விவேக சிந்தாமணி

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


#1
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் நல்ல
குணம் அதிகம் ஆம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக்கால்

@1 நூல்
** அறுசீரடியாசிரிய விருத்தம்

#1
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும் பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குரு மொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயன் இல்லை ஏழும்தானே

#2
பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்
கள்ளின் நல் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்
தெள் அற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்

#3
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்துவைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகு மணம் செய்தாலும் தான்
அக் குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ
குக்கலே குக்கல் அல்லால் குலம்-தனில் சிறந்தது ஆமோ

#4
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பு இலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும்தானே

#5
கதிர் பெறு செந்நெல் வாடக் கார்க் குலம் கண்டு சென்று
கொதி நிரைக் கடலில் பெய்யும் கொள்கை போல் குவலயத்தே
மதி தனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதி மிகப் படைத்தோர்க்கு ஈவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார்

#6
ஆலிலே பூவும் காயும் அளி தரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தன் குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி
ஆல் இலை ஆதிபோனால் அதன் அடி இருப்பார் உண்டோ

#7
** அறுசீரடியாசிரிய விருத்தம்
பொருட்பாலை விரும்புவர்கள் காமப்பாலிடை மூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருள் பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்றில்லார்
குருப்-பால் அக் கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து ஈவார்

#8
** வேறு
தண் தாமரையின் உடன் பிறந்தும் தண் தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
பண்டே பழகியிருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே

#9
** கலி விருத்தம்
வானரம் மழை-தனில் நனையத் தூக்கணம்
தான் ஒரு நெறி சொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே

#10
** அறுசீர் விருத்தம்
வண்டு மொய்த்து அனைய கூந்தல் மதனபண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளி மொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர் மா முனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே

#11
கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப் புவி-தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளி போல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா

#12
** எண்சீரடியாசிரிய விருத்தம்
ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோல மா மத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே

#13
** அறுசீர் விருத்தம்
சங்கு வெண்தாமரைக்குத் தந்தை தாய் இரவி தண்ணீர்
அங்கு அதைக் கொய்துவிட்டால் அழுகச் செய்து அ நீர் கொல்லும்
துங்க வண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே

#14
** எண்சீர் விருத்தம்
நாய் வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்
நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ
பேய் வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடது ஆமோ
தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்
ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான்
எழு பிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே

#15
** அறுசீர் விருத்தம்
வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்து அழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பிலும் கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடை ஆவாரே

#16
** எண்சீர் விருத்தம்
கெற்பத்தால் மங்கையருக்கு அழகு குன்றும்
கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்
துற்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்
சொல்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்
நன்மை செய்யத் தீமை உடன் நயந்து செய்வார்
அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்
அரிய தவம் கோபத்தால் அழிந்துபோமே

#17
** அறுசீர் விருத்தம்
தன்னுடன் பிறவாத் தம்பி தனைப் பெறாத் தாயார் தந்தை
அன்னியரிடத்துச் செல்வம் அரும் பொருள் வேசி ஆசை
மன்னிய ஏட்டின் கல்வி மறுமனையாட்டி வாழ்க்கை
இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாது அன்றே

#18
** எண்சீர் விருத்தம்
ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன்
இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெரு நான்கும் அறு_நான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே
சகிக்க முடியாது இனி என் சகியே மானே

#19
** எழுசீரடியாசிரிய விருத்தம்
தேன் நுகர் வண்டு மது-தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று தடம் கையில் எடுத்து முன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்று எண்ணி மலர்க் கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள்

#20
** எண்சீர் விருத்தம்
கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்
கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்
ஒரு தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்
பெரியோர்கள் முன் நின்று மரத்தைப் போலும்
பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்
பரிவு சொலித் தழுவின் அவன் பசப்பன் ஆகும்
பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

#21
** அறுசீர் விருத்தம்
தாங்கொணா வறுமை வந்தால் சபை-தனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூம் கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகு எலாம் பழிக்கும்தானே

#22
** கலி விருத்தம்
அரும்பு கோணிடில் அது மணம் குன்றுமோ
கரும்பு கோணிடில் கட்டியும் பாகும் ஆம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம்

#23
** அறுசீர் விருத்தம்
அன்னையே அனைய தோழி அறம்-தனை வளர்க்கும் மாதே
உன்னை ஓர் உண்மை கேட்பேன் உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கிப்
பொன்னையும் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வது ஏனோ

#24
பொம்மெனப் பணைத்து விம்மிப் போர் மதன் மயங்கி வீழும்
கொம்மை சேர் முலையினாளே கூறுவேன் ஒன்று கேண்மோ
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே

#25
பொன்னொடு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியில் மணமும் செய்வார்
மன்னராய் இருந்த பேர்கள் வகை கெட்டுப்போவார் ஆகில்
பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே

#26
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை
நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை
மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை
மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே

#27
அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருடனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை
வருடம் மூன்று மழை எனப் பெய்யுமே

#28
** அறுசீர் விருத்தம்
திருப்பதி மிதியாப் பாதம் சிவன் அடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது
புரப்பவர்-தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லைதானே

#29
தன் உடலினுக்கு ஒன்று ஈந்தால் தக்கதோர் பலமது ஆகும்
மின் இயல் வேசிக்கு ஈந்தால் மெய்யிலே வியாதி ஆகும்
மன்னிய உறவுக்கு ஈந்தால் வருவது மயக்கமாகும்
அன்னிய பரத்துக்கு ஈந்தால் ஆருயிர்க்கு உதவி ஆமே

#30
** பதினான்குசீர் விருத்தம்
படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம்
பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடும் மதக் குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்
குலுங்கப் பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம்
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம்
காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம்
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே

#31
** கலி விருத்தம்
வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும்
தண் தமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி இருந்திடின் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையே

#32
** அறுசீரடியாசிரிய விருத்தம்
கற்புடை மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை
வெற்புறு வேங்கையின் தோல் வீரன் கை வெய்ய கூர் வேல்
அற்பர்-தம் பொருள்கள்-தாமும் அவரவர் இறந்த பின்னே
பற்பலர் கொள்வார் இந்தப் பாரினில் உண்மைதானே

#33
வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற்பூச்சு என்பார்
பூணுவார் தராப் பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார்
காணவே பனைக் கீழாகப் பால் குடிக்கினும் கள்ளே என்பார்
மாண் உலகத்தோர் புல்லர் வழக்கினை மெய் என்பாரே

#34
** கலி விருத்தம்
ஓரியே மீன் உவந்து ஊன் இழந்தையோ
நாரியே கண் பிழை நாட்டில் இல்லையோ
பாரியே கணவனைப் பழுதுசெய்து நீ
நீரிலே இருப்பது நிலைமை அல்லவே

#35
** அறுசீரடியாசிரிய விருத்தம்
சம்புவே என்ன புத்தி சலம்-தனில் மீனை நம்பி
வம்புறு வடத்தைப் போட்டு வானத்தைப் பார்ப்பது ஏனோ
அம்புவி மாதே கேளாய் அரசனை அகலவிட்டு
வம்பனைக் கைப்பிடித்தவாறு போல் ஆயிற்று அன்றே

#36
மூப்பு இலாக் குமரி வாழ்க்கை முனை இலா அரசன் வீரம்
காப்பு இலா விளைந்த பூமி கரை இலாது இருந்த ஏரி
கோப்பு இலான் கொண்ட கோலம் குரு இலான் கொண்ட ஞானம்
ஆப்பு இலாச் சகடு போலே அழியும் என்று உரைக்கலாமே

#37
** சந்தக் கலி விருத்தம்
பொன்னின் மணி கிண்கிணி சிலம்பு ஒலி புலம்ப
மின்னு மணி மேகலைகள் மெல்லென ஒலிப்பச்
சின்ன மலர் கொண்டு சில சேடியர்கள் சூழ
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார்

#38
** அறுசீரடியாசிரிய விருத்தம்
கானலை நீர் என்று எண்ணிக் கடுவெளி திரியும் மான் போல்
வானுறும் இலவு காத்த மதி இலாக் கிள்ளையே போல்
தேனினை உண்டு தும்பி தியங்கிய தகைமையே போல்
நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே

#39
** குருங்கழிநெடில் விருத்தம்
சங்கு முழங்கும் தமிழ்நாடன்-தன்னை நினைத்த போது எல்லாம்
பொங்கு கடலும் உறங்காது பொழுது ஓர் நாளும் விடியாது
திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சில காலம்
எங்கும் உறங்கும் இராக் காலம் என் கண் இரண்டும் உறங்காதே

#40
** அறுசீரடியாசிரிய விருத்தம்
அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும்
இரவினில் தனிப்போவாரும் ஏரி நீர் நீந்துவாரும்
விரை செறி குழலியான வேசையை விரும்புவாரும்
அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பர் தாமே

#41
வாழ்வது வந்த போது மனம்-தனில் மகிழ வேண்டாம்
தாழ்வது வந்ததானால் தளர்வரோ தக்கோர் மிக்க
ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ
ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ

#42
** அறுசீர் விருத்தம்
பருப்பதங்கள் போல் நிறைந்திடும் நவமணிப் பதங்களைக் கொடுத்தாலும்
விருப்பம் நீங்கிய கணவரைத் தழுவதல் வீணதாம் விரை ஆர்ந்த
குருக்கு சந்தனக் குழம்பினை அன்பொடு குளிர் தர அணிந்தாலும்
செருக்கு மிஞ்சிய அற்பர்-தம் தோழமை செப்பவும் ஆகாதே

#43
** கலி விருத்தம்
பெருத்திடு செல்வமாம் பிணி வந்து உற்றிடில்
உருத் தெரியாமலே ஒளி மழுங்கிடும்
மருந்து உளதோ எனில் வாகடத்து இலை
தரித்திரம் என்னும் ஓர் மருந்தில் தீருமே

#44
** அறுசீரடியாசிரிய விருத்தம்
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கைதானும்
பித்தர்-தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம்தானும்
அத்தன் மால் பிரம்மதேவனால் அளவிடப்பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர்

#45
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வார் புல்லர்
நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரி சொல்கேட்டு
வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம்

#46
கதலி வீரர் களத்திடை வையினும்
குதலை வாயில் குழவிகள் வையினும்
மதன லீலையின் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே

#47
புத்திமான் பலவான் ஆவான் பலமுளான் புத்தி அற்றால்
எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும்
மற்று ஒரு சிங்கம்-தன்னை வரு முயல் கூட்டிச் சென்றே
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே

#48
மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத
கானுறு கவரி மான் போல் கனம் பெறு புகழே பூண்பார்
மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய்ச் சவங்கள் ஆகி
ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே

#49
** கலி நிலைத் துறை
கழுதை கா எனக் கண்டு நின்று ஆடிய அலகை
தொழுது மீண்டும் அக் கழுதையைத் துதித்திட அதுதான்
பழுது இலா நமக்கு ஆர் நிகராம் எனப் பகர்தல்
முழுதும் மூடரை மூடர் கொண்டாடிய முறை போல்

#50
** அறுசீரடியாசிரிய விருத்தம்
ஆசாரம் செய்வாராகில் அறிவொடு புகழும் உண்டாம்
ஆசாரம் நன்மையானால் அவனியில் தேவர் ஆவார்
ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்
பேசார் போல் பேச்சும் ஆகிப் பிணியொடு நரகில் வீழ்வார்

#51
செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார்
சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார்
வெல்வதே கருமம் அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார்
வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர்

#52
** கலி விருத்தம்
யானையைச் சலம்-தனில் இழுத்த அக்கரா
பூனையைக் கரை-தனில் பிடிக்கப் போகுமோ
தானையும் தலைவரும் தலம் விட்டு ஏகினால்
சேனையும் செல்வமும் தியங்குவார்களே

#53
** அறுசீர் விருத்தம்
கொண்ட நல் கலைகளோடு குணம் இலாக் கோதைமாரைக்
கண்டு விண்டு இருப்பது அல்லால் கனவிலும் புல்ல ஒண்ணாது
உண்டென மதுவை உண்ண ஓவியப் பூவில் வீழ்ந்த
வண்டினம் பட்ட பாடு மனிதரும் படுவர் தாமே

#54
மயில் குயில் செம் கால் அன்னம் வண்டு கண்ணாடி பன்றி
அயில் எயிற்று அரவு திங்கள் தவன் ஆழி கொக்கோடு
உயரும் விண் கமலப் பன்மூன்று உறு குணமுடையோர்-தம்மை
இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே

#55
** கலி விருத்தம்
தெருள் இலாக் கலையினார் செருக்கும் ஆண்மையும்
பொருள் இலா வறியர்-தம் பொறி அடக்கமும்
அருள் இலா அறிஞர்-தம் மௌன நாசமும்
கரு இலா மங்கையர் கற்பும் ஒக்குமாம்

#56
மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில் கண்டு நடமாடும்
தங்கு பானு நூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும்
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச் சிறந்திடும் அரக்கு ஆம்பல்
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே

#57
சந்திரன் இல்லா வானம் தாமரை இல்லாப் பொய்கை
மந்திரி இல்லா வேந்தன் மத கரி இல்லாச் சேனை
சுந்தரப் புலவர் இல்லாத் தொல் சபை சுதர்_இல் வாழ்வு
தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கை போலாம்

#58
** கலி விருத்தம்
குரை கடல் வறுமையும் குறத்தி உண்மையும்
நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும்
விரை செறி குழலினாள் வேசை ஆசையும்
அரையர் அன்பு அமைவதும் அஞ்சும் இல்லையே

#59
** அறுசீரடியாசிரிய விருத்தம்
முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்
தட வரை முலை மாதே இத் தரணியில் உள்ளோர்க்கு எல்லாம்
மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய்

#60
பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும்
மருவிய கீர்த்தி இல்லை மைந்தரில் பெருமை இல்லை
கருதிய கருமம் இல்லை கதி பெற வழியும் இல்லை
பெரு நிலம்-தனில் சஞ்சாரப் பிரேதமாய்த் திரிகுவாரே

#61
தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது
பாம்புக்கு பால் வார்த்து என்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்கு தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம் பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்

#62
கல்லாத மாந்தரையும் கடும் கோபத் துரைகளையும் காலம் தேர்ந்து
சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவாத் தேவரையும் சுருதி நூலில்
வல்லா அந்தணர்-தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி
நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே

#63
தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை
மீளவே கொடுக்கினாலே வெய்துறக் கொட்டலே போல்
ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்
கோளினர்-தமக்கு நன்மை செய்வது குற்றமாமே

#64
அறிவுளோர்-தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியில் உள்ளோர் நேசமாய் வணக்கம் செய்வார்
அறிவுளோர்-தமக்கு யாதோர் அசடது வருமே ஆகில்
வெறியர் என்று இகழார் என்றும் மேதினியுள்ளோர் தாமே

#65
குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்-பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திரம் விசாரம் ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே

#66
இடுக்கினால் வறுமையாகி ஏற்றவர்க்கு இசைந்த செல்வம்
கொடுப்பதே மிகவும் நன்று குற்றமே இன்றி வாழ்வார்
தடுத்து அதை விலக்கினோர்க்குத் தக்க நோய் பிணிகள் ஆகி
உடுக்கவே உடையும் இன்றி உண் சோறும் வெல்லம் ஆமே

#67
மெய்யதை சொல்வாராகில் விளங்கிடும் மேலும் நன்மை
வையகம் அதனைக் கொள்வார் மனிதரில் தேவர் ஆவார்
பொய்யதை சொல்வாராகில் போசனம் அற்பம் ஆகும்
நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவுள்ளோரே

#68
** சந்தக் கலி விருத்தம்
தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர்-தம் ஆணையை மறந்தோன்
சந்தமுறு வேத நெறி தாண்டின இ நால்வர்
செம் தழலின் வாயினிடைச் சேர்வது மெய் கண்டீர்

#69
** அறுசீரடியாசிரிய விருத்தம்
நாரிகள் வழக்கது ஆயின் நடு அறிந்து உரைத்தார் சுத்தர்
ஏரி போல் பெருகி மண் மேல் இரு கணும் விளங்கி வாழ்வார்
ஓரமே சொல்வார் ஆகில் ஓங்கிய கிளையும் மாண்டு
தீரவே கண்கள் இரண்டும் தெரியாது போவர்தாமே

#70
துப்புறச் சிவந்த வாயாள் தூய பஞ்சணையின் மீதே
ஒப்புறக் கணவனோடே ஓர் லீலை செய்யும் போது
கற்பகம் சேர்ந்த மார்பில் கன தனம் இரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவிப் பார்த்தாள்

#71
ஏரி நீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம்
மாரி நீர் மறுத்த போது அப் பறவை அங்கு இருப்பதுண்டோ
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்த போதே
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே

#72
** சந்தக் கழிநெடில் விருத்தம்
மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி மரநாய் கௌவும் காலினராய்
அண்ணாந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா
பண் ஆர் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட
உண்ணாநின்ற போது ஒருவர்க்கு உதவா மாந்தர் இவர்தாமே

#73
மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரைச் சேரும்
திண் திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியைச் சேரும்
தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவைச் சேரும்
கண்டு அன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்கு ஆமே

#74
நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று
பொற்பு உடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று
பற்பலரோடு நல் நூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று
சொல் பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம்தானே

#75
** வேறு
நிட்டையிலே இருந்து மனத் துறவடைந்த பெரியோர்கள் நிமலன் தாளைக்
கிட்டையிலே தொடுத்து முத்திபெறும் அளவும் பெரிய சுகம் கிடைக்கும் காம
வெட்டையிலே மதி மயங்கிச் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே கிடத்தும்-மட்டும் கவலைதானே

#76
** எழுசீர் விருத்தம்
அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள்
பென்னம்பெருத்த முலை கன்னங்கறுத்த குழல் சின்னஞ்சிறுத்த இடை பெண்
என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான்
சின்னஞ்சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங்களுக்கு அபயமே

#77
** எண்சீரடியாசிரிய விருத்தம்
ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ
மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ளக்
கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவி பாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படும் துயரம் பார்க்கொணாதே

#78
** அறுசீரடியாசிரிய விருத்தம்
தாய் பகை பிறர் நட்பு ஆகில் தந்தை கடன்காரன் ஆகில்
மாய் பகை மனைவியாரும் மா அழகு உற்ற போது
பேய் பகை பிள்ளைதானும் பெருமை நூல் கல்லாவிட்டால்
சேய் பகை ஒருவர்க்கு ஆகும் என்றனர் தெளிந்த நூலோர்

#79
நிலைதளர்ந்திட்ட போது நீள் நிலத்து உறவும் இல்லை
சலம் இருந்து அகன்ற போது தாமரைக்கு அருக்கன் கூற்றம்
பல வனம் எரியும் போது பற்று தீக்கு உறவாம் காற்று
மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அக் காற்றே கூற்றம்

#80
மடுத்த பாவாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க்கு எல்லாம்
கொடுத்து யார் வறுமை உற்றார் கொடாது வாழ்ந்தவர் ஆர் மண் மேல்
எடுத்து நாடு உண்ட நீரும் எடாத காட்டகத்து நீரும்
அடுத்த கோடையிலே வற்றி அல்லதில் பெருகும் தானே

#81
** வேறு
உணங்கி ஒரு கால் முடமாகி ஒரு கண் இன்றிச் செவி இழந்து
வணங்கு நெடு வால் அறுப்புண்டு மன்னும் முதுகில் வயிறு ஒட்டி
அணங்கு நலிய மூப்பு எய்தி அகல் வாயோடு கழுத்து ஏந்திச்
சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்

#82
** எழுசீரடியாசிரிய விருத்தம்
கல் மனப் பார்ப்பார்-தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப் படைத்தாய்
துன்மதி வணிகர்-தங்களைப் படைத்துச் சோரரை என் செயப் படைத்தாய்
வன்மன வடுகர்-தங்களைப் படைத்து வானரம் என் செயப் படைத்தாய்
நல் மனை-தோறும் பெண்களைப் படைத்து நமனையும் என் செயப் படைத்தனையே

#83
** கலி விருத்தம்
உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனை
பண்ணல் எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ
அண்ணல்-தம் பிரிவினை அறிந்தும் தோழி நீ
மண்ண வந்தனை இது மடமை ஆகுமால்

#84
** அறுசீரடியாசிரிய விருத்தம்
கோளரி அடர்ந்த காட்டில் குறங்கில் வைத்து அமுதம் ஊட்டித்
தோளினில் தூக்கிவைத்துச் சுமந்து பேறா வளர்த்த
ஆளனைக் கிணற்றில் தள்ளி அழகு இலா முடவன் சேர்ந்தாள்
காளம் நேர் கண்ணினாரைக் கனவிலும் நம்பொணாதே

#85
** கொச்சகக் கலிப்பா
சேய் கொண்டாரும் கமலச் செம்மலுடனே அரவப்
பாய் கொண்டாரும் பணியும் பட்டீசுரத்தானே
நோய் கொண்டாலும் கொளலாம் நூறு வயது ஆம் அளவும்
பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ளல் ஆகாதே

#86
** எழுசீரடியாசிரிய விருத்தம்
நானம் என்பது மணம் கமழ் பொருளது நாவில் உண்பதுவோ சொல்
ஊன் உணங்குவோய் மடந்தையர் அணிவதே உயர் முலைத் தலைக் கோட்டில்
ஆனது அங்கு அது பூசினால் வீங்குவது அமையுமோ எனக் கேட்க
கான வேட்டுவச் சேரி விட்டு அகன்றனர் கடி கமழ் விலை வாணர்

#87
** கலி நிலைத் துறை
கொண்டு விண் படர் கருடன் வாய்க் கொடு வரி நாகம்
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன் தேரை
மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு
வண்டு தேன் நுகர் இன்பமே மானிடர் இன்பம்

#88
** அறுசீரடியாசிரிய விருத்தம்
கற்பூரப் பாத்திகட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ் நீர் பாய்ச்சிப்
பொற்பு ஊர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்
சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே சொல்லினாலும்
நல் போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும்தானே

#89
** கலி விருத்தம்
தண்டு உலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்து அருகு ஏந்தினாள்
கெண்டை கெண்டை எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்

#90
மருவு சந்தனக் குழம்பொடு நறும் சுவை நலம் பெற அணிந்தாலும்
சருவ சந்தேக மனம் உள மாதரைத் தழுவலும் ஆகாதே
பருவதங்கள் போல் பலபல நவமணிப் பைம்பொனை ஈந்தாலும்
கெருவம் மிஞ்சிய மானிடர் தோழமை கிட்டலும் ஆகாதே

#91
** வேறு
நிலைத்தலை நீரில் மூழ்கி நின்றவள்-தன்னை நேரே
குலைத்தலை மஞ்ஞை கண்டு கூ எனக் காவில் ஏக
முலைத் தலை அதனைக் கண்டு மும்மதக் கரி வந்து உற்ற
தலைத்தலைச் சிங்கம் என்று அக் களிறு கண்டு ஏகிற்று அம்மா

#92
கரி ஒரு திங்கள் ஆறு கானவன் மூன்று நாளும்
இரி தலைப் புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈது என்று
விரி தலை வேடன் கையில் வில் குதை நரம்பைக் கவ்வி
நரி அனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ

#93
** வேறு
பூதலத்தில் மானிடராய்ப் பிறப்பது அரிது எனப் புகல்வர் பிறந்தோர் தாமும்
ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய்ச் சென்று
நீதி வழுவாத வகை வழக்குரைத்து நல்லோரை நேசம்கொண்டு
காத வழி பேர் இலார் கழுதை எனப் பாரில் உள்ளோர் கருதுவாரே

#94
** வேறு
ஆரம் பூண்ட மணி மார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள்
ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்தவாறு ஏது
வாரம் கொண்டு வழக்குரைத்து மண் மேல் நின்று வலி பேசி
ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே

#95
** அறுசீரடியாசிரிய விருத்தம்
வல்லியம்-தனைக் கண்டு அஞ்சி மரம்-தனில் ஏறும் வேடன்
கொல்லிய பசியைத் தீர்த்து ரட்சித்த குரங்கைக் கொன்றான்
நல்லவன்-தனக்குச் செய்த நலமது மிக்கது ஆகும்
புல்லர்கள்-தமக்குச் செய்தால் உயிர்-தனைப் போக்குவாரே

#96
தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம்
என் மானம் ஆகில் என்ன எல்லவரும் சரி எனவே எண்ணும் போது
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி அடைந்தோரைக் காக்கின்ற வள்ளல் என வழுத்தலாமே

#97
தன்னைத் தான் புகழ்வோரும் தன் குலமே பெரிது எனவே தான் சொல்வோரும்
பொன்னைத்தான் தேடி அறம் புரியாமல் அவை காத்துப் பொன்றினோரும்
மின்னலைப் போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்புவோரும்
அன்னை பிதா பாவலரைப் பகைப்போரும் அறிவு இலாக் கசடர் ஆமே

#98
பெண்டுகள் சொல்கேட்கின்ற பேயரேனும் குணம் மூடப் பேடி லோபர்
முண்டைகளுக்கு இணை இலா முனை வீரர் புருடர் என மொழியொணாதே
உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார்
அண்டினவர்-தமைக் கெடுப்பார் அழி வழிக்கே செய்வது அவர் அறிவுதானே

#99
பொல்லார்க்குக் கல்வி வரில் கருவம் உண்டாம் அதனோடு பொருளும் சேர்ந்தால்
சொல்லாதும் சொல்லவைக்கும் சொல் சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்
நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய்
எல்லார்க்கும் உபகாரராய் இருந்து பரகதியை எய்துவாரே

#100
** வேறு
உந்தியின் சுழியின் கீழ் சேர் உரோமமாம் கரிய நாகம்
சந்திரன் எனவே எண்ணித் தையலாள் முகத்தை நோக்க
மந்தரகிரிகள் விம்மி வழிமறித்திடுதல் கண்டு
சிந்துரக் கயல் கண் ஓடிச் செவி-தனக்கு உரைத்தது அம்மா

#101
** இதுவுமது
மாக மா மேடை மீதில் மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்று எண்ணி இராகு வந்து உற்ற போது
பாகு சேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்கத்
தோகை மா மயில் என்று எண்ணித் தொடர்ந்து அரா மீண்டது அன்றே

#102
** வேறு
சலதாரை வீழும் நீரும் சாகரம்-தன்னைச் சார்ந்தால்
குலம் என்றே கொள்வது அல்லால் குரை கடல் வெறுத்தது உண்டோ
புலவர்கள் சபையில் கூடிப் புன் கவியாளர் சார்ந்தால்
நலம் என்றே கொள்வது அல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம்

#103
கார் எனும் குழல்கள் தப்பிக் கடும் சிலை வாளி தப்பி
மேரு என வளர்ந்து நின்ற வேழத்தின் கோடு தப்பித்
தாருறு கரிய ரோமச் சங்கிலி வழியே சென்று
சீரியது என வளர்ந்த செல்வன் அல்குலில் கை வைத்தான்

#104
உண்டதை ஒழிக்கும் வாசல் ஓரம் நீர் ஒழித்து மேலே
வண்டலும் அழுக்கும் சேரும் உதிரமும் மாறா வாசல்
உண்டு அதன் இருப்பைக் கண்டு பெரும் களி உள்ளம் கொண்டு
கண்டனர் இளைஞர் எல்லாம் கதி எனக் கருதுவாரே

#105
** வேறு
கரந்து ஒருவன் கணை தொடுக்க மேல் பறக்கும் இராசாளி கருத்தும் கண்டே
உரந்து சிறு கானகத்தில் உயிர்ப் புறா பேடு-தனக்கு உரைக்கும்காலை
விரைந்து விடம் தீண்ட உயிர்விடும் வேடன் கணையால் வல்லூறும் வீழ்ந்தது
தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே

#106
கொல் உலை வேல் கயல் கண் கொவ்வை அம் கனி வாய் மாதே
நல் அணி மெய்யில் பூண்டு நாசிகாபரணம் மீதில்
சொல் அரில் குன்றி தேடிச் சூடியது என்னோ என்றான்
மெல்_இயல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்து என்றாள்

#107
** கலி விருத்தம்
அருகில் இவள் அருகில் இவள் அருகில் வர உருகும்
கரிய குழல் மேனி இவள் கான மயில் சாயல்
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே

#108
** வேறு
அலகு வாள் விழி ஆய்_இழை நல் நுதல்
திலகம் கண்டு எதிர் செம் சிலை மாரனும்
கலகமே செய்யும் கண் இதுவாம் என
மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்

#109
** கலி நிலைத் துறை
குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே
அரங்கு முன்பு நாய் பாடிக் கொண்டாடிய அது போல்
கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு
சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை

#110
** அறுசீரடியாசிரிய விருத்தம்
வில்லது வளைந்தது என்றும் வேழமது உறங்கிற்று என்றும்
வல்லியம் பதுங்கிற்று என்றும் வளர் கடா பிந்திற்று என்றும்
புல்லர்-தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று
நல்லது என்று இருக்க வேண்டா நஞ்சு எனக் கருதலாமே

#111
சலம்-தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது
கொலை புரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல
வலுவினால் அவனை வெல்ல வலு ஒன்றும் இல்லை என்றே
கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே

#112
நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார்
தலம் எலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம்
நலம் இலாக் கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்
குலம் எலாம் பழுது செய்யும் கோடரிக் காம்பு நேராம்

#113
** எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இச் செய்கை
செயல் எனை என்று இலைமறைகாய் எனத் தணவாது அவ் இரு வகையும் தீது என்று
அயல் விழியாய் மயல் பொது ஊழ் வலிது அதினும் பெண்மதியேன் அதுவும் ஊழின்
இயல் என வள்ளுவர் உரைத்தார் சான்று நீ எனப் புகன்றேன் இன்புற்றானே

#114
நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர் மனை நலத்தைச் செய்வார்
கற்பு உடை காமத் தீ ஆர் கன்னியை விலக்கினோரும்
அட்டு உடன் அஞ்சுகின்றோர் ஆயுளும் கொண்டு நின்று
குட்டநோய் நரகில் வீழ்ந்து குளிப்பவர் இவர்கள் கண்டாய்

#115
மதி இலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே
ருதுவது காலம்-தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில்
புதுமையாய் எடுத்த போது பெட்டியில் புலி வாயாலே
அதிருடன் கடியுண்டு அன்றே அரு நரகு அடைந்தான் மாதோ

#116
மையது வல்லியம் வாழ் மலைக்குகை-தனில் புகுந்தே
ஐயமும் புலிக்குக் காட்டி அடவியில் துரத்தும்காலை
பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட
வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தது அன்றே

#117
** வேறு
மங்கை கைகேசி சொல்கேட்டு மன்னர் புகழ் தசரதனும் மரணமானான்
செங்கமலச் சீதை சொல்லை சீராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின்
தங்கையவள் சொல்கேட்ட இராவணனும் கிளையோடு தானும் மாண்டான்
நங்கையர் சொல்கேட்பது எல்லாம் கேடு வரும் பேர் உலகோர் நகைப்பர் தாமே

#118
** வேறு
ஆதியாம் இருவர் நட்புக்கு அவமதிப்புற்று அவர்க்குள்
சூதினால் கபடம் செய்து துணை பிரிந்திடுவது என்றால்
வேதியன் பவனவாயில் வேசை தாய் பச்சைநாவி
ஊதிய கதை போல் ஆகி உறு நரகு எய்துவாரே

#119
அருமையும் பெருமையும்தானும் அறிந்து உடன்படுவர்-தம்மால்
இருமையும் ஒருமை ஆகி இன்புறற்கு ஏது உண்டாம்
பரிவு இலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள்-தம்பால்
ஒருமையின் நிரயம் எய்தும் ஏதுவே உயரும் மன்னோ

#120
ஒருவனே இரண்டு யாக்கை ஊன் பொதியான நாற்றம்
உருவமும் புகழும் ஆகும் அதற்குள் நீ இன்பமுற்று
மருவிய யாக்கை இங்கே மாய்ந்திடும் மற்று யாக்கை
திறமதாய் உலகம் ஏத்தச் சிறந்து பின் நிற்கும் அன்றே

#121
** கலி விருத்தம்
வேலியானது பயிர்-தனை மேய்ந்திட விதித்தால்
காலனானவன் உயிர்-தனைக் கவர்ந்திட நினைத்தால்
ஆலம் அன்னையர் பாலகர்க்கு அருத்துவரானால்
மேல் இது ஓர்ந்து உடன் யார்-கொலோ விலக்குவர் வேந்தே

#122
** அறுசீரடியாசிரிய விருத்தம்
அறம் கெடும் நிதியும் குன்றும் ஆவியும் மாயும் காலன்
நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும்
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோர் என்னும்
குலம் கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பினோர்க்கே

#123
** கட்டளைக் கலித்துறை
அரவிந்த நண்பன் சுதன் தம்பி மைத்துனன் அண்ணன் கையில்
வரம் முந்தி ஆயுதம் பூண்டவன் காணும் மற்று அங்கு அவனே
பரமன் திகிரியை ஏந்திய மைந்தன் பகைவன் வெற்பை
உரம் என்று எடுத்தவன் மாற்றான்-தன் சேவகன் ஒண்_தொடியே

#124
சங்கரன் தேவி தமையன் மனைவி-தனக்கு மூத்தாள்
அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ
கொங்கைகள் ஈர்_ஐந்து உடையவளாய் இக் குவலயத்தில்
எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே

#125
** அறுசீரடியாசிரிய விருத்தம்
இந்திர பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்
மந்தர நிலைகள் பேர மறுகு அயல் வறுமை ஆகும்
சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேசு மாளும்
அந்தணர் கருமம் குன்றின் யாவரே வாழ்வர் மண்ணில்

#126
** எழுசீரடியாசிரிய விருத்தம்
என் அனைக்கு அன்று முத்து அனைக் குனிக்கும் இறை அனை அனைக்குமே அன்று
மன் அனைக்கு அன்று பின் அனைக்கு உதவா வன் புளால் வருந்தி வாடுவனோ
முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த முது பகை அவன் பிதா உறாமல்
கன்னனைக் கொன்று விசயனைப் காத்த கவத்துவ இராமகிருட்டிணனே

#127
** நேரிசை வெண்பா
பண்புளருக்கு ஓர் பறவை பாவத்திற்கு ஓர் இலக்கம்
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி திண் புவியை
ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம்
நீள் வாகனம் நல் நிலம்

#128
சிறுவன் அளைபயறு செந்நெல் கடுகு
மறி திகிரி தண்டு மணி நூல் பொறி அரவம்
வெற்று ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி

#129
சிரம் பார்த்தான் ஈசன் அயன் தேவி-தனைப் பார்த்தான்
கரம் பார்த்தான் செங்கமலக் கண்ணன் உரம் சேர்
மலை வளைத்த திண் புயத்து வண்ணான் சீராமன்
கலை வெளுத்த நேர்த்தி-தனைக் கண்டு

#130
** கட்டளைக் கலித்துறை
கரி ஒன்று பொன்மிகும்பை ஏறக் கற்றவர் சூழ்ந்து தொழ
எரி என்னும் செல்வன் துலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினில் ஏறித் தொடர்ந்து வர
நரி ஒன்று சொந்தக் கனல் ஏறி வந்தது நம் களத்தே

#131
ஒரு பாதி மால் கொள மற்று ஒரு பாதி உமையவள் கொண்டு
இரு பாதியாலும் இறந்தான் புராரி இரு நிதியோ
பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்தில் கற்ப
தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே

#132
கம்ப மத கட களிற்றான் தில்லை வாழும்
கணபதி-தன் பெரு வயிற்றைக் கண்டு வாடி
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை
உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான்
பம்பு சுடர்க் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால்
பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள்
அம்புவியைப் படைத்திடுதல் அவமதே என்று
அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே

#133
காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்
காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம்
காமமே அனைவரையும் பகை ஆக்கிக் கழுத்து அரியும் கத்திதானே

#134
** கலி நிலைத் துறை
தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை
கடாகம் எங்கணும் அதிர்ந்திட ஒலித்திடக் காணல்
விடாத நாண் அகன்று அன்னிய புருடனை விழைந்தே
அடாது செய்த மங்கையர் வசை ஒலித்தல் போலாமே

#135
** பதினான்குசீர் விருத்தம்
தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு தாளிதம் பாத்திரம் இதேஷ்டம்
தாம்பு நீர் தேற்றம் ஊன்றுகோல் ஆடை சக்கிமுக்கிக் கைராந்தல்
கண்டகம் காண்பான் பூசை முஸ்தீபு கழல் குடை ஏவல் சிற்றுண்டி
கம்பளி ஊசி நூல் அடைக்காய் இலை கரண்டகம் கண்ட மேல் தங்கி
துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய எல்லாம் குறைவறத் திருத்தித் தொகுத்துப் பல்வகையின் இனிது அமைத்துப்
பெண்டுகள் துணையோடு எய்து வாகனனாய்ப் பெருநிலை நீர் நிழல் விறகு
பிரஜையும் தங்குமிடம் சமைத்து உண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே
** விவேக சிந்தாமணி முற்றிற்று
**