தேம்பாவணி


0.பாயிரம் – கடவுள் வாழ்த்து
1.நாட்டுப் படலம்
2.நகரப் படலம்
3.வளன் சனித்த படலம்
4.பால மாட்சிப் படலம்
6.ஈரறம் பொருத்து படலம்
5.திருமணப் படலம்
7.ஐயந்தோற்று படலம்
8.ஐயம் நீங்கு படலம்
9.மகிழ்வினைப் படலம்
10.மகவருள் படலம்
11.காட்சிப் படலம்
12.மகனேர்ந்த படலம்
13.பைதிரம் நீங்கு படலம்
14.இளவன் மாட்சிப் படலம்
15.சோசுவன் வெற்றிப் படலம்
16.சேதையோன் வெற்றிப் படலம்
17.காசை சேர் படலம்
18.சீனயி மாமலை காண் படலம்
19.பாலை புகு படலம்
20.சித்திரக் கூடப் படலம்
21.நீர்வரமடைந்த படலம்
22.எசித்து சேர் படலம்
23.குணுங்கு மந்திரப் படலம்
24.சோகு தோர்வைப் படலம்
25.குழவிகள் வதைப் படலம்
26.கருணையன் மாட்சிப் படலம்
27.ஞாபகப் படலம்
28.வாமன் ஆட்சிப் படலம்
29.வேதக் கெழுமைப் படலம்
30.மீட்சிப் படலம்
31.பிரிந்த மகவைக் காண் படலம்
32.புரோகிதப் படலம்
33.பிணிதோற்று படலம்
34.தூதுரைப் படலம்
35.உத்தானப் படலம்
36.முடிசூட்டுப் படலம்

@0 பாயிரம்


#1
சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்
நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய
வேரிய கமல பாதம் வினை அற பணிந்து போற்றி
ஆரிய வளன்-தன் காதை அறம் முதல் விளங்க சொல்வாம்

#2
தே உலகு இறைஞ்சும் சூசை தேன் மலர் கொடியை பூத்து
மூ உலகு அனைத்தும் எஞ்சா முறையொடு நிழற்றும் நாதன்
பூ உலகு எய்தி அன்ன பூ_நிழற்கு ஒதுங்கி சாய்ந்த
யா உலகு அனைத்தும் வாழ்த்தும் இரும் கதை இயம்பல் செய்வாம்

#3
வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த
உளம் செயும் அரிய மாட்சி உடையவன் ஆய தன்மை
நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது
அளம் செயும் தமிழ் சொல்லானும் அவன் வளன் என்பது ஒத்தே

#4
சூசை உற்றன வரங்கள் தூய் கடல் கடக்கல் இல்லால்
ஓசை உற்று ஒழுகு அமிர்தம் உடை கடல் என்ன நண்ணி
பூசை உற்று அதனை நக்க புக்கு என உளத்தை தூண்டும்
ஆசை உற்று ஊமன் ஏனும் அரும் கதை அறையல் உற்றேன்

#5
முறை அடுத்து அரும் நூலோர் உள் மூழ்கிய உவப்பில் அன்ன
துறை அடுத்து அள்ளி உண்ணும் துணிவிலான் என்னை நோக்கில்
குறை எடுத்தனை என்று அன்னார் கொடும் சினத்து உறுக்கல் நன்றோ
பறை எடுத்து உலகம் கேட்ப பழித்து எனை நகைத்தல் நன்றோ

#6
வண் தமிழ் இனிதின் கேட்ட மட கிளி கிளக்கும் புன் சொல்
கொண்டு உமிழ்ந்து உரைப்ப நூலோர் குறை என கேளார்-கொல்லோ
உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன
பண்டு அமிழ்து உண்டு யான் புன் பாவொடு கக்க கேட்பார்

#7
அடவியால் வனப்பில் வாய்ந்த ஆகிர்த எனும் நகர்க்குள்
புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி
நடவி ஆர் தவத்தில் ஓங்கி நாதனை ஈன்றாள் தாளை
தடவி ஆர்வு உயர போற்றி தகவு அடைந்து இருந்தாள் அன்றோ

#8
பொறையுழி சிறப்பில் வாய்ந்த புலன் தவிர் காட்சி-தன்னால்
அறை மொழி இனிமை கான்ற அருள் அவிழ் வாயினாளே
நிறை மொழி மாந்தர் பூத்த நீர்மையோடு ஒழுகல் செய்து
மறை மொழி வாய்மை காட்டும் மாண்பு உடை அறத்தினாளே

#9
சீது அருள் உடுக்கள் ஊடு திங்களை போல கன்னி
மாதருள் அரிய மாண்பால் வயங்கினாள் அன்றி தன்னில்
கோது அருள் குறை அற்று உம்பர் குழுவினுக்கு எந்தை அண்டம்
மீது அருள் காட்சி பூத்து வேதியர்க்கு ஒளியே போன்றாள்

#10
இளம் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து
வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள்
விளங்கு ஒளி உடுத்த மேனி வெண் மதி மிதித்த பாதம்
உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே

#11
இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை
பல் நவை அறும் தன் பூமான் பழங்கதை உரைத்து உரைத்த
அன்னவை எவரும் கேட்ப அவை வரைக என்றாள் தாயும்
சொன்னவை மகளும் அன்ன துணிவொடு வரைந்திட்டாளே

#12
வருந்திய நசையால் நானும் வரைந்தவை வரைந்து காட்ட
திருந்திய தமிழ் சொல் இல்லால் செவி புலன் கைப்ப நல்லோர்
பொருந்திய குறைகள் நோக்கின் புணர்ந்த மண் கலத்தை பாராது
அருந்திய அமுது நன்றேல் அருத்தியோடு அருந்தல் செய்வார்

#13
சீரிய மறை நூல் பூண்ட செழும் தவத்து அரிய மாட்சி
நேரிய உளத்தில் ஓங்கி நேமி காத்தவனை காத்த
வேரி அம் கொடியோன் காதை விளம்ப அ கொடி விள் பைம் பூ
ஆரியனூரில் தேம்பாவணி என பிணித்தல் செய்வாம்
மேல்

@1 நாட்டுப்படலம்


#1
புள் உலாம் விசும்பு-இடை-தொறும் பொரும் படை பொருவ
வெள் உலாம் மழை வெண் கொடி உரு கொடு விளங்கி
தெள் உலாம் திளை திதைப்ப உண்டு எழுந்து உயர் பரந்து
வள் உலாம் கரு மத கரி இனம் என தோன்ற

#2
போர் புறம் கொடு பொருந்தலர் உரத்தில் தேய்த்து ஒளிர் வேல்
சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி
வார் புறம் கொடு வளர் முரசு ஒலி என அதிர்ந்து
நீர் புறம் கொடு நீல் முகில் முழங்கின-மாதோ

#3
படை என செரு பகை தர படர்ந்தன அல்லால்
கடை என செறி கருணையோடு உஞற்றிய வள்ளர்
கொடை என செழும் குன்றொடு வயின்-தொறும் குளிர
மிடை என சொரி வியன் முகில் வரைவு இல பொழிவ

#4
படித்த நூல் அவை பயன்பட விரித்து உரைப்பவர் போல்
தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே
குடித்த நீர் எலாம் கொப்புளித்து அமுது என அருவி
இடித்து அறா ஒலி எழ திரை எறிந்து உருண்டு இரிவ

#5
புள்ளி மால் வரை பொன் உலகு இடத்து எடுத்து உய்த்தல்
உள்ளி வான் விடும் வடம் என தாரைகள் ஒழுக
வெள்ளி நீள் தொடர் விசித்து அதை பிடித்து என சூழ
துள்ளி வீழ் உயர் தூங்கிய அருவியின் தோற்றம்

#6
ஒள் நுரைத்து எரி உமிழ்ந்து அவிர் இன மணி வரன்றி
தெள் நுரைத்து எழும் திரை திரள் வயின்-தொறும் புகுந்து
வள் நுரைத்து எதிர் வதிந்த எலாம் சாய்த்து அவை கொடு போய்
புண் உரைத்து அட கொள்ளை செய் பொருந்தலர் போன்றே

#7
விரை கிடந்து அசை வீ உமிழ் மதுவினால் பெருகி
நிரை கிடந்து எழும் சோலையும் கழனியும் நிறைப்ப
வரை கிடந்து இழி வளம் புனல் எங்கணும் உலவல்
திரை கிடந்து உயிர் சீர்த்து உறுப்பு உலாவிய போன்றே

#8
அஞ்சு இலா எதிர் அடுக்கிய கல் எலாம் கடந்தே
எஞ்சு இலா எழில் இமைத்த நீள் மருதமும் நீக்கி
துஞ்சு இலா நதி தொடர்ந்து அகல் கரும் கடல் நோக்கல்
விஞ்சையார் எலாம் வெறுத்து வீடு இவறிய போன்றே

#9
மலையின் நேர் அறல் மலிய நால் திணை அருந்திய பின்
அலையின் நேர் உறல் அவனி தன் மகர்க்கு எலாம் ஊட்டி
முலையின் நேர் உறீஇ விஞ்சு பால் முடுகலில் உடுத்த
கலையின் நேர் உறீஇ களிப்பொடு சிந்துவ போன்றே

#10
செறி உலாம் புனல் சிறை செய்து பயன்பட ஒதுக்கி
வெறி உலாம் மலர் மிடைந்து அகல் வயல் வழி விடுவார்
பொறி உலாம் வழி போக்கு இலது இயல்பட அடக்கி
நெறி உலாவு அற நேர் அவை நிறுத்தினர் போன்றே

#11
உவர்க்கும் தாழ் கடல் உடுத்து அகல் விரி தலை ஞாலம்
எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபட கீறும்
அவர்க்கும் தான் உணவு அளித்தலே நோய் செய்வார்க்கு உதவும்
தவர்க்கும் தாவ அரும் தருமம் என்று இயற்றுதல் போன்றே

#12
கூர் விளைத்து அருள் குரு விதி போன்று ஒன்று கோடி
நீர் விளைத்த நெல் நிரம்ப என வித்தினர் இரட்ட
ஏர் விளைத்த பல் கடைச்சியர் குரவை ஆடு இயல்பால்
தேர் விளைத்த ஓர் சிறப்பு எழும் விழா அணி போன்றே

#13
நோக்க இன்பு உளம் நுகர ஒள் முளரியோடு ஆம்பல்
நீக்கு அலாது எலாம் நீர்_மலர் களை என கட்டல்
ஆக்கம் ஆக்கினும் அறன் இழந்து ஆவது கேடு என்று
ஊக்கம் மாண்பினர் ஒருங்கு அவை ஒழிக்குதல் போன்றே

#14
பூரியார் திரு போல் தலை பசிய கூழ் நிறுவி
நீரினார் தலை நேர நேர் வளைவொடு பழுத்த
ஆரம் மானும் நெல் அறுத்து அரி கொண்டுபோய் அங்கண்
போர் இது ஆம் என களித்தனர் போர் பல புனைவார்

#15
மெய் கலந்த பொய் விலக்கி மெய் கொள்பவர் வினை போல்
வை கலந்த நெல் பகட்டினால் தெளித்து வை மறுத்து
கை கலந்து அடுத்து ஏற்குநர்க்கு அளித்த பின் களித்து
துய் கலந்த நெல் உண்ணவும் ஈயவும் தொகுப்பார்

#16
ஈதலோடு இசை இனிய வாழ்வுகள்
ஆதலோடு அறன் அழிவு இல் ஆக்கினர்
காதலோடு உடல் கடிய நாள் வர
வீதலோடு உறும் வீட்டில் வாழ்வரே

#17
மறமொடு ஆகுலம் மலிந்த தீது எலாம்
புறமொடு ஆகையின் பொருவு இலா வளர்
அறமொடு ஆன்ற சூதேய நாடு அமை
திறமொடு ஆண்மையை செப்ப சீரதோ

#18
மிடியில் ஆர் நயன் விளைவில் மாற்றுவான்
முடியில் ஆர் கனி பொறை பொறா முயன்று
அடியில் ஆருயிர் அமைந்த நீர் தொழ
கடியில் ஆர் மரம் வளைதல் காணுமே

#19
ஆலை ஆர் புகை முகில் என்று ஆர்ப்பு எழ
சோலை ஆர் மயில் துள்ள மாம் குயில்
மாலை ஆர் இருள் விரும்பும் மாக்கள் காண்
மேலையார் என மெலிந்து தேம்பும்-ஆல்

#20
மல்ல விள் அலர் மலிந்த கான்-தொறும்
புல்ல அன்பு அறா பொருது காரணம்
இல்லது ஒல்லென குறும்புள் ஈந்த போர்
அல்லது இல்லது ஓர் அமர் அ நாட்டிலே

#21
தீ எழ தகர் சினந்து தாக்குப
மீ எழ துகள் விரைந்து பின் உறல்
நோய் எழ பகை நுதலும் ஒன்னலர்
வாய் எழ செயும் வணக்கம் மானுமே

#22
வேர்ப்பு எழ கயல் விழியர் கை வளை
ஆர்ப்பு எழ கடை தயிரில் ஆய நெய்
கூர்ப்பு எழ துயர் குறுக மேல் அறம்
ஏர்ப்பு எழ செய்வோர் இயல்பு மானுமே

#23
கழை இறால் பனை கனிகள் தேங்கு அலர்
உழையில் தாவிய தேறல் உண்ட பின்
மழையில் தாவிய மதுவின் ஊங்கு இனிது
இழை இறா அழகு இளம் புள் பாடும்-ஆல்

#24
உண்டு அகன்ற கன்று உள்ளி மேதிகள்
மண்ட அன்பு உறீஇ வழிந்த பால் திரள்
கொண்ட அன்னமே குடித்தல் ஆவது
கண்டது அங்கு உள களவு இது ஆம் அரோ

#25
குயில் இனத்தொடு கொம்பில் ஆர் கிளி
பயில் இனத்தொடு ஞிமிறும் பாடவே
துயில் இனத்தொடு விரித்த தோகை கொள்
மயில் இனத்தொடு மகளிர் ஆடும்-ஆல்

#26
கா சிலம்புவ களித்த புள் இனம்
வீ சிலம்புவ மிடைந்த தும்பிகள்
பா சிலம்புவ சிலம்ப பண் புகழ்
நா சிலம்புவ சிலம்பும் நாடு எலாம்

#27
முட்டு இரட்டின முரண் தகர் பெடை
பெட்டு இரட்டின குயில் மிளிர்ந்த முத்து
இட்டு இரட்டின கரும்பு இன்பு ஈன்ற கள்
விட்டு இரட்டின வீ இனங்களே

#28
நிழலின் கண் சிறைபடுத்தும் நீள் பொழில்
குழலில் பூ சிறைபடுத்தும் கோதையார்
கழலில் கால் சிறைபடுத்தும் காந்தர் நீர்
விழலின் தான் சிறைபடுத்தும் வேலியே

#29
துன் அல் இல் சிறைபடுத்த தோம் இலால்
அன்ன பல் சிறை அல்லது இல்லை-ஆல்
பொன்ன நல் சிறை அன்ன புள் உறை
மன்னவர்க்கு இறை வழங்கும் நாட்டிலே

#30
வாய்ந்த செந்நெலை மறுகும் பண்டியும்
ஆய்ந்த மெல் இலை அமையும் பண்டியும்
பாய்ந்த பூக ஒண் பழம் பெய் பண்டியும்
வேய்ந்த தீம் கனி விம்மும் பண்டியும்

#31
பன்னும் தேங்கு இளநீர் பெய் பண்டியும்
துன்னும் தீம் கழை சுமக்கும் பண்டியும்
மின்னும் தேன் செறி வீ பெய் பண்டியும்
மன்னும் தேசு பல் மணி கொள் பண்டியும்

#32
துளித்த தேறலை துவலை சோலை சூழ்
களித்த நாடு எலாம் கசடு இல் வாழ்வு உற
சுளித்த மள்ளர்கள் தூண்டும் ஏற்று இனம்
திளைத்த பண்டிகள் நெருங்கி தேயும்-ஆல்

#33
பாய்ந்த தேங்கு அதின் பழங்கள் வீழ்தலால்
வாய்ந்த வாழை மா வருக்கை ஆசினி
சாய்ந்த தீம் கனி சரிந்த தேன் புனல்
தோய்ந்த வாய் எலாம் இனிமை தோய்ந்தன

#34
வளைந்து அளித்தரும் கடலின் வாழ் வளை
உளைந்து அளித்த முத்து ஒருங்கு மற்று எலாம்
திளைந்து அளித்தலின் திரு என்று ஆண்டகை
விளைந்து அளித்தவை விருந்து என்று ஆம் அரோ

#35
பொறையினோடு இகல் பொதிர்ந்த பொன் மணி
உறையினோடு இகல் உவந்து இடும் கொடை
மறையினோடு இகல் முனிவர் மாண்பு வான்
முறையினோடு இகல் முயன்ற நாடு எலாம்

#36
காம் அலர் பெடை தழீஇ அன்னம் கண்படும்
தேம் மலர் தடம் தழீஇ சினைகள் நீடிய
பூ மலர் பொழில் தழீஇ பொலிந்த பொற்பு எழும்
தூ மலர் வயல் தழீஇ துளங்கு நாடு அதே

#37
ஓலைகள் கிடந்த நீள் கமுகொடும் பனை
பாலைகள் மா மகிள் பலவு சுள்ளிகள்
கோலைகள் சந்தனம் குங்குமம் பல
சோலைகள் கிடந்தன தொகுக்கும் வண்ணமோ

#38
தேன் வளர் அலங்கலை சிறை செய் கூந்தலோ
கான் வளர் சண்பகம் மலர்ந்த காவுகள்
வான் வளர் துளி நலம் வழங்கும் கொண்டலோ
தேன் வளர் ஒலி கொடு தேன் பெய் சோலையே

#39
தோடு அணி கவினொடு தூங்கும் குண்டலம்
நீடு அணி மதி முகம் நிழல் செய் மாதரோ
கோடு அணி எழுது அரும் கோல போதொடு
சேடு அணி கனி நலம் திளைத்த சோலையே

#40
நீல் நிரைத்து எழுதிய படத்தின் நேர் உடு
மேல் நிரைத்து எழுதிய விசும்பின் தோற்றமோ
கால் நிரைத்து எழும் தளிர் காழகத்து உயர்
தேன் நிரைத்து அவிழ் மலர் திளைத்த சோலையே

#41
அ புறத்து அமுது உணும் சிறை பொற்பு ஆர்ந்த புள்
இ புறத்து அலர்கள் கொய் இளைஞர் வாள் முகம்
மு புறத்து எழுதிய முகைகள் காட்டிய
துப்பு உற சித்திர கூடம் சோலையே

#42
கயில் துணை கலன் என கம்பில் தூங்கு அலர்
குயில் துணை குயிலவும் குழல் வண்டு ஊதவும்
மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம்
பயில் துணை களி மண பந்தர் சோலையே

#43
முதிர் செயும் கனி மலர் மொய்த்து தூங்கலோடு
உதிர் செயும் பழம் துணர் ஒளி செய் குப்பையால்
கதிர் செயும் முடி கலன் கழிந்து மன்னவர்
பொதிர் செயும் துறவு இடம் போலும் சோலையே

#44
வால் நிற தகர் இனம் கலையின் மான் இனம்
தூ நிறத்து உயரிய தூரியத்து இனம்
நீல் நிற பகட்டு இனம் நெடிது உழற்றலின்
கோன் நிற சிலம்ப நல் கூடம் சோலையே

#45
கறாகறா என ஒர்-பால் காடை புள் இனம்
ஞறாஞறா என ஒர்-பால் நயந்த தோகைகள்
புறா குறாவுதலொடு புள் பல் ஓதையால்
அறாது உறா உணர்வு உகும் அரங்கம் சோலையே

#46
மேல் வளர் அலர் படம் விரித்து வீணை செய்
பால் வளர் சுரும்பு இசை பாட மாம் குயில்
வால் வளர் மயில் நடம் காண மற்றை புள்
சால் வளர் நாடக சாலை சோலையே

#47
கால் எடுத்து அடுத்து எதிர்த்து ஒளி கலாப நீள்
வால் எடுத்து பக மாற மஞ்ஞைகள்
கோல் எடுத்து அஞ்சன கோல காருகம்
மேல் எடுத்து ஆரிய கூத்து வீக்கும்-ஆல்

#48
கூட நின்று ஓடை தன் குவளை கண் திறந்து
ஓட நின்று அலைந்து அலைந்து ஒருமித்து ஓர் இடம்
நாடலின் நகைத்து என நனைத்த முல்லை நீடு
ஆடலின் ஆவித்து என்று அலர்ந்த காந்தளே

#49
தோகை கொள் மயில் என மாதர் தோன்றலின்
வாகை கொண்டார் என மயில் ஒடுங்கலால்
சாகை கொண்டு எனைய புள் சிரித்த தன்மை போல்
ஓகை கொண்டு ஒலிதர ஒலிக்கும் நாடு எலாம்

#50
உதித்தன கதிர் என உவந்த மாம் குயில்
துதித்து என பாட ஒள் அனம் தன் தூய் நடை
விதித்து என முன் நடந்தன தம் மெல் அடி
பதித்து என நடந்தனர் பனி கொள் கோதையார்

#51
இன் நிற பிறை கதிர் திரட்டி ஈட்டு எனா
பல் நிறத்து அலர்ந்த பூ படர்ந்த கா-இடை
கொன் நிறத்து அலர்ந்து என கொய்து கொய்து தாம்
மின் நிறத்து அடவி சூழ் விரும்பி ஏகுவார்

#52
கொள்ளை கண்டு அளி இனம் கூ என் ஓதையும்
கிள்ளை கண்டு இனைவ போல் கீ என் ஓதையும்
வள்ளை கொண்டு இனிது இசை மறல பாடினர்
வெள்ளை கொண்டு உள பல நிறத்த வீ கொய்வார்

#53
ஐ மணி பவளம் முத்து அம் பொன் இற்று எலாம்
பம்மு அணி பெற அரும் படலை கோத்து என
பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால்
தம் அணி இணை என தார் பிணிக்குவார்

#54
பிணித்த தார் விரலின் மேல் பிறழ காட்டுவார்
அணி தகாது உனது என இசலி ஆர்த்த பின்
தணித்த பூண் ஒள் கலம் சவி கிலுத்தங்கள்
பணித்த பூம் புகை குழல் படிய சூடுவார்

#55
முருகு விம்மிய மலர் குடைந்து மூழ்கு தேன்
பருகு விம்மிய அளி பசி தவிர்ந்த பின்
அருகு விம்மியது என அலர் கொய் மங்கையர்
உருகு விம்மிய களிப்பு உயிர்த்து பாடுவார்

#56
பூமலி சேக்கை மேல் பொலிந்து நூல் படி
பா மலி பதத்து அறம் பழிச்சி பங்கய
தேம் மலி சேக்கை மேல் சிறந்த ஓதிமம்
நா மலி இனிது இசை நாண பாடுவார்

#57
ஆம்பல் வாய் நறும் விரை அவிழ்த்து விள்ளிய
ஆம்பல் வாய் மலர்ந்து அன அணங்கையார் இனிது
ஆம்பல் வாய் குரலுடன் ஆய்ந்து வெண் மதி
ஆம்பல் வாய் திருந்து உணர்வு அறைந்து பாடுவார்

#58
விண் புதைத்த மலர் பணை வாய் விரை குளித்த தேன் ஒழுகி
கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு இதுவே
களி கூர்ந்த நாடு இதுவேல் கண் கடந்த கவின் நாடி
நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ

#59
நிழல் மூழ்கும் பூம் பொழில் கண் நிறம் மது கான் இன்பம் அலால்
குழல் மூழ்கும் இசை துவைப்ப கோடு அரும் சீர் நாடு இதுவே
கோடு அரும் சீர் நாடு இதுவேல் கோது என கோள் புறத்து இமைப்ப
வாடு அரும் சீர் மல்கி எழும் வான் உலகம் நாடேமோ

#60
பட நாகம் தோல் உரித்த பான்மையின் கல் ஊடு உரிஞ்சி
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே
தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம்
வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம் நாடேமோ

#61
பகை தீர்ந்து சண்பகத்தின் தண் நிழல் கீழ் பள்ளி வர
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு இதுவே
வேட்கை செயும் நாடு இதுவேல் விரி காலத்து இமிழ் குன்றா
வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ

#62
நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடிய-கால்
மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ
வான் உலகம் நாடேமேல் மன் உயிர் மன் நயன் வெஃக
கான் உலகம் காட்டும் நலம் அ கவலை மாற்றுவதோ

#63
பண் கனிந்த நரம்பு உளரி பாண் இசைகள் பாடல் எனா
கண் கனிந்த கவின் நல்லார் களி கூர்ந்து இன்னதும் பலவும்
தண் கனிந்த தேன் இசையால் சாற்றலொடு பல நாளும்
விண் கனிந்த இன்பு உண்பார் விழைவு ஓங்க அ நாடே

#64
தேய முழங்கின ஆலைகள் பண்டிகள் தேய முழங்கின பா
ஆய முழங்கின ஆர் புகழ் சங்குகள் ஆயம் முழங்கின மேல்
பாய முழங்கின மேடகம் இன் புனல் பாய முழங்கின நீர்
தோய முழங்கின மேதிகள் தெண் திரை தோய முழங்கு இழையார்

#65
கான் திரள் சிந்திய சோலை இபம் செறி கான் மலர் சிந்திய தீம்
தேன் திரள் சிந்திய பூ தரளம் செறி தீம் புனல் சிந்திய வான்
மீன் திரள் சிந்திய மான வளம் செறி வேய் மணி சிந்திய பால்
ஆன் திரள் சிந்திய சீர் எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே

#66
ஆலையின் வாய் உள தேன் அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன்
சோலையின் வாய் உள தேனொடு தூறிய தூய் கனி வாய் உள தேன்
மாலையின் வாய் உள தேன் அளி வந்த இறால் அதின் வாய் உள தேன்
வேலியின் வாய் உள தேறிய செந்நெல் விளைக்குவ பாயினவே

#67
பானு அழகே நனி காட்டிய பங்கய நானம் முயங்கு அழகே
மீன் அழகே நனி காட்டிய விண்டு அவிர் வீ இனம் மண்டு அழகே
தேன் அழகே நனி காட்டிய தெள் துளி மாரி செறிந்த அழகே
வான் அழகே நனி காட்டும் பளிங்கு என வாவி வழங்கு அழகே

#68
காரொடு நேர் பொருதும் பொறையே பொழி காரொடு கை பொருதும்
தாரொடு நேர் பொருதும் கலனே தட மாரொடு தார் பொருதும்
பாரொடு நேர் பொருதும் சகடே நளிர் பாலொடு பா பொருதும்
சீரொடு நேர் பொருதும் பொழிலே செழு வீடொடு சீர் பொருதும்

#69
காலை ஒளிர்ந்துளி மொட்டு இதழ் விண்ட கடி கமலம் தவிசின்
சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளை குலம் நின்று இரிய
மாலை உறைந்துளி பொன் சிறை வந்து அது தன் கரு என்று அடைகாத்து
ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை பாடினவே

#70
கா-இடை மா தவர் கந்தம் மலிந்தன கஞ்சம் மிடைந்த அனமே
பூ-இடை தேன் அளி கொம்பு மலிந்து புகன்ற மடம் கிளிகள்
நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ்
யா-இடை ஆயினும் என்றும் அரும் தயை எந்தையை வாழ்த்தினவே

#71
அறத்தில் துறும் புகழ் ஒள் புகழ் என்றும் அடும் பகை நின்றனர்-கொல்
திறத்தில் துறும் புகழ் வஞ்சனை என்றும் தெளிந்த மனம் சிதைய
மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம்
புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே

#72
எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல்
வில்லை நிகழ்த்திய மெய் மறையின் விதி உண்மை நிகழ்த்திய தூய்
ஒல்லை நிகழ்த்திய ஒள் அறம் ஒன்றிய உள்ளம் நிகழ்த்திய சீர்
சொல்லை நிகழ்த்திய நுண்மை அறிந்தவர் சொல்லி நிகழ்த்துவரோ

#73
ஆற்ற வருந்து இல நல் அறம் அல்லதும் அல்லவை இல்லை எனா
மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா
ஏற்று_அரும் துதி ஒல் ஒலி அல்லதும் எள் அதும் இல்லை எனா
சாற்ற வருந்தினும் ஒல்லும் அரும் தமிழும் சமம் அல்லதுவே

#74
பூமலிந்த பொருத்த அரும் பொற்பு எலாம்
பூமலிந்து பொருந்திய பொற்பினால்
நாம் மலிந்த நசைக்கு உயர் நாடினும்
நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே

#75
வண்டு உரைத்து மலர்ந்த அலர் புண் அலால்
வண்டு உரைத்து மலர்ந்த அக புண் இலால்
வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே

#76
மாலை மாறி வயங்கிய மா மதி
மாலை மாறி வயங்கிய மாதர்கள்
மாலை மாறிய கற்பு உடை மார்பு உறை
மாலை மாறிய கற்பு உடை மாண்பர் அரோ

#77
மாசு இகற்கு வழங்கிய அம்பு இலார்
மாசு இகற்கு வழங்கிய அன்பினார்
தேசிகத்து இணை சீர் வரை தோளினார்
தேசிகத்து இணை சீர் வரைத்து ஓதும்-ஆர்

#78
அல்லது இல்லை அரும் தவம் ஆய் திரு
அல்லது இல்லை அருந்த அளித்தலால்
புல்லது இல்லை புனைந்த அற மாட்சியால்
புல்லது இல்லை புனைந்து அன வாழ்க்கையால்

#79
இருள் அகன்று அவிர் எல் வினை போல் எலா
இருள் அகன்று அவிர் இல் வினையோர் தமுள்
அருள் அகன்ற கைப்பு ஆரும் இலாமையால்
அருள் அகன்று அகைப்பார் அலது இல்லையே

#80
வேயும் முத்தம் மிடைந்தன வேலி வாய்
வேயும் முத்தம் மிடைந்தன வேலை வாய்
வாயும் முத்தம் மலிந்தன தீம் கழை
வாயும் முத்தம் மலிந்தன வாய் எலாம்

#81
செல்லின் மாரி திளைத்து என வள்ளியோர்
செல்லின் மாரி திளைத்தன வண்மையே
சொல்லின் மாரி சொரிந்து என ஏது இலா
சொல்லின் மாரி சொரிந்தனர் வேதியார்

#82
வாவு இபம் கயம் மல்கிய நாள் மலர்
வாவி பங்கயம் மல்கிய மாண்பு என
பாவி அங்கு இயலா பயன் ஆகையால்
பா இயங்கிய யா பயன் சால்பு அரோ

#83
பார் அணிந்த அணிக்கல பான்மைபோல்
சீர் அணிந்த செழும் தட நாட்டு-இடை
மார் அணிந்து அணி மா மணி மானிய
ஏர் அணிந்த நகர்க்கு இயல் ஏத்துவாம்
மேல்

@2 நகரப்படலம்


#1
மெய் வழி மறை நூல் நீங்கி வியன் உலகு இனிது என்று இன்னா
வவ்வு அழிவு உற்றது என்ன வதிந்து எமை அளித்து காக்க
செ வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால்
இ வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த

#2
ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன்
தாள் இணை தாங்கிற்று என்ன தாழ வானவரும் மாக்கள்
கோளினை உடை வான் வீட்டை குறுகவும் வழி ஈது என்றால்
மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ

#3
விண் புலன் அகன்று வாய்த்த வீட்டு-இடை வழங்கு மாட்சி
கண் புலன் அகன்றது என்ன கருதி ஓர் உவமை காட்ட
மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி
உள் புலன் கடந்த நாதன் உயர் நகர் புகழும் ஆறே

#4
நவ்வியம் கதிர் கொள் சூட்சி நாயகன் முதல் வானோரும்
செவ்விய மதுர சொல்லால் சீரிய காட்சியோரும்
அவ்வியம் அகன்று தேறும் அரும் தவத்தோரும் செய்த
குவ்விய புகழ் பின் உண்டோ கூறவும் மூகை யானே

#5
தேன் அக இனிய அன்பு ஆர் திருவினோன் அருளின் சிந்தும்
மீன் நக இருளை சீக்கும் வெயில் குழாம் உயிர்த்த செந்நீர்
தான் நக முடியாய் சூடி இ தமனிய நகரம் பூண்ட
வானகம் நக ஒள் மாட்சி வகுத்து உரைப்பு அரிய ஆறே

#6
பயனினால் மறை_நூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்
வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்
முயலினால் அலையை ஒக்கும் முனி முனிவு ஒன்னார்க்கு ஒக்கும்
நயனினால் உயர் வீடு ஒக்கும் நகரினை ஒக்கும் வீடே

#7
பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன
வில் தங்கும் இரவி காலும் வெயில் பிழம்பு அனைய நாறி
செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த
எல் தங்கும் அலையை மாறி இகன்று அகல் அகழி தோற்றம்

#8
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர்
தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி
தாவு உலகு இருத்த வெள்ளி தாள் தளை இட்டதே போல்
கோ உலவு இஞ்சி சூழ்ந்த குவளை நீள் அகழி தோற்றம்

#9
சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து
பூரியார் நட்பு போல புணர்ந்த சைவலம் மேல் ஆடி
நாரியார் அழகு காண நாணிய கமலம் இங்கண்
வேரி ஆர் இதழை பூத்து வெறி எறி அகழி தோற்றம்

#10
ஈரும் வாள் எயிற்றின் கூன் வெண் இளம் பிறை தோன்ற ஊனை
சோரும் வாய் விரித்து கண் தீ சொரிதர அகழி தாழ்ந்து
பேரும் வாய் உருக்கொண்டு அன்று பேய் குலம் வெரு உய்த்து எய்தி
ஊரும் வாய் என்ன அங்கண் உழக்கிய இடங்கர் ஈட்டம்

#11
ஓவல் இற்ற எழில் பூ_மாதே உவந்த நாள் செறிந்த கற்றை
தூவலின் பகல் செய் பைம்பொன் சுடர் முடி சூழ்ந்தது என்ன
ஆவலின் கிளர் நன்று உட்கொண்டு அடிகள்-தம் மனத்தை காக்கும்
காவலின் கது விடாத கனக மா மதிலின் தோற்றம்

#12
கார் அணி பசும்பொன் குன்றின் காட்சி போல் மதிலை சூழ்ந்து
சீர் அணி அனைத்தும் சேர்த்த செழு நகர் திறந்த வாயில்
பேர் அணி எவையும் ஈட்டி பின் அவை உவப்பின் காட்டி
பார் அணி பேழை யாரும் பயன்பட திறந்த போன்றே

#13
நீதி நல் முறைகள் ஓதி நீண்டு வீடு எய்தி வாழ
வீதி இது என்ன காட்டி விரித்த நுண் அரு நூல் வேதம்
ஆதி வந்து உரைப்ப வாய்ந்த அருத்தியோடு அலர்ந்த வாயே
சோதி பெய் அறத்தின் பண்பால் சுடர் நகர் திறந்த வாயில்

#14
மீன் நிகர் வயிர தூண்கள் விண் புக நிரைத்து வாய்ந்த
யா நிகர் அனைத்தும் நீக்கும் எரி மணி கோபுரத்தின்
வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம்
கோன் நிகர் நகரம் சூடும் குளும் சுடர் மகுடம் போன்றே

#15
இட்ட நூல் வழாமை ஓடி எல்லை இல் ஓடும் வீதி
சுட்ட நூல் அறிஞர் கல்வி துணிவொடு வளர்த்த மாடம்
சட்ட நூல் வீரர் கற்பின் தகை நலார் முறையும் மற்ற
வட்ட நூல் வழாமையோடு மலி நலம் கிளக்கல் உற்றேன்

#16
மழை தலை விலகுப வளர்ந்த மாடங்கள்
இழை தலை அரிதினில் இழைத்த வெண் சுதை
பிழை தலை அறுத்து ஒளி பிளிர வெள்ளி அம்
தழை தலை மலை குழாம் தயங்கும் தன்மையே

#17
பயிற்றிய முகில்-இடை பரந்த பால் மதி
வெயில் தியங்கிய என வெந்த அகில் புகை
அயிற்றிய வெயில் உமிழ் அரிய மா மணி
குயிற்றிய மாடங்கள் குளிர நாறுமே

#18
புலையினார் மன இணை வளைவு இல் பொன் அம் கால்
தலையின் ஆர் மனவினை தரித்த பூம் கொடி
கலையினார் மன இணை வெளிறு கான்று உக
முலையினார் மன இணை முயன்று அங்கு ஆடும்-ஆல்

#19
கோது அகன்று அளிக்குவார் அருத்தி கொள்கை போல்
தீது அகன்ற அரும் திரு நுகர செல்-மின் என்று
ஏது அகன்று அணி குலத்து இலங்கு மாடங்கள்
மீது அகன்று அசை கொடி விளிப்ப மானுமே

#20
பேர்த்தன பருதி போய் பெருகும் மா இரா
போர்த்தன இருள் அற தயங்கும் பொன் மணி
கோர்த்தன தரளம் மேல் கொளுமும் தோரணம்
ஆர்த்தன முகில்-இடை அவிர் வில் மானுமே

#21
தேனொடும் ஞிமிறொடும் செறிந்த தும்பிகள்
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம்
கானொடு வழிந்த தேன் களித்து மேய்ந்த பின்
ஆனொடும் இசையொடும் ஊஞ்சல் ஆடும்-ஆல்

#22
கரி இனம் கரியொடும் கலினம் பூண்டு பாய்
பரி இனம் பரியோடும் பரியை பூட்டிய
எரி இன மணி செறி ஏம தேர்களும்
நெரியின நெருங்குப நெரிந்த வாய் எலாம்

#23
பேர் ஒலி முரசு ஒலி பிளிர்ந்த சங்கு ஒலி
தேர் ஒலி மத மழை சிதறி யானைகள்
ஊர் ஒலி இவுளிகள் ஒலி மயங்கி மேல்
கார் ஒலி கடல் ஒலி கலங்க விம்மும்-ஆல்

#24
பொதிர் படும் மணி ஒலி பொருநர் சாய்தலோடு
எதிர் படும் முடி ஒலி இரங்கு யாழ் ஒலி
கதிர் படும் சிலம்பு ஒலி கழல் குலாவு ஒலி
அதிர் படும் வெருவு அற இனிதில் ஆர்த்தன

#25
நெரிந்தன குடை கொடி நிசியை செய்ய ஆங்கு
எரிந்தன கலனொடும் இரும் பொன் மா முடி
திரிந்தன வயின்-தொறும் தெளிந்த நண்பகல்
புரிந்தன புரி எலாம் பொருவு_இல் வாழவே

#26
சங்கு இட்ட விம்மிய தரளமோடு இயை
கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது
பொங்கிட விம்மிய அளி புசித்து இசை
அங்கு இட விம்மிய இன்பம் அ நகர்

#27
நாறிய நானமும் நறும் அகில் புகை
ஊறிய கானமும் உரைத்த சந்தமும்
வீறிய மது மலர் மிடைந்த வாசமும்
தேறிய வெறியொடு செறிந்த அ நகர்

#28
பூம் துறை தெரியல்கள் பொழிந்த தேறலும்
காந்து உறை தசும்பு-இடை கமழும் நீரமும்
தேம் துறை குங்கும தெளிந்த சுண்ணமும்
ஆம் துறை திரள் மணத்து ஆர்ந்த அ நகர்

#29
தேசு சூழ் செம் துகிர் திருந்தும் காலின் மேல்
காசு சூழ் தமனிய கம்பலம் திரை
தூசு சூழ் நித்திலம் துதைந்த குஞ்சுகள்
பாசு சூழ் மணி சுவர் படுக்கும் மாடமும்

#30
பொருந்தலர் உரத்து ஒளி புசித்த வாளொடும்
விருந்து அமர் புள் இனம் விழைந்த வேலொடும்
வருந்து அமர் கடந்த வில் மழுவினோடு மற்று
இருந்து அமர் படைக்கலம் இருக்கும் மாடமும்

#31
நீல் மணி மரகதம் நித்திலம் துகிர்
வேல் மணி வயிரம் கோமேதகம் மிளிர்
பால் மணி பரும் வயிடூரியம் படர்
வான் மணி மாணிக்கம் வைக்கும் மாடமும்

#32
ஒன்னலர் இறை கொணர்ந்து உற்ற அம் பொனும்
துன் அலர் மலை-வயின் துதைந்த பைம்பொனும்
மின் அலர் புனல் கொணர் மிடைந்த செம்பொனும்
இன் அலர் நிதி எலாம் இருக்கும் மாடமும்

#33
அவ்வியம் ஒழித்து அருள் அளிக்கும் மா மறை
திவ்விய மதுர நூல் செப்பும் சாலையும்
நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி உள்
வவ்விய பல கலை வகுக்கும் சாலையும்

#34
பெற்றி ஆர் குணில் கவண் பெரும் வில் நேமியோர்
குற்று இலா குறி பட குமுறும் சாலையும்
வெற்றி ஆர் அலங்கல் வாள் முதல் பல் வேல் படை
பற்று இலார் வெரு உற பழக்கும் சாலையும்

#35
கான் நல கனியினும் கனிந்த யாழொடு
தேன் நல பல்லியம் திளைக்கும் சாலையும்
பால் நலம் ஒழித்த பா பாடி ஆடி விண்
மேல் நலம் என ஒலி விம்மும் சாலையும்

#36
மாற்று அரசு இனம் இறை வணங்கும் சாலையும்
வேற்று அரசு இனம் திறை விசிக்கும் சாலையும்
ஏற்ற அரசு இனம் இனிது இருக்கும் சாலையும்
போற்று அரசு இனத்து மாண் பொருத்தும் சாலையும்

#37
ஆம் உறை முகில் என அளிக்கும் வான் பொருள்
மீ முறை திருந்திட விரும்பி யாவரும்
தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய்
ஏம் முறை சிறந்தது ஓர் சாலை இல்லையே

#38
பணி சுவர் சாலையும் பவள பந்தி கால்
தணி சுவர் சாலையும் தரள கொத்து உடை
மணி சுவர் சாலையும் வளைத்த தேவ மா
அணி சுவர் கோவிலை அறையலாம் அரோ

#39
மண்ணிய முடியோ முடியின் மா மணியோ வான்-இடை வயங்கு செம்_சுடரோ
புண்ணிய உடலத்து உயிர்-கொலோ முகமோ பொலம் முக கண்-கொலோ யாதோ
கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள் தான் உறைந்து அருள் காட்ட
பண்ணிய அம் மா நகர்-இடை பகலை பழித்து எரி பரந்த ஆலயமே

#40
பொன் பொதிர் வயிர கால் மிசை பவள போதிகை பொருத்தியது ஒரு-பால்
வில் பொதிர் துகிர் கால் மரகத மணியால் விளங்கிய போதிகை ஒரு-பால்
எல் பொதிர் நிதி கால் அமைந்த போதிகையாய் இன மணி கிடத்தியது ஒரு-பால்
செல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த பல் மண்டப நிலையே

#41
செம்பொனால் அம் பொன் மேல் எழுத்து அரிதின் தீட்டிய அழகு என தெளிந்த
அம் பொனால் இசைத்த மணி சுவர் ஏற்றி அரும் தொழில் தச்சரும் நாண
பைம்பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்ட பட்டு என அ உலகத்தோர்
கம் பொனால் வனைந்த தொழிலை இ உலகில் கை விடா காட்டினர் போன்றே

#42
வையகத்து உள்ளோர் ஏறவும் விரும்பி வானவர் இழியவும் வழி என்று
ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே அந்தரத்து உயர் தலை சாய்ந்து
கை அகத்து அதனை கடவுள் தான் தாங்க களித்து யாக்கோபு என்பாற்கு அங்கண்
துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவ தோன்றிய ஏணியை போன்றே

#43
தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன் தகட்டு மேல் படர்ந்த
சேண் தொடர் பருதி தன் கதிர் படலின் செறிந்த பல் அணி அணி கிளர்ந்த
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய
மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன வயங்கும் அ ஆலயம் மாதோ

#44
துன்_அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி நூல் இனிதினில் காட்ட
பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து எழ பல உரு கிளம்ப
உன்ன_அரும் வனப்பின் கிளர் ஒளி வாய்ந்த உயிர் பெற சித்திரம் தீட்டி
இன் அரும் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும் இமைப்பும் இல் ஆயின மாதோ

#45
வான் மணி விளக்கு ஓர் ஆயிரம் இழைத்த மரகதத்து இருள் அற கற்றை
கால் மணி விளக்கு ஓர் ஆயிரம் பவளம் கலந்த முத்து அணி அணி தயங்க
நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம் பசும்பொன் நிலை விளக்கு ஆயிரம் வயிர
பால் மணி விளக்கு ஓர் ஆயிரம் எவணும் பகலவன் பட பகல் செயும்-ஆல்

#46
தீ எரி வாய்ந்த குரு மணி ஆதி செறிந்த பல் மணிகளும் அகன்ற
வாய் எரி விளக்கின் தொகுதியும் மல்கி வயின்வயின் எரிந்த பைம்பொன்னும்
ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும்
மீ எரி சுடரை இள முகில் மூடி வேய்ந்து என குளிர வேய்ந்தனவே

#47
முருடு ஒடு பம்பை ஒலி வயிர் ஒலி வன் முரசொடு வளை ஒலி ஒலித்த
தெருள் தொடும் இனிய குழல் ஒலி வீணை செறி ஒலி கின்னரத்து ஒலி நல்
மருள் தொடும் மதுர பல்லியம் ஒலிப்ப மாகதர் பா ஒலி இசைந்து இ
அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும் அரிய இன்பு இரு செவி மாந்த

#48
பூ_மழை திரளும் நாறிய கலவை பொழிதர கமழும் நீர் துவலை
தேம் மழை திரளும் ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனை புகழ்பவர் வாய்
பா மழை திரளும் கன்னியர் இனிய பா மழை திரளும் எ ஞான்றும்
மீ மழை திரளும் மெலி தர விம்மி விண்ணும் மேல் குளிர நாறினவே

#49
மீ முறை ஒப்ப நாள்-தொறும் குறை இல வேதியர் அருச்சனை திருத்தும்
மா முறை நலமும் வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும்
யா முறை அனைத்தும் இன்புற கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால்
பா முறை நடத்தி தொடை சரம் தொடுத்து பகர்ந்து அவை புகழ்வது பாலோ

#50
உலகு எலாம் வணங்கும் பொது அற தனி கோல் ஓச்சிய இறைவனை வணங்க
அலகு எலாம் கடந்து பழுது அற பயத்த அற நெறி அருமையால் உவமை
விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள் விழைவொடு வதிந்தன தன்மைத்து
இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம்

#51
இன்ன அரு நகர் அமை எரி மணி இழையின்
உன்ன_அரும் எழில் நலம் உடை பெரும் கவினார்
பன்ன_அரும் அற நெறி பழுது அற இனிதாய்
துன்ன_அரு நயனொடு தொலைவன பொழுதே

#52
ஆடுவர் அமுதினோடு அலர் மது இகல
பாடுவர் பொருள் நகு பயன் அமை கலை நூல்
நாடுவர் நளிர் உற நறவு உறு மலரை
சூடுவர் நயனொடு தொலைவன பொழுதே

#53
மரு கொடு மிளிர் அலர் மருவிய முடி சூழ்ந்து
உரு கொடு மிளிருவர் எரியொடு மண நீர்
திரு கொடு மிளிரின தெரு-இடை எறிய
பெரு கொடு மிளிர் நகர் பெயர்வன பொழுதே

#54
இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால்
பந்தினை வனைகுவர் படிகுவர் எறிவார்
வந்து இணை எதிர்குவர் மறைகுவர் நகுவார்
சிந்தனை நயனொடு செலும் ஒரு பொழுதே

#55
மீன் மலை மெலிதர மிளிர் அற வினையோர்
பால் மலை மெலிதர இசையொடு பகல் போய்
நூல் மலை மெலிதர நுணி உணர்வு இரவு ஆய்
வான் மலை மெலிதர வரும் இரு பொழுதே

#56
எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர்
வழுது இனிது இனிது அல வழு இல இறையோன்
தொழுது இனிது அற நெறி துறுவன நயனால்
பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே

#57
பொறை இணை நகுவனர் புயம் மலி பொருநர்
உறை இணை நகுவனர் உதவிய கொடையோர்
துறை இணை நகுவனர் துறுவிய கலையோர்
தறை இணை நகுவனர் தடம் மலி நகரே

#58
அலையினோடு இகல்வன அரிது ஒலி நியமம்
விலையினோடு இகல்வன விரி அணி மணிகள்
கலையினோடு இகல்வன கடை இல நயம் ஓர்
வலையினோடு இகல்வன மலி திரு நகரம்

#59
வளை ஒலி வளைவு உடை வயிர் ஒலி வளர் பா
கிளை ஒலி இசை ஒலி குழல் ஒலி கிளர் பல்
துளை ஒலி நலம் ஒலி துறுவலொடு இனிதாய்
விளை ஒலி அலை ஒலி மெலிதர மிகும்-ஆல்

#60
கொடியொடு குடை உற இறையவர் குழுவின்
அடியொடு அடி உற விரிவன அனிகம்
பொடியொடும் இருள் உற நெரிவன பொருள் தேர்
முடியொடு முகில் உற முயல்வன நகரம்

#61
கோடாதன உயர் கோலொடு குளிர் மாறு இல குடையும்
வாடாதன தனி வாகையும் மதம் மாறு இல களிறும்
ஓடாதன அடல் தானையும் உள கோனொடு நகரம்
வீடாதன நெறி மாண் உறீஇ மெலியா நலம் உளது-ஆல்

#62
சால் அன்பொடு நிறை தாய் முலை தழுவும் சிறு குழவி
போல் அன்பொடு நகர் ஆள்பவன் அருளின் தயை புரி செம்
கோல் அன்பொடு தழுவும் குடி குறை ஒன்று இல நகரின்
பால் அன்பொடு தனி வாழ்வொடு படு நன்றியது அளவோ

#63
இருந்து ஓடிய திரு இங்கணில் இனிது அன்புற இடலால்
பருந்தோடு உறும் நிழல் என்று உயர் பயன் ஈன்றிடும் எனவே
மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர்
விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார்

#64
தெள் வார் உரை முகிலும் கடல் திரையும் கெட முகியா
வள் வார் முரசு அதிர் மா நகர்-வயின் வாழ்பவர் கொடையை
கொள்வார் இல குறை அல்லது குறை இல்லதும் எனவே
கள்வார் இல கடையார் இல கழிவார் இல நயவார்

#65
கோ வீற்று உறை தனி நாதனை குறையா புகழ் இடவும்
நா வீற்று உறை கலை ஆயவும் நறு மாண் அறம் செயவும்
பா வீற்று உறை இசை பாடவும் பதம் ஆடவும் படரும்
பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால்

#66
நீர் அல்லதும் அலை இல்லது நிறை வான் பொருள் இடுவார்
போர் அல்லது பகை இல்லது புரி வான் மழை பொழியும்
கார் அல்லது கறை இல்லது கடி காவலும் அறனால்
சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர்-இடையே

#67
மின்னார் இனிது இசை பாடலில் விளை இன்பு அது பெரிதோ
பொன் ஆர் குழல் புகல் இன்பு அது பெரிதோ கலை புரி நூல்
சொன்னார் அவர் உரை இன்பு அது பெரிதோ பொழி துளிகள்
அன்னார் நிறை கொடையால் பொருள் அருள் இன்பு அது பெரிதோ

#68
சிலை ஒத்தன நுதலார் மன சிறை ஒத்தன மதில்கள்
கலை ஒத்தன உயர் மாலைகள் கனம் ஒத்தன கரிகள்
மலை ஒத்தன இரதம் திரள் வளி ஒத்தன பரிகள்
அலை ஒத்தன கடை வீதிகள் அலை ஒத்தனர் அபயர்

#69
பா நாணுப இசை ஓதைகள் பகல் நாணுப மணிகள்
பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள்
நா நாணுப கலை மாட்சிமை நசை நாணுப நிறை சீர்
கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம்

#70
நளிர் பூ-இடை மது நேர் முக நவியே இடை விழி நேர்
ஒளிர் பூண்-இடை மணி நேர் உடல் உருவே கிடை உயிர் நேர்
குளிர் நாடு-இடை புனல் நேர் அற வழியே-இடை குரு நேர்
மிளிர் ஊர்-இடை அரசு ஆகையில் மிடை கோ இயல் பகர்வாம்
மேல்

@3 வளன் சனித்த படலம்


#1
அன்ன மா திரு நகர் அகத்து உடற்கு உயிர்
என்ன மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து
ஒன்னலார் வெரு உற உவந்து பாவலர்
சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ

#2
அருளொடு வீங்கிய அகத்தினான் துளி
மருளொடு வீங்கிய மழை கையான் மலர்
சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்
பொருளொடு வீங்கிய பொறை புயத்தினான்

#3
ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான்
அளி தவழ் நிழல் செயும் அருள் குடையினான்
வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான்
களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான்

#4
மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா
மெய் முனர் பொய் என வெருவு ஒன்னார் இவன்
கை முனர் நிற்கு இலா கலங்கி போற்றும் போர்
செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான்

#5
வேல் செயும் போரினால் வெலப்படான்-தனை
சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான்
சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று ஒளி
மேல் செயும் வானவர் விழைந்த பான்மையான்

#6
நீதி நல் முறை எலாம் நிறைந்த நீள் தவம்
ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர்
கோது இல் நன் உதவி செய் கொழுகொம்பு ஆகி வான்
ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான்

#7
கோல் நலம் கோடு இலா நிறுவி கூர்த்தலால்
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம்
தேன் நலம் இனிதினில் திளைந்து நாடு எலாம்
மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே

#8
பகை செய்வார்க்கு இடி என படிந்து போற்றிய
தகை செய்வார்க்கு அமுது என நாம தன்மையான்
நகை செய்வார்க்கு இளவலாய் நடத்தும் வேல் இலான்
மிகை செய்வான் ஆண்மையை விளம்பல் நன்று அரோ

#9
மறை வழங்கிய வளம் கொள் நாட்டு-இடை சவூல் ஆண்ட
முறை வழங்கிய கால் மறை பகைத்தனர் முகில் நின்று
உறை வழங்கிய ஒப்பு என சர மழை வழங்கி
பொறை வழங்கிய பிலித்தையர் போர் செய எதிர்த்தார்

#10
வேலியால் கது விடா திரு நகர் எலாம் நடுங்க
மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண்
ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த
கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான்

#11
துளி சிறை செயும் முகில் புகும் இரு மலை சுமந்த
ஒளி சிறை செயும் ஒரு கரும் பருவதம் என்னா
வெளி சிறை செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே
களி சிறை செயும் கதம் கொடு வெரு உற தோன்றும்

#12
நீண்ட வாள் புடை நெருங்கியே படர் கரு முகில் போல்
மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து வெம் சுடரை
தூண்டல் ஆம் என சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி
கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான்

#13
பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன
எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு-இடை அடங்கா
செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழ சினந்து
தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான்

#14
கூர்த்த போர் செய கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி
சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித்தனி தாக்க
தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர் என்னா
ஆர்த்த ஓகையான் நகைத்து இகழ்வு அறைந்து அறைந்து அழைப்பான்

#15
பெரிய குன்றமோ பேய் அதோ பூதமோ யாதோ
உரியது ஒன்று இலா உருவினை கண்டுளி வெருவி
கரிய விண் இடி கதத்த மின் கொடு விடுத்து அன்ன
அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார்

#16
நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை
கல் நெடும் குவடு ஒத்தனன் செருக்கு எழ கடுத்து
பல் நெடும் பகல் பரமனை பகைப்பவும் இகழ்ந்த
சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான்

#17
தாங்குவார் இலா சாற்றிய உரைகள் கேட்டு எவரும்
நீங்குவார் என நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு
ஏங்குவான் எவன் எதிர்ந்த அ அரக்கனை வென்றால்
ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன் என்பான்

#18
இன்னவாய் பகல் நாற்பதும் இரிந்த பின் அண்ணர்
முன்னர் மூவரே முரண்செய போயினர் அவரை
துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி
அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான்

#19
கேட்ட வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை
ஈட்டல் ஆம் என எழுந்து உளம் நினைந்தவை ஆக்கி
காட்ட வாய்மையின் கடந்த வல் கடவுளை நகைப்ப
வேட்டலால் விளி விழுங்கிய கயவன் ஆர் என்றான்

#20
கை வயத்தினால் கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும்
பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ
மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ கடவுள்
செய் வயத்தினால் சிறுவன் நான் வெல்லுவேன் என்றான்

#21
என்றது அண்ணல் கேட்டு இவன்-தனை கொணர்-மின் என்று இசைப்ப
சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும் நீயோ
பொன்ற உன்னினாய் பொருப்பினை பெயர்த்து எறிந்து உவமை
வென்ற திண்மையான் வெகுளி முன் நீய் எவன் என்றான்

#22
ஏந்தல் ஈர் அடி இறைஞ்சிய இளவலும் அறைவான்
காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின் மீட்டு
வேய்ந்தது ஓர் படை வேண்டுமோ கடவுளை பகைத்து
வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெலான் அய்யா

#23
திறம் கடுத்த கொல் சிங்கமும் உளியமும் பாய்ந்து
மறம் கடுத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து
கறங்கு அடுத்த கால் கழுத்தினை முருக்கி நான் கொன்றேன்
அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ என்றான்

#24
அரிய ஆண்மையை அதிசயித்து அரசன் நன்று என்னா
விரி அளாவு ஒளி வேலொடு தனது பல் கருவி
உரிய போர் செய ஒருங்கு தந்தனன் அவற்றொடுதான்
திரிய வாய் முறை தெரிகிலேன் என மறுத்து அகன்றான்

#25
தெரிந்த வாய்ந்த ஐம் சிலையொடு கவண் எடுத்து எவரும்
இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க
விரிந்த ஆசையால் வேதியர் ஆசியை கூற
பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார்

#26
ஆர்த்த ஓதை கேட்டு அரக்கன் நின்று அமர்க்கு எதிர் வருக
பார்த்த பாலனை பழித்து எழுந்து யாவரும் அஞ்ச
கூர்த்த வேலொடு குறுக வந்து அகல் கரு முகிலின்
பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான்

#27
நீ அடா எதிர் நிற்பதோ மதம் பொழி கரி மேல்
நாய் அடா வினை நடத்துமோ கதம் கொடு நானே
வாய் அடா பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள்
ஆய் அடா உலகு அப்புறத்து ஏகுவாய் என்றான்

#28
வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல் அடா நானோ
எல்வை ஆதரவு இயற்று எதிர் இலா திற கடவுள்
வல் கையோடு உனை மாய்த்து உடல் புட்கு இரை ஆக
ஒல் செய்வேன் எனா உடை கவண் சுழற்றினன் இளையோன்

#29
கல்லை ஏற்றலும் கவணினை சுழற்றலும் அ கல்
ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர் இடிக்கும்
செல்லை ஒத்து அன்ன சிலை நுதல் பாய்தலும் அன்னான்
எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும் கண்டார்

#30
கடை யுகத்தினில் கரு முகில் உருமொடு விழும் போல்
படை முகத்தினில் பார் பதைத்து அஞ்ச வீழ்ந்தனன் தன்
புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி என் தெய்வம்
உடை உரத்தினை உணர்-மின் என்று இரும் சிரம் கொய்தான்

#31
கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற
ஊன் நெடும் திரை ஒழுக ஆங்கு அனைவரும் கூச
நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான் ஒன்னார்
மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட

#32
கார் முகத்து அசனி கூச கடுத்த அ அரக்கன் வென்ற
சீர் முகத்து இளவல் பின்னர் திறத்த தன் நாம வேலால்
போர் முகத்து எதிர் ஒன்று இல்லான் பொழி மறை பழித்த யாரும்
பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே

#33
கொய்த வாள் முடி திரண்ட குப்பைகள் ஏறி வெய்யில்
செய்த வாள் முடியை சூடி சிறந்த ஆசனத்தில் ஓங்கி
பெய்த வான் ஒளியோடு ஆய்ந்த பெரும் தயை பிலிற்றும் செங்கோல்
எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே அரசன் ஆனான்

#34
நூல் நக துளங்கு கேள்வி நுண் அறிவாளர்க்கு ஒவ்வா
வான் அகத்து ஒதுங்கி வாழும் வரும் பொருள் காட்டும் காட்சி
கான் அகத்து ஒதுங்கி வைகும் கடி தவத்தோடும் இன்ன
கோன் அகத்து இலங்கி அங்கண் குடி என வதிந்ததாம்-ஆல்

#35
சூழ்ந்த பொன் முடியும் கோலும் துறந்து போய் அரிய கானில்
வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும் அதனை கூட்டி
ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்க சேர்த்தல்
தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான்

#36
வேலொடு மாற்றார் வெள்ளம் வென்று வென்று அடக்கி தன்னை
நூலொடு வெல்ல ஐந்து நுண் புலன் அடக்கி காத்து
கோலொடு வழாமை நீதி கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான்
சூலொடு வழங்கும் மாரி துளி பழித்து அருளும் கையான்

#37
மன் அரும் தயையால் பாரில் வழங்கிய கீர்த்தி அல்லால்
இன் அரும் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான்
முன் அரும் தவத்தோர் கொண்ட முறை தவிர் வரங்கள் எய்தி
துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை என புவியில் வாழ்ந்தான்

#38
ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள்
வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர்
சேயினால் நயப்ப செய்வேன் சிறந்த மூ_உலகில் அன்னான்
வாயினால் நவிலா கோன்மை வரம் பெற அளிப்பேன் என்றான்

#39
தந்த இ வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய்
வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும் என்ற
இந்த நல் முறையால் மைந்தன் இயல்பொடு தேவன் என்பான்
அந்தரம் முதலாய் யாண்டும் ஆள்வதும் அரிய பாலோ

#40
கோன்மையால் உயர்ந்த தாவின் கோத்திரத்து உதிக்கும் தெய்வ
மேன்மையால் ஒருவன் அன்றி விபுலையில் பிறக்கும் மாக்கள்
பான்மையால் உயிர்த்த மைந்தன் பாரொடு வானும் ஆள
நான்மையால் வழுவா செங்கோல் நல்க உள்ளினன்-ஆல் நாதன்

#41
உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்க வல்லோன்
எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்பொடு தாவிதன் தன்
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள
நள்ளின வளம் கொள் சூசை நயத்தொடு தெரிந்திட்டானே

#42
ஏற்றிய முறையோடு எந்தை இயன்ற தன் வலிமை காட்ட
போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய் தெரிந்த சூசை
சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாது ஏனும்
மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்க செய்தான்

#43
பொய் படும் உலக வாழ்வின் பொருட்டு இலா மிடிமையோடு
கைப்படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான்
மெய்ப்படும் மறத்தின் ஆண்மை விளங்கிய முறையின் பின்னர்
ஐ படும் விசும்பொடு எங்கும் அரசனாய் வணங்க செய்தான்

#44
நூல் நிலம் காட்சியால் நுனித்த கால் உணர்
மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான்
தேனில் அம் கருணையால் தெளிந்த எல்வையில்
கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே

#45
கொலை முகந்து அழன்ற வேல் கொற்ற தாவிதன்
தலை முகந்து ஒழுகிய குலம் சகோபு அவன்
சிலை முகந்து அவிர் நுதல் தேவி நீப்பி இன்பு
அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள்

#46
மணி பழித்த அரும் கவின் மங்கை உள் உவந்து
அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால்
பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ
பணி பழித்து ஒளி முகம் பொறித்த பான்மையே

#47
தாரொடு சனித்த தேன் தன்மையோ வளை
ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ
நீரொடும் ஐந்து தம் பகையை நீத்து ஒரு
சீரொடு வேற்று இல சிறந்த சூல் அதே

#48
அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என
இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி வெண்
பிறை வளர் நலம் என வளர்ந்த பீள் உள
சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ

#49
வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே
காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய
தீய் வழி கரு வழி சேரும் தொல் செயிர்
ஓய் வழி பொறாது இறை ஒழிய முன்னினான்

#50
புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால்
கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை
பரிப்ப ஓர் சிறப்பு அருள் பயத்தின் சூல் செயிர்
விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ

#51
தீயவை விலக்கிய சிறப்பின் தேவு அருள்
தூயவை பதி வர தொகையின் சூல் இடத்து
ஆயவை அறிந்திலள் அளவு_இல் உள் மகிழ்
தாய் அவள் வியப்பு உறீஇ தளர்வு அற்று ஓங்கினாள்

#52
தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு
கான் முகம் புதைத்து அவிழ் கமல பூ என
சூல் முகம் புதைத்த சீர் தொகை புறப்பட
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ

#53
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல்
எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு
பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள்

#54
கண்டார் எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம்
கொண்டார் அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர்
உண்டார் தெளிவு உண்டார் கடவுள்-தன் தாட்கு உவகை செயும்
தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார்

#55
மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி
ஆசை மிக்க கனி ஈன்றாள் கற்றோர் அரும் தொடைப்பா
ஓசை மிக்க அற தொகையின் பீடத்து உயர் வளர்க
சூசை என்று அவனை ஏற்றி எந்தை தொழுகின்றாள்

#56
எல்லின் கதிர் திரட்டி திலகம் திங்கட்கு இட்டது போல்
வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி விழைவு உற்ற
சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து
அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க என்றாள்

#57
வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன்
கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி
ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான்
வாடா அருள் மகன் என்று அம் பூ_மாரி வழங்கிற்றே

#58
மை நூற்று என கரும் பூம் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு
எ நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி
மெய்ந்நூல் திறத்த மறை முறையின் விள்ளா வினை எல்லாம்
கைந்நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார்

#59
கூம்பா அணி மகற்கு கணிதம் மிக்கோர் கூறு புகழ்
ஓம்பா அணி ஆக அனைத்தும் நீக்கி ஒருங்கு உடன் ஓர்
சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த
தேம்பாவணியே என்று அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே

#60
செய் வாய் வான் உடு சூழ் குழவி திங்கள் சீர் பொருவ
பெய் வாய் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப பெய்து சுடர்
வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி
மொய் வாய் கடல் உலகின் திலதம் என்பார் முகம் கண்டார்

#61
வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு என்பார்
கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார்
நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர் என்பார்
நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார்
மேல்

@4 பால மாட்சிப் படலம்


#1
வான் அடுத்த அரசு அடைந்து வாழ அ
கோன் அடுத்த நல் குணத்த சீர் எலாம்
மீன் அடுத்த வீடு உடைய விண்ணவர்
தேன் அடுத்த அலர் சிறுவற்கு ஊட்டினார்

#2
ஊட்டினார் அருள் முடியின் ஒப்பு என
சூட்டினார் அறம் சுடரும் பூண் என
பூட்டினார் தவம் பொன் செங்கோல் என
காட்டினார் அறிவு அமைந்த காட்சியே

#3
இளைய வான் பிறை என வளர்ந்து உளம்
வளைய மாசு உறா வயது மூன்று உளான்
உளைய நூலவர் உற்ற காட்சியின்
திளைய வான் அறிவு எய்தி சீர்த்தனன்

#4
அறிவுற்று ஆகையின் அலர் செங்கை எழீஇ
செறிவுற்று ஆசையின் தெய்வம் ஏற்றி வில்
நெறிவுற்று ஆர் நுதல் நிலத்தில் தாழ்ந்தனன்
வறிதுற்று ஆம் உடற்கு உயர்ந்த மாட்சியோன்

#5
இரவி காண் மரை இகல வாய் மலர்ந்து
அருவி மான் துதி அறைந்து கும்பிட
மருவி ஓங்கு செம் கரங்கள் மாலையில்
பருதி போய் குவி பதுமம் மானுமே

#6
தூ நிலாவு செம்_சுடரும் மீன்களும்
வான் உலாவு உடு நடு வழங்கிய
பால் நிலாவையும் பார்த்து நாதனை
தேன் உலாவு உரை செப்பி வாழ்த்துவான்

#7
முலைகள் ஆம் என மலை முடிக்கு மேல்
அலை கொள் பால் என அருவி விஞ்சி வெண்
கலைகள் ஆம் என கடலில் சிந்திய
நிலை கொள் மாது என நிலம் கண்டு ஓங்குவான்

#8
சோலை வாய் இறால் துளித்த தேறலும்
மாலை வாய் மலர் வழிந்த தேறலும்
ஆலை வாய் கழை அளித்த தேறலும்
நூலை ஆய்ந்து என நுதலி மூழ்குவான்

#9
நிழலில் மேதிகள் நீரில் சங்குகள்
பொழிலில் தோகைகள் பூவில் வண்டுகள்
கழனி ஓதிமம் துயில கண்டு வாழ்
குழவி வாய் நலம் துயில் கொள்வு ஆம் அரோ

#10
குயில்கள் பாடலும் குழல் ஒப்பு ஓதிமம்
வயல்-கண் பாடலும் மது உண் கிள்ளைகள்
பயில்கள் பாடலும் பாலன் கேட்டு இயைந்து
இயல்கள் பாடலும் இனிது இயங்கும்-ஆல்

#11
மலை மலைக்கு உரி வனப்பும் வாங்க_அரும்
அலை அலைக்கு உரி மணியும் ஆர்ந்த சீர்
நிலை நிலைக்கு உரி மருத நீர்மையும்
கலை கலைக்கு உரி கருத்தும் எய்தினான்

#12
மூக்கில் தாக்கிய முயல் மெய் தாக்கிய
நாக்கில் தாக்கிய செவி நள் தாக்கிய
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய்
தூக்கில் தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ

#13
மீது உலாவிய மீன்கள் தீபமாய்
போது உலாவிய புவியும் வீதியாய்
கோது உலாவிய குறை கொய் காட்சியான்
மூது உலாவு இறை அடைய முன்னினான்

#14
ஆறும் ஆறும் ஒன்று ஓடலாய் தம் உள்
மாறும் ஆறு கொண்டு அலை மயங்கு என
சாறு தாறும் ஒன்று இன்றி தான் வளத்து
ஏறு பேறு கொண்டு இளவல் ஓங்கினான்

#15
மாக்கள் தாக்கிய மறம் கொள் கூளிகள்
நோக்கத்து ஆக்கிய நுண் சடத்து இவன்
ஆக்கத்து ஆக்கிய அருளை தாக்கு உற
ஊக்கத்து ஆக்கிய இகல் உடைத்து உளான்

#16
கள்ளம் காட்டு களங்கம் கடிந்து ஒளிர்
உள்ளம் காட்டு ஒளி காட்டிய ஒள் முகம்
தெள்ளம் காட்டு எழில் தீட்டி வரங்கள் தம்
வெள்ளம் காட்டி வளர்ந்து விளங்கினான்

#17
இன் தெளித்து எவரும் நசை எய்துவ
பொன் தெளித்து எழுதும் பட பொற்பினான்
மின் தெளித்து எழுதி கதிர் வீசு எழில்
கொன் தெளித்து என ஆசையின் கோடு இலான்

#18
கதிர் முகத்து அலர் கஞ்சம்-கொல் கஞ்சம் மேல்
பொதிர் முகத்து எழும் பொற்பு அளி-கொல் நசை
பிதிர் முகத்து இழையார் இவன் பேர் எழில்
முதிர் முகத்து-இடை மொய்த்தன நோக்கமே

#19
விதி முகத்து அலர் மேதையின் மேன்மையான்
புதி முகத்து அலர் பூ அணி சாயலார்
நிதி முகத்து எதிர் மூடிய நீண்ட கண்
மதி முகத்து எதிர் தாமரை மானுமே

#20
கான் இறைஞ்சிய நல் தவ காவலன்
மீன் இறைஞ்சிய மின் விழியார் உரை
ஊன் இறைஞ்சிய வேல் என ஓர்ந்து தான்
தேன் இறைஞ்சிய தீம் சொலை கேட்கிலான்

#21
கார் முகத்து வளைத்தன கார் முகம்
சீர் முகத்து செயம் தரும் காம வெம்
போர் முகத்து வெல்வான் புரை ஆசை அற்று
ஏர் முகத்து எதிராது ஒளித்தான் என்றான்

#22
என்று ஒளித்து என கான் உற ஏகினான்
குன்று ஒளித்த குரு மணி சாயலான்
கன்று ஒளித்த கறவை கனைத்து என
அன்று ஒளித்தவற்கு ஆர்த்து அழ யாருமே

#23
தேம் முயங்கிய தேன் தரு நீடிய
கா முயங்கிய கார் வரை கண்ட கால்
பூ முயங்கு புலம் தரு நீழல் கீழ்
பா முயங்க வதிந்தனன் பாடுவான்

#24
வளைத்தன தனு கொடு எழுவும் ஈர்க்கு அடைவடி கணை வினைப்பட வினையை ஆக்கிய
விளைத்தன நசை கொடு விளையும் நோய் திரள் விட பகை பகைத்தன பொறிகள் ஈர்த்துபு
திளைத்தன மிறை கொடு நசையும் நீத்து அவை செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய் பொருவு
இளைத்தன திரு கொடு வளரும் மாட்சியை இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே

#25
சினை கரு முகில் தலை விலக ஊக்குபு திரள் கனி திளைத்தன பொழில்கள் சூட்டிய
நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல
நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல
வினை கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின் விருப்பினும் நனி தகும் மலையின் ஊக்கமே

#26
உடித்தன முதல் கதிர் எழுது கோட்டு உயர் உளத்து இருள் ஒளித்து ஒளி அறிவு நீர்த்தலின்
முடித்தன தவத்து உயிர் இனிது காத்துளி முரண் படு பகை பட அரணின் மாட்சி ஆய்
இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள்
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே

#27
என்று எழுந்து உவப்பில் ஓங்கி இரட்டு அலை கடலின் நீந்தி
நின்று எழும் கரை கண்டால் போல் நிழற்றிய திமிசு விம்மும்
குன்று எழும் குவடு நோக்கி குயில் குயின்று அகவ மஞ்ஞை
அன்று எழுந்து எழுதும் வண்ணத்து அலர்ந்த கான் நுழைந்தான் சூசை

#28
கார்-இடை குளித்த மின் போல் கான்-இடை குளிப்ப போகில்
நீர்-இடை குளித்த பேவு நிற நரை குளித்த ஓர் மூப்பன்
தார்-இடை குளித்த தேன் போல் தயை-இடை குளித்த சொல் கொண்டு
ஏர்-இடை குளித்த பாலா இயம்புதி போவது என்றான்

#29
வீடு இழந்து இகல் செய் பேய்கள் வினை பகைக்கு அஞ்சி ஓடி
நாடு இழந்து ஒளித்து கானில் நயந்து உறை அறத்தை நாடி
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து இடத்து நான் ஒளித்தல் உள்ளி
தோடு இழந்து ஏகுது என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன்

#30
கார் முகத்து அலரும் முல்லை கடி முகத்து இமைக்கும் வண் கால்
ஊர் முகத்து அஞ்சும் நாவாய் உடை திரு கொணரும்-கொல்லோ
போர் முகத்து எதிரா நீங்கின் புணருமோ விழைந்த வெற்றி
ஏர் முகத்து உணர்வில் தேர்ந்த இளவலோய் என்றான் மூத்தோன்

#31
பைம் பொறி அரவின் நஞ்சில் பழிப்பட பகைத்து கொல்லும்
ஐம்பொறி அன்றி சூழ்ந்த அனைத்துமே பகைத்த-காலை
செம் பொறி பெய்த பைம் பூ சிதைந்து என உளமும் ஏங்கி
வெம் பொறி ஆக ஆற்றா வேட்கையே என்றான் சூசை

#32
பொன் ஒளி காட்டும் செம் தீ புகை அகில் மணத்தை காட்டும்
மின் ஒளி மணியை காட்டும் வினை செயும் படைக்கல் மாட்சி
தன் ஒளி காட்டும் துன்ப தகுதியில் குன்றா ஊக்கம்
மன் ஒளி காட்டும் நல்லோய் மறை இது என்றான் சான்றோன்

#33
உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல
தெள் உயிர் மருட்டும் செல்வ திரள் துறந்து ஒருங்கு நீங்கி
கள் உயிர் உயிர்த்த பைம் பூம் கானில் வாழ் தவத்தை நாடல்
எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன்

#34
ஒருங்கு எலாம் நீக்கல் ஓர் நாள் உறுதியே பகைத்து சூழ் தன்
மருங்கு எலாம் இருப்ப உள்ள வாய் அடைத்து இடை விடாது
நெருங்கு எலாம் நுழையா காத்தல் நெடும் பயன் பயத்த நீள் போர்
சிருங்கு எலா நிலையின் ஊங்கும் திறம் இது என்று அய்யன் சொன்னான்

#35
நாள்-தொறும் கனிந்த செம் தேன் நல் கனி அளித்தல் நன்றோ
கோடு உறு மரமும் தன்னை கொடுத்தலே நன்றோ இவ்வாறு
ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார்
வீடு உறு நூலோர் என்ன விளம்பினான் இளவல் மாதோ

#36
காயொடு மரம் தந்தால் போல் கடி துறவு அருமை வெஃகி
வேயொடு நெருங்கும் கானில் விழைந்து தான் ஒழுகல் நன்றோ
தீயொடு குழை மற்றோரும் செவ்வுற செலுத்தல் நன்றோ
தூய் உடு உணர்வோய் என்ன சொற்றினான் குரவன் அம்மா

#37
பெற்று அறம் அணிந்த நல்லோய் பிறர் மனை விளைந்த செம் தீ
அற்று அற ஓடி தன் வீடு அழன்றதே போல வேட்கை
பற்று அற உணர்த்தி உள்ளம் பற்றிய நசையில் வெந்தால்
இற்று அற உறுதி என்னோ என்றனன் அரிய சூசை

#38
தீது இலா இடமே வேண்டின் சேண் உலகு எய்தல் வேண்டும்
கோது இலா வனத்தும் தன்னை கொணர்ந்த கால் விளையும் வெம் போர்
ஏது இலாது ஒழுகல் உள்ளத்து இயல்பினால் ஆகும் அன்றி
வாது இலா இடத்தால் ஆகா மைந்தனே என்றான் சான்றோன்

#39
ஈர் அறம் வழங்கும் வண்ணத்து யாவையும் துறந்த தன்மை
பேர் அறம் என்ப கேட்டேன் பின்னை அ துறவின் ஊங்கும்
ஓர் அறம் உளதேல் ஐயா உரைக்குதி உரைத்த அன்ன
சீர் அறம் விழைவேன் என்றான் சேண் உலகு உரிய பாலன்

#40
ஈர் அறம் பிரிந்து நோக்கில் இயம்பிய துறவின் மாட்சி
பேர் அறம் ஆவது அன்றி பிரிவு இலா இரண்டும் தம்முள்
ஓர் அறம் ஆக சேர்க்கில் உறுதியும் பயனும் ஓங்க
தேர் அறம் ஆகும் என்றான் செழும் துறை கேள்வி மூத்தோன்

#41
பால் கலந்திட்ட தெள் நீர் பால் குன்றும் பண்பும் இல்-ஆல்
மேல் கலந்து ஒளிர்ந்த வெய்யோன் வெயிலின் முன் எரித்த தீபம்
போல் கலந்து இசைத்த மற்ற புண்ணியம் துறவு வாய்ந்த
சால் கலந்த இயல்பை ஏற்றும் தகுதியோ என்றான் பாலன்

#42
தெருள் தகும் உணர்வின் சான்றோன் சேடனை தழுவி சொல்வான்
அருள் தகும் உணர்வு அன்பு ஊக்கம் அரும் பொறை ஈகை மற்ற
மருள் தகும் இயல் தீர் மாட்சி மதியை மீன் சூழ்ந்ததே போல்
பொருள் தகும் நாட்டில் வைகும் பொலம் துறவு அணியும் அன்றோ

#43
கான் வளர் தவத்தை கானில் கண்டு எளிது அடைவார் மற்றோர்
தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல்
வான் வளர் வலமை பூத்த மாண்பு இதே இது நின்-பால் ஆம்
மீன் வளர் உணர்வோய் என்று மின் என மறைந்தான் சான்றோன்

#44
ஊன் உரு காட்டி வந்த உம்பன் என்று அறிந்து போற்றி
தேன் உரு கோதை ஒத்தான் திளைத்த இன்பு உருகி மூழ்கி
கூன் உரு பிறையும் எஞ்ச கொழும் கதிர் முகத்தில் வீச
பான் உரு சுமந்து நாறும் பவள நல் மதலை ஒத்தான்

#45
நீதியும் நெறியும் சொன்ன நிலை எலாம் உணர்ந்த பின்னர்
ஆதியும் அந்தம் தானும் ஆய நின் கழல் அல்லாது
வீதியும் எனக்கு ஒன்று உண்டோ வினை அறும் இறையோய் என்ன
ஓதியும் விறலும் விம்ம ஒளித்த தன் நகரம் சேர்ந்தான்

#46
கார் வளர் மின்னின் மின்னி கதிர் வளர் பசும்பொன் இஞ்சி
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய்
தேர் வளர் பருதி ஒத்தான் சென்று புக்கு உவப்ப யாரும்
பார் வளர் திலகம் ஒத்தான் பழிப்பு அற விளங்கினானே

#47
மீன் ஆர் வானம் பெற்றவன் ஓது விதி பெற்று
தேன் ஆர் கானம் பெற்ற திருந்தும் தெளிவு ஆறாது
ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற
வான் ஆர் மானம் பெற்று அறம் ஒன்றாய் வனைகின்றான்

#48
வானம் கொண்டார் மாண் அருள் கொள்வான் அவர் கொண்ட
ஞானம் கொண்டான் இல்லவன் இல்லோர் நகை கொள்வான்
தானம் கொண்டான் மாசு இல தூயோன் தவம் கொண்டான்
ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான் இவை கொண்டான்

#49
புன்மை பட்டார் கொண்டவை வெஃகி பொருள் கொண்ட
தன்மை பட்டார் யாவையும் உண்ணார் தரல் செய்யார்
இன்மை பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான்
நன்மை பட்டு ஆர்ந்து ஏற்குநர் உய்வான் நனி ஈவான்

#50
வேய்ந்து ஆர்ந்து ஒன்றும் வான் பொருள் விஞ்ச விழைவோடு ஒன்று
ஈய்ந்தால் ஒன்றே கோடி பயக்கும் எனில் அன்பால்
வாய்ந்தான் ஒன்றும் தன் வறுமைக்கே மலிவு ஈகல்
ஆய்ந்தால் ஒன்றும் வான் புகழ் கூறல் அரிது அன்றோ

#51
மெய்யால் குன்றாது ஒள் தவம் மாறா வினை ஆண்மை
கையால் குன்றா வண் கொடையோடு உள் களி கூர்ந்து
பொய்யால் குன்றா நெஞ்சு அரு வல்லோன் புணர்வு ஆக்க
மையால் குன்றா வெம் வனம் ஏகா மனை நின்றான்

#52
காக்காது உள்ளம் ஐம்பொறி காட்டும் வழி நிற்ப
போக்காது உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை
ஆக்காது உள்ள யாவும் அகன்றே அழிவு ஆக்கம்
நோக்காது உள்ள தே அருள் நோக்கி நுதல்கிற்பான்

#53
சொல்லும் செல்லா கான் நுழையா தண் துளி தூற்றும்
செல்லும் செல்லா தீ எரி கற்றை திளை வேந்தன்
எல்லும் செல்லா கான் நகு நல் கான் என உள்ளம்
புல்லும் பொல்லாங்கு ஈர்த்துபு புக்கு ஐம்பொறி காத்தான்

#54
சுட்டு ஆகுலம் உற்று ஓர் வனம் உற்றான் துகள் தீரா
முட்டு ஆசையை உற்று எங்கணும் உற்றால் முனி தானோ
பட்ட ஆசை இரண்டு ஈர்த்து உளம் ஓங்க பல யாவும்
விட்டு ஆய் உளது ஓர் ஆண்டகை மேவி வினை தீர்த்தான்

#55
மை பட்டு இளகும் சேற்றில் உலா விண் மணி மாலி
செய் பட்டு ஒளிரும் செம் கதிர் மாசு ஆய் சிதைவு ஆமோ
பொய் பட்டு அயரும் புன் பொருள் மேல் ஐம்பொறி விட்டால்
மெய் பட்டு உயர் இன்னான் உளம் மாழ்கா வினை கொள்ளான்

#56
போர் ஆறு என்னும் இடை மாக்கள் புரை எல்லாம்
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா
ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான்

#57
உடல் கிடந்து உடலம் கடந்தான் எனா
மிடல் கிடந்து உயர் வீடு உள இன்பு அது
கடல் கிடந்து கனிந்த களிப்பு உறீஇ
மடல் கிடந்த கள் வார் மலர் மானுவான்

#58
கலை உற்று உள் இருள் நீங்கிய காட்சியான்
அலை உற்று இ பொருளோடு அலையாது உளம்
நிலை உற்று எந்தை நெருங்கு அடி சேர்ந்து உயர்
மலை உற்றான் என மாறுபடான் அரோ

#59
தேக்கு பாரில் திளைத்து உள யாவையும்
தூக்கி பார்த்தனன் தோன்றிய தீது எலாம்
போக்கி பாய் பயன் பூத்து கலந்த நீர்
நீக்கி பால் உணும் ஓதிமம் நேருவான்

#60
மீ இருள் கொணர் மேகம் மிடைந்து எனா
போய் இருள் கொணர் ஐம்பொறி போக்கு இலான்
தூய் அருள் கொணர் சூழ்ச்சி தெளிந்து உளம்
பாய் அருள் கொணர் பற்றுதல் எய்தினான்

#61
கோது_இல் ஓர் முறை கொண்டு நடந்த பின்
ஏது_இல் ஓர் முறை யாரும் நடந்து எழ
நீதி ஓர் முறை நேர் நெறி ஓதுவான்
வேதியோர் முறை விஞ்சிய மாட்சியான்

#62
முனி பழித்த இளைய மூத்தோன் என
பனி பழித்த பயன் பட யாவரும்
கனி பழித்த கனிந்த நல் வீணை தன்
தொனி பழித்த சொல் சொல்லிய வாய்மையான்

#63
பொருள் கடிந்து புலன்கள் அடக்கலால்
மருள் கடிந்த மனம் தெளி காட்சியான்
அருள் கடிந்த அசடரை நோக்கலோடு
இருள் கடிந்த இரக்கம் உற்று ஏங்குவான்

#64
தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து
உவர்க்கும் வேலை உடுத்தன பார் உறை
எவர்க்கும் நன்றி இயற்றி இன்னா செயும்
அவர்க்கும் வாய்ந்த அறம் துணை ஆயினான்

#65
அன்பு வாய்ந்த உயிர் நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் உடல் போர்த்தது என்று அன்பு உறை
இன்பு தோய்ந்த நிலை என தான் இவண்
துன்பு காய்ந்த உயிர் துணை ஆயினான்

#66
பொறையது ஆண்மையினோடு எரி பூண் எனா
மறையது ஆட்சி அணிந்த வளன் தகும்
நிறைய மாட்சி நிகர்ப்பது நூல் வழி
அறைய வாய்மையர் எய்துப ஆண்மையோ
மேல்

@5 திருமணப்படலம்


#1
இ அரும் குணத்து இரங்கிய இனிய அன்புடைமை
வவ்வு அரும் குணத்து அவனி கொள் மடி வினை நீக்கி
செ அரும் குணத்து இறையவன் சென்று அதை தீர்ப்ப
அ அரும் குண தவன் விருப்பு எய்தி நொந்து அயர்வான்

#2
உலகு உண்டாய-கால் மனு_குல தலையவன் உண்ட
விலகு உண்டு ஆய காய் விளைத்த தீது உயிர் எலாம் சிதைப்ப
அலகு உண்டு ஆய் இலாது அடும் விடம் குடித்த வாய் வழியால்
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம்

#3
குடித்த நஞ்சினால் குருடு கண் பாய் என பாவம்
முடித்த நஞ்சினால் முதிர் செயிர்க்கு உளத்து இருள் மொய்ப்ப
படித்த விஞ்சையால் பணிந்த மெய் இறைவனை பழித்து
பிடித்த வஞ்சனால் பெருகியது எங்கணும் மருளே

#4
பண் அரும் சுடர் பருதி போய் பாய் இருள் நீக்க
எண் அரும் சுடர் ஏற்றுவர் இணை என மாக்கள்
ஒண் அரும் சுடர் ஓர் இறையவன் ஒளித்து எவையும்
மண் அரும் சுடர் மானும் என்று இறைஞ்ச உள்ளினர்-ஆல்

#5
மறம் ஒழித்திலர் மறை முறை ஒழித்தனர் இறைவன்
திறம் ஒழித்தனர் செய் முறை ஒழித்தனர் சிறந்த
அறம் ஒழித்தனர் அறிவு ஒழித்தனர் நலம் யாவும்
புறம் ஒழித்தனர் புணர் உயிர் ஒழித்தனர் சிதடர்

#6
எஞ்சுக பயன் இயற்றிய அறங்களே இன்னா
விஞ்சுக பகை வினை செயும் பழம் பழி பேய் அ
நஞ்சு உக பகு வாய் அரவு உரு கொடு அ நாளில்
அஞ்சுக புவி அனைத்துமே தோன்றியது ஆம்-ஆல்

#7
அன்ன நஞ்சு உறும் பாவமே பரந்ததின் அதனை
உன்னின் நஞ்சு உறும் உன்னிய உன்னமும் அதனை
பன்னின் நஞ்சு உறும் பன்னிய வாய் அதும் அதனை
துன்னின் நஞ்சு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ

#8
நிழலில் நஞ்சு உறும் வெய்யிலில் நஞ்சு உறும் நெடு நீர்
கழனி நஞ்சு உறும் கடி மலர் நஞ்சு உறும் பொலிந்த
பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார்
எழிலில் நஞ்சு உறும் காண்டலால் இன் உயிர் இறக்கும்

#9
காரும் நஞ்சு என கனலியும் நஞ்சு என மாரி
சோரும் நஞ்சு என துறும் வளி நஞ்சு என சுடர் பூண்
ஆரும் நஞ்சு என ஆடை நஞ்சு உணவு நஞ்சு அமிர்த
நீரும் நஞ்சு என நேமி கொள் எவையும் நஞ்சு எனவே

#10
நஞ்சு எஞ்சாமையின் நடு நெறி தவிர்தலோடு இன்னா
விஞ்சு எஞ்சாமையின் சிறுமை நோய் துயர் பிணி மிடைந்து
நெஞ்சு எஞ்சாமலும் நெடியது ஓர் நடுக்கு உறா நிற்ப
மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம்

#11
மீன் மறந்தன மேதினி விளக்கலும் வெய்ய
வான் மறந்தன மாரியை வழங்கலும் மதுர
தேன் மறந்தன செழு மலர் பெய்தலும் வேத
நூல் மறந்தனர் நுதல்_அரும் தீமை செய்தமையால்

#12
அறம் மடிந்தன அடைந்தன தீயவை அனைத்தும்
மறம் மிடைந்தன மறந்தன தருமமே வஞ்ச
திறம் நிறைந்தன தீர்ந்தன தவங்களே விரதம்
புறம் முரிந்தன பொதிர்ந்தன பகை செயும் புரையே

#13
விண் கிழித்து இழி வெள்ள நீர் சிறை செயும் உழுநர்
மண் கிழித்து உழ வழங்கிய கொழுவினை நீட்டி
புண் கிழித்து நெய் புனலொடு போர் முகத்து அஞ்சா
கண் கிழித்து ஒளி கான்ற வேல் ஆக்கின பகையே

#14
அன்பும் இல்லன எனது உனது என்பதில் ஆர்வ
நண்பும் இல்லன வஞ்சனை கற்கலால் நல் நூல்
பின்பும் இல்லன தீயவை இனிது என பெட்டற்கு
இன்பும் இல்லன இச்சையால் வறுமை உள்ளதுவே

#15
கரும்பு உலாவிய சாறு இல காய்ந்தன ஆலை
அரும்பு உலாவிய அமுது இல அழுதன கமலம்
சுரும்பு உலா வயல் பயன் இல துறுவின கடு முள்
விரும்பு தேன் உணா பாடு இல விம்மின குயிலே

#16
எள்ளல் ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை விரும்பி
அள்ளல் ஆய இருள் மொய்ப்ப அவனி எங்கும் மொய்த்தன தீது
உள்ளல் ஆயது அருமை அதோ உள்ளி உள்ளத்து இரங்கி வளன்
வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான்

#17
ஒன்றாய் ஆளும் அரசே என் உயிர்க்கு ஓர் நிலையே தயை கடலே
குன்றா ஒளியே அருள் பரனே குணுங்கு ஈங்கு ஓச்சும் கொடுங்கோன்மை
பின்றா வினை செய்வது நன்றோ பிறந்து அ பகையை தீர்த்து அளிப்ப
சென்றால் ஆகாதோ இரக்கம் செய்ய குணித்த நாள் எவனே

#18
மறையை பழித்த பொய் மதங்கள் மருட்டும் வினையால் ஒண் தவத்தின்
முறையை பழித்த சிற்றின்பம் மூழ்கும் நசையால் என்றும் இதோ
உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த
தறையை பழித்த பேய் இனங்கள் தவிராது ஈங்கு ஆள்வது நன்றோ

#19
முன் நாள் இனிதின் நீ உரைத்த முறையால் பகைத்த வெறி தலையை
இ நாள் மனுவாய் அவதரித்து இங்கு எய்தி மிதிக்கில் ஆகாதோ
பல் நாள் உலகம் கொண்ட பழி பகையை எண்ணுவது நன்றோ
அ நாள் எம் மேல் காட்டிய பேர் அன்பு இன்று எண்ணில் ஆகாதோ

#20
தந்தை நோக உணர்வு இன்றி தவறா நின்ற பிள்ளைகள்-தம்
சிந்தை நோக பணிந்து அடுத்தால் சினந்த தாதை அகற்றுவனோ
நிந்தை ஆக பிழைத்து எனினும் நினக்கு ஓர் பிள்ளை ஆக எமக்கு
எந்தை ஆக நீ என்றும் இரங்கா முனிவது ஆம்-கொல்லோ

#21
பொறியை தவிர்த்த மா தவத்தோர் புலம்பற்கு இரங்கின் குறை என்னோ
அறிவை தவிர்த்த குழவிகளும் அழுதற்கு இனைந்தால் தீ என்னோ
நெறியை தவிர்த்த வஞ்சம் மிக நேமி சிதைத்து ஆள் கொடுங்கோன்மை
வெறியை தவிர்த்த வயம் கொடு நீ வினை தீர்த்து உதிப்ப தடை என்னோ

#22
கன்னித்தாய்-தன் கரத்து உன்னை கண்டு உள் உவப்ப உன் மலர் தாள்
சென்னி தார் என்று அணிந்து இலங்க சிறுவனாய் நீ அழுது உணும்-கால்
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப
என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான்

#23
இன்னான் இன்ன யாவும் உரைத்து ஏங்கி ஏங்கி அழுகின்ற
அ நாள் அன்ன உரைக்கு இசையாய் அன்பு தூண்டும் அரிய நசை
தன்னால் உன்ன பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள்
பல் நாள் துன்னாத அருள் புரிய பரமன் எய்த வேண்டினளே

#24
அன்று என் தொடையால் அடையா பண்பு அன்னார் இருவர் சொல் அமிர்தம்
துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன்
நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர்
ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற உள்ளத்து உள்ளி முடித்தான்-ஆல்

#25
அணை அற்று அகன்ற பவ வெள்ளத்து அமிழ்ந்தும் உயிர்கள் தம் குறை தீர்த்து
இணை அற்று அகன்ற அருள் பவ்வத்து இனிதின் மூழ்கி உய்வதற்கே
தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும்
துணை அற்று அகன்ற மாண்பு இவரை துணையாய் சேர்த்த நலம் சொல்வாம்

#26
ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான் அலகை வெல்ல
கார் ஆரும் வான் உலகும் மண் உலகும் கடி நயக்கும் கருணை கண்ணி
ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில் இருமை வாய்ந்த
சீர் ஆரும் கன்னியின்-கண் சேடு அமை ஓர் வானவனை செலுத்தி சொல்வான்

#27
சேய் ஆக மனு_குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார் சிதைவை நீக்க
தாயாக வளர் கன்னி தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு இல்லாது
தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி
வீயாத வரம் கொடு பெற்று எ உலகும் வியப்பு எய்த வேய்ந்தாள் அன்றோ

#28
காரணமாய் ஏது அறியா வையகத்தார் இனிது உளத்தில் களித்து மூழ்கி
வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும்
பூரணமாய் தொழுது உவப்ப பூவனத்தில் பொருவு இன்றி போர்த்த வெய்யோன்
பேர் அணியாய் பிறை மிதித்து முடி ஒப்ப மீன் சூடி பிறந்து வேய்ந்தாள்

#29
பிறை ஒக்கும் ஒளி அன்னாள் பெருகும் வயது ஒரு_மூன்றில் கோயில் சேர்ந்து
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால்
பொறை ஒக்கும் துணை அன்னாள் பூவனத்தில் நிற்பவருள் பொலிந்த வானோர்
முறை ஒக்கும் நிலை அன்னாள் முற்றி வளர் வரத்து அங்கண் முதிர்ந்தாள் அன்றோ

#30
துணை தீர்ந்து கன்னி எனை ஈன்றாலும் உறும் துயரில் துணை ஆதற்கும் அ
இணை தீர்ந்த இ பயன் பேய்க்கு ஒளிப்பதற்கும் அவட்கு இகழ்வு ஆங்கு எய்தாதற்கும்
அணை தீர்ந்த துணை அளிப்பேன் இவை கூறா மண தூதாய் வான் விட்டு அங்கண்
அணை தீர்ந்த அருள் கன்னி ஆம் என ஏகு என்று இறையோன் அனுப்புகின்றான்

#31
வான் செய்த சுடர் ஏய்க்கும் வடிவொடு வானவன் சடுதி வந்து அ கன்னி
கான் செய்த மலர் பதத்தை கண்டு இறைஞ்சி கடவுள் அருள் கருதும் தன்மை
தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன
தேன் செய்த கனி சொல்லால் சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே

#32
மண மொழி முற்று உணரா முன் மனம் உளைந்து வாடுகின்ற வதனம் மாற
பணி மொழி முற்று உணராதாய் பகல் செய் கண் ஆறு என நீர் பயின்று சேப்ப
அணி மொழி முற்று உணர் நெஞ்சம் உள் துடிப்ப நெட்டு உயிர்ப்போடு அரற்றி பின்னர்
துணி மொழி உற்று இறைவனது துணை தாளை பணிந்து இவளும் சொல்லல் ஓர்ந்தாள்

#33
தேன் தானோ நஞ்சு அதுவோ என விழுங்கலோடு உமிழ்தல் தேற்றா நெஞ்சள்
மீன் தான் ஓர் முடி சென்னி நிலம் புல்ல முழந்தாளை விரும்பி ஊன்றி
வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வல தோளின் வயங்கு திங்கள்
கூன் தானோ பூ எருத்தம் கோட்டி இரு கை கூப்பி கூறல் உற்றான்

#34
உலகு எல்லாம் புரக்கும் அருள் கொடையோனே உரு இல்லாது ஒளி வல்லோனே
அலகு இல்லா தற்பரனே அற்புதனே என் அன்பே அரசர் கோவே
நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள்
புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன்

#35
நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி மூ வயது நிகழா முன்னர்
மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி எம் ஞான்றும் மாறா கன்னியாய்
இருப்ப நான் உணர்-கால் ஆம் என நீ அருள் புரிந்தாய் அன்றோ ஐயா
நோய் உகுப்ப உளத்து அலக்கண் நுழைந்து அறுப்ப மணம் இப்போ நுதல்கிற்பானேன்

#36
என்று என்றாள் மென் தாளாள் இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள்
அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப
நின்று அன்று ஆயிர கதிரோன் நேர் உரு காட்டிய வானோன் நிகரா கன்னி
மின் தன் தாள் தொழுது இன்னும் விரி வேதத்து உறுதி உரை விளம்புகின்றான்

#37
மீனொடு மின் சுடர் எல்லாம் வெல் அறிவு உற்று அயர்வானேன் வெருவாது ஒன்றாய்
தேனொடு கொல் அரி இனம் ஓர் நாவாய்க்குள் அடக்கினனும் திளைத்த செம் தீ
கானொடு தண் மது மலரின் குளிர செய்தவனும் மண கடியோடு உன்-கண்
வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை காப்பதும் அரிதோ மறை பூண்டு உள்ளாய்

#38
சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும்
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன் திருவுளம் ஆய் விகற்பம் என்னோ
எல் வழியும் கடந்த அறிவான் ஏவலினால் இன்னல் உறாது என்ன வானோன்
கல் வழியும் கடந்து அன திண் கன்னி அறா மணத்து இணங்கி கடவுள் தாழ்ந்தாள்

#39
ஆம் என ஆயினது அறைய வானவன்
நாம் என யாவரும் நயப்ப நாயகன்
ஏம் என மாண்பு இசை சீமையோன் எனும்
தோம் என யாவும் தீர் தவற்கு சொற்றுவான்

#40
கோது இல தாவிதன் குலத்தில் தாதை தாய்
மாது இல தணர்ந்த மா மரி என்பாள் இவண்
ஏது இல வரத்து உயர்ந்து இலங்கு மீன்களுள்
மீது இயை மதி என விளங்கின்றாள் அரோ

#41
ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இ மங்கையை
நேர் எழு துணை மணம் முகிப்ப நீர்த்த தன்
சீர் எழு குலத்தினுள் தெரிந்து அ மாட்சியான்
பேர் எழு மணம் கொடு பிணிக்குவாய் என்றான்

#42
முனிவரன் முதலவன் மொழிந்த யாவையும்
தனி வர மடந்தையை விளித்து சாற்றி உள்
நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல்
இனி வர மணம் செயல் வேண்டுமே என்றான்

#43
என்றலும் கேட்டு உயிர்ப்பு எழ இரங்கினாள்
மன்றலும் மன்றல் செய் வாழ்வும் எற்கு அதே
பொன்றலும் பொருவு_இல புன்கண் ஆயினும்
ஒன்றலும் ஆம் இறை உரைக்கிலே என்றாள்

#44
என்றவை உணர்ந்த மா தவனும் இன்பொடு
மன்றலை முடிதர அங்கண் வைகிய
நன்று அமை முனிவரை கூட்டி நாயகன்
அன்று அமைந்து அறைந்த நல் பணி அறைந்து உளான்

#45
அறைந்த வாசகம் உணர்ந்து அரிய மா தவர்
நிறைந்த தாவிதன் குல நிலையில் மாட்சி கொண்டு
உறைந்த யாவரையும் விளித்து ஒருவனை பிரான்
பறைந்தது ஆகையில் ஒரு பழுது உறாது என்றார்

#46
நன்று என நயப்பொடு நாதன் வேண்டினர்
கன்றின முரசு ஒலி கறங்க தாவிதன்
துன்றின அனைவரும் துன்-மின் என்று அழைத்து
அன்று இன மணி நகர் அரிது உவந்ததே

#47
கார்க்கடை உரும் என முரசம் கால் ஒலி
ஈர்க்கு அடை கணை என இரு செவி புக
போர் கடை என மனம் புலம்பி மா மரி
சீர்க்கு அடை பிரான் அடி இறைஞ்சி செப்புவாள்

#48
எள் ஒழிந்து உனது தாள் இறைஞ்சி நாள் எலாம்
தெள் ஒளிர்ந்து உயர்ந்த இ தேவ கோயிலின்
நள் ஒளிந்து இருப்ப என் நசை அறிந்து உளாய்
உள் ஒளிந்ததும் எலாம் உணரும் நாதனே

#49
தீயினும் சுடும் மணம் செய்க என்றாய் அது
வாயினும் மடவரல் மறுக்கல் ஆம்-கொலோ
வீயினும் கொடியது இ வினையினால் உளம்
காயினும் திரு உளம் கனிவு என்று ஆம் அரோ

#50
கடி செயும் காலையும் கன்னி காக்க நின்
அடி செயும் உறுதியால் அகத்தில் ஓங்கி வான்
குடி செயும் அவரை நேர் குணித்த என் துணை
படி செயும் திரு நக பயன் பகுக்குவாய்

#51
பார் படைத்தன திரு பற்று இலான் அருள்
சீர் படைத்தன நலம் திளைப்ப கற்பு எனும்
பேர் படைத்தன வரம் பெற தந்து ஆயினான்
சூர் படைத்தன எனை துணை கொள்வு ஆம் அரோ

#52
உடைப்பதற்கு அரும் துயர் உயிர்த்த வாழ்வுகள்
கிடைப்பதற்கு உரி துணை கிடைப்ப கேட்கிலன்
துடைப்பதற்கு அரும் துகள் துடைத்து நின் அருள்
படைப்பதற்கு அற துணை பணிக்குவாய் என்றாள்

#53
என்று பெய் மாரியால் எழுந்த வெள்ளம் ஆய்
சென்று மொய் வேலை மேல் திரண்ட ஆறு போல்
துன்று துய் மணம் செய தெரிந்த சூசை மேல்
நன்று பெய் வரம் எலாம் நாதன் ஈட்டினான்

#54
இன்ன அரு முறைக்கு இவர் இருவர் எய்திய
துன்ன_அரும் வரங்களால் துணை இலார் தமுள்
உன்ன_அரும் துணைவர் என்று உணர்ந்த நாயகன்
பன்ன_அரு மணம் புணர் பயன் சொல்வாம் அரோ

#55
குணில் உற்று ஒலி உற்று அகல் கோ முரசின்
பணி உற்று மண பயன் ஆக நசை
துணிவு உற்று அரசு ஆயின சுற்றம் உளார்
அணி உற்று எவரும் கடிது அண்டினர்-ஆல்

#56
குரு மா முனி கூறிய ஏவலினால்
மருவா நசை ஆ மணமும் தவிர்கின்ற
அரு மா தவன் ஆயின சூசை பணிந்து
இரும் மா மணி ஆலயம் எய்தினன்-ஆல்

#57
குரு மா மணியால் ஒளிர் கோயிலினுள்
திரு மாதினை வேட்டும் எலாரும் உற
பொருவாது ஒளிர் பூம் கொடியை கொணர்வான்
அரு மா முனி அங்கண் அறைந்தனன்-ஆல்

#58
தன்னில் தவிரா தகு பற்று அளவாய்
உன்னில் தவிரா பயம் ஓங்கிய போல்
கன்னிக்கு அழிவு ஆகும் எனா கதனம்
துன்னி கலுழ்வாள் சுடர் சுந்தரியாள்

#59
மின்னும் திரை சூழ் விரி மேதினி மேல்
துன்னும் உயிரும் தொடர் காவலன் நீ
என்னும் பொழுது என் இறை நின்னை அலால்
பின்னும் உயிர் காவலன் ஆர் பெறவோ

#60
இறையோன் அடி எய்திய வானவரே
பொறையோர் பொருவா துயர் பூத்து அயர்வான்
கறை ஆகுலம் அற்று உயர் கன்னியர் ஊடு
உறை யான் பெயர தகும் ஓர் விதி ஏன்

#61
தாது ஊது அளி சூழ் தவழ் தண் தொடையால்
மாது ஊடு மனம் சுட வானவனே
மீது ஊது ஒலி இங்கிதம் மேவு உரையால்
நீ தூது நடந்த இது நேர் பயனோ

#62
பரனோ பரிவு அற்று அருளே பணியான்
சுரரோ மணம் ஆகுப தூது அறைவார்
நரரோ உதவார் நறு மா மணமே
வரலோடு வரும் பயன் மாட்சி இதோ

#63
நிழல் ஆலயம் நீங்கும் மண பயனால்
சுழல் ஆயின என் துயர் நாளும் எலாம்
புழல் ஆயின புண் நுழைய பொதுளும்
தழலாய் உருகும் தமியேன் இனியே

#64
மனனே மறவாது வருந்துதியே
கனலே உணு கண்கள் கலுழ்ந்துதிரே
எனவே உளம் ஏங்கி அறாது அழுவாள்
புனலே பொருவா விழி பொங்கு இழையாள்

#65
உள் உற்ற அணங்கில் அணங்கு உளைய
தெள் உற்ற அரும் தெருள் தேர்ந்து இறையோன்
அள் உற்ற அழுங்கும் அழுங்கல் அரும்
கள் உற்ற கனிந்த சொல் உற்றனன்-ஆல்

#66
அருள் எஞ்சு இல நெஞ்சு அவிரும் சுதையே
மருள் நெஞ்சு ஒரு வஞ்சனை அஞ்சியதோ
திரு எம் சரண் அஞ்சலியும் செயும் நின்
தருமம் செறி தஞ்சமும் எஞ்சியவோ

#67
கொன்னே குலையேல் குலையேல் குழைவு ஏன்
நின் ஏசு இல கன்னி நினைத்த விதத்து
என் ஏவலினால் துணை எய்தினனே
கல் நேரிய கன்னிமை காக்குவான்-ஆல்

#68
நீ ஆவிய நீர்மையின் நேர் துணைவன்
ஓயாத தவத்து உனொடு ஒத்தனன் ஆய்
தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய்
வீயாது ஒளிர் கன்னிமை வீற்று இயல்பு ஆம்

#69
குலையேல் குலையேல் குழையா மரபால்
கலையே தரு காட்சி கடந்த அறிவோடு
அலையே நிகர் ஆம் துணை ஆகும் அவன்
நிலையே நெறியே எழ நீ அறைவேன்

#70
தாய் செய் சிறை நீக்கு முன்னர் தரையில்
பேய் செய் சிறை நீத்து அருள் பெற்று உடல் ஆம்
நோய் செய் சிறை நூறுப கன்னி அறா
நீ செய் சிறை நேர் பொறி காத்தனன்-ஆல்

#71
அடை ஆரணம் நேர் அறம் நேர் வடிவான்
கொடை ஆகையினால் குளிர் கார் அனையான்
உடை ஞான அறிவால் ஒளி மானம் அருள்
கடை ஆவது இலால் கடல் நேரினன்-ஆல்

#72
தீ ஒக்கும் வனம் தெளியாத தவம்
தாய் ஒக்கும் அருள் தகை வென்ற தயை
மீ ஒக்கும் அவர்க்கு உரி மேதை உளன்
நீ ஒக்கும் நிலைக்கு உரி நீர்மையினான்

#73
விண் ஆரும் அவர்க்கும் வியப்புறவே
கண் ஆதி எலா பொறி காக்குதலால்
தெண் ஆழியினும் திரைகொள் நசை அற்று
எண்ணான் இவறான் எனை நீங்கும் எலாம்

#74
எனக்கு ஆவல் இயற்றிய யாரினும் உள்
மன காவலினால் மறவா பிரியன
தனக்கு ஆய வரத்து அமரர் தகை மேல்
உனக்கு ஆகுவதற்கு உரி காவலனே

#75
என்றான் இறையோன் களி கூர்ந்து இவளும்
வன் தாள் தொழுவாள் தகை வானவரும்
சென்று ஆர் விழி நீர் திரை மாற்றி அறாத
அன்று ஆர் உரன் ஆகி எழுந்தனளே

#76
ஈறு ஒப்பு அளவு ஆதி யாவும் இலாது
ஆறு ஒப்பு இல நீர்மையினான் அருள் உள்
தேறு ஒப்பு இல ஊக்கமொடும் தெருளாள்
நூறு ஒப்பு இல தோழியர் நோக்கினளே

#77
இடி ஒத்து அலர்ந்த எழில் ஏந்து சிலம்பு இரட்ட
குடி ஒத்து அலர்ந்த இருள் வைகிய கூந்தல் நல்லார்
முடி ஒத்து அலர்ந்த மதி நாண முதிர்ந்த பைம்பொன்
தொடி ஒத்து அலர்ந்த கொடி வேய்துப சூழ்ந்து அடைந்தார்

#78
வான் வைத்து அவிழ்ந்த மலர் போல் ஒளிர் மீன்கள் மான
தேன் வைத்து அவிழ்ந்த சினை நாடு அளி சேர்ந்து விம்ம
கான் வைத்து அவிழ்ந்த கடி மாலை கனிந்து சூழ
மீன் வைத்து அவிழ்ந்த விழியார் சிலரே மிடைந்தார்

#79
கடியாய் அலர்ந்த ஒளிர் காந்தளின் நேர் கரத்தில்
இடியாய அணி பொன் வளை இட்டு அணிவாரும் அல்லால்
கொடி ஆய தண்ண நறை நானமொடும் குளிர்ந்த
பொடி ஆய சுண்ணம் சிலர் பூசிடவும் பொதிர்ந்தார்

#80
செம்பொன் சிலம்பும் செருவோடு சிலம்பல் அன்றி
பைம்பொன் சிலம்பும் பல கிண்கிணியும் படர்ந்த
அம் பொன் சிலம்பும் மணிமேகலையோடு பொற்பு ஆர்
அம் பொன் சிலம்பும் கலனும் சிலர் கொண்டு அடைந்தார்

#81
நல் வாசம் உண்ட நறு நெய் நனி பூசி நானம்
கொல் வாசம் உண்ட குளிர் பூம் புனல் ஆட்டி வெந்த
பல் வாசம் உண்ட புகை பாய்ந்து அவிர் பாலின் ஆவி
வெல் வாசம் உண்ட துகில் ஏந்தினர் வேய்ந்து அடைந்தார்

#82
கடு கொண்ட கண்ணின் கவினார் கனிவு ஆய ஆசை
கொடு கொண்ட யாவும் இவள் கண்டு குளிர்ந்த சொல்லால்
உடு கொண்ட சென்னி ஒசித்து ஒல்லை அகல்-மின் என்னா
நடு கொண்டு அகன்று நகை கொண்டு நடந்து போனாள்

#83
தூங்கு ஆய மாலை தொடையோ மணவாது தூய் பொன்
வீங்கு ஆய ஆர கலனோ மிளிராது எந்தை
பாங்கு ஆய பாதம் பணியே அழகே அது அல்லால்
ஈங்கு ஆய யாவும் இழிவு என்று விரைந்து அகன்றாள்

#84
விண் ஆவி ஆய கதிர் தூசு என வேய்ந்து விண் மேல்
கண் ஆவி ஆய கடி மீன் முடி கவ்வி நல் தாள்
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும்
பண் ஆவி ஆய குரலாட்கு ஒரு பாங்கு நன்றோ

#85
வஞ்சம் செறிந்த நிலம் மண்டிய பூண் அனைத்தும்
கஞ்சம் செறிந்த அடியாள் கழிவாய் கடிந்தே
அஞ்சம் செறிந்த நடை ஆடி அகன்று அனந்தன்
விஞ்சம் செறிந்த மிளிர் வான் அணி வேய்ந்து அணிந்தான்

#86
வான் ஆரும் எய்தி அறமே மணி என்று அணிந்தார்
மீன் ஆரும் ஓதி மிளிர் தோடு என வேய்குகின்றார்
தேன் ஆரும் மாலை திரள் என்று அருள் சேர்க்குகின்றார்
கான் ஆரும் வாய்ந்த தவமே கலையாய் வனைந்தார்

#87
அலின் ஆர் ஒளிர் ஆரிய தாரகையுள்
மலி பால் ஒளி கால் மதி போவது போல்
ஒலி ஆய சிலம்பு உடை மங்கையருள்
பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே

#88
அடர் அற்று அடி வைத்தனள் அண்டிய வாய்
சுடர் அற்ற இருளும் துகளும் வெறியும்
படர் அற்று இசை பன் எழு காதம் அகன்று
இடர் அற்று இழிவு அற்று எழு சீர் அடியாள்

#89
வையம் பொருவா மடவாள் வர அம்பு
எய்யும் கொடு வேளொடு காம் இழிவும்
பொய்யும் பவமும் அகலும் புசியாத
ஐ உண் அலர் கண்டு அளி நீங்கின போல்

#90
காம கனல் ஆற்றின நோக்கிய கண்
வீம கருள் விட்டன மூடிய கண்
ஏம கதி காட்டும் விழித்த இரு கண்
வாம கதிர் வாட்டும் களித்த கணே

#91
வில் ஏவிய கோல் விழியார் அறை தீம்
சொல்லே உயிர் உண் எனவே சொலுவார்
கொல் ஏதம் இலா குதலை சொல் நல்லாள்
நல்லே உயிர் காக்கும் நவின்ற சொலால்

#92
பல்லும் விழியும் பவளத்து இதழும்
சொல்லும் கனி அம் சொலும் ஒள் நுதல் கொள்
வில்லும் கரமும் விரி சீறடியும்
செல்லும் திசை செல் உறழ் செல் அருளே

#93
அரிதாய் மடவாள் வர ஆங்கு எவரும்
பரிவாய் விழி விண்டனர் பார்க்குதலும்
எரி வானில் உலாம் மதி எய்திய கால்
விரி ஆம்பல் விரை சினை விண்டமை போல்

#94
அரு ஞானமும் மானமும் ஆய் அறிவும்
இரும் ஊக்கமும் ஆக்கமும் ஆங்கு எவரும்
கருதா வழி கண் வழி மேய்ந்து மனம்
தெருள் தாவு அருள் தேர்ந்து தெளிந்தனரே

#95
வீடு ஆடி விளங்கு எழில் வேய்ந்த முகத்து
ஆடு ஆடி விரும்பி அழுந்திய கண்
ஏடு ஆடி வடிந்த இளம் கனி தேன்
ஊடு ஆடி உவந்த அளி ஒத்தன ஆம்

#96
குறை ஈர்ந்து உயர் வான் குடி ஆய இவள்
கறை ஈர்ந்த எழில் காண எமக்கு இரு கண்
முறை ஈந்து அலது ஆயிர கண் முதல் ஆம்
இறை ஈந்தனனேல் இனிது என்று அறைவார்

#97
மறை செய்த வனப்பு என வாய்ந்த நலாள்
மிறை செய்தது இலா விழியும் உளமும்
சிறை செய்தன காலும் நலம் செயும் நல்
முறை செய்தன ஏது எனவே மொழிவார்

#98
எள்வார் இல இ கவினால் எமது உள்
கள்வு ஆய் களி நாம் பெறல் என் களவை
கொள்வாரும் அலாது கொடுப்பவரோ
உள் வாரிய இன்பு உளர் என்று அறைவார்

#99
அருகு ஆயின வான் அழகு ஆர் வதனம்
பருகு ஆயின எம் விழி பார்த்தலின் நாம்
உருகாது அளி உற்றிலமேல் எமது உள்
திருகாதன கல் திரள் என்று அறைவார்

#100
அவளோடு இனிதாய் மணமே அமைவான்
உவமோடு இறையோன் உளம் ஒத்தனனோ
தவம் ஓகையனோ தகவு ஆனவனோ
எவனோ அவள் எய்துவன் என்று அறைவார்

#101
மின் பட்ட மடந்தை விடங்கம் உறீஇ
மன் பட்ட மணம் பெறுவான் முதலோன்
நன் பட்டன தாள் நலம் வீட்டு நயம்
பின் பட்டனன் வான் பெறும் என்று அறைவார்

#102
அறைவார் அறை நீக்கி அரும் தவன் ஆங்கு
உறைவார் கையிலே தனி ஒவ்வொரு கோல்
இறை வாய் முறை என்று அதை ஈந்து எவரும்
முறை வாய் விதி கேட்ப மொழிந்தனன்-ஆல்

#103
மொய் பட்டு அலை நீர் முடுகும் தலம் மேல்
மெய் பட்டு எதிர் அற்று ஒளிர் மின் கொடியை
கை பட்டு உறல் ஓர்ந்து களித்து எவரும்
மை பட்ட வளன் தனில் அஞ்சினன்-ஆல்

#104
திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியை
பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ
துறவு ஆய் மணம் நீக்குப சொல்லிய பின்
உறல் ஆம் மணமோ என உள்ளினன்-ஆல்

#105
உள்ளும் பொழுதே இவன் ஓங்கிய கோல்
கள்ளும் கடியும் பொழி காமர் இதழ்
விள்ளும் செழு வெண் மலர் பூத்தமையால்
மள்ளும் விரை ஆலயம் மல்கியதே

#106
காம்பா அணி காட்டிய கன்னி நலத்து
ஓம்பா அணி இ அணி ஓர்ந்த பிரான்
நாம்பா அணி நம்பியை நல்கிட ஓர்
தேம்பா அணி பூங்கொடி சேர்த்தன் என்றார்

#107
செழும் தூய் துகிர் சே அடி பொன் நிற வாய்
விழும் தூவிய வெண் சிறை வேய் புறவம்
கொழும் தூவி கொடு ஓங்கி வளன் தலை மேல்
எழும் தூவியை நீட்டி இருந்ததுவே

#108
கண்ணா மணம் நான் செயல் ஆம் கசடு என்று
உள் நாணிய சூசை உளைந்து உருக
விண் நாதன் உரம் தரவே வெரு அற்று
எண்ணாதன காட்சியை ஈந்து அறைவான்

#109
துறவு ஆதல் தொடர்ந்து மணம் தொடராது
உறல் ஆவது எனோ திரு என் உளம் ஆய்
அற ஆலயம் ஆய அணங்கினை நீ
பெற ஆவிய பெற்றி அதே பெறுவாய்

#110
என்ற ஊடு ஒலி ஆய் இள வெண் புறவும்
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால்
வன் தூய் ஒளி வீழ்ந்து வளன் தலை மேல்
மின் தூவி நிலா முடி வேய்ந்ததுவே

#111
வேய்ந்தான் ஒளி வேந்து என வேய்ந்தது எலாம்
ஆய்ந்தான் அருளே அளிய அமுதே
தோய்ந்தான் கடல் தோய்ந்து என உம்பரினும்
வாய்ந்தான் தொழுதான் மது வாகையினான்

#112
வண் ஆம் கவின் ஆர் வயது ஈர் எழு கொள்
தண் ஆம் கலை தேய்த்து ஒளிர் தாள் கொடியை
எண்_நாங்கொடும் ஓர் வயது ஏகி மணம்
தெண் ஆம் கொடியான் செய வான் விதியே

#113
வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா
நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல்
படிய விழி விழி படிய மனம் மனம் இனிதின் விழ விழு பரிவுடன்
முடிய வரு மணம் உரிய துணை இவன் முறையின் மொழிகுவர் எவருமே

#114
அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை கொடியினை
கருப்பு விலின் இடை தொடுத்த பசு மலர் கதிர்த்த பகழி-கொல் என அவர்
நெருப்பு விட அது குளிர்ச்சி விடும் இது நிகர்த்த வினை அலது என இவர்
விருப்பு மலி அன தவத்தில் இணை அற விதித்த விருது என எவருமே

#115
அன்று நசையொடு நின்ற அனைவரும் அங்கண் அமைவன காணலால்
கன்று மனம் எழ இன்பம் மலி கடல் கன்றி முழுகிய வேலையே
நின்று குரவனும் மன்று அ கொடியொடு நின்ற வளனினை வா எனா
சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை தொழுதான் அரோ

#116
நாண நளினமும் நாண மதியமும் நாண அனையவும் நாரியை
காண மனம் எழு ஞான ஒளியொடு காமம் அற உறு காதலாய்
கோண மரபு அறு ஞான குரு அடி கோதை என அணி கோதையும்
யாணர் ஒளியொடு சாயு பிறை நுதல் ஈசன் அடி உற ஏத்தினாள்

#117
வாய்ந்த ஒளி இரு வான சுடரினை மானும் இருவரை வாழ்க என
சாய்ந்த முனிவரன் ஆசி மொழியொடு தாவி அணைகுபு தாங்கினான்
ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி இணை என ஆசியால்
வேய்ந்த மணம் இனி மேவி முடி தரல் வேத முறை என ஓதினான்

#118
காந்தள் மிசை ஒரு தாமரையின் அலர் காணல் என அரு மா தவன்
காந்தன் விரியு கை நான மலர் மிசை காந்தை கரம் அணிவு ஆகி வான்
வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர எனும் ஆசியோடு
ஏந்த மறை முறை ஏது இல் முடிதர ஏது இல் அரு மணம் ஆயதே

#119
முடுகு முரசு ஒலி முடுகு முழவு ஒலி முடுகு முருடு ஒலி முடிவு இலா
கடுகு பறை ஒலி கடுகு கலம் ஒலி கடுகு கடம் ஒலி கனிவு எழா
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி தொடுகு துதி ஒலி தொடுதலால்
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி படுதல் இல மணம் ஆயதே

#120
வாழி அற உரு வாழி மறை உரு வாழி திரு உரு மானுவீர்
வாழி எமது உயிர் வாழி உலகு உயிர் வாழி உயிர் உயிர் போலுவீர்
வாழி அருள் நிலை வாழி தவ நிலை வாழி நில நிலை ஆயினீர்
வாழி என இவர் வாழி என அவர் வாழும் அரு மணம் ஆயதே

#121
பொறுமை அறு பகை பொதுளும் பழி அமர் பொதுளும் சினம் இடர் புரை அறா
நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும்
சிறுமை உறு துயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி சிலுகு நோய்
வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே

#122
நிறையும் ஒளியொடு திருவும் நயமொடு நிதியும் நனியொடு நெறி வழா
முறையும் மகிழ்வொடு கலையும் அறிவொடு முயலும் வலியொடு முரண் அறா
பொறையும் அளியொடு பொருளும் வரமொடு புகழும் நலமொடு புரை இலா
மறையும் அருளொடு தவமும் அறமொடு வளர அரு மணம் ஆயதே

#123
ஓசை எழு புகழ் ஓதல் எழு கடல் ஓதம் எழும் என வேதியார்
பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி போழ்து இலா
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி சோதி இணை என வேய்தலால்
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே

#124
கன்னி முறையொடு நாயகனை ஒளி காலும் உடு என ஈனுதல்
என் இனிய முறை சூடும் இவள் என ஏக பரன் இடும் ஏவலால்
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு
உன்னி மருவிய வானம் உளர் துதி ஓத அரு மணம் ஆயதே

#125
பாட மடவரர் பாட விறலியர் பாகு நனி செவி மேயலால்
நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா
கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு
ஆட இரு உலகு ஆக அளவு_அற வாழ அரு மணம் ஆயதே

#126
ஓய வினை இனி ஓவல் இல நிலம் ஓகை எழு கடல் ஊடு உலாய்
மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர்
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய்
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே

#127
ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும் உண்மை உள பரன் ஆசி தந்து
எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு
அல்லை அறும் நெறி உள்ள முனி முதல் அன்னவரும் இடும் ஆசியால்
வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே

#128
உரைத்த விதம் கொடு ஆய முறை உவப்பில் நடந்த நாள் பலவும்
விரை தகவு உண்ட வாகையனை விளித்து அகலும் தன் ஊரில் உற
திரை தகவு உண்ட ஆர்வமொடு திளைத்து அருள் உண்ட ஆசி அறை
புரை தணிவு இன்றி வாழும் முனி புயத்தை அணிந்து கூறினன்-ஆல்

#129
அளிப்பட வந்த ஏவல் உணர் அளி பட விண்ட வாகை வளன்
ஒளிப்பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும் முறை
வெளிப்பட அன்று வேணும் என விழு படை அன்பு உலாவி உறு
களிப்பட நின்ற ஈசன் அடி கருத்தில் அணிந்து தாழுவனே

#130
உடுத்த அனந்த ஞான முறை உரைத்து உமிழ்கின்ற மான முனி
கொடுத்த வரங்களால் உயரு குணத்து வணங்கும் மா வரனை
எடுத்த பின் உண்ட ஓகை எழ எடுத்த முதிர்ந்த வேத முறை
அடுத்த அனந்த நீதி பல அவிழ்த்தனன் பின்பு கூறுவன்-ஆல்

#131
இருத்தி அகன்ற கேணி அறல் இறைத்த அளவு உந்தி ஊறும் என
பொருத்தி அமைந்த தேவ அருள் புணர்த்த அறம் கொடு ஏறும் அது
கருத்தில் ஒளித்த போது பசும் கலத்தில் ஒளித்த நீர் அது அறிந்து
அருத்தி எழும்ப வாழி என அணைத்து விரும்பி ஏவினன்-ஆல்

#132
இடித்து முழங்கும் ஏறு அனைய இவற்றை அறிந்த கோதை உளம்
வெடித்து வருந்தி மாறும் இல விதி குரு மன்னு பாதம் இல
நெடித்து வதிந்த கோயில் இல நெறி துணை நின்ற மாதர் இல
பிடித்து நடந்த வீதி இல பெயர்க்குவன் என்று வாடினளே

#133
உடை தனம் நின்று பேரும் என உயிர்த்தன மைந்தர் பேரும் என
குடைத்து அழல் புண் துழாவல் என குறைத்து உடல் ஒன்று பேரும் என
பெடை தணர் அன்றில் வாடும் என பெயர்த்து உயிர் நின்ற தேகம் என
அடைத்த அரந்தை காலும் என அரற்றி வருந்தி வாடினளே

#134
இருத்திய தந்தை தேவ உளம் என தெருள் உண்டு தேறி உயர்
கருத்தில் அணிந்த மாண முனி கழற்கள் பணிந்து காதல் எழ
பொருத்திய அன்பின் ஓகையொடு புடை துணை நின்ற பேதையரை
அருத்தி கலந்த நீர் இரிய அரற்றி அணைந்து தாழுவளே

#135
கனத்தில் எழுந்த ஓதையொடு கனத்தில் எழுந்த கூரலினர்
வனத்தில் எழுந்த தீ அனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ
இனத்தில் எழுந்த ஆர்வம் மிக இதயத்தில் எழுந்த தேறலொடு
தனத்தில் எழுந்த கோயில் அது தலத்தில் எழுந்து போயினரே

#136
உடு குலம் உண்டு சூடினளும் உரு கொடு மன்று வாகையனும்
அடுக்கு நெருங்க யாரும் முறை அணி குலம் மண்டு கோயில் உறீஇ
எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின்
வடு குலம் ஒன்று இலாத முனி மனத்தில் உவந்து கூறுவன்-ஆல்

#137
கனத்தில் இழிந்து சாய வரை கரத்தில் விழுந்து பேர அரும்
வனத்தில் வளர்ந்து போக வயல் வயத்தில் மெலிந்து பாய அலை
இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என
தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே

#138
அற துணை அன்றி ஆய துணை அது அற்றம் அறிந்து உறாமை என
திற துணை நம்பு வீரர் பிறர் திறத்தில் மெலிந்து மாள்வர் என
மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள்
உற துணை தந்த பாதம் அது உயிர்க்கு ஓர் அநந்த வீடு எனவே

#139
இவற்றை இயம்பி மீள மறை இயல்படு மண்டு நீதி பல
தவத்தை அணிந்த தேவ முனி தர தயை தந்த ஆசி தர
அவற்றை உணர்ந்த போது இருவர் அகத்தில் உயர்ந்து பாத மலர்
உவத்தை உவந்து தாழுகுவர் உகத்தில் உதிர்ந்த மீன் அனையார்

#140
இசை பட ஒன்றி ஈர் அறமும் எவர்க்கும் இலங்கும் ஆடியினர்
நசை பட நின்ற ஈசன் அடி நயப்பில் வணங்க வீழும் முறை
சுசைப்பு அவன் முன் தன் ஈர் அடிகள் துடைத்து வணங்கவே கனவில்
விசை படு திங்கள் மாலியொடு விழ தகை கண்ட ஆறு எனவே

#141
அணி தக எந்தை கூற இனிது அளி தக மன்றல் ஆதலொடும்
பிணித்த மனங்கள் வேறும் இல பிரித்த இரண்டு தேகம்-இடை
கணித்த விதங்கள் மாறும் முறை களித்து உயிர் ஒன்றி வாழ்க என
பணித்தனர் அங்கு யாரும் அறை பழிச்சல் கடந்த ஓகையிலே

#142
மிகுத்தனர் அங்கண் யாரும் அருள் விருப்பில் அருந்தி ஆசிகளை
வகுத்தனர் அங்கண் ஆய திரு மணத்தில் மிகுந்த சீர் அமைதி
தொகுத்தனர் எங்கும் யாரும் இல துணை பட ஒன்றி ஏகு அணிகள்
பகுத்தனர் அங்கு ஞான ஒளி பரப்பி நடந்து போயினரே

#143
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது
ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே
தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால்
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார்

#144
காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை காலுகின்ற நன்றி இயலால்
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின்
ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று உயிர் ஓவுகின்று பின்று செலவே
கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிந்து இரிந்த முறை கோசின் நின்று அகன்று பெயர்வார்

#145
மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை உற்று ஒளிர்ந்தது அனைய
ஆசை அற்று எழுந்த தவர் போக முற்று இடங்கள்-தொறும் ஆரணத்து அநந்த நயன் ஆய்
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள்
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே

#146
ஏதம் அங்கு ஒழிந்தது என நோவு அணங்கு ஒழிந்து நிறை ஏசு இல் இன்பு அடைந்து கடவுள்
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள்
சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண் அழுந்த மண்டும் ஒலியே

#147
அருகு மண்ட வந்து கொழு விழி உவந்து அருந்து நயன் அளவு அகன்று வந்து மிடைய
பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி மண்டும் இருள் பெருகல் இன்றி அங்கு குளிர
முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே
பருகு மண்டு அநந்த அருள் அரிது சிந்துகின்ற இருவர் பதி அமைந்து எழுந்து புகுவார்

#148
விதி எழுந்து ஒளிர்ந்த மறை வடிவு அணிந்து அநந்த தவன் விருது அணிந்து அடைந்தது என வான்
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால்
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய்
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே

#149
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர்
புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே
முகம் மலர்ந்து உவந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர் முதிர் அநந்தம் உண்ட முறைகள்
அகம் மலிந்து உணர்ந்த தமிழ் கலை வருந்துகின்ற தொடை அளவின் நின்று அடங்க முறையோ

#150
இற்றை இனிது ஆயின பின் மற்றையவரும் தொடர
கற்றை மலி சோதி கருள் முற்று முகில் புக்கு அனைய
நிறத்து இயல் நில்லாமை என வெறுத்த சிறிது ஓர் மனையுள்
அறத்தின் இயல் மாண்பு உரிமை பெற தகவர் புக்கு உறைவார்

#151
புக்க இவரோடு புடை மிக்க நலம் யாவும் உறீஇ
சொக்கு அவிழும் வான் உலகர் ஒக்க நசை தூண்ட உறீஇ
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில்
கோட்பு அது இல நூல் முறையின் கேட்பது இனி வாழ்த்து உளதோ

#152
மங்குல்-இடை மாலி என அங்கு நுழைவார் எனினும்
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர
தெள் அரிய சேடர் மிசை உள்ளமொடும் ஊரும் விழி
கள் அவிழு கான் அலர்கள் விள்ள அளி வீழ்வது போல

#153
திங்களை உரிஞ்சு ஒளியை மங்கு அரிய தாளின் நலாள்
நங்கையரை ஞானம் மிகு தங்க உரை சாற்றலொடு
மாலை மது வாகை வளன் நூலை அறை நூழை உரை
ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல்

#154
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற
செ ஒழுகு தேவன் அருள் வவ்வு இரு மைந்தர் இனை
சேர்த்து மணம் ஆக்கல் இவர் நீர்த்த மணம் நேரியதோ
தோற்றது எனவோ என உள் ஆர்த்து அறைகுவார் சிலரே

#155
துப்பு ஒளிறு செம்_சுடரோடு ஒப்பு ஒளிறும் ஒள் மதியம்
எப்பொழுதும் மீ திரிய அப்பொழுதில் ஆண்டகையும்
இ எழிலை ஒக்கும் என அ எழிலை ஆக்கினனோ
கு எழில்-கொல் வான் எழில்-கொல் வவ்வல் அரிது என்று அறைவார்

#156
மன்னரது மன்னன் இனிது உன்ன_அரிய ஒண் தவமே
துன்னலொடு துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என
தாவிது அது சந்ததியின் மேவி இவர் வேய்ந்து உறவே
ஏவினன் அநந்தன் என ஆவி அறைவார் சிலரே

#157
பொழுதும் இவர் பூண் இருமை எழுது மறை காட்டும் என
எழுது மறை ஒன்று எனினும் பழுது இல் இரு கல் எழுத
வேண்டியது நீதி என மாண்ட மறை காட்டும் இவர்
மீண்டு இவரை காட்டு மறை ஈண்டு அறிதும் என்று அறைவார்

#158
பொய் வினை பிரிந்த நயன் மெய்வினை உணர்த்தும் இவர்
செய் வினை அளிக்கும் என நொய் வினை குறித்த பரன்
மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள்
அண்ணும் என இன்ன மணம் எண்ணும் எனும் ஓர் சிலரே

#159
முனிய அளி மொய்த்த துணர் குனிய உமிழ் தேறலினும்
கனிய இவை ஓதுதலின் இனிய இரு போதும் உறீஇ
நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம் பெறலால்
புனைவு அரும் அநந்தம் உறீஇ அனைவரும் மகிழ்ந்தனரே

#160
தேன் கொடியை ஏந்தினனும் பூம் கொடியை வென்றவளும்
தாம் குடி இருந்து மறை ஆம் கொடி படர்ந்து வளர்
அரிய கொழுகொம்பு அனையர் புரிய அரிது ஈர் அறமும்
உரிய முறையோடு அணையல் விரிய அறைவாம் இனியே
மேல்

@6 ஈரறம் பொருத்து படலம்


#1
சுலவு உற்ற திரை ஆழி சூழ் புவனம் தாங்குகின்ற
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால்
நிலவு உற்ற பதத்தாளும் நீர் மலர் கோல் பூமானும்
உலைவு உற்ற உளத்து அஞ்சி உளைந்து இரங்கி வருந்தினரே

#2
தேன் வழங்கும் பூம் துறை ஆம் செழு வாகை ஏந்து தவன்
வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன் உணர்த்தமையால்
மீன் வழங்கும் முடியாள்-தன் விளம்பு அரிய மாட்சியொடு
கான் வழங்கும் தவ புங்கம் கணித்து அவளை வணங்குவன்-ஆல்

#3
இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும்
மருள் நீக்கும் கோல் தொடி தன் வாள் முகத்தால் எஞ்ஞான்றும்
கருள் நீக்கும் கதிர் உயிர்த்த காட்சியினால் உளம் வெருவி
அருள் நீக்கும் பொறி செறித்தோன் அஞ்சி உணர்ந்தவை சொல்லான்

#4
மின்னிய தாரகை முடியின் விளங்கு அரிய காட்சியினால்
துன்னியது ஓர் ஆவி பட தூய பளிங்கு ஆசு உறும் என்று
உன்னியதால் ஆடவரோடு உரைப்பு அறியா மடவாளும்
மன்னிய தார் துணையொடும் தன் மனம் காட்ட நாணுவள்ஆம்

#5
ஒப்பு அடையா துணை தந்து என் உடை கன்னி காப்பான் என்று
அப்பு அடை ஆர் கலி என்ன அலைந்த மனத்து உரம் செய்தாய்
வெப்பு அடையா மனம் குளிர விதித்தது எலாம் வெளியாகும்
தப்பு அடையா முறை அருள்தி தற்பரனே என தொழுதாள்

#6
வளம் ஆளும் திரு மடந்தை வருத்தம் கண்டு இரக்கு உறீஇ வான்
தளம் ஆளும் அரசு என்பான் தவிர்க்கு அரிய வய தன்மைத்து
உளம் ஆளும் முறை தன்னால் உரையாதும் உளம் தூண்டி
அளம் ஆளும் மலர் கொடியோன் ஆய்ந்து அறைய துணிவு ஈந்தான்

#7
உற்ற ஆறு உளத்தில் அறிவு உறாது உற்ற துணிவு ஓங்கி
சொற்ற ஆறு அறியேனேல் துகள் துடைத்த எந்தை வரம்
பெற்ற ஆறு உரைத்து அதற்கு பிரியாத ஓர் கைம்மாறும்
உற்ற ஆறு இவள் கேட்பேன் என வளன் முன் மொழி கொண்டான்

#8
வையகத்தார் வானகத்தார் வணங்குகின்ற வான் இறையோன்
மெய் அகத்தால் அருள் உணர்ந்து வெய்து அரிய துணைவி என
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல்
மொய் அகத்தால் உணர்ந்து அடியேன் முயலும் கைம்மாறு உண்டோ

#9
மொய் படு வெண் திரை ஆழி மூழ்கி எழும் பதங்கனது
செய் படு வெம் கதிர் தாங்கி தெளிந்து அத்தம் கதிர் விடும் போல்
கை படு நன்று உளம் ஏய்ந்து கைம்மாறாய் நன்று செயும்
மெய் படு நல் முறை நீயே விதித்து அருள்தி என்று அறைந்தான்

#10
இன் இசையும் கோல் தேனும் இன் கனியும் கழை பாகும்
பன் இசையும் பாகு ஊறும் பணி யாழும் மாம் குயிலும்
அன்னவையும் நாண இனிது அம் சொல் நலாள் உளம் நாணி
சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள்

#11
மின்னை அடை கடல் சூழ்ந்த வியன் உலகம் பரந்து அளிக்கும்
என்னை உடை இறைவன் அலால் என் உயிரை இனிது அளிப்ப
பின்னை அடைவது ஓர் காவல் பேதை பெற வேண்டியதேல்
உன்னை அடை யான் அடைந்த உவப்பு உரைப்ப பாலதோ

#12
இவ்வாறு ஒன்று அருள் புரிந்தே இனிது என்னை காத்து இறையோன்
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான்
ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை உற்றதின் கைம்மாறு ஆக
செ ஆறு என்று உளத்து ஓர்ந்த சிறிது உரைப்பேனோ என்றாள்

#13
கான் பயிலும் முறுக்கு அவிழ் செம் கமலம் தேன் துளித்தது என
மீன் பயிலும் முடியாள் வாய் விரித்து உரைத்த தீம் சொல்லால்
தேன் பயிலும் மலர் கொடியோன் செவி இன்பு உண்டு அறைதி என
தான் பயிலும் விடை ஆகி தாழ்ந்து இவளும் மொழிகின்றாள்

#14
தணிக்க அரிது ஆம் ஐம்பொறிகள் சார் பொருள் சார்ந்து உளம் பிரிந்து
துணிக்க அரிது ஆம் விழைவு ஆதல் இளமையின்-கண் தோன்றுதலால்
கணிக்க அரிது ஆம் அருள் புரிந்த கடவுள் ஒன்றே மனம் சேர
குணிக்க அரிது ஆம் இருள் ஈனும் கோது இனிமை நசை வெறுத்தேன்

#15
நசை அற்ற மனம் ஓங்கி நாயகற்கே பலியாக
வசை அற்ற கன்னிமையின் வளம் காக்க நினைத்தேன் இ
திசை உற்ற காவலன் நீ சேர்ந்து அதனை காக்குதி என்று
இசை உற்ற மதி பதத்தாள் இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே

#16
மீது-இடை ஊர் பானு உடுத்தாள் விளம்பிய சொல் கதிர் வெள்ளம்
காது-இடை ஊர்ந்து இதய செம் கமலம் முகை மேல் படவே
தாது-இடை ஊர் அமுது என நீர் தட கண் பெய்து உளம் மலர்ந்து
போது-இடை ஊர் மண கொடியோன் பொங்கு அருளால் புகல்கின்றான்

#17
புண் கனிந்த மருந்து ஒப்ப பொங்கு கருணாகரியே
விண் கனிந்த ஒளி இமைக்கும் வெம் சுடரோன் விரித்து உய்க்கும்
மண் கனிந்த கதிர் இருளை மாற்றும் என இனிது உரைத்த
பண் கனிந்த நின் சொல்லால் பாசறை செய் மருள் தீர்த்தாய்

#18
திரு உளத்திற்கு உணராது ஒன்று ஈங்கு உண்டோ செய் மணத்தோடு
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய் இசைத்த முறை நன்று அறிய
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ கருத்து உயர்ந்து தூண்டும் நசை
வரு உளத்திற்கு கருணை வலோன் வாய்ந்த தயை வழங்குவனே

#19
ஆசு அடை பூ_வனத்து உன்னை அமலன் எனக்கு அளித்ததனால்
மாசு அடை பூரியர் ஒத்த என் மனம் மலரும் என்று உணர
பாசு அடை பூம் கொடி தந்து பாசறை தீர் உரம் செய்யும்
தேசு அடை பூண் அறிவு உன்னை செழும் துணையாய் தந்தனனே

#20
அணித்து ஆக அரிது ஆய அருள் புரிந்த நாயகன் தாள்
பிணித்து ஆக நசையொடு நான் பெறும் வயது ஓர் ஈர் ஆறு
நணித்து ஆகி சாம்தனையும் நறும் கற்பு நலம் காக்க
குணித்து ஆகி கடவுள்-தனை சாட்சி என கூறல் உற்றேன்

#21
இளி செயும் என்று இ மணத்தை ஏவிய-கால் வெரு உற்றேன்
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால்
அளி செயும் என் கற்பு இனிதாய் அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய்
களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான்

#22
கைம்மாறும் அரிது எனில் அ கடன் கழிப்ப வீவு அளவும்
பொய்ம்மாறும் காட்சியினால் பொற்பு உயர் எம் கற்பினை யாம்
மெய்ம்மாறும் செயிர் இன்றி வெய்ய மலர் என காத்து
மைம்மாறும் திரு தகும் தாள் வாழ்த்திடல் நன்றே என்றான்

#23
என்பதும் ஆங்கு உள் உருக இவர் இன்ப கடல் மூழ்கி
அன்பு அது வாழ் இல்லறத்தோடு அணிக்க அரிய துறவறத்தை
முன்பு அது ஆங்கு இல முறையான் முயன்று தமில் சேர்த்தமையால்
பின்பு அது வான் அதிசயிப்ப பெயர்ப்பு அரிய மாண்பு அடைந்தார்

#24
கண் புலன் ஆதி ஐம்_கதவு அடைக்கலான்
மண் புலன் உளது எலாம் மனம் புகாது உயர்
விண் புலன் முதல் எலாம் ஆளும் வேந்து இவர்
உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும்-ஆல்

#25
ஐம்_கதவு அடைத்து அதற்கு அறம் நல் காவலாய்
தம் கதவு அடுத்த பல் பொருள் தடுத்து உளத்து
அங்கு அது கொணர் உணர்வு விட்ட பின் விடை
பங்கு அது பகர்ந்து உள பகை அற்று ஓங்குவார்

#26
மானமே வேலியாய் வகுத்த சொல் தரும்
ஞானமே தூதனாய் நயப்ப யாவரும்
தானமே தோழனாய் அறிவின் தன்மையால்
வானமே உறையுளாய் மடிவு_இல் வாழுவார்

#27
எள்ளலை கலந்த வாழ்வு இழந்து அகன்று வான்
வள்ளலை சிவணி உள் மலிய வாழுவார்
அள்ளலை கலந்த நீர் கடந்து அருந்து இலா
தெள் அலை சுனை அடுத்து உண்ட சீர்மை போல்

#28
கோல் திருந்தினர்க்கு எலாம் கோன் என்பான் பணி
நூல் திருந்திய முறை நுதலி ஆக்கிய
பால் திருந்து இவர் உளம் பழுது அற்று ஆண்டகை
வீற்றிருந்து ஆளும் ஆசனத்தின் மேன்மையே

#29
வெப்பு அருள் ஆசையை வெறுத்த சீர் கொடு
தப்பு அருள் பொருளினை தவிர்த்த ஆண்மையால்
அ பொருள் படைத்தனை அடைந்த மாண்பினர்
எ பொருள் அனைத்திலும் இதயத்து ஓங்கினார்

#30
எள்ளும் ஓர் நவை இலாது எனினும் யாக்கையை
உள்ளும் ஓர் தவத்தினால் ஒறுத்த தன்மையார்
விள்ளும் ஓர் மலர் உலை பெய்து வீழும் நீர்
கொள்ளும் ஓர் மணம் என குணம் கொண்டு ஓங்கினார்

#31
பொன் ஒளி காட்டும் எரி பொறிகளோ மணி
பன் ஒளி காட்டிய பாடையோ உரு
உன் ஒளி காட்டிய உளியனோ உளம்
தன் ஒளி காட்டிய தவம் அது ஏந்தினார்

#32
மீன் ஒளி விழுங்கிய மேகம் போல் நசை
தான் ஒளிந்து இறைவனை உணரும் தன்மையால்
வான் ஒளிர் காட்சியால் வளன் விளங்கி உள்
பானு ஒளி விழுங்கிய பளிங்கு ஒத்து ஆயினான்

#33
உண்ட செம் கதிர் உமிழ் அத்தம் ஒத்து அவன்
விண்ட செம் கமலம் மான் இதயமே ஒளி
மண்ட வெம் கதிர் என மலிந்த காட்சியை
கொண்ட சொல் இறைவனை வாழ்த்தி கூறுவான்

#34
அற கடல் நீயே அருள் கடல் நீயே அரும் கருணாகரன் நீயே
திற கடல் நீயே திரு கடல் நீயே திருந்து உளம் ஒளிபட ஞான
நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான்
பெற கடல் நீயே தாயும் நீ எனக்கு பிதாவும் நீ அனைத்தும் நீ அன்றோ

#35
கார் திரள் மறையா கடலின் உள் மூழ்கா கடை இலாது ஒளிர் பரம் சுடரே
நீர் திரள் சுருட்டி மாறு அலை இன்றி நிலைபெறும் செல்வ நல் கடலே
போர் திரள் பொருத கதுவிடா அரணே பூ_வனம் தாங்கிய பொறையே
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே

#36
விண் கிழித்து ஓங்கி மின் பயில் கொடிஞ்சி வேய்ந்து உயர் தேர் திரள் காப்போ
கண் கிழித்து ஒளி பாய் வாள் திரள் காப்போ கால் தவிர் பரி திரள் காப்போ
மண் கிழித்து ஒழுகும் புனல் என சீறி மதம் பொழி கரி திரள் காப்போ
புண் கிழித்து அடலார் காப்பு அதோ நீயே புரந்து செய் காப்பு அது காப்பே

#37
வஞ்சினர் உளம் போல் அளக்க அரிது ஆழ்ந்த வாரணத்து-இடை வழி கீண்டி
அஞ்சினர் நனையா கடக்கவே தந்தாய் ஆறு நின்று அதர் விட தந்தாய்
துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு-இடை குளிர்ந்து உற தந்தாய்
எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ

#38
தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே
முலை எழும் பயன் நேர் உமிழ்ந்த நீர் குழிவின் முடுகி வந்து இனிது உறைவது போல்
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால்
கலை எழும் பயனால் தாழ்குவர் எடுத்து களிபட கருணையே செய்வாய்

#39
வான் முகத்து எழுந்து ஈங்கு உலகையே நோக்கி மாலி தன் செழும் கதிர் கோலால்
கான் முகத்து அரிது ஓர் ஓவியம் என்ன கடி மலர் எழுதிய வண்ணம்
நூல் முகத்து அடங்காத அன்பில் என் தணிமை நோக்கி முள் கான் பொருவு என் உள்
தேன் முகத்து அவிழ்ந்த பூம் பொழில் ஒப்ப திருத்திய நினது அருட்கு அளவோ

#40
காய்ந்த போது அழல் முன் வை என உன் முன் காய்ந்து எரியாதது உண்டோ கருணை
ஈய்ந்த போது அருத்தி பின் உற அளிப்பாய் இருள் தவிர் காட்சியால் அனைத்தும்
ஆய்ந்த போது இருளும் உள்ளமும் கடந்தே அறிகு இலாது ஏது உண்டோ மனு ஆய்
வேய்ந்த போது அன்றே என் உயிர் இன்ப வேலையில் மூழ்குப செய்வாய்

#41
வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும்
ஒளி சிறை ஆக விண் திசை கீண்டி ஓதிமம் பறந்தன வழியும்
அளி சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து அவை அடைகினும் ஆர்வ
களி சிறை ஆக நீ வரும் வழியே கண்டு அதை அடைவது பாலோ

#42
உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு
இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது
அணங்கு இயற்றிய வெம் பழம் பழி கூளிக்கு அரி என வருதியே உன்னை
வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான்

#43
சூல் மலி முகில் பெய் மாரியால் பெருகி சுருட்டு அலை கரை அகட்டு அடங்கா
தேன் மலி காவும் கழனியும் நிறைப்ப திரை புரண்டு உலவிய வண்ணம்
நூல் மலி யோகத்து உணர்ந்தவை பொங்கி நுதலிய இவற்றொடு பலவும்
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான்

#44
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய் பாடிய வண்ணமே ஒரு நாள்
கான் உண்ட கொடியோடு ஆரணம் பூண்ட காவலனோடு உயிர் விளக்கும்
மீன் உண்ட முடியாள் ஞான பல் விதிகள் விளம்பிய முறை உரைப்பு அரிதே

#45
பொருள் கொண்டு எவையும் ஆக்கினன் அ பொருளில் குன்றா புகுந்துளன் ஆய்
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன்
அருள் கொண்டவர்க்கு அல்லால் உண்டோ ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான்

#46
தேர் மேல் தியங்கும் பதாகை அதோ சிகரி சிந்தும் சிந்து அலையோ
நீர் மேல் படரும் சைவலமோ நீர் மேல் ஆடு குமிழிகளோ
தார் மேல் பனியோ நுண் மணல் மேல் தடத்தில் வரைந்த உணர்வு என்றோ
பார் மேல் கடவுள் நிலை இல்லார் பான்மை என்றாள் மீன் முடியாள்

#47
நிலை கொண்டேனும் அ நிலையால் நிலைக்கும் பயன் ஒன்று உயிர்க்கு உண்டோ
அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு
உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர
கலை கொண்டவரும் ஈங்கு ஏதோ கண்டார் என்றான் பொறி செறித்தான்

#48
கனவில் பிடித்த தனம் என்றோ கனம் நின்று ஒல்கி பாய்ந்த மின்னோ
சினவி திளை தீ முன் வையோ திளைப்ப உவரில் பெய் உறையோ
நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ
என இ திசை கொள் வாழ்வு அனைத்தும் என்றாள் பிறை தேய்த்து ஒளிர் பதத்தாள்

#49
நிந்தை பொதுளும் வாழ்வு அடை முன் நினைவை தூண்டும் ஆசை சுடும்
சிந்தை பொதுளும் என்று அடைந்தால் சிந்தை வருந்த வெறுப்பு எய்தும்
எந்தை பொதுளும் தாய் வினையால் இரங்கி புரிந்த அருள் ஒன்றே
நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான்

#50
கனியோ கழையோ கழை கான்ற கனிந்த பாகோ கோல் தேனோ
நனி ஓகையினால் கூட்டியது ஓர் நறவோ உயிர் செய் மருந்தோ வான்
தனிலோ வழங்கும் அமுது என்றால் தகுமோ எந்தை அருட்கு இவையே
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ என்றாள் வழுவா மறை மொழியாள்

#51
தேவ அருள் அல்லால் இங்கண் தேடற்கு உரிது ஓர் பயன் உண்டோ
மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே
ஓவ வினை செய்து அதின் ஊங்கும் ஒன்னார் உண்டோ உயிர்க்கு எல்லாம்
பாவம் மலிதற்கு என்று உரைத்தான் பகை பேய் நடுக்கும் பரிசு அன்னான்

#52
நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ
பக்கிக்கு இட்டது ஓர் இரையோ பயனுள் கலந்த நஞ்சு அதுவோ
புக்கு இற்று ஒக்க யாவும் அற பொறி தீ ஒளி என்று எரிப்பதுவோ
இக்கு இச்சிக்கும் நசை என்றாள் எரி வான் நயக்கும் பரிசு அன்னாள்

#53
பவமே பழித்து பூ_வனத்தில் படர்ந்த அணங்கு இற்று உயிர் காத்து
துவமே நயனை பயத்து உய்க்கும் துணை ஏது என்னின் மன் உயிர்க்கு ஈங்கு
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும்
தவமே உயிர்க்கு ஓர் துணை என்றான் தவத்தின் பவ்வ கரை கண்டான்

#54
பொதிரும் முள் தாள் தாமரையோ பொதிர் முள் புற உள் சுவை கனியோ
அதிரும் ஒலியால் வெருவு உய்த்தே அவனி உவப்ப பெய் முகிலோ
எதிரும் ஒன்னார்க்கு ஓங்கு அரணோ எவரும் அஞ்சும் உரு காட்டி
கதிரும் இன்பு ஆர் தவம் என்றாள் கருணை பவ்வ கரை இல்லாள்

#55
மொய்யும் துறவே எந்தை அடி முறைகொண்டு அடைய வழி என்றால்
பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ குறை என்பார்
கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே இன்பு அலையே
மெய்யும் உயிரும் நீ என்றான் விளங்கு ஈர் அற கண்ணாடியினான்

#56
தாயும் நீயே தந்தையும் நீ தாவும் நசை நாட்டு இயம் நீயே
தீயும் நசை தீர் நசை நீயே செல்வம் நீயே உயிர் இனிதின்
தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ
காயும் வினை என்பார் என்றாள் கதிப்பால் காட்டும் கஞ்சனத்தாள்

#57
என்றான் அவன் என்றாள் அவள் என்று இன்ப கடலில் மூழ்கி உளம்
குன்றா வியப்போடு எய்திய வான் கொண்ட தளமும் பொங்கு உவப்பின்
பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ_மழையை பொழிந்து ஆசி
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப உயர் வானவர் ஒத்து இவர் வாழ்ந்தார்

#58
துறவினால் உடல் துறந்தன உயிர் என தோன்றி
நறவினால் நறை நறும் துணர் விள் அலர் போல் இல்லற
வினாவுடன் அனைவரும் ஓம்பிய அன்பின்
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் என கொண்டார்

#59
தாழு பான்மையோர் தகவு உடை பான்மையோர் என்னா
சூழும் யாரையும் சூழ்ந்து சூழ்வு அரு நயம் செய்வார்
கீழும் மேலும் என்று உணர்கிலாது உறுப்பு எலாம் கிளர்ப்ப
வாழுமே உயிர் மலிந்து உடல் உலவிய போன்றே

#60
துய் அம் தாய் உரி தொடர்பினார் சுட புகன்றவர்க்கும்
மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல்
நொய் அம் தாதுகள் நோவ உள் குடைந்து இமிர் அளிக்கும்
செய் அம் தாமரை திளைப்ப நல் விருந்து இடும் போன்றே

#61
வாய்ந்த மாண்பினர் வருந்தலும் செய்குவர்க்கு உள்ளம்
தோய்ந்த ஆர்வு உற துறவிய நலம் நிறை அளித்தல்
காய்ந்த ஆலையின் கரும்பினை முறுக்குதற்கு அளவில்
ஈய்ந்த பாகு இனிது இரிந்து எலாம் நிறைந்தன போன்றே

#62
வருந்தினார் முகத்து எழுதிய வருத்தமே கண்டால்
விருந்தினார் முகத்து அழைத்து அவர்க்கு ஊட்டிய மிடை தேன்
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மது செவியால்
அருந்தினார் முகத்து எழு நய கடலின் ஆழ்ந்து அகல்வார்

#63
கூர்ந்த நன்மையை கூறிய பயனினால் எவரும்
சேர்ந்த தன்மையின் செயிர் அற ஓங்கி வேறு ஆவார்
ஆர்ந்த பொன் வரை அடுத்து உறை காகமும் கருமை
பேர்ந்து அ பொன் வரை பேர் எழில் பிளிர்ந்தன போன்றே

#64
போய தாதையர் ஈட்டிய பொருள் எலாம் பொறை என்று
ஆய ஆயின அனைத்தையும் ஆலயத்து ஒரு-பால்
நேயம் ஆருயிர் நேரிய இரவலர்க்கு ஒரு-பால்
தூய ஆரியர் விரைந்து அரும் தொடர்பொடு தொகுத்தார்

#65
துன்பு துன்றிய பொருள் என அனைத்தையும் தொகுத்த
பின்பு துன்றிய பேர் அரிது அன்பு உளம் தூண்டி
என்பு தந்தினும் இனிது என ஈயவும் உழைத்தே
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை போன்றார்

#66
சிறுமையார் துயர் சிதைத்து இரந்து ஆயினும் அளித்து
வறுமையார் பலர் வறுமை தீர் திருவினர் ஆகி
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த
நறுமை ஆர் நளிர் நறு மலர் வாவியே போன்றார்

#67
தாய் ஒத்து ஆர்வொடு தரித்திரர்க்கு அனைத்துமே ஆகி
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம் குளிர வண் முகில் ஆய்
பேய் ஒத்தால் அதை பெயர்க்க அணி ஒத்தனர் பெயரா
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒத்தார்

#68
பொய் என படர் புழை பட குடைந்த புண் உடலை
மெய் என தயை வேர்விடு நெஞ்சினார் நோக்கி
ஐ என தமுள் இரங்கிய தன்மையோடு அ புண்
நொய் என கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே

#69
காவி உண்ட அருள் கண்ணினார் முகமன் நோக்கலின் ஆங்கு
ஆவி உண்ட சாவு அதை கடிது உமிழ்ந்ததே அமலன்
ஏவியும் தவிர்த்து ஏகிய இயோனசு என்றவனை
தாவி உண்ட பின் தந்தன திமிங்கிலம் போன்றே

#70
ஓதும் முற்று அருள் உரையினால் எவரும் உள் காம
கோது முற்று அழல் குளிர நீக்குவர் கரம் பிடித்து
தீது முற்று அழல் திளைத்த போது இலோத்து எனும் அவனை
சோதுமத்தில் நின்று அமரரே துரத்தினர் போன்றே

#71
அன்பின் காணியார் அன்பொடு வீங்கும் இல்லறம் செய்
இன்பின் காதலால் இன் உயிர் தன்னிலும் எவர்க்கும்
நன்பின் காவலாய் நவை அற நயன் எலாம் நல்கி
முன்பின் காசினிக்கு இணை_இலா முயன்றதற்கு அளவோ

#72
ஆலம் முற்றிய அகல் புவி நயன்பட அருளின்
கோலம் முற்றிய குணத்து இவர் கெழுவிய கருணை
நீலம் முற்றிய நெடும் வரை எங்கணும் குளிர
சீலம் முற்றிய சினை முகில் பொழிந்தன போன்றே

#73
கானக துறவு ஆயினர் இன்னணம் கனிவாய்
வானகத்து உறவு ஆயின இல்லறம் வனைந்தார்
மான் அகத்து உற மனுவொடு தெய்வதம் இறையோன்
ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே
மேல்

@7 ஐயந்தோற்று படலம்


#1
மாசு அறு துறவோர் அன்ன வட திசை உள்ளி வெய்யோன்
காசு அறு மேடம் உற்று களித்த பங்குனி நாள் கன்னி
ஆசு அறு கடவுள் எய்தி அவதரித்து உடலம் போர்த்த
ஏசு அறு காதை பாட இணை அவன் அடி மேல் கொள்வாம்

#2
தண் படு கொழுகொம்பு ஊன்றி தலை படர் வல்லி அன்ன
தெண் படு மது பூ வாகை சேர்த்த நல் துணைவனோடு
விண் படும் உடுக்கள் சூழ்ந்த விரை கொடி கன்னி இவ்வாறு
எண் படும் அளவு அற்று ஆய்ந்த ஈர் அறம் புனைந்த நாளில்

#3
குணிக்க_அரும் கருணை ஆர்ந்த குணத்தை ஆறு அமைந்த நாதன்
தணிக்க_அரும் குணுங்கை வென்று தரணியை புரந்து காக்க
கணிக்க_அரும் வளமை பூத்த கன்னியின் வயிற்றில் தான் ஈங்கு
அணிக்க_அரு முறையால் மைந்தன் ஆக உள் கருத்து உற்றானே

#4
மணம் முடித்து ஏழாம் திங்கள் வளர்ந்து தேய்ந்து ஒழுகா முன்னர்
கண முடி கன்னி உள்ளம் கனிவு இயைந்து அமைய கஞ்ச
மண மடல் குவியும் காலை வந்த பங்குனி ஐ_ஐ நாள்
கணம் என கபிரியேலை கடவுளே விட்டான் அன்றோ

#5
தூது என வலியோன் ஆய கபிரியேல் சுடரை சூட்டி
கோது என அ இருளை நீத்த கோதை-கண் விரைவில் சென்று
சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து
போது என வழிந்த தேனை பொருது வெல் உரை உற்றானே

#6
பொய் அகன்று எழுவ தெய்வ பூரண ஓகையாளே
ஐ அகன்று உவப்பின் நாதன் அடைந்து வாழ் நெஞ்சத்தாளே
வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண்_இல் ஆசி
துய் அகம் பொலிய பூத்த சுந்தரி வாழி என்றான்

#7
கனிக்கு அளவு உயர்ந்த கோடு வளையும் போல் கருணை ஆர்ந்த
நனிக்கு அளவு எளிமை பூத்த நறுமையில் பொருவா கன்னி
தனக்கு அளவு அகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கு அளவு உளைந்து நாணி வரைந்த ஓவியமே ஒத்தாள்

#8
கலங்கின அகத்தும் தெள் நீர் கடல் அளறு ஆகா வண்ணம்
மலங்கின அகத்தும் கன்னி மயக்கு உறாது உரன் உற்று ஓங்கி
துலங்கின அகத்து உன் ஏவல் தொடர் நெறி தோற்றுவாய் என்று
இலங்கின அகத்துள் உள்ளி இறைவனை வணக்கம் செய்தாள்

#9
பளிங்கு அடுத்தவற்றை காட்டும் பான்மையால் இவள் முகத்தில்
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான்
விளங்கு அடுத்து இறைவற்கு அன்பு மீது உற உவகை பூத்த
வளம் கடுத்து உயர்ந்த மாதே மயக்கு உற வருந்துவானேன்

#10
மதி பழித்து இலங்கு சங்கின் வாய்ந்த சூல் பழித்து ஈங்கு உள்ள
விதி பழித்து அரிய ஆற்றல் வேய்ந்தது ஓர் கருப்பம் ஆகி
நிதி பழித்து ஒளிர்ந்த தோன்றல் நீய் பயந்து அவற்கு இயேசு
துதி பழித்து இட்ட நாமம் சொற்றுவாய் கன்னி மாதே

#11
அளி அமைந்து உயிர்த்த செம்மல் அநந்தன் சேய் என்ன நேமியுளி
அமைந்து அரசு தாவித்து உயர்ந்த கோல் ஓச்சி நாளும்
களி அமைந்து அளித்த பாரில் காவல் என்று ஆள்வான் என்ன
நளி அமைந்த இனிய சொல்லை நவின்று அடி வணங்கிட்டானே

#12
தொய்யல் உற்று இறைவன் தாளை தொழுது வாழ் திரு வல்லோனே
மய்யல் அற்று அழிவு_இல் கன்னி மைந்தனை பெறுதல் ஏது என்று
அய்யம் உற்று இவள் வினாவ அரிய மாது அடியை போற்றி
வெய்யில் உற்று அடைந்த தூதன் விடை மொழி உரைப்பான்-மன்னோ

#13
கார் உலாம் உலகும் ஆங்கு கதிர் உலாம் சுடரை எல்லாம்
கார் உலாம் உலகும் யாவும் காரணம் ஒன்றும் இன்றி
சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை ஈன்றும்
சீர் உலாம் கன்னி ஆதல் சேர்த்தலே அரிது என்பாயோ

#14
மகன் பெறும் வயது முற்றி மைமை ஆம் எலிசபெற்கும்
தகல் பெறு கருப்பம் ஆகி தவன்ற வெண் திங்கள் ஆறு ஆய்
பகல் பெறு கன்னியாய் நீ பழுது இலா சிறுவன் ஈனல்
இகல் பெறு வினை என்றாலும் இறையவற்கு எளியது அன்றோ

#15
ஆவதும் கடந்த காட்சிக்கு அரும் தவன் ஈசயீயன்
நோவதும் இன்றி கன்னி ஒரு மகவு உயிர்ப்பாள் என்ன
கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல் பொய்யா
யாவதும் அறிதி அல்லால் யான் நினக்கு உரைப்பது என்னோ

#16
நேயம் ஆம் பிரீத்து சாந்து நிழன்ற தண் கவிகை கீழ் நீ
தாயும் ஆய் ஒன்று ஆம் மூவர்-தமில் சுதன்-தன்னை ஈன்றும்
தூய மா கன்னிக்கு ஏதம் தோன்று இலா சுடரின் ஊங்கு
மாயமாய் காக்குவான் என்று அஞ்சலி செய்திட்டானே

#17
தேற்று உரை உரைத்த தூதன் செப்பிய யாவும் கேட்டு
வேற்று உரை உரைத்திலாள் உள் விழைவு உற இறைவன் தாளை
போற்று உரை உரைத்து கேட்ட புதிவினை ஓர்ந்து உசாவி
ஏற்று உரை உடைத்த கன்னி இரவு எலாம் போக்கினாளே

#18
அருள் புறம் கண்ட செல்வத்து அமலை முன் எளிமை உள்ளி
வெருள் புறம் கண்டு கூசி வெறுத்தலோடு அமைதல் தேற்றாள்
தெருள் புறம் கண்ட மீனின் திரு முகத்து ஒளி வில் வீச
இருள் புறம் கண்ட பாரிற்கு எரி விளக்கு ஒப்ப நின்றாள்

#19
இன்னவாய் உசாவும் வேலை இளம் பிடி அன்ன ஓர் நல்
கன்னி வாய் மொழியை கேட்ப கடவுளும் கடவுள் தன்னை
துன்னி வாழ் அமரர் யாரும் துகள் தவிர்ந்து உலகம் எல்லாம்
அன்ன வாய் உய்யும் என்ன அவாவொடு நிற்பார் அன்றோ

#20
சூழ் திரை உடுத்த பாரில் தோன்றிய நவத்தை காண்டற்கு
ஆழ் திரை விரைவின் நீக்க ஆதவன் கதித்து தூண்டும்
தாழ் திரை ஆழ்ந்த பாய்மா தழல் சினத்து உயிர்த்தது என்ன
கீழ் திரை கவிந்த வானம் கேழ் ஒளி சிவந்தது அன்றோ

#21
நல் நிலா உதயத்து எந்தை நயப்பு உற வியப்ப வானோர்
மன்னி யாம் எவரும் வாழ்க வந்த வானவனை நோக்கி
கன்னி தாழ் சிரத்தை கோட்டி கடவுள் ஆள் என்னை இதோ
பன்னி ஆயின நின் வாய் சொற்படி எனக்கு ஆக என்றாள்

#22
என்றுளி கடுத்த அன்பால் இதயம் கூர்ந்து உயிர்த்த செந்நீர்
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி
சென்றுளி மனுவும் வாய்ந்த தெய்வமும் பொருந்த வீக்கி
ஒன்றுளி இறைவன் மைந்தன் ஓர் மனு_மகனும் ஆனான்

#23
மீ அகன்று உயர்ந்த மாண்பாள் விளங்கவே உலகம் மூன்றும்
ஆய் அகன்று ஒன்று நீத்து ஐயாயிரத்து இருநூறு ஆண்டில்
பாய் அகன்று ஒளியின் சான்றோன் படர் இருள் நீக்கு முன்னர்
நாயகன் மருளை நீக்க நான் என ஆயினானே

#24
ஆதனே விதித்த நாளும் அமையமும் ஆகும் வேலை
ஏதமே விளைத்த ஆதன் இழிவு ஒழித்து உயிர்கள் யாவும்
நாதனே அளிப்ப சுங்க நாளையில் உதித்து முன்னோர்
வேதமே உரைத்த வண்ணம் விகலம் அற்று ஆயிற்று அன்றே

#25
யாழ் இசை பழிப்ப வானோர் இனிது என பாட ஆங்கும்
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன்
கேழ் ஒளி பழிப்ப அன்ன மனை ஒளி கிளர்ப்ப வானில்
வீழ் உறை பழிப்ப எங்கும் விழு நயன் பொழிந்தது அன்றோ

#26
பளிக்கு வேய் செப்பில் உண்ட பருதி சூழ் எறிக்கும் வில்லால்
தெளிக்குமே போலும் தேன் பெய் செழு மலர் முகைகள் மோதம்
அளிக்குமே போலும் வாய்ந்த அன்ன மா கன்னி மாட்டு எ
உளிக்குமே மணமும் வில்லும் ஒளி முகத்து ஒழுகிற்று அம்மா

#27
சேய் என தன்-கண் வந்த தேவனை வணக்கம் செய்து
தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல்
தூய் என துளித்த மாரி தொகையின் மேல் வரங்கள் வாரும்
வாய் என கண்ட வானோர் வாய் அடைத்து அஞ்சா நின்றார்

#28
அஞ்சிய வணக்கத்தோடும் அஞ்சலி செய்து தாயும்
துஞ்சிய உயிர்கள் உய்ய தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம்
விஞ்சிய சேயும் வாழ்த்தி விரும்பி வான் வாழ் உயர் வீட்டை
எஞ்சிய விழுப்பத்து ஓங்கி இனிது என பாடா நின்றார்

#29
வாழும் வான் உளோர் யாமும் மருவு நன்றி மேல் உயர்ந்து
ஆழும் ஆழி சூழு பாரில் அரிவை உண்ட தே அருள்
சூழு சூல் இது ஆய போது சுடர் எரிந்த வானும் மேல்
தாழு பூமி ஏற ஆய தகவு வாடு இல் ஆவதே

#30
வாடு இலாது மாறு இலாது மணம் எறிந்த பூம் கொடி
கேடு இலாது உலாவு தேறல் கிளர் அரும்பு சூல் உறீஇ
ஈடு இலாது ஞாலம் மேவும் இழிவு அமைந்த நோய் அற
காடு யாவும் வாசம் ஆரு கனியை ஈனும் நாள் இதே

#31
நாள் இதே உவப்ப ஞாலம் நசை அமிழ்ந்து இரா அற
கோள் இதே கடுத்த தீது கொணர் குணுங்கின் நோய் அற
வாள் இதே பிழைத்த நீச மனு மலிந்த கேடு அற
பீள் இதே வியப்ப வீடு பெறுவுகின்ற நாமுமே

#32
பெறுவுகின்ற நாம வாகை பெருகுகின்ற வேலினான்
உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள்
இறுவுகின்ற காலம் ஆக இளவல் நின்ற நாதனை
துறுவுகின்ற நூலினோடு துதி செய்கின்றார் யாவரே

#33
துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால்
விதி செய்கின்ற வேதம் நின்ற மிகை துடைத்த ஞானம் ஆய்
கதி செய்கின்ற ஈறு அகன்ற கனிவு உகுக்கு வான் மிசை
பதி செய்கின்று வாழ ஒன்று பரிசு இலக்கம் ஆகுமோ

#34
இலக்கம் ஆக நேமி மீதில் இனிது எழும் பதங்கன் நீ
உலக்கம் ஆக வீதி தீதர் ஒழுகல் இன்றி உண்ட தோம்
விலக்கம் ஆக நாதன் ஆகி மெலிய மைந்தன் என்று உளாய்
கலக்கம் ஆக நேமி தேயு கடி அகம் கலங்கவே

#35
அகம் கலங்க முனை உடன்று அழிவு உகும் குணுங்கு இனம்
நகம் கலங்க உரும் இழிந்த நடையில் மண்டு எழுந்த தீ
சகம் கலங்க வெரு அடைந்து சடுதி இன்று இழிந்தது ஆம்
முகம் கலங்க உறும் அரந்தை முடிய மண் தலங்களே

#36
மண் தலம் களங்கம் எங்கும் வாரி மாறும் வாள்_முகன்
கண் தலங்களும் கலங்கு காலும் ஞான காந்தியால்
விண் தலங்கள் அங்கண் நின்ற மீனும் நாண வேய்ந்த சூல்
எண் தலங்கள் எங்கும் நன்றி ஈறு இலாமல் ஈயுமே

#37
ஈறு இலாமல் ஏகி மூடர் ஈங்கு தேடு சீர் எலாம்
சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே
மாறு இலாது நீடு வாழ்வு வான நாதன் ஈகுவான்
பேறு இலாத மனுவொடு ஒத்த பிணி அருந்த உற்று உளான்

#38
உற்ற மீனும் வானும் வானம் உற்ற யாமும் ஓயும் ஈறு
அற்ற ஆசையோடு கூசு அதிர்ப்பில் வாழ்த்தும் நாதனை
குற்றம் மாறி வாழு கோதை குக்கி சூழ ஆய சூல்
சொற்ற ஆய சீரதோ தொடுத்த பாவின் மாலையால்

#39
தொடுத்த பாவை நிகர நீதி தொடரும் நூலின் முறையினால்
அடுத்த மூ உலகம் யாவும் அரிய மூன்று விரலினால்
தடுத்த வீர எதிர் இலாது தகவில் தாங்கு பரமனை
உடுத்த சூலில் அரிதில் தாங்கும் உவமியாத ஓர் விறலியே

#40
விறலியால் உயிர்த்த பாலன் விறலினால் உயர்ந்து அரா
மறலினால் அமைத்த தீது மரபினால் அழிந்து அற
திறலினால் மிதித்து கூளி சிரம் எலாம் நெரித்து அடும்
மிறலினால் உகுத்த பாவம் விலகுவான் விளங்குவான்

#41
வான் விளங்க மண் விளங்க வந்த நாதன் வாழியே
மீன் விளங்கல் ஏய்த்த முத்து வேய்ந்த சிப்பி வாழியே
கான் விளங்க உயிர் அளிக்கு கனி இராயன் வாழியே
தேன் விளங்க முகை விளாது தேறு கன்னி வாழியே

#42
வாழி மைந்தர் உய்ய வந்த வான நாதன் வாழியே
வாழி நன்மை ஈய இன்மை மலி தயாபன் வாழியே
வாழி வாழும் வானின் வாழ்வு மண்ணின் வாழ்வு வாழியே
வாழி கருணை ஆழி வாழி மதுர ஆழி வாழியே

#43
என்று பா வழங்கும் மாரி இ திறத்து உகுத்த பின்
மன்று பூ வழங்கும் மாரி மட்டு இனத்து இறக்கிய
கன்று நீர் வழங்கும் மாரி கற்றை விட்ட மாரியும்
குன்று மீ வழங்கும் மாரி குறை என பரப்பினார்

#44
ஒளி முகத்து உள யாவும் உவந்தது ஒத்து
அளி முகத்து அமலன் மனு ஆயின
களி முகத்து உயர் காயமொடு ஆர்கலி
நளி முகத்து அகல் ஞாலம் நயந்தவே

#45
சேது உலாவிய செம் கதிரோடு வான்
மீது உலாவிய மீன் மகிழ்ந்தால் எனா
மாது உலாவிய மாட்சி ஒப்பாக விள்
ஏது இலா ஒளி ஏழ் மடங்கு ஆயதே

#46
மிகை உற்று ஆம் நிலம் காத்து அவன் வேய்தலால்
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய
நகை உற்றால் என நாள் மலர் தேன் உக
முகை உற்று ஆய முறுக்கு அவிழ்ந்து ஆம் அரோ

#47
கடு கொடு இங்கு கடுத்தன தீது அற
நடு கொடு அன்பு உடை நாயகன் தாழ்தலான்
மடு கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே
உடு கொடு அண்டம் இறங்கினது ஒத்தது-ஆல்

#48
வள்ள வாய் இள மாம் குயிலோடு எலா
புள் அவாவு உவப்பில் புகழ்ந்தால் என
உள் அளாம் மகிழ்வு ஒத்து இனி பாடலால்
எள்ள யாழ் இசை ஏய்த்தன ஆம் அரோ

#49
ஐயும் போயின போயின ஆகுலம்
மொய்யும் போயின போயின முன் பழி
மையும் போயின போயின வஞ்சனை
பொய்யும் போயின போயின பூதமே

#50
நெடிது நாள் வெளி மூடிய நீல் முகில்
கடிது போதலில் வான் கதிர் கான்று என
கொடிது நோய் ஒழியும் குணத்து அன்று அணி
முடி துளவு எழில் முற்றின ஞாலமே

#51
அலகு அற்று ஆயின ஆண்டகை ஓர் மகன்
உலகத்து ஆயினன் என்று உணரா தவத்து
இலக தாவிய மாண்பு இயலோர்க்கு எதிர்
விலக தாவிய மீ களி கூர்ந்ததே

#52
வேறு அரங்கில் உறங்கி விழித்து இறை
கால் தொழும் கடை காரணம் காண்டு இலன்
மால் தகும் கறை மாறிய சூசை உள்
தாறு இறந்த தடம் பட ஆழ்ந்தனன்

#53
வைய நாயகன் வையத்தார் எலாம்
உய்ய வந்து உலகு உற்றனனோ எனா
ஐயம் ஆய் இறையோனை அருச்சனை
செய்ய வீழ்ந்து மகிழ்ந்து அருள் சீர்த்தனன்

#54
வீடு அமைந்தன வாழ்வு விழுங்கிய
வீடு அமைந்தன இன்பு அது வேலை தன்
வீடு அமைந்து அதின் மூழ்கிய வேலையின்
வீடு அமைந்திலன் வெண் மலர் கோலினான்

#55
பானு அக கதிர் பானு அது சூலில் வான்
பால் நக களியாள் தர பார்த்ததால்
பால் நக களி பவ்வம் உள் மூழ்கினான்
பால் நக கமழ் பாடலி வாகையான்

#56
கண்டு அகம்-தனில் வாழ்ந்து தன் காதலி
கண்டு அகம் தகும் காதை தெரிந்து இலான்
கண்டு அகன்ற கனிந்த இன்பு எய்தலால்
கண் தகு அம் துளி கான்று களித்தனன்

#57
கலையின் மேல் எழு கால் கவினாள் உடை
கலையின் மேல் எழு காந்தி பரந்து அன
கலையின் மேல் எழுகும் களியோடு அரும்
கலையின் மேல் எழு காட்சி அடைந்து உளான்

#58
நாள்-தொறும் கரு நன்று வளர்ந்து பொன்
நாடு உறும் கருணை பொலி நாயகி
நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல்
நாட_அரும் கலையால் நவில்வு ஆம்-கொலோ

#59
கால்வு அரும் பிழி கால் கமழ் வாகையான்
கால் வரும் பரிசாய் களி மாற மேல்
கால் வரும்படி கம்பலை காய்ந்து உறும்
கால் வருந்திய காதை சொல்வாம் அரோ

#60
மாசு அறும் கருப்பம் ஆகி வளர்ந்து தேய் திங்கள் ஐந்து ஆய்
ஆசு அறும் தரும கன்னி அகடு இனிது ஓங்கும் வண்ணம்
ஏசு அறும் தவத்தோன் கண்டே எய்திட காட்சி வாளால்
தேசு அறும் நெஞ்சம் ஈர்ந்த செல்லலோடு ஐயம் கொண்டான்

#61
மணி நிறத்து அழகின் சாயல் வழங்கிய மடவாள் முன்னர்
அணி நிற படலை ஆக அறம் எலாம் சேர்த்த தன்மை
துணி நிற தெளிந்தோன் கண்ட தோற்றம் ஈங்கு ஆய்ந்த-காலை
பிணி நிறத்து உருத்த துன்பம் பெருகியே முற்றிற்று அம்மா

#62
நாள் வளர் பருவத்து அம் சூல் நன்று உற வளரும் வாய்ந்த
பீள் வளர் பருவத்து எஞ்சா பெரும் துயர் வளர்ந்து மிக்கு ஆய்
வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா
கோள் வளர் புணரி தாழ்ந்து குளித்த நெஞ்சு அமிழ்ந்துகின்றான்

#63
கதிர் வரு முகத்தின் மாமை காண்டலின் கண்ட கண்ணால்
பொதிர் வரும் அன்பும் ஐய புன்கணும் உளத்து உண்டு உண்ட
முதிர் வரும் துயர செம் தீ முழுதும் அவிப்ப சிந்தி
பிதிர் வரும் இரு கண் ஆறே பெரும் துயர் ஒழிக்கல் ஆற்றா

#64
கார் முகத்து எழுந்து சூழ கதத்த கால் முகத்தில் பவ்வ
நீர் முகத்து எழுந்த ஓதம் நேர நொந்து அலைந்த நெஞ்சான்
நேர் முகத்து எழுந்த ஐயம் இவள் அகன்று அகலும் தன்மை
சீர் முகத்து எழுந்து தேர்ந்து சிந்தையில் தேறல் ஓர்வான்

#65
பொய் எனக்கு அறைந்தீர் கண்ணே புரை உறா கன்னி முன் நாள்
மெய் எனக்கு அறைந்த தன்மை மெலியுமோ பளிங்கில் தூயாள்
மை என களங்கம் உற்று மயங்கும் முன் இரவி நீட்டும்
கை என் அ கதிர்கள் மாறி கலங்கலே காண்பீர் என்றான்

#66
என்றனன் கருக்கொள் காந்தை எதிர் வர எய்தல் உற்றான்
நின்றனன் விழித்தான் ஐயம் நீக்கவும் அருகு நண்ணி
சென்றனன் கரு கண்டு உற்றான் தேர்ந்து உளம் சிதைந்தான் நொந்தான்
பின்று அனன் பின்றா துன்பம் பெற்று அழுது உரைப்பன் மீண்டே

#67
வான் வளர் நாதன் ஏவி மணம் செய நானே பூத்த
தேன் வளர் வாகை விண்ட செழு மலர் வாடாது ஓங்க
மீன் வளர் கண்ணின் நல்லாள் விளைந்த தன் கன்னி அம் பூ
கான் வளர் இதழ்கள் வாடி காய்ந்தது என்று உணர்தல் ஆமோ

#68
புண் செயும் வை வாள் செய்த புண்-தனை ஆற்றும் தன்மை
கண் செயும் காட்சி காட்டும் கரு உளம் கிழித்து காட்டும்
பண் செயும் மொழியாள் மாட்சி பற்றிய துயர்கள் ஆற்ற
எண் செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது அம்மா

#69
நீர் விளை கடலோடு ஒத்து நெஞ்சு அலைந்து உருக பின்றா
சூர் விளை காட்சி தந்து துறும் துயர் தந்த கண்ணே
ஏர் விளை இரவி நோக்காது இருள் அடைந்து அரற்றி எஞ்சா
கார் விளை தாரை ஒப்ப கலுழ்ந்து இனி வருந்துதீரே

#70
இருள் அற உணர்வில் தேர்ந்த இரும் திறத்து அரசர் கோவே
தெருள் அற உணர்ந்த ஐயம் செய்த நோய் இனி நீத்து உற்ற
மருள் அற உணராய்-கொல்லோ மணம் செய பணி செய்து அன்றே
அருள் அற வருத்தும் தன்மை அதன் பயன் என ஓர்ந்தாயோ

#71
ஆவி நோய் செய்த இ சூல் ஆய என் வினை அன்றேனும்
தாவி நோய் செய்த ஐய தகுதியால் உணரா நானே
காவி நோய் செய்த கண்ணாள் காசு உற செய்தாள் என்னில்
ஓவி நோய் செய்த இ பார் ஒருங்கு எனை விழுங்கும் இன்றே

#72
பார் உலகு அளித்து காக்க பரமனை உயிர்க்கும் தாயே
பேர் உலகு உவப்ப கன்னி பெயர்கிலள் பெறுவாள் ஆகில்
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மண துணைவி ஆமோ
நீர் உலகு உறழ் நெஞ்சிற்கு இ நினைவு அகன்று அகல்-மின் அன்றோ

#73
அலை புறம் கண்ட நெஞ்சே அரந்தை உண்டு உய்யல் உன்னேல்
உலை புறம் கண்ட செம் தீ ஒருங்கு மூழ்குதி இன்று என்ன
இலை புறம் கண்ட பைம் பூ இரும் கொடி வாட நொந்து
கலை புறம் கண்ட நூலோன் கலங்கி உள் உளைந்து சோர்ந்தான்

#74
இரு மதி எல்லை நாள் இன்ன ஆறு போய்
பரு மதி மயக்கிய பலவும் ஓர்ந்து தேர்
ஒரு மதி உணர்கிலன் உயிர்ப்பு வீங்கி வீங்கு
அரு மதி மா தவன் அரற்றி விம்முவான்

#75
கருவினை தெளிகினும் காந்தை-கண் புரை
வரு வினை உணர்கிலன் வருத்தும் பாசறை
பெரு வினை உரைக்கிலன் உருகி பேர் உளத்து
அரு வினை தனித்து உணர்ந்து அலக்கண் மூழ்கினான்

#76
திருகினால் நொய் அலர் சிதைதல் போல் உளத்து
உருகினான் மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய்
பருகினான் துயில்கில் ஆய் பருகு இல் ஆகி வீ
மருகினான் மது மலர் வயங்கும் வாகையான்

#77
உள் படை பாய்ந்து அகன்று உடைத்த புண் எனா
நட்பு அடை உளத்தினுள் நணுகும் பாசறை
நுட்பு அடை துயரினும் நொந்த நோய் எனா
கண் படை கீறிய கருத்தின் நொந்து உளான்

#78
கார் முகத்து உடைந்த ஏறு அன்ன காதலி
சேர் முகத்து உடைந்து தான் கண்டு தேறலால்
நீர் முகத்து உடைந்த நீள் குரம்பின் நீர்மையால்
சூர் முகத்து உடைந்து உளம் கரைந்து தோன்றினான்

#79
உயர் வினை உணர்கு இலாது உடலை இன் உயிர்
பெயர் வினை போன்று தன் தலைவன் பேர் உளத்து
அயர் வினை அனைத்தும் உள் அறிந்த மங்கையும்
துயர் வினை அடைந்து உளத்து அரற்றி தோன்றினாள்

#80
நிறை பட சிறப்பொடு நிமலன் செய் அருள்
மறை படல் தகவு என மனத்தில் எண்ணலோடு
அறை பட திரு உளம் அறிந்து இலாமையால்
பொறை பட துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள்

#81
அன்பினால் இவன் துயர் அடைந்து உளான் எனா
நன்பினால் உவமியா நங்கை ஓர்தலால்
துன்பினால் உருகினள் துனியை நீக்கும் ஓர்
இன்பினால் உரம் செய இறைவன் போற்றினாள்

#82
வல்ல வள் வளி உருத்து அதிர வான் உயர்
பல்லவ மரமும் மேல் படர் பொன் வல்லியும்
ஒல் அவை அலைவு உறீஇ வளையும் உண்மை போல்
இல்லவள் கொழுநனோடு இடுக்கண் எய்தினாள்

#83
உருகிய துணைவனை உருகி நோக்கினள்
பெருகிய துயர் செயும் பிணிகள் ஏது ஐயா
மருகிய அடிமை யான் வனைவது ஏது எனா
அருகு இயைந்து அன்புற அறைந்து இறைஞ்சினாள்

#84
கண் நலாள் உரைத்த சொல் காதின் உள் புக
புண் அலாம் பெரும் புழை புகுந்த தீ எனா
எண்ணலால் அரும் துயர் எய்தி சூசை உள்
நண்ணல் ஆம் தழல் பொறா பிரிதில் நாடினான்

#85
காசு அடை கடல் எழும் கமலம் காலினால்
பாசு அடை தளம்பிய பான்மை பாசறை
ஆசு அடை பொழுது அரிது அமைந்த காட்சியால்
தேசு அடை உளத்தையும் சிதைப்பது ஆம் அரோ

#86
நீரின் மேல் தாள் பிரிந்து அலைந்த நீர் மலர்
சீரின் மேல் அலைந்து அலைந்து அமிழ்ந்தும் சிந்தையான்
சூரின் மேல் அன்பு உளம் சுடச்சுட தகும்
போரின் மேல் கலங்கி உள் புலம்பினான் அரோ

#87
மருள் தரு கரு என மாதை காட்டினேல்
இருள் தரு கசடு அது ஆம் இவை ஒளிக்கினேல்
அருள் தரு மறை முறை அழித்தல் ஆம் இனி
தெருள் தரு பிரிவு அலால் செய்வது ஏது உண்டோ

#88
என் உயிர் அதனின் ஊங்கு இனிய பொன் தொடி
தன் உயிர் பிரிந்து யான் தனித்து போயின
பின் உயிர் எனது உடல் பிரிவு இல் ஆம்-கொலோ
உன் உயிர் உய்யலும் எளியதோ என்றான்

#89
என்றலும் திரு உளம் இன்னது ஆகுமேல்
மன்று அரும் துணரொடு வந்த பூம் கொடி
நின்று அரும் துணை பெறா நீக்கி கான்-இடை
சென்று அரும் தவம் இனிது என்று தேறினான்

#90
பிரிந்துளி துணைவியின் பிணி கண்டால் உளம்
முரிந்துளி துணிவு இல் ஆம் என முடங்கு ஒளி
இரிந்துளி இருண்டு உறும் இரவின் நாப்பண் இல்
சரிந்துளி நீக்குப தனில் குணித்தனன்

#91
பிரிவு_அரும் அன்பினர் பிரியும் கால் உறும்
புரிவு_அரும் துயர்கள் கண் உறல் பொறாது ஒளித்து
எரி வரும் பருதி போய் ஐயம் எய்தினோன்
முரி வரும் சிந்தை போல் இருளும் மொய்த்ததே

#92
என் உளம் அறிந்த ஓர் எதிர் இல் நாதனே
உன் உளம் இனது என உளத்தில் உன்னலால்
மின்னலை அகலுது இவளை மேவி நீ
துன்னு அலைவு அகற்றுதி என்று துஞ்சினான்

#93
குணித்த யா நினைவையும் குறை இல் கோது எலாம்
துணித்த மா மடந்தை காண் சூழ்ச்சியால் தனை
தணித்த மா துணையவன் தணந்து போயினால்
கணித்த மா துயரினால் கலுழ்ந்து அரற்றினாள்

#94
தாய் பெறும் தனயனை மறந்த தன்மையால்
நீய் பெறும் அன்பு அருள் நிகழ்த்திலாய் ஐயா
தீய் பெறும் வளைத்த வில் நிமிரும் சீர்மையால்
நோய் பெறும் கருத்து அற நுதலின் தீது அதோ

#95
வளம் படு என்-வயின் வைகும் நாதனே
இளம் படு பேதை யான் தனிக்கில் ஈடு இதோ
உளம் படு துயர் அத்து உறுதி செய்க எனா
வளம் படு விழி சிவந்து அழுது வேண்டினாள்

#96
எள்_அரும் குணத்து இறை இரக்கம் மீது உறீஇ
உள்_அரும் துயரினால் உறுதி ஆம் என
தெள்_அரும் இருவருக்கு இடர் செய்தேன் இனி
தள்_அரும் துனி அற தயை செய்வேன் என்றான்

#97
என்றலும் கபிரியேற்கு ஏவல் செய்து அறா
மன்றலும் பிழியும் பெய் வாகை சூசை-கண்
சென்று அழுந்திய துயர் தீர்ப்ப சூல் வினை
நன்று அழுந்து உவப்பு எழ நவில்குவாய் என்றான்
மேல்

@8 ஐய நீங்கு படலம்


#1
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன்
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி தேன் தூற்றும் விரத செ வாய்
சொல் ஆரும் பங்கய கண் பொன் வரை தோள் சுடர் அகலம் தோற்று மேனி
எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான்

#2
கண் புலன் ஆம் கதவு அடைத்து கரிய துயில் கொண்ட தவ கரையை கண்டோன்
உள் புலனால் அறிவு அமைந்து உள் உருக்குகின்ற துயர் நீக்கி உவகை எய்த
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான்

#3
வையத்தார் வானகத்தார் வணங்குகின்ற வரம் பெற்ற மதி வல்லோனே
அய்யத்தால் அகத்து அலக்கண் நுழைந்து அறுப்ப அலைவான் ஏன் அழிவு_இல் கன்னி
பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி பெறுவள் என் அ பொருவு_இல் வாய்ந்த
மெய்யை தான் அறியாயோ விரை உயர்க்கும் மலர் வாடா விருது நல்லோய்

#4
நேர் விளைந்த நீதி பரன் நெடும் காலத்து உணர்த்த தயை நிகழ்த்தும் கால் ஆய்
சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம்
சூர் விளைந்த பிணி இன்றி சூல் கன்னி பெறும் தேவ தோன்றல் தானே
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என இயேசு எனும் நாமம் பகர்வாய் என்றான்

#5
அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ என கண் விழித்து ஒளி சூழ் அன்றி மற்று ஓர்
நிலை புறம் காண்கிலன் களியும் வெருவும் உறீஇ கடிது எழுந்தான் நிறை நூல் தந்த
கலை புறம் காண் அறிவு ஓங்கி கணிக்க_அரிய தன்மையின் தூய் கன்னி மாறா
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான்

#6
சால் அரும்பு சூல் அணிந்த சண்பக தண் சினைகள்-தொறும் தவறும் தென்றல்
கால் அரும்ப தாது அரும்பி கடி மலர் தேனோடு அரும்பும் கந்தம் என்னா
வால் அரும்பு வாய் அரும்ப அரும்பு அரும் பூ வாகையினான் மகிழ வானோர்
நூல் அரும்ப வாய் அரும்பி சுருதி மது பொழியும் உரை நுதலி சொல்வான்

#7
எல்லோடும் ஒளி பெருகாது இரவொடு இருள் படாது எங்கும் இலங்கும் சோதி
சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன்
புல்லோடும் புன்மை அறியாது என்னோ இ திறத்தில் பொலிய செய்தாய்
செல் ஓடும் வான் வியப்ப சிறுமை எடுத்து அடல் காட்டும் திறலின் மிக்கோய்

#8
பார் ஆழி உரை கொண்டே படைத்தாய் ஓர் குறும் சூரல் பயனை கொண்டே
நீர் ஆழி வழி வகுத்தாய் நெடும் படையோன் பணி கொண்டே நில்லா வான் மீது
ஊர் ஆழி நிறுத்தினையே ஒத்த திறத்து இன்று உலகம் உய்தற்கு அன்பின்
பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனை துணை கொண்டாய் பெயரா செல்வோய்

#9
என்பு என்போடு அடிபட கின்னரத்து ஓதை அடிபட சேர் இனத்து இனங்கள்
அன்பு அன்போடு இசைபட நேர் நரம்பு ஓடி வளர் தசை மீது அதளும் போர்த்த
பின்பு இன்போடு உயிர் படவே பெயர்ந்து எழ முன் இசேக்கியல் காண் பெற்றி என்னா
முன்பு என்போடு ஒன்று பட கிடந்தனன் நான் உயிர்பட இ முயல் கொண்டாயோ

#10
தெவ்வின் அகத்து ஊன் உண்டு தீ உமிழ் மால் கரியினும் உள் திறன் சுதீத்தை
நவ்வி அகத்து உரன் விஞ்ச நால் கடல் அம் படை தலைவன் நவிர் சிரத்தை
வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன்
குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது கூறுகிற்பேன்

#11
மேழகங்கள் காத்தன கால் மேதினியின் காவலராய் விரி செங்கோலால்
கேழ் அகம் கை தாவிதனும் மோயிசனும் நீ தெரிந்த கிளர் அன்பு ஆண்மை
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன்
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான்

#12
உம்பரிலும் அரிதில் தனை உயர்த்த நிலை அன்பு பட உணர்ந்து உணர்ந்தே
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும்
எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ
கம் பரிவு மிக முன்னர் கணித்த அயிர்ப்பு உணர்ந்து உரைப்பான் கனிவின் மீண்டே

#13
வான் செய்த சுடரினும் தூய் தெருளோனே மருள் அற்ற வலி நல்லோனே
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும்
மீன் செய்த முடியாளை தந்து தந்த நயன் அறியா வினை பயத்தால்
யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி நினைவினும் ஊங்கு இரக்கம் மிக்கோய்

#14
செய் படு வான் உலகினோடு திணை யாவும் படைத்து அளித்து ஆள் சிறந்த கோவே
மொய் படும் ஆர் கலி உடுத்த பாரில் நினக்கு அன்னை எனும் முகுளம் கன்னி
கைப்படுவான் அடியேனை தெரிந்தாயோ அதன் பின் யான் கசடு உலாவும்
பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே

#15
அரிய மறை கொழுந்து என மேல் படர் தர ஈங்கு ஒர் கொழுகொம்பு அன்னவட்கே
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில்
விரிய உறை உம்பரையும் ஏவலை கொள் பொருவு அற்ற மேன்மையாளை
திரிய முறை இட்டு ஏவல் கொண்டேனே கொண்ட நயன் தெரியா சீர்க்கே

#16
சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய மேனி
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த சென்னி
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து ஒளி பாய்ந்த செழும் தண் பூம் தாள்
ஈது உலாம் வடிவம் கொண்டு இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ

#17
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த
உலகு எல்லாம் முரிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர் மிதித்தே
விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும் தையல் இவள் விரிந்த வையத்து
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ

#18
செய் முறையும் கடன் முறையும் திறம்பாத நீதி நெறி செழும் கண்ணாடி
மெய் முறையும் மறை முறையும் விளக்குகின்ற ஞானம் அமை வியன் அத்தாணி
கை முறையும் அளி முறையும் பொழி கனக மாரியினால் கருணை காளம்
இ முறையும் எம் முறையும் கடந்து உயர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ

#19
புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர்
எத்தாலும் நிகர்ப்பு அரிய இ அறத்தி-தனை ஐயம் இதயத்து எண்ணி
சத்து ஆன கடவுள் தரும் தெருளோடு என் அகம் அறிந்த தகைவினாள்-கண்
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை

#20
கொழுந்து அழுந்து அழன்ற வாய் குறுகி வீழ்தலில்
எழுந்து எழும் கரத்தினால் இழிவு இன்று உய்வர் போல்
விழுந்து எழும் தகவினோன் வெருவி நாதன் அன்பு
அழுந்து எழும் துணர் அடி அரற்றி ஏற்றினான்

#21
மடல் மடு வழிந்த தேன் வாகையான் உளத்து
அடல் மடு திறந்து அழுந்து அன்பொடு ஆண்டகை
கடல் மடு திறந்து என வரங்கள் கால இன்பு
உடன் மடு மூழ்கினான் உவந்த சிந்தையான்

#22
இற்றை ஆகையில் இவை காண இச்சையால்
ஒற்றை ஆழியன் கடல் ஒல்லென்று ஈர்த்து எழ
கற்றை ஆம் கரங்களை நீட்டும் காட்சி போல்
அற்றை ஆர் ஒளியொடு சிவந்தது ஐந்திரி

#23
மருள் தரும் இருள்-தனை மாறி சூசை உள்
அருள் தரும் நய நலம் அன்று காட்டிட
இருள் தரும் உலகு இனிது இருளும் தீர்ந்தன
பொருள் தரும் ஒளியவன் பொலிந்து சேரவே

#24
செய் படும் உலகினர் வணங்கும் சீர்மையாள்
மொய் படு பணி இனி முயல்தல் ஆம்-கொலோ
மெய் படும் அடிமை யான் வினை செய்வேன் எனா
கை படு தொழில் எலாம் கனிவொடு இயற்றினான்

#25
படைத்தவன் தாய் அடி பணிந்து போற்றவும்
துடைத்த தன் ஐயமும் துகளும் சொற்றவும்
உடைத்து அன மன நசை பொறாத உண்மையால்
அடைத்தன கதவின் வாய் அணுகி நின்றனன்

#26
செழும் திரு மாது அறை திறந்த போது இவன்
எழுந்திருந்து ஐ என இதயம் துண்ணெனா
விழுந்து இரு விழும் திரு அடியை வேண்டினான்
தொழும் திரு அடி மிசை மழை கண் தூவியே

#27
ஈர் அணி தயவுடன் என்னை ஆள் உடை
சீர் அணி அறத்தினாய் செகத்து நாயகி
காரணன் மகவு என கருப்பம் தாங்கி மெய்
ஆரண மொழி முறை அமைந்த மாட்சியாய்

#28
கோது உற தமியன் உள் குணித்த யாவையும்
ஏது அற தெரி தரும் இரவி காட்சியாய்
தீது அற தயையில் உன் சிறுவன் தன்மையால்
நீது அற திளைத்த என் குறைகள் நீக்குவாய்

#29
துன்புற செய்த தோம் துடைத்து ஆசி நீ
அன்புற சொல்லினால் அல்லது உன் அடி
பின்பு உற பெயர்வனோ என பெருக்கு அனை
இன்புற துயருற இரங்குவான் அரோ

#30
பொருள் தொடும் அருமறை வடிவம் போன்று ஒளிர்
அருள் தொடும் மடவரல் அகத்தில் இன்புற
இருள் தொடு துயர் அகன்று அறிவை ஈந்தன
தெருள் தொடும் இறைவனை சிறந்து போற்றினாள்

#31
பொருக்கென துணைவனை பொலிய தூக்கினாள்
பெருக்கு என பெருகும் இன்பு உளம் புரண்டு எனா
கரு கனம் கண் மழை கழுமி வீழ்ந்தனள்
இரு கண முடியுடன் இரவி ஆடையாள்

#32
கதிர்ந்து எழும் அன்பினான் காந்தை வீழ்கு உறா
எதிர்ந்து எழுக என மலர் கரம் கொடு ஏந்தினான்
விதிர்ந்து எழு தாழ்ச்சியால் மீண்டும் வீழ்ந்தனள்
பொதிர்ந்து எழு வரங்களால் பொங்கு மாட்சியாள்

#33
என் உளம் கொளா கனிவு இயற்றும் அன்பினோய்
நின் உளம் கொளா துயர் நெடிது செய்து யான்
துன் உளம் கொளா துகள் சூட்டினேன் என
நன் உளம் கொளா தயை நல்கல் வேண்டுமே

#34
மன்னர் ஆள் மன்னவன் வகுத்த மா வரம்
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என
என்னை ஆள் உடையவன் ஏவல் இன்மையால்
உன்னை யான் சூல் வினை ஒளித்தது ஆம் என்றாள்

#35
என்று அலர் கரம் எடுத்து இவனை ஏத்தினாள்
மன்று அலர் உயிர்த்த வெண் வாகையாளனும்
துன்று அலர் கடுத்து உடு சூட்டு மங்கையும்
சென்று அலர் இறைவன் தாள் செறிந்து போற்றினார்

#36
பீடையால் வற்றிய உளத்தில் பேர் ஒளி
ஆடையாள் உரையினால் அரிது இன்பு ஆழ்ந்தனன்
கோடையால் வற்றி பெய் கொண்டலால் பெருகு
ஓடையால் நிகர்த்தன ஓகை சிந்தையான்

#37
கோள் கடைந்து அழுத்திய மகுட கோதையாள்
பீள் கடைந்து அழுத்திய கதிர் பிலிற்றல் காண்
தாள் கடைந்து அழுத்திய தாரின் வாகையான்
வாள் கடைந்து அழுத்திய வருத்தம் நீக்கினான்

#38
வண்டு உலாம் தாரினான் மலர் கண் வாயினால்
உண்டு உலாம் மகிழ் வினை உளம் பொறாமையின்
பண்டு உலாம் வளம் எலாம் பழித்த காந்தையை
கண்டு உலாம் உரை மது கனிய காலுவான்

#39
கூறு_அரும் தகை உடை கோதையார் தமுள்
மாறு_அரும் திரு வரம் வயங்கு மாட்சியாய்
சேறு_அரும் தன்மையால் சிறுவன் ஆகிய
பேறு_அரும் கடவுளை தாங்கும் பீடமே

#40
ஒளி முகத்து இந்து எதிர் இரவி உற்று எனா
களி முகத்து உன்னை உன் கடவுள் நோக்கி முன்
தெளி முகத்து இயம்பிய சீர் இன்று உன்-இடை
துளி முகத்து அமைந்ததால் துதிப்பர் யாருமே

#41
மை கடல் மருவிய வையத்தாரின் உள்
இ கடல் மான் அரும் இருமை உற்ற நான்
அ கடன் தவறு இலா திருத்தல் ஆக நீ
நிக்கு அடல் மதலை ஆம் நிமலன் போற்றுவாய்

#42
என்று உதிர் இரவி வில் எதிர் திருப்பல் ஆ
நின்று உதிர் பளிங்கு என நிரம்பி ஓதிய
தன் துதி அடங்கலும் தனது நாதனை
துன் துதி ஆக்கினள் பளிங்கில் தூயினள்

#43
எண்_இலா சுடர் என இமைத்த வானவர்
வண் நிலா நறு மலர் வருடம் தூவினர்
ஒள் நிலாவு இவர் பதம் உவந்து சூடினர்
அண்ணல் ஆம்-தனை துதி அளவு_இல் பாடினர்

#44
இருள் பரந்த ஐயமொடு துயரும் நீக்கி இன்பு அலையில் மூழ்கிய ஒண் தவத்தின் மிக்கோன்
தெருள் பரந்த காட்சி உறீஇ உளத்தில் ஓங்க சேண் உறையோர் பாடிய பேர் உவகையால் ஓர்
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள்

#45
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான்
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல்
வென்ற நிலை கொண்ட உணர்வோர்க்கும் பாலோ விண் வியப்ப நீ வியப்ப விருப்பம் மூழ்கி
மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய்

#46
விண் கதிர் கால் உரு தோன்றி விண்ணில் நின்றாள் விரத நிலை இதோ என்ன வளர்ந்து தேயும்
தண் கதிர் கால் பிறை குழவி அடியால் தேய்த்து தனை சென்றார் சிதையார் என்று இரவி முன்னும்
தெண் கதிர் கால் உடு குலமே முடியாய் சூடி தெளி ஞான நிலை இது என சுடாது தண்ணத்து
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள்

#47
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர்
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி
கரு கொண்டாள் வர பவ்வம் நீந்தி நீந்தி கதிர் வெள்ளம் சூழ் எறித்து கனி நின்றார்-ஆல்

#48
எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து
அ உலகினோர் பிரிந்த அவைகள் ஒன்பான் அவை அவைக்கு ஓர் ஒரு நூறும் பலர் ஓர் நூறும்
இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர்
வவ்வு உலகின் தமது அரசி ஆக சூழ வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே

#49
ஏவிய ஆறு இவள் பிரியா அன்னார் இ நாள் எழில் முகத்தில் வான் முகத்தை தோன்ற தோன்றி
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை
மேவிய ஆறு ஓங்கிய மார்பு அணிந்து வெய்யோன் வேய்ந்து அனைய அ அணி வேய்ந்து இனிதின் நின்றார்

#50
நீமம் உடை திங்கள் துடைத்து ஒளியை பாய்ந்த நேர் அடியாள் நேர் அற விள்ளா வண்ணம்
காமம் உடைத்து ஒளி உடுத்து சுடரில் தூய கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே
தாமம் உடை தண் தாது மடு உடைத்து சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி
ஏமம் உடை தனி விருது என்று அலர் சுவேத இலீலி எனும் மாலை பதத்து ஒரு நூறு உய்த்தார்

#51
இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள் இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்ச
கருதி எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு
பருதி எழில் படுத்திய சீறடியை போற்றி பணி ஆக முன் படைத்தார் ஒரு நூறு அன்றோ

#52
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும் கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே
நீடு அவிழ்த்த வாய் இடத்து பிரிந்து ஓடும் பல் நீர்க்கு எல்லாம் அடைக்கலம் செய் வாவி பூத்த
தோடு அவிழ்த்த விரை கமலம் மாலை மாற்றி சூடிய தாள் தொழுகின்றார் ஒரு நூறு அன்றோ

#53
துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞான துறை அன்னாள் மாசு அறு நல் உணர்வின் நீர்த்து
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே
முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின் முடுகு வழி விடா திரியும் இரவி காந்தம்
அறை கெழு நூல் வழி தொடை போல் தொடையல் ஆக்கி அருச்சனை செய்து அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ

#54
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா
தேசு என்று குலையா நெஞ்சு உறுதி எஞ்சா செல் அல்லற்கு உயர்ந்த திறம் காட்டுதற்கே
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட
காசு என்று தேன் துளிக்கும் குமுத மாலை கால் அணியாய் தொழுது இடுவார் ஒரு நூறு அன்றோ

#55
மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா வண்ணம் என கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள்
கண் பொதுளும் இன்னாமைக்கு அழுக்கு உறாதாள் கதிரினும் தூய் மாட்சி நலம் அணிந்ததற்கே
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது முருகு ஒழுகும் முகை விண்ட செம் செவ்வந்தி
விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக விழுந்து இறைஞ்சி கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ

#56
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த
அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா
மை திறத்தால் விரி சிறகை ஓசனித்த வண்டு அணுகா சண்பக அம் தொடையை அன்றே
மெய் திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா விசித்து அணிந்தார் தாள் வணங்கி ஒரு நூறு அன்றோ

#57
வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ வரத்து உயர்ந்த வான் அரசாள் நவை நாம் மாறா
கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும்
கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ

#58
வஞ்சம் சேர் தந்திரத்தால் பழியே விஞ்ச மன் உயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள்
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள்
கஞ்சம் சேர் திரு பதத்தால் மிதித்த வெற்றி காட்ட மது கான்ற நறும் தும்பை மாலை
பஞ்சம் சேர் உவப்பினொடு பைம்பொன் சேர்ந்த பதத்து அணியாய் தொழுது அணிந்தார் ஒரு நூறு அன்றோ

#59
இ முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ
அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய்
கைம்முறையாம் என பணி பொன் சுடிகை ஆரம் கண்டிகையோடு இன கலன் எண் இல்லாது ஏந்தி
மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர் விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார்

#60
வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன் வந்த பிரான் அருள் புரிந்து வஞ்சம் மிக்கோர்
கை அகத்தால் அடியுண்டு மாள்வான் என்னா கடு மரமோடு ஆணியும் முள்_முடியும் தூணும்
மொய் அகத்தால் அடும் மற்ற கருவி யாவும் மூ அறு வானவர் ஒரு-பால் கையில் ஏந்தி
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார் விளம்பு அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார்

#61
ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி ஏழ் எழு ஆய் பத்து அணியாய் நின்ற வானோர்
ஈர் இறகால் அஞ்சினர் போல் முகத்தை மூட ஈர் இறகால் அடி மூடி மற்று இரண்டு
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார்

#62
செம்பொன் மேல் பசும்பொன்னால் எழுதினால் போல் திண் கவச மேல் அணிகள் தியங்கி தோன்ற
பைம்பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லை பாய் மகுடம் புனைந்து அலகை முனைந்து வென்ற
வெம் பொன் மேல் கதிர்ந்த வை வேல் கையில் ஏந்து மிக்கயலும் கபிரியல் ஆம் திரு வல்லோனும்
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே

#63
இவரும் அலது உள அமரரும் அளவு இலாது எரியும் வெளி மிசை இரி பல சுடர் ஒளி
கவரும் முடிகளும் நவமணி அணியொடு ககன எழில் அணி பணிகளும் மிக ஒளி
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ
நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும் நிறைய வெளி வெளி நிரை நிரை நிகழ்வரே

#64
அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர் உருவுடன் அணி அணி நெரிதர
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள்
மலையின் உயர் இன முகில் அதிர்வன என மலிய முழகின இனியன ஒலியொடு
கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய இன எனது உரை அடை கருமமோ

#65
ஒலி அதிர முடி முடியொடும் அடிபட உவகை எழ விழ அணி தொடை அசைவொடு
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி
பொலிய அவரவர் சிரம் மிசை அணிகுவர் பொருவு_இல் நசையொடு பணிகுவர் அணுகியே

#66
அரவின் உருவொடு கடி விடு விடம் அற அரிதில் உயிர் தரும் இனிது அமுது இவள் என
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே

#67
கடியின் நெடிது அமர் எழ உயிர் மெலிகுவர் கவலை அடைகுவர் மகர் இல உளைகுவர்
மிடியின் மெலிகுவர் பிணிகளின் மெலிகுவர் வெருவி உருகுவர் விளிவு உறி அயர்பவர்
குடியின் மெலிவொடும் இருமையின் இழிவொடு குழைய அழுகுவர் கலுழுவர் மடிபவர்
படியின் அனையவர் உதவிய நலம் மலி பரவை இவள் என மொழிகுவர் சிலருமே

#68
ஒளி கொள் உலகமும் முதலிய உள பல உலகு பொது அற அனையவும் நடவிய
அளி கொள் அதிபதி-தனை மகவு என அணி அரிய கருவுடன் உலகு இடர் எரி அற
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள்
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே

#69
ஒருவர் கவரிகள் இடஇட அணுகுவர் ஒருவர் கவிகைகள் எழ எழ மருகுவர்
ஒருவர் பணிவிடை முடிதர விழைகுவர் ஒருவர் இறையவன் விடை மொழி கொணர்குவர்
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர் ஒருவர் அதிசயம் உறி இனிது உருகுவர்
ஒருவர் புகழிட நிகர்_இல மெலிகுவர் ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே

#70
பருதி உடை உடை நலம் மிக அருள் உடை பரமன் அதிபதி ஒரு கரு உடையவள்
சுருதி மொழி எழ எனது இறையவன் இவை தொகுதி அற அளவு அற இடும் அளவையில்
இருதி அற எனது அற அறிவு இசைதர இனி அடியனளும் என முயல்வது என உள்
கருதி நசையொடு கருதிய உணர்வுகள் கனிய உணர்தலில் அமரர் உள் உயருவார்

#71
அயமும் வழுவையும் இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்_இல மெலி தர
வயமும் இருமையும் அறிவொடு கருணையும் மருவும் இறையவன் ஒரு சிறு மனை-இடை
நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும் நடவும் அளவையும் இது எனில் வடுவொடு
கயமும் நடலையும் மலி புவி அருளொடு கனிய அது பொழுது உயர் கதி நிகருமே

#72
இற்றை எலாமும் இயற்றிய காலை இனத்து இயலா நயம் ஆய்
மற்றை எலாமும் மனத்தின் உசாவும் மலர் திரு வாகையினான்
கற்றை உலாவு பளிக்கு உரு வாமம் மிக கதிர் வீசி உருள்
ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே

#73
வென்னை விரித்திடு கூளி நடுக்கிய வேத மொழி திறலோன்
பொன்னை விரித்து அதன் மீது புதைத்த மின் மாலை இறுத்திய போல்
கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர் கோலம் உடுத்து எனை ஆள்
அன்னை விரித்த நிலா உண அ திறல் நானும் விரித்தனன்-ஆல்

#74
ஓசை எழுந்து அகல் ஓலம் எறிந்தன வாரி உடன்றல் எனா
ஆசை எழுந்தன ஓகை அடங்கு இலதாய் அலர் தன் கொடி போல்
பூசை எழுந்த நறா மது அம் புகழ் பூசல் தரும் படியே
சூசை எழுந்து உயர் நாயகி தன் துதி தூவி அறைந்தனன்-ஆல்

#75
நீ ஒரு தாய் ஒரு தாதையும் நீ உயிர் நீ எவை ஆகிலும் நீ
நீய் கனிவு ஆர் கடல் நீ ஒளி ஆர் சுடர் நீ அருள் ஆர் முகில் நீ
நீ இறையோன் எழும் ஆசனம் நீ நெறி வேதம் வழா நெறி நீ
நீய் முகிழாத நறா மலர் நீ நிறை நூல் நிகரா உரு நீ

#76
ஏர் அணியே இதயத்தில் இருந்து எனை ஆள் உடை ஆனவளே
சீர் அணியே மதி வெண் குடையே திரு மாரி விடும் புயலே
ஆரணியே கருணாகரியே உயிர் யாவும் அளித்த அமுது ஆர்
வாரணியே தனி நாயகியே நனி வாழுதி வாழுதியே

#77
வாழி அனந்த தயாபரனுக்கு உரி வாய்ந்த அருள் தாய் அவளே
வாழி விசும்பு-இடை வாழ் உயர் உம்பரின் வாம இராக்கினியே
வாழி முகிண்டு இல பூ அனை கன்னிய மாதரை ஆள் அரசே
வாழி அழுந்து அருளே மறையே அறனே நனி வாழுதியே

#78
என்றனன் என்று புகழ்ந்து புகழ்ந்து இவை எண்ணி மகிழ்ந்தன-கால்
நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ
சென்ற பிரான் முகமே மறையாது தெளிந்து உயர் கண்டனனே

#79
மேவு அரு மீ வரும் மாணொடு வேய்ந்த பிதா_சுதன் நேயன் எனும்
மூவரும் ஓர் நிகராத பராபரம் ஆம் முதலோன் முயல் ஓர்
தாவு அரு மா முறையால் மறையாது உரு ஏந்து தயாபம் எழா
ஆவு அரு மா தவன் ஈது உயர் காண் அளவு ஆம் நயன் ஓர் அளவோ

#80
செகத்து இயலாத சிறப்பு எழு நாயகியை செக நாயகனே
அகத்து இயலாத அருள் கொடு நோக்கி அருத்தியொடு ஏவியதால்
முகத்து இயலாத நயத்து நிலா உரு முற்றிய வானவர் சூழ்
நகத்து இயலாத மணி கலன் ஆர நயத்தொடு சூட்டினரே

#81
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர்
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம்
மின் உயிர் ஆகிய சென்னியின் மீது ஒரு மின்_முடி சூடினனே

#82
முழுது உணர்ந்து அருள் முற்றிய மா முனி
பழுது உணர்ந்த பனிப்பு அற இற்றை அ
பொழுது உணர்ந்தமையால் புகல் அற்று இனிது
அழுது உணர்ந்தவை ஆர் அறைவார் அரோ

#83
ஈது யாவும் உணர்ந்து இதயத்து எழும்
போது யாவும் புரந்திட நாயகன்
கோது யாவும் துடைத்து இவண் கொண்ட மெய்
நீதி யாவும் நிறைந்தவன் கண்டு உளான்

#84
பளிங்கு மஞ்சிகத்து ஊடு உறை பால் மணி
வெளிக்கு மஞ்சு அற வேய்ந்தது போல் உலகு
அளிக்கும் நாதன் அமைத்த மெய் தாய் வயிற்று
ஒளிக்குள் மா தவன் ஓர்ந்து கண்டான் அரோ

#85
கஞ்சமோ விரை கஞ்சம் உள் முத்தமோ
விஞ்சு பால் மதியோ விரி செம்_சுடர்
எஞ்சு பான் இயல்போ எனவோ வளன்
நெஞ்சு வாழ்குப காண் உடல் நீர்மையே

#86
கண்ட நாயகன் கண் ஒழுகும் கதிர்
உண்ட மா தவன் ஒள் ஒளி உண்டது ஓர்
சண்ட தூய பளிங்கு உயர் தாணு எனா
விண்ட வான் ஒளி வெம் சுடர் வெல்லும்-ஆல்

#87
சீர்த்த பூம் கொடியோன் திரு நாதனை
பார்த்த வேலையில் பார்த்தனன் நாயகன்
நேர்த்த ஆசையின் கண் எதிர்ப்பட்டு எழும்
கூர்த்த ஆர்வமும் கூறுதல் ஆம்-கொலோ

#88
தண் அம் தாமரை தாது அவிழ சுடர்
கண் அங்கு ஆம் கதிரால் கனி பார்த்து எனா
விண் அம் காவலன் பார்த்து விழைந்து உளத்து
எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான்

#89
விண்ட பூம் கொடி தந்த விருப்புடன்
உண்ட மா மணத்து உன் துணை பூம் கொடி
கொண்ட மாட்சி குணிக்க அரும் காட்சியால்
கண்டது ஆம் மறை காட்டிய மாண்பினோய்

#90
இன்ன தன்மையினாட்கு இவண் நீ துணை
துன்னு தன்மையினால் அருள் சூழ்ந்து உனக்கு
உன்னு தன்மையினால் உணரா வரம்
மன்னு தன்மையினால் வகுத்தோன் அரோ

#91
கருவி ஒன்று இல கன்னி பயந்தினும்
மருவி என்னை வளர்க்கும் கை_தாதையாய்
பொருவு_இல் நன்றி புணர்ந்திட நான் உனை
துருவினேன் என சூழ்ந்து ஒழுகு என்றனன்

#92
சொரிய மாரி துறும் தொனி வெள்ளம் ஆய்
பெரிய ஆர்கலி மேல் புரண்டால் எனா
அரிய மா தவற்கு ஆதி வளர்ப்பதற்கு
உரிய மா வரம் உற்று உளம் கூர்ந்ததே

#93
அண்ணற்கு இங்கண் அமைந்த கை_தாதையை
கண்ணற்கு ஓங்கு கருத்தொடு போற்றி உள்
எண்ணற்கு ஏந்திய ஆசி இயம்பினார்
வண்ண பூ மழை வானவர் வாரியே

#94
சிறை படும் கனல் சிக்கென வாய் கிழித்து
உறை படும் ககனத்து எழ ஓங்கல் போல்
அற படும் தவன் அன்பு மிகுந்து உயிர்
புற படும் பரன் போதல் இருத்து இலால்

#95
இருத்தி வாழ் உயிர் ஏவி உள் தூண்டிய
அருத்தியால் இளவல் பதத்து அர்ச்சனை
திருத்தி வீழ்ந்தனன் சென்னி நிலம் பட
கருத்தில் ஆர்ந்த மறை கொழுகொம்பினான்

#96
வீழ்ந்த ஆசையின் மீண்டு எழுந்தான் அருள்
ஆழ்ந்த காட்சி ஒன்று இன்றியும் அண்டையில்
தாழ்ந்த காந்தையை கண்ட தவத்தினோன்
சூழ்ந்த யாவையும் சூழ்ந்து உளத்து ஓங்கினான்
மேல்

@9 மகிழ் வினைப் படலம்


#1
இன்ன யாவையும் உளத்து எண்ணி எண்ணிய நிலைக்கு
உன்னலால் உளம் உயர்ந்து இன்பு அறாது உருகுவான்
பன்னலால் அடைவு_அரும் பண்பு அடைந்து உயரினாள்
துன்னலால் அடை நயன் சூழ்ந்த மா தவ நலோன்

#2
முந்தை ஆம் முதலினோன் மூ இடத்து ஒருவன் ஆய்
தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம்
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா
சிந்தையால் உருகி மீண்டு ஆய்ந்த சொல் செப்பினான்

#3
வானும் நேராது மாறா வரத்து ஓங்கி வான்
மீனும் நேராது மெல் ஆக்கை கண்டு ஏந்தி ஊர்
தேனும் நேராது தேர் தீம் சொலை செப்பவே
நானும் நேர் ஆகி நாணாது கேட்பேன்-கொலோ

#4
வேதமே வேடமாய் வேய்ந்த மா தவர் எலாம்
ஏதமே தீர்க்குவான் ஈங்கு நாடிய பிரான்
பாதமே பாவி நான் பார்க்கவும் தலையின் என்
கேதமே தீர மேல் சூடவும் கெழுமுமோ

#5
நீர் உலாம் உலகினோர் நீண்ட செம் கதிரவன்
தேர் உலாம் உலகினோர் சேர்ந்து போற்றிய நிலா
ஏர் உலாம் அடியினாள் எய்தி எய்திய நலம்
சீர் உலாம் அடியினால் தீம் சொலார் அடைவரோ

#6
மேலின் ஆர் வாசமே வீசு பூ விள்ளும் ஓர்
கோலினால் வந்த கோடாத பூம் கொடியை என்
பாலின் நான் எய்தலால் பான் உலாம் நாடரே
ஏலினால் மேவு சீர் ஆயது என்று எண்ணுவான்

#7
மாட்சியால் ஓங்கு பூ வாகையான் எண்_அரும்
காட்சியால் ஓங்கி முன் கண்ட யாவும் தரும்
சூட்சியால் ஓங்கு தன் தூய மா தேவியை
தாட்சியால் ஓங்கு உளத்து ஓர்ந்ததே சாற்றுவான்

#8
தூய் உலாம் இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும்
சேய் உலாம் பான் உலாம் சீர் உலாம் தேகமும்
மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும்
ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்சியாய்

#9
நீர் அளாம் புணரி சூழ் நீண்ட பார் உலகமும்
கார் அளாம் கதிர் அளாம் காய வான் உலகமும்
சீர் அளாம் கருவி இல்லாது செய்தன விதத்து
ஏர் அளாம் முறைமை ஈங்கு இன்று கண்டனன் யான்

#10
ஈறு இலா செகம் எலாம் ஏத்தும் ஓர் இறையவன்
மாறு இலா தயையினால் வந்து காரணம் இலா
பேறு இலா தகவு இலா பேதையாம் எனை உன்னால்
தாறு இலா திரு உற தான் தெரிந்தனன் இதோ

#11
வானகத்து உற்று நின்றோர் வணங்கு உன் வளம்
யான் அகத்து உற்றிலன் ஏவல் கொண்டேன் நினை
தேன் அகத்து உற்ற அருள் சீர்மையான் நீ பொறுத்து
ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே

#12
தாயும் நீ தலைவி நீ தாழ்வு இலா தயவு எலாம்
ஈயும் நீ பரியும் நீ இட்ட என் குறை எலாம்
தேயும் நீ கருணை ஆம் சேயொடு அன்பு அலையினுள்
தோயும் நீ எனையும் நீ ஆள் எனா தொழுது உளான்

#13
பற்று அறுத்து உள் திறல் பற்று அருள் பொற்பினான்
சொற்றல் உற்றிட்ட அ சொல் செவி பட்ட போது
உற்ற அழல் பட்டது ஒத்து உள் திகைத்து ஒப்பு இலாது
உற்று அகத்துள் தக சொக்கினாள் சொற்றுவாள்

#14
தொழுதேல் தொழுதேல் இறைவன் தொழுதால் நன்று என்றாலும்
பழுதே தவிர் சூல் பயனால் பரமன் என்னோடு ஒன்று ஆம்
பொழுதே தொழுதால் எனக்கே புரி ஓர் பணிவு ஆம் என்னா
அழுதே அழுதே தொழுதாள் அமரர்க்கு அரசாள் என்பாள்

#15
பைம் தாள் உயர் தாமரை போல் பிறை மேல் படி பொன் பதத்தாள்
நொந்தாள் என்னா தானும் நொந்து ஆம் என்றான் என்றால்
செம் தாள் நோக பணி நீ செய்யாது அடியேன் முடிப்ப
தந்து ஆள்பவே தயை செய்து அருள்வாய் என்றான் முனிவன்

#16
துன்று ஆய பணி தொழில் என் தொழிலே என்றாள் அவளும்
என்று ஆய் எளிமை தகவு எய்துதற்கே இருவர்-தம்மில்
பின்றா முறையால் இசலி பெரிது உம்பரும் உள் வியப்ப
சென்று ஆய பணி தொழிலை செய முன்னுவர் அ சான்றோர்

#17
வீழ் வாரியினால் குழி நீர் வீயாது உறைகின்று என்னா
சூழ்வார் இல்லால் தொடர் தீது அறியாது ஆள்வார் அல்லால்
வாழ்வார் இல்லை என்பார் மாணா மண்ணோர் மனத்தில்
தாழ்வார் உயர்வார் என இ தக்கார் தண்மை விழைவார்

#18
காயா மரமே அல்லால் காய்த்த சினைகள் நிறுவா
தீயார் செல்வத்து அல்லால் தெருளோர் செருக்கு எய்துவரோ
பாயா நெகிழும் பணியாதன வில் பணித்த சரமே
வீயாது உயரும் வளி நேர் வெகுளா வளையும் தருவே

#19
சால் ஓர் பொருளால் நிறை பொன் கலமே தரும் ஓர் தொனியோ
நூலோர் இயக்கம் பேசார் நுண் மாண் நுழைகின்ற அறம் கொள்
மேலோர் உகப்பே மேவார் மேவார் தொடர் தம் நிழலை
போல் ஓர் இடத்தும் தேடா பொழுதே தொடரும் புகழே

#20
ஈதே மறை_நூல் என்னா அறைதற்கு இறையோன் வந்த அ
போதே எளிமை புணர கண்டு அ தணிவில் பொலிவோர்
கோதே கொணர் ஆள் வினையை குணியா குனி தாழ் வினையே
நீதே என அ நெறி நின்று ஒழுகற்கு இசலா நின்றார்

#21
பல் நாட்கு ஒரு நாள் மனையாள் மனையை பரிவாய் விளக்க
முன் நாட்கு இணையா முனிவோன் கண்டே முதலோன் சூல் கொள்
அன்னாட்கு இதுவே முறையோ என்றான் அவளும் முறை ஈது
இன்னாட்கு இறை ஆம் நினக்கோ என அ தொழிலை முயன்றாள்

#22
உனதே எனதே இல்லாது இல்லில் ஒரு நாள் பணி-பால்
தனதே என மா தவனே செய்தான் தவறாது இ நன்று
எனதே என்றாள் அமரர்க்கு அரசாள் இது நன்று என்றால்
நினதே என்பாய்-கொல்லோ நிருபற்கு இது என்று உழைத்தான்

#23
வண்டு ஆயிரம் செம்_சுடர் தோன்றிய முன் வந்தே கமல
தண் தாதினை தாம் குடைந்து ஊறிய தேன் உண்ணும் தன்மைத்து
ஒண் தாது அவிழ் பூம் கொடியோன் உறங்கு இன்று அவள் தாமரை கண்
விண்டு ஆகுதல் முன் விழையும் பணியே எல்லாம் முயல்வான்

#24
முயலாது ஒன்று உண்டு என்றால் முடுகி முடிப்ப கேட்பாள்
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால்
இயலாது உனக்கு என்று மறுத்து-இடை வான் பொருள் போக்கிய-கால்
மயல் ஆம் என்னா மனம் நொந்து அழுவாள் வானோர்க்கு அரசாள்

#25
சேய் ஆய் எளிமைக்கு ஒளி ஆக்குதற்கே சென்றாய் திருவோய்
தாய் ஆய் அடியாட்கு எளிமை தகைமை வேண்டாது என்னோ
தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ
வீயா அருளே மகவே என்னா விழைவு உற்று அயர்வாள்

#26
அயர்வாள் தாயோ என்னா அன்போடு இரக்கு உற்று அம் சேய்
துயர் வாடு அகமே துன்பு அற்று அலர தூது ஏவிய ஓர்
உயர் வானவன் உற்று ஒரு நாள் வளன் அ பணியை செய்ய
பெயர்வு ஆயின கால் பிழி வாய் மலரே பிளிர சொல்வான்

#27
நுணி கொம்பினும் ஊக்கினர் நொந்து இறப்பார் அனைய ஊக்கம்
குணிக்க உம்பரும் மானிடரும் குணியா கெட்டார் என்னா
கணிக்கும் பரிசால் கடவுள் மனுவாய் எளிமை காட்ட
தணிக்கும் பரிசால் தாய் தண் தொழில் செய்யாதால் தகவோ

#28
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ்
கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும் கருணை
வல் ஆரிய மா மடவாள் வருந்தும் துயரம் கண்டும்
வில் ஆர் அறிவோய் விழையும் தொழிலை விடல் ஆகாதோ

#29
இன்பால் வான் ஏத்து இவளை நீ ஏற்றுதல் நன்று அன்றோ
அன்பால் விழை தண் தொழிலை அன்னாள் அரிது ஆற்றிடலே
தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல்
உன்-பால் என ஆண்டகை ஏவினன் என்று உரைசெய்து ஒளிந்தான்

#30
மீ ஏவியது ஓர் விதி மேல் விதி ஒன்று உண்டோ இறைவா
நீ ஏவியதே நான் மேவிய நீதி என தொழுதே
போய் ஏவியதை புகழ் மேல் நின்றாட்கு உரைசெய்தனன்-ஆல்
வாய் ஏவிய பா நிகரா மறைக்கு ஓர் கொழுகொம்பு அன்னான்

#31
இப்பால் ஏது ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினனாய்
முப்பால் ஒன்று ஆம் முந்தைக்கு உரி மாண் முறையோடு அருகு உற்று
ஒப்பால் அடையா இ பண்பு உடையோர் உடை இ எளிமைக்கு
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ

#32
நீர் கணம் குழி நேடிய நீர்மையால்
சீர்க்கு அணங்கு எளிமை துணை தேடினர்
கார்க்கு அணங்கு உறை கான்றலும் போல் அறத்து
ஏர்க்கு அணங்கு எனும் ஈகை இயற்றினார்

#33
மறுமை நாடி வழங்கிய அன்பொடு
நறுமை நாடிய வான் கொடை நல்கலின்
சிறுமை நாடிய பற்று அற தீர்த்திட
வெறுமை நாடினர் நாடு அரு மேன்மையார்

#34
வீட்டு நன்மை விளை நிலம் ஆம் இலோர்
நீட்டு தம் கரம் என்று நினைத்து அருள்
மாட்டு வித்து என வந்து இரப்பார் கரத்து
ஈட்டு வான் பொருள் எண்_இலது ஆம் அரோ

#35
ஈந்து தாமும் இல்லார் என ஆய பின்
காய்ந்து தீந்த குளம் கடி தோண்டு எனா
தோய்ந்து உலாம் அருளால் தொழில் செய்து உயிர்
வாய்ந்து வாழவும் ஈகை வழங்குவார்

#36
உழுது உண்பார் உயிர் வாழ்பவர் மற்று எலாம்
தொழுது உண்பார் எனில் தாம் தொழில் செய்த பின்
அழுது உண்பார் கொடை கோடல் இல் ஆயின
பொழுது உண்பாரில் யார் என பூசவே

#37
அந்த நுண் தொழில் ஆம் என கொள்பவர்
தந்தது ஒன்றினை தாமும் நிறை குறை
வந்தது என்று இலர் வாழ்த்தி கொண்டு அய்யமாய்
சிந்தவும் புயல் செம் கையில் கொள்ளுவார்

#38
நாக்கு அணங்கு கனிந்து நவின்ற சொல்
நோக்கு அணங்கு கண்ணோட்டம் நொதுத்த கை
ஊக்கு அணங்கு இடும் தானம் என்று உள்ளுவார்
கோக்கு அணம் கொடு ஓங்கு குலத்தினார்

#39
மங்குல் முட்டிய மாடம் எவன் செயும்
கங்குல் முற்றிய கையரை கொண்டதேல்
சங்கு உள் முத்து என புன் மனை தாம் உறைந்து
எங்கும் முற்றிய மாண்பு இவர் ஏந்தினார்

#40
அங்க மண் கலம் தீட்டுவர் ஆ எனா
பொங்கு அகத்தை கவர் வலை போன்ற பூண்
செம் கலத்து இனம் தீது என நீத்து அருள்
தங்க முற்று எளி வேடம் தரித்து உளார்

#41
பானு உடை கொடு பால் மதி பாவலும்
மீன் உடை குடமும் தனில் வேய்ந்த பின்
கான் உடை தொடையோ கலனோ தகா
வான் உடை தளம் வாழ்த்து அரசாட்கு அரோ

#42
வான் பொழிந்த இன்பு எய்து இலர் மண்-இடை
தேன் பொழிந்தவை இன்பு என தேடுவார்
கான் பொழிந்த கனி கடு பாய்ந்த பின்
ஊன் பொழிந்த உடற்கு இனிது ஏது என்பார்

#43
என்று தம் பசி மாற்றிட உண்கிலர்
பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர்-ஆல்
பின்று தம் இறையோன் பெரிது ஊட்டியது
ஒன்று தம் உளத்து உண்டு இனிது ஓங்குவார்

#44
புவி அருந்திய புன் மிடி ஊங்கு எழ
செவி அருந்திய கேள்வியார் தே அருள்
அவி அருந்தல் அல்லாது அருந்த ஒன்று இலா
நவி அருந்திய நல் உடல் வாடும்-ஆல்

#45
சிந்தை தேறிய தேறல் செய் வாகையான்
முந்தை ஆய எலீய முனிக்கு உணா
தந்தை காகை கொடு ஈந்தன தன்மையால்
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான் என்றான்

#46
உரை செயும் பொழுது ஒப்பு இல பாடிய
நிரை செயும் பல புள் நெடு நாள் உறீஇ
விரை செயும் கனி ஈந்து விருந்து எனா
கரை செயும் கடை அற்று இனிது உண்பர்-ஆல்

#47
ஏம் அகத்து அருள் நாயகன் ஏவியும்
சேம் அகத்து அருள் தேறு நல்லோர் பல
யாம் அகத்தில் நினைத்து இலது இன்ன மா
கோ மகர்க்கு விருந்து எதிர் கொள்வர்-ஆல்

#48
கொண்ட யாவையும் கொண்டு இறை வாழ்த்தி முன்
பண்ட நாள் சிறைப்பட்டு உறை தானியல்
கண்ட மேலவன் ஆங்கு உழவன் கொடு
மண்டு உணா கொணர் மாண்பு இது எனா உண்டார்

#49
பின்னை ஒன்று இல பிற்பகல் பேர் எழில்
அன்னையின் திரு ஆனனம் வாடல் காண்
தன்னை உன்னு இல மா தவன் நொந்து மீன்
மின்னை வென்ற கண் விண்டு உறை வென்றதே

#50
மன்ன நம் மணம் வாய்ந்து முடிப்ப முன்
பொன்ன நின் கொடி பூத்தது தந்த பின்
உன்ன_அரும் சுவை ஒன்று இலது ஈதலும்
அன்ன வண் தயையோற்கு அரிதோ என்றாள்

#51
என்னலோடு ஒரு காரணம் இன்றியும்
கன்னலோ மதுவோ கனி தன்மையோ
மின்னல் ஓடிய பொன் கலம் மீது ஒரு
பன்னலோடு அடையா பயன் கண்டு உளார்

#52
இற்றை ஓர்ந்த இல்லோர் உவந்து ஓங்கவே
மற்றை ஓர் பகல் மாந்திட ஒன்று இலர்
கற்றை ஓர் பிழம்பு உற்ற உரு காட்டி வான்
உற்றையோர் உணவு உய்த்து வழங்கினார்

#53
எண்ணம் தீர்ந்த எழில் கொடு வெண் நிலா
வண்ணம் தீர்ந்து ஒளிர் மாறுகத்து உம்பர் சூழ்
தண் அம் தீம் புனல் ஆடு அலர் தண் தொடை
சுண்ணம் தோய்ந்து உரம் தூங்குபு தோன்றினார்

#54
துகிலில் தோய் உரம் தோய் அணி தோன்றவே
அகிலில் தோய் துகில் வாடையோடு ஆட விண்
முகிலில் தோய் வரை மொய் புயம் ஓங்க நான்
புகலின் தோய் நயத்து ஓர் பொருவு ஒத்ததோ

#55
புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு மின்
எரிந்த மீனொடு தேன் இழி பூம் துகள்
விரிந்த வானி விரித்து உயர் வாசனை
சொரிந்த நீர் புனல் தூற்றி வழங்கினார்

#56
கான் சொரிந்த கனி பட பாலொடு
தேன் சொரிந்த சுவைப்பட சேண்உளோர்
வான் சொரிந்த மது கொடு பல் உணா
மீன் சொரிந்த வெயில் கலத்து ஈட்டினார்

#57
கண் கொடு உண்ட களிப்பினும் ஏழு இசை
பண் கொடு உண்ட செவி பயன் பாடு எனா
எண் கொடு உண்டு அளவு எல்லை_இல் தேவ பல்
உண் கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ

#58
எல்லும் செல்லா ஒள் ஒளி ஏந்து ஓர் எழில் உண்டு ஆய்
செல்லும் செல்லா விண் உறைகின்றோர் சிறிது ஆங்கு ஓர்
இல்லும் செல்லா நின்றன தன்மைத்து இவர்-தம்-பால்
சொல்லும் செல்லா உள்நயம் உண்டே தொழுது உண்டார்

#59
அள்ளும் தன்மைத்து ஆர்ந்த ஒளி வானோர் அரிது என் பா
கொள்ளும் தன்மைத்து இன் இசை பாட குளிர் தன் கோல்
விள்ளும் தன்மைத்து ஊறிய தேன் போல் வினை எல்லாம்
உள்ளும் தன்மைத்து ஒண் கொடி கொண்டான் உரை கொண்டான்

#60
பின்றா வல்லோய் பேணிய அன்போய் பிரிவு இன்றி
ஒன்றாய் நின்றோய் ஈங்கு உயிர் எல்லாம் உணவு ஈய்ந்தோய்
குன்றா அன்பால் நம்பின யார் யார் குறை உண்டோம்
என்றார் உண்டோ என் உயிர் மாறாது இனிது ஆள்வோய்

#61
வல்லார் உண்டோ உன்னை அலாது உன் வலம் நம்பி
இல்லார் உண்டோ உண்டிலர் உண்டோ இவை இங்கண்
கல்லார் உண்டோ கண்டவை எண்ணி கரவாதேல்
சொல்லார் உண்டோ உன் அருள் வாழ்த்தும் தொடை மிக்கோய்

#62
நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன்
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம்
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி
தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய்

#63
காய் கான் செல் என் முந்தையர் உண்_நீர் கனிவு இல்லா
நோய் கான்று ஈட்டும் தாகம் அவித்தே நுகர்வு எய்த
தீய் கால் கல்லே தீம் புனல் கால திரிவார் தம்
வாய் கான் எல்லாம் பின் செல அ கல் மலிவு உண்டார்

#64
அன்னார் அ நாள் அ வனவாய் வந்து அமுது இன்றி
பல் நாள் தன்னால் உள்ளிய இன்பம் பல ஈந்த ஓர்
உன்னா நுண் மா தே அவி தந்து ஆங்கு ஒரு கோடி
இன்னா துன் நோய் ஒன்று இல வாழ்ந்தே இனிது உண்டார்

#65
மாண்ட ஓர் முனியே கான் வழி உண்ணா மயல் உற்றான்
ஆண்டு ஓர் அமரன் தந்த ஓர் பிண்டம் அயில்கின்றான்
நீண்ட ஓர் வழியே நாற்பது நாள் போய் நிகர் அற்றான்
மீண்டு ஓர் பசி தோன்றாது உயர் குன்றின் மிசை சென்றான்

#66
கறித்து உண் பைம்புல் ஒன்று இல காய்தல் கருதி கார்
மறித்து உண்ணாது எண்ணா உயிர் மாழ்ந்தே மருள் எல்லாம்
செறித்து உண் அன்று ஆர் யோகி அவற்கே திளை பல் நாள்
பறித்து உண் காகம் தான் உணவு ஈய பரிவு ஈந்தோய்

#67
நின்னால் ஆம் ஓர் நன்றது வெள்ளம் நெடிது எண்ணல்
என்னால் ஆமோ என் உயிர் வேந்தே இயல் தம் கை
தன்னால் ஆம் ஓர் புன் தொழில் சார்பு என்றவர் வாழாது
உன்னால் ஆம் ஓர் நல் துணை ஓர்ந்தார் உயிர் வாழ்வார்

#68
குற்றம் தேடேன் கோல் குடை என்னும் குறை தேடேன்
சுற்றம் தேடேன் சூழ்ந்து என உள்ளம் சுடு அம் பொன்
பெற்றம் தேடேன் நம்பிய இம்மை பெரிது உய்க்கும்
அற்றம் தேடேன் தேடுவன் நீ செய் அருள் என்றான்

#69
என்றான் மென் தாது ஓங்கிய கோலான் இவை கேட்டு ஆங்கு
ஒன்றா நின்றார் வான் சபை உள்ளா உணர்வு உள்ளி
குன்றா மென் தாது ஊறிய தீம் தேன் கொடு பைம் பூ
பொன்றா அன்பால் விண் மழை போல பொழிகின்றார்

#70
மாண் அ கால் அ புன் மனை வானோர் மனை ஒப்ப
பேண் அ காலத்து ஒள் ஒளி பெற்ற பெரிது என்னா
காண் அ காலத்து ஆக்கை சிவந்தே கடல் அம் கீழ்
நாண் அ காலத்து ஆழ் முழுகிற்றே நனி வெய்யோன்

#71
மா இரு ஞாலம் மூடு மாசு இரா அற வில் வீசி
பாய் இரு சுடரோடு ஒத்தார் பகல் இரா இல வானோர்க்கு ஒன்று
ஆய் இருவரும் உள் ஓங்கி அமரர் சூழ் பணிந்து நிற்ப
காய் இரு விசும்பின் மாட்சி காட்டிய மனை அது அன்றோ

#72
சூல் முகத்து எரிந்த மேகம் சுடர்ந்து இருள் அற சூழ் மின்னும்
போல் முகத்து இறைவன் தன்னை புதல்வனாய் கருப்பம் பூண்டாள்
தான் முக திரு வில் வீசும் தகுதியால் தெளிந்த ஓதி
நூல் முகத்து உமிழ்ந்து தீம் தேன் நுகர்ந்த வாய் மலர்ந்து சொல்வாள்

#73
கார் எழும் ககனத்து ஊர்ந்த கதிர் பல உதித்தல் தந்தே
ஏர் எழும் மணியும் பூவும் இனிய தீம் கனியும் மற்ற
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த
பேர் எழும் கருணையானே பின்னையும் தன்னை தந்தான்

#74
நூல் நெறி வழங்கா வண்ணம் நுதலிய கருணை சால்பில்
சூல் நெறி நர_தேவு ஆகி தோன்றிய பின்னர் எந்தை
பால் நெறி பெருகும் இன்ப பரவை நாம் மூழ்கல் தந்து
வான் நெறி வழங்கும் தன்மை மண்-இடை வழங்கான்-கொல்லோ

#75
கோல நல் படலை பைம் பூ கூர் உகிர் விசித்த மாலை
சால நல் கதிர் பொன் பற்றும் தட மணி படலை மற்ற
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து இ
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான்

#76
பூட்டிய புணர்ச்சி பாலால் புணர் இரு துவங்கள் வேற்று ஆய்
கூட்டிய ஒருவன் ஆய குணத்தவன் மனுவும் என்பான்
ஈட்டிய நலங்கள் குன்றா இறைவனும் என்பான் இ-வாய்
சூட்டிய கருணை நல் நூல் துறை வலோர் அடையும் பாலோ

#77
நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து நஞ்சு நல் அமிர்தம் ஆமோ
விஞ்சு அவிர் பொன்னில் சீருள் விசித்து இது பசும்பொன் ஆமோ
நெஞ்சு அவிர் கருணை பூண்ட நிமலன் தன் குணமும் குன்றா
எஞ்சு அழி மனுவின் தன்மை இறைமையோடு உயர்த்தினானே

#78
கீழ்வரே சேர்ந்த மேலோர் கீழ்மையே மாறி தாமும்
தாழ்வரே அன்றி தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ
வாழ்வரே இறைவற்கு ஒத்த வளமையும் உணர்வும் பண்பும்
சூழ்வரே பரமன் நல் தாள் தொழுது அருகு உவப்பின் சேர்ந்தார்

#79
புரு வளர் கதிர்கள் கோலால் பொறித்தது ஓர் படத்தின் சாயல்
மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும்
உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன்
திரு வளர் தயையின் சார்பு சீர் எலாம் பயக்கும் அன்றோ

#80
மெய் விளை இடம் ஐந்து இன்றி விளங்கிய கடவுள் ஆகி
பொய் விளை பொறிகள் அட்டு புரை விளை நசையும் அட்டு
துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி
ஐ விளை உணர்வோர் அல்லால் அனந்தன் நல் பாதம் சேரார்

#81
செரு வழி பொறிகள் ஐந்தும் செகுத்து தன் நிலையில் ஊக்கல்
அரு வழி என்று தானே அம் கண் வான் இறங்கி பாரில்
கரு வழி வந்த நாதன் கலை முதிர் சுருதி காட்ட
உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே

#82
கோள் நெறி கடந்த ஞானம் கூறி எம் உயிர்கள் வாழ
வாள் நெறி கடந்த புண் போல் வருந்தல் நிற்கு இனிதோ அன்பால்
பாண் நெறி கடந்தோய் எம்மால் பயன் உனக்கு ஈங்கு ஒன்று உண்டோ
சேண் நெறி கடந்து நம்மை தேடி வந்து உளைவாய் என்றாள்

#83
தேன் உரு கோதை ஒத்தாள் செப்பிய கனிந்த தீம் சொல்
கான் உரு கொடியோன் சால களிப்புற செவியின் மாந்தி
ஊன் உரு கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி
மீன் உரு கொடு வில் வீச வேத நல் திலதம் ஒத்தார்

#84
இன்ன அரு நிலைமையோடு இரவு எலாம் இனிது
உன்ன_அரும் உவகையோடு உணர்ந்த ஓதியால்
துன்ன_அரும் அருள் புரி சுதனை வாழ்த்தலின்
பன்ன_அரு மகிழ் வினை பயத்தது ஆம் அரோ

#85
உள் நிலா உரை வழி உகுத்த பான்மையால்
தெண் நிலா அடியினாள் செப்பும் சொல் விழைந்து
எண்_இலா வரத்தவன் எண்_இலா முறை
அண்ணி ஆய் அவள் உறை அரங்குள் ஏகுவான்

#86
விரை செயும் கொடியினான் நுழை பல் வேலை தேன்
உரை செயும் மடந்தை வான் உயர் நின்று ஒள் ஒளி
வரை செயும் அளவு அற வழங்கல் காண்டலும்
கரை செயும் கடலினும் களிப்புற்று ஓங்குவான்

#87
தேனின் ஆர் மடி என திங்கள் தெண் சுடர்
பால் நிலா சகோரமே பருகினால் எனா
வான் நிலா எழுந்த தாள் மடந்தை கால் கதிர்
மீன் நிலாவு இரு விழி மேய்ந்து உள் தேறுவான்

#88
பேர் உயிர் துணை உடல் பெயர்ந்து வான் மிசை
ஏர் உயிர்த்து இரவி போல் எறிந்த வில் திரள்
நேர் உயிர்த்து அனலி முன் பளிங்கு நேர் முகத்து
ஆருயிர் தோழனும் அலங்கி தோன்றினான்

#89
சடம் கொடு விண் உறை தளங்கள் தாழ்தலும்
கடம் கொடு பல்லியம் கறங்கி பாடலும்
இடம் கொடு சூழ்தலும் கண்டுளி இன்பு அலை
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான்

#90
கண் குடித்தன ஒளி கிளர்த்த காட்சியான்
எண் குடித்து உவந்த கண் இமைப்பு இலாமையும்
வண் கொடி துணர் அலர் வாடு இலாமையும்
விண் குடி தகைமையால் விளங்கி தோன்றினான்

#91
இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள்
தன் நிழல் ஒடுங்க நான் தகு மணத்து-இடை
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான்
மின் நிழலுடன் புனல் விளைக்கும் கண்ணினான்

#92
உன்னிய உவகையோடு உருகி இன்பு அறா
மின்னிய முகில் துளி விட்டு எனா மிளிர்
கன்னிய விழி மழை கான்று கான்று உயர்
துன்னிய புய மலை துளங்க தோன்றினான்

#93
மன் என மணத்து-இடை அமைந்த மாது போய்
மின் என மிளிர்ந்து உயர் மேவி மீள்கு இலா
தன் என விசும்பு உறின் இவள் தணந்து நான்
பின் என செய்வது என்று உளத்தில் பேணினான்

#94
உந்து தேர் என நசை உகப்பில் ஏறினள்
நொந்து தேர் அரும் புவி இடுக்கண் நூக்கு சூல்
நந்து தேறிய நயன் நல்க மீட்டு இவண்
வந்து தேறுவள் என மனத்தில் தேறினான்

#95
இ திறத்து உணர்ந்த காலத்து எந்தை தன் கருணை வீர
மொய் திறத்து அவிர் தன் தாளின் முழுது உற விசித்த கோதை
மெய் திறத்து எறிந்த கற்றை விலகி நீத்து இறங்கினாள் என்று
அ திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்து சொல்வான்

#96
கடம் புகும் தேறலை சூல் கொள் கண்ணி போல்
தடம் புகும் கடவுளை தாங்கும் பீடமே
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு நின்
புடம் புகும் தமியனே புரிவது ஓதுவாய்

#97
கையினால் உரை செய கேட்ப கண்களால்
மொய்யினால் அலைவு கொள் சிந்தை மூகை போல்
மெய்யினால் அமைந்த பின் விமலன் செய் அருள்
மையினால் உணர்கு இலா மருள்கின்றேன் அரோ

#98
கொம்பு அயில் கொடி என கொடியில் என
கம்பு அயில் முத்து என மலருள் கள் என
அம் பயில் உன் வயிற்று அமலன் ஆய பின்
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம்-கொலோ

#99
மொய் அகத்து இரட்டும் நீர் முடுகி சூழ்ந்து அமர்
வையகத்து உறும் துயர் மடிய நாயகன்
மெய் அகத்து உதித்த போது அலரை வென்ற நின்
கை அகத்து அடியனேன் காணல் ஆம்-கொலோ

#100
ஒளி அமை பிறை நுதல் புருவத்து ஒண் சிலை
வெளி அமை உடு விழி துகிரை வெல் இதழ்
நளி அமை ஆம்பல் வாய் நளினம் நாண் முகம்
களி அமை நீர் உக காணல் ஆம்-கொலோ

#101
தண் படு மதுவொடு நறவு தாது அவிழ்
நுண் படும் அனிச்சையின் நொய்ய சீறடி
தெண் படும் மலர் இணை முத்தம் சேர்த்தி என்
கண் படு புனலினால் கழுவல் ஆம்-கொலோ

#102
வீயினின் பூளையின் நொய்ய மெய் உடை
சேயினை தொழிலினால் காய்த்த திண் கர
தே இனி அடியனென் ஏந்தல் ஆம்-கொலோ
வாயின் என் உயிர் பிரியாமை ஆகுமோ

#103
ஒளி பட உயர்ந்த பேறு ஒன்றும் இன்றியும்
வெளி பட மனு புரம் வேய்ந்த நாயகன்
நளி பட மலர் பதம் நயந்து சென்னி மேல்
அளி பட இருத்தி யான் அணிதல் ஆம்-கொலோ

#104
திருந்து பூம் சிகழிகை பூண்ட சீர் என
பொருந்து பூம் திரு உடல் போர்த்து நின் வயிற்று
இருந்து பூ-இடை அவன் பிறந்த எல்லையின்
வருந்து பூ எழ செயும் வளப்பு எவன்-கொலோ

#105
களிப்பனோ அழுவனோ கனிய தான் எனை
விளிப்பனோ சுளிப்பனோ விழைந்த வாள் முகம்
ஒளிப்பனோ தழுவிய உவப்பின் முத்தமும்
அளிப்பனோ உலகு எலாம் அளித்த நாதனே

#106
கோ முழுது இறைஞ்சிய கொற்ற கொற்றவன்
கா முழுது அளி பட கலிகை விண்டு என
பூ முழுது ஒழி நகை புரிதல் கண்டதேல்
ஓ முழுது உவந்து உளத்து உருகி ஓங்குவேன்

#107
பால் நலம் கழை நலம் பகர் யாழ் நலம்
தேன் நலம் கடந்த மென் குதலை தீம் சொலை
வான் நலம் உளம் பட செவிகள் மாந்தினேல்
யான் அலங்கு உயிர் விடல் இனியது ஆம் அரோ

#108
வளமை கொள் திறலினால் வயங்கு மாண்பினோன்
இளமை கொள் பிறை என இளவலாய் வளர்ந்து
எளிமை கொள் உணவினை எளியன் எம்மொடு
நளிமை கொள் கருணையால் நுகர்வது ஆவனோ

#109
கங்கை அம் சுழியினில் பட்ட கால் என
சங்கை அம் பெற்றியால் தவிக்கும் என் உளம்
பங்கையம் பதத்தினான் பருக நான் உழைத்து
எம் கை அம் தொழிலனுக்கு இயலும் பான்மையோ

#110
அரு வினை தொழில் உழைத்து அருந்துதீர் என
கரு வினை சாபமாய் கடவுள் ஏவினான்
பெரு வினை செய்ய நான் பிரான் உண்பான் எனில்
திரு வினை தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே

#111
துதி வளர் வரம்பு இலாது அனந்த சோபன
திதி வளர் உவப்பு எழீஇ அமரர் செய் புகழ்
விதி வளர் தகுதி மா விமலற்கு ஈங்கு உரி
பதி வளர் இருத்தியின் பயன் இல் ஆயதே

#112
தேனொடு ஏந்திய மலர் பதத்தில் சேர்த்திட
கானொடு ஏந்திய நுரை கதுவு அ பூம் துகில்
ஊனொடு ஏந்திய திரு உடலம் சாய்ந்திட
மீனொடு ஏந்திய அணை வேய்ந்து இல் ஆயதே

#113
இலங்கு ஒளி குரு மணி இணைக்கி பொன் தவழ்
அலங்கு ஒளி சாமரை அமைந்து இல் ஆயதே
விலங்கு ஒளி பரப்பு உற விரித்து நல் பகல்
துலங்கு ஒளி படம் உயர் தோன்று இல் ஆயதே

#114
தான் இழுக்குறாது எரி மதியம் தாங்கிய
மீன் இழுக்குற எரி பசும்பொன் வெற்பு எனா
வான் இழுக்குற எரி மணி சிங்காசனம்
பான் இழுக்குற எரி பாலற்கு இல்லதே

#115
மின் வளர் நவ மணி மிடைந்த போதிகை
பொன் வளர் தூண் மிசை பொருத்தி செம்_சுடரின்
வளர் இள வெயில் எறிந்த மாளிகை
கொன் வளர் நசைக்கு இணை கொண்டது இல்லதே

#116
இறைவனை அருத்தியோடு இருத்தல் ஆக நூல்
துறை வனை உணர்வினாய் பணியை சொல் எனா
அறைவன் நைகுவான் நசைக்கு அலைந்த நெஞ்சினான்
சிறை வனை வயிற்று உறை சேயை ஏற்றுவான்

#117
ஏற்றுவான் அன்பின் உள் உருகி இன்பு உற
தூற்றுவான் இரு விழி சொரிந்த மாரியை
போற்றுவான் அவற்கு பொழி வர தொகை
சாற்றுவான் உணர்குவான் மக்கள் தன்மையோ

#118
பண் என சொன்ன தீம் சொல் பயன் உணர்ந்து அரிய அன்பால்
கண் என தன்னை காக்கும் காவலன் விருப்பம் கண்டு
விண் என தரணி கவ்வும் விரிந்த மா கருணை வல்லாள்
நுண் என முறுவல் கோட்டி நுதல்வு அரும் கனி சொல் சொல்வாள்

#119
வான்-தனை காத்தோன் காத்து வளர்ப்பதற்கு உரி கை_தாதை
போன்று அனைத்து உணர்வும் பூண்டோய் பொலிந்த நின் விருப்பம் நன்றே
மீன் தனை கசடு என்று ஓட்டி விழி கடந்த ஒளி நிற்பானை
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முயன்று செய் வணக்கம் சால்போ

#120
பகை எலாம் பழித்து யாவும் படைத்து அளித்து அழிப்போனேனும்
தகை எலாம் பழித்த பாவம் தாங்கிய உலகம் தாங்கு
மிகை எலாம் பழித்து இ வாழ்க்கை விழைவு செய் மருளை நீக்க
நகை எலாம் பழித்து தண்மை நல்கிய வறுமை தேர்ந்தான்

#121
தூய் மணி பெயர் பெற்று அஃகா துளங்கு உடு புறத்து நீக்கி
வேய் மணி பெயர் அற்று உன்னா விளக்கு அணி வீட்டில் நின்றோன்
ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய்
தாய் மணி பெயர் பெற்று எம்-பால் தாழ்ந்துறல் உணர்வான்-கொல்லோ

#122
கதிர் செயும் உலகின் வேந்தர் கழல் தொழ உவகை பொங்கி
பொதிர் செயும் திருவோன் ஈங்கு புன் திரு நேடான் அன்றோ
முதிர் செயும் கனி தேன் மாந்தி முன்னர் யாம் உற்ற நோயை
பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உண தலையாய் வந்தான்

#123
ஆறு எலாம் கடலுள் வைகும் அரிய தூய் அறத்தின் உள்ளும்
வேறு எல்லா திருவே வைகும் விழு தவத்து இறைவ நாமே
மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால் எம் சேய்
பேறு எலாம் கடந்த செல்வ பெற்றியால் இமிழின் கொள்வான்

#124
களி வளர் தவத்தின் வீட்டில் காட்சி நல் நிலையில் ஞான
ஒளி வளர் கதவு சேர்த்தி ஒழுக்க நல் தாளை பூட்டி
அளி வளர் நெஞ்சின் மஞ்சத்து அன்பு அணை பரப்பினேமேல்
வெளி வளர் உயர் வான் வேந்தன் விழைந்து உறைந்து எம்மை ஆள்வான்

#125
துளைத்து எழும் நசையின் முந்நீர் சுழியில் நாம் பட்டதே போல்
திளைத்து எழும் ஐயம் என்னோ செய் கடன் இன்னது என்ன
விளைத்து எழும் தயையின் எந்தை விளம்ப வேண்டுதல் நன்று என்றாள்
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய் கேட்டு இவர் வேண்டுகின்றார்

#126
காரின்-பால் கடந்த அம் கண் ககனம்-பால் எதிர் இல் ஆளும்
ஓர் என்பான் மனத்துள் சொல்வான் உளத்தின்-பால் வணக்கம் செய்து
பாரின்-பால் தோன்றும் பாலால் இருவர்-பால் பயந்த சேய் போல்
நீரின்-பால் வறுமைக்கு ஒப்ப நீர் எனை வளர்த்தல் வேண்டும்

#127
பொறையினார் விரும்பும் வாழ்க்கை புரையினால் சிதைவுற்றார் என்று
இறைவன் நான் அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின் காட்ட
சிறுமையால் வளம் பெற்று உம் கண் சிறுவன் ஆய் திரு என்று ஈந்த
வறுமையால் உயர்ந்த உம்மை வையம்-வாய் தெரிந்தேன் என்றான்

#128
மாடக இசை நேர் இ சொல் மா தவன் சூசை கேட்டே
ஆடக மாடத்து ஓங்கி அரு மணி அணை மீது அம் பொன்
பாடகம் ஒளிர்ந்து ஈங்கு ஆளும் பார்த்திபர் செல்வம் ஏய்க்கும்
கோடு அகல் எமது இல்லாமை குணம் என கூறினானே

#129
அழற்றிய வேனில் காலத்து அருந்திய அமுதை கான்று
நிழற்றிய கொம்பில் பேசு நிற கிளி இரண்டும் என்னா
மிழற்றிய வண்ணத்து அன்னார் விருப்பு எனும் எழும் கால் பொங்கி
சுழற்றிய நெஞ்சில் ஆவி சுக கடல் அமிழ்ந்திற்று அன்றோ

#130
தோடு அணி மகளிர் மன்றல் துடங்கிய உவகை போல
கேடு அணி உலகம் பூத்த கேதம் அற்று உவப்ப கன்னி
நீடு அணி கருப்பம் முற்றி நீத்து எழும் பருதி போல் மெய்
கூடு அணி பரமன் தோன்ற குணித்த நாள் குறுகிற்று அம்மா

#131
வீ முயங்கிய பைம் தோகை விரித்த நல் மஞ்ஞை போன்றே
மீ முயங்கிய மீன் செய்த வெயில் முடி பூண்ட கோதை
சே முயங்கிய மெய் போர்த்த சேய் எழும் முன் தன் கையால்
பூ முயங்கிய பால் ஆவி பூம் துகில் வனைந்திட்டாளே

#132
தூம நல் புகைகள் சூட்டி துளித்த தேன் சினை கொள் பைம் பூ
தாம நல் கமழ் நீர் தூற்றி தாழ்ந்து ஒரு பேழை-தன்னில்
வாம நல் துகில் பெய்தே தன் மனம் என திரு தன் சேயின்
நாம நல் புணர்ச்சி பூட்டி நயப்ப நாள் விரும்பி நின்றாள்

#133
தண் தமிழ் சொல்லும் நூலும் சால்பொடு கடந்த வண்ணத்து
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இ இருவர் தம்முள்
பண் தமிழ் உரைத்ததே போல் பயன் பகர்ந்து இளவல் காண
மண்டு அமிழ்து உகும் அவாவின் மகிழ்வினை உரைப்பர் ஆரோ
மேல்

@10 மகவருள் படலம்


#1
செல் செயும் சாபம் நீக்க செம்_சுடர் சாபம் சேர் கால்
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய் பாவத்து
அல் செயும் சாபம் நீக்க ஆண்டகை மகரம் சேர்ந்து உள்
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம்

#2
மா இரு ஞாலம் கொண்ட மருட்கு இனைந்து அழுத வானம்
காய் இரும் இடர் தீர் கால் ஆய் களித்து என மாரி காலம்
போய் இரு புடையில் செந்நெல் பொதிர்ந்த மார்கழி நாள் ஐ_ஐந்து
ஆய் இரு உலகும் ஓங்க ஆண்டகை உதித்தல் ஓர்ந்தான்

#3
பழி எலாம் நீக்கி நீங்கா பகை முதிர் கொடுங்கோல் ஓச்சி
அழிவு எலாம் பயத்த பேய் வென்று அமலனும் மகரும் ஒன்றாய்
இழிவு எலாம் ஒழித்து வீக்க இளவலாய் பிறப்ப நாதன்
உழிவு எலாம் முனைவு அற்று எங்கும் ஒரு குடை நிழற்றிற்று அன்றே

#4
நிலம் உறை பகையை சீக்கி நிகர்_இல் ஒத்தவியான் என்பான்
வல முறை ஒருவன் ஆண்ட வளமையால் செருக்குற்று எங்கும்
பல முறை பிரிந்த யாரும் பண்டு உறை காணி ஊர் போய்
குல முறை இறையும் எண்ணும் கொணர்ந்து இட பணி இட்டானே

#5
இ பணி கேட்டு வேதத்து எழில் நுதல் திலதம் ஒப்ப
ஒப்பு அணி கடந்த சூசை உளத்து அழல் புகுத்தினால் போல்
வெப்பு அணி உயிர் உலாவும் வெய்து உறல் ஆற்ற மொய் கொள்
அப்பு அணி உலக வேந்தின் அன்னையை நோக்கி சொல்வான்

#6
மன்னவன் உலகில் எங்கும் வகுத்தது ஓர் பணி ஈது அன்றோ
பின் அவன் பணித்த ஆற்றால் பெத்திலேம் என்னும் வாய்ந்த
என் நகர்க்கு இறையும் எண்ணும் ஈவதற்கு ஏகல் வேண்டும்
அன்னதற்கு அடியேன் செய்யும் ஆவது என்று அருளி சொல்வாய்

#7
விண் தலம் அகத்து வேந்தர் வேந்தனாம் உனது மைந்தன்
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய்
தண்டலை அகத்து விள்ளும் தாதினும் நொய் தாள் நீயும்
கண்டகம் அகத்து என்னோடு துணை வர கருதலாமோ

#8
மின்னி நா இடி வெற்பு ஈர்ந்து வேறு இரு கூறு செய்வது
உன்னி நான் உய்யல் ஆற்றேன் ஒரு நொடி பிரிந்து போகின்
முன்னி நான் அடை நோய் நீக்க முதல்வன் கேட்டு அவன் செய் ஏவல்
பன்னி நான் செய்வது என்னோ பகர்தியே என்றான் சூசை

#9
என்று அரு மா மறை வடிவம் ஏந்து தவன் இவை கூற
பின் தரு யாவையும் உணர்ந்தும் பேர் இறையோன்-தனை தாங்கும்
துன்று அரு மா மாட்சிமையாள் தன் துணைவன் சொல் பணிய
அன்று அரு மா மகவினை தாழ்ந்து அதற்கு இயற்றும் பணி கேட்டாள்

#10
கேட்பது அரும் தயைக்கு இறைவன் கேட்டு உரைத்த திரு உளமே
கோட்பது அரும் குண கிழத்தி கொழுநன் உளத்து எழ சொல்லி
வேட்பது அரும் மணம் மணத்த உயிர் இரண்டும் வேறு ஆகா
வாட்பது அரும் நயத்து இருவர் மா நகர்க்கு ஏகுதும் என்றாள்

#11
தேன் நிகர் சொல் செவி மாந்த செழும் தவத்தோன் உளத்து ஓங்கி
மீன் நிகர் பொன் சிவிகையும் மால் வேழமும் பாய் பரிமாவும்
வான் நிகர் பொன் திண் தேரும் வறுமையர்க்கு இல்லாமையின் நீ
கான் நிகர் முள் தடத்து ஏக காண்டல் உளம் பொறுப்பு அரிதே

#12
தொல் மாண்ட புடை நகரில் துன்னிய பின் ஆங்கு உறையும்
பொன் மாண்ட முடி தாவின் பொலிவு அமைந்த எம் குலத்தோர்
வல் மாண்ட அருள் புரிந்து வந்த துயர் ஆறும் என
தன் மாண்ட உளத்து இதுவே சார்பு என தான் உணர்ந்தானே

#13
மாண் தகையார் அறன் சார்வார் அல்லது இன மனு சாரார்
ஆண்டகை ஆர் அருள் சாரார்க்கு அல்லது ஒரு துயர் சாரா
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர்
பூண் தகையால் அறம் சார்ந்தாள் புரை சாரா புகல் செய்தாள்

#14
குவட்டு ஆய வெள்ள நிகர் கூர்த்து உவகை பெருகி எழ
துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும்
உவட்டாத பணி முறையால் செல்வது என உணர்வு உற்றார்
சவட்டாத அன்பு உரிமை சால்பின் இரண்டு அன்றில் ஒத்தார்

#15
பூண் மின்னும் மணி பேழை போன்று அரும் சூல் முற்று அணிந்தாள்
கோள் மின்னும் முடி தாழ கொழுநனை தான் தொழ அவனும்
மாண் மின்னும் மனம் வெருவி வணங்க பின்பு இருவர் தொழும்
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார்

#16
அருள் வீங்கும் விண் அரசாட்கு ஆயின ஆயிரர் அன்றி
இருள் வீங்கும் துகள் துடைத்தோன் பிறக்கும் கால் என இன்னும்
பொருள் வீங்கும் உம்பர் ஒன்பது_ஆயிரரும் புடை திரிந்து
தெருள் வீங்கும் கதிர் பரப்பி செல விட்டான் முதலோனே

#17
பிறை பழித்த பொன் பதத்தால் பிறை மிதித்தாள்-தனை சூழ
பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ செம்_சுடரை
நிறை பழித்த உரு சூட்டி நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி
உறை பழித்த மலர் மாரி உந்தரத்தில் பொழிகின்றார்

#18
வஞ்சத்தார் மனம் போல இருண்ட இரா வாட்டும் ஒளி
விஞ்ச தாரணி அறியா வெயில் வெள்ளம் உம்பர் உக
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ்
எஞ்ச தாம் இரவு பகல் என்று அறியாது ஏகுகின்றார்

#19
புண் காத்த மருந்து அன்ன பொலி அருள் சேர் மா தவனும்
விண் காத்த வேந்தனை சூல் வேய்ந்து ஒவ்வா கன்னிகையும்
மண் காத்த அருள் பரப்பி வழி வரும்-கால் வளைத்து இவரை
கண் காத்த நிமை என்ன காத்தார் அ ககனத்தார்

#20
துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா துவள் கொடி போல்
அன்று ஆங்கு நொய் அடியாள் அயர்வுற்று சோர்ந்து விழ
பொன் தாங்கு பொறை திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்-ஆல்
மின் தாங்கு மலை தோற்றம் விளங்கு வடிவு ஒத்து எனவே

#21
பானு அளாவுழி பாய் இருள் நீத்து ஒளி
தான் அளாவிய தன்மையின் ஆயினார்
போன வாயில் எலாம் புரை நீத்து அருள்
ஆனது ஆருயிர் உயிர் ஆகுலம் மாறவே

#22
போர் கணம் கடுத்தால் என பொங்கு ஒலி
கார் கணம் கதம் காட்டி மலிந்து கால்
நீர் கணம் கழு வாவி நிறைந்து சூழ்
சீர் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம்

#23
சோலை சூழ் வரை தூங்கிய தீம் புனல்
மாலை சூழ் வழி ஒல்லென வந்து பாய்ந்து
ஆலை சூழ் வயல் ஆர்ந்து விளைந்த நெல்
வேலை சூழ் வளை முத்து என வேய்ந்ததே

#24
மாலை ஆரும் மணமகள் ஆம் எனா
சோலை ஆர் தரு பூம் பணை தோற்றமே
மாலை ஆர் உடு காட்டிய வான் எனா
சேலை வார் பொய்கை தேன் மலர் விள்ளவே

#25
வீறி மின்னிய விண் திரள் பெய்த நீர்
ஊறி நீத்தம் முடுக்கு என ஓங்கி இவர்
தேறி எங்கணும் செய் தயை நேர நல்
ஆறு இது ஒத்து என ஓடிய ஆலையே

#26
கொம்பின் ஆர் குயில் கூவவும் மஞ்ஞைகள்
பம்பி ஆடவும் பைம் சிறை தேனொடு
தும்பி பாடவும் தூய் அனம் நாணவும்
நம்பி மாதொடு நல் நெறி போயினான்

#27
தூமம் சூடிய தூய் துகில் ஏந்துபு
தாமம் சூடிய தாரொடு பூண் மலி
காமம் சூடிய காந்தரி என்று ஒரு
நாமம் சூடிய நாரியை கண்டுளார்

#28
வெம் சின கரி மேய்ந்து உகும் வெள்ளிலோ
நஞ்சின் முற்றிய காஞ்சிரமோ நகை
விஞ்சி வெற்று எழில் பாவையின் வேடமோ
நெஞ்சின் நல் தகை நீத்த எழில் நாரியே

#29
ஆலம் ஏந்திய ஆனனத்து ஓடி நல்
கோலம் ஏந்திய கோள் என வேய்ந்து கொல்
காலன் ஏந்திய வாள் கவர்ந்து ஈர்ந்து உயிர்
நீலம் ஏந்தி நிறைந்து உணும் கண்ணினாள்

#30
புலம்பும் ஓதையின் நொந்து என பொன் இட
சிலம்பு மேல் வல சீறடி ஊன்றி வில்
அலம் புனைந்த பொன் தூண் அயல் பொன் மலை
தலம் புனைந்த மின் சாயல் ஒத்தாள் அரோ

#31
துகில் கலாபம் உள் தோன்ற விளிம்பு எடுத்து
உகிர் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து எழும்
அகில் கவர் புகை தூது விட்டு அம் குழல்
முகில் கவர் மினின் மின் முகம் கோட்டுவாள்

#32
பால் கலந்தன நஞ்சு பருகினால்
போல் கலந்தன இன்பொடு புன்கணை
மால் கலந்த மனத்து உண மைந்தர் சூழ்
வேல் கலந்த கண் வெஃகி நெருங்கினார்

#33
காம தீ எழ ஓர் நகை காட்டினள்
ஈம தீ எழ வெம் சினம் காட்டுவாள்
தூம தீ எழ தோன்று இருள் போன்று கண்
வாம தீ எழ உள் நிசி மல்கும்-ஆல்

#34
மஞ்சு தோய் சிறகு ஆடிய மஞ்ஞை போல்
நஞ்சு தோய் மன நங்கை நறா அகில்
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால்
நெஞ்சு தோய் தகவோர் நெறி எய்தினார்

#35
கோலம் மூடிய அங்க குடத்து இணை
சீலம் மூடிய தீ மனம் கண்டு கார்
நீலம் மூடிய பானொடு நேர் மிடி
சால் மூடு தலைவி இரங்கினாள்

#36
வீய் கலந்த வனப்பொடு வீங்கு உளம்
பேய் கலந்து குடி என பேர்கு இலா
தீய் கலந்த சிதைவு உடை பேதையை
நோய் கலந்த உயிர்ப்பொடு நோக்கினாள்

#37
கண்ட தீயவை அல்லது கண் உறா
கொண்ட தீயவை எண்ணுவர்-கொல் எனா
உண்ட தீய உளத்தில் உறைந்த பேய்
அண்ட வாகை வளற்கு அவள் சூட்டினாள்

#38
கொடிய கோல் கோடு ஆண்ட குணுங்கு இனம்
மடிய சூல் கொடு வந்தவன் நாம வல்
கடிய வேல் கொடு அ கடி ஓட்டு எனா
நெடிய கோல் கொடு நின்றவன் வேண்டினான்

#39
மொய் கொள் நீரொடு மூ உலகிற்கு எலாம்
மெய் கொள் நாயகி மேவி உள் ஏவலால்
மை கொள் சோகு பழம் பதி மாற்றி வாய்
பொய் கொள் வேகம் நரகு உற போயதே

#40
கள்ளம் காட்டு குணுங்கு கடிந்த பின்
உள்ளம் காட்டு பளிங்கு உணர்ந்தால் என
வெள்ளம் காட்டு வாலாமை விழுங்கு எனா
மள்ளம் காட்டி மாழ்ந்தேன் என நாணினாள்

#41
உவா அமர்த்திய அங்குசம் ஒப்பு என
தவா வயத்து இவள் தாங்கிய நாணமே
சுவாது அமைத்த துகள் துடைத்து ஓர் கரை
அவா உடை கடற்கு ஆங்கு அடைத்தாள் அரோ

#42
நாணி நாணுப நாடிய காரணம்
காண் இலாள் வெருவும் களியும் கொடு
வாள் நிலா விழி நித்திலம் வார் முகம்
கோணி ஒன்று உரையா குழு நீங்கினாள்

#43
நீர் ஆர் பவள துறையின் நிரை நித்திலம் உய்த்து என்னா
ஏர் ஆர் துவர் வாய் முறுவல் இலங்க நின்றாள் ஏதோ
சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார்
வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப வருந்தி வெருவி போனார்

#44
விண் தோய் மாடத்து ஒதுங்கி வினை அற்று உளம் தூண்டு உணர்வால்
கண் தோய் புனல் ஆடினள் தன் கசடே கருதும் தன்மைத்து
உண்டு ஓய் இல மெய்ஞ்ஞானத்து உறுதி துணை ஓர் அமரன்
மண் தோய் துகள் தீர்ந்தவன் தாய் விடவே மனம் ஓங்கினள்-ஆல்

#45
இன்னே இரவி காண் அந்தகன் நேர் இயல் கொண்டு இன்னாள்
பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள் உம்மால்
கொன்னே குழைய பிறரும் குழைந்தேன் என நொந்து அழுதே
மின்னே மின்னி பெயும் கால் விழும் போல் விழ ஈர்த்து எறிந்தாள்

#46
விண்டு இக்கு ஒழுகி குழல் சூழ் விரை வீசிய தண் தொடைகாள்
வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே
தெண்டித்து என பூம் தாளால் தேய்த்தாள் துவைத்தாள் துடைத்தாள்

#47
அரும்பு மடல் தேன் குளிர் என்று அணியாய் முலை சூழ் அலங்காள்
கரும்பு வில் ஏவிய வெம் கணையாய் மனமே கருக
விருப்பு செய்து உள் நுழைந்தே வெம் தீ புகுத்தி கொன்றீர்
நெருப்பு கொணர்ந்தீர் நெருப்பில் வேவீர் என சுட்டிட்டாள்

#48
சுண்ணம் கலவை சுவை சாந்து எனும் வண்டு இவறும் சேறே
தண்ணம் கொண்டாய் என்றார் சடமே என்றார் தழலும்
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும் கசடு ஆய்
எண்ணம் கடிய எரிந்தேன் எரிந்தேன் என்னா எறிந்தாள்

#49
பண்ணே நீ ஓர் முலையாய் கீதம் பாலாய் சுரந்தேன்
கண்ணே காத்த கனிவால் ஊட்டி காம குழவி
பெண்ணே அறியா வளர்த்தேன் பெரிதாய் கணையால் சுடும் என்று
எண்ணேன் இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ என்று ஒடித்தாள்

#50
வாயே கரமே செவியே மருளும் கண்ணே மூக்கே
போயே வினை கொண்டு உள்ளே புகும் ஐம் பகையாம் பொறிகாள்
தீயே கொணர்ந்தீர் என உள் சிறை செய்து ஒறுப்பேன் ஒறுத்தற்கு
ஓயேன் ஓயேன் என உள் ஊக்கம் காவல் கொண்டாள்

#51
மீனே கொடியாய் விதுவே குடையாய் வேலை முரசாய்
கானே உமிழ் பூ கணையாய் கழையே தனுவாய் உருவம்
நானே எழுதி நாமம் வேள் என்றேன் என் உயிரை
தானே உண்டான் இனி-கொல் சமன் ஆக்குவன் நான் என்றாள்

#52
நின்னை மறந்தாய் நெஞ்சே நெடும் கோல் நீதி வல்லோன்
தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து
என்னை மறந்தாய் நெஞ்சே இனி முன் விழைந்தது எல்லாம்
பின்னை மறப்பாய் நெஞ்சே என்னா பெரிது ஆர்த்து அழுதாள்

#53
கண் நீர் ஆடி கழுவும் கசடு அற்று உணர்ந்த ஞான
தெண் நீர் ஆடி தெளிந்தாள் தெளி உள் நிறை தே அருளின்
தண் நீர் ஆடி குளிர்ந்தாள் தவறா அற மா புணரிக்கு
உள் நீராடி உயர்ந்தாள் உரு வேறு இயல் வேறு ஆனான்

#54
உள்ளம் கெட உள்குடியாய் உறைந்த குணுங்கு ஓட்டிய பின்
கள்ளம் கெட மெய்ஞ்ஞானம் காட்டி கடந்து ஏகினும் கான்
வெள்ளம் கெட மல்கு அருள் சேர் வியன் வான் கிழத்தி நிழலால்
வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள்

#55
இவ்வாறு எவ்வாறு உள்ளம் கெட எ பொருளோ உதவிற்று
அவ்வாறு அன்னாள் அகற்றி அட்டு ஐம்பொறியை புதைத்து
வவ்வு ஆறு ஒரு மாறு இன்றி பல நாள் வானோர்க்கு அரசாள்
செ ஆறு உளத்து திறன் செய்து அறம் சேர் கதியே சேர்ந்தாள்

#56
அப்பால் நடந்தார் அண்டத்து இரு அம் சுடர் ஒத்து அன்னார்
எப்பால் அனைத்தும் இயலும் தயையால் எதிர்கின்ற எவர்க்கும்
ஒப்பால் அடையா மரபால் உயிராய் உடலாய் துயர் செய்
வெப்பால் அயர்கின்ற உயிர்கள் விரிவாய் நிழற்றி போனார்

#57
என் பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ
மின்-பால் வெயில் செய் மிடை விண்ணவர் ஈர்_ஐயாயிரர் சூழ்ந்து
அன்பால் அணுகும் தன்மைத்து ஐம் வைகலும் வைகிய பின்
பொன்-பால் உயர் பெத்திலேம் ஆம் பொலி மா புரம் அண்மினரே

#58
ஓடையாய் பெரிது ஒலித்து பெயர்ந்த வெள்ளம் ஒழுகிய பின்
கோடை ஆய் வற்றும் என வழியில் கொண்ட கூர் நயமே
மாடையாய் இலங்கு நகர் வந்து மாற்றி மருவியது ஓர்
பீடை ஆய் உணங்கு அன்னார் வருந்தும் பெற்றி பெரிது எனவே

#59
எரி மாலை தாங்கு உடலால் பகல் செய் விண்ணோர் இரு புடையில்
புரி மாலை காண்டல் இலா பொலிவான் மாட்சி புலமையினோர்
உரி மாலை காண்டல் இலா எளிமை போர்த்த உரு தோன்ற
திரி மாலை கண்டவர் தாம் செய்த நிந்தை செப்பல் உற்றாம்

#60
மண் சிறையை ஒழித்தவர் தம் வருத்தம் காணா வழி முடுகி
தண் சிறை செய் கடல் மூழ்கி பருதி அங்கண் தாழ்ந்து ஒளிப்ப
ஒண் சிறை மொய் அளிகள் அழ முளரி தன் தாது உடன்று அடைப்ப
கண் சிறை செய் கங்குல் உறீஇ நகரில் சென்றார் கருணை வலார்

#61
சாதியினால் நிகர்க்கு அரிய மலர் மென் தாளின் தகுதி நலாள்
வீதியினால் எய்திய நோய் ஆற்ற வெஃகி வெயில் மிடைந்த
ஓதியினால் உளத்து உயர்ந்தோன் ஒதுங்கும் தன்மைத்து உறையுள் அருள்
சோதியினால் அவிர் முகத்தில் உறவோர் கேட்டு துருவினன்-ஆல்

#62
அடைப்பதற்கே அரும் கடலாம் அவா உள் பொங்கி ஆக்கம் இவண்
கிடைப்பதற்கே உறவு கிளை தேடும் பாலால் கிளர் நிரப்பில்
படைப்பதற்கே அரிய பொருள் கொண்டார்க்கு அல்லால் பயன் பயவா
துடைப்பதற்கே அரும் வறுமையவர்க்கு ஒன்று உண்டோ சுற்றம் அதே

#63
நஞ்சு எஞ்சா காஞ்சிரம் காய் அழகு என்று எண்ணி நச்சுவர் போல்
விஞ்சு எஞ்சா வினை பயக்கும் பொருளே வெஃகி விழி கடந்த
மஞ்சு எஞ்சா அருள் செல்வம் எண்ணா மூடர் வறியர் எனா
நெஞ்சு எஞ்சா திருவோரை எவரோ என்னா நீக்கினர்-ஆல்

#64
பொன் அன்ன பொலிந்த நகர் புடைகள்-தோறும் புகுந்து இன்னார்
மின் அன்ன விரைந்து இரிய உரும் என்று அன்னார் விடைந்து உடற்ற
பின் அன்ன முகில் உறை பெய் அன்ன சூசை பெரிது அழுது
முன் அன்ன நகர் உதவி உணர்ந்த பாலால் முழுது உளைந்தான்

#65
நான் செய்த குறை தானோ நகரே செய்த நவை தானோ
தான் செய்த விதி தானோ தரணி காக்க தற்பரன் ஈங்கு
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா
தேன் செய்த உயர்த்தோன் அரற்றி விம்மி திரிவான் ஆம்

#66
இகழுவர் என்று இகழ்வு இன்றி அருள் உற்று இன்னார் இகழ்ந்தாரும்
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா
நிகழுவரே நெகிழுவரே வணங்கி கேட்கின் நிந்தை உறீஇ
மகிழுவரே மருட்டும் அவா அரிந்து வாய்ந்த மாட்சி நலோர்

#67
தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின்
இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான்

#68
அடுத்து இரப்பார்க்கு ஆர்வம் உற அளித்த நன்றி அஞர் கடலே
மடுத்து இருப்ப கரை அன்றோ என்று கூப்பி வணங்கி இரு கை
எடுத்து இருப்ப காய் முகனோடு எள்ளும் தன்மைத்து எவர் எவரும்
கடுத்து இருப்ப கண் அருவி கடுக நொந்தான் கடி கொடியான்

#69
துன்புற்ற-கால் ஒருவர்க்கு இரங்கி செய்த துணை உறுதி
இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால் அஃதே இவர்க்கு இறுதி
பின்பு உற்ற கால் உயர் வான் தரும் வித்து என்பான் பெரிது உவப்ப
முன்பு உற்ற கால் மொழிவாய் ஞானம் என்று முனி நகைத்தார்

#70
நலம் செய்வான் விருப்புற்றார் நேரம் தேடார் நசை அற்றார்
சலம் செய்வார் கிலம் செய்யார் வணிகர் ஆக்கம் வரல் வெஃகி
அலம் செய்வார் போல் உயர் வீடு இயற்றும் நன்றி அமைவதற்கே
தலம் செய்வார் அறிவு உற்றார் என்று தாழ்ந்து பணிவான் ஆம்

#71
பால் நேர பாடிய பண் கோகிற்கு இன்பம் பயவா போல்
வேல் நேர பாய் துயர் கொண்டு இவற்றை கொன்னே விளம்பி இவர்
நூல் நேர பாய் நெடிய மறுகிற்கு எல்லாம் நொந்து ஒழுகில்
கோன் நேர பாவிய கையிறையும் எண்ணும் கொடுத்தனரே

#72
செய்முறை யாவையும் திருந்தி திறம்பா நீதி செழும் தகவோர்
கை முறையாம் இறை தந்து மலர்த்தாள் நல்லாள் கடி வருந்த
மொய் முறையால் கடல் ஒக்கும் நகரம் எல்லாம் முடுகிய பின்
மை முறையால் இரவின் நடு மருவ கண்டு வளன் சொல்வான்

#73
நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர்
குலத்து இயல்பால் கிழமை நிலை திரிகும் என்றார் குறை கிளர் என்
கிலத்து இயல்பால் கிளைத்தன இ கேதம் எல்லாம் கிடைத்து உளைய
நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய்

#74
முன் செய்கை பயத்த துயர் அகற்றி எம்மை முயன்று அளிக்கும்
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய்
நல் செய்கை ஒன்றும் இலா அடியன்-தன்னை நண்ணிய-கால்
மல் செய்கை வீங்கு வயத்து உயர்ந்தோனேனும் வருந்தானோ

#75
உடை நகர்-கண் வாழ் அரசன் வறுமை நாடி உதிப்ப சீர்
மிடை நகர்-கண் பதி அல்லது என்றோ இன்னார் விலகி எமக்கு
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி
புடை நகர்-கண் கண்ட முழை புணர போகின் புரிவு என்றான்

#76
இ தலை இவளும் நன்று என்று பேர் ஒலி
மொய்த்து அலை பெரும் கடல் நிகர் முற்று ஊர் கடந்து
அ தலை இருமையோர் அமரர் செய் ஒளி
மைத்து அலை நடு நிசி மயங்க போயினார்

#77
காய் ஒளி காண்கிலான் கையில் காண்கின் எல்
தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ இவர்
ஆய் ஒளி தெரிவதோ அறிவு இலார்க்கு எனா
வேய் ஒளி அமரர் சூழ் விரிப்ப போயினார்

#78
துறவினால் இரவலர் ஆகி தோன்றினார்
உறவினாரினும் உறவு எனினும் ஓர்வரோ
அற வினா அகன்றனர் என்ன அண்டனர்
திற வினா இயம்பிட செறிந்து போயினார்

#79
பூரியர்-கணும் உள பொருள் செய் செல்வம் நீத்து
ஆரியர் விரும்பிய அருளின் செல்வம் ஆய்
சீரியர் வழி இதே என்ன சேண் தள
வீரியர் விருப்பு எழீஇ விளம்பி போயினார்

#80
எல் என சுடர் அவிழ் ஈர்_ஐயாயிரம்
வில் என கவின் உரு விரி விண்ணோர் உறீஇ
அல் என பகல் என அறிகிலாது வான்
செல் என களிப்பு எழீஇ சிறந்து போயினார்

#81
கோள் ஐ வாய் புகழ் தர கோல வானவர்
பாளை வாய் கமுகு பாய் பலவின் காய் அற
சூளை வாய் பொய் என துளித்த தேன் செயும்
மூளை வாய் தண் பொழில் கடந்து முன்னினார்

#82
கள் உடை கயத்து எழும் கமல பொய்கையும்
புள் உடை கனியினால் பொலிந்த சோலையும்
உள் உடை புடை கடந்து உளத்தில் உன்னிய
எள் உடை புற நிலை இமிழில் எய்தினார்

#83
உயரிய வரை பகிர் உறுப்பு போன்று என
பெயரிய கல் மிசை பெரும் கல் சேர்த்திய
துயர் இயல் தோன்று இடம் விலங்கு துன் இடம்
அயரிய இடம் ஒரு முழை அஃது ஆம் அரோ

#84
வீசு அறை வளி மழை விளிப்ப வாய் திறந்து
ஏசு அறை கிழவி தீ எரி முகத்தொடு
பாசறை பரிப்பு நோய் பதி பயிற்றிய
ஆசு அறை உரு என் ஆம் முழை அஃது ஆம் அரோ

#85
கலங்கு எழும் திரை எறி கடல் எனா நகர்
புலம் கெழு மிடை மனு புழங்கலாமையும்
விலங்கு எழும் இடம் எனா வெறுத்த அ முழை
நலம் கெழும் இறையவன் பிறப்ப நாடினான்

#86
ஒப்பு உடை உயரினோர் உவந்து புக்க பின்
அ புடை விளக்கிட அருத்தி காண் மணி
துப்பு உடை உரு கொடு சூழ்ந்த வானவர்
வெப்பு உடை விருப்பொடு விளக்கினார் அரோ

#87
ஆவு அருள் தீது உள அகமும் வந்து அடை
தே அருள் புக்க பின் சீர்த்த பான்மையால்
நோவு அருள் முழை இவர் நுழைந்த-கால் அலர்
கா அருள் வனப்பொடு களித்தது ஆம் அரோ

#88
தணிவு அரும் சினத்தொடு தகைத்து அகற்றினார்
அணிவு அரும் குணத்தில் ஈங்கு அமலன் நாடிய
பணிவு அரு மிடி நலம் பயக்கின்றார் எனா
துணிவு அரும் அன்பு எழுந்து ஆசி சொற்றினார்

#89
அரும் பயன் நஞ்சினை ஆக்கும் பாம்பு எனா
விருப்பவர் நயன் செய பகைக்கும் மேல் அலார்
நெருப்பு அட துமிப்பரை நிழற்றும் கா எனா
பெரும் பகை செய்வரை பேணும் மாட்சியார்

#90
எஃகு என பாய்ந்து உளம் இரிந்த வான் துயர்
அஃகு என கண்படற்கு அமைதி என்றனள்
வெஃகு என துணைவியே விலகி தானும் நல்
இஃது என தனித்து இறை இறைஞ்சி நின்றனன்

#91
அய்யனை இறைஞ்சிய அமையத்து ஒண் தவன்
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ
மெய் அனை உளம் வளர்ந்து ஏவல் மேவி விண்
பெய் அனை அருவி கண் பிளிர்ந்து இன்பு ஓங்கினான்

#92
பொதிர் தரும் களி பொழிந்து வாய்ந்து அருள்
முதிர் தரும் கணாள் முழந்தின் நின்று இவண்
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற
கதிர் தரும் சுதன் அசைய கண்டனள்

#93
திரு முகம் செறி சுடர் சிறப்பினால்
ஒரு முகம் செறி ஒளிகள் ஆயிரம்
தரு முகம் பகல் தருக காலம் ஆய்
குரு முகம் கொளும் குணக்கு ஒத்தாள் அரோ

#94
உலகம் மூன்றினும் உவமை நீக்கிய
இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய்
அலகு_இல் மூன்றினுள் நடுவ மைந்தனை
நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள்

#95
வாய் படா நுழை பளிங்கின் வாய் கதிர்
போய் படா ஒளி படரும் போன்று தாய்
நோய் படாது அரும் கன்னி நூக்கு இலாது
ஆய் படா வயத்து அமலன் தோன்றினான்

#96
மாதம் மார்கழி வைகல் ஐ_ஐந்து ஆய்
ஏது இலா நிசிக்கு இருத்தை மூ_ஐந்து ஆய்
ஆதி நாள் என ஆதி நாதனை
காதல் நாயகி களிப்பின் நல்கினாள்

#97
தீபம் உற்று மேல் உலவு செம்_சுடர்
சாபம் உற்றுழி சாபம் தீர்த்து எமை
ஆபதத்து இறை அளிப்ப தாய் மடி
தாபதத்து எழீஇ தரையில் தோன்றினான்

#98
தோன்றினான் என நசை உள் தூண்டினால்
போன்று வாவு தேர் முடுக்கி போய் ஒளி
கான்று இராசிவம் களிப்ப மாலி எல்
ஈன்று இரா அன்று குறுகிற்று என்னவே

#99
கதிர் செய் தேர் எழ கடிய கோல் நிசி
பொதிர் செய் கார் இருள் புதைப்ப புக்கல் போல்
பிதிர் செய் பேய் எலாம் பெயர்ந்து தீ உற
எதிர் செய் ஆதி ஈங்கு இலங்கினான் அரோ

#100
பேயும் போயின அமரர் பிந்தினர்
தீயும் போயின அறங்கள் தேறின
நோயும் போயின நூற்கள் தேர்ந்தன
தோயும் ஓகையில் துளங்க வையமே

#101
இரவில் மீன்களும் இரவி பின்றையும்
பரவினால் என பரப்பும் தம் கதிர்
புரவின் ஏழு மடங்கு ஒளிர்ந்து அ பொற்பினை
விரவின் காண கண் விளக்கல் மானுமே

#102
பாய்ந்த வான் தரு பருவம் இன்றியும்
ஈய்ந்த தீம் கனி இயைய பூத்தலும்
வேய்ந்த நாயகன் விளைத்த நன்றியால்
வாய்ந்த ஓகையின் முறுவல் மானுமே

#103
பொதிர் செய் மாட்சி கொண்டு உயர்ந்த பூ எலாம்
கதிர் செய் வானம் நேர் களித்தது ஆம் எனில்
எதிர் செய் பா புகழ்ந்து இசைக்கும் தன்மையோ
முதிர் செய் மாண்பு உடை முழையின் தோற்றமே

#104
வான் உலா வனப்பு எண்_இல் வானவர்
மீன் உலாவு அடி இறைஞ்சி மீது பெய்
கான் உலா மலர் கந்த மாரியால்
தேன் உலா மழை திளைத்து ஓர்-பால் எலாம்

#105
பண் இன் ஓதையும் பண்ணின் பா இசை
தண் இன் ஓதையும் தாழ்ந்து வாழ்த்தினர்
விண் இன் ஓதையும் வழங்க வேட்டு உளம்
கண் இன் ஓகையின் களித்து ஓர்-பால் எலாம்

#106
பொன்னின் ஒள் உரு பொருந்தி பூணொடு
மின்னின் ஒள் நுதல் மின்னி வீழ்தர
துன் இன்பு உள் எழ தொழுது போற்றலின்
இன் இன்பு ஆர்ந்தன இனிது ஓர்-பால் எலாம்

#107
சந்த நல் சுதை நான சாயலின்
வந்த நல் சுதை மணம் கொள் காழ் அகில்
வெந்த நல் புகை கலந்து வீங்கின
கந்த நல் சுவை கனிவு ஓர்-பால் எலாம்

#108
மெய் திறத்து எழுந்து உதித்த வேந்தனை
கை திறத்து எழுந்து இறைஞ்சும் காதலால்
மொய் திறத்து எழும் கடலின் மொய்த்த ஆர்ப்பு
இ திறத்து எழுந்து எல்லை இல்லையே

#109
சொக்கு அளாவு உரு தோன்றிய தோன்றலை
மிக்கயேலொடு காபிரியேல் விழைந்து
ஒக்க ஏந்தினர் ஒக்கவும் தாய் முனர்
மக்கள் நாதனை மாண்பு எழ காட்டினர்

#110
பொதிர் கொள் பூ மணம் போல் மகவு ஈன்றனள்
கதிர் கொள் சேயொடு கண்கள் கலந்த கால்
எதிர் கொள் வெம் சுடர் காண் முழு இந்து எனா
முதிர் கொள் இன்ப முகத்து விளங்கினாள்

#111
தன்னை ஈன்றன தாய்-தனை நோக்கலோடு
அன்னை நீயும் என் சாயலின் ஆகு எனா
மின்னை வீறிய தோன்றல் விளம்பினான்
என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே

#112
தந்தை ஈன்றன தாயும் தன் சேயனை
இந்தை நேர் நுதல் தாழ்ந்து இறைஞ்சிட்ட பின்
சிந்தை ஓங்கு அமரர் அவள் செம் கையில்
முந்தை தோன்றலை தந்து முன் ஏற்றினார்

#113
காந்தள் நேரிய செம் கரத்து ஏந்தினள்
ஏந்த மார்பில் இறுகவும் சேர்த்தனள்
வாய்ந்த பூம் பதம் நீவி வணங்கினள்
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள்

#114
காவி மேல் கமழ் கஞ்சம் அமைந்து எனா
ஆவி ஆம் மகவு அம் கையில் ஏந்தினள்
ஓவி மாழ்கிய மன் உயிர் ஓர்ந்து அருள்
மேவி முந்தையை நோக்கி விளம்புவாள்

#115
உனக்கும் ஆகி எனக்கும் ஓர் பிள்ளை ஆய்
தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன்-தனை
நினக்கு நான் இவண் நேர்தலின் மற்று உயிர்க்கு
எனக்கு நேர் அருள் ஈந்து அளிப்பாய் என்றாள்

#116
ஊக்கி வாழ உணர்ந்து அறம் ஆதியில்
போக்கினார் புரை பொங்கி மலிந்த தீ
சீக்கி வாழ்வு இட எய்திய சேய் முகம்
நோக்கினால் சினம் நூக்கு அரிதோ என்றாள்

#117
மறம் செய் வேடம் எனா மனு வேடமே
நிறம் செய் தெய்வதம் மூடிய நீர்மையால்
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின்
திறம் செய் காய்ந்த சினத்து இடம் ஏது என்றாள்

#118
தாய் விழைந்த நலம் தரு சேயனே
நீய் விழைந்த துன்பு ஊட்டிட நேமியே
மீய் விழைந்த நலம் மிடைந்து ஊட்டி நீ
தீய் விழைந்த செயிர் செகுப்பாய் என்றாள்

#119
என்ன நல் உயிர் காத்த மருந்து எனா
மன்ன நல் அருள் வாய்ந்தனள் இன்னணம்
சொன்ன நல் உரை தேன் சுவையில் சுவை
அன்ன உண் குழவி நகை ஆடினான்

#120
நகை செய் தன்மையின் நம்பு எழீஇ தாய் துகள்
பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற
முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும்
குகை செய் இன்பு எழ கோலம் இட்டு ஒத்ததே

#121
தெருள் சுரந்த திரை புவி ஆர்ந்து உண
பொருள் சுரந்து உயிர்க்கு உண்டி பொழிந்தனன்
மருள் சுரந்த வடு கெட மைந்தன் ஆய்
அருள் சுரந்து அமுது ஆய் தர நுங்கினான்

#122
வேழ்வி மந்திர தீய் கொடி வேடமாய்
கேழ்வி ஒண் தவன் காட்சி கிளர்ப்பினால்
வாழ்வில் நின்றுழி வாழ்ந்த இவை யாவையும்
தாழ்வு இல் இன்பு உற கண்டு அருள் தாங்கினான்

#123
வேதம் நின்ற உரு தகு மேன்மையான்
காதல் நின்று இவை காட்சியின் காண்கினும்
நாதன் நின்ற நலம் வழியால் உண
சீது அணிந்தனள் வா என சென்று உளான்

#124
இந்து நேர் நுதல் மீன்கள் நேர் விழி இண்டை நேர் முக நீர்மையால்
கந்தம் நேர் நளிர் தாது நேர் உடல் காட்டு நாதனை அம்புய
சந்தம் நேரிய கன்னி நேர் கையில் தாமம் நேரிய முத்து என
சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில் தேற நோக்கினன் சூசையே

#125
வீழ்ந்து வீழ்ந்து அகல் நெற்றி பார்-இடை மேவலோடு உற வீழ்ந்தனன்
தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன்
சூழ்ந்து சூழ்ந்து உள இன்பு அறா மழை தூவ நீள் விழி வாழ்ந்தனன்
வாழ்ந்து வாழ்ந்து உயர் வான் உளோர் மனம் வாய் வியப்புற ஓங்கினான்

#126
அன்பு உற கடல் என்று எலா உயிர் ஆண்டு அளித்து அருள் நாயகி
துன்புற துணை ஆய் மாண்பு அருள் துற்று மார்பு உடை மா தவன்
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை
உன் புறத்து-இடை ஏந்துக என்று அலர் ஒத்த செம் கரம் நீட்டினாள்

#127
விண் புலத்து உயர் ஏக ஆணையின் வேந்தர் வேந்து எனும் தேவனை
உள் புலத்து வணக்கம் மிக்கு உற உற்று எடுத்திட நாணினான்
மண் புலத்து இணை அற்ற மாது அறை வாய்ந்த சொல் கொடு தேறினன்
கண் புலத்து உறு மாரியோடு இரு கை தலங்களில் ஏந்தினான்

#128
கை தலத்தில் எடுத்து மார்பொடு காதல் ஓங்க அணைத்தலும்
முத்தம் இட்டலும் நோக்கில் தீட்டலும் உற்ற நீரில் நனைத்தலும்
சித்தம் முற்றலும் நாள் மலர் கழல் சென்னியின் மிசை வைத்தலும்
இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே

#129
கோதை வாகையை நீழல் ஆர் அடி கோதை ஆக அணிந்த கை
தாதையான்-தனை நோக்கும் அன்பொடு தாவு உளத்து உலவு இன்பதின்
ஓதை ஆர்கலி ஓட ஓர் நகை உற்ற பாலகன் ஒண் முக
பாதையால் களி எய்தி மொய்த்தன பாரோடு உம்பர்கள்-பால் எலாம்

#130
வேது அணிந்தன பாலன் வீ அணி வாகையான்-தனை வீக்கலால்
போது அணிந்தன கோடு சூழ் படர் பூத்த பொன் கொடி போலுமே
மீது அணிந்தன நீவி போர்த்து அவிர் மேனியை தவன் வீக்கலும்
சீது அணிந்தன மேகம் ஒண் சுடர் செவ்வி மூடிய போலுமே

#131
தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன் முகத்து
ஒத்து எரிந்தன கண் களிப்பு எழ உற்று நோக்கிய நோக்கு அறா
மொய்த்து எரிந்தன சேய் முகத்து ஒளி முற்றும் உண்டனள் செம்_சுடர்
துய்த்து எரிந்தன திங்கள் தேறிய தோற்றம் ஒத்தது இலங்கினாள்

#132
மீன் வரம்பு என மின்னு நீள் விழி மீண்டு இமைப்பு இல காண் வளன்
வான் வரம்பு என வாம ஓவியம் மான நின்றனள் என்று ஒரீஇ
தேன் வரம்பு என இன்பு தேறிய ஆவி ஆயின சேயனை
கான் வரம்பு என விண்ட தாயது கஞ்ச அம் கையில் ஈந்தனன்

#133
காம்பு இல் அம் கிளர் கால் பெயர்ந்தன காலை அங்கு அலர் பேர்ந்தது ஓர்
ஆம்பலம் கிளர் பூ இரும் சினையாக நின்றன மா தவன்
சாம்பி அம் கிளர் தாள் துணர் துணை தார் அது என்று அணி ஓகையால்
ஓம்பி அம் கிளர் வாகை ஒண் குடை ஊச நல் நிழல் நீடினான்

#134
ஊசல் அம்புலி உற்றது ஒத்தென ஒள் இரண்டு வெண் சாமரை
காசு அலம்பிய மேனி காட்டிய காதல் வானவர் வீசவே
பாசு அலம் புரி பாழி பற்றிய பள்ளி பண்பொடு வீங்கினான்
ஆசலம் புரி ஆசையால் நிறை ஆகுல கடல் தூர்த்தனன்

#135
விண்ணே புரக்கும் அருள் துஞ்சான் விரி செ இதழ் தாமரை தவிசின்
கண்ணே அன்ன பார்ப்பு அன்ன கன்னி கரத்தில் துஞ்சிய-கால்
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன்
பண் நேர் பால் நேர் மாம் குயில் நேர் பாடி படர் நல் புகழ் உற்றான்

#136
இருளே அணுகா மறைவு அணுகா இரவிக்கு ஒளி ஆம் திரு விழியை
மருளே அணுகா மூடுகின்றான் வானும் மண்ணும் வழுவாது ஆள்
அருளே மருளா இ உலகில் அயர்வு மாற அயர்வு இல்லான்
தெருளே மருளா மனம் துயிலா திளை நான் களிப்ப துயில்கின்றான்

#137
களித்த நாளில் அரும்பும் தென் காலே இனிது ஈங்கு அரும்புதியே
துளித்த நான தேன் அரும்ப துணர் நாள் மலர்காள் அரும்புதிரே
விளித்த நாகு மாம் குயில்காள் விளை தேன் பாவை அரும்புதிரே
அளித்த நாதன் நான் கனிய அன்பு துயிலா துயில்கின்றான்

#138
கண் பட்டு உறங்க கண்டேனோ கருணாகரனே களி கடலே
புண் பட்டு உளையும் நெஞ்சிற்கு ஓர் பொருவா மருந்தே அருள் அன்பே
மண் பட்டு அலையும் கடல் அன்ன மருள் என் நெஞ்சிற்கு உயிர் நிலையே
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ

#139
வான் தோய் நயங்கள் பயந்தோய் நீ மண் தோய் துயர் நீத்து அளித்தோய் நீ
தேன் தோய் இன்பத்து அமைந்தோய் நீ சேண் மேல் புகழப்படுவோய் நீ
நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ நரன் என்று ஆக அவதரித்தே
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு எனக்கு பணியாயோ

#140
கோ வீற்றிருந்து மகிழ்வோய் நீ குலையா வயத்து ஒப்பு இகழ்ந்தோய் நீ
நா வீற்றிருந்த புகழ் மிக்க நணுகா காட்சிக்கு இறையோய் நீ
பூ வீற்றிருந்து நாம் வாழ பூ வந்து இடர் உற்று அழுவோய் நீ
ஆ வீற்றிராயோ என் இதயத்து அதற்கே உறுதி புரியாயோ

#141
நூல் வாய் புகழ் மேல் உயர்ந்தோய் நீ நோய் வாய் மருந்தின் கனிவோய் நீ
கோல் வாய் கோடா நீதி நெறி கொண்டு எ உலகும் புரந்தோய் நீ
வேல் வாய் குருதி பாய்ந்து இறப்ப மெய் கொண்டாயோ இதை அறியா
கால் வாய் இலை போல் தியங்கிய என் கருத்திற்கு உணர்வை உணர்த்தாயோ

#142
நீர் பாய் உலகிற்கு உயிரோய் நீ நிமிர் வீட்டு உலகிற்கு உயிரோய் நீய்
சீர் பாய் பாவிற்கு உரையோய் நீ திறன் கொண்டு ஆள்வார்க்கு அடலோய் நீய்
ஏர் பாய் இரவிக்கு ஒளியோய் நீ எம் மேல் இரங்கி பிறந்தனை நாம்
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ

#143
தேறும் தயையின் முனிவோய் நீ சினத்திற்கு அருள் செய் கனிவோய் நீ
கூறும் கலை அற்று உணர்வோய் நீ கூறும் தொனி அற்று உரைப்போய் நீ
மாறும் பொருள் யாவிலும் நின்றே மாறா நிலை கொள் மரபோய் நீ
ஈறும் தவிர்ந்த உன் புகழ் கடல் ஆழ்ந்த எனக்கே கரை காட்ட அருளாயோ

#144
ஒளி நாக்கொடு வான் சுடர் புகழ ஒளி நாக்கொடு பல் மணி புகழ
களி நாக்கொடு பல் புள் புகழ கமழ் நாக்கொடு கா மலர் புகழ
தெளி நாக்கொடு நீர் புனல் புகழ தினமே புகழப்படுவோய் நீ
அளி நாக்கொடு நான் உனை புகழ அறியா மூகை உணர்த்தாயோ

#145
என்றும் போற்றப்படுவோய் நீ எங்கும் நிழற்று ஓர் குடையோய் நீ
முன் துன் பொழுது அற்று உளனோய் நீ முக்காலத்து ஓர் பொழுதோய் நீ
குன்றும் தன்மைத்து உரை பின்ற குணியா அருள் செய்தாய் அதற்கே
ஒன்றும் தேறா என் இதயத்து உணர்வின் காட்சி அருளாயோ

#146
என்றான் அழுதான் உள் உருகி இன்ப கடல் ஆழ்ந்து அன்று ஆழ்ந்தான்
குன்றா இறையோன் தயை கடலுள் குளித்தான் நீந்தி கரை காணான்
சென்றான் என்ன மெய் மறந்தே சிறிது ஓர் கால் நின்று உணர்ந்தவை வான்
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப நிகர்_இல் அன்பால் மீண்டு உரைப்பான்

#147
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்று அனைத்தும் நீயே கதி நீயே
பிறந்தாய் உலகிற்கு உயிர் அன்னோய் பிறந்து எம் துயரும் எம் பகையும்
துறந்தாய் எங்கள் சிறை தீர்த்தாய் துகள் பூட்டிய வீட்டு உயர் வாயில்
திறந்தாய் இவை யாவரும் அறிய திறன் செய்து அருள் செய்து இரங்காயோ

#148
குருவாய் வந்தோய் ஒளிப்பாயோ கோது ஆர் இருள் தீர் வெம் சுடரின்
உருவாய் வந்தோய் ஒளியாயோ உயர் வான் நிகரே மண் கனிய
கருவாய் வந்தோய் இ கருணை கண் கொண்டு எவரும் களித்து அறிய
தருவாய் வந்து ஓய் இல அன்பின் தகவோய் திருவோய் என தொழுதான்

#149
துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு
விஞ்சும் தன்மைத்து ஓங்க வளன் விழைவே விளைக்கும் விழி விழித்தான்
எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த
அஞ்சும் தன்மைத்து எதிர் இறைஞ்சும் அமரர்க்கு உரையாது ஏவல் இட்டான்

#150
ஏவும் பாலால் விண்ணவர் போய் இடையர் வந்து ஏற்றிய ஆறும்
தூவும் பாலால் ஒளி பகலில் துளங்கு மீன் தோன்றிய ஆறும்
மேவும் பாலால் விரைந்து இறைஞ்ச வேந்தர் மூன்று எய்திய ஆறும்
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம்
மேல்

@11 காட்சிப் படலம்


#1
இன்ன வாயில் இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில்
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய்
மின்னல் நேரும் அன்னை ஈன்ற வேதநாதனை தொழ
உன் அலாத கோவர் இன்பம் உண்ண உற்று அழைத்தனர்

#2
கொழுந்து உறும் குளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும்
எழுந்து உறும் குடத்தியாரும் ஏகி ஆய காட்சியால்
விழுந்து உறும் களிப்பு விஞ்சி வேதநாதன் மேல் பதம்
தொழும்-தொறும் தொழும்-தொறும் துளங்குகின்ற தோற்றமே

#3
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன
மாலை ஆக வீங்கு உவந்து வாசம் ஆரும் முல்லை ஆர்
மாலை ஆக ஈங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார்

#4
பஞ்ச அரங்கில் இன்பு அரங்கு பான்மையால் அடை வரத்து
அம் சலம் குழிந்து உவந்து அமிழ்ந்து அமிழ்ந்த உரம் தனில்
விஞ்ச இன்பம் நெஞ்சு அடங்கு இல் மேவல் ஆர்ந்த தம் உயிர்
உஞ்சல் ஆடி வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர்

#5
எண் உளே அடங்கல் இன்றி ஏந்து மாட்சி பூண்டு வான்
விண் உளே பொலிந்து உவந்த விண்ணவர்க்கு வேந்தனே
புண் உளே மருந்து நீவி போன ஆட்டை மீட்கவோ
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை

#6
ஒண் தலங்கள் அண்ட உம்பரும் தொழும் பராபரா
விண் தலம் கலந்து இலங்கு வெண் களங்கன் ஒப்பு எனா
மண் தலங்கள் எங்கும் யாரும் வாழ ஈர வெண் குடை
கொண்டு அலங்கல் கொண்ட தேறல் கொண்ட அன்பு கொற்றவா

#7
மணி கலத்து அகத்து அமைத்த வான் அமிர்த மார்பினோய்
பிணி குலத்து அகத்து உதித்த பெற்றி ஆய்ந்து வாழ்த்திட
பணி குலத்து அகத்து அடங்கு இலால் பணித்த நின் பணி
அணி குலத்து அகத்து அணிந்த அன்பு பேர்கு இல் ஆகுமே

#8
இரவி வேய்ந்த கஞ்சம் ஈன்ற இலகு முத்தம் ஏய்த்து வெல்
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற பொருவு_இல் அன்னை வாழுதி
சுருதி வேய்ந்த மாட்சி பூண்ட துணைவன் ஆய மா தவத்து
உருவில் வேய்ந்த வேந்த வாழி என்று உறுதி சொற்றினார்

#9
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல்
குடத்தியர்க்கு அமைத்த பற்றல் கூர்ந்து தோன்றல் தாள் மிசை
தட துணர்க்கு அமைத்த தேறல் தாங்கு மாலை சாத்தலும்
முடித்த திங்களை தொடுத்து உடுக்கள் உற்றல் ஒத்ததே

#10
ஏதம் இன்றி மாலி ஈன்ற காந்தி என்று தோன்றலை
கோது அகன்று உயிர்த்த கோதை தாள் முன் அன்ன கோவலர்
சீத இன்பமோடு இரங்கு தேன் அமிழ்தம் ஈகலும்
பாதம் ஒன்று சோமன் ஈன்ற பால் நிலாவை மானுமே

#11
பால் நிலத்து அமைத்த அன்பு பதுமம் நேரு கண் செய
தேன் நிலத்தினாரை நோக்கு சிறுவன் இன்பு காட்டலால்
மேல் நிலத்தினாரின் ஒத்த விரியு காட்சி உற்று உளம்
வான் நிலத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார்

#12
கன்னி ஆய தாயும் ஓங்கு காவலானும் அன்பு உற
இன் இறாலினும் கனிந்த இன்ப அம் சொல் ஓதலால்
உன்னம் மேவும் ஈர அன்பு முன்னம் உள் உறாமையால்
மின்ன மாரி தூவல் ஒத்த வீழும் நாட்ட மாரியே

#13
ஏவல் ஆகி மூவரை இறைஞ்சி ஏங்கி ஏகினர்
ஆவல் ஆகி ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால்
மேவல் ஆகி ஆவியாக வேய்ந்த அன்பு இலாது எனின்
ஓவல் ஆகி வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே

#14
ஏகு ஆணை ஏக எங்கும் ஏகன் ஆகி ஆள்பவன்
மாகம் மேவு மாடம் நீக்கி மாடு மேவு உழைக்கு உறைந்து
ஆகம் மாடை வேந்தர் நீக்கி ஆயரை தெரிந்தது என்று
ஓகை ஆக ஓகனோடும் ஓங்கு தாயும் வாழ்த்தினாள்

#15
முன் அருந்திய தீம் சுவை முல்லையார்
பின் அருந்திட பெட்பு உறீஇ நாள்-தொறும்
மின் அருந்திய மெல் அடியாள் கரத்து
அன்ன அரும் திரு சேய் தொழ அண்ணுவார்

#16
அண்ணி நீர் தவழ் தீ என அம்புய
கண்ணி தாள் மிசை பெய்துழி காதலன்
விண்ணின் நீர் முகில் மின் என நோக்கலோடு
உள் நிலாவொடு இன்பு ஓர் மழை தூவினான்

#17
தூவி ஓடிய வாரி துவற்றொடு
காவில் ஓடிய முத்து என காதலால்
நாவில் ஓடிய நல் புகழ் சிந்துவார்
ஏவி ஓடிய கோல் விழி ஏந்தினார்

#18
ஏந்தி ஓங்கு உளத்து இன்ப நெடும் கடல்
நீந்தி நீந்தி நிலை கரை காண்கு இலா
காந்தி வேய்ந்தனளை கனிந்து ஓதுவாள்
சாந்தி நாமம் தரித்த குடத்தியே

#19
குடத்தி வாய் மொழி கோது என கோதையாய்
உடற்றி நீ ஒருவாது அருள் ஓர்ந்து கேள்
மடத்து யாது எனும் கிள்ளை வகுத்தன
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ

#20
ஆவதே முனர் ஆயது போல் அறிந்து
ஈவதே நசை பின்ற அளித்திடும்
கோ அதே மிசை ஆள் தனி கோலினான்
நோவதே இனிது என்று உதித்தான்-கொலோ

#21
கொல்லும் வேலொடும் கூர் நெடும் வாளொடும்
வில்லும் வாளியும் ஆழியும் வில் செய
ஒல்லும் ஆழி உருட்டிட கோன் துணை
செல்லும் வீர வெம் சேனை இல் ஆயது ஏன்

#22
ஆய வான் மணி ஆர்ந்து அணி உச்சியால்
காய நெற்றி கடந்து உயர் மாடமும்
தூய பொன்னொடு சூழ் சுடர் பூணும் இ
தேய வேந்தர் தம் செல்வம் ஒன்று இல்லது ஏன்

#23
இல் அதே இல இ வழி வந்தது ஏன்
செல்ல வான் வழி செய்ய வந்தான் எனில்
வல்ல வேடம் அணிந்து மறைவு அற
வெல்ல வான் உரு வேய்ந்தின் நன்று அல்லதோ

#24
ஓவு உண்டு ஆய உரு கொடு என் உளத்து
ஆவு உண்டாயின ஐயம் இதே இனி
தூவு உண் தாதுவ தூய் மலர் வாய் திறந்து
ஏவு உண்டு ஓதுதி ஆய் இழையாய் என்றாள்

#25
என்ற வாசகம் எந்தை மனு_குலம்
சென்ற வாய் அருள் காட்டிய சீர் உணர்வு
ஒன்றல் ஆகி உருகிய தாய் புனல்
மின் தவா விழி தூவி விளம்பினாள்

#26
அம்பினால் அபயர் செயும் அ துணை
நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார் பை
கொம்பில் ஏறும் இடை துவளும் கொடி
எம் பிரான் வலிக்கு இ துணை வேண்டுமோ

#27
வேண்டும் ஓர் வினை வேண்டும் என்றால் முடித்து
ஆண்டும் ஓர் தனி கோல் அரசான் எரி
தூண்டும் ஓர் சினம் தோன்றுழி அ பகை
தாண்டும் ஓர் வலி தாங்குவர் யாவரோ

#28
யாவரும் கடிது அஞ்சலொடு எஞ்சுவான்
மீ வரும் துளி மேதினி மொய்த்ததும்
தீ வரும் துளி ஐம் புரம் தீந்ததும்
தூ வரும் பலவும் தொகை சொற்றவோ

#29
சொல் தவிர்ந்த அருள் தொழில் கால் இது என்று
உற்று அவிர்ந்த உடு முடியாள் உரைத்து
இற்று அவிர்ந்த இடைச்சி உணர்ந்த பின்
பற்று அவிர்ந்த உரை பயன் கூறுவாள்

#30
கூறுவாள் செயும் கொள்கையின் என் உளம்
பீறு வாள் என பின்னை ஓர் ஐயமும்
தேறு வாய் மொழி கேட்டிட செப்புவேன்
ஈறு வாய் இல எந்தையின் அன்னையே

#31
அன்னை தந்தை இலான் அறை நூற்படி
என்னை இங்கு அளித்தோன் வரும் எல்வையின்
மின்னை ஒன்றிய வேடம் எடுத்து அவன்
தன்னை யாவரும் தாழ இறைஞ்சுவார்

#32
அஞ்சுவார் அவன் முன் உலகு ஆள்பவர்
எஞ்சுவார் அவனை இறைஞ்சுவார்
விஞ்சும் ஆரணம் ஆக விளம்பினார்
துஞ்சு மா தவரே என சொல்லினாள்

#33
சொல்ல கேட்டனள் தொன் மொழி தன்மையும்
வெல்ல கேட்பு_அரும் வெம் சினத்து எல்லை நாள்
ஒல்ல கேட்டனர் உட்குற ஆவதை
புல்ல கேட்கில் யான் புகல்வேன் என்றாள்

#34
தாள் எழும் கமலம் சுடர் தாவிய
கோள் எழும் கதிர் கொண்டு என கேட்டலும்
வாள் எழுந்த கண் மாதொடு யாவரும்
சூள் எழுந்து உற சொல் என சொல்லுவாள்

#35
மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின்
நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர் தோன்றி நயன் தருவான் மீண்டு அரிய திறத்து நீதி
பல் செய்கை காட்ட இரு வினையால் யார்க்கும் பயன் தர நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான்

#36
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய்
கண் கனிய பொன் கோலால் அரிதின் தீட்டி கதிர் தவழும் ஓவியம் நல் உயிர் பெற்று அன்ன
விண் கனிய கவின் பூண்ட வடிவம் சூட்டி விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி
புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன்

#37
அழுது ஆர்ந்த துயர் கரத்தில் பிறந்து கைக்கும் அரந்தையின் பால் அருந்தி வளர்ந்து அருள் வளர்த்த
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக
உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம்
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான் மணி கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன்

#38
பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால்
கை பொதுளும் கனி விடம் என்று ஒருவுக என்றான் கனிவு என்ன தான் அருந்தி பொன்றல் போல
மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ

#39
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி
முக்காலம் கடந்து உணர்த்து இ சுருதி நல் நூல் மொழிந்து அருளை காட்டிய பின் முதிர்ந்த நீதி
அ காலம் குறுகிய கால் தீர்வை தீர்க்க ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கி கூச
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ

#40
தேர் எழுந்த செம்_சுடரோன் இருண்டு மாழ்க தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப
பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கி பேர படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர்

#41
கடுகியன இடி சூல் கொள் கரும் கார் மொய்ப்ப கணகணென கடும் செம் தீ மாரி தூவ
வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப
முடுகியன சாப மழை திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க
கிடுகிடென பார் உலகம் நடுங்கி ஆட கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே

#42
வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம் வெண் பலி ஆயின பின்னர் வயத்திற்கு எஞ்சாது
உம்பரம் ஆள் தனி கோலான் ஏவும் தன்மைத்து உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே
அம்பரம் நான்கு ஓடி எழும் கடலும் காரும் அதிர்த்த அரவம் எஞ்சி விஞ்ச காளம் ஊதி
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம்

#43
ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன்
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண்
தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார்

#44
குல முறையும் இன முறையும் ஒன்றும் பாரா குண தொகையால் வேறுபட வினையை செய்த
நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய்
பல முறையும் மூதுனனை தம்பி ஓர் தூர் பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும்
வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார்

#45
இடி உண்ட முகில் ஒரு-பால் மின்னி விம்ம இகல் முரசும் பல் பறையும் ஒரு-பால் ஆர்ப்ப
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு-பால் முன்ன கோ கணம் போல் மற்று அமரர் இரு-பால் சூழ
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி
முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான் முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான்

#46
குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர்
சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி
நின்று எழுந்த துயர் அழற்று மன தீயோரை நெடும் வேல் கண்ணால் சுளித்து நோக்கி நோக்கும்
நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான்

#47
முன் செய்கை அனைத்தும் அவண் தோன்றி தீமை முயன்றதும் உள் விரும்பியதும் உரைத்த சொல்லும்
நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும்
மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே

#48
மின்னி வீழ் உரும் அன்ன களித்து நோக்கி வெரு உய்க்கும் முகத்து ஆர்த்து விமலன் சொல்வான்
துன்னி வீழ் புனல் அன்ன நிலையா செல்வ தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள் விண்
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி
வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ

#49
நூல் வழியே வந்த மறை நீக்கி காமம் நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர்
கோல் வழியே கோட்டம் இல என்னை போற்றும் குணத்தவரை குலம் இலரே என்றீர் நீங்கா
வேல் வழியே இரத்தம் உக அவரை கொன்றீர் வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப தீமை
கால் வழியே வணங்கிய தீ வஞ்சக தேவர் கணத்தொடு நீர் ஊழி_தீ முழுகி வேவீர்

#50
நண்ணாது நின்றுழி நான் தெரிந்த நீரோ நல் மறை நூல் உணர்ந்து உணராதவரை போன்றீர்
உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர் உள பிறர் கைப்பொருள் கொண்டீர் இகழ்ந்தீர் பொய்த்தீர்
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர்
கண்ணாது பிறர் மனை போய் காமத்து ஆழ்ந்தீர் கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர்

#51
என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து எ உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார்
குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம் நொந்தோம் குலைகிற்போம் கரை காணா மருண்டோம் கெட்டோம்
பின்றாது ஆர்த்து எரி வேவோம் அந்தோ அந்தோ பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம்
பொன்றாதார் வாழ அவர் பொன்றாது அந்தோ புகை செம் தீய் வேவோம் நாம் அந்தோ என்பார்

#52
துடித்திடுவார் உடல் பதைப்பார் மோதி வீழ்வார் சுழல்கிற்பார் புரள்வார் நொந்து அழுவார் சோர்வார்
கடித்திடுவார் தம் உடலை முனிவார் ஆர்ப்பார் கலுழ்கிற்பார் குருதிகள் தாவிட தாம் தம்மை
அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம்
குடித்திடுவார் தீ கடலை நீந்தார் நீந்தார் குன்றாது எஞ்ஞான்றும் எரி பொன்றா வேவார்

#53
வானகத்தே பேர் உவகை பயக்கும் பாலால் வடிவ முகத்து இவன் நல்லோர் தம்மை நோக்கி
கானகத்தே துயர் உண்டீர் நிந்தை உண்டீர் கசடு அற்றீர் அறம் பூண்டீர் இனி எஞ்ஞான்றும்
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி
மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர்

#54
மற நெஞ்சீர் போய் திரு என் முகத்து அகன்றே மண்ணையுடன் ஊழி_தீய் போ-மின் என்னா
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில்
புறம் நெஞ்சு ஈர்ந்து அன துயரோடு இவற்றை கண்ட பொதிர் தீயோர் அயர்ந்து ஏங்கி புலம்பி சீற
திற நெஞ்சு ஈர்ந்து என புவி உள் பிளந்த வாயில் திரண்டு உருண்டு ஆர்த்து அலறி தீ நரகில் வீழ்வார்

#55
சுற்றத்தார் வேண்டும் அன்றோ மறை உள் கொள்ளா சுற்றத்தோடு ஈங்கு அந்தோ என்றும் வேவோம்
செற்றத்தால் முந்தையர் தீ வழியை நீங்கா சிதைந்து இவரோடு அடர்ந்து எரி தீ ஆழ்ந்தோம் அந்தோ
குற்றத்தால் உலகு இயற்கை பிறழாது அண்ணி கொண்ட பயன் இதோ அந்தோ அந்தோ இன்ப
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார்

#56
அன்று இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு அரசு ஒக்கும் வடிவு ஒக்க பொலிந்து தோன்ற
இன்று அன்னான் நீதி முறை பிறழா நேர் சென்று இருபற்று அற்று ஒழுகும் நெறி எவர்க்கும் காட்ட
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம்
நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான்

#57
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான்
அன்பு அருந்தி அமுது ஏந்தும் மணி கலத்தின் அன்னான் என்று இறைஞ்சினள் தாய் துயர் முன் இன்பம்
பின்பு அருந்தி கேட்டு எவரும் வணங்கி நிற்ப பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள்

#58
வழுது ஆயின இன்பு உண நான் மனம் உள்
பழுது ஆயின பாவியினால் இறைவா
அழுதாய்-கொல் உளைந்து அயர்வாய்-கொல் எனா
தொழுதாள் அழுதாள் பினை சொற்றுவள்-ஆல்

#59
மறம் மேவினர் கை வசம் ஆகுப ஈங்கு
உற மேவிய காதல் உள் ஆயினையோ
திறம் மேவிய சீவனியே அமுதே
அறமே அருளே கருணாகரனே

#60
சிந்தா ஆகுல வேலை உடைத்த செயிர்
தந்த ஆகுல ஆசை தகைத்த கரை
உந்து ஆகுப நீ உலகு ஓர் மகனாய்
வந்து ஆகுல மா கடல் மூழ்குவதோ

#61
தேன் தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர்
வான் தோய் அமுது ஒத்த மருந்து இடவோ
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய்
கான் தோய் மலரே உயிர் செய் கனியே

#62
மண்ணோர்கள் வருந்து இல வாழ்வு அயிற
விண்ணோர் தொழும் ஓர் தனி வேந்து என நீ
புண் நோக உடல் துயர் பூத்திடவோ
கண் ஓர் மணியே கனிவு ஆருயிரே

#63
பை நாகம் எனா பல மின்னல் எழீஇ
கை நாகம் எனா கடிது ஆர்த்து நிறை
பெய் நாகம் எனா பிதிர் வந்தனை கல
மை நாகம் எனா உருகோம் மனம் நாம்

#64
அற ஈடும் இலார் அறிவு ஈடும் இலார்
திற ஈடும் இலார்-இடை சேர் பயனால்
உறவு ஈடும் இலா உறை வீடும் இலா
புற ஈடும் இலா பிணி பூத்து அழுவாய்

#65
புகை ஆடிய காடு எனும் இ புவியே
பகை ஆடியது அல்லது பண்பு உளதோ
நகை ஆடுவர் நாளி என கஞறி
மிகை ஆடுவர் நின் விழைவு ஆற்றுவரே

#66
பிணி ஆசையில் எய்தினையோ பிணியே
அணி ஆசையின் மேல் நிறை ஆக்குவரே
கணியா அருள் மா கை கருத்து இதுவோ
மணி ஆர் அணியே மறையின் திருவே

#67
இடி மொய்த்தன எல்வை இரும் கரிகள்
பிடியை தழுவி பிணி ஆற்றுவன
மடி உற்று இளம் குஞ்சுகள் மாழ்கும் என
முடி மொய்த்து உறை முன் பெடை தாங்குவன

#68
நெடு மூ உலகு ஆக்கிய நீ எனினும்
சுடு சூழ் அழல் ஆற்றிடவும் சுழல
படு விண் மழை தாங்கிடவும் பரிவு அற்றிடும்
ஒன்று இலது ஆம் அரு மாய்கை இதே

#69
பொய்யா விதியோய் பொருவா அருளோய்
உய்யா உலகு என்னில் உனக்கு இழிவோ
அய்யா பயன் நிற்கு இதன் ஆகுவதோ
கொய்யா வலியே குறையா திருவே

#70
விடியா இருள் முடிய மேதினி மேல்
முடியா ஒளி முற்றிய செம்_சுடரே
அடியாள் உயிரே அணியே என மென்
கொடி ஆடு என நொந்து குழைந்து அழுவாள்

#71
அழுவார் எவரும் அயர்வார் எவரும்
தொழுவார் புகழ்வார் துணர் மெல் அடி மேல்
விழுவார் சிர மேல் கொளுவார் மிடைவார்
எழுவார் நணுவார் பெயரார் இனிதே

#72
இன்றே நினை எள்ளினர் எல்லையின் நாள்
அன்றே அறிவார் அழுவார் அருளை
கொன் தேடினர் வன்னி குளிப்பவரே
என்றே தொழுவார் இளையோர் சிலரே

#73
மெய் ஆகிய நின் விதியே விழையா
பொய் ஆகிய புன் கதை பூத்த பயன்
மொய் ஆகிய நாள் மொழிவார் என நீர்
மை ஆகிய கண் வடிவார் சிலரே

#74
சிலர் நீதி செழும் திறல் பாடுவரே
சிலர் ஆர்வ இரும் திரு ஓதுவரே
சிலர் தீது செயும் பகை செப்புவரே
சிலர் தேடிய தீமை கலுழ்குவரே

#75
சிலர் தாள் இணை சென்னியில் ஏற்றுவரே
சிலர் ஏற்றிய சே அடி நீவுவரே
சிலர் பூ அணி சீறடி சூடுவரே
சிலர் வாள் விழி முத்து அணி சேர்க்குவரே

#76
சிலர் செய் துதி சீரியதோ அது என
அலர் வைகிய தேன் அளி பாடுவன
பலர் பெய் கமழ் நீர் பனி கோதது என
மலர் மல்கிய தேன் மழை தூவுவன

#77
திரு முற்று உறை சிந்திய கார் இது என
வரு பல் சிகி வால் சிறகு ஆடுவன
பருவத்து இருள் நீக்கிய பானு இது என
குரு நல் குயில் கொம்பு உயர் கூவுவன

#78
விரை மாறு இல தேன் விளை பூ இது என
நிரை தேன் நிறை வண்டொடு பாடுவன
கரை நீத்த அமுதின் கடலே இது என
உரையால் துதி ஒண் கிளி பேசுவன

#79
இவ்வாறு இமிழ் எல்லையும் இல்லை என
அவ்வாறு அணுகு ஆயரும் அன்பினொடு
செ ஆறு உளம் மேவிய சீர் பல நாள்
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறு அதுவோ

#80
செல்லை தாராய் சூடிய குன்றில் திரிகின்ற
முல்லை தாரார் இ தலை பல் நாள் முறை எஞ்சாது
எல்லை தாராய் ஏந்திய எந்தை தொழ அம் பூ
வில்லை தாராய் வேய்ந்தனன் அன்பு ஆர் விதி சொல்வான்

#81
சொல்லும் தன்மை பொன் மொழி மாரி துளி வெற்பில்
புல்லும் தன்மை தண்பட உள்ளம் பொலிவு எய்தி
செல்லும் தன்மைத்து ஏழ் மடி ஓங்க தெளி ஞானம்
ஒல்லும் தன்மைத்து ஒள் அறம் உற்றே கதி உற்றார்

#82
மை விண் மேல் ஆள்வோன் தனை ஏந்தும் வளன் ஓங்க
மொய் விண் நேர் உள் தூவிய ஞான முறை எல்லாம்
பெய் விண் நீர் உண்டே மலை ஆறாய் பிளிர்வு அன்ன
மெய் விண்டு அம் பூவாய் வழி கால்வான் வினை தீர்த்தான்

#83
செல் வாய் நின்ற அம் முழை சென்றார் எவர் உண்டோ
வில் வாய் விண்ட பூம் குழவி-கண் விளை ஞானம்
வல் வாய் உண்ட மா தவன் நல் நூல் மறை கூறும்
சொல் வாய் மல்கும் தூய் அறம் உற்றார் துகள் தீர்ந்தார்

#84
புன்மை கொண்டார் அ வழி போய் அ புடை ஆர்ந்த
இன்மை கண்டால் எள்ளுவர் எள்ளாது இவர் நிற்கும்
தன்மை கண்டே நூல் வடிவோன் சொல் தகை கேட்டால்
நன்மை கொண்டே நல் புகழ் ஓதி நடை கொள்வார்

#85
பார் ஆர் கங்குல் பானு ஒளி முன்னர் பரவு உண்டோ
ஏர் ஆர் வில் செய் மு சுடர் அன்னான் இவரை கண்டு
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ
தேரார் உண்டோ தேர்ந்து அடைவார்க்கு ஓர் சிதைவு உண்டோ

#86
துன்பால் இங்கண் ஆம் குலைவு எல்லாம் துகள் தீர்த்தோன்
தன்-பால் என்றே தான் அயர்வு உற்றான் தனை உற்றார்
இன்பால் எஞ்சா வாழ்வது தம்-பால் என விட்டான்
அன்பால் அஃகாது ஓர் உயிர் அன்னான் அமுது அன்னான்

#87
அணி கலத்து அழகு அழுந்திய உரு கொடு அமரர்
மணி கலத்து அமுது உய்த்து என வணங்கி ஆங்கு உய்த்த
பிணி கலத்து-இடை கிடந்து உறை குழவி தன் பெயரை
பணி கலத்து-இடை படைத்து உலகு உய்ந்து எழ பகர்வாம்

#88
மட்டு வாய் விளா மணி முகை மணம் உயிர்த்து அன்ன
கட்டு வாய் விளா கன்னி தன் மகவினை ஈன்ற
எட்டு நாளும் ஆய் இரவி ஆயிரர் என இரவி
சிட்டு வான் எழா முன்னர் ஆங்கு அமரரே திளைத்தார்

#89
வம் பொன் ஆடை மேல் செம்பொனால் வரைந்தன வண்ணத்து
அம் பொன் மார்பின் மேல் அழல் கொழுந்து அழற்று என அணிந்த
செம்பொன்னால் திரு நாமமே செறிந்த பேர் அணியாய்
பைம்பொன் மேனியர் பரப்பு ஒளி பருகி வில் செயும்-ஆல்

#90
அங்களை தெளித்து அகல் நறு மலர் கொடு மார்பில்
திங்களை தெளித்து இட்டு என நாமம் பூண் தியங்க
எங்களை தெளித்து உயர்த்திய இறைவ என்று இறைஞ்சி
மங்கள தெளி திரு புகழ் வழங்குபு வதிந்தார்

#91
ஆர் அணிக்கு எழு மிக்கயேல் கபிரியேல் அன்ன
பேர் அணிக்கு இரு தலைவரின் பெற்றியின் தோன்றி
தேர் அணிக்கு இரும் செம்_சுடர் அழகு உற தீட்டும்
ஏர் அணிக்கு இணை ஏமம் மேல் திரு பெயர் அணிந்தார்

#92
தகடு வைத்த பொன் பரப்பின் வாய் முத்து அணி தயங்க
முகடு வைத்த பைம் மணியொடு குரு மணி முடியாய்
அகடு வைத்த வால் மணியினால் அழகு எடுத்து அழுத்தி
துகள் துடைத்தவன் தூய் திரு நாமம் வேய்ந்ததுவே

#93
வருந்த மாசு உடை மனு_குலம் புரந்திடல் இவனால்
பொருந்தல் ஆம் என புரவலன் என்று ஒக்கும் நாமம்
திருந்த யேசுவே செப்புதீர் என மிக்கயேல் ஆங்கு
இருந்த வானவர் இடையிடை விருப்பு எழீஇ தொழுதார்

#94
முருடொடும் திசை முழுவதும் பல்லியம் முழங்க
அருள் தொடும் திசை அந்தரம் அளவு இல களிப்ப
மருள் தொடும் திசை வையகம் இனிது அயர்வு உயிர்ப்ப
இருள் தொடும் திசை இடியொடு நடுநடுங்கினவே

#95
பிணத்து இனங்களை நடுக்குறும் பெற்றி மா தவனும்
கணத்து இனங்களை முடி புனை கன்னி அம் தாயும்
குணத்து இணங்கிய குரு மணி திருந்திய நாமம்
மணத்து இணங்கினர் வணங்கலின் மிக்கயேல் உரைப்பான்

#96
இ திறத்திலும் இ தகை ஏந்திய நாமம்
கை திறத்திலும் களிப்புற கூப்பியர் உரைப்ப
மை திறத்தில் உள் மயங்கிய சிதைவு எலாம் கடிந்து
மெய் திறத்திலும் விளைந்த நன்று இயம்புதல் பாலோ

#97
பொய்யும் போவன போவன பொருந்திய புரைகள்
ஐயும் போவன ஆகுலம் போவன அலகை
மொய்யும் போவன முதிர்ந்த நோய் போவன மற்றும்
மையும் போவன வகுத்த இ திரு பெயர் வயத்தால்

#98
நோயும் ஒக்குமேல் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒக்கும்
பேயும் ஒக்குமேல் வெற்றியை பெறும் படை ஒக்கும்
தீயும் ஒக்குமேல் தீர்த்து அரும் செல் கதி உய்க்கும்
தாயும் ஒக்குமே தருமன் அன்பு உய்க்கும் இ நாமம்

#99
இன்ன இன்புறும் இனிய இ திரு பெயர் தன்னை
பன்ன இன்புறும் பன்னிய வாயும் உள் வணங்கி
உன்ன இன்புறும் உன்னிய உன்னமும் அதனை
துன்ன இன்புறும் துன்னிய திசை எலாம் அன்றோ

#100
வான மேலவர் வணங்கிய இ பெயர் தன்னால்
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து
ஞானமே பயில் நன்று எலாம் மிகுத்து உயிர் பிரிதல்
ஆன வேலையில் அனந்த வீடு அமைதல் ஆம் என்றான்

#101
என்ற காலையில் இன் இசை மகர யாழ் உளரி
நன்று அளாவிய நயத்து அமிழ்ந்து ஆசியை நவின்று
குன்று அளாவிய குன்று இல முகில் பொழி மழை போல்
மன்று அளாவிய மலர் மழை வழங்கினர் வானோர்

#102
மின்னு மா மகன் மேனி கொண்டு உதித்த எண் பகல் ஆய்
பன்னு மா மறை பயில்வரை விளித்து அரும் அன்பின்
மன்னு மா மறை வகுத்த நல் முறைகளை தவிரா
துன்னு மாண் உடை தூய் திரு நாமம் இட்டனரே

#103
வையத்தார் திரு விரும்பி மறு உற்றார் என்று எளிமை வடிவம் பூண்டு
மெய்யை தான் உலகு உணர்த்த விருப்பமொடு மனு ஆய விசைய வேந்தன்
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த
ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரை தன் தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம்

#104
விண் எழுந்த வெண் மதியம் மிதித்து ஒளிரு மெல் அடியாள் விரும்பி ஈன்ற
ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம்
கண் எழுந்த கவின் காட்டி கதிர் பொங்கு நவ மீனை கடவுள் தானே
மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான்

#105
நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும்
பெறுமான மணி புனல் சேர் பேர்சிய நாடு ஆண்டு அருளை பிளிர்ந்த வேந்தும்
செறு ஆகத்து அரசு அன்னம் திளைத்து ஆர்க்கும் சப நாட்டு சிறந்த வேந்தும்
துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு உள் அறிவு எய்தி தொய்யல் உற்றார்

#106
தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை
மனத்து இனத்து தொழுது அடியை வணங்குவல் என்று அவனவனும் மனத்தில் தேறி
இனத்து இனத்து கடல் தானை இணைந்து வர கோ வேந்தை இறைஞ்ச போகில்
கனத்து இனத்து தாழ்ந்து ஒளியை கான்று உடுவே அரிய சுரம் காட்டும் அன்றோ

#107
மாறு இன்றி இரவு பகல் மல்கு ஒளி கால் ஓர் உடுவே வழியை காட்ட
வேறு இன்றி தடம் ஒன்றை மேவிய மூ அரசர் ஒன்றி விழுப்பம் ஓங்கி
காறு இன்றி களிப்புற தம் கருத்து எல்லாம் உணர்ந்து உணர்த்தி கருணை ஆர்ந்த
ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை இறைஞ்சுவதற்கு இணைந்து போனார்

#108
மிடை அடைந்த மணி குயிற்றி வெயில் எறிக்கும் பொன் கொடிஞ்சி மின் தேர் ஈட்டம்
குடை அடைந்த பரிகளொடு குன்று அருவி மதம் மாறா கும்பி ஈட்டம்
படை அடைந்த பகைவர் உரம் பாய்ந்து உணும் ஊன் உமிழ் வடி வேல் படையர் ஈட்டம்
மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து நெருங்கிற்றே வையம் எல்லாம்

#109
குழல் எடுத்து மாகதர் தேன் பட பாடி பல்லியம் கார் குரலின் ஆர்ப்ப
நிழல் எடுத்து சுடர் இமைக்கும் முடி வேந்தர் நெட்டு-இடை பல் நெறிகள் நீக்கி
சுழல் எடுத்து முகில் தலை ஈர் கொடி நகரை கடந்து ஏகி சோகு இனங்கள்
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ

#110
மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என அங்கண் உடு வதிந்து நிற்ப
அந்தர மேலவர் வணங்கும் அரசர் பிரான் விலங்கு இனங்கள் அடையும் அன்ன
கந்தரமே தெரிந்தது என கண்டு உளத்தில் வியப்பினொடு களித்த மூவர்
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார்

#111
அழிவு இன்றி கன்னி தாய் அரிதில் அவண் திரு மகவு ஈன்று அளித்த ஆறும்
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த ஆறும்
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும்
விழி இன்றி இறை ஈந்த மேதையினால் அறிந்து உளத்து வியப்பு உற்றாரே

#112
மு மலை வீழ்ந்து என வீழ்ந்து மு சுடர் போல் மு முடிகள் முகிழம் தாளில்
விம்மு அலை வில் உற பெய்து மேவிய நெஞ்சு உருகி கண் விடுத்த நீரால்
பொம்மு அலையின் பெருகு இன்ப புணரியினுள் மூவர் அங்கண் பொலிக மூழ்கி
இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே

#113
ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை
நீர் ஆழி நிலம் காக்க மாள்வான் எனும் அதற்கு உரிய நெய் கொள் மீறை
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம்
பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார்

#114
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ
விண் களிப்ப உவப்பு ஆனாய் வெயில் வடிவம் மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ
கண் களிப்ப உரு ஆனாய் கசடு ஒழிப்ப உள் இரங்கி கலுழ்குவாயோ
புண் களிப்ப மருந்து ஆனாய் புண்பட மாள்வாய்-கொல் என புலம்பி நின்றார்

#115
மூ உலகும் பொது அற ஆள் முதிர் கருணை வேந்து இவரை முகமன் நோக்கி
பூ உலகும் களி கூர புகலா பூம் கரத்து ஆசி புரிதலோடு
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என வரங்கள் எலாம் மிடைய தந்தே
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே

#116
அருத்தியொடு மனத்து ஓங்கி அனிச்சையில் நொய் அடி சிரம் மேல் அணுகி சேர்த்தி
கருத்தினொடு கண்ணில் ஒற்றி கண் உகு நீர் முத்து என கால் கழல் போல் மாற்றி
இருத்தியொடு முலை தழுவும் இளையோர் போல் வாய் பொருத்தி இரு முத்து ஏற்றி
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார்

#117
கோது அணிந்த உலகு அளிக்கும் குணம் வேண்டின் இ துயரோ குளித்தல் வேண்டும்
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து பொது அற்று ஆண்டு
நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம் பணி செய்யா நின்றால் என்னோ
வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய் என வளனை விரும்பி கேட்டார்

#118
ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு இ திருவோ உலகில் வேண்டும்
குன்றாத அறம் ஒன்றே குணித்து எய்தி மற்று எவையும் கோது என்று ஓர்ந்து
பின்றாத விதி முறையால் பிறந்த பிரான் உமது ஆர்வ பெற்றி ஒன்றே
பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை

#119
வீங்கு ஒடியா விம்மிதத்து இ விதி கேட்டு புகழ்ந்து இவரை வேந்தர் ஏற்ற
பூங்கொடியாய் அழிவு இன்றி பூ அனைய மகவு ஈன்ற பொருவு_இல் தாயும்
தேன் கொடியால் இ மகற்கு செகத்து அமைந்த கை_தாதை சிறப்பு உற்றோனும்
ஆங்கு ஒடியா உறுதி சொல் அருத்தியினால் இருத்தியர் போல் அயனம் உன்னார்

#120
பணிப்பு அரிய குணத்து உம்பர் பரமன் தன் பணி என்ன பயணம் கூற
பிணிப்பு அரிய உடம்பு உயிரை பிரிந்தால் போல் உள் துயரம் பெருகலோடு
தணிப்பு அரிய இ மூவர் தாள் தொழுது அ மூ அரசர் தணந்து நீங்கி
அணிப்பு அரிய நெறி வேறு காட்டு உடு பின் சென்று தமது அகலுள் சேர்ந்தார்

#121
தேர்ந்து அரிது ஓர் தெருளுடன் அ செல்வ அரசர் ஈய்ந்த நிறை செம்பொன் யாவும்
பேர்ந்து அரிது ஓர் பொறை என்ன பேர் அருளோர் மு பாலாய் பிரிதல் செய்தே
ஓர்ந்து அரிது ஓர் முறையில் தமக்கு ஒன்று இன்றி மெய் மறையை ஓதினார்க்கும்
ஆர்ந்து அரிது ஒண் மணி தேவாலயத்திற்கும் இரப்போர்க்கும் அளவில் ஈந்தார்

#122
உடை ஒக்க நீர் உடுக்கும் உலகு அறிய மன்னவர் வந்து ஒழிந்த பின்னர்
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து அரும் புகழ் செய் குழுவிற்கு அஞ்சி
மிடி ஒக்க எளிமை உற வெயில் ஆர்ந்த கதிர் கரக்கும் விகத்தன் போல
கடல் ஒக்க பெத்திலையேம் கடி நகருள் சிறு வீட்டில் கரந்து புக்கார்

#123
ஆனகத்தால் பல்லியம் சூழ் ஆர்த்து எழ இ முறை மூவர் அகன்று போகில்
பான் அகத்து ஆர் சுடர் உமிழ் வேல் பற்று ஒரு வானவன் அங்கண் பதிந்து எஞ்ஞான்றும்
கானகத்து ஆர் விலங்கு இனம் அ கந்தரத்துள் புகல் செய்யா காவல் செய்து
வானகத்தார் உறையுள் என்று ஆம் மன்னர் பிரான் பிறந்த முழை வயினே மாதோ
மேல்

@12 மகனேர்ந்த படலம்


#1
இ நீர் அன்னார்க்கு எண்_ஐ நாள் இனிதில் அங்கண் போயின பின்
மெய் நீர் உடுத்து ஈங்கு அவதரித்து விள்ளா முகை ஆம் திருமகன் தன்
அ நீர் முகத்தின் துகள் துடைத்து இ அவனிக்கு எங்கும் பயன் பயப்ப
முந்நீர் எழுந்த இளம் கதிர் போல் மூது ஊர் புறம் வந்தது சொல்வாம்

#2
நிறை நீத்து எசித்தார் பகை முற்றி நெடு நாள் சிறை செய்து யூதர்கள்-தம்
மிறை நீத்து உயர்ந்த குலம் எல்லாம் விடைத்தார் என்னா விடைத்து இறையோன்
குறை நீத்து எல்லா தலை மகரை குலைய ஒன்னார் தான் கொன்று
சிறை நீத்து யூதர் அமுது ஒழுகும் திரு நாடு அமைத்தி அருள் செய்தான்

#3
முன் நாள் செய்த அருள் மறவா முறை கொண்டு ஒழுகும் தன்மை என
பின் நாள் பெறும் தம் தலை மகரை பிறழாமையின் நேர்ந்து அவர் மீட்பது
அன்ன நாள் சிறையை தீர்த்த பிரான் அவர்க்கு ஏவின பாலால் எவர்க்கும்
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார்

#4
பிறை ஒண் வடிவம் தேய்த்து ஒளி சூழ் பிலிற்றும் அனிச்ச பதத்தாளும்
மறை ஒண் வடிவம் போர்த்து இலங்கி மலர் கோல் ஓங்கு மா தவனும்
நறை ஒண் வடிவு அம் துணர் பதத்தை நண்ணி ஏற்றி ஆசியை கேட்டு
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள் இறைவன் ஏந்தினரே

#5
விண்ணும் மண்ணும் பொது அற்று விதித்தும் அருளால் புரிந்து அளித்தும்
எண்ணும் எள்ளும் நீத்த குணத்து இருமை ஏந்தும் எனை ஆள்வான்
கண்ணும் கையும் அருள் புரிய கருணை கடலோன் புறத்து ஏகி
மண்ணும் விண்ணும் உவந்த நிலை வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே

#6
கான் தோய் மலர் மேல் தேன் துளியோ கதிர் தோய் வளை மேல் முத்து அணியோ
தேன் தோய் கமலத்து அன பார்ப்போ சீர் தோய் பொன் மேல் துகிர் செப்போ
மீன் தோய் முடி சூழ் தாய் கரத்தில் வேய்ந்தான் முகத்தில் வில் வீசி
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன மனுவின் உடல் தோய்ந்து உதித்த பிரான்

#7
வேய்ந்தான் அன்னான் என வானின் விழி போல் வேய்ந்தான் ஒளி வேந்தன்
ஆய்ந்தான் கண்டான் நீத்த கடல் ஆற்றா இன்ப கடல் இனிதின்
தோய்ந்தான் மலர் தாள் கதிர் கையால் தொழுதான் தொழா மற்றவர் கண்டு
காய்ந்தான் என்ன கதிர் சரங்கள் கடுகி வீசி கடுத்தனனே

#8
பைம் தார் பூண்ட பிறன் மனையாள் பற்றி சென்ற கண் மறுத்த
செம் தார் நல்லோர் மாட்சி என சிறுவன் நோக தீண்டிய தீ
வெம் தார் வெய்யோன் புழுங்கிய தன் வில்லை சுருக்கி புது மகளிர்
தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே

#9
கடுத்த பருதி கதிர் சரங்கள் காத்த வட்டத்து இள முகிலோடு
அடுத்த தென்றல் சாமரை இட்டு அனைய வீசி நறும் பைம் பூ
உடுத்த வண்ணத்து உள் உள பேர் உவகை பொறித்த முகத்து உலகம்
தொடுத்த உவப்பில் இன்பு ஒழியா தோன்றிற்று அன்று ஓர் விழா அணியே

#10
சிரை வாய் கனி யாழ் தும்பி செய சிகிகள் ஆடும் நாடகமும்
இரை வாய் குயில்கள் தீம் குரலும் இணர் வாய் பொழில்கள் பெய் நறவும்
கரை வாய் பொய்கை மலர் கரத்தில் கனிந்து ஏந்திய தீம் தேன் மணமும்
விரை வாய் தடத்து ஆர்ந்து எதிர் எதிரே விருந்து செய்ய போயினர்-ஆல்

#11
பில்கி தீம் தேன் துளி சுரக்கும் பிணையல் திரள் ஓர் மாரி என
நல்கி தீம் சொல் பா இசைகள் நயப்பின் பாடி மின்னின் நிறத்து
ஒல்கி தீண்டின் கண் கனிய ஒளி செய்து ஐயாயிரத்து_இரட்டி
மல்கி காத்த உம்பர் அலால் வந்தார் அன்று ஓர் எண்_இலரே

#12
கற்பே அணி என்று ஓம்பி மது கரை ஆம் தண் தார் மாதர்கள்-தம்
பொற்பே கணவர் தமக்கு அல்லால் புறத்து பயனே பயவா போல்
வெற்பே எழும் செம்_சுடர் நாண விண்ணோர் புடையின் மொய்த்து உற்ற
பல் பேர் உரு இ மூவர் அலால் பலரும் காணா தோன்றினரே

#13
குரவம் நீள் வேலி கோலும் குடங்கையுள் துஞ்சி-தன்னை
கரவ நீள் பசும் பூ நெற்றி கரும்புகள் நிறுவி ஊக்கி
விரவ நீள் தலையின் வாழை விடும் கனி நக்கி தீம் கான்
பரவ நீள் பல பூங்காவும் படு நெறி போயினாரே

#14
சண்பக பூம் பந்து ஒத்த தனையனை ஏந்தி போய் தம்
பண்பு அகத்து அனைய நீழல் படர்ந்து கான் படர பூத்து
விண் பக பாய்ந்த கொம்பர் விட்டு கண்டு உலவ யூகம்
ஒண் பகல் தகைத்த மேகத்து உறை மருட்டிடும் வீழ் தேனே

#15
மலைத்து அளி இரு-பால் மல்கி மகர யாழ் இசைகள் செய்ய
இலை தளிர் இரும் பூம் சோலை இடத்தில் இட்டு ஏகி பின்னர்
கலை திரிபு ஆக கோலி கதிர் மணி அருவி ஆர்ப்ப
சிலைத்து இரி சிகிகள் ஆடும் திகிரியின் நலத்தை கண்டார்

#16
கண்டுளி உளத்தில் ஓங்க களித்த பூம் கொடியோன் சொல்லும்
தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய்
பண்டுளி அனைத்தும் எஞ்சா பசி சினந்து உயிர்கள் யாவும்
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான்

#17
கோல் அடி கோடி ஆய கொடுமையால் வருடம் மூன்றும்
மேல் அடி மழையும் இன்றி மெலிந்து உலகு எஞ்சி நிற்ப
கால் அடி தன்மைத்து ஓர் கார் காண தன் கோட்டில் தந்தே
ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான்

#18
நூல் வழி புகழே போன்று நொடிப்பினில் பரந்த மேகம்
வேல் வழி ஒளியே போன்று மின்னி ஆர்த்து இறைவன் அன்பின்
பால் வழி பயனே போன்று பகல் இரா அளவு_இல் தூவி
கோல் வழி படமே போன்று கூ எலாம் கேழ்த்தது என்றான்

#19
ஊன் நிலை குழவி தோன்றி உலகு எலாம் அளிக்கும் அன்பின்
பால் நிலை இடம் மூன்று ஆற்றா பரிசு உடை இவனை காட்ட
கால் நிலை தோன்றி அ கார் கடல் நிலை பயத்தது என்று
மீன் நிலை முடி தாள் சேர்த்தி மெய்யனை தொழுதாள் தாயே

#20
சுளகொடு சவரம் வீசும் தோற்றமே போன்று வேழம்
புளகொடு மதத்தின் சீறி புடைத்த தன் செவி கால் வீச
மிளகொடு படர்ந்த மெல் நீள் கொடியின் மேல் ஊஞ்சல் ஆடி
அளகொடு பொலி கூன் ஆர்க்கும் அத்திரி அணுகினாரே

#21
நாக நீல் நெற்றி தூங்கு நல் மணி ஓடை போன்று
நாக நீல் நெற்றி நாறு நல் மலர் அணியாய் சூழ்ந்த
நாக நீல் நெற்றி தோன்றி நயன் தரு மறையின் சிந்தும்
நாக நீல் நெற்றி மீன் போல் நல் மணி அருவி கண்டார்

#22
நிறை தவிர்ந்து உணர்ந்த காம நெறியில் கை பொருளே போன்றும்
முறை தவிர்ந்து அடை சீர் போன்றும் முனிகள் தம் முனிவு போன்றும்
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ
துறை தவிர்ந்து இடத்து இட்டு ஏகி துளித்த தேன் முல்லை சேர்ந்தார்

#23
நீழ் கிளர் மலரின் தண் பூ நிழல் கிளர் கொம்பில் புல்லி
கேழ் கிளர் பொறித்த மாமை கெழும் சிறை வகிர்ந்து பேணி
வாழ் கிளர் அன்பினாலும் மணி கிளர் வனப்பினாலும்
சூழ் கிளர் காவில் ஒவ்வா துணை புறவு இருந்தது அம்மா

#24
உலை வளர் எரி செம் கண்ணான் ஊன் எயிற்று ஊற்று வாயான்
கொலை வளர் புலி பால் உண்டு கொலையொடு வளர்ந்த வேடன்
இலை வளர் நிழல் பூங்காவில் எய்தி அ பறவை கண்டே
சிலை வளர் கொலை ஈண்டு உள்ளி சிலை வளைத்து அணுகி சேர்ந்தான்

#25
ஓர் பகை இவன் கீழ் உள்ள உலவி மேல் பருந்து தானும்
கூர் பகை உகிர் வவ்வா முன் கொடிய கண் இரையை வவ்வி
பேர் பகை உணர்ந்து சூழ பிறர் எலாம் தமை போல் எண்ணி
சேர் பகை உணரா அ புள் சிறுமை கண்டு இனைந்தான் சூசை

#26
சிட்டம் இட்டு எழுதப்பட்ட சிறகு ஒளி செகுப்ப பாறும்
வட்டம் இட்டு இழிந்து பாய வருகையில் வேடன் வாளி
சட்டம் இட்டு எய்ய சர்ப்பம்-தனை மிதித்திடும் கால் தீண்டி
தட்டம் இட்டு அவனும் மாய்ந்தான் தவிர்ந்த கோல் பருந்தும் கொய்தே

#27
வினையது விளைவு நோக்காய் வினை பிறர்க்கு உணர்ந்த பாவம்
தனை அது கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம்
பினை அது இன்று காண பெற்றனம் என்று சூசை
அனையது விளம்பி போன அணி வளர் முல்லை சொல்வாம்

#28
புது பட வேந்து உறீஇ பொலி தெரு-தொறும்
சது பட நகர் எலாம் சிறந்த தன்மை போல்
விது பட முகத்து வான் வேந்தன் எய்தலால்
மது பட மலர்ந்தன முல்லை வாய் எலாம்

#29
வானக தகவினோர் மகிழ வேய்ந்து என
மீன் நக தரு எலாம் முகைகள் விள்ளலே
கானக தவத்தினோன் மணத்தில் கானொடு
தேன் அகத்து அலர்ந்த கோல் சிறப்பு காட்டுமே

#30
சென்னி ஆர் இள மது திருந்தும் பூ மலர்
துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும்
மின்னி ஆர் உடு முடி வேய்ந்த நாயகி
கன்னியாய் மகன் பெறு மாட்சி காட்டுமே

#ஃ31
பரு இலார் மனம் என முகில் பரந்து நூல்
கரு இலார் மனம் என கருக அந்தரம்
திரு இலார் மனம் என தேம்ப மாம் குயில்
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும்-ஆல்

#32
ஏர் முகம் புதைத்த வில் இவர் செய்து எய்தலால்
கார் முகம் புதைத்த வெம் கதிர் உதித்தது என்று
ஆர் முகம் புதைத்த இன்பு அருந்தி கூய் குயில்
சூர் முகம் புதைத்தன தோகை நாணியே

#33
பொய் மறுத்து இவர் என பொலிந்த ஓகையால்
ஐ மறுத்து இரி மயில் ஆடி மற்றையும்
மை மறுத்து உளத்து எழீஇ மகிழ்ந்து பாடவே
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த கா எலாம்

#34
புல்லிய பொழிற்கு-இடை புறப்பட்டு எய்திய
மெல்லியது ஓர் வளி விருந்து எதிர் கொள
சொல்லிய தூது போல் சுருங்கி வீசி அங்கு
அல்லிய மலர் மணம் வாரி கக்கும்-ஆல்

#35
சூழ் இசை மேல் வளி துதைந்து அங்கு ஆடிய
காழ் இசை தரு தழை கனிய பாடலும்
கேழ் இசை மூவரை வாழ்த்த கின்னர
யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே

#36
ஆயரும் உலவு தீம் குழலின் ஆர்ப்பு எழ
ஆய் அரும் உறவினோடு ஆவும் மானும் ஒன்றாய்
அரும் அறிவு என அமர்ந்து நோக்கலின்
ஆயரும் மறந்த கன்று அடி தொடர்ந்தவே

#37
அம்பு உகை வில் என அடி வணங்கின
அம் புகை துகில் என அலர்ந்த பூம் தரு
அம்பு கை முளரி கொண்டு அடி வணங்கின
அம்பு கை ஒலி என ஆர்ப்ப வண்டு அரோ

#38
தழீஇயின கலன் பொறா தளர் நுசுப்பு என
குழீஇயின மலர் பொறா கொடிகள் ஊசல் கொண்டு
எழீஇயின கனி பொறா வளை இபங்கள் மேல்
விழீஇயின இணை பொறா விளங்க முல்லையே

#39
காவின் மீது ஆடிய கனத்தின் ஆர்ப்பு என
பாவின் மீது ஆடிய பரிசினார் அவண்
மேவில் மீது ஆடிய மிஞிறு விம்மின
பூவின் மீது ஆடிய புது கள் நாடியே

#40
ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து ஆர் நிழல்
தோய்ந்த கண் நாடி ஒண் மயில்-தம் தோகைகள்
வாய்ந்த கண்ணாடிகள் வனப்பு என்று ஆயிரம்
ஆய்ந்த கண் நாடி வந்தவர் கண்டு ஆடும்-ஆல்

#41
பைம் கயிற்று இசைத்த பொன் தாலி பற்று என
கொங்கு அயல் திமிசு சூழ் குளிர பூத்தன
செம் கயிற்று அடி உறை திரண்ட முத்து என
அங்கு அயல் திரா மரம் முகைத்த தாம் அரோ

#42
சிந்துரம் விழித்து என சினைத்த பாடலம்
சிந்துர முகை மணி துகளின் தீர்ந்தன
சிந்துரம் மணந்த நீர் குளித்த சீர்மை போல்
சிந்துரம் மணத்தொடு முகைத்த சீலமே

#43
மீன் பரப்பு என முகை விண்ட மற்றையும்
வான் பரப்பு என விரி வனத்தில் எங்கணும்
தேன் பரப்பு என குளிர் செலவை சென்று செல்
கான் பரப்பு அனைத்தையும் கடந்து போயினார்

#44
வீங்கு தம் குலம் மெலிவு உறா தாங்கு உயர் நீரார்
ஓங்கு தம் குணத்து ஒத்த சூழ் நிலத்தில் தாழ் விழுதே
தாங்கு தொன் மரத்து அடி மணல் திண்ணையில் தங்கி
ஆங்கு வெம் கதிர் சாய்ந்த பின் நின்று செல்வு அயர்ந்தார்

#45
விண் விளக்கு ஒளி வேந்தனை பொற்புற தெளித்து
கண் விளக்கிய கவின் மணி மேனியை பூண்டு
மண் விளக்கிட வந்த நாதனை புகழ்ந்து உம்பர்
பண் விளக்கு இசை பாடி போய் மருதமே சேர்ந்தார்

#46
ஆறு பாய் ஒலி அடல் தகர் பாய் ஒலி நெறி கொம்பு
ஏறு பாய் ஒலி எருமை நீர் பாய் ஒலி கரும்பின்
சாறு பாய் ஒலி சங்கு ஒலி வயிர் ஒலி மற்ற
மாறு பாய் ஒலி மயக்கு உறீஇ எதிர்கொண்டு ஆர்த்தனவே

#47
உறை செய் கார் அணி உயர் மலை முலை பொழி பாலாய்
நறை செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாய
சிறை செய் கால் அது சிலைத்தலே இவர் அடி சேர்ந்தோர்
குறை செய் நோய் அற கூவுபு கூப்பிடல் போன்றே

#48
நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர்
இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால் எழு மீன்
துடிப்ப ஆமைகள் தூம்பு-இடை தலை சுரித்து ஒளித்தல்
உடிப்ப மூவரே இடர் உலகு ஒளிக்குவ போன்றே

#49
கேழ்த்த பூ வயல் கிழிபட சிலர் அவண் கீறி
வீழ்த்த தாமரை மெலிவொடு வரம்பின் மேல் வாடல்
நீழ்த்த மாண்பு இவர் நிழல் அடி வணங்கு இலார் நீக்கி
வாழ்த்த மாண்பு இலர் வருந்தி உள் வாடுவ போன்றே

#50
புரிந்த ஓகையில் பொருவு இலா இவர் அருள் போன்று
பிரிந்த மேதி தன் பிள்ளையை உள்ளலின் கனைந்து
சொரிந்த பால் உண்டு துஞ்சிய ஓதிமம் வெருவி
இரிந்தது ஆக ஆர்த்து எழுக என வித்தினர் சிலரே

#51
இங்கண் பா இயாப்பு இசை பயன் விரித்து உரைத்து என்ன
அம் கண் மாதர் கட்டு அவிழ்த்து செந்நெல் முடி நடுவார்
திங்கள் நாண் முகத்து இவர்க்கு இணை அல என சினந்தே
அங்கண் ஆம்பலோடு அலர் எலாம் களை என பறிப்பார்

#52
படி ஒருங்கு இவர் பயத்த நன்று இயல்பு என ஒரு-பால்
நெடிது ஒருங்கு செந்நெல் வளர்ந்து இவர் தொழுது ஒரு-பால்
கடிது ஒருங்கு கை கூப்பு என கதிர் நெறித்து ஒரு-பால்
அடி ஒருங்கு உற வளை தலை விளைந்தன அகணி

#53
மீன் இரும் கொடி வேந்து தன் அருள் வளம் காட்ட
தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல்
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல்
கூன் இரும்பினில் குறைத்து அரி பகுத்தனர் ஒரு-பால்

#54
குறைக்குவார் சிலர் கூ மகள் குழல் என சேர்த்தி
இறுக்குவார் சிலர் இவள் புணர் முலை என பல போர்
நிறைக்குவார் சிலர் நீல் நிற பகட்டினால் தெளிப்ப
உறுக்குவார் சிலர் உறைந்த வை நீக்குவார் சிலரே

#55
மாரி மல்கிய மதி-தொறும் மு மழை பொய்யா
வேரி மல்கிய விளை புலத்து எனை பகல்-தோறும்
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி இ மூவர்
சீரின் மல்கிய செல்வ நாட்டு அலர் பணை கடந்தார்

#56
காரி வாய் என நிறுவிய கழுகு உயர் காவும்
நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும்
பூரி வாய் வளை புலவர் போல் அரம்பையின் காவும்
வேரி வாய் மலர் காவும் நீத்து அணி நகர் மிடைந்தார்

#57
விருந்தினார் முகம் விரும்பினர் கண்டு என மலர்ந்து
வருந்தினார் முகம் கண்டு அழு நீர் என மது பெய்து
அருந்தினார் முகந்து அவா அற கனி மலி காவில்
பொருந்தினார் முகம் பொலி நகர் புரிசையை கண்டார்

#58
மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி வேய்ந்து என விசும்பினை தாவும்
கன்னிய புரிசை சூழ் தர தோன்றி கசடுறும் எரோதன் என்ற அரசன்
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மா நகர் தோன்றியது அன்றே

#59
அல் உமிழ் இருளின் இருண்ட நெஞ்சு அவன் செய் அரந்தையின் வெவ் அழல் ஆற்ற
வில் உமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி விரித்த பூம் கொடிகள் தம் ஈட்டம்
எல் உமிழ் மூவர் வருகை கண்டு அரசன் இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி
நில்லு-மின் நில்-மின் என இடை விடாது நீண்ட கை காட்டுவ போன்றே

#60
மண் புடை வான மன்னனை வணங்கி வளம் பெறும் பசிய பொன் கோயில்
விண் புடை தீண்டி மின் மணி கோட்டின் மீது ஒளிர் பதாகை நின்று ஆடல்
ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன் என அமர்த்திடல் போன்றே

#61
சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து துகில் என அகழியை சூடி
புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில்
ததை நலம் கொணர் இ மூவரை காண தடம் விழி திறந்து என திறந்த
வதை நல மணிகள் குயிற்றிய வாயில் அருமறை வடிவினோர் புக்கார்

#62
நூலினும் வழுவா செம்மையின் ஒழுகி நோக்கினும் அகன்று ஒளித்து ஓடி
நூலினும் மலி சீர் சிறப்பு அணி தெருவில் நுண் மணி கொடிஞ்சி வண் தேரும்
காலினும் காலின் பாய் பரிமாவும் கடாம் கழி கரிகளும் நெருங்க
காலின் உம்பரும் சூழ் யாவையும் நீக்கி கதி புரி வேந்தர் போயினரே

#63
அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள் செயும் தெருவில்
முகில் அடும் குன்றில் துணை மயில் திரிந்த முகம் என இருவரே நடந்து
துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள் தோன்றிய மதி என தோன்றி
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர இளம் கதிர் பரப்பியே போனார்

#64
தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி
பால் நலம் பயின்று பாடிய வண்டின் பல் இனம் ஊசல் ஆடுதற்கே
கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணி தோரணம் தயங்க
வான் நலம் பயின்ற வேந்து வந்தமையால் வான வில் வீழ்ந்து என போன்றே

#65
தூமம் மேய்ந்து இருண்ட குழலினார் மார்பில் துளங்கிய முத்து அணி வடம் மேல்
காமனே களிப்புற்று ஊசல் ஆடிய-கால் கசடு அறும் இவர் வர கண்டு
வீமமே உற்று நடு கொடு வழுவி வீழ்ந்து உளத்து அழற்று அழல் ஆறி
தாமம் மேய் அளி போல் குளிர உள் களித்து தயவொடு தீது அற புகழ்ந்தார்

#66
விடும் திரை கொழித்த விம் ஒலி போன்ற விற்பவர் கொள்பவர் ஒலியும்
நெடும் திரை கொழித்த திரு திரள் போன்ற நிதியொடு நிற மணி பலவும்
படும் திரை கொழித்த மயங்கு அலை போன்ற பரி கரி ஈட்டமும் அமைவின்
கடும் திரை கொழித்த கரும் கடல் போன்ற கடை வழி போயினார் மாதோ

#67
மோயிசன் தன் கை சூரலின் பிரிந்த மொய் கடல் வழி விடுத்து அன்ன
மீ இசை தளங்கள் யாவரும் காணா மிடைந்து சூழ் வந்து செய் நெறியால்
போய் இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர் கடந்து
சேய் இசை சுடர் போன்று அ கடல் நீக்கி செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார்

#68
உதித்தனர் என்ன ஆயிரம் கதிரோன் உவமையில் தோற்று என ஒளித்து
குதித்தனன் கரும் தண் புணரியுள் புதைப்ப கோதையும் கொடும் தவத்தவனும்
புதி தனம் இழைத்த மணி கலத்து உயிரை புரி அமுது ஏந்திய போன்றே
விதித்த நன் மறையின் நாதனை ஏந்தி விருப்பொடு சிறு மனை புக்கார்

#69
கோண் நிகர் உணர்வில் கை பொருள் தந்து குறும் புகழ் கோடலே சிறிய
வாணிகர் தொழில் ஆம் ஈங்கு மாறு உணரார் வழங்கும் ஒன்று ஆயிரம் ஆக
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம்
பூண் நிகர் மறை நூல் அணி வளன் இருளின் போர்வை போர்த்து ஆலயத்து அளித்தான்

#70
விண் திறம் துதைந்த பூசனை அன்றே விழிப்பதற்கு அருத்தியோடு உயர் வான்
கண் திறந்து என்ன கதிரவன் முந்நீர் கடிந்து எழும் காலையில் இனிதாய்
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய் பசிய பொன் கோயிலை விருப்பம்
கொண்டு இறந்து இருவர் கோது_அறு பலியாய் குழவியை ஏந்தி எய்தினரே

#71
மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி விழு தக நிரை நிரை தீட்டி
பால் நிலா எறிக்கும் பளிங்கு உயர் கோயில் பற்பல சாளர விழிகள்
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின் வம்-மின் என்று அழைப்ப
தூ நிலா எறிக்கும் மணி கதவு அகற்றி சுருதி வாய் திறந்து இவர் புக்கார்

#72
தேக்கிய புகையும் வாம தெருட்சியும் மருளின் நோக்கிற்கு
ஆக்கிய விருந்தின் விம்ம அணி மணி கோயில் புக்கு
வீக்கிய துவங்கட்கு ஒன்று ஆம் மெய்யனை வினையின் தீய்மை
போக்கிய பலி என்று ஆக போற்றி வைத்து இருவர் நின்றார்

#73
வாய்மையோர் புகும்-கால் கோவில் வணக்கு உரி பணியில் வைகும்
தூய்மையோர் என உள் கோட்டம் துறந்தனர் அவையின் மூத்தோன்
மேய்மையோடு உயர்ந்த வேதம் மேல் படர் கொழுகொம்பு அன்னான்
சீய்மையோன் என்னும் வாய்ந்த சீர் கெழு முனியும் வந்தான்

#74
உணங்கிய மரத்திற்கு ஆர்ந்த உயிர் வரு மாரி போன்றும்
இணங்கிய இருளை சீக்கும் இரவியே போன்றும் நாதன்
இணங்கிய வினைகள் தீர்ப்ப பிறந்து இவண் மனு ஆய் காண
வணங்கிய முனிவன் நாளும் வரம் தர வேண்டுவானே

#75
வம்பு அலர் சுனையின் நீருள் வலம்புரி பிறத்தல் போன்றும்
கொம்பு அலர் தருவின் உச்சி குவளையே பூத்தல் போன்றும்
அம்பு அலர் கன்னி விள்ளாது அளித்தது ஓர் மகவாய் நாதன்
கம்பு அலர் கண்கள் பூப்ப காண்பை என்று இறைவன் சொன்னான்

#76
நம்பிய இன்ன வாய்மை நல் உயிர் ஆக நின்றான்
அம்புய மலரின் சாயல் அவதரித்து உதித்த நாதன்
கொம்பிய வினைகள் தீர்ப்ப கோயில் வந்து அடைந்தான் என்ன
பம்பிய காட்சி தோன்றி பறந்து என அன்று வந்தான்

#77
விண்டன மலர் போல் விண்ட விரும்பினான் வெய்தென்று எய்தி
கண்டனன் கனிந்த கண்ணால் கறவை காண் கன்றின் வெஃகி
உண்டு அன உருவில் குன்றா உயர் குணத்து இறைவன் தாளை
கொண்டனன் தலையில் சூடி குண கடல் குளித்து தாழ்ந்தான்

#78
தொழுது தன் உளத்து இன்பு ஆற்றா துணை அடி மலரை ஏற்றி
அழுது தன் கண்ணீர் ஆட்டி அருள் கொழும் துகிலின் நீவி
முழுது தன் கண்கள் கையால் முக கவின் முகந்து உண்டு ஆர்வத்து
இழுது தன் சுவையின் காய்த்த இரும் கனி சுவைத்து விள்ளான்

#79
பார் உடம்பு உயிராய் வந்த பரமனை கரத்தில் ஏந்தி
ஈர் உடம்பு உயிர் ஒன்று ஆக எழுந்த அன்பு உவப்பின் பொங்கி
சேர் உடம்பு இரண்டு ஒன்றாக சேர்த்துபு தழுவி அன்பின்
நேர் உடம்பு எழீஇ வீடு உற்ற நிலைமையின் பாடல் உற்றான்

#80
பால் கடல் என் உள்ள பதும மலர் அரும்ப
நூல் கடலே ஈங்கு உதித்தாய் நும் மலர் கண் முத்து அரும்ப
நும் மலர் கண் முத்து அரும்ப நோய் செய் வினை செய்தேம்
எம் மலர் கண் முத்து அரும்ப இன்று வினை தீர்த்தாய்

#81
வினை தீர்ப்ப எய்தி வினை கொண்டாய் பாவ
புனை தீர்ப்ப ஈங்கு மனு பூட்சி சிறை கொண்டாய்
பூட்சி சிறை கொண்ட புல் என் உயிர் போய் உன்
காட்சி சிறை கொண்டு கண்டேன் கதி நிலையே

#82
கண்டேன் கதி நிலையே கண்டு உயிர் என் பூண்பல் இனி
உண்டேன் உயிராய் அன்பு உன் அடியை சூடினேன்
உன் அடியை சூடி உனை அணுகான் தன் வினையே
தன் அடியை சூழ்ந்து உதைப்ப சுட்ட எரி வீழ்ந்து ஆழ்வானே

#83
ஆசை எழும் இன்னவை அரும் தவனும் பாடி
ஓசை எழும் வீணை குழல் யாழொடு இசை பாட
பூசை எழும் பூம் புகை பொலிந்து இனிதின் நாற
மாசை எழும் ஆலயமும் வான் உலகு போல்வு ஆம்

#84
கொங்கு அடரும் பூ மழையும் பா மழையும் கூர்ப்ப
சங்கு அடரும் வாய் தரள வெண் குடைகள் தாங்க
திங்கள் தரும் தீம் கதிரின் சேர் கவரி பொங்க
அங்கு அடரும் யாவரும் அருச்சனையின் மிக்கார்

#85
ஒருவர் அடி ஏற்றி மலர் ஒள் ஒலியல் சூட
ஒருவர் அகிலோடு மலர் ஊறு புகை காட்ட
ஒருவர் புகழும் தொடை உணர்ந்த இசை பாட
ஒருவர் வியப்போடு உருக வாழுவர் ஒருங்கே

#86
வான் தவழும் மீன்கள் திரள் பூத்தது என மல்கி
கான் தவழும் மாலையொடு கல் மணிகள் கண் பூத்து
ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க
மீன் தவழும் வெண் மதியின் மெய்யன் உரு மிக்கான்

#87
தும்மிய பொறி சுடர் துதைந்து எரியு செம் தீ
விம்மிய இருள் புகை விளைத்த நரகு எய்தா
பம்மிய வினை பகை பரிந்து உயிர்கள் காப்ப
பொம்மிய துயர்க்கு இறைவ பொன்றுவை-கொல் என்பார்

#88
தீய் வினை செய் நாம் மகிழ உம்பர் தொழு செல்வா
நீய் வினை செய் மெய் கொடு நிலத்தில் உலவாயோ
வீய் வினை செய் மெய் உளைய விண்ணில் எமை உய்க்கும்
தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர் என்பார்

#89
தீய அமை தீயர் எரி சென்று எரிவர் என்றால்
காய அமை ஓர் குறை நின்-கண் அமைவது உண்டோ
தூய அமை வீட்டு உவகை தோய்ந்து மனு வாழ்தல்
ஆய அமைதிக்கு நயன் யாது நினக்கு என்பார்

#90
வெம் வினை அறுத்து உயிர் விளைத்த கனி ஆக
உய் வினை எமக்கு அருள உற்றன பிரானை
எ வினையும் அற்ற முறை ஈன்ற அருள் தாயே
மை வினையை நாம் கழிய வாழி நனி என்பார்

#91
ஆரணம் எழுந்து படர் கொம்பு அனைய மார்ப
காரணன் ஓர் மைந்தனை வளர்த்திடு கை_தாதை
பூரண வரத்து அமரர் நின் புகழ இன்ப
வாரணம் அமிழ்ந்தி நனி வாழி நெடிது என்பார்

#92
ஏமம் சால் இன்பத்து அங்கண் இன்னவை ஆகி மூத்தோன்
சேமம் சால் வரங்கள் மிக்கு தெளிந்த மு பொழுதும் தாவி
வாமம் சால் காட்சி வாய்ந்த வரும் பொருள் உணர்த்தும் தாயும்
சோமம் சால் கொடி வல்லோனும் துயருற சொற்றினானே

#93
திரு கிளர் இன்ன தோன்றல் சிலர்க்கு உயிர் சிலர்க்கு கேடாய்
செரு கிளர் பகைவர் ஏவும் சின கணை குறி என்று ஆவான்
உரு கிளர் நெஞ்சம் போழ்தற்கு உறுகண் வாள் உருவ பாய்ந்து
தரு கிளர் தரும தாயே தளர்ந்து இடர் குளிப்பாய் என்றான்

#94
என்றன கடும் சொல் வாளால் இரு செவி முதல் ஈர்த்து அங்கண்
நின்றன இருவர் நோக நிலத்தில் எம் வினைகள் தீர்ப்ப
சென்றன நாதன் தன் தூய் செம் புனல் சிந்தி மாள்வான்
பின்று என உளத்தில் ஓர்ந்தார் பீடை நீள் புணரி தாழ்ந்தே

#95
நூல் நிலம் காட்சி மூத்தோன் நுதலி ஆங்கு உரைத்த சொல்லை
தேன் நில முகையின் நின்ற திரு நர_தேவன் கேட்டு
கான் நில முகை விண்டு அன்ன கனிந்த புன் முறுவல் கொட்டி
மீன் அம் சென்னி சாய்த்து விழைந்து அதற்கு அமைந்தான்-மன்னோ

#96
இன்னியம் ஒலிக்கும் கோயில் இவை இவர்ந்து அங்கண் வைகும்
கன்னிய மாதர்க்கு எல்லாம் கனிந்த கை தாயாய் மீன் செய்
மின்னிய முடியாள் தன்னை விரும்பி முன் வளர்த்த மாட்சி
துன்னிய அன்னம் என்பாள் துன்னி வந்து இளவல் கண்டாள்

#97
தேன் தும்மு மாலை சேர்த்தி திரு அடி பணிந்து நம்மால்
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து
வான் தும்மு மின்னின் மின்னு மகவினை நெடிது வாழ்த்தி
கான் தும்மு முக பூம் தேன் உண் கண் கனிந்து இமைத்தல் செய்தாள்

#98
ஏற்றினாள் இளவல் தாளை இணை_அறும் கன்னி தாயை
போற்றினாள் இருவர் மாட்சி புடையில் வந்து எவரும் கேட்ப
சாற்றினாள் இன்பு உள் பொங்கி தாரை நீர் தாரையாக
தூற்றினாள் பெருக்குற்ற இன்ப தூய் கடல் அமிழ்ந்தினாளே

#99
எடுப்பு_அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக
கெடுப்பு_அரும் மாட்சி பூத்த கேழ் கொடி துணையும் தாயும்
தடுப்பு_அரும் மறையின் வாய்மை தவறு இலாது இரு கபோதம்
கொடுப்ப_அரும் உலகை ஆளும் குழவியை மீட்டிட்டாரே

#100
மண்டு அரும் தவத்து மூத்தோன் வரைவு_இல ஆசி ஓத
பண்டு அருமறையோர் யாரும் பரிவு எழீஇ முகமன் கூற
அண்டரும் புடையில் சூழ அணி முகை மகவை ஏந்தி
கொண்டு அரும் தகவினோர் பொன் கோயில் நின்று ஏகினாரே
மேல்

@13 பைதிரம் நீங்கு படலம்


#1
களி முகத்தின் இவை ஆகி பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப
சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டி துகைத்து அன்னார்
வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை யான்
கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளத்துகிற்பேன்

#2
பூம் தாம கொம்பு அனையாள் பூத்த பைம் பூ முகை முகத்தில்
தேன் தாம திருமகன் நேர்ந்து இன்னும் எண் நாள் செல அன்னார்
தாம் தாம் அ கடி நகர்-கண் தங்கல் உள்ளி நாள்-தொறும் பொன்
காந்து ஆம் அ கோயில் விழா அணியின் வெஃகி கனி சேர்வார்

#3
நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐம் நாள்
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ்
விஞ்சு பதி கொண்ட அமரர் வைகும் கோயில் மேவிய பின்
நஞ்சு பதி கொண்ட உரை தூது வானோன் நவின்று அடைந்தான்

#4
கான் வயிறு ஆர் பூம் கொடியோன் உறங்கும் காலை கதிர் தும்மி
மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய்
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவல் கோறல் உள்ளினன் நீ
தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான்

#5
அழல் குளித்த பைம் தாதோ கண் பாய் வேலோ அகல் வாய் புண்
புழல் குளித்த செம் தீயோ உருமோ கூற்றோ பொருவு இன்றி
நிழல் குளித்த உரு வானோன் கொடும் சொல் கேட்டு நெடும் கடல் நீர்
சுழல் குளித்த மனம் சோர்ந்து வளன் அ பணியை தொழுது உளைந்தான்

#6
மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழ வினையும்
பொலி நிழல் பட்டு அலர் பூம் கொம்பு ஒத்தாள் நொய்வும் புரை வினையால்
அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன்
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கி புலம்பினன்-ஆல்

#7
அறிவு இன்மை உறவு இன்மை அறத்தின் இன்மை அங்கண் செல்
நெறி இன்மை நெறி தொலைக்கும் உறுதி இன்மை நெறி தன்னில்
பறி இன்மை சார்பு இன்மை தன்-பால் இன்மை பரிசு அல்லால்
பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான் உளைந்தும் ஈண்டே பிரிவு உற்றான்

#8
வேரி அம் தாரினான் விரைந்து எழுந்தனன்
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர்
நேரி அம் துணைவியை நேடி நாயகன்
தேரி அங்கு ஏவிய பணியை செப்பினான்

#9
செய் இதழ் தாமரை பழித்த சீறடி
துய் இதழ் துப்பு அவிழ் சுருதி வாயினாள்
ஐ இதழ் தாரினான் அறைய தீ முனர்
நொய் இதழ் தாது என நொந்து வாடினாள்

#10
எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான்
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான்
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர்
பிதிர் இலா திரு உளம் பேணி தேரினார்

#11
தேரிய மனத்தவர் தேறி நாயகன்
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார்
நீரிய முகில் என அ படத்தை நீக்கலால்
சூரியன் நவி என தோன்றல் தோன்றினான்

#12
மு பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து
எ பொழுது அனைத்தும் எ பொருள் யாவிலும்
மெய்ப்பொருள் தெளித்து அவிர் காட்சி மேன்மையான்
அப்பொழுது உறங்கினான் அன்ன பார்ப்பு அனான்

#13
கலை முகந்து அருந்திய புலமை காட்சியோய்
அலை முகந்து அருந்திய அருள் என்று உன் பணி
கொலை முகந்து அரும் துயர் கொண்டும் செய்வல் என்று
உலை முகந்து அரும் தழற்கு உருகி ஏந்தினாள்

#14
ஏர் வளர் அடி பணிந்து இளவல் ஏந்தலின்
நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர் அவன்
சீர் வளர் விழி மலர் சிறந்து முத்து உக
சூர் வளர் மனத்து அவர் துகைத்து உள் ஏங்கினார்

#15
கதிர் தரும் காதலன் கன்னி தாய் உரத்து
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன்
முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால்
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார்

#16
பொங்கிய அருத்தியால் பொலிந்த கன்னியும்
தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும்
பங்கய மலர் அடி பணிந்து பாலனை
அங்கு இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர்

#17
மருந்து அட கனி முகம் மகிழ்ந்து நாயகன்
அரும் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியை
தரும் தடத்து இவர்ந்து இருள் புதைத்த சாமத்து ஆங்கு
இரும் தடத்து ஏகுதற்கு எழுந்து போயினார்

#18
இரு சுடரோன் பட ஈர்_ஐயாயிரம்
குரு சுடர் மேனியை கொண்ட வானவர்
திரு சுடரோன் என அ சிறுவன் தாள் இணை
பரு சுடர் பாய்ந்து உற பணிந்து தோன்றினார்

#19
எல் இயல் பட சுடர் இரவில் தோற்றினார்
பல்லியம் கடல் ஒலி பட முழக்கினார்
அல்லி அம் குழவியை அளவு_இல் வாழ்த்தினார்
கல்லியம் பா தொடை கனிய பாடினார்

#20
வார் வளர் முரசும் ஆரா வரி வளர் வளையும் ஊதா
தேர் வளர் உருளும் செல்லா தெரு வளர் அரவும் தோன்றா
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி
சீர் வளர் உயிர் போய் அ ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே

#21
நல் வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகல்தல் போல
கொல் வினை அறுப்ப வந்த குண தொகை இறைவன் போக
வல் வினை மருளில் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட
புல் வினை மல்கி சீலம் புரி நலம் போயிற்று அன்றே

#22
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அற கடலோன் போக
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம்
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம்
பொருள் புகழ் புலமை மற்ற பொலி நலம் போயிற்று அன்றே

#23
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் நீக்க யாக்கை
நிலை புறம் கொண்ட ஞான நெடும் சுடர் அனையான் போக
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து உரி நகரும் நாடும்
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து இருள் மொய்த்தது அன்றே

#24
கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும்
பதி தள்ளி அமரர் போக பகையும் நீள் பசியும் நோயும்
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும்
மதி தள்ளி மருட்டும் பேயும் மறு குடி ஆயிற்று அன்றே

#25
மணி வளர் முகில் தண் ஊர்தி வான் உடு கொடி தண் திங்கள்
அணி வளர் குடை கொண்டு எங்கும் அருள் நிழல் மன்னன் போக
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற பகைத்து வாட்டி
பிணி வளர் வினையின் செம் தீ பிரிவு இலா மேய்ந்தது அன்றே

#26
கண் அகன்ற அகழி கலங்கலின்
தண் அகன்ற தரங்கம் தளம்பலே
எண் அகன்ற குணத்து இவர் நில்-மின் என்று
ஒண் அகன்ற கை நீட்டினது ஒத்தவே

#27
அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ
நிலை அடைந்தனர் நீங்கலிர் நில்-மின் என்று
உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே

#28
நாக நெற்றியின் நன் மணி ஓடை போல்
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய்
நாக நெற்றியின் நன் மலர் கா அப்பால்
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே

#29
உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று
உறை கிடந்த அயில் ஓங்கு அரசை பகைத்து
உறை கிடந்த கடல் பறைக்கு ஓர் குணில்
உறை கிடந்து அன ஒண் பிறை தோற்றமே

#30
சிதம் மிடைந்த அலர் சேடு அனையாள் கையில்
சிதம் மிடைந்து அலர் சேடனை நோக்குப
சிதம் மிடைந்து அலர் சேடு என தாங்கு பல்
சிதம் மிடைந்து அலர் சேடு கண் ஒத்தவே

#31
மனவு அணங்கு வணங்கு அடி நாயகன்
மன அணங்கு வணங்கு இல் வருந்தினார்
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும்
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே

#32
ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலம்
காரணம் தரும் கண் புனல் கண்டு இடர்
பூரணம் தரும் மார்பு புடைத்து எலா
வாரணம் தரும் வான் உற கூக்குரல்

#33
பேர்ந்த தன் பெருமான் அடை பிழை வான்
ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று
ஆர்ந்த பைம் தழை கா அழுது ஆயதே

#34
கறாகறா என காடை கலுழ்ந்தன
ஞறாஞறா என தோகைகள் நைந்து அழும்
புறா குறாவுதலோடு இவர் போதலால்
அறா நறா பொழில் ஆர் அழும் ஓதையே

#35
கிளி அழ குயில் கேட்டு அழ தேன் உணாது
அளி அழ சிறை நைந்து அழ ஆ என
வளி அழ துயர் மல்கி வனத்து எலா
உளி அழ தகவோர் அழ ஏகினார்

#36
கான் மறந்தன கா மலர் அன்னதே
தேன் மறந்தன தேன் இனம் அன்னதே
பால் மறந்தன மான் பறழ் அன்னதே
ஆன் மறந்தன தம் பிள்ளை அன்னதே

#37
சுருதி ஏந்து சுதன் துமிப்பேன் என
கருதி ஏந்து குரோதம் கதித்து என
பருதி ஏந்து படம் படரா முனர்
குருதி ஏந்து குணக்கு சிவந்ததே

#38
முழவு எழும் தொனி ஒப்ப முந்நீர் ஒலி
எழ எழுந்து பொர கதிர் எய் சரம்
விழ எழுந்த வெய்யோன் சிவந்து எய்தி வான்
அழ எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே

#39
பானும் பானொடு பாசறை பட்டு அழும்
வானும் வானொடு மண்ணும் இரங்கின
ஏனும் ஏதும் உணர்கில மாக்களும்
கோனும் கோடனை கொண்டு இரங்காயினார்
மேல்

@14 இளவன் மீட்சிப் படலம்


#1
இரங்கு படர் கான் எவையும் நைந்து அழுது இரைக்கும்
தரங்கு படர் வேலையில் தளம்பி அலை நெஞ்சார்
அரங்கு படர் வான் தொழும் அருள் குழவி ஏந்தி
குரங்கு படர் காட்டு நெறி கொள்ள வலம் உற்றார்

#2
பிழை குலம் அளிப்பவர் பிழைப்பு இடம் இலார் போல்
உழை குல நடுக்கம் என உள் குலைய நைந்து
மழை குலமிடத்து நுழை மின் மருள மல்கும்
தழை குலமிடத்து நுழைய சடுதி போனார்

#3
இருத்தி எழு வான் அரசன் ஈர் அடி நனைப்ப
அருத்தி எழு துன்ப முகில் ஆர்த்து உமிழ் கண் மாரி
திருத்தி எழு மா தவன் உளைந்து உளை உள் தேற்றா
கருத்தில் எழும் ஆர்ந்த துயர் கான்று இனைய சொன்னான்

#4
விண் முழுதும் ஏற்று தனி வீர முதலோனே
புண் முழுதும் ஏந்திய புலால் அயிலனோடு
மண் முழுதும் ஒன்றுபட மல்கி அமர் செய்தால்
எண் முழுதும் நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ

#5
புல் வினை உளைந்து அழ உதித்து அருள் புரிந்து
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய்
கொல் வினை உணர்ந்து உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு
ஒல் வினை என கருதும் இ உலகில் உண்டோ

#6
தொல்லை உள நம் வினை துடைத்து நமை வீட்டில்
வல்லை உள அன்பொடு புகுப்ப மனு வந்தோய்
ஒல்லை உள நம் துயர் ஒழித்திட நினக்கே
எல்லை உளது ஒன்றும் இல வேண்டும் இடர்-கொல்லோ

#7
முற்று முதல் ஆய் உலகம் மூன்று தொழ வான் மேல்
பெற்று முதல் ஈறு இல பெரும் தகையை மண் மேல்
உற்று முதல் வீடு இல விலங்கு உறையுள் வந்தாய்
இற்று முதல் நாடு அகலல் வேண்டும் இனி-கொல்லோ

#8
ஞானம் உறு சீலம் இல நட்பு உறவும் இல்லா
வானம் உறு வேதம் இல மாண்பு அருளும் இல்லா
கானம் உறு காய்ந்த சுரம் அ கடை கிடந்தார்
ஈனம் உறு நாடு அடைதல் வேண்டும் இனி-கொல்லோ

#9
வெவ் வினை விளைத்து அடும் இ வாழ்வு விடம் என்னா
மை வினை மறுப்ப இவண் வந்து துயர் வேண்டின்
மொய் வினை முதிர்ந்த முழுது என் மிடிமை அல்லால்
எ வினை தொலைக்கு அடைதல் வேண்டும் இனி ஐயா

#10
விஞ்சிய திறம் செறியும் விஞ்சை மலி வல்லோய்
துஞ்சிய நிலத்தில் உயிர் தோன்றி வினை நீக்கி
எஞ்சிய நலம் தருவை என்று அறிவர் யாரே
அஞ்சியது ஓர் தன்மை இது என்று அறைவர் என்றான்

#11
இற்று உறும் அருத்தியில் இயம்பின இயம்ப
பற்று உறும் உணர்ந்த பலவும் பகர்தல் தேற்றா
முற்று உறும் அரந்தை எனும் நீத்தம் முழுகி சொல்
அற்று உறும் அழும் தொழில் அலால் எதுவும் ஆற்றான்

#12
ஆசை வெற்பு வீழ் அரந்தை வாரியுள்
சூசை பட்டு அய்ய சுழியின் மூழ்கலின்
பூசை வாயினாள் புகல் கை தந்து உரம்
மாசை அம் கரை மருவ சொல்லினாள்

#13
உருக்கும்-கால் உலகு உயிர் எலாம் கெட
முருக்கும் காலமே முடிந்து போய் அருள்
பருக்கும் காலம் ஆய் புரந்து பாதுகாத்து
இருக்கும் காலம் என்று இளவல் ஆயினான்

#14
மண்ணை வேண்டினும் வகுத்து வாழ்வு அறா
விண்ணை வேண்டினும் விரும்பி ஈகுவான்
கண்ணை வேண்டினும் அளிக்கும் கால்-தனை
எண்ணி வேண்டினும் இகல் செய்வான்-கொலோ

#15
மணி உயிர்க்கு நாண் வடிவில் தோன்றினன்
பிணி உயிர்க்கும் மால் அவா செய் பீழையால்
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து தன்
அணி உயிர்க்கு இடர் ஆக மாள்குவான்

#16
இறந்து நம் உயிர் இரங்கி காக்க வந்து
அறம் துதைந்தவன் இறத்தற்கு அஞ்சவோ
திறம் துதைந்து மு_செகத்தை ஆள்பவன்
மறம் துதைந்த புன் மதுகைக்கு அஞ்சவோ

#17
நஞ்சினால் உயிர் அருந்தும் நால் படைக்கு
அஞ்சு இலான் அறிவு அருள் வல் ஆண்மை ஈடு
எஞ்சு இலான் என இறைஞ்சி கூறினாள்
நெஞ்சினால் அமுது ஆர்ந்த நேமியாள்

#18
புடை வரும் புகழ் பொலிந்த மிக்கயேல்
அடைவு_அரும் தயை அணிந்த தாள் தொழுது
உடைவு_அரும் கருத்து உணர்ந்த ஆண்மையை
தொடை வரும் கனி பாவின் சொற்றினான்

#19
அஞ்சுவான்-கொல்லோ நீதி அணி கலத்து இலங்கு வீரத்து
எஞ்சுவான்-கொல்லோ ஞாலத்து யாவரும் பனிப்ப ஆண்மை
விஞ்சுவான்-கொல்லோ என்ன மேவிய எசித்து நாடர்
துஞ்சுவான் உணர்ந்தார் முன் நாள் சுருதி சேர் கொழுகொம்பு அன்னோய்

#20
நினைந்த யாவையும் நினைந்த நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை
புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு
முனைந்த கால் இவன் முன் நாளில் முரிந்து எசித்து அஞ்சி வாட
வனைந்த யாவையும் நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல் என்றான்

#21
வீங்கு எழும் துயருள் ஆற்றா வெதிர்ப்பு எழும் புணரி நெஞ்சில்
பூம் கெழும் கொடியோன் சொல்லி புரை அற உணர்ந்ததேனும்
ஈங்கு எழுந்து எளியன் என்ன இரிந்த நாயகனை வாழ்த்த
ஆங்கு எழும் திறலின் ஆண்மை அறைதி என்று அறைந்தான் வானோன்

#22
பேர ஓங்கிய வெற்பு உச்சி பிளந்த விண் அசனி ஏறு
நேர ஓங்கு அடலில் சீற்றம் நெறித்து அருள் வணங்கா சென்னி
பாரயோன் என்பான் நாதன் பணித்த நல் பூசை செய்யா
வீர யோகத்து யூதர் விலக்கி மிக்கு அல்லல் செய்தான்

#23
உடை கலத்து இலங்கி செற்றத்து உடன்று இருள் பருகும் நெஞ்சான்
அடைக்கலத்து அடைந்த யூதர்க்கு அடிமை என்று இயற்றும் பீழை
துடைக்கல் அற்று எவரும் எஞ்சி தொறும்தொறும் அழுத கண்ணீர்
படைக்கல தகுதி போல பைதிரம் சிதைத்தது அன்றே

#24
நொந்து நொந்து அழுத ஓதை நுழைந்து உயர் வானத்து உச்சி
வந்து வந்து அருளில் மிக்கான் வருந்தினர்க்கு இரங்கி குன்றின்
முந்து நின்று அருணம் மேய்த்த மோயிசன் விளித்து ஓர் சூரல்
தந்து நின் குலம் கொல் கோன் கண் சடுதி தூது ஏகுக என்றான்

#25
கொடிய கோன் வெருவா அன்னான் குலைவு உறீஇ வெருவ பேசி
விடிய மா பூசை ஆக விடுதி என்று அவன் விடாதேல்
நெடிய சூரலை சூழ் ஓங்கி நிருபனோடு எவரும் அஞ்ச
கடியது ஓர் துயர் ஆங்கு உய்த்து என் கத திறல் காட்டுக என்றான்

#26
ஓளியில் சொன்ன யாவும் உணர்ந்த மோயிசன் போய் கூற
ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல்
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி
நீள் எயிற்று அழலும் கண் தீ நிறைய விட்டு உடற்றிற்று அன்றோ

#27
சாத்திர மாய விஞ்சை தன்மையில் அவரும் பல்பல்
காத்திரம் காட்ட அன்னார் காட்டிய அரவை தேவ
சூத்திர அரவு நுங்க தொடர்ந்து மோயிசன் வால் வவ்வி
வேத்திரம் ஆய தன்மை வேந்து கண்டு அஞ்சினானே

#28
அஞ்சினான் எனினும் தேவ அருச்சனைக்கு இடம் செய்யாத
நெஞ்சினான் கொடுமை ஆற்ற நீர் எரி கமலத்து அன்னம்
துஞ்சி வாழ் பொய்கை போகில் சொன்னவை மறுப்பாய் ஆயின்
எஞ்சு இலா துயரத்து ஆழ்வாய் என்று மோயிசன் சொல்கின்றான்

#29
சொல்லிய விசையில் ஏந்தும் சூரலை சுழற்றி நிற்ப
கல்லிய மலர்கள் வாட கயல் இனம் தளர்ந்து மாள
உல்லியர் மயங்க யாரும் உண்ணும் நீர் இன்றி சோர
புல்லிய புனல்கள் யாவும் புண்ணின் நீர் ஆயிற்று அன்றே

#30
மீட்டு அரும் சூரல் வீச வீழ்ந்தன நுணலை மாரி
தீட்டு அரும் சயன மாடம் சித்திரக்கூடம் யாவும்
ஈட்டு அரும் கனக சாலை இவை முதல் இடங்கள்-தோறும்
வாட்டு அரும் துயர் கொள் நாட்டில் மல்கிய நுணலை ஈட்டம்

#31
பண் இகல் இசையால் கோகு பயன் படாது என்ன அன்னான்
எண் இகல் விடாமை நாதன் ஏவலில் சூரல் ஓங்கி
உண்ணிகள் எண்_இல் மொய்ப்ப உழி-தொறும் வெருவும் மொய்த்து
புண் நிகழ் கிடந்த நாடு பொருவு_இலா வருந்திற்று அன்றே

#32
தீ இனம் குளித்த நெஞ்சான் செருக்கு உளத்து அறாது சீற
தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து
ஈ இனம் எண்ணும் ஈறும் இன்றியே எவணும் மொய்த்து
வீ இனம் மலர்ந்த நாடு வீந்தது ஓர் பிணத்திற்று ஆமே

#33
வெரு உற அரசன் போக விடை செய இடரும் நீங்கும்
உரு அற இடர்கள் நீங்க உரைத்தவை மறுத்து சீற
செரு உற சாதி ஓங்க சிந்துரம் முதல் மா எல்லாம்
தரு அறா உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ

#34
சுட்ட நோய் ஆறின் ஆறா துகள் தரும் தருக்கு நீக்க
விட்ட நோய் போதா வேகத்து இவன் சுழல் சூரல் தன்னால்
குட்ட நோய் அரசன் ஆதி கொண்டு உளம் குலைந்தார் யாரும்
பட்ட நோய் ஒன்றும் இன்றி பரிவு அற யூதர் வாழ்ந்தே

#35
உலை முகந்து அருந்தும் தீய் நெஞ்சு உரு உற சூரல் ஓங்கி
அலை முகந்து அருந்தி ஐ என்று அழல் முகில் ஆர்த்து மின்னி
சிலை முகந்து அருந்தி கான்ற சீர் என பெய்த ஆலி
கொலை முகந்து அருந்தி எங்கும் கொல் உயிர் அளவு ஒன்று உண்டோ

#36
மதம் கலந்து அரசன் கொண்ட மறம் கழிந்திலன் ஆம் தன்மை
கதம் கலந்து அசைத்த சாதி கடுகிய பதங்கம் எங்கும்
சிதம் கலந்து அலர்ந்த நாட்டில் சிறு புல் ஒன்று இன்றி யாவும்
இதம் கலந்து இமைக்கும் முன்னர் இற்று அழித்து ஆயிற்று அன்றே

#37
துச்சு இறை உளம் போன்று அள்ளும் தொகுதியால் இருள் மொய்த்து ஆடா
கை சிறை கடக்கல் தேற்றா கால் சிறை ஆகி எங்கும்
மெய் சிறைப்பட்ட யாரும் வெருவி ஆர்த்து அலறி நோக
மை சிறைப்பட்ட நாடு மற சிறை நகு ஒத்து ஆம்-ஆல்

#38
அங்கு அடைக்கலமாய் அடைந்தவர் ஆள் என்று ஆக்கிய கொடு வினை மாறா
பங்கு அடை கொடிய வேந்தனை தணிப்ப படி உள வேந்தர் ஆள் பரமன்
வெம் கறை நீகம் உண்ணிகள் ஈக்கள் விலங்கின் நோய் குட்ட நோய் ஆலி
சங்கு அடை பதங்கம் மல்கு இருள் என்னும் சபித்தது ஓர் சாபம் ஒன்பதுவே

#39
கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில் கலக்கம் உற்று இடம்-தொறும் யாரும்
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற மற்று யூதர்
தேன் முகம் புதைத்த மலர் என அங்கு ஓர் சிதைவு இல வாழ்தலை கண்டே
ஊன் முகம் புதைத்த வேல் அரசு அஞ்சி ஒருங்கு அகன்று ஏகு-மின் என்பான்

#40
என்பதும் வீர மோயீசன் தன் கை எடுத்து இடர் தீர்ப்பதும் ஒன்றாய்
துன்பு அது நீங்க அரசு உளத்து இகன்று தொழும்பராய் நில்-மின் என்றமையால்
ஒன்பது சாபம் நிறை நிறை தொடர உவமியா மதுகையோன் இட்ட
பின்பு அது கணியானோ என சினந்து பெயர்ப்பு அரும் இடுக்கண் உய்த்திட்டான்

#41
கண் முழுது அட்ட இருள் இரா நடுவில் கதத்து அளவு அரும் திறல் மிக்க
விண் முழுது அன்றி மண் முழுது இறைஞ்சும் வேந்தர் வேந்து அரை நொடி பொழுதில்
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும்
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான்

#42
ஒல்லென உளைந்து கண் புதைத்து அலறி உடன்ற இ கடவுளோடு எதிர்ப்ப
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி
அல் என எண்ணாது அரசன் மோயிசனை அழைத்து உமர் இ கணத்து எழுக
சொல் என இரைப்ப அனைவரும் உவந்து துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார்

#43
இற்று யாவையும் இ இளவல் தான் காட்டி எசித்து-இடை சிதறிய வெருவின்
வெற்றியால் யூதர் தம் சிறை தீர்த்து மிடைந்தன தெரிவையர் இளைஞர்
முற்றி ஆம் கிழவர் இவர் அலது அரும் போர் முரண்பட மலை புய வீர
பெற்றியார் அறு_நூறாயிரர் கடல் சேர் பெரும் சுரத்து ஏகினர் அன்றே

#44
விண் உக ஆர்த்து வீழ் உரும் அன்ன வேந்து மீண்டு உலம்பி ஐ என்ன
பண்ணுக பசும்பொன் கொடிஞ்சி அம் தேரும் பண்ணுக புரவியும் செம் தீ
கண்ணுக படு மா மத கரி மாவும் கடிந்தனர் தகைப்பன் என்று அயில் கொண்டு
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து எய்த கோல் பின்னுற தொடர்ந்தான்

#45
நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி
தாக்கிய தாக்கின் உடன்று உளம் தாக்க சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான்
நீக்கிய பாக்கத்து அகல்வரை தாக்க நெருங்கிய கால் நெடு மறைவை
ஆக்கிய படத்தில் ஆர்த்த கார் முகில் விட்டு அடைத்தனன் மதுகையின் வல்லோன்

#46
இ படை தொடர புணரி முன் நெருங்க இடை வரும் யூதர் உள் வெருவ
அப்பு அடை கடலை மோயிசன் பிரம்பால் அடித்தலின் பளிங்கு ஒளி சுவர்கள்
ஒப்பு அடை அலைகள் பிரிந்து அகன்று இரு-பால் உயர்ந்து நின்று இடத்து இவர் புக்கு
வெப்பு அடை அரசன் உளத்து உடன்று உலம்ப விருப்புடன் யூதர்கள் போனார்

#47
மறம் கொடு கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு உணர்கிலா கொடியோன்
அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும்
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான்
திறம் கொடு சினமும் ஆசையும் பெருக சேர் இழிவு அறிகுவர் எவரோ

#48
நெடு மா கடல் நிகர் மா படை உறி மா கடல் நெறியே
நடு மா கடல் அடை காலையில் நமை ஆள்பவன் நவில் சொல்லொடு
மா கடல் மிசை வானவன் அரு ஆயின ஒருவன்
வடு மா கடல் எனும் தானையை மதியா வதை வகுத்தான்

#49
உரம் அற்றனர் கவசத்தொடும் உறழ் அற்றன உழவர்
சரம் அற்றனர் சாபத்தொடு சமம் அற்றன சமித
கரம் அற்றனர் கருவி கொடு கழல் அற்றனர் கவிழ
சிரம் அற்றனர் படை விட்டு எதிர் செரு உற்றனர் தெரியார்

#50
கோல் இல்லன புதையோடு உள குதை இல்லன கொடிய
வேல் இல்லன வளையோடு இரு மழு இல்லன விரி நீள்
தோல் இல்லன வசியோடு உயர் கதை இல்லன சுளி வில்
கால் இல்லன வடமோடு ஒரு கடை இல் என மடிவார்

#51
உருள் பூட்டிய நெடும் அச்சு இல உருள் கால் இல உகளி
மருள் பூட்டிய பரிமா இல வரு பாகரும் இல மேல்
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன்
தெருள் பூட்டிய விரி பார் இல சிதை தேர் பல பலவே

#52
பிரிவார் தமில் நெரிவார் கறை பிளிர்வார் வதை பெறுவார்
முரிவார் அலை புகுவார் உளம் முனிவார் துயர் முதிர்வார்
எரிவார் உடல் கரிவார் இறந்து இழிவார் இடையிடையே
ஒரு வாளி எய் அரு ஆயின ஒரு வானவன் உரனால்

#53
வலம் ஆயினும் இடம் ஆயினும் வரு வாளிகள் அளவு உண்டு
இலது ஆயினும் வரு வாளிகள் படும் அல்லதும் இலை-ஆல்
பல வாளியில் ஒரு வாளியும் பறிப்பார் இலர் உயிர் உண்டு
அலது ஆறு உயிர் உணும் ஓர் சரம் அலது எல்லையும் இலையே

#54
அழல குயவு அழல கரி அழல பரி அயிலோடு
அழல கதை அழல தனு அழல சரம் அசியோடு
அழல கிடுகு அழல புதை அழல படை எவையும்
அழல குடை அழல கொடி அழல் அத்திரம் விடவே

#55
அழி தாரொடு கடல் ஆழியின் அடி வீழ்வன உயர் தேர்
ஒழி பாயொடு கவிழ்கின்றன உரு ஒத்தன மதமே
கழி மால் கரி கழறி குளிர் கடலுள் புகல் கதிரோன்
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே

#56
முடி வான் உறும் இரதத்து உளர் சிரம் அற்று உகும் முடிகள்
வடி வாளியொடு உரம் அற்று உகும் வடிவு உற்ற அணி மணிகள்
அடியோடு இரு கரம் அற்று உகும் அழகு உற்ற அவிர் அணிகள்
கடிதாய் உலகு ஒழி நாள் உகும் கணம் ஒத்தன எனவே

#57
கார் ஆர் ஒலி கடல் ஆர் ஒலி கறை பாய் ஒலி கடிது ஊர்
தேர் ஆர் ஒலி கரி ஆர் ஒலி பரி ஆர் ஒலி சிதறும்
போரார் ஒலி முரசு ஆர் ஒலி புகைவார் ஒலி புரை செய்
நேரார் ஒலி மடிவார் ஒலி நிறை பார் ஒலி நிகரா

#58
மாறா மத கரி பட்டன வதை பட்டன வயமா
வேறாய் உருள் அழிபட்டன அழிபட்டன மிளிர் தேர்
கூறாய் உடல் குறைபட்டன குறைபட்டன குருதி
ஆறாய் அலை கிழிபட்டு என அதிர்பட்டு உறும் அகடே

#59
செப்பு ஆறு இலது அடல் தானைகள் திரள் மாள்தலில் திரளும்
துப்பு ஆறு என உதிர திரை தொடர் ஆழியின் விரவ
அப்பால் திகழ் அலை சேப்பலின் அது செங்கடல் எனவே
ஒப்பு ஆறு இல கதை யாவரும் உணர பினர் உரைத்தார்

#60
நால் நேர் உள திசை எங்கணும் நானா படை நணுக
மேல் நேர் உள முகிலின் துளி மேல் நேர் கணை விழவே
கால் நேர் உள படை கண்டிலர் காணார் விடு கரமும்
மான் நேர் உளம் அழி வஞ்சகர் மானாது உளம் மருள்வார்

#61
முன் நேரினர் பின் நேரினர் புடை நேரினர் முகிலின்
அ நேரினர் இன்ன நேரினர் அன்ன நேரினர் அலை மேல்
என் நேரினர் என் நேரினர் என்றே அவர் எனினும்
கொன்னே படை கொண்டு ஆருயிர் கொன்றான் கரம் குறிப்பார்

#62
கண் துற்று எழு கனல் துற்றிய கதம் முற்றிய கயவர்
உள் துற்று எழு பகை ஒத்தன உற விண் திசை உயர் நேர்
பட்டு உற்று எழு முகில் ஒத்து எழு பகழி திரள் விடுவார்
விட்டு உற்று எழு சரம் விட்டனர் மிசை பட்டு உருவிடும்-ஆல்

#63
அண்டத்து உயர் உலகு ஆள் இறையவனோடு எவர் பொருவார்
மண்ட துயர் வலி அற்றனம் என மற்று அவர் மத மா
கண்டத்து உயர் பொலி வேந்தொடு கடிது ஓடிய கடையில்
சண்டத்து உயர் கரை யூதர்கள் தனி உற்றனர் ஒருங்கே

#64
கரை மேல் இவர் சென்றனர் என்று கதத்து இறையோன் கடல் தெண்
திரை மேல் அடல் சூரலை நீட்டு என நீட்டிய சீர் திரண்ட
வரை மேல் வரை வீழ்ந்து என ஆங்கு அலை வீழ்ந்து அவர் மேல் கவிழ்ந்து
குரை மேல் எழ உள் குளித்து ஆழ்ந்து கொடும் பகைவர் மடிந்தார்

#65
கடை நாள் கடல் நீர் குடைந்து கழறி பொங்கும் கதம் போல்
உடை மால் கரிகள் பரிகள் உருள் தேர் உழவர் உள மன்
படை நால் வகையும் குடைய பட மேல் பட கீழ் படவே
புடை வாங்கு அலையோடு அலைய பொலி ஆர்ப்பு உலகில் பொருவா

#66
ஓர் ஆயிர மால் கரிமா ஓர் ஆயிர_நூறு அயமா
ஈர்_ஆயிரம் ஓர் எழு_நூறு உருள் தேர் எரி தும்மிய வேலார்
ஆயின பல் கோடி அமிழ்ந்தி இமைப்பில் அனைத்தும்
பேர் ஆயின நீர் வலை இட்ட பிரான் நிறை வாரினன்-ஆல்

#67
போர் மீது ஏந்தும் புரவி கரி தேர் பொருநர் பொருவா
சீர் மீது ஏந்தும் செருக்கு உற்று எவையும் தெளியா நெஞ்சில்
நேர் மீது ஏந்தும் திறன் கொள் நிமலற்கு அஞ்சா கொடுங்கோன்
ஏர் மீது ஏந்தும் படையோடு இமைப்பில் சிதைந்தான் அழிந்தான்

#68
கரை மேல் நின்றார் கொடிஞ்சி கழி தேர் திரள் பல் தீவின்
புரை மேல் மிதக்க ஆமை புரையில் கிடுகு மிதக்க
நுரை மேல் எழும் போல் குடை வெண் கொடி வெண் கவரி மிதக்க
திரை மேல் மகர திரள் போல் செரு மா மிதக்க காண்பார்

#69
அல்லின் வண்ணத்து உடலோர் அணியா திரண்டு பிரியாது
எல்லின் வண்ணத்து எரி வாள் தணவாது இணைந்து திரிய
வில்லின் வண்ணத்து ஒளிர் தெண் திரை மேல் மிளிர் மின்னொடு மேய்
செல்லின் வண்ணத்து எவணும் திரண்டு மிதக்க காண்பார்

#70
மிக பட்டு உயர் வல் இறையோன் விறலால் கரை சேர்ந்தவரே
நக பட்டு ஒருங்கே நவைப்பட்டு உடன்ற நண்ணர் கடலுள்
அகப்பட்டு அமிழ்ந்தி அலை மேல் மிதக்க அனைத்தும் கண்டே
புக பட்டு அழிக்கும் வினையின் பொலிசை காண்-மின் என்பார்

#71
பரியே காவா உயிரை பருகி ஊன் பெய் மருப்பின்
கரியே காவா வளி முன் கடிது ஊர் இரதம் காவா
எரி வேல் காவா எவையும் காவா இறையோன் அருளில்
புரிவே காவாதன கால் புரையின் விளைவு இது என்பார்

#72
நல்லது இலதேல் அமுதே நஞ்சு ஆம் நஞ்சே அமுது ஆம்
அல்லது இலதேல் வினையே அமர் செய்து உதைப்ப நிற்பார்
இல்லது இலதேல் வினையே இகல் செய்து அவரை கெடுக்க
வல்லது இலதே என்பார் வரையா தொழுது மகிழ்வார்

#73
சொல் வாய் தவிர் சிறை தீர் சூதர் உவந்து அப்புறம் போய்
எல் வாய் முகிலும் அல் வாய் எரி தூண் உருவும் இவர் முன்
செல் ஆய் இவர் சென்று எரி வாய் திளைத்த பாலை திணை வாய்
ஒல் வாய் அழலும் ஆற்றாது உணும் நீர் இன்றி உளைந்தார்

#74
தொடையே நின்ற தயையும் நீதி தொகையும் பிரியா
மிடையே நின்ற இறையோன் பணிப்ப வேத்திரத்தால்
புடையே நின்ற கல்லை புடைப்ப புனல் பாய்ந்து அ கல்
இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார்

#75
அவ்வாறு ஒரு சூரலை கொண்டு அவை யாவையும் செய்தவனோ
இவ்வாறு இளவல் என்ன ஒளித்து அ நாடு ஏகுகின்றான்
செ ஆறு உளத்தோன் பயந்து அ திசை தேடுவனோ என்னா
ஒவ்வா எசித்தார் உணர்வார் என மீட்டு உரைத்தான் வானோன்

#76
கடல் உடை உலகு எலாம் கலங்க இன்னவை
மிடல் உடை வலியொடு விளங்க செய்தவன்
உடல் உடை இளவலாய் ஒளித்த பான்மையால்
அடல் உடை அருள் உணர்வு அமைந்து உளான் அரோ

#77
தீய் வினை செய்த போது எசித்து சீர் கெட
நோய் வினை செய்தனன் நுனித்து அ நாடர் தாம்
தாய் வினை செய்து முன் சகோபு காத்தலால்
போய் வினை அறுத்து அருள் பொழிய உள்ளினான்

#78
விண் துளி இலாமையால் வியன்ற பார் மிசை
பண்டுளி அனைத்திலும் பசி பரந்து உயிர்
உண்டுளி சகோபு தன் உயர் குலத்தொடும்
அண்டுளி எசித்தனர் அருள் செய்தார் அரோ

#79
வேதம் ஒன்று அறிந்திலார் வேதம் கொள் குலம்
கேதம் ஒன்றியது என கிளர்ந்த அன்பொடும்
ஏதம் ஒன்று இல வளர் அகலுள் இட்டனர்
பேதம் ஒன்று இல நயன் பெருக ஈட்டினார்

#80
தோல் முதல் உடைமை சால் தொகுத்து அங்கு ஓச்சு செங்கோல்
முதல் அளித்த கோன் பேணும் கொள்கையால்
வான் முதலவன் தொழும் வளர் சகோபு அவன்
கால் முதல் இனம் எலாம் கரை_இல் வாழ்ந்ததே

#81
இ குலத்து இவன் பிறந்து எய்துவான் எனா
அ குலத்தினர் உவந்து அருள் கைம்மாறு உற
மை குலத்து ஒளி நலம் வகுப்ப போய் அவண்
மெய் குலத்து அறிவு இட அன்று மேவினான்

#82
மேவிய கருத்து அறிந்து அரிய வேத நூல்
ஏவிய விதியினோர் இவன் அங்கு ஏகிய
தூவிய முகில் என தோன்றுவான் என்றார்
பாவிய முறைக்கு இது பயணம் உள்ளினான்

#83
உள்ளிய அருள் நலம் ஒளித்து செய்குவான்
தெள்ளிய அமைதி ஈது என்று தீ உளத்து
எள்ளிய அரசு செய் இகல் பெயர் பட
விள்ளிய உளத்து உணர் வினை முடிக்குவான்

#84
மெல்லிய உரு கொடு மிடலினோன் உணர்
கல்லிய கருணையின் கருத்து இது ஆம் என
சொல்லிய மிக்கயேல் தோன்றல் தூய் அடி
புல்லிய வணக்கொடு பொலிய போற்றினான்

#85
பெய்த கான் மது மழை பெருக்குற்று ஓடிய
மொய் தகா வெள்ளம் உள் மூழ்கி இன்பு எழ
பொய் தகா சுருதி நூல் பூத்த வாகையான்
கொய்த காய் இடர் கெட குளித்து உள் ஆடினான்

#86
தன் உயிர் காத்தன தன்மை தன்னிலும்
மன் உயிர் காத்து அருள் மலி பிரான் தனது
இன் உயிர் காத்து என ஒளித்து எசித்து போய்
அன்ன உயிர் காக்கவோ அயர்வுற்றான் என்றான்

#87
தெவ் உலகு அருள் பட தெரிந்த சூழ்ச்சி வான்
அ உலகினர் உணர்ந்து அறிகுவார் அலால்
இ உலகு உணர்குவார் எவர்-கொல் என்று அருள்
துவ்வு உலகு இறைஞ்சு அடி தொழுது பாடினான்

#88
தனை வேண்டி போய் ஒளித்த தன்மை பிறர் கொள்
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுவான் யாரே
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுதே இங்கண்
எனை வேண்டி மைந்தன் என எய்திய நீ அன்றே

#89
புள் வழியே நீர் மேல் புணை வழியே ஆய்ந்து அடைந்தால்
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் தான் யாரே
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் வான் அரசு ஆய்
முள் வழியே ஈங்கு இடருள் மூழ்கி அழும் நீ அன்றே

#90
காய்ந்தால் உலகு எரிக்கும் கண்ணால் கருணை முகந்து
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் தான் யாரோ
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் நீ அன்றோ
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே

#91
பாடினான் வியந்து உளத்தில் பெருகும் இன்ப பரவையில் தான்
ஆடினான் அழும் கண்ணீர் ஆட்டி தேம் பூ அடி தொழுதான்
சூடினான் சுவை விள்ளான் பினர் முந்நீர் மேல் துறும் வெள்ளம்
ஓடினால் என தொழும் காபிரியல் இன்புற்று உரை உற்றான்

#92
உடல் வண்ணத்து இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான்
கடல் வண்ணத்து எ குணமும் உளனாய் முன் நாள் கடு நீதி
அடல் வண்ணத்து எசித்து அறியும் அல்லால் இங்கண் ஆர் அறிவார்
மிடல் வண்ணத்து எழும் கதத்தில் இவன் தன் நீதி வெகுண்டன கால்

#93
செய் பட்ட வான் உலகும் வான் மீன் திங்கள் செம்_சுடரும்
மொய் பட்ட நீர் உலகும் நீரில் துப்பும் முத்து அணியும்
ஐப்பட்ட பூ உலகும் புனலும் வெற்பும் ஐம் திணையும்
கைப்பட்ட எ உலகும் செய்தான் இ நல் காதலனே

#94
சீர் ஆரும் மணி இனமும் பைம் பூ மு பால் திளை இனமும்
பார் ஆரும் கூழ் இனமும் கனியும் தீம் தேனும் பல் இனமும்
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும்
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே

#95
கூறு உற நான் கூறும் கால் கூற்றும் குன்ற குவிந்த திரு
வேறு உற வேறாய் பரப்பி மண் மேல் நீர் மேல் விண் திசை மேல்
பாறு உற வாழ் புள் இனமும் நீர் வாழ் மீன்கள் பல் இனமும்
மாறு உற நீள் நிலத்து உயிரும் எண் அற்று ஈட்டி வகுத்தனனே

#96
மட்டு_அற்ற புல் உயிர்கட்கு அரசன் ஆக வானவர் போல்
கட்டு_அற்ற வேண்டுதல் வேண்டாமை வல்ல கருத்து உயிரை
நட்டு அற்றம் நிகர் கடந்த உருவின் மாமை ஞாயில் பொறித்து
இட்டு அற்றம் இன்றி மனு_குலத்தை ஈன்றான் இ திறத்தான்

#97
இற்று எல்லாம் கலை முகந்த கற்றோர் எஞ்ச ஈட்டிய பின்
அற்று எல்லாம் உணர்கு இல்லா மக்கள் இன்னா அருந்தும் அவா
உற்று எல்லாம் அழுக்கு உற்றது என்று நாதன் உடன்றன கால்
முற்று எல்லாம் அழிப்ப முனிவு உணர்ந்த தன்மை மொழிகிற்பேன்

#98
மாயிரத்து அவிர் புவி வகுத்தும் ஆயனம்
ஆயிரத்து_ஆறு_நூற்று_ஐம்பத்தாறும் ஆய்
தீ அகத்து ஆர்ந்தன செயிர் பொறாமையால்
காய் அகத்து ஆண்டகை கதத்தை உள்ளினான்

#99
மறை நெறி நீங்கிய மனிதர் உள் கெட
நிறை நெறி நீங்கிய காம நீர் குளித்து
இறை நெறி நீங்கிய இன்ன பார் உடை
கறை நெறி நீங்குப கழுவல் உள்ளினான்

#100
உள்ளிய வாய் செய உளத்தின் ஏவலால்
எள்ளிய உலகு எலாம் எஞ்ச கார் முகில்
விள்ளிய கண் பக மின்னி ஆர்த்து இடித்து
அள்ளிய இருள் புவி அனைத்தும் மொய்த்ததே

#101
வரையுழி வரைவு இலா வடிந்த ஆறு என
புரையுழி முகில்கள் நீர் பொழிய நாழிகை
அரை ஒழியா முனர் அகன்று யாண்டையும்
தரையுழி ஆற்றொடு தடங்கள் ஆர்ந்தன

#102
ஆறொடும் ஆறொடும் அரிதம் நான்கினும்
ஆறொடும் ஆறு மொய்த்து அதிர்ந்து எழும் திரை
பாறொடு பாறு என பொருது பார் எலாம்
பாறொடு பாறு நீர் படர்ந்து மொய்த்ததே

#103
கரை கொலும் கடல் எழீஇ கழறி வாங்கிய
வரை கொலும் உயர் திரை மங்குல் பாய்ந்து எழ
புரை கொலும் முழக்கு எழீஇ புவனம் எங்கணும்
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே

#104
நீர் எழும் ஓதையும் நீர் பெய் ஓதையும்
கார் எழும் ஓதையும் கால் செய் ஓதையும்
சூர் எழும் ஓதையும் துதைந்து வீழ் மனை
பேர் எழும் ஓதையும் பெருகி மாறும்-ஆல்

#105
புதைத்து இருள் கிளர்த்தலும் புயல் பனித்தலும்
துதைத்து அடுத்து இடித்தலும் கடல் சுளித்தலும்
சிதைத்த அலை பெருக்கமும் திளைப்ப கண்டனர்
பதைத்து இரைத்து உகப்பு இடை பனிப்புற்று ஓடுவார்

#106
மாடம் நீள் முகட்டு உயர் மரத்தின் கொம்பு உயர்
கூடம் நீள் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர்
தேட நீள் நாள் உளைந்து அடுத்த சீர் எலாம்
ஓட நீள் நீத்தமோடு ஒழிய காண்பரே

#107
கவிகையும் கொடிகளும் கதிர் செய் மஞ்சமும்
சிவிகையும் தளிமமும் திகழ்ந்த கோசிக
குவிகையும் குஞ்சமும் கோல வட்டமும்
புவி கை உண் பெரு கொடு போக காண்பரே

#108
ஏர் முக புதி மணத்து இணைந்த காந்தனும்
ஓர் முகத்து அன்னையும் உலந்த தாதையும்
சீர் முக துணைவரும் இனிய சேயரும்
நீர் முகத்து அமிழ்ந்தி மேல் ஞெமுங்க காண்பரே

#109
கண்டு கண் புதைக்குவார் கலங்கி ஆர்த்து இடர்
உண்டு கண் மழையொடும் உமிழ்ந்து விம்முவார்
வண்டு கண் விசை வரும் வாரி மேட்டு மேல்
கொண்டு கண்டு அங்கணார் குழைந்து அமிழ்ந்துவார்

#110
ஏர் அணி வலியின் நீதி இறையவன் முனிந்த-காலை
நீர் அணி அரணம் ஆகா நெடு மதிள் அரணம் ஆகா
சீர் அணி அரணம் ஆகா சேண் வரை அரணம் ஆகா
பேர் அணி அரணம் ஆக பெற்ற நல் வினை இலார்க்கே

#111
எல் இரா பனிப்ப மாரி எழுந்து இரா கதிரில் பாய்ந்த
இல் இரா புரிசை ஓங்கும் எயில் இரா புணர்ந்த நாவாய்
வல் இரா கவிழ்ந்து மூழ்க வரை இரா பெருக்குள் மூழ்கா
கொல் இரா உயிரும் இல்லா குழைந்து உலகு அழிந்தது அன்றே

#112
ஆதியை பழித்து காமத்து அசனி பட்டு எரிகின்றாரும்
நீதியை பழித்து எள்ளி நீந்தி நைந்து அமிழ்ந்துவாரும்
ஓதியை பழித்த பாவத்து உணவு இல சோர்கின்றாரும்
சேதியை பழித்த மாடம் சிதைந்து வீழ்ந்து அழுங்குவாரும்

#113
இடி முகத்து ஊற்றும் மாரி இடைவிடா நால்_பான் நாளும்
படி முகத்து எழுந்த வாரி பருப்பதத்து உயர்ந்த எல்லா
முடி முகத்து எழுந்து மூ_ஐ முழத்து எழீஇ எவரும் மாண்டு
மடி முகத்து அழிந்த ஞாலம் வயின்-தொறும் நீத்த வாரி

#114
பிடி நலம் தழுவி நீந்தும் பெரும் கரி வரை என்று எண்ணி
மடி நல முயல் மான் கேழல் மரை கவி பலவும் ஏறி
கடி நலம் சோர்ந்து மூழ்கும் களிற்றொடும் அவையும் மூழ்க
அடி நலம் இழந்த வாழ்க்கை அடுத்தனர் சிதைவ போன்றே

#115
பயம் மிக பகை தோன்றாது பசு வரி புலியின் மேலும்
அயம் மிக சிங்கம் மேலும் மான் கலை யாளி மேலும்
அயம் மிக சடுதி நீந்தி அயர்ந்து சோர்ந்து உள மா யாவும்
கயம் மிகு அ பெருக்குள் மாண்டு கயற்கு இனம் விருந்து உண்டாமே

#116
மயில் கிளி புறவு பூவை மட அன்னம் குறும்புள் நாரை
குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும்
பயில் துளி விடாமையானும் பருக ஒன்று இலாமையானும்
துயில் சிறிது இலாமையானும் தொறும்தொறும் துஞ்சிற்று அன்றே

#117
வாயு முன் தூமம் போலும் மாலி முன் கங்குல் போலும்
தீயின் முன் பூளை போலும் திடனின் முன் பொய்யும் போலும்
வீயு முன் உழைகள் போலும் விமலன் உள் முனிந்த நீதி
நோயு முன் எதிர்த்து தாங்க நுனித்த பீடு உடையார் யாரே

#118
நூல் வரும் சுருதி வேலி நொறில் தவம் விளைத்த சீலம்
சால் வரும் மாட்சி நோவன் தானும் தான் தவத்தில் ஈன்ற
வால் வரும் சேமும் காமும் யாப்பனும் மக்கள் ஆக
நால்வரும் நால்வர் காந்தை நான்கும் அன்று அறிந்திலாரே

#119
எண்மரும் இறைவன் நூலால் இயைந்த நவ்வி ஏறி மீண்டும்
மண் மருவு இனங்கள் விண் மேல் மருவு இனம் விடாமை ஏற்றி
விண் மருவு அமலன் தானே விரும்பி மீகாமன் ஆய் பார்
கண் மருவு அளவு_இல் வாரி கடந்து மேல் மிதந்து நின்றார்

#120
அணி வளர் ஆருமேனி ஆகிய நாட்டில் அங்கண்
மணி வளர் குன்றத்து உச்சி வதிந்த பாறு இழிந்த வேலை
பிணி வளர் இன்ன தன்மை பின்னர் பெயாது ஆணையாக
பணி வளர் வான் வில் பெய்-கால் பரப்புவல் என்றான் நாதன்

#121
சோதியின் வடிவாய் ஞானம் தொடர் குணத்து எஞ்சான் கோப
வீதியின் வடிவாய் நீத்தம் விட்டு உலகு அஞ்சி எஞ்சி
நீதியின் வடிவாய் நின்ற நிமலனே கருணை பூத்த
சாதியின் வடிவாய் இங்கண் தனயன் ஆம் இவன்-தான் என்றான்

#122
பொன் கலத்து ஏந்தி தந்த பொழி அமுது அனைய வானோன்
சொல் கலத்து ஏந்து இ காதை தூற்றிய இருவர் உள்ளம்
தன் கலத்து ஏந்தும் இன்பம் சால்பினால் அன்னை தன் கை
எல் கலத்து ஏந்து தேவ இளவலை பாடினாளே

#123
மருள் தரு மறு அற மழை தரு மடிவு அற
அருள் தரு குருதியின் அடை மழை தருகுவை
அருள் தரு குருதியின் அடை மழை தருகும் நின்
சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும்

#124
சின வழி தெரிகு இல தயை வழி தெரிகு இல
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின்
தன வழி ஒளிர் அருள் தரும் அடி தொழுதும்

#125
மெலி உலகு அழிவுற வெருவிட வெகுளினை
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின்
வலி உலகு உணர்வுற மலர் அடி தொழுதும்

#126
பாண் நெறி பலவையும் பகர்ந்து உவப்பு எழீஇ
கோள் நெறி ஒளி முக குழவி ஏந்தினர்
சேண் நெறி கடந்து போய் தெளிந்த வாவியை
காண் நெறி எய்தி அ கரையின் அண்மினார்

#127
புல் அம் கரை வதிந்தனர் புடை அகன்றது ஓர்
நிலம் கரை இலாது ஒரு நிழல் இலாது நீறு
இலங்கு அரை உயர் மலை என கண்டு உம்பரை
அலம் கரை வாகையான் அழைத்து அஃது ஏது என்றான்

#128
இன்னவை மிக்கயேல் இறைஞ்சி கேட்டு அவண்
பல் நவை மிடைந்த ஐம்புரத்தில் பண்டு நாள்
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று
அன்னவை கேள்-மின் என்று அணுகி கூறினான்

#129
கான் ஊறு நேமி காணாது மூடு காவாத வாரி கழிவு ஆய்
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர்
ஊன் ஊறு சோதுமத்தாரது ஐந்தும் ஊர் உற்ற பாவம் ஒழிய
வான் ஊறு தீயை ஓர் மாரி ஆக வான் வாரினான் இ மகனே

#130
மறை ஒன்று இலாது தவம் ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய
நிறை ஒன்று இலாது நிரை ஒன்று இலாது நெகிழ்கின்ற நீதி அகல
முறை ஒன்று இலாது வரைவு ஒன்று இலாது முறிகின்ற காமம் முதிர
சிறை ஒன்று இலாது சிதைகின்ற நாடு திளைகின்ற தீயின் இரை ஆம்

#131
முடி கோடி கோடி கதிர் காலும் ஏக முதல் ஏவல் ஆகி அசனி
இடி கோடி கோடி எரியோடு வீழ எதிர் ஓதை சீற எரி வான்
துடி கோடி கோடி துறும் ஓதை போலு சுடு சூல் அகோர முகிலே
கடி கோடி கோடி குடியாய் உலாவு கடு நாடு மூடி மிடைய

#132
புரி வாய் பிளந்த இறையோன் உடன்று புரி சாபம் என்று கடிதே
எரி வாய் பிளந்த முகிலே உமிழ்ந்த இடி ஏறு அதிர்ந்து படலான்
முரி வாய் பிளந்த முகில் தாவு உயர்ந்த முடி மாடம் எங்கும் முரிய
விரி வாய் பிளந்த முகில் காலும் அங்கி விளியாது எரிந்து பொழிய

#133
பட்டு ஈயும் எங்கும் எழ ஓதை பட்ட படர் ஞாலம் முற்றும் நெகிழ
விண் தீயும் எங்கும் இழி காமம் முற்றி விளை சோதுமத்தர் விரகத்து
உள் தீயும் எங்கும் வெருவோடும் உற்ற உள வேகம் முற்றி உருகும்
கண் தீயும் எங்கும் விரவே கலந்து கடி மாகம் மொய்ப்ப எழுமே

#134
மேகங்கள் வேக இடு மீன்கள் வேக இடி ஏறு வேக மிளிரும்
மாகங்கள் வேக ஒளி வேந்தன் வேக மனம் அஞ்சி மேகம் மறைய
ஆகங்கள் வேக விழி கண்கள் வேக அறை நாவும் வேக அலை கொள்
வேகங்கள் வேக நதி வேக வேக வெரு ஆக வேலை அகல

#135
நாலோடு_நாலு திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய
காலோடு காலும் எரி கந்தகம் செய் கனலால் எரிந்த பலவோடு
ஆலோடு மாலும் அழல் ஆலி மண்டி அவியாத காம அசடர்
மாலோடு மாலும் மிக மாழ்கி வெந்து மதியாது எலாரும் மடிவார்

#136
வீழ்ந்து ஆரும் ஏறு படுவாரும் உண்டு வெருவு ஆகம் உண்டு மனையின்
தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர
வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு வயின் யாவும் உண்டு வடியா
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார்

#137
விரகம் கொள் தீய மிறை யாவும் வேக விரி நீதி தூண்டும் விளியா
நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி நனியாக விட்ட இவனே
உரகம் கொள் தீய விடம் மிஞ்சு பாவம் உரு ஆகி மாறு கருணை
சிரகம் கொள் தூய முகிலாக இன்று திரி நாதன் என்று தொழுதான்

#138
மெய் நூல் திறத்துள் இவை யாவும் இன்பம் மிக உம்பர் கேட்டு விரிவாய்
கை நூல் திறத்து நிகராத மாலை கடிது ஆக வாச மலரை
இ நூல் திறத்து வடிவாக வீக்கி அடி மேல் இறைஞ்சி அணிய
எ நூல் திறத்தும் இணையாத ஆசி இனிது அன்று பாடி இடுவார்

#139
மாற்றாரை மாய்த்த கத நீதி மாற்றி மாற்றாரை ஆற்ற மனு ஆய்
ஏற்றாரை ஏற்ற அடு காலம் நீக்கி ஏற்றாரை ஏற்ற இழிந்தே
தேற்றாரை ஆற்ற அழுது ஆவி வாழ்தல் தேற்றாரை உய்ப்ப மடிவாய்
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து யார் உன் அரு வீர ஆண்மை அறிவார்

#140
ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும் ஒரு மூவர் என்று பெயர் ஆய்
குரு ஆகி வந்து தணவாது அகன்று குறுகாதும் எங்கும் உளன் ஆய்
பொருள் ஆதி என்று பொருள்-தோறும் நின்று பொருள்-தோறு அழிந்து சிதையாய்
அரு ஆகி நின்றும் உருவோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார்

#141
வினை ஒன்றும் இன்றி வினை செய்து செய்த வினை-தன்னில் ஒன்றும் விழையாய்
நினைவு ஒன்றும் இன்றி மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த நிலவு ஆய்
முனைவு ஒன்றும் இன்றி முனிவாய் முனிந்தும் முதிர்கின்ற அன்பு முயல்வாய்
அனை ஒன்றும் இன்றி உயர்வோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார்
மேல்

@15 சோசுவன் வெற்றிப் படலம்


#1
தேன் ஆர்ந்த நறும் பாகில் தெள் அமுதில் தீம் சொல்லால்
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ் விழைந்து இளவல் துதி பாட
கான் ஆர்ந்த மலர் வாவி கடிந்து அன்னார் நெடு நெறி போய்
வான் ஆர்ந்த கதிர் சாய்ந்து வாருதி நீர் ஒளித்ததுவே

#2
நீர் ஒளித்த சுடர் எழு முன் நின்று எழுந்த நிறை நீரார்
பார் ஒளித்த நாதன் அடி பணிந்து ஏந்தி துயர்க்கு எஞ்சா
கார் ஒளித்த மின்கள் என கடுகி போய் நெடு நெறியின்
சூர் ஒளித்த வானவர் தீம் சொல் ஆட ஏகினரே

#3
முளைத்து எழுந்த முழு மதி போல் அரச அன்னம் முதிர் தூவி
வளைத்து எழுந்த குடை விரிப்ப வான் உச்சி செம்_சுடரோன்
திளைத்து எழுந்த கதிர் வீசி தேன் துளித்த பூம் சினைகள்
விளைத்து எழுந்த மலர் சோலை மிடைந்து அடைந்தார் வினை வென்றார்

#4
நீர் தவழும் செம் தீயோ நில_மகள் தன் துவர் வாயோ
கார் தவழும் மின் இனமோ கமல மலர் தடம் ஒரு-பால்
வார் தவழும் புவி சிலம்போ மணி வரன்றி ஒலித்து ஓடி
பார் தவழும் யாறு ஒரு-பால் பணி கை போல் தழுவினவே

#5
அ தலையார் அ நிழல் கா அகட்டு உறைந்தார் மா தவனும்
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன்
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான்
இ தலையான் ஆண்மையை வான் எய்தினரே சொல்-மின் என்றான்

#6
செய் பட்ட வானவரும் திற முனி சொல் கேட்டு உவந்து
மெய் பட்ட மறை முதலோன் மெல் அடியை பணிந்து ஏற்றி
கை பட்ட படை வீரர் களத்து-இடை முன் இவன் காட்டும்
மெய் பட்ட வலி காட்ட மிக்கயேலே மொழியுற்றான்

#7
அலை ஈன்ற முத்து என ஈங்கு அயர்வுற்றோன் முன் நாளில்
மலை ஈன்ற இ மணி பூம் புனலிடத்தும் மறை பகைத்த
கொலை ஈன்ற வேல் வல்லார் குழைந்து அற இ நாட்டிடத்தும்
கலை ஈன்ற சொல் கடந்து காட்டியவை கேள்-மின் என்றான்

#8
கல்லில் தீட்டி வரைந்த மறை கடவுள் தந்து மலை இறங்கி
எல்லின் தீட்டி ஒளிர்ந்த முகத்து எழு மோயிசன் செல் கதி சேர்ந்து
வில்லின் தீட்டி ஊன் உமிழ்ந்த வேல் சோசுவன் அ குலத்து அரசு ஆய்
வல்லின் தீட்டி வளர் தெய்வ மாட்சி காட்டும் உரு ஆனான்

#9
கார் தாவு அசல மேல் பிறந்து கதிர் சால் தும்மு மணி வரன்றி
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி
சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும்
சோர்தான் என்னும் இ நதியை துன்னி யூதர் எய்தினரே

#10
தெண் அம் தண் நீர் மேய்ந்து உயர்ந்த செல்லே மின்னி திரண்டு ஆர்த்து
கண் அம் குன்றத்து உயர் நெற்றி களிப்ப பொழிந்த வெள்ளமொடு
தண் அம் கந்த மலர் முல்லை தடத்தில் பெருகி அ நாளில்
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க வரைவு அற்று ஒழுகும் மா நதியே

#11
கரை மேல் திரண்ட யூதர் கொணர் கதி நூல் பேழை சேர்ந்தன-கால்
நிரை மேல் கீழ் நின்றன திரைகள் நெறி போய் ஓட மேல் வரு நீர்
திரை மேல் திரை நின்று அதிசயித்த சீர் போல் அடுக்கி நின்று இனிதாய்
புரை மேல் களித்த யூதர் எல்லாம் போய் அ கரை சேர்ந்து எய்தினரே

#12
இவ்வாறு அ ஆறு அவர் கடந்த எல்வை எவரும் உள் வியப்ப
செ ஆறு அடிகள் தம் பொறி போல் சிதறாது ஒதுங்கி நின்ற திரை
ஒவ்வா மறையை தொழும் தன்மைத்து உவந்து ஒல்லென வீழ்ந்து உலகு அறிய
அ ஆறு உற்றது உரைத்து என்ன அதிர முழங்கி ஓடினவே

#13
அமிர்தம் பாய்ந்து மது பாய்ந்து ஆர் அன்னம் பாய்ந்த வயல் கடந்து
துமிர்தம் பாய்ந்து கயல் பாய்ந்து துள்ளும் கமல தடம் நீக்கி
திமிர்தம் பாய்ந்து நிழல் பாய்ந்த செழும் பூம் சோலை புடை மருவ
நிமிர்தம் பாய்ந்து முகில் பாய்ந்த நேரார் வைகும் நகர் கண்டார்

#14
செல்லே வரையை தழுவுதலோ செல்லை தாங்கும் வரை தானோ
எல் ஏர் எரிக்கோ என்னும் நகர் ஏந்தும் கன்னி அம் புரிசை
வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழ கண்டு ஆர்த்து அம்பு விசை
ஒல்லே வெல்ல போயின போது உரை உற்று அறைந்தான் சோசுவனே

#15
செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும்
வெல்வேம் வெல்லும் வல்லமையோ வீர வில்லில் மாரியினோடு
எல் வேல் வல்லது அல்லது என இறைவன் தான் தன் வலி காட்ட
கொல் வேல் இல்லாது இ நகரை குலைய சிதைத்தல் காண்-மின் என்றான்

#16
ஏறு ஆர் ஒலி போல் பல் பறை ஆர்த்து இறைவன் பணியால் மறை பேழை
வீறு ஆம் மதில் சூழ் கொணர்ந்து ஒரு சொல் விளம்பா வெல் வேல் ஏந்தி விரைந்து
ஆறா அழல் பெய் அரி அன்னார் ஆறு நாளைக்கு ஒரு காலை
மாறா வரவே மருண்டு ஒன்னார் மனம் உள் பதைப்ப வியப்புற்றார்

#17
கோள் உற்று ஒளிர் வான் கோன் இவற்றை காண குணக்கில் எழ ஏழாம்
நாளுற்று அம்பின் கடிது ஓடி நகர் ஏழ் முறை இன்று இடை வளைத்து
வாள் உற்று எவரும் வான் அதிர வாய் விட்டு ஆர்த்து வருக என
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும் சோசுவன் தான் பணித்திட்டான்

#18
ஆர்த்தார் திரண்டார் முடுகுகின்றார் அன்றே ஏழாம் முறை வர கார்
ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர இடை விட்டு அரணும் தகர்ந்து இடிந்தே
பார்த்தார் ஒன்னார் பதைத்து அஞ்ச பாய்ந்தார் யூதர் வாள் பசியை
தீர்த்தார் துமித்தார் பகை வெள்ளம் சிறந்த வெற்றி நலம் கொண்டார்

#19
பொருவு_அற்ற விதத்து உயர் பொற்ப நகர்
செரு அற்ற திறத்தில் தகர்ந்தது எனா
வெருவுற்ற வியப்பில் ஒருங்கு எவரும்
தரு உற்ற பிரான் அடி தாழ்ந்தனரே

#20
விண் காவலன் ஆர் மிடல் அஞ்சினராய்
மண் காவல் வழங்கிய சோசுவன் வாய்
தண் காவில் அடைக்கலமே தா என்று
ஒண் காபன நாடர் ஒடுங்கினர்-ஆல்

#21
பார் அஞ்சின அஞ்சின பாரினொடு
நீர் அஞ்சினிர் நித்தன் அடைக்கலம் வந்தீர்
அஞ்சிலிர் அஞ்சிலிர் என்றனன்-ஆல்
போர் அஞ்சில கை புகழ் எஞ்சிலனே

#22
எஞ்சா உறவு ஆயினர் என்று உள மற்று
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம்
நஞ்சு ஆடிய நாணி வில் வவ்வி அறா
நெஞ்சு ஆடு இகல் ஆட நினைந்தனர்-ஆல்

#23
வேறாய் உரையும் உறையுள் விதமும்
வேறாய் முறையும் விதியும் குலமும்
வேறாய் இறையும் விழையும் மறையும்
வேறு ஆய் உறவாட விரும்புதல் என்

#24
பகையார்க்கு உறவோர் பகையார் எனலே
தகையார்க்கு உள தம் முறை ஆம் எனவே
நகை ஆர்க்க நகைத்து நடுங்கிய அ
வகையார்க்கு இகல் செய்திட வந்தனரே

#25
வஞ்சித்து உயிர் உண் அயில் வவ்வினர் போர்
விஞ்சி திரள் ஆக மிடைந்தனர் என்று
அஞ்சி திரி காபனர் வந்து அலறி
எஞ்சி தொழுது இற்றை இயம்பினர்-ஆல்

#26
ஒன்னாரின் உரத்தில் உலாவி உண் ஊன்
மின்னோடு உமிழும் கத வேல் அடலோய்
உன்னோடு உறவாடினம் என்று உள மற்று
அ நாடர் எலாம் பகை ஆடினர்-ஆல்

#27
மஞ்சு எஞ்சுக மா முரசு ஆர்ப்ப அரா
நஞ்சு எஞ்சுக எய் படை ஞாஞ்சிலொடு
நெஞ்சு அஞ்சுக நீள் நிலம் அஞ்சுக வந்து
அஞ்சு அஞ்சில மன்னர் அடுத்தனர்-ஆல்

#28
விது வீசிய வில்லில் வெலற்கு அரியான்
மது வீசும் எருசல மண்டிலம் ஆள்
அதுனீசதன் என்னும் அடல் பெயரான்
பொது ஈசர் பிரான் பொர எய்தினன்-ஆல்

#29
நாவால் அடையா நயன் ஆபிரம் ஆள்
மேவார் பணி வேல் எறி கை மிடலோன்
கா ஆரும் மதத்த களிற்றின் உயர்
ஓவான் எனும் நாமனும் உற்றனன்-ஆல்

#30
ஏர் ஆடிய ஏரிம நாட்டு இறையோன்
பாரான் எனும் நாமன் அகல் படியின்
வேர் ஆடிய மூ இலை வேலுடன் ஓர்
சீர் ஆடிய தேர் மிசை சென்றனன்-ஆல்

#31
கணையோ வலியோ கதிர் கார் மினலோ
துணை ஓர் துரகத்து உயர் வாள் சுழல
பணை ஓம்பு அயிலக்கின பாழியினான்
இணையோ தவிர் யாப்பியன் எய்தினன்-ஆல்

#32
வாசத்து அலர் பூம் வயல் ஏகில நல்
தேசத்து அரசாய் சிகி வாகையனாய்
பாசத்து இணை பால் மதி ஆழியனாய்
பூசத்தியில் தாபிர் பொலிந்தனன்-ஆல்

#33
இன்னாரும் எவேயரும் எந்தையரும்
பொன் நாடு அமுறேயரும் வண் புகழ் சேர்
நல் நாடு எபுசேயரும் நச்சு அயில் வேல்
மன் ஆர் பிரசேயரும் மண்டினரே

#34
மடையை கடல் வாரி திறந்தது என
புடையில் புவி யாவும் புழக்கம் உற
இடை எக்கணும் உள்ள யாவருமே
படை உற்று எமை இன்று பகைத்தனர்-ஆல்

#35
மலை நேர் கரியும் வளி நேர் பரியும்
முலை நேர் தனுவும் உறை நேர் கணையும்
சிலை நேர் உரமும் திளை சேனைகளே
நிலை நேர் இல நேமி நிறைந்தனவே

#36
போர் கீறிய வெய் புணரி திரையோ
நீர் கீறிய நீள் கலமோ சிறகால்
கார் கீறிய கல் திகிரி குலமோ
பார் கீறிய கால் படர் தேர் திரளே

#37
வளியோ கடலோ மழையோ உருமோ
விளியோடு அதிர் கூற்று இனமோ எவையோ
தெளியோம் உயிர் உண்டு சினந்து அதிரும்
களி ஓடு கடத்த கரி திரளே

#38
மேல் மன்னிய வீரியர் வில்லில் உகும்
கோல் முன்னின கொல்லு குளம்பின மேல்
வான் மின் என ஒல்கின வாவின போர்
பால் மன் மனம் உற்ற பரி திரளே

#39
சுழல் காலினர் கல் திரள் தோளினர் பொன்
நிழல் தாரினர் போர் பல நீந்தினரே
அழல் கோலினர் கூற்றது தோழர் அலை
சுழல் கார் இணை துன்று அபயர் திரளே

#40
கோல் பேர் படை தேர் கொடி மா படை மால்
தோல் பேர் படை ஓர் தொகை இன்றி வரும்
கால் பேர் படை மா கடல் அ கடை போய்
வேல் பேர் படையோய் எவர் வெல்வர் என்றார்

#41
ஊன் முகந்து அழன்ற வேலோன் ஓர் நகை சினந்து கொட்டி
தேன் முகம் தந்து கொல்லும் தீ வினை பகை ஒன்று அன்றி
வேல் முகம் தந்த வெம் போர் வெருவவோ இரங்கி நாதன்
தான் முகம் தந்த காலை சயம் நமக்கு அரிதோ என்றான்

#42
கூற்று என சினந்து அங்கு இன்ன கூற்றினை முடியா முன்னர்
ஏற்று இனத்து உடன்ற தானை எழுக என்று உயர் தேர் ஏறி
காற்று என பறந்து ஞாலம் கலக்கு உறீஇ கூச செம் தீ
ஊற்று என சுடரை பில்கி ஒளிர் படை படர்ந்தது அன்றே

#43
கால் என விசையில் தேர்கள் காலொடு பறந்து செல்ல
கோல் என பரிகள் செல்ல குளிறி வேம் இடி சூல் மேகம்
சால் என கரிகள் செல்ல சமர் புலி வெள்ளம் மொய்த்த
பால் என பதாதி செல்ல பகைவர் வெம் படையை கண்டார்

#44
கண் புலன் அழலை தும்ம கதத்து எதிர் கடலை கண்டான்
உள் புலன் அழற்றும் சீற்றம் ஒடுக்கிய சீலம் உள்ளி
மண் புலன் மொய்த்த வாரி மறித்து என படையை போக்கா
புண் புலன் தேய் வேல் ஆபன் புணர்க என்று அறைந்தான் வல்லோன்

#45
ஐவரும் இடை தூது ஏகி அனைத்தையும் பொது அற்று ஆளும்
மெய் வரும் சுருதி நாதன் விரைந்து அடைக்கலம் வந்தாரை
கை வரும் படையின் சால்பில் கலக்கு உறீஇ பகைத்தது என்னோ
மொய் வரும் பகையின் ஊங்கு முதலவன் பகை தீது என்பாய்

#46
பார் பெற ஆசையானும் பானு முன் பனியின் நீங்கும்
சீர் பெற ஆசையானும் செகுத்து உயிர் வித்தி கொள்ளும்
பேர் பெற ஆசையானும் பிறர்க்கு யான் செரு போர் செய்யேன்
போர் பெற நாதன் வேண்டி பொறுக்கவும் செய்யேன் என்பாய்

#47
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே
செரு பட வேண்டின் இன்றே செரு வரம் தருவல் என்பாய்
மரு பட மலர்ந்த தாரோய் மருள் படாது அறைதி என்றான்
நெருப்பு அட வெய்ய ஆபன் நிருபனை தொழுது போனான்

#48
வில் முகத்து அம்பின் சென்று வேந்தர் ஐந்து இறைஞ்சி சொல்வான்
சொல் முகத்து அடங்கா சீர்த்தி சோசுவன் தூது என்று உற்றேன்
வன் முகத்து ஒவ்வா நாதன் வணங்கு காபனரை சீய்க்க
செல் முகத்து உறையின் வை வேல் செரு படை மிடைந்தது என்னோ

#49
மண் முழுது அன்றி வானும் வணங்கும் ஒப்பு எதிர் ஈறு இன்றி
எண் முழுது இழந்த சீலத்து இறைவனை தொழுதல் தீதோ
உள் முழுது அறிவு மாழ்க உடற்றலே வேண்டா என்றான்
புள் முழுது ஏற்றும் வேலோன் பொருநரும் சினந்து நக்கார்

#50
வேற்று அலாது அவரும் நீரும் விரும்பி ஒன்று ஆய போழ்தில்
மாற்றலார் எமக்கு என்று அன்ன மன்னவர் உரைப்ப மீட்டும்
கூற்று அலாது இணையா வேலோன் கூறுவான் படையின் வெள்ளம்
போற்றலால் உளத்தில் ஏமம் பொங்குபு மருளல் வேண்டா

#51
பிரம்பினால் எசித்து நாட்டில் பெரும் துயர் விளைந்த ஆறும்
கரம்பின் ஆர் அடியே காண கடல் திரை பிரிந்த ஆறும்
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும்
பரம் பிரான் வலியை காட்டும் பலவையும் கேளீர்-கொல்லோ

#52
இ திறத்து அனைத்தும் செய்த இறைவன் நம் இறைவன் ஆகி
அ திறத்து அடலோன் நம்மை அமர் செய வெகுண்ட-காலை
கை திறத்து உடன்ற வெள் வேல் கடல் படை அரணம் ஆமோ
மெய் திறத்து இறைஞ்சி அன்னான் விரி நிழல் பெறல் நன்று என்றான்

#53
போற்றிய தேவர் நீக்கி புதுப்பட ஒருவன் போற்ற
சாற்றிய தூதோ போதி சடுதியே நீரும் நீவீர்
ஏற்றிய தெய்வம் தானும் எம் படை ஆண்மை நும்மை
தூற்றிய பின்னர் வாழ்த்தி சொற்றுவீர் என்றார் அன்னார்

#54
போரிடத்து அஞ்சி தூது புகலவோ வந்தேன் ஒன்றாய்
பாரிடத்து எதிரா நாதன் பழித்த போது இன்றே இ வேல்
சீரிடத்து உரிமை சொல்வேன் செரு பட வம்-மின் என்ன
காரிடத்து அசனி கூச கதத்தில் ஆர்த்து ஆபன் மீண்டான்

#55
சுளி முகத்து அனைத்தும் கேட்ட சோசுவன் உருமின் சீற
வெளி முகத்து அமலன் சொல்லும் வெல்லுவாய் வென்று என் ஆண்மை
தெளி முகத்து எவர்க்கும் தோன்ற தெளிக்குவாய் என்ன கேட்டு
வளி முகத்து அழலின் பொங்கி வய படை எழுக என்றான்

#56
காரின் மேல் முழங்க யானை கடலின் மேல் முழங்க திண் தேர்
தேரின் மேல் முழங்க மன்னர் திசைகள் மேல் முழங்க பம்பை
போரின் மேல் முழங்க பாய்மா புரவி மேல் முழங்க வீரர்
பாரின் மேல் முழங்க யாவும் பகைவர் மேல் முழங்கி மொய்த்தார்

#57
யானை எழும் கடல் ஏந்திய தேர் பரி கால்
சேனை எழும் கடல் சென்று செழும் கடல் மேல்
ஏனை எழும் கடல் மோதல் என பகைவர்
தானை எழும் கடலோடு தலைப்படும்-ஆல்

#58
செல் உகும் மாரி என சினம் முற்றிய நீள்
வில் உகும் மாரி மிடைந்து மிடைந்தனர் வாய்
சொல் உகும் மாரி சுளித்த முழக்கம் எழீஇ
அல் உகும் மாரி அகத்தினர் அஞ்சினர்-ஆல்

#59
நெஞ்சு உறை நீள் கவசத்தொடு நேரலர் தம்
நஞ்சு உறை நெஞ்சு அற நஞ்சு உறை வெம் சரம் மொய்த்து
எஞ்சு உறை விஞ்சிய குஞ்சரம் இற்றது அதின்
மஞ்சு உறையும் சினர் வஞ்சகர் துஞ்சினர்-ஆல்

#60
அற்று இழிவார் பிரிவார் அதிர்வார் இரிவார்
மற்று இகல்வார் மருள்வார் வரையா மடிவார்
முற்றிய மா தவம் ஆர் முனிமார் முனிவை
உற்று இரி கோல் உயிர் உண்டிலது ஒன்று இலை-ஆல்

#61
தாரொடு தானைகள் சாய்ந்து மடிந்திடவும்
நீரொடு நூறிய வீறு உடல் நீறிடவும்
பாறொடு பல் சிரம் மீது பறந்திடவும்
ஆறொடு மாறு உதிர திரை ஆர்ந்தன-ஆல்

#62
தோலொடு தோல் பொர மீமிசை துள்ளி எழீஇ
கோலொடு கோல் பொரு கொள்கையின் வாசி பொர
காலொடு கால் பொர நேமி கலந்து உலகின்
நாலொடு நால் திசை நாதம் நரன்றனவே

#63
மேகம் நிகர்த்தன வேழ மருப்பு மிதித்து
ஏகம் அறுத்தலின் ஆணை என புயல் பாய்
வேக இன பரி மேகம் உகுக்கு உரும் ஒத்து
ஆக வரை துகளாக உழக்கின-ஆல்

#64
வேலொடு வாள் எடு வீரர்கள் மேல் அதிர
கோலாடு கோலிய கொல் கரி சாய்ந்து பொர
சூலொடு சூழ்ந்து சுளித்து இடி மின்னொடு உக
காலொடு காய்ந்து அதிர் கார் திரள் ஒத்தனவே

#65
கோடை எழுந்த பதங்கன் என கொடி நீள்
ஆடை எழுந்து அகல் ஆகவ நீள் அடவி
பீடை எழுந்து பெரும் படை வாடி அற
மாடை எழுந்து உயர் தேர் வரு சோசுவனே

#66
மிடலொடு வேகம் மிகுந்து எறி வெம் கணைகள்
படலொடு மேகம் மலிந்த பருப்பதம் ஒத்து
உடலொடு வேழம் உருண்டு உகு வெம் குருதி
கடலொடு தீவு கிடந்து அன காட்சியதே

#67
படு கணை அல்லது பட்டிலது ஒன்று இலதால்
விடு கணை யாவையும் வீழ்த்தலில் வில் விசையால்
தொடு கணை மாரி துளித்தன பின் தொகை அற்று
அடு கணை வாரி அனைத்தையும் வாரினவே

#68
ஈர்_இரு தேரினர் ஈர்_அறு யானையினர்
ஓர் இரு_நூறு உகள் மா உயர் வில்லினர் வந்து
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனை துதைய
பார் இரு நால் திசை அன்று பதைத்தனவே

#69
இ தகவு உற்றது என கடி நக்கு இடி வில்
அ தகவோன் அவர் மீது வளைத்தமையால்
மத்தக மாவொடு பாய் பரிமாவொடு வெண்
முத்து அகம் நாறு இரதங்கள் முரிந்தனவே

#70
ஓர் அறு_பத்தும் இரட்டியும் ஓர் தொடையால்
சீர் அறு வேகமொடு அம்புகள் சேர்த்தி விட
பார் அறு வாரி என படர் சோரி விழ
ஈர்_அறு பேர் பிணம் இற்றது ஒரோர் கணையால்

#71
வேல் அற வாள் அற வில் அற வீரர் அற
கால் அற கூம்பு கவிழ்ந்து அற நேமி அற
தோல் அற மீமிசை துள்ளிய வாசி அற
மேல் அறம் மேவினன் வில் உகும் மாரி அறா

#72
துறுவன வாளி துமிந்தன யானைகள் தேர்
இறுவன தாரொடு எரிந்தன இன்னது எலாம்
அறுவன கால் தொடை அம் கை உரம் தலைகள்
உறுவன யாரும் ஒழிந்து நடந்தனனே

#73
திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய
மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி
கரு தகு முகில் குரல் மெலிய ஆர்த்தன கதத்தொடு கடுத்தன களிறு போக்கியும்
உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே

#74
மிக படு பசி தகு வளை இது ஆய் பல விதத்து உயிர் வெறுத்து உனது உயிர் அலால் பசி
தக படு சுவை கொடு நிறைய ஆற்றில தருக்கொடு வர பசி அருளி நீக்கு என
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை
பக படு குறி கையில் எழுக தீய் திரள் பயப்படு சமர் களம் இரிய ஓச்சினான்

#75
பசி பட வரின் பசி இனிதில் ஆற்றிய பருக்கை இது என குனி தனுவின் வாய்க்கு ஒரு
வசி பட வளைத்தன விசிகம் ஏற்றலும் வயப்பட வகுத்தலும் அறிகு இலா கழு
சசி பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய சமத்து எரி வளை படை அறவும் நோக்கு இலா
சுசி பட அறுத்தன துணிகள் மேல் திசை துடிப்பன பறப்பன வெருவ நோக்கினார்

#76
பொருக்கென மன சினம் அனைய தீக்கிய பொறி படு சிலை படை வளைய மாற்றினான்
முருக்கின சினத்து இரு புடையின் நூற்றுவர் முறுக்கென வளைத்திட ஒரு கை தாக்கினர்
கரு கனம் இடித்து என வருக தீ கணை கணைக்கு ஒரு கணை பட எழுதி மீட்டு அவர்
வெரு கனம் உளத்து உற இடைவிடா சரம் விடுத்தனன் மறைக்கு அரசு ஒரு வில் கோட்டியே

#77
திளைத்தன சினத்து இரு புடையின் நூற்றுவர் சிலை கொடு பனித்தன கணைகள் தாக்கலின்
முளைத்தன பொறி சிறகு உடைய தேர் கிரி முனை கொடு பறப்பு என நடவு பார்த்திபன்
வளைத்தன தனு புயல் இடைவிடா சர மழை திரள் களிற்று உயர் மலையின் மேல் பட
விளைத்தன களத்து-இடை உதிர நீத்தம் உள் விறல் கயல் என குறை உடல்கள் ஈட்டமே

#78
என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும்
நுனி சிலை அடி சிலை சிலையை வீக்கிய நுனி கரம் அடி கரம் எவையும் வீழ்த்தியும்
தனி சிலை வளைத்தன ஒருவன் ஆக்கிய சய சமர் நலத்தினை வெருவ நோக்கினர்
இனி சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர் என சிலர் வியப்பு உறி அளவு_இல் வாழ்த்தினார்

#79
இளைத்தனர் இளைத்து அமர் முரிய ஆர்த்தனர் எதிர்த்தனர் கணை திரள் எழுதி ஓட்டினர்
திளைத்தனர் புடைப்புடை படு புண் வாய் கறை சிதர்த்தனர் சின தொடு சின வில் பூட்டு என
வளைத்தனர் வளைத்த வில் ஒடிய மீட்டு ஒரு வய சிலை பிடித்தனர் முனியு தாக்கு என
விளைத்தனர் சின சமர் ஒரு வில் வாய்க்கு உயிர் விடுத்தனர் ஒருப்பட இடையின் நூற்றுவர்

#80
பரப்பின நிண பிணம் எழுக நூற்றுவர் பட தனி இபத்து உயர் திரியு பார்த்திபன்
நிரப்பின சிலை கொடு தொடையொடு ஈட்டிய நெறி கணை தடுத்தன கவசம் மேல் பட
வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை
இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான்

#81
வெறுத்தன பொறி தவர் முனிவு போல் பிறர் விலக்கு அரும் வடி கணை விசையில் ஓட்டலோடு
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை
அறுத்து என மருப்பு இணை கரமொடு ஈர்ந்தனன் அடல் கரி முழக்கொடு விழு முன் மீட்டு இமன்
உறுத்து என மறுத்து ஒரு கணையை ஓச்சியும் உரு படு முடி தலை அடியில் வீழ்த்தினான்

#82
கார் எழுந்து இடித்ததே போல் கதத்த பல் பறை ஆர்த்து இன்ன
போர் எழுந்து ஆய போது ஐம் பொருநர் நீடு உவப்ப என்ன
தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய்
நீர் எழும் திரையின் பொங்கி ஞெகிழி வேல் ஏந்தி நின்றான்

#83
நூல் வரும் மறையை வாழ்த்தி நுகோதரன் எதிர்ப்ப கண்டு
கோல் வரும் விசையின் பாய்ந்து குந்தம் விட்டு உனது இது என்றான்
மேல் வரும் நிரையின் சாய்ந்து விலகி நின்று ஒலி கொண்டு உற்ற
கால் வரும் அழல் பெய் வேலை கவ்வி மீட்டு எறிந்தான் வல்லோன்

#84
உழி அறிந்து எறிக பாராய் உனது இது என்று எறிந்த வை வேல்
வழி அறிந்து ஓடினால் போல் வளியினும் முடுகி மார்பில்
குழி அறிந்து இனிதின் மூழ்கி கொன்று உயிர் உண்டு அ நெஞ்சின்
பழி அறிந்து அங்கண் நில்லா பறந்து என போயிற்று அன்றே

#85
காய் எரி சீற்றத்து எல்லாம் கண்ட யாப்பியன் ஆர்த்து எய்ய
தீ எரி அசனி ஊழ்த்து சினந்து வீழ் விசையில் வீழ்ந்த
வாய் எரி கொடும் வேல் தைத்த மார்பினில் பறித்து எய்யும்-கால்
நோய் எரி கையும் சோர்ந்து நுகோதரன் உயிரில் சோர்ந்தான்

#86
களி முகத்து அரசன் ஆர்ப்ப கத முகத்து எதிர்ந்த ஆபன்
சுளி முகத்து அழலை தும்மும் துரக மேல் இருவர் தோன்றி
தெளி முகத்து எரிந்த மின் போல் தீ எரி இரு வாள் வீசி
வளி முகத்து அன்ன தூளி மலிந்து எழ உழக்கி பாய்ந்தார்

#87
வாள் தக விசையோடு ஆபன் வலத்து இடத்து ஒல்கி வீச
ஆடக முடியின் செல்வன் அதற்கு உடல் கரந்து தந்த
கேடக விளிம்பில் பட்டு கீழ் சரிந்து எருத்தின் மூழ்கி
கோடக தலையை கொய்து கோன் நிலத்து உருமின் பாய்ந்தான்

#88
கோளொடு பரியின் தானும் குதித்து உடன்று ஆபன் தீ போல்
வாளொடு பிரிந்து துன்னி வதிந்து பாய்ந்து இயல்பில் வீச
தோளோடு குரிசில் ஏந்தும் சுடர்ந்த பொன் கிடுகு நீண்ட
தாளொடு முளரி வீழ்ந்த தன்மையின் வீழ கொய்தான்

#89
ஏமமே தானும் நீங்கி இருவர் ஈர் ஊழி_தீ போல்
தூமமே மல்க பொங்கி தூதின் நீ நகைத்த தெய்வ
நாமம் ஏய் வலி இது என்ன நல் வினை உலந்த கோமான்
வாமம் ஏய் முடியின் சென்னி வாளொடு வீழ்த்தினானே

#90
வார் எழுந்த முரசு எதிர் எழுந்த பரி மதம் எழுந்த கரி வளியினும்
தேர் எழுந்த விசை விசை எழுந்த வசி திரள் எழுந்த கணை கணை உகும்
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள்
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல்

#91
அணி உடன்ற பரி பரி உடன்ற கரி கரி உடன்ற கொடி அணியு தேர்
மணி உடன்ற தனு தனு உடன்ற கணை கணை உடன்ற கறை மலிதர
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர
பணி உடன்ற குயவு உயர் உடன்று படை பட உடன்ற மறை அரசன்-ஆல்

#92
முனி வெகுண்ட முனிவு இணை புகைந்து முனி முனி வளைந்து விடு முனிவு அறா
நனி வெகுண்ட கணை குறி தவிர்ந்தது இல நனி எழுந்த பிணம் இரு கரை
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை துணை எழுந்த கரையொடும் எழ
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா

#93
நீர் ஓர் வாரி முனர் நீள் ஓர் கூலம் என நீல் ஓர் மேனியர் ஓர் நூறு எதிர்த்து
ஓர் ஓர் வாளி விட ஓர் ஓர் ஆகம் அற ஓர் ஓர் ஆவி உக ஏகி அ
போர் ஓர் சோசுவனும் ஓர் ஓர் ஆயிரர்கள் ஓர் ஓர் ஆயிர வில் போலும் என்று
ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார்

#94
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என உயிர் எரிந்த எரி விழி விட
அலை இரண்டு மிசை எழ முழங்கும் என அதிர் எழுந்து அவுணன் ஒருவன் நீர்
கலை இரண்டு மிசை அமர் நிகர்ந்து இருவர் களம் நடுங்க அமர் நடவினார்

#95
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா
இடி சுமந்த முகிலொடும் எதிர்ந்த முகில் என எதிர்ந்து விடு கணை இருள்
கடி சுமந்த முகில் என மறைந்து வெளி கடை முடிந்த உகம் இது எனா
படி சுமந்த பல உயிர் அடங்கல் மருள் பட வளைந்த இரு தனு பொர

#96
தேர் இரண்டு வலம் இடம் இரிந்து அகல அருகு எதிர்ந்து தம்முள் திரியவே
ஓர் இரண்டு சிலை அளவு இறந்த கணை உக அடைந்து படு கணை இலா
நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என
ஆர் இரண்டு படை வியவ மண்டி விரி படம் மலர்ந்து மிசை ஆடவே

#97
சுசி முகந்து சுடும் என சரங்கள் தம தொழில் மறந்தன-கொல் என ஒளி
வசி முகந்து கதிர் அளவு இறந்து இரவி மலியு கங்குல் அட விடும் எனா
நிசி முகந்து கரி நிறம் மலிந்த அவுணன் நிணம் அருந்த உரி விட நுனி
உசி முகந்து பல முக முனிந்த கணை ஒர் ஓர் அலங்கல் அளவு இல எய்தான்

#98
அற நிமிர்ந்த கொடி அற உயர்ந்த உருள் அற உகண்ட பரி அலவனோடு
அற எதிர்ந்த சிலை அற முனைந்த கரம் அற அணிந்த கழல் கழல்களோடு
அற உடன்ற உரம் அற விடைந்த சிரம் அறம் உலந்த அவுணன் உயிர் அற
அறம் மலிந்த சிலை நிகர் அடங்கல் அற அறம் உணர்ந்து பொரும் அமரினால்

#99
பொன் பொதுளும் கதிர் பூண் மகுட பொருநன் புனை வாகையினான்
மின் பொதுளும் புயல் ஆர்ப்பு மெலிந்திட வீங்கு ஒலி யூதர் எழீஇ
வென் பொதுள் உண்ட தழும்பு மிடைந்த பொருந்தலர் மேல் முடுகி
முன் பொதுளும் பகையார் முரிய கணை மாரி முடுக்கினர்-ஆல்

#100
வளைய முழங்கின வண் சிலை தேர் உருள் வளைய முழங்கின நொந்து
உளைய முழங்கின மாள் கரி மாள் பரி உளைய முழங்கின போர்
விளைய முழங்கின பல் பறை செம் புனல் விளைய முழங்கின மெய்
களைய முழங்கின வெம் படை ஒன்னலர் களைய முழங்கினரே

#101
துண்டு பட படும் உந்தி பட படு தூசி கொள் தேர் சுடர் வாள்
கொண்டு பட படு பல் சிரமும் கரமும் குவியும் பிணமும்
தண்டு பட படு வாளியும் வாளொடு சாபமும் வை அயிலும்
வண்டு பட படு யானைகள் பாய் பரி வண்டு பட படுமே

#102
கீழ் கடல் மேல் கடல் மேல் முடுகி கிளர் ஓதை கிளைத்தது எனா
ஆழ் கடல் மான் அடல் தானை இரண்டும் அதிர்ப்ப அமர் களம் ஓர்
தாழ் கடல் மான் உதிரங்கள் தரங்கம் எழுந்து ததும்ப நிலம்
சூழ் கடல் தீவுகள் என்று கிடந்தன துஞ்சிய தோல் இனமே

#103
இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர
தடித்தன கை படை தந்தன வாய் வழி தாவிய தம் உயிர் போய்
மடித்தன மேனி வடிந்தன சோரி மலிந்தன ஆர்கலியுள்
துடித்தன குன்றுகள் என்று உயர் தோலொடு துஞ்சுவ தூசிகளே

#104
போரில் எழுந்து அதிர் போரினை ஆடினர் பொங்கிய ஓதையினால்
மூரி எழுந்த முரண் கரி தூசி முரிந்து துடித்தமையால்
சோரி எழும் துமிதம் படவோ சுடர சுழல் ஒற்றை உருள்
தேரில் எழும் சுடர் மேனி சிவந்ததின் மாலை சிவந்ததுவே

#105
அல் இருள் தோன்றி அடுத்தன காலை அடங்கலும் ஒன்னலரை
வெல்லிட எல்வை இலாது ஒளி வேந்தன் இழிந்து அலை வீழும் எனா
எல்லினை நோக்கி எழுந்த மன திறல் ஏந்திய சோசுவனே
நில் என நின்றனன் நேமி விளக்கிய விண் தவழ் நேமியினான்

#106
மாலையில் மாலி பெயர்ந்து அகலாது வதிந்து அவண் நின்று ஒரு நாள்
காலையில் ஆகையில் ஆகிய காட்சியில் ஆய களிப்பொடு அற
சாலையில் ஆரிய சோசுவன் மாலை தகாது தடுத்தன அ
வேலையில் வேலையை வெல் அடல் தானையை வென்றன ஆறு அரிதே

#107
மருள் தரு நெஞ்சு-இடை அஞ்சின எஞ்சு இல வஞ்சனர் வெம் சமருக்கு
இருள் தரும் ஆதரவாக எதிர்ந்த இரா எனும் மேல் படையை
தெருள் தரும் மாலி செகுத்து மறித்திட வான் திரி தேர் முடுகாது
அருள் தரும் அன்பொடு வெம் கதிர் அம்பு என வல் எதிர் ஏவினன்-ஆல்

#108
நூல் மறை ஆதி சினம் தரும் நூக்கு அரிது ஆம் வலி காட்டிய போர்
வான் மறையாது வழங்கி மலர்ந்து அகல் வையம் அறிந்து அதனை
கால் மறையாது கதிர் குணிலோடு கறங்கு கடல் பறையை
தான் மறையாது புடைத்து என மாலி தரித்தன தோற்றம் அதே

#109
கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல கருதலர் பதைத்த தானை புறம் இட
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால்
பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என
முதிர் எதிர் கதத்த சோணன் அமர் செய முகில் இடி மறைத்த பூசல் விளையுமே

#110
அழல் எழ வளைத்த சாப இரு முகில் அளவு_இல பனித்த பாண மழையொடு
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும்
சுழல் எழ உருத்த வாரி என அமர் தொடு முறை உரைக்க நூலின் அளவதோ

#111
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன்
கடை இல சினத்த வாளி எழுவினன் கணம் என இடித்த சோணன் அளவு_இல
தொடையில் அழல் உற்ற பாணம் இடுதலின் துரகமோடு அறுத்த பாகன் மடிதர
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான்

#112
உகம் உக முடித்த நாளின் வளி என உருள் உருள் முடுக்கு சோணன் அலமர
நிக முகம் உகுத்த தேரின் நிலை மிசை நெய்யும் அவர் பிடித்த நோழிகையின் அவன்
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை முறை முறை தொடுத்து மீள வய மலை
பக முகம் முனைத்த சூலம் உனது இறை பழி இது என கடாவ எழுதினான்

#113
முதிர் வினை விளைத்த காலம் என இவன் முதல்வனை நகைத்தன் ஆதி எறி அழல்
கதிர் வினை பழுத்த சூலம் வழி-இடை கதிர் முனர் இருட்டு மாரி என அழிந்து
எதிர் வினை விளைத்த சோணன் எறி கணை இழிவுற உரைத்த வாயில் நிறைவன
பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன் புகை கணை புதைத்த தூணி நிகரவே

#114
மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு
இடி உற்ற விசையினொடு எரி ஒத்த இவுளி வரு மலை ஒத்த இரத மிசையான்
கடி உற்ற மதுவின் அவர் எரிமத்தின் அரசன் எதிர் கதம் முற்றி முடுகு விசை காண்
அடி உற்ற சுருதி அரசு அனிலத்து விசையில் உறீஇ அமர் முட்ட எதிர் அணுகினான்

#115
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய
சுரதத்தின் எதிரு வெளிறு என விட்ட கணையில் அது துகள் இட்டு வெளியில் எழ மற்று
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான்

#116
சிரகத்தின் உழுவை முகன் உரும் ஒப்ப உறுமி மதி தெளிவுற்ற வளை விட எடுத்து
உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன்
நரகத்தின் வெருவு விடு தருமத்து விசயன் ஒரு நகை உற்ற பிறை எழுதினான்
விரதத்தின் விளையு வினை விசையுற்ற கணையினொடு விழ வட்டமொடு கரமுமே

#117
அடி அற்ற வலது கையை வதை முற்றி இடது கையில் அணி வட்டமொடு விட எடுத்து
இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக இடைவிட்ட விசை இல விழ
கொடி அற்ற இரதம் அற உரம் அற்ற வலவன் அற அடி அற்ற குதிரை அற மின்
முடி அற்ற சிரமும் அற முனை உற்ற பகைவன் அற முடிவு அற்ற கணை அரசு எய்தான்

#118
இறை உற்ற இறுதலொடு வெருவுற்ற படை முடுகி எதிர் உற்ற கரி மதம் இலா
பிறை ஒத்த எயிறும் இல கயவு அற்ற பரியும் இல பிரிவுற்ற உருளையும் இலா
சிறையுற்ற பறவை என விசையுற்ற அயமும் இல செரு உற்ற படைகளும் இலா
கறை உற்றது இணையும் இல செயம் உற்ற அரசு படை கடை அற்ற கணை எழுதவே

#119
புயலினொடு மாறும் உயர் கரிய கரி மேல் சபலை பொழியும் அயில் ஏந்தி அதில் ஓவான்
பெயரினொடும் ஓவ முனை முடுகு மிடல் வேந்து இவுளி பெல கரி பதாதி உருள் திண் தேர்
இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப
குயவினொடு சோசுவனோடு அசனி எறி சாபம் உளர் குழுமி அவன் மேல் முடுகி மொய்த்தார்

#120
முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும் முரிய வரு தாக்கில் அவர் தாக்க
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக கிடுகிடென மாரி பொழி நாளில்
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே
கடுகி வரு சாப மழை கருடன் இறகு ஈர்ந்து இகல்வர் கடிது எவமம் ஓர் ஓர் அணி வீழ்ந்தார்

#121
வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள
கருடன் அகல் மார்பு உலவு கணையில் அவர் மாற்று அரசு கரியில் உறை பேரணி எதிர்த்தார்
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக
குருடன் ஒரு காட்சி உறின் அதிசயித்து மலை குவடு அதிர ஆர்த்த அசனி ஒத்தான்

#122
கொடிகள் அற வானில் தவழ் குடைகள் அற மேகம் அறு கொடிகளொடு தேரும் அற யானை
அடிகள் அற வாசி அற நெடிய சிலை நாணி அற அரணமொடு மார்பும் அற மற மன்னர்
முடிகள் அற முங்கம் அற அணிகள் அற மள்ளர் அற முனையும் ஒரு சோசுவனொடு ஆர் ஆர்
இடிகள் அற வேகு அமரில் எழுது கணையோடு கணை எழுத எதிர்கின்றவருள் உய்ந்தார்

#123
கடிய கணை சென்ற விசை கடுகும் இடி மின்னல் இணை கவசம் அற மீதில் அழல் பொங்க
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ
நெடிய வரை விண்டு பக உருவும் உரும் என்று நெடு பகழி கரி மார்பு உலவி வீழ்த்த
இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான்

#124
உருளும் உயர் காலும் இல கடவு பல பாகர் இல ஒளிரும் உயர் பாரும் இல பாய்ந்து
மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப
வெருளு பரி காலும் இல அணிகள் ஒரு வேலும் இல விசை உறவில் நாணி இல வெம் போர்
அருளும் இவர் ஈறும் இல நடுவை அணி பேரணியும் அழிய முனை சோசுவன் உள் நுழைந்தான்

#125
தீய் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து அபயர் செறிய இடை நின்ற அரசு ஓவான்
காய்ப்பு உற வயத்த படை கடவி நுழை வீரர் முனர் கடுகி வடி செம் புனல்கள் அ தீ
ஏய்ப்பு உற அவித்தது என எரியை விழி வாய் பொழிய இழியும் மத மால் களிறு தூண்டி
போய் புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான்

#126
கடவும் அழலோடு கடம் வடியு கரி நாண நனி கதறி இப மேல் பொலிய வெம் தீ
சுடவும் அழலோடு விடம் வடியும் அயில் நின்று இரு கை துறுவி எதிர் கோ உரம் உரைத்து
படவும் அழல் தாவு விசை எறிய எறி வேல் அசனி படு முன் இவன் நாகு மதி வாளி
விடவும் அழல் மேல் பறிய வெளியில் உயர் பட்ட துணி விழி அகல ஓச்சினன் வில் வல்லோன்

#127
நீறு பட நெட்டு அயில் துணித்த அரசனோடு இவனும் நீள் தனு எடுத்து எவரும் அஞ்ச
வீறு பட ஆர்த்து நிமிர் கார் முகம் மலிந்த மழை விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப
மாறு பட முட்டு சரம் மாறுபடுகின்ற விசை வன்னி எழ மின்னி விழி கூச
ஊறு பட ஓர் கணை படாது புவி ஊறு பட ஓர் இரு வில் போர் படும் உடன்றே

#128
உரைத்த கணை மேல் கணை தடுப்பது தடுப்பு இலதும் ஒண் கவச மேல் உதிர எங்கும்
விரைத்த நிலை சோசுவன் உணர்ந்து ஓர் அறு பத்து இருபது ஐம்பது அரும் வெம் பகழி வேகத்து
இரைத்த சிலை கால் எரிய ஓர் ஒர் தொடை ஏவினன் இகல் சிலையும் மால் களிறும் அம் பொன்
வரைத்த வயிர கவசமும் துணிபட படு பல் வாளி உரம் மூழ்கி விழ ஓவான்

#129
வெருவி முரியாத படை முரிய முரிதற்கு உலகில் வெருவு தரு நான் விளிய நீய் கொள்
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான்
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர்
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார்

#130
அகல அவர் யூதர் எதிர் அகலம் உற வந்து அரிகர் அகலம் உலவ சுருதி வாய்மை
புகல் அனைய வாடு அரிய கொடிய கணை ஏவலொடு புரவு கரி தேர் விரி பதாதி
இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு எதிர் அமரின் நால் அரசர் வையம்
நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான்

#131
சிறை பதி தேரினன் தீ பெய் வில்லினன்
பிறை பதி முடியினன் பெயர் செய் வாகையன்
நறை பதி தொடையினன் நளி பல் மன்னவர்
இறை பதி அடியினன் நொந்து அன்று எஞ்சினான்

#132
ஓர் இரு_நூறு உறழ் ஒரு மு_நூறு உடை
ஈர் இரு வகை படை ஈட்டினான் பினர்
பேர் இரு சிறகென பிரித்து அதற்கு வெம்
போர் இரு வரி என இருவர் போக்கினான்

#133
இட சிறை தலைவன் என்று இகுலன் ஆய் வலம்
படு அ சிறை தலைவனாய் நிகலன் பார்த்திபன்
விட சிறைக்கு உயிர் நடு அணியில் வேய்ந்து தான்
தட சிறை திகிரி மேல் சினந்து தாக்கினான்

#134
பெரியவர் கேண்மை போல் பீடையில் திளைத்து
அரியவை கண்டு எழும் அடலின் சோசுவன்
கரிய வல் யானையர் கனையன் சச்சுதன்
உரி இரு வகுப்பில் விட்டு உருமின் முட்டினான்

#135
கார் விளை முழக்கமும் காலொடும் கடல்
நீர் விளை முழக்கமும் நிகர் இலாத வெம்
போர் விளை முழக்கம் மேல் பொருமி பொங்கலின்
பார் விளை கலக்கம் நால் திசை பரந்ததே

#136
போர் முகம் காண்டலும் புனைந்த வாகையின்
சீர் முகம் கோடலும் சேர்ந்து ஒன்றாய் புகழ்
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன் அன்று தன்
கார் முகம் குனி முகத்து எதிர் கண்டான் அரோ

#137
ஆர் இருள் நெடுமையார் ஆடும் ஊசல் போல்
பேர் இரு படை-தமுள் பிரிந்து சேர்ந்து வெம்
போர் இரு முகம் முறிவு இன்றி போர் செய்வார்
ஓர் இரு புனல் என உதிரம் ஓடவே

#138
இட முகத்து இகுலன் ஆர்த்து எரித்த சூளையின்
தட முகத்து எழும் படை தாக்கும் தன்மையின்
பட முகத்து எதிர்த்தனர் முரிய பார்த்து மால்
கட முகத்து இபத்து உயர் கனையன் சீறினான்

#139
நூல் நலம் குல நலம் நுனித்த போர் நலம்
தான் நலம் பட சொலி தானை மீட்டு வேய்
கான் நலம் சினந்த தீ கனன்று மேய்ந்து என
வேல் நலம் பகைவரை வெம்பி தூற்றினான்

#140
எரி கெட சினந்த வில் எறிந்த மாரி முன்
பரி கெட பரி புனை பறந்த தேர் கெட
கரி கெட படை எலாம் கலங்கி போர் கெட
நரி கெட சினத்து அரி நலத்தின் கோறினான்

#141
முரிந்த தன் தானையை முனிந்தும் மீட்டிலான்
கரிந்த கை கடித்து இடித்து இகுலன் காற்று என
வரிந்த வில் கனையனை நோக்கி வந்து எதிர்
சொரிந்த மு மத கரி தூண்டினான் அரோ

#142
பொன் நாணினர் மணி வில்லினர் பொறி அம்பினர் புகையும்
சொல் நாவினர் சய நெஞ்சினர் சுடு கண்ணினர் சுடர் பூண்
மின் நாறினர் புலை நாறினர் விறல் வாளினர் மதம் ஆர்
கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார்

#143
சொல் வாய் உகு சுடு தீயொடு சுளி கண் அழல் உக நீர்
செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு சின வாய் உயிர் உண நீள்
வில் வாய் உகு கணை மாரியின் விரி போர் இரு முகமும்
கொல் வாய் உகு கறை தாறு இல கொடி தாய் அமர் எழும்-ஆல்

#144
தடவி திரி இயமற்கு இணை தட வில் குனி கனையன்
நடவி திரி மத அத்தியின் நடு மத்தகம் நுழைய
கடவி திரி கணை தைத்து என களி உற்றனன் இகுலன்
சுட வில் திறல் கணை மட்டு இல தொடை விட்டனன் அவனே

#145
இசை உண்டு உறு கணையும் பட இகுலன் தனு ஒடிய
கசை உண்டு உறும் உரமும் பக அளவு ஒன்று இல கணைகள்
விசை உண்டு உற வளையம் பட விசை அம் தனு வளைய
வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே

#146
பதம் ஏற்பட பவளத்தொடு பதி முத்து என இருவர்
இதம் ஏற்பட எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய்
கதம் ஏற்பட வய நெட்டு இரு கதை இட்டு இரு கனல் போல்
மதம் ஏற்பட உறும் அத்திகள் மறல தமுள் விடுவார்

#147
இரு கார் பல எரி ஏறு உக விளையாடின எனவே
செரு ஆர் களம் இடை ஆடுக திரள் தீ எழ அலறி
பொரு யானைகள் கதை வீசிய பொருவா விசை படலோடு
அருகு ஆயின படை யாவையும் அடி நூறின பொருதே

#148
திரிகின்றன இரு தீ நிகர் திரிகின்றன எவணும்
எரிகின்றன எதிர் யாவதும் இரிகின்றனர் எவரும்
பிரிகின்றன எதிர் சீறின பிளிர்கின்றன அழலை
விரிகின்றன கதையே மிசை விசை வெம் கதை படவே

#149
அழல கதை அழல கரி அழல கரி மிசையார்
சுழல கதை இகுலன் கரி சுழல் தன் கதை பறிபட்டு
எழ விண் திசை உறீஇ மற்றது எதிர் பட்டு இடு கதை மேல்
விழ மத்தகம் அடியில் பக விழும் அ கரி படவே

#150
கிரி நின்று இழி புலி என்று எரி கிளர் வெம் சின இகுலன்
கரி நின்று இழிதர மின் தவழ் கனல் மண்டு அசியொடு பாய்ந்து
எரிகின்ற இழி கதை முன் விழ எயிறு உள் உரம் உருவி
சொரிகின்ற இழி கறை சிந்துக சுழல் கொண்டு எறிதருமே

#151
இடி முழங்கின முகிலொடும் கடல் இணை முழங்கின ஒலி எனா
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெம் சமர் பொருத கால்
படி முழங்கின ஒலி நிகர்ந்தில பருபதங்களும் அதிரவே
கடி முழுங்கின வல முகம் சமர் கனல் சினந்து என விளையும்-ஆல்

#152
கரி அதட்டிய சினம் இரட்டிய கடிய சச்சுதன் இடைவிடாது
எரி அதட்டிய கொடிய அத்திரம் இடையிடைக்கு அளவு இல விட
பரி அதட்டிய இரத வெற்புகள் பரிகள் அத்திகள் சிதற வெய்
அரி அதட்டிய கரி இனத்து எதிர் அரிகள் உட்கு உறீஇ முறிவர்-ஆல்

#153
பணையில் ஆடிய பரிகள் யானைகள் பரவு தேர்களும் இவை எலாம்
இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா
கணையின் வாரி முன் அடையல் சாய்வன கறை அளாவிய பிணம் இரண்டு
அணையின் ஏறின குருதி நீர் நிறை அருவி ஓடின எவணுமே

#154
எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும்
கதிர் எழுந்து எரி கனல் அழுந்திய கதம் மலிந்து அடும் உழுவை பாய்ந்து
அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே

#155
சொரி இரத்தமொடு எரி பிலிற்றிய களி எயிற்று அடல் அதிரும் ஓர்
அரி இரட்டிய அமர் முகத்து எதிர் அழல் உடற்றிய வதை வளர்
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து
எரி எரித்தன உலறும் முள் கழை இரு சுரத்து என அமர் செய்வார்

#156
இரு முகத்து எதிர் படைகள் சிந்திட இருவர் வெம் சமர் பெருகலின்
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில்
கரு முகத்து-இடை மதி நுழைந்து என எதிரவன் கடவிய கரி
செரு முகத்து-இடை உரம் நுழைந்து உயிர் சிதைய உண்டது திகிரியே

#157
கரிய உச்சிய முகிலின் மின்னொடு கனல் உமிழ்ந்து இழி இடி எனா
அரிய சச்சுதன் இபம் இழிந்து அழல் அசி சுழன்று அவன் இரதம் மேல்
உரிய நஞ்சு அரவு என இவர்ந்து அவன் உடல் பிளந்து எதிர் படை எலாம்
இரிய அச்சமோடு உளம் உடன்று அவன் இரதம் உந்தினன் நடவினான்

#158
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர்
பொரு முகத்து எழும் முரசு ஒலி வளை ஒலி புரவி மிக்க ஒலி கரி ஒலி குயவு ஒலி
செரு முகத்து இவை மருளிய வெருவொடு சிலை வளைத்து ஒலி எழ விழும் மழை ஒலி
ஒரு முகத்தினும் நிகர் இல முரிவு இல உரை முகத்து அடை அளவு இல அமர் செய்வார்

#159
சுழல் எழ திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர இரு இரதமும்
அழல் எழ குனி இரு சிலை முடிவு இல அழல் பனித்து என விடு கணை மழை விழ
புழல் எழ படு கணி கணை வழி வழி புனல் என கறை குமிழிகள் எழ விழ
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே

#160
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என
பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர்
சலம் இடத்து அடும் வினை என மலிவன சவம் மிதித்து எழும் மலை மிசை மலைகுவார்

#161
வெளி முகத்து எழு கணை மழை இருள் இட விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும்
சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அற சமர் பொருதலின் ஒருவன் வந்து
இளி முகத்து எழு சிறை முரிவன என இள மதி பிறை முடியினன் அலறினான்

#162
கதம் மிக படர் இரதமும் அதிர்குப கழல் புடைத்தனன் அழல் எழ அளவு அற
பதம் மிக தனு வளையவும் இரு துணி பட மறுத்து அடல் ஒரு சிலை வளையும் முன்
சதம் மிக பதி மறை அரசு இடு கணை சடுதி தைத்தன அளவு_இல உடல் எலாம்
மதம் மிக கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி கிடி உரு நிகருவான்

#163
குருதி மிக்கு உக மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என உயரிய இரத மேல்
கருதி மிக்கு உறு நிலை பல பயன் இல கதறி நிற்பவன் விழி வழி அழல் எழ
விருதின் உய்த்தன பிறை உண்ணும் அரவு என விடு சரத்தொடும் அற விழ மறு கணை
பருதி மொய் கடல் முழுகு என ஒளி முடி பரிய விட்டனன் அறம் உணர் இறைவே

#164
பிறை புதைத்தன முடி விழ உளம் அறு பிணி புகைத்தன இறையவன் அலறி நல்
நறை புதைத்தன சிகழிகை மெலிதர நனி உரத்து அழல் எழ மிகு வெகுளியின்
கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து உனது உயர் முடி புனைவல் என்று
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான்

#165
தனை உதைத்து அன தனு முழுது அகல் முனர் சரம் உதைத்து அற எதிர் சரம் எழுதினன்
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு
கனை உதைத்தன பிறை என வளைவு உள கணை உதைத்திட நுதலொடு தலை பக
வினை உதைத்து அன உயிர் விடும் இறையவன் விழ உழைத்து என முரிவன படைகளே

#166
உழை என படை முரிதர அரி என உடறி மொய்த்தன மறையினர் இடை இடை
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன்
தழை என பட உதிரமும் அலையொடு ததைய விட்டு இசை இறையவன் வெகுளி முன்
பிழை என படை வகை வகை மடிவன பெருகுதற்கு ஒரு நிகர் இட அளவதோ

#167
வினை முடுக்கிய பகையவர் இரிதர விசயம் உற்றன களி எழும் இறையவன்
முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல முனை நிறுத்திய பொழுதினும் அரிது அமர்
தனை முடுக்கிய கடவுள் தன் வய வலி தகு சின திறம் அறிகுவர் வெரு உறீஇ
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற விரி படை கொலை செய்தான்

#168
முரி தரு பகையவர் முழுது அட அவர் மிசை
விரி தரு வலை கவிழ்வன என வெகுள் இடி
எரி தரு கரு முகில் இடை இடை ஒரு கணம்
பரி தரு முனர் உயர் பரவின வெளி எலாம்

#169
முனை முதிர் படை எழ முரசு அதிர் ஒலி என
சினை முதிர் இடியொடு செரு முதிர் சினம் எழ
கனை முதிர் அரவொடு கரு முகில் பரவலின்
வினை முதிர் உளம் என வெளி முதிர் இருள் அதே

#170
முடியொடு முடி பட வரை முனைவன என
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும்
படியொடு பிரி பருப்பதம் என விழுவன அசனியின்
வெடியொடு மழை என விழுவன உபலமே

#171
துறுவன வலிய கல் துகள் எழ இரதமும்
இறுவன கரி பரி இனம் இனம் மடிவன
அறுவன படை இனம் அழிவனர் பகையவர்
உறுவன இடிகளொடு உடன் அவை எரிவன

#172
கடி ஒலி எழ விழு கல்லின் உறை படும் ஒலி
இடி ஒலி இடியினும் இறும் இரதமது ஒலி
மடி கரி எழும் ஒலி மடி பரி எழும் ஒலி
முடிவு இல விளிகுவர் முதிர் ஒலி நிகர் இல

#173
சிந்தின சிலை மழை சிந்தின சிலை கணை
சிந்தின பல படை சிந்தின கரதலம்
சிந்தின இரு கழல் சிந்தின தலைமுடி
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற

#174
தப்பு இல களிறுகள் தப்பு இல புரவிகள்
தப்பு இல அபயவர் தப்பு இல தலையவர்
தப்பு இல குருசிலர் தப்பு இல அனையவர்
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய

#175
வானவர் அனைவரும் அலை மலி உலகு உள
ஏனையர் அனைவரும் இதயம் உள் வெரு உறீஇ
ஆனவை அறிதலொடு அளவு_இல இறையவன்
மேல் நிவர் அரு மிடல் விழைவொடு புகழுவார்

#176
வில்லொடு வயவரும் மிடல் இடும் அமர் அலது
எல்லொடு பிரிகு இல இரவியும் அமர் செய
வல்லொடு தவிரின சில உயிர் மடி தர
கல்லொடு மழை பொருது இறையது கதம் என

#177
கைவரும் ஒரு சிலை கனை எழ வளை முகத்து
ஐவரும் ஒரு பகல் அழியின பினர் இனி
மொய் வரு சினமொடு முதலவன் அமர் செயின்
உய்வரும் எவர் என வெரு உறீஇ உருகுவார்

#178
வலியவர் பகை முனர் மடிவு இலர் உளர் எனின்
மெலியவர் எதிரினும் வெகுளிய பல நவை
மலி அவர் எனின் இறை வய அமர் சின முனர்
பொலி அவர் எவர் என அளவு இல புகழுவர்

#179
ஊன் முகம் செறித்த வெம் போர் உடன்று இவை அனைத்தும் செய்தோன்
வான் முகம் செறித்த வாழ்க்கை வகுப்ப ஈங்கு இளவலாக
தேன் முகம் செறித்த பைம் பூம் திரு முகை முகத்தில் தோன்றி
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான்

#180
புண் கனிந்து ஆற்றினால் போல் புன்கண் நீத்து உவப்ப சூசை
பண் கனிந்து இசைத்ததே போல் பாகினும் இனிய சொல்லால்
கண் கனிந்து உவப்ப தெள் ஆர் கதிர் கிழி பொறித்ததே போல்
விண் கனிந்து ஆய காதை விரித்து அடி பணிந்தான் வானோன்

#181
நாமம் சால் உயர்ந்த வீர நாயகன் எளிய கோலம்
காமம் சால் உருத்த அன்பில் கனிந்து எடுத்து உதித்த பாலால்
வாமம் சால் பொறித்த பைம் பூ மலர் அடி வணங்கி உள்ளத்து
ஏமம் சால் இன்பம் மூழ்கி இருவரும் வியப்பின் மிக்கார்

#182
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த
பரு மணி காந்தள் கையால் பயிர் அளி கிளி போல் கீதம்
தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப வானோர்
திரு மணி சாயல் தாய் தன் சிறுவனை பாடினாளே

#183
மருள் தரு வலி உருவே மருள் அறு சின உருவே
அருள் தரு தயை உருவே அளவு அறு திரு உருவே
தெருள் தரு கலை உருவே செயிர் அறு மனு உருவே
பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன்

#184
உரை இல கலை நிலையே உயர் அறம் அடை உரையே
கரை இல படர் கடலே கதி உயிர் பெறு கரையே
வரை இல சுக நிலையே வளர் தவம் அடை வரையே
புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன்

#185
மரு மலி மலர் நிழலே மறை மலி உயர் பயனே
திரு மலி கர முகிலே சிவம் மலி தனி முதலே
இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே
குரு மலி அற நெறியே கொழு மலர் அடி தொழுதேன்

#186
காய் முகத்து உறை நீர் போலும் கங்குலின் விளக்கு போலும்
நோய் முகத்து உலன்ற நெஞ்சார் நுனித்து எழ இவை அங்கு ஆகி
சேய் முகத்து உயிரின் கான்ற செழும் கதிர் தெளிப்ப மாந்தி
போய் முகத்து எதிர்ந்த நாடு புக்கு நீள் நெறியே போனார்

#187
ஒழித்து என சுடர் நீர் மூழ்க உலகு இருள் போர்ப்ப கஞ்சம்
தெழித்து என கதவு அடைப்ப செழும் பொழில் பறவை ஆர்ப்ப
விழித்து என கண்களாக மீன் நலம் வானம் பூப்ப
கழித்து என நெடும் செலவு அப்பால் களரிமாபுரத்தில் சேர்ந்தார்
மேல்

@16 சேதையோன் வெற்றிப் படலம்


#1
கிணை நிலை முரசம் ஆர்ப்ப கீத யாழ் தெளிப்ப வேளில்
பிணை நிலை கரிகள் சீற பிரி நிலை கறவை ஏங்க
பணை நிலை புரவி ஆல படர் ஒலி களரி மூதூர்
திணை நிலை புறத்தில் அன்னார் சிறந்த மண்டபத்தில் நின்றார்

#2
தாள் உறு வருத்தம் ஓம்பி தலை விரி கதலி முற்றி
நீள் உறு கனிகள் மாந்தி நெடும் பசி பரிவும் ஆற்றி
வாள் உறு கதிரால் எங்கும் மல்கிய இருளை போழ்ந்து
கோள் உறு திங்கள் வான் மேல் குளிர் முகம் காட்டிற்று அன்றே

#3
கோள் கடைந்து அழுத்தினால் போல் கொழு மணி அழுத்தி வைத்த
தாள் கடைந்து அழுத்தி பைம்பொன் தவழ் கதிர் பவள தூணில்
வாள் கடைந்து அருந்தினால் போல் மதி சொரி பசும் பால் கற்றை
பீள் கடைந்து அழுத்தி பாயும் பெரும் கதிர் சூசை கண்டான்

#4
மணி நிலை புரத்தின் வாயில் மணி கதிர் தூணும் நிற்ப
அணி நிலை பவள தூண் மேல் அவிர் மணி பாவை நின்று
பணி நிலை பசும்பொன் காளம் பதி மணி தீபமோடு
துணி நிலை பசும் பூம் காந்தள் துணை கையில் தாங்க கண்டான்

#5
கதிர் எழும் உருவின் நின் கபிரியேல்-தன்னை நோக்கி
பொதிர் எழும் பவள தூண் மேல் பொன் மணி தீபம் காளம்
எதிர் எழும் அணி பொன் பாவை ஏந்தியது உரைமோ என்ன
பிதிர் எழும் கதிரின் வானோன் பிழி மொழி பிலிற்றி சொல்வான்

#6
வான் முழுது இறைஞ்சு நாயகன் வலிமையின் உருவமாக
தேன் முழுது உமிழ் பூம் தண் தார் சேதையோன் மறை பகைத்த
ஊன் முழுது உடன்ற வேலார் ஒருங்கு அழிந்து அற வெம் போரில்
வேல் முழுது இல கை கொண்ட விளக்கும் காளமும் இது என்றான்

#7
வான் சுவை தகவின் தேவ வாழ்த்து இரு செவியின் வாயால்
தான் சுவைத்து அல்லது அல்லல் தரும் பசி ஆற்றா நீரான்
ஊன் சுவைத்து உடன்ற போரில் உற்றது சொல்-மின் என்ன
தேன் சுவைத்து உமிழ் தீம் சொல்லால் செப்புதலுற்றான் வானோன்

#8
சொல் வழங்கிய தகுதியால் சுருதி நூல் வழங்க
செல் வழங்கிய துளியினும் கொடையொடு சினந்த
வில் வழங்கிய விசய மா சோசுவன் வென்ற
எல் வழங்கிய இரு முடி அரசர் எண் அரிதே

#9
சாரன் ஆப்பகன் தாப்புவன் பெத்திலன் தாபிர்
தோரன் யாக்கனன் சுடர் முடி இலேபுவன் எரிக்கோன்
தேரிசானொடு தேனகன் காசரன் உபரன்
ஏரிமான் அவன் ஏருசலன் எரிதன் எரிமான்

#10
ஏதில் ஏபிரன் இலக்கனன் எகிலன் சிமோரன்
காதன் ஆயரன் கலகலன் காதரன் உதுலன்
மாதன் ஆசுரன் மச்சதன் அக்கிசன் மகத்தன்
ஓது பேர் உள முப்பதோர் அரசர் வென்று ஒழித்தான்

#11
ஒழிந்த மாற்றலர் உறைந்த பல் உழி-தொறும் உறைந்து ஆண்டு
இழிந்த மாரியின் இரும் திரு யூதர்கள் பின் நாள்
விழிந்த தேவரை மேவலின் அறமொடு விரதம்
அழிந்த பான்மையால் அடல் அழிந்து ஒளி அழிந்து அழிந்தார்

#12
அறம் அகற்றினார் அற பயத்து ஆண்டவன் அளித்த
திறம் அகற்றினார் சிதைவுற அறிவுறீஇ கொடிய
மறம் அகற்றினார் வணங்கிய இறைவனும் சிறுமை
புறம் அகற்றினான் பொருவு_இல வலி திறம் விளங்க

#13
ஆளும் கோன் இல அடல் படை வீரரும் இல எ
நாளும் கோடிய கோல் பொறை சுமந்து இறை பிறர்க்கு
நீளும் கோடணை நிந்தையோடு அழிவு உடை குலத்தோர்
மீளும் கோது அறு மிடலினோன் உழுநனை தெரிந்தான்

#14
ஓதை ஓங்கிய களத்து நெல் தெளித்து எடுத்து உறைந்த
சேதையோன்-இடை சென்ற வான் தூது உமை பகைத்த
கோதை வேலினர் கொல்ல வெம் போர் அமைக என இ
பேதையோ பகை பெயர்த்து அட என அயிர்ப்புற்றான்

#15
அரிய ஓர் தொழில் ஆண்டவன் ஏவிய காலை
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால் ஊக்கம்
புரிய ஓர் மத புகர் முகம் என எழுந்து ஐயம்
பரிய ஓர் குல படை முகம் பண்ணுக என்றான்

#16
வேல் முகந்து இவர் வெம் சமர்க்கு அமைகுவர் என்னா
மீன் முகந்து ஒளி விரி மணி முடி பல அரசர்
ஊன் முகந்த கோட்டு உவா பரி தேர் பல பண்ணி
நால் முகம் தகு ஞாலமும் நெளி தர திரண்டார்

#17
துதியால் நிகரா வலியான் சுடும் ஏறு வில்லான்
திதி யாவும் எரிந்து கெட தழல் திக்கு கண்ணான்
மதியான் எனும் மா பெயரான் வரையாத எண்ணில்
பதியாத படை கடல் பண்ணி அதிர்ந்து எதிர்த்தான்

#18
மலை ஈன்ற மணி புயம் மா புலி ஈன்ற மார்பம்
கொலை ஈன்ற கரம் கொடிது ஈன்ற அழல் கொடும் கண்
சிலை ஈன்ற சரத்து இடி கொண்டு எரி ஈன்ற சீற்றத்து
அலை ஈன்ற படை திரளோடு அமலேக்கு எதிர்த்தான்

#19
வாளி திரள் ஓங்கிய தூணி வளர்ந்த தோளார்
கூளி திரளோ அடு கூற்றது தோழர்-கொல்லோ
யாளி திரளோ அவிர் கீழ் திசை யாவும் ஆளும்
ஓளி திரளோரும் ஒருங்கு திரண்டு உடன்றார்

#20
தாம கவின் இ முடியாரொடு சாய்ந்த காலை
தூம கண் எரித்து அன தானைகளோ துளித்த
காம கடம் ஆர் கரியோ பரியோ கவின் கொள்
சேம கடி தேர் திரளோ எவர் செப்ப வல்லார்

#21
கரி ஏகுக ஏகு இல கால் கடல் தானை காலாள்
வரி ஏகுக ஏகு இல வாய்ந்து எழு தேர் தடம் தேர்
கிரி ஏகுக ஏகு இல கேழ் கிளி வாசி பாயும்
பரி ஏகுக ஏகு இல தோல் படர் வெள்ளம் மட்டோ

#22
நாட்டம் கண் இமைப்பின் நடிப்பு நடத்து பாய்மா
கூட்டம் கதி கொண்ட குர துகள் கோ விசும்பின்
மோட்டு அம் கண் ஒளிக்கும் எனா மதம் முற்று யானை
ஈட்டம் கட மாரி வழங்க முன் ஏக விட்டார்

#23
கார் வென்றன போர் முரசு ஆர்ப்பு ஒலி காள கார் பெய்
நீர் வென்றன தோல் மத நீர் உகள் என்னில் அ சொல்
சீர் வென்றன பாய் பரி மா திசை யாங்கணும் பல்
போர் வென்றன பொன் பொறை வென்ற புயத்து வீரர்

#24
கண் தாவிய தீ கனல் இ கடல் தானை செல்ல
விட்டு ஆவி விழுங்கு அயில் வேல் உடை சேதையோன்-தன்
உள் தாவிய தே அருள் ஊக்கமொடு ஓங்கி ஓர் நான்கு
எட்டாயிரம் சேவகரை கடிது ஈட்டினான்-ஆல்

#25
கவி மதத்து உயர் வலி கடவுள் கண்டுளி
குவி மதத்து இபம் முதல் கொலை படை கடல்
செவி மதத்து உரு உற சிதைத்து நான் வெல
சவி மதத்து எழுந்த இ தானை வேண்டுமோ

#26
சுட்ட அழல் சமர்க்கு உளம் துவள அஞ்சுவார்
விட்டு அழல் சினம் முதிர் வீரர் நிற்ப என்று
இட்டு அழல் கதத்து எழுந்து ஈர்_ஐயாயிரம்
கண் தழல் திறலினோர் கனி நின்றார் அரோ

#27
வாகை மிக்கு ஒளி எனக்கு ஆக மற்று நாள்
வேகம் மிக்கு உறீஇ பகல் வேலை ஆற்று-இடை
தாகம் மிக்கு அக்கனின் தன்மை நீர் உண்பார்
போக மிக்கு அள்ளி உண் பொருநர் சேர்க்க என்றான்

#28
நீர் முகந்து உண்ட மு_நூறு நின்ற பின்
பார் முகம் தொழும் பிரான் பார்த்து நும் பகை
போர் முகம் தகும் செயம் இனி பொலிந்த என்
சீர் முகம் தகும் திறல் சிறப்பிற்று ஆம் என்றான்

#29
வவ்வு ஒரு வேல் இல மாங்குல் நாப்பணில்
கவ்வு ஒரு காளம் மண் கலம் விளக்கு இவை
ஒவ்வொருவற்கு இடுக என உரைத்தனன்
செ ஒரு திருவிளையாட்டு தேவனே

#30
செம் முகம் புதைத்து ஒளி சிகன்ற பின் செயல்
நும் முகம் தரும் என நூறு நூறுமாய்
மு முகம் பிரித்து மூன்று இட்டு மொய் பகை
அ முகம் வாய் விடாது அணுகினார் அரோ

#31
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ
கதிர் எழுந்த சுடர் ஒளி மறைந்து பிசை கவழுகின்ற பல கலமொடு
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி
முதிர் எழுந்த இறையவன் அறைந்த விதி முறை பணிந்த சமர் முயல்குவார்

#32
வீறு வீரன் இயை தாழி நூறி இடு வேலை வேகமுடன் நூறொடு
நூறு நூறு கலம் நூறி நூறுமொடு நூறு நூறு சுடர் தோன்ற நூறு
ஏறு நூறுமொடு நூறு தாரை ஒலி ஈறு இலாதும் எழ வானின் மேல்
சீறும் ஏறு பல கோடி கோடி அதிர் சீரின் நாலு திசை கூசவே

#33
கனவு உடைந்த மருள் இரவு அடர்ந்த இருள் கலம் உடைந்த ஒலி சுடர் இடும்
வினவு உடைந்த ஒளி மலி மலிந்த ஒலி வெரு இயன்ற இவை மருளி வெம்
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை வய முழங்கி வளர் முகில் இடி
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர் ஏறினார்

#34
மருள் முதிர்ந்த வெருவொடு வளைந்த வினை வடு வளர்ந்த பொழுது அது என
தெருள் முதிர்ந்த மறையவர் கலந்தது என செரு முதிர்ந்த பகையவர் தமை
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சினமொடு துமிந்து கொலை இடஇட
அருள் முதிர்ந்த இறையவன் அனந்த வய அடல் விளங்க அரிது அமர் செய்தார்

#35
இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என இழி முதிர்ந்த மத கரி பொர
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய
கடி எழுந்த திரை எறி சினந்த கடல் என எதிர்ந்த கதி இவுளிகள்
துடி எழுந்த பறை ஒலி முழங்க அமர் தொடர் உடன்ற கொலை அளவதோ

#36
பறை முழங்க மத கரி முழங்க வய பரி முழங்க விடு பகழிகள்
உறை முழங்க அவரவர் முழங்க இகல் உழவர் என்று தமர் ஒழி தர
நிறை நுகர்ந்த மது வெறி முதிர்ந்த நெறியிலர் உடன்ற அமர் நிகர் என
பிறை நுகர்ந்த இருளொடு மயங்கி அவர் பெரிது உமிழ்ந்த உயிர் அளவதோ

#37
வண்டு பட்டன இபங்கள் பட்டன அயங்கள் பட்டன வளர்ந்த தேர்
துண்டு பட்டன கரங்கள் பட்டன துமிந்து பட்டன பதங்கள் திண்
தண்டு பட்டன சிரங்கள் பட்டன சடங்கள் பட்டன தடிந்த வாள்
கொண்டு பட்டனர் குணுங்கர் பட்டன குணுங்கு பட்டில நயங்களே

#38
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள்
கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர் கனல் உடன்ற கதம் எனவும் எமன்
மழை நிகர்ந்த கணை கனை மலிந்த வசி வசி முனிந்த அயில் நுழை இடும்
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே

#39
முருடொடு முரசம் ஆதி முனிந்த பல் பறைகள் ஆர்ப்ப
இருள் தொடு நிசியில் ஆதி இறைவனை பகைத்த பாலால்
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார்

#40
கூன் பிறை எயிற்று மா போல் கொற்றவர் இருவர்-தம்மை
தேன் பிறழ் அலங்கல் மார்பின் சேதையோன் என்ன எண்ணி
வான் பிறை உறழ் வில் வாங்கி மறம் கொடு மயங்கி தம் மேல்
ஊன் பிறழ் பகழி மாரி உதிர்த்து அரிது அமரின் நேர்ந்தார்

#41
கடு உண்ட எண்_இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான்
கடு உண்ட எண்_இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான்
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் கோத்தான்
வடு உண்ட பிறையின் வாளி வகுத்து அவை அமலேக்கு ஈர்ந்தான்

#42
பொறி பட பகழி மாரி போக்கினான் அமலேக்கு அற்றை
பொறி பட பகழி மாரி புகுத்திய மதியான் தீர்த்தான்
கறி பட பகு வாய் புங்கம் கதத்துடன் இவனும் ஏவ
கறி பட பகு வாய் புங்கம் கடைத்து அவை அவனும் காத்தான்

#43
நச்சு அரவு ஒக்கும் வாளி நடுக்குற மதியான் தூவ
நச்சு அரவு ஒக்கும் வாளி நவிழ்த்து அவை விலக்கி மீட்டு
மு சிரம் மொய்க்கும் வாளி முடுக்கினான் அமலேக்கு அற்றை
மு சிரம் மொய்க்கும் வாளி முனிந்து விட்டு அறுத்தான் முன்பான்

#44
ஓர் இரு முகிலின் ஒப்ப ஒலித்து இரு தடம் தேர் ஓடி
பேர் இரு அசனி ஒத்தார் பெரும் சினத்து உடற்றி ஆர்ப்ப
நேர் இரு வய வில் கோலி நேர் அலால் தமில் தாழ்வு இன்றி
ஈர்_இரு திசைகள் கூச இயன்ற போர் உரைக்கும்-பாலோ

#45
பை மணி தேரின் சித்தி பகழியால் அமலேக்கு ஈர்ந்தான்
மை மணி தேரின் சித்தி வாளியால் மதியான் அற்றான்
செய் மணி தேரின் சாரன் சிரம் கவிழ்த்து இவனும் கொய்தான்
ஐ மணி தேரின் சாரன் அகலம் அற்று அவனும் மாய்த்தான்

#46
சாரர் சார்பு இழந்த வாசி தழல் பட தவறி தாவ
தேரர் தேர் உளத்தின் சீறி சீயமும் உருமும் தீயும்
நேரர் நேரலர் இலாதும் நெடு மருள் அறாதும் வீர
போரர் போர் இயற்றும் ஆறு புகன்றிடல் அரிய ஆறே

#47
எரிக்கு ஒன்றும் சின கண் சேப்ப இரைத்த வில் குனிய வாங்கி
கரிக்கு ஒன்றும் கதத்த வீரர் கடுத்து இளம் பிறையின் வாளி
பரிக்கு ஒன்றும் ஒன்ற ஏவி பக படு பரிகள் வீழ்க
அரிக்கு ஒன்றும் சீற்றத்து ஒண் தேர் அசல மேல் இருவர் காய்ந்தார்

#48
நிலை உண்ட தேரில் செம் தீ நிலை உண்ட மதியான் சீறி
சிலை உண்ட பகழி போக்கி திறத்து உண்ட கவசம் ஈர்ந்தான்
மலை உண்ட கவசம் ஈர்ந்தான் மறம் உண்ட விழி தீயோடு
கொலை உண்ட கணை ஒன்று ஏவும் கூற்று உண்ட அமலேக்கு என்பான்

#49
வேல் நிகர் வடி வை வாளி வில்-இடை அவன் கோத்து எய்ய
வான் நிகர் விலங்கல்-தன்னை வான் உரும் அறுத்தால் போல
தோல் நிகர் அமலேக்கு ஆகம் துளைத்த கோல் உருவி அப்பால்
கால் நிகர் மூடர்க்கு ஓதும் கலை என போயிற்று அன்றே

#50
தனம் பழுத்து அமலேக்கு ஏங்கி தன் உயிர் உயிர்க்கும் வேலை
சினம் பழுத்து உயிரை தாங்கி திங்களின் பாதி கோத்து
கனம் பழுத்து இழி ஏறு ஒத்த கணையொடும் உயிரும் போக்கி
மனம் பழுத்து எதிர்ந்தோன் சென்னி வலித்து அறுத்து இருவர் மாய்ந்தார்

#51
மா இரவு இடையில் தம்மின் மயக்கொடு வீரர் ஓர் நூறு
ஆயிரரோடு நால்_ஐயாயிரர் அன்றி அங்கண்
தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூ_ஐயாயிரர்
இன்னும் நிற்ப அவிர் சிகன் முளைத்தது அன்றே

#52
மண் மா மகள் போர்த்த இருளின் போர்வை வாங்கிட தன்
ஒண் மா ஒளி கரத்தை நீட்டி வெய்யோன் உதித்தன-கால்
கண் மா இருள் கொண்ட மயக்கம் தீர்ந்த கடும் பகைவர்
விண் மா இறையோன் தன் வலிமை கண்டு வெருவுற்றார்

#53
தீ வை வேல் ஆடா வெருவி ஏங்கி திறம் குழைந்து அ
மூ_ஐயாயிரரும் ஓட யூதர் முடுகி அவர்
மீ வை வாளி தொடுத்து ஒருங்கு மாய்த்தார் வியந்து எவரும்
நா ஐ_ஐ_இரட்டி அடையா வண்ணம் நடுக்குறவே

#54
ஏம போர் களம் இது என்ன இ ஊர் களரி என்றார்
தாம தீபமொடு காளம் தந்த சயம் அது ஓர்
வாம பாவை அவை ஏந்தி எந்தை வளம் மறவா
நாம திறல் காட்ட வைத்தார் என்றான் நவி வானோன்

#55
மாலை தூண் உச்சி விரித்த நீல மணி படத்து
வேலை தாளம் என விளக்கு மீன் பூம் பந்தர் கீழ்
பால் ஐ கதிர் மதியம் தீபம் ஏந்த பணி தூண் மேல்
கால் ஐ கடவுள் திறல் கண்ட சூசை தகவுற்றான்

#56
மாற்றார் உடல் படத்தில் அவர் தம் கையால் வடி உதிரத்து
ஏற்றார் அறிந்து ஏற்ற அரிது உன் ஆண்மை எழுதிய பின்
தேற்றார் என வருந்தி துன்பத்து இன்று உன் திரு உடலத்து
ஆற்றா அன்பின் நிலை வரைந்தாயோ என்று அடி பணிந்தான்

#57
தணியா வலி திறத்தை உலகம் கண்டு தாள் துதிப்ப
மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார்
கணியா நயன் செய் உன் ஆர்வம் காட்டும் கம்பம் என
அணி ஆர் திரு மேனி அணிந்தாயோ என்று அடி பணிந்தான்

#58
வினை அம் கடல் நீந்தி வழி என்று அறியார் மிளிர் பைம்பொன்
மனை அம் கதி அடைய நாட்டி வைத்த மணி தூணே
நனை அம் திரு அடி நான் பிரியா வாழ்க நறும் பைம் பூ
அனை அம் கதிர் மேனி அணிந்தாயோ என்று அடி தொழுதான்

#59
தான் ஓர் களி பெருக்கின் பலவும் சூசை சாற்றிய பின்
வானோர் அவை கேட்ட களிப்பின் பொங்கி மணி பண் யாழ்
தேன் ஓர் இசை தளிர்ப்ப தாமும் பாடி செயிர் நீக்க
ஈனோர் உடல் கொண்டான் நெடிது வாழ்த்தி இசை செய்தார்

#60
சிறந்த திரு புகழ் ஆர் கீதம் கேட்ட செழும் தவத்தோன்
திறந்த மணி கதவம் புக்கு அம் வீட்டில் சென்றவன் போல்
மறந்த மெய் உருக மங்குல் எல்லாம் வழி வருத்தம்
துறந்த துயில் ஆக தொடுத்த தேவ துதி விள்ளான்
மேல்

@17 காசை சேர் படலம்


#1
பள்ளி அம் தாமரை பறவை ஆர்ப்பு எழ
தெள்ளி அம் வைகறை தெளிப்ப வாரணம்
வெள்ளி அன்று உதித்து இருள் படத்தை மேதினி
தள்ளி அம் முகம் தர தடம் கொண்டு ஏகினார்

#2
புதை ஒளி பவள கால் பொலிய நீட்டிய
ததை ஒளி மரகத படத்து தைத்து இருள்
வதை ஒளி பல மணி மான வாய் எலாம்
துதை ஒளி பல மலர் சோலை வண்ணமே

#3
திறை சுமந்து அடி தொழும் தெவ்வர் போல் மது
நறை சுமந்த இணர் குடம் சுமந்த நாள் மலர்
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம்
பறை சுமந்து அடித்து என பாடும் ஓதையே

#4
தேன் மொழி கிள்ளையும் செழும் பொன் பூவையும்
பா மொழி கையிலும் பண்செய் தேனொடு
பூ மொழி தும்பியும் மருளி பொங்கு ஒலி
நா மொழி கீதம் போல் நரல போயினார்

#5
அள் இலை கமல மேல் அணி சங்கு ஈன்ற முத்து
ஒள் இலை குவளை கண் விழித்து உகுத்த தேன்
நள் இலை புறத்து இழீஇ நழுவ புள் எழ
கள் இலை கொழும் தடம் கடந்து போயினார்

#6
நவி வரி நகுலமும் நாவி பிள்ளையும்
கவி வரி நிபுடமும் கான கோழியும்
சவி வரி நவிரமும் களப தந்தியும்
குவி வரி மலை சரி குதிப்ப போயினார்

#7
மட்டு இடை அலந்தையும் மலர் பெய் சோலையும்
நட்டு இடை அணி வயல் நாடும் குன்றமும்
நெட்டு இடை நெறிகளும் நீந்தி கான் பொழி
மொட்டு இடை நிழல் பொழில் முழை கண் எய்தினார்

#8
நண் பகல் நெற்றி வான் நடக்கும்-காலை ஆழ்
மண் பக ஊன்றி மேல் மலர்ந்த பூம் சினை
செண்பகம் நிழற்றிய மணல் தண் திண்ணை மேல்
ஒண் பகல் ஒத்து ஒளிர்ந்து உவந்து வைகினார்

#9
அணி முகத்து அளி இனம் அலம்பி யாழ் செய
மணி முக குயில் இனம் மகிழ்ந்து பாட ஒண்
பிணி முகத்து இனம் சிறை பிரித்து அங்கு ஆடலின்
பணி முக கதலி நல் பழங்கள் மாந்தினார்

#10
தேன் சினை மலர் மது தின்ற வண்டு அருகு
ஆம் சினை ஒசிந்து இனிது அலம்பும் தன்மை போல்
தாம் சினை மலர் தொடை தாளில் பெய்து பைம்
பூம் சினை முக திரு புதல்வன் வாழ்த்தினார்

#11
நூல் நிலம் கடந்த அ நுண் புகழ்க்கு இசை
மீன் நிலம் திசையினோர் விரும்பி பாடலின்
வான் நிலம் கலந்து உயர் மதிளின் பொன் முகம்
கான் நிலம் கொடியினோன் கனி கண்டான் அரோ

#12
தேன் நிரைத்து அலர்ந்த பொன் குன்ற சென்னியின்
மேல் நிரைத்து ஒழுகிய வெள்ளி ஆறு என
வான் நிரைத்து உயர் மணி மாட நெற்றி கண்
கோல் நிரைத்து அசை கொடி கோட்டம் யாது என்றான்

#13
ஆசை கொண்டு அறைந்த மாற்றம் அறஞ்சயன் என்னும் வானோன்
பூசை கொண்டு இறைஞ்சி கேட்டு பொழி மது உரையின் சொல்லும்
மாசை கொண்டு ஒளிர் குன்று அன்ன வயங்கும் அ நகரை முன்னோர்
காசை என்றனர் முன் நாள் என் காவல் ஊர் அ ஊர் என்றான்

#14
தோடு உண்ட மணி பைம் பூம் தார் சூசையே நீயும் திங்கள்
கோடு உண்ட பதத்தினாளும் குழவியாய் பேணும் நாதன்
ஈடு உண்ட திறமும் பெண்மை இன்பம் என்று இருட்டும் ஆசை
கேடு உண்ட திறமும் காட்ட கிளைத்தது ஈங்கு உரைப்பல் கேள்மோ

#15
சேமம் சால் திறத்து நாதன் சிறுமையின் பெருமை காட்ட
வாமம் சால் மணியின் சென்னி மயிர் புலத்து ஒத்தி தந்த
தாமம் சால் திறத்தின் ஆண்மை தாங்கிய சஞ்சோன் என்பான்
நாமம் சால் வழங்க தோல்வி நவை பெறா வரம் பெற்று உற்றான்

#16
வல் அரி குழவி போன்றே வய தொடு பிறந்த தோன்றல்
செல் அரிது அடலோடு ஓங்கி சிறுவன் ஆய் சிறுமை இன்றி
புல் அரிது அகன்ற கானில் புடை துணை இன்றி போகில்
கொல் அரி எதிர்ப்ப கையால் கொறி என வகிர்ந்து கொல்வான்

#17
தனி திரு தகவோன் தந்த தனி திறல் அவன் மாற்றார் மேல்
இனி திருத்திடல் நன்று என்ன ஈங்கு உண்ட பீலித்தேயர்
பனி திரு தடத்து தந்த பழ மறை பகைத்தார் என்ன
முனி திரு திறத்த சஞ்சோன் மொய் செய அளவு_இல் மாய்ந்தார்

#18
கதிர் படும் வயலில் செந்நெல் காய்த்தன நாளில் ஓர் நாள்
எதிர் படும் நரிகள் மு_நூறு இவன் பிடித்து இரண்டாய் சேர்த்து
பொதிர் படும் வாலில் வாலை புணர்த்தலோடு எரி தீ பந்தம்
பிதிர் படும் பொறிகள் சிந்த பிணித்து இகல் நாட்டில் விட்டான்

#19
எண் திசை சம்பும் ஓட எண் திசை பொறி தீ சிந்த
மண்டு இசை வளியும் வீச மண்டு இசை கொழுந்து தீயால்
விண் திசை மலர் தண் காவும் விண் திசை தவழ் நெற்போரும்
பண்டு இசை பகைவர் நாடும் பழி பழுத்து எரிந்தது அன்றோ

#20
முனி பட்டார் பீலி தேயர் மொய் படை இன்றி ஓர் நாள்
தனி பட்டான் சஞ்சோன் என்ன தாம் வய அரிகள் போல
இனி பட்டான் என்று சீறி எண்_இலார் அவனை சூழ்ந்து
தொனி பட்டு ஆர்த்து அரிய போரை தொடங்கினார் வயிர தோளார்

#21
வீங்கினான் வெறும் கை சஞ்சோன் விளிந்த வேசரி வாய் என்பும்
வாங்கினான் வயிர தண்ட வய படை என்ன சீறி
ஓங்கினான் அரும் போராக ஒன்னலர் படைகள் எல்லாம்
தாங்கினான் அரி ஏறு அன்ன தாக்கினான் பகைவர் மாள்க

#22
அதிர்த்தனன் அதிர வானம் ஆர்த்தனன் தனி வல் மொய்ம்பான்
விதிர்த்தனன் அரிய தண்டம் வீசினன் எண்_இல் ஆவி
உதிர்த்தனன் உதிர வெள்ளம் ஓட வெம் கத கண் வாயும்
கதிர் தழல் ஓட ஓடி கத கனத்து உருமின் மிக்கான்

#23
இந்து இணை குனி வில் சிந்த ஈர்க்கு அடை பகழி சிந்த
கந்து இணை கரங்கள் சிந்த கரிய நெய் மூளை சிந்த
பந்து இணை சிரங்கள் சிந்த பல் உயிர் உடலம் சிந்த
சிந்தனை எவரும் சிந்த சிந்தின குருதி சிந்தே

#24
ஆயின தன்மைத்து அங்கண் ஆயிரம் உருமின் பாய்ந்து
பாயின இடங்கள்-தோறும் பரப்பினான் பிணத்தின் குப்பை
வீயின பகைவர் அங்கண் விழுந்த ஆயிரரும் அன்றி
ஓயின அமர் விட்டு ஓடி உடல் குறை இலரும் உண்டோ

#25
புற துணை கடந்த வல்லோன் போர்க்களத்து ஒருவன் நின்று
திற துணை வரை தோள் வீங்கி திசை திசை சுளித்து நோக்கி
மற துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓட கண்டே
அற துணை பெற்றால் பெற்றது அழிவு உண்டோ இடையில் என்றான்

#26
கார் திரள் அனைய ஆர்த்த கதத்தொடு கனலும் விம்மி
போர் திரள் இயற்றினான் உள் புலத்து எழும் தாகம் ஆற்றா
சூர் திரள் பயத்த தண்டம் சுனையின் ஊற்று என என்பின் வாய்
நீர் திரள் ஓட சால்பின் நிமலனை வாழ்த்தி உண்டான்

#27
மலை மூழ்கும் திண் தோளான் மன்னார் வைகும் அ நகருள்
அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கான் என்று அறிந்து அன்னார்
விலை மூழ்கும் மணி கோட்ட கதவம் பூட்டி விடிந்தன பின்
கொலை மூழ்கும் உயிர் பழியை கொள்வது என்ன கூர்த்து உவந்தார்

#28
தன் தொழில் செய்து ஆயின பின் அன்னான் போக தாம மணி
கல் தொழில் செய் வாய் கதவம் அடைத்தது என்ன கண்டு ஒன்னார்
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம்
மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான்

#29
போர் முகத்து நிகர் இன்றி பொலிந்த வெற்றி புனைந்து உயர்ந்தோன்
கார் முகத்து மணி கூந்தல் வலை பட்டு ஓர் பூம் கவின் நல்லாள்
ஏர் முகத்து வயம் குழைய சிதைந்த தன்மை இனி கேட்டோர்
பார் முகத்து பெண்மையின் ஓர் பழியும் கேடும் இலை என்பார்

#30
கடம் புனைந்த வளை உருட்டும் பெரும் சீர் செங்கோல் கடி வளமும்
சடம் புனைந்து பெண் ஆசை சழக்கில் கோலும் என்று உணரான்
விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது என்னும் தாலிலை ஓர்
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான்

#31
காது அளவு நீண்டு உலவும் களி கண் மாமை கனிந்து உண்ட
போது அளவு காதல் உளம் கோட்டி அன்னாள் புணரியின் ஆழ்
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன்
தீது அளவு மனம் மயங்கி சிறைப்பட்டு அ தீ சிறை விள்ளான்

#32
அண்ணி பற்று அன்பு அறிந்த அரிகர் பொன் சால்பு அளித்து அன்னாள்
நண்ணி பற்று அரும் திறத்தின் நிலை கேள் என்ன நனி கேட்டார்
எண்ணி பத்து அம் கை இடும் எல்வை நட்பும் இயல் பிறப்பும்
கண்ணி பற்றாது என்னை கடிதின் செய்யாள் பெண் பிறந்தாள்

#33
கோல் கலந்த கண் விருப்பம் குளிர காட்டி கொல் அகத்தாள்
பால் கலந்த நஞ்சு அன்ன பணி தீம் சொல்லால் பகைக்கு எஞ்சா
மேல் கலந்த வலி நிலை எங்கு என்றாள் காதல் வெறுப்பு ஆற்றா
மால் கலந்த அன்பின் தலை மயிர்க்கண் என்றான் மதி கெட்டான்

#34
முதிர் சூலும் பெண் காதின் மொழியும் நில்லா முறையில் அவள்
கதிர் சூழும் உதயத்து அன்று ஒன்னார்க்கு எல்லாம் காட்டிய பின்
பொதிர் சூழும் பின் இரவில் இன்பத்து அன்னாள் பூ மடி மேல்
எதிர் சூழும் கேடு உணரான் துஞ்ச மயிர் ஈர்ந்து இமிழ்த்தனரே

#35
மின்னினால் என எரி கண் விழித்து யாக்கை விடல் தேற்றான்
உன்னினாள் கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி
துன்னினார் பழம் பழியார் உவப்பில் ஆர்த்து சுடு நகை சொல்
பன்னினார் விழி குடைந்தார் பல் நாள் கோற சிறை வைத்தார்

#36
பல் நாளில் பல் நகையில் பழியின் ஆசை பற்று அமர்ந்த
பின் நாளில் பகைத்தன நாடு ஒருப்பட்டு ஒன்னார் பெரிது உவந்து
முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில் வைகி முன் கொணர்க என்று
அ நாளில் திறம் சிகையோடு உடை சஞ்சோனும் ஆங்கு அடைந்தான்

#37
மண் கவிழ்ந்த வானம் என வரைந்த மாமை மண்டபத்தின்
கண் கவிழ்ந்த சிகரம் தாங்கு அடுத்த இரு பொன் கம்பம் இடை
கண் கழிந்த சிகை திறத்தோன் நிற்ப நக்கு கதம் காட்டி
விண் கழிந்த தெய்வம் அனோய் இன்றே காட்டு உன் மிடல் என்றார்

#38
பகை விளைத்த வினை உதைப்ப நிற்பார் உண்டோ பாரில் என
சிகை விளைத்த திறம் மிக்கோன் இரு தூண் தன் கை திறத்து ஒடித்து
நகை விளைத்த மேல் சிகரம் வீழ்த்தி எண்_இல் நள்ளரொடு
மிகை விளைத்த தானும் தன் வினை பட்டு ஒன்னார் வென்று ஒழிந்தான்

#39
இ திறத்தில் இவை எல்லாம் இ நாட்டு இ ஊரிடத்து ஆகி
மெய் திறத்தின் கடவுள் நலம் விளங்கிற்று என்ன விண்ணவன் தன்
கை திறத்தின் தாள் தொழுது நிற்ப அன்னார் கனிந்து எழுந்து
மை திறத்தின் கலந்த மதிள் காசை மூது ஊர் மருவுகின்றார்

#40
திலம் குன்றா நிழல் தேன் பூப்ப நீர்
புலம் குன்றா மழை பொய் இல தூவ மேல்
நலம் குன்றா நகர் நாடு நயந்து எழ
வலம் குன்றாதவர் மா நகர் எய்தினார்

#41
புற துறை புலம் போய் நகர் வாயிலோர்
திற துறை புலம் புக்கனர் தேர்ந்த நூல்
உறு அ துறை புலமும் கடந்து உள் நகர்க்கு
அற துறை புலம் ஆயினர் எய்தினார்

#42
வேலை மா மணி பீடிகை வீதியும்
சாலை பூம் புகை வீதியும் தாண்டி நல்
பாலை யாழ் இசை பாடினர் வீதியுள்
மாலை மாடத்து அழும் குரல் கேட்டனர்

#43
திரி சுமந்து இல தீபம் ஒத்து ஆவி போய்
அரி சுமந்த அணை கிடந்த அன்னை சூழ்
வரி சுமந்த இள மயில் மான ஐந்து
எரி சுமந்த கணார் அழுது ஏங்கினார்

#44
ஆங்கு நான நெய் பூ அளகம் கெட
வீங்கு நோயின் நிலத்தின் விழுந்து அடித்து
ஏங்கும் ஓதையை கேட்ட இணர் கொடி
ஓங்கு சூசை உளத்தில் இரங்கினான்

#45
கொம்பு இலா கொடி போல் இளம் கோதையார்
பம்பி ஆர்த்து அழும் பாசறை நோக்கு என
நம்பி நாதனை வேண்டலின் நல் உயிர்
எம் பிரான் இடும் ஏவலின் மீண்டதே

#46
தாய் எழுந்து வரம் தரு கை பெறாது
ஆய் எழுந்த வியப்பில் அனைவரும்
தூய் எழுந்த களிப்பொடு துள்ளி வான்
மீது எழுந்த விமலனை வாழ்த்தினார்

#47
விண் உளோர் பணி வேலையை கொள்பவர்
மண்ணுள் ஓர் மிடி மாண்புற அ நகர்
கண் உளோர் வறியோர் என கை இரந்து
எண்ணுள் ஓர் பகல் மூன்று இருந்தார் அரோ

#48
வருந்தி கையொடு கால் வழங்காதனள்
பொருந்தி கை கொடை உய்த்து அவர் பூ முகம்
திருந்தி தீட்டிய தே அருள் கண்டு என் நோய்
இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ என்றாள்

#49
அணங்கு தேவ மகன் முகத்து ஆறும் என்று
அணங்கு பேய் உற ஆர் தவத்தோன் அறைந்து
அணங்கு தீர்ந்து அவள் வாய் புகழ்க்கு அஞ்சினர்
அணங்கு மின் என ஆங்கு ஒளித்தார் அரோ

#50
மாலை வாய் மணம் போலவும் வாச பூம்
சோலை வாய் நிழல் போலவும் தூய் அற
சாலை வாயினர் தாங்கிய மு பகல்
காலை வாய்ந்தது காசு அற காசையே
மேல்

@18 சீனயி மாமலை காண் படலம்


#1
கோபுர மணி ஒளி குன்ற பேர் அகழ்
நூபுரம் புலம்ப மேல் கொடி நுடங்க நீள்
மா புரம் சிறுமையின் வாட போயினார்
மீபுரம் குடி என மாட்சி மேன்மையார்

#2
கொன் தெளித்து எழுதியது என நல் கொள்கையார்
மின் தெளித்து எழுதிய செல்வம் விட்டு என
பொன் தெளித்து எழுதிய புரமும் நாடும் விட்டு
இன் தெளித்து எழுதிய இவர் அன்று ஏகினார்

#3
சூழ் விளை ஏனலும் பரியும் தோரையும்
கூழ் விளை குலுத்தமும் இறுங்கும் கோத்து இரு
நீழ் விளை நிரைத்த பல் காவும் நீங்கியே
காழ் விளை பழுவமும் கடந்து போயினார்

#4
நறவு சேர் பொழில்களும் நாரை அஞ்சமோடு
உறவு சேர் தடங்களும் உவந்த ஓகையின்
துறவு சேர் மடங்களும் துணை தணப்பு_அரும்
புறவு சேர் வனங்களும் கடந்து போயினார்

#5
பூண் எறி ஒளியொடு புடை விண்ணோர் வர
நீள் நெறி கடந்து போய் நெடிய நெற்றியால்
சேண் நெறி தவழ் மலை செல்ல சேர்ந்து இரு
கோள் நெறி உம்பர் வந்து எதிர்கொண்டார் அரோ

#6
பொன்னின் நீர் மிளிர் திரு புதல்வன் தாள் இணை
மின்னின் நீரவர் தொழ வீழ்ந்து சூசை உள்
உன்னி நீர் எவர் சொல்-மின் உற்றது என்றலும்
துன்னி நீர் சட்சதன் தொழுது சொற்றினான்

#7
திரை நிரை மணி கொழித்து ஒளி செய் சேண் செலும்
வரை நிரை வளர் நலம் காக்க வான் தொழும்
விரை நிரை மலர் உரு வேய்ந்த இ பிரான்
உரை நிரை வதிந்த நாம் என்ன ஓதினான்

#8
எம் பர நாயகன் ஏவலால் உலகு
அம்பரம் நான்கையும் அமரர் காத்தலில்
உம்பர இ மலைக்கு உரிமை யாது எனா
பம்பர வளன் சொல அமரன் பன்னினான்

#9
பான் அயில் உரு கொடு பரமன் எய்திய
கான் அயில் மலர் முடிக்கு ஆய காட்சியால்
மீன் அயில் வானினும் மிக புகழ்ந்தன
சீனயி மா மலை சிறப்பு இஃது ஆம் அரோ

#10
தனத்து-இடை எழுத்து என ஞான தன்மையான்
மனத்து-இடை எழுதிய மறையின் நூல் பினர்
கனத்து-இடை ஒலி எழ கல்லின் தீட்டிய
புனத்து-இடை குளிர் மலை பொலிவு இஃது ஆம் அரோ

#11
ஏர் கெழு மணி வளர் எசித்து நீக்கலின்
கார் கெழு குவட்டு வான் கலந்த இ வரை
நேர் கெழு யூதர் தம் நிரைத்த சேனைகள்
பார் கெழு அணி என பரப்பி நின்றவே

#12
தேன் நிமிர் தொத்து அணி திமிசும் சாந்தமும்
வான் நிமிர் கோட்டு அணி வகுத்த மால் வரை
மேல் நிமிர் நாயகன் விளிப்ப யூதர்-தம்
கோல் நிமிர் மோயிசன் குவட்டில் ஏறினான்

#13
கோண் இகந்து ஆள் வான் இறைவன் ஏவல் கொண்ட குல கோமான்
சேண் இகந்தான் சேண் சென்ற குன்றத்து உச்சி செல்கின்றான்
ஊண் இகந்தான் துயில் இகந்தான் வானோர் ஒத்து ஆங்கு உறைந்தன-கால்
மாண் இகந்தார் மனம் போல இருண்டு யாவும் மருண்டனவே

#14
கோடு ஒளிப்ப எழினி என எழிலி மொய்ப்ப குடக்கு இரவி
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ் மண்டி திரண்ட இருள்
ஈடு ஒளிப்ப விளக்கு இட்டதே போல் மின்னி எரிவாய் மின்
ஊடு ஒளிப்ப ஒல்கி இடித்து உலகம் எல்லாம் ஒலித்தனவே

#15
புழுங்கிய வாய் எரி செம் தீ புரிசை சூழ்ந்தால் போன்று ஓயா
தழங்கிய வாய் முகில் மின்னி எண்_ஐ நாளும் தாழ் எவரும்
அழுங்கிய வாய் மெலிந்து அஞ்ச இறைவன் தாள் சேர்ந்து ஆர்ந்து அமிர்தம்
விழுங்கிய வாய் மோயிசனே வாழ்ந்த வண்ணம் விளம்பு அரிது-ஆல்

#16
கண்ட-கால் இனியனவும் எவர்க்கும் காண்டற்கு அரியனவும்
உண்ட-கால் ஆங்கு அன்னான் உண்ட இன்பம் உயர் வீட்டை
கொண்ட-கால் அதற்கு உவமை குணிப்பர் அல்லால் கொங்கு அலர் கோல்
விண்ட-கால் வரம் பூண்டோய் மதியார் இங்கண் மேதினியார்

#17
முறை கெழு நல் கேள்வியின் நூல் புலமை மிக்க மோயிசன் ஆங்கு
உறை கெழு நல் கனத்து உலகம் கடந்து நிற்ப ஒளி அணி வான்
துறை கெழு நல் காட்சியினோடு இன்ப பவ்வம் தோய்ந்து உவப்ப
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல்

#18
பல் உயிரை வியவர் என படைத்த பின்னர் பார்த்திபர் போல்
நல் உயிரை அடைந்த மனு_குலத்தோர் ஆக்கி நல் வினையும்
புல் உயிரை அடும் வினையும் அறிந்து இரண்டில் புலன் தேற
வல் உயிரை ஈந்து உரி வேண்டுதல் வேண்டாமை வகுத்தனனே

#19
தனத்து எழுதி வைத்தது என உறுதி ஞான தகுதியின் நான்
மனத்து எழுதி வைத்த மறை மறைய தீமை மல்கியதால்
கனத்து எழுதி வைத்த மினல் ஒத்த வாழ்க்கை காதலித்து
புனத்து எழுதி வைத்த பொருள் ஒத்து அ வேதம் புறத்து ஒழிந்தார்

#20
மருள் மொய்ப்ப தீவினையும் இருளும் மொய்த்து மனு_குலத்தோர்
இருள் மொய்ப்ப மனத்து எழுதி வைத்த நுண்_மாண் எழுத்து உணரா
பொருள் மொய்ப்ப திரிந்து அந்தோ குருட்டால் வீழ்வர் புதவில் எனா
அருள் மொய்ப்ப கல்-இடை அம் மறைய தீட்டி அளிப்பல் என்றான்

#21
மின் அல்லால் நிகர்ப்பு அரிது ஓர் எழுத்தில் தீட்டி விதித்து இரு கல்
என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல் ஆவீர் எனை மெய்மை
தன் அல்லால் சாட்சி வையீர் திரு நாள் ஆட தவிர்கில்லீர்
மன் நல் ஆரணம் இது என்று ஒரு கல் கொள் மு வாசகமே

#22
தந்தை தாய் வணங்கு-மின் நீர் கொலையே செய்யீர் தவிர் காமம்
நிந்தையாய் ஊடு இல்லீர் கரவீர் பொய்யீர் நிலை பிறர் இல்
சிந்தையாய் இரீர் பிறர் கை பொருளே வெஃகீர் தீங்கு இது என்று
எந்தை ஆய்ந்து இரண்டாம் கல் தீட்டி வைத்த ஏழ் விதியே

#23
மின் முகத்து பொறித்த அணி இரு கல் ஏந்தி வெம் சுடர் போல்
நல் முகத்து மோயிசன் வில் வீசி வெற்பின் நயந்து இழிந்தான்
புன் முகத்து மனு_மகன் இ நாதன் அ நூல் புரிந்தமையால்
தன் முகத்து தாள் பணிய உற்றது என்றான் சட்சதனே

#24
பண் ஒன்று பாடல் ஒத்த பயன் எலாம் இமிழின் கேட்டு
கண் ஒன்று மகனும் தாயும் கண் இமை ஒன்றி காத்த
மண் ஒன்று பைம் பூம் கோலான் மகவினை வாழ்த்தி யாரும்
விண் ஒன்று வெற்பு வேத வெற்பு என வணங்கி சேர்ந்தார்

#25
நீர் தவழ் தழலின் கஞ்சம் நிரைத்த நீள் வாவி அங்கண்
ஓர் தவழ் முகைகள் தண் தாது இழிந்த தேன் இனிமை வெஃகி
வார் தவழ் முரசு வாட்டி வண்டொடு தேனும் ஆர்க்கும்
கார் தவழ் சினைகள் நீண்ட கா-இடை வதிந்து நின்றார்

#26
பார் கெழு மடந்தை ஈன்ற படர்தரு கை தாய் ஆம் வான்
கார் கெழு முலை தழீஇய கரம் என சினைகள் நீட்டி
நீர் கெழு பால் உண்டு அப்பால் நிழன்று தன் தாயை காக்க
ஏர் கெழு கை தாய் நோக இகன்று ஒளி ஒளிக்கும் காவே

#27
சிலை வளர் நாணின் கையின் சேர்ந்து அடர்ந்து இறுக பின்னி
கலை வளர் உணர்வின் ஓங்கி கள் உண்டார் தலையின் ஆடி
விலை வளர் மகளிர் நெஞ்சின் வெயில் பகல் இருளிற்று ஆகி
அலை வளர் ஒலியன் ஆர்க்கும் அலர் முகத்து அலர்ந்த காவே

#28
பூ-இடை அளிகள் துஞ்ச பொதும்பு-இடை மயில்கள் துஞ்ச
கோ-இடை அன்னம் துஞ்ச கொம்பு-இடை குயில்கள் துஞ்ச
மா-இடை முசுக்கள் துஞ்ச மருள்-இடை இரவு துஞ்ச
நா-இடை உரைகள் துஞ்ச நலம் எலாம் துஞ்சும் காவே

#29
இணங்கிய மலர் கா அங்கண் எரி முகத்து அனுங்கிற்று அன்ன
உணங்கிய தருவை கண்டார் உவந்து தாம் வதிந்த பின்னர்
அணங்கு இயைந்த இலையும் பூவும் அணிந்த அ தருவே தம்மை
வணங்கிய தன்மை கோலி வனப்பு அரிது அணிய கண்டார்

#30
தீய் நிற பவள கொம்பின் மரகத இலைகள் தீர்ந்து
தூய் நிற தரள மொட்டும் தூய் மணி மலரும் பூத்து
காய் நிறத்து இலங்க வெண்பொன் கனக நல் கனிகள் காய்த்து
மீய் நிற தருவின் வண்ணம் மீ வளர் வண்ணம் போன்றே

#31
நளி வளர் மலர் கோல் சூசை நயத்து இவை வியந்து நோக்கில்
களி வளர் உவப்பு மாற கதத்த வான் திசைகள் நான்கில்
வளி வளர் பகையில் வீச மரம் குழைந்து அமுங்கி வாடி
வெளி வளர் சினைகள் நூறி வீழ்வது போல கண்டான்

#32
படம் புரை பொறித்த மாமை பட்டு அற இலையும் இன்றி
விடம் புரை பட்ட காலால் வியன் தரு கெட்டது என்னா
வடம் புரை தவத்தை பூண்டோன் மதித்து உளத்து அனுங்கும் காலை
சடம் புரை அனிலம் கையால் தகைத்து என நின்றது அன்றோ

#33
அற்றது என்று அலைந்த சாகி அனிலம் அற்று ஒழிந்த போது
செற்றது என்று அரிந்த கீடம் தீண்டிய கனிகள் அல்லால்
மற்றது என்று ஒன்றும் குன்றா வனப்பு எழீஇ இலங்க சூசை
உற்றது என்று உணர்த்தி என்றான் உவந்து சட்சதனும் சொன்னான்

#34
எல் உடை சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதைய மா மலை போன்று
அல் உடை பாவ மருள் அற பரமன் அருளிய சுருதி நூல் உதித்த
செல் உடை அணிந்து எங்கணும் பெயர் சிறந்த சீனயி மா மலை சார்பில்
தொல் உடை சுருதி மாண்பு இயல் காட்ட தோன்றிய தரு இது ஆம்-மன்னோ

#35
தீட்டிய இரு கல் ஏந்தி மோயிசன் போய் திசைகள் நான்கு உரைத்த நல் மறைநூல்
காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள் களிப்பில் இ காவில் இ தருவும்
நீட்டிய சிவை விட்டு உறை முகில் நக்கி நிகர்ப்பு அரிது எழுதிய மாமை
ஈட்டிய மணி பூம் சினைகளை பரப்பி இரு நிலம் நிழற்றி நின்றதுவே

#36
இன்புற உயிர் செய் இ தரு கனிகள் யாம் உண பிறர் கையில் இரந்து
துன்புற போவல் என் என பலரும் சூழ்ந்து தம் காவின் நஞ்சு உகும் காய்
அன்புற இனிது என்று அருந்து என பல பொய் ஆரணம் எங்கணும் விதித்த
பின்பு உற மலர்ந்த இ தரு நொந்த பெற்றி போல் மெலிந்தது மாதோ

#37
மனத்து எழும் சுருதி மெலிந்தன அளவில் வனப்பு எலாம் ஒழிந்து தான் மெலிய
கனத்து எழும் கொம்பர் வாடலே கண்டீர் கருணையோடு இ பிரான் மாக்கள்
இனத்து எழுந்து எங்கும் இ முறை வழங்கும் என்று இவன் எய்திய முகத்தில்
தனத்து எழு மலரும் கனிகளும் பூத்து தரு எலாம் உவந்தது கண்டீர்

#38
செல்லின் மேல் வரையில் வரைந்த நூல் இவன் தான் தீட்ட ஓர் விலங்கலும் ஏறி
கல்லின் மேல் வரைந்த எழுத்து ஒழிந்து ஆக கண்டு அரும் தயையின் அ சுருதி
எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக இருப்பு அயில் ஆணியால் பொறித்து
வில்லின் மேல் இவர் செம் புனலின் மை இட்டு மெலிவு அற விளங்கலே செய்வான்

#39
நனை முகத்து உவந்து நக்க இ தரு போல் நர தெய்வ குமாரன் ஈங்கு அருளும்
வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி வெகுண்ட நால் திசை வளி எழுந்து
முனை முகத்து அடித்த தன்மையின் மறையை முருக்கிட பல மதத்தாரும்
கனை முகத்து உலகும் அலகையும் உடலும் கதத்த நால் பகைகள் மொய்ப்பனவே

#40
வேர் அற அடித்த வளி என எங்கும் விளைத்த பல் பகை இவன் அருளால்
நேர் அற நீங்கி கிருமி தீண்டிய காய் நிகர்த்த பற்று எஞ்சினர் அல்லால்
பேர் அற நல்லோர் சிதைவுறா வாழ்ந்து பெயர்கு இல மறையொடு பொலிந்து
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான்

#41
இனையன கேட்ட இரும் தவத்து இறைவன் ஏந்திய மகவினை நோக்கி
தனை அனே உலகம் படைத்தி நின் கருணை தளிர்ப்ப நல் சுருதி நூல் உரைத்தி
அனையன போதா மைந்தனாய் உதித்தி அ மறை வழங்க நோய் உற்றி
முனை அன உலகத்தோர் உனை பகைத்து முதிர் துயர் அழுந்துதி அந்தோ

#42
இன் ஒளி மகவே நினை பகைக்கினும் நீ ஈந்த நூல் பகைக்கினும் கயவர்
பொன் ஒளி சுடர சுடும் தழல் அனை அ புன்கணால் பொலிவுற பெருகி
நின் ஒளி குன்றா நின் மறை குன்றா நினைத்த நின் அருள் தொழில் முடிப்பாய்
மன் ஒளி மதுகையோய் என கண்ணீர் மலர் அடிக்கு அணி என புனைந்தான்

#43
சினை வரும் கனி தீம் சுவை உண்ட பின்
அனைவரும் பொழில் நின்று நடந்து போய்
கனை வரும் குளிர் கால் சவரம் செய
சுனை வரும் சுருதி கிரி நீங்கினார்

#44
நீங்கி ஆயின யாவையும் நீங்கு இலள்
ஓங்கி ஆர்வம் உணர்ந்து உடு பூண்டனள்
பாங்கு யாழ் இளகி பரிவு ஓதை கொண்டு
ஏங்கினால் என ஏங்கி இயம்பினாள்

#45
நாதன் ஓதிய நல் மறை நாகம் மேல்
சாத ஆரண சாகி என்கோ யான்
ஆதன் ஆயின பூம் பொழில் ஆங்கு உளது
ஏதும் ஈர் உயிர் சாகி என்கோ யான்

#46
உம்பரின் சுவை இ கனி உண்டு நீள்
கொம்பர் இன் நிழல் கீழ் உறை கோது இலார்
அம்பர் இன்புறும் அண்டர் என்கோ யான்
இம்பர் இன் உயிர் வாழ்வர் என்கோ யான்

#47
அறத்து செ வழி ஆரணம் எந்தை கை
திறத்து தீட்டிய சீர் பெரிது என்பெனோ
மறத்து தேர் இல மாக்கள் அது உட்கொளா
புறத்து போக்கிய புரை பெரிது என்பெனோ

#48
தொல்லின் தம் மனத்து ஆசு அற தோன்றிய
எல்லின் ஒண் மறை இற்று ஒழிந்தார் என
செல்லின் ஓங்கிய இன்ன சிலம்பு மேல்
கல்லின் தீட்டிய ஆண்டகை காட்டினான்

#49
தீட்டி காட்டிய திவ்விய நூல் புற
நாட்டில் கற்றது எனா நரர் பல் கதை
பூட்டி போற்று அரு நூல் என பொற்பு அறம்
கோட்டி கோது உலகு ஆர்ந்தன கொள்கையே

#50
நஞ்சு இதே அமுது இஃது என நாடுதற்கு
அஞ்சியே நரர் தேறிலர் ஆதலால்
நெஞ்சிலே அருள் நேரிய எந்தை நீ
எஞ்சியே மறை காட்டிட எய்தினாய்

#51
பொய்யை காட்டிய நின்னையும் பொய் அற
மெய்யை காட்டிய வேதமும் நூக்கினர்
கையை காட்டி உரைப்பவர் காதையே
மையை காட்டினும் நூல் என வவ்வரே

#52
காவி வாட்டிய கண் மணி காதலே
ஓவி வாட்டிய உன் உடல் புண் பட
வாவி வாட்டிய கோடையின் மானிடர்
ஆவி வாட்டிய அடும் பகை செய்வரோ

#53
சுடர பொன் சுடும் தீ என தொல் மறை
படர பொங்கி வரும் பகை பாசறை
அடர பொன்று இல ஆரணம் எங்கணும்
தொடர பொம்மி வளர்ந்து விளங்குமே

#54
வேண்டிய யாவையும் வேண்டுவ தன்மையால்
ஈண்டில் ஆக்கிய ஈடு உள நின் அருள்
தாண்டி மாற்றுவர் ஈங்கு இல தாரணி
ஆண்டு யாரும் அளிக்கு-மினோ என்றாள்

#55
கன்று ஒளித்த கறவையின் இன்னணம்
நன்று ஒளித்த நமக்கு இனைந்து ஆய் கதிர்
நின்று ஒளித்தலின் நேமியும் மெய்ம்மறை
என்று ஒளித்த மனத்தின் இருண்டதே

#56
அணி நிறத்த சினை படத்து ஆர் ஒளி
மணி நிறத்து அலர் பந்தரில் வந்து பேர்
அணி நிறத்து அமரர் புடை ஆர்ந்து அரும்
பணி நிறத்து அறம் பற்றினர் வைகினார்
மேல்

@19 பாலை புகு படலம்


#1
கார் எழு நிசி கோன்மை கடிய வில் ஒளி அம்பால்
தேர் எழு சுடர் வெம் போர் செம் கொடி உயர் தோன்ற
பார் எழு களம் எங்கும் பறவைகள் முரசு ஆர்ப்ப
போர் எழு பொழுதாக புலரி வந்து இவர் போனார்

#2
வான் பயில் மதி ஏந்தும் வடி வடிவு அடியாளும்
தேன் பயில் மலர் வாகை திருமறை அறையோனும்
ஊன் பயில் உரு நாதன் ஒளி அடி தொழுது ஏந்தி
கான் பயில் மலர் பூத்த கடி வன நெறி போனார்

#3
துயில் என விரி பூங்கா தும்பிகள் குழல் ஆக
குயில் இனம் முழவு ஆக குளிர் பொழில் அரங்கு ஆக
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி
அயில் என அழல் வீசும் அருஞ்சுர நெறி போனார்

#4
நண்ணிய பொருள் நீங்கி நல்குரவு எதிர் உற்ற
புண்ணிய மரபோர் உட்புலன் அயர்வு இலர் போன்றே
மண்ணிய வனம் நீங்கி வசு குடி உறை கானம்
கண்ணிய நெறி போக கண்டு அழுதன காவே

#5
பூ-இடை அழ வண்டு பொதும்பு-இடை அழ மஞ்ஞை
கா-இடை அழ அம் பூ கடி மலர் தவழ் யாறு
தாவு-இடை அழ அந்தோ தகாது என அழ யாவும்
கோ-இடை அரசு ஆள்வோர் கொடு வனம் அருகு உற்றார்

#6
மேல் சபையாக வானோர் விருப்பு எழீஇ மருங்கில் சூழ
நூல் சபையாக கற்றோர் நுதலிய புகழின் மிக்கோர்
கோல் சபையாக மூவர் கொடும் துயர் குடியாய் வைகும்
பேற்சபை என்னும் கானம் பெற்று உளம் தளரா புக்கார்

#7
காட்டிய விரலை தீக்க கண்ட கண் விழியை தீக்க
சூட்டிய கொடிய கானம் சுடும் எனில் எனும் வாய் தீக்க
ஈட்டிய அழலை எண்ணில் எண்ணிய மனத்தை தீக்க
கோட்டிய மனத்தின் தீக்கும் கொடியது ஓர் சுரம் அது அன்றோ

#8
புனல் பசை இழந்த கானில் பொழி துளி உள்ளி வந்தால்
கன பசை இழந்து தாமும் கார் திரள் கனன்று வேக
இன பசை இழந்த தீயோர் இரவலர் தம்மை கண்டு
மன பசை இழந்த கோரம் மானிய சுரம் அது அன்றோ

#9
தீய் வயிறு ஆர்ந்த காலும் செம்_சுடர் கதிரும் செம் தீ
மேய் வயிறு ஆர்ந்து வேகும் விரி மணல் பரப்பும் தீ ஆய்
நோய் வயிறு ஆர்ந்த கானம் நொடை நல மாதர் வஞ்சம்
காய் வயிறு ஆர்ந்த வாயும் கண்களும் மனமும் போன்றே

#10
போர் முகத்து அழன்ற வீரர் புகைந்து என புகைந்த கானம்
ஏர் முகத்து எழுந்த மூவர் எய்திய வேலை தானும்
தார் முகத்து உவந்த மன்றல் தகும் புது மகளிர் போன்று
நீர் முகத்து இவர் அன்பு ஆர்ந்த நெஞ்சு என குளிர்ந்தது அன்றே

#11
அயின்று எழும் விரை வாய் தாழை அலர் மடல் பள்ளி பல் நாள்
துயின்று எழும் இள நல் வேனில் துதித்த பங்குனியில் செல்ல
குயின்று எழும் குயில்கள் காட்ட கோது அற மகிழ் பூம் காவில்
பயின்று எழும் புகழின் மிக்கோர் பணி முகத்து உவந்த பாலை

#12
மை வினை அழன்ற நெஞ்சில் மருவிய அருளின் மாட்சி
செ வினை புக்க பாலால் தீது அற சிறந்த தன்மைத்து
அ வினை செகுத்த மூவர் அணி முகத்து அருளினாலே
வெம் வினை உடன்ற கானம் விரை முகத்து உவந்தது அன்றோ

#13
நிறை மலர் ஒழுக்க தாள் கீழ் நித்தில பரப்பில் தூய
நறை மலர் பரப்பினால் போல் நளிர்பட ஒழுகி சூழ
உறை மலர் மணவாய் தென்றல் உரைத்த மங்கலத்தின் வீச
மறை மலர் பூண்ட மார்பர் மகிழ்வு அலர் மனத்தின் போனார்

#14
மின் நிற கொடியை சூடி விளங்கிய மணியின் வில் செய்
நல் நிறத்து ஆரம் பூண்டு நாடி வந்து அணியின் தோன்றும்
செல் நிற குடையில் கொன்ற செழித்த செம் கதிரின் வெப்பத்து
இன் நிற குளிர் பூ நீழல் இயங்கிய சிறப்பின் போனார்

#15
பாகு இளம் சுவை பெய் வில் ஆர் பவள வாய் துறையில் வைத்த
நாகு இளம் தரளம் காட்டி நகை தரு மடந்தை போல
ஆகு இளம் பணி பூம் கானத்து அழகு அணி செய்தால் என்ன
வாகு இளம் சுடர் செய் மேனி வானவர் காட்டி நின்றார்

#16
ஈர் எழு வகுப்பில் தேர்ந்த இன மணி நல் யாழ் வாங்கி
ஓர் எழு குரலின் ஓதை உரி கிளை தளிர்ப்ப பாகின்
நேர் எழு மிடற்றின் ஓதை நெறிகள் மூன்று இயக்கி கூட்டி
பார் எழு நடங்கள் வாட்ட பாடினர் சிறப்பின் வானோர்

#17
காமம் சால் வியப்பில் ஓங்க கண்டு அவை உள்ளி பைம் பூம்
தாமம் சால் கொடியோன் விண்ணோர் தளங்களுள் தலைவன் என்ன
ஏமம் சால் இன்பத்து ஓர்ந்த இரும் புகழ் தளிர்த்து தேவ
நாமம் சால் வழங்க நல் யாழ் நடையொடு பாடினானே

#18
பாலையின் வெப்பம் பனி மருதத்து ஆக்கினையே
மாலையின் தாமத்து அருள் நீதி வல்லோய்
அருள் நீதி வல்லோன் அடி சென்றார் இங்கண்
தெருள் நீதி நீங்கா தார் தீது இடும்பை நண்ணாரே

#19
வீங்கு ஓத நீர் நிலை ஆம் வெய்ய நஞ்சு இன் அமுது ஆம்
ஈங்கு ஓத ஒப்பு இறந்த எந்தை அடி சென்றால்
எந்தை அடி சென்றார் எங்கும் இடர் மொய்த்து உலவ
சிந்தை மகிழ தாம் தீது இடும்பை நண்ணாரே

#20
வான் வாழ் அமரர் வணங்கி தலை ஏற்றும்
தேன் வாழ் அடி சென்றார் தீது இடும்பை நண்ணாரே
தீது இடும்பை நண்ணுவர் இ சீறடியை நாடாதால்
வாது இடும்பை வாழ்க்கை வழுக்கு இவறும் தீயோரே

#21
ஏழ் இசை குழலினோடு இனிய பண் தொனியினோடு இசை விடாத
யாழ் இசைக்கு இவை எலாம் இணர் நறும் கொடியினோன் அறைய நாதன்
கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை வாரி
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து அமரரே தொழுது போனார்

#22
இன்ன வாய் மருதம் ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள் பல் நாள்
துன்ன வான் உலகினில் துறுவினார் அனைய உள் சுவையின் விள்ளா
உன்ன வாய் மகிழ்வு துய்த்து உணவு உணா நினைவும் அற்று ஒழுகி ஓர் நாள்
அன்ன வாய் அமரர் உற்று அணுகி வான் உரி விருந்து அமைதல் செய்வார்

#23
கொழு நிலா மரகத கொடியின் மேல் மணிகள் பூத்து அயரும் பந்தர்
விழு நிலா விளையும் முத்து அனைய மீன் விரிவு செய் விரி விதானத்து
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து இணர் நறா அமளி பாய்த்தி
செழு நிலா மணி முக திருவினோர் அமளியில் பொலிய நின்றார்

#24
வில் கலத்து உரு நிலா இலக விட்டு அமரர் சூழ் வியவர் ஆக
பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி
பல் கலத்து அமிர்தமே பல சுவைக்கு அமைய வானவர் பரப்பி
சொல் கலத்து இணை இலா சுவையில் அ தகவினோர் துதியோடு உண்டார்

#25
சால் வரும் தயை உணர்ந்து இனிது உணும் பொழுது அரும் தகுதி வானோர்
கால் வரும் கவரியும் கமழ்வரும் புகையையும் கனிய வாரி
நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ நறா நளின வாயால்
பால் வரும் சுவை வரும் பல நரம்பு இசையொடும் பாடினாரே

#26
தன் தோல் உரித்த பாம்பு ஒத்த தவத்தின் வாளால் பொறி ஐந்தும்
கொன்றோன் உளம் பற்று இருள் புக்கா குன்றா சீல விளக்கு ஏற்றி
நின்றோன் வரும் கால் கடந்து உரைக்கும் நிறை சொல் வல்லோன் பா புகழும்
வென்றோன் எலீய மா முனிவன் விருந்து உண்டு உவந்த வனம் இதுவே

#27
கான் வாழ் சுவை தேன் துளி நக்கி கத வாழ் மாறா வாழ்வு ஒழிந்து
வான் வாழ் இறையோன் தனை மறுத்து வசை பல் தேவர் தொழ கண்டு
தேன் வாழ் காவும் மன் உயிரும் தேம்பி வாட மு வருடம்
தான் வாழ் உறை கொள் முகில் முகமும் தகைத்த சாப மா முனியே

#28
அ நாள் எல்லாம் தான் நுழை வாய் அசல முழையுள் புக்கு உறைந்த
பல் நாள் எல்லாம் முறை தவிரா பறந்து ஓர் காகம் உணவு உய்ப்ப
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து முதல்வன் அடி சேர்ந்தான் என்ன
எ நாள் எல்லாம் கோடாத இயல்பின் சீல மா முனியே

#29
பிழையின் கொடும் கோன் துறவர் எலாம் பின்றா சினத்து கொன்ற பினர்
முழையின் கிடந்த இ முனியும் முரிக்க கொணர்-மின் என விட்ட
உழையில் ஒரு மூ_ஐம்பது வேல் உழவர் ஒருங்கும் வாய் மொழியால்
மழையின் கனலை வான் பொழிய வைது என்று எரித்த மா முனியே

#30
கொழுகொம்பு இழந்த கொடி அன்ன கொழுநன் இழந்த இளம் கைமை
செழு கொம்பு அன்ன ஊன்றுதற்கு திதியின் நின்ற ஓர் மகனும்
விழு கொம்பு அன்ன வீழ்ந்து இறந்து விம்மி அழும் தாய் நனி உவப்ப
எழு கொம்பு அன்ன அ மகனை எழுப்பி தந்த மா முனியே

#31
வலம் புங்கு அவனி மா மகள் தன் மருங்குல் மணி நீள் மேகலையோ
சிலம்பும் பசிய பொன் சிலம்போ சிறந்த சோர்தான் நதி சேர்ந்து
புலம்பும் திரையை கம்பளத்தால் புடைப்ப அரிதின் பிரித்து நளிர்ந்து
அலம்பும் திரையில் அடி தோயாது அப்பால் கடந்த மா முனியே

#32
அப்பால் கடந்த போழ்து இருளை அகற்றி வீசும் சுடர் கண்டால்
வெப்பால் இரவி இரதம் என வேய்ந்து குளிர்ப்ப விடும் கதிரின்
ஒப்பால் மதி தன் இரதம் என உயர் நின்று இழிந்த தேர் ஏறி
எப்பால் அனைத்தும் அணுகாத ஓர் இடத்தில் சேர்ந்த மா முனியே

#33
இன்னும் இ நாள் நல் உயிர் ஈறு இன்றி இன்ப கடல் நின்றோன்
பின்னும் இறைவன் தனில் குணித்த பின் நாள்-தனில் இ உலகு எரிந்து
மன்னும் உயிரோடு உக முடிதல் வரும் கால் அ கால் மீட்டு ஒளியால்
மின்னும் உருவோடு இ உலகில் விளங்க தோன்றும் மா முனியே

#34
ஒல்கா தவத்தின் வர தொகையோன் ஒரு நாள் சுடும் இ வனத்திடையே
செல்-கால் தளர்ந்து ஓர் வானவனும் சென்று தந்த அடை அருந்தி
அல்கா திறத்து நாற்பது நாள் அருந்தா பசியா நெடு நெறி போய்
நல்கா திரு நல்கிய மலை வான் நண்ணி முகில் தோய் முடி சேர்ந்தான்

#35
எஞ்சா திறத்தை அம் முனிக்கு அன்று ஈந்தோன் ஈங்கண் இன்று உமக்கே
துஞ்சா தயையின் வான் விரும்பும் சுவை இ விருந்து ஈந்தவன் யாரே
அஞ்சா திறத்தின் மூ உலகும் ஆண்டு உம்மிடத்து மகன் ஆகி
விஞ்சா துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான் என தொழுதார்

#36
தேன் திறத்து இன்னவை செவியில் கேட்டனர்
வான் திறத்து இன்புறீஇ வைய நாதன் என்று
ஊன் திறத்து இளவலை ஆசி ஓதினர்
கான் திறத்து ஐ_எழு காதம் போயினர்

#37
ஐ_எழு காவதம் ஏகி அப்புறம்
கை எழு சூலத்து கவர்க்கும் மு நெறி
பொய் எழு வழி என போதல் கண்டுளி
மெய் எழு மிக்கயேல் விளம்பினான் அரோ

#38
நீர் விளை மாராஅமும் நிழல் செய் ஓமையும்
ஏர் விளை முகத்து இடம் கிடந்த இ நெறி
பார் விளை வாழ்வு என பனி முகத்து அழல்
சூர் விளை கொடியது ஓர் சுரம் அது ஆம் அரோ

#39
வலம் பட கிடந்த அ வழியும் முன் நிலை
நலம் பட காட்டிய சிறியர் நட்பு என
வலம் பட செலச்செல அஃகி கோறு மா
திலம் பட புகுந்து கல் சிலம்பில் செல்லும்-ஆல்

#40
நிலத்து இடத்து அரசர் கை நீதி கோல் என
வலத்து இடத்து எங்கணும் வழுவு_இலா நடு
புலத்து இடத்து உறைவழி பொருள் பொய்யா மறை
நலத்து இடத்து எசித்தனை நல்கும் ஆம் என்றான்

#41
செ வழி உளத்தினோர் சிறந்து செவ்விய
அ வழி நடந்து ஒளி அரசன் தாழ்ந்து போய்
மெய் வழி ஒளி தர சூழ்ந்த விண்ணவர்
மை வழி இரா ஒரு மரத்து ஒடுங்கினார்
மேல்

@20 சித்திரக்கூடப் படலம்


#1
மா இருள் விழுங்க வான் வாய் அங்காந்து என
சேய் இருந்து ஐந்திரி தெளித்த-கால் எழீஇ
தாய் இரு கரத்து எழும் தனயன் போற்றினர்
போய் இரு புடை நிழல் பொலி செல்வு ஏகினார்

#2
ஊன் வழங்கிய பிரான் உறலின் போற்றல் போல்
வான் வழங்கிய தரு வளைத்த நெற்றியில்
தேன் வழங்கிய கனி கலந்த தேன் மலர்
கான் வழங்கிய பொழில் எதிர் கண்டார் அரோ

#3
பொன் கலத்து அலர் முகை பொழிந்த வாசனை
தன் கலத்து உயிர்த்து அன தண் அம் கால் எதிர்
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என
வில் கலத்து எழில் நலோர் விளிப்ப வீசியே

#4
தேர் எழும் அரசு என சிலைத்த தெண் திரை
நீர் எழும் பருதி தன் நெடும் கதிர் கணை
பார் எழும் இருட்கு எதிர் பரப்பி ஓட்டலின்
கார் எழும் இருள் எலாம் கரந்த கா அதே

#5
கள் உற மலர்ந்த கா கலந்த நீழலோடு
அள் உற மலி இருள் இரு கண் அட்டதால்
தெள் உற உளத்து எழீஇ திளைத்த ஞாபகம்
உள் உற தவம் கனிந்து உறையும் கா அதே

#6
சீர் விளை புவி எழில் முகத்தின் சீர்மையால்
ஏர் விளை எசித்து நாட்டு அருகில் ஏந்திய
தார் விளை குழல் என கமழ் தண் தாது அவிழ்
கார் விளை நிழலொடு கரிய கா அதே

#7
காழகத்து அள் இருள் கதர் குளித்து ஒளி
வாழ் அகத்து எழுந்த மா மதி புத்தேள் எனா
சூழ் அகத்து இருண்ட கா தோன்றல் தோன்றி அன்பு
ஆழ் அக தகவினோர் நுழைந்து உள் ஆயினார்

#8
இழை இடை குளித்த தம் இளவல் ஏந்தினர்
மழை இடை குளித்த மின் என்ன வந்து பூம்
தழை இடை குளித்தனர் மலர்ந்த தாது தேன்
கழை இடை குளித்து இழி கள் ஒத்து ஓடவே

#9
கண் சிறை படுத்திய நிழல் செய் கா-இடை
மண் சிறை ஒழித்து அற வந்த மூவரை
பண் சிறை படுத்து இசை பாடி வாழ்த்தின
ஒண் சிறை புடைத்த புள் உவந்த ஈட்டமே

#10
பனி வளர் பூம் துறை பருகும் தேன் உக
தொனி வளர் யாழ் என பாட தும்பிகள்
கனி வளர் சினை-தொறும் கரிய யூகங்கள்
நனி வளர் ஆரிய நடம் செய்து ஏகினார்

#11
பரவ கதிர் வீசும் முகத்து இ மூவர் படர் பூம் கா
கரவ கடிது ஏக கனிகள் கொய்து அங்கண் திரிந்த
குரவ துகில் குளித்த குரம்பை முனிவர் எதிர்கொண்டு
விரவ கனிவு ஓங்க விருந்து ஓம்பினர் போல் விளம்புகின்றார்

#12
மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த வான் வடிவீர்
விண் சேர் இனம் தானோ மாக்கள் குலமோ விழைவு ஓங்கி
பண் சேர் இசை பறவை பாடி தவம் சேர் பதி சேர்ந்து
கண் சேர் அணி கடந்த கவின் நீர் சொல்-மின் உவந்தது என்றார்

#13
நசை சேர் வான் பதியோர் நாமே உடல் சேர் நடலை அறா
வசை சேர் மண் பதியோர் நாமே யூதர் மண்டிலத்தின்
மிசை சேர் பிரான் பணியால் எசித்து நேடி விரும்பிய புள்
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன்

#14
வைத்த திரு வீங்கும் எசித்து நாட்டின் வாயில் இதே
பொய்த்த வழி காட்டு இ பொழில்-கண் மயங்கா புடை வம்-மின்
துய்த்த அருள் உமிழும் முக நல்லிர் என்று சொற்றி மலர்
மொய்த்த தேன் துளிக்கும் வழி அம் மோனர் முன் நடந்தார்

#15
கான் ஆர் மலர் முகை கண் விழித்து நோக்கி கனி நகைத்த
தேன் ஆர் காவில் நெடு நெறி போய் தீம் சொல் செல் குறைய
மானார் மனம் என முள் மலிந்த வேய் ஆர் வனம் கடந்து
பான் ஆர் கதிர் கண்ட வெளியே கண்டு பரிவு அற்றார்

#16
கம் உகும் படர் கதலி கனிகள் நக்கும் கரும்பு ஒரு-பால்
கமுகும் பூகமும் ஆர் கனி முத்து அணிந்த கா ஒரு-பால்
அம் உகும் செம் கமல வாவி ஒரு-பால் அணிசெய்க
அம் உகும் சித்திர நல் கூடம் சென்றார் அ தகவார்

#17
வினைகள் மாறிய வண் தவம் செய் மோனர் விழைந்து இறுப்ப
சுனைகள் கண் குவளை இமையா நோக்க சுனை கரை மேல்
சினைகள் ஆகிய ஆயிரம் தூண் நாட்டி சித்திரங்கள்
நனைகள் தெளித்து எழுதி வனைந்த கூடம் நடு வதிந்தார்

#18
குடம் புரையின் தோன்றும் மதி கொழித்த கற்றை தெளித்து மணி
வடம் புரையின் சித்திரங்கள் வரைந்து தோன்றும் வடிவம் அதோ
படம் புரையின் தீட்டிய பொன் பாங்கார் நோற்ற பான்மை அதோ
சடம் புரையின் தோன்றிய வான் தளமோ தேறல் சால்பு அரிதே

#19
காவி அம் கண் கிளர் விளப்பான் இமையா நோக்கி கனிவு ஓங்கி
ஆவி அங்கண் உண்டு எனினும் நெடு நாள் மோனர் அண்டியதால்
ஓவியங்கள் மோனம் உறீஇ அவை கண்டாரும் ஓவியமாய்
மேவி அம் கண் பிறழாது விளைத்த இன்பால் வியப்பவரே

#20
அணி சாயல் ஈர் அறம் சேர்த்து அணிந்த மார்பு ஏந்து அரும் தவத்தோன்
பணி சாயல் வரைந்த உரு பலவும் சூழ பார்த்தன-கால்
பிணி சாயல் வாட்டிய மெய் பிணைவின் மாண்பு ஆர் நூறு அடிகள்
துணி சாயல் மலர் முகத்து துன்னி ஆசி சொற்றினர்-ஆல்

#21
துன்பு மிக ஐம்பொறியை துமித்த தன்மை சுடர் ஞானத்து
அன்பு மிக புடை சூழ்ந்த அரிய மோனர் அருந்துதிர் என்று
இன்பு மிக கனிந்த கனி இளம் தீம் கந்தத்தோடு அளித்த
பின்பு மிக அருள் மூத்தோன் பெயர்ந்த நாடு எ நாடு என்றான்

#22
திரு புகழே புகழ் மறையே திருவே நூலே குடி வைகும்
மரு பொழிலே விரை பணையே வளர் யூதேய நாட்டிலிருந்து
உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று
இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான்

#23
நாகத்தால் உண்ட மதி நாறா குன்றும் நவை ஒப்ப
மோகத்தால் உண்ட மனம் முதிர் பல் செல்வம் முரிந்து கெடும்
போகத்தால் விளை நசை தீ பொறாது தண் கா புக்கனம் என்று
ஆகத்து ஆர் அருள் மிக்க அதிட்டன் என்பான் அறைகின்றான்

#24
சிக்குருவை வித்திய பின் திண் காழ் ஆச்சா விளைவு ஆமோ
சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின்
இக்கு உருவை காட்டிய பூ எழுதும் காவும் சுடும் அன்றோ
ஒக்கு உருவை ஒழித்து நசை ஒழியும் என்றான் மலர் கொடியான்

#25
பிறந்த நாள் துயர் ஒக்க பிறந்து பேரா துணை வைகி
சிறந்த நாள் அகலா நூல் திறம் கொண்டு ஆசை அகன்றனரே
இறந்த நாள் உய்வர் அலால் இருந்த நாட்டில் துயர் ஆற்றார்
பறந்த நாள் கூண்டு ஒழியும் பறவை என்றான் அதிட்டன் என்பான்

#26
நசை அட்டு நசை கடந்த நயம் செய் வான் தாள் அணுகின் மெய்
பசை அட்டு வாழ்வர் அலால் பகைத்த பாரில் வதிந்தன நாள்
வசை அட்டு வாழ்பவரே மலி நீர் சூழ்ந்த மலை நண்ணி
அசைவு அட்டு நிலை பெறுதல் அன்ன என்றான் மறை வடிவோன்

#27
போர் ஏந்தி பகைத்தன போல் புணரி பல் நாள் புடை புடைப்ப
வார் ஏந்தி முகில் புதைத்த வயிர குன்றும் குன்றும் அன்றோ
தார் ஏந்தி வசை ஏந்தும் சடத்த மண்ணோர் தளிர்த்த பகை
சூர் ஏந்தி நிற்பர் எவர் சொல்-மின் என்றான் தொல் உணர்வான்

#28
நீர் ஏந்தி மலர் மிதக்கும் நிகரா வல்லோன் கை அருளின்
சீர் ஏந்தி எவர் நில்லார் தெறுநர் தெவ்வும் திரு பயத்தால்
ஏர் ஏந்தி வரைந்திட்ட இன்ன காதை காட்டும் என்றான்
பார் ஏந்தி அணி திலதம் என நல் சீல படலையினான்

#29
பொன் சாயல் அரிது அங்கண் பொறித்த காதை என்றன-கால்
வில் சாயல் கண் கனிய விரும்பி நோக்கி மதி புத்தேள்
தன் சாயல் மதி வல்லோய் தளிர்ந்த ஐயம் தீர் சிறிது
புன் சாயல் சொல்வல் என புகல் மீண்டு உற்றான் தவம் மூத்தோன்

#30
புதி வளர் திங்கள் கோட்டு புரை வளர் அசனி வில்லான்
கதி வளர் வளி முன் பாய்மா கடந்த போர் முகத்து ஏறு அன்னான்
நிதி வளர் மகுடம் பூண்ட நீபகன் என்னும் கோமான்
துதி வளர் துறவு வெஃகி துணர் வளர் காவில் வந்தான்

#31
நீள் அரி மதர் கண்ணார்-தம் நெடும் பகை துறத்தல் உள்ளி
வேள் அரிது அமர்ந்த போரில் வெற்றி கொண்டு வந்து மீண்ட
கோள் அரி நடப்பதே போல் கோன்மையும் நகரும் நீக்கி
வாள் அரிது இடையில் பூட்டி வந்து இவண் தனித்து சேர்ந்தான்

#32
தெள் உற மின்னி ஆர்த்த செல் உறும் படர்ந்த நெற்றி
கள் உற மலர்ந்த கானம் கண்டு அருகுறும்-கால் வேட்கை
உள் உற புதிய தென்றல் உந்து வேள் எதிர் கொண்டு அன்ன
அள் உற வாசம் கான்ற அனிலம் ஆங்கு எதிர் கொண்டானே

#33
புலம்பு உரை கேட்டு நண்ணி பூம் பொழில் ஒருங்கும் சூழ்ந்து ஈர்
அலம் புரை முகைத்த தேன் பூ அலர் இரு கரையில் விம்மி
சிலம்பு உரை சிலம்பி ஓட தீம் திரை சுருட்டும் கங்கை
கலம் புரை மணி பொன் மார்பன் கண்டு அதை கடக்கல் ஆற்றான்

#34
அவா உறீஇ நொந்து நிற்ப அம்புலி குழவி வெண் கோட்டு
உவா உறீஇ அமைவ நோக்கி உரம் கொடு உந்தி அப்பால்
இவா உறீஇ இழிந்த பின்னர் இயைந்த தன் வயத்த மாவை
சுவா உறீஇ விழுங்கல் கண்டான் துளங்கு பொன் குன்ற தோளான்

#35
மலை புறங்கண்ட மார்பன் மனம் வியந்து அயிர்ப்பின் நோக்க
அலை புறங்கண்ட கங்கை அரவு எழ அளவு_இல் விம்மி
சிலை புறம் கண்ட கூலம் சிவணி மேல் புரள கண்டே
இலை புறம் கண்ட கா உள் இயைந்த வாள் ஏந்தி புக்கான்

#36
பொன் கலத்து அரிட்டம் ஏந்தி பூத்த கா நுழையும் போழ்தில்
சொல் கலத்து இனிய பாடல் தொடர்ந்த கின்னரம் பண் மற்று அ
பல் கலத்து எழுந்த ஓதை பரிவு அற இமிழி கேட்டு
வில் கலத்து அலர்ந்த இ கா விரும்பி வந்தனர் ஆர் என்றான்

#37
கா எலாம் முகைத்து பூப்ப கால் எலாம் சவரம் வீச
பூ எலாம் நறும் தேன் தூவ புள் எலாம் விளித்து பாட
கூ எலாம் நிகரா வண்ண கோல நீள் நெறி போய் அப்பால்
மேவு எலா வனப்பு வாட்டும் வியன்ற ஓர் வெளியுள் சென்றான்

#38
மோட்டு இளம் தேறல் தூவி முகை தரு ஒழுங்கின் சூழ
நாட்டு இளம் பிடியார் சாயல் நகை மயில் அகவி ஆட
சேட்டு இளம் சினைகள்-தோறும் திரு மணி சாயல் பைம் பூ
வேட்டு இளம் விழிகள் விண்ட இளம் தரு நடுவில் கண்டான்

#39
மீன் நிறத்து அலர்ந்த பைம் பூ விரை நிறத்து ஒழுக தீம் தேன்
கோன் நிறத்து இடையில் வாய்ந்த கொழும் தரு அணுகி நோக்கி
கான் நிறத்து அலர்ந்த சாந்த கடி மரம் என்று நிற்ப
பான் நிறத்து இனிய பண் சேர் பாடல் கேட்டு ஒல்கி பார்த்தான்

#40
சூழ் அக மரங்கள்-தோறும் சூழ் உளைந்து ஈன்றதே போல்
காழ் அகம் பிளந்து சாய்ந்த காழக முகிலின் கூந்தல்
கேழ் அக உடு கண் மின்னின் கெழு நுசுப்பு அணி தூசு ஏந்தி
வாழ் அகம் மலர்ந்த நூறு மாதரே வருவ கண்டான்

#41
நிழல் எடுத்து உலவு விண்மீன் நிறை மதி சூழ்ந்ததே போல்
அழல் எடுத்து எரிக்கும் கண்ணார் அரசனை வளைத்து வீணை
குழல் எடுத்து இனிய ஓதை குயில் என குயில நூறும்
கழல் எடுத்து ஆடி பாடி கனிவு எடுத்து இனைய சொன்னார்

#42
தூசு அனை மரங்கள் சூழ்ந்த துணர் பொழில் முன்னி வில் செய்
காசு அனை விருப்பம் பூண்ட கருத்து உனை மறவா வெஃகும்
சாசனை உவப்ப வந்தாய் சாசனை உவப்பின் காவும்
ஈசனை கண்டதே போல் இன்பு எழ காணாய் என்றார்

#43
பாண் நெறி இவற்றை பாட படர்ந்த சந்தனமும் வீறி
வாள் நெறி பழித்த நீள் கண் மடந்தையே புறப்பட்டு எய்த
வேள் நெறி ஒழுகி தான் முன் விழைந்த சாசனையின் சாயல்
கோள் நெறி முகத்தில் கண்டு குலைந்து அயிர்ப்புற்று நின்றான்

#44
வாள் அணி கயல் கண் மின்ன மணி அணி குழை வில் வீச
நீள் அணி தயங்கி நாற நிற துகில் ஒளிகள் விம்ம
காள் அணி ஏறி வேல் சாயல் கனிவு உகுத்து உயிர் உண் தீம் சொல்
வேள் அணி திலதம் ஒத்தாள் வீணை நல் குரலில் சொன்னாள்

#45
மடங்கல் ஏறு உன்னை என்றார் மடங்கலின் கொடியன் ஆனாய்
தடம் கையே கொலையில் விஞ்சி தளர்ந்த என் உயிர் கொன்றாய் என்
குடம் கையே மறந்தாய் உன்னை குணித்து நான் தேட முன்னி
முடங்கலே விளை கான் வந்தேன் முற்றவோ இரங்காய் என்றாள்

#46
மட்டு உயிர் பதும வாயாள் வயிர குன்று உருக தேம்பி
நெட்டு உயிர்ப்பு உயிர்த்து விம்மி நெய்த்து இடை துவண்டு வாட
அட்டு உயிர் பசை உண் பேய்கள் அரும் தவம் தவிர்க்க மாயை
நட்டு உயிர்ப்பன என்று எண்ணி நர_பதி தேறினானே

#47
தேறினான் சுழற்றும் வாளால் சிதைவு உக முளைத்த சாகி
நூறி நான் துமிப்பல் என்ன நுண் இடை அணங்கும் தீம் தேன்
ஊறி நான் தெரிந்த சாந்தம் ஒழியவோ செய்வாய் என்று
கூறினாள் ஒருங்கு கையால் கொழும் தரு தழுவினாளே

#48
பூம் கணை உழுத நெஞ்சம் புண்பட உருவி பின்னர்
பாங்கு அணை மரம் கொய்து ஒக்க பகைத்த சாசனையும் கொல்வாய்
தீங்கு அணை கொடியோய் என்றான் செல்வனும் நகைத்து உன் மாயை
ஈங்கு அணை கொடுமை கற்றேன் என்று வாள் வீசினானே

#49
நாறு செம் மணியின் சாயல் நயப்பு எழ நின்றாள் கொண்மூ
கீறுமை உருவம் காட்டி கிளைத்த தோள் இரு_நூறு ஆக்கி
நூறு கை வடியாள் வீச நூறு கை கிடுகை ஏந்த
சீறு நெய் எயிற்று நீள் கூன் திங்களே தோன்ற நின்றாள்

#50
பண் கிளைத்த இசையின் பாடல் பணித்த மற்று அரிவையாரும்
கண் கிளைத்து எழுந்த செம் தீ கதத்த நூறு அரக்கர் ஆகி
விண் கிளைத்த இடி ஏறு எஞ்ச விபுலை சூழ் நடுங்க ஆர்த்து
புண் கிளைத்து ஒழுகு நெய்த்தோர் பொழி படை ஏந்தி நின்றார்

#51
கார் எழும் தன்மை வான் செய் கதிர் புதைத்து இருள வான் மேல்
போர் எழும் தன்மை மின்னி புயல் கிழித்து இடிகள் ஆர்ப்ப
நேர் எழும் தன்மை பூங்கா நிரயம் நேர் வெருவு வீங்க
சூர் எழும் தன்மைத்து அஞ்சா துளங்கினான் வயிர நெஞ்சான்

#52
உன்னிய தவத்தை பேண ஒழிந்த தீ இனிமை வெஃகேன்
துன்னிய இடுக்கண் அஞ்சேன் சுருதி இது எனக்கு என்று ஓங்கி
மன்னிய துணிவில் தோற்ற மண்ணைகள் நரகில் வீழ்க
மின்னிய வடிவை வாளால் வியன் தரு வீழ கொய்தான்

#53
கொல் வினை அலகை போய் தன் கொள்கையில் கானம் தோன்ற
புல் வினை அறுப்ப நோற்றான் பொலிந்த நீபகன் என்பானே
நல் வினை பகைத்த பேய்கள் நயமொடு வெருவு காட்டி
மல் வினை ஒழிக்க ஓர்ந்த மாயையே இன்றும் எஞ்சா

#54
வெம் கண் நேர் இரவி ஒத்த விடலையே நெடு நாள் நோற்ப
இங்கணே உறைந்த போழ்தில் இவை எலாம் வரைவித்தான்-ஆல்
அங்கண் நேர் எழில் பார்த்து அல்லால் அறிகிலேம் அறிதியேல் வெண்
திங்கள் நேர் தெளித்த நூலோய் செப்புதி என்றான் மூத்தோன்

#55
பண் கால் இசை படுத்தி பகர்ந்த உரை வளன் கேட்டு
மண் காவலற்கு ஆய முறையில் அறம் மலி நீரார்
விண் காவலன் அருளால் வினை கொள்ளார் என காட்ட
தண் கா எழுதியவை சாற்றுதும் என்று உரை கொண்டான்

#56
மின் ஆர் கதிர் தெளித்து ஈங்கு ஓவியமாய் வேந்து எழுதி
பொன் ஆர் மணி குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும்
இன்னார் என் குலத்து முந்தையர் ஆம் இவர் சரிதை
முன்னார் மொழி பிறழா மொழிகுதும் நான் கேள்-மின் என்றான்

#57
ஐ_ஐ_ஞூறு தொடர் நால் நூற்று ஆறு ஆண்டு முனர்
பொய்யை நூறு புகழ் பொலி வேத நெறி வழுவா
மெய்யை நூறு தவம் விளைத்த அரும் வர தொகையான்
மையை நூறு உவப்பில் வாழ்ந்திருந்தான் யகோபு என்பான்

#58
சீர் ஆர் புகழ் மிக்கோன் செய் தவத்தோன் முன் கொண்ட
தார் ஆர் அணங்கு அளித்த தனயரும் ஈர்_ஐந்து பினர்
கார் ஆர் பின் குழலாள் களித்து ஈன்ற இருவரினுள்
ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே

#59
அறம் கொண்டு இவன் வளர்ந்தே ஆங்கு வரைந்திட்டன போல்
உறங்கும் பொழுது ஈர்_ஐந்து_ஒரு மீனும் இரு சுடரும்
இறங்கும் தன்மையில் வந்து இறைஞ்சுவ போல் இணை தன் தாள்
பிறங்கும் கதிர் வாழும் பெற்றியை கண்டேன் என்றான்

#60
தெரியா நாம் தந்தை தாய் உனையோ தெண்டன் இட
எரி ஆர் சுடர் தொழுதது என பகைத்தார் மூதுனரே
பெரியார் உடை செல்வம் காண் சிறியார் பெரும் பகையே
உரியார் ஆவர் என உரைத்தார் நூல் உடை நீரார்

#61
தேறா பகை முற்றி திலத்து அவனை வர கண்டே
ஈறாய் கண்ட கனவு எவன் செய்யும் காண்-மின் எனா
ஆறா சடத்து அன்னார் அவனை இட ஓர்ந்து பினர்
கோறா கொல்வதற்கு கூவலினுள் வீழ்த்தினரே

#62
அழுவான் அடி விழுவான் அயர்ந்து ஒருங்கு கை கூப்பி
தொழுவான் நனி துதிப்பான் சுழன்று ஏங்கி விம்முவன் ஆம்
விழுவான் என உதைத்து வேங்கை அனார் வெகுண்டு அற நூல்
வழுவானை தூக்கி வற்றிய தாழ் குழி பெய்தார்

#63
இப்பால் வரைந்த கிணற்று ஆணரனை இட்டன பின்
அப்பால் வரித்த படி அதர் வர வாணிகர் கண்டு
துப்பால் ஈங்கு ஒழிந்தால் துறும் பொலிசை யாது இவர்க்கு
விப்பாம் என எடுத்து விற்று அளித்தார் அ கொடியார்

#64
நிந்தைக்கு அஞ்சாதார் ஆணரன் முன் நீடு உடுத்த
விந்தைக்கு எழுதிய தூசு இற்று உதிரம் மேல் சிதறி
தந்தைக்கு அது காட்டி தம்பி உடையோ இது எனா
சிந்தைக்கு இரங்கினர் போல் சின புலியோ செறித்தது என்றார்

#65
ஆங்கு பொறித்த படிக்கு அவை கேட்ட முதிர் தாதை
தீங்கு பொறித்த துகில் திளைப்ப கண்ணீர் பொழிய
பாங்கு பொறித்த முக பாலனுக்கு அன்று இரங்கி அழும்
ஈங்கு பொறித்த முறை காண்-மின் என்றான் இணர் கொடியான்

#66
ஏங்கு எழும் ஒலியோடு யாவரும் இரங்க இன மணி தவிசின் மேல் எழுந்து
தூங்கு எழு நுரை அம் பூம் துகில் குழைய துளி மது புயல் குழல் குழைய
பாங்கு எழு மணிகள் குழைய வாய் குழைய பதும வாள் முக நலம் குழைய
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான்

#67
விரை உமிழ் நெடும் கான் வாணிகர் கடந்து விளை திரு எசித்து நாடு அடைந்து
வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில்
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று திரு தகும் பூத்திபாற்கு ஆள் ஆய்
புரை உமிழ் துயர் நீத்து அற துணை பிரியா புவி நுதல் திலதமாய் வளர்ந்தான்

#68
திடம் புனைந்து அமைந்த அறம் தரும் பயனே செய்தவர்க்கு அன்றியும் அவர்-தம்
புடம் புனைந்தவர்க்கும் வான் சுடர் ஒளியால் பூமியும் ஒளிர்ந்து என தகும்-ஆல்
படம் புனைந்து என்ன ஆணர் ஆணரன் அ பதி அகத்து எய்திய பின்னர்
தடம் புனைந்து உயர பூத்திபான் தானும் சால்பு உயர் திரு பயன் அடைந்தான்

#69
பாண் நெறி வழுவாது ஆடலே இன்பம் பயக்கும் ஆம் முடவர்க்கும் போல
கோள் நெறி வழுவாது இலங்கு அற தொகுதி குணிக்க அரும் ஆணரன் மாட்சி
சேண் நெறி வழுவா நாய்கனே கண்டு சிறந்த அன்பு இயல்பில் ஓர் மகவின்
மாண் நெறி வழுவா திருந்திய செல்வம் மனை எலாம் அவன் கையில் பணித்தான்

#70
தோள் கடைந்து அழுத்தி அணி மணி சாயல் துளங்கிய ஆணரன் மாமை
வாள் கடைந்து அழுத்தி மதர் விழி நாய்கி மருள் உற கண்டு கண்டு உளத்தை
வேள் கடைந்து அழுத்தி ஏவிய கணையால் விருப்பு உறீஇ கற்பு எழில் சோர
கோள் கடைந்து அழுத்தி கொழும் சுதை கோலம் கொண்ட மண் பாவையோடு ஒத்தாள்

#71
பணி நிறத்து அருகில் மருவிட விளித்து பணித்தவை அவன் செயும்-காலை
மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தில் மயல் நிறத்து அருந்திய நஞ்சால்
பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா பெண்மையின் காணி ஆம் நாணம்
அணி நிறத்து அமைந்த சால்பினால் பேசா அயர்ந்து நெட்டு உயிர்ப்பொடு சோர்வாள்

#72
வீங்கிய உயிர்ப்பின் பொங்கிய காம வெம் தழல் வீக்கலும் ஆற்றாது
ஏங்கிய தன்மை விரை கமழ் மது பெய் இள முகை சேக்கையில் சாய்ந்து
தாங்கிய தோட்டி அழுத்தி வெல் பாகன் சாய்த்து வீழ்ந்தும் உவா என நாணம்
நீங்கிய அவா உள் பொங்கலின் விழித்த நினைவு உணராது அவன் சேர்ந்தான்

#73
பார்த்தனள் பார்த்த உவப்பொடு நாணி பகைத்த நாணமும் சினந்தால் போல்
கூர்த்து அனல் பொங்கி முகம் எலாம் சிவந்து குயிலினும் குழலினும் இனிதாய்
நீர்த்தன குதலை சொல் கொடு நெடு நாள் நினைத்தவை மறைவு அற சொன்னாள்
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு ஆணரன் நாணி நொந்து உரைத்தான்

#74
ஆர் முகத்து எனக்கு ஓர் ஐயன் ஆம் நாய்கன் அனைத்துமே உனை அலாது அளித்த
சீர் முகத்து இன்னாது அவற்கு நான் கருத சிந்தையும் இயலுமோ என்று இ
போர் முகத்து ஓடி ஒளித்தனர் வெற்றி புணர்ந்து உய்வார் என்ன உள் தேறி
கார் முகத்து ஒளித்த மின் என ஒல்கி கரந்து உய்யல் கருதினான் மாதோ

#75
பூம் கணையாய் என் நெஞ்சம் ஈர்த்தன பின் புகர் விழி ஒளிப்பவோ என்னா
ஓங்கு அணை ஐ என்று ஒழிந்து பாய்ந்து அவன் தன் உடை துகில் சிக்கென பிடித்தாள்
பாங்கு அணை துகிலும் பகை என எறிந்து பகழியும் பின்ற முன் ஓடி
தீங்கு அணை மடவாட்கு இரங்கியது அல்லால் செயிர் நசைக்கு இரங்கு இலாது ஆனான்

#76
நகைத்தன தன்மைத்து ஒளித்தனன் என்று நசை கெட பெரும் பகை வீங்கி
முகைத்தன தன்மைத்து என் முகம் வெறுத்து முயங்கலும் மறுத்த தீ கொடியான்
பகைத்தன தன்மைத்து என்னையே எண்ணி பணிகுவான் என கொடிது உணர்ந்தாள்
அகைத்தன தன்மைத்து அன்பிற்கும் பகைக்கும் அளவு_இலா பொங்குவர் மடவார்

#77
வேட்கையும் சிதைந்த நாணமும் சோர்ந்த மேனியே அறத்தின் சோர்ந்து என்ன
பூட்கையும் எஞ்ச கொடிய வெம் சினத்தாள் புருடன் முன் குழல் நலம் சிந்தி
பீள் கையும் இரு கண் புதைத்து அழுது இந்தோ பிரிய நின் தொழும்பனே எம்-தம்
வாள் கையும் புகழும் எஞ்ச இன்று என்னை வழுவுற நினைத்தனன் என்றாள்

#78
முற்றுபு கனன்ற முகத்து எழும் வெகுளி முரண் கொடு பூத்திபான் ஆர்த்து
பற்றுபு சிறையில் கதும் என பெய்-மின் பகைவரின் கொடியனை என்ன
சொற்றுபு கொடியார் மாசு_இல் ஆணரனை சுளித்து அடித்து இழிவுற கச்சின்
சுற்றுபு கொடு போய் சிறையினுள் திங்கள் துளி முகில் புக்கு என புக்கான்

#79
மின் நிறத்து இங்கண் எழுதிய மங்கை விளம்பிய மங்கை தான் அங்கண்
கல் நிறத்து அரியின் கொடியரே சிறை செய் கசடு இல ஆணரன் எழுதி
இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும்
சொல் நிறத்து அழன்று பெண்மையை பெண்மை சொற்றிலீர் கொடியதே என்றார்

#80
மட நடை பெண்மை நட்பு என உரைத்தார் வளர் உணர்வு உயரிய நீரார்
தட நடை நிகரான் இழிவு உறி எஞ்ச சால்பு அவள் அன்பு காட்டிய பின்
விட நடை வஞ்சத்து அடும் பகை செய்தாள் வினை இதேல் இனிது என பெண்மை
பட நடை எழிலை விரும்பிலீர் என்ன பாணிக மா முனி சொன்னான்

#81
முன் பட உரைத்த தன்மையின் அல்லோ முழுவதும் நாடு ஒழிந்து அல்லால்
வில் பட வழங்கி வளம் பெறல் அரிய வினை என அதிட்டனும் கூற
மல் பட நிமலன் செய் அருள் தன்னால் வரும் பகை திரு நலம் பயத்தல்
நல் பட அருளி கேள்-மின் நீர் என்ன நறு மலர் உயர்த்தனன் நவின்றான்

#82
நறை பட்டு ஆவி செய் நல் அகில் வெந்த-கால்
சிறை பட்டு அ சிறை பட்டு இல தேர் அற
துறை பட்டு ஆணரன் தானும் துளங்கினான்
குறைபட்டார் எவர்க்கும் குறை ஆற்றினான்

#83
தேர் எழும் சுடர் சேர் அ இடம்
பேர் எழும் கதிர் பெற்று விளங்கும்-ஆல்
ஏர் எழும் கதி வீட்டின் இன்னான் உறை
சூர் எழும் சிறை தோன்றியது ஆம் அரோ

#84
ஒளி பட பசும்பொன் உலை பெய்து என
தெளி பட சிறை பெய்தன ஆணரன்
களி பட கருத்து ஏந்திய காட்சியால்
அளிபட கனிந்து உம்பர் ஒத்து ஆயினான்

#85
நீர் புதைத்து ஒளி நேமி எழுந்து அவிர்
சீர் புதைத்த சிறை நெடு நாள் உறீஇ
ஏர் புதைத்த இ ஓவியத்து ஈங்கு அவன்
கார் புதைத்த மின் ஒத்து எழ காண்-மினே

#86
மன்னன் அன்று மனம் கெட கண்டவை
சொன்ன தன்மையின் தொல் உரை நூலினர்
தன் அமைச்சர் தபோதனர் கேள்வியர்
இன்னது என்று கண்டு எய்திலர் ஆயினார்

#87
குலைய மன்னவன் நூல் குரவர் தமின்
மலைய முன் சிறை வைகிய மைக்குணன்
கலை அது இந்து என ஆணரன் கண்டு அறிந்து
உலைய வேண்டு இல என்று மற்று ஓதினான்

#88
தூய தன்மை உளத்து உறும் காட்சியால்
ஆய தன்மையில் ஆவது அறிந்தவன்
தீய தன்மை இலா சிறை பட்டு உறை
நேய ஆணரன் கூவும்-மின் நீர் என்றான்

#89
மன்னன் உட்பட வையகம் வாழ்வுற
அல் நவத்து எழும் எல்லை ஒத்து ஆணரன்
சொன்ன அ சிறை நீத்து தொழ கலன்
மின்ன மிக்கு எழும் வேந்தன் விளம்பினான்

#90
ஒளிபட்டு ஒள் பளிங்கு ஒத்து இழிவு இன்றி நீ
களி பட்டு ஏற்றிய தேவன் செய் காட்சியால்
தெளி பட்டு ஈங்கு இவர் தேர் இல கண்டவை
வெளி பட்டு ஓத விளம்புதல் கேள் என்றான்

#91
பூ மலிந்து பொழில் கணின் மேய்ந்த ஏழ்
ஆ மலிந்தது கண்டது அ ஆ எலாம்
ஈ மலிந்து மெலிந்த பின் ஏழ் பசு
கா மலிந்து விழுங்கல் கண்டேன் என்றான்

#92
பொழுது எலாம் தனக்கு ஓர் பொழுதாய் எலாம்
பழுது இலா உணர் உம்பர நாதன் செய்
வழுது இலா தெருளால் வகுப்பேன் எனா
தொழுத ஆணரன் பின் இவை சொற்றினான்

#93
பருத்தது என்று முன் பார்த்த ஏழ் ஆ எனில்
கருத்தகும் புயல் காலம் பொய்யாமையால்
உருத்தகும் விளைவு ஓங்கி ஏழ் ஆண்டு ஒரு
வருத்தம் இன்றியும் வாழும் இ நாடு அன்றோ

#94
மெலிவொடு உற்ற பின் ஏழ் நிரை வேய்ந்து தாம்
மலிவொடு உற்ற முன் ஏழ் நிரை மாந்தலால்
பொலிவொடு உற்ற ஏழ் ஆண்டு உள பூரியை
கலியொடு உற்ற ஏழ் ஆண்டு கறிக்கும்-ஆல்

#95
கண்டது எண்ணி கலக்கம் அற்று ஆற்றலே
மண்ட வண்மையின் மன்னர் இயல்பு அரோ
அண்ட மன்னன் அளித்த இ காட்சியை
கொண்ட தன்மையின் கோது அற ஆள்-மினே

#96
மலிந்த ஆண்டினில் ஈட்டலும் மற்று அவை
மெலிந்த ஆண்டில் வகுத்தலும் மிக்குறும்
பொலிந்த ஆண்மை பொருந்திட தேருதி
வலிந்த நாட்டு உயிர் ஆய மன்னா என்றான்

#97
நூல் வழி உரைத்த தீம் சொல் நொய் இதழ் அவிழ்ந்த தேன் போல்
வேல் வழி மின் கை வேந்தன் வியப்பினோடு இமிழின் கேட்டு
பால் வழி நுரை அம் பைம் பூ பழித்த பொன் துகிலை போர்த்து
நால் வழி அணிகள் பூட்டி நயப்பு எழ தழுவினானே

#98
உன் அலால் தெய்வம் அல்லால் உணர்வு_அரும் பயன்கள் சொன்னாய்
நின் அலால் பிறர்கள் யாரே நிறைந்து இவை செலுத்தும் பாலார்
என் அலால் பிறர்கள் யார்க்கும் இறைவன் நீ உலகம் காக்க
மன் அலால் எவையும் தந்தேன் வாய்ந்த நூல் வடிவோய் என்றான்

#99
வார் வளர் முரசின் சாற்றி வளர் சிறப்பு இயற்றி பின்னர்
போர் வளர் சேனை சூழ புகர் முகத்து எருத்தின் பைம்பொன்
நீர் வளர் தவிசின் ஏற்றி நிரையின் ஈங்கு எழுதப்பட்ட
சீர் வளர் வண்ணத்து அங்கண் சிதைவு இலான் தோன்றினானே

#100
அருள் ஒன்றும் சார்ந்த நல்லோன் அரும் சிறை பட்ட போழ்தும்
பொருள் ஒன்றும் செங்கோல் ஓச்சி பொருநனாய் பொலிந்த போழ்தும்
மருள் ஒன்றும் புலம்பல் தானும் மகிழ்வும் உள் தோன்றல் இன்றி
தெருள் ஒன்றும் உணர்வின் மிக்கோன் திருவுளம் என உள் தேர்ந்தான்

#101
பொலம் தரு வளர்ந்த தன்மை புடை எலாம் நிழற்றும் போல
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும்
வலம் தரு செல்வத்து அன்பும் வளர்ந்து எலா உயிர்கள் பேணி
நிலம் தரும் இனிமை உண்டு நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான்

#102
பால் கலந்து உணும் ஏழ் ஆண்டு ஆய் பசி உயிர் உணும்-கால் ஆகி
கால் கலந்து ஒழுகும் மாரி கான்ற ஓர் துளியும் இன்றி
நூல் கலந்து உரைத்த வண்ணம் நொந்து உயிர் எவையும் எஞ்ச
சேல் கலந்து இழி நீர் நாட்டில் சேர்த்தவை வகுத்தல் செய்தான்

#103
பார் முழுது உண்ணும் கூர்த்த பசி-தனை உண்ணும் அன்னான்
சீர் முழுது அகன்ற அன்பின் சிறப்புற அளித்த நாடே
சூர் முழுது அழுங்கு மற்ற தொலைத்த நாடு உய்ய எய்தி
தார் முழுது இலங்கு மார்பன் தமையர் ஆங்கு இருவர் உற்றார்

#104
உற்றவர் தம்மை தானே உணர்ந்து கண்டு இருப்ப தன்னை
மற்று அவர் உணர்கிலாமை மதித்தனன் எவர் நீர் நும்மை
பெற்றவர் எவர் எ நாடு பிறந்தது எத்துணை என்று ஓத
விற்றவர் கேட்டு தாளை இறைஞ்ச வீழ்ந்து ஒருவன் சொன்னான்

#105
எல் கொண்ட கனய நாட்டில் யூதர் நாம் யாக்கோபு என்பான்
முன் கொண்ட குழலாள் ஈன்ற முளைகள் ஈர்_ஐந்தும் ஆனோம்
பின் கொண்ட நல்லாள் தந்த பிள்ளை ஒன்று அகன்றான் பின்னர்
வில் கொண்ட தரளம் ஒப்ப மீள ஒன்று உதித்தது என்றான்

#106
இனையன கேட்டு தன்னை ஈன்றனள் பின்னர் ஈன்ற
தனையனை காண வெஃகி தந்த பின்_மகன் வந்து அல்லால்
உனை அன நாட்டில் போக்கேன் உணவு இனி அளியேன் என்னா
அனையன செல்வன் கூறி அழுங்கி மற்று ஒருவன் போனான்

#107
வெறிபட்டு ஆர் மதுவின் நாட்டில் விளைந்த நோய் கேட்ட தந்தை
பொறி பட்டால் அலர் பூ நையும் போல் உளம் அழுங்க வாடி
மறி பட்டான் மீட்க வேண்டும் மறு உணவு அடைய வை வேல்
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான்

#108
எஞ்ச நொந்து அழ தாய் தந்தை இரிந்த தம் நாளில் வந்த
பெஞ்சமின் என்னும் தோன்றல் பெயர்ந்து போய் பவள குப்பை
அஞ்ச மின் முகத்து நிற்ப ஆணரன் முகமன் நோக்கி
விஞ்ச அன்பு உருகி பின்னர் விருந்து இவர்க்கு ஓம்பினானே

#109
ஓம்பிய விருந்தில் வைத்த ஒளி மணி கலமும் அன்னார்
சாம்பிய விலையின் பொன்னும் தம்பி-கண் ஒளித்து வைப்ப
காம்பிய அவரும் போகில் களவர் கை பிடி-மின் என்ன
கூம்பிய படைஞர் மொய்ப்ப குழைவுற குலைந்து நின்றார்

#110
புரந்த நாடு ஒழியேம் என்பார் பொதி எலாம் நோக்கீர் என்பார்
கரந்த நாம் அல்ல என்பார் களவனை கொல்-மின் என்பார்
பிரந்த மானவர் சூழ் நாடி பெஞ்சமின்-இடை கள்வு உண்டு ஆய்
பரந்த மா முகில் விட்ட ஏறு பட்டு என மயங்கி நின்றார்

#111
தணர்ந்த இ மகனும் போகின் தாதை தாய் உய்யார் என்பார்
புணர்ந்த எம் கொடுமையால் முன் புலம்பி ஆணரன் கை ஏற்றி
உணர்ந்த சொல் கேளேம் என்பார் உயிர் கொல்லா கொன்றேம் என்பார்
மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார்

#112
பேர் நலம் பொறித்த குன்றில் பெரு விளக்கு ஆக பைம்பொன்
ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று ஓங்க
தார் நலம் பொறித்த மார்பில் தழல் சினம் புழங்கினால் போல்
கூர் நலம் பொறித்த அன்பின் கொடுத்த நன்று ஒழிந்தீர் என்றான்

#113
உய் வகை இன்றி அண்ணர் உயிர் இலாது அடி வீழ்ந்து ஏற்றி
பொய் வகை செயிர் இதேனும் புகர் இல் ஓர் தம்பி நோக
மை வகை கொடுமையால் யாம் வஞ்சமே முடித்த பாவம்
மெய் வகை பயத்த தீமை விளைந்தது இன்று ஐயா என்றார்

#114
மணி திறத்து எழுந்த தோளான் மயங்கு இவர் துயரம் கண்டு
பிணி திறத்து இசைத்த சொல்லும் பெட்பு எழ கேட்டு தானும்
அணி திறத்து இலங்கு மார்பில் அன்பினை ஒளிக்க ஆற்றா
துணி திறத்து அலர்ந்த பூம் கண் துளித்த நீர் தூறிற்று அன்றோ

#115
அட்டு என நீவிர் விற்ற ஆணரன் அவன் தான் நான் என்றிட்டு
என துணுக்கென்று அன்னார் இடித்த கார் கிழித்த ஏறு
பட்டு என உயிர் பட்டால் போல் பாசறை குளிப்ப இன் நீர்
மட்டு என மலர் கண் தூவ மார்புற தழுவினானே

#116
தீது நீர் விதைத்த வேலி செல்வ நீர் விளைத்தது அன்றோ
கோது நீர் நினைத்த வண்ணம் கோது நான் குணிக்கல் செய்யேன்
தாது நீர் ஒழுகும் சாகி தனை கொய்வார் நிழற்றும் போல
யாதும் நீர் அஞ்சல் வேண்டா இயல்புற அளிப்பல் என்றான்

#117
தூம்பு உடை தட கை மாவும் துரகமும் தசமும் சாடும்
கூம்பு உடை கொடிஞ்சி தேரும் கொடி குடை பலவும் போக்கி
வீம்பு உடை புலமை நீரான் விளித்த தாய் தாதை தம் தாள்
தேம் புடை கண்ணி சாற்றி தெண்டனிட்டு உவப்ப செய்தான்

#118
தான் மலர் முகத்தில் ஓடி தாதை தாய் தமர்கள் யாரும்
கோன் மலர் அடி முன் காட்ட கோன் தமராக நோக்கி
தேன் மலர் மருத வேலி சிறப்பு எழும் நாட்டை தந்து
கான் மலர் விரி கா அன்ன கடவுள் செய் நிழலில் வாழ்ந்தார்

#119
பணி முகத்து உரைத்த நீரால் பைம் கதிர் தெளித்த கோலால்
மணி முகத்து எழுதப்பட்ட வளம் கதை ஒழுங்கின் நோக்கீர்
பிணி முகத்து இறைவன் செய்யும் பெரும் பயன் அருளின் நாட்டில்
அணி முகத்து ஒருவன் செய்த அறம் உலகு அளித்தது என்றான்

#120
சேற்று உறை தாமரை விரி செ ஏடு வான்
வீற்று உறை வெம் கதிர் விழுங்கிற்று ஆம் என
நூல் துறை புலமையோன் நுண் தன் வாய் உரை
ஊற்று உறை இனிமை அ முனிவர் உண்டு உளார்

#121
உண்ட தேன் அருகு நின்று உகுத்து யாழ் ஒலி
கொண்ட தேன் இனிது இசை பாடும் கொள்கை போல்
கண்டு அதே உணர்ந்து என கனிந்து கேட்டன
பண்டு அதே உணர்ந்து பல் பலவும் ஓதினார்

#122
கோன் செயும் துணை உயிர் கொல்லும் கூற்றம் ஆம்
கான் செயும் வனம் சுடும் அமிழ்தும் காளம் ஆம்
வான் செயும் அருள் இனான் மனத்து அது உள்ளதேல்
ஊன் செயும் கோட்டு-இடை உய்வது ஆம் என்பார்

#123
வீடு உற வேண்டில் நீ விதித்த நூல் அலால்
காடு உற ஒளிக்குதல் கயம் குளிக்குதல்
நீடு உற விழு சடை நீட்டல் மற்றவை
ஈடு உற பயன் இலா வெளிறு இது ஆம் என்பார்

#124
சடை வளர் உரு கொடு தவிர்கு_இல் நீர் குளித்து
அடை வளர் வனத்து-இடை அகன்றிலா திரிந்து
இடை வளர் கனிகளோடு இளம் கிழங்கு உணும்
முடை வளர் கரடிகள் முனிவரோ என்பார்

#125
சுரத்து-இடை தழலொடு துறும் புறாக்களும்
மரத்து-இடை தூங்கி நல் கனி உண் வாவலும்
உரத்து-இடை துறவரோ உளத்தின் மாண்பு அலால்
பரத்து-இடை கிளர் வினை பரியுமோ என்பார்

#126
செம் பொறி சினத்த போர் செறுநர்க்கு அஞ்சலால்
பைம் பொறி எயிலின் வாய் படிய பூட்டி உள்
வெம் பொறி எழ தமை வெட்டி வீழ்த்து எனா
ஐம்பொறி அடக்கி உள் அவா கொண்டால் என்பார்

#127
கோலமே வீண் அடா குளித்தல் வீண் அடா
சூலமே வீண் அடா துறவு வீண் அடா
காலமே மந்திரம் கதைத்தல் வீண் அடா
சீலமே கெட நசை செகுத்து இலால் என்பார்

#128
புரை வளர் பகை நமை புழுங்கி போர் எழ
விரை வளர் வனத்திலும் வினை செய்து உள் சுடும்
கரை வளர் கடல்-கணும் கலக்கம் இல்லது-ஆல்
நிரை வளர் உளத்து அருள் நிறைந்த-கால் என்பார்

#129
பல் நெறி இசைத்த சொல் பயன் கண்டே வளன்
முன் நெறி ஒழிந்த அ முனிவர் யாவரும்
நல் நெறி அடைந்தன நயப்பில் கோது அறும்
மன் நெறி உறுதிகள் வகுத்து காட்டினான்

#130
காட்டிய உறுதியும் கதிர் தெளித்து அவண்
தீட்டிய சரிதையும் செய்த ஞானம் உள்
ஊட்டிய நயத்து அவர் உளம் குளிர்ந்து என
கோட்டிய கதிர்கள் போய் நிலம் குளிர்ந்ததே

#131
அவ்வியம் ஒழிந்து அவர் அசைவு தீர்ந்தனர்
வவ்விய நெறி விடா மனம் நிலை பெற
நவ்விய முகத்து உறை நாதன் வேண்டினான்
செவ்விய உளம் புரை தேன் பெய் கோலினான்

#132
ஞானமே தெளித்து இவர் மனத்தின் ஞாயிறு
வான மேல் எழுந்து ஒளி வழங்கிற்று ஆய பின்
ஈனமே ஒழித்தி என்று எவரும் ஏற்றி அ
கானமே கழிப்ப நேர் வழியை காட்டினார்

#133
தொல் முகத்து அதிட்டனும் தொகைத்த மோனரும்
பொன் முகத்து அடைந்த இ மூவர் போதலால்
மின் முகத்து இடி என அரற்றி விம்மி மேல்
செல் முகத்து எழுந்த கா கடந்து செல்கின்றார்
மேல்

@21 நீர் வரம் அடைந்த படலம்


#1
கார் முகத்து அகன்ற திங்கள் கதிர்செய் போல் தோன்றல் தோன்ற
போர் முகத்து அளிகள் ஆர்க்கும் பொழில் அகன்று இருவர் போகில்
பார் முகத்து இரு கண் ஒத்தார் படர் வழி கடந்த பின்னர்
நீர் முகத்து அரும் பொன் சிந்தும் நெடும் புனல் எதிர்கொண்டு உற்றார்

#2
பொய் செல செல்லும் வாயில் பொலிவொடு பெருகும் போல
மை செல செல்லும் வாரி மருளி வந்து அளவின் பொங்கி
மெய் செல செல்லும் நன்று ஒத்து எங்கணும் விளைவு உய்த்து ஓடி
பை செல செல்லும் நாக பரிசு என செல்லும் ஆறே

#3
விரை வளர் மலர் விள் சோலை வெயில் அற நிழற்றி கவ்வும்
கரை வளர் புனலை காட்டி கபிரியேல் தொழுது கூற
வரை வளர் மாடத்து ஏந்தல் வைகும் மா புரம் கண் ஓடி
திரை வளர் மணியும் பொன்னும் சிந்து கையாறு இது என்றான்

#4
நூல் நெறி வழுவா யூதர் நொந்து எசித்து உறைந்த-காலை
கோல் நெறி வளைத்த கோன் அ குலத்தினை பகைத்த தன்மை
சூல் நெறி பிறந்த மாதர் துணிக்கு-மின் என்று தம் தாய்
பால் நெறி உயிர் உண்ணா முன் பகை நெறி சிந்துவார்-ஆல்

#5
காவினுள் கொடியின் பூவோ கமல மேல் அன்ன பார்ப்போ
பூவினுள் திரண்ட தேனோ பொன் வலம்புரியுள் முத்தோ
வாவியுள் பதும மொட்டோ வான் உலாம் கோளின் ஒன்றோ
கூவினுள் தனி நீர்த்து அன்று அ குலத்தில் ஓர் குழவி வேய்ந்தான்

#6
அம் கதிர் மணியின் சாயல் அ திரு மகனை நோக்கி
வெம் கதிர் வேலினார் தாம் வெட்டவும் விடவும் தேற்றா
செம் கதிர் திரை மூழ்கு அன்ன செய்த மஞ்சிகத்துள் பெய்தே
இங்கு அதிர் புனல்-கண் உய்க என்று இரங்கி விட்டு ஏகினார்-ஆல்

#7
தாள் எழும் கமலம் நீரில் தளம்பியது என்றோ முத்தம்
பீள் எழும் சங்கம் என்றோ பேழை மேல் அலைந்து போகின்
தூள் எழும் புரத்தின்-கண்ணே தூர் எழும் நாணல் மாட்டி
வாள் எழும் கணினாள் ஈன்ற வண்ண நல் குழவி நின்றான்

#8
அன்று ஒளி திங்கள் நாண அம் கதிர் முகத்து நல்லாள்
குன்று ஒளித்திடும் திண் தோளின் கோன் இனிது ஈன்ற கோதை
சென்று ஒளி திரையை மாதர் திரளினோடு இமிழில் ஆட
நின்று ஒளித்திருந்த பேழை நிமிர்ந்து கண்டு எடு-மின் என்றாள்

#9
எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி இள மதி முகத்தில் தண்ணீர்
விடுத்த பைம் பனியோ கஞ்சம் விள் முகத்து உதிர்த்த முத்தோ
கடுத்த துன்பு ஆற்றா கண்ணீர் கான்ற-கால் முகத்தை கண்டு
தொடுத்த தன் அணிகள் பெய்து என் தோன்றல் என்று அரசி கொண்டாள்

#10
பால் நல முலையினாளை பாலனுக்கு அழை-மின் என்னா
தான் நல மாடத்து எய்தி தையலார் கமழ் நீர் ஆட்டி
சே நலம் எழ பொன் ஆழி சிலம்பு கிண்கிணிகள் பூட்டி
மீன் நலம் அணிந்த நாகு விது என தோன்றினானே

#11
தாய் என உணரா தாயை தனயனை வளர்க்க கூட்ட
சேய் என இமிழின் கண்டாள் செறிந்து தன் உளத்தில் தைத்த
நோய் என அறுத்து ஒன்று என்னா நுனித்த அன்பு இயல்பின் பல் நாள்
தூயின மணியின் சாயல் தோன்றலை வளர்த்திட்டாளே

#12
வளர்ந்த வெண் மதி ஒத்து அன்னான் வளர்ந்து மோயிசன் என்று ஓத
தளர்ந்த தன் குலத்தை ஓம்ப தற்பரன் பணிப்ப அங்கண்
உளர்ந்த பல் முயற்சி யாவும் ஒழுங்கின் நீர் உணர்தீர் அன்றே
கிளர்ந்த நல் அறிவினோர்க்கு கிளர்க்க நான் உரைப்பது என்னோ

#13
ஐ எடுத்து ஒளிர் அ தோன்றற்கு அன்பு எடுத்து உயிரை காக்க
கை எடுத்து அளித்தது என்று இ கங்கையை கையாறு என்னும்
மெய் எடுத்து இசைத்த நாம விதி இதே என்றான் வானோன்
மை எடுத்து இரைத்த யாறு வலத்தில் இட்டு அவரும் போனார்

#14
மீன் சொரிந்த முடி வேய்ந்து ஒளிர் தாயும்
தேன் சொரிந்த கொடி அம் திறலோனும்
நான் சொரிந்த நவை தீர் மகவு ஏந்தி
கான் சொரிந்த சுனை கண்டு அருகு உற்றார்

#15
மக்கள் தங்கு வடு நீத்தவர் வைகி
சொக்கு அடங்கு சுதனை துதி பாட
மிக்கு அடங்கு குயில் பாடலின் விள்ளி
இக்கு அடங்கு மலர் இன்புறல் கண்டார்

#16
கரை கிடந்த இவர் காட்டு அருள் அன்ன
நிரை கிடந்த நிழல் நீள் தரு எல்லாம்
விரை கிடந்த மலர் விள்ளிய-காலை
நுரை கிடந்தன கள் நுண் மணல் ஆர்ந்தே

#17
கோளை உண்ட குழல் மென் கொடி ஈன்ற
காளை உண்ட வதன கவின் காண
வாளை உண்ட சுனை வாவி மலர்ந்தே
தாளை உண்ட மலர் தன் விழி ஆம்-ஆல்

#18
சொல் கலத்தில் உயர்வோர் சுவை மாந்த
பொன் கலத்தில் அமுதே பொழிவார் போல்
வில் கலத்தில் ஒளிர் பூ விரி தாது
தன் கலத்தில் நிறை தந்தன தேனே

#19
நான் கலந்த நவை தீர் அருள் நல்லோர்
கான் கலந்த கனிகள் கனிவு உண்டு
வான் கலந்த உடு மான் மலர் கான்ற
தேன் கலந்த தெளி தீம் கயம் உண்டார்

#20
மணி நிறத்த எழில் மைந்தனை மூடும்
அணி நிறத்த நுரை அம் துகில் ஆடை
பணி நிறத்த ஒளிர் பாணியின் நல்லாள்
புணி நிறத்த மலர் பூண் சுனை தோய்த்தாள்

#21
தோய்ந்த தன்மையொடும் அ சுனை நல் நீர்
மேய்ந்த தன்மையொடு வெம் பிணி யாவும்
வாய்ந்த தன்மையொடு மாறவும் நாதன்
ஈய்ந்த தன்மை உளது இன்றும் அது எஞ்சா

#22
அருளின் வீங்கு வரம் அஃது என ஓர்ந்து
தெருளின் வீங்கி நறு தீம் கய வாவி
சுருளின் வீங்கு திரை சூழ் கரை மோதி
பொருளின் வீங்கும் அடி போற்றுவ போன்றே

#23
அலை ஒருங்கு தமுள் ஆடிய பாலால்
இலை ஒருங்கு விரி ஏர் அலர் ஆட
தலை ஒருங்கு மிசை தன் கரம் ஏந்தும்
நிலை ஒருங்கு சுனை நீரிய தோற்றம்

#24
பால் நேர் இள நிலவு ஊறிய பனி மா மதி முக முன்
வான் நேர் இள பனி மானிய மது மா தரு வடிய
தேன் நேர் இள குரலோடு இள அளி பா இசை திருக
மீன் நேர் இள சிறை மா மயில் நடம் ஆடின மிகவே

#25
கயல் ஒத்தன விழி உற்றன களி மாதர்கள் கரு விண்
புயல் ஒத்தன திரையுள் களி விளையாடின புரை கண்டு
இயல் ஒத்தன கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும்
வியல் உற்றன சிறை விட்டு அயல் விளையாடின இனிதே

#26
புள்ளும் பல குருகும் பகம் இனமும் கவின் பொருவா
விள்ளும் பரிசு அனமும் பகை விலகும் களி விளை போர்
உள்ளும் படி குறுகும் படி உகளும் படி உளவே
துள்ளும் பரி என வந்து எதிர் தொடர்கின்றவை துறும்-ஆல்

#27
தேன் காவியொடு உள மற்று அலர் திளை தேறலை உண வந்து
ஆங்கு ஆயின அளி பற்பல அரவத்து ஒலி அதிர
தூங்கா ஒலி முரசு ஒத்து எழு தொனியில் தம்முள் தொடர் போர்
நீங்காதன பறவை குலம் நிகரும் சமர் நெடிதே

#28
இரியும் பல குறுகும் பல எதிரும் பல இறகை
விரியும் பல அறையும் பல மெலியும் பல விளை போர்
புரியும் பல முரியும் பல பொலியும் பல புடையின்
பிரியும் பல குமுறும் பல தொனி உம்பரம் பெறவே

#29
பறை சிந்தின ஒலி சிந்தின பகை சிந்தின பறவை
நறை சிந்தின மலர் சிந்தின நனை சிந்தின நறு தேன்
உறை சிந்தின இதழ் சிந்தின உயர் சிந்தின உணும் நீர்
முறை சிந்தின முனை சிந்தனை முயல் சிந்திட முடியா

#30
வந்து ஓடிய ஒரு கோ அனம் மது ஓடிய மலரின்
அம் தோடு இனிது அலகோடு அது கவர்வு ஆயின அளவில்
முந்து ஓடிய பெடை மீமிசை முருகு ஆர் துளி முடுக
பந்தோடு இயை மண நீர் களி மடவார் விடு படியே

#31
பெடை நாணினது என நாள் நறை பிளிர் தாமரை நெடும் கா
கடை நாணின அன்னம் மேவுபு கரவு ஆயின முறை கண்டு
இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர
நடை ஆடின பறவை குலம் நனி ஆர்த்தன நகவே

#32
பந்து ஒத்தன பனி முற்று அலர் பறவை குலம் எறிய
சந்து ஒத்தன மதுர துளி சரிய புயல் தரும் நீர்
சிந்து ஒத்தன சிதறி பினர் தெளி அ தடம் அதன் ஊடு
இந்து ஒத்தன உடு ஒத்தன இணர் மற்று உகும் இயலே

#33
அளி ஆர் அலர் அரவே படம் அனை ஆட்டின பலவும்
களியால் விரி சிறை ஊடு அது கரவு ஆற்றின பலவும்
துளி ஆர் முகில் உற மீ விசை துற ஒட்டின பலவும்
நளி ஆர் அலர் விளையாடின நயம் எல்லையும் இலை-ஆல்

#34
மேல் நின்று ஒரு நடம் நோக்கினர் விரி வண் புகழ் ஒலி போல்
வான் நின்று அகல் கரை சூழ் நிழல் மரம் உந்திய பறவை
தேன் நின்று அலர் சுனை ஆடின திறம் நோக்கிய களியால்
பால் நின்று இனிது இசை பாடுளி புகழ் பாடின பரிசே

#35
பற்றலால் செயிர் பற்று இருள் மாக்களே
கற்ற நூல் பயன் இன்றியும் காசினி
உற்ற நாதனை தாம் உணராமையின்
இற்று எலாம் அறிவு இல்லவை செய்தவே

#36
அறிவு இலா உயிர் தாம் அறிந்தால் என
செறி விழா அணியின் சிறப்பு ஆடின
நெறி விடா கனி நோக்கிய நேர் இலார்
முறிவு இல் ஆசி மொழிந்து எழுந்து ஏகினார்

#37
ஈய்ந்த நல் வரத்து ஏந்திய வாவி நின்று
ஆய்ந்த மாண்பினர் போகையில் அல்லல் உள்
பாய்ந்த தன்மையில் அ பறவை குலம்
வேய்ந்த வான் உற ஆர்த்தன விம்மியே
மேல்

@22 எசித்து சேர் படலம்


#1
அருள் உலாவும் இதயத்தில் இருந்தே அன்பு இயற்றி அரிதாய் எனை ஆளும்
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர்
தெருள் உலாவும் அவர் பூ அடி சூடி தெள் இயற்றி அவர் பா இசை கூற
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன்

#2
மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல் விண் மலிந்த தளம் மூவரை நண்ண
கா மலிந்த மணம் வீசிய தீம் தண் கள் மலிந்த மலர் ஏடினை விள்ள
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க
பூ மலிந்த நெறி மூவரும் ஏகி புரை மலிந்த வினை தீர்க்குவ போனார்

#3
மிக்கு அடங்கிய திறம் தரு வேந்தன் வெருவினால் என ஒளிக்குபு வந்து
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன்
திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய செல்வன் ஆய வழி கூட்டு இலர் நாடு
புக்கு அடங்கிய புரம் பல சேரும் புடை வளைந்த வழி காட்டினர் வானோர்

#4
விண் மேல் எழு வைகறை வெம் கதிரோ
மண் மேல் எரி கோடை வரும் துளியோ
பண் மேல் உரையோர் பனி மேல் அருளோர்
எண் மேல் எழ நாடு அவண் எய்தினர்-ஆல்

#5
ஈனம் தவிர் ஈர் அறம் ஈரம் அருள்
ஞானம் தகவு ஊக்கம் நயம் புகழ் சீர்
தானம் தவம் நூல் பொருள் தந்தன பின்
வானம் தரு வாழ்வு உக எய்தினர்-ஆல்

#6
கனை மஞ்சு பொய்யாது கயம் பொழிய
நனை விள் வயல் நான்கு பயன் விளைய
வினை நொந்து அழ வெம் பகை நீங்கி அழ
வனையாதவர் ஆங்கு அடி வைத்தனர்-ஆல்

#7
அடி வைத்தன அன்பினொடு ஆங்கு எவணும்
கடி வைத்தன பூ மலர் கான்ற மது
பொடி வைத்த வழி புடை சேறு உலவ
இடி வைத்தன கார் இணை தூறினதே

#8
கான் ஏந்திய காவுகள்-தோறும் மயில்
மீன் ஏந்திய தோகை விரித்து உலவி
ஊன் ஏந்திய நாதன் உற பறவை
தேன் ஏந்திய தீம் புகழ் பாடுவன

#9
கயல் பாய்ந்து உகள கமலம் கிழிபட்டு
அயல் பாய் ஒளி முத்து அறலோடு ஒழுகி
வயல் பாய்ந்து நெல் முத்தமொடே மருளி
இயல்பாய் நிலம் இன்புறி நக்கு எனவே

#10
கண்டார் எவரும் கனி கண் வழியால்
உண்டார் நிறை இன்பம் உளத்தில் என
தண் தார் மிசை சாய் அளி மொய்த்தன போல்
மண்டு ஆர் அறவோர் மிசை மல்கிய கண்

#11
நீர் மேல் எழு மாலி நெடும் கதிர் முன்
பார் மேல் எழு நீள் இருள்பட்டு ஒழியும்
சீர் மேல் எழு மூவர்கள் சிந்து அருளால்
சூர் மேல் எழு தீது துடைத்தனரே

#12
நீள் நெறி கடந்து அங்கு உய்ய நினைத்த வான் பயனை நல்க
கோள் நெறி முகத்து நாதன் கூர்ந்து அருள் தளிர்த்தல் உள்ளி
சேண் நெறி இறங்கி காத்த தேவராய் தொழுத பேய்கள்
மாண் நெறி சிறந்த நாட்டின் வயின்-தொறும் ஓட்டினானே

#13
புரந்த அரும் தயையை காட்டி புரை தரும் நரகில் உய்ப்ப
வரம் தரும் தேவர் ஆக வணங்கிய அலகை ஈட்டம்
உரம் தரும் திறத்தில் தம்மை உதைத்தனன் அறியாது எஞ்சி
தரம் தரும் வேகத்து ஓடி நரகு-இடை புதைத்த அன்றே

#14
கொன் ஒளி திறத்தின் நின்ற குணுக்கு இனம் நரகில் வீழ
பொன் ஒளி கோயில் யாவும் பொதிர் மணி உருவும் தேரும்
மின் ஒளி சாயல் கெட்டு வீழவும் கண்ட யாரும்
மன் ஒளி திறத்த நாதன் வழி உறா வியந்து நின்றார்

#15
நம்பிய உயிரை கொல்ல நாட்டிய தேவராக
வெம்பிய பகையின் தீய வினை விளைத்து இருந்த பேய்கள்
பம்பிய முகத்தின் முன்னர் பதைப்ப வீழ்ந்து ஒளிப்ப நோக்கி
அம்பிய மலர் வாய் கோலான் அகத்து உணும் சுவையின் விள்ளான்

#16
பொய் திறத்து அரசற்கு அஞ்சி போதல் போல் ஒளிப்ப எய்தி
அ திறத்து உணர்ந்த சூழ்ச்சி அருள் பயன் இதுவோ இங்கண்
இ திறத்து அன்பின் மாட்சி எய்துவர் உண்டோ என்ன
கை திறத்து அலர் தாள் நீவி கண்ணின் நீர் ஆட்டினானே

#17
சோலையின் நிழல் வாய் அன்பு துளிர்த்த பூ முகத்தின் நாதன்
மாலையின் தாமத்து அங்கண் வயின்-தொறும் நிரைப்ப ஈந்த
வேலையின் நிறைந்த நன்றி விளைத்து நாடு உலவி போன
காலையின் ஏரும் என்று ஓர் கடி நகர் அண்மினாரே

#18
மின் முகம் புதைத்த கொண்மூ விரும்பி மேல் தவழ வானின்
நல் முகம் புதைத்த மீன் போல் நறை முகத்து அலர்ந்த பைம் பூ
தன் முகம் புதைத்த பாலால் தயங்கும் ஓர் மரமே அங்கண்
பொன் முகம் புதைத்த வாயில் புறத்து எழில் பொழிந்தது அன்றோ

#19
பேர் நல மேன்மையானும் பெயர் அறியாமையானும்
ஆர் நல மரத்தின் சாயற்கு ஆங்கு வேறு இலாமையானும்
கூர் நலம் வியந்த பின்னர் கொழும் புகை காட்டி நல் நூல்
சீர் நலம் ஒழிந்த அன்னார் தேவன் என்று இறைஞ்சினாரே

#20
மட நடை கண்ட பேயும் வடு வளர் அமைதி என்ன
தட நடை வளர்ந்த பைம் பூம் தரு-இடை குடியாய் வைகி
பட நடை பொறித்த நச்சு பாந்தளின் உருவில் கான்ற
விட நடை நெடு நாள் யார்க்கும் விடை மொழி கூறிற்று அன்றோ

#21
கொழும் தன முகத்து நாதன் குறுக ஒன்று அறியா செம் தீ
விழுந்து அன பேயும் நீங்கி வினை அரிந்து உவந்ததே போல்
எழுந்து அன மரம் தன் நெற்றி இறைஞ்சிய திறத்து மூவர்
செழும் தன அடியில் செல்ல சிறப்பொடு வளைத்தது அம்மா

#22
மை வகை திற பேய் மாக்கள் வளம் கெட தெரிந்த சாகி
உய் வகை திறத்தில் வாய்ப்ப உயர் வரம் கடவுள் ஈந்த
மெய் வகை திறத்தில் உண்ட விரிந்த பாசிலை நோய் யாவும்
கொய் வகை திறத்து இ நாளும் குன்று இலா விளங்கிற்று அம்மா

#23
நடையொடு விளக்கி வான் மேல் ஞாயிறு நடப்பதே போல்
புடையொடு வானோர் மல்க போய் இவர் திறந்த அன்பின்
மடையொடு பாய்ந்த நன்றின் வரைவு_இல நீத்தம் எங்கும்
தொடையொடு வளர்ந்த பா போல் தொடர்பு அறா வழங்கிற்று அன்றோ

#24
வான் முகத்து வந்து அன்னம் வட்டம் இட்ட பின்
தேன் முகத்து அலர் தடம் சேர்ந்த பான்மையால்
கான் முகத்து அலர்ந்த நாடு உலவி காசு அணி
நால் முகத்து ஒளி நடு நகர் சென்றார் அரோ

#25
தாமம் சூழ் மணி நிரைத்து அரிகள் தாங்கு அணை
வாமம் சூழ் முடி அணி மன்னன் வீற்று உறை
ஏமம் சூழ் எயில் பொலி இரவிமாபுரம்
நாமம் சூழ் அழகு எழு நகர் அது ஆம் அரோ

#26
கார் செயும் குழல் நலம் கவிழ்ந்த கோபுரத்து
ஏர் செயும் முகம் மலர்ந்து எயிலின் தூசு மேல்
சீர் செயும் பயோதர ஞாஞ்சில் சேர்த்து அகழ்
நீர் செயும் மேகலை அணிந்து நீர்த்ததே

#27
கேழ் முக நகர் அடி கிளர் சிலம்பு என
ஏழ் முகம் பிரிந்த நீல் என்னும் தீம் புனல்
கூழ் முக நிலம் கெட பேய் முன் கொண்ட ஏழ்
காழ் முக அரவு என கவர் கொண்டு ஓடும்-ஆல்

#28
வரை உயிர்ப்பு என புகை மாட நெற்றி மேல்
நுரை உயிர்ப்பு என விடா நுடங்கும் பூம் கொடி
உரை உயிர்ப்பு உறாது என ஒளிர் கை நீட்டியே
விரை உயிர்ப்பொடும் இவர் விளித்தல் போலும்-ஆல்

#29
நீர் அகம் பொதிர் மணி நிறத்த கார் என
பார் அகம் குளிர்ப்ப வான் பயன் பெய்து ஏகி அன்பு
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து எல் ஐம்பது ஆய்
ஏர் அகம் கிளர் பதி தங்க ஏகினார்

#30
சீர் வளர் அறம் தவம் தியாகம் மற்ற நல்
நீர் வளர் மறை புடை புக்கு நீள் நகர்
வார் வளர் முரசு ஒலி வழங்க புக்கனர்
ஏர் வளர் முகத்தினும் இலங்கும் மாண்பினோர்

#31
பால் வழி சுவை என படத்தை தீட்டிய
கோல் வழி அழகு என குறை_இல் கேள்வி செய்
நூல் வழி புகழ் என நுழை அன்னார் புடை
மேல் வழி வளம் எலாம் விளைய புக்கனர்

#32
கொடியொடு குடை பொரும் கொள்கைத்து ஆர் இருள்
முடியொடு பொதிர் மணி முனிந்து அங்கு ஈர்த்தலால்
வடிவொடு பகல் செயும் மாடம் நீங்கி போய் ஓர்
மிடியொடு குறு_மனை விரும்பி புக்கனர்

#33
தான் வளர் கதிர் அழல் தாங்கி நை தரு
கான் வளர் நிழல் கொடு எவரும் காத்து என
வான் வளர் வாழ்வினை வகுப்ப நாதன் வந்து
ஊன் வளர் பாசறை உவந்து நாடினான்
மேல்

@23 குணுங்கு மந்திரப் படலம்


#1
மின்னாது இடித்து ஏறு இரிந்து அன்ன வெருவி பதறி பாய்ந்து உருண்டு அன்று
இன்னா விளைக்கும் பேய் இனங்கள் எசித்து நீங்கி தீ நிரயம்
பல் நாள் துயரில் எண் மடங்காய் பனிப்புற்று ஆர்ப்ப வீழ்ந்தன-கால்
தன் நாடு அயர்வுற்று அயர்ந்து அரசன் தரு-மின் உற்ற கொடிது என்றான்

#2
தெள் உண்ட அமுது ஆர் எசித்து இறைஞ்சும் தேவர் யாமே மேல் வயத்தால்
தள்ளுண்டு எரி வாய் நரகு இடத்தில் சரிந்தோம் என்ன அறிந்தது அலால்
வள் உண்டு எம்மை சிதைத்து அழித்த வலத்தை அறியோம் மன்ன எனா
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி உரை செய்தன அ குணுங்கு இனமே

#3
பின்றா வஞ்சத்து அரிது உண்டோ பெயர்க்கும் திறம் காணாது இரிந்து
குன்றா வஞ்சத்து என் வலியும் குணிக்கிலீரோ என சினந்து
பொன்றா உணர்வில் திறம் காண போவல் யான் என்று ஆர்த்து எசித்தில்
சென்றான் சிதைவு எங்கணும் சிந்த சிந்தை சிந்தா கொடும் கோனே

#4
அண்டாதன யாவையும் அண்டி ஆய்ந்தான் கண்டான் தே உருவும்
பண்டு ஆயின தேவாலயமும் பணி பொன் தேரும் துகள் என்ன
கண்டான் பலர் ஓர் கடவுள் தனை கருதி வணங்க கண்டான் கண்டு
உண்டாயின ஓர் காரணமும் உணராது எரி தீ வீழ்ந்து அயர்ந்தான்

#5
இரு வாய் உருவும் பேய் இனத்திற்கு இல்லாது எனினும் வேண்டு நிலைக்கு
உருவாய் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன்
பொருவா உருமின் ஆர்த்து அலறி பொருக்கென்று அலகை பொருநர் எலாம்
வெருவாய் உளை தன் மனம் எரிக்கும் வினை தீர்ப்பதற்கு விளித்தனன்-ஆல்

#6
திருகி மேட மருப்பு ஈர் ஏழ் செறி செம் சடை நீட்டு ஏழ் சிரத்தான்
பருகி எரியை கால் இரத்த பருதி தடத்த விழி கண்ணான்
உருகி ஒழுகும் நஞ்சு உமிழ் மால் ஓங்கல் நெடும் கை துண்டத்தான்
பெருகி அழலோடு ஊன் பிளிரும் பிறை கூன் எயிற்று வாய் உருவான்

#7
வேல் நேர் நிறுவி வேசரி நேர் விரிந்து திளைத்த மயிர் செவியான்
ஊன் நேர் ஒழுகி பிண குப்பை உதட்டு நாறும் பகு வாயான்
கான் நேர் நெருங்கி தெங்கு இலை நேர் கழு நீள் சிவந்த தாடியினான்
தான் நேர் இல மாசு ஒருங்கு அனைத்தும் தரித்த குரக்கு முக வடிவான்

#8ச்க்ஷ்
விண் திக்கு இழந்த பழி உளத்தான் வியன் தீ குடி ஏற்று அரும் கதத்தான்
மண் திக்கு உயிரை சிதைத்து உண்ண வஞ்சம் விளைக்கும் நெஞ்சகத்தான்
எண் திக்கு அசைக்கும் ஆணையினான் இ பார் நடுக்கும் சூலத்தான்
பண்டில் போர்த்த உரு என வெம் பகு வாய் பாந்தள் கேதனத்தான்

#9
இன்னான் இன்ன உரு காட்டி எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி
உன்னாதன யாவையும் உன்னி ஒத்த உருவோடு இடை சூழ்ந்து
துன் ஆழுவம் போல் கடி குழுவை சுளித்து நோக்கி சூளையின் வாய்
அன்னான் கொழுந்து விட்டு எரிக்கும் ஆர்ந்த அழல் கான்று ஆர்த்து அறைந்தான்

#10
பீடு உடை வரத்தில் ஒவ்வா பெரும் தகை நாம் வான் வாழ்ந்த
வீடு உடை பெரும் சீர் மாட்சி விட்டு இழந்து எரி தீ தாழ்ந்தும்
கேடு உடை அஞர் என்று எண்ணா கிளர் வயத்து உணர்வின்-பாலால்
ஈடு உடை அரசும் பேரும் எடுத்து வீற்றிருந்தேன் அன்றோ

#11
ஓர் என்பான் பகை செய்தாலும் உலகின்-பால் கொற்றம் கொண்டேன்
சீரின்-பால் வணக்கம் கொண்டேன் திரு மணி சிகரம் கொண்டே
காரின்-பால் மின்னின் மின்னும் கனக ஆலயமும் கொண்டேன்
பாரின்-பால் இன்று என் ஆண்மை பகை இலா குறைய கண்டேன்

#12
கதிர் உண்ட மணியின் சீர்த்து களி உண்ட எசித்து நாட்டில்
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி இயல் உண்டு ஆண்டு ஒருவன் நின்றேன்
முதிர் உண்ட இறைவராக முயல் உண்ட வணக்கம் கொண்ட
பொதிர் உண்ட எனது சேனை பொருக்கென இரிய கண்டேன்

#13
கார் தவழ் வரைகள்-தோறும் கடி மலர் பொழில்கள்-தோறும்
ஏர் தவழ் புரங்கள்-தோறும் எண்ண_அரும் இடங்கள்-தோறும்
சீர் தவழ் சிகரத்து ஓங்கி சிறந்த ஆலயங்கள் யாவும்
போர் தவழ் களங்கள் தூவும் பூழி என்று ஆக கண்டேன்

#14
பொன் முகத்து ஒளியை தும்மும் பூம் சுதை உருவம் பூண்ட
மின் முகத்து எறிக்கும் கற்றை விரி மணி முடியும் தாரும்
மன் முகத்து அணி பொன் தேரும் மற்று அணி சிறந்த யாவும்
கொன் முகத்து அலகையோடும் குழைந்து அழிந்து ஆக கண்டேன்

#15
நரம் தரும் குலைவின் நைந்து நாடு ஒழிந்து ஓடினாரை
வரம் தரும் தேவராக வணங்கவோ என்ன யாரும்
சரம் தரும் பூவும் சாத்தா சாந்தமும் புகையும் காட்டா
பரம் தரும் கமழ் நீர் ஆட்டா பணிதல் ஒன்றினையும் காணேன்

#16
பணி முகத்து உயிர்கள் கேடாய் பண்டுளி எருமு போற்றி
அணி முகத்து அலர்ந்த சாகி அரிது எலா பிணிகள் தீர்ப்ப
மணி முகத்து இறைவன் தந்த வரத்து உறைந்தன பேய் ஓடி
துணி முகத்து இவை ஓர்ந்து அன்னார் தொழுதல் விட்டு இருப்ப கண்டேன்

#17
இ திறத்து எவணத்தாரும் எனை நகைத்து இகழ்ச்சி கூற
மை திறத்து உயர் என் கோன்மை வசையினோடு அழிய கண்டே
அ திறத்து அனைத்தும் ஆக்கி அடும் பகை அணுகி பார்க்கின்
மெய் திறத்து உயர் என் காட்சி மெலிதர ஒன்றும் காணேன்

#18
காட்சியால் தெளிந்து பார்க்கில் காரணம் யாதோ நாடி
மாட்சியால் உயர் அ நாட்டில் வந்து இரு யூதர் கண்ட
சூட்சியால் நவம் இது ஒன்றே துளங்கு அறத்து உயர்ந்தோரேனும்
பூட்சியால் உளைந்தோர் ஆகி புரியும் ஓர் கருமம் உண்டோ

#19
நான் விளை வஞ்சத்து ஒல்கா நஞ்சு என இன்பம் வெஃகா
ஊன் விளை துயரின் குன்றா உரை விளை புகழின் நேரா
கான் விளை தவத்தில் ஒவ்வா காத்த மாண்பு இருவரேனும்
வான் விளை பகைக்கும் தேவ வயத்து அலால் அஞ்சேன் நானே

#20
ஆயினும் அன்ன யாவும் ஆயின வழியும் வாயும்
ஆயினும் அறிகிலா நான் அனைவரும் அழைத்தல் செய்தேன்
வீயினும் கொடிய நெஞ்சீர் விளைந்த இ துயர் வீயாதும்
வீயினும் புரியும் தன்மை விளம்புதீர் என்றான் வேந்தே

#21
கடாவிய அசனி அன்ன கவலை கொள் அரசை நோக்கி
தடாவிய சரணம் ஏத்தி தரணி யாவையும் ஏய்த்து ஏய்க்க
படா வியந்தரத்துள் வஞ்சம் பழுத்த கூர் அறிவின் வல்லான்
சிடாவியன் என்னும் கூளி தீ உமிழ்ந்து உரை முன் கொண்டான்

#22
குய்யம் கொண்டார் கண்டவை எண்ணி குறை எண்ணார்
அய்யம் கொண்டால் ஆர் அறிவு எஞ்சி அரிது உய்வார்
மொய் அங்கு உண்டாய் வான் இழி நாளின் முரிவு என்னோ
வய்யம் கொண்டார் ஏற்றிய கோலின் வலி கொண்டாய்

#23
மையின் வாயால் தம் அறிவு எஞ்ச மயல் உய்க்கும்
மெய்யின் வாயால் ஈனம் மலிந்த வினை மாக்கள்
பொய்யின் வாயால் பொங்கு அடலால் நாம் புரிகின்ற
மொய்யின் வாயால் நிற்பவர்-கொல்லோ முரியாதார்

#24
ஆய்ந்து ஆய்ந்து எல்லாம் நீ அறியாது ஒன்று அறைவேனோ
மாய்ந்தான் மைந்தன் என்று அரிது ஐயன் மனம் வாட
காய்ந்து ஆர் துன்பம் தீர்ப்ப மகன் தன் கவின் ஒப்ப
வேய்ந்தான் வாய்ந்த ஓர் நல் உரு அன்பின் வினையால் தான்

#25
கை கண்டு ஏவல் செய்பவர் தாதை கடிது உற்ற
மை கண்டு உள்ளம் தேறும் என தாம் வழிபாடாய்
பொய் கண்டேனும் பூவொடு வாச புகை சாத்தி
ஐ கொண்ட ஓர் நல் தெய்வதம் என்றார் அறிவு அற்றார்

#26
செல்லும் தன்மைத்து ஆயவை கேட்டு திரு வல்லோன்
வெல்லும் தன்மைத்து ஐயனை ஏத்த விரி பார் மேல்
சொல்லும் தன்மைத்து அர்ச்சனை விஞ்ச துகள் ஆக்கம்
ஒல்லும் தன்மைத்து ஓர் இறையோனை ஒழிகின்றார்

#27
எய்யா மாக்கள் தீ உற நானே எளிது இ வாய்
மெய் ஆம் நாதன் தன்னை மறுத்தே வினை உய்க்கும்
பொய்யா வஞ்சத்து உய்த்தன பொய்யம் பல தேவர்
கொய்யா வண்ணத்து எங்கணும் ஏத்தும் குழு கண்டாய்

#28
ஊன் தோய் மாக்கள் தம் குணம் இஃதேல் உளைவு என்னோ
கான் தோய் பைம் பூம் சோலை எசித்தார் கசடுற்று
வான் தோய் மின் போல் ஒல்குபு நின் தாள் வலி ஏத்த
நான் தோய் வஞ்சம் சால்பு என சொன்னான் நவை மிக்கான்

#29
என்றான் அன்னான் என்றவை கேட்டார் இனிது என்றார்
வின்றான் என்பான் விஞ்சிய மாயை வினை வல்லான்
நின்றான் முன்பான் என்றது இகழ்ந்து நிறை நக்கு
பொன்றா இன்னா பூண் அரசு ஏத்தி புகல் உற்றான்

#30
கார் நடந்துளி வாவியை காத்த புள்
நீர் அகன்றுளி நிற்பது காண்பரோ
சீர் அடைந்துளி மானிடர் செய் அறம்
சூர் அடைந்துளி தோமொடு மாற்றுவார்

#31
மை திறத்து உயிர் ஏய்த்தது வண்மையோ
மெய் திறத்து இறையோன் விறல் ஏய்த்து என
கை திறத்து உயிர் காத்திடத்தான் செய்யும்
ஐ திறத்து உயிர் கேடுற ஆக்கினேன்

#32
நிழன்ற சோலை எசித்தினை நீக்கி வந்து
அழன்ற கான் உறி யூதர் அறைந்த தீ
தழன்ற சொற்கு இறையோன் தரும் ஏவலால்
சுழன்று அரா உயிர் துய்த்தன சால்பு அரோ

#33
ஓவி ஏங்கி உளைந்து இறை வேண்டினார்
மேவி வேண்டினர் மேவுகின்ற ஆண்டகை
ஏவி மோயீசன் ஈண்டு ஒரு பாந்தளை
சாவு இல் ஆம்படி தாம்பிரத்து ஆக்கினான்

#34
ஆக்குகின்ற அரா ஒரு கம்ப மேல்
தூக்குகின்றனன் தூக்கிய பாந்தளை
நோக்குகின்றனர் நோய் அஃகி நஞ்சினை
நீக்குகின்று உயிர் நீங்கிலர் உய்வரே

#35
வாய்ந்த நன்றி மறப்பது தீது என
ஆய்ந்த தன்மை அரா அழியாது பின்
வேய்ந்த தம் மகர்க்கு ஆண்டகை மேவி முன்
ஈய்ந்த நன்றி இது என்று அவர் சாற்றுவார்

#36
புரை தரும் தடம் ஈது என புக்கு நான்
நிரை தரும் கடன் நீதி இது என்று அவர்
விரை தரும் புகையும் வெறி மாலையும்
உரை தரும் புகழோடு இட நாட்டினேன்

#37
முன் இருந்தனர் காலம் முடிந்த பின்
பின் இருந்தனர் பேர் எழில் பாந்தளுக்கு
என் இரும் தனி சூட்சியின் ஏவலால்
மன் இருந்தன மந்திரம் ஆக்கினார்

#38
மாக நாதன் வனைந்தவை மாற்றி அ
நாகம் ஆக்கிய நன்றி அது என்று நான்
நாக நாதன் எனும் பெயர் நாட்டி கேடு
ஆக நாகத்து அருச்சனை ஆயதே

#39
நாக நாதனை நம்பலின் நாக வாய்
ஆக மாறும் என்று ஆகமம் போன்று நல்
பாகம் மாய் விடம் மூடிய பல் கதை
ஆக மா நிலத்து அர்ச்சனை நாட்டினேன்

#40
ஆண்டு அங்கு ஆயிரத்து_ஐம்பத்திரண்டு போய்
மாண்ட கோன் எசைக்கீயன் மனம் பொறா
பூண்ட பாந்தளை பூழியா ஆக்கினும்
ஈண்டு அ அர்ச்சனை பற்பலர் விட்டு இலார்

#41
அறம் வழங்கிட அன்பொடு நாதன் அ
புறம் வழங்கிய இன்னவை பொய்யொடு
மறம் வழங்கிட மாற்றிய பின்னர் என்
திறம் வழங்கு இல சீரும் உண்டோ என்றான்

#42
பித்தன் ஆகமம் பேசிய தன்மையில்
அத்தனாது உரை கேட்டு அரும் பட்டிமை
மொய்த்த நாளி முகத்து அரில் முற்றிய
சத்தனாசு எனும் பேய் இவை சாற்றினான்

#43
நீரில் தவழ் மொக்குள் என நேர் பொருத கால் முன்
தேரில் தவழ் சித்தி என ஏறு திளை சீற்ற
காரில் தவழ் மின்னல் என நேர் கருதி நில்லா
பாரில் தவழ் மன் உயிர்கள் தம் பரிசு இது அன்றோ

#44
இ பரிசின் ஆயிர மனத்தவரை ஏய்த்து
மை பரிசின் எம் குடில மாயை அடல் பொய்யா
பொய் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம்
அ பரிசின் இ பொழுது அமைப்பது அரிது ஐயா

#45
நோ மலிய வந்த பல நூதனமும் நோக்கில்
வீ மலி அகன்ற தலை மேதினியில் அண்டா
தீ மலி இருள் செறியும் இ திசையில் ஆண்டு
நீ மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது என்றான்

#46
நாய் முகன் நவின்றவை நகைத்து இவனை நாளும்
காய் முகனொடும் கஞலி நோக்கிய கதத்தான்
போய் முகம் உடன்று எரி புகைந்து எழுவ திங்கள்
தேய் முக எயிற்று எதிர் திரங்கரன் உரைத்தான்

#47
வஞ்சினர் ஒருங்கு தொழு மன் அரச மாயை
எஞ்சினன் இளைத்தனன் இளைத்த ஒரு கைமைக்கு
அஞ்சினன் அறைந்தவை அமைந்து அயர வேண்டா
துஞ்சினர் துளங்குவர்-கொல் என்று உரை துவைத்தான்

#48
என்றலொடு நொந்து முகில் ஈன்ற உரும் என்னா
நின்றவன் இகழ்ந்து எனை நிகர்த்த பிணம் நீயோ
குன்ற வெறி கொள் ஒளி குணுங்கு என முளைத்தாய்
வென் தர வளர்ந்த மிடலோய் என உரைத்தான்

#49
அரங்கவும் இவற்கு அவன் அவற்கு இவன் எள் ஒத்து
தரங்கம் என ஓங்கி விழி தத்து தழல் தாக்க
திரங்கரன் உடன்று திருகும் சினமோடு ஆர்ப்ப
உரம் கடிது குத்தினன் ஒருங்கு உடல் பதைப்ப

#50
பதைத்த உடல் பத்து_இரு பனைக்கும் உயர் பாய்ந்தான்
துதைத்த அரி தோர்ப்ப எதிர் துள்ளி இரு காலால்
உதைத்தனன் உதைப்ப உரும் ஒப்ப அவன் ஆர்த்து
புதைத்தன எயிற்று இரிவ புண் புனல் கடித்தான்

#51
கடித்த உடல் செம் கறையின் மாரி நிறை கால
இடித்த இரு கார் என எதிர்த்து இருவர் தம்மை
துடித்து எழ உடல் குவடு அழல் துற இறுக்கி
பிடித்தனர் கடித்தனர் விழுத்தினர் புரண்டார்

#52
பிரண்டனர் சுழன்றனர் பிரிந்திலர் பிரிந்தார்
திரண்டனர் திரிந்தனர் சிதைந்திலர் செறிந்தார்
மிரண்டிலர் வெதிர்ந்திலர் மெலிந்திலர் முனைந்தார்
இரண்டு அனல் விசும்பும் என மீண்டு எதிர் எழுந்தார்

#53
எழுந்து இருவர் வவ்விய மருப்பு இணை கை விள்ளா
அழுந்து இரு அடி கொடு அகத்தினை உதைப்ப
கழும் திருகு கொம்பு இருவர் கையொடு பெயர்ந்தே
விழுந்து இருவர் வீழ்ந்தனர் உள் வெள்கினர் வெகுண்டார்

#54
நக்கன கண்ட பேய்கள் நக்கன என்று வேந்தன்
மிக்கன சினந்து நோக்கி வளைந்த போர் கையால் நீக்கி
தொக்கன பிணங்கள் அஞ்ச தொகை_இல இடி போல் ஆர்த்து
தக்கன வினைகள் கக்க சத்தனாசு உரை கொண்டான்-ஆல்

#55
வெல தொழில் எஞ்ச அஞ்சி விதவையின் இளைத்தேன் என்றான்
குல தொழில் வஞ்சம் பொங்க கூவிடத்து அவன் நான் செய்த
வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன
சல தொழில் அரசன் மூரல் தந்து மீண்டு அவன் சொன்னானே

#56
காசு உலாம் கடலின் நீரும் கார் உலாம் வரையும் சூழ்ந்து
தேசு உலாம் சிந்து கீறும் தேயமே எனக்கு தந்தாய்
ஆசு உலாம் குடிலத்து அங்கண் அறிவு அற இருளை உய்த்து
மாசு உலாம் தேயம் ஆக்கி வணக்கமே உனக்கு கொண்டேன்

#57
ஏற்றிய தேவர் எண்ணில் எண்ணுவர் கலங்கு வாரும்
போற்றிய தேவர் ஒப்ப புரிகுவர் புகர் கொள்வாரும்
ஆற்றிய தேவர் காதை அறைகுவர் வெள்குவாரும்
சாற்றிய தேவர் பூண்ட தகவு உளோர் தமை கொல்வாரும்

#58
புனை நிலா அணி இல்லாளை போக்கலால் அரற்றி மாழ்கல்
மனைவியால் அடி பட்டு ஓடல் மனைவியை தலையில் தாங்கல்
அனையள் கால் பினிற்று செந்நீர் அணி என நுதலில் பூசல்
இனை எலாம் பூசி தேவர்க்கு இயலும் ஓர் விளையாட்டு என்றேன்

#59
பொது முறை மகளிர் நாடல் புற மனை விழைதல் தண்ண
மதுமுறை மலருள் புக்கு மதுசகன் கணை வெப்பு ஆற்றல்
விதுமுறை குனிவிற்கு அஞ்சி வென் தர ஒளித்து நாணல்
இது முறை மறையின் நாட்டி இறையவர்க்கு இலீலை என்றேன்

#60
குய்யமே விழியா தாங்கல் குய்யத்துள் ஒளித்தல் கோசம்
வையவே ஊழ்த்து வீழ்தல் மருவிய குறி இரண்டும்
கையமே ஆக பூணல் காட்டு அரும் பலவும் நாட்டி
ஐயமே இன்றி தேவர்க்கு ஆனது ஓர் முறைமை என்றேன்

#61
ஈமம் சேர் மாலை ஆக இழி பட கழுதை சேர்ந்தோன்
காமம் சேர் சங்கத்து ஒன்றில் கடந்த ஆயிரம் ஆண்டு உள்ளோன்
ஏமம் சேர் மனையார் எண்_ஈர்_ஆயிரர் இமிழின் கொண்டோன்
சேமம் சேர் வலியில் ஓங்கும் சிறப்பு எழும் தேவர் என்றேன்

#62
அன்னையே மனைவியாக அமைந்தவன் தேவன் என்றேன்
பின்னையே சுதையை புல்ல பெட்டவன் தேவன் என்றேன்
தன்னையே அழித்து காமம் தணித்தவன் தேவன் என்றேன்
என்னையே அறைவேன் என்ற யாவுமே வழங்க செய்தேன்

#63
உடல் விளை ஈன மாக்கள் உணர்கவும் நாணும் காதை
மிடல் விளை களிப்பின் செய்தோர் விண்ணின் வாழ் தேவர் என்ன
கடல் விளை அரவத்து அன்னார் களி விழா அணி கொண்டாட
அடல் விளை வஞ்சத்து அங்கண் அரு முறை நாட்டினேனே

#64
சேண் முகம் புதைத்த கோயில் தீட்டிய தேவர் காதை
வாள் முகம் புதைத்த நீள் கண் மடந்தையர் கண்ட-காலை
நாண் முகம் புதைத்த பின்றை நாணம் அற்று அதை செய்தோரை
பூண் முகம் புதைத்த மையல் பொலிவொடு வணங்க செய்தேன்

#65
என் வல தொழில் இது அய்ய இவனும் வந்து அமைத்த யாவும்
தன் வல தொழில் என்று ஓத தாவு அரும் வலியோன் என்றும்
புன் வல தொழிலோன் என்றும் பொருத்தலின் தோன்றும் தோன்றி
மன் வல தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான் என்றான்

#66
கூடு உடை மாக்கள் காமம் குணம் என நாடி நாடும்
கேடு உடை காமம் மூட கெழுமிய தேவர் காம
பீடு உடையார் என்று உன்னல் பெரும் புகழ் பெற்ற ஆண்மை
ஈடு உடை தொழில் என்பாயோ என திரங்கரன் முன் பாய்ந்தான்

#67
முகில் கிழித்து இடித்த ஏற்றின் முகத்து அழல் கதத்த வேகத்து
உகிர் கிழி கணிச்சி காட்டி உற்ற அ சவத்தை பாந்தள்
துகில் கிழி குணுக்கு வேந்தன் சுளித்து அதிர்த்து அதட்டி பாய்ந்த
சிகி கிழி தடத்த கண்ணான் செப்பலும் விலக்கினானே

#68
இற்றை நீ செய்த போதே எமது பேர் இனத்து கோன் நான்
மற்றை நீ தலைவன் ஆகி வாழி சத்தனாசே வஞ்சத்து
ஒற்றை நீர் உடையன் நீ என்று ஒற்றை கொம்பு அளித்தேன் என்ன
அற்றை நீள் தலையின் நாப்பண் அமைத்து நாட்டினன் பேய் வேந்தே

#69
எ புறத்து அனைத்தும் முன்னர் இயன்ற தன் கோல் அ நாட்டிற்கு
அ புறத்து இயலாது என்னும் அதற்கு உளத்து உணர்ந்த தன்மை
செப்பு உற தானே கண்ட சிறப்பு என அரசன் கேட்ப
தப்பு உற தனி தீ வஞ்ச சத்தனாசு அறைதல் உற்றான்

#70
வான் விளை வாழ்வு இழந்து இங்கண் மருண்டு எரி நாம் விழும்-காலும்
தேன் விளை கான் முதல் மகனே தீதுற நாம் செயும்-காலும்
ஊன் விளை யாக்கையில் உம்மை ஒழிப்பல் என உரைத்து இறைவன்
தான் விளை ஆகுல காலம் தான் இது என தோன்றும் அய்யா

#71
ஈர்_ஏழு வெண் திங்களும் முன் ஈர்_இரு தண் திங்களும் முன்
போர் எழு வெம் பகை செய்த பொருந்தலரை காணா நாம்
கார் எழு வெம் கதத்து இடி போல் கடிது இங்கண் வீழ்ந்து அடைந்த
சூர் எழு வெம் காரணமும் தோன்று இலது உட்கு உற்றனமே

#72
மீண்டு எழுந்து நால் மதி முன் மேதினியில் போய் அங்கண்
மாண்டு எழுந்து வந்த நவம் மதித்து ஆய்ந்தே அன்று இரவி
ஈண்டு எழுந்து மு மடங்காய் இலங்கி நிசி இருள் அஃகி
ஆண்டு எழுந்து வையம் எலாம் அழகு உறி கேழ்த்தது கண்டோம்

#73
தேன் வயிறு ஆர் மலர் பூத்த செழும் சோலை பருவம் இல
கான் வயிறு ஆர் கனி நலமும் கலந்து அன்று களிப்பு எய்தி
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப மேதினி அன்று எழ கண்டோம்

#74
அருள் காட்டி அவதரித்தான் ஆண்டகையோ அன்று என்றோம்
தெருள் காட்டி பெத்திலத்து ஓர் சிறுவன் உதித்தனன் என்றேன்
இருள் காட்டி மல்கு இரவில் ஒளித்து எய்தான் இறை என்றீர்
வெருள் காட்டி மீண்டு இவை ஆய்ந்து அ மகன் வான் வேந்து என்றான்

#75
நாய் முகத்து நின்றன பேய் நவின்றவை கேட்டு அகீதத்தன்
வீய் முகத்து வியப்பு எய்தி விளம்பியதே திடம் என்றான்
தீய் முகத்து நகை காட்டி சீதாய்வு மறுத்து உரைக்கும்
நோய் முகத்து விலங்கு உறையுள் நுழைந்து இறையோன் பிறப்பானோ

#76
மிடி கொண்டான் உளைந்து அழ பல் வினை கொண்டான் நிந்தையொடும்
படி கொண்டான் பகை கொண்டான் பகர்வு அரிய அஞர் கொண்ட
குடி கொண்டான் புற நாட்டில் கூர் இடுக்கண் கொண்டானே
முடி கொண்டான் மூ உலகு ஓர் மூ விரலால் கொண்டானோ

#77
என்றான் ஒத்து இசைத்து இசைப்ப எரி பல பேய் பேய்க்கு அரசன்
கன்றா நல் கன்னி-வயின் கடவுள் உலகு உதிப்பன் என
குன்றா மெய் சுருதியது ஆய் கொழுநன் உள மரி என்பான்
அன்று ஆவற்கு ஈன்ற மகன் ஆண்டகையோ அன்று என்றான்

#78
கலை புறம் கண்டு ஒளிர் ஞானம் கடந்த இறையோன் கன்னி தாய்க்கு
இலை புறம் கண்டு அலர் உயர்த்தோன் கணவன் என ஈந்தன-கால்
கொலை புறம் கண்ட இகல் குணுங்கிற்கு இவை ஒளிப்ப குறித்தனனே
நிலை புறம் கண்ட ஆண்டகை முன் நினைத்த பயன் இன்று உளது-ஆல்

#79
தேற்றாதோர் அரும் பொருளை இருட்டு அறையுள் தேடுவர் போல்
ஆற்றாத ஓர் மந்திரத்தின் அலகை இனம் நிலை காணா
மாற்றாத ஓர் வெருள் கடலை நீந்து அறியா மருண்டு அலைய
போற்றாத ஓர் துயர் விள்ளா புகைந்து அரசன் புகலுற்றான்

#80
ஐயம் மீட்பதன் பொருட்டு அகத்து அலை நினைவு அகல்-மின்
வையம் மீட்பதன் பொருட்டு எம்மால் மலிந்தன வஞ்ச
பொய்யை மீட்பதன் பொருட்டு இறை பிறந்திலன் இன்ன
மெய்யை மீட்பதன் பொருட்டு ஒரு விளக்கமும் இலது-ஆல்

#81
திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா மனு ஆய்
தடம் கொடு ஆண்டகை தரணியில் உதிப்பனோ இதுவே
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப
இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர் என்றான்

#82
சிரகமாய் இரு மருப்பு இடை பைத்து உயர் செத்த
உரகம் ஆடிய உரு கொடு மேழக முகத்தான்
நரக மாதிரம் நயப்புற விரக நோய் நல்கும்
விரக வாயுவு வெடிப்ப நக்கு இயம்புதல் கொண்டான்

#83
தூமம் நாடிய உருவும் ஒண் கோயிலும் துகள் ஆய்
சேம நாடு என் அ செழும் எசித்து இழந்தன சிதைவால்
வீமம் நாடிய வெரு கொடு மயங்குவது என்னோ
காமம் நாடிய கால் அரிது எமக்கு உளது உண்டோ

#84
சிலை வல்லார்களும் சிறப்பு எழு நெடும் புகழ் திளை நூல்
கலை வல்லார்களும் கடி நிதி திரு கொடு பெரும் கோல்
நிலை வல்லார்களும் நிறுவிய மற்ற வல்லாரும்
முலை வல்லார்களின் முயலினால் முரிவு இலார் உண்டோ

#85
கார் இழந்து இழி துளி என நாள்-தொறும் கனவில்
பார் இழந்து இழி பல் உயிர் யாவையும் பார்க்கில்
நீர் இழந்து இழி நிறை தவிர் காமுகர் அல்லால்
சீர் இழந்து இழி செயிரினார் எண்ணுவது அரிதோ

#86
என் இயம்புவன் யான் இனி இவர் எலாம் ஒருங்கு
முன் இயம்பிய முரண் தொழில் யாவையும் நோக்கில்
கொன் இயம்பினர் காமம் நாட்டினர் என கூற
பின் இயம்பிட பிழை செயும் தொழில் யாது உண்டோ

#87
வேட்பது ஓர் வினை விலக்கினர் மானிடர் ஆயின்
மீட்பது ஓர் வினை விழைந்து உலகு அழிக்கும் பல் தொழிலை
கேட்பது ஓர் வினை கிடத்திட பயன் இலா ஆசை
கோட்பது ஓர் வினை குணிப்ப நாம் கொற்றம் ஆம் என்றான்

#88
மெய் எஞ்சா உரை வியந்து கேட்டு அலகைகள் ஆர்ப்ப
மை எஞ்சா வரை வரையினை தழுவிய வண்ணம்
பொய் எஞ்சா இறை புகன்றவன் பொறை புயம் தழுவி
மொய் எஞ்சா நிறை வஞ்சக முயல்வினை மொழிந்தான்

#89
தாங்க_அரும் பொறை தறை மடுத்து எடுத்து என வஞ்சத்து
ஓங்கு_அரும் தொழில் உதவி கொண்டு ஒளித்த வேல் எறிந்த
நீங்கு_அரும் பகை நிறை உயிர் உண்டு என நீயும்
தீங்கு அரும் படை ஒளித்தியேல் செயிர் புக வெல்வாய்

#90
கொல்வதற்கு அரும் குணத்து உளத்து இறையவன் புதைத்த
வெல்வதற்கு அரு நாணம் அது ஒன்றினை வென்றால்
ஒல்வதற்கு அரும் உளம் உனக்கு அமைந்து பா முகத்தில்
சொல்வதற்கு அரும் தொடை என தொடர்வன துகளே

#91
நங்கை நம்பியும் நாடிய அன்பு என நாட்டி
சங்கையம் பல சாதி நல் முறை என புகுத்தி
அம் கை அங்கனை பழகின் நீ அகலினும் அரிது உன்
வங்கை இன்புற வன்னி முன் வை என அழல்வாள்

#92
மால் கலந்த அவா வளர என் பணியினால் கவிஞர்
நூல் கலந்த வாய் நுனித்த தேன் என தகும் காமம்
சால் கலந்த பா சாற்றவும் கேட்பவும் செய்வாய்
பால் கலந்த-கால் பருகிய நஞ்சு மீட்பு அரிதே

#93
ஒருவரும் செயிர் உரைப்பவும் கேட்பவும் செய்தால்
இருவரும் செயிர் இன்றியும் நாணமே வெல்வாய்
மருவ_அரும் புகர் பழகவே வழங்கிய முறை ஆம்
தெருவரும் புலி சீறினும் சிறுவரும் வெருவார்

#94
அஞ்சினார் எனில் அமைதி ஓர் முறை என்பாய் வஞ்சத்து
எஞ்சு இலாய் எனில் இணங்குவர் இணங்கிய பின்றை
நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து நிற்பவரோ
மஞ்சில் வாழ் உயர் வரை பெயர்ந்து இழிந்த கல் போன்றே

#95
நம்பியோடு எழில் நல் மண துணைவியும் தம்முள்
வெம்பி ஓர் பகை விளைந்த கால் காமமும் விளைவு ஆம்
தும்பி சூழ் அலர் தொல் கொழுகொம்பு இழந்து அடுத்த
கொம்பில் ஏறிய கொழும் கொடி போல்வது காண்பாய்

#96
பெண் அம் காணியும் பெருமையும் பேர் ஒளி பிறப்பும்
திண் அம் வாழ்க்கையும் சிதையும் என்று இணங்கிலராகில்
வண்ணம் தீர்ந்து உளம் வளைந்து தீ நசையுற செய்வாய்
தண் அம் வேர் கெடின் தரு எலாம் சாய்தலும் அரிதோ

#97
மை முகத்து இவை வகுத்து அரும் பழி கொலை களவும்
பொய் முகத்து உறும் புரை பல விளையும் ஆறு உணர்த்தி
நை முகத்து உயிர் நவை உறி கேடு உறீஇ அரசன்
மொய் முகத்து அரு முரண் தொழில் நெடிது காட்டினன்-ஆல்

#98
கை முகம் புதைத்த நாக நீல் முகத்தான் கரோதரன் நக்கு இவை சொல்லும்
பொய் முகம் புதைத்த வஞ்சனை தொழிலால் புரையுற உணர்ந்த வாய் யாவும்
மெய் முகம் புதைத்த நூல் விளக்கு எய்தி விளங்கினேல் பயன் இலாது அன்றோ
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல் வடு புகும் பெரும் தடம் என்றான்

#99
நிறை தவிர் தீய கயவரும் நரகின் நிலை தவிர்ந்து இன்ப வீடு உடலின்
சிறை தவிர்-காலை எய்தலும் விழைவார் செல் கதி எளிது என காட்டி
முறை தவிர் அறங்கள் நம்புளி தாமே மூழ்கிய துகளின் ஆழ்ந்து அஞ்சா
மறை தவிர் அறத்தால் வீடு உற உள்ளி மாய்ந்து எரி நரகிடை வீழ்வார்

#100
நீர் விளை சிறந்த பல் துறை மூழ்கல் நீர் துளி இறைத்து உயர் வாரல்
பேர் விளை ஓதல் பெரு மணி தரித்தல் பெரும் சடை நீடுற வளர்த்தல்
சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல் துஞ்சினார்க்கு எள் அமுது இறைத்தல்
ஏர் விளை கதி சேர் வழி எனில் பாவம் இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ

#101
இ வழி எளிதில் புரை எலாம் தீரும் என்றுளி புரையின் மேல் சாய்ந்து
செ வழி ஒழிந்த மன் உயிர் கெட ஓர் செயிர் வழி காட்டவோ வேண்டும்
மொய் வழி அருவி முன் உள இழிவில் முடுகி வந்து ஓடவும் நாமோ
அ வழி காட்டல் வேண்டும் என்று உரைத்தான் அறிவு அளவு அரும் கொடும் சடத்தான்

#102
சடக்கலி எனும் பேய் மற்று எலாம் களிப்பில் சருக்கொடு கரும் கடல் ஓதம்
பட கலி தளிர்ப்ப உகளி முன் பாய்ந்தான் படர் இருள் முகில் தரும் அசனி
அட கலி எடுத்து ஆர்த்து அறிவு அறை போக்கி அழல் அறை அலகைகாள் நெஞ்சம்
கெட கலி என்னோ மருட்டு உணர்வு என்னோ கேதம் ஒன்று எசித்து-இடை காணேன்

#103
மதி வளர் உணர்வு அற்று எசித்தனர் முன் நாள் வதை வளர் நரகு-இடை வீழ்ந்தார்
நிதி வளர் கோயில் வீழ்ந்து நாம் வீழ்ந்த நிலைமையும் சூசை ஆங்கு உரைக்கும்
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான்
பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும் நமக்கு ஓர் பழி வளர் களிப்பும் ஆம் என்றான்

#104
ஐ வகை பொறியும் வாட்டிய சூசை அறையும் நூல் உறுதியால் அன்னார்
மெய் வகை தவத்து நிலைபெறின் இன்பம் விளையுமோ நமக்கு என அரசன்
பொய் வகை சடத்து நான் புகுந்து எசித்தார் புரையுற அவன் மொழி பழித்து
செய் வகை திறத்து நிற்பரோ என்ன செப்பினான் சடக்கலி மீண்டே

#105
கொக்கு அணி முடியும் கொடி சடை சிரமும் குண்டல செவியும் வெண் பலியை
மிக்கு அணி நுதலும் பொறி அடும் தவத்து மெலிவொடு வாடிய முகமும்
அக்கு அணி மார்பும் தண்டொடு கரக அம் கையும் இவற்றொடு மறையை
தொக்கு அணி வேட முனிவரன் என நான் தோன்றி ஆங்கு எவரையும் வெல்வேன்

#106
தொல்லையில் அளித்த தேவரை நீங்கி தொழுபவோ புது இறை என்பேன்
எல்லை_இல் முன்னோர் ஒழுகிய நெறியே இழிவுறும் பழுது அதோ என்பேன்
ஒல்லையில் நெடு நாள் தவ பயன் பேதை உரைகள் கேட்டு ஒருவவோ என்பேன்
கொல்லையில் முளைத்த களை என புல்லர் கொடு முறை கொய்-மின் நீர் என்பேன்

#107
புன் குலத்து உதித்து பொலிசை அற்று எய்தி புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன்
சொல் குலத்து இழிவின் பிதற்றிய கதைகள் சுருதியோ நூல் மலி நாட்டில்
நல் குலத்து உதித்த நீர் புற நீச நவ முறை ஒழுகவும் நன்றோ
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான்

#108
பொய் நிறத்து உரைத்தது இழிவுற வெளி ஆய் பூதலத்து ஒருப்பட பிறந்து
மெய் நிறத்து உயர் தொல் வேதம் அது என்றும் விரி ஒளி மணி முடி வேந்தர்
செய் நிற குலத்தோன் அம் முனி என்றும் திரு புகழ் கலை நிறை மாட்சி
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில் பிழை உனக்கு என்றனன் வேந்தே

#109
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட
விண் வழி அசனி ஒலி எழ நக்கு வெவ் வினை சடக்கலி விளம்பும்
கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள் காது இடும் உணர்வு எவன் செய்யும்
தெண் வழி உவரி சுறவு தன் காதை தெரிகு இலேல் கேள்-மினோ என்றான்

#110
வெள்ள மேல் எதிர்த்த இளம் சுறா கூவல் விழ எவண் நீ என குழி மீன்
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று ஆழ்ந்து கொழு மணி கொழித்த நீள் புணரி
உள்ளமேல் சிறப்பு கூற இ குழியோடு ஒத்தது உண்டோ என நகவே இ
பள்ளமே உறையும் காலை நீர் உரைத்த பழி எலாம் செல்லும் என்றதுவே

#111
மீளவும் கரு வித்து அழியவும் அழியா வெண்ணெயின் திரண்ட பின் கெடவும்
நீளவும் கெடாது பிறந்து மாய்ந்திடவும் நின்று நல் கலை துறையுறும்-கால்
மாளவும் மாளா நோயில் தீந்து இறவும் மக்களை வருத்து இன்னா செயும்-கால்
ஆளவும் செய்வேன் அ துயர் தீர அருச்சனை வழங்கவும் செய்வேன்

#112
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண்
மற்றை யாவையும் தாம் ஒழிந்த தொல் தேவர் மன சினத்து அயர்ந்தவை என்பேன்
அற்றை நான் செயும்-கால் அம் முனி உய்தல் அரியது ஆய் வீழ்ந்த அர்ச்சனை கொண்டு
ஒற்றை ஆழியின் நீ ஆளுவாய் என்ன உரைத்தனன் சடக்கலி மாதோ

#113
மஞ்சொடு கடல் ஒலி மயங்க ஆர்த்த பேய்
நஞ்சொடு வளர் சட நடையில் இன்ன ஆய்
அஞ்சொடு மு மதி அளவும் போக்கி வெம்
நெஞ்சொடு வளர் பழி நினைக்கும் தன்மையோ

#114
இழுக்கு இயை செருக்கு எழ இன்ன யாவையும்
வழுக்கு இயை களிப்பொடு கேட்ட மன்னவன்
ஒழுக்கு இயை செவிகளை ஒலுக்கி கொம்பு அசைத்து
அழுக்கு இயை எயிற்று வாய் அவிழ்த்து கூறினான்

#115
செயல் கடல் கடந்த வெம் வஞ்ச சேனைகாள்
மயல் கடல் கடந்த நும் மந்திரத்து அஞர்
இயல் கடல் கடந்து நான் நீந்தி இன்புறும்
பயன் கடல் கடந்து என பரிவு அற்று ஓங்கினேன்

#116
காட்சியும் கருத்து எலாம் கடந்த மாயை தன்
சூட்சியும் திளைத்த நீர் துணை எற்கு ஆக என்
மாட்சியும் கோன்மையும் மறுக்கல் ஆவதோ
தாட்சியும் கலக்கமும் தணந்த கூளிகாள்

#117
இன்புற பால் கலந்து ஏதம் ஊட்டுதீர்
துன்புற வெருட்டுதீர் துதியை ஆடுதீர்
அன்புற அணுகுதீர் அனைவரும் கனல்
பின்பு உற வருந்துதீர் பிழைப்பு எமக்கு இதே

#118
உள்ளிய வஞ்சனை உதவ அ இரு
தெள்ளிய அறிவினோர் திறம்பு இலா தவம்
விள்ளிய முறையொடு வினை கொண்டால் அலால்
எள்ளிய கசடு உகுத்து எசித்தில் ஆளவோ

#119
இ திறத்து ஆங்கு உறை இரண்டு யூதர்கள்
மை திறத்து உளம் கெடின் வழங்கும் வெற்றி என்று
எ திறத்திலும் ஒருங்கு இயன்று நாம் எலாம்
பொய் திறத்து அவரை முன் பொருதல் வேண்டும்-ஆல்

#120
அனைவரும் ஓர் அணி ஆக ஆகவம்
நினைவு_அரும் உரத்தொடு நிகழ்த்து நீர்மையால்
வினை வரும் முகத்து அவர் மெலிய வென்ற பின்
நனை வரும் எசித்து எலாம் நயப்ப வெல்லுவாம்

#121
புல்வதற்கு அரும் சடம் புணர்ந்த சூட்சியால்
வெல்வதற்கு அரும் சமர் வினை செய்வார்க்கு எலாம்
ஒல்வதற்கு அரும் பயன் உதவுவேன் எனா
சொல்வதற்கு அரும் சினத்து அரசன் சொற்றினான்

#122
அழுந்து விண் தரள் இடி அனைய கொம்புகள்
கொழுந்து விட்டு அழன்று அரசு அடியில் கூர் பட
விழுந்து விண் தரள் கெட வெறி ஒருங்கும் ஆர்ப்பு
எழுந்து விட்டு இரட்டின எரியும் கூசவே

#123
கொக்கரித்து இரட்டிட குதித்து உவப்ப அறா
மிக்கு அரி திரள் பட வெற்றி வெற்றி என்று
எக்கரித்து அழல் துளி இறைத்து இறைத்தன
நக்கரித்து எயிற்று எரி நதுத்த பேய் எலாம்

#124
புகழ்ச்சி வந்துற்ற-கால் பொலிந்த மாண்பினார்
இகழ்ச்சி வந்து உதிக்கும் என்று எண்ணி போற்றுவார்
நெகிழ்ச்சி வந்து உதிப்பது நினைக்கிலாத பேய்
மகிழ்ச்சி வந்து உவந்தன கடையில் மாழ்கவே
மேல்

@24 சோகு தோர்வைப் படலம்


#1
கா மலி அலர் கோலானும் கன்னி அம் துணைவியாளும்
தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச
தீ மலி குணுங்கு எலாம் ஏழ் செயிர்க்கு உரி அணிகள் ஏழாய்
பூ மலி நடுக்கின் கூச புதவு ஒழிந்தன போர் ஓர்ந்தே

#2
வெரு எனும் மதத்த யானை வெள்ளமே வளர் ஆங்கார
தரு எனும் கொடிஞ்சி ஓங்க சமைத்த தேர் இரட்டி கோப
செரு எனும் கலின பாய்மா தேரினும் இரட்டி ஆசை
உரு எனும் எண்_இல் காலாள் உடைய பேய் படைகள் தோற்றம்

#3
தீய் விளை காமம் அம்பாய் சீற்றமே வயிர வாளாய்
நோய் விளை குரோதம் வேலாய் நொறி கரத்து உலோபம் எஃகாய்
வாய் விளை பொய் நீள் கோலாய் மடி நெடும் கதையாய் ஏந்தி
பேய் விளை சமரில் கைக்கொள் பெரும் படைக்கலங்கள் அன்றோ

#4
நீர் அணி உலகம் ஆட நெடும் கடல் ஒடுங்கி பொங்க
கார் அணி வானம் விம்ம காரணம் அறியா மாக்கள்
சூர் அணி உளத்தின் கூச சுடு நரகு அலகை யாவும்
பேர் அணியாக செல்ல பேய்க்கு அரசு எழுந்தது அன்றோ

#5
எழுந்து அழல் இடி ஏறு அன்ன ஏழ் எரி வாய் கொண்டு ஆர்த்து
கொழும் தழல் விழிகள் தும்மி குணுங்கு இனத்து அரசன் நெஞ்சத்து
அழுந்து அழல் முனிவின் மற்ற அலகையோடு எழுவ கண்டு
விழுந்து அழல் உளத்து இல்லை என்ன விண்ணவர் இரங்கி நொந்தார்

#6
ஐ வகை பொறியின் மொய்த்த ஐம் பகை கொலையின் சூழ்ந்து
மெய் வகை திறத்தில் ஈனம் விளைந்து உளம் தெளியா மாக்கள்
பொய் வகை சடத்தில் ஆண்மை பொலிந்த பேய் திரண்டு செய்யும்
மை வகை சமரில் நிற்பர் வையகத்து எவரோ என்பார்

#7
திக்கு எலாம் நடுங்கி ஞானம் தெருள் தவம் அறத்தின் சீலம்
மிக்கு எலாம் ஒதுங்கி நீங்க வெகுண்ட இ தன்மை பாரில்
புக்கு எலா வெறிகள் சேர்-கால் பொய் கொலை களவு காமம்
தொக்கு எலாம் பரந்து மாக்கள் தொகையில் ஆர் உய்வர் என்பார்

#8
செ வினை நாட்ட பாரில் சிறுவனாய் உதித்த நாதன்
இ வினை அனைத்தும் நீக்கி இரங்கு இலான்-கொல்லோ என்ன
நவ்வினை விடா நல்லாளும் நறும் கொடியோனும் வெல்ல
வெம் வினை உணர் பேய் நோக்கும் வினவு என கண்டு நக்கார்

#9
அருள் முகத்து உதித்த நாதன் அவன் என அறியா வண்ணத்து
இருள் முகத்து உவந்து வெற்றி எளிது என உணர் பேய் சோதி
தெருள் முகத்து இரவு ஒத்து ஆற்றா சிதைவு உறீஇ வெருவுற்று எஞ்சி
மருள் முகத்து எரியில் வீழ்ந்து மாள்வன ஒருங்கும் என்பார்

#10
மன்று அலர் கொடியின் வாசம் மண்ணையை மருட்டும் என்பார்
துன்று அலர் கோதை கன்னி சுட வெறி முரியும் என்பார்
என்று அலர் சுடிகை சூடி இரு விசும்பு எங்கும் நிற்பார்
நின்று அலர் தொடைகள் ஏந்தி நிகர்த்த பேய் தோல்வி காண்பார்

#11
கான் மலி கொடியின் கன்னி கடி மலர் என கை ஏந்தும்
வான் மலி மகவின் மாமை வடிந்த தேன் உணும் வண்டு ஒப்ப
தேன் மலி கொடியோன் இன்பம் திளைப்ப உள் சுவைத்த-காலை
கூன் மலி சடத்த பேய்கள் குணித்த போர் தொடங்கிற்று அன்றோ

#12
ஈங்கு ஒரு விழா அணி என்ன மூவரே
வீங்கு ஒரு மகிழ்வு அருள் சுவை விள்ளாமையில்
ஆங்கு ஒரு காவதம் அகல நின்ற பேய்
ஓங்கு ஒரு வயம் தடுத்து ஒருவிற்று என்னவே

#13
அஞ்சல் ஏது அ புறத்து அணுகு இலா திறத்து
எஞ்சல் ஏது இரந்த இரு மைந்தர் ஈடு இவண்
விஞ்சல் ஏது உலகு எலாம் வென்ற வஞ்சனை
துஞ்சல் ஏது என வெறி சுளித்து சீறின

#14
மின் உள இடியின் ஆர்த்து அழல் கண் விட்டு அதிர்
பின் உள குணுக்கு இனம் பெரிது உதைத்தலின்
முன் உள வெறி எலாம் முழங்கி அ புறம்
கொன் உள வயம் செலா குலைய நின்றவே

#15
காலொடு பிணித்த பல் உழுவை காய் கத
சாலொடு தொடர் கடித்து அலறி தாவின
பாலொடும் அப்புறம் பாயல் ஆற்று இலா
மாலொடு வெகுண்ட பேய் சமர் வளர்த்தவே

#16
பரி உரு தகர் உரு பகடு உரு பகை
கரி உரு கரத்து உரு கவி உரு கதத்து
அரி உரு கரடி கோட்டு அரிகள் நாய் வரி
திரி உரு தோற்றின சினந்த பேய்களே

#17
ஈட்டமும் வேறும் ஆய் ஏந்தும் வேல் எலாம்
வாட்டமும் வெருவும் ஆய் வையம் ஆட உள்
கோட்டமும் வினைகளும் குணித்த பேய்கள் போர்
ஆட்டமும் முழக்கமும் அளவு அற்று ஆயதே

#18
ஒளி முகத்து இடமும் நீர் உலகும் நீறும் என்று
இளி முகத்து எங்கணும் எரி செம் தீ எழ
சுளி முகத்து அதிர்ந்த பேய் தொடுத்த வேல் எலாம்
வெளி முகத்து இடையின் நீறு ஆக வீழ்ந்தவே

#19
சுரதமே கவசமாய் தேவ தூய் தயை
இரதமே எழுந்த அ இருவர் தம் புடை
விரதமே கது விடா புரிசை மேல் பட
பிரதமே வெறியுற பிதிர்ந்த வேல் எலாம்

#20
புறத்து அளவு அகல் திரு புதல்வன் ஆண்மையால்
அறத்து அளவு உயரினோர் அழிவுற்று எஞ்சிட
திறத்து அளவு அறிவு உள பேய்கள் செய்த தீ
மறத்து அளவு அமர் வகை வரைவு_இல் ஆயதே

#21
உள்ளிய சமர் எலாம் ஒழிந்து உளம் கெட
எள்ளிய குணுங்கு இனம் ஏங்கி விம்மவும்
தெள்ளிய மரபினோர் செரு எண்ணாது உளம்
விள்ளிய மகிழ்வு அறா விளங்கினார் அரோ

#22
மின்னி அம்புய கண் ஆதி வென்ற ஐம்பொறியை காத்தோர்
வன்னி அம் பகையின் பொங்கி வஞ்சக வெறிகள் ஆர்த்து
துன்னி அம்பு உயிர்த்த தீயால் துகள் உறா கது விடாத
கன்னி அம் புரிசை சூழ்ந்த கதவு அடைத்து அரணை போன்றார்

#23
கருவினால் கலங்க தெண் அம் கயம் கெட தெளிவு அற்று அன்ன
செருவினால் கலங்க உள்ளம் தெளிவு அற பங்கம் ஆம் என்று
உருவினால் கலங்க தோன்றி உடன்ற பேய் உளத்தில் அன்னார்
வெருவினால் கலங்க தம்முள் விளைத்தன அரும் போர் அன்றே

#24
கடம் மாறு இல வெம் சின வேழமொடும் கனம் ஈரும் கொடிஞ்சி விமானமொடும்
இடம் மாறி உகண்டன வாசியொடும் எரி ஊறிய வெம் கதம் ஆர் விழியால்
விடம் மாறு இல வெம் சிலை ஆதியொடும் விளை போர் உரி வாள் வளை வேல் கவரும்
தடம் மாறு இல வண் கர வீரரொடும் சலராசியின் தோன்றியது ஓர் படையே

#25
புழு வாய் வழி கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரி திரள் ஊற்று உற நீள்
மழு வாய் வழி வேல் வழி வில் வழியும் மலி அக்கி புகைப்ப மதத்த உவா
கெழு வாய் வழி பாய் பரி வாய் வழியும் கிழிபட்ட கனத்து இடி ஒத்து எரி தீ
விழும் வாய் வழி மண் வழி வான் வழியும் வெரு உற்று அழல சமர் காட்டினவே

#26
மேகங்கள் மெலிந்து அற வேகும் எனா மேகம் துறுகின்ற இடி வேகும் எனா
மாகங்கள் அடங்கிலும் வேகும் எனா வானின் திரி வெம் சுடர் வேகும் எனா
நாகங்களொடும் புனல் வேகும் எனா நால் வம்பலொடும் கடல் வேகும் எனா
வேகங்கள் உணர்ந்து உளம் வேகும் எனா வேகம் கொடு வெம் திசையோர் பொருவார்

#27
தொடை உற்ற எயிற்று அழல் ஈட்டிய பேய் தொட ஒற்றை சரத்தை அடல் தனு கோத்து
இடை உற்ற சத சரம் ஆகி விடும் இடை ஆயிரம் ஆய் வெளியில் படரும்
கடை உற்ற சர தொடை கோடியும் ஆய் ககனத்தில் அழற்றிய மாரி எனா
மிடை உற்ற அழல் கிளர் நீத்தம் எனா விரி திக்குகள் முற்றும் எரிந்தன ஆம்

#28
களி வீசிய மு மதம் வீசிய மால் கரி வாரினர் அந்தரம் வீசினரே
வெளி வீசிய சிந்துரம் ஆர்த்து அலற விசையோடு சுழன்று சுழன்று உலவ
துளி வீசிய மேகம் ஒடுங்கிடவும் சுடரோன் வெருவி கடிது ஓடிடவும்
வளி வீசிய ஊழியில் ஏறோடு வீழ் மழை போல் நிலம் ஆடவும் வீழ்ந்தனவே

#29
சிறையோடு பறந்த பறம்பு எனவோ திறலோடு படர்ந்த விசும்பு எனவோ
உறையோடு கலந்து இரு விண்டு இடை ஊர் உருளோடு திரிந்த இரதம் திரளே
மிறையோடு விரிந்தன பொய் எனவோ விரைவோடு படர்ந்து பொதிர்ந்து பொர
கறையோடு மிடைந்து எரியும் தழல கதமோடு சரம் தொடு வெம் சமரே

#30
தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார் துறுகின்ற இரதம் கொடு எதிர்ந்து இரிவார்
புடை நின்று மிடைந்து திரிந்து அகல்வார் பொதிர்கின்று புழுங்கி உடன்று எரிவார்
இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார்
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார்

#31
ஒரு புடையில் இற்றை யாவும் இவரலின் உருவமுடன் உட்கு வீச அணி அணி
இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர எதிரும் எதிருற்ற யாவும் அற அமர்
தரு புடையில் முற்றி வேகும் அழல் எழ தகுதி இல கற்ற மாய வினையொடு
வரு புடையில் மற்ற யாரும் இணை அற வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார்

#32
கரிகளை நிகர்த்த வீர முனிவொடு கடிய கதம் மொய்த்த நாளி முகமுடன்
அரிகளை இசைத்த தேரின் எழ எழுது அழலு சரம் மைத்தன் ஏவி வருகையில்
எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது எயிறுகள் துதைத்த சீய முகமொடு
வரிகளை அமைத்த தேரின் உயர் எழும் வடுவன் எதிருற்று உலாவ மலைகுவார்

#33
அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல அரை நொடி முடித்து இலாது விடு கணை
நிழல் எழ மருட்டு வானம் இருளுற நிரை எதிர்த்த கூளி அணி அணி
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல்
சுழல் எழ உயிர்ப்பு வீசி மெலிவு இல சுனக முகன் முட்டி நீடு முனைகுவான்

#34
நெடு மலை திரட்டி நீள அமைவன நெடிய சிலை உற்ற வீர வடுவனும்
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட
தொடு மலை உயர்த்த நேமி உருவவும் துறு விசையின் மைத்தன் ஏவு கணையொடு
கடு மலை இழைத்த சாபம் இறுவது கடிதில் அவன் நக்கு நீடு குமுறவே

#35
சினமொடும் உடற்றி நீடு கையில் இடி சினை முகில் பறித்து நேமி என எறிந்து
இனமொடும் எதிர்த்து கூளி வெருவுற இடியொடு சுழற்றி வீச வடுவனே
மனமொடு பழுத்த தீயை உமிழ்வன வடிய கணை மைத்தன் ஏவி எழுதினன்
கனமொடும் எரித்த ஏறு துகள் எழ கடல் திரை சுருட்டி ஓடி மெலியவே

#36
புடவியை அனைத்தும் வேரோடு அசைவன புதவு அழல் கொளுத்து சூலம் இரு கையில்
தடவி இறுக கடாவி உழுது அன சடை வடுவன் இட்ட காலை எதிர்வன
நடவிய வயத்த தேரும் வெறி இனம் நகுவ அழல் பற்றி நீற முகில் புழை
இட விரையின் மைத்தன் மீதில் எழ இடி என முனர் குதித்து வீழ உறுமினான்

#37
உறுமி உரும் ஒத்த வீரன் வடுவன் உந்து உயரும் இரதத்தை வாரி முகில் அறர்
துறு மிசை சுழற்றி வீசு விசையொடு துறுவி அழல் பற்றி வேக எறி தர
தெறும் இடி இனத்து வேக இன முகில் திசை திசை அனைத்தும் வேக இரு விழி
இறும் எரி அழற்றி வேக எரி மழை என விழும் சினத்த சீய வதனனே

#38
அழல மத கரி அழல வய பரி அழல உருளொடு திகிரிகள்
அழல வரி சிலை அழல முனி கணை அழல வடி அயில் அழல வாள்
அழல இரு விழி அழல மற மனம் அழல இரு செவி அழல வாய்
அழல அடையலும் அழலும் இருவரும் அழலும் இரு கதையொடு பொர

#39
திரிவர் உகளுவர் அணுகி அகலுவர் திமிர இரு புயம் உறுமுவர்
பிரிவர் மிடைகுவர் புரள வெருளுவர் புரள உருளுவர் குருதிகள்
சொரிவர் உளைகுவர் சுழலும் கதையொடு சுசியின் வெருளுவர் தொனி எழ
முரிவர் எரிகுவர் முனிய அதிர்குவர் முனையில் எதிர் இலர் முனைவரே

#40
உயர மத கரி சுழல எறிகுவர் உழுவை உருவொடும் உகளுவர்
பெயர அவர் கவர் வயிர நெடு வரை பிளவ உரம் உழுது எறிகுவர்
அயர இரிகுவர் குருதி மலி அன அலையுள் முழுகுவர் சினம் மலி
துயர முகமொடு தசையை உணஉண உதிரம் உமிழுவர் சொரியவே

#41
முறை_இல் ஒலியொடு முரசு முருடொடு முழவு கடமொடும் ஒலி எழும்
பறையின் ஒலியொடும் இரத உருளொடு பரிகள் கரியொடும் ஒலி எழ
கறையின் ஒலியொடும் உவணி அயிலொடு கதைகள் சிலையொடு சிலை பொழி
உறையின் ஒலியொடும் முகிலின் ஒலியொடும் உவரி ஒலி மெலிவன எனா

#42
பிழையின் வழி வழி துயரின் மலியன பெரு வில் வழி வழி கணை அதன்
புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா

#43
இனைய அடையலும் நரக வெறி இனம் இயல இடையிடை அடல் அமர்
அனைய வலியொடு புரிய வளனுடன் அரிய துணைவியும் வெருவுறா
சினை அசனி முகில் மெலிய எரி வெறி சினவி எழஎழ அரிது இடர்
புனைய உளைவன புகைய வெருவன பொருதல் வெறிது என மெலிவன

#44
இன்ன யாவையும் உளத்து இரங்கி மூவரும்
மின் இலா அமரரும் விழித்து உற்றார் அலால்
துன்னி ஆர்கலி உடை சூழ்ந்த பார் உளோர்
அன்ன யாவையும் ஒருங்கு அறிந்தில் ஆயினார்

#45
பொன் வளர் வயிர நல் பொருப்பின் போன்று உளம்
மின் வளர் உணர்வினால் விளங்கும் மா தவன்
கொன் வளர் வஞ்சக குணுங்கின் மாயை கண்டு
இன் வளர் இரக்கம் மிக்கு எண்ணி ஓதினான்

#46
ஒழுங்கிய மருப்பினை ஒலுக்கி எந்தையான்
மழுங்கிய வயத்த பேய் வஞ்சம் மாறு இலா
புழுங்கிய கடை யுகம் பொருவ பார் எலாம்
விழுங்கியது என முனை விளைத்த ஈடு இதோ

#47
மின் முதல் முகிலொடு விசும்பு யாவையும்
பொன் முதல் மணி கிளர் புணரி யாவையும்
கல் முதல் ஈங்கு எலாம் கனன்று சுட்டு எனா
புல் முதல் சிதைந்தது ஓர் பொருள் இங்கு ஆயதோ

#48
விண்ணின் மேல் வைத்த நன்று இழந்த வெம் பழி
மண்ணின் மேல் வைத்த மன் உயிரின் வைத்த பேய்
கண்ணின் மேல் வைத்த மாசு என்ன காட்டிய
எண்ணின் மேல் வைத்த உட்கு இயற்றும் மாயமே

#49
மாற்று அரும் வஞ்சக மாய வித்தையால்
ஆற்று அரும் வெருவுடன் அகம் கலங்கவே
போற்று அரும் பழி வெறி புரை புகுத்தலால்
தேற்று அரும் அழிவு உறீஇ சிதையும் பார் எலாம்

#50
இ திறத்தினால் அன்றோ இருள் விரும்பிய
மை திறத்து அடல் கொளும் மண்ணை கங்குலில்
பொய் திறத்து உகுத்த தீ கனவை பூத்து அவர்
மெய் திறத்து உணர்வு அற விளைக்கும் தீமையே

#51
ஆசை செய் சேயர் கொன்று அலக்கண் செய்குவேன்
மாசை செய் நலம் அற மிடி வகுக்குவேன்
பூசை செய்து எனை வணங்கு இலாத-போது எனா
ஓசை செய் உவரி போல் உரைக்கும் பேய்களே

#52
ஒலித்தலால் எவன் செயும் உவரி பேய் இனம்
கலித்தலால் எவன் செயும் கடவுள் சார்ந்த-கால்
சலித்தலால் எவன் செயும் பிணித்த தன்மையின்
வலித்த நாய் கடிக்குமோ மருவு இலாமையே

#53
பிணிப்பு_அரும் குணத்தொடு பிணி பெயர்த்து அற
குணிப்பு_அரு நலம் தரும் கொள்கை பேசும்-ஆல்
துணிப்பு_அரும் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா
தணிப்பு_அரு நரகு அழல் தழல தாழ்ந்த பேய்

#54
சுட்டு-இடை நரகுழி புதைத்த சோகு வான்
நட்டு-இடை தளர்ந்தனர்க்கு உறுதி நல்கலே
நெட்டு-இடை நெறிகளில் உதவி நேடினர்க்கு
அட்டு-இடை கரவர் வந்து அமைதல் போலுமே

#55
வெம்பிய வஞ்சனை விளங்கு இலாமையால்
பம்பிய புரை புனைந்து ஏய்த்த பார் உளோர்
நம்பிய வெறியொடு நரகில் வீழ்வர் என்று
அம்பிய கொடியினோன் அழுது இரங்கினான்

#56
நல் திறத்து நரர்க்கும் இனைந்த பின்
செல் திறத்து ஒலி சீறிய பேய் கெட
வில் திறத்து வியன் தவம் ஏந்தி அம்பின்
திறத்தில் அற தொடை ஏற்றினான்

#57
கடி நடுக்கிய கள் அவிழ் கான் அலர்
கொடி நடுக்கிய கோடு இல மா தவன்
படி நடுக்கிய வெம் பழி பேய் எலாம்
அடி நடுக்கிய ஆண்மையின் நோக்கினான்

#58
நோக்கினான் கழுது ஆண்மையை நூறினான்
தாக்கினான் அற வெம் சர பல் தொடை
போக்கினான் கடி போக்கிய வேல் எலாம்
நீக்கினான் நிமிர் வச்சிர நெஞ்சினான்

#59
மேவி வான் தொழும் தன் தவ வில்லினால்
தூவினால் என கெட்டு அதிர் சோகு எலாம்
ஓவி நாண ஒருங்கி இரு கால் கொடு
பூவில் தேய்த்தது போல ஒடுக்கினான்

#60
புரிந்த நின் தயை பொற்பொடு அஞ்சேன் ஐயா
விரிந்த மன் உயிர் வேண்டி இ பேய் எலாம்
எரிந்த தீ புதைத்து ஓட்டு என இன் ஒளி
சொரிந்த பூ முக தோன்றலை வேண்டினான்

#61
மீன் முகத்து உணர் காட்சியின் மேன்மையான்
ஊன் முகத்தில் ஓர் ஆண்டு உரையாத பின்
கான் முகத்து அலர் வாய் கனி விண்டு உரை
வான் முகத்து அமுது ஊறி வழங்கினான்

#62
மின்னி தாரகை நோக்கு என வெண் மலர்
துன்னி தாங்கிய சூசையை நோக்கினான்
கன்னி தாய் கமல கரத்து ஆசனத்து
உன்னி தான் இனிது எந்தை என்று ஓதினான்

#63
சிந்தை நீடு எழ சீர்த்து இவை கேட்டனன்
முந்தை நீ உள மூ_உலகிற்கு எலாம்
தந்தை நீ தனி கன்னி தனயன் நீ
எந்தை நீ எனை என்றனையோ என்றான்

#64
அருளின் மா கடல் மூழ்க அரும் தவன்
மருளின் மா கடல் மூழ்கிய மண்ணைகள்
வெருவின் மா கடல் மூழ்கி விழுந்து எரி
இருளின் மா கடல் மூழ்கின என்னவே

#65
கெலி பட கனி எந்தை கிளைத்த சொல்
கலி பட கலங்கி கடி ஈட்டமே
வலி பட கனம் கால் இடி மான ஆர்ப்பு
ஒலி பட கனல் ஊடு உற வீழ்ந்ததே

#66
எல்லின் மாரியும் ஏந்திய வான் புகழ்
சொல்லின் மாரியும் தூய் மலர் மாரியும்
செல்லின் மாரியின் வானவர் சிந்தலின்
வில்லின் மாரியின் நாதன் விளம்பினான்

#67
எந்தை நீ தவத்து ஏந்திய வில்லினால்
நிந்தையாய் வெறி வென்றனை நின் பெயர்
சிந்தையால் அவை யாவரும் சீக்கவும்
வந்தையாய் வரமே வகுத்தேன் என்றான்

#68
என்ற நாதனை ஏத்தி வியப்பு உளத்து
ஒன்ற நீடு துதிப்ப உணர்வு எலாம்
குன்ற ஆசியை கூறினன் கூளியை
வென்ற மா தவத்து ஆண்மையின் வீரனே
மேல்

@25 குழவிகள் வதைப் படலம்


#1
செல் முகத்து இடி சினத்து ஒலி முழங்கிய வெம் போர்
கொன் முகத்து எரி குணுங்கு இனம் இயற்றிய-காலை
பொன் முகத்து ஒளி புரிசை மா நகரில் ஆயவை நாம்
சொல் முகத்து இவண் தொடையொடு தொடருதும் உரைத்தே

#2
புராதனம் தரும் புகழ் மறை யூதர் நாடு அளித்து
தராதரம் தரும் தடத்த தோள் உரும் உமிழ் தனு கை
நிரோருகம் தரும் நீண்ட தார் கரி கொடி தாங்கும்
எரோதன் என்று அரும் சடத்த கோன் எருசலேம் ஆண்டான்

#3
ஆள ஆசையால் அல்லவைக்கு அஞ்சிலான் தன் கோல்
நீள அசையால் நீதி_கோல் கோட்டிய கயத்தவன்
காள ஆசையால் கலங்கிய வெருளினான் உணர்வும்
மாள ஆசையால் மயங்கிய சிந்தையின் கொடியான்

#4
மன்னு நீர் உயர் மன்னவர் மூவர் வந்து உரைப்ப
மின்னு நீர் நவ மீன் உயர் உதித்தலும் வேந்தன்
என்னும் நீர் உலகு இனிது அளித்து ஆள்பவன் பிறந்து ஆங்கு
உன்னு நீர் கடந்து உதித்தலும் கேட்டு உளம் மருண்டான்

#5
மருள் கொள் நெஞ்சினான் மறை வலோர் யாரையும் விளித்து
தெருள் கொள் நன் மறை செப்பம் ஆய்ந்து உலகு அளித்து ஆள்வோன்
இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா
வெருள் கொள் நெஞ்சு அற வெத்திலத்து உதிக்குவன் என்றார்

#6
என்ற வாசகம் எறி வை வேல் என உளம் போழ்ந்து
குன்ற மார்பு-இடை கொண்ட வெம் கொடுமையை மறைத்து
சென்ற மூவரை செப்பி நீர் வணங்கி மீண்டு அங்கண்
நின்ற யாவையும் நீர் சொல போவல் யான் என்றான்

#7
மீன் முகத்து அவர் மேவி மீண்டிலர் என கண்டும்
கான் முகத்து அலர் முல்லையார் கண்டதும் கடந்த
நூல் முகத்து உயர் சீமையோன் உரைத்ததும் நுதலி
கோன் முகத்து அஞர் குவிந்து எழ வெருவினை கொண்டான்

#8
பிறந்த முன் இடம் பெயர்ந்து வந்து எருசலேம் தன்னை
துறந்த பின் அவன் தொடர்ந்த பல் இடம் தொடர்ந்து அவனை
பறந்தது என்னினும் பற்றி மொய்த்து அடுக என்று ஏவ
திறம் தகும் சிலர் தேடலின் காண்கிலாது அயர்ந்தான்

#9
நான் அளிக்கும் இ நாட்டில் மற்றொருவன் வந்து அவற்கே
மான் அளிக்கும் இ கோன்மை ஈய்ந்து இறைஞ்சவோ வளம் ஊழ்த்து
ஊன் அளிக்கும் இ உடல் விட நாள் இதோ என வான்
கோன் அளிக்கும் இ கொள்கையில் தான் மயல் கொண்டான்

#10
விண் புலம் தகை வேய்ந்தது தான் வினை வேய்ந்தான்
மண் புலம் குறை மறந்தது தான் உயிர் மறந்தான்
உள் புலம் தழல் உண்டது தான் உணவு உண்ணான்
கண் புலம் துயில் கடிந்தது தான் கொலு கடிந்தான்

#11
மாலை ஏந்து இருள் மொய்த்து எங்கும் மல்கிய-காலை கள்வர்
வேலை ஏந்துபு வெம் கோறல் விளைப்பது போல கோடும்
கோலை ஏந்து எரோதன் நெஞ்சில் கொடிது உணர்ந்து இருண்டு மாழ்ந்த-காலை
ஏந்தலை பேய் சேர்ந்து கடிது உணர்வு அழற்றிற்று அன்றோ

#12
உருட்டிய செங்கோல் ஈந்தே உயிர் உய்வர் எவரும் உண்டோ
மருட்டிய பகை முற்றா முன் வளர் திறத்து அடியில் ஈர்ந்து
தெருட்டிய நீரார் கோன்மை திறம் பெற தாயும் மேவார்
வெருட்டிய முறையில் வந்த வேந்தனை கோறல் நன்றே

#13
விடுதியேல் முடியின் வாழ்க்கை விடுத்தனை அவன் காணாதேல்
சடுதியே இடங்கள்-தோறும் ததும்பிய குழவி எல்லாம்
அடுதியே ஒருங்கு தானும் ஆவி அற்று இறப்பன் இல்லால்
கெடுதியே என பேய் கோவும் கேடுற நன்று ஈது என்றான்

#14
இருள் சொரிந்து அடர்ந்த கங்குல்-இடை முகில் இரு கண் கூச
தெருள் சொரிந்து இடித்து மின்னும் திறத்து உளத்து ஆளும் நாதன்
அருள் சொரிந்து இடும் மெஞ்ஞானத்து அவிர் கதிர் மின்னி அன்னான்
மருள் சொரிந்து இருண்ட நெஞ்சில் வடு முகம் கூசி கண்டான்

#15
தேம்பு உளம் கூச தோன்றும் திரு விளக்கு அவித்து மீண்டும்
சாம்பு உளம் கருதும் தீமை தன்னையே சாரா தோன்ற
கூம்பு உளம் கடுத்த வஞ்சம் குணம் என சொல்வார் தேடி
ஓம்பு உளம் தெளிந்த நூலோர் ஒருங்கு உடன் அழைத்தல் செய்தான்

#16
சொரி சுமந்திடும் கார் ஒப்ப துளி கையின் சலுமோன் நின்ற
எரி சுமந்து இலங்கி மின்னும் இன மணி நிரைத்து இட்டு ஈர்_ஆறு
அரி சுமந்து எழுந்த பைம்பொன் ஆசனத்து இருந்து தோன்றி
வரி சுமந்து அடும் வெம் வேங்கை மறத்தொடு பொலிய நின்றான்

#17
மந்திரிமாரும் வாய்ந்த வளம் தரும் தவரும் நன்னூல்
தந்திரிமாரும் தானை தலைவரும் ஒருங்கு கூடி
இந்திரி அலை பொங்கு ஒத்தது இடையிடை மொய்ப்ப நின்றான்
சிந்திரி மலை மேல் ஆடும் செழும் கொடி ஒத்த நெஞ்சான்

#18
நாறிய மணியின் வாய்ந்த நன் முடி பெயர்தற்கு அஞ்சி
ஊறிய கொடிய வஞ்சத்து உணர்வினை ஒளித்து தானே
கூறிய உரைகள் கோட்டி குணித்தவை முடித்தற்கு ஒல்கா
தேறிய உதவி தேடும் திறத்து என விளம்பல் செய்தான்

#19
பற்றார் வெம் பகை பட்டு அற நான் ஆள்
கற்றார் கல்வி கடந்து எழு நாட்டில்
மற்று ஆரோ ஒரு மன்னன் உதித்து ஈங்கு
உற்றான் என்றது ஒருங்கு உலகு எல்லாம்

#20
அன்னான் ஈங்கு உளன் என்று அறைவாரை
முன்னால் நானும் நகைத்து முனிந்தேன்
பின் நாள் ஆயின பெற்றியை எண்ணி
என்னால் ஆவது இயம்பு-மின் என்றான்

#21
என்றான் ஆடி அடுத்தவை என்ன
தன் தாழா முகம் உள்ளவை தந்து
நின்றான் கோட்டம் உணர்ந்து இடை நின்றார்
குன்றா நேர் நெறி கோடி உடைந்தார்

#22
கோல் கொண்டார் அவர் கொள்கையை நோக்கி
மேல் கொண்டாரும் விளம்புவர் என்றார்
நூல் கொண்டார் என நூல் அற யாரும்
மால் கொண்டார் அறம் மாற்று உரை கொண்டார்

#23
வள் வாய் மா முரசு ஆர்ப்பு ஒலி மாறா
கள் வாய் ஆளும் மன்னவ காதல்
கொள் வாய் வாய்மொழி கொள்க என மீண்டே
எள் வாய் நாபன் இயம்புதல் உற்றான்

#24
துஞ்சி திண் பகை முன் துடையாதார்
விஞ்சி திண் பகை முற்றிய வேலை
எஞ்சி திண் திறல் எள்ளுறல் காண்பார்
நெஞ்சில் திண் திறல் நேர் மதி வல்லோய்

#25
அன்று உற்று ஏகின அண்ணலர் ஓடும்
சென்று உற்றே பகை தீர்கிலம் நாமே
இன்று உற்று ஈர்கிலமேல் பழி வெள்ளம்
பின்று உற்று ஆழ்குதும் பேதையர் போன்றே

#26
நடு ஒக்கும் தகை நாட்டு அரசர்க்கு ஓர்
வடு ஒக்கும் துயர் வந்தன வேலை
கடு ஒக்கும் பிணி போல் அது காப்பார்
உடு ஒக்கும் கலை ஒள் ஒளி நீரார்

#27
ஆக்கத்து ஆருயிர் யாவும் அளித்த
நோக்கத்து ஓர் உயிர் கொன்றும் இகல் நூறல்
ஊக்கத்து அஞ்சுவையோ உலகு எல்லாம்
காக்க பெய் நிறை கார் இடியாதோ

#28
பாயா வேங்கையை என்புளி பைம் பூ
வீயா புண்டரிகம் என எண்ணல்
ஆயா பேதைமை ஆம் பகை கோறல்
ஓயா கோல் வழுவோ கடன் என்றான்

#29
விரும்பி தேடிய விலை பொருள் கண்டு என உள்ளம்
அரும்பி தேறிய அரசன் ஆங்கு அவன் மிசை மலர் கண்
திரும்பி தேறலின் காட்டிய திளை நயம் கண்டு
சுரும்பின் தேக்கிய மற்றவர் ஒத்து உரை சொன்னார்

#30
நன்று என்று ஆயினும் நடுக்குற பெத்தில நகர்-கண்
அன்று அங்கு எய்திய அன்னவன் இல்லையால் அகன்றே
இன்று எங்கு உள்ளன் என்றாயினும் இயம்புவர் இல்லை
பின்று இன்று ஆம் தொழில் பேசு-மின் என்றனன் பெருமான்

#31
நகைத்து மாதியன் நர_பதி வாழ்க என நவிலும்
துகைத்து மொய்த்த வெம் துயர் அற சொன்னதற்கு அமைகின்
பகைத்து வந்தவன் பழி அறுத்து உன் முடி பெயரா
முகைத்து நாடு எலாம் முரண் இல வாழ்வது காண்பாய்

#32
வளை கள் ஆர் பொழில் வனை அணி கரமித மலை மேல்
கிளைகள் ஆர் நிழல் கெழும் பலா கனி எலாம் தீம் தேன்
சுளைகள் ஆயிரம் தரவும் ஒன்று உயிர் அடும் விடம் ஆம்
திளைகள் ஆர் கனி சேர்கில் ஈங்கு எவன் செய்வாய் என்றான்

#33
கொல்லும் அ சுளை இன்னது என்று அறிகிலேல் குவி தேன்
புல்லும் அ சுளை ஒருங்கு ஒழிப்பேன் என பொருநன்
சொல்லும் நீர்மையின் துறும் பகை தோன்றிலது என்னில்
ஒல்லும் நீர்மையில் ஒருங்கு அடல் குழவிகள் என்றான்

#34
கேட்ட வாசகம் கெழும் குணம் என பலர் வாழ்த்த
கோட்டம் ஆம் என கூறிய சிலர் உளத்து அஞ்ச
நாட்டம் வாய் உறு நயம் ஒளித்து அரசு உரை நவிலான்
மீட்டு அம் மாதியன் வினை விளை மருள் உரை விரித்தான்

#35
திருந்த ஆய்ந்து அறம் திறம்பு இலா செய்யினும் எவர்க்கும்
பொருந்த ஆற்றுவர் பூவுலகு உண்டு-கொல் மன்ன
வருந்த ஆம்பலே மனம் மகிழ் முளரி வாய் மலரும்
இருந்த மா இருள் ஈர்த்த ஓர் இரவியின் முகத்தே

#36
பிரிந்தது ஓர் நிலம் பெற கொடும் போர் முகத்து இறப்ப
தெரிந்த வீரரை செலுத்தலே கொடிது அலது என்பார்
வரிந்த கோலொடு நாடு கொள் வழு அற சில ஈங்கு
இரிந்த சீறு உயிர் இறத்தலே கொடிது என்பார்-கொல்லோ

#37
பகைத்த வெம் பசி பரிந்து அற மலை ஒழிந்து ஒழுகி
முகைத்த பல் மலர் முருக்கிய நீத்தமும் கொடிதோ
துகைத்த தீது அற சொன்னவை விடுதியேல் அய்யா
தகைத்த வாழ்வொடு தாங்கு அரசு இகழ்ந்தனை என்றான்

#38
கால் முகத்து உயர் கல் மலை அனைய வெம் கொடிய
கோன் முகத்திலும் கொலும் துயர் முகத்திலும் கோடா
நூல் முகத்து உரை ஏலியன் நுவன்றவை கேட்டு
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து இயம்புதல் உற்றான்

#39
தன் உயிராக மற்று உயிர்கள் தாங்கிட
மின் உயிர் மணி முடி வேய்ந்த பாத்திபன்
கொன் உயிர் வழு என அய்யம் கொண்டு பல்
மன் உயிர் ஒழித்தலோ வடு இலாது என்றான்

#40
போழ் வினையாயினும் முடி புரந்திட
தாழ் வினை உண்டு என சாற்றுவார் உண்டோ
வாழ்வினை பிறர்க்கு அளித்து அரசன் வாழ்வுற
கீழ் வினை இலை என கிசலன் கூறினான்

#41
கண் இலான் ஓவியம் வரைந்த காதை போல்
எண்_இலா இளைஞனாய் இசைத்தி நீ என
ஒள் நிலாவு அரசு அடி இறைஞ்சி ஓதியின்
தெள் நிலா ஏலியன் மீண்டு செப்பினான்

#42
மண் அளவு ஒளி புகழ் மருவும் மன்னவ
கண் அளவு அறிவு உளோர் கதைத்த மாசு உரை
என் அளவு இழிவுறும் என்று கேட்கிலர்
விண் அளவு ஒளி மறை விளம்ப கேட்டியால்

#43
வையகத்து ஒருவனாய் வாய்ந்த மு தொழில்
செய் அகத்து இணை இலான் சிறந்த அன்பொடு
பொய் அகத்து உறும் செயிர் போக்க மைந்தனாய்
மெய் அகத்து உறும் திறன் மறையின் மெய்மையே

#44
ஊன் முகத்து உதித்த-போது உலகின் தீது இருள்
நால் முகத்து ஒழிப்பன் என்று உதிக்கும் நாள் தனில்
வான் முகத்து உடு நவம் வழங்கும் என்று மெய்
நூல் முகத்து எழு மறை நுவல்வது ஆய்ந்துளாய்

#45
அ கணம் காண்டலும் அரசர் மூவர் வந்து
இ கணம் காட்டிய யூதர் மன்னவன்
எ கண் அங்கு அவன் பிறந்து இயைந்துளான் என
மிக்கு அணங்கு அலங்கலோய் வினவ கேட்டியால்

#46
மீட்சியும் கோவலர் வியப்ப கண்டது ஓர்
காட்சியும் கடும் வினை கடிந்த சீமையோன்
சாட்சியும் புகழ்ச்சியும் மற்ற சால்புறு
மாட்சியும் பெருமையும் வழங்க கேட்டியால்

#47
மன் அரசு இழந்து என வானில் நின்று வான்
தன் அரசு எமக்கு எலாம் தர வந்தான் பகைத்து
உன் அரசு எடுப்ப ஈங்கு உணர்ந்து உற்றான் என
கொன் அரசு இழிவு உற குழைந்து உள் எண்ணவோ

#48
எண்ணினும் அவன் பெயர் இசைத்த நீர்மையான்
மண்ணினும் வானினும் மன்னர் ஆட்சி ஆய்
கண்ணினும் இனிது உயிர் கடிதல் பண்ணவோ
பண்ணினும் அரசியல் நிலைக்கும் பான்மையோ

#49
ஆயினும் அவனை நீ காண்டு இலாமையால்
தாயினும் அன்பு அமை அரசன் தன்மையாய்
தீயினும் கொடும் வினை தெரிந்து சேய் எலாம்
வீயினும் நலது என விரும்பி செய்யவோ

#50
வீய் வினை அஞ்சினார் விளிவு_இல் ஆவரோ
தீய் வினை அஞ்சினார் செத்தும் செத்திலா
தூய் வினை எஞ்சிலா துதியின் வாழ்வரே
காய் வினை எஞ்சிலா கருத்தினோய் என்றான்

#51
ஏலியன் என்பவன் இவை எலாம் மறை
நூல் இயன்று உளத்து அஞ்சா நுவல்வது ஆய பின்
காலியன் என்பவன் கதம் கொடு ஓதினான்
மால் இயன்று இறையவன் வதனம் நோக்கியே

#52
வீரியர் தொழில் இதோ வெருவி புன்மை சேர்
நாரியர் தொழில் இதோ நவை இலா மறை
ஆரியர் தொழில் என அரசியல் பட
பூரியர் தொழிலினை புகன்றுளாய் அரோ

#53
இன் வளர் தயை மலி இறைவன் ஏவலால்
மின் வளர் படை முகத்து இரத்த வெள்ளமாய்
முன் வளர் தகமையோர் பகை முருக்கியே
பொன் வளர் முடி நலம் புனைவது ஆயினார்

#54
சேய் வினை புரிவரை சேர்த்தி ஓம்ப ஓர்
தாய் வினை புரிதலே தருமம் ஆம் பகை
நோய் வினை புரிவரை நூறலும் கொடும்
தீய் வினை புரிதலோ என்று செப்பினான்

#55
பொன் தொழில் வனை மர பாவை பொற்பு என
மல் தொழில் ஒளியொடு வஞ்சம் கோடிய
புன் தொழில் அனைவரும் புகன்று கோல் வளை
முன் தொழில் அத்தனம் முறிய சொல்லினார்

#56
வழுக்கு உடை இவை எலாம் வழங்க கேட்டலும்
இழுக்கு உடை வழு அரசு எய்துவான் என
ஒழுக்கு உடை ஏலியன் உளத்து நொந்துளான்
விழுக்கு உடை அரசியல் விரும்பி கூறினான்

#57
தப்பு உற உரைத்த மாற்றம் தந்தன கடு நோய் தீர்க்கும்
கைப்பு உற உரைத்த மெய்மை கனிவு என கேட்கிற்பார்க்கே
துப்பு உற விளங்கும் மௌலி சூடினோய் அன்பை சூடி
செப்பு உற நினைத்த வாய்மை சினந்தினும் உரைப்பேன் நானே

#58
நூல் இயல் நுணங்கு கேள்வி நோக்கினார் முகத்தை நோக்கார்
கோல் இயல் கோட கோடி கூறுவர் பகையின் தீயார்
கால் இயல் நோக்கி ஆடும் கலை கொடி அன்னார் கேட்பின்
வேல் இயல் பகை இலானும் வேரொடு கெடும் உன் வாழ்க்கை

#59
கற்று உறு மாட்சி பூண்டு கசடு_அறு மறையின் நூலால்
உற்று உறு பொருள்கள் தேர்ந்தே உணர்த்துவது ஒன்று கேண்மோ
சொற்று உறும் எனது சூழ்ச்சி துணிவு இழிவாக தோன்றின்
முற்று உறும் மொழியை கேட்டு முனிதியே முருகு வேலோய்

#60
தேறிய தவத்தின் நீண்டு சிறந்த மோயிசனை நிந்தை
கூறிய அபீரோன் தாத்தான் கோரன் என்றவரை ஈண்டே
கீறிய புவி விழுங்கி கேடுற அவரை சார்ந்தோர்
ஊறிய அழலின் வெள்ளத்து ஒருங்கு ஐயைம்பதவர் வெந்தார்

#61
பின் இயல் பொருவா அன்னான் பெருந்தகை இகழ்ந்து பேசும்
அன்னியத்து அவண் ஓர் ஈர்_ஏழ் ஆயிரத்து_ஏழு_நூறும்
வன்னிய தடத்தில் உம்பி வய சினத்து இறைவன் நீதி
உன் இயற்கு உள்ளம் கூச ஒருங்கு வெந்து அடலை ஆனார்

#62
தொகை இலா தகவின் காட்சி சுடர் எலிசேய் என்பானை
சிகை இலா தலைய என்று சிறுவர் எண்_ஐந்து_இரண்டும்
தகை இலா சொன்ன பாலால் சடத்து இரு கரடி பாய்ந்து
நகையில் ஆற்றிய ஓர் சொல்லால் நடுங்கி ஆர்த்து ஒருங்கு மாய்ந்தார்

#63
ஈறு அடி இல்லான் குன்றத்து எழுதிய மறை கல் பேழை
தேறு அடி அடிகள் ஏந்தி செல்ல மற்று எவரும் எண்_ஐ_நூறு
அடி அகல நாதன் நுவன்று தான் செய்த ஏவல்
ஆறு அடி ஆர்க்கும் தாரோய் ஆரணத்து அறிதி அன்றோ

#64
செம்பு அதின் பிறப்பு ஐந்தோடும் சிறப்பு அணி வனை அ பேழை
தம் பதி வர கை கூப்பா தருக்கொடு நோக்க கால் முன்
கொம்பு அதின் இலைகள் போல குழைந்த பெற்சமித்தார் அங்கண்
ஐம்பதின்_ஆயிரத்து_ஏழு அமைந்த பத்து ஒருங்கு வீழ்ந்தார்

#65
அள்ளிய அபையர் நாப்பண் அரசனும் இறைஞ்சி செல்ல
தெள்ளிய மறையின் பேழை தேர் மிசை வரலின் சாய்ந்து
விள்ளிய அலங்கல் ஓசன் விழும் என கையால் தீண்ட
உள்ளிய உலகம் அஞ்ச உருமு பட்டு அன்ன மாண்டான்

#66
ஆதி நீடு உடன்ற காலத்து அம்புவி கூச செய்த
நீதி நீ அறிதி அன்றே நினக்கு யான் உரைப்பது என்னோ
ஏதின் நீ இறைஞ்சும் வேதத்து இவை எலாம் புரிந்த நாதன்
தீதின் நீ உயிர் ஈறு ஆக தேடுகின்றவனே அன்றோ

#67
அறத்து உறும் தகையும் செங்கோல் ஆண்மையும் ஒளியும் நீங்க
மறத்து உறும் தீங்கு தன்-பால் வந்த பின் ஆவது உண்டோ
புறத்து உறும் துயர் கண்டு உய்வார் பொலிந்த நூல் புலமை நீரார்
நிறத்து உறும் தொடையில் மார்ப நிகர்ப்பு அரும் நிலை இது அன்றோ

#68
கண் புலன் உணர்த்தும் காட்சி கசடர் சொல் உதவி கேளேல்
மண் புலன் அளிப்ப நாதன் மைந்தனாய் உதித்தான் என்ன
உள் புலன் தெளிந்து அன்னானை ஒருங்கு நீ தொழுதி பின்னர்
விண் புல வேந்தன் ஆக வினை அற வாழ்வாய் என்றான்

#69
நால் கடல் கவியின் பாடல் நயம் பெறா கேட்ட கோகோ
பால் கடல் திரிந்தும் நச்சு பயன் பெறும் பாந்தள் தானோ
நூல் கடல் கேள்வி நல்லோன் நுவன்றவை கேட்டு கால் முன்
மேல் கடல் சினத்து வேந்தன் மிக்கு உளம் வெகுண்டு சொன்னான்

#70
மெய் உண்ட திறத்த வீரர் விளிவதற்கு அஞ்சுவாரோ
கை உண்ட பசும்பொன் செங்கோல் கடிதலின் இறத்தல் நன்றே
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான் நிறை உயிர் உண்டு நானும்
மொய் உண்ட மடிவு உற்றாலும் முடியுடன் இனிது மாள்வேன்

#71
என்றனன் இறைவன் மீட்டும் இழி மத யானை சீற்றம்
வென்றனன் ஒருவன் தானை மிடல் தலை மலக்கன் என்பான்
நின்றனன் அவனை நோக்கி நீதி நீத்து உரைத்த காதை
சென்றன எவனும் கூச திசை எலாம் உருமின் சொன்னான்

#72
பொருந்தலர் தடிந்து எஞ்ஞான்றும் புள் இனம் இனிது மாந்த
விருந்து அமர் அசனி வேலோய் விரிந்த என் நாட்டில் எங்கும்
இருந்து அமர் சிறுவர் யாரும் எவனையும் நீங்காது ஒல்லற்கு
அரும் தமர் பிறர் என்று எண்ணாது அடுதியே சடுதி என்றான்

#73
குன்று இணை இயையின் குன்ற குவவிய தோளினானும்
இன்று இணை அடியை சூடி விரும்பிய நிலையின் ஊங்கும்
உன் திணை எங்கும் வேரோடு உன் பகை ஒருங்கு தீர்ப்பேன்
என்று இணை அற காய்ந்து ஏக எழுந்து இறை கோயில் புக்கான்

#74
புல கதம் பொதிர் அரி இனம் கொடும் புலி இனம் கொடிது ஒலி எழ
கலக்கம் ஒன்றிய வெறிகள் தம் பறழ் கடுகி வந்து உணு கதம் எனா
மலக்கன் என்றவனொடு முனிந்து அதிர் மறவர் வெம் குலம் மருவி ஆங்கு
இலக்கம் ஒன்று இல சிறுவர் பொன்றிட இறைவன் என்றவை அயர்குவார்

#75
முலை முக கதிர் தழுவி மொய்த்தன முகை முக பல சிறுவரே
உலை முக கனல் எரி கதத்தனர் உவணிகள் கொடு ஒழிதரும்
கொலை முகத்தொடு குருதியை தொடர் குழவி துய்த்து உணும் அமுது உக
அலை முகத்து ஒளி அவிழும் முத்தொடும் அவிரும் துப்பு என மருளுமே

#76
கரமும் அற்றனர் தழுவுகின்ற மொய் கதிரும் அற்றனர் கசடு இலா
உரமும் அற்றனர் நிரை துமிந்து உடல் உதரம் அற்றனர் உயிர் பட
சிரமும் அற்றனர் சிதற வம்பு இதழ் முளரி அற்று என சிறியதோர்
புரமும் அற்றனர் கடிகையும் பல புடையில் அற்று உக எவணுமே

#77
அடா விடாதன கொடுமையார் தருக அரிய சேயனை என அருள்
விடா விடாது தழுவினாள் அவன் வெகுள மார்பொடு மகவினை
கடாவினான் உருவு ஒரு வை வாள் வழி கடிதில் ஈர் உயிர் பட மது
படா விளா முகை எழிலொடு ஓர் கொடி படுவ போல் அவர் விழுவரே

#78
இப்புறத்து இவள் விடுதி என்று அது இழுத்து இழுத்தனள் எரி கதத்து
அப்புறத்து அவன் விடுதி என்று அது இழுத்து அறுத்தனன் அவள் முகம்
துப்பு உற தனி மகவு துண்டு துமித்து உடல் குறை எறிகுவான்
செப்பு உற தகு முறை அகன்ற சினத்து அழற்றிய நினைவினான்

#79
நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும் நாகு கொண்டு
அஞ்சினார் தொழில் கண்டிலாமையில் அன்பினால் உயிர் பேணிய
நெஞ்சினாள் தொழில் கண்டிலா மகன் நின்று நீடு அழவே பகை
விஞ்சினார் தொழில் கொண்டு வாள் வழி வெம் புண் நீர் உக வீவன்-ஆல்

#80
இடிக்குவார் சிலர் இகழ்வினோடு எதிர் உடற்றுவார் சிலர் இணை அடி
பிடிக்குவார் சிலர் தரையினோடு உடல் புடைக்குவார் சிலர் பிளிர நெய்
அடிக்குவார் சிலர் அணை கையோடு உடல் துமிக்குவார் சிலர் அணு என
தடிக்குவார் சிலர் தறிக்குவார் சிலர் தணிக்குவார் உயிர் எவருமே

#81
உருவி ஏந்திய உவணி மின் விழி உருவ வெய்து உறீஇ உளை உளம்
வெருவி மாழ்கிட இடி முழங்கு ஒலி மெலிய மேவலர் உரறவே
கருவி மாசு அனை குழலின் அன்னையர் கலுழு கண் மழை கடுகலோடு
அருவியாகிய குருதி நெய் மகர் அணை இலாது உகம் விடுவர்-ஆல்

#82
முலை அணி சுதர் அகலவே அழும் முலை என சொரி அழுது உக
தலை அணி சுதர் அகலவே கமழ் தலை இருள் கவின் அழி விட
நிலை அணி சுதர் அகலவே இனி நிலை இலேம் என விழ விழ
விலை அணி சுதர் அகலவே வினை விளைவு இல் தாயவர் மெலிவரே

#83
என் கணே உயிர் அமுதமே எனது இதயமே உயிர் இனிமையே
நின்-கணே உயிர் மடியவே நினை நினையவே அகல் நிலையுழி
தன்-கணே உயிரொடும் இரேன் இனி எனலொடே மகர் தணர்வரே
புன்கணே உயிர் பருகவே ஒரு புனல் அறா விழி பொழியுமே

#84
தாயர் ஓதையும் மடிதரும் பல தனயர் ஓதையும் உதிரமே
பாயல் ஓதையும் வதை செயும் பல படைகள் ஓதையும் மறம் மலி
தீயர் ஓதையும் இனைவரும் பல திசையில் ஓதையும் வெருவு உறும்
தூயர் ஓதையும் இடியொடும் கடல் துதையும் ஓதையும் இணை இலா

#85
வெவ் வினை விதைத்த காலை வினை விளைவாகும் தன்மை
மை வினை உணர்ந்த தீய மன்னன் இ திறத்தில் செய்த
அ வினை நினைத்து நிந்தை அனைவரும் உரைப்பது அல்லால்
செ வினை உளத்து வந்த திருமகன் விளிந்தான்-கொல்லோ

#86
தேன் உகும் எசித்து நாட்டில் சேர்ந்து உறை நாதன் அங்கண்
மீன் உகும் முடியின் தாயும் வெண் மலர் வளனும் காண
ஊன் உகும் கொலையின் தன்மை உளம் பனித்து எஞ்ச காட்டி
வான் உகும் நிறையை நீத்தார் வழுக்கு அது காண்-மின் என்றான்

#87
போர் முகத்து ஒன்னார் மார்பில் புதைத்த வேல் உயிர் சால்பு உண்ணும்
சீர் முகத்து அவன் தன் நாட்டில் சிந்திய குருதி ஓட
ஏர் முகத்து ஒரு மாசு இல்லா இளைஞரை கொல்லும் தன்மை
பார் முகத்து இணையா தீமை பார்த்து உளத்து இரங்கி நொந்தார்

#88
கடல் உடை தரணி யாவும் களித்து இனிது எழ ஈங்கு உற்ற
உடல் உடை கடவுள் தன்னை ஒழிக்குப பகைத்த கோமான்
அடல் உடை தன் நாடு எஞ்சல் அடை பெரும் பயனோ நாதன்
மிடல் உடை திறத்தில் என் ஆம் மேவலர் சூழ்ச்சி என்றார்

#89
கொழு மலர் பள்ளி பார்ப்பு கொடிய புள் பறிப்ப அன்னம்
அழும் மலர் தடம் ஒத்து அ நாட்டு அன்னைமார் அழு நோய்க்கு ஏங்கி
செழு மலர் கொடிகள் ஈன்ற தேன் முகை முகிழா முன்னர்
எழு மலர் பகை கால் முன் பட்டு என மகர்க்கு இரங்கி நொந்தார்

#90
கண் பொழி கலுழி போற்றி களிப்பு உகும் காட்சி உற்று
புண் பொழி உதிரத்து ஆவி போக்கிய மகவர் யாரும்
விண் பொழி ஒளியின் வாழ்ந்து வினை அறும் கதியில் கண்டு
பண் பொழி உரையின் நாதன் பணிந்து இவர் வாழ்த்தி சொன்னார்

#91
ஆலமே அமுது ஆக்கிய பான்மையால்
சீலம் மேவிலன் செய் பகை தம் உயிர்
கால மேனி இறந்தனர் காந்தி செய்
கோலம் மேவு உரு கொண்டு எழ நல்கினாய்

#92
தேர் எழும் கதிரோன் திரி வான் தெரு
கார் எழுந்து இருள் காலம் ஓர் காலமோ
பேர் எழும் தயை பெற்று உனை சேர்ந்தனர்
சூர் எழும் கயம் துய்த்திலர் வாழ்வரே

#93
தணி வரும் தடம் தாமரை பூத்து என
மணி வருந்து உரு மைந்தன் இறங்கி நீ
பிணி வருந்து உயிர் பேணிய பெற்றியே
பணிவு_அரும் கலையோர் அடை பான்மையோ

#94
அஞ்சினால் என ஈங்கு வந்து அண்மினாய்
எஞ்சினார் இவர்க்கு ஈங்கு அருள் ஈய்ந்துளாய்
துஞ்சினார் என ஆங்கு அவர் தோன்றி வாழ்
நெஞ்சின் ஆருயிர் நீடுற நல்கினாய்

#95
வளி விள்ளா முகை கொய்து என மாய்ந்து தேன்
துளி விள்ளா முகை தேம் தொடை ஆக நீ
அளி விள்ளாது அணிந்து அ மகர் யாவரும்
களி விள்ளா உயர் செல் கதி வாழ்வரே

#96
எண்ணின் மேல் எழும் சூட்சி இயற்றி நீ
விண்ணின் மேல் எழும் வீடு இட வந்து உனை
மண்ணின் மேல் எழு மாக்கள் பகைப்பரோ
புண்ணின் மேல் எழும் தீ பொறி ஈட்டியே

#97
மின்னை காட்டிய வேகத்துற்று ஒல்கி போய்
கொன்னை காட்டிய கோலம் விரும்பினார்
பொன்னை காட்டு அழல் போன்று அரிது உன் தயை
தன்னை காட்டினர் நோய் செயும் தன்மையால்

#98
கடல் வண்ணத்து அமுதே கதி வாயிலே
உடல் வண்ணத்து ஒளியே உயிரே உயிர்க்கு
அடல் வண்ணத்து அணியே அருளே எனா
மடல் வண்ணத்து அலர் தாளை வணங்கினார்

#99
வில்லின் மாரியின் விண்ணவர் நின்று இசை
சொல்லின் மாரியின் தூய் புகழ் பாடியும்
செல்லின் மாரியின் தேன் மலர் சிந்தியும்
எல்லின் மாரியின் ஒள் அடி ஏத்தினார்

#100
நாதன் அன்றியும் நாதன் தெரிந்த தன்
தூதன் என்ற கருணையன துஞ்சிலாது
ஆதல் அன்பு எழுந்து ஆங்கு அவர் கண்டு அடை
சீத இன்பு இயல்பு ஈங்கு இனி செப்புவாம்
மேல்

@26 கருணையன் மாட்சிப் படலம்


#1
அல் அற துளங்கு திங்கள் அணிந்த மீன் பரப்பு போல
பல் அற தொகுதி வாய்த்த பணி புனை சக்கரீயன்
இல்லற துணைவி குன்றத்து இணைய கற்பு எலிசபெத்தை
சொல் அற துணையாய் தம்முள் துணை புறத்து இன்றி நின்றார்

#2
கை வளர் கொடையோடு ஒன்ற கான் வளர் தவத்தின் மிக்கோர்
பொய் வளர் உலகின் ஆசை போற்றிய புதல்வர் இன்றி
மெய் வளர் திரு உளத்தின் வினை இது என்று உணர்வில் தேறி
மை வளர் துயர் அற்று ஓங்கி வயது முற்றியராய் நின்றார்

#3
பூட்சியின் துணையாம் இன்ப புதல்வரை இன்றி தூய் நல்
ஆட்சியின் துணையை நேடி அருமறை உணர்ந்த ஓதி
காட்சியின் துணையோடு அன்னார் கனிந்து உயர்ந்து எவர்க்கும் ஞான
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார்

#4
பரவு அலர் மலர்ந்த சோலை படர்ந்த தண் நிழலோடு ஒத்தார்
கர அலர் மலர்ந்து நல்கும் கனிந்த தேன் எவர்க்கும் ஊட்டி
புரவலர் ஆக நொந்து புலம்பினர்க்கு உயிரே ஆகி
இரவலர் உயிராய் பேணி இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார்

#5
பேர் அற கன்னி வையின் பிறக்கும் முன் தனக்கு தூது என்று
ஆர் அற தொகையோன் மைமைக்கு அரியது ஓர் புதல்வன் தோன்ற
ஈர் அற படலை கண்ணி ஏந்தும் இவர்க்கு இறைவன் அ நாள்
நேர் அற கருப்பம் தந்து நெடும் புகழ் அளித்தல் ஓர்ந்தான்

#6
கேள்வியின் புலமை மூத்தோன் கெழுமிய முறையில் தூம
வேள்வியின் முகத்து நிற்ப வேய்ந்த விண்ணவன் கண்டு அஞ்ச
சூழ் வினை அறிந்த வானோன் சொல் எடுத்து அஞ்சேல் அஞ்சேல்
வாழ்வினை உரைப்ப தூதாய் வந்தனென் கேட்டி என்றான்

#7
மாண் தகை அறத்தின் பாலான் மைந்தனே நினக்கு தோன்ற
காண் தகை உரிய பண்பால் கருணையன் அவனை என்பாய்
ஆண்டகை முகத்து முன்னி அவற்கு அதர் செப்பம் செய்து
சேண் தகை அடைய தீயோர் செலுத்துவான் நெறியில் என்றான்

#8
முதிர்ந்து அன காலம் சாய்ந்த முகத்திலோ உவப்ப நானே
எதிர்ந்து அன பிள்ளை காண்பேன் என்றனன் மூத்தோன் என்று உள்
பொதிர்ந்தன அயிர்ப்பு உற்றாயே புகன்றவை கண்டால் அல்லால்
அதிர்ந்து அன துயரில் ஊமை ஆதி என்று ஒளித்தான் வானோன்

#9
இ வழி எவரும் அஞ்ச இரும் தவன் கையால் பேசி
செ வழி உளத்து தேவ திருவுளம் போற்றி அய்யம்
வவ்வு அழிவு ஒழிய தூது வந்த காபிரியேல் சொன்னது
அ வழி கருப்பம் ஆகி அதிசயித்து ஓங்கினானே

#10
இலங்கு எழு விசும்பின் வெண் கோட்டு இளம் பிறை குழவி போல
நலம் கெழு கருவில் தோன்றல் நவி வளர்ந்து ஆறாம் திங்கள்
அலங்கு எழு பருவத்து எம்மை அளிப்பதற்கு இரங்கி நாதன்
வலம் கெழு கன்னி-தன்-வாய் மைந்தனே தானும் ஆனான்

#11
கண் கவர் வனப்பின் தூது கபிரியேல் உரைத்த-காலை
பண் கவர் மொழி நல் கன்னி பயன்பட எலிசபெத்தை
மண் கவர் கருப்பம் தாங்கி மகிழ்ந்தன காதை கூற
விண் கவர் அரசாள் ஓங்கி விளைந்த பல் உணர்வும் உற்றாள்

#12
பூ-இடை குளித்த தேன் போல் புதல்வனாய் தான் சூல் பூண்ட
மூ இடை புரக்கும் கோன் முன் முதிர் அருள் தூதாய் எய்தி
கூ-இடை பொது அற்று உற்ற குழவியை மருவ தானே
பா-இடை புகழின் மிக்க பயன் கொள்வான் என கண்டு உற்றாள்

#13
பான் நலம் சினை கொள் மேகம் பகல் செய விளங்காது என்னோ
தேன் நலம் சினை கொள் பைம் பூ தேம் கமழாதோ தேவ
சூல் நலம் சினை கொள் கன்னி துளங்கு அருள் புரிதல் உள்ளி
வான் நலம் சிவணி சூல் கொள் மைமையை அணுகல் ஓர்ந்தாள்

#14
ஓர்ந்தவை அறத்தின் ஆட்சிக்கு உரி துணையவற்கும் கூற
தேர்ந்தவை உயர்ந்த கேள்வி செறிந்த அருள் புலமையோனும்
கூர்ந்து அவை இமிழின் கேட்டு குணம் இது என்று இருவர் வானத்து
ஆர்ந்து அவை சூழ நீண்ட அதர் கடந்து ஏகல் உற்றார்

#15
தேசிக பாவையின் சிறந்த கோதையாள்
மாசு இகல் பானு ஒளி கமலம் மாந்தல் போல்
ஆசு இகல் சூல் அணிந்து அல்கல் நான்கும் ஆய்
ஏசு இகல் பாய் ஒளி பரப்ப ஏகினார்

#16
ஆரண வடிவினோன் அரிய சூல் எனும்
காரணம் அறிகிலா கருத்தில் ஓங்கிய
பூரண அருளினால் பொலிந்து இன்பு ஆர் அலை
வாரணம் நீந்தி உள் மகிழ ஏகினார்

#17
கயில் துணை படலை அம் கலனின் சேர்ந்து இவர்
குயில் துணை குயிலும் இன் இசையின் கூத்து எழ
மயில் துணை ஆடிய பொழில் வளைத்த நீள்
எயில் துணை உயர் நகர் அகல் ஏகினார்

#18
செண்பகம் மலர்ந்த கா திரளும் பொய்கையும்
வண் பகடு உழைத்த பூம் வயலும் நாடும் தம்
பண்பு அக விசையொடு அப்படி கடந்து போய்
விண் பகலவன் என வெற்பின் ஏறினார்

#19
கண் புதைத்து அன இருள் கலந்த சோலை சூழ்
மண் புதைத்து அன மணி வளர் குன்று உச்சி மேல்
நண்பு உதைத்து அன நசை சிறை நலம் கொடு
விண் புதைத்து அன மினின் விரைவுற்று ஏறினார்

#20
பிழை-இடை குளித்த நோய் பெயர்க்கல் ஓர்ந்து வான்
உழை இடை குளித்த பல் உறை விண் தாண்டி மின்
மழை-இடை குளித்து என வளர்ந்த பல் மலை
நுழை இடை குளித்து அருள் நுதலி போயினார்

#21
தீய் முகத்து இணங்கிலாது இல்லை செம்_சுடர்
காய் முகத்து இருள் இலை கழுமும் நீத்தமே
பாய் முகத்து அணை இலை அன்பு பற்றிய
வாய் முகத்து அரியது ஓர் வருத்தம் இல்லை-ஆல்

#22
துணி உடை உணர்வு இடும் துணிவு உற்று அன்பினால்
அணி உடை அலர் அடி வருத்தத்து அஞ்சிலார்
பிணி உடை வரைகளும் பிரிந்த நெட்டு-இடை
கணி உடை நெறிகளும் கடிதின் நீந்தினார்

#23
யாப்பு உரி அன்பினார் ஐயென்று ஏகலும்
தூ புரி முத்து அணி தோன்ற சூழ் முகை
கா புரிவு அலர்ந்த நீள் நெறி கடந்து போய்
பூ புரி எயில் நலம் பொலிய நோக்கினார்

#24
மின் எதிர் விளக்கு என விரிந்து வில் செய
பொன் எதிர் மணி என புரிந்த அன்பினால்
தன் எதிர் இலார்க்கு முன் சக்கரீயனும்
துன் எதிர் துணைவியும் தொழுது எதிர்ந்தனர்

#25
நீர்த்த மெய் உயிரினை தழுவும் நீர்மையால்
சீர்த்த அரும் தவர் தமை தழுவி தேன் மலர்
போர்த்த கொம்பு அணைத்த பூம் கொடியை போல் அருள்
கூர்த்த நல் மாதரும் குடங்கை வீக்கினார்

#26
அள்ளிய அலர்களும் அலருள் வாசமும்
தெள்ளிய கனிகளும் கனியுள் தேறலும்
வள்ளிய மணிகளும் மணியுள் வாமமும்
உள்ளிய நிலைத்து அவர் உறைந்த சீர்மையே

#27
வற்றியே முகில் மாரி செய் வாரியால்
பெற்றியே பெறும் ஓடையின் பெற்ற நாள்
முற்றியே நயம் முற்று உற சூல் அருள்
உற்றியே என கன்னி உரைத்தனள்

#28
உரைத்த வாய்மை இரு செவி ஊடு இனிது
இரைத்த ஆண்மையில் ஏந்திய சூல் உறை
வரைத்த வாம மகன் கரு மாசு அற
கரைத்த வாய் இலன் உள் களித்தான் அரோ

#29
நிருதி வாய் திறந்து அம் கையின் நேர் அருள்
கருதி வாய் திறந்து ஆசி கதைத்தலால்
பருதி வாய் திறந்து அள் இருள் பட்டு என
சுருதி வாய் திறந்து ஆசு துடைத்தனள்

#30
துடைத்த ஆசு அற சூல் உறை தோன்றல் ஆங்கு
உடை தயா நிகரும் தவிர்ந்து உள் உணர்வு
இடை தயாபமோடு ஈந்த வர தொகை
படைத்த நாதன் அருள் பயன் எய்தினான்

#31
முகையின் முற்றிய வாசம் எனா முதிர்
தகையின் கன்னி வயிற்று-இடை தற்பரன்
நகையின் தன்மையின் கண்டு நயந்து அருள்
தொகையின் அங்கு அவன் தாள் தொழுது ஏத்தினான்

#32
ஏற்று_அரும் குணத்து ஏத்திய நாதனும்
மாற்று_அரும் குண தாய் வயிற்று இன்பொடு
தூற்று_அரும் குண தோன்றலை நோக்கலால்
சாற்று_அரும் குணத்து ஆர் அருள் தாங்கினான்

#33
மாரியால் புரள் ஆறு என மைந்தன் உன்
தாரியால் தகு சால்பு அருள் தன்மை மேல்
வாரியால் புரண்டு அன்னையும் மல்கு ஒளி
மூரியால் துதி முற்று எடுத்து ஓதினாள்

#34
மக்கள் தங்கிய மாசு அற மைந்தனாய்
திக்கு அடங்கில தேவனை சூலொடு
தொக்கு அடங்கிய தாய் இவண் தோன்ற வந்து
இக்கு அடங்கில இன்பு அளிப்பாள்-கொலோ

#35
பிரிந்த கன்றினை நேடிய பெற்றமோ
எரிந்த கூழ் உயிர் என்று இயை மாரியோ
சொரிந்த தன்மை வர தொகை ஈக நீ
விரிந்த நீள் நெறி வந்து எனை மேவினாய்

#36
வேய்ந்த மாட்சியின் மேவரு மேன்மையால்
வாய்ந்த மாதருள் ஆசி மலிந்த நீ
ஆய்ந்த வாய்மை கடந்து அரிது ஆசியுள்
தோய்ந்த நீ அணி சூல் கனி தானுமே

#37
நின் தன் வாய் மொழி என் செவி நேர் பட
என்-தன் வாய் உறை என் மகவு இன்பு உறீஇ
மின் தன் வாய் என மேவி உகண்டு உளத்து
உன் தன் வாய் அருள் ஆண்மையில் ஓங்கினான்

#38
நீத வாய் நெகிழா நெறி நாயகன்
வேத வாய் மொழி ஆக விளம்பிய
சாத வாய்மை உன்-வாய் தக உன் புகழ்
கீத வாயில் எங்கும் கிளைப்பார் என்றாள்

#39
பட்ட செம் கதிர் மீட்டு அவை பானின் மேல்
விட்ட வெண் பளிங்கு ஒத்து இவள் மேவலோடு
இட்ட தன் புகழ தன் இறையோன்-தனை
ஒட்ட மீட்டனள் கன்னியும் ஓதியே

#40
தெருளால் தெளிந்த என் உளம் என் திரு நாயகனை புகழ்ந்து இறைஞ்ச
அருளால் உயர் என் உயிர் என்னை அளித்தோன் முகத்திற்கு எழுந்து உவப்ப
மருளால் தளர்ந்த இ அடிமை மனம் தான் இரங்கி பார்த்த தயை
பொருளால எவரும் முறை முறையால் புகழுற்று என்னை செல்வி என்பார்

#41
விண்-பால் முதல் மூ_உலகு அசைக்கும் மிடலின் மிக்கோன் என்னிடத்து
திண் பால் வளமே செய்தமையால் திரு தன் நாமம் புகழ்படவே
நண்பால் இணையா குண தொகையோன் நயந்து எம் ஞான்றும் முறை எஞ்சா
மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான்

#42
கேழ்வார் தட கை வலி காட்டி கிளர் தீ உணர்வின் செருக்கு உளத்து
சூழ்வார் சிதைத்தான் வயத்து உயர்ந்தோர் துகள் செய் நிவப்பின நூக்குகின்றான்
தாழ்வார் உயர்த்தான் பசித்து அயர்வார் சால நிறைத்தான் திரு மல்கி
வாழ்வார் வறியோர் ஆக்குகின்றான் மாறா நீதி வயம் மிக்கோன்

#43
அண்ண தலையின் முறை கடந்தே அபிரம் முதல் மூத்தோர்க்கு உரைத்த
வண்ணத்து அரும் தன் தயை உள்ளி வழுவா அன்பின் பணி தொழும்பன்
எண்ணத்து ஒழுகும் இசறயலை இரங்கி கைக்கொண்டான் என்றாள்
கண்ண தகுதி கடந்து எனை ஆள் கருணை மிக்க வான் அரசாள்

#44
இனைய பலவும் இசைத்து இசைப்ப இன்ப கடல் ஊடு உளம் மூழ்க
தனையர் அருளால் தெளிந்து எதிர்ப்பில் தாயார் இவ்வாறு அன்று உவந்தார்
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று
அனையர் இனிது ஆங்கு உறைந்து உற்றது அனைத்தும் அறைதற்கு எவர் பாலார்

#45
அம் கண் படர் வான் செம்_சுடர் முன் அருகே சுங்கன் உதித்தது போல்
இங்கண் சுடர் ஒத்து அவதரித்த இறைவன் பிறக்கு முன் எவரும்
தம்-கண் சிறுமை தீர்ந்தது என தகும் காரணம் காணாது உவப்ப
திங்கள் குழவி கோட்டு உருவின் சிறந்து அ தோன்றல் தோன்றினன்-ஆல்

#46
பிணித்த நர_தேவு இறையவற்கே பீடமாக வனைந்த மது
பணித்த கமல செம் கரத்தில் பயந்த மகவை ஏந்தி அருள்
குணித்த கன்னி அனைத்தன கால் குழவிக்கு ஊட்டும் வர தொகையை
கணித்த திறத்து ஊட்டினள் அல்லால் கதிர் வானவரும் அறிகுவரோ

#47
கனியே பார்த்தான் திரு முகத்தை கண்டான் உவந்தான் அருள் குளித்தான்
துனியே தீர்ந்தான் உரை உதவா துள்ளி துதித்தான் உணர்வு ஓங்கி
பனியே கிளர் பூம் கரத்து ஒல்கி பணிய சிரத்தை கோட்டுகின்றான்
நனியே வாழ்ந்தான் வர பவ்வம் நயப்ப தாழ்ந்தான் இள முத்தோன்

#48
மெய் கொள் மறை நூல் நெறி வழுவா விளைந்த உவப்பில் எட்டாம் நாள்
கைகொள் முறைகள் திருந்தலொடு கருணையன் பேர் இட்டன பின்
ஐ கொள் குழவி கருணையினால் அவிழ் நா புரிவு தீர்ந்த அய்யன்
மொய் கொள் உணர்வோடு உரை கொண்டே முதலோன் மேல் வாய் துதி முடித்தான்

#49
நிதியின் தோய்ந்த அழகு இளையோன் நீர்ப்ப ஆசி ஓதிய பின்
துதியில் தோய்ந்த உரை எவர்க்கும் சுவையின் கனிந்து கனி கூறி
மதியில் தோய்ந்த பதத்தாளும் மறை தோய் மாட்சி மா தவனும்
நுதியில் தோய்ந்த வாள் உயிர் ஈர் நோய் கொண்டு அகன்று போயினர்-ஆல்

#50
கொலை கொள் வாளால் உயிர் பிரிந்த கொள்கைத்து அன்னார் பிரிந்தினும் வெண்
கலை கொள் பதத்தாள் பிரியாத ஓர் கருணை விளைத்த அன்பு ஒழியாள்
உலை கொள் அழலின் துயர் கொண்டே ஒளிப்ப எசித்து மேவிய-கால்
அலை கொள் உணர்வோடு அன்பு உணர்ந்தே அருளின் பெயரோன் தனை உணர்ந்தாள்

#51
செய்த உதவி பாசம் என திருந்து ஈர் உயிரை விசித்திடும்-ஆல்
பெய்த உதவி கொண்ட சிலர் பேணாது ஒழிந்தால் பிறர் துயரை
கொய்த உதவி செய் உரவோர் குன்றா தம் கண் நட்பு உரிமை
எய்த உதவிக்கு அளவு அன்பும் எய்தி பிறரை மேவுவர்-ஆல்

#52
மாறா அருளோடு இன்னணமே மறைந்த திரு எம் மகன் காணா
தேறா வெகுளி அரசு எல்லா சிறுவர் கொல்வான் என்ன உயிர்
ஈறாய் மாள்வான் கருணையனோ எய்தி அவனை ஒளிக்குதும் என்று
ஆறா அன்போடு அரும் தவனோடு அறைந்தாள் கருணை நிலை நெஞ்சாள்

#53
வெருவின் மிக்கோர் ஒலித்தது எலாம் விண் ஏறு என்பார் அன்ன மறை
உருவின் மிக்கோன் எய்திய அன்பு உரிமைக்கு அஞ்சி மறுத்தமையால்
செருவின் மிக்கோன் உணர்ந்த பகை செப்பி சிறுவன் ஒளிக்குப வான்
திருவின் மிக்கு ஓர் வானவனை செலுத்துகின்றார் அருள் மிக்கார்

#54
அடைந்த வானவன் அறைந்தவை கேட்டு எலிசபெத்தை
குடைந்த நோய் உளம் கொடும் தழல் குடித்து என கொண்ட
மிடைந்த பாசறை பொறாமையில் வீழ்ந்தனள் உயிர் கெட்டு
உடைந்த காலையின் உடல் நிலை விழுவது போன்றே

#55
எம்மை ஈங்கு அளித்து இரு விசும்பு உயர்ந்த வான் நயங்கள்
தம்மை நீரொடு தான் தர இளவலாய் பிறந்த
செம்மையோன் தனை செகுத்திட பகைப்பரோ என்ன
வெம்மை பாய் அழல் விழுங்கின விருப்பினாள் உளைந்தாள்

#56
சொரிந்த சீர் பொறா தன்மை இ நாடு செய் துகளோ
அரிந்த நோய் கெட எசித்தனர் ஆற்றிய அறனோ
விரிந்த நீள் நெறி விளைத்த நோய் கொடு தளர்ந்து இங்கண்
பிரிந்த நாயகன் பெரிது உளைவான் என அழுதாள்

#57
உவணியால் உயிர் உளைய ஈர்த்த உடல் என உளைந்தே
சிவணி வானவன் திருவுளம் இது என தேற்றி
கவணியால் அலை கருத்து அமைந்து ஐயனை இழந்த
அவணி ஆர் தனது அரு மகவு ஒளிப்பதும் உணர்ந்தாள்

#58
சூர் முகத்து உரி துணை இலாள் நிகர்ப்பு அரும் துணிவால்
கார் முகத்து மின் கடுகலோடு அழி பொருள் அளித்த
சீர் முகத்த தன் சேய் எடுத்து அரும் தவம் உள்ளி
நீர் முகத்து நாடு அகன்று கான் ஒளிப்பதே நினைத்தாள்

#59
அன்பும் அச்சமும் காட்டிய வழி தொடர்ந்து அகல
முன் புகா இடர் முயன்ற நீள் நெறிகளை கடந்து
துன்பும் அல்லும் உள் குடி அலால் மன் உயிர் தொடரா
இன்பு உகுத்தது ஓர் இருண்ட கான்-இடை ஒளித்து உறைந்தாள்

#60
தெண் அம் சூழியில் செ இதழ் தாமரை பள்ளி
வண்ணம் பார்ப்பொடு மகிழ்வு எழ துஞ்சிய அன்னம்
எண்ணம் தூவிய வேடனுக்கு அஞ்சி வந்து எரி கான்
கண் அம் பார்ப்பொடு கலுழ்ந்து என மகவொடு கலுழ்வாள்

#61
மெழுகினால் வனை பாவை தீ வெம்மை பட்டு உருகி
ஒழுகினால் என உளம் மெலிந்து அரும் துயர் கடலில்
முழுகினால் என மொய் அறா நெஞ்சினாள் முரலும்
கழுகினால் இமிர் கான்-இடை உடல் தளர்ந்து இருந்தாள்

#62
இருந்த-காலையில் வானவர் இசைத்தலால் தான் உள்
வருந்த வெந்து எலா மகரையும் துமித்தனன் என கேட்டு
அரும் தயாபரன் தன் மகவு அளித்தலால் புகழை
திருந்த நீடு நாள் வாழ்த்தி இசைத்து உறுதியில் சிறந்தாள்

#63
காட்சியோடு உள அற தொகை அனைத்துமே கதிர் செய்
ஆட்சியோடு உடு அம்புலி தொடர்ந்து என தொடர
மாட்சியோடு உயிர் வளர்ந்தன தன்மையின் இளைத்த
பூட்சியோடு இனி புணர்வதும் அரிது என அறிந்தாள்

#64
சொரிந்த தேனினும் சுவை கொள் தன் உயிரினும் இனிமை
புரிந்த சேயொடு புகல் செயா கண்டு கண்டு உருகி
பிரிந்த காலையில் பெரும் துயர் உள்ளி உள் அயர்ந்து
விரிந்த காட்சியின் துணிந்த பின் குழவியை விளித்தாள்

#65
இனிய யாவினும் இனிய என் தனையனே உன்னை
கனிய ஈன்ற நான் கருதிய செல் கதி செல்ல
நனி அவாவிய நாள் இதே இது திருவுளம் ஆய்
முனிய மாறுமோ முரிந்து அழ மாறுமோ மகனே

#66
மற்று யாது யான் வகுப்பது உன் வயது ஒரு நான்கு
முற்றி ஆகும் முன் பிரிவது என்று அயர்வு இலை முன்னர்
பெற்றியே உணர்வு அனைத்தையும் பிறக்கு முன் வரம் சால்பு
உற்றியே உரைக்கு உயர்ந்தவற்கு உவகை செய் அருளோய்

#67
திலம் கலந்த மா செல் இடத்து உறைவதும் எண்ணேல்
அலம் கலந்த தேன் அனைய தீம் சொல்லொடு வஞ்ச
சலம் கலந்த சால் தகுதி கொள் மாக்கள் தம் துணையின்
புலம் கலந்த கான் பொதிர் விலங்கு இன துணை இனிதே

#68
நாடு இழந்து உள நட்பு இழந்து யாவையும் இழந்தே
கோடு இழந்த பூ குழைந்து என நசை கொடு குழையேல்
வீடு இழந்த தீவினை கொடு செல்வம் உற்று அறம் செய்
பீடு இழந்த புன் மாக்களின் பேதையர் இலையே

#69
ஊக்கமே பிதா உவ்வு தாய் உணர்ந்த மெய்ஞான
நோக்கமே ஒரு நுசுப்பு அறா தோழனா தயையின்
நீக்கமே மண துணைவியா நெடும் பொறை மகனா
ஆக்கம் மேவிய அறத்து உறவோரொடு வாழ்வாய்

#70
ஊக்க வித்தினால் உதித்த மெய்ஞ்ஞானமே மரமாய்
வீக்க நல் தவ வேர் விழ பொறை தயை கவட்டால்
நீக்கம் முற்றியே மகிழ்வு பூத்து உயர்ந்த வான் நிலை வீட்டு
ஆக்கம் நல் கனி அருந்தி வாழ்ந்து உணர்வின் மேல் கனிவாய்

#71
வான் கலந்த வில் வனப்பொடு செம்_சுடர் வயங்க
தேன் கலந்த பூ மலர்தலும் செழும் சிறை புடைத்து
கான் கலந்த புள் கணம் கனி பாடலும் கதிர் வான்
கோன் கலந்த சீர் வாழ்த்து உனக்கு உணர்த்து இரு குருவே

#72
விரை செய் கான் நலம் வெஃகு இல நெடியது ஓர் நெறியில்
கரை செய் சால் சிலைக்கு அஞ்சில கருதிய கடல் சேர்
திரை செய் நூல் இவண் தெளிய ஆய்ந்து அனைத்தையும் கடந்து
நிரை செய் சீர் கெழு நிமலனை நேடல் கற்று உயர்வாய்

#73
என்னை உன்னை முன் இனிதினில் பேணிய கன்னி
அன்னை ஈங்கு தன் அருளொடு நிழற்றிய தன்மைத்து
உன்னை ஓம்புவள் உன் உயிர்க்கு உயிர் என அளிப்பள்
பின்னை ஓர் துணை பெறுவதும் வேண்டுமோ மகனே

#74
தெளி கொள் ஆரண திருவினாள் அகன்றனள் என்னேல்
அளி கொள் ஆர்வலர்க்கு அகன்றது ஓர் சேண் இலை வான் மேல்
துளி கொள் கார் முகில் தோன்ற ஈங்கு அகவி வாழ்ந்து ஆடும்
களி கொள் தோகைகள் கான்-இடை கண்டனை இலையோ

#75
என்று கூறினாள் இமிழ்த்த மெய்யோடு உயிர் ஆர்வம்
ஒன்றுவான் அழுந்துற நனி தழுவினாள் தழுவி
நின்று நீவினாள் நெடிய கண் அருவி நீர் ஆட்டி
கன்றுவாள் உளம் கலங்குவாள் உருகுவாள் கலுழ்வாள்

#76
தீயின் மூழ்கு அலர் போல் உளம் வாடியும் செம் தீ
வாயின் மூழ்கு அலர் வரும் கொடி போல் உடல் சுருண்டும்
மீயின் மூழ்கின மின் என ஒல்கியும் குழவி
நோயின் மூழ்கினன் நுரை என கரைந்து ஒன்றும் நுவலான்

#77
நூறு காவதம் மேல் நுகர் சேண் உறை
தேறு காவல் எசித்து-இடை சேர்ந்து மேய்
ஊறு காதல் உணர்வினோடு இற்றை ஆம்
ஆறு மாறு_இல் அறிந்தனர் மூவரே

#78
கரிந்த நெஞ்சு கடுத்த கடும் திறல்
சொரிந்த செம் புனல் துன்றிய வாரியில்
பிரிந்த தன்மை கருணையன் பேர் உயிர்
அரிந்தது இல்லை என்று அன்பு எழ கண்டனர்

#79
கண்ட வேலையில் கண்டு அது வேலையை
உண்ட பான்மை உவந்து கை ஏந்திய
அண்ட நாதனை வாழ்த்தி இன்பு ஆழ்ந்தனர்
கொண்ட கோதையும் பூம் கொடியோனுமே

#80
படலையாய் நயம் பீடை பயத்தல் வான்
விடலை நீதி எனா விளை இன்பு அயல்
நடலை ஆக நைந்து எலிசபெத்தை தன்
உடலை நீக்குவது ஓர்ந்து உளத்து ஏங்கினார்

#81
வீயும் வீ மலர் மென் கொடியும் தழல்
தோயும் தன்மை துவண்டு சுருண்டு எனா
தாயும் பிள்ளையும் தாவு இடர் நோக்கி உள்
தீயும் தன்மையில் தேம்பி இரங்கினார்

#82
வான் வழங்கு அரசாள் வகுத்து ஏவலால்
தேன் வழங்கு மலர் சினை நீடிய
கான் வழங்கினர்-கண் உளம் தேற்றிட
மீன் வழங்கு விண்ணோர் விரைந்து எய்தினார்

#83
கண் கனிந்து களிப்ப மெய் காட்டினர்
பண் கனிந்த இசை கொடு பாடினர்
புண் கனிந்த மருந்து என பொங்கு அருள்
விண் கனிந்த உறுதி விளம்பினார்

#84
பெறுதி ஆகம் அறா பெரிது அன்பினாள்
உறுதி ஆக அன்று ஏவிய உம்பர் கேட்டு
இறுதி ஆக நின்று ஏங்கு உயிர் தேறி உள்
குறுகி ஆகம வாயொடு கூறுவாள்

#85
அன்னை ஏவிய அண்ணலரே இனிது
என்னை ஆண்டகை தன் பதத்து ஏவிய
பின்னை பேர்கில பெற்றியோடு என் மகன்
தன்னை ஓம்பிட தந்தையும் தாயும் நீர்

#86
என்று இரங்கி இரங்கிய சேயின் மேல்
நின்று இரங்கு கண் நீரோடும் ஆசி தந்து
அன்று இலங்கிய அம் கொடி வீழ்ந்து என
பொன்று இலங்கிய பூட்சி வீழ்ந்ததே

#87
வீழ்ந்த கொம்பொடு சேர் கொடி வீழ்ந்து என
மாழ்ந்த தாயொடு மாழ்ந்து என வீழ்ந்த சேய்
ஆழ்ந்த துன்பு உளத்து ஆற்றிலன் ஒற்றை வாள்
போழ்ந்த ஈர் உயிர் போல் கிடந்தான் அரோ

#88
தேற்று_அரும் துயர் தேற்றிய வானவர்
ஏற்று_அரும் துணை ஆக எழுந்து உயிர்
ஆற்று_அரும் பரிவாய் உடல் நாடல் போல்
போற்று_அரும் துயர் கொண்டு புலம்பினான்

#89
பருகு தேனினை கான்று என பண் இசைக்கு
அருகு தேனினும் இன்பு அளி பாடிய
முருகு தேனொடும் முற்று அலர் பூ வனம்
உருகு வான இளையோன் உளத்து ஏங்கினான்

#90
புல் உடம்பு புதைத்தன பேர் உயிர்
வில் உடம்பு என வேய்ந்தன காட்சியால்
கொல் உடம்பிடி கொண்டு குடைந்த புண்
நல் உடம்பு என தேறி நடந்ததே

#91
கதிர் செயும் உருவில் தோன்றி கனிவொடு சூழ்ந்த விண்ணோர்
உதிர் செயும் கனி போல் வீழ்ந்த உடற்கு நன் முறைகள் யாவும்
முதிர் செயும் அன்பின் பாலால் முடித்த பின் குழவி மோனன்
பொதிர் செயும் உளத்தை தூண்டும் புரிவில் தன் முறைகள் தேர்ந்தான்

#92
புன் மலர் கண்கள் தூவும் புனலின் நீராட்டி மார்பில்
பல் மலர் படலை கண்ணி பல் அறம் புனைந்தாய் என்று
தன் மலர் கரத்தால் சூட்டி சாய் பகலொடு குவ்வு ஏடு
துன் மலர் கமல கையை தொழ குவித்து இறைஞ்சிட்டானே

#93
அளி அழ குயில்கள் மஞ்ஞை அயர்ந்து அழ அழ அன்னங்கள்
கிளி அழ அழ பூம் பூவை கிளை அழ இரங்கி வீசும்
வளி அழ புனல் ஈண்டு ஓடி வந்து அழ வனத்தில் எல்லா
உளி அழ அழவே தோன்றல் உம்பர் மெய் எடுத்து போனார்

#94
பூ கையை குவித்து பூவே புரிவொடு காக்க என்று அம் பூம்
சேக்கையை பரப்பி இங்கண் திருந்திய அறத்தை யாவும்
யாக்கையை பிணித்து என்று ஆக இனிதில் உள் அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கி பூவோடு அழும் கணீர் பொழிந்தான் மீதே

#95
தாய் முறை திருந்தி யாக்கை தகு முறைக்கு அடக்கி பின் தன்
நோய் முறை அடக்கல் ஆற்றா நுதலிய தவத்தின் மாட்சி
தூய் முறை விரும்பி தன்-கண் துணை இலாது அஞ்சி ஏங்கி
தீய் முறை அழல் நெஞ்சு ஒத்த திரை சுனை தனித்து சென்றான்

#96
எழும் சுனை அகட்டு பாய் நீ இனிது இவற்கு இரங்கி விம்ம
கொழும் சுனை கண்கள் ஆய குவளைகள் இமையா நோக்க
கெழும் சுனை வரம்பில் வைகி கிளைத்த நோய் அழன்ற நெஞ்சான்
அழும் சுனை பெருக கண்ணீர் அகல் கடல் வெள்ளம் ஆற்றா

#97
மண் நரம்பு இசையின் பாடல் மாறி வண்டு இரங்கி விம்ம
உள் நரம்பு அழுத்த தன்மைத்து உரு குயில் அழுது தேம்ப
விண் நரம்பு அருளின் மார்பன் விழுங்கிய துயர் கால்வான் போல்
பண் நரம்பு இளகி ஏங்கும் பரிசொடு விம்மி சொல்வான்

#98
சொல்லிய இசையின் பெட்போ துயரமோ வியப்போ ஏதோ
புல்லிய கொம்பில் புள்ளும் பூவில் வண்டு இனமும் காற்றும்
இல்லிய புனலும் மற்ற யாவும் வாய் விடாமை கேட்ப
கல்லிய கவிர் செ வாயான் கருதிய துயரம் கான்றான்

#99
நீர் எழும் குமிழி போலும் நெடிய தேர் நேமி போலும்
கார் எழு மின்னல் போலும் கடல் எழும் திரைகள் போலும்
பார் எழும் செல்வத்து இல்லை பதியுமோ நிலையும் என்றார்
சீர் எழு ஞானத்திற்கும் திரை திரண்டு அலைவது உண்டோ

#100
வெண் நிற துகில் கொள் மாசு வெண் மதி கதிருள் தோய்த்து
தென் நிறத்து ஒழிக்கல் போல் சூல் சிறை அகன்று உதிக்கும் முன்னர்
தண் நிற பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன
பண் நிற கிளவியால் யான் பழம் பழி களங்கம் தீர்ந்தேன்

#101
உலை வளர் தீயின் தீய உலைப்பு இடும் பாவம் தீர்ந்து
கலை வளர் உணர்வும் ஞான காட்சியும் உணராது எய்தி
அலை வளர் உலகில ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின்
மலை வளர் வெள்ளம் என்ன வர தொகை உவப்ப கொண்டேன்

#102
தூங்கு உயர் கனிகள் தீம் பால் தோய வீழ்ந்து என்றோ வானின்
நீங்கு உயர் துளி முத்து ஆக நிறத்த சங்கு-இடை வீழ்ந்து என்றோ
பாங்கு உயர் வரத்தில் என்னை பயந்த தாய் உதரம் நீங்க
ஓங்கு உயர் இறைவன் சாயும் ஒண் கரத்து இமிழின் சாய்ந்தேன்

#103
மை வகை தளிர்த்த பாவ வடுவொடு சனித்த நான் உள்
பொய் வகை அன்றி பேறு புணர்கிலன் ஆகி எந்தை
மெய் வகை தெளிந்த ஞானம் விளைத்த பல் வரங்கள் தந்தே
உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே

#104
வளர்ந்த வெண் மதி தேய்ந்து அன்ன வளம் கொடு பிறந்த பின் நான்
உளர்ந்த கண் அருவி ஓட்டி உலந்து எனை ஈன்றோன் மாள
கிளர்ந்த வெம் பகையை கொன்னே கிளைத்த கோன் கொடுமைக்கு அஞ்சி
தளர்ந்த மெய் அவலித்து என்னை தாயும் இ வனத்தில் உய்த்தாள்

#105
நீட்டு இடை நெறிகள் நீக்கி நீர்-இடை மலர்ந்த கஞ்சத்து
ஏட்டு-இடை அன்னம் என்ன ஈன்றனள் கரத்தில் வைகி
காட்டு-இடை இருந்த தன்மை காண்கிலன் வையம் நீங்கி
வீட்டு-இடை உவந்த தன்மை விருப்பு எழ வளர்ந்தேன் அன்றோ

#106
வாய் மணி ஆக கூறும் வாய்மையே மழை நீர் ஆகி
தாய் மணி ஆக மார்பில் தயங்கி உள் குளிர வாழ்ந்தேன்
தூய் மணி ஆக தூவும் துளி இலது இளம் கூழ் வாடி
காய் மணி ஆகும் முன்னர் காய்ந்து என காய்ந்தேன் அந்தோ

#107
விரிந்தன கொம்பில் கொய்த வீ என உள்ளம் வாட
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு இரும் புழை புண் போல் நோக
பிரிந்தன புள்ளின் கானில் பெரிது அழுது இரங்கி தேம்ப
சரிந்தன அசும்பில் செல்லும் தடம் இலா தனித்தேன் அந்தோ

#108
துள்ளி வாழ் உழைகாள் கொம்பில் துன்னி வாழ் குயில்காள் தூய் தேன்
அள்ளி வாழ் அளிகாள் தேன்காள் அழல் நிற கமல பைம் பூம்
பள்ளி வாழ் ஓதிமங்காள் பறித்து வாழ் கொடிகாள் கோறல்
உள்ளி வாழ் வரிகாள் சொல்-மின் உயிர் தனித்தலின் தீது உண்டோ

#109
உய் முறை அறியேன் சேர்ந்த உணர்வின் ஒத்து உறுப்பும் இல்லா
மெய் முறை அறியேன் மெய்தான் விரும்பிய உணவு நேட
செய் முறை அறியேன் கானில் செல் வழி அறியேன் தாய் தன்
கை முறை அறிந்தேன் தாயும் கடிந்து எனை தனித்து போனாள்

#110
காய் முதிர் கனியின் ஊழ்த்து கனிந்து வீழ் இ மெய் வாட்டி
வேய் முதிர் வனத்தில் நோன்பின் வித்தினால் விளை மெய்ஞ்ஞானம்
ஆய் முதிர் உவப்பில் உள்ளத்து ஆண்டகை ஒருவன் ஆள
நோய் முதிர் உலகம் நீக்கல் நுதல்வு_அரும் இனிமை தானே

#111
ஊக்கம் ஏர் பூட்டி நோன்பால் உடல் செறு உழுது நன்றி
வீக்க மேல் விரத செந்நெல் வித்தி நல் ஒழுக்க நீரை
போக்க நீடு இறைத்து தன் ஐம்பொறி எனும் வேலி காக்கில்
ஆக்கமாய் பெரும் வீட்டு இன்பம் அண்டம் மேல் விளைக்கும் தானே

#112
ஆயினும் வயது ஓர் நான்கும் ஆகும் முன் தனித்த நானே
வீயினும் கொடிய பேய்கள் வினை செய ஒரு-பால் ஓர்-பால்
போயினும் கொடிய தன் மெய் பெரும் பகை செய இ வாயில்
போயினும் வழுவா செல்லல் புணர்வு அரிது அறத்தின் ஆறே

#113
தன் முகம் படிகம் இன்றி தரணியில் காண்பான் இல்லை
பல் முகம் காட்டும் இன்பம் பற்றலில் திரி தம் நெஞ்சம்
துன் முகம் தம்மில் தாமே துகள்_அற எவரும் காணார்
வில் முகம் காட்டும் நூலோர் வெயில் பளிங்கு இன்றி அன்றோ

#114
மொய்யொடு கடுத்த கோபம் முதிர் அற நீதி என்ன
மெய்யொடு விளைந்த காமம் விழு மன கேண்மை என்ன
மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன
பொய்யொடு பொங்கு பற்றல் புரை புகுத்து அரிய ஆறே

#115
இன்ன ஆறு ஒருவன் நானே இடறு இலாது ஒழுகும் பாலோ
துன்ன ஆறு இடறி வீழ்ந்தால் துணைவன் நின்று எடுத்து பின்றாது
அன்ன ஆறு ஒழுக என்று ஓர் அரும் குரு இல நிற்பேனோ
என்ன ஆறு ஒழுகும் வெள்ளத்து இள முனி அழுது சொன்னான்

#116
நவ மணி வட கயில் போல் நல் அற படலை பூட்டும்
தவம் அணி மார்பன் சொன்ன தன் இசைக்கு இசைகள் பாட
துவம் அணி மரங்கள்-தோறும் துணர் அணி சுனைகள்-தோறும்
உவம் அணி கானம் கொல்லென்று ஒலித்து ஒலித்து அழுவ போன்றே

#117
பனி மதி பொழிந்த கற்றை பருகிய ஆம்பல் போல
தனி மதி துய்த்த நெஞ்சின் தான் தனை நம்பா தன்மை
துனி மதித்து அயர்ந்தது அல்லால் துணிவு அறா வயிர குன்றாய்
முனி மதி குழவி சோர்ந்து முளரி மேல் துயில்கின்றானே

#118
படம் புனைந்து எழுதிய பாங்கின் பங்கய
தடம் புனைந்து இள முனி சாற்றுகின்ற எலாம்
வடம் புனைந்து என புனை மறை நல்லோர் எசித்து
இடம் புனைந்து இருள் அற உணர்ந்து இரங்கினார்

#119
இரங்கிய தன்மையின் உதவி ஈந்து அருள்
அரங்கிய நாயகன் ஆங்கு அடர்ந்து சூழ்
குரங்கிய உம்பரை விளித்து குட்டனுக்கு
உரம் கிளர் உறுதிகள் உரைப்ப ஓதினான்

#120
பேர்ந்த பூ கரையின் மேல் வாடும் பொற்றியால்
ஆர்ந்த பூம் தடம் கரைக்கு அயர்ந்து துஞ்சி உள்
கூர்ந்த நோய் அலைவு கொள் குழவி தன்மையில்
தேர்ந்த மா முனி மனம் தேற்ற செல்-மினே

#121
அற வினா விளைத்த நல் ஆசையால் உளம்
துறவினால் உயரிய விரதம் சூழ்ந்த பின்
நறவினால் அலர்ந்த பூ முறுக்கி நைந்து என
உறவின் ஆசையின் அயர்ந்து உளைவது ஏது என்பீர்

#122
செருக்கு-இடை கோடு உளம் சிதைக்கும் ஐம்பொறி
பெருக்கு-இடை பெரும் பகை பெறும் இ யாக்கையை
முருக்கு இடை துறவற முயற்சி வேண்டுவர்
நெருக்கு இடை தோல் உரித்த அரவு நேருவார்

#123
மெய் துணை இழுக்கு என துறவின் மேன்மையோர்
பொய் துணை என்று தம் பொறிகள் போழ்குவார்
அத்துணை கடிந்த பின் அனையர் மற்று இவண்
எத்துணை கொள்பவர் என்ன ஓதுவீர்

#124
உரு துணை பொன் மணி புணர்ச்சியோ துணர்
மர துணை மலர்தலோ குருவின் வாய் துணை
கரு துணை புரையொடு சனித்த காலையில்
குரு துணை இல் ஆயினான் குருடன் ஆயினான்

#125
என்பவன் ஆயினான் எனினும் கூர் உளத்து
இன்பு அவன் நுகர்ந்து எழ இதயத்து ஆண்டு அறா
அன்பு அவன் உணர்வின் மேல் இயற்ற ஆண்டகை
பின்பு அவன் குரு துணை பெறலும் நேடவோ

#126
போது வாய் மது என பொலிந்த சூல் அணி
மாது வாய் இருந்த போது உணர்ந்த வான் கலை
காது வாய் உரைப்ப ஓர் குரு கண்டான்-கொல் அன்று
ஓது வாய் மலர்ந்தவன் இன்றும் ஓதுவான்

#127
உள் உற திருவுளம் இது என்று ஓர்ந்த பின்
தெள் உற தேற்று உரை செப்பல் வேண்டுமோ
அள் உற பொலி வயத்து அணிந்த தேவ அருட்கு
எள் உற தோன்றிய இடுக்கண் ஏது என்பீர்

#128
தான் தனது என்று இரு தகுதி பற்றலும்
நோன்றன அடல் கொடு நூக்கி வான் உயர்
கோன் தனது அருள் நிலை சார்ந்த கொள்கையில்
ஆன்றன மதுகை மூ_உலகும் ஆட்டுமே

#129
நிரை எலா நயன் அடை கடல் நீர்மையால்
திரை இலா நிலை உடை தேவன் மார்புழி
மரை எனா மலர்ந்து அன மனம் துயின்றிட
புரை இலா வாழ்க என புகல்-மின் நீர் என்றான்

#130
இவை எலாம் இளம் தவற்கு இளம் பிரான் உரைத்து
அவை எலாம் வணக்கொடும் அமரர் கேட்டலின்
நவை எலாம் அற பொலி உம்பர் நாயகி
சுவை எலாம் மலிய ஓர் விருந்து தோற்றினாள்

#131
கன்னலும் தேறலும் கனியும் பாலொடு
பன்னலும் அரியது ஓர் பாகும் சேர்த்தி இஃது
இன்னலும் பசியும் ஆற்றிடும் என்று ஈந்தனள்
உன்னலும் அரிது அருள் உருத்த நெஞ்சினாள்

#132
தாய் வளர் அன்பின் மேல் தயை வளர்ந்து கான்
போய் வளர் தவர்க்கு எலாம் திலதம் போன்று உளான்
வீய் வளர் கொடியினான் தாழ்ச்சி மேன்மையின்
வாய் வளர் உணர்வினை வகுத்து கூறினான்

#133
மண் உற கிடந்த நான் வரைவு இலா வளம்
நண்ணுற எனக்கு அருள் நாதன் செய்தவை
கண் உற கண்ட பின் கலங்கி தான் உளம்
புண் உற குழைவதோ புலன் என்பீர் என்றான்

#134
இனையன பலவும் அன்று இசைத்து மூவரும்
நனை அன இள முனிக்கு ஆசி நல்கலும்
அனையன உயர்ந்த பல் அமரர் ஓர் கணம்
புனை அன உடை கதிர் பொதுள சென்றனர்

#135
குரவமே பின்னிய கூறையால் உடல்
கரவ மேல் உடுத்து மென் கமல பாசிதழ்
பரவ மேல் துயின்றனன் பாலனாய் தவம்
விரவ மேவியர்க்கு எலாம் விளக்கு ஒத்தான் அரோ

#136
விழுந்தன கதிர் திரள் விழிகள் கூச உள்
அழுந்தின வெருவுறீஇ அயிர்ப்பொடு ஐயெனா
எழுந்தனன் சொல்லு-மின் வந்தது என்று பின்
தொழும் தனது இரு கரம் குவித்து தோன்றினான்

#137
மூவரும் உணர்த்திய உறுதி முற்றவும்
தூவு_அரும் உணர்வினோன் செவியின் துய்த்த பின்
மேவு_அரும் கருணையாள் விருந்து துய்த்து உளம்
தே வரும் தெளிவு ஒளி துய்த்து தேறினான்

#138
தெள் நிற கவினொடு செறிந்த உம்பருள்
ஒள் நிற கதிர் முகத்து ஒருவன் போன்று இரீஇ
பண் நிறத்து இசைகளை பாட வானவர்
விண் நிற களிப்பு எழ விரும்பி பாடினான்

#139
அடல் வண்ணத்து அருள் வெள்ளம் ஆர்ந்து ஒழுக மல்கி எழும்
கடல் வண்ணத்து எ உயிரும் தேற்றல் தரும் காவலனே
தேற்றல் தரும் காவலனை சேர்ந்து அவிர் தன் கமல தாள்
ஏற்றல் தரும் சிந்தையவர் ஈங்கு இழிவு நண்ணாரே

#140
வான் தோய்ந்த மகிழ்வு உளனாய் மன் உயிர்கள் உய்வதற்கே
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே
உம்பர் தொழும் கோமானை உள்ளி நெறியுள் பிறழாது
இம்பர் தொழும் சிந்தையவா ஈங்கு இழிவு நண்ணாரே

#141
பால் நேரா அருள் கடலின் பதுமம் என நான் வாழ
தான் நேரா இடுக்கண் உறீஇ தயை உணர்வின் மிக்கோனே
தயை உணர்வின் மிக்கோனை தவிர் நசையை தவிர்ந்து உயர்ந்தோர்
இறை உணர்வில் பிறழாதார் ஈங்கு இழிவு நண்ணாரே

#142
விண் கனிய விண் உறைந்தோன் விளைத்த அருள் உளம் தூண்ட
மண் கனிய மனு ஆகி மணி கலத்து ஏந்து அமுது அன்னோன்
மணி கலத்து ஏந்து அமுது அன்னோன் மணி குடை கீழ் ஒதுங்கினர் அன்பு
அணி கலத்து ஏந்து அடி பெயரார் ஈங்கு இழிவு நண்ணாரே

#143
அ உலகும் உவந்து ஏத்தும் ஆன்ற குண தொகையோனை
இ உலகும் ஏத்தாதால் ஈங்கு இழிவு நண்ணாரோ
ஈங்கு இழிவு நண்ணாரே இ கருணை கடலோனை
நீங்கு இழிவு நண்ணாத நெறி நீங்கா சிந்தையரே

#144
என்று கூறி இளம் முனியோடு இடைநின்று
வாழ்த்திய வானவர் நீங்கினும்
மன்று மாலை மணத்து அணி கோதை போல்
அன்று கானம் எலாம் அலர் பூண்டதே

#145
தும்பி தேனொடு தூங்கு இசை யாழ் செய
கொம்பில் ஆர் குயில் கூவு இசை பாட மேல்
பம்பி ஆர்ந்த புள் பார்க்க உவந்து சூழ்
உம்பி வான் மயில் ஆடின ஓகையே

#146
கை அடங்கில காந்தி மின் போன்று புன்
மெய் அடங்கிய பேர் உயிர் மேல் எழீஇ
பொய் அடங்கிய ஐம்பொறி நீக்கி வான்
ஐ அடங்கிய ஆண்டகை நேடும்-ஆல்

#147
பேர்ந்த பேர் உயிரை பெற ஒல்கி நோய்
கூர்ந்த தாய் உடல் நேடிய கொள்கையால்
ஆர்ந்த ஆசை அலைந்து உளம் ஆட உள்
நேர்ந்த நாதனை எங்கணும் நேடுவான்

#148
மழையின் ஆர்ப்பு என வண்டு இமிர் நீள் தரு
மழையின் நீர் என தூய் மது தூவலும்
மழையின் நீல நிறத்த வனத்து-இடை
மழையின் மின் என வந்திரிவான் அரோ

#149
மனத்துளே உறைந்து ஆள் வய நாதனை
வனத்துளே தொடர்ந்தால் மருவான் என
கனத்துளே நுழை மின்னின் கடிந்து உளத்து
இனத்துளே திரு தாள் அடைந்து ஏத்தினான்

#150
நெடிது நேடிய நீரியது ஓர் பொருள்
கடிது காண்டலும் காதல் களித்து என
நொடி துதைந்த நுணங்கிய நோக்கு அறாது
அடி துதைந்த அகத்து அரிது ஓங்கினான்

#151
மின்னின் மின்னிய வேள்வியின் தீ எனா
வன்னி மின்னிய வாள் முகம் தண்ணமே
துன்னி மின்னிய தூய் உளம் தீ சுடர்
முன்னின் மோயிசன் காண் மரம் ஒத்ததே

#152
விண்டின் மாரி வரத்து அருள் மீ விளைந்து
அண்டி ஆர்ந்து உண்டு ஆங்கு உயிர் வாழ்கினும்
உண்டி நாட உறுப்பு உதவா பசி
மண்டி வாடிய பூ உடல் மாழ்கும்-ஆல்

#153
உய்ய நீள் கிழங்கோடு உயர் தீம் கனி
கொய்ய நீரிய குட்டனும் நொய்ய தன்
கை அதால் உதவி இல கால் எல்லாம்
வெய்ய வான் அரசாள் விருந்து ஓம்பினாள்

#154
ஓம்புகின்ற விருந்து உள நாள்-தொறும்
சாம்புகின்ற விண்ணோர் தர தாமரை
கூம்புகின்ற கரத்தொடு கொண்டு உண
காம்புகின்ற உடல் கனி வாழும்-ஆல்

#155
இனைய யாவையும் இன்பு எழ காண்டலும்
நனை அளாவிய வாகை நறும் தவன்
புனை அவா உளம் தூண்டிய பொம்மலால்
தனையன் ஆயின நாதனை சாற்றினான்

#156
வரி வளர்ந்த வனத்து இள மா முனி
எரி வளர்ந்து இடர் மாந்தல் எ நாளுமோ
உரி வளர்ந்த உன் தாள் உற சேர்க்குதி
சொரி வளர்ந்த அருள் தொடர் போய் என்றான்

#157
அருளின் காணியினான் அருளி சொலும்
பொருளின் காணிய பொற்பு அளிக்கு இன்புறீஇ
கருளின் காணும் மு காலை கடந்து ஒளிர்
தெருளின் காணியினான் இவை செப்பினான்

#158
கோது அணிந்த உளம் கோடி கோடா நிற்கும் கூ உலகம்
தீது அணிந்த துயர் தீர்ப்ப பிறந்தேன் நான் என் திரு முகத்தின்
தூது அணிந்த தவ வடிவாய் வழி தான் முன்னி துடைப்பதற்கே
போது அணிந்த வனம் வைகும் அவனை தேர்ந்தேன் பொறி வென்றோய்

#159
இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த இழிவும் சேர்வார் என்று அருளை
மனம் சேர்ந்து ஆய் வடு சேரா குழவி தான் என் மன பணியால்
வனம் சேர்ந்தான் அங்கண் எனது அருள் அங்கை மேல் வளர்ந்து அன்னான்
புனம் சேர்ந்த ஆர் கனி தருவின் பொலிசை மிக்கோன் பொலிவானே

#160
மீன் கறி கற்ற ஒளி வேற்கு அஞ்சு இல கான் நின்று வெளிப்பட்ட
ஊன் கறி கற்ற அரி அன்ன தவத்தின் மிக்கோன் உலகு அஞ்ச
தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தின்-நின்று செழு ஞானம்
தான் கறி கற்று உழிழ்ந்து என்ன தவறா நீதி சால்பு உரைப்பான்

#161
சொல் ஆரும் மலர் சிந்தும் குன்றத்து உச்சி துறந்து ஓடி
வில் ஆரும் திரை சிந்தும் சோர்தான் என்னும் வெண் நதி கண்
எல்லாரும் உய் வழியை காட்ட நான் வந்து இயைந்த நிலை
கல்லாரும் கற்று உய்ய விரலால் என்னை காட்டுவன்-ஆல்

#162
புண் துதைந்த தீ அன்ன சுடும் சொல் வாளால் புரை ஈர்ந்து
விண் துதைந்த இடி என்ன முழங்கி நீதி வெரு உய்த்து
கண் துதைந்த இருள் தீர விளக்கு இட்டு அன்ன கதி காட்டி
மண் துதைந்த மன் உயிர்கள் பலவும் உய்க்கும் வரம் கொள்வான்

#163
பாடலோடு இயைந்த ஆடல் முடவற்கும் இன்பம் பயந்து என கோல்
கோடலோடு இயைந்த புகர் கொண்டு அன்று ஆண்ட கோமானும்
ஆடலோடு இயைந்து ஒழுகி அரிய எல்லா அற தொகையோன்
வீடலோடு இயைந்து எதிர்க்கும் வினை சால் போத கனி கேட்பான்

#164
எரி காய்ந்த இரும்பின் மேல் துளி வீழ்ந்து அன்ன எரி காமம்
புரி காய்ந்த மனத்து உணர்வு உற்று ஒழுகல் செய்யா புகைந்து அழிய
வரி காய்ந்த உணர்வோன் தன் தம்பி இல்லாள் வைத்து மதம்
சொரி காய்ந்த கரி அன்ன காம பவ்வம் தோய்ந்து ஆழ்வான்

#165
நஞ்சு இனிதாய் நெடு நாளும் நக்கி நக்கி நா மரத்து
விஞ்சு இனிதாய் அமுது ஊட்டின் சுவை கொள்வானோ வினை வென்ற
நெஞ்சு இனிதாய் அமுது உமிழ்ந்தே அன்னான் ஓதும் நீதி முறைக்கு
அஞ்சிலனாய் அன்று அவனை சிறையுள் பெய்வான் அற பகையான்

#166
கலை செய் தூய் உயர்வு உரைத்தோன் பிரிதல் சொன்ன காரணமாய்
உலை செய் தீ விளை காம துணைவி தேறாது உணர் பகையால்
கொலை செய்வான் அமைதியை காத்து இருந்த-காலை கோன் பிறந்த
நிலை செய் நாள் விருந்து ஓம்பி நிருபர் எல்லாம் நின்று உவப்பர்

#167
குழல் எடுத்து இன்னிசை குயில அரசன் காண குழுச சூழ
நிழல் எடுத்து ஒண் மணி மின்ன நிருபன் பாவ நிலை மகளே
அழல் எடுத்து இன்பு என சுடும் வேல் கண்ணால் நோக்கி அறம் அழிய
கழல் எடுத்து ஒண் சிலம்பு ஆர்ப்ப கனத்து மின் போல் ஆடுகிற்பாள்

#168
தேன் குழைய மலர் குழைய இடை கண் கை கால் திறம் குழைய
மான் குழைய குழைந்து இழைந்து இன் அமிர்தம் ஊற மகிழ்வுறீஇ உள்
கோன் குழைய குழு புகழ உணராது ஆணை கூறினன் வான்
மீன் குழைய கவின் மகளே கேட்டது ஈவேன் விழைந்து என்பான்

#169
தாய் உணர்வால் கருணையன்-தன் தலையை அன்னாள் தர கேட்டு
தூய் உணர்வால் வருந்தினும் தான் மறுக்கல் தேற்றா தொடர் காமம்
காய் உணர்வான் உள் கலங்கி கொணர்-மின் என்ன கடும் கசடர்
போய் உணர்வால் பகைத்த முனி தலை கொய்து அங்கண் பொறுத்து உய்ப்பார்

#170
பகை தீர்ந்தது என தாய் உள் உவப்ப நீதி பகர்ந்தது போல்
தொகை தீர்ந்த வரத்தோன் வாய் தோன்ற யாரும் துதைந்து அஞ்ச
தகை தீர்ந்த தீ அரசன் குழைய குன்றா தவத்து உயர்ந்தோன்
மிகை தீர்ந்த செல் கதி சேர்ந்து உவப்பான் என்றான் வினை தீர்ப்பான்

#171
முருகு வாய் மொழி முற்றவும் கேட்டு உளத்து
உருகும் மா தவன் ஓங்கிய ஓதியால்
பருகு வாய்மையின் பால் நலம் பண்பொடு ஆங்கு
அருகு கான்று என ஆய்ந்து அறைந்தான் அரோ

#172
கொல்லும் வேலினும் கொன்று உயிர் மெய் உண
புல்லும் வீயினும் புன்கண் புகுத்தி மேல்
செல்லும் கூற்றினும் நஞ்சினும் தீயது ஆம்
ஒல்லும் மாதர் உணர்ந்து உடை ஆசையே

#173
கனி நுழைந்த அமுதோடு உணும் காளமே
துனி நுழைந்து துகைத்து உயிர் துய்த்து என
நனி நுழைந்த நசை இனிது உண்ட பின்
இனி நுழைந்த இடுக்கண் வருத்துமே

#174
சிலையின் மேன்மையும் சீர்த்தியும் சீல நல்
நிலையின் மேன்மையும் வாழ்க்கையும் நீதமும்
கலையின் மேன்மையும் காமம் நினைத்த-கால்
உலையின் மேல் வழுது ஒத்து எரிந்து இற்றவே

#175
கண் அவாவு கதிர் கடல் மூழ்கும் முன்
பெண் அவாவு கொணர் பிணி தன்மையின்
புண் அவாவு புலால் உணும் குந்தமும்
விண் அவாவு விண் ஏறும் ஓர் தீமையோ

#176
அரிந்த போது குழைந்து என ஆகுலம்
பிரிந்த போது நசை பெறுமாம் என்பார்
விரிந்த போது குடை வினை வண்டு என
புரிந்த போது நசை உயிர் போழுமே

#177
தசை செய் மெய் பகை தாங்கிய மாக்கள் தம்
நசை செய் அ பகை நாடினர் தாம் என
விசை செய் வில் பகை வில் தொழில் காக்கினும்
வசை செய் அ பகை மாற்ற அரிது ஆம் அரோ

#178
ஒல்லும் தன்மையை ஓர்ந்து இல மானிடர்
கொல்லும் தம் பகையே குணம் என்பது
சொல்லும் தன்மை அன்றேல் அருள் சூழ்ந்து நீ
வெல்லும் தன்மையை யார் ஐ விளம்புவார்

#179
மின்னல் நேர் ஒழி இன்பம் விரும்பிய
அன்ன நேரலன் கோடணை ஆற்றலோடு
இன்னது-ஆல் அருளோன் இரும் வீட்டு-இடை
மன்ன நீ செயும் வல் அருள் ஆண்மையே

#180
கடு உயிர்த்து அடும் கண் செவி நாகமே
கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார்
வடு மருட்டிய வஞ்சினர் செய்த தீ
அடு வினை கொடு நீ அருள் ஆற்றுவாய்

#181
தீய தம் வினை தீயர் முடித்தலால்
தூய நல்வினை சூழ்ந்து முடித்து அருள்
ஆய நின் வினை ஆதரவாய் இனி
காய வெவ் வினை கையருக்கு அஞ்சவோ

#182
உலகு யாவும் உடற்றினும் அஞ்சவோ
அலகு யாவும் அகன்று அருள் ஆற்ற நீ
விலகி யாவும் விளங்கிய வெம் சுடர்
இலகி ஆர் இருள் இற்றது போல் என்றான்

#183
என்ன மா தவன் எண் அகன்று இன்புறீஇ
அன்ன நாகில் அரும் தவன் மாட்சியை
உன்ன நாவு அமுது ஊற்று என நாள்-தொறும்
மன்ன நாதனை மாறு_இல வாழ்த்தினான்
மேல்

@27 ஞாபகப் படலம்


#1
மனை-இடை இவை எலாம் வழங்கும்-காலையில்
கனை இடை முரசு அதிர் கனலி மா புரம்
வினை-இடை விளை செயிர் விலகி ஞாபக
சினை-இடை மலர்ந்த நல் சீலம் செப்புவாம்

#2
போர் முகத்து உற்ற பேய் புதைய பூதியுள்
கார் முகத்து இடி என கறங்கி வீழ்ந்து உற
தார் முகத்து இக்கு என முதல் சொல் சாற்றிய
ஏர் முகத்து இளவல் அன்று அடி வைத்து ஏகினான்

#3
பூ-இடை புதி மது பூத்த பூ என
நா-இடை தேன் உக நவின்று உலாவலின்
பா-இடை புகழ் எழ உம்பர் பாடி மேல்
கோ-இடை திருவிழா கொள்கைத்து ஆயதே

#4
துன்னமும் இசைப்பும் ஒன்று இன்றி தூய் நிறத்து
அன்னமும் மறு என மெய் பை அன்னை தான்
பின்ன மு முறை தொழுது இட்டு பேர் அருள்
மின்ன மு முடியினோன் வேய்ந்து தோன்றினான்

#5
கான் உலகு அலரொடு கதிர் விளக்கிய
வான் உலகு உடுவொடு வனைந்த நாயகன்
மீன் உலகு இரங்க ஓர் மிடி கொள் காஞ்சுகம்
தான் உலகு அளித்து உறி தரித்து தோன்றினான்

#6
உரு வளர் மதியொடும் ஒளி வளர்ந்து அன
மரு வளர் முளரி மெய் வளர்ந்து மெய்ப்பையும்
தரு வளர்வொடு புதி தன்மை தோன்றின
வெரு வளர் முறையில் தான் விளிந்த வேலையே

#7
குழல் நிகர் தேன் மொழி குழவி கண்டனர்
நிழல் நிகர் நீங்கு இலா நிமிர்ந்த காதலால்
கழல் நிகர் அடி மலர் புல்லி காய் உளம்
அழல் நிகர் அடும் துயர் குளிர்ப்ப ஆற்றுவார்

#8
போது வாய் மலர்ந்து உரை முதல் புகன்ற-போது
ஏது வாய் மடங்கவும் இனிது உளத்தோடு
காது வாய் குளிரவும் கனிய சூசை பார்த்து
ஓது வாய் இளவல் இன்று உணர்த்தினான் அரோ

#9
கள் உண்ட எசித்து நாட்டில் கடவுளர் ஆக நின்று
தள்ளுண்ட பழியின் பொங்கும் சடத்து முன் பொருத போரில்
எள்ளுண்ட பேய்கள் அ நாடு இழிவுற குணித்த யாவும்
தெள் உண்ட உணர்வில் காட்டி திருமகன் சொன்னான் மீண்டே

#10
புண் தக வெறிகள் ஓட்டி புரை பொதிர் நாட்டின் மொய்த்த
கண்டகம் கொய் தேன் நானே கசடு அறும் உணர்வின் நீயும்
மண் தக உழுது சீலம் மலி அறம் வித்தி யாரும்
விண் தக வீட்டின் ஆக்கம் விளைவது பேணல் நன்றே

#11
மு மழை மதியில் பொய்யா முகில் என அருளின் வாய்ந்த
கம் மழை பொழிய நானே களிப்புற விளைவு காண்பாய்
மை மழை ஆக பேய்கள் வளர்த்த தீ மருளும் நீக்க
அ மழை குளிர்ப்பது அன்றி அகத்து ஒளி விளக்கு அது ஆமே

#12
ஆசை ஏர் ஆக பூட்டி அறிவு அழித்து உளம் சேறு ஆக்கி
ஓசையே கலங்க வீக்கி உழுது பல் புரையே வித்தி
மாசையே முதல் பல் வாழ்வின் வளர் பயிர் முகத்தை காட்டி
காசையே உதவா பூதி கனல் விளைவு இயற்றும் பேயே

#13
தெள்ளிய வரத்தின் மாரி திளைத்த வண் தவத்தின் குன்றத்து
உள்ளிய ஓதி நீத்தம் ஒழுகி வந்து அலகை வஞ்சத்து
எள்ளிய புரையின் பைம் கூழ் இற்று அற சிவையின் கொய்து
விள்ளிய கொடியோய் சீல விளைவு உணர்ந்து ஒழுக என்றான்

#14
கூகையே ஒளியை வெஃக கொடும் புலி இரங்க செம் தீ
வாகையே குளிர்ப்ப நச்சு மரம் உயிர் காக்க மற்றை
ஓகையே உணர்ந்த-காலை உனக்கு அரிது என்-கொல் வேதம்
மூகையே நானும் கூற முயல்வியே என தான் நேர்ந்தான்

#15
அணி தகு உருவில் எங்கும் அனலியே விளக்கும் ஆறும்
மணி தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும்
பணி தகு பயிற்றல் வேண்டா படர்ந்த அன்பு உணர்வினோற்கே
பிணி தகு உயிர் ஓம்பு ஆறும் பேசவோ என்றான் நாதன்

#16
நால் முகத்து அருளின் ஆக்கம் நாட்டி மேல் கதியில் உய்ப்ப
ஊன் முகத்து உறி நான் தேடும் உயிர் என உணர்ந்த நட்பின்
நூல் முகத்து உணர்த்தி என்ன நுவன்று இறை ஆசி தந்தான்
தேன் முகத்து அலர் தாள் சூசை சென்னி பூண்டு இறைஞ்சினானே

#17
நாடக அரசன் ஒவ்வா நவி கனி எட்டி ஒவ்வா
மாடக ஆணி ஒவ்வா மட கிளி உணர்த்தும் தீம் சொல்
சூடக மகளிர் ஒப்ப சொன்னவை பொய்யா சீலத்து
ஈடு அக மரபோன் வான் வீட்டு இன்பு உகும் ஓதி ஓர்ந்தான்

#18
வாய்ந்தன மணியின் பூவின் மலர்ந்தன விரை செய் தீம் தேன்
தோய்ந்தன அமுதில் யாரும் துய்ப்பன வழுவா சீலம்
ஈய்ந்தன வரும் வீட்டு இன்பம் இடுவன கருணை நெஞ்சத்து
ஆய்ந்தன எவர்க்கும் சூசை அறைகுப வலித்தான் அன்றோ

#19
ஈரம் ஒன்று இல இறைத்தன பயன் இல விரை ஆம்
வாரம் ஒன்று இல மனத்தவர்க்கு ஓதிய மறை என்று
ஆரம் ஒன்றிய அருள் அணி மார்பனே உடற்கும்
ஓரம் ஒன்றிய உதவியோடு அன்புறல் உணர்ந்தான்

#20
அன்பு வித்தினர் ஆங்கு அதன் விளைவு என அன்பை
பின்பு கொள்பவர் என பிறர் உயிர் என பேணி
என்பு வேண்டினும் இடும் தயை மலர் முகத்து எவர்க்கும்
முன்பு காண்டு இல முகை மது மொழி நலம் உரைப்பான்

#21
கை தளர்ந்தனர்க்கு இரந்து தான் அளித்து நோய் கடுத்த
மெய் தளர்ந்தனர் மெலிவு அறு மருந்து என பொறி செய்
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என எவர்க்கும்
மை தளர்ந்தன மனத்து உரி துணை என ஆனான்

#22
கொடும் தொல் புண்ணினை கொந்து அழல் ஆற்றியது அனைய
சுடும் சொல் கொண்டு அரும் துகள் வடு ஆற்றுதல் வேண்டின்
விடும் சொல் பூ என விள்ளிய நய முகத்து அருளே
படும் சொல் கொண்டு உளம் பனி பட குளிர்ந்து இனிது உரைப்பான்

#23
தீ ஒக்கும் துயர் தீக்கு உளத்து இழி மழை ஒக்கும்
நோய் ஒக்கும் கடை நுனிந்த நல் மருந்து ஒக்கும் இருளை
பேய் ஒக்கும் கடை பெயர்த்து உளத்து ஒளி விளக்கு ஒக்கும்
தாய் ஒக்கும் பயன் தரு மறை ஒக்கும் தன் தயவே

#24
பாசம் ஆம் அருள் பரிவு உளம் இன்னணம் பிணித்தே
வாச மாமையின் மது மலர் மொய்த்த வண்டு அனைய
காச மாமையின் காமரு மலர் கொடி தயை தேன்
வீச மா தவன் விளம்பியது உளத்து உண மொய்ப்பார்

#25
அருள் திறந்த வாய் அறைந்தவை ஒத்தது ஓர் அன்பின்
தெருள் திறந்த காது அருந்தலின் தெளிவு உகும் சீல
பொருள் திறம் தகா பொறி நெறி விலகி மெய் உணர்வின்
மருள் திறம் தகா வரும் பலர் காட்சியில் பொலிந்தார்

#26
ஓர் என்பான் உலக ஒருங்குடன் படைத்த பின் நீதி
சீரின்-பால் நெறி சிதைவு இலா நடவிய நிலையை
பாரின்-பால் நலம் படுவ கண்டு இறைஞ்சலே கல்வி
பேர் இன்பான் உறும் பெரும் பயன் இது என உரைப்பான்

#27
நனி அவா இருள் உளம் புகா தெளிதலும் நயப்ப
இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும் உள்
முனிய மாறலும் முரிந்தனர் நிறுத்தலும் மற்ற
கனிய சீலமும் காட்டி ஓர் பெரும் விளக்கு ஆனான்

#28
சாற்றி காட்டிய தகை நெறி விரும்பி வந்து ஒரு நாள்
ஏற்றி காதலோடு இருந்து திரு செல்வரே வினாவ
போற்றி கேள்-மின் நீர் புகை என ஒழி பொருள் ஈகை
ஆற்றி கேடு இல அமர் பயன் கூறுதும் என்றான்

#29
பொய்த்த பல் வழி கான்-இடை போதல் போல்
மொய்த்த நீர் உலகில் முரியாது அறம்
வைத்த நல் வழி வாய்ப்பு அரிது ஆம் கொடை
உய்த்த நல் முறை முற்பட ஓதுவாம்

#30
வெருள் தரும் குரல் வெம் சின ஏறு உமிழ்ந்து
இருள் தரும் புயல் பெய்தலில் ஏற்றுவார்
மருள் தரும் புகார் மல்கினும் மாறு இலா
பொருள் தரும் கையை போற்றுவர் யாருமே

#31
நஞ்சு நல் அமுது என்று அதை நக்கினும்
எஞ்சு நஞ்சு அமுது ஆம்-கொல் யாவரும்
மஞ்சு நேர் கொடை வாழ்த்தலின் தன் புரை
விஞ்சு வெவ் வினை இற்று அற வீயுமோ

#32
விஞ்சும் ஈகையில் வீண் புகழ் கோடலே
எஞ்சு வாணிகர் புன் தொழில் என்று அலால்
நெஞ்சு மாசுற மேல் புகழ் நீவுதற்கு
அஞ்சுவார் கொடையால் பயன் வேண்டுவார்

#33
கொடை வரும் பயன் கொண்டு கவர்ந்திடும்
இடை வரும் புகழ் என்று உயர் நீர்மையார்
உடை வரும் பொருள் கள்வர்க்கு ஒளித்து என
மிடை வரும் கொடை வேய்ந்து இல ஈவரே

#34
வீழ்ந்தவர்க்கு உதவி இல மேன்மையில்
வாழ்ந்தவர்க்கு இடுவார் வயல் பாய்கிலா
ஆழ்ந்த நீர் கடல் அண்டி நலம் கெட
தாழ்ந்த நீர் புனல் தன்மையின் ஆயினார்

#35
வளர்ந்த பூம் கதிர் மாழ்கிய நெற்கு உயிர்
உளர்ந்த வான் புயல் ஊட்டிய நீர் என
தளர்ந்த வாழ்க்கையை தாங்கி இல்லோர்க்கு இடும்
கிளர்ந்த வான் கொடை கேழ்த்து எழும் ஈகையே

#36
ஒரு கைம்மாறு உணரா கொடை வான் மிசை
வரு கைம்மாறு முன் வையகத்து ஆண்டகை
தரு கைம்மாறு இயல் சாற்றிட கேள்-மின் நீர்
இரு கை மாறு இல ஏழ் கொடை போற்றியே

#37
முரல் வாய் சங்கு உளைந்து ஈன்ற முத்தும் செந்நெல் முத்தும் உறழ்
நிரல் வாய் பூம் கமழ் கழனி அணிந்த தேன் பூ நிழல் குளிர்ந்த
குரல் வாய் புள் சோலை நலத்து அறமும் சீரும் குடி துஞ்ச
நரல் வாய் பண் கீதம் எழும் காலிலேய நாடு உளதே

#38
படம் புனைந்த பூம் சுனை நாட்டின் மூதூர் பார் முகமோ
வடம் புனைந்த மார்பு அணியோ மணியோ வைய வனப்பு அவிக்கும்
தடம் புனைந்த மணி புரிசை தழுவும் மாடம் தவழ் கொடி செய்
நடம் புனைந்த நெற்றலி மா நகரம் ஆம் அ நாட்டு அணியே

#39
சீர் செல்வத்து அருள் செல்வம் சேர்த்தி ஒவ்வா திரு மிக்கோன்
பேர் செல்வத்து ஒளி கொடை கை தொபீயன் என்பான் பிறழா கற்பு
ஏர் செல்வத்து அன்னம் என்பாள் ஈன்ற நம்பி தயோதரனே
நீர் செல்வத்து அலர் அன்னான் வளர்ந்தே வாழ்ந்தார் நிகர் இல்லார்

#40
பண் அழகு ஆம் இன் குரல் போல் அழகு ஆம் நாவில் பணி சொல்லே
விண் அழகு ஆம் பெய் துளி போல் அழகு ஆம் சீர்க்கு விளை கொடையே
கண் அழகு ஆம் கண்ணோட்டம் என்ன வீயா காட்சி ஒளி
நண்ணு அழகு ஆம் தவ விளக்கு உள் எறிப்ப கண்டான் நடந்து ஒத்தான்

#41
வீய் வரம்பு ஆம் கோதையினாள் உணர்வில் ஒப்ப விழைந்து இருவர்
தீய் வரம்பு ஆம் வினை செருக்கும் மறையின் நீழல் செய்து அங்கண்
நோய் வரம்பு ஆம் மிடி எவர்க்கும் செகுத்த பின்னர் நுனித்து அகன்று
போய் வரம்பு ஆய் நீனிவை மா நகரில் கை கார் பொழிந்து இருந்தார்

#42
மின் சுடர பொழி முகில் போல் புற நாட்டு அன்னார் விளக்கு ஆகி
கொன் சுடர பொன் புதையா விளங்க ஈய்ந்த கொடை மிக்கோர்
பொன் சுடர சுடும் தீ போல் பொன்றா தேவ பொலிவு அருளில்
பின் சுடர பல வினையே பெற்றார் மாட்சி பிரியாதார்

#43
ஏமம் சால் ஈதலில் தாம் இல்லோர் ஆனார் தாதையும் நோய்
தூமம் சால் மூடிய கண் குருடன் ஆனான் துகள் ஒன்றே
வீமம் சால் குறை எண்ணிக்கை கண் உதவா மெய் எல்லாம்
காமம் சால் அருள் வாயாய் கனிய யார்க்கும் உதவுவான்

#44
கால் முகத்து வயிர குன்று ஒப்ப நோயில் கலங்காதான்
வான் முகத்து திருவுளம் என்று ஓம்பி பொன் சால் வரும் கடனை
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்தி கொள்ள சேர் இனத்துள்
மீன் முகத்து நல்லாளை மகற்கு சேர்ப்ப விழைவுற்றான்

#45
பூ முற்று முகத்து ஆர்வம் புனை நெஞ்சான் என்ற அசரீயன்
காம் உற்று வந்து உணர்ந்த நிலையின் நம்பி கை கூட்டின்
ஏம் உற்று மணம் உற்று மீள்வாம் என்ன இரு குரவர்
தாம் முற்று களியில் விட தனையன் போற்றி தடம் கொண்டான்

#46
நம்பியும் துணையுமே கையும் நாட்டமும்
கம்பியும் குரல் மணி கலனும் போல் தம் உள்
பம்பியும் விளைத்த தீம் பணியின் நல் அறம்
உம்பியும் படர் வழி உவந்து போயினார்

#47
திரை வளர் தீம் புனல் சென்று தேன் மலர்
கரை வளர் நிழல் உறீஇ கவின் கொள் நம்பி மேல்
புரை வளர் வினை என புழுங்கு ஓர் மீன் வர
விரை வளர் தாரினான் வெருவி விம்மினான்

#48
மேவிய துணையவன் மீனை கொன்று பின்
ஏவிய முறை அதின் பித்தும் ஈரலும்
தீவிய மருந்து என எடுத்து செல்வு அயர்ந்து
ஆவிய நாட்டு எழில் அணுகி எய்தினார்

#49
வள்ளலின் மகன் என மகிழ யாவரும்
கொள்ளலின் உவர்ப்பு இல கடன் கைக்கொண்ட பின்
எள்ளல்_இல் மரபினாள் இயையும் மன்றலை
உள்ளலின் முகலி மா நகர் உற்றார் அரோ

#50
மதி அகடு உரிஞ்சிய கொடியின் மாடம் நீள்
நிதி அகடு ஆர் கொடை நிவலன் நோன்று தேன்
புதி அகடு ஆர் அணி பொற்பில் ஈன்ற அ
பதி அகடு இணை இலா சார்மி பாவையே

#51
காவி நோய் செய்த கண் விழைந்து ஏழ் காதலர்
ஓவி நோய் செய்த பேய் ஒருங்கு மாய்த்தலால்
நாவி நோய் செய்த பூம் குழலின் நங்கை உள்
ஆவி நோய் செய் தழல் அருந்தி வாடினாள்

#52
வாடிய ஒரு மகள் வளர்ச்சி கண்டு உளம்
கூடிய துயர்க்கு இரு குரவர் நாள்-தொறும்
நீடிய நசை கொடு நிமலனை தொழுது
ஆடிய சிந்தையின் அரற்றி விம்முவார்

#53
தம் துயர் மூவரும் தகைப்ப அன்று அவர்
வந்து உயர் மணி கொடி மன்றல் கேட்டலும்
நொந்து உயர் கிளையரை நிவலன் நோக்கி முன்
வெம் துயர் விளைத்த பேய் வினை விளம்பினான்

#54
பேய் வளர் வினை எலாம் பெயர்ப்பன் நான் என
தீய் வளர் குரவர் உள் சிறந்து நேர்தலால்
போய் வளர் கோலம் இட்டு அரிவை பொற்பு உறீஇ
மீய் வளர் மலர் கொடி பூத்து வேய்ந்ததே

#55
செம் கதிர் மதியொடு ஓர் அணையில் சேர்ந்து என
அம் கதிர் நல்லாளொடு காளை ஆங்கு உறீஇ
இங்கு எதிர் தோழன் முன் கொணர்ந்த ஈரலை
பொங்கு அதிர்வு எழ புகைத்து எரித்து போக்கினான்

#56
போக்கிய புகையொடு புழுங்கு பேய் இனம்
நீக்கிய நிலையின் ஆங்கு எவரும் நீர்த்து எழ
வீக்கிய கொடி நலம் ஏய்ந்த காளை உள்
தேக்கிய மகிழ்வு அறா சிறந்து மூழ்கினான்

#57
இரு மணி படலையின் இருவர் வாழ்ந்து உராய்
பரு மணி களிப்பின் நான் பலவும் சென்ற பின்
திரு மணி கொடியோடு திரும்ப செல உணர்ந்து
அரு மணி குன்று அனான் அமைதி கேட்டனன்

#58
விடையொடு வருந்தினும் தாதை மேவு அருள்
இடையொடு வளர்க என்று இள மின் கூட்டி வான்
கொடையொடு வளர்ந்த சீர் குவி தன் அன்பு உரி
நடையொடு வேண்டுவ வெறுப்ப நல்கினான்

#59
பறவையும் நிழலுமாய் உம்முள் பற்று உறீஇ
உறவையும் மறக்கினும் உவந்து இல்லோர்க்கு எலாம்
கறவையும் மிக அருள் கா-மின் என்றனன்
நறவையும் மணத்தையும் நவிழ் பைம் தாரினான்

#60
தூம்பு உடை கைய மா துரகம் சாடு உயர்
கூம்பு உடை தேர் தசம் கொடி குடை கொடு
தேம் புடை அலங்கல் வேல் சேனை சூழ் வர
வீம்பு உடை மரபினோர் விரைவின் போயினார்

#61
பண் நடையால் ஆடல் என பரிவு அற்று இங்கண்
உள் நடையால் உவப்பில் இவை ஒழுகும்-காலை
புண் நடையால் மகற்கு அவண் தாய் புலம்பி நோக
பெண் நடையால் உளி மயங்கி பெரிது நைந்தாள்

#62
பொருள் இழந்தே மகன் இழந்தே புலம்ப நீ கண்
தெருள் இழந்தாய் இதோ கொடையின் செய்கை என்றாள்
அருள் இழந்தே சொல்லல் என அழும் தொபீயன்
மருள் இழந்தே கலங்காதான் மறுத்து சொன்னான்

#63
அறம் ஒன்றே பயன் பேதாய் அஞர் தீது அல்ல
மறம் ஒன்றே வினை காணாய் வழங்கும் அன்பின்
திறம் ஒன்றே நயம் பீடை சேர்த்தி ஈவான்
புறம் ஒன்றே ஒவ்வா கருணை பொலிவோன் என்றான்

#64
மை திறத்தால் நொந்து அழுவது எளிதே வாடும்
மெய் திறத்தால் இறப்பு எளிதே விளை நோய் தந்த
கை திறத்தால் தேறி உளம் காய்ந்த துன்பம்
அ திறத்தால் இன்பம் என்பது அரிதே என்றான்

#65
காய் பதம் கண்டு அரும் கொல்லன் கரும் பொன் காப்பான்
நோய் பதம் கண்டு ஆற்றானோ நுனித்த அன்பின்
தாய் பதம் கண்ட எந்தை என சாற்றும் வேலை
சேய் பதம் கண்டு ஈண்டு ஒருவன் தூது சென்றான்

#66
திங்கள் நாண் அரிவையோடு சென்றனன் காளை என்றாற்கு
எங்கணான் நம்பி என்றார் எழும் விரைவு இவரும் சென்றே
இங்கண் நாம் அடிகள் என்ன இருவர் தாள் தழுவி வீழ்ந்து
தம் கணால் மலர் நீர் ஆட்டி தகும் துயர் ஆற்றினாரே

#67
ஏற்றினான் உயிரோடு ஆக்கை இமிழ்த்து என அணைத்தான் கண்ணீர்
தூற்றினான் அழும் கண் அன்றி துலங்கு கண் இலெனோ என்ன
சாற்றினான் அரிய தோழன் தழுவினான் அவனும் இ நோய்
ஆற்றி நான் உவப்ப செய்வேன் அரிக இ கவலை என்றான்

#68
நூல் வழி கொணர்ந்த பித்து நோம் இரு கண்ணில் பூசி
சேல் வழி சிலாம்பின் புல்லம் சிந்தி வீழ்ந்து இருளும் நீங்க
நால் வழி அனைத்தும் தோன்றி நவை அற தொபீயன் காண
மேல் வழி உதவி என்ன விமலன் பின் இவனை தாழ்ந்தான்

#69
திரு மணி குன்றின் சாயல் சிறுவனும் ஒளி மீன் பூத்து
வரு மணி சாயலாளும் வளர் நிதி குப்பையோடு
பெரு மணி பேழை சால்பும் பெற்ற மற்று எவையும் தன்-கண்
இரு மணி களிப்பின் கண்டான் இரும் கொடை பயனின் மிக்கான்

#70
நல் வினை விளைவு கண்ட நகர் எலாம் நயப்ப தோன்றல்
பல் வினை வழியில் ஆய பயன் எலாம் பணிப்ப தாதை
வில் வினை வளை கை பற்றி வேறு இருந்து உரைமோ காளாய்
வல் வினை உணர்வின் தோழன் வழங்கு கைம்மாறு ஏது என்றான்

#71
கொடிய ஓர் வகுலி கொன்றான் கொள் கடன் கொண்டான் பேய்கள்
கடிய ஓர் கவின் நல்லாளை கடியொடு சேர்த்தான் செல்வம்
பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான் புலம்பு உனக்கு இரு கண் தந்தான்
படிய ஓர் கைம்மாறோ சீர் பாதி இட்டு இறைஞ்ச என்றான்

#72
கோதை வாய் விரை செய் மார்பன் கூய்-மின் என்று அவனும் வந்தான்
தாதை வாய் அமிர்தம் ஊற தன் கையால் முன் கை பற்றி
காதை வாய் மடங்க செய்தாய் கடி புகழ் இங்கண் வித்தி
மேதை வாய் பெரும் சீர் வான் மேல் விளைத்தி மற்று அறிய நானோ

#73
அடி பணி செய்க நாமே அரும் பொருளோடும் உய்த்த
கடி பணி பகுந்து ஓர் பாகம் கை கொள்க என்ன போற்றி
கொடி பணி உலவு மார்பன் குளிர்ப்ப ஓர் முறுவல் காட்டி
துடிப்பு அணி மொழியால் சொன்னான் சுருதி நூல் அமிர்த வாயான்

#74
உரு கொடு தோன்றி நானே உரு இலா வானோன் இன்ப
பெரு கொடு தேவ பாதம் பெற்ற இரபயேல் என்பேன்
மரு கொடு மலர்ந்த பூ போல் வளர் அருள் கொடையின் பாலால்
திரு கொடு புகழ் நீ எய்த செலுத்தினான் என்னை நாதன்

#75
இரவலர் தம் கை வேலி இடத்து அரும் பொருளை வித்தி
புரவலர் புகழும் பொய்யா பொலிவொடு விளைத்தி வாழ்வும்
பரவு அலர் மலர்ந்த சோலை படர் நிழல் மங்கா யாண்டும்
கரவு அலர் முகத்து இல்லோர் தம் கை கொளும் கொடை வித்து எஞ்சா

#76
பொன் ஒளி சுடர செய் தீ புரை அறத்து உயர்ந்தாய் என்ன
உன் ஒளி சுடர துன்பத்து உளைதியே துன்பம் தாங்கி
மன் ஒளி சுடர நெஞ்சின் மயக்கு இலா பொலிந்தாய் என்ன
பின் ஒளி சுடர இ சீர் பெற்றியே கொடையின் மிக்கோய்

#77
ஓர் திறத்து இன்பம் துன்பம் ஒரு கையால் பகுத்த நாதன்
பேர் திறத்து இணங்கி வாழ்த்தி பெறும் வினை களைக என்ன
கார் திறத்து ஒளிரும் மின் போல் கதிர் எறித்து ஒளிப்ப வானோன்
சீர் திறத்து அருளின் மிக்கோர் திருவுளம் இறைஞ்சி வீழ்ந்தார்

#78
மிடி முகத்து எஞ்சா செல்வம் விளை முகத்து ஓங்கா நீரார்
படி முகத்து இணையா அன்பின் படும் குறை எவர்க்கும் நீக்கி
கடி முகத்து அடைந்த வாழ்க்கை கனி பொது பயன் நன்று ஆக
இடி முகத்து உறை தீது என்ன இமிழ் உற பகுத்து வாழ்ந்தார்

#79
கொடை தரும் பயனே இஃதேல் குளித்த-கால் கெடும் என்று ஈந்து
மிடை தரும் பொருளின் ஆக்கம் மேவு-மின் என்றான் சூசை
கடை தரும் அளவு அற்று அன்னார் களிப்புற இரப்போர் வாழ்க
மடை தரும் நிறைவில் தானம் வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார்

#80
கோலம் இட்ட அங்க குடம் ஒத்து அவண்
சூலம் அக்கு அணி கொக்கு அணி தொக்கு அணி
சால மிக்க தவத்து உரு தாங்கி நல்
சீலம் அற்ற சிவாசிவன் செப்பினான்

#81
அற்ற அல்லி அறாது உறு நூல் என
பெற்ற இ பிறப்பின் கொடை எ பிறப்பு
உற்றது என்னினும் புக்கு ஒழியாது உயிர்
பற்ற வந்து பயன் தருமே என்றான்

#82
பேதை வாய் மொழி கேட்டுளி பேர் அருள்
கோதை வாய் மொழி மா தவன் கூறினான்
காதை வாய் மொழி கண்ணி உளம் கெட
மேதை வாய் மொழி வேதம் அது என்பவோ

#83
பிறப்பதும் பிறந்தார் எவரும் பினர்
இறப்பதும் பொது அன்றி இறந்த பின்
புற படும் புரம் புக்கு முன் ஆயவை
மறப்பதும் தவிர்ந்து ஆர் வகுத்தார் என்றான்

#84
முன் பிறந்தனர் முற்றும் இறந்தார் எனின்
பின் பிறந்திலர் முன் பெறும் தீவினை
என்பு இறந்த பின் எ வழி வீயும் என்று
அன்பு இறந்த சினத்து அவன் கூறினான்

#85
மருள் விளைத்த வழக்கு உரை கேட்டலும்
தெருள் விளைத்த திரு விளக்கு ஆயினோன்
அருள் விளைத்த தன் அன்பொடு நூல் மறை
பொருள் விளைத்த பயன் புகன்றான் அரோ

#86
வினை முதிர்ந்து விளிந்தனர் ஆவி போய்
முனை முதிர்ந்த அழல் முதிர் பூதியில்
கனை முதிர்ந்த பனிப்பொடு எ காலமும்
புனை முதிர்ந்த சிறை புகுந்து ஓவும்-ஆல்

#87
செய்த நல் தவ வாள் கொடு தீ வினை
கொய்த பின் இறந்து ஆவி குளிர்த்து அருள்
பெய்த நெஞ்சு பெயர்கில பேரின்பம்
எய்த ஆண்டகை கண்டு என்றும் வாழும்-ஆல்

#88
இரு வகை படும் இ உயிர் விட்டு இடை
வரு வகை படும் மற்று உயிர் தன் வினை
ஒரு வகை படும் ஒப்பனை தீ உலகு
அரு வகை படும் அல்லலில் வீயும்-ஆல்

#89
கோது கொள் நிதி பொன் செயும் கொல்லரே
ஊது கொந்து அழல் ஒப்பனை செய்து என
தீது கொள் உயிர் தீது அளவு அன்ன தீ
போது மட்டும் பொருந்த வருத்தும்-ஆல்

#90
பொன் விளக்கிய-போதில் அ கொல்லரே
மின் விளக்கிய மேல் நகை செய்து என
இன் விளக்கிய அ உயிர் எம் பிரான்
மன் விளக்கிய மார்பு அணி ஆகும்-ஆல்

#91
சொன்ன முன் கதிகள் கடை தோன்று இலா
இன்ன பின் கதி ஈறு உளதாய் இறந்து
அன்ன தீ உறை அ உயிர்க்கு ஈங்கு நம்
பல் நல் ஆட்சியின் பாசறை குன்றும்-ஆல்

#92
அரிய வேதம் எட்டு_எட்டும் எண் ஆகமத்து
உரிய இ வழி ஒன்று அலது இல்லையால்
பிரிய மாண்ட உயிர் பின்பு பிறத்தலே
கரிய கங்குல் கனா என ஓதினான்

#93
கூறிய இ நிலை உளதேல் குன்று உடலும் உடல் வனப்பும் குறையும் வாழ்வும்
மாறிய இ நிலை உலகில் வழங்கிய-கால் நீதி இதோ வழுவோ கூறாய்
தேறிய இ நிலை மிக்கோய் என்று சிவாசிவன் கேட்ப தெளிந்த ஆர்வத்து
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே

#94
ஆதி இலா ஈறும் இலா இணை இன்றி என்றும் உளோன் அமலன் ஒன்றே
பேதி இலா வானவரும் எம் உயிரும் படைப்புண்ட பின் ஈறு இல்லா
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது ஆய்
நீதி இலா நவையுறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட நிலைமை என்னோ

#95
பார் முகத்து முதல் உடல் புக்கு எம் உயிர்கள் தோன்றிய-கால் பரிவு அற்று எல்லா
சீர் முகத்து வாழ் அரசர் யாவரும்-கொல் பல் முகத்து சென்றார் என்னில்
பேர் முகத்து வயத்து இறையோன் நீதி அதோ நீதி அதேல் பிறழா நீதி
ஓர் முகத்து முன் வினைகள் இன்றி இன்றும் இ விகிர்தம் உளது ஆம் என்றான்

#96
முன் பிறப்பின் விடங்கம் உற தலைவிதி காரணம் என்றான் முன்-பால் நீதி
தன் பிறப்பின் அன்பு உயர்ந்தோன் வேறு பட விதி எழுதல் தயவே என்ன
சொல் பிறப்பின் அடங்காதான் திருவுளமே என அன்னான் சூசை மீண்டே
பின் பிறப்பின் வீற்று இயற்றும் திருவுளமும் தான் என்றால் பிழையோ என்றான்

#97
வைகறை ஒத்து அள் இருளும் ஒளியும் இல் சிவாசிவன் உள் மயங்கி நிற்ப
மொய் கறை அற்று உணர்க என முந்நீர் சூழ் பூதலத்தில் முயலின் மிக்கோன்
செய் கறை அற்று உயர் நீதி திறம் காட்டி நெடிது உண்ட தெளியா மையல்
பெய் கறை அற்று ஒளி மொய் பெரும் சுருதி விளக்கு ஏந்தி பெரியோன் சொன்னான்

#98
தெருள் செல்வம் மிக்க இறையோன் முள் திலத்தும் பெய் முகில் போல் சிந்தி பெய்த
பொருள் செல்வம் வறிது என்ன பூரியர்க்கும் சால்பு இறைப்பான் பொருவா மாட்சி
அருள் செல்வம் நசைக்கு அளவா யாவரும் கைக்கொண்டு ஓங்க வயமே தந்தான்
மருள் செல்வம் மற்றவையும் ஆகியது அற பயனோ மதியின் மிக்கோய்

#99
சலத்து எல்லாம் ஓர் நிலையோ தருக்கு எல்லாம் ஓர் கனியோ தரணி எங்கும்
நிலத்து எல்லாம் ஓர் விளைவோ நமக்கு எல்லாம் ஓர் முகமோ நிலையும் பல் ஆய்
குலத்து எல்லாம் பொது நின்று குன்றா சீர் அறம் ஒன்றே குறை ஒன்று இன்றி
புலத்து எல்லாம் ஆகும் எனின் புற விகிர்தம் ஒன்று எண்ணார் புலமை மிக்கோர்

#100
காறு படும் திறத்து இவன் கைப்பொருள் அவற்கே இவற்கு அவன் கை கருமம் வேண்டி
வேறுபடும் மனு_குலமே ஒருப்படுத்தும் இரு கையாம் மிடி வாழ்வு அன்றி
கூறுபடும் திறத்து என்றும் வாழ்ந்து அறவோர் அழ தீயோர் குவவில் காண்கில்
ஈறுபடு நாளில் வரும் இரு வினை வீயா பயன் பின்பு இல்லை என்பார்

#101
திறம் தகா வாழ்வு இதுவாய் திறம்பா வான் வாழ்வது என தெளிய நாமே
பிறந்த கால் உயர் குலமும் சீர் திறமும் தெரிந்து இங்கண் பிறப்பார் இன்றி
இறந்த கால் உயர் வான் மேல் இணையா வாழ்வு உற்று ஆளும் இயல்பு ஒன்று அன்றோ
மறம் தகா நல்வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும் வழங்கும் என்றான்

#102
இற்று எலாம் இயம்பியும் இவை சிவாசிவன்
முற்று எலாம் விதி விதி முயலின் ஆம் என
அற்று எலாம் பொறா நுமான் அதற்கு ஓர் ஞாபகம்
உற்று எலாம் தீர்ப்பல் என்று உரைத்து எழீஇயினான்

#103
பிடித்து இழுத்து இறுத்தி பேர் விதி அடா என
அடித்து அடித்து உதைத்து இது விதி அடா என
இடித்து இடித்து அழற்க நீ விதி அடா என
வெடித்து அவர் நக கொடும் விதி விலக்கினார்

#104
கூன் முகத்து அடும் விதி கொடுமை ஈது என
தான் முகத்து ஒரு நகை தரும் சிவாசிவன்
நூல் முகத்து உரைத்தவை நுதலி தேற்று அரும்
பால் முகத்து ஒரு மொழி பகர்வ கேள் என்றான்

#105
ஏற்று_அரும் உணர்வினோய் இயைந்த நூல் நலோர்
போற்று_அரும் ஊழ்வினை என புகன்ற பின்
மாற்று_அரும் தலைவிதி மறுப்பவோ என்றான்
தேற்று_அரும் அயிர்ப்பு அற வளனும் செப்பினான்

#106
ஊழ்வினை என்னினும் உரிமை ஓர்ந்துழி
மாழ் வினை இயற்ற நீ வகுத்த அக்கர
தாழ் வினை என்பவோ இறைவன் சாற்றிய
கீழ் வினை இல மறை விரும்பி கேட்டி-ஆல்

#107
தீட்டிய விதி அலால் செயப்படா செயும்
கோட்டிய வினை விதி கோட்டம்-ஆம் அலால்
வாட்டிய மனம் செயும் வடு அதோ இவ்வாறு
ஈட்டிய அறம் மறம் இரண்டு இல் ஆம் அரோ

#108
இ விதி இலை என இயம்பும் ஊழ்வினை
மெய் விதி மறையினால் விளங்க மாக்களை
செ விதி இறைவன் முன் சிருட்டித்து ஆய-கால்
உய் விதி இழந்தவர்க்கு உற்றது ஓதுவாம்

#109
உரு மணி குன்று அனான் ஒருவன் ஆண் அலால்
திரு மணி கொடி அனாள் தெரிவை ஆக்கினோன்
இரு மணி படலையின் இருவர் சேர்த்து அலர்
மரு மணி சோலை-கண் வைத்து வாழ்க என்றான்

#110
காதல் மிக்கு இமிழ் எலாம் கலந்த வாழ்க்கை உண்டு
ஆதல் மிக்கு ஆண்டகைக்கு இறை அது ஆகவே
சாதல் மிக்கு உறும் என தகைத்த ஓர் கனி
நாதன் மிக்கு உரைத்து உணா நனி விலக்கினான்

#111
புண் தகா விளிவு உறா புதல்வரோடு நீர்
மண் தகா நலத்தொடு வாழுவீர் மறுத்து
உண்ட-கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய்
விண்ட கா அகன்று உறீஇ விம்முவீர் என்றான்

#112
மொய்த்தது ஓர் வான் நலம் முரிந்து இழந்து உளம்
தைத்தது ஓர் பழி விடா சவம் மனு_குலம்
வைத்து அது ஓர் அளவு_இல வாழுமோ என
பைத்தது ஓர் அரவு உரு பட வந்து ஆயதே

#113
பேதையாய் பிரிந்த பெண் பிணம் கண்டு இ கனி
கோதையாய் உணாமை என் குணம் இதே என
வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான்
தாதையாய் கடவுள் என்று அரிவை சாற்றினாள்

#114
கழீஇயின மணி நலாய் கலங்கல் தேன் துளி
தழீஇயின இ கனி அருந்தின் சாவு இலாது
எழீஇயின உணர்வு உறீஇ இறைவர் மானுவீர்
குழீஇயின வரத்து என கூளி கூறிற்றே

#115
கண் வழி புக்க அவா கழுமி அ கனி
பண் வழி மொழியினாள் பரிந்து உண்டாள் அது
தண் வழி இமிழ் அலால் சாவு இலாது மற்று
ஒண் வழி ஆடவற்கு உய்த்து உண்மோ என்றாள்

#116
கனி முகம் கண்டுழி வெருவி காந்தை-தன்
பனி முகம் கண்டுழி பரிவுற்று ஏங்கினான்
துனி முகம் கண்ட பேய் துறக்கின் மாது இறீஇ
தனி முகம் காண்டி என்று உளத்தில் சாற்றிற்றே

#117
மண் நலம் பொறித்தது ஓர் வதனம் வெஃகியே
உள் நலம் கெட ஒருங்கு உலகு எலாம் கெட
பெண் நலம் கொடியது ஓர் பெரு நஞ்சு ஆகி மேல்
விண் நலம் கெடும் கனி விழுங்கினான் என்றான்

#118
பொன் ஆர் மணி பூண் சாயலில் தேம் பூம் கொம்பு அனையார் திரு முகத்தின்
முன் ஆர் நிற்பார் என்று எவரும் மொழிந்து பனிக்கும் உளத்து எஞ்ச
அன்னார் அன்று அ கனி அருந்தி அழிவார் என்ன அறிந்து இறையோன்
இன்னா உகும் அ பணி செய்வது என்னை என்றான் விகரன் என்பான்

#119
பூண் தார் அரசன் வளர்த்த மது பொழி காய் உண்பார் என்று அறிந்தும்
தீண்டாது எனலும் தீண்டினரை தெண்டித்திடலும் கொடிது எனவோ
வேண்டா சொல்லாய் சொல்-மின் என விளம்பி நக்கான் சிவாசிவன் தான்
தாண்டா உணர்வின் மறை வாயோன் தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான்

#120
மானா விடம் உண்டு அன்று அன்னார் வான் பேறு இழந்தே வரம் இழந்தே
தேன் ஆர் அலர் கா இழந்தே தாம் சிந்தை பனிப்ப நாமும் அழ
நானா நஞ்சும் நல்குரவும் நகவும் நோயும் கொடும் கூற்றும்
கான் ஆர் முள்ளும் கொல் விலங்கும் கடிது இ உலகில் படர்ந்தனவே

#121
வாயே உணும் நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என
தாயே தாதை கொண்ட வினை தனையராம் நாம் கொண்டு அழுங்க
தீ ஏவிய தீதொடு சனித்து தெளியா உணர்வின் மனம் கலங்க
நோயே பால் உண்டு இடர் கரத்தின் நுடங்க வினையின் விளைவு உற்றோம்

#122
சொன்ன குரவர் காலம் அதை துதி நூலோர் முற்பிறப்பு என்றார்
முன்னம் அவரால் எமக்கு உற்ற முதிய வினை ஊழ்வினை என்றார்
இன்ன வினை அல்லாது தலையெழுத்தும் வேறு ஊழ்வினையும் இலை
அன்ன பிறப்பு அல்லாது இறந்தே அயர்ந்து பிறப்பார் இலை என்றான்

#123
விரிந்து ஆய் கதிர் செய் விடியல் என விளம்பும் தெளிந்த சிவாசிவனே
பரிந்தாய் என் நோய் உரை வாளால் பசு மண் பகைவன் கை நாணின்
அரிந்தாய் உளத்தின் மருள் எல்லாம் அழுதே உயிரே ஊட்டி அருள்
புரிந்தாய் புரந்தாய் சுடர் தவத்து புலமை புல்லா கலை நல்லோய்

#124
கனியே உண்டு வந்த வினை கண்ணி கற்றோர் ஓதிய நூல்
நனியே உணரா பொய் கலந்தே நல் நீர் கடலுள் கலந்தது போல்
துனியே தளிர்ப்ப தலைவிதியும் தொலையா பிறப்பும் புக்கனவோ
இனியே வந்த வினை பரியும் இயல்பு ஒன்று இலையோ காண் என்றான்

#125
விரை செய் கொடியோன் விழா அணியின் விரும்பி நோக்கி மீண்டு உய்ய
புரை செய் வினை எம்மால் ஆற்றா பொதிர் அன்பு ஆற்றா அருள் கடவுள்
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு காப்பான் என்னும் மறை என்றான்

#126
எ நாட்டு எ நாள் எ குலத்தே இறையோன் பிறப்பான் என அன்னான்
அ நாட்டு ஒளிப்ப திருவுளம் என்று அறிந்த சூசை மறை நூலோர்
முன் நாள் சொன்ன நிலை நோக்கின் முகைத்த என் நாட்டு என் குலத்தே
இ நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு என்றான்

#127
பருதி முன்னி இரவு அஃக பருவம் இன்றி வனம் பூப்ப
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன் இலங்க இறையோன் அடி வீழ்ச்சி
கருதி அரசர் மூவர் உற காட்சி அமுதர் கண்டு உவப்ப
சுருதி நாதன் பிறந்தது என துணிவின் தெளிந்தார் சிலர் என்றான்

#128
கான் ஆர் கொடி மேல் பூ அனைய கரத்தில் பொலிந்த திருமகனும்
மானா உறுதி மனத்து உரைப்ப மருள் தீர்ந்து அன்னான் தெளிந்து உவப்ப
தேன் ஆர் இ நாடு இறைஞ்சிய பொய் தேவர் ஒளித்த திறம் கண்டேன்
ஈனார் எழ வான் வேந்து உதித்தான் என்ன உளத்தில் தேறுகின்றான்

#129
இற்று எலாம் இயம்பினான் இக்கு உலாம் பதாகையான்
மற்று எலாம் மனத்து உள் ஆய் வான நாதன் ஓதலான்
உற்று எலாம் சிவாசிவன் ஓங்கி ஓங்கு ஞானம் உள்
பெற்று எலாம் வெறுத்தனன் பீலி பெற்ற பாணியான்

#130
கரம் அணிந்த சூல வேல் காது அணிந்த குண்டலம்
உரம் அணிந்த அக்கு அணி உள் அணிந்த மாசொடும்
சிரம் அணிந்த கொக்கு இறை தீது அணிந்த கோலமாய்
புரம் அணிந்த மற்று எலாம் போட்டு உதைத்து இரட்டினான்

#131
உற்ற கோலம் வீண் அடா ஒண் தவங்கள் வீண் அடா
கற்ற நூலும் வீண் அடா கை உதாரம் வீண் அடா
பெற்ற பேறும் வீண் அடா பேர் அறங்கள் வீண் அடா
மற்ற யாவும் வீண் அடா மண்ணை போற்றலால் அடா

#132
ஆதி ஈறு_இரண்டு இலோய் ஆசு இலோய் அமைந்த மு
போது இலோய் உறுப்பு இலோய் பொற்பு எலாம் அணிந்து உளோய்
கோது இலோய் எதிர்ப்பு இலோய் கோ வணங்கும் ஒன்று உளோய்
நீதி ஆதி நீர் எலாம் நீர்த்து அணிந்த நாதனே

#133
இங்கும் அங்கும் எங்கும் ஒன்று என்று நின்று ஒருங்கு உளோய்
தங்குகின்ற என் குறை தாங்கி நீங்கி வீடு இட
அங்கம் ஒன்றி உற்றியே அங்கு உறாது நான் இவண்
பொங்குகின்ற இன்பொடு உன் பூம் பதங்கள் போற்றினேன்

#134
தீ அளித்த காம் உறீஇ தீது அமிழ்ந்தி மூழ்கி யான்
பேய் அளித்த மால் இருள் பெற்று அறா செருக்கு உறீஇ
தாய் அளித்த அன்பினும் சாற்று_அரும் தயாபரா
நீ அளித்த கை கொடு நீசரை குரங்கினேன்

#135
கோவில் வீற்றிருந்த நீ கோது கொள் எனை கொள
மேவி வீற்றிருந்து யான் வீட்டில் வாழ மைந்தன் ஆய்
பூவில் வீற்றிருந்து இரா பொங்கு அரந்தை பூண்டியோ
நாவில் வீற்றிருந்த நூல் நாடி வாழ்த்த அன்பு இதோ

#136
ஆசு எனும் பெரும் கடல் ஆழ்ந்து நீந்தி ஏறினேன்
தேசு எனும் பெரும் கதிர் செய்து எறித்த சோதியோய்
மாசு எனும் பெரும் கறை மாறினாய் எனா நினை
தாசு எனும் பெரும் பெயர் தாங்கி வாழ்த்துவேன் என்றான்

#137
தான் உயிர்த்த தவத்தினால்
கான் உயிர்த்த கொடி கையான்
ஊன் உயிர்த்த உரு பிரான்
மான் உயிர்த்த அருள் வாழ்த்தினான்

#138
தூக்கினான் விழி தூவும் நீர்
நீக்கினான் நிறை மார்புற
வீக்கினான் விளை ஆர்வமாய்
நோக்கினான் மறை நூலினான்

#139
உரு ஒளித்து உறை நாயகன்
மரு ஒளித்த மலர் கணால்
திரு ஒளித்த தெருள் கொடு
பொரு ஒளித்த அருள் போக்கினான்

#140
திறம் கொளீஇ தெருள் தாசன் உள்
பிறங்கு ஒள் ஈடு உறு பெற்றியால்
புறம் கொளீஇ பொதிர் யாவரும்
அறம் கொளீஇ தெளிவு ஆயினார்

#141
கனை வரும் கன மின் என
வினை வரும் பொருள் மேவு இலார்
புனைவு அரும் புகழ் வேத நூல்
அனைவரும் துதி பாடினார்

#142
நஞ்சினோடு உறு நல் அமிர்து
எஞ்சி நோய் இட மாய்த்து என
துஞ்சினார் துணிவோடு பொய்
விஞ்சி வேதம் நஞ்சு ஆயதே

#143
மெய் வகை பொருள் வீக்கிய
பொய் வகை பொருள் பேர்த்து இல
மை வகை பொருள் மண்டு உளம்
உய் வகை பொருள் ஒன்று இலா

#144
இருள் அடர்ந்த இரா அற
தெருள் அடர்ந்த ஒளி சென்று என
அருள் அடர்ந்த இவன் ஓதியால்
மருள் அடர்ந்த பொய் மாய்ந்ததே

#145
பேர் நல மணி குன்று உச்சி பெரு விளக்கு இட்டதே போல்
சீர் நலம் பொலி மூதூரில் சிவாசிவன் விளங்கி தோன்ற
கூர் நலம் தெளிந்த காட்சி கொளீஇ சிலர் குளிர்ப்ப தேறி
ஆர் நலம் புதைத்த மெய் நூல் அருச்சனை கொண்டது அன்றே

#146
குவி மதத்து அயிர்ப்பில் கற்றோர் குழாம் குழாம் நகரத்து எங்கும்
கவி மதத்து எழுந்த அ நூல் கடக்கிலாது அலைய ஓர் நாள்
சவி மதத்து அலர்ந்த சோலை தடத்து உறும் வளனை கண்டு
செவி மத தீம் சொல் வெஃகி செல்க ஈங்கு அடிகள் என்றார்

#147
நாம் செய்த குறையோ பல் நாள் நாம் இவண் தொழுத தேவர்
தாம் செய்த குறையோ இ கால் தளர் உணர்வு எஞ்ச ஐயென்று
ஆம் செய்த மலர் கொய் இ நாடு அகன்று ஒருங்கு ஒளித்தது என்னோ
தேம் செய்த மது சொல் நல்லோய் செப்புதி என்றார் மாதோ

#148
உய் வகை இன்றி மற்று ஓருழி அடுத்து உய்வார் என்று
பொய் வகை முறுவல் காட்டி புகன்றனன் சூசை ஐயம்
மாய் வகை அருளி கேள்மோ முதிர் தவத்து இறைவ என்று
மெய் வகை உணர்வு நாடி வினாதத்தன் சொன்னான் மீண்டே

#149
எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன் இவண் வர மற்ற தேவர்
ஒல்லையில் தளர்ந்த வண்ணத்து ஒருங்கு ஒளித்து அகலும் என்ன
தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இ நாள் ஆகி
வல்லையில் பொதிர்ந்த ஐயம் வளர் வினை ஆயிற்று என்றான்

#150
விஞ்சிய வயத்து ஒன்று ஆகி வென்றன கடவுள் தானோ
அஞ்சிய பலரோ வேண்டும் அறைதியே என்றான் சூசை
எஞ்சிய எமக்கே வேண்டும் இரு வகை என்ன முன்பான்
துஞ்சிய கனவின் சூட்சி சூசை கேட்டு உரைத்தான் மீண்டே

#151
குல நலம் எண்ணா வாய்ந்த குண நலம் உணரா காவல்
இல நலம் விற்கும் மாதர் இழி படும் நினைவு ஈது அன்றோ
இல நலம் புணர் மெய் நாதன் மரபு உறாது ஒருவன் அன்றி
பல நலம் பிரிந்த தேவர் பணிதல் பேதைமை ஆம் என்றான்

#152
குரு சிலர்க்கு அமைச்சர் வீரர் கொள்கையின் முதல்வன் சூழ்ந்து
வரு சிலர் தேவர் என்னில் வழு அதோ என்ன அன்னான்
குருசிலர் நாமம் தானும் கோ உரி பணிவும் சூழ்ந்து
வரு சிலர்க்கு இட்ட-காலை வழு அன்றோ என்றான் சூசை

#153
இரவலர் மாட்சி ஒப்ப ஈடு அறிவு இன்மை காட்டும்
புரவலர் சூழ்ந்த வை வேல் பொருநரும் அமைச்சர் தாமும்
உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய்
பரம் வல நூலும் வேலும் பரிசு இலாது இழிவு ஆம் என்றான்

#154
அரும் பொருள் இருளில் தேடி அயர்வது என் தேவ தன்மை
வரும் பொருள் அறியாது அன்றோ மருண்ட சொல் வளர்த்தி வேதம்
தரும் பொருள் அனைத்தும் வாய்ந்த தவ விளக்கு எறிப்ப கண்டோய்
அரும் பொருள் இறைமை சொல்லாய் என்றனன் வசிட்டன் என்பான்

#155
மற்றவர் இனிது ஈது அடிகளே என்ன மலர் மது வாயினன் அருளி
கற்றவர் பருக பகர்குவ புகழ்வ காம் உறி கேட்டனர் களிப்ப
முற்று அவர் தெளிய முளரி வாய் மதுவின் முகைப்பன குளிர்ப்பன சலம் அற்று
உற்றவர் வான் மேல் உய்ப்பன தெய்வ ஓதிகள் நுவலிய வலித்தான்

#156
ஈறு_இல நன்மை நிறைவும் ஓர் குறை முற்று இன்மையும் தொழ தகும் தெய்வம்
மாறு_இல இயல்பே வேர் இதாய் கிளைத்து வரும் சினை என நூலோர்
ஆறு இலக்கணங்கள் உரைத்து அவை உள்ளோன் ஆண்டகை இலன் அலன் என்றார்
தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே

#157
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல்
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல்
பின் வயத்து இன்றி ஒருங்கு உடன் அனைத்தும் பிறப்பித்த காரணன் ஆதல்
பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும் போற்றும் மெய் இறைமையின் நிலையே

#158
மிக்கதும் தன்னோடு ஒப்பதும் இல்லா மேன்மையே இறைமையின் இயல்பு ஆய்
ஒக்க அது படைத்த காரணம் இன்றி ஒருங்கு தான் ஆதலும் நிலையே
தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் நட கையால் வரின் வழு என்ன
தொக்கு அது நீக்கி தன் வயத்து ஆதல் சொல்லிய ஆறினுள் முதற்றே

#159
அன்ன வாய் தன்னை ஆக்கினோன் இல்லாது ஆயின காலமும் இல்லாது
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம்
என்ன வாய்ந்து இணையா சிறப்பு மெய் இறையோன் இன்று உளன் அன்று இலன் என்னா
மன் அவாய் என்றும் தான் உளன் ஆகி மாய்ந்த நாள் அனைத்தையும் கடந்தோன்

#160
எல்லையே இடும் ஓர் காரணம் இறைவற்கு இல்லதால் எல்லையும் இல்லை
குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல் வடிவும்
இல்லையே அவ்வாறு அளவு உளது அன்றி இடர் இடும் உரு உடல் என்ன
வல்லையே மிக்க ஓர் அளவு இலாற்கு இல்லை வழங்கும் ஐம்பொறிக்கு உரி வடிவே

#161
சீர் வளர் ஞானம் நீதி அன்பு ஊக்கம் திறன் தயை ஆனந்தம் மற்றை
ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி எலாம் அனைத்து ஆகி ஒன்று ஆகி
நேர் வளர் பொலிவின் மிகை குறை பன்மை நீப்பன நிறைப்பன ஆகி
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ

#162
எ பொருள் அனைத்தும் எ உலகு அனைத்தும் இடைவிடா நிறை பட நின்றே
அ பொருள்-தொறும் தான் குறுகு இலா முழு நின்று அ பொருள் அழிவில் தான் அழியா
மெய் பொருள் ஞானத்து அனைத்தையும் உணர்ந்து விளை திறன் நீதியால் நடவி
மை பொருள் அடரா சோதியாய் நிலையாய் மன்னனாய் அனைத்துமாய் நின்றோன்

#163
இரு வகை வழங்கும் காரணம் இன்றி இயை வினை இன்றி நாள் இன்றி
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி வரும் பொருள் என் அளவு இன்றி
திரு வகை பொறித்த வீற்று வீற்று அனைத்தும் செய்து அளித்து அழிப்ப வல் ஒருவன்
அரு வகை வயத்து ஓர் காரண முதலாய் ஆதியாய் அந்தமாய் நின்றோன்

#164
சீரிய சவிய மிக்கன அமான சிறப்பன தூயன யாவும்
நீரிய முறையில் உளன் அவன் தேவன் நீங்கில் ஒன்று அவன் அலன் ஆகி
காரிய நலத்து அ இலக்கணம் ஆறும் கடவுள்-வாய் உள என்பார் அவற்று ஒன்று
ஆரிய வளப்பின் தன் இடத்து இல்லான் ஆண்டகை அவன் அலன் அன்றோ

#165
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம்
ஊர் எலாம் ஒருவன் ஆள் அரசு ஆய் மற்று ஒருவர் கேட்டு ஒழுகுதல் அரசோ
ஏர் எலாம் உள பல் தேவர் வேறு ஆக இவற்கு உளது ஒன்று அவற்கு இலதாய்
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி நீர்த்த ஓர் இறையும் இல் என்றான்

#166
ஒள் கை நீட்டி அல் ஒருவி வெம் சுடர் எழுந்து ஒளிர
அள் கை நீட்டிய அம்புயம் அ கதிர் அருந்தும்
கொள்கை நீட்டிய கொழும் கதிர் ஓதியை செவியே
விள் கை நீட்டினர் வேட்டு உளத்து அருந்துபு தெளிந்தார்

#167
விண் செய் வெம் சுடர் விலக எண்_இல சுடர் தீபம்
மண் செய் மாக்களே வளர்த்து என காப்பிய கவிகள்
பண் செய் பா அகப்படாத உயர் இறைமையை உணரா
எண் செய் ஈறு_இலா இறைவரை விகற்பித்தார் என்றார்

#168
நதி தள்ளி கரை நாடிலாது அலையினோடு உறல் போல்
மதி தள்ளி பலர் வாரியோடு இழிவுற ஒழுகி
கதி தள்ளி கெடும் கடவுளர் இறைஞ்சினம் இன்னே
பொதி தள்ளி குண பொருவு_இலான் உணர்ந்தனம் என்றார்

#169
இற்றை நாள் அளவு இரா இருள் இறாது உலகு உதித்த
அற்றை நாள் உள ஆரணம் எங்கணும் பொழிந்த
கற்றை நாமும் நம் முந்தையர் காண்கிலாது என்னோ
மற்றை நாதன் நீர் இதோ என வசிட்டன் நொந்து உரைத்தான்

#170
நனை வரும் பல நளினம் விள்ளா கதிர் குறையோ
புனைவு_அரும் குணம் முழுது உளான் பொருவு_இலான் பொலிந்த
நினைவு_அரும் திற நிமலன் என்று அறைதிரே அறைந்தும்
சினை வரும் பலர் சேர்த்தினீர் என வளன் சொன்னான்

#171
வினை செய் பாவம் உள் விளைத்த நள்ளிருள் புகை மொய்ப்ப
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து அறிவு எலாம் மயங்க
சுனை செய் பாசியில் தொகு நிலை இல மனம் தளம்ப
முனை செய் பேய் உறீஇ முழுவதும் மருட்டினது என்றான்

#172
வெறியின் சூழ்ந்த பல் விழைவு அதே கொடிது என தாழ்ந்த
தறியின் சூழ்ந்துழி தடம் உணர் ஒடுங்கு என நசை தாழ்
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ கற்ற
நெறியின் சூழ்ந்த நல் நிலை உறும் பால் அரிது என்றான்

#173
சுனைய நீகமே துளி மது உணாது என முன்னோர்
நனைய தாமரை நவிழ்ந்த வாய் நல்கிய தீம் தேன்
அனைய ஓதிய அரும் பொருள் கை கொளா பொய்யே
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே என்றான்

#174
நாதன் மிக்கு உரி நலமும் நல் மறையும் ஈங்கு உணர்வது
ஆதல் மிக்கு உற அவா இருள் உளம் புகா வேண்டும்
காதல் மிக்குழி கற்றவும் கைகொடா என்ன
ஓதல் மிக்குழி உணர்வு மிக்கு அனைவரும் தெளிந்தார்

#175
சோலை வாய் பறை துவைத்த புள் களிப்பு எழீஇ சுடர் போய்
மாலை வாய் இருள் விம்மி வான் மீன் பரப்பு அரும்பும்
வேலை வாய் பினர் வெஃகு உரை விளைக என பிரிந்து
காலை வாய் ஒளி கருத்து எழீஇ அனைவரும் போனார்
மேல்

@28 வாமன் ஆட்சிப் படலம்


#1
தண் தவத்து அனைய பைம் பூம் தரு திரள் நிழற்றி கவ்வும்
மண்டபத்து ஒரு நாள் வைகி மது நலம் பொழி வாய் கஞ்சம்
விண்டு அவத்து ஒழியும் மாந்தர் வீடு உற செப்பம் காட்டி
ஒண் தவத்து இறைவன் சூசை உரை விரித்து இமிழின் சொல்வான்

#2
போது வாய் மலர்ந்த-போது பொதிர்த்து அளி மிடைதல் போல
ஓது வாய் மலர்ந்த நல் நூல் ஒழுகிய அமிர்த தீம் தேன்
காது வாய் அருந்தல் வெஃகி கணம் கொடு எவரும் கேட்ப
கோது வாய் கிழிந்த புண் மேல் குளும் மருந்து உறழ சொல்வான்

#3
படம் புனைந்து எழுதப்பட்ட பங்கயம் எழு வாய் பைம் பூம்
தடம் புனைந்து உறைந்து எஞ்ஞான்றும் சைவலம் சிவை கொள்ளா போல்
வடம் புனைந்து ஒளிறும் மார்பின் வடு புனைந்து இருண்ட நெஞ்சோடு
உடம் புனைந்து அனைத்தும் கேட்டு ஒத்து ஒழுகிலான் வாமன் என்பான்

#4
சிலை வளர் தட கை வீரன் செரு முகத்து அசனி அன்னான்
கலை வளர் உணர்வின் காமம் காய் முகத்து அனுங்க மாழ்கி
உலை வளர் அழல் முன் பைம் பூ உலந்து என மனதில் சோர
விலை வளர் மகளிர் போரில் வீரம் அற்று எஞ்சும் நெஞ்சான்

#5
விது முகத்து எறித்த கற்றை மிடை இருள் மூழ்கிற்று அன்ன
பொது முகத்து உரைத்த யாவும் பொது அற தனக்கு என்று உள்ளி
மது முகத்து உணர்த்தும் நூலால் மனத்து அறம் விரும்பி பின்றை
முது முகத்து உருத்த காமம் முதிர் வினை ஆற்றா நொந்தான்

#6
பொறி குலாய் கிடந்த மார்பில் புண்ணியம் ஒரு-பால் ஓர்-பால்
செறி குலாய் கிடந்த காமம் செரு பட நடுவில் பட்ட
வெறி குலாய் கிடந்த மாலை விகன்று என நெஞ்சம் சோர
நெறி குலாய் கிடந்த சீல நிலை விழைந்து உரைக்கலுற்றான்

#7
சுருதி நூல் உயிர் பெற்று அன்ன சுடர் தவத்து உணர்வின் மிக்கோய்
கருதி நூல் உரைப்ப கேட்டு களிப்புறின் சிலம்ப வீரத்து
இருதி நூல் முடவன் கேட்டது என்ன நான் கனிந்தது அல்லால்
பொருது இ நூல் ஒழுக்கத்து அஞ்சா போதலே ஆற்றாது என்றான்

#8
துறை கெழும் அரு நூல் கேள்வி சுருதியின் வடிவோன் கேட்டு
நறை கெழும் அலங்கல் மார்பன் நயப்புற முகமன் நோக்கி
நிறை கெழும் அரிய காட்சி நிலைமையால் உளமும் கண்டு
முறை கெழு வழுவா நீதி முகைத்த நூல் மொழிந்தான்-மன்னோ

#9
கற்ற நூல் எளிய தோன்றி கற்கும் முன் அரியது அன்றோ
மற்ற நூல் போல வாய்ந்த மறை நெறி ஒழுகல் வில்லால்
பெற்ற நூல் வீர வல்லோய் பிறந்த போது அறிந்தாய்-கொல்லோ
உற்ற நூல் உறும் முன் நீ அஃது உணர்ந்து உனக்கு எளிது என்றாயோ

#10
வில் செய்வார் கொண்ட ஆறும் வெம் கணை தொடுத்த ஆறும்
கல் செய் தோள் இருந்த ஆறும் கண் பொருத்துகின்ற ஆறும்
கொல் செய் கோல் பாய்ந்த ஆறும் குறி படல் அன்றி காணா
மல் செய்வார் தொழிலை கண்டார் மைந்தர் செய் தொழிலோ என்பார்

#11
புகன்ற அம்பு எழுதும் ஆறும் பொருது அவை விலக்கும் ஆறும்
இகன்று அமர் நீந்தும் ஆறும் எஃகினுள் காக்கும் ஆறும்
அகன்று அமர் வளைக்கும் ஆறும் அதிர வாள் சுழற்றும் ஆறும்
விகன்று அமர் காணார் கண்டால் வியந்து உளம் மாழ்வர் அன்றோ

#12
சூல் புறத்து அழல மின்னி சூழ் எலாம் அதிர்ப்ப ஆர்த்து
மேல் புறத்து எழும் கார் ஒத்த வேழம் மேல் எதிர்த்த போழ்தில்
கால் புறத்து ஒளிக்கும் ஆறும் கை புறத்து இரியும் ஆறும்
வால் புறத்து ஒழுகும் ஆறும் வாய் உரை வழங்கும் ஆறோ

#13
நிரப்பு அற நெடும் தேர் போரும் நிண மருப்பு இபத்தின் போரும்
பரப்பு அற இவுளி பாய்ந்து படர் துகள் போரும் மற்ற
கரப்பு அற கற்ற போரும் கடிது உனக்கு இவையே தோன்றா
துரப்பு அறசர் உளம் மூழ்கி ஊன் நுகர்ந்து ஒளி கால் வேலோய்

#14
ஏர் விளை மணியின் சாயல் எண்ணிய அளவில் சொல்லும்
சீர் விளை இனிய யாப்பில் செய்யுளை பொருத்துவாரும்
கூர் விளை துறையின் நல் நூல் கொளும் முனர் அன்னார் தாமே
பார் விளை குன்றம் தாங்கல் பாடலின் இனியது என்பார்

#15
ஆடகம் ஒளிறும் ஆணி அலமர திண் கொண்டு எங்கும்
மாடக நரம்பை நோண்டி மாத்திரை நிறைய வீக்கி
தோடு அகடு இழி தேன் கீதம் தொகு விரல் உலவி ஆர்க்கும்
நாடகம் கண்ட யாரும் நமக்கு எளிது என்பார்-கொல்லோ

#16
பகை பட கலந்த வண்ணம் பழுது இல் ஓவியம் தோன்று ஆறும்
நகை பட பசும்பொன் வீக்கி நவிர் அணி அமைக்கும் ஆறும்
வகை பட நரம்பின் பாலால் வந்த நோய் உரைக்கும் ஆறும்
தொகை பட பழகா தன்மை தொழில் எலாம் அரிய அன்றோ

#17
பல் தொழிற்கு எல்லாம் இஃதே பால் எனின் அறத்தின் தூய
நல் தொழிற்கு இதுவும் அன்றி நசைக்கு இணை பயன் உண்டாம்-ஆல்
சில் தொழில் பல நாள் கற்றும் திருந்து இலாரேனும் இன்ன
மல் தொழில் பயன்பட்டு ஓங்க மன துணிவு ஒன்றே சால்பு ஆம்

#18
வெந்த அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே
வந்து அதில் கிடந்து நோற்ற வண்ணமே ஒழுகல் வேண்டா
சிந்தையில் சான்றோர் எள்ளும் தீ வினை ஒன்றை நீக்கி
நிந்தை இற்று இனிய தூய் நல் நெறி உற துணிதி என்றான்

#19
துணியும் பாங்கு அரியது அன்றோ தூய நல் சுருதி வேடம்
அணியும் பாங்கு அறத்தின் வாளால் ஐம்பொறி முழுதும் கோறி
கனியும் பாங்கு அரிய நோன்பின் கடவுளோய் என மீண்டு உள் நோய்
தணியும் பாங்கு உயிர்ப்பு வீக்கி சழுக்கு அற வாமன் சொன்னான்

#20
நரம்பை என்பின் நிரை பின்னி நல் செம் புனல் தோய்த்து
பரம்பை போர்த்து உள் தசை நிரப்பி படம் மேல் மயிர் பொலிய
வரம்பை அகல் பொற்பு இழைத்து ஒன்பான் வாசல் இட்டு இனிது ஓர்
குரம்பை செய்தான் பெரும் தச்சன் குறை என்பவர் உண்டோ

#21
ஆதலேனும் நாறிய வெந்த அகில் பூம் புகை தவழ்ந்து
காதல் செய் நல் சுதை மூழ்கி கதிர் செய் மணி கலன் பெய்து
ஊதல் செய் வண்டலம் சூடி உயிரின் பேணினும் ஊன்
ஈதல் செய் நாறு உடற்கு உயிரை இறுக பிணித்தனனே

#22
மெய்யால் உயிரே உணர்வு எய்த மெய்யும் தான் உணரா
பொய்யால் உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி உடல்
மொய்யால் உயிர் கொல் பகை அல்லால் முனைந்தோர் வேண்டுவதோ
அய்யா உயிர் உய் வகை அரிது உள் அடும் இ பகை வினையால்

#23
உள்ளே வைகும் இ பகையோடு உடன்பட்டு எ புறமும்
எள்ளே வைகும் பெரும் பகை சூழ்ந்து இகல் செய் முறை அரிதே
தெள்ளே வைகும் கவின் காட்டி தீம் பால் கலந்த விடம்
வள்ளே வைகும் உயிர்க்கு ஊட்டி வதை செய் பகை அதுவே

#24
சொன்ன பகையும் யாது என்னின் சூட்சி நலம் மிக்கோன்
இன்ன உடம்பின் துணையாக எழில் பூம் கொடி சாயல்
மின்ன எழுதி சுரி குழலார் மிளிர்ந்த இனம் செய்தான்
அன்ன இனம் தான் உயிர் அற நூல் அனைத்தும் கொல் பகையே

#25
மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து
ஒன்னார் வெம் போர் கடந்து உரும் ஒத்து உள்ளத்து அஞ்சா நான்
பொன் ஆர் மணி பூண் அணி சாயல் பூம் கொம்பு அனையார் போர்
முன் ஆர் நிற்பார் என்று எண்ணி முரிந்து உள் குழைகிற்பேன்

#26
முதிர் செய் உணர்வு உற்று அறம் வெஃகி முயல் நல் வினை உணர்-கால்
எதிர் செய் மதி வெண் முகம் கண்டால் எரி பூண் தூங்கி மின்ன
கதிர் செய் குழை வில் வீச இரு கண் செம் தீ பொழிய
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ

#27
இரு மஞ்சு அன்ன இருண்டு ஒளிறும் இயல்பு உற்று அவிர் கூந்தல்
மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார்
செரு விஞ்சு ஒன்னார் கரந்து உயிரை செகுக்கும் காடு அதுவே
கரு நஞ்சு அதுவே உயிர் உண்ணும் கடும் கூற்று அது தானே

#28
புருவ வில்லால் கண் கணைகள் புண்பட்டு உள் உயிரும்
உருவ விட்டால் பல நாளும் உற்ற உணர்வு அழிந்து
வெருவ நெஞ்சம் உள் கலங்கி விளைந்த புண் காட்டி
வருவது அல்லால் இ சமரின் மருளாது எவர் உண்டோ

#29
கடலை கடைய அமிர்தமொடு கடுவும் பிறந்தது என
படலை கதையாய் அறிந்தது அலால் பயனாய் கண்டது இலை
மடலை குடைய ஊறிய தேன் வதைத்த சொல் அமிர்தத்து
உடலை கொலை செய்து உயிர் உணும் நஞ்சு உகும் பெண் வாய் மொழியே

#30
குழலால் பிறழாது உயிர் விசிப்பார் குரலால் நஞ்சு உயிர்ப்பார்
கழலால் சிலம்ப மருட்டிடுவார் கண்ணால் கணை தொடுப்பார்
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார் நிறை தம் உறுப்பு எல்லாம்
அழலால் சுட சுட்டு உயிர் உண்டு உண்டு ஆற்றா பசி கொள்வார்

#31
போது அம் கையார் உளரிய பண் புழுங்கி செய் கொலையோ
ஏதம் கொண்டார் எண்ணுவர் மற்று எண்ணும் பாங்கு அரிதே
கீதம் பாலாய் சுரந்து என தீ கிளையோ வேலோ நச்சு
ஓதம்-கொல்லோ இரு செவி ஊடு ஊட்டி உயிர் கொல்வார்

#32
என்னே மற்றது யான் உரைப்பேன் எரி விண்டு இடித்த அசனி
மின்னே துடரா கால் உளதேல் மின் பெண் நசைக்கு இறுதல்
பின்னே துடரா காலம் இலை பெரும் புண் நீர் ஒழுக
அன்னே அறிவேன் நான் அல்லால் அறியாய் பொறி வென்றோய்

#33
சாதல் மிகவே கார் முக வெம் சரத்தின் மழை பனிப்பது
ஆதல் மிகவே கணை கண்ணார் அணி பூம் சாயலின் மேல்
காதல் மிகவே கற்ற பல கல்வி எவன் செய்யும்
ஓதல் மிகவே நூல் துறை நீத்த உணர்வோய் என தொழுதான்

#34
காதல் மிக்கு ஆங்கு எவன் செய்யும் கல்வி நலம் என்றாய்
நாதன் மிக்க நீதி வளர் நரகத்து எய்திய-கால்
சாதல் மிக்க இன்பு உண்டார் தாம் ஆங்கு எவன் செய்வார்
வீதல் மிக்க மிடல் வேலோய் என்றான் வினை வென்றான்

#35
என்றான் சூசை என்று இரங்கி எரி தன் நோய் காட்டி
நின்றான் அவனை தழுவி அழல் நிகர்த்த காம் அவிப்ப
தன் தாரை அம் கண்ணீர் ஆட்டி சாற்றி காட்டிய புண்
நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன நயந்தே மீண்டு உரைத்தான்

#36
கை வளர் மருத்துவர் அன்றி காய்ந்த நோய்
மெய் வளர் பிணி உளர் அறிதல் வேண்டிலா
பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்தி கொண்டனர்
மை வளர் நோய் அறிந்து அலது மாறுமோ

#37
புனம் செயும் பங்கமே புனம் ஒழித்து என
மனம் செயும் பங்கமும் மனம் நொந்து ஆற்றலின்
தினம் செயும் புகர் வினை தெரிகிலார் அறத்து
இனம் செயும் பயன் பட ஈட்டல் ஏலுமோ

#38
நகை வழி விரக நோய் வளர்ந்து நல்கிய
புகை வழி உளத்து இருள் பொதுள கொண்ட நோய்
தொகை வழி உணர்வு அரிது எனினும் சூழ்ந்த அ
வகை வழி அறிதி நீ அறிந்தும் மாழ்கல் ஏன்

#39
அள்ளிய இருள் அறும் அலங்கல் வேலினோய்
தெள்ளிய இடத்திலும் தெளிந்து நஞ்சு உணல்
உள்ளிய பேதையர் ஒப்ப சிந்தையில்
எள்ளிய வினை உளத்து இவறல் ஆயது ஏன்

#40
நஞ்சு அமிழ்து என்று நீ நக்கினால் இமிழ்
விஞ்சு அமிழ்து ஆகுமோ வினை கொள் நல் உயிர்
எஞ்சு அமிழ்ந்திய புரை இயைந்து மாழ்கவும்
நெஞ்சு அமிழ்ந்திய நசை நீக்கு இல் ஆவது ஏன்

#41
காதலே பாசம் ஆய் கால் கை வீக்குதல்
ஆதலே பிரிவு உனக்கு அரியது ஆம் என்றாய்
காதலே பாசம் ஆய் காதல் மிக்கு உளத்து
ஆதலே நாள்-தொறும் இறுக்கல் ஆவது ஏன்

#42
கொந்து என விரக நோய் கொழுந்து விட்டு எரிந்து
அந்து இல அழல் அவிப்பு அரியது ஆம் என்றாய்
கொந்து என எரிந்த தீ தூண்டி கொண்டு நீ
அந்து இல நசைக்கு அறல் ஈட்டல் ஆவது ஏன்

#43
பாங்கு எழும் எழில் நலம் பயந்த இன்பினால்
ஆங்கு எழும் நசை வெறுப்பு அரியது ஆம் என்றாய்
பாங்கு எழும் காஞ்சிர பழன் விரும்பி உண்டு
ஆங்கு எழும் அணங்கு உற வருந்தல் ஆவது ஏன்

#44
நெடிது நாள் உற்ற நோய் மருந்தின் நீர்மையால்
கடிது தீர் தரல் அரும் கருமம் ஆம் என்றாய்
நெடிது நாள் உற்ற நோய் நீள மீண்டு உயிர்
கடிது மாய்ந்து ஒழிதர கடு உண்பு ஆவது ஏன்

#45
கோட்பு_அரும் எழில் என கோதையார் முகம்
மீட்பு_அரும் விடம் அதை விழித்து உய்யார் என்றாய்
கோட்பு_அரும் எழில் உயிர் குழைய நாள்-தொறும்
மீட்பு_அரும் விளிவு உற விழித்தல் ஆவது ஏன்

#46
மால் வளர் விரக நோய் வழங்கும் போரினை
வேல் வளர் சமரில் நீ நோக்கல் வேண்டு இலா
கோல் வளர் போர் வெலும் எதிர்த்த கோல் இவண்
கால் வளர் ஓட்டமே வெற்றி காக்கும்-ஆல்

#47
பட்டு இலா கடை இலா பாவையார்கள்-தம்
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய்
கிட்டு இலால் காண்கு இலால் கேட்கு இலால் அது
வெட்டு இலால் கொல்லுமோ வெயில் செய் பூணினாய்

#48
வள் உற பகைத்து உயிர் வருத்தும் மெய் அலால்
அள் உற கொடுமை கொண்டு அடும் புற பகை
உள் உற கண் முதல் உள்ள வாயில் ஐந்து
எள் உற திறப்பது ஏன் எரிசெய் வேலினோய்

#49
இருண்ட இரும் கனத்து-இடை எரிந்த மின் என
மருண்டு இருண்டு உயிர் கெட மயல் செய் வாள் முகம்
உருண்டு உருண்டு எறிந்த வெண் தலை அது ஓர்ந்து உளம்
தெருண்டு இருந்து இமத்து-இடை காண்-மின் தேறவே

#50
பகை தக துகிர் துறை படலை முத்து எனும்
தகைத்து அக பல் இதழ் பதவில் தார் விழி
நகை தக பிறை நுதல் நளின வாய் என
மிகை தக துகள் தரும் விழைந்த பொற்பு இதோ

#51
போது என மலர்ந்து எழில் போதின் வாடி அ
கோது என மெலிவன மூப்பு கொண்ட-கால்
ஈது என உணர்கிலாது இன்பம் வேண்டுவர்
தீது என விளைத்த பின் தீயது எய்துவார்

#52
இன்று உளார் நாளையே இறப்பர் அன்றி மற்று
அன்று உளார் விழைந்தவை அருகில் போகிலா
நின்று உள் ஆய்செய் துகள் நெருங்கி பின் உற
சென்று உளாய் விளை துயர் செப்பவோ என்றான்

#53
அளி முகத்து இனையவும் பலவும் ஆரியன்
ஒளி முகத்து உரைத்தவை அவன் உணர்ந்த பின்
வளி முகத்து அலை என மனத்து அலைந்து அலால்
தெளி முகத்து உறுதி ஓர் துணிவு தேர்ந்து இலான்

#54
கைக்கும் ஓர் மருந்து பாலர் கனிய உண்டு உயிரும் உண்ண
இக்கும் ஓர் விளிம்பின் நீவி இட்டு என இயம்பல் என்னோ
ஒக்கும் ஓர் பழம் புண் ஆற்ற உடன்ற அழல் வேண்டும் என்ன
வைக்கும் ஓர் அளவில் விஞ்சை மறை நலோன் வகுத்தான் மீண்டே

#55
புள் முழுது இறைஞ்சும் கோட்டு புழங்கிய களிற்று ஏறு அன்னோய்
விண் முழுது இறைஞ்சும் வேதம் விலக்கிய தீமை நீங்கி
உள் முழுது இருள் அற்று ஊக்கத்து ஒழுகவே துணிந்தால் அல்லால்
மண் முழுது இவர் தீது ஒவ்வா மலி துயர் நிரையம் சேர்வாய்

#56
தொல்லை இ மருளின் ஊழ்த்த துகள் விட துணிதல் ஒன்றோ
ஒல்லை இ நசை நீங்காதேல் ஊழலில் வேதல் ஒன்றோ
எல்லை இ இரண்டில் ஒன்றே இயாவரும் தவிராது என்ன
வல்லை இ உணர்வில் தேர்தி மாற்றலர் வணங்கும் வேலோய்

#57
மீய் முகத்து உடையில் தோன்றும் விசும்பு சூழ் வரையில் தூங்கி
தூய் முகத்து அலைகள் ஓட்டி துள்ளி வீழ் அருவி போல
வேய் முகத்து இனிமை காட்டி விரைவில் ஓடும் இளமை நம்பேல்
காய் முகத்து அதிர் கால் வீச காய் முதல் வீழும் என்றான்

#58
காய் நரகு என்ற போழ்தில் கணம் கொடு நின்றார் சொல்வார்
தீய் நரகு என்பது அல்லால் தீ நரகு எ நாடு எ பால்
நோய் நரகு அரசர் பேயோ நுகர்ச்சியும் நிலையும் யாதோ
போய் நரகு உறைவர் யாரோ புலமையோய் விரித்து சொல்வாய்

#59
வீய் முதிர் மதுவின் தீம் சொல் விரித்த நூல் கல்வி மிக்கோய்
தீய் முதிர் உணர்வின் தீய செருக்கொடு எம் உயிரை உண்ணும்
பேய் முதிர் குலம் யாதோ அ பேய்கள் செய்தவன் ஆர் செய்த
நோய் முதிர் கருமம் யாதோ நுவன்று இவை பணியாய் என்றார்

#60
இனியவே கேட்டீர் இ நாள் எய்திய உணர்வின் தாழ்ந்து
முனிய வேம் அள்ளல் புக்கு முதிர்ந்த நோய் உணர்ந்து கூசின்
கனியவே பொன்றும்-கால் அ கனல் உறாது உவப்பீர் என்ன
பனிய வேய் அலர் செ வாயான் பணித்து மற்று இதனை சொன்னான்

#61
ஆடிய கடவுள் அன்றி அனைத்துமே படைப்பு உண்டாகி
நீடிய உலகம் மூன்றும் நிமலனாம் ஒருவன் செய்தான்
கோடியது எவையும் கோதால் கோடியது அன்றி முற்பால்
வாடிய குறை ஒன்று இன்றி வனப்பு உற முடித்தது அன்றோ

#62
கண் புலத்து உருவில் புல்லா கவின் நலம் தீட்டி வாய்ந்த
உள் புலத்து உடலம் இல்லா உயிர் என விழுப்பம் ஓங்க
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன்
விண் புலத்து இறைவன் சூழும் வீரர் என்று அமைத்தான் என்றான்

#63
கடவுளர் தேவர் என்னும் களி கெழும் குலமே தானோ
தடவு உளர் வணங்கும் நல் நூல் தகுதியோய் என்ன வாமன்
முடவு உளர் பறக்க வெஃகும் முயல் என பித்தர் காட்டும்
அடவு உளர் மருள் என் கேள்-மின் அறைகுதும் என்றான் சூசை

#64
விண்ணவர் அமரர் உம்பர் மேலினர் அமுதர் அய்யர்
பண்ணவர் வானோர் என்னும் பல் பெயர் தகுவது அல்லால்
திண் அவர் படைப்பு உண்டு ஆகி தேவர் என்று உரைக்கல் வேண்டா
நண் அவர் வணங்கும் தேவ நாயகன் துணை அற்று ஒன்று ஆம்

#65
வான் உறை குலத்தோர் ஆகி வரங்களும் வயமும் மிக்கார்
கோன் உறை கோயில் வைகி கோ கணம் என்ன தோன்றின்
கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப
மான் உறை வளம் இல்லாராய் வணக்கு உரி தேவர் அல்லார்

#66
வரம் தரும் தன்மைத்து எல்லா வையகத்து ஒன்று ஆம் நாதன்
புரந்த அரும் குணம் தன் பாலாய் புகன்று அவன் ஏவும் தன்மைத்து
உரம் தரும் உறுதி சொல்லி உதவிய வரங்கள் கேட்டு
சுரந்து அரும் துயரில் தேற்றும் துணை செயல் வானோர் பாலே

#67
விண் எனும் பதியோர் ஆகி மேவி நீர் உரைக்கும் தன்மை
மண் எனும் பதியோர்க்கு அன்றி வானவர்க்கு ஒவ்வா பால் ஆய்
கண் எனும் இமையார் என்னும் கடி மலர் வாடாது என்னும்
பெண் எனும் ஆணும் என்னும் பெயர் தகாது உரு இலார்க்கே

#68
திரு தகும் தேவர் என்று செயிர் தகும் நுமது காமத்து
உரு தகும் கதைகள் வீக்கி உளத்து உளை விரக நோயின்
கரு தகும் வினைகள் பாவி கை படை பலவும் தோற்றி
செரு தகும் பகையும் தம்மில் திளைத்து உளம் மெலிவார் என்பீர்

#69
சிட்டு இடை வான் நின்ற உங்கள் தேவர் பொன் உலகம் தன்னில்
நெட்டு இடை நெறிகள் நீண்ட நெற்றி அம் குன்றம் குன்றா
மொட்டு-இடை மலர்ந்த பொய்கை மொய் திரை கங்கை கான் விள்
மட்டு-இடை மலர்ந்த சோலை வகுத்து மண் ஒப்ப சொல்வீர்

#70
இனையவே பலவும் கூறி இரு விழி குருடர் யானை
அனையவே முசலம் திண் கை அடி உரல் செவிகள் சூர்ப்பம்
வனையவே உரைத்த வண்ணம் வடு மனு_குலத்தின் சாயல்
புனையவே உயர்ந்த வானோர் புன்மையில் வளைதல் நன்றோ

#71
ஒக்க அளவு அகன்று மின் மீன் ஒத்து இரா புறத்து நீக்க
தொக்கு அளவு அகன்ற சீர் கொள் சுடர் உலகு உரிமை அங்கண்
புக்க அளவு அறிதல் அன்றி புன் கரத்து உளரும் தன்மை
நக்கு அளவு அஃகும் இ சீர் நயத்து அளவு உணர்தல் ஆமோ

#72
உள்ளும் ஆறு அகன்ற வாழ்வு உய்த்து உம்பரை படைத்த பின்னர்
தெள்ளும் ஆறு அகன்று ஆங்காரம் சிலர் உறீஇ இறைவன் ஏவி
கொள்ளும் ஆறு அகன்ற தீய்மை குணித்த அளவு உரைத்த சாபத்து
எள்ளும் ஆறு அகன்ற வானோர் எரியுழி பேய்கள் ஆனார்

#73
பேய் வினை வெருவ கண்டு அ பேய்கள் செய்தவன் ஆர் என்றார்
தூய் வினை வயத்தோன் செய்த தொழில் கெட உணர்ந்த பாவம்
போய் வினை கொணர்ந்து பேய் தம் புழுங்கு இனம் செய்தது என்னா
தீய் வினை உளத்துள் புக்கால் செய் பகை அறிதீர் என்றான்

#74
வானவர் ஆக வான் மேல் வாழ்ந்த நல் உயிர்கள் கெட்டு
தானவர் ஆக செய்த தகுதி மேல் கொடிய பாவம்
ஊன் அவர் எமை பகைத்தால் வறும் சிதைவு அளவோ என்று ஆங்கு
ஆனவர் அஞ்சி கூற அரும் தவன் இனைய சொன்னான்

#75
வானவரை உரைக்கும்-கால் வாய்மை அற உணர்ந்தது போல்
தானவரை என்னும் கால் தடம் நீங்கி மயல் வேண்டாம்
ஆனவரை வேறு எண்ணி அழல் கிடக்கும் வெறி வேறு ஆய்
நான் அவரை மறை விதித்த நல் நூலால் எண்ணேனே

#76
விண்ணோர்க்கு பகை செய்து வெல் அறியா அறம் குன்ற
மண்ணோர்க்கு வினை செய்து மன் உயிர்கள் நரகு உய்ப்ப
புண் நோய்க்கு வைத்தன தீ புழுங்கும் என தாம் கதி நீத்த
உண் நோய்க்கு தக பகை ஓர்ந்து உயிர் அடும் தீது உணர் குலமே

#77
நல் செய்கை அனைத்தும் அற நலம் பகைத்தோர் தூய தவம்
தன் செய்கை நெடு நாளும் தாம் முடிப்ப வரம் பெற்று
வில் செய்கை அமர் பூட்டி விண்ணவரை புண்படுத்தி
மல் செய்கை வழங்கு அசுரர் என்று அறைதல் மருள் அன்றோ

#78
வீடு இழந்த தீ இனமே விளைந்த செருக்கு உளத்து ஒழியா
வீடு இழந்த தன்மை எரி பிளிர்ந்து இடித்து பிளந்த முகில்
நீடு இழந்த அசனிகள் போல் நீதி பரன் வய பயத்தால்
சேடு இழந்த நரகு ஊழி_தீ வீழ்ந்து புதைந்தனவே

#79
திரை உடுத்த பார் அகட்டு சேண் படர் தாழ் குழி தோண்டி
கரை உடுத்த கடல் பொங்கி கடந்து எழுவ போல் அலைகொண்டு
உரை உடுத்த நிகர் கடந்த ஊழி_தீ குடி வைக
புரை உடுத்த உருக்கொடு பேய் புதைத்து அலறும் நரகு அன்றோ

#80
இடிகள் தவழ் ஓதை மறுத்து எரிந்து அயர்வோர் ஓதை எழ
குடிகள் தவழ் இடும்பையொடு கொடியது எலாம் மொய்த்து அடர
நொடிகள் தவழ் போழ்து பல நூறு ஆண்டு என்று உணர்ந்து அலற
கடிகள் தவழ் இருள் தவழ் தீ காணி எனும் அரும் சிறையே

#81
கண் மல்கும் துயர் பணித்த கலுழி அவியா கனலாய்
மண் மல்கும் துயர் வெள்ளம் வாழ்வு உருவாய் இனிது என்ப
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை
புண் மல்கும் துயர் படுத்தல் புதவு இடத்து பேய் அரசே

#82
ஓர் என்பான் தனை ஏத்தார் ஒன்று ஆம் மெய் சுருதி வழி
சீரின்-பால் நடவாதார் சினம் காமம் களவு கொலை
பாரின்-பால் நச்சி அடும் பாவம் முடித்தவர் எல்லாம்
சூரின்-பால் நரகு எய்தி சோகு இனத்தோடு உளைந்து எரிவார்

#83
வீய் துணையும் அகி துணையும் வேழமுடன் அரி துணையும்
தீய் துணையும் செயிர் துணையும் சீறிய தீயோர் துணையும்
நோய் துணையும் சின துணையும் நூறி அடித்து உரம் சினந்த
பேய் துணையும் அன்றி நலம் பெறும் துணை அற்று இருப்பு அரிதே

#84
புல்லு அவையே பூரியராய் புழுங்கிய வெம் சினத்தினராய்
கொல் அவையே குணுங்கு இனங்கள் கொந்து அழலின் சீறி உடன்று
அல்லவையே செவி கேட்பது அல்லது அடும் துயர் ஆற்ற
நல்லவையே ஒன்று உரைக்கும் நல் துணை அற்று இருப்பு அரிதே

#85
இ துணை கொண்டு உளம் மாழ்கி எய்திய தன் செயிர் செய்யும்
அ துணை கொண்டு ஒழியாதால் அலைந்து அலைந்து உள் துயர் பொங்க
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய்
மொய் துணை கொண்டு எரி பீடை முறை மொழிவ கேள்-மின் அரோ

#86
நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை நுதலின் உள் பனிப்பவே ஊழி
தீய் நிலை என்றால் உதவிய இன்ன தீ என உணர்தலும் வேண்டா
வேய் நிலை வரையை நக்கினால் அ தீ வெந்து கண் இமைக்கும் முன் உருக
காய் நிலை கொண்டு நாரலை நிலையில் காய் கொழுந்து எழுந்து எரி தீயே

#87
ஆதி தன் அருள் இ தழலை நல்லவர்க்கும் ஆதர உதவியின் படைத்து
நீதி தன் மலிந்த சின திறம் காட்டி நெறி தவிர் தீயரை தீக்க
பூதி-தன் அழலை படைத்தனன் என்றால் பொருவ இ இரு தழல் நோக்கின்
சோதி-தன் முகத்து மின்மினி போன்று அ சுடர் முகத்து இ சுடர் நிலையே

#88
பொறி பட புழுங்கி கொழுந்து விட்டு எரிந்து புகை திரள் இருண்டு எழ மண்டி
நெறி பட சுடரா சுடச்சுட செம் தீ நீறும் ஆகாது எலாம் வெந்து
குறிப்பட புணர்ந்த செயிர் அளவு உடற்றி குடைந்து உடல் கிழித்த வாய் புக்கு
செறி பட திரண்டு வெளிப்பட கண் வாய் செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து எரிவார்

#89
படுப்பதற்கு அமைந்த பூ அணை தீயே படும் பசிக்கு உணவுகள் தீயே
உடுப்பதற்கு அணியும் கலிங்கமும் தீயே உயிர்ப்புளி ஆவியும் தீயே
கடுப்பதற்கு எரிந்த தீ புனல் ஆட்டி கனல் கடல் நீங்கு இல நீந்தி
அடுப்பதற்கு அணையும் காண்கு இல மூழ்கி அலைந்து அலைந்து எரிந்து உளைந்து அயர்வா

#90
சூளையில் அடுக்கி துறுவிய கல்லோ சுழன்றன பூட்டையில் திலமோ
மூளையில் புதை முள் பிணங்கலோ நாணி முறுக்கு அதோ கதிரினுள் கழையோ
பாளையில் துவன்ற முகைகளோ தம்மில் பதைப்ப உள் நெருங்கிய தன்மை
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா புதவு எரி புதைத்து வெந்து எரிவார்

#91
தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து
மீய் வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் வினையினால் நரகு உறீஇ அங்கண்
தீய் வளர் சுள்ளை புதைத்துளி கால் கை திருப்பவும் நீட்டவும் ஆற்றா
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான் இயம்பிடல் தேற்றேன்

#92
மிடைந்து தாம் தம்முள் துயர் செய ஒரு-பால் மிடைந்தன குணுங்கு இனம் ஒரு-பால்
அடைந்து தாம் உடற்றி சீறிய பகையோடு ஆகுல கடல் கரை அனைத்தும்
உடைந்து பாய் வெள்ளம் முனிவொடு தீயோர் உடல் பதைத்து உளைந்து அதிர்ந்து அலற
விடைந்து பாய் வெறிகள் படுத்திய பீடை விட்டு ஒழியாது எரிந்து உளைவார்

#93
சொரிவன மழை போல் அழல் விட ஒரு-பால் தோல் உரித்து எரிப்பன ஒரு-பால்
எரிவன அணை மேல் விரிப்பன ஒரு-பால் ஈய நீர் ஆட்டுவது ஒரு-பால்
கரிவன உடல்கள் துமிப்பன ஒரு-பால் கனல் திரள் ஊட்டுவது ஒரு-பால்
திரிவன உருவால் வெருட்டுவது ஒரு-பால் தேறு இல பகைத்தன பேயே

#94
வாச நெய் என்ன உருக்கிய ஈயம் வலித்து உடல் ஒருங்கு உடன் பூசி
கோசர நீர் என்று அழல் புனல் ஆட்டி கொந்து எரி சய மெய்ப்பை போர்த்து
பூசணம் ஆக நச்சு அரவு அணிந்து பூம் தவிசு உச்சி வாழ்க என்ன
வீசு அழல் விரிந்த மஞ்சம் மேல் இருத்தி விரகரை வருத்துவது அன்றோ

#95
சொறி படர் அரியும் உரகமும் மலமும் சுடச்சுட அமிர்து என ஊட்டி
வெறி படர் மலர் பூம் துகில் கொடு பைம் பூ மெல் உடல் நீவுதும் என்ன
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி
செறி படர் விரக நோய் மருந்து என்ன சினந்து அணங்கு இயற்றும் ஆம் கடியே

#96
அள்ளும் ஆறு இருண்ட புகை துறும் சிறை ஊடு அலகைகள் வருத்திய வண்ணம்
உள்ளும் ஆறு அகன்று நூலின் ஆறு அகன்று ஆங்கு உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று
தெள்ளும் ஆறு அகன்று ஈங்கு அவனவன் செய்த செயிர் அளவு ஆகுலித்து அங்கண்
எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும் இரும் பகை அன்று தோன்றுவதே

#97
மெய் முதல் பொறி ஐந்தொடு மேவிய
பொய் முதல் புரை பூரியர் பூத்து என
ஐ முதல் பொறியின் வழி ஆங்கு அதிர்
மொய் முதல் புதவு ஆகுலம் மொய்க்குமே

#98
நாறு பூம் புகை நாறும் அகில் புகை
ஊறு நானம் மற்று ஊறிய வாசமோடு
ஏறு காமம் வளர்த்த இயற்கையால்
பாறு பூதி படர் கடல் மூழ்குவார்

#99
பூதி நாறு புகை திரள் நாசி ஊடு
ஊதி ஊதி உலகம் உலாம் மலம்
ஆதி நாறும் யாவும் அலை கொடு
மோதி மோத உள் தீயரும் மூழ்குவார்

#100
கோதின் வாய் உளம் கோட இன்பு என்று அடும்
தீதின் வாய் வளர் தீ உரை கேட்டன
காதின் வாய் கடும் கோல் கடுத்து ஏற்றிய
போதின் வாய் வழி பொங்கு அழல் ஊற்றும்-ஆல்

#101
மாழ்வர் ஓதையும் எள் மலி ஆர்ப்பொடு
சூழ்வர் ஓதையும் சுட்டு எரி ஆழியை
ஆழ்வர் ஓதையும் அங்கணின் நாள்-தொறும்
தாழ்வர் ஓதையும் செய் துயர் சாற்றவோ

#102
இனிய உண்டலும் இன்னல் உரைத்தலும்
கனிய இன்பொடு காசு மலிந்த வாய்
நனி அழன்று நஞ்சு உண்டு பகைத்த பேய்
முனிய வந்த துயர் முடியாது அரோ

#103
கைத்த யாவையும் காய் கடுவும் புழு
மொய்த்த ஊத்தையும் முற்றிய பூதியும்
துய்த்த வாய் இரத்தம் சொரிய துமித்து
உய்த்த தீ உமிழ்ந்து ஓவி அரற்றுவார்

#104
காவி கண் வழி காமம் உண்டார் என
வாவி-கண் மலி வண்டு உறழ் மொய்த்த பேய்
தாவி கண் கிழித்து ஊடு தழல் பொறி
தூவி கண் அரும் கண் துயர் தோன்றுமே

#105
அஞ்சி வீமம் அழுங்கு உரு காண்டலும்
எஞ்சு இலா நிறை நீர் இழிந்து ஓடலும்
துஞ்சு இலா விழி தோய் அழல் தூவலும்
விஞ்சி நேர் இல வெய்து உறீஇ மாழ்குவார்

#106
நால் வகை பொறி நண்ணி ஐந்தாம் பொறி
பால் வகை புரை விஞ்சிய பான்மையால்
சால் வகை புதவு எங்கணும் சாற்று உரை
மேல் வகை துயர் மெய் துயர் ஆகும்-ஆல்

#107
ஈறும் ஒன்று இல இன்னணம் தீயரே
மாறும் ஒன்று இல மாழ்கி அழுங்கு உளம்
தேறும் ஒன்று இல தீ கடல் மூழ்குவார்
காறும் ஒன்று இல வேக எ காலுமே

#108
உலை கொள் தீயில் இரும்பு உறழ் வெந்து வெந்து
அலை கொள் தீயில் அமிழ்ந்தி அமிழ்ந்தியே
கொலை கொள் தீ உகம் கோடிகள் கோடி போய்
புலை கொள் தீயவர் பூதியில் வேகுவார்

#109
பாடி ஆடி இன்பு ஆதல் பகல் பல
நீடில் ஆகுலம் ஆம் என நீங்குவாய்
வாடு இலா வளர் நோய்கள் மலிந்து உகம்
கோடி கோடி பொறுப்பது கொள்கையோ

#110
இலைகள் எண்ணி முகில் துளி எண்ணி நீர்
அலை கொள் நுண் மணல் எண்ணியும் அத்துணை
புலை கொள் பூதியில் ஆண்டுகள் போயினும்
நிலை கொள் பீடைகள் நீங்கு இல வேகுவார்

#111
நல்லது ஒன்று இல ஆகுலம் நல்கியது
அல்லது ஒன்று இல அவாவிய மேல் கதி
செல் அது ஒன்று இல தீவினை செய் பகை
வெல் அது ஒன்று இல யாண்டையும் வேகுவார்

#112
வேக வேக விளிவு உற வேண்டுவார்
நோக நோகவும் பொன்று இலர் நோன்று இலர்
ஏக ஏக அரும் துயர் எஞ்சு இலா
ஆக ஆகுலம் ஆற்று இல விம்முவார்

#113
அந்தோ அந்தோ வீட்டை இழந்து ஈங்கு அழல் மூழ்க
வந்தோம் அந்தோ புண் இமிழ் நக்கி வரைவு இன்றி
வெந்தோம் அந்தோ மாறு_இல வேவோம் வினை முற்றி
எம் தோம் அந்தோ இ பகை ஈட்டிற்று என ஆர்ப்பார்

#114
கெட்டோம் அந்தோ மின் என ஒல்கி கெடும் நன்றி
இட்டோம் அந்தோ ஈட்டு அதின் இஃதே பயன் அந்தோ
பட்டோம் அந்தோ புன் நயன் நக்கி பர வீட்டை
விட்டோம் அந்தோ வேகுதும் அந்தோ என வேவார்

#115
கண் மேல் வைத்த மாசு என ஆசை கவர் உள்ளம்
விண் மேல் வைத்த வான் திரு எண்ணா வெருள் வீங்கி
மண் மேல் வைத்த வாழ்வினை ஈட்ட மலிகள் வாய்
புண் மேல் வைத்த தீ திரள் சேர்த்தோம் புதவு என்பார்

#116
ஆறு ஆ கொண்டேம் வெம் பகை ஆறாது அடு கோபம்
தேறா கொண்டேம் வெம் கொலை செய்தே பழி தீர்ந்தேம்
ஈறு ஆ கொண்டேம் தீ நரகு அந்தோ எரிகின்றேம்
மாறா கொண்டேம் பேய் பகை என்றே மருள்கிற்பார்

#117
காதல் மிக்கு ஆல் கற்றவை கண்ணா கசடு உள்ளத்து
ஆதல் மிக்கு ஆ பற்றிய காமத்து அமிழ்கின்றேம்
நாதன் மிக்கு ஆம் நீதி வளர்த்த நரகு எய்தி
சாதல் மிக்கு ஆ வேகுதும் என்றே தளர்கிற்பார்

#118
மெய் ஆர் நல் நூல் வேதம் நகைத்து விழைவு ஒத்த
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்க
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி
மொய் ஆர் தீயில் மூழ்கினம் என்று உள் முரிகிற்பார்

#119
ஆய்வார் எண்ணா நல் அறம் நிந்தித்து அழிவு உற்றார்
நோய் வார் நஞ்சு உண்பார் பசி ஆற்றார் நுகர்வு ஆற்றார்
காய்வார் ஆர்ப்பார் வீழ்ந்து எரி ஆழ்வார் கரை காணாது
ஓய்வார் நீந்தார் ஊழியும் வேவார் துகள் தீயார்

#120
அணியும் பாங்கே காமம் அறுத்து ஈங்கு அறம் எய்த
துணியும் பாங்கே நிற்கு அரிது என்றாய் சுடும் ஊழற்கு
அணியும் பாங்கோ நிற்கு எளிது என்பாய் கணை வார் வில்
பணியும் பாங்கோடு ஒன்னலர் ஏற்றும் பரிசு அன்னோய்

#121
நசை உற்று உற்ற தீது அற நொந்தே நடை ஒன்றோ
வசை உற்று உற்ற தீ உறீஇ என்றும் வயா ஒன்றோ
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது என்று
இசை உற்று உற்ற நூல் விதி சொன்னான் இசை மேலான்

#122
விண்டு ஆர் ஏறு உட்பட்டு என அன்னான் விரி நல் நூல்
கொண்டார் அன்னார் கொண்டவை உள்ளி குழைகின்றார்
கண்டார் என்னா கண்கள் புதைத்தார் கலுழ்கின்றார்
மண்டு ஆர் வேட்கை தீ அற இஃதே வழி என்பார்

#123
இன்பால் கொண்ட பாவம் இயற்றும் இயல்பு இஃதேல்
துன்பால் கொண்ட நோன்பு இனிது என்பார் துகள் மல்கி
பின்-பால் கொண்ட ஆகுலம் எண்ணார் பிறழாத ஓர்
அன்பால் கொண்ட தீது இனிது என்பார் அது என்பார்

#124
பொன் நேர் ஒள் பூம் சாயலை வெஃகல் புதவு உய்த்தேல்
அ நேர் உண்டோ ஓர் பகை காதல் அலது என்பார்
மின் நேர் ஒல்கி மாறிய இன்ப வினை காட்டி
கொன்னே மாளும் வாழ்வு உயிர் உண்ணும் கொலை என்பார்

#125
நரகம் கொண்ட தீ நிலை இஃதேல் நனி ஓர்ந்தால்
விரகம் கொண்ட தீயை அவிக்கும் வினை என்பார்
பிரதம் கொண்ட தீயவர் வைகும் பெரிது ஊழல்
சுரதம் கொண்ட நாம் உறும் வீட்டின் சுரம் என்பார்

#126
என்ன நொந்தார் நொந்து உணர்வு எய்தி எரி அ தீ
உன்ன உள் ஆர் தீ அற உள்ளத்து உறு தண்ணம்
துன்ன வாழ்ந்தார் நல் அறம் எய்த துணிவு உற்றார்
மின்ன விண்ணில் வீழ் துளி ஒப்ப விழி நீரார்

#127
மது கலத்து அலர் பூ வாயான் வழிந்த தேன் ஒத்த சொல்லால்
விது கலத்து இழிந்த வில் போல் விரித்த நூல் அனைத்தும் கேட்டு
புது கலத்து எரித்த தீம் பால் பொங்கல் போல் உளத்தில் பொங்கி
ஒதுக்கல் அற்று அருவி கண்ணீர் உயிர்த்தனன் வாமன் மாதோ

#128
நூல் கடல் துறையின் கேள்வி நுணுங்கிய புலமையோன் சொல்
பால் கடல் பதுமம் அன்ன படர்ந்த கண் இமையா கேட்டு
மேல் கடல் திரைகள் பொங்க மேல் வளி அடித்ததே போல்
நால் கடல் தானை ஏறான் நவை அறுத்து எழுந்து சொன்னான்

#129
தீயவர் செல்லும் செம் தீ தேக்கு இருள் நிலத்தை காட்டி
தூயவர் செல்லும் வீட்டை தொடர் வழி காட்டல் செய்தாய்
காய் அவர் குளிர்ப்ப தண் அம் கருணையோய் என அங்கண் வான்
மீ அவர் உவப்ப தாள் மேல் வீழ்ந்து நீர் ஆட்டினானே

#130
விழுந்து உற எடுத்து உள் தாபம் விளைத்த கண் கலுழி போற்றி
அழுந்து உற தழுவி மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற
செழும் துறவு இறைவன் சொன்ன தேறிய உணர்வில் தேறி
எழுந்து உற தெளிந்த நெஞ்சான் இதனை மீண்டு உரைத்தான் மாதோ

#131
கான் முழுதும் இறைஞ்சும் நோன்பின் கடல் கரை கண்ட நல்லோய்
தேன் முழுது இறைஞ்சும் தீம் சொல் தேறலை துளித்து நீயே
வான் முழுது இறைஞ்சும் நல் நூல் வழங்கிய ஓதி கேட்க
ஊன் முழுது இறைஞ்சும் கோட்டின் உவா மதம் மாறிற்று அன்றோ

#132
உள் உற தெளி நூலால் கீழ் உலகமே சுடும் தீ என்றாய்
அள் உற காம தீயை அவித்த தண் பொய்கை அன்றோ
வள் உற புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய்
தெள் உற கண் முன் இட்ட திரு விளக்கு ஆயிற்று அன்றோ

#133
சுழல் தர புகைகள் நாறும் தூய் மலர் தவிசில் தேம் பூ
நிழல் தர தொடலை கூந்தல் நீர்மையார் தோள் மேல் துஞ்சி
அழல் தர கனன்ற மஞ்சத்து அழன்று அழன்று ஊழி காலம்
புழல் தர புண்பட்டு அங்கம் பொடி படல் இனிதோ நெஞ்சே

#134
உலை வைத்த பொறி செம் தீயோடு உடன்ற வேல் உருவி பாய
மலை வைத்த அருவி கண்ணீர் மலிந்து அழல் இனியது என்றோ
சிலை வைத்த பகழி சாயல் திரு நுதல் விழியை வெஃகி
விலை வைத்த மகளிர் வஞ்ச வினை கொடு மருண்டாய் நெஞ்சே

#135
தீய் திரள் தளிர்த்த நோயால் தீயவர் புலம்பும் ஓதை
பேய் திரள் தளிர்த்த ஓதை பிளந்த காது உணல் இன்பு என்றோ
வீய் திரள் தளிர்த்த தேன் போல் விளம்பிய சொல் என்று எண்ணி
போய் திரள் தளிர்த்த பொய்யின் போழ்ந்த வாய் விழைந்தாய் நெஞ்சே

#136
அலை விரவு ஊழல் வைகி அரவின் நஞ்சு அயின்று எஞ்ஞான்றும்
கொலை விரவு ஊழி செம் தீ குளித்தலே இனியது என்றோ
வலை விரவு அணியின் பின்னி மலர் தவழ் கூந்தல் வெஃகி
புலை விரவு உணர்ந்த காம புணரியில் குளித்தாய் நெஞ்சே

#137
கோடு இழந்து அழியும் பைம் பூம் கொள்கை வாடு எழிலை பேணி
ஏடு இழந்து ஒழுகும் தேன் போல் இயைந்த புல் இன்பம் நக்க
வீடு இழந்து ஊழி செம் தீ வீழ நல் அறங்கள் செய்யும்
பீடு இழந்து ஒழுகுவாரில் பேதையர் இல்லை நெஞ்சே

#138
கால் வழி காயும் பூவும் கடியும் என்று இளமை நம்பா
மால் வழி தளிர்த்த காம வழி வளர் நிரையம் தந்த
நூல் வழி ஒழுகல் விள்ளா நுகர்ந்த நஞ்சு உமிழ்ந்தே உய்தி
சூல் வழி சனித்த பாவ தொடர்பினோடு ஊழ்த்த நெஞ்சே

#139
வள்ளி உருவம் தீ முன் வல்லையே உருகும் வண்ணத்து
உள்ளிய அருமை யாவும் ஊழல் முன் கரைந்து நீங்கி
எள்ளிய உள்ளம் கொள் மாசு இசைத்த நூல் பளிங்கில் கண்டு
தெள்ளிய தவ நீர் ஆட்டி செயிர் அற தெளிதி நெஞ்சே

#140
தொல் வினை இனிய என்று துகளுற தோன்றும்-காலும்
நல் வினை அரிய என்று நலம் கெட தோன்றும்-காலும்
கொல் வினை நிரைய செம் தீ குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து
வல் வினை ஊக்கம் பூண்டு மருளல் என் நெஞ்சே என்றான்

#141
என்ன இயம்பின கால்
உன்ன_அரும் இன்பம் உறீஇ
துன் அவர் சூழ் மகிழ்வு
பன்ன_அரும் பான்மையதே

#142
இனைய இயற்றிய நூல்
அனைய எமக்கு அளவோ
வனைய வரும் சுடரை
புனைய ஓர் பூண் உளதோ

#143
ஐ வழி ஆசு தரும்
பொய் வழி போக்கி அற
மெய் வழி மேவி நரகு
உய் வழி ஒன்று உளதே

#144
காதல் அலாது கடும்
சாதல் இலாது தகும்
ஓதல் ஒளித்து நரகு
ஆதலும் வித்து அதுவே

#145
இறந்தனர் வேகும் எரி
பிறந்தனர் ஓர்ந்து பெறின்
துறந்தனர் துஞ்சுளி வான்
சிறந்தனர் சீர்த்து உவப்பார்

#146
என்றனர் என்று எவரும்
கன்றினர் காட்சி உறீஇ
நின்றனர் வீட்டு நெறி
சென்றனர் சீர் பெறவே

#147
அள்ளிய வாமன் அரில்
எள்ளிய யாவருமே
தெள்ளிய சீர் இறுதி
உள்ளி அன்று ஓதினர்-ஆல்

#148
செல்வர் உறும் செயிரும்
வல் வரும் மாண்பு அறமும்
எல் வரும் ஒத்து எவணும்
சொல் வரு தோற்றம் அதே

#149
தெளித்த-கால் உரைத்த விஞ்சை சிறப்புற உழுத பூழி
துளித்த-கால் விதைத்தல் என்ன துணிவுற தெளிந்த வாமன்
களித்த-கால் உணர்ந்த ஞானம் காய்ந்த கால் சிதையுமோ என்று
அளித்த-கால் இது என்று ஆய்ந்த அரும் தவன் இனிதின் சொன்னான்

#150
ஐம்பொறி பகை கண்டு அஞ்சி அடக்கலின் ஆமை போல்வாய்
வெம் பொறி புதவை ஓர்ந்து விளை பகை சிறிது என்று எண்ணேல்
பைம் பொறி பாந்தள் தன் கூர் பல் பட மத நீர் குன்றின்
செம் பொறி புகை கண் யானை சிதைத்து உயிர் மாளும் அன்றோ

#151
பிரிந்தது என்று ஒழித்த பாவம் பெறும் இடத்து அணுகேல் வேலோய்
அரிந்தது என்று உறங்கும் ஆசை அமைதியால் விழித்து கொல்லும்
எரிந்த நின் காம தீயை இற்று அற அவித்தது என்னேல்
கரிந்தது என்று இருந்த பல் கால் கால் முகத்து எரியும் தீயே

#152
அசும்பு-இடை ஒளித்த செம் தீ அறல் என எடுத்தார் யூதர்
தசும்பு-இடை எடுத்த நீரை சமிதை மேல் தெளித்து வாரி
விசும்பு-இடை நீங்கி வெய்யோன் வெம் கதிர் பட தீ பற்றி
பசும் பிடி சூழ வாட்டி படர் நெருப்பு ஆயிற்று அன்றோ

#153
தண் உறும் குணம் கொண்டாலும் தழலும் தன் குணத்தை காட்டி
விண் உறும் கதிர் ஒன்று உண்-கால் வெம் கனல் எரிந்ததே போல்
கண் உறும் கனல் அம் காமம் ஓர் கவின் முன் காய்ந்து
புண் உறும் கசடு உள் ஆக புழுங்கி வெந்து எரியும் அன்றோ

#154
குலம் புரி கொடிய பேய்கள் கொலை தொழில் கருவி சூழ்ந்து
சலம் புரி வலையை வைக்க தளை படின் பிரிதல் ஆற்றா
வலம் புரி தவத்தின் நாம் அ வலை உறா விலகல் வேண்டும்
கலம் புரி பைம் பூ மூழ்கி கதிர்த்த பொன் குன்றின் மார்போய்

#155
முன் பட உரைத்த விஞ்சை மொழிகுதும் தளிர்ப்ப மீண்டே
வில் பட எதிர்த்து செய் போர் வினை இது நோக்கல் வேண்டா
மல் பட வெற்றி வேண்டின் மருள் படாது ஒடுங்கல் வேண்டும்
கற்பு அட ஆவி சால்பு காண் என தெளிக வேலோய்

#156
கச்சு ஒன்று இட்டு உணர்வோடு ஊக்கம் கட்டி மெய் சகட்டை ஓட்டி
நச்சு ஒன்று இட்டு ஏத சேற்றுள் நல் உயிர் அச்சு இற்றாய் மற்று
அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது அழும் பலர் கண்டீர் நல்லோர்
மெச்சு ஒன்று இட்டு அச்சு இறா முன் வீடு உற ஊர்-மின் பாகீர்

#157
விண்டுளி கமழ கஞ்சம் வெம் கதிர் உண்டதே போல்
பண் துளி உரையின் சொன்ன பயன் எலாம் உண்ட யாரும்
விண் துளி முத்தம் ஆக வெள் வளை உண்டதே போல்
பண்டுளி மருள் நீத்து ஓதி பரிந்து அறம் ஆக செய்தார்

#158
கயல் பொருது உகளி பாய கலங்கிய குமரி அன்னம்
அயல் பொரு சேவலோடும் அதிர்ந்து எழ சாய்ந்த செந்நெல்
வயல் பொருவு ஒழிந்த நாடு வளன் தரும் ஓதி தன்னால்
புயல் பொருது உயர் வான் வீட்டை புகும் மறுகு ஆயிற்று அன்றோ
மேல்

@29 வேதக் கெழுமைப் படலம்


#1
தாய் அணி ஆக மார்பில் தனையனே துஞ்சும் போல
வேய் அணி ஆக ஏய்ந்த வேத நூல் துஞ்சு மார்பன்
காய் அணி ஆக வாய்ந்த காவில் மீண்டு ஒரு நாள் வைகி
வாய் அணி ஆக ஓதி வகுத்து நீடு உரைத்தான் மாதோ

#2
ஏழ்வரும் கதிரை துய்ப்ப ஏடு அவிழ் கமலம் போல
சூழ்வரும் குழாத்து யாரும் சுருதி நூல் செவியின் மாந்தி
கேழ்வரும் பதுமம் பெய் தேன் கீடம் உண்டு இமிரும் போல
தாழ்வரும் புரைகள் நீக்கி தகவு உறீஇ புகழ்ந்து நின்றார்

#3
கூன் உரு கோலின் ஊன்றி குலுங்கிய சென்னி ஆட்டி
ஊன் உரு கழிந்த நீள் தோல் உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி
மீன் உரு கழிந்த கண் புண் மெலி முக சுரமி என்பாள்
வான் உரு தவத்தோன் சொன்ன மறை மொழி பழித்து சொன்னாள்

#4
விள்ளிய புது தேன் பைம் பூ விரும்பி நல் கனி நீத்து அன்ன
தெள்ளிய தவத்தின் பல் நாள் தேடிய பயன்கள் யாவும்
எள்ளிய அவத்தின் நீங்க இறைஞ்சிய தேவர் நீக்கி
உள்ளிய நவ நூல் எண்ணி ஒழுகலோ உறுதி என்றாள்

#5
குடக்கு நேர் வைகும் குணித்தனர் செப்பம் மாறி
வடக்கு நேர் நெடு நாள் செல்ல வழி அது அன்று என்று கேட்கின்
துடக்கு நேர் தடம் செல்லாதால் துயர் அலால் காட்டுகின்ற
கிடக்கும் நேர் நெறி செல்லாரோ கேள்வியர் என்றான் சூசை

#6
நின் நெறி கதியை சேரும் நெறி என அறிய நாங்கள்
என் நெறி வழாமை செல்லும் என்னில் நீ சால்போ என்றாள்
நல் நெறி உரையில் கேட்கின் நணுகலீர் உரைத்த ஞானத்து
அ நெறி உரியது என்றால் அறிந்து உளம் தெளிக என்றான்

#7
பண் மறைத்து இனிதின் நீயே பணித்த சொல் மறுக்கல் ஆற்றா
கண் மறைத்து இருட்டும் மாயை கட்டு என தோன்றும் என்றாள்
புண் மறைத்திட்ட பாலால் புண் அற மாயை என்றோ
உள் மறைத்து ஒளித்த நன்றி உறும் பயன் காட்டும் என்றான்

#8
சுனை வளர் குவளை ஆதி சொரி மது மலர்கள் வாடி
நனை வளர் பொய்கை வற்ற நான் இன்று கனவில் கண்டேன்
வினை வளர் நவங்கள் நாட்டி விரித்த நின் சொல்லை கேட்டு
பனை வளர் நாடு நைந்த பரிசு இதே என்றாள் மூத்தாள்

#9
தெருள் தவழ் பகலின் நோக்க சிதைந்த கண் கிழவி இல்லாது
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார்
மருள் தவழ் சினம் கொண்டு அன்னாள் வடிவுறும் கனவும் பொய்யோ
பொருள் தவழ்கிலதேல் தோன்ற பொருட்டு என்னோ சொல்-மின் என்றாள்

#10
சினவு-இடை மருண்ட உள்ளம் தெளிவு அற பொங்கல் வேண்டா
கனவு-இடை உணர்ந்த காட்சி கனவு இடை அடைந்த பொன் போல்
மன-இடை எண்ணின் கொன்னே வடு அலால் பயன் ஒன்று உண்டோ
என விடை உரைத்த சூசை இயல் பட விரித்து சொன்னான்

#11
படம் புனைந்து எழுதினால் போல் பகல் இடை இரு கண்ணோடு ஐந்து
இடம் புனைந்து உணர்ந்த யாவும் எழுதிய நினைவில் தோன்றி
கடம் புனைந்து அதிர் கைம்மாவும் காகமும் கண்ட பின்பு
சடம் புனை கனவில் யானை தலைக்கு மேல் பறக்க காண்பார்

#12
தெருள் புறம் கொண்ட அத்தம் சேர்ந்து அடுத்தவற்றை காட்டும்
மருள் புறம் கொள் கனாவும் மனம் கடுத்தவற்றை காட்டி
அருள் புறம் கொண்ட தாயே அகன்ற தன் மகவை காண்பாள்
வெருள் புறம் கண்ட பேதை வினை படை எதிர்ப்ப காண்பான்

#13
காய்ந்த ஓர் சுரம் மெய் நொந்தார் கடி மலர் சுனைகள் காண்பார்
வேய்ந்த ஓர் பழியை கொண்டார் வினை பகை முரிய காண்பார்
தீய்ந்த ஓர் மிடியின் மிக்கார் திரு நலம் மருவ காண்பார்
வாய்ந்த ஓர் பற்றல் பாலால் வரும் கனவு உருவம் மாதோ

#14
இருள்பட புகை மொய்த்து என்ன எஞ்சிய அறிவு குன்றும்
மருள்பட புகைந்து மண்டி மலிந்த பித்து ஏறும்-காலை
தெருள்பட தெளிந்ததே போல் சீர் இல கனவு காட்டி
வெருள்பட பதைத்து உள் அஞ்சி வினை கொள்வார் பித்தர் அன்றோ

#15
விஞ்சிய-காலை பித்து வினையினால் பித்தர் செம்மை
எஞ்சிய நினைவு உற்று ஆயாது இழிவு உற பிதற்றும் சொல்லும்
துஞ்சிய-காலை மெய் போல் தோன்றிய கனவும் ஒன்று ஆம்
அஞ்சிய உளத்து இஃது எண்ணில் அறிவு இதோ என்றான் சூசை

#16
நோய் உடை இரு கண் வெய்யோன் நோக்கு இலா மூடிற்று என்ன
தாய் உடை அன்பின் சூசை தந்த நூல் உளத்தில் கொள்ளா
தீ உடை வெகுளி பொங்க சீறிய சுரமி சாய்ந்து
போய் உடை வஞ்சம் உள்ளி புகைந்த நெஞ்சு ஆற்றாள் அன்றோ

#17
காழ் வளர் தருவின் கோட்டம் கைக்கொடு நிமிர்க்கல் ஆற்றா
ஊழ் வளர் புண்ணும் ஆறா ஊழுழி கிழவர் கொண்ட
தாழ் வளர் கசடு மாற்றார் சாற்றிய அவரின் ஊங்கும்
ஆழ் வளர் கடலின் வஞ்சத்து அறிவு இலார் என்றும் தேறார்

#18
விரை வாய் பூம் தாழை முகைகள் விண்ட வெறி விம்மும்
கரை வாய் சங்கங்கள் கதிர் முத்து ஈன்ற கடல் சூழும்
தரை-வாய் பூண் ஒக்க எசித்து நாட்டில் தகவு உய்க்கும்
உரை வாய் கதிர் வெள்ளம் ஒளிப்ப சுரமி உணர்ந்தாள்

#19
உள்ளம் காய்ந்து உளைய பசும்பொன் கோயில் ஒருங்கு அந்தோ
பள்ளம் காண் அடியே வீழ கண்டேன் பழிப்பு உய்க்கும்
கள்ளம் காட்டிய ஓர் மறையும் யாரும் கனிந்து உள்ளி
வெள்ளம் காட்டு அழிவும் இனி காண்பேனோ மெலிந்து என்பாள்

#20
பொன் ஆர் உலகு ஒப்ப பசும்பொன் இஞ்சி புகை தவழ
மின் ஆர் மணம் தேக்கி தொழுத தேவர் வெறுத்து அந்தோ
கொன் ஆர் முனி வேடத்து ஒருவன் மாயை கொடும் சொல்லால்
ஒன்னார் கண்டு உவப்ப ஒழிந்தது இ நாடு ஒருங்கு என்பாள்

#21
எ நாடு எ குலம் எ முறை ஒன்று அறியாது இரந்து ஒருவன்
சொல் நாடினன் அஃதே சுருதியாக தொடர்ந்து எண்ணி
முன் நாள் துணை இல்லா வாமன் தானும் முயங்குகின்ற
பின் நாள் தொடரார் ஆர் பொறுக்கும் தன்மை பிழை என்பாள்

#22
என்ன வஞ்சனைகள் பலவும் கூறி ஈர்த்து அற நான்
அன்ன நவ மறைக்கு கேடு இன்று உய்ப்பேன் அரிது என்று
சொன்ன தன்மைத்தே வெகுளி விம்மும் துகள் பொங்கி
முன்னம் மெலிந்து அலைந்த பின்னர் பள்ளி முயங்குகின்றாள்

#23
முன் நாள் உற்ற அரசு இழந்த பேய் அ முனி-தன் மேல்
பல் நாள் உற்ற பகை செலுத்தும் தன்மை பழிப்பு இன்றி
இன்னாள் உற்ற பகை ஆகும் என்ன கனவில் தான்
அன்னாள் உற்ற சினம் தூண்ட அங்கண் தோன்றிற்றே

#24
வரிந்த மயில் அகவி மலர்ந்த முகை வாய் மது ஊழ்த்து
சொரிந்த நெடும் பொழில்-கண் மெலிந்து வாடும் துயர் முகமாய்
திரிந்த வண்ணம் தான் இறைஞ்சும் தெய்வம் சென்று எதிர்ப்ப
கரிந்த கனவு இடையில் கண்டாள் கண்டு கை தொழுதாள்

#25
உலகிற்கு அளி செய்தோய் துயரம் பூத்த உணர்வு என்னோ
அலகு இற்ற அரும் திறலோய் பகை நிற்கு என்னோ அரிது என்னால்
விலகி தவிர் தன்மை என்னோ என்ன விழுந்து இறைஞ்சி
இலகி தகும் மின் போல் நோக்கி உயிர்ப்போடு இயம்பிற்றே

#26
மின் உயிர்த்து எரி விளக்கு ஏற்றி வெந்து அகில்
இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ்
பொன் உயிர் தட மணி கோயில் போல் எனை
மன் உயிர்த்த இறைவனாய் வணங்கு இலார் அரோ

#27
நாடு இல குலம் இல நயந்து வாழ்வு செய்
பீடு இல முனிவரன் பிதற்றும் சொல்லினால்
கோடு இல உனை அலால் குழைந்து நோக நான்
நீடு இல அனைவரும் என்னை நீக்கினார்

#28
பெய்த ஓர் மாரியால் பெருகும் வெள்ளம் முன்
செய்த ஓர் அணை என திளைத்த தீது எலாம்
கொய்த ஓர் உதவி நீ குணித்து செய்கு இலால்
எய்த ஓர் பயன் இனி இலை என்றிட்டதே

#29
கொல்லென அலறி உள் குலைந்து எழுந்தனள்
வில் என உரு என ஒன்றும் வேய்ந்து இலாது
அல் என இருண்ட நெஞ்சு அழுங்க நொந்தனள்
ஒல்லென அருவி நீர் ஒழுகும் கண்ணினாள்

#30
ஒளித்த தன் உயிர் உடல் தேடும் ஒத்து அவா
அளித்த பல் உணர்வு எலாம் ஆய்ந்து தேறிலள்
சுளித்த நெஞ்சு உளைந்த பின் தோன்றும் சூட்சியால்
களித்த தன் உளத்து இவை கனிய கூறினாள்

#31
விண் தொழும் விதி என வளன் விளம்பிய
பண் தொழும் உரைக்கு உரை மறுக்கும் பாலதோ
புண் தொழும் அயில் கொடு பொருத தன்மையால்
மண் தொழும் அரசு செய் வலம் இஃது ஆம் அரோ

#32
பூ அகல் மாலையோடு ஊக்கம் பூண்டு கோல்
தூவு அகல் முகில் கையான் சுளித்த நெஞ்சினான்
நாவகன் என்னும் நல் நாம வேல் ஒரு
சேவகன் உறுதியால் செயம் கொள்வாம் அரோ

#33
நூல் முகத்து உரை நலம் நுதல்கிலான் ஒளி
வேல் முகத்து எரிந்த முன் வெகுளி நீதியான்
வான் முகத்து அசனியான் மனத்தில் ஓர்ந்தவை
கோன் முகத்து உகந்தனாய் முடிக்கும் கொள்கையான்

#34
ஆயினான் அருகு போய் அழுது காட்டிய
நோயினால் இரங்கு உளம் நுழைந்து வெம் சின
தீயினால் அழற்றுதும் என்று தேறியே
போயினாள் அரும் பகை புழுங்க நெஞ்சினாள்

#35
சுதை ஒளி உச்சி ஆடும் சுடர் கொடி மாடத்து ஏகி
புதை ஒளி பரப்பி நாறும் பொன் மணி தவிசில் சாய்ந்த
ததை ஒளி வை வேல் வல்லோன் தாள் முனர் அழுது வீழ்ந்தாள்
உதை ஒளி முன்னர் வீழ்ந்த ஒருங்கு இருள் அருந்தும் நெஞ்சாள்

#36
சென்று வீழ் சுரமி நோக்கி செப்புதி கொடிய வந்த
என்று நாவகனும் கேட்ப எழுந்து கூன் உடல் கோல் ஊன்றி
நின்று பேர் உயிர்ப்பு வீக்கி நீர் மழை இரு கண் தூவி
கன்றுவாள் சோர்வாள் வஞ்சம் கக்கியே இனைய சொன்னாள்

#37
சிலை வைத்த பகழி மாரி சிந்துபு கடந்த வெம் போர்
கொலை வைத்த குருதி கோட்டு குஞ்சரத்து அன்னோய் முன் நாள்
அலை வைத்த உலகம் காத்தாய் அவிர்ந்த பொன் உலகம் காக்க
கலை வைத்த உணர்வோய் இன்று கருதலே வேண்டும் அன்றோ

#38
முந்து அழல் தறுகண் தூவ முரண் படை முரிக்கும் யானை
வந்து அழல் பரப்பும் சீற்றம் மயக்கிய வீர வல்லோய்
சிந்து அழலுடன் நின் ஒன்னார் சிதைத்தனை தேவர்க்கு உற்ற
கொந்து அழல் ஒன்னார் தம்மை கொன்று இனி வெல்வாய் அன்றோ

#39
வேய் நிற கரும்பு நக்கும் விரி தலை கதலி ஊழ்த்து
தூய் நிற தேறல் பாய்ந்து துணர் வயல் விளை இ நாடே
தீய் நிற கரிந்து வாட தேவரை ஒருங்கு நீக்கி
நோய் நிற கருத்தில் யாரும் நூதனம் அணுகினாரே

#40
முனி உரு காட்டி யாரோ முறை குலம் ஒன்றும் இல்லான்
பனி உரு காட்டி தண்ணம் பயத்த அன்பு எழுவ கூறும்
கனி உரு காட்டி தீம் சொல் கண்ணியால் உளத்தை வீக்கி
நனி உரு காட்டி வாய்ந்த நால் மறை ஒழிய செய்தான்

#41
மாகையோ மயலோ யாதோ வறுமையான் உரைகள் வெஃகி
ஓகையோடு எவரும் போய் வேறு ஒரு மறை விரும்பி கேட்ப
தோகையோடு ஒழிந்து வீழ்ந்த துணை மயில் என்ன கோயில்
ஈகையோடு இனி எம் தேவர் என்று அழுது உரை சோர்ந்தாளே

#42
வீங்கிய துயரில் சோர்ந்து வீழுளி சுரமி கையால்
தாங்கிய சுடர் செய் வேலோன் தழுவினான் உறுதி சொன்னான்
ஏங்கிய உளத்தில் தேற இரவலர் ஈனர் நால்வர்
நீங்கிய தன்மைத்து என்னை நீ அழுது அயர்வாய் என்றான்

#43
பூமனும் உணர்வில் தேர்ந்த புரட்டனும் செல்வத்து ஓங்கும்
தாமனும் சிரீத்தான்-தானும் தரும் புகழ் கடந்த வீர
வாமனும் பலரும் சேர்ந்து மாரி நாள் வெள்ளம் ஒத்தார்
காமனும் எஞ்ச பைம் பூம் கவின் நலோய் என்று சொன்னாள்

#44
துஞ்சிய கனவில் தெய்வம் துயர் முதிர்ந்து எஞ்சி தோன்றி
அஞ்சிய என்னை நோக்கி அனைவரும் தன்னை நீத்து
விஞ்சிய மாயை ஈர்தல் வேண்டும் என்று இரங்கி சொல்ல
எஞ்சிய பின்னர் நின்னை எண்ணி உள் தேறினேனே

#45
பொன் வளர் உலக தேவர் பொருந்தி ஈங்கு உனக்கு தந்த
மின் வளர் மணியும் பொன்னும் வீரமும் புகழும் யாவும்
கொன் வளர் செல்வமாக கொடுத்ததோ கொடுத்த தேவர்க்கு
இன் வளர் உதவியாக இயற்றலே வேண்டும் இன்றே

#46
நூல் வழி போதல் வேண்டா நுண் மதி முனிவன் வெல்வான்
வேல் வழி குருதி பாய வேந்தனே வெகுளி காட்டின்
கால் வழி தழைகள் என்ன கலங்கிய எவரும் மீண்டு
கோல் வழி வில்லோய் தேவர் கொண்ட வெம் பகையை தீர்ப்பாய்

#47
பண் முழுது இறைஞ்சும் நின் சொல் பார்த்திபன் மறுக்கல் செய்யான்
மண் முழுது அயிலால் காத்தாய் வளம் கொள் இ மறையும் நீத்தால்
விண் முழுது இன்று காப்பாய் வேண்டுமேல் அரிது ஒன்று இன்றி
உண் முழுது உணர்ந்த தன்மை ஒல்லும் என்று இறைஞ்சினாளே

#48
தொல் நெறி வாமன் நீக்கி சூசை ஆங்கு உணர்த்தும் ஓதி
நல் நெறியாக கொண்ட நவத்தொடு பலவும் ஓர்ந்தே
உன் நெறி போதி எம் தாய் உவப்ப நீ செய்வேன் என்ன
செல் நெறி அசனி ஒத்தான் சிந்தையில் பொங்குகின்றன்

#49
கள் ஆர் மலர் மணமோ கனல் ஆர் புகையோ கடுத்து ஒருவன்
உள் ஆர் வினை முக மேல் உருவும் தன்மைத்து அவன் உணர்ந்த
எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய் குன்றா குண்ணன் என்பான்

#50
பால் செய் கடல் கிடந்து நுரை சூழ் பவள கட்டை என
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய் கலை பூம் தவிசு எழுந்து
நூல் செய் புலம் மிக்கோன் நுனித்த அன்பின் நோன்று ஈன்ற
வேல் செய் திற நம்பி வினை கண்டு அற்க என விளித்தான்

#51
நெஞ்சே கொள் பிணியை முகம் தந்து என்ன நின் முகமும்
நஞ்சே கொள் வினை உள் நாட்டிற்று என்ன நல்கும் அதே
அஞ்சேல் எனக்கு உரைமோ அரி கண் இட்ட அஞ்சனம் போல்
செம் சேடு உருவோய் தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து என்றான்

#52
இட கை தொகு விரலால் எதிர் தோள் இட்ட வளை கவ்வி
தட கை விரலால் வாய் புதையா சாற்றுது அடிகள் என
நுடக்கை முதிர் சுரமி நுவன்றது எல்லாம் நுவன்று இரு தாள்
பட கை தொழுது இனி செய் பணியே பணிப்ப என நின்றான்

#53
ஈங்கு நீ உரைமோ உணர்ந்தது என்றாற்கு இளையோன் மற்று
ஓங்கு தேவர் பழி என்ன வேந்தற்கு உரைத்து நவ
தீங்கு கொய்தல் நல்லது என்றான் அணை மேல் சேர்த்து இருத்தி
வீங்கு கேள்வி நலோன் மெலியா தீம் சொல் விரித்து உரைத்தான்

#54
விள்ளா அரும்பு ஒப்ப விளை நல் நாகின் வேல் கடல் முன்
எள்ளா வில் தலைவன் யூதர் நாட்டில் இருந்தேன் நான்
நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அ நாள் அருகே
உள்ளா வயத்து உற்றது உரைப்ப போற்றி உணர்க என்றான்

#55
கன கரம் தழுவ மேல் கதிர் கொள் குன்றின் வீழ்
புனல் கரம் தழுவ மேல் பொலி அசீரியம்
என கரந்து உறை நலம் இயைந்த நாட்டை ஆள்
சினக்கரன் எனும் பெயர் சிறந்த வேந்தர் கோன்

#56
மாற்று அரசு இனம் எலாம் வணங்கும் வாகையான்
வேற்று அரசு இனம் முடி விளக்கும் தாளினான்
ஏற்று அரசு இனம் கொணர் இறை கொள் கையினான்
ஆற்று அரசு இனம் எலாம் நடுக்கும் ஆணையான்

#57
ஓடை மால் மத கரி உயர்த்த வாகையான்
கோடை நாள் அசனியை குழைத்த வில்லினான்
பாடையாய் இகல் உரம் பழக்கும் வாளினான்
வாடையால் வரு விசை வாட்டும் தேரினான்

#58
ஆலமும் அழலும் விட்டு அதட்டி சீறினால்
ஞாலமும் நடுக்கிய நச்சு கண்ணினான்
மாலமும் மறலியும் வஞ்ச மாலையும்
சீலம் ஒன்று இலது அவை செறிந்த நெஞ்சினான்

#59
அருள் இடு மொழி மறுத்து அழன்ற வாயினான்
வெருள் இடு பொய் புகழ் விழுங்கும் காதினான்
பொருள் இடு முடியொடு புன்கண் பூத்தவர்
திரள் இடு முறை எலாம் சுமந்த சென்னியான்

#60
ஆற்று நீர் அலையின் நீ அலந்தை நீர் எலாம்
சேற்று நீர் உவர் குழைவு என செகுத்து அவன்
ஆற்றும் நீர் இல சலம் ஆற்று இலார் விழி
ஊற்றும் நீர் ஒன்றினை உவப்பு என்று ஆடுவான்

#61
கின்னரம் பயில் யாழ் பொன் மாடக
இன் நரம்பு உளரலும் இனிது அன்று என்று தன்
வில் நரம்பு ஒலி கணை வினையின கைமையார்
துன்னரம் பயில் ஒலி சுவை என்று ஆவுவான்

#62
கோது இலார் தனக்கு வேற்று என்று கூட்டிலான்
தீது உளார் தனக்கு எதிர் என்று சேர்க்கிலான்
ஏதினால் இணை இலான் எதிர்ந்த யாரையும்
பேது இலா மறத்தொடு பகைக்கும் பெற்றியான்

#63
அ திறத்து ஆயினான் அரசர் யாரையும்
மொய் திறத்து அடக்குபு முதிர்ந்த வேத நூல்
மெய் திறத்து யூதர் சீர் விளைந்த நாட்டு உறீஇ
பொய் திறத்து அரும் செயம் உணர்ந்து போயினான்

#64
வேல் கடல் பரி கடல் வேழம் தேரொடு
நால் கடல் ஒருப்பட நடுங்க நால் திசை
நீல் கடல் எதிர்த்து என நினைப்பின் எய்தினான்
நூல் கடல் வேந்து உறை நகரை நோக்கினான்

#65
கார் விளை இடி மொழி கதத்தில் யூதர்-தம்
சீர் விளை மறை நலம் செகுத்து வந்து தன்
நீர் விளை மரை அடி பணிதல் நேர்கு இலால்
போர் விளை சுடு மொழி தூது போக்கினான்

#66
கோன் நலமும் குல நலமும் குலத்து உரிய தொல் சுருதி
நூல் நலமும் அவர் தொழுத நுனித்த ஒரு நாயகன்-தன்
வான் நலமும் ஒன்று எண்ணா வரைவு அறும் தன் கடல் தானை
வேல் நலம் ஒன்று ஊன்றிய சொல் வெடித்தான் தூது உரைகொண்டான்

#67
தீய் முகத்து பொங்கிய பால் தெள் நீர் இட்டு ஆற்றுவர் போல்
வீய் முகத்து சுடும் சொல்லான் விளைத்திட்ட வெம் வெகுளி
காய் முகத்து கோன் உணர்ந்த கருணையின் நீர் கொண்டு ஆற்றி
ஆய் முகத்து தேறி அயிர்ப்பு அற ஈர உரை வலித்தான்

#68
உன் அல்லால் இ உரை செய்து உய்வார் ஆர் உன் அரசன்
என் அல்லால் என் இறைவன் இகன்றன பின் என் இறைவன்
தன் அல்லால் விடை இங்கண் சாற்றுவர் ஆர் சடுதி போய்
வில் நல்லாய் இ மொழியை விளம்பு என்றான் மறை கோமான்

#69
பார் இறைஞ்சும் தேவர்கள் எம் படை முகத்து துஞ்சினரோ
நீர் இறைஞ்சும் தேவன் வலி மிக்கது-கொல் நெடிது எங்கும்
போர் இறைஞ்சும் வேல் வேந்தன் புகைந்து உகுத்த புண்கண் உறா
கார் இறைஞ்சும் உன் நாட்டை கா-மின் என்றான் கடும் சினத்தான்

#70
துஞ்சினரோ மற்று எவரும் தொழும் தேவர் நும் படை முன்
அஞ்சினரோ அறிகிலன் நான் என் இறையோன் வலி குன்றா
விஞ்சினனோ கண்டு உணர்க வினை வெம் போர் வேண்டினும் நான்
அஞ்சினனோ அ திறத்து இன்று அமர்க என்றான் அற நீரான்

#71
அருள் புரிந்த தூது உரைத்தேன் ஆர்ந்த மணி முடி நல்லோய்
மருள் புரிந்த மனத்து எண்ணா மன்னன் அருள் மறுத்தாயே
வெருள் புரிந்த வெம் சின போர் வினை நின்-பால் என்று இறைஞ்சி
இருள் புரிந்த இரவில் சென்று இவை இறைவற்கு இயம்புகின்றான்

#72
சீர் மீது ஆடிய செருக்கின் தெளியா கோன் இவை கேட்டு
போர் மீது ஆடிய சேனை பொலிவு எண்ணா மறுத்தானோ
கார் மீது ஆடிய கொடி நீள் மாட நகர் காடு ஆக்கி
பார் மீது ஆடிய வெருவே படும் நாளை என துயின்றான்

#73
குன்று உச்சி சுடர் பழியா கொளுத்திய புன் விளக்கு அன்றோ
வென்று உச்சி வான் ஆளும் வேந்தன் எதிர் பூ உலகில்
நின்று உச்சி நிறுவு அரசர் நினைத்த பகை ஆம் காணாய்
அன்று உச்சி முடி கவிழ அவற்கு ஆங்கு ஆயவை கேண்மோ

#74
நேர் அறு நூல் தெளிவு அறிவின் நீதி வலோன் பகைத்து இரவில்
பார் அறு நூங்கு இரதம் உகள் பரி கரி வாள் வில் வேல் என்று
ஆர் அறு நூங்கு அடல் தானை அற்று அற கண் இமையா முன்
ஓர் அறு_நூறு உறழ் மு_நூறு உடை ஐ_ஆயிரர் மாய்ந்தார்

#75
பான் இறைவன் செக்கர் வான் பந்தல் கீழ் விளக்கு ஏந்த
ஈன் இறைவன் அறு தானை இற்று அழிந்த நிலை கண்டான்
வான் இறைவன் திறம் கண்டான் வாழ்க்கை அற நகை கண்டான்
தான் இறைவன் அலன் என்ன தளர்ந்து அஞ்சி ஓடினன்-ஆல்

#76
நெடிது அழுங்கி பெரும் கள்வன் நீதி திறத்து இறந்து என்ன
கொடிது அழுங்கி எஞ்ச அன்று அ கொலை காண விளியா கோன்
கடிது அழுங்கி ஓட எதிர் கடுகி நகை உய்த்தாய் என்று
இடி தழுங்கி வீழ்ந்து அனைய இரு மைந்தர் கரத்து இறந்தான்

#77
மஞ்சு இவர் குன்றின் தெள் நீர் வழங்கும் அ நாட்டில் பின் நாள்
நஞ்சு இவர் சின்னத்தின் காய்ந்த நபூக்கன் என்ற அரசன் செங்கோல்
நெஞ்சு இவர் செருக்கின் கோட நீண்ட நாட்டு எங்கும் யூதர்
விஞ்சு இவர் இறைவன் தாழ்தல் வினை மிக விலக்கினானே

#78
கொன் வளர் தருக்கில் பொங்கும் குணத்து அவன் பினர் தன் சாயால்
பொன் வளர் உருவம் ஆக்கி பூண் வளர் சிறப்பின் மண்ணி
பின் வளர் இழிவு எண்ணாத பேதமை திறத்து அது ஒன்றை
மன் வளர் தேவன் ஆக வணங்க என்று ஏவினானே

#79
சீர் தங்கும் வயத்து ஒன்று ஆம் எம் தேவனை அன்றி மற்ற
ஏர் தங்கும் உருவ தேவர் இறைஞ்சு இலேம் என்ன மூவர்
கார் தங்கும் இடியின் காய்ந்தோன் கடுகி அ யூதர் தம்மை
பீர் தங்கும் உரு தீ சூளை பெய்-மின் ஈண்டு என்றான் மாதோ

#80
வம்மிய புகையின் சூளை வாய் அங்காந்து எரிந்த செம் தீ
தும்மி அ ஏவல் செய்தோர் தொகு உயிர் நக்கி கோறி
பொம்மிய உவப்பின் மூவர் புணர்ந்த கட்டு அன்றி வேகா
பம்மிய பைம் பூம் சோலை பதி என அங்கண் வாழ்ந்தார்

#81
அ நிலை கேட்ட மன்னன் அதிசயித்து அணுகி நோக்க
வெம் நிலை சூளை நால்வர் மெலிவு அற உவப்ப கண்டே
இ நிலை வியப்பில் பொங்கி ஈண்டு இவண் வம்-மின் என்ன
பைம் நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார்

#82
நால்வரும் கண்டேன் மற்று ஓர் நவியன் எங்கு என்ன அன்னார்
மேல் வரும் திறத்து எம் தேவன் விட்ட விண்ணவன் தான் என்றார்
போல்வரும் இன்றி யூதர் போற்றிய கடவுள் மாண்பும்
நூல் வரு மறையின் சால்பும் நோக்கினன் மருளும் நீக்கான்

#83
தன் திறத்து ஊக்கி தேவன் தான் என உணர்ந்த-பாலால்
பின் திறத்து எவரும் அஞ்ச பெரும் சினத்து அன்ன தேவன்
மன் திறத்து உயிரே மாறா மா உரு கொளீஇ தள்ளுண்டு
கொன் திறத்து எஞ்சி காவில் குனிந்து புல் மேய்ந்து நின்றான்

#84
ஏழ் வரும் வருடத்து இவ்வாறு இழிபட விலங்கின் சாயல்
போழ் வரு நெஞ்சின் நோக புணர் அறிவு எஞ்சான்-தன்னை
தாழ்வு அரும் உளத்து அ நாதன் தாழ்ந்த பின் உரி தன் மெய்யும்
கேழ் வரு முடியும் பெற்று கெழும் விளக்கு எவர்க்கும் ஆனான்

#85
மீட்டு அன்னார் இறைஞ்சும் கோயில் மிக்கு அரும் திரு உண்டு என்ன
கேட்டு அ நாட்டு அரசன் ஏவ எல்லியோதுரன் போய் கேழ்த்த
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்_இல கொல் வேங்கை
கூட்டு அன்னார் அபயர் சூழ கோயிலை இரவின் புக்கான்

#86
புக்கன அளவில் வானில் பொன் பரத்து ஒருவன் ஏறு
மிக்கன சின கொக்கு அன்னான் வியன்ற மார்பு உதைத்து வீழ்த்த
தொக்கன எவரும் ஓட சூழ் இரு வானோர் தோன்றி
நக்கன கதத்து அன்னானை நண்ணி மத்திகையால் பெய்தார்

#87
ஈறு உயிர் ஆக நிற்ப இனைந்து இரும் குரவன் வேண்டி
வீறு உயிர் ஆக தேற்றி விண்ணவர் இருவர் இ வாய்
தேறு உயிர் இறைவன் வாழ்த்த திசை எலாம் உணர்த்தி என்ன
ஊறு உயிர் உய்ந்து வாழ்நாள் உள் அளவும் ஏத்தினானே

#88
இ திறத்து உயர் அ வேதம் இகன்றன அரசர் ஈர்_ஆறு
அ திறத்து இழி பட்டு எஞ்ச அறிது நான் அன்ன தேவன்
மை திறத்து இகன்ற யாரும் வையகத்து உய்யார் காளாய்
பொய் திறத்து உணர்ந்த தீமை போக்குதி என்றான் மூத்தோன்

#89
பால் நிமிர் கனி அருள் பவள குன்று இழி
தேன் நிமிர் மொழி புனல் செறிந்த வாரியுள்
கோல் நிமிர் வில்லினன் குளித்து இன்பு உண்டு அலால்
நீல் நிமிர் இருள் உளம் நீங்கு இல் ஆயதே

#90
திங்கள் நீர் கதிர் அணி தியங்கு மார்பினோன்
தம் கண் நீர் கடவுளும் மறையும் தாம் உணர்ந்து
அங்கண் நீர்த்து ஒழுக மற்று அருளி கேட்டி ஒன்று
இங்கண் நீர்த்த அடிகளே என்று செப்பினான்

#91
உய் வகை இன்றி வந்து உலைந்து எம் நாட்டு உரி
ஐ வகை முறை அற அணுகி ஓர் முனி
மை வகை மொழியொடு மருட்டி நாடு எலாம்
பொய் வகை அழிப்பது பொறுப்பவோ என்றான்

#92
தாதை நெட்டு உயிர்ப்பினோடு இரங்கி சாற்றினான்
மேதை கெட்டு இருண்டு இரு விழி கெட்டு எள்ளிய
பேதை மட்டு உண்டு என பிதற்றி பில்கிய
காதை உள்கொண்டு நீ கலங்கல் நீர்மையோ

#93
கால் திறத்து ஆடிய கலை பதாகை போல்
மால் திறத்து உரைப்பவர் வழுது கேட்கிலாய்
வேல் திறத்து அங்கண் நான் இருந்த வேலையில்
நூல் திறத்து அவர் முறை நோக்கி வாழ்த்தினேன்

#94
தம் முறை எவர்க்கும் நீர் தகுதியாய் பொது
மெய் முறை சுருதியும் வினைகள் தீர் அறத்து
அ முறை அனைத்தும் நன்று ஆக காண்டியேல்
வெம் முறை வெருளொடு வெறுத்தல் வேண்டுமோ

#95
பூ நக புள் நக புனல் செய் பொய்கை-கண்
தே நக மலர்ந்த கா சென்று அன்னான் சொலும்
பா நக உணர்வு கேட்டு அறத்தின்-பாலதோ
கூ நக இழிவு அதோ கூறு நீ என்றான்

#96
அய்ய நன்று இது என அடியை தாழ்ந்து போய்
உய்ய நன்று உகும் மறை உணர்வு அவா இலா
வெய்ய நெஞ்சு உணர்ந்த தீ வினை முடித்திட
மைய நெஞ்சு உணர்வினோன் வளனை அண்டினான்

#97
தீய உள் ஒளித்து இனியவை முகத்து-இடை தீட்டி
போய் அலர்ந்த பூம் பொழிலிடத்து அவன் வர கண்டு
தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை
ஆய யாவையும் ஆசு அற கண்டு என அறிந்தான்

#98
வரை கிடந்து இன மணி கொழித்து ஒழுகிய நதி சூழ்
கரை கிடந்த மா வழை மகிள் சண்பகம் கமழ் கா
நிரை கிடந்தவர்க்கு உரைத்து என நாவகன் நெஞ்சில்
புரை கிடந்தவை பற்றி மா முனி இவை புகன்றான்

#99
உயிர் ஒன்றே உடையீர் என உயிர் உணும் கூற்றாம்
செயிர் ஒன்றே முழுதும் ஒருவு-மின் வித்திய செயிரே
துயர் ஒன்றே விளைத்து அடும் என சூழ்ந்துளி துகள் தன்
பெயர் ஒன்றே பெறல் அஞ்சுவர் பெருந்தகை நீரார்

#100
அண்டம் மீ வரை நெற்றியில் பனி இ அறமே
மண்ட வாழ்பவர் மருள ஓர் கேடு இலை அன்னார்
உண்ட நஞ்சும் அ உயிர்க்கு அமுது ஆகி மற்று அமிர்தம்
கொண்ட தீயவர்க்கு அஃது உயிர் கொலும் விடம் ஆம்-ஆல்

#101
பொன்றும் யாவுமே புரை செயும் பகை ஒன்றே பொன்றா
சென்று சென்று அடி சென்ற தன் நிழல் என நீங்காது
இன்று தீமையை இவன் பிறர்க்கு எண்ணிய தன்மைத்து
அன்று தீமையே அவன் தனக்கு அமைவது காண்பான்

#102
தீய காஞ்சிரம் நட்ட பின் தீம் கனி கொயவோ
தீய வித்தினர் தீயவை விளைவது காண்பார்
தீய செய்தனர் தீயவர் என்பவர் மருளா
தீய பட்டனர் தேவர் ஒத்தார் எனப்படுவார்

#103
அடும் செம் தீயினும் அட்ட அகில் மணம் இனிது அன்றோ
சுடும் செம் தீயினும் சுட்டு ஒளிர் நிதி இனிது அன்றோ
கொடும் செம் தீ என கொதித்து இன்னா ஆக்கலின் இனிது ஆம்
படும் செம் தீ என பாசறை படுவதே என்றான்

#104
இனைய சாற்றலும் எரி நெஞ்சான் வியப்புற நினைத்தது
அனைய கேட்டலும் அயர்ந்த பின் தீயவா தீய
புனைய ஆக்கலே புண்ணியம் என்று உளம் புழுங்கி
முனைய ஓதினான் முனிவனும் மீண்டு இவை மொழிந்தான்

#105
மெய் நினைந்து பொய் விளைத்து எழுதிய படம் போல
மை வளர்ந்து உள வஞ்சகர் மெய் ஒன்றை ஊன்றி
பொய் விளைந்த சொல் பொருந்தி உள் கொள்வதும் வேண்டாம்
மொய் மலிந்துளி முழுது ஒன்னார் இறைஞ்சிய வேலோய்

#106
நிலத்தின் தன்மையால் நீர் திரிந்து அனைய பற்று உளம் தன்
புலத்தின் தன்மையால் புறத்து அவை தோன்றலால் அன்பின்
நலத்தின் தன்மையால் தீயவும் நல்ல ஆம் பகை கொள்
சலத்தின் தன்மையால் நல்லவும் தீய ஆம் சகத்தே

#107
கண் புறத்து எழில் காட்டிய காஞ்சிரம் இனிதோ
முள் புறத்தில் உள் முதிர் சுவை சுளை பலா இனிதோ
விண் புறத்து எரி மின் ஒளி விரும்பிலன் ஆகி
உள் புறத்து நல்லவையும் அல்லவையும் என்று உணர்வாய்

#108
செய்த தீமையே செய்தவர் மேல் வரும் தன்மை
பொய் தகாது என பொன் மணி வீங்கிய தோளாய்
எய்த ஓர்ந்தவை இழுக்கு என விடுதி என்று உரைத்தான்
மை தகா மறை வளர் கொழுகொம்பு அனை நீரான்

#109
விண்டு என வீங்கு தோளான் வினா ஒளித்து உணர்ந்த யாவும்
கண்டு என முனிவன் சொல்ல கனன்று உளம் புழுங்க செம் தீ
உண்டு என வியப்பின் கேட்ப உடைந்து என நாணி பின் உள்
கிண்டு என எழுந்த சீற்றம் கிளைத்து எரி இடியின் பாய்ந்தான்

#110
பண் ஒன்று பாடல் ஒன்ற பகர்வு ஒன்றும் செய்கை நன்றே
புண் ஒன்றுபடல் நன்று என்றாய் புண் படுக என்ன எள்ளி
கண் ஒன்று கதத்தின் சீறி கன்னம் மேல் புடைத்தான் அன்னான்
விண் ஒன்று மதியின் சூசை மிக மகிழ்ந்து இலங்கி நின்றான்

#111
தனி கதிர் உணர்வின் மிக்கோன் தயை உறீஇ மகிழ நோக்கி
பனி கதிர் பகையாம் கஞ்சம் படுத்திய முகம் செய் வில்லால்
நுனி கதிர் சுரக்கும் வேலோன் நொந்து உளம் தெளிய தேறி
துனி கதிர் ஒழிய வீழ்ந்து துணை அடி தொழுது சொன்னான்

#112
துய் பட இனிய சொல்லால் சுட்டிய உணர்வில் தேற்றேன்
பொய்ப்பட உரைக்கின்றோரும் பொருந்து நூல் எளிய சொல்வார்
மைப்பட இவண் நான் செய்த வடுவினை பொறுத்த சால்பே
மெய்ப்பட உரைத்த வேத விதி என தெளிய கண்டேன்

#113
வில் பொறா வாவல் எல்லை விழுங்குவது உணர்ந்ததே போல்
சொல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து இமிர் இ வேதத்து
எல் பொறா பேதை நானும் இகன்று அதை ஒழித்தல் ஓர்ந்தேன்
அல் பொறாது இலங்கும் நின்-தன் அருளினால் உணர்வு உற்றேனே

#114
நாவலின் நிழல் செய் இன்ன நாடு அலால் அறியா வேற்று
காவலின் நாட்டில் உள்ள கலை நலம் உளத்தில் எள்ளி
பூவலில் நின்ற மீன் போல் பொலி உணர்வு இன்றி பாவ
கூவலில் நின்ற என்னை குணுங்கு இனம் மருட்டிற்று அன்றோ

#115
கரை கொன்ற கடலின் பொங்கி கதத்து உண்மை உணரா பாலால்
நிரை கொன்ற மனத்தில் ஓர்ந்த நினைவு எலாம் நிரையின் கண்டு
புரை கொன்ற தவத்தின் மிக்கோய் புகன்ற போது உளத்தின் நாணில்
வரை கொன்ற திண்ண மார்பில வடு அற உருகாது ஆனேன்

#116
உணங்கிய மரத்தில் செம் தீ உடன்று என கொண்ட நாணத்து
அணங்கிய நெஞ்சில் சீற்றம் அழன்று உனை புடைத்த-கால் நீ
வணங்கிய தன்மை காட்டும் மாட்சி கண்டு ஒருங்கு பாவத்து
இணங்கிய முறை கல்லூரி என் வழி ஒழிய தேர்ந்தேன்

#117
காமமே அன்றி நல் நூல் கல்வி ஒன்று அறியா பூண் செய்
தாமமே அன்றி வாய்ந்த தகவு இல பாவி நானே
வீமமே இன்றி உற்ற வினை அறுத்து அளித்தி மற்று உன்
நாமமே அன்றி நானும் நயப்ப ஒன்று உரைக்கல் தேற்றேன்

#118
என்று இவை உணர்வின் சொல்லோடு எரி வினை அவிப்ப கண்ணீர்
குன்று இயை அருவி போல கூர்ந்து எழுந்து ஒழுகிற்று ஆகி
சென்று இயை அன்பும் மார்பும் சென்று ஒன்ற தழுவி சூசை
அன்று இயை எவரும் தம்முள் அதிசயித்து உவப்பின் மிக்கார்

#119
தெளி வளர் அழல் இட்டு ஊதி செற்ற இரும்பு இரத பாலால்
ஒளி வளர் பசும்பொன் ஆதல் உண்டு என உரையின் கேட்டோம்
இளி வளர் கொடிய நீரான் இன்று நல் பொறையின் பாலால்
களி வளர் தருமன் ஆதல் கண்டு அது தெளிந்தோம் என்றார்

#120
தொல் வினை என்னும் சூலால் தொடர் வினை தளிர்த்து விம்மும்
புல் வினை புல்லா நோற்ற புலமையோன் ஒருவன் செய்த
வல் வினை உலகம் யாவும் வளம் பெற பயத்தது அன்றோ
நல் வினை விளைவு காண்-மின் நயப்ப என்று எவரும் வாழ்ந்தார்

#121
குடம் புரை இரு புயம் குழைத்த சாந்தினை
நடம் புரை அசை குழை நக்கி வில் செய
படம் புரை அருள் எழில் பரப்பினாற்கு இவை
வடம் புரை சுருதி சூழ் வளன் விளம்பினான்

#122
நாடலே அரும் தவ நலத்தை கண்டு நீ
நீடலே புகழ்வது நீர்மையோ இனிது
ஆடலே முடவற்கும் இனியது ஆம் அன்றோ
கோடலே குணம் என குறிப்பின் தேறுவாய்

#123
மின் நிழல் என மிளிர்ந்து ஒழி வெறுக்கை செய்
கொன் நிழல் வெறுத்து அறம் கொண்டு நின்றியேல்
நின் நிழல் என நினை இறைவன் நீங்கு இலாது
இன் நிழல் இயற்றி நீ இனிதில் வாழ்க என்றான்

#124
படைப்பதற்கு அரிய நல் பரிவின் தாதையும்
கிடைப்பதற்கு அரியது ஓர் பொருள் கிடைத்து எனா
உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு உளத்து
அடைப்பதற்கு அரிய அன்பு அருளை காட்டினான்

#125
கழீஇயின மணி என கசடு அற்று ஆர் அருள்
தழீஇயின நாவகன் தயங்கி அ நகர்க்கு
எழீஇயின திரு விளக்கு என நின்று ஏத்தினார்
குழீஇயின நலோர் எலாம் குழாம் குழாம் கொடே

#126
வேல் முகத்து ஒத்த நல் வீர நாவகன்
நூல் முகத்து ஒத்து என நோக்கி வாமனும்
தேன் முகத்து அலர்ந்த நெஞ்சு உவப்ப சேர்ந்து தாம்
வான் முகத்து இரு சுடர் மருள தோன்றினார்

#127
கேத காரணத்து இவை சுரமி கேட்டலின்
நாத கார் இடித்து என நைந்து அரற்றினாள்
நீத காதலின் மிகு நீர நாவகா
ஆ தகாது இது என அகடு அதுக்கினாள்

#128
தீய்ந்த ஓர் கறல் என கருகி சிந்தை கெட்டு
ஆய்ந்த ஓர் நிலை பயன் இதோ என்று ஆர்த்து உணா
காய்ந்த ஓர் சுவா என தனை கடித்து அழல்
தோய்ந்த ஓர் அரவு என சுருண்டு விம்மினாள்

#129
தே இழுக்கு உற இவன் சென்று யாவரும்
பூ இழுக்கு உற உளம் பொறுப்பதோ எனா
நாவு இழுத்து இறந்து எரி நரகில் தான் தொழும்
ஆவி இழுக்கு இடும் குணுங்கு உவப்ப மூழ்கினாள்

#130
தீயவை உணர்ந்தனள் தீய உண்டு எரி
போய் அவை புகழ்ந்த நூல் புதைப்ப உள்ளிய
வாய் அவை வளர் மறை வழங்கிற்று ஆயதே
தூயவை தூய வாய் துளங்கும் பீடையால்
மேல்

@30 மீட்சிப் படலம்


#1
ஏழ்பட வருடம் இவ்வாறு இயல் பட ஒழுகிற்று ஆகி
போழ் பட கல்லும் செம் தீ புழுங்கிய வனம் போல் பாவத்து
ஆழ் பட அழன்ற அ நாடு ஆரண அருவி பாய
கேழ் பட மலர்ந்த சோலை கிழமையின் எழுவிற்று அன்றோ

#2
தீவிற்று ஆய் அலைந்த முந்நீர் திரையினுள் அலைவு இலாதான்
ஓவிற்று ஆய் ஓவல் செய்தார்க்கு உளத்து நைந்து அருளின் பேணி
கா இற்றாய் எவர்க்கும் நீழல் காத்த மா முனிவன் தானே
ஆவிற்று ஆய் தெய்வ மைந்தன் அருள் நிழற்கு ஒடுங்கி வாழ்வான்

#3
உள் உற விண்ணோர்க்கு ஆற்றா உயர் அருள் கடல் ஆம் மைந்தன்
தெள் உற அகன்ற மார்பில் சித முடி தாயும் தானும்
அள் உற அன்பின் மூழ்கி ஆங்கு அவர் அருந்து ஞானம்
எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை

#4
கூர்த்து உராய் உவப்பின் மூழ்கி கொழுந்தவன் உண்ட ஞானம்
போர்த்து உராய் உமிழ்வதே போல் பெரும் பயன் எவர்க்கும் ஆக
சீர்த்து உராய் நாட்கள்-தோறும் தே மொழி வாயால் கூற
நீர்த்து உராய் எழீஇய அ நாடு நிகர்_இல கேழ்த்தது அம்மா

#5
வினை பகை ஒழிந்த யாரும் மெய் மறை விளைவு காண
எனை பகல்-தோறும் வீயா இன்பம் உற்று உவந்த போழ்தில்
சுனை பகை கோடை முற்றி துதைந்த பைம் கூழ் காய்ந்து அன்ன
முனை பகை தன்மைத்து அன்னார் முரிய உற்றது சொல்வாம்-ஆல்

#6
வான் இருந்து எவணும் ஆள்வோன் வளனிடத்து ஏவுகின்ற
தேன் இருந்து அலர் சொல் வானோன் திருமகன் கொல்ல ஓர்ந்தான்
தான் இருந்து ஒழிந்தான் ஈண்டே தாயொடு மகவும் கூட்டி
கான் இருந்து அலர் கோலோய் முன் கடிந்த நாடு அடைதி என்றான்

#7
பணி மொழி பணிந்து தாயும் பாலனும் உறையுள் சென்று
மணி மொழி தேவ தூது வகுத்தவை வளனே கூற
அணி மொழி இளவல் நன்று என்று அயனம் ஓர்ந்து எவர்க்கும் கூறா
துணி மொழி உறுதியாக சொல்லினான் மது பெய் கோலான்

#8
வரை என துயரில் போல்-மின் வாருதி நாடி ஓடும்
திரை என இறைவன் சேர்-மின் தீ என அகல்-மின் தீய
நுரை என வாழ்க்கை காண்-மின் நோய் என உயிரை கா-மின்
கரை என கதியை வெஃகு-மின் கசடு அறு நெறி இது என்றான்

#9
பண் தீண்டில் ஏங்குதல் போல் அன்பும் பூசல் பரவும் எனா
கண் தீண்டி மருட்டிய கார் இரவின் நாப்பண் கரந்தது போல்
விண் தீண்டி ஆடு கொடி மாட நல் ஊர் விட்டு அகன்று
புண் தீண்டி ஆற்றும் மருந்து ஒத்த நீரார் போதல் உற்றார்

#10
நதி தள்ளி நீந்து அறியா சுழி பட்டார் போல் நைந்து எசித்தார்
பதி தள்ளி போவது அறிந்து அயர்வார் என்று உள் பரிந்து இரங்கி
கதி தள்ளி நடு நிற்பார் கயவர் என பின் தேறி வளன்
மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே வழி நடந்தான்

#11
ஊர் ஆழி அகன்று இவர் போம் துயர் தீ பட்டு என்று உரு சிவப்ப
நீர் ஆழி அகன்று இரவி தோன்றி மூவர் நீங்கினர் என்று
ஈர் ஆழி உள் கவிழ்ந்த கலம் ஒத்து அந்தோ என்று அலறி
பேர் ஆழி ஒத்த நகர் புலம்பும் ஓதை பெரிது அன்றோ

#12
பொய் மறுத்தீர் புரை மறுத்தீர் மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள்
மை மறுத்தீர் மறை உரைத்தீர் பிள்ளையை தாய் மறுத்து என்ன
கை மறுத்தீர் போய் ஒளித்தீர் அந்தோ என்ன கை மறுத்து
மெய் மறுத்து ஈர் துயர் ஆற்றாது உயிர் நீத்து அன்ன மெய் மறந்தார்

#13
இன்று ஒளித்த சுடரொடு மு சுடராம் நீவிர் இரா இருள்-கண்
நின்று ஒளித்த திறம் என்னோ எம்-கண் தீதின் நிலை தானோ
குன்று ஒளித்த மணி ஒத்தீர் அந்தோ என்ன குழைந்து அலறி
கன்று ஒளித்த கறவை அனார் உளைந்து விம்மி கலுழ்கின்றார்

#14
வரை நாட்டி நீர் கடைந்து ஆங்கு அமுதும் நஞ்சும் வந்தன என்று
உரை நாட்டி உண்டு என முன் கதையில் கேட்டேம் ஒண் தவம் செய்
கரை நாட்டி அற கடலாம் இவர்-தம் அன்பின் கனிவு உண்டாய்
விரை நாட்டில் அகன்று இடரால் உண்டாம் நஞ்சின் விளைவு என்பார்

#15
கான் சுரக்கும் இள முல்லை நட்டு பொன்னால் கடை கோலி
வான் சுரக்கும் பனி மாலை பந்தர் முத்த மணல் பாய்த்தி
தேன் சுரக்கும் நீர் ஊட்டி வளர்த்த பூங்கா தீய்ந்து அறவோ
மீன் சுரக்கும் இரா ஒளித்து போதீர் நம்மை விட்டு என்பார்

#16
தாள் எழுந்த கஞ்சம் எஞ்ச கதிர் போய் நாளை தான் உவப்ப
கோள் எழுந்த தேர் எழுமே நீ போய் நெஞ்சும் குடைந்து அழுந்தும்
வாள் எழுந்த புழை புழுங்கும் பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு எ
நாள் எழுந்த நுமை காண கடவேம் அந்தோ நாம் என்பார்

#17
அன்பு உகுக்கும் கண்ணீரே அன்பிற்கு ஆற்றா பெரும் தளை என்று
இன்பு உகுக்கும் ஓர் இரு செல் கூறாது அந்தோ இராவு ஒளித்தீர்
துன்பு உகுக்கும் கான் துறும் கால் துணை இல் மஞ்ஞை துயர் கண்டு
நன்பு உகுக்கும் நெஞ்சு உருகி இரங்கீர்-கொல்லோ நமக்கு என்பார்

#18
கூண்டு உண்டாம் குஞ்சு அகலாது ஓம்பும் பல் புள் குலமும் கார்
கீண்டு உண்டாம் இடிக்கு அஞ்சும் பிடியை தாங்கும் கெழும் கரியும்
ஆண்டு உண்டாம் கான் துறுங்கால் காண்பீர் காண்கில் ஆதரவு அற்று
ஈண்டு உண்டாம் நமை நினை-மின் என்பார் ஆஅ தகாது என்பார்

#19
சீல நீர் கரு முகில்கள் மின்னி ஆர்த்து செய் அரவும்
நீல நீர் கடல் அரவும் எஞ்ச எஞ்சி நெடிது அழுதார்
சால் நீர் கடல் மடையை திறந்தால் போல தணந்தாரை
கோல நீர் கடலாம் அ நகர் நீத்து ஈட்டம் கொடு தொடர்ந்தார்

#20
தேன் ஆர் தெளி ஆர் திரு ஆர் மொழியார்
போனார் உயிர் பின் உடல் போவது என
கான் ஆர் வழி போவம் என கடலும்
வான் ஆர் கனமும் கலி மங்குவன

#21
மிக்கார் துயர் கண்டு அன மேன்மை இலார்
நக்கார் என முல்லைகள் நக்கு அலர
புக்கார் பொழில் தோகை மயில் புடையில்
தொக்கார் அனை அ துயர் ஆலுவன

#22
பயில் உண்ட நரம்பு இளகும் பரிசின்
மயிலும் அகவ சிறை வண்டும் அழ
அயிலும் துயர் ஆய்ந்து தகாதது என
குயிலும் குயில்கின்று குரங்குவன

#23
மயில்காள் அளிகாள் வரிகாள் சிவல்காள்
குயில்காள் கிளிகாள் கொடிகாள் உரையீர்
எயில் காள வனத்து இணை எஞ்ச நல்லோர்
வெயில் காளம் மறைந்து என மேவு இடமே

#24
வரை ஈர் புனலே மழை ஈர் வரையே
விரை ஈரம் அறா விரி பூம் தடமே
சுரை ஈர மலர் தொடை சூழ் பொழிலே
உரையீர் உயிரின் உயிர் உள் உழியே

#25
உருள் தேர் வழி ஒண் கொடி ஆடும் என
மருள் தேர் வழி அற்று மனம் தளர
அருள் தேர் வழி ஆயினரை எவணும்
பொருள் தேர் வழி தேடினர் போல் துறுவார்

#26
விண்டார் மது விள்ளிய பூம் பொழில் போய்
தண் தார் தகை தேர் தயை தாங்கிய மார்பு
உண்டார் அவர் போம் உழியோ இது என
கண்டார் கமல கழல் அம் சுவடே

#27
எல்லோ விதுவோ உடுவோ இவை ஓர்
வில்லோடு உறும் ஓர் நகையோ விரி நூல்
சொல்லோடு அடையா சுடர் செய் சிறுவன்
புல் ஓர் அடி போம் சுவடே இது என்பார்

#28
உண்மை சுருதி கொழுகொம்பு உருவாள்
பெண்மை பெரிது ஆய விளக்கு அனையாள்
தண்மை கனம் நேர் தயையாள் அவள் போய்
மண் வைத்தன மன் அடியே இது என்பார்

#29
அருள் வீங்கிய மார்பு அணி ஈர் அறனே
தெருள் வீங்கிய நூல் துறையே திரு நூல்
பொருள் வீங்கிய போதகன் ஏகி மலர்
சுருள் வீங்கிய கால் சுவடே இது என்பார்

#30
அடி காணுளி ஆர் உயிர் கண்டது என
கொடி காண் மலரும் குளிர் கொம்பர் உயர்
முடி கான் மலரும் முளி நீர் மலரும்
கடி கான் மலர் அம் கழல் மேல் அணிவார்

#31
பூ காவலன் ஆய பொலம் தவனே
நீக்காது உனை நேடிய எம் தொடர்பை
தூக்காமையினோ தொடராமையினோ
நோக்காது எமை நூக்குபு போதி என்பார்

#32
இனி யார் உயிர் தேற்றுவர் ஈர்த்து உயிர் கொல்
துனி யார் புரிவு ஓர்ந்து துடைத்திடுவார்
தனி யார் வினை வென்று தகை பெறுவார்
கனி ஆரும் இ நாடு எரி காயும் என்பார்

#33
திரை போல் இடர் வந்து திரண்டன-கால்
வரை போன்-மினிர் என்று வகுத்தனையே
நுரை போல் உயிர் பொங்க நுகர்ந்த அழற்கு
இரை போல் உருகும் கல்லும் என்று அயர்வார்

#34
அயர்வார் உரும் ஏற்றின் அரற்றினராய்
துயர்வார் இரு கண் மழை தூவி அழ
மயர்வார் மெலிவார் மனம் ஓங்கிய பின்
பெயர்வார் நசை உள் பெயரா தொடர்வார்

#35
பேர் வளர் அன்பின் மிக்கார் பிரியும்-கால் தம்மில் தேறின்
கூர் வளர் அழலை தூண்டி கொந்தல் போல் உரையில் பொங்கும்
சூர் வளர் தன்மைத்து உள்ளம் சுடும் என ஒளித்த மூவர்
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார்

#36
மாண் நெறி வளர்ந்த அன்பின் மனம் ததை அருள் மிக்கார்க்கும்
சேண் நெறி உணர்வினார்க்கும் சேண் நிலை ஆக அன்னார்
வாள் நெறி குடைந்த நெஞ்சில் வருந்தி ஆங்கு ஆய யாவும்
சேண் நெறி அகன்ற மூவர் சென்று கண்டு அன்ன கண்டார்

#37
தேன் அக மலர்ந்த கோலான் தெளி உளத்து இரங்கி ஐயா
கானகம் அன்னார் நண்ணின் காய் துயர் கா-மின் என்ன
வானகம் மிளிர் மீன் வாகை மணி முகில் ஊர்தி கொண்டு
பால் நக அருள் கொள் தெய்வ பாலனை வேண்டினானே

#38
மு சகம் முழு வெண் திங்கள் மு குடை நிழற்றி ஆளும்
எ சகம் அனைத்தும் ஏத்தும் இளவல் செய் ஆசி தன்னால்
கச்சு அகம் வீக்கினால் போல் கான் நெறி உணர்வு அற்று அன்னார்
நச்சு அகம் அமிர்தம் ஆக நய கடல் அமிழ்ந்தினாரே

#39
கரை உடைத்து அரவு உய்த்து ஓடும் கடல் கரை இட்டதே போல்
புரை உடைத்தவன் செய் ஏவல் புணர்ந்த நீள் கூலம் ஆக
திரை உடை தொடர்பின் வந்தார் திறன் உணர்கிலராய் நின்றே
உரை உடைத்து உயர்ந்த ஞானத்து ஒளி எழீஇ தேறினாரே

#40
தீயவும் நல்ல ஆமே திருவுளம் ஆக வந்தால்
தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால் என்னா
காய உள் மெலிந்த நெஞ்சார் கருத்து-இடை குளிர தேறி
பாய உள் மலி இன்பால் தம் பதி நகர் மீள்தல் சூழ்ந்தார்

#41
அம்மையே மகவே வாய்ந்த அரும் தவத்து இறைவ சூசை
நும்மையே உயிர் என்று ஆக நுதலி நும் நிழலில் வாழ்ந்த
நம்மையே அகன்று போதீர் நட்பு இடை அகலாது அன்பின்
செம்மையே பேண்-மின் என்னா சென்று மீண்டு எவரும் போனார்

#42
இ புறத்து இனையன இவரும் எல்லையின்
மு புறத்து இணை இல மூவர் எங்கணும்
ஒப்பு உற துணை இல உவகை செய்து எசித்து
அ புறத்து அமரர் சூழ் அணுகி போயினார்

#43
தீயினர் உறவு என சிறுகும் பல் நெறி
போயினர் அமரர் சூழ் புடை புடை புணர்ந்து
ஆயினர் அருத்தியோடு ஈர்_ஐயாயிரர்
தூயினர் துயர்க்கு அற தொடர்பின் போயினார்

#44
விண் உளே பிறந்தது ஓர் தளத்தின் விண்ணவர்
பின் உளே பிறந்தது ஓர் இசைகள் பாடிய
மண் உளே பிறந்தது ஓர் வடுவை மாற்றினர்
தன் உளே பிறந்தது ஓர் தடத்தின் நண்ணினார்

#45
மை கொடு குவளை கண் நோக்கி வாளிச
கை கொடு விளித்த பூம் பொய்கை கண்டுளி
பொய் கொடு மருட்டவோ என்று போயினார்
மெய் கொடு சுருதி நூல் விளைத்த விஞ்சையார்

#46
தூவி அம் சிறை அனம் தொடர் குடை செய
கூவி அம் குயில் யாழ் குளிற மஞ்ஞைகள்
ஓவியம் சிறை விரித்து உவப்பில் ஆட முன்
பூவியம் துணர் தடம் பொருந்தி போயினார்

#47
ஆவி நோய் செயும் புரை அழிக்கும் மூவர் போய்
காவி நோய் செயும் தம் கழற்கு நோய் செயா
பூவில் நோய் செயும் அளி குடைந்த பூ மது
தூவி நோய் செயும் தடம் துணரிற்று ஆயதே

#48
தனம் கிடந்து என கிளி தாங்கு இலா தினை
புனம் கிடந்தன பரப்பு அகன்று போய் துளி
கனம் கிடந்து என கரி கிடந்த காடும் போய்
வனம் கிடந்தன வழி மருவிற்று ஆயதே

#49
தீர் அரும் சிலையின் நாண் முறுக்கின் சீர்மையால்
பேர் அரும் தவத்தொடு பிறந்த ஞானம் போல்
சோர் அரும் கருத்தினோர் தொடர்ந்த தம் கதி
நேர் அரும் சுரத்து-இடை நெகிழ்வு இல் ஆயினார்

#50
நீர் முகத்து இரவி கை நீட்டி பொற்பு உற
பார் முகத்து இரவு இருள் படத்தை நீத்து என
சூர் முகத்து அழல் துயர் துடைத்து மூவர் வந்து
ஏர் முகத்து எழுந்த கான் இலங்கிற்று ஆயதே

#51
புடம் புனைந்து இரும்பு செம்பொன்னின் தன்மை ஆம்
இடம் புனைந்து இட்டது ஓர் இரதத்தால் என்பார்
தடம் புனைந்து இவர் வர தழன்ற கான் அலர்
படம் புனைந்து எழுதிய பரப்பிற்று ஆயதே

#52
சொல் திறத்து ஒரு கணத்து உலகம் தோற்றி முன்
பல் திறத்து எழில் நலம் படைத்த பான்மையால்
முன் திறத்து அழன்ற கான் மூவர் கண்டுளி
பொன் திறத்து அரிதினின் பொறித்தது ஆயதே

#53
மை மறுத்து அலர் அணி வனம் கண்டு ஆ என
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த காந்தளை
பை மறுத்து அவிழ் அரா என்று பாய் மயில்
பொய் மறுத்து இனம் நக நாணி போயதே

#54
தோகையின் எருத்து என துணர் விள் காசை கண்டு
ஆகையின் மயில் ஒளித்து ஆக உட்கு உறீஇ
ஏகையின் வண்டு கண்டு இளைய முல்லைகள்
ஓகையின் நக்கு என எயிறு உடைந்தவே

#55
மிகை உடை தகவினார் மெலிவு கண்டுளி
பகை உடை தகவு இலார் பரிசின் நக்கதோ
நகை உடைத்து உகுக்குவம் என்ன நண்ணி மென்
முகை உடைத்து உதிர்த்தன மொய்த்த வண்டு அரோ

#56
பை சுடர் மரகத பலகை பாய்த்தி மேல்
ஐ சுடர் மணி பரப்பு ஆக பைம் புல் மேல்
நொய் சுடர் அலர் தடம் நொய்து என்று ஏகினார்
மு சுடர் நடந்து என நடந்த மூவரே

#57
உள் முழுது அருள் முகத்து உகள தோற்றிய
விண் முழுது இறைஞ்சு எழில் காண வேட்கையால்
கண் முழுது உடல் பெற கலாப மஞ்ஞைகள்
தண் முழுது அலர்ந்த கான் ததும்பி ஆடும்-ஆல்

#58
கற்று என தகாது உரைத்து அன்பு கை கொள
பற்று என பொருளினை பற்றும் பூரியர்
அற்று என தும்பிகள் அலர்-கண் நட்பினை
சொற்று என கனைந்து சூழ் துணர் குடைந்தவே

#59
சாற்றின உரைகள் பொய்த்து அன்பின் தன்மையால்
போற்றின பொருள் அற புலம்பும் புல்லர் போல்
ஊற்று என வடிந்த தேன் உண்டு மாறலின்
தூற்றின அருகு அளி துவைப்ப போயினார்

#60
வல் உரு தகவினார் கடந்த வாய் எலாம்
தொல் உரு தகவனம் சுட அழன்றது-ஆல்
வில் உரு கணவனை விழித்த கண்ணினால்
பல் உரு காண்டு இல பாவை பான்மையே

#61
நண்பு அகம் மலர்ந்த மூவா நடு வனம் சென்று ஓர் நாளில்
ஒண் பகல் நெற்றி போதில் உயர் திடர் அகட்டில் வேய்ந்த
சண்பக நிழலின் வைகி தரணி ஆள் இளவல் நல் யாழ்
பண்பு அகல் உரை கொண்டு அம் பூ பதும வாய் மலர்ந்து சொன்னான்

#62
நேர் அலர் மறுத்து செம் தீ நிறைகினும் பல கால் வைகி
நேர் அலர் வனத்தில் நாமே நிகழ்ந்து அடி வைத்த பாலால்
நேரலர் நேரும் நேரா நீள் நிதி துஞ்சும் கோயில்
நேர் அலர் இ கான் துஞ்சும் நெடும் தவத்து அறங்கள் தாமே

#63
பேர் நலம் பொறித்த கான தேன் பெயர்க்கும் ஓர் ஊற்றது ஆகி
ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி
பார் நலம் துறந்து இங்கு ஆர்ந்த படிவர் எண் இன்றி வைகி
சேர் நலம் விரும்பி வானோர் சென்று வான் ஒக்கும் கானே

#64
கா உளன் ஆகி என் மேல் கருத்தில் வான் குடியன் வேத
நா உளன் தவத்தின் வாய்ந்த நல்வு உளன் வினை நீர் நீந்தி
மேவு உளன் வளர்ந்து எ நாளும் வேண்டும் ஊண் காகம் உய்ப்ப
பாவுளன் என்பான் நீட பறம்பு அடி முழை உள் வாழ்வான்

#65
இவாவு இயல் அடியின் நீழல் என அடும் கசடு நீங்கா
அவா இயல் அரிந்த தன்மைத்து அமரர் ஒத்து என கடாம் பெய்
உவா இயல் முதல் பல் மாவும் உவந்து அவற்கு ஏவல் செய்ய
தவா இயல் முனிவர்க்கு எல்லாம் தலைவன் என்று ஒளி மிக்கு ஆவான்

#66
வேள் அரிது அமர் போர் வென்று வியன்ற கான் எய்தி பேய்கள்
கோள் அரி உழுவை மற்ற கொடிய மா உருவில் தோன்றி
நீள் அரிது யுத்தத்து எஞ்சா நெடிய அம் மலை-கண் நோன்பின்
வாள் அரிது ஏந்தி வெல்வான் வரம் கொள் அந்தோனி என்பான்

#67
நீரின்-பால் இரவி மூழ்கி நினைத்தது ஓர் தியானம் விள்ளா
தேரின்-பால் இரவி மீண்டும் தீர்கிலன் உணர்ந்த காட்சி
காரின்-பால் உயர்ந்த வீட்டில் கனிந்து உறை காட்சி ஒப்ப
பாரின்-பால் வரை முகட்டு ஓர் படர் விளக்கு ஆக நிற்பான்

#68
மீ இரவு அரசன் சூழ்ந்த மீன் என முனிவர் ஓர் மூ_ஆயிரர்
தொடர நெஞ்சத்து அவா அற தணித்து நிற்ப
பாயிர உரையின் நாதன் பார்த்து அவண் இலரியோனே
தேய் இரவு அரசின் வெற்றி சிலையின் நாண் முறுக்கின் போல்வான்

#69
உரி வளர் தவத்தின் சால்பின் உறுத்த மெய் உருவம் தானே
எரி வளர் உலை கொன்று ஈன்ற இலை பலியாக மாறி
அரி வளர் அங்கண் கொன்ற ஐம்பொறி புதைத்து பல்-கால்
சொரி வளர் வானும் காணா சோண மா முனிவன் நோற்பான்

#70
உற பகை நுழை வாய் என்று ஐந்து உள் பகை தவமே காக்க
புற பகை பகழி தாங்கும் பொன் பரம் ஆக சீலம்
பெற பகை செகுக்கும் வை வாள் பெற்றியின் விரதம் ஓச்சி
அற பகை வெறியை வென்று ஆங்கு அயோதரன் நெடிது நோற்பான்

#71
அவா என மதத்தின் சீற்றத்து அறிவு என் எ பாகன் வீழ்த்த
உவா என உடலை கைக்கொண்டு ஊக்கம் நல் தோட்டி மாற்றி
இவா அன தவ கவட்டை இட்டு இறா விரத தூணின்
மவாவன முனிவன் சேர்த்தி வானமும் வியப்ப செய்வான்

#72
வீட்டு அரு நாட்டிற்கு ஏற்ற விழு பொருள் ஆக நாடி
ஈட்டு அரும் சீல குப்பை ஏற்றி நல் உயிரோடு ஆக்கை
பூட்டு அரும் ஏராய் பூட்டி புரை நசை சேற்றுள் செல்லா
வாட்டு அரும் தவத்தின் பண்டி மதித்தகன் கதியில் சேர்ப்பான்

#73
தேன் நிமிர் முல்லையாக திருந்து அற தொகுதி நட்டு
நூல் நிமிர் தவத்தின் காத்த நொறில் பொறி வேலி கோலி
மேல் நிமிர் ஒழுக்க நீரை விட்டு அருள் மணலை பாய்த்தி
வான் நிமிர் உலகில் நாறும் வனத்தின் ஆங்கு அசோரன் பூப்பான்

#74
ஆற்றிய தவ செம் தீயில் ஐம்பொறி இரும்பு இட்டு ஊதி
ஏற்றிய தெருளின் ஞான இரதம் இட்டு ஆய பைம்பொன்
தேற்றிய மறை அச்சு ஆக சீல நல் மணிகள் சேர்த்தி
போற்றிய தேவ மார்பில் புரோதரன் அணி பூண் ஆவான்

#75
மீன் என விளங்கி துஞ்சும் மின் என வாழ்க்கை நோக்கி
யான் எனது என்னும் பற்றல் யாவும் அற்று எண் ஒன்று இன்றி
வான் என விளங்க இ கான் வருந்தி என் அடியை வைத்தேன்
நான் என உணர்ந்து மொய்ப்பார் நல் தவத்து உயர்ந்த நீரார்

#76
போர் பொருள் பலவும் நாடி போதல் ஆண் தொழிலாய் போகில்
ஏர் பொருள் நாணம் நாடு இல் இருத்தல் பெண் தொழில் அது ஆகி
தேர் பொருள் அறங்கள் நாடி செய்த ஆண் துறவின் ஊங்கும்
பேர் பொருள் வாழ்க்கை நாடா பெண் துறவு அரியது அன்றோ

#77
தீயவும் நலமும் உள்ளின் தேறிய பெண்ணின் தேறல்
ஆயவும் அரிதே முன்னர் அழிந்த நாண் வேலி தாவி
ஏயவும் காமத்து ஆழ்ந்த எசிசிய மரியாள் பின்னர்
தூயவும் அரிதில் ஓர்ந்து துறந்து இவண் நெடு நாள் நிற்பாள்

#78
கண் மையின் மற்று யாரும் கண்ட தன் பிழை காண்பார் ஆர்
நுண்மையின் உற்ற பாவம் நுதலி உள் தானே கண்ட
உண்மையின் உணர்ந்த ஊக்கம் உளத்து இறகு ஆக எய்தி
பெண்மையின் போர்வை நாணம் பிரிவு இலள் போர்த்து நிற்பாள்

#79
காமமே பறவை தேர் மேல் கசடு எனும் பாலை சேர்ந்தாள்
வீமமே பறவை தேர் மேல் விளை தவ குறிஞ்சி ஞான
வாமமே பறவை தேர் மேல் வளர் அற முல்லை சேர்ந்து என்
நாமமே பறவை தேர் மேல் நயப்ப வான் நாட்டை சேர்வாள்

#80
இனைவரும் பலரும் எண்_இல் ஈட்டமும் வேறும் ஆகி
நனை வரும் பொழிலின் நிற்பார் நயப்பொடு நெடுங்கால் எஞ்சா
கனை வரும் திரண்ட தீயின் கனன்ற கான் நோற்று ஈங்கு என்னை
அனைவரும் புகழும் ஓதை அலையும் நீல் முகிலும் ஆற்றா

#81
துறவினால் உடலின் ஆக்கை துறந்தது ஓர் உயிர்கள் ஒப்பார்
உறவினால் அன்பின் மிக்கோர் உயிர்க்கு எலாம் உடல்கள் ஒப்பார்
அறவினா எழீஇய தன்மைத்து அருள் மலி அமரர் ஒப்பார்
நறவினால் அலர்ந்த கானும் நலத்தில் வான் உலகு ஒப்பு ஆமே

#82
உள்ளிய தவ நவ்வு ஏறி ஊக்கம் நீள் மரத்தை நாட்டி
விள்ளிய அன்பும் உட்கும் வியன் இரு பாயும் பாய்த்தி
தெள்ளிய வர கால் வீச தியானம் மீகாமன் ஆக
அள்ளிய வினை நீர் ஈர்ந்து ஊர்ந்து அரிதில் வீட்டு உலகில் சேர்வார்

#83
வவ்விய தவம் கெட்டு அ மா மரக்கலம் கவிழ்ந்ததே போல்
அவ்விய முந்நீர் மூழ்கி அழுந்துவர் பலர் இவர்க்குள்
கவ்விய உணர்வின் தெப்பம் கண்ணின் நீர் கடலை நீந்தி
செவ்விய கதியின் வீட்டை சேர்வர் ஓர் இருவர் என்றான்

#84
மெய் குடத்து அமிர்து உண்டு அன்ன விரித்த சொல் செவியின் மாந்தி
பை குடத்து அனைய தீயார் பான்மை என்றாலும் சுட்ட
அ குடத்து அழிவு தீர்த்தல் அரிது என தவம் நீத்தாரும்
இ குடத்து அனைய தேற்றார் என்றனன் மது பெய் கோலான்

#85
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து அணி உரு கொடு அமரர் கோ கணம்
வரைத்து அன குரு கதிர் இரவி நீர் கடல் மறுத்து எழ உடு கணம் விழுவ போல் திரை
இரைத்தன கடல் கலி மெலிய ஆர்த்து உடல் எடுத்து உலகு அளித்தவன் தொழுது சாற்றினார்

#86
தகை தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு தளிர்த்தன திரு தகு நகரின் வாழ்க்கையும்
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி
மிகை தகு தலத்து உரு வெருவு காட்டினும் விளைத்தன வரத்து அருள் மலிய வீட்டு உயர்
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ

#87
கொலை படு செரு படை கொடுமை போல் கொலை குணித்து உயிர் செகுத்து அன பொறிகள் ஆக்கிய
உலை படு நெருப்பினும் அழலு வேட்கையை உறுத்திய தவத்தினோடு அவிய மாற்றலின்
நிலை படு வனத்து அழல் திரளும் மாற்றுபு நிரை பட அற தொகை வளரும் மாட்சியோடு
இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ

#88
உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள் ஒளி கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப
எடுத்தன மலர் பத நலம் இது ஆய் திரள் இருட்டு இரவு ஒளி பகல் அனைய நீர்த்தலும்
கடுத்தன பொறி தழல் குளிர மீட்டலும் கடுத்து அடும் விடத்தினை அமிர்தம் ஆக்கலும்
விடுத்தன கடல் திரை நிலையின் வாய்த்தலும் விருப்பு எழ அடுத்த நின் அடியின் ஆக்கமே

#89
விதுப்பட உருப்படும் அமரர் பா தொடை விளைத்து இவை இசைத்து அடி தொழுது வாழ்த்துளி
சதுப்பட வகுப்பொடு பரவு அது ஆய் பல சதத்து அணி ஒருப்பட எம வினா பட
புதுப்பட வனப்பொடும் அரிதில் ஆக்கிய புழை குழல் குரல் கலம் உளரி வாய்த்தன
மதுப்பட இசைப்படும் இனிய பா புகழ் வகுத்தனர் துதித்தனர் தொழுது வாழ்த்தினார்

#90
வலித்தன கல குரல் தொனிகள் மாற்றிட மலர் துறை அடுத்து அளி இனிதில் ஆர்த்தலும்
ஒலித்தன மட குயில் இசைகள் நீர்த்தலும் ஒளி சிறை புடைத்து எனை பறவை பார்த்தலும்
பொலித்தன விழி தழை விரிய நோக்கிய பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ
கலித்தன இடை-தொறும் உவமை நீக்கிய களிப்பொடு வனப்பு எழு வனம் அது ஆக்கமே

#91
எழுக என்றனன் ஏழ் உலகு ஆள்பவன்
மெழுக விட்டு அன மென் மலர் பூம் தடம்
ஒழுக மூவரும் உள் உவப்பின் கடல்
முழுக ஏகுபு மொய் வனம் நீங்கினார்

#92
நீங்கினார் என தம்மை நினைத்திலார்
ஏங்கி ஆகுல தீயில் எரிந்து என
பாங்கினார் இவர் பாதம் அகன்ற கான்
வீங்கி ஆர் அழல் தொல்லையின் மேய்ந்ததே

#93
நெட்டு இடை தடம் பற்பல நீந்தினர்
மொட்டு-இடை கனை வண்டு இனம் மொய்த்த தண்
மட்டு-இடை குளிர் காட்டினுள் வான் கதிர்
பட்டு இடை கடல் பாய்ந்து என போயினார்

#94
பகையது உள் என பாந்தளின் செல்வு என
நகைய மின் என நங்கையர் நெஞ்சு என
தகையது ஓர் நெறி செம்மை தகாது உறும்
திகை அது எய்தினர் செம்மை உளத்தினார்

#95
தேம் கொள் பூ மலி நீள் திமிசு உச்சி மேல்
தூங்கு ஒள் வாவல் இறால் அற தூய் மடல்
ஓங்கு ஒள் பூகம் நல் முத்து உதிர் ஓங்கலை
தாம் கொள தடம் சாய்ந்து அருகு அண்மினார்

#96
ஆலம் விற்பன கண் பொது ஆட்டியார்
ஞாலம் விற்பன வாய் துகிர் நட்பு என
ஏலம் விற்பன வெற்பு அடி ஈட்டிய
கோலம் விற்பன காஞ்சிர கொள்கையே

#97
வல அகம் கிரி வைத்து நடந்து போய்
கலவ மஞ்ஞை களிப்புற தீம் குழல்
உலவ ஆயர் நிரை கொடு உழை குலம்
குலவ முல்லை நிலம் கொள ஏகினார்

#98
கரவ நெஞ்சு உணர் காமம் ஓர் மூரலே
பரவ காட்டின பான்மையில் அங்கணில்
குரவம் நீண்ட குடங்கை கரந்த பூ
விரவ நக்க முல்லை விரை காட்டும்-ஆல்

#99
முகை அணிந்து அளி மொய் புவி கூந்தலின்
வகை அணிந்த முல்லை பினர் மற்று அதன்
தகை அணிந்த முகம் தரும் யூதர் தம்
திகை அணிந்த சிலம்பு எதிர் எய்தினார்

#100
புக்க யாவரும் போக்கு அரிதாய் எழில்
தக்கது ஓர் பொழில் சாய்ந்து அடி நோய் அற
மிக்க தேன் துளி செய் நளிர் மேவி வந்து
ஒக்க வெண் மணல் திண்ணையில் ஓங்கினார்

#101
பொதிர் தரும் பூம் தரு பொலிந்து நாறி ஆங்கு
எதிர் தரும் மோரியம் என்னும் வெற்பு கண்டு
உதிர் தரும் மலர் மது ஒப்ப கண்ணின் நீர்
கதிர் தரும் முகத்து உக இளவல் காட்டினான்

#102
தீ உமிழ் உலையில் அம் கோதை தீந்து என
நோய் உமிழ் நீர் என நுதலி நொந்த தாய்
வீ உமிழ் தேனினும் விழைந்த தீம் சொலாய்
நீ உமிழ் நீர் உக நிலைமை யாது என்றாள்

#103
மின்னிய கார் குழல் தாங்கி வீழ் புனல்
துன்னிய கலை என சூட்டி ஆங்கு எதிர்
கன்னிய திரு மலை காண்-மின் அ மலை
உன்னிய திறத்து அழுது உயிர் நொந்தேன் என்றான்

#104
நொய்ய ஆய் மது மலர் நொதுத்த கோலினான்
வெய்ய ஆய் முகில் தவழ் வெற்பில் யாது என
உய்ய வாய் நமக்கு இட உதித்த நாயகன்
செய்ய வாய் அம்புயம் திறந்து செப்பினான்

#105
தேன் நலம் தோய் தயை சேர்த்தி ஆபிராம்
கான் நலம் தோய் தவத்து ஈன்ற காதலன்
வான் நலம் தோய் மகிழ்வு உய்த்த மைந்தன் ஆய்
நால் நலம் தோய் திரு நகுலன் என்பவே

#106
கலை புறங்கண்ட சேய் கனி வளர்ந்த பின்
கொலை புறங்கண்ட வாள் கொண்டு கொல் என
அலை புறங்கண்ட நோய் தாதைக்கு ஆண்டகை
உலை புறங்கண்ட தீ ஒப்ப செப்பினான்

#107
அ பணி உயிர் அறுத்து அருந்திற்று ஆயினும்
வெப்பு அணி பணி பணிந்து இயற்ற வெய்து என
இ பணி இல்லவட்கு இசைக்கு இலா ஆபிரான்
செப்பு அணி மலை மகன் சேர்த்தி நாடினான்

#108
நாக மேல் ஏறினர் நாதற்கு அ பலி
ஆக மேல் இருவர் ஓர் பீடம் ஆக்கினர்
வேக வேல் விறகு அழல் மெய்யன் ஏந்துபு
சாகவே பலி எவண் என்று சாற்றினான்

#109
பொன்னையே காட்டிய தழலை போன்று நோய்
தன்னையே காட்டிய தருமன் இ பலிக்கு
உன்னையே காட்டினன் என்று உடை பிதா
மின்னையே காட்டிய மகனை விள்ளினான்

#110
அயிர் தந்தால் உளம் அறுத்து அமுங்க கைப்பு உறும்
துயர் தந்தால் அரிய ஓர் தொடர்பை தோற்றுவித்து
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ
அயர் தந்தாய் என மகன் வலித்து சொல்லினான்

#111
தாதை பெய் கண் மழை ஓம்பி தாள் மிசை
கோதை பெய்து இறைஞ்சி என் குறை பொறுப்ப என்று
ஓதை பெய் முகில் அறும் உச்சி பீட மேல்
மேதை பெய் திறத்து எழீஇ விழு கை கூப்பினான்

#112
செவ்விய திரு உளம் என்று தேறி உள்
அவ்வியம் அறுத்து அரிது ஓங்கும் ஆபிராம்
கவ்விய சிகை தலை கவிழ்ந்து வீழ்ந்து அற
வவ்விய வாள் கொடு மகனை வீசினான்

#113
வீசின வாளொடு வினை கை தாங்குபு
கூசின உலகு எலாம் களிப்ப கோது அறுத்து
ஏசு இல மகிழ்வு உறல் இருவர் சால்பு என
ஆசியை இறைவன் அன்று அளவு_இல் நல்கினான்

#114
மன் உயிர் அளிப்ப நான் மற்று ஓர் வெற்பு மேல்
என் உயிர் அளிப்பல் என்று இவை அங்கு ஆயவே
பின் உயிர் அளிக்கும்-கால் பெற்று அலாது எனக்கு
இன் உயிர் இலை என அழுது இயம்பினான்

#115
கரை கொன்ற தயை கண்டு கலுழ்ந்து இரங்கி தவத்து இறைவன்
புரை கொன்ற அ இருவர் புணர் துணிவே சால்பு என்றால்
நிரை கொன்ற மன் உயிர்கள் நீ அளிப்ப இறப்பான் ஏன்
திரை கொன்ற அருள் விளைக்கும் திரு வல்லோய் என்று அழுதான்

#116
துப்பும் காய் எரி என்றால் சுடும்-கொல்லோ சொற்றிய ஓர்
ஒப்பும் காட்டிய பொருளும் ஒன்று எனவோ அவன் நிகராய்
தப்பும் காசினி அளிக்க சாகுதல் என்-பால் என்ன
செப்பும்-கால் எமக்கு இரங்கி திரு மைந்தன் மீண்டு உரைத்தான்

#117
அ நாளும் வந்து ஒழிய அக மகிழ்வு ஈங்கு எனக்கு உண்டோ
பல் நாளும் நான் இறப்ப பற்றிய நீள் மரம்-தன்னை
இ நாளும் காணாதால் இடர்க்கு எல்லை இலை என்றான்
பின் நாளும் துணை அற்று பெருகு தயை கடல் அன்னோன்

#118
மண் விளக்கும் சுடர் அன்னோன் வருத்தம் அற வானவர்-தம்
விண் விளக்கும் கதிர் திரட்டி மேல் வனைந்த ஓர் சிலுவை
கண் விளக்கும் பகலினும் செம் கதிர் பரப்ப காட்டினர்-ஆல்
பண் விளக்கும் தே மொழியான் பரிவு அற்று உள் உவந்து உரைத்தான்

#119
ஏர் அணியே என் அன்பே என் அன்பிற்கு இரதம் இதே
சீர் அணியே உயர் வீட்டை திறக்கும் கோல் இதே இன்பத்து
தார் அணியே எங்கணும் நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே
பேர் அணியே எனது உயிரின் பேர் உயிரே வாழியவே

#120
என்றான் தான் அன்பு விசை ஏந்திய தன் உடலும் எழீஇ
சென்றான் தான் அ சிலுவை திரு மார்பில் சேர்த்து அணைத்தான்
நின்றான் தான் அமுது ஆழி நீர் முழுகி இன்பத்து
குன்றான் தான் சுடர் குன்ற கொழும் கதிர் சூழ் பரப்பினான்-ஆல்

#121
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல
கொலை ஈன்ற வெற்று உடம்பாய் கூற்றும் இலாது அசைவும் இலாது
இலை ஈன்ற பூம் கொடி கொள் எழும் தவனும் தாயும் அழுது
உலை ஈன்ற தீ உருகும் ஓவியங்கள் என நின்றார்

#122
அழுத அன்னார் துயர் நோக்கி அருள் கடலோன் மீண்டு இறங்கி
முழுது அன்னார் உவப்ப ஒரு மூரலை இட்டு இயங்க என
தொழுது அன்னார் தடம் கொண்டு துதி பாடி நெடும் வழி போய்
பழுது அன்னார் மனத்தின் இருள் பாய் சுரம் செல் வெற்பு அடைந்தார்

#123
தூசு அனை மின்னி ஆடும் துளி முகில் தவழ்ந்து சூழ
காசு அனை முகைத்த சாந்தம் கலந்த நீள் திமிசு பூத்து
பூசனை என கற்பூரம் புழுகுடன் நானம் மற்றது
ஓசனை கமழ் அ குன்றத்து உதய மேல் ஏறினாரே

#124
சால் வளர் முகிலின் வேழம் சந்தனம் மேய்ந்து சீற
வால் வளர் கலாபம் நீட்டி மயில் இனம் உலவி ஆல
நூல் வளர் கலனின் தூங்கி நுரை வளர் அருவி ஓட
கால் வளர் உழைகள் பாய காவதம் ஒலிக்கும் குன்றே

#125
வருக்கையின் கனிகள்-தோறும் வானரம் உலவி பாய
செரு கையின் குருதி போல சிந்து தேன் பெருக்கு உற்று ஓடி
பருக்கையின் விளங்கும் தெண் நீர் பரப்பும் ஆறு இடத்து இட்டு ஏகி
தரு கையின் வனைந்த மாலை சாரல்-கண் போயினாரே

#126
சண்பகம் மலர்ந்த சோலை சந்தனம் நிழற்றும் சோலை
விண் பகல் ஒளிப்ப சூழ்ந்து விழைந்து இவர் எவரும் பேணும்
நண்பு அகம் மலிதல் போல நாள் மலர் பொதுளும் வாவி
ஒண் பகல் நெற்றி போதில் ஒத்து ஒளிர் மூவர் போனார்

#127
விண் முழுது இறைஞ்சும் தக்கோர் விரி கரை வதிந்த போழ்தில்
பண் முழுது ஒழிக்கும் தீம் பா பறவை சூழ் இமிழின் பாட
மண் முழுது அன்றி வானும் ஆற்று அரும் வனப்பு காண
கண் முழுது உடம்பு உற்று அன்ன கயம் எலாம் பூத்தது அன்றோ

#128
எல்லினை காண மாலைக்கு இருள் குணக்கு எதிர்ந்ததே போல்
வில்லினை சுமந்த கையால் வேடரும் தழை தூசு ஏந்தி
அல்லினை போல் நல்லாரும் அடைந்து அரிது அருள் மீ கூற
செல்லினை பொறுக்கும் குன்றின் தீம் கனி பரப்பினாரே

#129
சூழ் அகத்து அன்பு காட்ட சூசை வந்தவரை நோக்கி
வாழ் அகத்து எவர் இ குன்றில் வைகும் நீர் என்று கேட்ப
காழக சேற்றுள் தீம் பால் கலந்து என நரை கொள் மூப்பன்
மேழக குரலில் சொன்னான் வெண் மணல் திண்ணை சேர்ந்தே

#130
களித்தன முகத்தின் பொய்யா கனிகள் தந்து எழும் இ குன்றத்து
ஒளித்தன மக்கபேயர்க்கு உதவிய குலத்தினாரை
துளித்தன மதுவின் தண் அம் சுள்ளியின் நிழல் கீழ் சாய்ந்து ஆண்டு
அளித்தன தலைவன் நானே அவிர் முகத்து இரவி போன்றீர்

#131
பாங்கு ஒளி துணர் விட்டு ஓங்கும் படர்ந்த பல் காவு கவ்வி
ஆங்கு ஒளித்து அலர்ந்த பொய்கை அடுத்து அகல் பரப்பு நோக்கீர்
ஈங்கு ஒளித்து உளத்தில் ஓங்கி எதிர் பகை செகுத்து பின் நாள்
வீங்கு ஒளி தட கை வீரர் வென்றன இடம் அது ஆமே

#132
வானில் நின்று இழிந்த வாளால் மன்னவன் பொரும்-கால் வான்-தன்
பானில் நின்று இழிந்த வில் போல் படர் சுடர் செய பாய்மா மேல்
மேனி நின்று இழிந்த கற்றை விண்ணவர் ஐவர் வில்லால்
ஊனில் நின்று இழிந்த செந்நீர் உக கடல் படையை வென்றார்

#133
பன்னிய படலையாய் மேல் பண்பு எலாம் அடைந்த நாதன்
துன்னிய காலை துன்னா தோன்றிய அரிது ஒன்று உண்டோ
கன்னிய குலத்தோர் ஏற்றும் கடவுளை பணிந்த போழ்தே
பின்னிய முறையால் இங்கண் பிணிகள் நாம் பெறல் ஏது என்றான்

#134
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை
கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல்
பொன் வளர் திரு மிக்கு ஊர்தல் பூரியர் கண்ணும் கண்டால்
மின் வளர் உருவின் தோன்றி விளி நலம் விரும்பல் வேண்டா

#135
சலத்து எலா நிலையும் ஒன்றோ தருக்கு எலாம் கனியும் ஒன்றோ
நிலத்து எலாம் விளையும் ஒன்றோ நிலை பல நமக்கும் உண்டு ஆய்
குலத்து எலாம் பொதுவாய் நிற்கும் கொழும் தகவு அறத்தின் மாட்சி
புலத்து எலாம் ஒல்லும் ஒல்லின் பொருள் இலா குறை ஒன்று உண்டோ

#136
கார் முகத்து அலரும் முல்லை கதிர் முகத்து அலரும் கஞ்சம்
சீர் முகத்து அலரும் நெஞ்சின் சிலர் துணிந்து அறத்தை செய்வார்
சூர் முகத்து அலரும் ஊக்க துணிவொடு சிலரே நோற்பார்
பார் முகத்து ஆசு ஒன்று அல்லால் பயன்படாது இல்லை ஒன்றே

#137
மெய் மறந்து உணர்வை கொல்லும் வெறி மது உண்ணா கள்வை
கை மறந்து ஒழுகி காதல் கசடு உற பொறிகள் காட்டும்
பொய் மறந்து இன்னாது எல்லாம் போக்கி நல் அறமே பூண்டு
மை மறம் தவிர்ந்தீர் ஆகில் வானில் மேல் குலமாய் வாழ்வீர்

#138
பிறந்த-கால் குலமும் செல்வ பெற்றியும் தெரிந்தார் உண்டோ
மறம் தகாது ஒழுகும் சீரால் வான் திரு தகுவது என்றே
இறந்த-கால் இங்கண் தேர்ந்த இயல்புடன் எவரும் வாழ்வார்
சிறந்த-கால் வேண்டின் வேண்டும் தீது அகன்ற அறத்தின் மாட்சி

#139
வருணமே மக்கள் பேதம் வகுத்திடும் இங்கண் அல்லால்
அருணமே இறந்த பின்னர் அவரவர் தமில் வேறு ஆக்கும்
கருணமே திரியும் குன்றில் கடிது உறை நீரும் ஓர்ந்து
தருணமே காத்து சீலம் தவிர்கிலீர் என்றான் சூசை

#140
கழை இடை குளித்த தேன் வடிந்து என்ன கனிந்து இவை வளன் விதித்திடும்-கால்
தழை இடை குளித்த நீல் நிற மேனி தையலார் பொருக்கென ஓடி
குழை இடை குளித்த குளு மது முகைகள் கொய்து கொய்து இமிழ்த்த ஓர் கண்ணி
மழை இடை குளித்த மின் என தோன்ற மழை ஒத்தார் அதை கொணர்ந்து உய்த்தார்

#141
வாடும் ஓர் மலரை சேர்த்திய படலை மாலையை கொணரவோ ஓடி
கூடும் ஓர் பயன் இதோ என நக்கான் குழவியாய் தோன்றிய நாதன்
கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா கூ இல் வாடு இல மலர் அல்லால்
வாடும் ஓர் மலரும் அன்றி ஈங்கு உண்டோ மலர் என ஒருத்தி நக்கு உரைத்தாள்

#142
கோடிய கொம்பில் பூ அதோ படரும் கொடி மலர்-தான்-கொலோ நீரில்
ஆடிய பூவோ வாடு இல மலர் எங்கு ஆவது என்று அறைதி நீ என்றாள்
ஆடிய தவம் என்று அடவியில் பூத்த அரிய கற்பு ஆதியே மற்ற
கோடிய குறை தீர் சீலமே வாடா கொழு மலர் ஆயின என்றான்

#143
காவி பட்டு ஒளிரும் கண்ணினார் காணி கற்பு அதே பளிங்கினும் நொய்தாய்
ஆவி பட்டு அழுக்கு உற்று ஒழியும் என்று அறைவர் அரிய நூல் புலமையோர் என்றாள்
ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில் ஆண்மை கொண்டு உறுதியே நிற்ப
காவி பட்டு ஒளிரும் நீண்ட கண் ஆதி கா-மின் நீர் ஐந்தையும் என்றான்

#144
நகை எழ எதிர்ந்த இன்பம் ஐம்பொறிகள் நாடலின் காவலே ஆற்றா
பகை எழ ஐந்தும் பரமனே முன் நாள் படைத்து எமக்கு அளித்தது ஏது என்றாள்
பகை எழ முனிந்து பழுது உற எவையும் பருகு அழல் உமக்கு வேண்டாதோ
நகை எழ உதவும் திறத்து அவை பேணி நவை உறா கா-மின் நீர் என்றான்

#145
இனையவும் பலவும் கூறிய தன்மைத்து எவரும் வேறாய் மன ஊக்கம்
புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி புதிது உயர் பொருப்பு எலாம் பூத்தது
அனையவும் மலர்ந்த நெஞ்சு அறம் வெஃகி அடி தொழுது அனைவரும் அழ போய்
வனையவும் அரிய மாட்சியின் மூவர் வாய்ந்த அ வரை கடந்து அகன்றார்

#146
நாவியின் நறையும் பூம் பொழிலின் நாற்றமும்
வாவியின் வாசமும் மல்கி வாய்-தொறும்
மேவி இன்பு எழ எதிர்எதிர் விருந்து செய்து
ஏவி இன்பு உற இவர் ஏகினார் அரோ

#147
தேன் விளை மலர் விழி திறந்து நோக்கிய
கான் விளை கா எலாம் களிப்ப அன்று இவர்
தான் விளை திரு எழ தகும் தம் நாடு உறீஇ
வான் விளை மகிழ்ச்சி உள் மலிய போயினார்

#148
தகை மலி நாடு உறீஇ தளிர்த்த ஓகையில்
பகை மலி கோ மகன் ஆளும் பான்மையை
முகை மலி முல்லையார் மொழிய கேட்டலும்
மிகை மலி சூசை உள் வெருவினான் அரோ

#149
நிலத்தில் ஆள் அரசரை ஆளும் நீதியோன்
வலத்தில் ஆள்பவன் அருள் வழங்கும் என்று விண்
தலத்தில் ஆள் விடலை தூது அணுகி சாற்றிய
நலத்தில் ஆழ் துயர் வளன் நயப்ப நீக்கினான்

#150
மாலையாய் நயம் துயர் மயங்கி சேர்ந்து உற
காலை ஆய் இரவி காண் கஞ்சம் போல் அற
சாலையாம் நாசரெத்து என்னும் தம் நகர்
பாலை ஆய் மலர்ந்து எழ பற்றி அண்டினார்

#151
ஆடி பல கொடி ஆக அசையவும்
நேடி பல கரம் நீட்டி வருக என
ஓடி பல துயர் ஓய கடி நகர்
நாடி பல வரம் நல்க குறுகினார்

#152
வான் ஆர் குடை கொடி மல்க புடை புடை
வானார் வருவது காணார் அனைவரும்
கான் ஆர் துயர் இவர் காப்ப கடி நகர்
கான் ஆர் மலர் அடி கண்டார் புகுதுக

#153
தேன் தோய் முகை முக செல்வன் புகுதுக
மீன் தோய் மிளிர் முடி வேய்ந்தாள் புகுதுக
கான் தோய் கொடி வளர் கையான் புகுதுக
வான் தோய் மகிழ்வொடு கண்டார் வடு அற

#154
அறமே புகுதுக அருளே புகுதுக
திறமே புகுதுக தெளி நூல் புகுதுக
புறமே மொழி நலம் எவையும் புகுதுக
உறவே என நகர் எதிர்கொண்டு உறுமுமே

#155
வளை கொள் ஒலி எழ வயிர் கொள் ஒலி எழ
துளை கொள் குழலொடு தொனி யாழ் ஒலி எழ
உளை கொள் முரசொடு பலவும் ஒலி எழ
இளை கொள் ஒலி நகர் எதிர்கொண்டு உறுமுமே

#156
துன்னும் திரை அலை தொனியே ஒழி தர
மின்னும் கரு முகில் ஒலியே மெலி தர
பொன்னும் கெழு மணி பொலிவும் கிளை கடல்
என்னும் திரு நகர் எதிர் கொண்டு உறுமுமே

#157
கான் நீர் மலர் வனம் காய்ந்தால் என முனர்
நாம் நீர் அழுது உக நம்மை பிரிதர
போனீர் மெலி பயிர் போற்றும் துளி என
வான் நீர் அருளிட வந்தீர் உயிர் என

#158
எரி சேர் சுர வழி எஞ்சா மதம் இழி
கரி சேர் மலை வழி காவாது உயிர் அடும்
வரி சேர் வன வழி வந்தே மெலிவு இல
புரி சேர் உமது அடி கண்டோம் பொலிவு உற

#159
பண் தேர் மொழி உற பல் மா பணிவன
கண் தேர் அழகு உற காய் கான் மலர்வன
மண் தேர் உமது அடி வந்தே வடு இல
வெண் தேர் ஒழுகு இடம் விண்ணோர் ஒழுகுவார்

#160
நகர் நீத்து அகலவும் நாமே மெலிவு உறீஇ
நிகர் நீத்து அரசு இடு நீங்கா பகையொடு
மகர் நீத்து அழ அழ வாழ் நீர் அரு மகன்
புகர் நீத்து உடையினிர் என்றே புகழுவார்
மேல்

@31 பிரிந்த மகவைக் காண் படலம்


#1
ஆழி சூழ் உலகு அனைத்திலும் ஆழி ஒன்று உருட்டி
வாழ் யாவரும் வளம் பெற தோன்றிய நாதன்
ஏழ் யாக்கையோடு ஈங்கு இரும் அருள் எழும் தன்மை
சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ

#2
வளி கொண்டு ஓடிய மரக்கலம் போயின வழியும்
களி கொண்டு ஓதிமம் ககன மேல் பறந்தன வழியும்
உளி கொண்டு ஓதினும் உலகு இடை வதிந்த நாள் நாதன்
அளி கொண்டு ஓகையில் அயர்ந்தவை அடைந்தவர் உண்டோ

#3
மதி எழுந்த தாள் மடந்தையும் மலர் கொடி தவனும்
கதி எழுந்த வான் கணங்களும் அன்றி ஈங்கு உண்டோ
நிதி எழுந்த மேல் நிலம் நிகர் சிறந்த அ மனையின்
பதி எழுந்த கால் ஆயவை கண்ணிய பாலார்

#4
ஏமம் சால் உலகு இணை மனை மல்கிய கருணை
தாமம் சால்பொடு தான் அதில் அடங்கு இல புரண்டு
நாமம் சால் அருள் நாடு எலாம் வெள்ளமாய் மொய்ப்ப
வாமம் சால் நில மன்னவன் தோன்றினான் புறத்தே

#5
ஒளி பட படும் கேவணம் நிறை மணி ஒப்ப
இளி பட படும் எம் குறை தீர்ப்ப ஈங்கு உதித்தோன்
வெளி பட படும் விழி மழை வழி இழி கருணை
துளி பட படும் சுட்டு எரி துகள் துயர் ஒருங்கே

#6
அருளின் முற்றிய பன்னிரு வயது உளன் அம் பொன்
பொருளின் முற்றிய புரிசை சூழ் எருசல நகரில்
தெருளின் முற்றிய திரு மணி கோயில் தான் செல்ல
இருளின் முற்றிய இரவு அற கதிர் என எழுந்தான்

#7
பூவும் வாசமும் பொதுளிய தாமமும் மணியும்
காவும் நீழலும் காயமும் உயிரும் போல் பிரியா
மேவும் கேண்மையின் மிடைந்த கை_தாதையும் தாயும்
நீவும் தாளினை நீங்கிலர் பின் செல சென்றார்

#8
விண் உளோர் இவண் மிடைந்து உற அருத்தி செய்து அங்கண்
மண் உளோர் உற வழி என நின்ற அ கோயில்
புண் உளோர் மருந்து ஒத்தன புதல்வன் காண் பொழுதில்
பண் உள் ஓதையின் பனி மொழி மது உக பணித்தான்

#9
மண் மேல் அடியை வைத்து எந்தை வல கையால்
விண் மேல் விருப்பொடு தாங்க விண்ணவர் வந்து
எண் மேல் இழிந்து எழுந்து உலவ இயாக்கோபன்
கண் மேல் அறிவில் இங்கு ஏணி கண்டனன்-ஆல்

#10
சீர் மீது ஆடிய காட்சி சிறப்பு உள்ளி
கார் மீது ஆடிய கொடி கொள் கவின் சிகரத்து
ஏர் மீது ஆடிய எரி வாய் மணி குயிற்றி
பார் மீது ஆடிய படர் இ ஆலயமே

#11
முன்னான் இவை இவண் காண்-கால் முற்று உவப்ப
பின் நாள் உனது இனத்து உதிக்கும் பிள்ளை அருள்
தன்னால் உனக்கு ஒளி தளிர்ப்ப கண்டது எலாம்
அன்னான் முடிக்குவன் என்றான் அன்று இறையோன்

#12
அன்ன பிள்ளை நான் அன்ன ஏணியும் நான்
இன்ன நகர்-இடை இறக்கும் மரம் தானே
சொன்ன முறையில் ஈர் உலகும் தொடர்ந்து ஒன்றாய்
மன்ன மகிழ்வு உற மாள்வேன் நான் என்றான்

#13
வேல் நேர் நுழைந்த சொல் விளைத்த புண் இடு நீர்
போல் நேர் இல அயர்ந்து இருவர் புலம்பி அழ
தேன் நேர் மலர் என சிறுவன் நகைத்து உலகம்
வான் நேர் மகிழ்வது ஆகாதோ வளர்ந்து என்றான்

#14
எஞ்சா திருவுளம் இது என்று உளம் தேறி
மஞ்சு ஆர் வரை என மணி பூம் புகை கோயில்
துஞ்சா தயை மகன் தொடர்ந்து புக்கு நம்மை
நெஞ்சு ஆர் அருளொடு நினைத்தே வேண்டினர்-ஆல்

#15
விரிந்தன கடல் திரை மயங்கி வீழ்ந்து என
திரிந்தன மனு திரள் செறுத்து போகையில்
அரிந்து அன மனத்து அஞர் அழுங்க ஆங்கு இவர்
பிரிந்தனன் யாண்டையும் பிரிவு இலான் அரோ

#16
ஏர் வழி மாதருள் இவள் சென்று ஆடவர்
சேர் வழி அரும் தவன் செல்ல வேறு போய்
ஓர் வழி சேர்ந்த பின் உயிர் எங்கு எங்கு என
நீர் வழி முகம் கெட நேடி அஞ்சினார்

#17
உன்-இடை இலை-கொல் என்று இவளும் ஓதினாள்
நின்-இடை இலை-கொல் என்று அவனும் நேடினான்
என்-இடை இலை என இருவர் சாற்றினார்
மின்-இடை அசனி பட்டு என வெந்து ஏங்கினார்

#18
பத்திய மணி விழ படர்ந்த கேவணம்
ஒத்து இயல் உயிர் மணி மகன் ஒளித்தலால்
நித்திய நய நலம் நீங்கி வாடினார்
தத்திய உயிரில் வெற்று உடம்பின் தன்மையார்

#19
குன்று ஒளித்து அகல் கதிர் ஒத்த கொள்கையான்
அன்று ஒளித்தவன் தனை தேடற்கு ஆங்கு வேண்டும்
என்று ஒளித்தன உயிர் யாக்கை மீண்டு உறீஇ
கன்று ஒளித்துளி கரை கறவை மானினார்

#20
செல் அகத்து அனைத்திலும் சென்று தேடினார்
தொல் அகத்து உறவினோர் தொடர்ந்து நாடினார்
வல் அகத்து உலகம் ஆள் மகவை காண்கிலார்
கல் அகத்தாரும் உள் கலங்க விம்மினார்

#21
தாயும் நீ சேயும் நீ தவறி நாம் செயும்
தீயும் நீ பொறுப்பவன் சிறுவ எம் விழி
பாயும் நீருடன் உயிர் பறிப்பவோ இதோ
போயும் நீ அறா துயர் புகுத்தினாய் என்பார்

#22
எல்லை_இல் எங்கணும் இருந்து அடங்கு இலோய்
ஒல்லையில் வரும் பொழுது ஒன்று இலோய் எலாம்
தொல்லையில் அறிந்து உளோய் துதைந்த எம் துயர்
வல்லையில் அறாது எமை மறந்தியோ என்பார்

#23
இனையவும் பலவும் ஓர்ந்து இரிந்து உறும் துயர்
சினையவும் பொறாது ஒளி திரையில் தாழ்ந்து இருள்
புனையவும் இரா எலாம் இசலி பொங்கு அலை
அனையவும் பட வளர் அஞரில் விம்மினார்

#24
கருணாகரனே களி ஆலயனே கவின் ஆர் மகனே
மருள் நான் அஞர் மா கடலில் வருந்த கரையேற்றிட நீ
அருள் நாடி அகன்று உறைகின்ற அகமே அருளாய்-கொல்லோ
தெருள் நாயகனே என்றாள் திறம்பா அருவி கண்ணாள்

#25
இறந்தான்-கொல்லோ முதல் ஈறு இல்லோன் தனது ஆர் தயையை
மறந்தான்-கொல்லோ மறவா அன்போன் கடல் சூழ் வையம்
துறந்தான்-கொல்லோ உன்னை என்னை துறந்தோன் இதுவே
அறம்-தான்-கொல்லோ மகனே அறைக என்று அழுதான் வளனே

#26
மெய் ஆர் தவமே திருவின் திருவே ஆம் என்போன் வெம் தீ
மொய் ஆர் வனமே முடுகி முனி ஆயினனோ என்றாள்
பொய் ஆர் புரையே துடைப்ப பொன்றல் காதலித்தோன்
ஐ ஆருயிரே அவன் இன்று அளித்தான்-கொல்லோ என்றான்

#27
தேறா அன்போன் தேற சிலுவை கொணர வானோர்
ஆறா மொய்ம்பால் நான் ஈங்கு ஆண்டு ஓச்சிய கோல் இதுவே
மாறா நலம் செய் இதன் மேல் மாய்ந்தால் அல்லால் வாழ் நாள்
ஈறாக வருந்தினனே என்றான் அன்றோ என்றாள்

#28
வையத்து அடி வைத்து உயர் வான் மன்னன் கையில் சாய
பொய் அற்ற அரும் தவன் முன் பொலிய கண்ட ஏணி
உய்ய தரணி நானே உலக்கும் சிலுவைக்கு ஒப்பு ஆய்
மெய் அற்று இவணே விளிவேன் என்றான் அன்றோ என்றான்

#29
பற்றார் பழையம் பழியை பரிவான் படுவாய் என்னா
கற்று ஆரணம் காட்டிய காட்சி அறிந்து அன்றோ உன்னை
பெற்று ஆயினதே பிரியா அன்போய் பெயரா முன் வந்து
உற்று ஆசி எனக்கு உரைத்தால் ஆகாதேயோ என்றாள்

#30
இன்றோ அன்றோ என்றோ ஒரு நாள் எம்மை காக்க
மென் தோடு ஒன்று ஒள் உடல் வீவு உற வேண்டியதேல் இருவர்க்கு
ஒன்றோடு ஒன்று ஒத்தன அன்பு உளதேல் மகன் நீய் பிரியாது
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ என்றான்

#31
மடவாரில் அனந்தம் மலிந்து மகிழ்ந்த மடந்தை என
தட வானில் உயர்ந்த தளங்கள் தணிந்து மொழிந்தனிரே
நடவா முறையால் நடலை நரலை நடுவே அடியாள்
கடவாமல் அலைந்து கலங்குப கண்டிலிரோ என்றாள்

#32
அம் சேர் அம் சீர் அடை இ தலம் அண்டிய-கால் அடியேற்கு
அஞ்சேல் அஞ்சேல் நயம் ஆம் என ஆடின வானவனே
அஞ்சு_ஏழ் அஞ்சு_ஏழ் கடலான் ஒவ்வாத அஞர் கடல் ஆழ்ந்து
அம் சேர் எஞ்சா நயன் இங்கண் அகன்றதுவே என்றான்

#33
என்றான் இவனும் மென் தாள் அவளும் என்றாள் என்று ஆங்கு
ஒன்றா உரை கொண்டு புலம்பினர் உள் துயர் கண்டதனால்
குன்றா நய வானவரும் குழைந்து ஆகுலித்தால் என நின்று
அன்று ஆர் இடர் ஆற இவற்கும் அவட்கும் அறைந்தனர்-ஆல்

#34
துயர் ஏன் அஞர் ஏன் உளம் ஆழ்ந்து உறு தொல் நய மா கடலின்
பெயரேல் பெயரேல் பெயரா பெருமை தனையன் பிரிவால்
மயர் ஏன் மயர் ஏன் வளனே மரியே மருள் நெஞ்சு உருகி
அயரேல் அயரேல் மகன் மாண்டிலன் மாண்டிலன் என்று அறைந்தார்

#35
ஐயன் போக அவர் எய்திய ஆகுலம் அ சொல்லால்
ஐயம் போக தணிவு ஆம் எனினும் அன்று ஆங்கு இரவி
மையல் போக வரினும் மனமே விளக்கும் சுடர் ஆம்
மெய்யன் போக ஒளி போய் விழி போயிற்று என்று அழுதார்

#36
செ மா மணியின் செல்வனை தாய் தேடி அகல்
அ மா நகர்-கண் அழுது அன்றே அலையும்-கால்
பை மா மலர் பெய் கா வழியில் பரிவு ஓங்க
தம் மா மகனை துருவுகின்றான் தவ வல்லான்

#37
புள்ளும் புலம்ப வண்டும் அழ பூவும் நைய
விள்ளும் காவும் வினை கொண்டு உள் மெலிந்து இரங்க
கொள்ளும் துயரில் கண்டது எலாம் கொழும் தவன் தான்
உள்ளும் தன்மைத்து உருகி அழ வினாவினனே

#38
என் தன் சிந்தை போல் நிலையாது இரி சிந்தே
நின் தன் சிந்தை போல் கடல் நான் நேடி அலைந்து
இன்று என் சிந்தை எஞ்ச இவண் அருள் கடலோன்
உன் தன் சிந்தை எழ உற்றானோ என்றான்

#39
கண்ணோ மணியோ கமழ் மது பெய் மலர் காவே
பண்ணோ தேனோ பணிந்து இணையா கனி சொல்லான்
உள் நோய் அருந்து என் உளம் வாட அருள் பூத்து
விண் ஓர் மலர் போல் வேய்ந்தனனோ இவண் என்றான்

#40
என் நெஞ்சு ஒப்ப இரு பொழுதும் இருள் பொழிலே
உன் நெஞ்சு ஒப்ப உயிர் எல்லாம் நிழற்றி அருள்
தன் நெஞ்சு ஒப்ப தந்து ஓம்பும் தயை பெருமான்
நின் நெஞ்சு ஒப்ப நிறுத்தினையேல் காட்டு என்றான்

#41
இரவில் குன்றும் இதழ் கஞ்சம் அணி தடமே
இரவிக்கு ஒப்பான் இரு பொழுதும் மலர் மரை தாள்
விரவிற்கு இங்கண் வைத்து உன்னை மேவி அருள்
புரவி தெண் தீம் புனல் உண்டானோ என்றான்

#42
மனம் ஒத்து உயர் மா மலையே நீ தலையில் அணி
கனம் ஒத்து இருள் என் மனம் கரிய கனைத்து இழி உன்
புனம் ஒத்து இழி சீர் துறந்து உன் கண் புக்கனனோ
இனம் ஒத்து இலன் நேர் இலன் ஓர் என்பான் என்றான்

#43
பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள் குலமே
என் ஆர் உயிரே என் நெஞ்சத்து ஆள் அரசே
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி
அன்னான் நாட அறையீரோ எனக்கு என்றான்

#44
குயிலே கிளியே வெண் குருகே கோ அனமே
மயிலே இணைந்து என் மனம் குளிர்ப்ப அன்னான் கொள்
எயிலே வனமே இயம்பீரேல் போய் அவற்கே
துயிலே இல நான் துஞ்சுவன் என்பீர் என்றான்

#45
கிளியோடு அன்னம் அழ குயில்கள் கெழுமி அழ
அளியோடு அலரும் அழ புனலும் விம்மி அழ
வளியோடு அம் கா வருந்தி அழ வளன் அழுவான்
களியோடு அகன்றான் என் காவலன் என்ற ஓதையினான்

#46
பொய்யா வரத்தோன் போய் பூங்கா திரியும்-கால்
கையால் நையும் கஞ்சம் என வாடிய தாய்
உய்யா வண்ணத்து உருகி நகர் தெரு எல்லாம்
நையா அன்பால் நாடி காணாது அழுவாள்

#47
படமே எழுதி படர் பங்கயம் நீள்
தடமே அணுகி தடம் மேவிய பூ
வடமே இணையா மகவு உள்ளினள் அ
இடமே மது இன் இசை தாய் அறைவாள்

#48
தேன் தோய் மலர் தீட்டிய சேடு உலவி
கான் தோய் தடமே களி கூர்ந்து உனை நேர்
வான் தோய் எழில் தோய் மது மாறு இல பூ
தான் தோய் எனது உள் தடம் ஓங்கினதே

#49
பூ மாறினதோ பொருவா பகையோர்
தாம் மாறு இல தாது எழில் கொய்தனரோ
தேம் மாறு இல பூ இல தேம்பி உளம்
வேம் ஆறு இல வெப்பொடு காய்ந்ததுவே

#50
துளி மாரி இழந்துளி காய் சுனையோ
நளி வாசம் இழந்து அழி நை நனையோ
களி நான் உள் இழந்து அயர கடிது இ
உளி நீயும் இழந்து உறைவாய் மகனோ

#51
அன்ன சிறை நீ அலர் தாமரை நான்
என்ன செறி இன்பொடு இருந்தனமே
முன் நச்சிய தேன் முருகு இல்லது எனா
மன்ன சவியோய் வனம் ஏகினையோ

#52
இன்பு ஈரம் அருந்தி இருந்தனையே
அன்பு ஈரம் அகன்றொடு அகன்றனையோ
முன்பு ஈரம் உலாம் முளரி துணரே
பின்பு ஈரம் இலாது அது பேர்குவதோ

#53
மடல் ஒத்து அடி வாட நடந்து செலேல்
அடல் உற்று எனது ஆவியில் ஆண்டு உறைவாய்
கடல் ஒத்து உயிர் கெட்டன-கால் அலை கொள்
உடல் ஒத்து இனி நான் உளைய பெயர் ஏன்

#54
தருமத்து அழலும் தகுதி தகுமோ
உருமத்து அழலும் தழல் ஒப்பு அற நீ
மருமத்து அழலும் வதை செய்தொடு இதோ
இரு மத்திரி கொண்டு எரி பற்றியதே

#55
வெண்ணை கிரி வெந்தன போல் அழுது என்
கண்ணை கிழி நீர் கடிது ஓட நெடும்
புண்ணை கிழி தீயை உள் ஊற்றிய பின்
விண்ணை கிழி மின் என ஏகினையோ

#56
இன்பு ஓதம் அமிழ்ந்தி இருந்தன-கால்
உன் போது அவியாது எரி என் உளமே
துன்பு ஓதம் உறிஇ சுழியின் முழுக
அன்பு ஓதம் அகன்றொடு அகன்றனையோ

#57
கதிர் ஆய மணி கலம் ஏந்திய பால்
எதிர் ஆய அருள் கிளர் என் மகனே
பொதிர் ஆய இருள் கதிர் போக்கு என வந்து
அதிர் ஆய அக துயர் ஆற்று இலையோ

#58
கயல் ஆம் விழியே கடல் ஆம் அவனை
அயல் ஆடல் இல் ஆகி அகன்றனனே
இயலாத இடுக்கண் இயைந்து இனி நான்
உயல் ஆம் வழி ஒன்று உளதேல் உரையீர்

#59
மஞ்சே மருளா மதுவே குறையா
விஞ்சு ஏடு அவிழ் வீ அனை விள் முகனை
நெஞ்சே நனி பேண் இல நீங்கினனே
நஞ்சே இனி உண்டு உண நைந்து அழல்வாய்

#60
என்று அ தடம் ஓங்க இனைந்து அழுவாள்
குன்றத்து அருவி திரள் குன்றும் கண்ணாள்
பொன்ற தக நொந்து பொறாமலும் மீண்டு
அன்று அ தெரு யாவிலும் ஆய்ந்தனளே

#61
மீ உலாவிய மீன் முடியாள் நகர்
போய் உலாவிய போழ்து ஒரு கோதையாள்
தீ உலாவிய புண் என தீந்து உளத்து
தாய் உலாவியது ஏது என அண்மினாள்

#62
தேசிகத்து உயர் சேடு அமைந்து ஓதிய
தேசிகத்து உயர் சேடனை தேடி நான்
தேசிகத்து அயர்வேன் என செம்_சுடர்
தேசிகத்து உயர் செம் கலையாள் அரோ

#63
தனையர் ஈன்றனள் நான் என தாய் படும்
அனைய யாவும் அறிந்து அகத்து ஏங்குவேன்
நனை அலர்ந்து என ஈன்ற நின் நந்தனன்
எனையனோ என சாற்றுதி நீ என்றாள்

#64
அரியது ஓர் வினை கேட்டி அந்தோ எனா
பெரியது ஓர் உயிர்ப்பு இட்டனள் பின் தனக்கு
உரியது ஓர் நசை ஊங்கு உளம் தூண்டலால்
சரி அது ஓர் மது போல் உரை சாற்றினாள்

#65
பாவி தந்த மகற்கு உரி பான்மை கேள்
வாவி தந்த தண் தாமரை வாயினான்
காவி தந்த களிப்பு உமிழ் கண்ணினான்
ஆவி தந்த அறா அருள் சொல்லினான்

#66
பானு உயிர்த்த கதிர்ப்பட பங்கியான்
வான் உயிர்த்த மதிப்பட நெற்றியான்
தேன் உயிர்த்த முல்லை சிறு மூரலான்
கான் உயிர்த்த மலர் முக காமரான்

#67
பொருளில் வீங்கிய பொச்சை புயத்தினான்
அருளில் வீங்கிய ஆர்கலி மார்பினான்
தெருளில் வீங்கிய சீர் முகில் கையினான்
சுருளில் வீங்கிய தோடு அலர் தாளினான்

#68
ஈர் அஞ்சு ஆம் வருடத்து இரண்டு ஆண்டு உளான்
நீர் எஞ்சா அருளால் நிறை மாட்சியான்
கார் அஞ்சா ஒளி காட்டிய காட்சியான்
சீர் எஞ்சா உரை வெல் உயர் சீர்த்தியான்

#69
முகத்தின் தாமம் முகிழ்ந்து என பார்த்த-கால்
அகத்தின் தாமரை உள் அவிழ் கண்ணினான்
செகத்தின் பாசறை தேய்ந்து உளம் இன்புற
சுகத்தின் தாய் வினை துற்றிய அன்பினான்

#70
நளி முகத்து அலர் நல்கிய தேன் எனா
அளி முகத்து அவன் சொல் அறைந்தால் பகல்
ஒளி முகத்து இருள் ஓடிய ஆறு போல்
விளி முகத்து உறும் வெம் துயர் நீங்கும்-ஆல்

#71
உனக்கு இசைத்து இனி என் உரைப்பேன் இவண்
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால்
நினக்கு எதிர்த்து நின்றால் அறிவாய் என
எனக்கு இயற்று அருள் தாய் இவை சாற்றினாள்

#72
இனைய கேட்டலும் இன்புற கோதையாள்
வனைய வேட்டு உறும் மாண்பொடு காட்டின
அனையன் ஈங்கு கண்டேன் அருள் அன்னை நின்
தனையன் ஆம் அவன் தான் என சாற்றினாள்

#73
மண் தழன்றுளி வாடிய பூம் தரு
உண்ட நல் உயிர் உற்ற நீர் ஒத்த சொல்
கொண்ட தன்மையில் தாய் களி கூர்ந்து அவன்
கண்டது எ இடம் கண்டது எப்போழ்து என்றாள்

#74
மின்னலே நனி கேள் என வேட்புறும்
கன்னலே கடந்து இன்பம் செய் காதலன்
நென்னலே இருள் நேரிய-கால் எனது
இன்னலே அற என் மனை எய்தினான்

#75
புரிந்த தாம முக சுடர் பொற்பினால்
விரிந்த தாமரை கையை விரித்து மேல்
எரிந்த மீன் விழி தாழ்ந்து இணையா அருள்
சொரிந்த தான் உணும் துப்பு இரந்தான் அரோ

#76
அன்ன தன்மையினாற்கு இரவு ஆவது ஏது
என்ன உண்டியை ஈந்து அளித்தேன் அவன்
மன் அமிர்தம் மனத்து அளித்து ஆதலால்
முன்னம் அன்று முகிழ்ந்து என ஓங்கினேன்

#77
அள் அம்பு ஆடிய வாசமோடு ஆடிய
கள் அம்பு ஆடு இயை கட்டுரையானும் போய்
புள் அம்பு ஆடியது ஒத்து அவன் பூ முகம்
விள் அம்பு ஆடிய என் விழி பேர்கிலேன்

#78
மாசு அறுத்து மனத்து இவை ஆக்கிய
ஆசு அறுத்து இணை அற்றனன் ஐயம் அற்று
ஏசு அறுத்த நின் தன் மகன் என்றனள்
காசு அறுத்த சங்கு ஏந்திய கையினாள்

#79
பருகி வாழ் உயிர் பற்றிய ஊண் எலாம்
பெருகி ஈந்த பிரான் இரந்தான் எனா
உருகி ஆசி அவட்கு உரைத்து அன்னை போய்
மருகு யாண்டிலும் மைந்தனை தேடினாள்

#80
கழீஇயின மணியில் அன்னை களித்து இவை ஓர்ந்து போகில்
விழீஇயின உயிரை காணா வெய்துறும் உடலின் சூசை
எழீஇயின நகரில் சேர்ந்து ஆங்கு எதிர்பட உயிர்ப்பு வீக்கி
குழீஇயின துயர் தீர் பாலன் கொணர்ந்தனை இலையோ என்றான்

#81
ஆயவை உரைத்து ஈங்கு உள்ளன் ஆய் அவன் காணேன் என்ன
தாய் அவை வருந்தி சாற்ற தமனிய கோயில் சேர்ந்து
தீயவை துடைக்கும் நாதன் செம்மலை காட்ட வேண்டின்
நோய் அவன் நீப்பன் என்றான் நுண் மறை வடிவம் பூண்டான்

#82
மு பகல் இவர் இவ்வாறே முற்றிய துயர் கொண்டு ஏங்க
ஒப்பு அகல் மாட்சி பாலன் ஒளி மணி கோவில் தன்னில்
தப்பு அகல் மறையின் வல்லோர் சவையினுள் பலவை கேட்ப
அ பகல் மூன்றும் வைகி அனைவரும் வியப்ப செய்தான்

#83
உற்ற நூல் ஊன்றி நாதன் உருவொடு உற்றனனோ என்ன
பெற்ற நூல் தெளியா நீரார் பிதற்றலின் மூன்றாம் நாளில்
கற்ற நூல் இல நூல் வல்லோன் கற்க வந்து என சேர்ந்து ஓர் ஒப்பு
அற்ற நூற்படி தான் உற்றது அல்ல என்று அறைய கேட்டான்

#84
கேட்டலும் இரங்கி அன்னார் கிளந்தவை மறுத்து நீக்க
வேட்டலும் தன்னை காட்டா மெல் இசை இரங்கு நல் யாழ்
கூட்டலும் கனி பால் மற்ற குளும் சுவை திரட்டி காதில்
ஊட்டலும் அனைய தீம் சொல் ஓர் என்பான் ஓதல் உற்றான்

#85
ஊட்டு அரக்கு உண்ட பதுமம் விண்டு உவப்ப ஒளி சுடர் உதித்தது போன்றே
தீட்டு அரக்கு உடலின் நாதன் நாம் உவப்ப சிறுவனாய் பிறந்ததும் கேட்டேன்
மீட்டு அரக்கு ஒளி போய் வருடம் ஈர் அறு முன் வெயில் என இராவும் ஆய் கீதம்
கேட்டு அரற்று இடையர் அரியது ஓர் காட்சி கிளர் ஒளி கண்டதும் கேட்டேன்

#86
வான் தந்த நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ மீன்
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச
மீன் தந்த வழி வந்து எவண் அவன் என்ன விளங்கிய பெத்திலம் தன்னில்
ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று உரைத்தது நீர் அன்றோ என்றான்

#87
கான் முகத்து அலர்ந்த மது மலர் வடிவோய் களிப்ப நீ உரைத்தவை நாம் ஓர்ந்து
ஊன் முகத்து எந்தை உற்றது என்று ஐயம் உற்றனம் ஆயினும் வேத
நூல் முகத்து அரசர் இறைஞ்ச வந்து எங்கும் நுதல்வு_அரும் ஆண்மையில் ஆள்வான்
வான் முகத்து இறைவன் என்றது ஆய்ந்து அல்லோ வந்தது அன்று என்றனம் என்றார்

#88
சொல்லிய தன்மைத்து அன்றியும் அன்னான் துறும் துயர் கடை இலன் மிடியே
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில்
ஒல்லிய தன்மைத்து எளியனாய் தோன்றி ஒரு மரத்து இறப்பது அ வேதத்து
இல்லிய தன்மைத்து உளது அன்றோ என்றான் இள முகத்து அனாதியான் அன்றே

#89
வேறு பட்டு எதிர்த்த மாற்றம் ஒன்று ஆக வெளிற்று இளம் சொல் ஒருவீரேல்
ஈறு பட்டு அனைத்தும் கற்றவர் சொன்னது இயம்புதும் என தொழுது உரைப்பான்
மாறு பட்டு அழிந்த மனு_குலத்து அற நூல் வகுத்து அளித்து உற்ற பின் உலகம்
நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான் நிமலன் என்றது மறை அன்றோ

#90
படி முடித்து எவர்க்கும் பயன் தர வரும்-கால் பரமன் நீர் சொல்லிய வண்ணத்து
இடி இடித்து எரிந்த விசும்பு எலாம் முழங்க எங்கணும் வெருவினை வீச
கொடி பிடித்து அமரர் முன்ன மற்ற எவரும் குழைந்து சூழ் இறைஞ்ச வான் அரசாய்
கடிது இடித்து எரி கார் ஆசனத்து எழுந்து கதிர் முகத்து இயல்வது நன்றே

#91
ஒளி பொருள் இன்பம் வெஃகிய வினையால் உயிர் கெட நுழைந்த தீது ஒழிப்ப
விளி பொருள் இவை என்று எளிமையே பொறையே வெறுமையே மெய் திரு என்ன
தெளி பொருள் மறையாய் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து எளியன் உற்று எவர்க்கும்
நளி பொருள் ஓதல் தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால் உரிது அன்றோ என்றான்

#92
இ திறத்து எதிர்த்த காதைகள் பொருந்தி எய்திய நவங்கள் கண்டு அளிப்ப
மெய் திறத்து இறைவன் பிறந்தனன் என்னில் வெளிறு அதோ என்றனன் பாலன்
அ திறத்து எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து எவர் மகன் எ ஊர்
எ திறத்து உரிய குலத்தன் நீ என்றார் இளவலும் மறைவுற சொன்னான்

#93
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த
காதையும் தெளிப்ப எனக்கு ஓர் ஊர் இல்லை கலந்து இரு குலத்து உதித்து இல்லை
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று
ஓதை உண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு ஆங்கு உணர்ந்தவை ஓர்ந்து போயினரே

#94
தப்பு அடும் உரை உணர்ந்து எவரும் சாய்ந்து போய்
வெப்பு அடும் வேலை ஆய் தாயும் மெய்யனும்
ஒப்பு அடும் ஒளி மணி பதித்த ஒண் துகிர்
செப்பு அடும் சிறுவனை சென்று நோக்கினார்

#95
எல் ஒளி பட மலர் கஞ்சமே என
வில் ஒளி முகத்து முன் விண்டு அலர்ந்து உளம்
அல் ஒளி பட துளி அளித்த காந்தம் போல்
செல் ஒளி விழியினார் அழுது சேர்கின்றார்

#96
சுனை அனை விழி விடா தொடுத்த நீரினால்
நனை அனை முழு மெயும் நனைப்ப அன்னவர்
புனை அனை அன்பு உயிர் புணர்ந்து ஒன்று ஆகவும்
தனையனை முறை முறை தழுவினார் அரோ

#97
கற்றை நாண் முகத்தினோய் பிரிந்த காரணத்து
அற்றை நாள் ஆதியாய் உயிர் அற்று ஆகுலித்து
இற்றை நாம் நுகர நீ இரங்கு இல் ஆயது ஏன்
மற்றை நாள் ஒன்றின் நாம் வாழவோ என்றாள்

#98
பட்டவை அறிந்து இனைந்தேனும் பற்று எலாம்
அட்டு அவை புதைத்து என அருளி எந்தை தான்
சுட்டு அவை செயேன்-கொலோ என்று சொன்ன பின்
நட்டவை ஓம்பும் நீர் என நட்பு ஊட்டினான்

#99
மரு அணி மலர் மழை வாரி யாழ் குழல்
வரு அணி இசையொடு மதுர வாய் குரல்
உரு அணி உம்பர் சூழ் உவந்து பாடி வான்
தெரு அணி விழா அரும் சிறப்பில் வாழ்த்தினார்

#100
விட்ட இடைக்கு இறுகி அன்பு இன்பம் மிக்கவர்
கட்டு-இடை காப்பிய கவிகள் போலவும்
மட்டு-இடை கமழ் மலர் மாலை போலவும்
நெட்டு-இடை பழம் பதி நேடி போயினார்
மேல்

@32 புரோகிதப் படலம்


#1
மேக மாலை மிடைந்த உறை மேல் வரை
மேக மாலை மிடைந்து அரை கீழ் உறை
நாக மாலை நடந்து என நீள் நகர்
நாகம் மாலை நடந்து அகன்றார் அரோ

#2
காலின் ஆடிய கான் அலர் ஆடுகள்
காலின் ஆடிய கால் மணம் ஆடும்-ஆல்
பாலி நாடிய பொன் பறவை குலம்
பாலின் ஆடிய பொற்பு அற பாடும்-ஆல்

#3
சேது அகம் தரும் மாசு அயில் சென்ற அ
சேது அகம் தரும் ஆசையின் செம் தழல்
சேது அகம் தரும் செ ஒளி நீத்த வான்
சேது அகம் தரும் செ அலர் நீர்த்ததே

#4
தெண் கள் நாடிய சந்திரம் சேர் வனத்து
எண் கண் ஆடிய சந்திரன் இன்றி மீன்
மண் கண் ஆக மலர்ந்த அருள் காணியார்
மண் கண் ஆக மலர்ந்து உற காணும்-ஆல்

#5
பல்லியம் கனி பாட விண் ஓங்கிய
பல் இயம் கனி பாட விண்ணோர் செயும்
எல் இயங்க இலங்கு மண் பான்மையே
எல் இயங்க இலங்கும் விண் பான்மையே

#6
உளரி அங்கு ஒலி ஓதி உலாவு விண்
உளர் இயங்கு ஒளி சோதி ஒளி எனா
விளரி பங்கய மாலையில் விள்ளவே
விளரி பங்கய மாலையில் விள்ளும்-ஆல்

#7
கை படங்கு அமரும் தக காந்தனும்
கைப்பு அடங்க மருந்து அக காந்தையும்
செப்பு அடங்க இரும் தவ சேடனும்
செப்பு அடங்க இருந்தனர் சேடியே

#8
தீ தன் பள்ளியை நீத்து எழீஇ செய் துயில்
தீத்து அன்பு அள்ளி ஐ நீத்து எழில் சேய் உயிர்
தீத்தன் கை பணிய படி சேர்ந்த-கால்
தீ தன் கை பனிய படி சேர்ந்தவே

#9
ஈர நீர் அவிழ துணரே வரை
ஈர நீர விழ திரையே வனத்து
ஈர நீர எழ சிகியே அறத்து
ஈர நீரர் எழீஇ தடம் ஏகினார்

#10
ஆதி மாலை அகற்றி அழற்றும் என்று
ஆதி மாலை அகற்றி அளிப்பட
சீத மாலை செறிந்தன மேல் எலாம்
சீத மாலை செறிந்தன கீழ் எலாம்

#11
சுனைய நீலமும் கமலமோடு ஆம்பலும் துளி தேன்
நனைய நாகமும் நாறிய கோங்கமும் நறும் பூம்
சினைய சாந்தமும் செண்பகமும் கனி விருந்து ஆங்கு
இனைய யாவும் இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார்

#12
வேல் செய் ஆகுலத்து இருவர் முன் பட்ட நோய் விழுங்கி
சால் செய் ஓகையின் தளிர்த்து உளம் உவப்ப வான் தளங்கள்
பால் செய் ஆவியின் பைம் துகில் உடுத்து ஒளி பரப்பி
கால் செய் ஆவியின் கவரிகள் கமழ வீசினரே

#13
எரி மணி புகை எடுத்தனர் மலர் மழை பொழிந்தார்
அரி மணி குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி
உரி மணி குரல் ஒருப்பட பா இசை கூட்டி
விரி மணி கதிர் விண் திரு விழாவினை விளைத்தார்

#14
வினை விளைத்தன வெப்பு அற குளு முகத்து உதித்தோன்
தனை விளைத்தன தயை வழி அளவு_அற புகழ்ந்து
கனை விளைத்தன களிப்பில் ஓர் ஆயிர நாமம்
நினைவு இளைத்தன நெறி வரும் கனி நயம் அளவோ

#15
முருகு வாய் சுளை முள் புற கனியோடு பூங்கா
அருகு வாய் கனி பலவும் ஊழ்த்து அளித்த தீம் தேனும்
உருகு வாய் இறால் உடைந்து உமிழ் தேனும் ஆர்ந்து ஒழுகி
பெருகு வாய் புனல் பெற்றியோடு ஓங்கினன் வளனே

#16
வினை கெட பெரும் வெறுக்கையர் பொழி நிதி குப்பை
தனை கெட திரு தாள் மிசை நவ மணி கூப்பின்
நனை கெட கவின் நந்தன சால்பு அதோ என்றான்
சுனை கெட கலுழ்ந்து ஊற்று அது ஆய் துளித்த கண் சூசை

#17
முற்றி வேம் அழல் பாலையில் காய்ந்த எரி முள்ளின்
நெற்றி மேல் நறை நீலமும் கமலமும் பூப்ப
உற்றியே என ஒழுக்கம் ஒன்று இல்ல நான் உயர் வான்
பெற்றியே உன்னால் பெற்றனன் இதற்கு மாறு உளதோ

#18
உன்னை சேர்ந்த நான் உம்பருள் ஒருவனே ஆனேன்
என்னை சேர்ந்த நீ இயலும் இல் இல்லன் ஆயினையோ
தன்னை சேர்ந்த கால் தாழ் வினை விளைவு இதே என்ன
பொன்னை சேர்ந்த கால் போற்றினான் அன்பு அளவு அற்றான்

#19
ஆசு அவா அறும் அரும் தவன் அறைந்த சொல் கேட்டு
வாச வாய் தென்றல் தீண்டிய முல்லைகள் மதுவை
வீச வாய் மலர்ந்து என நகை காட்டிய விமலன்
பேச வாய் மலர்ந்து எதிர்த்த கால் பெரும் பயன் விரித்தான்

#20
தேன் அருந்தினர் தீய வேம்பு இன்பம் என்று அருந்தார்
வான் அருந்திய வளத்த நான் வாழவோ மண் மேல்
ஊன் அருந்திய உடலொடு தோன்றினேன் மிடி நோய்
நான் அருந்திட நண்ணி உன் மனை தெரிந்து உதித்தேன்

#21
மனை செயும் தகம் தேடுவர் தகவு இலார் மலர்ந்த
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி
வினை செயும் பகை வீழ்த்த நான் தெரிந்த இ மனையே
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள் என்றான்

#22
செல் நாகம் நீர் பொழிய தேன் பொழியும் புன்னாகம் திருவின் பூப்ப
கல் நாகம் நீர் உமிழ கவி நாகம் வெருண்டு அஞ்ச கல் ஊடு ஊர்ந்த
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓட கொழும் செய் வாய்ப்ப
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டு பொலிவு இது அன்றோ

#23
விரை வாய் பூம் தாழை உலாம் வெள் வளை ஈன்ற பூ வயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற
கரை வாய் பூம் சுனை பூப்ப கனி யாழ் வண்டு இமிர்ந்து ஒகரம் களி கூர்ந்து ஆடும்
சுரை வாய் பூம் பொழில் காய்ப்ப ஈர் அறமும் மு சீரும் சுகம் ஓர் ஏழும்
நிரை வாய் பூம் குடியாக நிமிர் இத்தாலிய நாட்டு நிலை இது அன்றோ

#24
பொருள் ஈன்ற பெரும் செல்வ பொலிவு ஒழிக்கும் வளம் புணர புகன்ற நாடு
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து மறை என்று ஓதும்
தெருள் ஈன்ற நூல் ஒருங்கே திரு விளக்கு என்று ஏற்றி எலா திக்கும் தானே
அருள் ஈன்ற விளக்கு ஆகி அவனி எலாம் ஆளும் இத்தாலிய நாடு அன்றோ

#25
ஓர் ஆழி உருட்டிய நான் வீற்றிருக்கும் கோயில் எனக்கு உலகில் ஆகி
பார் ஆழி ஒன்று இணையா படர் செல்வ நாட்டு இயல் யான் பகர்வது என்ன
நீர் ஆழி கடந்து அங்கண் இ மனை சென்று அடைக்கலமே நிலத்தில் செய்து ஆங்கு
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ

#26
பிறை தந்த கொடி உயர்த்தோர் பின்பு இங்கண் ஆண்டு எவரும் பெரிது அழுங்க
மறை தந்த நெறி நீத்து இ மனைக்கு அழிவு ஆம் என்று இதனை வானோர் ஏந்தி
சிறை தந்த விசையோடு போய் தெண் கடலை கடந்து இத்தாலிய நல் நாட்டில்
இறை தந்த விளக்காக மலை நெற்றி இரவியை போல் இலங்க உய்ப்பார்

#27
ஓங்கியது ஓர் உடல் முகமோ முக கண்ணோ கண் மணியோ ஒளி செய் மார்பில்
தூங்கியது ஓர் பூண் கலனோ சுடர் முடியோ முடி மணியோ சொல்லும் தன்மை
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில்
வீங்கியது ஓர் பேரின்ப வீடு அதுவே மேல் வீட்டு வாயில் அஃதே

#28
அடி கோடி தாங்கி எழுந்து அந்தர மேல் மணி செகரத்து அகன்ற நெற்றி
கொடி கோடி ஆடிட உள் குழல் கோடி குரல் கோடி குயின்று பாட
முடி கோடி கீழ் பணிய முன் விளக்கு ஓர் கோடி பகல் முற்றி மின்ன
துடி கோடி சூழ் முழங்க துணை அறும் ஆங்கு இ மனையின் தோற்றம் அன்றோ

#29
மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான் இவண் சென்றேன் மேவி என் தன்
அடி சென்ற வீடு என்ன ஆசை எழுந்து அனைவரும் போய் அவனி எல்லாம்
குடி சென்ற வீடு என்ன கொழு மணி பொன் பூம் தொடைகள் குவித்து போற்ற
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இ மனை என்றான் படர் நூல் வல்லான்

#30
எனை ஈன்ற இணையா இத்தாலிய நாடு அளவு இன்றி இயலும் மாட்சி
சுனை ஈன்ற மலர் வாயான் துளி மது போல் இன்பம் உகும் சொல்லால் சொன்ன
வினை ஈன்ற வியப்புடன் உள் மிக ஏய்ந்த ஐயம் அற வினவி தண் தேன்
நனை ஈன்ற நறும் கொடியோன் நளினம் அடும் தாள் தொழுதே நவின்றான் மாதோ

#31
ஏம் உற்று காத்தன கால் எவன் நில்லா மற்று அடிகள் இடை நீ காய்ந்தால்
பூ முற்றும் பெயர்ப்பது அரும் பொருள் உனக்கோ ஆயினும் நீ புகழ்ந்த நாடர்
காம் உற்று சீலம் அற காசினி முற்றும் சுழிந்து இறைஞ்சும் கடவுள் எல்லாம்
தாம் உற்று போற்றுவராம் பின்பு உரைத்த தகுதி உறும் தடம் ஏது என்றான்

#32
செ வழி உளத்து சான்றோன் செப்பிய உரைகள் கேட்டு
எ வழி அனைத்தும் தாவி எல்லையை கடந்த காட்சி
அ வழி அணுகி யாவும் அணுகு முன் முன்னு நூலோன்
மெய் வழி விதிப்ப மென் பூ விள்ளென விளம்பல் உற்றான்

#33
கண் கடந்து அறிந்த யாவும் கடந்து நான் அரூபியாய் நின்று
எண் கடந்த ஏதம் கொண்ட இ உலகு அனைத்தும் காத்து
விண் கடந்து எவரும் வீட்டை மேவுதற்கு உருவாய் தோன்றி
மண் கடந்து அரசு ஆம் ஆறு வகுத்தலே கேள்மோ என்றான்

#34
மழை குலம் பொழியும் மாரி வழங்கு இலா நாளில் உண் நீர்
உழை குலம் கண்டு வீழும் ஒத்து எலா துகள் மேல் வீழ
பிழை குலம் ஆக மாக்கள் பேர் உயிர் வினை கொண்டு எஞ்சி
தழை குலம் வளி நாள் வீழும் தன்மையே நரகில் வீழ்வார்

#35
தீயவை விழைந்த மாக்கள் தீய் எரி வீழ்வர் என்னா
தூயவை இரங்கி காட்ட துன்னி நான் துன்பம் இன்பம்
ஆய் அவை விழைந்து வேதத்து அரு நெறி ஓதி சீற்றம்
காய் அவை இயற்றும் யாவும் காதலித்து இரியா நிற்பேன்

#36
தாய் வினை இயற்றி யாரும் தமரின் ஊங்கு இனியர் ஆக
தீய் வினை நோயும் சாவும் தீர்த்து நான் ஒழுகும் வேலை
தூய் வினை செய்த பாலால் சுடு வினை தீயோர் செய்ய
நோய் வினை மகிழ்ந்து நானே நுகர்கிற்பேன் அளவு இற்று அன்றே

#37
பொருந்தலர் தடிந்து வீழ்த்து புள் குலத்து இனிது எஞ்ஞான்றும்
விருந்து அமர் அமர் செய்கிற்பார் வெற்றியே இங்கண் கொள்வார்
வருந்து அலர் யாரும் உய்ய வருந்தி நான் ஒருவன் தெய்வ
மருந்து அமர் இரத்தம் சிந்தி மாண்டலில் கொற்றம் கொள்வேன்

#38
என்றனன் இளவல் என்ன இவை எலாம் சூசை கேட்டு
பொன்றனன் என நீ பொன்று பொன்று இலா வெற்றி கொள்வாய்
வென்றனன் என்ன ஏகி விலக்கு_அரும் இடுக்கண் பாரில்
நின்றனர் உறுதி நிற்ப நெறி எனோ உரைத்தி என்றான்

#39
தேன் செயும் மாலையின் வாடுபு நீர் செயும் திரையின் ஆடி திறன் இல்லாது
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள்
நான் செயும் நல் அருள் பெற்றனரேல் அவர் நலம் நிற்பதுவோ அரிது என்ன
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான்

#40
நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும் நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும்
கோல் நலம் இன்றியும் ஈங்கு எனக்கு ஒத்தன குறும் பாட்டு இல்லோர் தமை தேர்ந்து
வான் நலம் நான் தர தந்தன நூல் மறை வையத்து எங்கும் வகுத்து ஓத
சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி என் சுருதி பரவு உற்று உலகு ஆள்வேன்

#41
இ திறத்தோர் தமை வேந்தரும் போற்றுப எல்லை இல்லா கலை வல்லோர்
பொய் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து ஏத்துப புவனம் யாவும் வியந்து அஞ்ச
மெய் திறத்து அற்புத நாவொடு நூல் எலாம் விண் நின்று எய்தி வரத்து ஓங்கும்
அ திறத்து எ திறத்து அற்புத மாட்சியும் அன்னார் காட்டி நிலம் மீட்பார்

#42
பாடிய ஓதையும் வீணை செய் ஓதையும் பகை அற்று உவப்ப எவர் கேளார்
ஆடிய நூல் மறை ஒத்து அற நல் நெறி அன்னார் நீங்கா ஒழுக்கத்தால்
கோடிய உள்ளமும் இன்பு உறீஇ சொன்னது உள் கொண்டு குன்றா தெளிவு எய்தி
நேடிய நன்று உற உற்றவை நீங்கு இல நிலையே பெற ஏழ் வரம் ஈவேன்

#43
வெண் நிற தூசு கொள் மாசு அற வெண் மதி கதிருள் தோய்த்த வினை என்ன
புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம்
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன்

#44
தாய் விளை அன்பு இணையாது என பின்பு உற தயையின் மிக்க ஓர் முறை உள்ளி
மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண விரும்பி நானே விருந்து ஆவேன்
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால்
தீய் விளை அ பிணி தீர்க்கும் மருந்து என சிறந்த ஓர் தேவ முறை செய்வேன்

#45
துஞ்சிய-கால் பழி பேய் அமர் வென்று எழ தூய் நெய் பூசல் திறன் தந்து
விஞ்சிய மா இருள் நீக்கு விளக்கு என விதி செய் அத்தர் விளைவு ஈந்தே
அஞ்சிய கோது இல வாழவும் மன்றலை அருள் செய் யாக்கை என செய்வேன்
எஞ்சிய மாக்களும் இ திறத்து ஏழ் வரம் எய்தி குன்றத்து இணை நிற்பார்

#46
கார் உரு என் உடல் மா மலை கோட்டு உயர் கருணை செந்நீர் மழை பெய்ய
பேர் ஒரு வெள்ளமும் ஓடலில் இ வரம் பிரிந்த ஏழு ஆறு என ஓடி
தேர் ஒரு நன்றி இல்லாமையில் தீவினை தீக்கும் பாலை என வைகும்
பார் ஒரு பூம் குளிர் சோலை என்று ஆக்கலும் பரிவு அற்று உய்வார் நரர் என்றான்

#47
வான் உகும் வாமையில் தோன்றிய வானவர் மகிழ்ந்து யாவும் மனத்து உள்ளி
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு திரு சேய் நாம புகழ் பாட
கான் உகும் பூம் கொடியோனும் அ தாள் மிசை கமழ் பூ ஏற்றி தொழ தானும்
ஊன் உகும் ஆக்கையை ஏந்திய நாதனை உணர்ந்து பாட தொடங்கின்றான்

#48
ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினோன் அல்லால்
நன்று இல்லா வையத்து இ நன்றி செய்வான் யாரே
நன்றி செய்வார் இல்லா நாம் வாழ தான் இறந்து
வென்றி செய்வான் எமக்கு நீ அல்லால் வேறு யாரே

#49
அன்பு உடையர் என்பும் அரிந்து அளிப்பார் தன் உயிரோடு
என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து உண என்பான் யாரே
ஈய்ந்து உண என்று எ உயிர்க்கும் எ உணவும் ஈட்டி இவண்
வேய்ந்து உண தான் ஊண் இரந்த நீ அல்லால் வேறு யாரே

#50
கைம்மாறு இவண் வெஃகா காமுற்று இவை எல்லாம்
மெய் மாறு எனக்கு அளிப்ப விஞ்சு அருள் கொண்டேன் யாரே
விஞ்சு அருள் கொண்டு ஆசு அற நாம் மீ வாழ தான் நொந்து
நெஞ்சு அருள் கொண்டு ஈங்கு இறக்கும் நீ அல்லால் வேறு யாரே

#51
இனையவும் பலவும் ஆங்கு இயல நாள்-தொறும்
வனையவும் புவி நிகர் மடிய வான் உலகு
அனையவும் அ மனை அரிய தேவ நூல்
புனையவும் மா முனி பொருவு அற்று ஓங்குவான்

#52
பூ அது கொடியினோன் பொலிய மீட்டு ஓர் நாள்
ஆவதும் ஆயதும் ஒன்றும் ஆய் எலாம்
தாவு அது உணர் பிரான் தந்த காட்சியை
நாவு அது வருந்தினும் நவிலும் பான்மையோ

#53
மண் இடத்து இருள் அறும் மாலி நாணவும்
விண் இடத்து உலாவி வில் விளங்கு வேந்தரை
எண்ணிட இடமும் ஒன்று இன்றி எண் திசை
கண்ணிட தகவு இல கனிவில் கண்டுளான்

#54
பொன் நெடும் குடைகளும் பொன் அம் பூண்களும்
வன் நெடும் இரதமும் மணி கொடிஞ்சியும்
துன் நெடும் கொடிகளும் தொகுதி ஒன்று இல்லா
மின் இடும் வெயில் இடும் மீனின் வில் இடும்

#55
அரி இனம் பூட்டிய அணி விமானமும்
வரி இனம் பூட்டிய இரத வையமும்
பரி இனம் பூட்டிய திகிரி பான்மையும்
கரி இனம் பூட்டிய தேரும் கண்டு உளான்

#56
பைம் மணி பசும் குடை பவள செம் குடை
ஐ மணி சிதம் குடை தரள அம் குடை
செய் மணி குரும் குடை திங்கள் வெண் குடை
மை மணி கரும் குடை மயங்கி தோன்றின

#57
மயில் அகல் தோகையும் மணியும் வில் செய
வெயில் அகல் நிழல் செயும் வெயில் செயும் குடை
துயில் அகல் ஒளி மணி தொடுத்த பான்மையால்
வெயில் அகல் வளி செயும் வெயில் செயும் கொடி

#58
பேர் ஒலி முரசொடு பிறங்கும் பல்லியத்து
ஆர் ஒலி பரி ஒலி அதிர் கைம்மா ஒலி
தேர் ஒலி கொடி ஒலி தியங்கும் பூண் ஒலி
கார் ஒலி ஒளித்து ஒலி கலந்து ஒலித்தவே

#59
மீன் நிகர் வெயில் திரள் எறிக்கும் மேனியார்
வான் நிகர் மகிழ்வுறீஇ மகர யாழொடு
தேன் நிகர் தொனி குழல் திளைத்த ஓதை செய்
பால் நிகர் இசை கொடு இசைகள் பாடுவார்

#60
நள் நிலவு அனீகமே நயந்து சூழ் வர
ஒள் நிலவு எறித்த பூண் உலாவும் மார்பினார்
தெள் நிலவு இமைத்த பொன் மகுட சென்னியார்
எண்_இல குருசிலர் இரிந்து உலாவுவார்

#61
மேகம் ஒத்து இழி மத வேழம் மீ சிலர்
நாகம் ஒத்து எழுந்த தேர் நவிரம் மீ சிலர்
ஆகம் ஒத்து அகன்று பாய் அயங்கள் மீ சிலர்
யூகம் ஒத்து அணி அணி உலவி ஏகுவார்

#62
மின் நிறத்து உரு சிலர் விரி வில் வீசிய
பொன் நிறத்து உரு சிலர் பொறி செய் தூய் அழல்
நல் நிறத்து உரு சிலர் அலர்ந்த நாள் மலர்
இன் நிறத்து உரு சிலர் ஏந்தி ஏகுவார்

#63
தோட்டு அழகு அலர்ந்த பூம் தொடை தொடுத்து ஒளி
தீட்டு அழகு அமர்ந்த பூண் தியங்கி செம்_சுடர்
காட்டு அழகு உரு கொடு கலந்து அன்னார் உடன்
வீட்டு அழகு அரிவையர் விளங்க கண்டு உளான்

#64
பால் நுரை தகுதியை பழித்த ஆடையும்
தேன் நுரைத்து அலர் தொடை செறிந்த பூண்களும்
மீன் உரைத்து ஒளி மணி மேனி மாமையும்
யான் உரைத்து இணைசெய இயலும் பான்மையோ

#65
வாவி சேர் முளரி சேர் வதன வாமமும்
காவி சேர் வடிவு சேர் களித்த நாட்டமும்
நாவி சேர் குழலும் சேர்ந்து இலங்கும் நங்கையார்
ஆவி சேர் அழகும் சேர்த்து அனுக்கம் சேர்க்கிலார்

#66
முடி மணி துளங்கவும் மார்பின் மொய்த்து உலாம்
கடி மணி விளங்கவும் கை அம் காந்தள் சூழ்
தொடி மணி இலங்கவும் எழில் முகத்தினார்
வடிவு அணி உடுவில் ஊர் மதியம் மானுவார்

#67
உந்து கேழ் மதிய வெண் குடைகள் ஊர்ந்து உயர்
வந்து கீழ் அணி வரும் மணி முகத்து ஒளி
சிந்து கேழ் இன மணி திளை பொன் பாவையார்
இந்து கீழ் இந்து வந்து இரியல் மானுவார்

#68
வன் மலை சிறை கொடு வான் பறந்து எனா
மின் மலை உரு கொடு விளங்கு தேர் மிசை
சொல் மலை பழித்து எழீஇ தோன்றும் மங்கையர்
பொன் மலை முடி உறை சுடரை போலுவார்

#69
எண் திசை இரிந்து வந்து இன்ன ஆறு எழில்
கொண்டு இசை அரசரோடு எழிலி கூந்தலார்
விண் திசை நெருக்குற மிடைய கண்ட பூம்
செண்டு இசை கொடி நலோன் வியந்து செப்பினான்

#70
மின் இனம் என நனை விரித்த கொம்பு அனார்
மன் இனம் என நிமிர் வயிர குன்று அனார்
பொன்னின் அங்கு அண்ட மேல் போவது ஏது எனா
என் இனம் புரக்கும் நீ இயம்பு என்றான் அரோ

#71
மை திறத்து ஒளித்து எதிர் வருவது ஆதியே
மெய் திறத்து அனைத்தையும் விழுங்கும் காட்சியான்
அ திறத்து அவர் எவர் என்ன ஆம்பல் வாய்
இ திறத்து அலர்ந்து இவை இயம்பினான் அரோ

#72
மீன் செய்த சுடர் ஏய்க்கும் மேனியொடு ஆங்கு ஒளி செய் அ வேந்தர் ஈட்டம்
கான் செய்த மலர் மொய்க்கும் கடி நாடு பல ஆண்டு கசடு அற்று இங்கண்
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது எஞ்ஞான்றும் வான் வீட்டு ஆள்வார்

#73
இருள் பாய்ந்த நிசி பருகும் இரவி என சுடர் வெள்ளம் இமைத்து பைம்பொன்
பொருள் பாய்ந்த முடி சூடி ஆகிலப்புள் விருது ஏந்தி பொலிந்து ஆங்கு உள்ளோர்
தெருள் பாய்ந்த மணி கொழித்த தெண் திரை பாய் செழும் கழனி திருவின் பூப்ப
அருள் பாய்ந்த இரோமை நாடு ஆண்டு அளிக்கும் பல் அரசர்க்கரசர் ஈட்டம்

#74
வாமம் சால் ஓடை நுதல் மா எருத்தம் மீது இங்கண் வரும் இ வேந்தர்
காமம் சால் விளை செல்வம் கவர் உங்காரிய நாட்டை காக்கும் ஈட்டம்
ஏமம் சால் அணி தியங்க எறி வேல் கொண்டு அங்கண் பாய் இவுளி மேல் ஓர்
நாமம் சால் வெற்றி தர நண்ணர் தொழும் புலோனிய நல் நாடர் ஈட்டம்

#75
மேய்ந்த கதிர் உயிர்த்து இமைக்கும் விருது என வேல் முன்னி இவண் மிடைந்த வீரர்
வாய்ந்த கதிர் படை ஒன்னார் வணங்கு அயில் கொள் பாவரர் தம் மன்னர் ஈட்டம்
பாய்ந்த கதிர் உண்ணும் குடையால் பாய் இருள் உண் முடி சூட்டி பகல் அங்கு உய்ப்போர்
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம்

#76
செய் பரந்த மணி கொடிஞ்சி திண் தேர் மீது ஆங்கு அரி போல் திறத்த வல்லார்
மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம்
மெய் பரந்த கலன் மின்ன மீன் பரந்த விசும்பு உளர் போல் வேய்ந்த அன்னார்
ஐ பரந்த வெற்பு அருவி அதிர்ந்து அரி கொய் ஆச்சிய நாட்டு அரசர் ஈட்டம்

#77
மீன் முழுகும் கொடி திண் தேர் மீ வரிமா விருது ஏந்தி வேய்ந்த வேந்தர்
கான் முழுகும் குன்றம் சால் கவவு முடி முராவியமே காக்கும் ஈட்டம்
ஊன் முழுகும் ஒளி முழுகும் உவணியை கொண்டு உவந்து இப்பால் உறைந்த கோமார்
தேன் முழுகும் பூம் பொழில் வாய் சிலீமுகம் ஆர் சிலேசியம் ஆள் செல்வர் ஈட்டம்

#78
செல் தாறு கடந்து அனில விசை கடந்த தேர் எழும் அ செல்வ வல்லோர்
பற்று ஆறு கடந்து இரு சீர் பயந்து இணையா புவேமியர்-தம் பதிகள் ஈட்டம்
சொல் தாறு கடந்த சினம் சூட்டு ஆளி ஏந்தி அவண் தோன்றும் மன்னர்
கல்தாறு கடந்த உரத்து கருணை மிகும் சசோனியமே காக்கும் ஈட்டம்

#79
சினம் பழுத்து சீறி விரி சிறை சிங்கம் உயர்த்து இங்கண் செல்லும் செல்வர்
தனம் பழுத்து திரு வாய்ப்ப தாழ் கடல் சூழ் வினேசியர் தம் தலைவர் ஈட்டம்
மனம் பழுத்து களி ஆர்ந்த வடிவு உற்று ஆங்கு இவுளி மிசை வாய்ந்த மன்னர்
கனம் பழுத்து பனி வரை சூழ் கலை மிக்க எத்திறூதியரை காக்கும் ஈட்டம்

#80
மை ஒக்க மின்னல் என மத கரி மீது ஒளி வயிர மணி குன்று அன்னார்
பொய் ஒக்க வளர் கருப்பம் பொழில் மொய்க்கும் சசீலியம் ஆள் பொருநர் ஈட்டம்
நெய் ஒக்க கதிர் தும்மும் நீடிய வாள் ஏந்திய அ நிருபர் தாமே
மெய் ஒக்க திருவொடு அறம் விசித்து ஒளிகொள் நாப்புலி ஆள் வேந்தர் ஈட்டம்

#81
கண் கடந்த கவின் காட்டி கமழ் கமல கண்ணி அணி களி மார்பு அன்னார்
பண் கடந்த குரல் அன்னம் கண்படும் வயல் கொய் மாந்துவம் ஆள் பரிவோர் ஈட்டம்
விண் கடந்த பூம் கொடியை விரித்து ஆர்க்கும் தேர் நடவி மிளிர செல்வோர்
எண் கடந்த நிரை தீம் பால் இனிது ஒழுகும் பார்ம நிலத்து இறைவர் ஈட்டம்

#82
திரை புறம் காண் கடல் பவள சிலுவை விருது உயர்த்தி இவுளி செலுத்தும் அன்னார்
புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம்
விரை புறம் காண் தொடை மார்பில் வெண் புறவு கதிர் பரப்ப வேய்ந்த அன்னார்
வரை புறம் காண் கோ நதி சார் வளம் பெற வாழ் சாவோய மன்னர் ஈட்டம்

#83
மீன் நலம் கொள் மணி திண் தோள் வீங்கி அரி தேர் ஏறி வேய்ந்து ஆங்கு அன்னார்
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர் கல்லியம் ஆள் மன்னர் ஈட்டம்
தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ்ந்து தாங்கு உலவும் திண் தேர் செல்வார்
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ நிருபர் ஈட்டம்

#84
போர் எல்லை கடந்து உகளும் பொன் கலின மா ஏறி பொலி உம் கோமார்
சேர் எல்லை வாழ்வு உற சீர் எல்லை இல விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம்
நேர் எல்லை இல்லை என நிமிர் கவிகை நெடும் செங்கோல் கொற்ற மன்னர்
பார் எல்லை அல்லது இல படர் இலுசி தானியம் ஆள் பரிவோர் ஈட்டம்

#85
கொக்கு ஒக்கும் தேரின் எழீஇ குணக்கு ஒக்கும் சுடர் ஒத்த குணத்து அ கோமார்
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு இறைவர் ஈட்டம்
புக்கு ஒக்கும் புயல் ஒக்க பொழி மத மால் களிறு ஒக்கும் பொலி கோல் அன்னார்
திக்கு ஒக்கும் செல்வம் எலாம் திரண்டு ஒக்கும் ஈர்லாந்த தீவார் ஈட்டம்

#86
கோல் உண்டே விசயம் கொள் கோல் உண்ட அ பசும்பொன் கோல் கை உண்டோர்
பால் உண்டே பூம் துகில் தம் பால் உண்ட பார்த்தவர் ஆள் பதியர் ஈட்டம்
கால் உண்டே விசை கடுத்த கால் உண்ட இரத மிசை களித்த அன்னார்
நூல் உண்டே நீதி வழா நூல் உண்ட நொர்வெற்கர் தலைவர் ஈட்டம்

#87
விண் தீண்டி ஆடு கொடி விமான மிசை விரி கதிர் பூண் வேய்ந்த அன்னார்
மண் தீண்டி உலாம் கடல் சார் வயம் எஞ்சா பிறூசியர் தம் மன்னர் ஈட்டம்
பண் தீண்டி எழும் குரலின் பாடினர் சூழ் வர வானோர் பரிசு ஒத்து அன்னார்
கண் தீண்டி இன்பு உகுக்கும் கவின் தீட்டும் பவோனியரை காக்கும் ஈட்டம்

#88
துப்பு அப்பால் உரு சிவப்ப தொக்கு உம்பர் என விருதாய் சுடர் மீன் கொண்டார்
ஒப்பு அப்பால் உலகு அணி கொள் ஒளி செப்பு ஆம் சிப்புரு தீவு உடையர் ஈட்டம்
வெப்பு அப்பால் ஒளி எறிக்கும் வெண் மணி மார்பு-இடை தூங்க வெயில் செய் அன்னார்
தப்பு அப்பால் தீம் கனிகள் தந்து உவக்கும் கான்றிய தீவு அதிபர் ஈட்டம்

#89
ஐ_அறும்_ஓர் வகுப்பு அப்பால் அலகு இல நாட்டு அரசரை தான் அங்கண் காட்டி
மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண் நான் மனத்து இரங்கி வையத்து ஓதும்
பொய் அறும் ஓர் மறை நல் நூல் பொன் சுடரோன் கதிர் பட்ட புவனத்து எங்கும்
மொய் அறும் ஓர் முறை தானும் முற்று உலவி வழங்கும் என்றான் முருகு சொல்லோன்

#90
பண் கடந்து இனிய சொல்லான் பகர்ந்து காட்டிய அ கோமார்
கண் கடந்து இயலும் மாமை கண் கடவாமை நோக்கி
எண் கடந்து அரிய இன்பம் ஈதி என்று அடியை போற்றி
மண் கடந்த அமரர் ஒத்தான் மது கடந்து அலர்ந்த கோலான்

#91
கனி வரும் இனைய ஆகி கதம் கொடு கடலும் காரும்
தொனி வரும் முழக்கத்து இ பார் துணுக்கென பிளந்த வாயால்
நனி வரும் புகை மொய்த்து எங்கும் நடுக்கு இருள் பரவ செம் தீ
முனி வரும் நரக பூதம் முழங்கி மேல் தோன்றிற்று அன்றோ

#92
நோய் விளை சினம் கொடு ஆவி நுகர வந்து எதிர்த்த கூற்றோ
தீய் விளை நரக பேயோ அவற்றினும் தீயது ஒன்றோ
மீய் விளை தலை ஏழ் கொம்பு ஏழ் விரி சிறை சற்பம் ஏறி
வாய் விளை அழல் விட்டு ஆர்ப்ப மண் பிளந்து எழுந்தது அன்றே

#93
நேர் ஒன்றும் இலது இவ்வாறே நினைப்பினும் பனிப்ப உள்ளம்
கார் ஒன்று முழக்கத்து அஃதே கதத்து அரசு ஆக எய்த
பார் ஒன்றும் திசைகள் எஞ்ச படர்ந்ததற்கு ஒத்த வீரர்
சீர் ஒன்றும் அலகு இல்லாத சேவகர் மருங்கின் சென்றார்

#94
நாய் இனம் என்ன சீறி நலது எலாம் பகைத்த அன்னார்
பேய் இனம் உவப்ப வேத பெயர் அற வெகுண்டு தாக்கி
தூய் இனம் ஒருங்கும் கோற சூழ் எங்கும் அரவம் பொங்கி
வேய் இனம் அழிப்ப புக்க வெம் தழல் கதத்தில் ஒத்தார்

#95
இடத்து இடத்து அலகு இல் நல்லோர் இறந்து உயிர் எஞ்ச மாய்ந்து
சுடச்சுட புது கலத்தில் சுவைய பால் பொங்கல் போல
படப்பட சிலர் எண் இன்றி பலர் எதிர்த்து உவப்பில் ஆவி
கெடக்கெட தந்து வான் மேல் கேழ் முடி சூடி நிற்பார்

#96
பேர் பகை எஞ்ச எஞ்சா பெருமையோர் வாய்ப்ப கண்டு
சேர் பகை யாது என்று ஐயா செப்புதி என்ன சூசை
ஆர் பகை காதை கேண்மோ அரும் தவ என்று சொல்வான்
நேர் பகை மறுப்ப நேரா நிமிர் நெடும் காட்சி நீரான்

#97
கூவில் வந்து நான் குணுங்கு அரசு எங்கணும் பறிப்ப
பூவில் வந்து தான் நமர் எலாம் பகைத்து அதிர் புலிகள்
காவில் வந்து மான் கடுத்து என மக்களும் அ பேய்
ஏவி வந்து மா பகை விளைந்து எங்கணும் ஆம்-ஆல்

#98
கடையர் என்பவர் கசடர் என்பவர் கலை கடிந்த
மடையர் என்பவர் மறை முறை குலம் திரு இழந்த
புடையர் என்பவர் புரை துயர் இழிவு நோய் ஒருங்கே
உடையர் என்பவர் தூய என் சுருதி நூல் உடையோர்

#99
தாயும் தந்தையும் தமர் எலாம் பகை செய என்றும்
ஓயும் தன்மையும் ஒன்று இல நகைத்து அடித்து அகற்றி
நோயும் துன்பமும் நுகர்ந்து எமர் யாவரும் செம்பொன்
காயும் தன்மையின் கதிர் செயல் போல் வளம் கொள்வார்

#100
கோலும் கோடிய கோ கணமும் பகைத்து அன்ன
நூலும் கோடு_அரும் நூல் உடை யாவரும் மடிய
வேலும் கோலும் மற்று அரும் படை கொடு மிக வெகுண்டு எ
பாலும் கோது இலர் குருதியோடு உயிர் நலம் பறிப்பார்

#101
கொடிய வேலினர் கொடுமை செய்து அயருவார் அயரார்
நெடிய வேதனை நீர்த்த இன் அமுது என நுகர்ந்தோர்
கடியரே உமக்கு உரியது ஓர் கருமம் இ துணையோ
மடியவே உடல் மடியுமோ உயிர் என நகைப்பார்

#102
எரிந்த வெம் தழல் இக்கு உகும் பனி மலர் என்பார்
அரிந்த வெம் படை அணிந்த பொன் பணி நலம் என்பார்
பிரிந்த நல் உயிர் பருகும் நஞ்சு அமுது என்பார் பெருக
புரிந்த வெம் துயர் புரி மண இன்பமே என்பார்

#103
இ திறத்து அவர் இறத்தல் காண் பலரும் அ மறை செய்
மெய் திறத்தில் இ வீரம் ஆம் என உளம் தேறி
அ திறத்தில் அங்கு ஒருவர் மாய்ந்து ஆயிரர் தெளிந்து
பொய் திறத்த நூல் போக்கி மெய் சுருதி கைக்கொள்வார்

#104
விரைத்த வேலியே விளைவுற பாய் புனல் போன்றே
நிரைத்த சோரியால் என் மறை விளைவு நீள்வதும் மற்று
உரைத்த ஓகையால் உலந்தவர் அரசு உறீஇ வான் மேல்
வரைத்த மாமையால் விரைவு இல வாழ்வதும் நோக்காய்

#105
பொன்னை காட்டிய பொறி அழல் போல்வதே அல்லால்
கொன்னை காட்டிய கொடுமை நொந்து எஞ்ச நல் மறையோடு
என்னை காட்டிய ஈடு உளோர் பகை வெல்வார் என்றான்
மின்னை காட்டிய விரி மணி மேக வாகனத்தான்

#106
என்னை பற்றி நீ இறந்து உலகு அளிப்ப மற்று உமர் தாம்
நின்னை பற்றி மாய்ந்து இகல் வெல நினக்கு இனி நிகர் யார்
உன்னை பற்றி நான் உதிரம் தந்து அரசு உற இரங்கி
பின்னை பற்றி நீ தருக என பெரும் தவன் தொழுதான்

#107
களிப்ப வானமும் நாய்கன் ஓர் புன்னகை காட்டி
அளிப்ப ஆர்வமும் ஆவியும் ஒன்று உற தழுவி
துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய் உன்னை
தெளிப்ப ஆசையின் செப்பிய தகுதி சால்பு என்றான்

#108
தீய் வரும் படை சிந்து செந்நீர் அரசு எனக்கு ஆய்
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான்
மீய் வரும் திருவுளம் வளன் மேவி உள் வலிப்ப
தூய் வரும் படும் துயர் அற இவன் பிணி சொல்வாம்
மேல்

@33 பிணி தோற்று படலம்


#1
வேல் முகத்து அசடர் கையால் வீழ்ந்து இறப்பு அரிது என்கேனோ
நால் முகத்து உறு நோய்க்கு எஞ்சா நயத்து அமைவு அரிது என்கேனோ
கோல் முகத்து ஈண்டே சாதல் குணம் என பல நாள் வெம் நோய்
பால் முகத்து அவலம் ஆற்றா பலர் தமை கொல்வார் அன்றோ

#2
தீங்கு இயன்று ஆய துன்பம் திரிந்து அறம் விளைவு காண
ஈங்கு இயன்று உதித்த நாதன் எளியன் ஆய் தனக்கு மற்றை
ஆங்கு இயன்று அமை கை_தாதை அனைத்திலும் அரிய துன்ப
பாங்கு இயன்று அரசு கொள்ள பல பிணி பட செய்தானே

#3
மேன்மையே பொருளால் ஆகி மிக்கு அவை இங்கண் உண்டேல்
கோன்மையே மனிதர்க்கு ஆகும் குன்றும் அஃது என்று வான் மேல்
நோன்மையே அரசு ஈந்து அங்கண் நுண்தகை மேன்மை ஆகும்
பான்மையே சூசை புன்கண் பட்டது ஓர் நிலையில் கண்டோம்

#4
வெம் வினை அனைத்தும் பாவ விளைவு தான் மீண்டு அ துன்பம்
செ வினை வளர்வு காட்ட திருவுளம் என நல்லோர் கண்டு
அ வினை நுகர்ந்து மாழ்கா அரும் தவன் தானும் பல் நோய்
மொய் வினை கொண்டு உள் எஞ்சா முற்று இவண் திலதம் ஆனான்

#5
இறைக்கு ஒரு தாதை ஆக எழுந்து எலா அறங்கள் பூத்து
மறைக்கு ஒரு கொழுகொம்பு அன்னான் வருந்தி நோயுற்ற பாலால்
பொறைக்கு ஒரு நிலை சார்பு அல்லால் புலம்பி நாம் எய்தும் பீடை
முறைக்கு ஒரு மருந்தும் ஆகி முற்றும் நாம் உவப்ப நொந்தான்

#6
விரை கிடந்து அலர்ந்த பைம் பூ வெம் தழல் பட்டதே போல்
நரை கிடந்து இரிந்த மூப்பின் நைந்து உடல் தளர்ந்து வாட
வரை கிடந்து அதிர்ந்து மல்கும் வாரியின் மலிந்த நோய்கள்
சிரை கிடந்து இழுத்து என்பு எல்லாம் சினம் கொடு குடைவ தாம்-ஆல்

#7
போர் முகத்து அஞ்சா வீர புழை கையோ புணரி மோத
நீர் முகத்து அசையா குன்றோ நெடும் பிணி முகத்து எஞ்சாதான்
கார் முகத்து அலர்ந்த முல்லை கா என திரண்ட பல் நோய்
சேர் முகத்து அலர்ந்து தேவ திருவுளம் துதித்தல் விள்ளான்

#8
தீய் வரும் துகள்கள் வெஃகி தீயவோ அருந்தல் ஆற்றோம்
மாய்வு_அரும் புரை தீது அல்லால் வழுவும் ஒன்று உண்டோ என்பான்
மீய் வரும் துன்பம் இன்பம் வீற்று வீற்று ஆக கொள்ளார்
ஆய்வு_அரும் திரியா தேவ அன்பு உணர் நீரார் என்பான்

#9
பொய்க்கும் ஓர் இன்பம் மாந்தி புரை எனும் நஞ்சு உட்கொண்டால்
கைக்கும் ஓர் மருந்து உண்ணாதோ கடுத்த நோய் ஒழியும் என்பான்
தைக்கும் ஓர் அம்பின் பீடை தகை கெட மிகும்-கால் வான் மேல்
மொய்க்கும் ஓர் இன்பம் உள்ளி முற்று எலாம் அவியும் என்பான்

#10
மு குடை நிழலில் யாவும் முற்றும் ஆள் இறைவன் பாரில்
புக்கு உடை புரைகள் தீர்த்து பொன்றவே உதித்த பின்னர்
இக்கு உடை இன்பம் அல்லால் எமக்கு இடர் தகாது என்பாரோ
மிக்கு உடை செல்வ வல்லோன் விரும்பிய நன்று இது என்பான்

#11
அ திறத்து இன்பம் ஆக அழுங்கிய துன்பம் தாங்கி
கை திறத்து இயற்றல் இன்றி கால் திறத்து இரிதல் இன்றி
மெய் திறத்து உருகி வாடி மேல் திறத்து ஊக்கம் வாடா
எ திறத்தாலும் ஒவ்வா இருமையின் பொலிந்தான் சூசை

#12
வரிந்த மாமை உரு கொடு வானவர்
இரிந்த ஓகையில் ஏந்திய வீணை வாய்
சொரிந்த ஓதை தொடர்ந்து இசை பாடலில்
விரிந்த வாம விழா அணி ஆயதே

#13
ஆடுவார் திரு நாமங்கள் ஆடுவார்
பாடுவார் பிணியோன் துதி பாடுவார்
தோடுவார் வெறி தொங்கல் இட்டு ஓடுவார்
வீடுவார் நயம் செய்குவர் வீடு இலார்

#14
ஆய இன்பம் அருமை அருந்தவும்
நேய வண் தவன் நேர் இசை பாடவும்
காய வெம் துயர் காண்டலன் அ துயர்
ஓய உம்பருள் உம்பன் என்று ஆயினான்

#15
துனி வரும் துயர் ஆக்கை துகைத்துளி
நனி வரும் களி நல் உயிர் உண்டலால்
முனி வரும் தழல் முய்த்து எரி பாலையில்
பனி வரும் துணர் பூத்து அன பான்மையே

#16
துகைத்த நோய் தணிவும் தொகையும் படா
பகைத்த பான்மை பணி பத மங்கை கண்டு
உகைத்த ஏவலில் ஓர் இரு போது அது
தகைத்த பின்பு சினம் கொடு தாக்கும்-ஆல்

#17
விது படும் பத மென் மலர் சுந்தரி
மது படும் கொடி வாட்டு இடர் முற்று அற
பொது படும் தனி கோல் சுதன் போற்றினள்
புது படும் பனி தேன் உரை போக்கினாள்

#18
வேண்டும் என்பதும் வேண்டுவது ஆக்கலும்
யாண்டும் ஒன்று என யாவும் இயற்றினோய்
நீண்டு நொந்து நின் தாதை படும் துயர்
காண்டு உளம் கனியாது-கொலோ என்றாள்

#19
துவர்க்கும் வெம் பகையோர்க்கு அருள் சூட்டி மற்று
எவர்க்கும் நோய் ஒழித்து இன் உயிர் ஈய வந்து
அவர்க்கும் செய்தவை ஈங்கு அளியாய்-கொலோ
உவர்க்கும் வேலை ஒவ்வா அருளோய் என்றாள்

#20
அல்லது அன்பு உடை ஆவருக்கும் ஆகுலம்
நல்லது என்று இவற்கு இ துயர் நல்கினேல்
வல்ல நந்தனே வந்த இ நோய்கள் நான்
புல்ல அன்புடன் ஈக என போற்றினாள்

#21
மீனில்-நின்று ஒளி மேய் முடியாட்கு அவன்
வானில்-நின்று இவண் நான் வந்து தேடிய
ஊனில்-நின்று உறும் துன்பம் நன்று ஆயினும்
தேனின் இன் துயர் செய்தியை கேள் என்றான்

#22
நோய் அருந்தல் இவற்கு என நொந்து உடல்
காயம் உண்டல் எனக்கு என கண்டு உளம்
தீ அருந்தல் உனக்கு என சீர்த்த ஓர்
தூய் அரும் தயை சூட்சி இது ஆம் என்றான்

#23
இனைய கேட்டலும் தாயே இது திருவுளம் என இணங்கி
தனையன் ஏற்றினள் தணியா தலைவன் நோய்க்கு இனைந்து அழுது ஆற்றா
சுனைய தாமரை இரு கண் சுட்டு எரி அழல் திரள் உண்டது
அனைய வாடினள் அ நோய் ஆற்றவும் வருந்தினள் மாதோ

#24
இனிய தேனினும் இனிய யாவிலும் இனிய தீம் சொல்லை
கனிய ஆடுவள் உயிரை காத்த மெய் என இரு பொழுதே
நனி அவாவொடு பிரியா நயந்து செய் ஏவலால் உடலை
முனிய வந்த நோய் முத்தி முற்று உகும் வாழ்வினும் இனிதே

#25
தேன் கலந்ததோ சுவையில் சீரிய தெளிந்த பாகு அதுவோ
வான் கலந்த நல் அமுதோ வான் மலர் மது அதோ யாதோ
மீன் கலந்த நீள் முடியாள் விளைந்த தன் அன்பு கூட்டியது ஓர்
கான் கலந்த தீம் விருந்தை கனிவில் எ நாளும் ஓம்புவள்-ஆல்

#26
ஆவல் செய் அருள் தாயும் அனைத்தையும் தொக்கு உள ஆக்கி
காவல் செய் திருமகனும் கண்ணினை காத்த கண் இமை போல்
ஓவல் செய் பிணி மாறா உளைந்த மா தவனை காத்து இருவர்
ஏவல் செய்தனர் வானும் இயம்பு அரும் வியப்புற மாதோ

#27
உண்டு வாழ் உயிர்க்கு எல்லாம் உணவு எலாம் அளித்தவன் உண்ப
பண்டு தான் உழைத்து உணவு பகுத்தலே செல்வம் என்கேனோ
வண் துளாய் கரத்து ஏந்தி வான் தொழும் அரசு இடும் உணவு
கொண்டு தான் உயிர் வாழ்ந்த கொள்கையே செல்வம் என்கேனோ

#28
நடலையோடு அரும் தேவ நயங்களும் இன்னணம் மாறா
படலை மாலையாய் புணர பகை பிணி சுடச்சுட துகைத்த
உடலை வாட்டிய தன்மைத்து உயிர் எழ சூசையே
விடலை ஆயின தகுதி விளம்பவோ புலமையின் வல்லோர்
மேல்

@34 தூதுரைப் படலம்


#1
நீடிய பிணிகள் எண் வருடம் நீங்கு இலா
வாடிய உடற்கு உயிர் வாடு இலா வளர்ந்து
ஓடிய மீன் மிதித்து உயர்ந்து வான் நலம்
சூடிய தன்மையின் சூசை ஆயினான்

#2
கண் புலம் கடந்து உரு கடிந்த வானவர்
உள் புலம் தகும் தகவு ஒத்த மாட்சியான்
மண் புலம் தணந்து இனி உரிய வாழ்வுற
விண் புலம் தணந்தனர் விளிப்ப எய்தினார்

#3
பணி வளர் மாமையின் பளிக்கு மேனி கொண்டு
அணி வளர் மகர யாழ் ஆதி மற்றையும்
மணி வளர் மலர் கையால் தடவி வாய் குரல்
பிணி வளர் துயர் அற பேணி பாடுவார்

#4
மீ மழை பொழிந்து என விண்ணில் பூத்தது ஓர்
பூ_மழை மண மழை பொழி நல் நீர் செயும்
தே_மழை துதி மழை செறிந்த பாடல் செய்
நா_மழை பகல் இரா நயந்து நல்குவார்

#5
சுக முகத்து இன்ன ஆய் தொடர் ஒன்பான் பகல்
நிக முகத்து ஆய் வளன் நிகர் இலா வயத்து
அக முகத்து ஒரு மறைவு இன்றி அன்று ஒளி
முக முகத்து இறைமையை முழுதும் கண்டுளான்

#6
உரை கடந்து உணர்வு_அரும் இறைமை ஒள் முக
வரை கடந்து ஒழுகு ஒளி மகிழ்ச்சி நீத்தம் உள்
தரை கடந்து என அரும் தவன் குளித்து எலா
கரை கடந்து உறு நயம் கருதும் தன்மையோ

#7
தோடு செய் கொடி நலோன் துலங்க நாயகன்
வீடு செய் நயத்தொடு விரும்பி நோக்கினன்
சேடு செய் கமல வாய் துளித்த தேன் உரை
பாடு செய்து இன்னவை பரிவின் கூறினான்

#8
உன் உயிர் தன்னினும் ஓம்பி தாய் மகன்
இன் உயிர் காத்தனை இனி பயன் கொளீஇ
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ
நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ

#9
ஆயினும் அரிதின் நீ வளர்த்த ஆண்டகை
தாயினும் அன்பொடு தரணி காக்குப
வீயினும் அன்றி மேல் வீடு உறாது உடல்
ஓயினும் நீ செய்வது ஓம்பி கேட்டி-ஆல்

#10
ஈடு அடைந்து அரும் தவம் இயன்ற முந்தையார்
நீடு அடைந்து உறையும் என் தயை நிழற்றிய
நாடு அடைந்து இறை இறந்து அளிக்கும் நாள் உறீஇ
வீடு அடைந்து உவப்பர் என்று அருள் விளம்புவாய்

#11
உடல் கடிந்து உவந்து உயிர் உறையும் நாடு என
மடல் கடிந்து எரி பட வாடும் பூ இணை
அடல் கடிந்து இளைத்த நின் ஆக்கை நீக்கி இ
இடன் கடிந்து அங்கண் நீ விரைவில் ஏகு என்றான்

#12
என்றலோடு உயிர் தனில் இனிய மைந்தனும்
மன்றலோடு இயைந்த மா மரியும் நீக்கலே
பொன்றலோடு உலைக்கினும் பொலி திரு உளத்து
ஒன்றலோடு இனிது இல் என்று உணர்வில் தேறினான்

#13
களி முகத்து இணங்கி அன்னான் கடவுளை பணியும் வேலை
வெளி முகத்து உற்ற காட்சி மின் என மறைந்து தானே
ஒளி முகத்து இலங்கி சூழ உவப்புற மகனும் தாயும்
அளி முகத்து இருப்ப நோக்கி அறைதல் பேர் உயிர்ப்போடு உற்றான்

#14
ஓர் இயல்பு ஆக உன்னோடு ஓர் என்பான் பணித்த ஏவல்
பேர் இயல்பு அறிவின் கண்டாய் பிரிதலே வேண்டும் இஃதே
சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில்
சீர் இயல்பு இயற்றும் தேவ திருவுளம் நன்றின் நன்றே

#15
மைந்தனே மைந்தன் என்ப வரம் எனக்கு அளித்தி நீயே
தந்த நேர் அகன்ற நன்றி தனக்கு என்னால் கைம்மாறு என்னோ
சிந்து நேர் எனக்கு செய்த சீர் அளவு இடுக்கண் யாவும்
கொந்தல் நேர் விளைய கொய்தி கொய்து அருள் விளைத்தி நல்லோய்

#16
நிந்தை என்று உடை நான் ஓங்க நிமிர்ந்த வான் வியப்ப என்னை
எந்தை என்றனை நீ உந்தைக்கு இரங்கி நல் ஆசி தேவ
தந்தையின் பணியை செய்ய தருதி என்று அடியில் வீழ
சிந்தையின் எழுந்தது ஆற்றா திருமகன் தாங்கினானே

#17
மூ_உலகு அனைத்தும் தாங்கும் முதலவன் ஒரு-பால் ஓர்-பால்
தே உலகு அனைத்தும் ஏத்தும் தேவ_தாய் தாங்க சூசை
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர் தனை அன்பு ஒன்றே
பூ உலகு இருத்தினால் போல் பூம் கரம் கூப்பி நின்றான்

#18
பன்னலால் நிகரா வண்ணம் பயன் உன்னால் பெற்றேன் நானே
மின்னலாய் உனக்கு ஈங்கு என்னால் விளைந்த பல் கசடு உண்டு ஆமே
நின் அலால் பொறுப்பார் யாரே நீத்து இவை அருளின் ஆர்வம்
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான்

#19
இருவரும் இரு-பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற
உரு வரும் வானோர் சூழ ஒலி குழல் இசையின் பாடி
மரு வரும் மலரை சிந்தி வயவையில் விளித்து முன்ன
திரு வரும் ஆக்கை நீக்கி தெள் உயிர் போயிற்று அம்மா

#20
மெய் இலார் நாட்டில் தூது விளம்ப மெய் உயிர் விட்டு ஏகி
பொய் இலா உயிராய் அன்பு உள் புக்கு என கிடந்த யாக்கை
மை இலா மலர்ந்த கொம்போ வரைந்த நல் படமோ தோன்றி
நை இலா துயில் கொண்டு என்ன நளி ஒளி வீசிற்று அம்மா

#21
விது வளர் பத நல்லாளும் விண் வளர் அரசர் கோனும்
பொது வளர் முறை மேல் அன்ன பூட்சியை பேணி வானோர்
சது வளர் அணியின் சூழ்ந்து தனி வளர் புகழ்ச்சி பாடி
மது வளர் மலரை சிந்தி மலர் வனத்து அடக்கினாரே

#22
தூது உற உயிர் போய் மீண்டு தோன்று அளவு உடலை பூவே
பாது உற கா-மின் என்ன பரமனே பகர்ந்த ஆசி
காது உற மகிழ்ந்த பூமி கை கொண்ட நன்றி மூட
போது உற விரித்த பைம் பூம் போர்வை மேல் போர்த்தது அன்றே

#23
மடல் கடிந்து நறா மது வாகையான்
உடல் கடிந்து உடலம் கடிந்தோர் இடை
கடல் கடிந்து கனிந்த சொல் கூற மெய்
அடல் கடிந்த தன் ஆவியோடு எய்தினான்

#24
நிந்தை ஆகுலம் நீத்து அற நீர்மையால்
தந்தை ஆம் இறை தாழ்வு இலா தாள் தொழுது
எந்தையால் கதி எய்துப நம்பிய
முந்தையார் உறை முற்று அருள் நாடு அதே

#25
மை இழந்து மயக்கம் இழந்து அவா
பொய் இழந்து புரைகள் இழந்து தோல்
பை இழந்து உறு பாடும் இழந்து அருள்
மெய் இழந்திலர் வேய்ந்து உறை நாடு அதே

#26
காட்டும் ஆசை களிப்புற நாதன் ஆங்கு
ஈட்டும் நன்றி இசைப்பது பாலதோ
பேட்டு வீடு அவர் பெற்றிலர் ஆயினும்
வீட்டு வாயில் எனா மிளிர் நாடு அதே

#27
அன்ன நாட்டை அன்னான் அடைந்து ஆங்கு மீன்
மின்ன மீன் அரசு உற்று இடை வேய்ந்து என
மன்ன மா தவர் ஊடு வயங்கினான்
சொன்ன மா மறை சூட்டு உள தூயினான்

#28
புக்கு அடைந்த பொலிந்த அ நாட்டு-இடை
மிக்கு அடைந்த நலோர் வியப்புற்று எழ
சொக்கு அடைந்த உரு கொடு தோன்றினான்
இக்கு அடைந்த இளம் துணர் வாகையான்

#29
மண் புலம் தவிர் நாம் களி மாந்திட
கண் புலம் தவிர் தன் கவின் காட்ட ஈங்கு
எண் புலம் தவிர் காந்தியோடு எய்தினேன்
விண் புலம் தவிர் விண்ணவனோ என்பார்

#30
ஆதி ஈறு இலா நாயகன் அம் புவி
மீதில் ஈறு உயிர் ஆக விளிந்து ஒரு
தீது இலா கதி வாயில் திறந்த பின்
ஏது_இல் நாம் அடை மாட்சி இதோ என்பார்

#31
ஆயினான் உலகத்தை அளித்த பின்
தாயின் ஆர் அருள் தாங்கிய தன்மையால்
மீயின் ஆம் கதி வீட்டு எமை சேர்த்திட
தூயினான் அடை தோற்றம் இதோ என்பார்

#32
ஐயம் தோன்றும் மனத்து அயர்வு அற்றிட
சையம் தோற்றிய தோள் தவழ் தாரினான்
துய் அம் தோடு அவிழ் பூம் கொடி சுட்டுபு
மையம் தோன்றி இ வாய் உரை போக்கினான்

#33
வையத்தார் கசடு அழித்து வழு இன்றி மன் உயிர்கள்
உய்யத்தான் மனு ஆய உயர் கடவுள் உமக்கு இன்பம்
செய்யத்தான் இன்று இங்கண் செலுத்தியது ஓர் தூது அடியேன்
அய்யத்தால் ஆசை அத்தால் அயர்வு உண்ட அறவோரே

#34
தூய் ஆக மறை வடிவு ஆய தொக்கு இணை வெல் மாட்சிமையாள்
தாய் ஆக கன்னியும் ஆய் தாரணி மேல் அரிது ஈன்ற
சேய் ஆக எம் இறையோன் சென்று ஐ_ஐந்து_ஓர் ஆண்டு ஆய்
தீ ஆக வருத்தும் வினை தீர்த்திடும் நாள் நண்ணியதே

#35
அன்னவட்கே மண துணை ஆய் அன்னவள் ஆங்கு இனிது உயிர்த்த
மன்னவற்கே கை_தாதை வரம் உளன் ஆய் ஈங்கு அடியேன்
இன்னவற்கே தூது உற்றேன் இ நாள் உம் சிறை நீங்கி
பின் அவற்கே வீட்டில் துணை பெரிது உவப்பீர் இனி என்றான்

#36
தேன் பொதுளும் கனி தீம் சொல் தெளி பயன் கேட்டு அவன் ஏந்தும்
கான் பொதுளும் மலர் வாகை கண்டு உண்ட நயம் பெருகி
ஊன் பொதுளும் குலத்து இ மாண்பு உண்டோ என்று உளம் வியப்ப
வான் பொதுளும் வரத்தோனை வணங்கின்றார் ஒருங்கு அன்னார்

#37
ஆரணனே ஆரணம் சேர் கொழுகொம்பே அரிது உவப்ப
காரணனே கண்டு அணைத்த கை_தாதையே அருளால்
பூரணனே நாம் விழைந்த பொழுது அடைந்தாய் இன்பம் மலி
வாரணனே தவத்து ஆசை கரை கண்டாய் வரத்தவனே

#38
மு காலம் காட்டும் ஒளி முக விளக்கு ஆம் தவத்தொடு நாம்
அ காலம் காண் மறைவில் ஆங்கு உரைத்த நாதனை நீ
இ காலம் காட்டினையே ஏந்தினையே வளர்த்தனையே
மெய் காலம் காட்டிய வான் வேந்தன் இயல் விளம்பு என்றார்

#39
கோட்பது அரும் குணத்து இறையோன் குணக்கு ஒளி போல் நிலத்து உதித்து
வேட்பது அரும் தயை புரிந்து விளங்கும் நிலை யாது என்ன
கேட்பது அரும் வினை கேட்டீர் கெழும் தவரே என்றான் பின்
மீட்பது அரும் சொல் தொடுத்தான் விம்மித கற்பு உள தூயான்

#40
நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும்
தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும்
வீ ஒக்கும் வடிவத்தால் வியன் தயையால் கடல் ஒக்கும்
தாய் ஒக்கும் தாதை ஒக்கும் சகத்து எங்கும் அ திருவோன்

#41
மீன் ஒக்க பாவ இருள் விலக மிளிர் விழி கொண்டான்
கான் ஒக்க மறை உமிழ கமழ் கமல வாய் கொண்டான்
தேன் ஒக்க துயர் கைப்பு சிதைப்ப இனிது உரை கொண்டான்
வான் ஒக்க கவின் காட்ட மலர் வதன நலம் கொண்டான்

#42
தீது ஒருங்கும் மலிபு அறியா திளை அருள் ஆர் நெஞ்சத்தான்
கோது ஒருங்கும் குறை ஒருங்கும் குறைத்து ஒழிக்கும் புயல் கரத்தான்
நீது ஒருங்கும் தோற்றுவிக்கும் நெறி வழுவா அற பதத்தான்
வாது ஒருங்கும் சிதைத்து அலகை வெல் நாம வய வேலான்

#43
அருள் விஞ்சி பகை வெள்ளம் அற கடந்தான் மறை ஓதும்
தெருள் விஞ்சி செயிர் புகையால் தேக்கிய தீது இருள் கடந்தான்
பொருள் விஞ்சி பொங்கு புரை புணரி இரந்து அவன் கடந்தான்
மருள் விஞ்சி பெருகும் நசை மடு கடந்தான் தவம் மிக்காள்

#44
என் உரைப்பது இனி யானே எந்தை மனு ஆயுளி நீர்
முன் உரைப்ப எடுத்த நிலை முற்று ஒழித்தான் கடந்து என்றால்
பின் உரைப்பது எவன் உண்டோ பெரும் தவரே என்றான் சூழ்
மின் உரைப்ப ஒளி எறிக்கும் மெய் சுருதி விளக்கு அன்னான்

#45
பேர் நல மணி குன்று உச்சியின் பெயர்ந்து பெருகி வீழ் வெள்ளம் ஒத்து அன்னான்
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு ஆங்கு
ஆர் நல தவத்தோர் களிப்புறீஇ நிற்ப அன்பு மிக்கு என் மகள் ஈன்ற
ஏர் நல புதல்வற்கு உற்றவை அறைதி என்றனள் அன்னமை என்பாள்

#46
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண்
அனைவரும் உவப்ப கன்னிமை முகையோடு அம் கனி கனிந்து என மரியே
புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு
வினை வரும் ஐயம் உற்ற ஆறும் அதனை விட்ட ஆறும் ஒருங்கு எலாம் உரைத்தான்

#47
ஆவலர் உறவோர் அகற்றலில் வெளி மேய்ந்த ஆ அடை குகை இடத்து இறைவன்
காவலர் தன்மைத்து அமரர் சூழ் நிற்ப கங்குலில் பிறந்தன வாறும்
கோவலர் காண குழீஇயின வாறும் கோக்கணம் இறைஞ்சிய வாறும்
பாவலர் வாழ்த்திப்பலர் பழித்து அங்கண் பழி பகை முற்றிய வாறும்

#48
கொன் விளை வெருவின் புழுங்கிய அரசன் கொடும் பகைக்கு அஞ்சிய பாலால்
இன் விளை நாடும் இனமும் நீத்து இழந்தே எசித்திடத்து எய்திய ஆறும்
பொன் விளை சிறப்பின் கோயிலும் உருவும் பொய் விளை தேவரோடு அங்கண்
மின் விளை ஒளிசெய் திருமகன் முகத்தில் வீழ்ந்து ஒருங்கு ஒழிந்தன ஆறும்

#49
ஒளி வளர் பிறை போல் வளர்ந்து அவன் மலர் தாள் ஊன்றி முன் நடந்தன ஆறும்
களி வளர் உவப்பில் எம் வினை தீர கனிந்த சொல் தொடங்கிய ஆறும்
வளி வளர் ஆடி ஏழு போய் மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும்
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான்

#50
மணி கலத்து அமிர்தம் ஏந்திய நெஞ்சான் வையகத்து இயற்றிய யாவும்
பணி கலத்து உரைப்பது என் இனி யானே பகர்வதும் செய்வதும் ஒருங்கே
அணி கலத்து இரு மா மணி என தயையும் அன்புமாய் ஒருப்பட தானே
பிணி கலத்து எடுத்த உடல் ஒன்றே எல்லா பிறர் உயிர்க்கு உயிர் என கொண்டான்

#51
ஓர் மர கனியால் வந்த தீது அகற்றி ஒருங்கு மன் உயிர் எலாம் உவப்ப
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று அதுவே பெறற்கு_அரும் நலம் தனக்கு என நோய்
கூர் மர சிலுவை தனக்கு ஓர் செங்கோலே கொலு அதே அமளியே என்னா
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா

#52
தன் உயிர் தனிலும் தமர் என மக்கள் தகுதியை மேவிய அன்பால்
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து எல்லை ஒன்று இல்லதும் அல்லால்
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான்

#53
என்றான் மென் தாது ஏந்திய கையான் இவை எல்லாம்
சென்று ஆங்கு உண்டாம் மாண்பினர் கேட்ப தெளிவு உண்டார்
பின்றா அன்பால் யாரும் இரங்க பெரிது ஏங்கி
நின்றார் ஒன்றாய் ஆர் புகழ் மாலை நிறை சொன்னார்

#54
தன் நேர் இல்லான் தன் வயன் ஆகி தனி வல்லோன்
முன் நேர் இல்லான் காரணன் ஆகி முழுது ஒன்று ஆய்
பின் நேர் இல்லான் தான் மனு ஆகி பெரிது ஏங்க
என் நேர் ஆனானோ அருள் நாளோ இது என்பார்

#55
தன்-பால் எல்லா நன்று உளன் ஆகி தகை வல்லோன்
பின்-பால் இல்லாது ஏது உளது உண்டோ பெற அஃதை
என்-பால் எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த
அன்பால் எல்லா ஒப்பு இலன் ஆய அரசு தான் என்பார்

#56
வாழ நாமும் தான் அழுவானோ வளர் நீள் நாள்
மூழ நாமும் தான் மடிவானோ முழு முந்நீர்
ஆழ நாமும் தாழ்ந்து உறின் எந்தை அருள் ஆழி
சூழ யார் உண்டோ இதில் உண்டோ துறை என்பார்

#57
எல்லை இல்லை என்று அவன் அன்பிற்கு இணை கூற
வல்லை இல்லை என்றது பொய்யோ வசை மண்ணர்
தொல்லை இல்லை என்று உள நாளும் தொடர் தீது ஒப்பு
இல்லை இல்லை என்றது பொய்யோ இதும் என்பார்

#58
அன்பிற்கு உண்டோ மாத்திரை ஆக அளவு எம்-பால்
முன்பிற்கு உண்டோ ஓர் பயன் வான் ஆள் முதல்வற்கே
என்பிற்கு உண்டோ வெஃகும் ஓர் நன்றி இவை ஆகி
பின்பிற்கு உண்டோ மானிடர் ஆசை பெற என்பார்

#59
அணியே அன்பே அன்பு அது சிந்தே அருள் வேந்தே
மணியே உன் பேர் ஆர்வம் நிகர்ப்ப வல்லர் உண்டோ
பிணியே கொண்டாய் பேர் அரசு ஆகி மனிதர்க்கே
பணியே நின்றாய் உன் தயை ஈதோ பரிசு என்பார்

#60
இ வாய் எஞ்சா நாள்-தொறும் அன்னார் இசை பாடி
மெய் வாய் வல்லோன் சூசை உரைப்ப விழைவு ஓங்கி
உவ்வு ஆய் இன்னா நீங்கிய மிக்கோர் உருகு உள்ள
செ வாய் துய்த்த திவ்விய இன்பம் திதி விள்ளா
மேல்

@35 உத்தானப் படலம்


#1
இன்னவை அங்கணில் இனிதில் ஆகையில்
உன் அவை உன்னிய உரிமைத்து ஆக்கினோன்
பல் நவை பயத்த பேய் பகைத்த மன் உயிர்
துன் நவை யாவையும் துடைத்தல் ஓர்ந்து உளான்

#2
நனை வரும் சண்பக நறு நிழற்கு இணை
அனை வரும் குளிர்பட அருள் நிழற்றினோன்
புனைவு_அரும் துணிவொடு புவி புரந்திட
நினைவு_அரும் தவம் வழா நெறி நின்றான் அரோ

#3
திடம் துதைந்த அருமறை தெளித்த நூற்படி
நடந்து முன் அற நெறி நல்கி பூ மது
கடந்து பின் இனியவை கனிய ஓதுவான்
கிடந்து மின் பிழம்பு உக கிளர்த்த காட்சியான்

#4
செய் வினை உரை வினை திரிபு இலா செயிர்
கொய் வினை ஆகையில் குணுங்கு இங்கு உய்த்த பல்
பொய் வினை அனைத்தையும் போக்கி யாண்டையும்
மெய் வினை உணர்த்துவான் மெய்யின் காணியான்

#5
ஒப்பு இலான் ஓர் என்பான் என்று உணர்கிலா
துப்பு இலா தேவரை தொழுதல் அந்தகற்கு
அப்பில் ஆழ்ந்த அந்தகன் துணை அமைந்து என
தப்பு இலா வழு இவர் தவிர்க்குமோ என்பான்

#6
மின் உரைத்து இழைத்த பொன் கோயில் வேய்ந்தினும்
கொன் உரைத்தன உரு கொள்கை தெய்வமோ
பொன் உரைத்து ஒளிப்பட புனைந்த பாவைகள்
என் உரைத்திடுவது ஓர் இயல்பு உண்டோ என்பான்

#7
உலகு இடத்து ஓர் என்பான் உரைத்த நூற்படி
விலகிட துகள் எலாம் விலகி ஈர் அறம்
இலகு இடத்து இடர் அறுத்து இயலும் நற்பயன்
அலகிடு அ தகுதியை அறிவர் யார் என்பான்

#8
மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது
அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே
பொருள் வரும் வழி என புயலின் வான் கொடை
தெருள் வரும் அறிவு உளார் திருத்துவார் என்பான்

#9
அறத்தினால் வருவதே இன்பம் அல்லது ஓர்
மறத்தினால் வசை வரும் அன்றி வான் நெறி
புறத்தின் ஆம் என்று தான் புகன்ற வேத நூல்
திறத்தினால் உளத்து இருள் சிதைப்ப ஓதுவான்

#10
கள்வரும் பொருள் தகா கடந்த சொல் புகழ்
கொள்வரும் அனையவர் கொண்ட அ புகழ்
எள் வரும் இழிவு அதே இயன்ற தாழ்ச்சியால்
ஒள் வரும் புகழ் என்பான் உலகில் ஓர் என்பான்

#11
இக்கு என பொருள் ஒளி இன்பம் மூன்றுமே
புக்கு என புரை எலாம் புவி புகுந்தன
மிக்கு என துடைத்து அவை வெல்லுவான் பொறை
சிக்கென தாங்கி எம் செயிரை தாங்கினான்

#12
வென்றியும் குணித்தனன் வென்றி வாளொடு
பின்றையும் உள பல பெரும் படைக்கலம்
இன்றியும் பொறுத்தலோடு இகல் வெல் பொறை
ஒன்றையும் தாங்கினான் உலகம் தாங்கினான்

#13
தீய் வரும் இகழ்ச்சியை சிந்தியா பிரான்
தாய் வரும் அருளினால் தரணி எங்கணும்
போய் வரும் துயர் அற புதுமை ஆக்கி உள்
காய்வரும் குளிர்ப்பவே கருணை காட்டுவான்

#14
கண் தரும் கரம் தரும் செல்ல கால் தரும்
உண் தரும் களி தரும் உயிர் தரும் தகும்
பண்டு அரும் துயர்கள் நோய் பலவை தீர் தரும்
மண்டு அரும் தயை நலம் வழங்க தந்துளான்

#15
தந்த நன்று எவர்க்கும் ஆய் தனக்கு யாவரும்
அந்தம் ஒன்று இலா மலி அல்லல் ஆக்கலும்
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணா பொறை
கந்தளம் தரித்தனன் கருணை வேலையான்

#16
புரை செயும் தன் துயர் பொறுத்து நொந்து இலான்
உரை செயும் நெறி உறா உயிரை தீ நரகு
இரை செயும் பாவம் என்று இரங்கி விம்முவான்
கரை செயும் கடல் இணை கடந்த அன்பினான்

#17
நக்கும் ஓர் சிறு சுவை நச்சி நீங்கு அலா
சிக்கும் ஓர் நிறை துயர் சிந்திப்பார் இலா
தக்கும் ஓர் அறிவு இல தரணி கெட்டது என்று
ஒக்கும் ஓர் இணை_இலான் உளைந்து இரங்குவான்

#18
தீது அளித்து ஓச்சிய தீய கோன்மையால்
கோது அளித்து உயிர் உணும் குணுங்கை வெல்லவும்
நீது அளித்து எரிந்த நின் வெகுளி நீக்கவும்
ஏது அளித்து இயற்றுவேன் என் பிதா என்றான்

#19
முன் பழி ஒழித்து நின் முனிவை ஆற்றிட
தன் பழி இலா பலி தரணி மீது இலாது
அற்ப அழிவு இலாத என் உயிர் அளித்து யான்
தொல் பழி பிதா இதோ துடைக்குவேன் என்றான்

#20
என்றனன் கடல் நீர் வெள்ளத்து இணை கடந்து அரிய அன்பான்
நன்று என பிதாவும் என்றான் நரதுவத்து இறைமை சேர்த்தி
நின்றன நாய்கன் செந்நீர் நீத்தமாய் சிந்தித்தானே
சென்று அன உலகின் மாசு தீர்த்து அற கழுவல் நேர்ந்தான்

#21
கலையினால் அளக்கல் ஆற்றா கசடு எலாம் ஒருங்கு தீர்ப்ப
கொலையினால் உயிரை சிந்தா கூறும் ஓர் உரை சால்பேனும்
விலையினால் உயர் வான் வீட்டு விழுப்பமே எவர்க்கும் காட்ட
அலையினால் உவமியாத அலக்கண் உற்று இறத்தல் நேர்ந்தான்

#22
இ திறத்து இறைவன் நேர்ந்த இயல்பு இது என்று அறிந்த பேய்கள்
மை திறத்து உடன்ற வஞ்சம் மற பகை இவன் மேல் தீயோர்
கை திறத்து இயற்றல் உள்ளி காய் தழல் தூண்டினால் போல்
அ திறத்தினரை ஏவி அரும் பகை முற்றிற்று அன்றோ

#23
கண் கிழித்து ஒழுக செம் தீ கதத்தினர் அடித்த பாலால்
விண் கிழித்து ஒழுகும் மாரி விதப்பு என எந்தை யாக்கை
புண் கிழித்து ஒழுகும் செந்நீர் புரை வினை மலங்கள் தீர்ப்ப
மண் கிழித்து ஒழுகு வெள்ளம் மலிவொடு ஆங்கு ஒழுகிற்று அன்றோ

#24
கடு மரத்து இழிந்த நஞ்சு உள் கடுத்து அடும் வினையை காக்க
நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன
வடு மர கனியால் மாக்கட்கு அமைந்த தொல் பழியை எந்தை
கொடு மரத்து அறைவுண்டு எம்மை குணித்து இறந்து ஒருங்கு தீர்த்தான்

#25
மக்கள் தம் கடன்கள் தீர்ப்ப வயம் இலார் என்ன நாதன்
திக்கு அடங்கலும் உள் கூச திளைத்த அ கடன் மேல் போட்டு
மிக்கு அடங்கு இல அன்பால் தான் மெய்யொடு மகனாய் இங்கண்
புக்கு அடங்கு இல நோய் இ வாய் பொறுத்து எமை உள்ளி மாய்ந்தான்

#26
எம் சிறை ஒழித்து தான் தன் இன் உயிர் தந்து யாக்கை
அம் சிறை ஒழித்து வாய்ந்த ஆவியால் முந்தையோர்கள்
தம் சிறை ஒழித்து வீட்டின் வளம் தர அருள் ஓர்ந்து ஆசை
விஞ்சு இறையவன் தன் தூது வியம்பிய நிலையின் போனான்

#27
பால் நலம் ஒழித்து அமரர் பா இசைகள் பாட
தேன் நலம் ஒழித்த பெரும் இன்பம் முனர் செல்ல
மீன் நலம் ஒழித்து இரவி எஞ்ச ஒளி விஞ்ச
கால் நலம் ஒழித்த இறையோன் கடிது அடைந்தான்

#28
இருள் பொதிர் இரா உண விளங்கு இரவி போன்றே
மருள் பொதிர் அவா அமர் மனத்து ஒளி வயங்க
தெருள் பொதிர் முகத்தில் திரு ஆசி உரை செய்தே
அருள் பொதிர் கதிக்கு உரிய காட்சியை அளித்தான்

#29
வில் திறம் மனத்தில் தரு விஞ்சை நலம் விஞ்ச
மல் திற நல்லோனை மறைவு அற்று இனிது காண
நல் திறம் இயற்றிய தவத்து அரிய நல்லோர்
சொல் திறம் அகன்ற நயம் உண்டு தொழுகின்றார்

#30
காட்சியை அடைந்துளி களிப்பு உளம் அடங்கா
மாட்சியை அடைந்து அரு வரத்தில் அவர் வாய்ந்த
சூட்சியை அடைந்து அடி தொறும்தொறும் இறைஞ்ச
ஆட்சியை அடைந்து ஒளி அடைந்து அருள் அடைந்தார்

#31
பணிந்தனர் புகழ்ந்தனர் பதம் தனில் உயர்ந்தே
தணிந்தனர் தணிந்து இல நலங்களில் தயங்க
துணிந்தனர் துளங்கினர் துதைந்தன நயங்கள்
அணிந்தனர் அரும் துதி அவிழ்ந்தனர் ஒருங்கே

#32
ஓசை வரு நீத்தமொடு நீர் பிறழ்வது ஒப்ப
சூசை வரு நாதன் ஒளி தோன்றலில் அடங்கா
ஆசை வரும் ஆர்வம் நிலையாய் அருள் வழிந்த
பூசை வரும் மா புகழ் புரிந்து புகலுற்றான்

#33
துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும்
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய்
உன் உயிர் அளித்து எமை அளிப்ப உயர் வீட்டை
மன் உயிர் எலாம் உற வருத்தம் உறீஇ மாய்ந்தாய்

#34
உரை கடல் கடந்த எழில் உண்டு இலக நீயே
வரை கடல் கடந்த துயரோடு உனை வளர்த்தேன்
கரை கடல் கடந்த பயன் இன்று இனிது கண்டேன்
புரை கடல் கடந்த களி உள் பொதுள என்றான்

#35
என்று எழும் அவாவொடு விழுந்து இரு விழு தாள்
அன்று எழு முடிக்கு இணை அணிந்து தொழு சூசை
நன்று எழும் அறா நசை நயத்த சவையோடு
சென்று எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான்

#36
அளி பொதுள ஆகி இவை அன்று தயை நாளாய்
ஒளி பொதுளவே நிதியின் ஓவி அழல் வெந்தார்
களி பொதுள அ துயர் கடிந்து வர வானோர்
தெளி பொதுள ஏகி இடர் தீர்த்த உயிர் மீட்டார்

#37
ஆசை தரும் அல்லல் அற அ அவையும் சேர்ந்தே
சூசை தரு திவ்விய துதி தொடை தொடுத்த
ஓசை தரு நாமம் ஒரு ஆயிரமும் ஓதி
பூசை தரு பூசு புகழ் பூசல் தருவார்-ஆல்

#38
மின் புரிய மீன்-அதினும் மின் ஒளி மிளிர்ந்த
அன்பு உரிய அன்னவர் அரும் துதிகள் ஆடி
பின்பு உரிய ஒப்பும் இல பேர் உவகை பேராத
இன்பு உரிய தொல்லை இலை எல்லை இலை அன்றே

#39
அயிர் கடந்த இனிய இன்பத்து அங்கணின் இரு நாள் போக்கி
உயிர் கடந்து ஒழித்த யாக்கை உறைந்து கல்லறை கண் எம்-தம்
செயிர் கடந்து அளித்த நாதன் செறிந்த அ அவையோர் நாப்பண்
வயிர் கடந்து உடன்ற ஓதை வழங்க வில் பரப்பி போனான்

#40
எல் பிழம்பு எறித்த வானோர் எண்_இலர் முனர் போய் பாட
அல் பிழம்பு அற வில் ஆர் மற்று அனைவரும் பினர் வந்து ஆர்ப்ப
கல் பிழம்பு உருக இன்பம் கனி வளன் புடையில் செல்ல
செல் பிழம்பு உறையின் ஆர்ந்த திரு அருள் நாதன் போனான்

#41
மெய் கிடந்து உறைந்த அங்கண் விரையில் ஓர் கணத்தில் சென்று
பொய் கிடந்து அமைந்த பாவம் போக்க தன் உடலில் பாய்ந்த
நெய் கிடந்து அடைந்த காயம் நின்ற அ அவை முன் காட்ட
துய் கிடந்த உடலை போர்த்த துகில் படம் நீக்கினானே

#42
அய நலம் போர்த்த பார் காத்து அருளொடு இன்று உமக்கு தந்த
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ என்று
இயல் நலம் தவிர்ந்த மெய் போர்த்திடும் கலை நீக்கி நீங்கா
வய நலம் பொலிந்த தூயோன் வாய் மலர்ந்து அறைந்தான் மீண்டே

#43
வானகத்து உவகை செய்யும் வனப்பு உடை சிரத்தை நோக்கீர்
கானக கொடிய நெஞ்சார் கண்டக முடியை சேர்த்தி
மீன் நக தெளிந்து மின் என் விழி அகத்து உருவ தாக்கி
ஊன் அகத்து இரத்தம் பாய உறும் துயர் உரைப்ப பாலோ

#44
பகை அரசு ஒழித்து ஒன்றாய் நான் படைத்து அளித்து அழிப்ப வல்ல
தகை அரசு ஆகி மாக்கள் தம் செருக்கு ஒழிப்ப என்னை
நகை அரசு ஆக்கி நீசர் நகைத்து முள் மகுடம் சூட்டி
மிகை அரசு ஆகி ஆய வெருவிடும் உருவம் காணீர்

#45
கண் வழி உயிரை போக்கி கண்டவை வெஃகி வெஃகும்
விண் வழி ஒழித்த தீது விலகுவான் கொடியர் கையால்
புண் வழி குருதி ஓட பூ என வாடி வான்_மீன்
ஒண் வழி கடந்த என் கண் ஒளி ஒழிந்து இருளல் நோக்கீர்

#46
தேன் உகும் உரையால் யார்க்கும் தெருள் உகும் மருந்து மான
மீன் உகும் வானோர் ஏத்தும் வேத நூல் உலகில் தந்த
கான் உகும் கமல வாயே கடிது அடி மிதிபட்டு அந்தோ
ஊன் உகும் உதிரம் தோய்ந்த உதட்டு அலர் வாடல் நோக்கீர்

#47
தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனை சேர்த்து ஓர் ஐ_ஆயிரத்து_ஒரு_நூற்று_ஐ_மூன்று
அடி அடித்து இடம் ஒன்று இன்றி
வாய் இரக்கமும் அற்று ஆய வடு அடித்து என்பும் தோன்ற
பாய் இரத்தமும் ஆறு ஓட பழி உரு உடலை நோக்கீர்

#48
படி அது ஓர் தனி கோல் ஓச்சி பார் எலாம் தாங்கு நானே
நெடியது ஓர் சிலுவை தாங்கி நீசருள் நீசன் என்ன
கடியது ஓர் வஞ்சர் நிந்தை கான்று அடித்து உதைப்ப வீழ்ந்து
கொடியது ஓர் தடத்து உயர்ந்த குன்று மேல் அரிதின் சென்றேன்

#49
ஓர் அயில் குன்றின் கோட்டில் உலகு எலாம் வெருவி கூச
பேர் அயில் ஆணி தன்னால் பெரு மரத்து அறையுண்டு என் செந்நீர்
அயில் புவி தன் தீது நீத்து அருள் கிளர்த்து வாழ
கூர் அயில் ஆணி காயம் கொண்ட கால் கரங்கள் நோக்கீர்

#50
ஆட்டியால் அமைந்த தீமை அகற்றி மீது உயர் வீட்டு ஆறு
காட்டி யான் உயிரை நீக்கி கடும் பகை நீங்கா நெஞ்சான்
ஈட்டியால் விலாவை தாக்கி அடைக்கலம் எவர்க்கும் செய்ய
பேட்டு யான் திறந்த நெஞ்சில் பெரியது ஓர் வாயில் நோக்கீர்

#51
பெய்தது ஓர் மாரி என்ன பெருகி என் இரத்தம் சிந்தி
கொய்தது ஓர் கனியால் கொண்ட குறைகள் தீர்த்து உலகம் காக்க
செய்தது ஓர் வினை ஈது என்னால் பெய்வதும் இனி யாது உண்டோ
எய்த ஓர் பயனும் உம்மால் எனக்கு உண்டோ என்றான் நாதன்

#52
உருக மா வயிர குன்றும் உரைத்த சொல் எறி வேல் பாய்ந்து
திருக வாய் பிளந்த புண்ணுள் திரண்ட தீ ஆக ஆவி
பருக நோய் ஆற்றா சூசை பரிவு அளவு அழுந்தும் துன்பம்
பெருகவோ ஆற்றவோ ஓர் பேர் உயிர்ப்பு உயிர்த்து சொன்னான்

#53
இன்று நீ உலகம் கூச இ துயர் படவோ அஞ்சி
அன்று நான் எசித்து நாட்டை அடைந்து நின் உயிரை காத்தேன்
பொன்று நீ மரத்தில் செந்நீர் புணரி ஆழ்ந்திடவோ வீட்டை
சென்று நான் உவப்பில் வாழ்வேன் தே அருள் திருவின் நல்லோய்

#54
அருள் மிக இறத்தல் வேண்டின் அ திற துயரோ வேண்டும்
மருள் மிக அசடர் உன்னை மரத்து அறைந்து இறத்தல் வேண்டின்
பொருள் மிக உன் தோள் என் தோள் பொருந்தி ஓர் மரத்தில் தூங்கி
இருள் மிக முகில் சூழ் குன்றத்து இருவர் வீதலும் வேண்டாது ஏன்

#55
பிறந்து உயிர் பிழைத்த போது பெயர்கு இலா துணை என்று ஆனேன்
இறந்து உயிர் அளித்த போதும் என்னையும் துணை வேண்டாது ஏன்
சிறந்து உயிர் அனைத்தும் காத்த திரு மருந்து அன்னோய் என்ன
மறந்து உயிர் அளிப்ப நொந்தான் வளன் விட உடல் உண்டு ஆனால்

#56
விண்டு ஆர் பைம் பூ வாகையன் இ ஆய் மெலிவு எய்த
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம்
கண்டு ஆராய்ந்தார் கண்டுளி யாரும் கலுழ்கின்றார்
உண்டார் உன்னா பீழைகள் மீட்டு ஓர் உரை உற்றார்

#57
ஐயா இவ்வாறு எங்கள் பொருட்டால் அயர்வுற்றாய்
மெய் ஆர் துன்பத்து ஒன்று என உன்-பால் விளைவு உண்டோ
மை ஆர் பெட்பால் தீ வினை செய்த மனு எல்லாம்
உய்யார் என்று அன்றோ உயிர் சிந்த உணர்வுற்றாய்

#58
கோன் பால் நின்-பால் என்று எதிர் இன்றி குறை இன்றி
வான்-பால் நின்றோய் எங்கணும் நின்றோய் மகிழ்கின்றாய்
ஊன்-பால் நின்று ஓர் மேனி எடுத்தாய் உயிர் சிந்த
தேன் பால் நின்ற ஓர் இன்பம் அது என்றாய் திரு வல்லோய்

#59
வாராயோ எம் மேலும் இரங்கி மனு அல்லல்
பாராயோ வெம் பேய் இனம் வென்றே பகை எல்லாம்
தீராயோ என்றோம் நசையின் மேல் சிறை தீர்த்தாய்
தாராயோ இன்று உன் தயை ஏத்த தகவு அன்றோ

#60
விண் மேல் வைத்த நன்று இவறா நாம் வினை செய்ய
மண் மேல் வைத்த காவல் நினக்கே வரைவு இன்றி
புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தோம்
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர்ஆர் இணை சொல்வார்

#61
வேண்டா இன்பம் வெஃகிய தன்மை விளை தீதால்
தாண்டா இன்மை கொண்டு பிறந்தாய் தகு தண்மை
பூண்டாய் புன்கண் பால் என உண்டாய் புரிவு ஓங்கி
மாண்டாய் ஓர் கைம்மாறு வழங்க கடவேமோ

#62
பொய் மாறுகின்றாய் ஆசை விளைக்கும் புரை உய்த்த
மை மாறுகின்றாய் பேய் உரு நாக வயம் நூறி
பை மாறுகின்றாய் நிற்கு என எம்மால் பயன் உண்டு ஆய்
கைமாறு உனக்கே யாங்கள் வழங்க கடவேமோ

#63
உன்னை உள்ள சீர்க்கு அறியோமே உலகு உள்ள
முன்னை பின்னை யாம் அறியோமே முரியாமல்
நின்னை ஏத்தி நல் நெறி நிற்ப அறியோமே
பின்னை ஓர் கைம்மாறு பிணிக்க கடவேமோ

#64
தாயும் நீயே தந்தையும் நீயே தவறா நன்று
ஈயும் நீயே என்று அறிவோமே இது அல்லால்
காயும் பாவ தன்மையும் நின்-தன் கனி அன்பும்
ஆயும் காலத்து அஃது அறியோம் நாம் அறியோமே

#65
பாய் ஓர் செந்நீர் கொண்டு உனது அங்க படம் மீதே
நீயோ நாமோ இ வரி வைத்த நிலை என்போம்
மாயா வஞ்சத்து இ வரி நாம் செய் வரி என்றால்
ஓயா அன்பால் உன் வரி என்றால் உரை பொய்யோ

#66
பற்ற கற்போர் நூல் பல கற்றால் பயன் என்னோ
ஒற்ற கற்றால் இ வரி ஒன்றே உணர்வு எல்லாம்
முற்ற கற்பார் ஆயினும் எம்மால் முழுது ஆகா
கற்று அ கட்டா நுண் பொருள் காட்டாய் கலை வல்லோய்

#67
நன்றாய் கற்றோம் நின் தயை நாம் செய் நவை கற்றோம்
பொன்றாய் எம்மால் பொன்றினை எம்-தம் புரை எல்லாம்
வென்றாய் வென்றாய் நின் அருள் மிக்காய் பெரிது அன்றோ
என்றார் உள்ளத்து ஓவி இறைஞ்சி எதிர் வீழ்ந்தார்

#68
வாள் அழுந்திய வருத்தமே கண்டு உயிர் புக மு
நாள் அழுந்திய நவை வடு நீத்து எழுந்து இறைவன்
கோள் அழுந்திய கொள்கையின் விலாவினோடு இரு கை
தாள் அழுந்திய காயம் ஐந்து ஒளிவிட தரித்தான்

#69
விண் விளக்கிய வெம் சுடர் எழுந்து என எழுந்து
மண் விளக்கிய மணி ஒளிப்ப ஒளி அணி தயங்க
கண் விளக்கிய கவின் மனம் விளக்க நின்று எந்தை
பண் விளக்கிய பணி மது பணி மொழி பகர்ந்தான்

#70
தீய் முகத்து உலகு அழிவு உறும்-கால் அறம் சினந்த
பேய் முகத்து எனை பெயர்கு இலார்க்கு இயல்பு இது என்று அறிய
நோய் முகத்து இறந்து அரிய தூது உரைப்ப நீ நுதலி
வீய் முகத்து இவண் விட்ட மெய் எடுத்து எழுக என்றான்

#71
அலை புறம்கொளீஇ ஆதவன் எழுந்து ஒளி முகத்தின்
கலை புறம்கொளீஇ கவின் நிறை திங்கள் சேர்ந்தது போல்
இலை புறம்கொளீஇ ஏடு அவிழ் கொடி நலோன் எழுந்து எம்
நிலை புறம்கொளீஇ நிமலனை தொழுது முன் நின்றான்

#72
போற்றினான் இணை போக்கிய புகழ் பொழி மாரி
தூற்றினான் மது தூற்றிய பூம் கொடி அடி மேல்
ஏற்றினான் அடி ஏற்றுபு தழுவினான் ஆசை
ஆற்றினான் அரிது அமரரும் வியப்ப அன்பு ஆற்றான்

#73
கான் அரும்பின கை கொடி அரும்பின மலர் பூ
தேன் அரும்பின செறிந்த மற்று அரும் தவர் சூழ
வான் அரும்பின வடிவு மீன் ஒத்தனர் வயங்கும்
மீன் அரும்பின விண்ணவர் விழா அணி விளைத்தார்

#74
மொடமொடவென இன முரசு ஒலி முழவு ஒலி மோதிய யாவும் முழங்கி அதிர
நெடநெடவென உள குழல் இசை கல இசை நீரிய ஓதை கலந்து கனிய
படபடவென மழை இடி ஒலி கடல் ஒலி பாடு என நேரில் ஒழிந்து மெலிய
விடவிடவென வெளி உலகு அலை உலகு-இடை வீரிய ஓதை மயங்கி எழும்-ஆல்

#75
விளை ஒளி உரு உறீஇ அணி அணி அமரர்கள் வீரியர் ஆக மிடைந்தது ஒரு-பால்
திளை ஒளி மணி அணி அணி முடி கொணர்வன சேடியர் ஆக மலிந்தது ஒரு-பால்
கிளை ஒளி வடிவு அடி மலர் இணை தலை மிசை கேழ் அணி ஆக அணிந்தது ஒரு-பால்
இளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ ஈர் அணி ஆக மகிழ்ந்தது ஒரு-பால்

#76
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால்
அளி வரும் உரை என வளி வரு கவரிகள் ஆடிய மாலை அமைந்தது ஒரு-பால்
ஒளி வரும் மதி என உயர் வரு கவிகைகள் ஊர் ஒளி மாலை ஒசிந்தது ஒரு-பால்
களி வரும் என கனை வரும் கனிவன காமர மாலை இடங்கள்-தொறுமே

#77
ஒருவரும் உள பல உலகு உள அதிபதி ஊழ் உள ஊழின் அறைந்து புகழ்வார்
ஒருவரும் இனைவன நினைவு அவன் உடலுடன் ஓர் மகன் ஆக இயைந்தது அறைவார்
ஒருவரும் அடி பட மிதி பட உயிர் பட ஓவிய காதை வியந்து மொழிவார்
ஒருவரும் இரவியின் ஒளி மிக இவன் எழும் ஓரையின் ஓகை நவின்று தொழுவார்

#78
அனைவரும் அணுகுவர் நயம் மிக உருகுவர் ஆசையில் ஆசி வழங்கி மெலியார்
சுனை வரும் மலர் அடி தொழுகுவர் அணைகுவர் சோபனம் ஆடிர் அனந்தம் முடியார்
நினைவு_அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை நேர் இல வாட வருந்தி ஒழியார்
புனைவு_அரும் அழகு உள முக முகை அயிலுவர் பூகதர் பூசை புணர்ந்து பிரியார்

#79
கனை விளை கதம் இல கதம் மலி பகை இல காதலில் ஆர்வம் மலிந்து பெருக
வினை விளை நசை இல நசை விளை செயிர் இல மேவிய மேதை அனந்தம் இலக
சினை விளை இழிவு இல அழிவு இல ஒழிவு இல சீரிய யோகம் ஒருங்கு விளைய
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே

#80
மெலிவன உயிர் உணும் அயர்வு அஞர் சிலுகு இடர் பாசறை யாவும் ஒழிந்து மறைய
நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி ஆகுலம் யாவும் அகன்று பெயர
மலிவன பகையொடு பழி மலி வெறி இன மாறு இல மாயை மடிந்து சிதைய
பொலிவன பல நலம் மருகுவ ஒளியொடு பூதல மீதில் எழுந்தது இறையே

#81
வானகம் முதல் எ உலகும் வாழ்ந்து உவப்ப
மீன் நக உரு உற்று எழுந்த மெய் திறலோன்
தேன் அக மொழியாள் தன்னை சீர்த்து உயிர்த்தாள்
தான் நக மற்று சவையோடு ஆங்கு எழுந்தான்

#82
ஒளி முகத்து இரு மா சுடரோடு ஒத்து இருவர்
தெளி முகத்து இலங்க எடுத்த சீர் உடலை
களி முகத்து அவளே கண்டாள் கண்டு அடி வீழ்ந்து
அளி முகத்து இறைஞ்சி அயின்ற நோய் ஒழிந்தாள்

#83
உணங்கிய முல்லைக்கு உயிர் பெய் நீர் துளி போல்
அணங்கு இயல் உள்ளம் மலர அ காட்சி
இணங்கிய தன்மைத்து இழி தேன் இணர் ஏற்றி
வணங்கிய இன்பம் கடல் நீர் வளம் ஆற்றா

#84
மாய் அளவு அரிய மகனை கண்டு அயின்ற
நோய் அளவு இன்பம் நுகர மற்ற நல்லோர்
மீ அளவு உடு போல் விளங்க கண்டு உவக்கும்
தாய் அளவு இல வாழ் தகையின் புகழ் அறைந்தாள்

#85
ஆயதும் அறைந்து அ அவையை காட்டிய தன்
சேய்-அது மொழி கேட்டு இது நீ செத்து அடைந்த
நோய்-அது பயன் என்று இரங்கி நொந்து அழுத
தாய் அது நமக்கு ஆம் என நோய் தாங்கினள்-ஆல்

#86
இ நிலை பலவும் பல நாள் இயைந்து அன்னார்
தம் நிலை செல்லா தரித்த கால் இவண் வீட்டு
அ நிலை சென்றது அன்ன ஆனந்தம்
செம் நிலை வடிவம் காட்டி செலுத்துவரே
மேல்

@36 முடிசூட்டு படலம்


#1
அன்பு அருந்திய ஆண்டகை மாய்தலால்
துன்பு அருந்திய யாவரும் தொய்யலின்
பின்பு அருந்திய காட்சியின் பெற்றியால்
இன்பு அருந்தலில் எல்லை ஒன்று இல்லை-ஆல்

#2
நீத நல் நெறி தந்து அருள் நேமியான்
நாதன் இன்னணம் நாற்பது நாள் இருந்து
ஆதவன் திரி அந்தர மேல் செல
காதல் உண்டு கருத்தும் உண்டான் அரோ

#3
விதி எழுந்த மெய் வேத நல் நாதனும்
துதி எழுந்த கை_தாதை அம் சூசையும்
மதி எழுந்த பதத்தினள் வாழ்த்தினர்
நிதி எழுந்த விண் நேடுதும் நாம் என்றார்

#4
புண் குடைந்த வேல் போல் உரை கேட்டு நான்
விண் குடைந்த இடிப்பட மின்னின் நீர்
கண் குடைந்த வில் காட்டி போதீர் எனா
பண் குடைந்த சொலாள் பணிந்து ஏங்கினாள்

#5
எல்லின் வேந்து அகன்று ஆம் இருள் ஈர்த்து அவிர்
அல்லின் வேந்து என நாம் அகன்று ஆகுலம்
புல்லின் யாவரும் போற்றுதி நீ எனா
சொல்லின் ஆசி தந்து ஓர் வரை துன்னினார்

#6
களி அழுந்திய காட்சி உளோர்களும்
ஒளி அழுந்திய உம்பரும் முன்பு உற
தெளி அழுந்திய சீடரும் பின்வர
வெளி அழுந்திய வெற்பினை துன்னினார்

#7
விரை கிடந்த வெற்பு ஏறி விண் வேந்தனும்
கரை கிடந்த கடல் கடந்த இன்புற
நிரை கிடந்தனர் ஆகுலம் நீத்து அற
சுரை கிடந்த சொல் ஆசி தந்தான் அரோ

#8
மேவி மீ எழு முன் விரை தாமரை
வாவி மீ எழும் வான் கதிர் போன்று அருள்
தூவி மீ எழ சூசையை நோக்கி உள்
ஆவி மீ எழும் அன்பொடு கூறினான்

#9
புண்ணை காக்கும் மருந்தினை போன்று உளோய்
கண்ணை காக்கும் இமைக்கு இணை காதலால்
மண்ணை காக்கும் எனை மண்-இடை காத்தலால்
விண்ணை காக்கு அரசு ஆக விளங்குவாய்

#10
ஒழிவு_அரும் தவ தாவிதற்கு ஓதிய
மொழி வரும்படி முற்று அவன் கோத்திர
வழி வரும் சுதன் நீ மணும் வானமும்
அழிவு அரும் தகவோடு அரசு ஆளுவாய்

#11
நான் அளித்த மனு_குலம் நன்று உற
கோன் அளித்த முடி குடம் சூடி நீ
வான் அளித்த வளம் கொடு வாழ வில்
மீன் அளித்த விசும்பு உயர்வாய் என்றான்

#12
பொருளில் வீங்கிய தாள் வளன் போற்றலும்
தெருளில் வீங்கிய சேனைகள் வாழ்த்தலும்
அருளில் வீங்கிய ஆண்டகை-பால் வளன்
மருளில் வீங்கிய வையம் விட்டு ஏறினான்

#13
வெளி பொதிர்ந்த கணங்களுள் வேய்ந்த நல்
ஒளி பொதிர்ந்த இரு சுடர் ஒத்து இவர்
களி பொதிர்ந்த கணங்களின் நாப்பணே
நளி பொதிர்ந்த நயம் கொடு ஏறினார்

#14
வான் வழங்கு தளங்கள் வகுப்பு எலாம்
மீன் வழங்கும் உரு கொடு வேய்ந்து உறீஇ
தேன் வழங்கு தெரியல் வழங்கிட
கோன் வழங்கு வளம் கொடு ஏறினார்

#15
வில் எழுந்தது காண விரும்பி அன்று
எல் எழுந்து இணை தோற்று என நாணலின்
மெல் எழுந்து சிவந்தது மிக்கு அவர்
சொல் எழுந்த சுடர் கொடு ஏறினார்

#16
மிகை விரிந்த வியப்பு இமையாது இவண்
தொகை விரிந்து நின்றார் துயர் தீர்ப்ப வான்
முகை விரிந்த மணி முகில் மூடி அ
வகை விரிந்த வில் வாகனத்து ஏறினார்

#17
விண் திக்கு இரிந்த உரும் அன்ன வீழ்ந்த வஞ்ச பேய் வினையால்
உண்ட இக்கு ஒழுகும் கனி ஒன்றால் உள தீது அடைத்த வான் வாயில்
மண்டி குமுறும் அலைகள் தவழ் வையம் அளித்த அருள் பயத்தால்
எண் திக்கு உறை மன் உயிர்க்கு எல்லாம் எந்தை அன்றோ திறந்திட்டான்

#18
அடைத்த வாயில் திறந்தானை அணுகி அணுகும் அணங்கு எல்லாம்
உடைத்த வண்ணத்து உளத்து எஞ்சா ஒத்த நெறி நின்றார் அல்லால்
படைத்தது இவறி படைத்தானை பகைப்பார் இங்கண் புகார் என்னா
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான் தொடர் நல் குழு சூழ்வர புக்கான்

#19
புக்க அனந்த நர_தேவன் பொலி வானவர் தம் நிலை கடந்தே
தொக்க சிந்தை நிலை கடந்த சுகத்தில் பிதா வீற்று இருந்து ஆளும்
மிக்க சுடர் சூழ் ஆசனத்தில் வீழ்ந்தான் தொழுதான் உளம் தூண்டி
மக்கள்-தம் மேல் அருத்தி எழீஇ வரையா அன்பான் உரை கொண்டான்

#20
மன்னா இன்ப வினை ஆற்றா மக்கட்கு இரங்கி மகன் ஆனேன்
அன்னார் வாழ உயிர் நொந்தேன் அயர்ந்தேன் நிந்தை பட்டு இறந்தேன்
முன் நாள் பிதா நீ பணித்தது எலாம் முடித்தேன் பகை பேய் வென்றேன் வென்று
இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன்

#21
நமர் என்று இரங்கி அன்பு மிக நான் மீட்டு அளித்த நரர் குலமே
நுமர் என்று இரங்கி அருள் நோக்காய் நூறா பழி பேய் அ குலத்தார்
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய்
அமர் என்று அவர் வென்று ஈங்கு எம்மோடு ஆள அருள் செய்க என தொழுதான்

#22
களி கூர்ந்து ஆர்வத்து அரு மகனை கனிய தழுவி கண் கடந்த
ஒளி கூர்ந்து உயர் தன் ஆசனத்தின் உகப்பில் அருத்தியோடு இருத்தி
அளி கூர்ந்து ஏதோ என் மகனே அமைவ கேள் என்று அவன் கூற
நளி கூர்ந்து ஆற்றா அருள் ஏந்தும் நளின நெஞ்சான் மீட்டு உரைத்தான்

#23
நின்-பால் இருந்து உன் பணியால் நான் நில-பால் இறங்கும் வேலை இவன்
தன்-பால் இருந்து நீ தந்த தேன் துளிக்கும் பூம் கொடியின்
மின்-பால் இருந்து நிழல் ஒதுங்க விரும்பி அரிதாய் எனை வளர்த்தான்
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன்

#24
பூத்தான் அரிய வரம் எல்லாம் புவனத்து என் தாய் உற்ற துயர்
நீத்தான் பிற நாடு அடைந்து அடும் கோல் நிருபன் வஞ்சத்து என் உயிரை
காத்தான் பிரியா அன்பு இயக்கி கலுழ்ந்தான் கனி நான் சுவை அருந்த
ஏத்தான் உளைந்தான் வேர்த்து உழைத்தான் எட்டா கருணை கரை கண்டான்

#25
உன்னோடு ஒன்றாய் மூ_உலகம் ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும்
என்னோடு என்னை கன்னி வழாது ஈன்றாட்கும் தான் நிழல் செய்த
மின் ஓடிய வான் மணி ஒப்ப விரி பூம் கொடியோன் தகு மாட்சி
நின்னோடு இனி யான் என் உரைப்ப நினைவும் கடந்த காட்சி நலோய்

#26
இன்னான் இன்ன தகவு உளனாய் என்னோடு உடல் கொண்டு ஈங்கு அடைந்தான்
பல் நாள் தொடர்ந்த பழி அற நான் பாய் செம் குருதி தந்து இறப்ப
என்னால் ஆய பயன் காட்ட இவனே மக்கட்கு அரசன் எனா
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும் ஐயா என பணிந்தான்

#27
ஆய்ந்தே இமிழின் சொன்னவை கேட்டு ஐயன் வான் மேல் பேர் உவகை
தோய்ந்தே எவரும் மகிழ்ந்து ஓயா துதிகள் துவைப்ப நன்று என்றான்
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி ஆசி நலம்
ஈய்ந்தே மீளா அன்பு அருளால் எழுக என்று இறுக தழுவினனே

#28
வான் புறத்து இலகும் செம்_சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம்
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி இயக்கம்
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி அம் முடியை
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலை மேல் களிப்பு எழ முதலவன் புனைந்தான்

#29
ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம் ஆர்த்தன தொடர் துதி துழனி
ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை ஆர்த்தன இனிய பா இசைகள்
ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி ஆர்த்தன அதிசய குமுதம்
ஆர்த்தன உவப்பில் ஆர் ஒளி மகுடம் அரும் தவற்கு அருள் சுதன் புனைந்தான்

#30
ஆர்த்தன பல்லாண்டு ஆர்ந்தன உவகை ஆறு_அறு_நூற்று_மூ_ஐ பூ
சீர்த்தன மதுவின் பூத்தன சூசை சேர்த்த கை கொடியில் அ மலரால்
கோர்த்தன ஆறு_ஆறு அணிகளே கடவுள் குளும் சுடர் பதத்து அவை வானோர்
நீர்த்தன இன்பத்து அணிய மா தவற்கே நேயனும் ஒளி முடி புனைந்தான்

#31
புனைந்த மா மகுடம் பொழி ஒளி பெருகி பொன் பதம் பாய்ந்து உற போற்றி
சுனைந்த பா உவமை நாண மிக்கு உவகை சுவைத்து அவன் துதித்து முன் நிற்ப
இனைந்த மா மகனது இருக்கையின் அருகே இலங்கு மீன் மணியொடு நிரைத்து
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான்

#32
தாவிது என்பவற்கே சாற்றிய வண்ணம் தவிர்கு இலாது அரசு உனக்கு அளித்தேன்
தூவி மின் பிலிற்றும் சுடிகை சூழ் பயிற்றி துளங்கும் ஏழ் மணிகளோ உன்னை
மேவி நின்றவர்க்கு வேண்டுவ வெறுப்ப விரும்பி நீ அளிக்கும் ஏழ் வரங்கள்
ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான்

#33
களங்கம் உற்றது கண்டு இந்து தேய்த்து ஒளிறும் கழலினாள் கன்னிமை காத்து
துளங்கம் முற்றிய செம்_சுடரின் உன் கற்பும் துகள் அற காத்தனை என்னா
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே
விளங்க முன் பதித்த முதல் மணி தந்தேன் வெண் கொடி ஒத்த உள தூயோய்

#34
போய் வினை கொணரும் பொறிகள் ஐந்து அடக்கி பொலம் தவ வேலியை கோலி
தூய் வினை உளத்தில் துகள் புகா காத்து சுடர் விளக்கு ஆயினாய் என்னா
தீய் வினை வரு முன் காக்கவும் வந்த தீது நேர்ந்து ஒழிக்கவும் உணர்த்தி
காய் வினை விலக்கும் வரத்தை இ இரண்டாம் கதிர் மணி காட்டும் மா தவனே

#35
பருதியே உடுத்து பனி சுடர் இயக்கி பரமனை பயந்த தாய் தன்னை
கருதியே கருத்து கடந்த அன்பு அருளால் காத்து அரிது ஓம்பினாய் என்னா
சுருதியே வடிவாய் தோன்றிய தாயின் தொடர்பு அருள் உதவி சார்பு எய்த
தருதியே என மூன்றாம் மணி தந்தேன் தயை கடல் கடந்து அருள் மிக்கோய்

#36
கனம் பழுத்து இரிந்த உரும் என விண்ணின் கடிந்த பேய் கொண்ட தொல் பகையால்
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண வழு இலா வென்றனை என்னா
சினம் பழுத்து எதிர்த்த குணுங்கு இனம் ஓடி செல்வ நின் நாம வேற்கு அஞ்ச
தனம் பழுத்து எரி நாலாம் மணி வரமே தந்தது ஆம் வெற்றி அம் கொடியோய்

#37
தே அருள் திளைத்த நிரப்பினால் கன்னி சினையை உற்று ஈனினும் ஈன்ற
மேவு அருள் மகவை மகன் என இனிதாய் விருப்பொடு வளர்த்தனை என்னா
நோவு அருள் புதல்வர் இலா குறை தீர்த்து நுண் தகை சந்ததி அளிப்ப
கா அருள் கமழ் பூம் கொடி நலோய் ஐந்தாம் கடி ஒளி மணி வரம் தந்தேன்

#38
விருந்தினை கண்டார் முகத்து அளவு இன்றி வினை செய மிடைந்த நோய் அருந்தி
திருந்தினை பொறையின் உள் முறை எல்லாம் திரு மணி குன்று ஒத்தாய் என்னா
மருந்தினை போன்று வருந்தினார் வருத்தம் அறுத்து உளம் குளிர்ப்ப நல் வரமே
அருந்தினை என ஆறாம் மணி அளித்தேன் அரும் பொறை அருள் அரசு உடையோய்

#39
தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க
தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கி சென்று தூது உரைத்தனை என்னா
நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை நொந்தவர்க்கு உதவ நீ ஒளியின்
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே வகுத்தது ஆம் வான் தொழும் மரபோய்

#40
தேன் பயில் மதுரத்து இனிதின் நீ வளர்த்த திருமகன் அளித்த மன் உயிர்கட்கு
ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி உரிய நல் அற நெறி நிறுத்தி
மீன் பயில் வான் வீட்டு அ உயிர் சேர்த்தி விழைந்து அரசு ஆள இன்று உனக்கே
நான் பயில் வரங்கள் வகுத்தி என்று ஆசி நல்கினான் பொது அற முதலோன்

#41
கரை கொன்ற அருள் கொண்டு அ உலகு உறை கால் களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான்
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும்
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன்
புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான்

#42
மீன் நிலம் முடியாள் திருமண நாளில் வினை அறு நேயமாம் நானே
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும்
கான் நிலம் கொடியின் நீழலில் உய்ய கருணை செய்வேன் என தேவ
வான் நிலம் காதல் ஆம் பிரான் ஆசி வகுத்து அருள் வெள்ளமும் பொழிந்தான்

#43
நல்கிய ஆசி நயத்து உயர் சூசை நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய்
மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள் வழங்கும் ஆள் மூன்றையும் வணங்கி
பில்கிய நயனில் உம் வயம் காட்ட பிழைத்த இ தொழும்பனை நோக்கி
அல்கிய புன்மை வளம்பட செய்தற்கு அருச்சனை உமக்கு என பணிந்தான்

#44
அன்னான் அன்று அடை அன்ன வரங்களினால்
உன்னா வண்ணம் அரும் தயை ஓம்பி வழா
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர்
என்னால் ஈங்கு அளவு ஏற்றுவது ஏலுவதோ

#45
தாயே ஒக்க அரும் தயை ஒக்கும் அறா
நோயே ஒக்க மருந்தினை ஒக்கும் நுழை
பேயே ஒக்க அரண் பிணைவு ஒக்கும் உயிர்
மீயே ஒக்க விடா துணை ஒக்கும் இவன்

#46
தாக்கி வெம் பகை தந்த சவத்தை இவன்
நோக்கி நண் பகல் முன் இருள் நூறுவ போல்
போக்கி அம் புவி பூத்தன புன்கண் எலாம்
நீக்கி இன்ப நிழல் கொடியால் பரிவான்

#47
நொந்தால் ஆதரவு ஆம் உறு நோய் ஒழியா
வந்தால் நாள் ஒளிவு அன்று மருங்கில் உறீஇ
செம் தாரால் நிழல் செய்து வழி துணையாய்
கந்தாம் வான் கதியின் கரை ஏற்றுவன்-ஆல்

#48
பின்றாத ஓர் நசையால் பெயராது அணுகி
குன்றாத ஓர் அருள் கொள் இவன் நம்பினருள்
பொன்றாத ஓர் துயர் பூத்து ஒழியா மெலிவின்
நின்றார் ஓர் ஒருவர் நிலம் மீது உளரோ

#49
எண் என்று ஆயின திக்கு இவை யாவும் உற
விண் நின்ற ஆர் ஒளி விஞ்சிய மா முடி சூழ்
மண் நின்று ஆள் பல மன்னவர் மன்னவனே
கண் நின்று ஆயின காதை உரைத்திடுவாம்

#50
அய போது அலர் வேலி அணிந்து அழியா
நயப்பு ஓகை இரோமையின் நாடு இனிது ஆள்
வியப்போடு வணங்கு இகல் வெம் படை வெல்
லெயுப்போல்து எனும் நாம வெள் வேல் இயலான்

#51
கோடாது தனி தகு கோன்மையினான்
வாடாது அழல் தாமரை மாலையினான்
வீடாத நிழல் குடை வேலியினான்
ஓடா அடல் தானை உடை கடலான்

#52
தவர்க்கும் கடிது ஆம் தகவு உற்று இகல்கின்
தவர்க்கும் கனி நன்று இடும் அன்பு இயலான்
உவர்க்கும் கடல் சூழ் உலகிற்கு உளர் ஆம்
எவர்க்கும் தயை ஏந்திய தாதை இனான்

#53
முயலே கடந்தான் முரணால் அருள் தாய்
இயலே கடந்தான் இயை அன்பு இயலால்
புயலே கடந்தான் புரி வான் கொடையால்
மயலே கடந்தான் மலி காட்சியினால்

#54
தன் தாள் இகலோர் தொழுது ஆம் தகை மேல்
ஒன்றாய் உலகு ஆள் உயர் வான் இறையோன்
முன் தான் தொழுது ஏவல் முடித்தலின் ஆம்
குன்றா நிறை வேட்டு உயர் கொள்கையினான்

#55
அனையான் அவியாத அருத்தி எழீஇ
நனை ஆர் கொடியோனை நயந்து அணுகி
வனையா வழிபாடு வனைந்து தொழ
புனையா உயர் பாடு புனைந்தனன்-ஆல்

#56
தண் அம் கொடி தந்த நிழற்கு அணுகும்
வண்ணம் கொடு வாய்ந்த வளம் கொடு சூழ்
தெண் அம் கடல் சேர்ந்த செகத்து ஒருவன்
எண்ணம் தவிர் மாட்சியை ஏந்தினன்-ஆல்

#57
உற்றான் நிறை சீர் வளம் உற்ற பகை
இற்றான் உயிர் ஈறு உற எய்திய நோய்
அற்றான் நெடிது ஆவிய சந்ததியை
பெற்றான் விரி பூ நிழல் பெற்றமையால்

#58
நெஞ்சில் தகவு இற்று இழிவு ஆர் நிகரார்
எஞ்சி தகு போர் வெல ஈடு இலதால்
வஞ்சித்து வெல்வாம் என வந்து ஒரு நாள்
நஞ்சு இட்டு உயிர் ஈறு இட நாடினர்-ஆல்

#59
ஈண்டு ஆங்கு உதவ தனி எய்தி வளன்
வேண்டார் வினை மாயை விளம்பி அதை
தீண்டாது என எண் திசை காத்து வழாது
ஆண்டான் உயிர் அன்பொடு காத்தனன்-ஆல்

#60
மை மாறிய அன்பு வலித்த வளன்
மெய் மாறு உயிர் காத்த வினைக்கு இனி ஓர்
கைமாறு இடு தன்மை கணித்தனன்-ஆல்
பொய் மாறிய மாண்பு உயர் பூபதியே

#61
ஒல்லென்று உலகு எங்கணும் ஓலைகள் விட்டு
எல் என்று ஒளி மேவிய தன் குடை கீழ்
நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல்
செல் என்று முழங்கிய திண் முரசான்

#62
கோலை பொருவ கடுகு ஒற்றர் கொணர்
ஓலை கதை கேட்டு உணர தொழுதே
வேலை படை வேந்தர் எலாரும் எழீஇ
காலை கடிய கடிது எய்தினர்-ஆல்

#63
மஞ்சு அஞ்சுக வன்னி விழி களிறும்
மஞ்சு அஞ்சுக மேல் வளர் தேரும் நிலா
மஞ்சு அஞ்சுக வாள் அபயரும் உறீஇ
அஞ்சம் சுகமாய் வதி நாடு அதிரும்

#64
கூடு ஆர் முகில் ஆர்த்தன கோடை என
கூடார் தொழு கோ முரசின் குரலே
கூடு ஆர் பறவை குலம் அஞ்சி எழ
கூடு ஆர் படையால் புவி கூசினதே

#65
புண் கீறின வேலினர் சூழ் பொதுள
மண் கீறின வல் உருள் தேர்கள் திரள்
விண் கீறின வெண் கொடியும் குடையும்
கண் கீறின பல் படை கால் ஒளியே

#66
நீர் ஏந்திய நித்தில நீள் குடையும்
சீர் ஏந்திய செய் பவள குடையும்
நேர் ஏந்திய நீல மணி குடையும்
ஏர் ஏந்திய நல் இருள் ஏந்தினவே

#67
தண் தாரின் நறா சரி தேன் துளியும்
விண் தாரையின் வேழம் உகும் கடமும்
பண் தாவிய பாய் வய மா குரமே
கொண்டு ஆய துகள் குவை நீத்தனவே

#68
மலை நேர் இரதம் வளி நேர் பரி வான்
கலை நேர் குடை வான் கனம் நேர் கரி நீர்
அலை நேர் அபயர் அடி நேர் தொழுதே
நிலை நேர் வலி நேர் அரசு அண்டினர்-ஆல்

#69
பரி பூட்டிய தேர் பல ஏறு அரசர்
கரி பூட்டிய தேர் கடிது ஓட்டு அரசர்
எரி பூட்டிய தேர் மிசை எய்து அரசர்
அரி பூட்டிய தேர் அரசு அண்டினர்-ஆல்

#70
பொங்கு ஆர்கலி மேல் பொலி வெம் சுடர் போல்
அங்கு ஆர் அரசர் கடல் மீது அவிர
சிங்காசன மேல் ஒரு சிங்கம் என
மங்கா ஒளி மன்னன் எழுந்தனனே

#71
விண் திக்கில் விளங்கிய வெம் சுடரை
அண்டி கிளர் மீன் அடி ஏத்துவ போல்
மண் திக்கில் எலா முடி மன்னவர் வந்து
எண் திக்கில் இராயனை ஏத்தினரே

#72
அன்னார் அவை ஆரணர் ஆர் அவை மெய்
மன்னார் அவை மந்திரிமார் அவை மற்று
ஒன்னார் தொழும் ஓங்கு அயில் ஓங்கு அவை சூழ்
பொன் ஆர் அடி பொற்புற நண்ணினரே

#73
வயிர் செய் ஒலி மற்று ஒலி மாறிய பின்
செயிர் செய் பகை தீர்த்த சிறந்த முகத்து
அயிர் செய் இனிது ஓர் உரை ஆய்ந்து அறைவான்
உயிர் செய் அமிர்து ஏந்திய மார்பு உரியோன்

#74
இன்றே உள்ளோர் அன்று அவர் மாள்வார் இது அல்லால்
பொன்றார் உண்டோ பூதலம் எங்கும் புகழ் விஞ்ச
குன்றா மின்னும் காசு ஒளி கொள் மா முடி கொண்டே
நின்றார் உள்ளும் பொன்று உயிர் நீங்காத எவன் உண்டோ

#75
ஒன்னார் அஞ்சும் வண் சிலை அஞ்சா உரி நல் நூல்
சொன்னார் சொல்லும் பா உரை அஞ்சா சுடர் மொய்ப்ப
மின் ஆர் மன்னர் கோல் ஒளி அஞ்சா விரியா பூ
அன்னார் சேடு அஞ்சா விளிவு என்னா அறியார் யார்

#76
மேலார் கீழார் யாவரும் ஒன்றாய் விளிவாரேல்
கோலால் ஓங்கு ஆங்காரம் உளத்தே கொள்ளுவான் ஏன்
சேல் ஆர் முந்நீர் சூழ் புவி ஆண்டே செயிர் மொய்க்கும்
பால் ஆய்ந்து என் கோல் நீக்குதல் நீங்கா பயன் ஆம்-ஆல்

#77
வீடா செல்வன் நோய் அற என்றும் விளியாதான்
கோடா கோலன் தண் அருள் மாறா குடை வல்லான்
வாடா தண் பூ வாகை அணங்கான் வளர் அன்பான்
ஈடு ஆடா தன்மைத்து எமை அன்னான் இனி ஆள்வான்

#78
அன்னான் என்னான் அன்ன அறைந்தால் அருள் ஆர்ந்து
மின் ஆர் விண்ணும் மண்ணும் ஒருங்கே வினை தீர்ப்ப
தன்னால் தான் ஆண்டு ஓம்பி நிழற்றும் தயையாற்கே
மன்னா நிற்கும் தண் நிழல் செய்த வளன் அன்றோ

#79
நஞ்சு இட்டு எஞ்சா வஞ்சனை நல்கும் வினை நீக்கி
எஞ்சி துஞ்சாது என் உயிர் காத்தான் இவன் என்னா
மஞ்சிற்கு எஞ்சாது ஆர் அருள் பெய்த வளம் ஓர்ந்து என்
நெஞ்சில் துஞ்சா மின் முடி சூட்டல் நினைவுற்றேன்

#80
பின்றாது ஓம்பி நோய் பசி பேரா பகை பொன்ற
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை பொலி இன்பம்
குன்றா வீட்டு உய்ப்பான் மலர் குன்றா கொடி கோமான்
என்றான் நின்றார் உள் உருக பேர் இயல் வல்லான்

#81
உள்ளிய துறவின் சொன்ன உரை இதோ என்ன அஞ்சி
தெள்ளிய வான் மேல் ஆள்வோன் சென்று எமை ஆளல் நன்றேல்
விள்ளிய கொடியோன் ஏவும் விடை பணி நீ தந்து எம்மை
அள்ளிய குறை தீர்த்து ஆள்வது அமைதி என்று உவப்பின் நேர்ந்தார்

#82
கோ முரசு அரசன் வீர குன்றனை முகத்து நோக்கி
மா முரசு ஒழிப்ப சொல்லும் வளன் முடி பத்தாம் நாளில்
பூ முரசு ஆர்ப்ப சூட பொற்புற நகரம் பூண
வே முரசு அறைவி என்றான் விரைந்து அவன் தொழுது போனான்

#83
வார் பிணி முரசும் யானை வளர் எருத்து ஏற்றி பைம்பொன்
தார் பிணி மார்பன் வான் மேல் தவழ் கொடி மனை மூதூரில்
கார் பிணி வரை மேல் மின்னி கதித்து இடி முழங்கினால் போல்
பார் பிணி ஒழிய ஓதை படர் முரசு அறைவித்தானே

#84
கேள்-மினே கேள்-மின் இன்பம் கிளைத்த சொல் கனிய கேள்-மின்
வாழ்-மினே பசி நோய் வஞ்சம் மற பகை ஒழிய வாழ்-மின்
பூண்-மினே வியல் வான் வேந்தன் புவி மிசை முடியை சூடல்
பேண்-மினே நகரம் எங்கும் பெரு நகை அணி-மின் ஈண்டே

#85
வான் அரசு ஆகில் இ பார் வான் உலகு ஆக பூண்-மின்
பான் அரசு ஆகில் கங்குல் பட்டு ஒளி பரவும் அன்றோ
கோன் நர_தேவன் ஏவல் கொண்ட மா வரத்தோன் இங்கண்
தான் நர_பதியாய் ஒவ்வா தயை தளிர்த்து எம்மை ஆள்வான்

#86
தே உலகு உரிய வண்ணம் திருவிழா ஒன்பான் நாளின்
பூ உலகு இயற்றி பின் நாள் பூம் கொடி செல்வ கோமான்
யா உலகு அனைத்தும் வாழ யாணர் மா மகுடம் சூடல்
மேவு உலகு எழுக என்ன வியல் முரசு அதிர்ப்ப சொன்னான்

#87
தார் புனை முரசின் பேழ் வாய் தழங்கு குரல் கேட்ட-காலை
கார் புனை மனை மூது ஊரில் கதத்த காற்று அதிர்ந்து வீச
நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன
நார் புனை உவப்பில் யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே

#88
கன்னி அம் குமரி வாழை கமுகொடு மயங்க நாட்டி
சென்னி அம் தளிரும் பன்னம் சேர்ந்த தீம் கனியும் பூவும்
பின்னி அங்கு இடங்கள்-தோறும் பெருக மொய்த்து எவணும் நாற
மின்னி அ நகர் வண்டு ஆர்க்கும் விரி மலர் காவிற்று ஆமே

#89
நெட்டு ஒளி மாடத்து உச்சி நேர் இடை விடாது நீல
பட்டு ஒளி பந்தர் பாய்த்தி பத்தியின் பயிற்றி கோத்த
கட்டு ஒளி மணிகள் நாற கதிர் பகற்கு அஞ்சா மின் மீன்
விட்டு ஒளி பூத்த வான் போல் வியென்ன மா நகரம் அன்றே

#90
செம் பொடி மணியின் தூசி செம்பொனின் தூசி சுண்ணத்து
அம் பொடி சிந்துரத்தோடு அயிர் மணல் முத்தம் மீதின்
பைம் பொடி அலரும் சிந்த படர்ந்த வான் மிரண்டு மீன்கள்
தம் பொடி மிதித்தல் ஆகும் தகும் ஒளி தெருவின் தோற்றம்

#91
தெரு-தொறும் ஒழுங்கின் பாய்ந்த திரு ஒளி பளிங்கு திண்ணை
பரு-தொறும் பசும்பொன் பாவை பவள நீள் குறட்டில் ஏற்றி
உரு-தொறும் இரவில் வில் வாய் ஒளி மணி தீபம் மின்ன
கருத்து உறும் எல்லைக்கு ஏலா கவின் நகர் கேழ்த்தது அன்றே

#92
நகும் மணி பாவையாக நங்கையர் மாலை தாமம்
தகு மணி நிரைத்து வாய்த்த சாளரத்து ஒசிந்து நோக்க
தொகு மணி பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல
மிகு மணி விழாவை காண விண்ணவர் வந்தது ஒத்தார்

#93
இ செவி மதர் கண் கையால் ஈறு இல முகந்து மாந்த
மெய் செவி இனிய யாழில் விளை இசை மதுவை மேய்ந்து
கை செவி வளை வில் வீச களித்த மின் ஆடி பாடி
எ செவி மிக்கது என்பது ஈடு இலா வியந்து நிற்பார்

#94
பண் நிற வாய் வண்டு ஆர்க்கும் பனி பூ நாற படர் மழை மின்
தெண் நிற வாய் பூம் புகையுள் மணி வில் வீசும் தெரு எல்லாம்
விண் நிற வாய் மலர்ந்து இவ்வாறு ஒன்பான் நாளும் விழா அணி கண்டு
ஒண் நிற வாய் இரவி எழீஇ விழைந்த நல் நாள் உதித்ததுவே

#95
பொன் பரப்பில் பவள தூண் நிறுத்தி மற்று ஓர் புறம் படிக
கல் பரப்பி சுவர் ஏற்றி கவிழ்ந்து வான் போல் கதிர் மணியின்
நல் பரப்பில் சிரம் கூட்டி நிலை கண்ணாடி நக நிரைத்து
வில் பரப்பி கதிர் பதி போல் வேய்ந்தது ஆங்கு ஓர் மண்டபமே

#96
கலை ஈன்ற முறை ஒல்காது அங்கண் நாப்பண் கதிர் பொன்னால்
உலை ஈன்ற அரி மு_நான்கு எருத்தின் தாங்க ஒளி அல்கா
மலை ஈன்ற இன மணியால் குறட்டை ஏற்றி வானோர் சேர்
நிலை ஈன்ற எழில் காட்ட நிமிர்ந்தது ஓர் சிங்காசனமே

#97
கண் கனிய மின் தெளித்து கதிரால் வீக்கி பான் உயிராய்
மண் கனிய கனி வானோர் களிப்பின் செய்த வடிவாக
புண் கனிய மருந்து அன்னோன் உருவம் அங்கண் பொலிந்து உயிர் போல்
விண் கனிய எண் கனிய திரு வில் வீசி வேய்ந்தது அன்றே

#98
வான் பூத்த சுடர் குழவி மான வாய்த்த திருமகவை
மீன் பூத்த பூம் கொடியோடு ஏந்தி கண்டார் வினை தீர்ப்ப
கான் பூத்த வாய் மலர்ந்து உள் குளிர்ப்ப நோக்கும் களி மலர் கண்
தான் பூத்த தயை தளிர்ப்ப உயிராய் உள் தங்கினது என்பார்

#99
விரி மாலை தாமத்து விரி பூம் கோலான் மேல் சுடரை
சொரி மாலை பூ மாலை சுடர் பொன் மாலை துகிர் குளும் தீ
எரி மாலை மணி மாலை முத்த மாலை இவை ஒருங்கு ஓர்
உரி மாலை தலை கூட்டி கதிர் நீப்பு ஒப்ப பரப்பினரே

#100
செல் நாக முழ கொடு பல் பறைகள் ஆர்ப்ப திரு மணி யாழ்
புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட தொழ பொருநர்
பொன் நாகம் அணி முகில் பூம் புகை சூழ் தேக்கும் மண்டபத்தில்
மின் நாக மணி மார்பன் மிளிர் தாள் ஏத்தி விரைந்து உற்றான்

#101
அலை வரம்பு அற்று ஓடுவ போல் நகர் எல்லாம் அடர்ந்து உறீஇ வான்
நிலை வரம்பு அற்று உம்பர் மிசை பல்லாண்டு ஓதி நிற்ப மறை
கலை வரம்பு அற்று உணர்ந்தோர் தம் கருமம் ஆற்றி மா தவற்கே
விலை வரம்பு அற்று அமைத்த முடி வேந்தர் வேந்தன் தொழுது அணிந்தான்

#102
படி வணங்கு அரசன் அடி வணங்க எழ விழ மறு படி வணங்க நிமிர் கிளை வணங்க எனை குருசிலர்
அடி வணங்க மறையவர் வணங்க அணி அணி படையவர் வணங்க அனையவர் வணங்க விரை விரி புகை
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம்

#103
மழை வழங்க இடி ஒலி முழங்கல் நிகர் பல பறை வயின் அடங்கல் ஒலி மிக முழங்க முதலவன் மணி
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல்
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே

#104
நக வளர்ந்த அறம் நக மலிந்த தவம் வினை அழ நக மிடைந்த திரு நக மிகுந்த கொடை மிடி அழ
நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம்

#105
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல்

#106
முகை அணிந்த அணி மது உமிழ்ந்த மணம் அளவு_இல முருகு உமிழ்ந்த சுதை கலவை சிந்துரமும் அளவு_இல
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு_இல நவை கொணர்ந்த வினை அற ஒழிந்த குறை அளவு_இல
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல்

#107
செல் மழை கொடையான் அரசர் கோன் கோவில் சென்று புக்கு அந்தணர்க்கு ஆதி
நல் மழை நெய் பால் அமுது அளித்து எவர்க்கும் நசை அற வான் பொருள் வழங்கி
வில் மழை போரில் மீண்டு எதிர் பகைவர் வெம் படை காண்பது மறுத்தோன்
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான்

#108
கை விளை கொடையின் பொழுது எலாம் இனிதின் கடிந்து வெம் கதிர் கடிந்து ஒளிப்ப
நெய் விளை சுடர் வாய் திரு மணி தீபம் நிறைந்து ஒளி மணிகளோடு எறிப்ப
மை விளை கங்குல் நுழைந்து இருள் உலகில் மல்கினது அ நகர் அறியா
மெய் விளை ஒற்றர் உரைப்ப ஈண்டு அரசன் விரி மணி தேர் எழ என்றான்

#109
அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு அவிர்ந்து எழும் மரகத மலையில்
கொடி என வெண் முத்து ஆரமே தவழ குடி என மணி உரு கிளம்ப
கடி என பசும்பொன் பரப்பில் வம்பு அலராய் கதிர் மணி பூப்ப மேல் ஒளி வான்
முடி என சிகரம் வயிர தூண் தாங்க முனி பதிக்கு அமைத்தது ஓர் இரதம்

#110
ஒற்றை ஆம் ஆழி தேர் நலம் நாண ஒற்றை நல் மாமையில் வனைந்த
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம்
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க முரசு இனம் முகிலினும் முழங்க
மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச மறையவர் ஏற்றினர் தொழுதே

#111
கள் உற மலர்ந்த கடி முகை பரப்பி கதிர் உற விளக்கிய தெருவில்
தெள் உற விளங்கி வான் தெரு இரவி திரிவதே போன்று பேர் உவகை
உள்ளுற தொழுவார் நசை அளவொடு மெல் உருண்டு கண் கூசுவ பேணி
அள்ளுற மணி பூம் புகை முகில் சூழ அருள் உற நடந்ததே இரதம்

#112
புல் பதி குழாத்தின் நிரைத்தன பிச்சம் புயல் குழாத்து எழுந்தன புகைகள்
அல் பதி திங்கள் பொழி கதிர் குப்பை அணி குழாத்து இரட்டின கவரி
தன் பதி பெயர்ந்து வீழும் மீன் குழாத்தின் தன துகள் மணி துகள் சிந்த
பொன் பதி சுடர்கள் குழாத்து எரி மணி வாய் பூப்ப நண்பகல் விளக்கு அளவோ

#113
பண் கவர் குரலால் பண் இசைக்கு இசை பா பாடலும் ஆடலும் ஒளி மீன்
மண் கவர் சுடர் வாய் மணி தெரு-தொறும் எல் வாய்த்தலும் மற்று அழகு அனைத்தும்
கண் கவர் வனப்பின் கண்டனர் கணியா களிப்பொடு வியந்து கை விதிர்ப்ப
எண் கவர் தயையின் பார்த்து என சூசை விழித்த கண் வினை அருள் அளவோ

#114
பணி நிலா வீசும் மணி திரள் பூத்து பகல் செயும் கை கொடி நோக்கீர்
அணி நிலா பிறையை மிதித்து எழுந்து ஒளி செய் அடி நல்லாட்கு அன்றியே அன்னாள்
மணி நிலா பிறை போல் ஈன்ற தன் தேவ மகற்கும் அன்பு அருள் நிழல் செய்த
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார்

#115
மறை அணி தவத்தோன் அரசு உறீஇ தானே மறைக்கு அணி ஆயினான் என்பார்
பிறை அணி பதத்தை தான் அணிந்து அன்ன பிறைக்கு அணி ஆயினான் என்பார்
பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய் பொறைக்கு அணி ஆயினான் என்பார்
இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார்

#116
தான் செய்த தவம் செய் அரசு இதோ நாமே தவ பயன் பெற்றனம் என்பார்
கான் செய்த கொடியோன் புனை முடி காண கண் பெற்ற பயன் பெற்றாம் என்பார்
ஊன் செய்த பிறப்பில் உரு இல வானோர்க்கு உயர் பயன் பெற்றனை என்பார்
வான் செய்த உவகை பெற்றனம் உன்னை மன்னன் ஆ பெற்ற நாம் என்பார்

#117
பன்ன_அரும் உவப்பொடு பலவும் கூறியே
பொன் அரும் கொடியினோன் இருக்கை போற்றி முன்
மன்னரும் வியப்புற வனைந்த கோயில் வாய்
மின் அரும் கொடிஞ்சி தேர் விளங்க நின்றதே

#118
செய் முறை அனைத்தையும் திருத்தி வேதியர்
கை முறை தொழ பறை கறங்க யாவரும்
மெய் முறை துதியொடு விழுந்து போற்ற நேர்
நை முறை கோயிலுள் உருவம் நாற்றினார்

#119
மிடி வினை பசி பிணி வெறுப்பு நோய் பகை
மடி வினை அடைந்த பல் அரக்கர் வண்ணமே
அடி வினை என்று கீழ் கிடத்தி அஞ்சிய
கடி வினை முகத்து-இடை காட்டி நின்றவே

#120
நால் மணி யானைகள் நவின்ற தீயவை
கால் மணி பட மிதித்து உயர் தம் கை தொழ
வால் மணி பூத்தது ஓர் மரகத கிரி
நீல் மணி எருத்து உயர் சுமந்து நின்றவே

#121
பை மணி மலையின் மேல் பணி செய் பாவையாய்
வெம் மணி உரு கொடு வேய்ந்து எண் விண்ணவர்
கை மணி தொழ சிலர் சிலர் கலாநிதி
துய் மணி குறட்டினை சுமந்து தோன்றினார்

#122
வையகத்து அரசர் கோன் வெற்றி வாகையாம்
ஐ அகத்து இரு தலை பறவை ஆகிலம்
மொய் அகத்து அலர்ந்த பொன் சிறகின் மொய்ம்பு மேல்
மெய் அக தவத்து அரசு உயர் விளங்கினான்

#123
மண் பட உலகு எலாம் விற்ப வாய்த்தன
விண் படம் என மணி விளங்க ஓர் ஐ வில்
உட்பட வளைத்த மா முடி ஓர் வானியாய்
புள் பட பறந்த வான் பொருநர் ஏந்தினார்

#124
மின் தவழ் மணி வரை வேய்ந்த ஆசனம்
முன் தவழ் திரு ஒளி முகிழ்த்த ஐ வில் கிடை
பின் தவழ் அணி கொடு வியவர் பெற்றியால்
பொன் தவழ் பாவைகள் போற்றி நின்றவே

#125
சார் வயின் படா தயை தானம் அன்பு அருள்
ஓர் வயிற்று உதித்து அன நால்வர் ஓர் முகத்து
ஏர் வயின் கரத்து அணி எண்_இல் ஏந்துபு
நேர் வயின் தென்கிழக்கு இறைஞ்சி நின்றவே

#126
பேர் விளை காட்சியின் பிறந்த பாவைகள்
சீர் விளை ஞானமும் நிறையும் சீலமும்
ஏர் விளை தாயொடு இன் அமிர்தம் ஏந்தி எல்
ஆர் விளைவு உற வட கிழக்கு அமைத்தவே

#127
வாட்டிய உடற்கு உயிர் வளர்ந்த மாட்சியை
காட்டிய முகம் நகை கதிர் பொன் பாவைகள்
ஈட்டிய கனி கொணர்ந்து என தென்மேல் திசை
பூட்டிய கற்பொடு தவம் பொலிந்தவே

#128
பெண் உரு காட்டி உள் பெருகும் ஆண்மையில்
வண் உரு காட்டு பொன் கவசம் மார்பு அணிந்து
ஒண் உரு தொடை கொணர் பொறையும் ஊக்கமும்
விண் உரு கொடு வடமேற்கு வேய்ந்தவே

#129
தண் வாய் கொடியோன் இன்னணம் தன் தவத்து ஈர் உலகின் அரசு எய்தி
மண் வாய் இன்ன நிலை பெற்று மணி வாய் முகத்து வீற்றிருக்க
பண் வாய் மணி பூம் குரல் முரல பனி பூம் குரல் வாய் துதி துவைப்ப
விண் வாய் மண பூம் புகை மொய்ப்ப விள்ளா இன்பத்து அடி தொழுதார்

#130
மன்ன களிப்போடு இவை ஆகி வான் வாழ்வான் இங்கு அரசு உற்றான்
என்ன காண அ உலகின் இறைவர் மொய்த்தார் என வானோர்
மின்ன கதிர் வாய் உரு காட்டி வியந்து யாரும் கை விதிர்ப்ப
பொன் நல் கலத்தில் மது பெய் பல் புனையல் கொணர்ந்து இ உரை கொண்டார்

#131
வான் மேல் மகுடம் புனை நாளில் வர மா தவன் தன் கொடி பூத்த
தேன் மேல் தளம்பும் ஆறு_அறு_நூறு சேர்ந்த மூ_ஐந்து திரு மணி பூ
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு_ஆறு அணி இது என
மீன் மேல் விளங்கும் வளன் பதத்தில் விரும்பி சாத்தி மீண்டு உரைத்தார்

#132
நாம்பா அணி பூம் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால்
காம்பா அணி வில் வீசிய தன் கன்னி துணைவி களித்து இசைத்த
தேம்பா அணி இஃது இதை அணிவார் திரு வீட்டு உயர்வார் அ இருவர்
சாம்பா அணி தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார் என மறைந்தார்

#133
திருவாய் மணி தேன் மலர் சேர்த்த தேம்பாவணியை தொழுது ஏந்தி
மருவாய் மணி பூம் வயல் நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன்
உருவாய் வேய்ந்த என் இறையோன் உடன் மூவரின் பொன் பதத்து அணிய
வெருவு ஆய் புன் சொல் அஞ்சிய பின் விருப்பம் தூண்ட தொழுது அணிந்தேன்