நீதி சூடாமணி (இரங்கேச வெண்பா) – பிறசை சாந்தக் கவிராயர்

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


@0 முன்னுரை
** கடவுள் வணக்கம்

#1
சீர் கொண்ட காவிரி சூழ் தென் அரங்கத்து எம்பிரான்
பார் கொண்ட தாளைப் பரவியே ஏர் கொண்ட
ஓங்கு புகழ் வள்ளுவனார் ஓது குறள் மூதுரையாப்
பாங்குபெறச் சொல்வேன் பரிந்து
** நூற் பெயர்

#2
சொற்ற அதிகாரம்-தோறும் ஒரு குறளில்
உற்ற பொருளுக்கு உதாரணமா முற்று கதை
யால் நீலவண்ணன் அடி பரவலால் இ நூல்
மா நீதி சூடாமணி
** அவையடக்கம்

#3
பிறைசை வரு சாந்தப் பெயரவன் சொல் வெண்பா
குறை உளது நீக்கிக் குறையா நிறை மொழியாச்
சொல் தமிழோர் கொள்வர் சுடரோனால் வெண் பிறைதான்
உற்ற மதி ஆவதனை ஓர்ந்து

@1 நூல்
** அறத்துப்பால்
** பாயிர இயல்

#1
** கடவுள் வாழ்த்து
சொன்ன கம்பத்தே மடங்கல் தோன்றுதலால் அன்பர் உளத்து
இன் அமுதம் ஆகும் இரங்கேசா மன்னும்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

#2
** வான் சிறப்பு
கொண்டல் உறையூர்க் கச்சிக் கோ நகரில் செய் குணத்தால்
எண் திசையும் போற்றும் இரங்கேசா மண்டிக்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

#3
** நீத்தார் பெருமை
மன்னன் மகமும் காதி மைந்தன் தனை அடைந்தோன்
இன் உயிரும் காத்தான் இரங்கேசா சொன்னால்
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து

#4
** அறன்வலி யுரைத்தல்
கானக் குரங்கு எழலால் கங்கை சுதன் முதலோர்
ஈனப்படலால் இரங்கேசா ஆன
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு

#5
** இல்லற இயல் இல்வாழ்க்கை
பத்துடன் நான்கு இல்லம் பரகதி கொண்டு ஏகினான்
இத் தலம் மேல் ஆள்வான் இரங்கேசா நித்தம்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

#6
** வாழ்க்கைத் துணைநலம்
மாண்டவியார் சாபத்தை வல் இருளால் மாற்றினாள்
ஈண்டு ஓர் மடந்தை இரங்கேசா நீண்ட புகழ்ப்
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு என்னும்
திண்மை உண்டாகப் பெறின்

#7
** புதல்வரைப் பெறுதல்
வேதம் புகழ் நதியை மேதினியில் தந்து குலத்து
ஏதம் கெடுத்தான் இரங்கேசா ஓதும்
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப்
பண்பு உடை மக்கள் பெறின்

#8
** அன்புடைமை
வெற்பின் சிறகு அரிய வெந் என்பு அளித்து முனி
இப் புவியைக் காத்தான் இரங்கேசா நல் புகழாம்
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

#9
** விருந்தோம்பல்
தேசு பெறு மாறன் தெளித்த முளை அமுது இட்டு
ஈசனுடன் போந்தான் இரங்கேசா பேசுங்கால்
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு

#10
** இனியவை கூறல்
வன் சமர் நட்பால் வென்று மா நிலம் ஆளத் தருமன்
இன்சொல்லால் பெற்றான் இரங்கேசா பொன் செய்
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

#11
** செய்நன்றி அறிதல்
நாடிச் சிறைக் கருடன் நாகக் கொடும் கணையை
ஈடழித்தான் அன்றோ இரங்கேசா நாடுங்கால்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

#12
** நடுவு நிலைமை
வேத விதி வீமா விலங்கிற்கு உடல் பாதி
ஈதல் அழகு என்றான் இரங்கேசா ஓதுங்கால்
நன்றே தரினும் நடு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல்

#13
** அடக்கமுடைமை
ஆன்ற சபையில் அடங்காச் சிசுபாலன்
ஏன்று இரந்தான் அன்றோ இரங்கேசா சான்றோர்கள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊஉங்கு இல்லை உயிர்க்கு

#14
** ஒழுக்கமுடைமை
வேட வான்மீகர் பின்பு வேதியரின் மேல் ஆனார்
ஏடு அவிழ் தார் சூடும் இரங்கேசா நாடில்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும்

#15
** பிறனில் விழையாமை
அம்பிகையை நோக்கி அளகேசன் கண் இழந்தான்
இம்பர் பரவும் இரங்கேசா நம்பிப்
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு

#16
** பொறையுடைமை
முந்தும் மரம் தரித்த மூர்க்கன் சொல்கேட்டும் அவன்
எந்தை பிரான் என்றான் இரங்கேசா கொந்தி
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

#17
** அழுக்காறாமை
வெள்ளி கொடுத்தல் விலக்கி விழி தோற்று உலகில்
எள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா உள்ளத்து
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது

#18
** வெஃகாமை
முன்னோனைப் போரில் முடுக்கி விமானத்தை
என்னோ கைக்கொண்டான் இரங்கேசா அன்னோ
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின்ற குடி பொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

#19
** புறங்கூறாமை
தக்க துரியோதனன்-பால் சார்ந்த சகுனியைப் போல்
இக் குவலயத்தில் இரங்கேசா மிக்குப்
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்

#20
** பயனில சொல்லாமை
வேந்தை வதிட்டன் வியத்தல் பழுது என்ற முனி
ஏந்து தவம் தோற்றான் இரங்கேசா ஆய்ந்தக்கால்
சீ£ர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மையுடையார் சொலின்

#21
**தீவினை அச்சம்
காளமுனி பாண்டவர் மேல் ஏவும் கடி விழுங்க
ஏளிதம் ஆனான் இரங்கேசா நாளும்தான்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்

#22
** ஒப்புரவறிதல்
அந்தணர் மேன்மை அறியாமல் சர்ப்ப என்றே
இந்திரன் பாம்பு ஆனான் இரங்கேசா முந்தவே
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து

#23
** ஈகை
அங்கியும் குண்டலமும் ஆகண்டலர்க்கு அளித்தான்
இங்கிதமாக் கன்னன் இரங்கேசா மங்கியே
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை

#24
** புகழ்
மும்மை உலகும் முசுகுந்தனைத் துதிக்கும்
எம்மை ஆட்கொண்ட இரங்கேசா செம்மையாத்
தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

#25
** துறவற இயல் அருளுடைமை
வஞ்சப் புறவினுடன் வான் துலையில் ஏறினான்
இன்சொல் சிவி முன் இரங்கேசா எஞ்சாமல்
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை

#26
** புலான் மறுத்தல்
அந்தணனைக் கன்மாடபாதன் அருந்தினான்
இந்த உலகத்து இரங்கேசா வந்த
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு

#27
** தவம்
வேந்து அந்தணர் குலத்து மேல் ஆகிய தகைமை
ஏந்து தவத்து ஏய்ந்தான் இரங்கேசா மாந்தர்க்கு
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும்

#28
** கூடா வொழுக்கம்
சந்யாசியாய் விஜயன் தார்_குழலைக் கொண்டு அகன்றான்
இ நானிலம் போற்றும் இரங்கேசா சொன்னால்
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று

#29
** கள்ளாமை
உத்தங்கன் ஓலை ஒளித்த நாகக் குலங்கள்
இற்ற புகையால் இரங்கேசா மற்று உலகில்
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

#30
** வாய்மை
மூவர் அரிச்சந்திரற்கு முன் நின்ற காட்சி போல்
ஏவர் பெற்றார் மேனாள் இரங்கேசா பூவில்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய்வாரின் தலை

#31
** வெகுளாமை
தாக்கி நிமி வதிட்டர் சாபத்தால் தம் உடல் விட்டு
ஏக்கமுற்றார் அன்றோ இரங்கேசா நோக்கினால்
செல்லா இடத்துச் சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற

#32
** இன்னா செய்யாமை
பாந்தள் முனி மேல் படுத்த பரிச்சித்தன் தான்
ஏந்து துன்பம் உற்றன் இரங்கேசா மாந்தர்
பிறர்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்

#33
** கொல்லாமை
சொல் ஆர் முனிக்கு இறுதி சூழ் கார்த்தவீரன் குலம்
எல்லாம் இறந்தது இரங்கேசா கொல்லவே
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை

#34
** நிலையாமை
அட்டகோணத்தன் உடல் அத்திரம் என்றான் திசைகள்
எட்டும் பரவும் இரங்கேசா மட்டினால்
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை

#35
** துறவு
பீடு பெறு பட்டினத்துப்பிள்ளையைப் போலே துறவார்க்கு
ஈடு தருமோ இரங்கேசா நீடு உலகில்
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

#36
** மெய்யுணர்தல்
கர்ப்பத்திலே சுகனார் கேடு_இல் பொருளைக் குறித்தார்
இப் புதுமைக்கு அன்பு ஆம் இரங்கேசா உற்பத்தி
ஐயுணர்வு எய்தியக்-கண்ணும் பயன் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு

#37
** அவா அறுத்தல்
தேசம் சொல் பத்ரகிரி சிந்தையின் மூவாசை விட்டான்
ஈசன் பரவும் இரங்கேசா பாச
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும்

#38
** ஊழ்
சிந்துபதி தந்தையொடு தேர் விசயனால் இறந்தான்
இந்து தவழ் இஞ்சி இரங்கேசா முந்தி வரும்
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும்

#39
** பொருட்பால் – அரசியல் – இறைமாட்சி
ஒன்றி மறித்தான் உரோணி சகடைச் செளரி
என்றும் புகாமல் இரங்கேசா நன்று
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்

#40
** கல்வி
மல்லல் வியாகரணம் மாருதி கற்கக் கருதி
எல்லவன் பின் போந்தான் இரங்கேசா நல்ல
ஒருமைக்-கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

#41
** கல்லாமை
ஞானசம்பந்தருடன் நன்றாய்ச் சமணர் எதிர்த்து
ஈனமுற்றார் அன்றோ இரங்கேசா ஆன
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டி கொளல்

#42
** கேள்வி
பாகவதம் கேட்டுப் பரிச்சித்தன் முத்தி பெற்றான்
ஏக உருவாம் இரங்கேசா சோக
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்

#43
** அறிவுடைமை
சீதரனைப் பார்த்தன் அன்று சேர்ந்தான் அரவு_உயர்த்தோன்
யாதவரைச் சேர்ந்தான் இரங்கேசா ஓதில்
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர்

#44
** குற்றங் கடிதல்
கை அரிந்தான் மாறன் கதவு இடித்த குற்றத்தால்
எய்யும் சிலைக் கை இரங்கேசா பையத்
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழி நாணுவார்

#45
** பெரியாரைத் துணைக்கோடல்
யோகமுனி ராகவனை உற்று அரக்கர் போர் களைந்தே
யாகம் முடித்தான் இரங்கேசா ஆகையால்
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்

#46
** சிற்றினஞ் சேராமை
துன்னு சகுனி கன்னன் சொல் கேட்டு அரவு_உயர்த்தோன்
என்ன பயன் பெற்றான் இரங்கேசா மன்னிய
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்துவிடும்

#47
** தெரிந்து செயல்வகை
வீடணன் வன்மம் விளம்ப இலங்கைநகர்
ஈடு அழிந்தது அன்றோ இரங்கேசா கூடத்
தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும் பொருள் யாதொன்றும் இல்

#48
** வலி அறிதல்
பைதல் எனக் கருதிப் பார்க்கவராமன் சிலையோடு
எய்து தவம் தோற்றான் இரங்கேசா வையத்து
உடைத் தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர்

#49
** காலம் அறிதல்
ஆண்டு பதின்மூன்று அரவு_உயர்த்தோன் செய்த எல்லாம்
ஈண்டு பொறுத்து ஆண்டான் இரங்கேசா வேண்டிய
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர்

#50
** இடனறிதல்
சார்ந்து பறை கீறிச் சராசந்தன்-தன் உடலை
ஈர்ந்து வென்றான் வீமன் இரங்கேசா தேர்ந்தக்கால்
எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன் அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

#51
** தெரிந்து தெளிதல்
கன்னன் தெளிந்து ஆசான் காதலனை ஐயமுற்றான்
இன்னல் பொலிந்தான் இரங்கேசா முன்னமே
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

#52
** தெரிந்து விளையாடல்
சல்லியனைத் தேருக்குச் சாரதியாய்க் கொண்டதனால்
எல்லாவன்_சேய் தோற்றான் இரங்கேசா சொல்லில்
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல்

#53
** சுற்றந்தழால்
வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர் அரக்கு
இல் உற்றும் உய்ந்தார் இரங்கேசா நல்ல
விருப்பு அறாச் சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும்

#54
** பொச்சாவாமை
தண் ஆர் சடை முடியைத் தக்கன் இழந்தான் அரனை
எண்ணாமல் அன்றோ இரங்கேசா மண்ணோர்
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

#55
** செங்கோன்மை
கண் கொண்டான் பொன்னிக் கரை கட்ட வாரானை
எண் கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின்

#56
** கொடுங்கோன்மை
துன்று புவிக்கு இடும்பை சூழ்ந்து புரவேந்தர்
இன்றி எறிந்தார் இரங்கேசா கன்றியே
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

#57
** வெருவந்த செய்யாமை
தாடகை-தன் மைந்தர் தவ முனியை அச்சுறுத்தி
ஈடு அரக்கர் ஆனார் இரங்கேசா நாடி
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

#58
** கண்ணோட்டம்
சொல்லுக என்று அங்கதனைத் தூது ஏவி மாதை விடல்
இல்லை அவன் என்றான் இரங்கேசா மெல்ல
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

#59
** ஒற்றாடல்
மேகநாதன் செய்த வேள்வி-தனை ஒற்றினால்
ஏகி அழித்து உய்ந்தார் இரங்கேசா சேகரித்த
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொளக் கிடந்தது இல்

#60
** ஊக்கமுடைமை
வீசு புகழ் விசயன் வில் தழும்பு சென்னியின் மேல்
ஈசன் தரித்தான் இரங்கேசா ஆசையால்
ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை

#61
** மடியின்மை
துஞ்சு விழிக் கும்பகன்னன் துண்டம் செவி இழந்தும்
எஞ்சுதலை உற்றான் இரங்கேசா விஞ்சும்
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும்

#62
** ஆள்வினை யுடைமை
செய்து சிவ பூசை சிரஞ்சீவி ஆம் அபயம்
எய்தினன் மார்க்கண்டன் இரங்கேசா நொய்தாக
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்

#63
** இடுக்கண் அழியாமை
விற்ற மனையாளை வெட்டுதலும் உற்ற துயர்
இற்றது மன்னற்கு இரங்கேசா அற்று உலகில்
இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு

#64
** அமைச்சியல் – அமைச்சு
மானவன் மால் தேவர் வனசரராம் மாதை விடாய்
ஈனம் உறும் என்றான் இரங்கேசா ஞானத்து
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன்

#65
** சொல்வன்மை
சோழன் சிவாற்பரச் சொல் தோற்றமைதான் இந்த உலகு
எழும் அறிந்த இரங்கேசா தாழாமல்
சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து

#66
** வினைத் தூய்மை
தன் மகிணன் தோற்றாள் தரணி முழுதும் கைகை
என் மகற்கு நல்கு என்று இரங்கேசா நன்மை
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

#67
** வினைத்திட்பம்
ஆர்க்கும் கடல் நீர் அருந்த ஒரு கரத்தில்
ஏற்க அடங்கிற்று இரங்கேசா பார்க்கும்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

#68
** வினை செயல்வகை
தொட்டது எரிப்போன் சுடர் முடி மேல் அங்கை வைப்பித்
திட்டு அவனைச் செற்றாய் இரங்கேசா முட்ட
வினையான் வினை ஆக்கிக் கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று

#69
** தூது
அக்கன் முதல் அரக்கர் ஆவி-தனை வாங்கி ஊர்
எக்கியனுக்கு ஈந்தான் இரங்கேசா மிக்க
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது

#70
** மன்னரைச் சேர்ந்தொழுகல்
அட்சன் நிதியோற்கு அபசாரம் செய்ததனால்
எட்சன் பிரிந்தான் இரங்கேசா பட்சம்
பழையம் எனக் கருதி பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

#71
** குறிப்பறிதல்
பார்வை கண்டு இராமன் பரன் வில் ஒடித்து அணங்கை
ஏர்வையாக் கொண்டான் இரங்கேசா நீர்மையொடும்
ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்

#72
** அவை அறிதல்
தேவர் குழாத்தினிடைத் தென்-பால் அகத்தியனை
ஏவின் நிகர் என்றான் இரங்கேசா பூவில்
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்

#73
** அவை அஞ்சாமை
ஆன்ற சங்கர் போற்ற ஒன்றை ஐ_இரண்டா மாநிலத்தார்க்கு
ஈன்றவரின் சொன்னார் இரங்கேசா தோன்றவே
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செலச் சொல்லுவார்

#74
** அங்க இயல் – நாடு
சீரிது ஆம் எண்ணம் உற்ற தேசத்தில் தென் திருக் கா
வேரி சூழ் சோணாடு இரங்கேசா ஆரப்
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

#75
** அரண்
சிந்து இடை ஏழு மதில் சேர்ந்த இலங்கைநகர்
எந்த வகை போயது இரங்கேசா முந்தும்
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்க்-கண் நில்லாது அரண்

#76
** பொருள் செயல்வகை
நட்டுவன் ஆம் பற்குணன்தான் நாடு ஆளக் கண்டு திசை
எட்டும் பணிந்தது இரங்கேசா கிட்டு பொருள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

#77
** படை மாட்சி
மொய் கொள் கடல் போலும் மூல பலம் மடிய
எய்து வென்றது ஓர் வில் இரங்கேசா வையத்து
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலிப் பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

#78
** படைச் செருக்கு
மார்பத்து அழுந்து கணை வாங்கி விடுத்தான் கரங்கள்
ஈர்_பத்தன் மைந்தன் இரங்கேசா ஆர்வத்தால்
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும்

#79
** நட்பு
வாசவன் தட்சன் மகம் புகாவாறு உற்றான்
ஈசன் அயன் போற்று இரங்கேசா நேசன்
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

#80
** நட்பாராய்தல்
தேசு பெறும் மார்த்தாண்டன் செல்வன் முடி சூடி இலங்
கேசனை வென்றான் இரங்கேசா மாசில்
குடிப் பிறந்து தன்-கண் பழி நாணுவானைக்
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு

#81
** பழைமை
தானவர் வேந்தைச் சடாயு பொருது இறந்தான்
ஏன உருவாம் இரங்கேசா மாநிலத்தில்
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்-கண் நின்றார் தொடர்பு

#82
** நட்பு
மாய மாரீசன் மடிந்தோன் கவுசிகன்தான்
ஏய தவம் உற்றான் இரங்கேசா ஆயதனால்
பேதை பெரும் கெழீ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

#83
** கூடாநட்பு
சார்ந்து திதி கர்ப்பம் சதகிருது ஏழ் கண்டமா
ஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா சேர்ந்தார் போல்
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான்

#84
** பேதைமை
மாதா பிதாவை மதியாமலே சிறையில்
ஏதாக வைத்தான் இரங்கேசா மேதினியில்
ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்றக் கடை

#85
** புல்லறிவாண்மை
தாதை சிலை ஒடிப்பத் தான் மொழிந்தான் தீதாக
ஈது அடையார் செய்யார் இரங்கேசா ஓதில்
அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

#86
** இகல்
சொன்ன நிறத்தான் சுதனே அரும் பகையாய்
இன் உயிரைக் கொன்றான் இரங்கேசா மன்னும்
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு

#87
** பகைமாட்சி
சித்திரசேனன் கையில் சிக்கினான் மன்னவர் மன்
இத் தரணி போற்றும் இரங்கேசா சுத்த
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது

#88
** பகைத்திறந் தெரிதல்
தெவ்வை இளந்தை என்று செப்பியே விக்கிரமன்
எவ்வம் மிக உற்றான் இரங்கேசா வவ்வி
இளைதாக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து

#89
** உட்பகை
இவ் உலகை ஆளாது இராமனைக் கான் போக்கினாள்
எவ்வ மனக் கூனி இரங்கேசா அவ்வியம் சேர்
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு

#90
** பெரியாரைப் பிழையாமை
சொல் வல் அகத்தியர்க்குச் சூழ்ச்சிசெய்த வாதாவி
வில்வலனும் மாய்ந்தார் இரங்கேசா மல் வல்ல
கூற்றத்தைக் கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

#91
** பெண்வழிச் சேரல்
சந்தநு வேந்து ஏழு தனையர் உயிர் இழந்தான்
இந்து நுதல் கங்கை இரங்கேசா அந்தோ
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டாப் பொருளும் அது

#92
** வரைவின் மகளிர்
தொண்டரடிப்பொடியைத் தோள் இறுக வீக்குதலால்
எண் திசையும் போற்றும் இரங்கேசா கண்டிருந்தும்
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கிப்
புன் நலம் பாரிப்பார் தோள்

#93
** கள்ளுண்ணாமை
தக்க குரு மைந்தன் என்பு சார்ந்த மது உண்ட சுங்கன்
எக் கருமம் செய்தான் இரங்கேசா மிக்க
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

#94
** சூது
தன்மர் துரியோதனனுடன் சூதாடி
இன்மையுற்றார் அன்றோ இரங்கேசா நன்மைப்
பொருள் கொடுத்துப் பொய் மேற்கொளீஇ அருள் கொடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

#95
** மருந்து
அம்பருடன் வேள்வி நுகர்ந்து அக்கினிக்கு மந்தமுற்றது
என்பது அறிந்தும் இரங்கேசா தன் பசியின்
தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றிப் படும்

#96
** ஒழிபியல் – குடிமை
தூடணம் ஆம் ஐவருடன் துன்னுதல் என்றே கன்னன்
ஈடு அனையை நீத்தான் இரங்கேசா நீட
அடுக்கிய கோடி பெறினும் குடிப் பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

#97
** மானம்
ஆகம் குறைந்து உரு வேறு ஆனான் இல்லாளை விடுத்து
ஏகி நளவேந்தன் இரங்கேசா கையினால்
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

#98
** பெருமை
மண் பரவு சக்கரத்தை மால் எடுப்ப வீட்டுமனார்
எண் புகழாக் கொண்டார் இரங்கேசா பண்பால்
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

#99
** சான்றாண்மை
புத்தன் எறி கற்கும் புராரி பதம் அளித்தான்
இத் தரணி போற்றும் இரங்கேசா மெத்தவே
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

#100
** பண்புடைமை
துன்பமுறும் தங்கை எனச் சொல்லி யுதிட்டிரனார்
இன்பமுற்றார் அன்றோ இரங்கேசா அன்பின்
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு

#101
** நன்றியில் செல்வம்
செப்பும் இரு நிதிகள் சேர்ந்தும் குபேரனுக்கு
எப் பொருளால் என் ஆம் இரங்கேசா கைப்பொருள்
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று

#102
** நாணுடைமை
வாவி புகுந்த மகிபன் தனது உயிரை
ஈவதற்குப் போந்தான் இரங்கேசா ஆவதனால்
நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர்

#103
** குடிசெயல் வகை
அன்னை அடிமைக்கு அமுது கொணர்ந்து எள்ளலுடன்
இன்னல் துடைத்தான் இரங்கேசா உன்னுங்கால்
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்

#104
** உழவு
வன் பாரதத்து அலம் கை வைத்தார்க்கு எதிர் இல்லை
என்பார் அதனால் இரங்கேசா முன்பார்
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

#105
** நல்குரவு
காவலனாம் பாஞ்சாலன் கண்டு துரோணரை நீர்
ஏவர் என்றான் அன்றோ இரங்கேசா தா_இல்
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும்

#106
** இரவு
அங்கி உம்பர்கோன் கா அருந்த நினைந்து அர்ச்சுனன்-பால்
இங்கிதமாப் பெற்றான் இரங்கேசா மங்காது
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார்-மாட்டு

#107
** இரவச்சம்
சென்று பலி பக்கல் செம் கை விரித்து ஏற்றல் பழுது
என்று குன்றி நின்றாய் இரங்கேசா நன்றி தரும்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

#108
** கயமை
தேன் இருந்த சொல்லாளைத் தேர் வேந்தர் காண உடை
ஏன் உரிந்தான் மேனாள் இரங்கேசா ஆனதனால்
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர்
** காமத்துப் பால் – களவியல் – (ஆண்பாற் கிளவிகள்)

#109
** தகையணங் குறுத்தல்
சுந்தரமாம் அகலி தோள் தோய்ந்து பத்து_நூறு
இந்திரன் கண் பெற்றான் இரங்கேசா இந்து முறி
ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு

#110
** குறிப்பறிதல்
மேதை விலோசனமும் மேவும் இணை நோக்கும்
ஏது கலவிக்கு இரங்கேசா ஆதலால்
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல

#111
** புணர்ச்சி மகிழ்தல்
உம்பரில் துன்முகனார் உள்ள கங்கை தோள் தோய
இம்பர் வந்தார் அன்றோ இரங்கேசா அன்பாகத்
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு

#112
** நலம்புனைந் துரைத்தல்
ஒண் கயல் கண் பாரதியை ஓது மறை நாவில்
எண்_கண்ணன் வைத்தான் இரங்கேசா பண்பில்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

#113
** காதர் சிறப்புரைத்தல்
சேர்ந்து திருமகளைத் தெள் அமுதை உம்பருக்கே
ஈந்த உதாரம் இரங்கேசா தேர்ந்தக்கால்
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர்

#114
** நாணுத் துறவுரைத்தல்
கீசகன் பாஞ்சாலியின் மேல் கேவல மால் கொண்டு உயிர் தோற்று
ஏசுதலை உற்றான் இரங்கேசா ஆசை எனும்
காமக் கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

#115
** அலரறிவுறுத்தல்
நீந்து கடல் மூழ்கி நெடுநாள் கெளதமனார்
ஏந்து அகலி தோய்ந்தார் இரங்கேசா மாந்தி
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது
** கற்பியல் (பெண்பாற் கிளவிகள்)

#116
** பிரிவாற்றாமை
தன் பதியின் செல்கையினால் தா_இல் நதி ஆயினாள்
என்பர் கவுசி இரங்கேசா அன்பினால்
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை

#117
** படர்மெலிந் திரங்கல்
குன்று_எடுத்தான் மார்பு குடிகொண்டு இருந்தாள் செம் கமலை
என்றும் பிரியாது இரங்கேசா நன்றி கூர்
இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது

#118
** கண்விதுப் பழிதல்
காதல் அருச்சுனனைக் கண்டு ஊர்வசி அடைந்தது
ஏதம் அன்றோ மேனாள் இரங்கேசா ஓதில்
கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இது நகத் தக்கது உடைத்து

#119
** பசப்புறு பருவரல்
மன்னும் அகலி கல்லாய் மாநிலத்திலே கிடந்தாள்
என்னும் மொழி கேட்டாய் இரங்கேசா துன்னப்
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர் என்பார் இல்

#120
** தனிப்படர் மிகுதி
தக்க சுவாகாவைத் தருமன் விழுங்க அவள்
எக்கியனை உண்டாள் இரங்கேசா மிக்க
ஒருதலையான் இன்னாது காமம் காப் போல
இருதலையானும் இனிது

#121
** நினைந்தவர் புலம்பல்
சுந்தோபசுந்தர் இகல் சூழ்ந்து பொருது இறந்தது
எந்த வகை மேனாள் இரங்கேசா சிந்தையால்
உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

#122
** கனவுநிலை யுரைத்தல்
செய் தவம் சேர் வாணனது செல்வி கனா நிலையில்
எய்தினான் அன்றோ இரங்கேசா பைய
நனவினான் நல்காதவரைக் கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர்

#123
** பொழுதுகண் டிரங்கல்
காக்கும் பதி அகலக் காட்டில் சலர்க்காரி
ஏக்கமுற்றாள் அன்றோ இரங்கேசா நோக்கில்
பனி அரும்பிப் பைதல்கொள் மாலை துனி அரும்பித்
துன்பம் வளர வரும்

#124
** உறுப்பு நலனழிதல்
மங்கை உமை ஓர் பங்கு வாங்கி மகிணன்-பால்
இங்கிதமுற்றாள் இரங்கேசா செம் கை
முயக்கிடைத் தண் வளி போழப் பயப்புற்ற
பேதை பெரு மழைக் கண்

#125
** நெஞ்சொடு கிளத்தல்
முன்னம் இரதிக்கு மொழிந்த பதி தந்தது
இன் நலம் அன்றோ இரங்கேசா துன்ன
நினைத்து ஒன்று சொல்வாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து

#126
** நிறை அழிதல்
பின்னைக்கு இனிய மொழி பேசி வென்ற மாயவன் போல்
என்னைத் தொண்டாளும் இரங்கேசா முன் நின்ற
பல் மாயக் கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை

#127
** அவர்வயின் விதும்பல்
வஞ்சி உருக்குமணி மா மால் வரு வழி பார்த்து
எஞ்சும் உளம் போலும் இரங்கேசா பஞ்சணையில்
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளிக்
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு

#128
** அன்பியல் – குறிப்பறிவுறுத்தல்
செட்டி வள்ளியம்மைச் சிறுமுறுவல் கண்டு உளத்தின்
இட்டம் அறிந்தான் இரங்கேசா மட்டு ஆர்
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு

#129
** புணர்ச்சி விதும்பல்
காந்தன் துகில் அரிந்து கானத்து அகன்ற தன்மை
ஏந்தி மறந்தாள் இரங்கேசா காந்தி
எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து

#130
** நெஞ்சொடு புலத்தல்
காங்கையர் மீது ஆசை கரவாமல் அம்பை உளம்
ஏங்கி எரி வீழ்ந்தாள் இரங்கேசா ஆங்கே
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தது என் நெஞ்சு

#131
** புலவி
அன்பர் திருநீலகண்டர் அணி_இழை-பால்
இன்பம் துறந்தார் இரங்கேசா முன்பாக
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று

#132
** புலவி நுணுக்கம்
சேர்ந்து மணம்செய்ய மறுசென்மம் உனி பக்கல் வரும்
ஏந்து_இழையைப் போலும் இரங்கேசா வாய்ந்து உம்மை
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண் நிறை நீர் கொண்டனள்

#133
** ஊடலுவகை
சத்தியபாமா ஊடல் தணிப்பக் கற்பகத்தை
இத் தலத்தில் தந்தான் இரங்கேசா சித்தசற்கும்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்
** இரங்கேசவெண்பா என்னும் நீதிசூடாமணி முற்றிற்று
**