பாரதியார் கவிதைகள் – பிற்சேர்க்கை

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

உள் தலைப்புகள்

1. இந்தத் தெய்வம்
2. வங்கமே வாழிய
3. வந்தே மாதரம்
4. என்னே கொடுமை
5. எனது தாய்நாட்டின் முன்னாட்
பெருமையும் இந்நாட் சிறுமையும்

6. வந்தே மாதரம்
7. சுதந்திர தேவியிடம் முறையீடு
8. உயிர் பெற்ற தமிழர் பாட்டு
9. பகவத் கீதை
10. வருண சிந்தாமணி நூலுக்குப்
பாடியளித்த பாயிரப் பாக்கள்

11. செட்டிமக்கள் குலவிளக்கு
12. இளசை ஒருபா ஒருபஃது
13. மணிமுத்து நாவலர்
14. குருவிப் பாட்டு
15. தனிமை இரக்கம்
16. யான்
17. சந்திரிகை
18. காவடிச் சிந்து
19. செல்வத்துட் பிறந்தனமா
20. பெரியோரின் பெருமை கெடாது
21. பண்டாரப் பாட்டு
22. வேலெனவென் விழி
23. ஆனந்த மையா
24. பாரதியார் திருப்புகழும் தேவாரமும்
25. கடல்
26. இந்தியாவின் அழைப்பு
27. போர்க்கோலம் பூணுவீரே
28. சுதந்திரம்
29. பெற்ற தாயும்


@1 இந்தத் தெய்வம்

#0
இந்தத் தெய்வம் நமக்கு அநுகூலம்
இனி மனக் கவலைக்கு இடம் இல்லை

#1
மந்திரங்களைச் சோதனைசெய்தால் வையகத்தினை ஆள்வது தெய்வம்
இந்தத் தெய்வம் கதி என்று இருப்பீர் ஆக்கம் உண்டு என்று அனைத்தும் உரைக்கும்

#2
மரத்தின் வேரில் அதற்கு உணவு உண்டு வயிற்றினிலே கருவுக்கு உணவு உண்டு
தரத்தில் ஒத்த தருமங்கள் உண்டு சக்தி ஒன்றிலோ முக்தி உண்டு

#3
உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம்
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம்

#4
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை
உய்கை கொண்டு அதன் நாமத்தைக் கூறின் உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர்

#5
நோய் இல்லை வறுமை இல்லை நோன் பிழைப்பதிலே துன்பம் இல்லை
தாயும் தந்தையும் தோழனும் ஆகித் தகுதியும் பயனும் தரும் தெய்வம்

#6
அச்சம் இல்லை மயங்குவது இல்லை அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு
மிச்சம் இல்லை பழம் துயர்க் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு
**1 ஆதாரம் பாரதி நினைவுகள் — பக்கம் 137-138 மகாகவி பாரதியாரின் மூத்த மகள்
**தங்கம்மாள் ருதுவான நாளன்று பாடிய பாடல் என யதுகிரி அம்மாள் குறிப்பிடுகிறார்

@2 வங்கமே வாழிய
**வங்க வாழ்த்துக் கவிகள்

#1
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணாச்
சிங்கமே என வாழ்தல் சிறப்பு எனாச் செம்மை கூறி நம் தாய்ப் பெரும் தேயத்தைப்
பங்கமே பெறும் இந் நிலை நின்று உயர் பண்டை மாண்பிடைக் கொண்டு
இனிது உய்த்திடும்
வங்கமே என வந்தனை வாழி நீ வங்கமே நனி வாழிய வாழிய

#2
கற்பகத் தருப் போல் எது கேட்பினும் கடிது நல்கிடும் பாரதநாட்டினில்
பொற்புறப் பிறந்தோம் நமக்கு ஓர் விதப் பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம்
அற்பர் போலப் பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை
வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழிய வாழிய

#3
கண்ணில் நீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய் கவினுறும் பரதப்பெரும்தேவியே
உள் நிகழ்ந்திடும் துன்பம் களைதியால் உன்றன் மைந்தர்கள் மேல் நெறி உற்றனர்
பெண்ணின் நெஞ்சிற்கு இதம் எனலாவது பெற்ற பிள்ளைகள் பீடுறவே அன்றோ
மண்ணி நீ புகழ் மேவிட வாழ்த்திய வங்கமே நனி வாழிய வாழிய
** 2 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 1-2 சுதேசமித்திரன் 15-9-1905
** 14-9-1905-ல் சென்னைக் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் பாடிய பாடல்

@3 வந்தே மாதரம்

#1
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும்
மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான்
மாரி எனும்படி வந்து சிறந்தது வந்தேமாதரமே மாண் உயர் பாரததேவியின்
மந்திரம் வந்தேமாதரமே
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு
புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின்
மந்திரம் வந்தேமாதரமே

#2
கார் அடர் பொன் முடி வாணி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்து
ஒரு தென்திசை ஆர்கலி காதல்செயா இடையும்
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி
அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும்
பாரததேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமும் பாதகர் ஓதினும் மேதகவு
உற்றிடு பண்பு உயர் மந்திரமும்
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர்
பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே
** 3ஆதாரம் சக்ரவர்த்தினி — பக்கம் 168
** சுதேசமித்திரனில் 24-2-1906-ல் திரும்பவும் பிரசுரம் செய்யப்பட்டது

@4 என்னே கொடுமை

#1
மல் ஆர் திண் தோள் பாஞ்சாலன் மகள் பொன் கரத்தின் மாலுற்ற
வில்லால் விஜயன் அன்று இழைத்த விந்தைத் தொழிலை மறந்திலிரால்
பொல்லா விதியால் நீவிர் அவன் போர் முன் இழைத்த பெரும் தொழில்கள்
எல்லாம் மறந்தீர் எம்மவர்காள் என்னே கொடுமை ஈங்கு இதுவே

#2
வீமன் திறலும் அவற்கு இளைய விஜயன் திறலும் விளங்கிநின்ற
சேம மணிப் பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும்
காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர்
ஈமம் புகுதல் இவை புரிவார் என்னே கொடுமை ஈங்கு இதுவே
** 4 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 16 சுதேசமித்திரன் 4-4-1906

@5 எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்
**கண்ணிகள்

#1
புன்னகையும் இன்னிசையும் எங்கு ஒளித்துப் போயினவோ
இன்னலொடு கண்ணீர் இருப்பாகிவிட்டனவே

#2
ஆண் எலாம் பெண்ணாய் அரிவையர் எலாம் விலங்காய்
மாண் எலாம் பாழாகி மங்கிவிட்டது இ நாடே

#3
ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநாடு என்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசம் ஆயினதே

#4
வீமாதி வீரர் விளித்து எங்கு போயினரோ
ஏமாறி நிற்கும் இழிஞர்கள் இங்கு உள்ளாரே

#5
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவர் இ நாட்டினிலே

#6
ஆதிமறைக் கீதம் அரிவையர்கள் சொன்னது போய்
வீதி பெருக்கும் விலை அடிமை ஆயினரே

#7
செந்தேனும் பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே
வந்தே தீப் பஞ்சம் மரபாகிவிட்டதுவே

#8
மா முனிவர் தோன்றி மணம் உயர்ந்த நாட்டினிலே
காமுகரும் பொய் அடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே

#9
பொன்னும் மணியும் மிகப் பொங்கிநின்ற இ நாட்டில்
அன்னம் இன்றி நாளும் அழிவார்கள் எத்தனைபேர்

@6 வந்தே மாதரம்
** [“வந்தே மாதரம் என்போம் — எங்கள் மாநிலத் தாயை வணங்குது மென்போம்”
** என்று துவங்கும்
** “வந்தே மாதர”ப் பாடலில் 1907-ம் ஆண்டில் ஸ்ரீ வி கிருஷ்ணசாமி ஐயர்
** வெளியிட்ட நான்கு பக்க பாரதி பாடல்
** பிரசுரத்தில் காணப்படும் சரணம் இது ‘எப்பதம் வாய்த்திடுமேனும்’என்று
** துவங்கும் சரணத்திற்கு
** அடுத்த சரணமாக இது இருக்கவேண்டும்]
**5 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 17
** சுதேசமித்திரன் 11-4-1906
**6 ஆதாரம் பாரதி புதையல் 1 — பக்கம் 22

#1
தேவி நம் பாரதபூமி எங்கள்
தீமைகள் யாவையும் தீர்த்து அருள்செய்வாள்
ஆவி உடல் பொருள் மூன்றும்
அந்த அன்னை பொன் தாளினுக்கு அர்ப்பிதம் ஆக்கி

@7 சுதந்திர தேவியிடம் முறையீடு

#1
அன்னாய் இங்கு உனைக் கூறப் பிழை இல்லை யாமே நின் அருள் பெற்று ஓங்க
என்னானும் தகுதியிலேம் மிகப் பொல்லேம் பழியுடையேம் இழிவு சான்றேம்
பொன்னான வழி அகற்றிப் புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம்
தன்னால் வந்திடும் நலத்தைத் தவிர்த்துப் பொய்த் தீமையினைத் தழுவுகின்றோம்

#2
எல்லையில்லாக் கருணையுறும் தெய்வதம் நீ எவர்க்கும் மனம் இரங்கிநிற்பாய்
தொல்லை எலாம் தவிர்த்து எங்கள் கண் காண நொடிப்பொழுதில் துருக்கி மாந்தர்
நல்ல பெரும் பதம் காணப்புரிந்திட்டாய் பல கால நவை கொண்டு அன்னார்
சொல்லரிய பிழை செய்தது அத்தனையும் மறந்து அவரைத் தொழும்புகண்டாய்

#3
அரைக்கணமாயினும் உன்னைத் திரிகரணத் தூய்மையுடன் அன்னாய் ஞானத்
திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்தத்
தரைக்கு அணிய பெரும்பொருளே காவாயோ என்று அலறித் தாய் உன் நாமம்
உரைக்க மனம் எமக்கு இன்றி யாம் அழிந்தாம் பிழை சிறிதும் உளதாம்-கொல்லோ

#4
வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார்
தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகித்
தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தால் அன்னாய் நீ செய்வது என்னே

#5
அந்த நாள் அருள்செய நீ முற்பட்ட பொழுது எலாம் அறிவிலாதேம்
வந்த மாதேவி நினை நல்வரவு கூறி அடி வணங்கிடாமல்
சொந்த மா மனிதருளே போரிட்டும் பாழாகித் துகளாய் வீழ்ந்தேம்
இந்த நாள் அச்சத்தால் நீ வருங்கால் முகம் திரும்பி இருக்கின்றோமால்
**7 ஆதாரம் பாரதி புதையல் 1 — பக்கம் 10-11 புதுவை இந்தியா 8-5-1909 இதழ்

@8 உயிர் பெற்ற தமிழர் பாட்டு
** பல்லவி

#0
இனி ஒரு தொல்லையும் இல்லை பிரிவு
இல்லை குறையும் கவலையும் இல்லை
** ஜாதி

#1
மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு

#2
பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சைப் பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு
நாவிற்கு இனியதைத் தின்பார் அதில் நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார்

#3
ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்
இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும்

#4
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் உணர்வு இன்பம் அடைதல் எளிது எனக் கண்டோம்
** இன்பத்திற்கு வழி

#5
ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியைப் பழகித் தெளிந்து
நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம்
** புராணங்கள்

#6
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் எனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதை எனக் கண்டோம்

#7
கடலினைத் தாவும் குரவும் வெம் கனலில் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும்

#8
நதியின் உள்ளே முழுகிப் போய் அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை
விதியுறவே மணம்செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம்

#9
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் ஒன்றில் உண்மை என்று ஓதி மற்றொன்று பொய் என்னும்
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலபல தந்தார்

#10
கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய் என்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்
** ஸ்மிருதிகள்

#11
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை
மன்னும் இயல்பின அல்ல இவை மாறிப் பயிலும் இயல்பின ஆகும்

#12
காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும்
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை

#13
சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்
சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் அது
சாத்திரம் அன்று சதி என்று கண்டோம்
** மேற்குலத்தார் எவர்

#14
வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும்
பொய் அகலத் தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்
** தவமும் யோகமும்

#15
உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல்
நல் தவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெரும் தவம் யாதொன்றும் இல்லை

#16
பக்கத்திருப்பவர் துன்பம்தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி
** யோகம்யாகம்ஞானம்

#17
ஊருக்கு உழைத்திடல் யோகம் நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்
** பரம்பொருள்

#18
எல்லை இல்லாத உலகில் இருந்து எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்
எல்லை இல்லாதன ஆகும் இவை யாவையுமாய் இவற்றுள் உயிர் ஆகி

#19
எல்லையில்லாப் பொருள் ஒன்று தான் இயல்பு அறிவு ஆகி இருப்பது உண்டு என்றே
சொல்லுவர் உண்மை தெளிந்தார் இதைத் தூவெளி என்று தொழுவர் பெரியோர்

#20
நீயும் அதனுடைத் தோற்றம் இந்த நீல நிறம் கொண்ட வானமும் ஆங்கே
ஓயுதல் இன்றிச் சுழலும் ஒளி ஓங்கு பல் கோடிக் கதிர்களும் அஃதே

#21
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இப் பூமி

#22
இன்பமும் ஓர் கணத் தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர் கணத் தோற்றம்
துன்பமும் ஓர் கணத் தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒரு கணத் தோற்றம்
** முக்தி

#23
தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும்
மூன்றில் எது வருமேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி

@9 பகவத் கீதை
**காப்புச் செய்யுள்

#1
வேய் இனிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேதம் அன்ன மொழிகளில் பார்த்தனே
நீ இனிக் கவலாது அறப்போர்செய்தல் நேர்மை என்றதோர் செய்தியைக் கூறும் என்
வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத்
தாய் இனிக் கருணைசெயல் வேண்டும் நின் சரணம் அன்றி இங்கு ஓர் சரண் இல்லையே

@10 வருண சிந்தாமணி நூலுக்குப் பாடியளித்த பாயிரப் பாக்கள்
**காப்புச் செய்யுள்

#1
செந்தண்மை பூண்டு ஒழுகும் திறத்தானே அறவோர்தம் சிறப்பு வாய்ந்த
அந்தணர் அப் பிரமநிலை அறிகுநரே பிராமணர் என்றளவில் நூற்கள்
சந்தமும் கூறியதைத் தேராமே பிறப்பு ஒன்றால் தருக்கி நாமே
எந்த நெறியுடைய பிறர் எனினும் அவர் சூத்திரர் என்று இகழ்கின்றோமால்

#2
மேழி கொடு நிலம் உழுது வாழ்வதுவே முதல் வாழ்க்கை வேதம் ஓதல்
வாழி அதினும் சிறப்பாம் மற்ற இவை இரண்டனுக்கும் வல்லார்தம்மைப்
பாழில் இவர் கடைக்குலத்தார் என்பது பேதைமை அன்றோ பார்க்கும் காலைக்
கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ

#3
பல் நாளா வேளாளர் சூத்திரர் என்று எண்ணிவரும் பழம் பொய்தன்னை
ஒன்னார் பற்பலர் நாண வருணசிந்தாமணி என்னும் உண்மை வாளால்
சின்னாபின்னம்புரிந்து புவியினரைக் கடப்படுத்தான் சென்னை வாழும்
நல் நா வலோர் பெருமான் கனகசபைப்பிள்ளை எனும் நாமத்தானே
**10 ஆதாரம் தினமணி சுடர் 11-12-77 ஆதாரம் வருண சிந்தாமணி — பக்கம் 4

@11 செட்டிமக்கள் குலவிளக்கு

#1
பல்லாண்டு வாழ்ந்து ஒளிர்க கானாடுகாத்தநகர்ப் பரிதி போன்றாய்
சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி
வில் ஆண்ட இராமனைப் போல் நிதி ஆளும் இராமன் என விளங்குவாய் நீ
மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே

#2
செட்டி மக்கள் குலத்தினுக்குச் சுடர் விளக்கே பாரதமாதேவி தாளைக்
கட்டி உளத்து இருத்திவைத்தாய் பராசக்தி புகழ் பாடிக் களித்துநிற்பாய்
ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய
வெட்டி உயர் புகழ்படைத்தாய் விடுதலையே வடிவம் என மேவிநின்றாய்

#3
தமிழ் மணக்கும் நின் நாவு பழவேத உபநிடதத்தின் சாரம் என்னும்
அமிழ்து நினது அகத்தினிலே மணம் வீசும் அதனாலே அமரத்தன்மை
குமிழ்பட நின் மேனி எலாம் மணம் ஓங்கும் உலகம் எலாம் குழையும் ஓசை
உமிழ்படு வேய்ங்குழல் உடைய கண்ணன் என நினைப் புலவோர் ஓதுவாரே

#4
பாரத தனாதிபதி என நினையே வாழ்த்திடுவார் பாரிலுள்ளோர்
ஈரம் இலா நெஞ்சுடையோர் நினைக் கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார்
நேர் அறியா மக்கள் எலாம் நினைக் கண்டால் நீதி நெறி நேர்ந்து வாழ்வார்
யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார்

#5
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல
குலம் ஆர்ந்த மக்களுடன் பழகி வந்தோம் பல செல்வர் குழாத்தைக் கண்டோம்
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றிப்
புலன் ஆரச் சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர்ப் பொருள் இங்கு உண்டோ

#6
மன்னர் மிசைச் செல்வர் மிசைத் தமிழ் பாடி எய்ப்புற்று மனம் கசந்து
பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம்
என்ன நமது உளத்து எண்ணியிருந்தோம் மற்று உன்னிடத்தே இமையோர்க்கு உள்ள
வன்னம் எலாம் கண்டு நினைத் தமிழ் பாடிப் புகழ்வதற்கு மனம்கொண்டோமே

#7
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய்
யாம் நாடு பொருளை எமக்கு ஈந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய்
வான் நாடும் மன் நாடும் களி ஓங்கத் திருமாது வந்து புல்கக்
கானாடுகாத்தநகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணைக் கோவே

@12 இளசை ஒருபா ஒருபஃது
** காப்பு

#0
நித்தர் எனும் தென் இளசை நின்மலனார் தாம் பயந்த
அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும்
என் தமிழில் ஏதும் இழுக்கு இலாமே அஃது
நன்றாகும் என்று அருளும் நன்கு
** நூல்

#1
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின்
மான் இருந்த கையன் மலரடியே வானில்
சுரர் தமனியன் மால் தொழும் கால் கிரீடத்து
அரதனங்கள் சிந்தும் அகம்

#2
அக இடத்திற்கு ஓர் திலகமாம் என் இளசைப்
பகவன் என் எட்டீசன் பதமே திகிரி
பொருந்து கரத்தான் அன்று ஓர் போத்திரியாய்த் தேடி
வருந்தியுமே காணாச் செல்வம்

#3
செல்வம் இரண்டும் செழித்து ஓங்கும் தென் இளசை
யில் வளரும் ஈசன் எழில் பதமே வெல் வயிரம்
ஏந்து கரத்தான் கரியன் எண்கணன்தம் உள்ளத்துப்
போந்து வளர்கின்ற பொருள்

#4
பொருளாளர் ஈய வேல்போர் இளசை
மருளாளர் ஈசர் அடியே தெருள் சேர்
தமனா மறையவன் மேல் தன் பாசமிட்ட
சமன் ஆவி வாங்கும் பாசம்

#5
சங்கம் தவழ் கழனி தண் இளசை நல் நகரில்
எங்கள் சிவனார் எழில் பதமே துங்கம் மிகும்
வேத முடியின் மிசையே விளங்கு நல்
சோதி என நெஞ்சே துணி

#6
துணி நிலவு ஆர் செஞ்சடையன் தோள் இளசை ஊரன்
மணிகண்டன் பாதமலரே பிணி நரகில்
வீழச்செய்யாது விரும்பிய ஈந்தே அடியர்
வாழச்செய்கின்ற மருந்து

#7
மருள் அறக் கற்றோர்கள் மருவு இளசை ஊரில்
வரும் இறைவன் பாதமலரே திருவன்
விரை மலரா விட்ட விழியாம் வியன் தாம்
அரை பூத்த செந்தாமரை

#8
தாமரையின் முத்து எங்கும் தான் சிதறும் தென் இளசைக்
கோமான் எட்டீசன் மலர் கொள் பதமே நாம வேல்
வல் அரக்கன் கைலை வரை எடுத்தகால் அவனை
அல்லல்பட அடர்த்ததால்

#9
ஆல விழியாரவர் முலை நேர் தண் வரை சூழ்
கோல மணி இளசைக் கோன் பதமே சீல
முனிவர் விடுத்த முயலகன் மீது ஏறித்
தனி நடனம் செய்ததுவே தான்

#10
தானே பரம்பொருளாம் தண் இளசை எட்டீசன்
தேன் ஏய் கமல மலர்ச் சீர் அடியே யானே முன்
செய்த வினை தீர்த்துச் சிவாநந்தம் பொங்கி அருள்
எய்திடவும் செய்யும் எனை
** தனி

#11
கன்னன் எனும் எங்கள் கருணை வெங்கடேசுரெட்ட
மன்னவன் போற்று சிவ மாண் அடியே அன்னவனும்
இ நூலும் தென் ஆர் இளசை எனும் நல் நகரும்
எந்நாளும் வாழவைக்குமே
** 12 ஆதாரம் சக்தி வெளியீடு — பக்கம் 475 — 476

@13 மணிமுத்து நாவலர்
**காப்பு

#1
பந்தைத் தெறு முலை மாப் பால் மொழியினும் கரிய
எந்தைக்குச் சால இனிக்குமே விந்தை
அணி முத்துக் கோவை என அம் சொல் இசை சேர்க்கும்
மணிமுத்துநாவலர் வாக்கு
**13 ஆதாரம் பாரதி புதையல் 1 — பக்கம் 22 1935-ல் எட்டயபுரத்தில்
** வெளியான ‘மணிமுத்துப் புலவர் பாடல்’ என்ற நூலில் இப்பாடல்
** வெளியிடப்பட்டுள்ளது
** 14 ஆதாரம் பாரதி புதையல் 1 — பக்கம் 14-17 புதுவை ‘பாரதி அன்பன்’ 23-10-1946 இதழ்

@14 குருவிப் பாட்டு

#1
அருவி போலக் கவி பொழிய எங்கள் அன்னை பாதம் பணிவேனே
குருவிப்பாட்டை யான் பாடி அந்தக் கோதை பாதம் அணிவேனே
** கேள்வி

#2
சின்னஞ்சிறு குருவி நீ செய்கிற வேலை என்ன
வன்னக் குருவி நீ வாழும் முறை கூறாய்
** குருவியின் விடை

#3
கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமை இல்லை எல்லோரும் வேந்தர் எனத் திரிவோம்

#4
உணவுக்குக் கவலை இல்லை எங்கும் உணவு கிடைக்குமடா
பணமும் காசும் இல்லை எங்குப் பார்க்கினும் உணவேயடா

#5
சிறியதோர் வயிற்றினுக்காய் நாங்கள் ஜன்மம் எல்லாம் வீணாய்
மறிகள் இருப்பது போல் பிறர் வசம்தனில் உழல்வது இல்லை

#6
காற்றும் ஒளியும் மிகு ஆகாயமே எங்களுக்கு
ஏற்றதொரு வீடு இதற்கு எல்லை ஒன்று இல்லையடா

#7
வையகம் எங்கும் உளது உயர்வான பொருள் எல்லாம்
ஐயம் இன்று எங்கள் பொருள் இவை எம் ஆகாரம் ஆகுமடா

#8
ஏழைகள் யாரும் இல்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வுகள் தாழ்வும் இல்லை என்றும் மாண்புடன் வாழ்வமடா

#9
கள்ளம் கபடம் இல்லை வெறும் கர்வங்கள் சிறுமை இல்லை
எள்ளற்குரிய குணம் இவை யாவும் உம் குலத்திலடா

#10
களவுகள் கொலைகள் இல்லை பெரும் காமுகர் சிறுமை இல்லை
இளைத்தவர்க்கே வலியர் துன்பம் இழைத்துமே கொல்லவில்லை

#11
சின்னஞ்சிறு குடிலிலே மிகச் சீரழி வீடுகளில்
இன்னலில் வாழ்ந்திடுவீர் இது எங்களுக்கு இல்லையடா

#12
பூ நிறை தருக்களிலும் மிகப் பொலிவுடைச் சோலையிலும்
தேன் நிறை மலர்களிலும் நாங்கள் திரிந்து விளையாடுவோம்

#13
குளத்திலும் ஏரியிலும் சிறு குன்றிலும் மலையினிலும்
புலத்திலும் வீட்டினிலும் எப் பொழுதும் விளையாடுவோம்

#14
கட்டுகள் ஒன்றும் இல்லை பொய்க் கறைகளும் ஒன்றும் இல்லை
திட்டுகள் தீதங்கள் முதல் சிறுமைகள் ஒன்றும் இல்லை

#15
குடும்பக் கவலை இல்லை சிறு கும்பித் துயரும் இல்லை
இடும்பைகள் ஒன்றும் இல்லை எங்கட்கு இன்பமே என்றுமடா

#16
துன்பம் என்று இல்லையடா ஒரு துயரமும் இல்லையடா
இன்பமே எம் வாழ்க்கை இதற்கு ஏற்றம் ஒன்று இல்லையடா

#17
காலையில் எழுந்திடுவோம் பெரும் கடவுளைப் பாடிடுவோம்
மாலையும் தொழுதிடுவோம் நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம்

#18
தானே தளைப்பட்டு மிகச் சஞ்சலப்படும் மனிதா
நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தைக் கைக்கொள்ளடா

#19
விடுதலையைப் பெறடா நீ விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா

#20
இன்பநிலை பெறடா உன் இன்னல்கள் ஒழிந்ததடா
துன்பம் இனி இல்லை பெருஞ்சோதி துணையடா

#21
அன்பினைக் கைக்கொள்ளடா இதை அவனிக்கு இங்கு ஓதிடடா
துன்பம் இனி இல்லை உன் துயரங்கள் ஒழிந்ததடா

#22
சத்தியம் கைக்கொள்ளடா இனிச் சஞ்சலம் இல்லையடா
மித்தைகள் தள்ளிடடா வெறும் வேஷங்கள் தள்ளிடடா

#23
தர்மத்தைக் கைக்கொள்ளடா இனிச் சங்கடம் இல்லையடா
கர்மங்கள் ஒன்றும் இல்லை இதில் உன் கருத்தினை நாட்டிடடா

#24
அச்சத்தை விட்டிடடா நல் ஆண்மையைக் கைக்கொள்ளடா
இச் சகத்து இனிமேலே நீ என்றும் இன்பமே பெறுவையடா
**சிறப்புக் குறிப்பு 14 குருவிப் பாட்டு இது மகாகவி பாரதியார் பாடல்
**அல்லவென்றும் ‘லோகோபகாரி’யில் பரலி ஸ்ரீ சு நெல்லையப்பர் பெயரால்
**வெளிவந்த பாடல் என்றும் திரு பெ தூரன் கூறுகிறார்
**மற்றும் பரலி சுநெல்லையப்பர் எழுதிய நெல்லைத் தென்றல் என்ற கவிதை
**நூலிலும் இப்பாடல் உள்ளது
** (பாரதி ஆய்வாளர் திரு ராஅபத்மநாபன் “பாரதி புதையல்” எனும் நூலில்
** வெளியிட்டிருக்கிற கட்டுரையின்
**முன்னுரைக் குறிப்பில் அவர் இந்தப் பாடல் குறித்த சில செய்திகளையும்
** சொல்லியிருக்கிறார் அவர் கூறுவது:
** இந்தப் பாட்டு புதுச்சேரியில் சரஸ்வதி விலாச சபை என்ற இளைஞர் சங்கத்தில்
** 1909இல் பாரதியார் பாடியது

@15 தனிமை இரக்கம்
** முதற் பாடல்

#1
குயிலனாய் நின்னொடு குலவி இன் கலவி
பயில்வதில் கழித்த பல் நாள் நினைந்து பின்
இன்று எனக்கிடையே எண்ணில் யோசனைப்படும்
குன்றமும் வனமும் கொழு திரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்
பாவி என் நெஞ்சம் பகீரெனல் அரிதோ
கலங்கரைவிளக்கு ஒரு காவதம் கோடியா
மலங்கும் ஓர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள் முன்னர் யான் அவளுடன்
உடம்பொடும் உயிர் என உற்று வாழ் நாட்களில்
வளி எனப் பறந்த நீர் மற்று யான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரி எனக் கிடக்கும்
செயலை என் இயம்புவல் சிவனே
மயலை இற்று என்று எவர் வகுப்பர் அங்கு அவட்கே
**17 ஆதாரம் சித்திர பாரதி
**மதுரை ‘விவேகபாநு’ ஜூலை இதழ் 1904-ம் வருடம்

@16 யான்

#1
ஆயிரம் கோடி அறிஞர்கள் பற்பல
ஆயிர யுகங்கள் ஆராய்ந்து அறிகிலா
யான் உடை இயற்கை யானோ அறிவன்
மீன் உணர்ந்திடும்-கொல் வியன் கடல் பெருமை
அருள் வழிக் காண்க என்று அருளினர் பெரியோர்
மருள் வழி அல்லால் மற்றொன்று உணர்கிலேன்
அகிலமும் யான் என ஆன்றோர் இசைப்பர்
மகிதலத்து இருளின் மண்டிய மனத்தேன்
யான் அதை ஒரோவழிக் கண்டுளேன் அதனினும்
மானத ஒளியது மங்கும் ஓர் கணத்தே
யான் எனும் பொருள்தான் என்னை-கொல் அதனை இவ்
ஊன் எனக் கொள்வர் உயிரிலார் சிலரே
பிரமமே யான் எனப் பேசுவர் பேசுக
பிரமமே யான் எனப் பேசினர் பெரியோர்
**18 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 28 சுதேசமித்திரன் 17-9-1906 இதழ்

@17 சந்திரிகை

#1
யாணர்க் குறையுளாம் இந்துநாடதனில்
காணற்கு இனிய காட்சிகள் பலவினும்
மாணப் பெரிய வனப்பு அமைந்து இன் கவி
வாணர்க்கு அமுதா வயங்கிடும் பொருள் இது என்று
ஊணப் புலவோன் உரைத்துளன் முன் நாள்
அஃதுதான்
கருமையில் படர்ந்த வானமாம் கடலிடை
ஒருமையில் திகழும் ஒண் மதித் தீவினின்று
எல்லாத் திசையினும் எழில் பெற ஊற்றும்
சொல்லா இனிமை கொள் சோதி என்று ஓதினன்
ஓர் முறை
கடல்புற மணல் மிசைத் தனியே கண் அயர்ந்து
இடைப்படும் இரவில் இனிது கண் விழித்து யான்
வானகம் நோக்கினேன் மற்று அதன் மாண்பினை
ஊன மா நாவினில் உரைத்தலும் படுமோ
நினைவரும் தெய்வீகக் கனவிடைக் குளித்தேன் வாழி மதி
** 19 ஆதாரம் பாரதி தமிழ் பக்கம் 30 சுதேசமித்திரன் 25-9-1906 இதழ்

@18 காவடிச் சிந்து

#1
பச்சைத் திருமயில் வீரன்
அலங்காரன் கௌமாரன் ஒளிர்
பன்னிரு திண் புயப் பாரன் அடி
பணி சுப்பிரமணியர்க்கு அருள்
அணி மிக்கு உயர் தமிழைத் தரு
பக்தர்க்கு எளிய சிங்காரன் எழில்
பண்ணும் அருணாசலத் தூரன்

@19 செல்வத்துட் பிறந்தனமா

#1
செல்வத்துள் பிறந்தனமா அது பெறுவான் சிறு தொழில்கள் பயில வல்லோமா
வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா
பல் வித்தையிலும் சிறந்த தீம் கானப் பெரு வித்தை பயின்றிட்டேமா
கொல் வித்தை இருள் வித்தை மருள் வித்தை பயின்று மனம் குறைகின்றேமால்

#2
காவித் திருவிழி மானார்தம் மையல் கடு விஷமாம்
கூவிச் சமயர்க்கு உரைப்பன பொய் இக் குவலயத்தில்
ஆவிச் சுகம் என்று அறிந்தது எல்லாம் துன்பம் அன்றி இலை
பாவிச் சிறு உலகே உன்னை யாவன்-கொல் பண்ணியதே
**20 ஆதாரம் ப்ஹரதி அந்த் ஹிச் வொர்க்ச் — பக்கம் 6
**21 ஆதாரம் ப்ஹரதி அந்த் ஹிச் வொர்க்ச் — பக்கம் 6

@20 பெரியோரின் பெருமை கெடாது
**[இப் பாடலை திருகு அழகிரிசாமி அவர்கள் 15-9-68 கல்கி இதழில்
** ‘பாரதி புதையல்’ என வெளியிட்டு ஓர் ரசமான குறிப்பும் எழுதியிருந்தார்.
** அக் குறிப்பு வருமாறு திரிசிரபுரம் எச்ஜி ராமாநுஜலு நாயுடு
** ஆசிரியராக இருந்த ஆநந்த குணபோதினி என்ற மாதப் பத்திரிகையின்
** முதலாவது இதழில் (ஏப்ரல் 1926) கீழ்க்காணும் பாரதி பாட்டு இதே தலைப்புடனும்
** இதே அடி குறிப்புக்களுடனும் வெளியாகி இருக்கின்றது இந்தப் பாட்டு
** இதுவரையிலுமே வெளிவந்துள்ள பாரதி பாடல் தொகுதி எதிலும் இடம் பெறவில்லை
** என்பது குறிப்பிடத்தக்கது இந்தப் பாட்டின் அடியில் ஸ்ரீ பாரதி என்றே
** குறிப்பிட்டிருப்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரையே இதே பத்திரிகையின்
** 1926 ஆகஸ்டு இதழில் ** பிரசுரமாகியுள்ள பாரத பூமி பழம் பெரும் பூமி
** நீரதன் புதல்வர் இந் நினை வகற்றாதீர் என்ற
** பாரதி பாடல் வரிகளின் கீழேயும் ஸ்ரீ பாரதி என்றே குறிக்கப்பட்டிருக்கிறது]
** 21 (2) ஆதாரம் ‘கல்கி’ 13-4-1958
** 22 ஆதாரம் ‘கல்கி’ 15-9-68 இதழ்

#1
கண்ணிலான் காலில் கவின் மணியை எற்றிவிட்டால்
மண்ணில் அதுதான் மதிப்பு அகன்றதாய்விடுமோ

#2
பொய்த்தொழிலோன் மைதிலியாம் பூவைதனைப் புன் காவல்
வைத்ததனால் அன்னை மதிப்பு இழந்துபோயினளோ

#3
ஐவர் முன்னே பாஞ்சாலி ஆடை உரிந்தார் கயவர்
மை வளர்ந்த கண்ணாளின் மாண்பு அகன்றுபோயினதோ

@21 பண்டாரப் பாட்டு

#1
வையகத்தே சடவஸ்து இல்லை மண்ணும் கல்லும் சடம் இல்லை
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை

#2
பையப்பையத் தேரடா படையும் விஷமும் கடவுளடா
பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை

#3
சாவும் நோவும் சிவனடா சண்டையும் வாளும் சிவனடா
பாவியும் ஏழையும் பாம்பும் பசுவும் பண்ணும் தானமும் தெய்வமடா

#4
எங்கும் சிவனைக் காணடா ஈனப் பயத்தைத் துரத்தடா
கங்கைச் சடையா காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ

#5
பாழும் தெய்வம் பதியும் தெய்வம் பாலைவனமும் கடலும் தெய்வம்
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம்

#6
வையத்தே சடம் இல்லை மண்ணும் கல்லும் தெய்வம்
மெய் உரைப்பேன் பாழ் மனமே மேலும் கீழும் பயம் இல்லை
**23 ஆதாரம் பாரதி நூல்கள் — வசனம் கதைக் கொத்து பக்கம் 171

@22 வேலெனவென் விழி

#1
இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி
முடி ஏறி மோதியது என்று அருள் முகிலைக் கடுஞ்சொற்கள் மொழிவான் போலக்
கடி ஏறு மலர்ப் பந்து மோதியது என்று இனியாளைக் காய்கின்றானால்
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான்

@23 ஆனந்த மையா
**ஆசுகவி – வெண்பா

#1
உலகைத் துறந்தீர் உருவைத் துறந்தீர்
மலையைப் பிளந்துவிட வல்லீர் இலகு புகழ்
ஞானம் தவம் கல்வி நான்கும் துறக்கலீர்
ஆனந்தம் ஐயா ஹரீ
**24 ஆதாரம் ‘ஞானரதம்’ — பக்கம் 24
**25 ஆதாரம் நவதந்திரக் கதைகள் — பக்கம் 42

@24 பாரதியார் திருப்புகழும் தேவாரமும்
** [பாரதியார் எழுதிய கீழ்க்கண்ட நான்கு பாடல்களை அம்பாசமுத்திரம் திரு
** அ ரா கிருஷ்ணன் என்பார் திரு ராஅ பத்மநாபன் அவர்களிடம் மனமுவந்து அளிக்க
** அவற்றை அவர் தமது பாரதி புதையல் 2 நூலில் வெளியிட்டார் இந்நாள்வரை வெளிவந்த
** பாரதியார் கவிதைகள் நூலில் இப் பாடல்கள் இடம்பெறவில்லை
** இப் பாடல்களுக்குத் தலைப்புகள் கிடைக்கப் பெறாத காரணத்தால் முதல் மூன்று
** பாடல்கள் திருப்புகழ் நடையிலும் நான்காம் பாடல் தேவாரநடையிலும் இருப்பதை
** யொட்டி பாரதி திருப்புகழ் என்றும் பாரதி தேவாரம் என்றும் திரு கிருஷ்ணன்
** சூட்டியுள்ள தலைப்புகளே இங்கும் உபயோகிக்கப்பட்டுள்ளன என்று
** திரு ராஅ பத்மநாபன் ஒரு சிறு விளக்குக் குறிப்பும் தந்துள்ளமை
** கவனிக்கத்தக்கது-பதிப்பாசிரியர்கள்]
**பாரதி திருப்புகழ்

#1
தோதகம் எத்தெனை அத்தனை கற்றவர் சூதரம் ஒத்தவர் கொக்கு நிகர்ப்பவர்
சூது பெருத்தவர் உக்ர மனத்தவர் சதியோடே
பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர்
பாவம் இயற்றிடும் அத் துறை மிக்கவர் விரகாலே
வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி
மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும்
ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட
யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே

#2
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர்
மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி
அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ எனக் கை தலை மோதி
விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா
புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே
** 26 ஆதாரம் பாரதி புதையல் 2 — பக்கம் 127-130
**கண்ணன்மீது திருப்புகழ்

#6
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள்
சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நலச் சுதந்திர வழி தெரி கரிசு அகல்
திருத் தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல
மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர்
மதர்த்து எழுந்த இன் புளகித இளமுலை மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில்
வசப்படும்படி சிலர்களை மயல்புரி அதிநீசர்
மயிர்த்தலம்தொறும் வினை கிளர் மறமொடு மறப்பரும் பல கொலைபுரி கொடிய வல்
வனக் குறும்பர் வெவ் விடம் நிகர் தகவினர் முறையாலே
வருத்தரும் பல பவிஷுகள் ஒழிதர வகைப் பெரும் கலை நெறி அறம் அழிபடா
மனத்து விஞ்சிய தளர்வொடும் அனுதினம் உழல்வோமே
அயிர்த்த வஞ்சக அரவு உயர் கொடியவன் அமர்க்களம்தனில் இனமுடன் மடிதர
அமர்த்த வெம் பரி அணி ரதமதை விடும் மறைநாதா
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர்
அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே
**பாரதி தேவாரம்

#14
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே
துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள்
சதியே புரிந்த படு நீசர் நைந்து தனி ஓட நன்கு வருவாய்
நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே

@25 கடல்
**[ஸ்ரீ மான் அரவிந்த கோஷ் கடலுக்கு என்ற தலைப்பின்கீழ் ஆங்கில
**பாஷையில் சில கண்ணிகள் புனைந்து அவற்றை மாடர்ன் ரெவியூ (நவீன பரிசோதகம்) என்ற
**கல்கத்தா மாதப் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பைக் கீழே தருகிறேன்
** கண்ணிகள்

#1
வெள்ளைத் திரையாய் வெருவுதரு தோற்றமதாய்
கொள்ளை ஒலிக் கடலே நல் அறம் நீ கூறுதி காண்

#2
விரிந்த பெரும் புறங்கள் மேல் எறிந்து உன் பேய் அலைகளை
பொருந்தும் இடையே புதைத்த பிளவுகள்தாம்

#3
பாதலம் போல் ஆழ்ந்திருப்பப் பார்க்க அரிதாய் அவற்றினை
மீது அலம்பிநிற்கும் ஒரு வெள்ளைச் சிறு தோணி
**கடல் போதனை முழங்குதல்

#4
ஏனடா நீ கரையில் ஏக்குற்று நிற்கின்றாய்
வானளாவு என் திரைகள் வாளாதான் காண்பானாய்

#5
புன் படகு காணாய் புடைக்கும் என்றன் வார் திரை மேல்
துன்பம் இலாதே மிதந்து துள்ளி விளையாடுவதே

#6
அல்லாது இது வீழ்ந்து அழிந்தாலும் என்னே காண்
பல்லாயிரம் இது போல் பார் மிசை வேறு உள்ளனவே

#7
சூழும் எனது அதிர்ச்சிக்கு அஞ்சேல் துணிக நீ
ஏழைக் கரையில் இருப்பது எளிமையடா

#8
வாராய் இடுக்கணினும் மாறி அதை எற்றலினும்
பாராய் நல் இன்பப் பரவசம் உண்டு என்பதையே
**மனிதன் மறுமொழி

#9
என்று முழங்கி அழைக்கும் இரும் கடலே
நன்று நீ சொல்லினை காண் நான் வருவேன் இக்கணமே

#10
நின்னில் வலியேன் நினது திரை வென்றிடுவேன்
முன்னி அவற்றின் முடி ஏறி மேல் எழுங்கால்

#11
வானகத்தோடு ஆடல்செய வாய்க்கும் காண் மூழ்குறினும்
யான் அகத்தே பேரொலிக் கீழ் உள்ளது அறிகுவனால்
**அபாயங்கள் ஈசனால் நன்மையின் பொருட்டுத் தரப்பட்டவை

#12
அபாயம் இலாது இக்கரையில் ஆர்ந்திருப்போர் ஈசனும்
உபாயம் அறியாத ஊமன் அன்றோ ஓர்ந்திடுங்கால்

#13
ஆழ உயிர் மானுடனுக்கு ஐயன் அருளிப் பின்
வாழி சிவத்தன்மை அதற்கு இலக்கா வைத்தனனே

#14
ஆதலால் கோடி அபாயம் இடையூறு எல்லாம்
மோது கடல்களைப் போல் முன்னர் இட்டான் அவ் உயிர்க்கே

#15
துன்பம் அருள்செய்தான் தோல்விதனை அளித்தான்
மன்பதையின் கால் சூழ வைத்தான் வலைத் திரளே

#16
நெற்றி மேல் மேகத்து மின் அடிகள் நேர்வித்தான்
எற்றி எமை வீழ்த்தப் பெரும் காற்று இயற்றினனே

#17
இங்கு மனிதன் வரும் இன்னல் எலாம் மாற்றி எதிரே
பொங்கும் இடுக்கண் எலாம் போழ்ந்து வெற்றிகொள்க எனவே

#18
விதிதான் எதிர்த்துவர வெல்லொணாத் தன் உயிரை
மதியாது அதில் தாக்கி மைந்தன் விஜயம் பெறவே

#19
**முடிவுரை

#20
ஏற்றிடுவாய் என்னை இரும் கடலே நின் மீது
தோற்றிடாது ஏறிப் போய் வானுலகு துய்ப்பேன் யான்

#21
வாரிதியாம் கோளரியே வந்து உன் பிடர் பிடித்துப்
பார் உன்னை என்னில் வசப்படுத்தும் பண்பினையே

#22
அல்லது நும்மால் அகழ்ப் பாதலங்களினும்
பொல்லாக் குகையினும் யான் போய் வீழ்ந்துவிட்டாலும்

#23
அங்கிருந்து உன் பாரம் அனைத்தும் பொறுத்துவித்து
மங்கி அழியும் வகை தேட வல்லேன் காண்

#24
தளை அறியா வார் கடலே நின்னோடு சாடி
அளவு அறிவேன் என்றன் பெரிய உயிர் ஆற்றலுக்கே
**27 ஆதாரம் பாரதி புதையல் 3 பக்கம் 1-4
**புதுவை ‘இந்தியா’ இதழ் 12-6-1909

@26 இந்தியாவின் அழைப்பு
**[இஃது யுனைடெட் ஸ்டேட்ஸ் மிஷிகன் மாகாணம் தெத்ருவா நகரத்திலுள்ள
** ஸ்ரீம மாட் (த்) ரால்ஸ்டன் ஷர்மன்
**என்ற ஸ்திரீ எழுதிய இங்கிலீஷ் கவிதையினின்றும் மொழிபெயர்த்தது]
**வேண்டுகோள்

#1
அன்பிற்கினிய இந்தியா அகில
மதங்கள் நாடுகள் மாந்தருக்கு எல்லாம்
தாயே எங்கள் உணர்வினைத் தூண்டிய
சேய் நெடுங்காலத்தின் முன்னே சிறந்து ஒளிர்
குருக்களை அளித்துக் குவலயம் காத்தனை 5
திருக் கிளர் தெய்வப் பிறப்பினர் பலரை
உலகினுக்கு அளித்தாய் உனது ஒளி ஞானம்
இலகிட நீ இங்கு எழுந்தருளுகவே
விடுதலை பெற நாம் வேண்டி நின் மறைவு
படு மணி முகத்தைத் திறந்து எம் பார்வை முன் 10
வருக நீ இங்கு உள மானுடச் சாதிகள்
பொருகளம் தவிர்ந்து அமைவுற்றிடப் புரிக நீ
மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக
செற்றவர் படைகளை மனையிடம் திருப்புக
தாயே நின்றன் பண்டைத் தநயராம் 15
மாயக் கண்ணன் புத்தன் வலிய சீர்
இராமனும் ஆங்கு ஒரு மஹமதும் இனையுற்ற
விராவு புகழ் வீரரை வேண்டுதும் இந்நாள்
தோன்றினேன் என்று சொல்லி வந்து அருளும்
சான்றோன் ஒரு முனி தருக நீ எமக்கே 20
மோசே கிறிஸ்து நானக் முதலியோர்
மாசற வணங்கி மக்கள் போற்றிடத்
தவித்திடும் திறத்தினர்தமைப் போல் இன்று ஒரு
பவித்திர மகனைப் பயந்து அருள்புரிக நீ
எம் முன் வந்து நீதியின் இயலைச் 25
செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ
**உத்தரம்
கேள் விடை கூறினள் மாதா நம்மிடை
யாவனே இங்கு தோன்றினன் இவன் யார்
உலகப் புரட்டர் தந்திர உரை எலாம்
விலகத் தாய் சொல் விதியினைக் காட்டுவான் 30
மலிவு செய்யாமை மனப் பகையின்மை
நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை
தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை
ஆச்சரியப்பட உரைத்தனன் அவை எலாம்
வருக காந்தி ஆசியா வாழ்கவே 35
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்
ஆன்மாஅதனால் ஜீவனை ஆண்டு
மேல் நெறிப்படுத்தும் விதத்தினை அருளினாய்
பாரதநாட்டின் பழம் பெரும் கடவுளர்
வீர வாள் கொடியை விரித்து நீ நிறுத்தினாய் 40
மானுடர்தம்மை வருத்திடும் தடைகள்
ஆனவை உருகி அழிந்திடும் வண்ணம்
உளத்தினை நீ கனலுறுத்துவாய் எங்கள்
காந்தி மஹாத்மா நின்பால் கண்டனம்
மாந்தருள் காண நாம் விரும்பிய மனிதனை 45
நின் வாய்ச் சொல்லில் நீதி சேர் அன்னை
தன் வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம்
தொழும் தாய் அழைப்பிற்கு இணங்கி வந்தோம் யாம்
எழுந்தோம் காந்திக்கு ஈந்தோம் எமது உயிர்
இங்கு அவன் ஆவிக் கொள்கை வென்றிடவே 50
அன்றைக்கு உணவுதான் அகப்படுமாயின்
நன்று அதில் மகிழ்வோம் விடுதலை நாடி
எய்திடும் செல்வ எழுச்சியில் களிப்போம்
மெய் திகழ் ஒற்றுமை மேவுவோம் உளத்தே
கட்டின்றி வாழ்வோம் புறத் தளைக் கட்டினை 55
எள்துணை மதியாது ஏறுவோம் பழம் போர்க்
கொலைத் தொழில் கருவிகள் கொள்ளாது என்றும்
நிலைத்தன ஆகிய நீதிக் கருவியும்
அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம்
வறிய புன் சிறைகளில் வாடினும் உடலை 60
மடிய விதிப்பினும் மீட்டு நாம் வாழ்வோம் என்று
இடியுறக் கூறி வெற்றி ஏறி
ஒடிபடத் தளைகள் ஓங்குதும் யாமே
** 28 ஆதாரம் பாரதி தமிழ் — பக்கம் 467-468 சுதேசமித்திரன் 19-7-1921 இதழ்

@27 போர்க்கோலம் பூணுவீரே
**[‘லா மார்ஸெலேஸ்’ என்னும் பிரெஞ்சு தேசிய கீதத்தைத்
**தமிழ்ப்படுத்தி பள்ளி நாடகத்தில் பாடுவதற்காகப் பள்ளி
**மாணவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பாடல் இது]

#1
அன்னை நல் நாட்டின் மக்காள் ஏகுவம்
மன்னு புகழ் நாள் இதுவே
நம் மேல் கொடுங்கோல் செலுத்துவோர்
நாட்டினார் உதிரக் கொடிதனை
கேட்டீர்களா கிராமங்களில் 5
வீரிடும் அரக்கப் படைகள்
அணுகி நம் மடிகளிலேயே
நம் மக்கள் பெண்டிரைக் கொல்லத் துணிவார்
போர்க்கோலம் பூணுவீர் வகுப்பீர் அணிகளை
செல்வோம் செல்வோம் 10
நாம் போம் பாதையில்
பாய்ச்சுவோம் அவர் இரத்தத்தை
**29 ஆதாரம் பாரதி புதையல் ஈ — பக்கம் 20

@28 சுதந்திரம்

#1
தாதையர் குருதியின் சாய்ந்து நாம் மடினும்
பின் வழி மக்கள் பேணுமாறு அளிக்கும்
சுதந்திரம் பெரும் போர் ஓர்கால் தொடங்குமேல்
பலமுறை தோற்கும் பான்மைத்து ஆயினும்
இறுதியில் வெற்றியொடு இலகுதல் திண்ணம்
**30 ஆதாரம் தாமரை 1979 செப்டம்பர் இதழ்
**இந்தியா 21-11-1908

@29 பெற்ற தாயும்

#1
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்
நல் தவ வானிலும் நனி சிறந்தனவே
** பாரதியார் பாடல் நூல்களில் பழைய பதிப்புகளிலெல்லாம் இந்த ஈரடிப் பாட்டு
** வெளியிடுவது வழக்கம்
*
*