பாரதியார் கவிதைகள் – குயில் பாட்டு

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

@1. குயில்

#1
காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே
நீலக் கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல்
மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடி
வந்து தவழும் வளம் சார் கரை உடைய 5
செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின்
மேற்கே சிறு தொலையில் மேவும் ஒரு மாஞ்சோலை
நால் கோணத்து உள்ள பல நத்தத்து வேடர்களும்
வந்து பறவை சுட வாய்ந்த பெரும் சோலை
அந்த மாஞ்சோலையதனில் ஓர் காலையிலே 10
வேடர் வாராத விருந்துத் திருநாளில்
பேடைக் குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில்
வீற்றிருந்தே ஆண் குயில்கள் மேனி புளகம் உற
ஆற்றல் அழிவு பெற உள்ளத்து அனல் பெருக
சோலைப் பறவை எலாம் சூழ்ந்து பரவசமாய்க் 15
காலைக்கடனில் கருத்து இன்றிக் கேட்டு இருக்க
இன் அமுதைக் காற்றினிடை எங்கும் கலந்தது போல்
மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்
வந்து பரவுதல் போல் வானத்து மோகினியாள்
இந்த உரு எய்தித் தன் ஏற்றம் விளக்குதல் போல் 20
இன் இசைத் தீம் பாடல் இசைத்து இருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதை வெறி மூண்டே நனவு அழியப்
பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான்
கன்னிக் குயில் அன்று கா இடத்தே பாடியது ஓர் 25
இன் இசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்
மனித உரு நீங்கிக் குயில் உருவம் வாராதோ
இனிது இக் குயில் பேட்டை என்றும் பிரியாமல்
காதலித்துக் கூடி களியுடனே வாழோமோ
நாதக் கனலினிலே நம் உயிரைப் போக்கோமோ 30
என்று பல எண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்
அன்று நான் கேட்டது அமரர்தாம் கேட்பாரோ
குக்குக்கூ என்று குயில் பாடும் பாட்டினிலே
தொக்க பொருள் எல்லாம் தோன்றியது என் சிந்தைக்கே
அந்தப் பொருளை அவனிக்கு உரைத்திடுவேன் 35
விந்தைக் குரலுக்கு மேதினியீர் என் செய்கேன்

@2. குயிலின் பாட்டு
** ராகம் – சங்கராபரணம் – தாளம் – ஏகதாளம்
** ஸ்வரம்- “ஸகா-ரிமா-காரீ – பாபாபாபா-மாமாமாமா
** ரீகா-ரிகமா-மாமா”
** சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.

#0
காதல் காதல் காதல்
காதல் போயில் காதல் போயில்
சாதல் சாதல் சாதல்

#1
அருளேயா நல் ஒளியே
ஒளி போமாயின் ஒளி போமாயின்
இருளே இருளே இருளே

#2.
இன்பம் இன்பம் இன்பம்
இன்பத்திற்கு ஓர் எல்லை காணில்
துன்பம் துன்பம் துன்பம்

#3.
நாதம் நாதம் நாதம்
நாதத்தே ஓர் நலிவு உண்டாயின்
சேதம் சேதம் சேதம்

#4
தாளம் தாளம் தாளம்
தாளத்திற்கு ஓர் தடை உண்டாயின்
கூளம் கூளம் கூளம்

#5.
பண்ணே பண்ணே பண்ணே
பண்ணிற்கே ஓர் பழுது உண்டாயின்
மண்ணே மண்ணே மண்ணே

#6.
புகழே புகழே புகழே
புகழுக்கே ஓர் புரை உண்டாயின்
இகழே இகழே இகழே

#7.
உறுதி உறுதி உறுதி
உறுதிக்கே ஓர் உடைவு உண்டாயின்
இறுதி இறுதி இறுதி

#8.
கூடல் கூடல் கூடல்
கூடிப் பின்னே குமரன் போயின்
வாடல் வாடல் வாடல்

#9
குழலே குழலே குழலே
குழலில் கீறல் கூடுங்காலை
விழலே விழலே விழலே

@3. குயிலின் காதற் கதை

#1
மோகனப் பாட்டு முடிவு பெறப் பார் எங்கும்
ஏக மவுனம் இயன்றது காண் மற்று அதில் ஓர்
இன்ப வெறியும் துயரும் இணைந்தனவால்
பின்பு நான் பார்க்கப் பெடைக் குயில் அஃது ஒன்று அல்லால்
மற்று அப் பறவை மறைந்து எங்கோ போகவும் இவ் 5
ஒற்றைக் குயில் சோகமுற்றுத் தலைகுனிந்து
வாடுவது கண்டேன் மரத்து அருகே போய் நின்று
பேடே திரவியமே பேரின்பப் பாட்டுடையாய்
ஏழு உலகம் இன்பத் தீ ஏற்றும் திறன் உடையாய்
பீழை உனக்கு எய்தியது என் பேசாய் எனக் கேட்டேன் 10
மாயக் குயில் அதுதான் மானுடவர் பேச்சினில் ஓர்
மாயச் சொல் கூற மனம் தீயுற நின்றேன்
காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லை எனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன் என்றதுவால்
வானத்துப் புள் எல்லாம் மையலுறப் பாடுகிறாய் 15
ஞானத்தில் புட்களிலும் நன்கு சிறந்து உள்ளாய்
காதலர் நீ எய்துகிலாக் காரணந்தான் யாது என்றேன்
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயில் இக் கதை சொல்லலாயிற்று
மானக் குலைவும் வருத்தமும் நான் பார்க்காமல் 20
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேல்குலத்தீர்
பெண்மைக்கு இரங்கி பிழை பொறுத்தல் கேட்கின்றேன்
அறிவும் வடிவும் குறுகி அவனியிலே
சிறியது ஒரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ 25
யாவர் மொழியும் எளிது உணரும் பேறு பெற்றேன்
மானுடவர் நெஞ்ச வழக்கு எல்லாம் தேர்ந்திட்டேன்
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீர் ஓசை அருவி ஒலியினிலும் 30
நீலப் பெரும் கடல் எந்நேரமுமே தான் இசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்
மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்
ஊன் உருகப் பாடுவதில் ஊறிடும் தேன் வாரியிலும்
ஏற்ற நீர்ப் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும் 35
கோல் தொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக் கரங்கள் தாம் ஒலிக்க
கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டு அமுதப் பாட்டினிலும் 40
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்று ஒலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளை 45
பாவி மனம் தான் இறுகப் பற்றி நிற்பது என்னேயோ
நெஞ்சத்தே தைக்க நெடு நோக்கு நோக்கிடுவீர்
மஞ்சரே என்றன் மன நிகழ்ச்சி காணீரோ
காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லை எனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன் என்றதுவே 50
சின்னக் குயில் இதனைச் செப்பிய அப் போழ்தினிலே
என்னைப் புதியது ஓர் இன்பச் சுரம் கவர
உள்ளத்திடையும் உயிரிடையும் ஆங்கு அந்தப்
பிள்ளைக் குயிலினது ஓர் பேச்சு அன்றி வேறு அற்றேன்
காதலோ காதல் இனிக் காதல் கிடைத்திலதேல் 55
சாதலோ சாதல் என சாற்றும் ஒரு பல்லவி என்
உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடு அத்தனையும்
விள்ள ஒலிப்பதலால் வேறு ஓர் ஒலி இல்லை
சித்தம் மயங்கித் திகைப்பொடு நான் நின்றிடவும்
அத் தருணத்தே பறவை அத்தனையும் தாம் திரும்பிச் 60
சோலைக் கிளையில் எலாம் தோன்றி ஒலித்தனவால்
நீலக் குயிலும் நெடிது உயிர்த்து ஆங்கு இஃது உரைக்கும்
காதல் வழிதான் கரடுமுரடாம் என்பர்
சோதித் திருவிழியீர் துன்பக் கடலினிலே
நல் உறுதி கொண்டது ஓர் நாவாய் போல் வந்திட்டீர் 65
அல்லல் அற நும்மோடு அளவளாய் நான் பெறும் இவ்
இன்பத்தினுக்கும் இடையூறு மூண்டதுவே
அன்பொடு நீர் இங்கே அடுத்த நான்காம் நாளில்
வந்து அருளல் வேண்டும் மறவாதீர் மேல்குலத்தீர்
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல் 70
ஆவி தரியேன் அறிந்திடுவீர் நான்காம் நாள்
பாவி இந்த நான்கு நாள் பத்து யுகமாக் கழிப்பேன்
சென்று வருவீர் என் சிந்தை கொடுபோகின்றீர்
சென்று வருவீர் எனத் தேறாப் பெரும் துயரம்
கொண்டு சிறு குயிலும் கூறி மறைந்தது காண் 75

@4. காதலோ காதல்

#1
கண்டதொரு காட்சி கனவு நனவு என்று அறியேன்
எண்ணுதலும் செய்யேன் இருபது பேய் கொண்டவன் போல்
கண்ணும் முகமும் களி ஏறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க
கொம்புக் குயில் உருவம் கோடி பல கோடியாய் 5
ஒன்றே அதுவாய் உலகம் எலாம் தோற்றமுற
சென்றே மனை போந்து சித்தம் தனது இன்றி
நாள் ஒன்று போவதற்கு நான் பட்ட பாடு அனைத்தும்
தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார்
நாள் ஒன்று போயினது நானும் எனது உயிரும் 10
நீளச் சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்
மாயக் குயிலும் அதன் மா மாயத் தீம் பாட்டும்
சாயை போல் இந்திர மா சாலம் போல் வையமுமா
மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்
வஞ்சனை நான் கூறவில்லை மான்மதனார் விந்தையால் 15
புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல்
வித்தை செயும் சூத்திரத்தின் மேவும் ஒரு பொம்மை என
கால் இரண்டும் கொண்டு கடுகவும் நான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன் நீண்ட வழியினிலே
நின்ற பொருள் கண்ட நினைவு இல்லை சோலையிடைச் 20
சென்று நான் பார்க்கையிலே செஞ்ஞாயிற்று ஒண் கதிரால்
பச்சை மரம் எல்லாம் பளபள என என் உளத்தின்
இச்சை உணர்ந்தன போல் ஈண்டும் பறவை எலாம்
வேறு எங்கோ போயிருப்ப வெம்மைக் கொடும் காதல்
மீற எனைத் தான் புரிந்த விந்தைச் சிறு குயிலைக் 25
காண நான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணம் எலாம் சுற்றி மரக் கொம்பை எலாம் நோக்கி வந்தேன்

@5. குயிலும் குரங்கும்

#1
மற்றை நாள் கண்ட மரத்தே குயில் இல்லை
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே
வஞ்சனையே பெண்மையே மன்மதனாம் பொய்த்தேவே
நெஞ்சகமே தொல் விதியின் நீதியே பாழ் உலகே
கண்ணாலே நான் கண்ட காட்சிதனை என் உரைப்பேன் 5
பெண்ணால் அறிவு இழக்கும் பித்தர் எலாம் கேண்-மினோ
காதலினைப் போற்றும் கவிஞர் எலாம் கேண்-மினோ
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ
மாயக் குயில் ஓர் மரக் கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழி நீர் பதைக்கும் சிறிய உடல் 10
விம்மிப் பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய்
அம்மவோ மற்று ஆங்கு ஓர் ஆண் குரங்குதன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலை கண்டேன்
தீது ஏது நன்று ஏது செய்கை தெளிவு ஏது
அந்தக் கணமே அதையும் குரங்கினையும் 15
சிந்தக் கருதி உடைவாளில் கைசேர்த்தேன்
கொன்றுவிடும் முன்னே குயில் உரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கு என் நெஞ்சம் விரும்பிடவும்
அங்கு அவற்றின் கண்ணில் அகப்படாவாறு அருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே 20
பேடைக் குயில் இதனைப் பேசியது வானரரே
ஈடு அறியா மேன்மை அழகு ஏய்ந்தவரே பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும் ஏந்தலே நின் அழகைத்
தப்புமோ மையல் தடுக்கும் தரம் ஆமோ
மண்ணில் உயிர்க்கு எல்லாம் தலைவர் என மானிடரே 25
எண்ணிநின்றார் தம்மை எனில் ஒருகால் ஊர் வகுத்தல்
கோயில் அரசு குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே அந்த மனிதர் உயர்வு எனலாம்
மேனி அழகினிலும் விண்டு உரைக்கும் வார்த்தையிலும்
கூனி இருக்கும் கொலு நேர்த்திதன்னிலுமே 30
வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்
பட்டு மயிர் மூடப்படாத தமது உடலை
எட்டு உடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும்
மீசையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் 35
ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகில் உமை நேர்வற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும் கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்
வேறு எத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே 40
வானரர் போல் ஆவரோ வாலுக்குப் போவது எங்கே
ஈனமுறும் கச்சை இதற்கு நிகராமோ
பாகையிலே வால் இருக்கப் பார்த்தது உண்டு கந்தை போல்
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வம் கொடுத்த திருவாலைப் போல் ஆமோ 45
சைவ சுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்
வானரர் போல் சாதி ஒன்று மண்ணுலகின் மீது உளதோ
வானரர்தம்முள்ளே மணி போல் உமை அடைந்தேன்
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்
நிச்சயமா முன் புரிந்த நேமத் தவங்களினால் 50
தேவரீர் காதல் பெறும் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே
ஆவலினால் பாடுகின்றேன் ஆரியரே கேட்டு அருள்வீர்
வானரப் பேச்சினிலே மைக் குயில் பேசியதை
யான் அறிந்துகொண்டுவிட்டேன் யாதோ ஒரு திறத்தால்
நீசக் குயிலும் நெருப்புச் சுவைக் குரலில் 55
ஆசை ததும்பி அமுது ஊறப் பாடியதே
காட்டில் விலங்கு அறியும் கைக்குழந்தைதான் அறியும்
பாட்டின் சுவையதனைப் பாம்பு அறியும் என்று உரைப்பார்
வற்றல் குரங்கு மதி மயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறி போல் முழு வெறி கொண்டு ஆங்கனே 60
தாவிக் குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும்
ஆவி உருகுதடீ ஆகாகா என்பதுவும்
கண்ணைச் சிமிட்டுவதும் காலாலும் கையாலும்
மண்ணைப் பிறாண்டி எங்கும் வாரி இறைப்பதுவும்
ஆசைக் குயிலே அரும் பொருளே தெய்வதமே 65
பேச முடியாப் பெரும் காதல் கொண்டு விட்டேன்
காதல் இல்லையானால் கணத்திலே சாதல் என்றாய்
காதலினால் சாகும் கதியினிலே என்னை வைத்தாய்
எப்பொழுதும் நின்னை இனிப் பிரிவது ஆற்றகிலேன்
இப்பொழுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன் 70
என்று பல பேசுவதும் என் உயிரைப் புண் செயவே
கொன்றுவிட எண்ணிக் குரங்கின் மேல் வீசினேன்
கைவாளை ஆங்கே கனவோ நனவு-கொலோ
தெய்வ வலியோ சிறு குரங்கு என் வாளுக்குத்
தப்பி முகஞ்சுளித்துத் தாவி ஒளித்திடவும் 75
ஒப்பிலா மாயத்தொரு குயிலும் தான் மறைய
சோலைப் பறவை தொகைதொகையாத் தாம் ஒலிக்க
மேலைச் செயல் அறியா வெள் அறிவில் பேதையேன்
தட்டுத்தடுமாறி சார்பு அனைத்தும் தேடியுமே
குட்டிப்பிசாசு அக் குயிலை எங்கும் காணவில்லை 80

@6. இருளும் ஒளியும்

#1
வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோன ஒளி சூழ்ந்திடவும் மொய்ம்பில் கொலுவிருந்தான்
மெய் எல்லாம் சோர்வு விழியில் மயக்கமுற
உய்யும் வழி உணராது உள்ளம் பதைபதைக்க
நாணும் துயரும் நலிவுறுத்த நான் மீண்டு 5
பேணும் மனை வந்தேன் பிரக்கினை போய் வீழ்ந்துவிட்டேன்
மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்
நாலு புறமும் எனை நண்பர் வந்து சூழ்ந்து நின்றார்
ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய்
வானம் வெளிறும் முன்னே வைகறையிலே தனித்துச் 10
சென்றனை என்கின்றார் அச் செய்தி என்னே ஊண் இன்றி
நின்றது என்னே என்று நெரித்துவிட்டார் கேள்விகளை
இன்னார்க்கு இது சொல்வது என்று தெரியாமல்
என்னால் பல உரைத்தல் இப்பொழுது கூடாதாம்
நாளை வருவீரேல் நடந்தது எலாம் சொல்வேன் இவ் 15
வேளை எனைத் தனியே விட்டு அகல்வீர் என்று உரைத்தேன்
நண்பர் எலாம் சென்றுவிட்டார் நைந்து நின்ற தாயார்தாம்
உண்பதற்குப் பண்டம் உதவி நல்ல பால் கொணர்ந்தார்
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்
முற்றும் மறந்து முழுத் துயிலில் ஆழ்ந்துவிட்டேன் 20
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்
மண்டு துயர் எனது மார்பை எலாம் கவ்வுவதே
ஓடித் தவறி உடைவனவாம் சொற்கள் எல்லாம்
கூடி மதியில் குவிந்திடுமாம் செய்தி எலாம்
நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் 25
பேசும் இடைப்பொருளின் பின்னே மதி போக்கிக்
கற்பனையும் வர்ணனையும் காட்டிக் கதை வளர்க்கும்
விற்பனர்தம் செய்கை விதமும் தெரிகிலன் யான்
மேலைக் கதை உரைக்க வெள்கிக் குலையும் மனம்
காலைக் கதிர் அழகின் கற்பனைகள் பாடுகின்றேன் 30
தங்கம் உருக்கித் தழல் குரைத்துத் தேன் ஆக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ வான் வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமை ஒன்று காண்பாரோ
கண்ணை இனிது என்று உரைப்பார் கண்ணுக்குக் கண் ஆகி 35
விண்ணை அளக்கும் ஒளி மேம்படும் ஓர் இன்பம் அன்றோ
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும்
மேலவரும் அஃது ஓர் விரியும் ஒளி என்பாரேல்
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி 40
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளி ஆக்கி விந்தை செயும் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன்
நாலு புறத்தும் உயிர் நாதங்கள் ஓங்கிடவும்
இன்பக் களியில் இயங்கும் புவி கண்டேன் 45
துன்பக் கதையின் தொடர் உரைப்பேன் கேளீரோ

@7. குயிலும் மாடும்

#1
காலைத் துயிலெழுந்து கால் இரண்டு முன் போலே
சோலைக்கு இழுத்திட நான் சொந்த உணர்வு இல்லாமே
சோலையினில் வந்து நின்று சுற்றுமுற்றும் தேடினேன்
கோலப் பறவைகளின் கூட்டம் எல்லாம் காணவில்லை
மூலையில் ஓர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே 5
நீலக் குயில் இருந்து நீண்ட கதை சொல்லுவதும்
கீழே இருந்து ஓர் கிழக் காளை மாடு அதனை
ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்
கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல்
கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய் வெயர்த்தேன் 10
கொல்ல வாள் வீசல் குறித்தேன் இப் பொய்ப் பறவை
சொல்லும் மொழி கேட்டு அதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி என
முன் போல் மறைந்து நின்றேன் மோகப் பழம் கதையைப்
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும்
கொண்டு குயில் ஆங்கே கூறுவதாம் நந்தியே 15
பெண்டிர் மனத்தைப் பிடித்து இழுக்கும் காந்தமே
காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடு போல் பொற்பு உடைய சாதி உண்டோ
மானிடரும் தம்முள் வலி மிகுந்த மைந்தர்தமை
மேனியுறும் காளை என்று மேம்பாடுறப் புகழ்வர் 20
காளையர்தம்முள்ளே கனம் மிகுந்தீர் ஆரியரே
நீள முகமும் நிமிர்ந்து இருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதி போல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சுப் புறச் சுமையும் வீரத் திருவாலும்
வானத்து இடி போல மா என்று உறுமுவதும் 25
ஈனப் பறவை முதுகின் மிசை ஏறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்து அடிக்கு நேர்மையும் பல்
காலம் நான் கண்டு கடு மோகம் எய்திவிட்டேன்
பார வடிவும் பயிலும் உடல் வலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத 30
சல்லித் துளிப் பறவைச் சாதியிலே நான் பிறந்தேன்
அல்லும்பகலும் நிதம் அற்ப வயிற்றினுக்கே
காடு எல்லாம் சுற்றி வந்து காற்றிலே எற்றுண்டு
மூட மனிதர் முடை வயிற்றுக்கு ஓர் உணவாம்
சின்னக் குயிலின் சிறு குலத்திலே தோன்றி 35
என்ன பயன் பெற்றேன் எனைப் போல் ஓர் பாவி உண்டோ
சேற்றிலே தாமரையும் சீழ் உடைய மீன் வயிற்றில்
போற்றும் ஒளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ
நீசப் பிறப்பு ஒருவர் நெஞ்சிலே தோன்றி வரும்
ஆசை தடுக்க வல்லது ஆகுமோ காமனுக்கே 40
சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ
வாதித்துப் பேச்சை வளர்த்து ஓர் பயனும் இல்லை
மூட மதியாலோ முன்னைத் தவத்தாலோ
ஆடவர்தம்முள்ளே அடியாள் உமைத் தெரிந்தேன்
மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் 45
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வம் என நீர் உதவி செய்த பின்னர் மேனி விடாய்
எய்தி இருக்கும் இடையினிலே பாவியேன்
வந்து உமது காதில் மதுர இசை பாடுவேன்
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன் 50
வாலில் அடிபட்டு மனம் மகிழ்வேன் மா என்றே
ஓலிடும் நும் பேர் ஒலியோடு ஒன்றுபடக் கத்துவேன்
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றிக் கழனி எலாம் மேய்ந்து நீர்
மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் 55
பக்கத்து இருந்து பல கதைகள் சொல்லிடுவேன்
காளை எருதரே காட்டில் உயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன் தையல் எனைக் காத்தருள்வீர்
காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை
மாதர் உரைத்தல் வழக்கம் இல்லை என்று அறிவேன் 60
ஆனாலும் என் போல் அபூர்வமாம் காதல் கொண்டால்
தானா உரைத்தல் அன்றிச் சாரும் வழி உளதோ
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கம் எல்லாம்
இத் தரையில் மேலோர் முன் ஏழையர்க்கு நாணம் உண்டோ
தேவர் முன்னே அன்பு உரைக்க சிந்தை வெட்கம் கொள்வது உண்டோ 65
காவலர்க்குத் தம் குறைகள் காட்டாரோ கீழடியார்
ஆசைதான் வெட்கம் அறியுமோ என்று பல
நேச உரை கூறி நெடிது உயிர்த்துப் பொய்க் குயிலி
பண்டு போலே தனது பாழடைந்த பொய்ப் பாட்டை
எண் திசையும் இன்பக் களி ஏறப் பாடியதே 70
பாட்டு முடியும் வரை பார் அறியேன் விண் அறியேன்
கோட்டுப் பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன்
தன்னை அறியேன் தனைப் போல் எருது அறியேன்
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே
கண்டேன் படைப்புக் கடவுளே நான்முகனே 75
பண்டே உலகு படைத்தனை நீ என்கின்றார்
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய்
நீரைப் பழைய நெருப்பில் குளிர்வித்தாய்
காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி
தோற்றுவித்தாய் நின்றன் தொழில் வலிமை யார் அறிவார் 80
உள்ளம்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத
கொள்ளைப் பெரிய உருக் கொண்ட பல கோடி
வட்ட உருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்
எல்லாம் அசைவில் இருப்பதற்கே சக்திகளைப் 85
பொல்லாப் பிரமா புகுத்துவிட்டாய் அம்மாவோ
காலம் படைத்தாய் கடப்பதிலா திக்கு அமைத்தாய்
ஞாலம் பலவினிலும் நாள்தோறும் தாம் பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான்முகனே 90
சால மிகப் பெரிய சாதனை காண் இஃது எல்லாம்
தாலம் மிசை நின்றன் சமர்த்து உரைக்க வல்லார் யார்
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா
காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில் 95
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா
பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தை எனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேர் ஆமோ
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ 100
செத்தைக் குயில் புரிந்த தெய்விகத் தீம் பாட்டு எனும் ஓர்
வித்தை முடிந்தவுடன் மீட்டும் அறிவெய்தி நான்
கையில் வாள் எடுத்துக் காளையின் மேல் வீசினேன்
மெய்யில் படும் முன் விரைந்து அதுதான் ஓடிவிட
வன்னக் குயில் மறைய மற்றைப் பறவை எலாம் 105
முன்னைப் போல் கொம்பு முனைகளிலே வந்து ஒலிக்க
நாணம் இலாக் காதல் கொண்ட நானும் சிறு குயிலை
வீணிலே தேடிய பின் வீடு வந்து சேர்ந்துவிட்டேன்
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண்ணிலே நீர் ததும்பக் கானக் குயில் எனக்கே 110
காதல் கதை உரைத்து நெஞ்சம் கரைத்ததையும்
பேதை நான் அங்கு பெரிய மயல் கொண்டதையும்
இன்பக் கதையின் இடையே தடையாக
புன் பறவை எல்லாம் புகுந்த வியப்பினையும்
ஒன்றைப் பொருள் செய்யா உள்ளத்தைக் காம அனல் 115
தின்று எனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்
சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்து எனக்கு
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்
இத்தனை கோலத்தினுக்கும் யான் வேட்கை தீராமல்
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் 120
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண் இரண்டும் மூடக் கடும் துயிலில் ஆழ்ந்துவிட்டேன்

@8. நான்காம் நாள்

#1
நான்காம் நாள் என்னை நயவஞ்சனை புரிந்து
வான் காதல் காட்டி மயக்கிச் சதி செய்த
பொய்ம்மைக் குயில் என்னைப் போந்திடவே கூறிய நாள்
மெய்ம்மை அறிவு இழந்தேன் வீட்டிலே மாடம் மிசை
சித்தம் திகைப்புற்று ஓர் செய்கை அறியாமல் 5
எத்துக் குயில் என்னை எய்துவித்த தாழ்ச்சி எல்லாம்
மீட்டும் நினைத்து அங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே
காட்டுத் திசையினில் என் கண் இரண்டு நாடியவால்
வானத்தே ஆங்கு ஓர் கரும் பறவை வந்திடவும்
யான் அதனைக் கண்டே இது நமது பொய்க் குயிலோ 10
என்று திகைத்தேன் இரும் தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துலங்கவில்லை நாடு மனம்
ஆங்கு அதனை விட்டுப் பிரிவதற்கும் ஆகவில்லை
ஓங்கும் திகைப்பில் உயர் மாடம் விட்டு நான்
வீதியிலே வந்து நின்றேன் மேல் திசையில் அவ் உருவம் 15
சோதிக் கடலிலே தோன்று கரும்புள்ளி எனக்
காணுதலும் சற்றே கடுகி அருகே போய்
நாணம் இலாப் பொய்க் குயிலோ என்பதனை நன்கு அறிவோம்
என்ற கருத்துடனே யான் விரைந்து சென்றிடுங்கால்
நின்ற பறவையும்தான் நேராகப் போயினதால் 20
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்
மேனி நன்கு தோன்ற அருகினிலே மேவாது
வானில் அதுதான் வழி காட்டிச் சென்றிடவும்
யான் நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்பு நாம்
கூறியுள்ள மாஞ்சோலைதன்னைக் குறுகி அந்த 25
ஊறு இலாப் புள்ளும் அதன் உள்ளே மறைந்ததுவால்
மாஞ்சோலைக்கு உள்ளே மதியிலி நான் சென்று ஆங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையும் ஒரு கொம்பரின் மேல்
சின்னக் கரும் குயிலி செவ்வனே வீற்றிருந்து
பொன் அம் குழலின் புதிய ஒளிதனிலே 30
பண்டைப் பொய்க் காதல் பழம் பாட்டைத் தான் பாடிக்
கொண்டு இருத்தல் கண்டேன் குமைந்தேன் எதிரே போய்
நீசக் குயிலே நிலை அறியா பொய்ம்மையே
ஆசைக் குரங்கினையும் அன்பு ஆர் எருதினையும்
எண்ணி நீ பாடும் இழிந்த புலைப் பாட்டை 35
நண்ணி இங்கு கேட்க நடத்திவந்தாய் போலும் எனை
என்று சினம் பெருகி ஏதேதோ சொல் உரைத்தேன்
கொன்றுவிட நெஞ்சில் குறித்தேன் மறுபடியும்
நெஞ்சம் இளகி நிறுத்திவிட்டேன் ஈங்கு இதற்குள்
வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கி 40
கண்ணிலே பொய் நீர் கடகடெனத் தான் ஊற்றப்
பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால்
ஐயனே என் உயிரின் ஆசையே ஏழை எனை
வையம் மிசை வைக்கத் திருவுளமோ மற்று எனையே
கொன்றுவிடச் சித்தமோ கூறீர் ஒரு மொழியில் 45
அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது
ஞாயிறுதான் வெம்மைசெயில் நாள்மலர்க்கு வாழ்வு உளதோ
தாய் இருந்து கொன்றால் சரண் மதலைக்கு ஒன்று உளதோ
தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என் ஆகும்
ஆவல் பொருளே அரசே என் ஆரியரே 50
சிந்தையில் நீர் என் மேல் சினம் கொண்டால் மாய்ந்திடுவேன்
வெம் தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய்ப் படுவேன்
குற்றம் நீர் என் மேல் கொணர்ந்ததனை யான் அறிவேன்
குற்றம் நுமைக் கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம
புன்மைக் குரங்கைப் பொதி மாட்டை நான் கண்டு 55
மென்மையுறக் காதல் விளையாடினேன் என்றீர்
என் சொல்கேன் எங்ஙன் உய்வேன் ஏது செய்கேன் ஐயனே
நின் சொல் மறுக்க நெறி இல்லை ஆயிடினும்
என் மேல் பிழை இல்லை யார் இதனை நம்பிடுவார்
நின் மேல் சுமை முழுதும் நேராகப் போட்டுவிட்டேன் 60
வெம் விதியே நீ என்னை மேம்பாடுறச் செய்து
செவ்விதின் இங்கு என்னை என்றன் வேந்தனோடு சேர்த்திடினும்
அல்லாது என் வார்த்தை அவர் சிறிதும் நம்பாமே
புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட நான்
அக்கணத்தே தீயில் அழிந்து விழ நேரிடினும் 65
எக்கதிக்கும் ஆளாவேன் என் செய்கேன் வெம் விதியே

@9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்

#1
தேவனே என் அருமைச் செல்வமே என் உயிரே
போவதன் முன் ஒன்று புகல்வதனைக் கேட்டு அருள்வீர்
முன்னம் ஒரு நாள் முடி நீள் பொதியமலை
தன் அருகே நானும் தனியே ஓர் சோலைதனில்
மாங்கிளையில் ஏதோ மனதில் எண்ணி வீற்றிருந்தேன் 5
ஆங்கு வந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியர் என்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன் ஐயர் எனை
ஆதரித்து வாழ்த்தி அருளினார் மற்று அதன் பின்
வேதமுனிவரே மேதினியில் கீழ்ப் பறவைச்
சாதியிலே நான் பிறந்தேன் சாதிக் குயில்களைப் போல் 10
இல்லாமல் என்றன் இயற்கை பிரிவு ஆகி
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவது ஏன்
மானுடர் போல் சித்தநிலை வாய்த்திருக்கும் செய்தி ஏன்
யான் உணரச் சொல்வீர் என வணங்கிக் கேட்கையிலே
கூறுகின்றார் ஐயர் குயிலே கேள் முன் பிறப்பில் 15
வீறு உடைய வெம் தொழிலார் வேடர் குலத் தலைவன்
வீர முருகன் எனும் வேடன் மகளாகச்
சேர வள நாட்டில் தென்புறத்தே ஓர் மலையில்
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ நல் இளமை
முந்தும் அழகினிலே மூன்று தமிழ் நாட்டில் 20
யாரும் நினக்கு ஓர் இணையில்லை என்றிடவே
சீர் உயர நின்றாய் செழும் கான வேடரில் உன்
மாமன் மகன் ஒருவன் மாடன் எனும் பேர் கொண்டான்
காமன் கணைக்கு இரையாய் நின் அழகைக் கண்டு உருகி
நின்னை மணக்க நெடுநாள் விரும்பியவன் 25
பொன்னை மலரை புதுத் தேனைக் கொண்டு உனக்கு
நித்தம் கொடுத்து நினைவு எல்லாம் நீ ஆக
சித்தம் வருந்துகையில் தேமொழியே நீ அவனை
மாலையிட வாக்களித்தாய் மையலினால் இல்லை அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய் 30
ஆயிழையே நின்றன் அழகின் பெரும் கீர்த்தி
தேயம் எங்கும் தான் பரவத் தேன்மலையின் சார்பினில் ஓர்
வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான்
நாடு அனைத்தும் அஞ்சி நடுங்கும் செயல் உடையான்
மொட்டைப் புலியனும் தன் மூத்த மகனான 35
நெட்டைக் குரங்கனுக்கு நேர் ஆன பெண் வேண்டி
நின்னை மணம்புரிய நிச்சயித்து நின் அப்பன்
தன்னை அணுகி நின் ஓர் தையலை என் பிள்ளைக்குக்
கண்ணாலம் செய்யும் கருத்து உடையேன் என்றிடலும்
எண்ணாப் பெரு மகிழ்ச்சி எய்தியே நின் தந்தை 40
ஆங்கே உடம்பட்டான் ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரியத் தாம் உறுதிபண்ணிவிட்டார்
பன்னிரண்டு நாட்களிலே பாவை உனைத் தேன்மலையில்
அன்னியன் கொண்டு ஏகிடுவான் என்னும் அது கேட்டு
மாடன் மனம் புகைந்து மற்றை நாள் உன்னை வந்து 45
நாடிச் சினத்துடனே நானா மொழி கூற
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்
காயும் சினம் தவிர்ப்பாய் மாடா கடுமையினால்
நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டு ஆக நேர்ந்தாலும்
கட்டுப்படி அவர்தம் காவலில் போய் வாழ்ந்தாலும் 50
மாதம் ஒரு மூன்றில் மருமம் சில செய்து
பேதம் விளைவித்துப் பின் இங்கே வந்திடுவேன்
தாலிதனை மீட்டும் அவர்தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ 55
மற்று இதனை நம்பிடுவாய் மாடப்பா என்று உரைத்தாய்
காதலினால் இல்லை கருணையினால் இஃது உரைத்தாய்
மாதரசாய் வேடன் மகள் ஆன முன் பிறப்பில்
சின்னக் குயிலி என்று செப்பிடுவார் நின் நாமம்
பின்னர்ச் சில தினங்கள் சென்றதன் பின் பெண் குயிலி 60
நின் ஒத்த தோழியரும் நீயும் ஒரு மாலையிலே
மின்னல் கொடிகள் விளையாடுதல் போலே
காட்டினிடையே களித்து ஆடி நிற்கையிலே
வேட்டைக்கு என வந்தான் வெல் வேந்தன் சேரமான்
தன் அருமை மைந்தன் தனியே துணை பிரிந்து 65
மன்னவன்தன் மைந்தன் ஒரு மானைத் தொடர்ந்து வரத்
தோழியரும் நீயும் தொகுத்து நின்றே ஆடுவதை
வாழி அவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து
நின்னைத் தனதாக்க நிச்சயித்தான் மாது நீ
மன்னவனைக் கண்டவுடன் மா மோகம் கொண்டு விட்டாய் 70
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய்
அன்ன ஒரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்
தோழியரும் வேந்தன் சுடர்க் கோலம்தான் கண்டே
ஆழி அரசன் அரும் புதல்வன் போலும் என்றே
அஞ்சி மறைந்துவிட்டார் ஆங்கு அவனும் நின்னிடத்தே 75
வஞ்சித் தலைவன் மகன் யான் என உரைத்து
வேடர் தவ மகளே விந்தை அழகு உடையாய்
ஆடவனாத் தோன்றியதன் பயனை இன்று பெற்றேன்
கண்டதுமே நின் மிசை நான் காதல் கொண்டேன் என்று இசைக்க
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய் 80
ஐயனே உங்கள் அரமனையில் ஐந்நூறு
தையலர் உண்டாம் அழகில் தன்னிகர் இல்லாதவராம்
கல்வி தெரிந்தவராம் கல் உருகப் பாடுவராம்
அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்
மன்னவரை வேண்டேன் மலைக் குறவர்தம் மகள் யான் 85
கொல்லும் அடல் சிங்கம் குழி முயலை வேட்பது உண்டோ
வெல்லு திறல் மா வேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பர்
பத்தினியா வாழ்வது அல்லால் பார் வேந்தர்தாம் எனினும்
நத்தி விலைமகளா நாங்கள் குடிபோவது இல்லை
பொன் அடியை போற்றுகின்றேன் போய்வருவீர் தோழியரும் 90
என்னை விட்டுப் போயினரே என் செய்கேன் என்று நீ
நெஞ்சம் கலக்கம் எய்தி நிற்கையிலே வேந்தன் மகன்
மிஞ்சு நின்றன் காதல் விழிக் குறிப்பினால் அறிந்தே
பக்கத்தில் வந்து பளிச்சென்று உனது கன்னம்
செக்கச் சிவக்க முத்தமிட்டான் சினம் காட்டி 95
நீ விலகிச் சென்றாய் நெறி ஏது காமியர்க்கே
தாவி நின்னை வந்து தழுவினான் மார்பு இறுக
நின்னை அன்றி ஓர் பெண் நிலத்தில் உண்டோ என்றனுக்கே
பொன்னே ஒளிர் மணியே புது அமுதே இன்பமே
நீயே மனையாட்டி நீயே அரசாணி 100
நீயே துணை எனக்கு நீயே குலதெய்வம்
நின்னை அன்றிப் பெண்ணை நினைப்பேனோ வீணிலே
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே
நின் மனைக்குச் சென்றிடுவோம் நின் வீட்டில் உள்ளோர்பால்
என் மனதைச் சொல்வேன் எனது நிலை உரைப்பேன் 105
வேதநெறியில் விவாகம் உனைச் செய்துகொள்வேன்
மாதரசே என்று வலக்கை தட்டி வாக்களித்தான்
பூரிப்புக் கொண்டாய் புளகம் நீ எய்திவிட்டாய்
வாரிப் பெரும் திரை போல் வந்த மகிழ்ச்சியிலே
நாணம் தவிர்த்தாய் நனவே தவிர்ந்தவளாய் 110
காணத் தெவிட்டாத ஓர் இன்பக் கனவினிலே
சேர்ந்துவிட்டாய் மன்னன்தன் திண் தோளை நீ உவகை
ஆர்ந்து தழுவி அவன் இதழில் தேன் பருகச்
சிந்தைகொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினைப் போல்
விந்தையுறு காந்தம் மிசை வீழும் இரும்பினைப் போல் 115
ஆவலுடன் நின்னை அறத் தழுவி ஆங்கு உனது
கோவை இதழ் பருகிக்கொண்டு இருக்கும் வேளையிலே
சற்று முன்னே ஊரினின்று தான் வந்து இறங்கியவன்
மற்று நீ வீட்டை விட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டுக் குதூகலமாய் 120
ஆத்திரம்தான் மிஞ்சி நின்னை ஆங்கு எய்திக் காண வந்தான்
நெட்டைக் குரங்கன் நெருங்கி வந்து பார்த்துவிட்டான்
பட்டப்பகலிலே பாவி மகள் செய்தியைப் பார்
கண்ணாலம் கூட இன்னும் கட்டி முடியவில்லை
மண் ஆக்கிவிட்டாள் என் மானம் தொலைத்துவிட்டாள் 125
நிச்சியதாம்பூலம் நிலையா நடந்திருக்க
பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் நெட்டைக் குரங்கன் அங்கே
மாப்பிளை தான் ஊருக்கு வந்ததையும் பெண் குயிலி 130
தோப்பிலே தானும் தன் தோழிகளுமாச் சென்று
பாடி விளையாடும் பண்பு கேட்டே குரங்கன்
ஓடி இருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார் ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீர் ஓடு மேனி நெருப்பு ஓடும் கண்ணுடனே 135
மாடன் அங்கு வந்து நின்றான் மற்று இதனைத் தேன்மலையின்
வேடர் கோன் மைந்தன் விழி கொண்டு பார்க்கவில்லை
நெட்டைக் குரங்கன் அங்கு நீண்ட மரம் போலே
எட்டி நிற்கும் செய்தி இவன் பார்க்க நேரம் இல்லை
அன்னியனைப் பெண் குயிலி ஆர்ந்து இருக்கும் செய்தி ஒன்று 140
தன்னையே இவ் இருவர் தாம் கண்டார் வேறு அறியார்
மாடன் அதைத் தான் கண்டான் மற்றவனும் அங்ஙனமே
மாடன் வெறிகொண்டான் மற்றவனும் அவ்வாறே
காவலன்தன் மைந்தனும் அக் கன்னிகையும் தானும் அங்கு
தேவ சுகம் கொண்டு விழியே திறக்கவில்லை 145
ஆவிக் கலப்பின் அமுத சுகம்தனிலே
மேவி அங்கு மூடியிருந்த விழி நான்கு
ஆங்கு அவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழி நான்கு
மாடனும் தன் வாள் உருவி மன்னவனைக் கொன்றிடவே 150
ஓடி வந்தான் நெட்டைக் குரங்கனும் வாள் ஓங்கி வந்தான்
வெட்டு இரண்டு வீழ்ந்தன காண் வேந்தன் முதுகினிலே
சட்டெனவே மன்னவனும் தான் திரும்பி வாள் உருவி
வீச்சு இரண்டில் ஆங்கு அவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம்
பேச்சு இழந்தே அங்கு பிணமாக் கிடந்துவிட்டார் 155
மன்னவனும் சோர்வு எய்தி மண் மேல் விழுந்துவிட்டான்
பின் அவனை நீயும் பெரும் துயர் கொண்டே மடியில்
வாரி எடுத்துவைத்து வாய் புலம்பக் கண் இரண்டும்
மாரி பொழிய மனம் அழிந்து நிற்கையிலே
கண்ணை விழித்து உனது காவலனும் கூறுகின்றான் 160
பெண்ணே இனி நான் பிழைத்திடேன் சில் கணத்தே
ஆவி துறப்பேன் அழுது ஓர் பயன் இல்லை
சாவிலே துன்பம் இல்லை தையலே இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினைக் கண்டு
காமுறுவேன் நின்னைக் கலந்து இனிது வாழ்ந்திடுவேன் 165
இன்னும் பிறவி உண்டு மாதரசே இன்பம் உண்டு
நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே
என்று சொல்லிக் கண் மூடி இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர மாண்டனன் காண்
மாடன் இங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது 170
பீடையுறு புள் வடிவம் பேதை உனக்கு எய்தியது
வாழி நின்றன் மன்னவனும் தொண்டை வள நாட்டில்
ஆழிக் கரையின் அருகே ஓர் பட்டினத்தில்
மானிடனாத் தோன்றி வளருகின்றான் நின்னை ஒரு
கானிடத்தே காண்பான் கனிந்து நீ பாடும் நல்ல 175
பாட்டினைத்தான் கேட்பான் பழவினையின் கட்டினால்
மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்தத்
தென்பொதியை மா முனிவர் செப்பினார் சாமீ
குயில் உருவம் கொண்டேன் யான் கோமானோ மேன்மை
பயிலும் மனித உருப் பற்றி நின்றான் எம்முள்ளே 180
காதல் இசைந்தாலும் கடி மணம்தான் கூடாதாம்
சாதல் பொழுதிலே தார் வேந்தன் கூறிய சொல்
பொய்யாய் முடியாதோ என்று இசைத்தேன் புன்னகையில்
ஐயர் உரைப்பார் அடி பேதாய் இப் பிறவி
தன்னிலும் நீ விந்தகிரி சார்பினில் ஓர் வேடனுக்குக் 185
கன்னி எனத் தான் பிறந்தாய் கர்ம வசத்தினால்
மாடன் குரங்கன் இருவருமே வன் பேயாக்
காடு மலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னை அங்கே இப் பிறப்பில் நீயும் பழமை போல்
மன்னனையே சேர்வை என்று தாம் சூழ்ந்து மற்று அவரும் 190
நின்னைக் குயில் ஆக்கி நீ செல்லும் திக்கில் எல்லாம்
நின்னுடனே சுற்றுகின்றார் நீ இதனைத் தேர்கிலையோ
என்றார் விதியே இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ பேய்கள் எனைப்
பேதைப்படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி 195
வாதைப்படுத்தி வருமாயில் யான் எனது
காதலனைக் காணுங்கால் காய் சினத்தால் ஏதேனும்
தீது இழைத்தால் என் செய்கேன் தேவரே மற்று இதற்கு ஓர்
மாற்று இலையோ என்று மறுகி நான் கேட்கையிலே
தேற்றமுறு மா முனிவர் செப்புகின்றார் பெண் குயிலே 200
தொண்டை வள நாட்டில் ஓர் சோலையிலே வேந்தன் மகன்
கண்டு உனது பாட்டில் கருத்து இளகிக் காதல் கொண்டு
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேய் இரண்டும்
மோசம் மிகுந்த முழு மாயச் செய்கை பல
செய்து பல பொய்த் தோற்றம் காட்டித் திறல் வேந்தன் 205
ஐயமுறச் செய்துவிடும் ஆங்கு அவனும் நின்றனையே
வஞ்சகி என்று எண்ணி மதி மருண்டு நின் மீது
வெம் சினம்தான் எய்தி நினை விட்டுவிட நிச்சயிப்பான்
பிந்தி விளைவது எல்லாம் பின்னே நீ கண்டுகொள்வாய்
சந்தி ஜபம் செய்யும் சமயம் ஆய்விட்டது என்றே 210
காற்றில் மறைந்து சென்றார் மா முனிவர் காதலரே
மாற்றி உரைக்கவில்லை மா முனிவர் சொன்னது எல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ திருவுளத்தில்
எப்படி நீர் கொள்வீரோ யான் அறியேன் ஆரியரே
காதல் அருள்புரிவீர் காதல் இல்லை என்றிடிலோ 215
சாதல் அருளித் தமது கையால் கொன்றிடுவீர்
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண்
கொன்றுவிட மனம்தான் கொள்ளுமோ பெண் என்றால்
பேயும் இரங்காதோ பேய்கள் இரக்கம் இன்றி
மாயம் இழைத்தால் அதனை மானிடனும் கொள்ளுவதோ 220
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பது உண்டோ
மாதர் அன்பு கூறில் மனம் இளகார் இங்கு உளரோ
அன்புடனே யானும் அரும் குயிலைக் கைக்கொண்டு
முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி
கொண்டு அதனை முத்தமிட்டேன் கோகிலத்தைக் காணவில்லை 225
விண்டு உரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா
ஆசைக் கடலின் அமுதமடா அற்புதத்தின்
தேசமடா பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான்
கண் எடுக்காது என்னைக் கணப் பொழுது நோக்கினாள் 230
சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவள் அழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன் கண் இரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ
மீள விழியில் மிதந்த கவிதை எலாம்
சொல்லில் அகப்படுமோ தூய சுடர் முத்தை ஒப்பாம் 235
பல்லில் கனி இதழில் பாய்ந்த நிலவினை யான்
என்றும் மறத்தல் இயலுமோ பாரின் மிசை
நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும்
தேனில் இனியாள் திருத்த நிலையினையும் 240
மற்று அவர்க்குச் சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனி பிழிந்த
சாற்றினிலே பண் கூத்து எனும் இவற்றின் சாரம் எலாம்
ஏற்றி அதனோடே இன் அமுதைத் தான் கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் 245
மாது அவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பான்
பெண் அவளைக் கண்டு பெரும் களி கொண்டு ஆங்ஙனே
நண்ணித் தழுவி நறும் கள் இதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெரு மயக்கில்
சித்தம் மயங்கிச் சில போழ்து இருந்த பின்னே 250
பக்கத்து இருந்த மணிப் பாவையுடன் சோலை எலாம்
ஒக்க மறைந்திடலும் ஓகோ எனக் கதறி
வீழ்ந்தேன் பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி எழுதுகோல்
பத்திரிகைக் கூட்டம் பழம் பாய் வரிசை எல்லாம் 255
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் என உணர்ந்தேன்
சோலைக் குயில் காதல் சொன்ன கதை அத்தனையும்
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டுகொண்டேன்
ஆன்ற தமிழ்ப் புலவீர் கற்பனையே ஆனாலும் 260
வேதாந்தம் ஆக விரித்துப் பொருள் உரைக்க
யாதானும் சற்றே இடம் இருந்தால் கூறீரோ
*