கா – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்


காசு
காஞ்சி
காடி
காண்டிகா
காண்டும்
காண்டை
காண்வரு(தல்)
காணிகா
காந்தள்
காமர்
காமரம்
காமரு
காமவேள்
காமன்
காமூர்
காயா
காரான
காரி
காரோடன்
கால்கிளர்
கால்கொள்
கால்சீ
கால்மயங்கு
கால்யா
கால்வீழ்
காவி
காவிதி
காவு
காழ்
காழ்க்கொள்
காழ்வை
காழகம்
காழியர்
காழோர்
காளாம்பி
கானல்

காசு

(பெ) மேகலை, கொலுசு போன்ற அணிகலன்களில் கோக்கும் உலோகத்தாலான
உருண்டைகள் அல்லது வட்டங்கள்.
globules or coin shaped metal parts strung with the girdle.
சங்க இலக்கியத்தில் காசு என்ற சொல்லைப்பற்றிய குறிப்புகள் 14 இடங்களில் கிடைக்கின்றன.
இந்தக் குறிப்புகளினின்றும் கிடைக்கும் செய்திகள்.

I.

காசு என்பது பெண்கள் தம் இடுப்பில் அணியும் மேகலையில் கோக்கப்பட்டிருக்கும்.

1. பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் – புறம் 353/2
2. பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
3. காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/9
4. பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1
5. உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை
பொலம் காழ் மேல் – கலி 85/3
6. பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 75/19
7. பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 269/15

அல்குல் என்பது இடுப்பைச் சுற்றி, இடுப்புக்கும் சற்றுக் கீழான பகுதி.

பார்க்க : மேகலை
இந்த மேகலையில் காசுக்கள் கோக்கப்பட்டிருந்தன.

II.

இந்தக் காசுகள் முட்டை வடிவில் அல்லது உருண்டை வடிவில் இருந்தன.

1.

இழை_மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/3-5

அணிகலன் அணிந்த ஒரு பெண்ணின்
பொன்னால் செய்யப்பட்ட காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்
குமிழமரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்
எனவே, இந்தக் காசுகள் குமிழம்பழம் உருவில் இருந்தன.
குமிழ் என்றாலே உருண்டை என்று பொருள்.

பார்க்க – காசு – குமிழம்பழம் –

2. அ.

கணை அரை
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப
பொலம் செய் காசின் பொற்ப தாஅம் – அகம் 363/5-8

திரண்ட அடிமரத்தையும்
சிறிய இலையினையும் உடைய நெல்லியின் வடு அற்ற பசிய காய்கள்
கற்களையுடைய நெறிகளில் கடிய காற்று உதிர்த்தலால்
பொன்னால் செய்த காசுப் போல அழகுறப் பரவிக்கிடக்கும்.

இந்தக் காசுகள் பொன்னால் செய்யப்பட்டவை.

2ஆ.

அகநானூற்றில் இன்னோர் இடத்திலும் இதே போன்ற உவமையைக் காணலாம்.

புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/10-12

புறா துளைத்து உண்ட புல்லிய காய்களையுடைய நெல்லியின்
மேல்காற்று உதிர்த்திட்ட குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள்
அறுந்து போன நூலிலிருந்த உருண்ட பளிங்கின் துளையிட்ட காசுகளை ஒப்ப

இந்தக் காசுகள் பளிங்கினால் செய்யப்பட்டவை.

பார்க்க – காசு – நெல்லி

நெல்லிக்காய்கள் துளையிட்ட காசுகளைப் போன்று இருந்தன என்ற ஒப்புமை எவ்வளவு
சரியாக இருக்கிறது என்று பாருங்கள்.

3

இந்தக் காசுகள் வேப்பம்பழம் போல் உருண்டு இருந்தன என்கிறது குறுந்தொகை.

கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு 67/2-4

கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
புதிய நூலைக் கோக்கும்பொருட்டு முனை சிறந்த நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட
பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்

பார்க்க – வேப்பம்பழம்

4.

இந்தக் காசுகள் கொன்றையின் மொட்டுக்கள் போல் இருந்தன என்கிறது இன்னொரு குறுந்தொகைப் பாடல்

காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3

காசைப் போன்ற மொட்டுக்களை ஈன்ற கொன்றை

பார்க்க – காசு – கொன்றை மொட்டு

III.

சில காசுகள் மணிகளால் செய்யப்பட்டிருக்கும்.

குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி
உகாஅ மென் சினை உதிர்வன கழியும் – அகம் 293/6-8

குயிலின் கண்ணைப் போன்ற நிறமுள்ள காய்கள் முற்றி
மணியினால் செய்யப்பட்ட காசுகளைப் போன்ற கரிய நிறத்திலான பெரிய கனிகள்
உகாவின் மெல்லிய கிளைகளினின்றும் உதிர்ந்து ஒழியும்.

பார்க்க – காசு – உகா கனி

IV.

சில காசுகள் வட்டமாகத் தட்டை வடிவிலும் இருந்திருக்கின்றன.

பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1

பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுகளை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குலையும்

பாண்டில் என்பது வட்டம் என்ற பொருள் தரும். இது இன்றைய காசுமாலையை ஒக்கும்.

பார்க்க – காசு – பாண்டில்

பாண்டில் என்பது பெண்கள் அணியும் ஓர் அணிகலன் என்பார் பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்.
அப்படியெனில் பாண்டில் காசுவும் ஏனைய காசுகளைப் போல் உருண்டை வடிவினதாகவே இருந்திருக்கலாம்.

V.

இதுவரை காசு என்பது பெண்கள் இடுப்பில் அணியும் மேகலையில் கோப்பது என்று அறிந்தோம்.
ஆனால் சிறுவர்கள் காலில் அணியும் கொலுசு என்ற கிண்கிணியிலும் காசுகள் கோக்கப்படும் என்று
குறுந்தொகை கூறுகிறது.

செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/1-3

செல்வர்களின் சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய
தவளையின் வாயைப் போன்ற பொன்னால் செய்த சதங்கையின்
காசைப் போன்ற அரும்புகளை ஈன்ற கொன்றை

பார்க்க – காசு – கிண்கிணி

மேல்


காஞ்சி

(பெ) 1. ஒரு மரம், ஆற்றுப்பூவரசு, River portia
2. நிலையாமை, Instability, transiency
3. மகளிர் இடையில் அணியும் ஏழுகோவையுள்ள அணி,
Woman’s waist-girdle consisting of seven strings of beads or bells
4.செவ்வழிப் பண் வகை, An ancient secondary melody-type of the cevvaḻi class
5. புறத்திணை வகைகளில் ஒன்று, one of the themes in puRam.

1.

குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர் – அகம் 341/9

குட்டையான அடிமரத்தையுடைய காஞ்சி மரத்தின் மாலை போன்ற மெல்லிய பூஞ்கொத்துக்கள்

2.

காஞ்சி சான்ற செரு பல செய்து – பதி 84/19

நிலையாமை உணர்வே நிறைந்த போர்கள் பலவற்றைச் செய்து

3.

மேகலை காஞ்சி வாகுவலயம் – பரி 7/47

மேகலைகள், இடையணிகள் ஆகியவற்றையும், ஆண்களின் தோள்வளையங்கள் ஆகிய

4.

இசை மணி எறிந்து காஞ்சி பாடி – புறம் 281/5

ஓசையைச் செய்யும் மணியை இயக்கி, காஞ்சிப்பண்ணைப் பாடி

5.

மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/3,4

எதிர்த்துப் போரிட்ட பகைவரின் வீரம் அழியும்படி வென்ற,
காஞ்சித்திணைக்கு அமைந்த வீரர்களுக்குத் தலைவனே!

மேல்


காடி

(பெ) 1. துணிகளுக்குப் போடும் சோற்றுக்கஞ்சி, gruel for stiffening the cloths
2. ஊறுகாய், pickles
3. புளித்த நீர், fermented rice water
4. தொண்டை, throat

1.

காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 134

கஞ்சி போட்டு வெளுக்கப்பட்ட துகிலின்

2.

விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் – பெரும் 56,57

வார்ப்பிணிப்பு இறுகின இனிய இசைக்கருவி(யான முழவை) ஒப்பக் கயிற்றால் (சுற்றிக்)கட்டி,
ஊறுகாய் வைத்த பாத்திரம்

3.

தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி
காடி வெள் உலை கொளீஇ – புறம் 399/2,3

பூணை சிறப்புற அணிந்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசியை
புளித்த நீரை உலைநீராகக் கொண்ட அடுப்பில் ஏற்றி

4.

விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை – பொரு 114-116

விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்,
பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி 115
உண்டபொழுதின்

மேல்


காண்டிகா

(ஏ.வி.மு) பார்ப்பாயாக, look at (him/her)

புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/9

நிழலுக்குப் புறம்பே நிற்பவளோ இவள்? இவளைப் பார்!
– காண்டி என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது.
– நச்.விளக்கம்

மேல்


காண்டும்

(த.ப.வி.மு) காண்போம், we will see

சோறு உடை கையர் வீறுவீறு இயங்கும்
இரும் கிளை சிறாஅர் காண்டும் – புறம் 173/9

சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற
பெரிய சுற்றத்தாரோடும் கூடிய பிள்ளைகளைக் காண்பேம்

மேல்


காண்டை

(மு.வி.மு) பார்த்துக்கொள், see to it

இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலை கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை – கலி 12/12-14

இளமையும் இன்பநுகர்வும் உன் சொல்கேட்டு உனக்காகக் காத்திருக்கமாட்டா!
முலையிடையே கிடக்கும் மாலை குழைந்துபோகும்படி தழுவிக்கொள்ளும்
முறைமையினையுடைய நாட்கள் வீணே கழிந்துபோகாமல் பார்த்துக்கொள்வாய்!
– காண் என்னும் முன்னிலை வினை காண்டை எனத் திரிந்தது.- நச்.விளக்கம்
– காண்டை – பார்த்துக்கொள்: வினைத்திரிசொல் – பெ.விளக்கம்

மேல்


காண்வரு(தல்)

(வி) 1. காண்பதற்கு இனிமையாக இரு(த்தல்), be very pleasant to look at
2. காணத்தோன்று, காட்சியுறு, come into view, be sighted

1.

நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல் – அகம் 116/7

நறிய மலர்கள் வேய்ந்த காண்டற்கு இனிய பலவாய கூந்தலினையும்
– நாட்டார் உரை

காண்வர
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா – நற் 121/7,8

காண்பதற்கு அழகாக
விரிந்த தலையாட்டம் பொலிந்த விரைந்து செல்லும் செருக்குடைய குதிரையை

2.

அழி துளி தலைஇய புறவின் காண்வர
வான் அர_மகளோ நீயே – ஐங் 418/2,3

மிக்க மழைத்துளிகள் பொழிதலுற்ற காட்டினிடையே யான் கண்கூடாகக் காண்டல் உண்டாக
என் முன்னே தோன்றுதற்கு
நீ தான் வானத்து உலவும் தெய்வ மகளோ?
– பொ.வே.சோ உரை

மிக்க மழையை ஏற்றுக்கொண்ட காட்டிடையே காட்சியுறத் தோன்றுதலின்
நீ வானர மகளோ, கூறுக
– ஔ.சு.து.உரை

மேல்


காணிகா

(மு.ஏ.வி.மு) காண்பாயாக, see

கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா – கலி 105/36

பிடிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிற அந்தச் செந்நிறக் காளையைப் பார்!

கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/40

கொம்புகள் மேலே எழும்போது ஆடுகின்ற கொத்தான மணிகளைப் பார்
– காணிகா என்புழி இக என்னும் முன்னிலை அசை இகா என நீண்டது. திரிந்தது என்பாரும் உளர்
– நச் உரை, பெ.விளக்கம்

மேல்


காந்தள்

(பெ) ஒரு செடி, பூ, கார்த்திகைப்பூ, glory lily, Gloriosa superba

கை போல் பூத்த கமழ் குலை காந்தள் – பரி 19/76

கைவிரல்கள் போல் பூத்த கமழ்கின்ற குலைகளையுடைய காந்தளும்

மேல்


காமர்

(பெ) 1. விருப்பம், ஆசை desire, wish
2. அழகு, beauty, loveliness

1.

காமர் பொருள்_பிணி போகிய
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/9,10

விரும்பத்தக்க பொருள்குறித்துப் பிரிந்து சென்ற
நாம் விரும்பும் காதலராகிய தலைவர் செம்ற வழிகள்

2.

கரும் கோட்டு இரலை காமர் மட பிணை – அகம் 74/9

கரிய கொம்பினையுடைய ஆண்மானினது அழகிய இளைய பெண்மான்

மேல்


காமரம்

(பெ) சீகாமரம் என்னும் பண், a musical mode

ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும் – சிறு 76,77

(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,
விருப்பம் மருவின தும்பி சீகாமரம் (என்னும் பண்ணை)இசைக்கும்

மேல்


காமரு

(பெ.அ) 1. விரும்பத்தக்க, விருப்பம் வரும், desirable
2. அழகிய, beautiful

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75

– ’காமம் வரும்’ என்பது விகாரத்தால் ’காமரு’ என நின்று ’கண்டார்க்கு விருப்பம் வரும்’ என்பதாயிற்று
என்பர் அடியார்க்கு நல்லார் – திருமூகாற்றுப்படை – அடிக்குறிப்பு -உ.வே.சா

காமரு தகைய கான வாரணம் – நற் 21/8

விரும்பத்தக்க அழகுபொருந்திய கானக்கோழி
– ஔ.சு.து.உரை

காமரு வையை சுடுகின்றே கூடல் – பரி 24/4

கண்டார்க்கு விருப்பம் வருதற்குக் காரணமான வையையாற்றின்கண் பெருகிய வெள்ளம் மதுரைக்கு விரைந்து வந்தது.
பொ.வே.சோ.உரை

மா மலை பயந்த காமரு மணியும் – புறம் 218/2

பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும்
– ஔ.சு.து.உரை

2.

காமரு பழன கண்பின் அன்ன – புறம் 334/1

அழகிய நீர் நிலைகளில் வளர்ந்திருக்கும் சண்பங்கோரையின் கதிர் போன்ற
– – ஔ.சு.து.உரை

தேம் கொள் மருதின் பூம் சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும் – புறம் 351/10,11

தேன் பொருந்திய மருத மரத்தின் பூவொடு கூடிய கிளைகளில் தங்குதலை வெறுப்பின்
அழகிய காஞ்சிமரத்தின்கண் உறங்கும்
– – ஔ.சு.து.உரை

மேல்


காமவேள்

(பெ) காமன், மன்மதன், indian Cupid, God of love

எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர் – பரி 18/28,29

ஓவியம் எழுதப்பட்ட அழகையுடைய அம்பலம், காமவேளுடைய அம்பின்
தொழில் வீற்றிருக்கும் மண்டபமாகத் திகழும்;

காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என – கலி 27/24

காமவேளுக்குரிய விழா நடக்கும்போது கலங்கிப்போவாளே பெரிதும் என்று

மேல்


காமன்

(பெ) மன்மதன் : பார்க்க : காமவேள்

நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு – கலி 92/65-68

மதுரை நகரத்து மகளிரும் மைந்தரும்
தேனீக்கள் ஒலிக்கும் மலர்வனத்தில் ஒன்றாகச் சேர்ந்து விழாக்கொண்டாடும்படியாக
குன்றாத ஆர்வத்துடன் தம்மை அழகுசெய்துகொள்வர், மன்மதனுக்கு
வேனிற்காலத்து விருந்தினைப் படைக்க எதிர்கொண்டு”.

பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123

காமதேவனின் கருவூலமும், படைக்கலங்களும் ஆகும் இவளின் கண்களைப் பாருங்கள்!

மேல்


காமூர்

(பெ)
காமூர் என்பது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் எனத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சங்ககாலத்தில் காமூரை இடையர்களின் தலைவனான கழுவுள் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் ஒரு பெரிய
கொடை வள்ளல் என்று மருதனிள நாகனார் என்னும் புலவர் பாடிச் சிறப்பித்துள்ளார் (அகம் 365)
வேளிர் அரசர்கள் 14 பேர் ஒன்று திரண்டு கழுவுளைத் தாக்கியபோது காமூர் கலங்கியது போலத், தலைவனை நம்பிய
நெஞ்சம் அவன் பிரிந்தபோது கலங்கியது எனப் பரணர் (அகம் 135)குறிப்பிடுகிறார்.
கழுவுள் அரசனின் குடிமக்கள் ஆனிரைகளை மேய்த்து வாழ்ந்துவந்தனர். இவர்கள் அண்டர் என்று குறிப்பிடப்படுகின்றனர்,
பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் இவர்களின் ஊரைப் பாழாக்கினான்

அடு போர்
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈரெழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போல
மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/10-14

அடும் போரினையும்
நீங்காத சிறந்த புகழினையும் வானை அளாவிய பெரிய குடையினையும் உடைய
பதினான்கு வேளிர் ஒருங்குகூடித் தாக்கியதுமாகிய
கழுவுள் என்பானது காமூரைப் போல
கலங்கா நின்றது அவரைப் பிரியாரென்று தெளிவுற்றிருந்த என் மனம்.

வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் – அகம் 365/11,12

வென்றி வேலினையும்
சிறந்த வண்மையினையும் உடைய கழுவுள் என்பானது காமூராகிய அவ்விடத்து

பார்க்க கழுவுள்
மேல்


காயா

(பெ) காசா மரம், Ironwood tree, Memecylon edule

1.

இதன் இலைகள் மிகவும் செறிந்திருப்பன; பூக்கள் கருநீல நிறமுடையவை

பொன் கொன்றை மணி காயா – பொரு 201

பொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், மணி போன்ற காயா மலரினையும் உடைய

கரு நனை காயா கண மயில் அவிழவும் – சிறு 165

கரிய அரும்புகளையுடைய (காயாக்கள்)கூட்டமான மயில்களின் (கழுத்துகளைப் போலப்)பூப்பவும்

செறி இலை காயா அஞ்சனம் மலர – முல் 93

நெருங்கின இலையினையுடைய காயா அஞ்சனம்(போல்) மலர

2.

பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும்.

பசும்பிடி வகுளம் பல் இணர் காயா – குறி 70

பச்சிலைப்பூ, மகிழம்பூ, பல கொத்துக்களையுடைய காயாம்பூ

மேல்


காரான்

(பெ) கரிய எருமை அல்லது பசு, black buffallo or cow

சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
நள்ளென் யாமத்து ஐயென கரையும் – குறு 261/3,4

சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
நள்ளென்கிற நடுச் சாமத்தில் ‘ஐ’யென்று கத்தும்

மேல்


காரி

(பெ) 1. கடைவள்ளல்களுள் ஒருவன், A chief famed for liberality, one of seven kaṭaivaḷḷalkaḷ
2. காரி என்ற வள்ளலின் குதிரை
3. நஞ்சு, poison
4. வாசுதேவன், vAsudEva,
5. கரிய காளை, black bull

1.

கழல் தொடி தட கை காரியும் – சிறு 95

இறுக்குகின்ற தொடி(யினை அணிந்த), பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்

2.

காரி குதிரை காரியொடு மலைந்த – சிறு 110

காரியென்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனும்

3.

காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 83

நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்

4.

செம் கண் காரி கரும் கண் வெள்ளை – பரி 3/81

சிவந்த கண்ணும் கரிய மேனியும் உடைய வாசுதேவனே! கரிய கண்ணும் வெள்ளை உடம்பும் உடைய பலதேவனே

5.

சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி – கலி 101/21

சூரியனின் கதிர்கள் விரிவதைப் போன்ற சுழியினை நெற்றியில் கொண்ட கரிய காளை

மேல்


காரோடன்

(பெ) சாணை பிடிப்பவர், person who sharpens the weapons

சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல் – அகம் 1/5,6

சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த
சாணைக்கல் போல் (உன்னைப்) ‘பிரியமாட்டேன்’ என்ற சொல்லை

மேல்


கால்கிளர்

(வி) ஓடு, எழுச்சியுடன் செல், நடமாடித்திரி, run, set out on a mission with zeal, roam about

1.

கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல் – அகம் 45/16

கடலில் வந்த பகைவர்கள் தோற்று ஓடும்படியான வெற்றியையுடைய நல்ல வேல்

2.

கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் – பெரும் 21

‘கல்’என்ற ஒலியை எழுப்பும் சுற்றத்தாருடன் எழுச்சியுடன் சுற்றித்திரியும்

3.

கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே – நற் 255/1

பேய்கள் நடமாடித்திரிய ஊர் உறங்கிற்று.

மேல்


கால்கொள்

(வி) ஒரு நிகழ்ச்சி அல்லது செயலைத் தொடங்கு, commence an event or act

பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/10

பனி பெய்யத்தொடங்கிய வருத்தம் நிறைந்த நள்ளிரவில்

மேல்


கால்சீ

(வி) முழுவதுமாக நீக்கு, root out

மதி மாலை மால் இருள் கால்சீப்ப – பரி 10/112

திங்களானது, மாலைக்காலத்து மயக்கந்தரும் இருளைக் முழுதுமாய்க் கூட்டித்தள்ள,

மேல்


கால்மயங்கு

(வி) இடம் தெரியாமல் தடுமாறு, baffled, not able to see around

பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள் – நற் 255/9

மழை இடம் தெரியாமல் தடுமாறச்செய்யும் பொழுது கழிந்த நள்ளிரவில்

மேல்


கால்யா

(வி) 1. மறை, hide
2. நெருங்கு, be close, dense

1.

படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ – பெரும் 399

(பகைவரின்)படையின்கண் தோல்வியடையாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்
எல்லையை மறைத்த, பலவாகிய மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து,

2.

காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/5

காடாக நெருங்கி வளர்ந்த நீண்ட மரங்களையுடைய சோலை

மேல்


கால்வீழ்

(வி) மழை மேகம் திரண்டு கீழே இறங்குதல், clouds coming down for a heavy downpour

ஆலி அழி துளி தலைஇ
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே – அகம் 323/12,13

ஆலங்கட்டிகளுடன் கூடிய மிக்க துளிகளைப் பெய்து
கீழிறங்கிவந்தது உன் கூந்தலைப்போன்ற கார்மேகம்.

மேல்


காவி

(பெ) கருங்குவளை, Blue nelumbo

சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப – அகம் 350/1

சிறிய பூங்கொத்துக்களையுடைய நெய்தல்பூவும், கருங்குவளைப் பூவும் குவிய

மேல்


காவிதி

(பெ) சான்றோருக்குப் பாண்டியர் கொடுத்துவந்த ஒரு பட்டம், title bestowed on nobles by Pāṇdya kings;

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் – மது 496-499

நன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,
அன்புநெறியையும் அறச்செயலையும் (கடைப்பிடித்தல்)தவறாதபடி பாதுகாத்து,
பழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற
தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும்

மேல்


காவு

1. (வி) 1. தோளில் காவடித்தண்டால் சும, carry on the shoulder, a pole with a weight at each end
2. தோளில் சும, carry on shoulder
– 2.(பெ) சோலை, grove

1.1.

காவினெம் கலனே சுருக்கினெம் கல பை – புறம் 206/10

எம் கலன்களைத் தோள்தண்டில் தூக்கிவைத்தோம், அந்தப் பைகளின் வாயைச் சுருக்குக் கயிறால் மூடினோம்

1.2

ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவு ஓலை சூழ் சிறை யாத்த – நற் 354/3

ஆடி அசையும் அடிமரத்தை வெட்டியதால், நெடிய கரிய பனைமரத்திலிருந்து
விழுந்ததால் தோளில் சுமந்துகொண்டு சென்ற ஓலையால் சுற்றிலும் வேலியைக் கட்டின

2.

மாவும் களிறும் மணி அணி வேசரி
காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி 22/25

குதிரைகளும், களிறுகளும், மணிகள் அணிந்த கோவேறு கழுதைகளும்
ஆற்றங்கரைச் சோலை நிறையவும், கரையையும் நெருக்கமாக வந்து கூடி

மேல்


காழ்

(பெ) 1. வடம், கயிறு, string, thread
2. மரவைரம், hard core of timber
3. கருமை, blackness
4. கழி, pole, rafter
5. விதை, seed
6. கட்டுத்தறி, post to which a cow is tied
7. மரத்தூண், wooden pillar
8. கைப்பிடி, காம்பு, handle, stem
9. இரும்பு முள், sharp iron
10. கட்டு, பிணிப்பு, tie, fastening
11. குறுந்தடி, short stick
12. அங்குசம், elephant goad
13. பூச்சரம், garland of flowers
14. முத்து,மணி,வடம், garland of pearls, gems
15. துடுப்பு, oar
16. உள்ளீடு, inner solidity, kernel
17. அரிசி, rice
18. இரும்புக்கம்பி, iron rod
19. சந்தன, அகில் கட்டை, sandalwood or akil piece

1

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16

பல பொற்காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும்

2

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 32,33

நுண்ணிய பூணையுடைய மார்பில் அசைய, திண்ணிய வயிரத்தையுடைய
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,

3

கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் – சிறு 6

மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,

4

காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த – சிறு 133

(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த

5

களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130

களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று,

6

கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் – பெரும் 244

கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,

7

திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் – மது 449

திண்ணிய கொடிக்கம்பங்களில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளை

8

காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி – மது 739

காம்பினுள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று நிலைகுலைத்தலின் நிலைகலங்கி,

9

நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய – பட் 80

நீண்ட தூண்டிலில் இரும்பு முள் சேர்த்துவைக்கப்பட்ட

10

சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகு
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள – நற் 312/4

சிறகுகளைக் குவித்துவைத்திருக்கும் துன்பத்தையுடைய வெள்ளைக் குருகாகிய
பார்வைப் பறவையை வேட்டுவன் கால்கட்டை நீக்கி அருள்செய்ய நின்ற

11

மாலை வெண் காழ் காவலர் வீச
நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும் – ஐங் 421/1,2

மாலை நேரத்தில் வெண்மையான வயிரம்பாய்ந்த குறுந்தடியைப் புனங்காவலர் ஓங்கி எறிய,
நறுமணமுள்ள பூக்களைக் கொண்ட முல்லைக்காட்டினில் பதுங்கியிருக்கும் முயல்கள் வெருண்டோடும்

12

தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்
——— ———– – உன் களிறு – பதி 53/17-21

தேனீக்கள் மொய்க்கும் மதநீரோடு, பாகரின் குத்துக்கோலுக்கும் கைமீறிக்கொண்டு,
வேங்கை மரத்தைப் புலி என்று நினைத்து அழித்த வடுக்கள் அமைந்த புள்ளிகளையுடைய நெற்றியையுடைய,
——— ———– – உன் களிறு

13.

நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8

அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்

14.

கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை – கலி 57/19

முனைப்பான கோபம் கொண்டனவாய் இருப்பது தகுமோ அந்த முத்துவடம் கொண்ட இள முலைகளுக்கு?

15

வணங்கு காழ் வங்கம் புகும் – கலி 92/47

வளைந்த துடுப்புகளை உடைய படகுக்குள் நுழைவாள்

16

அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி – அகம் 253/15,16

அழகிய உள்துளையினையுடைய அகன்ற மூங்கில் குழாயில் நிறையுமாறு இட்டுத்
திணித்த உள்ளீடாகிய உணவை உட்கொள்பவரின் தொழுவாகிய அறையினைக் கவர்ந்து

17

சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி – அகம் 393/10,11

திரிகையில் திரித்து, சுளகினால் கொழிக்கப்பட்ட வெண்மையான அரிசியை
பூண் சிறந்த உலக்கையினால் மாறிமாறிக் குத்தி

18

கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன – புறம் 70/2

குளத்தில் வாழும் ஆமைகளை இரும்புக் கம்பியால் குத்திக் கோத்ததைப் போல

19

தேய்வை வெண் காழ் புரையும் – புறம் 369/19

கல்லில் தேய்த்து அரைக்கப்படும் வெண்மையான சந்தனக் கட்டையைப் போன்ற

காழ் என்பதற்குப் பொதுவாக, உறுதியானது, கெட்டியானது என்பதே பொருள். இதனை ஒட்டியே
பல பொருள்கள் ஆகுபெயராக வந்திருப்பதைக் காணலாம்.

மேல்


காழ்க்கொள்

(வி) முதிர்ச்சியடை, mature

இன்று யாண்டையனோ தோழி ——
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி
எம் இல் வருகுவை நீ என
பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/1-6

இன்று எங்கிருக்கின்றானோ? தோழி! —-
உன் அறிவு முதிர்ச்சியடையும் காலத்தில், செறிந்த வளையல்களையுடையாய்!
எமது இல்லத்துக்கு வருவாய் நீ என்று
பொங்கிவரும் கூந்தலைத் தடவிக்கொடுத்தவன்

மேல்


காழ்வை

(பெ) அகில், eagle wood

ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93

சந்தனப்பூ, அகிற்பூ, மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ,

மேல்


காழகம்

(பெ) 1. கடாரம், Burma, Myanmar
2. ஆடை, cloth, probably imported from Myanmar

1.

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191

2.

புலரா காழகம் புலர உடீஇ – திரு 184

ஈரம் காயாத துகில் புலர உடுத்தி

மேல்


காழியர்

(பெ) துணிவெளுப்போர், washermen

காழியர்
கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய – அகம் 89/7,8

துணிவெளுப்போர்
ஆரவாரம் பொருந்திய பரப்பினையுடைய வெவ்விய உவர் மண் ஒழிய

மேல்


காழோர்

(பெ) யானைப்பாகர், mahouts

காழோர்
கடும் களிறு கவளம் கைப்ப – மது 658,659

யானைப்பாகர்
கடிய களிறுக்குக் கவளம் ஊட்ட

மேல்


காளாம்பி

(பெ) காளான், mushroom

பூழி பூத்த புழல் காளாம்பி

மண்துகள்களில் பூத்தன – உட்துளை(கொண்ட) காளான்

மேல்


கானல்

(பெ) 1. கடற்கரை, seashore
2. கடற்கரைச் சோலை, Grove or forest on the sea-shore

1.

கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 150

கரையிடத்துள்ள வெள்ளிய மணற்பரப்பிலே கடல் பரந்து ஏறுதலானும்

2.

பெரும் கடல் முழங்க கானல் மலர – நற் 117/1

பெரிய கடல் முழங்காநிற்பவும், கடலருகிலுள்ள சோலை ஒருங்கே மலர்தலைச் செய்யவும்

மேல்