வெற்றி வேற்கை (நறுந்தொகை) – அதிவீரராம பாண்டியர்

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


@0 முன்னுரை
** கடவுள் வாழ்த்து

#1
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே
** நூல் பயன்

#2
வெற்றிவேற்கை வீரராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை-தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே
** வாழ்த்து

#3
வாழிய நலனே வாழிய நலனே

@1 நூல்

#1
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

#2
கல்விக்கு அழகு கசடற மொழிதல்

#3
செல்வர்க்கு அழகு செழும் கிளை தாங்குதல்

#4
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்

#5
மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை

#6
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்

#7
உழவர்க்கு அழகு ஏர் உழுது ஊண் விரும்பல்

#8
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்

#9
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை

#10
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்

#11
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்

#12
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்

#13
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்

#14
அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்

#15
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை

#16
தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை
வானுற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவற்கு இருக்க நிழல் ஆகாதே

#17
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறு மீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணி தேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே

#18
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

#19
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

#20
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

#21
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

#22
கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

#23
அடினும் ஆவின் பால் தன் சுவை குன்றாது

#24
சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

#25
அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது

#26
புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது

#27
கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது

#28
அடினும் பால் பெய்து கைப்பு
அறாது பேய்ச் சுரைக்காய்

#29
ஊட்டினும் பல் விரை உள்ளி கமழாதே

#30
ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே

#31
நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசி போல் வேர்கொள்ளாதே

#32
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

#33
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்
பெரியோராயின் பொறுப்பது கடனே

#34
சிறியோர் பெரும் பிழை செய்தனராயின்
பெரியோர் அப் பிழை பொறுத்தலும் அரிதே

#35
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

#36
கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே

#37
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலனாயின் கீழ் இருப்பவனே

#38
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக் குடிக் கற்றோரை மேல் வருக என்பர்

#39
அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும்

#40
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக் குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று

#41
யானைக்கு இல்லை தானமும் தருமமும்

#42
பூனைக்கு இல்லை தவமும் தயையும்

#43
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்

#44
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்

#45
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்

#46
அச்சமும் நாணமும் அறிவில்லோர்க்கு இல்லை

#47
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை

#48
கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை

#49
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

#50
குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்

#51
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக் கூழ்ச் சாலை அடையினும் அடைவர்

#52
அறத்து இடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்

#53
குன்றத்தனை இருநிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்

#54
எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு
கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும்

#55
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப் பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெல் பொலி நெடு நகர் ஆயினும் ஆகும்

#56
மண அணி அணிந்த மகளிர் ஆங்கே
பிண அணி அணிந்து தம் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடியாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்

#57
இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே

#58
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே

#59
நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே

#60
தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறு கண் மூங்கில்கோற்கு அஞ்சும்மே

#61
குன்றுடை நெடும் காடூடே வாழினும்
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சும்மே

#62
ஆரையாம் பள்ளத்தூடே வாழினும்
தேரை பாம்புக்கு மிக அஞ்சும்மே

#63
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
கடும் புலி வாழும் காடு நன்றே

#64
சான்றோர் இல்லாத் தொல் பதி இருத்தலின்
தேன் தேர் குறவர் தேயம் நன்றே

#65
காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே

#66
குடி அலைத்து இறந்து வெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே

#67
முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே

#68
வித்தும் ஏரும் உளவாய் இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே

#69
தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றிப்
பின்பு அவள் பாராப் பேதையும் பதரே

#70
தன் மனையாளைத் தன் மனை இருத்திப்
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே

#71
தன் ஆயுதமும் தன் கையில் பொருளும்
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே

#72
வாய் பறையாகவும் நாக் கடிப்பாகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேள்-மின்

#73
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே

#74
மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே

#75
இருவர்-தம் சொல்லையும் எழு தரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையானாயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வது ஓர் வாள் ஆகும்மே

#76
பழியா வருவது மொழியாது ஒழிவது

#77
சுழியா வரு புனல் இழியாது ஒழிவது

#78
துணையோடு அல்லது நெடு வழி போகேல்

#79
புணை மீது அல்லது நெடும் புனல் ஏகேல்

#80
எழில் ஆர் முலை வரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே

#81
வழியே ஏகுக வழியே மீளுக

#82
இவை காண் உலகிற்கு இயலாமாறே
** வெற்றி வேற்கை (நறுந்தொகை) முற்றும்
**