மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

** கலிவெண்பா

@1 தமிழின் பெருமை

#1
சீர் கொண்ட கூடல் சிவராசதானி புரந்து
ஏர் கொண்ட சங்கத்து இருந்தோரும் போர் கொண்டு

#2
இசையும் தமிழரசி என்று ஏத்தெடுப்பத் திக்கு
விசையம் செலுத்திய மின்னும் நசையுறவே

#3
செய்ய சிவஞானத் திரள் ஏட்டில் ஓர் ஏடு
கையில் எடுத்த கணபதியும் மெய் அருளால்

#4
கூடல் புரந்து ஒருகால் கூடல் புலவர் எதிர்
பாடல் அறிவித்த படைவேளும் வீடு அகலா

#5
மன்னும் மூ ஆண்டில் வட கலையும் தென் கலையும்
அன்னை முலைப்பாலில் அறிந்தோரும் முன்னரே

#6
மூன்று_விழியார் முன் முதலை உண்ட பிள்ளையைப் பின்
ஈன்றுதரச் சொல்லின் இசைந்தோரும் தோன்று அயன் மால்

#7
தேடி முடியா அடியைத் தேடாதே நல்லூரில்
பாடி முடியாப் படைத்தோரும் நாடி முடி

#8
மட்டோலைப் பூ வனையார் வார்ந்து ஓலை சேர்த்து எழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் முட்டாதே

#9
ஒல்காப் பெரும் தமிழ் மூன்று ஓதி அருள் மா முனியும்
தொல்காப்பியம் மொழிந்த தொல் முனியும் மல்காச் சொல்

#10
பாத் திரம் கொண்டே பதி-பால் பாய் பசுவைப் பன்னிரண்டு
சூத்திரம் கொண்டே பிணித்த தூயோரும் நேத்திரமாம்

#11
தீது_இல் கவிதைத் திருமாளிகைத்தேவர்
ஆதி முனிவர் அனைவோரும் சாதியுறும்

#12
தந்திரத்தினால் ஒழியாச் சார் வினையைச் சாற்று திரு
மந்திரத்தினால் ஒழித்த வல்லோரும் செந்தமிழில்

#13
பொய் அடிமை இல்லாப் புலவர் என்று நாவலர் சொல்
மெய் அடிமைச் சங்கத்து மேலோரும் ஐயடிகள்

#14
காடவரும் செம் சொல் கழறிற்றறிவாரும்
பாட அரும் தெய்வமொழிப் பாவலரும் நாட அரும்

#15
கல்லாதார் சிங்கம் எனக் கல்வி கேள்விக்கு உரியர்
எல்லாரும் நீயாய் இருந்தமையால் சொல் ஆரும்

#16
என் அடிகளே உனைக் கண்டு ஏத்தின் இடர் தீரும் என்று உன்
பொன் அடிகளே புகலாப் போற்றினேன் பன்னிய மென்

#17
பஞ்சி படா நூலே பலர் நெருடாப் பாவே கீண்டு
எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே விஞ்சு நிறம்

#18
தோயாத செந்தமிழே சொல்_ஏர்_உழவர் அகம்
தீயாது சொல் விளையும் செய்யுளே வீயாது

#19
ஒரு குலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய்
வரு குலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் இரு நிலத்துப்

#20
புண்ணியம் சேர் உந்திப் புலத்தே வளி தரித்துக்
கண்ணிய வாக்காம் கருப்பமாய் நண்ணித்

#21
தலை மிடறு மூக்கு உரத்தில் சார்ந்து இதழ் நாத் தந்தம்
உலைவு_இலா அண்ணத்து உருவாய்த் தலை திரும்பி

#22
ஏற்ப முதல் முப்பது எழுத்தாய்ச் சார்பு இருநூற்று
நாற்பது எழுத்தா நனி பிறந்தாய் மேற்படவே

#23
எண் முதலாகப் பகரும் ஈராறு எனும் பருவம்
மண் முதலோர் செய்து வளர்க்கும் நாள் கண்மணி போல்

#24
பள்ளிக்கூடத்து அசையாம் பற்பல தொட்டில் கிடத்தித்
தள்ளிச் சிறார் கூடித் தாலாட்டி உள் இலகு

#25
மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய் மஞ்சரையே

#26
பன்னி ஒரு பத்துப் பருவமிட்டு நீ வளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட ஒண்ணுமோ முன்னே

#27
நினையும் படிப்பு எல்லாம் நின்னைப் படிப்பார்
உனையும் படிப்பிப்பார் உண்டோ புனைதரு நல்

#28
செய்யுள் சொல் நான்கும் உயர் செந்தமிழ்ச் சொல் ஓர் நான்கும்
மெய் உட்பொருள் ஏழ் விதத் திணையும் மை_இல் எழுத்து

#29
ஆதி யாப்பு எட்டும் அலங்காரம் ஏழ்_ஐந்தும்
பேதியாப் பேரெழில் மாப்பிள்ளையாய்ச் சாதியிலே

#30
ஆங்கு அமை செப்பல்பண் அகவல்பண் துள்ளல்பண்
தூங்கல்பண் பட்டத்துத் தோகையரா ஓங்கு மனத்து

#31
எண் கருவி ஐந்து ஈன்றிடு நூற்றுமூன்றான
பண்களும் பின் கல்யாணப் பாவையரா எண்கொளும்

#32
நல் தாரகமா நவரசமாம் பிள்ளைகளைப்
பெற்றாய் பெரு வாழ்வு பெற்றாயே உற்று அகலாப்

#33
பண்கள் முதல் பெண்களொடும் பாலரொடும் நாடகமாம்
பெண் கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே மண் புகழத்

#34
தாழ்வு_இலா அட்டாதச வன்னனைகள் எனும்
வாழ்வு எலாம் கண்டு மகிழ்ந்தாயே ஆழ

#35
நெடும் கோல வையையில் என் நேசர் மேல் பட்ட
கொடுங்கோல் செங்கோலாகக் கொண்டாய் அடங்காத

#36
எம் கோவே பத்து என்று இயம்பு திசைக்குள்ளே நின்
செங்கோல் செலாத திசை உண்டோ இங்கே உன்

#37
தேசம் ஐம்பத்தாறில் திசைச்சொல் பதினேழும்
மாசற நீ வைத்த குறுமன்னியரோ வீசு

#38
குடகடலும் கீழ்கடலும் கோக் குமரி ஆறும்
வடவரையும் எல்லை வகுத்தாய் இடை இருந்த

#39
முன் உறும் தென்பாண்டி முதல் புனல்நாடு ஈறான
பன்னிரண்டு நாடும் அப்பால் நாடோ அ நாட்டுள்

#40
வையை கருவை மருதாறு மருவூர் நடுவே
ஐய நீ வாழும் அரண்மனையோ செய்ய புகழ்

#41
மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய் வளைந்த
பா வேந்தே நீ பெரிய பார் வேந்தோ கா ஏந்து

#42
விண்ணவரும் காணரிய வேதாகமங்கள் எலாம்
புண்ணியனே உன்றன் புரோகிதரோ எண் அரிய

#43
நல்ல பெரும் காப்பியங்கள் நாடகாலங்காரம்
சொல் அரசே உன்னுடைய தோழரோ தொல் உலகில்

#44
சார் புரக்கும் கோவே நல் சாத்திரங்கள் எல்லாம் உன்
பார் புரக்கும் சேனாபதிகளோ வீரர் அதிர்

#45
போர்ப் பாரதமும் புராணம் பதினெட்டும்
சீர்ப் பாவே உன்னுடைய சேனைகளோ பார்ப்பார்கள்

#46
அக்கரவர்த்தி எனலாம் என்பார் பூலோக
சக்கரவர்த்தியும் நீதான் அன்றோ சக்கரம் முன்பு

#47
ஏந்தி நெடும் தேர் மேல் ஏறிச் சுழி குளம்
நீந்தியோர் கூட நிறை சதுக்கம் போந்து

#48
மதுரம் கமழ் மாலை மாற்று அணிந்து சூழும்
சதுரங்க சேனை தயங்கச் சதுராய்

#49
முரசம் கறங்க முடிவேந்தர் சூழ
வர சங்கம் மீதிருந்து வாழ்ந்தே அருள் வடிவாய்

#50
ஓங்கு புகழ் மூவர் ஒரு பா ஒரு பஃதும்
ஆங்கு அவை சொல் வாதவூராளி சொல்லும் ஓங்கும் அவன்

#51
கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோது_இல் தாய்
மாற்றா இரட்டைமணிமாலையும் தேற்றம் உற

#52
பற்றாம் இலக்கண நூற்பாவும் நூற்பா அறிந்து
கற்றார் வழங்கு பஞ்சகாப்பியமும் கொற்றவருக்கு

#53
எண்ணிய வன்னனைகள் ஈரொன்பதும் அறியக்
கண்ணியம் மிக்க பெருங்காப்பியமும் நண்ணியே

#54
இன்புறு சேரன் அரங்கேற்ற மகிழ்ந்து அம்பலத்தான்
அன்புறு பொன்வண்ணத்தந்தாதியும் முன்பு அவர் சொல்

#55
மாத் தமிழாம் மும்மணிமாலையும் பட்டினத்தார்
கோத்து அணிந்த மும்மணிக்கோவையும் மூத்தோர்கள்

#56
பாடி அருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
கேடு_இல் பதினெட்டுக்கீழ்க்கணக்கும் ஆடக மா

#57
வெற்பு_அனையார் மாதை விமலரிடத்தே இருவர்
கற்பனையால் சொன்ன கலம்பகமும் முற்படையோடு

#58
ஆடல் கலிங்கம் அழித்து ஆயிரம் ஆனை கொன்ற
பாடற்கு அரிய பரணியும் கூடல்

#59
நராதிபன் கூத்தன் எதிர் நண்ணி ஓர் கண்ணிக்கு
ஒராயிரம் பொன் ஈந்த உலாவும் பராவும் அவன்

#60
பிள்ளைத்தமிழும் முன்னாம் பேராத பல் குரவர்
வெள்ளத்தினும் மிகுத்தோர் மெய் காப்ப உள்ளத்து

#61
வீரியம் செய்து வினை ஒழியவே ராச
காரியம் செய்யும் கவிதையே பாரில்

#62
அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச்
சரி யாரும் உண்டோ தமிழே விரிவு ஆர்

#63
திகழ் பா ஒரு நான்கும் செய்யுள் வரம்பாகப்
புகழ் பா இனங்கள் மடைப்போக்கா நிகழவே

#64
நல் ஏரினால் செய்யுள் நால் கரணத்து ஏர்பூட்டிச்
சொல்_ஏர்_உழவர் தொகுத்து ஈண்டி நல்ல நெறி

#65
நாலே விதையா நனி விதைத்து நால் பொருளும்
மேலே பலன்பெறச் செய்விக்கும் நாள் மேலோரில்

#66
பாத் தனதாகக் கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லி ஒட்டக்
கூத்தன் இவர் கல்லாது கோட்டிகொளும் சீத்தையரைக்

#67
குட்டிச் செவி அறுத்துக் கூட்டித் தலைகள் எல்லாம்
வெட்டிக் களைபறிக்க மேலாய்த் தூர் கட்டி

#68
வளர்ந்தனை பால் முந்திரிகை வாழைக்கனியாய்க்
கிளர்ந்த கரும்பாய் நாளிகேரத்து இளங்கனியாய்

#69
தித்திக்கும் தெள் அமுதாய்த் தெள் அமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே புத்திக்குள்

#70
உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் மண்ணில்

#71
குறம் என்று பள் என்று கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ திறம் எல்லாம்

#72
வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச்
சிந்து என்று சொல்லிய நாச் சிந்துமே அந்தரம் மேல்

#73
முற்று உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார் நீ
குற்றம்_இலாப் பத்துக் குணம் பெற்றாய் மற்று ஒருவர்

#74
ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின் மேல் உண்டோ நீ
நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய் நாக்கு உலவும்

#75
ஊன ரசம் ஆறு அல்லால் உண்டோ செவிகள் உணவு
ஆன நவரசம் உண்டாயினாய் ஏனோர்க்கு

#76
அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ
ஒழியா வனப்பு எட்டு உடையாய் மொழி வேந்தர்

#77
வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார் நீ
ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே பாங்கு பெற

#78
ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனைப் போலச்
சீர் முப்பதும் படைத்த செல்வர் ஆர் சேரமான்

#79
தன் அடிக் கண்டு தளை விடுத்தாய் ஏழ் தளை உன்
பொன் அடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ என் அரசே

#80
திண் பாவலர்க்கு அறிவாம் செந்தமிழாய் நின்ற உன்னை
வெண்பா என்று ஓதுவது மெய்தானோ பண்பு ஏர்

#81
ஒலிப் பாவே சங்கத்து உகம் மூன்று இருந்தாய்
கலிப்பா என்று ஓதல் கணக்கோ உலப்பு_இல்

#82
இருள் பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை
மருட்பா என்று ஓதல் வழக்கோ தெருள் பாப்

#83
பொருத்தம் ஒரு பத்துப் பொருந்தும் உனைத்தானே
விருத்தம் என்று சொல்லல் விதியோ இருள் குவையை

#84
முந்தி ஒளியால் விலக்கும் முச்சுடர் என்பார் உனைப் போல்
வந்து என் மனத்து இருளை மாற்றுமோ சிந்தா

#85
மணி கொடையின் மிக்கது என்பார் வண் கொடையும் உன் பேர்
அணியும் பெருமையினால் அன்றோ தணியும்

#86
துலங்கு ஆரம் கண்டசரம் தோள் வளை மற்று எல்லாம்
அலங்காரமே உனைப் போல் ஆமோ புலம் காணும்

#87
உன்னைப் பொருள் என்று உரைக்கும்-தொறும் வளர்வாய்
பொன்னைப் பொருள் என்னப் போதுமோ கன்னமிட்டு

#88
மன்னர் கவர்ந்தும் வளர் பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருள் உனைப் போல் எய்தாவே நல் நெறியின்

#89
மண்ணில் புகழ் உருவாய் வாழ்வதற்கும் வாழுநர்
விண்ணில் போய்த் தே உருவாய் மேவுதற்கும் எண்ணி உனைக்

#90
கொண்டு புகழ் கொண்டவர்க்கே கூடும் உனைக் கூடாத
தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் தண் தமிழே

#91
ஈங்கு உனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ
ஓங்கும் அவரால் நீ உயர்ந்தாயோ பூம் கமல

#92
வீடு ஆளும் வாணி அங்கை மேலே இருந்தாயோ
ஏடா உன் மேல் இருந்தாளோ ஆடு அரவத்

#93
தாழ் பாயலாளரை நீ தானே தொடர்ந்தாயோ
சூழ் பாயோடு உன்னைத் தொடர்ந்தாரோ வாழ்வே என்று

#94
ஓதி முனி கேட்க உனை முருகர் சொன்னாரோ
சோதி அவரை நீ சொற்றனையோ பேதியா

#95
நேசர் உனக்கே பொருளாய் நின்றாரோ நீள் மதுரை
வாசருக்கு நீ பொருளாய் வந்தாயோ பாசமுறும்

#96
என் செய்தி நீ கண்டு இரங்குவது நீதி அல்லால்
உன் செய்தி நானோ உரை செய்வேன் இன்_சொல்லாய்

#97
கற்க கசடறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக என்ற சொற்குள்ளே

#98
எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ சொல்லிய உன்

#99
ஈரடிக்குள்ளே உலகம் எல்லாம் அடங்கும் எனின்
நேர் அடிக்கு வேறே நிலன் உண்டோ ஓர் அடிக்கு ஓர்

#100
ஆயிரம் பொன் இறைக்கும் ஐயரை வீதியிலே
போய் இரந்து தூது சொல்லப் போக்கினோயாயிருந்தும்

#101
மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என் வருத்தம்
காண்பாய் என் பெண் மதி நீ காணாதே ஆண்பனை நல்

#102
பெண்பனை ஆக்கினையால் பெண்களிலே காரைக்கால்
வண் பதியார் ஒளவை என வந்து உதித்தாய் நண்பு ஆர்

#103
திலகவதியாருடனே சென்மித்தாய் மாடக்
குல தவ தியானத்தார் கூடல் பல தவம் சேர்

#104
மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டு உருகும்
மானியார் தேசிகனா வந்து உதித்தாய் ஞானியார்

#105
துங்க மகவாகத் தோன்றி வனப்பகைக்கும்
சிங்கடிக்கும் தாதையாய்ச் சீர் செய்தாய் இங்கு நீ

#106
பெண்கள் எல்லாம் வாழப் பிறந்தமையால் என் மனத்தில்
புண்கள் எல்லாம் ஆறப் புரிகண்டாய் ஒண் கமலத்து

@2 பிறதூதைவிடத் தமிழின் தனிச் சிறப்பு

#107
அன்னம்-தனை விடுப்பேன் அன்னம்தான் அங்கு அவரை
இன்னம் தான் கண்டு அறியாது என்பரே மன் எந்தாய்

#108
அப்பால் ஓர் வண்டை அனுப்பின் அவர் காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே தப்பாது

#109
மானைப் போய்த் தூது சொல்லி வா என்பேன் வல்லியப் பூம்
தானைப் பரமர்-பால் சாராதே ஏனைப் பூம்

#110
கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கை இனம்
ஆகி வலியானுக்கு அஞ்சுமே ஆகையினால்

#111
இந்த மனத்தைத் தூதாய் ஏகு என்பேன் இ மனமும்
அந்த மனோதீதர்-பால் அண்டாதே எந்தவிதம்

#112
என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன்
குன்று அனையாய் உன்னுடனே கூறுகேன் சென்றாலும்

@3 சொக்கநாதர் புகழ்

#113
பண்ணிய பத்தொன்பதின் ஆயிரத்து இருநூற்று
எண்ணிய தொண்ணூற்று ஒன்று எனும் தொடையாய் நண்ணி

#114
ஒரு தொடை வாங்கி உதவாயோ ஓர் சே
விருது உடையார்க்கு நீ வேறோ தருமிக்கே

#115
ஓர் வாழ்க்கை வேண்டி உயர் கிழி கொள்வான் கொங்கு
தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் கீரன்

#116
இசையா வகையின் இயம்பினான் என்றே
வசையாடித் தர்க்கித்த வாக்கும் இசையான

#117
பாட்டுக்கு இரங்கி ஒரு பாணனுக்குச் சேரலன் மேல்
சீட்டுக்கவி விடுத்த சீராட்டும் பாட்டு இயலில்

#118
நாத் திரமா மேவு பொருள் நன்றா அறுபது எனும்
சூத்திரமாப் பாடி அருள் தோற்றமும் மாத்திரமோ

#119
உன்னோடு அவர் விளையாட்டு ஒன்றோ வடமதுரைக்கு
அந்நேரம் உன் பிறகே யார் வந்தார் மன்னவன் மேல்

#120
காரியார் நாரியார் கண்ட கவியைப் பகிர
வாரி_இலாக் கானகத்தில் வந்தவர் ஆர் நாரினொடும்

#121
போற்றி உறும் பத்திரற்காப் போந்து கிழ உருவில்
தோற்றி விறகு சுமந்தவர் ஆர் தேற்றி அவற்கு

#122
ஈ அரிய பொற்பலகை இட்டவர் ஆர் மற்று அவன்-தன்
நேய மனைவிக்கு எதிரா நேர்ந்தவளைப் போய் அவையில்

#123
தள்ளி இசை தாபிக்கத் தக்கவர் ஆர் தென்மதுரைக்கு
உள் இருந்த சொக்கர் உனக்குள் அன்றோ எள்ளி

#124
வடமொழியில் வேத வசனமே ஈசர்
திட மொழியா என்பார் சிலரே அடரும்

#125
பர சமய கோளரியாய்ப் பாண்டிநாடு எங்கும்
அர சமயம் நீ நிறுத்தும் அந்நாள் விரசு நீ

#126
ஆதிக்-கண் வையையில் வேதாகமத்தைத் தாபித்தாய்
சோதிக்கின் ஏடகமே சொல்லாதோ வேதத்தே

#127
ஆதவன் அங்கு அண்டாது அடைத்த கதவம் திறந்தாய்
வேதவனம் கண்டால் விளம்பாதோ வேதம்

#128
அமிழ்தினும் மிக்கு என்னும் முனிக்கு அன்பர் உனைச் சொன்னார்
தமிழ்முனி என்னும் பேர் தாராதோ தமிழால்

#129
அறம் பொருள் இன்பம் வீடு ஆரணர் சொன்னார் அத்
திறம் பரமர் வாக்கே செப்பாதோ மறந்திடல்_இல்

#130
கற்பு அலகை ஓது மறை காணார் கீழ் நிற்கவும் நீ
பொற்பலகை மேல் இருந்தாய் போதாதோ தற்பரரோடு

#131
எண்ணிறந்த வாசி அழைத்திட்டாய் சதுர்வேதப்
பண் நிறைந்த வாசி பகராதோ அண்ணலார்

#132
தென்பால் உகந்து ஆடும் செய்தி எல்லாம் உன்னிடத்தில்
அன்பால் என்று அப்பாலும் ஆர் அறியார் உன் பேர்

#133
பழி ஆர் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்
மொழியார் குழறி மொழிவார் அழியா

#134
உருவால் அவாய் இருக்கும் ஓதரிய முத்தித்
திரு ஆலவாய் இருக்கும் செல்வர் ஒரு மால்

#135
வடமதுரை ஏறும் முன்னே வந்த வடிவு என்னத்
தட மதுரை மீன் உயர்த்த தாணு படர் தீர்க்கும்

#136
சத்திபுரத்து ஓர் பால் தழைத்து மகிழ்ந்தோர் சீவன்
முத்திபுரத்து ஓர் பால் முளைத்து எழுந்தோர் அத் திசை போல்

#137
ஆங்கு ஓர் இருநான்கு அயிராவதம் சுமக்கும்
பூம் கோயிற்குள் உறைந்த புண்ணியனார் பாங்காம்

#138
இடம் பவனம் ஈது ஆக இந்திரன் வந்து ஏத்தும்
கடம்பவனம் மீதில் உறை காந்தர் அடும் பேர்

#139
அலகு அம்பு அரிக்கும் அரியார் முடி வேய்ந்து
உலகம் பரிக்கும் முறை உள்ளார் பல நாளும்

#140
நின்றவூர்ப் பூசலார் நீடு இரவு எலாம் நினைந்து
குன்று போலே சமைத்த கோயிலும் நன்றி தரும்

#141
தாயான கங்கை முடி தாள் குளிரக் கண்ணப்பர்
வாயால் உமிழ்ந்த திருமஞ்சனமும் தூய மழைத்

#142
துன்பு ஆர் திருக்குறிப்புத்தொண்டர் துணித்துறையில்
அன்பாய் அளித்த பரிவட்டமும் இன்பாத்

#143
தணிவு_அரிய மானக்கஞ்சாறனார் சாத்தும்
மணி முடி சூழ் பஞ்சவடியும் அணி விடையார்

#144
காமன்-பால் முன் சேந்த கண் போல மூர்த்தியார்
தாம் அன்பால் முன் சேர்த்த சந்தனமும் பூமன் போல்

#145
காக்கும் அரி புனைந்த கண் மலரும் காதலொடு
சாக்கியர் தாம் சாத்திய பூம் தண் மலரும் போக்கிய மா

#146
ஆக்கிய மாறன் அமுதும் சிறுத்தொண்டர்
மார்க் கறியும் தாயர் தரு மாவடுவும் நீக்கரிய

#147
கார் ஆர் இரவில் கணம் புல்லர் தம் முடி மேல்
சீராக ஏற்றிய செம் தீபமும் ஆரால்

#148
அமைத்து வணங்கல் உறும் அங்கணர்க்குப் பூசை
சமைத்து வணங்கத் தகுமோ உமைக்கு அன்பர்

#149
அற்சனை பாட்டேயாம் என்று ஆரூரர்க்கு ஆதியிலே
சொல் தமிழ் பாடுக எனச் சொன்னமையால் சொற்படியே

#150
செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்கப் பித்தன் என்று
வைதாய் நீ வைதாலும் வாழ்த்தாமே மெய்தான்

#151
இரும் தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் வருந்தினன் மால்

#152
வெல் ஆனை தின்ற விளங்கனி ஆனேன் விரகக்
கல் ஆனை தின்ற கரும்பு ஆனேன் நல் அவரைத்

#153
தேடு நிழல் சிந்தனையில் தேம்பினேன் வெம் பனியால்
வாடிய செந்தாமரை ஒத்தேன் ஓடம் மிசைக்

#154
கொள்ளம்பூதூர் வெள்ளக் கொள்ளை கடந்தாய் என் மால்
வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ தள் என்று

#155
மாறு இட்ட சாக்கியரை வன் கழுவேறச் செய்தாய்
சீறிட்ட வேளை அது செய்யாயோ நீறு இட்டே

#156
அங்கு அரும் பின் கூன் ஒழித்தாய் அன்று வழுதிக்கு மதன்
செங்கரும்பின் கூன் ஒழியச்செய்யாயோ அங்கம் உறு

#157
வெப்புநோய் தீர்த்தாய் அவ் வேந்தனுக்கு என் வெவ் விரக
வெப்பு நோய் தீர்க்க விரும்பாயோ தப்பு அலவே

#158
சாக்கியர் இட்ட நஞ்சு-தன்னை அமுது ஆக்கினை இன்று
ஆக்கிய நஞ்சை அமுது ஆக்காயோ நீக்கரிய

#159
வெம் தீக்குள்ளே கிடந்தும் வேவாய் என்பார் காமச்
செம் தீச் சுடாதிருக்கச்செய்யாயோ வந்து கொங்கில்

#160
அப் பனியால் வாடாதே யார்க்கும் துயர் ஒழித்தாய்
இப் பனியால் வாடாது இரங்காயோ அப்பரை

#161
மைக் கடல் கொல்லாதபடி வன் கல் மிதப்பித்தாய்
அக் கடல் கொல்லாமல் உறவாக்காயோ மிக்கு உயர்ந்த

#162
மன்றில் பனை வடிவம் மாற்றினாய் அப் பனை மேல்
அன்றில்புள் வேறு ஒரு புள் ஆக்காயோ தொன்றுதொட்டுத்

#163
தென்பொதியில் சாந்தினொடு தென்றல் உறவாய் வந்தாய்
அன்புற என்னோடும் உறவு ஆக்காயோ முன்பு இருந்து

#164
பாடும் இசை எல்லாம் உன் பாவையராச் சேர்ந்தாய் என்
னோடு முனியாதிருக்க ஓதாயோ பாடலால்

#165
சின்னமொடு காளம் சிவிகை பந்தர் முத்து அடைந்தாய்
பொன்னே சுடாது அணியப் பூட்டாயோ முன் இறந்தாள்

#166
அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினாய் ஆதலின் என்
அங்கத்தைப் பூம்பாவை ஆக்காயோ மங்கத்தான்

#167
மாய்ந்தாலும் மா முதலை வாய்ப் பிள்ளையைப் படைத்தாய்
மாய்ந்தாலும் பின் படைக்க வல்லையே ஏய்ந்த உரை

#168
செய்தான் என்று என் சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு
எய்தாமல் அங்கு இருக்க எண்ணாதே பொய் தீரத்

#169
தேசு இவரும் சொக்கருக்கே சென்று இருந்து ஆங்கு அவரைப்
பேசி வரும் தூது பிறிது உண்டோ நேசமொடு

#170
தைவரினும் காட்டத்தகாதாரைத் தாதையர்க்குக்
கை விரலால் காட்டி அருள் காளையும் தெய்வ வெள்ளிப்

#171
பூதர வானவரைப் போற்ற முயன்று ஐயாற்றில்
ஆதரவாய்க் கண்ட அரசரும் நாதர்

#172
அளந்து அருள் செம்பொன்னை மணியாற்றில் இட்டு ஆரூர்க்
குளம் தனிலே தேடி அருள் கோவும் வளம் திகழும்

#173
காளத்தியில் வந்த காட்சி கயிலாயத்து
நீளத்தான் சொற்றவனும் நீ அன்றோ கேள் அப்பால்

#174
அம்மை தமக்கு இல்லாதார் அம்மை தாமா இருந்தார்
அம்மை என்று முன் உரைத்த அம்மையாய்த் தம் எதிரே

#175
வெள் ஆனை மேல் கொண்ட வேந்தர் வரவிடுத்த
வெள் ஆனை மேல் கொண்ட வித்தகராய்த் தள்ளாது

#176
விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்று பணிந்து
அஞ்சலிசெய்து ஆட்செய்த அன்பராய்ச் சஞ்சரியாத்

#177
தென்கையிலாய வரைச் செல்வர்-பால் சென்றாயே
உன் கையில் ஆகாதது ஒன்று உண்டோ என்கையால்

#178
ஆயும் அவள் பாகத்து அன்பரும் உக்கிரராம்
சேயும் புரந்திருக்கும் தென்மதுரை வாய் இனிய

@4 தமிழுக்கு அறிவுரை

#179
செவ் வழியே செல்வாய் நீ செல் வழி நல் வழிதான்
எவ் வழி என்றால் இயம்பக் கேள் எவ் வழியும்

#180
வெல்வாய் உனை நினைந்து வேயுறு தோளி என்று
செல்வார்-தம் காரியம் சித்திக்குமே செல்வாய்

#181
தடை உண்டோ ஐயாறு-தன்னிலே பொன்னி
இடை விலங்கச் சென்றது அறியேனோ இடையிலே

#182
பாலை நிலம் நெய்தலாப் பண்ணினாய் இன்னும் அதைச்
சோலை நிலம் ஆக்குவை நான் சொல்லுவது என் மேலானார்

#183
கூறும் பொதிசோறு கொண்டுவரின் உனக்கு
வேறும் பொதிசோறு வேண்டுமோ வீறாகக்

#184
கற்பார் பொருள் காணார் காசுபணம் காணில் உனை
விற்பார் அவர்-பால் நீ மேவாதே கற்றாரை

#185
எள்ளிடுவார் சொல் பொருள் கேட்டு இன்புறார் நாய் போலச்
சள்ளிடுவார் தம் அருகே சாராதே தெள்ளு தமிழ்ப்

#186
பாயிரம் முன் சொன்னபடி படியாமல் குழறி
ஆயிரமும் சொல்வார்-பால் அண்டாதே ஆய்தரு நூல்

#187
ஓதி அறியாத ஒண் பேதையருடனே
நீதி முறையா நிகழ்த்தும் நூல் பேதமையாம்

#188
காணாதான் காட்டுவான் தான் காணான் கண் எதிரே
நாணாது இராதே நவிலாதே வீணாக

#189
ஆற்றின் அளவு அறிந்து கல்லாது அவை அஞ்சும்
கூற்றினர்-பால் ஏகாதே கூடாதே போற்றாரை

#190
வேண்டாதே கேடில் விழுச்செல்வம் கல்வி என்று
பூண்டாய் நீதானே பொருள் அன்றோ ஆண்ட

#191
வலவா நல ஆவடுதுறையில் உன் போல்
உலவாக்கிழி பெற்றார் உண்டோ நல இருப்பு அது

#192
ஆக்க அரும் செங்கலைப் பொன் ஆக்கினாய் மண் முழுதும்
மாக் கனகம் ஆக்கிவிட வல்லையே நோக்கு புகார்

#193
பாடியது ஓர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு
கோடி பொன் கொண்டது நின் கொற்றமே தேடி அருள்

#194
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார் கண் பட்ட திருக் கண்டாயே கல்லார்-பால்

#195
ஏகாதே அன்பிலார் இந்திரன் போல் வாழ்ந்தாலும்
போகாதே அங்கே புசியாதே மா கவிஞர்

#196
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந்தார் என்னும் மா மகிமை

#197
சேர்ந்தது உன்-பால் அன்றோ திருப்பாற்கடல் அமுதம்
ஆர்ந்தவர்க்கு அல்லாது பசி ஆறுமோ சேர்ந்து உன்னை

#198
நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்-
தம்பால் இருந்து தரித்து ஏகி வம்பாகப்

#199
பின் போய் யமன் ஓடப் பேர்ந்து ஓடும் வையையிலே
முன் போய் எதிர் போய் முழுகியே அன்போடே

@5 சொக்கநாதருக்கு வழி

#200
தாழ்ந்து நீள் சத்தம்-தனைக் கற்றார் உள்ளம் போல்
ஆழ்ந்த அகழி அகன்று போய்ச் சூழ்ந்து உலகில்

#201
மேன்மேல் உயர்ந்து ஓங்கு வேதம் போல் மேலாக
வான் மேல் உயர்ந்த மதில் கடந்து போனால்

#202
மிருதி புராணம் கலை போல் வேறுவேறாக
வரு திரு வீதி சூழ் வந்தே இருவினையை

#203
மோதும் சிவாகமம் போல் முத்திக்கு வித்தாக
ஓதும் திருக்கோயிலுள் புகுந்து நீ தென்பால்

#204
முன்னே வணங்கி முறையின் அபிடேகமுனி-
தன் நேயம் போலாம் தள இசையும் தன் அடைந்து

#205
தேறும் படிவர் சிவலோகம் சேர்ந்து இருக்க
ஏறும் படி நிறுத்தும் ஏணி போல் வீறு உயர்ந்த

#206
கோ மேவு கோபுரமும் கூடலின் மேல் முன் ஒரு நால்
மா மேகம் சேர்ந்தது போல் மண்டபமும் பூ மேவும்

#207
மட்டு அளையும் வண்டு எனப் போய் மாளிகைப் பத்தி அறைக்
கட்டளையும் கண்டு களிகூர்ந்தே இட்ட மணிச்

#208
சிங்காதனத்தில் சிறந்த திருவோலக்கம்
எங்காகிலும் ஒருவர்க்கு எய்துமோ பைம் கழல் சூழ்

#209
தேம் கமலத் தேசு தெரிசனம் செய்து அவர்க்கே
பூம் கமலக் கண் கொடுத்த புத்தேளும் ஓங்கு அமல

#210
மை_இல் அடியில் வணங்காத் தலை ஒன்றைக்
கையில் அளித்த கடவுளும் மொய் இழந்த

#211
மானம் தனக்கு வகுத்த கடம்பாடவிக்கு
மானம்-தனை வகுத்த வானவனும் தேன் அங்கு

#212
அணி மலர்த் தாள் நெஞ்சூடு அழுத்தி அழுத்தாதே
மணி முடிகள் நீக்கி வணங்கக் கணநாதர்

#213
ஓது துனியோடு சினமுற்ற பகை செற்ற முரண்
போதமுனிவர் புடைசூழத் தீது_இல்

#214
அரிய திசைப்பாலர் அத்தம் முதல் தாங்கி
தெரிசனக் கண் பார்த்து ஏவல் செய்யப் பரவியே

#215
முன் இருவர் எண்மரொடு மொய்த்த பதினொருவர்
பன்னிருவர் நின்று பணிசெய்ய முன்னே

#216
நதிகள் எனக் கண்டு நந்தி பிரம்பு ஓங்க
உதகம் இரு பாலின் ஒதுங்கிப் பதினெண்

#217
குலத்தேவர் தம் மகுட கோடி பதினெட்டு
நிலத்தோர் முடியால் நெரிய நிலத்தே

#218
செருக்கும் சிநேகம் உற்ற தேவியுடனே
இருக்கும் சினகரத்துள் எய்திப் பொருக்கெனப் போய்

@6 சொக்கநாதர் வருணனை

#219
எந்தாய் என்று ஏத்தும் இடைக்காடன் பின் போன
செந்தாமரை போல் திருத்தாளும் வந்து மனம்

#220
தேறிக் கழுத்து அரியத் தென்பாண்டிநாடனுக்கு
மாறித் திரும்பும் மணிக் குறங்கும் சீறிப்

#221
பணிக்கற்கு மாறாப் படை உடைவாள் சேர்த்து
மணிக் கச்சு உடுத்த மருங்கும் துணிக்கு அமையத்

#222
தொண்டுபடு வந்தி சொரிந்திடும் பிட்டு அள்ளிஅள்ளி
உண்டு பசி தீர்த்த உதரமும் அண்டும் ஒரு

#223
தாய் முலைப்பால் உண்டு அறியாத் தாம் பன்றிக்குட்டிகளின்
வாய் முலைப்பால் ஊட்டிய பூண் மார்பகமும் தூய முடி

#224
ஆணிக் கனகத்து அழுத்த வழுதிக்கு
மாணிக்கம் விற்ற மலர்க் கையும் காணிக்காப்

#225
பூம் படலை ஆத்திப் புனை மலரைப் பூணாமல்
வேம்பு அலரைப் பூண்ட வியன் புயமும் ஓம்பு கொடி

#226
வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம்
காதில் புகன்ற கனி வாயும் தீது_இல் சொல்

#227
வாயிலா நீ இருந்து வாழும்படி உனக்குக்
கோயிலாத் தந்த குழைக் காதும் போய் வணிகப்

#228
பெண் நீராள் கண்ணீர் பெருகத் தழுவித் தம்
கண்ணீரால் ஆற்றி அருள் கண்களும் தெண் நீரார்

#229
பண் சுமந்த பாட்டினுக்கும் பாவை தந்த பிட்டினுக்கும்
மண் சுமந்த சோதி மணி முடியும் கண் சுமந்து

@7 சொக்கநாதர் இருப்பிடம்

#230
கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள் உருகித்
தொண்டுசெய்து தாள் முடி மேல் சூடியே மண்டும்

#231
உடுக் குலம் தம் கோக் குலம் என்று உற்று அறிந்தால் என்ன
அடுக்கு இலங்கு தீபம் எதிராகக் கடுத்திடேல்

#232
வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல்
தங்க ஆரத் தீபம் தாம் அசையத் துங்க விடை

#233
ஏங்கும் ஒரு மீன் உயர்த்தின் எங்கு இருப்பேன் என்பது போல்
ஆங்கு இடப தீபம் அழன்று ஆட நீங்காது

#234
அருள் தாம் மிருகத்து உரு ஆனார்க்கு உவந்தே
புருடாமிருகத் தீபம் போற்ற மருவார்

#235
வரு குலத்தார் பானு வரல் நடுக்குற்று என்ன
அருகு உலவும் தட்டு-அது அசைய இரு சுடர்க்கும்

#236
சொக்கர் உனைத்தானே சுடர் என்று காட்டுதல் போல்
அக்கராலத்தி ஒளியாய் விளங்கத் தக்கவளோடு

#237
எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல் போல்
பொன் கும்ப தீபம் எதிர் போய் வளையச் சொற்கு உருகும்

#238
அற்பு ஊர் அத் தொண்டர்க்கு அருள் முத்தி ஈது எனல் போல்
கற்பூரத் தட்டில் கனல் வாய்ப்பப் பொற்பாக

#239
நம் குலத்தும் வந்து உதித்தார் நாதர் என்று பானு மகிழ்ந்து
அங்கு உறல் போல் கண்ணாடி அங்கண் உற இங்கு அரசர்

#240
எம் குலத்தார் ஆயினார் என்று பிறை தோற்றுதல் போல்
துங்க முடி மேல் குடை வெண் சோதி விடப் பொங்கி எழும்

#241
முந்து கடல் வெண் திரைகள் முன்னே மாமிக்காக
வந்தவன் போல் வெண்சாமரை இரட்ட விந்தை செயும்

#242
ஆடு அரவச் சித்தர் இவர் ஆதலினால் ஆலவட்டம்
நீடு அரவம் போல எதிர் நின்று ஆட நாடு அகலா

#243
வால நறும் தென்றல் நம் மன்னர் என்று காண்பது போல்
கோல விசிறி குளிர்ந்து அணுகக் காலைத்

#244
திருவனந்தன் முன்னாகச் சேவிக்கும் காலத்து
உரு அனந்த தேவருடனே மருவி எதிர்

#245
போற்றுவாய் நீயும் புரோகிதரை முன் அனுப்பித்
தோற்றரவு செய்து துதித்ததன் பின் ஆற்றல்

#246
அரிய சிவாகமத்தோர் ஆதிசைவர்-தம்பால்
உரிய படையா ஒதுங்கி அருமையுடன்

@8 தமிழை விடுத்த தூது

#247
மூவர் கவியே முதலாம் கவி ஐந்தும்
மூவராய் நின்றார்-தம் முன் ஓதி ஓவாதே

#248
சீபாதம் எண்ணாத தீவினைப் பாவி செய்த
மா பாதகம் தீர்த்த மா மருந்தைத் தீப மணிப்

#249
பை நாகம் சூழ் மதுரைப் பாண்டியனே பார மணிக்
கைந்நாகம் சூழ் கோயில் கண்மணியே மன் ஆக

#250
மைக் கண் கரும்பை மருவிப் பிரியாத
முக்கண் கனியே முழுமுதலே மிக்க புனல்

#251
கங்கா நதிக்கு இறையே கன்னித் துறைக்கு அரசே
சிங்காதனத் துரையே செல்வமே எம் கோவே

#252
நாட விளையாடி வந்த நல் பாவை போல் அடியார்
கூட விளையாடி வந்த கோமானே தேடரிய

#253
சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடிய நாள் ஓடி எதிர்
வந்த விளையாட்டு இனிமேல் வாராதோ வந்து அருளால்

#254
பாவும் புகழ் சேர் பழிக்கு அஞ்சி என்று உலகில்
மேவும் பெயர் இனிமேல் வேண்டாவோ ஆவலினால்

#255
புக்கு வந்தார்-தம் மேல் பொடிபோட்டு உளம் மயக்கின்
சொக்கலிங்கம் என்று எவரும் சொல்லாரோ இக்கு அணைத்த

#256
அங்கை வேள் தானே அரசாளவும் சிறிய
மங்கை-தனைக் கோட்டிகொளல் வல்லமையோ கங்கை எலாம்

#257
நல்ல மைக் கண் ஊடு வர நல்குதியேல் நங்கை எல்லாம்
வல்ல சித்தர் என்று அழைக்கமாட்டாளே நல்லவர் போல்

#258
மைக் குவளைக் கண்ணி வளை கவர்ந்து மங்கையர்-தம்
கைக்கு வளை விற்கக் கணக்கு உண்டோ திக்கு வளை

#259
தோள் தாரும் வேம்பாய்த் தொடர்ந்து தொடர்ந்தே ஒரு தார்
கேட்டாரும் வேம்பு ஆகக் கேட்டோமே நாட்டமுற

#260
வேளை எரித்தாய்க்கு இயல்போ மின்னார் கலை கவர்தல்
காளையிடை இருந்து கற்றதோ மீளாது

#261
சென்று இலகு நாரை அன்று சென்ற சிவலோகத்தே
இன்று எனை அங்கு எய்தவிடல் ஆகாதோ அன்றி அழல்

#262
குன்றே விருத்த குமாரர் இளம்பாலர்
என்றே ஓர் பெண் வீட்டு இருக்கலாம் சென்று ஒரு நாள்

#263
பொன்னனையாள் வீடும் புகுந்து இருக்கலாம் எனின் என்
பொன்_அனையாள் வீடும் பொருந்தாதோ என்னும் மொழி

#264
எல்லாம் திருச்செவியில் ஏறும்படி உரைக்க
வல்லாய் உன் போல் எவர்க்கு வாய்க்குமே நல்லாள்

#265
கருணை விழியாள் அங்கயற்கண்ணி-தன்னோடு
அருள் புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் திரு மதுரை

#266
தானே சிவராசதானி என்று வீற்றிருந்தால்
தேனே நம் பாக்கியத்தின் செய்தியே ஆனமையால்

#267
அந்தரலோகத்தின் மேலான திரு ஆலவாய்ச்
சுந்தர மீனவன் நின் சொற்படியே வந்து

#268
துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க
மறவாதே தூது சொல்லி வா.
**