நல்வழி – ஔவையார்

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


@0 கடவுள் வாழ்த்து

#1
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா

@1 நூல்

#1
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

#2
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ளபடி

#3
இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இதன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு

#4
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய் ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்து போது அல்லால் கண்ணில்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆம் காலம் ஆகும் அவர்க்கு

#5
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போ-மின் என்றால் போகா இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

#6
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு

#7
எல்லாப்படியாலும் எண்ணினால் இவ் உடம்பு
பொல்லாப் புழு மலி நோய் புன் குரம்பை நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

#8
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேள்-மின்
தரியாது காணும் தனம்

#9
ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அ நாளும் அவ் ஆறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ஏற்றவர்க்கு
நல்ல குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து

#10
ஆண்டாண்டு-தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டா
நமக்கும் அது வழியே நாம் போம் அளவும்
எமக்கு என் என்று இட்டு உண்டு இரும்

#11
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது

#12
ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு

#13
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய் அம்புவியதன் மேல்

#14
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

#15
சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய்விடும்

#16
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி

#17
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்

#18
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேர் உலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்

#19
சேவித்தும் சென்று இரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும்
பாவித்தும் பார் ஆண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்

#20
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய்விடும்

#21
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் ஊரும்
வரும் திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்

#22
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்

#23
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே மூதேவி
சென்று இருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்று ஓரம்சொன்னார் மனை

#24
நீறில்லா நெற்றி பாழ் நெய்யில்லா உண்டி பாழ்
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் மாறில்
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை

#25
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

#26
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்

#27
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும்
அன்றி அது வரினும் வந்து எய்தும் ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனை ஆளும் ஈசன் செயல்

#28
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்

#29
மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை சுரந்து அமுதம்
கற்றா தரல் போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்

#30
தாம்தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார்
பூந்தாமரையோன் பொறி வழியே வேந்தே
ஒறுத்தாரை என் செயலாம் ஊர் எல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி

#31
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கு அஞ்சாத்
தாரத்தின் நன்று தனி

#32
ஆறு இடும் மேடும் மடுவும் போலாம் செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து

#33
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்குவிடும்

#34
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயில் சொல்

#35
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே தூவா
விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு

#36
நண்டு சிப்பி வேய் கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் ஒண்_தொடீ
போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் அயல்
மாதர் மேல் வைப்பார் மனம்

#37
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை நினைப்பது எனக்
கண்ணுறுவதல்லால் கவலைப்படேல் நெஞ்சே மெய்
விண்ணுறுவார்க்கு இல்லை விதி

#38
நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும்
அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே நின்ற நிலை
தான் அது ஆம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்

#39
முப்பதாம் ஆண்டு அளவில் மூன்று அற்று ஒரு பொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்பும்
கலை அளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலை அளவே ஆகுமாம் மூப்பு

#40
தேவர் குறளும் திரு நான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனி மொழியும் கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்
** நல்வழி முற்றும்
**