பாரதியார் கவிதைகள் – கண்ணன் பாட்டு

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

உள் தலைப்புகள்

1. கண்ணன் என் தோழன்
2. கண்ணன் என் தாய்
3. கண்ணன் என் தந்தை
4. கண்ணன் என் சேவகன்
5. கண்ணன் என் அரசன்
6. கண்ணன் என் சீடன்
7. கண்ணன் எனது சற்குரு
8. கண்ணம்மா என் குழந்தை
9. கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை
10. கண்ணன் என் காதலன் – 1
11. கண்ணன் என் காதலன் – 2
12. கண்ணன் என் காதலன் – 3
13. கண்ணன் என் காதலன் – 4
14. கண்ணன் என் காதலன் – 5
15. கண்ணன் என் காந்தன்
16. கண்ணம்மா என் காதலி -1
17. கண்ணம்மா என் காதலி – 2
18. கண்ணம்மா என் காதலி – 3
19. கண்ணம்மா என் காதலி – 4
20. கண்ணம்மா என் காதலி – 5
21. கண்ணம்மா என் காதலி – 6
22. கண்ணன் என் ஆண்டான்
23. கண்ணம்மா எனது குலதெய்வம்


@1 கண்ணன் என் தோழன்
**புண்ணாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் – வத்ஸல ரஸம்

#1
பொன் அவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கே இனி
என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்தக்
கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழி ஒன்றில்லேன் வந்து இங்கு
உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒரு கணத்தே உரைப்பான்

#2
கானகத்தே சுற்றும் நாளிலும் நெஞ்சில் கலக்கம் இலாது செய்வான் பெரும்
சேனைத் தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்திக் கொடுப்பான் என்றன்
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம்
ஈனக் கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான்

#3
பிழைக்கும் வழி சொல்லவேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான்
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான்
அழைக்கும் பொழுதினில் போக்குச்சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான்
மழைக்குக் குடை பசி நேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்

#4
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லும் கேலி பொறுத்திடுவான் எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல்செய்திடுவான் என்றன்
நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃது என்று நான் சொல்லும் முன் உணர்வான் அன்பர்
கூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போல் அன்பு கொண்டவர் வேறு உளரோ

#5
உள்ளத்திலே கருவம்கொண்ட போதினில் ஓங்கி அடித்திடுவான் நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு
பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் பெரு
வெள்ளத்தைப் போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான்

#6
சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச் சிரித்துக் களித்திடுவான் நல்ல
வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் அவன்
சொன்னபடி நடவாவிடிலோ மிகத் தொல்லை இழைத்திடுவான் கண்ணன்
தன்னை இழந்துவிடில் ஐயனே பின் சகத்தினில் வாழ்வதிலேன்

#7
கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்துக் குலுங்கிடச்செய்திடுவான் மன
தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி தழைத்திடச் செய்திடுவான் பெரும்
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர்த்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான்

#8
உண்மை தவறி நடப்பவர்தம்மை உதைத்து நசுக்கிடுவான் அருள்
வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலைமலையா உரைப்பான் நல்ல
பெண்மைக் குணமுடையான் சில நேரத்தில் பித்தர் குணமுடையான் மிகத்
தண்மைக் குணமுடையான் சில நேரம் தழலின் குணமுடையான்

#9
கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிகத் தான் உடையான் கண்ணன்
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும்
நல்லவருக்கு ஒரு தீங்கு நண்ணாது நயமுறக் காத்திடுவான் கண்ணன்
அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான்

#10
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ் சித்திரத்தில் பகை
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண் உயர்
வேதம் உணர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் நல்ல
கீதை உரைத்து எனை இன்புறச்செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன்

@2 கண்ணன் என் தாய்
**(நொண்டிச் சிந்து)

#1
உண்ணஉண்ணத் தெவிட்டாத அம்மை உயிர் எனும் முலையினில் உணர்வு எனும் பால்
வண்ணமுறவைத்து எனக்கே என்றன் வாயினில் கொண்டு ஊட்டும் ஓர் வண்மையுடையாள்
கண்ணன் எனும் பெயருடையாள் என்னைக் கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து
மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள்

#2
இன்பம் எனச் சில கதைகள் எனக்கு ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள்
துன்பம் எனச் சில கதைகள் கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சில கதைகள்
என் பருவம் என்றன் விருப்பம் எனும் இவற்றினுக்கு இணங்க என் உளம் அறிந்தே
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய்ப் பரவசமடைவேன்

#3
விந்தைவிந்தையாக எனக்கே பல விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பாள்
சந்திரன் என்று ஒரு பொம்மை அதில் தண் அமுதம் போல ஒளி பரந்து ஒழுகும்
மந்தைமந்தையா மேகம் பல வண்ணமுறும் பொம்மை அது மழை பொழியும்
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே

#4
வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளைப் போல் மின்னி நிறைந்திருக்கும்
நானத்தைக் கணக்கிடவே மனம் நாடி மிக முயல்கினும் கூடுவதில்லை
கானத்து மலைகள் உண்டு எந்தக் காலமும் ஒர் இடம்விட்டு நகர்வதில்லை
மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண்

#5
நல்லநல்ல நதிகள் உண்டு அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும் காண்
மெல்லமெல்லப் போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிகப் பெரிதாம்
எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும்
ஒல்லெனும் அப் பாட்டினிலே அம்மை ஓம் எனும் பெயர் என்றும் ஒலித்திடும் காண்

#6
சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள்
சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள்
ஞாலம் முற்றிலும் நிறைந்தே மிக நயம்தரு பொம்மைகள் எனக்கெனவே
கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள்

#7
தின்றிடப் பண்டங்களும் செவி தெவிட்டறக் கேட்க நல் பாட்டுகளும்
ஒன்றுறப் பழகுதற்கே அறிவுடைய மெய்த் தோழரும் அவள் கொடுத்தாள்
கொன்றிடும் என இனிதாய் இன்பக் கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய்
நன்று இயல் காதலுக்கே இந்த நாரியர்தமை எனைச் சூழவைத்தாள்

#8
இறகுடைப் பறவைகளும் நிலம் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள்
அறை கடல் நிறைந்திடவே எண்ணில் அமைந்திடற்கு அரிய பல்வகைப்படவே
சுறவுகள் மீன் வகைகள் எனத் தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள்
நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை

#9
சாத்திரம் கோடி வைத்தாள் அவைதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்
மீத்திடும் பொழுதினிலே நான் வேடிக்கை உறக் கண்டு நகைப்பதற்கே
கோத்த பொய் வேதங்களும் மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய் நடையும் இன மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்

#10
வேண்டிய கொடுத்திடுவாள் அவை விரும்பும் முன் கொடுத்திட விரைந்திடுவாள்
ஆண்டு அருள்புரிந்திடுவாள் அண்ணன் அருச்சுனன் போல் எனை ஆக்கிடுவாள்
யாண்டும் எக்காலத்தினும் அவள் இன் அருள் பாடும் நல் தொழில் புரிவேன்
நீண்டதோர் புகழ் வாழ்வும் பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்

@3 கண்ணன் என் தந்தை
**(நொண்டிச் சிந்து)
**பிரதான ரஸம் – அற்புதம்

#1
பூமிக்கு எனை அனுப்பினான் அந்தப் புது மண்டலத்தில் என் தம்பிகள் உண்டு
நேமித்த நெறிப்படியே இந்த நெடுவெளி எங்கணும் நித்தம் உருண்டே
போம் இத் தரைகளில் எல்லாம் மனம் போல இருந்து ஆளுபவர் எங்கள் இனத்தார்
சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன்

#2
செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை
கல்வியில் மிகச் சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை
பல் வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவது உண்டு
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு

#3
நாவு துணிகுவதில்லை உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே
யாவரும் தெரிந்திடவே எங்கள் ஈசன் என்றும் கண்ணன் என்றும் சொல்லுவதுண்டு
மூவகைப் பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே அவன் செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார்

#4
பிறந்தது மறக்குலத்தில் அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்
சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிகப் பழக்கம் உண்டு
நிறம்தனில் கருமை கொண்டான் அவன் நேயமுறக் களிப்பது பொன் நிறப் பெண்கள்
துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்

#5
ஏழைகளைத் தோழமைகொள்வான் செல்வம் ஏறியார்தமைக் கண்டு சீறிவிழுவான்
தாழ வரும் துன்பமதிலும் நெஞ்சத் தளர்ச்சிகொள்ளாதவர்க்குச் செல்வம் அளிப்பான்
நாழிகைக்கு ஒர் புத்தியுடையான் ஒரு நாள் இருந்தபடி மற்றொர் நாளினில் இல்லை
பாழிடத்தை நாடியிருப்பான் பல பாட்டினிலும் கதையிலும் நேரம் அழிப்பான்

#6
இன்பத்தை இனிது எனவும் துன்பம் இனிது இல்லை என்றும் அவன் எண்ணுவதில்லை
அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர்க் குலம் ஏற்றமுறவே
வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன்
முன்பு விதித்ததனையே பின்பு முறைப்படி அறிந்து உண்ண மூட்டிவிடுவான்

#7
வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதைத் திரளில் அவ் வேதம் இல்லை
வேதங்கள் என்றவற்றுள்ளே அவன் வேதத்தில் சிலசில கலந்ததுண்டு
வேதங்களன்றி ஒன்று இல்லை இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம்

#8
நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்
சீலம் அறிவு கருமம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்
மேலவர் கீழவர் என்றே வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டு என்பான்

#9
வயது முதிர்ந்துவிடினும் எந்தை வாலிபக்களை என்றும் மாறுவதில்லை
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை
பயம் இல்லை பரிவு ஒன்று இல்லை எவர் பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை
நயம் மிகத் தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதிச் செயல் கண்டு மகிழ்வான்

#10
துன்பத்தில் நொந்து வருவோர்தம்மைத் தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்
அன்பினைக் கைக்கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்பு உடைபட்ட பொழுதும் நெஞ்சில் ஏக்கமுறப் பொறுப்பவர்தம்மை உகப்பான்
இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பம் மிகத் தருவதில் இன்பமுடையான்

@4 கண்ணன் என் சேவகன்

#1
கூலி மிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால்
பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது என்பார்
வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்தது என்பார் 5
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாள் என்பார்
ஓயாமல் பொய் உரைப்பார் ஒன்று உரைக்க வேறு செய்வார்
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தி எல்லாம் ஊர் அம்பலத்து உரைப்பார்
எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசறைவார் 10
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்
சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை
இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன் 15
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டு இசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டுவழி ஆனாலும் கள்ளர் பயம் ஆனாலும் 20
இரவில் பகலிலே எந்நேரம் ஆனாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவாணர்தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் உறாமல் காப்பேன்
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே
ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர் 25
நான் அறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன்
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன்
ஒன்றுமில்லை கண்ணன் என்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்
கட்டுறுதியுள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் ஈங்கு இவற்றால் 30
தக்கவன் என்று உள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய்
கூலி என்ன கேட்கின்றாய் கூறுக என்றேன் ஐயனே
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதும் இல்லை
நான் ஓர் தனியாள் நரைதிரை தோன்றாவிடினும் 35
ஆன வயதிற்கு அளவில்லை தேவாணர்
ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சில் உள்ள
காதல் பெரிது எனக்குக் காசு பெரிதில்லை என்றான்
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்று எனவே
கண்டு மிகவும் களிப்புடனே நான் அவனை 40
ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாகநாளாக நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்றுவரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம் 45
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான்
தாதியர் செய் குற்றம் எல்லாம் தட்டி அடக்குகிறான்
மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய்
ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றிப் 50
பண்டம் எல்லாம் சேர்த்துவைத்துப் பால் வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய் போல் பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான் 55
இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவயோகம் 60
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளி சேர் நலம் அனைத்தும் ஓங்கி வருகின்றன காண்
கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன்
கண்ணன் எனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே

@5 கண்ணன் என் அரசன்

#1
பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பதல்லால் ஒன்றும் செய்திடான்
நகைபுரிந்து பொறுத்துப்பொறுத்து ஐயோ நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்

#2
கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம் கண்ணில் காண்பது அரிது எனத் தோன்றுமே
எண்ணமிட்டு எண்ணமிட்டுச் சலித்து நாம் இழந்த நாட்கள் யுகம் எனப் போகுமே

#3
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணம் உண்டாக்கல் எதுவும் புரிந்திடான்
இடையன் வீரமிலாதவன் அஞ்சினோன் என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான்

#4
கொல்லப் பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோகமுற்றுப் பொழுதுகள் போக்குவான்

#5
வான நீர்க்கு வருந்தும் பயிர் என மாந்தர் மற்று இவண் போர்க்குத் தவிக்கவும்
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள் தனிமை வேய்ங்குழல் என்று இவை போற்றுவான்

#6
காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம் கதி எமக்கு ஒன்று காட்டுவை என்றிட்டால்
நாலில் ஒன்று பலித்திடும் காண் என்பான் நாமச்சொல்லின் பொருள் எங்கு உணர்வதே

#7
நாம் அவன் வலி நம்பியிருக்கவும் நாணம் இன்றிப் பதுங்கி வளருவான்
தீமைதன்னை விலக்கவும் செய்குவான் சிறுமைகொண்டு ஒளித்து ஓடவும் செய்குவான்

#8
தந்திரங்கள் பயிலவும் செய்குவான் சவுரியங்கள் பழகவும் செய்குவான்
மந்திரத் திறனும் பல காட்டுவான் வலிமை இன்றிச் சிறுமையில் வாழ்குவான்

#9
காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான்
ஆலகால விடத்தினைப் போலவே அகிலம் முற்றும் அசைந்திடச் சீறுவான்

#10
வேரும் வேரடி மண்ணும் இலாமலே வெந்துபோகப் பகைமை பொசுக்குவான்
பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்

#11
சக்கரத்தை எடுப்பது ஒருகணம் தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்
இக்கணத்தில் இடைக்கணம் ஒன்று உண்டோ இதனுள்ளே பகை மாய்த்திட வல்லவன் காண்

#12
கண்ணன் எங்கள் அரசன் புகழினைக் கவிதைகொண்டு எந்தக் காலமும் போற்றுவேன்
திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனைத் தேசம் போற்றத் தன் மந்திரி ஆக்கினான்

#13
நித்தச் சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலாப் பெரும் செல்வம் உதவினான்
வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்

#14
கண்ணன் எம்பெருமான் அருள் வாழ்கவே கலி அழிந்து புவித்தலம் வாழ்கவே
அண்ணல் இன் அருள் நாடிய நாடுதான் அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே

@6 கண்ணன் என் சீடன்
**(ஆசிரியப்பா)

#1
யானேயாகி என்னலால் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்
என்னிலும் அறிவினில் குறைந்தவன் போலவும்
என்னைத் துணைக்கொண்டு என்னுடைய முயற்சியால் 5
என் நடை பழகலால் என் மொழி கேட்டலால்
மேம்பாடு எய்த வேண்டினோன் போலவும்
யான் சொலும் கவிதை என் மதி அளவை
இவற்றினைப் பெருமை இலங்கின என்று
கருதுவான் போலவும் கண்ணக் கள்வன் 10
சீடனா வந்து எனைச் சேர்ந்தவன் தெய்வமே
பேதையேன் அவ் வலைப்பின்னலின் வீழ்ந்து
பட்டன தொல்லை பல பெரும் பாரதம்
உளத்தினை வென்றிடேன் உலகினை வெல்லவும்
தான் அகம் சுடாதேன் பிறர்தமைத் தான் எனும் 15
சிறுமையின் அகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன் இந்தச் சகத்திலே உள்ள
மாந்தர்க்கு உற்ற துயர் எலாம் மாற்றி
இன்பத்து இருத்தவும் எண்ணிய பிழைக்கு எனைத் 20
தண்டனை புரிந்திடத் தான் உளம்கொண்டு
மாயக் கண்ணன் வலிந்து எனைச் சார்ந்து
புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும்
பலவகையால் அகப் பற்றுறச் செய்தான்
வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃது ஓர் 25
அவலாய் மூண்டது யானும் அங்கு அவனை
உயர்நிலைப்படுத்தலில் ஊக்கம் மிக்கவனாய்
இன்னது செய்திடேல் இவரொடு பழகேல்
இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல்
இன்னது கற்றிடேல் இன்ன நூல் கற்பாய் 30
இன்னவர் உறவுகொள் இன்னவை விரும்புவாய்
எனப் பல தருமம் எடுத்தெடுத்து ஓதி
ஓய்விலாது அவனோடு உயிர்விடலானேன்
கதையிலே கணவன் சொல்லினுக்கு எல்லாம்
எதிர்செயும் மனைவி போல் இவனும் நான் காட்டும் 35
நெறியினுக்கு எல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பான் ஆயினன் நானிலத்தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமாக் கொண்ட சிறுமதி உடையேன்
கண்ணனாம் சீடன் யான் காட்டிய வழி எலாம் 40
விலகியே நடக்கும் விநோதம் இங்கு அன்றியும்
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கம் அத்தனையும்
தலையாக்கொண்டு சார்பு எலாம் பழிச்சொலும்
இகழும் மிக்கவனாய் என் மனம் வருந்த
நடந்திடல் கண்டேன் நாட்பட நாட்படக் 45
கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவான் ஆகி வீதியில் பெரியோர்
கிழவியர் எல்லாம் கிறுக்கன் என்று இவனை
இகழ்ச்சியோடு இரக்கமுற்று ஏளனம்புரியும்
நிலையும் வந்திட்டான் நெஞ்சிலே எனக்குத் 50
தோன்றிய வருத்தம் சொல்லிடப்படாது
முத்தன் ஆக்கிட நான் முயன்றதோர் இளைஞன்
பித்தன் என்று உலகினர் பேசிய பேச்சு என்
நெஞ்சினை அறுத்தது நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் 55
சொல்லி நான் கண்ணனைத் தொளைத்திடலாயினேன்
தேவநிலையிலே சேர்த்திடாவிடினும்
மானுடன் தவறி மடிவுறா வண்ணம்
கண்ணனை நானும் காத்திட விரும்பித்
தீ எனக் கொதித்துச் சினமொழி உரைத்தும் 60
சிரித்து உரை கூறியும் செள்ளென விழுந்தும்
கேலிகள் பேசிக் கிளறியும் இன்னும்
எத்தனை வகையிலோ என் வழிக்கு அவனைக்
கொணர்ந்திட முயன்றேன் கொள்பயன் ஒன்று இலை
கண்ணன் பித்தனாய்க் காட்டாள் ஆகி 65
எவ்வகைத் தொழிலிலும் எண்ணம் அற்றவனாய்
எவ்வகைப் பயனிலும் கருத்து இழந்தவனாய்
குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்
யாதோ பொருளாய் எங்ஙனோ நின்றான்
இதனால் 70
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற
யான் கடும் சினமுற்று எவ்வகையானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்
எனப் பெரும் தாபம் எய்தினேன் ஆகி
எவ்வாறேனும் இவனை ஓர் தொழிலில் 75
ஓரிடம்தன்னில் ஒரு வழி வலிய
நிறுத்துவோமாயின் நேருற்றிடுவான்
என்று உளத்து எண்ணி இசைந்திடும் சமயம்
காத்திருந்திட்டேன் ஒருநாள் கண்ணனைத்
தனியே எனது வீட்டினில் கொண்டு 80
மகனே என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும் நீ உடையை அதனை யான் நம்பி
நின்னிடம் ஒன்று கேட்பேன் நீ அது
செய்திடல் வேண்டும் சேர்க்கையின்படியே
மாந்தர்தம் செயல் எலாம் வகுப்புறல் கண்டாய் 85
சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோர்தமையே அருகினில் கொண்டு
பொருளினுக்கு அலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுது எலாம் அவருடன் மேவி 90
இருந்திடலாகுமேல் எனக்கு நன்று உண்டாம்
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகன் இங்கு உனையலால் அறிந்திடேன்
ஆதலால்
என் பயன் கருதி எனக்கு ஒரு துணையாய் 95
என்னுடன் சில நாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன் வேண்டுதல் மறுத்தே
என்னை நீ துன்பம் எய்துவித்திடாமே
இவ் உரைக்கு இணங்குவாய் என்றேன் கண்ணனும்
அங்ஙனே புரிவேன் ஆயின் நின்னிடத்தே 100
தொழில் இலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது
காரியம் ஒன்று காட்டுவையாயின்
இருப்பேன் என்றான் இவனுடை இயல்பையும்
திறனையும் கருதி என் செய்யுளை எல்லாம்
நல்லதோர் பிரதியில் நாள்தொறும் எழுதிக் 105
கொடுத்திடும் தொழிலினைக் கொள்ளுதி என்றேன்
நன்று எனக் கூறி ஓர் நாழிகை இருந்தான்
செல்வேன் என்றான் சினத்தோடு நானும்
பழங்கதை எழுதிய பகுதி ஒன்றினை அவன்
கையினில் கொடுத்துக் கவினுற இதனை 110
எழுதுக என்றேன் இணங்குவான் போன்று அதைக்
கையிலே கொண்டு கணப்பொழுது இருந்தான்
செல்வேன் என்றான் சினம் தீயாகி நான்
ஏதடா சொன்ன சொல் அழித்து உரைக்கின்றாய்
பித்தன் என்று உன்னை உலகினர் சொல்வது 115
பிழை இலை போலும் என்றேன் அதற்கு
நாளை வந்து இவ் வினை நடத்துவேன் என்றான்
இத் தொழில் இங்கே இப்பொழுது எடுத்துச்
செய்கின்றனையா செய்குவதில்லையா
ஓர் உரை சொல் என்று உறுமினேன் கண்ணனும் 120
இல்லை என்று ஒரு சொல் இமைக்கும் முன் கூறினான்
வெடுக்கெனச் சினத் தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்
கண் சிவந்து இதழ்கள் துடித்திடக் கனன்று நான்
சீச்சி பேயே சிறிது போழ்தேனும்
இனி என் முகத்தின் எதிர்நின்றிடாதே 125
என்றும் இவ் உலகில் என்னிடத்து இனி நீ
போந்திடல் வேண்டா போ போ போ என்று
இடியுறச் சொன்னேன் கண்ணனும் எழுந்து
செல்குவன் ஆயினன் விழிநீர் சேர்ந்திட
மகனே போகுதி வாழ்க நீ நின்னைத் 130
தேவர் காத்திடுக நின்றனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்
தோற்றுவிட்டேனடா சூழ்ச்சிகள் அறிந்தேன்
மறந்து இனி வாராய் செல்லுதி வாழி நீ
எனத் துயர் நீங்கி அமைதியோடு இசைத்தேன் 135
சென்றனன் கண்ணன் திரும்பி ஓர்கணத்தே
எங்கிருந்தோ நல் எழுதுகோல் கொணர்ந்தான்
காட்டிய பகுதியைக் கவினுறு வரைந்தான்
ஐயனே நின் வழி அனைத்தையும் கொள்வேன்
தொழில் பல புரிவேன் துன்பம் இங்கு என்றும் 140
இனி நினக்கு என்னால் எய்திடாது எனப் பல
நல்ல சொல் உரைத்து நகைத்தனன் மறைந்தான்
மறைந்ததோர் கண்ணன் மறுகணத்து என்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவான் ஆயினன்
மகனே ஒன்றை ஆக்குதல் மாற்றுதல் 145
அழித்திடல் எல்லாம் நின் செயல் அன்று காண்
தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய் உலகினில் வேண்டிய தொழில் எலாம்
ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ என்றான் வாழ்க மற்று அவனே 150

@7 கண்ணன் எனது சற்குரு
**புன்னாகவராளி – திஸ்ர ஜாதி – ஏகதாளம்
**ரஸங்கள் : அற்புதம், பக்தி

#1
சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம்
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே என்னும்
ஆத்திரம் நின்றது அதனிடை நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன

#2
நாடு முழுதிலும் சுற்றி நான் பல நாள்கள் அலைந்திடும் போதினில் நிறைந்து
ஓடும் யமுனைக் கரையிலே தடி ஊன்றிச் சென்றார் ஓர் கிழவனார் ஒளி
கூடு முகமும் தெளிவுதான் குடிகொண்ட விழியும் சடைகளும் வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில்

#3
என் உளத்து ஆசை அறிந்தவர் மிக இன்புற்று உரைத்திடலாயினர் தம்பி
நின் உளத்திற்குத் தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன் வட மா மதுரைப்பதி ஆள்கின்றான் கண்ணன்
தன்னைச் சரண் என்று போவையேல் அவன் சத்தியம் கூறுவன் என்றனர்

#4
மா மதுரைப்பதி சென்று நான் அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே என்றன்
நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி நன்மை தருக என வேண்டினன் அவன்
காமனைப் போன்ற வடிவமும் இளம்காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட
பூமியைக் காக்கும் தொழிலிலே எந்தப்போதும் செலுத்திடும் சிந்தையும்

#5
ஆடலும் பாடலும் கண்டு நான் முன்னர் ஆற்றங்கரையினில் கண்டதோர் முனி
வேடம் தரித்த கிழவரைக் கொல்லவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன் சிறு
நாடு புரந்திடும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கினோன் தவப்
பாடுபட்டோர்க்கும் விளங்கிடா உண்மை பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்

#6
என்று கருதி இருந்திட்டேன் பின்னர் என்னைத் தனியிடம் கொண்டுபோய் நினை
நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திடக் கேட்பை நீ நெஞ்சில்
ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான்

#7
சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினைச் சேர்ந்து தழுவி அருள்செயும் அதன்
மந்திரத்தால் இவ் உலகு எலாம் வந்த மாயக் களிப் பெரும் கூத்துக் காண் இதைச்
சந்ததம் பொய் என்று உரைத்திடும் மடச் சாத்திரம் பொய் என்று தள்ளடா

#8
ஆதித் தனிப்பொருள் ஆகும் ஓர் கடல் ஆரும் குமிழி உயிர்களாம் அந்தச்
சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண
நீதி அறிந்து இன்பம் எய்தியே ஒரு நேர்மைத் தொழிலில் இயங்குவார்

#9
சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல
மத்த மத வெம் களிறு போல் நடை வாய்ந்து இறுமாந்து திரிகுவார் இங்கு
நித்தம் நிகழ்வது அனைத்துமே எந்தை நீண்ட திருவருளால் வரும் இன்பம்
சுத்த சுகம் தனி ஆநந்தம் எனச் சூழ்ந்து கவலைகள் தள்ளியே

#10
சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற
நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமித் தொழில் செய்து கலை
ஓதிப் பொருளியல் கண்டதாம் பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில்

#11
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதி இனைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில நாளினில் எய்தப்பெறுகுவார் அவர்
காடு புதரில் வளரினும் தெய்வக் காவனம் என்று அதைப் போற்றலாம்

#12
ஞானியர்தம் இயல் கூறினேன் அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் எனத்
தேனில் இனிய குரலிலே கண்ணன் செப்பவும் உண்மை நிலை கண்டேன் பண்டை
ஈன மனிதக் கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறி
வான தனிச் சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன்

#13

@8 கண்ணம்மா என் குழந்தை
**(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)
**ராகம் – பைரவி : தாளம் – ரூபகம்
**ஸ ஸ ஸ ஸா ஸா பபப
** தநீத பதப பா
**பபப பதப பமா கரிஸா
** ரிகம ரிகரி ஸா
**என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு
** மனோபாவப்படி மாற்றிப் பாடுக

#1
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

#2
பிள்ளைக்கனி அமுதே கண்ணம்மா பேசும் பொன் சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே

#3
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடீ

#4
உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ

#5
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடீ
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ

#6
சற்று உன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடீ
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ

#7
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னது அன்றோ

#8
சொல்லும் மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்

#9
இன்பக் கதைகள் எல்லாம் உன்னைப் போல் ஏடுகள் சொல்வது உண்டோ
அன்பு தருவதிலே உனை நேர் ஆகும் ஓர் தெய்வம் உண்டோ

#10
மார்பில் அணிவதற்கே உன்னைப் போல் வைர மணிகள் உண்டோ
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப் போல் செல்வம் பிறிதும் உண்டோ

@9 கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை
**கேதாரம் – கண்டஜாதி – ஏகதாளம்
**ரஸங்கள் : அற்புதம், சிருங்காரம்

#1
தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை

#2
தின்னப் பழம் கொண்டு தருவான் பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என் அப்பன் என் ஐயன் என்றால் அதனை எச்சிற்படுத்திக் கடித்துக் கொடுப்பான்

#3
தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்
மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான்

#4
அழகுள்ள மலர் கொண்டுவந்தே என்னை அழஅழச் செய்து பின் கண்ணை மூடிக்கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்

#5
பின்னலைப் பின் நின்று இழுப்பான் தலை பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான்
வன்னப் புதுச் சேலைதனிலே புழுதி வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்

#6
புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கித் ததும்பும் நல் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போலே அதைக் கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்

#7
அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன் ஆறேழு கட்டெறும்பைப் போட்டுவிடுவான்
எங்காகிலும் பார்த்தது உண்டோ கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்றோ

#8
விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதைக் கேளாது இழுப்பான்
இளையாரொடு ஆடிக் குதிப்பான் எம்மை இடையில் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்

#9
அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்

#10
கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொலக் கூசாச் சழக்கன்
ஆளுக்கு இசைந்தபடி பேசித் தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்

@10 கண்ணன் என் காதலன் – 1
**செஞ்சுருட்டி – திஸ்ர ஏக தாளம் : சிருங்கார ரஸம்

#1
தூண்டில் புழுவினைப் போல் வெளியே சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்ததடீ
கூண்டுக்கிளியினைப் போல் தனிமைகொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளை எல்லாம் மனது வெறுத்துவிட்டதடீ

#2
பாயின் மிசை நானும் தனியே படுத்திருக்கையிலே
தாயினைக் கண்டாலும் சகியே சலிப்பு வந்ததடீ
வாயினில் வந்தது எல்லாம் சகியே வளர்த்துப் பேசிடுவீர்
நோயினைப் போல் அஞ்சினேன் சகியே நுங்கள் உறவை எல்லாம்

#3
உணவு செல்லவில்லை சகியே உறக்கம்கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்கவில்லை
குணம் உறுதி இல்லை எதிலும் குழப்பம் வந்ததடீ
கணமும் உள்ளத்திலே சுகமே காணக் கிடைத்ததில்லை

#4
பாலும் கசந்ததடீ சகியே படுக்கை நொந்ததடீ
கோலக் கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடீ
நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார்
பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்றுவிட்டான்

#5
கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்
இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டுவிட்டான்
வினவக் கண் விழித்தேன் சகியே மேனி மறைந்துவிட்டான்
மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ

#6
உச்சி குளிர்ந்ததடீ சகியே உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடும் எல்லாம் முன்னைப் போல் மனத்துக்கு ஒத்ததடீ
இச்சை பிறந்ததடீ எதிலும் இன்பம் விளைந்ததடீ
அச்சம் ஒழிந்ததடீ சகியே அழகு வந்ததடீ

#7
எண்ணும் பொழுதில் எல்லாம் அவன் கை இட்ட இடத்தினிலே
தண்ணென்று இருந்ததடீ புதிதோர் சாந்தி பிறந்ததடீ
எண்ணியெண்ணிப் பார்த்தேன் அவன்தான் யார் எனச் சிந்தைசெய்தேன்
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ

@11 கண்ணன் என் காதலன் – 2
**உறக்கமும் விழிப்பும்
**நாதநாமக்கிரியை – ஆதி தாளம்
**ரஸங்கள் : பீபத்ஸம், சிருங்காரம்

#1
நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்புத் தெரியவில்லை கூத்தடிக்கிறீர்
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவில் என்ன தூளிபடுகுதடி இவ்விடத்திலே
ஊரை எழுப்பிவிட நிச்சயங்கொண்டீர் அன்னை ஒருத்தி உண்டு என்பதையும் மறந்துவிட்டீர்
சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிகச் சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே

#2
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் இது நாளுக்குநாள் அதிகமாகிவிட்டதே
கூனன் ஒருவன் வந்து இ நாணி பின்னலைக் கொண்டை மலர் சிதற நின்று இழுத்ததும்
ஆனை மதம்பிடித்து இவ் வஞ்சி அம்மையின் அருகினில் ஓட இவள் மூர்ச்சையுற்றதும்
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் பாங்கி உரோகிணிக்கு நோவுகண்டதும்

#3
பத்தினியாளை ஒரு பண்ணை வெளியில் பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்
நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும்
கொத்துக் கனல் விழி அக் கோவினிப் பெண்ணைக் கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும்
வித்தைப் பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும்

#4
எத்தனை பொய்களடி என்ன கதைகள் என்னை உறக்கம் இன்றி இன்னல் செய்கிறீர்
சத்தமிடும் குழல்கள் வீணைகள் எல்லாம் தாளங்களோடு கட்டி மூடிவைத்து அங்கே
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்குச் சுவர் அருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ள எனைத் தனியில் விட்டே நீங்கள் எல்லோரும் உங்கள் வீடு செல்லுவீர்

#5
**(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)

#6
கண்கள் உறங்க ஒரு காரணம் உண்டோ கண்ணனை இன்று இரவு காண்பதன் முன்னே
பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்
வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலிப் புறத்தில் எனைக் காணடி என்றான்
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனைக் கை இரண்டும் கட்டல் இன்றியே

@12 கண்ணன் என் காதலன் – 3
**(காட்டிலே தேடுதல்)
**ஹிந்துஸ்தானி தோடி – ஆதி தாளம்
**ரஸங்கள் : பயாநகம், அற்புதம்

#0
திக்குத் தெரியாத காட்டில் உனைத்
தேடித்தேடி இளைத்தேனே

#1
மிக்க நலமுடைய மரங்கள் பல விந்தைச் சுவையுடைய கனிகள் எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள்

#2
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீளக் கிடக்கும் இலைக் கடல்கள் மதி
வஞ்சித்திடும் அகழிச் சுனைகள் முட்கள் மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்

#3
ஆசை பெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்சக் குரல் பழகும் புலிகள் நல்ல
நேசக் கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு

#4
தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் அதன் சத்தத்தினில் கலங்கும் யானை அதன்
முன் நின்று ஓடும் இளமான்கள் இவை முட்டாது அயல் பதுங்கும் தவளை

#5
கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு
வேல் கைக் கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான்

#6
பெண்ணே உனது அழகைக் கண்டு மனம் பித்தம்கொள்ளுது என்று நகைத்தான் அடி
கண்ணே எனது இரு கண்மணியே உனைக் கட்டித் தழுவ மனம்கொண்டேன்

#7
சோர்ந்தே படுத்திருக்கலாமோ நல்ல துண்டக் கறி சமைத்துத் தின்போம் சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம்

#8
என்றே கொடிய விழி வேடன் உயிர் இற்றுப்போக விழித்து உரைத்தான் தனி
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன்

#9
அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்சக் கொடுமை சொல்ல வேண்டா பிறன்
கண்ணாலஞ்செய்துவிட்ட பெண்ணை உன்றன் கண்ணால் பார்த்திடவும் தகுமோ

#10
ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தைப் பழைய கள்ளைப் போலே

#11
காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிகப்
போதாகவில்லை இதற்குள்ளே என்றன் போதம் தெளிய நினைக் கண்டேன்

#12
கண்ணா வேடன் எங்கு போனான் உனைக் கண்டே அலறி விழுந்தானோ மணி
வண்ணா எனது அபயக் குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி

@13 கண்ணன் என் காதலன் – 4
**(பாங்கியைத் தூது விடுத்தல்)
**தங்கப் பாட்டு மெட்டு
**ரஸங்கள் சிருங்காரம் ரெளத்ரம்

#1
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர்
ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்

#2
கன்னிகையாய் இருந்து தங்கமே நாங்கள்
காலம் கழிப்பமடி தங்கமே தங்கம்
அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும்
அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம்

#3
சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும்
தோழமை இல்லையடி தங்கமே தங்கம்
என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டுவிடடீ

#4
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் தலை
மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ
பொய்யை உருவம் எனக் கொண்டவன் என்றே கிழப்
பொன்னி உரைத்தது உண்டு தங்கமே தங்கம்

#5
ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள் எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியது எல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்

#6
சோரமிழைத்து இடையர் பெண்களுடனே அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவது எல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டியதில்லை என்று சொல்லிவிடடீ

#7
பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே

#8
நேர முழுதிலும் அப் பாவிதன்னையே உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு
தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்

@14 கண்ணன் என் காதலன் – 5
**(பிரிவாற்றாமை – பாங்கியைத் தூது விடுத்தல்)
**ராகம் – பிலஹரி

#1
ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமோ

#2
கண்ணில் தெரியுது ஒரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுது இல்லை
நண்ணும் முக வடிவு காணில் அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

#3
ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயும் உரைப்பது உண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும்

#4
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர்க் கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ

#5
தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி

#6
கண்ணன் முகம் மறந்து போனால் இந்தக் கண்கள் இருந்து பயன் உண்டோ
வண்ணப் படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி தோழி

@15 கண்ணன் என் காந்தன்
**வராளி – திஸ்ர ஏகதாளம்
**ரஸம் – சிருங்காரம்

#1
கனிகள் கொண்டுதரும் கண்ணன் கற்கண்டு போல் இனிதாய்
பனிசெய் சந்தனமும் பின்னும் பல்வகை அத்தர்களும்
குனியும் வாள் முகத்தான் கண்ணன் குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே வண்ணம் இயன்ற சவ்வாதும்

#2
கொண்டை முடிப்பதற்கே மணம் கூடு தயிலங்களும்
வண்டு விழியினுக்கே கண்ணன் மையும் கொண்டுதரும்
தண்டைப் பதங்களுக்கே செம்மை சார்ந்து செம்பஞ்சு தரும்
பெண்டிர்தமக்கு எல்லாம் கண்ணன் பேசரும் தெய்வமடீ

#3
குங்குமம் கொண்டுவரும் கண்ணன் குழைந்து மார்பு எழுத
சங்கை இலாத பணம் தந்தே தழுவி மையல் செய்யும்
பங்கம் ஒன்று இல்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்
மங்களம் ஆகுமடீ பின் ஓர் வருத்தம் இல்லையடீ

@16 கண்ணம்மா என் காதலி -1
**(காட்சி வியப்பு)
**செஞ்சுருட்டி – ஏகதாளம்
**ரஸங்கள் – சிருங்காரம், அற்புதம்

#1
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமை-கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வயிரம்
நட்டநடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடீ

#2
சோலை மலர் ஒளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடல் அலையே உனது நெஞ்சில் அலைகளடீ
கோலக் குயில் ஓசை உனது குரல் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக் காதல்கொண்டேன்

#3
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம்கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தம் ஒன்று

@17 கண்ணம்மா என் காதலி – 2
**(பின்னே வந்து நின்று கண் மறைத்தல்)
**நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
**சிருங்கார ரஸம்

#1
மாலைப் பொழுதில் ஒரு மேடை மிசையே
வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன்
மூலைக் கடலினை அவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே
சாலப் பலபல நல் பகற்கனவில்
தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன்

#2
ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே
ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே
பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன்
பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன்
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன்
ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன்
வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா
மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன்

#3
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே
திருமித் தழுவி என்ன செய்தி சொல் என்றேன்
நெரித்த திரைக் கடலில் என்ன கண்டிட்டாய்
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள்

#4
நெரித்த திரைக் கடலில் நின் முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன்
சின்னக் குமிழிகளில் நின் முகம் கண்டேன்
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றது உன் முகம் அன்றிப் பிறிது ஒன்றில்லை
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே
திருமித் தழுவி அதில் நின் முகம் கண்டேன்

@18 கண்ணம்மா என் காதலி – 3
**(முகத்திரை களைதல்)
**நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
**சிருங்கார ரஸம்

#1
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த
மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய்
வல்லி இடையினையும் மார்பு இரண்டையும் துணி
மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை
சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை முகச்
சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ

#2
ஆரியர் முன் நெறிகள் மேன்மை என்கிறாய் பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ
ஓரிருமுறை கண்டு பழகிய பின் வெறும்
ஒப்புக்குக் காட்டுவது இ நாணம் என்னடீ
யாரிருந்து என்னை இங்கு தடுத்திடுவார் வலு
வாக முகத்திரையை அகற்றிவிட்டால்
காரியமில்லையடி வீண்பசப்பிலே கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ

@19 கண்ணம்மா என் காதலி – 4
**(நாணிக் கண் புதைத்தல்)
**நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
**சிருங்கார ரஸம்

#1
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை இவன்
மருவ நிகழ்ந்தது என்று நாணமுற்றதோ
சின்னஞ்சிறு குழந்தை என்ற கருத்தோ இங்கு
செய்யத்தகாத செய்கை செய்தவர் உண்டோ
வன்ன முகத்திரையைக் களைந்திடு என்றேன் நின்றன்
மதம் கண்டு துகிலினை வலிது உரிந்தேன்
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய் எனக்கு
எண்ணப்படுவதில்லை ஏடி கண்ணம்மா

#2
கன்னி வயதில் உனைக் கண்டதில்லையோ கன்னம்
கன்றிச் சிவக்க முத்தமிட்டதில்லையோ
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை இரண்டு
ஆவியும் ஒன்றாகும் எனக் கொண்டதில்லையோ
பன்னிப் பல உரைகள் சொல்லுவது என்னே துகில்
பறித்தவன் கை பறிக்கப் பயம் கொள்வனோ
என்னைப் புறம் எனவும் கருதுவதோ கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ

#3
நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை
நைந்த பழங்கதைகள் நான் உரைப்பதோ
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள்
பன்னி உபசரணை பேசுவது உண்டோ
நீட்டும் கதிர்களோடு நிலவு வந்தே விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின் மருவுமோ
மூட்டும் விறகினைச் சோதி கவ்வுங்கால் அவை
முன் உபசார வகை மொழிந்திடுமோ

#4
சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர்
சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன்
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக
நெடும் பண்டைக் காலம் முதல் சேர்ந்து வந்ததாம்
போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு
பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான்
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன்
உருவம் நினக்கு அமையப் பார்த்தன் அங்கு நான்

#5
முன்னை மிகப் பழமை இரணியனாம் எந்தை
மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ
பின்னை ஒர் புத்தன் என நான் வளர்ந்திட்டேன் ஒளிப்
பெண்மை அசோதரை என்று உன்னை எய்தினேன்
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர்
சொல்லில் பழுது இருக்கக் காரணம் இல்லை
இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில்
ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே

@20 கண்ணம்மா என் காதலி – 5
**(குறிப்பிடம் தவறியது)
** செஞ்சுருட்டி — ஆதிதாளம்
**சிருங்கார ரஸம்

#1
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடு என்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடீ

#2
மேனி கொதிக்குதடீ தலைசுற்றியே வேதனைசெய்குதடீ
வானில் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்து இருக்குதடீ இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நான் ஒருவன் மட்டிலும் பிரிவு என்பதோர் நரகத்து உழலுவதோ

#3
கடுமையுடையதடீ எந்த நேரமும் காவல் உன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் எண்ணும் போது நான் அங்கு வருவதற்கில்லை
கொடுமை பொறுக்கவில்லை கட்டும்காவலும் கூடிக்கிடக்குது அங்கே
நடுமை அரசி அவள் எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள்

#4
கூடிப் பிரியாமலே ஓர் இரா எலாம் கொஞ்சிக் குலவி அங்கே
ஆடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை
நாடித் தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களி எய்தியே
பாடிப் பரவசமாய் நிற்கவே தவம்பண்ணியது இல்லையடி

@21 கண்ணம்மா என் காதலி – 6
**யோகம்

#1
பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நான் உனக்கு
வாய் உரைக்கவருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா

#2
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நான் உனக்கு
காணுமிடம்தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா

#3
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்குப் பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமறு நல் அழகே ஊறு சுவையே கண்ணம்மா

#4
வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணு கதி நீ எனக்குப் பாட்டு இனிமை நான் உனக்கு
எண்ணியெண்ணிப் பார்த்திடில் ஓர் எண்ணம் இலை நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா

#5
வீசு கமழ் நீ எனக்கு விரியும் மலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்குப் பேணும் மொழி நான் உனக்கு
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன்
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா

#6
காதலடி நீ எனக்குக் காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீம் சுவையே
நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா

#7
நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொன் சுடரே
முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே கண்ணம்மா

#8
தாரையடி நீ எனக்குத் தண் மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பம் எல்லாம்
ஒர் உருவமாய்ச் சமைந்தாய் உள் அமுதே கண்ணம்மா

@22 கண்ணன் என் ஆண்டான்
**புன்னாகவராளி – திஸ்ர ஏகதாளம்
**ரஸங்கள் – அற்புதம், கருணை

#1
தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றித் தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன் பாரம் உனக்கு ஆண்டே
ஆண்டே பாரம் உனக்கு ஆண்டே

#2
துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்துச் சுகம் அருளல் வேண்டும்
அன்புடன் நின் புகழ் பாடிக் குதித்து நின் ஆணை வழி நடப்பேன்
ஆண்டே ஆணை வழி நடப்பேன்

#3
சேரி முழுதும் பறையடித்தே அருள் சீர்த்திகள் பாடிடுவேன்
பேரிகை கொட்டித் திசைகள் அதிர நின் பெயர் முழக்கிடுவேன்
ஆண்டே பெயர் முழக்கிடுவேன்

#4
பண்ணைப் பறையர்தம் கூட்டத்திலே இவன் பாக்கியம் ஓங்கிவிட்டான்
கண்ணன் அடிமை இவன் எனும் கீர்த்தியில் காதலுற்று இங்கு வந்தேன்
ஆண்டே காதலுற்று இங்கு வந்தேன்

#5
காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன் காலிகள் மேய்த்திடுவேன்
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னர் என் பக்குவம் சொல் ஆண்டே
ஆண்டே பக்குவம் சொல் ஆண்டே

#6
தோட்டங்கள் கொத்திச் செடி வளர்க்கச்சொல்லிச் சோதனை போடு ஆண்டே
காட்டு மழைக் குறி தப்பிச் சொன்னால் எனைக் கட்டி அடி ஆண்டே
ஆண்டே கட்டி அடி ஆண்டே

#7
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திட வேண்டும் ஐயே
அண்டைஅயலுக்கு என்னால் உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே
உபகாரங்கள் ஆகிட வேண்டும் ஐயே

#8
மானத்தைக் காக்க ஓர் நாலுமுழத்துணி வாங்கித் தரவேணும்
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித் தரவும் கடன் ஆண்டே
சில வேட்டி தரவும் கடன் ஆண்டே

#9
ஒன்பது வாயில் குடிலினைச் சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே
துன்பப்படுத்துது மந்திரம்செய்து தொலைத்திட வேண்டும் ஐயே
பகை யாவும் தொலைத்திட வேண்டும் ஐயே

#10
பேயும் பிசாசும் திருடரும் என்றன் பெயரினைக் கேட்டளவில்
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே
தொல்லை தீரும் வழிசெய்ய வேண்டும் ஐயே

@23 கண்ணம்மா எனது குலதெய்வம்
**ராகம் புன்னாகவராளி
**பல்லவி

#0
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
**சரணங்கள்

#1
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத்தகாது என்று

#2
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமைபுகுந்தன கொன்று அவை போக்கு என்று

#3
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து இங்கு
நின் செயல் செய்து நிறைவுபெறும் வணம்

#4
துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை தோற்பு இல்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட

#5
நல்லது தீயது நாம் அறியோம் அன்னை
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக