சோமேசர் முதுமொழி வெண்பா — சிவஞான முனிவர்

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


@0 காப்பு

#1
மது வளரும் பூம் சடில மல்கு சோமேசர்
முதுமொழிவெண்பாவை மொழியப் பொதுளும்
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீடு அளிக்கும்
கடம் பொழி முக்கண் களிறு

@1 நூல்

#1
** கடவுள் வாழ்த்து
சீர் கொள் இறை ஒன்று உண்டு அத் தெய்வம் நீ என்று ஒப்பால்
சோர்வு_இல் அடையால் தெளிந்தோம் சோமேசா ஓரில்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

#2
** வான்சிறப்பு
நேய புகழ்த்துணையார் நீராட்டும் கை தளர்ந்து உன்
தூய முடி மேல் வீழ்ந்தார் சோமேசா ஆயுங்கால்
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்

#3
** நீத்தார் பெருமை
அத்திர வாக்கால் புத்தன் சென்னி அறுத்தார் சண்பைச்
சுத்தனார்-தம் அன்பர் சோமேசா நித்தம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்

#4
** அறன்வலியுறுத்தல்
தக்கனார் வேள்வித் தவத்தை மேற்கொண்டிருந்தும்
தொக்க அறம் ஆயிற்றோ சோமேசா மிக்க
அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

#5
** இல்வாழ்க்கை
இல் வாழ் தருமன் இயல் சந்திரசேனன்
தொல் வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா நல்ல
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

#6
** வாழ்கைத்துணை நலம்
மூவர் தடுப்பவும் கொண்மூவைப் பணிகொண்டாள்
தூய அனுசூயை சோமேசா மேவு பிற
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை

#7
** புதல்வரைப் பெறுதல்
பாடினர் மூ ஆண்டினில் சம்பந்தர் என யாவோரும்
சூடும் மகிழ்ச்சி மெய்யே சோமேசா நாடி இடில்
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது
** அன்புடைமை

#8
தோன்றா வகை கரந்தும் தோன்றலைக் கண்டு உள் நெகிழ்ந்து
தோன்ற நின்றான் முன்பு நளன் சோமேசா தோன்றுகின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும்

#9
** விருந்தோம்பல்
பொன்னனையாள் அன்பருக்கே போனகம் ஈந்து உன் அருளால்
சொன்னம் மிகப் பெற்றாளே சோமேசா பன்னில்
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

#10
** இனிவை கூறல்
இன்சொல் இராமன் இயம்ப இரேணுகை சேய்
துன்பம் மொழியே புகன்றான் சோமேசா அன்புடைய
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன்சொல் வழங்குவது

#11
** செய்நன்றி அறிதல்
பன்னும் அசதி நன்றி பாராட்டிக் கோவை நூல்
சொன்னாளே ஔவை முன்பு சோமேசா மன்னாத்
தினைத் துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்

#12
** நடுவு நிலைமை
வேதியன் ஆளாமே என்று எள்ளாது வெண்ணைநல்லூர்ச்
சோதி வழக்கே புகழ்ந்தார் சோமேசா ஓதில்
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால்
கோடாமை சான்றோர்க்கு அணி

#13
** அடக்கமுடைமை
எல்லாம் உணர்ந்தும் வியாதன் இயம்பிய அச்
சொல்லாலே நா அயர்ந்தான் சோமேசா வல்லமையால்
யா காவார் ஆயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு

#14
** ஓழுக்கமுடைமை
தீயனவே சொல்லும் சிசுபாலன் முன்பு கண்ணன்
தூயது அலாச் சொல் உரையான் சோமேசா ஆயின்
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்

#15
** பிறனில் விழையாமை
ஆன்ற எழில் சீதையை வேட்டு ஐ_நான்கு திண் கரத்தான்
தோன்று பழி மாறிலனே சோமேசா ஏன்ற
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல் இறப்பான்-கண்

#16
** பொறையுடைமை
ஒட்டலன் செய் தீமைக்கு ஒறாது நமர் என்று உரைத்தார்
சுட்டிய சீர் மெய்ப்பொருளார் சோமேசா முட்ட
ஓறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

#17
** அழுக்காறாமை
அன்பரைக் கண்டு அழுக்காறு ஆம் சமணர் தம் வாயால்
துன்பமுற்றார் வெம் கழுவில் சோமேசா வன்பாம்
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது

#18
** வெஃகாமை
நின் அபிடேகப் பழத்தை நீள் மறையோர்க்கு ஈந்த இறை
துன்னு குடியோடு அழிந்தான் சோமேசா பன்னில்
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

#19
** புறங்கூறாமை
கூனி இராமன் பிரிந்து போமாறே கூறினளே
தூ நறும் பூ கொன்றை அணி சோமேசா தானே
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்

#20
** பயனில சொல்லாமை
சேக்கிழார் சிந்தாமணிப் பயிற்சி தீது எனவே
தூக்கி உபதேசித்தார் சோமேசா நோக்கின்
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல்

#21
** தீவினையச்சம்
குற்று ஒருவர்க் கூறை கொண்டு கொன்றது இம்மையே கூடல்
சொற்றது கைகண்டோமே சோமேசா அற்றான்
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு

#22
** ஒப்புரவறிதல்
பண்டை நினைவு எண்ணி நொந்தார் பாகம் செய் மாறராம்
தொண்டர் மனைவியர் சோமேசா கண்டோம்
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
செய்யாது அமைகலா ஆறு

#23
** ஈகை
மீள் என்று உரைப்பளவும் மிக்கு உவகை பெற்றிலர் வன்
தோளர் இயற்பகையார் சோமேசா நீள் உலகில்
இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

#24
** புகழ்
போசன் கவிஞருக்கே போதப் பரிந்து அளித்துத்
தூசு இலாக் கீர்த்தி கொண்டான் சோமேசா ஆசையுடன்
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

#25
** அருளுடைமை
மூர்த்தி-பால் வன்கண்மை மூண்ட வடுகரசன்
சூர்த் திறந்தான் உய்ந்தானோ சோமேசா கூர்த்த
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது

#26
** புலால் மறுத்தல்
மச்சம் சுமந்து உய்ப்ப வானோர் பணிகொண்டான்
துச்சனாம் சூரபன்மன் சோமேசா நிச்சயமே
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

#27
** தவம்
ஏர் மண நல்லூர்ச் சுடருள் யாரும் அணுகச் சிலர்தாம்
தூர நெறி நின்று அயர்ந்தார் சோமேசா ஓரில்
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது

#28
** கூடாவொழுக்கம்
மாயன் அவ் வேடம்கொண்டே வன் சலந்தரன்_கிழத்தி
தூய நலம் கவர்ந்தான் சோமேசா ஆயின்
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று

#29
** கள்ளாமை
நாய் வால் களவினால் ஞாலம் இகழப்பட்டான்
தூயனாம் காதி_மகன் சோமேசா ஆயதனால்
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு

#30
** வாய்மை
பிள்ளை உடன் உண்ணப் பேசி அழைத்தார் அன்பு
துள்ளு சிறுத்தொண்டர் சோமேசா உள்ளுங்கால்
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

#31
** வெகுளாமை
பல்லவர் கோன் வந்து பணியக் கருணைசெய்தார்
தொல்லை நெறி வாகீசர் சோமேசா கொல்ல
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

#32
** இன்னா செய்யாமை
பிள்ளையார் வைப்பினில் தீப் பெய்வித்த மீனவன் தீத்
துள்ளு வெப்பு நோய் உழந்தான் சோமேசா எள்ளிப்
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்

#33
** கொல்லாமை
வேந்து மகன் தேர்க்கால் விடல் அஞ்சி மந்திரிதான்
சோர்ந்து தனது ஆவி விட்டான் சோமேசா ஆய்ந்து உணர்ந்தோர்
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை

#34
** நிலையாமை
ஆக்கையும் ஆயிரத்தெட்டு அண்டங்களும் நிலையாத்
தூக்கி அழிந்தான் சூரன் சோமேசா நோக்கியிடில்
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை

#35
** துறவு
கோவணம் ஒன்று இச்சிப்பக் கூடினவே பந்தம் எல்லாம்
தூவணம் சேர் மேனியாய் சோமேசா மேவில்
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து

#36
** மெய்யுணர்தல்
காரிகையாரைப் பொன்னைக் காட்டவும் காமாதி மும்மைச்
சோர்வு இழந்து உய்ந்தார் அரசர் சோமேசா ஓருங்கால்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்

#37
** அவாவறுத்தல்
தாய் கருவில் வாழ் குழவிதாம் எல்லாம் வேண்டுவது
தூய பிறவாமை ஒன்றே சோமேசா ஆயதனால்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

#38
** ஊழ்
முன்னர் அமண் மதத்து மூண்டு அரசர் பின் சைவம்
துன்னியதும் என் வியப்போ சோமேசா உன்னுங்கால்
பேதைப் படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்றக் கடை

#39
** இறைமாட்சி
பார் சீதை சீலம் பழித்து உரைத்தும் காகுத்தன்
சோர்வுற முன் சீறிலனே சோமேசா தேரின்
செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவிகைக் கீழ் தங்கும் உலகு

#40
** கல்வி
சம்பந்தர் நாவரசர்-பால் கண்டோம் சார்ந்து உவப்பதும்
பிரிவின் உள்ளுவதும் சோமேசா நம்பி
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

#41
** கல்லாமை
மெய்த்த திருவள்ளுவனார் வென்று உயர்ந்தார் கல்வி நலம்
துய்த்த சங்கத்தார் தாழ்ந்தார் சோமேசா உய்த்து அறியின்
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு

#42
** கேள்வி
ஊனுக்கு ஊன் என்னும் உரை கண்டு உவந்தனரே
தூ நல் சீர்க் கண்ணப்பர் சோமேசா ஆனதனால்
கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை

#43
** அறிவுடைமை
அன்று அமணர் தீவைப்ப அஞ்சியது என் என்னன்-மின்
துன்றிய சீர்ச் சம்பந்தர் சோமேசா நன்றேயாம்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

#44
** குற்றங்கடிதல்
ஈர்_ஐந்து தலையான் அணுகிய பின் ஏகலுற்றுச்
சூரம் தொலைந்தானே சோமேசா ஓரின்
வரும் முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்

#45
** பெரியோரைத் துணைகோடல்
எத்திறமும் ஏயர் கோன் நட்பு ஆமாறு எண்ணினரே
சுத்த நெறி ஆரூரர் சோமேசா வைத்த
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

#46
** சிற்றினஞ் சேராமை
அற்கா அமண் மொழி கேட்டு அல்லலுற்றான் மாறன் இல்லாள்
சொல்கேட்டு நோய் தீர்ந்தான் சோமேசா தற்காக்கும்
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல்

#47
** தெரிந்து செயல்வகை
சானகியை இச்சித்துத் தன் உயிரும் போக்கினனே
தூ நீர் இலங்கையர் கோன் சோமேசா ஆனதனால்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார்

#48
** வலியறிதல்
சக்கரத்தை ஏற்பன் சலந்தரன் நான் என்று எடுத்துத்
துக்கமுற்று வீடினனே சோமேசா ஒக்கும்
உடைத் தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர்

#49
** காலமறிதல்
வீமன் அவை முன் மனையை வேட்டானைக் கண்டும் ஒரு
தூ மொழியேனும் புகலான் சோமேசா ஆம் என்றே
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து

#50
** இடனறிதல்
காட்டு முயலும் கதக் கரியைக் கொல்லுமால்
தோட்டு அலர் நீர்க் கச்சியினுள் சோமேசா நாட்டி இடின்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றிச் செயின்

#51
** தெரிந்து தெளிதல்
தேர் அரும் ஆனந்தனை முன் தேறிப் பழி பூண்டான்
சூரியசன்மா என்பான் சோமேசா தாரணி மேல்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

#52
** தெரிந்து வினையாடல்
தேசிகனாக் கொண்ட சுரர் இறைக்குத் தீங்கு இழைத்தான்
தூசு ஆர் துவட்டாச் சேய் சோமேசா பேசில்
எனை வகையால் தேறியக்-கண்ணும் வினை வகையான்
வேறாகும் மாந்தர் பலர்

#53
** சுற்றந்தழால்
ஆர் வீடணனோடு அளவளாவாது அரக்கன்
சோர்வு இலா வாழ்வு இழந்தான் சோமேசா நேரே
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளாக்
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று

#54
** பொச்சாவாமை
முப்புரத்தோர் வேவ உடன் இருந்த மூவரே
துப்பினால் கண்டறிந்தார் சோமேசா வெப்பால்
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

#55
** செங்கோன்மை
மைந்தன் எனாமல் அசமஞ்சன்-தனை வெறுத்தான்
சுந்தரச் செங்கோல் சகரன் சோமேசா முந்தும்
குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில்

#56
** கொடுங்கோன்மை
ஐவர்_இல்லாள் அழுத அன்றே கண்டு ஏக்குற்றார்
துய்ய கங்கை_சேய் முதலோர் சோமேசா மெய்யே ஆம்
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

#57
** வெருவந்த செய்யாமை
வெய்து உரையால் அக்கணமே வீந்தான் சிசுபாலன்
தொய்யில் முலை உமை பால் சோமேசா உய்யாக்
கடும்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும்

#58
** கண்ணோட்டம்
மாலான் முதல் இகழ்ந்த வானவர் தீங்கும் பொறுத்துத்
தோலா விடம் உண்டாய் சோமேசா சால
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

#59
** ஓற்றாடல்
வேதன் இல்லாள் வீந்த திறம் மீனவற்கு நீ தெரித்தாய்
சோதி பழி அஞ்சும் சோமேசா பூதலத்தின்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல் அறிதல் வேந்தன் தொழில்

#60
** ஊக்கமுடைமை
வெம் கரியைப் பாகரை முன் வீட்டினார் ஏகராய்த்
துங்க எறிபத்தர் சோமேசா அங்கம்
பரியது கூர்ம் கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்

#61
** மடியின்மை
பொன்மலையின் வேங்கை பொறித்து மீண்டான் சென்னி
தொன்மை வலி ஆண்மையினால் சோமேசா பன்னின்
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

#62
** ஆள்வினையுடைமை
கூற்றுவர் மூவேந்தர் நிலமும் கைக்கொண்டாரே
தோற்றும் தாளாண்மையினால் சோமேசா சாற்றும்
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
இன்மை புகுத்திவிடும்

#63
** இடுக்கண்ணழியாமை
என்றும் ஒரு மீனே வந்து இன்மை மிகவும் தளரார்
துன்று ஏர் அதிபத்தர் சோமேசா மன்ற
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்

#64
** அமைச்சு
கால்_சேய் கதிர்_சேயைக் காத்து அரசன் நட்பு உதவித்
தூல முடி சூட்டுவித்தான் சோமேசா சாலப்
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு

#65
** சொல்வன்மை
நித்தியத்துவம் கேட்பான் நித்திரை என்றே மயக்கம்
துய்த்தனனாம் கும்பகன்னன் சோமேசா எத்திறத்தும்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு

#66
** வினைத்தூய்மை
தக்கன் உனை எள்ளி மகம் சாடும் போது எண்ணியெண்ணித்
துக்கமுற்றான் ஆவது என்னே சோமேசா எக்காலும்
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று

#67
** வினைத்திட்பம்
செவ்வேளைப் பாலன் என எள்ளித் திறல் அழிந்தான்
துவ்வாத வெம் சூரன் சோமேசா அவ்வாறு
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

#68
** வினைச்செயல்வகை
வெள்ளி வெற்பை எண்ணாது எடுப்பன் என வீறு எய்தித்
துள்ளி அழிந்தான் அரக்கன் சோமேசா மெள்ள
முடிவும் இடையூறும் முற்றி ஆங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

#69
** தூது
தன் துயரம் நோக்கான் தனை விடுத்தோர்க்கே உறுதி
துன்ற மொழிந்தான் நிடதன் சோமேசா என்றும்
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது

#70
** மன்னரைச் சேர்ந்தொழுகல்
மாமன் நான் என்னும் மதத்தால் உனை இகழ்ந்து
தோமுற்றார் தக்கனார் சோமேசா ஆமே
பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

#71
** குறிப்பறிதல்
அப்பூதியார் மறைத்தும் வாகீசர் அக் கரவைத்
துப்பான் அறிந்தனரே சோமேசா இப் புவியில்
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்

#72
** அவையறிதல்
ஓர் சங்கத்தார் கல்வி ஊமைச்சேய்க்குக் காட்டிச்
சோர்வு நலம் தேர்ந்தனரே சோமேசா ஓருங்கால்
கற்று அறிந்தார்க் கல்வி விளங்கும் கசடு அறச்
சொல் தெரிதல் வல்லாரகத்து

#73
** அவையஞ்சாமை
வாழ் வாதவூரர் வளவன் அவை முன் எதிர்த்துச்
சூழ் தேரரை வென்றார் சோமேசா தாழ்வு அகல
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு

#74
** நாடு
மேல் வளம் எல்லாம் அமைந்தும் வீரமகேந்திரம்தான்
தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா ஞாலம் மிசை
ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு

#75
** அரண்
வல் அதிகன்-தன் அரணம் வாள் வளவன் சேனை செலத்
தொல்லை வலி மாண்டதே சோமேசா நல்ல
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்க்-கண் இல்லது அரண்

#76
** பொருள் செயல்வகை
உக்கிரனார் மேருவை வென்று ஒண் நிதியம் பெற்றமையால்
தொக்க குடி காத்தனர் காண் சோமேசா மிக்கு உயர்ந்த
குன்று ஏறி யானைப் போர் கண்டு அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாகச் செய்வான் வினை

#77
** படைமாட்சி
நீ நகைப்ப முப்புரமும் நீறு ஆகி மாய்ந்ததே
தூ நகையாள் பால் அமரும் சோமேசா வானின்
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலிப் பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

#78
** படைச்செருக்கு
மன்மதன் நின்னோடு எதிர்த்து வீறு அழிந்து மாண்டாலும்
துன்னு புகழே பெற்றான் சோமேசா புல் நெருங்கும்
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது

#79
** நட்பு
வாக்கரசர் பிள்ளாய் என வலித்து மாற்றலுற்றார்
தூக்கு பிள்ளையார் செலவைச் சோமேசா நோக்கி
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண்
மேற்சென்று இடித்தல்-பொருட்டு

#80
** நட்பாராய்தல்
போற்றும் சுசீலன் புயபெலனை நீத்து அகன்றான்
தோற்று இறைவி தும்மிடவும் சோமேசா ஏற்றதே
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

#81
** பழைமை
இல்லாளைப் பற்றி மூழ்கு என்றிடவும் அன்பு குன்றார்
தொல்லை நெறி நீலகண்டர் சோமேசா ஒல்லாது
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர்

#82
** தீநட்பு
ஆம் காரியம் தடுத்த அங்கனை சொல்கேட்டு இறந்தான்
தூங்காத் தசரதன்தான் சோமேசா ஈங்கு இதனால்
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல்

#83
** கூடாநட்பு
தாய் தீண்டத் தூசு உடுத்துச் சார் எனும் சொல் தீது என்றாள்
தூய சுயோதனற்குச் சோமேசா வாயதனால்
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும்

#84
** பேதைமை
வன் சமணர்-தம் பிரிவால் வாகீசர்க்கு இன்பம் இன்றித்
துன்பம் என்பது இல்லையோ சோமேசா நன்காம்
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல்

#85
** புல்லறிவாண்மை
இல்லாள் மறுப்பவும் சென்று ஏகிச் சலந்தரன்தான்
தொல் வலி போய் மாண்டனனே சோமேசா வல்லமையால்
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர்
போஒம் அளவும் ஓர் நோய்

#86
** இகல்
எத்திறத்தும் கெட்டான் இகலான் சுயோதனன் சீர்
துய்த்தனன் நட்பால் தருமன் சோமேசா மொய்த்த
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம்
நன்னயம் என்னும் செருக்கு

#87
** பகைமாட்சி
ஏனையார்-பால் வெற்றிகொண்டான் நின்னோடு எதிர்த்து இறந்தான்
தூ நறும் பூ வாளியான் சோமேசா மானம்
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை

#88
** பகைதிறந் தெளிதல்
நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும்
சுந்தரம் சேர் தென்குளத்தூர்ச் சோமேசா சந்ததமும்
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை

#89
** உட்பகை
மாற்றார் முடியும் வளமையும் கொண்டு ஏக நலம்
தோற்றான் வழுதி மகன் சோமேசா ஆற்றல் இலா
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு

#90
** பெரியாரைப் பிழையாமை
கொன் படைகள் நீறு ஆகக் கோசிகனார் சாபத்தால்
துன்பமுற்றார் நால் வேந்தர் சோமேசா இன்பு உதவும்
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

#91
** பெண்வழிச் சேரல்
கற்பின்மை இல்லாள்-பால் கண்டு மயலுற்று அழிந்தான்
சொல் புண்டரீகாக்கன் சோமேசா பொற்பு எண்ணி
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

#92
** வரைவின் மகளிர்
வேண்டும் உருப்பசியைப் பார்த்தன் வெறுத்தனனே
தூண்டு மறைப் பரியாய் சோமேசா யாண்டும்
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர்

#93
** கள்ளுண்ணாமை
தக்கன்-பால் ஞானத் ததீசி உபதேசம் எல்லாம்
தொக்கதனால் ஆனது என்னே சோமேசா மிக்குக்
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்
குளித்தானைத் தீத் துரீஇ அற்று

#94
** சூது
முன் பணயத்தால் பின்னும் மூண்டு இழந்தார் சூதரொடு
சொற்படும் சூதாடினோர் சோமேசா அற்பமாம்
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு

#95
** மருந்து
நல்ல திலகவதியார் மொழியை நம்பி வெம் நோய்
சொல்லரசர் தீர்ந்து உய்ந்தார் சோமேசா புல்லிய
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்

#96
** குடிமை
மங்கலியம் விற்றும் வழாது பணி செய்துவந்தார்
துங்க மறை தேர் கலயர் சோமேசா அங்கண்
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று

#97
** மானம்
அச்சுவத்தாமாப் பட்டான் என்ன அமர் துறந்தான்
துச்சில் துரோணன் என்பான் சோமேசா நச்சும்
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

#98
** பெருமை
தண்டியடிகள் இரு தாள் இணை பேணாது அழிந்தார்
தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா மிண்டும்
சிறியார் உணர்ச்சியுள் இல்லைப் பெரியாரைப்
பேணிக் கொள்வோம் என்னும் நோக்கு

#99
** சான்றாண்மை
வன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறை மீட்டான்
தொன்மை நெறித் தருமன் சோமேசா பல் முறையும்
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

#100
** பண்புடைமை
உன் பணிக்கு என்று ஓதி நல்காச் செல்வம் உத்தியுறத்
துன்பமுற்றார் நால் வணிகர் சோமேசா அன்பு மிகும்
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்து அற்று

#101
** நன்றியில் செல்வம்
எல்லாம் மறையவர்க்கு ஈந்தே வறியன் போல் ஆனான்
சொல் ஆரும் கீர்த்தி ரகு சோமேசா நல்லதே
சீர் உடைச் செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்து அனையது உடைத்து

#102
** நாணுடைமை
புண்ணொடு உயிர் வாழ நாணி உயிர் போக்கினான்
துண்ணெனவே வாலி முனம் சோமேசா எண்ணி இடின்
நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப்-பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர்

#103
** குடிச்செயல்வகை
மல் திருதராட்டிரன் சந்தானம் எலாம் மாய்ந்ததே
சுற்று நீர் தென்குளத்தூர்ச் சோமேசா பற்றும்
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி

#104
** உழவு
வேள்வித் தொழிற்கும் உழு தொழில் முன் வேண்டுமால்
சூழி சூழ் தென்குளத்தூர்ச் சோமேசா வாழும்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை

#105
** நல்குரவு
நல் தருமன் வெற்றியினை நாடி விராடன் எதிர்
சொற்ற மொழி சோர்ந்ததே சோமேசா கற்றறிவால்
நல் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும்

#106
** இரவு
கஞ்சாறர் சோபனப் பெண் கூந்தல் கடிது அளிக்கத்
துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா நெஞ்சின்
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து

#107
** இரவச்சம்
எண்ணெய் இரப்பு அஞ்சி உடலே வருத்தித் தீபம் இட்டார்
துண்ணென் கணம்புல்லர் சோமேசா கண்ணியிடில்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

#108
** கயமை
ஏற்ற துரோணனை அன்று எள்ளித் துருபதன் பின்
தோற்று விசயர்க்கு அளித்தான் சோமேசா போற்றிடினும்
ஈர்ம் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு

#109
** தகையணங்குறுத்தல்
வாய்ந்த தமயந்தி உரு மாண் நலம் கண்டு இன்புற்றான்
தோய்ந்த புகழ் ஆளும் நளன் சோமேசா ஆய்ந்து உரைக்கின்
உண்டார்-கண் அல்லது அடு நறாக் காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று

#110
** குறிப்பறிதல்
காங்கேயன் வேண்ட வெறுத்து உரைத்தாள் கானவர்_மின்
தூங்கா வளக் குளத்தூர் சோமேசா ஆங்கண்
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும்

#111
** புணர்ச்சி மகிழ்தல்
மெய் தவத்தைக் காசிபனும் விட்டு ஒழிந்து மாயை-பால்
சுத்த மனம் வைத்தானே சோமேசா இத் தலத்தில்
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு

#112
** நலம்புனைந்துரைத்தல்
ஈன்றான் திலோத்தமையை இச்சிக்கில் ஆங்கு அவள் மெய்
தோன்றும் எழில் என் சொல்வேன் சோமேசா ஆன்ற
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேய்த் தோளவட்கு

#113
** காதற் சிறப்புரைத்தல்
கான் நடந்தும் சீதை கலப்பால் களித்தான் பின் அயர்ந்தான்
தூ நீர் அயோத்தியர்க் கோன் சோமேசா ஆனதனால்
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து

#114
** நாணுத்துறவுரைத்தல்
காமம் மிக உழந்தும் தூதைக் கடிந்துவிட்டாள்
சோமன் நுதல் பரவை சோமேசா ஆமே
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணின் பெரும் தக்கது இல்

#115
** அலரறிவுறுத்தல்
ஓர் நாள் அகலியையை வேட்டு இன்றும் உம்பர்_இறை
சோராப் பழி பூண்டான் சோமேசா ஆராயின்
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டு அற்று

#116
** பிரிவாற்றாமை
வாழ்வு இழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்கு நொந்தான்
சூழ்ச்சியை முன் பிரிந்து சோமேசா வீழ்வார்கட்கு
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனிலும்
இன்னாது இனியார்ப் பிரிவு

#117
** படர்மெலிந்திரங்கல்
இன்பமுற்றான் மாயை தோள் தோய்ந்து பின் எண் மடங்கு
துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா அன்புடையார்க்கு
இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது

#118
** கண்விதுப்பழிதல்
தாதை அன்றித் தானே துச்சந்தனைச் சேர்ந்து இன்னலுற்றாள்
சூது_இல் சகுந்தலைதான் சோமேசா ஓதின்
கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இது நகத் தக்கது உடைத்து

#119
** பசப்புறு பருவல்
கேழ்வரைச் சேடியர் சொல் கீழ்மைக்கு இயற்படும் சொல்
சூழ்ப மின்னார் துன்பத்தும் சோமேசா தாழ்வு_இல்
பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்

#120
** தனிப்படர்மிகுதி
பல் முநிவர் பன்னியர்கள் பண்டு உன்னைக் காமுறவும்
துன்னி அருள்செய்திலையே சோமேசா அன்னதே
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல்கொள்ளாக் கடை

#121
** நினைந்தவர் புலம்பல்
தன்னையே உன்னும் தமயந்தி மாதை நளன்
துன்னார் போல் நீத்திருந்தான் சோமேசா அன்னதே
தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல்

#122
** கனவுநிலை யுரைத்தல்
அல்லமனை மாயை கனவில் அணைந்ததனால்
சொல் அரிய இன்பமுற்றாள் சோமேசா நல்ல
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது

#123
** பொழுது கண்டிரங்கல்
வானவர்கோன் காமநோய் மாலை வர மிக்கதே
தூ நீர்ப் புளினத்தின் சோமேசா ஆனதே
காலை அரும்பிப் பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய்

#124
** உறுப்பு நலனழிதல்
ஓதா நாள் ஓது கலை ஒத்து இளைத்தாள் சீதை என்றான்
சூது ஆரா வான்மீகி சோமேசா கோது_இல்
பணை நீங்கிப் பைம் தொடி சோரும் துணை நீங்கித்
தொல் கவின் வாடிய தோள்

#125
** நெஞ்சொடு கிளத்தல்
அன்பன் துறப்பவும் நாளாயினி தேடித்
துன்பம் தலைக்கொண்டாள் சோமேசா முன்பே
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல்

#126
** நிறையழிதல்
கோல் தொடி விற்பாய் போன்று கூடல் வணிக மின்னார்
தோற்று நிறை அழித்தாய் சோமேசா சாற்றுங்கால்
பல் மாயக் கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை

#127
** அவர்வயின் விதும்பல்
சந்திரசேனன் வரவு நோக்கி உயிர் தாங்கினளால்
சுந்தரச் சீமந்தினிதான் சோமேசா முந்தும்
உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன்

#128
** குறிப்பறிவுறுத்தல்
சங்கிலி-பால் ஆரூரர் ஊழி கணம்தான் ஆகத்
துங்கம் மிகும் அன்புவைத்தார் சோமேசா பொங்கப்
பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து

#129
** புணர்ச்சி விதும்பல்
யோசனை கந்தியினைக் காண்டலும் பேர் ஓகைகொண்டான்
தூசு அணையாச் சந்தனுத்தான் சோமேசா நேசமுடன்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு

#130
** நெஞ்சொடு புலத்தல்
விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றும் தேடி நொந்தாள்
தொக்க உருப்பசி மின் சோமேசா ஒக்கும்
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது

#131
** புலவி
கொண்ட பரவை கொடும் புலவி எல்லாம் வன்
தொண்டர்க்குப் பேரழகே சோமேசா தண்டா
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத் தகை
பூ அன்ன கண்ணார் அகத்து

#132
** புலவி நுணுக்கம்
சீவகன் மஞ்சரியைத் தாழ்த்து உரைப்பச் சீறினளே
தூ வாய் குணமாலை சோமேசா ஆவகையே
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று

#133
** ஊடலுவகை
காயும் புலவியில் வன்தொண்டர் கடைப்பட்டுத்
தோயும் இன்பின் மேலானார் சோமேசா ஆயுங்கால்
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலில் காணப்படும்
** இரங்கேசவெண்பா என்ற சூடாமணி முற்றிற்று
**