வில்லி பாரதம் – பாகம் 4

சருக்கங்கள்

(துரோண பருவம்)

43.பதினைந்தாம் போர்ச் சருக்கம்

(கன்ன பருவம்)

44.பதினாறாம் போர்ச் சருக்கம்

45.பதினேழாம் போர்ச் சருக்கம்

(சல்லிய – சௌப்திக பருவங்கள்)

46.பதினெட்டாம் போர்ச் சருக்கம்

43. பதினைந்தாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$43.1

#1
சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூ வகை
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர்மறை புரோகிதன்
கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி நெஞ்சிலே
வைத்த முத்தி நாதன் அன்றி வான நாடர் முதல்வன் யார்

மேல்
*இரு பக்கத்தாரும் சினந்து களம் குறுகுதல்
$43.2

#2
எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக ஏழு மா
தொடுத்த தேர் அருக்கர் சோதி தொழுது தங்கள் தொழில் கழித்து
எடுத்த கோபம் மூள நின்று இரண்டு சேனை அரசரும்
கடுத்து உளம் கறுத்து வெய்ய கண் சிவந்து கடுகினார்

மேல்
$43.3

#3
நாலு சாப நிலையும் வல்ல நரனும் வீமன் நகுலனும்
நாலு பாகம் ஆன சேனை நாதனும் சிரங்களா
நாலு கூறு செய்து தானும் நரனும் முந்த நடவினான்
நாலு வேத முடிவினுக்கும் ஆதியான நாரணன்

மேல்
*விசயன் கணைகளால் வாலவீமனும்
*சோமதத்தனும் மாளுதல்
$43.4

#4
வாலவீமன் என்று பார் மதித்த ஆண்மை மன்னனும்
சூலபாசபாணி-தன்னொடு ஒத்த சோமதத்தனும்
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துற
காலன் ஊரில் ஏகினார் கிரீடி ஏவு கணைகளால்

மேல்
$43.5

#5
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே
முன்முன் நின்று யாவரோடும் மூரி வில் வணக்கினான்
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-
தன் முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன்

மேல்
*துரோணனும் குந்திபோசனும் பொருதல்
$43.6

#6
ஈர்_இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள்
ஈர்_இரண்டும் வேறு வேறுபட்டு வென்னிட புடைத்து
ஈர்_இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவிஏவி இகல் செய்தான்
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான்

மேல்
$43.7

#7
புந்தி கூர் துரோணனுக்கு யாவரும் புறம்தர
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு
உந்தி மீள முடுகி அந்த முனிவனோடு உடன்றபோது
அந்தி வானம் ஒத்தது அம்ம அமர் புரிந்த ஆகவம்

மேல்
*மத்திரன் முதலியோரும் இருவர் இருவராய்ப் பொருதல்
$43.8

#8
குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான்
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன்
கரு நிறத்து அனந்தசாயி இளவலோடு கடுகினான்

மேல்
$43.9

#9
முனிவன்_மைந்தன் இந்திரன்-தன் மைந்தனோடு முடுகினான்
தினகரன்-தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான்
தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான்
இனி அகண்டமும் சிதைக்கும் இறுதி காலம் என்னவே

மேல்
$43.10

#10
எந்தஎந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார்
அந்தஅந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ
முந்தமுந்த வென்றுவென்று மோகரித்த தெவ்வர்-தாம்
வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி

மேல்
*தருமன் தானை முனிவனுக்கு உடைந்து போதல்
$43.11

#11
தேயு வாளி வருணன் வாளி தேவர் வாளி திண்மை கூர்
வாயு வாளி முதல் அனைத்து வாளியாலும் மலைதலால்
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும்
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே

மேல்
*மரீசி, அகத்தியன் முதலிய பல முனிவர் வந்து,
*துரோணனுக்கு உபதேசம் செய்து மீளுதல்
$43.12

#12
குருவும் அ குருகுலேசன் கொற்ற வெம் சேனை-தானும்
பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில்
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும்
துருவனும் உவமை சாலா துரோணனை வந்து சூழ்ந்தார்

மேல்
$43.13

#13
மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல்
அகத்தியன் முதலா உள்ள அனைவரும் வருதல் கண்டு
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி
முகத்தினால் இறைஞ்சி நிற்ப மொழிந்தனர் மொழிகள் வல்லார்

மேல்
$43.14

#14
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம்
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ
துறை கெழு கலைகள் வல்லாய் துன்னலர் செகுக்கும் போரும்
நிறைதரு வலியும் வாழ்வும் நிருபர்-தம் இயற்கை அன்றோ

மேல்
$43.15

#15
தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும்
விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும்
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று
படுக என்று உரிமை தோன்ற பகர்ந்தனர் பவம் இலாதார்

மேல்
*முனிவர்களின் உபதேசத்தால் துரோணன்
*சாந்தத்தை மேற்கொண்டு நிற்றல்
$43.16

#16
ஆனபோது ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள
ஞானமும் பிறந்து போரில் ஆசையும் நடத்தல் இன்றி
தூ நலம் திகழும் சோதி சோமியம் அடைந்து நின்றான்
யானமும் விமானம் அல்லால் இரதம் மேல் விருப்பு இலாதான்

மேல்
*கண்ணன் துரோணன் மாளுதற்குக் காலம் வந்தது
*என்று கருதி, தருமனிடம் அவனை மாய்த்தற்கு
*உபாயம் உரைத்தல்
$43.17

#17
கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர்
ஓடையாம் என்ன நின்றோன் முன்னரே உரைத்த வார்த்தை
மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது என்று கொண்டான்

மேல்
$43.18

#18
கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்-தன்னோடு ஓதி
சுடு கனல் அளித்த திட்டத்துய்மனை அவன் மேல் ஏவி
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும்
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளி செய்வான்

மேல்
$43.19

#19
மந்தரம் அனைய பொன் தோள் மாருதி மாளவ கோன்
இந்திரவன்மா மேல் சென்று எரி கணை தொடுத்த போரில்
அந்தரம் அடைந்தது ஐய அச்சுவத்தாமா என்னும்
சிந்துரம் அதனை வென்றி திசை களிறு ஒப்பது அன்றே

மேல்
$43.20

#20
மதலை பேர் எடுத்து போரில் மடிந்தவாறு உரைத்தபோதே
விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம்
முதல் அமர்-தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம்
நுதலுதி நீயே சென்று நுவலுதி விரைவின் என்றான்

மேல்
*’பொய்யுரையேன்’ என்று தருமன் மறுக்க,
*கண்ணன் ஏதுக்காட்டி வற்புறுத்தல்
$43.21

#21
வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம்பொன்
கையினான் அந்தணாளன் கையறல் புகன்ற காலை
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு
பொய்யினால் ஆள்வது இந்த புவி-கொலோ என்று நக்கான்

மேல்
$43.22

#22
அண்ணிய கிளையும் இல்லும் அரும் பெறல் மகவும் அன்பும்
திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும்
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை
புண்ணியம் அனைத்தும் சேர பொய்மையால் பொன்றும் அன்றே

மேல்
$43.23

#23
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும்
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும் மறுத்து கூற
கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம்
வென்று கொண்டவனும் மீள விளம்புவன் என்ப மாதோ

மேல்
$43.24

#24
உம்மையில் மறுமை-தன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின்
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவரவர் இயற்கையாலே
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்குமாகின்
பொய்ம்மையும் மெய்ம்மை போல புண்ணியம் பயக்கும் மாதோ

மேல்
$43.25

#25
வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து
சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடை தொக்க ஆற்றால்
புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம்
இல்லை நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி இதனை என்றான்

மேல்
*தருமன் துரோணனை அடுத்து, ‘அச்சுவத்தாமா என்னும்
*வாரணத்துக்கு வீமன் சிங்கமானான்’ என்று உரைக்க,
*முனிவன் படைக்கலத்தை விடுத்து நிற்றல்
$43.26

#26
போர் அற மலைந்து வென்று போதத்தால் பவங்கள் ஏழும்
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று
பேர் அறன் மைந்தன் நாவின் பிழை அற பேசுவானே

மேல்
$43.27

#27
அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும்
மத்த வாரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கம் ஆனான்
எத்தனை கோடி சேனை இ களத்து இறந்தது அந்த
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது என்றான்

மேல்
$43.28

#28
தீது இலான் உரைத்த மாற்றம் செவி படும் அளவில் நெஞ்சில்
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி
போது இலான் இறந்தான் போலும் புதல்வன் என்று இனைதல் இன்றி
ஏதிலான் போல நின்றான் யார்-கணும் பந்தம் இல்லான்

மேல்
*திட்டத்துய்மன் எய்த வாளியால் துரோணன் படுதல்
$43.29

#29
முள் இயல் நாள கோயில் முனி நடு தலையை முன்னம்
கிள்ளிய பினாக பாணி கிரீசனொடு ஒத்த வீரன்
துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது அம்பு சென்று
தள்ளியது அப்போது அந்த தவ முனி தலையை அந்தோ

மேல்
*துரியோதனன் சேனை பின்னிட, அசுவத்தாமன் சென்று,
*இறந்த தந்தையைக் கண்டு வருந்துதல்
$43.30

#30
பட்டனன் வாசபதி நிகர் சேனாபதி என்ன
கெட்டது நாககேதனன் வீரம் கிளர் சேனை
தொட்ட வில் ஆண்மை துரகததாமா எதிர் ஓடி
கட்டு அழல் வேள்வி தாதை இறந்த களம் கண்டான்

மேல்
$43.31

#31
கண்டான் வீழ்ந்தான் அம் முனி பாதம் கமழ் சென்னி
கொண்டான் மோதி கண் பொழி நீரில் குளித்திட்டான்
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம்
உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான்

மேல்
$43.32

#32
வன்பின் மிக்க வீடுமன் உன்னை மன் ஆகு என்று
அன்பின் இ பார் அளவும் அன்றே அருள்செய்தான்
முன் பின் எண்ண உவமை இலாதாய் முடிவாயோ
உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ

மேல்
$43.33

#33
வில்லாய் நீ வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ
சொல்லாய் நீ தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே
எல்லாம் இன்றே பொன்றின உன்னோடு எந்தாயே

மேல்
$43.34

#34
கல் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த மொழிப்படியே கருதார் போரில்
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான்
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ

மேல்
*துரியோதனன் தேற்ற, அசுவத்தாமன் தேறி,
*’யாவரையும் வெல்வேன்!’ என வில் வளைத்தல்
$43.35

#35
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன்
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன்
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான்

மேல்
*கண்ணன் படைக்கலமும் வாகனமும் இன்றியிருக்குமாறு பணிக்க,
*வீமனை ஒழிந்தோர் அங்ஙனமே தரையில் நிற்றல்
$43.36

#36
பாகசாதனன் மதலை தெய்வ பாகன் பாகு அடரும் நெடும் பனை கை பகட்டின் மேலான்
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும்
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார்

மேல்
*அசுவத்தாமன் நாராயணன் வாளி தொடுத்தலும்,
*அதை வீரர்கள் வணங்க, அது வீமனைச் சென்று சேர்தல்
$43.37

#37
மாற்று அரிய மறையொடு நாராயணன்-தன் வாளி தொடுத்தலும் அந்த வாளி ஊழி
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே

மேல்
$43.38

#38
பார் உருவி திசை உருவி அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி பரந்து சீறி
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ

மேல்
*வீமன் எதிர் வந்த படைகளை வெவ்வேறு படைகளால் மாற்றுதல்
$43.39

#39
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன்
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கொன்று மாறான பகழிகளால் மாற்றினானே

மேல்
$43.40

#40
மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி
ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை
வீச்சினால் அறையுண்டும் கடக வாகு வெற்பினால் இடியுண்டும் வெகுளி கூரும்
பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி

மேல்
*கண்ணன் வீமன் கை வில்லும், வாகனமும் மாற்ற, நாராயணன் வாளி நாணியது
$43.41

#41
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன்
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள்
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான்
நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே

மேல்
*அசுவத்தாமன் பாசுபதம் விட நினைக்க, வியாத முனி அவனிடத்திற்கு வருதல்
$43.42

#42
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன்
வட்ட வெம் சிலையின் மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன்
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி உயர் சுருதி வாய்மையொடு தோன்றினான்

மேல்
*முனிவன் அசுவத்தாமனுக்கு அறிவுரை பகர்ந்து
*செல்லுதலும், சூரியன் மறைதலும்
$43.43

#43
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என
சென்று கைதொழுது பரசிட பரிவு தீர் கருத்தினொடு செப்பினான்
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும்
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே

மேல்
$43.44

#44
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம்
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின் மிசை இல்லையால்
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற
சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய்

மேல்
$43.45

#45
ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம்
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும்
மன்ற என்றும் இவர் செற்றதின் சதமடங்கு செற்றனர்கள் இன்று எனா
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே

மேல்
*தருமனும் துரியோதனனும் தத்தம் படைகளுடன் பாசறை அடைதல்
$43.46

#46
இருள் பரந்தது இனி அமையும் இற்றை அமர் என்று துன்று கழல் இட்ட தாள்
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை அடைந்த பின்
உருள் பரந்த ரத துரக குஞ்சர பதாதியோடு கடிது ஓடினான்
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே

மேல்
*துரியோதனன் சஞ்சயனை அழைத்து, துரோணன் மறைவையும்,
*கன்னன் சேனாதிபதி ஆதலையும் தந்தைக்கு உரைத்து வருமாறு அனுப்புதல்
$43.47

#47
தனது பாசறையில் ஆன அ குரிசில் சஞ்சயன்-தனை அழைத்து நீ
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும்
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும்

மேல்
$43.48

#48
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும்
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும்
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே

மேல்
*சஞ்சயன் திருதராட்டிரனுக்கு உரைத்து, துரியோதனனிடம்
*மீளுதலும், சூரியன் உதித்தலும்
$43.49

#49
அந்த அந்தணனும் அந்தனோடு இவை அனைத்தும் ஓதிய பின் அந்தனும்
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான்

மேல்
$43.50

#50
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான்
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே

மேல்

44. பதினாறாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$44.1

#1
மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா
மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயா மதுசூதா
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே

மேல்
*துரியோதனன் கன்னனைச் சேனாதிபதியாக்கி, களம்
*புக, ஐவரும் படைகளுடன் எதிரேற்றல்
$44.2

#2
கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார்
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே
அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும்
வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே

மேல்
$44.3

#3
சொல் தவறாத துரோணனை மௌலி துணித்த திட்டத்துய்மன்னும்
கொற்றவர் ஐவரும் மற்று உள பூபரும் வைனதேய கொடியோனும்
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார்

மேல்
*கன்னன் மகர வியூகமும், திட்டத்துய்மன் சக்கர வியூகமும் வகுத்தல்
$44.4

#4
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும்
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர்
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே

மேல்
$44.5

#5
பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான்
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும்
யானையின் மேலும் இருந்தவர் அவ்வவர் தம்மோடு அம்ம இகலுற்றார்

மேல்
$44.6

#6
நாமம் இரண்டொடு பத்துடை நாயகன் நவில வெம் சேனையின் நாதன்
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த
நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில்
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான்

மேல்
*காசி அரசனும் வீமனும் யானைமீது ஏறிப் பொருதல்
$44.7

#7
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய்
இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும்

மேல்
$44.8

#8
திலகமும் ஓடையும் இலகுறு நெற்றியது ஆலவட்ட செவியாலே
பல திசை மாருதம் உய்ப்பது செம் புகர் பட்டின் தொழிலின் பயில்கிற்பது
உலகினை மேல்கொளுமவனது என களி ஊறியதால் அங்குலம் ஒத்து
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன

மேல்
$44.9

#9
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும்
தரத்தது வெண்ணெய் நிறத்த நகத்தது தண் அம் துளவன் நிலை ஒத்த
திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே
உரத்தது நல் உதரத்தது இளம் கமுகு ஒத்தது அம்ம வாலதி

மேல்
$44.10

#10
தூணும் விலங்கும் முறிப்பது பாகு பரிக்கோல் யாவும் தூரத்தே
காணினும் நின்று கொதிப்பது தன் நிழல் கண்டு சீறும் கருத்தது
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம்

மேல்
$44.11

#11
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன்
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர்
தூசியின் வந்து முனைந்துமுனைந்து இரு தோலும் போர் செய்ய
வாசவர் ஓர் இருவோர் இரு கார் மிசை மலைவது என்ன மலைவுற்றார்

மேல்
$44.12

#12
அங்குசம் வார்த்தை வன் தாள் அடைவினில் பயிற்றி ஏனை
வெம் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார்

மேல்
$44.13

#13
கோடு கை முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற
ஆடவர்-தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி
சேடனும் அமரர் கோவும் வெரு கொள செரு செய்தாரே

மேல்
*காசிராசன் கேமதூர்த்தி வேல் எறிய, வீமன் அவனது
*யானையை வீழ்த்தலும், அவன் தன் தண்டினால்
*வீமன் யானையை வீழ்த்தலும்
$44.14

#14
ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல் அஞ்சி
காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி
வீசி அ காளை மார்பின் எறிதலும் வீமன் ஏ ஒன்று
ஏசு இல் அ வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான்

மேல்
$44.15

#15
கேமன் அ கரியின்-நின்றும் கிரியின்-நின்றும் இழியும் ஆளி
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி
வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான்
பூ மரு தாரினானும் பூவின் மேல் சுரும்பின் பாய்ந்தான்

மேல்
*இருவரும் கதைப் போர் புரிய, அதில்
*கேமனை வீமன் கொல்லுதல்
$44.16

#16
கரி அமர்க்கு ஒருவரான இருவரும் காலில் நின்று
பரிய அ கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண
கிரியொடு கிரி செய் பூசல் இது என கிளக்குமாறு
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார்

மேல்
$44.17

#17
தண்டொடு தண்டம் ஏந்தி சாரிகை பலவும் காட்டி
கொண்டலின் முழக்கு ஈது என்ன குரை கடல் ஒலி ஈது என்ன
கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்கு உரைப்பு அரும் கணக்கின் தாக்கி
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான்

மேல்
*சிதறிய சேனையைக் கன்னன் ஒன்று சேர்த்தலும்,
*பாண்டவர் சேனையும் ஓர் அணியாக வந்து பொருதலும்
$44.18

#18
எறிந்த தண்டு அமரில் கேமன் இறந்தனன் என்ற போழ்தின்
முறிந்தது வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை
அறிந்து எதிர் ஊன்றி வென்றி ஆண் தகை கன்னன் மீள
பிறிந்த பல் அணியும் ஒன்ற பேர் அணி ஆக்கி நின்றான்

மேல்
$44.19

#19
பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர்
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை
ஓர் அணியாக கூடி உடன்று எதிர் நடந்தது அன்றே

மேல்
*நாற்படைகளின் வரவும் திறனும்
$44.20

#20
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே

மேல்
$44.21

#21
நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன மகுடமும்
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும்
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே

மேல்
$44.22

#22
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன
படியில் ஒரு படி நிலை அறு கதியன பவனம் என நனி பரவின பரிகளே

மேல்
$44.23

#23
அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே

மேல்
$44.24

#24
முரசு கரடிகை கிணை துடி பெருமரம் முருடு படு பறை முதலிய கருவிகள்
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள்
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே

மேல்
$44.25

#25
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும்
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும்
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும்
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே

மேல்
*கன்னனும் நகுலனும் பரிமீது அமர்ந்து பொருதல்
$44.26

#26
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர்
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின்
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள்
வர நிரைநிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே

மேல்
$44.27

#27
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன
இசைகள் ஒருபது திசைகளும் எழுதிய இறைவர் இருவரும் மிசைகொளும் இவுளியே

மேல்
$44.28

#28
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும்
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும்
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே

மேல்
*நகுலன் கணைகளால் கன்னன் குதிரை இழந்து, இரதத்தில் புக,
*நகுலனும் குதிரையை விட்டுத் தேரில் ஏறிப் பொருதல்
$44.29

#29
நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின்
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே

மேல்
$44.30

#30
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர்
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே

மேல்
$44.31

#31
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை
அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர்
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே

மேல்
$44.32

#32
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின
இருவர் இரதமும் அழிய முன் முடுகின இருவர் துவசமும் அற விசை கடுகின
இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின
இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே

மேல்
$44.33

#33
கன்னனும் பரி நகுலனும் தம காலின் நின்றிடவே
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார்
முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும்மடங்கு பொர
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே

மேல்
*நகுலனை மீளுமாறு துரத்தி, அவனுடன் வந்தார் இருவரைக்
*கொன்று, விசயன் நின்ற இடத்தைக் கன்னன் அணுகுதல்
$44.34

#34
அல்லி நாள்முகை அம்புயங்கள் அலர்த்தும் நாதன் மகன்
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை இன்று அமரில்
கொல்லின் நா தவறும்-கொல் என்று ஒரு கோலினால் அழியா
வில்லின் நாண் அழியா நடக்க என மீள விட்டனனே

மேல்
$44.35

#35
நின்ற மா நகுலற்கு வன் துணையாகி நின்றிடலால்
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும்
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்-தனையும்
கொன்று வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே

மேல்
*விசயன் அம்பினால் கன்னன் வலி அழிந்து மீளுதல்
$44.36

#36
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல்
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர்
தொடங்கும் முன் பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன்
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே

மேல்
$44.37

#37
அருண வெம் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும்
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா
வருணமும் பெயரும் பிறிந்திலர் மனனும் ஒன்று எனவே
தருண வாள் நிலவு எழ நகைத்து உரைதந்து போயினனே

மேல்
$44.38

#38
அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை நீ
இன்று போய் இனி நாளை வா என இனிது இயம்பினனால்
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன்
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான்

மேல்
*சாத்தகி, சல்லியன், முதலியோர் இருவர்
*இருவராய் அங்கங்கே பொருதல்
$44.39

#39
அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும் குனி வில்
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும்
பல்லியங்கள் துவைப்ப நீடு பணை பகட்டுடனே
வல்லியம் பொருமாறு என பொர மாறுஇலார் ஒருபால்

மேல்
$44.40

#40
மாரனுக்கு இளையாமல் அம்பையை மா தவத்து விடும்
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெம்
சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும்
வீரனுக்கும் மிகுத்த பேர் அமர் விளைய வேறு ஒருபால்

மேல்
$44.41

#41
முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும்
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான்
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும்
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால்

மேல்
$44.42

#42
குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான்
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன்
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதி
புரவி வித்தகன் இளவல் சென்று அமர் புரிய வேறு ஒருபால்

மேல்
*அசுவத்தாமனும் வீமனும் செய்த வெம் போர்
$44.43

#43
வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல்
ஆரியன் தரு கடவுள் மைந்தனும் அனிலன் மைந்தனுமே
தூரியம் பல கோடி கோடி துவைப்ப வெம் சமரே
காரியம் பிறிது இல்லை என்று கலந்து மோதினரே

மேல்
$44.44

#44
சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் மேல்
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு
இரத நேமி குலைந்து சூதனொடு இவுளி நாலும் விழ
பொருது சீறினன் முன் பயந்த புராரியே அனையான்

மேல்
$44.45

#45
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல்
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர்
தூளம் உற்றிட முதுகிடும்படி தொட்டனன் கணையே

மேல்
*கைகயனும் சுருதகீர்த்தி முதலியோரும்
*இருவர் இருவராய்ப் பொருதல்
$44.46

#46
கருதி வாய்த்தது போர் எனா மெய் களித்த கைகயனும்
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால்
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன் மா
இரதம் மேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால்

மேல்
$44.47

#47
தரும பூபதி சேனையின் பதி சாப ஆசிரியன்
கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம்
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன்

மேல்
$44.48

#48
திங்களை தலையாக மன்னவர் செப்பு மா மரபோர்
தங்களில் பகை ஆகி வானவர் தானவர்க்கு எதிராய்
எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும்
வெம் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே

மேல்
*வெங்களத்தின் இயற்கை
$44.49

#49
இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன காவணமே
உற்றது கொள் அலகை குலம் வெம் களம் உரை பெருகாவணமே
வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே
கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன சா மரமே

மேல்
$44.50

#50
மின் புயல் வாய் விரிகின்றன ஒத்தன விரி நுதல் ஓடைகளே
என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின ஓடைகளே
முன் புடை வாலதி செற்றது வெம் புகர் முகம் முழுகும் சரமே
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே

மேல்
$44.51

#51
பட்டம் அணிந்த நுதற்கு இடையே விழு தும்பிகள் பட்டனவே
தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய தும்பிகள் பட்டனவே
வெட்டி அறன் புதல்வன்-தன் வரூதினி வென்று களித்தனவே
இட்ட குமண்டைய பேய் பிணம் மிக்கன என்று உகளித்தனவே

மேல்
$44.52

#52
பழுது அற வீழ் படை மன்னவர் பேர் உடல் பற்பல அம்பினவே
பொழி குருதி புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே
தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும் மா வனச கரமே

மேல்
$44.53

#53
முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே
விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன வெண் நிலவே
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே

மேல்
$44.54

#54
சர மழை காவலர்-தங்கள் மனோ வனசம் புக மேயினவே
இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன சம்புகம் ஏயினவே
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன வாரணமே
அருகு நடிப்பன அலகைகள் பாடுவ யாமள ஆரணமே

மேல்
$44.55

#55
செயிருடை ஆடவர் சோரி பரந்து சிவந்தது பார் இடமே
வயிறு பெரும் குருதி சுனை ஆக வளர்ந்தன பாரிடமே
பயில மறைத்தன பாறு பருந்தொடு பல கழுகு அந்தரமே
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன எத்தனை கந்தரமே

மேல்
$44.56

#56
உம்பல் அநேகம் இளம் பிடி என்ன ஒடிந்தன கோடுகளே
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே
தும்பிகளால் அறையுண்டன கொற்றவர் சூழ் மன அம்புயமே
வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே

மேல்
$44.57

#57
தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன சாயகமே
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த இரும் துகளே
வீழ் பசியால் உழல் பேயொடு பாரிடம் மிக்க விருந்துகளே

மேல்
$44.58

#58
செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே
கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே
மெய் வகையால் இவை கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே

மேல்
$44.59

#59
தாரைகள் ஒற்றை தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே
ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே

மேல்
$44.60

#60
பொரு கடல் ஒத்த பெரும் குருதி கடல் போத இரைந்தனவே
விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே
கரு முகில் முட்டின பட்டவர் கண் கனல் காலும் அரும் புகையே
சுரிகையொடு அற்று விழுந்தன மங்கையர் துனியில் அரும்பு கையே

மேல்
$44.61

#61
கட கரி ஏனமொடு ஒத்தன அம்பொடு போன கரத்தனவே
புடவியின் மீது உறை நிறை மதியம் பல போல் நகரத்தனவே
படு திறல் வேலவர் கண்மணி சென்று பறித்தன வாயசமே
அடு பணை யானையின் வெம் குடர் சென்று பிடுங்கின ஆயசமே

மேல்
$44.62

#62
அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே
மணி முடி பாரம் உற பல நாகம் வருந்த இளைத்தனவே
கணை பல வீரர் முகத்தன தோளன கண்ணன மார்வனவே
நிணமொடு மூளை நெடும் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே

மேல்
$44.63

#63
ஆவமொடு ஒத்தன ஆடவர் நெஞ்சுகள் ஆகியபோது அகமே
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே
மேவு நரிக்கு விளைந்தன வெம் கரி வீழ் தலை ஓதனமே
நாவலருக்கும் உரைப்பு அரிது அந்த நனம் தலை யோதனமே

மேல்
*திட்டத்துய்மன் பின்னிடும் முன்பே விசயன் எதிர்ந்து வர,
*சஞ்சத்தகரும் நாராயண கோபாலரும் எதிர்த்தல்
$44.64

#64
பேர் ஆண்மை செய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும்
நாராயண கோபாலரும் அணியாக நடந்தார்

மேல்
$44.65

#65
சத் கோண நெடும் தேர் மிசை வரு சத்தியசேனன்
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன்
துட்கோடு உளம் மறுகும்படி சுடு தோமரம் ஒன்றால்
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால்

மேல்
$44.66

#66
புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து
தொடை உண்ட மலர் தும்பை சுமக்கும் திரள் தோளார்
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி அவர் மேல்
தடையுண்ட தடம் தேரினை விட்டான் முனைதரவே

மேல்
$44.67

#67
சென்று ஆடு அமர் புரி சேனையுடன் சித்திரசேனன்
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்-தனை வானோர்
தன் தாதை அளிக்கும் பல சரத்தால் விழ மோதி
கொன்றான் மிடல் வழுவாத குரக்கு கொடி உடையோன்

மேல்
*சஞ்சத்தகரும் நாராயண கோபாலரும் முற்றும்
*இறந்துபட, பகைவர் முதுகிடுதல்
$44.68

#68
முன் நாள் முதல் நால் நாலினும் முனை-தோறும் முருக்கி
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும்
நல் நாரண கோபாலரும் நாகம் குடியேற
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான்

மேல்
$44.69

#69
சஞ்சத்தகர் கண்ணன் தரு தனயோர் பலர் அடைவே
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று
அஞ்சி களம் முழுதும் கழுகு ஆட குறை ஆட
குஞ்சத்தொடு குடை வீழ்தர முதுகிட்டனர் கூடார்

மேல்
*சேனை முதுகிட்டமை அறிந்து துரியோதனன் பெரும்
*படையுடன் வர, தருமன் அவனை எதிர்த்தல்
$44.70

#70
முதுகிட்டவர் துரியோதனன் முன் வீழ்தலும் நூறைம்
பது கற்கியும் நாலாயிரம் விகட பொரு பகடும்
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான்
எதிர்கை பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான்

மேல்
$44.71

#71
குருமித்து நடக்கின்றனன் இவனோடு கொடும் கார்
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல்
நிருமித்து நடந்தான் மனு நீதிக்கு ஒரு நிலையான்
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன்

மேல்
$44.72

#72
துனை வெம் கபோல விகட கட கரி துரகம் பதாதி இரதம் அளவு இல
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர்
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே

மேல்
$44.73

#73
கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன்
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே

மேல்
$44.74

#74
குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர்
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர்
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக இரதர் அணுகினர்
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு பொதி வெம் பதாதி விருதர் பொதுளவே

மேல்
$44.75

#75
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள் கடவ வல்லவர்கள்
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும்
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம் முழுதும் மறையவே

மேல்
$44.76

#76
அறன் மைந்தன் வாளி அடைய நயனமிலவன் மைந்தன் வாளி விலக விரகுடை
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின்
நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே

மேல்
$44.77

#77
விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு
சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில்
முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே

மேல்
$44.78

#78
மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும்
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே

மேல்
$44.79

#79
இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில்
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர்
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே

மேல்
$44.80

#80
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன்
உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே

மேல்
*துரியோதனன் தளர்வுற, தருமன், ‘இன்று போய் நாளை வா!’ எனக் கூறுதல்
$44.81

#81
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற
எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே

மேல்
$44.82

#82
அனிலன் குமாரன் அரசர் அசனி என் அநுசன் சொல் வாய்மை பழுதுபடும் என
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர்
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன்
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே

மேல்
*துரியோதனன் முறுவலித்து, கதை கொண்டு எறிய,
*அதைத் தருமன் வேலால் உருவ எறிதல்
$44.83

#83
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன்
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே

மேல்
*துரியோதனன் பாரில் விழ, கன்னன், அசுவத்தாமன் முதலிய பலரும் அங்கு வருதல்
$44.84

#84
சூழ்ந்தது விதி-கொல் பாகும் துரகமும் தேரும் வீழ
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய் தவா வேந்தன் வேலால்
தாழ்ந்தது நமது கொற்றம் என நடு தரிப்பு ஒன்று இன்றி
ஆழ்ந்த பைம் கடலோடு ஒப்பான் அடுத்தனன் அங்கர்_கோமான்

மேல்
$44.85

#85
முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு
கல் படு புண்ணின் மீள தடி படு கணக்கிற்று ஆக
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின்
எல் படு பரிதி என்ன தோன்றினன் இவுளித்தாமா

மேல்
$44.86

#86
வேட்ட வெம் களிறோடு ஒப்பான் மேதினிக்கு அரசன் வில் போர்
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம்
கேட்டனன் அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான்

மேல்
$44.87

#87
காப்புடை ஒற்றை நேமி காவலன் தாம மார்பில்
நா புகல் வாய்மையான்-தன் நாள்மலர் செம் கை வை வேல்
கோப்புற வீழும் முன்னர் கொதித்து எழு மனத்தன் ஆகி
தா புலி பாய்ந்தது என்ன சல்லியன்-தானும் வந்தான்

மேல்
*தருமனைப் பலரும் வளைக்க, விசயன் முதலியோர்
*அவனுக்கு வந்து உதவுதல்
$44.88

#88
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை
அ பெரும் தானை-தன்னில் அருச்சுனன் ஆதியான
ஒப்பு அரும் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே

மேல்
*துரியோதனாதியர் உடைந்து பாசறைக்கு மீள,
*தருமன் முதலியோர் உவகையோடு மீளுதல்
$44.89

#89
இரு படை அரசும் தம்மில் ஈர்_இரண்டு அங்கம் ஆகி
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க
பொரு பணியுடை பதாகை பூபதி-தனையும் கொண்டு ஆங்கு
ஒரு படை கை கொளாமல் ஒன்னலர் உடைந்து போனார்

மேல்
$44.90

#90
நா கையா புகழான் பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன்
வாகையால் பொலி திண் தோளான் மாகத கொங்கர்_கோமான்
பாகை ஆட்கொண்டான் செங்கை பரிசு பெற்றவர்கள் போல
ஓகையால் செருக்கி மீண்டார் உதிட்டிரன் சேனை உள்ளார்

மேல்
*சூரியன் மேல்கடலில் மூழ்கி, குணகடலில் பிறத்தல்
$44.91

#91
அருக்கனும் தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி
சுருக்கம் இல் கங்குல் காலம் சென்ற பின் சுதன் மேல் அன்பு
பெருக்க உண்டாக மீண்டும் குண கடல் பிறந்திட்டானே

மேல்

45. பதினேழாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$45.1

#1
ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார் நமக்கே

மேல்
*முன் நாள் தோற்ற மன்னரும் சேனைகளும் புடை சூழ,
*கன்னன் துரியோதனனோடு களம் புகுதல்
$45.2

#2
அற்றை வெம் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம் அவனிபர் பலரும்
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப
கற்றை வெண் கவரி கால் பொர தனி பொன் கவிகை நீழலில் களம் கலந்தார்

மேல்
$45.3

#3
எண்_இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு எழுந்தன என்னும்
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும்
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெம் களம் முழுவதும் கஞல
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான்

மேல்
$45.4

#4
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண் களிப்புறாது ஒழிந்தார்

மேல்
*தம்பியர் முதலியோர் சூழத் தேரில் நின்ற தருமன், ‘இன்று
*கன்னன் இறப்பானோ?’ என்று கண்ணனிடம் உசாவுதல்
$45.5

#5
ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும்
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன்
பெரும் கள பரப்பின் அணி பெற அணிந்து பேர் உலகு உய்யுமாறு இருண்ட
கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான்

மேல்
$45.6

#6
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை
மன்றல் அம் துளப மாலை மாதவனை வழிபடுமவர்க்கு வான் துணையை
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான்

மேல்
*’கன்னன் இன்றும், துரியோதனன் நாளையும், மடிய
*அவனி நின்னதாம்’ என்று கண்ணன் உரைத்தல்
$45.7

#7
இ தினம் இரவி_சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும் நாளை
தத்தின புரவி தேர் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும்
அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான்
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால்

மேல்
*தருமன் கண்ணன் செய்த உதவியை நன்றியுடன்
*பாராட்டி, பாதங்களில் வீழ்ந்து பணிதல்
$45.8

#8
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று
எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார்
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான்

மேல்
$45.9

#9
பொங்கு அழல் சிந்தை சுயோதனன் கங்கை புனல் விளையாட்டிடை புதைத்த
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய்
பைம் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர பயந்த
நுங்கு அழல் அனையாள் நாணமும் துகிலும் நோக்கினை காக்கும் நாயகனே

மேல்
$45.10

#10
கானக மருங்கில் மேவலன் பணியால் கடும் பசியுடன் வரும் கடவுள்
மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய்
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும்
பானுவின் மதலை கவசமும் அகற்றி பரிந்து பல் வினைகளும் புரிந்தாய்

மேல்
$45.11

#11
கள பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான்-தனக்கு நேர்ந்திடவும்
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய்

மேல்
$45.12

#12
அஞ்சியோ அன்றி அருள்-கொலோ அறியேன் ஆகவத்து அடு தொழில் மறந்த
வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய்
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை
துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன் வழாவகை துரந்தாய்

மேல்
$45.13

#13
ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல்
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய்
பொரு பகை அரசர் பலர் பட அபிமன் பொன்றிய பொழுது செம் தழலின்
நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய்

மேல்
$45.14

#14
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை
கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய்
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால்
அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய்

மேல்
$45.15

#15
ஏ வரும் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள்
வீ வரும் தன்மை அறிந்து வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய்
மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே பார்த்திவர் பலரும்
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான்

மேல்
*தருமனைக் கண்ணன் தழுவி, உபசாரம் சொல்லி, திட்டத்துய்மனை
*அணிவகுக்கப் பணிக்க, அவனும் அணிவகுத்தல்
$45.16

#16
கண்ணனும் கருணை கண்ணனை இறைஞ்சி கைகளால் தழுவி ஐவிரும் நீர்
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி
பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான்
அண்ணல் அம் திட்டத்துய்மனும் தெவ்வர் அஞ்சிடும்படி அணி வகுத்தான்

மேல்
*ஐவரது அணி கண்டு, கன்னன் துரியோதனனை நோக்கி, ‘சல்லியன் எனது
*தேரைச் செலுத்தின் இன்று யாவரையும் வெல்வேன்!’ எனல்
$45.17

#17
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான்
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான்

மேல்
$45.18

#18
கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன்
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம்
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும்
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான்

மேல்
$45.19

#19
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனை-தனக்கு ஆற்றார் பரவை ஆடை
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே

மேல்
$45.20

#20
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால்
வெம் சோற்றோடு இனிது அருந்தி அமுது அருந்தும் விண்ணவர் போல் இ நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன்
செஞ்சோற்றுக்கடன் இன்றே கழியேனாகில் திண் தோள்கள் வளர்த்ததனால் செயல் வேறு உண்டோ

மேல்
$45.21

#21
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே

மேல்
*துரியோதனன் சல்லியனை அடுத்து, ‘ஒரு வரம் வேண்டும்’ என்று முதலிற் கூறி
*பின் கன்னனுக்குத் தேர் ஊர்தல் குறித்து உரைத்தல்
$45.22

#22
கன்னன் இவை எடுத்துரைப்ப மகிழ்ந்து கேட்டு காந்தாரன் திரு குலத்து கன்னி ஈன்ற
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம்
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே

மேல்
$45.23

#23
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம்
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல்
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான்

மேல்
$45.24

#24
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ
தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள்
யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய்

மேல்
$45.25

#25
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும்
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால்
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே

மேல்
*சல்லியன் சினந்து, துரியோதனன் வேண்டுகோளை மறுத்தல்
$45.26

#26
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும்
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான்
சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே

மேல்
$45.27

#27
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல்
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான்

மேல்
*துரியோதனன் சமாதானம் கூற, சல்லியன் ஒருப்படுதல்
$45.28

#28
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான்
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான்

மேல்
$45.29

#29
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு
வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான் மேம்பாடு அன்றோ
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே

மேல்
$45.30

#30
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான்
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன்
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை

மேல்
*சல்லியன் கன்னனுக்குப் பாகனாய் வந்து அமர,
*கன்னன் உவந்து சேனைகளை அணிவகுத்தல்
$45.31

#31
பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீள பெற்றனன் போல் அடல் அருக்கன் பெற்ற பிள்ளை
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற
பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான்

மேல்
$45.32

#32
பணி நிறுத்தி எழுதுறு பொன் பதாகையானை படாது ஒழி தம்பியரோடும் பார்க்கவன் போல்
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான்

மேல்
*கன்னன் தானம் செய்தபின், தன்னைப் பலபடப் புகழ்ந்து சல்லியனிடம் பேசுதல்
$45.33

#33
கோவல் சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாகை வேந்தன்
பாவலர் மானம் காத்தான் பங்கய செம் கை என்ன
மேவலர் எமர் என்னாமல் வெம் களம்-தன்னில் நின்ற
காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி

மேல்
$45.34

#34
அந்தணர் பரிசில்மாக்கள் அவனிபர் முதலோர் யார்க்கும்
சிந்தைகள் களிக்க தான தியாகமும் சிறப்பும் நல்கி
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன கன்னன்
சந்து அணி குவவு தோளான் சல்லியன்-தனக்கு சொல்வான்

மேல்
$45.35

#35
மேகவாகனன்-பால் பெற்ற வெயிலவன் இயமதங்கி
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெரும் சாபம் பெற்றேன்
நாக வெம் பகழி பெற்றேன் நாரணற்கு ஒத்த உன்னை
பாகனும் ஆக பெற்றேன் பாக்கியம் பலித்தவாறே

மேல்
$45.36

#36
எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை அ விசயன் என்பான்
தனக்கு எதிர் என்னை அன்றி தரணிபர் யாரும் இல்லை
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த
கன குரல் களிற்றோய் இன்று காண்டி என் ஆண்மை என்றான்

மேல்
*சல்லியன் இளநகை செய்து, கன்னனது தருக்கு அடங்கப் பேசுதல்
$45.37

#37
என்றலும் மத்திரேசன் இள நகை செய்து நீ நின்
வென்றியும் வலியும் கற்ற வின்மையும் விளம்ப வேண்டா
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து
சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ

மேல்
$45.38

#38
ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள்
இருவரும் பொரும் போர்-தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம்
வெருவரல் மறந்தும் இல்லா விசயனை ஒருபோதத்தும்
திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால்

மேல்
$45.39

#39
வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு
செயிர்த்திடும் இற்றை பூசல் தெரியுமோ தெரிந்தது இல்லை
அயிர்த்தனம் என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப நீட
உயிர்த்தனன் ஆகி மீள உத்தரம் உரைக்கலுற்றான்

மேல்
*சல்லியனைக் கன்னன் கடிய, அவன் வாள் ஏந்தி
*மண்ணில் நின்று கன்னனை அறைகூவுதல்
$45.40

#40
இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை என்று நின்ற
தந்திரபாலர் முன்னர் சல்லிய இகழ்தல் வேண்டா
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான்

மேல்
$45.41

#41
வலியுடை தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு
கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி
ஒலியுடை புரவி திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ
எலியுடை பூசல் பூஞைக்கு எதிர்ப்படின் என் படாதோ

மேல்
*கன்னனும் கீழ் இறங்கி வாள் ஏந்திப் பொர,
*துரியோதனன் வந்து விலக்கி, இருவரையும் தேரில் ஏற்றிப்
*போர் செய் வேண்டுதல்
$45.42

#42
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல்
மருவுறும் மைந்தன்-தானும் வாளொடு மண்ணில் தாவி
இருவரும் இரண்டு காயம் இகலும் முன் உரக கேது
வெருவரும் சிந்தையோடு வெய்தின் போய் விலக்கினானே

மேல்
$45.43

#43
மூளும் வெம் சினத்தை மாற்றி முரணுறுத்தவர்கள்-தம்மை
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான்
மாளவும் பாண்டு மைந்தர் வையகம் முழுதும் தானே
ஆளவும் கருதி எல்லா அரசையும் அழிக்கும் நீரான்

மேல்
*கன்னனைக் கிருதவன்மன் முதலியோர் காத்து நிற்க,
*துரியோதனன் சல்லியனுக்கும் கன்னனுக்கும்
*நல்லுரை பகர்தல்
$45.44

#44
வனை கழல் கிருதவன்மன் வரி சிலை கிருபன் தானே
தனை நிகர் சகுனி தாமா சாலுவன் திகத்தராசன்
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை
கனை கடலோடு சூழ்ந்து கன்னனை காத்து நின்றார்

மேல்
$45.45

#45
நின்ற அ கன்னன்-தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி
வென்றனம் பூசல் இன்றே விசயனும் தாதை-தன்பால்
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம்
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே

மேல்
$45.46

#46
சதமகன் மகன் தேர் பாகன்-தன்வயின் கேண்மை விஞ்சி
விதுரனும் அமர் செய்யாமல் வெம் சிலை இறுத்து பின்னும்
யதுகுல தலைவனான இராமனும் தானும் பாரில்
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான்

மேல்
$45.47

#47
கங்கை-தன் வயிற்றில் தோன்றி தாதை-தன் காதல் தீர்ப்பான்
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து
வெம் களத்து உதயன் போல வீடுமன் களத்தை எல்லாம்
செம் கள படுத்தி மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான்

மேல்
$45.48

#48
கரி முக கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும்
குரை கழல் துணை தாள் சிங்க குருளையை பயந்த தாதை
அரு மறைக்கு அயனை ஒப்பான் அடல் சிலைக்கு அரனை ஒப்பான்
திருவருட்கு அரியை ஒப்பான் திரு தகு வீடு சேர்ந்தான்

மேல்
$45.49

#49
சாயலால் சிறந்த தோகை சாமள தடம் புள் ஊர்தி
சேய் அலால் தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார்
நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ
தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா

மேல்
$45.50

#50
மித்திரர் என்று நோக்காது என்னுடன் விளைந்த நண்பால்
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான்
குத்திரன் அல்லன் செம்மை கொள்கையன் மறையின் மிக்க
அத்திர சாபம் வல்லான் இவனொடு ஆர் அமர் செய்கிற்பார்

மேல்
$45.51

#51
என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான்
நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான்
தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல்
புன் மொழி ஆடி நும்மில் புலப்பது புன்மை அன்றோ

மேல்
$45.52

#52
இதயமும் வலியும் தேயத்து இயற்கையும் வினையும் பற்பல்
கதிகளும் உணர்ந்து பூணும் கவன மா தெரிந்து பூட்டல்
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர்
முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய்

மேல்
*அப்பொழுது திட்டத்துய்மன் வீரரோடு கன்னனை
*நெருங்கிப் பொருது தோற்றுத் தேருடன் திரும்புதல்
$45.53

#53
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன்
சொன்ன திண் திறல் துருபதேயனும் சோமகேசராய் உள்ள சூரரும்
கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே

மேல்
$45.54

#54
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார்
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார்
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார்
அன்றை ஆகவம்-தனில் நிகழ்ந்த போர் ஆரைஆரை என்று அதிசயிப்பதே

மேல்
$45.55

#55
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார்
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார்
வேறுவேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே

மேல்
$45.56

#56
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின்
பட்டு ஒழிந்த அ இருவர் சேனையின் பதிகளும் சயம் பட உடற்றினார்
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின்
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து ஏறு தேருடன் தேறி ஓடினான்

மேல்
*அப்பொழுது வீமன் வந்து கன்னனோடு பொருதல்
$45.57

#57
சோமகேசரில் பட்டு ஒழிந்த வெம் சூரர்-தம்முடன் துரோண சூதனன்
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின்
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும்
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான்

மேல்
$45.58

#58
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும்
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார்
வேலினால் எறிந்து அமர் உடற்றியும் வெய்ய வாளினால் வெட்டி முட்டியும்
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே

மேல்
$45.59

#59
மைந்தர் போர் விதம் கண்டுகண்டு தார் மருவும் அம் புயத்து இருவரும் களித்து
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும்
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார்

மேல்
$45.60

#60
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல்
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும்
மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான்

மேல்
$45.61

#61
வல கண் ஆன செம் சுடர் இட கணும் வாகுவும் துடித்து ஆகுலத்துடன்
கல கணீர் பொழிந்து இனையும் வேலையில் கனல் படும் புணில் தடி படும் கணக்கு
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்_இரண்டு நால் இரண்டு எண் இரண்டினால்
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே

மேல்
*’விசயன் வஞ்சினம் அழியும்’ என்று கன்னனை
*வீமன் கொல்லாது விடுத்துச் செல்லுதல்
$45.62

#62
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன்
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே
யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான்

மேல்
*சாத்தகியோடு விடசேனன் பொருது, தேர் முதலிய இழத்தல்
$45.63

#63
அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை சாய்தர ஊழியின்
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில்
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே

மேல்
$45.64

#64
திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும்
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே

மேல்
*சோழன் மாகதனுடன் பொருது, அவன் ஆவி கவர்தல்
$45.65

#65
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை
சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே

மேல்
$45.66

#66
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன்
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே

மேல்
$45.67

#67
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன்
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள்
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே

மேல்
$45.68

#68
அண்டர் குல பதியாம் விடை வாகனன் அம் பொன் முடி மலர் நாறிடு தாளினன்
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன்
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன்
மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே

மேல்
*மாகதன் மாண்டதும் சேனை புறமிட்டதும் கண்டு, அசுவத்தாமன் வர,
*விசயன் அவனை வென்று, வெறுங் காலுடன் மீள விடுதல்
$45.69

#69
யாது ஏவல் என்று பல மன்னரும் ஈண்ட இ பார்
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால்
மோது ஏவு பட்டு முகம் மாறி மகதர் கோமான்
சாதேவன் வீழ முதுகிட்டது தானை வெள்ளம்

மேல்
$45.70

#70
புறமிட்ட தானை நிலை கண்டு பொறாது சோதி
நிறம் இட்ட வில் கை துரோணன் மகன் நெஞ்சு கன்றி
மறம் இட்ட வாளி பல தூவி வருதல் நோக்கி
அறம் இட்ட சிந்தை அரசன்-தன் அனுசர்-தம்மில்

மேல்
$45.71

#71
இன்றே முடிப்பன் வினை என்று இரண்டு இந்த்ரநீல
குன்றே நிகர்ப்ப திருமாலொடும் கூடி நிற்பான்
சென்றே அதிர பரித்தாமனை செம் கை அம்பால்
வென்றே இமைப்பின் வெறும் காலினின் மீள விட்டான்

மேல்
*துரியோதனன் தம்பி சுதக்கணன் வர, நகுலன்
*அவனை அஞ்சி ஓடச் செய்தல்
$45.72

#72
துரியோதனன்-தன் இளையோரில் சுதக்கண பேர்
பெரியோன் முறிந்த பெரும் சேனையின் பின்பு நின்றோன்
பரியோடும் மான் தேர் பரப்போடும் பதாதியோடும்
கரியோடும் ஊழி கனல் என்ன கனன்று வந்தான்

மேல்
$45.73

#73
முகிலின் சிலையின் சிலை கோலி முனை கொள் அம்பு
பெகுலம் தொடுத்து வரு காளையை பெட்பின் நோக்கி
நகுலன் சிறிது நகைசெய்து நகை செய் வாளி
அகிலம் தொடுத்து ஆங்கு அவன்-தன்னையும் அஞ்சுவித்தான்

மேல்
*கன்னன் முனைந்து வர, தருமன் எதிர்ந்து பொருதல்
$45.74

#74
மட்டு படாமல் வரு தெவ்வர் மலையின் நின்றே
தட்டுப்படாது இன்று எமர்-ஆனவர் தானை என்னா
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ
முட்டுப்படாத முரண் கன்னன் முனைந்து சென்றான்

மேல்
$45.75

#75
பாஞ்சாலரின் கேகயரின் பல பாடை மாக்கள்
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில் அன்று போரில்
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ வண்டு
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான்

மேல்
$45.76

#76
மன்னன் தருமன் திரு மைந்தன் மலைய வந்த
கன்னன் கருத்தும் கடும் சேனையும் கண்டு மேல் போய்
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன வெம் பூசல் செய்தார்
இன்னம் தமக்கு தமை அன்றி எதிர் இலாதார்

மேல்
$45.77

#77
உதையன் புதல்வன் பெரும் சேனை உதிட்டிரன் கை
குதை அம்பில் வீழ்ந்தார் இனையோர் என கூறல் தேற்றார்
இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால்
உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா

மேல்
$45.78

#78
பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும்
மற்பூசல் செய்ய ஒளி செய்யும் அம் மன்னர் தம்மில்
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார்

மேல்
$45.79

#79
கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செம் கை
சிலையும் கிரிகள் இரண்டு என்ன திரண்ட தோளும்
நிலையும் குறிப்பும் சிறு நாண் ஒலி நின்றவாறும்
மலையும் திறலும் புகழ்ந்து அண்டரும் வாழ்த்தினாரே

மேல்
$45.80

#80
தாழம் குறித்து கரை செய்யும் தரங்க வேலை
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன்
சூழ் அம் பொன் மாலை துணை தோள்களின் எட்டும் மார்பின்
ஏழ் அம்பும் எய்தான் இருள் காயும் இரவி_மைந்தன்

மேல்
$45.81

#81
தன் தோளும் மார்பும் சரம் மூழ்க வெம் சாபம் வாங்கி
நின்றோனை வாய்மை நிலை நின்ற நிருபர் ஏறும்
வன் தோள் உற நாண் வலித்து ஓர் இரு வாளி ஏவி
சென்று ஓர் இமைப்பின் சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான்

மேல்
*கன்னனால் திட்டத்துய்மன் முதலியோர் தளர்தல் கண்டு,
*தருமன் சேனையுடன் நெருங்கிப் பொருதல்
$45.82

#82
வேறு ஓர் வரி வில் வெயிலோன் மகன் வெய்தின் வாங்கி
நூறோடு நூறு தொடுத்து ஏவும் நுதி கொள் அம்பால்
கூறு ஓர் இரண்டு பட யாரையும் கொன்ற போழ்தின்
ஆறு ஓடிவிட்டது அடையார் உடல் அற்ற சோரி

மேல்
$45.83

#83
சாதேவன் தண்டதரன் தண்டகன் சித்ரதேவன்
தீது ஏதும் இல்லா திறல் சாத்தகி சித்ரகீர்த்தி
தாது ஏறு தார் தம்பியரோடு இகல் தண்டநாதன்
மீது ஏறு தேரும் தகர்ந்து ஒண் சுடர் வில்லும் அற்றான்

மேல்
$45.84

#84
முன் சேனையோடும் வலி உற்று முனைந்து கொற்ற
மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு
நன் சேனை நாலும் உடன் சூழ நடக்கலுற்றான்

மேல்
$45.85

#85
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும்
நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே

மேல்
$45.86

#86
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர்
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும்
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும்
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே

மேல்
*கலிங்கர் முதலியோரைத் தருமன் ஓட்டி, பலரையும் விண் புகச் செய்தல்
$45.87

#87
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும்
இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள் என ஒருவருக்கொருவர் நடை
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே

மேல்
*தருமன் சங்கு முழக்க, கன்னனும் சங்கு முழக்கி, தருமன் நின்ற சமர முகத்து வருதல்
$45.88

#88
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும்
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும்
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே

மேல்
$45.89

#89
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில்
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும்
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே

மேல்
*தருமனது புயம் முதலியவற்றில் கன்னன் அம்பு எய்ய, அவன் சோர்ந்து புறங் கொடுத்தல்
$45.90

#90
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும்
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே

மேல்
$45.91

#91
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின்
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே

மேல்
$45.92

#92
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும்
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில்
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின்
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே

மேல்
*தருமனைப் புறமிடுதல் தகாது என்று கன்னன் கூற, அவன் உரையை மதித்துத்
*தருமன் நின்றபோது, வீமன் ஆங்கு வருதல்
$45.93

#93
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என

மேல்
$45.94

#94
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில்
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர்
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே

மேல்
*’வீமனை வெல்லுதல் அரிது!’ என்று சல்லியன் கூற,
*கன்னன் வீரம் பேசுதல்
$45.95

#95
முதல்வன் வென்னிடுதல் கண்டு முடியுடை வேந்தரோடும்
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின்
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன்
மதலையை நோக்கி பாகன் வன் பகை தோன்ற சொன்னான்

மேல்
$45.96

#96
காமனே என்ன நின்ற கன்னன் வில் கையில் வாங்கி
வீமனே ஆக வென்றி விசயனே ஆக வெற்றி
தாமனே காண்டி இற்றை சமரில் என் தழல் வாய் ஒற்றை
தூமம் நேர் பகழிக்கு ஆற்றார் தூண்டுதி இரதம் என்றான்

மேல்
*வீமன் அம்பால் கன்னன் அயர்ந்து வீழ்தல்
$45.97

#97
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி
கன்னனது உரையும் வில்லும் கணத்திடை சிதைந்து வீழ
முன் ஒரு வாளி தொட்டான் எதிரியும் முரண் வில் ஒன்றால்
பன்னிரு வாளி மீளி மார்பிடை பரப்பினானே

மேல்
$45.98

#98
பாய்ந்த அ பாணம்-தன்னை பாணியால் திமிர்ந்து வீமன்
காய்ந்த வாள் அனைய தாரை கடும் கொடும் பகழி ஒன்றால்
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான்
வேய்ந்த தாரவனும் தேரின் மிசை அயர்வுற்று வீழ்ந்தான்

மேல்
*சல்லியன் தேற்றத் தேறி, கன்னன் அம்பு எய்தல்
$45.99

#99
வீழ்தலும் மன்னர்_மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட
வாழ்வு அற வீழ்ந்தோன்-தன்னை மத்திர தலைவன் தேற்ற
ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி
சூழ் படை வீரர் யாரும் துஞ்சிட துணித்திட்டானே

மேல்
*சிங்கசேனனை உள்ளிட்ட எழுவர் மாய, வீமன் சேனையோடு
*முதுகிடுதலும், அருச்சுனன் அங்கு வந்து பொருதலும்
$45.100

#100
கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால்
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார்
பத்தி கொள் சாதுரங்க படைஞர் பாஞ்சாலர்-தம்மில்
செத்தனர் எழுவர் சிங்கசேனனை உள்ளிட்டாரே

மேல்
$45.101

#101
சேனையும் முறிந்து வீமசேனனும் முதுகிட்டு ஓட
கான் அமர் துளவோன் கண்டு கடும் பரி நெடும் தேர் பூண்ட
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான்
வானவர்க்கு அரசன் மைந்தன் மைந்துடை வரி வில்லோனே

மேல்
$45.102

#102
சென்றவன் சேனை-தன்னில் நிருபரும் செரு செய்கிற்பான்
நின்றவன் சேனை-தன்னில் நிருபரும் நேர்ந்த காலை
என்றவன் மதலை ஏவும் இமையவர் தெவ்வை ஓட
வென்றவன் ஏவும் தம்மில் விசும்பினை வேய்ந்தவாலோ

மேல்
*கன்னனுக்கு உதவியாக அசுவத்தாமன் வந்து
*கடும்போர் விளைத்தல்
$45.103

#103
இரவி-தன் மதலைக்காக இமைத்த கண் விழிக்கும் முன்னர்
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி
அரவு அணை செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும் செக்கர்
விரவிய வானம் என்ன வெம் சரம் புதைவித்தானே

மேல்
$45.104

#104
விசையனும் வெகுளுற்று அந்த வேதியன் வில்லும் தேரும்
அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர்
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு
நிசையினை அருக்கன் போல நிலை தளர்ந்திடுவித்தானே

மேல்
$45.105

#105
தளர்ந்த அ தளர்ச்சி கண்டு தனஞ்சயன்-தன்னை தேற்றி
கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன் ஐயா
பிளந்திடு இங்கு இவனை என்ன பிறை முக பகழி ஒன்றால்
உளம் புக தொடுத்தான் பாகன் உரை முடிவதன் முன் அம்மா

மேல்
*கண்ணன் உரைப்படி பிறைமுக அம்பை விசயன் ஏவுதலும்,
*அசுவத்தாமன் மயங்கித் தேரில் விழ, துச்சாதனன் கண்டு
*தேரொடும் அவனைக் கொண்டு போதலும்
$45.106

#106
எய்த அ பகழி ஒன்றால் ஈசன் மா மதலை மாழ்கி
வெய்துயிர்த்து இரதம் மீது வீழ்ந்தனன் வீழ்ந்தோன்-தன்னை
கைதவ செயலினான் துச்சாதனன் கண்டு முன்னை
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான்

மேல்
*அசுவத்தாமன் மீண்டும் வர, சித்திரவாக
*பாண்டியன் அவனோடு பொருதல்
$45.107

#107
போன அ புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை
சேனைகள் நான்கினோடும் சித்திரவாகன் என்னும்
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன்
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன்

மேல்
$45.108

#108
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும்
வன் திறல் வலவன் மேலும் வாம் பரிமாவின் மேலும்
துன்றிய கணைகள் ஏவி தொடு சிலை துணித்து வீழ்த்தான்
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே

மேல்
$45.109

#109
வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும்
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி
கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை
ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே

மேல்
$45.110

#110
அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ்வவ் அம்பால்
முந்துற விலக்கி தங்கள் மூ வகை தமிழும் போல
சிந்தையில் குளிக்குமாறு சிலீமுகம் மூன்று விட்டான்
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான்

மேல்
$45.111

#111
காலினால் துகைத்து வேலை கனை கடல் ஏழும் முன் நாள்
வேலினால் சுவற்றும் கொற்ற வெம் கயல் விலோத வீரன்
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய
கோலினால் சுவற்றினான் அ குறுகலார் சேனை வெள்ளம்

மேல்
*பாண்டியன் அசுவத்தாமனோடு கடும் போர்
*விளைத்து இறந்துபடுதல்
$45.112

#112
சங்கரன் அருளால் வந்த சதுர்மறை குமரன் மீள
பொங்கு அழல் கடவுள் என்ன பொரு சிலை வெய்தின் வாங்கி
மங்குல் போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ
செங்கயல் நெடும் பதாகை தென்னவன் செம்பொன் தேரே

மேல்
$45.113

#113
சிங்க ஏறு அனையான் அந்த தேரின்-நின்று இழிந்து முன்னம்
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல
பொங்கு வெண் தரங்க முந்நீர் புணரிகள் ஏழும் சேர
வெம் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே

மேல்
$45.114

#114
மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள்
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான்
கொலையினில் சிறந்த கோட்டு குஞ்சரம் கொண்டு மீண்டும்
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செரு செய்தானே

மேல்
$45.115

#115
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர்
சோதி மத்தக வெம் குன்றின் தழை செவி துளங்கு காற்றால்
சாதிமை துரோணன் மைந்தன் தனி தடம் தேரில் கொற்ற
ஓதிம பதாகை ஆடை அப்புறத்து ஒடுங்கிற்று அம்மா

மேல்
$45.116

#116
கூற்று என கொண்டல் என்ன குரை கடல் என்ன சூறை
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின்
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும்
சேற்றிடை புதைந்தது அந்த சேய் அனான் தேரின் காலே

மேல்
$45.117

#117
மறையவன் செம்பொன் தேரை வளைந்து மண்டலங்கள் ஓட்டி
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை
அறை சிறை பகழி ஒன்றால் ஆனையை வீழ்வித்தானே

மேல்
$45.118

#118
பாண்டியன் கை வில்லோடும் பதாதியாய் பகழி சிந்தி
ஈண்டிய இவுளித்தாமன் இரு தடம் தோளும் மார்பும்
வேண்டியவாறு சோரி வீழ்தர பொருத பின்னர்
தூண்டிய துரோணன்_மைந்தன் தொடை ஒன்றால் தானும் வீழ்ந்தான்

மேல்
*தருமன் சேனை பின்னிட, துரியோதனன்
*சேனையோர் அம்பு எய்தல்
$45.119

#119
பட்டனன் முனிவன் கையின் பஞ்சவன் என்று வேந்தர்
கெட்டனர் முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார்
தொட்டனர் வரி வில் வாளி தொடுத்தனர் அடுத்து மேன்மேல்
விட்டனர் வேந்தர்_வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார்

மேல்
*அசுவத்தாமன் முன் சோழன் தோன்றி, அவனை இகழ்தல
$45.120

#120
வில் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும்
உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால்
கொற்கையான் இறந்த பின் கோழியான் எனும்
சொல் கையா மனு குல தோன்றல் தோன்றினான்

மேல்
$45.121

#121
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர்
காரின் மேல் வீரனை கணையின் காய்வதே
பாரின் மேல் ஆர்-கொல் இ பாதகம் செய்தார்
நீரின் மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய்

மேல்
$45.122

#122
ஆர்ப்பன மறை மொழிந்து அனைவர் பாவமும்
தீர்ப்பன வேள்விகள் செய்வது அன்றியே
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய
பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ

மேல்
$45.123

#123
தாதையை கொன்ற வெம் சாப வீரனை
கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ
ஊதை முன் சருகு போல் ஓடல் அல்லதை
மோது அயில் படை கொடு முனைய வல்லையோ

மேல்
*சோழனும் அசுவத்தாமனும் பொருத வகை
$45.124

#124
என்று சில் மொழி மொழிந்து இவுளித்தாமன் மேல்
துன்று வில் வளைத்தனன் சோழ பூபதி
குன்றுடன் குன்று அமர் குறிக்குமாறு போல்
சென்றுசென்று அடுத்தன தேரும் தேருமே

மேல்
$45.125

#125
இருவர் செம் கரங்களும் இரண்டு கால்களும்
உரன் உற பிணித்த நாண் ஓசை வீசவும்
மருவு பொன் தோள் உற வலியின் வாங்கவும்
விரைவுடன் வளைந்தன வில்லும் வில்லுமே

மேல்
$45.126

#126
புகல் அரு மறையவன் புராரி ஆதியாம்
திகழ் ஒளி இமையவர் சிறப்பின் ஈந்தன
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே
அகல் வெளி புதைத்தன அம்பும் அம்புமே

மேல்
$45.127

#127
சுரர் உலகு எய்திய துரோணன் மைந்தனை
இரு கணை புயத்தினும் இரண்டு மார்பினும்
ஒரு கணை நுதலினும் உருவ ஏவினான்
மரு விரி தாதகி வாச மாலையான்

மேல்
$45.128

#128
பிறை முடி சடையவன் பிள்ளை வள் உகிர்
விறலுடை புலிக்கொடி வீரன் மெய் எலாம்
புறவினுக்கு அரிந்த நாள் போல மேல் விடும்
திறலுடை வாளியால் சிவப்பித்தான் அரோ

மேல்
*சோழன் எறிந்த வேலால் அசுவத்தாமன் கலங்கி விழ, சகுனி
*முதலியோர் அவனை எடுத்து, வருத்தம் மாற்றுதல்
$45.129

#129
துளவு அணி முடியவன் துள்ளு கன்றினால்
விளவினை எறிந்து என வீர வேலினால்
வளவனும் வெகுண்டு பின் மயூரவாகனன்
இளவலை எறிந்தனன் எவரும் அஞ்சவே

மேல்
$45.130

#130
உருத்திரன் தாதுவின் உற்பவித்த அ
கருத்துடை முனிவன் மெய் கலங்கி வீழ்தலும்
திரு தகு சகுனியும் சிற்சில் வேந்தரும்
வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார்

மேல்
*அசுவத்தாமனுடன் மன்னர் பலர் மீள வந்து,
*சோழனுடன் போர் செய்து, அழிந்து மீளுதல்
$45.131

#131
அவனொடும் மீள வந்து அபயன் தன்னொடு
கவன மான் தேருடை காவல் மன்னவர்
சிவனொடும் அமர் பொரும் தெவ்வர் என்னவே
துவனி செய் முரசு எழ துன்று போர் செய்தார்

மேல்
$45.132

#132
துன்மருடணன் மகன் சுவாகு துன்முகன்
வில்_மகன் சுவாது வாள் வெயில் விபாகரன்
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர்
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே

மேல்
$45.133

#133
பண் அக இசை அளி பாடு தண்டலை
கண் அகன் காவிரிநாடன் கை கணை
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை
விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே

மேல்
$45.134

#134
முன்னிய சிலை மறை முனிவன்_மைந்தனும்
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியா
துன்னிய நிருபரும் தொல் அமர்க்கு நீ
சென்னி என்று அவன் புகழ் செப்பி மீளவே

மேல்
*தம்பியர் ஒன்பதின்மருடன் துச்சாதனன்
*வீமனை அடுத்து எதிர்த்தல்
$45.135

#135
சோனா மேகம் பொழிவது போல் துச்சாதனனும் தம்பியரும்
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல்
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர்
ஆனா வாளி மழை தூவி அடல் வெம் சிலையோடு அடுத்தாரே

மேல்
$45.136

#136
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவன புரவி கால் தேரில்
செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே

மேல்
*துச்சாதனன் வீரத்தை வீமன் பழித்துரைத்து, வஞ்சினம் கூறுதல்
$45.137

#137
துச்சாதனனே உனை போலும் சூரர் உளரோ சூரர் எலாம்
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல் ஆண்மை
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து
இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே

மேல்
$45.138

#138
இன்றோ உன்-தன் சென்னி துணித்து இழி செம் புனலில் குளித்திடும் நாள்
இன்றோ அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம் முடித்திடும் நாள்
இன்றோ தாகம் கெட நாவுக்கு இசைந்த தண்ணீர் பருகிடும் நாள்
இன்றோ உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் பயன் பெற்றிடும் நாளே

மேல்
$45.139

#139
வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும்
கொன்றே நாளை அமரர் எதிர்கொள்ள கடிதின் வர விடுவன்
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில்
அன்றே கலகம் விளைத்து என்றும் அழியா அரசை அழித்தோனே

மேல்
*துச்சாதனன் வாய் பேசாது நிற்க, ஒன்பதின்மர்
*தம்பியரும் வீமனை எதிர்த்து மாளுதல்
$45.140

#140
வீமன் கருத்தோடு இவை மொழிய வேறு உத்தரம் மற்று ஒன்று இன்றி
ஊமன்-தனை போல் அவன் நிற்க உடனே இளையோர் ஒன்பதின்மர்
நாமம் பெறு கோல் ஓர் ஒருவர் நால் நாலாக நடந்த வழி
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே

மேல்
$45.141

#141
தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும் சூரன்-தானும் தன் கணையால்
தடுத்தான் மீள ஓர் ஒருவர்க்கு ஓர் ஓர் பகழி தனு வாங்கி
விடுத்தான் அவரும் இரதம் மிசை வீழ்ந்தார் வீழ்ந்த வீரரை வந்து
அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே

மேல்
*துச்சாதனன் வெகுண்டு வீமனுடன் விற்போர் பொருதல்
$45.142

#142
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவ புயல் போல் பாவனனை
மயிர் கால்-தொறும் அம்பு இனம் சொருக மன்னற்கு இளையோன் மலைந்தானே

மேல்
$45.143

#143
தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த சரங்கள் எல்லாம்
கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன்

மேல்
$45.144

#144
தூவாநின்ற ஏ அனைத்தும் துச்சாதனன் தன் தொடை பிழையா
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும்
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும்
மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே

மேல்
$45.145

#145
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற
மத்தே அனையான் சிலை வாங்கி மன்னற்கு இளைய வய மீளி
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ
பத்தே எய்து ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட எய்தான்

மேல்
*தேர் இழந்த நிலையில் இருவரும் கதைப் போர் புரிதல்
$45.146

#146
காரின் கரிய குழல் தீண்டி கலை அன்று உரிந்த கழல் காளை
பாரில் குதித்து ஓர் அதி பார பைம் பொன் கதையால் பாவனன்-தன்
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி
போரில் சிறந்த தண்டமுடன் புவி மேல் பாய்ந்தான் புலி போல்வான்

மேல்
$45.147

#147
இருவரும் புயங்களின் அப்பி ஒத்தினர் இகல் புரிந்து தண்டு இறுக பிடித்தனர்
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர்
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர்
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே

மேல்
$45.148

#148
வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர்
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர்
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர்
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே

மேல்
$45.149

#149
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன
திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம்
முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே

மேல்
$45.150

#150
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என
மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை
எழிலுடன் பரந்து இறுகி தடித்தன இமய மந்தரங்களொடு ஒத்த பொன் புயம்
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே

மேல்
$45.151

#151
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும்
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில
கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன
முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே

மேல்
*கதையை விடுத்து, இருவரும் முட்டி யுத்தம் செய்தல்
$45.152

#152
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி
நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின்

மேல்
$45.153

#153
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும்
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும்
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும் பெருக கலக்கியே

மேல்
$45.154

#154
பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை பற்று விட்டு அற
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற விசி நரம்பு சந்துகளில் தெறித்து இற
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற
முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே

மேல்
*வீமன் துச்சாதனன் உடலைத் துகைத்து, குருதியில் குளித்தல்
$45.155

#155
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல்
அயிர் படும் கடும் தரையில் துகள்பட அடி இரண்டினும் சரிய துகைத்து எழு
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே

மேல்
$45.156

#156
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம்
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழும் குருதி பெருக்கிடை
பகிரதன் தரும் கடவுள் துறை புனல் படியும் உம்பர்-தம் பரிசின் குளிக்கவே

மேல்
*துச்சாதனன் இறக்கவே, துரியோதனன் சேனை நில்லாது வென்னிடுதலும்,
*கண்ணன் முதலியோர் வீமனை வந்து கூடுதலும்
$45.157

#157
மன்னற்கு இளையோனை வாள் தருமனுக்கு இளையோன்
துன்னி பிளந்து சுரர் உலகம் ஏற்றுதலும்
கன்னற்கும் மற்று உள்ள காவலர்க்கும் நில்லாமல்
வென்னிட்டது அ மன்னன் வீர பெரும் சேனை

மேல்
$45.158

#158
வண்டு ஆரவாரம் அறாத நறும் பூம் துளப
தண் தார் முடியோனும் வில் கை தனஞ்சயனும்
கண்டார் அவர் முதலாம் காவலரும் கைகலந்தார்
வெண் தாரகை பரந்த விண் ஒத்தது ஆகவமே

மேல்
*வீமன் துச்சாதனன் விரல் பத்தையும் மீண்டும் துணித்து,
*அவனது உதிரத்தைக் குடிக்கப் புக, கண்ணன் தடுத்தல்
$45.159

#159
வேகம் மிகும் செம் தீயில் மேல் நாள் அவதரித்த
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன என்று
ஆகம் உற பிளந்த ஆண்தகை மீண்டு அ வீரன்
பாகம் உறு கை விரல்கள் பத்தும் துணித்தானே

மேல்
$45.160

#160
தண்ணீர் நிகர் என துச்சாதனன் தன் மெய்யில் இழி
புண்நீர் பருக புகுவோனை யாவருக்கும்
கண்ணீர் வர தடுத்தான் காணுங்கால் எத்திறத்தும்
வெண் நீர்மை இல்லாத மேகம்-தனை போல்வான்

மேல்
*வீமன் குருதியைக் குடியாமல் கொப்பளித்து நின்று கூத்தாடி,
*தருமனது அடி வீழ்ந்து செய்தி சொல்லி, அகங்கரித்தல்
$45.161

#161
குடியாமல் அ குருதி கொப்பளித்து வாகை
முடியாநின்று என் எண்ணம் முற்றினன் என்று ஆங்கண்
படி ஆளும் செங்கோன்மை பார்த்திவருக்கு எல்லாம்
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான்

மேல்
$45.162

#162
துன்பம் உறும் துன்னீதி துச்சாதனன் போர் செய்து
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான் என்று
அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான்
வன்புடைய தாதையினும் மிக்க வலியோனே

மேல்
*கன்னன் சற்றுப் போர் ஓய்ந்திருக்க, சல்லியன்
*இடித்துரைத்தல்
$45.163

#163
பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என
காண்டவம் அன்று உண்ட கனல் போல் நனி தருக்கி
மூண்ட நிலை கண்டு முதுகிடு தன் சேனையுடன்
மீண்டும் எதிர் ஊன்றாமல் வெய்யோன் மகன் நின்றான்

மேல்
$45.164

#164
மேல்கொண்டு பாண்டவர்-தம் வெம் சேனை சூழ்ந்திடவும்
மால் கொண்டவர் போல மாண்டாய் என கழறி
கால் கொண்ட திண் தேர் கடாவினான் கை உளவு
கோல் கொண்டான் கன்னனும் அ கூற்றுக்கு எதிர் கூறும்

மேல்
*’துச்சாதனன் இறந்த சோகமே தவிர வேறு அன்று’ என்று,
*கன்னன் சேனையைப் பேரணி ஆக்கி எதிர்த்தல்
$45.165

#165
வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை
மாய்ந்த நிலை கண்டு மனம் தளர்ந்தது அல்லாது
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே வெருவுமோ
பாந்தள் எதிர் செல்ல பறவைக்கு அரசு என்றான்

மேல்
$45.166

#166
முன்னம் அமரில் முதுகிட்ட மன்னரையும்
மன்னவர்கள் மன்னனையும் வன் பேர் அணி ஆக்கி
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர்
கன்னன் எதிர் ஊன்றினான் காயும் கனல் போல்வான்

மேல்
*திட்டத்துய்மனும் தன் சேனையை வகுத்து
*எதிர் வந்து பொருதல்
$45.167

#167
சேனாபதியான தேர் துருபதேயனும் வான்
மீனாம் என பரந்த வேந்தருடனே தனக்கு
தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும்
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான்

மேல்
$45.168

#168
பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும்
வில் நாண் ஒலியாலும் விண்ணோர் செவிடுபட
பல் நாம பேத படை ஒளியாலும் பல பூண்
மின்னாலும் கண்கள் வெறியோடிவிட்டனவே

மேல்
*விடசேனன் நகுலனுடன் பொருது, அவனை
*மயங்கி விழுமாறு செய்தல்
$45.169

#169
யாமினியில் எ உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன்
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன்
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில
தாம முனை வாளி தழல் பொறி போல் சிந்தினனே

மேல்
$45.170

#170
வெம் புரவி திண் தேர் விசயற்கு இளையோனும்
செம் பதும கையில் சிலை நாண் ஒலி எழுப்பி
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர்
அம்பு அடைய அம்பால் அறுத்துஅறுத்து வீழ்த்தினனே

மேல்
$45.171

#171
அண்டர் பெருமானுக்கு அம் பொன் கவசமுடன்
குண்டலமும் ஈந்தோன் குமரன் கொடும் கணையால்
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த
திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான்

மேல்
$45.172

#172
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ
கொற்ற நெடும் கச்சை கொடியோன் திரு மைந்தன்
வெற்றி விலோதனமும் வெம் சாபமும் உடனே
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே

மேல்
$45.173

#173
மீண்டு அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி
பாண்டவனை வீழும்படி எய்தான் வீழ்ந்தோனை
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக
காண்டவம் நீறு ஆக்கினான் கண்டான் அவன் போரே

மேல்
*விழுந்த நகுலனை வீமன் கொண்டு செல்ல, அருச்சுனன்
*விடசேனனோடு பொருது, அவனை மாய்த்தல்
$45.174

#174
நன் தூண் திகழ் மதியா நாகம் பரு மத்தா
அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன்
முன் தூண்டிய தேரில் சென்றான் முனை வாளி
மின் தூண்டில் வீசி விடசேன மீன் படுப்பான்

மேல்
$45.175

#175
தம்பி படும் துன்பம் தமையனையும் காண்பன் என
வெம்பி எதிர் சென்று விடசேனன் வில் வாங்கி
பம்பி வரு கொடி தேர் பார்த்தனையும் பாகனையும்
அம்பின் மறைத்தான் அடல் ஏறு அரி அனையான்

மேல்
$45.176

#176
வில் நாணும் வில் பிடித்த வெவ் விரலும் வில் நடுவும்
முன் ஆன தும்பை முடித்தோன் முடி தலையும்
பின் ஆக வாங்கும் பிறை அம்பும் பேர் அமரில்
ஒன்னார் முனை தடிந்தோன் ஓர் அம்பினால் அறுத்தான்

மேல்
$45.177

#177
வீழ்ந்தான் விடசேனன் வேந்தர் எலாம் வெம் சமரில்
தாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தை தடம் தேர் காலை
சூழ்ந்தார் சில வீரர் தோலாது எதிர் நடந்து
வாழ்ந்தார் சுரர் ஆகி வான் மாதர் மெய் கலந்தே

மேல்
*அப்பொழுது கன்னன் கருத்து அழிந்து
*விழ, சல்லியன் தேற்றுதல்
$45.178

#178
சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன் என்று அவன் தந்த
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர்
ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை
பாந்தள் அம் கொடி பார்த்திவன் நின்றுழி சென்றனன் பரித்தாமன்

மேல்
*அசுவத்தாமன் துரியோதனனை அடுத்து, ‘இப்பொழுதாயினும்
*பாண்டவருடன் கூடி வாழ முற்படு!’ எனல்
$45.179

#179
தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே
மெய் பெரும் புகழ் புனை குருகுலத்திடை வீடுமன் முதலான
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும்
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே

மேல்
$45.180

#180
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல்
விளைவு இலா அரும் புலமும் மு தீ இலா வேதியர் மனை வாழ்வும்
துளை இலா மணி முத்தும் அம் தண் புனல் துறை இலா வளநாடும்
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ

மேல்
$45.181

#181
தும்பி மா பரிமா உள தேர் உள சுருங்கின சுருங்காமல்
நும்பிமார்களில் இருந்தவர்-தம்மொடும் நுவல் அரும் பல கேள்வி
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும்
பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான்

மேல்
*’போரில் மாய்தலே நான் பெறும் பயன்!’ எனத்
*துரியோதனன் மறுத்து மொழிதல்
$45.182

#182
ஆரியன் திரு மகன் இவை உரைசெய அரசனும் அவை கேட்டு
காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த
வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன்

மேல்
*அசுவத்தாமனுடன் துரியோதனன் கன்னனை அடுத்து, அவன்
*சோகம் மாற்றி, விசயனது உயிரைக் கொள்ளுமாறு தூண்டுதல்
$45.183

#183
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும் இரப்பவர் உள்ளங்கை
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி
பனி நெடும் குடை பார்த்திவன் நுவன்றனன் பார்த்தனது உயிர் கொள்வான்

மேல்
*’விசயன் தலை கொய்வேன்!’ என்று கூறிக் கன்னன் எழ,
*இருபக்கத்துச் சேனைகளும் நெருங்கிப் பொருதல்
$45.184

#184
மலை கலங்கினும் மாதிரம் கலங்கினும் மாதிரங்களில் விண்ணோர்
நிலை கலங்கினும் நெடும் கடல் கலங்கினும் நிலம் கலங்கினும் சேடன்
தலை கலங்கினும் பேர் அவை மூன்றினும் தளர்வு இலாதவர் கற்ற
கலை கலங்கினும் போர்முகத்து என் மனம் கலங்குமோ கலங்காதே

மேல்
$45.185

#185
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன்
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா

மேல்
$45.186

#186
சுரிமுகங்களில் பேர் இயங்களில் எழு துவனியால் பகிரண்டம்
நெரியும் என்று அயன் அஞ்சினன் சேனையின் நெருக்கினால் எனைத்து உள்ள
கிரிகளும் சரிந்திடும் என அஞ்சினன் கிரீசனும் கிளர் ஆழி
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே

மேல்
$45.187

#187
பரியுடன் பரி நெருங்கின நெருங்கின படையுடன் படை மத்த
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும்
விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு
அரி எறிந்திட நெருங்கின ஆடையும் ஆடையும் அலமந்தே

மேல்
$45.188

#188
பரியில் வீரரும் பரியில் வீரரும் வய படை எறிந்தனர் கொற்ற
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம்
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே

மேல்
$45.189

#189
எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன இலக்கு உற கொடும் பாணம்
தொடுத்த சாபமும் சாபமும் வளைந்தன தொடியுடை கர சாலத்து
அடுத்த வாளமும் வாளமும் பொருதன அங்குலிகளின் சுற்றி
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன வீரர் சென்னிகள் வீழ

மேல்
$45.190

#190
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும்
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர்

மேல்
*விசயன் தம்பியரோடு கணைமழை பொழிந்து வர,
*கன்னனும் அசுவத்தாமா முதலியோர் சூழச் சென்று, கடும் போர் பொருதல்
$45.191

#191
இளைஞரும் பெரும் சேனையும் இரு புடை நடக்க
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி என சூழ
விளையும் வெம் சின வீமன் முன் போதர விசயன்
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான்

மேல்
$45.192

#192
கிரிசன் மைந்தனும் கிருபனும் கிருதவன்மாவும்
வரி பொலம் கழல் சகுனியும் முதலிய மறவோர்
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ
தெரியும் வாளி வன் சிலையுடை கன்னனும் சென்றான்

மேல்
$45.193

#193
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம்
வில் வளைத்தனர் விசையுடன் சிலீமுகம் திகிரி
கல் வளைத்த பார்-தனக்கு இடு காவணம் போல
சொல் வளைத்திலர் தொடுத்தனர் தும்பை அம் தொடையார்

மேல்
$45.194

#194
மருவ அரும் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது
இருவரும் சிலை வணக்கியதும் எய்த விரகும்
ஒருவரும் சிறிது உணர்ந்திலர் உகாந்தம் எனவே
வெருவரும் செயலில் விஞ்சினர்கள் விஞ்சையருமே

மேல்
$45.195

#195
ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும்
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும்
ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும் உடனே
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும் எதிர் ஓடு கணையே

மேல்
$45.196

#196
இடம் புரிந்திடில் வலம் புரியும் எண்ணின் முறையால்
வலம் புரிந்திடில் இடம் புரியும் மண்டலமுமாய்
நடம் புரிந்து பவுரி கதி நடத்தும் எதிரே
சலம் புரிந்து அதிர முட்டும் இரு சந்தனமுமே

மேல்
$45.197

#197
ஆசு போம் இவுளி மா கடவி ஆழி இரதம்
மூசு போரில் ஒருவர்க்கொருவர் முந்த விடலால்
வாசுதேவனையும் மத்திர மகீபதியையும்
தேசு வேறு தெரிகிற்றிலர்கள் தேவர்களுமே

மேல்
$45.198

#198
மறமும் ஒத்த வழு அற்ற சுழி ஒத்த வலி கூர்
புறமும் ஒத்த கதி பற்பலவும் ஒத்த புகல் வாள்
நிறமும் ஒத்த உயரம் பருமை நீளம் எனும் மெய்
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே

மேல்
$45.199

#199
நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர்
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை
சிலை இரண்டும் நிமிராது கணை சிந்தினர்களே

மேல்
*அருச்சுனன் தேவதத்தம் முழக்கி, அம்பு தெரிந்து விட,
*கன்னன் பராபரம் முழக்கி, அவற்றைத் தறித்தல்
$45.200

#200
தேவதத்தமும் முழக்கி உயர் தேவர் பலரால்
ஆவம் மெத்தும்வகை பெற்ற பல அம்பு தெரியா
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல்
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே

மேல்
$45.201

#201
பரிதி அன்பொடு வழங்கிய பராபரம் எனும்
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான்
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண்
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா

மேல்
*மாயன் தேர் செல்லாதபடி கன்னன் சரகூடம்
*அமைக்க, கண்ணன் விரகினால் எதிர்ப்
*பக்கத்தும் சரகூடம் உளதாதல்
$45.202

#202
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர்
இயக்கம் அற்றிட இயற்றினன் ஓர் கூடம் இவனும்
தியக்கம் உற்றிட மயக்கி நெடுமால் செய் விரகால்
உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது அவணும்

மேல்
*’செயலற்று நிற்றல் ஏன்?’ என்ற கண்ணனுக்கு, விசயன்,
*’கன்னன் தருமன்போல் தோன்றுதலின் எனக்கு அமர்
*செய்தல் அரிது; தேரினை மீளவிடு’ என மறுமொழி பகர்தல்
$45.203

#203
மாயா சரகூடம் வளைத்திடலால் வலையுள் படு வீர மடங்கல் என
சாயாபதி மைந்தனும் நின்றனன் மெய் தளர்வுற்றனன் நின்ற தனஞ்சயனும்
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல்
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா

மேல்
$45.204

#204
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-
தன் போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா
அன்பு ஓடியது உள்ளம் எனக்கு இனிமேல் அவனோடு அமர் செய்தலும் இங்கு அரிதால்
வென் போகுவன் என்றலுமே இறைவன் விசையோடு இரதத்தினை மீள விடா

மேல்
*விசயன் தருமனை அடுக்க, அவன் விசயனது வில்லைப் பழித்தலும்,
*அது குறித்துக் ‘கொல்வேன்!’ என்று எழுந்த விசயனைக் கண்ணன் விலக்குதலும்
$45.205

#205
முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல
பகலின்_பதி மைந்தனை இன்னமும் இ பகல் சாய்வதன் முன்பு படுத்திலையால்
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன்
புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே

மேல்
$45.206

#206
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல்
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே

மேல்
$45.207

#207
குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால்
உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய்
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும்
பரவு ஓத நெடும் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனி குடையோய்

மேல்
*விசயன் தமையனை நோக்கி இசையாத புன்மொழி பேச, தருமன்
*ஒன்றும் கூறாது ‘துறப்பேன்!’ என்று கான் புக நினைதல்
$45.208

#208
என்னா உரை செய்தலும் அஞ்சி இளைத்து இரு கை கொடு இறைஞ்சி நராதிபனை
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும்
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று
உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே

மேல்
*கண்ணனும் விசயனும் தருமனை வணங்கி, ‘கன்னனை உயிர் கொள்வோம்!’ என்று
*விடை கொண்டு செல்லுதல்
$45.209

#209
நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து ஒரு நாயகமா
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்
புரமே அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே

மேல்
$45.210

#210
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை
படை கொண்ட பதாகினி முன் பின் வரும் படி ஏகினர் மாதவ பற்குனரே

மேல்
$45.211

#211
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண்
சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின்
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று
இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால் இமையா விழியோர் முதல் யாவருமே

மேல்
*கன்னன் சரகூடத்தை அறுத்து வீமனோடு பொருதலை விசயன் கண்டு,
*களத்தை அடுத்துக் கன்னனுடன் பொருதல்
$45.212

#212
தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும்
வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன்
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே

மேல்
$45.213

#213
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும்
பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின்
கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே

மேல்
$45.214

#214
இணை இன்றி எழுந்து சுடும் கனலால் இரதங்களும் வேல் முதல் எ படையும்
கணையும் சிலையும் கவன பரியும் கரியும் கரியானவை கண்டு இயமன்
துணைவன் துணை வாகு வளர்ந்திடவும் துணை வார் புருவங்கள் துடித்திடவும்
பணை வெம் குரல் கன்றி முழங்கிடவும் பவ்வத்து அரசன் தரு பாணம் எடா

மேல்
$45.215

#215
பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவ பரவா
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும்
அ அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை அவித்ததுவே

மேல்
$45.216

#216
வாயு கணை ஏவினன் வானவர்_கோன் மைந்தன் திகழ் பேர் ஒளி வான்மணியின்
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால்
ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன்
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே

மேல்
$45.217

#217
என் அம்பு-தனக்கு எதிர் இல்லை எனா இருள் அம்பினை ஏவினன் வில் விசயன்
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால்
முன் அம்பு சிதைந்துசிதைந்து அழியா முகம் மாறி இமைத்து விழிக்கும் முனே
பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ

மேல்
$45.218

#218
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம்
பகவான் அருள் வாளி தொடுத்தனன் அ பகவான் அருள் தியாகபராயணனும்
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே
முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே

மேல்
$45.219

#219
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி
பரமன் கணை ஏவினன் அ கணை அ பகவன் கணை நீறுபடுத்துதலின்
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர்

மேல்
$45.220

#220
இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய மா மறை கூர்
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின்
மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம்
செ ஆறு படுத்தலின் மேதினியாள் திருமேனி அணிந்தது செவ்வணியே

மேல்
*கன்னன் நாகாஸ்திரத்தை விசயன் கழுத்திற்கு இலக்காக எய்தலும்,
*கண்ணன் தேரை அழுத்தவே, அது அவனது கிரீடத்தை இடறிச் செல்லுதலும்
$45.221

#221
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம்
மிகமிக வன் சிலை கோலி ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட ஓடி அந்தரம் மிசை
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும்
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே

மேல்
$45.222

#222
பரிமள சந்தன தீபமும் கமழ் புகை பனி மலரும் கொடு பூசையும் பரிவுடன்
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே

மேல்
$45.223

#223
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்வகை
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே

மேல்
$45.224

#224
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள்
இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின்
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும்
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே

மேல்
*நாகாச்திரத்தை விசயன் இருகூறாக்குதலும், அது மீண்டும் கன்னனிடம் வந்து,
*தன்னை விடுமாறு வேண்ட அவன் மறுத்தலும்
$45.225

#225
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள்
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே

மேல்
$45.226

#226
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும்
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும்
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே

மேல்
*நாகம் கன்னனை நொந்து உரைத்து, உயிர் துறத்தல்
$45.227

#227
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என
விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும்
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே

மேல்
*இருதிறத்தாரும் விசயன் தப்பியமைக்கு மகிழ்தல்
$45.228

#228
நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து நாக கொடி
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில் தன் செரு சேனையில்
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார்
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே

மேல்
*சல்லியன் உளம் நொந்து கூறி, கன்னனுக்குத்
*தேர் ஓட்டேன் என்று தேரிலிருந்து இறங்கி,
*தனது தேருக்குச் செல்லுதல்
$45.229

#229
அரு மார்பு இலக்காக எய் என்ன எய்யா அகங்காரமும்
வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும்
பொருமாறு நினைவு அற்றதும் கண்டு நரன் ஒத்த போர் மீளியை
திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்துநொந்து அம்ம சில கூறுவான்

மேல்
$45.230

#230
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று
உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர்
பன்னாக துவசற்கும் அரிதால் உனை கொண்டு பார் ஆளுமாறு
என்னா இழிந்தான் அவன் தேரின்-மிசைநின்றும் இசை நின்றுளான்

மேல்
$45.231

#231
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான்
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன்
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என
தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ

மேல்
*கன்னன் பரசுராமன் சாபத்தை நினைந்தவனாய்,
*வேறு தேர் ஏறி விசயனுடன் பொருதல்
$45.232

#232
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும்
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான்
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன்

மேல்
$45.233

#233
இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும்
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன்
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து
அயர்க்க சபித்தோனை வந்தித்து வேறு ஓர் அடல் தேரின் மேல்

மேல்
*கண்ணன் கன்னன் வலி குறைதலை விசயனுக்குக்
*குறிப்பிக்க, அவன் கன்னனது உயிர்க் காற்று
*அவியுமாறு பாணம் தொடுத்தல்
$45.234

#234
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன்
சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட
காறி கனன்று அ கடும் தேர் செலுத்தும் கரும் பாகனார்
கூறிக்கொடுத்தார் அருக்கன் குமரன் வன்மை குறைகின்றதே

மேல்
$45.235

#235
குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம்
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய்
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும்
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான்

மேல்
*போரை நிறுத்துமாறு கண்ணன் விசயனுக்குக் கூறி, வேதியர்
*வடிவு கொண்டு கன்னனை அடைதல்
$45.236

#236
எ தலங்களினும் ஈகையால் ஓகை வாகையால் எதிர் இலா வீரன்
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும்
கைத்தலம் மறந்தது இல்லை வில் குனிப்பும் கடும் கணை தொடுத்திடும் கணக்கும்

மேல்
$45.237

#237
அத்த வெற்பு இரண்டு விற்கிடை என போய் ஆதவன் சாய்தல் கண்டருளி
முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன்
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி
மெய் தவ படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனை அடைந்தான்

மேல்
*வேதியன் ‘இயைந்தது ஒன்று அளி’ எனலும், கன்னன்,
*’தரத்தகு பொருளை நீ சொல்லுக!’ என்ன, வேதியன்
*அவனது புண்ணியத்தை உதவ வேண்டுதலும்
$45.238

#238
தாண்டிய தரங்க கரும் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு
வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன்
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய்
தூண்டிய கவன துரகத தடம் தேர் சுடர் தர தோன்றிய தோன்றால்

மேல்
$45.239

#239
என்று கொண்டு அந்த அந்தணன் உரைப்ப இரு செவிக்கு அமுது என கேட்டு
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன்
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும்
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான்

மேல்
*கன்னன் மகிழ்ந்து, தான் செய் புண்ணியம்
*அனைத்தையும் நீர் வார்த்துக் கொடுத்தல்
$45.240

#240
ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன்
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்-தன்னில் வந்திலையால்
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ

மேல்
$45.241

#241
என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான்
கன்னனை உவகை கருத்தினால் நோக்கி கை புனலுடன் தருக என்ன
அன்னவன் இதயத்து அம்பின்-வாய் அம்பால் அளித்தலும் அங்கையால் ஏற்றான்
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன்

மேல்
*வேண்டும் வரம் கேள்’ என முனிவன் கன்னனுக்குக்
*கூறுதலும், அவன், ‘எப்பிறப்பினும் இல்லை என்போர்க்கு
*மறுத்து உரையா இதயம் அளி’ என்றலும்
$45.242

#242
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான்
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும்
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான்

மேல்
*கன்னன் வேண்டிய வரம் அளித்து, முத்தியும் பெறுவாய் என்று முனிவன் உரைத்தல்
$45.243

#243
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி

மேல்
*வேதியன் தன் உண்மை உருவைக் காட்டக் கண்டு,
*கன்னன் அகம் மகிழ்ந்து துதித்தல்
$45.244

#244
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப புணரி மொண்டு எழுந்த கார் முகிலை
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி
கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று
தோற்றியபடியே தோற்றினான் முடிவும் தோற்றமும் இலாத பைம் துளவோன்

மேல்
$45.245

#245
அமரரானவரும் அமர யோனிகளும் அமரருக்கு அதிபனானவனும்
கமல நான்முகனும் முனிவரும் கண்டு கனக நாள்மலர் கொடு பணிந்தார்
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண்
அமல நாரணனை காணவும் பெற்றேன் என்று தன் அகம் மிக மகிழ்ந்தான்

மேல்
$45.246

#246
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா
பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே

மேல்
$45.247

#247
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த
கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும்
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே

மேல்
$45.248

#248
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன்
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே

மேல்
$45.249

#249
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன்
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன்
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன்
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே

மேல்
*கண்ணன் கன்னன் பொருட்டுத் தான் செய்த செயல்களைக் கூறி, மீண்டு சென்று,
*விசயனுக்கு வலவன் ஆதல்
$45.250

#250
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய்
கன்று கொடு விள எறிந்த கண்ணன்-தானும் கன்னனுக்கு கட்டுரைப்பான் கடவுள் நாதன்
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும் குந்தியை கொண்டு அரவ வாளி
ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும்

மேல்
$45.251

#251
தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும்
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான்
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே

மேல்
*கண்ணன் சொற்படி, விசயன் அஞ்சரீகம் எனும் அம்பை ஏவ, கன்னன் வீழ்தல்
$45.252

#252
பகலவன்-தன் மதலையை நீ பகலோன் மேல்-பால் பவ்வத்தில் படுவதன் முன் படுத்தி என்ன
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான்

மேல்
*குற்றுயிருடன் கன்னன் கிடக்க, அசரீரி உரையால் செய்தி உணர்ந்த குந்தி
*அங்கு வந்து, புலம்புதல்
$45.253

#253
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க புதைந்து வாளி
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும்
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன்

மேல்
$45.254

#254
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான்
அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ

மேல்
$45.255

#255
என்றே என் தாதையுழை கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால் ஈன்றேன் ஈன்ற
அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன்
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு
நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ

மேல்
$45.256

#256
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி
ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல்
கார் அஞ்சு கரதலத்தாய் அந்தோ அந்தோ கடவுளர்-தம் மாயையினால் கழிவுற்றாயே

மேல்
*குந்தி தேவி கன்னனை நேயமோடு மடியில் வைத்து அமுதூட்ட, கன்னனது ஆவி பிரிதல்
$45.257

#257
என்று என்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு அதிசயிப்ப ஏங்கிஏங்கி
அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற
கன்று எஞ்ச இனைந்துஇனைந்து மறுகாநின்ற கபிலையை போல் என் பட்டாள் கலாபம் வீசி
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி

மேல்
$45.258

#258
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல்
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன்
பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே

மேல்
*துரியோதனன் சேனைகள் வீமனாலும் விசயனாலும் குறைந்த தன்மை
$45.259

#259
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில்
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை
பெருத்த கடல் சுவறிய அ பெருமை-தனை எப்படி நாம் பேசுமாறே

மேல்
*துரியோதனன் புலம்புதல்
$45.260

#260
அணையார்-தம் படை கடலின் அரு நிலைக்கு கரை ஏறல் ஆன கோல
புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க
துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில்
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே

மேல்
$45.261

#261
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால்
வீழ்வேனோ அமராட வீமனொடு தலைநாளில் விளைந்த செற்றம்
தாழ்வேனோ உனை ஒழிந்தும் தம்பியரை ஒழிந்தும் இனி தனித்து நானே
வாழ்வேனோ வாழ்வே என மன வலியே வருகின்றேன் வருகின்றேனே

மேல்
*சூரியன் மறைதல்
$45.262

#262
என கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது அரற்ற இருந்த வேந்தர்
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும்
இன கொண்டல் முழங்குவ போல் அந்தர துந்துபி முழங்க இமையோர் ஆர்ப்ப
கன கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து மூழ்கியதால் கடலினூடே

மேல்
*தாயின் அழுகை கேட்டு ஐவரும் கண்ணனை வினவி
*உண்மை தெரிந்து, கன்னனை அணுகுதல்
$45.263

#263
பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும் தம்மை பெற்ற பாவை
ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை
ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே

மேல்
*தருமன் முதல் ஐவரும் முறையே வருந்திப் புலம்புதல்
$45.264

#264
கன்னி இளம் பருவத்தில் அரியமா எனும் கடவுள் காதல் கூர
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின்
அன்னியம் நன்றாய் இருந்தது இப்படியே பிழைப்பிப்பது அறிந்திலேமே

மேல்
$45.265

#265
ஊற்று இருந்த விழியினளாய் உனை பயந்தாள் மனம் மறுக உயிராய் நின்று
காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று
கூற்று இருந்த பதி தேடி குடி இருக்க நடந்தனையோ கொற்ற வேந்தாய்
வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய்

மேல்
$45.266

#266
ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ
தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில்
யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே

மேல்
$45.267

#267
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன்
வாய் உரைத்தது இன்று அளவும் கேட்டிலேம் கேட்டனமேல் வாட்டம் உண்டோ
பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே

மேல்
$45.268

#268
ஆடகனை புதல்வனை கொண்டு அழிப்பித்தாய் இலங்கை நகர்க்கு அரசை அன்று
வீடணனை பகை ஆக்கி கிளையுடனே வீழ்வித்தாய் வேலை சூழ்ந்த
நாடு அறிய புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும் நரன் கை அம்பால்
ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே

மேல்
*ஐவரும் தாயும் பாடிவீடு செல்ல, துரியோதனனைக் கொண்டு
*சகுனி முதலியோர் தங்கள் இருப்பிடம் செல்லுதல்
$45.269

#269
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள்
ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார்
பைவரு மாசுண துவச பார்த்திவனை கொண்டே தம் பாடி புக்கார்
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர்

மேல்

46. பதினெட்டாம் போர்ச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$46.1

#1
மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய்
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய்
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே

மேல்
*சூரியன் தோன்றுதல்
$46.2

#2
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர்
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான்
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின்
புதைய பரந்த அகல் இருளும் துரந்து உரகர் புவனத்தினூடு புகவே

மேல்
*துரியோதனன் இரவில் சகுனியொடு எண்ணி, உதயத்தில் சூரியனைத் தொழுதல்
$46.3

#3
கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய்
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும்
வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான்

மேல்
*சல்லியனைத் துரியோதனன் அழைத்துச் சேனாதிபதியாக்குதல்
$46.4

#4
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான்
வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே
அல்லாது வேறு சிலர் இலர் என்று சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா

மேல்
$46.5

#5
நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும்
நீயே துணை புயமும் நீயே விழி துணையும் நீயே அனைத்து நிலையும்
நீயே முனை செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும் அதனால்
நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா

மேல்
$46.6

#6
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால்
நல் பட்டமும் தனது கையால் அணிந்து படை நாலுக்கும் நாயகம் எனா
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே

மேல்
*துரியோதனன் காலைக் கடன்களை முடித்து,
*சல்லியனோடு களம் புகுதல்
$46.7

#7
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில்
தூ நானம் ஆடி மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து துகிலும்
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா
வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என வன்போடு மன்னர் தொழவே

மேல்
$46.8

#8
கிருபாரியன் கடவுள் மருகன் திகத்த பதி சாலுவன் கிருதன் முதலோர்
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே
நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும்
பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே

மேல்
*சல்லியன் சேனையை அணி வகுத்தல்
$46.9

#9
தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய விறல் கூர்
மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய தினகரன்
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல்
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே

மேல்
*ஐவரும் பாசறையில் கன்னன் பிரிவுக்குப் புலம்பிச் சோகமுறுதல்
$46.10

#10
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன்
பொரு படை முனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை புகன்றனம் இனி
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில்
பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும் பாசறை முனைந்ததும் வியந்து பகர்வாம்

மேல்
$46.11

#11
செ இரவி_திருமகனை செகம் புரக்கும் காவலனை இரவலோருக்கு
எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர
அ இரவில் இமைப்பொழுதும் தரியாமல் அழுது அரற்றி அலமந்தாரே

மேல்
$46.12

#12
சாயை வெறுத்தனள் அவளின் தல தேவி மிக வெறுத்தாள் தபனன் ஈன்ற
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன
யாயை வெறுத்தனன் பின்னை விதியை வெறுத்தனன் வீமற்கு இளைய கோவே

மேல்
*பாண்டவர் போர்க்களம் புகுதல்
$46.13

#13
அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று அனிலன் மைந்தன்
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ
இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும் எனும் இதயத்தோடும்
பிற்றை நாள் முரசு அதிர வளை முழங்க களம் புகுந்தான் பிதாவை போல்வான்

மேல்
$46.14

#14
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன்
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும்
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார்

மேல்
*சல்லியனது அத்திரவியூகம் கண்டு தருமன் மனம் தளர,
*கண்ணன் அவனுக்குத் தேறுதல் உரைத்தல்
$46.15

#15
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான்
குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான்

மேல்
$46.16

#16
வீடுமனை சிலை குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள்
ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ
தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ என மொழிந்தான் துளப மாலே

மேல்
$46.17

#17
வில்லியரில் வேலாளில் வாள் எடுத்தோர் தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார்
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார்
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர் என்றும் சாற்றினானே

மேல்
$46.18

#18
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர்
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர்
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று உமக்கு என்றும் உரைசெய்தானே

மேல்
$46.19

#19
பார்த்தன் ஒருவனும் சென்று பரித்தாமாவுடன் மலைய படைஞரோடு
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல இகல் மா வலோனும்
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர்
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான்

மேல்
*திட்டத்துய்மன் அணிவகுத்து நிற்க, சேனைகள் பொரத் தொடங்குதல்
$46.20

#20
கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு
துருபதேயனும் தன் பெரும் சேனையை துன்றிய வியூகமா தொடுத்து
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான்
பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே

மேல்
*சல்லியன் வந்து தருமனோடு பொருதல்
$46.21

#21
ஆய போதினில் குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி அம்
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான்
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான்
தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான்

மேல்
$46.22

#22
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும்
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில்
பிதிர் படும்படி தொடுத்தனன் தொடி தட கையினில் பிடித்த வில் குனித்தே

மேல்
$46.23

#23
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண்
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு
விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய்
படிஞ்ச தூளி ஓர் நடம் பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றதுவே

மேல்
$46.24

#24
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில்
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும்
நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே

மேல்
*தருமனும் சல்லியனும் விற்போர் புரிதல்
$46.25

#25
வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார்

மேல்
$46.26

#26
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள்
கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன கூறுவது எவன்-கொல்
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால்
செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார்

மேல்
$46.27

#27
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன்
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால்
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன்

மேல்
*தருமன் தளர்ச்சி கண்டு, வீமன் சல்லியனோடு வந்து பொருதல்
$46.28

#28
வலவன் வீழ்ந்ததும் தனுவின் நாண் அற்றதும் மனத்து அழுக்காறு இலா வாய்மை
புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல்
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான்
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன்

மேல்
$46.29

#29
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை
கன தனுத்தனை ஊன்றி நின்று இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான்
எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான்
வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன்

மேல்
$46.30

#30
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார்
அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின் தொடுத்தார்
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர்

மேல்
*வீமன் விற்போரில் அதிர்ந்து கதை கொண்டு பூமியில் நிற்க,
*சல்லியன் தோமரப் படையால் வீமனை எற்றுதல்
$46.31

#31
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி
பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான்
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான்

மேல்
$46.32

#32
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும் திகிரியும் பாய் பரிமாவும்
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால்
மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன் வெற்றி கூர்ந்திடவே

மேல்
*போரில் வீமன் நிலைகுலைய, இரு பெருஞ் சேனையும்
*பொருதலும், கன்னன் புத்திரர் மூவர் நகுலனால் மடிதலும்
$46.33

#33
தோமரம்-தன்னால் வாயு_சுதன் அமர் அழிந்த போதில்
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும்
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே

மேல்
$46.34

#34
தேரவன் மைந்தன் மைந்தர் சித்திரசேனன் ஏனை
சூரியவன்மன் சித்ரகீர்த்தி முச்சுடரோடு ஒப்பார்
வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும்
போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே

மேல்
*சகுனியும், அவன் புதல்வர் இருவரும்
*நகுலனொடு பொருது தோற்றல்
$46.35

#35
தசை உற வளர்ந்த பொன் தோள் சகுனியும் தனயர் ஆகி
இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும் இரத மேலோர்
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன
விசையனது இளவலோடு செரு செய்து வெந்நிட்டாரே

மேல்
*துரியோதனன் கேதுதரன் என்பானைக் கொல்லுதல்
$46.36

#36
புயங்க வெம் பதாகை நச்சு பொங்கு அழல் புங்கயம் போல்வான்
தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால்
இயங்குக வானினூடு என்று இமையவன் ஆக்கினானே

மேல்
*சல்லியன் மீண்டும் தருமனோடு பொருதலும்,
*சுமித்திரன் முதலிய மன்னரை மடிவித்தலும்
$46.37

#37
இரு பெரும் சேனையோரும் இப்படி செரு செய் காலை
தருமன் மா மதலை-தன்மேல் சல்லியன்-தானும் மீள
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி
ஒரு தொடை-தன்னில் ஓர் ஏழ் உரத்துடன் துரத்தினானே

மேல்
$46.38

#38
பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி
துன்ன அரும் தடம் தேர் ஆண்மை சுமித்திரன் முதலா உள்ள
மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே

மேல்
*வீமன் வடிவு புதையுமாறு சல்லியன் அம்பு எய்ய, நகுல
*சகாதேவரும் சாத்தகியும் வந்து, சல்லியனொடு பொருதல்
$46.39

#39
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்-தானும் மீள
சின கனல் மூள வாள சிலம்பு என சிலையும் வாங்கி
கன குலம் ஏழும் சேர கல்மழை பொழிந்தது என்ன
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான்

மேல்
$46.40

#40
அறை கழல் வீமன்-தானும் அங்கர்_கோன் பாகன்-தானும்
முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார்
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும்
இறைவரும் செம் கண் மாயன் இளவலும் இவன் மேல் சென்றார்

மேல்
$46.41

#41
சென்று வெம் சிலைகள் கோலி சிலீமுகம் உறுப்பு-தோறும்
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து
இன்று இவன் ஆவி கோறும் என்று சல்லியன் மேல் தங்கள்
வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே

மேல்
$46.42

#42
மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்-தானும்
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம்
சதம்படு பகழி ஓரோர் தனுக்களின் உருவி ஓட
இதம்பட எய்து நக்கான் ஏவினுக்கு இராமன் போல்வான்

மேல்
*தம்பியர் தளர்வு கண்டு, சல்லியனது கொடி
*முதலியவற்றை வீமன் அழித்தல்
$46.43

#43
தம்பியர் தளர்ச்சி கண்டு சமீரணன் புதல்வன் சீறி
தும்பை மா மாலை வேய்ந்து தொடு கணை வலிதின் வாங்கி
வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி பாகு வாசி
செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து வீழ்த்தான்

மேல்
$46.44

#44
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய
கொற்றவர் பலரும் வீழ கொடி குடை கவரி வீழ
சுற்றிய நேமி வாசி துளை கர கோட்டு நால்வாய்
பொற்றைகள் துணிந்து வீழ புங்க வாளிகளும் தொட்டான்

மேல்
*துருபதன் முதலிய அனைவரும் தருமன்
*தம்பியர்களோடு கூடி முனைந்து பொருதல்
$46.45

#45
துருபதன் முதலா உள்ளோர் சோமகர் முதலா உள்ளோர்
நிருபர்-தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர்
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி
ஒரு முகமாகி மேற்சென்று உறு செரு புரியும் வேலை

மேல்
*அருச்சுனனும் அசுவத்தாமனும் விளைத்த போர்
$46.46

#46
அறுதியாக இன்று அரும் சமர் முடித்தும் என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால்
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன்
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே
இறுதி நாள் என ஆங்கு அவன் அணிந்த பேர் இகல் அணியிடை சென்றான்

மேல்
$46.47

#47
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற
ஒன்று போல்வன பிறைமுக கடும் கணை ஒருபது தொடுத்திட்டான்
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான்

மேல்
$46.48

#48
தொடுத்த அம்பினை அம்பினால் வானிடை துணித்து இடை நணித்து ஆக
விடுத்த அம்பினால் மருவலன் பாகனும் வெம் பரிகளும் வில்லும்
நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான்
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே

மேல்
$46.49

#49
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால
பொழிந்த வாளி ஓர் அளவு இல அவற்றையும் பொடி படுத்தினன் பார்த்தன்
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை

மேல்
$46.50

#50
செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான்
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன் மேல் ஒரு பார
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான்

மேல்
$46.51

#51
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம்
இலக்கை உற்றிட எறிந்தனன் எறிதலும் இவன் அவன் எறி தண்டை
வல கையின் தொடு கணைகளால் பல துணி ஆக வில் வளைத்தானே

மேல்
*’கண்ணன் தேர் விடும் வரையில் விசயனுடன் பொருதல் அரிது!’ என
*அசுவத்தாமன் விலகிச் செல்லுதல்
$46.52

#52
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும்
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும்
கோத்த அம்பினில் பல படைகளில் அமர் கொளுத்துதல் அரிது என்று
பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் கடல் பார் புகழ் பரித்தாமா

மேல்
*கிருபன் முதலிய பலரையும் விசயன் வென்று, வீமனைச் சேர்தல்
$46.53

#53
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர்
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர்
முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான்

மேல்
*சல்லியன் வீமனால் பரி, சிலை, முதலியன இழக்க,
*துரியோதனன் படையுடன் வந்து உதவுதல்
$46.54

#54
தயங்கு வெண்குடை சல்லியன் தண்டுடை சமீரணன் மகன்-தன்னால்
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று
தியங்குகின்ற பேர் இறுதி கண்டு உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற
புயங்க கேதனன் கண்ணினுக்கு இமை என பொரு படையுடன் சேர்ந்தான்

மேல்
*சாத்தகி முதலிய பலரும் எதிர்ந்து வர, சல்லியன்
*பொருது, சாத்தகியையும் நகுலனையும் வெல்லுதல்
$46.55

#55
சாத்தகி பெயரவன் சமீரணன் மகன் நகுலன் வெம் சாதேவன்
பார்த்தன் என்று இவர் அனைவரும் இவர் பெரும் படை தலைவனும் சேர
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும்
பேர்த்தும் முந்துற திருகினன் அரசொடும் பெரும் படையொடும் அம்மா

மேல்
$46.56

#56
தண் துழாய் முடி மாயவன் தம்பியை சாயகம் பல கோடி
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல்
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான்

மேல்
*நகுலனை ஒழிந்த நால்வரையும் அம்பினால் எய்ய,
*வீமன் சல்லியனது மகுடத்தை வீழ்த்துதல்
$46.57

#57
ஒரு கொடும் கணை தொடுத்தலும் வெம் கொடுத்து ஓடினன் சாதேவன்
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும்
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து
அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான்

மேல்
$46.58

#58
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன்
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி
புறத்து வீழ்தர எறிந்தனன் எறிந்தமை புயங்க கேதனன் கண்டான்

மேல்
*அது கண்டு பொறாத துரியோதனன்,
*வீமனோடு வந்து பொருது தோற்றல்
$46.59

#59
தன் படைத்தலைவனை தண்டினால் எறி
வன்புடை தடம் புய மருத்தின் மைந்தன் மேல்
மின் படைத்து ஒரு கணை விசையின் ஏவினான்
புன் படைப்பினில் அயன் படைத்த பூபனே

மேல்
$46.60

#60
காமனை சம்பரன் கனன்ற போர் என
வீமனை போர் செய்து வெல்ல முன்னிய
தீ மனத்து அரசனை சிலீமுகங்களின்
மா முனை படுத்தினன் மறித்து வீமனே

மேல்
$46.61

#61
யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறு போல்
மீளிகள் இருவரும் குனித்த வில் உமிழ்
வாளிகள் இருவர்-தம் வடிவில் பாயும் முன்
தூளிகள் பட்டன துணிந்து வானிலே

மேல்
$46.62

#62
தாள் முதல் முடி உற சரங்கள் ஏவியும்
வாள் முதல் படைகளால் மலைந்தும் மற்று அவர்
தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார்

மேல்
$46.63

#63
வன் பரி பாகு தேர் மதி நெடும் குடை
மின் பொழி கணை உமிழ் வில் விலோதனம்
என்பன யாவையும் இற்று வீழுமாறு
ஒன்பது படி அமர் உடற்றினான் அரோ

மேல்
*துரியோதனன் முதுகிட, சல்லியன் வந்து பொருதல்
$46.64

#64
இரண வித்தகன் இவன் எறிந்த வேலினால்
முரண் உடை சுயோதனன் முதுகுதந்த பின்
அரணுடை படைக்கு அரசு ஆன மத்திரன்
மரணம் இப்பொழுது என வந்து மேவினான்

மேல்
*சல்லியனுக்கும் தருமனுக்கும் துணையாகப்
*பல வீரர்கள் வருதல்
$46.65

#65
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும்
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர் களிற்றினர்கள்
ஊரும் ஊரும் இரதத்தினர் எனை பலரும் ஓத வாரி என மத்திரனொடு ஒத்தனரே

மேல்
$46.66

#66
வீமசேனனும் அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர் குல பகை தொலைத்தவனும்
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும்
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும்
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே

மேல்
*இரு திறத்தாரும் மலைந்த போர்ச் சிறப்பு
$46.67

#67
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும்
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள்
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள்
கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே

மேல்
$46.68

#68
ஆனபோது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கொருவர் மெய் கவசம்
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும்
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள்
தான வானவர்கள் யுத்தமும் அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும் நிகர்த்தனவே

மேல்
*தம்பியர் முதலியோரை விலக்கித் தருமன் சல்லியனோடு பொருதல்
$46.69

#69
வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர்
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே

மேல்
$46.70

#70
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும்
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே

மேல்
$46.71

#71
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே

மேல்
*தருமன் வேல் எறிந்து, சல்லியனது முடித்தலை துணித்தல்
$46.72

#72
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில்
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே

மேல்
*சல்லியன் மாண்டமை கண்டு துரியோதனன் சேனை நிலை குலைய,
*எழுநூறு தேர் வீரர்கள் தருமனை எதிர்த்தல்
$46.73

#73
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர்
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன்
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை

மேல்
$46.74

#74
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள்
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே

மேல்
*சகுனி முதலானோரோடு, துரியோதனனும் தருமனை எதிர்க்க வருதல்
$46.75

#75
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன
கவரி புடை பணிமாற தவள கொற்ற கவிகை ஒரு தனி நிழற்ற கரை காணாத
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான்

மேல்
*வீமன் முதலியோர் பகைவரை எதிர்த்துப் பொருத திறம்
$46.76

#76
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும்
சோமகரும் முதலாய தறுகண் வீரர் தும்பிகளை அரி இனங்கள் துரக்குமா போல்
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி
பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ

மேல்
*வீமன் துரியோதனன் தம்பியர் எழுவரை மாய்த்தலும், துரியோதனன் சோகமும்
$46.77

#77
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும்
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி
இன்று அமையும் சமரம் இனி காண்டல் பாவம் என்று இமையோர் அதிசயிப்ப இமயம் போல
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே

மேல்
$46.78

#78
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும்
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ

மேல்
*துரியோதனன் தம்பியர் ஐவரோடும் பெருஞ் சேனையோடும் கிருதவன்மன்
*வந்து பொர, வீமன் கணையால் தம்பியர் ஐவரும் மாளுதல்
$46.79

#79
தனக்கு நிகர் தான் ஆன கிருத்தவன்மன் தம்பியர்கள் எழுவர் பட தம்முன் பட்ட
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட
எனக்கு இவரே அமையும் என புறக்கிடாத இளையவர் மேல் கடும் கணை ஐந்து ஏவினானே

மேல்
$46.80

#80
சித்திரவாகுவினோடு பெலசேனன் போர் செயசூரன் சித்திரன் உத்தமவிந்து என்றே
அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர்
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன்
புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார்

மேல்
*அப்பொழுது துரியோதனன் சீற்றத்தொடு வந்து பொர, அவனைச் சகாதேவன் வெல்லுதல்
$46.81

#81
ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர
கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே

மேல்
$46.82

#82
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன்
வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும்
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு
பின் களத்தை சோரியினால் பரவை ஆக்கி பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே

மேல்
*சகுனி முதலிய பலரும் வீமனோடு பொருது பின்னிட, துரியோதனன் தம்பியர்
*ஒன்பதின்மர் வந்து பொருது மடிதல்
$46.83

#83
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன
வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும்
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால்
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே

மேல்
$46.84

#84
பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன்
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி
கறங்கு எனவே சூழ்வந்து பொருதான் வீமன் கட்டாண்மைக்கு இது பொருளோ கருதுங்காலே

மேல்
*எஞ்சியிருந்த துரியோதனன் தம்பியரும் வீமனால் இறத்தல்
$46.85

#85
பாண்டவரில் வீமன் கை படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர் ஒழிந்தோர்கள் பலரும் கூடி
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ

மேல்
*தன் தம்பியர் தொண்ணூற்றொன்பதின்மரும் வீமன் வாளியாலும் கதையாலும்
*இறந்தது குறித்துத் துரியோதனன் கவலையுற, சகுனி அவனுக்கு ஆறுதல் மொழிதல்
$46.86

#86
தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்-தாமும் சய வீமன் சரத்தாலும் தண்டினாலும்
கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான்

மேல்
$46.87

#87
அருகு சாயை போல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற
உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள்
மருக வாழி கேள் போரில் மடிவுறாத பூபாலர்
முருகவேளையே போல்வர் முரண் அறாத கூர் வேலோய்

மேல்
$46.88

#88
கிருத நாமன் நால் வேத கிருபன் ஆதியோரான
நிருபர் சேனை சூழ் போத நிமிர ஓடி மாறாது
பொருது சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை
முரசகேதுவோடு ஓட முரணு போரில் மூள்வோமே

மேல்
*வீமனோடு சகுனி பொர, அவனது சேனை நிலைகுலைதல்
$46.89

#89
என மகீபன் வாடாமல் இனிய வாய்மையே கூறி
அனிக ராசியோடு ஏகி அமரில் வீமன் மேல் மோத
முனைகொள் வீமன் ஆம் ஆறு முறுவல் வாள் நிலா வீச
மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே

மேல்
$46.90

#90
தரணி தாழுமாபோது சகுனி சேனை வான் ஏற
முரணு வாகுவால் மோதி முடுகு நீள் கதாபாணி
அரணி ஆகவே ஏனல் அடவி ஆனதால் நீடும்
இரண பூமி மால் யானை இரதம் வாசி காலாளே

மேல்
*மீளவும் சகுனி துரியோதனனுக்கு ஊக்கம் அளித்தல்
$46.91

#91
அலகு இல் வேலை போல் சேனை அதிபன் ஆவி போமாறு
பலம்-அது ஆக மேல் மோது படைஞர் சாயவே நாமும்
இலகு வாளம் வேல் நேமி எவரும் ஏவுவேமாக
தலைவ கேள் எனா வீர சகுனி கூறினான் மீள

மேல்
*சகுனிமேல் சகாதேவன் வாளி ஏவுமுன்,
*துரியோதனன் அவன் வேலை வீசுதல்
$46.92

#92
விரகு அறாத சூது ஆடு விடலை மீது சாதேவன்
இரதம் ஏவி ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன்
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில்
உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே

மேல்
*அது கண்ட வீமன், துரியோதனன்மேல் வாளி ஏவுதல்
$46.93

#93
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின் மேல் வீழ
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில்
முதுகில் ஓடவே நூறு முழுக ஏவினான் வாளி
அதல பூமியூடு ஆழி அமுதம் ஆரும் வாயானே

மேல்
*வீமன்மேல் வேல் ஏவிய அசுவத்தாமன்மேல்,
*சோழன் அம்பு தொடுத்தல்
$46.94

#94
சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே பூமி
அமரனான தாமா ஒர் அயிலை வீமன் மேல் ஏவ
எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான
குமரன் ஆவி போமாறு குடைதும் நாம் எனா வீரன்

மேல்
$46.95

#95
தனுவின் வேத நூல் வாசிதனயனான தாமாவை
முனை கொள் மார்பின்-வாய் மூழ்கி முதுகில் ஓடவே ஏழு
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய்
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே

மேல்
*அசுவத்தாமன் நிலைகண்டு பொரவந்த அவன் மாமன்
*கிருபாசாரியனும் வென்னிடுதல்
$46.96

#96
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை
விருதனோடு போராடி வெரிநிடா விடாது ஓட
அருகு சூழும் மா சூரர் அடைய ஓட ஓடாது
திருகினான் அரா ஏறு திகழ் பதாகையான் மாமன்

மேல்
*சகுனி மீள வந்து பொர, சகாதேவன்
*வேல் எறிந்து, அவனை மாய்த்தல்
$46.97

#97
சகுனி ஆவி போமாறு சபத வாய்மை கோடாமல்
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை
இகலொடு ஏவினான் வீமன் இளவலான போர் மீளி

மேல்
*சகுனி இறந்ததும் எங்கும் போர் ஒழிய,
*துரியோதனனும் வன்மை அழிந்து நிற்றல்
$46.98

#98
தாவிய வெம் பரிமா இரதத்திடை சாதேவன்
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான் என்று
ஓவியது எங்கணும் வெம் சமர் பார் முழுது உடையானும்
ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே

மேல்
$46.99

#99
தும்பியில் வாசியில் நீடு இரதத்தில் ஓர் துணை இன்றி
பம்பிய சேனை அழிந்து வரும்படி பாராதான்
தம்பியர் யாவரும் மாதுலனும் பல தமரும் போய்
அம்பி இழந்த பெரும் கடல்வாணரின் அலமந்தான்

மேல்
*இறந்தவரை எழுப்பும் மறையால் சேனையோரை எழச்
*செய்து பொர எண்ணி, துரியோதனன் ஒருவருக்கும்
*உரையாது தனிச் செல்லுதல்
$46.100

#100
ஒரு மதி வெண்குடை இரு கவரி குலம் ஊரும் சீர்
இரதம் மதம் கயம் இவுளி பணி கொடி முதலான
அரசர் பெருந்தகை அரசு அடையாளம் அனைத்தும் போய்
திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற

மேல்
$46.101

#101
அயனிடை அசுரர் குரு பெறலுற்றது அவன்-பால் முன்
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு
பயம் உற மா முனிவர்க்கு உரைசெய்தது பார் மீதே
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான்

மேல்
$46.102

#102
அ நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை
இன் உயிர் பெற்றிடும்வகை கொடு மீளவும் இகல்வேன் என்று
உன்னி உளம் தெளிவுற்று ஒருவர்க்கும் இஃது உரையாதே
தன் ஒரு வெம் கதையோடு தராபதி தனி சென்றான்

மேல்
*துரியோதனன் ஒரு குளத்தில் மூழ்கி, மறையை மொழிந்து, தவம் செய்தல்
$46.103

#103
தூய நலம் தரு கங்கை என பல சுரரும் தோய்
பாய தடம்-தனில் மூழ்கினன் அ மறை பயில்வேன் என்று
ஆயும் மனம் கொடு சேவடி முன் பினதா ஏகி
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான்

மேல்
$46.104

#104
கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற
வெம் பித்து அடங்கி மனம் சித்தொடு மேவல் கூர
தம்பித்த தோயத்திடை வாயு தசமும் ஒக்க
கும்பித்து ஞான பெரும் தீபம் கொளுத்தினானே

மேல்
$46.105

#105
பல் நாளும் யோகம் பயில்வோரின் பதின்மடங்கா
தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றி தயங்குமாறு
நல் நாள மூல நளினத்தை மலர்த்தி நாவால்
உன்னாமல் உன்னும் முறை மந்திரம் ஓதினானே

மேல்
*சோழனுக்கு முதுகிட்ட வீரர்கள் நிலையும் அசுவத்தாமன்
*முதலியோர் இறந்த சகுனியைக் காணுதலும்
$46.106

#106
இதயம் சிறிதும் கலங்காத இறைவன் இவ்வாறு
உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை
மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார்

மேல்
$46.107

#107
பர பாவகமாம் பரி தாமனும் பாய் பரி தேர்
கிருபாரியனும் கிருத பெயர் கேடு இலோனும்
ஒரு பால் இறைகொண்டு ஒழி சேனையும் தாமும் மீண்டு
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார்

மேல்
$46.108

#108
கண்டார் மிகவும் பரிவோடு கலக்கமுற்றார்
தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி
கொண்டான் முரச கொடியோன் என கோபம் மிஞ்சி
விண்டார் மிகவும் வியந்தார் அவர் வீரம் அம்மா

மேல்
*துரியோதனனைக் களத்தில் காணாது, அசுவத்தாமன்
*சஞ்சயனைக் கண்டு வினவுதல்
$46.109

#109
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை
காணார் களத்தில் ஒரு பாலும் கருகி உள்ளம்
வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல் வானொடு ஒத்தார்

மேல்
$46.110

#110
தனி வந்து தோன்றுதலும் சஞ்சயன் என்னும் வேத
முனிவன்-தனை கண்டு இரு தாளில் முடிகள் சேர்த்தி
அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி
கனி கண்டனையாய் எவண் காண்குதும் காட்டுக என்றார்

மேல்
*சஞ்சயன் துரியோதனன் இருக்கும் இடம் கூறல்
$46.111

#111
இவ்வோர் விரைவின் இவன்-தன்னை வினவ அஞ்சல்
அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை அமரில் மோதி
வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய யாரும்
ஒவ்வோன் மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான்

மேல்
$46.112

#112
ஈண்டு சமரின் இறந்தோர்கள் எவரும் இன்றே
மீண்டு உற்பவிக்க விடுவித்து விரகினோடும்
பாண்டு பயந்தோர் படை யாவும் மடிய மோத
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான்

மேல்
$46.113

#113
என்னை துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண
பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் யானும் வந்தேன்
தன் ஐக்கு மூழ்க தடம் வாய்த்தமை தந்தையோடும்
அன்னைக்கு உரைப்பேன் என போயினன் அந்தணாளன்

மேல்
*அசுவத்தாமன் முதலியோர் நீர்நிலையை
*அடைந்து, துரியோதனனை அழைத்தல்
$46.114

#114
வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும் மற்றை
ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும் எய்தி
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான
ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார்

மேல்
$46.115

#115
புள் இயல் அரவம் காணார் பொருது எறி தரங்கம் காணார்
துள்ளிய மீனம் காணார் சூழ்வரும் அனிலம் காணார்
ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி மன்றல்
வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார்

மேல்
$46.116

#116
ஏறிய பாதம் போல இறங்கிய பாதம் நோக்கி
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கிநோக்கி
கூறிய அரசன்-தன்னை கூவினர் அழைக்கலுற்றார்

மேல்
$46.117

#117
நின் கிளை ஆகி வந்த நிருபரும் துணைவர் யாரும்
வன் களிறு இவுளி பொன் தேர் வாள் முதல் படைகள் யாவும்
புன் களம்-அதனில் சேர பொன்றின இம்பர் அன்றோ
என் கருதினை-கொல் ஐயா என் பெறற்கு என் செய்தாயே

மேல்
*அசுவத்தாமன் ஐவரை அழிப்பதாகச் சபதம் செய்து கூறுதல்
$46.118

#118
வீரியம் விளம்பல் போதாது ஆயினும் விளம்புகின்றேன்
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால்
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை
மூரி வெம் கணைகளாலே முடி தலை துணிவர் கண்டாய்

மேல்
$46.119

#119
எல்லவன் வீழும் முன்னம் யாரையும் தொலைத்து வேலை
தொல்லை மண் அளித்திலேனேல் துரோணன் மா மதலை அல்லேன்
வில் எனும் படையும் தீண்டேன் விடையவன் முதலோர் தந்த
வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ

மேல்
$46.120

#120
மோது மோகர போர் வென்று முடித்துமோ ஒன்றில் ஒன்றில்
சாதுமோ இரண்டும் அல்லால் தரணிபர்க்கு உறுதி உண்டோ
யாதுமோ தெளிதி நின் போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு
போதுமோ பூண்டபூண்ட புகழ் எலாம் போய்விடாதோ

மேல்
$46.121

#121
பாண்டவர் முடிய வென்று இ பார் எலாம் உனக்கே தந்தால்
மாண்டவர்-தம்மை நின் வாய் மறைமொழி-தன்னை கொண்டு
மீண்டவர் ஆக்கி பின்னை வேறு ஒரு பகையும் இன்றி
ஆண்டவர் இவரே என்ன துணைவரோடு ஆளலாமே

மேல்
*துரியோதனன் மறுமொழி கொடாது தவநிலையில் நிற்க,
*அசுவத்தாமன் முதலியோர் மீளுதல்
$46.122

#122
என்று இவை போல்வ பல் நூறு இயம்பவும் இராசராசன்
ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல
துன்றிய வடிவத்தோடும் அடங்கினான் தோயத்தூடே

மேல்
$46.123

#123
உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன்
விரை தொடை கிருதனோடும் மாதுலனோடும் மீண்டான்

மேல்
*மிருக மாக்கள் கூற, துரியோதனன் சென்ற இடத்தை வீமன்
*அறிந்து, தருமன் முதலியோர்க்கு அறிவித்தல்
$46.124

#124
மற்று அவர் மீண்ட பின்னர் மா தவ குந்தி ஈன்ற
கொற்றவர்-தாமும் சேனை குழாத்தொடும் தங்களோடும்
செற்றவர்-தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி
பொன் தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல்

மேல்
$46.125

#125
பாடியும் களமும் சூழ்ந்த பாங்கரும் அங்குமிங்கும்
தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை
ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே

மேல்
$46.126

#126
துவம் மிகு முனிவரோடு சுரர்களும் தோயும் நல் நீர்
தவம் முயல் பொய்கை-தன்னில் தண்டுடை கையன் ஆகி
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன் கண்டோம் என்றார்
கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே

மேல்
$46.127

#127
கரு முகில் அனைய மேனி கண்ணனும் பவள மேனி
தருமனும் எவரும் கேட்ப தாம வேல் வீமன் சொன்னான்
பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான் என்று
தெருமரு மிருக மாக்கள் செப்பினர் என்று கொண்டே

மேல்
*துரியோதனன் இறந்தாரை எழுப்பும் மந்திரம்
*பெற்றதைக் கண்ணன் அறிவித்தல்
$46.128

#128
என்றலும் தன்னை சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்ற
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான்
அன்று அயன் முகத்தினால் பெற்று அநேக மா முனிவர்-தம்பால்
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே

மேல்
$46.129

#129
வெம் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர் அந்த
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரி தாரினானும்
நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி நீங்கள்
துஞ்சிட பொருவான் இன்னம் சூழ்ந்தனன் போலும் என்றான்

மேல்
*வீமன் குளத்தை அடைந்து, துரியோதனனை
*இகழ்ந்து, போருக்கு அழைத்தல்
$46.130

#130
மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு தந்தை
ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி
தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப
தீ என தீய நெஞ்சன் செவி சுட சில சொல் சொல்வான்

மேல்
$46.131

#131
கங்கை_மகன் முதலாக காந்தாரன் முடிவாக களத்தில் வீழ்ந்த
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும்
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண்
வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே

மேல்
$46.132

#132
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த
வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை
வெம் சமரம் முடித்து அன்றோ அறைவது இவை வீரருக்கு வீரம் ஆமோ

மேல்
$46.133

#133
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன்
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர்
படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே

மேல்
$46.134

#134
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி
பாதத்தில் வீழ்வரோ பார் அரசர் கேட்டாலும் பழியே அன்றோ
மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும்
காதத்தில் எதிர்கொள்ள கற்பக நீழலில் வைப்பன் கலங்கல் அம்மா

மேல்
$46.135

#135
களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ
குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ

மேல்
$46.136

#136
இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன் இகல் செய்யாமல்
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய்
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல்
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர்

மேல்
$46.137

#137
திரிபுவனங்களும் சேர செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி இந்த
விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி
எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே

மேல்
*துரியோதனன் வெளி வருதல்
$46.138

#138
பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவி பட்ட காலை
சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான்
ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி
வீவன மற்று அறியாமல் நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான்

மேல்
$46.139

#139
நீளம் உற பரவை உற வாளம் உற கரை பரந்து நிமிர்ந்த நீத்த
நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான்
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே

மேல்
*யாரொடு பொருவது?’ என்று, துரியோதனன் வினாவுதலும்,
*கண்ணன் ‘வீமனோடு பொருதலே ஏற்றது எனலும்
$46.140

#140
தோன்றி நெடும் கரை ஏறி கரை முழுதும் நெருக்கம் உற சூழ்ந்து நின்ற
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும்
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே

மேல்
$46.141

#141
ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும்
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான்
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ

மேல்
$46.142

#142
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால்
உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான்
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தட கையால் கொன்றான்
விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே

மேல்
$46.143

#143
வில்லாலும் வாளாலும் வேலாலும் பரி நெடும் தேர் வேழத்தாலும்
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப
புல்லாரை புறங்காணும் போர் வேலோய் இருவரும் நீர் பொருது நும்மில்
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான்

மேல்
*எந்த ஆயுதத்தால் போர் செய வேண்டும்?’
*என வீமனைத் துரியோதனன் வினாவுதல்
$46.144

#144
கொண்டல் நிகர் திருமேனி கோபாலன் இவை உரைப்ப
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து
திண் திறல் வீமனை நோக்கி சிலை முதல் ஆம் படை கொண்டோ
தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான்

மேல்
*’கதை கொண்டே போர் செய்யலாம்’ என வீமன் மொழிதல்
$46.145

#145
நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில்
என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான்
தனகரற்கும் குமரற்கும் தண் துழாய் முடியவற்கும்
தினகரற்கும் மேலான சிந்தையுடன் செரு செய்வோன்

மேல்
*’எந்த இடத்தில் போர் புரிவது?’ என்று வினாவிய
*துரியோதனனுக்குக் கண்ணன் விடை கூறும் அளவில்,
*பலராமனும் விதுரனும் அங்கு வருதல்
$46.146

#146
எவ்விடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம் என்று
பொய் விடை ஏழ் அடர்த்தோனை புயங்ககேதனன் கேட்ப
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால்
அவ்விடை ஆங்கு இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான்

மேல்
$46.147

#147
அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும் வேலையினில்
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த
கரும் புயலே அனையானும் காவலரும் கண் களித்து
விரும்பி மனம் களி கூர மேதகவே எதிர்கொண்டார்

மேல்
*பலராமனையும் விதுரனையும் கண்ணன்
*முதலியோர் வரவேற்றுப் பாராட்டுதல்
$46.148

#148
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி
விதுரனையும் மெய் தழுவ வேல் வேந்தர் அனைவோரும்
கதிரவர் ஓர் இருவரையும் கண்டு களிப்பவர் போல
எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார்

மேல்
*புண்ணிய நீர் ஆடி வந்த இருவரும் தாம்
*சென்று மீண்ட வரலாறு உரைக்க, கண்ணன் பாண்டவ
*கௌரவர்களின் போர்ச் செயலைக் கூறுதல்
$46.149

#149
அன்று முதல் ஏகிய நாள் அளவாக இருவோரும்
குன்று இடமும் கடல் இடமும் குறித்த நதிகளின் இடமும்
சென்று சுரரும் படியும் தீர்த்தங்கள் திசை-தோறும்
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி மீண்டவாறு உரைசெய்தார்

மேல்
$46.150

#150
அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த
மறம் தரு போர் வெம் களத்து மன்னவர்கள் அனைவோரும்
இறந்த நிலையும் தினங்கள் ஈர்_ஒன்பானிலும் தோன்ற
மறம் திகழ் தோள் இருவருக்கும் மா மாயன் கட்டுரைத்தான்

மேல்
*பலராமன் துரியோதனன் தோல்விக்கு வருந்தி,
*மேல் நடப்பது பற்றி அறிந்து கண்ணனையே
*பொரு களம் வரையறுக்குமாறு கூறுதல்
$46.151

#151
கேட்டருளி நெடும் தால கேதனன் மா மனம் தளர்வுற்று
ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில்
நாட்டம் இனி ஏது என்று நராந்தகனை வினவுதலும்
மீட்டும் அவற்கு உரைசெய்தான் விரி திரை நீர் மறந்தோனே

மேல்
$46.152

#152
வீமனுக்கும் வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரி பூம்
தாமனுக்கும் அமர் புரியும் தலம் ஏது என்று உயாவுகின்றோம்
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால்
சோமனுக்கு நிகர் ஆனோன் இளவலை நீ சொல் என்றான்

மேல்
*கண்ணன் போர்க்களம் குறிக்க, யாவரும்
*அவ்விடம் நோக்கிச் செல்லுதல்
$46.153

#153
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன்
மூ_எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து
நா எழு பான்மையின் உடையோன் களிக்க நரமேதம் செய்
பூ எழு தீவினும் சிறந்து பொன்னுலகோடு ஒத்துளதால்

மேல்
$46.154

#154
அ நிலமே இருவருக்கும் அமர் புரியல் ஆன இடம்
மன்னவர்-தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம்
என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான்

மேல்
*வேகமுடன் நடந்து செல்லும் துரியோதனன்,
*தன் நிலைக்கு மனம் இரங்குதல்
$46.155

#155
அ தலத்தின் திசை நோக்கி அனீகினியும் அனைவோரும்
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி
கொத்துடனே நெறி படர கொற்றவர் கொற்றவன்-தானும்
கைத்தலமும் தண்டமுமா கால் வேகம் உற சென்றான்

மேல்
$46.156

#156
தம்பியர்கள் புடை சூழ தருமன் மகன் பல்லியமும்
பம்பி எழ நடக்கின்ற பரிசு-தனை முகம் நோக்கி
எம்பியரும் எம் கிளையும் இறக்க இருந்தனம் என்றே
வெம்பி மனம் மிக தளர்ந்தான் விதி-தனக்கும் விதி போல்வான்

மேல்
*தருமன் அரசாட்சியை ஏற்குமாறு துரியோதனனை
*வேண்ட, அவன் இசையாமை
$46.157

#157
முடி குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற
அடி கமலம் நடந்து சிவப்பு ஆவதே என இரங்கி
கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு
இடிக்கும் முரசு என புகல்வான் இராசராசனுக்கு அம்மா

மேல்
$46.158

#158
என் துணைவருடன் யானும் ஏவிய நின் தொழில் புரிந்து
வன் துணையாய் சேவிப்ப மடங்கல் ஆசனம் ஏறி
இன் துணைவர் குருகுலத்தார் எனும் இசை போய் திசை ஏற
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ்

மேல்
$46.159

#159
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில்
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக
செப்பாத வாய்மை எலாம் செப்பினான் செப்பவும் அ
கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான்

மேல்
$46.160

#160
எம் கிளைஞர் எம் துணைவர் எம்பொருட்டால் இறந்து ஏக
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ
அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குரிதியின்-வாய்
கங்கமும் காகமும் கொத்த களத்து அவிந்தான் எனும் பெயரே

மேல்
*எல்லாரும் யமுனை கடந்து, சமந்தபஞ்சகத்தை அடைதல்
$46.161

#161
என தருமன் வார்த்தை-தனக்கு இசையாமல் அவன் ஏக
அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக
கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும்
வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா

மேல்
*யாவரும் சூழ்ந்து நிற்க, வீமனும்
*துரியோதனனும் போருக்குச் சித்தமாதல்
$46.162

#162
கலங்கள் பல இனம் ஏறி காளிந்தி கரை ஏறி
தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள
விலங்கல் என சூழ் நிற்ப வெம் சமரம் தொடங்கினரே

மேல்
$46.163

#163
பூம் கவசத்துள் புகுந்து பூண் அனைத்தும் திருத்தி மணி
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப
வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர
ஆங்கு உலகு செவிடுபட அடல் அரிநாதமும் செய்தார்

மேல்
*வீமன் துரியோதனனை இகழ்ந்து, தன் வீரம் பேசுதல்
$46.164

#164
கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான்
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ
சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே

மேல்
$46.165

#165
இடிப்பதும் இன்று இரு கதையும் என் கதையால் இடியுண்டு
துடிப்பதும் இன்று உன் உடலம் உயிர் துறக்கம் குடியேற
முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர்
குடிப்பதும் இன்று ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே

மேல்
*வீமனைப் போர் தொடங்குமாறு துரியோதனன்
*மொழிந்து அவனோடு கதைப் போர் புரிதல்
$46.166

#166
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம் எனது உயிர் நீ கோறல் இற்றை நாளிடை
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு
அனிகமும் மாயோன் நடத்து தேருடை அநுசனும் வாள் ஆண்மை மற்றை மூவரும்
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என

மேல்
$46.167

#167
நடை ஒழியாதோன் விறல் குமாரனும் நயனம் இலாதோன் முதல் குமாரனும்
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம்
விடை அரிமா ஏறு என ப்ரதாபமும் விசயமும் மேன்மேல் மிகுத்து மேலிடு
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே

மேல்
*இருவரும் பொருத வகை
$46.168

#168
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர்
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள்
இருவரும் ஆகாயம் முட்ட நாகர்கள் இறைகொள நால்_நாலு திக்கு நாகரும்
வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம்

மேல்
$46.169

#169
உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர்
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர்
முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே

மேல்
$46.170

#170
ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர்
விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர் விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர்
பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர் வீரரே

மேல்
$46.171

#171
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை
இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும்
உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே

மேல்
$46.172

#172
கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல்
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல்
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதை-கொல் பணை பல சூழ்போத எற்றும் ஓதை-கொல்
திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு அதிர்க்கும் ஓதையே

மேல்
*இளைத்த துரியோதனன், வீமனது உயிர்நிலையை உசாவி அறிந்து தாக்க,
*வீமன் மயங்கி விழுதல்
$46.173

#173
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும்
இருவருமே வாலி சுக்கிரீவர்கள் என அமர் மோதா இளைத்த காலையில்
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன்
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம்

மேல்
$46.174

#174
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன்
உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும்
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ

மேல்
*வீமன் துரியோதனனது உயிர் நிலையை வினாவ,
*அவன் மாறுபட மொழிதல்
$46.175

#175
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு
பகைவனை நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர் என மாறாடு சர்ப்பகேதுவும்
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும்
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே

மேல்
*வீமன் தாக்குதலால் துரியோதனன் நிலைகுலைய,
*வீமன் அவனை, ‘இளைப்பாறுக!’ எனல்
$46.176

#176
உரிய கதாபாணியர்க்குள் ஓத ஒர் உவமை இலாதான் அடித்தபோது உயர்
சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர
இரு நிலம் மீதே பதைத்து வீழ்தலும் இரிதர மோதாமல் விட்டு நீ இனி
விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே

மேல்
*துரியோதனன் தெளிவு பெற்று வீமனைத் தாக்க, இருவரும் கடும் போர் புரிதல்
$46.177

#177
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு
குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும்
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே

மேல்
$46.178

#178
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என
வீமனும் துரியோதன நாமனும் வேகம் ஒன்றிய வீரியராய் அடு
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே

மேல்
$46.179

#179
மேவு சிங்க வியாள விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட
வாவு வெம் பரி ஆதபனும் தடு மாறி நின்றனன் வானவர் தானவர்
நா அடங்கினர் மா முனிவோரொடு நாகர் அஞ்சினர் நான்முகன் ஆதிய
மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே

மேல்
*வீமனது தாழ்வு கண்டு, ‘துரியோதனனை வெல்லும்
*வகை யாது” என, கண்ணனை விசயன் வினாவுதல்
$46.180

#180
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள்
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி
நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர்
ஊர் புரந்தவன் ஓத முராரியும் ஓதினன் பரிவோடு அவனோடு இவை

மேல்
*துரியோதனனைக் கொல்லும் உபாயத்தைக் கண்ணன் கூறுதல்
$46.181

#181
நீ நயந்தனை கேள் உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும்
ஆனிலன் பெலவான் அதிலே முகுரானனன் தரு சேய் வினை ஆதிகன்
நான் இயம்பல் தகாது இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் வீவொடு
வானகம் புகுதார் இருவோர்களும் வாசவன் தரு பூண் அணி மார்பனே

மேல்
$46.182

#182
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின்
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர்
ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே

மேல்
*விசயன் குறிப்பினால் வீமனுக்கு உபாயம் உரைக்க, அவன் அதனை உணர்ந்து,
*துரியோதனனது தொடையில் அடித்துப் பூமியில் வீழ்த்துதல்
$46.183

#183
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும்
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக
ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர்
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே

மேல்
$46.184

#184
ஞான பண்டிதன் வாயு_குமாரனும் நாரணன் பணியால் இளையோன் மொழி
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின்
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின்
மேல் முழங்கின வானவர் தூரியம் மேல் விழுந்தது பூ மழை சாலவே

மேல்
$46.185

#185
மாறி நின்ற சுயோதனன் மீளவும் வாயு_மைந்தனை வாகுவும் மார்பமும்
நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன்
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும்
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே

மேல்
$46.186

#186
அரி பதாகன் உரக பதாகனை அதிர்த்து மேல் உற அடர்த்து நீடு
உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே அவன் உடற்றலும்
நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய்
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான்

மேல்
$46.187

#187
கதுப்பும் வாயும் நெரிய கதாயுத கரத்தினால் நனி கலக்கினான்
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி என பொன் மௌலியை இருத்தினான்
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள்
விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான்

மேல்
*துரியோதனன் கண்ணனைப் பழித்துக் கூறுதல்
$46.188

#188
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன்
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான்
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய்
அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ

மேல்
$46.189

#189
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ
குலத்திலே இழிகுலத்தர் ஆனவர் குறிப்பு இலாது இவை பிறக்குமோ
சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ
நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய் இனி நினைத்த காரியம் முடித்தியே

மேல்
*துரியோதனன் மீண்டும் எதிர்க்க எழுந்தபோது, வீமன் அவனை
*முடியில் உதைக்க, அது கண்டு பலராமன் சினந்து கூறி,
*வீமனோடு பொருதற்கு எழுதல்
$46.190

#190
என சில் வாசகம் மிழற்றி மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால்
உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான்

மேல்
$46.191

#191
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல்
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே

மேல்
$46.192

#192
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய
அதிர்வு உற புடைப்பரோ தொடையில் அடிபட துகைப்பரோ முடியில்
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை
முதுகிட புடைப்பல் யானும் என முசல கைத்தலத்தொடு ஓடினனே

மேல்
*கண்ணன் பலராமனைத் தடுத்து, சமாதானம் கூறுதல்
$46.193

#193
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும்
இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு
பதுமம் நிகரான தாள் பணியா மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என
அதி மதுர வாய்மையால் வெகுளாவகை அடிகள் இவை கேண்-மினோ என ஓதினான்

மேல்
$46.194

#194
முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும் பகையாளர்கள் காண்
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார்
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே

மேல்
$46.195

#195
வெம் சிலை விதுரன்-அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய ஏகினிர்
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில்
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை
எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே

மேல்
*பலராமன் செல்ல, துரியோதனன் குற்றுயிராய்க் களத்தில் கிடத்தல்
$46.196

#196
வெற்றி புனை பலபத்ரராமனும் மெய் துணைவன் இவை சொற்ற காலையில்
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன்
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல்
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன்

மேல்
*சூரியன் மறைய, ஐவரும் பாசறைக்கு மீளுதல்
$46.197

#197
மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால் துரியோதனன் மா முடி
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள்
அந்தி-வாய் தம பாசறை மேவினர் ஐந்து பார்த்திவர்-ஆனவர் தாமுமே

மேல்
*’பாசறை புகுதல் கடன் அன்று’ என்று, ஐவரையும் கண்ணன்
*பக்கத்திலுள்ள ஒரு காட்டிற்கு அழைத்துச் செல்லுதல்
$46.198

#198
மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர வினை வென்ற காவலர் பாசறை சேருதல்
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே

மேல்
*அசுவத்தாமன் செய்தி தெரிந்து, துரியோதனனை அணுகிச் சோகமுறுதல்
$46.199

#199
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில்

மேல்
$46.200

#200
உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேர் உடல்
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர்
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர்
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே

மேல்
*’பாண்டவரை விடிவதற்குள் அழித்து வருவேன்!’ என்று அசுவத்தாமன்
*வஞ்சினம் கூற, துரியோதனன் தன் முடி மணியை அளித்தல்
$46.201

#201
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன்
நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில்
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே

மேல்
$46.202

#202
அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும்
இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே

மேல்
$46.203

#203
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை
துடிதுடித்திட அவரவர் சேனைகள் துணிபட பொருது எழு புவி நீ பெற
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன்
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே

மேல்
*அசுவத்தாமன், கிருபன், கிருதவன்மன், மூவரும் பாண்டவரது பாசறை புகுதல்
$46.204

#204
பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன்
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின்
ஆசுகன் மகன்-தனையும் அப்போதே துணைவர் ஆனவரையும் தலை துணிப்பான் நாடி அவர்
பாசறை புகுந்தனர் பரி தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே

மேல்
$46.205

#205
வேல் அமர் தட கை வீரர் இ பாடி வீடு சென்று அணைதலும் புறத்து ஓர்
ஆல் அமர் சினையில் பல் பெரும் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால்
சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி
காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினர் அன்றே

மேல்
*ஒரு பூதம் அவர்களைத் தடுத்துவிட, அவர்கள் மூவரும்
*அருகிலுள்ள ஆலமரத்தின் அடியைச் சார்தல்
$46.206

#206
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார்
புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம்
பரத்துவாசனையும் மாதுலன் கிருத பன்மன் என்று இவரையும் முனைந்து
கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி

மேல்
$46.207

#207
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும்
என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால்
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து
பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ

மேல்
$46.208

#208
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து
பேதுற வெருவோடு இருந்தனர் கரிய பெரிய அ கங்குலில் துரோண
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான்

மேல்
*அசுவத்தாமன் பற்பல சிந்தை செய்து, பின் சிவனைப்
*பூசித்து, அவனால் ஆயுதம் பெறுதல்
$46.209

#209
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர்
வெம் சினம் உற சென்று உன் பகை முடித்து மீளுதும் என பல படியும்
வஞ்சினம் உரைத்து வந்தனம் இன்னம் வன் குறள் பாரிடம்-தன்னால்
துஞ்சினம் எனினும் அமையும் என்று எண்ணி துணிந்தனன் துயில் அறு கண்ணான்

மேல்
$46.210

#210
எண்ணிய கருமம் முடியினும் முடியாது ஒழியினும் ஈசனை தொழுதல்
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனை பங்கய மலர் கொண்டு
அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான்

மேல்
$46.211

#211
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனை-தனை உவந்தருளி
நின்றனன் விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடை கடவுள்
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு
என்றனன் என்ற உரை முடிவதன் முன் ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான்

மேல்
*அசுவத்தாமன் சிவன் அளித்த ஆயுதம் ஏந்தி, உடன் வந்த
*வீரரோடு பாசறை புக, பூதம் அஞ்சி ஓடுதல்
$46.212

#212
பாதி மெய் நீலம் ஆகிய பவள பருப்பதம் விருப்புடன் அளித்த
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும்
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில்
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி ஆவி கொண்டு ஓடியது அன்றே

மேல்
*உடன் வந்த இருவரையும் வாயிலில் நிறுத்தி,
*அசுவத்தாமன் உட்புகுந்து, திட்டத்துய்மனது
*தலையைத் துணிக்க, பாஞ்சாலர் அவனை எதிர்த்தல்
$46.213

#213
பருவரல் அகற்றி இருவர் வீரரையும் பாசறை வாயிலில் நிறுத்தி
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான்

மேல்
$46.214

#214
கயில் புரி கழல் கால் தந்தையை செற்ற காளையை பாளையத்திடையே
துயில் புரி அமையத்து இமைக்கு முன் சென்னி துணித்தனன் சுதன் என கலங்கி
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற
பயில் புரி சிலை கை சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர்

மேல்
*எதிர்ந்த பலரைக் கொன்று, ஐவரைத் தேடும் அசுவத்தாமன்,
*உறங்கும் அவர்களது புதல்வர் ஐவரையும் அடுத்தல்
$46.215

#215
உத்தமோசாவும் உதாமனும் முதலிட்டு உள்ளவர் யாவரும் பிறரும்
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும்
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான்

மேல்
*கனவுபோல் அசுவத்தாமனைக் கண்ட இளம் பாண்டவர், தமது
*படையை எடுப்பதற்குள், அவர்களைப் பாண்டவர் என மயங்கி,
*அவர்களது தலைகளை அசுவத்தாமன் கொய்தல
$46.216

#216
பூதலம் முழுதும் கவர்ந்த தந்தையர்கள் புறத்திடை போயதும் துயின்ற
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார்
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல்
காதல் அம் புதல்வர் கண் துயில் புரிவோர் கனவு கண்டனர் என கண்டார்

மேல்
$46.217

#217
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன் காசினி முழுவதும் வென்று
கொண்டவர் இவர் என்று எண்ணியே சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல்
உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான்

மேல்
*சோழன் அசுவத்தாமனை எதிர்த்து, சேனைகளுடன் மடிதல்
$46.218

#218
துருபதன் மைந்தர் அனைவரும் பஞ்ச திரௌபதேயரும் துயில் பொழுதில்
புரவிஅம்தாமா நினைவு அற புகுந்து பொன்றுவித்தனன் என புலம்ப
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன்
பெருமையோடு எழுந்தான் பகைவன் மேல் அவன் முன் பின்னிட பொருதிடும் பெரியோன்

மேல்
$46.219

#219
பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார்
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார்

மேல்
*அசுவத்தாமன் தனியாகப் பொருது, மேலும் பலரை அழித்தல்
$46.220

#220
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் அவர் படைத்த
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர
பகல் அரும் சமரில் பதின்மடங்கு ஆக பாதி நாள் இரவினில் படுத்தான்
தகல் அரும் கேள்வி தாமனே தாம சடையவன் தனயனாதலினால்

மேல்
*அசுவத்தாமன் இளம் பாண்டவர் தலைகளுடன்
*விடிவதன்முன் துரியோதனனை அடைதல்
$46.221

#221
உள்ளியபடியே கடும் சினம் கன்றி உள்ளவர் யாரையும் முருக்கி
துள்ளிய விடை போல் செருக்கி அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திட தூக்கி
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான்

மேல்
*அசுவத்தாமன் தான் சென்று செய்தன கூறி, கொணர்ந்த
*தலைகளைத் துரியோதனன் முன் வைத்தல்
$46.222

#222
வந்தனேன் ஐய மாதவன் ஏவலால்
முந்து பூதம் முதுகிட மா முடி
சிந்த யாரையும் செற்று அகன் பாசறை
ஐந்து வீரர்-தம் ஆவியும் கொண்டு அரோ

மேல்
$46.223

#223
சொன்ன சிங்க துவசனை ஆதியா
மன்னர் ஐவரும் மாண்டனர் மற்று அவர்
சென்னி என்று சிறுவர்-தம் சென்னியை
முன்னர் வைத்தனனால் முனி_மைந்தனே

மேல்
*துரியோதனன் அவற்றை நோக்கி, ‘சிறுவர் முகம்’
*என்று கூறி, இரங்கி மொழிதல்
$46.224

#224
வைத்த சென்னியை நோக்கி வயா உறு
சித்தம் மன்னவன் தேறி சிறார் முகம்
தம்தம் அன்புடை தந்தையர் வாள் முகம்
ஒத்த ஆகும் இஃது உண்மை என்று ஓதினான்

மேல்
$46.225

#225
ஓதும் வேந்துக்கு ஒரு மொழியும் சொலான்
வேத பண்டிதன் நிற்க அ வீரனை
பாதகம் செய்கை பார்ப்பன மாக்களுக்கு
ஏதம் ஏதம் இது என் செய்தவாறு அரோ

மேல்
$46.226

#226
துன்னு பாரதம் தோன்றிய நாள் முதல்
மன்னர் ஓட மலைந்தனை வாளியால்
சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று
என்ன வீரியம் என் நினைந்து என் செய்தாய்

மேல்
$46.227

#227
இரு குலத்தில் எமக்கும் அவர்க்கும் இங்கு
ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால்
குருகுலத்தின் கொழுந்தினை கிள்ளினை
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே

மேல்
$46.228

#228
ஆற்றின் நீர் விளையாடிய நாள் முதல்
காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன்
சாற்றின் என் வினை-தான் என்னையே சுட
கூற்றின் வாய் புகுந்தேற்கு என்ன கூற்று ஐயா

மேல்
$46.229

#229
பணை நெடும் கை பகட்டு வெம் சேனை சூழ்
இணைதரும் சொல் கிளைஞர்கள் யாரையும்
துணைவர் யாரையும் தோற்று நின்றேன் எனக்கு
இணையர் பார் மிசை யார் உளர் எண்ணிலே

மேல்
*’தீவினை நீங்கத் தவம் செய்’ என்று அசுவத்தாமனுக்கு விடை
*அளிக்க, அவனோடு கிருதனும் கிருபனும் போதல்
$46.230

#230
என்று பல் மொழி கூறி இ மைந்தரை
கொன்று வந்த குமரனை போர்-தொறும்
நின்ற தீவினை நீங்கிட நீ தவம்
ஒன்றி வாழ்க என்று உயர் விடை நல்கினான்

மேல்
$46.231

#231
வெம் சராசன வீரனும் மாமனும்
நெஞ்சம் மாழ்குற நின்றவர் போன பின்
கஞ்ச நாள் மலர் கண் புனல் சோர்தரும்
சஞ்சயாரியன்-தன்னொடு கூறுவான்

மேல்
*சஞ்சயனிடம் தந்தைக்குச் செய்தி சொல்லி, அவனை
*அனுப்பிவிட்டு, துரியோதனன் உயிர் நீத்தல்
$46.232

#232
யாயொடு எந்தை இரக்கம் உறாவகை
ஆய இன் சொலினால் துயர் ஆற்றிட
நீ எழுந்தருள் நின் மொழி வல்லபம்
தூய சிந்தை சுரர்களும் வல்லரோ

மேல்
$46.233

#233
யானும் எம்பியரும் இறந்தோம் எனும்
மான பங்கம் மறந்து தன் நெஞ்சினுக்கு
ஆன தம்பி அளித்தவர்-தம்மொடும்
கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய்

மேல்
$46.234

#234
என்ன அ முனி-தன் இணை தாள் மலர்
சென்னி மீதும் விழியினும் சேர்த்திடா
உன்னில் ஆண்மைக்கு உவமை இல்லாதவன்
பொன்னிலத்தின் உணர்வொடும் போயினான்

மேல்
*துரியோதனன் பொன்னுலகம் புகுதல்
$46.235

#235
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும்
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின்
உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே

மேல்
$46.236

#236
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க
அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும்
மிடைந்துமிடைந்து எதிர்கொள்ள வீரர் உறை பேர் உலகம் மேவினானே

மேல்
*அசுவத்தாமன் முதலிய மூவரும் வியாதரை அடைந்து செய்தி
*சொல்ல, அவர், கிருபனையும் அசுவத்தாமனையும் தவம்
*இயற்றக்கூறி, கிருதவன்மாவுக்கு விடைகொடுத்தல்
$46.237

#237
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும்
வாள் விறல் கூர் நரபதியும் குருபதி-தன் வாய்மையினால் மாழ்கி ஏகி
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர்
தோள் வலியும் தம் செயலும் தொழா முடியோன் துஞ்சியதும் தொழுது சொன்னார்

மேல்
$46.238

#238
புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன
துரகததாமனுக்கும் அமைத்து இவ்வுழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர்
கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில்
தரு நிலத்தோர் அதிசயிப்ப சிவபெருமான்-தனை நினைந்து தவம் செய்தாரே

மேல்
*திருதராட்டிரனுக்கும் காந்தாரிக்கும் சஞ்சயன் செய்தி கூற,
*அவர்கள் இருவரும் சோகத்துள் ஆழ்தல்
$46.239

#239
நாடிய சொல் சுருதி நிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல்
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி
ஆடிமுகத்து அரசினுக்கும் ஐ_இருபது அரசரையும் அளித்து வாழ்ந்து
வாடிய மெய் சவுபலைக்கும் உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான்

மேல்
$46.240

#240
சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற நாள்தொட்டு
ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரும் கடலாக அழுது சோர்வாள்
பால் நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை

மேல்
$46.241

#241
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால்
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன
கருத்தினுடன் அலமந்தான் அழுது பெரும் புனல் சொரிய கண் இலாதான்

மேல்
*சூரியன் தோற்றம் செய்ய, பாண்டவர் பாசறை சேர்ந்து,
*இரவில் நிகழ்ந்தன அறிதல்
$46.242

#242
இப்பால் மற்று இவர் இரங்க எப்பாலும் இருள் ஒளிப்ப இரவி பானு
துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய
தப்பாமல் நிலமடந்தை-தன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி
அப்பால் அ பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல் அறைதும் அம்மா

மேல்
$46.243

#243
ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான் அரிய கங்குல்
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க
இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார்

மேல்
*சீற்றமுற்று எழுந்த வீமனையும் விசயனையும் கண்ணன் தடுத்து,
*சமாதானம் செய்தல்
$46.244

#244
கண்டவுடன் மனம் மெலிவுற்று இவ்வண்ணம் எவன்-கொல் என கரிய மேனி
கொண்டல் உரைத்தனன் துரகதாமாவின் வினைகள் எலாம் கூற்றும் உட்க
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே

மேல்
$46.245

#245
பாரிடம் ஒன்றினை புரத்தி பாசறையை என புகன்று பரிவின் சென்றேம்
வீரருக்கு முனை தாமன் சுயோதனற்கு சூள் உரைத்து மீண்டான் ஐவர்
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே
கார் இருக்கும் மலர் அளக காந்தாரி சுத உள்ளம் களித்தி என்றே

மேல்
$46.246

#246
திருகு சினத்தொடும் கடுகி பாசறையில் புகுதலுமே செம் கண் பூதம்
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி
முருகு இதழி சுடர் அருளும் படைக்கலம் பெற்று இவ்வண்ணம் முடித்தான் அம்மா
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ

மேல்
$46.247

#247
என்று பினும் அபாண்டவியம் எனும் படையும் துரந்தால் மற்று எவரே காப்பார்
அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும்
வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை
துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான்

மேல்
*பின், கண்ணன் திரௌபதியைத் தேற்றுதலும், அவன் உரைப்படி
*தருமன் இறந்தார்க்கு உரிய கடன்கள் செய்தலும்
$46.248

#248
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய்
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன்
கொந்து அலரும் முகம் நோக்கி கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து
அந்தம் உறு கடன் கழித்தி என உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர்

மேல்
*பின், எல்லோரும் அத்தினாபுரி சேர்ந்து, திருதராட்டிரனை வணங்குதல்
$46.249

#249
அத்தினாபுரி அதனில் ஐவருடன் சென்று அரியும் அந்தன் முன்னர்
பத்தியினால் இறைஞ்சிட மற்று எவர்-கொல் என தருமன் முதல் பாலர் என்ன
வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன
அத்தன் அ தூண் அளித்தருள தழுவி நெரித்தனன் துகள்கள் ஆயது அம்மா

மேல்
*அத்தினாபுரியில் ஐவரையும், ‘ஊழி வாழ்திர்’ எனக் கண்ணன்
*இருத்தி, துவாரகைக்கு மீளுதல்
$46.250

#250
இனி ஊழி வாழ்திர் என இளைஞர் ஒரு நால்வருடன் அறத்தின் மைந்தன்-
தனை இருத்தி மீள்வல் என சாத்தகியும் அலாயுதனும் தன்னை சூழ
வினை அகற்றும் பசும் துளவோன் துவரை நகர் திசை நோக்கி மீண்டான் சீர்த்தி
கனை கடல் பார் அளித்து அவரும் அ நகரின் அறநெறியே கருதி வாழ்ந்தார்