தஞ்சைவாணன் கோவை

** பொய்யாமொழிப்புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவை

&1 களவியல்

@1 கைக்கிளை
** காட்சி

#1
புயலே சுமந்து பிறையே அணிந்து பொரு விலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின்
அயலே பசும்பொன் கொடி நின்றதால் வெள்ளை அன்னம் செந்நெல்
வயலே தடம் பொய்கை சூழ் தஞ்சைவாணன் மலையத்திலே
**ஐயம்

#2
பார்_அணங்கோ திருப்பாற்கடல் ஈன்ற பங்கேருகத்தின்
ஓர் அணங்கோ வெற்பு உறை அணங்கோ உயர் பாவலர்க்கு
வாரணம் கோடி தரும் தஞ்சைவாணன் தென்மாறை வையை
நீர்_அணங்கோ நெஞ்சமே தனியே இங்கு நின்றவரே
**துணிவு

#3
மை ஆர் குவளை வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
நையாது ஒழி-மதி நல் நெஞ்சமே இனி நம்மினும் தன்
நெய் ஆர் கரும் குழல் செம் மலர் வாடின நீல உண்கண்
கையால் அழைப்பன போல் இமையாநிற்கும் காரிகைக்கே
** குறிப்பறிதல்

#4
மண்ணில் சிறந்த புகழ்த் தஞ்சைவாணன் மலைய வெற்பில்
பெண்ணில் சிறந்த இப் பேதை-தன் பார்வை பெருவினையேன்
எண்ணில் சிறந்த இரும் துயர் நோய் தனக்கு இன் மருந்தாய்க்
கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை யாவதும் காட்டியதே

@2 இயற்கைப் புணர்ச்சி
** இரந்து பின்னிற்றற் கெண்ணல்

#5
தேங்கிய காதர ஆதரம் செப்பித் தண் செப்பு இணை போல்
வீங்கிய மா முலை மேவுதும் யாம் விசயக் கொடி மேல்
வாங்கிய சாபம் உயர்த்தவன் போர் வென்ற வாணன் வையம்
தாங்கிய மால்_அனையான் தஞ்சை சூழ் வரைத் தாழ்_குழற்கே
** இரந்து பின்னிலை நிற்றல்

#6
செறி வேழ வெம் சிலை வேள் தஞ்சைவாணன் திருந்தலர் மேல்
எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல்
நெறி வேய் அலங்கல் முடித் தலை சாய்த்து இங்ஙன் நிற்பதுதான்
அறிவே அறிந்த உனக்கு அலர் மாளிகை ஆர்_அணங்கே
** முன்னிலையாக்கல்

#7
வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வண்டு
கொழுது இயல் ஆர் செய் குழல் மடவீர் நும் குற்றேவல்செய்து
தொழுது இயல் ஆயத் தொகுதியொடு ஆடிச் சுனை குடையாது
எழுதிய பாவையைப் போல் நின்றவாறு என் இயம்பு-மினே
** மெய்தொட்டுப் பயிறல்

#8
நல்லார் விழி போல் இருந்தும் அளி எனும் நாமம் பெற்றும்
அல் ஆர் குழலில் அமர்ந்திருந்தால் அமராரை வெல்ல
வல்லான் வரோதயன் வாணன் தென்மாறை மதுகரங்காள்
நில்லாது இடை உமக்கோ பழி சால நிலைநிற்குமே
** பொய் பாராட்டல்

#9
பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமளப் பூம்
செருந்து ஒன்று சோலைத் தென்மாறை அன்னீர் செழும் திங்கள் உங்கள்
முருந்து ஒன்று கோப முகம் கண்டு நாணி முயல் மறுத் தீர்
மருந்து ஒன்று நாடி அன்றோ வட மேரு வலம்கொள்வதே
**இடம்பெற்றுத் தழால்

#10
படம் பட்ட வாள் அரவு அல்குலிலே தளைபட்ட நெஞ்சம்
விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும்
தடம்பட்ட வாவியும் சூழ் தஞ்சைவாணன் தமிழ்க்கிரி நாம்
இடம்பட்ட ஆர முலைத் தடம் தோய்தற்கு இடம் இதுவே
** வழிபாடு மறுத்தல்

#11
தேறாக தெவ் வென்ற வாணன் தென்மாறைச் செந்தேன் அருவி
ஊறாத காலத்தும் ஊறு தண் சாரல் ஒதுக்கிடம் தந்து
ஆறாத சோகமும் ஆற்றுதல் வேண்டும் அசோகம் எய்தி
மாறாத தண்ணளி கூர் மலர் வாள் முக மாதவியே
** இடையூறு கிளத்தல்

#12
சிதையா முளரித் திருமாளிகையில் சிறந்தது என்று என்
இதயாரவிந்தத்து இனிது இருப்பீர் இரு கோட்டு ஒரு கை
மத யானை வாணன் வரும் தஞ்சை சூழ் வையைநாட்டு உறைவோர்
புதையார் தனம் என்பதோ மதர் வேல் கண் புதைத்துவே
** நீடுநினைந் திரங்கல்

#13
தமிழ் தங்கிய தஞ்சை காவலன் வாணன் தடம் சிலம்பில்
குமிழ் தங்கிய மதிக் கொம்பர்_அன்னீர் குளிர் வெண்ணிலவு ஊடு
உமிழ் தண் தரளப் பவளச் செம் கேழ் வள்ளத்து உள் இருக்கும்
அமிழ்தம் தருவது என்றோ பெரு வேட்கை என் ஆருயிர்க்கே
** மறுத்தெதிர்க்கோடல்

#14
கறை ஆர் இலங்கு இலை வேல் அன்பர் காமக் கடற்கு எதிர்ந்த
நிறையாம் வரம்பு இனி நிற்பதன்றால் நிறை நீர் உலகை
மறையாமல் வன்கலி மாற்றிய வாணன் தென்மாறையினாம்
பொறை ஆர் தவம்செய்திலேம் நெஞ்சமே என் புகல்வதுவே
** வறிதுநகை தோற்றல்

#15
எறி தேன் அலம்பும் சிலம்பின் எப்போதும் இரந்து இவள் பின்
வெறிதே திரிந்து மெலிந்தனம் நாம் உள்ளம் மெல்_இயற்குப்
பிறிதோ-கொல் என்னும் பெருந்தகை தேறப் பெரிது உயிர்த்து
வறிதே முறுவல்செய்தாள் தஞ்சைவாணன் வரை_அணங்கே
** முறுவற் குறிப்புணர்தல்

#16
வில் மலை வேல் அன்ன நல் நுதல் வாள் கண்ணி வேட்கை எண்ணாள்
என் மலைவேன் என்னும் என் உயிர் தாங்கும் எதிர்ந்த ஒன்னார்
மன் மலை வேழம் திறைகொண்ட சேய் தஞ்சைவாணன் மஞ்சு ஆர்
தென்மலை வேய் நிகரும் பெரும் தோளி சிறுநகையே
** முயங்குதலுறுத்தல்

#17
வானக் கதிரவன் மண்ணக மாதை மணந்தது அன்றோ
நானக் குழலியை நான் இன்று பெற்றது நாவலர்க்குத்
தானக் களிறு தரும் புயல் வாணன் தமிழ்த் தஞ்சை சூழ்
கானக் கடி வரை-வாய் விரை நாள்_மலர்க் கா அகத்தே
** புணர்ச்சியின் மகிழ்தல்

#18
மலைநாடு கொண்ட வழுதி கண்_போல்பவன் வாணன் எண்ணெண்
கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரைக் கன்னி பொன் நாண்
முலை நாம் முயன்று முயங்கினமால் முயன்றால் இனி ஐந்
தலைநாக நல் மணியும் பெறலாம் இத் தரணியிலே
** புகழ்தல்

#19
திரள் மா மரகதச் செய்குன்றுகாள் என்றும் செவ் வன நீர்
முரண் மா தவங்கள் முயன்று செய்தாலும் முளரி_மங்கை
சரண் மாறை வாணன் தமிழ்த் தஞ்சை நாட்டு என் தனி உயிர்க்கு ஓர்
அரண் மான் அனைய கண்ணாள் கொங்கை போறல் அரிது உமக்கே

@3 வன்புறை
** அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல்

#20
நாவியும் கார் அகில் ஆவியும் தோய்_குழல் நாணி அஞ்சேல்
வாவியும் சோலையும் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வயல்
காவியும் சேலும் கமலமும் காட்டும் நின் கண் மலரும்
ஆவியும் போல் இனியார் அணியாக அணிந்தனனே
** பெருநயப்பு உரைத்தல்

#21
மன்னா உலகத்து மன்னிய சீர்த் தஞ்சைவாணன் வெற்பில்
என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த
பொன் நாண் அணி கொங்கை போல வண்டீர் உங்கள் பொய்கை உண்டோ
நல் நாள் அரும்பு ஒரு தாள் இரண்டு ஈனும் நளினங்களே
** தெய்வத்திறம் பேசல்

#22
மன்னிய பார் புகழ் வாணன் தென்மாறையின் மாந்தளிர் போல்
மின்னிய மாமை விளர்ப்பது என்னே விதி கூட்ட நம்மில்
பின்னிய காதல் பிரிப்பவர் யார் இனிப் பேர் அருவி
இன்னியமாக இள மயில் ஆடும் இரும் பொழிற்கே
** பிரியேன் என்றல்

#23
வண் கொடி ஏய் மதில் மாறை வரோதயன் வாணன் ஒன்னார்
எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல்
நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுரத் தாள்
பெண் கொடியே பிரியேன் தரியேன் நின் பிரியினுமே
** பிரிந்து வருகென்றல்

#24
சென்றே பகை வென்ற திண் படை வாணன் செழும் தஞ்சை சூழ்
நன்றே தரு வையைநாடு_அனையாய் நமது ஆர் உயிர் போல்
ஒன்றே எனது உரை ஊங்கு உயர் சோலையினூடு ஒளிந்து
நின்றே வருவல் இங்கே விளையாடுக நீ சிறிதே
** இடம் அணித்து என்றல்

#25
மணி பொன் சொரியும் கை வாணன் தென்மாறை மருவினர் போல்
தணி பொன் சொரியும் தட முலையாய் உயர் சந்தம் உந்தி
அணி பொன் சொரியும் அருவி எம் சாரலகத்து அலர் தேம்
கணி பொன் சொரியும் நின் சாரல் மென் காந்தள கையகத்தே

@4 தெளிவு
** தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத் தெளிதல்

#26
எத்தும் தமது உரை தேறி நின்றேனை இங்கே தனியே
வைத்து அங்கு அகன்று மறந்து உறையார் வறியோர் கவர
முத்தும் துகிரும் இரங்கும் தரங்கம் முகந்து எறிந்து
தத்தும் கரை வையை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே

@5 பிரிவுழி மகிழ்ச்சி
** செல்லுங் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல்

#27
அகில் ஏந்து கூந்தல் ஒரு கையில் ஏந்தி அசைந்து ஒரு கை
துகில் ஏந்தி ஏந்தும் துணைச் சிலம்பு ஆர்ப்பத் துளி கலந்த
முகில் ஏந்து பூம் பொழில் சூழ் தஞ்சைவாணன் முந்நீர்த் துறை-வாய்
நகில் ஏந்து பூங்கொடி போல் செல்லுமால் நெஞ்சம் நம் உயிரே
** பாகனொடு சொல்லல்

#28
தென் பால் திலகம்_அன்னன் தஞ்சைவாணன் தென்மாறை முந்நீர்
வன் பால் திரள் முத்த வண்டலின் மேல் வரும் ஏதம் அஞ்சி
முன் பார்த்து என் நெஞ்சம் வரும் வழி பார்த்து முறைமுறையே
பின் பார்த்து ஒதுங்குதல் காண் வலவா ஒரு பெண் அணங்கே

@6 பிரிவுழிக் கலங்கல்
** ஆயவெள்ளம் வழிபடக் கண்டு இது மாயமோ என்றல்

#29
சீயம்-கொலோ எனத் தெவ் வென்ற வாணன் தென்மாறை வையைத்
தோயம்-கொலோ எனும் நேயம் நம்-பால் வைத்துச் சோலை மஞ்ஞை
ஆயம்-கொலோ எனும் ஆயத்துள்ளாள் இவ் அரிவை என்ன
மாயம்-கொலோ நெஞ்சமே மணம் போல் இங்கு வந்து உற்றதே
** வாயில்பெற்று உய்தல்

#30
பெரு மால் மருந்து ஒன்று பெற்றனம் யாம் நெஞ்சம் பேதுறல் பார்
மருமான் வரோதயன் வாணன் தென்மாறை மணம் கமழ் பூம்
திருமான் முக மலர்ச் சே அரி பாய் கயல் சென்றுசென்று அவ்
ஒரு மான் நகை முக மா மலர் ஓடை உலாவருமே
** பண்பு பாராட்டல்

#31
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாய்த்தவர் கண்
கயலாம் எனில் கயல் கள்ளம் கொள்ளா கரும் தாழ் அளகம்
புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இப் புனை இழையார்
இயலாம் அனைத்தையும் வேறு என்ன பேரிட்டு இயம்புவதே
** பயந்தோர்ப் பழிச்சல்

#32
அணியும் சுடர் விரி சங்கு பங்கேருகம் ஆடகமும்
மணியும் தர மன்னி வாழியரோ தஞ்சைவாணன் வெற்பில்
தணியும் தொழில் ஒழித்து இன்பமும் துன்பமும் தன் பதமே
பணியும் பணி எனக்குப் பயந்தாளைப் பயந்தவரே
** கண்படை பெறாது கங்குல் நோதல்

#33
வாமக் கலை அல்குல் வாள்_நுதலார் தஞ்சைவாணன் வெற்பில்
நாம் அக் கலவி நலம் கவர் போது நமக்கு அளித்த
காமக் கனல் அவர் கையகல் காலைக் கடும் பனி கூர்
யாமக் கடலகத்தும் தணியாது இனி என் செய்துமே

@7 இடந்தலைப்பாடு
** தந்த தெய்வந் தருமெனச் சேறல்

#34
மன்றும் பொதியிலும் மா மயில் சேர் தஞ்சைவாணன் வெற்பில்
துன்றும் புயல் இளம் சோலையின்-வாய்ச் சுறவுக் குழையைச்
சென்று உந்து சேல் விழி மின்னை முன் நாள் தந்த தெய்வம் நமக்கு
இன்றும் தரும் நெஞ்சமே எழு வாழி இங்கு என்னுடனே
** முந்துறக் காண்டல்

#35
மரு ஆய நாப்பண் மயில் உருவாய் நென்னல் வாணன் தஞ்சைத்
தரு-வாய்த் தழை கொய்து தண் புனம் காத்துத் தடம் குடைந்து
திருவாய் மலர்ந்து சிலம்பு எதிர்கூய் இன்று ஒர் தெய்வதப்பெண்
உருவாய் ஒரு தனியே நின்றதால் என் உயிர்க்குயிரே
** முயங்கல்

#36
மானாகரன் தஞ்சைவாணன் வரோதயன் மாறை_அன்னாள்
தான் ஆவி-நின்று அலர் தாமரையே அத் தட மலர்-வாய்
ஆனாது ஒழுகு செந்தேன் அல்லி மேவும் அரச_அன்னம்
யான் ஆ கிடைப்பதுவே இன்ன பான்மை இருவர்க்குமே
** புகழ்தல்

#37
அரும்பாம் அளவில் தனத்தொடு ஒவ்வாய் அலராம் அளவில்
கரும்பாம் மொழி வதனத்தொடு ஒவ்வாய் களி யானை செம்பொன்
தரும் பாரி வாணன் தமிழ்த் தஞ்சையான் தரியாரின் முன் செய்
பெரும் பாவம் அல்லது நீர் நின்ற பேறு அல்லி பெற்றிலையே
** ஆயத்துய்த்தல்

#38
மேவிக் கலைக் கடல் என் புலன் மீன் உண்டு மீண்டுவந்து என்
ஆவிக் கமலத்து அமர் அன்னமே நின் அயில் விழி போல்
வாவிக் கயல் உகளும் தஞ்சைவாணன் வரையின் உடன்
கூவிக் கயம் குடை நின் குயில் ஆயம் குறுகுகவே

@8 பாங்கற் கூட்டம்
** தலைவன் பாங்கனைச் சார்தல்

#39
புனை ஆழி அங்கைப் புயல் வளர் பாற்கடல் பூங்கொடி வாழ்
மனை ஆகிய தஞ்சைவாணன் ஒன்னார் என மற்று இங்ஙனே
இனையாது எழு-மதி நல் நெஞ்சமே நமக்கு இன் உயிரே_
அனையான் அருள் புனலால் அனங்கானலம் ஆற்றுதற்கே
** பாங்கன் தலைவனை உற்றது வினாதல்

#40
வலம்புரி போல் கொடை வாணன் தென்மாறை மழை வளர் பூம்
சிலம்பு உறை சூர் வந்து தீண்டின போல் ஒளி தேம்பி இவ்வாறு
உலம் புனை தோளும் நின் உள்ளமும் வாடி உருகிநின்று
புலம்புவது என்னை-கொல்லோ சொல்ல வேண்டும் புரவலனே
** தலைவன் உற்றது உரைத்தல்

#41
மலை முழுதும் கொற்றம் வைக்கின்ற வாணன் தென்மாறை நண்பா
சிலை முழுதும் சுற்றுமுற்றும் எய்யாநிற்பச் செம் நிறத்தே
கொலை முழுதும் கற்ற கூரிய வாளி குளிப்ப இன்று என்
கலை முழுதும் பட்டதால் ஒரு மான் முடிக் கண்ணியிலே
** கற்றறி பாங்கன் கழறல்

#42
தரு கற்பகம் அன்ன சந்திர வாணன் தடம் சிலம்பில்
முருகக் கடவுள் அனைய வெற்பா முகிலும் பிறையும்
செருகக் கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம்
உருகக் கலங்கினை நீ தகுமோ மற்று உனக்கு இதுவே
** கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்

#43
மாலாய் மதம் பொழி வாரண வாணன் தென்மாறை_அன்னார்
சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர்
நூல் ஆர் மருங்கும் பெரும் தனபாரமும் நும்மை அன்றி
மேலானவரும் கண்டால் உரையார் இந்த வீரங்களே
** கிழவோற் பழித்தல்

#44
சூர் ஆர் சிலம்பில் சிலம்பி மெல் நூல் கொண்டு சுற்ற வெற்றிப்
போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை
வாரால் அணைப்ப வருந்தினை நீ தஞ்சைவாணன் வெற்பா
ஓர் ஆழி சூழ் உலகத்து எவரே நின்னை ஒப்பவரே
** கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல்

#45
பொறை கொண்ட தாமரைப் போது அன்ன கொங்கையும் பொங்கு அரி சேர்
கறை கொண்ட வாள் அன்ன கண்களும் கொண்டு ஒரு கன்னி தெவ்வைத்
திறை கொண்ட வாணன் செழும் தஞ்சை சூழும் சிலம்பில் இன்று என்
நிறை கொண்டவாறு அறியாது இகழாநிற்றி நீயும் நின்றே
** பாங்கன் தன்மனத்து அழுங்கல்

#46
சீதள ஆரம் கமழ் தஞ்சைவாணன் தென்மாறை_அன்னாள்
காது அளவா வெம் கடு அளவா ஒளிர் காவி அம் தண்
போது அளவா விழி என்னும் என் ஆசை புறத்து அளவா
சூது அளவா முலை என்னும் என் நாம் இனிச் சொல்லுவதே
** பாங்கன் தலைவனோடு அழுங்கல்

#47
என் மேல் அறைவது யான் இங்கு நின் செவிக்கு என் சொல் எல்லாம்
வல் மேல் அடர் கொங்கை காரணமாத் தஞ்சைவாணன் வெற்பா
கல் மேல் அறைகின்ற மென் முளை போலும் கடல் வெதும்பில்
தன் மேல் விளாவ உண்டோ தரை மேல் ஒரு தண் புனலே
** எவ்விடத்து எவ்வியற்று என்றல்

#48
முகத்தில் பகழி இரண்டு உடையார்க்கு இடம் மூரி முந்நீர்
அகத்தில் பிறந்த அரவிந்தமோ அடையார்-தமக்கு
மகத்தில் சனி அன்ன சந்திரவாணன் தென்மாறை வெற்போ
நுகத்தில் பகல்_அனையாய் தன்மை ஏது நுவல் எனக்கே
** அவன் அஃது இவ்விடத்து இவ்வியற்று என்றல்

#49
கனமே குழல் செங்கயலே விழி மொழி கார்க் குயிலே
தனமே முகை என் தனி நெஞ்சமே இடை தன் பகைக்கு
வனமே அருளிய வாணன் தென்மாறை மணி வரை சூழ்
புனமே இடம் இங்ஙனே என்னை வாட்டிய பூங்கொடிக்கே
** பாங்கன் இறைவனைத் தேற்றல்

#50
மழை வளர் மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பின்
இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய்க்
கழை வளர் சாரலில் கண்டு உனை யான் வந்து காண்பு அளவும்
தழை வளர் தார் அண்ணலே தணிவாய் நின் தகவின்மையே
** குறிவயிற் சேறல்

#51
பாரித்த திண்மை எம் அண்ணல் உள் நீரைப் பருகி நின்று
பூரித்த செவ்விளநீர்களும் தாங்கி அப் பூங்கொடிதான்
வாரித் தலம் புகழ் வாணன் தென்மாறை வரைப் புனம் சூழ்
வேரித் தடம் பொழில்-வாய் விளையாடும்-கொல் மேவி நின்றே
** இறைவியைக் காண்டல்

#52
கான் ஏய் அளகம் கரும் புயலே இயல் கார் மயிலே
மானே விழி முகம் மா மதியே தஞ்சைவாணன் வெற்பில்
தேன் ஏய் தொடையல் அச் சேய்_அனையான் சொன்ன சே_இழையாள்
தானே இவள் இதுவே இடமாகிய தண் புனமே
** இகழ்ந்ததற்கு இரங்கல்

#53
கொலை கால் அயில் படை நேரியர்கோன் அகம் கோட அங்கைச்
சிலை கால் வளைத்துத் திருத்திய வாணன் தென்மாறை வெற்பில்
முலை கால்கொளக் கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண்
வலை கால் பிணிப்ப வந்தார் வருந்தாரல்லர் மால் உழந்தே
** தலைவனை வியத்தல்

#54
தலம் காவலன் தஞ்சைவாணன் முந்நீர் பொரும் தண் பொருந்தத்து
இலங்கு ஆர வல் வடக் கொங்கை வெற்பால் இணை நீல உண்கண்
பொலம் காமவல்லி கடைந்த அப்போது புடைபெயர்ந்து
கலங்காது இருந்தது எவ்வாறு எம்பிரான்-தன் கலைக் கடலே
** தலைவியை வியத்தல்

#55
வெம் கோல் மழை பொழி வானவர் போர் வென்ற மீனவர்-தம்
செங்கோல் முறைமை செலுத்திய வாணன் தென்மாறை வெற்பில்
நம் கோன் மெலிய நலிகின்ற காம வெம் நஞ்சினைப்
பைம் கோல் மணி வளையார் தணியாரல்லர் பார்வை கொண்டே
** தலைவன்றனக்குத் தலைவிநிலை கூறல்

#56
வளம் கனி மாறை வரோதயன் வாணன் மலய வெற்பா
உளம் கனி காதலுடன் நின்றதால் நின் உடலம் எல்லாம்
களங்கனி போலக் கருகி வெண் கோட்டுக் களிறு உண்டதோர்
விளங்கனி போல் வறிதா நிறை வாங்கிய மென்கொடியே
** தலைவன் சேறல்

#57
புறம் கூர் இருள் கங்குல் போன்று அகம் நண்பகல் போன்ற பொங்கர்
நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலைச் சுளித்து
மறம் கூர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாள்_நுதலாள்
அறம் கூர் மனத்து அருளால் நின்றதாம் எனது ஆருயிரே
** தலைவியைக் காண்டல்

#58
பாகையும் தேனையும் போல் மொழியார் தமிழ்ப் பைந்தொடையும்
வாகையும் சூடிய வாணன் தென்மாறை வளமும் அவன்
ஈகையும் போலும் எழிலியை நோக்கி இரங்கு புள்ளும்
தோகையும் போல் நின்றவா தனியே இந்தச் சோலையிலே
** கலவியின் மகிழ்தல்

#59
யார் உம்பர்-தம் பதம் என் போல எய்தினர் இம்பர் அம் பொன்
வாரும் துறை வையை சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பில்
தேரும்-தொறும் இனிதாம் தமிழ் போன்று இவள் செங்கனி வாய்
ஆரும்-தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே
** புகழ்தல்

#60
தழல் கண்டது அன்ன கலி வெம்மை ஆறத் தன் தண்ணளியாம்
நிழல் கண்ட சந்திரவாணன் தென்மாறை நிழல் பொலியும்
கழல் கண்டது அன்ன கதிர் முத்த மாளிகைக் காரிகை நின்
குழல் கண்ட பின் அல்லவோ அறல் நீருள் குளித்ததுவே
** பாங்கியொடு வருகெனப் பகர்தல்

#61
என் காதலின் ஒன்று இயம்புகின்றேன் இங்கு இனி வருங்கால்
நின் காதலியொடு நீ வரல் வேண்டும் நிலமடந்தை-
தன் காதலன் தஞ்சைவாணன் தென்மாறைத் தண் தாமரை வாழ்
பொன் காதல் கொண்டு தொழும் சிலம்பு ஆர் அடிப் பூங்கொடியே
** பாங்கிற்கூட்டல்

#62
என்னூடு நின்ற இளம்_கொடியே சங்கம் ஏய்ந்து குழாம்-
தன்னூடு செல்லும் சலஞ்சலம் போல் தஞ்சைவாணன் வெற்பில்
பொன்னூடு செல்லும் புகழ் மணி போல் நின் புடை அகலா
மின் ஊடு நுண் இடையாருடன் நீ சென்று மேவுகவே

@9 பாங்கி மதியுடன்பாடு
** தோற்றத்தால் ஆராய்தல்

#63
வண்டலை ஆயத்துடன் அயர்ந்தோ அன்றி வண்டு இமிர் பூம்
தண்டலை ஆரத் தழைகள் கொய்தோ தஞ்சைவாணன் வெற்பில்
புண் தலை வேலினும் கண் சிவப்பு ஆரப் பொலம் சுனைத் தேன்
கொண்டலை நீர் குடைந்தோ இவள் மேனி குழைந்ததுவே
** ஒழுக்கத்தால் ஐயந் தீர்தல்

#64
திளைக்கும் திரை மேல் உனக்கு முன் தோன்றலில் செம்பொன் வெற்பை
வளைக்கும் பிரான் முடி வைகுதலால் தஞ்சைவாணன் மண் மேல்
விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார்
தளைக்கும் குழல் திருவே தொழவே தகும் தன்மையதே
** பாங்கி மெய்யினாற் பல்வேறு கவர்பொருள்
** சொல்லி நாடலின் சுனை நயப்பு உரைத்தல்

#65
பூட்டிய வார் சிலை வீரரை வென்று எப்பொருப்பினும் சீர்
தீட்டிய வாணன் தென்மாறை_அன்னீர் இதழ்ச் செம்மையும் மை
ஊட்டிய வாளின் கருமையும் தான் கொண்டு உமக்கு இங்ஙனே
சூட்டியவாறு நன்றால் முல்லை மாலை சுனைப் புனலே
** சுனை வியந்து உரைத்தல்

#66
மறலாய் எதிர்ந்த மற மன்னர் வேழ மலை எறி வேல்
திறல் ஆர் முருகன் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வையை
அறல் ஆர் குழலாய் நுதல் குறுவேர்வும் அழகும் நின் போல்
பெறலாம் எனில் குடைவேன் அடியேனும் பெரும் சுனையே
** பொய்யினாற் பல்வேறு கவர்பொருள் சொல்லி
** நாடலின் தகையணங்குறுத்தல்

#67
குவளை சிவத்துக் குமுதம் வெளுத்த குறை அல்லவேல்
அவளை மறைத்து உன்னைக் காட்டலும் மா மலர்த் தேன் குதிக்கத்
தவளை குதிக்கும் தடம் பொய்கை சூழ் தஞ்சைவாணன் வெற்பில்
இவளை வரக் கண்டு நீ அணங்கே பின் எழுந்தருளே
** நடுங்கநாட்டம்

#68
பால் போல் மொழி வஞ்சி அஞ்சி நின்றேன் இந்தப் பார் முழுதும்
மால் போல் புரந்தவன் மாறை வரோதயன் வாணன் வென்றி
வேல் போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய
கோல் போல் கொடியனவாம் கொலை யானையின் கோடு கண்டே
** இத்துணையும் மூன்றாநாட் செய்தியென வுணர்க
** குறையுறவுணர்தல்
** பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுத்தல்

#69
பொரு மணி வெண் திரைப் பைம் கடல் வங்கம் பொருந்தி முன்பு
தரும் மணி பின் பெற்று அணிபவர் போல் சென்று சார்ந்து இரந்து
பரு மணி நன் கலப் பாங்கியை நீங்கி அப் பாவையை நாம்
மரு மணி வண்டு உறை தார் வாணன் மாறை மருவுதுமே
** ஊர்வினாதல்

#70
புதியேன் மிக இப் புனத்திற்கு யான் தனிப் போந்தனன் நும்
பதி ஏது செல்லும்படி சொல்லுவீர் படி மேல் படிந்த
மதி ஏய் சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வையை
நதி ஏய் சுழி நிகரும் பழி தீர் உந்தி நல்லவரே
** பெயர் வினாதல்

#71
கரைத் தாவி உந்திய காவிரி வைகிய காலத்தினும்
தரைத் தாரு அன்ன செம் தண்ணளி வாணன் தமிழ்த் தஞ்சை சூழ்
வரைத் தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர்
உரைத்தால் இழிவது உண்டேல் பெயரேனும் உரை-மின்களே
** கெடுதி வினாதல்

#72
தண் பட்டம் மேவும் வயல் தஞ்சைவாணன் தமிழ்ச் சிலம்பில்
பண் பட்ட தே மொழிப் பாவை_அன்னீர் பனை பட்ட கையும்
மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடிக் கணை தோய்
புண்பட்ட மேனியுமாய் வந்ததோ ஒரு போர்க் களிறே
** ஒழிந்தது வினாதல்

#73
வனம் ஆர் குடிஞைப் பகைக் குரலாம் என வாணன் தஞ்சைப்
புனம் ஆர் குளிரிப் புடைப்பு ஒலியால் கிள்ளை போயின மீண்டு
இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ
கனமா நறும் குழலீர் மொழியாது ஒழி காரணமே
** யாரே இவர் மனத்து எண்ணம் யாது எனத் தேர்தல்

#74
தரை ஆர வண் புகழ் தேக்கிய வாணன் தமிழ்த் தஞ்சை சூழ்
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளிக் கார்
புரை யானை அம்பொடு போந்தது உண்டோ என்பர் பூங்கொடியீர்
உரையாதது என் என்பரால் என்-கொலோ இவர் உள் கொண்டதே
** எண்ணந் தெளிதல்

#75
யாரே இவர் என்று அறிகின்றிலேம் எதிர்ந்தாரை வென்று
வார் ஏய் கழல் புனை வாணன் தென்மாறை வரை உறைவீர்
ஊர் ஏது என முன் வினாவிப் பின் வேறொன்று உரைப்பது எல்லாம்
நேரே இவள் பொருட்டால் என்று தோன்றும் என் நெஞ்சினுக்கே
** இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல்
** தலைவன் கையுறை ஏந்தி வருதல்

#76
தண் தாமரை மலர்ப் பொன்னையும் பார்_மங்கை-தன்னையும் போல்
வண்டு ஆர் குழல் மடவார் மணந்தார் சென்று வாணன் தஞ்சை
நுண் தாது அணி பொங்கர் நீழலின் கீழ் நுடங்கு இடையார்க்
கண்டு ஆதரவை எல்லாம் சொல்லவே நல்ல காலம் இதே
** தலைவன் அவ்வகை வினாதல்

#77
வல் ஆர் இளம் கொங்கை வஞ்சி_அன்னீர் தஞ்சைவாணனைக் கண்டு
ஒல்லார் களத்தின் உடைந்தது போல ஒரு கலை போர்
வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்துப்
புல் ஆர்வதும் இன்றியே வந்ததோ நும் புனத்து அயலே
** எதிர்மொழி கொடுத்தல்

#78
வாக்கும் திறனும் மதனை ஒப்பீர் தஞ்சைவாணன் மஞ்சு
தேக்கும் குடுமிச் சிறுமலைக்கே திரி கோட்டு இரலை
கோக் குஞ்சரமும் குருதியும் சோரக் கொடிச்சியரேம்
காக்கும் புனம் மருங்கே தனியே வரக் கண்டிலமே
** இறைவனை நகுதல்

#79
மை வாள் இலங்கு கண் மங்கை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில்
இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின்
செவ் வாளியும் கொண்டு சேண் சென்றதால் அன்று சீதை கொண்கன்
கை வாளியும் கொண்டு போன பொய் மானினும் கள்ளத்ததே
** பாங்கிமதியின் அவரவர் மனக்கருத்து உணர்தல்

#80
புனம் காவல் அன்று இவள் பூண்டதும் ஆண்டகை போந்ததும் மான்
இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை
தனம் காவலன் தஞ்சைவாணன் நல் நாட்டு இவர் தங்களில் தாம்
மனம் காவல் கொண்டது எல்லாம் கண்களே சொல்லும் வாய் திறந்தே

@10 பாங்கியிற் கூட்டம்
** தலைவன் உட்கோள் சாற்றல்

#81
வாவும் கலை விந்தை காவலன் வாணன் தென்மாறை_அன்னீர்
ஏவும் தொழில் எனக்கு ஏது இயலாதது இங்கே நுமக்கு ஓர்
மேவும் செய்குன்றமும் சோலையுமாகப் பொன் வெற்பும் விண்ணோர்
காவும் தரவும் வல்லேன் எனை ஆளும் கடைக்கண் வைத்தே
** பாங்கி குலமுறை கிளத்தல்

#82
நீ வேறு உரைக்கின்றது என் குற மாது எங்கள் நேர் இழை ஓர்
மா வேழ வன் படை வாணன் தென்மாறை மணியை அன்றித்
தா ஏதும் இல்லாத் தமனியம் மீது தலம் புரக்கும்
கோவே அழுத்துவரோ வறியோரும் குருவிந்தமே
** தலைவன் தலைவி தன்னை உயர்த்தல்

#83
மிக்கு ஆர் உளர் அல்லர் மெல் இயல் மாதரின் மேதினி மேல்
தக்கார் புகழ் தஞ்சைவாணர் பிரான் தமிழ்நாடு_அனையாய்
மைக் கார் நிகர் குழல் வள்ளி செவ்வேளுக்கு வல்லவையாம்
இக் காரணம் உணராது என்-கொலோ நின்று இயம்புவதே
** பாங்கி அறியாள் போன்று வினாதல்

#84
பொன் இயல் ஊசலும் பொய்தலும் ஆடி எப்போதும் நல் நீர்
மன்னிய நீலமும் நித்திலமும் குற்று வாணன் தஞ்சை
இன் இயல் ஆரும் இளமரக் காவினிடம் பிரியாக்
கன்னியர் தாம் பலர் யார் நின்னை வாட்டிய காரிகையே
**இறையோன் இறைவி தன்மை இயம்பல்

#85
தாள் இணை மாந்தளிர் அல்குல் பொன் தேர் இடை சங்கை கொங்கை
கோள் இணை கோலக் குரும்பை கை காந்தள் கொடிக் கரும்பு ஆர்
தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண்
வாள் இணை வார் குழலாய் வாணன் மாறை எம் மன்னுயிர்க்கே
** பாங்கி தலைவி அருமை சாற்றல்

#86
புகழ் ஆர் வரை எம் புரவலன் காதல் புதல்வியை நீர்
இகழா எளியள் என்று எண்ணப்பெறீர் எமக்கு என்றும் வண்மை
திகழ் ஆபரணன் செழும் தஞ்சைவாணன் சிலம்பின் உள்ளீர்
அகழ் ஆர்கலி உலகில் புலனான அணங்கு அவளே
** தலைவன் இன்றியமையாமை இயம்பல்

#87
வனைந்தால் அன கொங்கை மாது உருவாய்த் தஞ்சைவாணன் வெற்பில்
புனைந்தால் அனைய புனத்து அயல்-வாய் வண்டு போதகத் தேன்
நனைந்தால் அனைய என் நல்வினை தான் வந்து நண்ணிற்று என்று
நினைந்தால் அணங்கு_அனையாய் தமியேன் உயிர் நிற்கின்றதே
** பாங்கி நின்குறை நீயே சென்று உரை என்றல்

#88
மருப் பாவிய தொங்கல் வாணன் தென்மாறை வனச மலர்த்
திருப்பாவை அன்ன என் சே_இழையாட்கு உன் திருவுளத்து
விருப்பு ஆகிய குறை உள்ளது எல்லாம் சொல்லி வேண்டுக நீ
பொருப்பா மொழியப்பெறார் எம்மனோர் இவை போல்வனவே
** பாங்கியைத் தலைவன் பழித்தல்

#89
வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல
வல்லார் இலை சொல்ல வல்லை என்று யான் தஞ்சைவாணன் தெவ்வின்
ஒல்லாது இது நுமக்கு என்று உணரேன் இன்று உணங்கி இ நாள்
எல்லாம் இரந்தது நின் குறையே அல்ல என் குறையே
** குறையுற வுணர்தல் முதல் நாலாநாட் செய்தி
** பாங்கி பேதைமை யூட்டல்

#90
தேனும் சுரும்பும் செறி தொங்கல் வாணன் தென்மாறை வெற்பா
மானும் கலையும் வடிக் கணையால் எய்து மன்னுயிரும்
ஊனும் கவர்கின்ற தன்னையர் போல் அயில் ஒத்த கண்ணாள்
தானும் பிறர் உள்ள நோய் அறியாத தகைமையளே
** காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்

#91
வரு நீர் வன முலை மங்கை நல்லாய் செம் கை வாணன் வையை
தரும் நீர் மலி வயல் தஞ்சை_அன்னாள் அன்று தஞ்சம் இலேன்
அரு நீர் நவையுறக் கண் மலர் நீர் தெளித்து ஆற்றினளால்
இரு நீர் நிலம் கொள்ளுமோ அறியாள் என்னும் இவ் உரையே
** பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல்

#92
செறி வளர் காவி வயல் தஞ்சைவாணன் சிறுமலை மேல்
நெறி வளர் வார் குழல் நேர்_இழையாள் அன்ன நீர்மையளேல்
குறி வளர் காவில் முன் கூடியவாறு இன்னும் கூடுக நீ
கறி வளர் சாரல் வெற்பா பிறரால் என்ன காரியமே
** தன்னிலை தலைவன் சாற்றல்

#93
உரைத்து என் பிற அந்தப் பைம்_தொடி ஆகம் உறாவிடில் வெண்
திரைத் தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும் செழும் பனி நீர்
அரைத்து என்பு உருக மெய் அப்பினும் வெப்பம் அறாது இனி நின்
வரைத்து என் கருமம் எல்லாம் தஞ்சைவாணன் வரை அணங்கே
** பாங்கி உலகியல் உரைத்தல்

#94
விரை அக நாள்_மலர் மெல் இயல் மாதை விரும்பினையேல்
வரையக நாட வரைந்துகொள் நீ தஞ்சைவாணன் முந்நீர்த்
தரையகம் நான்மறைக் கேள்வியர் வேள்வியர் சான்றவர்-தம்
உரையகம் நாடி முன்னிட்டனது ஆகும் உலகியலே
** தலைமகன் மறுத்தல்

#95
வெண் தாமரை மங்கை காதலன் ஆகிய வேதியன்-பால்
உண்டாகிய தொல் உலகியலால் உங்கள் ஆரணங்கை
வண்டு ஆர் குழலி வரைந்துகொள்வேன் தஞ்சைவாணன் வண்மை
கண்டால் அருள் உள்ள நீ எனது ஆருயிர் காத்த பின்னே
** பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்

#96
மல் ஆர் புயன் தஞ்சைவாணன் வெற்பா எமர் வந்து இனி இக்
கல் ஆர் வியன் புனம் காவல் விடார் அவர் காணின் மிகப்
பொல்லாது இருண்டது போதும் மற்று யாங்களும் போதும் இங்கு
நில்லாது எழுந்தருள் நீயும் இப்போது நெடுந்தகையே
** தலைவன் கையுறை புகழ்தல்

#97
சிமை ஆர் மலயத் தமிழ்த் தஞ்சைவாணன் சிறுமலை மேல்
அமை ஆகிய தடம் தோள் அன்னமே அணியத் தகுமால்
உமையாள் இறைவன் பயில் கயிலாயத்தும் உம்பர் தங்கும்
இமையாசலத்தும் எல்லாம் இல்லையால் நிகர் இத் தழைக்கே
** பாங்கி கையுறை மறுத்தல்

#98
மல்குற்ற தண் புனல் சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பா
நல்குற்றவை இந்த நாட்டு உள அன்மையின் நல்_நுதலாள்
அல்குல் தடத்து எமர் கண்டால் அயிர்ப்பர் அதுவும் அன்றிப்
பல் குற்றமும் வருமால் யாங்கள் வாங்கேம் பசும் தழையே
** ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல்

#99
உழையும் வெம் காளமும் போலும் கண்ணாள் ஒருகாலம் உள்ளம்
குழையும் எம்-பால் என்று கொண்ட நெஞ்சே கலிக் கோடை மண் மேல்
மழையும் மந்தாரமும் வந்தன வாணன் தென்மாறையின் மாந்
தழையும் நம் போல் இங்ஙனே கவின் வாடத் தவம்செய்ததே
** பாங்கி ஆற்றுவித்து அகற்றல்

#100
சோலையில் வாழ் இளம் தோகை_அன்னாளைத் தொழுது இரந்து இ
மாலையில் வாழி வரம்கொள்வல் யான் தஞ்சைவாணன் வெற்பா
வேலையில் வார் துகிர் அன்ன வெய்யோன் வெயில் வெற்பின் மல்கும்
காலையில் வா பின்னை என் கையதாகும் நின் கையுறையே
** இத்துணையும் ஐந்தாநாட் செய்தி
** இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன்
** மடலே பொருளென மதித்தல்

#101
திருந்தார் தொழும் கழல் சேய் அன்ன வாணன் தென்மாறை வெற்பில்
அருந்தா அமுது அன்ன அம் சொல் நல்லார் அழகு ஆர் குழை தோய்
பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காமப் பிணி-தனக்கு
மருந்து ஆவது நெஞ்சமே இல்லை வேறு மடல் அன்றியே
** பாங்கிக்கு உலகியன்மேல் வைத்து உரைத்தல்

#102
விரை ஊர் குழலியர் தந்த சிந்தாகுல வெள்ளம் நிறைக்
கரை ஊர் பொழுது இளங்காளையர் தாம் கிழி கைப் பிடித்துத்
தரை ஊர்-தொறும் பெண்ணை மா மடல் ஊர்வர் தவிர்ந்து இன்னும்
வரை ஊர்வர் தஞ்சையர்கோன் வாணன் மாறையில் வாள்_நுதலே
** அம் மடலேற்றினைத் தலைவன் தன்மேல்வைத்துச் சாற்றல்

#103
வன் பணி போல் நிலம் தாங்கிய வாணன் தென்மாறை வெற்பில்
மின் பணி பூண் முலை மெல்_இயலீர் குறை வேண்டி உங்கள்
முன் பணிவேன் இன்று நாளை வெண்பூளை முகிழ் எருக்கோடு
என்பு அணிவேன் மடல் மேல் வருவேன் இவை என் பணியே
** பாங்கி தலைமகள் அவயவத்து அருமை சாற்றல்

#104
தொடையே எருக்கு என்பு நீ அணிந்தால் என்னை சூல் வளை ஊர்
மடை ஏய் வயல் தஞ்சைவாணன் வெற்பா மலரோன் வகுத்த
படையே நயனம் படைத்த பொன் பாவை படியெடுக்க
இடை ஏது எனத் தெரியாது உரை ஆணியிட அரிதே
** தலைவன் தன்னைத்தானே புகழ்தல்

#105
நறை அலர் ஆ விரைப் போது இசையா திசை நால் முகத்தும்
மறை அலரா வந்த மால் மகன் யான் தஞ்சைவாணன் வையைத்
துறை அலர் ஆவி அம் காவி அம் கண்ணி துணிந்து சொல்லும்
குறை அலர் ஆர் குழலாட்கு இனித் தீரக் குறை இல்லையே
** பாங்கி அருளியல் கிளத்தல்

#106
செயல் ஆர் குடம்பையில் செம் தலை அன்றில் சினை உள பைம்
கயல் ஆர்வன வெண்குருகின் வண் பார்ப்பு உள கைக்கு அடங்கா
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறை வையைத் துறைவா
இயலாது அருளுடையார்க்கு என்றும் மா மடல் ஏறுவதே
** கொண்டு நிலைகூறல்

#107
வெண் தோடு அணி முகப் பைம் குரும்பைக் கொங்கை வெய்ய உண்கண்
கண்டோர் விரும்பும் கரும் பனையாரைக் கடல் துறைவா
கொண்டு ஓர் குறை முடி கொம்பு_அனையார் நின் குறை மறுத்தால்
வண்டு ஓலிடும் தொங்கலான் வாணன் மாறை வள நகர்க்கே
** தலைவி இளைமைத்தன்மை பாங்கி தலைவர்க்கு உணர்த்தல்

#108
களவு அரும்பா கருநீலங்கள் காமக் கடவுளும் மால்
கொள அரும்பா பைம் குரும்பைக் குலம் செம் குமுதத்து வெண்
தளவு அரும்பா நண்பனே தஞ்சைவாணன் தமிழ் வையைநாட்டு
இள அரும்பாம் இவள்-மாட்டு என்-கொலோ நின்று இரப்பதுவே
** தலைவன் தலைவி வருத்தியவண்ணம் உரைத்தல்

#109
சிலை பயில் வாள் நுதல் மின்னே பிறந்த அச் செவ்வியிலே
கொலை பயில் நாகக் குருளையைப் போல் குறியோன் இருந்த
மலை பயில் வார் தமிழ்வாணன் தென்மாறை மயில்_அனையாள்
அலை பயில் ஆல் விழியால் எனது ஆவி அணங்கினளே
** பாங்கி தலைமகள் செவ்வி அருமை செப்பல்

#110
ஏடு ஆர் அலங்கல் இலங்கு இலை வேல் வெற்ப ஏழ் உலகும்
வாடாமல் வந்து அருள் வாணன் தென்மாறையில் வல்லி_அன்னாள்
சூடாள் குவளையும் முல்லை அம் சூட்டும் சுனையும் பந்தும்
ஆடாள்-தனக்கு என்-கொலோ அடியேன் சென்று அறிவிப்பதே
** தலைவன் செவ்வி எளிமை செப்பல்

#111
தேன் வந்த வாய் இதழ்ச் சே_இழையாய் இளம் செவ்வி நவ்வி
மான் வந்த வாள் விழி வஞ்சிக்கு நீ தஞ்சைவாணன் வெற்பில்
யான் வந்தவா சென்று இயம்புதியேல் அவர் யாவர் என்னாள்
தான் வந்து அவாவுடனே நின்னை ஆரத் தழீஇக்கொளுமே
** என்னை மறைத்தபின் எளிதென நகுதல்

#112
மண்ணும் பயில் வித்தும் ஒன்றினும் சந்திரவாணன் வெற்பா
நண்ணும் புனல் இன்றி அங்குரியாது உங்கள் நல்வினையால்
கண்ணும் கருத்தும் கலந்தனவாயினும் கண்ணினும் முன்
எண்ணும் குறை என்னை நீர் மறைத்தால் இங்கு இயல்வது அன்றே
** அந் நகைபொறாது அவன் புலம்பல்

#113
வெவ் வேல் எறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியது ஓர்
செவ் வேல் நுழைப்பவர் சீலம் அன்றோ திருவே மருவார்
வை வேல் அமர் வென்ற வாணன் தென்மாறை மயில் பொருட்டால்
நைவேனை அஞ்சல் என்னாது இன்னவாறு நகைக்கின்றதே
** பாங்கி தலைவனைத் தேற்றல்

#114
தன் கண் அனைய தன் பாங்கியருள்ளும் தனக்கு உயிராம்
என்-கண் அருள் பெரிது எம் பெருமாட்டிக்கு இகல் மலைந்தார்
வன்கண் அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்து அவளால்
புன்கண் அடையலை நீ இனி வாடல் புரவலனே
** பாங்கி கையுறை ஏற்றல்

#115
ஒலி தெண் கடல் புடை சூழ் உலகு ஏழினும் ஊழ்வினைதான்
வலிது என்பதனை வயக்கியதால் தஞ்சைவாணன் வெற்பா
கலி தெங்கு மாவும் கமுகும் பலாவும் கதலிகளும்
பொலி தென் பொதியிலின் மேல் சந்தனாடவிப் பூம்_தழையே
** கிழவோன் ஆற்றல்

#116
மைப் போது அணி தொங்கல் வாணன் ஒன்னார் என வல்வினையேற்கு
அப்போது அடைந்த அரும் துயர் நீங்கி அரும்பிய பொன்
செப்பு ஓது இளமுலையாள் நகை வாள் முகத் திங்களைக் கண்டு
இப்போது இளகியதால் இந்துகாந்தம்-கொல் என் நெஞ்சமே
** இறைவன் றனக்குக் குறைநேர் பாங்கி இறைவிக்கு
** அவன் குறையுணர்த்தல்

#117
இருவர் கண்டால் வரும் ஏதம் என்று எண்ணி எனக்கு எதிரே
வருவர் வந்தாலும் தம் வாய் திறவார் தஞ்சைவாணன் வெற்பின்
ஒருவர் நம் சாரல் உழை அகலார் தழை உள்ளது எல்லாம்
தருவர் வம்பு ஆர் முலையாய் என்-கொலோ செயத்தக்கதுவே
** இறைவி அறியாள்போன்று குறியாள் கூறல்

#118
கலை தொடக் கீண்ட கருவி அம் தேன் பல கால் கொடு மா
மலை தொடுத்து ஊர்ந்து வருகின்றதால் தஞ்சைவாணன் வென்றிச்
சிலை தொடுத்தாங்கு எழில் சேர் நுதலாய் பயில் செம்பழுக்காய்க்
குலை தொடுத்து ஓங்கு பைம் கேழ்ப் பூக நாகக் குழாம் கவர்ந்தே
** பாங்கி இறையோன் கண்டமை பகர்தல்

#119
திவாகரனே அன்ன பேரொளி வாணன் தென்மாறை நல் நாட்டு
உவாமதி போலும் ஒளிர் முகத்தாய் என் ஒளிப்பது உன் மேல்
அவாவினன் ஆகி ஒர் மானை வினாவி வந்தானை இன்று இக்
கவான் உயர் சோலையின்-வாய் வண்டல் ஆர் உழைக் கண்டனமே
** பாங்கியைத் தலைவி மறைத்தல்

#120
செவ் வண்ண வேல்_விழியாய் தஞ்சைவாணன் தென்மாறை நல் நாட்டு
இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பது அன்றால் நின் இடை எனத் தாம்
மெய் வண்ணம் வாடி வெறிதே வருந்தி விருந்தினராய்க்
கை வண்ண வார் தழை கொண்டு சென்றார் தமைக் கண்டுகண்டே
** பாங்கி என்னை மறைப்பது என்னெனத் தழால்

#121
பரக்கின்ற செவ் இதழ்ப் பங்கயப் பாதம் பணிந்து நின்னை
இரக்கின்றது ஒன்றையும் எண்ணலையால் எழு பார் முழுதும்
புரக்கின்ற கோன் தஞ்சைவாணன் பொதியிலில் பொய்த்து என்னை நீ
கரக்கின்றது என்னை-கொல் என் உயிர் ஆகிய காரிகையே
** பாங்கி கையுறை புகழ்தல்

#122
சூடத் தகுவன அல்லது எல்லாம் படி சொல்லினும் தாம்
வாடத் தருவன அல்ல நல்லாய் தஞ்சைவாணன் வெற்பர்
தேடத் தகுவன வல்லது அல்லாத சிலம்பின் உள்ளார்
நாடத் தகுவன அல்ல கல் ஆர நறும் தழையே
** தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்

#123
வனையும் குழல் வஞ்சி வாணன் தென்மாறை வரைக் களிறு
தினையும் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்த இன் நீர்
சுனை உண்டு அசோக நிழல் சோகம் நீங்கித் துயில்வது கண்டு
எனையும் கடைக்கணியா இனையாநிற்பர் ஏதிலரே
** மறுத்தற்கு அருமை மாட்டல்

#124
கையும் தழையும் முன் காண்-தொறும் காண்-தொறும் கட்டுரைத்த
பொய்யும் தொலைந்தன பூம் தழை போல் அரி போர்த்து நஞ்சும்
மையும் கலந்து உண்ட வாள்_விழியாய் தஞ்சைவாணன் வெற்பர்
மெய்யும் துவண்டது என்னால் முடியாது வெளி நிற்கவே
** தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறுதல்

#125
விடை ஆன் மிசை வரும் மேரு_வில்லானொடும் மேழி வென்றிப்
படையானொடும் வெம் பகை கொள்வதோ பகல் போலும் மெய்ம்மை
உடையான் உயர் தஞ்சைவாணன் ஒன்னார் என ஒல்கிய நுண்
இடையாய் பிறிது-கொலோ அறியேன் வெற்பர் எண்ணுவதே
** தோழி தலைவியை முனிதல்

#126
தூற்றாது அலரை மறைப்பவர்க்கே குறை சொல்லு குற்றம்
ஏற்றாது ஒழி எனை எம்பெருமாட்டி சென்று ஏற்றவர்க்கு
மாற்றாது அருள் செங்கை வாணன் தென்மாறையில் வந்து நெஞ்சம்
போற்றாது நின்று அயலேன் சொன்ன தீங்கு பொறுத்தருளே
** தலைவி பாங்கியை முனிதல்

#127
மற்று ஏது அவர் நினைவார் தஞ்சைவாணன் வரையின் மு நாள்
பொன் தேரின் வந்து புணர்ந்து சென்றார்-தம் பொருட்டு நம்மைக்
குற்றேவல் மங்கை குறையிரந்தாள் எனும் குற்றம் இ நாள்
எற்றே தவறு நம்-பால் இல்லையாகவும் எய்தியதே
** தலைவி கையுறை ஏற்றல்

#128
ஆற்றும் தலைவர் அரும் துயர் ஆற்றினும் ஆற்றிலன் நாண்
மாற்றும் புனையின் மயில்_அனையாய் தஞ்சைவாணன் தெவ்வின்
போற்றும் கொடுவினையேன் புனையாவிடில் போந்து அலரே
தூற்றும் தழை என்று இது ஒன்று எங்ஙனே வந்து தோன்றியதே
** இறைவி கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல்

#129
போய் யான் அளித்தலும் கைகுவித்து ஏற்ற பின் போற்றி அன்பால்
சாயாத கொங்கையின் மேல் அணைத்தாள் தஞ்சைவாணன் வெற்பா
காயாமலர் அன்ன மேனி மெய் ஆக நின் கையுறையே
நீயாக அல்லது மாந்தழையாக நினைந்திலளே
** பாங்கி தலைமகற்குக் குறியிடங் கூறல்

#130
அணி மா மலர் மயிலைப் புயத் தூணம் கொள் ஆகம் எனும்
மணி மாளிகை வைத்த வாணன் மண் காவலன் மாறை வெற்பா
துணி மா மரகதப் பாசறை வேலைச் சுடரவன் போல்
பணி மா மணி திகழும் பகல் யாங்கள் பயிலிடமே
** பாங்கி குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறல்

#131
நாம் ஆவி மூழ்கி நறு மலர் குற்று நந்தாவனத்துத்
தேமா இளந்தளிர் செவ் வண்ணம் கொய்து சிலம்பு எதிர்கூய்
வாமான் நெடும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில்
பூ மாதவிப் பந்தர்-வாய் விளையாடுகம் போதுகவே
** பாங்கி தலைமகளைக் குறியிடத்து உய்த்து நீங்கல்

#132
கண் சாயல் கை உருக் கொண்டு தன் வேல் மயில் காந்தள் வள்ளி
எண் சாய வென்றனை என்று செவ்வேள் இவரும் பவளம்
வண் சாய் ஒசிக்கும் வயல் தஞ்சைவாணன் மலய மராத்
தண் சாயை நின்று அணங்கும் தையல் நீ நிற்க சாரலிலே
** இறைவி இறையோனிடத்து எதிர்ப்படுதல்

#133
முயங்கிய நூபுரப் பங்கயத் தாளும் முலை சுமந்து
தயங்கிய நூல் இடைதானும் என் போலத் தளர்வுறும் இங்கு
இயங்கியவாறு என் மனத்து இருள் நீக்க என்றே துணிந்தோ
வயங்கிய சீர் உடையான் வாணன் மாறை மணிவிளக்கே
** புணர்ச்சியின் மகிழ்தல்

#134
தரும் தாரு அஞ்சும் கொடையுடையான் தஞ்சைவாணன் இன் சொல்
செருந்து ஆர் பசும் தமிழ்த் தென்வரை மேல் செம்பொன் மேரு வெற்பால்
கரும் தாரை நஞ்சு உமிழ் வாசுகியால் வெண்கடல் கடைந்து
வருந்தா அமுது அளித்தாள் வல்லளாம் இ மட_கொடியே
** புகழ்தல்

#135
மயனார் விதித்து அன்ன மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில்
பயன் ஆர் பயோதரப் பாவை_அன்னீர் பசும்பொன் குழை தோய்
நயனாரவிந்தத்து நஞ்சு நும் வாய் இதழ் நல் அமுதம்
அயனார் படைத்திலரேல் அடங்காது அவ் அரனுக்குமே
** தலைமகளைத் தலைமகன் விடுத்தல்

#136
நேயம் புகலிடம் இன்றி நின்-பால் வந்து நின்றது போல்
ஆயம் புகல அடைந்தருள் நீ அடையாத மன்னர்-
வாய் அம்பு உக வில் வணக்கிய வாணன் தென்மாறை நல் நீர்த்
தோய் அம் புகர் இணை வேல் விழியாய் நின் துணையுடனே
** பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல்

#137
பொய் போல் இடை நின் விழி போல் குவளை அம் போது இவை நின்
மெய் போல் அசோகம் மிளிர் பூம் தழை இவை மெல் இயல் நின்
கை போல் கவின்கொள் செங்காந்தள் அம் போது இவை கண்டருள் யான்
மை போல் குழலி தந்தேன் தஞ்சைவாணன் வரையின்-நின்றே
** தலைவியைப் பாங்கிற் கூட்டல்

#138
குனி நாள் மதி நுதல் கோகிலமே நின் குழலில் எல்லாப்
பனி நாள்_மலரும் பறித்து அணிந்தேன் இந்தப் பார்_மடந்தை
தனி நாயகன் தஞ்சைவாணன் தண் சாரல் தனித்து நில்லாது
இனி நாம் அகன்று இளையார் விளையாடு இடம் எய்துதுமே
** பாங்கி தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றல்

#139
சில் நாள்_மலர்க் குழல் காரணமாச் செவ்வி பார்த்து உழன்று
பல் நாள் உரைத்த பணி மொழி நோக்கிப் பழி நமக்கு ஈது
என்னாது இடைப்பட்ட என் நிலை நீ மறவேல் இறைவா
தன் ஆகம் மெய்ப் புகழான் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே
** உலகியல் மேம்பட விருந்து விலக்கல்

#140
வலைப் பெய்த மான் தசை தேன் தோய்த்து அருந்தி மரை முலைப் பால்
உலைப் பெய்த வார் தினை மூரலும் உண்டு உளம் கூர் உவகை
தலைப்பெய்த நாள்_அனையான் தஞ்சைவாணன் சயிலத்து எம் ஊர்
இலைப் பெய்த தாழ் குரம்பைத் தங்கினால் உமக்கு என் வருமே
** விருந்து இறை விரும்பல்

#141
மஞ்சு ஊட்டி அன்ன சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில்
பஞ்சூட்டிய மென் பதயுகத்தீர் உங்கள் பாடியின் மான்
வெம் சூட்டு இழுது அன்ன ஊனும் பைம் தேனும் விருந்தினர்க்குச்
செம் சூட்டு இளகு பொன் போல் தினை மூரலும் தெள் அமுதே

@11 ஒருசார் பகற்குறி
** கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி
** மாலையம் பொழுது கண்டு இரங்கல்

#142
ஆழ்ந்தார்-தமக்து அருளாதவர் போல் இவ்வளவில் அன்பு
சூழ்ந்தார் செலத் தொங்கல் சூழ் குழலாய் சொல் பொருள் படைத்து
வாழ்ந்தார் புகழ் தஞ்சைவாணனைப் பேணலவர் மான வெய்யோன்
வீழ்ந்து ஆர்கலிக் கரந்தான் பனி மாலை வெளிப்படவே
** பாங்கி புலம்பல்

#143
காலை அம்போருக வாள் முகத்தாள் அன்பர் கையகல
மாலை அம் போது வருவித்த நீர் தஞ்சைவாணன் தெவ்வர்
ஆலையம் போல் உங்கள் ஆதவன் கோயில் அழல் கொளுந்த
வேலை அம்போடு உழல்வீர் பரிகாள் என்றும் வெய்துயிர்த்தே
** தலைவன் நீடத் தலைவி வருந்துதல்

#144
ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால்
வாராத முன்னம் வருகிலரால் தஞ்சைவாணன் வெற்பில்
கூர் ஆதரம் நல்கி வல்வினையேன் நலம் கொள்ளைகொண்டு
தேர் ஆதவனுடனே நென்னல் மாலையில் சென்றவரே
** தலைவியைப் பாங்கி கழறல்

#145
சிறந்தார் தெரிந்த செழும் தமிழ்வாணன் தென்மாறை வெற்பர்
துறந்தார் எனை என்று சோருவது ஏன் இந்தத் தொல் உலகில்
பிறந்தார் எவர்க்கும் பிரிவு எய்துமால் வெய்ய பேர் அமர்க் கண்
புறம் தாழ் கரிய குழல் செய்ய வாய் ஐய பூங்கொடியே
** தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல்

#146
பூ அலர் வாவியின் நீர் அற்ற போது உற்ற புன்மை அல்லால்
காவலர் காமம் துறக்கில் என்னாம் கடம் பாய் மதுகை
மா வல வாணன் வயல் தஞ்சை வேந்தனை வாழ்த்தல்செய்யா
மேவலர் போலும் கழற்று உரையாளர் வியன் அறிவே
** தலைவி பாங்கியொடு பகர்தல்

#147
முலை ஆர் முயக்கினும் அல்லா இடத்தினும் மூரி முந்நீர்
அலை ஆர் அமுதமும் நஞ்சமும் போல அணங்கு_அனையாய்
தொலையாத இன்பமும் துன்பமும் காட்டுவர் தூங்கு அருவி
மலையாசலத் தமிழ் தேர் வாணன் மாறை நம் மன்னவரே
** தலைவியைப் பாங்கி அச்சுறுத்தல்

#148
பேணற்கு அரிய நின் பெண்மையும் நாணமும் பேணியவர்
காணத் தகும் என்று காண்பது அல்லால் கழி காதல் நெஞ்சு
பூணத் தருகினும் பொற்பல்லள் ஆகுதல் கற்பு அல்லவால்
யாணர்த் தமிழ் உடையான் வாணன் மாறையின் இன் அமுதே
** நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கல்

#149
குன்றாகிய பொன்னும் வேழக் குழாமும் கொடை புகழ்ந்து
சென்றார் முகக்கும் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பில்
நன்றாம் இறைவற்கும் நன்றியிலேற்கு முன் நான்முகத்தோன்
ஒன்றா விதித்திலனே உயிர் போல உடம்பையுமே
** தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல்

#150
நெஞ்சு உக ஆய் மலர் அன்ன கண் நீர் மல்க நின்ற அம் சொல்
கிஞ்சுக வாய் வஞ்சி கேட்டருள் நீயும் கிளைத் தமிழோர்
தம் சுக வாய் மொழி நெஞ்சு_உடையான் தஞ்சைவாணன் வெற்பில்
மஞ்சு உக ஆர்த்தனவால் அவர் தேரின் மணிக் குரலே
** தோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல்

#151
தொடைக்கு அணி ஆர் தடம் தோளவர் கேளலர் தோகை_அன்னார்
உடைக்கு அணியாம் தழை கொய்யார் உழவர் உடைத்த தெள் நீர்
மடைக்கு அணி ஆரம் இடும் தஞ்சைவாணன் வரையின் முன் போல்
கடைக்கணியார் கணியார் நம்மை நாளைக் கரும்_கணியே
** தோழி தலைமகற்கு முன்னிலைப் புறமொழி
** மொழிந்து அறிவுறுத்தல்

#152
பயில் காள பந்திப் புயல் அன்ன ஓதியைப் பைங்கிள்ளைகாள்
மயில்காள் சிறிதும் மறக்கப்பெறீர் தஞ்சைவாணன் வெற்பில்
குயில் காளம் எங்கும் இயம்பு தண் சோலையில் கூடி இன்பம்
அயில் காள வெம் கதிர் வேல் அன்பர் சால அயர்ப்பினுமே
** பாங்கி தலைமகன் முன்னின்று உணர்த்தல்

#153
கானல் அம் கான் மலர்க் கள் வாய்க் கரும் கணி கட்டுரையால்
கூனல் அம் சாய் பொன் குரலும் கொய்தார் எமர் கொற்றவ யாம்
ஏனல் அம் காவலும் இன்றே ஒழிந்தனம் ஏழ் புவிக்கும்
தான் அலங்காரம்_அன்னான் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே
** பாங்கி முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல்

#154
கனம் சாய நல்கிய கை_உடையான் எதிர் கன்றினர்-தம்
மனம் சாய வென்று அருள் வாணன் வரோதயன் மாறை வெற்பில்
சினம் சாலும் வேல் அண்ணலே மறவேல் எம்மைச் செவ்வி இரு
தனம் சாயினும் இனி நின்னை அல்லாது இல்லைத் தாழ்_குழற்கே
** கிழவோன் தஞ்சம்பெறாது நெஞ்சொடுகிளத்தல்

#155
ஏ அலர் ஏய் விழி மாந்தளிர் மேனியர் ஏனல் இனிக்
காவலரே மனம் காத்தனம் யாம் களி யானை செம்பொன்
நாவலரே பெற நல்கும் கை மேக நறும் குவளை
மா அலர் ஏய் தொடையான் தஞ்சைவாணன் வரையில் வந்தே

@12 பகற்குறி இடையீடு
** இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்

#156
புனமும் பசும் தினைச் செம் குரல் ஏந்தும் புகன்ற கிள்ளை
இனமும் குழீஇ வந்து இறைகொள்ளுமால் இறை ஆர் வளையும்
மனமும் கவர் வெற்ப வாணன் தென்மாறை மடப் பிடியும்
அனமும் தொழும் நடை பால் பலகால் வரும் அன்னையுமே
** இறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கல்

#157
நந்து சுற்றும் கடல் ஞாலம் எல்லாம் புகழ் நாமன் வளர்
சந்து சுற்றும் கொங்கை மங்கையர் வேள் சஞ்சரீகம் நறை
வந்து சுற்றும் தொங்கல் வாணன் தென்மாறை வரையின் மலர்க்
கொந்து சுற்றும் குழலாய் செல்லல் நீ அக் குளிர் பொழிற்கே
** இறைமகள் ஆடிடம் நோக்கி அழுங்கல்

#158
அருவித் தடமும் மணி முத்த யாறும் அவனி எங்கும்
திரு வித்திய தஞ்சைவாணன் சிலம்பும் இச் சிற்றிலும் பேர்
இருவிப் புனமும் இன்று என் நினைக்கின்றன என்னை இன்னே
மருவிப் பிரிபவர் போல் இல்லையே மண்ணில் வன்கண்ணரே
** பாங்கி ஆடிடம் விடுத்துக்கொண்டு அகறல்

#159
உன்னை அரா அல்குல் நல்லவரே என்று உசாவின் எங்கள்
மன் அயராமல் வகுத்து உரை நீ தஞ்சைவாணன் வெற்பில்
என் ஐயர் ஆணைகொண்டு ஏகுகின்றேன் இவை இத்தனையும்
பின் அயராது ஒழிவாய் இதணே இது பெற்றனமே
** இத்துணையும் ஆறாநாட் செய்தியென்றுணர்க
** பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கல்

#160
மான்காள் நிகர்_இல் மட மயில்காள் தஞ்சைவாணன் வெற்பில்
தேன்காள் திரை மென் சிறைக் கிள்ளைகாள் என் தெருமரல் நோய்
தான் காணிய-கொல் இச் சந்தனச் சோலையைத் தன்னை இன்று
யான் காணிய-கொல் எழுந்தருளாதது இன்று என் உயிரே
** தலைவன் வறும் களம் நாடி மறுகல்

#161
செம் கேழ் விழிக்கும் மொழிக்கும் பகை திருப்பாற்கடலும்
பங்கேருகமும் பயந்தனவாயினும் பைங்கிள்ளைகாள்
சங்கு ஏய் தடம் துறை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல்
எங்கே இனித் தங்குவார் ஏனல் காத்து இங்கு இருந்தவரே
** குறுந்தொடி வாழும் ஊர் நோக்கி மதிமயங்கல்

#162
பெற அரிதால் அவன் பின் சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு
மற அரிதான் அன்ன வாணன் தென்மாறை வரைப் புனம் சூழ்
நறவு அரி தாழ் முல்லை நாள்_மலர் ஓதி நகரும் எனக்கு
உற அரிதாம் என் செய்வேன் என்று சோரும் என் ஓர் உயிரே

@13 இரவுக்குறி
** இறையோன் இருட்குறி வேண்டல்

#163
கரு இருந்து எண் திசையும் கன மா மழை கான்றது உள்ளம்
வெரு இருந்து எம் பதிக்கு ஏக ஒண்ணாது விதம்விதமாய்
வரு விருந்து என்றும் புரந்து அருள் வாணன் தென்மாறை_அன்னீர்
ஒரு விருந்து எங்களைப் போல் எய்துமோ கங்குல் உங்களுக்கே
** பாங்கி நெறியினது அருமை கூறல்

#164
மலை_மாது வல்லவன் வாணன் வரோதயன் மாறை வெற்பில்
சிலை மால் உரும் எங்கும் தீ உமிழாநிற்கும் சிங்கம் எங்கும்
கொலை மா கரி இரை தேர்ந்து உழலாநிற்கும் கொற்றவ பொன்
கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே
** இறையோன் நெறியினது எளிமை கூறல்

#165
வடு வரி நீள்_கண்ணி அஞ்சலம் யாம் தஞ்சைவாணன் வெற்பில்
கொடுவரி கேழல் குழாம் பொரு கொல்லையும் குஞ்சரம் தேர்ந்து
அடு அரி தாவும் அடுக்கமும் சூர் வழங்கு ஆறும் ஐ வாய்க்
கடு வரி நாகம் தவர் மல்கு கல் அளைக் கானமுமே
** பாங்கி அவன் நாட்டு அணி இயல் வினாதல்

#166
பூந்தழை யாது மலை மலர் யாது புனை இழையும்
சாந்தமும் யாது தடம் பொழில் யாது தரணியின் மேல்
மாந்தரில் வேள் அன்ன வாணன் தென்மாறை வள நகர் சூழ்
தேம் தரு சோலை வெற்பா உங்கள் நாட்டு உறை செல்வியர்க்கே
** தலைவன் அவள் நாட்டு அணி இயல் வினாதல்

#167
எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல்
மை நாட்ட வெண் முத்த வாள் நகையாய் தஞ்சைவாணன் மண் மேல்
உம் நாட்டு அரிவையர் ஆடிடம் சாந்தம் ஒளி இழை பூ
மொய் நாள்_தழையொடு எல்லாம் ஒழியாமல் மொழி எனக்கே
** தன் நாட்டு அணி இயல் பாங்கி சாற்றல்

#168
வகை கொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின் முத்தம்
தகை கொண்ட சந்தனச் சாந்து அணிந்து ஆடுவர் தஞ்சையர்கோன்
மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட வாணன் வெற்பா எமது ஊர்
நகை கொண்ட வல்லி_அன்னார் எல்லி நாக நறு நிழலே
** இறைவிக்கு இறையோன் குறை அறிவுறுத்தல்

#169
புயலேறு எதிர்-தொறும் பொங்கு உளை மீதெழப் போதகம் தேர்ந்து
இயல் ஏறு அதிரும் இரும் கங்குல்-வாய் முத்தம் ஈன்று சங்கம்
வயல் ஏறு அணை வளரும் தஞ்சை வாணன் வரையில் உண்கண்
கயல் ஏறு அனைய நின்-பால் வரல் வேண்டினர் காதலரே
** நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தல்

#170
விடம் வார் கணை விழி மெல் இயல் மாதரை மேதினியோர்
மடவார் எனும் உரை வாய்மை நெஞ்சே தஞ்சைவாணன் தெவ்வின்
கட வாரணம் திரி கங்குல் நம் கண் அன்ன காதலர் முள்
பிடவு ஆர் சிறுநெறி-வாய் வரல் வேண்டினள் பெண் அணங்கே
** நேரிழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தல்

#171
வெம் குல வாரணம் ஏற்றவர்க்கே நல்கி வேற்றரசர்-
தம் குல வாழ்வு தவிர்த்து அருள் வாணன் தமிழ்ச் சிலம்பில்
கங்குல் அவாவினர் காதலர் ஆயின் களி பயந்த
கொங்கு உலவா அலர் சூழ் குழலாய் என்-கொல் கூறுவதே
** நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தல்

#172
பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்தும் நெஞ்சம்
கரவாத பொன்னை நின் காரணமாகக் கயிலை என்றே
வர ஆதவன் அஞ்சும் வெண் மாளிகைத் தஞ்சைவாணன் வெற்பா
இரவாத வண்ணம் எல்லாம் இரந்தேன் இவ் இரவிடையே
** குறியிடை நிறீஇத் தாய் துயில் அறிதல்

#173
மாகம் தரியலர்க்கு ஈந்து அருள் வாணன் தென்மாறை வெற்பில்
மேகம் தரும் மின் இடை அன்னமே விரை நாள்_மலர் வேய்
நாகம் தழுவும் குடம்பையின்-வாய் நடுநாள் இரவில்
சோகம் தவிர்விலவாய்த் துயிலாதது என் தோகைகளே
** இறைவிக்கு இறைவன் வரவு அறிவுறுத்தல்

#174
கந்தாரம் நாணும் கனிந்த சொல்லாய் நம் கடி மனைக்கே
வந்தார் அவாவின் பெருமையினால் தஞ்சைவாணன் வெற்பில்
கொந்து ஆர் அசோகம் தரும் செழும் போது கொழும் தழையும்
தந்து ஆர் அகலம் தழீஇ அகலாது தணந்தவரே
** தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசேறல்

#175
மின்னே அயிலொடு மின் விளக்கா வந்த வெற்பரை நாம்
பொன்னே எதிர்கொளப் போதுகம் வா புவி ஏழினுக்கும்
தன் நேயம் வைத்து அருள் சந்திரவாணன் தமிழ்ச் சிலம்பில்
நின் நேர் இயல் மயில் கண் துயில் நாக நிழலகத்தே
** குறி உய்த்து அகறல்

#176
மந்தாரம் அன்ன கை வாணன் தென்மாறை மயில்_அனையாய்
நந்தா வனப் பொய்கை நான் கொய்குவேன் குழல் நாணும் கங்குல்
கொந்து ஆர் தெரியல் நின் செங்கனி வாயொடும் கொங்கையொடும்
பைம் தாமரையையும் சேதாம்பலையும் பகைப்பித்ததே
** வண்டு உறை தாரோன் வந்து எதிர்ப்படுதல்

#177
முதிரா முலை இப் பனி அந்தகாரம் முனிய வல்ல
கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரித் தேர் இல்லைக் காவல் வெய்யோற்கு
எதிராதல் சோமற்கு இயல்வது அன்றே நும்மில் யார் திறந்தார்
மதுராபுரித் தமிழ் தேர் வாணன் மாறை வனத்து வந்தே
** பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கல்

#178
செழியன் கயலைத் திசை வைத்த வாணன் தென்மாறை என் மேல்
கழி அன்பு உடைய நின் கால் கண்களாகக் கராம் பயிலும்
குழி அன்றியும் வெம் சுழி ஒன்றும் யாறும் குழீஇக் கொடிதாம்
வழி அன்ப நீ எங்ஙனே வந்தவாறு இ மழை இருளே
** புரவலன் தேற்றல்

#179
வெயில் உந்து அரவிந்த மென் மலர் அன்னமும் விந்தை வெற்றி
மயிலும் பயில் புயல் வாணன் தென்மாறை நின் வாள் விழி போல்
அயிலும் குயில்_மொழி நின் இடை போல் மின்னும் ஆடு அளிகள்
பயிலும் தொடை நின் குழல் போல் இருளைப் பருகினவே
** புணர்தல்

#180
சுழி நீர் அலை கடல் தொல் உலகு ஏழினும் தோற்றும் வண்மைக்
கழி நீடும் ஆடக மேருவின் மீதினும் காவல் கொண்டு
வழி நீள் புகழ் கொண்ட வாணன் தென்மாறை வரையின் மலர்ப்
பொழில் நீழல் உம்பர் அமுது_அனையாரைப் புணர்ந்தனமே
** புகழ்தல்

#181
மண் ஆர் பெரும் புகழ் வாணன் தென்மாறை வரை பயிலும்
தண் ஆரமும் கமழ் சார்வு அரும் சாரலில் சார்ந்து உறையும்
பெண் ஆரணங்கு அன்ன நின் முகம்தான் கண்ட பின்னும் உண்டோ
கண் ஆர் தடங்களின் வாய் ஒடுங்காத கமலங்களே
** இறைமகள் இறைவனைக் குறிவரல் விலக்கல்

#182
மூரல் கதிர் முத்த வார் முலை ஆவியின் மூழ்கத் தனி
வாரற்க நீ தஞ்சைவாணன் வெற்பா வயமா வழங்கும்
வேரல் கடிய கவலையினூடு வெயிலவற்கும்
சாரற்கு அருமையதால் இருள் கூரும் எம் சாரலிலே
** இறைவியை இல்வயின் விடுத்தல்

#183
மல்லையம் போர் வென்ற வாணன் தென்மாறை நின் மாளிகையாம்
தொல்லை அம்போருகம் தேடவும் கூடும் தொடித் தளிரால்
முல்லை அம் போது முகையும் கொய்யாது முகிழ் முலையாய்
செல்லை அம் பொன் பளிங்கின் தலம் பாதம் சிவப்பிக்கவே
** இறைவியை எய்திப் பாங்கி கையுறை காட்டல்

#184
முகையாய் அலராய் முலைக்கும் நின் வாய்க்கும் முறைமுறையே
பகையாம் முளரியும் சேதாம்பலும் இவை பைம் கழுநீர்
வகை ஆர் தொடை புனை வாணன் தென்மாறையின் மௌவல் அன்ன
நகையாய் அவை இவை நின் குழற்காம் முல்லை நாள்_மலரே
** இற்கொண்டு ஏகல்

#185
ஒல்கா இருள் மணந்து ஒல்கு அரும் போழ்தின் உணர்ந்து நம்மை
நல்கா இயல்பு அன்னை நாடினும் நாடும் நடந்தருள் நீ
மல்கு ஆவி சூழ் தஞ்சைவாணன் தென்மாறையின் வள்ளையின் மேல்
செல் காவி அன்ன விழித் திருவே நின் திருமனைக்கே
** பிற்சென்று இறைவனை வரவு விலக்கல்

#186
வெம் போர் முருகு என்ன வேல் வலன் ஏந்தி வெறிது இங்ஙனே
வம்பு ஓர் நகர் எல்லி வாரல் வெற்பா மருவா அரசர்-
தம் போர் கடந்த தடம் புய வாணன் தமிழ்த் தஞ்சை நாட்டு
அம்போருகம் அல்லவோ திருக்கோயில் அணங்கினுக்கே
** பெருமகன் மயங்கல்

#187
வஞ்சம் கலந்த கலி வென்ற வாணன் தென்மாறை வெற்பில்
தஞ்சம் கலந்த சொல் தையலும யானும் தனித்தனியே
நெஞ்சம் கலந்த நிலைமை எல்லாம் கண்டும் நீ அமுதில்
நஞ்சம் கலந்தனையே நனை வார் குழல் நல்_நுதலே
** தோழி தலைமகள் துயர் கிளந்து விடுதல்

#188
முன் ஊர் அராவும் தெரியா இருள் நெறி முன்னி நையும்
மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர்
மன் ஊர் களிறு திறைகொண்ட வாணன் தென்மாறை அன்ன
நின் ஊரகம் புகுந்தால் குறி காட்டு நெடுந்தகையே
** திருமகள் புணர்ந்தவன் சேறல்

#189
இரும் குன்று அன மதில் எம் பதிக்கு ஏகல் எளிது செம்மை
தரும் குங்கும முலைத் தையல் நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில்
கரும் குஞ்சர இனம் வெண் சிங்க ஏறு அஞ்சும் கங்குலின் எம்
மருங்கும் சுடர் விளக்காம் மடவார் குழை மாணிக்கமே
** இத்துணையும் ஏழாநாட் செய்தியென் றுணர்க

@14 இரவுக்குறி இடையீடு
** அல்லகுறி
** இறைவிக்கு இகுளை இறை வரவு உணர்த்தல்

#190
கயல் வென்ற உண்கண்ணி காரணம் ஏது-கொல் கைதை அம் கான்
அயல் நின்ற புன்னையின் அன்னம் எலாம் அடல் ஆழி அங்கைச்
சயமங்கை-தன் பெருமான் தஞ்சைவாணன் தரியலர் போல்
துயரம் பெருகி இரா ஒருபோதும் துயின்றிலவே
** தான் குறிமருண்டமை தலைவி அவட்கு உரைத்தல்

#191
பேசத் தகுவது ஒன்று அன்று கண்டாய் பிறிதோர் குறியை
நேசத்தவர் குறி என்று சென்று யான் குறி நின்று வந்தேன்
வாசத் தமிழ் புனை தோள்_உடையான் தஞ்சைவாணன் ஒன்னார்
தேசத்தவரும் எய்தா வெய்ய நோய் எய்திச் சே_இழையே
** பாங்கி தலைமகன் தீங்கு எடுத்து இயம்பல்

#192
வடியோ எனும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணனை வந்து
அடியோம் எனச் சென்று அடையலர் போல் அயர்கின்ற நின் கைத்
தொடி ஓட மென் பணைத் தோள் இணை வாடும் தொழில் புரிந்த
கொடியோர் துணிந்து செய்தார் குறியாத குறி நமக்கே
** தலைவன் புலந்து போதல்

#193
தேன் உற்ற வாகை அம் தார்த் தஞ்சைவாணனைச் சேரலர் போல்
மான் உற்ற பார்வை மயில் பொருட்டாக வழி தெரியாக்
கான் உற்ற கானல் கனை இருள்-வாய் வரக் கற்பித்த நீ
யான் உற்ற நோய்கள் எல்லாம் படுவாய் இனி என் நெஞ்சமே
** இத்துணையும் எட்டாநாட் செய்தியென் றுணர்க
** புலர்ந்த பின் வறும் களம் தலைவி கண்டு இரங்கல்

#194
தாது அகை தண்டலை சூழ் தஞ்சைவாணன் தடம் துறை-வாய்
நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிறக் கனி வாய்
மேதகு முள் எயிற்று ஒண் முகைக் கொங்கை வெண் தோட்டு மென் பூம்
கேதகை என்னும் நல்லாய் கொண்கர் மாலை கிடைத்தது என்றே
** தலைவி தன் துணைக்கு உரைத்தல்

#195
வரல் இங்கு அரிய மயங்கு இருள் யாமத்து வந்து இள வேய்
நாலும் சிலம்பர் நவ மணி ஆழி நறவு உண் வண்டு
முரலும் தளை அவிழ் மொய் மலர்க் காந்தள் அம் செம் மலர்க் கை
விரல் என்று-கொல் செறித்தார் நெறித் தாழ் குழல் மெல்_இயலே
** (இது பிறசெய்யுட்கவி)
** தலைமகள் அவலம் பாங்கி தணித்தல்

#196
பொய்யாது அவர்-தம் குறி பிழையார் அவர் பூண்ட அன்பு
மெய் ஆதல் தேறி அழுங்கல் மின்னே புய வெற்பு இரண்டால்
மை ஆழி வையம் நிலையிட்ட வாணன் தென்மாறை வெற்பின்
உய்யான மென் கழுநீர் நறு மாலை உடைத்து அல்லவே
** இறைவன்மேற் பாங்கி குறிபிழைப்பு ஏற்றல்

#197
விம் ஊர் துயர்க் கடல் வெள்ளத்துள்ளே எம்மை வீழ்வித்து நீர்
எம் ஊரகத்து வரல் ஒழிந்தீர் எதிரேற்ற தெவ்வர்-
தம் ஊரை முப்புரம் ஆக்கிய வாணன் தமிழ்த் தஞ்சை போல்
உம் ஊர் வரத் துணிந்தோம் அன்பர் கூறும் அவ் ஊர் எமக்கே
** இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றல்

#198
துறந்தனள் ஆகி அம்போருகம்-தன்னை இத் தொல் வரை மேல்
பிறந்தனள் ஆகும் பெரும் திருமாது எனப் பேதையரில்
சிறந்தனள் ஆதலின் செந்தமிழ்வாணன் தென்மாறை_அன்னாள்
மறந்தனள் ஆயினும் யாம் ஒருபோதும் மறவலமே
** அவள் குறிமருண்டமை அவள் அவற்கு இயம்பல்

#199
தனை யாவரும் புகழத் தரும் வாணன் தமிழ்த் தஞ்சை மான்_
அனையாள் அவள் குறியாம் இது என்றே நினைந்து அல்லது ஒன்று
நினையா வரும் கங்குல் நின் குறியா வந்து நின்றது நம்
வினையால் விளைந்தது என்றே வெறிதே அன்ப மீண்டனளே
** அவன் மொழிக் கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பல்

#200
பல்லியம் போல் உருமேறு எங்கும் ஆர்ப்பதும் பார்ப்பது இன்றி
வல்லியம் போதகம் போர் பயில் கான் வந்து வாணன் தஞ்சை
அல்லி அம்போருகை அன்ன நின் கேள் அருள் ஆசையில் நின்
எல்லி அம் போது சென்றேன் என்று கேள்வர் இயம்பினரே
** என்பிழைப்பு அன்றென்று இறைவி நோதல்

#201
வியல் ஊர் எயில்புறம் நொச்சியின் ஊழ் மலர் வீழ்-தொறு எண்ணி
மயல் ஊர் மனத்தொடு வைகினன் யான் தஞ்சைவாணன் வெற்பர்
புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று
அயலூர் நகைக்கும் என்னே என்ன பாவம்-கொல் ஆக்கினவே
** இத்துணையும் பகற்செய்தியென்று உணர்க
** வரும் தொழிற்கு அருமை
** தாய் துஞ்சாமை

#202
ஆழி அகல் புவி உள்ளன யாவும் அடங்கி நள்ளென்று
ஊழி முடிந்தன ஆங்கு இருள் யாமத்தும் ஓடையினும்
தாழியினும் போது அலர் தஞ்சைவாணன் தரியலர் போல்
தோழி நம் அன்னை கண்ணே துயில் கோடல் துறந்தனவே
** நாய் துஞ்சாமை

#203
தண்ணென் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல்
பெண் என் பிறவியும் பேர் உடைத்து அன்று இப் பெரும் பதி நம்
கண்_என்பவர் வரக் கங்குலின் ஞாளிக் கணம் குரைத்துத்
துண்ணென் கடும் குரல் வாய் அன்னை துஞ்சினும் துஞ்சிலவே
** ஊர் துஞ்சாமை

#204
ஓங்கு அண்ணல் வெம் பகடு உந்தி வந்தோரை உடன்று தும்பைத்
தேம் கண்ணி சூடிச் செரு வென்ற வாணன் தென்மாறை மின்னே
தாம் கண்_அனையர்-தமைப் பிரிந்தோ நம் தனிமை கண்டோ
நாம் கண்ணுறங்கினுமோ உறங்கார் கண் நகரவரே
** காவலர் கடுகுதல்

#205
புயற்கு அண்ணிய தலைப் பூக மென் பாளைப் புது மது நீர்
வயல்-கண் நிறை தஞ்சைவாணன் தென்மாறையில் வஞ்சி_அன்னாள்
கயல் கண் இணை அஞ்சி நீர் மல்கக் காவலர் கைப் பறையின்
செயல் கண் இணை அல்லவோ படுகின்றன திண் கடிப்பே
** நிலவு வெளிப்படுதல்

#206
தெண் பால் கதிர் முத்த வெண் நகையாய் திகிரிக்கிரி சூழ்
மண்-பால் புகழ் வைத்த வாணன் தென்மாறை நம் மன்னர் பொன் தேர்
பண்பால் பரிக்கும் பரி வருமாறு என் பரந்த நிலா
வெண் பாற்கடலின் வையம் பதினாலும் மிதக்கின்றவே
** கூகைகுழறுதல்

#207
நம் பேறுடைமை இருக்கின்றவா கடல் ஞாலத்துள்ளோர்-
தம் பேறு என வந்த சந்திரவாணன் தரியலர் போல்
வம்பு ஏறு கொங்கை மயில்_இயல் நாம் அஞ்ச மன்ற மராம்
கொம்பு ஏறி நள்ளிருள்-வாய்க் குழறாநின்ற கூகைகளே
** கோழி குரல் காட்டுதல்

# 208
மன்பதை உய்ய வரும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பர்
கொன் பதி வேல் வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான்
என்பது தேறி இடையிருள் ஊரை எழுப்பும் வெம் முள்
பொன் பதி தாள் வளை வாய்ச் செய்ய சூட்டு வன் புள் இனமே
** இத்துணையும் ஒன்பதாநாட் செய்தியென் றுணர்க

@15 வரைதல் வேட்கை
** தலைமகளைப் பாங்கிப் பருவரல் வினவல்

#209
விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம்
தண் தாமரை_மங்கை தங்கிய தஞ்சை நின் தாயர்-தம்மோடு
உண்டாகிய முனிவோ அன்றி ஆயத்தொடு உற்றது உண்டோ
வண்டு ஆர் குழலி சொல்லாய் செல்லல் ஏது உன் மனத்திடையே
** அருமறை செவிலி அறிந்தமை கூறல்

#210
மாணிக்க மென் கொம்பர் என் சொல்லுகேன் தஞ்சைவாணன் வெற்பர்
பேணிப் புணர்ந்து பிரிந்த பின் தோன்றலும் பேதை முகம்
பாணித்தல் இன்றி மதி கண்டு நாணிய பங்கயம் போல்
நாணிக் கவிழ்ந்ததனால் அறிந்தாள் அன்னை நம் களவே
** தலைமகன் வருந் தொழிற்கு அருமைசாற்றல்

#211
ஓவல்_இல் வாய் அன்னை ஞாளி இவ் ஊர் கணுறங்கினும் ஊர்க்
காவலர் காய்வர் நிலா மதி காலும் கடும் குடிஞைச்
சேவலும் வாரணமும் தஞ்சைவாணனைச் சென்று இறைஞ்சா
மேவலர் போல் வெய்ய வாய் அடையா என் மெலிவு அறிந்தே
** தலைமகனூர்க்குச் செலவொருப்படுதல்

#212
நம்-பால் நலன் உண்ட நம் பாதகர்-தம் நகர் வினவித்
தம்-பால் உடன் சென்று சார்குவமோ தரியாரை வென்று
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சிக்
கொம்பாகிய மருங்குல் கரும்பாம் மொழிக் கோமளமே
** பாங்கி இறைவனைப் பழித்துரைத்தல்

#213
வறியார் புகழ் தஞ்சைவாணன் தென்மாறை மடந்தை_அன்னாள்
அறியாள் துயர் முன் அறிந்தவர்தாம் அதனால் அழலின்
பொறி ஆர் உயிர் வெம் பணி மா மணியும் புதை இருள் கூர்
நெறியார் அருள் பெற நாம் நடுநாளிடை நீந்துதுமே
** இறைவி இறையோன் தன்னை நொந்து இயற்பட மொழிதல்

#214
புணரா விரகமும் போகா இரவும் புணர் முலை மேல்
இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல்
வணர் ஆர் குழல் பிறை வாள்_நுதலாய் தஞ்சைவாணன் வெற்பர்
உணராது இருப்பது வேறொன்றும் அல்ல நம் ஊழ்வினையே
** இத்துணையும் பத்தாநாட் செய்தியென் றுணர்க
** கனவு நலிபு உரைத்தல்

#215
இல்லா அரும் துயில் உண்டாய் அவரும் வந்து எய்தின் கங்குல்
பொல்லாத சேவல் கடும் குரல் ஆர்த்துப் புவி புரக்கும்
மல் ஆர் புயன் தமிழ்வாணன் தென்மாறை மருவலர் போல்
அல்லாமை நெஞ்சம் தடுமாற நல் இடை ஆக்கியதே
** கவின் அழிபு உரைத்தல்

#216
வாளினும் நீள் விழி வாள்_நுதலாய் தஞ்சைவாணன் தெவ்வின்
நாளினும் நாளும் நலம் தொலைவேன் நகை ஆர் அயில் வேல்
வேளினும் ஏர் நல்ல வெற்பனும் நீயும் என் மேனியினும்
தோளினும் நோய் அறியீர் அறியாதது என் தொல்வினையே
** தன் துயர் தலைவற்கு உணர்த்தல் வேண்டல்

#217
வரைப்-பால் மதுரத் தமிழ் தெரி வாணன் தென்மாறை வையை
நுரைப் பால் முகந்து அன்ன நுண் துகிலாய் இந்த நோய் அவர்க்கு இன்று
உரைப்பார் உளரேல் உயிர் எய்தலாம் நமக்கு ஊர் திரை சூழ்
தரைப்-பால் வளரும் புகழ் எய்தலாம் அவர்-தங்களுக்கே
** துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல்

#218
ஒல்லெனவே என் உறு துயர் தாமும் உணரும் வண்ணம்
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம்
வல் எனவே கொண்ட கொங்கையர் வேள் தஞ்சைவாணன் வெற்பில்
அல் என ஆர் குழலாய் அறியாரல்லர் அன்பருமே
** அலர் பார்த்து உற்ற அச்சக்கிளவி

#219
மலரும் தொடை வஞ்சி வஞ்சக மாதரும் மாரனும் வாய்
அலரும் தடம் கை_அலரும் தொடாநிற்ப அஞ்சி நெஞ்சம்
பலரும் புகழ் தஞ்சைவாணர் பிரானைப் பணியலர் போல்
புலரும் பெயரும் கண்ணீர் புலராது புலரினுமே
** ஆறு பார்த்து உற்ற அச்சக்கிளவி

#220
அரியும் கரியும் பொரு நெறிக்கு ஓர் துணையாய் அவர் மேல்
சொரியும் திவலை துடைக்க என்றோ குழை தோய்ந்து நஞ்சும்
வரியும் பயில் கண்ணி வாணன் தென்மாறை நம் மன்னர் வந்து
பிரியும் பொழுது எல்லி-வாய் வினையேன் மனம் பின் செல்வதே
** காமம் மிக்க கழிபடர் கிளவி

#221
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ்
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள்
ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர் துறைவர்க்கு இவளோ
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே
** தன்னுட் கையாறு எய்திடு கிளவி

#222
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல் அம் கழி சூழ்
கண்டலையே கரியாக் கன்னிப் புன்னைக் கலந்த கள்வர்
கண்டிலையே வரக் கங்குல் எல்லாம் மங்குல்-வாய் விளங்கும்
மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே
** (இதுவும் புறசெய்யுட் கவி)
** நெறி விலக்குவித்தல்

#223
ஈன்றாளினும் எனக்கு அன்புடையாய் சென்று இரந்துகொண்டு
சான்றாண்மை அன்பர்-தமக்கு உரை நீ தஞ்சை காவலனைத்
தேன் தாழ் வரைத் தமிழ் சேர்த்திய வாணனைச் சேரலர்க்கும்
தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே
** குறி விலக்குவித்தல்

#224
வெற்றி அவாவிய வாணர் பிரான் தஞ்சை வெற்பகத்து இப்
பெற்றிய சோலைப் பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும்
முற்றிய ஏனல் படு கிள்ளை ஓட்டும் முறைமையள் என்று
எற்றிய காதலினால் இசைத்தாள் அன்னை என்று உரையே
** வெறி விலக்குவித்தல்

#225
மின்னாது இடித்து என அன்னை கொண்டாள் வெறி விந்தை_மங்கை
மன் ஆண்மை மன்னிய வாணன் தென்மாறை வரையில் வண்டு யாழ்
என்னா அசுணம் இறைகொள்ளும் நாடர் எனக்கு அருளால்
முன் நாள் அருளிய நோய் தணிப்பான் இன்று மொய்_குழலே
** பிறர் வரைவு விலக்குவித்தல்

#226
பொரு பால் மதியினைப் போல் மருப்பு யானையில் பொன்னொடு இன்பம்
தரு பால் மொழி வஞ்சி சார வந்தார் தஞ்சைவாணன் வெற்பின்
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல்
இரு பால் மருங்கினும் கொண்டு எறிந்தால் ஒத்தது என் செவிக்கே
** குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தல்

#227
தன் பழியாமலும் சந்திரவாணன் தமிழ்த் தஞ்சை நம்
கற்பு அழியாமலும் காரணமாகக் கயல்_விழி நின்
சொல் பழியார் நமர் சொல்லு வல்லே சென்று சொல்லலையேல்
இல் பழியாம் வழியாம் நமது ஆருயிர்க்கு ஏதமுமே
** இத்துணையும் பதினொன்றாநாட் செய்தியென் றுணர்க

@16 வரைவு கடாதல்
** வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்

#228
தளரா இள முலை தாங்ககில்லாது தளர்_இடை கண்
வளராதது என் கங்குல் வாராய் எனத் தஞ்சைவாணன் வெற்பா
விளர் ஆர் திருநுதல் அன்னைக்கு ஒர் மாற்றம் விளம்பி உய்ந்தேன்
உளராம் அவர் வலையுள் பட்டு வாழ்வது உணர்ந்தருளே
** அலர் அறிவுறுத்தல்

#229
மணி வரை மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பா
பணிமொழியாள் என்னும் கொள் கொம்பு மூடிப் படர்ந்து அயல் ஆர்
அணி மனை-தோறும் கொழுந்துவிட்டு அம்பல் அரும்பி மண் மேல்
தணிவு இலதாக இப்போது அலர் பூத்தது உன் தண்ணளியே
** தாய் அறிவு உணர்த்தல்

#230
திரையின் பவளம் வடவாமுகத்து எழும் தீக்கொழுந்தின்
கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன்
வரையில் திகழ்வித்த வாணன் தென்மாறை மலர்ந்த மௌவல்
விரையில் களவை எல்லாம் அறிந்தாள் அன்னை மெய்யுறவே
** வெறி அச்சுறுத்தல்

#231
மையுற்ற நீலக் கண் மா மங்கை கோன் தஞ்சைவாணன் வெற்பில்
நெய்யுற்ற வேல் அன்ப நீ தணியாமையின் நெஞ்சினுள்ளே
ஐயுற்று அயர்வுற்று எம் அன்னையும் ஆயும் என் ஆரணங்கின்
மெய் உற்ற நோய் தணிப்பான் வெறியாடல் விரும்பினரே
** பிறர் வரைவு உணர்த்தல்

#232
வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம் பகு வாய்த்
துடிக்கின்ற திங்களின் தோன்றும் துறைவ செஞ்சொல் புலவோர்
வடிக்கின்ற முத்தமிழ் வாணன் தென்மாறை எம் மான் மருங்கை
ஒடிக்கின்ற கொங்கை கண்டால் எவர் நெஞ்சு உருகாதவரே
** வரைவெதிர் வுணர்த்தல்

#233
குருதி கண்டால் அன்ன காந்தள் அம் சாரல் குறி வெறிதே
வருதி கண்டாய் தஞ்சைவாணன் வெற்பா எங்கள் மாநகர் நீ
சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார்
பருதி கண்டால் மலராது ஒழியா கயப் பங்கயமே
** வரையும் நாள் உணர்த்தல்

#234
அலகு அம்பு அன கண் இவள் கொங்கை மென் சுணங்கு ஆகி வண்டு
பல கம்பலை செய்யப் பூத்தன வேங்கை பனிவரை மேல்
திலகம் பதித்து எனச் சேல் வைத்த வாணன் தென்மாறை மன்னன்
உலகம் பயில் புகழ் போல் சிலம்பா மதி ஊர்கொண்டதே
** அறிவு அறிவுறுத்தல்

#235
வன நாள் முளரி முகை வென்று வாணன் தென்மாறை வெற்பில்
கன நாண் அணிந்து பொன் கச்சு அற வீசிக் கதித்து எழுந்த
தனம் நாணும் நுண் இடைத் தையல் நல்லாள் பழி சாற்றுவல் யான்
என நாணி நின் பழி தான் மறைத்தாள் அன்ப என்னையுமே
** குறிபெயர்த்திடுதல்

#236
ஊறு ஓர்பவர் இங்கு உலாவவும் கூடும் வந்து ஒண் சிலம்பா
வேறு ஓர் பொதும்பரில் போய் விளையாடுக வேல் படையான்
மாறோர் பகை வென்ற வாணன் தென்மாறை எம் மன்னு தவப்
பேறு ஓர் வடிவு கொண்டால் அன்ன நீயும் என் பேதையுமே
** இத்துணையும் பன்னிரண்டா நாட் செய்தியென் றுணர்க
** பகல் வருவானை இரவு வருகென்றல்

#237
முத்து அணி நீல மணித் தகட்டுள் எங்கும் மொய்கொளவே
வைத்து அணி சேர வகுத்தது போல் தஞ்சைவாணன் வையைப்
பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னைப் பாசிலை வெண்
தொத்து அணி பூம் துறைவா வருவாய் இருள் தூங்கு இடையே
** இரவு வருவானைப் பகல்வரு கென்றல்

#238
இழை விளையாடும் இள முலை சாயற்கு இடைந்த மஞ்ஞை
கழை விளையாடும் கடிப் புனம் காத்தும் கலை அகலாது
உழை விளையாடும் உயர் சிலம்பா இன்னும் உன் பொருட்டால்
மழை விளையாடும் மதில் தஞ்சைவாணன் மலயத்திலே
** பகலினும் இரவினும் பயின்று வருகென்றல்

#239
குரவும் கணியும் விரவும் வெற்பா வெய்ய குஞ்சரம் மேல்
வரவு உந்திய தெவ்வை மாற்றிய வாணன் தென்மாறை மின்னும்
அரவும் பணியும் நுடங்கு_இடை ஆற்றலளால் பகலும்
இரவும் குறி-வயின் நீ வரல் வேண்டும் இவள் பொருட்டே
** பகலினும் இரவினும் அகல் இவண் என்றல்

#240
தாவாத செல்வம் தரும் தஞ்சைவாணன் தடம் சிலம்பா
நீ வாரல் சாரல் நிலவு அலராம் பகல் நீடு இருள் ஆர்
மா வான் நிலவு நிலமங்கை வார் குழல் மல்லிகை போல்
ஓவாது இரவு எறிக்கும் சோலை நீழலினூடு வந்தே
** இத்துணையும் பன்னிரண்டாநாட் செய்தியென் றுணர்க
** உரவோன் நாடும் ஊரும் குலனும்
** மரபும் புகழும் வாய்மையும் கூறல்

#241
தலத்திற்கும் மாறைக்கும் மன்னவன் வாணன் தமிழ்த் தஞ்சை சூழ்
நிலத்திற்கும் மாமணி ஆகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும்
குலத்திற்கும் மாசு_இல் குடிமைக்கும் சீர்மைக்கும் கோது_இல் மெய்ம்மை
நலத்திற்கும் ஆவது அன்றால் வரையாது நடப்பதுவே
** ஆறுபார்த்துற்ற அச்சங் கூறல்

#242
புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம்
குராம் தொடை மென் குழல் கொம்பினை வேண்டிக் கொடி முல்லை நீள்
மராம் தழுவும் தஞ்சைவாணன் வெற்பா வல்சி தேர்ந்து இலஞ்சிக்
கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே
** ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறல்

#243
கலங்கும் தெளியும் கனல் எழ மூச்செறியும் கண்ணின் நீர்
மலங்கும் பொலம் தொடி சோர மெய் சோரும் மறம் செய் கொலை
விலங்கும் படிறு செய்யாக் குன்ற நாட விரைந்து அளிப்பாய்
அலங்கும் கடும் பரித் தேர் வாணன் மாறை அணங்கினையே
** காவல் மிக உரைத்தல்

#244
நஞ்சு ஆர் அரவம் திரிதரு கான் நடுநாள் இரவில்
அஞ்சாது செம் கை அயில் விளக்கா அணங்கின் பொருட்டால்
மஞ்சு ஆர் மதில் தஞ்சைவாணன் வெற்பா வரல் வன் சொல் அன்னை
துஞ்சாள் கடும் துடிக் கை நகர் காவலர் துஞ்சினுமே
** காமம் மிக உரைத்தல்

#245
தென்நாக வண் தமிழ் வாணன் தென்மாறைச் செருந்தியுடன்
புன்னாகமும் கமழ் பூம் துறைவா சுரர் போற்று அமிர்தம்
பின்னாக முன் வந்த பேதை தன் காமப் பெரும் கடற்கு
நின் ஆகம் அன்றி உண்டோ புணை ஆவது நீந்துதற்கே
** கனவு நலிபு உரைத்தல்

#246
மாணாத தெவ் வென்ற வாணன் தென்மாறை வள நகர் போல்
பூண் ஆகம் மெல்_இயல் புல்லினையாக அப் பொய்யை மெய்யாப்
பேணா மகிழ்ந்து பெரும் துயில் ஏற்றவள் பின்னை நின்னைக்
காணாள் கலங்கினளால் கலங்கா மனக் காவலனே
** கவின் அழிபு உரைத்தல்

#247
ஏர் ஏற்ற கொங்கை இளம் கொடி மாந்தளிர் ஏய்ந்த வண்ணம்
கார் ஏற்ற கங்குலின் பீர் அலர் போன்றது காவி உண்கண்
வார் ஏற்ற பைம் கழல் வாணன் தென்மாறையில் வாவியின்-கண்
நீர் ஏற்ற செங்கழுநீர் மலர் போன்றது நின் பொருட்டே

@17 ஒருவழித் தணத்தல்
** தன் பதிக்கு அகற்சி தலைவன் சாற்றல்

#248
திரை கேதகை மணம் கூடும் எம் பாடியில் சென்றுவந்து யான்
வரைகேன் வரும் துணை வல்லியை நீ தஞ்சைவாணன் செவ் வேல்
புரை கேழ் மதர் விழிக் கோங்கு அரும்பு ஏர் முலைப் பூசல் வண்டு
நிரை கேச வஞ்சி அஞ்சேல் என்று தேற்றுதல் நின் கடனே
** பாங்கி விலக்கல்

#249
பறந்தாங்கு இவர் பரித் தேர் கடவேல் உன் பதி அடைந்தால்
மறந்து ஆங்கு அமையவும் வல்லை அன்பா தஞ்சைவாணன் ஒன்னார்
நிறம் தாங்கு இவர் கணை போல் உண்கண் மா முகில் நீர்மை கொண்டு
புறம் தாழ கரும் குழல் வெண் முத்த வாள் நகைப் பொன்னினையே
** தலைவன் நீங்கல் வேண்டல்

#250
அறையும் பொறையும் மணந்த வெம் கானத்து அணங்கை இல் வைத்து
இறையும் பிரிவதற்கு எண்ணகிலேன் எண்ணலார் வரை மேல்
மறையும்படி வென்ற சந்திரவாணன் தென்மாறையில் வண்டு
உறையும் குழலி சென்றேவரல் வேண்டும் எம் ஊரகத்தே
** தலைவனைப் பாங்கி விடுத்தல்

#251
இல்லத்து உறையும் இவள் பொருட்டால் நுமக்கு யானும் ஒன்று
சொல்லத் தவிர்கிலன் சூழ் கழலீர் சுடர் தோய் புரிசை
வல்லத்து அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்துவந்து
செல்லத் திருவுளம்வைத்து அகல்வீர் நும் திருநகர்க்கே
** பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்

#252
நிலவு ஏய் தரளம் நிரைத்து அன்ன வாள் நகை நீல நிறக்
குல வேய் நிகர் பொன் தொடி நெடும் தோளி குறுகி வரச்
செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழும் கமலத்
தல வேதியன் பெறும் நாள் பெற்று வாழ்பவன் தஞ்சையிலே
** தலைவி நெஞ்சொடு புலத்தல்

#253
குளித்தார் இளம் கொங்கை ஆவியில் ஆவி குளிர்ப்ப நம்மை
அளித்தார் அளித்து அகலத்து அணைத்தார் அன்று அணங்கின் முன்னே
தெளித்தார் செழும் தஞ்சைவாணன் ஒன்னாரின் நம் சிந்தை நைய
ஒளித்தார் அவர் இங்ஙனே நன்றுநன்று இவ் இலகியலே
** இத்துணையும் பதினான்காம்நாட் செய்தியென் றுணர்க
** சென்றோன் நீடலின் காமம் மிக்க கழி படர் கிளவி

#254
மயில் ஆடு தண்டலை மாறை வரோதயன் வாணன் ஒன்னார்க்கு
எயில் ஆகிய கடல் கானல் அம் சேர்ப்பற்கு இடையிருள் யான்
துயிலா நிலை ஒன்றும் சொல்லாய் துணையுடன் சூழ் திரைத் தேன்
பயிலா மலரணை மேல் துயிலாநிற்றி பால் அன்னமே
** தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல்

#255
ஆடுகம் வா நம் அகன்றவர் ஊர் அகலாப் புது நீர்
பாடுகம் வா பொன் பசலைத் தந்தார் திறம் பாங்கின் எல்லாம்
தேடுகம் வா தஞ்சைவாணன் நல் நாட்டு அன்பர் தேர் வழி நாம்
சூடுகம் வா கவலாது அவர் கானல் துறை மலரே
** இத்துணையும் பதினைந்தாநாட் செய்தியென் றுணர்க
** தலைவன் வந்தமை பாங்கி உணர்த்தல்

#256
பண்ணும் குழலும் பழித்த சொல் பாவை பரியல் எல்லா
மண்ணும் புகழ் தஞ்சைவாணன் ஒன்னார் என மைக் குவளைக்
கண்ணும் கனை இருள் கங்குலும் மாரன் கணைகள் பட்ட
புண்ணும் புலர வந்தார் தமது ஊர்-வயின் போனவரே
** வந்தோன் தன்னொடு நொந்து வினாதல்

#257
ஒருதலைக்கு எய்திய கல்லதர்க்குச் செல்ல ஓர் உயிர்த்தாய்
இருதலைப்புள்ளின் இயைந்த நும் கேண்மையை எண்ணி எம் ஊர்
வருதலைக் கொண்க நினைந்திலை வாணன் தென்மாறை வண்டு
பொருது அலைக்கும் குழலாள் அழ நீ கண்டு போய பின்னே
** தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல்

#258
ஐ வாய் அரவு உற்றது அன்ன இன்னா இடர் ஆற்றி என் போல்
எவ்வாறு இருந்திர் நீர் எல் வளையீர் எதிர்ந்தாரை வென்று
மை வாரணம் கொண்ட வாணன் தென்மாறை மருவலர் போல்
ஒவ்வா அலரையும் கேட்டு இருவீரும் ஒருதனியே
** தலைவியை ஆற்றுவித்திருந்த அருமை கூறல்

#259
இவள் ஆருயிர் புரந்து யான் இருந்தேன் செக்கர் இந்து அன்ன
பவளாடவியில் பயில் நித்திலம் பங்கயம் குவியத்
தவள் ஆதவம் சொரி தண் துறைவா தஞ்சைவாணன் தெவ்வின்
துவளாமல் ஆற்றுவி என்று அன்று நீ சொன்ன சொல் நினைந்தே

@18 வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்
** என் பொருட்பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்றல்

#260
கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும்
மழை போல் வருகுவன் வன் சுரம் போய்த் தஞ்சைவாணன் வெற்பில்
இழை போல் இடையாள் முலைவிலைக்கு ஆவன யாவையும் கொண்டு
உழை போல் அரி நெடும் கண் மயிலே சென்று உணர்த்து இதுவே
** பாங்கி நின் பொருட்பிரிவு உரை நீ அவட்கு என்றல்

#261
வசையும் புகழும் நின் மேலனவாம் தஞ்சைவாணன் வெற்பா
மிசையும் கரும்பினில் வேம்பு வைத்தால் அன்ன வேட்கை எல்லாம்
திசையும் பரவும் திரு_அனையாள்-தன் திருவுளத்துக்கு
இசையும்படி வல்லையேல் சொல்லி நீ பின் எழுந்தருளே
** நீடேன் என்று அவன் நீங்கல்

#262
காலைப் பொழுது கடும் பரித் தேர் பண்ணிக் கானகம் போய்
மாலைப் பொழுது வருகுவல் யான் தஞ்சைவாணன் நல் நாட்டு
ஆலைப் பழனம் அணிந்த எம் ஊர் நும் அகம் குளிரச்
சோலைப் பயில் குயில் போல் மொழியாய் என் துணிவு இதுவே
** பாங்கி தலைவிக்கு அவன் செலவு உரைத்தல்

#263
வில் ஏய் குறும்பும் இறும்பும் எவ்வாயும் விராய வெவ் வாய்க்
கல் ஏய் கவலைக் கடம் கடந்தார் நமர் காய்ந்து எதிர்ந்தார்
செல் ஏய் முரசச் செரு வென்ற வாணன் தென்மாறையில் நின்
வல் ஏய் முலைவிலை தான் தந்து நாளை மணம் பெறவே
** பூங்குழை இரங்கல்

#264
இப் பேருவகை இனிப் பிரியேன் என்றும் என் முன் சொன்ன
அப் பேருரை பழுதாம் என்னவே அரவம் சுமந்த
மைப் பேர் அலை கடல் வையகம் தாங்கிய வாணன் தஞ்சைச்
செப்பு ஏர் இளம் கொங்கை மங்கை செப்பாது அன்பர் சென்றதுவே
** பாங்கி கொடுஞ்சொல் சொல்லல்

#265
ஆரணத்தான் அருள் பார் அளித்தான் அடங்காதவரை
வாரணத்தால் வென்ற வாணன் தென்மாறை வயங்கு ஒளி சேர்
பூரணத்து ஆர் மதி போல் முகத்தாய் என் புலம்புதி நின்
காரணத்தால் அல்லவோ பிரிந்தார் இன்று காதலரே
** தலைவி கொடுஞ்சொல் சொல்லல்

#266
மண்டும் திரை வையை சூழ் தஞ்சைவாணற்கு வன் புலியும்
செண்டும் கொடுத்து அகல் செம்பியர் போல் அன்பர் சென்றுழி முள்
இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய்
கண்டும் கலங்கல்செல்லாது இந்த ஊர் என் கழறல் நன்றே
** வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தல்

#267
தேர்த் தானை வாணன் தென்மாறை மின்னே அஞ்சல் செம்பு உருக்கி
வார்த்தால் அனைய வழி நெடும் பாலை மடப் பெடை நோய்
பார்த்து ஆதவம் தவி பாதவம் இன்மையில் பைம் சிறகால்
போர்த்து ஆலும் மஞ்ஞை கண்டும் போவரோ நம் புரவலரே
** பருவம் கண்டு பெருமகள் புலம்பல்

#268
மிகவும் பரந்த கரிய கண்ணீர் செம் கை வெள் வளை போல்
உகவும் துறந்தவர் உன்னலரால் உறை கார் பொழிய
மகவும் துணையும் கலை தழுவும் தஞ்சைவாணன் வெற்பின்
அகவும் பெடை மயிலும் தமியேன் எங்ஙன் ஆற்றுவலே
** இகுளை வம்பு என்றல்

#269
தனம் சேர்ந்த வஞ்சி நின் சாயல் கண்டு அஞ்சித் தனித்தனி போய்
வனம் சேர்ந்து அயர்ந்த மயில்கள் எல்லாம் தஞ்சைவாணன் வெற்பில்
கனம் சேர்ந்து அலர் துளி காலும் முன்னே வம்பு காலும் என்னா
இனம் சேர்ந்து அகவின நாம் தனி வாடி இருத்தல் கண்டே
** இறைமகள் மறுத்தல்

#270
வாவித் தகை அன்னமே தஞ்சைவாணன் வரையகத்து என்
பாவித் தனி நெஞ்சு பார்த்து அஞ்சுமே கண் பயின்ற கண் ஆர்
தூவித் தளை மயில் கோபம்கொள்ளா வரத் தோன்றியைச் சேர்ந்து
ஆவித்து அகம் தளரும் மணி காலும் அரா என்னவே
** அவர் தூதாகி வந்து அடைந்தது இப்பொழுது எனத்
** துணைவி சாற்றல்

#271
இன்னே வருவர் நின் காதலர் ஏதிலர் ஏங்க இனிக்
கொன்னே இரங்கி வருந்தல் கண்டாய் கொற்ற நேமி விந்தை
மன்னே என வந்த வாணன் தென்மாறை வரவு உணர்த்த
முன்னே நடந்தன காண் கடும் கால முகில் இனமே
** தலைமகள் ஆற்றல்

#272
இன்புற்ற காலத்து இருவர்க்கும் ஒன்று உயிர் என்று சொன்னார்
அன்புற்ற காதலர் ஆதலினால் அகன்றார் என நாம்
துன்புற்ற காலத்து அவரும் உறாரல்லர் தோழி சொல்லும்
வன்புற்ற கார் அளிக்கும் தஞ்சைவாணன் தென்மாறையிலே
** அவன் அவண் புலம்பல்

#273
விழி குழியும்படி தேர் வழி பார்த்தனை வீழ்ந்து வண்டு
கொழுது இமிரும் குழல் சோரக் கிடந்து குடங்கையின் மேல்
ஒழுகிய அஞ்சன வெள்ளத்து உணங்கும் அணங்கை முன் சென்று
எழுக எனும் நெஞ்சம் என்னே அவரோ எனில் என் சொல்லுமே
** (இது பிறசெய்யுட் கவி)
** இத்துணையும் பதினாறாநாள் செய்தியென் றுணர்க
** மீண்டுவருங்காலைப் பாகனொடு செல்லல்

#274
வன் மா முடுக வலவ திண் தேர் இனி வாணன் தஞ்சைக்கு
என் மாலுறும் நெஞ்சின் முன் செல நாகு இள ஏறு புல்லிப்
பொன் மா மணியும் பிரிந்திருந்தாரும் புலம்ப மன்றில்
செல் மாலை அந்தி கண்டு ஆற்ற அரியாள் என் திருந்து_இழையே
** மேகத்தொடு சொல்லல்

#275
வேண்டும் பொருளைத் தரும் பொருள் போய் முற்றி மீண்ட என் தேர்
தூண்டும் பரி முன் துனை முகில்காள் சென்று சொல்லும் இந்து
தீண்டும் கொடி மதில் சூழ் தஞ்சைவாணனைச் சேரலர் போல்
ஈண்டும் பசலை மெய் போர்த்திருப்பார்-தமக்கு என் வரவே
** பாங்கி வலம்புரி கேட்டு அவன் வரவு அறிவுறுத்தல்

#276
பொருகின்ற செங்கயல் போல் விழியாய் பண்டு போய நின் கைக்
குருகு இன்று அணித்து இறைகொள்வது காண்க நம் கொண்கர் பொன் தேர்
தருகின்ற சங்கத் தரு அன்ன வாணன் தமிழ்த் தஞ்சை-வாய்
வருகின்றது என்று முன்னே ஓகை கூறும் வலம்புரியே
** வலம்புரி கிழத்தி வாழ்த்தல்

#277
மால் வண்டு என மன்னி வாணன் தென்மாறை மன்னன் புகழே
போல் வண் தமிழ் மன்னர் போற்ற விளங்குக பொன் கொழிக்கும்
கால் வண்டல் வையைக் கரை மல்கும் மல்லிகைக் கால் முகையின்
மேல் வண்டு இருந்தது போல் கரு மா முக வெண் சங்கமே
** தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமை வினாவல்

#278
நினையீர் பொருட்குப் பிரிந்து அயல் நாட்டுழி நின்றுழி வேள்_
அனையீர் நினைந்தும் அறிதிர்-கொல்லோ அம் சொலால் அறிவோர்
வனை ஈர் இதழ்க் கண்ணி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல்
நனை ஈர் இதழ்க் கண் வைகா வெவ்வ நோயுற்ற நவ்வியையே
** தலைவன் நினைத்தமை செப்பல்

#279
கான் நெடும் குன்றம் கடந்து சென்றேன் ஒருகாலும் மை தோய்
மான் நெடும் கண்ணி மறந்து அறியேன் வண் கை வாணன் தஞ்சை
நீல் நெடும் பெண்ணைச் சுரும்பையும் சூதும் நெருங்கு கொங்கைத்
தேன் நெடும் கண்ணி மென் பூம் குழல் மாதர் திருமுகமே
** ஆற்றுவித்திருந்த அருமை சாற்றல்

#280
உயர் ஆமலகத்து அரும் கனி நீர் நசைக்கு உண் சுரம் போய்
வியராமல் இல்லின் விடுத்து அகன்றாளை மென் பூம் சிலம்பா
அயராமல் அஞ்சல் என்று ஆற்றுவித்தேன் இவ் அவனி எல்லாம்
மயராமல் வந்த பிரான் தஞ்சைவாணன் தென்மாறையிலே
** முதலாவது களவியல் முற்றிற்று

&2 வரைவியல்

@19 வரைவுமலிவு
** காதலன் முலைவிலை விடுத்தமை
** பாங்கி காதலிக்கு உரைத்தல்

#281
தொலைவு இலை ஆகிய பல் பொருள் காதலர் சூது அமர் நின்
முலைவிலையாக முகந்து அளித்தார் முனை வேந்தர்-தம்மைத்
தலைவிலையாகத் திறைகொண்ட வாணன் தமிழ்த் தஞ்சை நீ
உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே
** காதலி நற்றாய் உள்ளம் மகிழ்ச்சி உள்ளல்

#282
கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள்
இயமா மணம்புணர் ஈர்ம் துறை நாடர் எதிர்ந்தவர் மேல்
வயமா நடத்திய வாணன் தென்மாறை வருகுவரேல்
நயமாம் மண அணி கண்டு யாயும் இன்புறும் நம்மினுமே
** பாங்கி தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தல்

#283
மணிப் பாலிகை முத்தம் வைத்து ஆங்கு அடம்பு அலர் வார் திரை தூய்
அணிப் பாய் துவலை அரும்பும் துறைவர்க்கு அணி எதிர்ந்து
பணிப் பாசிழை அல்குல் வெண் நகையாய் நமர் பார நின் நோய்
தணிப்பான் முரசு அறைந்தார் தஞ்சைவாணன் தமிழ் நிலத்தே
** தலைமகள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தல்

#284
சோகாகுலம் எய்தல் காண்டும் நெஞ்சே நம் துறைவர் எனும்
நீகானுடன் பள்ளி நீள் வங்கம் ஏறி நிலம் புரக்கும்
மா காவிரி அன்ன வாணன் தென்மாறை மன்னன் பகையும்
ஏகா இருள் கங்குலாம் கடல் காலை எனும் கரையே
** தலைவனைப் பாங்கி வாழ்த்தல்

#285
மாரி அஞ்சும் கொடை வாணன் தென்மாறையில் வாழி வண்டு ஆர்
வேரி அம் தொங்கல் விரை கமழ் மார்ப விடாத அம்பல்
சேரி அம் பொய்கைத் துறை அலர் வாட நின் செவ்வி மணம்
தூரியம் சங்கு அதிரக் காட்டு நீ அன்று சூட்டு அலரே
** தலைவி மணம் பொருட்டாக
** அணங்கைப் பராநிலை காட்டல்

#286
உர இப் பெரும் கலித் துன்பங்கள் போய் முதலூழி இன்பம்
வர இப் படி-தன்னை வாழ்வித்த வாணன் தென்மாறை_அன்னாள்
புரவிப் புனை நெடும் தேர் அண்ணலே நின் பொருட்டு அணங்கைப்
பரவிப்பரவி நின்றே வரம் வேண்டுதல் பார்த்தருளே
** பராநிலை கண்ட தலைவன் மகிழ்தல்

#287
இவ் வித்தகம் இவட்கு எய்தியது எவ்வணம் எவ்வுலகும்
வவ்வித் திகழ் புகழ் வாணன் தென்மாறை மணம் பொருட்டால்
நவ்வித் தொகையின் நாணும் மென் நோக்கி நறை புகையாச்
செவ்வித் தகை மலர் தூய்த் தெய்வம் வாழ்த்தும் திருத் தகவே
** இத்துணையும் ஐம்பத்தொன்றாநாட் செய்தியென் றுணர்க

@20 அறத்தொடு நிற்றல்
** கையறு தோழி கண்ணீர் துடைத்தல்

#288
அயிர் ஆர் திரை வந்து உன் வண்டலம் பாவை அழித்தனவோ
செயிராத அன்னை செயிர்த்தனளோ செறி நாரை திண் போர்
வயிரா நரலும் வயல் தஞ்சைவாணன் தென்மாறையில் என்
உயிர் ஆகிய தையல் நீ கலுழ்வான் என் உளம் குழைந்தே
** தலைமகள் கலுழ்தல் காரணம் கூறல்

#289
தார் அணி கொண்ட இரு தோள் ஒருவர் தனித்துழி என்
வார் அணி கொங்கை மணந்து சென்றார் தஞ்சைவாணன் ஒன்னார்
தேர் அணி வென்ற செழும் புகர் வேல் விழித் தேன் இனம் சூழ்
கார் அணி மென் குழலாய் அதுவே கலுழ் காரணமே
** தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத்
** தெளிந்தமை எய்தக் கூறல்

#290
துதித்தேன் அணங்கொடு சூளும் உற்றேன் என்ற சொல்லை மெய்யா
மதித்தேன் அயர்ந்து மதியிலியேன் தஞ்சைவாணன் வையை
நதித் தேன் இனம் புணர் மாதர் கண் போல நகைக்கும் நெய்தல்
பொதித் தேன் நுகர்ந்து அகலும் கழிக் கானல் புலம்பர் வந்தே
** இறைவி தலைவன் இகந்தமை இயம்பல்

#291
வரி ஓல வண்டு அலை தண்டலை சூழ் தஞ்சைவாணன் வண்மைக்கு
உரியோன் உயர் வையை ஒண் துறை-வாய் உரவோர் தெளித்தும்
கரியோர் பிறர் இல்லை என்று அகன்றார் இனிக் காரிகையாய்
பெரியோர் மொழி பிறழார் என்று தேறுதல் பேதைமையே
** பாங்கி இயற்பழித்தல்

#292
மழவே துறந்து மறந்தவர் போல் தஞ்சைவாணன் வென்றி
முழவு ஏய முந்நீர் முழங்கு இரும் கானல் முழுது உலகும்
தொழவே தகுந்த தெய்வம் நோக்கிச் செல்லேன் என்று சொல்லியும் நீ
அழவே துறந்தனரால் நல்லர் நல்லர் அவ் ஆடவரே
** தலைமகள் இயற்பட மொழிதல்

#293
மாகப் புயல் மண்ணில் வந்து அன வாணன் தென்மாறை முந்நீர்
நாகப் புகர்ச் செய்ய புள்ளிப் பைம் கால் ஞெண்டு நாகு இளம் தண்
பூகக் குளிர் நிழல் பேடையொடு ஆடும் புலம்பர் இன்னா
ராகக் கருதின் நல்லாய் இனி யார் இனியார் உளரே
** தெய்வம் பொறைகொளச் செல்குவம் என்றல்

#294
மா தங்கம் நல்கும் கை வாணன் தென்மாறை வையைத் துறைவர்
ஏதம் பயந்திலர் எங்கட்கு நீ எம் இகந்ததனால்
கோதம்படாதி கொடும் தெய்வமே என்று கூர் பலி தூய்ப்
பாதம் பரவ நல்லாய் இருவேமும் படர்குவமே
** இல்வயிற்செறித்தமை செப்பல்

#295
தன் போல் உலகம் புரக்கின்ற வாணன் தமிழ்த் தஞ்சையார்
மன் போல் எவர்க்கும் வழங்கி உண்ணாதவர் வைத்து இழக்கும்
பொன் போல் இறுகப் பொதிந்துகொண்டாள் அன்னை பூவை என் மேல்
வன்பு ஓதிய மடவார் அலர் தூற்றியவாறு கண்டே
** செவிலி கனை இருள் அவன் வரக் கண்டமை கூறல்

#296
வெம் கார்முக வெம் புருவ மின்னே அன்னை மேல் ஒருநாள்
எம் காதலர் இருள் எய்தல் கண்டாள் இந்த ஏழ் உலகும்
மங்காமல் வந்து அருள் வாணன் தென்மாறை வண்டானம் அஞ்சச்
சங்கு ஆழி கொண்டு எறியும் கண்டல் வேலி அம் தண் துறைக்கே
** செவிலி தலைமகள் வேற்றுமை கண்டு பாங்கியை வினாதல்

#297
பொன்னுற்ற கொங்கையும் முத்துற்ற கண்ணும் இப்போது கண்டேன்
பன்னுற்ற சொல்லும் இன் பாலும் கொள்ளாள் பதினால் உலகும்
மன்னுற்ற வண் புகழ் வாணன் தென்மாறை என் மான்_அனையாட்கு
என் உற்றது என்று அறியேன் புனம் காவல் இருந்த பின்னே
** பாங்கி வெறி விலக்கல்

#298
அறியாமையான் ஒன்று கேட்கலுற்றேன் உம்மை ஆவது ஒன்றும்
குறியா மறி உயிர் கொள்ள என்றோ குருதிப் பலி கூர்
வெறியால் இவள் உயிர் மீட்க என்றோ வென்றி வேல் வலத்தீர்
சிறியார் மனையில் வந்தீர் தஞ்சைவாணன் சிலம்பின்-நின்றே
** வெறிவிலக்கியவதனாற் செவிலி பாங்கியை வினாதல்

#299
மண் குன்ற வந்த கலியினை மாற்றிய வாணன் தஞ்சை
ஒண் குன்ற மங்கையர் முன்னர் மின்னே உமையாள் மகனைப்
பண் குன்ற வென்ற சொல் வள்ளி-தன் கோனைப் பைம் தார் அயிலால்
வெண்குன்று எறிந்த செவ்வேளை இவ்வாறு என் விளம்பி
** தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்

#300
போர் உறை தீக் கணை போலும் நின் கண் கண்டு போத அஞ்சி
நீர் உறை நீலமும் நீயும் நண்பாக என்று நின் மகட்கு ஒர்
தார் உறை தோளவர் தந்தனர் வாணன் தமிழ்த் தஞ்சை சூழ்
கார் உறை சோலையில் யாம் விளையாடிய காலையிலே
** புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்

#301
ஒழி தோற்றிய சொல்லல் உன் மகள் ஓதிக்கு உடைந்த கொண்டல்
பொழி தோல் திரள் உந்தி வந்த செம் நீர் உந்திப் பொற்பினுக்கு ஓர்
சுழி தோற்றிடும் பகை தீர்க்கின்ற போது ஒரு தோன்றலும் அவ்
வழி தோற்றி வந்து எடுத்தான் தஞ்சைவாணன் தென் வையையிலே
** களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்

#302
மண் அலையாமல் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வெற்பில்
அண்ணலை ஆய்_இழை_பாகன் என்று அஞ்சினம் அஞ்சனம் தோய்
கண் அலை நீர் இடப் பாகமும் மேல் வந்த கைக் களிற்றின்
புண் அலை நீர் வலப் பாகமும் தோயப் பொருத அன்றே
** தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை வினாதல்

#303
தண் தார் தழுவிய வேல் அண்ணல் வாணன் தென் தஞ்சை வெற்பில்
வண்டு ஆர் குழலி தன் வண்ணமும் கண்ணும் வடிவும் முன் நாள்
கண்டார் அறியும்படியனவே அல்ல காரணம் ஒன்று
உண்டால் உயிர்_அனையாய் அயிராமல் உரை எனக்கே
** செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால்
** அறத்தொடு நிற்றல்

#304
மலை வந்ததோ எனும் வாரண வாணன் தென்மாறை மதிச்
சிலை வந்ததோ எனும் நல்_நுதலாய் ஒரு செல்வர் இங்கு ஓர்
கலை வந்ததோ என வந்து வினாவி நம் காரிகைக்கு
முலை வந்ததோ இல்லையோ என்னும் நாளில் முயங்கினரே
** இத்துணையும் ஐம்பத்திரண்டாநாட் செய்தியென் றுணர்க

@21 உடன்போக்கு
** பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல்

#305
மை நீர் நெடும் கண் மடந்தையுடன் தஞ்சைவாணன் வெற்பா
செந்நீர் விழவு அணி நின் நகர்க்கே கொண்டு சேர்ந்து அருள் மற்று
இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால்
முந்நீர் உலகும் கொள்ளார் விலையாக முலையினுக்கே
** தலைமகன் மறுத்தல்

#306
பாரோ முலைவிலை என்பர் நின் கேளிர் என் பல் கிளை வாழ்
ஊரோ அணியது அன்று ஒண்_தொடியாய் விந்தை உண்கண்களோ
தாரோ வளரும் புயன் தஞ்சைவாணன் தரியலர் போல்
யாரோ தனி நடப்பார் அரும் கானம் இவளுடனே
** அவள் உடன்படுத்தல்

#307
சுருள் ஏய் குழலும் சுணங்கு ஏய் முலையும் சுமந்து கற்புப்
பொருளே எனச் சுரம் போதும் அப்போது புகழ் வெயிலான்
மருள் ஏய் கலி இருள் மாற்றிய வாணன் தென்மாறையில் நின்
அருளே ஒழிய உண்டோ நிழல் ஆவது அணங்கினுக்கே
** தலைவன் போக்கு உடன்படுதல்

#308
நஞ்சோ அழலோ எனும் சுரமே செல்ல நாடிய என்
நெஞ்சோ கொடியது நேர்_இழையாய் நிழல் மா மதியோ
மஞ்சோ தவழ் மதில் சூழ் தஞ்சைவாணன் வரை இலவம்
பஞ்சோ அனிச்சம்-கொலோ எனும் சீறடிப் பைம்_தொடிக்கே
** தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல்

#309
பால் அன்ன பாயல் பகை என்னும் சீறடி பட்டு உருவும்
வேல் அன்ன கூர்ம் கல் மிதிக்கும்-கொல் என்றனர் மேதினிக்கு
மால் அன்ன வாணன் தென்மாறை நல் நாட்டு வயல் உகளும்
சேல் அன்ன நீள்_விழியாய் தெரியாது அன்பர் சிந்தனை
** தலைவி நாணழிவு இரங்கல்

#310
மற வாகை வேல் அங்கை வாணனை மாறையர் மன்னனைத் தம்
உறவாக எண்ணி உறாதவர் போல் உயிர் ஓம்பி என்றும்
துறவாத நாணம் துறப்பது வேண்டலின் தொல் உலகில்
பிறவாது ஒழிகை நன்றே ஒருகாலமும் பெண் பிறப்பே
** கற்பு மேம்பாடு பாங்கி கழறல்

#311
செம் நாள்_மலரின் திரு அன்ன கோலத் தெரிவையர்க்கு
மெய் நாண் உயிரினும் மிக்கது என்றால் விரவா அரசர்
தம் நாள் முறைமை தவிர்த்து அருள் வாணன் தமிழ்த் தஞ்சை நாட்டு
அ நாணமும் மடவாய் கற்பு நோக்க அழகிது அன்றே
** தலைவி யொருப்பட்டெழுதல்

#312
பலரே சுமந்த உரைகளும் தாயர்-தம் பார்வைகளும்
சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_
மலரே சுமந்த வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
அலரே சுமந்துசுமந்து இந்த ஊர் நின்று அழுங்குகவே
** பாங்கி சுரத்து இயல்பு உரைத்துழித் தலைமகள் சொல்லல்

#313
செல்லின் கொடிய களிற்று அண்ணல் வாணன் தென்மாறை மன்னன்
வில்லின் கொடிய புருவ மின்னே என் விளம்புதி நீ
சொல்லில் கொடிய நம் அன்னையைப் போல்பவர் சூழ்ந்திருக்கும்
இல்லின் கொடிய-கொல்லோ செல்லும் நாட்டு அவ் இரும் சுரமே
** பாங்கி கையடை கொடுத்தல்

#314
வட மால் வரை நிரை சாயினும் வண் புயல் வாரி புகும்
கடன் ஆகிய நெறி கைவிட நீங்கினும் கந்து அலைக்கும்
அடல் மா களிற்று அன்ப நின்னை_அன்னார் பின்னை என்னை என்னார்
உடன் ஆய கேண்மை ஒழிந்து அறியார் இவ் உலகத்திலே
** (இது பிறசெய்யுட் கவி)
** பாங்கி வைகிருள் விடுத்தல்

#315
பொழி நான மன்றல் அம் பூம் குழல் நீங்கள் புணர்ந்து செல்லும்
வழி நாடி நும் பின் வருகுவல் யான் தஞ்சைவாணன் வையைச்
சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா
மொழி நா அடங்க மொழிந்து அயலாரை முகம் கவிழ்த்தே
** தலைமகளைத் தலைமகன் சுரத்து உய்த்தல்

#316
தளி போல் கொடை பயில் சந்திரவாணன் தமிழ்த் தஞ்சையான்
அளி போல் குளிர்ந்த இள மரக் காவும் அவன் புகழின்
ஒளி போல் விளங்கிய வெண் மணல் யாறும் உவந்து கண்டு
நளி போது அவிழ் குழலாய் மெல்லமெல்ல நடந்தருளே
** தலைமகன் தலைமகள் அசைவு அறிந்து இருத்தல்

#317
வர மாமை வேல் படை வாணன் தென்மாறை வணங்கலர்கள்
புரமான வல் அழல் பொங்கு வெம் கானில் பொருந்திய கூர்
அரம் மான கல் உன் அடி மலர் ஆற்றல ஆதலின் நாம்
சுரம் ஆறும் எல்லை நல்லாய் இருப்பாம் இந்தச் சோலையிலே
** உவந்து அலர் சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தல்

#318
அடி மலர் போற்றவும் போற்றி அன்பால் இவள் ஆய் முடிக்கு யான்
கடி மலர் சூட்டவும் காட்டியதால் கள்வர் காய்ந்து எறியும்
துடி மலர் சீர்க்கு எதிர் கூகை இரட்டும் சுரத்திடை ஓர்
வடி மலர் வேல் படையான் வாணன் மாறை என் மா தவமே
** கண்டோர் அயிர்த்தல்

#319
சையத் திரள் புயன் சந்திரவாணன் தனி புரக்கும்
வையத்து உறைகின்ற மானிடரோ அன்றி வானவரோ
நையப் படும் அழல் வெம் சுரத்தூடு நடந்தவர் என்று
ஐயப்படுவது அல்லால் உண்மை சால அறிவு அரிதே
** கண்டோர் காதலின் விலக்கல்

#320
மாலும் திருவும் என வருவீர் தஞ்சைவாணன் தெவ் ஊர்
போலும் சுரம் இனிப் போக ஒண்ணாது பொருப்பு அடைந்தான்
ஆலும் புரவி அருக்கன் இக் கங்குல் அடல் கட மான்
பாலும் தசையும் உண்டே தங்குவீர் எங்கள் பாடியிலே
** கண்டோர் தன் பதி அணிமை சாற்றல்

#321
தொடங்கும் பிறை நுதல் தோகையும் நீயும் முன் தோன்றுகின்ற
கடம் குன்று இரண்டும் கடந்து சென்றால் கமலத் தடமும்
கிடங்கும் புரிசையும் சூழ்ந்து எதிர் தோன்றும் கிளைத்த பைம் தார்த்
தடம் குங்கும நெடும் தோள் வாணன் மாறையும் தஞ்சையுமே
** தலைவன் தன் பதி அடைந்தமை சாற்றல்

#322
சந்தனம் தோய்ந்து தயங்கு முத்தாரம் தரித்து விம்மும்
நம் தனம் தாங்கி நடுங்கு இடை போல நடந்து இங்ஙனே
நொந்தனம் கால் என்று நோவல் பொன்னே ஒரு நோயும் இன்றி
வந்தனம் காண் இது காண் வாணன் மாறை வள நகரே

@22 கற்பொடு புணர்ந்த கவ்வை
** செவிலி பாங்கியை வினாதல்

#323
நலம் புனை ஆயமும் நீயும் நற்றாயொடு நானும் நல் பொன்
சிலம்பு உயர் சோலையும் சிற்றிலும் பேரிலும் தெண் திரை மேல்
வலம்புரி ஊர் வயல் சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
புலம்புற மாதர் எங்கே மகளே தனிப் போயினளே
** பாங்கி செவிலிக்குணர்த்தல்

#324
வெறுத்தார் ஒறுத்து உரை மேலும் நம் கேளிர் விழைதல் இன்றி
மறுத்தார் அவற்கு மணம் அதனால் தஞ்சைவாணர் பிரான்
கறுத்தார் புரத்து நடந்தனள் காளை பின் காமர் கற்பால்
பொறுத்தாள் அழல் சுரம்-தன்னை அன்னாய் நின் பொலம்_கொடியே
** பாங்கியின் உணர்ந்த செவிலி தேற்றுவோர்க்கு
** எதிரழிந்து கூறல்

#325
மாறா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை என்-கண்
ஆறா அரும் துயர் ஆற்றுகின்றீர் அறிவே கொளுத்தி
ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல்
கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே
** செவிலி தன் அறிவின்மை தன்னை நொந்துரைத்தல்

#326
வழியா வரும் பெரு நீர்த் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
கழியாத அன்புடைக் காளை பின் நாளைக் கலந்து கொண்டல்
பொழியாத வெம் சுரம் போகுவல் யான் என்று போம் குறிப்பால்
ஒழியாது என் முன்பு சொன்னாள் பேதையேன் ஒன்றை ஓர்ந்திலனே
** செவிலி தெய்வம் வாழ்த்தல்

#327
இணங்கிப் புவனத்து எவரும் இல்லா என் இளம்_கொடியாள்
உணங்கிக் கழிதல் ஒழிய என்-பால் வர உன்னை அன்பால்
வணங்கிப் பல முறை வாழ்த்துகின்றேன் தஞ்சைவாணன் தெவ்வை
அணங்கித் திரள் புயத்தான் மலயாசலத்து ஆரணங்கே
** செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்

#328
சகம் நல்க வந்து அருள் சந்திரவாணன் தென் தஞ்சை நல்லாய்
முகம் நல்கி நல்க முலைகொடுத்தாரின் முத்தம் கொடுத்தார்
மிக நல்லர் என்பது மன்பதை தேற விடலை பின்னே
மக நல்கும் மந்தி அம் கான் நடந்தாள் உன் மடந்தை இன்றே
** நற்றாய் பாங்கியொடு புலம்பல்

#329
முன்னே இதனை மொழிந்தனையேல் நுந்தை முந்தை மணம்
பின் ஏய் குழலி பெறாள் அல்லளே பிறழாது எவர்க்கும்
தன் நேயம் வைத்து அருளும் தஞ்சைவாணன் தமிழ்ச் சிலம்பில்
பொன்னே அனைய நல்லாய் அவமே சுரம் போக்கினையே
** அதுகேட்ட பாங்கி அழுங்கக் கண்டு நற்றாய் புலம்பல்

#330
இல்லும் கழங்கு ஆடிடங்களும் நோக்கி இரங்கல் வம்பும்
வல்லும் பொரும் கொங்கை மங்கை நல்லாய் தஞ்சைவாணன் ஒன்னார்
புல்லும் துணைவியர் போல் வினையேன் பெற்ற பூவை_அன்னாள்
செல்லும் சுரத்து அழல் அன்று உன் கண்ணீர் என் தெறுகின்றதே
** நற்றாய் பாங்கியொடு புலம்பல்

#331
நேயம் புணை துணையாக வெம் கானகம் நீந்தல் எண்ணி
ஆயம் புலம்ப அகன்றனளோ கல்லகம் குழைய
மாயம் புகல் ஒரு காளை பின் வாணன் தென்மாறை_அன்னீர்
சே அம்புய மலர் போல் அடி நோவ என் சில்_வளையே
** நற்றாய் அயலார் தம்மொடு புலம்பல்

#332
மேனாள் வரம்கிடந்து என் போல் வருந்தி மிகவும் மெய் நொந்து
ஈனாதவர் துன்பம் எய்துவரோ இமையோர் உலகம்
தான் நாண நீடு மதில் தஞ்சைவாணன் தமிழ்ச் சிலம்பின்
மான் ஆர் விழி_அனையாள் விளையாடிய வண்டல் கண்டே
** நற்றாய் தலைமகள் பயிலிடம் தம்மொடு புலம்பல்

#333
செயலைத் தருவின் திரு நிழலே பெரும் சிற்றில்லமே
வயலைக் கொடி நொச்சி மண்டபமே தஞ்சைவாணன் ஒன்னார்
இயலைத் தனித்தனி தந்தனளே நமக்கு இன்று அது அன்றோ
கயலைப் பொருத கண்ணாள் மேலும் வாழ்விக்கும் கட்டளையே
** நிமித்தம் போற்றல்

#334
வடி ஏய் புகர் முக வாள் வல வாணன் தென்மாறையுள் யான்
அடியே தொழும் தெய்வமாக நின் பேணி அரும் பலி இப்
படியே தருகுவல் என்று மின்னே இப் பதி உவகைக்
கொடியே வரக் கரை நீ கொடியேன் பெற்ற கொம்பினையே
** சுரம் தணிவித்தல்

#335
வெம் சுர நாடு வியன் சுரலோகமும் வெம் கடும் கான்
ஐஞ்சுர தாரு வனங்களும் ஆக அகில் புகை போல்
மஞ்சுர ஆடக மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில்
பஞ்சுரம் ஆகும் மொழிச் சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே
** தன் மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல்

#336
தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லைத் தண் அனிச்சப்
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும்
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய்
ஆமே நடக்க அரு வினையேன் பெற்ற அம் அனைக்கே
** (இது பிறசெய்யுட்கவி)
** இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கல்

#337
இரும்பா மனம் கொண்டவாறு என்னை நீ தன்னை ஏத்தி என்றும்
வரும் பாவலர்க்கு அருள் வாணன் தென்மாறை வள வயலில்
கரும்பு ஆர் மொழியாய் அழல் என்று கண்ணீர் துடைத்து அணைத்து உன்
அரும்பா முலை செய்ய வாய்ப் பசும் பாவைக்கு அளிக்கும் மின்னே
** அச்சத்தன்மைக்கு அச்சமுற்று இரங்கல்

#338
நாள் மாதவி மலர் நாறு இரும் கூந்தல் நடந்த வழிக்
கோள்மா குமிறும் கொடும் குரல் கேள்-தொறும் கூர் கணையால்
வாள் மா முனை வென்ற வாணன் தென்மாறை மணி வரை வேய்த்
தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே
** கண்டோர் இரக்கம்

#339
நொந்தும் கலுழ்ந்தும் துணைவியர் ஆற்றலர் நோக்கொடு இன் சொல்
தந்தும் கவையும் தணந்து சென்றாள் எனத் தாள் பணியார்
மைந்தும் கதமும் கடிந்து அருள் வாணன் தென்மாறை_அன்னாள்
பந்தும் கழங்கும் எல்லாம் கண்டு வாடும் பயந்தவளே
** செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றல்

#340
நன்றே இது என்று முகம் முகம் நோக்கி நகை நகையா
மன்றே அலர் சொல்லும் மாதர் முன்னே தஞ்சைவாணன் தொல் சீர்
சென்றே பரந்த திசைகள் எல்லாம் சென்று தேர்ந்து அணங்கை
இன்றே தருவன் அன்னே வருந்தாது இங்கு இருந்தருளே
** ஆற்றிடை முக்கோல் பகவரை வினாதல்

#341
ஒரு வெண்குடை இரு நீழல் முக்கோல் கொண்டு ஒழுக்கத்தினால்
அரு வெம் களர் இயைந்து ஆறு செல்வீர் அருளீர் எழு பார்
மருவு எண் திசை புகழ் வாணன் தென்மாறை என் வஞ்சி_அன்னாள்
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே
** மிக்கோர் ஏதுக் காட்டல்

#342
இயங்கா வனம் என் மகள் ஒரு காளை பின் ஏகினள் என்று
உயங்காது ஒழி அஃது உலகு இயல்பால் உலவும் புயல் தோய்
வயங்கு ஆடக மதில் சூழ் தஞ்சைவாணன் மணம் கமழ் தார்
புயம் காதல்கொண்டு அணைந்தாள் அயனார் தந்த பூமகளே
** செவிலி எயிற்றியொடு புலம்பல்

#343
செரு மகள் ஏயும் புயத்து அயலான் பின் செல விடுத்து என்
ஒரு மகளே என்று உனை அயிர்த்தேன் புனை ஓவியம் போல்
வரு மகளே தஞ்சைவாணன் ஒன்னார் துன்னும் வன் சுரத்து ஓர்
அரு மகளே உரையாய் அவள் போன அதர் எனக்கே
** செவிலி குரவொடு புலம்பல்

#344
இரவு ஏய் குழலி இன்று ஏதிலன் பின் செல்லல் என்று சொல்லாக்
குரவே அறவும் கொடியை கண்டாய் கொடிக் கோகனகம்
தரவே என வந்த சந்திரவாணன் தரியலர் போம்
சுர வேய் அழல் வழியே தனிப் போய என் தோகையையே
** சுவடு கண்டு இரங்கல்

#345
தொடு சிலைக் கானவர் ஓடிய வேற்றுச் சுவடு உவையே
அடு சிலைக் காளை அடி அவையே அறிந்தோர் அறிய
இடு சிலைப் பார் புரக்கும் தஞ்சைவாணன் இசைக்கு உருகப்
படு சிலைப் பாவை பதம் இவையே வண்டு பாடுகவே
** செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்

#346
யான் அகம் போத வருந்த நும் போல் வனப்பு எய்தி வெய்ய
கானகம் போயினர் கண்டனிரோ கற்ப காடவி சூழ்
வானகம் போர் பயில் வானவற்கு ஈந்து அருள் வாணன் தஞ்சைத்
தேன் நகு அம்போருக மாது_அனையாளும் ஒர் செல்வனுமே
** கலந்துடன் வருவோர் புலம்பல் தேற்றல்

#347
யான் கண்ட அண்ணலும் எண் அரும் காதலின் ஏகிய என்
மான் கண்டு அன கண் மயில் கண்ட மாதரும் மா தருமம்
கான் கண்ட தண்ணளிச் சந்திரவாணன் தரியலர் போம்
கான் கண்ட மெய் குளிரப் பொய்கை சூழ் தஞ்சை காண்பர்களே
** செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல்

#348
நாணினும் தார் அணி கற்பு நன்று என்று நயந்து முத்தம்
பூணினும் பாரம் இது என்னும் என் பொன்னை இப்போது எனக்குச்
சேணினும் சார் புகழ் வாணன் தென்மாறை மன் சேரலரைக்
காணினும் காண அந்தோ அரிதால் இந்தக் கானிடையே
** இதுகாறும் ஐம்பத்து மூன்றாநாட் செய்தியென்றுணர்க

@23 மீட்சி
** தலைவி சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தல்

#349
ஏடு ஆர் மலர்க் குழல் வல்லியை அன்னை இத் தீவினையேன்
நாடா இடம் இல்லை ஞாலத்து அகல்-வயின் நன் கமலக்
காடு ஆர் பழனக் கழனி நல் நாடு கடந்து தன் ஊர்
வாடா வள மனை கொண்டுசென்றான் ஒரு வள்ளல் இன்றே
** (இது பிறசெய்யுட் கவி)
** தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றல்

#350
நினை யான் எதிர்ப்பட்ட நீடு இரும் குன்று இது நீ குடைந்த
சுனையாம் அது மலர்ச் சோலைகளாம் உவை தூய வண்டல்
மனையாம் இவை இனி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல்
இனையாது எழுந்தருள் மான்_அனையாய் நம் எழில் நகர்க்கே
** தலைவி முன்செல்வோர் தம்மொடு தான் வரல்
** பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல்

#351
புனை அலர் ஏதிலர் காதலர் தாயர் பொறாமையில் போய்
இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன்
வனை கழலானும் வருவது எல்லாம் சென்ற வாணன் தஞ்சை
துனைவுடன் ஏகுகின்றீர் சொல்லுவீர் என் துணைவியர்க்கே
** முன்சென்றோர் பாங்கியர்க்கு உணர்த்தல்

#352
போது அலர்ந்து அல்லை முனியும் மெல் ஓதிப் புனை_இழை தன்
காதலன் பின் வரக் கண்டனம் யாம் கண்டல் வேலி முந்நீர்
மா தலம் தன் இரு தோள் வைத்த வாணன் தென்மாறை வண்ணச்
சூது அலந்து ஒல்க விம்மித் திரள் மா முலைத் தோகையரே
** பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உரைத்தல்

#353
வாள் ஏய் விழி நின் மயில்_அனையாள் தஞ்சை வாணன் வெற்பில்
வேளே அனைய விடலை பின்னே சுரம் மீண்டு இனி நம்
கேள் ஏய் பதி வரும் என்ன நல்லோர் சொல்லக் கேட்டனம் இ
நாளே அனைய நல் நாள் உளவோ சென்ற நாள்களிலே
** நற்றாய் கேட்டவன் உளங்கோள் வேலனை வினாதல்

#354
தென்மாறை நல் நகர் மன்னவன் வாணன் செழும் தஞ்சை சூழ்
பொன் மாதிரத்துப் புலன் உணர்வீர் சுரம் போய் வருவோன்
என் மானை என் மனையில் தருமோ தன்னை ஈன்ற நற்றாய்
தன் மா நகர் உய்க்குமோ சொல்லுவீர் ஒன்றுதான் எனக்கே
** இதுகாறும் ஐம்பத்து நான்காநாட் செய்தியென் றுணர்க

@24 தன்மனை வரைதல்
** நற்றாய் மணன் அயர் வேட்கையில் செவிலியை வினாதல்

#355
தாமாக மேவினும் நம் மனைக்கே வந்து தண் சிலம்பு ஆர்
மா மாதினை மணம்செய்வதற்கே மருவார் கமலப்
பூமாது கேள்வன் புகழ்த் தஞ்சைவாணன் பொருப்பில் இனி
ஆமாறு உயிர்_அனையாய் சொல்வமோ அவர் அன்னையர்க்கே
** செவிலிக்கு இகுளை வரைந்தமை உணர்த்தல்

#356
என்னாம் இயம்புவது யாய்க்கு இனி நாம் அன்னை இன்று தம் இல்
கொன் ஆரும் நித்திலக் கோதை நம் மாதைக் கொடி நெடும் தேர்க்
கன்னாடர் மண் கொண்ட வாணன் தென்மாறையில் காதலர் தாம்
நல் நாள் மணம்புணர்ந்தார் என்று தூதர் நவின்றனரே
** வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல்

#357
எனைக் கேளிரும் நின்று இயற்ற அங்கே மண இன்பம் எய்தி
அனைக் கேண்மை நண்ணிய அண்ணல் பின்னாக நம் அன்னை இன்று இ
மனைக்கே வரும் என வந்து சொன்னார் தஞ்சைவாணன் வெற்பில்
சுனைக் கேழ் நனைக் கழுநீர்க் குழலாய் சில தூதர் இன்னே
** தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க்கு
** இயம்பு சென்று என்றல்

#358
கோபுரம் சோலை கொடி மதில் மாடம் குலாவு இமையோர்
மா புரம் போலும் தென்மாறை வரோதயன் வாணன் வெற்பில்
நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய்
நூபுரம் சூழ் அடியாய் சென்று கூறு நுமர்-தமக்கே
** பாங்கி தான் அது முன்னே சாற்றியது உரைத்தல்

#359
அன்னைக்கு இயம்பினன் ஆண்டகை யான் முன் அறிந்து தென்னன்-
தன்னைப் பணிந்து குற்றேவல்செய்யாது சமர்க்கு எழுந்த
மன்னைப் புறம்கண்ட வாணன் தென்மாறை வரையில் எங்கள்
பொன்னைப் புணர்ந்து நும் கேள் முன்னர் நீ பொன் புனைந்ததுவே

@25 உடன்போக்கு இடையீடு
** நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத்
** தன் செலவு உணர்த்தி விடுத்தல்

#360
வள வேய் மிடைந்த வழிப் படர்வீர் செம் கை வாணன் தஞ்சைத்
தளவு ஏய் நகை என் துணைவியர்-பால் சென்று சாற்று-மின் போர்க்
கள வேள் அனைய ஓர் காளை பின் போயினள் கான் பனி நீத்து
இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே
** தலைமகள் தன் செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தல்

#361
வாயார நுங்களை வாழ்த்துகின்றேன் தஞ்சைவாணன் வெற்பில்
சாயாத மா தவத் தாழ் சடையீர் அன்பர் தம்மொடு இன்று யான்
சே ஆறு தேர் மிசைச் செல்வது எல்லாம் எங்கள் சேரியில் சென்று
யாய் ஆகிய கொடியாட்கு இனிதாக இயம்பு-மினே
** நற்றாய்க்கு அந்தணர் மொழிதல்

#362
மருள் கொண்ட சிந்தை மலை கிழவோய் தஞ்சைவாணன் வெற்பில்
வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை
அருள் கொண்ட நெஞ்சின் ஓர் அண்ணல் பின்னே அகன்றாள் அகல் வான்
இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே
** நற்றாய் அறத்தொடு நிற்றலின் தமர்பின் சேறலைத்
** தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல்

#363
உவலைப் பதுக்கை முரம்பு செல்லாமல் உலக மங்கை
தவலைத் தவிர்த்த தமிழ்த் தஞ்சைவாணன் தரியலர் போல்
கவலைக் கடத்துச் சிலைத் திரை கோலிக் கடும் பகழித்
துவலைப் படைக் கடல் தோன்றல் பொன் தேர் வங்கம் சூழ்கின்றதே
** தலைமகளைத் தலைமகன் விடுத்தல்

#364
ஆறலை வெம் சிலைக் கானவரேல் என் கை அம்பு ஒன்றினால்
நூறலை அஞ்சலன் நுண்_இடையாய் நுமரேல் அவர் முன்
சேறலை அஞ்சுவல் செல்வல் பைம் பூகச் செழும் பழுக்காய்த்
தாறு அலை தண்டலை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே
** தமருடன் செல்பவள் அவன் புறம் நோக்கிக் கவன்று ஆற்றல்

#365
ஏ மான் என அஞ்சும் என் காத்தலின் அவ் இரவி பொன் தேர்
வாமானின் வாழ்வனவாக பல் நாள் தஞ்சைவாணன் ஒன்னார்
போம் மான் அதரிடத்து என் ஐயர் தோன்றப் புறங்கொடுத்த
கோமான் மணி நெடும் தேர் நுகம் பூண்ட குரகதமே
** இதுகாறும் ஐம்பத்தைந்தாநாட் செய்தியென் றுணர்க

@26 வரைதல்
** சென்றோன் மீண்டுவந்து அந்தணரையும் சான்றோரையும் முன்னிட்டு
** வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல்

#366
சேல் ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தென்மாறையில் நம்
வேலான் எனப் பிறர் வேட்டவர் யார் மணம் வெண் துகிலின்
பால் ஆர் அமளியும் பாற்கடல் ஆனது பங்கயக் கண்
மால் ஆயினன் இவனும் திரு ஆயினள் மாதும் இன்றே
** இரண்டாவது வரைவியல் முற்றிற்று

&3 கற்பியல்

@27 இல்வாழ்க்கை
** தலைவன் தலைவி முன் பாங்கியைப் புகழ்தல்

#367
நின் மேல் அடுத்த பசலையின் காரணம் நின் துணைவி
என் மேல் அடுத்த இயல்பின் அன்றோ பெற்றது ஏழ் உலகும்
தன் மேல் அடுத்த புகழ்த் தஞ்சைவாணன் தமிழ்க்கிரி நுண்
பொன் மேல் அடுத்தன போல் சுணங்கு ஈன்ற புணர் முலையே
** தலைவனைப் பாங்கி வாழ்த்தல்

#368
தெரி ஆடக இதழ்ப் பூம் கொன்றை வேணியும் தேவியும் போல்
பிரியாது உறையப் பெறுகுதிரால் பிறை மானும் நெற்றிப்
புரி யாழ் நிகர் மொழிப் பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ்
வரி ஆர் சிலை அண்ணலே தஞ்சைவாணன் தென்மாறையிலே
** பாங்கி தலைவியை வரையும் நாளளவும்
** வருந்தாதிருந்தமை உரையாய் என்றல்

#369
கோங்க நல் மா முகைக் கொங்கை நல்லாய் மணம்கூடும் எல்லை
யாங்கனம் ஆற்றி இருந்தனை நீ இப மா சயிலம்
தாம் கனம் ஆறத் தலம் புனை வாணன் தமிழ்த் தஞ்சை வாழ்
பூம் கனம் ஆர் குழலார் அலர் மாலைப் பொறை சுமந்தே
** பெருமகள் உரைத்தல்

#370
மை தோய்ந்து அலர்ந்த மலர்த் தடம் சூழ் தஞ்சைவாணன் ஒன்னார்
மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர்
கை தோய்ந்து அளிப்ப அசோகத்தவாய் நிறம் கால்வனவாய்
நெய் தோய்ந்து அன தழையே புணையாக் கொண்டு நீந்தினனே
** தலைவனைப் பாங்கி வரையும் நாளளவும்
** நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல்

#371
வரையும் இ நாள் அளவு எவ்வாறு நீர் எம் மடந்தை முகை
புரையும் மென் கொங்கை பிரிந்திருந்தீர் முன் பொருப்பு எடுத்தே
நிரையும் இ ஞாலமும் காத்தருள் தானன் பதாகையின் நீள்
திரையும் குயிலும் விடாது எழும் ஓசை செவிமடுத்தே
** (இது பிறசெய்யுட் கவி)
** மன்றல் மனை வரு செவிலிக்கு இகுளை அன்புற உணர்த்தல்

#372
வளம் கொண்ட தஞ்சை வரோதயன் வாணன் தென்மாறை_அன்னாள்
இளம் கொங்கை கொண்டு உழுது ஈரம் கொள் மார்பின் முத்து ஏற்ப வித்தி
விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர்
உளம் கொண்டு அருத்துதலால் அன்னை ஊரன் உவப்புறுமே
** பாங்கி இல்வாழ்க்கை நன்று என்று செவிலிக்கு உரைத்தல்

#373
சின வேய் சுளியும் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் நம்
மனவு ஏய் அகல் அல்குல் வல்லி_அன்னாள் மறையோர் முதலாம்
சன வேதனை கெடத் தானங்கள் ஈதலின் சாலவும் நன்று
எனவே நடக்கின்றதால் அன்னை நாள்-தொறும் இல்லறமே
** மணமனைச் சென்றுவந்த செவிலி
** பொற்றொடி கற்பியல் நற்றாய்க்கு உணர்த்தல்

#374
ஒன்றோ நமக்கு வந்து எய்திய நன்மை உடன்று எதிர்ந்தார்
வன் தோல் அமர் வென்ற வாள் படை வாணன் தென்மாறையில் வாழ்
நின் தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு
அன்றோ வடக்கிருந்தாள் மடப் பாவை அருந்ததியே
** நன்மனை வாழ்க்கைத் தன்மை உணர்த்தல்

#375
விண் மேல் அமரர் விரும்பு அமராவதி வெள்ள முந்நீர்
மண் மேல் அடைந்து அன்ன வாழ்க்கையது ஆனது வாணன் தஞ்சை
பண் மேல் அளி முரல் குங்குமத் தோளவர் பங்கயம் போல்
கண் மேல் அருள் பெற்று வாழ் மட மாதர் கடி மனையே
** செவிலி நற்றாய்க்கு இருவர் காதலையும் அறிவித்தல்

#376
நனை அகத்து அல்கிய நாள்_மலர்_ஓதி நயந்து உறையும்
மனையகத்து அல்லிடை வைகுதலால் தஞ்சைவாணன் ஒன்னார்
வினையகத்து அல்குதல் செல்லுவரேனும் அவ் வேந்தர் பொன் தேர்
முனையகத்து அல்கல் செல்லாது ஒருநாளும் முகிழ்_நகையே

@28 பரத்தையிற் பிரிவு
** காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு
** ஏது இதாம் அவ் இறைவிக்கு என்றல்

#377
மாறையர் காவலன் வாணன் தென் தஞ்சையில் வாள்_நுதற்கு இவ்
வாறு அயர் காரணம் ஆகும் என்றே கொங்கை யானையுடன்
சாறு அயர் வீதி அரிப் பறை ஆர்ப்பத் தயங்கு குழல்
சூறையர் சூறைகொள்வான் வயலூரனைச் சூழ்ந்தனரே
** தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கல்

#378
வன் போது அணி தொங்கல் வாணன் தென்மாறை மகிழ்நர் நம் மேல்
அன்போடு நல் நெஞ்சு அறிவு அறைபோக அழலுள் வெந்த
பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து
என் போல் எவர் இங்ஙனே இமையாமல் இருப்பவரே
** ஈங்கு இது என் எனப் பாங்கி வினாதல்

#379
எம்மாதிரமும் புரவலர்த் தேடி இரந்து உழல்வோர்-
தம் மா துயரம் தணித்து அருள் வாணன் தமிழ்த் தஞ்சை வாழ்
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ
விம்மா வருந்துவது என் பிரிந்தாரின் விளங்கு_இழையே
** இறைமகன் புறத்தொழுக்கு இறைமகள் உணர்த்தல்

#380
தார் ஆகம் நல்கினர் காரிகையாய் தஞ்சைவாணன்-தன்னைச்
சேராதவர் என்னத் தீவினையேன் நையச் செம் கண் வன்கண்
காரா கழனிக் கரும்பு இனம் சாயக் கதழ்ந்து செந்நெல்
ஆராது அயலில் பைஞ்சாய் ஆரும் ஊரர் அயலவர்க்கே
** தலைவியைப் பாங்கி கழறல்

#381
புனை அலங்காரம் நம் கற்பியல் போற்றியும் போற்று அரும் சீர்
மனையறம் பாலித்தும் வாழ்வது அல்லால் தஞ்சைவாணன் நல் நாடு
அனைய வண்டு ஆர் குழல் ஆரணங்கே நமக்கு அன்பர் இ நாள்
இனையர் என்று ஆர்வம் இல்லா உரையாடல் இயல்பு அல்லவே
** தலைவி செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி
** அவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறல்

#382
வேளாண் மரபு விளக்கிய வாணன் மின் ஆர் கழல் சூழ்
தாளான் வளம் கெழு தஞ்சை_அன்னீர் சங்கம் தந்த நல் நீர்த்
தோளா மணி அன்ன தொல் குல ஓடையில் தோன்றிய பூ
வாளா அலர் தொடுப்பார்க்கு எங்ஙனே வந்து வாய்த்ததுவே
** பரத்தையர் கண்டு பழித்தல்

#383
படி ஒன்று சாலி_அனையவர் சேரிப் படர் பவளக்
கொடி ஒன்று நீலம் மலர்ந்தது காட்டக் கொடிய வெம் போர்
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன்
தொடி ஒன்று தோள் மடவார் சேரி-வாய் வந்து தோன்றியதே
** பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின்
** தலைவன் வரவு கண்டு வந்து வாயில்கள் மொழிதல்

#384
வார் உந்து பச்சிளநீர் முலையார் மதன் வாணன் தஞ்சை
யாரும் தொழத் தகும் எம் பெருமாட்டி-தன் ஏவலினால்
சேரும் பரத்தையர் சேரியிலே சென்ற சேடியைக் கண்டு
ஊரும் திரைப் புனல் ஊரன் வந்தான் இன்று உலகியற்கே
** வரவு உணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தல்

#385
தள்ளா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல்
உள்ளாது உனைப் பண்டு அகன்றனராயினும் உள்ளி இப்போது
எள்ளாது வந்து உன் கடையில் நின்றார் நம் இறைவர் குற்றம்
கொள்ளாது எதிர்கொள்வதே குணம் ஆவது கோமளமே
** தலைவனைத் தலைவி எதிர்கொண்டு பணிதல்

#386
மருவின் பெரு நலம் மன்னுவதாம் தஞ்சைவாணன் வெற்பர்
ஒருவின் பசலை உருக்குவதாம் நமக்கு ஊடல் எவ்வாறு
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லாத்
திருவின் புனை நறும் தார் வரை மார்பர் திருமுன் நின்றே
** புணர்ச்சியின் மகிழ்தல்

#387
மன்னவர் காம நெடும் கடல் வாணன் தென்மாறை_அன்னாள்
தொல் நலம் வார் முலை மத்தம் தழீஇத் தடம் தோள் இணையாம்
பன்னக நாணில் கடைந்து இதழ் வார் திரைப்பட்ட நல் நீர்
இன் அமிழ்து ஆர்ந்து இமையோர் அமையா இன்பம் எய்தினரே
** வெள்ளணி அணிந்து விடுத்துழித்
** தலைமகன் வாயில் வேண்டல்

#388
என்-பால் குறையை நினைந்து மறாது எதிர்கொள்ள வல்லே
தன்-பால் புலவி தணிக என்ற நீ தஞ்சைவாணன் வையம்
அன்பால் பரவும் புகழுடையான் அருளே_அனையாய்
உன்-பால் புலவியுறாள் வண்ண வார் குழல் ஒண்_நுதலே
** தலைவி நெய்யாடியது இகுளை சாற்றல்

#389
மலர் புரை ஏர் கொண்ட வாள் கண் எம் கோ மங்கை வாணன் தஞ்சைப்
பலர் புகழ் பாலன் பயந்து நெய்யாடினள் பாங்கு எவர்க்கும்
அலர் புரை நீடு ஒளி ஆடியுள் பாவை_அன்னாட்கு உள நீர்
புலர் புனல் ஊர என்னோ திருவுள்ளம் இப்போது உனக்கே
** தலைவன் தன் மனத்து உவகை கூறல்

#390
மை அணி வேல் விழி வாள்_நுதல் கூர்ந்தது வாணன் தஞ்சைக்
கொய் அணி நாள்_மலர்க் கொம்பர்_அன்னாள் குழவிப் பயந்து
நெய் அணி மேனியில் ஐயவி பூண்ட நிலை அறிந்தே
கை அணி வால் வளையைக் கண்ட நாளினும் காதன்மையே
** தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றல்

#391
ஏர் ஆர் புதல்வன் பிறந்தனன் வாழிய என்னும் முன்னே
வாரார் வள மனை வந்து நின்றார் கங்குல் வாணன் தஞ்சை
நீர் ஆவி நீல நெடும் கண் மின்னே நின்னை நீப்பது அல்லால்
தேராது ஒழிகுவரோ பெரியோர் தம் சிறுவனையே
** தலைவி உணர்ந்து தலைவனோடு புலத்தல்

#392
வயங்கு ஏழ் உலகும் புரக்கின்ற வாணன் தென்மாறை அன்ன
நயம் கேழ் பெரு வளம் நல்கும் நல் ஊர நயந்து நண்ணி
முயங்கேல் சிறுவன் பயந்த என் மேனியின் முத்து வடம்
தயங்கு ஏர் அகம் முழுதும் பழுதாம் அதுதான் நினக்கே
** தலைவி பாணனை மறுத்தல்

#393
தலை ஆகிய தன்மை ஊரற்கு வாணன் தமிழ்த் தஞ்சை சூழ்
மலை ஆகிய மதில் வையை நல் நாட்டு எங்கை மான் படுக்கும்
கலை ஆகும் நின் இசைக் கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னிப்
புலையா கடக்க எம் இல் போக போக புறங்கடையே
** வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறல்

#394
நினக்கே தகும் நின் நெடும் புனல் ஊரனும் நீயும் அவன்-
தனக்கே தகுவை தமிழ்த் தஞ்சைவாணன் தடம் கிரி சூழ்
புனக் கேகயம் அன்ன நின் அடி போற்றிப் புகன்று கன்றும்
எனக்கே தகும் மிகையால் எம்பிராட்டி எறிந்த கல்லே
** விறலி வாயில் மறுத்தல்

#395
வண் புனல் ஊர் வையை சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல்
கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே
தண் புனல் ஊரன் வந்தான் என்று சாற்றினை தானம் உறப்
பண் புனல் ஊர்கள் எல்லாம் பாடி ஏற்று உண்ணும் பாண்மகளே
** விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு
** இறையோன் மகிழ்தல்

#396
புரவே எதிர்ந்த நமக்கு விருந்து இன்று போல என்றும்
வரவே புணர்ந்த நம் மா தவம் வாழிய வாணன் தஞ்சைக்
குரவு ஏய் கரு முகில் கொந்தளபாரம் குரும்பைக் கொங்கை
அரவு ஏய் நுடங்கு இடையாள் விழி ஊர் சிவப்பு ஆற்றுதற்கே
** விருந்து கண்டு ஒளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்
** சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்

#397
தெரியோர் பொருட்டு அன்று தேர்வு இன்றி ஊடல் செயிர்த்தவர்க்குக்
கரியோர் தெளித்து என்ன காரணம் காட்டுவர் கான் உண்டு தேன்
வரி ஓர் தொடைப் புயன் வாணன் தென்மாறை மலர்த் திருவே
பெரியோர் பொறுப்பர் அன்றே சிறியோர்கள் பிழைத்தனவே
** இஃது எங்கையர் காணின் நன்றன்று என்றல்

#398
எண் போன நெஞ்சமும் நீரும் என் பாதம் இறைஞ்சுதல் நும்
கண் போலும் எங்கையர் காணின் நன்றோ கயல் மாதிரத்துத்
திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ்
வண் போது அளவிய நீர் வையைநாட்டு உறை மன்னவரே
** அங்கு அவர் யாரையும் அறியேன் என்றல்

#399
மன்னும் புலவியை மாற்றியும் தேற்றியும் வல்ல வண்ணம்
இன்னும் தெளிந்திலை என்னை என்னே என் செய்கேன் இதற்கு
முன்னம் படிந்து முழுகி நல் நீர்க் கங்கை முன் உறையும்
அன்னம் படியும்-கொல்லே உவர் ஆழியில் ஆரணங்கே
** (இது பிறசெய்யுட்கவி)
** காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல்

#400
போயே தெருவில் தனி விளையாடும் புதல்வன் புல்ல
நீ ஏதிலை அல்லை நின் மகனே இவன் நீயும் அவன்
தாயே வருக எனச் சேய் அன்ன வாணன் தமிழ்த் தஞ்சை மான்
ஏயே என நிற்றலான் அறிந்தேன் தன்னை எங்கை என்றே
** தலைவியைப் பாங்கி தணித்தல்

#401
மா வாரணம் அன்ன வாணன் தென்மாறை நம் மன்னர் நின்னைப்
பாவாய் பணியவும் பார்க்கிலை நீ இடப் பாக மங்கை
தாவாத சங்கரன் கங்கை-தன் கொங்கை தழீஇ இதழிப்
பூ ஆர் சடை முடி மேல் வைத்த போதும் பொறுத்தனளே
** தலைமகள் புலவி தணியாளாகத் தலைமகன் ஊடல்

#402
தழங்கு ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன்-தனது அருள் போல்
பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன்
கழங்கு ஆடிடமும் கடி மலர்க் காவும் கடந்து புள்ளும்
வழங்கா வழி நமக்கு ஓர் துணையாய் வந்த மான் அல்லளே
** பாங்கி அன்பிலை கொடியை எனத்
** தலைவனை இகழ்தல்

#403
மை நாள்_மலர்த் தொடை வாணன் தென்மாறை எம் மன்ன உவந்து
அ நாள் முயங்கி அமிழ்து என ஆர்ந்தனிர் ஆர்வமுற்ற
மு நாள் மதி வட்ட மென் முலை மாதை முனிந்து நஞ்சு என்று
இ நாள் மிக உவர்த்தீர் புலவாநிற்றிர் எங்களையே
** ஆயிழை மைந்தனும் ஆற்றாமையும்
** வாயிலாக வரவு எதிர்கோடல்

#404
வெள்ளம் பரந்து அன்ன வேட்கை சென்றாலும் மிகப் பெரியோர்
உள்ளம் சிறியவர் மேல் செல்வரோ ஒளிர் கோமளம் செய்
வள்ளம் கமல மலர்த் தஞ்சைவாணன் தென்மாறை அன்னப்
புள் அம் புனல் வயல் ஊர புன் காமம் புகல்வது அன்றே
** மணந்தவன் போய பின் வந்த பாங்கியோடு இணங்கிய
** மைந்தனை இனிதில் புகழ்தல்

#405
இருமையில் ஏயும் பயன்கள் எல்லாம் தன்னை ஈன்ற நமக்கு
ஒருமையிலே வந்து உறத் தகைந்தான் மைந்தன் ஒண் சுடர் போல்
வரும் அயிலே கொண்டு மா தடிந்தான் அன்ன வாணன் தஞ்சைத்
திரு மயிலே_அனையாய் புனல் ஊரனைத் தேருடனே
** தலைவி தலைவனைப் புகழ்தல்

#406
கொண்டானில் துன்னிய கேளிர் மற்று இல்லைக் குறிப்பின் என்று
தண்டாதவர் சொன்ன சால்பு கண்டேன் தலம் ஏழ் புரக்கும்
வண்டு ஆர் மலர்ப் புயன் வாணன் தென்மாறை மகிழ்நர் முன் நாள்
உண்டாகிய பழம் கேண்மை இந்நாளும் ஒழிந்திலரே
** பாங்கி மனைவியைப் புகழ்தல்

#407
சிறந்தார் புகழ்தரும் தீம் புனல் ஊரன் செய் தீமை எல்லாம்
மறந்து ஆர்வம் எய்தி வணங்குதலால் இவள் வாணன் தஞ்சை
நிறம் தாரகை அன்ன நித்திலம் போலும் நெடும் குலத்தில்
பிறந்தார் நிறைந்த கற்பு ஓர் வடிவே பெற்ற பெற்றியளே

@29 ஓதல் பிரிவு
** கல்விக்குப் பிரிவு தலைமகனால் உணர்ந்த
** தோழி தலைமகட்கு உணர்த்தல்

#408
மல் வித்தகம் கொண்ட தோளுடையான் தஞ்சைவாணன் தொல் சீர்
நல் வித்து அகன் புவி நாவில் வைத்தோன் வையைநாடு_அனையாய்
கல்வித் தடம் கடல் நீந்திய காதலர் கற்றவர் முன்
சொல் வித்த என்று அழல் ஆர் சுரம் போகத் துணிந்தனரே
** தலைமகள் கார்ப்பருவம் கண்டு புலம்பல்

#409
யாணர்க் குழல்_மொழி என் செய்குவேன் கல்வி எல்லை எல்லாம்
காணப் பிரிந்தவர் காண்கிலரால் கடல் மேய்ந்து தஞ்சை
வாணற்கு எதிர்ந்தவர் மங்கையர் போலும் என் வல் உயிரின்
ஊண் அற்பம் என்ன எண்ணா வரும் மேகம் உருமுடனே
** தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல்

#410
காதல் கயம் படிந்து உன்னொடு காமக் களி நுகராது
ஓதற்கு அகன்ற உணர்வுடையோர் உடை நீர் உலக
மாதர்க்கு அமைந்து அருள் வாணன் தென்மாறை வரக்கடவர்
ஆதற்கு அணங்கு_அனையாய் புயல் ஏது அறிந்தருளே

@30 காவல் பிரிவு
** தோழி தலைவன் காவல் பிரிவு உணர்த்தல்

#411
விண் காவல் கொண்ட திலோத்தமை தான் முதல் மெல்_இயலார்
கண் காவல் கொண்டு அருள் காரிகை காவலர் கார்க் கடல் சூழ்
மண் காவல் கொண்ட மனத்தினர் ஆயினர் வாணன் தஞ்சைப்
பண் காவல் கொண்ட மொழிச் செய்ய வாய் இதழ்ப் பைங்கிளியே
** தலைமகள் கூதிர்ப்பருவம் கண்டு வருந்தல்

#412
மன் உயிர் காவலன் வாணன் தென்மாறையில் வந்து அளியார்
என் உயிர் காவலர் ஏந்து_இழையாய் இதயம் புலர்த்திக்
கொன் உயிர் வாடை கொடும் பனி நீரில் குளிர் குழைத்துப்
பின் உயிராமல் என் மேல் பூசும் நாளும் என் பேசுவதே
** தோழி ஆற்றுவித்தல்

#413
வரல் காலம் என்று என்று எனப் பல கூடல்வளைத்து உதிரம்
விரல் கால இன்று மெலியன்-மின்னே சென்று மேதினி காத்து
உரல் கால குஞ்சரம் அஞ்ச மஞ்சூ ஊர்ந்து உறை வீசுகின்ற
சரற்காலம் வந்தடைந்தார் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே

@31 தூதில் பிரிவு
** தலைமகனால் உணர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்தல்

#414
தூதாக அன்பர் செலத் துணிந்தார் என்றும் சொல் புலவோர்
மா தாகம் வன் பசி தீர்த்து அருள் வாணன் தென்மாறை இந்து
மீதா அம்பு கிடந்தன போல் உண்கண் மெல்_இயல் இப்
போது ஆகவம் புகல்வோர் இகலார் தம் புரம் புகவே
** தலைவி முன்பனிப் பருவம் கண்டு வருந்தல்

#415
மலிகின்ற வண் புகழ் வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல்
மெலிகின்ற சிந்தையும் மேனியும் கொண்டு விளர்ப்பு எனும் பேர்
பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந்தேனைப் புரந்தருளார்
நலிகின்ற முன்பனி நாளில் நண்ணார் முனை நண்ணினரே
** தோழி ஆற்றுவித்தல்

#416
சுற்றும்_குழல் நின் பிணி விடுப்பான் வந்து தோன்றினர் பார்
முற்றும் பொழிகின்ற முன்பனி நாள் முகிலும் கடலும்
வற்றும் பருவத்தும் மண் புரப்பான் தஞ்சைவாணன் ஒன்னார்ச்
செற்றும் படையின் வெம் போர் தணிப்பான் அன்று சென்றவரே

@32 துணைவயின் பிரிவு
** துணைவயின் பிரிந்தமை தோழி தலைமகட்கு உணர்த்தல்

#417
நண்பான மன்னர்க்கு இடர் தணிப்பான் எண்ணி நல் உதவிப்
பண்பான மன்னர் படர்தலுற்றார் பனி நீர் பொழியும்
தண் பானல் அம் தொடை அம் புய வாணன் தமிழ்த் தஞ்சை வாழ்
வெண் பால் நலம் கொள் செவ் வாய் அன்னமே அன்ன மெல்_நடையே
** தலைமகள் பின்பனிப் பருவம் கண்டு புலம்பல்

#418
இன்னல்படுகின்ற என்னை எண்ணார் தமக்கு இன் துணையாம்
மன்னற்கு உதவிப் பிரிந்த நம் காதலர் வாணன் தஞ்சைக்
கன்னல் கடிகை அறிவது அல்லால் பகல் காண்பு அரிதாம்
பின்னல் கனை இருள் கூர் துன்பம் மேவிய பின்பனியே
** தோழி ஆற்றுவித்தல்

#419
வடுக் கண்டு அனைய கண் மங்கை நல்லாய் தஞ்சை வாணன் வெற்பின்
அடுக்கம் குளிர அசைகின்ற வாடை அகன்றவர்க்கு
நடுக்கம்செய் பின்பனி நாளின் வந்தார் அமர் நண்பன் உற்ற
இடுக்கண் களைய என்றே அகல் கானம் இகந்தவரே

@33 பொருள்வயின் பிரிவு
** தோழி தலைமகட்கு உணர்த்தல்

#420
மஞ்சைப் புனை மதில் மாறை வரோதயன் வாணர் பிரான்
தஞ்சைப் பதி அண்ணல் எண்ணலர் போல் தனி நாம் இருக்க
நெஞ்சைப் பொருள்-வயின் வைத்து நம் கேள்வர் நல் நீள் மதியின்
பிஞ்சைப் புரை நுதலாய் பிரிவான் இன்று பேசினரே
** தலைவி இளவேனில் பருவம் கண்டு புலம்பல்

#421
நம் கண் இரங்க அரும் பொருள் தேட நடந்த அன்பர்
செம் கண் இரும் குயில் ஆர்ப்பது கேட்கிலர் செந்தமிழோர்
தம்-கண் இடும்பை தவிர்த்து அருள் வாணன் தென் தஞ்சை வஞ்சி
திங்கள் நிவந்தது போல் கவின் ஆர் முகத் தே_மொழியே
** தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்

#422
வார்த் தனபார மட_மயிலே குயில் மாருதமாம்
தேர்த் தனி வீரன் திருநாளும் வந்தது சேர்-மின் சென்றார்
தார்த் தட மேரு எனும் புய வாணன் தஞ்சாபுரி-நின்று
ஆர்த்தது கேட்டு வந்தார் பொருள் தேட அகன்றவரே
** தலைவன் தலைமகளது
** உருவுவெளிப்பாடு கண்டு சொல்லல்

#423
மைக் குஞ்சர நிரையால் தஞ்சைவாணன் மருவலரைக்
கைக்கும் களம் கெழு பாசறையூடு கயலும் வில்லும்
மொய்க்கும் சுடர் இள அம்புலிதானும் முயங்கி எல்லாத்
திக்கும் தொழுவருமே சுருள் ஓலைத் திருமுகமே
** பாசறை முற்றி மீண்டு ஊர்வயின் வந்த
** தலைவன் பாகற்குச் சொல்லல்

#424
மால் கொண்ட வாரண வாணன் தென்மாறை வலவ நண்ணார்
கால் கொண்ட வாள் அமர் கையகல் பாசறைக் கை-வயின் முள்
கோல் கொண்டவாறும் நின் ஏவல் கொண்டு யான் இக் கொடி நெடும் தேர்
மேல் கொண்டவாறும் நம் ஊர் வந்தவாறும் வியப்பு எனக்கே
** தலைமகளோடு இருந்த தலைமகன்
** கார்ப்பருவம் கண்டு சொல்லல்

#425
கொத்து அலர் ஓதி அம் கொம்பர்_அன்னாள் பொங்கு கொங்கை விம்ம
முத்து அலர் ஆகம் முயங்கினம் யாம் முழு நீர் விழி போல்
மைத்து அலர் நீல மலர் வயல் சூழ் தஞ்சைவாணன் வண்மைக்
கைத்தலம் மான இனிப் பொழி வாழிய கார் முகிலே
** இதுகாறும் ஐம்பத்தாறாம்நாட் செய்தியென் றுணர்க
** தஞ்சைவாணன் கோவை முற்றிற்று