பாரதியார் கவிதைகள் – சுயசரிதை

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

** மகாகவி பாரதியார் கவிதைகள்
&6 சுயசரிதை

@1 கனவு
** பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
** மெல்லப் போனதுவே
** பட்டினத்துப்பிள்ளை
**முன்னுரை

#1
வாழ்வு முற்றும் கனவு எனக் கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண்
தாழ்வுபெற்ற புவித்தலக் கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன்
பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன்

#2
மாயை பொய் எனல் முற்றிலும் கண்டனன் மற்றும் இந்தப் பிரமத்து இயல்பினை
ஆய நல் அருள்பெற்றிலன் தன்னுடை அறிவினுக்குப் புலப்படல் இன்றியே
தேயம் மீது எவரோ சொலும் சொல்லினைச் செம்மை என்று மனத்திடைக் கொள்வதாம்
தீயபக்தி இயற்கையும் வாய்ந்திலேன் சிறிது காலம் பொறுத்தினும் காண்பமே

#3
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை
சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரிதாக மயக்குமால்
திலத வாணுதலார் தரும் மையலாம் தெய்விகக் கனவு அன்னது வாழ்கவே

#4
ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால்
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்
தூண்டு நூல் கணத்தோடு தனியனாய்த் தோழமை பிறிது இன்றி வருந்தினேன்
**பிள்ளைக் காதல்

#5
அன்ன போழ்தினில் உற்ற கனவினை அம் தமிழ்ச்சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன்
சொன்ன தீம் கனவு அங்குத் துயிலிடைத் தோய்ந்ததன்று நனவிடைத் தோய்ந்ததால்
மெல் நடைக் கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய
கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றனைக் கண்டு காதல் வெறியில் கலந்தனன்

#6
ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு ஓது காதைச் சகுந்தலை ஒத்தனள்
என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல்
அன்பு எனும் பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே
முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழைக் குழந்தை என் செய்வனே

#7
வயது முற்றிய பின் உறு காதலே மாசுடைத்தது தெய்விகம் அன்று காண்
இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அக் காதலாம்
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ
கயல் விழிச் சிறு மானினைக் காண நான் காமன் அம்புகள் என் உயிர் கண்டவே

#8
கனகன் மைந்தன் குமரகுருபரன் கனியும் ஞானசம்பந்தன் துருவன் மற்று
எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர்
மனதிலே பிறந்தோன் மனன் உண்ணுவோன் மதனதேவனுக்கு என் உயிர் நல்கினன்
முனம் உரைத்தவர் வான் புகழ் பெற்றனர் மூடனேன் பெற்றது ஓதுவன் பின்னரே

#9
நீர் எடுத்து வருவதற்கு அவள் மணி நித்திலப் புன்னகை சுடர்வீசிடப்
போர் எடுத்து வரும் மதன் முன் செலப் போகும் வேளை அதற்குத் தினந்தொறும்
வேர் எடுத்துச் சுதந்திர நல் பயிர் வீந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினைக் காத்தல் போல்

#10
காத்திருந்து அவள் போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழகு ஆர்ந்து களித்திட
யாத்த தேருருளைப் படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று எனக்
கோத்த சிந்தனையோடு ஏகி அதில் மகிழ்கொண்டு நாட்கள் பல கழித்திட்டனன்
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன்

#11
புலங்களோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்கள் ஏது விரும்புவன் அங்கு அவை நண்ணுறப்பெறல் திண்ணமதாம் என
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் எனத் தேர்ந்துளேன்
விலங்கு இயற்கை இலையெனில் யாம் எலாம் விரும்புமட்டினில் விண்ணுறல் ஆகுமே

#12
சூழும் மாய உலகினில் காணுறும் தோற்றம் யாவையும் மானதம் ஆகுமால்
ஆழும் நெஞ்சகத்து ஆசை இன்று உள்ளதேல் அதனுடைப் பொருள் நாளை விளைந்திடும்
தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவிப் பல பொருள் நாடுவோர்
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறார் இவர்தாம் அன்றே

#13
விதியை நோவர் தம் நண்பரைத் தூற்றுவர் வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்
சதிகள் செய்வர் பொய்ச் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர்
மதியினில் புலை நாத்திகம் கூறுவர் மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தரும் எனல் ஓர்ந்திடார் கண்ணிலாதவர் போலத் திகைப்பர் காண்

#14
கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன்
பன்னி ஆயிரம் கூறினும் பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திடலாகுமோ
முன்னி வான் கொம்பில் தேனுக்கு உழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண்டால் என
என் இயன்று மற்று எங்ஙனம் வாய்ந்ததோ என்னிடத்து அவள் இங்கிதம் பூண்டதே

#15
காதல் என்பதும் ஓர்வயின் நிற்குமேல் கடலின் வந்த கடுவினை ஒக்குமால்
ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ
ஓதொணாத பெரும் தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர்
மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தரப் பெற்றிடும் மாந்தரே

#16
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனிக் கீழுறு மென் மலர்
கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி
பொய்க் கிளைத்து வருந்திய மெய் அரோ பொன்னனார் அருள்பூண்டிலராம் எனில்
கைக்கிளைப் பெயர் கொண்ட பெரும் துயர்க் காதல் அஃது கருதவும் தீயதால்

#17
தேவர் மன்னன் மிடிமையைப் பாடல் போல் தீய கைக்கிளை யான் எவன் பாடுதல்
ஆவல்கொண்ட அரும்பெறல் கன்னிதான் அன்பு எனக்கு அங்கு அளித்திடலாயினள்
பாவம் தீமை பழி எதும் தேர்ந்திடோம் பண்டைத் தேவ யுகத்து மனிதர் போல்
காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம்

#18
கானகத்தில் இரண்டு பறவைகள் காதலுற்றது போலவும் ஆங்ஙனே
வானகத்தில் இயக்கர் இயக்கியர் மையல்கொண்டு மயங்குதல் போலவும்
ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே
தேன் அகத்த மணிமொழியாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேன் அரோ

#19
ஆதிரைத் திருநாள் ஒன்றில் சங்கரன் ஆலயத்து ஒரு மண்டபம்தன்னில் யான்
சோதி மானொடு தன்னந்தனியனாய்ச் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள்
பாதி பேசி மறைந்து பின் தோன்றித் தன் பங்கயக் கையில் மை கொணர்ந்தே ஒரு
சேதி நெற்றியில் பொட்டுவைப்பேன் என்றாள் திலகமிட்டனள் செய்கை அழிந்தனன்

#20
என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண் எய்திய தாய்தனை
முன்னை ஈன்றவன் செந்தமிழ்ச் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன்
அன்னவன் தவப் பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான்
பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண்
**ஆங்கிலப் பயிற்சி

#21
நெல்லையூர் சென்று அவ் ஊணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன்
புல்லை உண்க என வாள் அரிச் சேயினைப் போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம்
நல்லது என்று ஒரு பார்ப்பனப்பிள்ளையை நாடுவிப்பது போலவும் எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை

#22
நரி உயிர்ச் சிறு சேவகர் தாதர்கள் நாய் எனத் திரி ஒற்றர் உணவினைப்
பெரிது எனக் கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர்
கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்க என என்னை விடுத்தனன்
அருமை மிக்க மயிலைப் பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ

#23
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எள்துணைப் பயன் கண்டிலார்

#24
கம்பன் என்று ஒரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பரும் திறலோடு ஒரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

#25
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல் இசைப் பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும்
பேரருள் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்

#26
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர்
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்று உழல் பித்தர்கள்
என்ன கூறி மற்று எங்ஙன் உணர்த்துவேன் இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதே

#27
சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்து எனக்கு நலம் செயல் நாடியே
ஏதிலார் தரும் கல்விப் படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம்
தீது இயன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினுமே அசிரத்தையும்
வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெம் குகைக்கு என்னை வழங்கினன்

#28
ஐயர் என்றும் துரை என்றும் மற்று எனக்கு ஆங்கிலக் கலை என்று ஒன்று உணர்த்திய
பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான்
மெய் அயர்ந்து விழி குழிவு எய்திட வீறு இழந்து எனது உள்ளம் நொய்தாகிட
ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரித் துரும்பு என்று அலைந்ததால்

#29
செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன
நலம் ஒர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்
சில முன்செய் நல்வினைப் பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும்
அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாது ஒருவாறு பிழைத்ததே
**மணம்

#30
நினைக்க நெஞ்சம் உருகும் பிறர்க்கு இதை நிகழ்த்த நா நனி கூசும் அதன்றியே
எனைத்து இங்கு எண்ணி வருந்தியும் இவ் இடர் யாங்ஙன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம்
அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே
வினைத் தொடர்களில் மானுட வாழ்க்கையுள் மேவும் இ மணம் போல் பிறிதின்று அரோ

#31
வீடுறாவணம் யாப்பதை வீடு என்பார் மிக இழிந்த பொருளைப் பொருள் என்பார்
நாடுங்கால் ஒர் மணமற்ற செய்கையை நல்லதோர் மணமாம் என நாட்டுவார்
கூடுமாயில் பிரமசரியம் கொள் கூடுகின்றிலதென்னில் பிழைகள் செய்து
ஈடு அழிந்து நரக வழிச் செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண்

#32
வசிட்டருக்கும் இராமருக்கும் பின் ஒரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல்
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண்
புசிப்பது உம்பரின் நல் அமுது என்று எணிப் புலையர் விற்றிடும் கள் உணலாகுமோ
அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின்

#33
வேறு தேயத்து எவர் எது செய்யினும் வீழ்ச்சிபெற்ற இப் பாரதநாட்டினில்
ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம்
கூறும் எந்தத் துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும்
நீறுபட்ட இப் பாழ்ச் செயல் மட்டினும் நெஞ்சத்தாலும் நினைப்பது ஒழிகவே

#34
பால் அருந்து மதலையர்தம்மையே பாதகக் கொடும் பாதகப் பாதகர்
மூலத்தோடு குலம் கெடல் நாடிய மூட மூட நிர்மூடப் புலையர்தாம்
கோலமாக மணத்திடைக் கூட்டும் இக் கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும்
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக எனத் தோன்றுமே

#35
ஆங்கு ஒர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன்
ஈங்கு ஒர் கன்னியைப் பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன்
தீங்கு மற்று இதில் உண்டு என்று அறிந்தவன் செயல் எதிர்க்கும் திறனிலன் ஆயினேன்
ஓங்கு காதல் தழல் எவ்வளவு என்றன் உளம் எரித்துளது என்பதும் கண்டிலேன்

#36
மற்றொர் பெண்ணை மணம்செய்த போழ்து முன் மாதராளிடைக் கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டும் என உளத்து எண்ணிலேன் நினைவையே இ மணத்தில் செலுத்திலேன்
முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன்
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின

#37
மதனன் செய்யும் மயக்கம் ஒருவயின் மாக்கள் செய்யும் பிணிப்பு மற்றோர்வயின்
இதனில் பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு என்னை வேண்டும் இடர்க்கு உறு சூழ்ச்சிதான்
எதனிலேனும் கடமை விளையுமேல் எத்துயர்கள் உழன்றும் மற்று என் செய்தும்
அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன்

#38
சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரம் தாலி மணி எலாம்
யாத்து எனைக் கொலைசெய்தனர் அல்லது யாது தர்மமுறை எனல் காட்டிலர்
தீத்திறன் கொள் அறிவற்ற பொய்ச் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர்
மூத்தவர் வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூடப் பிள்ளை அறம் எவண் ஓர்வதே
**தந்தை வறுமை எய்திடல்

#39
ஈங்கு இதற்கிடை எந்தை பெரும் துயர் எய்தி நின்றனன் தீய வறுமையான்
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன்
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர்
வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ

#40
பார்ப்பனக் குலம் கெட்டு அழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால்
வேர்ப்ப வேர்ப்பப் பொருள்செய்வது ஒன்றையே மேன்மை கொண்ட தொழில் எனக் கொண்டனன்
ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்
நீர்ப்படும் சிறு புற்புதமாம் அது நீங்கவே உளம் குன்றித் தளர்ந்தனன்

#41
தீய மாய உலகிடை ஒன்றினில் சிந்தைசெய்து விடாயுறுங்கால் அதை
வாய் அடங்க மென்மேலும் பருகினும் மாயத் தாகம் தவிர்வது கண்டிலம்
நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால்
காயம் உள்ளவரையும் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளம் கொண்டே

#42
ஆசைக்கு ஓர் அளவில்லை விடயத்துள் ஆழ்ந்த பின் அங்கு அமைதி உண்டாம் என
மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம்
தேசத்தார் புகழ் நுண்ணறிவோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சினனாயினும்
நாசக் காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர்க் கடல் வீழ்ந்தனன்
**பொருட் பெருமை

#43
பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண்
பொருளிலார்க்கு இனம் இல்லை துணை இலை பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால்
பொருளிலார் பொருள்செய்தல் முதற்கடன் போற்றிக் காசினுக்கு ஏங்கி உயிர்விடும்
மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன்

#44
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர்தம்மை அனுதினம் போற்றுவேன்
பிற விரும்பி உலகினில் யான் பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும்
திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்து உள்ள இளைஞர் அறி-மினோ
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால்

#45
வெய்ய கர்மப் பயன்களின் நொந்துதான் மெய் உணர்ந்திடலாகும் என்று ஆக்கிய
தெய்வமே இது நீதி எனினும் நின் திருவருட்குப் பொருந்தியது ஆகுமோ
ஐயகோ சிறிது உண்மை விளங்கும் முன் ஆவி நையத் துயருறல் வேண்டுமே
பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால்

#46
தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்
சிந்தையில் தெளிவு இல்லை உடலினில் திறனும் இல்லை உரன் உளத்து இல்லையால்
மந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம் மடமைக் கல்வியால் மண்ணும் பயன் இலை
எந்த மார்க்கமும் தோற்றிலது என் செய்கேன் ஏன் பிறந்தனன் இத் துயர் நாட்டிலே
**முடிவுரை

#47
உலகு எலாம் ஒர் பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான்
பல நினைந்து வருந்தி இங்கு என் பயன் பண்டு போனதை எண்ணி என் ஆவது
சில தினங்கள் இருந்து மறைவதில் சிந்தைசெய்து எவன் செத்திடுவானடா

#48
ஞானம் முந்துறவும் பெற்றிலாதவர் நானிலத்துத் துயர் அன்றிக் காண்கிலர்
போனதற்கு வருந்திலன் மெய்த்தவப் புலமையோன் அது வானத்து ஒளிரும் ஓர்
மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை வீசல் ஒக்கும் எனலை மறக்கிலேன்
ஆனது ஆவது அனைத்தையும் செய்வதோர் அன்னையே இனியேனும் அருள்வையால்
** வேறு

#49
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்
பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்று இவை அருளாய்
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப் பரம்பொருளே

@2 பாரதி அறுபத்தாறு
**கடவுள் வாழ்த்து – பராசக்தி துதி

#1
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
மனத்தினிலே நின்று இதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மா சக்தி வையத்தேவி
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும் செய்ய மணித் தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னை ஒரு மலரைப் போலும் வண்டினைப் போல் எனையும் உருமாற்றிவிட்டாள்

#2
தீராத காலம் எலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன் அமுதின் செவ்விதழ்ச்சி
நீராகக் கனலாக வானாக் காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது
போராக நோயாக மரணமாகப் போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால்
நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள்

#3
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவி கங்காளி மனோன்மணி மாமாயி
பாகு ஆர்ந்த தேமொழியாள் படரும் செந்தீ பாய்ந்திடும் ஓர் விழியுடையாள் பரமசக்தி
ஆகாரம் அளித்திடுவாள் அறிவு தந்தாள் ஆதிபராசக்தி எனது அமிர்தப் பொய்கை
சோகாடவிக்குள் எனைப் புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள்
**மரணத்தை வெல்லும் வழி

#4
பொன் ஆர்ந்த திருவடியைப் போற்றி இங்கு புகலுவேன் யான் அறியும் உண்மை எல்லாம்
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார் முடிவாக அவ் உரையை நான் மேற்கொண்டேன்
அன்னோர்கள் உரைத்தது அன்றிச் செய்கை இல்லை அத்வைத நிலை கண்டால் மரணம் உண்டோ
முன்னோர்கள் உரைத்த பல சித்தர் எல்லாம் முடிந்திட்டார் மடிந்திட்டார் மண்ணாய்விட்டார்

#5
பொந்திலே உள்ளாராம் வனத்தில் எங்கோ புதர்களிலே இருப்பாராம் பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம்
நொந்த புண்ணைக் குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான் அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்

#6
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்
மலிவு கண்டீர் இவ் உண்மை பொய் கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே
நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை
**அசுரர்களின் பெயர்

#7
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும்
மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை
துச்சமெனப் பிறர் பொருளைக் கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே நேர்வதே மானுடர்க்குச் சினத் தீ நெஞ்சில்
**சினத்தின் கேடு

#8
சினம்கொள்வார் தமைத்தாமே தீயால் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார் சினம்கொள்வார்தாம்
மனம் கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவாராம்
தினம் கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார்
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாகச் செய்தது எணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவார்

#9
மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா
சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல்
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன் பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான்
வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே
**தேம்பாமை

#10
வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்குத் தென்கோடு பார் மீது இங்கே
விடம் உண்டும் சாகாமல் இருக்கக் கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம் தேம்பல் வேண்டா தேம்புவதில் பயன் இல்லை தேம்பித்தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர்
**பொறுமையின் பெருமை

#11
திருத்தணிகை மலை மேலே குமாரதேவன் திருக்கொலு வீற்றிருக்குமதன் பொருளைக் கேளீர்
திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல்
பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும்
அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்

#12
பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும் யுதிட்டிரனும் நெடுநாள் இப் புவி மேல் காத்தான்
இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான் ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே
பொறுமை இன்றிப் போர்செய்து பரதநாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான்

#13
ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ
தேனான உயிரைவிட்டுச் சாகலாமோ செத்திடற்குக் காரணம்தான் யாது என்பீரேல்
கோன் ஆகிச் சாத்திரத்தை ஆளும் மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான்
ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர் நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான்

#14
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியது ஆகும் அச்சத்தால் நாடி எலாம் அவிந்துபோகும்
தாபத்தால் நாடி எலாம் சிதைந்துபோகும் கவலையினால் நாடி எலாம் தழலாய் வேகும்
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான் கொல்வதற்கு வழி என நான் குறித்திட்டேனே
**கடவுள் எங்கே இருக்கிறார்

#15
சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல் என்று ஹிரணியன்தான் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான்
வல்ல பெரும் கடவுள் இலா அணு ஒன்று இல்லை மஹாசக்தி இல்லாத வஸ்து இல்லை
அல்லல் இல்லை அல்லல் இல்லை அல்லல் இல்லை அனைத்துமே தெய்வம் என்றால் அல்லல் உண்டோ
**சுயசரிதை

#16
கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக் கீழான் பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்து இரு கரமும் சிரம் மேல் கூப்பிச் சங்கரசங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும் கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே

#17
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம்
வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர் வித்தை இலாப் புலையனும் அஃது என்னும் வேதம்
பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும்
நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே

#18
உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றிப் பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்குப் பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர்
வெயில் அளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம் மேலும் இங்குப் பலபலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம் எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்
**குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்)

#19
ஞானகுருதேசிகனைப் போற்றுகின்றேன் நாடு அனைத்தும் தான் ஆவான் நலிவிலாதான்
மோன குரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம்
தேன் அனைய பராசக்தி திறத்தைக் காட்டிச் சித்தின் இயல் காட்டி மனத் தெளிவு தந்தான்
வானகத்தை இவ் உலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி

#20
எப்போதும் குரு சரணம் நினைவாய் நெஞ்சே எம்பெருமான் சிதம்பரதேசிகன் தாள் எண்ணாய்
முப்பாழும் கடந்த பெருவெளியைக் கண்டான் முத்தி எனும் வானகத்தே பரிதி ஆவான்
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமித் தேவன்
குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனைக் காத்தான் குமாரதேவன்

#21
தேசத்தார் இவன் பெயரைக் குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான் பயத்தைச் சுட்டான் பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்
நாசத்தை அழித்துவிட்டான் யமனைக் கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான்
ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே

#22
வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்கலாமோ ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ
ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கிச் சொல்வேன்
காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளைக் கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை
**குரு தரிசனம்

#23
அன்றொரு நாள் புதுவைநகர்தனிலே கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில் இராஜாராம் ஐயன் என்ற நாகைப் பார்ப்பான்
முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி

#24
அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி இது பேசலுற்றேன்
அப்பனே தேசிகனே ஞானி என்பார் அவனியிலே சிலர் நின்னைப் பித்தன் என்பார்
செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனைப் புகழ்வார் சிலர் என் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே

#25
யாவன் நீ நினக்குள்ள திறமை என்னே யாது உணர்வாய் கந்தை சுற்றித் திரிவது என்னே
தேவனைப் போல் விழிப்பது என்னே சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட்டு என்னே
பாவனையில் பித்தரைப் போல் அலைவது என்னே பரமசிவன் போல் உருவம் படைத்தது என்னே
ஆவலற்று நின்றது என்னே அறிந்தது எல்லாம் ஆரியனே எனக்கு உணர்த்தவேண்டும் என்றேன்

#26
பற்றிய கை திருகி அந்தக் குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை
சுற்றுமுற்றும் பார்த்துப் பின் முறுவல் பூத்தான் தூய திருக்கமல பதத் துணையைப் பார்த்தேன்
குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டுக் கொல்லை சேர்ந்தான்
மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனைக் கொல்லையிலே மறித்துக்கொண்டேன்
**உபதேசம்

#27
பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி
ஒக்கத் தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ எனக் கேட்டான் அறிந்தேன் என்றேன்
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன்

#28
தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன்
வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்
தேசு உடைய பரிதி உருக் கிணற்றின் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்

#29
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்கச் சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானைக் காட்டி
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும்
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே

#30
மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாதக் கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான்
சற்று நகைபுரிந்தவன்பால் கேட்கலானேன் தம்பிரானே இந்தத் தகைமை என்னே
முற்றும் இது பித்தருடைச் செய்கை அன்றோ மூட்டை சுமந்திடுவது என்னே மொழிவாய் என்றேன்

#31
புன்னகைபூத்து ஆரியனும் புகலுகின்றான் புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தின் உள்ளே
இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான்
மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே
இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

#32
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்

#33
மேன்மேலும் நினைந்து அழுதல் வேண்டா அந்தோ மேதை இல்லா மானுடரே மேலும் மேலும்
மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர்
ஆன்மா என்றே கருமத்தொடர்பை எண்ணி அறிவு மயக்கம்கொண்டு கெடுகின்றீரே
மான் மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டுத் தனை மறந்து வாழ்தல் வேண்டும்

#34
சென்ற வினைப்பயன்கள் எனைத் தீண்டமாட்டா ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யான் அன்றோ
நன்று இந்தக் கணம் புதிதாய்ப் பிறந்துவிட்டேன் நான் புதியன் நான் கடவுள் நலிவிலாதோன்
என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்மக்
குன்றின் மிசை ஒரு பாய்ச்சலாகப் பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார்

#35
குறி அனந்தம் உடையோராய்க் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி
வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத் தீயினைப் போல் மண் மீது திரிவார் மேலோர்
அறிவுடைய சீடா நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரன் ஆவாய்

#36
கேளப்பா மேற்சொன்ன உண்மை எல்லாம் கேடற்ற மதியுடையான் குள்ளச்சாமி
நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்
தோளைப் பார்த்துக் களித்தல் போலே அன்னான் துணை அடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே
வாளைப் பார்த்து இன்பமுறும் மன்னர் போற்றும் மலர்த் தாளான் மாங்கொட்டைச்சாமி வாழ்க
**கோவிந்த சுவாமி புகழ்

#37
மாங்கொட்டைச்சாமி புகழ் சிறிது சொன்னோம் வண்மை திகழ் கோவிந்த ஞானி பார் மேல்
யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்கக் கேளீர்
தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டைச்சாமி போலே பயிலும் மதி வர்ணாசிரமத்தே நிற்போன்

#38
அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான்
துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயைப் போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி
அன்பினுக்குக் கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான்
மன்பதைகள் யாவும் இங்கே தெய்வம் என்ற மதியுடையான் கவலை எனும் மயக்கம் தீர்ந்தான்

#39
பொன் அடியால் என் மனையைப் புனிதமாக்கப் போந்தான் இ முனி ஒருநாள் இறந்த எந்தை
தன் உருவம் காட்டினான் பின்னர் என்னைத் தரணி மிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன் மா யோகி என்றும் பரமஞானத்து அனுபூதி உடையன் என்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனைக் குரு என நான் சரணடைந்தேன் மரணபயம் நீங்கினேன் வலிமை பெற்றேன்
**யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்

#40
கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான்
தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி பரமபதவாயில் எனும் பார்வையாளன்
காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்

#41
தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்குப் பார் மேல்
மங்களம் சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னைச்
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி
**குவளைக் கண்ணன் புகழ்

#42
யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன் பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்
தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார்

#43
மகத்தான முனிவர் எலாம் கண்ணன் தோழர் வானவர் எல்லாம் கண்ணன் அடியார் ஆவார்
மிகத் தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீரப் பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்
ஜகத்தினில் ஓர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்சாமிதனை இவன் என்றன் மனைக் கொணர்ந்தான்
அகத்தினிலே அவன் பாதமலரைப் பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு

#44
பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோம் பாரினிலே பயம் தெளிந்தோம் பாசம் அற்றோம்
நீங்காத சிவசக்தி அருளைப் பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார்
ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர்
**பெண் விடுதலை

#45
பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ மதிகெட்டீரே
விண்ணுக்குப் பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர்
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை
**தாய் மாண்பு

#46
பெண்டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டிப் பெண்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ
கண்டார்க்கு நகைப்பு என்னும் உலக வாழ்க்கை காதல் எனும் கதையினுடைக் குழப்பம் அன்றோ
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ உணர்ச்சி கெட்டீர்
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும் பாரிடை முன் அறி தெய்வம் என்றாள் அன்றோ

#47
தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ தாய் பெண்ணே அல்லளோ தமக்கை தங்கை
வாய்க்கும் பெண் மகவு எல்லாம் பெண்ணே அன்றோ மனைவி ஒருத்தியை அடிமைப்படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுது அடிமைப்படுத்தலாமோ தாயைப் போலே பிள்ளை என்று முன்னோர்
வாக்கு உளது அன்றோ பெண்மை அடிமையுற்றால் மக்கள் எலாம் அடிமையுறல் வியப்பு ஒன்றாமோ

#48
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் உண்டாம் வீட்டினிலே தனக்கு அடிமை பிறராம் என்பான்
நாட்டினிலே நாள்தோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப் பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே
**காதலின் புகழ்

#49
காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம் கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல்செய்வீர் உலகத்தீரே அஃது அன்றோ இவ் உலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம்

#50
ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான் அயன் வாணிதனை நாவில் அமர்த்திக்கொண்டான்
சோதிமணி முகத்தினளைச் செல்வம் எல்லாம் சுரந்து அருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான் வானோர்க்கேனும் மாதர் இன்பம் போல் பிறிதோர் இன்பம் உண்டோ
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்

#51
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக் கோக் கவிஞன் காளிதாசனும் பூஜித்தான்
மங்கைதனைக் காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான்
இங்கு புவி மிசைக் காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ

#52
நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால் நாட்டினர்தாம் வியப்பு எய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்
பாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய்கின்றார் பாரினிலே காதல் என்னும் பயிரை மாய்க்க
மூடர் எலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்திக் கெடுகின்றாரே

#53
காதலிலே இன்பம் எய்திக் களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ
மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனம்கொள்வாரோ
பாதி நடுக் கலவியிலே காதல் பேசிப் பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருதுவாரோ
**விடுதலைக் காதல்

#54
காதலிலே விடுதலை என்று ஆங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில்
மாதர் எலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்
பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால்
வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறொருவன்றனைக் கூட வேண்டும் என்பார்

#55
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மைக் காதல்
சோரரைப் போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார்
காரணம்தான் யாது எனிலோ ஆண்கள் எல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேல் என்று
ஈரம் இன்றி எப்போதும் உபதேசங்கள் எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்புவாரே

#56
ஆண் எல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ
நாணற்ற வார்த்தை அன்றோ வீட்டைச் சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ
பேணும் ஒரு காதலினை வேண்டி அன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்
காணுகின்ற காட்சி எலாம் மறைத்துவைத்துக் கற்புக்கற்பு என்று உலகோர் கதைக்கின்றாரே
**சர்வ மத சமரசம்
**(கோவிந்த சுவாமியுடன் உரையாடல்)

#57
மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி
ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன்
நாளைப் பார்த்து ஒளிர்தரு நல் மலரைப் போலே நம்பிரான் வரவு கண்டு மனம் மலர்ந்தேன்
வேளையிலே நமது தொழில் முடித்துக்கொள்வோம் வெயில் உள்ள போதினிலே உலர்த்திக்கொள்வோம்

#58
காற்றுள்ள போதே நாம் தூற்றிக்கொள்வோம் கனமான குருவை எதிர் கண்ட போதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக்கொள்வோம் மலமான மறதியினை மடித்துக்கொள்வோம்
கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம்
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞானப் பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே

#59
சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே தேய்வு என்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக் கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான்
அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம்
பந்தம் இல்லை பந்தம் இல்லை பந்தம் இல்லை பயம் இல்லை பயம் இல்லை பயமே இல்லை

#60
அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறையக் கேளாய்
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும்
அது அன்றிப் பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல்
மது உண்ட மலர் மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடா

#61
பாரான உடம்பினிலே மயிர்களைப் போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா
சீரான மழை பெய்யும் தெய்வம் உண்டு சிவன் செத்தால் அன்றி மண் மேல் செழுமை உண்டு

#62
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும்
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப் பின் அதற்குக் காவல் என்று பேரும் இட்டு
நீதம் இல்லாக் கள்வர் நெறி ஆயிற்று அப்பா நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி அன்றோ
பாதமலர் காட்டி நினை அன்னை காத்தாள் பாரினில் இத் தருமம் நீ பகருவாயே

#63
ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒரு மொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர்
ஹரிஹரி என்றிடினும் அஃதே ராமராம சிவசிவ என்றிட்டாலும் அஃதே ஆகும்
தெரிவுறவே ஓம் சக்தி என்று மேலோர் ஜெபம்புரிவது அப் பொருளின் பெயரே ஆகும்

#64
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம்
ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனைக் காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய்
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனைக் காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய்
பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்

#65
பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம்
நாமம் உயர் சீனத்துத் தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலாப் பார் மேல்
யாம் அறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கு ஒன்றே

#66
பூமியிலே வழங்கிவரும் மதத்துக்கு எல்லாம் பொருளினை நாம் இங்கு எடுத்துப் புகலக் கேளாய்
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்
பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமி நீ அ மாயைதன்னை நீக்கிச் சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே
*