பாரதியார் கவிதைகள் – வேதாந்தப் பாடல்கள்

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

உள் தலைப்புகள்

1. அச்சமில்லை
2. ஜய பேரிகை
3. விடுதலை சிட்டுக்குருவி
4. விடுதலை வேண்டும்
5. உறுதி வேண்டும்
6. ஆத்ம ஜயம்
7. காலனுக்கு உரைத்தல்
8. மாயையைப் பழித்தல்
9. சங்கு
10. அறிவே தெய்வம்
11. பரசிவ வெள்ளம்
12. பொய்யோ மெய்யோ
13. நான்
14. சித்தாந்தச் சாமி கோயில்
15. பக்தி
16. அம்மாக்கண்ணு பாட்டு
17. வண்டிக்காரன் பாட்டு
18. கடமை
19. அன்பு செய்தல்
20. சென்றது மீளாது
21. மனத்திற்குக் கட்டளை
22. மனப் பெண்
23. பகைவனுக்கு அருள்வாய்
24. தெளிவு
25. கற்பனையூர்


@1 அச்சமில்லை
**(பண்டாரப் பாட்டு)

#1
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
இச் சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
இச்சை கொண்டே பொருள் எலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே

#2
கச்சு அணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே

@2 ஜய பேரிகை
**பல்லவி

#0
ஜய பேரிகை கொட்டடா கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா
**சரணங்கள்

#1
பயம் எனும் பேய்தனை அடித்தோம் பொய்ம்மைப் பாம்பைப் பிளந்து உயிரைக் குடித்தோம்
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்

#2
இரவியின் ஒளியிடைக் குளித்தோம் ஒளி இன் அமுதினை உண்டு களித்தோம்
கரவினில் வந்து உயிர்க் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம்

#3
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசை எலாம் நான் அன்றி வேறில்லை நோக்கநோக்கக் களியாட்டம்

@3 விடுதலை சிட்டுக்குருவி
**பல்லவி

#0
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக்குருவியைப் போலே
**சரணங்கள்

#1
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறி அக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு

#2
பெட்டையினோடு இன்பம் பேசிக் களிப்புற்றுப் பீடையிலாததோர் கூடுகட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வு எய்தி முந்த உணவு கொடுத்து அன்புசெய்து இங்கு

#3
முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன் கண்ட தானியம்தன்னைக் கொணர்ந்து உண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று

@4 விடுதலை வேண்டும்
**ராகம் நாட்டை
**பல்லவி

#0
வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா
**சரணங்கள்

#1
தூண்டும் இன்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவில் அங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழராகி எம்மோடு அமுதம் உண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடும் இன்பம் அனைத்தும் உதவ

#2
விருத்திராதி தானவர்க்கு மெலிவது இன்றியே
விண்ணும் மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்தமுற நல் வேதம் ஓர்ந்து பொய்ம்மை தீர மெய்ம்மை நேர
வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய

#3
பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளி எலாம்
பாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே
நண்ணி அமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ணம் இனிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள

@5 உறுதி வேண்டும்

#1
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும்

#2
கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்

@6 ஆத்ம ஜயம்

#1
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திடமாட்டாவோ அட
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ
எண்ணியெண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வோமோ அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே

#2
என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியமாகும் என்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள் முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்று ஆளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமோ

@7 காலனுக்கு உரைத்தல்
**ராகம் சக்கரவாகம்
**தாளம் ஆதி
**பல்லவி

#0
காலா உனை நான் சிறு புல் என மதிக்கிறேன் என்றன்
கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட
**சரணங்கள்

#1
வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன்
வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணித் துதிக்கிறேன் ஆதி
மூலா என்று கதறிய யானையைக் காக்கவே நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே அட

#2
ஆலாலம் உண்டவன் அடி சரண் என்ற மார்க்கண்டன்தனது
ஆவி கவரப் போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு
நாலாயிரம் காதம் விட்டு அகல் உனை விதிக்கிறேன் ஹரி
நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் அட

@8 மாயையைப் பழித்தல்
**ராகம் காம்போதி
**தாளம் ஆதி

#1
உண்மை அறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்று உண்டோ மாயையே

#2
எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ
சித்தத் தெளிவு எனும் தீயின் முன் நிற்பாயோ மாயையே

#3
என்னைக் கெடுப்பதற்கு எண்ணமுற்றாய் கெட்ட மாயையே நான்
உன்னைக் கெடுப்பது உறுதி என்றே உணர் மாயையே

#4
சாகத் துணியில் சமுத்திரம் எம்மட்டு மாயையே இந்தத்
தேகம் பொய் என்று உணர் தீரரை என் செய்வாய் மாயையே

#5
இருமை அழிந்த பின் எங்கு இருப்பாய் அற்ப மாயையே தெளிந்து
ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே

#6
நீ தரும் இன்பத்தை நேர் என்று கொள்வனோ மாயையே சிங்கம்
நாய் தரக் கொள்ளுமோ நல் அரசாட்சியை மாயையே

#7
என் இச்சை கொண்டு உனை எற்றிவிட வல்லேன் மாயையே இனி
உன் இச்சை கொண்டு எனக்கு ஒன்றும் வராது காண் மாயையே

#8
யார்க்கும் குடியல்லேன் யான் என்பது ஓர்ந்தனன் மாயையே உன்றன்
போர்க்கு அஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை மாயையே

@9 சங்கு

#1
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம்

#2
இத் தரை மீதினிலே இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம்

#3
பொய்யுறு மாயையைப் பொய் எனக் கொண்டு புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறலின்றிக் களித்திருப்பார் அவர் ஆரியராம் என்று இங்கு ஊதேடா சங்கம்

#4
மையுறு வாள் விழியாரையும் பொன்னையும் மண் எனக் கொண்டு மயக்கற்று இருந்தாரே
செய்யுறு காரியம் தாம் அன்றிச் செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம்

@10 அறிவே தெய்வம்
**கண்ணிகள்

#1
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்
லாயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ

#2
மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள் எத
னூடும் நின்று ஓங்கும் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ

#3
சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல
பித்த மதங்களிலே தடுமாறிப் பெருமை அழிவீரோ

#4
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அவ் வேதம் அறியாதே

#5
நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வீர் என்று அ நான்மறை கண்டிலதே

#6
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே உப
சாந்த நிலையே வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே

#7
கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு என்று காட்டும் மறைகள் எலாம் நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு அவங்கள் புரிவீரோ

#8
உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே இங்கு
கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ

#9
மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்துப் பல
கள்ள மதங்கள் பரப்புதற்கு ஓர் மறை காட்டவும் வல்லீரோ

#10
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனும் வேதம் எலாம் என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனக் கொள்வாயே

@11 பரசிவ வெள்ளம்

#1
உள்ளும் புறமுமாய் உள்ளது எலாம் தான் ஆகும்
வெள்ளம் உன்று உண்டாம் அதனைத் தெய்வம் என்பார் வேதியரே

#2
காணுவன நெஞ்சில் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பது அந்த வெள்ளத்தே

#3
எல்லை பிரிவற்றதுவாய் யாதெனும் ஓர் பற்றிலதாய்
இல்லை உளது என்று அறிஞர் என்றும் மயல் எய்துவதாய்

#4
வெட்டவெளியாய் அறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டும் முகிலாய் அணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்

#5
தூல அணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்தில்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மை எலாம் தான் ஆகி

#6
தன்மை ஒன்று இலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த்
தன்மை பலவுடைத்தாய்த் தான் பலவாய் நிற்பதுவே

#7
எங்கும் உளான் யாவும் வலான் யாவும் அறிவான் எனவே
தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கு இதையே

#8
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்கு
ஈண்டு பொருளாய் அதனை ஈட்டுவதாய் நிற்குமிதே

#9
காண்பார்தம் காட்சியாய்க் காண்பாராய்க் காண் பொருளாய்
மாண்பு ஆர்ந்திருக்கும் வகுத்துரைக்க ஒண்ணாதே

#10
எல்லாம் தான் ஆகி இருந்திடினும் இஃது அறிய
வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே

#11
மற்று இதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்
பற்று இதனைக் கொண்டார் பயன் அனைத்தும் கண்டாரே

#12
இப் பொருளைக் கண்டார் இடருக்கு ஓர் எல்லைகண்டார்
எப்பொருளும் தாம் பெற்று இங்கு இன்பநிலை எய்துவரே

#13
வேண்டுவ எலாம் பெறுவார் வேண்டார் எதனையும் மற்று
ஈண்டு புவியோர் அவரை ஈசர் எனப் போற்றுவரே

#14
ஒன்றுமே வேண்டாது உலகு அனைத்தும் ஆளுவர் காண்
என்றுமே இப் பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே

#15
வெள்ளமடா தம்பி விரும்பிய போது எய்தி நினது
உள்ளம் மிசைத் தான் அமுத ஊற்றாய்ப் பொழியுமடா

#16
யாண்டும் இந்த இன்ப வெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டும் உபாயம் மிகவும் எளிதாகுமடா

#17
எண்ணமிட்டாலே போதும் எண்ணுவதே இவ் இன்பத்
தண் அமுதை உள்ளே ததும்பப்புரியுமடா

#18
எங்கும் நிறைந்திருந்த ஈச வெள்ளம் என் அகத்தே
பொங்குகின்றது என்று எண்ணிப் போற்றி நின்றால் போதுமடா

#19
யாதுமாம் ஈச வெள்ளம் என்னுள் நிரம்பியது என்று
ஓதுவதே போதும் அதை உள்ளுவதே போதுமடா

#20
காவித்துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே

#21
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதும் இல்லை
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டுநின்றால் போதுமடா

#22
தவம் ஒன்றும் இல்லை ஒரு சாதனையும் இல்லையடா
சிவம் ஒன்றே உள்ளது எனச் சிந்தைசெய்தால் போதுமடா

#23
சந்ததமும் எங்கும் எல்லாம் தான் ஆகி நின்ற சிவம்
வந்து என் உளே பாயுது என்று வாய் சொன்னால் போதுமடா

#24
நித்தம் சிவவெள்ளம் என்னுள் வீழ்ந்து நிரம்புது என்று உன்
சித்தம் மிசைக் கொள்ளும் சிரத்தை ஒன்றே போதுமடா

@12 பொய்யோ மெய்யோ
** உலகத்தை நோக்கி வினவுதல்

#1
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம்
சொற்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம்
அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ

#2
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்கள் எல்லாம்
கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ
போனது எல்லாம் கனவினைப் போல் புதைந்து அழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ

#3
காலம் என்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ
சோலையிலே மரங்கள் எல்லாம் தோன்றுவது ஓர் விதையில் என்றால்
சோலை பொய்யாமோ இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ

#4
காண்ப எல்லாம் மறையும் என்றால் மறைந்தது எல்லாம் காண்பம் அன்றோ
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதி இல்லை
காண்பது சக்தியாம் இந்தக் காட்சி நித்தியமாம்

@13 நான்
**இரட்டைக் குறள் வெண் செந்துறை

#1
வானில் பறக்கின்ற புள் எலாம் நான் மண்ணில் திரியும் விலங்கு எலாம் நான்
கான் நிழல் வளரும் மரம் எலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான்

#2
விண்ணில் தெரிகின்ற மீன் எலாம் நான் வெட்டவெளியின் விரிவு எலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழு எலாம் நான் வாரியில் உள்ள உயிர் எலாம் நான்

#3
கம்பன் இசைத்த கவி எலாம் நான் காருகர் தீட்டும் உரு எலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

#4
இன் இசை மாதர் இசையுளேன் நான் இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புல் நிலை மாந்தர்தம் பொய் எலாம் நான் பொறையரும் துன்பப் புணர்ப்பு எலாம் நான்

#5
மந்திரம் கோடி இயக்குவோன் நான் இயங்கு பொருளின் இயல்பு எலாம் நான்
தந்திரம் கோடி சமைத்துளோன் நான் சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்

#6
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான் அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்ட நல் சக்திக் கணம் எலாம் நான் காரணமாகிக் கதித்துளோன் நான்

#7
நான் எனும் பொய்யை நடத்துவோன் நான் ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான்

@14 சித்தாந்தச் சாமி கோயில்

#1
சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில் தீப ஒளி உண்டாம் பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையும் காட்டிட மூண்ட திருச்சுடராம் பெண்ணே

#2
உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே
கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்படக் காட்ட வரும் சுடராம் பெண்ணே

#3
தோன்றும் உயிர்கள் அனைத்தும் நன்று என்பது தோற்றமுறும் சுடராம் பெண்ணே
மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே

#4
பட்டினம்தன்னிலும் பார்க்க நன்று என்பதைப் பார்க்க ஒளிர் சுடராம் பெண்ணே
கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதைக் காண ஒளிர் சுடராம் பெண்ணே

@15 பக்தி
**ராகம் – பிலஹரி
**பல்லவி

#0
பக்தியினாலே தெய்வ பக்தியினாலே
**சரணங்கள்

#1
பக்தியினாலே இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ
சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும்
வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடைத்
தத்துவம் உண்டாம் நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்

#2
காமப் பிசாசைக் குதிகால் கொண்டு அடித்து விழுந்திடலாகும் இத்
தாமசப் பேயைக் கண்டு தாக்கி மடித்திடலாகும் எந்நேரமும்
தீமையை எண்ணி அஞ்சும் தேம்பல் பிசாசைத் திருகி எறிந்து பொய்
நாமம் இல்லாதே உண்மை நாமத்தினால் இங்கு நன்மை விளைந்திடும்

#3
ஆசையைக் கொல்வோம் புலை அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட
பாசம் அறுப்போம் இங்குப் பார்வதி சக்தி விளங்குதல் கண்டு அதை
மோசம்செய்யாமல் உண்மை முற்றிலும் கண்டு வணங்கி வணங்கி ஓர்
ஈசனைப் போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம்

#4
சோர்வுகள் போகும் பொய்ச் சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும் நல்
பார்வைகள் தோன்றும் மிடிப் பாம்பு கடித்த விஷம் அகன்றே நல்ல
சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும் பிணி தீரும் பலபல இன்பங்கள் சேர்ந்திடும்

#5
கல்வி வளரும் பல காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும்
அல்லல் ஒழியும் நல்ல ஆண்மை உண்டாகும் அறிவு தெளிந்திடும்
சொல்லுவது எல்லாம் மறைச்சொல்லினைப் போலப் பயனுளதாகும் மெய்
வல்லமை தோன்றும் தெய்வ வாழ்க்கையுற்றே இங்கு வாழ்ந்திடலாம் உண்மை

#6
சோம்பல் அழியும் உடல் சொன்னபடிக்கு நடக்கும் முடி சற்றும்
கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும்
வீம்புகள் போகும் நல்ல மேன்மை உண்டாகிப் புயங்கள் பருக்கும் பொய்ப்
பாம்பு மடியும் மெய்ப் பரம் வென்று நல்ல நெறிகள் உண்டாய்விடும்

#7
சந்ததி வாழும் வெறும் சஞ்சலம் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன்
கந்த மலர்த்தாள் துணை காதல் மகவு வளர்ந்திட வேண்டும் என்
சிந்தை அறிந்தே அருள்செய்திட வேண்டும் என்றால் அருள் எய்திடும்

@16 அம்மாக்கண்ணு பாட்டு

#1
பூட்டைத் திறப்பது கையாலே நல்ல மனம் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே

#2
ஏட்டைத் துடைப்பது கையாலே மனவீட்டைத் துடைப்பது மெய்யாலே
வேட்டையடிப்பது வில்லாலே அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே

#3
காற்றை அடைப்பது மனதாலே இந்தக் காயத்தைக் காப்பது செய்கையிலே
சோற்றைப் புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே

@17 வண்டிக்காரன் பாட்டு
**(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)

#1
காட்டு வழிதனிலே அண்ணே கள்ளர் பயம் இருந்தால் எங்கள்
வீட்டுக் குலதெய்வம் தம்பி வீரம்மை காக்குமடா

#2
நிறுத்து வண்டி என்றே கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே எங்கள்
கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா

@18 கடமை

#1
கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்
கடமை அறிவோம் தொழில் அறியோம் கட்டு என்பதனை வெட்டு என்போம்
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல்
கடமை நினைவும் தொலைத்து இங்கு களியுற்று என்றும் வாழ்குவமே

@19 அன்பு செய்தல்

#1
இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர்ப் பூம் செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ

#2
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும்
வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள்
வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே
யான் எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர்
என் மதத்தைக் கைக்கொள்-மின் பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர்

@20 சென்றது மீளாது

#1
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும்
சென்றதையே சிந்தைசெய்து
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமை எலாம் அழிந்துபோம் திரும்பி வாரா

@21 மனத்திற்குக் கட்டளை

#1
பேயாய் உழலும் சிறுமனமே பேணாய் என் சொல் இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே நினது தலைவன் யானே காண்
தாயாம் சக்தி தாளினிலும் தருமம் என யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால்

@22 மனப் பெண்

#1
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய்
ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்
அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய்
நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய் 5
தொட்டதை மீளமீளவும் தொடுவாய்
புதியது காணில் புலன் அழிந்திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்
பழமையாம் பொருளில் பரிந்து போய் வீழ்வாய் 10
பழமையே அன்றிப் பார் மிசை ஏதும்
புதுமை காணோம் எனப் பொருமுவாய் சீச்சீ
பிணத்தினை விரும்பும் காக்கையே போல
அழுகுதல் சாதல் அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்து அதில் இசைவாய் 15
அங்ஙனே
என்னிடத்து என்றும் மாறுதல் இல்லா
அன்புகொண்டிருப்பாய் ஆவி காத்திடுவாய்
கண்ணின் ஓர் கண்ணாய் காதின் காதாய்ப்
புலன் புலப்படுத்தும் புலனாய் என்னை 20
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்
இன்பு எலாம் தருவாய் இன்பத்து மயங்குவாய்
இன்பமே நாடி எண்ணிலாப் பிழைசெய்வாய்
இன்பம் காத்துத் துன்பமே அழிப்பாய்
இன்பம் என்று எண்ணித் துன்பத்து வீழ்வாய் 25
தன்னை அறியாய் சகத்து எலாம் தொளைப்பாய்
தன் பின் நிற்கும் தனிப் பரம்பொருளைக்
காணவே வருந்துவாய் காண் எனில் காணாய்
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய் 30
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய்
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்
இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே
விரும்புவன் நின்னை மேம்படுத்திடவே
முயற்சிகள் புரிவேன் முத்தியும் தேடுவேன் 35
உன் விழிப் படாமல் என் விழிப் பட்ட
சிவம் எனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்

@23 பகைவனுக்கு அருள்வாய்

#0
பகைவனுக்கு அருள்வாய் நல் நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்

#1
புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியில் கண்டோமே நல் நெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நல் நெஞ்சே
பரமன் வாழ்கின்றான்

#2
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ நல் நெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ நல் நெஞ்சே

#3
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ நல் நெஞ்சே
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே

#4
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேர் ஆமோ நல் நெஞ்சே
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே

#5
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர் போல வந்தானும் அவன் நல் நெஞ்சே
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு நின்றதும் கண்ணன் அன்றோ நல் நெஞ்சே

#6
தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் நல் நெஞ்சே
அன்னை பராசக்தி அவ் உரு ஆயினள் அவளைக் கும்பிடுவாய் நல் நெஞ்சே

@24 தெளிவு

#1
எல்லாம் ஆகிக் கலந்து நிறைந்த பின் ஏழைமை உண்டோடா மனமே
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கம் உண்டோ

#2
உள்ளது எலாம் ஓர் உயிர் என்று தேர்ந்த பின் உள்ளம் குலைவது உண்டோ மனமே
வெள்ளம் எனப் பொழி தண் அருள் ஆழ்ந்த பின் வேதனை உண்டோடா

#3
சித்தின் இயல்பும் அதன் பெரும் சத்தியின்
செய்கையும் தேர்ந்துவிட்டால் மனமே
எத்தனை கோடி இடர் வந்து சூழினும்
எண்ணம் சிறிதும் உண்டோ

#4
செய்க செயல்கள் சிவத்திடை நின்று எனத் தேவன் உரைத்தனனே மனமே
பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ

#5
ஆன்ம ஒளிக் கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா மனமே
தேன் மடை இங்கு திறந்தது கண்டு தேக்கித் திரிவமடா

@25 கற்பனையூர்

#1
கற்பனையூர் என்ற நகர் உண்டாம் அங்குக் கந்தர்வர் விளையாடுவாராம்
சொப்பனநாடு என்ற சுடர்நாடு அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை

#2
திருமணை இது கொள்ளைப் போர்க்கப்பல் இது ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே

#3
அ நகர்தனில் ஓர் இளவரசன் நம்மை அன்பொடு கண்டு உரைசெய்திடுவான்
மன்னவன் முத்தமிட்டு எழுப்பிடவே அவன் மனைவியும் எழுந்து அங்கு வந்திடுவாள்

#4
எக்காலமும் பெரு மகிழ்ச்சி அங்கே எவ்வகைக் கவலையும் போரும் இல்லை
பக்குவத் தேயிலைநீர் குடிப்போம் அங்குப் பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே

#5
இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும்
நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே

#6
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்குக் கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம்
அழகிய பொன் முடி அரசிகளாம் அன்றி அரசிளங்குமரிகள் பொம்மை எலாம்

#7
செந்தோல் அசுரனைக் கொன்றிடவே அங்குச் சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள்
சந்தோஷத்துடன் செங்கலையும் அட்டைத் தாளையும் கொண்டு அங்கு மனைகட்டுவோம்

#8
கள்ளர் அவ் வீட்டினுள் புகுந்திடவே வழி காண்பதிலா வகை செய்திடுவோம் ஓ
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே நீர் பின்னும் அ நிலைபெற வேண்டீரோ

#9
குழந்தைகள் ஆட்டத்தின் கனவை எல்லாம் அந்தக் கோல நல் நாட்டிடைக் காண்பீரே
இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே
**[ஜான் ஸ்கர் என்ற ஆங்கிலப் புலவன் நக்ஷத்ர தூதன் என்ற பத்திரிகையில் பிரசுரித்த
**தி டவுன் ஓப் லெட்ஸ் பிரெடெண்டு என்ற பாட்டின் மொழி பெயர்ப்பு]
** குறிப்பு இப்பாடலின் பொருள் கற்பனை நகரமென்பது சித்தத்தில்
** குழந்தை நிலை பெறுவதை இங்குக் குறிப்பிடுகிறது. யோவான் என்பது
** குமார தேவனுடைய பெயர். அக்கடவுள் மனிதனுக்குள்ளே
** நிலைபெற்று மனிதன் அடையவேண்டும் என்று யேசு கிறிஸ்து நாதர்
** சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது கவலைகளை முற்றுந்
** துறந்துவிட்டு உலகத்தை வெறுமே **லீலையாகக் கருதினாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.
*