திருமந்திரம் – பாயிரம் + முதல் மூன்று தந்திரங்கள்


0.பாயிரம் (1 – 112)

#1
ஒன்று அவன் தானே இரண்டு அவன் இன் அருள்
நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே

மேல்

#2
போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே

மேல்

#3
ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்-தொறும்
பக்க நின்றார் அறியாத பரமனை
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே

மேல்

#4
அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தை
புகலிடத்து என்றனை போதவிட்டானை
பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே

மேல்

#5
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவன சடைமுடி தாமரையானே

மேல்

#6
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே

மேல்

#7
முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லா தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போது அகத்தானே

மேல்

#8
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு
தாயினும் நல்லன் தாழ் சடையோனே

மேல்

#9
பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்ன
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே

மேல்

#10
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே தட வரை தண் கடம் ஆமே

மேல்

#11
அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே

மேல்

#12
கண்_நுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண்_இலி தேவர் இறந்தார் என பலர்
மண்ணுறுவார்களும் வானுறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறியகிலார்களே

மேல்

#13
மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே

மேல்

#14
கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி
கடந்து நின்றான் கடல்_வண்ணன் எம் மாயன்
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே

மேல்

#15
ஆதியுமாய் அரனாய் உடல் உள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள்
சோதியுமாய் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே

மேல்

#16
கோது குலாவிய கொன்றை குழல் சடை
மாது குலாவிய வாள்_நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவி குணம் பயில்வாரே

மேல்

#17
காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அ வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே

மேல்

#18
அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதி பதி செய்த நிறை தவம் நோக்கி
அது பதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இது பதி கொள் என்ற எம் பெருமானே

மேல்

#19
இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முது பதி செய்தவன் மூதறிவாளன்
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அது பதி ஆக அமருகின்றானே

மேல்

#20
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடி மலர் குன்ற மலையது தானே

மேல்

#21
வான பெரும் கொண்டல் மால் அயன் வானவர்
ஊன பிறவி ஒழிக்கும் ஒருவனை
கான களிறு கதற பிளந்த எம்
கோனை புகழு-மின் கூடலும் ஆமே

மேல்

#22
மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே

மேல்

#23
வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே

மேல்

#24
போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன்-தன் அடி
தேற்று-மின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயலுற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே

மேல்

#25
பிறப்பு_இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு_இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு_இலி-தன்னை தொழு-மின் தொழுதால்
மறப்பு_இலி மாயா விருத்தமும் ஆமே

மேல்

#26
தொடர்ந்து நின்றானை தொழு-மின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமலம் மலர் மேலே
உடந்து இருந்தான் அடி புண்ணியம் ஆமே

மேல்

#27
சந்தி என தக்க தாமரை வாள் முகத்து
அந்தம்_இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே

மேல்

#28
இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமராபதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே

மேல்

#29
காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவி கொள
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே

மேல்

#30
வான் நின்று அழைக்கும் மழை போல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்-கொல் என்று தயங்குவார்
ஆன் நின்று அழைக்கும் அது போல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே

மேல்

#31
மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித்தேனே

மேல்

#32
தேவர் பிரான் நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே

மேல்

#33
பதி பல ஆயது பண்டு இ உலகம்
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார்
துதி பல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே

மேல்

#34
சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே

மேல்

#35
ஆற்றுகில்லா வழி ஆகும் இறைவனை
போற்று-மின் போற்றி புகழ்-மின் புகழ்ந்திடில்
மேல் திசைக்கும் கிழக்கு திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே

மேல்

#36
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பு_இலி வள்ளலை ஊழி முதல்வனை
எ பரிசு ஆயினும் ஏத்து-மின் ஏத்தினால்
அ பரிசு ஈசன் அருள் பெறலாமே

மேல்

#37
நானும் நின்று ஏத்துவன் நாள்-தொறும் நந்தியை
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்
வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே

மேல்

#38
பிதற்று ஒழியேன் பெரியான் அரியானை
பிதற்று ஒழியேன் பிறவா உருவானை
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி-தன்னை
பிதற்று ஒழியேன் பெருமை தவன் யானே

மேல்

#39
வாழ்த்த வல்லார் மனத்து உள்ளுறு சோதியை
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே

மேல்

#40
குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும்
நிறைந்து அடை செம்பொனின் நேர் ஒளி ஒக்கும்
மறைஞ்சு அடம்செய்யாது வாழ்த்த வல்லார்க்கு
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே

மேல்

#41
சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானை
புனம் செய்த நெஞ்சிடை போற்ற வல்லார்க்கு
கனம் செய்த வாள்_நுதல் பாகனும் அங்கே
இனம் செய்த மான் போல் இணங்கி நின்றானே

மேல்

#42
போய் அரன்-தன்னை புகழ்வார் பெறுவது
நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு
மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும்
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும் தானே

மேல்

#43
அரன் அடி சொல்லி அரற்றி அழுது
பரன் அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே

மேல்

#44
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே

மேல்

#45
விதி வழி அல்லது இ வேலை உலகம்
விதி வழி இன்பம் விருத்தமும் இல்லை
துதி வழி நித்தலும் சோதி பிரானும்
பதி வழி காட்டும் பகலவன் ஆமே

மேல்

#46
அந்தி_வண்ணா அரனே சிவனே என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்தி வண்ணா முதல்வா பரனே என்று
வந்து இ வண்ணன் எம் மனம் புகுந்தானே

மேல்

#47
மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து அது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே

மேல்

#48
அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னி
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே

மேல்

#49
பரை பசு பாசத்து நாதனை உள்ளி
உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்கு
திரை பசு பாவ செழும் கடல் நீந்தி
கரை பசு பாசம் கடந்து எய்தலாமே

மேல்

#50
சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன் மலர் தூவி பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று
நாடுவன் யான் இன்று அறிவது தானே

மேல்

#51
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓத தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே

மேல்

#52
வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதன் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே

மேல்

#53
இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே

மேல்

#54
திருநெறி ஆவது சித்த சித்து அன்றி
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும்
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே

மேல்

#55
ஆறு அங்கமாய் வரு மா மறை ஓதியை
கூறு அங்கம் ஆக குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறு அங்கம் ஆக பெருக்குகின்றாரே

மேல்

#56
பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே

மேல்

#57
அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்துமூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்தறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே

மேல்

#58
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடி நூறு ஆயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்ற அ பொருள் ஏத்துவன் யானே

மேல்

#59
பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
கண்டவர் கூறும் கருத்து அறிவார் என்க
பண்டிதர்-தங்கள் பதினெட்டு பாடையும்
அண்ட முதலான் அறம் சொன்னவாறே

மேல்

#60
அண்ணல் அருளால் அருளும் திவ்யாகமம்
விண்ணில் அமரர்-தமக்கும் விளங்க அரிது
எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்
எண்ணிலும் நீர் மேல் எழுத்தது ஆகுமே

மேல்

#61
பரனாய் பராபரம் காட்டி உலகில்
அரனாய் சிவதன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே

மேல்

#62
சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே

மேல்

#63
பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்
உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்
மற்று அ வியாமளம் ஆகும்-கால் ஓத்தரந்து
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே

மேல்

#64
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்_இலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்
எண்_இலி கோடியும் நீர் மேல் எழுத்தே

மேல்

#65
மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லி
காரிகையார்க்கு கருணைசெய்தானே

மேல்

#66
அவிழ்கின்ற ஆறும் அது கட்டு மாறும்
சிமிட்டலை பட்டு உயிர் போகின்றவாறும்
தமிழ் சொல் வட சொல் எனும் இ இரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே

மேல்

#67
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மா முனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே

மேல்

#68
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே

மேல்

#69
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என் வழி ஆமே

மேல்

#70
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவித பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே

மேல்

#71
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழும் சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன்
கழிந்த பெருமையை காட்டகிலானே

மேல்

#72
எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
செழும் தண் நியமங்கள் செய்யு-மின் என்று அண்ணல்
கொழும் தண் பவள குளிர் சடையோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந்தானே

மேல்

#73
நந்தி இணை அடி நான் தலை மேல் கொண்டு
புந்தியின் உள்ளே புக பெய்து போற்றி செய்து
அந்தி மதி புனை அரன் அடி நாள்-தொறும்
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற்றேனே

மேல்

#74
செப்பும் சிவாகமம் என்னும் அ பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள் நந்தி தாள் பெற்று
தப்பு இலா மன்றில் தனி கூத்து கண்ட பின்
ஒப்பு இல் எழு கோடி உகம் இருந்தேனே

மேல்

#75
இருந்த அ காரணம் கேள் இந்திரனே
பொருந்திய செல்வ புவனா பதி ஆம்
அருந்தவ செல்வியை சேவித்து அடியேன்
பரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே

மேல்

#76
சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம்
இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி
உதாசனி யாது உடனே உணர்ந்தோமால்

மேல்

#77
மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியாள் நேரிழையாளொடு
மூலாங்கம் ஆக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தை செப்ப வந்தேனே

மேல்

#78
நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்த
பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்
சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை
சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே

மேல்

#79
சேர்ந்து இருந்தேன் சிவமங்கை-தன் பங்கனை
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை
சேர்ந்து இருந்தேன் சிவபோதியின் நீழலில்
சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே

மேல்

#80
இருந்தேன் இ காயத்தே எண்_இலி கோடி
இருந்தேன் இரா பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணை அடி கீழே

மேல்

#81
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ்செய்யுமாறே

மேல்

#82
ஞான தலைவி-தன் நந்தி நகர் புக்கு
ஊனம் இல் ஒன்பது கோடி உகம்-தனுள்
ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து
யானும் இருந்தேன் நல் போதியின் கீழே

மேல்

#83
செல்கின்ற ஆறு அறி சிவன் முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்-தம்பால்
ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே

மேல்

#84
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமமாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே

மேல்

#85
யான் பெற்ற இன்பம் பெறுக இ வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணருறு மந்திரம்
தான் பற்றப்பற்ற தலைப்படும் தானே

மேல்

#86
பிறப்பு_இலி நாதனை பேர் நந்தி-தன்னை
சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி
மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறை பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே

மேல்

#87
அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கு மிகாமை வைத்தான் தமிழ் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே

மேல்

#88
அடி முடி காண்பார் அயன் மால் இருவர்
படி கண்டிலர் மீண்டும் பார் மிசை கூடி
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே

மேல்

#89
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே

மேல்

#90
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு அத்தினை
மாயத்தை மா மாயை-தன்னில் வரும் பரை
ஆயத்தை அ சிவம்-தன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட்டேனே

மேல்

#91
விளக்கி பரமாகும் மெய்ஞ்ஞான சோதி
அளப்பு_இல் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்க_அறும் ஆனந்த கூத்தன் சொல்போந்து
வளப்பின் கயிலை வழியில் வந்தேனே

மேல்

#92
நந்தி அருளாலே மூலனை நாடி பின்
நந்தி அருளாலே சதாசிவம் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான் இருந்தேனே

மேல்

#93
இருக்கில் இருக்கும் எண்_இலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே

மேல்

#94
பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி-தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே

மேல்

#95
ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்
வேர் அறியாமை விளம்புகின்றேனே

மேல்

#96
பாட வல்லார் நெறி பாட அறிகிலேன்
ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன்
நாட வல்லார் நெறி நாட அறிகிலேன்
தேட வல்லார் நெறி தேடகில்லேனே

மேல்

#97
மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே

மேல்

#98
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமையால் இ பயன் அறியாரே

மேல்

#99
மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்து அறிந்து ஓதிடின்
ஞால தலைவனை நண்ணுவர் அன்றே

மேல்

#100
வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவாயிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது
வைத்த சிறப்பு தரும் இவை தானே

மேல்

#101
வந்த மடம் ஏழு மன்னும் சன்மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம் வரை
தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தர ஆகம சொல் மொழிந்தானே

மேல்

#102
கலந்து அருள் காலாங்கர்-தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகை தேவர் நாதாந்தர்
புலம் கொள் பரமானம் தர்போக தேவர்
நிலம் திகழ் மூவர் நிராமயத்தோரே

மேல்

#103
அளவு_இல் இளமையும் அந்தமும் ஈறும்
அளவு இயல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல்
அளவு_இல் பெருமை அரி அயற்கு ஆமே

மேல்

#104
ஆதி பிரானும் அணி மணிவண்ணனும்
ஆதி கமலத்து அலர்மிசையானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்
பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே

மேல்

#105
ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே

மேல்

#106
சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே

மேல்

#107
பயன் அறிந்து அ வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம்
வயனம் பெறுவீர் அ வானவராலே

மேல்

#108
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள்
பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ
மாலுக்கும் ஆதி பிரமற்கும் ஒப்பு நீ
ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே

மேல்

#109
வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேன் அமர் கொன்றை சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனி தெய்வம் மற்று இல்லை
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே

மேல்

#110
சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற
ஆதி கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதி-கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித்து அவரை பிதற்றுகின்றாரே

மேல்

#111
பரத்திலே ஒன்றாய் உள்ளாய் புறம் ஆகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகி
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகி
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே

மேல்

#112
தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை
வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான்
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே

1.முதல் தந்திரம் (113 – 336)

மேல்

#113
விண்-நின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
தண் நின்ற தாளை தலைக்காவல் முன் வைத்து
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த
கண் நின்று காட்டி களிம்பு அறுத்தானே

மேல்

#114
களிம்பு அறுத்தான் எங்கள் கண்_நுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருள் கண்விழிப்பித்து
களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே

மேல்

#115
பதி பசு பாசம் என பகர் மூன்றில்
பதியினை போல் பசு பாசம் அனாதி
பதியினை சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே

மேல்

#116
வேயின் எழும் கனல் போலே இ மெய் எனும்
கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி
தாயினும் மும்மலம் மாற்றி தயா என்னும்
தோயம் அதாய் எழும் சூரியன் ஆமே

மேல்

#117
சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ் பஞ்சை சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றம் முன் அற்ற மலங்களே

மேல்

#118
மலங்கள் ஐந்தாம் என மாற்றி அருளி
தலங்கள் ஐந்தால் நற்சதா சிவம் ஆன
புலங்கள் ஐந்தான் அ பொதுவின் உள் நந்தி
நலம் களைந்தான் உள் நயந்தான் அறிந்தே

மேல்

#119
அறி ஐம்புலனுடனே நான்றது ஆகி
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல
அறிவறிவு உள்ளே அழிந்தது போல
குறி அறிவிப்பான் குருபரன் ஆமே

மேல்

#120
ஆ மேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல்
தாமே தனி மன்றில் தன்னந்தனி நித்தம்
தீ மேவு பல் கரணங்களுள் உற்றன
தாம் ஏழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே

மேல்

#121
வித்தை கெடுத்து வியாக்கிரத்தே மிக
சுத்த துரியம் பிறந்து துடக்கு அற
ஒத்து புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே

மேல்

#122
சிவயோகம் ஆவது சித்து அசித்து என்று
தவ யோகத்து உள் புக்கு தன் ஒளி தானாய்
அவயோகம் சாராது அவன் பதி போக
நவயோகம் நந்தி நமக்கு அளித்தானே

மேல்

#123
அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே

மேல்

#124
வெளியில் வெளி போய் விரவியவாறும்
அளியில் அளி போய் அடங்கியவாறும்
ஒளியில் ஒளி போய் ஒடுங்கியவாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே

மேல்

#125
சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர
முத்தர்-தம் முத்தி முதல் முப்பத்தாறே

மேல்

#126
முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு
செப்ப_அரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அ பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே

மேல்

#127
இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பை குறித்து அங்கு
இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே

மேல்

#128
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்து இடம்
சோம்பர் கண்டு ஆர சுருதி-கண் தூக்கமே

மேல்

#129
தூங்கி கண்டார் சிவலோகமும் தம் உள்ளே
தூங்கி கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கி கண்டார் சிவபோகமும் தம் உள்ளே
தூங்கி கண்டார் நிலை சொல்வது எவ்வாறே

மேல்

#130
எவ்வாறு காண்பான் அறிவு-தனக்கு எல்லை
அவ்வாறு அருள்செய்வான் ஆதி அரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும்
செ வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம்

மேல்

#131
மாணிக்கத்து உள்ளே மரகத சோதியாய்
மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தை
பேணி தொழுது என்ன பேறு பெற்றாரே

மேல்

#132
பெற்றார் உலகில் பிரியா பெருநெறி
பெற்றார் உலகில் பிறவா பெரும் பயன்
பெற்றார் அ மன்றில் பிரியா பெரும் பேறு
பெற்றார் உலகுடன் பேசா பெருமையே

மேல்

#133
பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல்
அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர்
ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே

மேல்

#134
புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தால் போல்
திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும்
உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே

மேல்

#135
சத்தம் முதல் ஐந்தும் தன்வழி தான் சாரில்
சித்துக்கு சித்து அன்றி சேர்விடம் வேறு உண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும்
அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே

மேல்

#136
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பு என பேர் பெற்று உரு செய்த அ உரு
அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே

மேல்

#137
அடங்கும் பேரண்டத்து அணு அண்டம் சென்று அங்கு
இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ
கடம்-தொறும் நின்ற உயிர் கரை காணில்
திடம் பெற நின்றான் திருவடி தானே

மேல்

#138
திருவடியே சிவம் ஆவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல் கதி அது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே

மேல்

#139
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே

மேல்

#140
தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும்
தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்து எம் பிரான்-தனை சந்தித்தே

மேல்

#141
சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே

மேல்

#142
போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை
போதம் தனில் வைத்து புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திட போய் அடைந்தார் விண்ணே

மேல்

#143
மண் ஒன்று கண்டீர் இரு வகை பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது
விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல்
எண் இன்றி மாந்தர் இறக்கின்றவாறே

மேல்

#144
பண்டம் பெய் கூரை பழகி விழுந்த-கால்
உண்ட அ பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே

மேல்

#145
ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டு
சூரை அம் காட்டு இடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே

மேல்

#146
காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்று உள
பாலுள் பரும் கழி முப்பத்திரண்டு உள
மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன்
போல் உயிர் மீள புக அறியாதே

மேல்

#147
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டு இற்ற
ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது
மூக்கினில் கைவைத்து மூடிட்டு கொண்டுபோய்
காக்கைக்கு பலி காட்டியவாறே

மேல்

#148
அட பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இட பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்க படுத்தார் கிடந்து ஒழிந்தாரே

மேல்

#149
மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்று அத்தா என்ன திரிந்திலன் தானே

மேல்

#150
வாசந்தி பேசி மணம்புணர்ந்த அ பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை
ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு
பாசம் தீ சுட்டு பலி அட்டினார்களே

மேல்

#151
கைவிட்டு நாடி கருத்து அழிந்து அச்சற
நெய் அட்டி சோறு உண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய் விட்டு போக விடைகொள்ளுமாறே

மேல்

#152
பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலம் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே

மேல்

#153
நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைமகன்
காட்டு சிவிகை ஒன்று ஏறி கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்றவாறே

மேல்

#154
முப்பதும் முப்பதும் முப்பத்துஅறுவரும்
செப்ப மதிள் உடை கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிள் உடை கோயில் சிதைந்த பின்
ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார்களே

மேல்

#155
மது ஊர் குழலியும் மாடும் மனையும்
இது ஊர் ஒழிய இதணம் அது ஏறி
பொது ஊர் புறம் சுடுகாடு-அது நோக்கி
மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே

மேல்

#156
வைச்சு அகல்வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சு அகலாது என நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்று அவர்
எச்ச அகலா நின்று இளைக்கின்றவாறே

மேல்

#157
ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர் துறை-காலே ஒழிவர் ஒழிந்த பின்
வேர் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர் தலை மூழ்குவர் நீதியிலோரே

மேல்

#158
வளத்திடை முற்றத்து ஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே

மேல்

#159
ஐந்து தலை பறி ஆறு சடை உள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டு
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேல் அறியோமே

மேல்

#160
அத்தி பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலை பெய்து கூழ் அட்டு வைத்தனர்
அத்தி பழத்தை அறைக்கீரை வித்து உண்ண
கத்தி எடுத்தவர் காடு புக்காரே

மேல்

#161
மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை
காலும் இரண்டு முகட்டு அல கொன்று உண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்தது ஓர் வெள்ளி தளிகையே

மேல்

#162
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுதிட்டு
தேடிய தீயினில் தீய வைத்தார்களே

மேல்

#163
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார் மணம் பன்னிரண்டு ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடு அறியீரே

மேல்

#164
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சு இருளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்தது பதைக்கின்றவாறே

மேல்

#165
மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர்
குடர் பட வெம் தமர் கூப்பிடுமாறே

மேல்

#166
குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு
இடையும் அ காலம் இருந்து நடுவே
புடையும் மனிதனார் போகும் அப்போதே
அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே

மேல்

#167
காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில் என்
பால் துளி பெய்யில் என் பல்லோர் பழிச்சில் என்
தோல் பையுள் நின்று தொழில் அற செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டு போன இ கூட்டையே

மேல்

#168
அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர் கொள்ள போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனை சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே

மேல்

#169
இயக்குறு திங்கள் இருள் பிழம்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தை சொல்லவும் வேண்டா
மயக்கு அற நாடு-மின் வானவர் கோனை
பெயல் கொண்டல் போல பெரும் செல்வம் ஆமே

மேல்

#170
தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு
என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்
உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது
கண் அது கண் ஒளி கண்டுகொளீரே

மேல்

#171
ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும்
கூட்டி கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டி துரந்திட்டு அது வலியார் கொள
காட்டி கொடுத்தது கைவிட்டவாறே

மேல்

#172
தேற்ற தெளி-மின் தெளிந்தீர் கலங்கன்-மின்
ஆற்று பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றி களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தை
கூற்றன் வரும்-கால் குதிக்கலும் ஆமே

மேல்

#173
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர் மிசை செல்லும் கலம் போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடுபேறு ஆக
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே

மேல்

#174
வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவேது எமக்கு என்பர் ஒண் பொருள்
மேவும் அதனை விரவு செய்வார்கட்கு
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே

மேல்

#175
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது
நாட்டிய தாய் தமர் வந்து வணங்கி பின்
காட்டி கொடுத்தவர் கைவிட்டவாறே

மேல்

#176
உடம்பொடு உயிரிடை விட்டோடும் போது
அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும்
விடும் பரிசாய் நின்ற மெய் நமன் தூதர்
சுடும் பரிசு அத்தையும் சூழ்கிலாரே

மேல்

#177
கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழ கண்டும் தேறார் விழி இலா மாந்தர்
குழ கன்று மூத்து எருதாய் சில நாளில்
விழ கண்டும் தேறார் வியன் உலகோரே

மேல்

#178
ஆண்டு பலவும் கழிந்தன அப்பனை
பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே

மேல்

#179
தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை முறை
ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்து அற்ற கங்கை படர் சடை நந்தியை
ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே

மேல்

#180
விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர்
கரும்பு தகர்த்து கடைக்கொண்ட நீர் போல்
அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்கு
கரும்பு ஒத்து காஞ்சிரம் காயும் ஒத்தேனே

மேல்

#181
பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்புவன் யானே

மேல்

#182
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அ ஈசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய்தானே

மேல்

#183
பரு ஊசி ஐந்தும் ஓர் பையினுள் வாழும்
பரு ஊசி ஐந்தும் பறக்கும் விருகம்
பரு ஊசி ஐந்தும் பனி-தலை பட்டால்
பரு ஊசி பையும் பறக்கின்றவாறே

மேல்

#184
கண்ணதும் காய் கதிரோனும் உலகினை
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறுவாரையும் வினையுறுவாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே

மேல்

#185
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின்
சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே

மேல்

#186
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்து-மின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்து கண்டேனே

மேல்

#187
தழைக்கின்ற செந்தளிர் தண் மலர் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற-போது அறியார் அவர் தாமே

மேல்

#188
ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது
ஐவரும் அ செய்யை காத்து வருவார்கள்
ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அ செய்யை காவல் விட்டாரே

மேல்

#189
மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள
அத்துள்ளே வாழும் அரசரும் அங்கு உளன்
அத்துள்ளே வாழும் அரசனும் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கியவாறே

மேல்

#190
வேங்கடநாதனை வேதாந்தக்கூத்தனை
வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே

மேல்

#191
சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன்
அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர்
நின்று உணரார் இ நிலத்தின் மனிதர்கள்
பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே

மேல்

#192
மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனை பெரிது உணர்ந்தார் இலை
கூறும் கரு மயிர் வெண் மயிர் ஆவது
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே

மேல்

#193
துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பு இடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி
அடுத்து எரியாமல் கொடு-மின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே

மேல்

#194
இன்புறு வண்டு இங்கு இன மலர் மேல் போய்
உண்பது வாச மது போல் உயிர் நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே

மேல்

#195
ஆம் விதி நாடி அறம் செய்-மின் அ நிலம்
போம் விதி நாடி புனிதனை போற்று-மின்
நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர்
ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே

மேல்

#196
அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்-மின்
வெவ்வியன் ஆகி பிறர் பொருள் வவ்வன்-மின்
செவ்வியன் ஆகி சிறந்து உண்ணும்-போது ஒரு
தவ்வி கொடு உண்-மின் தலைப்பட்ட-போதே

மேல்

#197
பற்று ஆய நல் குரு பூசைக்கும் பல் மலர்
மற்று ஓர் அணுக்களை கொல்லாமை ஒண் மலர்
நற்றார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே

மேல்

#198
கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை
வல்லடிக்காரர் வலி கயிற்றால் கட்டி
செல்லிடு நில் என்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே

மேல்

#199
பொல்லா புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்-தன் தூதுவர்
செல்லாக பற்றி தீவாய் நரகத்தில்
மல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே

மேல்

#200
கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகம் ஆம் அவை நீக்கி
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே

மேல்

#201
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளை காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனி உண்ணமாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்றவாறே

மேல்

#202
திருத்தி வளர்த்தது ஓர் தேமாம் கனியை
அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்து
பொருத்தம் இலாத புளிமாம் கொம்பு ஏறி
கருத்து அறியாதவர் கால் அற்றவாறே

மேல்

#203
பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்டு மாதர் மயலுறுவார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே

மேல்

#204
இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்
குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா
முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல்
விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே

மேல்

#205
மனை புகுவார்கள் மனைவியை நாடில்
சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும்
கனவு அது போல கசிந்து எழும் இன்பம்
நனவு அது போலவும் நாட ஒண்ணாதே

மேல்

#206
இயலுறும் வாழ்க்கை இளம் பிடி மாதர்
புயலுற புல்லி புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார இது என்பார்
அயலுற பேசி அகன்று ஒழிந்தாரே

மேல்

#207
வையகத்தே மடவாரொடும் கூடி என்
மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது
கையகத்தே கரும்பு ஆலையின் சாறு கொள்
மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே

மேல்

#208
கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறுவார்களை
தாழ துடக்கி தடுக்க இல்லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்றவாறே

மேல்

#209
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட்டார்களும் அன்பு இலர் ஆனார்
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே

மேல்

#210
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று
அ குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்
எ குழி தூர்த்தும் இறைவனை ஏத்து-மின்
அ குழி தூரும் அழுக்கு அற்ற போதே

மேல்

#211
கற்குழி தூர கனகமும் தேடுவர்
அ குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அ குழி தூர்க்கும் அறிவை அறிந்த பின்
அ குழி தூரும் அழுக்கற்றவாறே

மேல்

#212
தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றி
தொடர்ந்து நின்று அ வழி தூர்க்கலும் ஆமே

மேல்

#213
அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்_இலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே

மேல்

#214
வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசை பெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதல் ஆம்
அசைவு இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே

மேல்

#215
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போ கதி நாடி புறம் கொடுத்து உண்ணுவர்
தாம் விதி வேண்டி தலைப்படு மெய்ந்நெறி
தாம் அறிவாலே தலைப்பட்டவாறே

மேல்

#216
அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது
துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே

மேல்

#217
போது இரண்டு ஓதி புரிந்து அருள்செய்திட்டு
மாது இரண்டாகி மகிழ்ந்து உடனே நிற்கும்
தாது இரண்டு ஆகிய தண் அம் பறவைகள்
வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே

மேல்

#218
நெய்-நின்று எரியும் நெடும் சுடரே சென்று
மை நின்று எரியும் வகை அறிவார்கட்கு
மை நின்று அவிழ்தரும் அ தினமாம் என்றும்
செய் நின்ற செல்வம் தீ அது ஆமே

மேல்

#219
பாழி அகலும் எரியும் திரி போல் இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய் பல
வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும்
வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே

மேல்

#220
பெரும் செல்வம் கேடு என்று முன்னே படைத்த
வரும் செல்வம் தந்த தலைவனை நாடும்
வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி
அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே

மேல்

#221
ஒண் சுடரானை உலப்பு_இலி நாதனை
ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அ
தண் சுடர் ஓம தலைவனும் ஆமே

மேல்

#222
ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன்
வேமத்துள் அங்கி விளைவு வினை கடல்
கோமத்துள் அங்கி குரை கடல் தானே

மேல்

#223
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரத்து
அங்கி இருக்கும் வகை அருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்ப பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே

மேல்

#224
அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
தம் தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டு
சந்தியும் ஓதி சடங்கு அறுப்போர்களே

மேல்

#225
வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பத
போதாந்த மான பிரணவத்துள் புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே

மேல்

#226
காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேய தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே

மேல்

#227
பெருநெறியான பிரணவம் ஓர்ந்து
குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து
இரு நெறி ஆன கிரியை இருந்து
சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே

மேல்

#228
சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்
எய் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே

மேல்

#229
வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே

மேல்

#230
நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூல் அது கார் பாசம் நுண் சிகை கேசம் ஆம்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே

மேல்

#231
சத்தியம் இன்றி தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம்விட்டு ஓரும் உணர்வு இன்றி
பத்தியும் இன்றி பரன் உண்மை இன்றி
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே

மேல்

#232
திருநெறி ஆகிய சித்து அசித்து இன்றி
குரு நெறியாலே குரு பதம் சேர்ந்து
கரும நியம் ஆதி கைவிட்டு காணும்
துரிய சமாதி ஆம் தூய் மறையோர்க்கே

மேல்

#233
மறையோர் அவரே மறைவர் ஆனால்
மறையோர்-தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை
குறையோர்-தன் மற்று உள்ள கோலாகலம் என்று
அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே

மேல்

#234
அம் தண்மை பூண்ட அருமறை அந்தத்து
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும் புவி
நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே

மேல்

#235
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன்-பால் புக புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே

மேல்

#236
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம் பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்கும் திரு உடையோரே

மேல்

#237
தானே விடும் பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூ மேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓம் மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே

மேல்

#238
கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனில் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்
நல்லாரை காலன் நணுக நில்லானே

மேல்

#239
நாள்-தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி
நாள்-தோறும் நாடி அவன் நெறி நாடானேல்
நாள்-தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால்
நாள்-தோறும் செல்வம் நரபதி குன்றுமே

மேல்

#240
வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன்
வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே
வேட நெறி நில்லார்-தம்மை விறல் வேந்தன்
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே

மேல்

#241
மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில்
வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும்
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து
ஆடம்பர நூல் சிகை அறுத்தால் நன்றே

மேல்

#242
ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர்-தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானம் உண்டாக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே

மேல்

#243
ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும்
தேவர்கள் போற்றும் திரு வேடத்தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே

மேல்

#244
திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்த நீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே

மேல்

#245
வேந்தன் உலகை மிக நன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அ வழியாய் நிற்பர்
பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள
பாய்ந்த புலி அன்ன பாவகத்தானே

மேல்

#246
கால் கொண்டு கட்டி கனல் கொண்டு மேல் ஏற்றி
பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர்
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன் கடனே

மேல்

#247
தத்தம் சமய தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எ தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே
மெய் தண்டம் செய்வது அ வேந்தன் கடனே

மேல்

#248
அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே
அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும்
கமுகு ஊறு தெங்கு கரும்பொடு வாழை
அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே

மேல்

#249
வரையிடை நின்று இழி வான் நீர் அருவி
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர்
கரை இல்லை எந்தை கழுமணி ஆறே

மேல்

#250
ஆர்க்கும் இடு-மின் அவர் இவர் என்னன்-மின்
பார்த்து இருந்து உண்-மின் பழம்பொருள் போற்றன்-மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்-மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறி-மினே

மேல்

#251
தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்
தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்கு தமர்பரன் ஆமே

மேல்

#252
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே

மேல்

#253
அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே

மேல்

#254
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்து இருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
விழ கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே

மேல்

#255
தன்னை அறியாது தான் நலன் என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர் என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வரு முன்னம்
தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே

மேல்

#256
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறிந்தான் அறியும் அளவு அறிவாரே

மேல்

#257
தான் தவம் செய்வதாம் செய் தவத்து அ வழி
மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர்காள்
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே

மேல்

#258
திளைக்கும் வினை கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அ கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே

மேல்

#259
பற்று அதுவாய் நின்ற பற்றினை பார் மிசை
அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே

மேல்

#260
எட்டி பழுத்த இரும் கனி வீழ்ந்தன
ஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம்
வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டி பதகர் பயன் அறியாரே

மேல்

#261
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளும் குறுகி
பிழிந்தன போல தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம் அறியாரே

மேல்

#262
அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார் சிவலோக நகர்க்கு
புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே

மேல்

#263
இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர்-தம்-பாலது ஆகும்
உரும் இடி நாகம் உரோணி கழலை
தருமம் செய்வார் பக்கல் தாழகிலாவே

மேல்

#264
பரவப்படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டி காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல் நெஞ்சினீரே

மேல்

#265
வழிநடப்பார் இன்றி வானோர் உலகம்
கழி நடப்பார் நடந்தார் கரும் பாரும்
மழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட
வழிநடப்பார் வினை ஓங்கி நின்றாரே

மேல்

#266
கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி
மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே

மேல்

#267
இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது
இன்பம் அது கண்டும் ஈகிலா பேதைகள்
அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே

மேல்

#268
கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன்
நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணு-மின் இன்பம்
படுவது செய்யில் பசு அது ஆமே

மேல்

#269
செல்வம் கருதி சிலர் பலர் வாழ்வு எனும்
புல்லறிவாளரை போற்றி புலராமல்
இல்லம் கருதி இறைவனை ஏத்து-மின்
வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே

மேல்

#270
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

மேல்

#271
பொன்னை கடந்து இலங்கும் புலித்தோலினன்
மின்னி கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னி கிடந்த சுடு பொடி ஆடிக்கு
பின்னி கிடந்தது என் பேரன்பு தானே

மேல்

#272
என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டு
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என் போல் மணியினை எய்த ஒண்ணாதே

மேல்

#273
ஆர்வம் உடையவர் காண்பார் அரன்-தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி
பாரம் உடையவர் காண்பார் பவம்-தன்னை
கோர நெறி கொடு கொங்கு புக்காரே

மேல்

#274
என் அன்பு உருக்கி இறைவனை ஏத்து-மின்
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடு-மின்
பின் அன்பு உருக்கி பெருந்தகை நந்தியும்
தன் அன்பு எனக்கே தலைநின்றவாறே

மேல்

#275
தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வான் ஒரு காலம் வழித்துணையாய் நிற்கும்
தேன் ஒரு-பால் திகழ் கொன்றை அணி சிவன்
தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே

மேல்

#276
முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை
அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார்
வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகலிடத்தானே

மேல்

#277
கருத்துறு செம்பொன் செய் காய் கதிர் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே

மேல்

#278
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இச்சை உளே வைப்பர் எந்தை பிரான் என்று
நச்சியே அண்ணலை நாடுகிலாரே

மேல்

#279
அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன்
அன்பின் உள் ஆகி அமரும் அரும்பொருள்
அன்பின் உள்ளார்க்கே அணை துணை ஆமே

மேல்

#280
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள்செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து அருள்கூர வல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே

மேல்

#281
இன்ப பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்ப பிறவி தொழில் பல என்னினும்
அன்பில் கலவி செய்து ஆதி பிரான் வைத்த
முன்பு இ பிறவி முடிவது தானே

மேல்

#282
அன்புறு சிந்தையின் மேல் எழும் அ ஒளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று
நண்புறு சிந்தையை நாடு-மின் நீரே

மேல்

#283
புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே

மேல்

#284
உற்று நின்றாரொடு அத்தகு சோதியை
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை
பத்திமையாலே பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே

மேல்

#285
கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி
கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை
கண்டேன் கமல மலர் உறைவான் அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே

மேல்

#286
நம்பனை நானாவித பொருள் ஆகும் என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்திடை நின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகிலாரே

மேல்

#287
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர்
இன்ப பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
அன்பில் அவனை அறியகிலாரே

மேல்

#288
ஈசன் அறியும் இராப்பகலும் தன்னை
பாசத்துள் வைத்து பரிவு செய்வார்களை
தேசுற்று அறிந்து செயலற்று இருந்திடில்
ஈசன் வந்து எம்மிடை ஈட்டி நின்றானே

மேல்

#289
விட்டு பிடிப்பது என் மே தகு சோதியை
தொட்டு தொடர்வன் தொலையா பெருமையை
எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை
மட்டு கலப்பது மஞ்சனம் ஆமே

மேல்

#290
குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடி
செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே

மேல்

#291
கற்றறிவாளர் கருதிய காலத்து
கற்றறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு
கற்றறிவாளர் கருதி உரைசெய்யும்
கல் தறி காட்ட கயல் உள ஆக்குமே

மேல்

#292
நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்-மின் கழிந்து அறும் பாவங்கள்
சொல் குன்றல் இன்றி தொழு-மின் தொழுத பின்
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே

மேல்

#293
கல்வி உடையார் கழிந்து ஓடி போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்து-மின் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே

மேல்

#294
துணையதுவாய் வரும் தூய நல் சோதி
துணையதுவாய் வரும் தூய நல் சொல் ஆம்
துணையதுவாய் வரும் தூய நல் கந்தம்
துணையதுவாய் வரும் தூய நல் கல்வியே

மேல்

#295
நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே

மேல்

#296
ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும்
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார்கட்கு
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே

மேல்

#297
வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன்
கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை
ஒழி துணையாம் உம்பராய் உலகு ஏழும்
வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே

மேல்

#298
பற்று அது பற்றில் பரமனை பற்று-மின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே

மேல்

#299
கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து
உடல் உடையான் பல ஊழி-தொறு ஊழி
அடல் விடை ஏறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே

மேல்

#300
அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன்
திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே

மேல்

#301
தேவர் பிரான்-தனை திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின்
ஓது-மின் கேள்-மின் உணர்-மின் உணர்ந்த பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே

மேல்

#302
மயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின்
அயன் பணி கேட்பது அரன் பணியாலே
சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன் பணி கேட்பது பற்று அதுவாமே

மேல்

#303
பெருமான் இவன் என்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னை தேவரும் ஆவர்
வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள்செய்யும்
அருமாதவத்து எங்கள் ஆதி பிரானே

மேல்

#304
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி
நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று
வாச மலர் கந்தம் மன்னி நின்றானே

மேல்

#305
விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற-போது
வழுக்கிவிடாவிடில் வானவர் கோனும்
இழுக்கு இன்றி எண்_இலி காலம் அது ஆமே

மேல்

#306
சிறியார் மணல் சோற்றில் தேக்கிடுமா போல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றை குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவர் ஆவர் அன்றே

மேல்

#307
உறுதுணை ஆவது உயிரும் உடம்பும்
உறுதுணை ஆவது உலகுறு கேள்வி
செறி துணை ஆவது சிவன் அடி சிந்தை
பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே

மேல்

#308
புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்
இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழ நின்று ஆதியை ஓதி உணரா
கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே

மேல்

#309
வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது
அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே

மேல்

#310
கல்லாதவரும் கருத்து அறி காட்சியை
வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர்
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகிலாரே

மேல்

#311
வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்
அல்லாதவர்கள் அறிவு பல என்பார்
எல்லா இடத்தும் உளன் எங்கள்-தம் இறை
கல்லாதவர்கள் கலப்பு அறியாரே

மேல்

#312
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லா குரம்பை நிலை என்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்து காண ஒண்ணாதே

மேல்

#313
கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன்
கல்லேன் அரன்நெறி அறியா தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே

மேல்

#314
நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி
வல்லார் அறத்தும் தத்துவத்துளும் ஆயினோர்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினை துயர் போகம் செய்வாரே

மேல்

#315
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது
மண்ணினின் உள்ளே மதித்துமதித்து நின்று
எண்ணி எழுதி இளைத்து விட்டாரே

மேல்

#316
கணக்கு அறிந்தார்க்கு அன்றி காண ஒண்ணாது
கணக்கு அறிந்தார்க்கு அன்றி கைகூடா காட்சி
கணக்கு அறிந்து உண்மையை கண்டு அண்ட நிற்கும்
கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே

மேல்

#317
கல்லாத மூடரை காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்க கடன் அன்று
கல்லாத மூடர்க்கு கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்து அறியாரே

மேல்

#318
கற்றும் சிவஞானம் இல்லா கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள்
மற்றும் பல திசை காணார் மதி இலோர்
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே

மேல்

#319
ஆதி பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற
சோதி நடத்தும் தொடர் அறியாரே

மேல்

#320
நடுவுநின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின்றார் வழி யானும் நின்றேனே

மேல்

#321
நடுவுநின்றான் நல்ல கார் முகில் வண்ணன்
நடுவுநின்றான் நல்ல நால்மறை ஓதி
நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின்றார் நல்ல நம்பனும் ஆமே

மேல்

#322
நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவர்
நடுவுநின்றார் சிலர் தேவரும் ஆவர்
நடுவுநின்றார் சிலர் நம்பனும் ஆவர்
நடுவுநின்றாரொடு யானும் நின்றேனே

மேல்

#323
தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி
ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி
மூன்று நின்றார் முதல்வன் திருநாமத்தை
நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே

மேல்

#324
கழுநீர் பசு பெறில் கயம்-தொறும் தேரா
கழுநீர் விடாய்த்து தம் காயம் சுருக்கும்
முழுநீர் கள் உண்போர் முறைமை அகன்றோர்
செழு நீர் சிவன்-தன் சிவானந்த தேறலே

மேல்

#325
சித்தம் உருக்கி சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவானந்தத்து ஓவாத தேறலை
சுத்த மது உண்ண சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ் காலே

மேல்

#326
காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயலுறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்த தேறல் உணர்வு உண்டே

மேல்

#327
வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர்
காமத்தோர் காம கள் உண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே

மேல்

#328
உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே

மேல்

#329
மயக்கும் சமய மலம் மன்னு மூடர்
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார்
மயக்குறு மா மாயையை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே

மேல்

#330
மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்-தம் இன்பமே எய்தி
முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே

மேல்

#331
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கு அற ஆனந்த தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறை அடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே

மேல்

#332
சத்தியை வேண்டி சமயத்தோர் கள் உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டு
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே

மேல்

#333
சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்க
சத்தியம் எண் சித்தி தன்மையும் ஆமே

மேல்

#334
தத்துவம் நீக்கி மருள் நீக்கி தான் ஆகி
பொய்த்தவம் நீக்கி மெய் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டு பரானந்த
சித்தி அது ஆக்கும் சிவானந்த தேறலே

மேல்

#335
யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்த
போத அமுதை பொசித்தவர் எண் சித்தி
மோகியர் கள் உண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே

மேல்

#336
உண்ணீர் அமுதமுறும் ஊறலை திறந்து
எண்ணீர் குரவன் இணை அடி தாமரை
நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம்
கண் ஆற்றொடே சென்று கால் வழி காணுமே

மேல்

2.இரண்டாம் தந்திரம் (337 – 548)


#337
நடுவு நில்லாது இ உலகம் சரிந்து
கெடுகின்றது எம் பெருமான் என்ன ஈசன்
நடு உள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே

மேல்

#338
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம்செய் மேல்-பால் அவனொடு
மங்கி உதயம்செய் வட-பால் தவ முனி
எங்கும் வளம் கொள் இலங்கு ஒளி தானே

மேல்

#339
கருத்து உறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்ட
குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே

மேல்

#340
கொலையில் பிழைத்த பிரசாபதியை
தலையை தடிந்திட்டு தான் அங்கி இட்டு
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணி
தலையை அரிந்திட்டு சந்திசெய்தானே

மேல்

#341
எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும்
தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற
அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே

மேல்

#342
எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழிசெய்தானே

மேல்

#343
அ பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அ புரம் எய்தமை ஆர் அறிவாரே

மேல்

#344
முத்தீ கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதியது ஆம் பல தேவரும்
அ தீயின் உள் எழுந்தன்று கொலையே

மேல்

#345
மூல துவாரத்து மூளும் ஒருவனை
மேலை துவாரத்து மேலுற நோக்கி முன்
காலுற்று காலனை காய்ந்து அங்கி யோகமாய்
ஞால கடவூர் நலமாய் இருந்ததே

மேல்

#346
இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி இலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயல் அழித்து அம் கண்
அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே

மேல்

#347
அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடி சேர் மலை மகனார் மகள் ஆகி
திடமார் தவம்செய்து தேவர் அறிய
படியார அர்ச்சித்து பத்திசெய்தாளே

மேல்

#348
திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடையாளர்க்கு பொய் அலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசு அறிவானே

மேல்

#349
ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும்
ஊழி வலம்செய்ய ஒண் சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அ வழி
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே

மேல்

#350
தாங்கி இருபது தோளும் தட வரை
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெரு வலி
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே

மேல்

#351
உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி
அறு வகை ஆன் ஐந்தும் ஆட்ட தன் தாதை
செறு வகை செய்து சிதைப்ப முனிந்து
மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே

மேல்

#352
ஓடிவந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்து தாம் சென்று
நாடி இறைவா நம என்று கும்பிட
ஈடு இல் புகழோன் எழுக என்றானே

மேல்

#353
தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை
வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறை கெட்டு
சிந்தினர் அண்ணல் சினம்செய்த-போதே

மேல்

#354
சந்தி செய கண்டு எழுகின்ற அரிதானும்
எந்தை இவன் அல்ல யாமே உலகினில்
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம்செய்ய
அந்தம்_இலானும் அருள் புரிந்தானே

மேல்

#355
அ பரிசே அயனார் பதி வேள்வியுள்
அ பரிசே அங்கி அதிசயம் ஆகிலும்
அ பரிசே அது நீர்மையை உள் கலந்து
அ பரிசே சிவன் ஆலிகின்றானே

மேல்

#356
அ பரிசே அயன் மால் முதல் தேவர்கள்
அ பரிசே அவர் ஆகிய காரணம்
அ பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு
அ பரிசு ஆகி அலர்ந்திருந்தானே

மேல்

#357
அலர்ந்திருந்தான் என்று அமரர் துதிப்ப
குலம் தரும் கீழ் அங்கி கோளுற நோக்கி
சிவந்த பரம் இது சென்று கதுவ
உவந்த பெரு வழி ஓடி வந்தானே

மேல்

#358
அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே
வரு மதி வாலை வன்னி நல் இந்திரன்
சிர முக நாசி சிறந்த கை தோள் தான்
அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே

மேல்

#359
செவி மந்திரம் சொல்லும் செய் தவ தேவர்
அவி மந்திரத்தின் அடுக்களை கோலி
செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும்
குவி மந்திரம்-கொல் கொடியது ஆமே

மேல்

#360
நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புற
பல்லார் அமரர் பரிந்து அருள்செய்க என
வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும்படிக்கே

மேல்

#361
தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதி பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீய
சுளிந்தாங்கு அருள்செய்த தூய் மொழியானே

மேல்

#362
கருவரை மூடி கலந்து எழும் வெள்ளத்து
இருவரும் கோ என்று இகல இறைவன்
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி
அருவரையாய் நின்று அருள்புரிந்தானே

மேல்

#363
அலை கடல் ஊடறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு
உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி
அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே

மேல்

#364
தண் கடல் விட்டது அமரரும் தேவரும்
எண் கடல் சூழ் எம் பிரான் என்று இறைஞ்சுவர்
விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம்
கண் கடல் செய்யும் கருத்து அறியாரே

மேல்

#365
சமைக்க வல்லானை சயம்பு என்று ஏத்தி
அமைக்க வல்லார் இ உலகத்து உளாரே
திகை தெண் நீரில் கடல் ஒலி ஓசை
மிகை கொள அங்கி மிகாமை வைத்தானே

மேல்

#366
பண்பு அழி செய் வழிபாடு சென்று அப்புறம்
கண் பழியாத கமலத்து இருக்கின்ற
நண் பழியாளனை நாடி சென்று அச்சிரம்
விண் பழியாத விருத்திகொண்டானே

மேல்

#367
மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம்
கால் போதம் கையினோடு அந்தர சக்கரம்
மேல் போக வெள்ளி மலை அமரர் பதி
பார் போகம் ஏழும் படைத்து உடையானே

மேல்

#368
சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னை தரிக்க ஒண்ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்க
தக்க நல் சத்தியை தான் கூறு செய்ததே

மேல்

#369
கூறது ஆக குறித்து நல் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்கு
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்கு
கூறது செய்து தரித்தனன் கோலமே

மேல்

#370
தக்கன்-தன் வேள்வி தகர்த்த நல் வீரர்-பால்
தக்கன்-தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம்-தன்னை சசி முடி மேல் விட
அக்கி உமிழ்ந்தது வாயு கரத்திலே

மேல்

#371
எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணி முடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே

மேல்

#372
பிரமனும் மாலும் பிரானே நான் என்ன
பிரமன் மால் தங்கள் தம் பேதைமையாலே
பரமன் அனலாய் பரந்து முன் நிற்க
அரன் அடி தேடி அரற்றுகின்றாரே

மேல்

#373
ஆம் ஏழ் உலகுற நின்ற எம் அண்ணலும்
தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும்
வான் ஏழ் உலகுறும் மா மணிகண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே

மேல்

#374
ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்
சேணாய் வான் ஓங்கி திருவுருவாய் அண்ட
தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து
தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே

மேல்

#375
நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன்
அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேல் செல
நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே

மேல்

#376
சேவடி ஏத்தும் செறிவு உடை வானவர்
மூவடி தா என்றானும் முனிவரும்
பாவடியாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டு தலைப்பெய்துமாறே

மேல்

#377
தான கமலத்து இருந்த சதுமுகன்
தான கரும் கடல் ஊழி தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற
தான பெரும் பொருள் தன்மையது ஆமே

மேல்

#378
ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர்
மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந்நெறி முன் கண்டு
ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும்
கோலிங்கம் ஐஞ்சு அருள் கூடலும் ஆமே

மேல்

#379
வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்
ஆள் கொடுத்து எம் போல் அரனை அறிகிலர்
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்து கோளாக
தாள் கொடுத்தான் அடி சாரகிலாரே

மேல்

#380
ஊழி வலம்செய்து அங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழி தலை நீர் விதித்தது தா என
ஊழி கதிரோன் ஒளியை வென்றானே

மேல்

#381
ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம் அது ஆக புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்ற தோன்றுமாம்
தீது இல் பரை அதன்-பால் திகழ் நாதமே

மேல்

#382
நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில்
தீது அற்று அகம்வந்த சிவன் சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்து எழும் விந்துவே

மேல்

#383
இல்லது சத்தி இடம்-தனில் உண்டாகி
கல் ஒளி போல கலந்து உள் இருந்திடும்
வல்லது ஆக வழி செய்த அ பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதிதூரமே

மேல்

#384
தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்
பார சதாசிவம் பார் முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்தி ஓர் சாத்துமான் ஆமே

மேல்

#385
மானின்-கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும்
கானின்-கண் நீரும் கலந்து கடினமாய்
தேனின்-கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்
பூவின்-கண் நின்று பொருந்தும் புவனமே

மேல்

#386
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்கு புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசையான் ஆய்
புவனம் படைப்பான் அ புண்ணியன் தானே

மேல்

#387
புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்
கண் இயல்பாக கலவி முழுதும் ஆய்
மண் இயல்பாக மலர்ந்து எழு பூவிலே

மேல்

#388
நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்தில் சோதி பிறக்கும் அ காற்றிடை
ஓர் உடை நல் உயிர் பாதம் ஒலி சத்தி
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே

மேல்

#389
உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்ட சதுமுக காரணன்-தன்னொடும்
பண்டு இ உலகம் படைக்கும் பொருளே

மேல்

#390
ஓங்கு பெரும் கடல் உள்ளுறு வானொடும்
பாங்கர் கயிலை பராபரன்-தானும்
வீங்கும் கமல மலர் மிசை மேல் அயன்
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே

மேல்

#391
காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே

மேல்

#392
பயன் எளிதாம் பரு மா மணி செய்ய
நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு
அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும்
பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே

மேல்

#393
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்து
ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து
மேக்கு மிக நின்ற எட்டு திசையொடும்
தாக்கும் கலக்கும் தயாபரன் தானே

மேல்

#394
நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடலுற
முன் துயர் ஆக்கும் உடற்கும் துணையதா
நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே

மேல்

#395
ஆகின்ற தன்மையில் அக்கு அணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேல் அணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய் ஆண்தகையானே

மேல்

#396
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள்-தோறும் பயன் பல ஆன
திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே

மேல்

#397
புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல்
புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல்
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள்
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே

மேல்

#398
ஆணவ சத்தியும் ஆம் அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடை முறை
பேணிய ஐம் தொழிலால் விந்துவில் பிறந்து
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே

மேல்

#399
உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா
மற்றைய மூன்று மாயோதயம் விந்து
பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே

மேல்

#400
ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம்
ஆகாயம் பூமி காண அளித்தலே

மேல்

#401
அளியார் முக்கோணம் வயிந்தவம்-தன்னில்
அளியார் திரிபுரையாம் அவள் தானே
அளியார் சதாசிவம் ஆகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே

மேல்

#402
வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரியம் ஆக கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமும் ஆமே

மேல்

#403
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன்
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே

மேல்

#404
ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான்
ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான்
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான்
ஒருவனுமே உலகோடு உயிர் தானே

மேல்

#405
செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை
மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்து நின்றானே

மேல்

#406
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் பிறவி குணம் செய்த மா நந்தி
ஊடும் அவர் தமது உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே

மேல்

#407
ஓர் ஆயமே உலகு ஏழும் படைப்பதும்
ஓர் ஆயமே உலகு ஏழும் அளிப்பதும்
ஓர் ஆயமே உலகு ஏழும் துடைப்பதும்
ஓர் ஆயமே உலகோடு உயிர் தானே

மேல்

#408
நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டி குழைத்தனர்
ஏது பணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின்றானே

மேல்

#409
அ பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய் பரிசு எய்தி புகலும் மனிதர்கட்கு
இ பரிசே இருள் மூடி நின்றானே

மேல்

#410
ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள்
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே

மேல்

#411
புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகி
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி
புகுந்து நின்றான் உடலாய் உயிர் ஆகி
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே

மேல்

#412
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே

மேல்

#413
உடலாய் உயிராய் உலகம் அது ஆகி
கடலாய் கார் முகில் நீர் பொழிவானாய்
இடையாய் உலப்பு_இலி எங்கும் தான் ஆகி
அடையார் பெரு வழி அண்ணல் நின்றானே

மேல்

#414
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடு மரபில் குணஞ்செய்த மா நந்தி
ஊடும் அவர்-தமது உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே

மேல்

#415
தான் ஒரு காலம் தனிச்சுடராய் நிற்கும்
தான் ஒரு-கால் சண்ட மாருதமாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே

மேல்

#416
அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்ப கலவியுமாய் நிற்கும்
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே

மேல்

#417
உற்று வனைவான் அவனே உலகினை
பெற்று வனைவான் அவனே பிறவியை
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை
மற்றும் அவனே வனைய வல்லானே

மேல்

#418
உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி
வெள் உயிராகும் வெளியாய் இலங்கு ஒளி
உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து
தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே

மேல்

#419
தாங்க_அரும் தன்மையும் தான் அவை பல் உயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அ வழி
தாங்கி நின்றானும் அ தாரணி தானே

மேல்

#420
அணுகினும் சேயவன் அங்கியில் கூடி
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்
பணிகினும் பார் மிசை பல் உயிர் ஆகி
தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே

மேல்

#421
அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது
அங்கி செய்து ஈசன் அசுரரை சுட்டது
அங்கி அ ஈசற்கு கை அம்பு தானே

மேல்

#422
இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்தம்
நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேனால்
உலை தந்த மெல் அரி போலும் உலகம்
மலை தந்த மாநிலம் தான் வெந்ததுவே

மேல்

#423
பதம் செய்யும் பாரும் பனி வரை எட்டும்
உதம் செய்யும் ஏழ் கடல் ஓதம் முதலாம்
குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம்
விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே

மேல்

#424
கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி
ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புற
குண்டத்தின் மேல் அங்கி கோலிக்கொண்டானே

மேல்

#425
நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம்
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம்
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே

மேல்

#426
நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்
வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம்
சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல்
உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே

மேல்

#427
நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால்
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல்
சுத்த சங்காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே

மேல்

#428
நித்த சங்காரமும் நீடு இளைப்பாற்றலின்
வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில்
சுத்த சங்காரமும் தோயா பரன் அருள்
உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே

மேல்

#429
பாழே முதலா எழும் பயிர் அ பயிர்
பாழாய் அடங்கினும் பண்டை பாழ் பாழ் ஆகா
வாழா சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம்
பாழாம் பயிராய் அடங்கும் அ பாழிலே

மேல்

#430
தீய வைத்து ஆர்-மின்கள் சேரும் வினை-தனை
மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர்
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே

மேல்

#431
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உரு அறியாதே

மேல்

#432
இன்ப பிறவி படைத்த இறைவனும்
துன்பம் செய் பாச துயருள் அடைத்தனன்
என்பில் கொளுவி இசைந்துறு தோல் தசை
முன்பில் கொளுவி முடிகுவது ஆமே

மேல்

#433
இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்து உடன் கூடி
இறையவன் செய்த இரும் பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசு அறியாதே

மேல்

#434
காண்கின்ற கண் ஒளி காதல்செய்து ஈசனை
ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை
ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டு
சேண் படு பொய்கை செயல் அணையாரே

மேல்

#435
தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகை செய்யும் ஆதி பிரானும்
சுருளும் சுடருறு தூ வெண் சுடரும்
இருளும் அற நின்ற இருட்டு அறையாமே

மேல்

#436
அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன்று ஒவ்வா
பரக்கும் உருவமும் பாரகம் தானாய்
கரக்கின்றவை செய்த காண்தகையானே

மேல்

#437
ஒளித்து வைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்று அருள்செய்திடும் ஈண்டே
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே

மேல்

#438
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன்
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே

மேல்

#439
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இரும் கரை மேல் இருந்து இன்புற நாடி
வரும் கரை ஓரா வகையினில் கங்கை
அரும் கரை பேணில் அழுக்கு அறலாமே

மேல்

#440
மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும்
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே

மேல்

#441
எட்டு திசையும் எறிகின்ற காற்றொடு
வட்ட திரை அனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர் நிலை என்னும் இ காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்_நுதல் காணுமே

மேல்

#442
உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கு
தச்சும் அவனே சமைக்க வல்லானே

மேல்

#443
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணை
குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன்
குசவனை போல் எங்கள் கோன் நந்தி வேண்டில்
அசைவு இல் உலகம் அது இது ஆமே

மேல்

#444
விடை உடையான் விகிர்தன் மிகு பூத
படை உடையான் பரிசே உலகு ஆக்கும்
கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும்
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே

மேல்

#445
உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே

மேல்

#446
படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே

மேல்

#447
ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்_இலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கி நின்றானே

மேல்

#448
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே

மேல்

#449
உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல்
விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள்
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன்
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே

மேல்

#450
ஆரும் அறியாத அண்ட திருவுரு
பார் முதலாக பயிலும் கடத்திலே
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையை
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே

மேல்

#451
ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர்
ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை உள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே

மேல்

#452
அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவி
பொறைகின்ற இன் உயிர் போந்துற நாடி
பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே

மேல்

#453
இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய
துன்புறு பாசத்து உயர் மனை வான் உளன்
பண்புறு காலமும் பார் மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்து ஒழிந்தானே

மேல்

#454
கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார்
திருவின் கருக்குழி தேடி புகுந்த
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே

மேல்

#455
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொடு ஏறி
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே

மேல்

#456
பூவின் மணத்தை பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்தவாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட-போதே

மேல்

#457
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடான் எனில் பன்றியும் ஆமே

மேல்

#458
ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும்
மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும்
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும்
பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே

மேல்

#459
ஏயம் கலந்த இருவர்-தம் சாயத்து
பாயும் கருவும் உருவாம் என பல
காயம் கலந்தது காண பதிந்த பின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே

மேல்

#460
கர்ப்பத்து கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம்
சொற்புறு தூய் மறை வாக்கினாம் சொல்லே

மேல்

#461
என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டி
செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின்றேனே

மேல்

#462
பதம் செய்யும் பால் வண்ணன் மேனி பகலோன்
இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து
குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே

மேல்

#463
ஒழி பல செய்யும் வினையுற்ற நாளே
வழி பல நீர் ஆடி வைத்து எழு வாங்கி
பழி பல செய்கின்ற பாச கருவை
சுழி பல வாங்கி சுடாமல் வைத்தானே

மேல்

#464
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அ யோனியும்
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே

மேல்

#465
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடை தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே

மேல்

#466
பிண்டத்தில் உள்ளுறு பேதை புலன் ஐந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அ வகை
அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே

மேல்

#467
இலை பொறி ஏற்றி எனது உடல் ஈசன்
துலை பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி
நிலை பொறி முப்பது நீர்மை கொளுவி
உலை பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே

மேல்

#468
இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்ப கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே

மேல்

#469
அறியீர் உடம்பினில் ஆகியவாறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்ட
தறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே

மேல்

#470
உடல் வைத்தவாறும் உயிர் வைத்தவாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து
திடம் வைத்த தாமரை சென்னியுள் அங்கி
கடை வைத்த ஈசனை கைகலந்தேனே

மேல்

#471
கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர்
மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன்
கூட்டுகின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்று ஆகத்து நேர்பட்டவாறே

மேல்

#472
பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்த பின்
காவுடை தீபம் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்
பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே

மேல்

#473
எட்டினுள் ஐந்து ஆகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும்
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே

மேல்

#474
கண்_நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடை
பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண் முதலாக வகுத்து வைத்தானே

மேல்

#475
அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி
அருள் இல்லை ஆதலின் அ ஓர் உயிரை
தருகின்ற-போது இரு கைத்தாயர்-தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடும் தானே

மேல்

#476
வகுத்த பிறவியை மாது நல்லாளும்
தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும்
பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே

மேல்

#477
மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம் பதி செய்தான் அ சோதி தன் ஆண்மையே

மேல்

#478
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்து பொருந்தில் அலி ஆகும்
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

மேல்

#479
பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்த பின் நால் ஓடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்து அறிந்து இ வகை
பாய்ந்திடும் யோகிக்கு பாய்ச்சலும் ஆமே

மேல்

#480
பாய்கின்ற வாயு குறையில் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே

மேல்

#481
மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே

மேல்

#482
குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில்
குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே

மேல்

#483
கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே

மேல்

#484
கோல்_வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம்
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உரு
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே

மேல்

#485
உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்
பருவம் அது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே

மேல்

#486
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்
கெட்டேன் இ மாயையின் கீழ்மை எவ்வாறே

மேல்

#487
இன்புற நாடி இருவரும் சந்தித்து
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே

மேல்

#488
குயில் குஞ்சு முட்டையை காக்கை கூட்டிட்டால்
அயிர்ப்பு இன்றி காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்கின்றவாறே

மேல்

#489
முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின்
அதல் புதலாய் பலமாய் நின்று அளிக்கும்
அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல்
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதி பிரானே

மேல்

#490
ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தினின் உள்ளே

மேல்

#491
பரத்தில் கரைந்தது பதிந்த நல் காயம்
உரு தரித்து இ உடல் ஓங்கிட வேண்டி
திரை கடல் உப்பு திரண்டது போல
திரித்து பிறக்கும் திருவருளாலே

மேல்

#492
சத்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி
சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்து
சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே

மேல்

#493
விஞ்ஞானர் நால்வரும் மெய் பிரளயாகலத்து
அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்
விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே

மேல்

#494
விஞ்ஞானர் கேவலத்து ஆராது விட்டவர்
தம் ஞானர் அட்ட வித்தேசராம் சார்ந்து உளோர்
எஞ்ஞானர் ஏழ் கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே

மேல்

#495
இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவது உள்ளே இருமல பெத்தர்
இரண்டாகும் நூற்று எட்டு உருத்திரர் என்பர்
முரண் சேர் சகலத்தர் மும்மலத்தாரே

மேல்

#496
பெத்தத்த சித்தொடு பேண்முத்த சித்தது
ஒத்திட்டு இரண்டிடை ஊடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து உளாரே

மேல்

#497
சிவம் ஆகி ஐ வகை திண்மலம் செற்றோர்
அவம் ஆகார் சித்தர் முத்தாந்தத்து வாழ்வார்
பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர்
நவம் ஆன தத்துவம் நாடி கண்டோரே

மேல்

#498
விஞ்ஞானர் ஆணவ கேவலம் மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அ சகலத்தர் சகலராம்
விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே

மேல்

#499
விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டு போய்
மெய்ஞ்ஞானர் ஆகி சிவம் மேவல் உண்மையே

மேல்

#500
ஆணவம் துற்ற அவித்தாம் நனவு அற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே
சேண் உயர் சத்தி சிவதத்துவம் ஆமே

மேல்

#501
திலம் அத்தனை பொன் சிவஞானிக்கு ஈந்தால்
பல முத்தி சித்தி பரபோகமும் தரும்
நிலம் அத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும் அற்றே பரபோகமும் குன்றுமே

மேல்

#502
கண்டிருந்து ஆருயிர் உண்டிடும் காலனை
கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை
நன்று உணர்ந்தார்க்கு அருள்செய்திடும் நாதனை
சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே

மேல்

#503
கைவிட்டிலேன் கருவாகிய காலத்து
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய் விட்டு நானே புரிசடையான் அடி
நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே

மேல்

#504
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளையோனே

மேல்

#505
கோல வறட்டை குனிந்து குளகு இட்டு
பாலை கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து
காலம் கழிந்த பயிர் அது ஆகுமே

மேல்

#506
ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி
ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு
ஈவ பெரும் பிழை என்று கொளீரே

மேல்

#507
ஆமாறு அறியான் அதி பஞ்சபாதகன்
தோம் மாறும் ஈசற்கும் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான் போதம் கற்கவே

மேல்

#508
மண் மலையத்தனை மா தனம் ஈயினும்
அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரக குழியிலே

மேல்

#509
உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ள குடைந்து நின்று ஆடார் வினை கெட
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடை கல்வி இலோரே

மேல்

#510
தளி அறிவாளர்க்கு தண்ணிதாய் தோன்றும்
குளி அறிவாளர்க்கு கூடவும் ஒண்ணான்
வளி அறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே

மேல்

#511
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினை
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே

மேல்

#512
அறிவார் அமரர்கள் ஆதி பிரானை
செறிவான் உறை பதம் சென்று வலம் கொள்
மறியார் வளை கை வரு புனல் கங்கை
பொறியார் புனல் மூழ்க புண்ணியர் ஆமே

மேல்

#513
கடலில் கெடுத்து குளத்தினில் காண்டல்
உடல் உற்று தேடுவார் தம்மை ஒப்பார் இலர்
திடம் உற்ற நந்தி திருவருளால் சென்று
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே

மேல்

#514
கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே

மேல்

#515
தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே

மேல்

#516
கட்டுவித்து ஆர் மதில் கல் ஒன்று வாங்கிடில்
வெட்டுவிக்கும் அபிடேகத்து அரசரை
முட்டுவிக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே

மேல்

#517
ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி
போற்ற_அரு மன்னரும் போர் வலி குன்றுவர்
கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே

மேல்

#518
முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்கு தீங்கு உள வாரி வளம் குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என் அரு நந்தி எடுத்து உரைத்தானே

மேல்

#519
பேர் கொண்ட பார்ப்பான் பிரான்-தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே

மேல்

#520
எம்பெருமான் இறைவா முறையோ என்று
வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல
அம் பவள மேனி அறுமுகன் போய் அவர்
தம் பகை கொல் என்ற தற்பரன் தானே

மேல்

#521
அண்டமொடு எண் திசை தாங்கும் அதோ முகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்
வெண் தலை மாலை விரிசடையோற்கே

மேல்

#522
செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்து
பொய்யே உரைத்து புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே

மேல்

#523
நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும்
முந்தி கலந்து அங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோ முகம் ஆமே

மேல்

#524
அதோமுகம் கீழ் அண்டம் ஆன புராணன்
அதோமுகம்-தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண் மலர் கண்ணி பிரானும்
அதோமுகன் ஊழி தலைவனும் ஆமே

மேல்

#525
அதோமுகம் மா மலர் ஆயது கேளும்
அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தம்_இல் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்து இருந்தானே

மேல்

#526
தெளிவுறு ஞானத்து சிந்தையின் உள்ளே
அளிவுறுவார் அமராபதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழில்
கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே

மேல்

#527
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதி பிரானை
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே

மேல்

#528
அ பகையாலே அசுரரும் தேவரும்
நல் பகைசெய்து நடுவே முடிந்தனர்
எ பகையாகிலும் எய்தார் இறைவனை
பொய் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே

மேல்

#529
போகமும் மாதர் புலவி அது நினைந்து
ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால்
வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே

மேல்

#530
பெற்றிருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந்தார் வழி உற்றிருந்தார் அவர்
பெற்றிருந்தார் அன்றி யார் பெறும் பேறே

மேல்

#531
ஓர் எழுத்து ஒரு பொருள் உணர கூறிய
சீர் எழுத்தாளரை சிதைய செப்பினோர்
ஊரிடை சுணங்கனாய் பிறந்து அங்கு ஓர் உகம்
வாரிடை கிருமியாய் மாய்வர் மண்ணிலே

மேல்

#532
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்க சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே

மேல்

#533
மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே

மேல்

#534
ஈசன் அடியார் இதயம் கலங்கிட
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும்
நாசம் அது ஆகுமே நம் நந்தி ஆணையே

மேல்

#535
சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய் வரின்
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு
பல் மார்க்கமும் கெட்டு பஞ்சமும் ஆமே

மேல்

#536
கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லை சுமப்போன் விதி போன்றும்
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்க தான் அற
கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே

மேல்

#537
ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே

மேல்

#538
ஞானியை நிந்திப்பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப்பவனுமே நல்வினை
ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம்
போன பொழுதே புகும் சிவபோகமே

மேல்

#539
பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு
முற்றி கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றி கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒழிவது மாகமை ஆமே

மேல்

#540
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள்
பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்து உய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்
ஞாலத்து இவன் மிக நல்லன் என்றாரே

மேல்

#541
ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசை-தொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்-தம் ஆதியை
ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே

மேல்

#542
வல்வகையாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகையாலும் பயிற்றி பதம் செய்யும்
கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு
எல்லை இல்லாத இலயம் உண்டாமே

மேல்

#543
ஓட வல்லார் தமரோடு நடாவுவன்
பாட வல்லார் ஒளி பார் மிசை வாழ்குவன்
தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும்
கூட வல்லார் அடி கூடுவன் யானே

மேல்

#544
தாம் இடர்ப்பட்டு தளிர் போல் தயங்கினும்
மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும்
நீ இடர்ப்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே
போம் இடத்து என்னொடும் போது கண்டாயே

மேல்

#545
அறிவார் அமரர் தலைவனை நாடி
செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை
நெறிதான் மிக மிக நின்று அருள்செய்யும்
பெரியாருடன் கூடல் பேரின்பம் ஆமே

மேல்

#546
தார் சடையான்-தன் தமராய் உலகினில்
போர் புகழான் எந்தை பொன் அடி சேருவார்
வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள்செய்யும்
கோ அடைந்து அ நெறி கூடலும் ஆமே

மேல்

#547
உடையான் அடியார் அடியாருடன் போய்
படையார் அழல் மேனி பதி சென்று புக்கேன்
கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப
உடையான் வருக என ஓலம் என்றாரே

மேல்

#548
அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும்
பெருமை வல்லோன் பிறவி சுழி நீந்தும்
உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும்
இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே

3.மூன்றாம் தந்திரம் (549 – 883)

மேல்

#549
உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரை முறை எண்ணி
பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே

மேல்

#550
செய்த இயம நியமம் சமாதி சென்று
உய்ய பராசத்தி உத்தர பூருவம்
எய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த உரைசெய்வன் இ நிலை தானே

மேல்

#551
அ நெறி இ நெறி என்னாது அட்டாங்க
தன் நெறி சென்று சமாதியிலே நின்-மின்
நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே

மேல்

#552
இயம நியமமே எண்_இலா ஆதனம்
நயமுறு பிரணாயாமம் பிரத்தியாகாரம்
சய மிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவது ஆமே

மேல்

#553
எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
செழும் தண் நியமங்கள் செய்-மின் என்று அண்ணல்
கொழும் தண் பவள குளிர் சடையோடே
அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே

மேல்

#554
கொல்லான் பொய் கூறான் களவு இலான் எண் குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம்
இல்லான் நியமத்து இடையில் நின்றானே

மேல்

#555
ஆதியை வேதத்தின் அ பொருளானை
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை
பாதியுள் மன்னும் பராசத்தியோடு உடன்
நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே

மேல்

#556
தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை
காமம் களவு கொலை என காண்பவை
நேமி ஈரைந்து நியமத்தன் ஆமே

மேல்

#557
தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன் தன் விரதமே சித்தாந்த கேள்வி
மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து
நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே

மேல்

#558
பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
அங்கு உளவாம் இரு நாலும் அவற்றினுள்
சொங்கு இல்லை ஆக சுவத்திகம் என மிக
தங்க இருப்ப தலைவனும் ஆமே

மேல்

#559
ஓர் அணை அ பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு
ஆர வலித்து அதன் மேல் வைத்து அழகுற
சீர் திகழ் கைகள் அதனை தன் மேல் வைக்க
பார் திகழ் பத்மாசனம் எனல் ஆகுமே

மேல்

#560
துரிசு இல் வலக்காலை தோன்றவே மேல் வைத்து
அரிய முழந்தாளில் அம் கையை நீட்டி
உருசியொடும் உடல் செவ்வே இருத்தி
பரிசு பெறும் அது பத்திராசனமே

மேல்

#561
ஒக்க அடியிணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றி
தொக்க அறிந்து துளங்காது இருந்திடல்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே

மேல்

#562
பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுற
கோது இல் நயனம் கொடி மூக்கிலே உற
சீர் திகழ் சிங்காதனம் என செப்புமே

மேல்

#563
பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு
உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டு
பத்தொடு நூறு பல ஆசனமே

மேல்

#564
ஐவர்க்கு நாயகன் அ ஊர் தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு
மெய்யர்க்கு பற்று கொடுக்கும் கொடாது போய்
பொய்யரை துள்ளி விழுத்திடும் தானே

மேல்

#565
ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள
வீசி பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரி பிடிக்க வசப்படும் தானே

மேல்

#566
புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்
கள் உண்ண வேண்டாம் தானே களி தரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே

மேல்

#567
பிராணன் மனத்தொடும் பேராது அடங்கி
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறி பேச்சு அறிவித்து
பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே

மேல்

#568
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்துநாலு அதில்
ஊறுதல் முப்பத்திரண்டு அதி இரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே

மேல்

#569
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கு ஒத்து காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளிய குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனும் ஆமே

மேல்

#570
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை
அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்ல
சங்கே குறிக்க தலைவனும் ஆமே

மேல்

#571
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றை பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை
காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறி அது ஆமே

மேல்

#572
மேல் கீழ் நடு பக்கம் மிக்கு உற பூரித்து
பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து
மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே

மேல்

#573
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத்திரண்டும் இரேசித்து
காமுற்ற பிங்கலை கண்ணாக இ இரண்டு
ஓமத்தால் எட்டெட்டு கும்பிக்க உண்மையே

மேல்

#574
இட்டது அ வீடு இளகாது இரேசித்து
புட்டி பட தச நாடியும் பூரித்து
கொட்டி பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமன் இல்லை தானே

மேல்

#575
புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டு போகான் புரிசடையோனே

மேல்

#576
கூடம் எடுத்து குடி புக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண் விரல் கண்டிப்பர் நால் விரல்
கூடி கொளில் கோல அஞ்சு எழுத்து ஆமே

மேல்

#577
பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது
பன்னிரண்டு ஆனையை பாகன் அறிகிலன்
பன்னிரண்டு ஆனையை பாகன் அறிந்த பின்
பன்னிரண்டு ஆனைக்கு பகல் இரவு இல்லையே

மேல்

#578
கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில்
கொண்டுகொண்டு உள்ளே குணம் பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே

மேல்

#579
நாபிக்கு கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கு மந்திரம்-தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம்-தன்னை அறிந்த பின்
கூவிக்கொண்டு ஈசன் குடி இருந்தானே

மேல்

#580
மூலத்து இரு விரல் மேலுக்கு முன் நின்ற
பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற
கோலித்த குண்டலி உள் எழும் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே

மேல்

#581
நாசிக்கு அதோ முகம் பன்னிரண்டு அங்குலம்
நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மா சித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை ஆமே

மேல்

#582
சோதி இரேகை சுடர் ஒளி தோன்றிடில்
கோது இல் பரானந்தம் என்றே குறி கொண்-மின்
நேர் திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால்
ஓதுவது உன் உடல் உன்மத்தம் ஆமே

மேல்

#583
மூல துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு
மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு
வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு
காலத்தை வெல்லும் கருத்து இது தானே

மேல்

#584
எரு இடும் வாசற்கு இரு விரல் மேலே
கரு இடும் வாசற்கு இரு விரல் கீழே
உரு இடும் சோதியை உள்க வல்லார்க்கு
கரு இடும் சோதி கலந்து நின்றானே

மேல்

#585
ஒருக்கால் உபாதியை ஒண் சோதி-தன்னை
பிரித்து உணர் வந்த உபாதி பிரிவை
கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால்
பிரத்தியாகார பெருமை அது ஆமே

மேல்

#586
புறப்பட்ட வாயு புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே
புறப்பட்டு போகான் பெருந்தகையானே

மேல்

#587
குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புறு சிந்தையை சிக்கென்று உணரில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே

மேல்

#588
கோணா மனத்தை குறிக்கொண்டு கீழ் கட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுற தான் நோக்கி
காணா கண் கேளா செவி என்று இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே

மேல்

#589
மலை ஆர் சிரத்திடை வான் நீர் அருவி
நிலையார பாயும் நெடுநாடி ஊடே
சிலை ஆர் பொதுவில் திருநடம் ஆடும்
தொலையாத ஆனந்த சோதி கண்டேனே

மேல்

#590
மேலை நிலத்தினாள் வேதக பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே

மேல்

#591
கடை வாசலை கட்டி காலை எழுப்பி
இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி
மடை வாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே

மேல்

#592
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிர் அது காலின் நெருக்கம்
கலந்த உயிர் அது கால் அது கட்டில்
கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே

மேல்

#593
வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு
வாய் திறப்பாரே வளி இட்டு பாய்ச்சுவர்
வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர்
கோய் திறவாவிடில் கோழையும் ஆமே

மேல்

#594
வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடை
போழ்கின்ற வாயு புறம் படா பாய்ச்சுறில்
ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியது ஓர் பள்ளி அறையே

மேல்

#595
நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால்
இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய்
வரம்பினை கோலி வழி செய்குவார்க்கு
குரங்கினை கொட்டை பொதியலும் ஆமே

மேல்

#596
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறு கதி பேசிடில்
என்ன மாயம் இடி கரை நிற்குமே

மேல்

#597
அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்து
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
தெரித்த மனாதி சத்தாதியில் செல்ல
தரித்தது தாரணை தற்பரத்தோடே

மேல்

#598
வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போகம் ஏவல்
உரு ஆய சத்தி பர தியான முன்னும்
குருவார் சிவதியானம் யோகத்தின் கூறே

மேல்

#599
கண் நாக்கு மூக்கு செவி ஞான கூட்டத்துள்
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்தவாறே

மேல்

#600
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி-தன்னை
கண்ணார பார்த்து கலந்து ஆங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடி
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே

மேல்

#601
ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை
ஒருபொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை
ஒருபொழுது உன்னார் சந்திர பூவே

மேல்

#602
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றி
சினத்து விளக்கினை செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரி ஒக்க தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே

மேல்

#603
எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண் ஆர் அமுதினை கண்டு அறிவார் இல்லை
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால்
கண்ணாடி போல கலந்து நின்றானே

மேல்

#604
நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில்
வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே

மேல்

#605
நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு
உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கி
துயர் அற நாடியே தூங்க வல்லார்க்கு
பயன் இது காயம் பயம் இல்லை தானே

மேல்

#606
மணி கடல் யானை வார் குழல் மேகம்
அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே

மேல்

#607
கடலொடு மேகம் களிறொடும் ஓசை
அட எழும் வீணை அண்டர் அண்டத்து
சுடர் மன்னு வேணு சுரிசங்கின் ஓசை
திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே

மேல்

#608
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும்
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர்
ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே

மேல்

#609
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே

மேல்

#610
உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசு உடை தூங்கு இருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்க
கதி கொன்றை ஈசன் கழல் சேரலாமே

மேல்

#611
பள்ளி அறையில் பகலே இருள் இல்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது
வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே

மேல்

#612
கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றி
தண்டுடன் ஓடி தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்த பின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே

மேல்

#613
அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில்
அவ்வவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே

மேல்

#614
இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றி
துளை பெரும் பாசம் துருவிடுமாகில்
இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே

மேல்

#615
முக்குண மூடு அற வாயுவை மூலத்தே
சிக்கென மூடி திரித்து பிடித்திட்டு
தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர் நிலை வானவர் கோனே

மேல்

#616
நடலித்த நாபிக்கு நால் விரல் மேலே
மடலித்த வாணிக்கு இரு விரல் உள்ளே
கடலித்து இருந்து கருத வல்லார்கள்
சடல தலைவனை தாம் அறிந்தாரே

மேல்

#617
அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று
செறிவான மாயை சிதைத்து அருளாலே
பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே

மேல்

#618
சமாது இயம் ஆதியில் தான் செல்லக்கூடும்
சமாது இயம் ஆதியில் தான் எட்டு சித்தி
சமாது இயம் ஆதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாது இயம் ஆதி தலைப்படும் தானே

மேல்

#619
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியில் ஆன சமாதியில் கூடிடும்
அந்தம் இலாத அறிவின் அரும்பொருள்
சுந்தர சோதியும் தோன்றிடும் தானே

மேல்

#620
மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு
மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை
மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே

மேல்

#621
விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டு உணர்வாக கருதி இருப்பார்கள்
செண்டு வெளியில் செழும் கிரியத்திடை
கொண்டு குதிரை குசை செறுத்தாரே

மேல்

#622
மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுற கண்ட பின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே

மேல்

#623
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே

மேல்

#624
பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவை
தேட்டு அற்ற அ நிலம் சேரும்படி வைத்து
நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே

மேல்

#625
உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர்
கரு வரை பற்றி கடைந்து அமுது உண்டார்
அரு வரை ஏறி அமுது உண்ண மாட்டார்
திரு வரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே

மேல்

#626
நம்பனை ஆதியை நால்மறை ஓதியை
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கி போய்
கொம்பு ஏறி கும்பிட்டு கூட்டம் இட்டாரே

மேல்

#627
மூலத்து மேல் அது முச்சதுரத்து
கால திசையில் கலக்கின்ற சந்தினில்
மேலை பிறையினில் நெற்றி நேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே

மேல்

#628
கற்பனை அற்று கனல் வழியே சென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளி
பொற்பினை நாடி புணர் மதியோடு உற்று
தற்பரம் ஆக தகும் தண் சமாதியே

மேல்

#629
தலைப்பட்டு இருந்திட தத்துவம் கூடும்
வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும்
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே

மேல்

#630
சோதி தனிச்சுடராய் நின்ற தேவனும்
ஆதியும் உள் நின்ற சீவனும் ஆகுமால்
ஆதி பிரமன் பெரும் கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந்து அன்புறுவாரே

மேல்

#631
சமாதி செய்வார்க்கு தகும் பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில்
சமாதியில் எட்டெட்டு சித்தியும் எய்துமே

மேல்

#632
போது உகந்து ஏறும் புரிசடையான் அடி
யாது உகந்தார் அமராபதிக்கே செல்வர்
ஏது உகந்தான் இவன் என்று அருள்செய்திடும்
மாது உகந்து ஆடிடும் மால் விடையோனே

மேல்

#633
பற்றி பதத்து அன்பு வைத்து பரன் புகழ்
கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு
முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வர
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே

மேல்

#634
வருந்தி தவம் செய்து வானவர் கோவாய்
திருந்து அமராபதி செல்வன் இவன் என
தரும் தண் முழவம் குழலும் இயம்ப
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே

மேல்

#635
செம்பொன் சிவகதி சென்று எய்தும் காலத்து
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள
எம் பொன் தலைவன் இவனாம் என சொல்ல
இன்ப கலவி இருக்கலும் ஆமே

மேல்

#636
சேருறு காலம் திசை நின்ற தேவர்கள்
ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ள
கார் உரு கண்டனை மெய் கண்டவாறே

மேல்

#637
நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும்
சொல் வழியாளர் சுருங்கா பெரும் கொடை
இல்வழியாளர் இமையவர் எண் திசை
பல்வழி எய்தினும் பார் வழி ஆகுமே

மேல்

#638
தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்
வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும்
தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே

மேல்

#639
காரியம் ஆன உபாதியை தான் கடந்து
ஆரிய காரணம் ஏழும் தன்-பால் உற
ஆரிய காரணம் ஆய தவத்து இடை
தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே

மேல்

#640
பணிந்து எண் திசையும் பரமனை நாடி
துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை
அணிந்து எண் திசையினும் அட்டமாசித்தி
தணிந்து எண் திசை சென்று தாபித்தவாறே

மேல்

#641
பரிசு அறி வானவர் பண்பன் அடி என
துரிசு அற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கு இல்லை அட்டமாசித்தி
பெரியது அருள்செய்து பிறப்பு அறுத்தானே

மேல்

#642
குரவன் அருளில் குறிவழி மூலன்
பரையின் மணம் மிகு சங்கட்டம் பார்த்து
தெரிதரு சாம்பவி கேசரி சேர
பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே

மேல்

#643
காயாதி பூதம் கலை கால மாயையில்
ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே
ஓயா பதி அதன் உண்மையை கூடினால்
வீயா பரகாயம் மேவலும் ஆமே

மேல்

#644
இருபதினாயிரத்து எண்ணூறு பேதம்
மருவிய கன்மமாம் அந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே

மேல்

#645
மதி-தனில் ஈராறாய் மன்னும் கலையின்
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டு
பதியும் ஈராறு ஆண்டு பற்று அற பார்க்கில்
திதமான ஈராறு சித்திகள் ஆமே

மேல்

#646
நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்த-கால்
நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றினால் வாயா சித்தி பேதத்தின்
நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈராறே

மேல்

#647
ஏழானதில் சண்ட வாயுவின் வேகி ஆம்
தாழா நடை பல யோசனை சார்ந்திடும்
சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற்றான் பர காயமே

மேல்

#648
ஈரைந்தில் பூரித்து தியான உருத்திரன்
ஏர் ஒன்று பன்னொன்றில் ஈராறாம் எண் சித்தி
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே

மேல்

#649
தானே அணுவும் சகத்து தன் நொய்ம்மையும்
மானா கனமும் பரகாயத்தேகமும்
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே

மேல்

#650
தாங்கிய தன்மையும் தான் அணு பல் உயிர்
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை
ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்து மிக்கு
ஓங்கி வர முத்தி முந்தியவாறே

மேல்

#651
முந்திய முந்நூற்றறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாய் இட
சிந்தைசெயச்செய மண் முதல் தேர்ந்து அறிந்து
உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே

மேல்

#652
சித்தம் திரிந்து சிவமயம் ஆகிய
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே

மேல்

#653
ஒத்த இ ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இ ஒன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்த இ ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே

மேல்

#654
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்றிருபத்துமூன்றாய்
இருக்கும் உடலில் இருந்திலவாகில்
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே

மேல்

#655
வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பல அதாய்
வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே

மேல்

#656
கண்ணில் வியாதி உரோகம் தனஞ்செயன்
கண்ணில் இ ஆணிகள் காசம் அவன் அல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே

மேல்

#657
நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர் விடு சோதியை
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே

மேல்

#658
ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் இடம்
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட்கு
ஒன்பது காட்சி இலை பல ஆமே

மேல்

#659
ஓங்கிய அங்கி கீழ் ஒண் சுழுமுனை செல்ல
வாங்கி இரவி மதி வழி ஓடிட
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட
ஆங்கு அது சொன்னோம் அருவழியோர்க்கே

மேல்

#660
தலைப்பட்டவாறு அண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன் பிணை மான் போல்
துலைப்பட்ட நாடியை தூவழி செய்தால்
விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே

மேல்

#661
ஓடிச்சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர்
தேடிச்சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரை கட்டுமே

மேல்

#662
கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களம் கனி ஊடுபோய்
பொட்டிட்டு நின்று பூரணம் ஆனதே

மேல்

#663
பூரண சத்தி எழுமூன்று அறை ஆக
ஏர் அணி கன்னியர் எழுநூற்றைந்து ஆக்கினார்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரணம் ஆகி கலந்து விரிந்ததே

மேல்

#664
விரிந்து குவிந்து விளைந்த இ மங்கை
கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில்
பரந்து குவிந்தது பார் முதல் பூதம்
இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே

மேல்

#665
இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடை படு வாயுவும் மாறியே நிற்கும்
தடை அவை ஆறேழும் தண் சுடர் உள்ளே
மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே

மேல்

#666
ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே
நடம் கொண்ட கூத்தனும் நாடுகின்றானே

மேல்

#667
நாடியின் உள்ளே நாத தொனியுடன்
தேடி உடன் சென்று அ திருவினை கைக்கொண்டு
பாடி உள் நின்ற பகைவரை கட்டிட்டு
மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே

மேல்

#668
அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பாகாயம் ஏவல்
அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே

மேல்

#669
எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால்
கிட்டா பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடு நாடி மூலத்து அனல் பானு
விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே

மேல்

#670
சித்திகள் எட்டு அன்றி சேர் எட்டியோகத்தால்
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை
சத்தி அருள் தர தான் உள ஆகுமே

மேல்

#671
எட்டு இவை தன்னோடு எழில் பரம் கைகூட
பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே

மேல்

#672
மந்தரம் ஏறு மதி பானுவை மாற்றி
கந்தாய் குழியில் கசடு அற வல்லார்க்கு
தந்து இன்றி நல் காயம் இயலோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே

மேல்

#673
முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்
அணிந்த அணிமா கைதான் ஆம் இவனும்
தணிந்த அ பஞ்சினும் தான் நொய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே

மேல்

#674
ஆகின்ற அ தனிநாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்றது ஐ ஆண்டின் மாலகு ஆகுமே

மேல்

#675
மாலகு ஆகிய மாயனை கண்ட பின்
தான் ஒளி ஆகி தழைத்து அங்கு இருந்திடும்
பால் ஒளி ஆகி பரந்து எங்கும் நின்றது
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே

மேல்

#676
மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாளுடன்
தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிட
கைப்பொருள் ஆக கலந்திடும் ஓர் ஆண்டின்
மை பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே

மேல்

#677
ஆகின்ற கால் ஒளி ஆவது கண்ட பின்
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம்
மேல் நின்ற காலம் வெளியுற நின்றன
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே

மேல்

#678
தன்வழி ஆக தழைத்திடும் ஞானமும்
தன் வழி ஆக தழைத்திடும் வையகம்
தன் வழி ஆக தழைத்த பொருள் எல்லாம்
தன் வழி தன் அருள் ஆகி நின்றானே

மேல்

#679
நின்றன தத்துவநாயகி தன்னுடன்
கண்டன பூத படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே

மேல்

#680
ஆகின்ற மின் ஒளி ஆவது கண்ட பின்
பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்
ஏகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே

மேல்

#681
போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை
தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி
யாவதும் இல்லை அறிந்துகொள்வார்க்கே

மேல்

#682
அறிந்த பராசத்தி உள்ளே அமரில்
பறிந்தது பூத படை அவை எல்லாம்
குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகாயம் மேவலும் ஆமே

மேல்

#683
ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர்
மூல விளக்கு ஒளி முன்னே உடையவர்
கான விளக்கு ஒளி கண்டு கொள்வார்கட்கு
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே

மேல்

#684
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூத படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில்
பண்டை அ ஈசன் தத்துவம் ஆகுமே

மேல்

#685
ஆகின்ற சந்திரன் தன் ஒளியாய் அவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே

மேல்

#686
தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்கார தலைவனும் ஆயிடும்
தானே இவன் எனும் தன்மையன் ஆமே

மேல்

#687
தன்மை அது ஆக தழைத்த கலையின் உள்
பன்மை அது ஆக பரந்த ஐம்பூதத்தை
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின்
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் காணுமே

மேல்

#688
மெய்ப்பொருளாக விளைந்தது ஏது எனின்
நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம்
கைப்பொருள் ஆக கலந்த உயிர்க்கு எல்லாம்
தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே

மேல்

#689
தன்மை அது ஆக தழைத்த பகலவன்
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மை அது ஆக புலன்களும் போயிட
நன்மை அது ஆகிய நல்_கொடி காணுமே

மேல்

#690
நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன்
அ கொடி ஆகம் அறிந்திடில் ஓர் ஆண்டு
பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும்
கல் கொடி ஆகிய காமுகன் ஆமே

மேல்

#691
காமரு தத்துவம் ஆனது வந்த பின்
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும்
மா மரு உன்னிடை மெய்த்திடும் மானனாய்
நாம் மருவும் ஒளி நாயகம் ஆனதே

மேல்

#692
நாயகம் ஆகிய நல் ஒளி கண்ட பின்
தாயகம் ஆக தழைத்து அங்கு இருந்திடும்
போய் அகம் ஆன புவனங்கள் கண்ட பின்
பேய் அகம் ஆகிய பேரொளி காணுமே

மேல்

#693
பேரொளி ஆகிய பெரிய அ வேட்டையும்
பார் ஒளி ஆக பதைப்பு அற கண்டவன்
தார் ஒளி ஆக தரணி முழுதும் ஆம்
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே

மேல்

#694
காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில்
கால் அது அ கொடி நாயகி தன்னுடன்
கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும்
கால் அது வேண்டி கொண்ட இ ஆறே

மேல்

#695
ஆறது ஆகும் அமிர்த தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சு உள
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி
ஆறது ஆக வளர்ப்பது இரண்டே

மேல்

#696
இரண்டின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால் கொண்டு எழு வகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே

மேல்

#697
அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது
அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே

மேல்

#698
ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி
ஒன்று அது கால் கொண்டு ஊர் வகை சொல்லிடில்
ஒன்று அது வென்றி கொள் ஆயிரமாயிரம்
ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே

மேல்

#699
முன் எழும் அ கலைநாயகி-தன்னுடன்
முன்னுறு வாயு முடி வகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடி வகை ஆமே

மேல்

#700
ஆய் வரும் அ தனிநாயகி-தன்னுடன்
ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில்
ஆய் வரும் ஐஞ்ஞூற்றுமுப்பதோடு ஒன்பது
மாய் வரு வாயு வளப்புள் இருந்தே

மேல்

#701
இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்றுமுப்பத்துமூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே

மேல்

#702
எழுகின்ற சோதியுள் நாயகி-தன்-பால்
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில்
எழுநூற்றிருபத்தொன்பான் அது நாலாய்
எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே

மேல்

#703
ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்த பின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே

மேல்

#704
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையை
சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து
உந்தி சமாதி உடை ஒளியோகியே

மேல்

#705
அணங்கு அற்றம் ஆதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்வி மா ஞானம் மிகுத்தல்
சுணங்குற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல்
நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே

மேல்

#706
மரணம் சரை விடல் வண் பர காயம்
இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல்
அரணன் திருவுறவு ஆதல் மூவேழாம்
கரனுறு கேள்வி கணக்கு அறிந்தேனே

மேல்

#707
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை
காதலில் அண்ணலை காண இனியவர்
நாதன் இருந்த நகர் அறிவாரே

மேல்

#708
மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்க
கோலிய ஐம்முகன் கூற பரவிந்து
சால பரநாதம் விந்து தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே

மேல்

#709
ஆதார யோகத்து அதிதேவொடும் சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி ஈரெண் கலை செல்லம் மீது ஒளி
ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே

மேல்

#710
மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடி
துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்
விதி அது செய்கின்ற மெய்யடியார்க்கு
பதி அது காட்டும் பரமன் நின்றானே

மேல்

#711
கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர்
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து
பொட்டு எழ குத்தி பொறி எழ தண்டு இட்டு
நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே

மேல்

#712
காதல் வழிசெய்த கண் நுதல் அண்ணலை
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடில்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலும் ஆமே

மேல்

#713
காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
காக்கலும் ஆகும் கலை பதினாறையும்
காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும்
காக்கலும் ஆகும் கருத்துற நில்லே

மேல்

#714
நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்து
கலை வழி நின்ற கலப்பை அறியில்
அலைவு அற ஆகும் வழி இது ஆமே

மேல்

#715
புடை ஒன்றி நின்றிடும் பூத பிரானை
மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும்
சடை ஒன்றி நின்ற அ சங்கரநாதன்
விடை ஒன்றில் ஏறியே வீற்றிருந்தானே

மேல்

#716
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற கால பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்க
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே

மேல்

#717
சாதகமான அ தன்மையை நோக்கியே
மாதவம் ஆன வழிபாடு செய்திடும்
போதகம் ஆக புகலுற பாய்ச்சினால்
வேதகம் ஆக விளைந்து கிடக்குமே

மேல்

#718
கிடந்தது தானே கிளர் பயன் மூன்று
நடந்தது தானே உள் நாடியுள் நோக்கி
படர்ந்தது தானே பங்கயம் ஆக
தொடர்ந்தது தானே அ சேதியுள் நின்றே

மேல்

#719
தானே எழுந்த அ தத்துவநாயகி
ஊனே வழிசெய்து எம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திட
தேனே பருகி சிவாலயம் ஆகுமே

மேல்

#720
திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்த பின் நந்தி
திகழ்கின்ற வாயுவை சேர்தலும் ஆமே

மேல்

#721
சோதனை-தன்னில் துரிசு அற காணலாம்
நாதனும் நாயகி-தன்னில் பிரியும் நாள்
சாதனம் ஆகும் குருவை வழிபட்டு
மாதனம் ஆக மதித்து கொள்ளீரே

மேல்

#722
ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை
பேராமல் கட்டி பெரிது உண்ண வல்லீரேல்
நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே

மேல்

#723
ஓசையில் ஏழும் ஒளியின்-கண் ஐந்தும்
நாசியின் மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள்
மாசு அறு சோதி வகுத்து வைத்தானே

மேல்

#724
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

மேல்

#725
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே

மேல்

#726
சுழற்றி கொடுக்கவே சுத்தி கழியும்
கழற்றி மலத்தை கமலத்தை பூரித்து
உழற்றி கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றி தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே

மேல்

#727
அஞ்சனம் போன்று உடல் ஐ அறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செம் சிறு காலையில் செய்திடில் பித்து அறும்
நஞ்சு அற சொன்னோம் நரைதிரை நாசமே

மேல்

#728
மூன்று மடக்கு உடை பாம்பு இரண்டு எட்டு உள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்
நான்ற இ முட்டை இரண்டையும் கட்டி இட்டு
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே

மேல்

#729
நூறும் அறுபதும் ஆறும் வலம் வர
நூறும் அறுபதும் ஆறும் இடம் வர
நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே

மேல்

#730
சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தான்
மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே

மேல்

#731
திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உற பெறவே நினைந்து ஓதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெற யோகிக்கு அறநெறி ஆமே

மேல்

#732
உந்தி சுழியின் உடன் நேர் பிராணனை
சிந்தித்து எழுப்பி சிவமந்திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனை
சிந்தித்து எழுப்ப சிவன் அவன் ஆமே

மேல்

#733
மாறா மலக்குதம்-தன் மேல் இரு விரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்-மின்
ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே

மேல்

#734
நீல நிறன் உடை நேரிழையாளொடும்
சாலவும் புல்லி சதம் என்று இருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே

மேல்

#735
அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பல உள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே

மேல்

#736
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத்து ஏகிடில்
வண்டி இச்சிக்கும் மலர் குழல் மாதரார்
கண்டு இச்சிக்கும் நல் காயமும் ஆமே

மேல்

#737
சுழலும் பெருங்கூற்று தொல்லை முன் சீறி
சுழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன்
கழல் கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே

மேல்

#738
நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும்
தான் கண்ட வாயு சரீரம் முழுதொடும்
ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக
மான் கன்று நின்று வளர்கின்றவாறே

மேல்

#739
ஆகும் சன வேத சத்தியை அன்புற
நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை
பாகுபடுத்தி பல் கோடி களத்தினால்
ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே

மேல்

#740
மதிவட்டம் ஆக வரை ஐந்து நாடி
இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதிவட்டத்து உள் நின்று பாலிக்குமாறு
மது விட்டு போமாறு மாயல் உற்றேனே

மேல்

#741
உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும்
கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றது அறியாது அழிகின்றவாறே

மேல்

#742
அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்துமூன்று என்பது ஆகும்
கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப
எழுகின்ற ஈரைம்பத்தெண் அற்று இருந்ததே

மேல்

#743
திருந்து தினம் அ தினத்தினொடு நின்று
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே

மேல்

#744
மனை புகுவீரும் மகத்து இடை நாடி
என இருபத்தஞ்சும் ஈராறு அதனால்
தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு
வினை அறி ஆறு விளங்கிய நாலே

மேல்

#745
நாலும் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலம் கடந்தது பத்து பதினைந்து
கோலம் கடந்த குணத்து ஆண்டு மூவிரண்டு
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே

மேல்

#746
ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சு மூன்றுக்கும்
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை
கூறு மதி ஒன்றினுக்கு இருபத்தேழு
வேறு பதியங்கள் நாள் விதித்தானே

மேல்

#747
விதித்த இருபத்தெட்டொடு மூன்று அறையாக
தொகுத்து அறி முப்பத்துமூன்று தொகு-மின்
பகுத்து அறி பத்து எட்டும் பாராதிகள் நால்
உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே

மேல்

#748
முறைமுறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது
மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை
பறை அறையாது பணிந்து முடியே

மேல்

#749
முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு
கடிந்தனன் மூள கதுவ வல்லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே

மேல்

#750
நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும்
பின்னிய மார்பு இடை பேராமல் ஒத்திடும்
சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே

மேல்

#751
ஓவியம் ஆன உணர்வை அறி-மின்கள்
பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை
தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணிய தண்டே

மேல்

#752
தண்டுடன் ஓடி தலைப்பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரிய பிணங்குகின்றாரே

மேல்

#753
பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குடனே வந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக்காக சுழல்கின்றவாறே

மேல்

#754
சுழல்கின்றவாறு இன் துணை மலர் காணான்
தழலிடை புக்கிடும் தன்னுள் இலாமல்
கழல் கண்டு போம்வழி காண வல்லார்க்கு
குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே

மேல்

#755
கூத்தன் குறியில் குணம் பல கண்டவர்
சாத்திரம்-தன்னை தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே

மேல்

#756
ஒன்றில் வளர்ச்சி உலப்பு_இலி கேள் இனி
நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும்
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
குன்றிடை பொன் திகழ் கூத்தனும் ஆமே

மேல்

#757
கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே
ஏத்துவர் பத்தினில் எண் திசை தோன்றிட
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில்
சாத்திடு நூறு தலைப்பெய்யலாமே

மேல்

#758
சாத்திடும் நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்து உடல் ஆயிரம் கட்டுற காண்பர்கள்
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி உகம் அது ஆமே

மேல்

#759
உகம் கோடி கண்டும் ஒசிவு அற நின்று
அகம் கோடி கண்டு உள் அலற காண்பர்கள்
சிவம் கோடி விட்டு செறிய இருந்து அங்கு
உகம் கோடி கண்டு அங்கு உயருறுவாரே

மேல்

#760
உயருறுவார் உலகத்தொடும் கூடி
பயனுறுவார் பலர் தாம் அறியாமல்
செயலுறுவார் சிலர் சிந்தை இலாமல்
கயலுறு கண்ணியை காணகிலாரே

மேல்

#761
காணகிலாதார் கழிந்து ஓடிப்போவர்கள்
காணகிலாதார் நயம் பேசிவிடுவார்கள்
காணகிலாதார் கழிந்த பொருள் எலாம்
காணகிலாமல் கழிகின்றவாறே

மேல்

#762
கழிகின்ற அ பொருள் காணகிலாதார்
கழிகின்ற அ பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில்
கழியாத அ பொருள் காணலும் ஆமே

மேல்

#763
கண்ணன் பிறப்பு_இலி காண் நந்தியாய் உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
திண்ணென்று இருக்கும் சிவகதியாய் நிற்கும்
நண்ணும் பதம் இது நாட வல்லார்கட்கே

மேல்

#764
நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை
நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர்
தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது
கூட வல்லார்கட்கு கூறலும் ஆமே

மேல்

#765
கூறும் பொருளில் தகார உகாரங்கள்
தேறும் பொருள் இது சிந்தையுள் நின்றிட
கூறும் மகாரம் குழல் வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே

மேல்

#766
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே

மேல்

#767
அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை
அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ
அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும்
அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே

மேல்

#768
வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திட
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே

மேல்

#769
காணலும் ஆகும் பிரமன் அரி என்று
காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனை
காணலும் ஆகும் சதாசிவ சத்தியும்
காணலும் ஆகும் கலந்துடன் வைத்ததே

மேல்

#770
வைத்த கை சென்னியில் நேரிதாய் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம்
அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில்
நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே

மேல்

#771
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்-கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே

மேல்

#772
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனும் ஆமே

மேல்

#773
தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே

மேல்

#774
ஏறிய வானில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்
ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளி இ வகையே

மேல்

#775
இ வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அ வகை ஐம்பதே என்ன அறியலாம்
செ வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
முவ்வகை ஆம் அது முப்பத்துமூன்றே

மேல்

#776
மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடில்
பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே

மேல்

#777
பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில்
ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டு
போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில்
தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே

மேல்

#778
ஏ இரு நாளும் இயல்புற ஓடிடில்
பாய் இரு நாளும் பகை அற நின்றிடும்
தேய்வுற மூன்றும் திகழவே நின்றிடில்
ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே

மேல்

#779
அளக்கும் வகை நாலும் அ வழியே ஓடில்
விளக்கும் ஒரு நாலும் மெய் பட நிற்கும்
துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில்
களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே

மேல்

#780
காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில்
காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
காணலும் ஆகும் கலப்பு அற மூவைந்தேல்
காணலும் ஆகும் கருத்துற ஒன்றே

மேல்

#781
கருதும் இருபதில் காண ஆறு ஆகும்
கருதும் ஐயைந்தில் காண்பது மூன்று ஆம்
கருதும் இருபதுடன் ஆறு காணில்
கருதும் இரண்டு என காட்டலும் ஆமே

மேல்

#782
காட்டலும் ஆகும் கலந்து இருபத்தேழில்
காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று என
காட்டலும் ஆகும் கலந்து இருபத்தெட்டில்
காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே

மேல்

#783
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்று எட்டுக்கும்
பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும்
வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில்
ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே

மேல்

#784
ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்தொன்று ஆகில்
கன்றிய நாளும் கருத்துற மூன்று ஆகும்
சென்று உயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின்
மன்று இயல்பாகும் மனையில் இரண்டே

மேல்

#785
மனையில் ஒன்று ஆகும் மாதமும் மூன்றும்
சுனையில் ஒன்று ஆக தொனித்தனன் நந்தி
வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனும் ஆமே

மேல்

#786
ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை
ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை
ஆரும் அறியார் அழிகின்ற அ பொருள்
ஆரும் அறியார் அறிவு அறிந்தேனே

மேல்

#787
அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய
அறிவாவது தான் உலகு உயிர் அத்தின்
பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில்
செறிவது நின்று திகழும் அதுவே

மேல்

#788
அது அருளும் மருள் ஆன உலகம்
பொது அருளும் புகழாளர்க்கு நாளும்
மது அருளும் மலர் மங்கையர் செல்வி
இது அருள்செய்யும் இறையவன் ஆமே

மேல்

#789
பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோல குரம்பை
பழப்பதி ஆவது பற்று அறும் பாசம்
அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே

மேல்

#790
வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம்
தெள்ளிய தேய்பிறை தான் வலம் ஆமே

மேல்

#791
வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில்
ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்து உரைத்தானே

மேல்

#792
செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்து புரியவிட்டு
அவ்வாறு அறிவார்க்கு அ ஆனந்தம் ஆமே

மேல்

#793
மாறி வரும் இருபான் மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங்கலை இடை
ஊறும் உயிர் நடுவே உயிர் உக்கிரம்
தேறி அறி-மின் தெரிந்து தெளிந்தே

மேல்

#794
உதித்து வலத்து இடம் போகின்ற-போது
அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும்
உதித்தது வே மிக ஓடிடுமாகில்
உதித்த இராசி உணர்ந்து கொள் உற்றே

மேல்

#795
நடுவு நில்லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்றவாறு சென்றின் பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே

மேல்

#796
ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது
வாயு விதமும் பதினாறு உள வலி
போய மனத்தை பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே

மேல்

#797
வாரத்தில் சூலம் வரும் வழி கூறும்-கால்
நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும்
பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள்
நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே

மேல்

#798
தெக்கணம் ஆகும் வியாழத்து சேர் திசை
அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில்
துக்கமும் இல்லை வலம் முன்னே தோன்றிடின்
மிக்கது மேல் வினை மேன்மேல் விளையுமே

மேல்

#799
கட்ட கழன்று கீழ் நான்று வீழாமல்
அட்டத்தை கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தை பூட்டி மேல் பையை தாள் கோத்து
நட்டம் இருக்க நரன் இல்லை தானே

மேல்

#800
வண்ணான் ஒலிக்கும் சதுர பலகை மேல்
கண்ணாறு மோழை படாமல் கரை கட்டி
விண் ஆறு பாய்ச்சி குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கு அற்றவாறே

மேல்

#801
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
துதிக்கையால் உண்பார்க்கு சேரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு
இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே

மேல்

#802
ஆய்ந்து உரைசெய்யில் அமுதம் நின்று ஊறிடும்
வாய்ந்து உரைசெய்யும் வருகின்ற காலத்து
நீந்து உரைசெய்யில் நிலா மண்டலம் அதாய்
பாய்ந்து உரைசெய்தது பாலிக்குமாறே

மேல்

#803
நாவின் நுனியை நடுவே சிவிறிடில்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்துமூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சத கோடி ஊனே

மேல்

#804
ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல்
வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை
வான் ஊறல் வகை அறிவாளர்க்கு
தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே

மேல்

#805
மேலை அண்ணாவில் விரைந்து இருகால் இடில்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே

மேல்

#806
நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டு
சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும்
பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாக
சிந்தித்து இருப்பவர் தீவினையாளரே

மேல்

#807
தீவினை ஆட திகைத்து அங்கு இருந்தவர்
நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை
பாவினை நாடி பயன் அற கண்டவர்
தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே

மேல்

#808
தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர்
ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு
கோங்கு அரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட
ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே

மேல்

#809
ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டு
தேன் நீர் பருகி சிவாய நம என்று
கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும்
வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே

மேல்

#810
வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்து அறிவு ஆக கருணை பொழிந்திடும்
பாய்ந்து அறிந்து உள்ளே படி கதவு ஒன்று இட்டு
கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே

மேல்

#811
கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளும்
தீயினும் தீயர் அ தீவினையாளர்க்கே

மேல்

#812
தீவினையாளர்-தம் சென்னியில் உள்ளவன்
பூவினையாளர்-தம் பொன் பதி ஆனவன்
பாவினையாளர்-தம் பாகவத்து உள்ளவன்
மாவினையாளர்-தம் மதியில் உள்ளானே

மேல்

#813
மதியின் எழும் கதிர் போல பதினாறாய்
பதிமனை நூறு நூற்றிருபத்துநாலாய்
கதி மனை உள்ளே கணைகள் பரப்பி
எதிர் மலையாமல் இருந்தனன் தானே

மேல்

#814
இருந்தனள் சத்தியும் அ கலை சூழ
இருந்தனள் கன்னியும் அ நடு ஆக
இருந்தனள் மான் நேர் முகம் நிலவு ஆர
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே

மேல்

#815
பொழிந்த இரு வெள்ளி பொன் மண் அடையில்
வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு
கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்கு
கொழுந்து அது ஆகும் குணம் அது தானே

மேல்

#816
குணம் அது ஆகிய கோமளவல்லி
மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில்
தனம் அது ஆகிய தத்துவ ஞானம்
இனம் அது ஆக இருந்தனன் தானே

மேல்

#817
இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்த இ தண்டுடன் அண்டம் பரிய
விரிந்த அ பூவுடன் மேல் எழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே

மேல்

#818
மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தை
கண்டகத்து அங்கே கருதியே கீழ் கட்டி
பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆக
குண்டலகாதனும் கூத்து ஒழிந்தானே

மேல்

#819
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும்
கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும்
வழிகின்ற காலத்து வட்ட கழலை
பழிகின்ற காலத்து பை அகற்றீரே

மேல்

#820
பையினின் உள்ளே படி கதவு ஒன்று இடின்
மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம்
கையின் உள் வாயு கதித்து அங்கு எழுந்திடின்
மை அணி கோயில் மணி விளக்கு ஆமே

மேல்

#821
விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி
நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே
வணங்கிடும் மண்டலம் வாய்த்திட கும்பி
சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே

மேல்

#822
சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும்
சொல்லலும் ஆகும் மண் நீர் கடினமும்
சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில்
சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே

மேல்

#823
தூர தரிசனம் சொல்லுவான் காணலாம்
கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பெய்திட்டு
ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில்
பாரார் உலகம் பகல் முன்னது ஆமே

மேல்

#824
முன் எழு நாபிக்கு முந்நால் விரல் கீழே
பன் எழு வேத பகல் ஒளி உண்டு என்னும்
நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திட
தன் எழு கோயில் தலைவனும் ஆமே

மேல்

#825
பூசுவன எல்லாம் பூசி புலர்த்திய
வாச நறும் குழல் மாலையும் சாத்தி
காய குழலி கலவியொடும் கலந்து
ஊசித்துளையுற தூங்காது போகமே

மேல்

#826
போகத்தை உன்னவே போகாது வாயுவும்
மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும்
தாதில் குழைந்து தலைகண்டவாறே

மேல்

#827
கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும்
வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிட
தண்டு ஒருகாலும் தளராது அங்கமே

மேல்

#828
அங்க புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்து
பங்க படாமல் பரிகரித்து தம்மை
தங்கி கொடுக்க தலைவனும் ஆமே

மேல்

#829
தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன்வழி போகம்
தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே
தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே

மேல்

#830
அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில்
துஞ்சுவது ஒன்ற துணைவி துணைவன்-பால்
நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே

மேல்

#831
பரியங்க யோகத்து பஞ்ச கடிகை
அரிய இ வியோகம் அடைந்தவர்க்கு அல்லது
சரி வளை முன்கைச்சி சந்தன கொங்கை
உருவி தழுவ ஒருவற்கு ஒண்ணாதே

மேல்

#832
ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில்
விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினை பஞ்ச கடிகையில்
எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே

மேல்

#833
ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம்
வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திட
சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே

மேல்

#834
வெள்ளி உருகி பொன் வழி ஓடாமே
கள்ள தட்டானார் கரி இட்டு மூடினார்
கொள்ளி பறிய குழல் வழியே சென்று
வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே

மேல்

#835
வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தகனாய் நிற்கும் வெம் கதிரோனே

மேல்

#836
வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையை புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம்
தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம்
திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே

மேல்

#837
திருத்தி புதனை திருத்தல் செய்வார்க்கு
கருத்து அழகாலே கலந்து அங்கு இருக்கில்
வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும்
துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே

மேல்

#838
எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால்
மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்த பின்
விழுகின்றது இல்லை வெளி அறிவார்க்கே

மேல்

#839
வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளி முறி ஆமே
தெளிவை அறிந்து செழும் நந்தியாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே

மேல்

#840
மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின்
மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர்
நாலா நிலத்தின் நடு ஆன அ பொருள்
மேலா உரைத்தனர் மின் இடையாளுக்கே

மேல்

#841
மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்து
பொன் இடை வட்டத்தின் உள்ளே புக பெய்து
தன்னொடு தன் ஐ தலைப்பெய்ய வல்லாரேன்
மண் இடை பல் ஊழி வாழலும் ஆமே

மேல்

#842
வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை
வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணினாரே

மேல்

#843
உதம் அறிந்து அங்கே ஒரு சுழி பட்டால்
கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்து உம்முளே பார் கடிந்தாளே

மேல்

#844
பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது
ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு
கீழ் இல்லை மேல் இல்லை கேள்வியில் பூவே

மேல்

#845
உடலில் கிடந்த உறுதி குடிநீர்
கடலில் சிறு கிணற்று ஏற்றம் இட்டால் ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலை படாது உயிர் நாடலும் ஆமே

மேல்

#846
தெளி தரும் இந்த சிவநீர் பருகில்
ஒளி தரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களி தரும் காயம் கனகம் அது ஆமே

மேல்

#847
நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள்
தேறில் இதனை தெளி உச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறு மயிர் ஆமே

மேல்

#848
கரை அருகே நின்ற கானல் உவரி
வரைவரை என்பவர் மதி இலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகர வல்லார்க்கு
நரைதிரை மாறும் நமனும் அங்கு இல்லையே

மேல்

#849
அளக நல் நுதலாய் ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இ நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில்
இளகும் மேனி இருளும் கபாலமே

மேல்

#850
வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும்
நாரி மருந்து என்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம்
சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே

மேல்

#851
எய்து மதி கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகை பக்கத்துள்
எய்தும் கலை போல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்து தூலத்த காயமே

மேல்

#852
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டொடு ஆறிரண்டு ஈரைந்துள்
ஏகின்ற அ கலை எல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே

மேல்

#853
ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலம் அங்கு அவர் கொள
பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈரெட்டும்
மாறா கதிர்கொள்ளும் மற்று அங்கி கூடவே

மேல்

#854
பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை
பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி
ஒத்த நல் அங்கி அது எட்டெட்டு உயர் கலை
அ திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே

மேல்

#855
எட்டெட்டு அனலின் கலை ஆகும் ஈராறுள்
சுட்டப்படும் கதிரோனுக்கும் சூழ் கலை
கட்டப்படும் ஈரெட்டாம் மதி கலை
ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்றாவே

மேல்

#856
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீ கதிர்
சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை என
கட்டப்படும் தாரகை கதிர் நால் உள
கட்டிட்ட தொண்ணூற்றொடு ஆறும் கலாதியே

மேல்

#857
எல்லா கலையும் இடை பிங்கலை நடு
சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம்
செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே

மேல்

#858
அங்கியில் சின்ன கதிர் இரண்டு ஆட்டத்து
தங்கிய தாரகை ஆகும் சசி பானு
வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி
தங்கு நவசக்கரம் ஆகும் தரணிக்கே

மேல்

#859
தரணி சலம் கனல் கால் தக்க வானம்
அரணிய பானு அரும் திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவம் ஆகும் பெருநெறி தானே

மேல்

#860
தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்து
தாரகை மின்னா சசி வளர் பக்கத்து
தாரகை பூவில் சகலத்து யோனிகள்
தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே

மேல்

#861
முன் பதினைந்தின் முளைத்து பெருத்திடும்
பின் பதினைந்தில் பெருத்து சிறுத்திடும்
அ பதினைஞ்சும் அறிவல்லார்கட்கு
செப்ப_அரியான் கழல் சேர்தலும் ஆமே

மேல்

#862
அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்து
தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகி
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அற
திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே

மேல்

#863
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின்
சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே

மேல்

#864
அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி
அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி
அங்கி சசி கதிர் கூட அ தாரகை
தங்கிய அதுவே சகலமும் ஆமே

மேல்

#865
ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை
பேராமல் புக்கு பிடித்து கொடுவந்து
நேராக தோன்றும் நெருப்புறவே பெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே

மேல்

#866
காணும் பரிதியின் காலை இடத்து இட்டு
மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காது அ ஆயிரத்து ஆண்டே

மேல்

#867
பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும்
காலைக்கு சங்கு கதிரவன் தானே

மேல்

#868
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும்
அதிரவன் அண்ட புறம் சென்று அடர்ப்ப
எதிரவன் ஈசன் இடம் அது தானே

மேல்

#869
உந்தி கமலத்து உதித்து எழும் சோதியை
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலர்
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்த பின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே

மேல்

#870
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வெளிப்படும் தானே

மேல்

#871
பாம்பு மதியை தினலுறும் பாம்பினை
தீங்கு கதிரையும் சோதித்து அனலுறும்
பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ
நீங்கல் கொடானே நெடுந்தகையானே

மேல்

#872
அயின்றது வீழ் அளவும் துயில் இன்றி
பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று
நயம் தரு பூரணை உள்ள நடத்தி
வியம் தரு பூரணை மேவும் சசியே

மேல்

#873
சசி உதிக்கும் அளவும் துயில் இன்றி
சசி உதித்தானேல் தனது ஊண் அருந்தி
சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல்
சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே

மேல்

#874
ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழ வல்லார் இ சசி வன்னர் ஆமே

மேல்

#875
தண் மதி பானு சரி பூமியே சென்று
மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு
வெண் மதி தோன்றிய நாளில் விளைந்த பின்
தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே

மேல்

#876
வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும்
மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே

மேல்

#877
ஆம் உயிர் தேய் மதி நாளே எனல் விந்து
போம் வழி எங்கணும் போகாது யோகிக்கு
காமுற இன்மையில் கட்டுண்ணும் மூலத்தில்
ஓம் மதியத்துள் விட்டு உரை உணர்வாலே

மேல்

#878
வேறுற செங்கதிர் மெய்க்கலை ஆறொடும்
சூருற நான்கும் தொடர்ந்துறவே நிற்கும்
ஈறில் இனன் கலை ஈரைந்தொடே மதித்து
ஆறுள் கலையுள் அகல் உவா ஆமே

மேல்

#879
உணர் விந்து சோணி உறவினன் வீசும்
புணர் விந்து வீசும் கதிரில் குறையில்
உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே

மேல்

#880
விடாத மனம் பவனத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவி
கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே

மேல்

#881
அமுத புனல் வரும் ஆற்றங்கரை மேல்
குமிழிக்குள் சுடர் ஐந்தையும் கூட்டி
சமைய தண் தோட்டி தரிக்க வல்லார்க்கு
நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே

மேல்

#882
உண்ணீர் அமுதமுறும் ஊறலை திறந்து
தெண்ணீர் இணை அடி தாமரைக்கே செல
தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம்
கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே

மேல்

#883
மாறு மதியும் மதித்திரு மாறு இன்றி
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும்
பாறு படா இன்பம் பார் மிசை பொங்குமே

மேல்