பாரதியார் கவிதைகள் – பல்வகைப் பாடல்கள்

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்


@1 புதிய ஆத்திசூடி
**(காப்பு – பரம்பொருள் வாழ்த்து)

#1
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழு வெண்மேனியான்
கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறை அருள்புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே
அதன் இயல் ஒளியுறும் அறிவாம்
அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்
**நூல்

#2
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண் மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை
கற்றது ஒழுகு
காலம் அழியேல்
கிளை பல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்று என நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல் கைக் கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திரத் தேர்ச்சிகொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்
சைகையில் பொருள் உணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடம்தனை இகழ்
சௌரியம் தவறேல்
ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்
ஞேயம் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்று வாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தைக் காத்தல்செய்
தையலை உயர்வுசெய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியில் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாள் எலாம் வினை செய்
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிது கேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்மை இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொடேல்
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புறத் தவம்செய்
மோனம் போற்று
மௌட்டியம்தனைக் கொல்
யவனர் போல் முயற்சிகொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல்செய்
ரஸத்திலே தேர்ச்சிகொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசி பல வென்று உணர்
ரூபம் செம்மைசெய்
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ் உலகு
லுத்தரை இகழ்
லோகநூல் கற்று உணர்
லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்து உண்
வானநூல் பயிற்சிகொள்
விதையினைத் தெரிந்திடு
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு

@2 பாப்பாப் பாட்டு

#1
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா

#2
சின்னஞ்சிறு குருவி போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா
வன்னப் பறவைகளைக் கண்டு நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா

#3
கொத்தித் திரியும் அந்தக் கோழி அதைக் கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடும் அந்தக் காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா

#4
பாலைப் பொழிந்து தரும் பாப்பா அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா

#5
வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு வயலில் உழுது வரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா

#6
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

#7
பொய் சொல்லக் கூடாது பாப்பா என்றும் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா

#8
பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

#9
துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்துவிடலாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

#10
சோம்பல் மிகக் கெடுதி பாப்பா தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா
தேம்பி அழும் குழந்தை நொண்டி நீ திடங்கொண்டு போராடு பாப்பா

#11
தமிழ்த்திருநாடுதன்னைப் பெற்ற எங்கள் தாய் என்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

#12
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா

#13
வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

#14
வேதம் உடையது இந்த நாடு நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு
சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதைத் தெய்வம் என்று கும்பிடடி பாப்பா

#15
சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்

#16
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா

@3 முரசு

#0
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே
நெற்றி ஒற்றைக்கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே

#1
ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக்கெல்லாம் முதல் ஆகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும்

#2
வேதம் அறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

#3
பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலைப் போல் இழிவு இல்லை

#4
நாலு வகுப்பும் இங்கு ஒன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி

#5
ஒற்றைக் குடும்பம்தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை
மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை

#6
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல வீடு நடத்துதல் கண்டோம்

#7
சாதிப் பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வு என்றும் மேல் என்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்

#8
சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்று இங்கு வாழ்வோம் தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்

#9
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்

#10
கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்

#11
தெய்வம் பலபல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வது அனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம்

#12
தீயினைக் கும்பிடும் பார்ப்பார் நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்
கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார்

#13
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்

#14
வெள்ளை நிறத்து ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்று அந்தப் பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும்

#15
சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி
பாம்பு நிறம் ஒரு குட்டி வெள்ளைப் பாலின் நிறம் ஒரு குட்டி

#16
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிது என்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

#17
வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்று எனல் காணீர்

#18
நிகர் என்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்பவர் எல்லாம்
தகர் என்று கொட்டு முரசே பொய்ம்மைச் சாதி வகுப்பினை எல்லாம்

#19
அன்பு என்று கொட்டு முரசே அதில் ஆக்கம் உண்டாம் என்று கொட்டு
துன்பங்கள் யாவுமே போகும் வெறும் சூதுப் பிரிவுகள் போனால்

#20
அன்பு என்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால்

#21
உடன்பிறந்தார்களைப் போலே இவ் உலகில் மனிதர் எல்லாரும்
இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்

#22
மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிடச் செய்வான்
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை

#23
வயிற்றுக்குச் சோறு உண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும்
பயிற்றி உழுது உண்டு வாழ்வீர் பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்

#24
உடன்பிறந்தவர்களைப் போலே இவ் உலகினில் மனிதர் எல்லாரும்
திடங்கொண்டவர் மெலிந்தோரை இங்குத் தின்று பிழைத்திடலாமோ

#25
வலிமையுடையது தெய்வம் நம்மை வாழ்ந்திடச்செய்வது தெய்வம்
மெலிவு கண்டாலும் குழந்தைதன்னை வீழ்த்தி மிதித்திடலாமோ

#26
தம்பி சற்றே மெலிவானால் அண்ணன் தான் அடிமைகொள்ளலாமோ
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள் சிற்றடிமைப்படலாமோ

#27
அன்பு என்று கொட்டு முரசே அதில் யார்க்கும் விடுதலை உண்டு
பின்பு மனிதர்கள் எல்லாம் கல்வி பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்

#28
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

#29
பாருக்குள்ளே சமத்தன்மை தொடர் பற்றும் சகோதரத்தன்மை
யாருக்கும் தீமை செய்யாது புவி எங்கும் விடுதலை செய்யும்

#30
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்

#31
ஒன்று என்று கொட்டு முரசே அன்பில் ஓங்கு என்று கொட்டு முரசே
நன்று என்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக்கு எல்லாம்

@4 புதுமைப் பெண்

#1
போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின்
பொன் அடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர் போல் ஒளி
தோற்றி நின்றனை பாரதநாட்டிலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதரசே எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ

#2
மாதர்க்கு உண்டு சுதந்திரம் என்று நின்
வண் மலர்த் திருவாயின் மொழிந்த சொல்
நாதம்தான் அது நாரதர் வீணையோ
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ
வேதம் பொன் உருக் கன்னிகை ஆகியே
மேன்மைசெய்து எமைக் காத்திடச் சொல்வதோ
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ
தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே

#3
அறிவு கொண்ட மனித உயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே
சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமைச் சுருள்
தீயில் இட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்
நறிய பொன் மலர் மென் சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ

#4
ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணும் நல் அறத்தோடு இங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல் அறம் வீர சுதந்திரம்
பேணும் நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ

#5
நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம்
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்பு உயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே அரிது ஆவதோர் செய்தியாம்
குலத்து மாதர்குக் கற்பு இயல்பு ஆகுமாம்
கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அ
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ

#6
புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிது அன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள்
தன்னிலே பொதுவான வழக்கமாம்
மதுரத் தேமொழி மங்கையர் உண்மை தேர்
மா தவப் பெரியோருடன் ஒப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்

#7
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்
உதயகன்னி உரைப்பது கேட்டீரோ

#8
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே
திலக வாணுதலார் நங்கள் பாரத
தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

#9
சாத்திரங்கள் பலபல கற்பாராம்
சவுரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை அனைத்தையும்
கடவுளர்க்கு இனிதாகச் சமைப்பராம்
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ

#10
போற்றி போற்றி ஜய ஜய போற்றி இப்
புதுமைப்பெண் ஒளி வாழி பல்லாண்டு இங்கே
மாற்றி வையம் புதுமையுறச்செய்து
மனிதர்தம்மை அமர்கள் ஆக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல்
அருளினால் ஒரு கன்னிகை ஆகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேல் செல்வம் எய்தினோம்

@5 பெண்மை

#1
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன
தாயின் பெயரும் சதி என்ற நாமமும்

#2
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையினாலடா
சூரப் பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம்

#3
வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி அழிப்பது பெண்கள் அறமடா
கைகள் கோத்துக் களித்து நின்று ஆடுவோம்

#4
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான்
பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை
கண்ணைக் காக்கும் இரண்டு இமை போலவே
காதல் இன்பத்தைக் காத்திடுவோமடா

#5
சக்தி என்ற மதுவை உண்போமடா
தாளம்கொட்டித் திசைகள் அதிரவே
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர் வியக்கக் களித்து நின்று ஆடுவோம்

#6
உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே

#7
போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே
நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண் இடைப் பெண் ஒருத்தி பணியிலே

#8
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா
போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம்
காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே

#9
அன்னம் ஊட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும் பொன் கைகளைப் பாடுவோம்

@6 பெண்கள் விடுதலைக் கும்பி
**காப்பு

#0
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசிக் களிப்பொடு நாம் பாடக்
கண்களிலே ஒளி போல உயிரில் கலந்து ஒளிர் தெய்வம் நல் காப்பாமே

#1
கும்மியடி தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோம் என்று கும்மியடி

#2
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

#3
மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே
வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோம் என்று கும்மியடி

#4
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
கொல்லத் துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார்

#5
கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

#6
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி

#7
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம் என்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்

#8
காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சிபெறச் செய்து வாழ்வமடி

@7 பெண் விடுதலை

#1
விடுதலைக்கு மகளிர் எல்லோரும் வேட்கைகொண்டனம் வெல்லுவம் என்றே
திடமனத்தின் மதுக்கிண்ணம் மீது சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
உடையவள் சக்தி ஆண் பெண் இரண்டும் ஒரு நிகர் செய்து உரிமை சமைத்தாள்
இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர் இதற்கு நாம் ஒருப்பட்டிருப்போமோ

#2
திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவிலாது முழு நிகர் நம்மைக் கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும்
சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டைத் திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம்
அற விழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்குப் பெண் விலங்கு எனும் அஃதே

#3
விடியும் நல் ஒளி காணுதி நின்றே மேவும் நாகரிகம் புதிது ஒன்றே
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாம் முதல் என்றனர் அன்றே
அடியொடு அந்த வழக்கத்தைக் கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நம் தேசத்து வீரக் காரிகைக் கணத்தீர் துணிவுற்றே

@8 தொழில்

#1
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே

#2
மண் எடுத்துக் குடங்கள் செய்வீரே மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ணக் காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய்ப் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே இழையை நூற்று நல் ஆடை செய்வீரே
விண்ணினின்று எமை வானவர் காப்பார் மேவிப் பார் மிசைக் காப்பவர் நீரே

#3
பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே பரதநாட்டியக் கூத்திடுவீரே
காட்டும் வையப் பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே
நாட்டிலே அறம் கூட்டிவைப்பீரே நாடும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே
தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே

@9 மறவன் பாட்டு

#1
மண் வெட்டிக் கூலி தினலாச்சே எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே
விண் முட்டிச் சென்ற புகழ் போச்சே இந்த மேதினியில் கெட்டபெயர் ஆச்சே

#2
நாண் இலகு வில்லினொடு தூணி நல்ல நாதம் மிகு சங்கொலியும் பேணி
பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு

#3
கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும்
சின்னக் கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே

#4
ஏழை எளியவர்கள் வீட்டில் இந்த ஈன வயிறு படும் பாட்டில்
கோழை எலிகள் என்னச் சென்றே பொருள் கொண்டு இழிவின் வருகிறோம் இன்றே

#5
முன் நாளில் ஐயர் எல்லாம் வேதம் சொல்வார் மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார் இவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார்

#6
பேராசைக்காரனடா பார்ப்பான் ஆனால் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான்

#7
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் நம்மைப் பிய்த்துப் பணம் கொடு எனத் தின்பான்
கொள்ளைக்கே சென்று ஒரு பொய் மூட்டி நம்மைக் கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி

#8
மெல்லப் பயந்து மிகப் பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்தப் பஞ்சம்

#9
நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு ஐயோ நாள் எல்லாம் மற்று இதிலே உழைப்பு
பாயும் கடிநாய்ப் போலீசுக்காரப் பார்ப்பானுக்கு உண்டு இதிலே பீசு

#10
சோரம் தொழிலாக் கொள்வோமோ முந்தைச் சூரர் பெயரை அழிப்போமோ
வீர மறவர் நாம் அன்றோ இந்த வீண் வாழ்க்கை வாழ்வது இனி நன்றோ

@10 நாட்டுக் கல்வி
**(ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு)

#1
விளக்கிலே திரி நன்கு சமைந்தது மேவுவீர் இங்கு தீக் கொண்டு தோழரே
களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே
துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்
களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ

#2
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே ஆசை என்ற விண்மீன் ஒளிர்செய்ததே
துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால் சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்
நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை
குன்றித் தீக்குறி தோன்றும் இராப்புட்கள் கூவுமாறு ஒத்திருந்தன காண்டிரோ

#3
இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல்
இன்னும் இங்கு வனத்திடை காற்றுத்தான் ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்
முன்னைக் காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி

#4
இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய்
அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமைத்
தெருளுறுத்தவும் நீர் எழுகில்லிரோ தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ வான் ஒளிக்கு மகாஅர் இ யாம் என்றே

@11 புதிய கோணங்கி

#1
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு

#2
தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோ என்று போவான்

#3
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திரம் எல்லாம் வளருது வளருது

#4
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ
அந்தரி வீரி சண்டிகை சூலி
குடுகுடு குடுகுடு

#5
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமிமார்க்கு எல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது
சாத்திரம் வளருது சாதி குறையுது
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது
வீரம் வருகுது மேன்மை கிடைக்குது
சொல்லடி சக்தி மலையாள பகவதி
தர்மம் பெருகுது தர்மம் பெருகுது
*