பாரதியார் கவிதைகள் – வசன கவிதை

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

@1 முதற் கிளை இன்பம்

#1
இவ் உலகம் இனியது இதில் உள்ள வான் இனிமையுடைத்து காற்றும் இனிது
தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
ஞாயிறு நன்று திங்களும் நன்று
வானத்துச் சுடர்கள் எல்லாம் மிக இனியன
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு நன்று
ஆறுகள் இனியன
உலோகமும் மரமும் செடியும் கொடியும்
மலரும் காயும் கனியும் இனியன
பறவைகள் இனிய
ஊர்வனவும் நல்லன
விலங்குகள் எல்லாம் இனியவை
நீர்வாழ்வனவும் நல்லன
மனிதர் மிகவும் இனியர்
ஆண் நன்று பெண் இனிது
குழந்தை இன்பம்
இளமை இனிது முதுமை நன்று
உயிர் நன்று சாதல் இனிது

#2
உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன
உயிர் சுவையுடையது
மனம் தேன் அறிவு தேன் உணர்வு அமுதம்
உணர்வே அமுதம்
உணர்வு தெய்வம்

#3
மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம்
காடு மலை அருவி ஆறு
கடல் நிலம் நீர் காற்று
தீ வான்
ஞாயிறு திங்கள் வானத்துச் சுடர்கள் எல்லாம் தெய்வங்கள்
உலோகங்கள் மரங்கள் செடிகள்
விலங்குகள் பறவைகள் ஊர்வன நீந்துவன
மனிதர் இவை அமுதங்கள்

#4
இவ் உலகம் ஒன்று
ஆண் பெண் மனிதர் தேவர்
பாம்பு பறவை காற்று கடல்
உயிர் இறப்பு இவை அனைத்தும் ஒன்றே
ஞாயிறு வீட்டுச்சுவர் ஈ மலை அருவி
குழல் கோமேதகம் இவ் அனைத்தும் ஒன்றே
இன்பம் துன்பம் பாட்டு
வண்ணான் குருவி
மின்னல் பருத்தி
இஃது எல்லாம் ஒன்று
மூடன் புலவன்
இரும்பு வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்
வேதம் கடல்மீன் புயல்காற்று மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம்
உள்ளது எல்லாம் ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின் பெயர் தான்
தானே தெய்வம்
தான் அமுதம் இறவாதது

#5
எல்லா உயிரும் இன்பம் எய்துக
எல்லா உடலும் நோய் தீர்க
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க
தான் வாழ்க
அமுதம் எப்போதும் இன்பம் ஆகுக

#6
தெய்வங்களை வாழ்த்துகின்றோம்
தெய்வங்கள் இன்பம் எய்துக
அவை வாழ்க
அவை வெல்க
தெய்வங்களே
என்றும் விளங்குவீர் என்றும் இன்பம் எய்துவீர்
என்றும் வாழ்வீர் என்றும் அருள்புரிவீர்
எவற்றையும் காப்பீர்
உமக்கு நன்று
தெய்வங்களே
எம்மை உண்பீர் எமக்கு உணவாவீர்
உலகத்தை உண்பீர் உலகத்துக்கு உணவாவீர்
உமக்கு நன்று
தெய்வங்களே
காத்தல் இனிது காக்கப்படுதலும் இனிது
அழித்தல் நன்று அழிக்கப்படுதலும் நன்று
உண்பது நன்று உண்ணப்படுதலும் நன்று
சுவை நன்று உயிர் நன்று நன்று நன்று

#7
உணர்வே நீ வாழ்க
நீ ஒன்று நீ ஒளி
நீ ஒன்று நீ பல
நீ நட்பு நீ பகை
உள்ளதும் இல்லாததும் நீ
அறிவதும் அறியாததும் நீ
நன்றும் தீதும் நீ
நீ அமுதம் நீ சுவை
நீ நன்று நீ இன்பம்

@2 இரண்டாங் கிளை – புகழ்
**ஞாயிறு

#1
ஒளி தருவது யாது தீராத இளமையுடையது யாது
வெய்யவன் யாவன் இன்பம் எவனுடையது
மழை எவன் தருகின்றான் கண் எவனுடையது
உயிர் எவன் தருகிறான்
புகழ் எவன் தருகின்றான் புகழ் எவனுக்கு உரியது
அறிவு எது போல் சுடரும்
அறிவுத் தெய்வத்தின் கோயில் எது
ஞாயிறு
அது நன்று

#2
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி
மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து
இவை எல்லாம் நினது நிகழ்ச்சி
கண் நினது வீடு
புகழ் வீரம் இவை நினது லீலை
அறிவு நின் குறி அறிவின் குறி நீ
நீ சுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க
உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய்
வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய்
நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க

#3
வைகறையின் செம்மை இனிது
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க
உஷையை நாங்கள் தொழுகின்றோம்
அவள் திரு
அவள் விழிப்புத் தருகின்றாள் தெளிவு தருகின்றாள்
உயிர் தருகின்றாள் ஊக்கம் தருகின்றாள்
அழகு தருகின்றாள் கவிதை தருகின்றாள்
அவள் வாழ்க
அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது
அவள் அமுதம் அவள் இறப்பதில்லை வலிமையுடன் கலக்கின்றாள்
வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரிது
வடமேருவிலே பலவாகத் தொடர்ந்து வருவாள்
வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்
அவளுடைய நகைப்புக்கள் வாழ்க
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள் அன்பு மிகுதியால்
ஒன்று பலவினும் இனிது அன்றோ
வைகறை நன்று அதனை வாழ்த்துகின்றோம்

#4
நீ சுடுகின்றாய் நீ வருத்தம் தருகின்றாய்
நீ விடாய் தருகின்றாய் சோர்வு தருகின்றாய்
பசி தருகின்றாய்
இவை இனியன
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய் இனிய மழை தருகின்றாய்
வானவெளியிலே விளக்கேற்றுகிறாய்
இருளைத் தின்றுவிடுகின்றாய்
நீ வாழ்க

#5
ஞாயிறே இருளை என்ன செய்துவிட்டாய்
ஓட்டினாயா கொன்றாயா விழுங்கிவிட்டாயா
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா
இருள் நினக்குப் பகையா
இருள் நின் உணவுப்பொருளா
அது நின் காதலியா
இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா
நின்னைக் கண்டவுடன் நின் ஒளி தானுங் கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா
நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா
உங்களுக்கு மரணம் இல்லையா நீங்கள் அமுதமா
உங்களைப் புகழ்கின்றேன்
ஞாயிறே உன்னைப் புகழ்கின்றேன்

#6
ஒளியே நீ யார்
ஞாயிற்றின் மகளா
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம்
ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம்
ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயிர்
ஒளியே நீ எப்போது தோன்றினாய்
நின்னை யாவர் படைத்தனர்
ஒளியே நீ யார்
உனது இயல்பு யாது
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக்கிடக்கும் தெளிவு நீ போலும்
அறிவின் உடல் போலும்
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாள் பழக்கம்
உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது
அதனுடன் நீ எப்படி இரண்டறக் கலக்கிறாய்
உங்களை எல்லாம் படைத்தவள் வித்தைக்காரி
அவள் மோஹினி மாயக்காரி
அவளைத் தொழுகின்றோம்
ஒளியே வாழ்க

#7
ஞாயிறே
நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது
நீ அதனை உமிழ்கின்றாயா
அது நின்னைத் தின்னுகிறதா
அன்றி ஒளி தவிர நீ வேறொன்றும் இல்லையா
விளக்குத்திரி காற்றாகிச் சுடர் தருகின்றது
காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு
காற்றின் வடிவே திரி என்று அறிவோம்
ஒளியின் வடிவே காற்றுப் போலும்
ஒளியே நீ இனியை

#8
ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு
வெம்மை ஏற ஒளி தோன்றும்
வெம்மையைத் தொழுகின்றோம்
வெம்மை ஒளியின் தாய் ஒளியின் முன்னுருவம்
வெம்மையே நீ தீ
தீ தான் வீரத்தெய்வம்
தீ தான் ஞாயிறு
தீயின் இயல்பே ஒளி
தீ எரிக
அதனிடத்தே நெய் பொழிகின்றோம்
தீ எரிக
அதனிடத்தே தசை பொழிகின்றோம்
தீ எரிக
அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம்
தீ எரிக
அதற்கு வேள்விசெய்கின்றோம்
தீ எரிக
அறத்தீ அறிவுத்தீ உயிர்த்தீ
விரதத்தீ வேள்வித்தீ
சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ
இவை அனைத்தையும் தொழுகின்றோம்
இவற்றைக் காக்கின்றோம்
இவற்றை ஆளுகின்றோம்
தீயே நீ எமது உயிரின் தோழன்
உன்னை வாழ்த்துகின்றோம்
நின்னைப் போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக
தீயே நின்னைப் போல எமது உள்ளம் சுடர்விடுக
தீயே நின்னைப் போல எமது அறிவு கனலுக
ஞாயிற்றினிடத்தே தீயே நின்னைத்தான் போற்றுகின்றோம்
ஞாயிற்றுத் தெய்வமே நின்னைப் புகழ்கின்றோம்
நினது ஒளி நன்று நின் செயல் நன்று நீ நன்று

#9
வானவெளி என்னும் பெண்ணை ஒளி என்னும் தேவன் மணந்திருக்கின்றான்
அவர்களுடைய கூட்டம் இனிது
இதனைக் காற்றுத்தேவன் கண்டான்
காற்று வலிமையுடையவன்
இவன் வானவெளியைக் கலக்க விரும்பினான்
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை
இவன் தனது பெருமையை ஊதிப் பறையடிக்கின்றான்
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பது போல் கலந்தன
காற்றுத்தேவன் பொறாமைகொண்டான்
அவன் அமைதியின்றி உழலுகிறான்
அவன் சீறுகின்றான் புடைக்கின்றான் குமுறுகின்றான்
ஓலமிடுகின்றான் சுழலுகின்றான் துடிக்கின்றான்
ஓடுகின்றான் எழுகின்றான் நிலையின்றிக் கலங்குகின்றான்
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன
காற்றுத் தேவன் வலிமையுடையவன்
அவன் புகழ் பெரிது அப் புகழ் நன்று
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன
அவை வெற்றியுடையன
ஞாயிறே நீதான் ஒளித்தெய்வம்
நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கிறாள்
உங்கள் கூட்டம் மிக இனிது
நீவிர் வாழ்க

#10
ஞாயிறே நின் முகத்தைப் பார்த்த பொருள் எல்லாம் ஒளி பெறுகின்றது
பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன்
யுரேனஸ் நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள்
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகைசெய்கின்றன
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல
இவை எல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்பர்
இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான்
இவை ஒளிகுன்றிப்போயின
ஒளியிழந்தன அல்ல குறைந்த ஒளியுடையன
ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை
இருள் என்பது குறைந்த ஒளி
செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன
அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன
அவனுடைய சக்தி எல்லையை என்றும் கடந்துசெல்லமாட்டா
அவன் எப்போதும் இவற்றை நோக்கியிருக்கின்றான்
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன
அவன் ஒளியை இவை மலரிலும் நீரிலும் காற்றிலும் பிடித்துவைத்துக்கொள்ளும்
ஞாயிறு மிகச் சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும்
அவனையே மலர் விரும்புகின்றது
இலைகள் அவனுடைய அழகிலே யோகம் எய்தியிருக்கின்றன
அவனை நீரும் நிலமும் காற்றும் உகந்து களியுறும்
அவனை வான் கவ்விக்கொள்ளும்
அவனுக்கு மற்றெல்லாத் தேவரும் பணிசெய்வர்
அவன் புகழைப் பாடுவோம்
அவன் புகழ் இனிது

#11
புலவர்களே அறிவுப்பொருள்களே உயிர்களே பூதங்களே சக்திகளே எல்லோரும் வருவீர்
ஞாயிற்றைத் துதிப்போம் வாருங்கள்
அவன் நமக்கெல்லாம் துணை
அவன் மழை தருகின்றான்
மழை நன்று
மழைத்தெய்வத்தை வாழ்த்துகின்றோம்
ஞாயிறு வித்தைகாட்டுகின்றான்
கடல்நீரைக் காற்றாக்கி மேலே கொண்டுபோகிறான்
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்
மழை இனிமையுறப் பெய்கின்றது
மழை பாடுகின்றது
அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி
வானத்திலிருந்து அமுத வயிரக் கோல்கள் விழுகின்றன
பூமிப்பெண் விடாய் தீர்கிறாள் குளிர்ச்சி பெறுகின்றாள்
வெப்பத்தால் தண்மையும் தண்மையால் வெப்பமும் விளைகின்றன
அனைத்தும் ஒன்றாதலால்
வெப்பம் தவம் தண்மை யோகம்
வெப்பம் ஆண் தண்மை பெண்
வெப்பம் வலியது தண்மை இனிது
ஆணிலும் பெண் சிறந்தது அன்றோ
நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம்
அது வாழ்க

#12
நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்
வெம்மைத் தெய்வமே ஞாயிறே ஒளிக் குன்றே
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும்
விழிகளின் நாயகமே
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே
வலிமையின் ஊற்றே ஒளி மழையே உயிர்க் கடலே
சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும்
புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே
கண்ணன் என்னும் கள்வன் அறிவு என்னும் தன் முகத்தை
மூடிவைத்திருக்கும் ஒளி என்னும் திரையே
ஞாயிறே நின்னைப் பரவுகின்றோம்
மழையும் நின் மகள் மண்ணும் நின் மகள்
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்
வெளி நின் காதலி
இடியும் மின்னலும் நினது வேடிக்கை
நீ தேவர்களுக்குத் தலைவன்
நின்னைப் புகழ்கின்றோம்
தேவர்கள் எல்லாம் ஒன்றே
காண்பன எல்லாம் அவர் உடல்
கருதுவன அவர் உயிர்
அவர்களுடைய தாய் அமுதம்
அமுதமே தெய்வம் அமுதமே மெய்யொளி
அஃது ஆத்மா
அதனைப் புகழ்கின்றோம்
அதன் வீடாகிய ஞாயிற்றைப் புகழ்கின்றோம்
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று

#13
மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது
புலவர்களே மின்னலைப் பாடுவோம் வாருங்கள்
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம்
அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர்
மின்னலைத் தொழுகின்றோம்
அது நம் அறிவை ஒளியுறச்செய்க
மேகக் குழந்தைகள் மின்னல்பூச் சொரிகின்றன
மின் சக்தி இல்லாத இடம் இல்லை
எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே
கருங்கல்லிலே வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே
காற்றிலே வரையிலே எங்கும் மின்சக்தி உறங்கிக்கிடக்கின்றது
அதனைப் போற்றுகின்றோம்
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக
நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக
நமது பாட்டு மின்னல் உடைத்தாகுக
நமது வாக்கு மின் போல் அடித்திடுக
மின் மெலியதைக் கொல்லும்
வலியதிலே வலிமை சேர்க்கும்
அது நம் வலிமையை வளர்த்திடுக
ஒளியை மின்னலை சுடரை மணியை
ஞாயிற்றை திங்களை வானத்து வீடுகளை மீன்களை
ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம்
அனைத்தையும் வாழ்த்துகின்றோம்
ஞாயிற்றை வாழ்த்துகின்றோம்

@3 சக்தி

#1
சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்
சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்
சக்தி அநந்தம் எல்லையற்றது முடிவற்றது
அசையாமையில் அசைவு காட்டுவது
சக்தி அடிப்பது துரத்துவது கூட்டுவது
பிணைப்பது கலப்பது உதறுவது
புடைப்பது வீசுவது சுழற்றுவது
கட்டுவது சிதறடிப்பது தூற்றுவது
ஊதிவிடுவது நிறுத்துவது ஓட்டுவது
ஒன்றாக்குவது பலவாக்குவது
சக்தி குளிர்செய்வது அனல் தருவது
குதுகுதுப்புத் தருவது
குதூஹலம் தருவது நோவு தருவது நோவு தீர்ப்பது
இயல்பு தருவது இயல்பு மாற்றுவது
சோர்வு தருவது ஊக்கம் தருவது
எழுச்சி தருவது கிளர்ச்சி தருவது
மலர்விப்பது புளகம்செய்வது
கொல்வது உயிர் தருவது
சக்தி மகிழ்ச்சி தருவது சினம் தருவது
வெறுப்புத் தருவது உவப்புத் தருவது
பகைமை தருவது காதல் மூட்டுவது
உறுதி தருவது அச்சம் தருவது
கொதிப்புத் தருவது ஆற்றுவது
சக்தி முகர்வது சுவைப்பது தீண்டுவது கேட்பது காண்பது
சக்தி நினைப்பது ஆராய்வது கணிப்பது தீர்மானம்செய்வது
கனாக்காண்பது கற்பனைபுரிவது தேடுவது சுழல்வது
பற்றி நிற்பது எண்ணமிடுவது பகுத்து அறிவது
சக்தி மயக்கம் தருவது தெளிவு தருவது
சக்தி உணர்வது
பிரமன் மகள் கண்ணன் தங்கை சிவன் மனைவி
கண்ணன் மனைவி சிவன் மகள் பிரமன் தங்கை
பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்
சக்தி முதல்பொருள்
பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு
சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம்
சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்
சக்தியின் கலைகளிலே ஒளி ஒன்று
சக்தி வாழ்க

#2
காக்கை கத்துகிறது
ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிர ஒளியாகிய நீர் பாய்ச்சுகிறது
அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன
அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகின்றது
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது
மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன
கோழி கூவுகின்றது
எறும்பு ஊர்ந்து செல்கின்றது
ஈ பறக்கின்றது
இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான்
இவை அனைத்தும் மஹாசக்தியின் தொழில்
அவள் நம்மைக் கர்மயோகத்தில் நாட்டுக
நமக்குச் செய்கை இயல்பாகுக
ரஸமுள்ள செய்கை இன்பமுடைய செய்கை
வலிய செய்கை சலிப்பில்லாத செய்கை
விளையும் செய்கை பரவும் செய்கை
கூடிவரும் செய்கை இறுதியற்ற செய்கை
நமக்கு மஹாசக்தி அருள்செய்க
கவிதை காவல் ஊட்டுதல் வளர்த்தல்
மாசு எடுத்தல் நலம் தருதல் ஒளி பெய்தல்
இச் செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக
அன்பு நீர் பாய்ச்சி அறிவு என்னும் ஏர் உழுது
சாத்திரக் களை போக்கி வேதப் பயிர் செய்து
இன்பப் பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம்
அதனை அவள் தருக

#3
இருள் வந்தது ஆந்தைகள் மகிழ்ந்தன
காட்டிலே காதலனை நாடிச் சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள்
ஒளி வந்தது காதலன் வந்தான் பெண் மகிழ்ந்தாள்
பேய் உண்டு மந்திரம் உண்டு
பேய் இல்லை மந்திரம் உண்டு
நோய் உண்டு மருந்து உண்டு
அயர்வு கொல்லும் அதனை ஊக்கம் கொல்லும்
அவித்தை கொல்லும் அதனை வித்தை கொல்லும்
நாம் அச்சம்கொண்டோம் தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள்
நாம் துயர்கொண்டோம் தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்
குனிந்த தலையை நிமிர்த்தினாள்
சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்
கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்
இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்
மஹாசக்தி வாழ்க

#4
மண்ணிலே வேலி போடலாம்
வானத்திலே வேலி போடலாமா
என்றான் ராமகிருஷ்ண முனி
ஜடத்தைக் கட்டலாம் சக்தியைக் கட்டலாமா உடலைக்
கட்டலாம் உயிரைக் கட்டலாமா
உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்
என்னிடத்தே சக்தி எனது உயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள்
சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும்
தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும்
அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும்
இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர்
இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள்
இது பழமைப்பட்டுப்போனவுடன் இதை விட்டுவிடுவாள்
இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள்
இப்போது எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன
இப்போது எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன
இப்போது என் உள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது
இது எனக்குப் போதும்
சென்றது கருதமாட்டேன் நாளைச் சேர்வது நினைக்கமாட்டேன்
இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள்
அவள் நீடூழி வாழ்க
அவளைப் போற்றுகின்றேன் புகழ்கின்றேன் வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன்

#5
மண்ணிலே வேலி போடலாம் வானத்திலே வேலி போடலாமா போடலாம்
மண்ணிலும் வானம்தானே நிரம்பியிருக்கின்றது
மண்ணைக் கட்டினால் அதில் உள்ள வானத்தைக் கட்டியது ஆகாதா
உடலைக் கட்டு உயிரைக் கட்டலாம்
உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்
உள்ளத்தைக் கட்டு சக்தியைக் கட்டலாம்
அநந்த சக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தம் இல்லை
என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது
அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது
இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம்
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்
புதுப்பிக்காவிட்டால் அவ் வடிவம் மாறும்
அழுக்குத் தலையணை ஓட்டைத் தலையணை பழைய தலையணை
அதிலுள்ள பஞ்சை எடுத்துப் புதிய மெத்தையிலே போடு
மேலுறையை கந்தை என்று வெளியே எறி அந்த வடிவம் அழிந்துவிட்டது
வடிவத்தைக் காத்தால்
சக்தியைக் காக்கலாம்
அதாவது சக்தியை அவ் வடிவத்திலே காக்கலாம்
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை
எங்கும் எதனிலும் எப்போதும் எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி
வடிவத்தைக் காப்பது நன்று
சக்தியின் பொருட்டாக சக்தியைப் போற்றுதல் நன்று
வடிவத்தைக் காக்குமாறு
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர்

#6
பாம்புப்பிடாரன் குழல் ஊதுகின்றான்
இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம்
ஆனால் இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும்
சோகரஸம் தவிர்ந்தது
இஃது ஓர் பண்டிதன் தர்க்கிப்பது போல் இருக்கின்றது
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை
அடுக்கிக்கொண்டுபோவது போல் இருக்கிறது
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்
தான தந்தத் தான தந்தத் தா தனத்
தான தந்தன தான தந்தன தா
தந்தனத் தன தந்தனத் தன தா
அவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக
வாசித்துக்கொண்டு போகிறான்
இதற்குப் பொருள் என்ன
ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று
காளிக்குப் பூச்சூட்டினேன் அதைக்
கழுதை ஒன்று தின்ன வந்ததே
பராசக்தியின்பொருட்டு இவ் உடல் கட்டினேன்
அதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது
பராசக்தியைச் சரணடைந்தேன்
நோய் மறைந்துவிட்டது
பராசக்தி ஒளி ஏறி என் அகத்திலே விளங்கலாயினள்
அவள் வாழ்க

#7
பாம்புப்பிடாரன் குழல் ஊதுகின்றான்
குழலிலே இசை பிறந்ததா தொளையிலே பிறந்ததா
பாம்புப்பிடாரன் மூச்சிலே பிறந்ததா
அவன் உள்ளத்திலே பிறந்தது குழலிலே வெளிப்பட்டது
உள்ளம் தனியே ஒலிக்காது குழல் தனியே இசைபுரியாது உள்ளம் குழலிலே ஒட்டாது
உள்ளம் மூச்சிலே ஒட்டும் மூச்சுக் குழலிலே ஒட்டும் குழல் பாடும்
இஃது சக்தியின் லீலை
அவள் உள்ளத்திலே பாடுகிறாள் அது குழலின் தொளையிலே கேட்கிறது
பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி
தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன
பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி
ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் அதே சுருதியில்
ஆ பொருள் கண்டுகொண்டேன்
பிடாரன் உயிரிலும் தொம்பக் குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன்
உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது
கருவி பல பாணன் ஒருவன்
தோற்றம் பல சக்தி ஒன்று
அஃது வாழ்க

#8
பராசக்தியைப் பாடுகின்றோம்
இவள் எப்படி உண்டாயினாள் அதுதான் தெரியவில்லை
இவள் தானே பிறந்த தாய் தான் என்ற பரம்பொருளினிடத்தே
இவள் எதிலிருந்து தோன்றினாள் தான் என்ற பரம்பொருளிலிருந்து
எப்படித் தோன்றினாள் தெரியாது
படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது அறிவுக்கும் தெரியாது
சாவு நமது கண்ணுக்குத் தெரியும் அறிவுக்குத் தெரியாது
வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும் அறிவுக்கும் தெரியும்
வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல் இதன் பயன் இன்பம் எய்தல்
உள்ளம் தெளிந்திருக்க உயிர் வேகமும் சூடும் உடையதாக உடல் அமைதியும்
வலிமையும் பெற்றிருக்க
மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல் நாம் வாழ்கின்றோம்
நம்மை வாழ்வுறச்செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம்

@4 காற்று

#1
ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல் ஓலைப் பந்தல் தென்னோலை
குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி
மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது
ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது
ஒரு சாண் கயிறு
இந்தக் கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது
பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை
சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது
இன்று அப்படி இல்லை குஷால்வழியில் இருந்தது
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம்
நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வது உண்டு
கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா
பேசிப்பார் மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை
ஆனால் அது ஸந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும்
இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களைப் போல
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டுக் கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை
ஒரு கயிறா சொன்னேன் இரண்டு கயிறு உண்டு
ஒன்று ஒரு சாண் மற்றொன்று முக்கால் சாண்
ஒன்று ஆண் மற்றொன்று பெண் கணவனும் மனைவியும்
அவை இரண்டும் ஒன்றையொன்று காமப் பார்வைகள் பார்த்துக்கொண்டும்
புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டும்
வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரஸப்போக்கிலே இருந்தன
அத் தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்
ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர்
பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை
மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர்வைக்கலாம்)
கந்தன் வள்ளியம்மை மீது கையைப் போட வருகிறது வள்ளியம்மை சிறிது
பின்வாங்குகிறது
அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்
என்ன கந்தா ஸௌக்கியந்தானா ஒரு வேளை நான் ஸந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ
என்னவோ
போய் மற்றொரு முறை வரலாமா என்று கேட்டேன்
அதற்குக் கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா
என்னடி வள்ளி
நமது ஸல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா என்றது
சரி சரி என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம் என்றது வள்ளியம்மை
அதற்குக் கந்தன் கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து நான்
பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது
வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று ஆனால் மனதுக்குள்ளே
வள்ளியம்மைக்கு ஸந்தோஷம்
நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு ஸந்தோஷம்தானே
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான் உள்ளதைச்
சொல்லிவிடுவதிலே என்ன குற்றம்
இளமையின் ஸல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பம் அன்றோ
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே கந்தன் அதை விட்டுவிட்டது
சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக்கொண்டது
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதல் மறுபடியும் தழுவல் மறுபடியும்
கூச்சல் இப்படியாக நடந்துகொண்டே வந்தது
என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூடச் சொல்லமாட்டேன் என்கிறாய்
வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன்
அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு
இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன்
நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன்
போய்விடாதே இரு என்றது
நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன்
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை
மறந்து நாணத்தை விட்டுவிட்டது
உடனே பாட்டு நேர்த்தியான துக்கடாக்கள் ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு
இரண்டே ஸங்கதி பின்பு மற்றொரு பாட்டு
கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி இது முடிந்தவுடன் அது மாற்றிமாற்றிப்
பாடி கோலாஹலம்
சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும்
அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்
அது தழுவிக்கொள்ள வரும் இது ஓடும் கோலாஹலம்
இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களி ஏறிவிட்டது
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டுவரப் போனேன்
நான் போவதை அவ் இரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை
நான் திரும்பிவந்து பார்க்கும் போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டு இருந்தது
கந்தன் என் வரவை எதிர்நோக்கி இருந்தது
என்னைக் கண்டவுடன் எங்கடா போயிருந்தாய் வைதீகம் சொல்லிக்கொள்ளாமல்
போய்விட்டாயே என்றது
அம்மா நல்ல நித்திரை போல் இருக்கிறதே என்று கேட்டேன்
ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற
தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன்
காற்றுத்தேவன் தோன்றினான்
அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்
வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி
காற்றே போற்றி நீயே கண்கண்ட பிரமம்
அவன் தோன்றிய பொழுதிலே வானம் முழுதும் ப்ராணசக்தி நிரம்பிக் கனல்
வீசிக்கொண்டு இருந்தது
ஆயிரம் முறை அஞ்சலிசெய்து வணங்கினேன்
காற்றுத்தேவன் சொல்வதாயினன்
மகனே ஏதடா கேட்டாய் அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா
இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும் என் உறவு இல்லாதது சவம்
நான் ப்ராணன் என்னாலேதான் அச் சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது
சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும்
சாவுதான் சாவும் துயிலே
நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன்
அது மறுபடி பிழைத்துவிடும்
நான் விழிக்கச்செய்கிறேன் அசையச்செய்கிறேன் நான் சக்திகுமாரன் என்னை
வணங்கி வாழ்க என்றான்
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி

#2
நடுக்கடல் தனிக் கப்பல்
வானமே சினந்து வருவது போன்ற புயல்காற்று
அலைகள் சாரி வீசுகின்றன நிர்த்தூளிப்படுகின்றன
அவை மோதி வெடிக்கின்றன சூறையாடுகின்றன
கப்பல் நிர்த்தனஞ்செய்கிறது
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது
பாறையில் மோதிவிட்டது
ஹதம்
இருநூறு உயிர்கள் அழிந்தன
அழியும் முன் அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனம் இருக்கும் என்பதை
அறிந்துகொண்டு போயின
ஊழி முடிவும் இப்படியேதான் இருக்கும்
உலகம் ஓடுநீர் ஆகிவிடும் தீ நீர்
சக்தி காற்றாகிவிடுவாள்
சிவன் வெறியிலே இருப்பான்
இவ் உலகம் ஒன்று என்பது தோன்றும்
அஃது சக்தி என்பது தோன்றும்
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும்
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான் அவற்றில் உயிர் பெய்கிறான்
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி
நெருப்பை நீராக்கி
நீரைத் தூளாக்கித் தூளை நீராக்கிச் சண்டமாருதம் செய்கின்றான்
காற்றே யுகமுடிவு செய்கின்றான்
காற்றே காக்கின்றான்
அவன் நம்மைக் காத்திடுக
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி

#3
காற்றுக்குக் காது நிலை
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான்
காற்று இல்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது
காற்றுக்குக் காது இல்லை
அவன் செவிடன்
காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா
காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு இடியிடிக்கச் சொல்லி
வேடிக்கை பார்ப்பானா
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா
காற்றை ஒலியை வலிமையை வணங்குகின்றோம்

#4
பாலைவனம்
மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு
திசையிலும் மணல்
மாலை நேரம்
அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபாரக் கூட்டத்தார்
போகிறார்கள்
வாயு சண்டனாகி வந்துவிட்டான்
பாலைவனத்து மணல்கள் எல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன
ஒரு க்ஷணம் யம வாதனை வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே
அழிந்துபோகிறது
வாயு கொடியோன் அவன் ருத்ரன் அவனுடைய ஓசை அச்சம் தருவது
அவனுடைய செயல்கள் கொடியன
காற்றை வாழ்த்துகின்றோம்

#5
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்
உயிருடையன எல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்
உயிர்தான் காற்று
உயிர் பொருள் காற்று அதன் செய்கை
பூமித்தாய் உயிரோடு இருக்கிறாள்
அவளுடைய மூச்சே பூமியில் உள்ள காற்று
காற்றே உயிர் அவன் உயிர்களை அழிப்பவன்
காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது
மரணம் இல்லை
அகில உலகமும் உயிர் நிலையே
தோன்றுதல் வளர்தல் மாறுதல் மறைதல் எல்லாம் உயிர்ச் செயல்
உயிரை வாழ்த்துகின்றோம்

#6
காற்றே வா
மகரந்தத்தூளைச் சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய
வாசனையுடன் வா
இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை
எங்களுக்குக் கொண்டு கொடு
காற்றே வா
எமது உயிர்நெருப்பை நீடித்து நின்று நல் ஒளி தருமாறு நன்றாக வீசு
சக்தி குறைந்துபோய் அதனை அவித்துவிடாதே
பேய் போல வீசி அதனை மடித்துவிடாதே
மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்

#7
சிற்றெறும்பைப் பார்
எத்தனை சிறியது
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக
வைத்திருக்கிறது
யார் வைத்தனர் மஹாசக்தி
அந்த உறுப்புகள் எல்லாம் நேராகவே தொழில்செய்கின்றன
எறும்பு உண்ணுகின்றது உறங்குகின்றது மணம்செய்துகொள்கின்றது
குழந்தை பெறுகிறது ஓடுகிறது
தேடுகிறது போர் செய்கிறது நாடு காக்கிறது
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்விளையாட்டு விளையாடுகின்றாள்
காற்றைப் பாடுகிறோம்
அஃது அறிவிலே துணிவாக நிற்பது
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்கள் ஆவது
உயிரிலே உயிர் தானாக நிற்பது
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம் நாம் அறிவதில்லை
காற்றுத்தேவன் வாழ்க

#8
மழைக் காலம்
மாலை நேரம்
குளிர்ந்த காற்று வருகிறது
நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான்
பயன் இல்லை
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வது உண்டோ
காற்று நம் மீது வீசுக
அது நம்மை நோயின்றிக் காத்திடுக
மலைக்காற்று நல்லது
கடல்காற்று மருந்து
வான்காற்று நன்று
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர்
அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை
அதனால் காற்றுத்தேவன் சினம் எய்தி அவர்களை அழிக்கின்றான்
காற்றுத்தேவனை வணங்குவோம்
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின
பண்டங்கள் போடலாகாது
புழுதி படிந்திருக்கலாகாது எவ்விதமான அசுத்தமும் கூடாது
காற்று வருகின்றான்
அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்துவைத்திடுவோம்
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்துவைப்போம்
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்திவைப்போம்
அவன் நல்ல மருந்தாக வருக
அவன் நமக்கு உயிராகி வருக
அமுதமாகி வருக
காற்றை வழிபடுகின்றோம்
அவன் சக்திகுமாரன் மஹாராணியின் மைந்தன்
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம்
அவன் வாழ்க

#9
காற்றே வா மெதுவாக வா
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே
காயிதங்களை எல்லாம் எடுத்து விசிறி எறியாதே
அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே
பார்த்தாயா இதோ தள்ளிவிட்டாய்
புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்
வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கைபார்ப்பதிலே நீ மஹா ஸமர்த்தன்
நொய்ந்த வீடு நொய்ந்த கதவு நொய்ந்த கூரை
நொய்ந்த மரம் நொய்ந்த உடல் நொய்ந்த உயிர்
நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான்
சொன்னாலும் கேட்கமாட்டான்
ஆதலால் மானிடரே வாருங்கள்
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்
கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்
உடலை உறுதிகொள்ளப் பழகுவோம்
உயிரை வலிமையுற நிறுத்துவோம்
உள்ளத்தை உறுதிசெய்வோம்
இங்ஙனம் செய்தால் காற்று நமக்குத் தோழனாகிவிடுவான்
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்
வலிய தீயை வளர்ப்பான்
அவன் தோழமை நன்று
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்

#10
மழை பெய்கிறது
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது
தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள்
ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள்
ஈரத்திலேயே நடக்கிறார்கள்
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல் ஈரத்திலேயே உணவு
உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான்
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள் மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம்
என்கிறார்கள்
ஆமடா விதிவசந்தான்
அறிவில்லாதவர்களுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி
சாஸ்த்ரம் இல்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி
தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை
வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத்
தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி
வயிறுபிழைத்து வருகிறார்கள்
குளிர்ந்த காற்றையா விஷம் என்று நினைக்கிறாய்
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால்
காற்று நன்று
அதனை வழிபடுகின்றோம்

#11
காற்று என்று சக்தியைக் கூறுகின்றோம்
எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று
எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்
சக்தியின் கலைகளையே தெய்வங்கள் என்கின்றோம்
காற்று சக்திகுமாரன்
அவனை வழிபடுகின்றோம்

#12
காக்கை பறந்து செல்லுகிறது
காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது
அலைகள் போல் இருந்து மேலே காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும்
பொருள் யாது காற்று
அன்று அஃது அன்று காற்று
அது காற்றின் இடம் வாயு நிலயம்
கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத் தூள்களே காற்றடிக்கும்
போது நம் மீது வந்து மோதுகின்றன
அத் தூள்களைக் காற்று என்பது உலகவழக்கு
அவை வாயு அல்ல வாயு ஏறிவரும் தேர்
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது நீரிலே குடேற்றினால்
வாயு ஆகிவிடுகிறது
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது அத் திரவத்திலே
சூடேற்றினால் வாயு ஆகின்றது
இங்ஙனமே உலகத்துப் பொருள்கள் அனைத்தையும் வாயுநிலைக்குக்
கொண்டுவந்துவிடலாம்
இந்த வாயு பௌதிகத்தூள்
இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்தேவன் என்று வணங்குகிறோம்
காக்கை பறந்து செல்லும் வழி காற்று
அந்த வழியை இயக்குபவன் காற்று
அதனை அவ் வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று
அவனை வணங்குகின்றோம்
உயிரைச் சரணடைகின்றோம்

#13
அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா ஆம்
இரைகின்ற கடல்நீர் உயிரால் அசைகின்றதா ஆம்
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது
அதன் சலனம் எதனால் நிகழ்வது உயிருடைமையால்
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில்
ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது உயிர் நேரிட்டிருக்கிறது
வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது
வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது
காற்றாடி உயிருள்ளது
நீராவிவண்டி உயிருள்ளது பெரிய உயிர் யந்திரங்கள் எல்லாம் உயிருடையன
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது
அவள் தீராத உயிருடையவள் பூமித்தாய்
எனவே அவள் திருமேனியில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்கொண்டதேயாம்
அகில முழுதும் சுழலுகிறது
சந்திரன் சுழல்கின்றது ஞாயிறு சுழல்கின்றது
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும்
அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும்
வானத்து மீன்கள் எல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன
எனவே இவ் வையகம் உயிருடையது
வையகத்தின் உயிரையே காற்று என்கிறோம்
அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம்

#14
காற்றைப் புகழ நம்மால் முடியாது
அவன் புகழ் தீராது
அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம என்று போற்றுகிறார்கள்
ப்ராணவாயுவைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காத்திடுக
அபாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க
வ்யாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க
உதாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க
ஸமாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க
காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம்
உயிரை வணங்குகின்றோம்
உயிர் வாழ்க

#15
உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்
நீ கண்கண்ட தெய்வம்
எல்லா விதிகளும் நின்னால் அமைவன
எல்லா விதிகளும் நின்னால் அழிவன
உயிரே
நீ காற்று நீ தீ நீ நிலம் நீ நீர் நீ வானம்
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில்
பறக்கின்ற பூச்சி கொல்லுகின்ற புலி ஊர்கின்ற புழு
இந்தப் பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள
எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள்
இவை எல்லாம் நினது விளக்கம்
மண்ணிலும் நீரிலும் காற்றிலும் நிரம்பிக்கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம்
காற்றிலே ஒரு சதுரஅடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது
கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன
ஒரு பெரிய ஜந்து அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள் அவற்றுள்
அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்
அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களைப்
பொதிந்துவைத்திருக்கிறது
மஹத் அதனிலும் பெரிய மஹத் அதனிலும் பெரிது அதனிலும் பெரிது
அணு அதனிலும் சிறிய அணு அதனிலும் சிறிது அதனிலும் சிறிது
இரு வழியிலும் முடிவில்லை இருபுறத்திலும் அநந்தம்
புலவர்களே காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம்
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி

@5 கடல்

#1
கடலே காற்றைப் பரப்புகின்றது
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்தச்
சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து
திசைவெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை
பராசக்தியின் ஆணை
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள்
அவள் திருநாமம் வாழ்க
கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு
கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா
அதுபற்றியே கடலும் கவிழவில்லை
பராசக்தியின் ஆணை
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது
மலை நமது தலை மேலே புரளவில்லை
கடல் நமது தலை மேலே கவிழவில்லை
ஊர்கள் கலைந்துபோகவில்லை
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது
இஃது எல்லாம் அவளுடைய திருவருள்
அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்

#2
வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக்
காற்று ஓடிவருகிறது
அங்ஙனம் ஓடிவரும் போது காற்று மேகங்களையும் ஓட்டிக்கொண்டு வருகிறது
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடல் பாரிசங்களிலிருந்தே வருகின்றது
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்மழை கொண்டுவா
உனக்குத் தூப தீபங்கள் ஏற்றிவைக்கிறோம்
வருணா இந்திரா நீவிர் வாழ்க
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரியவேண்டும்
எங்களுடைய புலங்கள் எல்லாம் காய்ந்துபோய்விட்டன
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது
அதனை மாற்றி அருள வேண்டும்
பகல் நேரங்களிலே அனல் பொறுக்கமுடியவில்லை
மனம் ஹா ஹா என்று பறக்கிறது
பறவைகள் எல்லாம் வாட்டம் எய்தி நிழலுக்காகப் பொந்துகளில் மறைந்து
கிடக்கின்றன
பல தினங்களாக மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய் ஓர் இலைகூட அசையாமல் புழுக்கம்
கொடிதாக இருக்கிறது
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்துத்
துரத்திக்கொண்டு போகின்றன
இப்படிப் பல நாட்களாக ஏமாந்துபோகிறோம்
இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையைப் பாடுகிறேன்
எங்கள் தாபம் எல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு இன்ப மழை பெய்தல் வேண்டும்

@6 ஜகத் சித்திரம்
** (சிறு நாடகம்)
** முதல் காட்சி
** இடம் மலையடி வாரத்தில் ஒரு காளி கோயில்
** நேரம் நடுப்பகல்
** காக்கை யரசன் (கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையிலிருந்த
** தெப்பமண்டபத்தின் உச்சியில் ஏறி
** உட்கார்ந்துகொண்டு சூர்யனை நோக்கிச் சொல்லுகிறான்)

#1
எங்கோ வாழ்
நீல மலைகள் நிரம்ப அழகியன
வானம் அழகியது வான்வெளி இனிது
வானவெளியை மருவிய நின் ஒளி
இனியவற்றுள் எல்லாம் இனிது
எங்கே எங்கோ எனவும் அன்றி
கிலுகிலு கிலுகிலு எனவும் கிக்கீ
கிக்கீ என்றும் கேக்க கேக்க
கேட்க கேட்க எனவும் கெக்கெக்கே
குக்குக் குக்குக் குக்குக் குக்குக்
குக்கூவே என்றும் கீச் கீச் கீச் கீச்
கிசு கிசு கிசு கீச் என்றும் ரங்க ரங்க
என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும்
குயில்களும் கிளிகளும் குலவு பல ஜாதிப்
புட்களும் இனிய பூங்குரல் உடையன
எனினும்
இத்தனை இன்பத்தினிடையே உயிர்க்குலத்தின்
உளத்தே மாத்திரம் இன்பம் உறவில்லை
இஃது என்னே காக்கா காக்கா எங்கோ வாழ்
இதைக் கேட்டு மற்றப் பக்ஷிகள் எல்லாம் கத்துகின்றன
ஆம் ஆம் ஆமாம் ஆமாம் ஆமாமடா ஆமாமடா ஆமாம் எங்கோ வாழ்
எங்கோ வாழ் நன்றாக உரைத்தாய்
மனம்தான் சத்துரு வேறு நமக்குப் பகையே கிடையாது
மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை
வேரறுக்கிறது அடுத்துக்கெடுக்கிறது
மனந்தான் பகை
அதைக் கொத்துவோம் வாருங்கள் அதைக் கிழிப்போம் வாருங்கள் அதை
வேட்டையாடுவோம் வாருங்கள்
** இரண்டாம் காட்சி
** வானுலகம் இந்திர சபை
** தேவேந்திரன் கொலுவீற்றிருக்கிறான்
** தேவ சேவகன்

#2
தேவ தேவா
** இந்திரன்
சொல்
** தேவ சேவகன்
வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார் தங்களைத் தரிசிக்கவேண்டும்
என்று சொல்லுகிறார்
** இந்திரன்
வருக
** (நாரதர் பாடிக்கொண்டு வருகிறார்)
நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
** இந்திரன்
நாரதரே நாராயணன் எங்கு இருக்கிறான்
** நாரதர்
நீ அவனைப் பார்த்தது கிடையாதோ
** இந்திரன்
கிடையாது
** நாரதர்
ஸர்வ பூதங்களிலும் இருக்கிறான்
** இந்திரன்
நரகத்தில் இருக்கிறானா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
துன்பத்தில் இருக்கிறானா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
மரணத்தில் இருக்கிறானா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந்தத்தின் துணிவு யாது
** நாரதர்
எல்லா வஸ்துக்களும் எல்லா லோகங்களும் எல்லா நிலைமைகளும் எல்லாத்
தன்மைகளும்
எல்லா சக்திகளும் எல்லா ரூபங்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று ஸமானம்
** இந்திரன்
நீரும் கழுதையும் ஸமானம்தானா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
அமிருதபானமும் விஷபானமும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
சாதுவும் துஷ்டனும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
அசுரர்களும் தேவர்களும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
ஞானமும் அஞ்ஞானமும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
ஸுகமும் துக்கமும் ஸமானமா
** நாரதர்
ஆம்
** இந்திரன்
அது எப்படி
** நாரதர்
ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்
** (பாடுகிறார்)
நாராயண நாராயண நாராயண நாராயண
** மூன்றாம் காட்சி
** இடம் மண்ணுலகத்தில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு காளி கோயிலுக்கெதிரே
சோலையில்
** கிளி பாடுகிறது

#3
தைர்யா தைர்யா தைர்யா
தன்மனப் பகையைக் கொன்று
தாமே குணத்தை வென்று
உள்ளக் கவலை அறுத்து
ஊக்கம் தோளில் பொறுத்து
மனதில் மகிழ்ச்சி கொண்டு
மயக்கம் எல்லாம் விண்டு
ஸந்தோஷத்தைப் பூண்டு
தைர்யா ஹுக்கும் ஹுக்கும்
ஹுக்கும் ஹுக்கும்
ஆமடா தோழா
ஆமாமடா
எங்கோவா எங்கோவா வா
தைர்யா தைர்யா தைர்யா
** குயில்கள்
சபாஷ் சபாஷ் சபாஷ்
** குருவிகள்
டிர்ர்ர்ர்ர்ர்ர்ர் டிர்ர்ர்ர்
** நாகணவாய்
ஜீவ ஜீவ ஜீவ ஜீவ ஜீவ ஜீவ
** குருவிகள்
சிவ சிவ சிவ சிவ சிவ சிவா சிவ சிவா
** காக்கை
எங்கோ வாழ் எங்கோ வாழ்
** கிளி
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம்
வேறு இல்லை
தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதைக் காட்டிலும் பெரிய பேதைமை
வேறு இல்லை
** காக்கை
அக்கா அக்கா காவு காவு
** குருவி
கொட்டடா கொட்டடா கொட்டடா
** கிளி
ஹுக்குக்கூ
** கிளி
காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறு இல்லை
** அணிற் பிள்ளை
ஹுக்கும் ஹுக்கும் ஹுக்கும் ஹுக்கும்
** பசுமாடு
வெயிலைப் போல் அழகான பதார்த்தம் வேறு இல்லை
** அணில்
பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்குப் புலப்படும்
வஸ்துக்களுக்குள்ளே
உன் கண்ணைப் போல் அழகிய பொருள் பிறிதொன்று இல்லை
** நாகணவாய்
டுபுக் பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறு இல்லை
** எருமை மாடு
பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும்
இனிய குரலும்
மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன்
காரணம் யாது
** நாகணவாய்
டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக்
காட்டிலும் எங்களுக்கு அதிகம்
எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதைச் சிறிது சிறிதாக
நெடுநேரம் தின்கிறோம்
ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள்
இருப்பதைக் காட்டிலும்
எங்களுக்குள்ளே காதல் இன்பம் அதிகம் ஆதலால் நாங்கள் அதிக
ஸந்தோஷமும் பாட்டும் நகைப்பும்
கொஞ்சு மொழிகளுமாகக் காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு
சொல்லியது போல்
காலனுக்குத் தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும்
அழித்துவிடத்தான் செய்கிறது
அதற்கு நிவாரணம் தேடவேண்டும் கவலையைக் கொல்வோம் வாருங்கள்
அதிருப்தியைக் கொத்துவோம் கொல்லுவோம்
** மற்றப் பக்ஷிகள்
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் துயரத்தை அழிப்போம்
கவலையைப் பழிப்போம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம்
** நான்காம் காட்சி
** இடம் கடற்கரை
** நேரம் நள்ளிரவு முழுநிலாப் பொழுது
** இரண்டு பாம்புகள் ஒரு பாலத்தடியே இருட் புதரினின்றும்
** வெளிப்பட்டு நிலா வீசி ஒளிதரும் மணல்மீது வருகின்றன
** ஆண் பாம்பு

#4
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை
உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது
உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவைப் போலே
துடித்துக்கொண்டிருக்கிறது
** பெண் பாம்பு
உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கு இன்பம் இல்லை
உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது
உன்னால் என் மனம் தழலில் பட்ட புழுவைப் போல் இடையறாது துடிக்கிறது
** ஆண் பாம்பு
நான் உன்னைப் பகைக்கிறேன்
** பெண் பாம்பு
நான் உன்னை விரோதிக்கிறேன்
** ஆண் பாம்பு
நான் உன்னைக் கொல்லப்போகிறேன்
** பெண் பாம்பு
நான் உன்னைக் கொல்லப்போகிறேன்
** ஒன்றையொன்று கடித்து இரண்டு பாம்புகளும் மடிகின்றன
** ஐந்தாம் காட்சி
** கடற்கரை
** தேவதத்தன் என்ற மனித இளைஞன்

#5
நிலா இனியது நீல வான் இனியது தெண் திரைக் கடலின் சீர் ஒலி இனிய
உலகம் நல்லது கடவுள் ஒளிப்பொருள் அறிவு கடவுள் அதன் நிலை மோக்ஷம்
விடுதலைப்பட்டேன் அசுரரை வென்றேன்
நானே கடவுள் கடவுளே நான்
காதல் இன்பத்தால் கடவுள்நிலை பெற்றேன்

@7 விடுதலை
** (நாடகம்)
** அங்கம் 1
** காட்சி 1
** இடம் வானுலகம்
** காலம் கலி முடிவு
** பாத்திரங்கள் இந்திரன் வாயு அக்நி ஒளி (சூரியன்) ஸோமன் இரட்டையர்
(அசுவிதி தேவர்) மருத்துக்கள்
** வசுக்கள் த்வஷ்டா விசு வே தேவர் முதலாயினோர்
** இந்திரன்

#0
உமக்கு நன்று தோழரே
** மற்றவர்
தோழா உனக்கு நன்று
** இந்திரன்
பிரம்மதேவன் நமக்கு ஓர் பணியிட்டான்
** மற்றோர்
யாங்ஙனம்
** இந்திரன்
மண்ணுலகத்து மானுடன்தன்னைக்
கட்டிய தளை எல்லாம் சிதறுக என்று
** அக்கி
வாழ்க தந்தை மானுடர் வாழ்க
** மற்றோர்
தந்தை வாழ்க தனிமுதல் வாழ்க
உண்மை வாழ்க உலகம் ஓங்குக
தீது கெடுக திறமை வளர்க
** ஒளி
உண்மையும் அறிவும் இன்பமும் ஆகி
பல எனத் தோன்றிப் பல வினை செய்து
பல பயன் உண்ணும் பரம நற்பொருளை
உயிர்க்கு எலாம் தந்தையை உயிர்க்கு எலாம் தாயை
உயிர்க்கு எலாம் தலைவனை உயிர்க்கு எலாம் துணைவனை
உயிர்க்கு எலாம் உயிரை உயிர்க்கு எலாம் உணர்வை
அறிவிலே கண்டு போற்றி
நெறியினில் அவன் பணி நேர்படச் செய்வோம்
** இந்திரன்
நன்று தோழரே அமிழ்தம் உண்போம்
** மற்றோர்
அமிழ்தம் நன்றே ஆம் அஃது உண்போம்
** (எல்லாரும் அமிர்த பானம் செய்கிறார்கள்)
** இந்திரன்
நித்தமும் வலிது
** வாயு
நித்தமும் புதிது
** அக்கி
தீரா விரைவு
** இரட்டையர்
மாறா இன்பம்
** மருத்துக்கள்
என்றும் இளமை
** ஒளி
என்றும் தெளிவு
** அக்கி
மண்ணுலகத்து மானுடர் வடிக்கும்
ஸோமப் பாலும் இவ் அமிழ்தமும் ஓர் சுவை
** இந்திரன்
மண்ணுலகத்து மக்களே நீவிர்
இன்பம் கேட்டீர் எண்ணிய மறப்பீர்
செயல் பல செய்வீர் செய்கையில் இளைப்பீர்
எண்ணளவதனால் ஏழுலகினையும்
விழுங்குதல் வேண்டுவீர் மீளவும் மறப்பீர் 5
தோழர் என்று எம்மை நித்தமும் சார்ந்தீர்
ஸோமப் பாலொடு சொல்லமுது ஊட்டுவீர்
நும்மையே அவுணர் நோவுறச் செய்தார்
ஆஅஅ மறவுக் குறும்பா அரக்கா
விருத்திரா ஒளியினை மறைத்திடும் வேடா 10
நமுசிப் புழுவே வலனே நலிசெயும்
துன்பமே அச்சமே இருளே தொழும்பர்காள்
பெயர் பல காட்டும் ஒரு கொடும் பேயே
உருப் பல காட்டும் ஒரு புலைப் பாம்பே
படை பல கொணர்ந்து மயக்கிடும் பாழே 15
ஏடா வீழ்ந்தனை யாவரும் வீழ்ந்தீர்
அரக்கரே மனித அறிவு எனும் கோயிலை
விட்டு நீர் ஒழிந்தால் மேவிடும் பொன்னுலகம்
முந்தை நாள் தொடங்கி மானுடர்தமக்குச்
சீர் தர நினைந்து நாம் செய்ததை எல்லாம் 20
மேகக் கரும் புலை விருத்திரன் கொடுத்தான்
வலியிலார் தேவர் வலியவர் அரக்கர்
அறமே நொய்யது மறமே வலியது
மெய்யே செத்தை பொய்யே குன்றம்
இன்பமே சோர்வது துன்பமே வெல்வது 25
என்று ஓர் வார்த்தையும் பிறந்தது மண் மேல்
மானுடர் திகைத்தார் மந்திரத் தோழராம்
விசுவாமித்திரன் வசிட்டன் காசிபன்
முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது
பொய்ந்நூல் பெருகின பூமியின்கண்ணே 30
வேதம் கெட்டு வெறுங்கதை மலிந்தது
போதச் சுடரை புகை இருள் சூழ்ந்தது
தவம் எலாம் குறைந்து சதி பல வளர்ந்தன
எல்லாப் பொழுதினும் ஏழை மானுடர்
இன்பம் கருதி இளைத்தனர் மடிந்தார் 35
கங்கை நீர் விரும்பிக் கனல் நீர் கண்டார்
அமுதம் வேண்டி விடத்தினை உண்டார்
ஏஎ
வலியரே போலும் இவ் வஞ்சக அரக்கர்
***
விதியின் பணிதான் விரைக 40
மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக
** ஒளி
ஒருவனைக் கொண்டு சிறுமை நீக்கி
நித்திய வாழ்விலே நிலைபெறச் செய்தால்
மானுடச் சாதி முழுதும் நல்வழிப் படும்
மானுடச் சாதி ஒன்று மனத்திலும் 45
உயிரிலும் தொழிலிலும் ஒன்றேயாகும்
** தீ
பரதகண்டத்தில் பாண்டியநாட்டிலே
விரதம் தவறிய வேதியர் குலத்தில்
வசுபதி என்று ஓர் இளைஞன் வாழ்கின்றான்
தோலிலே மெலிந்தான் துயரிலே அமிழ்ந்தான் 50
நாளும் வறுமை நாயொடு பொருவான்
செய் வினை அறியான் தெய்வமும் துணியான்
ஐய வலையில் அகப்படலாயினன்
இவனைக் காண்போம் இவன் புவி காப்பான்
** காற்று
உயிர் வளம் கொடுத்தேன் உயிரால் வெல்க
** இந்திரன்
மதி வலி கொடுத்தேன் வசுபதி வாழ்க
** சூரியன்
அறிவிலே ஒளியை அமைத்தேன் வாழ்க
** தேவர்
மந்திரம் கூறுவோம் உண்மையே தெய்வம்
கவலையற்று இருத்தலே வீடு களியே
அமிழ்தம் பயன் வரும் செய்கையே அறமாம்
அச்சமே நரகம் அதனைச் சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க
மகனே வசுபதி மயக்கம் தெளிந்து
தவத் தொழில்செய்து தரணியைக் காப்பாய்
** காட்சி 2
** பாணிநாட்டில் வேதபுரம் கடற்கரை
** வசுபதி தனியே நிலவைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்
** வசுபதி பாடுகிறான்
** நிலவுப் பாட்டு

#1
வாராய் நிலவே வையத் திருவே
வெள்ளைத் தீவில் விளையும் கடலே
வானப் பெண்ணின் மதமே ஒளியே
வாராய் நிலவே வா

#2
மண்ணுக்குள்ளே அமுதைக் கூட்டிக்
கண்ணுக்குள்ளே களியைக்காட்டி
எண்ணுக்குள்ளே இன்பத் தெளிவாய்
வாராய் நிலவே வா

#3
இன்பம் வேண்டில் வானைக் காண்பீர்
வான் ஒளிதன்னை மண்ணில் காண்பீர்
தும்பம்தான் ஓர் பேதைமை அன்றோ
வாராய் நிலவே வா

#4
அச்சப் பேயைக் கொல்லும் படையாம்
விதைத் தேனில் விளையும் களியாய்
வாராய் நிலவே வா
*