புறநானூறு

பாடல்கள்
0 – 50
பாடல்கள்
51 – 100
பாடல்கள்
101 – 150
பாடல்கள்
151 – 200
பாடல்கள்
201 – 250
பாடல்கள்
251 – 300
பாடல்கள்
301 – 350
பாடல்கள்
351 – 400


# 1 கடவுள் வாழ்த்து
கண்ணி கார் நறும் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை
ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப
கறை மிடறு அணியலும் அணிந்தன்று அ கறை 5
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு
தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும்
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை
பதினெண்_கணனும் ஏத்தவும் படுமே 10
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியா கரகத்து
தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே

# 2 முரஞ்சியூர் முடிநாகராயர்
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு 5
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும் 10
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ
நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய 15
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து 20
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

# 3 இரும்பிடர் தலையார்
உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகை கவுரியர் மருக 5
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ
பொன் ஓடை புகர் அணி நுதல்
துன் அரும் திறல் கமழ் கடாஅத்து
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில் 10
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து
மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயா
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி
நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்
பொலம் கழல் கால் புலர் சாந்தின் 15
விலங்கு அகன்ற வியன் மார்ப
ஊர் இல்ல உயவு அரிய
நீர் இல்ல நீள் இடைய
பார்வல் இருக்கை கவி கண் நோக்கின்
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர் 20
அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை
திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அரும் கவலை
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் 25
இன்மை தீர்த்தல் வன்மையானே

# 4 பரணர்
வாள் வலம் தர மறு பட்டன
செம் வானத்து வனப்பு போன்றன
தாள் களம் கொள கழல் பறைந்தன
கொல்ல் ஏற்றின் மருப்பு போன்றன
தோல் துவைத்து அம்பின் துளை தோன்றுவ 5
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
மாவே எறி_பதத்தான் இடம் காட்ட
கறுழ் பொருத செம் வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன
களிறே கதவு எறியா சிவந்து உராஅய் 10
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்று போன்றன
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி
பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி
மா கடல் நிவந்து எழுதரும் 15
செம் ஞாயிற்று கவினை மாதோ
அனையை ஆகன் மாறே
தாய் இல் தூவா குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே

# 5 நரிவெரூஉ தலையார்
எருமை அன்ன கரும் கல் இடை-தோறு
ஆனில் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா 5
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்பு-மதி
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே

# 6 காரிகிழார்
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின் 5
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை_உலகத்தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரி சீர்
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க 10
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து
அ எயில் கொண்ட செய்வு-உறு நன் கலம் 15
பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கி
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே 20
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே
செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய 25
தண்டா ஈகை தகை மாண் குடுமி
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நில மிசையானே

# 7 கருங்குழல் ஆதனார்
களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்து அடி
கணை பொருது கவி வண் கையால்
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின் 5
தோல் பெயரிய எறுழ் முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளி கம்பலை
கொள்ளை மேவலை ஆகலின் நல்ல
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ 10
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே

# 8 கபிலர்
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக
போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை
கடந்து அடு தானை சேரலாதனை 5
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம்
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி
மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி
அகல் இரு விசும்பினானும்
பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே 10

# 9 நெட்டிமையார்
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என 5
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ வாழிய குடுமி தம் கோ
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன் 10
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே

# 10 ஊன் பொதி பசும் குடையார்
வழிபடுவோரை வல் அறிதீயே
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அ தக ஒறுத்தி
வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின் 5
தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதே
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப 10
செய்து இரங்கா வினை சேண் விளங்கும் புகழ்
நெய்தல் அம் கானல் நெடியோய்
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே

# 11 பேய்மகள் இளவெயினியார்
அரி மயிர் திரள் முன்கை
வால் இழை மட மங்கையர்
வரி மணல் புனை பாவைக்கு
குலவு சினை பூ கொய்து
தண் பொருநை புனல் பாயும் 5
விண் பொரு புகழ் விறல் வஞ்சி
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே
வெப்பு உடைய அரண் கடந்து
துப்பு உறுவர் புறம்பெற்றிசினே
புறம்பெற்ற வய வேந்தன் 10
மறம் பாடிய பாடினியும்மே
ஏர் உடைய விழு கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே
இழை பெற்ற பாடினிக்கு
குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே 15
என ஆங்கு
ஒள் அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே

# 12 நெட்டிமையார்
பாணர் தாமரை மலையவும் புலவர்
பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும்
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி
இன்னா ஆக பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே 5

# 13 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
இவன் யார் என்குவை ஆயின் இவனே
புலி நிற கவசம் பூ பொறி சிதைய
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்
மறலி அன்ன களிற்று மிசையோனே
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் 5
பன் மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவு_இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம
பழன மஞ்ஞை உகுத்த பீலி 10
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழு மீன் விளைந்த கள்ளின்
விழு நீர் வேலி நாடு கிழவோனே

# 14 கபிலர்
கடுங்கண்ண கொல் களிற்றால்
காப்பு உடைய எழு முருக்கி
பொன் இயல் புனை தோட்டியால்
முன்பு துரந்து சமம் தாங்கவும்
பார் உடைத்த குண்டு அகழி 5
நீர் அழுவ நிவப்பு குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை
சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அரும் கலம் நல்கவும் குரிசில் 10
வலிய ஆகும் நின் தாள் தோய் தட கை
புலவு நாற்றத்த பைம் தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை
கறி_சோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் 15
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மை
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே

# 15 கபிலர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில்
புள்_இனம் இமிழும் புகழ் சால் விளை வயல்
வெள் உளை கலி_மான் கவி குளம்பு உகள 5
தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து
துளங்கு இயலான் பணை எருத்தின்
பாவு அடியான் செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப்பு உடைய கயம் படியினை 10
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார்
ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார்
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய 15
வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல்
நன் பனுவல் நால் வேதத்து
அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண்
வீயா சிறப்பின் வேள்வி முற்றி 20
யூபம் நட்ட வியன் களம் பல-கொல்
யா பல-கொல்லோ பெரும வார்-உற்று
விசி பிணி கொண்ட மண் கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே 25

# 16 பாண்டரம் கண்ணனார்
வினை மாட்சிய விரை புரவியொடு
மழை உருவின தோல் பரப்பி
முனை முருங்க தலைச்சென்று அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆக 5
கடி துறை நீர் களிறு படீஇ
எல்லு பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்று செக்கரின் தோன்ற
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை
துணை வேண்டா செரு வென்றி 10
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து உரு கெழு குருசில்
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
பனி பகன்றை கனி பாகல்
கரும்பு அல்லது காடு அறியா 15
பெரும் தண் பணை பாழ் ஆக
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை
நாம நல் அமர் செய்ய
ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே

# 17 குறுங்கோழியூர் கிழார்
தென் குமரி வட_பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்று பட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி 5
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல் மலை வேலி 10
நிலவு மணல் வியன் கானல்
தெண் கழி மிசை தீ பூவின்
தண் தொண்டியோர் அடு பொருந
மா பயம்பின் பொறை போற்றாது
நீடு குழி அகப்பட்ட 15
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்க குழி கொன்று
கிளை புகல தலைக்கூடி ஆங்கு
நீ பட்ட அரு முன்பின் 20
பெரும் தளர்ச்சி பலர் உவப்ப
பிறிது சென்று மலர் தாயத்து
பலர் நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய உயர் மண்ணும்
சென்று பட்ட விழு கலனும் 25
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும்
ஏந்து கொடி இறை புரிசை
வீங்கு சிறை வியல் அருப்பம்
இழந்து வைகுதும் இனி நாம் இவன்
உடன்று நோக்கினன் பெரிது எனவும் 30
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி
காண்கு வந்திசின் பெரும ஈண்டிய
மழை என மருளும் பல் தோல் மலை என
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை 35
உடலுநர் உட்க வீங்கி கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப
இடி என முழங்கும் முரசின்
வரையா ஈகை குடவர் கோவே 40

# 18 குடபுலவியனார்
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம் புகழ் நிறீஇ
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய 5
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே
நீர் தாழ்ந்த குறும் காஞ்சி
பூ கதூஉம் இன வாளை
நுண் ஆரல் பரு வரால்
குரூஉ கெடிற்ற குண்டு அகழி 10
வான் உட்கும் வடி நீள் மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே
செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த 15
நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன்
தகுதி கேள் இனி மிகுதியாள
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம் 20
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே
வித்தி வான் நோக்கும் புன்_புலம் கண் அகன்
வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும் 25
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடு போர் செழிய இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே 30

# 19 குடபுலவியனார்
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கை
தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து
மன் உயிர் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய
இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய 5
பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே மயங்கி
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானை
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து 10
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர்
இன்ன விறலும் உள-கொல் நமக்கு என
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி 15
கூற்று கண்ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல் வலம் கடந்தோய் நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே

# 20 குறுங்கோழியூர்கிழார்
இரு முந்நீர் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளி வழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை 5
அறிவும் ஈரமும் பெரும் கணோட்டமும்
சோறு படுக்கும் தீயோடு
செம் ஞாயிற்று தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே
திரு_வில் அல்லது கொலை வில் அறியார் 10
நாஞ்சில் அல்லது படையும் அறியார்
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு
வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே 15
அம்பு துஞ்சும் கடி அரணால்
அறம் துஞ்சும் செங்கோலையே
புது புள் வரினும் பழம் புள் போகினும்
விதுப்பு உறவு அறியா ஏம காப்பினை
அனையை ஆகன் மாறே 20
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே

# 21 ஐயூர் மூலங்கிழார்
புல வரை இறந்த புகழ் சால் தோன்றல்
நில வரை இறந்த குண்டு கண் அகழி
வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின்
மீன் பூத்து அன்ன உருவ ஞாயில்
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை 5
அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்
கரும் கை கொல்லன் செம் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என
வேங்கைமார்பன் இரங்க வைகலும்
ஆடு கொள குழைந்த தும்பை புலவர் 10
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுநர் இசையொடு மாய
புகழொடு விளங்கி பூக்க நின் வேலே

# 22 குறுங்கோழியூர் கிழார்
தூங்கு கையான் ஓங்கு நடைய
உறழ் மணியான் உயர் மருப்பின
பிறை நுதலான் செறல் நோக்கின
பா அடியால் பணை எருத்தின
தேன் சிதைந்த வரை போல 5
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து
அயறு சோரும் இரும் சென்னிய
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க
பாஅல் நின்று கதிர் சோரும் 10
வான் உறையும் மதி போலும்
மாலை வெண்குடை நீழலான்
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடி கூரை 15
சாறு கொண்ட களம் போல
வேறு_வேறு பொலிவு தோன்ற
குற்று ஆனா உலக்கையால்
கலி சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டு பைம் தும்பை 20
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ
சின மாந்தர் வெறி குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க
வாய் காவாது பரந்து பட்ட
வியன் பாசறை காப்பாள 25
வேந்து தந்த பணி திறையான்
சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும்
ஓங்கு கொல்லியோர் அடு பொருந
வேழ நோக்கின் விறல் வெம் சேஎய்
வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே 30
நின் பாடிய வயங்கு செந்நா
பின் பிறர் இசை நுவலாமை
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து 35
இனிது காண்டிசின் பெரும முனிவு இலை
வேறு புலத்து இறுக்கும் தானையோடு
சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே

# 23 கல்லாடனார்
வெளிறு இல் நோன் காழ் பணை நிலை முனைஇ
களிறு படிந்து உண்டு என கலங்கிய துறையும்
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல்
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் 5
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும்
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர்
வினை புனை நல் இல் வெம் எரி நைப்ப 10
கனை எரி உரறிய மருங்கும் நோக்கி
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று
இன்னும் இன்ன பல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவினோன் என
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை 15
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை 20
வேளை வெண் பூ கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே

# 24 மாங்குடி மருதனார்
நெல் அரியும் இரும் தொழுவர்
செம் ஞாயிற்று வெயில் முனையின்
தெண் கடல் திரை மிசை பாயுந்து
திண் திமில் வன் பரதவர்
வெப்பு உடைய மட்டு உண்டு 5
தண் குரவை சீர் தூங்குந்து
தூவல் கலித்த தேம் பாய் புன்னை
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர்
எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
வண்டு பட மலர்ந்த தண் நறும் கானல் 10
முண்டக கோதை ஒண் தொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூ கரும்பின் தீம் சாறும்
ஓங்கு மணல் குலவு தாழை
தீம் நீரோடு உடன் விராஅய் 15
மு நீர் உண்டு முந்நீர் பாயும்
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு கழனி
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் 20
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை கொடி தேர் செழிய
நின்று நிலைஇயர் நின் நாள்_மீன் நில்லாது
படாஅ செலீஇயர் நின் பகைவர் மீனே 25
நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை அன்ன நின்
ஆடு குடி மூத்த விழு திணை சிறந்த
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த
இரவன் மாக்கள் ஈகை நுவல 30
ஒண் தொடி மகளிர் பொலம் கலத்து ஏந்திய
தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசை
மலர் தலை உலகத்து தோன்றி 35
பலர் செல செல்லாது நின்று விளிந்தோரே

# 25 கல்லாடனார்
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை 5
அணங்கு அரும் பறந்தலை உணங்க பண்ணி
பிணி உறு முரசம் கொண்ட-காலை
நிலை திரிபு எறிய திண் மடை கலங்கி
சிதைதல் உய்ந்தன்றோ நின் வேல் செழிய
முலை பொலி அகம் உருப்ப நூறி 10
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்
ஒண் நுதல் மகளிர் கைம்மை கூர
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டே

# 26 மாங்குடி மருதனார்
நளி கடல் இரும் குட்டத்து
வளி புடைத்த கலம் போல
களிறு சென்று களன் அகற்றவும்
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி 5
அரைசு பட அமர் உழக்கி
உரை செல முரசு வௌவி
முடி தலை அடுப்பு ஆக
புனல் குருதி உலை கொளீஇ
தொடி தோள் துடுப்பின் துழந்த வல்சியின் 10
அடு_களம் வேட்ட அடு போர் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே 15
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே

# 27 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன
வேற்றுமை இல்லா விழு திணை பிறந்து
வீற்றிருந்தோரை எண்ணும்-காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே 5
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப தம் செய்_வினை முடித்து என
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி 10
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியாதோரையும் அறிய காட்டி
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் 15
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர்
கொடாஅமை வல்லர் ஆகுக
கெடாஅ துப்பின் நின் பகை எதிர்ந்தோரே

# 28 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என 5
முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறி சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத்தோர் நின் தெவ்வர் நீயே 10
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரை
பூ போது சிதைய வீழ்ந்து என கூத்தர்
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் 15
ஆற்றும் பெரும நின் செல்வம்
ஆற்றாமை நின் போற்றாமையே

# 29 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்த நூல் பெய்து
புனை வினை பொலிந்த பொலன் நறும் தெரியல்
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி
பாண் முற்றுக நின் நாள்_மகிழ்_இருக்கை 5
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க
முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப
கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி 10
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்
நெல் விளை கழனி படு புள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு
வெம் கள் தொலைச்சியும் அமையார் தெங்கின் 15
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு
பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள்
பற்றா_மாக்களின் பரிவு முந்துறுத்து
கூவை துற்ற நால் கால் பந்தர்
சிறு_மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு 20
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை
ஊழிற்று ஆக நின் செய்கை விழவின்
கோடியர் நீர்மை போல முறை_முறை
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய
நகை புறன் ஆக நின் சுற்றம் 25
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளே

# 30 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
செம் ஞாயிற்று செலவும்
அ ஞாயிற்று பரிப்பும்
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று இவை 5
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறி அறிவு ஆக செறிவினை ஆகி
களிறு கவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட 10
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது
புகாஅர் புகுந்த பெரும் கலம் தகாஅர்
இடை புல பெரு வழி சொரியும்
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே 15

# 31 கோவூர்கிழார்
சிறப்பு உடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை
உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் 5
பாசறை அல்லது நீ ஒல்லாயே
நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே
போர் எனின் புகலும் புனை கழல் மறவர்
காடு இடை கிடந்த நாடு நனி சேஎய 10
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து
குண கடல் பின்னது ஆக குட கடல்
வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து 15
நெஞ்சு நடுங்கு அவலம் பாய
துஞ்சா கண்ண வட புலத்து அரசே

# 32 கோவூர்கிழார்
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடி
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள்
ஒண் நுதல் விறலியர் பூ விலை பெறுக என
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் 5
பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள்
தொல் நில கிழமை சுட்டின் நன் மதி
வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த
பசு மண் குரூஉ திரள் போல அவன்
கொண்ட குடுமித்து இ தண் பணை நாடே 10

# 33 கோவூர்கிழார்
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர்
குள கீழ் விளைந்த கள கொள் வெண்ணெல் 5
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்
ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாட படையோர் 10
தாது எரு மறுகின் பாசறை பொலிய
புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலை பந்து கண்டு அன்ன
ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
செம்மற்று அம்ம நின் வெம் முனை இருக்கை 15
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப
காம இருவர் அல்லது யாமத்து
தனி மகன் வழங்கா பனி மலர் காவின்
ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி 20
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப
நீ ஆங்கு கொண்ட விழவினும் பலவே

# 34 ஆலத்தூர் கிழார்
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும்
மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என
நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன் 5
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவு கரு அன்ன புன்_புல வரகின்
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி 10
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி
அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலா செல்வம் முழுவதும் செய்தோன் 15
எம் கோன் வளவன் வாழ்க என்று நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்
படுபு அறியலனே பல்_கதிர்_செல்வன்
யானோ தஞ்சம் பெரும இ உலகத்து
சான்றோர் செய்த நன்று உண்டாயின் 20
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய பலவே

# 35 வெள்ளைக்குடி நாகனார்
நளி இரு முந்நீர் ஏணி ஆக
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
அரசு எனப்படுவது நினதே பெரும 5
அலங்கு கதிர் கனலி நால்-வயின் தோன்றினும்
இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும்
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட
தோடு கொள் வேலின் தோற்றம் போல
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் 10
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே
நினவ கூறுவல் எனவ கேள்-மதி
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு 15
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறே
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு
கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய 20
குடி மறைப்பதுவே கூர் வேல் வளவ
வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை
வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்து
பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை 25
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர் பழிக்கும் இ கண் அகன் ஞாலம்
அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும் 30
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி
குடி புறந்தருகுவை ஆயின் நின்
அடி புறந்தருகுவர் அடங்காதோரே

# 36 ஆலத்தூர் கிழார்
அடுநை ஆயினும் விடுநை ஆயினும்
நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல்
செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய 5
கரும் கை கொல்லன் அரம் செய் அம் வாய்
நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து
வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும்
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர்
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப 10
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின்
சிலை தார் முரசம் கறங்க
மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தே

# 37 மாறோக்கத்து நப்பசலையார்
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த
வேக வெம் திறல் நாகம் புக்கு என
விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடி
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் 5
சினம் கெழு தானை செம்பியன் மருக
கராஅம் கலித்த குண்டு கண் அகழி
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி 10
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர்
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவத்தானே

# 38 ஆவூர் மூலம் கிழார்
வரை புரையும் மழ களிற்றின் மிசை
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ 5
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப
செம் ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த 10
எம் அளவு எவனோ மற்றே இன் நிலை
பொலம் பூ காவின் நன் நாட்டோரும்
செய்_வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவது அன்மையின் கையறவு உடைத்து என 15
ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின் நாடு உள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத்து எனவே

# 39 மாறோக்கத்து நப்பசலையார்
புறவின் அல்லல் சொல்லிய கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை
கோல் நிறை துலாஅம்_புக்கோன் மருக
ஈதல் நின் புகழும் அன்றே சார்தல்
ஒன்னார் உட்கும் துன் அரும் கடும் திறல் 5
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல் நின் புகழும் அன்றே கெடு இன்று
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால்
முறைமை நின் புகழும் அன்றே மறம் மிக்கு 10
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியா பொன் படு நெடும் கோட்டு
இமையம் சூட்டிய ஏம வில் பொறி 15
மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடும் காலே

# 40 ஆவூர் மூலங்கிழார்
நீயே பிறர் ஓம்பு-உறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு அவர்
முடி புனைந்த பசும்_பொன் நின்
அடி பொலிய கழல் தைஇய
வல்லாளனை வய வேந்தே 5
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும
ஒரு பிடி படியும் சீறிடம் 10
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே

# 41 கோவூர் கிழார்
காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே
திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும்
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் 5
வெம் கதிர் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவர_தகுந புள்ளு குரல் இயம்பவும்
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும் 10
கனவின் அரியன காணா நனவில்
செரு செய் முன்ப நின் வரு_திறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்
புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு 15
பெரும் கலக்கு-உற்றன்றால் தானே காற்றோடு
எரி நிகழ்ந்து அன்ன செலவின்
செரு மிகு வளவ நின் சினைஇயோர் நாடே

# 42 இடைக்காடனார்
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்
யானையும் மலையின் தோன்றும் பெரும நின்
தானையும் கடல் என முழங்கும் கூர் நுனை
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் 5
புரை தீர்ந்தன்று அது புதுவதோ அன்றே
தண் புனல் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ என்று நின்
முனை தரு பூசல் கனவினும் அறியாது
புலி புறங்காக்கும் குருளை போல 10
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர்
கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர்
கரும்பில் கொண்ட தேனும் பெரும் துறை 15
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்
வன்_புல கேளிர்க்கு வரு விருந்து அயரும்
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந
மலையின் இழிந்து மா கடல் நோக்கி
நில வரை இழிதரும் பல் யாறு போல 20
புலவர் எல்லாம் நின் நோக்கினரே
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து
கூற்று வெகுண்டு அன்ன முன்பொடு
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே

# 43 தாமப்பல் கண்ணனார்
நில மிசை வாழ்நர் அலமரல் தீர
தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும்
அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறை
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ 5
தன் அகம் புக்க குறு நடை புறவின்
தபுதி அஞ்சி சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக
நேரார் கடந்த முரண் மிகு திருவின்
தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் 10
கொடு மர மறவர் பெரும கடு மான்
கைவண் தோன்றல் ஐயம் உடையேன்
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது
நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி 15
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மை பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்
இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் 20
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள்
மிக்கு வரும் இன் நீர் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே

# 44 கோவூர் கிழார்
இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி
நில மிசை புரளும் கைய வெய்து_உயிர்த்து
அலமரல் யானை உரும் என முழங்கவும் 5
பால் இல் குழவி அலறவும் மகளிர்
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல் 10
அறவை ஆயின் நினது என திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆக
திறவாது அடைத்த திண் நிலை கதவின்
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் 15
நாணு_தகவு உடைத்து இது காணும்-காலே

# 45 கோவூர் கிழார்
இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே 5
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடி பொருள் அன்று நும் செய்தி கொடி தேர்
நும் ஓர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலே

# 46 கோவூர் கிழார்
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த 5
புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கண் நோவு உடையர்
கேட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே

# 47 கோவூர் கிழார்
வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி 5
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
மண் ஆள் செல்வம் எய்திய 10
நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே

# 48 பொய்கையார்
கோதை மார்பின் கோதையானும்
கோதையை புணர்ந்தோர் கோதையானும்
மா கழி மலர்ந்த நெய்தலானும்
கள் நாறும்மே கானல் அம் தொண்டி
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் 5
அன்னோன் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல
அமர் மேம்படூஉம்-காலை நின்
புகழ் மேம்படுநனை கண்டனம் எனவே

# 49 பொய்கையார்
நாடன் என்கோ ஊரன் என்கோ
பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோ
யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையை
புனவர் தட்டை புடைப்பின் அயலது
இறங்கு கதிர் அலமரு கழனியும் 5
பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே

# 50 மோசிகீரனார்
மாசு அற விசித்த வார்பு-உறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணி தார்
பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி
குருதி வேட்கை உரு கெழு முரசம் 5
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை
அறியாது ஏறிய என்னை தெறுவர
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் 10
அதனொடும் அமையாது அணுக வந்து நின்
மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென
வீசியோயே வியல்_இடம் கமழ
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை 15
விளங்க கேட்ட மாறு-கொல்
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே

# 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம்
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின்
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு
அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து 5
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே
அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த
செம் புற்று ஈயல் போல 10
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே

# 52 மருதன் இளநாகனார்
அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇ
முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல்
ஊன் நசை உள்ளம் துரப்ப இரை குறித்து
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு
வட புல மன்னர் வாட அடல் குறித்து 5
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் 10
பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட
பலி கண்மாறிய பாழ்படு பொதியில்
நரை மூதாளர் நாய் இட குழிந்த
வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி 15
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே

# 53 பொருந்தில் இளங்கீரனார்
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை கடு மான் பொறைய 5
விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல நின் புகழே என்றும்
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே தாழாது 10
செறுத்த செய்யுள் செய் செம் நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப
பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே 15

# 54 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடை இன்று குறுகி
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல்
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து 5
வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மை
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்கும்-காலை
பாசிலை தொடுத்த உவலை கண்ணி 10
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா
புலி துஞ்சு வியன் புலத்து அற்றே
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே

# 55 மதுரை மருதன் இளநாகனார்
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல 5
வேந்து மேம்பட்ட பூ தார் மாற
கடும் சினத்த கொல் களிறும்
கதழ் பரிய கலி_மாவும்
நெடும் கொடிய நிமிர் தேரும்
நெஞ்சு உடைய புகல் மறவரும் என 10
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமர் என கோல் கோடாது
பிறர் என குணம் கொல்லாது
ஞாயிற்று அன்ன வெம் திறல் ஆண்மையும் 15
திங்கள் அன்ன தண் பெரும் சாயலும்
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர்
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் 20
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே

# 56 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
* மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும்
கடல் வளர் புரி வளை புரையும் மேனி
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் 5
மண்-உறு திரு மணி புரையும் மேனி
விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும்
மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின் 10
தோலா நல் இசை நால்வருள்ளும்
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம்
வலி ஒத்தீயே வாலியோனை
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின் 15
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே அதனால்
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும் 20
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெம்_கதிர்_செல்வன் போலவும் குட திசை
தண் கதிர் மதியம் போலவும் 25
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே

# 57 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின்
நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு 5
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க
நனம் தலை பேரூர் எரியும் நைக்க
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்
ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம்
கடி_மரம் தடிதல் ஓம்பு நின் 10
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே

# 58 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ 5
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அரு நரை உருமின் பொருநரை பொறாஅ
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என 10
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே
பால் நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல் நிற உருவின் நேமியோனும் என்று 15
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் 20
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே
அதனால் நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறியர் போலவும் 25
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில்_மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி வென்று_வென்று
அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரி
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி 30
நெடு நீர் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே

# 59 மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்
தாள் தோய் தட கை தகை மாண் வழுதி
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் 5
ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு
திங்கள் அனையை எம்மனோர்க்கே

# 60 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து 5
தொழுதனம் அல்லமோ பலவே கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன்
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் 10
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே

# 61 கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரை குமரனார்
கொண்டை கூழை தண் தழை கடைசியர்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக 5
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர்
தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர்
குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து 10
செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும்
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன்
எஃகு விளங்கு தட கை இயல் தேர் சென்னி
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின்
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் 15
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர்
வாழ கண்டன்றும் இலமே தாழாது
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்த காண்டல் அதனினும் இலமே

# 62 கழா தலையார்
வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு
குருதி செம் கை கூந்தல் தீட்டி
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க 5
பருந்து அருந்து உற்ற தானையொடு செரு முனிந்து
அறத்தின் மண்டிய மற போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே
உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம் 10
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே 15
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற_உணவினோரும் ஆற்ற
அரும்_பெறல்_உலகம் நிறைய
விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழே

# 63 பரணர்
எனை பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினை இன்றி படை ஒழிந்தனவே
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே
தேர் தர வந்த சான்றோர் எல்லாம் 5
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே 10
என் ஆவது-கொல் தானே கழனி
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்
பாசவல் முக்கி தண் புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே 15

# 64 நெடும்பல்லியத்தனார்
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி
செல்லாமோ தில் சில் வளை விறலி
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப
பகை புலம் மரீஇய தகை பெரும் சிறப்பின் 5
குடுமி கோமான் கண்டு
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே

# 65 கழாஅ தலையார்
மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப
இரும் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப 5
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து
இரு சுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்கு
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி மற தகை மன்னன் 10
வாள் வடக்கிருந்தனன் ஈங்கு
நாள் போல் கழியல ஞாயிற்று பகலே

# 66 வெண்ணி குயத்தியார்
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானை கரிகால்வளவ
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே 5
கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலை
மிக புகழ் உலகம் எய்தி
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே

# 67 பிசிராந்தையார்
அன்ன சேவல் அன்ன சேவல்
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனைய 5
குமரி அம் பெரும் துறை அயிரை மாந்தி
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன் நாட்டு படினே கோழி
உயர் நிலை மாடத்து குறும்_பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம் 10
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணிய தன்
அன்பு உறு நன் கலம் நல்குவன் நினக்கே

# 68 கோவூர் கிழார்
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர் காணாது
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து
ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து 5
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் 10
உட்பகை ஒரு திறம் பட்டு என புள் பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி
கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த 15
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே

# 69 ஆலந்தூர் கிழார்
கையது கடன் நிறை யாழே மெய்யது
புரவலர் இன்மையின் பசியே அரையது
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண
பூட்கை இல்லோன் யாக்கை போல 5
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை
வையகம் முழுதுடன் வளைஇ பையென
என்னை வினவுதி ஆயின் மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை
குருதி பரப்பின் கோட்டு_மா தொலைச்சி 10
புலா களம் செய்த கலாஅ தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே
பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலை
பகை புலம் படர்தலும் உரியன் தகை தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் 15
கிள்ளிவளவன் படர்குவை ஆயின்
நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி
நீ அவன் கண்ட பின்றை பூவின்
ஆடு வண்டு இமிரா தாமரை 20
சூடாய் ஆதல் அதனினும் இலையே

# 70 கோவூர் கிழார்
தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை
இனிய காண்க இவண் தணிக என கூறி
வினவல் ஆனா முது வாய் இரவல 5
தைஇ திங்கள் தண் கயம் போல
கொள_கொள குறைபடா கூழ் உடை வியன் நகர்
அடு தீ அல்லது சுடு தீ அறியாது
இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன்
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி 10
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி
பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல்
இன் நகை விறலியொடு மென்மெல இயலி 15
செல்வை ஆயின் செல்வை ஆகுவை
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே

# 71 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப அவரை
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு
அவர் புறங்காணேன் ஆயின் சிறந்த 5
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் 10
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால்
அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும்
வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும்
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த 15
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ
மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர்
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே

#72
நகு_தக்கனரே நாடு மீக்கூறுநர்
இளையன் இவன் என உளைய கூறி
படு மணி இரட்டும் பா அடி பணை தாள்
நெடு நல் யானையும் தேரும் மாவும்
படை அமை மறவரும் உடையம் யாம் என்று 5
உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அரும் சமம் சிதைய தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது 10
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் 15
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே

#73
மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் 5
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை
கழை தின் யானை கால் அகப்பட்ட
வன் திணி நீள் முளை போல சென்று அவண் 10
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா
பல் இரும் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரே

# 74 பாடியவன் சேரமான் கணைக்கா லிரும்பொறை
குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய 5
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இ உலகத்தானே

# 75 பாடியவன் சோழன் நலங்கிள்ளி
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை
சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே 5
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே மை அற்று 10
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே

# 76 இடைக்குன்றூர் கிழார்
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இ உலகத்து இயற்கை
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர்
நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து 5
செறிய தொடுத்த தேம் பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலிய சூடி
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக
நாடு கெழு திருவின் பசும் பூண் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடி 10
பொருதும் என்று தன் தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க
ஒருதான் ஆகி பொருது களத்து அடலே

# 77 இடைக்குன்றூர் கிழார்
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடும் கொடி உழிஞை பவரொடு மிலைந்து
குறும் தொடி கழித்த கை சாபம் பற்றி
நெடும் தேர் கொடிஞ்சி பொலிய நின்றோன் 5
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே வயின்_வயின்
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை 10
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே

# 78 இடைக்குன்றூர் கிழார்
வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள்
அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து
அளை செறி உழுவை இரைக்கு வந்து அன்ன
மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மின் 5
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்தில் பெயர
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர்
மாண் இழை மகளிர் நாணினர் கழிய 10
தந்தை தம் ஊர் ஆங்கண்
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே

# 79 இடைக்குன்றூர் கிழார்
மூதூர் வாயில் பனி கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி
வெம் போர் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே 5
எஞ்சுவர்-கொல்லோ பகல் தவ சிறிதே

# 80 சாத்தந்தையார்
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால்
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர் 5
பொரல் அரும் தித்தன் காண்க தில் அம்ம
பசித்து பணை முயலும் யானை போல
இரு தலை ஒசிய எற்றி
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே

# 81 சாத்தந்தையார்
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார்
செறிய தொடுத்த கண்ணி
கவி கை மள்ளன் கைப்பட்டோரே 5

# 82 சாத்தந்தையார்
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர் கொள வந்த பொருநனொடு 5
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே

# 83 பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும்
ஒரு பால் படாஅது ஆகி 5
இரு பால் பட்ட இ மையல் ஊரே

# 84 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
என் ஐ புற்கை உண்டும் பெரும் தோளன்னே
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே
போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண்
ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு 5
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே

# 85 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே
ஆடு அன்று என்ப ஒருசாரோரே
நல்ல பல்லோர் இரு நன் மொழியே 5
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்
முழா அரை போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே

# 86 காவல் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம்
சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே 5
தோன்றுவன் மாதோ போர்_களத்தானே

# 87 ஔவையார்
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

# 88 ஔவையார்
யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல்
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன்
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின்
விழவு மேம்பட்ட நல் போர் 5
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே

# 89 ஔவையார்
இழை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என
வினவல் ஆனா பொரு படை வேந்தே
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன 5
சிறு வல் மள்ளரும் உளரே அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசி-உறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்
அது போர் என்னும் என் ஐயும் உளனே

# 90 ஔவையார்
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல்
மற புலி உடலின் மான் கணம் உளவோ
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ ஞாயிறு சினவின் 5
அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
விரி மணல் ஞெமர கல் பக நடக்கும்
பெருமித பகட்டுக்கு துறையும் உண்டோ
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தட கை 10
வழு இல் வன் கை மழவர் பெரும
இரு நில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ நீ களம் புகினே

# 91 ஔவையார்
வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார்
களம் பட கடந்த கழல் தொடி தட கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர் அடு திருவின் பொலம் தார் அஞ்சி
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி 5
நீல மணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொல் நிலை
பெரு மலை விடர்_அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லி தீம் கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கி 10
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

# 92 ஔவையார்
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை
என் வாய் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்து 5
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே

# 93 ஔவையார்
திண் பிணி முரசம் இழுமென முழங்க
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
நோய்-பால் விளிந்த யாக்கை தழீஇ 5
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
நீள் கழல் மறவர் செல்வு-உழி செல்க என 10
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய
அரும் சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே 15

# 94 ஔவையார்
ஊர் குறு_மாக்கள் வெண் கோடு கழாஅலின்
நீர் துறை படியும் பெரும் களிறு போல
இனியை பெரும எமக்கே மற்று அதன்
துன் அரும் கடாஅம் போல
இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே 5

# 95 ஔவையார்
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர் குத்தி கோடு நுதி சிதைந்து
கொல் துறை குற்றில மாதோ என்றும் 5
உண்டு ஆயின் பதம் கொடுத்து
இல் ஆயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே

# 96 ஔவையார்
அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின்
திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே ஒன்றே
பூ போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்றே 5
விழவின்று ஆயினும் படு பதம் பிழையாது
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்
கை_மான் கொள்ளுமோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே

# 97 ஔவையார்
போர்க்கு உரைஇ புகன்று கழித்த வாள்
உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின்
ஊன் உற மூழ்கி உரு இழந்தனவே
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர்
நறும் கள்ளின் நாடு நைத்தலின் 5
சுரை தழீஇய இரும் காழொடு
மடை கலங்கி நிலை திரிந்தனவே
களிறே எழூஉ தாங்கிய கதவம் மலைத்து அவர்
குழூஉ களிற்று குறும்பு உடைத்தலின்
பரூஉ பிணிய தொடி கழிந்தனவே 10
மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர்
பொலம் பைம் தார் கெட பரிதலின்
களன் உழந்து அசைஇய மறு குளம்பினவே
அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானை
பொலம் தும்பை கழல் பாண்டில் 15
கணை பொருத துளை தோலன்னே
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள்
பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே மறுப்பின் 20
ஒல்வான் அல்லன் வெல் போரான் என
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல்
கழல் கனி வகுத்த துணை சில் ஓதி
குறும் தொடி மகளிர் தோள் விடல்
இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே 25

# 98 ஔவையார்
முனை தெவ்வர் முரண் அவிய
பொர குறுகிய நுதி மருப்பின் நின்
இன களிறு செல கண்டவர்
மதில் கதவம் எழு செல்லவும்
பிணன் அழுங்க களன் உழக்கி 5
செலவு அசைஇய மறு குளம்பின் நின்
இன நன் மா செல கண்டவர்
கவை முள்ளின் புழை அடைப்பவும்
மார்பு உற சேர்ந்து ஒல்கா
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் 10
தோல் கழியொடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடு பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென 15
உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை ஆகலின் போற்றார்
இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து
இறங்கு கதிர் அலம்வரு கழனி
பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே 20

# 99
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகை அம் கழல் கால் இரும் பனம் புடையல் 5
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல்
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம்
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய 10
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே

# 100 ஔவையார்
கையது வேலே காலன புனை கழல்
மெய்யது வியரே மிடற்றது பசும் புண்
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சி கொண்ட ஊசி வெண் தோட்டு
வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇ 5
சுரி இரும் பித்தை பொலிய சூடி
வரி வயம் பொருத வய களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே
செறுவர் நோக்கிய கண் தன் 10
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே

# 101 ஔவையார்
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி
அதியமான் பரிசில் பெறூஉம் காலம் 5
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போல
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே

# 102 ஔவையார்
எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன 5
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே

# 103 ஔவையார்
ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என
சுரன் முதல் இருந்த சில் வளை விறலி
செல்வை ஆயின் சேணோன் அல்லன் 5
முனை சுட எழுந்த மங்குல் மா புகை
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும்
பகை புலத்தோனே பல் வேல் அஞ்சி
பொழுது இடைப்படாஅ புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப 10
அலத்தல் காலை ஆயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே

# 104 ஔவையார்
போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை
ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும்
தாள் படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ
நுண் பல் கருமம் நினையாது 5
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே

# 105 கபிலர்
சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி
தடவு வாய் கலித்த மா இதழ் குவளை
வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ
பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக 5
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்-பால் பாடினை செலினே

#106
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண்மையே 5

#107
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவன் புகழ்வர் செம் நா புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே

#108
குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளி
ஆரம் ஆதலின் அம் புகை அயலது
சாரல் வேங்கை பூ சினை தவழும்
பறம்பு பாடினரதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின் 5
வாரேன் என்னான் அவர் வரையன்னே

#109
அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே 5
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே
வான் கண் அற்று அவன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு 10
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி 15
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே

#110
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே 5
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

#111
அளிதோ தானே பேர் இரும் குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே

# 112 பாரி மகளிர்
அற்றை திங்கள் அ வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றை திங்கள் இ வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே 5

# 113 கபிலர்
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும்
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி
நட்டனை-மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று 5
நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே
கோல் திரள் முன்கை குறும் தொடி மகளிர்
நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே

#114 கபிலர்
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல
நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல்
வார் அசும்பு ஒழுகும் முன்றில் 5
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே

# 115 கபிலர்
ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார்
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார்
வாக்க உக்க தே கள் தேறல்
கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு 5
இன்னான் ஆகிய இனியோன் குன்றே

#116
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை
கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல்
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர்
புன் மூசு கவலைய முள் மிடை வேலி
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் 5
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்
ஈத்து இலை குப்பை ஏறி உமணர்
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ
நோகோ யானே தேய்கமா காலை
பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும் 10
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும்
கலையும் கொள்ளா ஆக பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியல் மலை அற்றே
அண்ணல் நெடு வரை ஏறி தந்தை 15
பெரிய நறவின் கூர் வேல் பாரியது
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படு தானை வேந்தர்
பொலம் படை கலி_மா எண்ணுவோரே

#117
மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்_அகம் நிறைய புதல் பூ மலர
மனை தலை மகவை ஈன்ற அமர் கண்
ஆமா நெடு நிரை நன் புல் ஆர 5
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி
பெயல் பிழைப்பு அறியா புன்_புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே 10

#118
அறையும் பொறையும் மணந்த தலைய
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே 5

#119
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப
செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல 5
பணை கெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே

#120
வெப்புள் விளைந்த வேங்கை செம் சுவல்
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து
பூழி மயங்க பல உழுது வித்தி
பல்லி ஆடிய பல் கிளை செவ்வி
களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி 5
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி
கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு அரிய
தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை 10
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெரும் தோள் தாலம் பூசல் மேவர 15
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர்
பாடி ஆனா பண்பின் பகைவர்
ஓடு கழல் கம்பலை கண்ட 20
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே

# 121 கபிலர்
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை
பலரும் வருவர் பரிசில்_மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல்
அது நற்கு அறிந்தனை ஆயின் 5
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே

# 122 கபிலர்
கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்
கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே
வீயா திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என 5
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே 10

# 123 கபிலர்
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல் இசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசை 5
பட்ட மாரி உறையினும் பலவே

# 124 கபிலர்
நாள் அன்று போகி புள் இடை தட்ப
பதன் அன்று புக்கு திறன் அன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள
பாடு ஆன்று இரங்கும் அருவி
பீடு கெழு மலையன் பாடியோரே 5

# 125 வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்
பருத்தி_பெண்டின் பனுவல் அன்ன
நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர
உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே
நள்ளாதார் மிடல் சாய்ந்த 5
வல்லாள நின் மகிழ் இருக்கையே
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே
குன்றத்து அன்ன களிறு பெயர
கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே 10
வெலீஇயோன் இவன் என
கழல் அணி பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து சமம் தாங்கிய
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என 15
தோற்றோன் தானும் நின் கூறும்மே
தொலைஇயோன் இவன் என
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலை
திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே 20

# 126 மாறோக்கத்து நப்பசலையார்
ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு
பாணர் சென்னி பொலிய தைஇ
வாடா தாமரை சூட்டிய விழு சீர்
ஓடா பூட்கை உரவோன் மருக
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே 5
நின்-வயின் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின்
பறை இசை அருவி முள்ளூர் பொருந
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய
நில மிசை பரந்த மக்கட்கு எல்லாம் 10
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி
பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி 15
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை
இன்மை துரப்ப இசை தர வந்து நின்
வண்மையின் தொடுத்தனம் யாமே முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய 20
அரும் சமம் ததைய தாக்கி நன்றும்
நண்ணா தெவ்வர் தாங்கும்
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே

# 127 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழை அணி மகளிரொடு 5
சாயின்று என்ப ஆஅய் கோயில்
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி
உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே 10

# 128 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மன்ற பலவின் மா சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின்
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும்
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் 5
ஆடு_மகள் குறுகின் அல்லது
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே

# 129 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
குறி இறை குரம்பை குறவர் மாக்கள்
வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
தீம் சுளை பலவின் மா மலை கிழவன்
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் 5
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று
வானம் மீன் பல பூப்பின் ஆனாது
ஒரு வழி கரு வழி இன்றி
பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே

# 130 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர் 5
குட கடல் ஓட்டிய ஞான்றை
தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே

#131 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மழை கணம் சேக்கும் மா மலை கிழவன்
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன்
குன்றம் பாடின-கொல்லோ
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே

#132 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளை பைம் சுனை பருகி அயல 5
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே

#133 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின்
கேட்பின் அல்லது காண்பு அறியலையே
காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளர
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி 5
மாரி அன்ன வண்மை
தேர் வேள் ஆயை காணிய சென்மே

#134 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே

#135 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை
அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்
வளை கை விறலி என் பின்னள் ஆக
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் 5
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ
புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே என்றும் 10
மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு
கறை அடி யானை இரியல்_போக்கும்
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய்
களிறும் அன்றே மாவும் அன்றே
ஒளிறு படை புரவிய தேரும் அன்றே 15
பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கு அவர்
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என
பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு
அன்ன ஆக நின் ஊழி நின்னை
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் 20
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே

#136 துறையூர் ஓடை கிழார்
யாழ் பத்தர் புறம் கடுப்ப
இழை வலந்த பல் துன்னத்து
இடை புரை பற்றி பிணி விடாஅ
ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன் பகை என ஒன்று என்கோ 5
உண்ணாமையின் ஊன் வாடி
தெண் நீரின் கண் மல்கி
கசிவு-உற்ற என் பல் கிளையொடு
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ
அன்ன தன்மையும் அறிந்தீயார் 10
நின்னது தா என நிலை தளர
மரம் பிறங்கிய நளி சிலம்பின்
குரங்கு அன்ன புன் குறும் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய் 15
என கருதி பெயர் ஏத்தி
வாயார நின் இசை நம்பி
சுடர் சுட்ட சுரத்து ஏறி
இவண் வந்த பெரு நசையேம்
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் 20
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என
அனைத்து உரைத்தனன் யான் ஆக
நினக்கு ஒத்தது நீ நாடி
நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும்
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை 25
நுண் பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

#137 ஒருசிறை பெரியனார்
இரங்கு முரசின் இனம் சால் யானை
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது 5
கழை கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்
கண் அன்ன மலர் பூக்குந்து
கரும் கால் வேங்கை மலரின் நாளும்
பொன் அன்ன வீ சுமந்து 10
மணி அன்ன நீர் கடல் படரும்
செம் வரை படப்பை நாஞ்சில் பொருந
சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை
நீ வாழியர் நின் தந்தை
தாய் வாழியர் நின் பயந்திசினோரே 15

#138 மருதன் இளநாகனார்
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய
மீன்_இனம் கலித்த துறை பல நீந்தி
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண 5
நீயே பேர் எண்ணலையே நின் இறை
மாறி வா என மொழியலன் மாதோ
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
மரன் அணி பெரும் குரல் அனையன் ஆதலின் 10
நின்னை வருதல் அறிந்தனர் யாரே

#139 மருதன் இளநாகனார்
சுவல் அழுந்த பல காய
சில் ஓதி பல் இளைஞருமே
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே
வாழ்தல் வேண்டி 5
பொய் கூறேன் மெய் கூறுவல்
ஓடா பூட்கை உரவோர் மருக
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி
கனி பதம் பார்க்கும் காலை அன்றே 10
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள்
அரும் சமம் வருகுவது ஆயின்
வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே 15

#140 ஔவையார்
தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செம் நா புலவீர்
வளை கை விறலியர் படப்பை கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆக தான் பிற 5
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளது-கொல்
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே 10

#141 பரணர்
பாணன் சூடிய பசும்_பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்க
கடும் பரி நெடும் தேர் பூட்டு விட்டு அசைஇ
ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர்
யாரீரோ என வினவல் ஆனா 5
காரென் ஒக்கல் கடும் பசி இரவல
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் 10
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ
கடாஅ யானை கலி_மான் பேகன்
எ துணை ஆயினும் ஈதல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே 15

#142 பரணர்
அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும்
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போல
கடாஅ யானை கழல் கால் பேகன்
கொடை மடம்படுதல் அல்லது 5
படை மடம்படான் பிறர் படை மயக்கு-உறினே

#143 கபிலர்
மலை வான் கொள்க என உயர் பலி தூஉய்
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என
கடவுள் பேணிய குறவர் மாக்கள்
பெயல் கண்மாறிய உவகையர் சாரல்
புன தினை அயிலும் நாட சின போர் 5
கைவள் ஈகை கடு மான் பேக
யார்-கொல் அளியள் தானே நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண் 10
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும் நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலை_அகம் நனைப்ப விம்மி
குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே 15

#144 கபிலர்
அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேம் ஆக
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப 5
இனைதல் ஆனாள் ஆக இளையோய்
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என
யாம் தன் தொழுதனம் வினவ காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி 10
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல் ஊரானே

#145 கபிலர்
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை
கடாஅ யானை கலி_மான் பேக
பசித்தும் வாரோம் பாரமும் இலமே
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் 5
நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி
அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என
இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின்
இன மணி நெடும் தேர் ஏறி
இன்னாது உறைவி அரும் படர் களைமே 10

#146 அரிசில் கிழார்
அன்ன ஆக நின் அரும் கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல
நன் நாடு பாட என்னை நயந்து
பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ 5
நல்காமையின் நைவர சாஅய்
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ
தண் கமழ் கோதை புனைய 10
வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே

#147 பெருங்குன்றூர் கிழார்
கல் முழை அருவி பன் மலை நீந்தி
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை
கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழை கண் அம் மா அரிவை 5
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல்
மண்-உறு மணியின் மாசு அற மண்ணி
புது மலர் கஞல இன்று பெயரின்
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே

#148 வன்பரணர்
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின்
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடு விளங்கு வியல் நகர் பரிசில் முற்று அளிப்ப
பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி 5
செய்யா கூறி கிளத்தல்
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே

#149 வன்பரணர்
நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் அது நீ
புரவு கடன் பூண்ட வண்மை யானே 5

#150 வன் பரணர்
கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன
பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தி
தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என்
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால் 5
வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி
செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ
இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே 10
தாம் வந்து எய்தா அளவை ஒய்யென
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின்
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி
நன் மரன் நளிய நறும் தண் சாரல் 15
கல் மிசை அருவி தண்ணென பருகி
விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே
பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம்
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் 20
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன்
எ நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ என பேரும் சொல்லான்
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி 25
அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின்
பளிங்கு வகுத்து அன்ன தீ நீர்
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே

#151 பெருந்தலை சாத்தனார்
பண்டும்_பண்டும் பாடுநர் உவப்ப
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து
புன் தலை மட பிடி பரிசில் ஆக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் 5
கண்டீரக்கோன் ஆகலின் நன்றும்
முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை 10
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும்
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே

#152 வண்பரணர்
வேழம் வீழ்த்த விழு தொடை பகழி
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை
கேழல் பன்றி வீழ அயலது
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் 5
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும்
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் 10
சாரல் அருவி பய மலை கிழவன்
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் 15
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்
மதலை மா கோல் கைவலம் தமின் என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
மூவேழ் துறையும் முறையுளி கழிப்பி 20
கோ என பெயரிய-காலை ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் 25
தான் உயிர் செகுத்த மான் நிண புழுக்கோடு
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி
தன் மலை பிறந்த தா இல் நன் பொன்
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் என
சுரத்து இடை நல்கியோனே விடர் சிமை 30
ஓங்கு இரும் கொல்லி பொருநன்
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே

#153 வண்பரணர்
மழை அணி குன்றத்து கிழவன் நாளும்
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன்கை
அடு போர் ஆனா ஆதன் ஓரி
மாரி வண் கொடை காணிய நன்றும் 5
சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பே
பனி நீர் பூவா மணி மிடை குவளை
வால் நார் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி 10
கூடு கொள் இன் இயம் கறங்க
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே

#154 மோசிகீரனார்
திரை பொரு முந்நீர் கரை நணி செலினும்
அறியுநர் காணின் வேட்கை நீக்கும்
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல்
அரசர் உழையர் ஆகவும் புரை தபு
வள்ளியோர் படர்குவர் புலவர் அதனால் 5
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே
ஈ என இரத்தலோ அரிதே நீ அது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர்
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை 10
தூ விரி கடுப்ப துவன்றி மீமிசை
தண் பல இழிதரும் அருவி நின்
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே

#155 மோசி கீரனார்
வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு 5
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்
கொண்பெரும்கானத்து கிழவன்
தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தே

#156 மோசிகீரனார்
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண்பெரும்கானம்
நச்சி சென்ற இரவலர் சுட்டி
தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃதான்று
நிறை அரும் தானை வேந்தரை 5
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே

#157 குறமகள் இளவெயினி
தமர் தன் தப்பின் அது நோன்றல்லும்
பிறர் கையறவு தான் நாணுதலும்
படை பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
நும்மோர்க்கு தகுவன அல்ல எம்மோன் 5
சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல்
கோடல் கண்ணி குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை
எல் படு பொழுதின் இனம் தலைமயங்கி
கட்சி காணா கடமான் நல் ஏறு 10
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை
இரும் புலி புகர் போத்து ஓர்க்கும்
பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே

#158 பெருஞ்சித்திரனார்
முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும்
அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசை
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும் 5
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த
மாரி ஈகை மற போர் மலையனும்
ஊராது ஏந்திய குதிரை கூர் வேல்
கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும்
ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை 10
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வம்-உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர
தள்ளாது ஈயும் தகை சால் வண்மை 15
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவர
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண்
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற 20
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினி கவினிய பலவின் ஆர்வு-உற்று
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும்
அதிரா யாணர் முதிரத்து கிழவ 25
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண
இசை மேந்தோன்றிய வண்மையொடு
பகை மேம்படுக நீ ஏந்திய வேலே

#159 பெருஞ்சித்திரனார்
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின்
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து
கோல் கால் ஆக குறும் பல ஒதுங்கி
நூல் விரித்து அன்ன கதுப்பினள் கண் துயின்று
முன்றில் போகா முதுர்வினள் யாயும் 5
பசந்த மேனியொடு படர் அட வருந்தி
மருங்கில் கொண்ட பல் குறு_மாக்கள்
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து
குப்பை கீரை கொய் கண் அகைத்த
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று 10
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று
அவிழ் பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா
துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் 15
கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை
ஐவனம் வித்தி மை உற கவினி
ஈனல் செல்லா ஏனற்கு இழுமென
கருவி வானம் தலைஇ ஆங்கும்
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என் 20
பசி தின திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும்
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
இன்புற விடுதி ஆயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண 25
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ்
வசை இல் விழு திணை பிறந்த
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே

#160 பெருஞ்சித்திரனார்
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப கல்லென
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு
பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய 5
நெறி கொள் வரி குடர் குளிப்ப தண்ணென
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில்
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என 10
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல் இசை குமணன்
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே
செல்குவை ஆயின் நல்குவன் பெரிது என
பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து 15
உள்ளம் துரப்ப வந்தனென் எள்-உற்று
இல் உணா துறத்தலின் இல் மறந்து உறையும்
புல் உளை குடுமி புதல்வன் பன் மாண்
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின் 20
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும்
வினவல் ஆனாள் ஆகி நனவின் 25
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப
செல்லா செல்வம் மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை படு திரை
நீர் சூழ் நிலவரை உயர நின்
சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பலவே 30

#161 பெருஞ்சித்திரனார்
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு
ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து
வள மழை மாறிய என்றூழ் காலை 5
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின்
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர
சென்று தலைவருந அல்ல அன்பு இன்று 10
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின்
தாள் படு செல்வம் காண்-தொறும் மருள 15
பனை மருள் தட கையொடு முத்து படு முற்றிய
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு
ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கின்
படு மணி இரட்ட ஏறி செம்மாந்து
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில் 20
இன்மை துரப்ப இசைதர வந்து நின்
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின் அளந்து அறி-மதி பெரும என்றும் 25
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி
பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம்
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின்
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப 30
வாள் அமர் உழந்த நின் தானையும்
சீர் மிகு செல்வமும் ஏத்துகம் பலவே

#162 பெருஞ்சித்திரனார்
இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர்
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த 5
நெடு நல் யானை எம் பரிசில்
கடு மான் தோன்றல் செல்வல் யானே

#163 பெருஞ்சித்திரனார்
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடும் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது 5
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே
பழம் தூங்கு முதிரத்து கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே

#164 பெருந்தலை சாத்தனார்
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்த்த பொல்லா வறு முலை
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி 5
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நின் படர்ந்திசினே நல் போர் குமண
என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலை
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய 10
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்
மண் அமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே

#165 பெருந்தலை சாத்தனார்
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரே
துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே 5
தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல்
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை
பாடி நின்றெனன் ஆக கொன்னே
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் 10
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
ஆடு மலி உவகையோடு வருவல்
ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டே 15

#166 ஆவூர் மூலம் கிழார்
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்-மார் 5
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட 10
புல புல்வாய் கலை பச்சை
சுவல் பூண் ஞான் மிசை பொலிய
மறம் கடிந்த அரும் கற்பின்
அறம் புகழ்ந்த வலை சூடி
சிறு நுதல் பேர் அகல் அல்குல் 15
சில சொல்லின் பல கூந்தல் நின்
நிலைக்கு ஒத்த நின் துணை துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்ப
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர்_ஏழின் இடம் முட்டாது 20
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாண பல வேட்டும்
மண் நாண புகழ் பரப்பியும்
அரும் கடி பெரும் காலை
விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை 25
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது
பொன் படு நெடு வரை புயல்_ஏறு சிலைப்பின்
பூ விரி புது நீர் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் 30
செல்வல் அத்தை யானே செல்லாது
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே

#167 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
நீயே அமர் காணின் அமர் கடந்து அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்
வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே
அவரே நின் காணின் புறங்கொடுத்தலின் 5
ஊறு அறியா மெய் யாக்கையொடு
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர்
ஒவ்வா யா உள மற்றே வெல் போர்
கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி 10
நின்னை வியக்கும் இ உலகம் அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே

#168 கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்
அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நல்_நாள் வரு பதம் நோக்கி குறவர் 5
உழாஅது வித்திய பரூஉ குரல் சிறுதினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி 10
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்
செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும்
ஊரா குதிரை கிழவ கூர் வேல்
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி 15
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும
கைவள் ஈகை கடு மான் கொற்ற
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
பொய்யா செம் நா நெளிய ஏத்தி
பாடுப என்ப பரிசிலர் நாளும் 20
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே

#169 காவிரிபூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நும் படை செல்லும்-காலை அவர் படை
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ
அவர் படை வரூஉம்-காலை நும் படை
கூழை தாங்கிய அகல் யாற்று
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ 5
அரிதால் பெரும நின் செவ்வி என்றும்
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல்
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் 10
பெரு மர கம்பம் போல
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே

#170 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர்
எல் அடிப்படுத்த கல்லா காட்சி
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென
இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப 5
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடும் துடி
புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன்
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே
சிறு கண் யானை வெண் கோடு பயந்த 10
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல்
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
இரும்பு பயன் படுக்கும் கரும் கை கொல்லன் 15
விசைத்து எறி கூடமொடு பொருஉம்
உலை_கல் அன்ன வல்லாளன்னே

#171 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
இன்று செலினும் தருமே சிறு வரை
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் 5
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப
அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன்
இன மலி கத சே களனொடு வேண்டினும்
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்
அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை 10
பிறர்க்கும் அன்ன அற தகையன்னே
அன்னன் ஆகலின் எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்க தில்ல
ஈவோர் அரிய இ உலகத்து
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே 15

#172 வடமண்ணக்கன் தாமோதரனார்
ஏற்றுக உலையே ஆக்குக சோறே
கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழை
பாடு வல் விறலியர் கோதையும் புனைக
அன்னவை பலவும் செய்க என்னதூஉம்
பரியல் வேண்டா வரு பதம் நாடி 5
ஐவனம் காவல் பெய் தீ நந்தின்
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும்
வன்_புல நாடன் வய_மான் பிட்டன்
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை
மா வள் ஈகை கோதையும் 10
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே

#173 சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி 5
முட்டை கொண்டு வன்_புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும்
இரும் கிளை சிறாஅர் காண்டும் கண்டும்
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென 10
பசி_பிணி_மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே

#174 மாறோக்கத்து நப்பசலையார்
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு 5
அரசு இழந்திருந்த அல்லல் காலை
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருது
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர
பொய்யா நாவின் கபிலன் பாடிய 10
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென
செரு புகல் மறவர் செல் புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
மதி மருள் வெண்குடை காட்டி அ குடை 15
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந
விடர் புலி பொறித்த கோட்டை சுடர் பூண்
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன்
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர்
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் 20
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்
கல் கண் பொடிய கானம் வெம்ப
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க 25
கோடை நீடிய பைது அறு காலை
இரு நிலம் நெளிய ஈண்டி
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே

#175 கள்ளில் ஆத்திரையனார்
எந்தை வாழி ஆதனுங்க என்
நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே
நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்
என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல் 5
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
திண் கதிர் திகிரி திரிதர குறைத்த
உலக இடைகழி அறை வாய் நிலைஇய
மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும்
பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே 10

#176 புறத்திணை நன்னாகனார்
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின் 5
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை
உடையை வாழி எம் புணர்ந்த பாலே
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர்
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல 10
காணாது கழிந்த வைகல் காணா
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே

#177 ஆவூர் மூலங்கிழார்
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்
வெளிறு கண் போக பன் நாள் திரங்கி
பாடி பெற்ற பொன் அணி யானை
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின்
திங்களும் நுழையா எந்திர படு புழை 5
கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்
தீம் புளி களாவொடு துடரி முனையின்
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி 10
கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை
பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய 15
இரும் பனம் குடையின் மிசையும்
பெரும் புலர் வைகறை சீர் சாலாதே

#178 ஆவூர் மூலங்கிழார்
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்-உற்று
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் 5
ஈண்டோர் இன் சாயலனே வேண்டார்
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்-காலை 10
ஏமம் ஆக தான் முந்துறுமே

#179 வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார்
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்
விசி பிணி முரசமொடு மண் பல தந்த
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன் 5
படை வேண்டு-வழி வாள் உதவியும்
வினை வேண்டு-வழி அறிவு உதவியும்
வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்து
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து
தோலா நல் இசை நாலை_கிழவன் 10
பருந்து பசி தீர்க்கும் நல் போர்
திருந்து வேல் நாகன் கூறினர் பலரே

#180 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்து
இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி 5
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து
ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ முது வாய் இரவல
யாம் தன் இரக்கும்-காலை தான் எம் 10
உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர்
கரும் கை கொல்லனை இரக்கும்
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே

#181 சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார்
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்
கரும் கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும்
பெரும் குறும்பு உடுத்த வன்-புல இருக்கை
புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை 5
வலாஅரோனே வாய் வாள் பண்ணன்
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே செல்-மதி நீயே சென்று அவன்
பகை புலம் படரா அளவை நின்
பசி பகை பரிசில் காட்டினை கொளற்கே 10

#182 கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் 5
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே

#183 ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்
உற்று-உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடி பிறந்த பல்லோருள்ளும் 5
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல்-பால் ஒருவனும் அவன் கண் படுமே 10

#184 பிசிராந்தையார்
காய் நெல் அறுத்து கவளம் கொளினே
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே 5
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியா கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல 10
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

#185 தொண்டைமான் இளந்திரையன்
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகை கூழ் அள்ளல் பட்டு 5
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே

#186 மோசிகீரனார்
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்கு கடனே

#187 ஔவையார்
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எ வழி நல்லவர் ஆடவர்
அ வழி நல்லை வாழிய நிலனே

#188 பாண்டியன் அறிவுடை நம்பி
படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும்
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை பட
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் 5
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்கு-உறு மக்களை இல்லோர்க்கு
பய குறை இல்லை தாம் வாழும் நாளே

#189 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு_மா பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே 5
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

#190 சோழன் நல்லுருத்திரன்
விளை_பத சீறிடம் நோக்கி வளை கதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம்
வளன் வலி-உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல் ஆகியரோ 5
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள்
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து
இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்து அன்ன மெலிவு இல் உள்ளத்து 10
உரன் உடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ

#191 பிசிராந்தையர்
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்_தலை 5
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

#192 கணியன் பூங்குன்றன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் 5
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர் 10
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

#193 ஓரேருழவர்
அதள் எறிந்து அன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்-மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே

#194
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூ அணி அணிய பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற அ பண்பிலாளன் 5
இன்னாது அம்ம இ உலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே

#195 நரிவெரூஉ தலையார்
பல் சான்றீரே பல் சான்றீரே
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே
கணிச்சி கூர்ம் படை கடும் திறல் ஒருவன்
பிணிக்கும்-காலை இரங்குவிர் மாதோ 5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே

#196 ஆவூர் மூலங்கிழார்
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மை-பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே 5
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ் குறைப்படூஉம் வாயில் அத்தை
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும்
சேய்த்து காணாது கண்டனம் அதனால்
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும் 10
வெயில் என முனியேன் பனி என மடியேன்
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல்
மெல் இயல் குறு_மகள் உள்ளி
செல்வல் அத்தை சிறக்க நின் நாளே 15

#197 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ
கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ
உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு 5
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர்
வெண்குடை செல்வம் வியத்தலோ இலமே
எம்மால் வியக்கப்படூஉமோரே
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த 10
குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு
புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்-வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும் 15
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே

#198 வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்
அருவி தாழ்ந்த பெரு வரை போல
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா
கடவுள் சான்ற கற்பின் சே இழை
மடவோள் பயந்த மணி மருள் அம் வாய்
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி 5
திண் தேர் அண்ணல் நின் பாராட்டி
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம்
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின் 10
விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக
பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல்
நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும் 15
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம்
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும்
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும் 20
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை யானும்
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும்
துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின் 25
அடி நிழல் பழகிய அடியுறை
கடு மான் மாற மறவாதீமே

#199 பெரும்பதுமனார்
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம்
அனையர் வாழியோ இரவலர் அவரை
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர் 5
உடைமை ஆகும் அவர் உடைமை
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே

#200 கபிலர்
பனி வரை நிவந்த பாசிலை பலவின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
கழை மிசை துஞ்சும் கல்_அக வெற்ப 5
நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே
இவரே பூ தலை அறாஅ புனை கொடி முல்லை
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும் 10
கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி_மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர் 15
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே

#201 கபிலர்
இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை
படு மணி யானை பறம்பின் கோமான்
நெடு மா பாரி_மகளிர் யானே 5
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகை துவரை ஆண்டு 10
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்
தார் அணி யானை சேட்டு இரும் கோவே
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் 15
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல்
பொன் படு மால் வரை கிழவ வென் வேல்
உடலுநர் உட்கும் தானை
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே 20

#202 கபிலர்
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட
கட்சி காணா கடமா நல் ஏறு
கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர
கடிய கதழும் நெடு வரை படப்பை
வென்றி நிலைஇய விழு புகழ் ஒன்றி 5
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி
நுந்தை தாயம் நிறைவு-உற எய்திய
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் 10
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்
எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர்
கைவண் பாரி_மகளிர் என்ற என் 15
தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும
விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மா தகட்டு ஒள் வீ தாய துறுகல்
இரும் புலி வரி புறம் கடுக்கும் 20
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே

#203 ஊன்பொதி பசுங்குடையார்
கழிந்தது பொழிந்து என வான் கண்மாறினும்
தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் 5
இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்
உள்ளி வருநர் நசை இழப்போரே
அனையையும் அல்லை நீயே ஒன்னார்
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என 10
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய்
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே

#204 கழைதின் யானையார்
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்_எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் 5
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உண கலங்கி
சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை 10
உள்ளி சென்றோர் பழி அலர் அதனால்
புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

#205 பெருந்தலை சாத்தனார்
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே
விறல் சினம் தணிந்த விரை பரி புரவி
உறுவர் செல் சார்வு ஆகி செறுவர்
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை 5
வெள் வீ வேலி கோடை_பொருந
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து 10
கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்
களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே

#206 ஔவையார்
வாயிலோயே வாயிலோயே
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம்
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே 5
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என
வறும் தலை உலகமும் அன்றே அதனால்
காவினெம் கலனே சுருக்கினெம் கல பை 10
மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழு உடை காட்டு_அகத்து அற்றே
எ திசை செலினும் அ திசை சோறே

#207 பெருஞ்சித்திரனார்
எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்-வழி
அருகில் கண்டும் அறியார் போல
அகம் நக வாரா முகன் அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர் 5
வருக என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென
நோவாதோன்-வயின் திரங்கி 10
வாயா வன் கனிக்கு உலமருவோரே

#208 பெருஞ்சித்திரனார்
குன்றும் மலையும் பல பின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு
ஈங்கனம் செல்க தான் என என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன் 5
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர்
வாணிக பரிசிலன் அல்லேன் பேணி
தினை அனைத்து ஆயினும் இனிது அவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே

#209 பெருந்தலை சாத்தனார்
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர்
கூம்பு விடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல்
படு திரை இன் சீர் பாணி தூங்கும் 5
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந
பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று
பெறாது பெயரும் புள் இனம் போல நின் 10
நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள்
குறு நணி காண்குவது ஆக நாளும் 15
நறும் பல் ஒலிவரும் கதுப்பின் தே மொழி
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும்
பெரு வரை அன்ன மார்பின்
செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையே

#210 பெருங்குன்றூர் கிழார்
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ
செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி 5
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே அதனால்
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என
நுவல்வு-உறு சிறுமையள் பல புலந்து உறையும் 10
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை
விடுத்தேன் வாழியர் குருசில் உது காண்
அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர்
அரும் கடி முனை அரண் போல
பெரும் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே 15

#211 பெருங்குன்றூர் கிழார்
அஞ்சுவரு மரபின் வெம் சின புயல்_ஏறு
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய
நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிர
குன்று தூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று 5
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின்
உள்ளி வந்த ஓங்கு நிலை பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என
கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின்
உள்ளியது முடிந்தோய் மன்ற முன்_நாள் 10
கை உள்ளது போல் காட்டி வழி நாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாண கூறி என்
நுணங்கு செம் நா அணங்க ஏத்தி
பாடப்பாட பாடு புகழ் கொண்ட நின் 15
ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சி
செல்வல் அத்தை யானே வைகலும்
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து 20
முலை கோள் மறந்த புதல்வனொடு
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே

#212 பிசிராந்தையார்
நும் கோ யார் என வினவின் எம் கோ
களமர்க்கு அரித்த விளையல் வெம் கள்
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ
வைகு தொழில் மடியும் மடியா விழவின் 5
யாணர் நன் நாட்டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்து பசி பகை ஆகி
கோழியோனே கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே 10

#213 புல்லாற்றூர் எயிற்றியனார்
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள்
வெண்குடை விளக்கும் விறல் கெழு வேந்தே
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து
நின் தலை வந்த இருவரை நினைப்பின்
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர் 5
அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்
நினையும்-காலை நீயும் மற்று அவர்க்கு
அனையை அல்லை அடு_மான் தோன்றல்
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும் 10
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே
அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே
நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த
எண் இல் காட்சி இளையோர் தோற்பின் 15
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே
அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே வல் விரைந்து
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு 20
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர்
விதும்பு-உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே

#214 கோப்பெரும் சோழன்
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே 5
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் 10
மாறி பிறவார் ஆயினும் இமயத்து
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே

#215 கோப்பெரும் சோழன்
கவை கதிர் வரகின் அவைப்பு-உறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் 5
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே
செல்வ காலை நிற்பினும்
அல்லல் காலை நில்லலன்-மன்னே

#216 கோப்பெரும் சோழன்
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் 5
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே
தன் பெயர் கிளக்கும்-காலை என் பெயர்
பேதை சோழன் என்னும் சிறந்த
காதல் கிழமையும் உடையவன் அதன்_தலை 10
இன்னது ஓர் காலை நில்லலன்
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே

#217 பொத்தியார்
நினைக்கும்-காலை மருட்கை உடைத்தே
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக 5
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே
அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும் 10
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இ உலகம்
என் ஆவது-கொல் அளியது தானே

#218 கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும்-காலை
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் 5
சான்றோர்-பாலர் ஆப
சாலார் சாலார்-பாலர் ஆகுபவே

#219 பெருஞ்கருவூர்ப்சதுக்கத்து பூதநாதனார்
உள் ஆற்று கவலை புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரால் அத்தை நின் குறி இருந்தோரே

#220 பொத்தியார்
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெரும் களிறு இழந்த பைதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு
கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார் 5
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே

#221 பொத்தியார்
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து 5
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது அ தக்கோனை
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் 10
நனம் தலை உலகம் அரந்தை தூங்க
கெடு இல் நல் இசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே

#222 பொத்தியார்
அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என
என் இவண் ஒழித்த அன்பு இலாள
எண்ணாது இருக்குவை அல்லை 5
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே

#223 பொத்தியார்
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும்
இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
இன் உயிர் விரும்பும் கிழமை 5
தொல் நட்பு உடையார் தம் உழை செலினே

#224 கருங்குழல் ஆதனார்
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து
முறை நற்கு அறியுநர் முன் உற புகழ்ந்த 5
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு
பருதி உருவின் பல் படை புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம்
அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன் 10
இறந்தோன் தானே அளித்து இ உலகம்
அருவி மாறி அஞ்சுவர கருகி
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர 15
கொய்து கட்டு அழித்த வேங்கையின்
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே

#225 ஆலத்தூர் கிழார்
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர
நில மலர் வையத்து வல முறை வளைஇ
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு 5
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
முள் உடை வியன் காட்டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என
இன் இசை பறையொடு வென்றி நுவல 10
தூக்கணம்_குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப
ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி
ஞாலம் காவலர் கடை தலை
காலை தோன்றினும் நோகோ யானே

#226
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ
பாடுநர் போல கைதொழுது ஏத்தி
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார்
மண்டு அமர் கடக்கும் தானை 5
திண் தேர் வளவன் கொண்ட கூற்றே

#227
நனி பேதையே நயன் இல் கூற்றம்
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல்
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும்
குருதி அம் குரூஉ புனல் பொரு_களத்து ஒழிய 5
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின்
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
இனையோன் கொண்டனை ஆயின் 10
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே

#228
கலம் செய் கோவே கலம் செய் கோவே
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல் 5
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் 10
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியா பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே 15

#229 கூடலூர் கிழார்
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முட பனையத்து வேர் முதலா
கடை குளத்து கயம் காய
பங்குனி உயர் அழுவத்து 5
தலை நாள்_மீன் நிலை திரிய
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தர
தொல் நாள்_மீன் துறை படிய
பாசி செல்லாது ஊசி துன்னாது
அளக்கர் திணை விளக்கு ஆக 10
கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர்
பறை இசை அருவி நன் நாட்டு பொருநன்
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என 15
அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும்
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும் 20
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும்
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின்
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு 25
அளந்து கொடை அறியா ஈகை
மணி வரை அன்ன மாஅயோனே

#230
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்
வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்
விலங்கு பகை கடிந்த கலங்கா செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் 5
பொய்யா எழினி பொருது களம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போல
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி 10
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்
நேரார் பல் உயிர் பருகி 15
ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே

#231
எறி புன குறவன் குறையல் அன்ன
கரி புற விறகின் ஈம ஒள் அழல்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்பு உற நீளினும் நீள்க பசும் கதிர்
திங்கள் அன்ன வெண்குடை 5
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே

#232
இல் ஆகியரோ காலை மாலை
அல் ஆகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய 5
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே

#233
பொய் ஆகியரோ பொய் ஆகியரோ
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா
சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய
பொன் புனை திகிரியின் பொய் ஆகியரோ
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் 5
போர் அடு தானை எவ்வி மார்பின்
எஃகு உறு விழுப்புண் பல என
வைகுறு விடியல் இயம்பிய குரலே

#234
நோகோ யானே தேய்கமா காலை
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல்
உலகு புக திறந்த வாயில் 5
பலரோடு உண்டல் மரீஇயோனே

#235
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே
பெரிய கள் பெறினே
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே 5
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ 10
இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன்கண் பாவை சோர
அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே 15
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை
பனி துறை பகன்றை நறை கொள் மா மலர்
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவ பலவே 20

#236
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
மலை கெழு நாட மா வண் பாரி
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே 5
பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே ஆயினும்
இம்மை போல காட்டி உம்மை 10
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே

#237
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி
பாடி நின்ற பசி நாள் கண்ணே
கோடை காலத்து கொழு நிழல் ஆகி
பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என 5
நச்சி இருந்த நசை பழுது ஆக
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு
அளியர் தாமே ஆர்க என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் 10
வாழை பூவின் வளை முறி சிதற
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை 15
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை
கடல் மண்டு புனலின் இழுமென சென்று
நனி உடை பரிசில் தருகம்
எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே 20

#238
கவி செம் தாழி குவி புறத்து இருந்த
செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும்
காடு முன்னினனே கள் காமுறுநன் 5
தொடி_கழி_மகளிரின் தொல் கவின் வாடி
பாடுநர் கடும்பும் பையென்றனவே
தோடு கொள் முரசும் கிழிந்தன கண்ணே
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப 10
எந்தை ஆகுல அதன் படல் அறியேன்
அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே
மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின்
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு 15
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து
அவல மறு சுழி மறுகலின்
தவலே நன்று-மன் தகுதியும் அதுவே

#239
தொடி உடைய தோள் மணந்தனன்
கடி காவில் பூ சூடினன்
தண் கமழும் சாந்து நீவினன்
செற்றோரை வழி தபுத்தனன்
நட்டோரை உயர்பு கூறினன் 5
வலியர் என வழிமொழியலன்
மெலியர் என மீக்கூறலன்
பிறரை தான் இரப்பு அறியலன்
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்
வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் 10
வரு படை எதிர்தாங்கினன்
பெயர் படை புறங்கண்டனன்
கடும் பரிய மா கடவினன்
நெடும் தெருவில் தேர் வழங்கினன்
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் 15
தீம் செறி தசும்பு தொலைச்சினன்
பாண் உவப்ப பசி தீர்த்தனன்
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ 20
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே

#240
ஆடு நடை புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப 5
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ
பொத்த அறையுள் போழ் வாய் கூகை
சுட்டு குவி என செத்தோர் பயிரும்
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது 10
புல்லென் கண்ணர் புரவலர் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகி பிறர்
நாடு படு செலவினர் ஆயினர் இனியே

#241 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி
வச்சிர தட கை நெடியோன் கோயிலுள்
போர்ப்பு-உறு முரசும் கறங்க
ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினானே 5

#242 குடவாயி தீரத்தனாரி
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை 5
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

#243 தொடித்தலை விழுத்தண்டினார்
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல்
செய்வு-உறு பாவைக்கு கொய் பூ தைஇ
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து
தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு 5
உயர் சினை மருத துறை உற தாழ்ந்து
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக
கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை 10
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு-உற்று
இரும் இடை மிடைந்த சில சொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே

#244
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா
விறலியர் முன்கையும் தொடியின் பொலியா
இரவல் மாக்களும்

#245 சேரமான் கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே
உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
வெள் இடை பொத்திய விளை விறகு ஈமத்து
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி 5
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே

#246 பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பல் சான்றீரே பல் சான்றீரே
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும்
பொல்லா சூழ்ச்சி பல் சான்றீரே
அணில்_வரி_கொடும்_காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது 5
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளி பெய்து அட்ட
வேளை வெந்ததை வல்சி ஆக
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ 10
பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம்
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே 15

#247 மதுரை பேராலவாயர்
யானை தந்த முளி மர விறகின்
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில்
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ 5
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
முழவு கண் துயிலா கடி உடை வியன் நகர்
சிறு நனி தமியள் ஆயினும்
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே 10

#248 ஒக்கூர் மாசாத்தனார்
அளிய தாமே சிறு வெள் ஆம்பல்
இளையம் ஆக தழை ஆயினவே இனியே
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே 5

#249 தும்பி சொகினனார் தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ
எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரி குரல் தடாரியின் யாமை மிளிர
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு 5
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை
பகல் இடம் கண்ணி பலரொடும் கூடி
ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றே
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை 10
உயர்_நிலை_உலகம் அவன் புக வார
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனா கண்ணள்
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே

#250 தாயம் கண்ணியார்
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்
இரவலர் தடுத்த வாயில் புரவலர்
கண்ணீர் தடுத்த தண் நறும் பந்தர்
கூந்தல் கொய்து குறும் தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனியே 5
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனி தலை புதல்வர் தந்தை
தனித்தலை பெரும் காடு முன்னிய பின்னே

#251 மாற்பித்தியார்
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில்
பாவை அன்ன குறும் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும்
கழை கண் நெடு வரை அருவி ஆடி
கான யானை தந்த விறகின் 5
கடும் தெறல் செம் தீ வேட்டு
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே

#252 மாற்பித்தியார்
கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள் இலை தாளி கொய்யுமோனே
இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே 5

#253 குளம்பாதாயனார்
என் திறத்து அவலம் கொள்ளல் இனியே
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப
நகாஅல் என வந்த மாறே எழா நெல்
பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின்
வளை இல் வறும் கை ஓச்சி 5
கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையே

#254 கயமனார்
இளையரும் முதியரும் வேறு புலம் படர
எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல
இடை சுரத்து இறுத்த மள்ள விளர்த்த
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள்
இன்னன் ஆயினன் இளையோன் என்று 5
நின் உரை செல்லும் ஆயின் மற்று
முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு என நாளும்
ஆனாது புகழும் அன்னை 10
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே

#255 வன்பரணர்
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகல் மார்பு எடுக்க அல்லேன்
என் போல் பெரு விதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே
திரை வளை முன்கை பற்றி 5
வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

#256 பெயர் தெரிந்திலது
கலம் செய் கோவே கலம் செய் கோவே
அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போல தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி 5
அகலிது ஆக வனைமோ
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே

#257 பெயர் தெரிந்திலது
செருப்பு இடை சிறு பரல் அன்னன் கணை கால்
அம் வயிற்று அகன்ற மார்பின் பைம் கண்
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார்-கொலோ அளியன் தானே தேரின் 5
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் என
காடு கைக்கொண்டன்றும் இலனே காலை
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி
கையின் சுட்டி பையென எண்ணி
சிலையின் மாற்றியோனே அவை தாம் 10
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும்
வெண் கோள் தோன்றா குழிசியொடு
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே

#258 உலோச்சனார்
முள் கால் காரை முது பழன் ஏய்ப்ப
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
பச்சூன் தின்று பைம் நிணம் பெருத்த
எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி 5
புலம் புக்கனனே புல் அணல் காளை
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை
ஊர் புறம் நிறைய தருகுவன் யார்க்கும்
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி
ஆ தர கழுமிய துகளன் 10
காய்தலும் உண்டு அ கள் வெய்யோனே

#259 கோடை பாடிய பெரும்பூதனார்
ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராது
இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்த
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்
செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல 5
தாவுபு தெறிக்கும் ஆன் மேல்
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே

#260 வடமோதங்கிழார்
வளர தொடினும் வௌவுபு திரிந்து
விளரி உறுதரும் தீம் தொடை நினையா
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி களர
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி 5
பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅ
காணலென்-கொல் என வினவினை வரூஉம்
பாண கேள்-மதி யாணரது நிலையே
புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும் 10
கை உள போலும் கடிது அண்மையவே
முன் ஊர் பூசலின் தோன்றி தன் ஊர்
நெடு நிரை தழீஇய மீளியாளர்
விடு கணை நீத்தம் துடி புணை ஆக
வென்றி தந்து கொன்று கோள் விடுத்து 15
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர்
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன்
நிரையொடு வந்த உரையன் ஆகி
உரி களை அரவம் மான தானே 20
அரிது_செல்_உலகில் சென்றனன் உடம்பே
கான சிற்றியாற்று அரும் கரை கால் உற்று
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே
உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயரே 25
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி
இடம் பிறர் கொள்ளா சிறு வழி
படம் செய் பந்தர் கல் மிசையதுவே

#261 ஆவூர் மூலங்கிழார்
அந்தோ எந்தை அடையா பேர் இல்
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு
வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம்
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக
கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே 5
வையம் காவலர் வளம் கெழு திரு நகர்
மையல் யானை அயா உயிர்த்து அன்ன
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
புது கண் மாக்கள் செது கண் ஆர
பயந்தனை-மன்னால் முன்னே இனியே 10
பல் ஆ தழீஇய கல்லா வல் வில்
உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி
நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை
விரகு அறியாளர் மரபின் சூட்ட
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய 15
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி
கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய
கழி_கல_மகடூஉ போல
புல்லென்றனையால் பல் அணி இழந்தே

#262 மதுரை பேராலவாயர்
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின்
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின்
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று
நிரையோடு வரூஉம் என் ஐக்கு 5
உழையோர் தன்னினும் பெரும் சாயலரே

#263 திணை கரந்தை
பெரும் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்
இரும் பறை இரவல சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து 5
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில் உமிழ் கடும் கணை மூழ்க
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே

#264 உறையூர் இளம்பொன் வாணிகனார்
பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடு
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும் கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய 5
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே

#265 சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார்
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து
பல் ஆன் கோவலர் படலை சூட்ட
கல் ஆயினையே கடு மான் தோன்றல் 5
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை
பரிசிலர் செல்வம் அன்றியும் விரி தார்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்கா வென்றியும் நின்னொடு செலவே

#266 பெருங்குன்றூர் கிழார்
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி
கயம் களி முளியும் கோடை ஆயினும்
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் 5
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசு ஆகு என்னும் பூசல் போல
வல்லே களை-மதி அத்தை உள்ளிய 10
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறி புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூர்மையே

#267

#268

#269 ஔவையார்
குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல்
பயிலாது அல்கிய பல் காழ் மாலை
மை இரும் பித்தை பொலிய சூட்டி
புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர்
ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை 5
உவலை கண்ணி துடியன் வந்து என
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின்
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் 10
கொடும் சிறை குரூஉ பருந்து ஆர்ப்ப
தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே

#270 கழாத்தலையார்
பன் மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின் இனம் சால் யானை
நிலம் தவ உருட்டிய நேமியோரும்
சமம் கண் கூடி தாம் வேட்பவ்வே
நறு விரை துறந்த நாறா நரை தலை 5
சிறுவர் தாயே பேரில்_பெண்டே
நோகோ யானே நோக்கு-மதி நீயே
மற படை நுவலும் அரி குரல் தண்ணுமை
இன் இசை கேட்ட துன் அரும் மறவர்
வென்றி தரு வேட்கையர் மன்றம் கொள்-மார் 10
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை
விழு நவி பாய்ந்த மரத்தின்
வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்தே

#271 வெறி பாடிய காமக்கண்ணியார்
நீர் அறவு அறியா நில முதல் கலந்த
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து 5
ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்து
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே

#272 மோசி சாத்தனார்
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி
போது விரி பன் மரனுள்ளும் சிறந்த
காதல் நன் மரம் நீ நிழற்றிசினே
கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்த
தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி 5
காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின்
ஊர் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னி கிழமையும் நினதே

#273 எருமை வெளியனார்
மா வாராதே மா வாராதே
எல்லார் மாவும் வந்தன எம் இல்
புல் உளை குடுமி புதல்வன் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் 5
விலங்கு இடு பெரு மரம் போல
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே

#274 உலோச்சனார்
நீல கச்சை பூ ஆர் ஆடை
பீலி கண்ணி பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து இனியே
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர 5
கையின் வாங்கி தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய் கொண்டனனே

#275 ஒரூஉத்தனார்
கோட்டம் கண்ணியும் கொடும் திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
திணி நிலை அலற கூவை போழ்ந்து தன்
வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி 5
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப
கன்று அமர் கறவை மான
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே

#276 மாதுரை பூதன் இளநாகனார்
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல்
இரம் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை
செம் முது பெண்டின் காதல் அம் சிறாஅன்
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த
குட பால் சில் உறை போல 5
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே

#277 பூங்கணுத்திரையார்
மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரை கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து 5
வான் பெய தூங்கிய சிதரினும் பலவே

#278 காக்கைபாடினியார் நச்செள்ளையார்
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் என சினைஇ 5
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா
செம் களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே

#279 ஒக்கூர் மாசாத்தியார்
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் 5
பெரு நிரை விலங்கி ஆண்டு பட்டனனே
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு-உற்று மயங்கி
வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள் 10
செருமுகம் நோக்கி செல்க என விடுமே

#280 மாறோக்கத்து நப்பசலையார்
என் ஐ மார்பில் புண்ணும் வெய்ய
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா
துஞ்சா கண்ணே துயிலும் வேட்கும்
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும் 5
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா
துடிய பாண பாடு வல் விறலி
என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும் 10
மண்-உறு மழி தலை தெண் நீர் வார
தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல்
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழி_கல_மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே 15

#281 அரிசில் கிழார்
தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க
கை பய பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசை மணி எறிந்து காஞ்சி பாடி 5
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ காதல் அம் தோழீ
வேந்து உறு விழுமம் தாங்கிய
பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே

#282 பாலை பாடிய பெருங்கடுங்கோஇ
எஃகு உளம் கழிய இரு நில மருங்கின்
அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனை
யாண்டு உளனோ என வினவுதி ஆயின்
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம்
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய 5
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய
அலகை போகி சிதைந்து வேறு ஆகிய
பலகை அல்லது களத்து ஒழியாதே
சேண் விளங்கு நல் இசை நிறீஇ 10
நா நவில் புலவர் வாய் உளானே

#283 அடை நெடும் கல்வியார்
ஒண் செங்குரலி தண் கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும் 5
வலம்புரி கோசர் அவை_களத்தானும்
மன்றுள் என்பது கெட தானே பாங்கற்கு
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க
உயிர் புறப்படாஅ அளவை தெறுவர
தெற்றி பாவை திணி மணல் அயரும் 10
மென் தோள் மகளிர் நன்று புரப்ப
இமிழ்ப்பு-உற நீண்ட பாசிலை
கமழ் பூ தும்பை நுதல் அசைத்தோனே

#284 ஓரம் போகியார்
வருக தில் வல்லே வருக தில் வல் என
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப
நூல் அரி மாலை சூடி காலின்
தமியன் வந்த மூதிலாளன்
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த 5
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக
திரிந்த வாய் வாள் திருத்தா
தனக்கு இரிந்தானை பெயர் புறம் நகுமே

#285 அரிசில் கிழார்
பாசறையீரே பாசறையீரே
துடியன் கையது வேலே அடி புணர்
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ்
பாணன் கையது தோலே காண்வர
கடும் தெற்று மூடையின் 5
வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்து தொழில் அயரும் அரும் தலை சுற்றமொடு
நெடு நகர் வந்து என விடு கணை மொசித்த
மூரி வெண் தோள்
சேறுபடு குருதி செம்மல் உக்கு ஓஒ 10
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே
அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து
இறைஞ்சியோனே குருசில் பிணங்கு கதிர்
அலமரும் கழனி தண்ணடை ஒழிய 15
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்
கரம்பை சீறூர் நல்கினன் எனவே

#286 ஔவையார்
வெள்ளை வெள்யாட்டு செச்சை போல
தன்னோர் அன்ன இளையர் இருப்ப
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனை
கால்_கழி_கட்டிலில் கிடப்பி
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே 5

#287 சாத்தந்தையார்
துடி எறியும் புலைய
எறி கோல் கொள்ளும் இழிசின
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம் புனை ஓடை அண்ணல் யானை 5
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லா பீடு உடையாளர்
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை
நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது படினே 10
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்
உயர்_நிலை_உலகத்து நுகர்ப அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே

#288 கழாத்தலையார்
மண் கொள வரிந்த வை நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடை புலத்து இரங்க
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர 5
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்தே

#289 கழாத்தலையாரி
ஈர செவ்வி உதவின ஆயினும்
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி
வீறு_வீறு ஆயும் உழவன் போல
பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய
மூதிலாளருள்ளும் காதலின் 5
தனக்கு முகந்து ஏந்திய பசும்_பொன் மண்டை
இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறை
பூ கோள் இன்று என்று அறையும்
மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே 10

#290 ஔவையார்
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர்
இன களிற்று யானை இயல் தேர் குருசில்
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை
எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன்
அடுத்து எறி குறட்டின் நின்று மாய்ந்தனனே 5
மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்பு-உழி ஓலை போல
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே

#291 நெடுங்கழுத்து பரணர்
சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர்
தூ வெள் அறுவை மாயோன் குறுகி
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும்
விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென்
என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே 5
கொன்னும் சாதல் வெய்யோற்கு தன் தலை
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே

#292 விரிச்சியூர் நன்னாகனார்
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி
வாய் வாள் பற்றி நின்றனென் என்று
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர்
ஈண்டே போல வேண்டுவன் ஆயின் 5
என் முறை வருக என்னான் கம்மென
எழு தரு பெரும் படை விலக்கி
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே

#293 நொச்சி நியமங்கிழார்
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என
பிறர் மனை புகுவள்-கொல்லோ 5
அளியள் தானே பூ_விலை_பெண்டே

#294 பெருந்தலை சாத்தனார்
வெண்குடை மதியம் மேல் நிலா திகழ்தர
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை
குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர்
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள் 5
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும்
அரவு உமிழ் மணியின் குறுகார்
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே

#295 ஔவையார்
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண்
வெந்து வாய் மடித்து வேல் தலைப்பெயரி
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின்
வரு படை போழ்ந்து வாய் பட விலங்கி
இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய 5
சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி
வாடு முலை ஊறி சுரந்தன
ஓடா பூட்கை விடலை தாய்க்கே

#296 வெள்ளை மாளர்
வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்றவ்வே
வேந்து உடன்று எறிவான்-கொல்லோ
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே 5

#297
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின்
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை
கன்று உடை மரையா துஞ்சும் சீறூர்
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி 5
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி
துறை நணி கெழீஇ கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி
நெடு வேல் பாய்ந்த மார்பின்
மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கே 10

#298
எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும்-மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் ஆர் எயில் முற்றி
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே 5

#299 பொன் முடியார்
பருத்தி வேலி சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி
கடல் மண்டு தோணியின் படை முகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தார் உடை புரவி
அணங்கு உடை முருகன் கோட்டத்து 5
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே

# 300 அரிசில் கிழார்
தோல் தா தோல் தா என்றி தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு 5
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே

# 301 ஆவூர் மூலங்கிழார்
பல் சான்றீரே பல் சான்றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அரு முள் வேலி
கல்லென் பாசறை பல் சான்றீரே
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின் 5
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின்
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள்
எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
எதிர் சென்று எறிதலும் செல்லான் அதனால்
அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே 10
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண்
நிலன் அளப்பு அன்ன நில்லா குறு நெறி
வண் பரி புரவி பண்பு பாராட்டி
எல் இடை படர் தந்தோனே கல்லென
வேந்து ஊர் யானைக்கு அல்லது 15
ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே

# 302 வெறிபாடிய காம கண்ணியார்-காம கணியார் எனவும் பாடம்
வெடி வேய் கொள்வது போல ஓடி
தாவுபு உகளும் மாவே பூவே
விளங்கு இழை மகளிர் கூந்தல் கொண்ட
நரந்த பல் காழ் கோதை சுற்றிய
ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ் 5
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய
நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர்
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
விண் இவர் விசும்பின் மீனும் 10
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே

# 303 எருமை வெளியனார்
நிலம் பிறக்கிடுவது போல குளம்பு குடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல்
எள்ளுநர் செகுக்கும் காளை கூர்த்த
வெம் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப
ஆட்டி காணிய வருமே நெருநை 5
உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர்
கரை பொரு முந்நீர் திமிலின் போழ்ந்து அவர்
கயம் தலை மட பிடி புலம்ப
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே

# 304 அரிசில்கிழார்
கொடும் குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி
வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி
பண்ணற்கு விரைதி நீயே நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஓராங்கு 5
நாளை செய்குவென் அமர் என கூறி
புன் வயிறு அருத்தலும் செல்லான் பன் மான்
கடவும் என்ப பெரிதே அது கேட்டு
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று 10
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே

# 305 மதுரை வேளாசான்
வயலை கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்கு
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி 5
மாண் வினை யானையும் மணி களைந்தனவே

# 306 அள்ளூர் நன் முல்லையார்
களிறு பொர கலங்கு கழல் முள் வேலி
அரிது உண் கூவல் அம் குடி சீறூர்
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும் 5
வேந்தனொடு
நாடு தரு விழு பகை எய்துக எனவே

# 307
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போல தோன்றும் உது காண்
வேனல் வரி அணில் வாலத்து அன்ன
கான ஊகின் கழன்று உகு முது வீ 5
அரியல் வான் குழல் சுரியல் தங்க
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த
வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர்
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு 10
வெம் சின யானை வேந்தனும் இ களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என
பண் கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே

# 308 கோவூர் கிழார்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே 5
வேந்து உடன்று எறிந்த வேலே என்னை
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே
உளம் கழி சுடர் படை ஏந்தி நம் பெரு விறல்
ஓச்சினன் துரந்த-காலை மற்றவன்
புன் தலை மட பிடி நாண 10
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே

# 309 மதுரை இளங்கண்ணி கௌசிகனார்
இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார்
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே
நல்_அரா உறையும் புற்றம் போலவும்
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை 5
உளன் என வெரூஉம் ஓர் ஒளி
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே

# 310 பொன்முடியார்
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே இனியே
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான்
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே 5
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமி
தோல் மிசை கிடந்த புல் அணலோனே

# 311 ஔவையார்
களர் படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை
தாது எரு மறுகின் மாசுண இருந்து
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்து 5
சிறப்பு உடை செம் கண் புகைய ஓர்
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே

# 312
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே
நல்_நடை நல்கல் வேந்தற்கு கடனே
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கி 5
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே

# 313 மாங்குடி மருதனார்
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சி
காணிய சென்ற இரவல் மாக்கள்
களிறொடு நெடும் தேர் வேண்டினும் கடவ
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட 5
கழி முரி குன்றத்து அற்றே
எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே

# 314 ஐயூர் முடவனார்
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன்
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை
புன் காழ் நெல்லி வன்_புல சீறூர்
குடியும் மன்னும் தானே கொடி எடுத்து 5
நிறை அழிந்து எழுதரு தானைக்கு
சிறையும் தானே தன் இறை விழுமுறினே

# 315 ஔவையார்
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல
தோன்றாது இருக்கவும் வல்லன் மற்று அதன் 5
கான்று படு கனை எரி போல
தோன்றவும் வல்லன் தான் தோன்றும்-காலே

# 316 மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்
கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாள் செருக்கு அனந்தர் துஞ்சுவோனே
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர்
நெருநை வந்த விருந்திற்கு மற்று தன் 5
இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ
கரும் கோட்டு சீறியாழ் பணையம் இது கொண்டு
ஈவது இலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய
கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்க 10
சென்று வாய் சிவந்து மேல் வருக
சிறு கண் யானை வேந்து விழுமுறவே

# 317 வேம்பற்றூர் குமரனார்
வென் வேல் வந்து
முன்றில் கிடந்த பெரும் களியாளற்கு
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும்
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே
வேட்கை மீள 5
எமக்கும் பிறர்க்கும்
யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே

# 318 பெருங்குன்றூர் கிழார்
கொய் அடகு வாட தரு விறகு உணங்க
மயில் அம் சாயல் மாஅயோளொடு
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
மனை உறை குரீஇ கறை அணல் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான் 5
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
புன் புற பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே

# 319 ஆலங்குடி வங்கனார்
பூவல் படுவில் கூவல் தோண்டிய
செம் கண் சில் நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முது வாய் சாடி
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று
படலை முன்றில் சிறுதினை உணங்கல் 5
புறவும் இதலும் அறவும் உண்கு என
பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம் புகுதந்து
ஈங்கு இருந்தீமோ முது வாய் பாண
கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி 10
புன் தலை சிறாஅர் கன்று என பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
பாடினி மாலை அணிய
வாடா தாமரை சூட்டுவன் நினக்கே 15

# 320 வீரை வெளியனார்
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி
பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல்
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர்
தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட 5
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி கலையே
பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல் வழங்காமையின் கல்லென ஒலித்து
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி 10
கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என
ஆர நெருப்பின் ஆரல் நாற
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி
தங்கினை சென்மோ பாண தங்காது 15
வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

# 321 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
பொறி புற பூழின் போர் வல் சேவல்
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள்
சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்ன
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட 5
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும்
வன்_புல வைப்பினதுவே சென்று
தின் பழம் பசீஇ பாண
வாள் வடு விளங்கிய சென்னி
செரு வெம் குருசில் ஓம்பும் ஊரே 10

# 322 ஆவூர்கிழார்
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன
கவை முள் கள்ளி பொரி அரை பொருந்தி
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்
பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய 5
மன்றில் பாயும் வன்_புலத்ததுவே
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண்
தண் பணை ஆளும் வேந்தர்க்கு
கண்படை ஈயா வேலோன் ஊரே 10

# 323
புலி-பால் பட்ட ஆமான் குழவிக்கு
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும்
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள்
கறை அடி யானைக்கு அல்லது 5
உறை கழிப்பு அறியா வேலோன் ஊரே

# 324 ஆலத்தூர் கிழார்
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரை உடை வால் முள்
ஊக நுண் கோல் செறித்த அம்பின் 5
வலாஅர் வல் வில் குலாவர கோலி
பருத்தி வேலி கருப்பை பார்க்கும்
புன்_புலம் தழீஇய அம் குடி சீறூர்
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த
வெண் காழ் தாய வண் கால் பந்தர் 10
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து
பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை
வலம் படு தானை வேந்தற்கு
உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே

# 325 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின்
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை 5
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர்
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார்
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து 10
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயம் தலை சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்து தலைவரினும் தாங்கும்
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே 15

# 326 தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
ஊர் முது வேலி பார்நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை
உயிர் நடுக்கு-உற்று புலா விட்டு அரற்ற
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்தி_பெண்டின் சிறு தீ விளக்கத்து 5
கவிர் பூ நெற்றி சேவலின் தணியும்
அரு மிளை இருக்கையதுவே மனைவியும்
வேட்ட சிறாஅர் சேண் புலம் படராது
படப்பை கொண்ட குறும் தாள் உடும்பின்
விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை 10
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
வரு விருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன் செய் ஓடை பெரும் பரிசிலனே 15

# 327
எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற
சில் விளை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்கு கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்
ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர் 5
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே

# 328
புல்லென் அடை முதல் புறவு சேர்ந்திருந்த
புன்_புல சீறூர் நெல் விளையாதே
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன
அமைந்தனனே 5
அன்னன் ஆயினும் பாண நன்றும்
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு
களவு புளி அன்ன விளை
வாடூன் கொழும் குறை
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு 10
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு
உண்டு இனிது இருந்த பின்
தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை
முயல் வந்து கறிக்கும் முன்றில் 15
சீறூர் மன்னனை பாடினை செலினே

# 329 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
இல் அடு கள்ளின் சில் குடி சீறூர்
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி
நன் நீராட்டி நெய் நறை கொளீஇய
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும்
அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று 5
அரவு உறை புற்றத்து அற்றே நாளும்
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

# 330 மதுரை கணக்காயனார்
வேந்து உடை தானை முனை கெட நெரிதர
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு
ஆழி அனையன் மாதோ என்றும்
பாடி சென்றோர்க்கு அன்றியும் வாரி 5
புரவிற்கு ஆற்றா சீறூர்
தொன்மை சுட்டிய வண்மையோனே

# 331 உறையூர் முதுகூத்தனார் உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல்
வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி
நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிக
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும்
கல்லா இடையன் போல குறிப்பின் 5
இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள்
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉ போல சிற்சில
வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின் 10
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகு பலி வெண் சோறு போல
தூவவும் வல்லன் அவன் தூவும்-காலே

# 332 விரியூர் கிழார்
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே
இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை
குரம்பை கூரை கிடக்கினும் கிடக்கும்
மங்கல மகளிரொடு மாலை சூட்டி 5
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து
மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்கு
இரும் கடல் தானை வேந்தர்
பெரும் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே 10

# 333
நீருள் பட்ட மாரி பேர் உறை
மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ண
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல்
உள்ளூர் குறும் புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் 5
உண்க என உணரா உயவிற்று ஆயினும்
தங்கினிர் சென்மோ புலவீர் நன்றும்
சென்றதற்கொண்டு மனையோள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என 10
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலளே தன் ஊர்
வேட்ட குடி-தொறும் கூட்டு
உடும்பு செய் 15
பாணி நெடும் தேர் வல்லரோடு ஊரா
வம்பு அணி யானை வேந்து தலைவரினும்
உண்பது மன்னும் அதுவே
பரிசில் மன்னும் குருசில் கொண்டதுவே

# 334 மதுரை தமிழ கூத்தனார்
காமரு பழன கண்பின் அன்ன
தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல்
புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
படப்பு ஒடுங்கும்மே பின்பு
ஊரே மனையோள் 5
பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே
உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த
பொலம்
பரிசில் பரிசிலர்க்கு ஈய 10
உரவு வேல் காளையும் கைதூவானே

# 335 மாங்குடி கிழார்
அடல் அரும் துப்பின்
குருந்தே முல்லை என்று
இ நான்கு அல்லது பூவும் இல்லை
கரும் கால் வரகே இரும் கதிர் தினையே
சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடு 5
இ நான்கு அல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இ நான்கு அல்லது குடியும் இல்லை
ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து என 10
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே

# 336 பரணர்
வேட்ட வேந்தனும் வெம் சினத்தினனே
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே 5
இயவரும் அறியா பல் இயம் கறங்க
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர்
அறன் இலள் மன்ற தானே விறல் மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை 10
தகை வளர்த்து எடுத்த நகையொடு
பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயே

# 337 கபிலர்
ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல்
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும்
வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர்
வரல்-தோறு அகம் மலர
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை 5
பாரி பறம்பின் பனி சுனை போல
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய 10
கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியே
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி 15
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர்
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை 20
உருத்த பல சுணங்கு அணிந்த
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே

# 338 குன்றூர் கிழார் மகனார்
ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின்
படு வண்டு ஆர்க்கும் பன் மலர் காவின்
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
பெரும் சீர் அரும் கொண்டியளே கரும் சினை 5
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் தரினும் தன் தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு
பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று 10
உணங்கு கலன் ஆழியின் தோன்றும்
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே

# 339
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு
மடலை மாண் நிழல் அசை விட கோவலர்
வீ ததை முல்லை பூ பறிக்குந்து
குறும் கோல் எறிந்த நெடும் செவி குறு முயல்
நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து 5
தொடலை அல்குல் தொடி தோள் மகளிர்
கடல் ஆடி கயம் பாய்ந்து
கழி நெய்தல் பூ குறூஉந்து
பைம் தழை துயல்வரும் செறு விறல்
வளர வேண்டும் அவளே என்றும் 10
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி
முறம் செவி யானை வேந்தர்
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே

# 340
அணி தழை நுடங்க ஓடி மணி பொறி
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்
மா மகள்
என வினவுதி கேள் நீ
எடுப்ப 5
மைந்தர் தந்தை
இரும் பனை அன்ன பெரும் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே

# 341 பரணர்
வேந்து குறை-உறவும் கொடாஅன் ஏந்து கோட்டு
அம் பூ தொடலை அணி தழை அல்குல்
செம் பொறி சிலம்பின் இளையோள் தந்தை
எழு விட்டு அமைத்த திண் நிலை கதவின்
அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும் 5
புலி கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடு
மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
பூ கோள் என ஏஎய் கயம் புக்கனனே
விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல்
சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை 10
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று என
படை தொட்டனனே குருசில் ஆயிடை 15
களிறு பொர கலங்கிய தண் கயம் போல
பெரும் கவின் இழப்பது-கொல்லோ
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே

# 342 அரிசில் கிழார்
கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள்
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை
திரு நய_தக்க பண்பின் இவள் நலனே 5
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின்
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் 10
தண் பணை கிழவன் இவள் தந்தையும் வேந்தரும்
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின்
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா
வாள் தக வைகலும் உழக்கும்
மாட்சியவர் இவள் தன்னைமாரே 15

# 343 பரணர்
மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனை மறுக்குந்து
மனை கவைஇய கறி மூடையால்
கலி சும்மைய கரை கலக்கு-உறுந்து
கலம் தந்த பொன் பரிசம் 5
கழி தோணியான் கரை சேர்க்குந்து
மலை தாரமும் கடல் தாரமும்
தலைப்பெய்து வருநர்க்கு ஈயும்
புனல் அம் கள்ளின் பொலம் தார் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன 10
நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் என
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து 15
இடை மதில் சேக்கும் புரிசை
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே

# 344 அடைநெடும் கல்வியார்
செந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞை
செறி வளை மகளிர் பறந்து எழுந்து
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு
நிறை சால் விழு பொருள் தருதல் ஒன்றோ
புகை படு கூர் எரி பரப்பி பகை செய்து 5
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே
காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி
கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே

# 345
களிறு அணைப்ப கலங்கின காஅ
தேர் ஓட துகள் கெழுமின தெருவு
மா மறுகலின் மயக்கு-உற்றன வழி
கலம் கழாஅலின் துறை கலக்கு-உற்றன
தெறல் மறவர் இறைகூர்தலின் 5
பொறை மலிந்து நிலன் நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி
கரும் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை 10
மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே இவள் தன்னைமாரே
செல்வம் வேண்டார் செரு புகல் வேண்டி
நிரல் அல்லோர்க்கு தரலோ இல் என
கழி பிணி பலகையர் கதுவாய் வாளர் 15
குழாஅம் கொண்ட குருதி அம் புலவொடு
கழாஅ தலையர் கரும் கடை நெடு வேல்
இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ
என் ஆவது-கொல் தானே
பன்னல் வேலி இ பணை நல் ஊரே 20

# 346 அண்டர் மகன் குறுவழுதி
பிற பால் என மடுத்தலின்
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன்
ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் 5
பேணுநர் பெறாஅது விளியும்
புன் தலை பெரும் பாழ் செயும் இவள் நலனே

# 347 கபிலர்
உண்போன் தான் நறும் கள்ளின் இட சில
நா இடை பல் தேர் கோல சிவந்த
ஒளிறு ஒள் வாள் அட குழைந்த பைம் தும்பை
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை 5
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன
குவை இரும் கூந்தல் வரு முலை சேப்ப
என் ஆவது-கொல் தானே நன்றும்
விளங்கு உறு பராரைய ஆயினும் வேந்தர்
வினை நவில் யானை பிணிப்ப 10
வேர் துளங்கின நம் ஊருள் மரனே

# 348 பரணர்
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய
கள் அரிக்கும் குயம் சிறு சின்
மீன் சீவும் பாண் சேரி
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன 5
குவளை உண்கண் இவளை தாயே
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும்
செம் நுதல் யானை பிணிப்ப
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே 10

# 349 மதுரை மருதனிள நாகனார்
நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையா
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று
அரி மதர் மழை கண் அம் மா அரிவை 5
மரம் படு சிறு தீ போல
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே

# 350 மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர்
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது
படு மழை உருமின் இறங்கு முரசின்
கடு மான் வேந்தர் காலை வந்து எம் 5
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ
பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடி வேல் எஃகின் சிவந்த உண்கண்
தொடி பிறழ் முன்கை இளையோள் 10
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே

# 351 மதுரை படைமங்க மன்னியார்
படு மணி மருங்கின பணை தாள் யானையும்
கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும்
படை அமை மறவரொடு துவன்றி கல்லென
கடல் கண்டு அன்ன கண் அகன் தானை
வென்று எறி முரசின் வேந்தர் என்றும் 5
வண் கை எயினன் வாகை அன்ன
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்
என் ஆவது-கொல் தானே தெண் நீர்
பொய்கை மேய்ந்த செ வரி நாரை
தேம் கொள் மருதின் பூ சினை முனையின் 10
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே

# 352 பரணர்
தேஎம் கொண்ட வெண் மண்டையான்
வீங்கு முலை கறக்குந்து
அவல் வகுத்த பசும் குடையான்
புதன் முல்லை பூ பறிக்குந்து
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் 5
குன்று ஏறி புனல் பாயின்
புற வாயால் புனல் வரையுந்து
நொடை நறவின்
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரை சால் நன் கலம் 10
கொடுப்பவும் கொளாஅ
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின்
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மா கண் மலர்ந்த முலையள் தன்னையும்
சிறு கோல் உளையும் புரவியொடு 15
யாரே

# 353 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல்
ஈகை கண்ணி இலங்க தைஇ
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை 5
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்
யார் மகள் என்போய் கூற கேள் இனி
குன்று கண்டு அன்ன நிலை பல் போர்பு
நாள் கடா அழித்த நனம் தலை குப்பை
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா 10
தொல் குடி மன்னன் மகளே முன்_நாள்
கூறி வந்த மா முது வேந்தர்க்கு
உழக்கு குருதி ஓட்டி
கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு
பஞ்சியும் களையா புண்ணர் 15
அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே

# 354 பரணர்
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும்
வயல் அமர் கழனி வாயில் பொய்கை
கயல் ஆர் நாரை உகைத்த வாளை 5
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும்
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை
வீங்கு இறை பணை தோள் மடந்தை
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே 10

# 355
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே மற்றே
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர்
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி 5

# 356 தாயங்கண்ணனார்
களரி பரந்து கள்ளி போகி
பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல்
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் 5
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து
மன்பதை எல்லாம் தானாய்
தன் புறம் காண்போர் காண்பு அறியாதே

# 357 பிரமனார்
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்
மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே
வைத்தது அன்றே வெறுக்கை வித்தும் 5
அற வினை அன்றே வழு துணை அ துணை
புணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழ
தொக்கு உயிர் வௌவும்-காலை
இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே

# 358 வான்மீகியார்
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம்
ஒரு பகல் எழுவர் எய்தி அற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட்டனரே காதலர் அதனால் 5
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே

# 359 கரவட்டனாரி
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின்
வேறு படு குரல வெம் வாய் கூகையொடு
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர் 5
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி
ஈம விளக்கின் வெருவர பேரும்
காடு முன்னினரே நாடு கொண்டோரும்
நினக்கும் வருதல் வைகல் அற்றே
வசையும் நிற்கும் இசையும் நிற்கும் 10
அதனால் வசை நீக்கி இசை வேண்டியும்
நசை வேண்டாது நன்று மொழிந்தும்
நிலவு கோட்டு பல களிற்றோடு
பொலம் படைய மா மயங்கிட
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது 15
கொள் என விடுவை ஆயின் வெள்ளென
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே

# 360 சங்க வருணர் என்னும் நாகரியர்
பெரிது ஆரா சிறு சினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்
நுண் உணர்வினால் பெரும் கொடையர்
கலுழ் நனையால் தண் தேறலர்
கனி குய்யான் கொழும் துவையர் 5
தாழ் உவந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர்
சிலரே பெரும கேள் இனி நாளும்
பலரே தகையஃது அறியாதோரே 10
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்று அதன் பண்பே அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டு இலை பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர
பாறு இறைகொண்ட பறந்தலை மாறு தக 15
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு
புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு
அழல் வாய் புக்க பின்னும் 20
பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே

# 361
கார் எதிர் உருமின் உரறி கல்லென
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம்
நின் வரவு அஞ்சலன் மாதோ நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை 5
தாயின் நன்று பலர்க்கு ஈத்து
தெருள் நடை மா களிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் 10
புரி மாலையர் பாடினிக்கு
பொலம் தாமரை பூ பாணரொடு
கலந்து அளைஇய நீள் இருக்கையால்
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின்
வில் என விலங்கிய புருவத்து வல்லென 15
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
கலங்கல் அம் தேறல் பொலம் கலத்து ஏந்தி
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன்
நில்லா உலகத்து நிலையாமை நீ 20
சொல்ல வேண்டா தோன்றல் முந்து அறிந்த
முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே

# 362 சிறுவெண்டேரையார்
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரள
பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்
செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி 5
அணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்
ஆ குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் 10
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ
கை பெய்த நீர் கடல் பரப்ப
ஆம் இருந்த அடை நல்கி
சோறு கொடுத்து மிக பெரிதும்
வீறு சால் நன் கலம் வீசி நன்றும் 15
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடி
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல 20
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே

# 363 ஐயாதி சிறுவெண்டேரையார்
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே சுடு பிண
காடு பதி ஆக போகி தத்தம் 5
நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு 10
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலாஅ அவி புழுக்கல்
கை கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈய பெற்று
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் 15
இன்னா வைகல் வாரா முன்னே
செய் நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே

# 364 கூகைக் கோழியார்
வாடா மாலை பாடினி அணிய
பாணன் சென்னி கேணி பூவா
எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி
காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை 5
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்
மகிழ்கம் வம்மோ மற போரோயே
அரிய ஆகலும் உரிய பெரும
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் 10
முது மர பொத்தின் கதுமென இயம்பும்
கூகை கோழி ஆனா
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே

# 365 மார்க்கண்டேயனார்
மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து
பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி 5
பொருநர் காணா செரு மிகு முன்பின்
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூற
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண்
நிலமகள் அழுத காஞ்சியும் 10
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே

# 366 கோதமனாரி
விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம்
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒரு தாம் ஆகிய பெருமையோரும்
தம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனரே 5
அதனால் அறவோன் மகனே மறவோர் செம்மால்
நின் ஒன்று உரைப்ப கேள்-மதி
நின் ஊற்றம் பிறர் அறியாது
பிறர் கூறிய மொழி தெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி 10
இரவின் எல்லை வருவது நாடி
உரைத்திசின் பெரும நன்றும்
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு
செம் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப 15
கெடல் அரும் திருவ உண்மோ
விடை வீழ்த்து சூடு கிழிப்ப
மடை வேண்டுநர்க்கு அடை அருகாது
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை 20
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின்
இடம் கெட தொகுத்த விடையின்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே

# 367 ஔவையார்
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய
பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து 5
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழ செய்த நல்வினை அல்லது 10
ஆழும்-காலை புணை பிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து 15
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே

# 368 கழா தலையார்
களிறு முகந்து பெயர்குவம் எனினே
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன
கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே
கடும் பரி நன் மான் வாங்கு-வயின் ஒல்கி 5
நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி
வளி வழக்கு அறுத்த வங்கம் போல
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க 10
முகவை இன்மையின் உகவை இன்றி
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ
கடாஅ யானை கால்_வழி அன்ன என்
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி 15
பாடி வந்தது எல்லாம் கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே

# 369 பரணர்
இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின்
கரும் கை யானை கொண்மூ ஆக
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் ஆக வயங்கு கடிப்பு அமைந்த
குருதி பலிய முரசு முழக்கு ஆக 5
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின்
வெம் விசை புரவி வீசு வளி ஆக
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த
கணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கை
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக 10
விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
செரு படை மிளிர்ந்த திருத்து-உறு பைம் சால்
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி
விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ்
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு 15
கண நரியோடு கழுது களம் படுப்ப
பூதம் காப்ப பொலி_களம் தழீஇ
பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை 20
அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று
எழிலி தோயும் இமிழ் இசை அருவி
பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன
ஓடை நுதல ஒல்குதல் அறியா 25
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த
வேழ முகவை நல்கு-மதி
தாழா ஈகை தகை வெய்யோயே

# 370 ஊன்பொதி பசுங்குடையார்
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி
நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு
பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து 5
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல்
உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின்
பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட 10
பழு மரம் உள்ளிய பறவை போல
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என
துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப
விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து
படு பிண பல் போர்பு அழிய வாங்கி 15
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் 20
வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த
தொடி உடை தட கை ஓச்சி வெருவார்
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு 25
செம் செவி எருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே

# 371 கல்லாடனார்
அகன் தலை வையத்து புரவலர் காணாது
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து
தயங்கு இரும் பித்தை பொலிய சூடி
பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய் 5
ஆடு-உறு குழிசி பாடு இன்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப
குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப 10
வரு கணை வாளி அன்பு இன்று தலைஇ
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி 15
அதரி திரித்த ஆள் உகு கடாவின்
மதியத்து அன்ன என் விசி-உறு தடாரி
அகன் கண் அதிர ஆகுளி தொடாலின்
பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை
புகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும 20
களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள் நிண சுவையினள்
குடர் தலை மாலை சூடி உண தின
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து
வயங்கு பன் மீனினும் வாழியர் பல என 25
உரு கெழு பேய்_மகள் அயர
குருதி துகள் ஆடிய களம் கிழவோயே

# 372 மாங்குடி கிழார்
விசி பிணி தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி
கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் 5
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் 10
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என
புலவு களம் பொலிய வேட்டோய் நின்
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே

# 373 கோவூர்கிழார்
உரு மிசை முழக்கு என முரசம் இசைப்ப
செரு நவில் வேழம் கொண்மூ ஆக
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் 5
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே
தண்ட மா பொறி
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு 10
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்
புண் உவந்து
உளை அணி புரவி வாழ்க என
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர 15
நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர்
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா
வாளில் தாக்கான்
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு 20
உரும் எறி மலையின் இரு நிலம் சேர
சென்றோன் மன்ற கொலைவன் சென்று எறி
வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப
வஞ்சி முற்றம் வய களன் ஆக
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து 25
கொண்டனை பெரும குட புலத்து அதரி
பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம்
விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று
புகர்_முக முகவை பொலிக என்று ஏத்தி
கொண்டனர் என்ப பெரியோர் யானும் 30
அம் கண் மா கிணை அதிர ஒற்ற
முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு 35
தா இன்று உதவும் பண்பின் பேயொடு
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செம் செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே

# 374 உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் 5
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி
இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர
கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட
புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர்
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா 10
சிலை-பால் பட்ட முளவு_மான் கொழும் குறை
விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம்
புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ
விருந்து இறை நல்கும் நாடன் எம் கோன் 15
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ ஞாயிறு
கொன் விளங்குதியால் விசும்பினானே

# 375 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி
நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால்
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக
முழா அரை போந்தை அர வாய் மா மடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி 5
ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என
புரசம் தூங்கும் அறாஅ யாணர்
வரை அணி படப்பை நன் நாட்டு பொருந 10
பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய்
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும்
ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால்
புலவர் புக்கில் ஆகி நிலவரை 15
நிலீஇயர் அத்தை நீயே ஒன்றே
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து
நிலவன்மாரோ புரவலர் துன்னி
பெரிய ஓதினும் சிறிய உணரா
பீடு இன்று பெருகிய திருவின் 20
பாடு இல் மன்னரை பாடன்மார் எமரே

# 376 புறத்திணை நன்னாகனார்
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி
சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி
சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ
பாணர் ஆரும் அளவை யான் தன் 5
யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென்
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற
பண்டு அறி வாரா உருவோடு என் அரை
தொன்றுபடு துளையொடு பரு இழை போகி 10
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி நன்றும்
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு
நிரயத்து அன்ன என் வறன் களைந்தன்றே 15
இரவினானே ஈத்தோன் எந்தை
அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின்
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
நிறை குள புதவின் மகிழ்ந்தனென் ஆகி 20
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி
தோன்றல் செல்லாது என் சிறு கிணை குரலே

# 377 உலோச்சனார்
பனி பழுநிய பல் யாமத்து
பாறு தலை மயிர் நனைய
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின்
இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி
அவி உணவினோர் புறம்காப்ப 5
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
அதன் கொண்டு வரல் ஏத்தி
கரவு இல்லா கவி வண் கையான்
வாழ்க என பெயர் பெற்றோர்
பிறர்க்கு உவமம் தான் அல்லது 10
தனக்கு உவமம் பிறர் இல் என
அது நினைத்து மதி மழுகி
அங்கு நின்ற என் காணூஉ
சேய் நாட்டு செல் கிணைஞனை
நீ புரவலை எமக்கு என்ன 15
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும்
கடல் பயந்த கதிர் முத்தமும்
வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப
நனவின் நல்கியோன் நகை சால் தோன்றல் 20
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர்
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர்
புகர் நுதல் அவிர் பொன் கோட்டு யானையர்
கவர் பரி கச்சை நன் மான்
வடி மணி வாங்கு உருள
கொடி மிசை நல் தேர் குழுவினர் 25
கதழ் இசை வன்கணினர்
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி
கடல் ஒலி கொண்ட தானை
அடல் வெம் குருசில் மன்னிய நெடிதே

# 378 ஊன்பொதி பசுங்குடையார்
தென் பரதவர் மிடல் சாய
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடை அமை கண்ணி திருந்து வேல் தட கை
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்
நல் தார் கள்ளின் சோழன் கோயில் 5
புது பிறை அன்ன சுதை செய் மாடத்து
பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என்
அரி கூடு மா கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கு என வகுத்த அல்ல மிக பல 10
மேம்படு சிறப்பின் அரும் கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே அது கண்டு
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவி தொடக்குநரும்
செவி தொடர் மரபின விரல் செறிக்குநரும் 15
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் 20
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இரும் கிளை தலைமை எய்தி
அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே

# 379 புறத்திணை நன்னாகனார்
யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை
அவனே பெறுக என் நா இசை நுவறல்
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின்
பின்னை மறத்தோடு அரிய கல் செத்து
அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும் 5
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லியாதன் கிணையேம் பெரும
குறும் தாள் ஏற்றை கொளும் கண் அம் விளர்
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என 10
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது
விண் தோய் தலைய குன்றம் பிற்பட
நசை தர வந்தனென் யானே வசை இல்
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ 15
திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும்
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே

# 380
தென் பவ்வத்து முத்து பூண்டு
வட_குன்றத்து சாந்தம் உரீஇ
கடல் தானை
இன் இசைய விறல் வென்றி
தென்னவர் வய மறவன் 5
மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து
நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய
தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன்
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன்
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் 10
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல
சிலைத்தார் பிள்ளை அம் சிறாஅர்
அன்னன் ஆகன் மாறே இ நிலம்
இலம்படு காலை ஆயினும்
புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே 15

# 381 புறத்திணை நன்னகனாரி
ஊனும் ஊணும் முனையின் இனிது என
பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்து-உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என 5
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி
துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்
பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண் 10
ஈயா மன்னர் புறங்கடை தோன்றி
சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின்
இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு 15
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
இரு நிலம் கூலம் பாற கோடை
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை
சேயை ஆயினும் இவணை ஆயினும்
இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ 20
சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று
இரும் கோள் ஈரா பூட்கை 25
கரும்பனூரன் காதல் மகனே

# 382 கோவூர் கிழார்
கடல் படை அடல் கொண்டி
மண்டு உற்ற மலிர் நோன் தாள்
தண் சோழ நாட்டு பொருநன்
அலங்கு உளை அணி இவுளி
நலங்கிள்ளி நசை பொருநரேம் 5
பிறர் பாடி பெறல் வேண்டேம்
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என
நெய் குய்ய ஊன் நவின்ற
பல் சோற்றான் இன் சுவைய
நல்குரவின் பசி துன்பின் நின் 10
முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும்
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி
கண் கேள்வி கவை நாவின்
நிறன் உற்ற அராஅ போலும்
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப 15
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல்
நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை
கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல்
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் 20
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென்
வென்ற தேர் பிறர் வேத்தவையானே

# 383 மாறோக்கத்து நப்பசலையார்
ஒண் பொறி சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி
நெடும் கடை நின்று பகடு பல வாழ்த்தி
தன் புகழ் ஏத்தினென் ஆக என் வலத்து 5
இடுக்கண் இரியல் போக ஊன் புலந்து
அரும் கடி வியன் நகர் குறுகல் வேண்டி
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள
பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் 10
கழை படு சொலியின் இழை அணி வாரா
ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண்
வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்தி
கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல
மெல் அணை கிடந்தோன் 15
என் பெயர்ந்த நோக்கி
கல் கொண்டு
அழித்து பிறந்தனென் ஆகி அ வழி
பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி 20
நரை முக ஊகமொடு உகளும் வரை அமல்
குன்று பல கெழீஇய
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என
ஒருவனை உடையேன்-மன்னே யானே
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே 25

# 384 புறத்திணை நன்னாகனார்
மென்-பாலான் உடன் அணைஇ
வஞ்சி கோட்டு உறங்கும் நாரை
அறை கரும்பின் பூ அருந்தும்
வன்-பாலான் கரும் கால் வரகின்
அரிகால் கருப்பை அலைக்கும் பூழின் 5
அம் கண் குறு முயல் வெருவ அயல
கரும் கோட்டு இருப்பை பூ உறைக்குந்து
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து
கரும்பனூரன் கிணையேம் பெரும 10
நெல் என்னா பொன் என்னா
கனற்ற கொண்ட நறவு என்னா
மனை என்னா அவை பலவும்
யான் தண்டவும் தான் தண்டான்
நிணம் பெருத்த கொழும் சோற்று இடை 15
மண் நாண புகழ் வேட்டு
நீர் நாண நெய் வழங்கி
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
யாண்டு நிற்க வெள்ளி மாண்ட 20
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும்
தின்ற நன் பல் ஊன் தோண்டவும்
வந்த வைகல் அல்லது
சென்ற எல்லை செலவு அறியேனே

# 385 கல்லாடனார்
வெள்ளி தோன்ற புள்ளு குரல் இயம்ப
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை 5
நிலம் தின சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே
காவிரி அணையும் தாழ் நீர் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அருவந்தை வாழியர் புல்லிய 10
வேங்கட விறல் வரைப்பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே

# 386 கோவூர் கிழார்
நெடு நீர நிறை கயத்து
படு மாரி துளி போல
நெய் துள்ளிய வறை முகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவும்
ஊன் கொண்ட வெண் மண்டை 5
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் 10
பாத்தி பன் மலர் பூ ததும்பின
புறவே புல் அருந்து பல் ஆயத்தான்
வில் இருந்த வெம் குறும்பின்று
கடலே கால் தந்த கலம் எண்ணுவோர்
கானல் புன்னை சினை அலைக்குந்து 15
கழியே சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து
அன்ன நன் நாட்டு பொருநம் யாமே
பொராஅ பொருநரேம்
குண திசை நின்று குட முதல் செலினும் 20
குட திசை நின்று குண முதல் செலினும்
வட திசை நின்று தென்-வயின் செலினும்
தென் திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டும் நிற்க வெள்ளி யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே 25

# 387 குண்டுகட் பாலியாதனார்
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண்டு அன்ன
வீங்கு விசி புது போர்வை
தெண் கண் மா கிணை இயக்கி என்றும்
மாறுகொண்டோர் மதில் இடறி 5
நீறு ஆடிய நறும் கவுள
பூம் பொறி பணை எருத்தின
வேறு_வேறு பரந்து இயங்கி
வேந்து உடை மிளை அயல் பரக்கும்
ஏந்து கோட்டு இரும் பிணர் தட கை 10
திருந்து தொழில் பல பகடு
பகை புல மன்னர் பணி திறை தந்து நின்
நகை_புல_வாணர் நல்குரவு அகற்றி
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று
யாஅன் இசைப்பின் நனி நன்று எனா 15
பல பிற வாழ்த்த இருந்தோர்-தம் கோன்
மருவ இன் நகர் அகன் கடை தலை
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி
வென்று இரங்கும் விறல் முரசினோன்
என் சிறுமையின் இழித்து நோக்கான் 20
தன் பெருமையின் தகவு நோக்கி
குன்று உறழ்ந்த களிறு என்கோ
கொய் உளைய மா என்கோ
மன்று நிறையும் நிரை என்கோ
மனை களமரொடு களம் என்கோ 25
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின்
நல்கியோனே நகை சால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள்
செல்வக்கடுங்கோ வாழியாதன் 30
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவண்
விடுவர் மாதோ நெடிதே நில்லா
புல் இலை வஞ்சி புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல் ஊர் சுற்றிய கழனி 35
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே

# 388 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல்
பள்ளம் வாடிய பயன் இல் காலை
இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி
தன் நிலை அறியுநன் ஆக அ நிலை 5
இடுக்கண் இரியல்_போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல்
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம்
பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன் 10
வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன்
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை
அண்ணல் யானை வழுதி 15
கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே

# 389 கள்ளில் ஆத்திரையனாரி
நீர் நுங்கின் கண் வலிப்ப
கான வேம்பின் காய் திரங்க
கயம் களியும் கோடை ஆயினும்
ஏலா வெண்பொன் போகு-உறு-காலை
எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் 5
என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்
செலினே காணா வழியனும் அல்லன்
புன் தலை மட பிடி இனைய கன்று தந்து
குன்றக நல் ஊர் மன்றத்து பிணிக்கும் 10
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்
செல்வு-உழி எழாஅ நல் ஏர் முதியன்
ஆதனுங்கன் போல நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும 15
ஐது அகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே

# 390 ஔவையார்
அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்
அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ்
விழவு அணி வியன் களம் அன்ன முற்றத்து
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் 5
கனவினும் குறுகா கடி உடை வியன் நகர்
மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என்
அரி குரல் தடாரி இரிய ஒற்றி
பாடி நின்ற பன் நாள் அன்றியும்
சென்ற ஞான்றை சென்று படர் இரவின் 10
வந்ததன் கொண்டு நெடும் கடை நின்ற
புன் தலை பொருநன் அளியன் தான் என
தன் உழை குறுகல் வேண்டி என் அரை
முது நீர் பாசி அன்ன உடை களைந்து
திரு மலர் அன்ன புது மடி கொளீஇ 15
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி
முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற 20
அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி
கொண்டி பெறுக என்றோனே உண்துறை
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்
கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி 25
வான் அறியல என் பாடு பசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ அறியலர் காண்பு அறியலரே

# 391 கல்லாடனார்
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற
திருந்தா மூரி பரந்து பட கெண்டி 5
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி
நனம் தலை மூதூர் வினவலின் 10
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன் என
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற
காண்கு வந்திசின் பெரும மாண் தக
இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும் 15
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும்
ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின்
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு
இன் துயில் பெறுக-தில் நீயே வளம் சால்
துளி பதன் அறிந்து பொழிய 20
வேலி ஆயிரம் விளைக நின் வயலே

# 392 ஔவையார்
மதி ஏர் வெண்குடை அதியர் கோமான்
கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான்
பசலை நிலவின் பனி படு விடியல்
பொரு களிற்று அடி வழி அன்ன என் கை
ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ 5
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் 10
வைகல் உழவ வாழிய பெரிது என
சென்று யான் நின்றனென் ஆக அன்றே
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை
நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என 15
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்_மீன் அன்ன பொலம் கலத்து அளைஇ
ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
அரும் பெறல் அமிழ்தம் அன்ன 20
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே

# 393 நல்லிறையனார்
பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை
குறு நெடும் துணையொடும் கூமை வீதலின்
குடி முறை பாடி ஒய்யென வருந்தி
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் 5
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா
உலகம் எல்லாம் ஒரு-பால் பட்டு என
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் 10
கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப
கோடை பருத்தி வீடு நிறை பெய்த
மூடை பண்டம் மிடை நிறைந்து அன்ன
வெண் நிண மூரி அருள நாள் உற
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் 15
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி
போது விரி பகன்றை புது மலர் அன்ன
அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும்
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல்
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி 20
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி
கோடை ஆயினும் கோடி
காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந
வாய் வாள் வளவன் வாழ்க என
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே 25

# 394 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்
ஒலி கதிர் கழனி வெண்குடை கிழவோன்
வலி துஞ்சு தட கை வாய் வாள் குட்டுவன்
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் 5
யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி
பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி 10
கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின்
வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர்
பெரும் களிறு நல்கியோனே அதன் கொண்டு 15
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும்
துன் அரும் பரிசில் தரும் என
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே

# 395 மதுரை நக்கீரர்
மென்_புலத்து வயல் உழவர்
வன்_புலத்து பகடு விட்டு
குறு முயலின் குழை சூட்டொடு
நெடு வாளை பல் உவியல்
பழம் சோற்று புக வருந்தி 5
புதல் தளவின் பூ சூடி
அரி_பறையால் புள் ஓப்பி
அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து
மனை கோழி பைம் பயிரின்னே
கான கோழி கவர் குரலொடு 10
நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து
வேய் அன்ன மென் தோளால்
மயில் அன்ன மென் சாயலார்
கிளி கடியின்னே
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து 15
ஆங்கு அ பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழு சிறப்பின்
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன்
செல்லா நல் இசை உறந்தை குணாது
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் 20
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி
கதிர் நனி சென்ற கனை இருள் மாலை
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின்
தீம் குரல் அரி குரல் தடாரியொடு 25
ஆங்கு நின்ற என் கண்டு
சிறிதும் நில்லான் பெரிதும் கூறான்
அரும் கலம் வரவே அருளினன் வேண்டி
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை
பொன் போல் மடந்தையை காட்டி இவனை 30
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு
அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
மிக வானுள் எரி தோன்றினும்
குள_மீனோடும் தாள் புகையினும் 35
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி
விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என
உள்ளதும் இல்லதும் அறியாது
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே 40

# 396 மாங்குடி கிழார்
கீழ் நீரால் மீன் வழங்குந்து
மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து
கழி சுற்றிய விளை கழனி
அரி_பறையான் புள் ஓப்புந்து
நெடு நீர் கூஉம் மணல் தண் கால் 5
மென் பறையான் புள் இரியுந்து
நனை கள்ளின் மனை கோசர்
தீம் தேறல் நறவு மகிழ்ந்து
தீம் குரவை கொளை தாங்குந்து
உள் இலோர்க்கு வலி ஆகுவன் 10
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன்
கழுமிய வென் வேல் வேளே
வள நீர் வாட்டாற்று எழினியாதன்
கிணையேம் பெரும
கொழும் தடிய சூடு என்கோ 15
வள நனையின் மட்டு என்கோ
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறு நெய்ய சோறு என்கோ
திறந்து மறந்து கூட்டு முதல்
முகந்து கொள்ளும் உணவு என்கோ 20
அன்னவை பல_பல
வருந்திய
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
எம்மோர் ஆக்க கங்கு உண்டே 25
மாரி வானத்து மீன் நாப்பண்
விரி கதிர வெண் திங்களின்
விளங்கி தோன்றுக அவன் கலங்கா நல் இசை
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
நிரை சால் நன் கலன் நல்கி 30
உரை செல சுரக்க அவன் பாடல் சால் வளனே

# 397
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும்
உயர் சினை குடம்பை குரல் தோற்றினவே
பொய்கையும் போது கண் விழித்தன பைபய
சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப 5
இரவு புறங்கண்ட காலை தோன்றி
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை
வைகறை அரவம் கேளியர் பல கோள்
செய் தார் மார்ப எழு-மதி துயில் என
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி 10
நெடும் கடை தோன்றியேனே அது நயந்து
உள்ளி வந்த பரிசிலன் இவன் என
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு
மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல்
பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு 15
மாரி அன்ன வண்மையின் சொரிந்து
வேனில் அன்ன என் வெப்பு நீங்க
அரும் கலம் நல்கியோனே என்றும்
செறுவில் பூத்த சே இதழ் தாமரை
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த 20
தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள்
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும்
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும்
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் 25
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே

# 398 திருத்தாமனார்
மதி நிலா கரப்ப வெள்ளி ஏர்தர
வகை மாண் நல் இல்
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
பொய்கை பூ முகை மலர பாணர்
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க 5
இரவு புறம்பெற்ற ஏம வைகறை
பரிசிலர் வரையா விரை செய் பந்தர்
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு
புலி_இனம் மடிந்த கல் அளை போல 10
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர்
மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என 15
என் வரவு அறீஇ
சிறிதிற்கு பெரிது உவந்து
விரும்பிய முகத்தன் ஆகி என் அரை
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை
புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ 20
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி
யான் உண அருளல் அன்றியும் தான் உண்
மண்டைய கண்ட மான் வறை கருனை
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர 25
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு
புரையோன் மேனி பூ துகில் கலிங்கம்
உரை செல அருளியோனே
பறை இசை அருவி பாயல் கோவே 30

# 399 ஐயூர் முடவனார்
அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி
காடி வெள் உலை கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை 5
செறுவின் வள்ளை சிறு கொடி பாகல்
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன
மெய் களைந்து இனனொடு விரைஇ
மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல்
அழிகளின் படுநர் களி அட வைகின் 10
பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை
காவிரி கிழவன் மாயா நல் இசை
கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன்
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து 15
கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு
ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே
அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் 20
இசையின் கொண்டான் நசை அமுது உண்க என
மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை
விசிப்பு-உறுத்து அமைந்த புது காழ் போர்வை
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து 25
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன்
கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது என
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின் 30
மீன் பூத்து அன்ன உருவ பன் நிரை
ஊர்தியொடு நல்கியோனே சீர் கொள
இழுமென இழிதரும் அருவி
வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே

# 400 கோவூர் கிழார்
மாக விசும்பின் வெண் திங்கள்
மூ_ஐந்தால் முறை முற்ற
கடல் நடுவண் கண்டு அன்ன என்
இயம் இசையா மரபு ஏத்தி
கடை தோன்றிய கடை கங்குலான் 5
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி 10
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம்
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து
போது அறியேன் பதி பழகவும்
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர் 15
பசி பகை கடிதலும் வல்லன் மாதோ
மறவர் மலிந்த தன்
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து 20
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர்
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே