பாரதியார் கவிதைகள் – தேசீய கீதங்கள்

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்

உள் தலைப்புகள்

1. வந்தே மாதரம்
2. ஜய வந்தே மாதரம்
3. நாட்டு வணக்கம்
4. பாரத நாடு
5. பாரத தேசம்
6. எங்கள் நாடு
7. ஜய பாரத
8. பாரத மாதா
9. எங்கள் தாய்
10. வெறி கொண்ட தாய்
11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
12. பாரத மாதா நவரத்தின மாலை
13. பாரத தேவியின் திருத் தசாங்கம்
14. தாயின் மணிக்கொடி பாரீர்
15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
17. பாரத சமுதாயம்
18. ஜாதீய கீதம்
19. ஜாதீய கீதம்
20. செந்தமிழ் நாடு
21. தமிழ்த் தாய்
22. தமிழ்
23. தமிழ்மொழி வாழ்த்து
24. தமிழச் சாதி
25. வாழிய செந்தமிழ்
26. சுதந்திரப் பெருமை
27. சுதந்திரப் பயிர்
28. சுதந்திர தாகம்
29. சுதந்திர தேவியின் துதி
30. விடுதலை
31. சுதந்திரப் பள்ளு
32. சத்ரபதி சிவாஜி
33. கோக்கலே சாமியார் பாடல்
34. தொண்டு செய்யும் அடிமை
35. நம்ம ஜாதிக் கடுக்குமோ
36. நாம் என்ன செய்வோம்
37. பாரத தேவியின் அடிமை
38. வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று
39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
40. நடிப்புச் சுதேசிகள்
41. வாழ்க நீ எம்மான்
42. குரு கோவிந்தர்
43. தாதாபாய் நவுரோஜி
44. பூபேந்திர விஜயம்
45. வாழ்க திலகன் நாமம்
46. திலகர் முனிவர் கோன்
47. லாஜபதி
48. லாஜபதியின் பிரலாபம்
49. வஉசிக்கு வாழ்த்து
50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை
51. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து
52. புதிய ருஷியா
53. கரும்புத் தோட்டத்திலே

** பாரத நாடு

@1 வந்தேமாதரம்
**ராகம் – நாதநாமக்கிரியை : தாளம் – ஆதி
**பல்லவி

#0
வந்தேமாதரம் என்போம் எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
**சரணங்கள்

#1
ஜாதி மதங்களைப் பாரோம் உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே அன்றி
வேறு குலத்தினராயினும் ஒன்றே

#2
ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ
சீனத்தர் ஆய்விடுவாரோ பிற
தேசத்தர் போல் பல தீங்கு இழைப்பாரோ

#3
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ

#4
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும்

#5
எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

#6
புல் அடிமைத் தொழில் பேணிப் பண்டு
போயின நாட்களுக்கு இனி மனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி

@2 ஜய வந்தே மாதரம்
**ராகம் – ஹிந்துஸ்தானி பியாக் : தாளம் – ஆதி
**பல்லவி

#0
வந்தேமாதரம் ஜய
வந்தேமாதரம்
**சரணங்கள்

#1
ஜய ஜய பாரத ஜய ஜய பாரத
ஜய ஜய பாரத ஜய ஜய ஜய ஜய

#2
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொலும் வீரிய வாசகம்

#3
நொந்தேபோயினும் வெந்தே மாயினும்
நம் தேசத்தர் உவந்தே சொல்வது

#4
ஒன்றாய் நின்று இனி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்

@3 நாட்டு வணக்கம்
**ராகம் – காம்போதி : தாளம் – ஆதி

#1
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இ நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இ நாடே அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இ நாடே இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ

#2
இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இ நாடே அவர்
கன்னியர் ஆகி நிலவினில் ஆடிக் களித்ததும் இ நாடே தங்கள்
பொன் உடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இ நாடே இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ

#3
மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இ நாடே அவர்
தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டித் தழுவியது இ நாடே மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இ நாடே பின்னர்
அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ

@4 பாரத நாடு
**ராகம் – இந்துஸ்தானி : தாளம் – தோடி
**பல்லவி

#0
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள்
பாரத நாடு
**சரணங்கள்

#1
ஞானத்திலே பரமோனத்திலே உயர்
மானத்திலே அன்னதானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு

#2
தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில்
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு
தருவதிலே உயர் நாடு

#3
நன்மையிலே உடல் வன்மையிலே செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன் மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு

#4
ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத் திறல் கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினிலே உயர் நாடு

#5
வண்மையிலே உளத் திண்மையிலே மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே உயர் நாடு

#6
யாகத்திலே தவ வேகத்திலே தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு

#7
ஆற்றினிலே சுனை ஊற்றினிலே தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி
இனத்தினிலே உயர் நாடு

#8
தோட்டத்திலே மரக் கூட்டத்திலே கனி
ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே
தேட்டத்திலே அடங்காத நதியின்
சிறப்பினிலே உயர் நாடு

@5 பாரத தேசம்
**ராகம் புன்னாகவராளி
**பல்லவி

#0
பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் மிடிப்
பயம் கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்
**சரணங்கள்

#1
வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம் அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள்
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

#2
சிங்களத் தீவினுக்கு ஓர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்

#3
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம்
எட்டுத் திசைகளிலும் சென்று இவை விற்றே
எண்ணும் பொருள் அனைத்தும் கொண்டுவருவோம்

#4
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கு இனிய பொருள் கொணர்ந்தே
நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே

#5
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நல் நாட்டு இளம்பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

#6
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்

#7
காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத்தானத்து வீரர்தமக்கு
நல் இயல் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்

#8
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகள் என வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்

#9
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

#10
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம்
நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்

#11
மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்

#12
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்

#13
சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்
நீதி நெறியினின்று பிறர்க்கு உதவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்

@6 எங்கள் நாடு
**ராகம் பூபாளம்

#1
மன்னும் இமயமலை எங்கள் மலையே
மாநிலம் மீது இது போல் பிறிது இலையே
இன் நறு நீர்க் கங்கையாறு எங்கள் யாறே
இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே
பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே
பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே

#2
மா ரத வீரர் மலிந்த நல் நாடு
மா முனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு
நாரத கான நலம் திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்த நல் நாடு
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம் பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கு இலை ஈடே

#3
இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம்
ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழி தொழில் கற்போம்
தாய்த்திருநாடு எனில் இனிக் கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே

@7 ஜய பாரத

#1
சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்று இவள்
மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும்
இறந்து மாண்பு தீரம் மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறம் தவிர்க்கிலாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே

#2
நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேயவாணர்கள்
தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும்
மாறுகொண்டு கல்லி தேய வண்மை தீர்ந்த நாளினும்
ஈறு நிற்கும் உண்மை ஒன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே

#3
வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே
வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர
வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே

#4
தேவர் உண்ணும் நல் மருந்து சேர்ந்த கும்பம் என்னவும்
மேவுவார் கடற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும்
பாவ நெஞ்சினோர் நிதம் பறித்தல் செய்வராயினும்
ஓவிலாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே

#5
இதம் தரும் தொழில்கள் செய்து இரும் புவிக்கு நல்கினள்
பதம் தரற்கு உரியவாய பல் மதங்கள் நாட்டினள்
விதம் பெறும் பல் நாட்டினர்க்கு வேறு ஒர் உண்மை தோற்றவே
சுதந்திரத்தில் ஆசை இன்று தோற்றினாள்-மன் வாழ்கவே

@8 பாரத மாதா
**தான தனந்தன தான தனந்தன
**தானனத் தானா னே

#1
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில் எங்கள்
அன்னை பயங்கரி பாரததேவி நல்
ஆரிய ராணியின் வில்

#2
இந்திரசித்தன் இரண்டு துண்டாக
எடுத்த வில் யாருடை வில் எங்கள்
மந்திரத் தெய்வம் பாரதராணி
வயிரவிதன்னுடை வில்

#3
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
நாயகிதன் திருக்கை

#4
சித்தமயம் இவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்

#5
சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்
தட்டி விளையாடி நன்று
உகந்ததோர் பிள்ளை முன் பாரதராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை

#6
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை
ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரியர் தேவியின் தோள்

#7
சாகும் பொழுதில் இரு செவிக் குண்டலம்
தந்தது எவர் கொடைக் கை சுவைப்
பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும்
பாரதராணியின் கை

#8
போர்க்களத்தே பரஞான மெய்க் கீதை
புகன்றது எவருடை வாய் பகை
தீர்க்கத் திறம் தரு பேரினள் பாரத
தேவி மலர் திருவாய்

#9
தந்தை இனி துறந்தான் அரசாட்சியும்
தையலர்தம் உறவும் இனி
இந்த உலகில் விரும்புகிலேன் என்றது
எம் அனை செய்த உள்ளம்

#10
அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்
அன்பினில் போகும் என்றே இங்கு
முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி

#11
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி தன்
மதியினில் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி

#12
தெய்வீகச் சாகுந்தலம் எனும் நாடகம்
செய்தது எவர் கவிதை அயன்
செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரத
தேவி அருள் கவிதை

@9 எங்கள் தாய்
**(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)

#1
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு
சூழ் கலைவாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்

#2
யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்த
ளாயினுமே எங்கள் தாய் இந்தப்
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்

#3
முப்பது கோடி முகம் உடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்று உடையாள் இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில்
சிந்தனை ஒன்று உடையாள்

#4
நாவினில் வேதம் உடையவள் கையில்
நலம் திகழ் வாள் உடையாள் தனை
மேவினர்க்கு இன் அருள்செய்பவள் தீயரை
வீட்டிடு தோள் உடையாள்

#5
அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள்
செய்து கிடத்துவள் தாய்

#6
பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும்
புண்ணிய நெஞ்சினள் தாய் எனில்
தோம் இழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும்
துர்க்கை அனையவள் தாய்

#7
கற்றைச் சடை மதி வைத்த துறவியைக்
கைதொழுவாள் எங்கள் தாய் கையில்
ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகு ஆளும்
ஒருவனையும் தொழுவாள்

#8
யோகத்திலே நிகரற்றவள் உண்மையும்
ஒன்று என நன்று அறிவாள் உயர்
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொன் குவை தான் உடையாள்

#9
நல் அறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள் தாய் அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்

#10
வெண்மை வளர் இமயாசலன் தந்த
விறல்மகளாம் எங்கள் தாய் அவன்
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம்
சீருறுவாள் எங்கள் தாய்

@10 வெறி கொண்ட தாய்
**ராகம் -ஆபோகி : தாளம் – ரூபகம்

#1
பேயவள் காண் எங்கள் அன்னை பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காய் தழல் ஏந்திய பித்தன்தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை

#2
இன் இசையாம் இன்பக் கடலில் எழுந்து
எற்றும் அலைத் திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கித் திளைப்பாள் அங்குத்
தாவிக் குதிப்பாள் எம் அன்னை

#3
தீம் சொல் கவிதை அம் சோலைதனில்
தெய்வீக நல் மணம் வீசும்
தேம் சொரி மா மலர் சூடி மது
தேக்கி நடிப்பாள் எம் அன்னை

#4
வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை
வேல் கையில் பற்றிக் குதிப்பாள்
ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து
ஓதி உலகு எங்கும் விதைப்பாள்

#5
பாரதப் போர் எனில் எளிதோ விறல்
பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்
மா ரதர் கோடி வந்தாலும் கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்

@11 பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

#1
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை இருள் கணம் போயின யாவும்
எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி
தொழுது உனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல் ஆயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே
வியப்பு இது காண் பள்ளியெழுந்தருளாயே

#2
புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம்
பொங்கியது எங்கும் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய்
வீதி எலாம் அணுகுற்றனர் மாதர்
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த் திருநாமமும் ஓதி நிற்கின்றார்
அள்ளிய தெள் அமுது அன்னை எம் அன்னை
ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே

#3
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்
பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம்
கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம்
சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே
நிருதர்கள் நடுக்குறச் சூல் கரத்து ஏற்றாய்
நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே

#4
நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ
பொன் அனையாய் வெண்பனி முடி இமயப்
பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ
இன் உயிரே பள்ளியெழுந்தருளாயே

#5
மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ
மாநிலம் பெற்றவள் இஃது உணராயோ
குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ
கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே
விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி
வேண்டியவாறு உனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்து எமை ஆண்டு அருள்செய்வாய்
ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே

@12 பாரத மாதா நவரத்தின மாலை
**(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும்
** சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன)
**(காப்பு)

#1
வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த
பாரதமாதாவின் பதமலர்க்கே சீர் ஆர்
நவரத்னமாலை இங்கு நான் சூட்டக் காப்பாம்
சிவ ரத்ந மைந்தன் திறம்
**(வெண்பா)

#2
திறம் மிக்க நல் வயிரச் சீர் திகழும் மேனி
அறம் மிக்க சிந்தை அறிவு பிற நலங்கள்
எண்ணற்றன பெறுவார் இந்தியா என்ற நின்றன்
கண் ஒத்த பேர் உரைத்தக்கால்
**(கட்டளை கலித்துறை)

#3
காலன் எதிர்ப்படில் கைகூப்பிக் கும்பிட்டுக் கம்பனமுற்று
ஓலமிட்டு ஓடி மறைந்து ஒழிவான் பகை ஒன்று உளதோ
நீலக் கடல் ஒத்த கோலத்தினாள் மூன்று நேத்திரத்தாள்
காலக் கடலுக்கு ஓர் பாலமிட்டாள் அன்னை கால் படினே
**(எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்)

#4
அன்னையே அந்நாளில் அவனிக்கு எல்லாம்
ஆணிமுத்துப் போன்ற மணிமொழிகளாலே
பன்னி நீ வேதங்கள் உபநிடதங்கள்
பரவு புகழ்ப் புராணங்கள் இதிகாசங்கள்
இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம்
என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள்
மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற
விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே
**(ஆசிரியப்பா)

#5
வெற்றி கூறு-மின் வெண்சங்கு ஊது-மின்
கற்றவராலே உலகு காப்புற்றது
உற்றது இங்கு இந்நாள் உலகினுக்கு எல்லாம்
இற்றை நாள் வரையினும் அறம் இலா மறவர்
குற்றமே தமது மகுடமாக் கொண்டோர்
மற்றை மனிதரை அடிமைப்படுத்தலே
முற்றிய அறிவின் முறை என்று எண்ணுவார்
பற்றை அரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார்
இற்றை நாள்
பாரில் உள்ள பல நாட்டினர்க்கும்
பாரதநாடு புது நெறி பழக்கல்
உற்றது இங்கு இந்நாள் உலகு எலாம் புகழ
இன்ப வளம் செறி பண் பல பயிற்றும்
கவீந்திரன் ஆகிய ரவீந்திரநாதன்
சொற்றது கேளீர் புவி மிசை இன்று
மனிதர்க்கு எல்லாம் தலைப்படு மனிதன்
தர்மமே உருவமாம் மோஹனதாஸ
கர்ம சந்திர காந்தி என்று உரைத்தான்
அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவி மிசைத் தருமமே
அரசியலதனிலும் பிற இயல் அனைத்திலும்
வெற்றி தரும் என வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள் இதனால் படைஞர் தம்
செருக்கு ஒழிந்து உலகில் அறம் திறம்பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே
**(தரவு கொச்சக் கலிப்பா)

#6
ஊது-மினோ வெற்றி ஒலி-மினோ வாழ்த்தொலிகள்
ஓது-மினோ வேதங்கள் ஓங்கு-மினோ ஓங்கு-மினோ
தீது சிறிதும் பயிலாச் செம்மணி மா நெறி கண்டோம்
வேதனைகள் இனி வேண்டா விடுதலையோ திண்ணமே
**(வஞ்சி விருத்தம்)

#7
திண்ணம் காணீர் பச்சை
வண்ணன் பாதத்து ஆணை
எண்ணம் கெடுதல் வேண்டா
திண்ணம் விடுதலை திண்ணம்
**(கலிப்பா)

#8
விடுதலை பெறுவீர் விரைவா நீர்
வெற்றி கொள்வீர் என்று உரைத்து எங்கும்
கெடுதல் இன்றி நம் தாய்த்திருநாட்டின்
கிளர்ச்சிதன்னை வளர்ச்சிசெய்கின்றான்
சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை
எடு-மினோ அறப் போரினை என்றான்
எம் கோமேதகம் ஏந்திய காந்தி
**(அறுசீர் விருத்தம்)

#9
காந்தி சேர் பதுமராகக் கடி மலர் வாழ் ஸ்ரீதேவி
போந்து நிற்கின்றாள் இன்று பாரதப் பொன் நாடு எங்கும்
மாந்தர் எல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார்
காந்தி சொல் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே
**(எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்)

#10
கணம் எனும் என்றன் கண் முன்னே வருவாய் பாரததேவியே கனல் கால்
இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே
துணை நினை வேண்டும் நாட்டினர்க்கு எல்லாம் துயர் கெட விடுதலை அருளி
மணி நகைபுரிந்து திகழ் திருக்கோலம் கண்டு நான் மகிழ்ந்திடுமாறே

@13 பாரத தேவியின் திருத் தசாங்கம்
**நாமம்
**(காம்போதி)

#1
பச்சை மணிக் கிளியே பாவி எனக்கே யோகப்
பிச்சை அருளியதாய் பேருரையாய் இச் சகத்தில்
பூரணமா ஞானப் புகழ் விளக்கை நாட்டுவித்த
பாரதமாதேவி எனப் பாடு
**நாடு
**(வசந்தா)

#2
தேன் ஆர் மொழிக் கிள்ளாய் தேவி எனக்கு ஆனந்த
மானாள் பொன் நாட்டை அறிவிப்பாய் வான் நாடு
பேர் இமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்றே அறி
**நகர்
**(மணியரங்கு)

#3
இன் மழலைப் பைங்கிளியே எங்கள் உயிர் ஆனாள்
நன்மையுற வாழும் நகர் எது-கொல் சின்மயமே
நான் என்று அறிந்த நனி பெரியோர்க்கு இன் அமுது
தான் என்ற காசித் தலம்
**ஆறு
**(சுருட்டி)

#4
வண்ணக் கிளி வந்தேமாதரம் என்று ஓதுவரை
இன்னல் அறக் காப்பாள் யாறு உரையாய் நன்னர் செயத்
தான் போம் வழி எலாம் தன்மமொடு பொன் விளைக்கும்
வான் போந்த கங்கை என வாழ்த்து
**மலை
**(கானடா)

#5
சோலைப் பசுங்கிளியே தொன் மறைகள் நான்கு உடையாள்
வாலை வளரும் மலை கூறாய் ஞாலத்துள்
வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும்
பொற்பு ஒன்று வெள்ளைப் பொருப்பு
**ஊர்தி
**(தன்யாசி)

#6
சீரும் சிறப்பும் உயர் செல்வமும் ஓர் எண்ணற்றாள்
ஊரும் புரவி உரை தத்தாய் தேரின்
பரி மிசை ஊர்வாள் அல்லள் பார் அனைத்தும் அஞ்சும்
அரி மிசையே ஊர்வாள் அவள்
**படை
**(முகாரி)

#7
கருணை உருவானாள் காய்ந்து எழுங்கால் கிள்ளாய்
செருநரை வீழ்த்தும் படை என் செப்பாய் பொருபவர் மேல்
தண் அளியால் வீழாது வீழின் தகைப்பு அரிதாம்
திண்ணமுறு வான் குலிசம் தேறு
**முரசு
**(செஞ்சுருட்டி)

#8
ஆசை மரகதமே அன்னை திருமுன்றிலிடை
ஓசை வளர் முரசம் ஓதுவாய் பேசுகவோ
சத்தியமே செய்க தருமமே என்று ஒலிசெய்
முத்தி தரும் வேத முரசு
**தார்
**(பிலகரி)

#9
வாராய் இளஞ்சுகமே வந்திப்பார்க்கு என்றும் இடர்
தாராள் புனையும் மணித் தார் கூறாய் சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தான் ஒளிர்வாள்
பொன் தாமரைத் தார் புனைந்து
**கொடி
**(கேதாரம்)

#10
கொடிப் பவள வாய்க் கிள்ளாய் சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல் கொடிதான் மற்று என் அடிப்பணிவார்
நன்று ஆரத் தீயார் நலிவுறவே வீசும் ஒளி
குன்றா வயிரக் கொடி

@14 தாயின் மணிக்கொடி பாரீர்
**(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)
**தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
**பல்லவி

#0
தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
**சரணங்கள்

#1
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்

#2
பட்டுத் துகில் எனலாமோ அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும் புயல் காற்று
மட்டு மிகுந்து அடித்தாலும் அதை
மதியாது அவ் உறுதிகொள் மாணிக்கப் படலம்

#3
இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ

#4
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும்
காணரும் வீரர் பெரும் திருக்கூட்டம்
நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள்
நல் உயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்

#5
அணியணியாய் அவர் நிற்கும் இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ
பணிகள் பொருந்திய மார்பும் விறல்
பைம் திரு ஓங்கும் வடிவமும் காணீர்

#6
செந்தமிழ்நாட்டுப் பொருநர் கொடும்
தீக் கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின்
சேவடிக்கே பணிசெய்திடு துளுவர்

#7
கன்னடர் ஒட்டியரோடு போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன் நகர்த் தேவர்கள் ஒப்ப நிற்கும்
பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர்

#8
பூதலம் முற்றிடும் வரையும் அறப்
போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்

#9
பஞ்சநதத்துப் பிறந்தோர் முன்னைப்
பார்த்தன் முதல் பலர் வாழ்ந்த நல் நாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின் பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும்

#10
சேர்ந்ததைக் காப்பது காணீர் அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க
தேர்ந்தவர் போற்றும் பரத நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க

@15 பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
**நொண்டிச் சிந்து

#1
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சியஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

#2
மந்திரவாதி என்பார் சொன்ன மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்
யந்திர சூனியங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்
தந்த பொருளைக் கொண்டே ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசர் எல்லாம்
அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார்

#3
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வரக் கண்டு வீட்டில் ஒளிவார்
அப்பால் எவனோ செல்வான் அவன் ஆடையைக் கண்டு பயந்து எழுந்து நிற்பார்
எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்

#4
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ
ஐந்து தலைப் பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

#5
சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனைக் குலைத்து இகழ்வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரம்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெரும் சண்டையிடுவார்

#6
நெஞ்சு பொறுக்குதிலையே இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களைத் தீர்க்க ஓர் வழி இலையே

#7
எண்ணிலா நோயுடையார் இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிக்கொள்வார்
நண்ணிய பெரும் கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

@16 போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
**(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

#1
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ
பொலிவிலா முகத்தினாய் போ போ போ
பொறி இழந்த விழியினாய் போ போ போ
ஒலி இழந்த குரலினாய் போ போ போ
ஒளி இழந்த மேனியாய் போ போ போ
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ போ

#2
இன்று பாரதத்திடை நாய் போல
ஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாண் இலாது கெஞ்சுவாய் போ போ போ
சென்றுபோன பொய் எலாம் மெய்யாகச்
சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய் எலாம் பொய்யாக
விழி மயங்கி நோக்குவாய் போ போ போ

#3
வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய் கூறும்
நூலில் ஒத்து இயல்கிலாய் போ போ போ
மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறும் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ

#4
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசு ஒன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வது அஞ்சிலாய் நின் முன்னே
தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ
**(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)

#5
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

#6
மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதம் என்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூறல் அஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்கள் எற்றுவாய் வா வா வா
நொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசம் மீது தோன்றுவாய் வா வா வா

#7
இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளி இழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா
களை இழந்த நாட்டிலே முன் போலே
கலை சிறக்க வந்தனை வா வா வா
விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா

#8
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர் முகத்தினாய் வா வா வா
கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதியது இயற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்குள் உய்யவே நாடு எல்லாம்
ஒரு பெரும் செயல் செய்வாய் வா வா வா

@17 பாரத சமுதாயம்
**ராகம் பியாக்
**தாளம் திஸ்ர ஏகதாளம்
**பல்லவி

#0
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய
**அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை வாழ்க
**சரணங்கள்

#1
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில்
வாழ்க்கை இனியுண்டோ நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ
இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு
கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு இது
கணக்கின்றித் தரும் நாடு நித்தநித்தம் கணக்கின்றித் தரும் நாடு வாழ்க

#2
இனி ஒரு விதிசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவு இலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் வாழ்க

#3
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று உரைத்தான் கண்ணபெருமான்
எல்லாரும் அமரநிலை எய்தும் நல் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் வாழ்க

#4
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இ நாட்டு மன்னர் நாம்
எல்லாரும் இ நாட்டு மன்னர் ஆம் எல்லாரும் இ நாட்டு மன்னர் வாழ்க

@18 ஜாதீய கீதம்
**(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)

#1
இனிய நீர்ப் பெருக்கினை இன் கனி வளத்தினை
தனி நறு மலயத் தண் கால் சிறப்பினை
பைம் நிறப் பழனம் பரவிய வடிவினை

#2
வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை
மலர் மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை
நல்குவை இன்பம் வரம் பல நல்குவை

#3
முப்பது கோடி வாய் நின் இசை முழங்கவும்
அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்கு ஆற்றவும்
திறனிலாள் என்று உனை யாவனே செப்புவன்
அரும் திறல் உடையாய் அருளினைப் போற்றி
பொருந்தலர் படை புறத்து ஒழித்திடும் பொற்பினை

#4
நீயே வித்தை நீயே தருமம்
நீயே இதயம் நீயே மருமம்
உடலகத்து இருக்கும் உயிரும்-மன் நீயே

#5
தடம் தோள் அகலாச் சக்தி நீ அம்மே
சித்தம் நீங்காது உறு பக்தியும் நீயே
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவி இங்கு உனதே

#6
ஒரு பது படை கொளும் உமையவள் நீயே
கமல மெல் இதழ்களில் களித்திடும் கமலை நீ
வித்தை நன்கு அருளும் வெண்மலர்த் தேவி நீ

#7
போற்றி வான் செல்வி புரையிலை நிகரிலை
இனிய நீர்ப் பெருக்கினை இன் கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாம் தகையினை
இனிய புன்முறுவலாய் இலங்கு நல் அணியினை
தரித்து எமைக் காப்பாய் தாயே போற்றி
**(* மூலப் பாடலில் ஏழு கோடி என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது
** ஆனால் அது வங்காளத்தை மட்டுமே குறித்தது)

@19 ஜாதீய கீதம்
**(புதிய மொழிபெயர்ப்பு)

#1
நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர் பூம் தென்றலும் கொழும் பொழில் பசுமையும்
வாய்ந்து நன்கு இலகுவை வாழிய அன்னை

#2
தெள் நிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண் இயல் விரி மலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை

#3
கோடிகோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடிகோடி புயத் துணை கொற்றம் ஆர்
நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும்
கூடு திண்மை குறைந்தனை என்பது என்
ஆற்றலின் மிகுந்தனை அரும் பதம் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன் படை ஓட்டுவை

#4
அறிவும் நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்பு நீ நெஞ்சகத்து அன்பு நீ
ஆலயம்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலை எலாம் தேவி இங்கு உனதே

#5
பத்துப் படை கொளும் பார்வதி தேவியும்
கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ

#6
திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை
மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை
பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை
இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம்
** தமிழ்நாடு

@20 செந்தமிழ் நாடு

#1
செந்தமிழ்நாடு எனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே எங்கள்
தந்தையர் நாடு என்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

#2
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் இளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

#3
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய யாறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு

#4
முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு செல்வம்
எத்தனை உண்டு புவி மீதே அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

#5
நீலத் திரைக் கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம்செய் குமரி எல்லை வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு

#6
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பார் எங்கும் வீசும் தமிழ்நாடு

#7
வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

#8
சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய
தீவு பலவினும் சென்று ஏறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

#9
விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

#10
சீன மிசிரம் யவனர் அகம் இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக் கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

@21 தமிழ்த் தாய்
**தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்
**(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

#1
ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்று ஓர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கண செய்துகொடுத்தான்

#2
மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை
மூண்ட நல் அன்போடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளினுள்ளே உயர்
ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன்

#3
கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் பல
தீம் சுவைக் காவியம் செய்துகொடுத்தார்

#4
சாத்திரங்கள் பல தந்தார் இந்தத்
தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரம் கெட்டவன் காலன்தன் முன்
நேர்ந்தது அனைத்தும் துடைத்து முடிப்பான்

#5
நன்று என்றும் தீது என்றும் பாரான் முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வையச்
சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான்

#6
கன்னிப் பருவத்தில் அந்நாள் என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயர் உண்டு பின்னர்
யாவும் அழிவுற்றிருந்தன கண்டீர்

#7
தந்தை அருள் வலியாலும் முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்

#8
இன்று ஒரு சொல்லினைக் கேட்டேன் இனி
ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள்
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்

#9
புத்தம் புதிய கலைகள் பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

#10
சொல்லவும் கூடுவதில்லை அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத் தமிழ் இனிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும்

#11
என்று அந்தப் பேதை உரைத்தான் ஆ
இந்த வசை எனக்கு எய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்

#12
தந்தை அருள் வலியாலும் இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும் பழி தீரும் புகழ்
ஏறிப் புவி மிசை என்றும் இருப்பேன்

@22 தமிழ்

#1
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகு அனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழர் எனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

#2
யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர்
சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

#3
பிற நாட்டு நல் அறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம்செய்தல் வேண்டும்

#4
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்புக் கண்டார்

@23 தமிழ்மொழி வாழ்த்து
**தான தனத்தன தான தனத்தன தானன தந்தா னே

#1
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே

#2
ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே

#3
சூழ் கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே

#4
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே

@24 தமிழச் சாதி

#1
எனப் பல பேசி இறைஞ்சிடப்படுவதாய்
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய்
நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ
விதியே விதியே தமிழச் சாதியை 5
என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ
சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றும் ஓர் நிலையாய் இருந்து நின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடுவாயோ 10
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்து மற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதைவற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ
அழியாக் கடலோ அணி மலர்த் தடமோ
வானுறு மீனோ மாளிகை விளக்கோ 15
கற்பகத் தருவோ காட்டிடை மரமோ
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய் எனக்கு உணர்த்துவாய்
ஏனெனில்
சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் 20
திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை ஒன்று இன்மை எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்பு நான் தமிழச் 25
சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன் ஒரு பதினாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடைவு இன்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன் 30
ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத்து உள்ள
பற்பல தீவினும் பரவி இவ் எளிய
தமிழச் சாதி தடி உதையுண்டும் 35
கால் உதையுண்டும் கயிற்று அடியுண்டும்
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியால் சாதலும்
பிணிகளால் சாதலும் பெரும் தொலை உள்ள தம் 40
நாட்டினைப் பிரிந்த நலிவினால் சாதலும்
இஃது எலாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன்
தெய்வம் மறவார் செயும் கடன் பிழையார்
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார் 45
என்பது என் உளத்து வேர் அகழ்ந்திருத்தலால்
எனினும்
இப் பெரும் கொள்கை இதயம் மேல் கொண்டு
கலங்கிடாதிருந்த எனைக் கலக்குறுத்தும்
செய்தி ஒன்று அதனைத் தெளிவுறக் கேட்பாய் 50
ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து
வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகு போல்
தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து
ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி
சாத்திரம் கண்டாய் சாதியின் உயர்த் தலம் 55
சாத்திரம் இன்றேல் சாதி இல்லை
பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மை ஆகிப் புழு என மடிவார்
நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்
அறிவுத் தலைமையாற்றிடும் தலைவர் 60
மற்று இவர் வகுப்பதே சாத்திரம் ஆகும்
இவர்தாம்
உடலும் உள்ளமும் தன்வசம் இலராய்
நெறி பிழைத்து இகழ்வுறு நிலைமையில் வீழினும்
பெரிது இலை பின்னும் மருந்து இதற்கு உண்டு 65
செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்
உய்வகைக்கு உரிய வழி சில உளவாம்
மற்று இவர்
சாத்திரம் அதாவது மதியிலே தழுவிய
கொள்கை கருத்து குளிர்ந்திடும் நோக்கம் 70
ஈங்கு இதில் கலக்கம் எய்திடுமாயின்
மற்று அதன் பின்னர் மருந்து ஒன்று இல்லை
இந்நாள் எமது தமிழ்நாட்டிடையே
அறிவுத் தலைமை தமது எனக் கொண்டார்
தம்மிலே இரு வகை தலைபடக் கண்டேன் 75
ஒருசார்
மேற்றிசை வாழும் வெண்ணிறமக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றினும் சிறந்தன ஆதலின் அவற்றை 80
முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்
தமிழச் சாதி தரணி மீது இராது
பொய்த்து அழிவு எய்தல் முடிபு எனப் புகழும்
நன்றடா நன்று நாம் இனி மேற்றிசை
வழி எலாம் தழுவி வாழ்குவம் எனிலோ 85
ஏ ஏ அஃது உமக்கு இசையாது என்பர்
உயிர் தரும் மேற்றிசை நெறிகளை உவந்து நீர்
தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெரும் தடை
பல அவை நீங்கும் பான்மையை வல்ல
என்று அருள்புரிவர் இதன் பொருள் சீமை 90
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்
சாதியின் நோய்க்குத் தலையசைத்து ஏகினர்
என்பதே ஆகும் இஃது ஒரு சார்பாம்
பின் ஒரு சார்பினர் வைதிகப் பெயரோடு
நமது மூதாதையர் நாற்பதிற்று ஆண்டின் 95
முன் இருந்தவரோ முந்நூற்று ஆண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர்-கொல்லோ ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ ஐயாயிரமோ
பவுத்தரே நாடு எலாம் பல்கிய காலத்
தவரோ புராணம் ஆக்கிய காலமோ 100
சைவரோ வைணவ சமயத்தாரோ
இந்திரன் தானே தனிமுதல் கடவுள்
என்று நம் முன்னோர் ஏந்திய வைதிகக்
காலத்தவரோ கருத்திலாதவர்தாம்
எமது மூதாதையர் என்பது இங்கு எவர்-கொல் 105
நமது மூதாதையர் நயமுறக் காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கு அவர் காட்டிய அவ்வப்படியே
தழுவிடின் வாழ்வு தமிழர்க்கு உண்டு
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் 110
கலி தடைபுரிவன் கலியின் வலியை
வெல்லலாகாது என விளம்புகின்றனரால்
நாசம் கூறும் நாட்டுவயித்தியர்
இவராம் இங்கு இவ் இருதலைக்கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர் 115
விதியே விதியே தமிழச் சாதியை
என் செயக் கருதியிருக்கின்றாயடா
**விதி
மேலே நீ கூறிய விநாசப் புலவரை
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
எத்திசைத்து எனினும் யாவரே காட்டினும் 120
மற்றவை தழுவி வாழ்வீராயின்
அச்சம் ஒன்று இல்லை ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும்

@25 வாழிய செந்தமிழ்
**(ஆசிரியப்பா)

#1
வாழிய செந்தமிழ் வாழ்க நல் தமிழர்
வாழிய பாரத மணித் திருநாடு
இன்று எமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்து எய்துக தீது எலாம் நலிக
அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக
ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு ஓங்குக
நம் தேயத்தினர் நாள்தொறும் உயர்க
வந்தேமாதரம் வந்தேமாதரம்
** சுதந்திரம்

@26 சுதந்திரப் பெருமை
**( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர்
** திரும்பியும் வருவாரோ என்னும் வர்ணமெட்டு)

#1
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ என்றும்
ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ

#2
புகழும் நல் அறமுமே அன்றி எல்லாம் வெறும்
பொய் என்று கண்டாரேல் அவர்
இகழுறும் ஈனத் தொண்டு இயற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற்றிருப்பாரோ

#3
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி எனும்
பெற்றியை அறிந்தாரேல் மானம்
துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகம் என்று மதிப்பாரோ

#4
மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது எனும்
வாய்மையை உணர்ந்தாரேல் அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படுமாறு உளதோ

#5
விண்ணில் இரவிதனை விற்றுவிட்டு எவரும் போய்
மின்மினி கொள்வாரோ
கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின்
கைகட்டிப் பிழைப்பாரோ

#6
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ
கண் இரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ

#7
வந்தேமாதரம் என்று வணங்கிய பின்
மாயத்தை வணங்குவரோ
வந்தேமாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ

@27 சுதந்திரப் பயிர்
** கண்ணிகள்

#1
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப் பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ

#2
எண்ணம் எலாம் நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கு இஃது மடியத் திருவுளமோ

#3
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பினர்
வாராது போல வந்த மா மணியைத் தோற்போமோ

#4
தர்மமே வெல்லுமேனும் சான்றோர் சொல் பொய் ஆமோ
கர்ம விளைவுகள் யாம் கண்டது எலாம் போதாதோ

#5
மேலோர்கள் வெம் சிறையில் வீழ்ந்துகிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ

#6
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ

#7
மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்து அழிதல் காணாயோ

#8
எந்தாய் நீ தந்த இயற்பொருள் எலாம் இழந்து
நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ

#9
இன்பச் சுதந்திரம் நின் இன் அருளால் பெற்றது அன்றோ
அன்பற்ற மாக்கள் அதைப் பறித்தால் காவாயோ

#10
வான மழை இல்லையென்றால் வாழ்வு உண்டோ எந்தை சுயா
தீனம் எமக்கு இல்லையென்றால் தீனர் எது செய்வோமே

#11
நெஞ்சகத்தே பொய் இன்றி நேர்ந்தது எலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத் தூய்மை காணாயோ

#12
பொய்க்கோ உடலும் பொருள் உயிரும் வாட்டுகிறோம்
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே

#13
நின்பொருட்டு நின் அருளால் நின் உரிமை யாம் கேட்டால்
என்பொருட்டு நீ தான் இரங்காதிருப்பதுவோ

#14
இன்று புதிதாய் இரக்கின்றோமோ முன்னோர்
அன்று கொடு வாழ்ந்த அருமை எலாம் ஓராயோ

#15
நீயும் அறமும் நிலத்து இருத்தல் மெய்யானால்
ஓயும் முனர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே

@28 சுதந்திர தாகம்
**ராகம் கமாஸ்
**தாளம் ஆதி

#1
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்
என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும்
அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே
ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே
வென்றி தரும் துணை நின் அருள் அன்றோ
மெய் அடியோம் இன்னும் வாடுதல் நன்றோ

#2
பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ
தஞ்சமடைந்த பின் கைவிடலோமோ
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப்போமோ
அஞ்சல் என்று அருள்செயும் கடமை இல்லாயோ
ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ
வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே
வீர சிகாமணி ஆரியர் கோனே

@29 சுதந்திர தேவியின் துதி

#1
இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும்
பதம் திரு இரண்டும் மாறிப் பழி மிகுந்து இழிவுற்றாலும்
விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும்
சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே

#2
நின் அருள்பெற்றிலாதார் நிகரிலாச் செல்வரேனும்
பன்னருங் கல்வி கேள்வி படைத்து உயர்ந்திட்டாரேனும்
பின்னரும் எண்ணிலாத பெருமையில் சிறந்தாரேனும்
அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோடு ஒப்பார்

#3
தேவி நின் ஒளி பெறாத தேயம் ஓர் தேயம் ஆமோ
ஆவி அங்கு உண்டோ செம்மை அறிவு உண்டோ ஆக்கம் உண்டோ
காவிய நூல்கள் ஞானக் கலைகள் வேதங்கள் உண்டோ
பாவியர் அன்றோ நிந்தன் பாலனம் படைத்திலாதார்

#4
ஒழிவறு நோயில் சாவார் ஊக்கம் ஒன்று அறியமாட்டார்
கழிவுறு மாக்கள் எல்லாம் இகழ்ந்திடக் கடையில் நிற்பார்
இழிவறு வாழ்க்கை தேரார் கனவிலும் இன்பம் காணார்
அழிவுறு பெருமை நல்கும் அன்னை நின் அருள்பெறாதார்
** வேறு

#5
தேவி நின் அருள் தேடி உளம் தவித்து
ஆவியும் தமது அன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெம் சிறையாயினும்
தாவில் வானுலகு என்னத் தகுவதே

#6
அம்மை உன்றன் அருமை அறிகிலார்
செம்மை என்று இழி தொண்டினைச் சிந்திப்பார்
இம்மை இன்பங்கள் எய்து பொன் மாடத்தை
வெம்மையார் புன் சிறை எனல் வேண்டுமே

#7
மேற்றிசைப் பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நினைப் புது நிலை எய்தினர்
கூற்றினுக்கு உயிர் கோடி கொடுத்தும் நின்
பேற்றினைப் பெறுவேம் எனல் பேணினர்

#8
அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன்
என்ன கூறி இசைத்திட வல்லனே
பின்னமுற்றுப் பெருமை இழந்து நின்
சின்னமற்று அழி தேயத்தில் தோன்றினேன்

#9
பேரறத்தினைப் பேணுதல் வேலியே
சோர வாழ்க்கை துயர் மிடி ஆதிய
கார் அறுக்கக் கதித்திடு சோதியே
வீரருக்கு அமுதே நினை வேண்டுவேன்

@30 விடுதலை
**ராகம் பிலகரி

#1
விடுதலை விடுதலை விடுதலை

#2
பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை
திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே

#3
ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே

#4
மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வுதன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே

@31 சுதந்திரப் பள்ளு
**(பள்ளர் களியாட்டம்)
**ராகம் – வராளி : தாளம் – ஆதி
**பல்லவி

#0
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று

#1
பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே நம்மை
ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே

#2
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதைத்
தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

#3
எல்லோரும் ஒன்று என்னும் காலம் வந்ததே பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே இனி
நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே கெட்ட
நயவஞ்சக்காரருக்கு நாசம் வந்ததே

#4
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும்
வீணருக்கு உழைத்து உடலம் ஓயமாட்டோம்

#5
நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் பரி
பூரணனுக்கே அடிமைசெய்து வாழ்வோம்
** தேசிய இயக்கப் பாடல்கள்

@32 சத்ரபதி சிவாஜி
**(தன் சைனியத்திற்குக் கூறியது)

#1
ஜய ஜய பவானி ஜய ஜய பாரதம்
ஜய ஜய மாதா ஜய ஜய துர்க்கா
வந்தேமாதரம் வந்தேமாதரம்
சேனைத் தலைவர்காள் சிறந்த மந்திரிகாள்
யானைத் தலைவரும் அரும் திறல் வீரர்காள் 5
அதி ரத மன்னர்காள் துரகத்து அதிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்
வேல் எறி படைகாள் சூல் எறி மறவர்காள்
காலன் உருக்கொளும் கணை துரந்திடுவீர்
மற்றும் ஆயிர விதம் பற்றலர்தம்மைச் 10
செற்றிடும் திறன் உடைத் தீர ரத்தினங்காள்
யாவிரும் வாழிய யாவிரும் வாழிய
தேவி நுந்தமக்கு எலாம் திருவருள் புரிக
மாற்றலர்தம் புலை நாற்றமே அறியா
ஆற்றல் கொண்டு இருந்தது இவ் அரும் புகழ் நாடு 15
வேதநூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரததேவி
வீரரும் அவர் இசை விரித்திடு புலவரும்
பார் எலாம் பெரும் புகழ் பரப்பிய நாடு
தர்மமே உருவமாத் தழைத்த பேரரசரும் 20
நிர்மல முனிவரும் நிறைந்த நல் நாடு
வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடும் நாடு
பாரதப் பூமி பழம் பெரும் பூமி
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் 25
பாரத நாடு பார்க்கு எலாம் திலகம்
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர்
வானகம் முட்டும் இமய மால் வரையும்
ஏனைய திசைகளில் இரும் திரைக் கடலும்
காத்திடும் நாடு கங்கையும் சிந்துவும் 30
தூத் திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன் அரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு
பைம் நிறப் பழனம் பசியிலாது அளிக்க
மை நிற முகில்கள் வழங்கும் பொன் நாடு 35
தேவர்கள் வாழ்விடம் திறல் உயர் முனிவர்
ஆவலோடு அடையும் அரும் புகழ் நாடு
ஊனம் ஒன்று அறியா ஞான மெய்ப் பூமி
வானவர் விழையும் மாட்சியார் தேயம்
பாரத நாட்டு இசை பகர யான் வல்லனோ 40
நீர் அதன் புதல்வர் நினைவு அகற்றாதீர்
தாய்த்திருநாட்டைத் தறுகண் மிலேச்சர்
பேய்த் தகை கொண்டோர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் 45
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய்கின்றார்
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர் கற்பழித்தலும் மறைவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார் 50
சாத்திரத் தொகுதியைத் தாழ்த்துவைக்கின்றார்
கோத்திர மங்கையர் குலம் கெடுக்கின்றார்
எண்ணில துணைவர்காள் எமக்கு இவர் செயும் துயர்
கண்ணியம் மறுத்தனர் ஆண்மையும் கடிந்தனர்
பொருளினைச் சிதைத்தனர் மருளினை விதைத்தனர் 55
திண்மையை அழித்துப் பெண்மை இங்கு அளித்தனர்
பாரதப் பெரும் பெயர் பழிப் பெயர் ஆக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர் 60
மற்று இதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து-கொல் வாழ்வீர்
மொக்குகள் தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்
தாய்த்திருநாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை 65
மாய்த்திட விரும்பான் வாழ்வும் ஓர் வாழ்வு-கொல்
மானம் என்று இலாது மாற்றலர் தொழும்பாய்
ஈனமுற்று இருக்க எவன்-கொலோ விரும்புவன்
தாய் பிறன் கைப்படச் சகிப்பவன் ஆகி
நாய் என வாழ்வோன் நமரில் இங்கு உளனோ 70
பிச்சை வாழ்வு உகந்து பிறருடை ஆட்சியில்
அச்சமுற்று இருப்போன் ஆரியன் அல்லன்
புன் புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலாது இருப்போன் ஆரியன் அல்லன்
மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும் 75
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்
ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர்
யார் இவண் உளர் அவர் யாண்டேனும் ஒழிக
படை முகத்து இறந்து பதம் பெற விரும்பாக்
கடைபடு மாக்கள் என் கண் முன் நில்லாதீர் 80
சோதரர்தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க
நாடு எலாம் பிறர் வசம் நண்ணுதல் நினையான்
வீடு சென்று ஒளிக்க விரும்புவோன் விரும்புக
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் 85
பாசமே பெரிது எனப் பார்ப்பவன் செல்க
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன் வயிறு
ஊட்டுதல் பெரிது என உண்ணுவோன் செல்க
ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில் இங்கு இருந்து எனை வெறுத்திடல் விரும்பேன் 90
ஆரியர் இரு-மின் ஆண்கள் இங்கு இரு-மின்
வீரியம் மிகுந்த மேன்மையோர் இரு-மின்
மானமே பெரிது என மதிப்பவர் இரு-மின்
ஈனமே பொறாத இயல்பினர் இரு-மின்
தாய்நாட்டு அன்புறு தனையர் இங்கு இரு-மின் 95
மாய் நாள் பெருமையின் மாய்பவர் இரு-மின்
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இரு-மின்
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இரு-மின்
ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின்
சோர நெஞ்சிலாத் தூயவர் இரு-மின் 100
தேவி தாள் பணியும் தீரர் இங்கு இரு-மின்
பாவியர் குருதியைப் பருகுவார் இரு-மின்
உடலினைப் போற்றா உத்தமர் இரு-மின்
கடல் மடுப்பினும் மனம் கலங்கலர் உதவு-மின்
வம்-மினோ துணைவீர் மருட்சிகொள்ளாதீர் 105
நம்மின் ஓர் ஆற்றலை நாழிகைப் பொழுது எனும்
புல்லிய மாற்றலர் பொறுக்க வல்லார்-கொல்
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
இன் அருள் நமக்கு ஓர் இரும் துணை ஆகும்
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் 110
வீமனும் துரோணனும் வீட்டுமன்தானும்
ராமனும் வேறு உள இரும் திறல் வீரரும்
நல் துணைபுரிவர் வானக நாடுறும்
வெற்றியே அன்றி வேறு எதும் பெறுகிலேம்
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வார் 115
செற்று இனி மிலேச்சரைத் தீர்த்திட வம்-மின்
ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழு-மின்
நீட்டிய வேல்களை நேர் இருந்து எறி-மின்
வாளுடை முனையினும் வயம் திகழ் சூலினும்
ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின் 120
உருளையின் இடையினும் மாற்றலர் தலைகள்
உருளையில் கண்டு நெஞ்சு உவப்புற வம்-மின்
நம் இதம் பெரு வளம் நலிந்திட விரும்பும்
வன்மியை வேரறத் தொலைத்த பின் அன்றோ
ஆண் எனப்பெறுவோம் அன்றி நாம் இறப்பினும் 125
வானுறு தேவர் மணி உலகு அடைவோம்
வாழ்வமேல் பாரத வான் புகழ்த் தேவியைத்
தாழ்வினின்று உயர்த்திய தடம் புகழ் பெறுவோம்
போர் எனில் இது போர் புண்ணியத் திருப்போர்
பாரினில் இது போல் பார்த்திடற்கு எளிதோ 130
ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம் யாம்
வேள்வியில் இது போல் வேள்வி ஒன்று இல்லை 135
தவத்தினில் இது போல் தவம் பிறிது இல்லை
முன்னையோர் பார்த்தன் முனைத் திசை நின்று
தன் எதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலை தரு குரவர் என்று 140
இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய்த்
தன் அரும் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே இவர் மீது அம்பையோ தொடுப்பேன்
வையகத்து அரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன் 145
மெய்யினில் நடுக்கம் மேவுகின்றதுவால்
கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது
வாய் உலர்கின்றது மனம் பதைக்கின்றது
ஓய்வுறும் கால்கள் உலைந்தது சிரமும்
வெற்றியை விரும்பேன் மேன்மையை விரும்பேன் 150
சுற்றம் இங்கு அறுத்துச் சுகம் பெறல் விரும்பேன்
எனை இவர் கொல்லினும் இவரை யான் தீண்டேன்
சினை அறுத்திட்ட பின் செய்வதோ ஆட்சி
எனப் பல கூறி அவ் இந்திரன் புதல்வன்
கனப் படை வில்லைக் களத்தினில் எறிந்து 155
சோர்வோடு வீழ்ந்தனன் சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்ற நம் தெய்விகப் பெருமான்
வில் எறிந்து இருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின்றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனாதியரைச் 160
செறுத்து இனி மாய்ப்பது தீமை என்கின்றாய்
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய்
வஞ்சகர் தீயர் மனிதரை வருத்துவோர்
நெஞ்சகத் தருக்கு உடை நீசர்கள் இன்னோர் 165
தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்
ஆரிய நீதி நீ அறிகிலை போலும்
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும் புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும் 170
பெரும் பதத் தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை
பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல்
ஈடிலாப் புகழினாய் எழுகவோ எழுக என்று
மெய்ஞ்ஞானம் நம் இறையவர் கூறக்
குன்று எனும் வயிரக் கொற்ற வான் புயத்தோன் 175
அறமே பெரிது என அறிந்திடும் மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர்தமை எலாம் பார்க்கு இரையாக்கினன்
விசயன் அன்று இருந்த வியன் புகழ் நாட்டில் 180
இசையும் நல் தவத்தால் இன்று வாழ்ந்திருக்கும்
ஆரிய வீரர்காள் அவருடை மாற்றலர்
தேரில் இ நாட்டினர் செறிவுடை உறவினர்
நம்மை இன்று எதிர்க்கும் நயனிலாப் புல்லோர்
செம்மை தீர் மிலேச்சர் தேசமும் பிறிதாம் 185
பிறப்பினில் அன்னியர் பேச்சினில் அன்னியர்
சிறப்புடை ஆரியச் சீர்மையை அறியார்

@33 கோக்கலே சாமியார் பாடல்
**(இராமலிங்க சுவாமிகள் களக்கமறப் பொதுநடனம் நான் கண்டுகொண்ட
** தருணம் என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது)
களக்கமுறும் மார்லி நடம் கண்டுகொண்ட தருணம்
கடைச் சிறியேன் உளம் பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி விழுந்திடுமோ
வெம்பாது விழினும் என்றன் கரத்தில் அகப்படுமோ
வளர்த்த பழம் கர்சான் என்ற குரங்கு கவர்ந்திடுமோ
மற்று இங்ஙன் ஆட்சிசெய்யும் அணில் கடித்துவிடுமோ
துளக்கமற யான் பெற்று இங்கு உண்ணுவனோ அல்லால்
தொண்டை விக்குமோ ஏதும் சொல் அரியதாமோ

@34 தொண்டு செய்யும் அடிமை
**(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேய
** உத்தியோகஸ்தன் கூறுவது)
**நந்தனார் சரித்திரத்திலுள்ள மாடு தின்னும் புலையா உனக்கு
** மார்கழித் திருநாளா என்ற பாட்டின் வர்ணமெட்டு

#1
தொண்டு செய்யும் அடிமை உனக்கு
சுதந்திர நினைவோடா
பண்டு கண்டது உண்டோ அதற்குப்
பாத்திரம் ஆவாயோ

#2
ஜாதிச் சண்டை போச்சோ உங்கள்
சமயச் சண்டை போச்சோ
நீதி சொல்ல வந்தாய் கண் முன்
நிற்கொணாது போடா

#3
அச்சம் நீங்கினாயோ அடிமை
ஆண்மை தாங்கினாயோ
பிச்சை வாங்கிப் பிழைக்கும் ஆசை
பேணுதல் ஒழித்தாயோ

#4
கப்பல் ஏறுவாயோ அடிமை
கடலைத் தாண்டுவாயோ
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை
கொற்றத் தவிசும் உண்டோ

#5
ஒற்றுமை பயின்றாயோ அடிமை
உடம்பில் வலிமை உண்டோ
வெற்றுரை பேசாதே அடிமை
வீரியம் அறிவாயோ

#6
சேர்ந்து வாழுவீரோ உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ
சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ

#7
வெள்ளை நிறத்தைக் கண்டால் பதறி
வெருவலை ஒழித்தாயோ
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கு இல்லை மறந்திடடா

#8
நாடு காப்பதற்கே உனக்கு
ஞானம் சிறிதும் உண்டோ
வீடு காக்கப் போடா அடிமை
வேலை செய்யப் போடா

#9
சேனை நடத்துவாயோ தொழும்புகள்
செய்திட விரும்புவாயோ
ஈனமான தொழிலே உங்களுக்கு
இசைவது ஆகும் போடா

@35 நம்ம ஜாதிக் கடுக்குமோ
** (புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்)
** ஓய் நந்தனாரே நம்ம ஜாதிக் கடுக்குமோ நியாயந் தானோ நீர் சொல்லும்
** என்ற வர்ணமெட்டு
**பல்லவி

#0
ஓய் திலகரே நம்ம ஜாதிக்கு அடுக்குமோ
செய்வது சரியோ சொல்லும்
**கண்ணிகள்

#1
முன் அறியாப் புது வழக்கம் நீர்
மூட்டிவிட்டது இந்தப் பழக்கம் இப்போது
எ நகரிலும் இது முழக்கம் மிக
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம்

#2
சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள்
தொழும்புகள் எல்லாம் வீணாய்ப் போச்சு இது
மதம்பிடித்தது போல் ஆச்சு எங்கள்
மனிதர்க்கு எல்லாம் வந்தது ஏச்சு

#3
வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் அன்றி
வேறெவர்க்கும் அது தியாஜ்யம் சிறு
பிள்ளைகளுக்கே உபதேசம் நீர்
பேசிவைத்தது எல்லாம் மோசம்

@36 நாம் என்ன செய்வோம்
**(நாம் என்ன செய்வோம் புலையரே இந்தப் பூமியிலில்லாத
** புதுமையைக் கண்டோம் என்ற வர்ணமெட்டு)
**ராகம் புன்னாகவராளி
**தாளம் ரூபகம்
**பல்லவி

#0
நாம் என்ன செய்வோம் துணைவரே இந்தப்
பூமியில் இல்லாத புதுமையைக் கண்டோம்
**சரணங்கள்

#1
திலகன் ஒருவனாலே இப்படி ஆச்சு
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு
பல திசையும் துஷ்டர் கூட்டங்கள் ஆச்சு
பையல்கள் நெஞ்சில் பயம் என்பதே போச்சு

#2
தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார்
செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார்
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்
பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார்

#3
பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை
பரதேசப் பேச்சில் மயங்குபவர் இல்லை
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை
சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை

#4
சீமைத் துணி என்றால் உள்ளம் கொதிக்கிறார்
சீர் இல்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்
தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார்
தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார்

@37 பாரத தேவியின் அடிமை
**(நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன் அல்லவே என்ற பாட்டின்
**வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதியது)
**பல்லவி

#0
அன்னியர்தமக்கு அடிமை அல்லவே நான்
அன்னியர்தமக்கு அடிமை அல்லவே
**சரணங்கள்

#1
மன்னிய புகழ் பாரத தேவி
தன் இரு தாள் இணைக்கு அடிமைக்காரன்

#2
இலகு பெரும் குணம் யாவைக்கும் எல்லையாம்
திலக முனிக்கு ஒத்த அடிமைக்காரன்

#3
வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம்
ஐயன் பூபேந்தரனுக்கு அடிமைக்காரன்

#4
காவலர் முன் நிற்பினும் மெய் தவறா எங்கள்
பாலர்தமக்கு ஒத்த அடிமைக்காரன்

#5
காந்து அனல் இட்டாலும் தர்மம் விடா ப்ரமம்
பாந்தவன் தாள் இணைக்கு அடிமைக்காரன்

@38 வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று
**ராகம் -தாண்டகம் : தாளம் – ஆதி

#1
நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய் கனல் மூட்டினாய்
வாட்டி உன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் வலி காட்டுவேன்

#2
கூட்டம் கூடி வந்தேமாதரம் என்று
கோஷித்தாய் எமை தூஷித்தாய்
ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல்
ஓட்டினாய் பொருள் ஈட்டினாய்

#3எ
கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள்
கூறினாய் சட்டம் மீறினாய்
ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே
ஏசினாய் வீரம் பேசினாய்

#4
அடிமைப் பேடிகள்தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் புன்மை போக்கினாய்
மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை
மீட்டினாய் ஆசை ஊட்டினாய்

#5
தொண்டு ஒன்றே தொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய் புகழ் வேண்டினாய்
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய் சோர்வை ஓட்டினாய்

#6
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் விதை தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ நீங்கள் உய்யவோ

#7
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
சொல்லுவேன் குத்திக் கொல்லுவேன்
தட்டிப் பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே
தள்ளுவேன் பழி கொள்ளுவேன்

@39 தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி

#1
சொந்த நாட்டில் பரர்க்கு அடிமைசெய்தே
துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ தெய்வம் பார்க்குமோ

#2
வந்தேமாதரம் என்று உயிர் போம் வரை
வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்
எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்
ஈனமோ அவமானமோ

#3
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு
போகவோ நாங்கள் சாகவோ
அழுதுகொண்டு இருப்போமோ ஆண்பிள்ளைகள்
அல்லமோ உயிர் வெல்லமோ

#4
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ பன்றிச் சேய்களோ
நீங்கள் மட்டும் மனிதர்களோ இது
நீதமோ பிடிவாதமோ

#5
பாரதத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ மனஸ்தாபமோ
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ இதில் செற்றமோ

#6
ஒற்றுமை வழி என்றே வழி என்பது
ஓர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம்
மலைவுறோம் சித்தம் கலைவுறோம்

#7
சதையைத் துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம்
சாயுமோ ஜீவன் ஓயுமோ
இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி
ஏகுமோ நெஞ்சம் வேகுமோ

@40 நடிப்புச் சுதேசிகள்
**(பழித்தறிவுறுத்தல்)
**கிளிக் கண்ணிகள்

#1
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடீ கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி

#2
கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றல் அன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ கிளியே
நாளில் மறப்பாரடீ

#3
சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க்கு உண்டாகுமோ கிளியே
அலிகளுக்கு இன்பம் உண்டோ

#4
கண்கள் இரண்டு இருந்தும் காணும் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ கிளியே
பேசிப் பயன் என்னடீ

#5
யந்திர சாலை என்பார் எங்கள் துணிகள் என்பார்
மந்திரத்தாலே எங்கும் கிளியே
மாங்கனி வீழ்வது உண்டோ

#6
உப்பு என்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடீ கிளியே
செய்வது அறியாரடீ

#7
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினால் சொல்வது அல்லால் கிளியே
நம்புதல் அற்றாரடீ

#8
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போல் உயிரைக் கிளியே
பேணியிருந்தாரடீ

#9
தேவி கோயிலில் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிது என்று எண்ணிக் கிளியே
அஞ்சிக்கிடந்தாரடீ

#10
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடீ கிளியே
ஊமைச் சனங்களடீ

#11
ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றும் இல்லா
மாக்களுக்கு ஓர்கணமும் கிளியே
வாழத் தகுதி உண்டோ

#12
மானம் சிறிது என்று எண்ணி வாழ்வு பெரிது என்று எண்ணும்
ஈனர்க்கு உலகம்தனில் கிளியே
இருக்க நிலைமை உண்டோ

#13
சிந்தையில் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல்
வந்தேமாதரம் என்பார் கிளியே
மனத்தில் அதனைக் கொள்ளார்

#14
பழமை பழமை என்று பாவனை பேசல் அன்றிப்
பழமை இருந்த நிலை கிளியே
பாமரர் ஏது அறிவார்

#15
நாட்டில் அவமதிப்பும் நாண் இன்றி இழி செல்வத்
தேட்டில் விருப்பும் கொண்டே கிளியே
சிறுமை அடைவாரடீ

#16
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ கிளியே
செம்மை மறந்தாரடீ

#17
பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத் தம் கண்ணால் கண்டும் கிளியே
சோம்பிக் கிடப்பாரடீ

#18
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா கிளியே
வந்தேமாதரம் என்பார்
** தேசியத் தலைவர்கள்

@41 வாழ்க நீ எம்மான்
**மகாத்மா காந்தி பஞ்சகம்

#1
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரததேசம்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க

#2
அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம்
குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கிப்
படி மிசைத் தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய்
** வேறு

#3
கொடிய வெம் நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ
இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலிப் புகழ்வது இங்கு உனையே
விடிவிலாத் துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம்
படி மிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய்

#4
தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும் கணித்தல்
மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல்
இன்ன மெய்ஞ்ஞானத் துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனில் பிணைத்திடத் துணிந்தனை பெருமான்

#5
பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம்
அரும் கலைவாணர் மெய்த் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு
வரும் கதி கண்டு பகைத் தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே

@42 குரு கோவிந்தர்

#1
ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு
விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம்
ஆனந்தபுரத்தில் ஆர்ந்து இனிது இருந்தனன்
பாஞ்சாலத்துப் படர் தரு சிங்கக்
குலத்தினை வகுத்த குருமணி ஆவான் 5
ஞானப் பெரும் கடல் நல் இசைக் கவிஞன்
வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும்
வீரர் நாயகன் மேதினி காத்த
குரு கோவிந்த சிங்கமாம் கோமகன்
அவன் திருக்கட்டளை அறிந்து பல் திசையினும் 10
பாஞ்சாலத்து உறு படைவலோர் நாள்தொறும்
நாள்தொறும் வந்து நண்ணுகின்றாரால்
ஆனந்தபுரத்தில் ஆயிரமாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்
கூடிவந்து எய்தினர் கொழும் பொழில் இனங்களும் 15
புன்னகை புனைந்த புது மலர்த் தொகுதியும்
பைம் நிறம் விரிந்த பழனக் காட்சியும்
நல்வரவு ஆகுக நம்மனோர் வரவு என்று
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற
புண்ணிய நாளில் புகழ் வளர் குரவன் 20
திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்
யாது அவன் கூறும் என் எமக்கு அருளும்
எப் பணி விதித்து எமது ஏழேழ் பிறவியும்
இன்புடைத்து ஆக்கும் எனப் பல கருதி
மாலோன் திருமுனர் வந்து கண் உயர்த்தே 25
ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்
தேவரை ஒத்தனர் திடுக்கெனப் பீடத்து
ஏறி நின்றது காண் இளமையும் திறலும்
ஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம்
விழிகளில் தெய்வப் பெரும் கனல் வீசிடத் 30
திருமுடி சூழ்ந்தோர் தேசி காத்திருப்ப
தூக்கிய கரத்தில் சுடர் உமிழ்ந்து இருந்தது
கூற நா நடுங்கும் ஓர் கொற்றக் கூர் வாள்
எண்ணிலா வீரர் இவ் உரு நோக்கி
வான்நின்று இறங்கிய மாந்திரிகன் முனர்ச் 35
சிங்கக் கூட்டம் திகைத்து இருந்தாங்கு
மோனமுற்று அடங்கி முடி வணங்கினரால்
வாள் நுனி காட்டி மாட்சியார் குரவன்
திருவுள நோக்கம் செப்புவன் தெய்வச்
சே இதழ் அசைவுறச் சினந்து ஓர் எரிமலை 40
குமுறுதல் போல் வெளிக் கொண்டன திருமொழி
வாள் இதை மனிதர் மார்பிடைக் குளிப்ப
விரும்புகின்றேன் யான் தீர்கிலா விடாய்கொள்
தருமத் தெய்வம் தான் பல குருதிப்
பல விழைகின்றதால் பக்தர்கள் நும்மிடை 45
நெஞ்சினைக் கிழித்து நிலம் மிசை உதிரம்
வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப
யார் வருகின்றீர் என்னலும் சீடர்கள்
நடுங்கி ஓர்கணம் வரை நா எழாது இருந்தனர்
கம்மென ஓர் சிறுகணம் கழிவுற்றது 50
ஆங்கு இருந்தார் பல்லாயிரருள் ஒரு
வீரன் முன் வந்து விளம்புவான் இஃதே
குருமணி நின் ஒரு கொற்ற வாள் கிழிப்ப
விடாய் அறாத் தருமம் மேம்படு தெய்வதத்து
இரை என மாய்வன் ஏற்று அருள்புரிகவே 55
புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம்
கோயிலுள் அவனைக் குரவர் கோன் கொடுசெல
மற்று அதன் நின்றோர் மடுவின் வந்தால் எனக்
குருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டனர்
பார்-மின் சற்குரு பளீரெனக் கோயிலின் 60
வெளிப் போந்து ஆங்கு மேவினோர் முன்னம்
முதல் பலி முடித்து முகம் மலர்ந்தோனாய்
மின்னெனப் பாய்ந்து மீண்டு வந்து உற்றனன்
மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கிப்
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன் கோன் 65
மானுடர் நெஞ்சில் இவ் வாளினைப் பதிக்கச்
சித்தம் நான் கொண்டேன் தேவிதான் பின்னும் ஓர்
பலி கேட்கின்றாள் பக்தர்காள் நும்முளே
இன்னும் இங்கு ஒருவன் இரத்தமே தந்து இக்
காளியைத் தாகம் கழித்திடத் துணிவோன் 70
எவன் உளன் எனலும் இன்னும் ஓர் துணிவுடை
வீரன் முன் நின்று விருப்பினை உணர்த்தினன்
இவனையும் கோயிலுள் இனிது அழைத்து ஏகி
இரண்டாம் பலி முடித்து ஈண்டினன் குரவன்
குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர் 75
இங்ஙனம் மீண்டுமே இயற்றிப்
பலி ஓர் ஐந்து பரமன் அங்கு அளித்தனன்
அறத்தினைத் தமது ஓர் அறிவினால் கொண்ட
மட்டிலே மானிடர் மாண் பெறலாகார்
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி 80
வாள் குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்
அவரே மெய்மையோர் முத்தரும் அவரே
தோன்று நூறாயிரம் தொண்டர்தம்முள்ளே
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே
தண் அருள் கடலாம் தகவு உயர் குரவன் 85
கொடுமை சேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்
ஐவரைக் கண்ட பின் அவ் இயல் உடையார்
எண்ணிலர் உளர் எனத் துணிந்து இன்பு எய்தினன்
வெய்ய செங்குருதியின் வீழ்ந்து தாம் இறந்து 90
சொர்க்கம் உற்றார் எனத் தொண்டர் கொண்டிருக்கும்
ஐந்து நல் மணி எனும் ஐந்து முத்தரையும்
கோயிலுள் இருந்து பேரவை முனர்க் கொணர்ந்தான்
ஆர்த்தனர் தொண்டர் அரு வியப்பு எய்தினர்
விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர் 95
ஜய ஜய குருமணி ஜய குரு சிங்கம்
எனப் பல வாழிகள் இசைத்தனர் ஆடினர்
அப்போழ்து இன் அருள் அவதரித்து அனையான்
நல் சுடர்ப் பரிதி நகைபுரிந்தாங்கு
குறுநகை புரிந்து குறையறு முத்தர் 100
ஐவர்கள்தம்மையும் அகமுறத் தழுவி
ஆசிகள் கூறி அவையினை நோக்கிக்
கடல் முழக்கு என்ன முழங்குவன் காணீர்
காளியும் நமது கனக நல் நாட்டுத்
தேவியும் ஒன்று எனத் தேர்ந்த நல் அன்பர்காள் 105
நடுக்கம் நீர் எய்த நான் ஐம் முறையும்
பலியிடச் சென்றது பாவனை மன்ற
என் கரத்தால்-கொலோ நும் உயிர் எடுப்பன்
ஐம் முறைதானும் அன்பரை மறைத்து நும்
நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே 110
தாய் மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர்
என்பது தெளிந்தேன் என் கர வாளால்
அறுத்தது இங்கு இன்று ஐந்து ஆடுகள் காண்பீர்
சோதனை வழியினும் துணிவினைக் கண்டேன்
களித்தது என் நெஞ்சம் கழிந்தன கவலைகள் 115
குரு கோவிந்தன் கொண்டதோர் தருமம்
சீடர்தம் மார்க்கம் எனப் புகழ் சிறந்தது
இன்னும் அ மார்க்கத்து இருப்பவர்தம் பெயர்
காலசா என்ப காலசா எனும் மொழி
முத்தர்தம் சங்க முறை எனும் பொருளது 120
முத்தர்தம் சபைக்கு மூலர்களாக மற்று
ஐவர் அன்னோர்தமை அருளினன் ஆரியன்
சமைந்தது காலசா எனும் பெயர்ச் சங்கம்
பாரதம் என்ற பழம் பெரு நாட்டினர்
ஆவி தேய்ந்து அழிந்திலர் ஆண்மையில் குறைந்திலர் 125
வீரமும் சிரத்தையும் வீந்திலர் என்று
புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்
அ நாள் முகுந்தன் அவதரித்து ஆங்கு ஓர்
தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி
மண் மாசு அகன்ற வான்படு சொற்களால் 130
எழுப்பிடுங்காலை இறந்துதான் கிடக்கிலள்
இளமையும் துணிவும் இசைந்து நம் அன்னை
சாதியின் மானம் தாங்க முற்படுவள் என்று
உலகினோர் அறிவிடை உறுத்தினன் முனிவன்
ஐம் பெரும் பூதத்து அகிலமே சமைத்த 135
முன்னவன் ஒப்ப முனிவனும் ஐந்து
சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச்
சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம்
கொடுங்கோல் பற்றிய புன்னகைக் குரிசிலர்
நடுங்குவராயினர் நகைத்தனள் சுதந்திரை 140
ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு
விக்கிரமார்க்கன் ஆண்டினில் வியன் புகழ்க்
குரு கோவிந்தன் கொற்றம் ஆர் சீடரைக்
கூட்டியே தெய்வக் கொலு ஒன்று அமைத்தனன்
காண்டற்கு அரிய காட்சி கவின் திகழ் 145
அரியாசனத்தில் அமர்ந்தனன் முனிவர் கோன்
சூழ்ந்திருந்தனர் உயிர்த் தொண்டர் தாம் ஐவரும்
தன் திருக்கரத்தால் ஆடைகள் சார்த்தி
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக்
கண்மணி போன்றோர் ஐவர் மேல் கனிந்து 150
குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி
காண்டிரோ முதலாம் காலசா என்றனன்
நாடும் தருமமும் நன்கு இதில் காப்பான்
அமைந்தது இச் சங்கம் அறி-மின் நீர் என்றான்
அருகினில் ஓடிய ஆற்றினின்று ஐயன் 155
இரும்புச் சிறுகலத்து இன் நீர் கொணர்ந்து
வாள் முனை கொண்டு மற்று அதைக் கலக்கி
மந்திரம் ஓதினன் மனத்தினை அடக்கிச்
சித்தமே முழுதும் சிவத்திடை ஆக்கிச்
சபம் உரைத்திட்டான் சயப் பெரும் திரு அக் 160
கொலு முனர் வந்து குதித்து நின்றிட்டாள்
ஆற்றுநீர்தனையோ அடித்தது அத் திருவாள்
அயர்ந்துபோய் நின்ற அரும் புகழ் பாரதச்
சாதியின் திறல்கள்தம்மையே இயக்கி
நல் உயிர் நல்கினன் நாடு எலாம் இயங்கின 165
தவமுடை ஐவரைத் தன் முனர் நிறுத்தி
மந்திர நீரை மாசறத் தெளித்து
அருள் மயம் ஆகி அவர் விழி தீண்டினன்
பார்-மினோ உலகீர் பரமன் அம் கரத்தால்
அவர் விழி தீண்டிய அக்கணத்து அன்றே 170
நாடு அனைத்திற்கும் நல்வழி திறந்தது
சீடர்கள் அனைவரும் தீட்சை இஃது அடைந்தனர்
ஐயன் சொல்வான் அன்பர்காள் நீவிர்
செய்திடப்பெற்ற தீட்சையின் நாமம்
அமிர்தம் என்று அறி-மின் அரும் பேறாம் இது 175
பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்
நுமக்கு இனித் தருமம் நுவன்றிடக் கேள்-மின்
ஒன்றாம் கடவுள் உலகிடைத் தோன்றிய
மானிடர் எல்லாம் சோதரர் மானிடர்
சமத்துவம் உடையார் சுதந்திரம் சார்ந்தவர் 180
சீடர்காள் குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந்தொட்டு நீர் யாவிரும் ஒன்றே
பிரிவுகள் துடைப்பீர் பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரம் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவிரும் 185
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதி ஒன்றனையே சார்ந்ததோர் ஆவீர்
அநீதியும் கொடுமையும் அழித்திடும் சாதி
மழித்திடல் அறியா வன்முகச் சாதி 190
இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும்
கையினில் வாளும் கழன்றிடாச் சாதி
சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி
அரசன் இல்லாது தெய்வமே அரசா
மானுடர் துணைவரா மறமே பகையாக் 195
குடியரசு இயற்றும் கொள்கையார் சாதி
அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினைப் பொறுக்கிலீர்
தாய்த்திருநாட்டைச் சந்ததம் போற்றிப்
புகழொடு வாழ்-மின் புகழொடு வாழ்-மின்
என்று உரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன் 200
அவன் அடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்
குருகோவிந்தக் கோமகன் நாட்டிய
கொடி உயர்ந்து அசையக் குவலயம் புகழ்ந்தது
ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி

@43 தாதாபாய் நவுரோஜி

#1
முன் நாளில் இராமபிரான் கோதமனாதிய புதல்வர் முறையின் ஈன்று
பல் நாடு முடி வணங்கத் தலைமை நிறுத்திய எமது பரதகண்ட
மின்னாள் இங்கு இந்நாளின் முதியோளாய்ப் பிறர் எள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர் சில மக்கள் அவர் அடிகள் சூழ்வாம்

#2
அவ் அறிஞர் அனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன்தன் அன்னை கண்ணீர்
எவ்வகையினும் துடைப்பேன் இன்றேல் என் உயிர் துடைப்பேன் என்னப் போந்து
யௌவன நாள் முதற்கொடு தான் எண்பதின் மேல் வயதுற்ற இன்றுகாறும்
செவ்வியுறத் தனது உடலம் பொருள் ஆவி யான் உழைப்புத் தீர்தல் இல்லான்

#3
கல்வியைப் போல் அறிவும் அறிவினைப் போலக் கருணையும் அக் கருணை போலப்
பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றிப் படைத்த வீரன்
வில் விறலால் போர்செய்தல் பயன் இலதாம் என அதனை வெறுத்தே உண்மைச்
சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றித் தனக்கு உழையாத் துறவி ஆவோன்

#4
மாதா வாய்விட்டு அலற அதைச் சிறிதும் மதியாதே வாணாள் போக்கும்
தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன்
வேதாவாயினும் அவனுக்கு அஞ்சாமே உண்மை நெறி விரிப்போன் எங்கள்
தாதாவாய் விளங்குறு நல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க

#5
எண்பஃது ஆண்டு இருந்தவன் இனிப் பல்லாண்டு இருந்து எம்மை இனிது காக்க
பண்பு அல்ல நமக்கு இழைப்போர் அறிவு திருந்துக எமது பரதநாட்டுப்
பெண் பல்லார் வயிற்றினும் அ நவுரோஜி போல் புதல்வர் பிறந்து வாழ்க
விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ

@44 பூபேந்திர விஜயம்

#1
பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன் ஞான
ரூபேந்திரன்தனக்குப் பின்வந்தோன் விண்ணவர்தம் உலகை ஆள் ப்ர
தாபேந்திரன் கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்க்கிலாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரதநாட்டிற்கு அடிமைபூண்டு வாழ்வோன்

#2
வீழ்த்தல் பெறத் தருமம் எலாம் மறம் அனைத்தும் கிளைத்துவர மேலோர்தம்மைத்
தாழ்த்த தமர் முன் ஓங்க நிலைபுரண்டு பாதகமே ததும்பிநிற்கும்
பாழ்த்த கலியுகம் சென்று மற்றொரு உகம் அருகில் வரும் பான்மை தோன்றக்
காழ்த்த மன வீரமுடன் யுகாந்திரத்தின் நிலை இனிது காட்டிநின்றான்

#3
மண் ஆளும் மன்னர் அவன்றனைச் சிறைசெய்திட்டாலும் மாந்தர் எல்லாம்
கண்ணாகக் கருதியவன் புகழ் ஓதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால்
எண்ணாது நல் பொருளைத் தீது என்பார் சிலர் உலகில் இருப்பர் அன்றே
விண் ஆரும் பரிதி ஒளி வெறுத்து ஒரு புள் இருள் இனிது விரும்பல் போன்றே

#4
இன்னாத பிறர்க்கு எண்ணான் பாரதநாட்டிற்கு இரங்கி இதயம் நைவான்
ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம் பெருமை எதும் அறிகிலாதார்
முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது எனப் பெரியோர் மொழிந்தார் அன்றே

@45 வாழ்க திலகன் நாமம்
**பல்லவி

#0
வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே
வீழ்க கொடுங்கோன்மை வீழ்க வீழ்கவே
**சரணங்கள்

#1
நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே
நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே
ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே

#2
கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான நல்ல
கருத்தினால் அதனைச் சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான்
சொல் விளக்கம் என்றதனிடைக் கோயில் ஆக்கினான்
ஸ்வாதந்தர்யம் என்றதனிடைக் கொடியைத் தூக்கினான்

#3
துன்பம் என்னும் கடலைக் கடக்கும் தோணி அவன் பெயர்
சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர்
அன்பு எனும் தேன் ஊறித் ததும்பும் புது மலர் அவன் பேர்
ஆண்மை என்னும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன் பேர்

@46 திலகர் முனிவர் கோன்

#1
நாமகட்குப் பெரும் தொண்டு இயற்றிப் பல்
நாட்டினோர்தம் கலையிலும் அவ்வவர்
தாம் அகத்து வியப்பப் பயின்று ஒரு
சாத்திரக் கடல் என விளங்குவோன்
மாமகட்குப் பிறப்பிடமாக முன்
வாழ்ந்து இந்நாளில் வறண்டு அயர் பாரதப்
பூமகட்கு மனம் துடித்தே இவள்
புன்மை போக்குவல் என்ற விரதமே

#2
நெஞ்சகத்து ஓர் கணத்திலும் நீங்கிலான்
நீதமே ஓர் உரு எனத் தோன்றினோன்
வஞ்சகத்தைப் பகை எனக் கொண்டதை
மாய்க்குமாறு மனத்தில் கொதிக்கின்றோன்
துஞ்சுமட்டும் இப் பாரதநாட்டிற்கே
தொண்டு இழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல் போல்
அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன்

#3
வீரம் மிக்க மராட்டியர் ஆதரம்
மேவிப் பாரததேவி திருநுதல்
ஆர வைத்த திலகம் எனத் திகழ்
ஐயன் நல் இசைப் பாலகங்காதரன்
சேரலர்க்கு நினைக்கவும் தீ என
நின்ற எங்கள் திலக முனிவர் கோன்
சீர் அடிக் கமலத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுக எனச் சிந்தித்தே

@47 லாஜபதி

#1
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளி தருதல் காண்கிலமோ நின்னை அவர் கனன்று இ நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்கள் எலாம் மறக்கொணாது எம்
எண்ணகத்தே லாஜபதி இடையின்றி நீ வளர்தற்கு என் செய்வாரே

#2
ஒரு மனிதன் தனைப் பற்றிப் பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல்
அருமை இலை எளிதின் அவர் புரிந்திட்டார் என்றிடினும் அந்த மேலோன்
பெருமையை நன்கு அறிந்தவனைத் தெய்வம் என நெஞ்சினுளே பெட்பில் பேணி
வரு மனிதர் எண்ணற்றார் இவரை எலாம் ஓட்டி எவர் வாழ்வது இங்கே

#3
பேரன்பு செய்தாரில் யாவரே பெரும் துயரம் பிழைத்துநின்றார்
ஆர் அன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்கு உற்ற
கோரங்கள் சொலத் தகுமோ பாரதநாட்டில் பக்தி குலவி வாழும்
வீரம் கொள் மனமுடையார் கொடும் துயரம் பல அடைதல் வியத்தற்கு ஒன்றோ

@48 லாஜபதியின் பிரலாபம்
**கண்ணிகள்

#1
நாடு இழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து
வீடு இழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே

#2
வேதமுனி போன்றோர் விருத்தராம் எந்தை இரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ

#3
ஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன்
மாசற்ற சோதி வதனம் இனிக் காண்பேனோ

#4
அன்றிலைப் போன்று என்னை அரைக்கணமேனும் பிரிந்தால்
குன்றி மனம் சோர்வாள் இக் கோலம் பொறுப்பாளோ

#5
வீடும் உறவும் வெறுத்தாலும் என் அருமை
நாடு பிரிந்த நலிவினுக்கு என் செய்கேனே

#6
ஆதி மறை தோன்றிய நல் ஆரியநாடு எந்நாளும்
நீதி மறைவு இன்றி நிலைத்த திருநாடு

#7
சிந்து எனும் தெய்வத் திருநதியும் மற்று அதில் சேர்
ஐந்து மணி ஆறும் அளிக்கும் புனல் நாடு

#8
ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர்தம்
வெம் புலனை வென்ற எண்ணில் வீரர்க்கும் தாய்நாடு

#9
நல் அறத்தை நாட்டுதற்கு நம் பெருமான் கௌரவராம்
புல்லியரைச் செற்று ஆழ்ந்த புனிதப் பெரு நாடு

#10
கல் நாணும் திண் தோள் கள வீரன் பார்த்தன் ஒரு
வில் நாண் ஒலி கேட்ட மேன்மைத் திருநாடு

#11
கன்னன் இருந்த கருணை நிலம் தர்மன் எனும்
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ் நாடு

#12
ஆரியர்தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தம் காதல் துறந்திருந்த நல் நாடு

#13
வீமன் வளர்த்த விறல் நாடு வில் அசுவத்
தாமன் இருந்து சமர்புரிந்த வீர நிலம்

#14
சீக்கர் எனும் எங்கள் நல் சிங்கங்கள் வாழ்தரு நல்
ஆக்கம் உயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன் நாடு

#15
ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு

#16
என் அருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ
பன்னரிய துன்பம் படர்ந்து இங்கே மாய்வேனோ

#17
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ
ஏதெல்லாம் யான் அறியாது என் மனிதர் பட்டனரோ

#18
என்னை நினைத்தும் இரங்குவரோ அல்லாது
பின்னைத் துயர்களில் என் பேரு மறந்திட்டாரோ

#19
தொண்டுபட்டு வாடும் என்றன் தூய பெரு நாட்டில்
கொண்டுவிட்டு அங்கு என்னை உடன் கொன்றாலும் இன்புறுவேன்

#20
எத்தனை ஜன்மங்கள் இருள் சிறையில் இட்டாலும்
தத்து புனல் பாஞ்சாலம்தனில் வைத்தால் வாடுகிலேன்

@49 வஉசிக்கு வாழ்த்து

#1
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக் கோவே
தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி
வேளாண்மை நின் துணைவர் பெறுக எனவே வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி

@50 மாஜினியின் சபதம் பிரதிக்கினை

#1
பேரருள் கடவுள் திருவடி ஆணை
பிறப்பு அளித்து எமை எலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என் அரு நாட்டின்
தவப் பெயரதன் மிசை ஆணை
பார வெம் துயர்கள் தாய்த்திருநாட்டின்
பணிக்கு எனப் பலவிதத்து உழன்ற
வீரர் நம் நாடு வாழ்க என வீழ்ந்த
விழுமியோர் திருப்பெயர் ஆணை

#2
ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர்
யாவர்க்கும் இயற்கையின் அளித்த
தேசம் இன்புறுவான் எனக்கு அவன் பணித்த
சீர் உயர் அறங்களின் ஆணை
மாசறு மெல் நல் தாயினைப் பயந்து என்
வழிக்கு எலாம் உறையுளாம் நாட்டின்
ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ
அத்தகை அன்பின் மீது ஆணை

#3
தீயன புரிதல் முறை தவிர் உடைமை
செம்மை தீர் அரசியல் அநீதி
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும்
அரும் பகை அதன் மிசை ஆணை
தேயம் ஒன்று அற்றேன் நற்குடிக்கு உரிய
உரிமைகள் சிறிதெனும் இல்லேன்
தூய சீர் உடைத்தாம் சுதந்திரத் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்

#4
மற்றை நாட்டவர் முன் நின்றிடும் போழ்து
மண்டும் என் வெட்கத்தின் ஆணை
முற்றிய வீடு பெறுக எனப் படைப்புற்று
அச் செயல் முடித்திட வலிமை
அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில்
ஆர்ந்த பேராவலின் ஆணை
நல் தவம்புரியப் பிறந்ததாயினும் இ
நலனறு மடிமையின் குணத்தால்

#5
வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண்
வளர்ந்திடும் ஆசை மீது ஆணை
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின் மீது ஆணை
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை
பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும்
புன் சிறைக் களத்திடை அழிந்தும்

#6
வேற்று நாடுகளில் அவர் துரத்துண்டும்
மெய் குலைந்து இறந்துமே படுதல்
ஆற்றகிலாராய் எம் அரு நாட்டின்
அன்னைமார் அழும் கணீர் ஆணை
மாற்றலர் எங்கள் கோடியர்க்கு இழைக்கும்
வகுக்கொணாத் துயர்களின் ஆணை
ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே
யான் செயும் சபதங்கள் இவையே

#7
கடவுள் இ நாட்டிற்கு ஈந்ததோர் புனிதக்
கட்டளைதன்னினும் அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்று இத்
தேசத்தே பிறந்தவர்க்கு எல்லாம்
உடனுறு கடமை ஆகும் என்பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்
தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன்
சமைக எனப் பணிப்பனேல் அதுதான்

#8
சமைதலுக்கு உரிய திறமையும் அதற்குத்
தந்துளன் என்பதை அறிந்தும்
அமையும் அத் திறமை ஜனங்களைச் சாரும்
அன்னவர் தமக்கு எனத் தாமே
தமை அலது எவர்கள் துணையும் இல்லாது
தம் அரும் திறமையைச் செலுத்தல்
சுமை எனப் பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே
சூழ்ச்சியாம் என்பதை அறிந்தும்

#9
கருமமும் சொந்த நலத்தினைச் சிறிதும்
கருதிடாது அளித்தலும்தானே
தருமமாம் என்றும் ஒற்றுமையோடு
தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமை கொள் வலியாம் என்றுமே மனத்தில்
பெயர்ந்திடா உறுதி மேற்கொண்டும்
அருமை சால் சபதம் இவை புரிகின்றேன்
ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே

#10
என்னுடன் ஒத்த தருமத்தை ஏற்றார்
இயைந்த இவ் வாலிபர் சபைக்கே
தன் உடல் பொருளும் ஆவியும் எல்லாம்
தத்தமா வழங்கினேன் எங்கள்
பொன் உயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது ஆகி
இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகிக்
குடியரசு இயன்றதாய் இலக

#11
இவருடன் யானும் இணங்கியே என்றும்
இது அலால் பிற தொழில் இலனாய்த்
தவமுறு முயற்சிசெய்திடக் கடவேன்
சந்ததம் சொல்லினால் எழுத்தால்
அவமறு செய்கை அதனினால் இயலும்
அளவு எல்லாம் எம்மவர் இந்த
நவமுறு சபையின் ஒரு பெரும் கருத்தை
நன்று இதன் அறிந்திடப் புரிவேன்

#12
உயரும் இ நோக்கம் நிறைவுற இணக்கம்
ஒன்றுதான் மார்க்கம் என்பதுவும்
செயம் நிலையாகச் செய்திடற்கு அறமே
சிறந்ததோர் மார்க்கம் என்பதுவும்
பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்தில்
பேணுமாறு இயற்றிடக் கடவேன்
அயல் ஒரு சபையில் இன்றுதோறு என்றும்
அமைந்திடாது இருந்திடக் கடவேன்

#13
எங்கள் நாட்டு ஒருமை என்னொடும் குறிக்கும்
இச் சபைத் தலைவராய் இருப்போர்
தங்கள் ஆக்கினைகள் அனைத்தையும் பணிந்து
தலைக்கொளற்கு என்றுமே கடவேன்
இங்கு எனது ஆவி மாய்ந்திடுமேனும்
இவர் பணி வெளியிடாதிருப்பேன்
துங்கம் ஆர் செயலால் போதனையாலும்
இயன்றிடும் துணை இவர்க்கு அளிப்பேன்

#14
இன்றும் எந்நாளும் இவை செயத் தவறேன்
மெய் இது மெய் இது இவற்றை
என்றுமே தவறு இழைப்பனேல என்னை
ஈசனார் நாசமே புரிக
அன்றியும் மக்கள் வெறுத்து எனை இகழ்க
அசத்தியப் பாதகம் சூழ்க
நின்ற தீ எழு வாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம் யான் உழலுக-மன்னோ

#15
பேசி நின்ற பெரும் பிரதிக்கினை
மாசிலாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி அருளுக ஏழையேற்கு
ஈசன் என்றும் இதயத்து இலகியே

@51 பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து

#1
அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்வாய்
முறத்தினால் புலியைத் தாக்கும் மொய் வரைக் குறப்பெண் போலத்
திறத்தினான் எளியை ஆகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்

#2
வண்மையால் வீழ்ந்துவிட்டாய் வாரி போல் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலிதல் இன்றி
ஒண்மை சேர் புகழே மேல் என்று உளத்திலே உறுதிகொண்டாய்
உண்மை தேர் கோல நாட்டார் உரிமையைக் காத்து நின்றாய்

#3
மானத்தால் வீழ்ந்துவிட்டாய் மதிப்பிலாப் பகைவர் வேந்தன்
வானத்தால் பெருமை கொண்ட வலிமைதான் உடையனேனும்
ஊனத்தால் உள்ளம் அஞ்சி ஒதுங்கிட மனம் ஒவ்வாமல்
ஆனத்தைச் செய்வோம் என்றே அவன் வழி எதிர்த்துநின்றாய்

#4
வீரத்தால் வீழ்ந்துவிட்டாய் மேல் வரை உருளும் காலை
ஓரத்தே ஒதுங்கித் தன்னை ஒளித்திட மனம் ஒவ்வாமல்
பாரத்தை எளிதாக் கொண்டாய் பாம்பினைப் புழுவே என்றாய்
நேரத்தே பகைவன்தன்னை நில் என முனைந்து நின்றாய்

#5
துணிவினால் வீழ்ந்துவிட்டாய் தொகையிலாப் படைகளோடும்
பிணி வளர் செருக்கினோடும் பெரும் பகை எதிர்த்த போது
பணிவது கருதமாட்டாய் பதுங்குதல் பயன் என்று எண்ணாய்
தணிவதை நினைக்கமாட்டாய் நில் எனத் தடுத்தல் செய்தாய்

#6
வெருளுதல் அறிவு என்று எண்ணாய் விபத்தை ஓர் பொருட்டாக் கொள்ளாய்
சுருள் அலை வெள்ளம் போலத் தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன் வலிமையாக் புகுந்த வேளை
உருளுக தலைகள் மானம் ஓங்குக என்று எதிர்த்துநின்றாய்

#7
யாருக்கே பகை என்றாலும் யார் மிசை இவன் சென்றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி உத்திரவு எண்ணிடாமல்
போருக்குக் கோலம் பூண்டு புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கும் இடம் இல்லாமல் வெட்டுவேன் என்று நின்றாய்

#8
வேள்வியில் வீழ்வது எல்லாம் வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண்டு உலகிற்கு என்றே வேதங்கள் விதிக்கும் என்பர்
ஆள்வினை செய்யும் போதில் அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண்டு உடனே மீளக் கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல்

#9
விளக்கு ஒளி மழுங்கிப்போக வெயில் ஒளி தோன்றும் மட்டும்
களக்கம் ஆர் இருளின் மூழ்கும் கனக மாளிகையும் உண்டாம்
அளக்கரும் தீதுற்றாலும் அச்சமே உளத்துக் கொள்ளார்
துளக்கற ஓங்கி நிற்பர் துயர் உண்டோ துணிவுள்ளோர்க்கே

@52 புதிய ருஷியா
**(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)

#1
மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர்

#2
இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி
சரண் இன்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னைத்
திரணம் எனக் கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம்
அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில்

#3
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவு இல்லை பிணிகள் பல உண்டு பொய்யைத்
தொழுது அடிமைசெய்வாருக்குச் செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கு எல்லாம்
எழுதரிய பெரும் கொடுமைச் சிறை உண்டு தூக்கு உண்டே இறப்பது உண்டு
முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு

#4
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் இவ்வாறு அங்கே
செம்மை எல்லாம் பாழாகிக் கொடுமையே அறம் ஆகித் தீர்ந்த போதில்
அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை
மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன்

#5
இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனைச் சூழ்ந்து
சமயம் உளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயல் காற்றும் சூறைதன்னில்
திமுதிமென மரம் விழுந்து காடு எல்லாம் விறகான செய்தி போலே

#6
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி
கடி ஒன்றில் எழுந்தது பார் குடியரசு என்று உலகு அறியக் கூறிவிட்டார்
அடிமைக்குத் தளை இல்லை யாரும் இப்போது அடிமை இல்லை அறிக என்றார்
இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ

@53 கரும்புத் தோட்டத்திலே
**ஹரிகாம்போதி ஜன்யம்
**ராகம் – ஸைந்தவி : தாளம் – திஸ்ரசாப்பு
**பல்லவி

#0
கரும்புத் தோட்டத்திலே ஆ
கரும்புத் தோட்டத்திலே
**சரணங்கள்

#1
கரும்புத் தோட்டத்திலே அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய்
சுருங்குகின்றனரே அவர்
துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு
மருந்து இதற்கு இலையோ செக்கு
மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்தக்

#2
பெண் என்று சொல்லிடிலோ ஒரு
பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ அந்த
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணில் கலந்திடுமோ தெற்கு
மா கடலுக்கு நடுவினிலே அங்கு ஓர்
கண்ணற்ற தீவினிலே தனிக்
காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் அந்தக்

#3
நாட்டை நினைப்பாரோ எந்த
நாள் இனிப் போய் அதைக் காண்பது என்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல்
கேட்டிருப்பாய் காற்றே துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ அவர்
விம்மி அழவும் திறம்கெட்டும் போயினர்

#4
நெஞ்சம் குமுறுகிறார் கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிர் எல்லாம் துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்து ஒரு
தஞ்சமும் இல்லாதே அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்சவிடலாமோ ஹே
வீர மாகாளி சாமுண்டி காளீஸ்வரி
** தேசீய கீதங்கள் முற்றிற்று
*