அறநெறிச்சாரம் — முனைப்பாடியார்

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


&8 முனைப்பாடியார் அருளிய அறநெறிச்சாரம்

@1 நூல்

#1
தா இன்றி எப்பொருளும் கண்டு உணர்ந்து தாமரைப்
பூவின் மேல் சென்றான் புகழ் அடியை நாவின்
தரித்து ஈண்டு அறநெறிச்சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருங்க விரைந்து

#2
மற உரையும் காமத்து உரையும் மயங்கிப்
பிற உரையும் மல்கிய ஞாலத்து அறவுரை
கேட்கும் கருத்துடையோரே பிறவியை
நீக்கும் திருவுடை யார்

#3
உரைப்பவன் கேட்பான் உரைக்கப்படுவது
உரைத்ததனால் ஆய பயனும் புரைப்பு இன்றி
நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு

#4
அறம் கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள்-மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் துறந்து அடங்கி
மன் உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற்பட்ட வன்

#5
பிள்ளை பேய் பித்தன் பிணியாளன் பின்நோக்கி
வெள்ளை களி விடமன் வேட்கையான் தெள்ளிப்
புகைக்கப் பொருள் உணர்வான் என்று இவரே நூலை
உரைத்தற்கு உரிமையிலாதார்

#6
தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
வடுமாற்றம் அஞ்சித் தற்காப்பான் படும் ஆற்றால்
ஒப்புரவு செய்து ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன்
தக்கான் தரும உரைக்கு

#7
தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன்
புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் இன்சொல்லை
ஏன்றிருந்தும் கேளாத ஏழை என இவர்கட்கு
ஆன்றவர்கள் கூறார் அறம்

#8
வினை உயிர் கட்டு வீடு இன்ன விளக்கி
தினையனைத்தும் தீமை இன்றாகி நினையுங்கால்
புல்லறத்தைத் தேய்த்து உலகினோடும் பொருந்துவதாம்
நல்லறத்தை நாட்டுமிடத்து

#9
ஆவட்டை போன்று அறியாதாரை மயக்குறுத்திப்
பாவிட்டார்க்கு எல்லாம் படுகுழியாய்க் காவிட்டு
இருமைக்கும் ஏமம் பயவாதனவே
தருமத்துப் போலிகள் தாம்

#10
புல்ல உரைத்தல் புகழ்தல் பொருள் ஈதல்
நல்லர் இவர் என்று நட்பாடல் சொல்லின்
அறம் கேள்வியால் ஆம் பயன் என்று உரைப்பார்
மறம் கேள்வி மாற்றியவர்

#11
காட்சி ஒழுக்கொடு ஞானம் தலைநின்று
மாட்சி மனைவாழ்தல் அன்றியும் மீட்சி_இல்
வீட்டுலகம் எய்தல் என இரண்டே நல்லறம்
கேட்டதனால் ஆய பயன்

#12
மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்
செம்மை ஒன்றின்மை துறவுடைமை நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
அறம் பத்தும் ஆன்ற குணம்

#13
தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையும் செய்து மனக்கு இனிய
போகம் தருதலால் பொன்னே அறத் துணையோடு
ஏகமாம் நண்பு ஒன்றும் இல்

#14
ஈட்டிய ஒண் பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார்
காட்டு-வாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் மூட்டும்
எரியின் உடம்பு ஒழியும் ஈர்ம் குன்ற நாட
தெரியின் அறமே துணை

#15
நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவருக்குச் சார்வாய் அறம் பெருக்கி யாப்புடைக்
காழும் கிடுகும் போல் நிற்கும் கயக்கு இன்றி
ஆழி சூழ் வையத்து அறம்

#16
இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொல் களை கட்டு வாய்மை எரு அட்டி
அன்பு நீர் பாய்ச்சி அறக் கதிர் ஈன்றது ஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்

#17
காலைச் செய்வோம் என்று அறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச் செய்வாரே தலைப்படுவார் மாலைக்
கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்-கொல்
அறம் காலைச் செய்யாதவாறு

#18
சென்ற நாள் எல்லாம் சிறு விரல்வைத்து எண்ணலாம்
நின்ற நாள் யார்க்கும் உணர்வு அரிது என்று ஒருவன்
நன்மை புரியாது நாள் உலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம்

#19
கோட்டுநாள் இட்டுக் குறை உணர்ந்து வாராதால்
மீட்டு ஒரு நாள் இடையும் தாராதால் வீட்டுதற்கே
வஞ்சஞ்செய் கூற்றம் வருதலால் நன்று ஆற்றி
அஞ்சாது அமைந்திருக்கற்பாற்று

#20
இன்று உளார் இன்றேயும் மாய்வர் அவர் உடைமை
அன்றே பிறர் உடைமை ஆயிருக்கும் நின்ற
கருமத்தர் அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார்
தருமம் தலைநிற்றல் நன்று

#21
மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவென் என்றல் பேதைமை தன்னைத்
துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு

#22
மூப்பொடு தீப் பிணி முன் உறீஇப் பின் வந்து
கூற்ற அரசன் குறும்பு எறியும் ஆற்ற
அற அரணம் ஆராய்ந்து அடையின் அஃது அல்லால்
பிற அரணம் இல்லை உயிர்க்கு

#23
திருத்தப்படுவது அறக் கருமம் தம்மை
வருத்தியும் மாண்புடையார் செய்க பெருக்க
வரவும் பெரும் கூற்றம் வன்கண் ஞமன் கீழ்த்
தரவு அறுத்து மீளாமை கண்டு

#24
முன்னே ஒருவன் முடித்தான் தன் துப்பு எலாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் முன்னே
முடித்த படி அறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து

#25
குறைக் கருமம் விட்டு உரைப்பின் கொள்ள உலவா
அறக் கருமம் ஆராய்ந்து செய்க பிறப்பிடைக்கு ஓர்
நெஞ்சு ஏமாப்பு இல்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
துஞ்சாத் துயரம் தரும்

#26
அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரணம் என்னை மறந்து ஒருவன்
நாட்டு விடக்கு_ஊர்தி அச்சு இறும் காலத்துக்
கூட்டும் திறம் இன்மையால்

#27
பாவம் பெருகப் பழி பெருகத் தன் ஓம்பி
ஆவது ஒன்று இல்லை அறன் அழித்துப் பாவம்
பொறாஅ முறைசெய் பொரு_இல் ஞமன் கீழ்
அறா உண்ணும் ஆற்றவும் நின்று

#28
முன் செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால்
பின் செய் வினையின் பின் போகலால் நற்செய்கை
ஆற்றுந்துணையும் அறம் மறவேல் நல் நெஞ்சே
கூற்றம் குடில் பிரியா முன்

#29
திரை அவித்து நீராடல் ஆகா உரைப்பார்
உரை அவித்து ஒன்றும் சொல் இல்லை அரைசராய்ச்
செய்தும் அறம் எனினும் ஆகாது உளவரையால்
செய்வதற்கே ஆகும் திரு

#30
கல்லா ஒருவனைக் காரணம் காட்டினும்
இல்லை மற்று ஒன்றும் அறன் உணர்தல் நல்லாய்
நறு நெய் நிறைய முகப்பினும் மூழை
பெறுமோ சுவை உணருமாறு

#31
வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும் அஃதே போல்
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு

#32
கயத்திடை உய்த்திடினும் கல் நையாது என்றும்
பயற்றுக் கறி வேவாது அற்றால் இயற்றி
அறவுரை கேட்டவிடத்தும் அனையார்
திறவுரை தேறாதவர்

#33
அற்ற பொழுதே அறம் நினைத்து யாதொன்றும்
பெற்ற பொழுதே பிற நினைத்தி எற்றே
நிலைமை_இல் நல் நெஞ்சே நின்னொடு வாழ்க்கை
புலை மயங்கி அன்னது உடைத்து

#34
ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெரு வாழ்க்கை முத்தாடை கொண்ட திருவாளா
வீணாள் படாமை நீ துன்னம் பொய்யே ஆக
வாணாள் படுவது அறி

#35
உள்ள நாள் நல்லறம் செய்க என்னும் சாற்று அன்றோ
இல்லை நாள் போய் ஏன்று இடம் கடிந்து தொல்லை
இடைக் கடையும் ஆற்றார் இரந்தார்க்கு நின்றார்
கடைத்தலை வைத்து ஈயும் பலி

#36
ஒரு நாளும் நீ தரியாய் உண் என்று சொல்லி
இரு நாளைக்கு ஈந்தாலும் ஏலாய் திருவாளா
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே
நின்னோடு வாழ்தல் அரிது

#37
கட்டளை கோடித் திரியின் கருதிய
இட்டிகையும் கோடும் அது போலும் ஒட்டிய
காட்சி திரியின் அறம் திரியும் என்று உரைப்பர்
மாட்சியின் மிக்கவர் தாம்

#38
தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவின் துணிவொடு பக்கம் மலைவு இன்றி
நாட்டி இவ் ஆறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி அறம் உரைப்பார்

#39
இறந்தும் பெரிய நூல் எம்மதே தெய்வம்
அறம்தானும் இஃதே சென்று ஆற்றத் துறந்தார்கள்
தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம்

#40
ஒன்றோடொன்று ஒவ்வாத பாசண்டத்துள் எல்லாம்
ஒன்றோடொன்று ஒவ்வாப் பொருள் தெரிந்து ஒன்றோடொன்று
ஒவ்வா உயிர் ஓம்பி உள் தூய்மை பெற்றதே
அவ்வாயது ஆகும் அறம்

#41
நிறுத்து அறுத்துச் சுட்டு உரைத்துப் பொன் கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால் பிறப்பு அறுக்கும்
மெய்ந்நூல் தலைப்படல் ஆகும் மற்று ஆகாதே
கண் ஓடிக் கண்டதே கண்டு

#42
காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்-கண்
ஆய்தல் அறிவுடையோர்-கண்ணதே காய்வதன்-கண்
உற்ற குணம் தோன்றாததாகும் உவப்பதன்-கண்
குற்றமும் தோன்றாக் கெடும்

#43
துறந்தார் துறந்திலர் என்று அறியல் ஆகும்
துறந்தவர் கொண்டு ஒழுகும் வேடம் துறந்தவர்
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்று அவர்
உள்ளம் கிடந்த வகை

#44
இந்தியக்கு ஒல்கா இரு_முத் தொழில் செய்தல்
சிந்தை தீரப் அப்பியத்தின் மேல் ஆக்கல் பந்தம்
அரிதல் இவை எய்துமாறு ஒழுகுவார்க்கே
உரிதாகும் உம்பர் உலகு

#45
அழல் அடையப்பட்டான் அதற்கு மாறு ஆய
நிழல் ஆதி-தன் இயல்பே நாடும் அழலது போல்
காமாதியால் ஆம் கடுவினைக் கட்டு அழித்துப்
போமாறு செய்வார் புரிந்து

#46
வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம்
வெப்பமே என்னார் விதி அறிவார் வெப்பம்
தணிப்பதூஉம் தட்பமே தான் செய் வினையைத்
துணிப்பதூஉம் தூய ஒழுக்கு

#47
தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் பித்தர் அவர்
நூல்களும் பொய்யே அ நூல் விதியின் நோற்பவரும்
மால்கள் என உணரற்பாற்று

#48
குருட்டுச் செவிடர்கள் கோல் விட்டுத் தம்முள்
தெருட்டி வழி சொல்லிச் சேறல் திருட்டேட்டம்
மாறுகொளக் கிடந்த மார்க்கத்தால் நற்கதியில்
ஏறுதும் என்பார் இயல்பு

#49
அற்றறிந்த காரணத்தை ஆராய்ந்து அறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே மற்று அதனை
மாட்சி புரிந்த மதியுடையாளரே
கேட்பர் கெழுமியிருந்து

#50
உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
பொரு_இல் தலைமகனோடு இன்ன ஒருவாது
கண்டு கருதிக் கயக்கு அறத் தேர்ந்த பின்
கொண்டு வீடு ஏற்க அறம்

#51
நூல் உணர்வு நுண் ஒழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம்
சால்பின்மை காட்டும் சவர்ச் செய்கை பால் வகுத்துப்
பட்டிமையால் ஆகா பரமார்த்தம் பற்றின்மை
ஒட்டுவான் உய்ந்துபோவான்

#52
புனை படை கண்டு அஞ்சித் தற்காப்பான்-தன்னை
வினை கடியும் என்று அடி வீழ்தல் கனை இருள்-கண்
பல் எலி தின்னப் பறைந்திருந்த பூனையை
இல் எலி காக்கும் என்றற்று

#53
மாடமும் மண்ணீடும் கண்டு அடக்கமில்லாரைக்
கூடி வழிபடும் கோள் அமை ஆடரங்கின்
நோவகமாய் நின்றான் ஓர் கூத்தினை ஊர் வேண்டிச்
சேவகமாய் நின்றது உடைத்து

#54
நாற்றம் ஒன்று இல்லாத பூவொடு சாந்தினை
நாற்றம் தான் வேண்டியது போலும் ஆற்ற
மறு அறு சீலமும் நோன்பும் இல்லாரை
உறு பயன் வேண்டிக்கொளல்

#55
மால் கடல் சூழ் வையத்து மை ஆ தாம் காத்து ஓம்பிப்
பால் கருதி அன்னது உடைத்து என்பர் மேல் வகுத்து
மன்னிய நற்குணம் இல்லாரைத் தாம் போற்றிப்
புண்ணியம் கோடும் எனல்

#56
உடங்கு அமிழ்தம் கொண்டான் ஒருவன் பலரும்
விடம் கண்டு நன்று இதுவே என்றால் மடம்கொண்டு
பல்லவர் கண்டது நன்று என்று அமிழ்து ஒழிய
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு

#57
தன்னையும் தன்னின் பொருளையும் பட்டாங்கின்
பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய
துட்டர் எனச் சிட்டன் தோற்றுவது அல்லாரைச்
சிட்டர் என்று ஏத்தல் சிதைவு

#58
எத்துணை கற்பினும் ஏகான்மவாதிகள்
புத்தியும் சொல்லும் பொலிவு இலவாய் மிக்க
அறிவன் நூல் கற்றார் அல எனவே நிற்கும்
எறி கதிர் முன் நீள் சுடரே போன்று

#59
அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும்
செவ்விதின் நீக்கிச் சினம் கடிந்து கவ்விய
எட்டுறுப்பின் ஆய இயல்பின் நற்காட்சியார்
சுட்டு அறுப்பர் நாற்கதியில் துன்பு

#60
அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்க பாசண்டமே தீத்தெய்வம் மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றாதவர்

#61
மன்னனுடன் வயிறு மாண்புடைத் தாய் தந்தை
முன்னி முடிக்கும் முனி ஆசான் பன்னி அங்கு
ஆய குரவர் இவர் என்ப வையத்துத்
தூய குலம் சாதியார்க்கு

#62
கண்டதனைத் தேறாதவனும் கனாக் கண்டு
பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும் பண்டிதனாய்
வாழ்விப்பக் கொண்டானும் போல்வரே வையத்துக்
கோள் விற்பக் கொள்ளாநின்றார்

#63
தோல் காவி சீரைத் துணி கீழ் விழ உடுத்தல்
கோல் காக் கரகம் குடை செருப்பு வேலொடு
பல் என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப்படும்

#64
ஆவரணம் இன்றி அடு வாளும் ஆனை தேர்
மா அரணம் இன்றி மலைவானும் தா_இல்
கழுதையில் அண்டம் சுமந்தானும் போலப்
பழுதாகும் பாசண்டியார்க்கு

#65
அறிவுடைமை மீக்கூற்றம் ஆன குலனே
உறு வலி நல் தவம் ஓங்கிய செல்வம்
பொறி வனப்பின் எம்போல்வார் இல் என்னும் எட்டும்
இறுதிக்-கண் ஏமாப்பு இல

#66
உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற்று உண்ண
இழந்திழந்து எங்கணும் தோன்றச் சுழன்று உழன்ற
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால் நல் நெஞ்சே
செற்றத்தால் செய்வது உரை

#67
உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளிச்
செயிரும் சினமும் கடிந்து பயிரிடைப்
புல் களைந்து நெல் பயன் கொள்ளும் ஒருவன் போல்
நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று

#68
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய் பழி நீக்கல் நிறுத்துதல் மெய்யாக
அன்புடைமை ஆன்ற அற விளக்கம் செய்தலோடு
என்று இவை எட்டாம் உறுப்பு.

#69
மக்கள் உடம்பு பெறற்கு அரிது பெற்ற பின்
மக்கள் அறிவும் அறிவு அரிது மக்கள்
அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார்
நெறி தலைநின்று ஒழுகுவார்

#70
பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா
மறந்தேயும் மாண்பு ஒழியும் நெஞ்சே சிறந்த
ஒழுக்கத்தோடு ஒன்றி உயப்போதி அன்றே
புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து

#71
தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை ஆசு இன்றிக்
கற்றல் கடன் அறிதல் கற்றார் இனத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி

#72
எப்பிறப்பாயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள் பிறப்பின் பிறிது இல்லை அப் பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்-கண்
நிற்றலும் கூடப் பெறின்

#73
கற்றதுவும் கற்று ஒருபால் நிற்பக் கடைப்பிடியும்
மற்றொருபால் போக மறித்திட்டுத் தெற்றென
நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துள் கல் பட்டால் போன்று

#74
விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கையிகந்து ஆக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு

#75
பற்றொடு செற்றம் பயம் இன்றிப் பல பொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன கற்றும்
கடையாய செய்து ஒழுகும் காரறிவினாரை
அடையார் அறிவுடையார்

#76
நல்வினைப் பின் அல்லால் நறும் தாமரையாளும்
செல்லாள் சிறந்தார் பின் ஆயினும் நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள் வழி
நீத்தல் ஒருபொழுதும் இல்

#77
தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்

#78
அஞ்சினாயேனும் அடைவது அடையும் காண்
துஞ்சினாய் என்று வினை விடா நெஞ்சே
அழுதாய் எனக் கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
தொழுதேன் நிறை உடையை ஆகு

#79
பல கற்றோம் யாம் என்று தன் புகழ வேண்டா
அலர் கதிர் ஞாயிற்றைக் கைக் குடையும் காக்கும்
சில கற்றார்-கண்ணும் உளவாம் பல கற்றார்க்கு
அச்சாணி அன்னது ஓர் சொல்

#80
தன்னை ஒருவன் இகழ்ந்து உரைப்பின் தான் அவனைப்
பின்னை உரையாப் பெருமையான் முன்னை
வினைப் பயனும் ஆயிற்றாம் என்று அதன்-கண் மெய்ம்மை
நினைத்து ஒழிய நெஞ்சில் நோய் இல்

#81
எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச்சொல் தன் நெஞ்சில்
கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும் மெள்ள
அறிவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின்
பிறிது ஒன்று வேண்டா தவம்

#82
நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை நாம் பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கு இவை என்று எண்ணி
உரைகள் பரியாது உரைப்பாரில் யாரே
களைகணது இல்லாதவர்

#83
பிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை
பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டுத் தனக்கு இன்னா
வித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலின்
பித்தும் உளவோ பிற

#84
முன் நின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
கல் நின்று உருகக் கலந்து உரைத்துப் பின் நின்று
இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்து இமையார் நின்ற நிலை

#85
பொய் மேல் கிடவாத நாவும் புறனுரையைத்
தன் மேல் படாமைத் தவிர்ப்பானும் மெய் மேல்
பிணிப் பண்பு அழியாமை பெற்ற பொழுதே
தணிக்கும் மருந்து தலை

#86
ஒளியும் ஒளி சான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும் களி என்னும்
கட்டுரையால் கோதப்படுமேல் இவை எல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து

#87
ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் சூது
பொரும் என்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
இருளாம் ஒருங்கே இவை

#88
தனக்குத் தகவல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றால்
உணற்கு விரும்பும் குடரை வனப்பு அற
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கித்
தேம்பத் தாம் கொள்வது அறிவு

#89
அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடையன் என்று உரைக்கும் தேசும் பிறன் இல்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல்
இழுக்காம் ஒருங்கே இவை

#90
சாவாய் நீ நெஞ்சமே சல்லிய என்னை நீ
ஆவதன்-கண் ஒன்றானும் நிற்க ஒட்டாய் ஓவாதே
கட்டு அழித்துக் காமக் கடற்கு என்னை ஈர்ப்பாயே
விட்டு எழுங்கால் என் ஆவாய் சொல்

#91
பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றிக்
கழி பெரும் காமநோய் வாங்கி வழிபடாது
ஓடும் மனனே விடுத்து என்னை விரைந்து நீ
நாடிக்கொள் மற்று ஓர் இடம்

#92
மக்களும் மக்களல்லாரும் என இரண்டு
குப்பைத்தே குண்டு நீர் வையகம் மக்கள்
அளக்கும் கருவி மற்று ஒண் பொருள் ஒன்றோ
துளக்குறு வெள் வளையார் தோள்

#93
இம்மை அடக்கத்தைச் செய்து புகழ் ஆக்கி
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் மெய்ம்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே
நட்டார் எனப்படுவார்

#94
நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
பட்டாம் பல பிறப்புத் துன்பம் என்று ஒட்டி
அறநெறி கைவிடாது ஆசாரம் காட்டிப்
பிற நெறி போக்கிற்பவர்

#95
நட்டாரை வேண்டின் நறு மென் கதுப்பினாய்
விட்டாரை அல்லால் கொளல் வேண்டா விட்டார்
பொறி சுணங்கு மென் முலைப் பொன்_அன்னாய் உய்ப்பர்
மறிதரவு இல்லாக் கதி

#96
காலொடு கை அமுக்கிப் பிள்ளையை வாய் நெறித்துப்
பாலொடு நெய் பெய்யும் தாய் அனையர் சால
அடக்கத்தை வேண்டி அறன் வலிது நாளும்
கொடுத்து மேற்கொண்டு ஒழுகுவார்

#97
கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து
பழியொடு பாவம் படாமை ஒழுகினார்
உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
துய்க்கும் பொருள் எல்லாம் தொக்கு

#98
காய உரைத்துக் கருமம் சிதையாதார்
தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு வாய் பணிந்து
உள்ளம் உருக உரைத்துப் பொருள் கொள்வார்
கள்ளரோடு ஒவ்வாரோ தாம்

#99
அறுதொழில் நீ?த்தாரை மெச்சாது அவற்றோடு
உறுநரைச் சார்ந்து உய்யப்போதல் இறுவரை மேல்
கண் இல் முடவன் துணையாக நீள் கானம்
கண்ணிலான் சென்றது உடைத்து

#100
குற்றத்தை நன்று என்று கொண்டு குணம் இன்றிச்
செற்றம் முதலா உடையவரைத் தெற்ற
அறிந்தார் என்று ஏத்துமவர்களைக் கண்டால்
துறந்து எழுவர் தூய்க் காட்சியார்

#101
கொன்று ஊன் நுகரும் கொடுமையை உள் நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் என்றும்
இடுக்கண் என உண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே
படுத்தானாம் தன்னைத் தவம்

#102
தம் புண் கழுவி மருந்திடுவர் தாம் பிறிதின்
செம் புண் வறுத்த வறை தின்பர் அந்தோ
நடுநின்று உலக நயன் இலா மாந்தர்
வடு அன்றோ செய்யும் வழக்கு

#103
அறம் கூறும் நா என்ப நாவும் செவியும்
புறங்கூற்றுக் கேளாத என்பர் பிறன் தாரத்து
அற்றத்தை நோக்காத கண் என்ப யார்-மாட்டும்
செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு

#104
பெண் விழைவார்க்கு இல்லை பெரும் தூய்மை பேணாது ஊன்
உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும்
மண் விழைவார்க்கு இல்லை மறமின்மை மாணாது
தம் விழைவார்க்கு இல்லை தவம்

#105
கல்லான் கடை சிதையும் காமுகன் கண் காணான்
புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக்-கண்ணும்
நடுக்கமும் நன் மகிழ்வும் இல்

#106
தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும் மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை
பழியாமல் வாழும் திறம்

#107
தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
ஆய பொழுது ஆற்றும் ஆற்றலும் காயவிடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இ மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை

#108
வெம்மை உடையது அடிசில் விழுப்பொருள்-கண்
செம்மை உடையதாம் சேவகம் தம்மைப்
பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை இ மூன்றும்
உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு

#109
ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயேன்
வெறுப்பார்க்கும் நான் மடங்கேன் என்பர் ஒறுத்தியேல்
ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும்
ஊர் பகை நின்-கண் ஒறு

#110
குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார்
நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர் வினைப்பயன்-கொல்
கல்லார் குலமில்லார் பொல்லார் தறுகட்பம்
இல்லார் பின் சென்ற நிலை

#111
வேட்டு அவாய்க் கேட்பர் விரைந்து ஓடி ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் கோட்டு இல்லா
ஓது-மின் ஓதி அடங்கு-மின் என்னும் சொல்
கூதற்குக் கூதிர் அனைத்து

#112
இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி
முறையின் நரம்பு எங்கும் யாத்து நிறைய
அவாப் பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
புகாச் சுருக்கில் பூட்டா விடும்

#113
ஆசையும் பாசமும் அன்பும் அகத்து அடக்கி
பூசிப் பொதிந்த புலால் உடம்பு ஊசல்
கயிறு அற்றால் போலக் கிடக்குமே கூற்றத்து
எயிறுற்று இடை முரிந்தக்கால்

#114
மறந்து ஒருவன் வாழும் இ மாயமாம் வாழ்க்கை
அறிந்து ஒருவன் வாழுமேல் இல்லை செறிந்து ஒருவன்
ஊற்றம் இறந்து உறுதிகொள்ளாக்கால் ஓ கொடிதே
கூற்றம் இடைகொடுத்த நாள்

#115
தோற்றமும் சம்பிரதம் துப்புரவும் சம்பிரதம்
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம் தோற்றம்
கடைப்பட்டவாறு அறிந்து கற்றறிந்தார் துஞ்சார்
படைப் பட்ட நாயகனே போன்று

#116
தெரிவு_இல் இளமையும் தீப் பிணியும் மூப்பும்
பிரிவும் துயிலும் உறீஇப் பருவந்து
பத்தெட்டுநாளைப் பயன் இலா வாழ்க்கைக்கு
வித்துக் குற்று உண்பார் பலர்

#117
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி என்று இ நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர் குறைக்கூடாச்
செல்வம் கிளை பொருள் காமம் என்று இ நான்கும்
பொல்லாப் பொறியறுக்கப்பட்டு

#118
மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடும் எல்லாம் சலம் இலவாய் நோக்கீர்
பருந்துக்கு இரை ஆம் இவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு

#119
நீக்க அரு நோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடு என்று ஐந்து களிறு உழக்கப் போக்க அரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்து எய்தும்
இன்பத்து இயல்பு அறியாதார்

#120
எக்காலும் சாதல் ஒருதலையே யான் உனக்குப்
புக்கில் நிறையத் தருகிலேன் மிக்க
அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
துறத்தல் மேல் சார்தல் தலை

#121
அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து
அங்கே ஒரு வண்ணம் கோடலால் என்றும்
அரங்கு ஆடு கூத்தனே போலும் உயிர்தான்
சுழன்றாடு தோற்றப் பிறப்பு

#122
இ காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை மெச்சாது
அலந்து தம் வாய் வந்த கூறும் அவரின்
விலங்குகள் நல்ல மிக

#123
எண்ணற்கு அரிய இடையூறு உடையதனைக்
கண்ணினால் கண்டும் கருதாதே புண்ணின் மேல்
வீக் கருவி பாய இருந்து அற்றால் மற்று அதன்-கண்
தீக் கருமம் சோரவிடல்

#124
நெடும் தூண் இரு காலா நீள் முதுகு தண்டாக்
கொடும் கோல் விலா என்பு கோலி உடங்கிய நல்
புன் தோலால் வேய்ந்த புலால் வாய்க் குரம்பையை
இன்புறுவர் ஏழையவர்

#125
என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா
ஒன்பது வாயிலும் ஊற்று அறாத் துன்பக்
குரம்பை உடையார் குடி போக்கு நோக்கிக்
கவர்ந்து உண்ணப் போந்த கழுகு

#126
ஒரு பாகன் ஊரும் களிறு ஐந்தும் நின்ற
இரு கால் நெடும் குரம்பை வீழின் தரு காலால்
பேர்த்து ஊன்றலாகாப் பெரும் துன்பம் கண்டாலும்
ஓர்த்து ஊன்றி நில்லாது உலகு

#127
நீத்து ஒழிந்த ஆறு ஐந்து அடக்கிப் பின் நிச்சயமே
வாய்த்து அமைந்த வாயில் பெண் ஆனையும் கூத்தற்கு
வாள் ஏறோடு ஓசை விளைநிலம் இவ் அல்லால்
கேளாய் உடன் வருவது இல்

#128
வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி மற்றவற்றின்
வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள்
பல் நோய் கவற்றப் பரிந்து குறை என்னை
அன்னோ அளித்து இவ் உலகு

#129
உடம்பும் கிளையும் பொருளும் பிறவும்
தொடர்ந்து பின் செல்லாமை கண்டும் அடங்கித்
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தம் கழிகின்ற நாள்

#130
போற்றியே போற்றியே என்று புதுச் செல்வம்
தோற்றியார்-கண் எல்லாம் தொண்டே போல் ஆற்றப்
பயிற்றிப்பயிற்றிப் பல உரைப்பது எல்லாம்
வயிற்றுப் பெருமான்-பொருட்டு

#131
புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்-கண்
தவா வினை வந்து அடையக் கண்டும் அவாவினைப்
பற்றுச்செய்து என்னை பயம் இன்றால் நல் நெஞ்சே
ஒற்றி உடம்பு ஓம்புதற்கு

#132
புழுப் போல் உவர்ப்பு ஊறிப் பொல்லாங்கு நாறும்
அழுக்கு உடம்பு-தன்னுள் வளர்ந்தாய் விழுத்து உமிழ்ந்து
இன்ன நடையாய் இறக்கும் வகையினை
நல் நெஞ்சே நாடாய் காண் நற்கு

#133
ஒழுக்கமிலன் ஆகி ஓர்த்துடையனேனும்
புழுப் பொதிந்த புண்ணில் கொடிதாம் கழுக்கு இரையை
ஓம்பின் மற்று என்னை உறுதிக்-கண் நில்லாக்கால்
தேம்பிவிடுதலே நன்று

#134
முடை உடை அங்கணம் நாள்-தோறும் உண்ட
கடை முறை வாய் போதரக் கண்டும் தடுமாற்றில்
சாவாப் பிறவா இச் சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு

#135
வயிறு நிறைக்குமேல் வாவின் மிக்கு ஊறிச்
செயிரிடைப் பாடு எய்துமாம் சீவன் வயிறும் ஓர்
பெற்றியால் ஆர்த்திப் பெரும் பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன்

#136
புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே
சலங்களைச் சாரா ஒழுகல் புலங்கள்
ஒறுக்கும் பருவத்து உசாத்துணையும் ஆகா
வெறுத்து நீ உண்டல் கடன்

#137
புகாப் பெருக ஊட்டின் புலன்கள் மிக்கு ஊறி
அவாப் பெருகி அற்றம் தருமால் புகாவும் ஓர்
பெற்றியான் ஊட்டிப் பெரும் பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன்

#138
ஒறுக்கிலேன் ஊர் பசை என்-கண் பிறரை
ஒறுக்கிற்பேன் என்று உரைப்பையாகில் கறுத்து எறிந்த
கல் கறித்துக் கல் கொண்டு எறிந்தாரைக் காய்கல்லாப்
பல் கழல் நாய் அன்னது உடைத்து

#139
உள்ளப் பெரும் குதிரை ஊர்ந்து வயப்படுத்திக்
கள்ளப் புலன் ஐந்தும் காப்பு அமைத்து வெள்ளப்
பிறவிக்-கண் நீத்தார் பெரும் குணத்தாரைத்
துறவித் துணை பெற்றக்கால்

#140
பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நெஞ்சே
அரிந்து என்னை ஆற்றவும் தின்னல் புரிந்து நீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
பூண்டேன் பொறியிலி போ

#141
தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்
பின்னைத் தான் எய்தா நலன் இல்லை தன்னைக்
குடி கெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவேல் செய்தல்
பிடி படுக்கப்பட்ட களிறு

#142
உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல்
கள் அவிழ் சோலையாம் காட்டு உளார் காட்டுள்ளும்
உள்ளம் அறப் பெறுகல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடுவூர் உளார்

#143
நின்னை அறப் பெறுகிற்கிலேன் நல் நெஞ்சே
பின்னை யான் யாரைப் பெறுகிற்பேன் நின்னை
அறப் பெறுகிற்பேனேல் பெற்றேன் மற்று ஈண்டே
துறக்கம் திறப்பது ஓர் தாழ்

#144
ஆதன் பெரும் களியாளன் அவனுக்குத்
தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர் தோழர்
வெறுப்பனவும் உண்டு எழுந்து போனக்கால் ஆதன்
இறுக்குமாம் உண்ட கடன்

#145
தன் ஒக்கும் தெய்வம் பிறிது இல்லை தான் தன்னைப்
பின்னை மனம் அறப் பெற்றானேல் என்னை
எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டு ஆங்கு
அருள்-கண்ணே நிற்பது அறிவு

#146
தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார்
விடு மாற்றம் தேர்ந்து அஞ்சித் துஞ்சார் தடுமாற்றம்
யாதும் அறியாரும் துஞ்சார் தம் ஐம்புலனும்
ஆரும் வகை யாதாம்-கொல் என்று

#147
ஆர்வில் பொறி ஐந்திற்கு ஆதி இரு வினையால்
தீர்வு இல நீ கோதாதி சேர்விக்கும் தீர்வு_இல்
பழி இன்மை எய்தின் பறையாத பாவம்
வழியும் வருதலும் உண்டு

#148
அலை புனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்-கண் நீர் நிலாது ஆகும் அலைவின்
புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே
மலம் கடிவு ஆளா தவர்க்கு

#149
பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்
பற்றின்-கண் நில்லாது அறம் செய்க மற்று அது
பொன்றாப் புகழ் நிறுத்திப் போய்ப் பிறந்த ஊர் நாடிக்
கன்றுடைத் தாய் போல் வரும்

#150
பேறு அழிவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று
ஆறு உள அந்நாள் அமைந்தன தேறி
அவையவை வந்தால் அழுங்காது விம்மாது
இவையிவை என்று உணரற்பாற்று

#151
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி

#152
செய் வினை அல்லால் சிறந்தார் பிறர் இல்லை
பொய் வினை மற்றைப் பொருள் எல்லாம் மெய் வினவில்
தாய் யார் மனைவி யார் தந்தை யார் மக்கள் ஆர்
நீ யார் நினை வாழி நெஞ்சு

#153
உயிர் திகிரியாக உடம்பு மண்ணாகச்
செயிர் கொள் வினை குயவனாகச் செயிர் தீரா
எண் அரு நல் யாக்கைக் கலம் வனையும் மற்று அதனுள்
எண்ணரு நோய் துன்பம் அவர்க்கு

#154
முற்பிறப்பில் தாம் செய்த புண்ணியத்தின் நல்லது ஓர்
இல் பிறந்து இன்புறாநின்றவர் இப் பிறப்பே
இன்னும் கருதுமேல் ஏதம் கடிந்து அறத்தை
முன்னி முயன்று ஒழுகற்பாற்று

#155
அம்மைத் தாம் செய்த அறத்தினை வரு பயனை
இம்மைத் துய்த்து இன்புறாநின்றவர் உம்மைக்கு
அறம் செய்யாது ஐம்புலனும் ஆற்றல் நல் ஆக்
கறந்து உண்டு அஃது ஓம்பாமையாம்

#156
இறந்த பிறப்பில் தாம் செய்த வினையைப்
பிறந்த பிறப்பால் அறிக பிறந்திருந்து
செய்யும் வினையால் அறிக இனிப் பிறந்து
எய்தும் வினையின் பயன்

#157
தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தா
ராய் வந்து தோன்றி அருவினையால் மாய்வதன்-கண்
மேலைப் பிறப்பும் இது ஆனால் மற்று என்னை
கூலிக்கு அழுத குறை

#158
வினை காத்து வந்த விருந்து ஓம்பி நின்றான்
மனை வாழ்க்கை நன்று தவத்தின் புனை கோதை
மெல் இயல் நல்லாளும் நல்லள் விருந்து ஓம்பிச்
சொல் எதிர் சொல்லாள் எனில்

#159
கொண்டான் குறிப்பு ஒழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை விண்டு
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி
உறுப்போடு உணர்வுடையாள் பெண்

#160
மடப்பதூஉம் மக்கள் பெறுவதூஉம் பெண் பால்
முடிப்பதூஉம் எல்லாரும் செய்வர் படைத்ததனால்
இட்டு உண்டு இல்வாழ்க்கை புரிந்து தாம் நல்லறத்தே
நிற்பாரே பெண்டிர் என்பார்

#161
வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்றுச் செய்து ஆங்கு எதிர் உரையாது
ஏத்திப் பணியுமேல் இல்லாளை ஆண்மகன்
போற்றிப் புனையும் புரிந்து

#162
தலைமகனில் தீர்ந்து உறைதல் தான் பிறர் இல் சேர்தல்
நிலைமை_இல் தீப்பெண்டிர்ச் சேர்தல் கலன் அணிந்து
வேற்றூர்ப் புகுதல் விழாக் காண்டல் நோன்பு இடுதல்
கோல் தொடியாள் கோள் அழியும் ஆறு

#163
அயலூர் அவன் போக அம் மஞ்சள் ஆடிக்
கயல் ஏர் கண் ஆர எழுதிப் புயல் ஐம்பால்
வண்டு ஓச்சி நின்று உலாம் வாள் ஏர் தடம் கண்ணாள்
தண்டு ஓச்சிப் பின் செல்லும் கூற்று

#164
மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரும் பூண்டு உய்ப்பின் அல்லால் ஒருவரால்
இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று

#165
பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன் தாரம்
நிச்சலும் நோக்காது பொய் ஒரீஇ நிச்சலும்
கொல்லாமை காத்துக் கொடுத்து உண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை என்னும் இயல்பு

#166
விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான்
பெரும் தக்கவரையும் பேணான் பிரிந்து போய்க்
கல்லான் கடுவினை மேற்கொண்டு ஒழுகுமேல்
இல்வாழ்க்கை என்பது இருள்

#167
அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டு உண்ணா மாட்சி உடையவர் அட்டு உண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை

#168
நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு
பிறங்கு இரு கோட்டொடு பன்றியும் வாழும்
அறம் செய்து வாழ்வதே வாழ்க்கை மற்று எல்லாம்
வெறும் பேழை தாழ்க்கொளீஇ அற்று

#169
உப்புக் குவட்டின் மிசை இருந்து உண்ணினும்
இட்டு உணாக் காலத்துக் கூராதாம் தொக்க
உடம்பும் பொருளும் உடையான் ஓர் நன்மை
தொடங்காக்கால் என்ன பயன்

#170
பெற்ற நாள் பெற்ற நாள் பெற்றதனுள் ஆற்றுவது ஒன்று
இற்றை நாள் ஈத்து உண்டு இனிது ஒழுகல் சுற்றும்
இதனில் இலேசுடை காணோம் அதனை
முதல் நின்று இடை தெரியுங்கால்

#171
கொடுத்துக் கொணர்ந்த அறம் செல்வம் கொடாது
விடுத்துத் தம் வீறு அழிதல் கண்டார் கொடுப்பதன்-கண்
ஆற்ற முடியாது எனினும் தாம் ஆற்றுவார்
மாற்றார் மறுமை காண்பார்

#172
பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாள் செறிந்து
விட்டு ஒழிவது அல்லால் அவ் வெம் கூற்றம் ஒட்டிக்
கலாய்க் கொடுமை செய்யாது கண்டது பாத்துண்டல்
புலால் குடிலால் ஆய பயன்

#173
தண்டாமம் பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்று
ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப பண்பாளா
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல் கற்று
ஆய்தல் அறிவார் தொழில்

#174
நீத்தாற்றின் நின்ற நிலையினோர் உண்டக்கால்
ஈத்து ஆற்றினாரும் உயப்போவார் நீத்தாற்றின்
பெற்றிப் புணை_அன்னார் பேர்த்து உண்ணா விட்டக்கால்
எற்றான் உயப்போம் உலகு

#175
கொடுத்து உய்யப்போமாறு கொள்வான் குணத்தில்
வடுத்தீர்ந்தார் உண்ணில் பெறலாம் கொடுத்தாரைக்
கொண்டு உய்யப்போவார் குணமுடையார் அல்லாதார்
உண்டு ஈத்து வீழ்வார் கிழக்கு

#176
அடங்கினார்க்கு ஈதல் தலையே அடங்காது
அடங்கினார்க்கு ஈதல் இடையே நுடங்கு_இடையாய்
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃது என்ப
தோல்பாவைக் கூத்தினுள் போர்

#177
வாழ்நாள் உடம்புவலி வனப்புச் செல்கதியும்
தூ மாண் நினைவு ஒழுக்கம் காட்சியும் தாம் மாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண் கொடையோடு
ஒன்றும் கொடை ஒப்பது இல்

#178
பரப்பு நீர் வையகத்துப் பல் உயிர்கட்கு எல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச் செல் கதிப் பயனும்
தம்மைத் தலைப்படுத்தலால்

#179
செல்வத்தைப் பெற்றார் சினம் கடிந்து செவ்வியராய்ப்
பல் கிளையும் வாடாமல் பாத்துண்டு நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பது ஓர் வைப்பு

#180
ஒன்றாக நல்லது உயிர் ஓம்பல் ஆங்கு அதன் பின்
நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் என்று இரண்டும்
குன்றாப் புகழோன் வருக என்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து

#181
சோரப் பசிக்குமேல் சோற்றூர்திப் பாகன் மற்று
ஈரப்படினும் அது ஊரான் ஆரக்
கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல

#182
ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவரும் கொள்ளாதவாறு எண்ணி மேவு அரிய
மற்றுடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை
பற்று விடுதல் இலர்

#183
இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலி மரீஇப்
பட்ட வழங்காத பான்மையார் நட்ட
சுரிகையாற்கானும் சுலாக்கோலாற்கானும்
சொரிவதாம் ஆ போல் சுரந்து

#184
கொடுப்பான் பசை சார்ந்து கொள்வான் குணத்தில்
கொடுக்கப்படுதல் அமையின் அடுத்தடுத்துச்
சென்று ஆங்கு அடைந்து களைவினை என்பரே
வென்றார் விளங்க விரித்து

#185
கொடுப்பான் வினை அல்லன் கொள்வானும் அல்லன்
கொடுக்கப்படும் பொருளும் அன்றால் அடுத்தடுத்து
நல்லவை யாதாம்-கொல் நாடி உரையாய் நீ
நல்லவர் நாப்பண் நயந்து

#186
அறிவு மிகப் பெருக்கி ஆங்காரம் நீக்கிப்
பொறி ஐந்தும் வெல்லும் வாய் போற்றிச் செறிவினான்
மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-
தன்னை உயக்கொள்வது

#187
சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ
ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ தேறி
உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு

#188
பாம்பு உண்ட நீர் எல்லாம் நஞ்சாம் பசு உண்ட
தேம்படு தெள் நீர் அமுதமாம் ஓம்பற்கு
ஒளியாம் உயர்ந்தார்-கண் ஞானம் அது போல்
களியாம் கடையாயார்-மாட்டு

#189
கெடுக்கப்படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப்படுவது அருளே அடுத்தடுத்து
உண்ணப்படுவது நல் ஞானம் எப்பொழுதும்
எண்ணப்படுவது வீடு

#190
இந்தியக் குஞ்சரத்தை ஞான இரும் கயிற்றால்
சிந்தனைத் தூண் பூட்டிச் சேர்த்தியே பந்திப்பர்
இம்மைப் புகழும் இனிச் செல் கதிப் பயனும்
தம்மைத் தலைப்படுத்துவார்

#191
உணர்ச்சி அச்சாக உசா வண்டியாகப்
புணர்ச்சிப் புலன் ஐந்தும் பூட்டி உணர்ந்து அதனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடையன் ஆகுமேல்
பேர்கின்றதாகும் பிறப்பு

#192
தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக்குறுதி உயிர் ஓம்பி வாழ்தல்
அறிவிற்கறிவாவது எண்ணின் மறுபிறப்பு
மற்று ஈண்டு வாரா நெறி

#193
உயிர் வித்தி ஊன் விளைத்துக் கூற்று உண்ணும் வாழ்க்கைச்
செயிர் வித்திச் சீலம் தின்று என்னை செயிரினை
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம்
கூற்றம் குறுகா இடம்

#194
இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின்
நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை நெய் பயந்த
பால் போல் ஒழுக்கத்தவரே பரிவில்லா
மேலுலகம் எய்துபவர்

#195
ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டுநெறி என்பார் நீர் புகப்
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழி வியக்குமாறு

#196
அருளால் அறம் வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள் வளரும் நாளும் தெருளா
விழைவின்பத்தால் வளரும் காமம் அக் காம
விழைவின்மையால் வளரும் வீடு

#197
பண் அமை யாழ் குழல் கீதம் என்று இன்னவை
நண்ணி நயப்ப செவி அல்ல திண்ணிதின்
வெட்டெனச் சொல் நீக்கி விண்ணின்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி

#198
புண்ணாகப் போழ்ந்து புலால் பழிப்பத் தாம் வளர்ந்து
வண்ணப் பூண் பெய்வ செவி அல்ல நுண்ணூல்
அறவுரை கேட்டு உணர்ந்து அஞ்ஞானம் நீக்கி
மறவுரை விட்ட செவி

#199
கண்டவர் காமுறூஉம் காமரு சீர்க் காதில்
குண்டலம் பெய்வ செவி அல்ல கொண்டு உலகில்
மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றிச்
சூன்று சுவைப்ப செவி

#200
பொருள் எனப் போழ்ந்து அகன்று பொன் மணி போன்று எங்கும்
இருள் அறக் காண்பன கண் அல்ல மருள் அறப்
பொய்க் காட்சி நீக்கிப் பொரு_அறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண்

#201
சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும்
மோந்து இன்புறுவன மூக்கு அல்ல வேந்தின்
அலங்கு சிங்காதனத்து அண்ணல் அடிக் கீழ்
இலங்கு இதழ் மோப்பதாம் மூக்கு

#202
கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளி மதுரம்
உப்பு இரதங்கொள்வன நா அல்ல தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டு வந்து எப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா

#203
கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றிப் பிறர் மனையில்
செல்வதூஉம் செய்வன கால் அல்ல தொல்லைப்
பிறவி தணிக்கும் பெரும் தவர்-பால் சென்று
அறவுரை கேட்பிப்ப கால்

#204
குற்றம் குறைத்துக் குறைவு இன்றி மூவுலகின்
அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி முற்ற
உணர்ந்தானைப் பாடாத நா அல்ல அல்ல
சிறந்தான் தாள் சேரா தலை

#205
உடன் பிறந்த மூவர் ஒருவனைச் சேவித்து
இடங்கொண்டு சின்னாள் இருப்பர் இடம் கொண்ட
இல்லத்து இருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன் பின் சிறந்து

#206
கட்டெனச் சொல்லியக்கால் கல் பிளப்பில் தீயே போல்
பொட்டப் பொடிக்கும் குரோதத்தை வெட்டெனக்
காய்த்து வரக் கண்டக்கால் காக்கும் திறலாரே
மோக்க முடிவு எய்துவார்

#207
நல்வினை நால் கால் விலங்கு நவை செய்யும்
கொல் வினை அஞ்சிக் குயக்கலம் நல்ல
உறுதியும் அல்லவும் நாள் பேர் மரப் பேர்
இறுதியில் இன்ப நெறி

#208
பறவை அரும் பொருள் இன்சொல் முதிரை
உறுதிக்-கண் ஊன் உண் விலங்கு சிறியன
நீர்ப்புள் குயக்கலம் புல் அவை ஊர்வது
பேர்த்து ஈண்டு வாரா நெறி

#209
உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே
நட்கப்படும் எழுத்தும் அத்துணையே ஒட்டி
இழுக்கா எழுத்து ஒன்று இமிழ் கடல் தண் சேர்ப்ப
விழுச்சார்வு வேண்டுபவர்க்கு

#210
முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்துத்
தப்பிய பின்றை தம் பேர் ஒழித்து அப்பால்
பெறு பெயரைக் காயப் பெறுபவேல் வையத்து
உறும் அவனை எல்லாம் ஒருங்கு

#211
ஆற்றாமை ஊர அறிவு இன்றி யாதொன்றும்
தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் மாற்றி
மனையின் அகன்று போய் மா பெரும் காட்டில்
நனை_இல் உடம்பு இடுதல் நன்று

#212
நல்லறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும்
கல்வி என் தோழன் துணிவு எம்பி அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ பொருளாய
இச் சுற்றத்தாரில் எனக்கு

#213
மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை
ஒக்க உடன்பிறந்தார் என்று இவர்கள் மிக்க
கடும் பகையாக உழலும் உயிர்தான்
நெடும் தடுமாற்றத்துள் நின்று

#214
அளற்றகத்துத் தாமரையாய் அம் மலர் ஈன்றாங்கு
அளற்று உடம்பாம் எனினும் நன்றாம் அளற்று உடம்பின்
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுதலான்

#215
தேற்றம் இல்லாத ஒருவனைப் பின் நின்று ஆங்கு
ஆற்ற நலிவர் இரு_நால்வர் ஆற்றவும்
நல்லார் போல் ஐவர் பகை வளர்ப்பார் மூவரால்
செல்லும் அவன் பின் சிறந்து

#216
அருவினையும் ஆற்றுள் வரு பயனும் ஆக்கும்
இரு வினையும் நின்ற விளைவும் திரிவு இன்றிக்
கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டு அதரும் நாட்டு அதரும்
கொண்டு உரைப்பான் நிற்றல் குதர்

#217
ஆதியின் தொல் சீர் அறநெறிச்சாரத்தை
ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் சோதி
பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது

#218
எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என் செய்யும்
பொய் நூல் அவற்றின் பொருள் தெரிந்து மெய் நூல்
அறநெறிச்சாரம் அறிந்தான் வீடு எய்தும்
திற நெறிச் சாரம் தெளிந்து

#219
அவன்-கொல் இவன்-கொல் என்று ஐயப்படாதே
சிவன்-கண்ணே செய்ம்-மின்கள் சிந்தை சிவன்தானும்
நின்று கால் சீக்கும் நிழல் திகழும் பிண்டிக் கீழ்
வென்றிச் சீர் முக்குடையான் வேந்து

#220
முனைப்பாடியானைச் சூர் முக்குடைச் செல்வன்-
தனைப் பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
வினைப்பாடு கட்டு அழித்து வீட்டு இன்பம் நல்கி
நினைப் பாடி வந்தோர்க்கும் நீம் ஈக என்றான்
நிறைவிளக்குப் போல் இருந்து
** பிற்சேர்க்கை

#221
அருள் வட்டமாக அறிவு கதிராய்ப்
பொருள் வட்டம் எல்லாம் விளக்கி இருள் வட்டம்
மாற்றும் அறிவான ஞான வளர் ஒளியான்
வேற்று இலிங்கம் தோன்றும் வென்று

#222
மாமாங்கம் ஆடல் மணல் குவித்தல் கல் இடுதல்
தாம் ஓங்கு உயர் வரை மேல் சா வீழ்தல் காமம்கொண்டு
ஆடோடு எருமை அறுத்தல் இவை உலக
மூடம் என உணரற்பாற்று

#223
சக்கரன் நான்முகன் சங்கரன் பூரணன்
புத்தன் கபிலன் கணாதரன் என்று எத்திறத்து
ஏகாந்த வாதிகள் எண் கேட்ட ஆதன் போல்
ஆகாதாம் ஆதன் துணிவு

#224
கடம்பன்தான் தன்னொடு காம்படு தோள் வள்ளி
உடம்பினும் கூட்டம் அது உவந்து கேட்பர்
கொடுத்து உண்-மின் கொண்டு ஒழுக்கம் காணு-மின் என்பார் சொல்
அடுப்பு ஏற்றி ஆமை தீந்து அற்று

#225
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்று இவை
தன்னால் முடித்து அறான் இல்லையேல் பொன்னே போல்
ஆவட்டம் செய்த அணிகலம் தேயகில் போல்
ஆய் வட்டம் நில்லாது உடம்பு

#226
நால் இறகில் கண் இலதே எனினும் நல் பொருளின்
பேர் இறையான் உண் பெயரில் பின் சிறக்குமோரும்
இரு கண் உளதே எனினும் அதனை
வெருண்டு விலங்காமல் கா
** அறநெறிச்சாரம் முற்றும்
**