நற்றிணை

பாடல்கள்
0 – 50
பாடல்கள்
51 – 100
பாடல்கள்
101 – 150
பாடல்கள்
151 – 200
பாடல்கள்
201 – 250
பாடல்கள்
251 – 300
பாடல்கள்
301 – 350
பாடல்கள்
351 – 400


# 0 கடவுள் வாழ்த்து
மா நிலம் சேவடி ஆக தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய………………………..………………………..5
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே

# 1 குறிஞ்சி
நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரை தண் தாது ஊதி மீமிசை
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை………………………..………………………..5
நீர் இன்று அமையா உலகம் போல
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சி
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே

# 2 பாலை
அழுந்துபட வீழ்ந்த பெரும் தண் குன்றத்து
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறு தலைய நெய்த்தோர் வாய
வல்லிய பெரும் தலை குருளை மாலை………………………..………………………..5
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம்
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே………………………..………………………..10

# 3 பாலை
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர்………………………..………………………..5
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்து அன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே

# 4 நெய்தல்
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை………………………..5
அரிய ஆகும் நமக்கு என கூறின்
கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி………………………..………………………..10
கரும் கால் வெண்_குருகு வெரூஉம்
இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே

# 5 குறிஞ்சி
நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப
அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப
குறவர் கொன்ற குறை கொடி நறை பவர்
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி………………………..………………………..5
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்
அரிதே காதலர் பிரிதல் இன்று செல
இளையர் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே

# 6 குறிஞ்சி
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண்
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு
எய்த சென்று செப்புநர் பெறினே………………………..………………………..………………………..5
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது
அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல்………………………..………………………..………………………..10
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே

# 7 பாலை
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்………………………..………………………..5
இன்னே பெய்ய மின்னுமால் தோழி
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறும் சிலம்பில் துஞ்சும்
சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டே

# 8 குறிஞ்சி
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண்
பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர்
துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல்………………………..………………………..5
அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும்
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே………………………..………………………..10

# 9 பாலை
அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழ நின்
நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின்
பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி………………………..………………………..5
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி
நிழல் காண்-தோறும் நெடிய வைகி
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்………………………..………………………..10
நறும் தண் பொழில கானம்
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே

# 10 பாலை
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர
இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர்………………………..………………………..5
கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன நின்
பிழையா நன் மொழி தேறிய இவட்கே

# 11 நெய்தல்
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே………………………..………………………..………………………..5
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே

# 12 பாலை
விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ பன் மாண்………………………..………………………..5
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவை காண்-தோறும் நோவர் மாதோ
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும்
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே………………………..10

# 13 குறிஞ்சி
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅதீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த
பகழி அன்ன சே அரி மழை கண்
நல்ல பெரும் தோளோயே கொல்லன்………………………..………………………..5
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி
மயில் அறிபு அறியா-மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புற கிளியே

# 14 பாலை
தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்
நட்டனர் வாழி தோழி குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது………………………..………………………..5
அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என
துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல்
நெடு வரை விடர்_அகத்து இயம்பும்………………………..………………………..10
கடு மான் புல்லிய காடு இறந்தோரே

# 15 நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப
பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே………………………..………………………..5
நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இ ஊரே………………………..………………………..10

# 16 பாலை
புணரின் புணராது பொருளே பொருள்-வயின்
பிரியின் புணராது புணர்வே ஆயிடை
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே பொருளே
வாடா பூவின் பொய்கை நாப்பண்………………………..………………………..………………………..5
ஓடு மீன் வழியின் கெடுவ யானே
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்
கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்………………………..………………………..10
எனைய ஆகுக வாழிய பொருளே

# 17 குறிஞ்சி
நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை………………………..5
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்
காந்தள் ஊதிய மணி நிற தும்பி………………………..………………………..………………………..10
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே

# 18 பாலை
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி தோழி மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல்
தெறல் அரும் தானை பொறையன் பாசறை………………………..………………………..5
நெஞ்சு நடுக்கு-உறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண்படுப்ப
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை
தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே………………………..………………………..10

# 19 நெய்தல்
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை
பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
நன் மான் உழையின் வேறுபட தோன்றி
விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப………………………..………………………..5
இன மணி நெடும் தேர் பாகன் இயக்க
செலீஇய சேறி ஆயின் இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே

# 20 மருதம்
ஐய குறு_மகள் கண்டிகும் வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர
செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில்………………………..………………………..5
பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல்
சுணங்கு அணிவு-உற்ற விளங்கு பூணள்
மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை
பழம் பிணி வைகிய தோள் இணை………………………..………………………..10
குழைந்த கோதை கொடி முயங்கலளே

# 21 முல்லை
விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏ-மதி வலவ தேரே உது காண்………………………..………………………..………………………..5
உருக்கு-உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன
அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிர கெண்டி………………………..………………………..………………………..10
நாள்_இரை கவர மாட்டி தன்
பேடை நோக்கிய பெரும் தகு நிலையே

# 22 குறிஞ்சி
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை
முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன்
திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி………………………..………………………..5
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை
பீளொடு திரங்கிய நெல்லிற்கு………………………..………………………..………………………..10
நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே

# 23 குறிஞ்சி
தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய
காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்………………………..5
முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே

# 24 பாலை
பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு
உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத்து அன்ன பைம் பயிர் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை………………………..………………………..5
சேறும் நாம் என சொல்ல சே_இழை
நன்று என புரிந்தோய் நன்று செய்தனையே
செயல்படு மனத்தர் செய்_பொருட்கு
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே

# 25 குறிஞ்சி
அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன
செம் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு………………………..………………………..5
கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ
சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது
அல்லல் அன்று அது காதல் அம் தோழி
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி………………………..………………………..10
கண்டும் கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே

# 26 பாலை
நோகோ யானே நெகிழ்ந்தன வளையே
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டு புரையும் புணர் நிலை நெடும் கூட்டு
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய
சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய்………………………..………………………..5
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று
பொன் பொதிந்து அன்ன சுணங்கின்
இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே

# 27 நெய்தல்
நீயும் யானும் நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பி
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரை
கழி சூழ் கானல் ஆடியது அன்றி
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்………………………..5
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும்
எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணை கால் நீடி
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல………………………..………………………..10
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று என கூறாதோளே

# 28 பாலை
என் கை கொண்டு தன் கண் ஒற்றியும்
தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போல கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என………………………..………………………..5
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே

# 29 பாலை
நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என
மான்ற மாலை வழங்குநர் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி………………………..………………………..5
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன்
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என
நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன்
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ
வெய்ய உயிர்க்கும் சாயல்………………………..………………………..………………………..10
மை ஈர் ஓதி பெரு மட தகையே

# 30 மருதம்
கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கோ
பாணன் கையது பண்பு உடை சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர்………………………..………………………..5
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி
கால் ஏமுற்ற பைதரு காலை
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே………………………..………………………..10

# 31 நெய்தல்
மா இரும் பரப்பு_அகம் துணிய நோக்கி
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை
பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால்
தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே………………………..………………………..5
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து
யானும் இனையேன் ஆயின் ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு………………………..10
உலவு திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே

# 32 குறிஞ்சி
மாயோன் அன்ன மால் வரை கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி………………………..………………………..………………………..5
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே

# 33 பாலை
படு_சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து
கல் உடை படுவில் கலுழி தந்து
நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்………………………..5
துவர் செய் ஆடை செம் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என
விம்மு-உறு கிளவியள் என் முகம் நோக்கி………………………..………………………..10
நல் அக வன முலை கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே

# 34 குறிஞ்சி
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியா குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழ கட்டி
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்………………………..………………………..5
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக………………………..………………………..………………………..………………………..10
மடவை மன்ற வாழிய முருகே

# 35 நெய்தல்
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை
புன் கால் நாவல் பொதி புற இரும் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்து
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்………………………..………………………..………………………..5
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர்………………………..10
கள் களி செருக்கத்து அன்ன
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே

# 36 குறிஞ்சி
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி
தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம்
கல்_அக வெற்பன் சொல்லின் தேறி
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து………………………..………………………..5
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து
ஆனா கௌவைத்து ஆக
தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே

# 37 பாலை
பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ………………………..………………………..5
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு
ஆர் கலி நல் ஏறு திரிதரும்………………………..………………………..………………………..10
கார் செய் மாலை வரூஉம் போழ்தே

# 38 நெய்தல்
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு
மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென………………………..………………………..5
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்
கழி சூழ் படப்பை காண்ட_வாயில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே………………………..………………………..10

# 39 குறிஞ்சி
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்………………………..………………………..5
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ அல்ல நண்ணார்
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரும் பெயர் கூடல் அன்ன நின்………………………..………………………..………………………..10
கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கே

# 40 மருதம்
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட
குரை இலை போகிய விரவு மணல் பந்தர்
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார்
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறி-உற விரிந்த அறுவை மெல் அணை………………………..………………………..5
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல………………………..………………………..………………………..10
அகன் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே

# 41 பாலை
பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண் புற களரி விடு நீறு ஆடி
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ………………………..………………………..5
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடை கூட்டம் வேண்டுவோரே………………………..………………………..10

# 42 முல்லை
மறத்தற்கு அரிதால் பாக பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால்………………………..………………………..5
ஏகு-மின் என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென
மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அ நிலை புகுதலின் மெய் வருத்து-உறாஅ………………………..………………………..10
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே

# 43 பாலை
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன்
ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்………………………..………………………..5
வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே
மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர் காணாது கலங்கிய உடை மதில்………………………..………………………..10
ஓர் எயின் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே

# 44 குறிஞ்சி
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனை-வயின் பெயர்ந்த-காலை நினைஇயர்
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த………………………..………………………..5
நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிர
கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில்
குட காய் ஆசினி படப்பை நீடிய
பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்து………………………..………………………..10
செல் மழை இயக்கம் காணும்
நன் மலை நாடன் காதல் மகளே

# 45 நெய்தல்
இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்
கடும் தேர் செல்வன் காதல் மகனே………………………..………………………..5
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே………………………..………………………..………………………..10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

# 46 பாலை
வைகல்-தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப பாணர்………………………..………………………..………………………..5
அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையா துயல்வர
வெம் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து
எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து
நன் வாய் அல்லா வாழ்க்கை………………………..………………………..………………………..10
மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே

# 47 குறிஞ்சி
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம் செவி
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்………………………..………………………..5
கானக நாடற்கு இது என யான் அது
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின்………………………..………………………..………………………..10
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே

# 48 பாலை
அன்றை அனைய ஆகி இன்றும் எம்
கண் உள போல சுழலும் மாதோ
புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ
வைகுறு_மீனின் நினைய தோன்றி
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை………………………..………………………..5
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமர் இடை உறுதர நீக்கி நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே

# 49 நெய்தல்
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்
தொடியோர் மடிந்து என துறை புலம்பின்றே
முடி வலை முகந்த முடங்கு இறா பாவை
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து………………………..5
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என
சென்று யாம் அறியின் எவனோ தோழி
மன்ற புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே………………………..10

# 50 மருதம்
அறியாமையின் அன்னை அஞ்சி
குழையன் கோதையன் குறும் பைம் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமென தாக்கலின்………………………..………………………..5
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என
யாணது பசலை என்றனன் அதன் எதிர்
நாண் இலை எலுவ என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறு நுதல் அரிவை போற்றேன்………………………..………………………..………………………..10
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே

# 51 குறிஞ்சி
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை
காம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்
கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇ
பெயல் ஆனாதே வானம் பெயலொடு………………………..………………………..5
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெரும் தண் குளவி குழைத்த பா அடி
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த………………………..………………………..………………………..………………………..10
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே

# 52 பாலை
மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம்………………………..………………………..5
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெருமகன் மா வள் ஓரி
கைவளம் இயைவது ஆயினும்………………………..………………………..………………………..10
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே

# 53 குறிஞ்சி
யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன்
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள்………………………..………………………..………………………..5
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆட பெறின் இவள்………………………..………………………..………………………..10
பனியும் தீர்குவள் செல்க என்றோளே

# 54 நெய்தல்
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை………………………..………………………..5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணி புறம் தைவரும்………………………..………………………..10
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே

# 55 குறிஞ்சி
ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின்………………………..………………………..5
கண் கோள் ஆக நோக்கி பண்டும்
இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த………………………..10
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே

# 56 பாலை
குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ
சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா………………………..………………………..5
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி
ஏதிலாட்டி இவள் என
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே………………………..………………………..10

# 57 குறிஞ்சி
தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால்………………………..………………………..5
கல்லா வன் பறழ் கை நிறை பிழியும்
மா மலை நாட மருட்கை உடைத்தே
செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்-காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே………………………..………………………..10

# 58 நெய்தல்
பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்………………………..………………………..5
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்ப
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை
நீடு நீர் பனி துறை சேர்ப்பன்………………………..………………………..………………………..10
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே

# 59 முல்லை
உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும்………………………..………………………..5
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
நம்-வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே………………………..10

# 60 மருதம்
மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின்
பெரு நெல் பல கூட்டு எருமை உழவ
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு………………………..………………………..5
கவர் படு கையை கழும மாந்தி
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்
நடுநரொடு சேறி ஆயின் அவண
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல்
மா இரும் கூந்தல் மடந்தை………………………..………………………..………………………..10
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே

# 61 குறிஞ்சி
கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறு_மகள் என்றலின்………………………..………………………..5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு
கண்ணும் படுமோ என்றிசின் யானே………………………..………………………..10

# 62 பாலை
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று………………………..5
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள்
உரறு குரல் வெம் வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே………………………..………………………..10

# 63 நெய்தல்
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரி புலவர் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்………………………..………………………..5
அறன் இல் அன்னை அரும் கடி படுப்ப
பசலை ஆகி விளிவது-கொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம்………………………..………………………..………………………..10
மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே

# 64 குறிஞ்சி
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்ன ஆக இனையல் தோழி யாம்
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன்
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம்………………………..………………………..5
வறன்-உற்று ஆர முருக்கி பையென
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என்
அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது………………………..………………………..10
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே

# 65 குறிஞ்சி
அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன இட்டு கரை கான்யாற்று
கலங்கும் பாசி நீர் அலை கலாவ
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து
புலியொடு பொருத புண் கூர் யானை………………………..………………………..5
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழி பட்ட நாம பூசல்
உரும் இடை கடி இடி கரையும்
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே

# 66 பாலை
மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி
புன் புறா உயவும் வெம் துகள் இயவின்………………………..………………………..5
நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும்
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ
கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும்
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்
மாண் நலம் கையற கலுழும் என்………………………..………………………..………………………..10
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே

# 67 நெய்தல்
சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே
இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு
வெண் கோட்டு அரும் சிறை தாஅய் கரைய
கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே………………………..………………………..5
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி
துணை சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர்………………………..………………………..10
முழவு இசை புணரி எழுதரும்
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே

# 68 குறிஞ்சி
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்………………………..………………………..5
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே………………………..10

# 69 முல்லை
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய
பறவை பார்ப்பு-வயின் அடைய புறவில்
மா எருத்து இரலை மட பிணை தழுவ
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்………………………..………………………..5
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடும் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்………………………..………………………..10
இனைய ஆகி தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே

# 70 மருதம்
சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவை தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி………………………..5
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே

# 71 பாலை
மன்னா பொருள்_பிணி முன்னி இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என
விடுநள் ஆதலும் உரியள் விடினே
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று………………………..………………………..5
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ண புறவின் செம் கால் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்ப கேள்-தொறும்………………………..………………………..………………………..10
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே

# 72 நெய்தல்
பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணு_தக்கன்று அது காணும்-காலை
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது
அழி_தக்கன்றால் தானே கொண்கன்………………………..………………………..5
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என்
பிரிதல் சூழான்-மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால்
புலர்வது-கொல் அவன் நட்பு எனா………………………..………………………..………………………..10
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே

# 73 பாலை
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய் பேஎய்
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய………………………..………………………..5
செல்ப என்ப தாமே செ வரி
மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர்
செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என்
நுதல் கவின் அழிக்கும் பசலையும்………………………..………………………..10
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே

# 74 நெய்தல்
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார்
நிறைய பெய்த அம்பி காழோர்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை………………………..………………………..5
ஏதிலாளனும் என்ப போது அவிழ்
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன்………………………..………………………..………………………..10
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே

# 75 குறிஞ்சி
நயன் இன்மையின் பயன் இது என்னாது
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது
தகாஅது வாழியோ குறு_மகள் நகாஅது
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல்………………………..………………………..5
கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சி
பச்சூன் பெய்த பகழி போல
சே அரி பரந்த மா இதழ் மழை கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யும் மாறே………………………..………………………..………………………..10

# 76 பாலை
வரு மழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி
அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள்………………………..………………………..5
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே

# 77 குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி புலையன்
பெரும் துடி கறங்க பிற புலம் புக்கு அவர்
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர்
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின்………………………..………………………..5
சுளை உடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல்………………………..………………………..10
திதலை அல்குல் குறு_மகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே

# 78 நெய்தல்
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல்
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை………………………..………………………..5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா
வலவன் கோல் உற அறியா………………………..………………………..………………………..10
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே

# 79 பாலை
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ
கூரை நன் மனை குறும் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம்
ஏர்தரல் உற்ற இயக்கு அரும் கவலை
பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர்………………………..………………………..5
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறி காமம் செப்புதும்
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று
அம்ம வாழி தோழி
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே………………………..………………………..10

# 80 மருதம்
மன்ற எருமை மலர் தலை காரான்
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு
ஊர் குறு_மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பி போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என………………………..………………………..5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇ திங்கள் தண் கயம் படியும்
பெரும் தோள் குறு_மகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே

# 81 முல்லை
இரு நிலம் குறைய கொட்டி பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப
பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ்………………………..………………………..5
ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே………………………..………………………..10

# 82 குறிஞ்சி
நோயும் நெகிழ்ச்சியும் வீட சிறந்த
வேய் வனப்பு உற்ற தோளை நீயே
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே………………………..………………………..5
போகிய நாக போக்கு அரும் கவலை
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளை………………………..………………………..………………………..10
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே

# 83 குறிஞ்சி
எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்………………………..………………………..5
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும்
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சு வர கடும் குரல் பயிற்றாதீமே

# 84 பாலை
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே இன்றே
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர்
மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம்………………………..………………………..5
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம்
ஏகுவர் என்ப தாமே தம்-வயின்………………………..………………………..………………………..10
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே

# 85 குறிஞ்சி
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும்
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும்
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்
குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை
கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும்………………………..………………………..5
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி
வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்………………………..………………………..………………………..10
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே

# 86 பாலை
அறவர் வாழி தோழி மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தக
கைவல் வினைவன் தையுபு சொரிந்த………………………..………………………..5
சுரிதக உருவின ஆகி பெரிய
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே

# 87 நெய்தல்
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின்
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு………………………..………………………..5
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும்
பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே

# 88 குறிஞ்சி
யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை
வருந்தல் வாழி தோழி யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரை
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண்………………………..………………………..5
தம்மோன் கொடுமை நம்-வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி ஆக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே

# 89 முல்லை
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள்
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின்………………………..………………………..5
அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த………………………..………………………..………………………..10
புன்கண் மாலையும் புலம்பும் முந்து-உறுத்தே

# 90 மருதம்
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையின் பெரும் கைதூவா
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடி………………………..………………………..………………………..5
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா………………………..………………………..………………………..10
நயன் இல் மாக்களொடு கெழீஇ
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே

# 91 நெய்தல்
நீ உணர்ந்தனையே தோழி வீ உக
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை
பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன்………………………..………………………..5
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய
புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணி தார்………………………..………………………..10
கடு மா பூண்ட நெடும் தேர்
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே

# 92 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்ட சீறூர் அகன் கண் கேணி………………………..………………………..………………………..5
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர்
புன் தலை மட பிடி கன்றோடு ஆர
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே

# 93 குறிஞ்சி
பிரசம் தூங்க பெரும் பழம் துணர
வரை வெள் அருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம் புக நாளும்
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட………………………..………………………..5
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள்
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல்………………………..………………………..10
மயிர் கண் முரசினோரும் முன்
உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே

# 94 நெய்தல்
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர்………………………..………………………..5
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன்
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே

# 95 குறிஞ்சி
கழை பாடு இரங்க பல் இயம் கறங்க
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவ தீம் கனி அன்ன செம் முக
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து………………………..5
குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் அ
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர்
சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே………………………..………………………..10

# 96 நெய்தல்
இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை
புதுவது புணர்ந்த பொழிலே உதுவே
பொம்மல் படு திரை நம்மோடு ஆடி
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்………………………..………………………..5
துவரினர் அருளிய துறையே அதுவே
கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல்
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி………………………..………………………..10
பைஇ பைய பசந்தனை பசப்பே

# 97 முல்லை
அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு
பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே
அதனினும் கொடியள் தானே மதனின்………………………..………………………..5
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட_மகளே

# 98 குறிஞ்சி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என………………………..………………………..………………………..5
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளை பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே………………………..………………………..10
வைகலும் பொருந்தல் ஒல்லா
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே

# 99 முல்லை
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்
அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்
தாம் வர தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று………………………..………………………..5
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே………………………..………………………..………………………..10

# 100 மருதம்
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்
மாரி கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என்-வயின்
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்………………………..………………………..5
சினவிய முகத்து சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை பேர் இசை
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்………………………..………………………..10
மண் ஆர் கண்ணின் அதிரும்
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே

# 101 நெய்தல்
முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும்
துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி………………………..………………………..5
இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்
மீன் எறி பரதவர் மட_மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

# 102 குறிஞ்சி
கொடும் குரல் குறைத்த செம் வாய் பைம் கிளி
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறை
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல்
பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு………………………..………………………..5
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை
கான குறவர் மட_மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே

# 103 பாலை
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅம் செருக்கிய கடும் சின முன்பின்
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி………………………..………………………..5
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்………………………..………………………..10
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே

# 104 குறிஞ்சி
பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சா
குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டக_சிறுபறை பாணி அயலது………………………..………………………..5
பைம் தாள் செந்தினை படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்-கொல் பானாள்
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு_நீர்………………………..10
போக்கு அற விலங்கிய சாரல்
நோக்கு அரும் சிறு நெறி நினையுமோரே

# 105 பாலை
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெம் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்………………………..………………………..5
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரை சுனைய மா இதழ் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம்_சில்_ஓதி அரும் படர் உறவே………………………..………………………..………………………..10

# 106 நெய்தல்
அறிதலும் அறிதியோ பாக பெரும் கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள
ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப………………………..5
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்
ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே

# 107 பாலை
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு
கொடிறு போல் காய வால் இணர் பாலை
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்………………………..………………………..5
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து
ஆனா கௌவை மலைந்த
யானே தோழி நோய்ப்பாலேனே………………………..………………………..………………………..10

# 108 குறிஞ்சி
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர்
கணையர் கிணையர் கை புனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட………………………..………………………..………………………..5
பழகிய பகையும் பிரிவு இன்னாதே
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே

# 109 பாலை
ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின்
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று
அன்னவோ இ நல்_நுதல் நிலை என
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென………………………..………………………..5
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்
துளி உடை தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சி கட்டிய கூழை ஆவின்
நிலை என ஒருவேன் ஆகி
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே………………………..………………………..10

# 110 பாலை
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து-உற்று………………………..5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என………………………..………………………..10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

# 111 நெய்தல்
அத்த இருப்பை பூவின் அன்ன
துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்
வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர்
மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார்
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு
திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி………………………..………………………..5
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெரும் கழி பாக்கம் கல்லென
வருமே தோழி கொண்கன் தேரே

# 112 குறிஞ்சி
விருந்து எவன் செய்கோ தோழி சாரல்
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி………………………..………………………..5
மா கடல் முகந்து மணி நிறத்து அருவி
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே

# 113 பாலை
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை
புல் அரை இரத்தி பொதி புற பசும் காய்
கல் சேர் சிறு நெறி மல்க தாஅம்
பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால்
அரும் செயல் பொருள்_பிணி முன்னி யாமே………………………..………………………..5
சேறும் மடந்தை என்றலின் தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்………………………..………………………..10
ஆம்பல் அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே

# 114 குறிஞ்சி
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகி கேட்டு பையாந்திசினே
அளிதோ தானே தோழி அல்கல்………………………..………………………..………………………..5
வந்தோன் மன்ற குன்ற நாடன்
துளி பெயல் பொறித்த புள்ளி தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி………………………..………………………..10
மையல் மட பிடி இனைய
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே

# 115 முல்லை
மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என
மயில் அடி இலைய மா குரல் நொச்சி………………………..………………………..5
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர்
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர்
அன்பினர் வாழி தோழி நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்………………………..………………………..………………………..10
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே

# 116 குறிஞ்சி
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ
வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும்………………………..………………………..5
மலை கெழு நாடன் கேண்மை பலவின்
மா சினை துறந்த கோல் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அற
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த………………………..………………………..10
குறிஞ்சி நல் ஊர் பெண்டிர்
இன்னும் ஓவார் என் திறத்து அலரே

# 117 நெய்தல்
பெரும் கடல் முழங்க கானல் மலர
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்
கமழ் பூ பொதும்பர் கட்சி சேர
செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம்………………………..5
கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி என்-கண்
பிணி பிறிது ஆக கூறுவர்………………………..………………………..………………………..10
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே

# 118 பாலை
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலிய
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என………………………..………………………..5
இணர் உறுபு உடைவதன்-தலையும் புணர் வினை
ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி
புது மலர் தெருவு-தொறு நுவலும்………………………..………………………..………………………..10
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே

# 119 குறிஞ்சி
தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர்
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும்………………………..………………………..5
பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்………………………..………………………..………………………..10
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே

# 120 மருதம்
தட மருப்பு எருமை மட நடை குழவி
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல்
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ………………………..………………………..5
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று………………………..………………………..10
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே

# 121 முல்லை
விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவை கதிர் கறித்த காமர் மட பிணை
அரலை அம் காட்டு இரலையொடு வதியும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே………………………..………………………..5
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு
பரியல் வாழ்க நின் கண்ணி காண்வர
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா
வண் பரி தயங்க எழீஇ தண் பெயல்
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய………………………..………………………..10
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறை பணை தோள் துயில் அமர்வோயே

# 122 குறிஞ்சி
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும் கால் செந்தினை கடியும் உண்டன
கல்_அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின
நரை உரும் உரறும் நாம நள்ளிருள்………………………..………………………..5
வரை_அக நாடன் வரூஉம் என்பது
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்………………………..………………………..………………………..10
பூ வேய் கண்ணி அது பொருந்தும் மாறே

# 123 நெய்தல்
உரையாய் வாழி தோழி இரும் கழி
இரை ஆர் குருகின் நிரை பறை தொழுதி
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை
கானல் ஆயமொடு காலை குற்ற………………………..………………………..………………………..5
கள் கமழ் அலர தண் நறும் காவி
அம் பகை நெறி தழை அணிபெற தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி
புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்………………………..………………………..10
சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே

# 124 நெய்தல்
ஒன்று இல் காலை அன்றில் போல
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்………………………..………………………..5
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி
உருக்கு-உறு கொள்கலம் கடுப்ப விருப்பு-உற
தெண் நீர் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே

# 125 குறிஞ்சி
இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரி புற்றம் வாய்ப்ப வாங்கி
நல்_அரா நடுங்க உரறி கொல்லன்
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என………………………..………………………..5
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல
வேங்கை கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை………………………..………………………..10
மென் தினை நெடும் போர் புரி-மார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே

# 126 பாலை
பைம் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்
கரும் களி ஈந்தின் வெண் புற களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி
துனைதரும் வம்பலர் காணாது அ சினம்………………………..………………………..5
பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே அதனால்………………………..………………………..10
நில்லா பொருள்_பிணி சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே

# 127 நெய்தல்
இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ பாண பேதை
கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்த
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும்………………………..………………………..………………………..5
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனா பாவை தலையிட்டு ஓரும்
மெல்லம்புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே

# 128 குறிஞ்சி
பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே என்று நனி………………………..………………………..5
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல்
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணென
சிறுபுறம் கவையினனாக அதன் கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு………………………..………………………..………………………..10
இஃது ஆகின்று யான் உற்ற நோயே

# 129 குறிஞ்சி
பெரு நகை கேளாய் தோழி காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய
செல்ப என்ப தாமே சென்று
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை………………………..5
வாழ்தும் என்ப நாமே அதன்_தலை
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப
படு மழை உருமின் உரற்று குரல்
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே

# 130 நெய்தல்
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண்
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப
கோலின் எறிந்து காலை தோன்றிய
செம் நீர் பொது வினை செம்மல் மூதூர்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ………………………..5
எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர்………………………..………………………..10
வையக வரை அளவு இறந்த
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே

# 131 நெய்தல்
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப
திரை முதிர் அரைய தடம் தாள் தாழை
சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய………………………..………………………..5
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும்
நறவு_மகிழ்_இருக்கை நல் தேர் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே

# 132 நெய்தல்
பேரூர் துஞ்சும் யாரும் இல்லை
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி
போர் அமை கதவ புரை-தொறும் தூவ
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர்………………………..………………………..5
பயில் படை நிவந்த பல் பூ சேக்கை
அயலும் மாண் சிறையதுவே அதன்_தலை
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்………………………..………………………..………………………..10
இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே

# 133 குறிஞ்சி
தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே
நுதலும் பசலை பாயின்று திதலை
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று………………………..………………………..5
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதலம் கிளவி
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த
தோய் மடல் சில் நீர் போல………………………..………………………..………………………..10
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே

# 134 குறிஞ்சி
இனிதின் இனிது தலைப்படும் என்பது
இது-கொல் வாழி தோழி காதலர்
வரு குறி செய்த வரை_அக சிறுதினை
செம் வாய் பாசினம் கடீஇயர் கொடிச்சி
அ வாய் தட்டையொடு அவணை ஆக என………………………..………………………..5
ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர்
அம் மா மேனி நிரை தொடி குறு_மகள்
செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு என
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே………………………..………………………..………………………..10

# 135 நெய்தல்
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்
வரையா தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடி சீறூர்
இனிது மன்று அம்ம தானே பனி படு………………………..………………………..5
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும்
வால் உளை பொலிந்த புரவி
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே

# 136 குறிஞ்சி
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என் ஐ வாழிய பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய………………………..………………………..5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவி
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே

# 137 பாலை
தண்ணிய கமழும் தாழ் இரும் கூந்தல்
தட மென் பணை தோள் மட நல்லோள்-வயின்
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று
எய்தினை வாழிய நெஞ்சே செம் வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை………………………..………………………..………………………..5
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர்
பெரும் களிறு தொலைத்த முட தாள் ஓமை
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்று சேண் அகறல் வல்லிய நீயே………………………..………………………..10

# 138 நெய்தல்
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை
மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை
கணம்_கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன்_நாள் நம்மொடு………………………..………………………..5
பாசடை கலித்த கணை கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்………………………..………………………..………………………..10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே

# 139 முல்லை
உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ
பல வயின் நிலைஇய குன்றின் கோடு-தோறு
ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇ அன்ன உறையினை முழவின்………………………..………………………..5
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்
விரவு மலர் உதிர வீசி
இரவு பெயல் பொழிந்த உதவியோயே………………………..………………………..10

# 140 குறிஞ்சி
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை………………………..………………………..5
நெடும் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து
பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம்
அரும் துயர் அவலம் தீர்க்கும்………………………..………………………..………………………..10
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே

# 141 பாலை
இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய்
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனி
குன்று உறை தவசியர் போல பலவுடன்………………………..………………………..5
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும்
அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து பட
பாண்டிலொடு பொருத பல் பிணர் தட கை
ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த………………………..………………………..10
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே

# 142 முல்லை
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள்
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப………………………..………………………..5
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே பொய்யா யாணர்
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்………………………..………………………..………………………..10
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே

# 143 பாலை
ஐது ஏகு அம்ம யானே ஒய்யென
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள்………………………..………………………..5
வழு இலள் அம்ம தானே குழீஇ
அம்பல் மூதூர் அலர் வாய் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே………………………..………………………..10

# 144 குறிஞ்சி
பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய்………………………..………………………..5
பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலை
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்று
கரை அரும் குட்டம் தமியர் நீந்தி
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே………………………..………………………..………………………..10

# 145 நெய்தல்
இரும் கழி பொருத ஈர வெண் மணல்
மா கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதை கூட்டும்
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு………………………..………………………..5
புணர்ந்தனன் போல உணர கூறி
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம்
பராரை புன்னை சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ………………………..………………………..………………………..10
அம்ம வாழி அவர் தேர் மணி குரலே

# 146 குறிஞ்சி
வில்லா பூவின் கண்ணி சூடி
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு
நெடு மா பெண்ணை மடல்_மானோயே
கடன் அறி மன்னர் குடை_நிழல் போல
பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து………………………..5
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என
அருளி கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண்_தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய………………………..………………………..………………………..10
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே

# 147 குறிஞ்சி
யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறு_மகள்
தேம் படு சாரல் சிறுதினை பெரும் குரல்
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று
எ வாய் சென்றனை அவண் என கூறி
அன்னை ஆனாள் கழற முன் நின்று………………………..………………………..5
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர் புனை தட்டையேன் மலர் பூ கொய்து
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு………………………..………………………..10
தலை இறைஞ்சினளே அன்னை
செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே

# 148 பாலை
வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம்
தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்றே
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை
செம் கால் மராஅத்து அம் புடை பொருந்தி………………………..………………………..5
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது
கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து
செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்………………………..………………………..10
அரும் சுரம் இறப்ப என்ப
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே

# 149 நெய்தல்
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானல்………………………..………………………..5
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ
நடுநாள் வரூஉம் இயல் தேர் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே………………………..………………………..10

# 150 மருதம்
நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்
மிளை வலி சிதைய களிறு பல பரப்பி
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு
மன் எயில் உடையோர் போல அஃது யாம்………………………..………………………..5
என்னதும் பரியலோ இலம் என தண் நடை
கலி_மா கடைஇ வந்து எம் சேரி
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச
கண் உடை சிறு கோல் பற்றி………………………..………………………..………………………..10
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே

# 151 குறிஞ்சி
நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும்
கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கி
செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல்
வாரற்க தில்ல தோழி கடுவன்………………………..………………………..………………………..5
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி
கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி கரும் கால்
பொன் இணர் வேங்கை பூ சினை செலீஇயர்
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன்………………………..10
புன் தலை பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே

# 152 நெய்தல்
மடலே காமம் தந்தது அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்
எல்லாம் தந்ததன்-தலையும் பையென………………………..………………………..5
வடந்தை துவலை தூவ குடம்பை
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே

# 153 பாலை
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு………………………..………………………..5
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெம் சின வேந்தன் பகை அலை கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே………………………..………………………..10

# 154 குறிஞ்சி
கானமும் கம்மென்றன்றே வானமும்
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி
பல் குரல் எழிலி பாடு ஓவாதே
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை………………………..………………………..5
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதியோ இல தூ இலாட்டி
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே சாரல்………………………..………………………..………………………..10
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும்
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே

# 155 நெய்தல்
ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய்
விரி பூ கானல் ஒரு சிறை நின்றோய்
யாரையோ நின் தொழுதனெம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரை………………………..………………………..5
பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ
இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோ
சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன
பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே………………………..………………………..10

# 156 குறிஞ்சி
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்
கடி உடை வியல் நகர் காவல் நீவியும்
பேர் அன்பினையே பெரும் கல் நாட
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்
சிறுதினை காக்குவம் சேறும் அதனால்………………………..………………………..5
பகல் வந்தீமோ பல் படர் அகல
எருவை நீடிய பெரு வரை சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்
பாடு இமிழ் விடர் முகை முழங்க
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே………………………..10

# 157 பாலை
இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில்
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளி-தொறும்………………………..5
நம்-வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே………………………..………………………..………………………..10

# 158 குறிஞ்சி
அம்ம வாழி தோழி நம்-வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே
விடர் முகை செறிந்த வெம் சின இரும் புலி………………………..………………………..5
புகர் முக வேழம் புலம்ப தாக்கி
குருதி பருகிய கொழும் கவுள் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே

# 159 நெய்தல்
மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின்
உரவு திரை கொழீஇய பூ மலி பெரும் துறை
நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரை
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி
எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல………………………..………………………..5
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்
கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும்
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல்………………………..………………………..10
சில் குடி பாக்கம் கல்லென
அல்குவது ஆக நீ அமர்ந்த தேரே

# 160 குறிஞ்சி
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின்………………………..5
ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி
முது நீர் இலஞ்சி பூத்த குவளை
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் காணா ஊங்கே………………………..………………………..10

# 161 முல்லை
இறையும் அரும் தொழில் முடித்து என பொறைய
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி………………………..………………………..5
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல்………………………..………………………..10
புதல்வன் காட்டி பொய்க்கும்
திதலை அல்குல் தே மொழியாட்கே

# 162 பாலை
மனை உறை புறவின் செம் கால் பேடை
காமர் துணையொடு சேவல் சேர
புலம்பின்று எழுதரு புன்கண் மாலை
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ………………………..………………………..………………………..5
நும்மொடு வருவல் என்றி எம்மொடு
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை முனாஅது
வேனில் இற்றி தோயா நெடு வீழ்
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும்………………………..………………………..10
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே

# 163 நெய்தல்
உயிர்த்தன ஆகுக அளிய நாளும்
அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது கல்லென
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப
நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர………………………..………………………..5
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி
வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல்
நீல் நிற புன்னை தமி ஒண் கைதை
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று………………………..………………………..10
வைகுறு வனப்பின் தோன்றும்
கைதை அம் கானல் துறைவன் மாவே

# 164 பாலை
உறை துறந்து இருந்த புறவில் தனாது
செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பக
உலகு மிக வருந்தி உயா-உறு காலை
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்………………………..………………………..5
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம்………………………..………………………..………………………..10
ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே

# 165 குறிஞ்சி
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன்
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து
கிளையொடு மகிழும் குன்ற நாடன்………………………..………………………..5
அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக என்னான்
ஒல்காது ஒழி மிக பல்கின தூதே

# 166 பாலை
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும்………………………..………………………..5
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்_தலை
பொலம் தொடி புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறு புலத்து இலெனே நினையின்
யாதனின் பிரிகோ மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே………………………..………………………..………………………..10

# 167 நெய்தல்
கரும் கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரும் சினை
விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய்
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற
பண் அமை நெடும் தேர் பாணியின் ஒலிக்கும்
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த………………………..………………………..5
பயன் தெரி பனுவல் பை தீர் பாண
நின் வாய் பணிமொழி களையா பன் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த
இறை ஏர் எல் வளை குறு_மகள்………………………..………………………..………………………..10
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே

# 168 குறிஞ்சி
சுரும்பு உண விரிந்த கரும் கால் வேங்கை
பெரும் சினை தொடுத்த கொழும் கண் இறாஅல்
புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை
குற குறு_மாக்கள் உண்ட மிச்சிலை
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்………………………..………………………..5
நன் மலை நாட பண்பு எனப்படுமோ
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள்
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை………………………..………………………..………………………..10
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே

# 169 முல்லை
முன்னியது முடித்தனம் ஆயின் நல்_நுதல்
வருவம் என்னும் பருவரல் தீர
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி
பரல் தலைபோகிய சிரல் தலை கள்ளி
மீமிசை கலித்த வீ நறு முல்லை………………………..………………………..………………………..5
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லி பரீஇ
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை
மறுகு உடன் கமழும் மாலை
சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரானே………………………..………………………..10

# 170 மருதம்
மட கண் தகர கூந்தல் பணை தோள்
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்
விழவு_களம் பொலிய வந்து நின்றனளே
எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம்………………………..………………………..5
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே

# 171 பாலை
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனில் குன்றத்து வெம் வரை கவாஅன்
நிலம் செல செல்லா கயம் தலை குழவி
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன்………………………..………………………..5
பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு
யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர்
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ………………………..………………………..………………………..10
மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணே

# 172 நெய்தல்
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே………………………..………………………..5
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே………………………..………………………..10

# 173 குறிஞ்சி
சுனை பூ குற்றும் தொடலை தைஇயும்
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும்
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி
வெறி என உணர்ந்த அரிய அன்னையை
கண்ணினும் கனவினும் காட்டி இ நோய்………………………..………………………..5
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின்
படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின்
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ
தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே………………………..………………………..10

# 174 பாலை
கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை
கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின்
புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடை
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி………………………..………………………..5
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து
உயங்கினை மடந்தை என்றி தோழி
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே
வீழா கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்………………………..………………………..………………………..10
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே

# 175 நெய்தல்
நெடும் கடல் அலைத்த கொடும் திமில் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ
மீன் நெய் அட்டி கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை………………………..………………………..5
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி
சுடுவான் போல நோக்கும்
அடு பால் அன்ன என் பசலை மெய்யே

# 176 குறிஞ்சி
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து
நல்கினம் விட்டது என் நலத்தோன் அ-வயின்
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள்
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி
நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப………………………..………………………..5
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு பட குவைஇ
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு
அருவி முழவின் பாடொடு ஒராங்கு
மென்மெல இசைக்கும் சாரல்………………………..………………………..………………………..10
குன்ற வேலி தம் உறைவு இன் ஊரே

# 177 பாலை
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு
ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும்………………………..………………………..5
பீலி சூட்டி மணி அணிபவ்வே
பண்டினும் நனி பல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே………………………..………………………..………………………..10

# 178 நெய்தல்
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன
தோடு அமை தூவி தடம் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது
கைதை அம் படு சினை புலம்பொடு வதியும்………………………..………………………..5
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று-மன்னே நாணி
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன்
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே………………………..10

# 179 பாலை
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள்
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு………………………..………………………..………………………..5
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள்-மன்னே இன்றே
மை அணல் காளை பொய் புகல் ஆக
அரும் சுரம் இறந்தனள் என்ப தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே………………………..10

# 180 மருதம்
பழன பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன்
பலர் பெறல் நசைஇ நம் இல் வாரலனே
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே………………………..………………………..5
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர் பொரு_களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும் இ இருவரது இகலே

# 181 முல்லை
உள் இறை குரீஇ கார் அணல் சேவல்
பிற புல துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கி பேடை
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்………………………..………………………..5
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து
ஈர நெஞ்சின் தன்-வயின் விளிப்ப
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த………………………..………………………..10
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே
உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே

# 182 குறிஞ்சி
நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின்
பாவை அன்ன நின் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்
கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு………………………..5
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல
கண்டனம் வருகம் சென்மோ தோழி
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறும் தலை பெரும் களிறு போல
தமியன் வந்தோன் பனியலை நீயே………………………..………………………..10

# 183 நெய்தல்
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாது ஆகும்………………………..………………………..5
மடவை மன்ற கொண்க வயின்-தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே
இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல………………………..………………………..………………………..10
வாழாள் ஆதல் சூழாதோயே

# 184 பாலை
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு………………………..
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே………………………..………………………..5
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என்
அணி இயல் குறு_மகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

# 185 குறிஞ்சி
ஆனா நோயோடு அழி படர் கலங்கி
காமம் கைம்மிக கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நன் மான்
கவி குளம்பு பொருத கல் மிசை சிறு நெறி………………………..………………………..5
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரை சால் உயர் வரை கொல்லி குட-வயின்
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய………………………..………………………..10
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே

# 186
கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து………………………..………………………..5
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருள்_பிணி போகிய
நாம் வெம் காதலர் சென்ற ஆறே………………………..………………………..………………………..10

# 187 நெய்தல்
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய
பல் பூ கானலும் அல்கின்றன்றே
இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய………………………..………………………..5
தேரும் செல் புறம் மறையும் ஊரொடு
யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே………………………..………………………..10

# 188 குறிஞ்சி
படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம்
மெல் விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப………………………..………………………..5
நன்றி விளைவும் தீதொடு வரும் என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே

# 189 பாலை
தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர்
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின்
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ………………………..………………………..5
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கான புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே………………………..………………………..10

# 190 குறிஞ்சி
நோ இனி வாழிய நெஞ்சே மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்
திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும்………………………..………………………..5
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணை தோள் நலம் வீறு எய்திய
வலை மான் மழை கண் குறு_மகள்
சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே

# 191 நெய்தல்
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம்
கண்டல் வேலி காமர் சிறுகுடி………………………..………………………..………………………..5
எல்லி வந்தன்றோ தேர் என சொல்லி
அலர் எழுந்தன்று இ ஊரே பலருளும்
என் நோக்கினளே அன்னை நாளை
மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணி கவின் உண்மையோ அரிதே மணி கழி………………………..………………………..10
நறும் பூ கானல் வந்து அவர்
வறும் தேர் போதல் அதனினும் அரிதே

# 192 குறிஞ்சி
குருதி வேட்கை உரு கெழு வய_மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய பூழியர்
உருவ துருவின் நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலை சுர நீள் இடை………………………..………………………..5
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து
அழுதனை உறையும் அம் மா அரிவை
பயம் கெழு பலவின் கொல்லி குட வரை
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின்………………………..………………………..10
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே

# 193 பாலை
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை
துய் தலை புது மலர் துளி தலை கலாவ
நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை
நினக்கு தீது அறிந்தன்றோ இலமே………………………..………………………..5
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே

# 194 குறிஞ்சி
அம்ம வாழி தோழி கைம்மாறு
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய்
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை………………………..………………………..5
தனி நிலை இதணம் புலம்ப போகி
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை
குன்ற வெற்பனொடு நாம் விளையாட
இரும்பு கவர்கொண்ட ஏனல்
பெரும் குரல் கொள்ளா சிறு பசும் கிளிக்கே………………………..………………………..10

# 195 நெய்தல்
அருளாய் ஆகலோ கொடிதே இரும் கழி
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும்
மெல்லம்புலம்ப யான் கண்டிசினே
கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி………………………..………………………..5
நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலை தோற்றம் போல
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே

# 196 நெய்தல்
பளிங்கு செறிந்து அன்ன பல் கதிர் இடையிடை
பால் முகந்து அன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறை-உறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின்………………………..………………………..5
என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய்
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு_சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே

# 197 பாலை வெள்ளைக்குடி நாகனார்
தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே
கண்ணும் தண் பனி வைகின அன்னோ
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி நீ நின்………………………..………………………..………………………..5
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டு படு புது மலர் உண்துறை தரீஇய
பெரு மட மகளிர் முன்கை சிறு கோல்
பொலம் தொடி போல மின்னி கணம்_கொள்
இன் இசை முரசின் இரங்கி மன்னர்………………………..………………………..10
எயில் ஊர் பல் தோல் போல
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே

# 198 பாலை நக்கீரர்
சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்
முன்_நாள் உம்பர் கழிந்த என் மகள்
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை
தன் ஊர் இட-வயின் தொழுவேன் நுண் பல்………………………..………………………..5
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே
மை அணல் எருத்தின் முன்பின் தட கை
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்………………………..………………………..10
தந்தை-தன் ஊர் இதுவே
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே

# 199 நெய்தல்
ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை
வீங்கு மடல் குடம்பை பைதல் வெண்_குருகு
நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து
உளெனே வாழி தோழி வளை நீர்………………………..………………………..………………………..5
கடும் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர்
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி
வளி பொர கற்றை தாஅய் நளி சுடர்
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய
பைபய இமைக்கும் துறைவன்………………………..………………………..………………………..10
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே

# 200 மருதம்
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
சாறு என நுவலும் முது வாய் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ………………………..………………………..5
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து
பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி
கை கவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர் இவன்………………………..………………………..10
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே

# 201 குறிஞ்சி
மலை உறை குறவன் காதல் மட_மகள்
பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள்
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள்
உள்ளல் கூடாது என்றோய் மற்றும்
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி………………………..………………………..5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு
அம் வெள் அருவி குட வரை_அகத்து
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்………………………..………………………..10
மாயா இயற்கை பாவையின்
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே
* பரணர்

# 202 பாலை
புலி பொர சிவந்த புலால் அம் செம் கோட்டு
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மட பிடி தழீஇய தட கை வேழம்
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை………………………..………………………..5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வர
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை
அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடும் கொடி போல………………………..………………………..………………………..10
பல் பூ கோங்கம் அணிந்த காடே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 203 நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ
கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை
எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு………………………..5
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க
செய்த தன் தப்பல் அன்றியும்………………………..………………………..………………………..10
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே
* உலோச்சனார்

# 204 குறிஞ்சி
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண………………………..5
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து
தான் செய் குறி நிலை இனிய கூறி
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு
உறு கழை நிவப்பின் சிறுகுடி பெயரும்………………………..………………………..10
கொடிச்சி செல் புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே
* மள்ளனார்

# 205 பாலை
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி
ஏந்து வெண் கோட்டு வய களிறு இழுக்கும்
துன் அரும் கானம் என்னாய் நீயே………………………..………………………..5
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு
போயின்று-கொல்லோ தானே படப்பை
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய………………………..………………………..………………………..10
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே
* இளநாகனார்

# 206 குறிஞ்சி
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடு அலை கொண்டன ஏனல் என்று
துறு கல் மீமிசை குறுவன குழீஇ
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய்
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என………………………..5
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும்
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்
கல் கெழு நாடன் கேண்மை………………………..………………………..………………………..10
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே
* ஐயூர் முடவனார்

# 207 நெய்தல்
கண்டல் வேலி கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி………………………..………………………..5
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால்………………………..………………………..10
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெம் சிறாஅர் பாற்பட்டனளே

# 208 பாலை
விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து
எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள்
செல்வார் அல்லர் நம் காதலர் செலினும்………………………..………………………..5
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர்
கொன்னும் நம்பும்-குரையர் தாமே
சிறந்த அன்பினர் சாயலும் உரியர்
பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள்
முடியாது ஆயினும் வருவர் அதன்_தலை………………………..………………………..10
இன் துணை பிரிந்தோர் நாடி
தருவது போலும் இ பெரு மழை குரலே
* நொச்சி நியமங்கிழார்

# 209 குறிஞ்சி
மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டு என பல விளைந்து
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல்………………………..5
கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே
படும்_கால் பையுள் தீரும் படாஅது
தவிரும் காலை ஆயின் என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே
* நொச்சி நியமங்கிழார்

# 210 மருதம்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈர செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்………………………..………………………..5
செல்வம் அன்று தன் செய்_வினை பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கள் செல்வம் செல்வம் என்பதுவே
* மிளைகிழான் நல்வேட்டனார்

# 211 நெய்தல்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில்
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த
கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை………………………..………………………..5
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு
துறு கடல் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே
* கோட்டியூர் நல்லந்தையார்

# 212 பாலை
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர்………………………..………………………..5
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம்-வயின்
வந்தனர் வாழி தோழி கையதை
செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன்
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே………………………..………………………..10
* குடவாயில் கீரத்தனார்

# 213 குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி
கன்று கால்யாத்த மன்ற பலவின்
வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம்
குழவி சேதா மாந்தி அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்………………………..………………………..5
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை
கொய் புனம் காவலும் நுமதோ………………………..………………………..………………………..10
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே
* கச்சிப்பேட்டு பெருந்தச்சனார்

# 214 பாலை
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என
வினை-வயின் பிரிந்த வேறுபடு கொள்கை
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என………………………..5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து
செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்-கொல்லோ தோழி தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி………………………..10
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே
* கருவூர் கோசனார்

# 215 நெய்தல்
குண கடல் இவர்ந்து குரூஉ கதிர் பரப்பி
பகல்_கெழு_செல்வன் குட மலை மறைய
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்………………………..………………………..5
நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி எம்மொடு
தங்கின் எவனோ தெய்ய செம் கோல்
கொடு முடி அம் வலை பரிய போகிய………………………..………………………..10
கோள் சுறா குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே
* மதுரை சுள்ளம் போதனார்

# 216 மருதம்
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர் காண்பு-உழி வாழ்தல்
கண் உறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்
இன்னாது அன்றே அவர் இல் ஊரே………………………..………………………..5
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி
கேட்டோர் அனையர் ஆயினும்………………………..………………………..………………………..10
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே
* மதுரை மருதன் இளநாகனார்

# 217 குறிஞ்சி
இசை பட வாழ்பவர் செல்வம் போல
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது
கரும் கால் வேங்கை ஊறுபட மறலி
பெரும் சினம் தணியும் குன்ற நாடன்………………………..………………………..5
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்பு சேண் அகல நீக்கி
புலவி உணர்த்தல் வன்மையானே
* கபிலர்

# 218 நெய்தல்
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும்
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும்
ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர்………………………..………………………..5
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்
ஆனா நோய் அட வருந்தி இன்னும்
தமியேன் கேட்குவென்-கொல்லோ………………………..………………………..………………………..10
பரியரை பெண்ணை அன்றில் குரலே
* காவிதி கீரங்கண்ணனார்

# 219 நெய்தல்
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால்
அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல்………………………..5
பெரு மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல் அம் பெரும் துறை சேர்ப்பன்
தானே யானே புணர்ந்த மாறே………………………..………………………..………………………..10
* தாயங்கண்ணனார்

# 220 குறிஞ்சி
சிறு மணி தொடர்ந்து பெரும் கச்சு நிறீஇ
குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி
உண்ணா நன் மா பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறு_மாக்கள்
பெரிதும் சான்றோர் மன்ற விசி பிணி………………………..………………………..5
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண்
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தே மொழி
கயல் ஏர் உண்கண் குறு_மகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே………………………..………………………..10
* குண்டுகட்பாலியாதனார்

# 221 முல்லை
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய
பொன் தொடர்ந்து அன்ன தகைய நன் மலர்
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க
வம்பு விரித்து அன்ன செம் புல புறவில்………………………..………………………..5
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ
செல்க பாக நின் செய்வினை நெடும் தேர்
விருந்து விருப்பு-உறூஉம் பெரும் தோள் குறு_மகள்
மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க
நடை நாள் செய்த நவிலா சீறடி………………………..………………………..………………………..10
பூ கண் புதல்வன் உறங்கு-வயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே
* இடைக்காடனார்

# 222 குறிஞ்சி
கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை
வடு கொள பிணித்த விடு புரி முரற்சி
கை புனை சிறு நெறி வாங்கி பையென
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி………………………..………………………..5
செலவுடன் விடுகோ தோழி பல உடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது
பெரும் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடும் குன்றம் காணிய நீயே………………………..………………………..10
* கபிலர்

# 223 நெய்தல்
இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின்
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல்
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள்
அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால்………………………..………………………..5
எல்லி வம்மோ மெல்லம்புலம்ப
சுறவு_இனம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சா கண்ணர்
பெண்டிரும் உடைத்து இ அம்பல் ஊரே
* உலோச்சனார்

# 224 பாலை
அன்பினர் மன்னும் பெரியர் அதன்_தலை
பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை
செம் கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும்………………………..5
இன்ப வேனிலும் வந்தன்று நம்-வயின்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து
இனி எவன் மொழிகோ யானே கயன் அற
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய………………………..………………………..………………………..10
வெம் முனை அரும் சுரம் முன்னியோர்க்கே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 225 குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடும் சினம் செருக்கி
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை………………………..………………………..5
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே
* கபிலர்

# 226 பாலை
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட
பொன்னும் கொள்ளார் மன்னர் நல்_நுதல்
நாம் தம் உண்மையின் உளமே அதனால்
தாம் செய் பொருள் அளவு அறியார் தாம் கசிந்து………………………..5
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இ உலகத்தானே
* கணி புன்குன்றனார்

# 227 நெய்தல்
அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே
புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ
படு மணி யானை பசும் பூண் சோழர்………………………..………………………..5
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா
தேர் வழங்கு தெருவின் அன்ன
கௌவை ஆகின்றது ஐய நின் அருளே
* தேவனார்

# 228 குறிஞ்சி
என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து
அருளான்-கொல்லோ தானே கானவன்………………………..………………………..5
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ
அழுந்துபட விடர்_அகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே
* முடத்திருமாறனார்

# 229 பாலை
சேறும் சேறும் என்றலின் பல புலந்து
செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே
செல்லாதீம் என செப்பின் பல்லோர்
நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு………………………..5
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி
உழையீர் ஆகவும் பனிப்போள் தமியே
குழைவான் கண்ணிடத்து ஈண்டி தண்ணென
ஆடிய இள மழை பின்றை………………………..………………………..………………………..10
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே

# 230 மருதம்
முய பிடி செவியின் அன்ன பாசடை
கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும்
கயல் கணம் கலித்த பொய்கை ஊர………………………..………………………..5
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய்
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்து ஆஅங்கு
இனிதே தெய்ய நின் காணும்-காலே………………………..………………………..10
* ஆலங்குடி வங்கனார்

# 231 நெய்தல்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும்………………………..………………………..5
உள்ளூர் குரீஇ கரு உடைத்து அன்ன
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை
கானல் அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்கா மாறே
* இளநாகனார்

# 232 குறிஞ்சி
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம்
குளவி தண் கயம் குழைய தீண்டி
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலி சிறுகுடி அலற
செம் கால் பலவின் தீம் பழம் மிசையும்………………………..………………………..5
மா மலை நாட காமம் நல்கு என
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
வீ உக வரிந்த முன்றில்
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே
* முதுவெங்கண்ணனார்

# 233 குறிஞ்சி
கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்
பெரும் கல் நாடனை அருளினை ஆயின்
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று………………………..………………………..5
கூறுவென் வாழி தோழி முன் உற
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் செல் நெறி வழாஅ
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே
* அஞ்சில் ஆந்தையார்

# 234 குறிஞ்சி
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு………………………..5
கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதே

# 235 நெய்தல்
உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல்
அரவு வாள் வாய முள் இலை தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூ கானல் பகற்குறி வந்து நம்
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும்………………………..………………………..5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத
படு மணி கலி_மா கடைஇ
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே………………………..………………………..………………………..10

# 236 குறிஞ்சி
நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு………………………..5
உரை இனி வாழி தோழி புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய சிறிதே………………………..………………………..………………………..10
* நம்பி குட்டுவன்

# 237 பாலை
நனி மிக பசந்து தோளும் சாஅய்
பனி மலி கண்ணும் பண்டு போலா
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உள் கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை………………………..5
உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல
உலகம் உவப்ப ஓது அரும்
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே………………………..………………………..10
* காரிக்கண்ணனார்

# 238 முல்லை
வறம் கொல வீந்த கானத்து குறும் பூ
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை………………………..………………………..………………………..5
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்
சான்றோர் புரைவதோ அன்றே மான்று உடன்
உர உரும் உரறும் நீரின் பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்………………………..………………………..………………………..10
இனிய அல்ல நின் இடி நவில் குரலே
* கந்தரத்தனார்

# 239 நெய்தல்
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடி செல் நெறி வழியின்………………………..………………………..5
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும்
மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி………………………..………………………..10
முயங்கு என கலுழ்ந்த இ ஊர்
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே
* குன்றியனார்

# 240 பாலை
ஐது ஏகு அம்ம இ உலகு படைத்தோனே
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள்
கை கவர் முயக்கம் மெய் உற திருகி
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்………………………..………………………..5
வெயில் வெய்து-உற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே………………………..………………………..10
* நப்பாலத்தனார்

# 241 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறை
புள் அடி பொறித்த வரி உடை தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண் பூ விரிவன பல உடன்………………………..………………………..5
வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல் உற
பனி கால்கொண்ட பையுள் யாமத்து………………………..………………………..10
பல் இதழ் உண்கண் கலுழ
நில்லா பொருள்_பிணி பிரிந்திசினோரே
* மதுரை பெருமருதனார்

# 242 முல்லை
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ
பொன் என கொன்றை மலர மணி என
பன் மலர் காயாம் குறும் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து………………………..………………………..5
செல்க பாக நின் தேரே உவ காண்
கழி பெயர் களரில் போகிய மட மான்
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே………………………..………………………..………………………..10
* விழிக்கட்பேதை பெருங்கண்ணனார்

# 243 பாலை
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில்
கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு………………………..5
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என
கையற துறப்போர் கழறுவ போல
மெய் உற இருந்து மேவர நுவல
இன்னாது ஆகிய காலை பொருள்-வயின்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்………………………..………………………..10
அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே
* காமக்கணி பசலையார்

# 244 குறிஞ்சி
விழுந்த மாரி பெரும் தண் சாரல்
கூதிர் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ………………………..………………………..5
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய்
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலின் கொடியை தோழி
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன என்………………………..………………………..………………………..10
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே
* கூற்றங்குமரனார்

# 245 நெய்தல்
நகை ஆகின்றே தோழி தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்………………………..………………………..5
தெளி தீம் கிளவி யாரையோ என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என
பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கி
தான் நம் அணங்குதல் அறியான் நம்மின்
தான் அணங்கு உற்றமை கூறி கானல்………………………..………………………..10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே
* அல்லங்கீரனார்

# 246 பாலை
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடும் சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும்
மனை மா நொச்சி மீமிசை மா சினை
வினை மாண் இரும் குயில் பயிற்றலும் பயிற்றும்
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி………………………..………………………..5
செய்_பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்
வருவர் வாழி தோழி புறவின்
பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ
இன் இசை வானம் இரங்கும் அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே………………………..………………………..………………………..10
* காப்பியம் சேந்தனார்

# 247 குறிஞ்சி
தொன்றுபடு துப்பொடு முரண் மிக சினைஇ
கொன்ற யானை செம் கோடு கழாஅ
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ………………………..………………………..5
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும்
நின் வழி படூஉம் என் தோழி நன் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே
* பரணர்

# 248 முல்லை
சிறு வீ முல்லை தேம் கமழ் பசு வீ
பொறி வரி நன் மான் புகர் முகம் கடுப்ப
தண் புதல் அணி பெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்………………………..………………………..5
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மட கணம் போல
நினை மருள்வேனோ வாழியர் மழையே
* காசிபன் கீரனார்

# 249 நெய்தல்
இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறும் தாது உதிர
புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல்………………………..………………………..5
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ
பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்
மல்லல் அம் சேரி கல்லென தோன்றி
அம்பல் மூதூர் அலர் எழ………………………..………………………..………………………..10
சென்றது அன்றோ கொண்கன் தேரே
* உலோச்சனார்

# 250 மருதம்
நகுகம் வாராய் பாண பகு வாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன்
பூ நாறு செம் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன்………………………..………………………..………………………..5
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
யாரையோ என்று இகந்து நின்றதுவே………………………..………………………..10
* மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்

# 251 குறிஞ்சி
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நன் மலை நாடனை நயவா யாம் அவன்
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி………………………..………………………..5
நின் புறங்காத்தலும் காண்போய் நீ என்
தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து
நுடங்கு நிலை பறவை உடங்கு பீள் கவரும்
தோடு இடம் கோடாய் கிளர்ந்து………………………..………………………..………………………..10
நீடினை விளைமோ வாழிய தினையே
* மதுரை பெருமருதிள நாகனார்

# 252 பாலை
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த………………………..………………………..………………………..5
வினை இடை விலங்கல போலும் புனை சுவர்
பாவை அன்ன பழி தீர் காட்சி
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண்
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய்………………………..10
நன் நா புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனை_இழை குணனே
* அம்மெய்யன் நாகனார்

# 253 குறிஞ்சி
புள்ளு பதி சேரினும் புணர்ந்தோர் காணினும்
பள்ளி யானையின் வெய்ய உயிரினை
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய் நினையினை நீ நனி
உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறு_மகள்………………………..………………………..5
பேர் இசை உருமொடு மாரி முற்றிய
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி
பலவு உறு குன்றம் போல
பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே
* கபிலர்

# 254 நெய்தல்
வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும்
குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும்
துனி இல் நன் மொழி இனிய கூறியும்
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப………………………..………………………..5
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த நீல
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி………………………..………………………..………………………..10
வானம் வேண்டா உழவின் எம்
கானல் அம் சிறுகுடி சேந்தனை செலினே
* உலோச்சனார்

# 255 குறிஞ்சி
கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி
கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார்
வய களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகை சிலம்பில் குழுமும் அன்னோ………………………..………………………..5
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர்
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்
திரு மணி அரவு தேர்ந்து உழல………………………..………………………..………………………..10
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே
* ஆலம்பேரி சாத்தனார்

# 256 பாலை
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே
இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி………………………..………………………..5
களவுடன் கமழ பிடவு தளை அவிழ
கார் பெயல் செய்த காமர் காலை
மட பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும்………………………..………………………..………………………..10
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 257 குறிஞ்சி
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன்
அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை………………………..5
பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம்
நன் மலை நாட நயந்தனை அருளாய்
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி
கடு மா வழங்குதல் அறிந்தும்
நடுநாள் வருதி நோகோ யானே………………………..………………………..………………………..10
* வண்ணக்கன் சோருமருங்குமரனார்

# 258 நெய்தல்
பல் பூ கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த………………………..………………………..5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும்
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள்………………………..………………………..10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே
* நக்கீரர்

# 259 குறிஞ்சி
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி………………………..………………………..5
சாரல் ஆரம் வண்டு பட நீவி
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போல காண்பேன் விரி திரை
கடல் பெயர்ந்து அனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே………………………..………………………..10
* கொற்றம் கொற்றனார்

# 260 மருதம்
கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமை
பழன தாமரை பனி மலர் முணைஇ
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர
வெய்யை போல முயங்குதி முனை எழ………………………..………………………..5
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே………………………..………………………..10
* பரணர்

# 261 குறிஞ்சி
அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம்
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து………………………..………………………..5
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை
எருவை நறும் பூ நீடிய
பெரு வரை சிறு நெறி வருதலானே………………………..………………………..10
* சேந்தன் பூதனார்

# 262 பாலை
தண் புன கருவிளை கண் போல் மா மலர்
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர
உறை மயக்கு-உற்ற ஊர் துஞ்சு யாமத்து
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்………………………..………………………..5
பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால்
குவளை நாறும் கூந்தல் தே மொழி
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின்
அரிது மன்று அம்ம இன்மையது இளிவே………………………..………………………..10
* பெருந்தலை சாத்தனார்

# 263 நெய்தல்
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின்
இறை வரை நில்லா வளையும் மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு
கடும் சூல் வயவொடு கானல் எய்தாது………………………..………………………..5
கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா
கரப்பவும்_கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே………………………..………………………..………………………..10
* இளவெயினனார்

# 264 பாலை
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர………………………..………………………..………………………..5
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே
* ஆவூர் காவிதிகள் சாதேவனார்

# 265 குறிஞ்சி
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின்………………………..………………………..………………………..5
சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லி
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் நம்-வயினானே
* பரணர்

# 266 முல்லை
கொல்லை கோவலர் குறும் புனம் சேர்ந்த
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே
அதுவே சாலும் காமம் அன்றியும்………………………..………………………..………………………..5
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய-காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே
* கச்சிப்பேட்டு இளந்தச்சனார்

# 267 நெய்தல்
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்………………………..………………………..5
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல்………………………..………………………..10
இவை மகன் என்னா அளவை
வய_மான் தோன்றல் வந்து நின்றனனே
* கபிலர்

# 268 குறிஞ்சி
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து
கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு………………………..………………………..………………………..5
காதல் செய்தவும் காதல் அன்மை
யாதனின்-கொல்லோ தோழி வினவுகம்
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே
* வெறி பாடிய காமக்கண்ணியார்

# 269 பாலை
குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன்
மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி………………………..………………………..5
திரு முகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்
சிறு பல் குன்றம் இறப்போர்
அறிவார் யார் அவர் முன்னியவ்வே
* எயினந்தை மகன் இளங்கீரனார்

# 270 நெய்தல்
தடம் தாள் தாழை குடம்பை நோனா
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல்
அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா………………………..………………………..5
பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா
என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே………………………..………………………..………………………..10
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே
* பரணர்

# 271 பாலை
இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி
பைம் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர்………………………..………………………..5
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு………………………..10
மா இரும் தாழி கவிப்ப
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே

# 272 நெய்தல்
கடல் அம் காக்கை செ வாய் சேவல்
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி………………………..………………………..5
பூ உடை குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின் நசை பழுது ஆக
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே………………………..………………………..10
* முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

# 273 குறிஞ்சி
இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்து-உறீஇ நம்-வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்………………………..………………………..5
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளு-தொறும்
நெஞ்சு நடுக்கு-உறூஉம் அவன் பண்பு தரு படரே………………………..10
* மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

# 274 பாலை
நெடு வான் மின்னி குறும் துளி தலைஇ
படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்து
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்………………………..………………………..5
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே
* காவன் முல்லை பூதனார்

# 275 நெய்தல்
செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற
காணார் முதலொடு போந்து என பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கை
தன் உறு விழுமம் அறியா மென்மெல
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்………………………..………………………..5
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து
அறன் இலாளன் புகழ என்
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே
* அம்மூவனார்

# 276 குறிஞ்சி
கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில்………………………..………………………..5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே செல்லாது
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே………………………..………………………..10
* தொல் கபிலர்

# 277 பாலை
கொடியை வாழி தும்பி இ நோய்
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என
மெய்யே கருமை அன்றியும் செவ்வன்
அறிவும் கரிதோ அறன் இலோய் நினக்கே
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை………………………..………………………..5
நுண் முள் வேலி தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்
சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர்………………………..10
வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே
* தும்பி சேர் கீரனார்

# 278 நெய்தல்
படு காழ் நாறிய பராஅரை புன்னை
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ
பொன்னின் அன்ன தாது படு பன் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும்
நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை………………………..………………………..5
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல்
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி
குளம்பினும் சே_இறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே
* உலோச்சனார்

# 279 பாலை
வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும்
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு………………………..………………………..5
பொருத யானை புல் தாள் ஏய்ப்ப
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய்
சிலம்பு கழீஇய செல்வம்………………………..………………………..………………………..10
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே
* கயமனார்

# 280 மருதம்
கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டா பரத்தமை
புலவாய் என்றி தோழி புலவேன்………………………..………………………..………………………..5
பழன யாமை பாசடை புறத்து
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்
நன் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தா மாறே………………………..………………………..10
* பரணர்

# 281 பாலை
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி
வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும்
நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும்
அடங்கா சொன்றி அம் பல் யாணர்………………………..………………………..5
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப
மழை அமைந்து-உற்ற மால் இருள் நடுநாள்
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம்
பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர்………………………..………………………..………………………..10
அன்பு இலர் தோழி நம் காதலோரே
* கழார் கீரன் எயிற்றியார்

# 282 குறிஞ்சி
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ
கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட
நன் நுதல் சாய படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த
அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன்………………………..………………………..5
கிளவியின் தணியின் நன்று-மன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே
* நல்லூர் சிறு மேதாவியார்

# 283 நெய்தல்
ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரி சிறு_மனை அணியும் துறைவ
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை………………………..………………………..5
முந்நீர் மீமிசை பலர் தொழ தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே
* மதுரை மருதன் இளநாகனார்

# 284 பாலை
புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்-வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல்………………………..………………………..5
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்கா தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரி பழம் கயிறு போல………………………..………………………..………………………..10
வீவது-கொல் என் வருந்திய உடம்பே
* தேய்புரி பழங்கயிற்றினார்

# 285 குறிஞ்சி
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள்
இரவின் வருதல் அன்றியும் உரவு கணை
வன் கை கானவன் வெம் சிலை வணக்கி
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட………………………..………………………..5
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட
நடு கால் குரம்பை தன் குடி-வயின் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி என்றும்
அயலோர் அம்பலின் அகலான்………………………..………………………..………………………..10
பகலின் வரூஉம் எறி புனத்தானே
* மதுரை கொல்லன் வெண்ணாகனார்

# 286 பாலை
ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன
அத்த குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து………………………..………………………..5
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ தோழி அவர் சென்ற திறமே
* துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார்………………………..………………………..10

# 287 நெய்தல்
விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த
நல் எயில் உடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போல கொடும் கழி
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன்………………………..………………………..5
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்-கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என………………………..………………………..10
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே
* உலோச்சனார்

# 288 குறிஞ்சி
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று
நன் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை………………………..………………………..5
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ
கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில்
ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல்
சிறு கிளி கடிகம் சென்றும் இ
நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே………………………..10
* குளம்பனார்

# 289 முல்லை
அம்ம வாழி தோழி காதலர்
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே வானம்
நளி கடல் முகந்து செறி_தக இருளி
கனை பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றி………………………..………………………..5
கார் செய்து என் உழையதுவே ஆயிடை
கொல்லை கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல
அருள் இலேன் அம்ம அளியேன் யானே
* மருங்கூர் பட்டினத்து சேந்தன் குமரனார்………………………..………………………..

# 290 மருதம்
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில்
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல்
கொள்ளல் மாதோ முள் எயிற்றோயே………………………..………………………..5
நீயே பெரு நலத்தையே அவனே
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே
* மதுரை மருதன் இளநாகனார்

# 291 நெய்தல்
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு
குப்பை வெண் மணல் ஏறி அரைசர்
ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும்
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும்………………………..………………………..5
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து
எல்லி தரீஇய இன நிரை
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே
* கபிலர்

# 292 குறிஞ்சி
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்
யாணர் வைப்பின் கானம் என்னாய்
களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை………………………..………………………..5
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மை கூர் பனியே
* நல்வேட்டனார்

# 293 பாலை
மணி குரல் நொச்சி தெரியல் சூடி
பலி கள் ஆர்கை பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல்………………………..………………………..5
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல்
பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே
* கயமனார்

# 294 குறிஞ்சி
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி வேய் பயின்று
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும்
தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ………………………..5
கொன்ற யானை கோடு கண்டு அன்ன
செம் புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்பு உடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே
* புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

# 295 நெய்தல்
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள்
அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை
வேறு பல் நாட்டு கால் தர வந்த………………………..………………………..………………………..5
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை
கலி மடை கள்ளின் சாடி அன்ன எம்
இள நலம் இல்_கடை ஒழிய
சேறும் வாழியோ முதிர்கம் யாமே
* ஔவையார்

# 296 பாலை
என் ஆவது-கொல் தோழி மன்னர்
வினை வல் யானை புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மே தக மலரும்………………………..………………………..………………………..5
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇ
செல்ப என்ப காதலர்
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே
* குதிரை தறியனார்

# 297 குறிஞ்சி
பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப
நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய்
பன் மாண் சேக்கை பகை கொள நினைஇ
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை………………………..5
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை………………………..………………………..………………………..10
ஐயம் இன்றி கடும் கவவினளே
* மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

# 298 பாலை
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட
எருவை சேவல் கிளை-வயின் பெயரும்
அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை………………………..………………………..5
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள்
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம்
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார்
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை வான் முகை………………………..………………………..10
இரும் போது கமழும் கூந்தல்
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே
* விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

# 299 நெய்தல்
உரு கெழு யானை உடை கோடு அன்ன
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ
தயங்கு இரும் கோடை தூக்கலின் நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும் அவர்_காண்………………………..………………………..5
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே
* வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

# 300 மருதம்
சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர்
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம்………………………..5
முன்கடை நிறீஇ சென்றிசினோனே
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்………………………..………………………..………………………..10
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே

# 301 குறிஞ்சி
நீள் மலை கலித்த பெரும் கோல் குறிஞ்சி
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனை
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண்
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார்
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள்………………………..………………………..5
பாவை அன்ன வனப்பினள் இவள் என
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி
யாய் மறப்பு அறியா மடந்தை
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே
* பாண்டியன் மாறன் வழுதி

# 302 பாலை
இழை அணி மகளிரின் விழை_தக பூத்த
நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை
காடு கவின் பூத்து ஆயினும் நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ………………………..………………………..5
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்
வழங்கு அரும் கானம் இறந்திசினோரே………………………..………………………..10
* மதுரை மருதன் இளநாகனார்

# 303 நெய்தல்
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்………………………..5
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய்
நம்-வயின் வருந்தும் நல்_நுதல் என்பது
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல்
வன் கை பரதவர் இட்ட செம் கோல்
கொடு முடி அம் வலை பரிய போக்கி………………………..………………………..10
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே
* மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

# 304 குறிஞ்சி
வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி
சாரல் வரைய கிளை உடன் குழீஇ
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இரும் சிலம்பின் நன் மலை நாடன்
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின்………………………..………………………..5
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்கும்-மார் பசலை அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண் கமழ் நறும் தார் விறலோன் மார்பே………………………..………………………..10
* மாறோக்கத்து நப்பசலையார்

# 305 பாலை
வரி அணி பந்தும் வாடிய வயலையும்
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை நின் தோழி………………………..………………………..5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வெள் வேல் விடலையை
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே………………………..10
* கயமனார்

# 306 குறிஞ்சி
தந்தை வித்திய மென் தினை பைபய
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என
நல்ல இனிய கூறி மெல்ல
கொயல் தொடங்கினரே கானவர் கொடும் குரல்………………………..5
சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல்
செறி தோட்டு எல் வளை குறு_மகள்………………………..………………………..10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே
* உரோடோகத்து கந்தரத்தனார்

# 307 நெய்தல்
கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும்
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன்………………………..………………………..5
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை
மா அரை மறைகம் வம்-மதி பானாள்
பூ விரி கானல் புணர் குறி வந்து நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே………………………..………………………..10
* அம்மூவனார்

# 308 பாலை
செல விரைவு-உற்ற அரவம் போற்றி
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை
யாம் தன் கரையவும் நாணினள் வருவோள்
வேண்டாமையின் மென்மெல வந்து
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி………………………..………………………..5
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை
பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து
ஆகம் அடைதந்தோளே அது கண்டு
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம்
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம்………………………..………………………..10
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே
* எயினந்தை மகன் இளங்கீரனார்

# 309 குறிஞ்சி
நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின்
ஆழல் வாழி தோழி வாழை
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும்………………………..5
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமம் ஆக அறியுநர் இன்று என
கூறுவை-மன்னோ நீயே
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே
* கபிலர்

# 310 மருதம்
விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை
களிற்று செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே………………………..………………………..5
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு ஓரா தாயரொடு ஒழிபு உடன்
சொல்லலை-கொல்லோ நீயே வல்லை
களிறு பெறு வல்சி பாணன் கையதை
வள் உயிர் தண்ணுமை போல………………………..………………………..………………………..10
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே
* பரணர்

# 311 நெய்தல்
பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து
இரும் கழி செறுவின் வெள் உப்பு விளையும்
அழியா மரபின் நம் மூதூர் நன்றே………………………..………………………..5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே
ஒன்றே தோழி நம் கானலது பழியே
கரும் கோட்டு புன்னை மலர் தாது அருந்தி
இரும் களி பிரசம் ஊத அவர்………………………..………………………..………………………..10
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே
* உலோச்சனார்

# 312 பாலை
நோகோ யானே நோம் என் நெஞ்சே
பனி புதல் ஈங்கை அம் குழை வருட
சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகு
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள
மாரி நின்ற மையல் அற்சிரம்………………………..………………………..………………………..5
யாம் தன் உழையம் ஆகவும் தானே
எதிர்த்த தித்தி முற்றா முலையள்
கோடை திங்களும் பனிப்போள்
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே
* கழார் கீரன் எயிற்றியார்

# 313 குறிஞ்சி
கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப
தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து
ஒலி பல் கூந்தல் அணி பெற புனைஇ
காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு………………………..………………………..5
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்-வயின்
மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா………………………..………………………..………………………..10
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே
* தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

# 314 பாலை
முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்
குறும் பொறி கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்………………………..5
கரும் கண் வெம் முலை ஞெமுங்க புல்லி
கழிவது ஆக கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி
அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள்………………………..………………………..10
புன் புறா வீழ் பெடை பயிரும்
என்றூழ் நீள் இடை சென்றிசினோரே
* முப்பேர் நாகனார்

# 315 நெய்தல்
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என
பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டு
மூத்து வினை போகிய முரி வாய் அம்பி
நல் எருது நடை வளம் வைத்து என உழவர்
புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு………………………..………………………..5
நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதல் பிணிக்கும் துறைவ நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல்………………………..………………………..10
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர்
மலர் தீய்ந்து அனையர் நின் நயந்தோரே
* அம்மூவனார்

# 316 முல்லை
மடவது அம்ம மணி நிற எழிலி
மலரின் மௌவல் நலம் வர காட்டி
கயல் ஏர் உண்கண் கனம் குழை இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்………………………..5
நன் நுதல் நீவி சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை அத்த
கல் மிசை அடுக்கம் புதைய கால்வீழ்த்து
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே………………………..………………………..10
* இடைக்காடனார்

# 317 குறிஞ்சி
நீடு இரும் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூ பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை
பவள செம் வாய் பைம் கிளி கவரும்
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை………………………..………………………..5
அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து
என் ஆகுவ-கொல் தானே எந்தை
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே………………………..………………………..10
* மதுரை பூவண்ட நாகன் வேட்டனார்

# 318 பாலை
நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம்
பணை தாள் ஓமை படு சினை பயந்த
பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக
நடுக்கம் செய்யாது நண்ணு-வழி தோன்றி
ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை………………………..5
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்ப
புன் தலை மட பிடி புலம்பிய குரலே
* பாலை பாடிய பெரும் கடுங்கோ

# 319 நெய்தல்
ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும்………………………..………………………..5
அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள்
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்
தட மென் பணை தோள் மடம் மிகு குறு_மகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி
மீன் கண்துஞ்சும் பொழுதும்………………………..………………………..………………………..10
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையே
* வினைத்தொழில் சோகீரனார்

# 320 மருதம்
விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில்………………………..………………………..5
காரி புக்க நேரார் புலம் போல்
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய் தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே………………………..………………………..10
* கபிலர்

# 321 முல்லை
செம் நில புறவின் புன் மயிர் புருவை
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர
கான முல்லை கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை………………………..………………………..5
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை
வல்லை கடவு-மதி தேரே சென்றிக
குருந்து அவிழ் குறும்_பொறை பயிற்ற
பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே………………………..………………………..10
* மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

# 322 குறிஞ்சி
ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து
எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகை
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்………………………..………………………..5
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது
நன் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணர கூறி வேலன்………………………..………………………..10
இன் இயம் கறங்க பாடி
பன் மலர் சிதறி பரவு-உறு பலிக்கே
* மதுரை பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்

# 323 நெய்தல்
ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை
நடுவணதுவே தெய்ய மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவண
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை………………………..………………………..5
நல்லோள் தந்தை சிறுகுடி பாக்கம்
புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்
தெரி மணி கேட்டலும் அரிதே………………………..………………………..………………………..10
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே
* வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

# 324 குறிஞ்சி
அந்தோ தானே அளியள் தாயே
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல்
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள்
கோடு முற்று யானை காடு உடன் நிறைதர
நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின்………………………..………………………..5
செல்வ தந்தை இடன் உடை வரைப்பின்
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே
* கயமனார்

# 325 பாலை
கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி
நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்………………………..………………………..5
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள்
பூ போல் உண்கண் புது நலம் சிதைய
வீங்கு நீர் வார கண்டும்
தகுமோ பெரும தவிர்க நும் செலவே
* மதுரை காருலவியம் கூத்தனார்

# 326 குறிஞ்சி
கொழும் சுளை பலவின் பயம் கெழு கவாஅன்
செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு_இனம்
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது
துய் தலை மந்தி தும்மும் நாட
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே………………………..………………………..5
நுண் கொடி பீரத்து ஊழ்-உறு பூ என
பசலை ஊரும் அன்னோ பல் நாள்
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண
வண்டு எனும் உணரா ஆகி
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே………………………..………………………..10
* மதுரை மருதன் இளநாகனார்

# 327 நெய்தல்
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்
சாதலும் இனிதே காதல் அம் தோழி
அ நிலை அல்ல ஆயினும் சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து………………………..5
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்
புன்னை ஓங்கிய கானல்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே
* அம்மூவனார்

# 328 குறிஞ்சி
கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி
சிற்சில வித்தி பற்பல விளைந்து
தினை கிளி கடியும் பெரும் கல் நாடன்
பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால்
அது இனி வாழி தோழி ஒரு நாள்………………………..………………………..………………………..5
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே இனியே
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல்
விலங்கு மலை அடுக்கத்தானும்………………………..………………………..………………………..10
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே
* தொல் கபிலர்

# 329 பாலை
வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி………………………..………………………..5
செம் கணை செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்
அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து
அல்கலர் வாழி தோழி உது காண்
இரு விசும்பு அதிர மின்னி………………………..………………………..………………………..10
கருவி மா மழை கடல் முகந்தனவே
* மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

# 330 மருதம்
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து
மட நடை நாரை பல் இனம் இரிய
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்………………………..………………………..5
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்-தம்
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும்
பைம் தொடி மகளிரொடு சிறுவர் பயந்து
நன்றி சான்ற கற்பொடு………………………..………………………..………………………..10
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே
* ஆலங்குடி வங்கனார்

# 331 நெய்தல்
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி
கானல் இட்ட காவல் குப்பை
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி………………………..………………………..5
எந்தை திமில் இது நுந்தை திமில் என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர்
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம்………………………..………………………..10
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே
* உலோச்சனார்

# 332 குறிஞ்சி
இகுளை தோழி இஃது என் எனப்படுமோ
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு
நாளும் நாள் உடன் கவவவும் தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி என பன் மாண்
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை………………………..………………………..5
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி
தலை நாள் அன்ன பேணலன் பல நாள்
ஆர் இருள் வருதல் காண்பேற்கு
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே………………………..………………………..10
* குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

# 333 பாலை
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என
கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து………………………..………………………..5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து
திருந்து_இழை பணை தோள் பெறுநர் போலும்
நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி………………………..………………………..10
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே
* கள்ளி குடி பூதம் புல்லனார்

# 334 குறிஞ்சி
கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன்………………………..………………………..5
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள்
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி
மின்னு வசி விளக்கத்து வரும் எனின்
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே

# 335 நெய்தல்
திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்
பொங்கு திரை புணரியும் பாடு ஓவாதே
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல்
பல் பூ கானல் முள் இலை தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ………………………..………………………..5
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனை மிசை பைதல உயவும்
அன்றிலும் என்பு உற நரலும் அன்றி
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று………………………..………………………..………………………..10
காமம் பெரிதே களைஞரோ இலரே
* வெள்ளிவீதியார்

# 336 குறிஞ்சி
பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடு
கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின்
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை
புனை இரும் கதுப்பின் மனையோள் கெண்டி………………………..………………………..5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின்
ஈர் அளை புற்றம் கார் என முற்றி
இரை தேர் எண்கு_இனம் அகழும்………………………..………………………..………………………..10
வரை சேர் சிறு நெறி வாராதீமே
* கபிலர்

# 337 பாலை
உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரே
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரை பாதிரி குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய………………………..5
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன்
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்
தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே………………………..………………………..10
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 338 நெய்தல்
கடும் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப………………………..………………………..5
யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி
கொடு வாய் பேடை குடம்பை சேரிய………………………..………………………..10
உயிர் செல கடைஇ புணர் துணை
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே
* மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்

# 339 குறிஞ்சி
தோலா காதலர் துறந்து நம் அருளார்
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை சிறந்த………………………..………………………..5
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல்
ஒண் நுதல் பெதும்பை நன் நலம் பெறீஇ
மின் நேர் ஓதி இவளொடு நாளை
பன் மலர் கஞலிய வெறி கமழ் வேலி………………………..………………………..10
தெண் நீர் மணி சுனை ஆடின்
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே
* சீத்தலை சாத்தனார்

# 340 மருதம்
புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்
கல்லா யானை கடும் தேர் செழியன்
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி………………………..………………………..5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே………………………..………………………..10
* நக்கீரர்

# 341 குறிஞ்சி
வங்கா வரி பறை சிறு பாடு முணையின்
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து
அலையா உலவை ஓச்சி சில கிளையா
குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும்………………………..………………………..5
துணை நன்கு உடையள் மடந்தை யாமே
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து என
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப
துணை இலேம் தமியேம் பாசறையேமே………………………..………………………..10
* மதுரை மருதன் இளநாகனார்

# 342 நெய்தல்
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி
என் வாய் நின் மொழி மாட்டேன் நின்-வயின்
சேரி சேரா வருவோர்க்கு என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என………………………..………………………..5
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள்
யானே எல்_வளை யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னி சேவடி சேர்த்தின்
என் என படுமோ என்றலும் உண்டே………………………..………………………..10

# 343 பாலை
முல்லை தாய கல் அதர் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடி சீறூர்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை………………………..………………………..5
புன்கண் அந்தி கிளை-வயின் செறிய
படையொடு வந்த பையுள் மாலை
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து
அரும் பொருள் கூட்டம் வேண்டி
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே………………………..………………………..10
* கருவூர் கதப்பிள்ளை சாத்தனார்

# 344 குறிஞ்சி
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடி தட கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை………………………..5
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை
பெரும் கல் விடர்_அகம் சிலம்ப இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து………………………..10
செந்தினை உணங்கல் தொகுக்கும்
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே
* மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

# 345 நெய்தல்
கானல் கண்டல் கழன்று உகு பைம் காய்
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன
வெளிய விரியும் துறைவ என்றும்………………………..………………………..5
அளிய பெரிய கேண்மை நும் போல்
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடு இன்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே………………………..………………………..10
* நம்பி குட்டுவனார்

# 346 பாலை
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
தண் கார் தலைஇய நிலம் தணி காலை
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடி சீறூர்
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட………………………..………………………..5
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை
இன்று நக்கனை-மன் போலா என்றும்
நிறை-உறு மதியின் இலங்கும் பொறையன்
பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி
கடி பதம் கமழும் கூந்தல்………………………..………………………..………………………..10
மட மா அரிவை தட மென் தோளே
* எயினந்தை மகன் இளங்கீரனார்

# 347 குறிஞ்சி
முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை
மாதிர நனம் தலை புதைய பாஅய்
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு
வான் புகு தலைய குன்றம் முற்றி
அழி துளி தலைஇய பொழுதில் புலையன்………………………..………………………..5
பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன
அருவி இழிதரும் பெரு வரை நாடன்
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய………………………..………………………..………………………..10
காண வீடுமோ தோழி என் நலனே
* பெருங்குன்றூர் கிழார்

# 348 நெய்தல்
நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும்………………………..5
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இரும் கங்குலும் கண்படை இலெனே
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம்
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே………………………..10
* வெள்ளி வீதியார்

# 349 நெய்தல்
கடும் தேர் ஏறியும் காலின் சென்றும்
கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும் செய் தார்………………………..………………………..5
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறு வேல் அழுவத்து களிறு பட பொருத
பெரும் புண்ணுறுநர்க்கு பேஎய் போல
பின்னிலை முனியா நம்-வயின்
என் என நினையும்-கொல் பரதவர் மகளே………………………..………………………..10
* மிளை கிழான் நல்வேட்டனார்

# 350 மருதம்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழன பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல் கவின் தொலையினும் தொலைக சார………………………..………………………..5
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇ
கவவு கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆசு இல் கலம் தழீஇ அற்று
வாரல் வாழிய கவைஇ நின்றோளே………………………..………………………..10
* பரணர்

# 351 குறிஞ்சி
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை
அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய் பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள்………………………..5
வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த
களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து
சிறுதினை வியன் புனம் காப்பின்
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே
* மதுரை கண்ணத்தனார்

# 352 பாலை
இலை மாண் பகழி சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை
அழல் போல் செவிய சேவல் ஆட்டி
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி………………………..………………………..5
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து-உற்று
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அரும் சுர கவலை வருதலின் வருந்திய
நமக்கும் அரிய ஆயின அமை தோள்………………………..………………………..10
மாண்பு உடை குறு_மகள் நீங்கி
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே
* மதுரை பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

# 353 குறிஞ்சி
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல கணம்_கொள
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
கல் கெழு குறவர் காதல் மட_மகள்………………………..………………………..5
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம்
காமம் கனிவது ஆயினும் யாமத்து
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
வெம் சின உருமின் உரறும்………………………..………………………..………………………..10
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே
* கபிலர்

# 354 நெய்தல்
தான் அது பொறுத்தல் யாவது கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்
எல்லி அன்ன இருள் நிற புன்னை………………………..………………………..………………………..5
நல் அரை முழு_முதல் அ-வயின் தொடுத்த
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின்
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப………………………..………………………..………………………..10
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே
* உலோச்சனார்

# 355 குறிஞ்சி
புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள்
குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை
அ மடல் பட்ட அருவி தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட………………………..………………………..………………………..5
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ
என் கண் ஓடி அளி-மதி………………………..………………………..………………………..10
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே

# 356 குறிஞ்சி
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும்………………………..………………………..5
அசைவு இல் நோன் பறை போல செலவர
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையள் ஆக
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே
* பரணர்

# 357 குறிஞ்சி
நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு
என்னொடு நிலையாது ஆயினும் என்றும்
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே
சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன்
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி………………………..………………………..5
பீலி மஞ்ஞை ஆலும் சோலை
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலை கலைஇய கண்ணி
சாரல் நாடனொடு ஆடிய நாளே………………………..………………………..………………………..10
* குறமகள் குறியெயினி

# 358 நெய்தல்
பெரும் தோள் நெகிழ அம் வரி வாட
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர
இன்னேம் ஆக என் கண்டு நாணி
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம்
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என………………………..………………………..5
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ தோழி
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல்
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என்………………………..………………………..10
அரும் பெறல் ஆய் கவின் தொலைய
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே
* நக்கீரர்

# 359 குறிஞ்சி
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின்………………………..………………………..5
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை
வாடல-கொல்லோ தாமே அவன் மலை
போர் உடை வருடையும் பாயா
சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே
* கபிலர்

# 360 மருதம்
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல
நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவி
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்
சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை………………………..………………………..5
பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்தி கசிந்தவர் அலைப்ப
கை இடை வைத்தது மெய் இடை திமிரும்
முனி உடை கவளம் போல நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்………………………..………………………..………………………..10
மற்றும் கூடும் மனை மடி துயிலே
* ஓரம்போகியார்

# 361 முல்லை
சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரி
தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர்
விசும்பு கடப்பு அன்ன பொலம் படை கலி_மா
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப………………………..………………………..5
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்
தந்தன நெடுந்தகை தேரே என்றும்
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே
* மதுரை பேராலவாயர்

# 362 பாலை
வினை அமை பாவையின் இயலி நுந்தை
மனை வரை இறந்து வந்தனை ஆயின்
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும்………………………..………………………..5
நீ விளையாடுக சிறிதே யானே
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி
அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே………………………..………………………..10
* மதுரை மருதன் இள நாகனார்

# 363 நெய்தல்
கண்டல் வேலி கழி சூழ் படப்பை
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு………………………..5
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப
பைம் தழை சிதைய கோதை வாட
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே………………………..10

# 364 முல்லை
சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப
இன்ன சில் நாள் கழியின் பல் நாள்………………………..………………………..5
வாழலென் வாழி தோழி ஊழின்
உரும் இசை அறியா சிறு செம் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப
பல் ஆ தந்த கல்லா கோவலர்
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப………………………..10
உயிர் செல துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே
* கிடங்கில் காவிதி பெரும் கொற்றனார்

# 365 குறிஞ்சி
அரும் கடி அன்னை காவல் நீவி
பெரும் கடை இறந்து மன்றம் போகி
பகலே பலரும் காண வாய் விட்டு
அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி
சென்மோ வாழி தோழி பல் நாள்………………………..………………………..………………………..5
கருவி வானம் பெய்யாது ஆயினும்
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலை கிழவனை
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே
* கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்

# 366 பாலை
அரவு கிளர்ந்து அன்ன விரவு-உறு பல் காழ்
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ
கூதிர் முல்லை குறும் கால் அலரி………………………..………………………..5
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பன் மெல் அணை ஒழிய கரும்பின்
வேல் போல் வெண் முகை விரிய தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில் அம் கழை தூங்க ஒற்றும்………………………..………………………..10
வட புல வாடைக்கு பிரிவோர்
மடவர் வாழி இ உலகத்தானே
* மதுரை ஈழத்து பூதன் தேவனார்

# 367 முல்லை
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து
கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால்
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும்………………………..………………………..5
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை
தளை அவிழ் அலரி தண் நறும் கோதை
இளையரும் சூடி வந்தனர் நமரும்………………………..………………………..………………………..10
விரி உளை நன் மா கடைஇ
பரியாது வருவர் இ பனி படு நாளே
* நக்கீரர்

# 368 குறிஞ்சி
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ
நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த………………………..………………………..5
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே
ஐய அஞ்சினம் அளியம் யாமே………………………..………………………..………………………..10
* கபிலர்

# 369 நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறை குருகு_இனம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபய கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்………………………..………………………..………………………..5
அறியேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்………………………..………………………..10
நிறை அடு காமம் நீந்தும் ஆறே
* மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்

# 370 மருதம்
வாராய் பாண நகுகம் நேர்_இழை
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ்
விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி………………………..5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என
பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல
முகை நாண் முறுவல் தோற்றி………………………..………………………..………………………..10
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே
* உறையூர் கதுவாய் சாத்தனார்

# 371 முல்லை
காயாம் குன்றத்து கொன்றை போல
மா மலை விடர்_அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய்
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்………………………..………………………..5
நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குலானே
* ஔவையார்

# 372 நெய்தல்
அழி_தக்கன்றே தோழி கழி சேர்பு
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என
கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு………………………..5
அன்ன வெண் மணற்று அக-வயின் வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப மனை இருந்து………………………..………………………..10
இரும் கழி துழவும் பனி தலை பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலி கழி நல் ஊரே
* உலோச்சனார்

# 373 குறிஞ்சி
முன்றில் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி………………………..………………………..………………………..5
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே
* கபிலர்

# 374 முல்லை
முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின்
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை………………………..………………………..5
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்து இழை அரிவை தே மொழி நிலையே
* வன் பரணர்

# 375 நெய்தல்
நீடு சினை புன்னை நறும் தாது உதிர
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும்
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த
என்னும் நாணும் நல்_நுதல் உவப்ப………………………..………………………..5
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல்
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே
* பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி

# 376 குறிஞ்சி
முறம் செவி யானை தட கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம்
குல்லை குளவி கூதளம் குவளை………………………..………………………..………………………..5
இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன்
சுற்று அமை வில்லன் செயலை தோன்றும்
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி………………………..………………………..10
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே
* கபிலர்

# 377 குறிஞ்சி
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ………………………..………………………..5
அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல
அளகம் சேர்ந்த திரு_நுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே
* மடல் பாடிய மாதங்கீரனார்

# 378 நெய்தல்
யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்………………………..………………………..5
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய்
அயல் இல் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல்
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து
பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி………………………..………………………..10
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே
* வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

# 379 குறிஞ்சி
புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது
எரி அகைந்து அன்ன வீ ததை இணர
வேங்கை அம் படு சினை பொருந்தி கைய
தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி………………………..………………………..5
எழுது எழில் சிதைய அழுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தை_வாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன விரலே
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது………………………..………………………..10
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இரும் சிலம்பில் பூத்த
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே
* குடவாயில் கீரத்தனார்

# 380 மருதம்
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரி தோன்றும்………………………..………………………..5
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை………………………..………………………..10
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே
* கூடலூர் பல்கண்ணனார்

# 381 முல்லை
அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்
கரை பொருது இழிதரும் கான்யாற்று இகு கரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை………………………..………………………..5
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே………………………..………………………..10
* ஔவையார்

# 382 நெய்தல்
கானல் மாலை கழி நீர் மல்க
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி
புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி………………………..………………………..5
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே
* நிகண்டன் கலைக்கோட்டு தண்டனார்

# 383 குறிஞ்சி
கல் அயல் கலித்த கரும் கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள்………………………..………………………..5
அருளினை போலினும் அருளாய் அன்றே
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு
ஓங்கு வரை நாட நீ வருதலானே
* கோளியூர் கிழார் மகனார் செழியனார்

# 384 பாலை
பைம் புற புறவின் செம் கால் சேவல்
களரி ஓங்கிய கவை முட கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடை பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம்………………………..………………………..5
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நன்_நாள் வேங்கை பொன் மருள் புது பூ
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு
அரும் துயர் உழந்த-காலை………………………..………………………..………………………..10
மருந்து எனப்படூஉம் மடவோளையே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 385 நெய்தல்
எல்லை சென்ற பின் மலரும் கூம்பின
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு
அலவனும் அளை-வயின் செறிந்தன கொடும் கழி
இரை நசை வருத்தம் வீட மரம் மிசை
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால்………………………..………………………..5
பொழுது அன்று ஆதலின் தமியை வருதி
எழுது எழில் மழை

# 386 குறிஞ்சி
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
துறு கண் கண்ணி கானவர் உழுத
குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்
விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்………………………..………………………..………………………..5
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம்
கல் கெழு சிறுகுடி பொலிய
வதுவை என்று அவர் வந்த ஞான்றே………………………..………………………..10

# 387 பாலை
நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும்
அம்ம நாளும் தொல் நலம் சிதைய
ஒல்லா செம் தொடை ஒரீஇய கண்ணி
கல்லா மழவர் வில் இடை விலங்கிய
துன் அரும் கவலை அரும் சுரம் இறந்தோர்………………………..………………………..5
வருவர் வாழி தோழி செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானை செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி உது காண்
நெடும் பெரும் குன்றம் முற்றி………………………..………………………..………………………..10
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே
* பொதும்பில் கிழார் மகனார்

# 388 நெய்தல்
அம்ம வாழி தோழி நல்_நுதற்கு
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி
கயிறு கடை யாத்த கடு நடை எறி-உளி
திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇ
நடுநாள் வேட்டம் போகி வைகறை………………………..………………………..5
கடல் மீன் தந்து கானல் குவைஇ
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே………………………..………………………..10
* மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

# 389 குறிஞ்சி
வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும்
களிற்று முகம் திறந்த கல்லா விழு தொடை
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என………………………..………………………..5
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல்
காவல் நீ என்றோளே சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதை சுவல் கிளைத்த பூழி மிக பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு………………………..………………………..10
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பே
* காவிரி பூம்பட்டினத்து செங்கண்ணனார்

# 390 மருதம்
வாளை வாளின் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ………………………..………………………..5
விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையாமையோ அரிதே வரையின்
வரை போல் யானை வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்………………………..………………………..………………………..10
அளிய தோழி தொலையுந பலவே
* ஔவையார்

# 391 பாலை
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே
புலி பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும்………………………..………………………..5
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்-வயின்
யாரோ பிரிகிற்பவரே குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன நின்
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே………………………..………………………..10
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 392 நெய்தல்
கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தை
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்………………………..5
பெண்ணை வேலி உழை கண் சீறூர்
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம் பானாள்
முனி படர் களையினும் களைப………………………..………………………..………………………..10
நனி பேர் அன்பினர் காதலோரே
* மதுரை மருதன் இளநாகனார்

# 393 குறிஞ்சி
நெடும் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்
கானவன் எறிந்த கடும் செலல் ஞெகிழி………………………..………………………..5
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்………………………..………………………..10
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்-காலே
* கோவூர் கிழார்

# 394 முல்லை
மரம் தலைமணந்த நனம் தலை கானத்து
அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர்
வன் பரல் முரம்பின் நேமி அதிர………………………..………………………..………………………..5
சென்றிசின் வாழியோ பனி கடு நாளே
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின்
குறும் பொறி கொண்ட சாந்தமொடு
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே
* ஔவையார்

# 395 நெய்தல்
யாரை எலுவ யாரே நீ எமக்கு
யாரையும் அல்லை நொதுமலாளனை
அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின்
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன………………………..5
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை
கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே………………………..10
* அம்மூவனார்

# 396 குறிஞ்சி
பெய்து போகு எழிலி வைகு மலை சேர
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப
வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள்
பொன்னின் அன்ன பூ சினை துழைஇ
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை………………………..………………………..5
பாசறை மீமிசை கணம்_கொள்பு ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி………………………..………………………..………………………..10
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே

# 397 பாலை
தோளும் அழியும் நாளும் சென்று என
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று………………………..………………………..5
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே
* அம்மூவனார்

# 398 நெய்தல்
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே
நீர் அலை கலைஇய கூழை வடியா
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே………………………..………………………..………………………..5
பன் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன்
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர்
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து
யாணர் இள முலை நனைய
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே………………………..10
* உலோச்சனார்

# 399 குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நில வரை நிவந்த பல உறு திரு மணி………………………..………………………..5
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி நின் திரு நுதல் கவினே………………………..………………………..10
* ஆலங்குடி வங்கனார்

# 400 மருதம்
வாழை மென் தோடு வார்பு-உறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இரும் சுவல் வாளை பிறழும் ஊர
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று………………………..5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த
கேண்மையொடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே………………………..………………………..10