பாரதியார் கவிதைகள் – பாஞ்சாலி சபதம்

1.தேசீய கீதங்கள் 2.தோத்திரப் பாடல்கள்(பக்திப் பாடல்கள்) 3.வேதாந்தப் பாடல்கள் (ஞானப் பாடல்கள்) 4.பல்வகைப் பாடல்கள் 5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை 7.கண்ணன் பாட்டு 8.பாஞ்சாலி சபதம் 9.குயில் பாட்டு 10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்) பாடல் தேடல் - பாடல் முதல் அடி - அகர வரிசையில்


@1 அழைப்புச் சருக்கம் (துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்)
**1 பிரம்ம ஸ்துதி
**நொண்டிச் சிந்து

#1
ஓம் எனப் பெரியோர்கள் என்றும் ஓதுவதாய் வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் துயர் தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே மனம் நாடரிதாய்ப் புந்தி தேடரிதாய்
ஆம் எனும் பொருள் அனைத்தாய் வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்

#2
நின்றிடும் பிரமம் என்பார் அந்த நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்
நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவசக்தி எனை மேவுறவே இருள் சாவுறவே
இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே
**2 ஸரஸ்வதி வணக்கம்

#3
வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினைக் கொண்டிருப்பாள்
கள்ளைக் கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ்க் கவி சொலவே
பிள்ளைப் பருவத்திலே எனைப் பேண வந்தாள் அருள்பூண வந்தாள்

#4
வேதத் திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள்
சீதக் கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்று உடையாள்
வாதத் தருக்கம் எனும் செவி வாய்ந்த நல் துணிவு எனும் தோடு அணிந்தாள்
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள்

#5
கற்பனைத் தேன் இதழாள் சுவைக் காவியம் எனும் மணிக் கொங்கையினாள்
சிற்பம் முதல் கலைகள் பல தேமலர்க் கரம் எனத் திகழ்ந்திருப்பாள்
சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவை அறிவார்
விற்பனத் தமிழ்ப் புலவோர் அந்த மேலவர் நா எனும் மலர்ப் பதத்தாள்

#6
வாணியைச் சரண்புகுந்தேன் அருள் வாக்கு அளிப்பாள் எனத் திடம் மிகுந்தேன்
பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள்
பூண் இயல் மார்பகத்தாள் ஐவர் பூவை திரௌபதி புகழ்க் கதையை
மாண் இயல் தமிழ்ப் பாட்டால் நான் வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே
**3 ஹஸ்தினாபுரம்

#7
அத்தினபுரம் உண்டாம் இவ் அவனியிலே அதற்கு இணையிலையாம்
பத்தியில் வீதிகளாம் வெள்ளைப் பனி வரை போல் பல மாளிகையாம்
முத்து ஒளிர் மாடங்களாம் எங்கும் மொய்த்து அளி சூழ் மலர்ச் சோலைகளாம்
நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம்

#8
அந்தணர் வீதிகளாம் மறை ஆதிகளாம் கலைச் சோதிகளாம்
செந்தழல் வேள்விகளாம் மிகச் சீர்பெறும் சாத்திரக் கேள்விகளாம்
மந்திர கீதங்களாம் தர்க்க வாதங்களாம் தவ நீதங்களாம்
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம்

#9
மெய்த் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம்
உய்த்திடு சிவஞானம் கனிந்து ஓர்ந்திடும் மேலவர் பலர் உண்டாம்
பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் கொண்டு கண் மயக்கால் பிழைப்போர் பலராம்

#10
மாலைகள் புரண்டு அசையும் பெரு வரை எனத் திரண்ட வன் தோளுடையார்
வேலையும் வாளினையும் நெடு வில்லையும் தண்டையும் விரும்பிடுவார்
காலையும் மாலையிலும் பகை காய்ந்திடு தொழில் பல பழகி வெம் போர்
நூலையும் தேர்ச்சிகொள்வோர் கரி நூறினைத் தனி நின்று நொறுக்க வல்லார்

#11
ஆரிய வேல் மறவர் புவி ஆளும் ஒர் கடும் தொழில் இனிது உணர்ந்தோர்
சீர் இயல் மதி முகத்தார் மணித் தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார்
வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் எனத் திரிவார்
பாரினில் இந்திரர் போல் வளர் பார்த்திவர் வீதிகள் பாடுவமே

#12
நல் இசை முழக்கங்களாம் பல நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம்
தொல் இசைக் காவியங்கள் அரும் தொழில் உணர் சிற்பர் செய் ஓவியங்கள்
கொல் இசை வாரணங்கள் கடும் குதிரைகள் அடு பெரும் தேர்கள் உண்டாம்
மல் இசை போர்கள் உண்டாம் திரள் வாய்ந்து இவை பார்த்திடுவோர்கள் உண்டாம்

#13
எண்ணரு கனி வகையும் இவை இலகி நல் ஒளிதரும் பணி வகையும்
தண் நறும் சாந்தங்களும் மலர்த் தார்களும் மலர் விழிக் காந்தங்களும்
சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும்
உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே

#14
சிவனுடை நண்பன் என்பார் வடதிசைக்கு அதிபதி அளகேசன் என்பார்
அவனுடைப் பெரும் செல்வம் இவர் ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்
தவனுடை வணிகர்களும் பல தரனுடைத் தொழில் செயும் மா சனமும்
எவனுடைப் பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே
**4 துரியோதனன் சபை

#15
கன்னங்கரியதுவாய் அகல் காட்சியதாய் மிகு மாட்சியதாய்
துன்னற்கு இனியதுவாய் நல்ல சுவைதரும் நீருடை யமுனை எனும்
வன்னத் திருநதியின் பொன் மருங்கிடைத் திகழ்ந்த அம் மணி நகரில்
மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவக் கொடி உயர்த்துநின்றான்

#16
துரியோதனப் பெயரான் நெஞ்சத் துணிவுடையான் முடி பணிவறியான்
கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான் என்று அக் கவிஞர்பிரான்
பெரியோன் வேதமுனி அன்று பேசிடும்படி திகழ் தோள்வலியோன்
உரியோர் தாம் எனினும் பகைக்குரியோர்தமக்கு வெம் தீயனையான்

#17
தந்தை சொல் நெறிப்படியே இந்தத் தடம் தோள் மன்னவன் அரசிருந்தான்
மந்திரம் உணர் பெரியோர் பலர் வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே
அந்தமில் புகழுடையான் அந்த ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன்
வந்தனைபெறும் குரவோர் பழமறைக்குல மறவர்கள் இருவரொடே

#18
மெய்ந்நெறி உணர் விதுரன் இனி வேறு பல் அமைச்சரும் விளங்கிநின்றார்
பொய்ந்நெறித் தம்பியரும் அந்தப் புலை நடைச் சகுனியும் புறம் இருந்தார்
மைந்நெறி வான் கொடையான் உயர் மானமும் வீரமும் மதியுமுளோன்
உய்ந்நெறி அறியாதான் இறைக்கு உயிர் நிகர் கன்னனும் உடன் இருந்தான்
**5 துரியோதனன் பொறாமை
**வேறு

#19
எண்ணிலாத பொருளின் குவையும் யாங்கணும் செலும் சக்கர மாண்பும்
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று வேண்டும் இன்பமும் பெற்றவனேனும்
கண்ணிலாத் திரிதாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்
**வேறு

#20
பாண்டவர் முடி உயர்த்தே இந்தப் பார் மிசை உலவிடு நாள் வரை நான்
ஆண்டது ஒர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஒர் பொருளாமோ
காண் தகு வில்லுடையோன் அந்தக் காளை அருச்சுனன் கண்களிலும்
மாண் தகு திறல் வீமன் தட மார்பிலும் எனது இகழ் வரைந்துளதே

#21
பாரதநாட்டில் உள்ள முடிப் பார்த்திவர் யார்க்கும் ஒர் பதி என்றே
நாரதன் முதல் முனிவோர் வந்து நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய்தான்
சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும்
வீரமிலாத் தருமன்தனை வேந்தர்தம் முதல் என விதித்தனவே

#22
ஆயிரம் முடிவேந்தர் பதினாயிரம் ஆயிரம் குறுநிலத்தார்
மா இரும் திறை கொணர்ந்தே அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திடவோ
தூ இழை ஆடைகளும் மணித் தொடையலும் பொன்னும் ஒர் தொகைப்படுமோ
சே இழை மடவாரும் பரித் தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ

#23
ஆணிப்பொன் கலசங்களும் ரவி அன்ன நல் வயிரத்தின் மகுடங்களும்
மாணிக்கக் குவியல்களும் பச்சை மரகதத் திரளும் நல் முத்துக்களும்
பூணிட்ட திருமணி தாம் பல புதுப்புது வகைகளில் பொலிவனவும்
காணிக்கையாக் கொணர்ந்தார் அந்தக் காட்சியை மறப்பதும் எளிதாமோ

#24
நால் வகைப் பசும்பொன்னும் ஒரு நாலாயிர வகைப் பணக் குவையும்
வேல் வகை வில் வகையும் அம்பு விதங்களும் தூணியும் வாள் வகையும்
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே
பால் வளர் மன்னவர்தாம் அங்குப் பணிந்ததை என் உளம் மறந்திடுமோ

#25
கிழவியர் தபசியர் போல் பழம் கிளிக்கதை படிப்பவன் பொறுமை என்றும்
பழவினை முடிவு என்றும் சொலிப் பதுங்கி நிற்போன் மறத்தன்மை இலான்
வழவழத் தருமனுக்கோ இந்த மாநில மன்னவர் தலைமைதந்தார்
முழவினைக் கொடி கொண்டான் புவி முழுதையும் தனியே குடிகொண்டான்

#26
தம்பியர் தோள் வலியால் இவன் சக்கரவர்த்தி என்று உயர்ந்ததுவும்
வெம்பிடு மத கரியான் புகழ் வேள்விசெய்து அ நிலை முழக்கியதும்
அம்புவி மன்னர் எலாம் இவன் ஆணை தம் சிரத்தினில் அணிந்தவராய்
நம்பரும் பெரும் செல்வம் இவன் நலம் கிளர் சபையினில் பொழிந்ததுவும்

#27
எப்படிப் பொறுத்திடுவேன் இவன் இளமையின் வளமைகள் அறியேனோ
குப்பை-கொலோ முத்தும் அந்தக் குரை கடல் நிலத்தவர் கொணர்ந்து பெய்தார்
சிப்பியும் பவளங்களும் ஒளி திரண்ட வெண்சங்கத்தின் குவியல்களும்
ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே

#28
மலைநாடு உடைய மன்னர் பல மான் கொணர்ந்தார் புதுத் தேன் கொணர்ந்தார்
கொலை நால்வாய் கொணர்ந்தார் மலைக் குதிரையும் பன்றியும் கொணர்ந்து தந்தார்
கலைமான் கொம்புகளும் பெரும் களிறுடைத் தந்தமும் கவரிகளும்
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார்

#29
செம் நிறத் தோல் கரும் தோல் அந்தத் திரு வளர் கதலியின் தோலுடனே
வெம் நிறப் புலித்தோல்கள் பல வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத் தோல்
பல் நிற மயிருடைகள் விலை பகரரும் பறவைகள் விலங்கினங்கள்
பொன் நிறப் பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள்

#30
ஏலம் கருப்பூரம் நறும் இலவங்கம் பாக்கு நல் சாதி வகை
கோலம் பெறக் கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார்
மேலும் தலத்திலுளார் பல வேந்தர் அப் பாண்டவர் விழைந்திடவே
ஓலம் தரக் கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே

#31
மாலைகள் பொன்னும் முத்தும் மணி வகைகளில் புனைந்தவும் கொணர்ந்து பெய்தார்
சேலைகள் நூறு வன்னம் பல சித்திரத் தொழில் வகை சேர்ந்தனவாய்
சாலவும் பொன் இழைத்தே தெய்வத் தையலர் விழைவன பலர் கொணர்ந்தார்
கோல நல் பட்டுக்களின் வகை கூறுவதோ எண்ணில் ஏறுவதோ

#32
கழல்களும் கடகங்களும் மணிக் கவசமும் மகுடமும் கணக்கிலவாம்
நிழல் நிறப் பரி பலவும் செம் நிறத்தன பலவும் வெண் நிறம் பலவும்
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம்
அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய்ப் பணி சேர்ந்தனவாய்

#33
காற்று எனச் செல்வனவாய் இவை கடிது உகைத்திடும் திறல் மறவரொடே
போற்றிய கையினராய்ப் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார்
சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம்
ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார்

#34
தென்திசைச் சாவகமாம் பெரும் தீவு தொட்டே வடதிசையதனில்
நின்றிடும் புகழ்ச் சீனம் வரை தேர்ந்திடும் பலப்பல நாட்டினரும்
வென்றி கொள் தருமனுக்கே அவன் வேள்வியில் பெரும் புகழ் விளையும் வண்ணம்
நன்று பல் பொருள் கொணர்ந்தார் புவி நாயகன் யுதிட்டிரன் என உணர்ந்தார்

#35
ஆடுகள் சிலர் கொணர்ந்தார் பலர் ஆயிரமாயிரம் பசுக் கொணர்ந்தார்
மாடுகள் பூட்டினவாய்ப் பல வகைப்படு தானியம் சுமந்தனவாய்
ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார்
நாடுறு தயில வகை நறு நானத்தின் பொருள் பலர் கொணர்ந்து தந்தார்

#36
நெய்க் குடம் கொண்டுவந்தார் மறை நியமம் கொள் பார்ப்பனர் மகத்தினுக்கே
மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே
தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள்
கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ

#37
தந்தத்தில் கட்டில்களும் நல்ல தந்தத்தின் பல்லக்கும் வாகனமும்
தந்தத்தின் பிடி வாளும் அந்தத் தந்தத்திலே சிற்பத் தொழில் வகையும்
தந்தத்தில் ஆதனமும் பின்னும் தமனிய மணிகளில் இவை அனைத்தும்
தந்தத்தைக் கணக்கிடவோ முழுத் தரணியின் திருவும் இத் தருமனுக்கோ
**வேறு

#38
என்று இவ்வாறு பலபல எண்ணி ஏழையாகி இரங்குதலுற்றான்
வன் திறத்து ஒரு கல் எனும் நெஞ்சன் வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்
குன்றம் ஒன்று குழைவுற்று இளகிக் குழம்புபட்டு அழிவு எய்திடும் வண்ணம்
கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல

#39
நெஞ்சத்து உள் ஓர் பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய்
மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம் வன்மை யாவும் மறந்தனன் ஆகிப்
பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலும் பாலர் போலும் பரிதவிப்பானாய்க்
கொஞ்ச நேரத்தில் பாதகத்தொடு கூடியே உறவு எய்தி நின்றானால்

#40
யாது நேரினும் எவ்வகையானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீதுசெய்து மடித்திட எண்ணிச் செய்கை ஒன்று அறியான் திகைப்பு எய்திச்
சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமனைத் தான் சரண் எய்தி
ஏது செய்வம் எனச் சொல்லி நைந்தான் எண்ணத்து உள்ளன யாவும் உரைத்தே

#41
மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த மா மகத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினைக் கண்டும்
என்ன பட்டது தன் உளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான் நெஞ்சில் கூறிய எல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான்
**6 துரியோதனன் சகுனியிடம் சொல்வது
**வேறு

#42
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ்
ஓங்கி நின்றார் இத் தருமனைப் போல் எவர் மாமனே
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள்
ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே
கலைகள் உணர்ந்த நல் வேதியப் பாவலர் செய்தவாம் பழம்
கற்பனைக் காவியம் பற்பல கற்றனை மாமனே
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்லப்
பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே

#43
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர்
யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண்
விதமுறச் சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த
வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி
இங்கு இவர் மீது அவனும் பகை எய்திடச் செய்குவாய்
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த
வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய்

#44
கண்ணைப் பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல
காமரு பொன் மணிப் பூண்கள் அணிந்தவர்தம்மையே
மண்ணைப் புரக்கும் புரவலர்தாம் அந்த வேள்வியில் கொண்டு
வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே எங்கள் மாமனே
எண்ணைப் பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரைப் பலர்
ஈந்தனர் மன்னர் இவர்தமக்குத் தொண்டு இயற்றவே
விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார் தெய்வ
வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார்

#45
நாரதன்தானும் அவ் வேதவியாசனும் ஆங்ஙனே பலர்
நான் இங்கு உரைத்தற்கு அரிய பெருமை முனிவரும்
மா ரத வீரர் அப் பாண்டவர் வேள்விக்கு வந்ததும் வந்து
மா மறை ஆசிகள் கூறிப் பெரும் புகழ் தந்ததும்
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல
விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல
தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும்

#46
விப்பிரர் ஆதிய நால் வருணத்தவர் துய்ப்பவே நல்
விருந்து செயலில் அளவற்ற பொன் செலவிட்டதும்
இப் பிறவிக்குள் இவை ஒத்த வேள்வி விருந்துகள் புவி
எங்கணும் நான் கண்டதில்லை எனத் தொனி பட்டதும்
தப்பு இன்றியே நல் விருந்தினர் யாருக்கும் தகுதிகள் கண்டு
தக்க சன்மானம் அளித்து வரிசைகள் இட்டதும்
செப்புக நீ அவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் இந்தச்
செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய்

#47
அண்ணன் மைந்தன் அவனிக்கு உரியவன் யான் அன்றோ அவர்
அடியவர் ஆகி எமைப் பற்றி நிற்றல் விதி அன்றோ
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார் அந்தப்
பாண்டவர் நமைப் புல் என எண்ணுதல் பார்த்தையோ
கண்ணனுக்கு முதல் உபசாரங்கள் காட்டினார் சென்று
கண்ணிலாத் தந்தைக்கு இச் செயலின் பொருள் காட்டுவாய்
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன்
மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய்

#48
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று
சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ
தந்திரத் தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர்
தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ
மந்திரத்தில் அச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய
மா மகத்தில் அதிதியைக் கொல்ல மரபு உண்டோ
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும் நெறி நன்றே இதை
எண்ணியெண்ணி என் நெஞ்சு கொதிக்குது மாமனே

#49
சதிசெய்தார்க்குச் சதிசெயல் வேண்டும் என் மாமனே இவர்
தாம் என் அன்பன் சராசந்தனுக்கு முன் எவ்வகை
விதி செய்தார் அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ இந்த
மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே
நிதி செய்தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே எந்த
நெறியினால் அது செய்யினும் நாய் என நீள் புவி
துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும்
சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம்
**வேறு

#50
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில்
பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும்
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் மார்பணி தந்ததும் ஒளி
ஓங்கிய மாலை அ மாகதன் தான் கொண்டு வந்ததும்
பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன்
பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்
முற்றிடும் மஞ்சனத்திற்குப் பலபல தீர்த்தங்கள் மிகு
மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும்

#51
மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல
வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும்
குஞ்சரச் சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்
கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர்
அஞ்சுவர் போல் அங்கு நின்று கவரி இரட்டவே கடல்
ஆளும் ஒருவன் கொடுத்ததொர் தெய்விகச் சங்கினில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறும் கங்கை நீர் கொண்டு திரு
மஞ்சனம் ஆட்டும் அப்போதில் எவரும் மகிழ்ந்ததும்

#52
மூச்சை அடைத்ததடா சபைதன்னில் விழுந்து நான் அங்கு
மூர்ச்சையடைந்தது கண்டனையே என்றன் மாமனே
ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த
ஏந்திழையாளும் எனைச் சிரித்தாள் இதை எண்ணுவாய்
பேச்சை வளர்த்துப் பயன் என்றும் இல்லை என் மாமனே அவர்
பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே
தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர்
செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே
**7 சகுனியின் சதி
**வேறு

#53
என்று சுயோதனன் கூறியே நெஞ்சம் ஈர்ந்திடக் கண்ட சகுனிதான் அட
இன்று தருகுவன் வெற்றியே இதற்கு இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன் இனி
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றிக் கருத்தொடு கேட்பையால் ஒரு
மன்று புனைந்திடச் செய்தி நீ தெய்வ மண்டபம் ஒத்த நலம் கொண்டே

#54
மண்டபம் காண வருவிர் என்று அந்த மன்னவர்தம்மை வரவழைத்து அங்கு
கொண்ட கருத்தை முடிப்பவே மெல்லக் கூட்டி வன் சூது பொரச் செய்வோம் அந்த
வண்டரை நாழிகை ஒன்றிலே தங்கள் வான் பொருள் யாவையும் தோற்று உனைப் பணி
தொண்டர் எனச் செய்திடுவன் யான் என்றன் சூதின் வலிமை அறிவை நீ

#55
வெம் சமர் செய்திடுவோம் எனில் அதில் வெற்றியும் தோல்வியும் யார் கண்டார் அந்தப்
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன்
நெஞ்சத்தில் சூதை இகழ்ச்சியாக் கொள்ள நீதம் இல்லை முன்னைப் பார்த்திவர் தொகை
கொஞ்சம் இலைப் பெரு சூதினால் வெற்றி கொண்டு பகையை அழித்துளோர்

#56
நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி நானிலத்தோர் கொடும் போர்செய்வார் அன்றி
ஓடும் குருதியைத் தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த
நாடும் குடிகளும் செல்வமும் ஒரு நாழிகைப் போதினில் சூதினால் வெல்லக்
கூடும் எனில் பிறிது எண்ணலேன் என்றன் கொள்கை இது எனக் கூறினான்

#57
இங்கு இது கேட்ட சுயோதனன் மிக இங்கிதம் சொல்லினை மாமனே என்று
சங்கிலிப் பொன்னின் மணி இட்ட ஒளித் தாமம் சகுனிக்குச் சூட்டினான் பின்னர்
எங்கும் புவி மிசை உன்னைப் போல் எனக்கு இல்லை இனியது சொல்லுவோர் என்று
பொங்கும் உவகையின் மார்புறக் கட்டிப் பூரித்து விம்மித் தழுவினான்
**8 சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்

#58
மற்று அதன் பின்னர் இருவரும் அரு மந்திரக் கேள்வியுடையவன் பெரும்
கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அரு
ளற்ற சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல்
வற்றித் துரும்பு ஒத்து இருக்கின்றான் உயிர் வாழ்வை முழுதும் வெறுக்கின்றான்

#59
உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ
நண்பர்களோடு உறவு எய்திடான் இளநாரியரைச் சிந்தைசெய்திடான் பிள்ளை
கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர்
திண் பருமத் தடம் தோளினாய் என்று தீய சகுனியும் செப்பினான்

#60
தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன்
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு
எந்தவிதத்தும் குறை உண்டோ நினை யாரும் எதிர்த்திடுவார் உண்டோ நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருள் எலாம் கணம் தேடிக் கொடுப்பவர் இல்லையோ

#61
இன் அமுது ஒத்த உணவுகள் அந்த இந்திரன் வெஃகுறும் ஆடைகள் பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி
மன்னும் அப் பாண்டவச் சோதரர் இவை வாய்ந்தும் உனக்குத் துயர் உண்டோ

#62
தந்தை வசனம் செவியுற்றே கொடி சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமகன்
வெம் தழல் போலச் சினம்கொண்டே தன்னை மீறிப் பல சொல் விளம்பினான் இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய
சிந்தை வெதுப்பத்தினால் இவன் சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால்

#63
தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல்
என்னைப் பணித்தனன் யான் இவன்றனை இங்கு வலியக் கொணர்ந்திட்டேன் பிள்ளை
நல் நயமே சிந்தைசெய்கின்றான் எனில் நன்கு மொழிவது அறிந்திலன் நெஞ்சைத்
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ

#64
நீ பெற்ற புத்திரனே அன்றோ மன்னர் நீதி இயல்பில் அறிகின்றான் ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும்
ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல்

#65
வேள்வியில் அன்று அந்தப் பாண்டவர் நமை வேண்டுமட்டும் குறைசெய்தனர் ஒரு
கேள்வி இலாது உன் மகன்றனைப் பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி
ஆள்வினை முன்னவர்க்கு இன்றியே புகழ் ஆர்ந்து இளையோர் அது கொள்வதைப் பற்றி
வாள் விழி மாதரும் நம்மையே கயமக்கள் என்று எண்ணி நகைத்திட்டார்

#66
ஆயிரம் யானை வலி கொண்டான் உந்தன் ஆண்டகை மைந்தன் இவன் கண்டாய் இந்த
மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி
ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடித் தொழுதிடும் தன்மை போல் அவர்
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார்

#67
ஐய நின் மைந்தனுக்கு இல்லை காண் அவர் அர்க்கியம் முற்படத் தந்ததே இந்த
வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக
நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும் உன்றன் சேயினை வைத்தனர் பாண்டவர்

#68
பாண்டவர் செல்வம் விழைகின்றான் புவிப் பாரத்தை வேண்டிக் குழைகின்றான் மிக
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம்
பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணிப் பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன்
ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ

#69
நித்தம் கடலினில் கொண்டுபோய் நல்ல நீரை அளவின்றிக் கொட்டுமாம் உயர்
வித்தகர் போற்றிடும் கங்கையாறு அது வீணில் பொருளை அழிப்பதோ ஒரு
சத்தமிலா நெடும் காட்டினில் புனல் தங்கி நிற்கும் குளம் ஒன்று உண்டாம் அது
வைத்ததன் நீரைப் பிறர் கொளாவகை வாரடைப் பாசியில் மூடியே

#70
சூரிய வெப்பம் படாமலே மரம் சூழ்ந்த மலை அடிக் கீழ்ப்பட்டே முடை
நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில்
ஆரியர் செல்வம் வளர்தற்கே நெறி ஆயிரம் நித்தம் புதியன கண்டு
வாரிப் பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ
**9 திரிதராட்டிரன் பதில் கூறுதல்

#71
கள்ளச் சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லித் தன் உள்ளத்தின் பொருள்
கொள்ளப் பகட்டுதல் கேட்ட பின் பெரும் கோபத்தோடே திரிதாட்டிரன் அட
பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு
வெள்ளத்தைப் புல் ஒன்று எதிர்க்குமோ இளவேந்தரை நாம் வெல்லல் ஆகுமோ

#72
சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில்
ஆதரம் கொண்டவர் அல்லரோ முன்னர் ஆயிரம் சூழ்ச்சி இவன் செய்தும் அந்தச்
சீதரன் தண் அருளாலும் ஓர் பெரும் சீலத்தினாலும் புயவலி கொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலே பிழைத்து எண்ணரும் கீர்த்திபெற்றார் அன்றோ

#73
பிள்ளைப் பருவம் தொடங்கியே இந்தப் பிச்சன் அவர்க்குப் பெரும்பகைசெய்து
கொள்ளப்படாத பெரும்பழி அன்றிக் கொண்டதொர் நன்மை சிறிது உண்டோ நெஞ்சில்
எள்ளத் தகுந்த பகைமையோ அவர் யார்க்கும் இளைத்த வகை உண்டோ வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய் பழநூலின் பொருளைச் சிதைக்கிறாய்

#74
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையைச் சிறு மண்குடம் கொள்ளச்
சொன்னதொர் நூல் சற்றுக் காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ்
துன்னப் புவிச் சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை
என்னக் கருதி அவர் எனைப் பணிந்து என் சொற்கு அடங்கி நடப்பவும்

#75
முன்னை இவன் செய்த தீது எலாம் அவர் முற்றும் மறந்தவராகியே தன்னைத்
தின்ன வரும் ஒர் தவளையைக் கண்டு சிங்கம் சிரித்து அருள்செய்தல் போல் துணை
என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே நின்றன்
சின்னமதியினை என் சொல்வேன் பகைசெய்திட எண்ணிப் பிதற்றினாய்

#76
ஒப்பில் வலிமையுடையதாம் துணையோடு பகைத்தல் உறுதியோ நம்மைத்
தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல்
அப்பி விழி தடுமாறியே இவன் அங்குமிங்கும் விழுந்து ஆடல் கண்டு அந்தத்
துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ

#77
தவறி விழுபவர்தம்மையே பெற்ற தாயும் சிரித்தல் மரபு அன்றோ எனில்
இவனைத் துணைவர் சிரித்ததோர் செயல் எண்ணரும் பாதகம் ஆகுமோ மனக்
கவலை வளர்த்திடல் வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ வெறும்
அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர்

#78
சின்னஞ்சிறிய வயதிலே இவன் தீமை அவர்க்குத் தொடங்கினான் அவர்
என் அரும் புத்திரன் என்று எண்ணித் தங்கள் யாகத்து இவனைத் தலைக்கொண்டு பசும்
பொன்னை நிறைத்ததொர் பையினை மனம் போலச் செலவிடுவாய் என்றே தந்து
மன்னவர் காண இவனுக்கே தம்முள் மாண்பு கொடுத்தனர் அல்லரோ

#79
கண்ணனுக்கே முதல் அர்க்கியம் அவர் காட்டினர் என்று பழித்தனை எனில்
நண்ணும் விருந்தினர்க்கு அன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால் அவர் அன்னியமா நமைக் கொண்டிலர் முகில்
வண்ணன் அதிதியர்தம்முளே முதல் மாண்புடையான் எனக் கொண்டனர்

#80
கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொலச் செய்தனர் இதைப்
பண்ணரும் பாவம் என்று எண்ணினால் அதன் பாரம் அவர்தமைச் சாருமோ பின்னும்
கண்ணனை ஏது எனக் கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து
எண்ணரும் மன்னவர்தம்முளே பிறர் யாரும் இலை எனல் காணுவாய்

#81
ஆதிப் பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல் மீதிலே நல்ல
சோதிப் பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு
போதத் துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசைத் தோன்றினான் இந்தச்
சீதக் குவளை விழியினான் என்று செப்புவார் உண்மை தெளித்தவர்

#82
நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தைத் தான் எனக் கொள்ளலும் பர
மோன நிலையின் நடத்தலும் ஒரு மூவகைக் காலம் கடத்தலும் நடு
வான கருமங்கள் செய்தலும் உயிர் யாவிற்கும் நல் அருள் பெய்தலும் பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும் தனது உள்ளம் அருளின் நெகுதலும்

#83
ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இப் பேறுகள் ஞானியர் இவை
தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமைச் சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த
மா இரு ஞாலம் அவர்தமைத் தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார்
**10 துரியோதனன் சினங் கொள்ளுதல்
**வேறு

#84
வெற்றி வேல் கைப் பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன்
பெற்றி மிக்க விதுரன் அறிவைப் பின்னும் மற்றொரு கண் எனக் கொண்டோன்
முற்று உணர் திரிதராட்டிரன் என்போன் மூடப் பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்றவாறு நயங்கள் புகட்ட

#85
கொல்லலும் நோய்க்கு மருந்து செய் போழ்தில் கூடும் வெம்மையதாய்ப் பிணக்குற்றே
தொல் உணர்வின் மருத்துவன்தன்னைச் சோர்வுறுத்துதல் போல் ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான்
கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும் கட்டுரைக்குக் கடும் சினமுற்றான்
**11 துரியோதனன் தீ மொழி
**வேறு

#86
பாம்பைக் கொடி என்று உயர்த்தவன் அந்தப் பாம்பு எனச் சீறி மொழிகுவான் அட
தாம் பெற்ற மைந்தர்க்குத் தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான் திருத் தேடினும் என்னை இகழ்கின்றான்

#87
மன்னர்க்கு நீதி ஒருவகை பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை என்று
சொன்ன வியாழ முனிவனை இவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும்
என்னென்னவோ கதை சொல்கிறான் உறவு என்றும் நட்பு என்றும் கதைக்கிறான் அவர்
சின்னமுறச் செயவே திறம்கெட்ட செத்தை என்று என்னை நினைக்கிறான்

#88
இந்திர போகங்கள் என்கிறான் உணவு இன்பமும் மாதரின் இன்பமும் இவன்
மந்திரமும் படை மாட்சியும் கொண்டு வாழ்வதைவிட்டு இங்கு வீணிலே பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே உளம் தேம்புதல் பேதைமை என்கிறான் மன்னர்
தந்திரம் தேர்ந்தவர்தம்மிலே எங்கள் தந்தையை ஒப்பவர் இல்லை காண்

#89
மாதர்தம் இன்பம் எனக்கு என்றான் புவி மண்டலத்து ஆட்சி அவர்க்கு என்றான் நல்ல
சாதமும் நெய்யும் எனக்கு என்றான் எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் அட
ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா

#90
சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனைச் சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்
கல்லிடை நார் உரிப்பார் உண்டோ நினைக் காரணம் காட்டுதல் ஆகுமோ என்னைக்
கொல்லினும் வேறு எது செய்யினும் நெஞ்சில் கொண்ட கருத்தை விடுகிலேன் அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக் கண்டு போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்

#91
வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொலக் கேட்பையால் ஒரு
தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களிச்
சூதுக்கு அவரை அழைத்து எலாம் அதில் தோற்றிடுமாறு புரியலாம் இதற்கு
ஏதும் தடைகள் சொல்லாமலே எனது எண்ணத்தை நீ கொளல் வேண்டுமால்
**12 திரிதராட்டிரன் பதில்
** வேறு

#92
திரிதராட்டிரன் செவியில் இந்தத் தீமொழி புகுதலும் திகைத்துவிட்டான்
பெரிதாத் துயர் கொணர்ந்தாய் கொடும் பேய் எனப் பிள்ளைகள் பெற்றுவிட்டேன்
அரி தாக்குதல் போலே அமர் ஆங்கு அவரொடு பொரல் அவலம் என்றேன்
நரி தாக்குதல் போலாம் இந்த நாணமில் செயலினை நாடுவனோ

#93
ஆரியர் செய்வாரோ இந்த ஆண்மையிலாச் செயல் எண்ணுவரோ
பாரினில் பிறர் உடைமை வெஃகும் பதரினைப் போல் ஒரு பதர் உண்டோ
பேரியல் செல்வங்களும் இசைப் பெருமையும் எய்திட விரும்புதியேல்
காரியம் இதுவாமோ என்றன் காளை அன்றோ இது கருதலடா

#94
வீரனுக்கே இசைவார் திரு மேதினி எனும் இரு மனைவியர் தாம்
ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல்
பாரதநாட்டினிலே அந்தப் பாண்டவர் எனப் புகழ் படைத்திடுவாய்
சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ

#95
தம் ஒரு கருமத்திலே நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை
இம்மியும் கருதாமை சார்ந்திருப்பவர்தமை நன்கு காத்திடுதல்
இம்மையில் இவற்றினையே செல்வத்து இலக்கணம் என்றனர் மூதறிஞர்
அம்ம இங்கு இதனை எலாம் நீ அறிந்திலையோ பிழை ஆற்றல் நன்றோ

#96
நின்னுடைத் தோளனையார் இளநிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ
என்னுடை உயிர் அன்றோ எனை எண்ணி இக் கொள்கையை நீக்குதியால்
பொன்னுடை மார்பகத்தார் இளம் பொன் கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும் பல் இன்பத்தினும் உளம் இசையவிட்டே இதை மறந்திடடா
**13 துரியோதனன் பதில்

#97
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரைத் தோளான்
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய்
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அப் பாண்டவர் வாரார்
இந்த வார்த்தை உரைத்துவிடாயேல் இங்கு நின் முன் என் ஆவி இறுப்பேன்

#98
மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச் சுருதியாம் எனக் கொண்டனை நீதான்
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான்

#99
தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ
உலைவு அலால் திரிதாட்டிர வர்க்கத்து உள்ளவர்க்கு நலம் என்பது இல்லை
நிலையிலாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்தல் இலாமே
விலையிலா நிதி கொண்டனம் என்றே மெய் குழைந்து துயில்பவர் மூடர்

#100
பழைய வான் நிதி போதும் என்று எண்ணிப் பாங்கு காத்திடும் மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர் கணத்துற்றே வென்று அழிக்கும் விதி அறியாயோ
குழைத்தல் என்பது மன்னவர்க்கு இல்லை கூடக்கூடப் பின் கூட்டுதல் வேண்டும்
பிழை ஒன்றே அரசர்க்கு உண்டு கண்டாய் பிறரைத் தாழ்த்துவதில் சலிப்பு எய்தல்
**வேறு

#101
வெல்வது எம் குலத்தொழிலாம் எந்தவிதத்தினில் இசையினும் தவறிலை காண்
நல்வழி தீயவழி என நாம் அதில் சோதனை செயத் தகுமோ
செல்வழி யாவினுமே பகை தீர்த்திடல் சாலும் என்றனர் பெரியோர்
கொல்வதுதான் படையோ பகை குமைப்பன யாவும் நல் படை அலவோ
** வேறு

#102
சுற்றத்தார் இவர் என்றனை ஐயா தோற்றத்தாலும் பிறவியினாலும்
பற்றலார் என்றும் நண்பர்கள் என்றும் பார்ப்பது இல்லை உலகினில் யாரும்
மற்று எத்தாலும் பகையுறல் இல்லை வடிவினில் இல்லை அளவினில் இல்லை
உற்ற துன்பத்தினால் பகை உண்டாம் ஓர் தொழில் பயில்வார்தமக்குள்ளே

#103
பூமித் தெய்வம் விழுங்கிடும் கண்டாய் புரவலர் பகை காய்கிலர்தம்மை
நாம் இப் பூதலத்தே குறைவு எய்த நாளும் பாண்டவர் ஏறுகின்றாரால்
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல்
சாமி அந்தப் பகை மிகலுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய்

#104
போர்செய்வோம் எனில் நீ தடுக்கின்றாய் புவியினோரும் பழி பல சொல்வார்
தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மைச் சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம்
யார் செய் புண்ணியத்தோ நமக்கு உற்றான் எங்கள் ஆருயிர் போன்ற இ மாமன்
நேர்செய் சூதினில் வென்று தருவான் நீதித் தர்மனும் சூதில் அன்புள்ளோன்

#105
பகைவர் வாழ்வினில் இன்புறுவாயோ பாரதர்க்கு முடி மணி அன்னாய்
புகையும் என்றன் உளத்தினை வீறில் புன்சொல் கூறி அவித்திடலாமோ
நகைசெய்தார்தமை நாளை நகைப்போம் நமர் இப் பாண்டவர் என்னில் இஃதாலே
மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமைச் சார்ந்து நன்கு உய்வார்

#106
ஐய சூதிற்கு அவரை அழைத்தால் ஆடி உய்குதும் அஃது இயற்றாயேல்
பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ
நைய நின் முனர் என் சிரம் கொய்தே நான் இங்கு ஆவி இறுத்திடுவேனால்
செய்யலாவது செய்குதி என்றான் திரிதராட்டிரன் நெஞ்சம் உடைந்தான்
**14 திரிதராட்டிரன் சம்மதித்தல்
** வேறு

#107
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ
மதி செறி விதுரன் அன்றே இது வரும் திறன் அறிந்து முன் எனக்கு உரைத்தான்
அதிசயக் கொடுங்கோலம் விளைந்து அரசர்தம் குலத்தினை அழிக்கும் என்றான்
சதிசெயத் தொடங்கிவிட்டாய் நின்றன் சதியினில்தான் அது விளையும் என்றான்

#108
விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே
கதியுறும் காலன் அன்றோ இந்தக் கயமகன் என நினைச் சார்ந்துவிட்டான்
கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன்
வதியுறு மனை செல்வாய் என்று வழியும் கண்ணீரொடு விடைகொடுத்தான்
**15 சபா நிர்மாணம்
** வேறு

#109
மஞ்சனும் மாமனும் போயின பின்னர் மன்னன் வினைஞர் பலரை அழைத்தே
பஞ்சவர் வேள்வியில் கண்டது போலப் பாங்கின் உயர்ந்ததொர் மண்டபம் செய்வீர்
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே
கஞ்ச மலரில் கடவுள் வியப்பக் கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே

#110
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும் வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்
நல்ல தொழில் உணர்ந்தார் செயல் என்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை இசைத்துப் பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார்
**16 விதுரனைத் தூதுவிடல்

#111
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி
எம்பியின் மக்கள் இருந்து அரசாளும் இந்திரமாநகர் சார்ந்து அவர்தம்பால்
கொம்பினை ஒத்த மடப்பிடியோடும் கூடி இங்கு எய்தி விருந்து களிக்க
நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய்

#112
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நல் மணிமண்டபம் செய்ததும் சொல்வாய்
நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகித் திரும்பிய பின்னர்
பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்றக்
கூடும் வயதில் கிழவன் விரும்பிக் கூறினன் இஃது எனச் சொல்லுவை கண்டாய்

#113
பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட
தீச் செயல் இஃது என்று அதையும் குறிப்பால் செப்பிடுவாய் என மன்னவன் கூறப்
போச்சுது போச்சுது பாரதநாடு போச்சுது நல் அறம் போச்சுது வேதம்
ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம் ஐய இதனைத் தடுத்தல் அரிதோ

#114
என்று விதுரன் பெரும் துயர்கொண்டே ஏங்கிப் பல சொல் இயம்பிய பின்னர்
சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன்
வென்று படுத்தனன் வெவ் விதி என்னை மேலை விளைவுகள் நீ அறியாயோ
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான்
**17 விதுரன் தூது செல்லுதல்

#115
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்
அடவி மலை ஆறு எல்லாம் கடந்துபோகித்
திண்ணமுறு தடம் தோளும் உளமும் கொண்டு
திரு மலியப் பாண்டவர்தாம் அரசு செய்யும்
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான்
வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி
எண்ணமுறலாகித் தன் இதயத்துள்ளே
இனைய பல மொழி கூறி இரங்குவானால்

#116
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு
நீர் அமுதம் எனப் பாய்ந்து நிரம்பும் நாடு
கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும்
குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு
ஞாலம் எலாம் பசி இன்றிக் காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்கப்
பாலடையும் நறு நெய்யும் தேனும் உண்டு
பண்ணவர் போல் மக்கள் எலாம் பயிலும் நாடு

#117
அன்னங்கள் பொன் கமலத் தடத்தின் ஊர
அளி முரலக் கிளி மழலை அரற்றக் கேட்போர்
கன்னங்கள் அமுது ஊறக் குயில்கள் பாடும்
கா இனத்து நறு மலரின் கமழைத் தென்றல்
பொன் அங்க மணி மடவார் மாடம் மீது
புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச
வன்னம் கொள் வரைத்தோளார் மகிழ மாதர்
மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு

#118
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு
பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு
தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு
பாரதர்தம் நாட்டிலே நாசம் எய்தப்
பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே
**18 விதுரனை வரவேற்றல்
**வேறு

#119
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்துச்
சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே
எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி
மதுர மொழியில் குசலங்கள் பேசி மன்னனொடும் திருமாளிகை சேர்ந்தார்

#120
குந்தி எனும் பெயர்த் தெய்வதம்தன்னைக் கோமகன் கண்டு வணங்கிய பின்னர்
வெம் திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கித் தலைகுனிந்து ஆங்கு வந்து எய்தி
அந்தி மயங்க விசும்பிடைத் தோன்றும் ஆசைக் கதிர் மதி அன்ன முகத்தை
மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான்

#121
தங்கப் பதுமை என வந்து நின்ற தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி
அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர் ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர்
சிங்கம் எனத் திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசிப்
பொங்கு திருவின் நகர்வலம் வந்து போழ்து கழிந்து இரவாகிய பின்னர்
**19 விதுரன் அழைத்தல்

#122
ஐவர்தமையும் தனிக் கொண்டுபோகி ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே
மை வரைத் தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன்
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிரக் கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச் சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி

#123
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திடக் கேளீர்
மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாகத்
தங்கும் எழில் பெரு மண்டபம் ஒன்று தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர்
அங்கு அதன் விந்தை அழகினைக் காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன்

#124
வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பல தினம் ஆயினவேனும்
வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட
நாள் வைக்கும் சோதிடரால் இது மட்டும் நாயகன் நும்மை அழைத்திடவில்லை
கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது எனக் கண்டே

#125
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள்
சந்து கண்டே அச் சகுனி சொல் கேட்டுத் தன்மை இழந்த சுயோதன மூடன்
விந்தை பொருந்திய மண்டபத்து உம்மை வெய்ய புன் சூது களித்திடச் செய்யும்
மந்திரம் ஒன்றும் மனத்திடைக் கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன்
**20 தருமபுத்திரன் பதில்

#126
என்று விதுரன் இயம்பத் தருமன் எண்ணம் கலங்கிச் சில சொல் உரைப்பான்
மன்று புனைந்தது கேட்டும் இச் சூதின் வார்த்தையைக் கேட்டும் இங்கு என்றன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்றது ஐயா சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா
நன்று நமக்கு நினைப்பவனல்லன் நம்பல் அரிது சுயோதனன்தன்னை

#127
கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான்
சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ
வெல்லக் கடவர் எவர் என்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ
தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்தச் சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான்
**21 விதுரன் பதில்
** வேறு

#128
விதுரனும் சொல்லுகிறான் இதை விடம் எனச் சான்றவர் வெகுளுவர் காண்
சதுர் எனக் கொள்ளுவரோ இதன் தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்துவிட்டேன்
இது மிகத் தீது என்றே அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன்
மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றிப் பிதற்றுகிறான்

#129
கல் எனில் இணங்கிவிடும் அண்ணன் காட்டிய நீதிகள் கணக்கிலவாம்
புல்லன் அங்கு அவற்றை எலாம் உளம் புகுதவொட்டாது தன் மடமையினால்
சல்லியச் சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன்
சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினைத் தொடர்க என்றான்
**22 தருமபுத்திரன் தீர்மானம்

#130
தருமனும் இவ்வளவில் உளத் தளர்ச்சியை நீக்கி ஒர் உறுதிகொண்டே
பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான்
மருமங்கள் எவை செயினும் மதி மருண்டவர் விருந்து அறம் சிதைத்திடினும்
கருமம் ஒன்றே உளதாம் நங்கள் கடன் அதை நெறிப்படி புரிந்திடுவோம்

#131
தந்தையும் வரப் பணித்தான் சிறுதந்தையும் தூதுவந்து அதை உரைத்தான்
சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் எனத் தெளிந்துவிட்டேன்
முந்தை அச் சிலை ராமன் செய்த முடிவினை நம்மவர் மறப்பதுவோ
நொந்தது செயமாட்டோம் பழநூலினுக்கு இணங்கிய நெறி செல்வோம்

#132
ஐம் பெரும் குரவோர் தாம் தரும் ஆணையைக் கடப்பதும் அறநெறியோ
வெம் பெரு மத யானை பரி வியன் தேர் ஆளுடன் இரு தினத்தில்
பைம் பொழில் அத்திநகர் செலும் பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய்
மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான்
**23 வீமனுடைய வீரப்பேச்சு

#133
வீமனும் திகைத்துவிட்டான் இள விசயனை நோக்கி இங்கு இது சொலுவான்
மாமனும் மருமகனுமா நமை அழித்திடக் கருதி இவ் வழி தொடர்ந்தார்
தாமதம்செய்வோமோ செலத் தகும் தகும் என இடியுற நகைத்தான்
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண்

#134
நெடுநாள் பகை கண்டாய் இந்த நினைவினில் யான் கழித்தன பல நாள்
கெடும் நாள் வருமளவும் ஒரு கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ
படு நாள் குறி அன்றோ இந்தப் பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான்
விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா

#135
போரிடச் செல்வமடா மகன் புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார் இதை எத்தனை நாள் வரை பொறுத்திருப்போம்
பாரிடத்து இவரொடு நாம் எனப் பகுதி இவ் இரண்டிற்கும் காலம் ஒன்றில்
நேரிட வாழ்வு உண்டோ இரு நெருப்பினுக்கு இடையினில் ஒரு விறகோ
**24 தருமபுத்திரன் முடிவுரை
** வேறு

#136
வீமன் உரைத்தது போலவே உளம் வெம்பி நெடு வில் விசயனும் அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய
தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லைத் தட்டிப் பணிவொடு பேசினார் தவ
நேமத் தவறலும் உண்டு காண் நரர் நெஞ்சம் கொதித்திடு போழ்திலே

#137
அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு
வன்பு மொழி சொலக் கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட
முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன் என்னைப் பித்தன் என்று எண்ணி உரைத்திட்டீர்

#138
கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன் கணக்கில் சுழன்றிடும் சக்கரம் அது
தப்பி மிகையும் குறையுமாச் சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை
ஒப்பிடலாகும் புவியின் மேல் என்றும் உள்ள உயிர்களின் வாழ்விற்கே ஒரு
செப்பிடுவித்தையைப் போலவே புவிச் செய்திகள் தோன்றிடுமாயினும்

#139
இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு
எங்கணும் இன்றி எவற்றினும் என்றும் ஏறி இடையின்றிச் செல்வதாம் ஒரு
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று
மங்கி ஒர் நாளில் அழிவதாம் நங்கள் வாழ்க்கை இதனைக் கடந்ததோ

#140
தோன்றி அழிவது வாழ்க்கைதான் இங்குத் துன்பத்தொடு இன்பம் வெறுமையாம் இவை
மூன்றில் எது வருமாயினும் களி மூழ்கி நடத்தல் முறை கண்டீர் நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி
போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர்

#141
சேற்றில் உழலும் புழுவிற்கும் புவிச் செல்வம் உடைய அரசர்க்கும் பிச்சை
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம்
ஆற்றுதற்கு உள்ள கடமைதான் முன்வந்து அவ்வக்கணம்தொறும் நிற்குமால் அது
தோற்றும் பொழுதில் புரிகுவார் பல சூழ்ந்து கடமை அழிப்பரோ

#142
யாவருக்கும் பொது ஆயினும் சிறப்பு என்பர் அரசர்குலத்திற்கே உயர்
தேவரை ஒப்ப முன்னோர்தமைத் தங்கள் சிந்தையில் கொண்டு பணிகுதல் தந்தை
ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவிக்
காவலர்தம்மில் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர்-கொலோ
**25 நால்வரும் சம்மதித்தல்
** வேறு

#143
என்று இனைய நீதி பல தருமராசன்
எடுத்துரைப்ப இளைஞர்களும் தம் கைகூப்பிக்
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக்
குவலயத்திற்கு அறம் காட்டத் தோன்றினாய் நீ
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை
மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை
அன்றி அடியார்தமக்குக் கடன் வேறு உண்டோ
ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே

#144
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய்ச்
சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள
அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின்
ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல்
மன்பதையின் உளச் செயல்கள் தெளியக் காணும்
மன்னவனே மற்று அது நீ அறியாது ஒன்றோ
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல்
வழிச் செல்வோம் எனக் கூறி வணங்கிச் சென்றார்
**26 பாண்டவர் பயணமாதல்

#145
ஆங்கு அதன் பின் மூன்றாம் நாள் இளைஞரோடும்
அணியிழை அப் பாஞ்சாலர் விளக்கினோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவினோடும்
படையினோடும் இசையினோடும் பயணமாகித்
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ
நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே

#146
நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம்
நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும்
வரி வகுத்த உடல் புலியைப் புழுவும் கொல்லும்
வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்
கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும்
கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம்
புரி வகுத்த முந்நூலார் புலையர்தம்மைப்
போற்றிடுவார் விதி வகுத்த போழ்தின் அன்றே
**27 மாலை வருணனை

#147
மாலைப் போது ஆதலுமே மன்னன் சேனை
வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை
சேலைப் போல் விழியாளைப் பார்த்தன் கொண்டு
சென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில்
மேலைப் போம் பரிதியினைத் தொழுது கண்டான்
மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்லச் சாய்ந்து
பாலைப் போல் மொழி பிதற்ற அவளை நோக்கிப்
பார்த்தனும் அப் பரிதி எழில் விளக்குகின்றான்

#148
பாரடியோ வானத்தில் புதுமை எல்லாம்
பண்மொழீ கணம்தோறும் மாறிமாறி
ஓர் அடி மற்றோர் அடியோடு ஒத்தல் இன்றி
உவகையுற நவநவமாத் தோன்றுங் காட்சி
யாரடி இங்கு இவை போலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும்
செழும் சோதி வனப்பை எலாம் சேரக் காண்பாய்

#149
கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்
கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்
கணம்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டிக்
காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம்
கணம்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்

#150
அடிவானத்தே அங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடி வானத்து ஒளி மின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்
வடிவானதொன்றாகத் தகடு இரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்

#151
அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே
அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே
சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய்
தரணியில் இங்கு இது போல் ஓர் பசுமை உண்டோ
இமை குவிய மின் வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய்
உமை கவிதை செய்கின்றாள் எழுந்து நின்றே
உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே
** வேறு

#152
பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட்டு எரிவன ஓகோ
என்னடி இந்த வன்னத்து இயல்புகள்
எத்தனை வடிவம் எத்தனை கலவை
தீயின் குழம்புகள் செழும் பொன் காய்ச்சி 5
விட்ட ஓடைகள் வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத் தீவுகள் பாரடி
நீலப் பொய்கைகள் அடடா நீல
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடி
எத்தனை செம்மை பசுமையும் கருமையும் 10
எத்தனை கரிய பெரும்பெரும் பூதம்
நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத்
தோணிகள் சுடர் ஒளிப் பொன் கரை இட்ட
கரும் சிகரங்கள் காணடி ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம் பல மிதக்கும் 15
இருள் கடல் ஆஹா எங்கு நோக்கிடினும்
ஒளித் திரள் ஒளித் திரள் வன்னக் களஞ்சியம்
** வேறு

#153
செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக என்பதோர் நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர்
தங்கள் இனங்கள் இருந்த பொழிலிடைச் சார்ந்தனர் பின்னர்
அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் மன்னர் 5
பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே வழி
எங்கும் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே கதிர்
மங்கிடும் முன் ஒளி மங்கும் நகரிடை வந்துற்றார்
**துரியோதனன் சூழ்ச்சிச் சுருக்கம் முற்றும்

@2 சூதாட்டச் சருக்கம்
**28 வாணியை வேண்டுதல்

#154
தெளிவுறவே அறிந்திடல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல் கண்ணீர்த்
துளி வளர உள் உருக்குதல் இங்கு இவை எல்லாம் நீ அருளும் தொழில்கள் அன்றோ
ஒளி வளரும் தமிழ் வாணீ அடியனேற்கு இவை அனைத்தும் உதவுவாயே
**29 பாண்டவர் வரவேற்பு

#155
அத்தினமாநகரத்தினில் வந்தனர் ஆரியப் பாண்டவர் என்றது கேட்டலும்
தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள் சந்திகள் வீதிகள் சாலைகள் சோலைகள்
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர் இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர்
இத் தினம்மட்டும் என வியப்பு எய்துற எள்ளும் விழற்கு இடம் இன்றி இருந்தார்

#156
மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர் வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர்
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிகச் செய்தன
வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன
செந்திரு வாழும் நகரினில் அத் தினம் சேர்ந்த ஒலியைச் சிறிது எனலாமோ

#157
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நால் இயலாம் படையோடு நகரிடை நல்ல பவனி எழுந்த பொழுதினில்
சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திடச் சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திடக்
கோலிய பூமழை பெய்திடத் தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே
** வேறு

#158
மன்னவன் கோயிலிலே இவர் வந்து புகுந்தனர் வரிசையொடே
பொன் அரங்கினில் இருந்தான் கண்ணில் புலவனைப் போய் நின்று போற்றிய பின்
அன்னவன் ஆசி கொண்டே உயர் ஆரிய வீட்டுமன் அடி வணங்கி
வில் நயம் உணர் கிருபன் புகழ் வீரத் துரோணன் அங்கு அவன் புதல்வன்

#159
மற்று உள பெரியோர்கள்தமை வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார்
கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணிக் கொடியோன் இளையவர் சகுனியொடும்
பொன் தடம் தோள் சருவப் பெரும் புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண்டார்
நல் தவக் காந்தாரி முதல் நாரியர்தமை முறைப்படி தொழுதார்

#160
குந்தியும் இளங்கொடியும் வந்து கூடிய மாதர்தம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி அன்பு மூண்டு உரையாடிப் பின் பிரிந்துவிட்டார்
அந்தியும் புகுந்ததுவால் பின்னர் ஐவரும் உடல் வலித் தொழில் முடித்தே
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின்

#161
சந்தன மலர் புனைந்தே இளம் தையலர் வீணை கொண்டு உயிர் உருக்கி
விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார்
வந்ததொர் துன்பத்தினை அங்கு மடித்திடல் அன்றிப் பின் வரும் துயர்க்கே
சிந்தனை உழல்வாரோ உளச் சிதைவின்மை ஆரியர் சிறப்பு அன்றோ
**30 பாண்டவர் சபைக்கு வருதல்

#162
பாணர்கள் துதி கூற இளம்பகலவன் எழும் முனர்த் துயிலெழுந்தார்
தோள் நலத்து இணையில்லார் தெய்வம் துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து
பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடைப் போந்தனரால்
நாணமில் கவுரவரும் தங்கள் நாயகனொடும் அங்கு வீற்றிருந்தார்

#163
வீட்டுமன்தான் இருந்தான் அற விதுரனும் பார்ப்பனக் குரவர்களும்
நாட்டு மந்திரிமாரும் பிற நாட்டினர் பலபல மன்னர்களும்
கேட்டினுக்கு இரையாவான் மதி கெடும் துரியோதனன் கிளையினரும்
மாட்டுறு நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிடை வணங்கிநின்றார்
**31 சூதுக்கு அழைத்தல்

#164
புன் தொழில் கவறதனில் இந்தப் புவி மிசை இணையிலை எனும் புகழான்
நன்று அறியாச் சகுனி சபை நடுவினில் ஏறு எனக் களித்து இருந்தான்
வென்றி கொள் பெரும் சூதர் அந்த விவிஞ்சதி சித்திரசேனனுடன்
குன்று சத்தியவிரதன் இதழ் கூர் புருமித்திரன் சயன் என்பார்

#165
சாலவும் அஞ்சுதரும் கெட்ட சதிக்குணத்தார் பல மாயம் வல்லோர்
கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால்
மேலவர்தமை வணங்கி அந்த வெம் திறல் பாண்டவர் இளைஞர்தமை
ஆலமுற்றிடத் தழுவிச் செம்பொன் ஆதனத்து அமர்ந்த அப் பொழுதினிலே

#166
சொல்லுகின்றான் சகுனி அறத் தோன்றல் உன் வரவினைக் காத்து உளர் காண்
மல்லுறு தடம் தோளார் இந்த மன்னவர் அனைவரும் நெடும் பொழுதா
வில்லுறு போர்த்தொழிலால் புவி வென்று தம் குலத்தினை மேம்படுத்தீர்
வல்லுறு சூது எனும் போர்தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி என்றான்
**32 தருமன் மறுத்தல்

#167
தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய்
பெருமை இங்கு இதில் உண்டோ அறப் பெற்றி உண்டோ மறப் பீடு உளதோ
வருமம் நின் மனத்து உடையாய் எங்கள் வாழ்வினை உகந்திலை எனல் அறிவேன்
இருமையும் கெடுப்பதுவாம் இந்த இழிதொழிலால் எமை அழித்தலுற்றாய்
**33 சகுனியின் ஏச்சு

#168
கலகல எனச் சிரித்தான் பழிக் கவற்றை ஒர் சாத்திரம் எனப் பயின்றோன்
பலபல மொழிகுவது ஏன் உனைப் பார்த்திவன் என்று எணி அழைத்துவிட்டேன்
நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ எனப் பலர் சொலக் கேட்டதனால்
சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன்

#169
பாரத மண்டலத்தார்தங்கள் பதி ஒரு பிசுனன் என்று அறிவேனோ
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ
மா ரத வீரர் முன்னே நடு மண்டபத்தே பட்டப்பகலினிலே
சூரசிகாமணியே நின்றன் சொத்தினைத் திருடுவம் எனும் கருத்தோ

#170
அச்சம் இங்கு இதில் வேண்டா விரைந்து ஆடுவம் நெடும் பொழுதாயினதால்
கச்சை ஒர் நாழிகையா நல்ல காயுடன் விரித்து இங்கு கிடந்திடல் காண்
நிச்சயம் நீ வெல்வாய் வெற்றி நினக்கு இயல்பாயினது அறியாயோ
நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான்
**34 தருமனின் பதில்
** வேறு

#171
தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும்
தேவலப் பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவலர்க்கு விதித்தது அ நூலில் கவறும் நஞ்சு எனக் கூறினர் கண்டாய்

#172
வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார் மாயச் சூதைப் பழி எனக் கொள்வார்
அஞ்சல் இன்றிச் சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார்
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றிச் சொல் மிலேச்சரைப் போல் என்றும் சொல்லார்
மிஞ்சு சீர்த்தி கொள் பாரதநாட்டில் மேவும் ஆரியர் என்றனர் மேலோர்

#173
ஆதலால் இந்தச் சூதினை வேண்டேன் ஐய செல்வம் பெருமை இவற்றின்
காதலால் அரசாற்றுவனல்லேன் காழ்த்த நல் அறம் ஓங்கவும் ஆங்கே
ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலைத் தொகை யாவும்
சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய்

#174
என்னை வஞ்சித்து என் செல்வத்தைக் கொள்வோர் என்றனக்கு இடர் செய்பவரல்லர்
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார் மூதுணர்வில் கலைத் தொகை மாய்ப்பார்
பின்னை என் உயிர்ப் பாரதநாட்டில் பீடை செய்யும் கலியை அழைப்பார்
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான்
**35 சகுனி வல்லுக்கு அழைத்தல்
** வேறு

#175
சாத்திரம் பேசுகின்றாய் எனத் தழல்படு விழியொடு சகுனி சொல்வான்
கோத்திரக் குல மன்னர் பிறர் குறைபடத் தம் புகழ் கூறுவரோ
நாத் திறன் மிக உடையாய் எனில் நம்மவர் காத்திடும் பழ வழக்கை
மாத்திரம் மறந்துவிட்டாய் மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ

#176
தேர்ந்தவன் வென்றிடுவான் தொழில் தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான்
நேர்ந்திடும் வாட்போரில் குத்து நெறி அறிந்தவன் வெலப் பிறன் அழிவான்
ஓர்ந்திடு சாத்திரப் போர்தனில் உணர்ந்தவன் வென்றிட உணராதான்
சோர்ந்து அழிவு எய்திடுவான் இவை சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ

#177
வல்லவன் வென்றிடுவான் தொழில் வன்மையில்லாதவன் தோற்றிடுவான்
நல்லவன் அல்லாதான் என நாணமிலார் சொலும் கதை வேண்டா
வல் அமர் செய்திடவே இந்த மன்னர் முன்னே நினை அழைத்துவிட்டேன்
சொல்லுக வருவது உண்டேல் மனத் துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான்
**36 தருமன் இணங்குதல்

#178
வெய்யதான விதியை நினைந்தான் விலக்கொணாது அறம் என்பது உணர்ந்தோன்
பொய்யதாகும் சிறு வழக்கு ஒன்றைப் புலனிலாதவர்தம் உடம்பாட்டை
ஐயன் நெஞ்சில் அறம் எனக் கொண்டான் ஐயகோ அந்த நாள் முதலாகத்
துய்ய சிந்தையர் எத்தனை மக்கள் துன்பம் இவ் வகை எய்தினர் அம்மா

#179
முன்பு இருந்ததொர் காரணத்தாலே மூடரே பொய்யை மெய் எனலாமோ
முன்பு எனச் சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ
முன்பு எனச் சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே
முன்பு இருந்து எண்ணிலாது புவி மேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ

#180
நீர் பிறக்கும் முன் பார் மிசை மூடர் நேர்ந்தது இல்லை என நினைந்தீரோ
பார் பிறந்ததுதொட்டு இன்று மட்டும் பலப்பலப்பல பற்பல கோடி
கார் பிறக்கும் மழைத்துளி போலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும்
நீர் பிறப்பதன் முன்பு மடமை நீசத்தன்மை இருந்தன அன்றோ

#181
பொய் அழுக்கை அறம் என்று கொண்டும் பொய்யர் கேலியைச் சாத்திரம் என்றும்
ஐயகோ நங்கள் பாரதநாட்டில் அறிவிலார் அறப் பற்று மிக்குள்ளோர்
நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன்
மெய் அறிந்தவர்தம்முள் உயர்ந்தோன் விதியினால் அத் தருமனும் வீழ்ந்தான்

#182
மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள்
விதியினும் பெரிதோர் பொருள் உண்டோ மேலை நாம் செயும் கர்மம் அல்லாதே
நதியில் உள்ள சிறு குழிதன்னில் நான்கு திக்கிலிருந்தும் பல் மாசு
பதியுமாறு பிறர் செயும் கர்மப் பயனும் நம்மை அடைவது உண்டு அன்றோ
**37 சூதாடல்
** வேறு

#183
மாயச் சூதினுக்கே ஐயன் மனம் இணங்கிவிட்டான்
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்
நேயமுற்ற விதுரன் போலே நெறியுளோர்கள் எல்லாம்
வாயை மூடிவிட்டார் தங்கள் மதி மயங்கிவிட்டார்

#184
அந்த வேளையதனில் ஐவர்க்கு அதிபன் இஃது உரைப்பான்
பந்தயங்கள் சொல்வாய் சகுனி பரபரத்திடாதே
விந்தையான செல்வம் கொண்ட வேந்தரோடு நீதான்
வந்து எதிர்த்துவிட்டாய் எதிரே வைக்க நிதியம் உண்டோ

#185
தருமன் வார்த்தை கேட்டே துரியோதனன் எழுந்து சொல்வான்
அருமையான செல்வம் என்பால் அளவிலாதது உண்டு
ஒரு மடங்கு வைத்தால் எதிரே ஒன்பதாக வைப்பேன்
பெருமை சொல்ல வேண்டா ஐயா பின் அடக்குக என்றான்

#186
ஒருவன் ஆடப் பணயம் வேறே ஒருவன் வைப்பது உண்டோ
தருமமாகுமோடா சொல்வாய் தம்பி இந்த வார்த்தை
வருமம் இல்லை ஐயா இங்கு மாமன் ஆடப் பணயம்
மருமகன் வைக்கொணாதோ இதிலே வந்த குற்றம் ஏதோ

#187
பொழுது போக்குதற்கே சூதுப் போர் தொடங்குகின்றோம்
அழுதல் ஏன் இதற்கே என்றே அங்கர் கோன் நகைத்தான்
பழுதிருப்பது எல்லாம் இங்கே பார்த்திவர்க்கு உரைத்தேன்
முழுதும் இங்கு இதற்கே பின்னர் முடிவு காண்பீர் என்றான்

#188
ஒளி சிறந்த மணியின் மாலை ஒன்றை அங்கு வைத்தான்
களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான்
விழி இமைக்கும் முன்னே மாமன் வென்று தீர்த்துவிட்டான்
பழி இலாத தருமன் பின்னும் பந்தயங்கள் சொல்வான்

#189
ஆயிரம் குடம் பொன் வைத்தே ஆடுவோம் இது என்றான்
மாயம் வல்ல மாமன் அதனை வசமது ஆக்கிவிட்டான்
பாயுமா ஒர் எட்டில் செல்லும் பாரமான பொன் தேர்
தாயம் உருட்டலானார் அங்கே சகுனி வென்றுவிட்டான்

#190
இளையரான மாதர் செம்பொன் எழில் இணைந்த வடிவும்
வளை அணிந்த தோளும் மாலை மணி குலுங்கும் மார்பும்
விளையும் இன்ப நூல்கள்தம்மில் மிக்க தேர்ச்சியோடு
களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர்

#191
ஆயிரக்கணக்கா ஐவர்க்கு அடிமை செய்து வாழ்வோர்
தாயம் உருட்டலானார் அந்தச் சகுனி வென்றுவிட்டான்
ஆயிரங்கள் ஆவார் செம்பொன் அணிகள் பூண்டிருப்பார்
தூ இழைப் பொனாடை சுற்றும் தொண்டர்தம்மை வைத்தான்

#192
சோரன் அங்கு அவற்றை வார்த்தை சொல்லும் முன்னர் வென்றான்
தீரம் மிக்க தருமன் உள்ளத் திடன் அழிந்திடாதே
நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள்
வாரணங்கள் கண்டாய் போரில் மறலி ஒத்து மோதும்

#193
என்று வைத்த பணயம்தன்னை இழிஞன் வென்றுவிட்டான்
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்து இழந்தான்
நன்று இழைத்த தேர்கள் போரின் நடை உணர்ந்த பாகர்
என்று இவற்றை எல்லாம் தருமன் ஈடுவைத்து இழந்தான்

#194
எண்ணிலாத கண்டீர் புவியில் இணையிலாத ஆகும்
வண்ணம் உள்ள பரிகள்தம்மை வைத்து இழந்துவிட்டான்
நண்ணு பொன் கடாரம்தம்மில் நாலு கோடி வைத்தான்
கண்ணிழப்பவன் போல் அவையோர் கணம் அழிந்துவிட்டான்

#195
மாடு இழந்துவிட்டான் தருமன் மந்தை மந்தையாக
ஆடு இழந்துவிட்டான் தருமன் ஆள் இழந்துவிட்டான்
பீடு இழந்த சகுனி அங்கு பின்னும் சொல்லுகின்றான்
நாடு இழக்கவில்லை தருமா நாட்டை வைத்திடு என்றான்
**38 நாட்டை வைத்தாடுதல்
** வேறு

#196
ஐயகோ இதை யாது எனச் சொல்வோம் அரசரானவர் செய்குவது ஒன்றோ
மெய்யதாக ஒர் மண்டலத்து ஆட்சி வென்று சூதினில் ஆளும் கருத்தோ
வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள்
துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம் தூ என்று எள்ளி விதுரனும் சொல்வான்

#197
பாண்டவர் பொறை கொள்ளுவரேனும் பைம் துழாயனும் பாஞ்சாலத்தானும்
மூண்ட வெம் சினத்தோடு நம் சூழல் முற்றும் வேரறச்செய்குவர் அன்றோ
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின்
மாண்டு போரில் மடிந்து நரகில் மாழ்குதற்கு வகைசெயல் வேண்டா

#198
குலம் எலாம் அழிவு எய்திடற்கு அன்றோ குத்திரத் துரியோதனன்தன்னை
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே
அலறி ஓர் நரி போல் குரைத்திட்டான் அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய
கலகம் தோன்றும் இப் பாலகனாலே காணுவீர் எனச் சொல்லிடக் கேட்டோம்

#199
சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போலப்
பேதை நீயும் முகம் மலர்வு எய்திப் பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய்
மீது சென்று மலையிடைத் தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன்
பாதம் ஆங்கு நழுவிட மாயும் படு மலைச்சரிவு உள்ளது காணான்

#200
மற்று நீரும் இச் சூது எனும் கள்ளால் மதி மயங்கி வரும் செயல் காணீர்
முற்றும் சாதி சுயோதனனாம் ஓர் மூடற்காக முழுகிடலாமோ
பற்று மிக்க இப் பாண்டவர்தம்மைப் பாதகத்தில் அழித்திடுகின்றாய்
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே

#201
வீட்டுளே நரியை விடப் பாம்பை வேண்டிப் பிள்ளை என வளர்த்திட்டோம்
நாட்டுளே புகழ் ஓங்கிடுமாறு இ நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்
மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்
கேட்டிலே களியோடு செல்வாயோ கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ

#202
தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே
நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ நாதன் என்று உனைக் கொண்டவர் அன்றோ
எம்பிரான் உளம் கொள்ளுதியாயின் யாவும் தானம் எனக் கொடுப்பாரே
கும்பி மா நரகத்தினில் ஆழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே

#203
குருகுலத் தலைவன் சபைக்கண்ணே கொற்றம் மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்தி அக் கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏகத்
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே
அருகு வைக்கத் தகுதியுள்ளானோ அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே

#204
நெறி இழந்த பின் வாழ்வதில் இன்பம் நேரும் என்று நினைத்திடல் வேண்டா
பொறி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்தமை மாற்றலர் ஆக்கிச்
சிறியர் பாதகர் என்று உலகு எல்லாம் சீ என்று ஏச உகந்து அரசாளும்
வறிய வாழ்வை விரும்பிடலாமோ வாழி சூதை நிறுத்துதி என்றான்
**இரண்டாவது சூதாட்டச் சருக்கம் முற்றிற்று

@3 மூன்றாவது : அடிமைச் சருக்கம்
**39 பராசக்தி வணக்கம்

#205
ஆங்கு ஒரு கல்லை வாயிலில் படி என்று அமைத்தனன் சிற்பி மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவு என்று உயர்த்தினான் உலகினோர் தாய் நீ
யாங்கணே எவரை எங்ஙனம் சமைத்தற்கு எண்ணமோ அங்ஙனம் சமைப்பாய்
ஈங்கு உனைச் சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலைப் புலவன் ஆக்குதியே
**40 ஸரஸ்வதி வணக்கம்

#206
இடையின்றி அணுக்கள் எலாம் சுழலும் என இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றிக் கதிர்கள் எலாம் சுழலும் என வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப் பொருட்கு எல்லாம் இயற்கையாயின்
இடையின்றிக் கலைமகளே நினது அருளில் எனது உள்ளம் இயங்கொணாதோ
**41 விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்
** வேறு

#207
அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான்
நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவது உண்டோ
பொறி பறக்க விழிகள் இரண்டும் புருவம் ஆங்கு துடிக்கச் சினத்தின்
வெறி தலைக்க மதி மழுங்கிப்போய் வேந்தன் இஃது விளம்புதலுற்றான்
** வேறு

#208
நன்றிகெட்ட விதுரா சிறிதும் நாணமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா
அன்றுதொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய்
மன்றில் உன்னை வைத்தான் எந்தை மதியை என் உரைப்பேன்

#209
ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும்
தெய்வம் அன்று உனக்கே விதுரா செய்துவிட்டதேயோ
மெய் வகுப்பவன் போல் பொதுவாம் விதி உணர்ந்தவன் போல்
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவு தேடுகின்றாய்

#210
மன்னர் சூழ்ந்த சபையில் எங்கள் மாற்றலார்களோடு
முன்னர் நாங்கள் பணையம் வைத்தே முறையில் வெல்லுகின்றோம்
என்ன குற்றம் கண்டாய் தருமம் யாருக்கு உரைக்க வந்தாய்
கன்னம் வைக்கிறோமோ பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ

#211
பொய் உரைத்து வாழ்வார் இதழில் புகழ் உரைத்து வாழ்வார்
வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ
செய்யொணாத செய்வார் தம்மைச் சீருறுத்த நாடி
ஐய நீ எழுந்தால் அறிஞர் அவலம் எய்திடாரோ

#212
அன்பிலாத பெண்ணுக்கு இதமே ஆயிரங்கள் செய்தும்
முன்பின் எண்ணுவாளோ தருணம் மூண்ட போது கழிவாள்
வன்பு உரைத்தல் வேண்டா எங்கள் வலி பொறுத்தல் வேண்டா
இன்பம் எங்கண் உண்டோ அங்கே ஏகிடு என்று உரைத்தான்
**42 விதுரன் சொல்வது
** வேறு

#213
நன்று ஆகும் நெறி அறியா மன்னன் அங்கு
நான்கு திசை அரசர்சபை நடுவே தன்னைக்
கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொல் கூறிக்
குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான்
சென்றாலும் இருந்தாலும் இனி என்னேடா
செய்கை நெறி அறியாத சிறியாய் நின்னைப்
பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன்
பொல்லாத விதி என்னைப் புறங்கண்டானால்

#214
கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
கருங்கல்லில் விடம் தோய்த்த நெஞ்சும் கொண்டோர்
படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய்
பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர்
இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார்
இளகுமொழி கூறார் என நினைத்தே தானும்
நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய்
நினக்கு எவரும் கூறியவர் இல்லை-கொல்லோ

#215
நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக
வலம்கொண்ட மன்னரொடு பார்ப்பார்தம்மை
வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய்
சிலங்கைப் பொன் கச்சு அணிந்த வேசை மாதர்
சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர் மற்றும்
குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர்
கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய்

#216
சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா
செப்புவன நினக்கென நான் செப்பினேனோ
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார்
மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்
இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம்
யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய்
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி
வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே

#217
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான்
வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன்
சதி வழியைத் தடுத்து உரைகள் சொல்லப் போந்தேன்
சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை
மதி வழியே செல்லுக என விதுரன் கூறி
வாய் மூடித் தலைகுனிந்தே இருக்கை கொண்டான்
பதிவுறுவோம் புவியில் எனக் கலி மகிழ்ந்தான்
பாரதப்போர் வரும் என்று தேவர் ஆர்த்தார்
**43 சூது மீட்டும் தொடங்குதல்

#218
காய் உருட்டலானார் சூதுக் களி தொடங்கலானார்
மாயம் உள்ள சகுனி பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்
நீ அழித்தது எல்லாம் பின்னும் நின்னிடத்து மீளும்
ஓய்வடைந்திடாதே தருமா ஊக்கம் எய்துக என்றான்

#219
கோயில் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதியவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான்

#220
நாட்டு மாந்தர் எல்லாம் தம் போல் நரர்கள் என்று கருதார்
ஆட்டு மந்தையாம் என்று உலகை அரசர் எண்ணிவிட்டார்
காட்டும் உண்மை நூல்கள் பலதாம் காட்டினார்களேனும்
நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை

#221
ஓரம்செய்திடாமே தருமத்து உறுதி கொன்றிடாமே
சோரம் செய்திடாமே பிறரைத் துயரில் வீழ்த்திடாமே
ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை
சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம்
**44 சகுனி சொல்வது
** வேறு

#222
செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா
தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய்
பல் வளம் நிறை புவிக்கே தருமன்
பார்த்திவன் என்பது இனிப் பழங்கதை காண்
சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும்
சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல்
வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ்
வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம்

#223
எல்லாம் இழந்த பின்னர் நின்றன்
இளைஞரும் நீரும் மற்று எதில் பிழைப்பீர்
பொல்லா விளையாட்டில் பிச்சை
புக நினை விடுவதை விரும்புகிலோம்
வல்லார் நினது இளைஞர் சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணயம் என்றே
சொல்லால் உளம் வருந்தேல் வைத்துத்
தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான்
** வேறு

#224
கருணனும் சிரித்தான் சபையோர் கண்ணின் நீர் உதிர்த்தார்
இருள் நிறைந்த நெஞ்சன் களவே இன்பம் என்று கொண்டான்
அரவு உயர்த்த வேந்தன் உவகை ஆர்த்து எழுந்து சொல்வான்
பரவு நாட்டை எல்லாம் எதிரே பணயமாக வைப்போம்

#225
தம்பிமாரை வைத்தே ஆடித் தருமன் வென்றுவிட்டால்
முன்பு மாமன் வென்ற பொருளை முழுதும் மீண்டு அளிப்போம்
நம்பி வேலை செய்வோம் தருமா நாடு இழந்த பின்னர்
அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள்

#226
அவள் இகழ்ந்திடாளோ அந்த ஆயன் பேசுவானோ
கவலை தீர்த்துவைப்போம் மேலே களி நடக்குக என்றான்
இவளவான பின்னும் இளைஞர் ஏதும் வார்த்தை சொல்லார்
துவளும் நெஞ்சினாராய் வதனம் தொங்க வீற்றிருந்தார்

#227
வீமன் மூச்சுவிட்டான் முழையில் வெய்ய நாகம் போலே
காமன் ஒத்த பார்த்தன் வதனக் களை இழந்துவிட்டான்
நேமம் மிக்க நகுலன் ஐயோ நினைவு அயர்ந்துவிட்டான்
ஊமை போல் இருந்தான் பின்னோன் உண்மை முற்று உணர்ந்தான்

#228
கங்கைமைந்தன் அங்கே நெஞ்சம் கனலுறத் துடித்தான்
பொங்கு வெம் சினத்தால் அரசர் புகை உயிர்த்து இருந்தார்
அங்கம் நொந்துவிட்டான் விதுரன் அவலம் எய்திவிட்டான்
சிங்க மைந்தை நாய்கள் கொல்லும் செய்தி காணலுற்றே
**45 சகாதேவனைப் பந்தயம் கூறுதல்
** வேறு

#229
எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை
ஏற்றி உலகம் ஒர் ஆடல் போல் எண்ணித்
தப்பு இன்றி இன்பங்கள் துய்த்திடும் வகை
தான் உணர்ந்தான் ஸஹதேவனாம் எங்கும்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல்
உன்னித் தருமன் பணயம் என்று அங்குச்
செப்பினன் காயை உருட்டினார் அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான்
**46 நகுலனை இழத்தல்

#230
நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு
நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து
புகுவது போல் அவன் புந்தியில் என்ன
புன்மை செய்தோம் என எண்ணினான் அவ் எண்ணம்
மிகுவதன் முன்பு சகுனியும் ஐய
வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்கத்
தகுவர் என்று இந்தச் சிறுவரை வைத்துத்
தாயத்திலே இழந்திட்டனை

#231
திண்ணிய வீமனும் பார்த்தனும் குந்தி
தேவியின் மக்கள் உனை ஒத்தே நின்னில்
கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமைக்
காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று
புண்ணியம் மிக்க தருமனை அந்தப்
புல்லன் வினவிய போதினில் தர்மன்
துண்ணென வெம் சினம் எய்தியே அட
சூதில் அரசு இழந்து ஏகினும்
**47 பார்த்தனை இழத்தல்
**தர்மன் சொல்வது

#232
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர்
எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண் இவர்
பங்கமுற்றே பிரிவு எய்துவார் என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய் அட
சிங்க மறவர்தமக்குள்ளே வில்லுத்
தேர்ச்சியிலே நிகரற்றவன் எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும் விலை
ஈடு எனக் கொள்ளத் தகாதவன்

#233
கண்ணனுக்கு ஆருயிர்த் தோழனாம் எங்கள்
கண்ணிலும் சால இனியவன்
வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று
வானத்து அமரரைப் போன்றவன் அவன்
எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ்
ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய் என்று
பார்த்திவன் விம்மி உரைத்திட்டான்

#234
மாயத்தையே உருவாக்கிய அந்த
மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான் பின்பு
சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில்
தாயம் உருட்டி விழுத்தினான் அவன்
சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும்
ஈயத்தைப் பொன் என்று காட்டுவார் மன்னர்
இப் புவி மீது உளராம் அன்றோ
**48 வீமனை இழத்தல்

#235
கொக்கரித்து ஆர்த்து முழங்கியே களி
கூடிச் சகுனியும் சொல்லுவான் எட்டுத்
திக்கு அனைத்தும் வென்ற பார்த்தனை வென்று
தீர்த்தனம் வீமனைக் கூறு என்றான் தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன் உளம்
சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன் அறத்து
அண்ணல் இதனை உரைக்கின்றான்

#236
ஐவர் தமக்கு ஒர் தலைவனை எங்கள்
ஆட்சிக்கு வேர் வலி அஃதினை ஒரு
தெய்வம் முன்னே நின்று எதிர்ப்பினும் நின்று
சீறி அடிக்கும் திறலனை நெடும்
கை வளர் யானை பலவற்றின் வலி
காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள்
பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று
போ என்று உரைத்தனன் பொங்கியே

#237
போரினில் யானை விழக் கண்ட பல
பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை
ஓரி கழுகு என்று இவை எலாம் தமது
உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிகச்
சீரிய வீமனைச் சூதினில் அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும் நின்று
மார்பிலும் தோளிலும் கொட்டினார் களி
மண்டிக் குதித்து எழுந்து ஆடுவார்
**49 தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்

#238
மன்னவர்தம்மை மறந்துபோய் வெறி வாய்ந்த திருடரை ஒத்தனர் அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் இன்னும் செப்புக பந்தயம் வேறு என்றான் இவன்
தன்னை மறந்தவன் ஆதலால் தன்னைத் தான் பணயம் என வைத்தனன் பின்பு
முன்னைக் கதை அன்றி வேறு உண்டோ அந்த மோசச் சகுனி கெலித்தனன்
**50 துரியோதனன் சொல்வது

#239
பொங்கி எழுந்து சுயோதனன் அங்கு பூதல மன்னர்க்குச் சொல்லுவான் ஒளி
மங்கி அழிந்தனர் பாண்டவர் புவி மண்டலம் நம்மது இனிக் கண்டீர் இவர்
சங்கையிலாத நிதி எலாம் நம்மைச் சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை
எங்கும் பறையறைவாயடா தம்பி என்றது கேட்டுச் சகுனிதான்
**51 சகுனி சொல்வது

#240
புண்ணிடைக் கோல் கொண்டு குத்துதல் நின்னைப் போன்றவர் செய்யத் தகுவதோ இரு
கண்ணில் இனியவராம் என்றே இந்தக் காளையர்தம்மை இங்கு உந்தைதான் நெஞ்சில்
எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி
நண்ணித் தொடங்கிய சூது அன்றோ இவர் நாணுறச் செய்வது நேர்மையோ

#241
இன்னும் பணயம்வைத்து ஆடுவோம் வெற்றி இன்னும் இவர் பெறலாகும் காண்
பொன்னும் குடிகளும் தேசமும் பெற்றுப் பொற்பொடு போதற்கு இடம் உண்டாம் ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள்
துன்னும் அதிட்டமுடையவள் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாம்

#242
என்று அந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தில் உடையனாய் மிக
நன்றுநன்று என்று சுயோதனன் சிறு நாய் ஒன்று தேன் கலசத்தினை எண்ணித்
துன்றும் உவகையில் வெற்றுநாவினைத் தோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல் அவன்
ஒன்று உரையாமல் இருந்திட்டான் அழிவுற்றது உலகத்து அறம் எலாம்
** அடிமைச் சருக்கம் முற்றும்

@4 நான்காவது : துகிலுரிதற் சருக்கம்
**52 திரௌபதியை இழத்தல்

#243
பாவியர் சபைதனிலே புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை
ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை
ஓவியம் நிகர்த்தவளை அருள் ஒளியினைக் கற்பனைக்கு உயிரதனைத்
தேவியை நிலத் திருவை எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியத்தை

#244
படி மிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்விக மலர்க் கொடியைக்
கடி கமழ் மின் உருவை ஒரு கமனியக் கனவினைக் காதலினை
வடிவுறு பேரழகை இன்ப வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத்தில் அறக் கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்

#245
வேள்விப் பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல்
நீள் விட்டப் பொன் மாளிகை கட்டிப் பேயினை நேர்ந்து குடியேற்றல் போல்
ஆள் விற்றுப் பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்குப் பூட்டுதல் போல்
கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர்த் தேவியைக் கீழ்மக்கட்கு ஆளாக்கினான்

#246
செருப்புக்கு தோல் வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை
விருப்புற்ற சூதினுக்கே ஒத்த பந்தயம் மெய்த் தவப் பாஞ்சாலியோ
ஒருப்பட்டுப் போனவுடன் கெட்ட மாமனும் உன்னி அத் தாயம் கொண்டே
இருப் பகடை போடு என்றான் பொய்மைக் காய்களும் இருப் பகடை போட்டவே
**53 திரௌபதி சூதில் வசமானதுபற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி

#247
திக்குக் குலுங்கிடவே எழுந்து ஆடுமாம் தீயவர் கூட்டம் எல்லாம்
தக்குத்தக்கென்றே அவர் குதித்து ஆடுவார் தம் இரு தோள் கொட்டுவார்
ஒக்கும் தருமனுக்கே இஃது என்பர் ஓ ஓ என்று இரைந்திடுவார்
கக்கக்கென்றே நகைப்பார் துரியோதனா கட்டிக்கொள் எம்மை என்பார்

#248
மாமனைத் தூக்காய் என்பார் அந்த மாமன் மேல் மாலை பல வீசுவார்
சேமத் திரவியங்கள் பல நாடுகள் சேர்ந்ததில் ஒன்றுமில்லை
காமத் திரவியமாம் இந்தப் பெண்ணையும் கைவசமாகச்செய்தான்
மாமன் ஒர் தெய்வம் என்பார் துரியோதனன் வாழ்க என்று ஆர்த்திடுவார்
**54 துரியோதனன் சொல்வது

#249
நின்று துரியோதனன் அந்த மாமனை நெஞ்சொடு சேரக் கட்டி
என் துயர் தீர்த்தாயடா உயிர் மாமனே ஏளனம் தீர்த்துவிட்டாய்
அன்று நகைத்தாளடா உயிர் மாமனே அவளை என் ஆளாக்கினாய்
என்றும் மறவேனடா உயிர் மாமனே என்ன கைம்மாறு செய்வேன்

#250
ஆசை தணித்தாயடா உயிர் மாமனே ஆவியைக் காத்தாயடா
பூசை புரிவோமடா உயிர் மாமனே பொங்கல் உனக்கு இடுவோம்
நாசமடைந்ததடா நெடுநாள் பகை நாம் இனி வாழ்ந்தோமடா
பேசவும் தோன்றுதில்லை உயிர் மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய்

#251
என்று பல சொல்லுவான் துரியோதனன் எண்ணியெண்ணிக் குதிப்பான்
குன்று குதிப்பது போல் துரியோதனன் கொட்டிக் குதித்து ஆடுவான்
மன்று குழப்பமுற்றே அவர் யாவரும் வகைதொகை ஒன்றும் இன்றி
அன்று புரிந்தது எல்லாம் என்றன் பாட்டிலே ஆக்கல் எளிதாகுமோ
**55 திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு
** அழைத்து வரச் சொல்லியதுபற்றி ஜகத்தில் உண்டான
** அதர்மக் குழப்பம்

#252
தருமம் அழிவு எய்தச் சத்தியமும் பொய் ஆக
பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண் ஆக
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப் பாய
மோன முனிவர் முறைகெட்டுத் தாம் மயங்க
வேதம் பொருள் இன்றி வெற்றுரையே ஆகிவிட 5
நாதம் குலைந்து நடுமை இன்றிப் பாழ் ஆக
கந்தருவர் எல்லாம் களையிழக்கச் சித்தர் முதல்
அந்தரத்து வாழ்வோர் அனைவோரும் பித்துறவே
நான்முகனார் நா அடைக்க நாமகட்குப் புத்தி கெட
வான் முகிலைப் போன்றதொரு வண்ணத் திருமாலும் 10
அறிதுயில் போய் மற்று ஆங்கே ஆழ்ந்த துயில் எய்திவிட
செறிதரு நல் சீர் அழகு செல்வம் எலாம் தான் ஆகும்
சீதேவிதன் வதனம் செம்மை போய்க் கார் அடைய
மாதேவன் யோகம் மதிமயக்கம் ஆகிவிட
வாலை உமாதேவி மாகாளி வீறுடையாள் 15
மூலமாசக்தி ஒரு மூவிலை வேல் கை ஏற்றாள்
மாயை தொலைக்கும் மஹாமாயை தான் ஆவாள்
பேயைக் கொலையைப் பிணக் குவையைக் கண்டு உவப்பாள்
சிங்கத்தில் ஏறிச் சிரிப்பால் உலகு அழிப்பாள்
சிங்கத்தில் ஏறிச் சிரித்து எவையும் காத்திடுவாள் 20
நோவும் கொலையும் நுவலொணாப் பீடைகளும்
சாவும் சலிப்பும் எனத் தான் பல் கணம் உடையாள்
கடா எருமை ஏறும் கரு நிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி
மங்களம் செல்வம் வளர் வாழ்நாள் நற்கீர்த்தி 25
துங்கமுறு கல்வி எனச் சூழும் பல கணத்தாள்
ஆக்கம் தான் ஆவாள் அழிவு நிலை ஆவாள்
போக்குவரவு எய்தும் புதுமை எலாம் தான் ஆவாள்
மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும்
மாறிமாறிப் போம் வழக்கமே தான் ஆவாள் 30
ஆதிபராசக்தி அவள் நெஞ்சம் வன்மையுறச்
சோதிக் கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின்
முகத்தே இருள் படர மூடப் புலைமையினோன்
**56 துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது
அகத்தே இருளுடையான் ஆரியரின் வேறு ஆனோன்
துரியோதனனும் சுறுக்கெனவே தான் திரும்பி 35
அரியோன் விதுரனவனுக்கு உரைசெய்வான்
செல்வாய் விதுரா நீ சிந்தித்திருப்பது ஏன்
வில் வாள் நுதலினாள் மிக்க எழிலுடையாள்
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவி மகள்
இன்னே நாம் சூதில் எடுத்த விலைமகள்பால் 40
சென்று விளைவு எல்லாம் செவ்வனே தான் உணர்த்தி
மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள் மனையில் ஏவலுக்கே
என்ன உரைத்து அவளை இங்கு கொணர்வாய் என்றான்
**57 விதுரன் சொல்வது
துரியோதனன் இச் சுடுசொற்கள் கூறிடவும் 45
பெரியோன் விதுரன் பெரிதும் சினம்கொண்டு
மூட மகனே மொழியொணா வார்த்தையினைக்
கேடு வர அறியாய் கீழ்மையினால் சொல்லிவிட்டாய்
புள்ளிச் சிறுமான் புலியைப் போய்ப் பாய்வது போல்
பிள்ளைத் தவளை பெரும் பாம்பை மோதுதல் போல் 50
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகின்றாய்
நின்னுடைய நன்மைக்கு இ நீதி எலாம் சொல்லுகிறேன்
என்னுடைய சொல் வேறு எவர்பொருட்டும் இல்லையடா
பாண்டவர்தாம் நாளைப் பழி இதனைத் தீர்த்திடுவார் 55
மாண்டு தரை மேல் மகனே கிடப்பாய் நீ
தன் அழிவு நாடும் தறுகண்மை என்னேடா
முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ
நல்லோர் தமது உள்ளம் நையச் செயல் செய்தான்
பொல்லாத வேனன் புழுவைப் போல் மாய்ந்திட்டான் 60
நெஞ்சம் சுட உரைத்தல் நேர்மை எனக் கொண்டாயோ
மஞ்சனே அச் சொல் மருமத்தே பாய்வது அன்றோ
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்
பட்டார்தம் நெஞ்சில் பல நாள் அகலாது
வெம் நரகு சேர்த்துவிடும் வித்தை தடுத்துவிடும் 65
மன்னவனே நொந்தார் மனம் சுடவே சொல்லும் சொல்
சொல்லிவிட்டேன் பின்னொருகால் சொல்லேன் கவுரவர்காள்
புல்லியர்கட்கு இன்பம் புவித்தலத்தில் வாராது
பேராசை கொண்டு பிழைச் செயல்கள் செய்கின்றீர்
வாராத வன் கொடுமை மா விபத்து வந்துவிடும் 70
பாண்டவர்தம் பாதம் பணிந்து அவர்பால் கொண்டது எலாம்
மீண்டு அவர்க்கே ஈந்துவிட்டு விநயமுடன்
ஆண்டவரே யாங்கள் அறியாமையால் செய்த
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர் என்று உரைத்து
மற்று அவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் 75
குற்றம் தவிர்க்கும் நெறி இதனைக் கொள்ளீரேல்
மாபாரதப்போர் வரும் நீர் அழிந்திடுவீர்
பூபாலரே என்று அப் புண்ணியனும் கூறினான்
சொல் இதனைக் கேட்டுத் துரியோதன மூடன்
வல் இடி போல் சீச்சி மடையா கெடுக நீ 80
எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்பு உனக்கே
இப்போது உன் சொல்லை எவரும் செவிக்கொளார்
யாரடா தேர்ப்பாகன் நீ போய்க் கணம் இரண்டில்
பாரதர்க்கு வேந்தன் பணித்தான் எனக் கூறிப்
பாண்டவர்தம் தேவிதனைப் பார் வேந்தர் மன்றினிலே 85
ஈண்டு அழைத்துவா என்று இயம்பினான் ஆங்கே தேர்ப்
பாகன் விரைந்து போய்ப் பாஞ்சாலி வாழ் மனையில்
சோகம் ததும்பித் துடித்த குரலுடனே
அம்மனே போற்றி அறம் காப்பாய் தாள் போற்றி
வெம்மையுடைய விதியால் யுதிட்டிரனார் 90
மாமன் சகுனியொடு மாயச் சூதாடியதில்
பூமி இழந்து பொருள் இழந்து தம்பியரைத்
தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்து இழந்தார்
சாற்றிப் பணயம் எனத் தாயே உனை வைத்தார்
சொல்லவுமே நாவு துணியவில்லை தோற்றிட்டார் 95
எல்லாரும் கூடியிருக்கும் சபைதனிலே
நின்னை அழைத்துவர நேமித்தான் எம் அரசன்
என்ன உரைத்திடலும் யார் சொன்ன வார்த்தையடா
சூதர் சபைதனிலே தொல் சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா யார் பணியால் 100
என்னை அழைக்கின்றாய் என்றாள் அதற்கு அவனும்
மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால் என்றிட்டான்
நல்லது நீ சென்று நடந்த கதை கேட்டு வா
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர் தாம்
என்னை முன்னே கூறி இழந்தாரா தம்மையே 105
முன்னம் இழந்து முடித்து என்னைத் தோற்றாரா
சென்று சபையில் இச் செய்தி தெரிந்துவா
என்று அவளும் கூறி இவன் போகிய பின்னர்
தன்னந்தனியே தவிக்கும் மனத்தாளாய்
வன்னம் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய 110
உள்ளத்தை அச்சம் உலையுறுத்தப் பேய் கண்ட
பிள்ளை என வீற்றிருந்தாள் பின் அந்தத் தேர்ப்பாகன்
மன்னன் சபை சென்று வாள் வேந்தே ஆங்கு அந்தப்
பொன்னரசி தாள் பணிந்து போதருவீர் என்றிட்டேன்
என்னை முதல் வைத்து இழந்த பின்பு தன்னை என் 115
மன்னர் இழந்தாரா மாறித் தமைத் தோற்ற
பின்னர் எனைத் தோற்றாரா என்றே நும் பேரவையை
மின்னல்கொடியார் வினவிவரத் தாம் பணித்தார்
வந்துவிட்டேன் என்று உரைத்தான் மாண்புயர்ந்த பாண்டவர்தாம்
நொந்துபோய் ஒன்றும் நுவலாது இருந்துவிட்டார் 120
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னர் எலாம்
முற்றும் உரை இழந்து மூங்கையர் போல் வீற்றிருந்தார்
**58 துரியோதனன் சொல்வது
** வேறு

#253
உள்ளம் துடித்துச் சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட
பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய் என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ அந்தக்
கள்ளக் கரிய விழியினாள் அவள் கல்லிகள் கொண்டு இங்கு வந்தனை அவள்
கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே

#254
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர்
நீண்ட பெரும் சபைதன்னிலே அவள் நேரிடவே வந்த பின்பு தான் சிறு
கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம்
மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா

#255
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னைச்
சின்னமுறச் செய்குவேனடா கணம் சென்று அவளைக் கொணர்வாய் என்றான் அவன்
சொன்ன மொழியினைப் பாகன் போய் அந்தத் தோகை முன் கூறி வணங்கினான் அவள்
இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன்
**59 திரௌபதி சொல்லுதல்

#256
நாயகர்தாம் தம்மைத் தோற்ற பின் என்னை நல்கும் உரிமை அவர்க்கு இல்லை புலைத்
தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார் அவர்
தாயத்திலே விலைப்பட்டவர் புவி தாங்கும் துருபதன் கன்னி நான் நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ

#257
கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர்
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே அங்கு சாத்திரம் செத்துக்கிடக்குமோ புகழ்
ஒவ்வுற ஆய்ந்த குருக்களும் கல்வி ஓங்கிய மன்னரும் சூதிலே செல்வம்
வவ்வுறத் தாம் கண்டிருந்தனர் என்றன் மானம் அழிவதும் காண்பரோ

#258
இன்பமும் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம் எனில்
மன்பதை காக்கும் அரசர்தாம் அற மாட்சியைக் கொன்று களிப்பரோ அதை
அன்பும் தவமும் சிறந்துளார் தலை அந்தணர் கண்டு களிப்பரோ அவர்
முன்பு என் வினாவினை மீட்டும் போய்ச் சொல்லி முற்றும் தெளிவுறக் கேட்டுவா

#259
என்று அந்தப் பாண்டவர் தேவியும் சொல்ல என் செய்வன் ஏழை அப் பாகனே என்னைக்
கொன்றுவிட்டாலும் பெரிதில்லை இவள் கூறும் வினாவிற்கு அவர் விடை தரின்
அன்றி இவளை மறுமுறை வந்து அழைத்திட நான் அங்கு இசைந்திடேன் என
நன்று மனத்திடைக் கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறினான்

#260
மாதவிடாயில் இருக்கிறாள் அந்த மாதரசு என்பதும் கூறினான் கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் நின்ற பாண்டவர்தம் முகம் நோக்கினான் அவர்
பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன்
தீதுற்ற சிந்தை தடுக்கவே உள்ளத் திண்மை இலாது அங்கு இருந்தனர்

#261
பாகனை மீட்டும் சினத்துடன் அவன் பார்த்து இடி போல் உரைசெய்கின்றான் பின்னும்
ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னைச்
சாக மிதித்திடுவேனடா என்று தார் மன்னன் சொல்லிடப் பாகனும் மன்னன்
வேகம்தனைப் பொருள்செய்திடான் அங்கு வீற்றிருந்தோர்தமை நோக்கியே

#262
சீறும் அரசனுக்கு ஏழையேன் பிழை செய்தது உண்டோ அங்குத் தேவியார்தமை
நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களைக் கேட்கத் திருப்புவார் அவர்
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன்
கூறும் பணி செய வல்லன் யான் அந்தக் கோதை வராவிடில் என் செய்வேன்
**60 துரியோதனன் சொல்வது

#263
பாகன் உரைத்தது கேட்டனன் பெரும் பாம்புக் கொடியவன் சொல்கிறான் அவன்
பாகன் அழைக்க வருகிலள் இந்தப் பையலும் வீமனை அஞ்சியே பல
வாகத் திகைப்புற்று நின்றனன் இவன் அச்சத்தைப் பின்பு குறைக்கிறேன் தம்பீ
போகக் கடவை இப்போது அங்கே இங்கு அப் பொற்றொடியோடும் வருக நீ
** திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம் முற்றும்

@5 ஐந்தாவது: சபதச் சருக்கம்
**61 துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்

#264
இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன்
செவ்வி சிறிது புகலுவோம் இவன் தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி
எவ்வளவேனும் இலாதவன் கள்ளும் ஈரக் கறியும் விரும்புவோன் பிற
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார் தன்னைச் சேர்ந்தவர் பேய் என்று ஒதுங்குவார்

#265
புத்தி விவேகம் இல்லாதவன் புலி போல உடல் வலி கொண்டவன் கரை
தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவ
சக்தி வழி பற்றி நின்றவன் சிவசக்தி நெறி உணராதவன் இன்பம்
நத்தி மறங்கள் இழைப்பவன் என்றும் நல்லவர் கேண்மை விலக்கினோன்

#266
அண்ணன் ஒருவனை அன்றியே புவி அத்தனைக்கும் தலை ஆயினோம் என்னும்
எண்ணம் தனதிடைக் கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான் அருள்
கண்ணழிவு எய்திய பாதகன் அந்தக் காரிகைதன்னை அழைத்துவா என்று அவ்
அண்ணன் உரைத்திடல் கேட்டனன் நல்லதாம் என்று உறுமி எழுந்தனன்

#267
பாண்டவர் தேவி இருந்ததோர் மணிப் பைம் கதிர் மாளிகை சார்ந்தனன் அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய் நின்ற நேரிழை மாதினைக் கண்டனன் அவள்
தீண்டலை எண்ணி ஒதுங்கினாள் அடி செல்வது எங்கே என்று இரைந்திட்டான் இவன்
ஆண்டகையற்ற புலையன் என்று அவள் அச்சம் இலாது எதிர் நோக்கியே
**62 திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்

#268
தேவர் புவி மிசைப் பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை
யாவரும் இற்றை வரையினும் தம்பி என் முன் மறந்தவர் இல்லை காண் தம்பி
காவல் இழந்த மதி கொண்டாய் இங்குக் கட்டுத் தவறி மொழிகிறாய் தம்பி
நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி

#269
பாண்டவர் தேவியும் அல்லை நீ புகழ்ப் பாஞ்சாலத்தான் மகள் அல்லை நீ புவி
ஆண்டு அருள் வேந்தர் தலைவனாம் எங்கள் அண்ணனுக்கே அடிமைச்சி நீ மன்னர்
நீண்ட சபைதனில் சூதிலே எங்கள் நேசச் சகுனியோடு ஆடி அங்கு உன்னைத்
தூண்டும் பணயம் என வைத்தான் இன்று தோற்றுவிட்டான் தருமேந்திரன்

#270
ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர்
கூடியிருக்கும் சபையிலே உன்னைக் கூட்டிவருக என்று மன்னவன் சொல்ல
ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்தப்
பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே
** வேறு

#271
துச்சாதனன் இதனைச் சொல்லினான் பாஞ்சாலி
அச்சா கேள் மாதவிலக்கு ஆதலால் ஓராடை
தன்னில் இருக்கிறேன் தார் வேந்தர் பொற்சபை முன்
என்னை அழைத்தல் இயல்பில்லை அன்றியுமே
சோதரர்தம் தேவிதனைச் சூதில் வசமாக்கி 5
ஆதரவு நீக்கி அருமை குலைத்திடுதல்
மன்னர் குலத்து மரபோ காண் அண்ணன்பால்
என் நிலைமை கூறிடுவாய் ஏகுக நீ என்றிட்டாள்
கக்கக்க என்று கனைத்தே பெரு மூடன்
பக்கத்தில் வந்தே அப் பாஞ்சாலி கூந்தலினைக் 10
கையினால் பற்றிக் கரகரெனத் தான் இழுத்தான்
ஐயகோ என்றே அலறி உணர்வற்றுப்
பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டு வர
நீண்ட கரும் குழலை நீசன் கரம் பற்றி
முன் இழுத்துச் சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் 15
என்ன கொடுமை இது என்று பார்த்திருந்தார்
ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரம் ஆமோ
வீரம் இலா நாய்கள் விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே
பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல் 20
நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணை ஆமோ
பேரழகு கொண்ட பெரும் தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னர் அறம் கெட்ட சபைதனிலே 25
கூடுதலும் அங்கே போய்க் கோவென்று அலறினாள்
**63 சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்
விம்மி அழுதாள் விதியோ கணவரே
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டி எனை
வேதச் சுடர்த் தீ முன் வேண்டி மணம்செய்து
பாதகர் முன் இந்நாள் பரிசு அழிதல் காண்பீரோ 30
என்றாள் விஜயனுடன் ஏறு திறல் வீமனுமே
குன்றா மணித் தோள் குறிப்புடனே நோக்கினார்
தருமனும் மற்று ஆங்கே தலைகுனிந்து நின்றிட்டான்
பொருமியவள் பின்னும் புலம்புவாள் வான் சபையில்
கேள்வி பலவுடையோர் கேடிலா நல் இசையோர் 35
வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள்
மேலோர் இருக்கின்றீர் வெம் சினம் ஏன் கொள்கிலரோ
வேலோர் எனையுடைய வேந்தர் பிணிப்புண்டார்
இங்கு இவர் மேல் குற்றம் இயம்ப வழி இல்லை
மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே 40
என்னைப் பிடித்து இழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்
நின்னை எவரும் நிறுத்தடா என்பது இலர்
என் செய்கேன் என்றே இரைந்து அழுதாள் பாண்டவரை
மின் செய் கதிர் விழியால் வெம் நோக்கு நோக்கினாள்
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றிப் 45
பற்றைகள் போல் நிற்பதனைப் பார்த்து வெறிகொண்டு
தாதியடி தாதி எனத் துச்சாதனன் அவளைத்
தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான்
சகுனி புகழ்ந்தான் சபையினோர் வீற்றிருந்தார்
தகுதி உயர் வீட்டுமனும் சொல்கின்றான் தையலே 50
**64 வீட்டுமாசாரியன் சொல்வது
சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான்
வாதாடி நீ அவன்றன் செய்கை மறுக்கின்றாய்
சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால்
மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்
மற்று இதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே 55
குற்றம் என்று சொல்லுகிறாய் கோமகளே பண்டை யுக
வேதமுனிவர் விதிப்படி நீ சொல்லுவது
நீதம் எனக்கூடும் நெடுங்காலச் செய்தி அது
ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில்
பேணி வந்தார் பின் நாளில் இஃது பெயர்ந்துபோய் 60
இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்கு
ஒப்பில்லை மாதர் ஒருவன் தன் தாரத்தை
விற்றிடலாம் தானம் என வேற்றுவர்க்குத் தந்திடலாம்
முற்றும் விலங்கு முறைமை அன்றி வேறு இல்லை
தன்னை அடிமை என விற்ற பின்னும் தருமன் 65
நின்னை அடிமை எனக் கொள்வதற்கு நீதி உண்டு
செல்லும் நெறியறியார் செய்கை இங்குப் பார்த்திடிலோ
கல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும்
செய்கை அநீதி என்று தேர்ந்தாலும் சாத்திரம்தான்
வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் 70
ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன்
தீங்கு தடுக்கும் திறம் இலேன் என்று அந்த
மேலோன் தலைகவிழ்ந்தான் மெல்லியளும் சொல்லுகிறாள்
**65 திரௌபதி சொல்வது
சால நன்கு கூறினீர் ஐயா தரும நெறி
பண்டு ஓர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால் 75
கொண்டு ஓர் வனத்திடையே வைத்துப் பின் கூட்டம் உற
மந்திரிகள் சாத்திரிமார்தம்மை வரவழைத்தே
செந்திருவைப் பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால்
தக்கது நீர் செய்தீர் தருமத்துக்கு இச் செய்கை
ஒக்கும் எனக் கூறி உகந்தனராம் சாத்திரிமார் 80
பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
மாயம் உணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கை அன்றோ
மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ள அன்றோ 85
பெண்டிர்தமை உடையீர் பெண்களுடன் பிறந்தீர்
பெண்பாவம் அன்றோ பெரிய வசை கொள்வீரோ
கண் பார்க்க வேண்டும் என்று கையெடுத்துக் கும்பிட்டாள்
அம்பு பட்ட மான் போல் அழுது துடிதுடித்தாள்
வம்பு மலர்க் கூந்தல் மண் மேல் புரண்டுவிழத் 90
தேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள்
பாவி துச்சாதனனும் பாங்கு இழந்து கூறினான்
** வேறு

#272
ஆடை குலைவுற்று நிற்கிறாள் அவள் ஆவென்று அழுது துடிக்கிறாள் வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைக் குழல் பற்றி இழுக்கிறான் இந்தப்
பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர்
கூடித் தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ
**66 வீமன் சொல்வது
** வேறு

#273
சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிர் உண்டு
சூதில் பணயம் என்றே அங்கு ஓர் தொண்டச்சி போவது இல்லை

#274
ஏது கருதி வைத்தாய் அண்ணே யாரைப் பணயம்வைத்தாய்
மாதர் குலவிளக்கை அன்பே வாய்ந்த வடிவழகை

#275
பூமி அரசர் எல்லாம் கண்டே போற்ற விளங்குகிறான்
சாமி புகழினுக்கே வெம் போர்ச் சண்டனப் பாஞ்சாலன்

#276
அவன் சுடர் மகளை அண்ணே ஆடி இழந்துவிட்டாய்
தவறுசெய்துவிட்டாய் அண்ணே தருமம் கொன்றுவிட்டாய்

#277
சோரத்தில் கொண்டது இல்லை அண்ணே சூதில் படைத்தது இல்லை
வீரத்தினால் படைத்தோம் வெம் போர் வெற்றியினால் படைத்தோம்

#278
சக்கரவர்த்தி என்றே மேலாம் தன்மை படைத்திருந்தோம்
பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்துவிட்டாய்

#279
நாட்டை எல்லாம் தொலைத்தாய் அண்ணே நாங்கள் பொறுத்திருந்தோம்
மீட்டும் எமை அடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம்

#280
துருபதன் மகளைத் திட்டத் துய்மன் உடற்பிறப்பை
இரு பகடை என்றாய் ஐயோ இவர்க்கு அடிமை என்றாய்

#281
இது பொறுப்பது இல்லை தம்பி எரி தழல் கொண்டுவா
கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்
**67 அர்சு1னன் சொல்வது
** வேறு

#282
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான்
இதைக் கேட்டு வில் விஜயன் எதிர்த்துச் சொல்வான்
மனமாரச் சொன்னாயோ வீமா என்ன
வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே
கனம் ஆரும் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய்
சினமான தீ அறிவைப் புகைத்தலாலே
திரிலோகநாயகனைச் சினந்து சொன்னாய்

#283
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான்
**68 விகர்ணன் சொல்வதும்

#284
அண்ணனுக்குத் திறல் வீமன் வணங்கி நின்றான்
அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான்
பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை
எண்ணமதில் விலங்கு எனவே கணவர் எண்ணி
ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன்
வண்ணம் உயர் வேதநெறி மாறிப் பின் நாள்
வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான்

#285
எந்தையர் தாம் மனைவியரை விற்பது உண்டோ
இதுகாறும் அரசியரைச் சூதில் தோற்ற
விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு
விதித்ததையே பிற்கால நீதிக்காரர்
சொந்தம் எனச் சாத்திரத்தில் புகுத்திவிட்டார்
சொல்லளவேதான் ஆனாலும் வழக்கம்தன்னில்
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில்
ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம்

#286
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர்த்
தாரம் எது வீடு ஏது தாதன் ஆன
பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மைப்
பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்
மன்னர்களே களிப்பதுதான் சூது என்றாலும்
மனுநீதி துறந்து இங்கே வலிய பாவம்
தன்னை இரு விழி பார்க்க வாய் பேசீரோ
தாத்தனே நீதி இது தகுமோ என்றான்

#287
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்
எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சலிட்டார்
ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார்
ஒருநாளும் உலகு இதனை மறக்காது என்பார்
எவ்வாறு புகைந்தாலும் புகைந்துபோவீர்
ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா
செவ்வானம் படர்ந்தால் போல் இரத்தம் பாயச்
செருக்களத்தே தீருமடா பழி இஃது என்பார்
**69 கர்ணன் பதில்
** வேறு

#288
விகருணன் சொல்லைக் கேட்டு வில் இசைக் கர்ணன் சொல்வான்
தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றன்று எண்ணி வாய்புதைத்திருந்தார் நீதான்
மிகும் உரை சொல்லிவிட்டாய் விரகிலாய் புலனும் இல்லாய்

#289
பெண் இவள் தூண்ட எண்ணிப் பசுமையால் பிதற்றுகின்றாய்
எண்ணிலாது உரைக்கலுற்றாய் இவளை நாம் வென்றதாலே
நண்ணிடும் பாவம் என்றாய் நாணிலாய் பொறையும் இல்லாய்
கண்ணிய நிலைமை ஓராய் நீதி நீ காண்பது உண்டோ

#290
மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் கீழடியார்க்கு இல்லை
சீரிய மகளும் அல்லள் ஐவரைக் கலந்த தேவி
யாரடா பணியாள் வாராய் பாண்டவர் மார்பில் ஏந்தும்
சீரையும் களைவாய் தையல் சேலையும் களைவாய் என்றான்

#291
இவ் உரை கேட்டார் ஐவர் பணிமக்கள் ஏவாமுன்னர்
தெவ்வர் கண்டு அஞ்சும் மார்பைத் திறந்தனர் துணியைப் போட்டார்
நவ்வியைப் போன்ற கண்ணாள் ஞானசுந்தரி பாஞ்சாலி
எவ்வழி உய்வோம் என்றே தியங்கினாள் இணைக் கை கோத்தாள்
**70 திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை
** வேறு

#292
துச்சாதனன் எழுந்தே அன்னை துகிலினை மன்றிடை உரிதலுற்றான்
அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான்
பிச்சேறியவனைப் போல் அந்தப் பேயனும் துகிலினை உரிகையிலே
உட்சோதியில் கலந்தாள் அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள்

#293
ஹரி ஹரி ஹரி என்றாள் கண்ணா அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள்
கரியினுக்கு அருள்புரிந்தே அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்
கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய்
பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறைப் பொருள் ஆளாவாய்

#294
சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லைக் கரத்துடையாய்
அட்சரப் பொருள் ஆவாய் கண்ணா அக்கார அமுது உண்ணும் பசுங்குழந்தாய்
துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா தொண்டர் கண்ணீர்களைத் துடைத்திடுவாய்
தக்கவர்தமைக் காப்பாய் அந்தச் சதுர்முகவேதனைப் படைத்துவிட்டாய்

#295
வானத்துள் வான் ஆவாய் தீ மண் நீர் காற்றினில் அவை ஆவாய்
மோனத்துள் வீழ்ந்திருப்பார் தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய்
கானத்துப் பொய்கையிலே தனிக் கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள்
தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கைக் கொண்டு மகிழ்ந்திருப்பாய்

#296
ஆதியில் ஆதி அப்பா கண்ணா அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளே
சோதிக்குச் சோதி அப்பா என்றன் சொல்லினைக் கேட்டு அருள்செய்திடுவாய்
மா திக்கு வெளியினிலே நடுவானத்தில் பறந்திடும் கருடன் மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர்ப் பொருளே பேரடல் பொருளே

#297
கம்பத்தில் உள்ளானோ அடா காட்டு உன்றன் கடவுளைத் தூணிடத்தே
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அத் தூண் உதைத்தான்
செம்பு அவிர் குழலுடையான் அந்தத் தீய வல் இரணியன் உடல் பிளந்தாய்
நம்பி நின் அடி தொழுதேன் என்னை நாண் அழியாது இங்குக் காத்தருள்வாய்

#298
வாக்கினுக்கு ஈசனையும் நின்றன் வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்
ஆக்கினை கரத்துடையாய் என்றன் அன்புடை எந்தை என் அருள் கடலே
நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்து அருள்வாய்
தேக்கு நல் வான் அமுதே இங்கு சிற்றிடை ஆய்ச்சியில் வெண்ணெய் உண்டாய்

#299
வையகம் காத்திடுவாய் கண்ணா மணிவண்ணா என்றன் மனச் சுடரே
ஐய நின் பதமலரே சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள்
பொய்யர்தம் துயரினைப் போல் நல்ல புண்ணியவாணர்தம் புகழினைப் போல்
தையலர் கருணையைப் போல் கடல் சலசலத்து எறிந்திடும் அலைகளைப் போல்

#300
பெண் ஒளி வாழ்த்திடுவார் அந்த பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல்
கண்ணபிரான் அருளால் தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய்
வண்ணப் பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே
எண்ணத்தில் அடங்காவே அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ

#301
பொன் இழை பட்டு இழையும் பல புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்
சென்னியில் கைகுவித்தாள் அவள் செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே
முன்னிய ஹரி நாமம்தன்னில் மூளும் நல் பயன் உலகு அறிந்திடவே
துன்னிய துகில் கூட்டம் கண்டு தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்

#302
தேவர்கள் பூச்சொரிந்தார் ஓம் ஜெய ஜெய பாரதசக்தி என்றே
ஆவலோடு எழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமன் கைதொழுதான்
சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார்
காவலின் நெறி பிழைத்தான் கொடி கடி அரவு உடையவன் தலைகவிழ்ந்தான்
**71 வீமன் செய்த சபதம்
** வேறு

#303
வீமன் எழுந்து உரைசெய்வான் இங்கு
விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை
தாமரைப் பூவினில் வந்தான் மறை
சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை
மா மகளைக் கொண்ட தேவன் எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்து ஆணை
காமனைக் கண் அழலாலே சுட்டுக்
காலனை வென்றவன் பொன் அடி மீதில்

#304
ஆணையிட்டு இஃது உரைசெய்வேன் இந்த
ஆண்மையிலாத் துரியோதனன்தன்னை
பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடை மீதில்
நாண் இன்றி வந்திரு என்றான் இந்த
நாய்மகனாம் துரியோதனன்தன்னை
மாண் அற்ற மன்னர் கண் முன்னே என்றன்
வன்மையினால் யுத்தரங்கத்தின் கண்ணே

#305
தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன் தம்பி
சூரத் துச்சாதனன்தன்னையும் ஆங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன் அங்கு
கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன்
நடைபெறும் காண்பிர் உலகீர் இது
நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது
சாதனை செய்க பராசக்தி என்றான்
**72 அர்சு1னன் சபதம்

#306
பார்த்தன் எழுந்து உரைசெய்வான் இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை
கார்த் தடம் கண்ணி எம் தேவி அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் ஹே
பூதலமே அந்தப் போதினில் என்றான்
**73 பாஞ்சாலி சபதம்

#307
தேவி திரௌபதி சொல்வாள் ஓம்
தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் இது
செய்யும் முன்னே முடியேன் என்று உரைத்தாள்

#308
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம்
ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம்
பூமியதிர்ச்சி உண்டாச்சு விண்ணைப்
பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று
சாமி தருமன் புவிக்கே என்று
சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும்
நாமும் கதையை முடித்தோம் இந்த
நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க
*