திருவருட்பா – நான்காம் திருமுறை


@1 குஞ்சிதபாதப் பதிகம்

#2571
திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும்
தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர்
மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும்
மன் வண்ண மிகு துணைப் பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும்
இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம்
எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம்
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே.

#2572
எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர்
எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க
நண்ணும் மன மாயையாம் காட்டைக் கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும்
நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய்
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே
வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே.

#2573
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமாப் புகலும் மூவுலகு நீத்துப்
புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளித் துணையினால்
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட
விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய்
வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே
மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ்
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

#2574
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரி நடுவில்
குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன்
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உறக் கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே
நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவப் புரை கொண்ட மறவர் குடியாம்
பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்கக்
கார் கொண்ட இடி ஒலிக் கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய்
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

#2575
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயைப்
பார்த்துக் களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாகத்
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன்
தீரத் துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும்
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட
வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய்க் கடவுளே சடை கொள் அரசே
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

#2576
எழு வகைப் பிறவிகளுள் எப் பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான்
எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக
வழு வகைத் துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக
வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின்
இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே
கழி வகைப் பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

#2577
பற்றுவது பந்தம் அப் பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே
பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே
எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண்
எண்ணுவதும் நண்ணுவதும் இப் புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன்
தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அச் சுழல் மனம் அடக்க வருமோ
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

#2578
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே
என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால்
வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன்
மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய்
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம்
உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

#2579
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி
தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும்
போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம்
மந்திரப் படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடைக் கடவுளே கருணை_மலையே
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

#2580
நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே
ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே
மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே
மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே
ஊன் முகச் செயல் விடுத்து உள் முகப் பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே
ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே
கான் முகக் கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே
கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

@2. போற்றித் திருப்பதிகம்

#2581
அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே அடியனேன் மனத்தகத்து எழுந்த
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும்
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே

#2582
மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி
அணி மதி முடியோய் போற்றி இ ஏழைக்கு அருள் அமுது அருளுக போற்றி
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி
தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னைத் தாங்குக போற்றி நின் பதமே

#2583
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடித் தயா நிதியே

#2584
நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி
மதி முடிக் கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி
விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி
பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி

#2585
போற்றி என் உயிர்க்கு ஓர் இன்பமே அன்பர் புரி தவக் காட்சியே போற்றி
போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி
போற்றி என் பெரிதாம் செல்வமே கருணைப் பூரண வெள்ளமே போற்றி
போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடிப் போதே

#2586
போத ஆனந்த போகமே என்னைப் புறம்பு இட நினைத்திடேல் போற்றி
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி
பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி

#2587
போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி
ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி
சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி

#2588
துணை முலை மடந்தை எம் பெருமாட்டி துணைவ நின் துணை அடி போற்றி
புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி
இணை_இல் பேர்_இன்ப அமுது அருள் கருணை இறைவ நின் இணை அடி போற்றி
கணை எனக் கண்ணன்-தனைக் கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி

#2589
அடியனேன் பிழைகள் பொறுத்து அருள் போற்றி அயல் எனை விட்டிடேல் போற்றி
கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குணப் பெரும் குன்றமே போற்றி
நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி
படி மிசைப் பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே

#2590
நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே

@3. அம்மை திருப்பதிகம்

#2591
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே
உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே
இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே
கட கரட விமல கய முக அமுதும் அறு முகக் கந அமுதும் உதவு கடலே
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

#2592
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மனக் கரிசு அற உணர்ந்து கேட்டுக்
காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர்
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன்
புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய்
நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே
நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

#2593
இக் கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கணப் போதிலே
இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம்
தெக்கணம் நடக்க வரும் அக் கணம் பொல்லாத தீக் கணம் இருப்பது என்றே
சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே
எக் கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை
இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே
அக் கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

#2594
பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம்
புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும்
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும்
இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய்
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமளத் தெய்வ மலரே
கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

#2595
பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழப்
பகலான சகலமுடன் இரவான கேவலப் பகையும் தடாதபடி ஓர்
தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ
தானா நடக்குமோ என் செய்கேன் நின் திருச் சரணமே சரணம் அருள்வாய்
உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே
உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

#2596
சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்துத்
துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால்
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர்
கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு எனச் சுழல்கின்றதே
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான்
தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இத் தமியனேன் என் செய்குவேன்
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

#2597
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம்
வந்து மன அடிமையை எழுப்பி அவனைத் தமது வசமாக உளவு கண்டு
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலைச் சாளிகை எலாம்
வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ
நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன்
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

#2598
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம்
மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும்
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால்
கண்ணுறக் கண்டும் இப் புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன்
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன்
இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன்
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

#2599
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும்
உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம்
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடித் தியானம் இல்லாமல் அவமே
சிறுதெய்வ நெறி செல்லும் மானிடப் பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய்
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே
கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

#2600
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர்
நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுறக் கொண்டு நின் அடிப் பூசைசெய்து
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர்
மெய்ச் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே
பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

@4. ஆனந்த நடனப் பதிகம்

#2601
பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த
பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த
சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித
சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா
துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல
சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2602
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல்
துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே
சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே
நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2603
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆடக் கவின் செய்யும் மதி வேணி ஆட
செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில்
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட
மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட
நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய்
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2604
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார்
போகமே பெரிது எனக் கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியைச்
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன்
சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ
மெய்யான நிலை பெறக் கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின்
மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும்
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல்
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2605
போது ஆரும் நான்முகப் புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால்
போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியைக்
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு
கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள்
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே
மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன்
ஆதாரமான அம்போருகத்தைக் காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர்
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2606
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_
பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை
கண்ணார நெல்லி அம் கனி எனக் காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில்
கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய்
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும்
தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என்
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும்
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2607
பவமான எழு வகைப் பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும்
பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு எனப் படராது மறை அனைத்தும்
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும்
உளவான வழி ஈது எனக் காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல்
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம்
தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே
அவமான கருணைப் பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய்
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2608
சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர்
சம்புவாம் என்னும் மறை ஆகமத் துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே
இன்ப மயமாய் இனிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி
தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய
அந்தணர்கள் பல கோடி முகமனாடப் பிறங்கு அருள் முக விலாசத்துடன்
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2609
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம்
நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம்
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த
வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திருத் துணை மலர்த் தாட்கு உரியனாய்த்
துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய்
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2610
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின்
மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினைத் தரும் வள்ளலாய் மாறா மிகத்
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞானச்
செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானனச் செம்மலாய் அணையாக வெம்
பணிகொண்ட கடவுளாய்க் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம்
பரமேட்டியாய்ப் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய்
அணி கொண்ட சுத்த அனுபூதியாய்ச் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய்
அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

@5. எதிர்கொள் பத்து

#2611
ஆனந்தக் கூத்தனை அம்பலத்தானை அற்புதத் தேனை எம் ஆதிப் பிரானைத்
தேன் நந்து அக் கொன்றை அம் செஞ்சடையானைச் செங்கண் விடையனை எம் கண்மணியை
மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
ஈனம் தக்காது எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

#2612
அடுத்தவர்க்கு எல்லாம் அருள்_புரிவானை அம்பலக் கூத்தனை எம் பெருமானைத்
தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானைச் சங்கரன்-தன்னை என் தந்தையைத் தாயைக்
கடுத் ததும்பும் மணி_கண்டத்தினானைக் கண்_நுதலானை எம் கண் அகலானை
எடுத்து எனைத் துன்பம் விட்டு ஏறவைத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

#2613
மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை
ஆலம் அமுதின் அருந்தல் செய்தானை ஆதியை ஆதியோடு அந்தம்_இலானைக்
காலன் வருந்தி விழ உதைத்தானைக் கருணை_கடலை என் கண்_அனையானை
ஏல மணி குழலாள்_இடத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

#2614
சுந்தரர்க்காக முன் தூது_சென்றானைத் தூயனை யாவரும் சொல்ல_அரியானைப்
பந்தம் அறுக்கும் பராபரன்-தன்னைப் பத்தர் உளம்கொள் பரஞ்சுடரானை
மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை
எம்-தமை ஆண்டு நல் இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

#2615
அன்பர்கள் வேண்டும்-அவை அளிப்பானை அம்பலத்தே நடம் ஆடுகின்றானை
வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானைத்
துன்பம் தவிர்த்துச் சுகம் கொடுப்பானைச் சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
என் பணிகொண்டு எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

#2616
கண்_நுதலானை என் கண் அமர்ந்தானைக் கருணாநிதியைக் கறை_மிடற்றானை
ஒள் நுதலாள் உமை வாழ் இடத்தானை ஒருவனை ஒப்பு இலா உத்தமன்-தன்னை
நண்ணுதல் யார்க்கும் அருமையினானை நாதனை எல்லார்க்கும் நல்லவன்-தன்னை
எண்ணுதல் செய்து எனக்கு இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

#2617
வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானைக்
கள் விரை ஆர் மலர்க் கொன்றையினானைக் கற்பகம்-தன்னை முக் கண் கொள் கரும்பை
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை
எள் வினை ஒன்றும் இலாதவன்-தன்னை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

#2618
பெண் அமர் பாகனைப் பேர்_அருளோனைப் பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னைக்
கண் அமர் நெற்றிக் கடவுள் பிரானைக் கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள்
பண் அமர் பாடல் பரிசு அளித்தானைப் பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை
எண் அமராத எழில்_உடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

#2619
வளம் கொளும் தில்லைப் பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னைக்
களங்கம்_இலாத கருத்து_உடையானைக் கற்பனை முற்றும் கடந்து_நின்றானை
உளம்கொளும் என்றன் உயிர்த் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை
இளம்பிறை சூடிய செஞ்சடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

#2620
குற்றம் எல்லாம் குணமாகக் கொள்வானைக் கூத்து_உடையானைப் பெண் கூறு_உடையானை
மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானைப்
பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானைப் பிறை முடியோனைப் பெம்மானை எம்மானை
எற்றி என் துன்பம் எலாம் ஒழித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

@6. புறமொழிக் கிரங்கல்

#2621
கேள் அனம்-தான் ஒரு போது உண்டனை மனக் கேதம் அற
நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே
வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
ஏளனம் செய்குவர் நீ அருளாவிடில் என் அப்பனே

#2622
அப்பா நின் பொன் அருள் என் மேல் தயை செய்து அளித்திலையேல்
துப்பானவும் ஒரு போது துவ்வாது சுழன்றனையே
இப் பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ
செப்பாய் என அரிப்பார் சிரிப்பார் இச் செகத்தவரே

#2623
தீது செய்தேற்கு அருள்செய்வான் நின் சித்தம் திரும்பிலையேல்
தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு
ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால்
யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே

#2624
தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில்
பிரியாமை வைத்து அருள்செய்திலையேல் எனைப் பெற்றவளும்
பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே
பரியாசை செய்குவளால் அயலார் என் பகருவதே

#2625
எண்ணாமல் நாய்_அடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி
அண்ணா நின் சித்தம் இரங்காய் எனில் இங்கு அயலவர்-தாம்
பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு
ஒண்ணாது இ வண்மை விரதம் என்றால் என் உரைப்பதுவே

#2626
பொய்யான வஞ்சகனேன் பிழை யாவும் பொறுத்து உன் அருள்
செய்யாய் எனில் எது செய்குவன் யான் இச் செகதலத்தோர்
எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய்
அய்யா என் இன் அமுதே அரசே எனது ஆண்டவனே

#2627
உன் உள்ளம் கொண்டேற்கு அருளாய் எனில் இ உலகர் பொய்யாம்
என் உள்ளம் கொண்ட களவு அறியாதுநின்று ஏட இங்கே
நின் உள்ளம் கொள் விரதப் பயன் யாது நிகழ்த்து எனவே
முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே

#2628
முந்து ஓகை கொண்டு நின் தண் அருள்_வாரியின் மூழ்குதற்கு இங்கு
அந்தோ என் துன்பம் துடைத்து அருளாய் எனில் ஆங்கு உலகர்
வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று
இந்து ஓர்தரு சடையாய் விடையாய் என்னை ஏசுவரே

#2629
ஆசும் படி இல் அகங்காரமும் உடையான் என்று எண்ணிப்
பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர்
ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணியெண்ணிக்
கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே

#2630
ஐ தட்டிடும் நெஞ்சகத்தேன் பிழைகளை ஆய்ந்து வெறும்
பொய் தட்டு இகல் உடையேற்கு உன் கருணை புரிந்திலையேல்
வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே
கைதட்டி வெண் நகைசெய்வர் கண்டாய் அருள் கற்பகமே

@7. திருப்புகற் பதிகம்

#2631
வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன்
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
மாக நதியும் மதியும் வளர் சடை எம்
ஏக இனி மற்று எனக்கு ஆர் இரங்குவரே

#2632
கள்ள மனத்துக் கடையோர்-பால் நாணுறும் என்
உள்ள மெலிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும்
எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்
எள்ளும் உலகில் எனக்கு ஆர் இரங்குவரே

#2633
பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம் பெருமான்
உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும்
அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
என்னை முகம் பார்த்து எனக்கு ஆர் இரங்குவரே

#2634
துன் உடைய வியாக்கிரமத் தோல்_உடையான் தான் இருக்கப்
பொன்_உடையார் பக்கம் புகுவானேன் என்று இருப்பேன்
தன்னுடைய துன்பம் தவிர்த்து இங்கு அருளாயேல்
என்_உடையாய் மற்று இங்கு எனக்கு ஆர் இரங்குவரே

#2635
வன்கண்ணர்-தம்மை மதியாது உன் பொன் அடியின்-
தன்கண் அடியேன்-தன் சஞ்சல வன் நெஞ்சகத்தின்
புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்
என் கண்_அனையாய் எனக்கு ஆர் இரங்குவரே

#2636
தோன்றுவதும் மாய்வதும் ஆம் சூழ்ச்சி இடைப்பட்டு அலைந்து
மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
ஏன்றுகொளாய் என்னில் எனக்கு ஆர் இரங்குவரே

#2637
தீது முற்றும் நாளும் செயினும் பொறுத்து அருளும்
சாது முற்றும் சூழ்ந்த தயாநிதி நீ என்று அடைந்தேன்
கோது முற்றும் தீரக் குறியாயேல் நன்மை என்பது
ஏதும் அற்ற பாவிக்கு எவர்-தான் இரங்குவரே

#2638
துன்றிய மா_பாதகத்தோன் சூழ் வினையை ஓர் கணத்தில்
அன்று தவிர்த்து ஆண்ட அருள்_கடல் நீ என்று அடுத்தேன்
கன்றுறும் என் கண் கலக்கம் கண்டும் இரங்காயேல்
என்றும் உளாய் மற்று இங்கு எவர்-தான் இரங்குவரே

#2639
கோடாமே பன்றி தரும் குட்டிகட்குத் தாய் ஆகி
வாடா முலை கொடுத்த வள்ளல் என நான் அடுத்தேன்
வாடா என்று உன் அருளில் வாழ்வான் அருள் இலையேல்
ஈடு ஆரும் இல்லாய் எனக்கு ஆர் இரங்குவரே

#2640
கல்லா நடையேன் கருணை_இலேன் ஆனாலும்
நல்லார் புகழும் நமச்சிவாயப் பெயரே
அல்லாது பற்று ஒன்று அறியேன் அருளாயேல்
எல்லாம் உடையாய் எனக்கு ஆர் இரங்குவரே

@8. சிந்தைத் திருப்பதிகம்

#2641
விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின்
இடை ஆர்த்து நின்று அழும் இ ஏழை முகம் பாராமே
நடை ஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க்கு ஈயாத
உடையார்க்கோ என்னை_உடையாய் உதவுவதே

#2642
கற்றே அறியாக் கடைப் புலையேன் ஆனாலும்
உற்றே நின்றன்னை நினைந்து ஓதுகின்றேன் அல்லாமே
மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிரச்
சற்றே இரங்கித் தயவு செய்தால் ஆகாதோ

#2643
கல்லாரொடும் திரிந்து என் கண்ணே நின் தாள் வழுத்தும்
நல்லார்-தமைக் காண நாணுகின்றேன் ஆனாலும்
வல்லாய் நின்றன்னை அன்றி மற்று ஒன்று அறியேன் நான்
எல்லாம் அறிவாய்க்கு இதனை இயம்பல் என்னே

#2644
கள்ள நெறி கொள்ளும் கடை நாயேன் என்னினும் நின்
வள்ளல் மலர்_தாளே வழுத்துகின்றேன் என்னுடைய
உள்ள மெலிவோடு உடல் மெலிவும் கண்டும் அந்தோ
எள்ளளவும் எந்தாய் இரங்காது இருந்தனையே

#2645
சீர் துணையார் தேடும் சிவனே நின்றன்னை அன்றி
ஓர் துணையும் இல்லேன் நின் ஒண் பொன்_பதம் அறிய
கார் துணையா நாடும் கலாபி என நாடுகின்றேன்
ஆர் துணை என்று ஐயா அகல இருந்தனையே

#2646
பேய்_அனையாரோடும் பிழை புரிந்தேன் ஆனாலும்
நாய்_அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
தீ அனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
தாய்_அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே

#2647
வெள்ளம் மருவும் விரி சடையாய் என்னுடைய
உள்ள விரிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும்
தள்ள அரிய நின் அருள் ஓர் சற்றும் புரியாமே
கள்ள வினைக்கு என் உளத்தைக் கைகாட்டி நின்றனையே

#2648
என் உரிமைத் தாய்க்கும் இனியாய் நின் ஐந்தெழுத்தை
உன்னு நிலைக்கு என்னை உரித்தாக்க வேண்டுதியேல்
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனைக் காத்து அயர்ந்தேன்-
தன்னுடைய எண்ணம்-தனை முடிக்க வேண்டுவதே

#2649
குற்றம் எலாம் நல்ல குணமாகக் கொண்டு அருளும்
உற்ற_துணை நீயே மற்று ஓர் துணையும் இல்லை என்றே
நல் தலைமையாம் உனது நாமம் நவில்கின்றேன்
கற்றவனே என்றனை நீ கைவிடில் என் செய்வேனே

#2650
அறியாப் பருவத்து அறிவுறுத்தி ஆட்கொண்ட
நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை
பொறி ஆர் நின் நாமம் புகலுவதே அன்றி மற்றை
வெறியார் வன் நாமம் ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேனே

@9. உய்கைத் திருப்பதிகம்

#2651
திருவும் சீரும் சிறப்பும் திறலும் சற்
குருவும் கல்வியும் குற்றம் இல் கேள்வியும்
பொரு இல் அன்னையும் போக்கு அறு தந்தையும்
தரும வெள் விடைச் சாமி நின் நாமமே

#2652
பொய்யனேன் பிழை யாவும் பொறுத்து அருள்
செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால்
அய்யனே முக்கணா இ அடியனேற்கு
உய்ய வேறு புகல் இலை உண்மையே

#2653
கள்ள நெஞ்சகனேனும் கடையனேன்
வள்ளல் நின் மலர் வார் கழல் பாதமே
உள்ளுவேன் மற்றை ஓர் தெய்வ நேயமும்
கொள்ளலேன் என் குறிப்பு அறிந்து ஆள்கவே

#2654
வஞ்ச மாதர் மயக்கம் கனவினும்
எஞ்சுறாது இதற்கு என் செய்குவேன் என்றன்
நெஞ்சம் அ மயல் நீங்கிட வந்து எனைத்
தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே

#2655
பற்று நெஞ்சகப் பாதகனேன் செயும்
குற்றம் யாவும் குணம் எனக் கொண்டு அருள்
உற்ற எள்துணையேனும் உதவுவாய்
கற்ற நல் தவர் ஏத்தும் முக்கண்ணனே

#2656
மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்
பதியும் ஈந்து எம் பசுபதி மெய் நெறிக்
கதியின் வைப்பது நின் கடன் வன் கடல்
வதியும் நஞ்சம் அணி மணி_கண்டனே

#2657
நீடு வாழ்க்கை நெறி வரு துன்பினால்
வாடும் என்னை வருந்தல் என்று உன் பதம்
பாடும் வண்ணம் நல் பாங்கு அருள்வாய் மன்றுள்
ஆடும் முக்கண் அருள் பெரு வெள்ளமே

#2658
சிந்தை நொந்து இ சிறிய அடியனேன்
எந்தை என்று உனை எண்ணிநிற்கின்றனன்
இந்து சேகரனே உன்றன் இன் அருள்
தந்து காப்பது உன்றன் கடன் ஆகுமே

#2659
உன்னை நாடும் என் உள்ளம் பிறரிடைப்
பொன்னை நாடும் புதுமை இது என்-கொலோ
மின்னை நாடும் நல் வேணிப் பிரான் இங்கே
என்னை நாடி எனக்கு அருள்செய்கவே

#2660
இழை பொறுத்த முலையவர்க்கு ஏற்ற என்
பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும்
மழை பொறுக்கும் வடிவு_உடையோன் புகழ்
தழை பொறுக்கும் சடை முடித் தந்தையே

#2661
மூடனேன் பிழை முற்றும் பொறுத்து உனைப்
பாடவே அருள் பாங்கு எனக்கு ஈதியேல்
நாட வேறு மனையிடை நண்ணி நான்
வாட வேண்டுவது என்னை எம் வள்ளலே

#2662
மின் ஒப்பு ஆகி விளங்கும் விரி சடை
என் அப்பா எனக்கு இன் அருள் ஈந்து நின்
பொன் ஒப்பாம் துணைப் பூம் பதம் போற்றியே
உன்னப் பாங்கின் உயர் நெறி உய்க்கவே

@10. அபராத விண்ணப்பம்

#2663
உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே
இலகு அம்பரத்தே பரம்பரமாய் இன்ப நடம் செய் எம் இறையே
கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட்டிட நீ கருதுதியோ
திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே

#2664
அன்று ஓர் பொருளாய் அடியேனை ஆட்கொண்டு அருளி அறிவு அளித்தாய்
இன்றோ சிறியேன் பிழை கருதி இரங்காது அகற்ற எண்ணுதியோ
குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய்
நன்றோ கருணைப் பெரும் கடலே ஆளாய் இந்த நாயினையே

#2665
நாய்க்கும் கடையேன் பிழை அனைத்தும் நாடில் தவத்தால் நல்கிய நல்
தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார்
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய
பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே

#2666
பேதைப் பருவத்து எனை வலியப் பிடித்து ஆட்கொண்ட பெருமானே
போதைக் கழிப்பான் வீண் புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே
ஓதைக் கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே

#2667
உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
நரைத்தார் இறந்தார் அவர்-தம்மை நான் கண்டிருந்தும் நாணாமே
விரைத் தாள்_மலரைப் பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன்
திரைத் தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே

#2668
செய்வேன் தீமை நலம் ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
வைவேன் அன்றி வாழ்த்தேன் என் வண்ணம் இந்த வண்ணம் எனில்
உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால்
நைவேன் அலது இங்கு என் செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே

#2669
எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால்
நண்ணி நலிவைத் தவிராயேல் என் செய்திடுவேன் நாயகனே
கண்ணி நலியப் படும் பறவைக் கால் போல் மனக் கால் கட்டுண்ணப்
பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே

#2670
பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பதப் பணியே
புரியும் இனத்தாரொடும் கூடிப் புனிதனாக வேண்டும் எனத்
திரியும் அடிமைச் சிறியேனுக்கு இரங்காது இருந்தால் சில் நாள் பின்
எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே

#2671
என் செய்திடுவேன் புலை நாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம் நின்
பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்
புன்செய் விளவிப் பயன்_இலியாய்ப் புறத்தில் கிடத்தி என அடியார்
வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே

#2672
வாழா மனத்தின் வழி சென்று வாளா நாளைக் கழிக்கின்ற
பாழாம் உலகச் சிறு நடையில் பாவியேனைப் பதிவித்தாய்
ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன்
ஏழாம் நரகுக்கு ஆளாவேன் அல்லால் புகல் என் எளியேற்கே

#2673
எளியேன் கருணைத் திரு_நடம் செய் இணைத் தாள்_மலர் கண்டு இதயம் எலாம்
களியேன் கருங்கல் பாறை எனக் கிடக்கின்றேன் இக் கடையேனை
அளியே பெருக ஆளுதியோ ஆள்கிலாயோ யாது ஒன்றும்
தெளியேன் அந்தோ அந்தோ என் செய்வேன் விலங்கில் சிறியேனே

#2674
சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னைச் சீறுதியோ
எறியேம் எனக் கொண்டு இரங்குதியோ இவ்வாறு அவ்வாறு என ஒன்றும்
அறியேன் அவல_கடல் அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
பிறியேன் என்னைப் பிரிக்கினும் பின் துணையும் காணேன் பெருமானே

#2675
காணேன் நினது திரு_அருளைக் கண்டார்-தமது கழல் தலை மேல்
பூணேன் உலகச் சிறு நடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச் சுமக்கும்
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே

#2676
சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமைச் சூழ்ந்து
வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ
தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவல_கடலில் சலியாமே
வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே

#2677
வினையே பெருக்கிக் கடை நாயேன் விடயச் செருக்கால் மிக நீண்ட
பனையே என நின்று உலர்கின்றேன் பாவியேனுக்கு அருளுதியோ
நினையே நினையாப் பிழை கருதி நெகிழவிடவே நினைதியோ
அனையே அனையாய் திரு_குறிப்பை அறியேன் ஈது என்று அடியேனே

#2678
அடியேன் முடுகிச் செயும் பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோ இக்
கொடியேன் நினைக்கும்-தொறும் உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண்
பொடியே திகழும் வடிவு_உடையாய் யாது புரிவேன் புலையேனே

#2679
புலையே புரியும் மனம் போன போக்கே அல்லால் புண்ணிய நல்
நிலையே அறியேன் சிறியேனுக்கு அருளல் அழகோ நிறைந்த குண_
மலையே மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே
கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே

#2680
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்திக் கடு வினையேன்
மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன்
தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய்
அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே

#2681
அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்
படியார் பலரும் பல பேசிச் சிரியாநின்றார் பரந்து இரவும்
விடியாநின்றது என் புரிவேன் இன்னும் கருணை விளைத்திலையே
கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குண_குன்றே

#2682
குன்றா நிலை நின்று அருள் அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன் நான்
நன்றாம் நெறி சென்று அறியாதே மனம் செல் வழியே நடக்கின்றேன்
பொன்றா மணியே அவர்க்கு அருளி என்னை விடுத்தல் புகழ் அன்றே
என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே

#2683
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னைப் பொருளாய் எண்ணி மகிழ்ந்து
அ நாள் அடிமைகொண்டு அளித்தாய் யார்க்கோ வந்த விருந்து எனவே
இ நாள் இரங்காது இருக்கின்றாய் எங்கே புகுவேன் என் புரிவேன்
நின்னால் அன்றிப் பிறர்-தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே

#2684
நின்-பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடு வினையேன்
வன்பால் மன_பேய்-தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
தென் பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே

@11. கலி விண்ணப்பம்

#2685
செறியாத நெஞ்சக வஞ்சகனேன் இச் சிறு தலத்தே
அறியாது அறிந்தவன் போல் சில செய்திடல் ஐய நின் தாள்
குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே
முறியாது அருள்செய்தியோ தெரியேன் எந்தை முன்னியதே

#2686
தீது ஒன்றுமே கண்டு அறிந்தது அல்லால் பலன் சேர நலம்
யாது ஒன்றும் நான் கண்டு அறியேன் அறிந்தவன் என்ன இங்கே
போது ஒன்று போக்குகின்றேன் பிழை யாவும் பொறுத்து அருள்வாய்
மாது ஒன்று பாகத் துணை அன்றி நல் துணை மற்று இலையே

#2687
எல்லாம் தெரிந்த இறைவா நின் தண் அருள் எய்துகிலாப்
பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்து அருள்வாய்
கல்லா மனக் கடையாலே கடைவைத்துக் கண்டது துன்பு
அல்லால் அணுத்துணையும் அறியேன் இன்பம் ஆவதுவே

#2688
மண்ணுடையாரிடை வாளா மனம் செல வைத்தது அலால்
எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன்
புண்ணுடையாரின் புலம்புகின்றேனைப் பொறுத்து அருள் முக்
கண்_உடையாய் கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே

#2689
தாழாத துன்பச் சமுத்திரத்தே இத் தனி அடியேன்
வீழாத வண்ணம் கருணைசெய்வாய் என்னை வேண்டி அ நாள்
ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே
வாழா வகை எனை இ நாள் விடுத்தல் வழக்கு அலவே

#2690
ஊன் செய்த வெம் புலைக் கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து
நான் செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
ஏன் செய்தனை எனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
வான் செய்த நாத நின் தண் அருள் வண்ணம் என் வாழ்த்துவனே

#2691
ஆயாது நான் செயும் குற்றங்களைக் கண்டு அறியில் பெற்ற
தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே
ஓயாது செய்யும்-தொறும் பொறுத்து ஆளும் உனை எளியேன்
வாயால் உரைக்கவும் மாட்டேன் அந்தோ என்ன வன்மை இதே

#2692
ஒன்றும் தெரிந்திட மாட்டாப் பருவத்து உணர்வு தந்தாய்
இன்றும் தருதற்கு இறைவா நின் உள்ளம் இயைதி-கொலோ
கன்றும் கருத்தொடு மாழ்குகின்றேன் உன் கழல் அடிக்கே
துன்றும் கருத்து அறியேன் சிறியேன் என் துணிவு அதுவே

#2693
ஆஆ என எனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன்
வாவா என அழைப்பார் பிறர் இல்லை மறந்தும் என்றன்
நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே

#2694
பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால்
எள்ளத்திலே சிறிது ஆயினும் நான் செல்வது இல்லை எந்தாய்
கள்ளத்திலே சொல்லுகின்றேன்_அல நின் கழல் இணை என்
உள்ளத்திலே நின்ற ஆங்கு அவை காண்க உடையவனே

@12. அடிமைப் பதிகம்

#2695
ஆள்வினையால் பயனுறுவார் அசதியாட அந்தோ இப் புலை நாயேன் அன்பால் நின்-பால்
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும்
நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன்
கேள்வி இலாத் துரைத்தனமோ அலது நாயேன் கிளக்கும் முறை கிளக்கிலனோ கேட்டிலாயே

#2696
கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலாக் குணத்தவர்-பால் கிட்டுகின்றோய்
ஏட்டில் ஆயிரம்_கோடி எனினும் சற்றும் எழுத முடியாக் குறை கொண்டு இளைக்கின்றேன் நான்
சேட்டியாவிடினும் எனைச் சேட்டித் தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையைத் தேர்தியாயில்
நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும்

#2697
வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர்க் கொழுந்தே என் உயிர்க்குத் துணையே என்னை
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே
ஈண்டு ஆவ எனச் சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே

#2698
என்னை அறியாப் பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என்
றன்னை இன்று விடத் துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணைத் தகவுக்கு எந்தாய்
உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று
முன்னை வினைப் பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவது என்னே

#2699
என் நாணை அறிந்தும் என்னை அந்தோ அந்தோ இவ்வகை செய்திடத் துணிந்தாய் என்னே எந்தாய்
நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும்
உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே

#2700
உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்னக்
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே
எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன்
வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மனத் துயர் போம் வகை அருள மதித்திடாயே

#2701
வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும்
தகை அறியேன் நலம் ஒன்றும் அறியேன் பொய்ம்மை-தான் அறிவேன் நல்லோரைச் சலம்செய்கின்ற
மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில்
பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்தப் பாவி உயிர்விடத் துணிவேன் பகர்ந்திட்டேனே

#2702
இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின்
மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால்
துட்டன் என விடத் துணிதியாயில் அந்தோ சூறையுறு துரும்பு எனவும் சுழன்று வானில்
விட்ட சிலை எனப் பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே

#2703
விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா
கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியாச் சிறு பருவத்து என்னை ஆண்டு
நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே

#2704
நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி
இலை அறியேன் மற்றவரைக் கனவிலேனும் எள்துணை ஓர் துணை எனவும் எண்ணுறேன் நல்
கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும்
அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே

@13. சரணப் பதிகம்

#2705
மதி வார் சடை மா மணியே அருள் வள்ளலே நல்
நிதியே திரு அம்பலத்து ஆடல்செய் நித்தனே நின்
துதியேன் எனினும் உனை அன்றித் துணை_இலேன் என்
பதியே எனது எண்ணம் பலிக்கும்படிக்கு அருளே

#2706
படி மேல் அடியேன் உனை அன்றி ஓர் பற்று_இலேன் என்
முடி மேல் அடி வைத்து அருள்செய்திட முன்னு கண்டாய்
கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே
பொடி மேல் விளங்குந் திரு_மேனி எம் புண்ணியனே

#2707
புண்ணாம் மனம் சஞ்சலித்து உள்ளம் புலர்ந்து நின்றேன்
அண்ணா எனை ஆட்கொள வேண்டும் அகற்றுவாயேல்
கண் ஆர் களைகண் பிறிது ஒன்று இலை கள்ளனேனை
எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே

#2708
செய்வேன் அவம் அன்றித் தவம் ஒன்றும் செய்து அறியேன்
நைவேன் பிழை யாவும் பொறுத்து அருள் நல்குவாயேல்
உய்வேன் அலது உய் வகை இன்று மன்று ஓங்குகின்றாய்
வைவேன் துதிப்பேன் உனை என்றும் மறந்திலேனே

#2709
மறவாது உனை வாழ்த்தும் மெய் அன்பரை மா நிலத்தே
இறவா வகை ஆட்கொண்டு அருளிய ஈசனே மெய்
உறவு ஆகிய நின் பதம் அன்றி ஒன்று ஓர்கிலேன் நான்
பிறவா நெறி தந்து அருள் என்பது என் பேசிடாயே

#2710
என்னே இனும் நின் அருள் எய்திலன் ஏழையேனை
முன்னே வலிந்து ஆட்கொண்டது இன்று முனிந்ததேயோ
பொன் ஏர் அணி அம்பலத்து ஆடிய புண்ணியா என்
அன்னே அரசே அமுதே அருள் ஆண்டவனே

#2711
ஆண்டாய் எனை ஏழ் பிறப்பும் உனை அன்றி ஒன்றும்
தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க
வேண்டாது அயலார் எனக் காண்பது என் மெய்யனே பொன்_
ஆண்டான் திரு எய்த நஞ்சைக் களம் நாட்டினோயே

#2712
நாட்டார் நகைசெய்வர் என்றோ அருள் நல்கிலாய் நீ
வீட்டார் நினை என் நினைப்பார் எனை மேவிலாயேல்
தாள் தாமரை அன்றித் துணை ஒன்றும் சார்ந்திலேன் என்
மாட்டாமை அறிந்து அருள்வாய் மணி மன்று_உளானே

#2713
மன்று ஆடிய மா மணியே தனி வானவா ஓர்
மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன்
பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று
நன்றாய் இரவும்_பகலும் உனை நாடுமாறே

#2714
மாறா மன மாயையினால் மதி மாழ்கி மாழ்கி
ஏறாமல் இறங்குகின்றேன் இதற்கு என் செய்வேன்
தேறா உளத்தேன்-தனை ஏறிடச்செய்தி கண்டாய்
பேறா மணி அம்பலம் மேவிய பெற்றியானே

#2715
ஆன் ஏறி வந்து அன்பரை ஆட்கொளும் ஐயனே எம்
மானே மணி மன்றில் நடம் புரி வள்ளலே செம்
தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ-
தானே எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே

@14. பொதுத் தனித் திருவெண்பா

#2716
வந்திக்கும் மெய் அடியார் மால் அற்ற ஓர் மனத்தில்
சந்திக்கும் எங்கள் சயம்புவே பந்திக்கும்
வன் மலக் கட்டு எல்லாம் வலி கெட்டு அற நினது
நின்மலக் கண் தண் அருள்-தான் நேர்

#2717
சங்கரா முக்கண் சயம்புவே தாழ் சடை மேல்
பொங்கு அராத் திங்கள் பொலிந்தோனே வெம் கரா
வாய்-நின்று பிள்ளை வரப் பாடும் வன் தொண்டர்க்
காய் நின்று சந்து உரைத்தது ஆர்

#2718
நீலக் களம் கொண்ட நீடு ஒளியே நீள் கங்கை
கோலச் சடைக்கு அணிந்த கோமளமே ஞாலத்தில்
அந்தோ சிறியேன் அருள் இன்றி வாடுவது
சந்தோடமோ நின்றனக்கு

#2719
நான் சிறியேன் என்னினும் இ நானிலத்தில் நான் செய் பிழை-
தான் சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய்
அங்ஙனமேனும் உன் அருள் பெருமைக்கு இ பெருமை
எங்ஙனம் என்று உள்ளம் எழும்

#2720
ஆவித் துணையே என் ஆர்_அமுதே நின் வடிவைப்
பாவித்து உள் நையேன் இப் பாவியேன் சேவித்து
வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்துத்
தாழ்த்தேன் என் செய்தேன் தவம்

#2721
உன்னை நினைந்து இங்கே உலாவுகின்றேன் அன்றி எந்தாய்
பின்னை நினைப்பு ஒன்றும் பெற்றிலேன் என்னை
விடாதே நின் பொன் அடியை மேவார் சேர் துன்பம்
கொடாதே எனை ஏன்றுகொள்

#2722
என் அரசே நின் அடிக் கீழ் என் இடரை நீக்கு என நான்
சொன்னது அலால் தாயுடனும் சொன்னேனோ இன்னும் இந்தத்
துன்பச் சுமையைச் சுமக்க முடியாது என்னால்
அன்பர்க்கு அருள்வோய் அருள்

#2723
அன்னே என் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் ஆதரவே
என்னே நின் உள்ளம் இரங்கிலையே பொன்னே
உடையாரிடை என் உளம் நொந்து வாடிக்
கடையேன் படும் துயரைக் கண்டு

#2724
பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டித் தகவின்
அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர்
திரு_சிற்சபையானைத் தேர்ந்து

#2725
தாதாதாதாதாதாதாக் குறைக்கு என் செய்குதும் யாம்
தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா
நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே
எந்தாய் எனப் புகழவே

#2726
பொய் கண்டாய் காமப் புது மயக்கில் போய் உழலக்
கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட
பொன்னே_அனையார்-பால் போய் வணங்கக் கற்றிலையோ
என்னே நின் தன்மை மனமே

#2727
இ வழியில் செல்லாதே என்_உடையான்-தன் அடி சேர்
அ வழியில் செல் என்று அடிக்கடிக்குச் செவ் வழியில்
சொன்னாலும் கேட்கிலை நீ துட்ட மனமே உனக்கு இங்கு
என்னால் உறவு ஏது இனி

#2728
கால்வாங்கிய உள் கதவம் கொளும் அகத்தின்
பால் வாங்கிய கால் பரம்பரனே மால் வாங்கு
அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழைப்
பெரிது ஆர ஓர் மொழியைப் பேசு

@15. தனித் திருவிருத்தம்

#2729
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின்
சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும்
பார் பூத்த பச்சைப் பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர்
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே

#2730
வீழாக ஞான்ற செவ் வேணிப் பிரான் என் வினை இரண்டும்
கீழாக நான் அதன் மேலாக நெஞ்சக் கிலேசம் எல்லாம்
பாழாக இன்பம் பயிராக வாய்க்கில் அப்பால் பிறவி
ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே

#2731
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால்
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன்
நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற
தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே

#2732
செம்பவளத் தனிக் குன்றே அருளானந்தச் செழும் கனியே முக்கண் உடைத் தேவே மூவா
அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும்
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க
வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே

#2733
நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேட அருள் நாட்டம் கொண்டு
பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்தப் படிவம் ஆகி
ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம்

#2734
மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி
பிறை முடிச் சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி
சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி

#2735
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுளக் குறிப்பையும் தெரியேன்
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன்
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன்
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுகேன் புலையனேன் புகல் அறியேனே

#2736
நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்தக்
கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த
பதியை உனைப் பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்சச்
சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இத் தமியனேனே

#2737
தாய் தடை என்றேன் பின்னர்த் தாரமே தடை என்றேன் நான்
சேய் தடை என்றேன் இந்தச் சிறு தடை எல்லாம் தீர்ந்தும்
தோய் தடைச் சிறியேன் இன்னும் துறந்திலேன் எனைத் தடுக்க
ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே

#2738
எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன்
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான்
பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டுப் பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன்
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே

#2739
மின்னைப் போல் இடை மெல்லியலார் என்றே விடத்தைப் போல் வரும் வெம் மனப் பேய்களைப்
பொன்னைப் போல் மிகப் போற்றி இடை நடுப் புழையிலே விரல் போதப் புகுத்தி ஈ-
தன்னைப் போல் முடை நாற்றச் சலத்தையே சந்தனச் சலம்-தான் எனக் கொள்கின்றேன்
என்னைப் போல்வது நாய்க் குலம்-தன்னிலும் இல்லை அல்லது எவற்றினும் இல்லையே

#2740
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ
முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும்
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன்
உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே

#2741
மன் உயிர்க்குத் தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான
மின் உடற்குத் தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ
என் உயிர்க்குத் துணைவா நின் ஆணை ஒன்றும் அறியேன் நான் இரங்கிடாயே

#2742
மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும்
தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழும் தேனே சோதியே நீ
போற்று அரிய சிறியேனைப் புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம்
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணைச் சிறியனேனே

#2743
உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச
நள் உணர்வேன் சிறிதேனும் நலம் அறியேன் வெறித்து உழலும் நாயின் பொல்லேன்
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன்
தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே

#2744
கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னைக் கனவிலேனும்
மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே எனத் துதியேன் வஞ்சம் இல்லா
நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே

#2745
இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த
அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும்
கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடாது இருக்கின்றார் கடையனேற்கே
தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனைத் தழுவிலேனே

#2746
கஞ்ச மலர்த் தவிசு இருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
அஞ்ச நடை அம்மை கண்டு களிக்கப் பொன்_அம்பலத்தில் ஆடுகின்ற
எஞ்சல் இலாப் பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும்
வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே

#2747
வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர்
பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இப் படி மிசை யான்
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ
தேம் புக்கும் வார் சடைத் தேவே கருணைச் சிவ_கொழுந்தே

#2748
அட முடியாது பல் ஆற்றாலும் ஏழைக்கு அடுத்த துன்பம்
பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய்
திட முடியால் அயன் மால் வணங்கும் துணைச் சேவடியாய்
தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே

#2749
பொல்லா வாழ்க்கைத் துயரம் எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்து அழுந்திப்
பல்லார் நகைக்கப் பாவி படும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர்
எல்லாம் உடையீர் மால் விடையீர் என்னே இரங்கி அருளீரே

#2750
பொன்னை உடையார் மிகும் கல்விப் பொருளை உடையார் இவர் முன்னே
இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும்
மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர்
என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே

#2751
ஆயும் வஞ்சக நெஞ்சன் இ அடியனேன் ஐயா
நீயும் வஞ்சக நெஞ்சன் என்றால் இந்த நிலத்தே
ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும்
தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய்

#2752
நானும் பொய்யன் நின் அடியனேன் தண் அருள் நிதி நீ-
தானும் பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா
தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர்
ஊனும் உள்ளமும் உயிரும் அண்ணிக்கின்ற உரவோய்

#2753
நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும்
ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின்
தேசுறு சீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
ஆசு அகலும் வண்ணம் அருள் புரிந்தால் ஆகாதோ

#2754
ஆற்றால் விளங்கும் சடையோய் இ ஏழை அடியனும் பல்
ஆற்றால் வருந்தும் வருத்தம் எல்லாம் முற்று அறிந்தும் இன்னம்
ஆற்றாது இருத்தல் நின் பேர்_அருள் ஆற்றுக்கு அழகு-கொலோ
ஆற்றாமை மேற்கொண்டு அழுதால் எவர் எனை ஆற்றுவரே

#2755
அருள் ஆர்_அமுதே அரசே நின் அடியேன் கொடியேன் முறையேயோ
இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ
மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ
தெருள் ஓர்சிறிதும் அறியாதே திகையாநின்றேன் முறையேயோ

#2756
ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ
அழியாக் கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ
பொழியாப் புயலே_அனையார்-பால் புகுவித்தனையே முறையேயோ
இழியாத் திரிதந்து உழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ

#2757
மதி ஒளிர் கங்கைச் சடைப் பெரும் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே
நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில்
பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வக் களிப்பையே கருதுகின்றனனே

#2758
வெள்ளம் கொண்டு ஓங்கும் விரி சடையாய் மிகு மேட்டில்-நின்றும்
பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர்
உள்ளம் கொண்டு ஓங்கும் அவமே பருத்த ஒதி_அனையேன்
கள்ளம் கொண்டு ஓங்கும் மனத்து உறுமோ உறில் காண்குவனே

#2759
ஐயா முக்கண் கொண்ட ஆர்_அமுதே அருள் ஆர் பவள
மெய்யா மெய்ஞ்ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ
பொய்யா என் செய்வல் அருளாய் எனில் எங்குப் போதுவனே

#2760
நாராயணன் திசை நான்முகன் ஆதியர் நண்ணி நின்று
பாராயணம் செயப்பட்ட நின் சேவடிப் பங்கயம் மேல்
சீராயணம் பெறப் பாடும் திறம் ஓர்சிறிதும் இலேன்
ஆராய் அணங்குற நின்றேன் பொன் மன்றத்து அமர்ந்தவனே

#2761
பேய் கொண்ட நெஞ்சகப் பாழால் வரும் என் பெரும் துயரை
வாய் கொண்டு அனந்தர் அனந்தர்க்கும் சொல்லவராது எனில் இ
நாய் கொண்டு உரைக்க வருமோ என் செய்குவன் நச்சு மரக்
காய் கொண்டு வாழைக் கனியைக் கைவிட்ட கடையவனே

#2762
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர்
நல் மானம் காத்து அருளும் அருள்_கடலே ஆனந்த நடம் செய் வாழ்வே
பொன் மான் அம்பினைப் பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு
என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே

#2763
வைவம் என்று எழுகின்றவர்-தமக்கும் நல் வாழ்வு
செய்வம் என்று எழுகின்ற மெய்த் திரு_அருள் செயலும்
சைவம் என்பதும் சைவத்தில் சாற்றிடும் தலைமைத்
தெய்வம் என்பதும் என்னளவு இல்லை என் செய்வேன்

#2764
ஐயரே உமது அடியன் நான் ஆகில் அடிகள் நீர் எனது ஆண்டவர் ஆகில்
பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும்
தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்பச் சச்சிதானந்தத் தனி நடம் புரியும்
மெய்யரே மிகு துய்யரே தரும விடையரே என்றன் விழி அமர்ந்தவரே

#2765
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலைத் தொழில் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே

#2766
பொன் அளிக்கும் நல் புத்தியும் தந்து நின்
றன் அருள் துணைத் தாள்_மலர்த் தியானமே
மன்ன வைத்திட வேண்டும் எம் வள்ளலே
என்னை நான் பல கால் இங்கு இயம்பலே

#2767
தாயும் தந்தையும் சற்குரு_நாதனும்
ஆயும் தெய்வமும் நீ என்று அறிந்தனன்
பாயும் மால் விடை ஏறும் பரமனே
நீயும் கைவிட என்னை நினைத்தியோ

#2768
ஒழியா மயல்கொண்டு உழல்வேன் அவமே
அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
பொழியா மறையின் முதலே நுதல் ஏய்
விழியாய் விழியாய் வினை தூள்படவே

#2769
உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட
இலகு வான் ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்றே
அலகு_இல் ஆனந்த நாடகம் செய்யும் அம் பொன் சேவடிக்கு அபயம் என்னையும்
திலக நீ விழைவாய் நடராச சிகாமணியே

#2770
என் இரு கண்காள் உமது பெரும் தவம் எப் புவனத்தில் யார்-தான் செய்வர்
முன் இருவர் காணாமல் அலைந்தனரால் இனும் காண முயலாநின்றார்
நல் நிருபர் தொழுது ஏத்தும் அம்பலத்தே ஓர் இடத்து ஓர் நாள் ஆதித்தர்
பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியைப் பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே

#2771
சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அத் திரளோர் சற்றும்
காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள்
ஆணாகப் பிறந்து அடியேன் அரும் தவம் என் புரிந்தேனோ அறிகிலேன் முன்
பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இப் பிறப்பே என் பிறப்பாம் அந்தோ

#2772
இருள் அற ஓங்கும் பொதுவிலே நடம் செய் எம் குருநாதன் எம் பெருமான்
அருள் எனும் வடிவம் காட்டி ஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
தெருளுற அருமைத் திரு_கையால் தடவித் திரு_மணி வாய்_மலர்ந்து அருகில்
பொருளுற இருந்து ஓர் வாக்கு அளித்து என் உள் புகுந்தனன் புதுமை ஈது அந்தோ

#2773
பொன் என்கோ மணி என்கோ புனித ஒளித் திரள் என்கோ பொற்பின் ஓங்கும்
மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான்
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம்
முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி

#2774
வஞ்சகர்க்கு எல்லாம் முதலாய் அறக் கடையாய் மறத் தொழிலே வலிக்கும் பாவி
நெஞ்சகத் துன்மார்க்கனை மா_பாதகனைக் கொடியேனை நீசனேனை
அஞ்சல் எனக் கருணை புரிந்து ஆண்டுகொண்ட அருள்_கடலை அமுதைத் தெய்வக்
கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளைப் பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே

#2775
நாதா பொன்_அம்பலத்தே அறிவானந்த நாடகம் செய்
பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டு எல்லாம்
ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன
நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே

#2776
கந்த நாள்_மலர்க் கழல் இணை உளத்து உறக் கருதுகின்றவர்க்கு எல்லாம்
பந்த நாண் வலை அவிழ்த்து அருள் சிதம்பரை பரம் பரையுடன் ஆடும்
அந்த நாள் மகிழ்வு அடைபவர் உளர் சிலர் அவர் எவர் எனில் இங்கே
இந்த நாள் முறை திறம் பலராய் உயிர்க்கு இதம் செயும் அவர் அன்றே

#2777
வெட்டை மாட்டி விடாப் பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டிச் சென்றே தொழுக்
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டிப் பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே
துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்தக் கட்டை-தான்
எட்டை மாட்டி உயிர்விடக் கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே

#2778
புண்ணைக் கட்டிக்கொண்டே அதன் மேல் ஒரு புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயைக் கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண்
மண்ணைக் கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால்
கண்ணைக் கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழக் கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே

#2779
உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேல் இலை உண்ணவோ உணவுக்கும் வழி இலை
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான்
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான்
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறைச் சடை வித்தக வள்ளலே

#2780
தொடுக்கவோ நல்ல சொல்_மலர் இல்லை நான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள்
ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களைத்
தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும்
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே

#2781
இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம்
அறுகு அடுத்த சடை முடி மேல் மண் எடுக்க மாட்டாமல் அடிபட்டையோ
பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளாப் பிள்ளைகளைப் பெற்ற தோஷம்
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே

#2782
சச்சிதாநந்த சிற்சபையில் நாடகம்
பச்சிதாம் திரு_உருப் பாவை நோக்கிட
மெச்சிதாகாரமா விளைப்பர் மெல் அடி
உச்சி தாழ்குவர் நமக்கு_உடையர் நெஞ்சமே

#2783
தத்தா தனத் தத்தைத்தா என்று அரங்கன் தனி நடிப் பாதத்தா
தன் அத்தத்தைத் தா என்று அரங்கன் தனி நடிப் பாதம்
தா தன் அத்தத்தைத் தா என்று அரங்கன் தனி நடிப் பா
தத்து ஆதனத்தத்தைத் தா என்று அரங்கு அன்று அனம் சொல்லுமே

#2784
இ மை அறை அனைய ஏசு ஊர மாதருமா
இம்மை உமை இம்மை ஐயோ என் செய்த தம்மை மதன்
மாமாமாமாமாமா மாமாமாமாமாமா
மாமாமாமாமாமாமா

#2785
ஆவி ஈரைந்தை அபரத்தே வைத்து ஓதில்
ஆ வி ஈரைந்தை அகற்றலாம் ஆவி ஈ
ரைந்து உறலாம் ஆவி ஈர் ஐந்து அறலாம் ஆவி ஈ
ரைந்து இடலாம் ஓர் இரண்டோடு ஆய்ந்து

@16. திருக்குறிப்பு நாட்டம்

#2786
ஆற்றுக்கே பிறைக் கீற்றுக்கே சடை ஆக்கிச் சேவடி தூக்கி ஆர்_உயிர்ப்
பேற்றுக்கே நடிப்பாய் மணி மன்றில் பெருந்தகையே
சோற்றுக்கே இதம் சொல்லிப் பேதையர் சூழல்வாய்த் துயர் சூழ்ந்து மேல் திசைக்
காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ

#2787
ஞாலத்தார்-தமைப் போலத் தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு
சீலத்தார் சிவமே எவையும் எனத் தேர்ந்தனரால்
சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தைத் தாவி நான் பெரும் பாவி ஆயினன்
ஏலத்து ஆர் குழலாள் இடத்தாய் எனை எண்ணுதியோ

#2788
அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன்
நண்ணலே அறியேன் கடையேன் சிறு நாய்_அனையேன்
பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலிப் பேயனேன் கொடும் பேதையேன் பிழை
கண்ணலே புரியாது இனும் மீட்கக் கருதுதியோ

#2789
வல்லி ஆனந்தவல்லி சேர் மணவாளனே அருளாளனே மலை
வில்லியாய் நகைத்தே புரம் வீழ்த்த விடையவனே
புல்லி யான் புலைப் போகம் வேட்டு நின் பொன் அடித் துணைப் போகம் போக்கினேன்
இல்லி ஆர் கடம் போல் இருந்தேன் எனை எண்ணுதியோ

@17. தனித் திருப்புலம்பல்

#2790
திங்கள் விளங்கும் சடைத் தருவைத் தீம் பால் சுவையைச் செந்தேனைச்
செங்கை மருவும் செழும் கனியைச் சீர் ஆர் முக்கண் செங்கரும்பை
மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வைப் பவள மலை-தன்னை
எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே

#2791
அன்பர் இதய_மலர்க் கோயில் அமர்ந்த பரமானந்தத்தைத்
துன்பம் அகலச் சுகம் அளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
வன்பரிடத்தின் மருவாத மணியை மணி ஆர் மிடற்றானை
இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணாது இருந்தேனே

#2792
ஒருமைப் பயனை ஒருமை நெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
அருமைக் களத்தில் கருமை அணி அம்மான்-தன்னை எம்மானை
இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணாது இருந்தேனே

#2793
கறை ஓர் கண்டத்து அணிந்து அருளும் கருணாநிதியைக் கண்_நுதலை
மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியைப்
பொறையோர் உள்ளம் புகுந்து ஒளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
இறையோன்-தன்னை அந்தோ நான் என்னே எண்ணாது இருந்தேனே

@18. பரம ராசியம்

#2794
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன்
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன்
எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன்
பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசியப் பரம்பரப் பொருளே

#2795
செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மனச் செறிவு என்பது அறியேன்
கொடியனேன் கொடும் கொலை பயில் இனத்தேன் கோளனேன் நெடு நீள வஞ்சகனேன்
அடியனேன் பிழை அனைத்தையும் பொறுத்து உன் அன்பர்-தங்களோடு இன்புற அருள்வாய்
படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசியப் பரம்பரப் பொருளே

@19. திருப்புகழ்ச்சி

#2796
திருவுளம் தெரியேன் திகைப்புறுகின்றேன் சிறியரில் சிறியனேன் வஞ்சக்
கரு உளக் கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ
வெருவுறுகின்றேன் அஞ்சல் என்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்
மருவும் மா கருணைப் பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே

#2797
தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும்
ஆயும் இன்பமும் அன்பும் மெய் அறிவும் அனைத்தும் நீ என ஆதரித்து இருந்தேன்
ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன்
சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடைத் திகழ் ஒளி விளக்கே

#2798
அருள் பழுத்து ஓங்கும் கற்பகத் தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே
அருள் எனும் அமுதம் தரும் ஒரு கடலே அருள் கிரணம் கொளும் சுடரே
அருள் ஒளி வீசும் அரும்_பெறல் மணியே அருள் சுவை கனிந்த செம்பாகே
அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே

@20. திருமருந்தருள் நிலை

#2799
பனக_அணைத் திரு நெடுமால் அயன் போற்றப் புலவர் எலாம் பரவ ஓங்கும்
கனக மணி அம்பலத்தே பெரிய மருந்து ஒன்று இருக்கக் கண்டேன் கண்டேன்
அனக நடத்தது சச்சிதானந்த வடிவு அது பேர்_அருள் வாய்ந்துள்ளது
என் அகம் அமர்ந்திருப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா

#2800
திரு நெடுமால் அயன் தேடத் துரிய நடு ஒளித்தது எனத் தெளிந்தோர் சொல்லும்
ஒரு கருணை மருந்து திரு அம்பலத்தே இருந்திடக் கண்டு உவந்தேன் அந்தோ
அருவுருவம் கடந்தது பேர்_ஆனந்த வடிவு அது நல் அருள் வாய்ந்துள்ளது
இருமையும் நன்கு அளிப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா

@21. திருவருள் விலாசம்

#2801
ஆண்டவன் நீ ஆகில் உனக்கு அடியனும் நான் ஆகில் அருள்_உடையாய் இன்று இரவில் அருள் இறையாய் வந்து
நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி
வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்துப் புரிதி இது விளங்கும் எனப் புகல்வாய்
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணைத் தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே

#2802
திரு_நெறி மெய்த் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடாத் தெய்வ மறை இது எனப் பின்பு உணர்ந்தேன்
ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன்
தெருள் நெறி தந்து அருளும் மறைச் சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே

@22. சிவ சிதம்பர சங்கீர்த்தனம்

#2803
உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும்
கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும்
இலக ஒன்று இரண்டு எனல் அகன்றதோர் இணை_இல் இன்பமாம் இதயம் என்பதும்
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

#2804
வரம் உறும் சுதந்தர சுகம் தரும் மனம் அடங்கு சிற்கன நடம் தரும்
உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும்
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறைச்
சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

#2805
நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம்
சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம்
வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும்
சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

#2806
அருள் அளித்து மெய் அன்பர்-தம்மை உள்ளங்கை நெல்லி போல் ஆக்குகின்றதும்
பொருள் அளித்து நான்மறையின் அந்தமே புகலுகின்றதோர் புகழ் அளிப்பதும்
வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம்
தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

#2807
பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும்
சுத்தமும் தெறா வித்தமும் தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்
சித்தமும் செலாப் பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

@23. சிவகாமவல்லி துதி

#2808
அரங்கு ஆய மனம் மாயை அளக்கர் ஆழம் அறியாமல் கால் இட்டு இங்கு அழுந்துகின்றேன்
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன்
உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா
திரம் காணாப் பிள்ளை எனத் தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வத் தாயே

#2809
தனத்தால் இயன்ற தனிச் சபையில் நடிக்கும் பெருமான்-தனக்கு அன்றே
இனத்தால் உயர்ந்த மண_மாலையிட்டுக் களித்த துரைப் பெண்ணே
மனத்தான் விளங்கும் சிவகாமவல்லிக் கனியே மாலொடும் ஓர்
அனத்தான் புகழும் அம்மே இ அடியேன் உனக்கே அடைக்கலமே

#2810
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே
உருவே இச்சை மயமே மெய் உணர்வின் வணமே உயர் இன்பக்
குருவே ஆதித் தனித் தாயே குலவும் பரையாம் பெரும் தாயே
மருவே மலரே சிவகாமவல்லி மணியே வந்து அருளே

#2811
அருளே அறிவே அன்பே தெள் அமுதே மாதர் அரசே மெய்ப்
பொருளே தெருளே மாற்று அறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
இருள் ஏய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இ அடியேன்
மருளே தவிர்த்த சிவகாமவல்லி நினக்கே வந்தனமே

#2812
தருவாய் இது நல் தருணம் கண்டாய் என்னைத் தாங்கிக்கொண்ட
குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனைக் கூடி இன்ப
உருவாய் என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மை எலாம்
திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே

@24. சிவ பரம்பொருள்

#2813
உருத்திரன் திருமால் அயன் ஒப்ப முக்குணமாய்
இருத்தல் இன்றி அக் குணங்களை என்றும் ஆண்டருளும்
கருத்தன் ஆகையில் குணேசன் அக் குணவிகாரத்தில்
பொருத்தம்_இன்மையன் ஆகையால் புகல் குணரகிதன்

#2814
களங்க அ குணம் கடந்து இருத்தலில் குணாதீதன்
வளம் கொளத் தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால்
விளங்கு விச்சுவவியாபி இ விசுவத்தை யாண்டு
துளங்குறா நலம் தோற்றலின் விச்சுவகருத்தன்

#2815
வெய்யனாய் உலகு அழித்தலின் விசுவசங்காரி
பைய மேலெனப்படுவன பலவற்றின் மேலாம்
ஐயன் ஆதலின் பராபரனாம் எனப்பட்ட
செய்யன் ஆகிய சிவபிரான் ஒருவன் உண்டு அமரீர்

#2816
உய்வதாம் இது நம் குரு ஆணை ஒன்று உரைப்பேன்
சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடித் தலத்தும்
நைவது இன்றி ஆங்கு அது அதுவாய் அது நமது
தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் எனத் தெளிவீர்

@25. நடராஜ அலங்காரம்

#2817
இரண்டே கால் கை முகம் தந்தீர் இன்ப நடம் செய் பெருமானீர்
இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன்
இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே

#2818
இரண்டேகாற்கு ஐமுகம் கொண்டீர் என்னை_உடையீர் அம்பலத்தீர்
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன்
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனைக் கண்டே
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி

#2819
ஆடும் கருணைத் திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன்
பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார்
நாடும்படி நன்கு அருளும் என்றேன் நங்காய் முன் பின் ஒன்றேயாய்
ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி

@26. பாங்கிமார் கண்ணி

#2820
அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே அவர்
ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் பாங்கிமாரே

#2821
ஆடுகின்ற சேவடி மேல் பாங்கிமாரே மிக
ஆசை கொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே

#2822
இன்ப வடிவாய்ச் சபையில் பாங்கிமாரே நட
மிட்டவர் மேல் இட்டம்வைத்தேன் பாங்கிமாரே

#2823
ஈன உடற்கு இச்சைவையேன் பாங்கிமாரே நட
னேசர்-தமை எய்தும் வண்ணம் பாங்கிமாரே

#2824
உத்தமர் பொன்_அம்பலத்தே பாங்கிமாரே இன்ப
உரு ஆகி ஓங்குகின்றார் பாங்கிமாரே

#2825
ஊன உலகைக் கருதேன் பாங்கிமாரே மன்றில்
உத்தமருக்கு உறவு ஆவேன் பாங்கிமாரே

#2826
கற்பனை எல்லாம் கடந்தார் பாங்கிமாரே என்றன்
கற்பனைக்கு உட்படுவாரோ பாங்கிமாரே

#2627
கண்டிலர் நான் படும் பாடு பாங்கிமாரே மூன்று
கண்_உடையார் என்பார் ஐயோ பாங்கிமாரே

#2828
கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம்
கரையார் என்னளவிலே பாங்கிமாரே

#2829
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் பாங்கிமாரே என்னைக்
கைவிடவும் துணிவாரோ பாங்கிமாரே

#2830
கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமாரே இன்று
கைநழுவவிடுவாரோ பாங்கிமாரே

#2831
கண்டவர் எல்லாம் பழிக்கப் பாங்கிமாரே என்றன்
கன்னியழித்தே ஒளித்தார் பாங்கிமாரே

#2832
காமனைக் கண்ணால் எரித்தார் பாங்கிமாரே என்றன்
காதலைக் கண்டு அறிவாரோ பாங்கிமாரே

#2833
காவலை எல்லாம் கடந்து பாங்கிமாரே என்னைக்
கைகலந்த கள்ளர் அவர் பாங்கிமாரே

#2834
காண விழைந்தேன் அவரைப் பாங்கிமாரே கொண்டு
காட்டுவாரை அறிந்திலேன் பாங்கிமாரே

#2835
கிட்ட வர வேண்டும் என்றார் பாங்கிமாரே நான்
கிட்டும் முன்னே எட்ட நின்றார் பாங்கிமாரே

#2836
கின்னரம் கேள் என்று இசைத்தார் பாங்கிமாரே நான்
கேட்பதன் முன் சேட்படுத்தார் பாங்கிமாரே

#2837
கிள்ளையைத் தூதா விடுத்தேன் பாங்கிமாரே அது
கேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே

#2838
கீத வகை பாடிநின்றார் பாங்கிமாரே அது
கேட்டு மதி மயங்கினேன் பாங்கிமாரே

#2839
கீழ்மை குறியாமல் என்னைப் பாங்கிமாரே மனக்
கேண்மை குறித்தாரே அன்று பாங்கிமாரே

#2840
கீடம்_அனையேன் எனையும் பாங்கிமாரே அடிக்
கே அடிமைகொண்டார் அன்று பாங்கிமாரே

#2841
குற்றம் எல்லாம் குணமாகப் பாங்கிமாரே கொள்ளும்
கொற்றவர் என் கொழுநர் காண் பாங்கிமாரே

#2842
குற்றம் ஒன்றும் செய்து அறியேன் பாங்கிமாரே என்னைக்
கொண்டு குலம் பேசுவாரோ பாங்கிமாரே

#2843
குஞ்சிதப் பொன் பாதம் கண்டால் பாங்கிமாரே உள்ள
குறை எல்லாம் தீரும் கண்டீர் பாங்கிமாரே

#2844
கூற்று உதைத்த பாதம் கண்டீர் பாங்கிமாரே நங்கள்
குடிக்கு எல்லாம் குல_தெய்வம் பாங்கிமாரே

#2845
கூற அரிய பதம் கண்டு பாங்கிமாரே களி
கொண்டு நிற்க விழைந்தேன் நான் பாங்கிமாரே

#2846
கூடல் விழைந்தேன் அவரைப் பாங்கிமாரே அது
கூடும் வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே

@27. வெண்ணிலாக் கண்ணி

#2847
தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே

#2848
நாத முடி மேல் இருந்த வெண்ணிலாவே அங்கே
நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

#2849
சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே நானும்
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

#2850
இரா_பகல் இல்லா இடத்தே வெண்ணிலாவே நானும்
இருக்க எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே

#2851
தேசு நிறமாய் நிறைந்த வெண்ணிலாவே நானும்
சிவமயம்-அதாய் விழைந்தேன் வெண்ணிலாவே

#2852
போத நடு ஊடு இருந்த வெண்ணிலாவே மலப்
போதம் அற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

#2853
ஆரும் அறியாமல் இங்கே வெண்ணிலாவே அரு
ளாளர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே

#2854
அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே எங்கள்
ஐயர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே

#2855
வேத முடி மேல் இருந்த வெண்ணிலாவே மல
வேதை உள ஏது சொல்லாய் வெண்ணிலாவே

#2856
குண்டலி-பால் நின்று இலங்கும் வெண்ணிலாவே அந்தக்
குண்டலிப் பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

#2857
ஆதி அந்தம் என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த
ஆதி அந்தம் ஆவது என்ன வெண்ணிலாவே

#2858
வித்து இலாமலே விளைந்த வெண்ணிலாவே நீ-தான்
விளைந்த வண்ணம் ஏது சொல்லாய் வெண்ணிலாவே

#2859
முப்பொருளும் ஒன்று அது என்பார் வெண்ணிலாவே அந்த
மூன்றும் ஒன்றாய் முடிந்தது என்ன வெண்ணிலாவே

#2860
நான் அதுவாய் நிற்கும் வண்ணம் வெண்ணிலாவே ஒரு
ஞான நெறி சொல்லு கண்டாய் வெண்ணிலாவே

#2861
ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே என்னை
நான் அறியச் சொல்லு கண்டாய் வெண்ணிலாவே

#2862
வாசி வாசி என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த
வாசி என்ன பேசு கண்டாய் வெண்ணிலாவே

#2863
ஐந்தலைப் பாம்பு ஆட்டுகின்றார் வெண்ணிலாவே அவர்
அம்பலத்தில் நின்றது என்ன வெண்ணிலாவே

#2864
ஓர் எழுத்தில் ஐந்து உண்டு என்பார் வெண்ணிலாவே அது
ஊமை எழுத்து ஆவது என்ன வெண்ணிலாவே

#2865
அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர்
ஆடுகின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே

#2866
அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர்
ஆடும் வகை எப்படியோ வெண்ணிலாவே

#2867
அணுவில் அணுவாய் இருந்தார் வெண்ணிலாவே எங்கும்
ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே

#2868
அண்ட பகிரண்டம் எல்லாம் வெண்ணிலாவே ஐயர்
ஆட்டம் என்று சொல்வது என்ன வெண்ணிலாவே

#2869
அம்பரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே

@28. முறையீட்டுக் கண்ணி

#2870
பற்று நினைத்து எழும் இப் பாவி மனத் தீமை எலாம்
உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2871
எள்ளேதம் நின்னிடத்தே எண்ணுகின்ற-தோறும் அதை
உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2872
துன்னுகின்ற தீமை நின்-பால் சூழ்ந்து உரைக்கும்-தோறும் அதை
உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2873
எள்ளுகின்ற தீமை நின்-பால் எண்ணுகின்ற-தோறும் அதை
உள்ளுகின்ற போதில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2874
மிக்க நிலை நிற்க விரும்பேன் பிழைகள் எலாம்
ஒக்க நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2875
கோகோ எனும் கொடியேன் கூறிய குற்றங்கள் எலாம்
ஓஓ நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2876
பித்து மனக் கொடியேன் பேசியவன் சொல்லை எலாம்
ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2877
தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமை எலாம்
ஓர்ந்து நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2878
நிறுத்தி அறியேன் நிகழ்த்தியவன் சொல்லை
உறுத்தி நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2879
தோன்றி விரியும் மனத் துட்டனேன் வன்_பிழையை
ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

#2880
எண்ணி நினைப்பது இன்றி நினை எள்ளி உரைத்ததனை
உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா

#2881
கடையவனேன் வைத கடும் சொல் நினைக்கும்-தோறும்
உடையவனே என்னுடைய உள்ளம் உருகுதடா

#2882
பித்தன் எனத் தீமை பிதற்றியது எண்ணும்-தோறும்
உத்தமனே என்னுடைய உள்ளம் உருகுதடா

#2883
மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில்
ஒன்றை நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா

#2884
வெருவாமல் ஐயோ விளம்பிய சொல் எல்லாம்
ஒருவா நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா

#2885
புலைக் கொடியேன் புன் சொல் புகன்றது எண்ணும்-தோறும்
உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா

#2886
ஈடு இல் பெரும் தாயில் இனியாய் நின் தண் அருள்-பால்
ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா

#2887
புரைத்த மன வஞ்சப் புலையேன் திரு_அருளை
உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா

#2888
நாடி நினையா நவை_உடையேன் புன் சொல் எலாம்
ஓடி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா

#2889
வெப்பு இல் கருணை விளக்கு_அனையாய் என் பிழையை
ஒப்பி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா

#2890
அஞ்சல் என்றாய் நின்-பால் அடாத மொழி பேசியதை
அஞ்சி நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2891
மெய் ஓர்சிறிதும் இலேன் வீண் மொழியால் ஊடியதை
ஐயோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2892
இத் தாரணிக்குள் எங்கும் இல்லாத தீமை செய்தேன்
அத்தா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2893
பொய்யால் விரிந்த புலை மனத்தேன் செய் பிழையை
ஐயா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2894
இப் பாவி நெஞ்சால் இழுக்கு உரைத்தேன் ஆங்கு அதனை
அப்பா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2895
எண்ணாக் கொடுமை எலாம் எண்ணி உரைத்தேன் அதனை
அண்ணா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2896
வெம் மால் மனத்து வினையேன் புகன்றது எலாம்
அம்மா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2897
எச் சோடும் இல்லாது இழிந்தேன் பிழைகள் எலாம்
அச்சோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2898
வந்து ஓடி நை மனத்து வஞ்சகனேன் வஞ்சம் எலாம்
அந்தோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2899
ஓவாக் கொடியேன் உரைத்த பிழைகள் எலாம்
ஆஆ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2900
கரை சேர ஒண்ணாக் கடையேன் பிழையை
அரைசே நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2901
மருள்_உடையேன் வஞ்ச மனத் தீமை எல்லாம்
அருள்_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2902
ஈண்டவனேன் வன் சொல் இயம்பியதை என்னுடைய
ஆண்டவனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2903
வற்புதனேன் வஞ்ச மனப் பிழையை மன்று ஆடும்
அற்புதனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2904
துன்பு_உடையேன் புன் மொழிகள் தூற்றியதை எவ்வுயிர்க்கும்
அன்பு_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

#2905
கொதிக்கின்ற வன் மொழியால் கூறியதை ஐயோ
மதிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2906
சினம்கொண்ட போது எல்லாம் செப்பிய வன் சொல்லை
மனம்கொள்ளும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2907
செய்த நன்றி எண்ணாச் சிறியவனேன் நின் அருளை
வைத்து எண்ணும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2908
பொய்த்த மனத்தேன் புகன்ற கொடும் சொற்கள் எலாம்
வைத்து நினைக்கும்-தோறும் வாளிட்டு அறுக்குதடா

#2909
பொங்குகின்ற தீமை புகன்றது எலால் எண்ணியெண்ணி
மங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2910
ஊடுகின்ற சொல்லால் உரைத்ததனை எண்ணியெண்ணி
வாடுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2911
உயங்குகின்றேன் வன் சொல் உரைத்ததனை எண்ணி
மயங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2912
சொல் விளைவு நோக்காதே சொன்னது எலாம் எண்ணு-தொறும்
வல்_வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

#2913
மேல் விளைவு நோக்காதே வேறு சொன்னது எண்ணு-தொறும்
மால் வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

#2914
விஞ்சகத்தால் அந்தோ விளம்பியதை எண்ணு-தொறும்
வஞ்சகத்தேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

#2915
விலங்குகின்ற நெஞ்ச விளைவை எண்ணும்-தோறும்
மலங்குகின்றேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

#2916
தூய்மை இலா வன் மொழியால் சொன்ன எலாம் எண்ணு-தொறும்
வாய்மை_இலேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

#2917
கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி
வலிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2918
நீட்டுகின்ற வஞ்ச நெடும்சொல் எலாம் நெஞ்சகத்தே
மாட்டுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2919
பொருந்துகின்ற வஞ்சப் புதுமை எண்ணி ஐயோ
வருந்துகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2920
வெருவிக்கும் வஞ்ச வெறும் சொல் எலாம் நெஞ்சில்
வருவிக்கும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

#2921
ஊடும் போது உன்னை உரைத்த எலாம் நாய்_அடியேன்
நாடும் போது எல்லாம் என் நாடி நடுங்குதடா

#2922
வாய்க் கடையா வன் சொல் வழங்கிய என் வன் மனத்தை
நாய்க் கடையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

#2923
கன்றி உரைத்த கடும் சொல் கடுவை எலாம்
நன்றி_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

#2924
புன்மையினால் வன் சொல் புகன்ற புலைத் தன்மை எலாம்
நன்மை_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

#2925
ஊன் எண்ணும் வஞ்ச உளத்தால் உரைத்த எலாம்
நான் எண்ணும்-தோறும் என்றன் நாடி நடுங்குதடா

#2926
வஞ்சனையால் அஞ்சாது வன் சொல் புகன்ற எலாம்
நஞ்சு_அனையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

#2927
கோண நெடு நெஞ்சக் குரங்கால் குதித்த எலாம்
நாணம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

#2928
ஊனம் இலா நின்னை உரைத்த கொடும் சொல்லை எலாம்
ஞானம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

#2929
எற்றே மதி_இலியேன் எண்ணாது உரைத்ததனைச்
சற்றே நினைத்திடினும் தாது கலங்குதடா

#2930
இனி ஏது செய்வேன் இகழ்ந்து உரைத்த சொல்லைத்
தனியே நினைத்திடினும் தாது கலங்குதடா

#2931
நாய்_அனையேன் எண்ணாமல் நலங்கியவன் சொல்லை எலாம்
தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா

#2932
நிற்கு உருகா வஞ்ச நினைவால் நினைத்த எலாம்
சற்குருவே எண்ணு-தொறும் தாது கலங்குதடா

#2933
வெம் நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
என் அரசே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா

#2934
நன்கு அறியேன் வாளா நவின்ற நவை அனைத்தும்
என் குருவே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா

#2935
ஆவது அறியாது அடியேன் இகழ்ந்த கொடும்
பாவம் நினைக்கில் பகீரென்று அலைக்குதடா

#2936
வந்திப்பு அறியேன் வழங்கியவன் சொல்லை எலாம்
சிந்திக்கில் உள்ளே திடுக்கிட்டு அழுங்குதடா

#2937
குற்றம் நினைத்த கொடும் சொல் எலாம் என் உளத்தே
பற்ற நினைக்கில் பயமாய் இருக்குதடா

#2938
எள்ளுகின்ற தீமை எடுத்துரைத்தேன் ஆங்கு அதனை
விள்ளுகின்ற-தோறும் உள்ளம் வெந்து வெதும்புதடா

@29. திருவடிக் கண்ணி

#2939
மின்_இடையாள் காண விளங்கும் மன்றில் ஆடுகின்றாய்
என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா

#2940
வன்ன அமுதே இன்பம் மலிய மன்றில் ஆடுகின்றாய்
என் அமுதே உன்றன் இணை அடி-தான் நோவாதா

#2941
நண்ணிய மெய் அன்பர் நயக்க மன்றில் ஆடுகின்றாய்
புண்ணியனே உன்றனது பொன் அடி-தான் நோவாதா

#2942
அன்பர் இன்பம் கொள்ள நடம் அம்பலத்தே ஆடுகின்றாய்
இன்பு உருவாம் உன்றன் இணை அடி-தான் நோவாதா

#2943
நூல் உணர்வாம் நுண்ணுணர்வின் நோக்க நடம் ஆடுகின்றாய்
மால் அறியா உன்றன் மலர்ப் பாதம் நோவாதா

#2944
எள்ளல் அற அம்பலத்தே இன்ப நடம் ஆடுகின்றாய்
வள்ளலே உன்றன் மலர்_அடி-தான் நோவாதா

#2945
சைவம் நிலைத்துத் தழைத்து ஓங்க ஆடுகின்றாய்
தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா

#2946
எல்லாரும் இன்புற்றிருக்க நடம் ஆடுகின்றாய்
வல்லாரின் வல்லாய் மலர்_பாதம் நோவாதா

#2947
அவமே கழிந்து இன்பம் அன்பர் கொள ஆடுகின்றாய்
சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா

#2948
தற்பரமாம் மன்றில் தனி நடனம் ஆடுகின்றாய்
சிற்பரமே உன்றன் திரு_மேனி நோவாதா

#2949
வில்வ வேர் மாலை மிளிர்ந்து அசைய ஆடுகின்றாய்
செல்வமே உன்றன் திரு_மேனி நோவாதா

@30. பேரன்புக் கண்ணி

#2950
கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன்
அற்புதச் சிற்றம்பலத்தில் அன்பு வைத்தேன் ஐயாவே

#2951
ஈடணைகள் நீக்கி நமக்கு இன்பு அளிக்கும் என்று மன்றில்
ஆடும் திரு_அடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே

#2952
நான் அந்தம் எய்தா நலம் பெறவே எண்ணி மன்றில்
ஆனந்த நாடகத்துக்கு அன்பு வைத்தேன் ஐயாவே

#2953
வாடல் அறச் சாகா_வரம் கொடுக்கும் என்று மன்றில்
ஆடல் அடிப் பொன்_மலர்க்கே அன்பு வைத்தேன் ஐயாவே

#2954
பொற்பு உறவே பொன்றாப் பொருள் அளிக்கும் என்று மன்றில்
அற்புதப் பொன் சேவடிக்கே அன்பு வைத்தேன் ஐயாவே

#2955
ஈனம் மறுத்து என்றும் இறவாமை நல்கும் என்றே
ஞான மணி மன்றிடத்தே நண்பு வைத்தேன் ஐயாவே

#2956
ஓர் துணை நின் பொன் அடி என்று உன்னுகின்றேன் உன்னை அன்றி
ஆர் துணையும் வேண்டேன் என் அன்பு உடைய ஐயாவே

#2957
பூசைசெய்து பெற்ற உன்றன் பொன் அடி மேல் அன்றி அயல்
ஆசை ஒன்றும் இல்லை எனக்கு அன்பு உடைய ஐயாவே

#2958
இச்சை நின் மேல் அன்றி எனக்கு எள்ளளவும் வேறும் ஒன்றில்
இச்சை இலை நின் ஆணை என் அருமை ஐயாவே

#2959
எப்படி நின் உள்ளம் இருக்கின்றது என்னளவில்
அப்படி நீ செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே

#2960
எவ்வண்ணம் நின் கருத்து இங்கு என்னளவில் எண்ணியதோ
அவ்வண்ணம் செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே

#2961
தேசுறு நின் தண் அருளாம் தெள் அமுதம் கொள்ள உள்ளே
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே

#2962
மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே

#2963
நாசம் இலா நின் அருளாம் ஞான மருந்து உண்ண உள்ளே
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே

@31. நடேசர் கொம்மி

#2964
கொம்மி அடிப் பெண்கள் கொம்மி அடி இரு
கொங்கை குலுங்கவே கொம்மி அடி

#2965
நம்மை ஆளும் பொன்_அம்பல_வாணனை
நாடிக் கொம்மி அடியுங்கடி பதம்
பாடிக் கொம்மி அடியுங்கடி

#2966
காமம் அகற்றிய தூயன் அடி சிவ
காம சவுந்தரி நேயனடி
மா மறை ஓது செவ் வாயனடி மணி
மன்று எனும் ஞான ஆகாயனடி

#2967
ஆனந்தத் தாண்டவ ராஜனடி நமை
ஆட்கொண்டு அருளிய தேஜனடி
வான் அந்த மா மலை மங்கை மகிழ் வடி
வாளனடி மணவாளனடி

#2968
கல்லைக் கனிவிக்கும் சுத்தனடி முடி
கங்கைக்கு அருளிய கர்த்தனடி
தில்லைச் சிதம்பர சித்தனடி தேவ
சிங்கமடி உயர் தங்கமடி

#2969
பெண் ஒரு பால் வைத்த மத்தனடி சிறு
பிள்ளைக் கறி கொண்ட பித்தனடி
நண்ணி நமக்கு அருள் அத்தனடி மிக
நல்லனடி எல்லாம்_வல்லனடி

#2970
அம்பலத்து ஆடல் செய் ஐயனடி அன்பர்
அன்புக்கு எளிதரும் மெய்யனடி
தும்பை முடிக்கு அணி தூயனடி சுயஞ்
சோதியடி பரஞ்சோதியடி

@32. தோழியர் உரையாடல்

#2971
தண் மதி ஒண் முகப் பெண்மணியே உன்னைத்
தான் கொண்ட நாயகர் ஆரேடி
அண்மையில் பொன் அணி அம்பலத்து ஆடல் செய்
ஐயர் அமுதர் அழகரடி

#2972
செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன்
செங்கை பிடித்தவர் ஆரேடி
அங்கு அயலார் அன்று பொன்_அம்பலத்து எங்கள்
ஆனந்தத் தாண்டவ ராஜனடி

#2973
கன்னல் சுவை மொழி மின்_இடையாய் உன்னைக்
கன்னியழித்தவர் ஆரேடி
உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய்
உத்தமர் ஆனந்த சித்தரடி

#2974
தீமை இலாத பெண் மா மயிலே உன்னைச்
சேர்ந்து கலந்தவர் ஆரேடி
தாமம் முடிக்கு அணிந்து அம்பலத்தே இன்பத்
தாண்டவம் செய்யும் சதுரரடி

#2975
அன்ன நடைப் பெண்கள் ஆர்_அமுதே உன்னை
அன்பில் புணர்ந்தவர் ஆரேடி
துன்னல் உடையினர் அம்பலத்தே நின்ற
தூய திரு_நடராயரடி

#2976
கார் அளகப் பெண் சிகாமணியே உன்றன்
கற்பை அழித்தவர் ஆரேடி
பேர்_அளவைக் கடந்து அம்பலத்தே நின்ற
பித்தர் பரானந்த நித்தரடி

@33. தெண்டனிட்டேன்

#2977
தெண்டனிட்டேன் என்று சொல்லடி சுவாமிக்கு நான்
தெண்டனிட்டேன் என்று சொல்லடி.

#2978
தண்டலை விளங்கும் தில்லைத் தலத்தில் பொன்_அம்பலத்தே
கண்டவர் மயங்க வேடம்கட்டி ஆடுகின்றவர்க்கு

#2979
கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே
கனிந்த புன்னகை ஆடக் கருணைக் கடைக்கண் ஆட
அற்பு ஆர் பொன்_அம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
ஆடிக்கொண்டே என்னை ஆட்டம் கண்டாருக்கு

#2980
இழிந்தாலும் நம்மை இங்கே ஏற்றுவார் என்று அடைந்தால்
ஏற்றுவார் போலே பின்னும் இழியவைப்பாருக்குப்
பழம்-தான் நழுவி மெல்லப் பாலில் விழுந்தது என்னப்
பசப்பிப்பசப்பி அன்பர் பண்டம் பறிப்பவர்க்கு

#2981
சுட்ட திரு_நீறு பூசித் தொந்தோம் என்று ஆடுவார்க்குத்
தோன்று தலை மாலை அணி தோள் விளங்க வருவார்க்குப்
பிட்டுக்கு ஆசைப்பட்டு மாறன் பிரம்படி பட்டவர்க்குப்
பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ளத் தவ வேடருக்கு

#2982
வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய்பவருக்கு
மாசு பறித்தவர் கையில் காசு பறிக்கின்றவர்க்குத்
தாழ்ந்தாரை அடிக்கடி தாழக் காண்பவருக்குத்
தான் ஆகி நான் ஆகித் தனியே நின்றவருக்கு

#2983
ஆதி அந்தம் நடு இல்லா ஆனந்த நாடருக்கு
அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்குச்
சோதி மயமாய் விளங்கும் தூய வடிவாளருக்குத்
தொண்டர் குடி கெடுக்கவே துஜம்கட்டிக்கொண்டவர்க்கு

#2984
பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய்ப்
பண்பு உரைத்துத் தூதன் என்றே பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு
வீட்டுக்கு ஆசைப்படுவாரை வீட்டை விட்டுத் துரத்தியே
வேட்டாண்டியாய் உலகில் ஓட்டாண்டி ஆக்குவார்க்கு

#2985
தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
சாதி குலம் அறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு
ஏய தொழில் அருளும் என் பிராண_நாயகர்க்கு
ஏமாந்தவரை எல்லாம் ஏமாத்தும் ஈசருக்கு

@34. இன்னந் தயவு வரவிலையா

#2986
இன்னம் தயவு வரவிலையா உனக்கு என் மீதில்
என்ன வர்மம் சொலையா

#2987
அன்னம்பாலிக்கும் தில்லைப் பொன்_அம்பலத்தில் ஆடும்
அரசே அரசே அரசே என்று அலறவும்

#2988
சின்னஞ்சிறு வயதில் என்னை அடிமைகொண்ட
சிவமே சிவமே சிவமே என்று அலறவும்

#2989
முன்னம் பிழை பொறுத்தாய் இன்னம் பொறாதுவிட்டால்
முறையோ முறையோ முறையோ என்று அலறவும்

#2990
தன்னை அறியா என்னை இன்னலுறச் செய்தாயே
தகுமோ தகுமோ தகுமோ என்று அலறவும்

#2991
பண்டு மகிழ்ந்து எனை ஆட்கொண்டு கருணைசெய்த
பரமே பரமே பரமே என்று அலறவும்

#2992
கொண்டு குலம் பேசுவார் உண்டோ உலகில் எங்கள்
குருவே குருவே குருவே என்று அலறவும்

@35. வினா விடை

#2993
ஆகமமும் ஆரணமும் அரும் பொருள் என்று ஒருங்குரைத்த
ஏக உரு ஆகி நின்றார் இவர் ஆர் சொல் தோழி
மாக நதி முடிக்கு அணிந்து மணி மன்றுள் அனவரத
நாக மணி மிளிர நடம் நவில்வார் காண் பெண்ணே

#2994
அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு
அனுபவமாகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே

#2995
அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவமாகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே

@36. நற்றாய் கவன்றது

#2996
திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள்
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதிச் சடை வள்ளலே என்பாள்
இருவருக்கு அரிய ஒருவனே எனக்கு இங்கு யார் துணை நின் அலாது என்பாள்
வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே

#2997
ஓடுவாள் தில்லைத் திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகித்
தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள்
வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்_வினையேன் பெற்ற மகளே

#2998
உலகு எலாம் தழைப்பப் பொதுவினில் ஓங்கும் ஒரு தனித் தெய்வம் என்கின்றாள்
இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள்
அலகு_இலாக் கருணை அமுதன் என்கின்றாள் அன்பர்கட்கு அன்பன் என்கின்றாள்
திலக வாள் நுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற்று அழுங்குகின்றாளே

#2999
திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள்
உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள்
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள்
மரு எலாம் மயங்கும் மலர்க் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே

#3000
மின் இணைச் சடில விடங்கன் என்கின்றாள் விடைக் கொடி விமலன் என்கின்றாள்
பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள்
என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள்
துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே

#3001
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள்
பெரும் களி துளும்ப வடவனத்து ஓங்கும் பித்தரில் பித்தன் என்கின்றாள்
ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள்
தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே

#3002
மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரை என்கின்றாள்
வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள்
ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள்
பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே

#3003
திருத் தகு தில்லைத் திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள்
பெருத்த குங்குமப் பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள்
மருத் தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள்
குருத் தகு குவளைக் கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே

#3004
அம்பலத்து ஆடும் அழகனைக் காணாது அருந்தவும் பொருந்துமோ என்பாள்
கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள்
வம்பு அணி முலைகள் இரண்டும் நோக்கிடுவாள் வள்ளலைப் பரிகிலீர் என்பாள்
உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே

@37. சல்லாப லகரி

#3005
சுந்தர நீறு அணி சுந்தரர் நடனத் தொழில்_வல்லார்
வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதே நீ
மந்தணம் இது கேள் அம் தனம் இல நம் வாழ்வு எல்லாம்
அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே

#3006
நம் பலமாம் என நல் மனை புக்கார் நடராஜர்
எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன்
வம்பு அல மடவாய் எம்முடை இன்ப வாழ்வு எல்லாம்
அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே

@38. தலைமகளின் முன்ன முடிபு

#3007
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய்ப் பொதுவில் நடிப்போய்
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே முக் கண் ஓங்கு கரும்பே
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன்
செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே

#3008
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய்
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணாத் துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே

#3009
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்துக் கனிந்து அருளல் வேண்டும்
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே

#3010
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான்
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே

#3011
ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால்
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனைக் கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய்
நாடுதற்கு இங்கு என்னாலே முடியாது நீயே நாடுவித்துக் கொண்டு அருள்வாய் ஞான சபாபதியே

#3012
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன்
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய்
மன்னு மணிப் பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மனக் கலக்கம் தவிர்த்தே

#3013
எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே
மணம் குறித்துக் கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே
கணம் குறித்துச் சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல்
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே

#3014
மனம் பிடியாமையினாலோ மாட்டாமையாலோ மறதியினாலோ எனது வருத்தம்-அதனாலோ
தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனைச்
சினம் பிடியாத் தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே

#3015
நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் நாடிய தத்துவத் தோழி நங்கையர் என் வசத்தே
மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன்
தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று எனத் தேவர் செப்பியதும் உளதே

#3016
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும்
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன்
பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன்
இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே

@39. வேட்கைக் கொத்து

#3017
விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன்
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும்
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன்
கண் படைத்தும் குழியில் விழக் கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

#3018
சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவ_பெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன்
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான்
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள்
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

#3019
என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன்
தன்னை அறியாப் பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான்
பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

#3020
தெருள் அமுதத் தனி யோகர் சிந்தையிலும் ஞானச் செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன்
அருள் அமுதம் அளிப்பன் என்றே அன்று மணம் புணர்ந்தான் அளித்து அறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில்
இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ

#3021
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணைச் செல்வ நடராஜன்
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார்
இன்மயம் இல்லாதவர் போல் இன்று மணந்து அருளான் இறை அளவும் பிழை புரிந்தேன்_இல்லை அவன் இதயம்
கல் மயமோ அன்று சுவைக் கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

#3022
எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன்
பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன்
வண் குணத்தால் அனுபவம் நான் அறிய நின்ற பொழுதில் வந்து அறியான் இன்பம் ஒன்றும் தந்து அறியான் அவனும்
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் எனப் பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ

#3023
பொய்யாத புகழ்_உடையான் பொதுவில் நடம் புரிவான் புண்ணியர்-பால் நண்ணிய நல் புனித நடராஜன்
கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வரக் காணேன்
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள்
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ

#3024
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன்
தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனைத் தனித்துத் தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான்
பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசாப் பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான்
உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ

#3025
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன்
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலைப் பரிந்து அணிந்தான் தெரிந்த தனிப் பருவம்-இதில் பரியான்
தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழியச் சம்மதமும் வருமோ
கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ

#3026
தனித்த பரநாத முடித் தலத்தின் மிசைத் தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன்
இனித்த சுகம் அறிந்துகொளா இளம் பருவம்-தனிலே என் புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன்_இல்லை
அனித்தம் இலா இச் சரிதம் யார்க்கு உரைப்பேன் அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயல் அறிவார் உளரோ
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ

@40. அறநிலை விளக்கம்

#3027
மருவு ஆணைப் பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அப் பெண்
உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பைக் கடிந்து உண்ணும் கருத்தனேல் எம்
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி எனக் கூறவொணாதே

@41. அருள்நிலை விளக்கம்

#3028
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும்
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே
செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்பக் கேளீர்
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே