திருவருட்பா – ஆறாம் திருமுறை


@1 பரசிவ வணக்கம்

#3267
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே
எல்லாம்_வல்லான்-தனையே ஏத்து

#3268
திரு விளங்கச் சிவயோக சித்தி எலாம் விளங்கச் சிவ ஞான நிலை விளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெரு விளங்கு திரு_தில்லைத் திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம்
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணிப் பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே

#3269
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே.

@2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை

#3270
அகர நிலை விளங்கு சத்தர் அனைவருக்கும் அவர்-பால் அமர்ந்த சத்திமாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகர வரும் அண்ட வகை அனைத்தினுக்கும் பிண்டப் பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும்
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும்
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#3271
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய்
அண்ணுறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#3272
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி
நேர் ஆதி விளக்கம்-அதாய்ப் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும்
பேர்_ஆசை விளக்கம்-அதாய்ச் சுத்த விளக்கம்-அதாய்ப் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#3273
இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகித்
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்தியப் பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல்
நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிரதிசய இன்பம் ஞான சித்திப் பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய்த்
திடம் பெற ஓங்கிய இயற்கைத் தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#3274
எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய்ச்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாதாய்த் துரிய வெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடும் கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#3275
அயர்வு அறு பேர்_அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் அறிவறிவுள் அறிவாய் ஆங்கு அதனுள் ஓர் அறிவாய்
மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மைத் தனி அறிவாய்ச் செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய்த்
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய்த் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய்
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#3276
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பு இன்றிக்
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#3277
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூதப் பகுதி முதல் பகர் நாதப் பகுதி வரையான
ஏர்பெறு தத்துவ உருவாய்த் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய்
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#3278
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம்
பரவு மற்றைப் பொருள்கள் உயிர்த் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அப் புறத்தும்
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளிப் பேர்_ஒளியாய்
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#3279
ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம்
பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்தப் பேர்_ஆனந்தத்தோடு
ஏற்றிடும் ஏகானந்தம் அத்துவிதானந்தம் இயன்ற சச்சிதானந்தம் சுத்த சிவானந்த
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#3280
வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#3281
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர்
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார்
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#3282
ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார் உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார்
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும்
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்

@3. ஆற்றாமை

#3283
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலைத் தொழில் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3284
கற்ற மேலவர்-தம் உறவினைக் கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3285
கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கல்_மன குரங்கு_அனேன் கடையேன்
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3286
நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தைப் போக்கி வீண் போது போக்குறுவேன்
நலத்தில் ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினும் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3287
செடி முடிந்து அலையும் மனத்தினேன் துன்பச் செல்லினால் அரிப்புண்ட சிறியேன்
அடி முடி அறியும் ஆசை சற்று அறியேன் அறிந்தவர்-தங்களை அடையேன்
படி முடிவு அழித்துக் கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்சக்
கொடி முடிந்திடுவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3288
அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அறக் கடையவரினும் கடையேன்
இரங்கில் ஓர்சிறிதும் இரக்கம் உற்று அறியேன் இயலுறு நாசியுள் கிளைத்த
சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கு எனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3289
வாட்டமே உடையார்-தங்களைக் காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத் தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3290
கலைத் தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன்
விலைத் தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்தப்
புலைத் தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
கொலைத் தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3291
பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்றுப் பணம் பறித்து உழல்கின்ற படிறேன்
எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன்
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு எனத் திரிந்து உழல்கின்றேன்
குணம் இலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3292
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

@4. பிறப்பவம் பொறாது பேதுறல்

#3293
குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்துப் பெரும் பாவி வஞ்ச நெஞ்சப் புலையேன்
நலத்திடை ஓர் அணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்கு நகை தோன்றநின்றேன் பேய்க்கும் மிக இழிந்தேன்
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே.

#3294
விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிகப் பெரிதும் சிறியேன்
அளக்க அறியாத் துயர்க் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிகத் துரும்பேன்
கிளக்க அறியாக் கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன்
களக்கு அறியாப் புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே.

#3295
அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும் அதிகரித்துத் துன்மார்க்கத்து அரசு செயும் கொடியேன்
குறியாத கொடும் பாவச் சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக் கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன்
எறியாத புவியிடை நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதயம் அறியேன் மன்றில் இனித்த நடத்து இறையே.

#3296
இனித்த பழச்சாறு விடுத்து இழித்த மலம் கொளும் ஓர் இழி விலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம் ஒன்றும் இல்லேன்
அனித்த நெறியிடைத் தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அறக் கடையர்-தமக்கு எல்லாம் அறக் கடையன் ஆனேன்
பனித்த மன_குரங்காட்டிப் பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன்
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனிக் கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே.

#3297
ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலாப் புலையேன்
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன்
மாறுகின்ற குணப் பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன்
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய்க் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே.

#3298
அரசர் எலாம் மதித்திடப் பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிகக் கிளைத்தேன் அருள் அறியாக் கடையேன்
புரசமரம் போல் பருத்தேன் எட்டி எனத் தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன்
பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன் பசை அறியாக் கருங்கல்_மனப் பாவிகளில் சிறந்தேன்
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே.

#3299
பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
மருள் அறியாத் திருவாளர் உளம் கயக்கத் திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன்
வெருள் அறியாக் கொடு மனத்தேன் விழற்கு இறைத்துக் களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன்
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே.

#3300
தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமைப் போல நடித்துத் தருக்குகின்றேன் உணர்ச்சி இலாச் சடம் போல இருந்தேன்
பவம் புரிவேன் கமரினிடைப் பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மனப் பாறை சுமந்து உழல்வேன்
அவம் புரிவேன் அறிவு அறியேன் அன்பு அறியேன் அன்பால் ஐயா நின் அடி_அடைந்தார்க்கு அணுத்துணையும் உதவேன்
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே.

#3301
இறையளவும் அறிவு ஒழுக்கத்து இச்சை_இலேன் நரகில் இருந்து உழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டுத் தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன்
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடுஞ் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன்
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே.

#3302
காட்டுகின்ற உவர்க் கடல் போல் கலைகளிலும் செல்வக் களிப்பினிலும் சிறந்து மிகக் களித்து நிறைகின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவாப் படும் கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருள் பெருமை ஒருசிறிதும் தெரியேன் அச்சம்_இலேன் நாணம்_இலேன் அடக்கம் ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே.

@5. மாயைவலிக் கழுங்கல்

#3303
தாவும் மான் எனக் குதித்துக்கொண்டு ஓடித் தையலார் முலை_தடம் படும் கடையேன்
கூவு காக்கைக்குச் சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவுறாது உழல் ஈ எனப் பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவுறா வகைக்கு என் செயக் கடவேன் தந்தையே எனைத் தாங்கிக்கொண்டு அருளே.

#3304
போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேகம் ஆதியைப் பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

#3305
விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியைத் தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன்
பழியைத் தூர்ப்பதற்கு என் செயக் கடவேன் பரமனே எனைப் பரிந்துகொண்டு அருளே.

#3306
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன்
குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன்
சிதத்திலே உறற்கு என் செயக் கடவேன் தெய்வமே எனைச் சேர்த்துக்கொண்டு அருளே.

#3307
கொடிய வெம் புலிக் குணத்தினேன் உதவாக் கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவப் பொழுதையே கழிப்பேன்
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன்
அடியன் ஆவதற்கு என் செயக் கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

#3308
தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன்
ஏங்குகின்றதே தொழில் எனப் பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால்
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு எனப் பறந்தேன்
ஓங்குகின்றதற்கு என் செயக் கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே.

#3309
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன்
பருத்த ஊனொடு மலம் உணத் திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன்
கருத்து இலாது அயல் குரைத்து அலுப்படைந்த கடைய நாயினில் கடையனேன் அருட்குப்
பொருத்தன் ஆவதற்கு என் செயக் கடவேன் புண்ணியா எனைப் புரிந்துகொண்டு அருளே.

#3310
துருக்கலோ கொடும் கருங்கலோ வயிரச் சூழ் கலோ எனக் காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவக் கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் எனப் பந்தமுற்று அலைவேன்
திருக்கு எலாம் பெறு வெருக்கு எனப் புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான்
உருக்கல் ஆகுதற்கு என் செயக் கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே.

#3311
கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன்
மானம் மேலிடச் சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன்
ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன் இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன்
ஞானம் மேவுதற்கு என் செயக் கடவேன் நாயகா எனை நயந்துகொண்டு அருளே.

#3312
இருளையே ஒளி என மதித்து இருந்தேன் இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன்
மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் எனத் திரிந்தேன்
பொருளை நாடும் நல் புந்திசெய்து அறியேன் பொதுவிலே நடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற்கு என் செயக் கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

@6. முறையீடு

#3313
மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன்
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே
இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3314
அகங்காரக் கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன் அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன்
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமரக் கனி போல இச்சை கனிந்து உழல்வேன்
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ
இகம் காணத் திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3315
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன்
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காமப் பெரும் கடலை நீந்தும் வகை அறியேன்
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசைச் சேர்க்க அறிவேனோ
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3316
தேகம் உறு பூத நிலைத் திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன்
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடைக் கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3317
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன்
நாதாந்தத் திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன்
போதாந்தத் திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3318
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன்
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம்
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3319
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திரச் சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன்
ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியாக் கடல் போல் ஆனந்தப் பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன்
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணிப் பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3320
சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ந் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன்
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3321
தத்துவம் என் வசமாகத் தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன்
அத்த நிலை சத்த நிலை அறியேன் மெய் அறிவை அறியேன் மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்த சிவ சன்மார்க்கத் திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3322
வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன்
திரை அறு தண் கடல் அறியேன் அக் கடலைக் கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன்
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

@7. அடியார் பேறு

#3323
அடியார் வருத்தம்-தனைக் கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம்
நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ
கடியாக் கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே.

#3324
பை ஆர் பாம்பு கொடியது எனப் பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள்
ஐயா கருணை அளித்தனை என்னளவில் இன்னும் அளித்திலையே
மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன்
நையாநின்றேன் ஐயோ நான் பாம்பில் கொடியன் ஆனேனே.

#3325
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான்
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ
மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தம் கண்டு இருத்தல் அழகோ எம் கோவே.

#3326
மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையாக் கல் என்று
பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே
இருள் நாடிய இச் சிறியேனுக்கு இன்னும் இரங்காது இருந்தாயே.

#3327
முன்னும் கொடுமை பல புரிந்து முடுகிப் பின்னும் கொடுமை செய
உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே
மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு
இன்னும் கருணை புரிந்திலை நான் என்ன கொடுமை செய்தேனோ.

#3328
அங்கே அடியர்-தமக்கு எல்லாம் அருளார் அமுதம் அளித்து ஐயோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்-தான் அளிக்க இசைந்தாயேல்
செம் கேழ் இதழிச் சடைக் கனியே சிவமே அடிமைச் சிறு நாயேன்
எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே.

#3329
அளியே அன்பர் அன்பே நல் அமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்ப நடம் புரியும் அரசே விதி ஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையாத் திருவுளம்-தான்
எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே.

#3320
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத் தெளிந்து
வாது நினைக்கும் மனக் கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில் யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே.

#3331
பொது என்று அறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவது அன்றிக்
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது
இது என்று அறியா எனை வருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எது என்று அறிவேன் என் புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.

#3332
வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினைத் துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளம்-தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்து இங்கு இருந்தது காண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.

#3333
கல்லும் கனியத் திரு_நோக்கம் புரியும் கருணைக் கடலே நான்
அல்லும்_பகலுந் திரு_குறிப்பை எதிர்பார்த்து இங்கே அயர்கின்றேன்
கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்புத் தேவர் மனம் போலச்
சொல்லும் இரங்கா வன்மை கற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.

#3334
படி மேல் ஆசை பல வைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்து சுகக்
கொடி மேல் உறச்செய்து அருள்கின்றாய் என்-பால் இரக்கம் கொண்டிலையே
பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன்
அடி மேல் ஆசை அல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே.

#3335
நாயேன் உலகில் அறிவு வந்த நாள் தொட்டு இந்த நாள் வரையும்
ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எது கொண்டு வாழ்ந்து இங்கு இருக்கத் துணிவேனே.

#3336
நயத்தால் உனது திரு_அருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இ உடம்பைச் சுமக்கின்றேன் எம் பரஞ்சுடரே.

#3337
இன்பம் மடுத்து உன் அடியர் எலாம் இழியாது ஏறி இருக்கின்றார்
வன்பரிடத்தே பல கால் சென்று அவரோடு உறவு வழங்கி உன்றன்
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடிப் பாடி அடுத்த வினைத்
துன்பம் முடுகிச் சுடச்சுடவும் சோறு உண்டு இருக்கத் துணிந்தேனே.

#3338
எ நாள் கருணைத் தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ
அ நாள் இ நாள் இ நாள் என்று எண்ணிஎண்ணி அலமந்தேன்
செல் நாள்களில் ஓர் நல் நாளும் திரு_நாள் ஆனது இலை ஐயோ
முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.

#3339
எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ
அந்த வகையை நான் அறியேன் அறிவிப்பாரும் எனக்கு இல்லை
இந்த வகை இங்கு ஐயோ நான் இருந்தால் பின்னர் என் செய்வேன்
பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மைப் பரம் பொருளே.

#3340
அடுக்கும் தொண்டர்-தமக்கு எல்லாம் அருள் ஈந்து இங்கே என்னளவில்
கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே
தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இத் தாழ்வு அகற்றி
எடுக்கும்துணையும் பிறிது இல்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.

#3341
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள்
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம் விடுத்தால் புறத்தும் உன்றன் மயம் அன்றே
நல்லார் எங்கும் சிவமயம் என்று உரைப்பார் எங்கள் நாயகனே.

#3342
கூடும் கருணைத் திரு_குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும்
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லைப் பர வெளியில்
ஆடும் செல்வத் திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே.

@8. ஆன்ம விசாரத் தழுங்கல்

#3343
போகமே விழைந்தேன் புலை மனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன்
ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியாக்
காகமே எனப் போய்ப் பிறர்-தமை வருத்திக் களித்த பாதகத் தொழில் கடையேன்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே.

#3344
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமைப் போய்ப் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார்
பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அறத் தொழில் புரியேன் அன்பினால் அடுத்தவர் கரங்கள்
கூப்பினும் கூப்பாக் கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே.

#3345
விழுத் தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள்
வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணை என மதித்துக்
கொழுத்து அலை மனத்துப் புழுத் தலைப் புலையேன் கொக்கு_அனேன் செக்கினைப் பல கால்
இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே.

#3346
புலை விலைக் கடையில் தலை குனித்து அலைந்து பொறுக்கிய சுணங்கு_அனேன் புரத்தில்
தலை_விலை பிடித்துக் கடை_விலை படித்த தயவு இலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன்
இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே.

#3347
கொட்டிலை அடையாப் பட்டி_மாடு_அனையேன் கொட்டைகள் பரப்பி மேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அற உண்டு குப்பை மேல் போட்ட
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே.

#3348
நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனை கலை இலர்க்கு ஒரு கலையில்
ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன்
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே.

#3349
அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் அசடனேன் அறிவு_இலேன் உலகில்
குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர்க் குழியிலே குளித்த வெம் கொடியேன்
வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயைக்
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே.

#3350
தொழுது எலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன் தூய்மை ஒன்று அறியேன்
கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உணக் கருதிய கருத்தேன்
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே.

#3351
வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டைச்
சட்டியே எனினும் பிறர் கொளத் தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய்
எட்டியே மண்ணாங்கட்டியே அனையேன் என்னினும் காத்து அருள் எனையே.

#3352
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதிய வறிஞருக்கு ஏதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை
அடுத்திலேன் அடுத்தற்கு ஆசையும் இல்லேன் அவனி மேல் நல்லவன் எனப் பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே.

@9. அவா அறுத்தல்

#3353
தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே
சீலம் ஆர் பூசைக் கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே
ஞாலம் மேலவர்க்குக் காட்டி நான் தனித்தே நவிலும் இ நாய் வயிற்றினுக்கே
காலை ஆதிய முப்போதினும் சோற்றுக் கடன் முடித்து இருந்தனன் எந்தாய்.

#3354
சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாம் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளி எனப் போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய்.

#3355
விருப்பு_இலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளைக் கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடாத் தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய்.

#3356
உறியிலே தயிரைத் திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ
குறியிலே அமைத்த உணவு எலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்த பேர்_ஆசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.

#3357
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண்
நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர் எனப் புகல்வேன் அய்யகோ அடிச் சிறு நாயேன்
பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய்.

#3358
பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திடத் துணியேன்
வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய்.

#3359
உடம்பு ஒரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால்
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த
தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன்
திடம் பெறும் மற்றைச் சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய்.

#3360
மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவாச்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன்
இளகிலா மனத்தேன் இனிய பச்சடிசில் எவற்றிலும் இச்சைவைத்து இசைத்தேன்
குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய்.

#3361
தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன்
கொண்டுபோய் வயிற்றுக் குழி எலாம் நிரம்பக் கொட்டினேன் குணம் இலாக் கொடியேன்
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன்
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய்.

#3362
வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி வைத்தலே துவட்டலில் சுவைகள்
உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்குத் தொழில் எனத் துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியைப்
பொறுத்தலே அறியேன் மலப் புலைக் கூட்டைப் பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய்.

#3363
பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒரு பெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப் பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
துருப் பிடி இருப்புத் துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய்.

#3364
அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடம்-தொறும் அலைந்தே
தடிக் கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்துத் தவம் புரிந்தான் என நடித்தேன்
பொடிக் கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய்.

#3365
உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்ப நின் ஆணை நின்றனக்கே
தொண்டு_உறாதவர் கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.

@10. தற் சுதந்தரம் இன்மை

#3366
இப் பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே
எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை அருள் சோதி இயற்கை என்னும்
துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனைச் சோதிப்பாயோ
அப்பா நின் திருவுளத்தை அறியேன் இ அடியேனால் ஆவது என்னே.

#3367
என்னே எம் பெருமான் இங்கு இன்னும் அணைந்திலன் என்றே ஏங்கிஏங்கி
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற
பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய்ப் போதமே என்
அன்னே என் அப்பா என்று அழைத்தல் அன்றி அடியேனால் ஆவது என்னே.

#3368
பொடி எடுக்கப் போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர்
தடி எடுக்கக் காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இத் தரத்தேன் இங்கே
முடியெடுக்க வல்லேனோ இறைவா நின் அருள் இலதேல் முன்னே வைத்த
அடி எடுக்க முடியாதே அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#3369
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#3370
உடுப்பவனும் உண்பவனும் நானே என்னவும் நாணம் உறுவது எந்தாய்
தடுப்பவனும் தடை தீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி
எடுப்பவனும் காப்பவனும் இன்ப அனுபவ உருவாய் என்னுள் ஓங்கி
அடுப்பவனும் நீ என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#3371
சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி
நோவது இன்று புதிது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#3372
இசைத்திடவும் நினைத்திடவும் பெரிது அரிதாம் தனித் தலைமை இறைவா உன்றன்
நசைத்திடு பேர்_அருள் செயலால் அசைவது அன்றி ஐந்தொழில் செய் நாதராலும்
தசைத்திடு புன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள் சுதந்தரத்தால் இங்கே
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#3373
கல்லாய மனத்தையும் ஓர் கணத்தினிலே கனிவித்துக் கருணையாலே
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவம் தந்து அருள் பதமும் பாலிக்கின்றோய்
எல்லாம் செய் வல்லோய் சிற்றம்பலத்தே ஆடல் இடுகின்றோய் நின்னால்
அல்லால் ஒன்று ஆகாதேல் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#3374
கரை சேரப் புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயைத்
திரை சேரப் புரிந்தாலும் திருவுளமே துணை என நான் சிந்தித்து இங்கே
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன்
அரைசே என் அம்மே என் அப்பா இச் சிறியேனால் ஆவது என்னே.

#3375
இன்பே நன்று அருளி அருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத்
துன்பே செய்வித்தாலும் என் செய்வேன் நின் அருளே துணை என்று அந்தோ
என் பேதை மனம் அடங்கி இருப்பது அன்றி எல்லாம் கண்டிருக்கும் என்றன்
அன்பே என் அம்மே என் அப்பா இச் சிறியேனால் ஆவது என்னே.

@11. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு

#3376
திருத் தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடிச் சிறியேன் சென்னி மிசை வருமோ
உருத் தகு நானிலத்திடை நீள் மலத் தடை போய் ஞான உருப் படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பிப் பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ
அருத் தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே.

#3377
கரணம் எலாம் கரைந்த தனிக் கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே.

#3378
நாதாந்தத் திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ
போதாந்தத் திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அறச் சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே.

#3379
சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ
பதம் பெறத் தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது எனப் பாடி மகிழ்வேனோ
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ
மதம் பரவு மலைச் செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே.

#3380
களக்கம் அறப் பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடைச் சிறியேன் உளம் பூத்துக் காய்த்தது ஒரு காய்-தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ
கொளக் கருதும் மல மாயைக் குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும்
துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே.

#3381
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள்
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ
தருப் பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே.

#3382
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான்
கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ
ஊன் அந்தம் அறக் கொளும் போது இனிக்க ரசம் தருமோ உணக் கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே.

#3383
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனிக் கரணப் பூவை
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம்
பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ
வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே.

#3384
தீட்டு மணிப் பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்தச் செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன்
காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ
ஈட்டு திரு_அடிச் சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே.

#3385
ஞான மணிப் பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன்
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ
ஈனம் உறும் அகங்காரப் புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கதப் பேய் எனைப் பிடித்துக்கொளுமோ
ஆன மலத் தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே.

@12. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

#3386
தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால்
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித் திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன்.

#3387
பெற்ற தம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே.

#3388
வெம் மதிக் கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக்கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே
இ மதிச் சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம் மதிக் கருணைத் திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய்.

#3389
பொய் பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில் ஓர் புல்_முனை ஆயினும் பிறர்க்கு
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே
கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால்
செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.

#3390
அப்பு அணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம் புரி அரசே
இப் புவி-தனிலே அறிவு வந்தது தொட்டு இந்த நாள் வரையும் என்றனக்கே
எப் பணி இட்டாய் அப் பணி அலது என் இச்சையால் புரிந்தது ஒன்று இலையே
செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.

#3391
முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபை நடத்து அரசு உன் புணர்ப்பு அலால் என் புணர்ப்பு அலவே
என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு எனக் காண்கின்றேன் தனித்தே.

#3392
இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன்
தன் உளப் புணர்ப்பு இங்கு எனக்கு ஒருசிறிதும் சம்மதம் அன்று நான் இதனைப்
பன்னுவது என்னே இதில் அருவருப்புப் பால் உணும் காலையே உளதால்
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே.

#3393
அறிவு இலாச் சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பைப்
பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே
செறிவு இலாக் கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன்
எறிவு இலாச் சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய்.

#3394
இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்
றன் சுதந்தரம் இங்கு எனக்கு அதில் இறையும் சம்மதம் இல்லை நான்-தானே
என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடியதும் இலை ஈண்டே.

#3395
செறிவது இல் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள் அன்றி
அறிவு-அது இல்லாத சிறுபருவத்தும் அடுத்தவர் கொடுத்த காசு அவர் மேல்
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந்ததுவே
பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவது என்னே.

#3396
பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அப் பணங்களைப் பல கால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளைக் கண்டனன் இனிச் சொல்வது என்னே.

#3397
கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு
திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன்
தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின்றேன் இது நான்-தான் இயம்பல் என் நீ அறிந்ததுவே.

#3398
இ உலகு-அதிலே இறை அரசாட்சி இன்பத்தும் மற்றை இன்பத்தும்
எவ்வளவெனினும் இச்சை ஒன்று அறியேன் எண்ணு-தோறு அருவருக்கின்றேன்
அ உலகு-அதிலே இந்திரர் பிரமர் அரி முதலோர் அடைகின்ற
கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே.

#3399
சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகம் ஓர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்று அறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும்
உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்.

#3400
இறக்கவும் ஆசை இல்லை இப்படி நான் இருக்கவும் ஆசை இன்று இனி நான்
பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை
துறக்கவும் ஆசை இலை துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன்று இலையே.

#3401
சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடித் தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும்
நல் சபைக்கு உரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடித்
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய்.

#3402
உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது
ஒருமையுற்று அழியாப் பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி
இரு நிலத்து ஓங்கிக் களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே
திரு_மணிப் பொதுவில் அன்பு_உடையவராச் செய்யவும் இச்சை காண் எந்தாய்.

#3403
எவ்வுயிர்த் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும்
அ உயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும்
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடிச் சிவசிவ என்று கூத்தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே ஓங்கவும் இச்சை காண் எந்தாய்.

#3404
உலக அறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி உன் அறிவு அடையும் நாள் வரையில்
இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடி நின்று உனையே
அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய்.

#3405
திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில்
உரு வளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவாறு இயல்பெறப் புதுக்கி
மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும்
கரு வளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சை காண் எந்தாய்.

#3406
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும்
துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய்.

#3407
கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த கடும் துயர் அச்சம் ஆதிகளைத்
தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க உஞற்றவும் அம்பலம்-தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய்.

#3408
மண்ணுலகு-அதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம்
நண்ணும் அ வருத்தம் தவிர்க்கும் நல் வரம்-தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய்.

#3409
இவை அலால் பிறிது ஓர் விடயத்தில் இச்சை எனக்கு இலை இவை எலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே
தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை
நவை இலா இச்சை என அறிவிக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.

@13. பிள்ளைப் பெரு விண்ணப்பம்

#3410
தனிப் பெரும் சோதித் தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே
கனிப் பெரும் கருணைக் கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே
இனிச் சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர்ப் பொன் அடி ஆணை.

#3411
திரிபு இலாப் பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே
உரிய நல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டு அருள் இதுவே.

#3412
தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லாத் தலைவனே திரு_சிற்றம்பலத்தே
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே
ஞான நாடகம் செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டு அருள் இதுவே.

#3413
என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா
என் உளத்து இனிக்கும் தீம் சுவைக் கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே
என்னை ஈன்றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்க இ மொழியே.

#3414
கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பலக் கனியே
வருண மா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள் நிறை உளத்தே திகழ் தனித் தலைமைத் தெய்வமே திரு_அருள் சிவமே
தருணம் என் ஒருமைத் தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே.

#3415
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே.

#3416
இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி
விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில்
அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே.

#3417
மலத்திலே கிடந்தேன்-தனை எடுத்து அருளி மன்னிய வடிவு அளித்து அறிஞர்
குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்குக் கொடுத்து உளே விளங்கு சற்குருவே
பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே.

#3418
விண்ட போதகரும் அறிவ அரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டு உடன்_பிறந்தோர் அயலவர் எனும் இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய்.

#3419
சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே
ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பைப்
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ.

#3420
பரைத் தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே
தரைத் தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனை ஓர் நண்பன் என்று அவரவர் குறைகள்
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ.

#3421
அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே
சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ.

#3422
உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டு உயிர் மடிந்தார் அலறுகின்றார் என்று ஒருவரோடொருவர் தாம் பேசிக்
கொண்ட போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ.

#3423
காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமைக் கடவுளே சிற்சபை-தனிலே
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர்
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கிப் பதைத்தது உன் உளம் அறியாதோ.

#3424
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணி பல அடைந்தே
ஏதம் நேர்ந்திடக் கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும்
தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ.

#3425
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னைப்
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அப் பிரிவை
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.

#3426
என்றும் நாடுறுவோர்க்கு இன்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்று நாடிய நல்லோர் உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற
அன்று நான் அடைந்த நடுக்கமும் துயரும் அளவு இலை அளவு இலை அறிவாய்
இன்று அவர் பிரிவை நினைத்திடும்-தோறும் எய்திடும் துயரும் நீ அறிவாய்.

#3427
நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே
கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம்
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே
துலைபுரிந்து ஓடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீ அறிந்ததுவே.

#3428
ஓர்ந்த உள்ளகத்தே நிறைந்து ஒளிர்கின்ற ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம்
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய்
ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.

#3429
மறை முடி வயங்கும் ஒரு தனித் தலைமை வள்ளலே உலகு அரசாள்வோர்
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன்
இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.

#3430
தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய்
வாய் மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய்.

#3431
எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன்
இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.

#3432
பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும்
சொல்லிய-தோறும் பிறர் துயர் கேட்கச் சொல்கின்றவோ எனச் சூழ்ந்தே
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய்
வல்லியக் குரல் கேட்டு அயர் பசுப் போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய்.

#3433
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.

#3434
வேறு பல் விடம் செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்ய நாய்க் குழுவின்
சீறிய குரலோடு அழு_குரல் கேட்டுத் தியங்கினேன் மற்றை வெம் சகுனக்
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார்
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய்.

#3435
நிறமுறு விழிக் கீழ்ப் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும்
உறவு தோல் தடித்துத் துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ
பிறர் துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன்
நறுவிய துகிலில் கறையுறக் கண்டே நடுங்கினேன் எந்தை நீ அறிவாய்.

#3436
மங்கையர் எனைத் தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல்
தங்கிய பிறர்-தம் துயர்-தனைக் காண்டல் ஆகும் அத் துயருறத் தரியேம்
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய்.

#3437
வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே
மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனைக் கண்டே நடுங்குறவரும் எனப் பயந்தே
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய்.

#3438
களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்ட காலத்தும்
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.

#3439
இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இச் சுகத்தால் இனி யாது
துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கிச் சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் ஐயகோ தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய்.

#3440
உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள்
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சிப் பேர்_உணவு உண்டனன் சில நாள்
உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன்
மற்று இவை அல்லால் சுக உணாக் கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய்.

#3441
தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும்
அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே.

#3442
அந்தமோடு ஆதி இல்லதோர் பொதுவில் அரும் பெரும் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகல் இரவு எல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எக் காலம் என்று எழுந்தேன்.

#3443
உடைய அம்பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன் நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிது உறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ.

#3444
பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய்
நகல் உறச் சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ.

#3445
தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில்
சகிப்பு இலாமையினால் அடித்தனன் அடித்த தருணம் நான் கலங்கிய கலக்கம்
வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம்
மிகப் புகுந்து அடித்துப் பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ.

#3446
ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே
அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்த வெம் சினம் என் உளம் உறக் கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய்.

#3447
கோபமே வருமோ காமமே வருமோ கொடிய மோகங்களே வருமோ
சாபமே அனைய தடை மதம் வருமோ தாமதப் பாவி வந்திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ பயன் இல் மாற்சரியம் வந்திடுமோ
தாப ஆங்காரமே உறுமோ என்று ஐய நான் தளர்ந்ததும் அறிவாய்.

#3448
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம்
நாமம் ஆர் உளத்தோடு ஐயவோ நான்-தான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய்
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளைச் செறிந்தவர்-தங்களைக் கண்டே
ஆமை போல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐய நின் திருவுளம் அறியும்.

#3449
கருத்து வேறு ஆகிக் கோயிலில் புகுந்து உன் காட்சியைக் கண்ட போது எல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கிப்
பருத்த என் உடம்பைப் பார்த்திடாது அஞ்சிப் படுத்ததும் ஐய நீ அறிவாய்.

#3450
புன் புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும்
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்
வன் புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல்
என்பு எலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய்.

#3451
இந்து அவிர் சடை எம் இறைவனே என்னோடு இயல் கலைத் தருக்கம்செய்திடவே
வந்தவர்-தம்மைக் கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தைத் தமியனேன் மீளவும் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய்.

#3452
முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றித்
தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்று அவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பு_இலேன் மற்று இது குறித்தே
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய்.

#3453
பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
மதி இலாமையினால் அகங்கரித்ததன் பின் வள்ளல் உன் அருளினால் அறிந்தே
விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே.

#3454
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்பு_உளார் வலிந்து எனக்கு ஈந்த
பொருளினை வாங்கிப் போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய்
மருளும் அப் பொருளைச் சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால்
இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும்.

#3455
பொருளிலே உலகம் இருப்பதாதலினால் புரிந்து நாம் ஒருவர்-பால் பல கால்
மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் எனக் கருதி
வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய்
ஒருவும் அப் பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய்.

#3456
தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே
நகைத்த போது எல்லாம் நடுங்கினேன் இங்கே நல்ல வாகனங்களில் ஏறி
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன்
பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.

#3457
சகப் புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் எனப் பயந்தே
நகர் புறத்து இருக்கும் தோட்டங்கள்-தோறும் நண்ணியும் பிற இடத்து அலைந்தும்
பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே
மிகப் பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே.

#3458
உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன்
ஒருவுளத்தவரே வலிந்திட வேறு ஓர் உவளகத்து ஒளித்து அயல் இருந்தேன்
கரு உளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே.

#3459
பண்ணிகாரங்கள் பொசித்த அப்போதும் பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார்-தங்களை விழைந்தே இசைந்து அனுபவித்த அப்போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்ற சங்கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய்.

#3460
நயந்த பொன் சரிகைத் துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது
பயந்த அப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கைத் துகில் வீசி
அயம் தரு தெருவில் நடப்பதற்கு அஞ்சி அரைக்கு மேல் வீக்கினன் எந்தாய்.

#3461
கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்
வையம் மேல் பிறர்-தம் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயம் மிகப் படைப்பேன்.

#3462
வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனைக் கை பிடித்து இழுத்தும்
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனைப் பல விசை அறிந்தும்
பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும்
கை கலப்பு அறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லை நீ அறிவாய்.

#3463
எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம்
தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
களியரைக் கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய்
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார்.

#3464
இரவிலே பிறர்-தம் இடத்திலே இருந்த இருப்பு எலாம் கள்ளர்கள் கூடிக்
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம்
விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய்
உரவிலே ஒருவர் திடுக்கென வரக் கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால்.

#3465
உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால்
கரத்தினால் உரத்துக் கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப் பிறர் புகன்ற சொல் புகுந்தே
தரத்தில் என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே.

#3466
மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம்
கண்ணில் நீர் விடக் கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன்
நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்த போது அடியனேன் எண்ணாது
எண்ணி யாது உற்றதோ எனக் கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய்.

#3467
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே.

#3468
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம்
துன்பு_உடையவரோ இன்பு_உடையவரோ சொல்லுவது என்னையோ என்றே
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய்
அன்பு_உடையவரைக் கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே.

#3469
காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன்
கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன்.

#3470
பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி
அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள்
பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர்
முதிர்ந்த தீம் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன்.

#3471
வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமைக் கண்டே இளைத்தேன்.

#3472
நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன்.

#3473
துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத் தொடங்கிய போது எலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும்.

#3474
நடு நிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
கெடு நிலை நினைக்கும் சிற்றதிகாரக் கேடரைப் பொய் அலால் கிளத்தாப்
படு நிலையவரைப் பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.

#3475
ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனித் தலைவனே என்னைத்
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்-பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய்.

#3476
காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன்
பாட்டு அயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குறக் களித்துக் கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.

#3477
தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ
கலை நெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது எனக் கண்டு இரங்காது
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே.

#3478
இவ்வணம் சிறியேற்கு உலகியல் அறிவு இங்கு எய்திய நாள் அது தொடங்கி
நை வணம் இற்றைப் பகல் வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும்
செவ்வணத் தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.

#3479
தரைத் தலத்து எனை நீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான்
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால்
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ .

#3480
கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ
மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம்
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம்.

#3481
இன்னவாறு அடியேன் அச்சமும் துயரும் எய்திநின்று இளைத்தனன் அந்தோ
துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது
மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ.

#3482
எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பு எலாம் இங்கு நான் ஆற்றிக்
கொள்ளவே அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ
வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன்
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய்.

#3483
என் சுதந்தரம் ஓர் எள்துணையேனும் இல்லையே எந்தை எல்லாம் உன்
றன் சுதந்தரமே அடுத்த இத் தருணம் தமியனேன்-தனைப் பல துயரும்
வன் சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும்
இன் சுவைக் கனி போல் உண்கின்றது அழகோ இவைக்கு எலாம் நான் இலக்கு அலவே.

#3484
அறிவு ஒருசிறிது இங்கு அறிந்த நாள் முதல் என் அப்பனே நினை மறந்து அறியேன்
செறிவு இலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில்
பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னைக்
குறியுறக் கொண்டே குலம் குறிப்பது நின் குணப் பெரும் குன்றினுக்கு அழகோ.

#3485
ஐய நான் ஆடும் பருவத்தில்-தானே அடுத்த நல் நேயனோடு அப்பா
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே
மெய்யுறத் துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம்
துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே.

#3486
தேர்வு இலாச் சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின்
சார்வு கொண்டு எல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன்
பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன்
ஓர்வு இலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்று நான் உரைப்பது இங்கு என்னே.

#3487
பொறித்து உனைப் பதியாப் பெற்ற நாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமைத் தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும்
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ எனப் பெற்றே
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறிக் குதித்தது என் கூறுக நீயே.

#3488
பரிந்து உனைப் பதியாப் பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில்
புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும்
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே.

#3489
மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும்
வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி
உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு
செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ.

#3490
ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம்
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமை நான் அறிந்தும்
தாரணியிடை இத் துன்பம் ஆதிகளால் தனையனேன் தளருதல் அழகோ.

#3491
பார் முதல் நாதப் பதி எலாம் கடந்து அப்பாலும் அப்பாலும் அப்பாலும்
ஓர் முதல் ஆகித் திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கிச்
சீர் பெற விளங்க நடத்தி மெய்ப் பொதுவில் சிறந்த மெய்த் தந்தை நீ இருக்க
வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ.

#3492
ஆர்ந்த வேதாந்தப் பதி முதல் யோகாந்தப் பதி வரையும் அப்பாலும்
தேர்ந்து அருள் ஆணைத் திரு_நெறிச் செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே
சார்ந்த பேர்_இன்பத் தனி அரசு இயற்றும் தந்தையே தனிப் பெருந் தலைவா
பேர்ந்திடேன் எந்தவிதத்திலும் நினக்கே பிள்ளை நான் வருந்துதல் அழகோ.

#3493
சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞானத் திரு_சபை-தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனி அருள் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ.

#3494
சாற்று பேர்_அண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
தோற்று மா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும் பெரும் தந்தையே இன்பப்
பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ.

#3495
சிறந்த தத்துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ் ஒளியாய் ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால்
நிறைந்த சிற்சபையில் அருள் அரசு இயற்றும் நீதி நல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டு அகலேன் பிள்ளை நான் வாடுதல் அழகோ.

#3496
எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலாத் தனி நெடும் செங்கோல்
நண்ணிய திரு_சிற்றம்பலத்து அமர்ந்தே நடத்தும் ஓர் ஞான நாயகனே
தண் அருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன் நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.

#3497
கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிடப் பொதுவில்
மலைவு இலாச் சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமைத்
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ.

#3498
ஆதியே நடுவே அந்தமே எனும் இ அடைவு எலாம் இன்றி ஒன்றான
சோதியே வடிவாய்த் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனிச் செங்கோல்
நீதியே நடத்தும் தனிப் பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
ஓதியே வழுத்தும் தனையன் நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.

#3499
அத்தனே திரு_சிற்றம்பலத்து அரசே அரும் பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன் நான் மயங்கித் துயர்ந்து உளம் வாடுதல் அழகோ.

#3500
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனித் தந்தையே நின்-பால்
குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அக் குற்றம்
இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ.

#3501
குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே
உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே
தெற்றென அருட்கே குற்றம் என்பது நான் செய்திடில் திருத்தலே அன்றி
மற்று அயலார் போன்று இருப்பதோ தந்தை மரபு இது நீ அறியாயோ.

#3502
மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கித்
தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ
ஆயினும் தீய இவை என அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி
நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய்.

#3503
கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம்
மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய்
தெருள் நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே.

#3504
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால்
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம்
அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே.

#3505
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று எனப் பல கால்
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே
அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன்
துரும்பினும் சிறியேன் புகல்வது என் நினது தூயதாம் திருவுளம் அறியும்.

#3506
வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும்
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும்
உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம்
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை.

#3507
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும்
மலைவு இல் என் அறிவும் நானும் இ உலக வழக்கிலே உயிர் இரக்கத்தால்
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும்.

#3508
ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலே அன்றி ஓர் விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்
போது அலால் சிறிய போதும் உண்டு அது நின் புந்தியில் அறிந்தது-தானே
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய்.

#3509
என்னையும் இரக்கம்-தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித்து இ உலகில்
மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம்
பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவாறு என நீ சொன்னவாறு இயற்றாது இருந்ததோர் இறையும் இங்கு இலையே.

#3510.
உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும்
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்குச்
சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய்.

#3511
தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காமச்
சிந்தையர் ஆகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும்
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு
தெந்தன என்றே திரிந்தது உண்டேயோ திருவுளம் அறிய நான் அறியேன்.

#3512
அம் புவி-தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவருடனே
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே
இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன்.

#3513
வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள் அருந்துதல் சூதாடுதல் காமக் கடை-தொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே
எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன்.

#3514
மலைவு இலாத் திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடிக் கொடிய தீ_நெறியிலே மக்கள்
புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே
உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன்.

#3515
தனிப் பெரும் சோதித் தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும்
பனிப்புற ஓடிப் பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்றத்
தினைத்தனையேனும் பதுங்கியது உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன்.

#3516
தன்னை நேர் இல்லாத் தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே
சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன்
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு எனக் கொள்கின்றேன் அல்லால்
பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன்.

#3517
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா
ஏற்ற ஆபரணம் தா எனக் கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன்
தேற்றுவாய் நின்னைக் கேட்டது ஒன்று உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன்.

#3518
குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரைப்
பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே
மணம் புரி எனவே வருத்துகின்றார் என் மனத்திலே ஒருசிறிதேனும்
எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன்.

#3519
இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர்த் தந்தையே இந்தச்
சகத்திலே மக்கள் தந்தையரிடத்தே தாழ்ந்தவராய்ப் புறம் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக்கின்றார் ஐயவோ வஞ்சம் நின்அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன்.

#3520
தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
என் மனக் கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய்த் துணையே
நின் மனம் வெறுப்பப் பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன்.

#3521
ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை
வைப்பில் வேறு ஒருவர் வைதிடக் கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன்
தப்பு இலாய் நினை வேறு உரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி
வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.

#3522
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே
சித்தம் வேறு ஆகித் திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும்
அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத்து ஆடும்
சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.

#3523
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன்
நை வகை தவிரத் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது
கைவகைப்படல் எக் கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்கச்
செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன்.

#3524
அன்னையே என்றன் அப்பனே திரு_சிற்றம்பலத்து அமுதனே என நான்
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான்
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும்
மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

#3525
பொய்படாப் பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே
தெய்வமே என நான் நின்னையே கருதித் திரு_பணி புரிந்து இருக்கின்றேன்
மைபடா உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

#3526
தன் நிகர் அறியாத் தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற்கு இனிய ஒருவனே என நான் உன்னையே நினைத்து இருக்கின்றேன்
மன்னும் என் உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

#3527
திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழிப் பொருளும்
உரு வளர் திருமந்திரத் திருமுறையால் உணர்த்திய மெய் மொழிப் பொருளும்
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழிப் பொருளும்
மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

#3528
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இப்
பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.

#3529
ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தைத் தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்து உளே கருதி மலை எனப் பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம்
தோய்ந்து நின்று ஆடிச் சுழன்றதும் இ நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.

#3530
வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின்
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே
தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடித் துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான்
கேட்ட போது இருந்த கிளர்ச்சியும் இ நாள் கிலேசமும் திருவுளம் அறியும்.

#3531
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம்
மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள்
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடிப் பார்த்து ஓடிப் பார்த்து இரவும்
எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும்.

#3532
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம்
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும்
பொருள் நிறை இன்பம் நம்மை ஆண்டு அளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.

#3533
இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற்கு அரிய பேர்_இன்பம்
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனிப் பெருந் தந்தை
அமையும் நம் உயிர்க்குத் துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.

#3534
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல்
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அறப் பார்த்து இருக்கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளம் கண்டதே எந்தாய்.

#3535
பன்னிரண்டு ஆண்டு தொடங்கி நான் இற்றைப் பகல் வரை அடைந்தவை எல்லாம்
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என் உளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே.

#3536
இதுவரை அடியேன் அடைந்த வெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின்
மது வளர் மலர்ப் பொன்_பதத் துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே
எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய்.

#3537
என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ
இன்னும் என்றனக்கு இ இடரொடு பயமும் இருந்திடில் என் உயிர் தரியாது
அன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்து அருள் எனையே.

#3538
பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயைப் பற்றொடு வினையும் ஆணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும்
வியத்திடத் தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும்
உயத் தருவாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே.

#3539
ஐய நான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடும்-தோறும்
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன்
வையம் மேல் இனி நான் இவைகளால் இளைக்க வசம் இலேன் இவை எலாம் தவிர்த்தே
உய்யவைப்பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே.

#3540
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இப் பகை எலாம் பற்று அறத் தவிர்த்தே
நயந்த நின் அருளார் அமுது அளித்து அடியேன் நாடி ஈண்டு எண்ணிய எல்லாம்
வியந்திடத் தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே
வயம் தரக் கருதித் தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.

#3541
என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே
நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.

#3542
பரிக்கிலேன் பயமும் இடரும் வெம் துயரும் பற்று அறத் தவிர்த்து அருள் இனி நான்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக் கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை
வரிக் கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே.

@14. மாயையின் விளக்கம்

#3543
திடுக்கு அற எனை-தான் வளர்த்திடப் பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால்
மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும் வந்து எனைப் பார்த்திலை அந்தோ
தடுக்க அரும் கருணைத் தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ.

#3544
தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று மாயமே புரிந்திருக்கின்றாள்
கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும் கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ
உளம் தரு கருணைத் தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ.

#3545
தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் சூதையே நினைத்திருக்கின்றாள்
ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ உளம் தளர்வு உற்றனன் நீயும்
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ.

#3546
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள்
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும்
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே
கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ.

#3547
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான்
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித் தொட்டிலும் ஆட்டிடுகின்றாள்
ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய்.

#3548
வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான் என் செய்வேன் என் உடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய் நீயும் இங்கு அறிந்திலையேயோ.

#3549
தும்மினேன் வெதும்பித் தொட்டிலில் கிடந்தே சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள் காதுறக் கேட்டிருக்கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச் சிரித்திருக்கின்றனர் அந்தோ
இம்மியே எனினும் ஈந்திடார் போல இருப்பதோ நீயும் எந்தாயே.

#3550
துரு இலா வயிரத் தொட்டிலே தங்கத் தொட்டிலே பல இருந்திடவும்
திரு இலாப் பொத்தைத் தொட்டிலில் செவிலி சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
பிரிவு இலாத் தனிமைத் தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ
கரு_இலாய் நீ இத் தருணம் வந்து இதனைக் கண்டிடில் சகிக்குமோ நினக்கே.

#3551
காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம்
பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப் பயம் புரிவித்தனள் பல கால்
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையாத் திரு_மதி என நினைந்து அறியாள்
சாய்ந்த இச் செவிலி கையிலே என்னைத் தந்தது சாலும் எந்தாயே.

#3552
ஞான ஆனந்த வல்லியாம் பிரியாநாயகியுடன் எழுந்து அருளி
ஈனம் ஆர் இடர் நீத்து எடுத்து எனை அணைத்தே இன் அமுது அனைத்தையும் அருத்தி
ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய்த் தலத்தில் உறப்புரிந்து எனைப் பிரியாமல்
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே.

@15. அபயத் திறன்

#3553
ஆடக மணிப் பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே
வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில்
நாடகக் கருணை_நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே.

#3554
வட்ட வான் சுடரே வளர் ஒளி விளக்கே வயங்கு சிற்சோதியே அடியேன்
இட்டமே இட்டத்து இயைந்து உளே கலந்த இன்பமே என் பெரும் பொருளே
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே
நட்டமே புரியும் பேர்_அருள் அரசே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3555
புல் அவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய் நெறி ஒழுக்கம்
சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிது ஓர் சொப்பனத்தாயினும் நினையேன்
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும்
நல்லவா எல்லாம்_வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3556
புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலம் சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3557
புண்ணிலே புகுந்த கோல் எனத் துயரம் புகுந்து எனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும்
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3558
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனிப் பெரும் தெய்வமும் தவமும்
வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும்
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3559
வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்து என் வடிவமும் வண்ணமும் உயிரும்
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணைத் தேகமும் உருவும் மெய்ச் சிவமும்
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான
நாட்டமும் கொடுத்துக் காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே.

#3560
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார்
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன்
செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே
நம்பனே ஞான நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3561
ஆய கால் இருந்தும் நடந்திட வலி இல்லாமையால் அழுங்குவார் என உன்
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன்
தீய கான் விலங்கைத் தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு
நாயகா உயிர்க்கு நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3562
அற்றமும் மறைக்கும் அறிவு இலாது ஓடி_ஆடிய சிறுபருவத்தே
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குணப் பெரும் குன்றமே குருவே
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய்த் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே
நல் தகவு உடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3563
படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு
இடம் புரி மனத்தேன் இரக்கம் ஒன்று இல்லேன் என்னினும் துணை எந்தவிதத்தும்
திடம் புரி நின் பொன் அடித் துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன்
நடம் புரி கருணை_நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3564
படித்தனன் உலகப் படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களைப் பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப் பெரியரில் பெரியர் போல் பேசி
நடித்தனன் எனினும் நின் அடித் துணையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3565
பஞ்சு நேர் உலகப் பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன
புஞ்செயே_அனையேன் புழுத் தலைப் புலையேன் பொய் எலாம் பூரித்த வஞ்ச
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3566
கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3567
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3568
காட்டிலே திரியும் விலங்கினில் கடையேன் கைவழக்கத்தினால் ஒடிந்த
ஓட்டிலே எனினும் ஆசை விட்டு அறியேன் உலுத்தனேன் ஒரு சிறு துரும்பும்
ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3569
துனித்த வெம் மடவார் பகல் வந்த போது துறவியின் கடுகடுத்திருந்தேன்
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடித் தழுவினேன் தட முலை விழைந்தேன்
இனித்த சொல் புகன்றேன் என்பினைக் கறித்தே இடர்ப்பட்ட நாய் என இளைத்தேன்
நனித் தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3570
தார்த் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரைப்
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப் பாதகப் பூனை போல் இருந்தேன்
பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து பேசினேன் வஞ்சரில் பெரியேன்
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3571
பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் எனப் பிடித்தனன் மடவார்க்கு
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமைத் தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன்
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன்
நண்மையே அடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3572
வன்மையில் பொருள் மேல் இச்சை_இல்லவன் போல் வாதி போல் வார்த்தைகள் வழங்கி
அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன்
இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விடக் கொடியருக்கு ஈந்தேன்
நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3573
கட்டமே அறியேன் அடுத்தவரிடத்தே காசிலே ஆசை_இல்லவன் போல்
பட்டமே காட்டிப் பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன்
இட்டமே இரவில் உண்டு அயல் புணர்ந்தே இழுதையில் தூங்கினேன் களித்து
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3574
காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக் காட்டிடாது அம்பு எலாம் அடங்கும்
தூணியே எனச் சார்ந்திருந்தனன் சோற்றுச் சுகத்தினால் சோம்பினேன் உதவா
ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே
நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3575
அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் அடிக்கடி பொய்களே புனைந்தே
எடுத்தெடுத்து உரைத்தேன் எனக்கு எதிர் இலை என்று இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன்
கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன்
நடுத் தயவு அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3576
எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய்க்
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன்
துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போலச் சுவை பெறச் சுவைத்த நாக்கு உடையேன்
நளிர் எனச் சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3577
கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன் கோடு உறு குரங்கினில் குதித்தே
அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன்
மலைவுறு சமய வலை அகப்பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர்
நலை அல எனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே.

#3578
ஈ எனப் பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிகத் தழைத்தேன்
பேய் எனச் சுழன்றேன் பித்தனே என வாய்ப் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன்
காய் எனக் காய்த்தேன் கடை என நடந்தேன் கல் எனக் கிடந்தனன் குரைக்கும்
நாய் எனத் திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3579
ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நாத் தழும்புறவே
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற
பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு எனத் திரிகின்ற படிறேன்
நன்றியே அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3580
கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன்
சுவை எலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீது எலாம் துணிந்தேன்
இவை எலாம் அ நாள் உடையனோ அலனோ இந்த நாள் இறைவ நின் அருளால்
நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே.

@16. ஆற்ற மாட்டாமை

#3581
இப் பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே
தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட்கொண்ட தயாநிதியே
எப்பாலவரும் புகழ்ந்து ஏத்தும் இறைவா எல்லாம்_வல்லோனே
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3582
புரை சேர் துயரப் புணரி முற்றும் கடத்தி ஞான பூரணமாம்
கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலைக் குடிப்பித்திடல் வேண்டும்
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே
அரைசே அப்பா இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3583
கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே
தண் ஆர் மதியே கதிர் பரப்பித் தழைத்த சுடரே தனிக் கனலே
எண் நாடு அரிய பெரிய அண்டம் எல்லாம் நிறைந்த அருள் சோதி
அண்ணா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3584
பொய்யாது என்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
கை ஆர்ந்து இலங்கு மணியே செங்கரும்பே கனியே கடையேற்குச்
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவாத் தெள் அமுதே
ஐயா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3585
இத் தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே
நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல
சித்தா சித்திபுரத்து அமர்ந்த தேவே சித்த சிகாமணியே
அத்தா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3586
எ மேதகவும் உடையவர்-தம் இதயத்து அமர்ந்த இறையவனே
இ மேதினியில் எனை வருவித்திட்ட கருணை எம்மானே
நம் மேலவர்க்கும் அறிவு அரிய நாதா என்னை நயந்து ஈன்ற
அம்மே அப்பா இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3587
செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்து தெளிந்து
இப் பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழிப் பாட்டு
ஒப்பாச் சிறியேன் புன் மொழிப் பாட்டு எல்லாம் உவந்த உடையானே
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3588
துப்பு ஆர் கனகப் பொதுவில் நடத் தொழிலால் உலகத் துயர் ஒழிக்கும்
வைப்பாம் இறைவா சிவகாமவல்லிக்கு இசைந்த மணவாளா
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3589
ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும்
துப்பு ஆர் வண்ணச் சுடரே மெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன்
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3590
வெப்பு ஆர் உள்ளக் கலக்கம் எலாம் இற்றைப் பொழுதே விலக்கி ஒழித்து
இப் பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்து அருள்க
ஒப்பால் உரைத்தது அன்று உண்மை உரைத்தேன் கருணை உடையானே
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

@17. வாதனைக் கழிவு

#3591
பொழுது விடிந்தது இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே
அழுது விழிகள் நீர் துளும்பக் கூவிக்கூவி அயர்கின்றேன்
பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும்
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே.

#3592
உடையாய் திரு அம்பலத்து ஆடல் ஒருவா ஒருவா உலவாத
கொடையாய் என நான் நின்றனையே கூவிக்கூவி அயர்கின்றேன்
தடையாயின தீர்த்து அருளாதே தாழ்க்கில் அழகோ புலை நாயில்
கடையாய்த் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணைக் கருத்தினுக்கே.

#3593
கருணைக் கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இத்
தருணத்து அருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வது-தான்
அருணச் சுடரே நின் அருளுக்கு அழகோ அழகு என்று இருப்பாயேல்
தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே.

#3594
திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே
வகைப் பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்குத்
தகைப் பாரிடை இத் தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம்
நகைப்பார் நகைக்க உடம்பினை வைத்திருத்தல் அழகோ நாயகனே.

#3595
நாயில் கடையேன் கலக்கம் எலாம் தவிர்த்து நினது நல் அருளை
ஈயில் கருணைப் பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே
தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர்
சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே.

#3596
தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை
திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே
புரிந்து அ மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே
விரிந்த மனத்துச் சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ.

#3597
வேண்டார் உளரோ நின் அருளை மேலோர் அன்றிக் கீழோரும்
ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல்
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று
ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே.

#3598
அருளே வடிவாம் அரசே நீ அருளாவிடில் இ அடியேனுக்கு
இருளே தொலைய அருள் அளிப்பார் எவரே எல்லாம்_வல்லோய் நின்
பொருள் ஏய் வடிவில் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும்
தெருளேயுற எத் தலைவருக்கும் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.

#3599
திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
புகழ்ந்தார்-தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய் உரைத்தே
இகழ்ந்தேன்-தனைக் கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ
அகழ்ந்தார்-தமையும் பொறுக்க என அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.

#3600
எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய்
வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என்
சொல்லானவையும் அணிந்துகொண்ட துரையே சோதித் திரு_பொதுவில்
நல்லாய் கருணை நடத்து அரசே தருணம் இது நீ நயந்து அருளே.

#3601
நயந்த கருணை நடத்து அரசே ஞான அமுதே நல்லோர்கள்
வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
கயந்த மனத்தேன் எனினும் மிகக் கலங்கி நரகக் கடும் கடையில்
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே.

#3602
பார்த்தார் இரங்கச் சிறியேன் நான் பாவி மனத்தால் பட்ட துயர்
தீர்த்தாய் அ நாள் அது தொடங்கித் தெய்வம் துணை என்று இருக்கின்றேன்
சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர்ப் பாவி
ஈர்த்தால் அது கண்டு இருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு எந்தாயே.

#3603
தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே
நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில்
நாயே_அனையேன் எவர் துணை என்று எங்கே புகுவேன் நவிலாயே.

#3604
ஆயேன் வேதாகமங்களை நன்கு அறியேன் சிறியேன் அவலம் மிகும்
பேயேன் எனினும் வலிந்து என்னைப் பெற்ற கருணைப் பெருமானே
நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான்
காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே.

#3605
கருணாநிதியே என் இரண்டு கண்ணே கண்ணில் கலந்து ஒளிரும்
தெருள் நாடு ஒளியே வெளியே மெய்ச் சிவமே சித்த சிகாமணியே
இருள் நாடு உலகில் அறிவு இன்றி இருக்கத் தரியேன் இது தருணம்
தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே.

#3606
வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம்
தருவாய் தருணம் இதுவே மெய்த் தலைவா ஞான சபாபதியே
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய்
இரு வாய் அல நின் திரு_அடிப் பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே.

#3607
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என்
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ
தானே மகிழ்ந்து தந்தாய் இத் தருணம் கைம்மாறு அறியேனே.

#3608
அறியேன் சிறியேன் செய்த பிழை அனைத்தும் பொறுத்தாய் அருள் சோதிக்
குறியே குணமே பெற என்னைக் குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க
நெறியே விளங்க எனைக் கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும்
பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே.

#3609
சுகமே நிரம்பப் பெரும் கருணைத் தொட்டில் இடத்தே எனை அமர்த்தி
அகமே விளங்கத் திரு_அருள் ஆர் அமுதம் அளித்தே அணைத்து அருளி
முகமே மலர்த்திச் சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல்
சகம் மேல் இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.

#3610
தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலும் தனித் தலைமை
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில்
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே.

@18. அபயம் இடுதல்

#3611
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒரு பேர்_அருள் ஆர் அமுதம்
தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ
வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன்
குருவாய் முனமே மனமே இடமாக் குடிகொண்டவனே அபயம் அபயம்.

#3612
என்னே செய்வேன் செய் வகை ஒன்று இங்கு இது என்று அருள்வாய் இதுவே தருணம்
மன்னே அயனும் திருமாலவனும் மதித்தற்கு அரிய பெரிய பொருளே
அன்னே அப்பா ஐயா அரசே அன்பே அறிவே அமுதே அழியாப்
பொன்னே மணியே பொருளே அருளே பொது வாழ் புனிதா அபயம் அபயம்.

#3613
கருணாநிதியே அபயம் அபயம் கனகாகரனே அபயம் அபயம்
அருள் நாடு அகனே அபயம் அபயம் அழகா அமலா அபயம் அபயம்
தருண் ஆதவனே அபயம் அபயம் தனி நாயகனே அபயம் அபயம்
தெருள் நாடுறுவாய் அபயம் அபயம் திரு_அம்பலவா அபயம் அபயம்.

#3614
மருளும் துயரும் தவிரும்படி என் மன மன்றிடை நீ வருவாய் அபயம்
இருளும் பவமும் பெறு வஞ்சக நெஞ்சினன் என்று இகழேல் அபயம் அபயம்
வெருளும் கொடு வெம் புலையும் கொலையும் விடுமாறு அருள்வாய் அபயம் அபயம்
அருளும் பொருளும் தெருளும் தருவாய் அபயம் அபயம் அபயம் அபயம்.

#3615
இனி ஓர் இறையும் தரியேன் அபயம் இது நின் அருளே அறியும் அபயம்
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம்
தனியேன் துணை வேறு அறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம்
துனியே அற வந்து அருள்வாய் அபயம் சுக நாடகனே அபயம் அபயம்.

#3616
அடியார் இதயாம்புயனே அபயம் அரசே அமுதே அபயம் அபயம்
முடியாது இனி நான் தரியேன் அபயம் முறையோ முறையோ முதல்வா அபயம்
கடியேன் அலன் நான் அபயம் அபயம் கருணாகரனே அபயம் அபயம்
தடியேல் அருள்வாய் அபயம் அபயம் தருண் ஆதவனே அபயம் அபயம்.

#3617
மல வாதனை தீர் கலவா அபயம் வலவா திரு_அம்பலவா அபயம்
உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம்
பல ஆகுலம் நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம்
நலவா அடியேன் அலவா அபயம் நட நாயகனே அபயம் அபயம்.

#3618
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம்
முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம்
படியே அறியும்படியே வருவாய் பதியே கதியே பரமே அபயம்
அடியேன் இனி ஓர் இறையும் தரியேன் அரசே அருள்வாய் அபயம் அபயம்.

#3619
இடர் தீர் நெறியே அருள்வாய் அபயம் இனி நான் தரியேன் தரியேன் அபயம்
விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவேன் அலன் நான் அபயம் அபயம்
உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம்
சுடர் மா மணியே அபயம் அபயம் சுக நாடகனே அபயம் அபயம்.

#3620
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம்
பற்றம் பலமே அலதோர் நெறியும் பதியே அறியேன் அடியேன் அபயம்
சுற்றம் பலவும் உனவே எனவோ துணை வேறு இலை நின் துணையே அபயம்
சிற்றம்பலவா அருள்வாய் இனி நான் சிறிதும் தரியேன் தரியேன் அபயம்.

@19. பிரிவாற்றாமை

#3621
போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம்
வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன்
ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான்
சாக_மாட்டேன் உனைப் பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே.

#3622
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள்
சொல்ல_மாட்டேன் இனிக் கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரைக்
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே

#3623
வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர் சிறிதும்
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான்
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை
மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.

#3624
கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுள் கலந்து ஒளிரும்
தருணச் சுடரே எனை ஈன்ற தாயே என்னைத் தந்தோனே
வருணப் படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல்
பொருள் மெய்ப் பதியே இனித் துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே.

#3625
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவாச் சுயம் சோதி
வண்ணம் பழுத்த தனிப் பழமே மன்றில் விளங்கு மணிச் சுடரே
தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன்
எண்ணம் பழுத்தது இனிச் சிறியேன் இறையும் தரியேன் தரியேனே.

#3626
நாட்டுக்கு இசைந்த மணி மன்றில் ஞான வடிவாய் நடம் செய் அருள்
ஆட்டுக்கு இசைந்த பெரும் கருணை அப்பா என்றன் அரசே என்
பாட்டுக்கு இசைந்த பதியே ஓர் பரமானந்தப் பழமே மேல்
வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே.

#3627
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டிப் பரவும் நினது மலர்ப்
பாதம் தலை மேல் சூட்டி எனைப் பணி செய்திடவும் பணித்தனை நான்
சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன்
ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இச் சீர் கிடைத்தது எவ்வாறே.

#3628
பொய் விட்டு அகலாப் புலைக் கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின்
கை விட்டு அகலாப் பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய்
மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா
மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே.

#3629
சாமத்து இரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கம் தடுத்து மயல்
காம_கடலைக் கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய்
நாமத் தடி கொண்டு அடிபெயர்க்கும் நடையார்-தமக்கும் கடை ஆனேன்
ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே.

#3630
பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருள்
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே.

@20. இறை பொறுப் பியம்பல்

#3631
தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திடச் சிறிது நின்னுடனே
ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ
ஆடிய பாதம் அறிய நான் அறியேன் அம்பலத்து அரும் பெரும் சோதி
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் கூறவும் கூசும் என் நாவே.

#3632
மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு
இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ
நடம் புரி பாதம் அறிய நான் அறியேன் நான் செயும் வகை இனி நன்றே
திடம் புரிந்து அருளிக் காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.

#3633
நீக்கிய மனம் பின் அடுத்து எனைக் கலக்கி நின்றதே அன்றி நின்அளவில்
நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ
தூக்கிய பாதம் அறிய நான் அறியேன் துயர் இனிப் பொறுக்கலேன் சிறிதும்
தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னைத் தெளிவித்தல் நின் கடன் சிவனே.

#3634
ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில்
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ
ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும்
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்துத் துலக்குதல் நின் கடன் துணையே.

#3635
மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன்றன்னையே மதித்து உன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ
தூய பொன் பாதம் அறிய நான் அறியேன் துயர் இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன்
நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே.

#3636
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ
அண்ணல் நின் பாதம் அறிய நான் அறியேன் அஞர் இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன்
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னைத் தெளிவித்துக் காப்பது உன் கடனே.

#3637
ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன்
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ
ஆடல் செய் பாதம் அறிய நான் அறியேன் ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன்
பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்குப் பரிந்து அருள் புரிவது உன் கடனே.

#3638
உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன்
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ
வள்ளல் உன் பாதம் அறிய நான் அறியேன் மயக்கு இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன்
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே.

#3639
எ மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ
செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித் துயர் ஆற்றேன்
இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய்.

#3640
அகம் புறம் மற்றை அகப்புறம் புறத்தே அடுத்திடும் புறப்புறம் நான்கில்
இகந்ததும் இலை ஓர் ஏகதேசத்தால் இறையும் இங்கு எண்ணியது உண்டோ
உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனிச் சிறிதும்-தான்
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே.

@21. கைம்மாறின்மை

#3641
இழை எலாம் விளங்கும் அம்மை இடம் கொள் நின் கருணை என்னும்
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய்
பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே.

#3642
போது-தான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ
ஏது-தான் புரிவேன் ஓகோ என் என்று புகழ்வேன் ஞான
மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே.

#3643
சிற்றறிவு_உடையன் ஆகித் தினம்-தொறும் திரிந்து நான் செய்
குற்றமும் குணமாக் கொண்ட குணப் பெரும் குன்றே என்னைப்
பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னைக்
கற்று அறிவு_இல்லேன் எந்தக் கணக்கு அறிந்து உரைப்பேன் அந்தோ.

#3644
மை அரி நெடும் கணார்-தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
பொய்_அறிவு_உடையேன் செய்த புன்மைகள் பொறுத்து ஆட்கொண்டாய்
ஐயறிவு_உடையார் போற்றும் அம்பலத்து அரசே நின் சீர்
மெய் அறிவு அறியேன் எந்த விளைவு அறிந்து உரைப்பேன் அந்தோ.

#3645
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக்கு எல்லை இல்லை
ஆயினும் பொறுத்து ஆட்கொண்டாய் அம்பலத்து அரசே என்றன்
தாயினும் இனிய உன்றன் தண் அருள் பெருமை-தன்னை
நாயினும் கடையேன் எந்த நலம் அறிந்து உரைப்பேன் அந்தோ.

#3646
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்த நெஞ்சகத்தேன் செய்த
பெரும் பிழை அனைத்தும் அந்தோ பெரும் குணமாகக் கொண்டாய்
அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற
கரும்பினில் இனியாய் உன்றன் கருணை என் என்பேன் அந்தோ.

#3647
வரை கடந்து அடியேன் செய்த வன்_பிழை பொறுத்து ஆட்கொண்டாய்
திரை கடந்து அண்ட பிண்டத் திசை எலாம் கடந்தே அப்பால்
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம்
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே.

#3648
நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான்
நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை
வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே.

#3649
வன் செயல் பொறுத்து ஆட்கொண்ட வள்ளலே அடியனேன்-தன்
முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம்
என் செயல் ஆகக் காணேன் எனைக் கலந்து ஒன்றாய் நின்றோய்
நின் செயல் ஆகக் கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே.

#3650
இருமையும் ஒருமை-தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி
உரிமையால் யானும் நீயும் ஒன்று எனக் கலந்துகொண்ட
ஒருமையை நினைக்கின்றேன் என் உள்ளகம் தழைக்கின்றேனே.

@22. நடராசபதி மாலை

#3651
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே
அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம்
பொருள் நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்கப்
புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகித்
தெருள் நிலைச் சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றித்
திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே
சுருள் நிலைக் குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3652
என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே
என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவிப் புலன் இசையிலே
என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும்
தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3653
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே
ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக
இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே
காணாத பொருள் எனக் கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய்த் துணையாய் விளங்கும் அறிவே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3654
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க
விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி
ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே
கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே
துய் தழை பரப்பித் தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3655
எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல்
ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே
கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகிக் கலந்து ஓங்குகின்ற பொருளே
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய்க் கோடை-வாய்ச் சேர்ந்து அனுபவித்த சுகமே
சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மனத் திரு_மாளிகைத் தீபமே
துண்ணுறாச் சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3656
அம்புவியிலே புவியின் அடியிலே முடியிலே அ மண்டலம்-தன்னிலே
அகலத்திலே புவியின் அகிலத்திலே அவைக்கான வடிவாதி-தனிலே
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே
மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ந் நிலையும் ஆன பொருளே
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியாத் தலத்தில் உறவைத்த அரசே
சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும் ஒன்றான சிவமே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3657
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே
நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே
ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே
உற்ற நீர்க் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறாக் கருணை_மழை பொழி மேகமே
கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3658
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல்
ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே
சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே
மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே
துள்ளிய மனப் பேயை உள்ளுற அடக்கி மெய்ச் சுகம் எனக்கு ஈந்த துணையே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3659
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே
ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே
ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசிக்
குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3660
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே
வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே
வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனித் திரளிலே தித்திக்கும் ஓர்
தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு எனச் செப்பிடாத் தெள் அமுதமே
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3661
என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே
ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதபத் திரளிலே
ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே
ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே
அன்று இரவில் வந்து எனக்கு அருள் ஒளி அளித்த என் அய்யனே அரசனே என்
அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3662
அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே
அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே
பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே
மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3663
அண்ட ஒருமைப் பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரியப் பகுதியே
ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில்
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல்
கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்கக் கலந்து நிறைகின்ற ஒளியே
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணாக்
குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3664
கரை இலாக் கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே
கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே
வரை இலா வெள்ளப் பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே
மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே
பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே
மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#3665
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய்
உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள்
பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
பண்புறு சிதம்பரப் பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய்த்
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே
சித்து எலாம் செய் எனத் திரு_வாக்கு அளித்து எனைத் தேற்றி அருள்செய்த குருவே
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே
மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#3666
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி
இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய்ச் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே
அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகிக்
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய்க் காட்சியே கருணை நிறைவே
கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே
மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே.

#3667
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே
நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய்க் கொடி நாட்டியே
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னிப் படைத்தல் முதலாம்
முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப
மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3668
ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடிப் பெருமையே உன்ன முடியா அவற்றின்
ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த
திகழ்கின்ற மற்றைப் பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன்
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக
ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய்த் தந்தையே
மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#3669
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு
வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே
என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே
கரவு நெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே
கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம்
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா
மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே.

#3670
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலாப்
பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும்
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்பத்
திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே
உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே
அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே.

#3671
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல்
ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த
செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே
பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய்ப் பரமமே பரம ஞான
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே
மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே.

#3672
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ
ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என்
மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப
இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே
அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே.

#3673
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழிப் பணிகள் கேட்பப்
பொய்படாச் சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும்
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும்
இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெறச் சன்மார்க்கமாம்
ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே
மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#3674
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள்
மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே
நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே
என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே
மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே.

#3675
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று
எண்ணி இரு கண்ணில் நீர் காட்டிக் கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள்
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே
மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த
நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே
மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே

#3676
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச் சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில்
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும்
மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே
எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே

#3677
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும்
போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏர் உற்ற சுக நிலை அடைந்திடப் புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே
இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே

#3678
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம்
மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனைத் தேற்றி அருள்செய்த சிவமே
சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே

#3679
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது
நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே
அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே
நாடு நடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய
நல்கிய பெரும் கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனே என்
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள்
ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே.

#3680
அந்நாளில் அம்பலத் திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே
அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க
என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும்
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம்
இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே
மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#3681
காய் எலாம் கனி எனக் கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்குக்
கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புதக் காட்சியே கனக_மலையே
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனித் தலைவனே நின் பெருமையைச்
சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற-தோறும் அந்தோ
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என்
மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன்
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே
துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

#3682
எய்ப்பு அற எனக்குக் கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய்
என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே
கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே
மெய்ப் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே
மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே
துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

#3683
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்துத்
தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி
என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய்
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ
வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறித்
துன்பம் அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும் இச் சுக வண்ணம் என் புகலுவேன்
துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

#3684
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே
உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே
பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே
ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே
தூங்கி விழு சிறியனைத் தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே
துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

@23. சற்குருமணி மாலை

#3685
மாற்று அறியாத செழும் பசும்பொன்னே மாணிக்கமே சுடர் வண்ணக் கொழுந்தே
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குணப் பெரும் குன்றே
வேற்று அறியாத சிற்றம்பலக் கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே.

#3686
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே
சொல் கரை இன்றிய ஒளியினுள் ஒளியே துரியமும் கடந்திட்ட பெரிய செம்பொருளே
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே.

#3687
என் உயிரே எனது இன் உயிர்க்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கு அறிவே
அன்னையில் இனிய என் அம்பலத்து அமுதே அற்புதமே பதமே எனது அன்பே
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்தப் பொருத்திய தயவு உடைப் புண்ணியப் பொருளே
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே.

#3688
காய் மனக் கடையனைக் காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே
தேய் மதிச் சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே
ஆய் மதிப் பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடைச் சிவமே தனி நடராச என் சற்குரு மணியே.

#3689
உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளது இலதாய் ஒளிர் ஒரு தனி முதலே
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே.

#3690
ஆறு அந்த நிலைகளின் அனுபவ நிறைவே அதுஅதுவாய் ஒளிர் பொதுவுறு நிதியே
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே
பேறு இந்த நெறி எனக் காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய்த் தனி நடராச என் சற்குரு மணியே.

#3691
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் எனத் தயவு செய்து உரைத்தே
போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே
தா காதல் எனத் தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே.

#3692
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் எனத் தனித்து உரைத்து எனக்கே
எத் துவந்தனைகளும் நீக்கி மெய் நிலைக்கே ஏற்றி நான் இறவாத இயல் அளித்து அருளால்
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே.

#3693
இது பதி இது பொருள் இது சுகம் அடைவாய் இது வழி என எனக்கு இயல்புற உரைத்தே
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலைச் சுடரே
பொது நடமிடுகின்ற புண்ணியப் பொருளே புரை அறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே.

#3694
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய்
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம்
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

#3695
காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரியக் கரு இது பலவாய்
ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே
பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எப் பொருள் நிலைகளுமே
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

#3696
பல் நெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால்
செல் நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

#3697
அடி இது முடி இது நடு நிலை இது மேல் அடி நடு முடி இலாதது இது மகனே
படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலாப் பரிசையும் அறிவாய்
செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

#3698
நண்ணிய மத நெறி பலபல அவையே நன்று அற நின்றன சென்றன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் அலைதருகின்றனர் அலைவு அற மகனே
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ
தண்ணிய அமுது உணத் தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே.

#3699
அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருள்_பெரும்_சோதியை அளித்தனம் உனக்கே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே
விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய்
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே.

#3700
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடிச் சுடரே
நாதத்தின் முடி நடு நடமிடும் ஒளியே நவை அறும் உளத்திடை நண்ணிய நலமே
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர்த் துணையே
தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே.

#3701
சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளித் தலத்து எழும் சுடரே
வந்து இரவிடை எனக்கு அருள் அமுது அளித்தே வாழ்க என்று அருளிய வாழ் முதல் பொருளே
மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே.

#3702
அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருள்_பெரும்_சோதியை அன்புடன் அளித்தே
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய்ப் பதியே
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே.

#3703
நல் மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே நடு வெளி நடு நின்று நடம் செயும் பரமே
துன்மார்க்கவாதிகள் பெறற்கு அரு நிலையே சுத்த சிவானந்தப் புத்தமுது உவப்பே
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே.

#3704
ஆதியும் அந்தமும் இன்றி ஒன்று ஆகி அகம் புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளங்கொள் சிற்சபை நடு விளங்கு மெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலும் தான் ஆகிச் சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே.

#3705
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பகக் கனியே
அற்பனை ஆண்டுகொண்டு அறிவு அளித்து அழியா அருள் நிலை-தனில் உற அருளிய அமுதே
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசைப் பதித்த மெய்ப் பதியே
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே.

#3706
பவ நெறி செலுமவர் கனவினும் அறியாப் பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே
நவ நெறி கடந்ததோர் ஞான மெய்ச் சுகமே நான் அருள் நிலை பெற நல்கிய நலமே
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே.

#3707
அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
பிரியாமல் என் உளம் கலந்த மெய்க் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே
தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே.

#3708
கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே
எருதாகத் திரிந்தேனுக்கு இக_பரம் அளித்தே இறவாத வரமும் தந்து அருளிய ஒளியே
வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே
தரு தானம் உணவு எனச் சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே.

#3709
ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய்ப் பரமே
ஈ காதல் உடையவர்க்கு இரு_நிதி அளித்தே இன்புறப் புரிகின்ற இயல்பு உடை இறையே
சாகாத வரம் தந்து இங்கு எனைக் காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

@24. தற்போத இழப்பு

#3710
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்தச்
செவ் வண்ணம் பழுத்த தனித் திரு_உருக் கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ
மவ்வண்ணப் பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3711
கள் இருந்த மலர் இதழிச் சடைக் கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே
நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார்
உள் இருந்த எனைத் தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன்
வள் இருந்த குணக் கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3712
இகத்து இருந்த வண்ணம் எலாம் மிகத் திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால்
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே
அகத்து இருந்த எனைப் புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன்
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3713
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடைத் தலை-வாய்
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3714
நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில்
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும்
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3715
நதி கலந்த சடை அசையத் திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள்
கதி கலந்துகொளச் சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிடக் கண்டு இன்னும்
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்கப் பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3716
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே
நஞ்சு அனைய கொடியேன் கண்டிடப் புரிந்த அருளை நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன்
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3717
அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில்
புரி புழுவில் இழிந்தேனைப் பொருள் ஆக்கி அருளாம் பொருள் அளிக்கப்பெற்றனன் இப் புதுமை பிறர் அறியாது
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால்
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3718
விழற்கு இறைத்துக் களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினைக் கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளிக்
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்துக் கருணை செயப்பெற்றனம் இக் கருணை நம்மை இன்னும்
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3719
அடி பிடித்துத் திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவைக் காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடி பிடித்த குரு மணியைக் கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் எனக் கொண்டு அகத்தே இருந்தேன்
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே
மடி பிடித்துப் பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

@25. திருமுன் விண்ணப்பம்

#3720
மாழை மா மணிப் பொது நடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
வாழை வான் பழச் சுவை எனப் பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய்
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும்
கோழை மானிடப் பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே.

#3721
பொன்னின் மா மணிப் பொது நடம் புரிகின்ற புண்ணியா கனிந்து ஓங்கி
மன்னு வாழையின் பழச் சுவை எனப் பத்தர் மனத்து உளே தித்திப்போய்
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
இன்ன என் உடைத் தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே.

#3722
விஞ்சு பொன் அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி
எஞ்சுறாத பேர் இன்பு அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும்
துஞ்சும் இ உடல் இம்மையே துஞ்சிடாச் சுக உடல் கொளுமாறே.

#3723
ஓங்கு பொன் அணி அம்பலத்து அருள் நடம் உயிர்க்கு எலாம் ஒளி வண்ணப்
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தாத்
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே.

#3724
இலங்கு பொன் அணிப் பொது நடம் புரிகின்ற இறைவ இ உலகு எல்லாம்
துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடித் துணை துணை என்னாமல்
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
அலங்கும் இ உடல் இம்மையே அழிவுறா அருள் உடல் உறுமாறே.

#3725
சிறந்த பொன் அணித் திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும்
பிறந்த இ உடல் இம்மையே அழிவுறாப் பெரு நலம் பெறுமாறே.

#3726
விளங்கு பொன் அணிப் பொது நடம் புரிகின்ற விரை மலர்த் திரு_தாளை
உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலாப் பெருந்தன்மை
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறாத் தொல் உடல் உறுமாறே.

#3727
வாய்ந்த பொன் அணிப் பொது நடம் புரிகின்ற வள்ளலே மறை எல்லாம்
ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல்
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே.

#3728
மாற்று இலாத பொன்_அம்பலத்து அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே..

#3729
தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர்த் திரட்கு இன்பம்
காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும்
வாட்டும் இ உடல் இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே.

@26. இனித்த வாழ்வருள் எனல்

#3730
உரத்த வான் அகத்தே உரம் தவா ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்தி
புரத்தவா பெரியோர்_புரத்தவா குற்றம் பொறுத்து அடியேன்-தனக்கு அளித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆகமங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவு ஆதரத்தவா பொதுவில் தனித்தவா இனித்த வாழ்வு அருளே.

#3731
முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா
பின்னவ அதிபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம்_வல்லவா நல்ல வாழ்வு அருளே.

#3732
விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த
நடையவா ஞான நடையவா இன்ப நடம் புரிந்து உயிர்க்கு எலாம் உதவும்
கொடையவா ஓவாக் கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என்
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே.

#3733
வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனம் முதல் கடந்த
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞான நோக்கு அளித்த
நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற்கு அரிதாம்
பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே.

#3734
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உரு-அதாய் இன்பம்
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_
குணம் திகழ்ந்து ஓங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
தணந்த சன்மார்க்கத் தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே.

#3735
தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா
சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே
ஒத்து நின்று ஓங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்த வாழ்வு அருளே.

#3736
மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்றிலே வயம்கொள் நாடகம் செய்
பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதிப் பரிசு தந்திடுதும் என்று உளத்தே
நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம்
சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே.

#3737
மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும்
ஆவியும் தனது மயம் பெறக் கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா
ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும்
மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூய வாழ்வு அருளே.

#3738
பங்கம் ஓர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
தங்கும் ஓர் சோதித் தனிப் பெரும் கருணைத் தரம் திகழ் சத்தியத் தலைவா
துங்கமுற்று அழியா நிலை தரும் இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கச்
சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே.

#3739
இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பதப் பாகொடு தேனும்
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட
மனித்தரும் அமுத உணவுகொண்டு அருந்தும் வான_நாட்டவர்களும் வியக்கத்
தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு அளித்த தனியவா இனிய வாழ்வு அருளே.

@27. திருவருள் விழைதல்

#3740
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுளக் குறிப்பையும் தெரியேன்
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன்
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன்
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் புலையனேன் புகல் அறியேனே.

#3741
அறிவு_இலேன் அறிந்தார்க்கு அடிப் பணி புரியேன் அச்சமும் அவலமும்_உடையேன்
செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல்
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன்
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே.

#3742
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே
பின் கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன்
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே.

#3743
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான்
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன்
திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே.

#3744
தான் எனைப் புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
தேன் உறக் கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே
ஆன் எனக் கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில்
நான் இருப்பு அறியேன் திரு_சிற்றம்பலத்தே நடம் புரி ஞான நாடகனே.

#3745
ஞானமும் அதனால் அடை அனுபவமும் நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
ஈனமும் இடரும் தவிர்த்தனை அ நாள் இந்த நாள் அடியனேன் இங்கே
ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனைக் கூவி உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும்
ஏன் என வினவாது இருத்தலும் அழகோ இறையும் நான் தரிக்கலன் இனியே.

#3746
இனிய நல் தாயின் இனிய என் அரசே என் இரு கண்ணினுள் மணியே
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே
துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன்
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ.

#3747
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும்
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே
சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்ததே எந்தாய்
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ.

#3748
அழகனே ஞான அமுதனே என்றன் அப்பனே அம்பலத்து அரசே
குழகனே இன்பக் கொடி உளம் களிக்கும் கொழுநனே சுத்த சன்மார்க்கக்
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான்
பழக நேர்ந்திட்டேன் இன்னும் இ உலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ.

#3749
பழம் பிழி மதுரப் பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும்
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ளக் கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய்
வழங்கு நின் புகழே பாடுறுகின்றேன் மற்றொரு பற்றும் இங்கு அறியேன்
சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ.

#3750
தாயும் என் ஒருமைத் தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும்
தூய நின் பாதத் துணை எனப் பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும்
மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனைப் பிடித்திடல் வழக்கோ
நாயினேன் இனி ஓர் கணம் தரிப்பு அறியேன் நல் அருள் சோதி தந்து அருளே.

#3751
சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விடத் தொடங்குவன் நான்
நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
ஓதியே உணர்தற்கு அரும் பெரும் பொருளே உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
ஆதியே நடுவே அந்தமே ஆதி நடு அந்தம் இல்லதோர் அறிவே.

#3752
இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர் இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே
அல்லை உண்டு எழுந்த தனிப் பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே
வல்லை இன்று அடியேன் துயர் எலாம் தவிர்த்து வழங்குக நின் அருள் வழங்கல்
நல்லை இன்று அலது நாளை என்றிடிலோ நான் உயிர் தரிக்கலன் அரசே.

#3753
அரைசு எலாம் வழங்கும் தனி அரசு அது நின் அருள் அரசு என அறிந்தனன் பின்
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய்
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே
இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை ஈந்து அருள் இற்றை இப்போதே.

#3754
போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த புழுத் தலைப் புலையர்கள் புணர்க்கும்
சூது எலாம் கேட்கும்-தொறும் உனைப் பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கித்
தாது எலாம் கலங்கத் தளருதல் அழகோ தனி அருள் சோதியால் அந்த
வாது எலாம் தவிர்த்துச் சுத்த சன்மார்க்கம் வழங்குவித்து அருளுக விரைந்தே.

#3755
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான்
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கிக் கரை எலாம் கடந்தது கண்டாய்
வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்_வல்லவா அம்பல_வாணா
திரைந்த என் உடம்பைத் திரு_உடம்பு ஆக்கித் திகழ்வித்த சித்தனே சிவனே.

#3756
சிவம் திகழ் கருணைத் திரு_நெறிச் சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும்
நவம் தரு நிலைகள் சுதந்தரத்து இயலும் நன்மையும் நரை திரை முதலாம்
துவந்துவம் தவிர்த்துச் சுத்தம் ஆதிய முச்சுக வடிவம் பெறும் பேறும்
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே.

#3757
தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்கத் தனி நெறி உலகு எலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள் எனக் கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்பப்
பொருள் நிறை ஓங்கத் தெருள் நிலை விளங்கப் புண்ணியம் பொற்புற வயங்க
அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே அருள்_பெரும்_சோதி என் அரசே.

#3758
என் உள வரை மேல் அருள் ஒளி ஓங்கிற்று இருள் இரவு ஒழிந்தது முழுதும்
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர்ப்
பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்திப் பூவையர் புணர்ந்திடப் போந்தார்
சொன்ன நல் தருணம் அருள்_பெரும்_சோதி துலங்க வந்து அருளுக விரைந்தே.

#3759
வந்து அருள் புரிக விரைந்து இது தருணம் மா மணி மன்றிலே ஞான
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே
தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல தனி அருள் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்வித்து அருள்க செய் வகையே.

@28. திருக்கதவந் திறத்தல்

#3760
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதித் திரு_உருக் காட்டாயோ
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ
கருக் கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ
செருக் கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3761
மணிக் கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியாப் பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ
கணிக்க அறியாப் பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிடச் செய்யாயோ
தணிக்க அறியாக் காதல் மிகப் பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனித் தலைமைப் பதியே
திணிக் கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3762
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவைக் கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கித் ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கிக்
கரை_கடந்து போனது இனித் தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3763
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே
என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன்
தென் புடை ஓர் முகம் நோக்கித் திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3764
இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என்
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்து இறந்து போய்க் கதியைப் பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம்
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3765
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே
பை உடைப் பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3766
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக் கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உறப் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3767
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே
தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3768
கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்கக் கருதி அருள் வழங்கினை என்றனக்கே
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே
சிலை நிகர் வன் மனம்_கரைத்துத் திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3769
திருத் தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டித் திரு_அமுதம் ஊட்டிக்
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும்
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகிக் கால வரை உரைப்ப எலாம் கடந்தே
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

@29. சிற்சபை விளக்கம்

#3770
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலால் சுகமாம்
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே

#3771
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் இடுக்குண்டு ஐய நின் இன் அருள் விரும்பி
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின் அலால் அறிகிலேன் ஒன்றும்
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#3772
சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன் அருள் சுகப் பெரும் பதி நின்
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன்
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#3773
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் அலைதந்து ஐயவோ அயர்ந்து உளம் மயர்ந்து
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
நாட்டம் நின்-புடை அன்றி மற்று அறியேன் நாயினேன் பிழை பொறுத்து இது தருணம்
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#3774
கருணை ஒன்று இலாக் கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ
வருண நின்-புடை வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
அருணன் என்று எனை அகற்றிடுவாயேல் ஐயவோ துணை அறிந்திலன் இதுவே
தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனி பெரும் பதியே.

#3775
கரண வாதனையால் மிக மயங்கிக் கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#3776
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணைச் சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால்
தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#3777
சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_
வரத்தை வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
கரத்தை நேர் உளக் கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன்
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#3778
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை
சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#3779
கயவு செய் மத கரி எனச் செருக்கும் கருத்தினேன் மனக் கரிசினால் அடைந்த
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

@30. திருவருட் பேறு

#3780
படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அப் பதி நடுவே விளங்கும்
கொடிகள் நிறை மணி மாடக் கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அக் கோயிலிலே கோபுர வாயிலிலே
செடிகள் இலாத் திரு_கதவம் திறப்பித்துக் காட்டித் திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே.

#3781
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன்
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக
வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம்புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே.

#3782
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே
செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
மைக்கு இசைந்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே.

#3783
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர்
இரு நிலத்தே பசித்தவர்க்குப் பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது எனக் கொண்டீர்
திரிவு அகத்தே நான் வருந்தப் பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே.

#3784
பொய் கொடுத்த மன மாயைச் சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறிப் புந்தி மகிழ்ந்து இருக்கக்
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனிக் கீழ் விழைந்து இறங்கேன் என்றும்
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே.

#3785
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்தப் பிடித்தேன்
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே
என் போலே இரக்கம் விட்டுப் பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே
பொன் போலே முயல்கின்ற மெய்த் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே.

#3786
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும்
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில்
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ.

#3787
கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்தத் தனித்த திரு_வரவின்
நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது நனவிடையாயினும் அன்றிக் கனவிடையாயினுமே.

#3788
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான்
கன்று எனச் சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மனக் கலக்கம்
பொன்றிடப் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்புப் பொருந்தி விளங்கிட நீ
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே.

#3789
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனித் தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான்
மது விழும் ஓர் ஈப் போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய்
குதுகலமே இது தொடங்கிக் குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே.

@31. உண்மை கூறல்

#3790
தனிப் பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞானப் பதி சிதம்பரரே
இனிச் சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால்
அனிச்சய உலகினைப் பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3791
பெறுவது நுமை அன்றிப் பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றிப் பிறிது ஒன்றும் பேசேன்
உறுவது நும் அருள் அன்றிப் பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றிப் பிறிது ஒன்றும் உன்னேன்
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்துக் கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால்
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3792
கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர்
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன்
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால்
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3793
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனிப் பெரும் தலைவரே சபை நடத்தவரே
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன்
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உளக் கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர்
அடுத்து இனிப் பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3794
காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ
ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர் இறையவரே உமை இன்று கண்டு அல்லால்
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3795
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர்
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால்
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3796
திருந்தும் என் உள்ளத் திரு_கோயில் ஞான சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன்
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உருக் காட்டி
வருந்தலை என்று எனைத் தேற்றியவாறே வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால்
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3797
கரைக் கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்குக் கரைக்கு அணம் செய்யீர்
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவிப் பல உதவி செய்கின்றீர்
வரைக் கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால்
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3798
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும்
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து
எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர் இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால்
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3799
கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன்
நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளிப் பொன் பொது நாடகம் புரிவீர்
செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனைச் சேர்ந்திடல் வேண்டும்
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

@32. பிரியேன் என்றல்

#3800
அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே
இப் பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும்
துப்பு ஆகித் துணை ஆகித் துலங்கிய மெய்த் துணையே சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே.

#3801
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க_மாட்டேன்
கோணை நிலத்தவர் பேசக் கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உறக் கொண்டிடவும்_மாட்டேன்
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன்
மாணை மணிப் பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே.

#3802
பட முடியாது இனித் துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்தப் பயம் தீர்த்து இப்பொழுது என்
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே.

#3803
வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த
ஏழை படும் பாடு உனக்கும் திருவுளச் சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ
மாழை மணிப் பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ
கோழை உலகு உயிர்த் துயரம் இனிப் பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியைக் கொடுத்து அருள் இப்பொழுதே.

#3804
செய் வகை என் எனத் திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனைத் தெளிவித்தாய் நீயே
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன்
எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன்
ஐவகை இ உயிர்த் துயரம் இனிப் பொறுக்க_மாட்டேன் அருள் சோதிப் பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே.

#3805
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உருக் காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன்
இன்னும் வரக் காணேன் நின் வரவை எதிர்பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய்
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்குப் பெரும் துணையே என் உயிர்_நாயகனே.

#3806
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே
இன்னும் மிகக் களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே.

#3807
நான் மறந்தேன் எனினும் எனைத் தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும்
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன்
பால் மறந்த குழவியைப் போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே.

#3808
தெருவிடத்தே விளையாடித் திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அச் சிறுவயதில் இந்த
உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள் ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ
கருவிடத்தே எனைக் காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான்
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே.

#3809
பெரியன் அருள்_பெரும்_சோதிப் பெரும் கருணைப் பெருமான் பெரும் புகழைப் பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த
அரிய பெரும் பேர்_ஆசைக் கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே
உரிய அருள் அமுது அளித்தே நினைத் துதிப்பித்து அருள்வாய் உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே.

#3810
கவலை எலாம் தவிர்ந்து மிகக் களிப்பினொடு நினையே கை குவித்துக் கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே
சவலை மனச் சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய்த் தானே தான் ஆகி இன்பத் தனி நடம் செய் இணைத் தாள்
தவல் அரும் சீர்ச் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆடத் தருணம் இது-தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமாக் கொண்டவனே.

@33. சிவ தரிசனம்

#3811
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணியே
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே.

#3812
சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே
நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம்
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே.

#3813
துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே சுத்த சிவானந்த சபைச் சித்த சிகாமணியே
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரிய மணித் திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தைக் காணுதல் வல்லேனோ
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.

#3814
மறப்பு அறியாப் பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே
இறப்பு அறியாத் திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்கப்
பிறப்பு அறியாப் பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே.

#3815
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என்
தன் உழைப் பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர்
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே.

#3816
விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல் விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே
மொழித் திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்துப் பரிசு மகிழ்ந்து அருளே.

#3817
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ
தேன் ஒருவா மொழிச்சியரைத் திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே.

#3818
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன்
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன்
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன்
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே.

#3819
கட்டு அவிழ்ந்த கமலம் எனக் கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான்
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம்
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே.

#3820
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர்ப் பொன் மதில் காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டை எலாம் கொடி நாட்டிக் கோலம் இடப் பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன்
சேட்டை அற்றுக் கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல்
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே.

#3821
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த
இத் தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம்
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே.

@34. அனுபோக நிலயம்

#3822
இனிப் பிரிந்து இறையும் இருக்கலேன் பிரிவை எண்ணினும் ஐயவோ மயங்கிப்
பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ
தனிப்படு ஞான வெளியிலே இன்பத் தனி நடம் புரி தனித் தலைவா
கனிப் பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#3823
பிரிந்து இனிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப் பேசினும் நெய் விடும் தீப் போல்
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய்
புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும் புண்ணியா என் உயிர்த் துணைவா
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#3824
மேலை ஏகாந்த வெளியிலே நடம் செய் மெய்யனே ஐயனே எனக்கு
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_வல்லனே நல்லனே அருள் செங்
கோலையே நடத்தும் இறைவனே ஓர் எண்_குணத்தனே இனிச் சகிப்பு அறியேன்
காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#3825
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன்
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குறக் காட்டிய விமலா
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#3826
தனித் துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனிப் பிரிவு ஆற்றேன்
கனித் துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#3827
துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா
இன்பு எலாம் அளிக்கும் இறைவனே என்னை ஈன்ற நல் தந்தையே தாயே
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனிப் பிரிவு ஆற்றேன்
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

#3828
ஏதும் ஒன்று அறியாப் பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே
ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என் உயிர்த் துணைவா
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான
போதகம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

#3829
எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான்
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே
தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே
புண்ணியம் அளித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

#3830
மலப் பகை தவிர்க்கும் தனிப் பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே
நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான்
புலப்படத் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

#3831
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பகத் தீம் சுவைக் கனியே
வெளிப் புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே
ஒளிப்பு இலாது அன்றே அளித்த சிற்பொதுவில் ஒருவனே இனிப் பிரிவு ஆற்றேன்
புளிப்பு அற இனித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

@35. சிவயோக நிலை

#3832
மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டே
பதி மண்டலத்து அரசுபண்ண நிதிய
நவ நேயம் ஆக்கும் நடராசனே எம்
சிவனே கதவைத் திற.

#3833
இந்து ஆர் அருள் அமுதம் யான் அருந்தல் வேண்டும் இங்கே
நந்தா மணி_விளக்கே ஞான சபை எந்தாயே
கோவே எனது குருவே எனை ஆண்ட
தேவே கதவைத் திற.

#3834
சாகா அருள் அமுதம் தான் அருந்தி நான் களிக்க
நாகாதிபர் சூழ் நடராசா ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற.

#3835
அருள் ஓங்கு தண் அமுதம் அன்பால் அருந்தி
மருள் நீங்கி நான் களித்து வாழப் பொருளாம்
தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
சிவனே கதவைத் திற.

#3836
வானோர்க்கு அரிது எனவே மா மறைகள் சாற்றுகின்ற
ஞானோதய அமுதம் நான் அருந்த ஆனாத்
திறப் பாவலர் போற்றும் சிற்றம்பலவா
சிறப்பா கதவைத் திற.

#3837
எல்லாமும் வல்ல சித்து என்று எல்லா மறைகளும் சொல்
நல்லார் அமுதம்-அது நான் அருந்த நல்லார்க்கு
நல் வாழ்வு அளிக்கும் நடராயா மன்று ஓங்கு
செல்வா கதவைத் திற.

#3838
ஏழ் நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண் அமுதம்
வாழ் நிலைக்க நான் உண்டு மாண்புறவே கேழ் நிலைக்க
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா
தேவா கதவைத் திற.

#3839
ஈன உலகத்து இடர் நீங்கி இன்புறவே
ஞான அமுதம்-அது நான் அருந்த ஞான
உருவே உணர்வே ஒளியே வெளியே
திருவே கதவைத் திற.

#3840
திரையோதசத்தே திகழ்கின்ற என்றே
வரை ஓது தண் அமுதம் வாய்ப்ப உரை ஓது
வானே எம் மானே பெம்மானே மணி மன்றில்
தேனே கதவைத் திற.

#3841
சோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம்
மேதினி மேல் நான் உண்ண வேண்டினேன் ஓத அரிய
ஏகா அனேகா எழில் பொதுவில் வாழ் ஞான
தேகா கதவைத் திற.

@36. பெற்ற பேற்றினை வியத்தல்

#3842
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனித் தந்தையே நின்-பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணைசெய்து அருள்செய்திடத் தாழ்க்கில்
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன்
போரிட முடியாது இனித் துயரொடு நான் பொறுக்கலேன் அருள்க இப்போதே.

#3843
போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன்
தீது-தான் புரிந்தேன் எனினும் நீ அதனைத் திருவுளத்து அடைத்திடுவாயேல்
ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர்த் தந்தை நீ அலையோ.

#3844
தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி
எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலிடுகின்றேன்
சிந்தையே அறியார் போன்று இருந்தனையேல் சிறியனேன் என் செய்கேன் ஐயோ
சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே.

#3845
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல்
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ
சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே.

#3846
அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்ப நீ அடியனேன்-தன்னை
விடாதவாறு அறிந்தே களித்து இருக்கின்றேன் விடுதியோ விட்டிடுவாயேல்
உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே
படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்தப் பாடு எலாம் நீ அறியாயோ.

#3847
அறிந்திலையோ என் பாடு எலாம் என்றே அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடாது இந்தத் தருணமே வந்தாய் எடுத்து அணைத்து அஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே.

#3848
களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம்
தளிர்த்திடச் சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடாச் சித்திகள் எல்லாம்
அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே.

#3849
என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்பப்
பொன் இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும்
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே
தன் நிகர் இல்லாத் தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே.

#3850
சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம்
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என்
ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ.

#3851
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூய நல் உடம்பினில் புகுந்தேம்
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே இன்புறக் கலந்தனம் அழியாப்
பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதிப் பரிசு பெற்றிடுக பொன்_சபையும்
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே.

@37. அழிவுறா அருள்வடிவப் பேறு

#3852
சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெரு வாழ்வே
நவம் கனிந்த மேல் நிலை நடு விளங்கிய நண்பனே அடியேன்-தன்
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே
பவம் கனிந்த இ வடிவமே அழிவுறாப் பதி வடிவு ஆமாறே.

#3853
விளங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே
களங்கம்_இல்லதோர் உளம் நடு விளங்கிய கருத்தனே அடியேன் நான்
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே
உளம்கொள் இ வடிவு இம்மையே மந்திர ஒளி வடிவு ஆமாறே.

#3854
விஞ்சுகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர்த் துணையே நான்
அஞ்சல் இன்றியே செய்த விண்ணப்பம் ஏற்று அகம் களித்து அளித்தாயே
துஞ்சும் இ உடல் அழிவுறாது ஓங்கும் மெய்ச் சுக வடிவு ஆமாறே.

#3855
ஓங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் ஒளிர்கின்ற பெரு வாழ்வே
தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின்
பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே
ஈங்கு வீழ் உடல் என்றும் வீழாது ஒளிர் இயல் வடிவு ஆமாறே.

#3856
இலங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடமிடுகின்ற பெரு வாழ்வே
துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என்
புலம்கொள் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை இஞ்ஞான்றே
அலங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா அருள் வடிவு ஆமாறே.

#3857
சிறந்த பேர்_ஒளித் திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே
துறந்த பேர்_உளத்து அருள் பெருஞ் சோதியே சுகப் பெரு நிலையே நான்
மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே
பிறந்த இ உடல் என்றும் இங்கு அழிவுறாப் பெருமை பெற்றிடுமாறே.

#3858
வயங்குகின்ற சிற்றம்பலம்-தன்னிலே வளர்கின்ற பெரு வாழ்வே
மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு
இயங்கு சிற்றடியேன் மொழி விண்ணப்பம் ஏற்று அருள் புரிந்தாயே
தயங்கும் இ உடல் எற்றையும் அழிவுறாத் தனி வடிவு ஆமாறே.

#3859
தீட்டுகின்ற சிற்றம்பலம்-தன்னிலே திகழ்கின்ற பெரு வாழ்வே
காட்டுகின்றதோர் கதிர் நடு விளங்கிய கடவுளே அடியேன் நான்
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே
பூட்டும் இ உடல் எற்றையும் அழிவுறாப் பொன் வடிவு ஆமாறே.

#3860
தடை இலாத சிற்றம்பலம்-தன்னிலே தழைக்கின்ற பெரு வாழ்வே
கடை இலாப் பெரும் கதிர் நடு விளங்கும் ஓர் கடவுளே அடியேன் நான்
இடைவுறாது செய் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தாயே
புடையின் இ உடல் எற்றையும் அழிவுறாப் பொன் வடிவு ஆமாறே.

#3861
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே
மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய்ப் பெரும் பொருளே நான்
ஐய மற்று உரைத்திட்ட விண்ணப்பம் ஏற்று அளித்தனை இஞ்ஞான்றே
செய்யும் இ உடல் என்றும் இங்கு அழிவுறாச் சிவ வடிவு ஆமாறே.

@38. பேரருள் வாய்மையை வியத்தல்

#3862
நன்றே தரும் திரு_நாடகம் நாள்-தொறும் ஞான மணி
மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார் கழலோய்
இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம்
ஒன்றே எனினும் பொறேன் அருள் ஆணை உரைத்தனனே.

#3863
தன் சோதி என் உயிர்ச் சத்திய சோதி தனித் தலைமைச்
சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே
நல் சோதி ஞான நல் நாடக சோதி நலம் புரிந்த
பொன் சோதி ஆனந்த பூரண சோதி எம் புண்ணியனே.

#3864
திரை கண்ட மாயைக் கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும்
கரை கண்டு அடைந்தனன் அக் கரை மேல் சர்க்கரை கலந்த
உரை கண்ட தெள் அமுது உண்டேன் அருள் ஒளி ஓங்குகின்ற
வரை கண்டதன் மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.

#3865
மனக் கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-
தனக்கே விடைகொடுத்து ஆணவம் தீர்த்து அருள் தண் அமுதம்
எனக்கே மிகவும் அளித்து அருள் சோதியும் ஈந்து அழியா
இனக் கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே.

#3866
வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தைச்
சேதித்து என் உள்ளம் திரு_கோயிலாக் கொண்டு சித்தி எலாம்
போதித்து உடம்பையும் பொன் உடம்பு ஆக்கி நல் புத்தமுதும்
சாதித்து அருளிய நின் அருட்கு யான் செயத் தக்கது என்னே.

#3867
செத்தார் எழுக எனச் சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே
இத் தாரணியில் அருள்_பெரும்_சோதி எனக்கு அளித்தாய்
எத்தாலும் என்றும் அழியா வடிவு தந்து என்னுள் நின்னை
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே.

#3868
ஆக்கல் ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்து இந்த அண்ட பிண்ட
வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே.

#3869
என்னே என் மீது எம்பெருமான் கருணை இருந்த வண்ணம்
தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியைத் தந்து உலகுக்கு
அன்னே என விளையாடுக என்று அழியாத செழும்
பொன் ஏர் வடிவும் அளித்து என் உயிரில் புணர்ந்தனனே.

#3870
அச்சோ என் என்று புகல்வேன் என் ஆண்டவன் அம்பலத்தான்
எச் சோதனையும் இயற்றாது என்னுள் கலந்து இன் அருளாம்
மெய்ச் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை
இச் சோதி ஆக்கி அழியா நலம் தந்த விச்சையையே.

#3871
வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும்
வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர்ப் பதங்கள்
வாழி மெய்ச் சுத்த சன்மார்க்கப் பெரு நெறி மாண்பு கொண்டு
வாழி இ வையமும் வானமும் மற்றவும் வாழியவே.

@39 பொதுநடம் புரிகின்ற பொருள்

#3872
அருள்_பெரும்_சோதி அமுதமே அமுதம் அளித்து எனை வளர்த்திட அருளாம்
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்தியச் சிவமே
இருள் பெரு நிலத்தைக் கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லாப்
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3873
சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன்
கத்து எலாம் தவிர்த்துக் கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே
சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே
புத்து எலாம் நீக்கிப் பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே.

#3874
கலைகள் ஓர் அனந்தம் அனந்தம் மேல் நோக்கிக் கற்பங்கள் கணக்கில கடப்ப
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே
அலைகள் அற்று உயிருக்கு அமுது அளித்து அருளும் அருள் பெரும் கடல் எனும் அரசே
புலை களவு அகற்றி எனக்குளே நிறைந்து பொது நடம் புரிகின்ற பொருளே.

#3875
தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்தியக் கனலே
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள் ஓர் ஒளியே உலகு எலாம் தழைக்க மெய் உளத்தே
நண்ணிய விளக்கே எண்ணியபடிக்கே நல்கிய ஞான போனகமே
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3876
அற்புத நிறைவே சற்புதர் அறிவில் அறிவு என அறிகின்ற அறிவே
சொல் புனை மாயைக் கற்பனை கடந்த துரிய நல் நிலத்திலே துலங்கும்
சிற்பரம் சுடரே தற்பர ஞானச் செல்வமே சித்து எலாம் புரியும்
பொன் புலம் அளித்த நல் புலக் கருத்தே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3877
தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப் பெறல் அரிது ஆகிய பேறே
புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே.

#3878
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும்
நால் வகைப் பயனும் அளித்து எனை வளர்க்கும் நாயகக் கருணை நல் தாயே
போல் உயிர்க்குயிராய்ப் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3879
அலப்பு அற விளங்கும் அருள் பெரு விளக்கே அரும் பெரும் சோதியே சுடரே
மலப் பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே
உலப்பு அறு கருணைச் செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
புலப் பகை தவிர்க்கும் பூரண வரமே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3880
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே
வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே
புரம் புகழ் நிதியே சிரம் புகல் கதியே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3881
வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுதத் தெள் கடலே
அற்புறும் அறிவில் அருள் ஒளி ஆகி ஆனந்தமாம் அனுபவமே
பொற்புறு பதியே அற்புத நிதியே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3882
தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமயப்
புன்மை நீத்து அகமும் புறமும் ஒத்து அமைந்த புண்ணியர் நண்ணிய புகலே
வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே
பொன்மை சார் கனகப் பொதுவொடு ஞானப் பொது நடம் புரிகின்ற பொருளே.

#3883
மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே
தாவிய முதலும் கடையும் மேல் காட்டாச் சத்தியத் தனி நடு நிலையே
மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே
பூ இயல் அளித்த புனித சற்குருவே பொது நடம் புரிகின்ற பொருளே

#3884
வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும்
போதமும் சுகமும் ஆகி இங்கு இவைகள் போனதுமாய் ஒளிர் புலமே
ஏதமுற்று இருந்த ஏழையேன் பொருட்டு இ இரு நிலத்து இயல் அருள் ஒளியால்
பூத நல் வடிவம் காட்டி என் உளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3885
அடியனேன் பொருட்டு இ அவனி மேல் கருணை அருள் வடிவெடுத்து எழுந்தருளி
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே
மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல் வரம் தந்த வாழ்வே
பொடி அணி கனகப் பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3886
என் பிழை அனைத்தும் பொறுத்து அருள் புரிந்து என் இதயத்தில் இருக்கின்ற குருவே
அன்பு உடை அரசே அப்பனே என்றன் அம்மையே அருள்_பெரும்_சோதி
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என் உயிர்_நாதனே என்னைப்
பொன் புனை மாலை புனைந்த ஓர் பதியே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3887
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே
சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது
புத்தியின் தெளிவே புத்தமுது அளித்துப் பொது நடம் புரிகின்ற பொருளே

#3888
சிதத்து ஒளிர் பரமே பரத்து ஒளிர் பதியே சிவபத அனுபவச் சிவமே
மதத் தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே
சதத் திரு_நெறியே தனி நெறித் துணையே சாமியே தந்தையே தாயே
புதப் பெரு வரமே புகற்கு அரும் தரமே பொது நடம் புரிகின்ற பொருளே.

#3889
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே
புலை தவிர்த்து எனையும் பொருள் எனக் கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே.

#3890
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலாக் களிப்பே
ஐம்மையே அதற்குள் அது அது ஆகும் அற்புதக் காட்சியே எனது
பொய்ம்மையே பொறுத்துப் புகல் அளித்து அருளிப் பொது நடம் புரிகின்ற பொருளே.

#3891
காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி
ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்து ஒளிர் அற்புதச் சுடரே
நாரண தலமே நாரண வலமே நாரணாகாரத்தின் ஞாங்கர்ப்
பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே.

@40. ஆனந்தானுபவம்

#3892
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின் அருளாம்
வெள்ளத்தை எல்லாம் மிக உண்டேன் உள்ளத்தே
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_
வாணா நினக்கு அடிமை வாய்த்து.

#3893
காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் ஞாலம் மிசைச்
சாகா_வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கு அடிமை ஏற்று.

#3894
மூவர்களும் செய்ய முடியா முடிபு எல்லாம்
யாவர்களும் காண எனக்கு அளித்தாய் மேவு கடை
நாய்க்குத் தவிசு அளித்து நல் முடியும் சூட்டுதல் எம்
தாய்க்குத் தனி இயற்கை தான்.

#3895
கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்வப்
பிள்ளை என எற்குப் பெயரிட்டாய் தெள் அமுதம்
தந்தாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய்
எந்தாய் கருணை இது.

#3896
கண்டேன் களித்தேன் கருணைத் திரு_அமுதம்
உண்டேன் உயர் நிலை மேல் ஓங்குகின்றேன் கொண்டேன்
அழியாத் திரு_உருவம் அச்சோ எஞ்ஞான்றும்
அழியாச் சிற்றம்பலத்தே யான்.

#3897
பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப் புளகம்
போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று
ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்பு உரு ஆனேன் அருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான்.

#3898
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_
சிற்றம்பலத்தே திரு_நடம் செய்கின்றான் என்
குற்றம் பல பொறுத்துக்கொண்டு.

#3899
கொண்டான் அடிமை குறியான் பிழை ஒன்றும்
கண்டான் களித்தான் கலந்து இருந்தான் பண்டாய
நான்மறையும் ஆகமமும் நாடும் திரு_பொதுவில்
வான் மயத்தான் என்னை மகிழ்ந்து.

#3900
கண்டேன் களித்தேன் கருணைத் திரு_அமுதம்
உண்டேன் அழியா உரம் பெற்றேன் பண்டே
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-
தனை உவந்து கொண்டான்-தனை.

#3901
தாதையாம் என்னுடைய தாயாம் என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் ஓது
குணவாளன் தில்லை அருள் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத_மலர்.

#3902
திருவாம் என் தெய்வமாம் தெள் அமுத ஞானக்
குருவாம் எனைக் காக்கும் கோவாம் பரு வரையின்
தேப் பிள்ளையாம் எம் சிவகாமவல்லி மகிழ்
மாப்பிள்ளை பாத_மலர்.

#3903
என் அறிவாம் என் அறிவின் இன்பமாம் என் அறிவின்
தன் அறிவாம் உண்மைத் தனி நிலையாம் மன்னு கொடிச்
சேலை இட்டான் வாழச் சிவகாமசுந்தரியை
மாலையிட்டான் பாத_மலர்.

@41. பரசிவ நிலை

#3904.
அருள் சோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3905
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நல் சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம்
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3906
தாய் ஆகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம்
காயாது கனி ஆகிக் கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதித் தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3907
என் இதய_கமலத்தே இருந்து அருளும் தெய்வம் என் இரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம்
அன்னியம் அல்லாத தெய்வம் அறிவான தெய்வம் அ அறிவுக்கு அறிவாம் என் அன்பான தெய்வம்
செல் நிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3908
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம்
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகித் தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3909
இச்சை எலாம் எனக்கு அளித்தே எனைக் கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச் சமயத் தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம்
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனித் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3910
சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம் சன்மார்க்க சபையில் எனைத் தனிக்க வைத்த தெய்வம்
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகம் எலாம் செயப் பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3911
தூண்டாத மணி_விளக்காய்த் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதித் தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம்
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3912
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம்
ஒவ்வு அகத்தே ஒளி ஆகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம்
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3913
சத்தியமாம் தனித் தெய்வம் தடை அறியாத் தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்கத் தான் ஓங்கும் தெய்வம்
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லாப் பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம்
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்தத் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

@42. பேரானந்தப் பெருநிலை

#3914.
அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் ஆனந்த போகமே அமுதே
மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும் என் ஆர்_உயிர்த் துணையே
துணிவுறு சித்தாந்தப் பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3915
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே
உரு வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே ஓங்கும் என் உயிர்ப் பெரும் துணையே
ஒரு தனித் தலைமை அருள் வெளி நடுவே உவந்து அரசு அளிக்கின்ற அரசே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3916
துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே
கதி தரு துரியத் தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3917
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே
நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே
ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து இருந்து அரசு அளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3918
உரை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே
வரை வளர் மருந்தே மவுன மந்திரமே மந்திரத்தால் பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3919
மேல் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மெய் அறிவானந்த விளக்கே
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந்தப் பர வெளிக்கு அப்பால் அரசாள்கின்ற அரசே
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3920
இசை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் இன்பமே என் உடை அன்பே
திசை வளர் அண்ட கோடிகள் அனைத்தும் திகழுறத் திகழ்கின்ற சிவமே
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3921
அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் அரும் பெரும் சோதியே எனது
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னைப் புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே
மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3922
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே
மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3923
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே
நலம் வளர் கருணை நாட்டம் வைத்து எனையே நண்புகொண்டு அருளிய நண்பே
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

@43. திருவடி நிலை

#3924.
உலகு பல் கோடி கோடிகள் இடம் கொள் உலப்பு இலா அண்டத்தின் பகுதி
அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த அவை எலாம் புறத்து இறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்று இருந்து என இருந்தன மிடைந்தே
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே.

#3925
தடையுறாப் பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள்
இடை உறாத் திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின்
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே.

#3926
அடர் மலத் தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள்
சுடர் மணிப் பொதுவில் திரு_நடம் புரியும் துணை அடிப் பாதுகைப் புறத்தே
இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திரு_வடி நிலையே.

#3927
இகத்து உழல் பகுதித் தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம்
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடிப் பாதுகைப் புறத்தும்
புகத் தரம் பொருந்தா மலத்து உறு சிறிய புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல்
செகத் தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே.

#3928
பொன் வணப் பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல்
மன் வணச் சோதித் தம்பம் ஒன்று அது மா வயிந்துவாந்தத்தது ஆண்டு அதன் மேல்
என் வணச் சோதிக் கொடி பரநாதாந்தத்திலே இலங்கியது அதன் மேல்
தன் வணம் மணக்கும் ஒளி மலராகத் தழுவினன் திரு_அடி நிலையே.

#3929
மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம் என்று இவற்றின் அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே.

#3930
தொகை அளவு இவை என்று அறிவரும் பகுதித் தொல்லையின் எல்லையும் அவற்றின்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி எங்கணும் இரு பாற்குத்
தகையுறு முதலா அணங்கு அடையாகத் தயங்க மற்று அதுஅது கருவிச்
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே.

#3931
மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த
ஒன்றின் ஒன்று அனந்த கோடிகோடிகளா உற்றன மற்றவை எல்லாம்
நின்ற அ நிலையின் உருச் சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர்
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே.

#3932
பேசும் ஓங்காரம் ஈறு-அதாப் பேசாப் பெரிய ஓங்காரமே முதலா
ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம் என்றவற்று அவண்அவண் இசைந்த
மாசு அறு சத்தி சத்தர் ஆண்டு அமைத்து மன் அதிகாரம் ஐந்து இயற்றத்
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே.

#3933
பரை தரு சுத்த நிலை முதல் அதீதப் பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி என உலகு உணர்ந்த
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உருக் கொண்டு பொன் பொதுவில்
திரை அறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திரு_அடி நிலையே.

@44. காட்சிக் களிப்பு

#3934.
அறிந்தானை அறிவறிவுக்கு அறிவானானை அருள்_பெரும்_சோதியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய்ச் சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார்-தம்மைப்
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானைப் பிறவி-தன்னை
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3935
பாலானைத் தேனானைப் பழத்தினானைப் பலன் உறு செங்கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலை சாகாத் தலையினானைக் கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா
மேலானை மேல் நிலை மேல் அமுதானானை மேன்மேலும் எனது உளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3936
உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என் பாட்டைக் குறிக்கொண்டானைக் கொல்லாமை விரதம் எனக் கொண்டார்-தம்மைத்
தள்ளானைக் கொலை புலையைத் தள்ளாதாரைத் தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3937
உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை
மறவானை அறவாழி வழங்கினானை வஞ்சகர்க்குத் திரு_கோயில் வழிக்க பாடம்
திறவானை என்னளவில் திறந்து காட்டிச் சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை
இறவானைப் பிறவானை இயற்கையானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3938
அகத்தானைப் புறத்தானை அணுவானானை அணுவினுக்குள் அணுவானை அதனுள்ளானை
மகத்தானை மகத்தினும் ஓர் மகத்தானானை மா மகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டம் எலாம் தானானானைத் தனி அருளாம் பெரும் கருணைத் தாயானானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும் எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3939
செய்யானைக் கரியானைப் பசுமையானைத் திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை
மெய்யானைப் பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்குக்
கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3940
மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு
விருந்தானை உறவானை நண்பினானை மேலானைக் கீழானை மேல் கீழ் என்னப்
பொருந்தானை என் உயிரில் பொருந்தினானைப் பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3941
ஆன்றானை அறிவானை அழிவு_இலானை அருள்_பெரும்_ஜோதியினானை அலர்ந்த ஜோதி
மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
தோன்றானைத் தூயர் உளே தோன்றினானைச் சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை
ஈன்றானை எல்லாமாய் அல்லாதானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3942
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3943
நன்றானை மன்றகத்தே நடிக்கின்றானை நாடாமை நாடல் இவை நடுவே ஓங்கி
நின்றானைப் பொன்றாத நிலையினானை நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சு இலேசம்
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றானானை ஒரு சிறியேன்-தனை நோக்கி உளம் நீ அஞ்சேல்
என்றானை என்றும் உள இயற்கையானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

@45. கண்கொளாக் காட்சி

#3944.
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்று இங்கு ஆண்டானைச் சிறு நெறிகள் அடையாது என்னைத்
தடுத்தானைப் பெரு நெறிக்குத் தடை தீர்த்தானைத் தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால்
கொடுத்தானைக் குற்றம் எலாம் குணமாக் கொள்ளும் குணத்தானைச் சமய மதக் குழி-நின்று என்னை
எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3945
விரித்தானைக் கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்குத்
தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானைச் சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானைத் தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனைத் தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3946
நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானைத் துன்பம் எலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள
எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3947
சோற்றானைச் சோற்றில் உறும் சுகத்தினானைத் துளக்கம் இலாப் பாரானை நீரானானைக்
காற்றானை வெளியானைக் கனலானானைக் கருணை நெடும் கடலானைக் களங்கர் காணத்
தோற்றானை நான் காணத் தோற்றினானைச் சொல் அறியேன் சொல்லிய புன் சொல்லை எல்லாம்
ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3948
சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறியச் செம்பொன்_தாளில்
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம்
பார்த்தானைப் பாராரைப் பாராதானைப் பார்ப்பு அறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3949
முளையானைச் சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானைக்
களையானைக் களங்கம் எலாம் களைவித்து என்னைக் காத்தானை என் பிழையைக் கருதிக் கோபம்
விளையானைச் சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3950
புயலானை மழையானை அதிர்ப்பினானைப் போற்றிய மின்_ஒளியானைப் புனித ஞானச்
செயலானைச் செயல் எல்லாம் திகழ்வித்தானைத் திரு_சிற்றம்பலத்தானைத் தெளியார் உள்ளே
அயலானை உறவானை அன்பு_உளானை அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
இயலானை எழிலானைப் பொழிலானானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3951
தாயானைத் தந்தை_எனக்கு_ஆயினானைச் சற்குருவும்_ஆனானைத் தமியேன் உள்ளே
மேயானைக் கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன
வாயானை வஞ்சம் இலா மனத்தினானை வரம் கொடுக்க வல்லானை மணி மன்று அன்றி
ஏயானைத் துரிய நடு_இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3952
தழைத்தானைத் தன்னை ஒப்பார்_இல்லாதானைத் தானே_தான்_ஆனானைத் தமியனேனைக்
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானைக் குறை கொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
அழைத்தானை அருள் அமுதம் அளிக்கின்றானை அச்சம் எலாம் தவிர்த்தானை அன்பே என்-பால்
இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3953
உடையானை அருள் சோதி உருவினானை ஓவானை மூவானை உலவா இன்பக்
கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானைக் கொல்லாமை குறித்திடாரை
அடையானைத் திரு_சிற்றம்பலத்தினானை அடியேனுக்கு அருள் அமுதம் அளிக்கவே பின்
னிடையானை என் ஆசை எல்லாம் தந்த எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

@46. இறை திருக்காட்சி

#3954.
அருள் எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அரசை
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியைப்
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளைத்
தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தைக் கண்டுகொண்டேனே.

#3955
துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ளத் துரிசு எலாம் தொலைத்த மெய்ச் சுகத்தை
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை
அன்பு எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அடியேன்
என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த எந்தையைக் கண்டுகொண்டேனே.

#3956
சிதத்திலே ஊறித் தெளிந்த தெள் அமுதைச் சித்து எலாம் வல்ல மெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப் பெரும் பழத்தைப் பரம்பர வாழ்வை எம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை
இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட இறைவனைக் கண்டுகொண்டேனே.

#3957
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பைப்
புணர்ந்து எனைக் கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணியப் பயனைக்
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குணப் பெருங் குன்றை
மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த வள்ளலைக் கண்டுகொண்டேனே.

#3958
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம்
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியைச் சோதியாது என்னை
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை
எல்லியும் இரவும் என்னை விட்டு அகலா இறைவனைக் கண்டுகொண்டேனே.

#3959
பண்ணிய தவமும் பலமும் மெய்ப் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை
நண்ணி என் உளத்தைத் தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை
எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த இறைவனை மறை முடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன் நிகர் இல்லாத் தந்தையைக் கண்டுகொண்டேனே.

#3960
பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் பிறங்கிய பொதுமையைப் பெரிய
தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியைத் தயாநிதி-தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனைக் கண்டுகொண்டேனே.

#3961
ஆதியை ஆதி அந்தம் ஈது என உள் அறிவித்த அறிவை என் அன்பைச்
சோதியை எனது துணையை என் சுகத்தைச் சுத்த சன்மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை
ஓதியை ஓதாது உணர்த்திய வெளியை ஒளி-தனைக் கண்டுகொண்டேனே.

#3962
என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியைப்
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை
வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவைக்
கொன் செயல் ஒழித்த சத்திய ஞானக் கோயிலில் கண்டுகொண்டேனே.

#3963
புல் நிகர்_இல்லேன் பொருட்டு இருட்டு இரவில் போந்து அருள் அளித்த சற்குருவைக்
கல் நிகர் மனத்தைக் கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளைத் தனது
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுறப் புனைந்த மெய்த் துணையைத்
தன் நிகர் இல்லாத் தலைவனை எனது தந்தையைக் கண்டுகொண்டேனே.

#3964
ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியைப்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண்டு எல்லாப் பரிசும் இங்கு அளித்த தற்பரத்தைத்
தாங்கும் ஓர் நீதித் தனிப் பெருங் கருணைத் தலைவனைக் கண்டுகொண்டேனே.

#3965
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை
அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித்து அருள் உரு ஆக்கி இனிது அமர்ந்து அருளிய இறையை
வன்பு இலாக் கருணை மா நிதி எனும் என் வள்ளலைக் கண்டுகொண்டேனே.

#3966
நனவினும் எனது கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுதை
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியைச்
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை
உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில் ஒளி-தனைக் கண்டுகொண்டேனே.

#3967
கரும்பில் இன் சாற்றைக் கனிந்த முக்கனியைக் கருது கோல்_தேன் நறும் சுவையை
அரும்_பெறல் அமுதை அறிவை என் அன்பை ஆவியை ஆவியுள் கலந்த
பெரும் தனிப் பதியைப் பெரும் சுகக் களிப்பைப் பேசுதற்கு அரும் பெரும் பேற்றை
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினைக் கண்டுகொண்டேனே.

#3968
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்துக் களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை
உளம்கொளும் தேனை உணவு உணத் தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியைக்
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே.

#3969
சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச் சிதம்பர நடம் புரி சிவத்தைப்
பதம் தரு பதத்தைப் பரம்பர பதத்தைப் பதி சிவ பதத்தைத் தற்பதத்தை
இதம் தரும் உண்மைப் பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதம் தரும் சச்சிதானந்த நிறைவைச் சாமியைக் கண்டுகொண்டேனே.

#3970
ஆரண முடி மேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தைக்
காரண வரத்தைக் காரிய தரத்தைக் காரிய_காரணக் கருவைத்
தாரண நிலையைத் தத்துவ பதியைச் சத்திய நித்திய தலத்தைப்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம் பொருளினைக் கண்டுகொண்டேனே.

#3971
சுத்த வேதாந்த பிரம ராசியத்தைச் சுத்த சித்தாந்த ராசியத்தைத்
தத்துவாதீதத் தனிப் பெரும் பொருளைச் சமரச சத்தியப் பொருளைச்
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்தத் தெளிவை
வித்த மா வெளியைச் சுத்த சிற்சபையின் மெய்மையைக் கண்டுகொண்டேனே.

#3972
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை நடம் புரிகின்ற தனியைத்
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய்ச் சார்வைச் சத்துவ நித்த சற்குருவை
அமைய என் மனத்தைத் திருத்தி நல் அருள் ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை
நிமல நிற்குணத்தைச் சிற்குணாகார நீதியைக் கண்டுகொண்டேனே.

#3973
அளவைகள் அனைத்தும் கடந்துநின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதியை உலகக்
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியைக் கருணை அம் கடலை
உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியைக்
குள-வயின் நிறைந்த குரு சிவ பதியைக் கோயிலில் கண்டுகொண்டேனே.

#3974
சார் கலாந்தாதிச் சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியைச்
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய்த் துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார் பெறாப் பதத்தைப் பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய்ப் பதியைச்
சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமைத் தெய்வத்தைக் கண்டுகொண்டேனே.

#3975
அடி நடு முடி ஓர் அணுத்துணையேனும் அறிந்திடப்படாத மெய் அறிவைப்
படி முதல் அண்டப் பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய்ப் பதியைக்
கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணைக்
கொடி வளர் இடத்துப் பெரும் தயாநிதியைக் கோயிலில் கண்டுகொண்டேனே.

#3976
பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும் பற்று அறத் தவிர்த்து அருள் பரிசும்
நயமும் நல் திருவும் உருவும் ஈங்கு எனக்கு நல்கிய நண்பை நல் நாத
இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரைப்
புயல் நடு விளங்கும் புண்ணிய ஒளியைப் பொற்பு உறக் கண்டுகொண்டேனே.

#3977
கலை நிறை மதியைக் கனலைச் செங்கதிரைக் ககனத்தைக் காற்றினை அமுதை
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை
அலை அறு கருணைத் தனிப் பெருங் கடலை அன்பினில் கண்டுகொண்டேனே.

#3978
மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்-பால் சேர்ந்திடப் புரி அருள் திறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என் பேர்_அன்பனைக் கண்டுகொண்டேனே.

#3979
கருத்தனை எனது கண்_அனையவனைக் கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த
ஒருத்தனை என்னை உடைய நாயகனை உண்மை வேதாகம முடியின்
அருத்தனை வரனை அபயனைத் திரு_சிற்றம்பலத்து அருள் நடம் புரியும்
நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனைக் கண்டுகொண்டேனே.

#3980
வித்து எலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்க வல்லவனை
அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபைத் தனித் தலைவனைத் தவனைச்
சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம் தெய்வத்தைக் கண்டுகொண்டேனே.

#3981
உத்தர ஞான சித்திமாபுரத்தின் ஓங்கிய ஒரு பெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை
உத்தர ஞான நடம் புரிகின்ற ஒருவனை உலகு எலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம் ஓதியைக் கண்டுகொண்டேனே.

#3982
புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னைப் புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவு அறத் தெளிந்த அமுது அளித்து அழியா வாழ்க்கையில் வாழவைத்தவனைத்
தலைவனை ஈன்ற தாயை என் உரிமைத் தந்தையைக் கண்டுகொண்டேனே.

#3983
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதிக் கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞானப் பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளைத்
தனியனை ஈன்ற தாயை என் உரிமைத் தந்தையைக் கண்டுகொண்டேனே.

@47. உளம் புகுந்த திறம் வியத்தல்

#3984.
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என்
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே.

#3985
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்திப் பல் மணிகள் ஒளி விளங்கப் பதித்த சிங்காதனத்தே
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த
வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்தக்
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே.

#3986
உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய்
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம்
கொள்ளைகொளக் கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

#3987
தடை அறியாத் தகையினதாய்த் தன் நிகர் இல்லதுவாய்த் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடை அறியாத் தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த
நடை அறியாத் திரு_அடிகள் சிவந்திட வந்து எனது நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய்
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.

#3988
இறையளவும் துரிசு இலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும் முதல் இடமாய்
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெறச் செய்தனையே
குறைவு_இலது இப் பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

#3989
உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய்
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளித் திரு அனைத்தும் கொடுத்தாய்
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.

#3990
மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய்
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞானக்
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

#3991
சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய்ப் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே
குரங்கு மனச் சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

#3992
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகிப் பழுத்த பெரியவரும்
உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில் ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள்
பெற்று அறியப் பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.

#3993
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகிப் பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள் மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

@48. வரம்பில் வியப்பு

#3994.
பொன் புனை புயனும் அயனும் மற்றவரும் புகல அரும் பெரிய ஓர் நிலையில்
இன்பு உரு ஆகி அருளொடும் விளங்கி இயற்றலே ஆதி ஐந்தொழிலும்
தன் பொதுச் சமுகத்து ஐவர்கள் இயற்றத் தனி அரசு இயற்றும் ஓர் தலைவன்
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே.

#3995
மன்பதை வகுக்கும் பிரமர் நாரணர்கள் மன் உருத்திரர்களே முதலா
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி
இன்புறச் சிறிதே கடைக்கணித்து அருளி இலங்கும் ஓர் இறைவன் இன்று அடியேன்
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்றனை மறுப்பவர் யாரே.

#3996
தன் நிகர் இல்லாத் தலைவ என்று அரற்றித் தனித்தனி மறைகள் ஆகமங்கள்
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனிப் பெரும் பதி உவந்தே
புல் நிகர் இல்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்து அருள் பூரண வடிவாய்
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே.

#3997
பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ
ஏல் வகை ஒன்றோ இரண்டதோ அனாதி இயற்கையோ ஆதியின் இயல்போ
மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன்
மால் வகை மனத்தேன் உளக் குடில் புகுந்தான் வள்ளலைத் தடுப்பவர் யாரே.

#3998
வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியாப் பராபர உணர்ச்சியும் பற்றா
உரம் பெற உணர்வார் யார் எனப் பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன்
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளைத் தடுப்பவர் யாரே.

#3999
படைத்திடல் முதல் ஐந்தொழில் புரிந்து இலங்கும் பரம்பர ஒளி எலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ் மேல் நடு எனக் காட்டாக் கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம்
அடைத்த காரணமாய்க் காரணம் கடந்த அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன்
கடைத் தனிச் சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளைத் தடுப்பவர் யாரே.

#4000
அளவு எலாம் கடந்த பெரும் தலை அண்ட அடுக்கு எலாம் அம்ம ஓர் அணுவின்
பிளவில் ஓர் கோடிக் கூற்றில் ஒன்று ஆகப் பேச நின்று ஓங்கிய பெரியோன்
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பிக் கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ வள்ளலைத் தடுப்பவர் யாரே.

#4001
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் உள உயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும் குறைபடாப் பெரும் கொடைத் தலைவன்
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்துக் கருத்து எலாம் இனிது தந்து அருளித்
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையைத் தடுப்பவர் யாரே.

#4002
அறிந்தன அறிந்தாங்கு அறிந்தறிந்து அறியாது ஐயகோ ஐயகோ அறிவின்
மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும்
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனிப் பெரும் தலைவன்
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே.

#4003
கரு முதல் கருவாய்க் கருவினுள் கருவாய்க் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய்க்
குரு முதல் குருவாய்க் குரு எலாம் கிடைத்த கொள்கையாய்க் கொள்கையோடு அளவா
அரு முதல் அருவாய் அல்லவாய் அப்பால் அருள்_பெரும்_ஜோதியாம் தலைவன்
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையைத் தடுப்பவர் யாரே.

@49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்

#4004.
அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணியை
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியைக்
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4005
திருத் தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலாத் திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா
ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை
நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனைச் சிவனை நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
கருத்தனைச் சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4006
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியைப் பசுபதியைக் கனக_சபாபதியை உமாபதியைத்
தேட்டம் மிகும் பெரும் பதியைச் சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனிப் பதியைத் திகழ் தெய்வப் பதியை
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4007
மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியைத்
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியைச் சுயம் சோதித் திரு_மணியைச் சுத்த சிவ மணியை
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியைக்
கதித்த சுக மய மணியைச் சித்த சிகாமணியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4008
மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னைத்
தேற்றம் மிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னைக்
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ணப் பொன்னைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4009
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை
வேய் தரு தத்துவப் பொருளைத் தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
தோய்தரல் இல்லாத தனிச் சுயம் சோதிப் பொருளைச் சுத்த சிவ மயமான சுகாதீதப் பொருளைக்
காய்தரல் இல்லாது என்னைக் காத்த அருள் பொருளைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4010
திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச் சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தம் மிகு தலைவர்களும் அடக்கிடல் வல்லவரும் அலைபுரிகின்றவர்களும் உள் அனுக்கிரகிப்பவரும்
பொருத்தும் மற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ எனத் தேடிப் போக அவரவர்-தம்
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4011
கோணாத நிலையினராய்க் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலைக் குகை முதலாம் இடத்தில்
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடித்
தூணாக அசைதல் இன்றித் தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும்
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4012
நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும்
ஆட்டாய போதாந்தம் அலைவு அறு நாதாந்தம் ஆதி மற்றை அந்தங்கள் அனைத்தினும் உற்று அறிந்தும்
வேட்டாசைப் பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4013
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளைத்
தருணம்-அது தெரிந்து எனக்குத் தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயைப்
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியைப் புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய்ச் சுகத்தைக்
கருணை அருள்_பெரும்_சோதிக் கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே.

@50. ஆண்டருளிய அருமையை வியத்தல்

#4014.
அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ அடியனேன் ஆர்_உயிர் என்கோ
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ
இம்பர் இப் பிறப்பே மெய்ப் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே.

#4015
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருள்_பெரும்_சோதியே என்கோ
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனித் துணை என்கோ
இம்மையே அழியாத் திரு உரு அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#4016
எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனிப் பெரும் தலைவனே என்கோ
இப் பிறப்பு-அதிலே மெய்ப் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#4017
அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ அம்பலத்து எம்பிரான் என்கோ
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ
பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ
இச் சகத்து அழியாப் பெரு நலம் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#4018
அத்தம் நேர் கிடைத்த சுவைக் கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பலச் சிவம் என்கோ
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ
இத் தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே.

#4019
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ
பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பதச் சுவை அனுபவம் என்கோ
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பலத் தந்தை என்கோ
இறப்பு இலா வடிவம் இம்மையே அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#4020
அன்பிலே பழுத்த தனிப் பழம் என்கோ அறிவிலே அறிவறிவு என்கோ
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர்த் துணைப் பதி என்கோ
வன்பு இலா மனத்தே வயங்கு ஒளி என்கோ மன்னும் அம்பலத்து அரசு என்கோ
என் புரி அழியாப் பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே.

#4021
தடை இலாது எடுத்த அருள் அமுது என்கோ சர்க்கரைக்கட்டியே என்கோ
அடைவு உறு வயிரக் கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ
உடைய மாணிக்கப் பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ
இடைதல் அற்று ஓங்கும் திரு அளித்து இங்கே என்னை ஆண்டு அருளிய நினையே.

#4022
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகமப் பொருள் என்கோ
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குணப் பெரும் குன்றமே என்கோ
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ
இறை முடிப் பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#4023
என் உளம் பிரியாப் பேர்_ஒளி என்கோ என் உயிர்த் தந்தையே என்கோ
என் உயிர்த் தாயே இன்பமே என்கோ என் உயிர்த் தலைவனே என்கோ
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே.

@51. இறைவனை ஏத்தும் இன்பம்

#4024.
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே.

#4025
ஒட்டியே என்னுள் உறும் ஒளி என்கோ ஒளி எலாம் நிரம்பிய நிலைக்கு ஓர்
வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு விளங்குறக் கிடைத்த ஓர் வயிரப்
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்கக்
கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே.

#4026
துன்பு எலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுள் சோதியே என்கோ
அன்பு எலாம் அளித்த அன்பனே என்கோ அம்மையே அப்பனே என்கோ
இன்பு எலாம் புரிந்த இறைவனே என்கோ என் உயிர்க்கு இன் அமுது என்கோ
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே.

#4027
கருத்தனே எனது கருத்தினுக்கு இசைந்த கணவனே கணவனே என்கோ
ஒருத்தனே எல்லாம் உடைய நாயகனே ஒரு தனிப் பெரியனே என்கோ
திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே.

#4028
தாயனே எனது தாதையே ஒருமைத் தலைவனே தலைவனே என்கோ
பேயனேன் பிழையைப் பொறுத்து அருள் புரிந்த பெருந்தகைப் பெரும் பதி என்கோ
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே.

#4029
அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்தத் தனி மலர் என்கோ
கரும்பிலே எடுத்த சுவைத் திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம்
இரும்பிலே பழுத்துப் பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே.

#4030
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ
மோகம் வந்து அடுத்த போது கைப் பிடித்த முக நகைக் கணவனே என்கோ
போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ
ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே.

#4031
தத்துவம் அனைத்தும் தவிர்த்து நான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன்று என்கோ
சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ
ஒத்து வந்து எனைத் தான் கலந்துகொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே என்கோ
சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே.

#4032
யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ
சாகலைத் தவிர்த்து என்றன்னை வாழ்விக்கச் சார்ந்த சற்குரு மணி என்கோ
மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே.

#4033
இரவு இலாது இயம்பும் பகல் இலாது இருந்த இயற்கையுள் இயற்கையே என்கோ
வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ
கரவு இலாது எனக்குப் பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே.

@52. பாமாலை ஏற்றல்

#4034.
நான் புனைந்த சொல்_மாலை நல் மாலை என்று அருளித்
தான் புனைந்தான் ஞான சபைத் தலைவன் தேன் புனைந்த
சொல்லாள் சிவகாமசுந்தரியைத் தோள் புணர்ந்த
நல்லான்-தன் தாட்கே நயந்து.

#4035
சொல்லுகின்ற என் சிறு வாய்ச் சொல்_மாலை அத்தனையும்
வெல்லுகின்ற தும்பை என்றே மேல் அணிந்தான் வல்லி சிவ
காம சவுந்தரிக்குக் கண்_அனையான் ஞான சபைச்
சேம நடராஜன் தெரிந்து.

#4036
ஏது ஆகுமோ என நான் எண்ணி இசைத்த எலாம்
வேதாகமம் என்றே மேல் அணிந்தான் பாதார
விந்தம் எனது சிரம் மேல் அமர்த்தி மெய் அளித்த
எந்தை நடராஜன் இசைந்து.

#4037
இன் உரை அன்று என்று உலகம் எல்லாம் அறிந்திருக்க
என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார்
ஆர் என்றான் அம்பலவன் ஆய்ந்து.

#4038
என்பாட்டுக்கு எண்ணாதது எண்ணி இசைத்தேன் என்
றன் பாட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான் முன் பாட்டுக்
காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான்.

#4039
என்னே அதிசயம் ஈது இ உலகீர் என் உரையைப்
பொன்னே என மேல் புனைந்துகொண்டான் தன் நேர் இல்
நல் ஆரணங்கள் எலாம் நாணியவே எல்லாம் செய்
வல்லான் திரு_கருணை வாய்ப்பு.

#4040
முன்பின் அறியாது மொழிந்த மொழி_மாலை எலாம்
அன்பின் இசைந்து அந்தோ அணிந்துகொண்டான் என் பருவம்
பாராது வந்து என் பருவரல் எல்லாம் தவிர்த்துத்
தாரா வரங்கள் எலாம் தந்து.

#4041
பொன் ஒப்பதாம் ஒரு நீ போற்றிய சொல்_மாலை என்றே
என் அப்பன் என் சொல் இசைந்து அணிந்தான் தன் ஒப்பு இல்
வல்லான் இசைந்ததுவே மா மாலை அற்புதம் ஈது
எல்லாம் திரு_அருள் சீரே.

#4042
பின்_முன் அறியேன் நான் பிதற்றிய சொல்_மாலை எலாம்
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன்
இருந்தான் என் உள்ளே இருக்கின்றான் ஞான
மருந்தான் சிற்றம்பலத்தான் வாய்ந்து.

#4043
நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும்
ஆயேம் என்று அந்தோ அணிந்துகொண்டான் நாயேன் செய்
புண்ணியம் இ வானில் புவியின் மிகப் பெரிதால்
எண்ணிய எல்லாம் புரிகின்றேன்.

#4044
எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க
நண்ணுகின்றது என் புகல்வேன் நானிலத்தீர் உண்ணுகின்ற
உள் அமுதோ நான்-தான் உஞற்று தவத்தால் கிடைத்த
தெள் அமுதோ அம்பலவன் சீர்.

#4045
ஆக்கி அளித்தல் முதலாம் தொழில் ஓர் ஐந்தினையும்
தேக்கி அமுது ஒரு நீ செய் என்றான் தூக்கி
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
கொடுத்தான் சிற்றம்பலத்து என் கோ.

@53. உத்தரஞானசிதம்பர மாலை

#4046.
அருள் ஓங்குகின்றது அருள்_பெரும்_சோதி அடைந்தது என்றன்
மருள் ஓங்குறாமல் தவிர்த்தது நல்ல வரம் அளித்தே
பொருள் ஓங்கி நான் அருள் பூமியில் வாழப் புரிந்தது என்றும்
தெருள் ஓங்க ஓங்குவது உத்தர ஞான சிதம்பரமே.

#4047
இணை என்று தான் தனக்கு ஏற்றது போற்றும் எனக்கு நல்ல
துணை என்று வந்தது சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்தது என்னை
அணை என்று அணைத்துக்கொண்டு ஐந்தொழில் ஈந்தது அருள் உலகில்
திணை ஐந்தும் ஆகியது உத்தர ஞான சிதம்பரமே.

#4048
உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும்
கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே.

#4049
பவமே தவிர்ப்பது சாகா_வரமும் பயப்பது நல்
தவமே புரிந்தவர்க்கு இன்பம் தருவது தான் தனக்கே
உவமேயமானது ஒளி ஓங்குகின்றது ஒளிரும் சுத்த
சிவமே நிறைகின்றது உத்தர ஞான சிதம்பரமே.

#4050
ஒத்தாரையும் இழிந்தாரையும் நேர் கண்டு உவக்க ஒரு
மித்தாரை வாழ்விப்பது ஏற்றார்க்கு அமுதம் விளம்பி இடு
வித்தாரைக் காப்பது சித்தாடுகின்றது மேதினி மேல்
செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே.

#4051
எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல
சித்தாடல் செய்கின்றது எல்லா உலகும் செழிக்கவைத்தது
இத் தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும்
செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே.

#4052
குரு நெறிக்கே என்னைக் கூட்டிக் கொடுத்தது கூற அரிதாம்
பெரு நெறிக்கே சென்ற பேர்க்குக் கிடைப்பது பேய் உலகக்
கரு நெறிக்கு ஏற்றவர் காணற்கு அரியது காட்டுகின்ற
திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே.

#4053
கொல்லா நெறியது கோடா நிலையது கோபம்_இலார்
சொல்லால் உவந்தது சுத்த சன்மார்க்கம் துணிந்தது உலகு
எல்லாம் அளிப்பது இறந்தால் எழுப்புவது ஏதம் ஒன்றும்
செல்லா வளத்தினது உத்தர ஞான சிதம்பரமே.

#4054
காணாத காட்சிகள் காட்டுவிக்கின்றது காலம் எல்லாம்
வீண் நாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது வெம் சினத்தால்
கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது கூடி நின்று
சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே.

#4055
சொல்வந்த வேத முடி முடி மீதில் துலங்குவது
கல் வந்த நெஞ்சினர் காணற்கு அரியது காமம்_இலார்
நல் வந்தனை செய நண்ணிய பேறது நன்று எனக்கே
செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே.

#4056
ஏகாந்தம் ஆகி வெளியாய் இருந்தது இங்கு என்னை முன்னே
மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின்
மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன்
தேகாந்தம் நீக்கியது உத்தர ஞான சிதம்பரமே.

@54. செய்பணி வினவல்

#4057.
அருளே பழுத்த சிவ தருவில் அளிந்த பழம் தந்து அடியேனைத்
தெருளே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன்
பொருளே இனி நின்றனைப் பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.

#4058
ஒருவாது அடியேன் எண்ணியவாறு எல்லாம் அருளி உளம் களித்தே
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன்
உரு ஆர் உலகில் உனைப் பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே.

#4059
அவமே புரிந்தேன்-தனை மீட்டு உன் அருள் ஆர் அமுதம் மிகப் புகட்டிச்
சிவமே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன்
நவமே அடியேன் நினைப் பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.

#4060
பல் வாதனையும் தவிர்த்து எனக்கே பரமானந்த அமுது அளித்துச்
செல்வா சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
வல் வாதனை செய் மனச் செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன்
நல் வாழ்வு அளித்தாய் நினைப் பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.

#4061
ஓவா இன்ப மயம் ஆகி ஓங்கும் அமுதம் உதவி எனைத்
தேவா சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன்
நாவால் அடியேன் நினைப் பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.

#4062
இளிவே தவிர்த்துச் சிறியேன்-தன் எண்ணம் முழுதும் அளித்து அருளித்
தெளிவே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன்
தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.

#4063
மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்திச்
சிறப்பே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன்
திறப் பேர்_உலகில் உனைப் பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.

#4064
ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகித்
தேனே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வு உடையேன் நானே நின்-பால் வளர்கின்றேன்
தான் நேர் உலகில் உனைப் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.

#4065
ஆரா_அமுதம் அளித்து அருளி அன்பால் இன்ப நிலைக்கு ஏற்றிச்
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஏர் ஆர் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
தீரா உலகில் அடிச் சிறியேன் செய்யும் பணியைத் தெரித்து அருளே.

#4066
மெய் வைப்பு அழியா நிலைக்கு ஏற்றி விளங்கும் அமுதம் மிக அளித்தே
தெய்வப் பதியே சிவமே நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஐ வைப்பு அறிந்தேன் துரிசு எல்லாம் அறுத்தேன் நின்-பால் வளர்கின்றேன்
பொய் வைப்பு அடையேன் இ உலகில் புரியும் பணியைப் புகன்று அருளே.

#4067
நாராயணனும் நான்முகனும் நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏர் ஆர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே.

#4068
பிறந்தேற்கு என்றும் இறவாது பிறவாது ஓங்கும் பெருமை தந்து
சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறம் தேர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை அருளுகவே

@55. ஆன்ம தரிசனம்

#4069.
திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான்
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே
தெரு எலாம் அறியக் கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன்
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

#4070
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம்
எனைத் தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும்
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் எனப் புரிந்தேன்
அனைத்தும் என் அரசே நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

#4071
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பித்
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன்
ஒளித் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#4072
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே
ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#4073
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான் களித்து அறியேன்
உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன்
கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

#4074
திலக வாள் நுதலார்-தமைக் கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த
உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயைக்
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே எனத் துயர்ந்து இருந்தேன்
அலகு_இலாத் திறலோய் நீ அறிந்தது நான் அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

#4075
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என்று அறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீ அறிந்தது நான் உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#4076
பித்து எலாம் உடைய உலகர்-தம் கலகப் பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமைச்
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் எனத் துயர்ந்து இருந்தேன்
ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#4077
ஒன்று எனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும்
என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ இயல் அருள் சித்திகள் எனை வந்து
ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ எனத் துயர்ந்தேன்
உன் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#4078
கள்ள வாதனையைக் களைந்து அருள் நெறியைக் காதலித்து ஒருமையில் கலந்தே
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ
வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ எனத் துயர்ந்தேன்
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே

@56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

#4079
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

#4080
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனைப் பிரியாது உறுதலும் வேண்டுவனே.

#4081
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும்
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும்
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்தப் பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும்
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனைப் பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே.

#4082
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியைப் பெற்றே அகம் களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே.

#4083
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியைப் பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும்
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும்
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும்
உரை சேர் மெய்த் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.

#4084
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும்
துடி சேர் எவ்வுலகமும் எத் தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும்
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.

#4085
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும்
இ மாலைத் தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும்
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும்
தம் மானத் திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே.

#4086
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும்
எச் சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும்
இச் சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொது அடைதல் வேண்டும்
உச்ச ஆதி அந்தம் இலாத் திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே.

#4087
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும்
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்தப் பொது சிறத்தல் வேண்டும்
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும்
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனைப் பாடி ஆடுதல் வேண்டுவனே.

#4088
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும்
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.

#4089
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமன் ஆதித் தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும்
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவைக் களித்து ஏத்தல் வேண்டும்
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே.

@57. அருள் விளக்க மாலை

#4090
அருள் விளக்கே அருள் சுடரே அருள் சோதிச் சிவமே அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியாப் பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே.

#4091
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவைத் தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#4092
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னைத் தாங்கிய நல் துணையே
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே
துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே.

#4093
ஒசித்த கொடி_அனையேற்குக் கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்றுத் திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே
நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே நான் புணர நான் ஆகி நண்ணிய மெய்ச் சிவமே
கசித்த மனத்து அன்பர் தொழப் பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே.

#4094
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே
சின_முகத்தார்-தமைக் கண்டு திகைத்த பொழுது அவரைச் சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே
அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம் எனப் பேர்_அன்பர் தொழப் பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே.

#4095
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே
துங்கமுறத் திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே.

#4096
கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகித் திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய்ச் சத்தே
வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே.

#4097
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே
துதிக்கும் அன்பர் தொழப் பொதுவில் நடம் புரியும் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே.

#4098
அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த சராசர அளவு எவ்வளவோ அவ்வளவும்
கண்டதுவாய் ஆங்கு அவைகள் தனித்தனியே அகத்தும் காண் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண் தகு பேர்_அருள் சோதிப் பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணைக் கொடி நாட்டி அருளாம்
தண் தகும் ஓர் தனிச் செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே.

#4099
நல்லார் சொல் யோகாந்தப் பதிகள் பல கோடி நாட்டியதோர் போதாந்தப் பதிகள் பல கோடி
வல்லார் சொல் கலாந்த நிலைப் பதிகள் பல கோடி வழுத்தும் ஒரு நாதாந்தப் பதிகள் பல கோடி
இல் ஆர்ந்த வேதாந்தப் பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள் பல கோடி
எல்லாம் பேர்_அருள் சோதித் தனிச் செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே.

#4100
நாட்டியதோர் சுத்த பராசத்தி அண்டம் முதலா ஞானசத்தி அண்டம்-அது கடையாக இவற்றுள்
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்டப் பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்கச்
சூட்டிய பொன் முடி இலங்கச் சமரச மெய்ஞ்ஞானச் சுத்த சிவ சன்மார்க்கப் பெரு நிலையில் அமர்ந்தே
நீட்டிய பேர்_அருள் சோதித் தனிச் செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே.

#4101
தன் பெருமை தான் அறியாத் தன்மையனே எனது தனித் தலைவா என் உயிர்க்குள் இனித்த தனிச் சுவையே
நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார்
அன்புறும் ஆகம மறைகள் அறியாவே எனினும் அவரும் அவைகளும் சில சொல் அணிகின்றார் நினக்கே
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே.

#4102
உண்ண உண்ணத் தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும்
தண்ணிய வண்ணம் பரவப் பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுதத் திரளே
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

#4103
நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறைப் பாட்டே மெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே.

#4104
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில்
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

#4105
கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசைவைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே
தடுத்திட வல்லவர் இல்லாத் தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே.

#4106
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனிப் பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே
அனித்தம் அறத் திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே.

#4107
மலைவு அறியாப் பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணிப் பொருப்பே மரகதப் பேர் வரையே
விலை_அறியா உயர் ஆணிப் பெரு முத்துத் திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலை அறியாக் குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனிக் கோவே மெய் அறிவால்
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடிப் பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே.

#4108
கண் களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக் கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண் களிக்கப் பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்கப் பழுத்த தனிப் பழமே
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண் களிக்கப் பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ்ச் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே.

#4109
உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனிப் பொருளே
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே.

#4110
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே.

#4111
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே
மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டு அறியாத் திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே.

#4112
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றித் தனித்த திரு_அமுது அளித்த தனித் தலைமைப் பொருளே
ஆதி நடுக் கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதி மயமாய் விளங்கித் தனிப் பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே

#4113
அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள் உருவாய்த் திரிந்துதிரிந்து அருள்கின்ற பொருளே
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனிப் பதியே
பொடிக் கனகத் திரு_மேனித் திரு மணம் கற்பூரப் பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே
அடிக் கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#4114
அறையாத மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்ட பகிரண்டத்
துறை யாவும் பிண்ட வகைத் துறை முழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய் எவ்வுயிர் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#4115
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே.

#4116
பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே.

#4117
ஐம்பூத பரங்கள் முதல் நான்கும் அவற்று உள்ளே அடுத்து இடு நந்நான்கும் அவை அகம் புறம் மேல் நடுக் கீழ்
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய்க் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனிக் கனலே
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம் பூதத் தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே.

#4118
வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும் வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடுப் பால்
ஓதுறும் மற்று எல்லாம் தன்மயமாகக் கலந்தே ஓங்க அவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதிச் சுடரே
போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில் புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

#4119
பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கித்
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளிச் செங்கோல் நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும் துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

#4120
மாமாயைப் பரம் ஆதி நான்கும் அவற்றுள்ளே வயங்கிய நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி
ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிடக் கதிர் செய் தனித்த பெரும் சுடரே
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#4121
சுத்த பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் தூய ஒளி வடிவாகத் துலங்கும் ஒளி அளித்தே
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே
வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுறச் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்திய ஞானானந்தச் சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#4122
சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும் தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடுக் கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பிச் சூழ்கின்ற சுடரே
போற்றுகின்ற மெய் அடியர் களிப்ப நடித்து அருளும் பொதுவில் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

#4123
நாட்டிய ஓங்காரம் ஐந்தில் பரம் முதல் ஓர் நான்கும் நந்நான்கும் ஆறிடத்தும் நயந்து நிறைந்து அருளி
ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்கக் கதிர் பரப்பிக் குலவு பெரும் சுடரே
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

#4124
மன்னுகின்ற அபர சத்திப் பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கிப் பதிந்து அருளும் ஒளியே
துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம் சுகம் பெறவே கதிர் பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னும் அன்பர் உளம் களிக்கத் திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#4125
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கிக்
களங்கம்_இலாப் பர வெளியில் அந்தம் முதல் நடுத் தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்கச் சுடர் பரப்பி ஓங்கு தனிச் சுடரே
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே.

#4126
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகிப் பரவிய பேர்_ஒளியே
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே
புரிந்த தவப் பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

#4127
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்கச் சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனிச் சுடரே
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே.

#4128
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே.

#4129
காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க் கையும் மெய்யும் பரிசிக்கச் சுக பரிசத்ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தம் செய்குவதாய்த் தூய செவிக்கு இனியதொரு சுக நாதத்ததுவாய்
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே
ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#4130
திரை இலதாய் அழிவு இலதாய்த் தோல் இலதாய்ச் சிறிதும் சினைப்பு இலதாய்ப் பனிப்பு இலதாய்ச் செறிந்திடு கோது இலதாய்
விரை இலதாய்ப் புரை இலதாய் நார் இலதாய் மெய்யே மெய்யாகி அருள் வண்ணம் விளங்கி இன்ப மயமாய்ப்
பரை வெளிக்கப் பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்கக் கிடைத்த தனிப் பழமே
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணிப் பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#4131
கார்ப்பு இலதாய்த் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய்ச் சிறிதும் கசப்பு இலதாய்ப் புளிப்பு இலதாய்க் காய்ப்பு இலதாய்ப் பிறவில்
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அத் தீமை ஒன்றும் இலதாய்ப்
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய்த் தவப் பயனால் கிடைத்த தனிப் பழமே
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே.

#4132
தெற்றியிலே நான் பசித்துப் படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே
ஒற்றியில் போய்ப் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடிப் பற்று ஆகப் பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணிப் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே.

#4133
தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லைத் தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியாக் களிப்பே
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

#4134
ஓங்கிய ஓர் துணை இன்றிப் பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடைச் சிறியேன்
தூங்கி மிகப் புரண்டு விழத் தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்துக் கீழ்க் கிடத்திய மெய்த் துணையே
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவப் பயனாம் பொருளே
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளிப் பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#4135
தனிச் சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனைத் தன் வருத்தம் எனக் கொண்டு தரியாது அக் கணத்தே
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னைப் பரிந்து அணைத்த குருவே
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர்க் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

#4136
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனைத் தேற்றிப் பிடித்த பெருந்தகையே
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளிச் சிறுமை எலாம் தீர்த்த தனிச் சிவமே
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

#4137
இருள் இரவில் ஒரு மூலைத் திண்ணையில் நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனைத் தேடி வந்தே
பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியைப் போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#4138
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னைச் செல்வம் உற வளர்த்தே
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே
வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞானத் திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#4139
நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய்க் கிளை எனும் பேர்_ஒளியே
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க எனக் குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனிப் பதியே
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

#4140
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால்
தான் நிலைக்கவைத்து அருளிப் படுத்திட நான் செருக்கித் தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#4141
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன் அகத்தினைத் தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்தப் பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே
ஏர்த் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே.

#4142
இச்சை ஒன்றும் இல்லாதே இருந்த எனக்கு இங்கே இயலுறு சன்மார்க்க நிலைக்கு இச்சையை உண்டாக்கித்
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றைத் தடை ஆக்கி உலகு அறியத் தடை தீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும் முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே.

#4143
கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#4144
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே.

#4145
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூ கா என்று எனைக் கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே
மா காதல் உடையார்கள் வழுத்த மணிப் பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே.

#4146
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகித் தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனிப் பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலைத் தலை நின்ற சிவமே
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

#4147
நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகித்
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது எனத் தோற்றித் தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்துத்
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#4148
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனைத் தெளிவித்து மணி மாடத் திரு_தவிசில் ஏற்றி
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே
வசை அறியாப் பெரு வாழ்வே மயல் அறியா அறிவே வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே
பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருளப் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

#4149
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனைப் புணர்ந்த தனித்த பெரும் சுடரே
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

#4150
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டிப்
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்துப் பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனிப் பேர்_ஒளியே
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

#4151
நன்மை எலாம் தீமை எனக் குரைத்து ஓடித் திரியும் நாய்க் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும்
புன்மை எலாம் பெருமை எனப் பொறுத்து அருளிப் புலையேன் பொய் உரை மெய் உரையாகப் புரிந்து மகிழ்ந்து அருளித்
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே
இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுறப் பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#4152
விழு_குலத்தார் அருவருக்கும் புழுக் குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனிப் பேர் ஒளியே
எழுக் குலத்தில் புரிந்த மனக் கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

#4153
கலைக்கொடி கண்டு அறியாத புலைக் குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி
மலைக்கு உயர் மாத் தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே
புலைக் கொடியார் ஒருசிறிதும் புலப்படக் கண்டு அறியாப் பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே.

#4154
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும்
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்கப் பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#4155
என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தித்
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்துத் தானும் உடன் இருந்து அருளிக் கலந்த பெருந்தகையே
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய்ச் சிவமே
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழிப் பூம் கண்ணியும் ஏற்று அருளே.

#4156
தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகித் தாழ்ந்து ஏவல் இயற்ற
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும்
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடிப் பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே.

#4157
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும்
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்துப் போற்ற
உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளைத் தன்னுள் அடக்கும் வெளியாய்க்
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

#4158
வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளிக் காத்து அளித்த துரையே
ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#4159
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே
நிலை விழைவார்-தமைக் காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே
புலை அறியாப் பெரும் தவர்கள் போற்ற மணிப் பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

#4160
உயிர்க் கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றைப் பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இது-தான் நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே
மயர்ப்பு அறு மெய்த் தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

#4161
வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில்
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செயத் துணியேல் என்றே
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனித் தந்தையே தாயே என் இறையே
துன்பு அறு மெய்த் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

#4162
கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில் அதைப் பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக எனப் பரிந்து உரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#4163
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே
மயல் அறு மெய்த் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

#4164
அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடிச் செழித்திடுக வாழ்க எனச் செப்பிய சற்குருவே
பொருள்_உடைய பெரும் கருணைப் பூரண மெய்ச் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணிப் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே.

#4165
வெம் மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச் சிறிய பருவத்தே வியந்து நினை நமது
பெம்மான் என்று அடி குறித்துப் பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய்ப் பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#4166
ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை அணி மாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவு அளித்து
நீள் நவமாம் தத்துவப் பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#4167
பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே
மீன் மறுத்துச் சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#4168
மெய்ச் சுகமும் உயிர்ச் சுகமும் மிகும் கரணச் சுகமும் விளங்கு பதச் சுகமும் அதன் மேல் வீட்டுச் சுகமும்
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே
அ சுகமும் அடை அறிவும் அடைந்தவரும் காட்டாது அது தானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
பொய்ச் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே.

#4169
அண்ட வகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே.

#4170
சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இத் திசை அத் திசையாக இசைக்கும் அண்டப் பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர்த் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய்ச்
சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

#4171
பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றைப் புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரைச் செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க
அறிவறிவாய் அ அறிவுக்கு அறிவாய் எவ்விடத்தும் ஆனது வாய்த்தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
நெறி வழங்கப் பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே.

#4172
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடிப் பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய்ச் சிறிய பயல்களினும் சிறியேற்குக் கிடைத்த பெரும் பதியே
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகித் தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான்
எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#4173
கொள்ளை வினைக் கூட்டு உறவால் கூட்டிய பல் சமயக் கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளம் உறும் அக் கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#4174
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்ப்பொருளே
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே.

#4175
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு எனக் கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்குச் செப்பிய சற்குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே
ஒவ்விடச் சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#4176
இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலம் கடையா உரைப்பார்
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே
அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#4177
தோன்றிய வேதாகமத்தைச் சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் எனக் கண்டு அறியேல்
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தைப் பொய் எனக் கண்டு உணர்வாய்
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனிச் சிவமே
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#4178
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் நவில் அருகர் புத்தர் முதல் மதத் தலைவர் எல்லாம்
வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளைக் கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால்
தான் மிகக் கண்டு அறிக எனச் சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#4179
தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச் சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும்
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான்
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#4180
ஐயமுறேல் என் மகனே இப் பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி
வையம் மிசைத் தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனிப் பதியே
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#4181
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப் பதியே சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே.

#4182
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்தத் தேம் பாகின் பதமே
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனிப் பொருளே
நல் பதம் என் முடி சூட்டிக் கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே
பல் பதத்துத் தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே.

#4183
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம் மிகப் பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம்
சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம்
நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே.

#4184
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே
இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும் இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனிப் பொருளே என் வாழ்வே என் மருந்தே
பிணக்கு அறியாப் பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே.

#4185
அடிச் சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து
கடிக் கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்பக் கதிர் முடியும் சூட்டி எனைக் களித்து ஆண்ட பதியே
வடித்த மறை முடி வயங்கும் மா மணிப் பொன் சுடரே மனம் வாக்குக் கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிடப் பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

#4186
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே
மெய்த் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாடப் புரிந்து
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில்
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#4187
இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்கத் திரு_அமுதும் அளித்த பெரும் பதியே
திருந்து மறை முடிப் பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோகப் பொருளே
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே.

#4188
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமாக் கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தித்
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகித் தழைத்து ஓங்கப் புரிந்தே
அணவுறு பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#4189
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனைத் தான் வலிந்து ஆட்கொண்டு அருளித் தடை முழுதும் தவிர்த்தே
மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி வல்லப சத்திகள் எல்லாம் மருவியிடப் புரிந்து
நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி
அலர் தலைப் பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

@58. நற்றாய் கூறல்

#4190.
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள்
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை ஈது என்றாள்
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள்
மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4191
மயங்கினேன் எனினும் வள்ளலே உனை நான் மறப்பனோ கனவினும் என்றாள்
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள்
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள்
வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4192
அஞ்சல் என்று எனை இத் தருணம் நீ வந்தே அன்பினால் அணைத்து அருள் என்றாள்
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள்
செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள்
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4193
பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப் புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
காமி என்று எனை நீ கைவிடேல் காமக் கருத்து எனக்கு இல்லை காண் என்றாள்
சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள்
மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4194
அடுத்து நான் உன்னைக் கலந்து அனுபவிக்க ஆசை மேல் பொங்கியது என்றாள்
தடுத்திட முடியாது இனிச் சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
தொடுத்து உலகு_உள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள்
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4195
தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளைத் தருக நல் தருணம் ஈது என்றாள்
கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள்
நடுத் தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள்
வடுத் தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4196
பொன் செய் நின் வடிவைப் புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள்
என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள்
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள்
வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4197
மெலிந்த என் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள்
நலிந்த போது இன்னும் பார்த்தும் என்று இருத்தல் நல்லவர்க்கு அடுப்பதோ என்றாள்
மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள்
வலிந்து எனைக் கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4198
ஒன்று_இலேன் பிறிது ஒன்று உன் அருள் சோதி ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
நன்று_இலேன் எனினும் நின் திரு_அடியை நம்பினேன் நயந்து அருள் என்றாள்
குன்றிலே இருத்தற்கு உரிய நான் துயரக் குழியிலே இருந்திடேன் என்றாள்
மன்றிலே நடம் செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4199
ஆடிய பாதத்து அழகன் என்றனைத் தான் அன்பினால் கூடினன் என்றாள்
கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்குக் கூடுதல் கூடுமோ என்றாள்
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பிப் பரிசு எலாம் புரிந்தனன் என்றாள்
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

@59. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்

#4200.
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள்
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும்
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

#4201
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டுப் போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள்
எங்கள் இட்டம் திரு_அருள் மங்கலம் சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

#4202
பனம் பழமே எனினும் இந்தப் பசி தவிர்த்தால் போதும் பாரும் எனப் பகர்கின்ற பாவையர் போல் பகராள்
இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம்
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள்
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

#4203
புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார்
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும்
நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே.

#4204
தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார்
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே.

#4205
அன்னையைக் கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே
என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை
முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல்
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே.

#4206
கரவு அறியா அம்பலத்து என் கணவரைக் கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள்
இரவு அறியாள் பகல் அறியாள் எதிர்வருகின்றவரை இன்னவர் என்று அறியாள் இங்கு இன்னல் உழக்கின்றாள்
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மனக் கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும்
விரவும் ஒரு கணமும் இனித் தாழ்க்கில் உயிர் தரியாள் மெய்ப் பொதுவில் நடம் புரியும் மிகப் பெரிய துரையே.

#4207
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது
பேர்_ஆசைப் பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ
நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள் நாடு அறிந்தது இது எல்லாம் நங்கை இவள்அளவில்
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே.

#4208
என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகித்
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள்
அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள்
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய்ப் பொதுவில் நடம் புரியும் மிகப் பெரிய துரையே.

#4209
அம்பலத்தே நடம் புரியும் எனது தனித் தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால்
தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க
எம்பலத்தே மலர் அணையைப் புனைக எனப் பல கால் இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்து நுமது அருளாம்
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கித் திகழ் பெரிய துரையே.

@60. தலைவி வருந்தல்

#4210.
பருவம் இலாக் குறையாலோ பகுதி வகையாலோ பழக்கம் இலாமையினாலோ படிற்று வினையாலோ
இரு வகை மாயையினாலோ ஆணவத்தினாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள்
நிருவ மடப் பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே.

#4211
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி
எம்பலத்தே எம் இறைவன் என்னை மணம் புரிவான் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனித் தாயும் மலர்ந்து முகம் பாராள்
நிம்ப மரக் கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே.

#4212
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி
எண் உறங்கா நிலவில் அவர் இருக்கும் இடம் புகுவேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பெண் அடங்காள் எனத் தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள்
மண் அடங்காப் பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே.

#4213
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே
செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#4214
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ
எச் சமயத் தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நச்சு மரக் கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்புப் புகன்றாள்
அச்சம்_இலாள் இவள் என்றே அலர் உரைத்தார் மடவார் அண்ணல் நடராயர் திரு_எண்ணம் அறிந்திலனே.

#4215
வஞ்சம் இலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி
எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள்
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

#4216
அன்னம் உண அழைத்தனர் நான் ஆடும் மலர் அடித்தேன் அருந்துகின்றேன் என உரைத்தேன் அதனாலோ அன்றி
என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள்
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே.

#4217
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி
இதுவரையும் வரக் காணேன் தடை செய்தார் எவரோ எனப் புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புது முகம் கொண்டு எனது தனித் தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள்
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே.

#4218
கண் கலந்த கள்வர் என்னைக் கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள்
பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே.

#4219
மாடம் மிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நான் என்றேன் அதனாலோ அன்றி
ஈடு அறியாச் சுகம் புகல என்னாலே முடியாது என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
ஏடு அவிழ் பூம் குழல் கோதைத் தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள்
நாடு அறியப் பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நல்ல நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே.

#4220
கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி
இல் பூவை அறியுமடி நடந்த வண்ணம் எல்லாம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள்
சொல்_பூவைத் தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே.

#4221
மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ
இன்னும் அவர் வதன இளநகை காணச் செல்வேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மின்னும் இடைப் பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிகப் பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்துப் போனாள்
அன்ன நடைப் பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#4222
கள்_உண்டாள் எனப் புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள்
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#4223
காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி
ஏர் இகவாத் திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கார் இகவாக் குழல் சோரக் கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே
நேர் இகவாப் பெண்கள் மொழிப் போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

#4224
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ
எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நண்ணாரில் கடுத்த முகம் தோழி பெற்றாள் அவளை நல்கி எனை வளர்த்தவளும் மல்கிய வன்பு அடுத்தாள்
பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ளப் பிரியம் அறிந்திலனே.

#4225
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடித் தாமரைக் கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள்
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே.

#4226
மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ
இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புனை முகம் ஓர் கரி முகமாய்ப் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
பனை உலர்ந்த ஓலை எனப் பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே.

#4227
தாழ் குழலீர் எனைச் சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரைக் காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கூழ் கொதிப்பது எனக் கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள்
சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#4228
தனித் தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி
இனித்த சுவை எல்லாம் என் கணவர் அடிச் சுவையே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள்
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

#4229
அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ
இரும்பு மனம் ஆனாலும் இளகிவிடும் கண்டால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள்
விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே.

#4230
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள்
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே.

#4231
பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவைப் பார்ப்பதற்குத் தரம்_இல்லீர் என்ற அதனாலோ
எதிலும் எனக்கு இச்சை இல்லை அவர் அடிக் கண் அல்லால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள்
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#4232
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ
இன்று ஆவி_அன்னவர்க்குத் தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள்
ஒன்றாத மனப் பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

#4233
கூடிய என் கணவர் எனைக் கூடாமல் கலைக்கக் கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ
ஏடி எனை அறியாரோ சபைக்கு வருவாரோ என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள்
தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

@61. ஞானசிதம்பர வெண்பா

#4234.
அன்னை அப்பன் மா இனத்தார் ஆய் குழலார் ஆசையினால்
தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை
யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே
ஆ வகை ஐந்தாய்ப் பதம் ஆறு ஆர்ந்து.

#4235
நீர்க்கு இசைந்த நாமம் நிலை மூன்று கொண்ட பெயர்
போர்க்கு இசைந்தது என்று அறியாப் புல் நெஞ்சே நீர்க்கு இசைந்தே
ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று தில்லை மணி
மன்று ஒன்றுவானை மகிழ்ந்து.

#4236
ஈற்றில் ஒன்றாய் மற்றை இயல் வருக்கம் ஆகிய பேர்
ஏற்ற பறவை இருமைக்கும் சாற்று அமை
அன்றே தலைமகட்கா அம்பலவர்-தம்பால் ஏகு
என்றே எனக்கு நினக்கும்.

#4237
கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்குக்
கைத் தலை மேல் இட்டு அலையில் கண்ணீர் கொண்டு உய்த்தலை மேல்
காணாயேல் உண்மைக் கதி நிலையைக் கைக் கணியாக்
காணாயே நெஞ்சே களித்து.

#4238
கல்லோ மணலோ கனியோ கரும்போ என்று
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் சொல்லோம்
அதுவாய் அதன் பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது.

#4239
அது பார் அதிலே அடைந்து வதி மற்று ஆங்கு
அதில் ஏழையைப் புர மெய் அன்பால் அதிலே
நலம் மேவு அதிலே நில் நா ஊர் திரு_அம்
பலம் மேவக் காட்டும் பரிசு.

#4240
நம் பார்வதி பாகன் நம் புரத்தில் நின்று உவந்தோன்
அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் வெம்பாது
பார்த்தால் அளிப்பான் தெரியும் சிதம்பரம் நீ
பார்த்தாய் இப் பாட்டின் பரிசு.

#4241
நடிப்பார் வதி தில்லை நல் கோபுரத்தின்
அடிப் பாவையும் வடக்கே ஆர்ந்து கொடிப் பாய
நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும்
இன்று எவ்விடத்து என்னில் இப் பாட்டில்.

#4242
பூமி பொருந்து புரத்தே நமது சிவ
காமி-தனை வேட்டுக் கலந்து அமர்ந்தான் நேமி
அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்தக் கூத்தில்
களித்தான் அவன்-தான் களித்து.

@62. சிவபதி விளக்கம்

#4243.
உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே
விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே
பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே.

#4244
ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே ஒளி உயிர் வளர்தரும் உணர்வே
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே
வளி வளர் அசைவே அசை வளர் வளியே வளி அசை வளர்தரு செயலே
அளி வளர் அனலே அனல் வளர் அளியே அளி அனல் வளர் சிவ பதியே.

#4245
அடி வளர் இயலே இயல் வளர் அடியே அடி இயல் வளர்தரு கதியே
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே
படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே
தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே.

#4246
சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே
தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே
வரம் வளர் நிறையே நிறை வளர் வரமே வரம் நிறை வளர்தரு வயமே
பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே.

#4247
திரு வளர் வளமே வளம் வளர் திருவே திரு வளம் வளர்தரு திகழ்வே
உரு வளர் வடிவே வடி வளர் உருவே உரு வடி வளர்தரு முறைவே
கரு வளர் அருவே அரு வளர் கருவே கரு அரு வளர் நவ கதியே
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே.

#4248
நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே
பொறை வளர் புவியே புவி வளர் பொறையே புவி பொறை வளர்தரு புனலே
துறை வளர் கடலே கடல் வளர் துறையே துறை கடல் வளர்தரு சுதையே
மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே.

#4249
தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே
நவம் வளர் புரமே புரம் வளர் நவமே நவ புரம் வளர்தரும் இறையே
துவம் வளர் குணமே குணம் வளர் துவமே துவ குணம் வளர்தரு திகழ்வே
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே.

#4250
நடம் வளர் நலமே நலம் வளர் நடமே நடம் நலம் வளர்தரும் ஒளியே
இடம் வளர் வலமே வலம் வளர் இடமே இடம் வலம் வளர்தரும் இசைவே
திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே.

#4251
அது வளர் அணுவே அணு வளர் அதுவே அது அணு வளர்தரும் உறவே
விது வளர் ஒளியே ஒளி வளர் விதுவே விது ஒளி வளர்தரு செயலே
மது வளர் சுவையே சுவை வளர் மதுவே மது உறு சுவை வளர் இயலே
பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே.

#4252
நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே
மதி வளர் நலமே நலம் வளர் மதியே மதி நலம் வளர்தரு பரமே
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே
பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே.

@63. ஞானோபதேசம்

#4253.
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே
தண் ஏர் ஒண் மதியே எனைத் தந்த தயாநிதியே
உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே.

#4254
வளியே வெண் நெருப்பே குளிர் மா மதியே கனலே
வெளியே மெய்ப்பொருளே பொருள் மேவிய மேல் நிலையே
அளியே அற்புதமே அமுதே அறிவே அரசே
ஒளியே உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே.

#4255
அன்பே என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே
என்பே உள் உருகக் கலந்து என்னுள் இருந்தவனே
இன்பே என் அறிவே பரமே சிவமே எனவே
உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே.

#4256
தனையா என்று அழைத்தே அருள் சத்தி அளித்தவனே
அனையாய் அப்பனுமாய் எனக்கு ஆரியன் ஆனவனே
இனையாது என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே
உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே.

#4257
துப்பு ஆர் செம் சுடரே அருள் சோதி சுகக் கடலே
அப்பா என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே
இப் பாரில் பசிக்கே தந்த இன் சுவை நல் உணவே
ஒப்பாய் ஒப்ப அரியாய் எனக்கு உண்மை உரைத்து அருளே.

#4258
என்றே என்றுள் உறும் சுடரே எனை ஈன்றவனே
நன்றே நண்பு எனக்கே மிக நல்கிய நாயகனே
மன்று ஏர் மா மணியே சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே
ஒன்றே என் துணையே எனக்கு உண்மை உரைத்து அருளே.

#4259
திருவே தெள் அமுதே அருள் சித்த சிகாமணியே
கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே
மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம்
உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே.

#4260
தடை யாவும் தவிர்த்தே எனைத் தாங்கிக்கொண்டு ஆண்டவனே
அடையா அன்பு_இலர்-பால் எனக்கு அன்பொடு தந்த பெரும்
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே
உடையாய் உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே.

#4261
பெண்ணாய் ஆண் உருவாய் எனைப் பெற்ற பெருந்தகையே
அண்ணா என் அரசே திரு_அம்பலத்து ஆடுகின்றோய்
எண்ணா நாய்_அடியேன் களித்திட்ட உணவை எலாம்
உண்ணாது உண்டவனே எனக்கு உண்மை உரைத்து அருளே.

#4262
நந்நாலும் கடந்தே ஒளிர் ஞான சபாபதியே
பொன் ஆரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே
என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் எந்தாய்
உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே.

@64. ஆர்_அமுதப் பேறு

#4263.
விரை சேர் பொன்_மலரே அதில் மேவிய செந்தேனே
கரை சேர் முக்கனியே கனியில் சுவையின் பயனே
பரை சேர் உள் ஒளியே பெரும்பற்று அம்பலம் நடம் செய்
அரைசே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

#4264
விண் ஆர் செம் சுடரே சுடர் மேவிய உள் ஒளியே
தண் ஆர் வெண் மதியே அதில் தங்கிய தண் அமுதே
கண் ஆர் மெய்க் கனலே சிவகாமப் பெண் காதலனே
அண்ணா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே

#4265
துப்பு ஆர் செம் சடையாய் அருள் சோதிச் சுகக் கடலே
செப்பா மேல் நிலைக்கே சிறியேனைச் செலுத்தியவா
எப்பாலும் புகழும் பொது இன்ப நடம் புரியும்
அப்பா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே

#4266
மெய்யா மெய் அருளே என்று மேவிய மெய்ப்பொருளே
கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே
செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய்
ஐயா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

#4267
பொறி வேறு இன்றி நினை நிதம் போற்றும் புனிதருளே
குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதிக் கொழும் சுடரே
செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_
அறிவே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

#4268
முத்தா முத்தர் உளே ஒளிர்கின்ற முழு_முதலே
சித்தா சித்தி எலாம் தர வல்ல செழும் சுடரே
பித்தா பித்தன் எனை வலிந்து ஆண்ட பெருந்தகையே
அத்தா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

#4269
தன் நேர் இல்லவனே எனைத் தந்த தயாநிதியே
மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே
பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே
அன்னே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

#4270
ஒளியே அ ஒளியின் நடு உள் ஒளிக்குள் ஒளியே
வெளியே எவ்வெளியும் அடங்கின்ற வெறுவெளியே
தளியே அம்பலத்தே நடம் செய்யும் தயாநிதியே
அளியே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

#4271
மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே
தெருளே ஓர் வடிவாய் உறச் செய்த செழும் சுடரே
பொருளே சிற்சபை வாழ்வுறுகின்ற என் புண்ணியனே
அருளே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

#4272
முன்பே என்றனையே வலிந்து ஆட்கொண்ட முன்னவனே
இன்பே என் உயிரே எனை ஈன்ற இறையவனே
பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ்
அன்பே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

#4273
பவனே வெம் பவ நோய்-தனைத் தீர்க்கும் பரஞ்சுடரே
சிவனே செம்பொருளே திரு_சிற்றம்பலம் நடிப்பாய்
தவ நேயம் பெறுவார்-தமைத் தாங்கி அருள் செய வல்
லவனே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே..

#4274
தேனாய்த் தீம் பழமாய்ச் சுவை சேர் கரும்பாய் அமுதம்-
தானாய் அன்பர் உளே இனிக்கின்ற தனிப் பொருளே
வானாய்க் கால் அனலாய்ப் புனலாய் அதில் வாழ் புவியாய்
ஆனாய் தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

#4275
பொடி ஏற்கும் புயனே அருள் பொன்_அம்பலத்து அரசே
செடியேற்கு அன்று அளித்தாய் திரு_சிற்றம்பலச் சுடரே
கடியேற்கு அன்னை எனும் சிவகாமக் கொடை_உடையாய்
அடியேற்கு இன்று அளித்தாய் அருள் ஆர்-அமுதம்-தனையே.

@65. உபதேச வினா

#4276.
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும்
நாதாந்தத் திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி.

#4277
தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும்
எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.

#4278
சின்மய வெளியிடைத் தன்மயம் ஆகித் திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும்
என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி.

#4279
நவ நிலை மேல் பர நாதத் தலத்தே ஞானத் திரு_நடம் நான் காணல் வேண்டும்
மவுனத் திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி.

#4280
ஆறாறுக்கு அப்புறம் ஆகும் பொதுவில் அது அதுவா நடம் நான் காணல் வேண்டும்
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்து இங்கு இறப்பாயோ தோழி.

#4281
வகார வெளியில் சிகார உருவாய் மகாரத் திரு_நடம் நான் காணல் வேண்டும்
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி.

#4282
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும்
சூதாம் தற்போதத்தைச் சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி.

#4283
அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திரு_நடம் நான் காணல் வேண்டும்
செறிவில் அறிவு ஆகிச் செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ந் நெறி வெல்வாயோ தோழி.

#4284
என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திரு_நடம் நான் காணல் வேண்டும்
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி.

#4285
துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதித் திரு_நடம் நான் காணல் வேண்டும்
கரியைக் கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய்ப் பழி பூண்பாயோ தோழி.

#4286
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும்
கொத்து அறு வித்தைக் குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி

@66. நெஞ்சொடு நேர்தல்

#4287.
அடங்கும் நாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே
தொடங்கும் நாள் நல்லது அன்றோ நெஞ்சே
தொடங்கும் நாள் நல்லது அன்றோ.

#4288
வல்லவாறு எல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்ல நாள் எண்ணிய நாள் நெஞ்சே
நல்ல நாள் எண்ணிய நாள்.

#4289
காலம் கடந்த கடவுளைக் காணற்குக்
காலம் கருதுவது ஏன் நெஞ்சே
காலம் கருதுவது ஏன்.

#4290
ஆலம் அமுது ஆக்கும் அண்ணலைக் காணற்குக்
காலம் கருதுவது ஏன் நெஞ்சே
காலம் கருதுவது ஏன்.

#4291
தடை யாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
தடை யாதும் இல்லை கண்டாய் நெஞ்சே
தடை யாதும் இல்லை கண்டாய்.

#4292
கையுள் அமுதத்தை வாயுள் அமுது ஆக்கப்
பையுள் உனக்கு என்னையோ நெஞ்சே
பையுள் உனக்கு என்னையோ.

#4293
என் உயிர்_நாதனை யான் கண்டு அணைதற்கே
உன்னுவது என்னை கண்டாய் நெஞ்சே
உன்னுவது என்னை கண்டாய்.

#4294
நான் பெற்ற செல்வத்தை நான் பற்றிக் கொள்ளற்கே
ஏன் பற்றுவாய் என்பது ஆர் நெஞ்சே
ஏன் பற்றுவாய் என்பது ஆர்.

#4295
தத்துவாதீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவம் உன்னுவது ஏன் நெஞ்சே
தத்துவம் உன்னுவது ஏன்.

#4296
ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச் சற்றும்
விக்கல் வராது கண்டாய் நெஞ்சே
விக்கல் வராது கண்டாய்.

@67. அஞ்சாதே நெஞ்சே

#4297.
அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே
அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே.

#4298
வஞ்சம்_இலார் நாம் வருந்திடில் அப்போதே
அஞ்சல் என்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4299
துய்யர் அருள்_பெரும்_ஜோதியார் நம்முடை
அய்யர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

#4300
மண்ணில் நமை அண்ட வள்ளலார் நம்முடை
அண்ணல் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

#4301
இப் புவியில் நம்மை ஏன்றுகொண்டு ஆண்ட நம்
அப்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

#4302
சித்தர் எலாம் வல்ல தேவர் நமை ஆண்ட
அத்தர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

#4303
சோதி அருள் பெருஞ் சோதியார் நம்முடை
ஆதி இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

#4304
தாண்டவனார் என்னைத் தான் தடுத்து ஆட்கொண்ட
ஆண்டவனார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4305
வன்பர் மனத்தை மதியாதவர் நமது
அன்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

#4306
தெருள்_உடையார் எலாஞ் செய்ய வல்லார் திரு
அருள்_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4307
நம்மை ஆட்கொள்ள நடம் புரிவார் நமது
அம்மையினோடு இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4308
தன்னை ஒப்பார் சிற்சபை நடம் செய்கின்றார்
அன்னை ஒப்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4309
பாடுகின்றார்க்கு அருள் பண்பினர் ஞானக் கூத்
தாடுகின்றார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4310
காதரிப்பார்கட்குக் காட்டிக்கொடார் நம்மை
ஆதரிப்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4311
நீள வல்லார்க்கு மேல் நீள வல்லார் நம்மை
ஆள வல்லார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4312
இன்பு_உடையார் நம் இதயத்து அமர்ந்த பேர்_
அன்பு_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4313
உபய பதத்தை நம் உச்சி மேல் சூட்டிய
அபயர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

#4314
வேண்டு கொண்டார் என்னை மேல் நிலைக்கு ஏற்றியே
ஆண்டுகொண்டார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4315
எச்சம் பெறேல் மகனே என்று என்னுள் உற்ற
அச்சம் தவிர்த்தவர் அம்பலத்து இருக்கின்றார்

#4316
நமுதன் முதல் பல நன்மையுமாம் ஞான
அமுதர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

#4317
செடிகள் தவிர்த்து அருள் செல்வம் அளிக்கின்ற
அடிகள் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

#4318
விரசு உலகு எல்லாம் விரித்து ஐந்தொழில் தரும்
அரசு_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

#4319
செறிவு_உடையார் உளத்தே நடம் செய்கின்ற
அறிவு_உருவார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

@68. ஆடிய பாதம்

#4320.
ஆடிய பாதம் மன்று ஆடிய பாதம்
ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம்.

#4321
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்தி செய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்

#4322
தீராத வல்_வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம்
வாரா_வரவு ஆகி வந்த பொன் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம்.

#4323
ஆரா_அமுது ஆகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்து அருள் பாதம்
நாராயணன் விழி நண்ணிய பாதம்
நான் புனை பாடல் நயந்த பொன் பாதம்.

#4324
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல் எல்லாம்_வல்ல பொன் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம்.

#4325
எச் சமயத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம்
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக்கு அதிபதி பாதம்

#4326
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள் அமுதாய் உளம் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழு_முதல் பாதம்
முப்பாழுக்கு அப்பால் முளைத்த பொன் பாதம்.

#4327
துரிய வெளிக்கே உரிய பொன் பாதம்
சுக மயம் ஆகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம்
பேறு எல்லாம் தந்த பெரும் புகழ்ப் பாதம்.

#4328
சாகா_வரம் தந்த தாரகப் பாதம்
சச்சிதானந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம்.

#4329
ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டு ஆகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்.

#4330
ஐவண்ணமும் கொண்ட அற்புதப் பாதம்
அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம்
கை வண்ண நெல்லிக் கனி ஆகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்த பொன் பாதம்.

#4331
ஆர்_உயிர்க்கு ஆதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சார் உயிர்க்கு இன்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம்.

#4332
தாங்கி எனைப் பெற்ற தாய் ஆகும் பாதம்
தந்தையும் ஆகித் தயவு செய் பாதம்
ஓங்கி என் உள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்த பொன் பாதம்.

#4333
எண்ணியவாறே எனக்கு அருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருள் ஆகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்.

#4334
ஆறு அந்தத்துள்ளும் அமர்ந்த பொன் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறு அந்தம் இல்லா என் வாழ் முதல் பாதம்
மண் முதல் ஐந்தாய் வழங்கிய பாதம்.

#4335
அருள்_பெரும்_ஜோதி அதாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருள் பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன் வண்ணம் ஆகிய புண்ணிய பாதம்.

#4336
நாரணன் ஆதியர் நாட அரும் பாதம்
நான் தவத்தால் பெற்ற நல் துணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசை_விட்டார்க்கே அணிமை ஆம் பாதம்.

@69. அபயம் அபயம்

#4337.
அபயம் அபயம் அபயம்.

#4338
உபயம்-அதாய் என் உறவாய்ச் சிதம்பரச்
சபையில் நடம் செயும் சாமி பதத்திற்கே

#4339
எம் பலத்தால் எம்மை ஏன்றுகொளத் தில்லை
அம்பலத்து ஆடும் எம் ஐயர் பதத்திற்கே

#4340
தவ சிதம்பரம் ஆகித் தன்மயமாய்ச் செயும்
சிவ_சிதம்பர மகாதேவர் பதத்திற்கே

#4341
ஒன்றும் பதத்திற்கு உயர் பொருள் ஆகியே
என்றும் என் உள்ளத்து இனிக்கும் பதத்திற்கே

#4342
வான் அந்தமாம் தில்லை மன்றிடை என்றும் நின்று
ஆனந்த_தாண்டவம் ஆடும் பதத்திற்கே

#4343
நாராயணனொடு நான்முகன் ஆதியர்
பாராயணம் செயும் பதும பதத்திற்கே

#4344
அன்பர் செயும் பிழை ஆயிரமும் பொறுத்து
இன்பம் அளிக்குநம் ஈசர் பதத்திற்கே

#4345
குற்றம் செயினும் குணமாகக் கொண்டு நம்
அற்றம் தவிர்க்கு நம் அப்பர் பதத்திற்கே

#4346
செம்பொருள் ஆகிச் சிதம்பரத்தே என்றும்
நம் பொருள் ஆன நடேசர் பதத்திற்கே

#4347
வெச்சென்ற மாயை வினை ஆதியால் வந்த
அச்சம் தவிர்க்கும் நம் ஐயர் பதத்திற்கே

#4348
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்கும் நம்
புண்ணியனார் தெய்வப் பொன் அடிப் போதுக்கே

#4349
மன் அம்பரத்தே வடிவில் வடிவு ஆகிப்
பொன்_அம்பலத்து ஆடும் பொன் அடிப் போதுக்கே

#4350
நாத முடியில் நடம் புரிந்து அன்பர்க்குப்
போதம் அளிக்கின்ற பொன் அடிப் போதுக்கே

#4351
உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
சச்சிதானந்தத் தனி நடப் போதுக்கே

#4352
சித்தமும் உள்ளமும் தித்தித்து இனிக்கின்ற
புத்தமுது ஆகிய பொன் அடிப் போதுக்கே

@70. அம்பலவாணர் வருகை

#4353.
வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணி மன்ற_வாணரே வாரீர்.

#4354
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே திரு
அம்பல_வாணரே வாரீர்
அன்பு_உடையாளரே வாரீர்.

#4355
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளிய
அந்தணரே இங்கு வாரீர்
அம்பலத்து ஐயரே வாரீர்.

#4356
அன்பு_உருவானவர் இன்புற உள்ளே
அறிவு_உருவாயினீர் வாரீர்
அருள்_பெரும்_ஜோதியீர் வாரீர்.

#4357
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
அரும் பெருஞ் சித்தரே வாரீர்
அற்புதரே இங்கு வாரீர்.

#4358
அம்மையுமாய் எனக்கு அப்பனும் ஆகி என்
அன்பனும் ஆயினீர் வாரீர்
அங்கணரே இங்கு வாரீர்.

#4359
அல்லல் அறுத்து என் அறிவை விளக்கிய
அம்பல_வாணரே வாரீர்
செம்பொருள் ஆயினீர் வாரீர்.

#4360
அப்பு அணி பொன் முடி அப்பன் என்று ஏத்தும் மெய்
அன்பருக்கு அன்பரே வாரீர்
இன்பம் தர இங்கு வாரீர்.

#4361
அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
அடிக் கமலத்தீரே வாரீர்
நடிக்க வல்லீர் இங்கு வாரீர்.

#4362
அண்டர்க்கு அரும் பதம் தொண்டர்க்கு எளிதில்
அளித்திட வல்லீரே வாரீர்
களித்து என்னை ஆண்டீரே வாரீர்.

#4363
அம்பரமான சிதம்பர நாடகம்
ஆட வல்லீர் இங்கு வாரீர்
பாடல் உவந்தீரே வாரீர்.

#4364
ஆதி அனாதி என்று ஆரணம் போற்றும்
அரும் பெரும் ஜோதியீர் வாரீர்
ஆனந்த நாடரே வாரீர்.

#4365
ஆகம வேதம் அனேக முகம் கொண்டு
அருச்சிக்கும் பாதரே வாரீர்
ஆர்_உயிர்_நாதரே வாரீர்.

#4366
ஆசு அறும் அந்தங்கள் ஆறும் புகன்ற நல்
ஆரியரே இங்கு வாரீர்
ஆனந்தக் கூத்தரே வாரீர்

#4367
ஆல நிழல்-கண் அமர்ந்து அறம் சொன்ன நல்
ஆரியரே இங்கு வாரீர்
ஆனந்தக் கூத்தரே வாரீர்.

#4368
ஆர்_அமுது ஆகி என் ஆவியைக் காக்கின்ற
ஆனந்தரே இங்கு வாரீர்
ஆடல் வல்லீர் இங்கு வாரீர்.

#4369
ஆதரவாய் என் அறிவைத் தெளிவித்து
அமுதம் அளித்தீரே வாரீர்
ஆடிய பாதரே வாரீர்.

#4370
ஆதார மீதானத்து அப்பாலும் காண்டற்கு
அரும் பெரும் ஜோதியீர் வாரீர்
கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர்.

#4371
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
ஜோதியரே இங்கு வாரீர்
வேதியரே இங்கு வாரீர்.

#4372
ஆடல்கொண்டீர் திரு_அம்பலத்தே என்றன்
பாடல்கொண்டீர் இங்கு வாரீர்
கூட வல்லீர் இங்கு வாரீர்.

#4373
ஆக்கம் கொடுத்து என்றன் தூக்கம் தடுத்த என்
ஆண்டவரே இங்கு வாரீர்
தாண்டவரே இங்கு வாரீர்.

#4374
ஆபத்தை நீக்கி ஓர் தீபத்தை ஏற்றி என்
ஆணவம் போக்கினீர் வாரீர்
காண வந்தேன் இங்கு வாரீர்.

#4375
இது தருணம் தருணம் தருணம் என்
இறையவரே இங்கு வாரீர்
இடர் தவிர்த்து ஆட்கொண்டீர் வாரீர்.

#4376
இச்சையின் வண்ணம் எனக்கு அருள்செய்ய
இது தருணம் இங்கு வாரீர்
இன் அமுது ஆயினீர் வாரீர்.

#4377
இன்பம் கொடுத்தே என் துன்பம் கெடுத்து உள்
இருக்கின்ற நாதரே வாரீர்
இருக்கின் பொருள் ஆனீர் வாரீர்.

#4378
இரவும்_பகலும் இதயத்தில் ஊறி
இனிக்கும் அமுதரே வாரீர்
இனித் தரியேன் இங்கு வாரீர்.

#4379
இன்னும் தாழ்த்து அங்கே இருப்பது அழகு அன்று
இது தருணம் இங்கு வாரீர்
இருமையும் ஆயினீர் வாரீர்.

#4380
இடர் தவிர்த்து இன்பம் எனக்கு அளித்து ஆளற்கு
இது தருணம் இங்கு வாரீர்
இனியவரே இங்கு வாரீர்

#4381
இறையும் பொறுப்பு அரிது என் உயிர்_நாதரே
இத் தருணம் இங்கு வாரீர்
இத நடம் செய்கின்றீர் வாரீர்.

#4382
இம்மையிலே எனக்கு அம்மையின் இன்பம்
இது என்று அளித்தீரே வாரீர்
இதயத்து இருந்தீரே வாரீர்.

#4383
இங்கு_அங்கு என்னாமலே எள்ளுக்குள் எண்ணெய் போல்
எங்கும் நிறைந்தீரே வாரீர்
இந்து எழில் வண்ணரே வாரீர்.

#4384
இணை ஒன்றும் இல்லா இணை அடி என் தலை
ஏறவைத்தீர் இங்கு வாரீர்
இறுதி_இலீர் இங்கு வாரீர்.

#4385
ஈன்றாளும் எந்தையும் என் குருவும் எனக்கு
இன்பமும் ஆயினீர் வாரீர்
அன்பருக்கு அன்பரே வாரீர்.

#4386
ஈனம் அறுத்து மெய்ஞ்ஞான விளக்கு என்
இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
உதயச் சுடரினீர் வாரீர்.

#4387
ஈடு அறியாத மெய்_வீடு தந்து அன்பரை
இன்புறச்செய்கின்றீர் வாரீர்
வன்பர்க்கு அரியீரே வாரீர்.

#4388
ஈது இயல் என்று நின்று ஓதிய வேதத்திற்கு
எட்டாது இருந்தீரே வாரீர்
நட்டார்க்கு எளியீரே வாரீர்.

#4389
ஈசர் எனும் பல தேசர்கள் போற்றும் ந
டேசரே நீர் இங்கு வாரீர்
நேசரே நீர் இங்கு வாரீர்.

#4390
ஈசர் பலிக்கு உழல் நேசர் என்று அன்பர்கள்
ஏச நின்றீர் இங்கு வாரீர்
நாசம்_இல்லீர் இங்கு வாரீர்.

#4391
ஈறு அறியா மறையோன் என்று அறிஞர்
இயம்ப நின்றீர் இங்கு வாரீர்
வயம் தருவீர் இங்கு வாரீர்.

#4392
ஈதல் கண்டே மிகக் காதல்கொண்டேன் எனக்கு
ஈதல் செய்வீர் இங்கு வாரீர்
ஓத அரியீர் இங்கு வாரீர்.

#4393
ஈடணை அற்ற நெஞ்சூடு அணைவுற்று மற்று
ஈடு_அணையீர் இங்கு வாரீர்
ஆட வல்லீர் இங்கு வாரீர்.

#4394
ஈண்டு அறிவு ஓங்கிடத் தூண்டு அறிவு ஆகி உள்
ஈண்டுகின்றீர் இங்கு வாரீர்
ஆண்டவரே இங்கு வாரீர்.

#4395
உள்ளதே உள்ளது விள்ளது என்று எனக்கு
உள்ளது உரைசெய்தீர் வாரீர்
வள்ளல் விரைந்து இங்கு வாரீர்.

#4396
உருவாய் அருவாய் உரு_அருவாய் அவை
ஒன்றும்_அல்லீர் இங்கு வாரீர்
என்றும் நல்லீர் இங்கு வாரீர்.

#4397
உறவும் பகையும் உடைய நடையில்
உறவும் எண்ணேன் இங்கு வாரீர்
பிறவும் நண்ணேன் இங்கு வாரீர்.

#4398
உள்ளக் கருத்தை நான் வள்ளற்கு உரைப்பது என்
உள்ளத்து இருந்தீரே வாரீர்
விள்ளற்கு அரியீரே வாரீர்.

#4399
உய்ய வல்லார்க்கு அருள்செய்ய வல்லீர் நானும்
உய்ய வல்லேன் இங்கு வாரீர்
செய்ய வல்லீர் இங்கு வாரீர்.

#4400
உடையவர் ஆர் இக் கடையவனேனுக்கு
உடையவரே இங்கு வாரீர்
சடையவரே இங்கு வாரீர்.

#4401
உறங்கி இறங்கும் உலகவர் போல நான்
உறங்க_மாட்டேன் இங்கு வாரீர்
இறங்க_மாட்டேன் இங்கு வாரீர்.

#4402
உண்டு உடுத்து இன்னும் உழல_மாட்டேன் அமுது
உண்டி விரும்பினேன் வாரீர்
உண்டி தர இங்கு வாரீர்.

#4403
உன்னு-தோறு உன்னு-தோறு உள்ளே இனிக்கின்ற
உத்தமரே இங்கு வாரீர்
உற்ற_துணை ஆனீர் வாரீர்.

#4404
உம் ஆணை உம் ஆணை உம்மை அல்லால் எனக்கு
உற்றவர் மற்று இலை வாரீர்
உற்று அறிந்தீர் இங்கு வாரீர்.

#4405
ஊன நடம் தவிர்த்து ஆன நடம் காட்டு
மோன நடேசரே வாரீர்
ஞான நடேசரே வாரீர்.

#4406
ஊரும்_இல்லீர் ஒரு பேரும்_இல்லீர் அறி
வோரும் இல்லீர் இங்கு வாரீர்
யாரும் இல்லீர் இங்கு வாரீர்.

#4407
ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற
வீறு_உடையீர் இங்கு வாரீர்
நீறு_உடையீர் இங்கு வாரீர்.

#4408
ஊன்று நும் சேவடி சான்று தரிக்கிலேன்
ஏன்றுகொள்வீர் இங்கு வாரீர்
ஆன்றவரே இங்கு வாரீர்.

#4409
ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என
ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
தேற்றம் அருள்செய்வீர் வாரீர்.

#4410
ஊடல்_இல்லீர் எனைக் கூடல் வல்லீர் என்னுள்
பாடல் சொல்வீர் இங்கு வாரீர்
ஆடல் நல்லீர் இங்கு வாரீர்.

#4411
ஊக்கம் கொடுத்து என்றன் ஏக்கம் கெடுத்து அருள்
ஆக்கம் அடுத்தீரே வாரீர்
தூக்கம் தவிர்த்தீரே வாரீர்.

#4412
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று
ஓமை அறிவித்தீர் வாரீர்
சேமஞ் செறிவித்தீர் வாரீர்.

#4413
ஊகம்_இலேன் பெற்ற தேகம் அழியாத
யோகம் கொடுத்தீரே வாரீர்
போகம் கொடுத்தீரே வாரீர்.

#4414
ஊதியம் தந்த நல் வேதியரே உண்மை
ஓதிய நாதரே வாரீர்
ஆதி அனாதியீர் வாரீர்.

#4415
என் குறை தீர்த்து என் உள் நன்கு உறைவீர் இனி
என் குறை என் முன்னீர் வாரீர்
தன் குறை இல்லீரே வாரீர்.

#4416
என் உயிர் ஆகி என்றன் உயிர்க்கு உள்ளே ஓர்
இன் உயிர் ஆயினீர் வாரீர்
என் உயிர்_நாதரே வாரீர்.

#4417
என்-கண் அருள்செய்து என் புன்கண் விலக்கிய
என் கண்_அனையீரே வாரீர்
மின் கண்_நுதலீரே வாரீர்.

#4418
எல்லா உயிர்களும் நல்லார் எனத் தொழும்
எல்லாம்_வல்லீர் இங்கு வாரீர்
சொல்லா நிலையினீர் வாரீர்.

#4419
எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல்
எட்டும்படி செய்தீர் வாரீர்
எட்டு_உருவாயினீர் வாரீர்

#4420
என்று கண்டாய் இது நன்று கொண்டு ஆளுக
என்று தந்தீர் இங்கு வாரீர்
அன்று வந்தீர் இன்று வாரீர்.

#4421
எச் சமயங்களும் பொய்ச் சமயம் என்றீர்
இச் சமயம் இங்கு வாரீர்
மெய்ச் சமயம் தந்தீர் வாரீர்.

#4422
என்-பால் களிப்பொடும் அன்பால் ஒன்று ஈந்து இதை
இன்பால் பெறுக என்றீர் வாரீர்
தென்பால் முகம் கொண்டீர் வாரீர்.

#4423
எச்ச உரை அன்று என் இச்சை எல்லாம் உமது
இச்சை கண்டீர் இங்கு வாரீர்
அச்சம் தவிர்த்தீரே வாரீர்.

#4424
எண்ணம் எல்லாம் உமது எண்ணம் அல்லால் வேறு ஓர்
எண்ணம் எனக்கு இல்லை வாரீர்
வண்ணம் அளிக்கின்றீர் வாரீர்.

#4425
ஏராய நான்முகர் நாராயணர் மற்றும்
பாராயணம் செய்வீர் வாரீர்
ஊர் ஆயம் ஆயினீர் வாரீர்.

#4426
ஏமம் மிகும் திரு வாம சுகம் தரும்
ஏம சபேசரே வாரீர்
சோம சிகாமணி வாரீர்.

#4427
ஏதம் இலாப் பர நாத முடிப் பொருள்
ஏது அது சொல்லுவீர் வாரீர்
ஈதல் உடையீரே வாரீர்.

#4428
ஏக பராபர யோக வெளிக்கு அப்பால்
ஏக வெளி நின்றீர் வாரீர்
ஏகர் அனேகரே வாரீர்.

#4429
ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
ஏறவைத்தீர் இங்கு வாரீர்
தேறவைத்தீர் இங்கு வாரீர்.

#4430
ஏகாந்த நல் நிலை யோகாந்தத்து உள்ளது என்று
ஏகாந்தம் சொல்லினீர் வாரீர்
தேகாந்தம் இல்லீரே வாரீர்.

#4431
ஏகாத கல்வி-தான் சாகாத கல்வி என்
றே காதலால் சொன்னீர் வாரீர்
வேகாத_காலினீர் வாரீர்.

#4432
ஏடு ஆயிரம் என்னை கோடா மொழி ஒன்றே
ஏடா என்றீர் இங்கு வாரீர்
ஈடு_ஆவார் இல்லீரே வாரீர்.

#4433
ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
ஈசான மேல் என்றீர் வாரீர்
ஆசு ஆதி இல்லீரே வாரீர்.

#4434
ஏன் என்பார் வேறு இலை நான் அன்பால் கூவுகின்
றேன் என்-பால் ஏன் என்பீர் வாரீர்
ஆனின் பால் ஆடுவீர் வாரீர்.

#4435
ஐந்து மலங்களும் வெந்து விழ எழுத்து
ஐந்தும் செயும் என்றீர் வாரீர்
இந்து சிகாமணி வாரீர்.

#4436
ஐயமுற்றேனை இ வையம் கரி ஆக
ஐயம் தவிர்த்தீரே வாரீர்
மெய் அம்பலத்தீரே வாரீர்.

#4437
ஐயர் நடம் புரி மெய்யர் என்றே உணர்ந்து
ஐயர் தொழ நின்றீர் வாரீர்
துய்யர் உளம் நின்றீர் வாரீர்.

#4438
ஐவணங் காட்டும் நும் மெய் வணம் வேட்டுநின்று
ஐவணர் ஏத்துவீர் வாரீர்
பொய் வணம் போக்குவீர் வாரீர்.

#4439
ஒன்றே சிவம் அதை ஒன்று சன்மார்க்கமும்
ஒன்றே என்றீர் இங்கு வாரீர்
நன்றே நின்றீர் இங்கு வாரீர்.

#4440
ஒப்பார்_இல்லீர் உமக்கு இப் பாரில் பிள்ளை நான்
ஒப்பாரி அல்ல காண் வாரீர்
முப்பாழ் கடந்தீரே வாரீர்

#4441
ஒத்த இடம்-தன்னில் நித்திரை செய் என்றீர்
ஒத்த இடம் காட்ட வாரீர்
சித்த சிகாமணி வாரீர்.

#4442
ஒட்டு மற்று இல்லை நான் விட்டுப் பிரிகலேன்
ஒட்டுவைத்தேனும் மேல் வாரீர்
எட்டு_குணத்தீரே வாரீர்.

#4443
ஒருமை நிலையில் இருமையும் தந்த
ஒருமையினீர் இங்கு வாரீர்
பெருமையினீர் இங்கு வாரீர்.

#4444
ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
உண்மை சொன்னேன் இங்கு வாரீர்
பெண்மை இடம் கொண்டீர் வாரீர்.

#4445
ஓங்கார நாடகம் பாங்காகச் செய்கின்ற
ஓங்கார நாடரே வாரீர்
ஆங்காரம் நீக்கினீர் வாரீர்.

#4446
ஓங்கும் பிண்டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
ஓங்கு நடேசரே வாரீர்
பாங்கு செய்வீர் இங்கு வாரீர்.

#4447
ஓசையின் உள்ளே ஓர் ஆசை உதிக்க மெல்
ஓசை செய்வித்தீரே வாரீர்
பாசம் அறுத்தீரே வாரீர்.

#4448
ஓராது உலகினைப் பாராது இரு நினக்கு
ஓரா வகை என்றீர் வாரீர்
பேரா நிலை தந்தீர் வாரீர்.

#4449
ஓடாது மாயையை நாடாது நல் நெறி
ஊடாது இரு என்றீர் வாரீர்
வாடாது இரு என்றீர் வாரீர்.

#4450
ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்து அருள்
ஓலக்கம் காட்டினீர் வாரீர்
காலக் கணக்கு_இல்லீர் வாரீர்.

#4451
ஓடத்தில் நின்று ஒரு மாடத்தில் ஏற்றி மெய்
யூடு அத்தைக் காட்டினீர் வாரீர்
வேடத்தைப் பூட்டினீர் வாரீர்.

#4452
ஓமத்திலே நடு_சாமத்திலே எனை
ஓமத்தன் ஆக்கினீர் வாரீர்
சாம் அத்தம் நீக்கினீர் வாரீர்.

#4453
ஓம் என்பதற்கு முன் ஆம் என்று உரைத்து உடன்
ஊம் என்று காட்டினீர் வாரீர்
நாம் என்று நாட்டினீர் வாரீர்.

#4454
ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
ஒவ்வி ஒன்று ஆக்கினீர் வாரீர்.

#4455
கண்_அனையீர் உம்மைக் காண என் ஆசை
கடல் பொங்குகின்றது வாரீர்
உடல் தங்குகின்றது வாரீர்.

#4456
கண்டு அணைந்தால் அன்றிக் காதல் அடங்காது என்
கண்மணியீர் இங்கு வாரீர்
உள்_மணியீர் இங்கு வாரீர்.

#4457
கட்டிக்கொண்டு உம்மைக் கலந்துகொளல் வேண்டும்
காரணரே இங்கு வாரீர்
பூரணரே இங்கு வாரீர்.

@71. அம்பலவாணர் ஆடவருகை

#4458.
ஆட வாரீர் என்னோடு ஆட வாரீர்
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆட வாரீர்.

#4459
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனித் தலைமைப் பெரும் பதியீர் ஆட வாரீர்
வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர்
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர்
இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர். என்னுடைய நாயகரே ஆட வாரீர்

#4460
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர்
பெரு வாய்மைப் பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர்
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர்
இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

#4461
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர்
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர்
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர்
ஏற்ற தனித் தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

#4462
இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர்
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர்
நல்லார் சொல் நல்லவரே ஆட வாரீர் நல் தாயில் இனியவரே ஆட வாரீர்
எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

#4463
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர்
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர்
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர்
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

#4464
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர்
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர்
சொல் மார்க்கப் பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர்
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

#4465
அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர்
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர்
கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர்
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

#4466
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டுக் காலை இதே ஆட வாரீர்
ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர்
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனித் தலைமைப் பெரும் பதியீர் ஆட வாரீர்
ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

#4467
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர்
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர்
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர்
எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

#4468
நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர்
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர்
எச் சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர்.
இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

#4469
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர்
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர்
என் உரிமைத் தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனித் தந்தையரே ஆட வாரீர்
என் ஒருமைச் சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

@72. அம்பலவாணர் அணையவருகை

#4470.
அணைய வாரீர் என்னை அணைய வாரீர்
அணி வளர் சிற்றம்பலத்தீர் அணைய வாரீர்.

#4471
இயற்கை உண்மை வடிவினரே அணைய வாரீர் எல்லாம் செய் வல்லவரே அணைய வாரீர்
இயற்கை விளக்கத்தவரே அணைய வாரீர் எல்லார்க்கும் நல்லவரே அணைய வாரீர்
இயற்கை இன்பம் ஆனவரே அணைய வாரீர் இறைமை எலாம் உடையவரே அணைய வாரீர்
இயற்கை நிறைவு ஆனவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4472
உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர்
கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர்
அலக் அறியாப் பெருமையரே அணைய வாரீர் அற்புதப் பொன் சோதியரே அணைய வாரீர்
இலகு சபாபதியவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4473
பொதுவில் நடிக்கின்றவரே அணைய வாரீர் பொற்பு உடைய புண்ணியரே அணைய வாரீர்
மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர்
விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர்
இது தருணம் இறையவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4474
வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடிப் பொருளவரே அணைய வாரீர்
அனை மாலைக் காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதிப் பதியீர் அணைய வாரீர்
புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர்
எனை மாலையிட்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4475
சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர்
உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர்
பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர்
இறுதி தவிர்த்து ஆண்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4476
சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனித் தலைமைப் பெரும் பதியீர் அணைய வாரீர்
ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர்
ஓதி உணர்வ அரியவரே அணைய வாரீர் உள்ளபடி உரைத்தவரே அணைய வாரீர்
ஈது இசைந்த தருணம் இங்கே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4477
அன்பாட்டை விழைந்தவரே அணைய வாரீர் அருள் சோதி வடிவினரே அணைய வாரீர்
துன்பாட்டை ஒழித்தவரே அணைய வாரீர் துரிய நிறை பெரியவரே அணைய வாரீர்
பின்பாட்டுக் காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர்
என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4478
அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர்
புரைக் கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனிப் புண்ணியரே அணைய வாரீர்
வரைக் கணம் செய்வித்தவரே அணைய வாரீர் மன்றில் நடிக்கின்றவரே அணைய வாரீர்
இரைக்கு அணவு தருணம் இதே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4479
கருணை நடம் செய்பவரே அணைய வாரீர் கண்மணியில் கலந்தவரே அணைய வாரீர்
அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர்
தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர்
இருள் நிறைந்தார்க்கு அறிவரியீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4480
சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர்
ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர்
ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்றத் அணைய வாரீர்
ஏர் அகத்தே அமர்ந்து அருள்வீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

#4481
கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர்
புலந்து அறியேன் விரைகின்றேன் அணைய வாரீர் புணர்வதற்குத் தருணம் இதே அணைய வாரீர்
அலந்தவிடத்து அருள்கின்றீர் அணைய வாரீர் அரை_கணமும் இனித் தரியேன் அணைய வாரீர்
இலந்தை நறும் கனி_அனையீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

@73. வருவார் அழைத்துவாடி

#4482.
வருவார் அழைத்துவாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே.

#4483
திரு ஆர் பொன்_அம்பலத்தே செழிக்கும் குஞ்சிதபாதர்
சிவ_சிதம்பர போதர் தெய்வச் சபாநாதர்

#4484
சிந்தை களிக்கக் கண்டு சிவானந்த மது உண்டு
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரி கொண்டு
இந்த வெளியில் நடமிடத் துணிந்தீரே அங்கே
இதைவிடப் பெருவெளி இருக்குது என்றால் இங்கே

#4485
இடுக்கு இலாமல் இருக்க இடம் உண்டு நடம் செய்ய
இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டு ஐய
ஒடுக்கில் இருப்பது என்ன உளவு கண்டுகொள்வீர் என்னால்
உண்மை இது வஞ்சம் அல்ல உம் மேல் ஆணை என்று சொன்னால்

#4486
மெல் இயல் சிவகாமவல்லியுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து
எல்லை_இல் இன்பம் தரவும் நல்ல சமயம்-தான் இது
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்ற போது

@74. என்ன புண்ணியம் செய்தேனோ

#4487.
என்ன புண்ணியம் செய்தேனோ அம்மா நான்
என்ன புண்ணியம் செய்தேனோ.

#4488
மன்னர் நாதர் அம்பலவர் வந்தார் வந்தார் என்று திரு_
சின்ன நாதம் என் இரண்டு செவிகளின் உள் சொல்கின்றதே.

#4489
பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய்
அருள் நாடகம் புரியும் கருணாநிதியர் உன்னை ஆள வந்தார் வந்தார் என்று எக்காள நாதம் சொல்கின்றதே.

#4490
பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் பத்தி_வலையுள் படுவார் சத்தியர் நித்தியர் மன்றில்
ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே.

#4491
எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார்
மந்திர மா மன்றில் இன்பம் தந்த நடராஜர் உன்னை மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே.

#4492
ஓதி எந்தவிதத்தாலும் வேதியனும் தேர்வு_அரியார் ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
ஆதி அந்தம் காண்ப அரிய ஜோதி சுயம் ஜோதி உன்னோடு ஆட வந்தார் வந்தார் என்றே நாடி நாதம் சொல்கின்றதே.

#4493
அற்புதப் பேர்_அழகாளர் சொல் பதம் கடந்து_நின்றார் அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார்
சிற்பரர் எல்லாமும் வல்ல தற்பரர் விரைந்து இங்கு உன்னைச் சேர வந்தார் வந்தார் என்று ஓங்கார நாதம் சொல்கின்றதே.

#4494
ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர்
காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னைக் காண வந்தார் வந்தார் என்றே வேணு நாதம் சொல்கின்றதே.

#4495
பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர்
வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க வலிய வந்தார் வந்தார் என்றே வலிய நாதம் சொல்கின்றதே.

@75. இவர்க்கும் எனக்கும்

#4496.
இவர்க்கும் எனக்கும் பெரு வழக்கு இருக்கின்றது அது
என்றும் தீரா வழக்குக் காணடி.

#4497
எவர்க்கும் பெரியவர் பொன்_அம்பலத்தே நடம்
இட்டார் எனக்கு மாலையிட்டார் இதோ வந்தார்.

#4498
அன்று இதோ வருகின்றேன் என்று போனவர் அங்கே யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை
இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே இந்தக் கதவை மூடு இவர் போவது இனி எங்கே.

#4499
அவரவர் உலகத்தே அறிந்து அலர் தூற்றப்பட்டேன் அன்று போனவர் இன்று வந்து நிற்கின்றார் கெட்டேன்
இவர் சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் இந்தக் கதவை மூடு இனி எங்கும் போக ஒட்டேன்.

#4500
சின்ன வயதில் என்னைச் சேர்ந்தார் புன்னகையோடு சென்றார் தயவால் இன்று வந்தார் இவர்க்கு ஆர் ஈடு
என்னை விட்டு இனி இவர் எப்படிப் போவார் ஓடு இந்தக் கதவை மூடு இரட்டைத் தாள்கோலைப் போடு.

@76. இது நல்ல தருணம்

#4501.
இது நல்ல தருணம் அருள்செய்ய
இது நல்ல தருணம்.

#4502
பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே கேளும்
பொய் ஏதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன்.

#4503
மதித்த சமய மத வழக்கு எல்லாம் மாய்ந்தது
வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பு எல்லாம் ஒழிந்தது
கொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது.

#4504
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
குதித்த மன முருட்டுக் குரங்கு முடங்கிற்று
வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தை செய் கொடு மாயைச் சந்தையும் கலைந்தது.

#4505
கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது
தத்துவம் எல்லாம் என்றன் வசம் நின்றது.

#4506
கரையா எனது மனக் கல்லும் கரைந்தது
கலந்துகொளற்கு என் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பி மேல் பொங்கிற்று.

@77. ஆனந்தப் பரிவு

#4507.
நான் அந்தம் அடையாது எந்நாளினும் உள்ளவன் ஆகி நடிக்கும் வண்ணம்
ஆனந்த நடம் புரிவான் ஆனந்த அமுது அளித்தான் அந்தோ அந்தோ.

#4508
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக
ஆதி நடம் புரிகின்றான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

#4509
துரிய பதம் அடைந்த பெரும் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்கு
அரிய பதம் எனக்கு அளித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.

#4510
மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில்
அருள்_பெரும்_சோதிப் பெருமான் அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

#4511
துன்பம் எலாம் ஒருகணத்தில் தொலைத்து அருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க
அன்பு_உடையான் அம்பலத்தான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

#4512
பந்தம் எலாம் தவிர்த்து அருளிப் பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற
அந்தம் எலாம் கடந்திடச்செய்து அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

#4513
பேராலும் அறிவாலும் பெரியர் எனச் சிறப்பாகப் பேச நின்றோர்
ஆராலும் பெறல் அரியது யாது அதனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.

#4514
தினைத்தனையும் அறிவு அறியாச் சிறியன் என நினையாமல் சித்தியான
அனைத்தும் என்றன் வசம் ஆக்கி அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

#4515
பொதுவாகிப் பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்பப் பொருள்-தான் யாதோ
அது நானாய் நான் அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.

#4516
மருள் வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலும் மாய்வு இலாத
அருள் வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற்று ஆடுகின்றேன் அந்தோ அந்தோ

#4517
எக் கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு
அக்கரை சேர்த்து அருள் எனும் ஓர் சர்க்கரையும் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ

@78. ஞான மருந்து

#4518.
ஞான மருந்து இ மருந்து சுகம்
நல்கிய சிற்சபாநாத மருந்து.

#4519
அருள்_பெரும்_சோதி மருந்து என்னை
ஐந்தொழில் செய்தற்கு அளித்த மருந்து
பொருள் பெரும் போக மருந்து என்னைப்
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து.

#4520
எல்லாம் செய் வல்ல மருந்து என்னுள்
என்றும் விடாமல் இனிக்கும் மருந்து
சொல்லால் அளவா மருந்து சுயம்
ஜோதி அருள்_பெரும்_ஜோதி மருந்து.

#4521
காணாது காட்டும் மருந்து என்றன்
கையில் பொன் கங்கணம் கட்டும் மருந்து
ஆண் ஆகிப் பெண் ஆம் மருந்து அது
ஆகி மணி மன்றில் ஆடும் மருந்து.

#4522
சுத்த சன்மார்க்க மருந்து அருள்
சோதி மலையில் துலங்கும் மருந்து
சித்து உரு ஆன மருந்து என்னைச்
சித்து எலாம் செய்யச்செய்வித்த மருந்து.

#4523
அன்பர்க்கு எளிய மருந்து மற்றை
ஐவர்க்கும் காண்டற்கு அரிய மருந்து
என் பற்றில் ஓங்கும் மருந்து என்னை
இன்ப நிலையில் இருத்தும் மருந்து.

#4524
நாதாந்த நாட்டு மருந்து பர
ஞான வெளியில் நடிக்கும் மருந்து
போதாந்தர்க்கு எய்தும் மருந்து என்னுள்
பொன் அடி காட்டிப் புணர்ந்த மருந்து.

#4525
ஆதி அனாதி மருந்து திரு
அம்பலத்தே நடம் ஆடும் மருந்து
ஜோதி மயமாம் மருந்து என்னைச்
சோதியாது ஆண்ட துரிய மருந்து.

#4526
ஆறு அந்தத்து ஓங்கும் மருந்து அதற்கு
அப்பாலுக்கப்பாலும் ஆன மருந்து
ஊறந்தம் இல்லா மருந்து எனக்
குள்ளே கலந்த உறவா மருந்து.

#4527
என் உயிர்க்கு அன்பாம் மருந்து கலந்து
என் உயிர்க்கு உள்ளே இருந்த மருந்து
என் உயிர் காக்கும் மருந்து என்றும்
என் உயிர் ஆகிய இன்ப மருந்து.

#4528
என் அறிவு உட்கொள் மருந்து என்றும்
என் அறிவு ஆகி இலங்கும் மருந்து
என் அறிவு இன்ப மருந்து என்னுள்
என் அறிவுக்கு அறிவு என்னும் மருந்து

#4529
என் குரு ஆன மருந்து என்றும்
என் தெய்வம் ஆகி இருக்கும் மருந்து
என் அன்னை என்னும் மருந்து என்றும்
என் தந்தை ஆகிய இன்ப மருந்து.

#4530
என் பெரு வாழ்வாம் மருந்து என்றும்
என் செல்வம் ஆகி இருக்கும் மருந்து
என் உயிர் நட்பாம் மருந்து எனக்கு
எட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து.

#4531
என் இறை ஆன மருந்து மகிழ்ந்து
எனக்குத் தன் பொன்_மேனி ஈந்த மருந்து
தன் அறிவு ஆகும் மருந்து என்னைத்
தந்த மருந்து என்றன் சொந்த மருந்து.

#4532
உள்ளத்தின் உள்ளாம் மருந்து என்றன்
உயிருக்கு அனாதி உறவாம் மருந்து
தெள்ளத் தெளிக்கும் மருந்து என்னைச்
சிவம் ஆக்கிக்கொண்ட சிவாய மருந்து.

#4533
மெய்ப்பொருள் என்னும் மருந்து எல்லா
வேதாகமத்தும் விளங்கும் மருந்து
கைப்பொருள் ஆன மருந்து மூன்று
கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து.

#4534
மதியில் விளைந்த மருந்து யார்க்கும்
மதிக்கப்படாத பொன் வண்ண மருந்து
கதி தரும் இன்ப மருந்து அருள்
கண்ணால் என்றன்னைக் கலந்த மருந்து.

#4535
கற்பூர ஜோதி மருந்து பசும்
கற்பூர நல் மணம் காட்டும் மருந்து
பொன் பூவின் ஓங்கும் மருந்து என் தற்
போதம் தவிர்த்த சிற்போத மருந்து.

#4536
மேலை வெளியாம் மருந்து நான்
வேண்டும்-தோறு எல்லாம் விளையும் மருந்து
சாலை விளக்கு மருந்து சுத்த
சமரச சன்மார்க்க சங்க மருந்து.

#4537
என்னைத் தான் ஆக்கும் மருந்து இங்கே
இறந்தாரை எல்லாம் எழுப்பும் மருந்து
துன்னும் மெய்ச் சோதி மருந்து அருள்
சோதியால் என்னைத் துலக்கும் மருந்து.

#4538
பொய்யர்க்கு அரிதாம் மருந்து என்னைப்
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து
கையில் கிடைத்த மருந்து சிவ
காமக்கொடியைக் கலந்த மருந்து.

#4539
ஆணவம் தீர்க்கும் மருந்து பர
மானந்தத் தாண்டவம் ஆடும் மருந்து
மாணவ வண்ண மருந்து என்னை
வலிய அழைத்து வளர்க்கும் மருந்து.

#4540
வான் நடுவான மருந்து என்னை
மா மணி மேடை மேல் வைத்த மருந்து
ஊனம் தவிர்த்த மருந்து கலந்து
உள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து.

#4541
மலை இலக்கான மருந்து என்றன்
மறைப்பைத் தவிர்த்த மெய் வாழ்க்கை மருந்து
கலை நலம் காட்டும் மருந்து எங்கும்
கண் ஆகிக் காணும் கனத்த மருந்து.

#4542
அற்புத ஜோதி மருந்து எல்லாம்
ஆகி அன்று ஆகி அமர்ந்த மருந்து
தற்பதம் தந்த மருந்து எங்கும்
தானேதான் ஆகித் தனித்த மருந்து.

#4543
தன்னை அளித்த மருந்து என்றும்
சாகாத நல் வரம் தந்த மருந்து
பொன் அடி ஈந்த மருந்து அருள்
போனகம் தந்த புனித மருந்து.

#4544
கண்ணுக்கு இனிய மருந்து என்றன்
கைப்பொருளாம் தங்கக்கட்டி மருந்து
எண்ணுக்கு அடங்கா மருந்து என்னை
ஏதக் குழிவிட்டு எடுத்த மருந்து.

#4545
சுட்டப் படாத மருந்து என்றன்
தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து
எட்டுதற்கு ஒண்ணா மருந்து நான்
எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து.

#4546
உன்னற்கு அரிதாம் மருந்து எனக்கு
உள்ளும் புறத்தும் உலாவும் மருந்து
தன்னந்தனித்த மருந்து சுத்தச்
சாக்கிராதீதச் சபேச மருந்து.

#4547
ஒன்றில் ஒன்று ஆன மருந்து அந்த
ஒன்றில் இரண்டு ஆகி ஓங்கும் மருந்து
அன்றி மூன்று ஆன மருந்து நான்கு
ஆகி ஐந்து ஆகி அமர்ந்த மருந்து.

#4548
வெளிக்குள் வெளியாம் மருந்து எல்லா
வெளியும் கடந்து விளங்கும் மருந்து
ஒளிக்குள் ஒளியாம் மருந்து எல்லா
ஒளியும் தான் ஆகிய உண்மை மருந்து.

#4549
ஆறாறுக்கு அப்பால் மருந்து அதற்கு
அப்புறத்து ஈர்_ஆறுக்கு அப்பால் மருந்து
ஈறு ஆதி இல்லா மருந்து என்னை
எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து.

#4550
ஆரணத்து ஓங்கும் மருந்து அருள்
ஆகமம் ஆகி அண்ணிக்கும் மருந்து
காரணம் காட்டும் மருந்து எல்லாம்
கண்ட மருந்து என்னுள் கொண்ட மருந்து.

#4551
மலம் ஐந்து நீக்கும் மருந்து புவி
வான் அண்டம் எல்லாம் வளர்க்கும் மருந்து
நலம் மிக்கு அருளும் மருந்து தானே
நான் ஆகித் தான் ஆளும் நாட்டு மருந்து.

@79. சிவசிவ ஜோதி

#4552.
சிவசிவ சிவசிவ ஜோதி சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.

#4553
சிற்பரமாம் பரஞ்ஜோதி அருள்
சித்து எல்லாம்_வல்ல சிதம்பர ஜோதி
தற்பர தத்துவ ஜோதி என்னைத்
தான் ஆக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி.

#4554
சித்து உருவாம் சுயம் ஜோதி எல்லாம்
செய்திட வல்ல சிதம்பர ஜோதி
அத்துவிதானந்த ஜோதி என்னை
ஆட்கொண்டு அருளும் சிற்றம்பல ஜோதி.

#4555
சின்மயமாம் பெரும் ஜோதி அருள்
செல்வம் அளிக்கும் சிதம்பர ஜோதி
தன்மயமாய் நிறை ஜோதி என்னைத்
தந்த மெய் ஜோதி சதானந்த ஜோதி.

#4556
ஆதி ஈறு இல்லா முன் ஜோதி அரன்
ஆதியர்-தம்மை அளித்த பின் ஜோதி
ஓதி உணர்வ அரும் ஜோதி எல்லா
உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி.

#4557
மன்னிய பொன் வண்ண ஜோதி சுக
வண்ணத்ததாம் பெரு மாணிக்க ஜோதி
துன்னிய வச்சிர ஜோதி முத்து
ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி.

#4558
பார் முதல் ஐந்துமாம் ஜோதி ஐந்தில்
பக்கம் மேல் கீழ் நடுப் பற்றிய ஜோதி
ஓர் ஐம்பொறியுரு ஜோதி பொறிக்கு
உள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி.

#4559
ஐம்புலமும் தான் ஆம் ஜோதி புலத்து
அகத்தும் புறத்தும் மலர்ந்து ஒளிர் ஜோதி
பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றைப்
பொறி புலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி.

#4560
மனம் ஆதி எல்லாம் ஆம் ஜோதி அவை
வாழ அகம் புறம் வாழ்கின்ற ஜோதி
இனமான உள் அக ஜோதி சற்றும்
ஏறாது இறங்காது இயக்கும் ஓர் ஜோதி.

#4561
முக்குணமும் மூன்று ஆம் ஜோதி அவை
முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
எக் குணத்து உள்ளுமாம் ஜோதி குணம்
எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி.

#4562
பகுதி மூன்று ஆகிய ஜோதி மூலப்
பகுதிகள் மூன்றும் படைத்து அருள் ஜோதி
பகுதி பல ஆக்கும் ஜோதி சற்றும்
விகுதி ஒன்று இன்றி விளக்கிய ஜோதி.

#4563
கால முதல் காட்டும் ஜோதி கால
காரணத்து அப்பால் கடந்து ஒளிர் ஜோதி
கோலம் பல ஆகும் ஜோதி ஒன்றும்
குறிக்கப்படாச் சிற்குணப் பெரும் சோதி.

#4564
தத்துவம் எல்லாம் ஆம் ஜோதி அந்தத்
தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
அத்துவிதப் பெரும் ஜோதி எல்லாம்
அருளில் விளங்க அமர்த்திய ஜோதி.

#4565
சத்தர்கள் எல்லாம் ஆம் ஜோதி அவர்
சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
முத்தர் அனுபவ ஜோதி பர
முத்தியாம் ஜோதி மெய்ச் சித்தியாம் ஜோதி.

#4566
ஆறு அந்தத்தே நிறை ஜோதி அவைக்கு
அப்புறத்து அப்பாலும் ஆகிய ஜோதி
வீறும் பெருவெளி ஜோதி மேலும்
வெட்டவெளியில் விளங்கிய ஜோதி.

#4567
பேர்_அருள் ஜோதியுள் ஜோதி அண்ட
பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
வாரம் முற்று ஓங்கிய ஜோதி மனம்
வாக்குக்கு எட்டாததோர் மா மணி ஜோதி.

#4568
ஒன்றான பூரண ஜோதி அன்பில்
ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
என்றா ஒளிர்கின்ற ஜோதி என்னுள்
என்றும் விளங்கிய என் உயிர் ஜோதி.

#4569
மெய்யே மெய் ஆகிய ஜோதி சுத்த
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
துய்ய சிவானந்த ஜோதி குரு
துரியத் தலத்தே துலங்கிய ஜோதி.

#4570
சிவ மயமாம் சுத்த ஜோதி சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்து ஒளிர் ஜோதி
உவமை இல்லாப் பெரும் ஜோதி எனது
உள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி.

#4571
என்னைத் தான் ஆக்கிய ஜோதி இங்கே
இறந்தாரை எல்லாம் எழுப்பும் ஓர் ஜோதி
அன்னைக்கும் மிக்கு அருள் ஜோதி என்னை
ஆண்டு அமுதம் தந்த ஆனந்த ஜோதி.

#4572
சித்தம் சிவம் ஆக்கும் ஜோதி நான்
செய்த தவத்தால் தெரிந்த உள் ஜோதி
புத்தமுது ஆகிய ஜோதி சுக
பூரணமாய் ஒளிர் காரண ஜோதி.

#4573
தம்பத்தில் ஏற்றிய ஜோதி அப்பால்
சார் மணி மேடை மேல் தான் வைத்த ஜோதி
விம்பப் பெருவெளி ஜோதி அங்கே
வீதியும் வீடும் விளக்கிய ஜோதி.

#4574
சுக மயம் ஆகிய ஜோதி எல்லா
ஜோதியும் ஆன சொரூப உள் ஜோதி
அகமிதம் தீர்த்து அருள் ஜோதி சச்சி
தானந்த ஜோதி சதானந்த ஜோதி.

#4575
நித்த பரானந்த ஜோதி சுத்த
நிரதிசயானந்த நித்திய ஜோதி
அத்துவிதானந்த ஜோதி எல்லா
ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி.

#4576
பொய்யாத புண்ணிய ஜோதி எல்லாப்
பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி
நையாது அருள்செய்த ஜோதி ஒரு
நானும் தானும் ஒன்றாய் நண்ணிய ஜோதி.

#4577
கண்ணில் கலந்து அருள் ஜோதி உள-
கண் உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி
எண்ணில்படாப் பெரும் சோதி நான்
எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி.

#4578
விந்து ஒளி நடு ஜோதி பர
விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி
நம் துயர் தீர்த்து அருள் ஜோதி பர
நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி.

#4579
தான் அன்றி ஒன்று இலா ஜோதி என்னைத்
தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
நான் இன்று கண்டதோர் ஜோதி தானே
நான் ஆகி வாழ்ந்திட நல்கிய ஜோதி.

#4580
தன் நிகர் இல்லதோர் ஜோதி சுத்த
சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி
என்னுள் நிறைந்த மெய் ஜோதி என்னை
ஈன்று ஐந்தொழில் செய் என்று ஏவிய ஜோதி.

#4581
அச்சம் தவிர்த்த மெய் ஜோதி என்னை
ஆட்கொண்டு அருளிய அம்பல ஜோதி
இச்சை எலாம் தந்த ஜோதி உயிர்க்கு
இங்கும் அங்கு என்னாமல் எங்கும் ஆம் ஜோதி.

#4582
காலையில் நான் கண்ட ஜோதி எல்லாக்
காட்சியும் நான் காணக் காட்டிய ஜோதி
ஞாலமும் வானும் ஆம் ஜோதி என்னுள்
நான் ஆகித் தான் ஆகி நண்ணிய ஜோதி.

#4583
ஏகாந்தம் ஆகிய ஜோதி என்னுள்
என்றும் பிரியாது இருக்கின்ற ஜோதி
சாகாத வரம் தந்த ஜோதி என்னைத்
தான் ஆக்கிக்கொண்டதோர் சத்திய ஜோதி.

#4584
சுத்த சிவ மய ஜோதி என்னை
ஜோதி மணி முடி சூட்டிய ஜோதி
சத்தியம் ஆம் பெரும் ஜோதி நானே
தான் ஆகி ஆளத் தயவு செய் ஜோதி.

@80. ஜோதியுள் ஜோதி

#4585.
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி சுத்த
ஜோதி சிவ ஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.

#4586
சிவமே பொருள் என்று தேற்றி என்னைச்
சிவ வெளிக்கு ஏறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_
சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

#4587
வித்து எல்லாம் ஒன்று என்று நாட்டி அதில்
விளைவு பலபல வேறு என்று காட்டிச்
சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4588
சொல் வந்த அந்தங்கள் ஆறும் ஒரு
சொல்லாலே ஆம் என்று அச் சொல்லாலே வீறும்
செல்வம் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4589
தம் கோல் அளவு எனக்கு ஓதிச் சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4590
ஆபத்தை நீக்கி வளர்த்தே சற்றும்
அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4591
மெய் ஒன்று சன்மார்க்கமே-தான் என்றும்
விளங்கப் படைப்பு ஆதி மெய்த் தொழில் நீ-தான்
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4592
என்-பால் வருபவர்க்கு இன்றே அருள்
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
தென்பால் இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4593
துரியத் தலம் மூன்றின் மேலே சுத்த
துரியப் பதியில் அது அதனாலே
தெரியத் தெரிவது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4594
பரை தூக்கிக் காட்டிய காலே ஆதி_
பரை இவர்க்கு அப்பால் அப்பால் என்று மேலே
திரை தூக்கிக் காட்டுதல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4595
தற்பரமே வடிவு ஆகி அது
தன்னைக் கடந்து தனி உரு ஆகிச்
சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4596
நவ வெளி நால் வகை ஆதி ஒரு
நடு வெளிக்கு உள்ளே நடத்திய நீதிச்
சிவ வெளியாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4597
மேரு வெற்பு உச்சியின்-பாலே நின்று
விளங்கும் ஓர் தம்பத்தின் மேலுக்கு மேலே
சேரும் ஓர் மேடை மேல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4598
ஆரண வீதிக் கடையும் சுத்த
ஆகம வீதிகள் அந்தக் கடையும்
சேர நடுக் கடை பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4599
பாடல் மறைகள் ஓர் கோடி அருள்
பாத உருவ சொரூபங்கள் பாடி
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4600
நீடு சிவாகமம் கோடி அருள்
நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4601
பத்தி நெறியில் செழித்தே அன்பில்
பாடும் மெய் அன்பர் பதியில் பழுத்தே
தித்தித்து இருப்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4602
பித்தாடும் மாயைக்கு மேலே சுத்தப்
பிரம வெளியினில் பேர்_அருளாலே
சித்தாடுகின்றது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4603
தரு நெறி எல்லாம் உள்வாங்கும் சுத்த
சன்மார்க்கம் என்று ஓர் தனிப் பேர்கொண்டு ஓங்கும்
திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4604
எம் பொருள் எம் பொருள் என்றே சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4605
சைவம் முதலாக நாட்டும் பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இது வந்து பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4606
எள்ளல்_இல் வான் முதல் மண்ணும் அமுது
எல்லாம் இதில் ஓர் இறையளவு என்னும்
தெள் அமுதாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4607
எத்தாலும் ஆகாதே அம்மா என்றே
எல்லா உலகும் இயம்புதல் சும்மா
செத்தாரை மீட்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4608
பிறந்துபிறந்து உழன்றேனை என்றும்
பிறவாது இறவாப் பெருமை தந்து ஊனைச்
சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4609
வருவித்த வண்ணமும் நானே இந்த
மா நிலத்தே செயும் வண்ணமும் தானே
தெரிவித்து அருளிற்றுப் பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4610
பாரிடம் வானிடம் மற்றும் இடம்
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேர் இடமாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4611
உய் பிள்ளை பற்பலர் ஆவல் கொண்டே
உலகத்து இருப்ப இங்கு என்னைத் தன் ஏவல்
செய் பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4612
உருவும் உணர்வும் செய்நன்றி அறி
உளமும் எனக்கே உதவியத் அன்றித்
திருவும் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4613
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நான்
எண்ணியவாறே இனிது தந்து என்னைத்
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

#4614
பேர்_உலகு எல்லாம் மதிக்கத் தன்
பிள்ளை என்று என்னைப் பெயரிட்டு அழைத்தே
சீர் உறச் செய்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி.

@81 அருட்பெருஞ்ஜோதி அகவல்

#4615.
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_சோதி
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி
அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்
அருள் சிவ பதியாம் அருள்_பெரும்_ஜோதி
ஆகம முடி மேல் ஆரண முடி மேல் 5
ஆக நின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
இக நிலைப் பொருளாய்ப் பர நிலைப் பொருளாய்
அகம் அறப் பொருந்திய அருள்_பெரும்_ஜோதி
ஈனம் இன்று இக_பரத்து இரண்டின் மேல் பொருளாய்
ஆனலின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி 10
உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல்
அரைசு செய்து ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருள்_பெரும்_ஜோதி
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் 15
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி
ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே
ஆறாறு காட்டிய அருள்_பெரும்_ஜோதி
ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி 20
ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை
அன்று என விளங்கிய அருள்_பெரும்_ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர் 25
அ இயல் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி
திரு நிலைத் தனி வெளி சிவ வெளி எனும் ஓர்
அருள் வெளிப் பதி வளர் அருள்_பெரும்_ஜோதி
சுத்த சன்மார்க்க சுகத் தனி வெளி எனும்
அத்தகைச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி 30
சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளி எனும்
அத்துவிதச் சபை அருள்_பெரும்_ஜோதி
தூய கலாந்த சுகம் தரு வெளி எனும்
ஆய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
ஞான யோகாந்த நட திரு_வெளி எனும் 35
ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும்
அமல சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
பெரிய நாதாந்தப் பெரு நிலை வெளி எனும்
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி 40
சுத்த வேதாந்தத் துரிய மேல் வெளி எனும்
அத் தகு சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
சுத்த சித்தாந்த சுகப் பெருவெளி எனும்
அத் தனிச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
தகர மெய்ஞ்ஞானத் தனிப் பெருவெளி எனும் 45
அகர நிலைப் பதி அருள்_பெரும்_ஜோதி
தத்துவாதீதத் தனிப் பொருள் வெளி எனும்
அத் திரு_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி
சச்சிதானந்தத் தனிப் பர வெளி எனும்
அச்சியல் அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி 50
சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும்
ஆகாயத்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி
காரண காரியம் காட்டிடு வெளி எனும்
ஆரணச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
ஏகம் அனேகம் எனப் பகர் வெளி எனும் 55
ஆகமச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம்
ஆதாரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி
என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது
அன்றாம் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி 60
சமயம் கடந்த தனிப் பொருள் வெளியாய்
அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி
முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்து அருள்
அச் சுடராம் சபை அருள்_பெரும்_ஜோதி
துரியமும் கடந்த சுக பூரணம் தரும் 65
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி
எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்து அருள்
அவ்வகைச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாம்
அயர்ப்பு இலாச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி 70
சாக்கிராதீதத் தனி வெளியாய் நிறை
வாக்கிய சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளி எனும்
அட்ட மேல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
நவம் தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய் 75
அவம் தவிர் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
உபய பக்கங்களும் ஒன்று எனக் காட்டிய
அபய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
சேகரமாம் பல சித்தி நிலைக்கு எலாம்
ஆகரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி 80
மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்
அனாதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
ஓதி நின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்
ஆதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
வாரமும் அழியா வரமும் தரும் திரு 85
ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி
இழியாப் பெரு நலம் எல்லாம் அளித்து அருள்
அழியாச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி 90
எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய
அனைத்தும் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி
பாணிப்பு இலதாய்ப் பரவினோர்க்கு அருள் புரி
ஆணி_பொன்_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி
எம் பலம் எனத் தொழுது ஏத்தினோர்க்கு அருள் புரி 95
அம்பலத்து ஆடல் செய் அருள்_பெரும்_ஜோதி
தம்பர ஞான சிதம்பரம் எனும் ஓர்
அம்பரத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
எச் சபை பொது என இயம்பினர் அறிஞர்கள்
அச் சபை இடம்கொளும் அருள்_பெரும்_ஜோதி 100
வாடுதல் நீக்கிய மணி மன்றிடையே
ஆடுதல் வல்ல அருள்_பெரும்_ஜோதி
நாடகத் திரு_செயல் நவிற்றிடும் ஒரு பேர்
ஆடகப் பொது ஒளிர் அருள்_பெரும்_ஜோதி
கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர் 105
அற்புதச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு
ஆன்ற சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
இன்புறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு
அன்புறத் தரு சபை அருள்_பெரும்_ஜோதி 110
எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது
அம்மை அப்பனுமாம் அருள்_பெரும்_ஜோதி
பிரிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என்
அறிவுக்கு அறிவாம் அருள்_பெரும்_ஜோதி
சாதியும் மதமும் சமயமும் காணா 115
ஆதி அனாதியாம் அருள்_பெரும்_ஜோதி
தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர்
அனுபவம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த
அனுபவாதீத அருள்_பெரும்_ஜோதி 120
பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே
அது எனில் தோன்றா அருள்_பெரும்_ஜோதி
உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின்
அளவினில் அளவா அருள்_பெரும்_ஜோதி
என்னையும் பணிகொண்டு இறவா_வரம் அளித்து 125
அன்னையில் உவந்த அருள்_பெரும்_ஜோதி
ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த
ஆதி ஈறு இல்லா அருள்_பெரும்_ஜோதி
படி அடி வான் முடி பற்றினும் தோற்றா
அடி முடி எனும் ஓர் அருள்_பெரும்_ஜோதி 130
பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும்
அவனுக்கு அவனாம் அருள்_பெரும்_ஜோதி
திவள் உற்ற அண்டத் திரளின் எங்கெங்கும்
அவளுக்கு அவளாம் அருள்_பெரும்_ஜோதி
மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும் 135
அதனுக்கு அதுவாம் அருள்_பெரும்_ஜோதி
எப்பாலுமாய் வெளி எல்லாம் கடந்து மேல்
அப்பாலும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும்
அல்லதாய் விளங்கும் அருள்_பெரும்_சோதி 140
எப் பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர்
அப் பொருள் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று
ஆங்குற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து 145
அத் திசை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும்
அத் தகை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி 150
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருள்_பெரும்_ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அது தரும்
ஆட்சியும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று 155
அன்புடன் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
இறவா_வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய
அறவாழியாம் தனி அருள்_பெரும்_ஜோதி
நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருள்_பெரும்_ஜோதி 160
எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை
அண்ணி உள் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது
ஆயினை என்று அருள் அருள்_பெரும்_ஜோதி
எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என 165
அண்ணித்து இனிக்கும் அருள்_பெரும்_ஜோதி
சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக எனத் தொழில்
ஐந்தையும் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கங்கிருந்து அருள் அருள்_பெரும்_ஜோதி 170
சகம் முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகம் புறம் முற்றுமாம் அருள்_பெரும்_ஜோதி
சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும்
அகரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
உபரச வேதியின் உபயமும் பரமும் 175
அபரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
மந்தணம் இது என மறு இலா மதியால்
அந்தணர் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி
எம் புயக் கனி என எண்ணுவார் இதய
அம்புயத்து அமர்ந்த அருள்_பெரும்_ஜோதி 180
செடி அறுத்தே திட தேகமும் போகமும்
அடியருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி
துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகம்-தனை
அன்பருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழயது என்று 185
அதுஅதுவாய்த் திகழ் அருள்_பெரும்_ஜோதி
சேதனப் பெரு நிலை திகழ்தரும் ஒரு பரை
ஆதனத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
ஓம் மயத் திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு
ஆமயத் தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி 190
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருள்_பெரும்_ஜோதி
எத் தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு
அத் தகை அருளிய அருள்_பெரும்_ஜோதி
இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு 195
அங்கையில் கனியாம் அருள்_பெரும்_ஜோதி
பார் உயப் புரிக எனப் பணித்து எனக்கு அருளி என்
ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி
தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது
ஆவியில் கலந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி 200
எவ்வழி மெய் வழி என்ப வேதாகமம்
அ வழி எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள்
ஐயறிவு அளித்த அருள்_பெரும்_ஜோதி
சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே 205
ஆமாறு அருளிய அருள்_பெரும்_ஜோதி
சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு
அத் திறல் வளர்க்கும் அருள்_பெரும்_ஜோதி
சாவா நிலை இது தந்தனம் உனக்கே
ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி 210
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருள்_பெரும்_ஜோதி
மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல்
அயர்ந்திடேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி
தேசு உறத் திகழ்தரு திரு_நெறிப் பொருள் இயல் 215
ஆசு அறத் தெரித்த அருள்_பெரும்_ஜோதி
காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருள்_பெரும்_ஜோதி
எம் குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு
அங்குலம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி 220
எம் மதம் எம் இறை என்ப உயிர்த் திரள்
அ மதம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி
கூறிய கரு நிலை குலவிய கீழ் மேல்
ஆறியல் என உரை அருள்_பெரும்_ஜோதி
எண் தர முடியாது இலங்கிய பற்பல 225
அண்டமும் நிறைந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி
சார் உயிர்க்கு எல்லாம் தாரகமாம் பரை
ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி
வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர்
ஆழியை அளித்த அருள்_பெரும்_ஜோதி 230
மாய்ந்தவர் மீட்டும் வரும் நெறி தந்து இதை
ஆய்ந்திடு என்று உரைத்த அருள்_பெரும்_ஜோதி
எச்சம் நினக்கு இலை எல்லாம் பெருக என்று
அச்சம் தவிர்த்த என் அருள்_பெரும்_ஜோதி
நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று 235
ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி
முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும்
அத் திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
மூ வகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி 240
கரும சித்திகளின் கலை பல கோடியும்
அரசு உற எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
யோக சித்திகள் வகை உறு பல கோடியும்
ஆக என்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
ஞான சித்தியின் வகை நல் விரிவு அனைத்தும் 245
ஆனி_இன்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவது என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
முத்தி என்பது நிலை முன் உறு சாதனம்
அத் தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி 250
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்
அத் திறம் என்ற என் அருள்_பெரும்_ஜோதி
ஏக சிற்சித்தியே இயல் உற அனேகம்
ஆகியது என்ற என் அருள்_பெரும்_ஜோதி
இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம் 255
அன்பருக்கு என்ற என் அருள்_பெரும்_ஜோதி
எட்டிரண்டு என்பன இயலும் முன் படி என
அட்ட நின்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
இப்படி கண்டனை இனி உறு படி எலாம்
அப்படியே எனும் அருள்_பெரும்_ஜோதி 260
படி முடி கடந்தனை பார் இது பார் என
அடி முடி காட்டிய அருள்_பெரும்_ஜோதி
சோதியுள் சோதியின் சொருபமே அந்தம்
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி 265
அந்தம் என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என்
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி 270
கற்பகம் என் உளங்கை-தனில் கொடுத்தே
அற்புதம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி
கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே
அதிசயம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி
அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே 275
அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி
பரை ஒளி என் மனப் பதியினில் விரித்தே
அரசு-அது இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி
வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி 280
ஆர் இயல் அகம் புறம் அகப்புறம் புறப்புறம்
ஆர்_அமுது எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று
ஆரியர் புகழ்தரும் அருள்_பெரும்_ஜோதி
பிறிவு ஏது இனி உனைப் பிடித்தனம் உனக்கு நம் 285
அறிவே வடிவு எனும் அருள்_பெரும்_ஜோதி
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி
மாண்டு உழலா வகை வந்து இளங்காலையே
ஆண்டுகொண்டு அருளிய அருள்_பெரும்_ஜோதி 290
பற்றுகள் அனைத்தையும் பற்று அறத் தவிர்த்து எனது
அற்றமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி
சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருள்_பெரும்_ஜோதி
வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால் 295
ஆய்தற்கு அரிய அருள்_பெரும்_ஜோதி
எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை
அல்லாது இலை எனும் அருள்_பெரும்_ஜோதி
நவை இலா உளத்தில் நாடிய நாடிய
அவை எலாம் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி 300
கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு
ஆற்றல் மிக்கு அளித்த அருள்_பெரும்_ஜோதி
நன்று அறிவு அறியா நாயினேன்-தனையும்
அன்று வந்து ஆண்ட அருள்_பெரும்_ஜோதி
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் 305
ஆயினும் அருளிய அருள்_பெரும்_ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருள்_பெரும்_ஜோதி
எச் சோதனைகளும் இயற்றாது எனக்கே
அச்சோ என்று அருள் அருள்_பெரும்_ஜோதி 310
ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு
ஆறாறு கடத்திய அருள்_பெரும்_ஜோதி
தாபத் துயரம் தவிர்த்து உலகு உறும் எலா
ஆபத்தும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி
மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே 315
அருள் குரு ஆகிய அருள்_பெரும்_ஜோதி
உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள் நிலை தெரித்த அருள்_பெரும்_ஜோதி
இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி
அருள் அமுது அளித்த அருள்_பெரும்_ஜோதி 320
தெருள் நிலை இது எனத் தெருட்டி என் உளத்து இருந்து
அருள் நிலை காட்டிய அருள்_பெரும்_ஜோதி
பொருள் பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய
அருள் பதம் அளித்த அருள்_பெரும்_ஜோதி
உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை 325
அருள் வழி நிறுத்திய அருள்_பெரும்_ஜோதி
வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள்
அருள் விளக்கு ஏற்றிய அருள்_பெரும்_ஜோதி
சுருள் விரிவு உடை மனச் சுழல் எலாம் அறுத்தே
அருள் ஒளி நிரப்பிய அருள்_பெரும்_ஜோதி 330
விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே
அருள் பேறு அளித்த அருள்_பெரும்_ஜோதி
அருள் பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட
அருள் சீர் அளித்த அருள்_பெரும்_ஜோதி
உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே 335
அலகு_இலா ஒளி செய் அருள்_பெரும்_ஜோதி
விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருள்_பெரும்_ஜோதி
விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருள்_பெரும்_ஜோதி 340
காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி
காற்றுறு காற்றாய்க் கால் நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய் 345
அனலுற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
அனலுறும் அனலாய் அனல் நிலை அனலாய்
அனலுற வயங்கும் அருள்_பெரும்_ஜோதி
புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனை என வயங்கும் அருள்_பெரும்_ஜோதி 350
புனலுறு புனலாய்ப் புனல் நிலைப் புனலாய்
அனை எனப் பெருகும் அருள்_பெரும்_ஜோதி
புவியினுள் புவியாய்ப் புவி நடுப் புவியாய்
அவை தர வயங்கும் அருள்_பெரும்_ஜோதி
புவியுறு புவியாய்ப் புவி நிலைப் புவியாய் 355
அவை கொள விரிந்த அருள்_பெரும்_ஜோதி
விண் நிலை சிவத்தின் வியன் நிலை அளவி
அண்ணுற அமைந்த அருள்_பெரும்_ஜோதி
வளி நிலைச் சத்தியின் வளர் நிலை அளவி
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 360
நெருப்பு-அது நிலை நடு நிலை எலாம் அளவி
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீர் நிலை திரை வளர் நிலை-தனை அளவி
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புவி நிலைச் சுத்தமாம் பொன் பதி அளவி 365
அவையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் திண்மையை வகுத்ததில் கிடக்கை
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 370
மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் நாற்றம் வகுத்ததில் பல் வகை
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் பற்பல வகை கரு நில இயல் 375
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல் பயன்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணிடை அடி நிலை வகுத்ததில் பல் நிலை
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 380
மண்ணில் ஐந்தைந்து வகையும் கலந்துகொண்டு
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணியல் சத்திகள் மண் செயல் சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணுருச் சத்திகள் மண் கலைச் சத்திகள் 385
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண் ஒளிச் சத்திகள் மண் கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண் கணச் சத்திகள் வகை பலபலவும்
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி 390
மண் நிலைச் சத்தர்கள் வகை பலபலவும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண் கரு உயிர்த் தொகை வகை விரி பலவா
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு 395
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணுறு நிலை பல வகுத்ததில் செயல் பல
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணியல் பலபல வகுத்ததில் பிறவும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 400
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன் பல
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும்
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல 405
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடைப் பூ இயல் நிகழுறு திற இயல்
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரினில் சுவை நிலை நிரைத்து அதில் பல் வகை
ஆருறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி 410
நீரினில் கரு நிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை நான்கு இயல் நிலவுவித்து அதில் பல
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை அடி நடு நிலையுற வகுத்து அனல் 415
ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை ஒளி இயல் நிகழ் பல குண இயல்
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடைச் சத்திகள் நிகழ் வகை பலபல
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி 420
நீரினில் சத்தர்கள் நிறை வகை உறை வகை
ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல 425
ஆர்கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
நீர் இயல் பலபல நிறைத்து அதில் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி 430
தீயினில் சூட்டு இயல் சேர்தரச் செலவு இயல்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயினில் வெண்மைத் திகழ் இயல் பலவாய்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடைப் பூ எலாம் திகழுறு திறம் எலாம் 435
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை ஒளியே திகழுற அமைத்து அதில்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 440
தீயிடை மூ_இயல் செறிவித்து அதில் பல
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை நடு நிலை திகழ் நடு நடு நிலை
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடைப் பெரும் திறல் சித்திகள் பலபல 445
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி 450
தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயினில் பக்குவம் சேர் குணம் இயல் குணம் 455
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை உருக்கு இயல் சிறப்பு இயல் பொது இயல்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீ இயல் பலபல செறித்து அதில் பலவும்
ஆயுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி 460
காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல்
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடைப் பூ இயல் கருதுறு திற இயல்
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல 465
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் பெரு நிலை கரு நிலை அளவு இல
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி 470
காற்றினில் இடை நடு கடை நடு அகப் புறம்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடைச் சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல 475
ஆற்றவும் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடை உயிர் பல கதி பல கலை பல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி 480
காற்றிடை நால் நிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடை உணர் இயல் கருது இயல் ஆதிய
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடைச் செயல் எலாம் கருதிய பயன் எலாம் 485
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் பக்குவக் கதி எலாம் விளைவித்து
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் காலம் கருதுறு வகை எலாம்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி 490
காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடைப் பகுதியின் விரிவு இயல் அணைவு இயல்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடைப் பூ எலாம் வியப்புறு திறன் எலாம் 495
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியினில் ஒலி நிறை வியன் நிலை அனைத்தும்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடைக் கரு நிலை விரி நிலை அரு நிலை
அளி கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி 500
வெளியிடை முடி நிலை விளங்குற வகுத்தே
அளி பெற விளக்கும் அருள்_பெரும்_ஜோதி
வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள்
அளியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல 505
அளிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல
அளிதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல்
அளி பெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 510
வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
புறம் நடுவொடு கடை புணர்ப்பித்து ஒரு முதல்
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புறம் தலை நடுவொடு புணர்ப்பித்து ஒரு கடை 515
அறம் பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அகப் புற நடுக் கடை அணைவால் புறம் முதல்
அகப்பட வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அகப் புற நடு முதல் அணைவால் புறக் கடை
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி 520
கருது அகம் நடுவொடு கடை அணைந்து அகம் முதல்
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தணி அகம் நடுவொடு தலை அணைந்து அகக் கடை
அணியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அக நடு புறக் கடை அணைந்து அகப்புறம் முதல் 525
அகமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அக நடு புறத் தலை அணைந்து அகப்புறக் கடை
அகலிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அக நடு அதனால் அகப்புற நடுவை
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 530
அகப்புற நடுவால் அணி புற நடுவை
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி
புற நடு அதனால் புறப்புற நடுவை
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புகல அரும் அகண்ட பூரண நடுவால் 535
அக நடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புறப்புறக் கடை முதல் புணர்ப்பால் புறப்புறம்
அறக் கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புறத்து இயல் கடை முதல் புணர்ப்பால் புறத்துறும்
அறக் கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி 540
அகப்புறக் கடை முதல் அணைவால் அக் கணம்
அகத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அகக் கடை முதல் புணர்ப்பு-அதனால் அகக் கணம்
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும் 545
ஆன்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீர் மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 550
புனல் மேல் புவியும் புவி மேல் புடைப்பும்
அனல் மேல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத
அகல் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி
உயிர் வெளி இடையே உரைக்க அரும் பகுதி 555
அய வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி
உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில்
அயல்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
கலை வெளி-அதனைக் கலப்பு_அறு சுத்த
அலர் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி 560
சுத்த நல் வெளியைத் துரிசு_அறு பர வெளி
அத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பர வெளி-அதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பரம்பர வெளியைப் பராபர வெளியில் 565
அரம் தெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பராபர வெளியைப் பகர் பெருவெளியில்
அராவு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பெருவெளி அதனைப் பெரும் சுக வெளியில்
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 570
குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காலமே முதலிய கருவிகள் கலை வெளி 575
ஆலுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
துரிசு_அறு கருவிகள் சுத்த நல் வெளியிடை
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
இ வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்
அ-வயின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி 580
ஓங்கிய அண்டம் ஒளி பெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை
அருள் திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காவல் செய் தலைவரைக் காவல் அண்டங்களை 585
ஆவகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி
அழித்தல் செய் தலைவரை அவர் அண்டங்களை
அழுக்கு_அற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை
அறத்தொடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி 590
தெளிவு செய் தலைவரைத் திகழும் அண்டங்களை
அளி பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை
அ திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை 595
ஆங்காக அமைத்த அருள்_பெரும்_ஜோதி
சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நாதமாம் பிரமமும் நாத அண்டங்களை
ஆதரம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி 600
பகர் பரா சத்தியைப் பதியும் அண்டங்களும்
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பரசிவ பதியைப் பரசிவாண்டங்களை
அரசு உற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை 605
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அளவு_இல் பல் சத்தரை அளவு_இல் அண்டங்களை
அளவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
உயிர் வகை அண்டம் உலப்பு_இல எண்_இல
அயர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 610
களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல
அளவு_இல வகுத்த அருள்_பெரும்_ஜோதி
கடல்-அவை அனைத்தும் கரை இன்றி நிலையுற
அடல் அனல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும் 615
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
கடலிடைப் பல் வளம் கணித்து அதில் பல் உயிர்
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மலையிடைப் பல் வளம் வகுத்து அதில் பல் உயிர்
அலைவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 620
ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்
அன்று_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பத்திடை ஆயிரம் பகர் அதில் கோடி
அத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நூற்றிடை இலக்கம் நுவல் அதில் அனந்தம் 625
ஆற்றிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
கோடியில் அனந்த கோடி பல் கோடி
ஆடுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வித்து இயல் ஒன்றாய் விளைவு இயல் பலவாய்
அத் தகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி 630
விளைவு இயல் அனைத்தும் வித்திடை அடங்க
அளவு செய்து அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வித்தும் பதமும் விளை உபகரிப்பும்
அத் திறல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வித்திடை முளையும் முளையிடை விளைவும் 635
அத் தக அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வித்தினுள் வித்தும் வித்து-அதில் வித்தும்
அத் திறம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
விளைவினுள் விளைவும் விளைவு-அதில் விளைவும்
அளையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 640
முளை-அதின் முளையும் முளையினுள் முளையும்
அளைதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
பதம்-அதில் பதமும் பதத்தினுள் பதமும் 645
அதிர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்
அற்று என வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பொருள் நிலை உறுப்பு இயல் பொது வகை முதலிய
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 650
உறவினில் உறவும் உறவினில் பகையும்
அறனுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பகையினில் பகையும் பகையினில் உறவும்
அகைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பாதியும் முழுதும் பதி செயும் அந்தமும் 655
ஆதியும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
துணையும் நிமித்தமும் துலங்கு-அதின் அதுவும்
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
உரு-அதின் உருவும் உருவினுள் உருவும்
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 660
அருவினுள் அருவும் அரு-அதில் அருவும்
அருள் இயல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
கரணமும் இடமும் கலை முதல் அணையும் ஓர்
அரண் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
உரு-அதில் அருவும் அரு-அதில் உருவும் 665
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வண்ணமும் வடிவும் மயங்கிய வகை பல
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்
அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி 670
பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
அருள் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்
அண்மையின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும் 675
அன்மை அற்று அமைத்த அருள்_பெரும்_ஜோதி
அடியினுள் அடியும் அடியிடை அடியும்
அடியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நடுவினுள் நடுவும் நடு-அதில் நடுவும்
அடர்வுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 680
முடியினுள் முடியும் முடியினில் முடியும்
அடர்தர அமைத்த அருள்_பெரும்_ஜோதி
அகப்பூ அக உறுப்பு ஆக்க அதற்கு அவை
அகத்தே வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புறப்பூ புறத்தில் புனையுரு ஆக்கிட 685
அறத்துடன் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அகப்புறப்பூ அகப்புற உறுப்பு இயற்றிட
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புறப்புறப்பூ-அதில் புறப்புற உறுப்பு உற
அறத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி 690
பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆர்_உயிர் அமைக்கும் அருள்_பெரும்_ஜோதி
ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அசைவு_இல அசைவு_உள ஆர்_உயிர்த் திரள் பல 695
அசல் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அறிவு ஒரு வகை முதல் ஐ வகை அறு வகை
அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற
அவ்வாறு அமைத்த அருள்_பெரும்_ஜோதி 700
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத் தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும் 705
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 710
பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும்
அண்டுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பெண் இயல் மனமும் ஆண் இயல் அறிவும்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல் 715
அனைத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள
அனைத்தையும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
ஓவுறா எழு வகை உயிர் முதல் அனைத்தும்
ஆவகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி 720
பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
முட்டை-வாய்ப் பயிலும் முழு உயிர்த் திரள்களை 725
அட்டமே காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
நிலம் பெறும் உயிர் வகை நீள் குழு அனைத்தும்
அலம்பெறக் காத்தருள் அருள்_பெரும்_ஜோதி
வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி 730
உடலுறு பிணியால் உயிர் உடல் கெடா வகை
அடலுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
சிசு முதல் பருவச் செயல்களின் உயிர்களை
அசைவு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும் 735
அயர்வு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
முச்சுடர் ஆதியால் எச் சக உயிரையும்
அச்சு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி 740
வான் முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர்
ஆன் அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
இன்புறு சத்தியால் எழில் மழை பொழிவித்து
அன்புறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
எண் இயல் சத்தியால் எல்லா உலகினும் 745
அண் உயிர் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
அண்டப் புறப்புற அமுதம் பொழிந்து உயிர்
அண்டுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
தேவரை எல்லாம் திகழ் புற அமுது அளித்து
ஆவகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி 750
அகப்புற அமுது அளித்து ஐவர் ஆதிகளை
அகப்படக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
தரும் அக அமுதால் சத்தி சத்தர்களை
அருளினில் காக்கும் அருள்_பெரும்_ஜோதி
காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும் 755
ஆலுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை
அச்சு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை
ஆகமுள் காக்கும் அருள்_பெரும்_ஜோதி 760
கலை அறிவு அளித்துக் களிப்பினில் உயிர் எலாம்
அலைவு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர் அனைத்தையும்
அடைவுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
துன்பு அளித்து ஆங்கே சுகம் அளித்து உயிர்களை 765
அன்புறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
கரணேந்தியத்தால் களிப்புற உயிர்களை
அரணேர்ந்து அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி
எத் தகை எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு
அத் தகை அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி 770
எப்படி எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு
அப்படி அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி
ஏங்காது உயிர்த் திரள் எங்கெங்கு இருந்தன
ஆங்காங்கு அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி
சொல்லுறும் அசுத்தத் தொல் உயிர்க்கு அவ்வகை 775
அல்லலில் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
சுத்தமும் அசுத்தமும் தோய் உயிர்க்கு இருமையின்
அ தகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
வாய்ந்திடும் சுத்த வகை உயிர்க்கு ஒருமையின்
ஆய்ந்துறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி 780
எவை எலாம் எவை எலாம் ஈண்டின ஈண்டின
அவை எலாம் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி
அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்
அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
பிண்டத் துரிசையும் பேர்_உயிர்த் துரிசையும் 785
அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
உயிர் உறு மாயையின் உறு விரிவு அனைத்தும்
அயிர் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
உயிர் உறும் இரு_வினை உறு விரிவு அனைத்தும்
அயர்வு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி 790
காமப் புடைப்பு உயிர்-கண் தொடரா வகை
ஆம் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்
அங்கு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
மதம் புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு 795
அதம்பெற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும்
அடர்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த வாதனைகளை
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி 800
நால்-வயின் துரிசும் நண்ணு உயிர் ஆதியில்
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
நால்-வயின் படைப்பும் நால்-வயின் காப்பும்
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
மூவிடத்து இருமையின் முன்னிய தொழில்களில் 805
ஆவிடத்து அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
மூவிட மும்மையின் முன்னிய தொழில்களில்
ஆவிடம் அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி 810
சுத்த மா நிலையில் சூழுறு விரிவை
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
கரைவின் மாமாயைக் கரும் பெரும் திரையால்
அரைசு-அது மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி
பேர் உறு நீலப் பெரும் திரை-அதனால் 815
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி
பச்சைத் திரையால் பர வெளி-அதனை
அச்சு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி
செம்மைத் திரையால் சித்து உறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி 820
பொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி
வெண்மைத் திரையால் மெய்ப் பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி
கலப்புத் திரையால் கருது அனுபவங்களை 825
அலப்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத் திறம் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி 830
திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே
அரைசு உறக் காட்டும் அருள்_பெரும்_ஜோதி
தோற்ற மாமாயைத் தொடர்பு அறுத்து அருளின்
ஆற்றலைக் காட்டும் அருள்_பெரும்_ஜோதி
சுத்த மாமாயைத் தொடர்பு அறுத்து அருளை 835
அத்தகை காட்டும் அருள்_பெரும்_ஜோதி
எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே
அனுக்கிரகம் புரி அருள்_பெரும்_ஜோதி
விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை
அடைவுறத் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி 840
சொருப மறைப்பு எலாம் தொலைப்பித்து உயிர்களை
அருளினில் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி
மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே
அறத்தொடு தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி
எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே 845
அவ்வகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க்கு இன்பம்
அடையுறத் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி
சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க்கு இன்பம்
அத்துறத் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி 850
சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க்கு இன்பம்
அத்தகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி
படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருள்_பெரும்_ஜோதி
காக்கும் தலைவர்கள் கணக்கில் பல் கோடியை 855
ஆக்குறக் காக்கும் அருள்_பெரும்_ஜோதி
அடக்கும் தலைவர்கள் அளவு_இலர்-தம்மையும்
அடர்ப்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி
மறைக்கும் தலைவர்கள் வகை பல கோடியை
அறத்தொடு மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி 860
தெருட்டும் தலைவர்கள் சேர் பல கோடியை
அருள் திறம் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி
ஐந்தொழில் ஆதி செய் ஐவர் ஆதிகளை
ஐந்தொழில் ஆதி செய் அருள்_பெரும்_ஜோதி
இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில் 865
அறம் தலையளித்த அருள்_பெரும்_ஜோதி
செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழு திறல்
அத்தகை காட்டிய அருள்_பெரும்_ஜோதி
இறந்தவர் எழுக என்று எண்ணியாங்கு எழுப்பிட
அறம் துணை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி 870
செத்தவர் எழுக எனச் செப்பியாங்கு எழுப்பிட
அத் திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
சித்து எலாம் வல்ல திறல் அளித்து எனக்கே
அத்தன் என்று ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி
ஒன்று அது இரண்டு அது ஒன்றின் இரண்டு அது 875
ஒன்றினுள் ஒன்று அது ஒன்று எனும் ஒன்றே
ஒன்று அல இரண்டு அல ஒன்றின் இரண்டு அல
ஒன்றினுள் ஒன்று அல ஒன்று எனும் ஒன்றே
ஒன்றினில் ஒன்று உள ஒன்றினில் ஒன்று இல
ஒன்றுற ஒன்றிய ஒன்று எனும் ஒன்றே 880
களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி
விளங்க என் உள்ளே விளங்கும் மெய்ப்பொருளே
மூவிரு நிலையின் முடி நடு முடி மேல்
ஓ அற விளங்கும் ஒருமை மெய்ப்பொருளே
எழு நிலை மிசையே இன்பு உரு ஆகி 885
வழு நிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே
நவ நிலை மிசையே நடுவுறு நடுவே
சிவ மயம் ஆகித் திகழ்ந்த மெய்ப்பொருளே
ஏகாதச நிலை யாது அதின் நடுவே
ஏகாதனம் மிசை இருந்த மெய்ப்பொருளே 890
திரையோதச நிலை சிவ வெளி நடுவே
வரையோ தரு சுக வாழ்க்கை மெய்ப்பொருளே
ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில்
பூரண சுகமாய்ப் பொருந்தும் மெய்ப்பொருளே
எல்லா நிலைகளும் இசைந்து ஆங்காங்கே 895
எல்லாம் ஆகி இலங்கும் மெய்ப்பொருளே
மனாதிகள் பொருந்தா வான் நடு வானாய்
அனாதி உண்மை-அதாய் அமர்ந்த மெய்ப்பொருளே
தான் ஒரு தானாய்த் தானே தானாய்
ஊன் உயிர் விளக்கும் ஒரு தனிப் பொருளே 900
அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்
உயலுற விளங்கும் ஒரு தனிப் பொருளே
அருவினுள் அருவாய் அரு அரு அருவாய் 905
உருவினுள் விளங்கும் ஒரு பரம் பொருளே
அலகு_இலாச் சித்தாய் அது நிலை அதுவாய்
உலகு எலாம் விளங்கும் ஒரு தனிப் பொருளே
பொருளினுள் பொருளாய்ப் பொருள்-அது பொருளாய்
ஒருமையின் விளங்கும் ஒரு தனிப் பொருளே 910
ஆடுறு சித்திகள் அறுபத்துநான்கு எழு
கோடியும் விளங்கக் குலவும் மெய்ப்பொருளே
கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும்
ஆட்டுற விளங்கும் அருள் பெரும் பொருளே
அறிவுறு சித்திகள் அனந்த கோடிகளும் 915
பிறிவு அற விளக்கும் பெரும் தனிப் பொருளே
வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க
ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே
பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க
உற்று அருளாடல் செய் ஒரு தனிப் பொருளே 920
பரத்தினில் பரமே பரத்தின் மேல் பரமே
பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே
பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே
பரம் பதம் பரமே பரம் சிதம்பரமே
பரம் புகழ் பரமே பரம் பகர் பரமே 925
பரம் சுக பரமே பரம் சிவ_பரமே
பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே
தரம் கொள் பொன் பரமே தனிப் பெரும் பரமே
வரம் பராபரமே வணம் பராபரமே
பரம் பராபரமே பதம் பராபரமே 930
சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே
தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே
தம்பரம் பதமே தனிச் சுகம் பதமே 935
அம்பரம் பதமே அருள் பரம் பதமே
தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே
நவம் தரு பதமே நடம் தரு பதமே
சிவம் தரு பதமே சிவசிவ பதமே 940
பிரம மெய்க் கதியே பிரம மெய்ப் பதியே
பிரம நிற்குணமே பிரம சிற்குணமே
பிரமமே பிரமப் பெரு நிலை மிசை உறும்
பரமமே பரம பதம் தரும் சிவமே
அவனோடு அவளாய் அதுவாய் அலவாய் 945
நவமா நிலை மிசை நண்ணிய சிவமே
எம் பொருள் ஆகி எமக்கு அருள் புரியும்
செம்பொருள் ஆகிய சிவமே சிவமே
ஒரு நிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு
திரு நிலை மேவிய சிவமே சிவமே 950
மெய் வைத்து அழியா வெறுவெளி நடுவுறு
தெய்வப் பதியாம் சிவமே சிவமே
புரை தவிர்த்து எனக்கே பொன் முடி சூட்டிச்
சிரம் உற நாட்டிய சிவமே சிவமே
கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச் 955
செல்வமும் அளித்த சிவமே சிவமே
அருள் அமுது எனக்கே அளித்து அருள் நெறி-வாய்
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே
சத்து எலாம் ஆகியும் தான் ஒரு தானாம்
சித்து எலாம் வல்லதோர் திரு_அருள் சிவமே 960
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருள் பெரும் சிவமே
ஆரே என்னினும் இரங்குகின்றார்க்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே
பொய் நெறி அனைத்தினும் புகுத்தாது எனை அருள் 965
செம் நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
கொல்லா நெறியே குரு அருள் நெறி எனப்
பல் கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே
உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிர் எலாம் விடுக எனச் செப்பிய சிவமே 970
பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த் திரள் ஒன்று என உரைத்த மெய்ச் சிவமே
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே
இயல் அருள் ஒளி ஓர் ஏகதேசத்தினாம் 975
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய்ச் சிவமே
அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச் சிவமே
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
அருளுற முயல்க என்று அருளிய சிவமே 980
அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எலாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே
அருள் பெறில் துரும்பு ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள் இது எனவே செப்பிய சிவமே
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம் 985
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே
அருள் சுகம் ஒன்றே அரும்_பெறல் பெரும் சுகம்
மருள் சுகம் பிற என வகுத்த மெய்ச் சிவமே
அருள் பேறு-அதுவே அரும்_பெறல் பெரும் பேறு
இருள் பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே 990
அருள் தனி வல்லபம் அதுவே எலாம் செய்
பொருள் தனிச் சித்து எனப் புகன்ற மெய்ச் சிவமே
அருள் அறியார் தமை அறியார் எம்மையும்
பொருள் அறியார் எனப் புகன்ற மெய்ச் சிவமே
அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறு நிலை 995
பொருள் நிலை காண்க எனப் புகன்ற மெய்ச் சிவமே
அருள் வடிவு-அதுவே அழியாத் தனி வடிவு
அருள் பெற முயலுக என்று அருளிய சிவமே
அருளே நம் இயல் அருளே நம் உரு
அருளே நம் வடிவாம் என்ற சிவமே 1000
அருளே நம் அடி அருளே நம் முடி
அருளே நம் நடுவாம் என்ற சிவமே
அருளே நம் அறிவு அருளே நம் மனம்
அருளே நம் குணமாம் என்ற சிவமே
அருளே நம் பதி அருளே நம் பதம் 1005
அருளே நம் இடமாம் என்ற சிவமே
அருளே நம் துணை அருளே நம் தொழில்
அருளே நம் விருப்பாம் என்ற சிவமே
அருளே நம் பொருள் அருளே நம் ஒளி
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே 1010
அருளே நம் குலம் அருளே நம் இனம்
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே
அருளே நம் சுகம் அருளே நம் பெயர்
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே
அருள் ஒளி அடைந்தனை அருள் அமுது உண்டனை 1015
அருள் மதி வாழ்க என்று அருளிய சிவமே
அருள் நிலை பெற்றனை அருள் வடிவுற்றனை
அருள் அரசு இயற்றுக என்று அருளிய சிவமே
உள்ளகத்து அதமர்ந்து எனது உயிரில் கலந்து அருள்
வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே 1020
நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து எனைத்
தகவொடு காக்கும் தனிச் சிவ பதியே
சுத்த சன்மார்க்கச் சுக நிலை-தனில் எனைச்
சத்தியன் ஆக்கிய தனிச் சிவ பதியே
ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள் என் 1025
கைவரப் புரிந்த கதி சிவ பதியே
துன்பம் தொலைத்து அருள் சோதியால் நிறைந்த
இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே
சித்தமும் வாக்கும் செல்லாப் பெரு நிலை
ஒத்து உறவு ஏற்றிய ஒரு சிவ பதியே 1030
கையறவு அனைத்தும் கடிந்து எனைத் தேற்றி
வையம் மேல் வைத்த மா சிவ பதியே
இன்புறச் சிறியேன் எண்ணு-தோறு எண்ணு-தோறு
அன்பொடு என் கண்ணுறும் அருள் சிவ பதியே
பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை 1035
மழை எலாம் பொழிந்து வளர் சிவ பதியே
உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது
குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே
பரமுடன் அபரம் பகர் நிலை இவை எனத்
திறமுற அருளிய திரு_அருள் குருவே 1040
மதி நிலை இரவியின் வளர் நிலை அனலின்
திதி நிலை அனைத்தும் தெரித்த சற்குருவே
கண நிலை அவற்றின் கரு நிலை அனைத்தும்
குணமுறத் தெரித்து உள் குலவு சற்குருவே
பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம் 1045
மதியுறத் தெரித்து உள் வயங்கு சற்குருவே
பிரம ரகசியம் பேசி என் உளத்தே
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே
பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே
வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே 1050
சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே
நவ நிலை காட்டிய ஞான சற்குருவே
சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும்
அத்தகை தெரித்த அருள் சிவ குருவே
அறிபவை எல்லாம் அறிவித்து என் உள்ளே 1055
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே
கேட்பவை எல்லாம் கேட்பித்து என் உளே
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே
காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே
மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே 1060
செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே
உய்பவை அளித்து எனுள் ஓங்கு சற்குருவே
உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே
சாகாக் கல்வியின் தரம் எலாம் கற்பித்து 1065
ஏகாக் கரப் பொருள் ஈந்த சற்குருவே
சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த் தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே
எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்து எலாம்
வல்லான் என எனை வைத்த சற்குருவே 1070
சீர் உற அருளாம் தேசு உற அழியாப்
பேர் உற என்னைப் பெற்ற நல் தாயே
பொருந்திய அருள் பெரும் போகமே உறுக எனப்
பெரும் தயவால் எனைப் பெற்ற நல் தாயே
ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனை-தான் 1075
ஈன்று அமுது அளித்த இனிய நல் தாயே
பசித்திடு-தோறும் என்-பால் அணைந்து அருளால்
வசித்து அமுது அருள் புரி வாய்மை நல் தாயே
தளர்ந்த-தோறு அடியேன் சார்பு அணைந்து என்னை
உளம் தெளிவித்த ஒருமை நல் தாயே 1080
அருள் அமுதே முதல் ஐ வகை அமுதமும்
தெருளுற எனக்கு அருள் செல்வ நல் தாயே
இயல் அமுதே முதல் எழு வகை அமுதமும்
உயலுற எனக்கு அருள் உரிய நல் தாயே
நண்புறும் எண் வகை நவ வகை அமுதமும் 1085
பண்புற எனக்கு அருள் பண்பு உடைத் தாயே
மற்று உள அமுத வகை எலாம் எனக்கே
உற்று உணவு அளித்து அருள் ஓங்கு நல் தாயே
கலக்கமும் அச்சமும் கடிந்து எனது உளத்தே
அலக்கணும் தவிர்த்து அருள் அன்பு உடைத் தாயே 1090
துய்ப்பினில் அனைத்தும் சுகம் பெற அளித்து எனக்கு
எய்ப்பு எலாம் தவிர்த்த இன்பு உடைத் தாயே
சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே
சத்தியை அளித்த தயவு உடைத் தாயே
சத்தினிபாதம்-தனை அளித்து எனை மேல் 1095
வைத்து அமுது அளித்த மரபு உடைத் தாயே
சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய்
சித்தியை அளித்த தெய்வ நல் தாயே
தன் நிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே
என்னை மேல் ஏற்றிய இனிய நல் தாயே 1100
வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே
அளித்து அளித்து இன்பு செய் அன்பு உடைத் தாயே
எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும்
கண் எனக் காக்கும் கருணை நல் தாயே
இன் அருள் அமுது அளித்து இறவாத் திறல் புரிந்து 1105
என்னை வளர்த்திடும் இன்பு உடைத் தாயே
என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம்
தன்ன என்று ஆக்கிய தயவு உடைத் தாயே
தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்
தரியாது அணைத்த தயவு உடைத் தாயே 1110
சினம் முதல் அனைத்தையும் தீர்த்து எனை நனவினும்
கனவினும் பிரியாக் கருணை நல் தாயே
தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும்
ஏக்கமும் நீக்கிய என் தனித் தாயே
துன்பு எலாம் தவிர்த்து உளே அன்பு எலாம் நிரம்ப 1115
இன்பு எலாம் அளித்த என் தனித் தந்தையே
எல்லா நன்மையும் என்றனக்கு அளித்த
எல்லாம்_வல்ல சித்து என் தனித் தந்தையே
நாயில் கடையேன் நலம் பெறக் காட்டிய
தாயில் பெரிதும் தயவு உடைத் தந்தையே 1120
அறிவு இலாப் பருவத்து அறிவு எனக்கு அளித்தே
பிறிவு இலாது அமர்ந்த பேர்_அருள் தந்தையே
புல் நிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த
தன் நிகர் இல்லாத் தனிப் பெரும் தந்தையே
அகத்தினும் புறத்தினும் அமர்ந்து அருள் ஜோதி 1125
சகத்தினில் எனக்கே தந்த மெய்த் தந்தையே
இணை_இலாக் களிப்புற்று இருந்திட எனக்கே
துணை அடி சென்னியில் சூட்டிய தந்தையே
ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில்
சோதி மா மகுடம் சூட்டிய தந்தையே 1130
எட்டிரண்டு அறிவித்து எனைத் தனி ஏற்றிப்
பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே
தம் கோல் அளவு-அது தந்து அருள் ஜோதிச்
செங்கோல் செலுத்து எனச் செப்பிய தந்தையே
தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் 1135
என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே
தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில்
என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே
தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில்
என் சித்து ஆக்கிய என் தனித் தந்தையே 1140
தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும்
என் வசம் ஆக்கிய என் உயிர்த் தந்தையே
தன் கையில் பிடித்த தனி அருள் ஜோதியை
என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே
தன்னையும் தன் அருள் சத்தியின் வடிவையும் 1145
என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல்
என்ன இயற்றிய என் தனித் தந்தையே
தன் உரு என் உரு தன் உரை என் உரை
என்ன இயற்றிய என் தனித் தந்தையே 1150
சதுரப் பேர்_அருள் தனிப் பெரும் தலைவன் என்று
எதிர் அற்று ஓங்கிய என் உடைத் தந்தையே
மனம் வாக்கு அறியா வரைப்பினில் எனக்கே
இன வாக்கு அருளிய என் உயிர்த் தந்தையே
உணர்ந்துணர்ந்து உணரினும் உணராப் பெரு நிலை 1155
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே
துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும்
பெரிய வாழ்வு அளித்த பெரும் தனித் தந்தையே
ஈறு_இலாப் பதங்கள் யாவையும் கடந்த
பேறு அளித்து ஆண்ட பெருந்தகைத் தந்தையே 1160
எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம்
அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே
இனிப் பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய
தனிப் பெரும் தலைமைத் தந்தையே தந்தையே
பற்று அயர்ந்து அஞ்சிய பரிவு கண்டு அணைந்து எனைச் 1165
சற்றும் அஞ்சேல் எனத் தாங்கிய துணையே
தளர்ந்த அத் தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள்
கிளர்ந்திட எனக்குக் கிடைத்த மெய்த் துணையே
துறை இது வழி இது துணிவு இது நீ செயும்
முறை இது எனவே மொழிந்த மெய்த் துணையே 1170
எங்கு உறு தீமையும் எனைத் தொடரா வகை
கங்குலும் பகலும் மெய்க் காவல் செய் துணையே
வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே
ஈண்டு இருந்து அருள் புரி என் உயிர்த் துணையே
இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது 1175
அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த் துணையே
அயர்வு அற எனக்கே அருள் துணை ஆகி என்
உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே
அன்பினில் கலந்து எனது அறிவினில் பயின்றே
இன்பினில் அளைந்த என் இன் உயிர் நட்பே 1180
நான் புரிவன எலாம் தான் புரிந்து எனக்கே
வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே
உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே
செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த 1185
குற்றமும் குணமாக் கொண்ட என் நட்பே
குணம் குறி முதலிய குறித்திடாது எனையே
அணங்கு அறக் கலந்த அன்பு உடை நட்பே
பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல்
கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நல் நட்பே 1190
சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும்
கவலையும் தவிர்த்து எனைக் கலந்த நல் நட்பே
களைப்பு அறிந்து எடுத்துக் கலக்கம் தவிர்த்து எனக்கு
இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே
தன்னைத் தழுவுறு தரம் சிறிது அறியா 1195
என்னைத் தழுவிய என் உயிர் உறவே
மனக் குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும்
எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே
துன்னும் அனாதியே சூழ்ந்து எனைப் பிரியாது
என் உறவு ஆகிய என் உயிர் உறவே 1200
என்றும் ஓர் நிலையாய் என்றும் ஓர் இயலாய்
என்றும் உள்ளதுவாம் என் தனிச் சத்தே
அனைத்து உலகவைகளும் ஆங்காங்கு உணரினும்
இனைத்து என அறியா என் தனிச் சத்தே
பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும் 1205
இது எனற்கு அரிதாம் என் தனிச் சத்தே
ஆகம முடிகளும் அவை புகல் முடிகளும்
ஏகுதற்கு அரிதாம் என் தனிச் சத்தே
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே
இத்தகை வழுத்தும் என் தனிச் சத்தே 1210
துரியமும் கடந்ததோர் பெரிய வான் பொருள் என
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய்ச் சத்தே
அன்று அதன் அப்பால் அதன் பரத்தது-தான்
என்றிட நிறைந்த என் தனிச் சத்தே
என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய் 1215
என்றும் விளங்கிடும் என் தனிச் சித்தே
சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே
தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே 1220
படி நிலை பலவாய்ப் பத நிலை பலவாய்
இடிவு அற விளங்கிடும் என் தனிச் சித்தே
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளக்கிடும் என் தனிச் சித்தே
உயிர் வகை பலவாய் உடல் வகை பலவாய் 1225
இயலுற விளக்கிடும் என் தனிச் சித்தே
அறிவவை பலவாய் அறிவன பலவாய்
எறிவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே
நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே 1230
காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடும் என் தனிச் சித்தே
செய் வினை பலவாய்ச் செய்வன பலவாய்
எய்வு அற விளக்கிடும் என் தனிச் சித்தே
அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும் 1235
எண்தர விளக்கும் என் தனிச் சித்தே
எல்லாம்_வல்ல சித்து என மறை புகன்றிட
எல்லாம் விளக்கிடும் என் தனிச் சித்தே
ஒன்று-அதில் ஒன்று என்று உரைக்கவும்படாதாய்
என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே 1240
இது அது என்னா இயல் உடை அதுவாய்
எதிர் அற நிறைந்த என் தனி இன்பே
ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்து மேல்
ஏக்கு அற நிறைந்த என் தனி இன்பே
அறிவுக்கு அறிவினில் அது அதுஅதுவாய் 1245
எறிவு அற்று ஓங்கிய என் தனி இன்பே
விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை
இடையிடை ஓங்கிய என் தனி இன்பே
இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்
எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே 1250
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத்தவர்க்குமாம் என் தனி இன்பே
எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும்
எல்லா இன்புமாம் என் தனி இன்பே
கரும்புறு சாறும் கனிந்த முக்கனியின் 1255
விரும்புறும் இரதமும் மிக்க தீம் பாலும்
குணம் கொள் கோல்_தேனும் கூட்டி ஒன்றாக்கி
மணம்கொளப் பதம் செய் வகையுற இயற்றிய
உணவு எனப் பல கால் உரைக்கினும் நிகரா
வணம் உறும் இன்ப மயமே அதுவாய்க் 1260
கலந்து அறிவுருவாய்க் கருதுதற்கு அரிதாய்
நலம் தரு விளக்கமும் நவில் அரும் தண்மையும்
உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்
உள்ளதாய் என்றன் உயிர் உளம் உடம்புடன்
எல்லாம் இனிப்ப இயலுறு சுவை அளித்து 1265
எல்லாம்_வல்ல சித்து இயற்கையது ஆகிச்
சாகா_வரமும் தனித்த பேர்_அறிவும்
மா காதலும் சிவ வல்லப சத்தியும்
செயற்கு அரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கு அறத் தரும் திறல் வண்மையது ஆகிப் 1270
பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்து எனது அறிவாம் கன மேல் சபை நடு
நடம் திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆர்_அமுதே
சத்திய அமுதே தனித் திரு_அமுதே 1275
நித்திய அமுதே நிறை சிவ அமுதே
சச்சிதானந்தத் தனி முதல் அமுதே
மெய்ச் சிதாகாச விளைவு அருள் அமுதே
ஆனந்த அமுதே அருள் ஒளி அமுதே
தான் அந்தம் இல்லாத் தத்துவ அமுதே 1280
நவ நிலை தரும் ஓர் நல்ல தெள் அமுதே
சிவ நிலை-தனிலே திரண்ட உள் அமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெரும் சீர்க் கடவுள் வான் அமுதே
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம் 1285
உகந்த நான் கிடத்தும் ஓங்கிய அமுதே
பனி முதல் நீக்கிய பரம்பர அமுதே
தனி முதல் ஆய சிதம்பர அமுதே
உலகு எலாம் கொள்ளினும் உலப்பு_இலா அமுதே
அலகு_இலாப் பெரும் திறல் அற்புத அமுதே 1290
அண்டமும் அதன் மேல் அண்டமும் அவற்று உள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே
பிண்டமும் அதில் உறு பிண்டமும் அவற்று உள
பண்டமும் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற 1295
அனைத்தையும் தரும் ஓர் அரும்_பெறல் மணியே
விண் பதம் அனைத்தும் மேல் பதம் முழுவதும்
கண்பெற நடத்தும் ககன மா மணியே
பார் பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும்
சார்புற நடத்தும் சர ஒளி மணியே 1300
அண்ட கோடிகள் எலாம் அரை_கணத்து ஏகிக்
கண்டுகொண்டிட ஒளிர் கலை நிறை மணியே
சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும்
விராவி உள் விளங்கும் வித்தக மணியே
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் 1305
தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே
தாழ்வு எலாம் தவிர்த்துச் சகம் மிசை அழியா
வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே
நவ மணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு
சிவ மணி எனும் அருள் செல்வ மா மணியே 1310
வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து
நான் பெற அளித்த நாத மந்திரமே
கற்பம் பலபல கழியினும் அழியாப்
பொற்பு உற அளித்த புனித மந்திரமே
அகரமும் உகரமும் அழியாச் சிகரமும் 1315
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே
ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என
முந்துறு மறை முறை மொழியும் மந்திரமே
வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்
ஓத நின்று உலவாது ஓங்கும் மந்திரமே 1320
உடல் பிணி அனைத்தையும் உயிர்ப் பிணி அனைத்தையும்
அடர்ப்பு அறத் தவிர்த்த அருள் சிவ மருந்தே
சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம்
தித்திக்கும் ஞானத் திரு_அருள் மருந்தே
இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும் 1325
சிறந்த வல்லபம் உறு திரு_அருள் மருந்தே
மரணப் பெரும் பிணி வாரா வகை மிகு
கரணப் பெரும் திறல் காட்டிய மருந்தே
நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும்
உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே 1330
என்றே என்னினும் இளமையோடு இருக்க
நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே
மலப் பிணி தவிர்த்து அருள் வலம் தருகின்றதோர்
நலத் தகை அது என நாட்டிய மருந்தே
சிற்சபை நடுவே திரு_நடம் புரியும் 1335
அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே
இடையுறப்படாத இயற்கை விளக்கமாய்த்
தடை ஒன்றும் இல்லாத் தகவு உடையதுவாய்
மாற்று இவை என்ன மதித்து அளப்ப அரிதாய்
ஊற்றமும் வண்ணமும் ஒருங்கு உடையதுவாய்க் 1340
காட்சிக்கு இனிய நல் கலை உடையதுவாய்
ஆட்சிக்கு உரிய பல் மாட்சியும் உடைத்தாய்
கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய்ச்
செய் தவப் பயனாம் திரு_அருள் வலத்தால்
உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே 1345
வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே
புடம் படாத் தரமும் விடம் படாத் திறமும்
வடம் படா நலமும் வாய்த்த செம்பொன்னே
மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய்
இம்மையே கிடைத்து இங்கு இலங்கிய பொன்னே 1350
எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது
அடுத்தடுத்து ஓங்கும் மெய் அருள் உடைப் பொன்னே
தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடுவேம் எனக்
கிளர்ந்திட உரைத்துக் கிடைத்த செம்பொன்னே
எண்ணிய-தோறும் இயற்றுக என்று எனை 1355
அண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம்பொன்னே
நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டுப்
போகேம் என எனைப் பொருந்திய பொன்னே
எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்குப்
பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே 1360
விண் இயல் தலைவரும் வியந்திட எனக்குப்
புண்ணியப் பயனால் பூத்த செம்பொன்னே
நால் வகை நெறியினும் நாட்டுக எனவே
பால் வகை முழுதும் பணித்த பைம்பொன்னே
எழு வகை நெறியினும் இயற்றுக எனவே 1365
முழு வகை காட்டி முயங்கிய பொன்னே
எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனைப்
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே
ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி
வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே 1370
இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு
உதவினும் உலவாது ஓங்கும் நல் நிதியே
இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல்
திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே
எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை 1375
அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே
அற்புதம் விளங்கும் அருள் பெரு நிதியே
கற்பனை கடந்த கருணை மா நிதியே
நல் குண நிதியே சற்குண_நிதியே
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே 1380
பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே
வளம் எலாம் நிறைந்த மாணிக்க_மலையே
மதி உற விளங்கும் மரகத மலையே
வதி தரு பேர்_ஒளி வச்சிர மலையே
உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே 1385
துரிய மேல் வெளியில் சோதி மா மலையே
புற்புதம் திரை நுரை புரை முதல் இலது ஓர்
அற்புதக் கடலே அமுதத் தண் கடலே
இருள் கலை தவிர்த்து ஒளி எல்லாம் வழங்கிய
அருள் பெரும் கடலே ஆனந்த_கடலே 1390
பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே
உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே
என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்து உளம்
நன்று உற விளங்கிய நந்தனக் காவே
சேற்று நீர் இன்றி நல் தீம் சுவை தரும் ஓர் 1395
ஊற்று நீர் நிரம்ப உடைய பூந் தடமே
கோடை-வாய் விரிந்த குளிர் தரு நிழலே
மேடை-வாய் வீசிய மெல்லிய காற்றே
களைப்பு அறக் கிடைத்த கருணை நல் நீரே
இளைப்பு அற வாய்த்த இன் சுவை உணவே 1400
தென்னை-வாய்க் கிடைத்த செவ்விளநீரே
தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே
நீர் நசை தவிர்க்கும் நெல்லி அம் கனியே
வேர் விளை பலவின் மென் சுவைச் சுளையே
கட்டு மாம்பழமே கதலி வான் பழமே 1405
இட்ட நல் சுவை செய் இலந்தை அம் கனியே
புனித வான் தருவில் புதுமையாம் பலமே
கனி எலாம் கூட்டிக் கலந்த தீம் சுவையே
இதம் தரு கரும்பில் எடுத்த தீம் சாறே
பதம் தரு வெல்லப் பாகினின் சுவையே 1410
சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே
உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே
கலப்பு உறா மதுரம் கனிந்த கோல்_தேனே
நவை இலாது எனக்கு நண்ணிய நறவே 1415
சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே
பதம் பெறக் காய்ச்சிய பசு நறும் பாலே
இதம் பெற உருக்கிய இளம் பசு_நெய்யே
உலர்ந்திடாது என்றும் ஒருபடித்து ஆகி
மலர்ந்து நல் வண்ணம் வயங்கிய மலரே 1420
இகம் தரு புவி முதல் எவ்வுலகு உயிர்களும்
உகந்திட மணக்கும் சுகந்த நல் மணமே
யாழ் உறும் இசையே இனிய இன் இசையே
ஏழ் உறும் இசையே இயல் அருள் இசையே
திவள் ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே 1425
அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே
நாத நல் வரைப்பின் நண்ணிய பாட்டே
வேத கீதத்தில் விளை திரு_பாட்டே
நல் மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே 1430
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே
எம் பலம் ஆகிய அம்பலப் பாட்டே
என் மன_கண்ணே என் அருள்_கண்ணே
என் இரு கண்ணே என் கணுள் மணியே
என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே 1435
என் பெரும் திறலே என் பெரும் செயலே
என் பெரும் தவமே என் தவப் பலனே
என் பெரும் சுகமே என் பெரும் பேறே
என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே
என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே 1440
என் பெரு நலமே என் பெரும் குலமே
என் பெரு வலமே என் பெரும் புலமே
என் பெரு வரமே என் பெரும் தரமே
என் பெரு நெறியே என் பெரு நிலையே
என் பெரும் குணமே என் பெரும் கருத்தே 1445
என் பெரும் தயவே என் பெரும் கதியே
என் பெரும் பதியே என் உயிர் இயலே
என் பெரு நிறைவே என் தனி அறிவே
தோல் எலாம் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாம் கட்டவை விட்டுவிட்டு இயங்கிட 1450
என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட
மென்பு உடைத் தசை எலாம் மெய் உறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம் 1455
உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட
ஒள் நுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட
உள் நகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட 1460
வாய் துடித்து அலறிட வளர் செவித் துளைகளில்
கூ இசைப் பொறி எலாம் கும்மெனக் கொட்டிட
மெய் எலாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திடக்
கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட
மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட 1465
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச்
சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட
அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்
பொறியுறும் ஆன்ம தற்போதமும் போயிடத் 1470
தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட
உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட
அலகு_இலா அருளின் ஆசை மேல் பொங்கிட
என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட 1475
என் உளத்து ஓங்கிய என் தனி அன்பே
பொன் அடி கண்டு அருள் புத்தமுது உணவே
என் உளத்து எழுந்த என் உடை அன்பே
தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே 1480
என் உளே அரும்பி என் உளே மலர்ந்து
என் உளே விரிந்த என் உடை அன்பே
என் உளே விளங்கி என் உளே பழுத்து
என் உளே கனிந்த என் உடை அன்பே
தன் உளே நிறைவு உறு தரம் எலாம் அளித்தே 1485
என் உளே நிறைந்த என் தனி அன்பே
துன்பு உள அனைத்தும் தொலைத்து எனது உருவை
இன்பு உரு ஆக்கிய என்னுடை அன்பே
பொன் உடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என் உளம் கலந்த என் தனி அன்பே 1490
தன் வசம் ஆகித் ததும்பி மேல் பொங்கி
என் வசம் கடந்த என் உடை அன்பே
தன் உளே பொங்கிய தண் அமுது உணவே
என் உளே பொங்கிய என் தனி அன்பே
அருள் ஒளி விளங்கிட ஆணவம் எனும் ஓர் 1495
இருள் அற என் உளத்து ஏற்றிய விளக்கே
துன்புறு தத்துவத் துரிசு எலாம் நீக்கி நல்
இன்புற என் உளத்து ஏற்றிய விளக்கே
மயல் அற அழியா வாழ்வு மேன்மேலும்
இயல் உற என் உளத்து ஏற்றிய விளக்கே 1500
இடு வெளி அனைத்தும் இயல் ஒளி விளங்கிட
நடு வெளி நடுவே நாட்டிய விளக்கே
கரு வெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட
உரு வெளி நடுவே ஒளி தரு விளக்கே
தேற்றிய வேதத் திரு_முடி விளங்கிட 1505
ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே
ஆகம முடி மேல் அருள் ஒளி விளங்கிட
வேகம்-அது அறவே விளங்கு ஒளி விளக்கே
ஆரியர் வழுத்திய அருள் நிலை அனாதி
காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே 1510
தண்ணிய அமுதே தந்து எனது உளத்தே
புண்ணியம் பலித்த பூரண மதியே
உய் தர அமுதம் உதவி என் உளத்தே
செய் தவம் பலித்த திரு வளர் மதியே
பதி எலாம் தழைக்கப் பரம் பெறும் அமுத 1515
நிதி எலாம் அளித்த நிறை திரு_மதியே
பால் எனத் தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும்
மேல் வெளி விளங்க விளங்கிய மதியே
உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட
வயங்கிய கருணை_மழை பொழி மழையே 1520
என்னையும் பணிகொண்டு என் உளே நிரம்ப
மன்னிய கருணை_மழை பொழி மழையே
உளம்கொளும் எனக்கே உவகை மேல் பொங்கி
வளம் கொளக் கருணை_மழை பொழி மழையே
நலம் தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே 1525
மலர்ந்திடக் கருணை_மழை பொழி மழையே
தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கி நல்
வாய்மையால் கருணை_மழை பொழி மழையே
வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில்
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே 1530
திரை எலாம் தவிர்த்துச் செவ்வி உற்று ஆங்கே
வரை எலாம் விளங்க வயங்கு செம் சுடரே
அலகு_இலாத் தலைவர்கள் அரசு செய் தத்துவ
உலகு எலாம் விளங்க ஓங்கு செம் சுடரே
முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே 1535
என் உள வரை மேல் எழுந்த செம் சுடரே
ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த
சோதியாய் என் உளம் சூழ்ந்த மெய்ச் சுடரே
உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட
வெள் ஒளி காட்டிய மெய் அருள் கனலே 1540
நலம் கொளப் புரிந்திடு ஞான யாகத்திடை
வலம்சுழித்து எழுந்து வளர்ந்த மெய்க் கனலே
வேதமும் ஆகம விரிவும் பரம்பர
நாதமும் கடந்த ஞான மெய்க் கனலே
எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள் 1545
நண்ணிய புண்ணிய ஞான மெய்க் கனலே
வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு
நலம் எலாம் அளித்த ஞான மெய்க் கனலே
இரவொடு பகல் இலா இயல் பொது நடமிடு
பரம வேதாந்தப் பரம்பரம் சுடரே 1550
வரம் நிறை பொதுவிடை வளர் திரு_நடம் புரி
பரம சித்தாந்தப் பதி பரம் சுடரே
சமரச சத்தியச் சபையில் நடம் புரி
சமரச சத்தியத் தற்சுயம் சுடரே
சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே 1555
அபயம் அளித்ததோர் அருள்_பெரும்_ஜோதி
மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே
அருள் அமுது அருத்திய அருள்_பெரும்_ஜோதி
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர்
ஆழி ஒன்று அளித்த அருள்_பெரும்_ஜோதி 1560
என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே
அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து
உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை
அலகு_இல் பேர்_அருளால் அறிவது விளக்கிச்
சிறுநெறி செல்லாத் திறன் அளித்து அழியாது 1565
உறு நெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து
சாகா_கல்வியின் தரம் எலாம் உணர்த்திச்
சாகா_வரத்தையும் தந்து மேன்மேலும்
அன்பையும் விளைவித்து அருள் பேர்_ஒளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் 1570
ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம்
சீர் உறச் செய்து உயிர்த் திறம் பெற அழியா
அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருள்_பெரும்_ஜோதி
வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர் 1575
அல்கல் இன்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
உலகு உயிர்த் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி 1580
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே 1585
சத்திய நிலை-தனைத் தயவினில் தந்தனை
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க 1590
சுத்த சன்மார்க்கச் சுக நிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி 1595
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி

#4616.
அருள் சபை நடம் புரி அருள்_பெரும்_சோதி
தெருள் பெரும் சீர் சொலத் திகழ்வ சித்தியே

@82. அருட்பெருஞ்சோதி அட்டகம்

#4617.
அருள் பெருவெளியில் அருள் பெரு உலகத்து அருள் பெரும் தலத்து மேல் நிலையில்
அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த
அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே அருள் பெரும் சித்தி என் அமுதே
அருள் பெரும் களிப்பே அருள் பெரும் சுகமே அருள்_பெரும்_சோதி என் அரசே.

#4618
குலவு பேர் அண்டப் பகுதி ஓர் அனந்த கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும் மெய் அறிவானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுஅதில் விளங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

#4619
கண் முதல் பொறியால் மனம் முதல் கரணக் கருவினால் பகுதியின் கருவால்
எண் முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால்
விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர்
அண் முதல் தடித்துப் படித்திட ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

#4620
நசைத்த மேல் நிலை ஈது என உணர்ந்து ஆங்கே நண்ணியும் கண்ணுறாது அந்தோ
திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கித் திரும்பின எனில் அதன் இயலை
இசைத்தல் எங்ஙனமோ ஐயகோ சிறிதும் இசைத்திடுவேம் என நாவை
அசைத்திடற்கு அரிது என்று உணர்ந்துளோர் வழுத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

#4621
சுத்த வேதாந்த மவுனமோ அலது சுத்த சித்தாந்த ராசியமோ
நித்த நாதாந்த நிலை அனுபவமோ நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ
புத்தமுது அனைய சமரசத்ததுவோ பொருள் இயல் அறிந்திலம் எனவே
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

#4622
ஏகமோ அன்றி அனேகமோ என்றும் இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ
யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர்
ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

#4623
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவாதீத மேல் நிலையில்
சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குறக் கரைந்துபோயினம் என்று
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

#4624
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்ப அரிதாய்த்
தங்கும் ஓர் இயற்கைத் தனி அனுபவத்தைத் தந்து எனைத் தன்மயம் ஆக்கிப்
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய்ப் புத்தமுது அருத்தி என் உளத்தே
அங்கையில் கனி போன்று அமர்ந்து அருள் புரிந்த அருள்_பெரும்_சோதி என் அரசே.

@83. இறை இன்பக் குழைவு

#4625.
கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர்
கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய்
அருள் நல் நிலையில் அதுஅதுவாய் அறிவில் கிடைத்த அறிவே என்
அகத்தும் புறத்தும் ஒளி நிறைவித்து அமர்ந்த குருவே ஐம்பூத
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில்
வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே
தருண நடம் செய் அரசே என் தாயே என்னைத் தந்தாயே
தனித்த தலைமைப் பதியே இத் தருணம் வாய்த்த தருணம் அதே.

#4626.
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என்
கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என்
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என்
உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெரும் கருணைத் தேவே உலகத் திரள் எல்லாம்
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே
வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.

#4627.
தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுது அளித்த
தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என்
உடைமையாக் கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே
வானே மதிக்கச் சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே
வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதல் ஐந்தும்
நானே புரிகின்றேன் புரிதல் நானோ நீயோ நான் அறியேன்
நான் நீ என்னும் பேதம் இலா நடம் செய் கருணை_நாயகனே.

#4628.
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய்க் கரிசு இலதாய்க்
கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மைத்
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமைத் தனி முதலே
சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே
புலை சார் மனத்துச் சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளிப்
பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும்
நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.

#4629.
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய்க்
காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல்
ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
இருத்திக் கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என்
இதயம் உருகித் தளதள என்று இளகிஇளகித் தண்ணீராய்
அருத்திப் பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்புப் பெருக்கில் கலந்தது நான்
அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.

#4630.
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே
எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே
ஓதும் பொருளைக் கொடுத்து என்றும் உலவா இன்பப் பெரு நிலையில்
ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமைப் பெருமானே
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை
இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான்
தாதும் உணர்வும் உயிரும் உள்ளத் தடமும் பிறவாம் தத்துவமும்
தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே.

#4631.
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்துக் கதை பேசி
உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை
ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என்
ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதித்
தேவா இது நின் செயலே இச் செயலை நினைக்கும்-தொறும் எனது
சிந்தை கனிந்துகனிந்து உருகித் தெள் ஆர்_அமுதம் ஆனதுவே.

#4632.
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து
இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம்
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும்
படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
விரவிக் களித்து நாத் தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம்
வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே
கரவு ஒன்று அறியாப் பெரும் கருணைக் கடவுள் இது நின் தயவு இதனைக்
கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.

#4633.
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்துக் கதை பேசி
உண்டு இங்கு உடுத்துக் கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன்
நேரே இற்றைப் பகல் அந்தோ நெடும் காலமும் மெய்த் தவ யோக
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
அமுது உண்டு அழியாத் திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதிப்
பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான் நின்
பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.

#4634.
புரை சேர் வினையும் கொடும் மாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞானப் பொருள் விளங்கும்
வரை சேர்த்து அருளிச் சித்தி எலாம் வழங்கிச் சாகா_வரம் கொடுத்து
வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த
பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
அரைசே அமுதம் எனக்கு அளித்த அம்மே உண்மை அறிவு அளித்த
அப்பா பெரிய அருள் சோதி அப்பா வாழி நின் அருளே.

@84. பெறாப் பேறு.

#4635
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
சாவாத வரம் எனக்குத் தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே
நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே.

#4636
ஆராலும் அறிந்துகொளற்கு அரிய பெரும் பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
காராலும் கனலாலும் காற்றாலும் ககனக் கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ்
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலாத் தனி வடிவம் எனக்கு அளித்த பதியே
சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே.

#4637
ஆதி அந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
ஓதி எந்த வகையாலும் உணர்ந்துகொளற்கு அரிதாய் உள்ளபடி இயற்கையிலே உள்ள ஒரு பொருளே
ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
சாதி இந்த மதம் எனும் வாய்ச் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்தியத் தெள் அமுதே.

#4638
அச்சம் எலாம் தவிர்த்து அருளி இச்சை எலாம் அளித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
துச்ச உலகு ஆசாரத் துடுக்கு அனைத்தும் தவிர்த்தே சுத்த நெறி வழங்குவித்த சித்த சிகாமணியே
உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமைப் பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
இச் சமயம் எழுந்து அருளி இறவாத வரமும் எல்லாம் செய் வல்ல சித்தின் இயற்கையும் தந்தனையே.

#4639
அன்பு உடைய என் அறிவே அருள் உடைய பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
துன்பு உடைய உலகர் எலாம் சுகம்_உடையார் ஆகத் துன்மார்க்கம் தவிர்த்து அருளிச் சன்மார்க்கம் வழங்க
இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனைப் பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே
என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே.

#4640
அடுக்கிய பேர் அண்டம் எலாம் அணுக்கள் என விரித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
நடுக்கிய என் அச்சம் எலாம் தவிர்த்து அருளி அழியா ஞான அமுது அளித்து உலகில் நாட்டிய பேர்_அறிவே
இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே
முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே.

#4641
ஆங்காரம் தவிர்ந்தவர் உள் ஓங்கா நின்றவனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில்
பாங்காக ஏற்றி எந்தப் பதத் தலைவராலும் படைக்கவொணாச் சித்தியை நான் படைக்கவைத்த பதியே
தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகைச் சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே.

#4642
ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமைப் பதியே
பாடகக் கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப் பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயைக்
காடகத்தை வளம் செறிந்த நாடகமாப் புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்த நறும் கனியே.

#4643
அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே
கடியாத பெரும் கருணைக் கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே
மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல் வரமே மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயல் பொருளே.

#4644
அனந்தம் மறை ஆகமங்கள் அளப்ப அரிய சிவமே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே
மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமைப் பதியே
சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே.

@85. சிவானந்தத் தழுந்தல்

#4645.
காரண காரியக் கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை
நாரணர் நான்முகர் போற்ற மேல் ஏற்றி நாதாந்த_நாட்டுக்கு ஓர் நாயகன் ஆக்கிப்
பூரணமாம் இன்பம் பொங்கித் ததும்பப் புத்தமுதாம் அருள் போனகம் தந்தே
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

#4646
தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கிப் போதாந்த_நாட்டைப் புரக்க மேல் ஏற்றி
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

#4647
தான் அந்தம் இல்லாத தன்மையைக் காட்டும் சாகாத கல்வியைத் தந்து எனக்கு உள்ளே
தேன் நந்தத் தெள் அமுது ஊற்றிப் பெருக்கித் தித்தித்துச் சித்தம் சிவமயம் ஆக்கி
வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்த வேதாந்த
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

#4648
சிற்சபை இன்பத் திரு_நடம் காட்டித் தெள் அமுது ஊட்டி என் சிந்தையைத் தேற்றிப்
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய்ப் போகமும் தந்தே
தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில் சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

#4649
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கிச் சாகா_வரத்தையும் தந்து எனைத் தேற்றி
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றிச்
சித்தி எலாம் செயச்செய்வித்துச் சத்தும் சித்தும் வெளிப்படச் சுத்த நாதாந்த
அத் திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

#4650
இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே
நித்தியன் ஆக்கி மெய்ச் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த
அத் தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

#4651
மருந்து இது மணி இது மந்திரம் இது செய் வகை இது துறை இது வழி இது எனவே
இருந்து எனுள் அறிவித்துத் தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கிப்
பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்திப் புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

#4652
பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டிப் பாச விமோசனப் பக்குவன் ஆக்கி
நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருறப் புரிந்து
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

#4653
இருளான மலம் அறுத்து இக_பரம் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடிப் போகத்
தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

#4654
இருள் சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இரு வாய்ப்புப் புன்செயில் எரு ஆக்கிப் போட்டு
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழிக் கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

@86. திருவருட் பெருமை

#4655
அன்பனே அப்பா அம்மையே அரசே அருள்_பெரும்_சோதியே அடியேன்
துன்பு எலாம் தொலைத்த துணைவனே ஞான சுகத்திலே தோற்றிய சுகமே
இன்பனே எல்லாம்_வல்ல சித்து ஆகி என் உளே இலங்கிய பொருளே
வன்பனேன் பிழைகள் பொறுத்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

#4656
பெருகும் மா கருணைப் பெரும் கடல் இன்பப் பெருக்கமே என் பெரும் பேறே
உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால்
கருகும் நெஞ்சு-அதனைத் தளிர்த்திடப் புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து
வருக என்று உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

#4657
எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே
இந்து உறும் அமுதே என் உயிர்த் துணையே இணை_இலா என் உடை அன்பே
சொந்த நல் உறவே அம்பலத்து அரசே சோதியே சோதியே விரைந்து
வந்து அருள் என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

#4658
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே
பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே
தேவு எனத் தேவ தேவு என ஒருமைச் சிவம் என விளங்கிய பதியே
வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

#4659
உள்ளமே இடம்கொண்டு என்னை ஆட்கொண்ட ஒருவனே உலகு எலாம் அறியத்
தெள் அமுது அளித்து இங்கு உன்னை வாழ்விப்பேம் சித்தம் அஞ்சேல் என்ற சிவமே
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என்
வள்ளலே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

#4660
நல்லவா அளித்த நல்லவா எனையும் நயந்தவா நாயினேன் நவின்ற
சொல்லவா எனக்குத் துணையவா ஞான சுகத்தவா சோதி அம்பலவா
அல்லவா அனைத்தும் ஆனவா என்னை ஆண்டவா தாண்டவா எல்லாம்
வல்லவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

#4661
திண்மையே முதல் ஐங்குணக் கரு ஆய செல்வமே நல் வழி காட்டும்
கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே
உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனித் தெய்வமே உலவா
வண்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

#4662
காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த கற்பகத் தனிப் பெரும் தருவே
தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த சோதியே தூய்மை_இல்லவர்க்குச்
சேய்மையே எல்லாம் செய வல்ல ஞான சித்தியே சுத்த சன்மார்க்க
வாய்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

#4663
என் அவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம்
சொன்னவா கருணைத் தூயவா பெரியர் துதியவா அம்பலத்து அமுதம்
அன்னவா அறிவால் அறி அரி அறிவா ஆனந்த நாடகம் புரியும்
மன்னவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

#4664
விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி
இரதம் ஆதிய நல் தெள் அமுது அளித்து இங்கு என் கருத்து அனைத்தையும் புரிந்தே
சரதமா நிலையில் சித்து எலாம் வல்ல சத்தியைத் தயவினால் தருக
வரதனே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

@87. அச்சோப் பத்து

#4665.
கருத்தனை என் கண்மணியைக் கண்_நுதலைப் பெரும் கருணை_கடலை வேதத்
திருத்தனை என் சிவ பதியைத் தீம் கனியைத் தெள் அமுதத் தெளிவை வானில்
ஒருத்தனை என் உயிர்த் துணையை உயிர்க்குயிரை உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி
அருத்தனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

#4666
மெய்யனை என் துயர் தவிர்த்த விமலனை என் இதயத்தே விளங்குகின்ற
துய்யனை மெய்த் துணைவனை வான் துரிய நிலைத் தலைவனைச் சிற்சுகம் தந்தானைச்
செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை
அய்யனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

#4667
எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் விளங்க விளக்கிடுவான்-தன்னைச்
செப்ப அரிய பெரிய ஒரு சிவ பதியைச் சிவ_கதியைச் சிவ போகத்தைத்
துப்புரவு பெற எனக்கே அருள் அமுதம் துணிந்து அளித்த துணையை என்றன்
அப்பனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

#4668
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னைச்
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்குப் பெரும் களிப்புச் செய்தான்-தன்னை
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை
அறிவனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

#4669
பொன் புனை உள் ஒளிக்கு_ஒளியைப் பூரணமாம் பெரும் பொருளைப் புனிதம்-தன்னை
என் பிழையைப் பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை
இன்பினை என் இதயத்தே இருந்து அருளும் பெரு வாழ்வை என் உள் ஓங்கும்
அன்பினைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

#4670
இத்தனை என்றிட முடியாச் சத்தி எலாம் உடையானை எல்லாம்_வல்ல
சித்தனை என் சிவ பதியைத் தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனிப் பெரும் தாயை என்னை ஈன்ற
அத்தனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

#4671
எம்மையும் என்றனை பிரியாது என் உளமே இடம்கொண்ட இறைவன்-தன்னை
இம்மையில் என்றனக்கு அழியாத் திரு_வடிவம் தந்தானை எல்லாம்_வல்ல
செம்மை தரு சித்தனை என் சிவ பதியைத் தெள் அமுதத் திரளை என்றன்
அம்மையைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

#4672
என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால்
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை
முன்னையும் பின்னையும் எனக்கே முழுத் துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை
அன்னையைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

#4673
எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என்
கண் நிரம்ப ஒளி காட்டிக் கருத்தில் அமர்ந்து இருக்கின்ற கருத்தன்-தன்னைப்
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்பப் பொருளை என்றன்
அண்ணலைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

#4674
சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான
நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்தினானைப்
பாதியை ஒன்று_ஆனவனைப் பரம்பரனைப் பராபரனைப் பதி அனாதி
ஆதியைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

@88. அனுபவ நிலை

#4675.
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர்
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன்
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன்
தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய்த் திரு_நிலையே.

#4676
நான் செய்த புண்ணியம் என் உரைப்பேன் பொது நண்ணியதோர்
வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன்
கோன் செய்த பற்பல கோடி அண்டங்களும் கூறு அவற்றில்
தான் செய்த பிண்டப் பகுதியும் நான் செயத் தந்தனனே.

#4677
திரு நிலை பெற்றனன் அம்பலத்தான் அருள் தெள் அமுது உண்டு
உரு நிலை பெற்றனன் ஒன்றே சிவம் என ஓங்குகின்ற
பெரு நிலை பெற்றனன் சுத்த சன்மார்க்கம் பிடித்து நின்றேன்
இரு நிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்கு உளவே.

#4678
எத்தனை நான் குற்றம் செய்தும் பொறுத்தனை என்னை நின்-பால்
வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான் சொன்ன வார்த்தைகள் இங்கு
அத்தனையும் சம்மதித்து அருள்செய்தனை அம்பலத்தே
முத்து_அனையாய் நினக்கு என் மேல் இருக்கின்ற மோகம் என்னே.

#4679
இனியே இறையும் சகிப்பு அறியேன் எனக்கு இன்பம் நல்கும்
கனியே என்றன் இரு கண்ணே முக்கண் கொண்ட கற்பகமே
தனியே என் அன்பு உடைத் தாயே சிற்றம்பலம் சார் தந்தையே
முனியேல் அருள்க அருள்க மெய்ஞ்ஞானம் முழுதையுமே.

#4680
புத்தி அஞ்சேல் சற்றும் என் நெஞ்சமே சிற்பொதுத் தந்தையார்
நித்தியம் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீ இனி நல்
முத்தியும் ஞான மெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.

#4681
கூடிய நாள் இது-தான் தருணம் எனைக் கூடி உள்ளே
வாடிய வாட்டம் எல்லாம் தவிர்த்தே சுக வாழ்வு அளிப்பாய்
நீடியதேல் இனிச் சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன்
ஆடிய பாதம் அறியச் சொன்னேன் எனது ஆண்டவனே.

#4682
ஆக்கிய நாள் இது-தான் தருணம் அருள் ஆர்_அமுதம்
தேக்கி மெய் இன்புறச்செய்து அருள்செய்து அருள்செய்து அருள் நீ
நீக்கினையேல் இனிச் சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன்
தூக்கிய பாதம் அறியச் சொன்னேன் அருள் சோதியனே.

@89. அருட்பெருஞ்சோதி அடைவு

#4683.
அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்து அறிவாய் விளங்கும்
அருள்_பெரும்_சோதித் தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற
அருள்_பெரும்_சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே.

#4684
ஆர்கின்ற தெள் அமுதின் சுவை என் என்று அறைவன் அந்தோ
சார்கின்ற சிற்றம்பலப் பெரும் சீரினைச் சாற்று-தொறும்
சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே.

#4685
உளத்தே பெரும் களிப்புற்று அடியேன் மிக உண்ணுகின்றேன்
வளத்தே அருள்_பெரும்_சோதியினால் ஒளி வாய்ந்து எனது
குளத்தே நிறைந்து அணையும் கடந்து ஓங்கிக் குலவு பரி
மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனம் மகிழ்ந்தே.

#4686
மனம் மகிழ்ந்தேன் மன மாயையை நீக்கினன் மா நிலத்தே
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம் வல்ல சித்தும் பெற்றேன்
இனம் மிகும் சுத்த சன்மார்க்கப் பெரு நெறி எய்திநின்றேன்
கனம் மிகும் மன்றில் அருள்_பெரும்_சோதியைக் கண்டுகொண்டே.

#4687
கண்டேன் அருள்_பெரும்_சோதியைக் கண்களில் கண்டு களி
கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக்கொண்டு இக் குவலயத்தே
தொண்டே திரு_அம்பலம் தனக்கு ஆக்கிச் சுக அமுதம்
உண்டேன் உயிர் தழைத்து ஓங்குகின்றேன் உள் உவப்புறவே.

#4688
உறவே எனது இன் உயிரே என் உள்ளத்தில் உற்று இனிக்கும்
நறவே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு நடத்து அரசே
இறவேன் எனத் துணிவு எய்திடச்செய்தனை என்னை இனி
மறவேல் அடிச் சிறியேன் ஒரு போது மறக்கினுமே.

#4689
மறப்பேன்_அலேன் உன்னை ஓர் கணமேனும் மறக்கில் அன்றே
இறப்பேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் இசைத்தேன்
பிறப்பே தவிர்த்து எனை ஆட்கொண்டு அமுதம் பெரிது அளித்த
சிறப்பே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு செழும் சுடரே.

#4690
சுடரே அருள்_பெரும்_சோதியனே பெண் சுகத்தை மிக்க
விடரே எனினும் விடுவர் எந்தாய் நினை விட்டு அயல் ஒன்று
அடரேன் அரை_கணமும் பிரிந்து ஆற்றலன் ஆணை கண்டாய்
இடரே தவிர்த்து எனக்கு எல்லா நலமும் இங்கு ஈந்தவனே.

#4691
தவ நேயமும் சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளியத் தெளித்தனையே
நவ நேய மன்றில் அருள்_பெரும்_சோதியை நாடிநின்ற
இவனே அவன் எனக் கொள்வார் உன் அன்பர் இரு நிலத்தே.

#4692
நிலத்தே புழுத்த புழுவும்_அலேன் புன் நிலத்து இழிந்த
மலத்தே புழுத்த புழு_அனையேனை அ வான் துதிக்கும்
குலத்தே தலைமை கொடுத்து என் உளத்தில் குலவுகின்றாய்
தலத்தே அருள்_பெரும்_சோதி அப்பா என் தயாநிதியே.

#4693
நிதியே என் உள்ள நிறைவே பொதுவில் நிறைந்த சிவ
பதியே அருள்_பெரும்_சோதியனே அம்பலம் விளங்கும்
கதியே என் கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட
மதியே அமுத மழையே நின் பேர்_அருள் வாழியவே.

#4694
வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_
ஆழி என்றே துதித்து ஏத்தப் புரிந்தனை அற்புதம் நீ
டூழி அன்றே என்றும் சாகா_வரமும் உவந்து அளித்தாய்
வாழி மன்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி நின் மன் அருளே.

#4695
மன்னிய நின் அருள் ஆர்_அமுதம் தந்து வாழ்வித்து நான்
உன்னிய உன்னிய எல்லாம் உதவி என் உள்ளத்திலே
தன் இயல் ஆகிக் கலந்து இத் தருணம் தயவு செய்தாய்
துன்னிய நின் அருள் வாழ்க அருள்_பெரும்_சோதியனே.

@90. அடிமைப் பேறு

#4696.
அருள் அளித்தான் அன்பு அளித்தான் அம்பலத்தான் உண்மைப்
பொருள் அளித்தான் என் உள் புணர்ந்தான் தெருள் அளித்தான்
எச் சோதனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
அச்சோ எனக்கு அவன் போல் ஆர்.

#4697
ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உணர்த்துகின்ற
காரணமும் காரியமும் காட்டுவித்தான் பூரணன் சிற்
றம்பலத்தான் என் ஆசை அப்பன் எலாம் வல்ல
செம் பலத்தை என் உளத்தே சேர்த்து.

#4698
சேர்த்தான் பதம் என் சிரத்தே திரு_அருள் கண்
பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என்
துன்பம் எலாம் தூக்கம் எலாம் சூழாது நீக்கிவிட்டான்
இன்பம் எலாம் தந்தான் இசைந்து.

#4699
இசைந்தான் என் உள்ளத்து இருந்தான் எனையும்
நசைந்தான் என் பாட்டை நயந்தான் அசைந்தாடு
மாயை மனம் அடக்கிவைத்தான் அருள் எனும் என்
தாயை மகிழ் அம்பலவன் தான்.

#4700
தானே அருள் ஆனான் தானே பொருள் ஆனான்
தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான்
நான் ஆனான் என்னுடைய நாயகன் ஆனான் ஞான
வான் ஆனான் அம்பலத்து எம்மான்.

#4701
மான் முதலா உள்ள வழக்கு எல்லாம் தீர்த்து அருளித்
தான் முதலாய் என் உளமே சார்ந்து அமர்ந்தான் தேன் முதலாத்
தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில்
தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.

#4702
தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள் என உள்
ஓர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் சார்ந்தேன் சிற்
றம்பலத்தில் எல்லாம்_வல்லானை அவன் அருளால்
எம் பலத்து எல்லாம்_வலன் ஆனேன்.

#4703
ஆனேன் அவனா அவன் அருளால் ஆங்காங்கு
நானே களித்து நடிக்கின்றேன் தானே என்
தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும்
சிந்தை வியக்கின்றேன் தெரிந்து.

#4704
தெரிந்தேன் அருளால் சிவம் ஒன்றே என்று
புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை விரிந்த மனச்
சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்து எல்லாம்_வல்ல அருள்
நாட்டை எலாம் கைக்கொண்டேன் நான்.

#4705
நான் செய்த நல் தவம்-தான் யாதோ நவிற்ற அரிது
வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் தான் செய்து
தம் பலம் என்றே மதிக்கத் தான் வந்து என் உள் கலந்தான்
அம்பலவன் தன் அருளினால்.

@91. உலப்பில் இன்பம்

#4706.
கருணாநிதியே அடியேன் இரு கண்_உளானே
தெருள் நாடும் என் சிந்தையுள் மேவிய தேவ தேவே
பொருள் நாடிய சிற்றம்பலத்து ஒளிர் புண்ணியா மெய்த்
தருணா இது-தான் தருணம் எனைத் தாங்கிக்கொள்ளே.

#4707
கூ கா எனக் கூடி எடாது இக் கொடியனேற்கே
சாகா_வரம் தந்த தயாநிதித் தந்தையே நின்
மா காதலன் ஆகினன் நான் இங்கு வாழ்கின்றேன் என்
யோகாதிசயங்கள் உரைக்க உலப்புறாதே.

#4708
எந்தாய் உனைக் கண்டு களித்தனன் ஈண்டு இப்போதே
சிந்தா நலமும் பலமும் பெற்றுத் தேக்குகின்றேன்
அம் தாமரையான் நெடுமாலவன் ஆதி வானோர்
வந்தார் எனை வாழ்த்துகின்றார் இங்கு வாழ்க என்றே.

#4709
வாழ்வேன் அருள் ஆர் அமுது உண்டு இங்கு வாழ்கின்றேன் நான்
ஏழ் வேதனையும் தவிர்ந்தேன் உனையே அடைந்தேன்
சூழ்வேன் திரு_சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
தாழ்வேன் அலது யார்க்கும் இனிச் சற்றும் தாழ்ந்திடேனே.

#4710
தாழாது எனை ஆட்கொண்டு அருளிய தந்தையே நின்
கேழ் ஆர் மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன் நான்
ஏழா நிலை மேல் நிலை ஏறி இலங்குகின்றேன்
ஊழால் வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்தது அன்றே.

#4711
கோடா மறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
சூடாமணியே மணியுள் ஒளிர் சோதியே என்
பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும்
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே.

#4712
எல்லாம் செய வல்லவனே எனை ஈன்ற தாயின்
நல்லாய் சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே
கொல்லா நெறி காட்டி என்றன்னைக் குறிப்பில்கொண்டு என்
பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே.

#4713
பரமான சிதம்பர ஞான சபாபதியே
வரமான எல்லாம் எனக்கு ஈந்த நல் வள்ளலே என்
தரமானது சற்றும் குறித்திலை சாமி நின்னை
உரமான உள் அன்பர்கள் ஏசுவர் உண்மை ஈதே.

#4714
தாயே எனைத் தந்த தயாநிதித் தந்தையே இ
நாயேன் பிழை யாவையும் கொண்டனை நன்மை என்றே
காயே கனியாகக் கருதும் கருத்தனே நின்
சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே.

#4715
பொய்யே உரைக்கின்ற என் சொல்லும் புனைந்துகொண்டாய்
மெய்யே திரு_அம்பலத்து ஆடல் செய் வித்தகனே
எய்யேன் இனி வெம் மலக் கூட்டில் இருந்து என் உள்ளம்
நையேன் சுத்த நல் உடம்பு எய்தினன் நானிலத்தே.

@92. மெய் இன்பப் பேறு

#4716.
சத்தியம் சத்தியம் அருள்_பெரும்_சோதித் தந்தையரே எனைத் தாங்குகின்றீரே
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
இத்தகை உலகிடை அவைக்கும் என்றனக்கும் ஏதும் சுதந்தரம் இல்லை இங்கு இனி நீர்
எத்தகையாயினும் செய்துகொள்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4717
ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே
நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன்
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம்
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4718
அகத்து ஒன்று புறத்து ஒன்று நினைத்தது இங்கு இல்லை அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே நீர்
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனிப் பெரும் தேவரீர் திரு_சமுகத்தே
உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
இகத்து அன்றிப் பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4719
தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன்
செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லபத் திரு_சமுகத்தே
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4720
தருணத்துக்கு ஏற்றவா சொல்லிப் பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன்
கருணைப் பெருக்கினில் கலந்து எனது உள்ளே கனவினும் நனவினும் களிப்பு அருள்கின்றீர்
வருணப் பொதுவிலும் மா சமுகத்து என் வண் பொருள் ஆதியை நண்பொடு கொடுத்தேன்
இருள் நச்சு அறுத்து அமுதம் தர வல்லீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4721
வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தை அன்று இது என் மனம் ஒத்துச் சொல்லிய வாய்மை முக்காலும்
தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனிப் பெருந்தகையீர்
ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர்
ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4722
தித்திக்கப் பேசிக் கசப்பு உள்ளே காட்டும் திருட்டுப் பேச்சு அன்று நும் திருவுளம் அறியும்
எத் திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன்
சித்திக்கும் மூலத்தைத் தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே
இத் திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4723
புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகிப் புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட
சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச் சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே
என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4724
இச்சை வேறு இல்லை இங்கு என் கருத்து எல்லாம் என் உள் அமர்ந்து அறிந்தே இருக்கின்றீர்
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம்
எச் செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4725
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன்
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

#4726
தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பு ஒழித்தவர்க்கு அறிவு அருள்வீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

@93. சிவபுண்ணியப் பேறு

#4727.
மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலம் சார்
தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது
காலிலே ஆசைவைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனை நின்
பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

#4728
மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம்
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்து எனை அழிவு இலா நல்ல
பதத்திலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

#4729
குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்து வீண் பொழுது
நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம்
பலத்திலே நின்றாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

#4730
கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண
நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியைப் பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே
பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

#4731
உயத் திடம் அறியாது இறந்தவர்-தமை இ உலகிலே உயிர்பெற்று மீட்டும்
நயத்தொடு வருவித்திடும் ஒரு ஞான நாட்டமும் கற்ப கோடியினும்
வயத்தொடு சாகா_வரமும் என்றனக்கே வழங்கிடப் பெற்றனன் மரண
பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

#4732
நாடல் செய்கின்றேன் அருள்_பெரும்_சோதி நாதனை என் உளே கண்டு
கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிடக் குலவி இன்பு உருவாய்
ஆடல் செய்கின்றேன் சித்து எலாம் வல்லான் அம்பலம்-தன்னையே குறித்துப்
பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

#4733
துதி பெறும் அயனோடு அரி அரன் முதலோர் சூழ்ந்துசூழ்ந்து இளைத்து ஒரு தங்கள்
விதியை நொந்து இன்னும் விழித்திருக்கின்றார் விழித்திருந்திடவும் நோவாமே
மதி_இலேன் அருளால் சுத்த சன்மார்க்க மன்றிலே வயங்கிய தலைமைப்
பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

#4734
புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில்
துரிசு எலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம் துலங்கவும் திரு_அருள் சோதிப்
பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

#4735
வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல
வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்ய ஓர் பரம
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் நல் மணி மன்றிலே நடிக்கும்
பாதமே பிடித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

#4736
கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய்ப் பிள்ளை என்று ஒரு பேர்ப்
பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

@94. சிவானந்தப் பற்று

#4737.
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின்
பாதமும் மா முடியும் கண்டுகொள்ளும்படி எனக்கே
போதமும் போதத்து அருள் அமுதும் தந்த புண்ணியனே
நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.

#4738
வண்ணப் பொன்_அம்பல வாழ்வே என் கண்ணினுள் மா மணியே
சுண்ணப் பொன் நீற்று ஒளி ஓங்கிய சோதிச் சுகப் பொருளே
எண்ணப் பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என்
விண்ணப்பம் ஏற்று வருவாய் என்-பால் விரைந்தே விரைந்தே.

#4739
சிற்சபை அப்பனைக் கண்டுகொண்டேன் அருள் தெள் அமுதம்
சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தான் அறிந்த
நல் சபைச் சித்திகள் எல்லாம் என் கை வசம் நண்ணப்பெற்றேன்
பொன்_சபை ஓங்கப் புரிந்து ஆடுதற்குப் புகுந்தனனே.

#4740
வரை_அற்ற சீர்ப் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும்
புரை_அற்ற மெய் நிலை ஏற்றி மெய்ஞ்ஞானப் பொதுவினிடைத்
திரை_அற்ற காட்சி அளித்து இன் அமுதத் தெளிவு அருளி
நரை அற்று மூப்பு அற்று இறப்பு அற்று இருக்கவும் நல்கியதே

#4741
தாய் ஆகி என் உயிர்த் தந்தையும் ஆகி என் சற்குருவாய்த்
தேயாப் பெரும் பதம் ஆகி என் சத்தியத் தெய்வமுமாய்
வாயாரப் பாடும் நல் வாக்கு அளித்து என் உளம் மன்னுகின்ற
தூயா திரு_நடராயா சிற்றம்பலச் சோதியனே.

#4742
ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச் சுடர் ஆகி இன்ப
நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தம் இடும்
சோதியும் வேதியும் நான் அறிந்தேன் இச் செகதலத்தில்
சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.

#4743
தன் நேர் இலாத தலைவா சிற்றம்பலம்-தன்னில் என்னை
இன்னே அடைகுவித்து இன்பு அருள்வாய் இதுவே தருணம்
அன்னே எனைப் பெற்ற அப்பா என்று உன்னை அடிக்கடிக்கே
சொன்னேன் முன் சொல்லுகின்றேன் பிற ஏதும் துணிந்திலனே.

#4744
தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே
மோகாதிபன் என்று உலகவர் தூற்ற முயலுகின்றேன்
நாகாதிபரும் வியந்திட என் எதிர் நண்ணி என்றும்
சாகா_வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.

#4745
கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினனே.

#4746
தீமைகள் யாவும் தொலைத்துவிட்டேன் இத் தினம் தொடங்கிச்
சேம நல் இன்பச் செயலே விளங்க மெய்ச் சித்தி எலாம்
காமமுற்று என்னைக் கலந்துகொண்டு ஆடக் கருணை நடத்
தாமன் என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.

@95. இறை எளிமையை வியத்தல்

#4747.
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பதத் துணையே பிடித்தேன்
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன்
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால்
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே.

#4748
சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர் தடை அறியாக் கால் காட்டித் தரம் பெறவும் அளித்தீர்
மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்த உடம்பினராம் புண்ணியரும் நண்ண அரிய பொது நிலையும் தந்தீர்
நாகாதிபதிகளும் நின்று ஏத்த வளர்க்கின்றீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே.

#4749
வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்தப்
போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
பாதாந்தம் அறிவித்தீர் சுத்த வடிவுடனே பகர் பிரணவாகாரப் பரிசும் எனக்கு அளித்தீர்
நாதாந்தத் தனிச் செங்கோல் நான் செலுத்தக் கொடுத்தீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே.

#4750
ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்கத் தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்கப்
பார் நீடத் திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்திப் பண்புறவும் செய்தீர்
நார் நீட நான் தானாய் நடம் புரிகின்றீரே நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே.

#4751
பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை
ஆயிரம் ஆயிரம் கோடி நா_உடையோர் எனினும் அணுத்துணையும் புகல் அரிதேல் அந்தோ இச் சிறியேன்
வாய் இரங்கா வகை புகலத் துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே.

#4752
ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன் உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய்
வான் உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் வகுத்து உரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை
நான் உரைக்க நான் ஆரோ நான் ஆரோ நவில்வேன் நான் எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.

#4753
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர்
எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாமப்
பெண் உடைய மனம் களிக்கப் பேர்_உலகம் களிக்கப் பெத்தரும் முத்தரும் மகிழப் பத்தர் எலாம் பரவ
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே.

#4754
பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர்
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனித் தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
எது நினைத்தேன் நினைத்தாங்கே அது புரியும் திறமும் இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருளுவதற்கே
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே.

#4755
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன்
துரும்பின் மிகச் சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன் துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்தத் தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன்
பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள் பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே.

#4756
அ நாளில் அடிச் சிறியேன் அம்பல வாயிலிலே அருளை நினைந்து ஒருபுறத்தே அயர்ந்து அழுது நின்றேன்
முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்தச்
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அச் செல்வம் மிகு திரு_நாள்
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே.

@96. திருநடப் புகழ்ச்சி

#4757.
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்தப் பதம் தரும் மெய்ஞ்ஞான
நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனித் தலைமை நிபுண மணி_விளக்கே
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே
துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

#4758
ஆரணமே ஆகமமே ஆரண ஆகமத்தின் அரும் பொருளே அரும் பொருளின் அனுபவமே அறிவே
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே
பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே
தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

#4759
இணை ஏதும் இன்றி நின்ற இறையவனே மறை சொல் ஏகமுமாய் அனேகமுமாய் இலங்கு பரம்பரனே
அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும்
புணையே மெய்ப்பொருளே மெய்ப் புகழே மெய்ப் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும்
துணையே சத்துவமே தத்துவமே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

#4760
எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடிச் சிறியேன் இருந்த இடம்-தனைத் தேடி இணைப் பரி மான் ஈர்க்கும்
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்துப் பயத்தொடு நின்றேனே
வருதி எனத் திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே
சுருதி முடி அடிக்கு அணிந்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

#4761
அக வடிவை ஒரு கணத்தே அனக வடிவு ஆக்கி அருள் அமுதம் உவந்து அளித்தே அடிக்கடி என் உளத்தே
முக வடிவம்-தனைக் காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே
சக வடிவில் தான் ஆகி நான் ஆகி நானும் தானும் ஒரு வடிவு ஆகித் தனித்து ஓங்கப் புரிந்தே
சுக வடிவம்-தனை அளித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

#4762
உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னைப் பரிந்து திரு_கரத்தால்
அடுத்து அணைத்துக்கொண்டு எடுத்துப் போய்ப் பிறிது ஓர் இடத்தே அமர்த்தி நகைத்து அருளிய என் ஆண்டவனே அரசே
தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

#4763
ஆற்றாத அடிச் சிறியேற்கு ஆற்றல் மிகக் கொடுத்தே அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்து அன்புடனே
போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இப் பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே
ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே
தோற்றாத தோற்றுவித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

#4764
படிப்பு அடக்கிக் கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கிப் பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கித்
தடிப்புறும் ஊண் சுவை அடக்கிக் கந்தம் எலாம் அடக்கிச் சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி
மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வனக் குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த
துடிப்பு அடக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

#4765
பணிந்து அறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்து அறியேன் கேட்டு அறியேன் பத்தியில் பூ மாலை
அணிந்து அறியேன் மனம் உருகக் கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன்
துணிந்து எனக்கும் கருணைசெய்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

#4766
தாங்காதே பசி பெருக்கிக் கடை நாய் போல் உலம்பித் தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே
வாங்காது தூங்கியதோர் வழக்கம் உடையேனை வலிந்து அடிமைகொண்டு அருளி மறப்பு ஒழித்து எந்நாளும்
தூங்காதே விழிக்கவைத்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

@97. திருவருட்பேறு

#4767.
சீர் விளங்கு சுத்தத் திரு_மேனி தான் தரித்துப்
பார் விளங்க நான் படுத்த பாயலிலே தார் விளங்க
வந்தாய் எனைத் தூக்கி மற்றொரு சார் வைத்தனையே
எந்தாய் நின் உள்ளம் அறியேன்.

#4768
பயத்தோடு ஒரு பால் படுத்திருந்தேன் என்-பால்
நயத்தோடு அணைந்தே நகைத்து வயத்தாலே
தூக்கி எடுத்து எனை மேல் சூழலிலே வைத்தனை நான்
பாக்கியவான் ஆனேன் பதிந்து.

#4769
என்னே நின் தண் அருளை என் என்பேன் இ உலகில்
முன்னே தவம்-தான் முயன்றேனோ கொன்னே
படுத்து அயர்ந்தேன் நான் படுத்த பாய் அருகுற்று என்னை
எடுத்து ஒரு மேல் ஏற்றி வைத்தாயே.

#4770
சிந்தாகுலத்தொடு நான் தெய்வமே என்று நினைந்து
அந்தோ படுத்து உள் அயர்வுற்றேன் எந்தாய்
எடுத்து ஆள் என நினையாதே கிடந்தேன் என்னை
எடுத்தாய் தயவை வியவேன்.

#4771
உன்னுகின்ற-தோறும் எனது உள்ளம் உருகுகின்றது
என் உரைப்பேன் என் உரைப்பேன் எந்தாயே துன்னி நின்று
தூக்கம் தவிர்த்து என்னைத் தூக்கி எடுத்து அன்பொடு மேல்
ஆக்கமுற வைத்தாய் அது.

#4772
நான் படுத்த பாய் அருகில் நண்ணி எனைத் தூக்கி
ஊன் படுத்த தேகம் ஒளி விளங்கத் தான் பதித்த
மேலிடத்தே வைத்தனை நான் வெம்மை எலாம் தீர்ந்தேன் நின்
கால்-இடத்தே வாழ்கின்றேன் காண்.

#4773
புண்ணியம்-தான் யாது புரிந்தேனோ நான் அறியேன்
பண்ணிய துன்போடே படுத்திருந்தேன் நண்ணி எனைத்
தூக்கி எடுத்து எனது துன்பம் எலாம் தீர்த்து அருளி
ஆக்கியிடு என்றே அருள்தந்தாய்.

#4774
அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கு ஒரு சார்
பஞ்சின் உழந்தே படுத்து அயர்ந்தேன் விஞ்சி அங்கு
வந்தாய் எனைத் தூக்கி மற்றொரு சார் வைத்து அமுது
தந்தாய் என் நான் செய் தவம்.

#4775
நானே தவம் புரிந்தேன் நானே களிப்பு அடைந்தேன்
தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே
ஒளி விளங்கப் பெற்றேன் உடையான் எனை தான்
அளி விளங்கத் தூக்கி அணைத்தான்.

#4776
வாழி எனைத் தூக்கிவைத்த கரதலங்கள்
வாழி எலாம் வல்ல மணி மன்றம் வாழி நடம்
வாழி அருள் சோதி வாழி நடராயன்
வாழி சிவ ஞான வழி.

@98. அருட்கொடைப் புகழ்ச்சி

#4777.
கடையேன் புரிந்த குற்றம் எலாம் கருதாது என் உள் கலந்துகொண்டு
தடையே முழுதும் தவிர்த்து அருளித் தனித்த ஞான அமுது அளித்துப்
புடையே இருத்தி அருள் சித்திப் பூவை-தனையும் புணர்த்தி அருள்
கொடையே கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4778.
கடுத்த மனத்தை அடக்கி ஒரு கணமும் இருக்க மாட்டாதே
படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவைப் பல நாளும்
தடுத்த தடையைத் தவிர்த்து என்றும் சாகா நலம் செய் தனி அமுதம்
கொடுத்த குருவே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4779.
மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து எழிலுறு நல்
உருவும் பொருள் ஒன்று எனத் தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கைச் சிவம் எனும் ஓர்
குருவும் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4780.
சேட்டித்து உலகச் சிறுநடையில் பல் கால் புகுந்து திரிந்து மயல்
நீட்டித்து அலைந்த மனத்தை ஒரு நிமிடத்து அடக்கிச் சன்மார்க்கக்
கோட்டிக்கு இயன்ற குணங்கள் எலாம் கூடப் புரிந்து மெய் நிலையைக்
காட்டிக் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4781.
தோலைக் கருதித் தினம்-தோறும் சுழன்றுசுழன்று மயங்கும் அந்த
வேலைக்கு இசைந்த மனத்தை முற்றும் அடக்கி ஞான மெய் நெறியில்
கோலைத் தொலைத்துக் கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலைக்
கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4782.
பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே
தெட்டிற்கடுத்த பொய் ஒழுக்கச் செயலே என்று திரிந்து உலகில்
ஒட்டிக் குதித்துச் சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கைக்
கட்டிக் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4783.
மதியைக் கெடுத்து மரணம் எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும் ஓர்
விதியைக் குறித்த சமய நெறி மேவாது என்னைத் தடுத்து அருளாம்
பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர்
கதியைக் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4784.
தருண நிதியே என் ஒருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு
வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வே நல்
அருண ஒளியே எனச் சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன் வந்தே
கருணை கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4785.
பொன் பங்கயத்தின் புது நறவும் சுத்த சலமும் புகல்கின்ற
வெற்பு அந்தரமா மதி மதுவும் விளங்கு பசுவின் தீம் பாலும்
நல் பஞ்சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவை தீர்க்கும்
கற்பம் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4786.
புலையைத் தவிர்த்து என் குற்றம் எலாம் பொறுத்து ஞான பூரணமா
நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தம் இடும்
மலையைக் காட்டி அதன் அடியில் வயங்க இருத்திச் சாகாத
கலையைக் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4787.
அருள் நாடு அறியா மன_குரங்கை அடக்கத் தெரியாது அதனொடு சேர்ந்து
இருள் நாடு அனைத்தும் சுழன்றுசுழன்று இளைத்துக் களைத்தேன் எனக்கு அந்தோ
தெருள் நாடு உலகில் மரணமுறாத் திறம் தந்து அழியாத் திரு அளித்த
கருணாநிதியே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4788.
மண்ணுள் மயங்கிச் சுழன்று ஓடும் மனத்தை அடக்கத் தெரியாதே
பெண்ணுள் மயலைப் பெரும் கடல் போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய
கண்ணுள் மணியே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4789.
புலந்த மனத்தை அடக்கி ஒரு போது நினைக்க மாட்டாதே
அலந்த சிறியேன் பிழை பொறுத்தே அருள் ஆர்_அமுதம் அளித்து இங்கே
உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்து என் உயிரின் உளே
கலந்த பதியே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4790.
தனியே கிடந்து மனம் கலங்கித் தளர்ந்துதளர்ந்து சகத்தினிடை
இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து
முனியேல் என நான் மொழிவதற்கு முன்னே கருணை அமுது அளித்த
கனியே கரும்பே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4791.
பெண்ணே பொருளே எனச் சுழன்ற பேதை மனத்தால் பெரிது உழன்று
புண்ணே எனும் இப் புலை உடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
தண் ஏர் மதியின் அமுது அளித்துச் சாகா_வரம் தந்து ஆட்கொண்ட
கண்ணே மணியே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4792.
பொருத்திக் கொடுத்த புலை உடம்பில் புகுந்தேன் புணைத்தற்கு இணங்காத
எருத்தில் திரிந்தேன் செய் பிழையை எண்ணாது அந்தோ எனை முற்றும்
திருத்திப் புனித அமுது அளித்துச் சித்தி நிலை மேல் சேர்வித்து என்
கருத்தில் கலந்தோய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4793.
பெண்ணுக்கு இசைந்தே பல முகத்தில் பேய் போல் சுழன்ற பேதை மனத்து
எண்ணுக்கு இசைந்து துயர்_கடல் ஆழ்ந்திருந்தேன்-தன்னை எடுத்து அருளி
விண்ணுக்கு இசைந்த கதிர் போல் என் விவேகத்து இசைந்து மேலும் என்றன்
கண்ணுக்கு இசைந்தோய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4794.
மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கு ஓர்
சூழ்ச்சி அறியாது உழன்றேனைச் சூழ்ச்சி அறிவித்து அருள் அரசின்
ஆட்சி அடைவித்து அருள் சோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
காட்சி கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4795.
பொய்யில் கிடைத்த மனம்_போன_போக்கில் சுழன்றே பொய் உலகில்
வெய்யில் கிடைத்த புழுப் போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என்
கையில் கிடைத்தோய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

#4796.
போதல் ஒழியா மன_குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது
நோதல் புரிந்த சிறியேனுக்கு இரங்கிக் கருணை நோக்கு அளித்துச்
சாதல் எனும் ஓர் சங்கடத்தைத் தவிர்த்து என் உயிரில் தான் கலந்த
காதல் அரசே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

@99. திருவருட் கொடை

#4797.
சிருட்டி முதல் ஐந்தொழில் நான் செய்ய எனக்கு அருள் புரிந்தாய்
பொருள் திகழ் நின் பெரும் கருணைப் புனித அமுது உவந்து அளித்தாய்
தெருள் திகழ் நின் அடியவர்-தம் திரு_சபையின் நடு இருத்தித்
தெருட்டி எனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

#4798
படைத்தல் முதல் ஐந்தொழில் செய் பணி எனக்கே பணித்திட்டாய்
உடைத் தனிப் பேர்_அருள் சோதி ஓங்கிய தெள் அமுது அளித்தாய்
கொடைத் தனிப் போகம் கொடுத்தாய் நின் அடியர் குழு நடுவே
திடத்து அமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

#4799
அயன் முதலோர் ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்திட்டாய்
உயர்வுறு பேர்_அருள் சோதித் திரு_அமுதம் உவந்து அளித்தாய்
மயர்வு அறு நின் அடியவர்-தம் சபை நடுவே வைத்து அருளிச்
செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

#4800
ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்தாய் நின் அருள் அமுது என்
கைவரச்செய்து உண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்து அணிந்தாய்
சைவர் எனும் நின் அடியார் சபை நடுவே வைத்து அருளித்
தெய்வம் என்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

#4801
முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னி மகிழ்ந்து எனக்கு அளித்தாய்
புத்தமுதம் உண்ணுவித்து ஓர் பொன் அணி என் கரத்து அணிந்தாய்
சித்தர் எனும் நின் அடியார் திரு_சபையில் நடு இருத்திச்
சித்து உருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

#4802
ஐந்தொழில் நான் செயப் பணித்தாய் அருள் அமுதம் உணவு அளித்தாய்
வெம் தொழில் தீர்ந்து ஓங்கிய நின் மெய் அடியார் சபை நடுவே
எந்தை உனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்து அருளிச்
செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

#4803
நான்முகன் நாரணன் முதலாம் ஐவர் தொழில் நயந்து அளித்தாய்
மேன்மை பெறும் அருள் சோதித் திரு_அமுதும் வியந்து அளித்தாய்
பான்மையுறு நின் அடியார் சபை நடுவே பதித்து அருளித்
தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

#4804
நாய் எனவே திரிந்தேனை வலிந்து அழைத்து நான்முகன் மால்
தூய பெரும் தேவர் செயும் தொழில் புரி என்று அமுது அளித்தாய்
நாயக நின் அடியர் சபை நடு இருக்கவைத்து அருளிச்
சேய் எனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

#4805
புல் வழங்கு புழு-அதனில் சிறியேனைப் புணர்ந்து அருளிச்
சொல் வழங்கு தொழில் ஐந்தும் துணிந்து கொடுத்து அமுது அளித்தாய்
கல்வி பெறு நின் அடியர் கழக நடு வைத்து என்னைச்
செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

#4806
தெரு மனை-தோறு அலைந்தேனை அலையாமே சேர்த்து அருளி
அருள் ஒளியால் ஐந்தொழிலும் செயப் பணித்தே அமுது அளித்து
மருவிய நின் மெய் அடியார் சபை நடுவே வைத்து அழியாத்
திரு அளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

@100. அனுபவ சித்தி

#4807.
அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆர்_அமுதே
இப் பாரில் என்றன்னை நீயே வருவித்து இசைவுடனே
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்து உலகில்
வெப்பானது தவிர்த்து ஐந்தொழில் செய்ய விதித்தனையே.

#4808
விதித்தனை என்னை நின்றன் மகனாக விதித்து உளத்தே
பதித்தனை என் உள் பதிந்தனை சிற்றம்பல நடமும்
உதித்து ஒளிர் பொன்_அம்பல நடமும் ஒருங்கே எனக்கே
கதித்து அழியாமையும் இன்பமும் கைவரக் காட்டினையே.

#4809
காட்டினை ஞான அமுது அளித்தாய் நல் கனகசபை
ஆட்டினை என் பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்று வந்து
நீட்டினை என்றும் அழியா_வரம் தந்து நின் சபையில்
கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே.

#4810
கூறு உகந்தாய் சிவகாமக்கொடியைக் கொடியில் வெள்ளை
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_
நீறு உகந்தாய் உலகு எல்லாம் தழைக்க நிமிர் சடை மேல்
ஆறு உகந்தாய் மன்றில் ஆட்டு உகந்தாய் என்னை ஆண்டவனே.

#4811
ஆண்டவனே திரு_அம்பலத்தே அருளால் இயற்றும்
தாண்டவனே எனைத் தந்தவனே முற்றும் தந்தவனே
நீண்டவனே உயிர்க்கு எல்லாம் பொதுவினில் நின்றவனே
வேண்ட அனேக வரம் கொடுத்து ஆட்கொண்ட மேலவனே.

#4812
மேலவனே திரு_அம்பலத்து ஆடல் விளக்கும் மலர்க்
காலவனே கனல் கையவனே நுதல் கண்ணவனே
மாலவன் ஏத்தும் சிவகாமசுந்தரவல்லியை ஓர்
பாலவனே எனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே.

#4813
வாட்டம் எல்லாம் தவிர்ந்தேன் அருள் பேர்_ஒளி வாய்க்கப்பெற்றேன்
கூட்டம் எல்லாம் புகழ் அம்பல_வாணரைக் கூடப்பெற்றேன்
தேட்டம் எல்லாம்_வல்ல சித்தி பெற்றேன் இச் செகதலத்தே
ஆட்டம் எல்லாம் விளையாடுகின்றேன் எனக்கு ஆர் சரியே.

#4814
நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன்
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமாக்
கோன் செயவே பெற்றுக்கொண்டேன் உண்டேன் அருள் கோன் அமுதே.

#4815
எனை யான் மதித்துப் புகல்கின்றது அன்று இஃது எந்தை பிரான்-
தனை யான் மதித்து இங்குப் பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன்
வினையால் மெலிந்த மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்துத்
தனை யான் புணர்ந்திடச் சாகா_வரத்தையும் தந்தனனே.

#4816
சிற்றம்பலத்தைத் தெரிந்துகொண்டேன் எம் சிவன் அருளால்
குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குணக் குன்றிலே
வெற்று அம்பல் செய்தவர் எல்லாம் விரைந்துவிரைந்து வந்தே
நல் தம்பலம் தருவாய் என்கின்றார் இந்த நானிலத்தே.

#4817
ஒன்று கண்டேன் திரு_அம்பலத்தே ஒளி ஓங்குகின்ற
நன்று கண்டேன் உலகு எல்லாம் தழைக்க நடம் புரிதல்
இன்று கண்டேன் என்றும் சாகா_வரத்தை எனக்கு அருள
மன்று கண்டார்க்கு இந்த வாழ்வு உளது என்று மகிழ்ந்தனனே.

@101. பொன்வடிவப் பேறு

#4818.
அருள்_பெரும்_சோதி அபயம் அபயம்
பொருள் பெரும் சோதிப் புணை தந்து இருள் பெரும் கார்
அள்ளல்_கடல் கடத்தி அக்கரை மேல் ஆனந்தம்
கொள்ளற்கு அபயம் கொடு.

#4819
ஆர்_அமுதம் தந்து என்னுள் அச்சம் எலாம் தீர்த்து அருளிச்
சீர் அமுத வண்ணத் திரு_அடி கண்டு ஆர்வம் மிகப்
பாடி உடம்பு உயிரும் பத்தி வடிவு ஆகிக் கூத்
தாடிக் களிக்க அருள்.

#4820
இடர் தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த
சுடர் கலந்த ஞான்றே சுகமும் முடுகி உற்றது
இன்னே களித்திடுதும் என் நெஞ்சே அம்பலவன்
பொன் நேர் பதத்தைப் புகழ்.

#4821
ஈனம் எலாம் தீர்ந்தனவே இன்பம் எலாம் எய்தினவே
ஊனம் எலாம் கைவிட்டு ஒழிந்தனவே ஞானம் உளோர்
போற்றும் சிற்றம்பலத்தும் பொன்_அம்பலத்து நடம்
போற்றும்படிப் பெற்ற போது.

#4822
உள்ளக் கவலை எலாம் ஓடி ஒழிந்தனவே
வள்ளல் பெரும் சோதி வாய்த்தனவே கள்ளக்
கருத்து ஒழிய ஞானக் கருத்து இயைந்து நாதன்
பொருத்தமுற்று என் உள் அமர்ந்த போது.

#4823
ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுது எனக்கு நல்கியதே வானப்
பொருள் பெரும் சோதிப் பொதுவில் விளங்கும்
அருள்_பெரும்_சோதி அது.

#4824
எல்லாம் செய வல்லான் எந்தை அருள் அம்பலவன்
நல்லான் எனக்கு மிக நன்கு அளித்தான் எல்லாரும்
கண்டு வியக்கின்றார் கருணைத் திரு_அமுதம்
உண்டு வியக்கின்றேன் உவந்து.

#4825
ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டு நிற்கத்
தேசு ஆர் ஒளியால் சிறியேனை வாசாம
கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருள் அமுதம்
ஈசன் அத்தன் அம்பலவனே.

#4826
ஐயன் எனக்கு ஈந்த அதிசயத்தை என் புகல்வேன்
பொய் அடியேன் குற்றம் பொறுத்து அருளி வையத்து
அழியாமல் ஓங்கும் அருள் வடிவம் நான் ஓர்
மொழி ஆடுதற்கு முனம்.

#4827
ஒப்பு உயர்வு ஒன்று இல்லா ஒருவன் அருள் சோதி
அப்பன் எலாம் வல்ல திரு_அம்பலத்தான் இப் புவியில்
வந்தான் இரவி வருதற்கு முன் கருணை
தந்தான் என் உள் கலந்தான் தான்.

#4828
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர்_உளன்
சாதல் ஒழித்து என்னைத் தான் ஆக்கிப் பூதலத்தில்
ஐந்தொழில் செய் என்றே அருள் சோதிக் கோல் அளித்தான்
வெம் தொழில் போய் நீங்க விரைந்து.

#4829
ஔவியம் தீர் உள்ளத்து அறிஞர் எலாம் கண்டு உவக்கச்
செவ்விய சன்மார்க்கம் சிறந்து ஓங்க ஒவ்வி
விரைந்து வந்து என் உள் கலந்து மெய்யே மெய் ஆக
நிரந்து ஒன்றாய் நின்றான் நிலத்து.

#4830
சோதிப் பிழம்பே சுக வடிவே மெய்ஞ்ஞான
நீதிப் பொதுவே நிறை நிதியே சோதிக்
கடவுளே மாயை இரு_கன்மம் இருள் எல்லாம்
விட உளே நின்று விளங்கு.

#4831
துன்பம் எலாம் தீர்ந்த சுகம் எல்லாம் கைதந்த
அன்பர் எலாம் போற்ற அருள் நடம் செய் இன்பன்
அருள் பெரும் சிற்சோதி திரு_அம்பலத்தான் வேதப்
பொருள் பெரும் சித்து என் உள் புகுந்து.

#4832
தூக்கம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் என்றனக்கே
ஆக்கம் என ஓங்கும் பொன்_அம்பலத்தான் ஏக்கம் எலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம்
தாங்கினேன் சத்தியமாத்தான்.

#4833
துன்பம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் என்றனக்கே
அன்பு அகத்தில் வாழும் சிற்றம்பலத்தான் இன்பு உருவம்
தாங்கினேன் சாகாத் தனி வடிவம் பெற்று ஒளியால்
ஓங்கினேன் உண்மை உரை.

@102. தத்துவ வெற்றி

#4834.
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்தன் எல்லாம் உடையான்
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒருவன் உண்டே அவன்-தான்
பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை எனப் பெரியர் எலாம் அறிவார்
இருமையுறு தத்துவர்காள் என்னை அறியீரோ ஈங்கும் அது துள்ளல் எலாம் ஏதும் நடவாதே.

#4835
மனம் எனும் ஓர் பேய்க் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல் வழி ஏற்றிலை ஆனாலோ
தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே.

#4836
பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம்
கொன்முகம் கொண்டு அடிக்கடி போய்க் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது
என் முனம் ஓர் புல்_முனை மேல் இருந்த பனித் துளி நீ இம்மெனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ
பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனித் தலைவனுக்குப் பெரிய பிள்ளை நானே.

#4837
விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம்
புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே பொறி வாய்ப் புரையாதே விரையாதே புகுந்து மயங்காதே
தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே.

#4838
பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடித் தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே
ஆய்வுறக் கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்குப் பெற்ற பிள்ளை நானே.

#4839
மயங்கு புத்தி எனும் உலக வழக்காளி_பயலே வழி துறை ஈது என்று அறியாய் வகை சிறிதும் அறியாய்
உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ
வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய்
இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே.

#4840
கலை அறியாச் சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய்
நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய்
அலை அறியாக் கடல் போலே அசைவு அற நின்றிடு நீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனை-தான்
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே.

#4841
அகங்காரம் எனும் பொல்லா அடவாதி_பயலே அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்து முடுக்கின்றாய்
செகம் காணத் தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது
இகம் காண அடங்குக நீ அடங்காயேல் கணத்தே இருந்த இடம் தெரியாதே எரிந்திடச்செய்திடுவேன்
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே.

#4842
மான் எனும் ஓர் சகச்சாலச் சிறுக்கி இது கேள் உன் வஞ்சகக் கூத்து எல்லாம் ஓர் மூட்டை எனக் கட்டி
ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகிக்
கான் அடைந்து கருத்து அடங்கிப் பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய்
ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே.

#4843
மாயை எனும் படு திருட்டுச் சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன்
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே
பேய் எனக் காட்டிடை ஓடிப் பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன்
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே.

#4844
மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசனப் பெண் வகை_தொகைகள் உடனே
போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமாக் கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல்
சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ
ஆமாறு சிற்சபையில் அருள் நடனம் புரிவார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை காணே.

#4845
கன்மம் எனும் பெரும் சிலுகுக் கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள்
நன்மையொடு தீமை எனப் பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது
என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல்
இன்மையுற மாய்த்திடுவேன் என்னை அறியாயோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே.

#4846
எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகாரக் குருட்டு முட_பயலே
இத்தனை நாள் பிடித்தது உனைக் கண்டு துரத்திடவே இன்னும் அரை_கணம் தரியேன் இக்கணத்தே நினது
பொத்திய சுற்றத்துடனே போய்விடுதி இலையேல் பூரண மெய் அருள் ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபைத் தலைவன் தரு தலைமைத் தனிப் பிள்ளை நானே.

#4847
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகாச் சுத்த உடம்பு ஆக்கி
ஒரு ஞானத் திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்த பிள்ளை நானே.

#4848
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ
ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே
மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே.

#4849
தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய்
ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே.

#4850
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்துப் பனிக் கடல் வீழ்ந்து ஒளிப்பாய்
தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்குத் தீம்பு வரும் தலை மட்டோ நினது
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும்
அயலிடை நேர்ந்து ஓடுக நீ என்னை அறியாயோ அம்பலத்து என் அப்பன் அருள் நம்பு பிள்ளை நானே.

#4851
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோகக் கடை_பயலே குறும்பு மத_பயலே
தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண்
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சாரப் போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர்
சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனித் தலைவன் தலை_பிள்ளை நானே.

#4852
பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே
வசி அவத்தைக் கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர்
நசிய உமக்கு உளம் உளதோ இக்கணத்தே நீவீர் நடந்து விரைந்து ஓடு-மினோ நாடு அறியா வனத்தே
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனிக் கதிர்_பிள்ளை நானே.

#4853
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
பரணமுறு பேர்_இருட்டுப் பெரு நிலமும் தாண்டிப் பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதிப் பதியை அடைந்த பிள்ளை காணே.

@103. பேறடைவு

#4854.
மணம் புரி கடிகை இரண்டரை எனும் ஓர் வரை உளது ஆதலால் மகனே
எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே
குணம் புரிந்து எமது மகன் எனும் குறிப்பைக் கோலத்தால் காட்டுக எனவே
வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே.

#4855
எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரைக் கடிகையில் உனக்கே
அம்புவி வானம் அறிய மெய் அருளாம் அனங்கனை தனை மணம் புரிவித்து
உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில்
வெம்புறு துயர் தீர்ந்து அணிந்துகொள் என்றார் மெய்ப் பொது நடத்து இறையவரே.

#4856
அன்பு உடை மகனே மெய் அருள் திருவை அண்டர்கள் வியப்புற நினக்கே
இன்பு உடை உரிமை மணம் புரிவிப்பாம் இரண்டரைக் கடிகையில் விரைந்தே
துன்பு உடையவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மை சேர் நல் மணக் கோலம்
பொன் புடை விளங்கப் புனைந்துகொள் என்றார் பொது நடம் புரிகின்றார் தாமே.

#4857
ஈது கேள் மகனே மெய் அருள் திருவை இரண்டரைக் கடிகையில் நினக்கே
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண்
போது போக்காமல் மங்கலக் கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார்
தீது தீர்த்து என்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபையவரே.

#4858
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே
வரைந்து நல் மணம் செய்து ஒரு பெரு நிலையில் வைத்து வாழ்விக்கின்றோம் அதனால்
இரைந்து உளம் கவலேல் இரண்டரைக் கடிகை எல்லையுள் எழில் மணக் கோலம்
நிரைந்துறப் புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே.

#4859
களிப்பொடு மகனே அருள் ஒளித் திருவைக் கடிகை ஓர் இரண்டரை அதனில்
ஒளிப்பு இலாது உலகம் முழுவதும் அறிய உனக்கு நல் மணம் புரிவிப்பாம்
அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம் அணி பெறப் புனைக நீ விரைந்தே
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்கு மெய்ப்பொருள் இறையவரே.

#4860
கலங்கிடேல் மகனே அருள் ஒளித் திருவைக் களிப்பொடு மணம் புரிவிப்பாம்
விலங்கிடேல் வீணில் போது போக்காமல் விரைந்து நல் மங்கலக் கோலம்
நலம் கொளப் புனைந்து மகிழ்க இ உலகர் நவிலும் அ உலகவர் பிறரும்
இலங்க நின் மணமே ஏத்துவர் என்றார் இயலுறு சிற்சபையவரே.

#4861
ஐயுறேல் இது நம் ஆணை நம் மகனே அருள் ஒளித் திருவை நின்றனக்கே
மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம் விரைந்து இரண்டரைக் கடிகையிலே
கையறவு அனைத்தும் தவிர்ந்து நீ மிகவும் களிப்பொடு மங்கலக் கோலம்
வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக என்றனர் மன்று இறையவரே.

#4862
தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே
பாங்குற ஓங்கு மங்கலக் கோலம் பண்பொடு புனைந்துகொள் கடிகை
ஈங்கு இரண்டரையில் அருள் ஒளித் திருவை எழிலுற மணம் புரிவிப்பாம்
ஏங்கலை இது நம் ஆணை காண் என்றார் இயல் மணி மன்று இறையவரே.

#4863
மயங்கிடேல் மகனே அருள் ஒளித் திருவை மணம் புரிவிக்கின்றாம் இதுவே
வயங்கு நல் தருணக் காலை காண் நீ நல் மங்கலக் கோலமே விளங்க
இயம் கொளப் புனைதி இரண்டரைக் கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார்
சயம் கொள எனக்கே தண் அமுது அளித்த தந்தையார் சிற்சபையவரே.

@104. அடைக்கலம் புகுதல்

#4864.
எண்ணாநின்றேன் எண்ணம் எலாம் எய்த அருள்செய்கின்ற தனித்
தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெரு வாழ்வே
கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என்
அண்ணா ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே.

#4865.
திரை சேர் மறைப்பைத் தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்துப்
பரை சேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே
கரை சேர் இன்பக் காட்சி எலாம் காட்டிக் கொடுத்தே எனை ஆண்ட
அரைசே ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே.

#4866.
தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
ஊனே புகுந்த ஒளியே மெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
வானே என்னைத் தான் ஆக்குவானே கோனே எல்லாம்_வல்
லானே ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே.

#4867.
கடையேன் உள்ளக் கவலை எலாம் கழற்றிக் கருணை அமுது அளித்து என்
புடையே அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் விளங்கும் புண்ணியனே
தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
அடையேன் உலகை உனை அடைந்தேன் அடியேன் உன்றன் அடைக்கலமே.

#4868.
இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்திச்
சகத்து_உள்ளவர்கள் மிகத் துதிப்பத் தக்கோன் என வைத்து என்னுடைய
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

#4869.
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
வேண்ட அவைகட்கு ஒருசிறிதும் விளங்கக் காட்டாது என் மொழியைப்
பூண்ட அடியை என் தலை மேல் பொருந்தப் பொருத்தி என்றன்னை
ஆண்ட கருணைப் பெரும் கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.

#4870.
பாடும் சிறியேன் பாட்டு அனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
கோடு மனப் பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்று ஒழித்து
நீடும் உலகில் அழியாத நிலை மேல் எனை வைத்து என் உளத்தே
ஆடும் கருணைப் பெரு வாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.

#4871.
கட்டுக்கடங்கா மனப் பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்து என்
மட்டுக்கு அடங்கா ஆங்கார மத_மா அடங்க அடக்குவித்தே
எட்டுக்கு இசைந்த இரண்டும் எனக்கு இசைவித்து எல்லா இன் அமுதும்
அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

#4872.
புல்லும் களபப் புணர் முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும் என்
தொல்லும் உலகப் பேர்_ஆசை உவரி கடத்தி எனது மனக்
கல்லும் கனியக் கரைவித்துக் கருணை அமுதம் களித்து அளித்தே
அல்லும் பகலும் எனது உளத்தே அமர்ந்தோய் யான் உன் அடைக்கலமே.

#4873.
பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால் யானைப் பிடரியின் மேல்
நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுது ஏத்த
எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என்
அச்சம் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

#4874.
இருளைக் கெடுத்து என் எண்ணம் எலாம் இனிது முடிய நிரம்புவித்து
மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகை புரிந்து
தெருளைத் தெளிவித்து எல்லாம் செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
அருளைக் கொடுத்து என்றனை ஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

@105. இறைவரவு இயம்பல்

#4875.;
அப்பன் வரு தருணம் இதே ஐயம் இலை கண்டாய் அஞ்சாதே அஞ்சாதே அகிலம் மிசை உள்ளார்க்கு
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை
இப் புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய்க் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே.

#4876
இறைவன் வரு தருணம் இதே இரண்டு_இலை அஞ்சலை நீ எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே
பொறையுறக் கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனைத் தானாப் புணர்த்தியது காணே

#4877
என் இறைவன் வரு தருணம் இது கண்டாய் இதற்கு ஓர் எள்துணையும் ஐயம் இலை என்னுள் இருந்து எனக்கே
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல்
மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்துத் தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால்
உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.

#4878
எல்லாம் செய் வல்ல தனிப் பெரும் தலைமைச் சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே
நல்லார்கள் வியக்க எனக்கு இசைத்தபடி இங்கே நான் உனக்கு மொழிகின்றேன் நன்று அறிவாய் மனனே
பல்லாரும் களிப்பு அடையப் பகல் இரவும் தோற்றாப் பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே
எல்லா நன்மைகளும் உற வரு தருணம் இதுவே இ உலகம் உணர்ந்திட நீ இசைத்திடுக விரைந்தே.

#4879
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கிக் கருணை நடப் பெருமான்
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும்
திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறியத் தெரித்திடுக மனனே
வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே.

#4880
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய
வள்ளல் வரு தருணம் இது தருணம் இதே என்று வகுத்து உரைத்துத் தெரித்திடுக மயக்கம் அணுத்துணையும்
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதிப் பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய்
நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் எனத் தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நடக் களிப்பே.

#4881
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம்
மேயது இதுவாம் இதற்கு ஓர் ஐயம் இலை இங்கே விரைந்து உலகம் அறிந்திடவே விளம்புக நீ மனனே
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்துத் தாழ்க்கேல்
தூய திரு அருள் ஜோதித் திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே.

#4882
மாற்று உரைக்க முடியாத திரு_மேனிப் பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல்
நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான்
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு எனக் கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே
சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் எனத் தாழ்க்கேல் தனித் தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே.

#4883
ஏதும் அறியாச் சிறிய பயல்களினும் சிறியேன் இப் பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன்
ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம் ஈது உணர்ந்திடுக நமது
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்கத் திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம்
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே.

#4884
தனித் தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபைத் தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்தக்
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய்க் கருத்துரை என்று அறிக
இனித்த அருள்_பெரும்_சோதி ஆணை எல்லாம் உடைய இறைவன் வரு தருணம் இது சத்தியமாம் இதனைப்
பனித்த உலகவர் அறிந்தே உய்யும் வகை இன்னே பகர்ந்திடுக நாளை அருள் பரம சுகச் சாறே.

@106. திருப்பள்ளி எழுச்சி

#4885.
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும்
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே
எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே.

#4886
துற்குண மாயை போய்த் தொலைந்தது ஞானம் தோன்றிடப் பொன் ஒளி தோற்றிய கதிர்-தான்
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடிப் பணி செய்திடச் சூழ்ந்த
நல்_குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம்பண்ணி நிற்கின்றார்
எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே.

#4887
நிலம் தெளிந்தது கணம் மழுங்கின சுவண நீடு ஒளி தோன்றிற்றுக் கோடு ஒலிக்கின்ற
அலர்ந்தது தாமரை ஆணவ இருள் போய் அழிந்தது கழிந்தது மாயை மால் இரவு
புலர்ந்தது தொண்டரோடு அண்டரும் கூடிப் போற்றியோ சிவசிவ போற்றி என்கின்றார்
இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே.

#4888
கல்லாய மனங்களும் கரையப் பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின்று ஆடிப் பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய்
நல்லார் மெய்ஞ்ஞானிகள் யோகிகள் பிறரும் நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே.

#4889
புன் மாலை இரவு எலாம் புலர்ந்தது ஞானப் பொருப்பின் மேல் பொன் கதிர் பொலிந்தது புலவோர்
சொல்_மாலை தொடுத்தனர் துதித்து நிற்கின்றார் சுத்த சன்மார்க்க சங்கத்தவர் எல்லாம்
மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார்
என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே.

#4890
ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்கப் பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே
இருமையும் அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அரசே பள்ளி எழுந்தருள்வாயே.

#4891
சினைப் பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார்
நினைப்பு அள்ளி உண்ணத் தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார்
முனைப் பள்ளி பயிற்றாது என்றனைக் கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே
எனைப் பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே.

#4892
மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான்
கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார்
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பலப் பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார்
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே.

#4893
மருளொடு மாயை போய்த் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம்
அருள் ஒளி விளங்கியதொரு திரு_சபையும் அலங்கரிக்கின்றனர் துலங்கி வீற்றிருக்கத்
தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்துச் சித்து எலாம் செய்திடத் திரு_அருள் புரிந்தே
இருள் அறுத்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் வள்ளலே பள்ளி எழுந்தருள்வாயே.

#4894
அலங்கரிக்கின்றோம் ஓர் திரு_சபை அதிலே அமர்ந்து அருள் சோதி கொண்டு அடிச் சிறியோமை
வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம்
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இத் தருணம்
இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே.

@107. திரு உந்தியார்

#4895.
இரவு விடிந்தது இணை அடி வாய்த்த
பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற
பால் அமுது உண்டேன் என்று உந்தீபற.

#4896
பொழுது விடிந்தது பொன்_பதம் வாய்த்த
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற
தூயவன் ஆனேன் என்று உந்தீபற.

#4897
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற
இன் அமுது உண்டேன் என்று உந்தீபற.

#4898
துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்தது என்று உந்தீபற
எண்ணம் பலித்தது என்று உந்தீபற.

#4899
ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
தீனம் தவிர்ந்தது என்று உந்தீபற
சிற்சபை கண்டேன் என்று உந்தீபற.

#4900
திரை அற்றுவிட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரை ஒளி ஓங்கிற்று என்று உந்தீபற
பலித்தது பூசை என்று உந்தீபற.

#4901
உள் இருள் நீங்கிற்று என் உள் ஒளி ஓங்கிற்றுத்
தெள் அமுது உண்டேன் என்று உந்தீபற
தித்திக்க உண்டேன் என்று உந்தீபற.

#4902
எந்தையைக் கண்டேன் இடர் எலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற.

#4903
தந்தையைக் கண்டேன் நான் சாகா_வரம் பெற்றேன்
சிந்தை களித்தேன் என்று உந்தீபற
சித்து எலாம் வல்லேன் என்று உந்தீபற.

#4904
முத்தியைப் பெற்றேன் அ முத்தியினால் ஞான
சித்தியை உற்றேன் என்று உந்தீபற
சித்தனும் ஆனேன் என்று உந்தீபற.

@108. அருள் அற்புதம்

#4905.
அற்புதம் அற்புதமே அருள்
அற்புதம் அற்புதமே

#4906.
சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது
சித்தாடுகின்ற திரு_நாள் பிறந்தது
கல் பத நெஞ்சக் கரிசு துறந்தது
கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது

#4907
செத்தார் எழுகின்ற திரு_நாள் அடுத்தது
சிவ நெறி ஒன்றே எங்கும் தலையெடுத்தது
இத் தாரணி முதல் வானும் உடுத்தது
இறவா_வரம்-தான் எனக்குக் கொடுத்தது

#4908
ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
ஈன அந்த மாயை இருள் வினை சோர்ந்தது
என் அருள் சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது

#4909
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்கொண்டனன்
நித்திய ஞான நிறை அமுது உண்டனன்
நிந்தை உலகியல் சந்தையை விண்டனன்

#4910
வஞ்சகர் அஞ்சினர் வாய் மூடிச் சென்றனர்
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர்
சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர்

#4911
புறம் கூறினார் எல்லாம் புல் எனப் போயினர்
பொன் படிக் கீழ்ப்புறம் மீளவும் மேயினர்
மறம் கூறினோம் என் செய்வோம் என்று கூயினர்
வாழிய என்று சொல் வாயினர் ஆயினர்

#4912
வெவ் வினைக் காடு எலாம் வேரொடு வெந்தது
வெய்ய மாமாயை விரிவு அற்று நொந்தது
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது

#4913
சாதி சமயச் சழக்கு எலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது
மேதியில் சாகாத வித்தையைக் கற்றது
மெய் அருள் சோதி என் உள்ளத்தில் உற்றது

@109. ஆணி_பொன்_அம்பலக் காட்சி

#4914.
ஆணி_பொன்_அம்பலத்தே கண்ட காட்சிகள்
அற்புதக் காட்சியடி அம்மா
அற்புதக் காட்சியடி

#4915.
ஜோதி மலை ஒன்று தோன்றிற்று அதில் ஒரு
வீதி உண்டாச்சுதடி அம்மா
வீதி உண்டாச்சுதடி.

#4916
வீதியில் சென்றேன் அ வீதி நடு ஒரு
மேடை இருந்ததடி அம்மா
மேடை இருந்ததடி.

#4917
மேடை மேல் ஏறினேன் மேடை மேல் அங்கு ஒரு
கூடம் இருந்ததடி அம்மா
கூடம் இருந்ததடி.

#4918
கூடத்தை நாட அக் கூடம் மேல் ஏழ் நிலை
மாடம் இருந்ததடி அம்மா
மாடம் இருந்ததடி.

#4919
ஏழ் நிலைக்குள்ளும் இருந்த அதிசயம்
என் என்று சொல்வனடி அம்மா
என் என் என்று சொல்வனடி.

#4920
ஓர் நிலை-தன்னில் ஒளிர் முத்து வெண் மணி
சீர் நீலம் ஆச்சுதடி அம்மா
சீர் நீலம் ஆச்சுதடி.

#4921
பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளமதாச்சுதடி அம்மா
பவளமதாச்சுதடி.

#4922
மற்றோர் நிலையில் மரகதப் பச்சை செம்
மாணிக்கம் ஆச்சுதடி அம்மா
மாணிக்கம் ஆச்சுதடி.

#4923
பின் ஓர் நிலையில் பெரு முத்து வச்சிரப்
பேர் மணி ஆச்சுதடி அம்மா
பேர் மணி ஆச்சுதடி.

#4924
வேறு ஓர் நிலையில் மிகும் பவளத் திரள்
வெண் மணி ஆச்சுதடி அம்மா
வெண் மணி ஆச்சுதடி.

#4925
புகலோர் நிலையில் பொருந்திய பல் மணி
பொன் மணி ஆச்சுதடி அம்மா
பொன் மணி ஆச்சுதடி.

#4926
பதியோர் நிலையில் பகர் மணி எல்லாம்
படிகமதாச்சுதடி அம்மா
படிகமதாச்சுதடி.

#4927
ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்த பொன் தம்பமடி அம்மா
இசைந்த பொன் தம்பமடி.

#4928
பொன் தம்பம் கண்டு ஏறும் போது நான் கண்ட
புதுமை என் சொல்வனடி அம்மா
புதுமை என் சொல்வனடி.

#4929
ஏறும் போது அங்கே எதிர்ந்த வகை சொல
என்னளவு அல்லவடி அம்மா
என்னளவு அல்லவடி.

#4930
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
ஆக வந்தார்களடி அம்மா
ஆக வந்தார்களடி.

#4931
வந்து மயக்க மயங்காமல் நான் அருள்
வல்லபம் பெற்றனடி அம்மா
வல்லபம் பெற்றனடி.

#4932
வல்லபத்தால் அந்த மா தம்பத்து ஏறி
மணி முடி கண்டேனடி அம்மா
மணி முடி கண்டேனடி.

#4933
மணி முடி மேல் ஓர் கொடு முடி நின்றது
மற்றது கண்டேனடி அம்மா
மற்றது கண்டேனடி.

#4934
கொடு முடி மேல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்
கோயில் இருந்ததடி அம்மா
கோயில் இருந்ததடி.

#4935
கோயிலைக் கண்டு அங்கே கோபுர வாயிலில்
கூசாது சென்றனடி அம்மா
கூசாது சென்றனடி.

#4936
கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
கோடி பல் கோடியடி அம்மா
கோடி பல் கோடியடி.

#4937
ஆங்கு அவர் வண்ணம் வெள் வண்ணம் செவ் வண்ணம் முன்
ஐ வண்ணம் ஆகுமடி அம்மா
ஐ வண்ணம் ஆகுமடி.

#4938
அங்கு அவர் எல்லாம் இங்கு ஆர் இவர் என்னவும்
அப்பாலே சென்றனடி அம்மா
அப்பாலே சென்றனடி.

#4939
அப்பாலே சென்றேன் அங்கு ஓர் திரு_வாயிலில்
ஐவர் இருந்தாரடி அம்மா
ஐவர் இருந்தாரடி.

#4940
மற்றவர் நின்று வழி காட்ட மேல் ஓர்
மணி வாயில் உற்றேனடி அம்மா
மணி வாயில் உற்றேனடி.

#4941
எண்ணும் அ வாயிலில் பெண்ணோடு ஆணாக
இருவர் இருந்தாரடி அம்மா
இருவர் இருந்தாரடி.

#4942
அங்கு அவர் காட்ட அணுக்கத் திரு_வாயில்
அன்பொடு கண்டேனடி அம்மா
அன்பொடு கண்டேனடி.

#4943
அத் திரு_வாயிலில் ஆனந்தவல்லி என்
அம்மை இருந்தாளடி அம்மா
அம்மை இருந்தாளடி.

#4944
அம்மையைக் கண்டேன் அவள் அருள் கொண்டேன்
அமுதமும் உண்டேனடி அம்மா
அமுதமும் உண்டேனடி.

#4945
தாங்கும் அவள் அருளாலே நடராஜர்
சந்நிதி கண்டேனடி அம்மா
சந்நிதி கண்டேனடி.

#4946
சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறு அது
சாமி அறிவாரடி அம்மா
சாமி அறிவாரடி.

@110. அருட்காட்சி

#4947.
வானத்தின் மீது மயில் ஆடக் கண்டேன்
மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி
மயில் குயில் ஆச்சுதடி.

#4948
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்று ஆடும்
வள்ளலைக் கண்டேனடி அக்கச்சி
வள்ளலைக் கண்டேனடி.

#4949
சாதி சமயச் சழக்கை விட்டேன் அருள்
சோதியைக் கண்டேனடி அக்கச்சி
சோதியைக் கண்டேனடி.

#4950
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்று ஆடும்
ஐயரைக் கண்டேனடி அக்கச்சி
ஐயரைக் கண்டேனடி.

@111. பந்தாடல்

#4951.
ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து

#4952.
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன்
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய்த் திசை நோக்கினேன் சீர்த் திகழ் சித்தி
ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4953
இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவாப் பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன்
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு
நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில்
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4954
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவாப் பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன்
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கி என்னோடே சுத்த சன்மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4955
சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன் உத்தரம் எனும் ஓர்
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான்
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4956
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்கச் சோதி என்று ஓதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4957
வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்று இந்த உலகோ ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4958
சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத் தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4959
துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச் சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக்கொண்டேன் இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4960
ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகு புளிச் சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும்
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4961
துதி செயும் முத்தரும் சித்தரும் காணச் சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதி செயும் சித்திகள் பற்பலவாகப் பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

#4962
பூவாமலே நிதம் காய்த்த இடத்தும்
பூ ஆர் மலர் கொண்டு பந்து ஆடாநின்றேன்
சாவா_வரம் தந்து வாழ்வாயோ பந்தே
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.

@112. மெய்யருள் வியப்பு

#4963.
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ.

#4964.
தனக்கு நிகர் இங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்று அதே
தாவிப் போகப்போக நூலின் தரத்தில் நின்றதே
கனக்கத் திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே
கலக்கம் நீக்கித் தூக்கிவைத்தாய் நிலை பொருந்தவே.

#4965
இங்கு ஓர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே
ஏறிப் போகப்போக நூலின் இழை போல் நுணுகவே
அங்கே திகைத்து நடுங்கும் போது என் நடுக்கம் நீக்கியே
அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே.

#4966
இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே
யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே
விரவில் தனித்து அங்கு என்னை ஒரு கல் மேட்டில் ஏற்றியே
விண்ணில் உயர்ந்த மாடத்து இருக்க விதித்தாய் போற்றியே.

#4967
மேலைப் பால் சிவகங்கை என்னும் ஓர் தீர்த்தம்-தன்னையே
மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னையே
ஏலத் துகிலும் உடம்பும் நனையாது எடுத்ததே ஒன்றோ
எடுத்து என் கரத்தில் பொன் பூண் அணிந்த இறைவன் நீ அன்றோ.

#4968
என்னது உடலும் உயிரும் பொருளும் நின்னது அல்லவோ
எந்தாய் இதனைப் பெறுக என நான் இன்று சொல்லவோ
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே.

#4969
அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லையே
அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே
எப்பாலவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லையே
எனக்கும் நின் மேல் அன்றி உலகில் இச்சை இல்லையே.

#4970
அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே
அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே
விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே
மேவிப் பிடித்துக்கொள்ளும்-தோறும் உவகை ஆளுதே.

#4971
தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே
தகும் ஐந்தொழிலும் வேண்டும்-தோறும் தருதல் வல்லையே
வினவும் எனக்கு என் உயிரைப் பார்க்க மிகவும் நல்லையே
மிகவும் நான் செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லையே.

#4972
என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகுதே
என்னை விழுங்கி எங்கும் இன்ப_வெள்ளம் பெருகுதே
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்குதே
உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே.

#4973
உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே
உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே
அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற்றே
அன்போர் அணுவும் இல்லா எனக்கு இங்கு அருளல் ஆயிற்றே.

#4974
நினைக்க நினைக்கத் தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே
நின்-பால் அன்றிப் பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே
எனைத் துன்பு ஒழித்து ஆட்கொண்ட நின்னை அன்னை என்பனோ
எந்தாய் அன்பு_இலேன் நின் அடிக்கு முன்னை அன்பனோ.

#4975
உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ
உன்-பால் அன்றிப் பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ
என்னைக் கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ
எந்தாய் நின்னைக் கொடுக்க என்-பால் இன்று வருதியோ.

#4976
நெடுநாள் முயன்றும் காண்டற்கு அரிய நிலையைக் காட்டியே
நிறைந்து என் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டியே
நடு நாடிய நின் அருளுக்கு என் மேல் என்ன நாட்டமோ
நாய்க்குத் தவிசு இட்டனை நின்றனக்கு இங்கு இது ஓர் ஆட்டமோ.

#4977
நாகாதிபனும் அயனும் மாலும் நறுமுறு என்னவே
ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்னவே
சாகாக் கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவையே
சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே.

#4978
யாது கருதி என்னை ஆண்டது ஐய ஐயவோ
யான் உன் அடிப் பொன் துணைகட்கு வந்து தொழும்புசெய்யவோ
ஓது கடவுள் கூட்டம் அனைத்தும் அடிமை அல்லவோ
உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்லவோ.

#4979
தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கினேனையே
தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே
புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்கவே
புகுவித்தாயை என் வாய் துடிப்பது ஏத்தித் துதிக்கவே.

#4980
தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தையே
தனியே நின்னை நினைக்கக் கிளர்வது எனது சிந்தையே
நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக்கொடுத்த பண்பனே
நான் செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்பனே.

#4981
ஏறா நிலையில் விரைந்துவிரைந்து இங்கு என்னை ஏற்றியே
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே
மாறாக் கருணை என் மேல் வைக்க வந்தது என்னையோ
மதி_இலேன் நின் அருட்குச் செய்த தவம்-தான் முன்னையோ.

#4982
இடமும் வலமும் இது என்று அறியாது இருந்த என்னையே
எல்லாம் அறிவித்து அருள்செய் கருணை என்னை என்னையே
நடமும் நடம் செய் இடமும் எனக்கு நன்று காட்டியே
நாயினேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே.

#4983
விதுவும் கதிரும் இது என்று அறியும் விளக்கம் இன்றியே
விழித்து மயங்கினேன்-பால் பெரிய கருணை ஒன்றியே
அதுவும் அதுவும் இது என்று எனக்குள் அறியக் காட்டியே
அடியனேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே.

#4984
இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணியே
இரவும்_பகலும் மயங்கினேனை இனிது நண்ணியே
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டியே
அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே.

#4985
அண்டத்து அகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லுதே
அவனே எல்லாம்_வல்லான் என்று மறைகள் சொல்லுதே
பிண்டத்து அகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதியே
பேயேன் அளவில் விளங்குகின்றது என்ன நீதியே.

#4986
கருணாநிதி நின்றன்னைக் காணக் கண்கள் துடிக்குதே
காண்போம் என்று நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே
அருள் நாடகம் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே.

#4987
அருள் ஆர் சோதி என்னுள் விளங்க அளித்த காலத்தே
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்தது இந்த ஞாலத்தே
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னையோ
பொன் என்று ஐய மதிப்பது உதவாத் துரும்பு-தன்னையோ.

#4988
எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருக்கும் தன்மையே
இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மையே
தனக்கு உள்ளது தன் தலைவர்க்கு உளது என்று அறிஞர் சொல்வதே
சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே.

#4989
கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்ததே
கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே
தருணத்து உண்டு மகிழ்வுற்றேன் அ மகிழ்ச்சி சொல்லவே
தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்தது அல்லவே.

#4990
என் ஆர்_உயிர்க்குத் துணைவ நின்னை நான் துதிக்கவே
என்ன தவம் செய்தேன் முன் உலகு_உளோர் மதிக்கவே
பொன் ஆர் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே
புலையனேனுக்கு அளித்த கருணை மிகவும் பெரியதே.

#4991
என் கண்மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காணவே
என்ன தவம் செய்தேன் முன் அயனும் அரியும் நாணவே
புன்கண் ஒழித்துத் தெள் ஆர் அமுதம் புகட்டி என்னையே
பொருளாய் எண்ணி வளர்க்கின்றாய் நீ எனக்கு ஓர் அன்னையே.

#4992
அறிவு_இலேன் செய் குற்றம் அனைத்தும் பொறுத்தது அன்றியே
அமுதும் அளித்தாய் யார் செய்வார்கள் இந்த நன்றியே
செறிவு இலாத பொறியும் மனமும் செறிந்து நிற்கவே
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே.

#4993
ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலையே
யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே
திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே
சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையுமே.

#4994
அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே
ஆசைப்பட்டது அறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டியே
பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம்-தன்னையே
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே.

#4995
வேதாகமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன்றாகவே
விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போகவே
பூதாதிகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்றுமே
பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்றுமே.

#4996
வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய் மணக்குதே
வஞ்ச வினைகள் எனை விட்டு ஓடித் தலை வணக்குதே
எள்ளாது உனது புகழைக் கேட்கச் செவி நயக்குதே
எந்தாய் தயவை எண்ணும்-தோறும் உளம் வியக்குதே.

#4997
இறைவா நின்னைக் கனவிலேனும் யான் மறப்பனோ
எந்தாய் உலகத்தவர்கள் போல் நான் இனி இறப்பனோ
மறை வாசகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியிலே
வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியிலே.

#4998
தலைவா எனக்குக் கருணை அமுதம் தர இ தலத்திலே
தவம் செய்தேன் அத் தவமும் உன்றன் அருள் வலத்திலே
அலை வாரிதியில் துரும்பு போல அயனும் மாலுமே
அலைய எனக்கே அளிக்கின்றாய் நீ மேலும் மேலுமே.

#4999
உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்னவே
உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே
சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம்-அது ஆயிற்றே.

#5000
மயங்கும்-தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கியே
மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே
உயங்கும் மலங்கள் ஐந்தும் பசை அற்று ஒழிந்து வெந்ததே
உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே.

#5001
எனக்கும் நின்னைப் போல நுதல் கண் ஈந்து மதனையே
எரிப்பித்தாய் பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனையே
சினக்கும் கூற்றை உதைப்பித்து ஒழித்துச் சிதைவு மாற்றியே
தேவர் கற்பம் பலவும் காணச்செய்தாய் போற்றியே.

#5002
கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்றுமே
கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே
உள்ளது உரைக்கின்றேன் நின் அடி மேல் ஆணை முன்னையே
உள்ளே விளங்கிக் காண்கின்றாய்க்கு இங்கு ஒளிப்பது என்னையே.

#5003
என்னை அடிமைகொண்டாய் நானும் நினக்கு நல்லனோ
எல்லாம்_வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்லனோ
முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டியே
மூவர்க்கு அரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே.

#5004
சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண் களிக்கவே
துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிமளிக்கவே
ஓதி உணர்தற்கு அரிய பெரிய உணர்வை நண்ணியே
ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் நின் அருளை எண்ணியே.

#5005
ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே
ஏற்றிக் களிக்கவைத்தாய் அதன் மேல் இலங்கு குன்றிலே
வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே
மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப் பொன் காசுமே.

#5006
இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மையே
என்-பால் செய்யவைத்தாய் இது நின் அருளின் தன்மையே
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கியே
அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமையாக்கியே.

#5007
அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதியே
அரசே எனக்குள் விளங்கும் ஆதியாம் அனாதியே
ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணையாளனே
ஒன்றாய் ஒன்றில் உபயம் ஆகி ஒளிரும் தாளனே.

#5008
பாலும் தேனும் கலந்தது என்ன என்னுள் இனிக்கவே
பரம ஞான அமுதம் அளிக்கின்றாய் தனிக்கவே
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவது என்பரே
இன்று நோக்கி ஓர_வாரன் என்பர் அன்பரே.

#5009
ஐயா நான் செய் பிழைகள் ஏழு கடலில் பெரியதே
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக்கு அரியது அரியதே
மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே
வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே.

#5010
பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்டமும்
போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும்
நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமுமே
நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமுமே.

#5011
எட்டும் இரண்டும் இது என்று எனக்குச் சுட்டிக்காட்டியே
எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக்கூட்டியே
துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடர் உள் ஏற்றியே
தூண்டாது என்றும் விளங்கவைத்தாய் உண்மை சாற்றியே.

#5012
அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவன் ஆகியே
அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகியே
பொருளாய் எனையும் உளங்கொண்டு அளித்த புனித நாதனே
போற்று நாத முடிவில் நடம் செய் கமல பாதனே.

#5013
உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்தனே
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே
மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரமமே
மன்றில் பரமானந்த நடம் செய்கின்ற பிரமமே.

#5014
அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ளமே
அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ளமே
பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே
புனித வானத்துள்ளே விளங்கும் புரண ஞானமே.

#5015
சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்பு-அது என்னவே
சாற்றப் புகினும் சாலார் அருளின் பெருமை உன்னவே
அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியிலே
அனந்தத்து ஒன்று என்று உரைத்தும் சாலா நின் பொன் அடியிலே.

#5016
அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவரே
ஆறாறு அகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவரே
இப் பார் ஆதி பூதம் அடங்கும் காலும் நின்னையே
ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐயம் என்னையே.

#5017
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டியே
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே
முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னையே.

#5018
எண்ணும்-தோறும் எண்ணும்-தோறும் என்னுள் இனிக்குதே
இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்குதே
கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றிப் பிறர்-பால் செல்லுமோ
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ.

#5019
விந்தோநாத வெளியும் கடந்து மேலும் நீளுதே
மேலை வெளியும் கடந்து உன் அடியர் ஆணை ஆளுதே
அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லையே
அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லையே.

#5020
இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனி நான் விடுவனோ
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ
குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற்றே
கோவே உன்றன் அருள் சிற்சோதி என்னது ஆயிற்றே.

#5021
காய்க்கும் பருவம்-தன்னைப் பழுத்த பருவம் ஆக்கியே
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலைத் தூக்கியே
நாய்க்குத் தவிசு இட்டு ஒரு பொன் முடியும் நன்று சூட்டியே
நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டியே.

#5022
கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலைத் தூக்கியே
புல்லை முடிக்கும் அணிகின்றாய் என் புன் சொல்_மாலையே
புனைந்து என் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின் பொன் காலையே.

#5023
சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே
தனித்து உன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொன் பாதமே
உலக விடயக் காட்டில் செல்லாது எனது போதமே.

#5024
அருளும் பொருளும் பெற்றேன் அடியன் ஆகி நானுமே
அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே
இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள் சிற்சோதியே
என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்ற தாதியே.

#5025
காம_கடலைக் கடந்து வெகுளி_கடலை நீந்தினேன்
கடிய மயக்க_கடலைத் தாண்டி அடியை ஏந்தினேன்
சேமப் பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன்
சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன்.

#5026
தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம்-அது ஆயிற்றே
சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற்றே
ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன்
எந்தாய் கருணை அமுது உண்டு இன்பப் பொருப்பில் ஓங்கினேன்.

#5027
உறவு பகை என்று இரண்டும் எனக்கு இங்கு ஒன்று-அது ஆயிற்றே
ஒன்று என்று இரண்டு என்று உளறும் பேதம் ஓடிப் போயிற்றே
மறவு நினைவு என்று என்னை வலித்த வலிப்பு நீங்கினேன்
மன்றில் பரமானந்த நடம் கண்டு இன்பம் ஓங்கினேன்.

#5028
உன்னைக் கண்டுகொண்டேன் கண்டவுடன் இங்கு என்னையே
உலகம் எல்லாம் கண்டுகொண்ட உவப்பு இது என் ஐயே
என்னைக் கண்டுகொண்ட காலத்து இறைவ நின்னையே
யாரும் கண்டுகொண்டார் இல்லை ஆங்கு அது என் ஐயே.

#5029
மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயினேன்
வள்ளல் கருணை அமுது உண்டு இன்ப நாட்டான் ஆயினேன்
குலத்தில் குறியில் குணத்தில் பெருமைகொள்ளா நாயினேன்
கோது_இல் அமுது உண்டு எல்லா நலமும் உள்ளான் ஆயினேன்.

#5030
கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயினேன்
கருணை அமுது உண்டு இன்ப நாட்டுக்கு உடையன் ஆயினேன்
விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயினேன்
விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயினேன்.

#5031
அயனும் மாலும் தேடித்தேடி அலந்து போயினார்
அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார்
மயனும் கருத மாட்டாத் தவள மாடத்து உச்சியே
வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே.

#5032
வல்லாய் உனது கருணை அமுது என் வாய்க்கு வந்ததே
மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்ததே
எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே
இறவாது என்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்ததே.

#5033
சிற்றம்பலத்தில் நடம் கண்டவர் கால் பொடி கொள் புல்-அதே
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய்ய வல்லதே
பற்று அம்பலத்தில் வைத்தார்-தம்மைப் பணியும் பத்தரே
பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே.

#5034
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய் என்று என்னையே
செல்வப் பிள்ளை ஆக்கி வளர்க்கின்றாய் இது என் ஐயே
தெருட்டித் திரு_பொன்_பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டியே
திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே.

#5035
அடியன் ஆக்கிப் பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே
அடிகள் ஆக்கிக்கொண்டாய் என்னை அவலம் நீக்கியே
படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே
பதியும் ஓர_வாரன் என்பர் பரிவு தேக்கியே.

#5036
அண்ணா எனையும் பொருள் என்று எண்ணி இரவும்_பகலுமே
அகத்தும் புறத்தும் திரிகின்றாய் இ உலகு என் புகலுமே
தண் ஆர் அமுதம் மிகவும் எனக்குத் தந்தது அன்றியே
தனியே இன்னும் தருகின்றாய் என் அறிவின் ஒன்றியே.

#5037
வேதாகமத்தின் அடியும் நடுவும் முடியும் மற்றுமே
வெட்டவெளி-அது ஆகி விளங்கக் கண்டேன் முற்றுமே
நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்டதே
நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்டதே.

#5038
புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன்
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன்
தழுவற்கு அரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன்
தனித்து அப்பால் ஓர் தவள மாடத்து இருந்து தேறினேன்.

#5039
கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லையே
கனி-அது ஆக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத்து எல்லையே
உடையாய் துரியத் தலத்தின் மேல் நின்று ஓங்கும் தலத்திலே
உன்-பால் இருக்கவைத்தாய் என்னை உவந்து வலத்திலே.

#5040
அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையுமே
எறிந்து அப் பாடு முழுதும் பெரிய இன்பம் ஆயிற்றே
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்தம் ஆயிற்றே.

#5041
பனிரண்டு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே
துனியாது அந்தப் பாடு முழுதும் சுகம்-அது ஆயிற்றே
துரையே நின் மெய் அருள் இங்கு எனக்குச் சொந்தம் ஆயிற்றே.

#5042
ஈர்_ஆறு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே
ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்பம் ஆயிற்றே
இறைவா நின் மெய் அருள் இங்கு எனக்குச் சொந்தம் ஆயிற்றே.

#5043
பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாயரே
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே
நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயிலோ
நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக்காயிலோ.

#5044
சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வமே
சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே
என்னை அவத்தைக் கடல்-நின்று இங்ஙன் எடுத்த தெய்வமே
எல்லா நலமும் தரும் இன் அமுதம் கொடுத்த தெய்வமே.

#5045
அச்சம் தீர்த்து இங்கு என்னை ஆட்கொண்டு அருளும் அமுதனே
அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்து உள் அமர்ந்த அமுதனே
இச்சை யாவும் முடித்துக் கொடுத்து உள் இலங்கும் குரவனே
என்றும் இறவாக் கல்வி அடியேற்கு ஈய்ந்த குரவனே.

#5046
உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னையே
ஓதாது உணர உணரும் உணர்வை உதவும் அன்னையே
தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச்செய்த அப்பனே
செல்வப் பிள்ளை ஆக்கி என் உள் சேர்ந்த அப்பனே.

#5047
இரவும்_பகலும் என்னைக் காத்து உள் இருக்கும் இறைவனே
எல்லா உலகும் புகழ எனை மேல் ஏற்றும் இறைவனே
கரவு நினையாது எனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே
களித்து என்றனையும் சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவனே.

#5048
சற்றும் வருந்தப் பாராது என்னைத் தாங்கும் நேயனே
தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே
முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேயனே
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே.

#5049
நேயா நின்னை நினைக்கநினைக்க நெஞ்சம் களிக்குதே
நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர் துளிக்குதே
ஓயாது உனது பெருமை நினைக்க உவகை நீடுதே
உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடித் தேடுதே.

#5050
பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடுதே
பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே
என்னே பிறர்-தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்புதே
எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்புதே.

#5051
மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவரே
மனிதர் கண்ணில் பட்ட புல்லும் மரமும் தேவரே
அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவரே
அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவரே.

#5052
வாழ்வே நினது நடம் கண்டவரைச் சுத்தர் என்பனோ
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்பனோ
ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்பனோ.

#5053
சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மையே
தேவர் கண்டுகொண்டு வணங்குகின்றார் இம்மையே
தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்தரே
தகும் ஐந்தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்தரே.

#5054
ஐவராலும் நின்னை அறிதற்கு அருமை அருமையே
ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமையே
பொய் வராத வாய் கொண்டு உன்னைப் போற்றும் அன்பரே
பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்பரே.

#5055
என்னைக் காட்டி என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே
பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடியே
புந்தி களிக்கவைத்தாய் அழியாது என்னை நாடியே.

#5056
அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே
அறிந்தேன் அங்கைக் கனி போல் அவற்றில் உள்ள செய்தியே
பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே
பேசிப்பேசி வியக்கின்றேன் இப் பிறவி-தன்னையே.

#5057
சிற்றம்பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டியே
சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தித் திறத்தைக் காட்டியே
குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே
கோவே நீயும் என்னுள் கலந்துகொண்டாய் நாட்டியே.

#5058
சுத்த நிலையின் நடு நின்று எங்கும் தோன்றும் சோதியே
துரிய வெளியைக் கடந்து அப்பாலும் துலங்கும் சோதியே
சித்தர் உளத்தில் சுடர்செய்து ஓங்கும் தெய்வச் சோதியே
சிற்றம்பலத்தில் நடம் செய்து எனக்குள் சிறந்த சோதியே.

#5059
அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதியே
அதன் பின் பிள்ளை ஆக்கி அருள் இங்கு அளித்த சோதியே
நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே
நானும் நீயும் ஒன்று என்று உரைத்து நல்கு சோதியே.

#5060
நீயே வலிந்து இங்கு என்னை ஆண்ட நீதிச் சோதியே
நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதியே
தாயே என வந்து என்னைக் காத்த தருமச் சோதியே
தன்மை பிறரால் அறிதற்கு அரிய தலைமைச் சோதியே.

#5061
சாகா_கல்வி எனக்குப் பயிற்றித் தந்த சோதியே
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே
ஏகாக்கரப் பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே
எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே.

#5062
சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழியே
துரிய வெளியின் நடு நின்று ஓங்கும் சோதி வாழியே
சூது இலா மெய்ச் சிற்றம்பலத்துச் சோதி வெல்கவே
துலங்கப் பொன்_அம்பலத்தில் ஆடும் சோதி வெல்கவே.

#5063
சுத்த சிவ சன்மார்க்க நீதிச் சோதி போற்றியே
சுக வாழ்வு அளித்த சிற்றம்பலத்துச் சோதி போற்றியே
சுத்த சுடர்ப் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே

@113 அம்பலத்தரசே

#5064.
சிவசிவ கஜ முக கண நாதா
சிவ கண வந்தித குண நீதா.

#5065
சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண் முக நாதா

#5066
அம்பலத்து அரசே அரு_மருந்தே
ஆனந்தத் தேனே அருள் விருந்தே.

#5067
பொது நடத்து அரசே புண்ணியனே
புலவர் எலாம் புகழ் கண்ணியனே.

#5068
மலை தரு மகளே மட மயிலே
மதி முக அமுதே இளம் குயிலே.

#5069
ஆனந்தக் கொடியே இளம்_பிடியே
அற்புதத் தேனே மலை மானே.

#5070
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவ சுந்தர குஞ்சித நடராஜா

#5071
படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா.

#5072
அரி பிரமாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா.

#5073
அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா.

#5074
அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.

#5075
தந்திர மந்திர யந்திர பாதா
சங்கர சங்கர சங்கர நாதா.

#5076
கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர.

#5077
சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண.

#5078
இக்கரை கடந்திடில் அக்கரையே
இருப்பது சிதம்பர சர்க்கரையே.

#5079
என் உயிர் உடம்பொடு சித்தம்-அதே
இனிப்பது நடராஜ புத்தமுதே.

#5080
ஐயர் திரு_சபை ஆடகமே
ஆடுதல் ஆனந்த நாடகமே.

#5081
உத்தர ஞான சிதம்பரமே
சித்தி எலாம் தரும் அம்பரமே.

#5082
அம்பலவா சிவ மா தேவா
வம்பு அல வா இங்கு வாவாவா.

#5083
நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே
நல்ல எலாம் செய வல்லவனே.

#5084
ஆனந்த நாடகம் கண்டோமே பர
மானந்த போனகம் கொண்டோமே.

#5085
சகள உபகள நிட்கள நாதா
உகள சததள மங்கள பாதா.

#5086
சந்ததமும் சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம்.

#5087
சங்கர சிவசிவ மா தேவா
எங்களை ஆட்கொள வாவாவா.

#5088
அரகர சிவசிவ மா தேவா
அருள் அமுதம் தர வாவாவா.

#5089
நடன சிகாமணி நவ மணியே
திடன் அக மா மணி சிவ மணியே.

#5090
நடமிடும் அம்பல நல் மணியே
புடமிடு செம்பு அல பொன் மணியே.

#5091
உவட்டாது சித்திக்கும் உள் அமுதே
தெவிட்டாது தித்திக்கும் தெள் அமுதே.

#5092
நடராஜ வள்ளலை நாடுதலே
நம் தொழிலாம் விளையாடுதலே.

#5093
அருள் பொது நடமிடு தாண்டவனே
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவனே.

#5094
நடராஜ மாணிக்கம் ஒன்று அதுவே
நண்ணுதல் ஆணி_பொன் மன்றதுவே.

#5095
நடராஜ பலம் அது நம் பலமே
நடமாடுவது திரு_அம்பலமே.

#5096
நடராஜர் பாட்டே நறும் பாட்டு
ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு.

#5097
சிதம்பரப் பாட்டே திரு_பாட்டு
ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெரு_பாட்டு.

#5098
அம்பலப் பாட்டே அருள் பாட்டு
அல்லாத பாட்டு எல்லாம் மருள் பாட்டு.

#5099
அம்பல_வாணனை நாடினனே
அவன் அடியாரொடும் கூடினனே.

#5100
தம்பதமாம் புகழ் பாடினனே
தந்தன என்று கூத்தாடினனே.

#5101
நான் சொன்ன பாடலும் கேட்டாரே
ஞான சிதம்பர நாட்டாரே.

#5102
இனித் துயர் பட_மாட்டேன் விட்டேனே
என் குரு மேல் ஆணையிட்டேனே.

#5103
இனிப் பாடு பட_மாட்டேன் விட்டேனே
என் அப்பன் மேல் ஆணை இட்டேனே.

#5104
சன்மார்க்கம் நல் மார்க்கம் நல் மார்க்கம்
சக மார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.

#5105
நாதாந்த நாட்டுக்கு நாயகரே
நடராஜரே சபாநாயகரே.

#5106
நான் சொல்லும் இது கேளீர் சத்தியமே
நடராஜ எனில் வரும் நித்தியமே.

#5107
நல்லோர் எல்லார்க்கும் சபாபதியே
நல் வரம் ஈயும் தயாநிதியே.

#5108
நடராஜர்-தம் நடம் நல் நடமே
நடம் புரிகின்றதும் என்னிடமே.

#5109
சிவகாமவல்லிக்கு மாப்பிள்ளையே
திருவாளன் நான் அவன் சீர்ப் பிள்ளையே.

#5110
சிவகாமவல்லியைச் சேர்ந்தவனே
சித்து எல்லாம் செய்திடத் தேர்ந்தவனே.

#5111
இறவா_வரம் தரு நல் சபையே
என மறை புகழ்வது சிற்சபையே.

#5112
என் இரு கண்ணுள் இருந்தவனே
இறவாது அருளும் மருந்தவனே.

#5113
சிற்சபை அப்பனை உற்றேனே
சித்தி எலாம் செயப்பெற்றேனே.

#5114
அம்பல_வாணர்-தம் அடியவரே
அருள் அரசாள் மணி முடியவரே.

#5115
அருள்_பெரும்_சோதியைக் கண்டேனே
ஆனந்தத் தெள் அமுது உண்டேனே.

#5116
இருள் பெரும் மாயையை விண்டேனே
எல்லாம் செய் சித்தியைக் கொண்டேனே.

#5117
கருணாநிதியே குண நிதியே
கதி மா நிதியே கலா நிதியே.

#5118
தருணாபதியே சிவபதியே
தனி மா பதியே சபாபதியே.

#5119
கருணாநிதியே சபாபதியே
கதி மா நிதியே பசுபதியே.

#5120
சபாபதி பாதம் தபோப்ரசாதம்
தயாநிதி போதம் சதோதய வேதம்.

#5121
கருணாம்பர வரகர சிவபவபவ
அருணாம்பரதர ஹரஹர சிவசிவ.

#5122
கனகாகரபுரஹர சிரகரதர
கருணாகர பரசுரவர ஹரஹர.

#5123
கனக_சபாபதி பசுபதி நவபதி
அனக உமாபதி அதிபதி சிவபதி.

#5124
வேதாந்த பராம்பர ஜயஜய
நாதாந்த நடாம்பர ஜயஜய.

#5125
ஏகாந்த சர்வேச சமோதம
யோகாந்த நடேச நமோநம.

#5126
ஆதாம்பர ஆடக அதிசய
பாதாம்புஜ நாடக ஜயஜய.

#5127
போதாந்த புரேச சிவாகம
நாதாந்த நடேச நமோநம.

#5128
ஜால கோல கனகாம்பர சாயக
காலகால வனகாம்பர நாயக.

#5129
நாத பால சுலோசன வர்த்தன
ஜாத ஜால விமோசன நிர்த்தன.

#5130
சத பரி சத உப சத மத வித பவ
சிதபரி கதபத சிவசிவ சிவசிவ.

#5131
அரகர வர சுப கரகர பவபவ
சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ.

#5132
உபல சிரதல சுப கண வங்கண
சுபல கரதல கண பண கங்கண.

#5133
அபய வரத கரதல புரி காரண
உபய பரத பத பர பரிபூரண.

#5134
அகர உகர சுபகர வர சினகர
தகர வகர நவ புர சிர தினகர.

#5135
வகர சிகர தினகர சசிகர புர
மகர அகர வர புர ஹர ஹரஹர.

#5136
பரம மந்திர சகளாகன கரணா
படன தந்திர நிகமாகம சரணா.

#5137
அனந்த கோடி குணகர கர ஜொலிதா
அகண்ட வேத சிரகர தர பலிதா.

#5138
பரிபூரண ஞான சிதம்பர
பதி காரண நாத பரம்பர.

#5139
சிவ ஞான பதாடக நாடக
சிவ போத பரோகள கூடக.

#5140
சகல லோக பரகாரக வாரக
சபள யோக சர பூரக தாரக.

#5141
சத்வ போதக தாரண தன்மய
சத்ய வேதக பூரண சின்மய.

#5142
வர கேசாந்த மகோதய காரிய
பர பாசாந்த சுகோதய சூரிய.

#5143
பளித தீபக சோபித பாதா
லளித ரூபக ஸ்தாபித நாதா.

#5144
அனிர்த கோப கருணாம்பக நாதா
அமிர்த ரூப தருணாம்புஜ பாதா.

#5145
அம்போருக பத அரகர கங்கர
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர.

#5146
சிதம் பிரகாசா பரம் பிரகாசா
சிதம்பரேசா சுயம் பிரகாசா.

#5147
அருள் பிரகாசம் பரப் பிரகாசம்
அகப் பிரகாசம் சிவப் பிரகாசம்.

#5148
நடப் பிரகாசம் தவப் பிரகாசம்
நவப் பிரகாசம் சிவப் பிரகாசம்.

#5149
நாத பரம்பரனே பர நாத சிதம்பரனே
நாத திகம்பரனே தச நாத சுதந்தரனே.

#5150
ஞான நடத்தவனே பர ஞானி இடத்தவனே
ஞான வரத்தவனே சிவஞான புரத்தவனே.

#5151
ஞான சபாபதியே மறை நாடு சதாகதியே
தீன தயாநிதியே பர தேவி உமாபதியே.

#5152
புத்தம் தரும் போதா வித்தம் தரும் தாதா
நித்தம் தரும் பாதா சித்தம் திரும்பாதா.

#5153
நடு நாடி நடு நாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே.

#5154
நடுநாடியொடு கூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே.

#5155
நடு நாடி இடை நாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே.

@114. சம்போ சங்கர

#5156.
தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு.

#5157
சந்தம் இயன்று அந்தணர் நன்று சந்ததம் நின்று வந்தனம் என்று
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு.

#5158
நனம் தலை வீதி நடந்திடு சாதி நலம் கொளும் ஆதி நடம் புரி நீதி
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி.

#5159
நகப் பெரும் சோதி சுகப் பெரும் சோதி நவப் பெரும் சோதி சிவப் பெரும் சோதி
அகப் பெரும் சோதி நடப் பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி.

#5160.
உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவப் பெருவாதி
அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி.

#5161
ஓத அடங்காது மடங்காது தொடங்காது ஓகை ஒடுங்காது தடுங்காது நடுங்காது
சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி.

#5162
ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது
சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி.

#5163
அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி
மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி.

#5164
அமல சபாபதி அபய சபாபதி அமுத சபாபதி அகில சபாபதி
நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி.

#5165
பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே
திரு_நடனம் பர குரு நடமே சிவ நடம் அம்பர நவ நடமே.

#5166
அம்பலத்து ஒரு நடம் உரு நடமே அரு நடம் ஒரு நடம் திரு_நடமே
எம் பலத்து ஒரு நடம் பெரு நடமே இதன் பரத்திடு நடம் குரு நடமே.

#5167
அஞ்சோடு அஞ்சு அவை ஏலாதே அங்கோடு இங்கு எனல் ஆகாதே
அந்தோ வெம் துயர் சேராதே அஞ்சோகம்சுகம் ஓவாதே
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே
சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா.

#5168
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத
என்றோடு இந்தனம் நன்றாம் அங்கண எம் கோ மங்கள எஞ்சா நெஞ்சக
சந்தேகம் கெட நந்தா மந்திர சந்தோடம் பெற வந்தாள் அந்தண
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

#5169
நஞ்சோ என்றிடு நம் கோபம் கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி
தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

#5170
பொது நிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொது நலம் உடையது பொது நடமிடுவது
அது பரம் அது பதி அது பொருள் அது சிவம் அரஅர அரஅர அரஅர அரஅர.

#5171
நவ நிலை தருவது நவ வடிவு உறுவது நவ வெளி நடுவது நவநவ நவம் அது
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.

#5172
சந்திர தர சிர சுந்தர சுர வர தந்திர நவ பத மந்திர புர நட
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ.

#5173
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர.

#5174
பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித
நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர.

#5175
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர.

#5176
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம்
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம்.

#5177
எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம்
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம்.

@115. சிவபோகம்

#5178.
போகம் சுக போகம் சிவ போகம் அது நித்தியம்
ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம்.

#5179
நல மங்கலம் உறும் அம்பல நடனம் அது நடனம்
பல நன்கு அருள் சிவ சங்கர படனம் அது படனம்.

#5180
சூது மன்னும் இந்தையே சூடல் என்ன விந்தையே
கோது விண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே.

#5181
அன்பு முந்து சிந்தையே அம்பலம் கொள் விந்தையே
இன்பம் என்பன் எந்தையே எந்தை தந்தை தந்தையே.

#5182
ஞான சித்திபுரத்தனே நாத சத்தி பரத்தனே
வானம் ஒத்த தரத்தனே வாத வித்தை வரத்தனே.

#5183
நீ என் அப்பன் அல்லவா நினக்கும் இன்னம் சொல்லவா
தாயின் மிக்க நல்லவா சர்வ சித்தி வல்லவா.

#5184
பலத்தில் தன் அம்பலத்தில் பொன்_அம்பலத்தில் துன்னும் நலத்தனே
பலத்தில் பன்னும் பரத்தில் துன்னும் பரத்தில் மன்னும் குலத்தனே.

#5185
ஆயவாய நேய ஞேய மாய ஞாயவாதியே
தூயவாய காய தேய தோய மேய ஜோதியே.

#5186
ஆதவாத வேத கீத வாதவாத வாதியே
சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே.

#5187
அங்க சங்க மங்கை பங்க ஆதி ஆதி ஆதியே
துங்க புங்க அங்க லிங்க ஜோதி ஜோதி ஜோதியே.

#5188
அத்த முத்த அத்தமுத்த ஆதி ஆதி ஆதியே
சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே.

#5189
அஞ்சல் அஞ்சல் என்று வந்து என் நெஞ்சு அமர்ந்த குழகனே
வஞ்ச நஞ்சம் உண்ட கண்ட மன்றுள் நின்ற அழகனே.

#5190
தொண்டர் கண்டுகண்டு மொண்டுகொண்டு உள் உண்ட இன்பனே
அண்டர் அண்டம் உண்ட விண்டு தொண்டு மண்டும் அன்பனே.

#5191
கந்த தொந்த பந்த சிந்து சிந்த வந்த காலமே
எந்தஎந்த சந்தம் முந்தும் அந்த வந்த கோலமே.

#5192
என்றும் என்றின் ஒன்று மன்றுள் நன்று நின்ற ஈசனே
ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்று அது என்ற தேசனே.

#5193
எட்ட எட்டி ஒட்ட ஒட்டும் இட்டது இட்ட கீர்த்தியே
அட்ட வட்டம் நட்டம் இட்ட சிட்ட வட்ட மூர்த்தியே.

#5194
சேர் இகார சார வார சீர் அகார ஊரனே
ஓர் உகார தேர தீர வார வார தூரனே.

#5195
வெய்ய நொய்ய நைய நைய மெய் புகன்ற துய்யனே
ஐயர் ஐய நையும் வையம் உய்ய நின்ற ஐயனே.

#5196
பாச நாச பாப நாச பாத தேச ஈசனே
வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே.

#5197
உரிய துரிய பெரிய வெளியில் ஒளியில் ஒளி செய் நடனனே
பிரிய அரிய பிரியம் உடைய பெரியர் இதய படனனே.

#5198
அகில புவன உயிர்கள் தழைய அபயம் உதவும் அமலனே
அயனும் அரியும் அரனும் மகிழ அருளும் நடன விமலனே.

#5199
அகர உகர மகர வகர அமுத சிகர சரணமே
அபர சபர அமன சமன அமல நிமல சரணமே.

#5200
தகர ககன நடன கடன சகள அகள சரணமே
சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே.

#5201
அனக வனஜ அமித அமிர்த அகல அகில சரணமே
அதுல அனத அசுத அசல அநில அனல சரணமே.

#5202
தனக கனக சபைய அபய சரத வரத சரணமே
சதுர சதர சகச சரித தருண சரண சரணமே.

#5203
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே
உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே.

#5204
இளகும் இதய_கமலம் அதனை இறைகொள் இறைவ சரணமே
இருமை ஒருமை நலமும் அருளும் இனிய சமுக சரணமே.

#5205
அடியும் நடுவும் முடியும் அறிய அரிய பெரிய சரணமே
அடியர் இதய வெளியில் நடனம்-அது செய் அதிப சரணமே.

#5206
ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே
உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே.

#5207
அறிவுள் அறியும் அறிவை அறிய அருளும் நிமல சரணமே
அவசமுறு மெய் அடியர் இதயம் அமரும் அமல சரணமே.

#5208
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே
எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே.

#5209
நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே
நினையும் எனையும் ஒருமை புரியும் நெறியில் நிறுவு சரணமே.

#5210
வனையும் மதுர அமுத உணவு மலிய உதவு சரணமே
மருவு சபையில் நடன வரத வருக வருக சரணமே.

#5211
நினைக்கில் நெஞ்சம் இனிக்கும் என்ற நிருத்த மன்றில் ஒருத்தனே
நினைக்கும் அன்பர் நிலைக்க நின்று பொருத்துகின்ற கருத்தனே.

#5212
மயங்கி நெஞ்சு கலங்கி நின்று மலங்கினேனை ஆண்டவா
வயங்கி நின்று துலங்கும் மன்றில் இலங்கு ஞான தாண்டவா.

#5213
களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே
களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே.

#5214
தடுத்த மலத்தைக் கெடுத்து நலத்தைக் கொடுத்த கருணைத் தந்தையே
தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே.

#5215
எச்ச நீட்டி விச்சை காட்டி இச்சையூட்டும் இன்பனே
அச்சம் ஓட்டி அச்சு நாட்டி வைச்சு உள் ஆட்டும் அன்பனே.

#5216
சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா.

#5217
வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா
வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா.

@116. அம்பலத்தமுதே

#5218.
நீடிய வேதம் தேடிய பாதம்
நேடிய கீதம் பாடிய பாதம்
ஆடிய போதம் கூடிய பாதம்
ஆடிய பாதம் ஆடிய பாதம்.

#5219
சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.

#5220
ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.

#5221
சஞ்சிதம் வீடும் நெஞ்சு இத பாதம்
தம் சிதம் ஆகும் சஞ்சித பாதம்
கொஞ்சு இதம் மேவும் ரஞ்சித பாதம்
குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.

#5222
எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
எண்ணியவாறே நண்ணிய பேறே
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
புண்ணியவானே புண்ணியவானே.

#5223
தொத்திய சீரே பொத்திய பேரே
துத்திய பாவே பத்திய நாவே
சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
சத்தியவானே சத்தியவானே.

#5224
எம் புலப் பகையே எம் புலத்து உறவே
எம் குலத் தவமே எம் குலச் சிவமே
அம்பினில் கனலே அந்தணர்க்கு இறையே
அம்பலத்து அரசே அம்பலத்து அரசே.

#5225
இன்பு உடைப் பொருளே இன் சுவைக் கனியே
எண்_குணச் சுடரே இந்து அகத்து ஒளியே
அன்பு உடைக் குருவே அம்புயற்கு இறையே
அம்பலத்து அமுதே அம்பலத்து அமுதே.

@117. திருநட மணியே

#5226.
பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே
நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே.

#5227
புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே
நரையாத வரமே நடியாத நடமே நடராஜ நிதியே நடராஜ நிதியே.

#5228
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே
நவ நீத மதியே நவ நாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே.

#5229
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே
நவ வார நடமே சுவகார புடமே நடராஜ பரமே நடராஜ பரமே.

#5230
துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே
நதி ஆர நிதியே அதிகார பதியே நடராஜ குருவே நடராஜ குருவே.

#5231
வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே
நயமான உரையே நடுவான வரையே நடராஜ துரையே நடராஜ துரையே.

#5232
பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே.

#5233
அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே.

#5234
தரு வளர் நிழலே நிழல் வளர் சுகமே தடம் வளர் புனலே புனல் வளர் நலனே
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே.

#5235
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே.

#5236
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே.

#5237
மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே.

#5238
இயல் கிளர் மறையே மறை கிளர் இசையே இசை கிளர் துதியே துதி கிளர் இறையே
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே.

#5239
புரை அறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே.

#5240
நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே.

@118. ஞான சபாபதியே

#5241.
வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே
நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

#5242
ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே
நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

#5243
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே
ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

#5244
ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே
நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

#5245
ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே
நாக நடோதயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

#5246
ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே
நாடக நாயகனே நான் அவன் ஆனவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

#5247
ஆரியனே சிவனே ஆரணனே பவனே ஆலயனே அரனே ஆதரனே சுரனே
நாரியனே வரனே நாடியனே பரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

#5248
ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே
நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

#5249
தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே
நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

#5250
ஆடிய நாடகனே ஆல் அமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே
நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

@119. விரைசேர் சடையாய்

#5251.
விரை சேர் சடையாய் விடையாய் உடையாய்
விகிர்தா விபவா விமலா அமலா
வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா
விம்ப சிதம்பரனே.

#5252
அரைசே குருவே அமுதே சிவமே
அணியே மணியே அருளே பொருளே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய்
அம்பல நம் பதியே.

#5253
உருவே உயிரே உணர்வே உறவே
உரையே பொருளே ஒளியே வெளியே
ஒன்றே என்றே நன்றே தந்தாய்
அம்பர நம் பரனே.

#5254
அருவே திருவே அறிவே செறிவே
அதுவே இதுவே அடியே முடியே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய்
அம்பல நம் பதியே.

@120. ஜோதி ஜோதி

#5255.
ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

#5256
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி
ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி.

#5257
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே.

@121. கண்புருவப் பூட்டு

#5258.
கையறவு இலாது நடுக் கண் புருவப் பூட்டு
கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு
ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு
ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு.

#5259
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு
என் பிறப்புத் துன்பம் எலாம் இன்றோடே போச்சு.

#5260
ஐயர் அருள் சோதி அரசாட்சி எனது ஆச்சு
ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு
எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு
என் பிறவித் துன்பம் எலாம் இன்றோடே போச்சு.

#5261
ஈசன் அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம்
ஏறிக் கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம்
தேசுறும் அ மாட நடுத் தெய்வ மணி பீடம்
தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம்.

#5262
மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி
மேவும் அதன் மேல் உலகில் வீறும் அரசாட்சி
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி
செப்பல் அரிதாம் இதற்கு என் அப்பன் அருள் சாட்சி.

#5263
துரிய மலை மேல் உளது ஓர் சோதி வள நாடு
தோன்றும் அதில் ஐயர் நடம் செய்யும் மணி வீடு
தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு
செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு.

#5264
சொல்லால் அளப்ப அரிய சோதி வரை மீது
தூய துரியப் பதியில் நேய மறை ஓது
எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது
இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது.

#5265
சிற்பொதுவும் பொற்பொதுவும் நான் அறியலாச்சு
சித்தர்களும் முத்தர்களும் பேசுவது என் பேச்சு
இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு
என் பிறவித் துன்பம் எலாம் இன்றோடே போச்சு.

#5266
வலது சொன்ன பேர்களுக்கு வந்தது வாய்த் தாழ்வு
மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு
வலது புஜம் ஆட நம்-பால் வந்தது அருள் வாழ்வு
மற்று நமைச் சூழ்ந்தவர்க்கும் வந்தது நல் வாழ்வு.

#5267
அம்பலத்தில் எங்கள் ஐயர் ஆடிய நல் ஆட்டம்
அன்பொடு துதித்தவருக்கு ஆனது சொல்லாட்டம்
வம்பு சொன்ன பேர்களுக்கு வந்தது மல்லாட்டம்
வந்த தலையாட்டம் இன்றி வந்தது பல் ஆட்டம்.

#5268
நாத்திகம் சொல்கின்றவர்-தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு
செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு.

@122. ஊதூது சங்கே

#5269.
கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே
கனகசபையான் என்று ஊதூது சங்கே
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே
பூசை பலித்தது என்று ஊதூது சங்கே.

#5270
தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே
ஏம சபையான் என்று ஊதூது சங்கே.

#5271
பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே
பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே
என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே.

#5272
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே
இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே
இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே.

#5273
என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே
இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே
பொன் உருத் தந்தான் என்று ஊதூது சங்கே
பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே.

#5274
சிவம் ஆக்கிக் கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே
நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே
நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே.

#5275
நாத முடியான் என்று ஊதூது சங்கே
ஞானசபையான் என்று ஊதூது சங்கே
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே
பலித்தது பூசை என்று ஊதூது சங்கே.

#5276
தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே
சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே
உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே.

#5277
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே
சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே.

#5278
இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே.

#5279
கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே
கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே.

#5280
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே
எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே
எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே.

#5281
கருணாநிதியர் என்று ஊதூது சங்கே
கடவுள் அவனே என்று ஊதூது சங்கே
அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே
அம்பலச் சோதி என்று ஊதூது சங்கே.

#5282
தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே
தலைவன் அவனே என்று ஊதூது சங்கே
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே
பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே.

#5283
ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே
அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே
தத்துவச் சோதி என்று ஊதூது சங்கே.

#5284
பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே
புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே
மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே.

@123. சின்னம் பிடி

#5285.
அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி
அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி
செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி
சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி.

#5286
சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி
புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி.

#5287
ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி
நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி
அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி.

#5288
கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி
கூத்தாடுகின்றோம் என்று சின்னம் பிடி
அடி முடியைக் கண்டோம் என்று சின்னம் பிடி
அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி.

#5289
அப்பர் வருகின்றார் என்று சின்னம் பிடி
அற்புதம் செய்வதற்கு என்று சின்னம் பிடி
செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி
சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி.

#5290
தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி
சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி
ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி
ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி.

#5291
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி
வேகாத நடுத் தெரிந்து சின்னம் பிடி
சாகாத தலை அறிந்து சின்னம் பிடி
சாகாத கல்வி கற்றுச் சின்னம் பிடி.

#5292
மீதான நிலை ஏறிச் சின்னம் பிடி
வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி
வேதாகமம் கடந்து சின்னம் பிடி
வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.

#5293
பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி
பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி
சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி.

#5294
சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி
செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி
இத் தாரணியில் என்று சின்னம் பிடி
இதுவே தருணம் என்று சின்னம் பிடி.

@124. முரசறைதல்

#5295.
அருள் சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு.

@125. தனித் திருஅலங்கல்

#5296.
எவ்வுயிரும் பொது எனக் கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வை_இலாத் திரு_நெறி அத் திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய
ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ.

#5297
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்-தான் சுத்த
சித்து உருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்-தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ.

#5298
கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர் போல் கண்டு ஞானத்
தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்கப் பெரு நீதி செலுத்தாநின்ற
பொருள் நெறி சற்குண சாந்தப் புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை
அருள் நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகள் என்று அறைவராலோ.

#5299
மன் அப்பா மன்றிடத்தே மா நடம் செய் அப்பா என்
றன் அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும்
முன் அப்பா பின் அப்பா மூர்த்தி அப்பா மூவாத
பொன் அப்பா ஞானப் பொருள் அப்பா தந்து அருளே.

#5300
ஆதி அப்பா நம் அனாதி அப்பா நங்கள் அம்மை ஒரு
பாதி அப்பா நிருபாதி அப்பா சிவ பத்தர் அனு
பூதி அப்பா நல் விபூதி அப்பா பொன் பொது நடம் செய்
சோதி அப்பா சுயம் சோதி அப்பா எனைச் சூழ்ந்து அருளே.

#5301
அண்ட அப்பா பகிரண்ட அப்பா நஞ்சு அணிந்த மணி_
கண்ட அப்பா முற்றும் கண்ட அப்பா சிவகாமி எனும்
ஒண் தவப் பாவையைக் கொண்ட அப்பா சடை ஓங்கு பிறைத்
துண்ட அப்பா மறை விண்ட அப்பா எனைச் சூழ்ந்து அருளே.

#5302
வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர்
சோலை அப்பா பரஞ்சோதி அப்பா சடைத் துன்று கொன்றை
மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்கச்
சாலை அப்பா எனைத் தந்த அப்பா வந்து தாங்கிக்கொள்ளே.

#5303
மெச்சி அப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கிய என்
உச்சி அப்பா என்னுடைய அப்பா என்னை உற்றுப் பெற்ற
அச்சி அப்பா முக்கண் அப்பா என் ஆர்_உயிர்க்கான அப்பா
கச்சி அப்பா தங்கக்கட்டி அப்பா என்னைக் கண்டுகொள்ளே.

#5304
எக் கரையும் இன்றி ஓங்கும் அருள்_கடல் என்று உரைக்கோ
செக்கரை வென்ற பொன் என்கோ படிகத் திரள்-அது என்கோ
திக்கு அரை அம்பரன் என்கோ என் உள்ளத்தில் தித்திக்கின்ற
சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே.

#5305
ஒட்டி என் கோது அறுத்து ஆட்கொண்டனை நினை ஓங்கு அறிவாம்
திட்டி என்கோ உயர் சிற்றம்பலம்-தனில் சேர்க்கும் நல்ல
வெட்டி என்கோ அருள் பெட்டியில் ஓங்கி விளங்கும் தங்கக்
கட்டி என்கோ பொன் பொது நடம் செய்யும் முக்கண்ணவனே.

#5306
அருள் பெரும் கடலே என்னை ஆண்ட சற்குருவே ஞானப்
பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
மருள் பெரு மாயை முற்றும் மடிந்தன வினைகளோடே
இருள் பெரும் தடையை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே.

#5307
மாண் நவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
தாள் நவ நடம் செய்கின்ற தனிப் பெருந் தலைவனே என்
கோண் அவ மாயை எல்லாம் குலைந்தன வினைகளோடே
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்தது அன்றே.

#5308
தற்பரம் பொருளே வேதத் தலை நின்ற ஒளியே மோனச்
சிற்பர சுகமே மன்றில் திரு_நடம் புரியும் தேவே
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைகளோடே
இல் படும் இருளை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே.

#5309
சிற்றறிவு உடைய நான் செய்த தீமைகள்
முற்றவும் பொறுத்து அருள் முனிந்திடேல் இன்றே
தெற்றென அருள்_பெரும்_சோதிச் செல்வமும்
மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.

#5310
என்ற சொல் செவிமடுத்து இறையும் அஞ்சிடேல்
இன்று உனக்கு அருள்_பெரும்_சோதி ஈந்தனம்
நன்றுற மகிழ்க எந்நாளும் சாவுறா
வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.

#5311
மேவி என் உள்ளகத்து இருந்து மேலும் என்
ஆவியில் கலந்து இவன் அவன் என்று ஓதும் ஓர்
பூ இயல் பேதமும் போக்கி ஒன்று-அதாய்த்
தே இயல் புரிந்தனன் சிதம்பரேசனே.

#5312
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம்
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம்
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே.

#5313
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம்
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே.

#5314
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என்
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான்
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காணக் காட்டிய கருத்த போற்றி வன்
கூற்று தைத்து நீத்து அழிவு இலா உருக் கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே.

#5315
அம்பலம் சேர்ந்தேன் எம் பலம் ஆர்ந்தேன் அப்பனைக் கண்டேன் செப்பம் உட்கொண்டேன்
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன்
நம்பிடில் அணைக்கும் எம் பெருமானை நாயகன்-தன்னைத் தாய்-அவன்றன்னைப்
பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்தவாறே.

#5316
கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன் கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன்
அள்ளக் குறையா வள்ளல் பொருளை அம்பலச் சோதியை எம் பெரு வாழ்வை
பள்ளிக்குள் பாடிப் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்தவாறே.

#5317
காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
வீட்டைப் புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன்
ஆட்டைப் புரிந்தே அம்பலத்து ஓங்கும் ஐயர் திரு_அடிக்கு ஆனந்தமாகப்
பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்தவாறே.

#5318
தேன் பாடல் அன்பு_உடையார் செயப் பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
கான் பாடிச் சிவகாமவல்லி மகிழ்கின்ற திருக் கணவா நல்ல
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய்.

#5319
ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன்
ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய்.

#5320
பொருள் பெரும் தனி மெய்ப் போகமே என்னைப் புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்கச் செல்வமே நான் பெற்ற சிறப்பே
மருள் பெரும் கடலைக் கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம்.

#5321
பொருள் பெரு மறைகள் அனந்தம் ஆகமங்கள் புகலும் ஓர் அனந்தம் மேல் போந்த
தெருள் பெருவெளி மட்டு அளவு இலாக் காலம் தேடியும் காண்கிலாச் சிவமே
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம்.

#5322
பொருள் பெரும் சுடர் செய் கலாந்த யோகாந்தம் புகன்ற போதாந்த நாதாந்தம்
தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே
மருள் பெரு இருளைத் தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம்.

#5323
அருள்_பெரும்_சோதி அபயம் அபயம்
அருள்_பெரும்_சோதி அபயம் அருள்_பெரும்_
சோதி அபயம் சிற்சோதி அபயம் பொன்
சோதி அபயம் துணை.

#5324
துணைவா அபயம் துயர் அகல என்-பால்
அணைவா அபயம் அபயம் பணை வாய்
வடலா அபயம் வரதா அபயம்
நட நாயகா அபயம் நான்.

#5325
நான் ஆகித் தானாய் நடித்து அருள்கின்றாய் அபயம்
தேனாய் இனிக்கும் சிவ அபயம் வான்_நாடு
மெய்யா அபயம் விமலா அபயம் என்றன்
ஐயா அபயம் அபயம்.

#5326
அபயம் பதியே அபயம் பரமே
அபயம் சிவமே அபயம் உபய
பதத்திற்கு அபயம் பரிந்து என் உளத்தே நல்
விதத்தில் கருணை விளை.

#5327
கருணாநிதியே அபயம் கனிந்த
அருள் நாடகனே அபயம் மருள் நாடும்
உள்ளக் கவலை ஒழிப்பாய் என் வன் மனத்துப்
பொள்ளல் பிழைகள் பொறுத்து.

#5328
இணக்கு அறியீர் இதம் அறியீர் இருந்த நிலை அறியீர் இடம் அறியீர் தடம் அறியீர் இ உடம்பை எடுத்த
கணக்கு அறியீர் வழக்கு அறியீர் அம்பலத்தே மாயைக் கலக்கம் அற நடிக்கின்ற துலக்கம் அறிவீரோ
பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவைப் பெரு வயிற்றுப் பிலத்தில் இட அறிவீர்
மணக் கறியே பிணக் கறியே வறுப்பே பேர்ப் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே.

#5329
உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர்
கிழக்கு அறியீர் மேற்கு அறியீர் அம்பலத்தே மாயைக் கேதம் அற நடிக்கின்ற பாதம் அறிவீரோ
வழக்கு அறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் வடிக்கும் முன்னே சோறு எடுத்து வயிற்று அடைக்க அறிவீர்
குழக் கறியே பழக் கறியே கூட்டு வர்க்கக் கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே.

#5330
உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றிப் போய் அலைகின்றீர்
பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே.

#5331
மழவுக்கும் ஒரு பிடி சோறு அளிப்பது அன்றி இரு பிடி ஊண் வழங்கில் இங்கே
உழவுக்கு முதல் குறையும் என வளர்த்து அங்கு அவற்றை எலாம் ஓகோ பேயின்
விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
இழவுக்கும் இடர்க் கொடுங்கோல் இறை வரிக்கும் கொடுத்து இழப்பர் என்னே என்னே.

#5332
கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க எனக் கழறிக் களிக்காநின்ற
சுடுகாட்டுப் பிணங்காள் இச் சுகம் அனைத்தும் கணச் சுகமே சொல்லக் கேள்-மின்
முடுகாட்டுக் கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர்
இடுகாட்டுப் பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே.

#5333
மதிப் பாலை அருள் பாலை ஆனந்தப் பாலை உண்ண மறந்தார் சில்லோர்
விதிப் பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்பக்
கொதிப் பாலை உணர்வு அழிக்கும் குடிப் பாலை மடிப் பாலைக் குடிப்பார் அந்தோ
துதிப் பாலை அருள்தரும் நம் தேவ சிகாமணித் தேவைத் துதியார் அன்றே.

#5334
சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கைச் சிறியவர் சிந்தை மாத்திரமோ
பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவது அன்றி எள்ளளவும் இனிப்பிலே புகுகின்றது இலையே.

#5335
பூ ஆர் கொன்றைச் செஞ்சடையாளர் புகழாளர்
ஈவார் போல் வந்து என் மனை புக்கார் எழில் காட்டி
தே ஆர் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
ஆ வா என்றார் என்னடி அம்மா அவர் சூதே.

#5336
நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செயத் தக்கது ஏது என்பாள்
செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள்
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே.

#5337
நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனித் தலைவர் ஞான சபாபதியார்
வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே
காதலுடன் வருகின்றார் என்று பர நாதம் களிப்புறவே தொனிக்கின்றது அந்தர துந்துபி-தான்
ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.

#5338.
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை
என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டுப்
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும்
உன்பாடு நான் உரைத்தேன் நீ இனிச் சும்மா இருக்க ஒண்ணாது அண்ணா.

#5339.
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
இன் பாடும் இ உலகில் என் அறிவில் இலை அதனால் எல்லாம்_வல்லோய்
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்துக் காத்தல்
உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா.

#5340..
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ
என் நாணைக் காத்து அருளி இத் தினமே அருள் சோதி ஈதல் வேண்டும்
அந்நாள் நையாதபடி அருள் புரிந்த பெரும் கருணை அரசே என்னை
முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே.

#5341.
தூங்காதே விழித்து இருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே என்னை
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டிப் பின்னே
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும்
தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே.

#5342.
இயங்கு ஆளி புலி கரடி எனப் பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில்
சயம் காளிக் கோயிலைக் கண்டு அஞ்சி மனம் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
பயங்காளி_பயல் போலப் பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை
வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே.

#5343.
சிறு செயலைச் செயும் உலகச் சிறு நடையோர் பல புகலத் தினம்-தோறும்-தான்
உறு செயலை அறியா இச் சிறு_பயலைப் பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய்
தெறு செயலைத் தவிர்த்து எல்லாச் சித்தியும் பெற்றிட அழியாத் தேகன் ஆகப்
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலைப் புரிக எனைப் பெற்ற தேவே.

#5344
அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
இங்கே நீ-தான் என்னளவு இன்னும் இரங்காயேல்
எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன்
செம் கேழ் வேணித் திங்கள் அணிந்து அருள் சிவனேயோ.

#5345
ஈயோடு உறழும் சிறியேன்அளவில் எந்தாய் நின்
சேயோடு உறழும் பேர்_அருள் வண்ணத் திருவுள்ளம்
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
தீயோடு உறழும் திரு_அருள் வடிவச் சிவனேயோ.

#5346
உடைய நாயகன் பிள்ளை நான் ஆகில் எவ்வுலகமும் ஒருங்கு இன்பம்
அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம்
மிடைய அற்புதப் பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாடத்
தடை-அது அற்ற நல் தருணம் இத் தருணமாத் தழைக்க இத் தனியேற்கே.

#5347
கோது கொடுத்த மனச் சிறியேன் குற்றம் குணமாக் கொண்டே இப்
போது கொடுத்த நின் அருளாம் பொருளை நினைக்கும் போது எல்லாம்
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு
ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.

#5348
கன்று உடைய பசுப் போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காணக் காட்டும்
என்று உடைய நாயகனே எல்லாம் செய் வல்லவனே இலங்கும் சோதி
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா.

#5349
திரு நிலைத்து நல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்து ஓங்க
உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய்
இரு நிலத்தவர் இன்புறத் திரு_அருள் இயல் வடிவொடு மன்றில்
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி.

#5350
குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமாக் கொள்ளல் உனக்கு இயல்பே
சிற்றம்பலவா இனிச் சிறியேன் செப்பும் முகமன் யாது உளது
தெற்றென்று அடியேன் சிந்தை-தனைத் தெளிவித்து அச்சம் துயர் தீர்த்தே
இற்றைப் பொழுதே அருள் சோதி ஈக தருணம் இதுவாமே.

#5351
அருள் ஆர்_அமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவே என்
பொருளாய் அகத்தும் புறத்தும் என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பே மெய்த்
தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம்பலத்தே நடிக்கின்றோய்
இருளாயின எல்லாம் தவிர்த்து என் எண்ணம் முடிப்பாய் இப்போதே.

#5352
மந்திரம் அறியேன் மற்றை மணி மருந்து அறியேன் வேறு
தந்திரம் அறியேன் எந்தத் தகவு கொண்டு அடைவேன் எந்தாய்
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்சப் பொன் மன்றில் வேணிச்
சந்திரன் ஆட இன்பத் தனி நடம் புரியும் தேவே.

#5353.
கருணைக் கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனி அமுதில்
தருணச் சுவையே சுவை அனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
பொருள் மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
தெருள் மெய்க் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே.

#5354.
கலக்கம் அற்று நான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள் எந்நாள்
இலக்கம் உற்று அறிந்திட அருள் புரிகுவாய் எந்தை இ இரவின்-கண்
துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய்ச் சோதியே சுக வாழ்வே
அலக்கண் அற்றிடத் திரு_அருள் புரியும் என் அப்பனே அடியேற்கே.

#5355
பண்டு நின் திருப் பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரைப் போல்
தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல்
குண்டு நீர்க் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம் கோடி செய்தாலும் முன்
கொண்டு பின் குலம் பேசுவரோ எனைக் குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே.

#5356
கண் எலாம் நிரம்பப் பேர்_ஒளி காட்டிக் கருணை மா மழை பொழி முகிலே
விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள்
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்துப்
புண் எலாம் தவிர்த்துப் பொருள் எலாம் கொடுத்துப் புகுந்து எனது உளம் கலந்து அருளே.

#5357
அன்பு_இலேன் எனினும் அறிவு_இலேன் எனினும் அன்று வந்து ஆண்டனை அதனால்
துன்பு_இலேன் என இ உலகு எலாம் அறியச் சொல்லினேன் சொல்லிய நானே
இன்பு_இலேன் என இன்று உரைத்திடல் அழகோ எனை உலகு அவமதித்திடில் என்
என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே.

#5358
வான் வேண்டு சிற்றம்பலத்தே வயங்கி வளர் அமுதத்
தேன் வேண்டினேன் இத் தருணத்து அருள்செய்க செய்திலையேல்
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன்
நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே.

#5359
செவ்வணத்தவரும் மறையும் ஆகமமும் தேவரும் முனிவரும் பிறரும்
இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை
எவ்வணத்து அறிவேன் எங்ஙனம் புகல்வேன் என் தரத்து இயலுவதேயோ
ஒவ்வணத்து அரசே எனக்கு என இங்கு ஓர் உணர்ச்சியும் உண்டு-கொல் உணர்த்தே.

#5360
உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பதத் தலைவ நின் இயலைப்
புணர்ந்த நின் அருளே அறியும் நான் அறிந்து புகன்றிடும் தரம் சிறிது உளனோ
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொளக் கொடுத்த குரு எனக் கூறல் என் குறிப்பே.

#5361
அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றிச் சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன்
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர்
செயல் அறியேன் எனக்கு அருளத் திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே.

#5362
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடைக் கனியே
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்குத் துணையே என் இரு கண்ணுள் மணியே
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே.

#5363
என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும்
நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என்
றன்னால் ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும்
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே.

#5364
இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனிச் சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே
அச்சை எலாம் வெளிப்படுத்தி அச்சம் எலாம் அகற்றி அருள் சோதித் தனி அரசே ஆங்காங்கும் ஓங்க
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும்
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே.

#5365
தரு வகை இத் தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான்
ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
இரு வகையும் சம்மதமே திரு_அடி சாட்சி-அதாய் இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந்ததுவே
அரு வகையோ உரு வகையும் ஆகி என் உள் அமர்ந்தாய் அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே.

#5366
வரும் முன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல் நீ மகிழ்ந்து அருள் சோதி
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே
குரு முன் பொய் உரை கூறலேன் இனி இக் குவலையத்திடைக் கவலையைத் தரியேன்
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே. .

#5367
வினைத் தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணிப் பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன்
எனைத் தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே. .

#5368
அணியே எனது மெய் அறிவே பொது வளர் அரசே திரு வளர் அமுதே
இனிது அருள்வாய் இது தருணம் அமுது அருளாய் இது தருணம்
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே
அருள் புரிவாய் இது தருணம் அருள் புரிவாய் இது தருணம். .

#5369
இதுவே தருணம் எனை அணைதற்கு இங்கே
பொதுவே நடிக்கும் புனிதா விது வேய்ந்த
சென்னியனே சுத்த சிவனே உனக்கு அடியேன்
அன்னியனே_அல்லேன் அறிந்து. .

#5370
ஆதியே திரு_அம்பலத்து ஆடல் செய் அரசே
நீதியே எலாம் வல்லவா நல்லவா நினைந்தே
ஓதியே உணர்தற்கு அரிதாகிய ஒரு வான்
சோதியே எனைச் சோதியேல் சோதியேல் இனியே. .

#5371
போதோ விடிந்தது அருள் அரசே என் பொருட்டு வந்து என்
தாது ஓர் எழுமையும் நன்மையுற்று ஓங்கத் தருவது-தான்
மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின்
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே. .

#5372
அப் பனை இப் பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன் சொல்
அப்பனை என் உயிர்க்கான செந்தேனை அமுதை அ நாள்
அப்பனை ஆழி கடத்திக் கரை விட்டு அளித்த சடை_
அப்பனைச் சிற்றம்பலவனை நான் துதித்து ஆடுவனே. .

#5373
மாது ஓர் புடை வைத்த மா மருந்தே மணியே என்மட்டில்
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன்
போதோ கழிகின்றது அந்தோ நின்றன்னைப் பொருந்துகின்ற
சூது ஓர் அணுவும் தெரியேன் நின் பாதத் துணை துணையே. .

#5374
ஆர்ந்த அருள்_பெரும்_சோதி அப்பா நான் அடுத்தவர்-தம்
சோர்ந்த முகம் பார்க்க இனித் துணியேன் நின் அருள் ஆணை
நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும்
ஓர்ந்து செவி புகத் துணியேன் உன் ஆணை உன் ஆணை. .

#5375
அழியா நிலை யாது அது மேவி நின் அன்பினோடும்
ஒழியாது உனைப் பாடிநின்று ஆடி உலகினூடே
வழியாம் உயிர்க்கு இன்பம் புரிந்து வயங்கல் வேண்டும்
இழியாது அருள்வாய் பொது மேவிய எந்தை நீயே. .

#5376
கரும்பு அசைக்கும் மொழிச் சிறியார் கல்_மனத்தில் பயின்றுபயின்று
இரும்பு அசைக்கும் மனம் பெற்றேன் யானோ இ ஏழைகள்-தம்
அரும் பசிக்கு மருந்து அளிப்பேன் அந்தோ இங்கு என்னாலே
துரும்பு அசைக்க முடியாதே சோதி நடப் பெருமானே.

#5377.
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று
பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்குப் பணிக்கின்றேன் நீ
விதிக்கு அளவாச் சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே
பொதிக்கு அளவா முன்னர் இங்கே சத்தத்துக்கு அளவு என்பார் போன்றாய் அன்றே.

#5378.
ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம்
கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும் வார்த்தை
ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே
பாடி அவன் திரு_பாட்டைப் படி கண்டாய் இன்பு உலகப் படி கண்டாயே.

#5379
ஒன்றும் முன் எண்-பால் எண்ணிடக் கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால்
நன்று கண்டு ஆங்கே அருள்_பெரும்_சோதி நாதனைக் கண்டவன் நடிக்கும்
மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய்
நின்றுகொண்டு ஆடும் தருணம் இங்கு இதுவே நெஞ்சமே அஞ்சலை நீயே.

#5380
கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி
மலை வளர்கின்றது அருள் வெளி நடுவே வயங்குவது இன்பமே மயமாய்த்
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே.

#5381
மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த
அன்று-தான் தொடங்கி அம்மையே அப்பா ஐயனே அன்பனே அரசே
என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில்
சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே.

#5382
உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால்
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்று இதை நினைத்திடும்-தோறும்
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக் குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய்.

#5383.
ஐ வகைத் தொழிலும் என்-பால் அளித்தனை அது கொண்டு இ நாள்
செய் வகை தெரிவித்து என்னைச் சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும்
பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று
மெய் வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே.

#5384.
உருவர் ஆகியும் அருவினர் ஆகியும் உரு_அருவினராயும்
ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகு_உளீர் உணர்வு இன்றி
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே.

#5385
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணிச் சேர்ந்து பெற்ற
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்
காய் போல் பிறர்-தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
நாய் போல் குரைப்பர் துன்மார்க்க சங்கத்தவர் நானிலத்தே.

#5386
வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம்
கண்டவரைக் கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால்
பண் தகு நின் திரு_தொண்டர் அடிப் பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே.

#5387
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே
சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் எனச் சண்டை இட்ட கலக
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே.

#5388
சிற்சபை-கண்ணும் பொன்_சபை-கண்ணும்
திரு_நடம் புரியும் திரு_நடராஜ
எனக்கு அருள் புரிந்த நினக்கு அடியேன் கைம்
மாற்றை அறிந்திலன் போற்றி நின் அருளே.

#5389
நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன்
யாதில் பெரியேன் தீதில் பெரியேன்
என்னை ஆண்டு அருளினை என்னை ஆண்டவனே
அம்பலத்து ஆடல் செய் எம் பெரும் பொருளே

#5390
உண்மை உரைத்து அருள் என்று ஓதினேன் எந்தை பிரான்
வண்மையுடன் என் அறிவில் வாய்ந்து உரைத்தான் திண்மையுறு
சித்தி நிலை எல்லாம் தெரிவித்து அருள்கின்றேம்
இத் தருணம் சத்தியமே என்று.

#5391
உலகம் எலாம் போற்ற ஒளி வடிவன் ஆகி
இலக அருள்செய்தான் இசைந்தே திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்து.

#5392
தனித் துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண்டு என்றன்
மனித்த உடம்பு அழியாவாறே கனித் துணையாம்
இன் அமுதம் தந்து எனக்கே எல்லாமும் வல்ல சித்தி-
தன்னையும் தந்து உள் கலந்தான் தான்.

#5393
சர்க்கரை ஒத்தான் எனக்கே தந்தான் அருள் என் மனக்
கல் கரையச் செய்தே களிப்பித்தான் கற்க
இனியான் அருள் சோதி எந்தை என்னுள் உற்றான்
இனி யான் மயங்கேன் இருந்து.

#5394
உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான்
என்னை விட மாட்டாய் இருவருமாய் மன்னி என்றும்
வண்மை எலாம் வல்ல வாய்மை அருளால் உலகுக்கு
உண்மை இன்பம் செய்தும் உவந்து.

#5395
நஞ்சு உண்டு உயிர்களைக் காத்தவனே நட நாயகனே
பஞ்சு உண்ட சிற்றடிப் பாவை_பங்கா நம் பராபரனே
மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா
பிஞ்சு உண்ட வாய்க்குப் பழம் அளித்து ஆண்ட பெரியவனே.

#5396
அப்பு ஊறு செம் சடை அப்பா சிற்றம்பலத்து ஆடுகின்றோய்
துப்பு ஊறு வண்ணச் செழும் சுடரே தனிச் சோதியனே
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே
உப்பு ஊறு வாய்க்குத் தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே.

#5397
நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர்
வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன்
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன்
கோன் செய்த விச்சை குணிக்க வல்லார் எவர் கூறு-மினே.

#5398
பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம்பல நடம் கண்டு
எண்ணிய எண்ணம் பலித்தன மெய் இன்பம் எய்தியது ஓர்
தண் இயல் ஆர்_அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான்
நண்ணிய புண்ணியம் என் உரைக்கேன் இந்த நானிலத்தே.

#5399
அருள்_பெரும்_சோதி என் அம்மையினோடு அறிவு ஆனந்தமாம்
அருள்_பெரும்_சோதி என் அப்பன் என் உள்ளத்து அமர்ந்து அன்பினால்
அருள்_பெரும்_சோதித் தெள் ஆர்_அமுதம் தந்து அழிவற்றதோர்
அருள்_பெரும்_சோதிச் செங்கோலும் கொடுத்தனன் அற்புதமே.

#5400
அருள்_பெரும்_சோதி என் அகத்தில் ஓங்கின
மருள் பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின
இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.

#5401
ஓவுறாத் துயர் செயும் உடம்பு-தான் என்றும்
சாவுறாது இன்பமே சார்ந்து வாழலாம்
மாவுறாச் சுத்த சன்மார்க்க நல் நெறி
மேவுறார்-தங்களை விடுக நெஞ்சமே.

#5402
பொத்திய மலப் பிணிப் புழுக் குரம்பை-தான்
சித்து இயல் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால்
நித்தியம் ஆகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து_உளீர்களே.

#5403
வான் ஆகி வான் நடுவே மன்னும் ஒளி ஆகி அதில்
தான் ஆடுவான் ஆகிச் சன்மார்க்கர் உள் இனிக்கும்
தேன் ஆகித் தெள் அமுதாய்த் தித்திக்கும் தேவே நீ
யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ.

#5404
ஞானாகரச் சுடரே ஞான மணி_விளக்கே
ஆனா அருள் பெரும் சிற்றம்பலத்தே ஆனந்தத்
தேன் ஆர் அமுதாம் சிவமே சிவமே நீ
நான் ஆகி என் உள் நடிக்கின்றாய் என்னேயோ.

#5405
என் தரத்துக்கு ஏலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
முன் தரத்தின் எல்லாம் முடித்துக்கொடுக்கின்றாய்
நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும்
பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய்.

#5406
என்னுடைய விண்ணப்பம் இது கேட்க எம் பெருமான்
நின்னுடைய பெரும் கருணை நிதி உடையேன் ஆதலினால்
பொன்_உடையான் அயன் முதலாம் புங்கவரை வியவேன் என்
றன்னுடைய செயல் எல்லாம் தம்பிரான் செயல் அன்றே.

#5407
ஓங்கும் அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்
தூங்கிய என்றன்னை எழுப்பி அருள் தூய பொருள்
வாங்குக என்று என்-பால் வலியக் கொடுத்து அமுதும்
பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே.

#5408
நாள் பாரில் அன்பர் எலாம் நல்குக என்று ஏத்திநிற்ப
ஆட்பாரில் அன்பு ஓர் அணுத்துணையும் இல்லேற்கே
நீட்பாய் அருள் அமுதம் நீ கொடுத்தாய் நின்னை இங்கே
கேட்பார் இலை என்று கீழ் மேலது ஆக்கினையே.

#5409
எல்லார்க்கும் கடை ஆகி இருந்தேனுக்கு அருள் புரிந்தே
எல்லார்க்கும் துணை ஆகி இருக்கவைத்தாய் எம் பெருமான்
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே.

#5410
நான் ஆனான் தான் ஆனான் நானும் தானும் ஆனான்
தேன் ஆனான் தெள் அமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
வான் ஆனான் ஞான மணி மன்றில் ஆடுகின்றான்
கோன் ஆனான் என் உள் குலாவுகின்ற கோமானே.

#5411
எல்லாக் குறையும் தவிர்ந்தேன் உன் இன் அருள் எய்தினன் நான்
வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்து அருந்தி
நல்லார் எவர்க்கும் உபகரிப்பான் இங்கு நண்ணுகின்றேன்
கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.

#5412
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால்
இ நாள் அடைந்து இன்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவாறு
எந்நாளும் இ உடம்பே இறவாத இயற்கை பெற்றேன்
என் ஆசை அப்பனைக் கண்டுகொண்டேன் என் இதயத்திலே.

#5413
கண்டேன் சிற்றம்பலத்து ஆனந்த நாடகம் கண்டு களி
கொண்டேன் எல்லாம்_வல்ல சித்தனைக் கூடிக் குலவி அமுது
உண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன் பொய் உலகு ஒழுக்கம்
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு இதுவே.

#5414
கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்துகொண்டே
பண் கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்
விண் கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்றது
எண்கொண்ட மற்றை மத மார்க்கம் யாவும் இறந்தனவே.

#5415
தாழைப்பழம் பிழி பாலொடு சர்க்கரைச் சாறு அளிந்த
வாழைப்பழம் பசு நெய் நறும் தேனும் மருவச்செய்து
மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்து அளவி
ஏழைக்கு அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே.

#5416
தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசு
வின் பால் கலந்து அளி முக்கனிச் சாறும் எடுத்து அளவி
அன்பால் மகிழ்ந்து மகனே வருக என்று அழைத்து அருளி
என்-பால் அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே.

#5417
செத்தார் எழுந்தனர் சுத்த சன்மார்க்கம் சிறந்தது நான்
ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்று அடைந்தே
சித்தாடுகின்றனன் சாகா_வரமும் சிறக்கப்பெற்றேன்
இத் தாரணியில் எனக்கு இணை யார் என்று இயம்புவனே.

#5418
கருணையாம் பெரும் கடல் அமுது அளித்தனை எனக்கே
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை
அருண வண்ண ஒண் சுடர் மணி மண்டபத்து அடியேன்
பொருள் நயப்புறக் கண்டுகண்டு உளம் மகிழ் போதே.

#5419
முந்தை நாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் என என் முன்னர் நீ தோன்றினை அந்தோ
அந்த நாள் தொடங்கி மகிழ்ந்து இருக்கின்றேன் அப்பனே அய்யனே அரசே
இந்த நாள் கவலை இடர் பயம் எல்லாம் என்னை விட்டு ஒழிந்திடப் புரிந்தாய்
எந்த நாள் புரிந்தேன் இப் பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய்த் தவமே.

#5420
வாய்க் குறும்பு உரைத்துத் திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட
நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உறச் சூட்டினை அந்தோ
தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவைத்
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனிப் பெருந் தயவே.

#5421
பேர்_இடர் தவிர்த்துப் பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ
யார் என உரைப்பேன் என் எனப் புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ.

#5422
சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையைக் கணத்தே
வெறுவியது ஆக்கித் தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன்
உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும்
நறு நெயும் கலந்த சுவைப் பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே.

#5423
புல்லிய நெறிக்கே இழுத்து எனை அலைத்த பொய் மன மாயையைக் கணத்தே
மெல்லியது ஆக்கித் தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன்
வல்லி நின் அம்மை மகிழ மன்று ஓங்கும் வள்ளலே மறைகள் ஆகமங்கள்
சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய்த் துணையே.

#5424
அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே
இருந்தனன் அம்மா நான் செய்த தவம்-தான் என்னையோ என்னையோ என்றாள்
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான
மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே.

#5425
இன்பிலே வயங்கும் சிவ_பரம்பொருளே என் உயிர்க்கு அமுதமே என்றன்
அன்பிலே பழுத்த தனிப் பெரும் பழமே அருள் நடம் புரியும் என் அரசே
வன்பிலே விளைந்த மாயையும் வினையும் மடிந்தன விடிந்ததால் இரவும்
துன்பு_இலேன் இனி நான் அருள்_பெரும்_சோதிச் சூழலில் துலங்குகின்றேனே.

#5426
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன்
செயிர் எலாம் தவிர்ந்தேன் திரு எலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன்
மயிர் எலாம் புளகித்து உளம் எலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்
பயிர் எலாம் தழைக்கப் பதி எலாம் களிக்கப் பாடுகின்றேன் பொதுப் பாட்டே.

#5427
படித்த என் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயன்-அதாம் உணர்ச்சியும் அடியேன்
பிடித்த நல் நிலையும் உயிரும் மெய் இன்பும் பெருமையும் சிறப்பும் நான் உண்ணும்
வடித்த தெள் அமுதும் வயங்கும் மெய் வாழ்வும் வாழ்க்கை நல் முதலும் மன்றகத்தே
நடித்த பொன் அடியும் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய பொருளும் என்று அறிந்தேன்.

#5428
கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமைக் கடவுளே என் இரு கண்ணே
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே
புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன்
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே.

#5429
தரம் பிறர் அறியாத் தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதிப்
பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல
உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே
வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே.

#5430
யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ
ஊன் மனம் உருக என்றனைத் தேற்றி ஒளி உருக் காட்டிய தலைவா
ஏன் மனம் இரங்காய் இன்று நீ என்றேன் என்ற சொல் ஒலி அடங்குதன் முன்
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே.

#5431
பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கிப் பரம்பரம் தருகின்றது என்று ஓர்
தனிப் பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன்
இனிப்பை நான் என் என்று இயம்புவேன் அந்தோ என் உயிர் இனித்தது என் கரணம்
சனிப்பு அற இனித்த தத்துவம் எல்லாம் தனித்தனி இனித்தன தழைத்தே.

#5432
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே
கண் எலாம் களிக்கக் காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில்
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே
உண்ணலாம் விழைந்தார்க்கு உதவலாம் உலகில் ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.

#5433
வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியைக் கண்டனம் மனமே
அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே
உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம்
கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே.

#5434.
சனி தொலைந்தது தடை தவிர்ந்தது தயை மிகுந்தது சலமொடே
துனி தொலைந்தது சுமை தவிர்ந்தது சுபம் மிகுந்தது சுகமொடே
கனி எதிர்ந்தது களை தவிர்ந்தது களி மிகுந்தது கனிவொடே
புனித மன்று இறை நடம் மலிந்தது புகழ் உயர்ந்தது புவியிலே.

#5435,
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மை சேர்
திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்று விழுந்ததே.

#5436
அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே
உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது
செம் பதத்தே மலர் விளங்கக் கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய்ச் செல்வம் அடைந்தேனே.

#5437
அடி விளங்கக் கனகசபைத் தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே
துடி விளங்கக் கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருபப் பொருளே
பொடி விளங்கத் திரு_மேனிப் புண்ணியனே ஞான_போனகரைச் சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா
படி விளங்கச் சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு எனப் பெற்றேனே.

#5438
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என்
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே
இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே
என்-புடை எனைத் தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே.

#5439
கலக்கம் நீங்கினேன் களிப்புறுகின்றேன் கனக அம்பலம் கனிந்த செங்கனியே
துலக்கம் உற்ற சிற்றம்பலத்து அமுதே தூய சோதியே சுகப் பெரு வாழ்வே
விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே
அலக்கண் அற்ற மெய் அன்பர்-தம் உளத்தே அமர்ந்ததோர் சச்சிதானந்த சிவமே.

#5440
ஓங்கார அணை மீது நான் இருந்த தருணம் உவந்து எனது மணவாளர் சிவந்த வடிவு அகன்றே
ஈங்கு ஆரப் பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ
ஆங்காரம் ஒழி என்றார் ஒழிந்திருந்தேன் அப்போது அவர் நானோ நான் அவரோ அறிந்திலன் முன் குறிப்பை
ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே.

#5441
சொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம் துரிசு அலவே சூது அலவே தூய்மை உடையனவே
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால்
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இத் தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றேன் அடி நான் உண்மை இது உண்மை இது உண்மை இது-தானே.

#5442
தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
எந்தை எம் பிரான் ஐந்தொழில் புரியும் இறைவன் மன்று உளே இயல் நடம் புரிவான்
மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான்
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின்.

#5443
என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே
உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே
புல் நிகரேன் குற்றம் எலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ.

#5444
என் உரைக்கேன் என் உரைக்கேன் இந்த அதிசயம்-தன்னை எம்_அனோர்காள்
பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள்
மின் உரைக்கும்படி கலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மையான
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே.

#5445
ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடு இருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பதப் புகழை அன்பினொடும் பாடிப்பாடி
நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே.

#5446
ஆணை ஆணை நீ அஞ்சலை அஞ்சலை அருள் ஒளி தருகின்றாம்
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம்
ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று
ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி.

#5447
நாய்க்கும் ஓர் தவிசு இட்டுப் பொன் மா முடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள்
வாய்க்குவந்தபடி பல பேசவே மதி_இலேனையும் மன் அருள் சத்தியாம்
தாய்க்குக் காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாடப் பொன் மண்டபத்து ஏற்றியே
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழக் கட்டினை என்னை நின் செய்கையே.

#5448
தன்னைவிடத் தலைமை ஒரு தகவினும் இங்கு இயலாத் தனித் தலைமைப் பெரும் பதியே தருண தயாநிதியே
பொன் அடி என் சிரத்து இருக்கப் புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான்
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான்
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே.

#5449
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன்
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே.

#5450
காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனைச் சார்வீரே.

#5451
எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின
எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே.

#5452
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் எனக் கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே.

#5453
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்தியச் சுத்த சன்மார்க்க
வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே.

#5454
வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேள்-மீன்கள் வந்து நும்
போது போவதன் முன்னரே அருள் பொதுவிலே நடம் போற்றுவீர்
தீது பேசினீர் என்றிடாது உமைத் திருவுளம் கொளும் காண்-மினோ
சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே.

#5455
தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் தொலைந்தன தொலைந்தன எனை விட்டு
ஏக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும்
ஆக்கமும் அருளும் அறிவும் மெய் அன்பும் அழிவுறா உடம்பும் மெய் இன்ப
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின்.

#5456
பிச்சு உலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
இச்சை எலாம் எய்த இசைந்து அருளிச் செய்தனையே
அச்சம் எலாம் தீர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேர்_ஆனந்த நித்திரை செய்கின்றேனே.

@126. சிற்சத்தி துதி

#5457.
சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதி உருப்
பாதிக் கொடியே சோதி வலப் பாகக் கொடியே எனை ஈன்ற
ஆதிக் கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க
நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.

#5458.
பொருள் நல் கொடியே மாற்று உயர்ந்த பொன் அம் கொடியே போதாந்த
வருணக் கொடியே எல்லாஞ் செய் வல்லார் இடம் சேர் மணிக் கொடியே
தருணக் கொடியே என்றன்னைக் தாங்கி ஓங்கும் தனிக் கொடியே
கருணைக் கொடியே ஞான சிவகாமக் கொடியே அருளுகவே.

#5459.
நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவ கீதப்
பாட்டுக் கொடியே இறைவர் வலப் பாகக் கொடியே பரநாத
நாட்டுக் கொடியே எனை ஈன்ற ஞானக் கொடியே என் உறவாம்
கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற்கு அருளுகவே.

#5460.
மாலக் கொடியேன் குற்றம் எலாம் மன்னித்து அருளி மரணம் எனும்
சாலக் கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவக் கொடியே
காலக் கருவைக் கடந்து ஒளிர் வான் கருவும் கடந்து வயங்குகின்ற
கோலக் கொடியே சிவ ஞானக் கொடியே அடியேற்கு அருளுகவே.

#5461.
நாடாக் கொடிய மனம் அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
பாடாப் பிழையைப் பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதிக் கொடியே
தேடாக் கரும சித்தி எலாம் திகழத் தயவால் தெரிவித்த
கோடாக் கொடியே சிவ தருமக் கொடியே அடியேற்கு அருளுகவே.

#5462.
மணம்கொள் கொடிப் பூ முதல் நான்கு வகைப் பூ வடிவுள் வயங்குகின்ற
வணம் கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான் கொடியே
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத
குணம் கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற்கு அருளுகவே.

#5463.
புலம் கொள் கொடிய மனம்போனபோக்கில் போகாது எனை மீட்டு
நலம் கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நல் கொடியே
வலம்கொள் ஞான சித்தி எலாம் வயங்க விளங்கும் மணி மன்றில்
குலம் கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற்கு அருளுகவே.

#5464.
வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன்-தன்னை விழாத வகை
மறிக்கும் ஒரு பேர்_அறிவு அளித்த வள்ளல் கொடியே மனக் கொடியைச்
செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வக் கொடியே சிவ ஞானம்
குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற்கு அருளுகவே.

#5465.
கடுத்த விடர் வன் பயம் கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
அடுத்த கொடியே அருள அமுதம் அளித்து என்றனை மெய் அருள் கரத்தால்
எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே
கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற்கு அருளுகவே.

#5466.
ஏட்டைத் தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த
பாட்டைப் புனைந்து பரிசு அளித்த பரம ஞானப் பதிக் கொடியே
தேட்டைத் தனிப் பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்கக்
கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற்கு அருளுகவே.

@127. இன்பத் திறன்

#5467.
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன்
இலகு சிவபோக வடிவு ஆகி மகிழ்கின்றேன் இளைப்பு அறியேன் தவிப்பு அறியேன் இடர் செய் பசி அறியேன்
விலகல் இலாத் திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின்
அலகு_அறியாத் திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே.

#5468
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே
போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே
தீது அவத்தைப் பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பாச் செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே
பூதலத்தே அடிச் சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே.

#5469
அளந்திடு வேதாகமத்தின் அடியும் நடு முடியும் அப்புறமும் அப்பாலும் அதன் மேலும் விளங்கி
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியாப் பொன்னே என் மன்னே கண்மணியே
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனித் துணைவா
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே.

#5470
நாடு கலந்து ஆள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணி எனை மாலையிட்ட நாயகனே நாட்டில்
ஈடு கரைந்திடற்கு அரிதாம் திரு_சிற்றம்பலத்தே இன்ப நடம் புரிகின்ற இறையவனே எனை நீ
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன்
கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குணப் பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே.

#5471
நண்பு_உடையாய் என்னுடைய நாயகனே எனது நல் உறவே சிற்சபையில் நடம் புரியும் தலைவா
எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய்
பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே
தண்பு உடை நல் மொழித் திரளும் சுவைப் பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே.

#5472
பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழைக் கணிப்பதற்குப் பல கால்
துணிந்துதுணிந்து எழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந்து அடிகள் சுமந்துசுமந்து இளைத்திளைத்துச் சொல்லிய அல்லன என்று
அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.

#5473
விதிப்பவர்கள் பல கோடி திதிப்பவர் பல் கோடி மேலவர்கள் ஒரு கோடி விரைந்துவிரைந்து உனையே
மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே
துதிப்பதுவே நலம் எனக் கொண்டு இற்றை வரை ஏற்ற சொல் பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
குதிப்பு ஒழியா மனச் சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே.

#5474
ஒளி ஆகி உள் ஒளியாய் உள் ஒளிக்குள் ஒளியாய் ஒளி ஒளியின் ஒளியாய் அ ஒளிக்குளும் ஓர் ஒளியாய்
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கு ஓர் வெளியாய்
அளி ஆகி அது ஆகி அதுவும் அல்லாது ஆகி அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபைத் தலைவா நின் இயலைச் சாற்றுவது எவ்வணமே.

#5475
வாக்கு ஒழிந்து மனம் ஒழிந்து மதி ஒழிந்து மதியின் வாதனையும் ஒழிந்து அறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
போக்கு ஒழிந்தும் வரவு ஒழிந்தும் பூரணமாய் அதுவும் போன பொழுது உள்ளபடி புகலுவது எப்படியோ
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே
ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே.

#5476
என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய்
நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலைப் பெயர் பெற்றிருந்தேன்
தன் இயலாம் தனி ஞான சபைத் தலைமைப் பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
பின் இயல் மானிடப் பிள்ளை பேச்சினும் ஓர் பறவைப் பிறப்பின் உறும் கிளி_பிள்ளைப் பேச்சு உவக்கின்றதுவே.

@128. உற்ற துரைத்தல்

#5477.
துனி நாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம் பலிக்கும்
கனி நாள் இதுவே என்று அறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
தனி நாயகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
இனி நான் இறையும் கலக்கமுறேன் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே.

#5478
அருளும் பொருளும் யான் பெறவே அடுத்த தருணம் இது என்றே
தெருளும்படி நின் அருள் உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பு ஒழிந்தேன்
மருளும் மனம்-தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
இருளும் தொலைந்தது இனிச் சிறிதும் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே.

#5479
அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இது என்றே
இருளே தொலைந்தது இடர் அனைத்தும் எனை விட்டு அகன்றே ஒழிந்தனவால்
தெருளே சிற்றம்பலத்து ஆடும் சிவமே எல்லாம் செய்ய வல்ல
பொருளே இனி நான் வீண் போது போக்க_மாட்டேன் கண்டாயே.

#5480
கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இது என்று அருள் உணர்த்தக்
கொண்டே அறிந்துகொண்டேன் நல் குறிகள் பலவும் கூடுகின்ற
தொண்டே புரிவார்க்கு அருளும் அருள் சோதிக் கருணைப் பெருமானே
உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.

#5481
ஒழித்தேன் அவலம் அச்சம் எலாம் ஓடத் துறந்தேன் உறுகண் எலாம்
கழித்தேன் மரணக் களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன்
பழித்தேன் சிற்றம்பலம் என்னாப் பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
விழித்தேன் கருத்தின்படி எல்லாம் விளையாடுதற்கு விரைந்தேனே.

#5482
விரைந்துவிரைந்து படி கடந்தேன் மேல் பால் அமுதம் வியந்து உண்டேன்
கரைந்துகரைந்து மனம் உருகக் கண்ணீர் பெருகக் கருத்து அலர்ந்தே
வரைந்து ஞான மணம் பொங்க மணி மன்று அரசைக் கண்டுகொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.

#5483
தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என்
ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை
நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.

#5484
நிலத்தே அடைந்த இடர் அனைத்தும் நிமிடத்து ஒழித்தே நிலை பெற்றேன்
வலத்தே அழியா_வரம் பெற்றேன் மணி மன்று ஏத்தும் வாழ்வு அடைந்தேன்
குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்து இ உலகம் குமையாதே
நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டாநின்றேன் நாட்டகத்தே.

#5485
அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.

#5486
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன் எனை
உற்றே கலந்தான் நான் அவனை உற்றே கலந்தேன் ஒன்று ஆனேம்
எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன் அமுதம்
துற்றே உலகீர் நீவிர் எலாம் வாழ்க வாழ்க துனி அற்றே.

@129. சுத்த சிவநிலை

#5487.
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் பண்ணில்
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.

#5488
எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
எல்லாம் செய வல்லான் எம் பெருமான் எல்லாமாய்
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
ஒன்று ஆகி நின்றான் உவந்து.

#5489
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் உண்ணுகின்றேன்
தெள் அமுதம் உள்ளம் தெளியத் தருகின்றான்
வள்ளல் நடராயன் மகிழ்ந்து.

#5490
சித்தி எலாம் தந்தே திரு_அம்பலத்து ஆடும்
நித்தியன் என் உள்ளே நிறைகின்றான் சத்தியம் ஈது
அந்தோ உலகீர் அறியீரோ நீவிர் எலாம்
சந்தோடமாய் இரு-மின் சார்ந்து.

#5491
அய்யா என்று ஓர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
எய்யேன் மகனே என்று எய்துகின்றான் ஐயோ என்
அப்பன் பெரும் கருணை யார்க்கு உண்டு உலகத்தீர்
செப்பமுடன் போற்று-மினோ சேர்ந்து.

#5492
அப்பா என்று ஓர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனே என்று ஆர்கின்றான் துப்பு ஆர்
சடையான் சிற்றம்பலத்தான் தானே தான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து.

#5493
தானே வந்து என் உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
தானே எனக்குத் தருகின்றான் தானே நான்
ஆகப் புரிந்தான் என் அப்பன் பெரும் கருணை
மேகத்திற்கு உண்டோ விளம்பு.

#5494
பாலும் கொடுத்தான் பதி திறக்கும் ஓர் திறவுக்
கோலும் கொடுத்தான் குணம் கொடுத்தான் காலும்
தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
நிலையும் கொடுத்தான் நிறைந்து.

#5495
வெவ் வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
செவ்வை அறிவு இன்பம் சிறந்தனவே எவ்வயினும்
ஆனான் சிற்றம்பலத்தே ஆடுகின்றான் தண் அருளாம்
தேன் நான் உண்டு ஓங்கியது தேர்ந்து.

#5496
வஞ்ச வினை எல்லாம் மடிந்தன வன் மாயை இருள்
அஞ்சி எனை விட்டே அகன்றனவால் எஞ்சல் இலா
இன்பம் எலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
துன்பம் எலாம் போன தொலைந்து.

#5497
அம்மை திரோதை அகன்றாள் எனை விரும்பி
அம்மை அருள் சத்தி அடைந்தனளே இம்மையிலே
மாமாயை நீங்கினள் பொன் வண்ண வடிவுற்றது என்றும்
சாமாறு இலை எனக்கு-தான்.

#5498
நானே தவம் புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
தானே வந்து என்னைத் தடுத்தாண்டான் ஊனே
புகுந்தான் என் உள்ளம் புகுந்தான் உயிரில்
புகுந்தான் கருணை புரிந்து.

#5499
ஒன்றே சிவம் என்று உணர்ந்தேன் உணர்ந்தாங்கு
நின்றே மெய்ஞ்ஞான நிலை பெற்றேன் நன்றே மெய்ச்
சித்தி எலாம் பெற்றேன் திரு_அம்பலத்து ஆடி
பத்தி எலாம் பெற்ற பலன்.

#5500
தூக்கம் கெடுத்தான் சுகம் கொடுத்தான் என் உளத்தே
ஏக்கம் தவிர்த்தான் இருள் அறுத்தான் ஆக்கம் மிகத்
தந்தான் எனை ஈன்ற தந்தையே என்று அழைக்க
வந்தான் என் அப்பன் மகிழ்ந்து.

#5501
வாட்டம் எலாம் தீர்த்தான் மகிழ்வு அளித்தான் மெய்ஞ்ஞான
நாட்டம் எலாம் தந்தான் நலம் கொடுத்தான் ஆட்டம் எலாம்
ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலைப்
பாடுக நீ என்றான் பரன்.

#5502
தான் நான் எனும் பேதம்-தன்னைத் தவிர்த்தான் நான்
ஆனான் சிற்றம்பலவன் அந்தோ நான் வான்_நாடர்
செய்தற்கு அரிய தவம் செய்தேன் மகிழ்கின்றேன்
எய்தற்கு அரிய சுகம் ஏய்ந்து.

#5503
சுத்த வடிவும் சுக வடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்து ஓங்கு சித்து எனும் ஓர்
ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்
தான விளையாட்டு இயற்றத்தான்.

#5504
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி
நான் உரைக்கும் வார்த்தை அன்று நாட்டீர் நான் ஏன் உரைப்பேன்
நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம்
ஊன் நாடி நில்லா உழி.

#5505
ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உரைக்கின்ற
காரணமும் காரியமும் காட்டுவித்தான் தாரணியில்
கண்டேன் களிக்கின்றேன் கங்குல் பகல் அற்ற இடத்து
உண்டேன் அமுதம் உவந்து.

#5506
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்த சிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என் மார்க்கம்
நல் மார்க்கம் என்றே வான்_நாட்டார் புகழ்கின்றார்
மன் மார்க்கத்தாலே மகிழ்ந்து.

#5507
பல் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே சொல் மார்க்கத்து
எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு.

#5508
சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப
நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் ஓதுகின்ற
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தவே பிறர்-தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

#5509
சிந்தாகுலம் தவிர்த்துச் சிற்றம்பலப் பெருமான்
வந்தான் எனைத் தான் வலிந்து அழைத்தே ஐந்தொழிலும்
நீயே செய் என்று எனக்கே நேர்ந்து அளித்தான் என்னுடைய
தாயே_அனையான் தனித்து.

#5510
கூ கா என அடுத்தோர் கூடி அழாத வண்ணம்
சாகா_வரம் எனக்கே தந்திட்டான் ஏகா அ
னேகா என மறைகள் ஏத்தும் சிற்றம்பலத்தான்
மா காதலனாம் மகிழ்ந்து.

#5511
நாடுகின்றது எம் பெருமான் நாட்டம் அதே நான் உலகில்
ஆடுகின்றது எந்தை அருள் ஆட்டம் அதே பாடுகின்ற
பாட்டு எல்லாம் அம்பலவன் பாத_மலர்ப் பாட்டே
நீட்டு எல்லாம் ஆங்கு அவன்றன் நீட்டு.

#5512
சத்தியம் செய்கின்றேன் சகத்தீர் அறி-மின்கள்
சித்தி எலாம் வல்ல சிவம் ஒன்றே நித்தியம் என்று
எண்ணும் எண்ணத்தாலே நம் எண்ணம் எலாம் கைகூடும்
நண்ணும் இன்பத் தேன் என்று நான்.

#5513
நானே தவம் புரிந்தேன் நம் பெருமான் நல் அருளால்
நானே அருள் சித்தி_நாடு அடைந்தேன் நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.

#5514
எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான் காண
இ உலகில் எந்தை எனக்கு அளித்தான் எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம்-தனை அடையச் செய்வித்தே
என் மார்க்கம் காண்பேன் இனி.

#5515
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வது அன்றி
நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே
உற்று இங்கு அறிந்தேன் உவந்து.

#5516
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாகச்
சொன்ன அலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை.

#5517
சாகாத கல்வித் தரம் அறிதல் வேண்டும் என்றும்
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகாத்
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை
நிலை அடைதல் வேண்டும் நிலத்து.

#5518
பொய் உரை என்று எண்ணுதிரேல் போ-மின் புறக்கடையில்
மெய் உரை என்று எண்ணுதிரேல் மேவு-மினோ ஐயன் அருள்
சித்தி எலாம் வல்ல திரு_கூத்து உலவாமல்
இத் தினம் தொட்டு ஆடுகிற்பான் இங்கு.

#5519
வான் வந்த தேவர்களும் மால் அயனும் மற்றவரும்
தான் வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் தேன் வந்த
மங்கை சிவகாமவல்லியொடும் எம் பெருமான்
இங்கு நடம் செய்வான் இனி.

#5520
சத்தி எலாம் கொண்ட தனித் தந்தை நடராயன்
சித்தி எலாம் வல்லான் திருவாளன் நித்தியன் தான்
ஊழி பல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே
வாழி நடம் செய்வான் மகிழ்ந்து.

#5521
இன்று தொடங்கி இங்கே எம் பெருமான் எந்நாளும்
நன்று துலங்க நடம் புரிவான் என்றும் என் சொல்
சத்தியம் என்று எண்ணிச் சகத்தீர் அடை-மின்கள்
நித்தியம் பெற்று உய்யலாம் நீர்.

#5522
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான்
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே
தந்தான் அருள் சிற்சபையப்பா என்று அழைத்தேன்
வந்தான் வந்தான் உள் மகிழ்ந்து.

#5523
செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் இங்கு
எத்தால் முடியும் எனில் எம்மவரே சித்தாம்
அருள்_பெரும்_சோதி அதனால் முடியும்
தெருள் பெரும் சத்தியம் ஈதே.

#5524
இ உலகில் செத்தாரை எல்லாம் எழுக எனில்
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் செவ் உலகில்
சிற்றம்பலத்தான் திரு_அருள் பெற்றார் நோக்கம்
உற்றவரை உற்றவர்கள் உற்று.

#5525
யான் புரிதல் வேண்டும்-கொல் இ உலகில் செத்தாரை
ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் வான் புரிந்த
அம்பலத்தான் நல் அருளால் அந்தோ நான் மேல் போர்த்த
கம்பலத்தால் ஆகும் களித்து.

#5526
என்னே உலகில் இறந்தார் எழுதல் மிக
அன்னே அதிசயம் என்று ஆடுகின்றார் இன்னே
திரு_அம்பலத்தான் திரு_நோக்கம் பெற்றார்க்கு
உருவம் பலத்தே என்று உன்.

#5527
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து இனி இங்கு
என் மார்க்கமும் ஒன்று ஆமே.

#5528
மார்க்கம் எலாம் ஒன்று ஆகும் மா நிலத்தீர் வாய்மை இது
தூக்கம் எலாம் நீக்கித் துணிந்து உளத்தே ஏக்கம் விட்டுச்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடு-மின் சத்தியம் நீர்
நல் மார்க்கம் சேர்வீர் இ நாள்.

#5529
இ நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
நல் நாள் என் வார்த்தைகளை நம்பு-மினோ இ நாள்
அருள்_பெரும்_சோதி அடைகின்ற நாள் மெய்
அருள் பெருஞ் சத்தியம் ஈதாம்.

#5530
ஏமாந்திருக்கும் எமரங்காள் இ உலகில்
சாமாந்தர் ஆகாத் தரம் பெறவே காமாந்த
காரத்தை விட்டுக் கருது-மினோ இ தருணம்
நீர் அத்தைச் சேர்வீர் நிஜம்.

#5531
வீணே பராக்கில் விடாதீர் உமது உளத்தை
நாணே உடைய நமரங்காள் ஊணாகத்
தெள் அமுதம் இன்று எனக்குச் சேர்த்து அளித்தான் சித்தாட
உள்ளிய நாள் ஈது அறி-மின் உற்று.

#5532
போற்றி உரைக்கின்றேன் பொய் என்று இகழாதீர்
நால் திசை-கண் வாழும் நமரங்காள் ஆற்றல் அருள்
அப்பன் வருகின்றான் அருள் விளையாட்டு ஆடுதற்கு என்று
இ புவியில் இத் தருணம் இங்கு.

#5533
ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற
நாள் எதுவோ என்று நலியாதீர் நீள
நினையாதீர் சத்தியம் நான் நேர்ந்து உரைத்தேன் இ நாள்
அனையான் வருகின்றான் ஆய்ந்து.

@130. உலகப்பேறு

#5534.
இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
துன்பால் இறந்தவர் துன்பு அற்றுத் தோன்றினர்
அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
என்-பால் அருள்_பெரும்_சோதியார் எய்தவே.

#5535
பாம்பு எலாம் ஓடின பறவை உள் சார்ந்தன
தீம் பலா வாழை மாத் தென்னை சிறந்தன
ஆம் பலன் மென்மேலும் ஆயின என் உளத்து
ஓம்பல் என் அருள்_பெரும்_சோதியார் ஓங்கவே.

#5536
மலம் கழிந்து உலகவர் வானவர் ஆயினர்
வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர்
நலம் பெறும் அருள்_பெரும்_சோதியார் நண்ணவே.

#5537
முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன் உள சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பன்னு உளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின
என் உளத்து அருள்_பெரும்_சோதியார் எய்தவே.

#5538
இடம் பெற்ற உயிர் எலாம் விடம் அற்று வாழ்ந்தன
மடம் பெற்ற மனிதர்கள் மதி பெற்று வாழ்கின்றார்
திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம்
நடம் பெற்ற அருள்_பெரும்_சோதியார் நண்ணவே.

#5539
அண்டமும் அகிலமும் அருள் அரசாட்சியைக்
கொண்டன ஓங்கின குறை எலாம் தீர்ந்தன
பண்டங்கள் பலித்தன பரிந்து எனது உள்ளத்தில்
எண் தகும் அருள்_பெரும்_சோதியார் எய்தவே.

#5540
குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
பிணங்கள் எலாம் உயிர்பெற்று எழுந்து ஓங்கின
இணங்க அருள்_பெரும்_சோதியார் எய்தவே.

#5541
பத்தர்கள் பாடினர் பணிந்து நின்று ஆடினர்
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
சித்தர்கள் ஆனந்தத் தெள் அமுது உண்டனர்
சுத்த அருள்_பெரும்_சோதியார் தோன்றவே.

#5542
ஏழ்_உலகு அவத்தை விட்டு ஏறினன் மேல் நிலை
ஊழிதோறூழியும் உயிர் தழைத்து ஓங்கினன்
ஆழியான் அயன் முதல் அதிசயித்திட எனுள்
வாழி அருள்_பெரும்_சோதியார் மன்னவே.

#5543
இருள் பெரு மலம் முழுதும் தவிர்ந்து இற்றது
மருள் பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்தன என் உளத்து
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்ததே.

@131. அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்

#5544.
அருள் பெரும் தனிச் சோதி அம்பலத்திலே நடிக்கும்
பொருள் பெரும் திரு_நடம் அது போற்றுவீர் புலவீர்
மருள் பெரும் பகை நீக்கி மெய் வாழ்வு பெற்றிடலாம்
தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே.

#5545
வாரம் செய்த பொன் மன்றிலே நடிக்கும் பொன் அடிக்கே
ஆரம் செய்து அணிந்தவர்க்கு முன் அரி அயன் முதலோர்
வீரம் செல்கிலாது அறி-மினோ வேதம் மேல் ஆணை
ஓரம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் உலகீர்.

#5546
ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்து ஆடும்
சோதி-தன்னையே நினை-மின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேல் ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செலும் வீதி.

#5547
நாதம் சொல்கின்ற திரு_சிற்றம்பலத்திலே நடிக்கும்
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர் என்று அறி-மின்
வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க
வாதம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் மதித்தே.

#5548
துரிய மேல் பர வெளியிலே சுக நடம் புரியும்
பெரியதோர் அருள் சோதியைப் பெறுதலே எவைக்கும்
அரிய பேறு மற்றவை எலாம் எளியவே அறி-மின்
உரிய இ மொழி மறை மொழி சத்தியம் உலகீர்.

#5549
ஆகமாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
பாகமாம் பரவெளி நடம் பரவுவீர் உலகீர்
மோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் உன்னும்
யோக மாந்தர்க்குக் காலம் உண்டாகவே உரைத்தேன்.

#5550
வான_நாடரும் நாட அரும் மன்றிலே வயங்கும்
ஞான நாடகக் காட்சியே நாம் பெறல் வேண்டும்
ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
ஈன நாடகப் பெரியர்காள் வம்-மினோ ஈண்டே.

#5551
சமயம் ஓர் பல கோடியும் சமயங்கள்-தோறும்
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞான சன்மார்க்கத்து
எமையும் உம்மையும் உடையதோர் அம்பலத்து இறையும்
அமைய ஆங்கு அதில் நடம் புரி பதமும் என்று அறி-மின்

#5552
ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவை மேல்
வீறு சேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்தம்
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம் ஒன்றே அன்றி
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.

#5553
கலை இருந்ததோர் திரு_சிற்றம்பலத்திலே கருணை
நிலை இருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
மலை இருந்து என இருப்பிரேல் வம்-மினோ அன்றிக்
கொலை விரும்புவீர் எனில் புறத்து ஏகு-மின் குலைந்தே.

#5554
கதி இருக்கின்ற திரு_சிற்றம்பலத்திலே கருணை
நிதி இருக்கின்றது ஆதலால் நீவீர்கள் எல்லாம்
பதிய இங்ஙனே வம்-மினோ கொலை பயில்வீரேல்
விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே.

#5555
அருள் விளங்கிய திரு_சிற்றம்பலத்திலே அழியாப்
பொருள் விளங்குதல் காண்-மினோ காண்-மினோ புவியீர்
மருள் உளம்கொளும் வாதனை தவிர்ந்து அருள் வலத்தால்
தெருள் விளங்குவீர் ஞான சன்மார்க்கமே தெளி-மின்.

@132. உலகர்க்கு உய்வகை கூறல்

#5556.
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

#5557
ஆறாமல் அவியாமல் அடைந்த கோபத்தீர் அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
மாறாமல் மனம்சென்றவழி சென்று திகைப்பீர் வழி துறை காண்கிலீர் பழிபடும்படிக்கே
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செயக் கடவீர்
ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

#5558
ஆயாமையாலே நீர் ஆதி அனாதி ஆகிய சோதியை அறிந்துகொள்கில்லீர்
மாயாமை பிறவாமை வழி ஒன்றும் உணரீர் மறவாமை நினையாமை வகை சிறிது அறியீர்
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு
ஈயாமை ஒன்றையே இன் துணை என்பீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

#5559
சாமாந்தர் ஆகாத் தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று எனத் தெரியீர்
மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
காமாந்தகாரத்தில் கண் மூடித் திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதாது
ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

#5560
அச்சையும் உடம்பையும் அறி வகை அறியீர் அம்மையும் அப்பனும் ஆர் எனத் தெரியீர்
பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப் பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர்
பிச்சையிட்டு உண்ணவும் பின்படுகின்றீர் பின்படு தீமையின் முன்படுகின்றீர்
இச்சையில் கண் மூடி எச் சுகம் கண்டீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

#5561
வட்டி மேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப் பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

#5562
வன் சொல்லின் அல்லது வாய்திறப்பு அறியீர் வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
முன் சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றீர் வினை மூட்டையைக் கட்டி
மன் சொல்லும் மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழி நடக்கின்றீர் அ மரணத் தீர்ப்புக்கே
என் சொல்ல இருக்கின்றீர் பின் சொல்வது அறியீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

#5563
துன்மார்க்க நடையிடைத் தூங்குகின்றீரே தூக்கத்தை விடுகின்ற துணை ஒன்றும் கருதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர்
என் மார்க்கம் எச் சுகம் யாது நும் வாழ்க்கை எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

#5564
பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இப் பொய் உடல் வீழ்ந்தால்
செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகித் திகைத்திடல் அறியீர்
கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர்
எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

#5565
பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன் மொழி பகருகின்றீரே
நண்ணாத தீ இனம் நண்ணுகின்றீரே நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டுக் கருத அறியீரே
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

@133. புனித குலம் பெறுமாறு புகலல்

#5566.
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனித் தலைவர் ஒருத்தர் அவர்-தாமே
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.

#5567
காடு வெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டுக் கரும்பை விட்டுக் கடு விரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடு விட்டுப் போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே
பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே.

#5568
ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணைபோட அறியீர் அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலகக் கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின்
சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியைச் சார்வதற்கே.

#5569
பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கை_விளக்குப் பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் எனக் களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர்
ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர்
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே.

#5570
எய் வகை சார் மதங்களிலே பொய் வகைச் சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐ வகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர் அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்
உய் வகை என் தனித் தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

#5571
உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்ப_துன்பம் அடுத்தே எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம் புரி என் தனித் தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்ணு-மினோ புண்ணியம் சார்வீரே.

#5572
நரை மரணம் மூப்பு அறியா நல்ல உடம்பினரே நல் குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிடக் காண்கின்றீர்
புரையுறு நும் குலங்கள் எலாம் புழுக் குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே
உரை பெறும் என் தனித் தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே.

#5573
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரைச் சிறிதும் நினையீரோ
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனித் தந்தை வரு தருணம் இதுவே

#5574
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மை அகத்தே உறு மரண வாதனையைத் தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனித் தந்தை இத் தருணம்-தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே.

#5575
கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே
திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும் சித்திபுரம் என ஓங்கும் உத்தர சிற்சபையில்
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனித் தந்தை வருகின்ற தருணம் இது தானே.

@134. மரணமிலாப் பெருவாழ்வு

#5576.
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே.

#5577
புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர்
உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே
மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய்ப் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே
தகுந்த தனிப் பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே.

#5578
பணிந்துபணிந்து அணிந்தணிந்து பாடு-மினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே துரிய முடி அனுபவமே சுத்த சித்தாந்தம்-அதாய்த்
தணிந்த நிலைப் பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மைத் தனிப் பதியே என்று
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே.

#5579
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடை-மின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே.

#5580
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம் எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்பு_உடையீர் வம்-மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடு-மின் அக வடிவு இங்கு அனக வடிவு ஆகிப்
பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே.

#5581
தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளிச் சிறியேனுக்கு அருள் அமுதத் தெளிவு அளித்த திறத்தை
ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருள்_பெரும்_சோதியை ஓர்
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளைப் பெரும் கருணை உடைய பெரும் பதியை
நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்-மின் நீரே.

#5582
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றிக் கொடு மொழி சொல்வேனோ
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றித் தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான்
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்துச் சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த
ஓர்பு உறவே இது நல்ல தருணம் இங்கே வம்-மின் உலகியலீர் உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே.

#5583
விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர்
திரைந்துதிரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்துவரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்-தானே வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர்
கரைந்துகரைந்து உளம் உருகிக் கண்களின் நீர் பெருகிக் கருணை நடக் கடவுளை உள் கருது-மினோ களித்தே.

#5584
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதிக் கடவுள் வரு தருணம்
தெளித்திடும் எத் தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர்
ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே.

#5585
ஆசை உண்டேல் வம்-மின் இங்கே அருள் சோதிப் பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான்
தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரியத் திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே
மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே.

#5586
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதிப் பெரும் பதி என் அப்பன் வரு தருணம்
கடைந்த தனித் திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனைப் போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன்
உடைந்த சமயக் குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்கத் திரு_நெறி பெற்று உவந்தே.

#5587
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்கச் சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு
வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெரு நெறியில் சித்தாடத் திருவுளம்கொண்டு அருளிப் பெரும் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே.

#5588
உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர்
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர்
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்கக்
கண்மை தரும் ஒரு பெரும் சீர்க் கடவுள் எனப் புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே.

#5589
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய்த் தனிப் பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனைத்
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதைச் சிற்சபையில் பெரு வாழ்வைச் சிந்தைசெய்-மின் உலகீர்
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியைப் பெறுவீர் சத்தியம் சொன்னேனே.

#5590
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய்
நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும் நித்த பரிபூரணனைச் சித்த சிகாமணியை
அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியைச்
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே.

#5591
நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை
எந்தையை என் தனித் தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனித் தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்துக் கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே.

#5592
முயன்று உலகில் பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர்
துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்
பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பைப் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

#5593
சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகீர் சூது அறிந்தீர் வாது அறிந்தீர் தூய்மை அறிந்திலிரே
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ
அகம் அறிந்தீர் அனகம் அறிந்து அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம் அடைந்திடு-மின் ஈண்டே
முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே.

#5594
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்-தன் வார்த்தை நம்பு-மினோ நமரங்காள் நல் தருணம் இதுவே
வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே.

#5595
குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர்
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறி-மின்
செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இத் தினமே சத்தியம் சேர்ந்திடுமே.

#5596
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்கத் திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம்
ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா
சார்ந்திடும் அ மரணம்-அதைத் தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்வீரே.

#5597
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணைத் திறத்தான் அங்கு அவனை
மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான்
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்
பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே.

#5598
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலாப் பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே
அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே.

#5599
மற்று அறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர்
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே.

#5600
இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெரு வரம் நீர் ஏன் அடைய மாட்டீர்
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே.

#5601
உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக் காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ
சற்றும் இதைச் சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன்
இற்று இதனைத் தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே.

#5602
சன்மார்க்கப் பெரும் குணத்தார் தம்பதியை என்னைத் தாங்குகின்ற பெரும் பதியைத் தனித்த சபாபதியை
நல் மார்க்கத்து எனை நடத்திச் சன்மார்க்க சங்க நடு இருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனைப்
புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகிப் பொருந்திய மா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொளச் சார்வீரே.

#5603
சார் உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே.

@135. சமாதி வற்புறுத்தல்

#5604.
ஆய் உரைத்த அருள் ஜோதி வருகின்ற தருணம் இதே அறி-மின் என்றே
வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே
நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே.

#5605
இறந்தவர்கள் பலரும் இங்கே எழுகின்ற தருணம் இதே என்று வாய்மை
அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என் வார்த்தைகள் என்று அறைகின்றாரால்
மறந்த சிறியேன் உரைக்க வல்லேனோ எல்லாம் செய் வல்லோய் உன்றன்
சிறந்த திரு_வார்த்தை எனத் தெரிந்திலர் இ மனிதர் மதித் திறமை என்னே.

#5606
சோற்று ஆசையொடு காமச் சேற்று ஆசைப்படுவாரைத் துணிந்து கொல்லக்
கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர்
நேற்று ஆசைப்பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த ஆங்கே
பேற்று ஆசைக்கு அருள் புரியும் ஞான சபாபதிப் புகழைப் பேசுவீரே.

#5607
தொண்டாளப் பணம் தேடும் துறை ஆள உலகு ஆளச் சூழ்ந்த காமப்
பெண்டாளத் திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரைப் பிடிக்க நாளைச்
சண்டாளக் கூற்று வரில் என் புகல்வீர் ஞானசபைத் தலைவன் உம்மைக்
கொண்டு ஆளக் கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே.

#5608
பிறந்தவரை நீராட்டிப் பெருக வளர்த்திடுகின்றீர் பேயரே நீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணம் சம்மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரைத் தீ மூட்ட வல்லீரால் நும் மனத்தை வயிரம் ஆன
சிறந்த வரை எனப் புகழச் செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீரே.

#5609
அணங்கு எழு பேர்_ஓசையொடும் பறை ஓசை பொங்கக் கோர அணி கொண்டு அந்தோ
பிணம் கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர் இனிச் சாகும் பிணங்களே நீர்
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே
எணம் கெழு சாம்பலைக் கண்டீர் அது புன்செய் எருவுக்கும் இயலாது அன்றே.

#5610
குணம் புதைக்க உயிர் அடக்கம் கொண்டது சுட்டால் அது-தான் கொலையாம் என்றே
வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்கச் சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம் புதைக்கச் சம்மதியீர் பணம் புதைக்கச் சம்மதிக்கும் பேயரே நீர்
எணம் புதைக்கத் துயில்வார் நும்-பால் துயிலற்கு அஞ்சுவரே இழுதையீரே.

#5611
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேய் உலகீர் கலை சோர்ந்தாரைப்
பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் சுடுகின்றீர் புதைக்க நேரீர்
சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாது என் சொல்லீர் நும்மைத்
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதி இலை மேல் சூழ்வீர் அன்றே.

#5612
பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் எனப் பகர்கின்றேன் நீர்
சிரம் நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி
உரன் அளிக்க எழுகின்ற திரு_நாள் வந்து அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர்
வரன் அளிக்கப் புதைத்த நிலை காணீரோ கண் கெட்ட மாட்டினீரே.

#5613
புலைத் தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் கரும் கடலில் போக விட்டீர்
கொலைத் தொழிலில் கொடியீர் நீர் செத்தாரைச் சுடுகின்ற கொடுமை நோக்கிக்
கலைத் தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அக் கலக்கம் எலாம் கடவுள் நீக்கித்
தலைத் தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்கப் புரிகுவது இத் தருணம் தானே.

@136. சன்மார்க்க உலகின் ஒருமைநிலை

#5614.
சித்திபுரத்தே தினம்-தோறும் சீர் கொள் அருள்
சத்தி விழா நீடித் தழைத்து ஓங்க எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உறுக மதத்
துள்ளல் ஒழிக தொலைந்து.

#5615
ஒன்றே சிவம் என்று உணர்ந்து இ உலகம் எலாம்
நன்றே ஒருமையுற்று நண்ணியே மன்றே
நடம் புரியும் பாத நளின மலர்க்கு உள்ளம்
இடம் புரிக வாழ்க இசைந்து.

#5616
சிற்சபையும் பொன்_சபையும் சித்தி விளக்கத்தால்
நல் சகம் மேல் நீடூழி நண்ணிடுக சற்சபையோர்
போற்றி வரம் பெற்று வகை பூரிக்க வாழ்ந்திடுக
நால் திசையும் வாழ்க நயந்து.

#5617
அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக நச்சு அரவம்
ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக
நீதிக் கொடி விளங்க நீண்டு.

#5618
கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நல் மார்க்கர் ஆள்க தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து.

#5619
புல்_ஒழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய் ஒழிக
நல்_ஒழுக்கம் ஒன்றே நலம் பெறுக இல் ஒழுக்கில்
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்து மனம்
ஒத்தாராய் வாழ்க உவந்து.

#5620
செத்தார் எழுக சிவமே பொருள் என்றே
இத் தாரணியில் இருந்து ஒளிர்க சுத்த சிவ
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவு அறியாத்
துன்மார்க்கம் போக தொலைந்து.

#5621
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வரச்
சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே சுத்த சிவ
சன்மார்க்க சங்கத் தலைவனே நின் போற்றும்
என் மார்க்கம் நின் மார்க்கமே.

#5622
நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மை சொல
வல்லாரும் என்னை வளர்த்தாரும் எல்லாரும்
நீ என்று இருக்கின்றேன் நின்மலனே நீ பெற்ற
சேய் என்று இருக்கின்றேன் சேர்ந்து.

#5623
ஆட எடுத்தான் என்று அறைகின்றீர் என் தலை மேல்
சூட எடுத்தான் என்று சொல்கின்றேன் நாடு அறிய
இ வழக்கை யார்-பால் இசைத்து அறுத்துக் கொள்கிற்பாம்
கவ்வை அற்ற அம்பலத்தான் கால்.

#5624
நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா_வரம் எனைப் போல் சார்ந்தவரும் தேவா நின்
பேர்_அருளை என் போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை.

@137. திருவடிப் பெருமை

#5625.
திருவாளர் கனகசபைத் திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்குத் திரு_மாலை கொடுத்தார்
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த் துணைவர் அவர்-தம்
பெரு வாய்மைத் திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால்
துருவாமல் இங்கு எனக்குக் கிடைத்ததை என் சொல்வேன் சொல்அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி.

#5626
அருளாளர் பொன் பொதுவில் அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் சிறியேன்
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமைத் திறத்தை எவர் புகல்வார்
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி.

#5627
செம்பவளத் திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதித் தனிப் பிழம்போ செவ் வண்ணத் திரளோ
அம் பதுமத் திரு விளங்கும் அகலத்தான் பிரமன் அரன் முதலோர் ஐவர்களும் அப்பால் நின்றோரும்
எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார்
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி.

#5628
தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனித் தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ
மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர்
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர் தொழக் கனகசபை நடிப்பார் அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறிவார் தோழி.

#5629
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர்
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த
மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல்
நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி.

#5630
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனைத் தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல்
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான்
பொடித் திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி.

#5631
திரு_சிற்றம்பலத்து இன்பத் திரு_உருக் கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும்
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி
உருச்சிக்கும் பரநாதத் தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல்
பெருச் சித்து எல்லாம்_வல்ல நடராஜப் பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி.

#5632
நாத வரை சென்று மறை ஓர் அனந்தம் கோடி நாடி இளைத்து இருந்தன ஆகமங்கள் பரநாத
போத வரை போந்து பல முகம் கொண்டு தேடிப் புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல்
பாத வரை வெண் நீறு படிந்து இலங்கச் சோதிப் படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும்
போது அவரைக் காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி.

#5633
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அப் பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீதத் திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே
புரை கடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர் என் தனித் தலைவர் புனித நடராஜர்
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி.

#5634
ஏய்ப்பு அந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும் இணையில் ஒளி உருவர் என்றும் இயல் அருவர் என்றும்
வாய்ப்பந்தல் இடுதல் அன்றி உண்மை சொல வல்லார் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றிக் காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டாத்
தாய்ப் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி.

#5635
கலைக் கடலைக் கடந்த முனிக் கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது
அலைக் கடலில் துரும்பு ஆகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பது அலால் அவர் வண்ணம் அதுவும்
நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அச் சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே
மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி.

#5636
சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும்
பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அப் பொடி படிந்த படியோ
இதம் மலரும் அப் படி மேல் இருந்தவரோ அவர் பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்கு முத்தர் என்றால்
நிதம் மலரும் நடராஜப் பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி.

#5637
சுத்தமுற்ற ஐம்பூத வெளி கரண வெளி மேல் துலங்கு வெளி துரிய வெளி சுக வெளியே முதலாம்
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி என்கின்றார் என்றால் அ வெளியில்
நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர்
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி.

#5638
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால்
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார்
தோற்றும் அந்தத் தத்துவமும் தோற்றாத் தத்துவமும் துரிசாக அவை கடந்த சுக சொருபம் ஆகி
மாற்ற மனம் உணர்வு செல்லாத் தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி.

#5639
நாதம் மட்டும் சென்றனம் மேல் செல்ல வழி அறியேம் நவின்ற பர விந்து மட்டும் நாடினம் மேல் அறியேம்
ஏதம் இலாப் பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனிச் செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே
ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம்
ஓத நின்ற திரு_நடனப் பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி.

#5640
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணாத் தோற்று சத்தி பல கோடித் தொகை உரைக்க முடியா
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அச் சத்திகளைக் கூட்டி
ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால்
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி.

#5641
தோற்றம் ஒன்றே வடிவு ஒன்று வண்ணம் ஒன்று விளங்கும் சோதி ஒன்று மற்று அதனில் துலங்கும் இயல் ஒன்று
ஆற்ற அதில் பரமாய அணு ஒன்று பகுதி அது ஒன்று பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று
ஏற்றம் மிக்க அக் கருவுள் சத்தி ஒன்று சத்திக்கு இறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால்
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி.

#5642
ஒருமை பெறு தோற்றம் ஒன்று தத்துவம் பல் வேறு ஒன்றின் இயல் ஒன்றிடத்தே உற்றில இங்கு இவற்றை
இருமையினும் மும்மை முதல் எழுமையினும் கூட்டி இலங்கிய சிற்சத்தி நடு இரண்டு ஒன்று என்னாத
பெருமை பெற்று விளங்க அதின் நடு அருள் நின்று இலங்கப் பெரிய அருள் நடு நின்று துரிய நடம் புரியும்
அருமை எவர் கண்டுகொள்வர் அவர் பெருமை அவரே அறியாரே என்னடி நீ அறைந்த வண்ணம் தோழி.

#5643
படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம்
புடைத்த அவை புகுந்து உலவும் புரம் ஒன்று அப் புரத்தில் பூபதி ஒன்று அவர்க்கு உணர்த்தும் பூரண சித்து ஒன்று
மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே
அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி.

#5644
சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரணக் கரு அச் சினைக் கருவில் சிறிது
வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிகச் சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில்
தெருட்டுகின்ற சத்தி மிகச் சிறிது அதனில் கோடித் திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி.

#5645
நான்முகர்கள் மிகப் பெரியர் ஆங்கு அவரில் பெரியர் நாரணர்கள் மற்று அவரின் நாடின் மிகப் பெரியர்
வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர்
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிகப் பெரிது பரை அதனில் மிகப் பெரியள் அவளின்
ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி.

#5646
மண் அனந்தம் கோடி அளவு உடையது நீர் அதனில் வயங்கிய நூற்றொரு கோடி மேல் அதிகம் வன்னி
எண்ணிய ஆயிரம் அயுதம் கோடியின் மேல் இலக்கம் எண்பத்துநான்கு அதின் மேல் அதிகம் வளியொடு வான்
விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம்
அண்ணல் அடிச் சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி.

#5647
மண் ஆதி ஐம்பூத வகை இரண்டின் ஒன்று வடிவு வண்ணம் இயற்கை ஒரு வால் அணுச் சத்து இயலாய்க்
கண் என்னும் உணர்ச்சி சொலாக் காட்சியவாய்க் நிற்பக் கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில்
நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவம் ஆகி மூலத்தின் நவின்ற சத்திக்கு எல்லாம்
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடிப் பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி.

#5648
மண் பூத முதல் சத்தி வால் அணுவில் அணுவாய் மதித்த அதன் உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய்
எண் பூதத்து அ ஒளிக்குள் இலங்கு வெளியாய் அ இயல் வெளிக்குள் ஒரு வெளியாய் இருந்த வெளி நடுவே
பண் பூத நடம் புரியும் பதப் பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல்
நண்பு ஊற வைத்து அருளும் நடராஜப் பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி.

#5649
வண் கலப்பில் சந்தி செயும் சத்தியுளே ஒருமை வயங்கு ஒளி மா சத்தி அதனுள் ஒரு காரணமாம்
விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குருச் சத்தி அதின் மெய்ம்மை வடிவான
எண்_குணமா சத்தி இந்தச் சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும்
தண் கருணைத் திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி.

#5650
பெரிய எனப் புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
உரிய பெரும் பகுதியும் அப் பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில்
துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி.

#5651
பொன் வண்ணப் பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமாக் கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை
தன் வண்ணப் பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய்த் தனித்து அதற்கு ஓர் முதலாய்
மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணுக் கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும்
மின் வண்ணத் திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி.

#5652
பொற்பு உடைய ஐங்கருவுக்கு ஆதார கரணம் புகன்ற அறு கோடி அவைக்கு ஆறு இலக்கம் அவற்றுக்கு
அற்புறும் ஓர் அறுபதினாயிரம் அவற்றுக்கு அடை ஆறாயிரம் ஆங்கு அவற்றுக்கு ஓர் அறுநூறு இங்கு இவைக்கே
வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய்ச்
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி.

#5653
ஏற்றமுறும் ஐங்கருவுக்கு இயல் பகுதிக் கரணம் எழு கோடி ஈங்கு இவற்றுக்கு ஏழ் இலக்கம் இவைக்கே
தோற்றமுறும் எழுபதினாயிரம் இவற்றுக்கு எழுமை துன்னிய நூறு இவற்றினுக்குச் சொல்லும் எழுபது-தான்
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இக் கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்திச்
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவைப் பயன் உண்டாக்கும் சாமி திரு_அடிப் பெருமை சாற்றுவது ஆர் தோழி.

#5654
விளங்கிய ஐங்கருச் சத்தி ஓர் அனந்தம் கருவில் விளைகின்ற சத்திகள் ஓர் அனந்தம் விளைவு எல்லாம்
வளம் பெறவே தருகின்ற சத்திகள் ஓர் அனந்தம் மாண்பு அடையத் தருவிக்கும் சத்திகள் ஓர் அனந்தம்
உளம்கொள நின்று அதிட்டிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் ஓங்கிய இச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடிப் பெருமை சாற்றுவது ஆர் தோழி.

#5655
காணுகின்ற ஐங்கருவின் வித்தின் இயல் பலவும் கருதுறும் அங்குரத்தின் இயல் பற்பலவும் அடியின்
மாணுகின்ற இயல்கள் பல பலப்பலவும் நடுவில் மன்னும் இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
பூணும் இயல் அனந்த வகை புரிந்த பலபலவும் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையும் தான் ஆகி
ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணைப் பதப் பெருமை இயம்புவது ஆர் தோழி.

#5656
மண் முதலாம் தத்துவத்தின் தன்மை பல கோடி வயங்கு சத்திக் கூட்டத்தால் வந்தன ஓர் அனந்தம்
பண்ணுறும் அத் தன்மையுளே திண்மை ஒரு கோடி பலித்த சத்திக் கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம்
எண்ணுறும் இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனி நின்று இலங்க நிலை புரிந்தே
விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடிப் பெருமை விளம்புவது ஆர் தோழி.

#5657
விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூக்
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும்
பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய்ப் பிரிவு இலவாய்ப் பிரிவு உளவாய்ப் பிறங்கி உடல் கரணம்
நண்ணிடத் தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடிப் பெருமை சொல்லுவது ஆர் தோழி.

#5658
வண் பூவில் வடிவு பல வண்ணங்கள் பல மேல் மதிக்கும் இயல் பல ஒளியின் வாய்மை பல ஒளிக்குள்
நண்பு ஊறும் சத்தி பல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பல நாத நடுவணை ஓர் கலையில்
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகிப் பொதுவில்
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடிச் சீர் கழறுவது ஆர் தோழி.

#5659
ஓங்கிய ஐம்பூ இவைக்குள் ஒன்றின் ஒன்று திண்மை உற்றன மற்று அதுஅதுவும் பற்றுவன பற்றத்
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையாத் தன்மை புரிந்து ஆங்காங்குத் தனித்தனி நின்று இலங்கித்
தேங்கிய போது அவை கலையச் செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய்த் திறவில் ஒளி வெளியில்
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி.

#5660
விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகிப்
பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியாப் பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய்த்
தெரிந்திடு நால் நிலைக்குள்ளே இருந்து வெளிப்படவும் செய்கை பல புரிகின்ற திறல் உடைத்தார் அகம் மேல்
எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி.

#5661
தோன்றிய ஐங்கருவினிலே சொல்ல அரும் ஓர் இயற்கைத் துலங்கும் அதில் பல கோடிக் குலம்கொள் குருத் துவிகள்
ஆன்று விளங்கிடும் அவற்றின் அசலை பல கோடி அமைந்திடும் மற்று அவைகளுளே அமலைகள் ஓர் அனந்தம்
ஏன்று நிறைந்திடும் அவற்றில் கணிப்பதனுக்கு அரிதாய் இலங்கு பிரகாசிகள் தாம் இருந்தன மற்று இவற்றில்
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடிப் பெருமை உரைப்பவர் ஆர் தோழி.

#5662
உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே
நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே
குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உறப் புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே
மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி.

#5663
சூழ்ந்திடும் ஐங்கருவினிலே சொருப சத்தி பேதம் சொல்லினொடு மனம் கடந்த எல்லை இலாதனவே
தாழ்ந்திலவாய் அவை அவையும் தனித்தனி நின்று இலங்கத் தகும் அவைக்குள் நவ விளக்கம் தரித்து அந்த விளக்கம்
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுறப் புரிந்து மதிக்கும் அந்தச் சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி
ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடிப் பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி.

#5664
பசு நிறத்த ஐங்கருவில் பகர்ந்த சுவைத் தன்மை பற்பல கோடிகளாம் அ உற்பவ சத்திகளில்
வசு நிறத்த விவித நவ சத்தி பல கோடி வயங்கும் அவைக்குள் ஆதி வயங்குவள் அ ஆதி
தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனிப் பரை சார்ந்திடுவள்
திசை நிறத்தப் பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவைச் செப்புவது ஆர் தோழி.

#5665
பூத்த சுடர்ப் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிகக் காய்த்து மதி அமுது ஒழுகப் பழுத்து
மாத் தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள்
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்று உணர்ந்தோர் இயம்பிடில் இச் சிறியேன்
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடிப் பெருமையை என் சொல்லுவது தோழி.

#5666
வளம் பெறு விண் அணுக்குள் ஒரு மதி இரவி அழலாய் வயங்கிய தாரகையாய் இவ்வகை அனைத்தும் தோற்றும்
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகித் தனித்த சத்திமான் ஆகித் தத்துவம் எல்லாம் போய்
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடிச் சீர் உரைப்பவர் எவ்வுலகில்
அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி.

#5667
பரவிய ஐங்கருவினிலே பருவ சத்தி வயத்தே பரை அதிட்டித்திட நாத விந்து மயக்கத்தே
விரவிய தத்துவ அணுக்கள் ஒன்றொடொன்றாய் ஒன்றி விளங்க அவற்று அடி நடு ஈறு இவற்றினில் மூவிதமாய்
உர இயலுற்று உயிர் இயக்கி அறிவை அறிவித்தே ஓங்கு திரு_அம்பலத்தில் ஒளி நடனம் புரியும்
தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி.

#5668
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகிச் சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி
ஆதி நடு அந்தம் இலா ஆனந்த உருவாய் அம்பலத்தே ஆடுகின்ற அடி_இணையின் பெருமை
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி.

#5669
பூ ஒன்றே முப் பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய்ப் பூத்து மலர்ந்திடவும்
நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில்
மேவு ஒன்றா இருப்ப அதின் நடு நின்று ஞான வியன் நடனம் புரிகின்ற விரை மலர்ச் சேவடியின்
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி.

@138. தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்

#5670.
அன்னப் பார்ப்பால் அழகாம் நிலையூடே அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர்
துன்னப் பார்த்து என் உயிர்_தோழியும் நானும் சூதாடுகின்ற அச் சூழலில் வந்தே
உன்னைப் பார்த்து உன் உள்ளே என்னைப் பாராதே ஊரைப் பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே
என்னைப் பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

#5671
அது பாவக முகத்து ஆனந்த நாட்டில் அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர்
விது பாவக முகத் தோழியும் நானும் மெய்ப் பாவனை செய்யும் வேளையில் வந்து
பொது பாவனை செய்யப் போகாதோ பெண்ணே பொய்ப் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ
இது பாவம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

#5672
அறம் காதல் செய்தேனை ஆண்டுகொண்டு இங்கே அருள்_பெரும்_சோதியாய் ஆடும் அழகர்
உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால்
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

#5673
அ நாள் வந்து என்றனை ஆண்டு அருள்செய்த அய்யர் அமுதர் என் அன்பர் அழகர்
நல் நாள் கழிக்கின்ற நங்கையரோடு நான் அம்பலம் பாடி நண்ணுறும் போது
பின்_நாள் என்று எண்ணிப் பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதிப் பெரு மணம் செய் நாள்
இ நாளே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

#5674
தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர்
ஒப்பு ஓத ஒண்ணாத மெய்ப் போத மன்றின் உண்மையைப் பாடி நான் அண்மையில் நின்றேன்
அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புறக் கூடல்
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

#5675
மெய்க் குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
இக் குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது
பொய்க் குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான்
எக் குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

#5676
வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர்
சம்மத மா மடவார்களும் நானும் தத்துவம் பேசிக்கொண்டு ஒத்துறும் போது
இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான்
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

#5677
பாரொடு விண்ணும் படைத்த பண்பாளர் பற்று அம்பலத்தார் சொல் சிற்றம்பலத்தார்
வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே
ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

#5678
மறப்பு அற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மலப் பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர்
சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடிச் செல்கின்ற போது
புறப் பற்று அகற்றத் தொடங்காதே பெண்ணே புலை அகப் பற்றை அறுத்தாய் நினக்கே
இறப்பு அற்றது என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

#5679
ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர்
தேறு அறிவு ஆகிச் சிவானுபவத்தே சின்மயமாய் நான் திளைக்கின்ற போது
மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

@139. நற்றாய் செவிலிக்குக் கூறல்

#5680.
உணர்ந்தவர்-தமக்கும் உணர்வு அரியான் என் உள்ளகத்து அமர்ந்தனன் என்றாள்
அணிந்தனன் எனக்கே அருள் மண_மாலை அதிசயம் அதிசயம் என்றாள்
துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள்
புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்துப் பொங்கினாள் நான் பெற்ற பொன்னே.

#5681
தனிப் பெரும் பதியே என் பதி ஆகத் தவம் எது புரிந்ததோ என்றாள்
அனித்தம் நீத்து எனை-தான் அன்பினால் அணைத்தான் அதிசயம் அதிசயம் என்றாள்
இனித் துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள்
சனிப் பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்புத் ததும்பினாள் நான் பெற்ற தனியே.

#5682
புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான் செய் புண்ணியம் புகல் அரிது என்றாள்
தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ என்றாள்
எண்ணிய அனைத்தும் ஈந்து அருள்கின்றான் என்னையோ என்னையோ என்றாள்
அண்ணிய பேர்_ஆனந்தமே வடிவம் ஆயினாள் நான் பெற்ற அணங்கே.

#5683
சத்திய ஞான சபாபதி எனக்கே தனிப் பதி ஆயினான் என்றாள்
நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள்
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்திப் பேறு எலாம் என் வசத்து என்றாள்
எத்திசையீரும் ஒத்து இவண் வருக என்றனள் எனது மெல்_இயலே.

#5684
திரு_மணிப் பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள்
பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தைப் பேசுதல் அரிதரிது என்றாள்
இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள்
மரு மலர் முகத்தே இள_நகை துளும்ப வயங்கினாள் நான் பெற்ற மகளே.

#5685
வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இது-தான் மாலையோ காலையோ என்றாள்
எள்ளலைத் தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள்
தெள் அமுது அருந்தி அழிவு இலா உடம்பும் சித்தியும் பெற்றனன் என்றாள்
துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே.

#5686
கனக மா மன்றில் நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள்
அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள்
தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செயத் தந்தனன் என்றாள்
தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே.

#5687
கொடிப் பெரு மணிப் பொன் கோயில் என் உளமாக் கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள்
கடிப் புது மலர்ப் பூங் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள்
ஒடிப்பு அற எல்லாம்_வல்லதோர் சித்தாம் ஒளி எனக்கு அளித்தனன் என்றாள்
இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே.

#5688
வாழி மா மணி மன்று இறைவனே எனக்கு மாலை வந்து அணிந்தனன் என்றாள்
ஊழிதோறூழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன் என்றாள்
ஆழி சூழ் உலகோடு அண்டங்கள் அனைத்தும் அளிக்க என்று அருளினான் என்றாள்
ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே.

#5689
ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள்
பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள்
சாலும் எவ்வுலகும் தழைக்க என்றனக்கே சத்தியை அளித்தனன் என்றாள்
மேலும் எக்காலும் அழிவு_இலேன் என்றாள் மிகு களிப்புற்றனள் வியந்தே.

@140. தோழிக் குரிமை கிளத்தல்

#5690.
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடிய மந்திரங்கள் சில கூடி உரையிடவே
வியந்து மற்றைத் தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி
வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடிப் பணிக்கே பதித்த குடி அறியே.

#5691
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நங்கை நினைக் கண்டிடவே நாடி மற்றைத் தலைவர்
வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி
வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும்
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடிப் பணிக்கே பதித்த குடி அறியே.

#5692
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றைத் தலைவர்-தமைக் கண்ட பொழுது எனினும்
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி
வயம் தரும் இ அண்ட பகிரண்டம் மட்டோ நாத வரையோ அப்பாலும் உள மா நாட்டார்-தமக்கும்
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடிப் பணிக்கே பதித்த குடி அறியே.

#5693
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்குக் கணவர் எனினும் பிறரைக் கண்ட பொழுது எனினும்
நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி
ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலைத் தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும்
நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடிப் பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே.

#5694
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி
மடங்கு சமயத் தலைவர் மதத் தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மாத் தலைவர்களுக்கும்
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடிப் பணிக்கு என்றே அமைத்த குடி அறியே.

#5695
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மதத் தலைமை பதத் தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால்
இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே.

#5696
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிடக் கேட்டேன்
தவ_மயத்தார் பல சமயத் தலைவர் மதத் தலைவர் தத்துவர் தத்துவத் தலைவர் அவர் தலைவர் தலைவர்
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி
நவ மயம் நீ உணர்ந்து அறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை நின் ஐயம் அற நான் புகல்வேன் கேளே.

#5697
ஒளி ஒன்றே அண்ட பகிரண்டம் எலாம் விளங்கி ஓங்குகின்றது அன்றி அண்ட பகிரண்டங்களிலும்
வெளி நின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்பும் அகப்புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே.

#5698
ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில்
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களைக் கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளைத்
தேற்றம் மிகு தண்ணீரைச் சீவர்கள் பற்பலரைச் செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும்
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி.

#5699
பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே
பிரமம் எனப் பிறர்க்கு உரைத்துப் பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல்
உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே.

#5700
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய்
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனிப் பொருளாம்
சிரம் உறும் ஓர் பொது உண்மைச் சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே.

#5701
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ
துலங்கும் அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ சொல் அளவோ பொருள் அளவோ துன்னும் அறிவு அளவோ
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேல் நிலை என்று அந்தம் எலாம் விளம்புகின்றது அன்றி
வலம்கொளும் அ மேல் நிலையின் உண்மை எது என்றால் மவுனம்சாதிப்பது அன்றி வாய் திறப்பது இலையே.

#5702
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும்
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண்
மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும்
ஆய பெருவெளி-தனிலே அடங்கும் இது மட்டே அளப்பது ஒருவாறு அதன் மேல் அளப்பது அரிது அரிதே.

#5703
கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேர்_அளவை கிளந்திடும் மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை
விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடும் காலம் மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திடக் கண்டாரே அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்_இலையே
துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளி வரையேனும் துணிந்து அளக்கப்படுமோ.

@141. தலைவி கூறல்

#5704.
தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார்
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே
வந்தே இங்கு அமர்ந்து அருள்வர் ஆதலினால் விரைந்தே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
சந்தேகம் இல்லை என்றன் தனித் தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

#5705
நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி
என்பாட்டுக்கு இருந்தேனை வலிந்து கலந்து அணைந்தே இன்பமுறத் தனி மாலையிட்ட நடத்து இறைவர்
முன் பாட்டுக் காலையிலே வருகுவர் மாளிகையை முழுதும் அலங்கரித்திடுக ஐயுறவோடு ஒரு நீ
தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

#5706
முன் பாட்டுக் காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக
பின்பாட்டுக் காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில்
துன் பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையைச் சூழ அலங்கரிப்பாய்
தன் பாட்டுத் திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

#5707
உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயைக்
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்தக் காலையிலாம் கண்டாய்
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப நன்கு புனைந்து அலங்கரிப்பாய் நான் மொழிந்த மொழியைத்
தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

#5708
என்னுடைய தனிக் கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார்
உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் உலம்புதல் கேட்டு ஐயமுறேல் ஓங்கிய மாளிகையைத்
துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில்
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே

#5709
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை
இன்ன உலகினர் அறியார் ஆதலினால் பலவே இயம்புகின்றார் இயம்புக நம் தலைவர் வரு தருணம்
மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல்
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

#5710
கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக் கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனித் தலைவர்
அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே
இளைவு அடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப இனிது புனைந்து அலங்கரிப்பாய் காலை இது கண்டாய்
தளர்வு அறச் சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

#5711
ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார்
பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய்
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே
தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

#5712
ஐயர் எனக்கு உள் இருந்து இங்கு அறிவித்த வரத்தை யார் அறிவார் நான் அறிவேன் அவர் அறிவார் அல்லால்
பொய் உலகர் அறிவாரோ புல்_அறிவால் பலவே புகல்கின்றார் அது கேட்டுப் புந்தி மயக்கு அடையேல்
மெய்யர் எனை ஆளுடையார் வருகின்ற தருணம் மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

#5713
உடையவர் என் உளத்து இருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
இடை புகல்கின்றார் அது கேட்டு ஐயமுறேல் இங்கே இரவு விடிந்தது காலை எய்தியதால் இனியே
அடைவுற நம் தனித் தலைவர் தடை அற வந்து அருள்வர் அணிபெற மாளிகையை விரைந்து அலங்கரித்து மகிழ்க
சடை அசையப் பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

@142. அனுபவ மாலை

#5714.
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன்
எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தைத் தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே
வம்பு இசைத்தேன் அன்றடி நீ என் அருகே இருந்து உன் மணி நாசி அடைப்பதனைத் திறந்து முகந்து அறி காண்
நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே.

#5715
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும்
எண் அடங்காப் பெரும் ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு_பகல் காணாது இன்புறச்செய்கின்றார்
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது
பெண் உறங்காள் எனத் தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே.

#5716
எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ
நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே
பல்லாரில் இவள் புரிந்த பெரும் தவத்தை நம்மால் பகர்வ அரிது என்கின்றார் சிற்பதியில் நடம் புரியும்
வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கு இவளே வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே.

#5717
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி
எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே
பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரைப் பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன்
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விடத் துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே.

#5718
வஞ்சம் இலாத் தலைவருக்கே மாலை மகிழ்ந்து அணிந்தேன் மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத்து உரைக்கும்
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய்
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார்
பஞ்சு அடிப் பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே.

#5719
அன்னம் உண அழைக்கின்றாய் தோழி இங்கே நான்-தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடி_மலர்த் தேன்
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமைப் பெரும் தலைவருடைய அருள் புகழாம்
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனிக் கணவர் உருக் காட்சி எனும் ஓர்
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே.

#5720
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடிப் பொன் பெறும் என்று உரைப்பார்
இதுவரையோ பல கோடி என்னினும் ஓர் அளவோ எண்_இறந்த அண்ட வகை எத்தனை கோடிகளும்
சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
துதி பெறும் அத் திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே.

#5721
கண் கலந்த கணவர் எனைக் கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும்
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன்
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினைத் துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம்
உண் கலந்த ஆனந்தப் பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்கக் கற்றது காண் தோழி.

#5722
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே
ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன்
தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்கக் கலந்தது எனச் செப்பினும் சாலாதே
ஈடு அறியாச் சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே.

#5723
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான்
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே
பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே
நல் பூதி அணிந்த திரு_வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே.

#5724
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன்
என்னடி இத் திரு_மேனி இருந்த வண்ணம் தோழி என் புகல்வேன் மதி இரவி இலங்கும் அங்கியுடனே
மின்னும் ஒன்றாய்க் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே
அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ.

#5725
கள் உண்டாள் எனப் புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான்
எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர்
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய்
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்துக் கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே.

#5726
காரிகை நீ என்னுடனே காண வருவாயோ கனகசபை நடு நின்ற கணவர் வடிவழகை
ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கிப்
பார் இகவாது இன்றளவும் மிக எழுதிஎழுதிப் பார்க்கின்ற முடிவு ஒன்றும் பார்த்தது இலை அம்மா.

#5727
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே
உள் நாடிப் பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே.

#5728
கற்பூரம் கொணர்ந்திடுக தனித் தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம்
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடித் தாமரைக் கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண்
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ
இல் பூவை அ அடிக்குக் கண்ணாறு கழித்தால் எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே.

#5729
மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும்
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே
தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ
உனை அணைந்தால் இவ்வாறு நான் கேட்பேன் அப்போது உன் அறிவும் என் அறிவும் ஓர் அறிவாம் காணே.

#5730
தாழ் குழலாய் எனைச் சற்றே தனிக்க விட்டால் ஞானசபைத் தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான்
வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால்
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே.

#5731
தனித் தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி
இனித்த சுவைத் திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புறக் கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே
மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும்
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடித் தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே.

#5732
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக
குணவாளர் அணையும் மலர்_அணை அகத்தை நானே குலவு மணி_விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
தணவாத சுகம் தரும் என் தனிக் கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
அணவாத மனத்தவரைப் புறப் பணிக்கே விடுக அன்பு_உடையார்களுக்கு இடுக அகப் பணி செய்திடவே.

#5733
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம்
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரைக் கமுகு தெங்கிளநீர் எனைப் பலவும் புனைக
கரும்பு நெல்லின் முளை நிறை நீர்க் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக
இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே.

#5734
பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாடப் பக்கம் எலாம் புனைக
அதிக நலம் பெறு பளிக்கு மணி மேடை நடுவே அணையை அலங்கரித்திட நான் புகுகின்றேன் விரைந்தே
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே
புதிய நவமணி குயின்ற ஆசனங்கள் இடுக புண்ணியனார் நல் வரவை எண்ணிஎண்ணி இனிதே.

#5735
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி
இன்று ஆர உண்டது என இனித்தினித்துப் பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி
இன்று ஆவி_அன்னவரைக் கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ.

#5736
கூடிய என் தனிக் கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான்
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரைக் கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ.

#5737
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரம் ஆயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும்
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய்
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே.

#5738
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார்
பொன் அணி பொன்_சபையாளர் சிற்சபையார் என்னைப் புறம் புணர்ந்தார் அகம் புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ
மன்னுறும் என் தனித் தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே.

#5739
தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய்
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனைப் புணர்ந்த திரு_கணவர் அவர்-தம்
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே
எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே.

#5740
எல்லாமும் செய வல்ல தனித் தலைவர் பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெரும் சோதியினார்
நல்லாய் நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய நண்ணி எனை மணம் புரிந்தார் புண்ணியனார் அதனால்
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெரும் செல்வம் என் புகல்வேன் அம்மா
செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞானப் பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே.

#5741
வான் கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து வருந்துகின்றார் அந்தோ
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன்
கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறைவு இலையேல் அண்ட கோடி எலாம் தனிப் பெரும் செங்கோல் நடத்தும் இறைவர்
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனித் தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே.

#5742
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர் போல் புகல் மறையும் ஆகமமும் புலம்புகின்றது அம்மா
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே.

#5743
ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன்
தேன்குழல் இங்கு இனி எனக்குப் பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
ஏங்கல் அற நீ அவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடற்கே.

#5744
ஐயர் எனை ஆளுடையார் அரும் பெரும் சோதியினார் அம்பலத்தே நடம் புரியும் ஆனந்த வடிவர்
மெய்யர் எனை மணம் புரிந்த தனிக் கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என்
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பு அரிதாம் அதுவே.

#5745
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர்
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான்
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே.

#5746
இ உலகில் எனை_போல்வார் ஓர் அனந்தம் கோடி என்னில் உயர்ந்து இருக்கின்றார் எத்தனையோ கோடி
அ உலகில் சிறந்துநின்றார் அளவு_இறந்த கோடி அத்தனை பேர்களும் அந்தோ நித்தம் வருந்திடவும்
எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார்
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே.

#5747
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்குத் திரு_மாலை கொடுத்தார்
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த் துணைவர் அவர்-தம்
பெரு வாய்மைத் திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன்
துருவாத எனக்கு இங்கே அருள் நினைக்கும்-தோறும் சொல்லளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி.

#5748
அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான்
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமைத் திறத்தை எவர் புகல்வார்
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ
இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி.

#5749
செம்பவளத் திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகதத் திரளோ செழும் நீலப் பொருப்போ
பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ணப் பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே
எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார்
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபைத் தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி.

#5750
தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ
மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனித் தலைவர்-தம் இயலை உணர்ந்தார்
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர் தொழச் சிற்சபையில் நடிப்பார் அவர் பெருமை அவர் அறிவர் அவரும் அறிந்திலரே.

#5751
திரு_சிற்றம்பலத்து இன்பத் திரு_உருக் கொண்டு இன்பத் திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய்
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகிப்
பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகிப் பயன் ஆகிப் பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே.

#5752
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனைத் தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல்
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான்
பொடித் திரு_மேனியர் அவரைப் புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ.

#5753
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனிப் பதி வயங்கு கனக_சபாபதி வான்
பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும்
அன்னியம் அல்லாது அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் அருள் செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே.

#5754
என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய்
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே
மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே.

#5755
பார் முதலாப் பரநாதப் பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனிச் செங்கோல் ஓங்க நடக்கின்ற
சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே
ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம்
ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே.

#5756
நாதாந்த வரையும் எங்கள் நாயகனார் செங்கோல் நடக்கின்றது என்கின்றார் நாதாந்தம் மட்டோ
போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்தப் பதியும் புகல்கின்றார் புகலும்
வேதாந்த வெளியும் மிகு சித்தாந்த வெளியும் விளங்கும் இவற்று அப்பாலும் அதன் மேல் அப்பாலும்
வாதாந்தத்து-அதன் மேலும் அதன் மேல் அப்பாலும் மன்று ஆடி அருள் செங்கோல் சென்று ஆடல் அறியே.

#5757
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய்
பண்ணுறும் என் தனிக் கணவர் கூத்து ஆடும் சபையைப் பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே
அண்ணுறும் அத் திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.

#5758
கூசுகின்றது என்னடி நான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
ஏசுகின்றார் ஆரடியோ அண்ட பகிரண்டத்து இருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே
வீசுகின்ற பெரும் சோதித் திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே.

#5759
குலம்_அறியார் புலம்_அறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள்
அலகு_அறியாத் திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும்
விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.

#5760
கொடி_இடைப் பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமைக் குறித்தாய்
படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம்
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள்
கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக் கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே.

#5761
இன்ப வடிவம் தருதற்கு இறைவர் வருகின்றார் எல்லாம் செய் வல்ல சித்தர் இங்கு வருகின்றார்
அன்பர் உளத்தே இனிக்கும் அமுதர் வருகின்றார் அம்பலத்தே நடம் புரியும் ஐயர் வருகின்றார்
என்பு உருப் பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா
துன்பம் அறத் திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனைச் சூழ்ந்தே.

#5762
துரிய பதம் கடந்த பெரும் சோதி வருகின்றார் சுக வடிவம் தர உயிர்க்குத் துணைவர் வருகின்றார்
பெரிய பிரமாதியர்க்கும் அரியர் வருகின்றார் பித்தர் என மறை புகலும் சித்தர் வருகின்றார்
இரிவு அகல் சிற்சபை நடம் செய் இறைவர் வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டுக் களித்திடுவாய் உள வாட்டம் அறவே.

#5763
ஈசர் எனது உயிர்த் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான்
ஏசு அறவே அகத்து இருந்தால் என் எனக் கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே
ஆசை வெட்கம் அறியாது நான் அவரைத் தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார்
கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ.

#5764
அரசு வருகின்றது என்றே அறைகின்றேன் நீ-தான் ஐயமுறேல் உற்றுக் கேள் அசையாது தோழி
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான்
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க
பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்குப் பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே.

#5765
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி
வாழ் வகை என் கணவர்-தமைப் புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழிப் படையாள்
ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரைக்
கேழ் வகையில் அகம் புணர்ந்தேன் அவர் கருணை அமுதம் கிடைத்தது நான் ஆண்_மகன் ஆகின்றது அதிசயமோ.

#5766
துடி ஏறும் இடை உனக்கு வந்த இறுமாப்பு என் சொல் என்றாய் அரி பிரமர் சுரர் முனிவர் முதலோர்
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படிக் கீழ் நிற்பது பெற்று அப் பரிசு நினைந்தே
இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின்
படி ஏறித் தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே.

#5767
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான்
காற்று அறியாத் தீபம் போல் இருந்திடும் அத் தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம்
தோற்று அறியாப் பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான்
மாற்று அறியாப் பொன் ஒளியோ அ ஒளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே.

#5768
நடம் புரிவார் திரு_மேனி வண்ணம் அதை நான் போய் நன்கு அறிந்து வந்து உனக்கு நவில்வேன் என்கின்றாய்
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள்
திடம்பட நாம் தெரிதும் எனச் சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.

#5769
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய்ப் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர்
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும்
மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே.

#5770
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய்ப் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனித் தலைவர்
திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே
வருத்தமுறேல் இனிச் சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்கக்
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி.

#5771
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய்ச் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர்
இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர
எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன்
சுமை அறியாப் பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி.

#5772
ஐயமுற்றார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் அம்பலத்தே திரு_நடம் கண்டு அகம் களிக்கும் போது
மை அகத்தே பொருந்தாத வள்ளல் அருகு அணைத்து என் மடி பிடித்தார் நானும் அவர் அடி பிடித்துக்கொண்டேன்
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி.

#5773
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ளத் திரிந்தார்
கோமாலை மனச் செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார்
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார்
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே.

#5774
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன்
ஆ மாலும் அ அயனும் இந்திரனும் இவர்கள் அன்றி மற்றைத் தேவர்களும் அசை அணுக்கள் ஆன
தா மாலைச் சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்காரத்
தே மாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி.

#5775
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள்
மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி
போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உருப் புனைந்தே
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடிப் பெருமை யார் உரைப்பார் தோழி.

#5776
உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி உறு பிரமர் பல கோடி இந்திரர் பல் கோடி
பெருத்த மற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடித்
திருத்தமுறு திரு_சபையின் படிப் புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே.

#5777
பார் உலகாதிபர் புவனாதிபர் அண்டாதிபர்கள் பகிரண்டாதிபர் வியோமாதிபர் முதலாம் அதிபர்
ஏர் உலவாத் திரு_படிக் கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன்
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்தத் திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்தப்
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே.

#5778
என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலாச் சோதி மன்றில் கண்டேன்
இன்ப மயமாய் ஒன்றாய் இரண்டாய் ஒன்று இரண்டும் இல்லதுவாய் எல்லாம் செய் வல்லதுவாய் விளங்கித்
தன் பரமாம் பரம் கடந்த சமரசப் பேர் அந்தத் தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுகப் பொதுவே.

#5779
தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி
ஏங்கல் அறப் புறத்தே போய்த் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே
ஓங்குறவே நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே.

#5780
ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய்
வெய்யர் உளத்தே புகுதப் போனது இருள் இரவு விடிந்தது நல் சுடர் உதயம் மேவுகின்ற தருணம்
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே
உய்ய இங்கே நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

#5781
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி
துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயைத் துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால்
இன்று அருளாம் பெரும் சோதி உதயமுற்றது அதனால் இனிச் சிறிது புறத்து இரு நீ இறைவர் வந்த உடனே
ஒன்று_உடையேன் நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

#5782
வைகறை ஈது அருள் உதயம் தோன்றுகின்றது எனது வள்ளல் வரு தருணம் இனி வார்த்தை ஒன்றானாலும்
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய்த் தத்துவப் பெண் குழுவில்
பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே
உய்கரை-வாய் நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

#5783
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்குக் கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால்
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே
ஓலையுறாது யான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

#5784
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினைத் திரள் எல்லாம் வெந்தது காண் மாயை
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனித் தலைவர் வரு தருணம்
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே
உடம்பு உறவே நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

#5785
மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே
காலையிலே கலப்பதற்கு இங்கு எனைப் புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தருமச்
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே.

#5786
இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்_அறியார் உயல்_அறியார் மயல் ஒன்றே அறிவார்
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ
துரவகத்தே விழுந்தார் போன்று இவர் கூடும் கலப்பில் சுகம் ஒன்றும் இல்லையடி துன்பம் அதே கண்டார்
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி.

#5787
என்னுடைய தனித் தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார்
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய்
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே.

#5788
நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம்
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உருச் சுவை கலந்தே அதுவாய்த்
தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய்த் திரிபு இன்றி இயற்கை இன்பச் சிவம் கலந்த நிலையே
தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் எனத் தனித்து உணர்ந்து கொள்ளே.

#5789
இ உலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம் நான் இசைப்பதுவோ என்னினும் மற்று இது கேள்
எவ்வம் உறும் இருள் பொழுதில் இருட்டு அறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்திக்
கவ்வை பெறக் கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கணச் சுகமும் கண்டு அறியார் கண்டாய்
செவ்வையுறக் காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருணச் சுகம் புகல யார் தருணத்தவரே.

#5790
பொன் பறியாப் புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய்
அன்பு அறியாப் பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி
இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான்
துன்பு அறியாக் காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே.

#5791
அருள்_உடையார் எனை_உடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர் எலாம் வல்லவர் தாம் அணைந்து அருளும் காலம்
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய்
தெருள் உடை என் தனித் தலைவர் திரு_மேனிச் சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே
அருள் உறும் ஓர் பரநாத வெளி கடந்து அப்பாலும் அப்பாலும் விளங்குமடி அகம் புறத்தும் நிறைந்தே.

#5792
அம்மா நான் சொல்_மாலை தொடுக்கின்றேன் நீ-தான் ஆர்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி
இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ
செம்மாப்பில் உரைத்தனை இச் சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும்
பல் மாலைத் தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனைப் பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே.

#5793
நாடுகின்ற பல கோடி அண்ட பகிரண்ட நாட்டார்கள் யாவரும் அ நாட்டு ஆண்மை வேண்டி
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில்
ஆடுகின்ற திரு_அடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்கான வகை சொல்_மாலை அணிந்ததனால் அன்றோ
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பலப் பாட்டே திரு_சிற்றம்பலப் பாட்டே தோழி.

#5794
தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே
அடுக்கின்றோர்க்கு அருள் அளிக்கும் ஊன்றிய சேவடிக்கே அ அடிகள் அணிந்த திரு அலங்காரக் கழற்கே
கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ
எடுக்கின்றேன் கையில் மழுச் சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே.

#5795
நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய்
வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும்
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி.

#5796
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே
தான் கொடுக்க நான் வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத் தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்துக் காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம்
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே.

#5797
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம்
நல் மாலை ஆகும் அந்தச் சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன்
புன் மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே.

#5798
உரிய பெரும் தனித் தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும்
துரியர் துரியம் கடந்த சுக சொருபர் பொதுவில் சுத்த நடம் புரிகின்ற சித்தர் அடிக் கழலே
பெரிய பதத் தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே.

#5799
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ
சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ
பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனைச் சில புகன்றார் என்றாய்
சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே.

#5800
எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெரும் சோதியரே இறைவர் என்பது அறியாதே இ மதவாதிகள்-தாம்
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார்
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய்த் தேன் அமுதம் உண்டேன்
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அத் தீ மொழியும் தே மொழி ஆயினவே.

#5801
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே.

#5802
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்குச் சேர்ந்த புறச் சமயப் பேர் பொருந்துவதோ என்றாய்
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எப் பெயர் ஒவ்வாதோ
அச் சமயத் தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞானத் திரு_கூத்துக் கண்ட அளவே தெளியும் இது தோழி.

#5803
எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல் உண்மை அறிவு இன்ப வடிவு ஆகி நடிக்கும்
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும்
இப் பொருள் அப் பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிரதிசய இன்ப நடம்-தனை நீ
பைப்பறவே காணுதியேல் அத் தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே.

#5804
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன்
கோணாத மேல் நிலை மேல் இன்ப அனுபவத்தில் குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு அனைத்தும் தவிர்ந்தேன்
நாணாளும் திரு_பொதுவில் நடம் பாடிப்பாடி நயக்கின்றேன் நல் தவரும் வியக்கின்றபடியே
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி.

#5805
சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே
ஆதியில் என் உளத்து இருந்தே அறிவித்தபடியே அன்பால் இன்று உண்மை நிலை அறிவிக்க அறிந்தேன்
ஓதி உணர்ந்தோர் புகழும் சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம்
சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச் சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே.

#5806
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன்
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன்
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும்
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி.

#5807
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார்
வான் பதிக்கும் கிடைப்ப அரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனைப் புணர்ந்த புறப் புணர்ச்சித் தருணம்
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அகப் புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே.

#5808
துருவு பர_சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன்
குரு பிரம_சாக்கிரத்தைக் கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன்
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர்
மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி.

#5809
தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன்
கனிப்படு மெய்ச் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய்ச்
செனிப்பு இலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவ துரியாதீதத்தே சிவ மயமாய் நிறைந்தேன்
இனிப்புறு சிற்சபை இறையைப் பெற்ற பரிசு-அதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன் தோழி.

#5810
அருள் சோதித் தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம்
இருள் சாதித் தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம்
மருள் சாதி நீக்கி எனைப் புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன்
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்கத் திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே.

#5811
புறப் புணர்ச்சி என் கணவர் புரிந்த தருணம்-தான் புத்தமுதம் நான் உண்டு பூரித்த தருணம்
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அகப் புணர்ச்சி அவர்-தாம் செய்த தருணச் சுகத்தைச் செப்புவது எப்படியோ
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்தப் பெரும் போகப் பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே
மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய்ச் சின்மயமாய்த் தன்மயமான நிலையே.

#5812
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனித் தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார்
வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார்
ஆயினும் என்னளவின் மிக எளியர் என என்னை அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார் புறப் புணர்ச்சித் தருணம்
தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவு ஆனேன் சுக மயமாம் அகப் புணர்ச்சி சொல்லுவது எப்படியோ.

#5813
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செயப் பணித்தார்
செறியாத மனச் சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு எனக் கொண்டே திரு_மாலை அணிந்தார்
பிறியாமல் என் உயிரில் கலந்துகலந்து இனிக்கும் பெரும் தலைவர் நடராயர் எனைப் புணர்ந்தார் அருளாம்
அறிவாளர் புறப் புணர்ச்சி எனை அழியாது ஓங்க அருளியது ஈண்டு அகப் புணர்ச்சி அளவு உரைக்கலாமே.

@143 சத்திய வார்த்தை

#5814.
சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே
நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில்
தவம் நிறைந்தவர் போற்றிட ஆனந்தத் தனி நடம் புரிகின்றான்
எவன் அவன் திரு_ஆணை ஈது இசைத்தனன் இனித் துயர் அடையேனே.

@144 சத்திய அறிவிப்பு

#5815.
ஐயன் அருள் வருகின்ற தருணம் இது கண்டீர் ஐயம் இலை ஐயம் இலை ஐயன் அடி ஆணை
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன்
துய்யன் அருள்_பெரும்_சோதி துரிய நட நாதன் சுக அமுதன் என்னுடைய துரை அமர்ந்து இங்கு இருக்க
வையம் மிசைத் திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.

#5816
தனித் தலைமைப் பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின்
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே

#5817
சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடமுறுவாய்
இத் தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அத் தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே.

#5818
என் சாமி எனது துரை என் உயிர்_நாயகனார் இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே.