அகநானூறு

பாடல்கள்
0 – 50
பாடல்கள்
51 – 100
பாடல்கள்
101 – 150
பாடல்கள்
151 – 200
பாடல்கள்
201 – 250
பாடல்கள்
251 – 300
பாடல்கள்
301 – 350
பாடல்கள்
351 – 400


#0 கடவுள் வாழ்த்து
கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே மூவாய் 5
வேலும் உண்டு அ தோலாதோற்கே
ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே
செ வான் அன்ன மேனி அ வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை 10
முதிரா திங்களொடு சுடரும் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியா தொன் முறை மரபின்
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் 15
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே

#1 பாலை மாமூலனார்
வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவ குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய 5
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்த
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு
பொலம் கல வெறுக்கை தரு-மார் நிலம் பக
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின் 10
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை 15
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று
உடை திரை பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே

#2 குறிஞ்சி கபிலர்
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை
ஊழ் உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடும் சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது 5
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலை
பல் வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய 10
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்-மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை பைம் புதல் 15
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே

#3 பாலை
இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை 5
வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
துளங்கு நடை மரையா வலம்பட தொலைச்சி
ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் 10
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்
கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய்
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய் 15
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே

#4 முல்லை குறுங்குடி மருதனார்
முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப 5
கருவி வானம் கதழ் உறை சிதறி
கார் செய்தன்றே கவின் பெறு கானம்
குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய
பூத்த பொங்கர் துணையொடு வதிந்த 10
தாது_உண்_பறவை பேது உறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன்
உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தை குணாது
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள் 15
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே

#5 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளி நிலை கொள்ளாள் தமியள் மென்மெல
நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅ
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் 5
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல்
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையல் அம் காட்டு
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப 10
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் 15
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவ செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி 20
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த-காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் 25
கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே

#6 மருதம் பரணர்
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை
அரம் போழ் அம் வளை பொலிந்த முன்கை
இழை அணி பணை தோள் ஐயை தந்தை
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் 5
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு
வேழ வெண் புணை தழீஇ பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு
ஏந்து எழில் ஆகத்து பூம் தார் குழைய 10
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என
மாய பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம்
முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல 15
சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும்
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் 20
இளமை சென்று தவ தொல்லஃதே
இனிமை எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே

#7 பாலை கயமனார்
முலை முகம்_செய்தன முள் எயிறு இலங்கின
தலை முடி சான்ற தண் தழை உடையை
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை 5
பேதை அல்லை மேதை அம் குறு_மகள்
பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி 10
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இ சுரம் படர்தந்தோளே ஆயிடை
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என
பிற்படு பூசலின் வழிவழி ஓடி 15
மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு
புலி பல் கோத்த புலம்பு மணி தாலி
ஒலி குழை செயலை உடை மாண் அல்குல்
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த 20
துய் தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடி கானவன் மகளே

#8 குறிஞ்சி பெருங்குன்றூர்கிழார்
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும்
அரிய அல்ல-மன் இகுளை பெரிய 5
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய 10
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல்
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது
மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெல
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால் 15
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ
நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம்
அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினே

#9 பாலை கல்லாடனார்
கொல் வினை பொலிந்த கூர்ம் குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்க பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் 5
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு
ஆலி வானின் காலொடு பாறி
துப்பின் அன்ன செம் கோட்டு இயவின்
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் 10
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது 15
துனை பரி துரக்கும் துஞ்சா செலவின்
எம்மினும் விரைந்து வல் எய்தி பல் மாண்
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ
பாங்கர் பல்லி படு-தொறும் பரவி
கன்று புகு மாலை நின்றோள் எய்தி 20
கை கவியா சென்று கண் புதையா குறுகி
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல்
அம் தீம் கிளவி குறு_மகள் 25
மென் தோள் பெற நசைஇ சென்ற என் நெஞ்சே

#10 நெய்தல் அம்மூவனார்
வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய
மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த
முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை
புள் இறைகூரும் மெல்லம்புலம்ப
நெய்தல் உண்கண் பைதல கலுழ 5
பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும்
அரிது உற்றனையால் பெரும உரிதினின்
கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு
குரூஉ திரை புணரி உடைதரும் எக்கர்
பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் 10
மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டி
மணம் கமழ் பாக்கத்து பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே

#11 பாலை ஔவையார்
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடும் கொடி பொற்ப தோன்றி 5
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென
வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்று
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் 10
அவரும் பெறுகுவர்-மன்னே நயவர
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவல ஆகி
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே 15

#12 குறிஞ்சி கபிலர்
யாயே கண்ணினும் கடும் காதலளே
எந்தையும் நிலன் உற பொறாஅன் சீறடி சிவப்ப
எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும்
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இரு தலை புள்ளின் ஓர் உயிரம்மே 5
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்-தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை
விழு கோள் பலவின் பழு பயம் கொள்-மார்
குறவர் ஊன்றிய குரம்பை புதைய
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் 10
புலி செத்து வெரீஇய புகர் முக வேழம்
மழை படு சிலம்பில் கழைபட பெயரும்
நல் வரை நாட நீ வரின்
மெல்லியல் ஓரும் தான் வாழலளே

#13 பாலை பெருந்தலை சாத்தனார்
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை
தெறல் அரு மரபின் கடவுள் பேணி
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் 5
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
வள் வாய் அம்பின் கோடை பொருநன் 10
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட 15
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை
கவவு இன்புறாமை கழிக வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர 20
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை
இலங்கு பூம் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண்_குருகு நரல வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே

#14 முல்லை ஒக்கூர் மாசாத்தனார்
அரக்கத்து அன்ன செம் நில பெரு வழி
காயாம் செம்மல் தாஅய் பல உடன்
ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடு
மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ 5
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள
முல்லை வியன் புலம் பரப்பி கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற 10
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின் காலை
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்
செவ்வழி நல் யாழ் இசையினென் பையென 15
கடவுள் வாழ்த்தி பையுள் மெய்ந்நிறுத்து
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே
விடு விசை குதிரை விலங்கு பரி முடுக
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி
கார் மழை முழக்கு இசை கடுக்கும் 20
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே

#15 பாலை மாமூலனார்
எம் வெம் காமம் இயைவது ஆயின்
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர்
கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்த
பாகல் ஆர்கை பறை கண் பீலி
தோகை காவின் துளுநாட்டு அன்ன 5
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரி செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல
தோழிமாரும் யானும் புலம்ப
சூழி யானை சுடர் பூண் நன்னன் 10
பாழி அன்ன கடி உடை வியல் நகர்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ
துய்த்த வாய துகள் நிலம் பரக்க
கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி 15
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணை படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே

#16 மருதம் சாகலாசனார்
நாய் உடை முது நீர் கலித்த தாமரை
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய்
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்
யாவரும் விழையும் பொலம் தொடி புதல்வனை 5
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
வருக-மாள என் உயிர் என பெரிது உவந்து 10
கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன்
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை
நீயும் தாயை இவற்கு என யான் தன்
கரைய வந்து விரைவனென் கவைஇ
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா 15
நாணி நின்றோள் நிலை கண்டு யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே

#17 பாலை கயமனார்
வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும்
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள் வதியும்-மன்னே இனியே 5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென 10
ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின்
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்த
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும்
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் 15
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அரும் சுர கவலைய அதர் படு மருங்கின்
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர்
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி 20
வைகுறு_மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே

#18 குறிஞ்சி கபிலர்
நீர் நிறம் கரப்ப ஊழ் உறுபு உதிர்ந்து
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி
மராஅ யானை மதம் தப ஒற்றி
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் 5
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து
நாம அரும் துறை பேர்தந்து யாமத்து
ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும் 10
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால்
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் 15
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய்
ஓம்பினள் எடுத்த தட மென் தோளே

#19 பாலை பொருந்தில் இளங்கீரனார்
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி
வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் 5
எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்று
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது
செல் இனி சிறக்க நின் உள்ளம் வல்லே
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின்
சே இதழ் அனைய ஆகி குவளை 10
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர வெரீஇ பையென
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை 15
பூ வீ கொடியின் புல்லென போகி
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே

#20 நெய்தல் உலோச்சனார்
பெரு_நீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி
எக்கர் புன்னை இன் நிழல் அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி
ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி 5
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி
மணி பூ பைம் தழை தைஇ அணி தக
பல் பூ கானல் அல்கினம் வருதல் 10
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர்
கொடிது அறி பெண்டிர் சொல்கொண்டு அன்னை
கடி கொண்டனளே தோழி பெரும் துறை
எல்லையும் இரவும் என்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி 15
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே

#21 பாலை காவன்முல்லை பூதனார்
மனை இள நொச்சி மௌவல் வால் முகை
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇ
தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள்
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு 5
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர்
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் 10
கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி
மராஅம் அலைத்த மண வாய் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை 15
இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் 20
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர்
ஊறாது இட்ட உவலை கூவல்
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து 25
இரும் களிற்று இன நிரை தூர்க்கும்
பெரும் கல் அத்தம் விலங்கிய காடே

#22 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரல் பொழுதில்
படியோர் தேய்த்த பல் புகழ் தட கை 5
நெடுவேள் பேண தணிகுவள் இவள் என
முது வாய் பெண்டிர் அது வாய் கூற
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி
வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்து
உருவ செந்தினை குருதியொடு தூஉய் 10
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள்
ஆரம் நாற அரு விடர் ததைந்த
சாரல் பல் பூ வண்டு பட சூடி
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல 15
நன் மனை நெடு நகர் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய் தணி காதலர் வர ஈண்டு 20
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே

#23 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்
மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல்
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி
புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ
காடே கம்மென்றன்றே அவல 5
கோடு உடைந்து அன்ன கோடல் பைம் பயிர்
பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ
தண் அறல் பருகி தாழ்ந்துபட்டனவே
அனைய-கொல் வாழி தோழி மனைய 10
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மா சினை காட்டி
அவ்வளவு என்றார் ஆண்டு செய்பொருளே

#24 முல்லை ஆவூர் மூலம் கிழார்
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை
சிதரல் அம் துவலை தூவலின் மலரும்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் 5
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி
மங்குல் மா மழை தென் புலம் படரும்
பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி
தம் ஊரோளே நல்_நுதல் யாமே 10
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி
கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து 15
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள்
இரவு துயில் மடிந்த தானை
உரவு சின வேந்தன் பாசறையேமே

#25 பாலை ஒல்லையூர் தந்த பூத பாண்டியன்
நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை
தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சி
பைம் தாது அணிந்த போது மலி எக்கர்
வதுவை நாற்றம் புதுவது கஞல 5
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில்
படு நா விளியால் நடு நின்று அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினை பூ கோங்கின் நுண் தாது பகர்நர் 10
பவள செப்பில் பொன் சொரிந்து அன்ன
இகழுநர் இகழா இள_நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி என நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
வாராமையின் புலந்த நெஞ்சமொடு 15
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என
மெல்லிய இனிய கூறி வல்லே
வருவர் வாழி தோழி பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தட கை
பொதியின் செல்வன் பொலம் தேர் திதியன் 20
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரே

#26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை
புலத்தல் கூடுமோ தோழி அல்கல் 5
பெரும் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று 10
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே 15
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை
கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் 20
மகன்-வயின் பெயர்தந்தேனே அது கண்டு
யாமும் காதலம் அவற்கு என சாஅய்
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய்
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே 25
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே

#27 பாலை மதுரைக்கணக்காயனார்
கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார் நாம் அழ
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார்
செல்ப என்ப என்போய் நல்ல 5
மடவை மன்ற நீயே வட-வயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் 10
தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் பட
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை
பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து பட
வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் 15
குருதியொடு துயல்வந்து அன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே

#28 குறிஞ்சி பாண்டியன் அறிவுடைநம்பி
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைம் கால்-தோறும்
இருவி தோன்றின பலவே நீயே 5
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி
பரியல் நாயொடு பன் மலை படரும்
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின்
பூ கெழு தொடலை நுடங்க எழுந்து_எழுந்து
கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி 10
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என
பிறர் தந்து நிறுக்குவள் ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே

#29 பாலை வெள்ளாடியனார்
தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள்
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலை சிறப்ப
செய்_வினைக்கு அகன்ற-காலை எஃகு உற்று 5
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின்
மாவின் நறு வடி போல காண்-தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான் என தேற்றி பல் மாண் 10
தாழ கூறிய தகை சால் நன் மொழி
மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை 15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை
எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு 20
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே

#30 நெய்தல் முடங்கி கிடந்த நெடுஞ்சேரலாதன்
நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலை
கடல் பாடு அழிய இன மீன் முகந்து
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும் 5
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி
பெரும் களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி
பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி 10
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னை
தண் நறும் கானல் வந்து நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே 15

#31 பாலை மாமூலனார்
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து 5
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு
கல் உடை குறும்பின் வயவர் வில் இட
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர் 10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே 15

#32 குறிஞ்சி நல்வெள்ளியார்
நெருநல் எல்லை ஏனல் தோன்றி
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி
சிறுதினை படு கிளி கடீஇயர் பன் மாண் 5
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா
சூர்_அர_மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என
சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் 10
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல்
கடிய கூறி கைபிணி விடாஅ
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்-வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து 15
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கே
மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று
என் குறை புறனிலை முயலும் 20
அண்கணாளனை நகுகம் யாமே

#33 பாலை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டி
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய
கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
வீளை பருந்தின் கோள் வல் சேவல் 5
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள்
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண்
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் 10
வெம் பரல் அதர குன்று பல நீந்தி
யாமே எமியம் ஆக நீயே
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை
நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள் 15
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின்
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம்
செய்_வினை ஆற்று-உற விலங்கின்
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே 20

#34 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
சிறு கரும் பிடவின் வெண் தலை குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்
தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல் 5
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற
செல்க தேரே நல் வலம் பெறுந 10
பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி
துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில்
செம் தார் பைம் கிளி முன்கை ஏந்தி
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என 15
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே

#35 பாலை குடவாயில் கீரத்தனார்
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்ப
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர்
முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த 5
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார்
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் 10
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்து
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன்
மார்பு துணை ஆக துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை 15
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு
அறியா தேஎத்து ஆற்றிய துணையே

#36 மருதம் மதுரை நக்கீரர்
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி 5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை
திரு மருது ஓங்கிய விரி மலர் காவில் 10
நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் 15
போர் வல் யானை பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் 20
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செல
கொன்று களம் வேட்ட ஞான்றை
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே

#37 பாலை விற்றூற்று மூதெயினனார்
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி 5
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து
கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை 10
கயம் மண்டு பகட்டின் பருகி காண்வர
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய
பருதி அம் குப்பை சுற்றி பகல் செல 15
மருத மர நிழல் எருதொடு வதியும்
காமர் வேனில்-மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே

#38 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன்
அம் சிலை இடவது ஆக வெம் செலல்
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன் 5
வந்தனன் ஆயின் அம் தளிர் செயலை
தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் 10
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை
மட கிளி எடுத்தல் செல்லா தட குரல்
குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு 15
அய வெள் அருவி சூடிய உயர் வரை
கூஉம் கணஃது எம் ஊர் என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே

#39 பாலை மதுரை செங்கண்ணனார்
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின்
முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின்
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து 5
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதைய பொத்தி நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்று உறாஅ
காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின்
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு 10
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என
கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென 15
பரந்து படு பாயல் நவ்வி பட்டு என
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின்
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் 20
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறும் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே 25

#40 நெய்தல் குன்றியனார்
கானல் மாலை கழி பூ கூம்ப
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப
மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி
குவை இரும் புன்னை குடம்பை சேர
அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை 5
தாழை தளர தூக்கி மாலை
அழி_தக வந்த கொண்டலொடு கழி படர்
காமர் நெஞ்சம் கையறுபு இனைய
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவர் உடை கேண்மை 10
அளி இன்மையின் அவண் உறை முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை 15
அக மடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே

#41 பாலை குன்றியனார்
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப
கரு நனை அவிழ்ந்த ஊழ்-உறு முருக்கின்
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து
குடுமி கட்டிய படப்பையொடு மிளிர 5
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப
கோழ் இணர் எதிரிய மரத்த கவினி
காடு அணி கொண்ட காண்_தகு பொழுதில்
நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய் 10
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய 15
நுண் பல் தித்தி மாஅயோளே

#42 குறிஞ்சி கபிலர்
மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகை
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச 5
கோடை நீடிய பைது அறு காலை
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லா புள்ள உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை 10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கி தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்த மாறே

#43 பாலை மதுரையாசிரியர் நல்லந்துவனார்
கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி 5
குறுநீர் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய்
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி
மை இரும் கானம் நாறும் நறு நுதல் 10
பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருள்_பிணி போகி தம்
இன் துணை பிரியும் மடமையோரே 15

#44 முல்லை குடவாயில் கீரத்தனார்
வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தம் திறை கொடுத்து தமர் ஆயினரே
முரண் செறிந்து இருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது 5
ஊர்க பாக ஒருவினை கழிய
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் 10
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர் 15
பழம் பல் நெல்லின் பல் குடி பரவை
பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை
தண் குடவாயில் அன்னோள்
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே

#45 பாலை வெள்ளிவீதியார்
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் 5
காடு இறந்தனரே காதலர் மாமை
அரி நுண் பசலை பாஅய் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணி 10
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
ஆதிமந்தி போல பேது உற்று
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார் 15
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனை கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே

#46 மருதம் அள்ளூர் நன்முல்லையார்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை 5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர
யாரையோ நின் புலக்கேம் வார்-உற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல்
பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம் 10
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறு உடை அரும் சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க 15
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ

#47 பாலை ஆலம்பேரி சாத்தனார்
அழிவு இல் உள்ளம் வழிவழி சிறப்ப
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி 5
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்தி கைம்மிக்கு
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரி கொளாஅலின் 10
குறு நடை புறவின் செம் கால் சேவல்
நெடு நிலை வியன் நகர் வீழ் துணை பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி
இழை அணி நெடும் தேர் கைவண் செழியன் 15
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை
சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்
வேய் புரை பணை தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே

#48 குறிஞ்சி தங்கால் முட கொற்றனார்
அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள்
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் மேல் நாள்
மலி பூ சாரல் என் தோழிமாரோடு 5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்று-உழி
புலி புலி என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சை கண்ணியன் 10
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு
யாதோ மற்று அம் மா திறம் படர் என
வினவி நிற்றந்தோனே அவன் கண்டு
எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி 15
நாணி நின்றனெமாக பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்
பொய்யும் உளவோ என்றனன் பையென
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து 20
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே
பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன்
மகனே தோழி என்றனள் 25
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே

#49 பாலை வண்ணப்புற கந்தரத்தனார்
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி 5
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப
பல் கால் முயங்கினள்-மன்னே அன்னோ
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி 10
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர்
செல்வு-உழி செல்வு-உழி மெய் நிழல் போல 15
கோதை ஆயமொடு ஓரை தழீஇ
தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள்
ஆடு-வழி ஆடு-வழி அகலேன்-மன்னே

#50 நெய்தல் கருவூர் பூதஞ்சாத்தனார்
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும்
வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும்
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப
பகலும் நம்-வயின் அகலான் ஆகி 5
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன்
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண எல்லி 10
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என
கண் நிறை நீர் கொடு கரக்கும்
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே

#51 பாலை பெருந்தேவனார்
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை
முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி
ஊன் பதித்து அன்ன வெருவரு செம் செவி 5
எருவை சேவல் கரிபு சிறை தீய
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி
பல் இதழ் மழை கண் மாஅயோள்-வயின்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது 10
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ்
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும்
மனை முதல் வினையொடும் உவப்ப
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே

#52 குறிஞ்சி நொச்சிநியமம் கிழார்
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர்
பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்
ஏ கல் அடுக்கத்து இருள் அளை சிலம்பின் 5
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம்
மலை கெழு சீறூர் புலம்ப கல்லென
சிலை உடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என 10
இரு-பால் பட்ட சூழ்ச்சி ஒரு-பால்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள்
ஆய் மலர் உண்கண் பசலை
காம நோய் என செப்பாதீமே 15

#53 பாலை சீத்தலை சாத்தனார்
அறியாய் வாழி தோழி இருள் அற
விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரி
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடும் கால் முருங்கை வெண் பூ தாஅய்
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை 5
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் 10
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும்
அரும் சுர கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல் 15
அருளே காதலர் என்றி நீயே

#54 முல்லை மாற்றூர் கிழார் மகனார் கொற்றம் கொற்றனார்
விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல்
காரும் ஆர்கலி தலையின்று தேரும்
ஓவத்து அன்ன கோப செம் நிலம்
வள் வாய் ஆழி உள் உறுபு உருள 5
கடவுக காண்குவம் பாக மதவு நடை
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கை கோவலர் 10
கொன்றை அம் குழலர் பின்றை தூங்க
மனை_மனை படரும் நனை நகு மாலை
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடி படப்பை நுண் இலை
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர் 15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி
முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள்
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால் என
விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி 20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூம்_கொடி நிலையே

#55 பாலை மாமூலனார்
காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின்
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
உளி முக வெம் பரல் அடி வருத்து-உறாலின்
விளி முறை அறியா வேய் கரி கானம்
வய களிற்று அன்ன காளையொடு என் மகள் 5
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம்
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன் கனவ ஒண் படை
கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலை 10
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் 15
காதல் வேண்டி என் துறந்து
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே

#56 மருதம் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நகை ஆகின்றே தோழி நெருநல்
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை
கூம்பு விடு பன் மலர் மாந்தி கரைய 5
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணி புதுவோர் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் 10
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு
எம் மனை புகுதந்தோனே அது கண்டு
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று
இ மனை அன்று அஃது உம் மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி 15
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே

#57 பாலை நக்கீரர்
சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து
புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை 5
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ்
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை
யாமே எமியம் ஆக தாமே 10
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி 15
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து
பானாள் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே

#58 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை 5
கூதிர் இல் செறியும் குன்ற நாட
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் 10
தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி
மனை மரம் ஒசிய ஒற்றி
பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே

#59 பாலை மதுரை மருதன் இளநாகன்
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும்
வருந்தினை வாழியர் நீயே வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5
மரம் செல மிதித்த மாஅல் போல
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் 10
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம்
தாம் பாராட்டிய-காலையும் உள்ளார் 15
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம்
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே

#60 நெய்தல் குடவாயில் கீரத்தனார்
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க
கொடும் தொழில் முகந்த செம் கோல் அம் வலை
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளி சொரிந்து 5
கொழு மீன் தடியொடு குறு_மகள் கொடுக்கும்
திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ 10
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என
கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல்
கொற்ற சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே 15

#61 பாலை மாமூலனார்
நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என
தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர்
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து
ஆழல் வாழி தோழி தாழாது 5
உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் 10
கழல் புனை திருந்து அடி கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி 15
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலை பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே

#62 குறிஞ்சி பரணர்
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள்
மா தாள் குவளை மலர் பிணைத்து அன்ன
மா இதழ் மழை கண் மாஅயோளொடு 5
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல 10
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைதந்தோளே வென் வேல்
களிறு கெழு தானை பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப
கடவுள் எழுதிய பாவையின் 15
மடவது மாண்ட மாஅயோளே

#63 பாலை கருவூர் கண்ணம்புல்லனார்
கேளாய் வாழியோ மகளை நின் தோழி
திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி 5
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்ப
கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவர தகுந கானம் நீந்தி
கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து 10
மன்று நிறை பைதல் கூர பல உடன்
கறவை தந்த கடும் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை 15
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள்
வேட்ட கள்வர் விசி-உறு கடும் கண்
சே கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே

#64 முல்லை ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார்
களையும் இடனால் பாக உளை அணி
உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி_மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் 5
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல
கடு நீர் வரித்த செம் நில மருங்கின்
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி 10
மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை 15
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே

#65 பாலை மாமூலனார்
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் 5
பாடி சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு
செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும்
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி 10
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர்
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை
உயவல் யானை வெரிநு சென்று அன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி 15
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள்
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை
நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு
அரியவால் என அழுங்கிய செலவே 20

#66 மருதம் செல்லூர் கோசிகன் கண்ணனார்
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி
சிறுவர் பயந்த செம்மலோர் என
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் 5
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி புதுவதின்
இயன்ற அணியன் இ தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து 10
காண்டல் விருப்பொடு தளர்பு_தளர்பு ஓடும்
பூ கண் புதல்வனை நோக்கி நெடும் தேர்
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது
மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண
புல்லி பெரும செல் இனி அகத்து என 15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மா நிதி கிழவனும் போன்ம் என மகனொடு
தானே புகுதந்தோனே யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்று 20
அலைக்கும் கோலொடு குறுக தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழம் கண்ணோட்டமும் நலிய 25
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே

#67 பாலை நோய்பாடியார்
யான் எவன் செய்கோ தோழி பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை
அரம் போழ் நுதிய வாளி அம்பின் 5
நிரம்பா நோக்கின் நிரயம் கொள்-மார்
நெல்லி நீள் இடை எல்லி மண்டி
நல் அமர் கடந்த நாண் உடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் 10
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர்
கழி பிணி கறைத்தோல் நிரை கண்டு அன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை
உரு இல் பேஎய் ஊரா தேரொடு 15
நிலம் படு மின்மினி போல பல உடன்
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே

#68 குறிஞ்சி ஊட்டியார்
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய
இன் இசை அருவி பாடும் என்னதூஉம்
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை
ஊட்டி அன்ன ஒண் தளிர் செயலை 5
ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என
முழு_முதல் துமிய உரும் எறிந்தன்றே
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள்
அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன்_தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 10
வருவர் ஆயின் பருவம் இது என
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக
வந்தனர் வாழி தோழி அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ 15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம்
புன் தலை மட பிடி பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி பட துழவும்
அகல் வாய் பாந்தள் படாஅர் 20
பகலும் அஞ்சும் பனி கடும் சுரனே

#69 பாலை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர்
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி மேவர 5
செய்பொருள் திறவர் ஆகி புல் இலை
பராரை நெல்லி அம் புளி திரள் காய்
கான மட மரை கண நிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது ஏமுற்று
விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் 10
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம்
நீடலர் வாழி தோழி ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம்
சிலை மாண் வல் வில் சுற்றி பல மாண் 15
அம்பு உடை கையர் அரண் பல நூறி
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து
தலை நாள் அலரின் நாறும் நின்
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே 20

#70 நெய்தல் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என
இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்து
குறும் கண் அம் வலை பயம் பாராட்டி
கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே 5
அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே
வதுவை கூடிய பின்றை புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம் பெரும் துறை கவினி மா நீர் 10
பாசடை கலித்த கணை கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும்
வென் வேல் கவுரியர் தொன் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த 15
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே

#71 பாலை மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
நிறைந்தோர் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம்
சுனை பூ நீத்து சினை பூ படர
மை இல் மான் இனம் மருள பையென 5
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக 10
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து 15
இது-கொல் வாழி தோழி என் உயிர்
விலங்கு வெம் கடு வளி எடுப்ப
துளங்கு மர புள்ளின் துறக்கும் பொழுதே

#72 குறிஞ்சி எருமை வௌவௌயனார் மகனார் கடலனார்
இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை 5
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண்
ஆறே அரு மரபினவே யாறே
சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலைய
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து 10
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன்
ஈர் உயிர் பிணவின் வயவு பசி களைஇய
இரும் களிறு அட்ட பெரும் சின உழுவை
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் 15
வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை
உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
நீ தவறு உடையையும் அல்லை நின்-வயின் 20
ஆனா அரும் படர் செய்த
யானே தோழி தவறு உடையேனே

#73 பாலை எருமை வௌவௌயனார்
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க
வணங்கு உறு கற்பொடு மடம் கொள சாஅய் 5
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் படர் தீர வருவது 10
காணிய வம்மோ காதலம் தோழி
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின்
ஏனல் அம் சிறுதினை சேணோன் கையதை
பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளி 15
விடு பொறி சுடரின் மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே

#74 முல்லை மதுரை கவுணியன் பூதத்தனார்
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த
தண் பெயல் பொழிந்த பைது-உறு காலை
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப 5
பைம் கொடி முல்லை மென் பத புது வீ
வெண் களர் அரி மணல் நன் பல தாஅய்
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்
கரும் கோட்டு இரலை காமர் மட பிணை
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து 10
திண் தேர் வலவ கடவு என கடைஇ
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்தி கொடும் கோல் 15
கல்லா கோவலர் ஊதும்
வல் வாய் சிறு குழல் வருத்தா-காலே

#75 பாலை மதுரைப்போத்தனார்
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர்
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது
எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல்
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை 5
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்
அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த
கல் நெறி படர்குவர் ஆயின் நன் நுதல்
செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய் 10
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆரா காதலொடு தார் இடை குழையாது
சென்று படு விறல் கவின் உள்ளி என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் 15
தருநரும் உளரோ இ உலகத்தான் என
மாரி ஈங்கை மா தளிர் அன்ன
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின்
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
மெல் இயல் குறு_மகள் புலந்து பல கூறி 20
ஆனா நோயை ஆக யானே
பிரிய சூழ்தலும் உண்டோ
அரிது பெறு சிறப்பின் நின்-வயினானே

#76 மருதம் பரணர்
மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்க
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு
நன் கலன் ஈயும் நாள்_மகிழ்_இருக்கை
அவை புகு பொருநர் பறையின் ஆனாது 5
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில்
கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்
சுரியல் அம் பொருநனை காண்டிரோ என
ஆதிமந்தி பேது உற்று இனைய 10
சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே

#77 பாலை மருதன் இள நாகனார்
நன் நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்
துன் அரும் கானம் துன்னுதல் நன்று என
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து-உற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் 5
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ்
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர் திறம் பெயர நல் அமர் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர 10
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும்
கல் அதர் கவலை போகின் சீறூர்
புல் அரை இத்தி புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை
வானவன் மறவன் வணங்கு வில் தட கை 15
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல
அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணே

#78 குறிஞ்சி மதுரை நக்கீரனார்
நனம் தலை கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து
பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல்
இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவ 5
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல்
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள்
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணென
வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் 10
நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர்
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என
எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும்
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை 15
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று
செழும் செய் நெல்லின் விளை கதிர் கொண்டு
தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டு பல கழிய வேண்டு-வயின் பிழையாது
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி 20
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய
கடும் பரி புரவி கைவண் பாரி
தீம் பெரும் பைம் சுனை பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே

#79 பாலை குடவாயில் கீரத்தனார்
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து
கல்லுறுத்து இயற்றிய வல் உவர் படுவில்
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்_புலம் துமிய போகி கொங்கர் 5
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செம் நில குரூஉ துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றி தோன்றும்
நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர 10
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை
வளை வாய் பருந்தின் வான் கண் பேடை
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி
கொடு வில் எயினர் கோள் சுரம் படர
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை 15
கல் பிறங்கு அத்தம் போகி
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயே

#80 நெய்தல் மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார்
கொடும் தாள் முதலையொடு கோட்டு_மீன் வழங்கும்
இரும் கழி இட்டு சுரம் நீந்தி இரவின்
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை
புணர் திரை பரப்பு_அகம் துழைஇ தந்த 5
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முது நீர் அடைகரை
ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப
இன மணி புரவி நெடும் தேர் கடைஇ 10
மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைம் தாது உறைக்கும்
புன்னை அம் கானல் பகல் வந்தீமே

#81 பாலை ஆலம்பேரி சாத்தனார்
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின்
புல் அளை புற்றின் பல் கிளை சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடு
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் 5
மண் பக வறந்த ஆங்கண் கண் பொர
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறி புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
வெம் முனை அரும் சுரம் நீந்தி சிறந்த 10
செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு பட கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன எம்
மை எழில் உண்கண் கலுழ
ஐய சேறிரோ அகன்று செய்பொருட்கே 15

#82 குறிஞ்சி கபிலர்
ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அம் வளி குழல் இசை ஆக
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக
கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு 5
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து
மந்தி நல் அவை மருள்வன நோக்க
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்
நனவு புகு விறலியின் தோன்றும் நாடன் 10
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து
செரு செய் யானை செல் நெறி வினாஅய்
புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்
பலர் தில் வாழி தோழி அவருள் 15
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன்-கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே

#83 பாலை கல்லாடனார்
வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி
கறை அடி மட பிடி கானத்து அலற
களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து
கரும் கால் மராஅத்து கொழும் கொம்பு பிளந்து 5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டி
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் 10
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே

#84 முல்லை மதுரை எழுத்தாளன்
மலை மிசை குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ
மாதிரம் புதைப்ப பொழிதலின் காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறு காலை 5
நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி
அயிர்-கண் படாஅர் துஞ்சு புறம் புதைய
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும்
புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின்
சீறூரோளே ஒண்_நுதல் யாமே 10
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து 15
வினை-வயின் பெயர்க்கும் தானை
புனை தார் வேந்தன் பாசறையேமே

#85 பாலை காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
நன் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர்
அறவர் அல்லர் அவர் என பல புலந்து
ஆழல் வாழி தோழி சாரல் 5
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி
கன்று பசி களைஇய பைம் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை
நல்_நாள் பூத்த நாகு இள வேங்கை 10
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து
துணை பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்
வருதும் யாம் என தேற்றிய
பருவம் காண் அது பாயின்றால் மழையே 15

#86 மருதம் நல்லாவூர் கிழார்
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால்
தண் பெரும் பந்தர் தரு மணல் ஞெமிரி
மனை விளக்கு உறுத்து மாலை தொடரி
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை 5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தர 10
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
கற்பினின் வழாஅ நன் பல உதவி
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி 15
பல் இரும் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன் மணம் கழிந்த பின்றை
கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்து
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல் 20
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த-காலை யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என 25
இன் நகை இருக்கை பின் யான் வினவலின்
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின் 30
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே

#87 பாலை மதுரை பேராலவாயார்
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
படலை பந்தர் புல் வேய் குரம்பை
நல்கூர் சீறூர் எல்லி தங்கி
குடுமி நெற்றி நெடு மர சேவல் 5
தலை குரல் விடியல் போகி முனாஅது
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடம் கள் பாணி
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் 10
நனி நீடு உழந்தனை-மன்னே அதனால்
உவ இனி வாழிய நெஞ்சே மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி
தாழ் இரும் கூந்தல் நம் காதலி 15
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே

#88 குறிஞ்சி ஈழத்து பூதன் தேவனார்
முதை சுவல் கலித்த மூரி செந்தினை
ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர்
பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும்
புருவை பன்றி வரு_திறம் நோக்கி
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய 5
நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன்-கொல்லோ தானே குன்றத்து
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் 10
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றி
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே 15

#89 பாலை மதுரைக்காஞ்சி புலவர்
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை
உருத்து எழு குரல குடிஞை சேவல்
புல் சாய் விடர்_அகம் புலம்ப வரைய
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண் 5
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து
ஊழ்-உறு விளை நெற்று உதிர காழியர்
கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய
களரி பரந்த கல் நெடு மருங்கின்
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் 10
மை படு திண் தோள் மலிர வாட்டி
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த
படு புலா கமழும் ஞாட்பில் துடி இகுத்து
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் 15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து
அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் 20
இடு மணல் பந்தருள் இயலும்
நெடு மென் பணை தோள் மாஅயோளே

#90 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
மூத்தோர் அன்ன வெண் தலை புணரி
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும்
தளை அவிழ் தாழை கானல் அம் பெரும் துறை
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ
இல்-வயின் செறித்தமை அறியாய் பல் நாள் 5
வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர் 10
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர்
கரும் கண் கோசர் நியமம் ஆயினும்
உறும் என கொள்குநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே

#91 பாலை மாமூலனார்
விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின்
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாது
பாசி தின்ற பைம் கண் யானை 5
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை 10
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்
விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப
பசி என அறியா பணை பயில் இருக்கை
தட மருப்பு எருமை தாமரை முனையின் 15
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே

#92 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நற்றாமனார்
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி
படு மழை பொழிந்த பானாள் கங்குல்
குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி
செம் கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர் ஐய நேர் இறை 5
நெடு மென் பணை தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண்
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை 10
உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திரு மணி விளக்கின் பெறுகுவை
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே

#93 பாலை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து
ஆரம் கண்ணி அடு போர் சோழர்
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன 5
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும்
செயல் அரும் செய்_வினை முற்றினம் ஆயின்
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாள்_அங்காடி நாறும் நறு நுதல் 10
நீள் இரும் கூந்தல் மாஅயோளொடு
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர்
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை
நிவந்த பள்ளி நெடும் சுடர் விளக்கத்து
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப 15
முயங்குகம் சென்மோ நெஞ்சே வரி நுதல்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து
மீளி மொய்ம்பொடு நிலன் எறியா குறுகி
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை
கடும் பகட்டு யானை நெடும் தேர் கோதை 20
திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை
தெண் நீர் உயர் கரை குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே

#94 முல்லை நன்பலூர் சிறு மேதாவியார்
தேம் படு சிமய பாங்கர் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூ குழைய
வான் என பூத்த பானாள் கங்குல்
மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ 5
வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன்
ஐது படு கொள்ளி அங்கை காய
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கண் பன்றி பெரு நிரை கடிய
முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் 10
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்
இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரே

#95 பாலை ஒரோடோகத்துகந்தரத்தனார்
பைபய பசந்தன்று நுதலும் சாஅய்
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும்
பலரும் அறிய திகழ்தரும் அவலமும்
உயிர் கொடு கழியின் அல்லதை நினையின்
எவனோ வாழி தோழி பொரி கால் 5
பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க
ஈனல் எண்கின் இரும் கிளை கவரும்
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் 10
கௌவை மேவலர் ஆகி இ ஊர்
நிரைய பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல என் மகட்கு என பரைஇ
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே 15

#96 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்
பழன பொய்கை அடைகரை பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி 5
அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறு_மகள் அதுவே 10
செம் பொன் சிலம்பின் செறிந்த குறங்கின்
அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடு போர் சோழர்
வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய 15
ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை
களிறு கவர் கம்பலை போல
அலர் ஆகின்றது பலர் வாய் பட்டே

#97 பாலை மாமூலனார்
கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறி கலை
வறன்-உறல் அம் கோடு உதிர வலம் கடந்து
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை
இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர் திற்றி கெண்டும் 5
கொலை வில் ஆடவர் போல பல உடன்
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு 10
அகவுநர் புரந்த அன்பின் கழல் தொடி
நறவு_மகிழ்_இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின்
அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்து
ஆழல் என்றி தோழி யாழ என் 15
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி
கலிழ் தளிர் அணிந்த இரும் சினை மாஅத்து 20
இணர் ததை புது பூ நிரைத்த பொங்கர்
புகை புரை அம் மஞ்சு ஊர
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே

#98 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக
முனி தக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல் 5
அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து 10
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க என் மகட்கு என பரைஇ
கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் 15
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ கைபெயரா
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் 20
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று 25
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி
வெறி கமழ் நெடுவேள் நல்குவன் எனினே
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என
கான் கெழு நாடன் கேட்பின்
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே 30

#99 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில்
மாண் இழை மகளிர் பூண் உடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை 5
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய் பராஅம்
அணங்கு உடை நகரின் மணந்த பூவின்
நன்றே கானம் நயவரும் அம்ம 10
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை
அடு_களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்
பிடி மிடை களிற்றின் தோன்றும்
குறு நெடும் துணைய குன்றமும் உடைத்தே

#100 நெய்தல் உலோச்சனார்
அரை-உற்று அமைந்த ஆரம் நீவி
புரைய பூண்ட கோதை மார்பினை
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த 5
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடா பூட்கை வேந்தன் பாசறை
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்ப தோன்றும் 10
பாடுநர் தொடுத்த கைவண் கோமான்
பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர்
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் 15
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே

#101 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல்
தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் 5
வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல்
தீ படு சிறு கோல் வில்லொடு பற்றி
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி
கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர் 10
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல
பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை
புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர் 15
தண் கார் ஆலியின் தாவன உதிரும்
பனி படு பன் மலை இறந்தோர்க்கு
முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமே

#102 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன்
உளை மான் துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்து
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி 5
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப 10
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன்
காவலர் அறிதல் ஓம்பி பையென
வீழா கதவம் அசையினன் புகுதந்து
உயங்கு படர் அகலம் முயங்கி தோள் மணந்து
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி 15
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே

#103 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு செம் நாவின்
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி
காமர் சேவல் ஏமம் சேப்ப
முளி அரில் புலம்ப போகி முனாஅது 5
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி
உறையுநர் போகிய ஓங்கு இலை வியன் மனை
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும்
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்-வயின் 10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே 15

#104 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
வேந்து வினை முடித்த-காலை தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா 5
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர்
வாங்கு சினை பொலிய ஏறி புதல
பூ கொடி அவரை பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி
மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய 10
புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை
இனிது செய்தனையால் எந்தை வாழிய
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் 15
ஆய் தொடி அரிவை கூந்தல்
போது குரல் அணிய வேய்தந்தோயே

#105 பாலை தாயங்கண்ணனார்
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலை தொடலை தைஇ மெல்லென
நல் வரை நாடன் தன் பாராட்ட
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி 5
ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள்
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின்
எம் உடை செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு
பந்து புடைப்பு அன்ன பாணி பல் அடி
சில் பரி குதிரை பல் வேல் எழினி 10
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழு தொடை மறவர்
தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம் 15
முகை தலை திறந்த வேனில்
பகை தலைமணந்த பல் அதர் செலவே

#106 மருதம் ஆலங்குடி வங்கனார்
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன்
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை 5
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம் ஆயினும் உய்யாமையின்
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் 10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும்
களிறு பெறு வல்சி பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே

#107 பாலை காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார்
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து
அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு
கரும் கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல் 5
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் 10
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு 15
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கி
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர்
மாலை இன் துணை ஆகி காலை
பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப 20
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே

#108 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லனார்
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம்
வரை முதல் சிதறிய வை போல் யானை
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப 5
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி
படு மழை பொழிந்த பானாள் கங்குல்
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும்
இருள் இடை தமியன் வருதல் யாவதும் 10
அருளான் வாழி தோழி அல்கல்
விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல்
காயா மென் சினை தோய நீடி
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் 15
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலை கிழவோனே

#109 பாலை கடுந்தொடைகாவினார்
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி
காடு கால்யாத்த நீடு மர சோலை 5
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் 10
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன்-உறு குன்றம் பல விலங்கினவே 15

#110 நெய்தல் போந்தை பசலையார்
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல் 5
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனம் ஆக எய்த வந்து
தட மென் பணை தோள் மட நல்லீரே 10
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ
கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோ
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி 15
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ என காலின் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் 20
என்னே குறித்த நோக்கமொடு நல்_நுதால்
ஒழிகோ யான் என அழி_தக கூறி
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன்
நெடும் தேர் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே 25

#111 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி
வருவர் வாழி தோழி அரச
யானை கொண்ட துகில் கொடி போல
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி 5
ஓடை குன்றத்து கோடையொடு துயல்வர
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்த கேழல் அட்ட நல் கோள் 10
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப
குருதி ஆரும் எருவை செம் செவி
மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்ட
புண் தேர் விளக்கின் தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே 15

#112 குறிஞ்சி ஆவூர் கிழார்
கூனல் எண்கின் குறு நடை தொழுதி
சிதலை செய்த செம் நிலை புற்றின்
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல்
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி 5
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும்
பனி இரும் சோலை எமியம் என்னாய்
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே
நாள் இடைப்படின் என் தோழி வாழாள்
தோள்-இடை முயக்கம் நீயும் வெய்யை 10
கழிய காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ வான் தோய் வெற்ப
கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் 15
தொன்று இயல் மரபின் மன்றல் அயர
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி
நொதுமல் விருந்தினம் போல இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே

#113 பாலை கல்லாடனார்
நன்று அல் காலையும் நட்பின் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் 5
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின்
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற
நல்காது துறந்த காதலர் என்றும்
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் 10
அல்கு வன் சுரை பெய்த வல்சியர்
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல் 15
விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர்
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர்
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர்
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி 20
சேயர் என்றலின் சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அம் சினை குடம்பை புல்லென
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு 25
மெய் இவண் ஒழிய போகி அவர்
செய்_வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே

#114 முல்லை
கேளாய் எல்ல தோழி வேலன்
வெறி அயர் களத்து சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் 5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண்
நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் 10
வான்_அக மீனின் விளங்கி தோன்றும்
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர்
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்
அணங்கு சால் அரிவையை காண்குவம் 15
பொலம் படை கலி_மா பூண்ட தேரே

#115 பாலை மாமூலனார்
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்
பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல்
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக
நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என் 5
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும்
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர் 10
சுடர் பூ கொன்றை ஊழ்-உறு விளை நெற்று
அறை மிசை தாஅம் அத்த நீள் இடை
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை 15
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு
நம் நீத்து உறையும் பொருள்_பிணி
கூடாமையின் நீடியோரே

#116 மருதம் பரணர்
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர
பெரிய நாண் இலை மன்ற பொரி என 5
புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல்
நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல்
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே 10
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து
அலர் ஆகின்றால் தானே மலர் தார்
மை அணி யானை மற போர் செழியன்
பொய்யா விழவின் கூடல் பறந்தலை
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் 15
கடல் மருள் பெரும் படை கலங்க தாக்கி
இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர்
ஓடு புறம் கண்ட ஞான்றை
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே

#117 பாலை
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும்
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள்
ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்ப போகி
வெருவரு கவலை ஆங்கண் அருள்வர 5
கரும் கால் ஓமை ஏறி வெண் தலை
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து 10
யான் போது துணைப்ப தகரம் மண்ணாள்
தன் ஓர் அன்ன தகை வெம் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிட
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல்
நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம் 15
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே

#118 குறிஞ்சி கபிலர்
கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன்
தேம் கமழ் இணர வேங்கை சூடி
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட 5
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் 10
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்
அளியள் தான் நின் அளி அலது இலளே

#119 பாலை குடவாயி கீரத்தனார்
நுதலும் தோளும் திதலை அல்குலும்
வண்ணமும் வனப்பும் வரியும் வாட
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை 5
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப
நெறி அயல் திரங்கும் அத்தம் வெறி கொள
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து 10
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை
தொடை அமை பீலி பொலிந்த கடிகை
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப
துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொள 15
மற புலி உழந்த வசி படு சென்னி
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை
மை தோய் சிமைய மலை முதல் ஆறே 20

#120 நெய்தல் நக்கீரனார்
நெடுவேள் மார்பின் ஆரம் போல
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப
எல்லை பைப்பய கழிப்பி குட-வயின்
கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு 5
மதர் எழில் மழை கண் கலுழ இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
அழல் தொடங்கினளே பெரும அதனால்
கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி 10
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ
வல் வில் இளையரொடு எல்லி செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண் 15
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே

#121 பாலை மதுரை மருதன் இளநாகன்
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழி நாள்
வறுமை கூரிய மண் நீர் சிறு குள
தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல்
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி 5
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு
செம் கோல் வால் இணர் தயங்க தீண்டி
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்கு-உறு வரி நிழல் அசைஇ நம்மொடு
தான் வரும் என்ப தட மென் தோளி 10
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
கரு முக முசுவின் கானத்தானே 15

#122 குறிஞ்சி பரணர்
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர்
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின்
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள்
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் 5
துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின் 10
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும்
வளை கண் சேவல் வாளாது மடியின் 15
மனை செறி கோழி மாண் குரல் இயம்பும்
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா 20
நொச்சி வேலி தித்தன் உறந்தை
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே

#123 பாலை காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார்
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடா படிவத்து ஆன்றோர் போல
வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த 5
சில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் 10
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெரும் கடல் ஓதம் போல
ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே

#124 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து
சென்றீக என்ப ஆயின் வேந்தனும்
நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது நன்றே 5
மாட மாண் நகர் பாடு அமை சேக்கை
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற
பாசறை வருத்தம் வீட நீயும்
மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை
கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி 10
வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய
காலை எய்த கடவு-மதி மாலை
அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியல் அகத்து இயம்பும் 15
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே

#125 பாலை பரணர்
அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப 5
தாது உறு குவளை போது பிணி அவிழ
படாஅ பைம் கண் பா அடி கய வாய்
கடாஅம் மாறிய யானை போல
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர 10
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரண் இல் காலை
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின் 15
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வள கரிகால் முன்னிலை செல்லார்
சூடா வாகை பறந்தலை ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த 20
பீடு இல் மன்னர் போல
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே

#126 மருதம் நக்கீரர்
நின வாய் செத்து நீ பல உள்ளி
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று 5
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்
காலை தந்த கணை கோட்டு வாளைக்கு
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள்
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் 10
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி 15
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என
சிறிய மிழற்றும் செம் வாய் பெரிய
கயல் என அமர்த்த உண்கண் புயல் என
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் 20
மின் நேர் மருங்குல் குறு_மகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே

#127 பாலை மாமூலனார்
இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய
வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து 5
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்
நிலம் தின துறந்த நிதியத்து அன்ன 10
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
தங்கலர் வாழி தோழி செம் கோல்
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி
கல்லா மழவர் வில் இடம் தழீஇ 15
வருநர் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே

#128 குறிஞ்சி கபிலர்
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇ காமம்
கடலினும் உரைஇ கரை பொழியும்மே
எவன்-கொல் வாழி தோழி மயங்கி 5
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில்
குறும் சுனை குவளை வண்டு பட சூடி
கான நாடன் வரூஉம் யானை 10
கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி
மாரி வானம் தலைஇ நீர் வார்பு
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின்
இருள் இடை மிதிப்பு-உழி நோக்கி அவர்
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே 15

#129 பாலை குடவாயில் கீரத்தனார்
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் 5
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை
தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் 10
கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும்
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல்
திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின் 15
குவளை உண்கண் இவளொடு செலற்கு என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே

#130 நெய்தல் வெண்கண்ணனார்
அம்ம வாழி கேளிர் முன் நின்று
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ
நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை
பேஎய் தலைய பிணர் அரை தாழை 5
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன்
வயிறு உடை போது வாலிதின் விரீஇ
புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம்
கவர் நடை புரவி கால் வடு தபுக்கும் 10
நல் தேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே

#131 பாலை மதுரை மருதன் இளநாகனார்
விசும்பு உற நிவந்த மா தாள் இகணை
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என 5
வீளை அம்பின் விழு தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் 10
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் நம்மொடு
வருக என்னுதி ஆயின்
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே 15

#132 குறிஞ்சி தாயங்கண்ணனார்
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின்
களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி
வால் நிண புகவின் கானவர் தங்கை 5
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண்
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப
துளி தலை தலைஇய சாரல் நளி சுனை
கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவை 10
வேங்கை விரி இணர் ஊதி காந்தள்
தேன் உடை குவி குலை துஞ்சி யானை
இரும் கவுள் கடாஅம் கனவும்
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே

#133 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி
நல்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப
கார் தலைமணந்த பைம் புதல் புறவின் 5
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்
கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு
எரி பரந்து அன்ன இல மலர் விரைஇ
பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று 10
வான் கொள் தூவல் வளி தர உண்கும்
எம்மொடு வருதல் வல்லையோ மற்று என
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் 15
மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மட பிணை
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே

#134 முல்லை சீத்தலை சாத்தனார்
வானம் வாய்ப்ப கவினி கானம்
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என
மணி மருள் பூவை அணி மலர் இடையிடை
செம் புற மூதாய் பரத்தலின் நன் பல
முல்லை வீ கழல் தாஅய் வல்லோன் 5
செய்கை அன்ன செம் நில புறவின்
வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா
தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை
வாழை வான் பூ ஊழ்-உறுபு உதிர்ந்த 10
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு
கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை
கடு மான் தேர் ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே

#135 பாலை பரணர்
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி 5
பேது உற்றிசினே காதலம் தோழி
காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ
கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம்
காடு இறந்தனரே காதலர் அடு போர் 10
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போல
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே

#136 மருதம் விற்றூற்று மூதெயினனார்
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர் பேணி
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து 5
கடி நகர் புனைந்து கடவுள் பேணி
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று
பூ கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை 10
பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி
தூ உடை பொலிந்து மேவர துவன்றி 15
மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர்
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ 20
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே பேணி
பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே

#137 பாலை உறையூர் முதுகூத்தனார்
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ
களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே
வென்று எறி முரசின் விறல் போர் சோழர் 5
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் 10
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும்
தோளா முத்தின் தெண் கடல் பொருநன்
திண் தேர் செழியன் பொருப்பின் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும் 15
தொல் கவின் தொலைந்தன நோகோ யானே

#138 குறிஞ்சி எழூஉ பன்றி நாகன் குமரனார்
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி
குவளை உண்கண் தெண் பனி மல்க
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி 5
உடலுநர் கடந்த கடல் அம் தானை
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில்
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது
உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ 10
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு
தோடும் தொடலையும் கை கொண்டு அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ நீடு
நின்னொடு தெளித்த நன் மலை நாடன்
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி 15
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள்
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்
கொழு மடல் புது பூ ஊதும் தும்பி
நன் நிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே 20

#139 பாலை இடைக்காடனார்
துஞ்சுவது போல இருளி விண் பக
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு
ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் 5
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை 10
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல்
காமர் துணையொடு ஏமுற வதிய
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய்
பரப்பியவை போல் பாஅய் பல உடன்
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ 15
இன்னும் வாரார் ஆயின் நல்_நுதல்
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர்
கருவி கார் இடி இரீஇய
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே

#140 நெய்தல் அம்மூவனார்
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர்
இரும் கழி செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள் 5
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண் கல் உப்பு என
சேரி விலைமாறு கூறலின் மனைய
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு 10
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே 15

#141 பாலை நக்கீரர்
அம்ம வாழி தோழி கைம்மிக
கனவும் கங்குல்-தோறு இனிய நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி 5
மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு-உறுத்து மாலை தூக்கி
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய 10
விழவு உடன் அயர வருக தில் அம்ம
துவர புலர்ந்து தூ மலர் கஞலி
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ 15
கூழை கூந்தல் குறும் தொடி மகளிர்
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது 20
நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர் கரிகால்
வெல் போர் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை 25
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை
தேம் கமழ் நெடு வரை பிறங்கிய
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே

#142 குறிஞ்சி பரணர்
இல மலர் அன்ன அம் செம் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல்
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்ற 5
குறையோர் கொள்கலம் போல நன்றும்
உவ இனி வாழிய நெஞ்சே காதலி
முறையின் வழாஅது ஆற்றி பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய் 10
கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின்
பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய 15
நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி
சூர்ப்பு-உறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து 20
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை
இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப
தொடி கண் வடு கொள முயங்கினள் 25
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே

#143 பாலை ஆலம்பேரி சாத்தனார்
செய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிக
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின்
நீடு சினை வறிய ஆக ஒல்லென
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு 5
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி
சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும்
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே
வசை இல் வெம் போர் வானவன் மறவன் 10
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன்
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போல 15
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே

#144 முல்லை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
வருதும் என்ற நாளும் பொய்த்தன
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா
தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் 5
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என
சிறிய சொல்லி பெரிய புலப்பினும்
பனி படு நறும் தார் குழைய நம்மொடு
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல 10
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி 15
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்_வயின் இமைப்ப
அமர் ஓர்த்து அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே

#145 பாலை கயமனார்
வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு 5
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு
வாள் வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும்
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர் 10
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல
கடு நவை படீஇயர் மாதோ களி மயில்
குஞ்சர குரல குருகோடு ஆலும் 15
துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின்
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம் 20
எனக்கு உரித்து என்னாள் நின்ற என்
அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே

#146 மருதம் உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர் பொய்கை பகல் செல மறுகி
மட கண் எருமை மாண் நாகு தழீஇ
படப்பை நண்ணி பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர் 5
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை
யார்-கொல் அளியள் தானே எம் போல்
மாய பரத்தன் வாய்மொழி நம்பி
வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் 10
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து
ஆயமும் அயலும் மருள
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே

#147 பாலை ஔவையார்
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என 5
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீள் இடை
வெள்ளி வீதியை போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து 10
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே

#148 குறிஞ்சி பரணர்
பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை
கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின்
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை
தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி
உறு புலி உரற குத்தி விறல் கடிந்து 5
சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட
கடும் பரி குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என
காணிய செல்லா கூகை நாணி
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை 10
பெரிதால் அம்ம இவட்கே அதனால்
மாலை வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெரும் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே

#149 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்
புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும்
அத்த நீள் இடை போகி நன்றும் 5
அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர்
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடு போர் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய 15
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே

#150 நெய்தல் குறுவழுதியார்
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி
எல்லினை பெரிது என பன் மாண் கூறி
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து 5
அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல்
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர்
நனைத்த செருந்தி போது வாய் அவிழ
மாலை மணி இதழ் கூம்ப காலை 10
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து
வாரார்-கொல் என பருவரும்
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே

#151 பாலை காவன்முல்லை பூதரத்தனார்
தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு 5
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி
கலை_மான் தலையின் முதன்முதல் கவர்த்த
கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள்
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் 10
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை பொருந்தி செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செம் நாவின்
மணி ஓர்த்து அன்ன தெண் குரல்
கணி வாய் பல்லிய காடு இறந்தோரே 15

#152 குறிஞ்சி பரணர்
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை
சினம் கெழு தானை தித்தன்_வெளியன் 5
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை
தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடைய கடந்த வென் வேல் 10
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ்
பாரத்து தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில்
களி மயில் கலாவத்து அன்ன தோளே
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி 15
சோலை அடுக்கத்து சுரும்பு உண விரிந்த
கடவுள் காந்தளுள்ளும் பல உடன்
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு
சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும் 20
மாஅல் யானை ஆஅய் கானத்து
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமை கண் இடை புரைஇ
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே

#153 பாலை சேரமான் இளங்குட்டுவன்
நோகோ யானே நோ_தகும் உள்ளம்
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி
வெம்பும்-மன் அளியள் தானே இனியே
வன்கணாளன் மார்பு உற வளைஇ 5
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண்
உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின்
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி 10
பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல்
வல்லுநள்-கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றி 15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின்
கால் உற கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே

#154 முல்லை பொதும்பி புல்லாளங்கண்ணியார்
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகு வாய் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறி கறங்க
குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி
செம் நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப 5
வெம் சின அரவின் பை அணந்து அன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி
காமர் துணையொடு ஏமுற வதிய
காடு கவின் பெற்ற தண் பத பெரு வழி 10
ஓடு பரி மெலியா கொய் சுவல் புரவி
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு
நம்-வயின் புரிந்த கொள்கை
அம் மா அரிவையை துன்னுகம் விரைந்தே 15

#155 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் 5
செய்_வினை முடிக்க தோழி பல்-வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி
நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது 10
பெரும் களிறு மிதித்த அடி_அகத்து இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும் 15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே

#156 மருதம் ஆவூர் மூலங்கிழார்
முரசு உடை செல்வர் புரவி சூட்டும்
மூட்டு-உறு கவரி தூக்கி அன்ன
செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர்
மூதா தின்றல் அஞ்சி காவலர்
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ 5
காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும்
தீம் புனல் ஊர திறவிது ஆக
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய 10
பொய்தல் ஆடி பொலிக என வந்து
நின் நகா பிழைத்த தவறோ பெரும
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக
நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய்
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி 15
தணி மருங்கு அறியாள் யாய் அழ
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே

#157 பாலை வேம்பற்றூர் குமரனார்
அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட
பகு வாய் பாளை குவி முலை சுரந்த
அரி நிற கலுழி ஆர மாந்தி
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர்
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் 5
எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார்
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி 10
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உற சாஅய்
வினை அழி பாவையின் உலறி
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே

#158 குறிஞ்சி கபிலர்
உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள்
மின்னு நிமிர்ந்து அன்ன கனம் குழை இமைப்ப
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி 5
மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என
அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
சூர் உடை சிலம்பில் சுடர் பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே
நனவின் வாயே போல துஞ்சுநர் 10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும் வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்_தலை
புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு 15
முருகன் அன்ன சீற்றத்து கடும் திறல்
எந்தையும் இல்லன் ஆக
அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே

#159 பாலை ஆமூர் கவுதமன் சாதேவனார்
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரன் உடை சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
வடி உறு பகழி கொடு வில் ஆடவர் 5
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி
பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்
கனை குரல் கடும் துடி பாணி தூங்கி
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் 10
கவலை காதலர் இறந்தனர் என நனி
அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூ சாரல் குறும் பொறை குணாஅது
வில் கெழு தட கை வெல் போர் வானவன் 15
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை
தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி
கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் 20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே

#160 நெய்தல் குமுழிஞாழலார் நப்பசலையார்
ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ
நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம்
அடும்பு கொடி சிதைய வாங்கி கொடும் கழி
குப்பை வெண் மணல் பக்கம் சேர்த்தி
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த 5
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய்
கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன்
முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி 10
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி
செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி
நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்
பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப
இர வந்தன்றால் திண் தேர் கரவாது 15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவ சீறூர் காண
பகல் வந்தன்றால் பாய் பரி சிறந்தே

#161 பாலை மதுரை புல்லங்கண்ணனார்
வினை-வயின் பிரிதல் யாவது வணர் சுரி
வடியா பித்தை வன்கண் ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி
வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை
படு முடை நசைஇய வாழ்க்கை செம் செவி 5
எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர் என்பது சிறப்ப
கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல் 10
அம் மா மேனி ஆய் இழை குறு_மகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே

#162 குறிஞ்சி பரணர்
கொள குறைபடாஅ கோடு வளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல
கடல் கண்டு அன்ன மாக விசும்பின்
அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி 5
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள்
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி
பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என 10
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண்
முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்
கோல் அமை விழு தொடி விளங்க வீசி
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது 15
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியா கழல் தொடி அதிகன்
கோள் அறவு அறியா பயம் கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பு_அகம் பொலிய 20
வில் கெழு தானை பசும் பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்ப காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி
நேர்_கொள் நெடு வரை கவாஅன்
சூர்_அர_மகளிரின் பெறற்கு அரியோளே 25

#163 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
விண் அதிர்பு தலைஇய விரவு மலர் குழைய
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள்
எமியம் ஆக துனி உளம் கூர
சென்றோர் உள்ளி சில் வளை நெகிழ
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி 5
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது
களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனி பானாள்
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை
எனக்கே வந்தனை போறி புனல் கால் 10
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ
கொடியோர் சென்ற தேஎத்து மடியாது
இனையை ஆகி செல்-மதி
வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே

#164 முல்லை மதுரை தமிழ் கூத்தன் நாகன்தேவனார்
கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிர கனை பெயல் பொழிதலின்
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன் 5
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் 10
இது நன் காலம் கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்
கந்து கால் ஒசிக்கும் யானை
வெம் சின வேந்தன் வினை விட பெறினே

#165 பாலை
கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென எழுந்த செம் வாய் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் 5
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று தாயும்
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என
கண்ணும் நுதலும் நீவி தண்ணென
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ 10
தாழி குவளை வாடு மலர் சூட்டி
தரு மணல் கிடந்த பாவை என்
அரு மகளே என முயங்கினள் அழுமே

#166 மருதம் இடையன் நெடுங்கீரனார்
நன் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும்
பழம் பல் நெல்லின் வேளூர் வாயில்
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை 5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் 10
யார்-கொல் வாழி தோழி நெருநல்
தார் பூண் களிற்றின் தலை புணை தழீஇ
வதுவை ஈர் அணி பொலிந்து நம்மொடு
புதுவது வந்த காவிரி
கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே 15

#167 பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின்
பசும் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை
விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை 5
பொருந்தா கண்ணேம் புலம்பு வந்து உறுதர
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்கு உடை பகழி
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ் 10
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என
மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று 15
ஒழுகு பலி மறந்த மெழுகா புன் திணை
பால் நாய் துன்னிய பறை கண் சிற்றில்
குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய்
கூர் முக சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறை பொதியிலானே 20

#168 குறிஞ்சி கோட்டம்பலத்து துஞ்சிய சேரமான்
யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக
பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப
பல்லான்குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் 5
கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து
அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின்
ஈன்று அணி இரும் பிடி தழீஇ களிறு தன்
தூங்கு நடை குழவி துயில் புறங்காப்ப 10
ஒடுங்கு அளை புலம்ப போகி கடுங்கண்
வாள் வரி வய புலி கல் முழை உரற
கானவர் மடிந்த கங்குல்
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே

#169 பாலை தொண்டியாமூர் சாத்தனார்
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை
புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை
ஞெலி_கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை 5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும்
சுரம் பல கடந்த நம்-வயின் படர்ந்து நனி
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை 10
மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி
கயல் உமிழ் நீரின் கண் பனி வார
பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே

#170 நெய்தல் மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்
கானலும் கழறாது கழியும் கூறாது
தேன் இமிர் நறு மலர் புன்னையும் மொழியாது
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே
இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ 5
தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து
பறைஇய தளரும் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால்
கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம்
கடல்_சிறு_காக்கை காமர் பெடையொடு 10
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து
நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ எனவே

#171 பாலை கல்லாடனார்
நுதலும் நுண் பசப்பு இவரும் தோளும்
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும் நாளும்
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது
இனையல் வாழி தோழி புணர்வர் 5
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ பொருள் புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார்
திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை 10
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின்
கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய
கரும் கோட்டு இருப்பை ஊரும்
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே 15

#172 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நப்பாலனார்
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென
கல் முகை விடர்_அகம் சிலம்ப வீழும்
காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல் 5
இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி 10
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல்
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் 15
அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள்
மணி ஏர் மாண் நலம் சிதைய
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே

#173 பாலை முள்ளியூர் பூதியார்
அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என
செய்_வினை புரிந்த நெஞ்சினர் நறு_நுதல்
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் 5
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின்
நன் மாண் எல் வளை திருத்தினர் ஆயின்
வருவர் வாழி தோழி பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ 10
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட
காடு கவின் அழிய உரைஇ கோடை
நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல பழம் குழி தாஅம் 15
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரை கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே

#174 முல்லை மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து
ஒரு படை கொண்டு வரு படை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என
பூ கோள் ஏய தண்ணுமை விலக்கி
செல்வேம் ஆதல் அறியாள் முல்லை 5
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து
காலை வானத்து கடும் குரல் கொண்மூ
முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை 10
ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்
நன் மணல் வியல் இடை நடந்த
சில் மெல் ஒதுக்கின் மாஅயோளே

#175 பாலை ஆலம்பேரி சாத்தனார்
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின்
பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும் 5
வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர
அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து
வருதும் என்றனர் அன்றே தோழி
கால் இயல் நெடும் தேர் கைவண் செழியன் 10
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர் கதிர் நிரைத்த நேமி_அம்_செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் 15
திருவில் தேஎத்து குலைஇ உரு கெழு
மண் பயம் பூப்ப பாஅய்
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே

#176 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால்
களிற்று செவி அன்ன பாசடை மருங்கில் 5
கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை
முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க
பூத்த தாமரை புள் இமிழ் பழனத்து
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்_குருகு அஞ்சி அயலது 10
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளை செறியும் ஊர
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ 15
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை
குறும் தொடி துடக்கிய நெடும் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும் நின் காதலி எம் போல்
புல் உளை குடுமி புதல்வன் பயந்து 20
நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி
அடித்து என உருத்த தித்தி பல் ஊழ்
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு 25
கூர் நுனை மழுகிய எயிற்றள்
ஊர் முழுதும் நுவலும் நின் காணிய சென்மே

#177 பாலை செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
தொல் நலம் சிதைய சாஅய் அல்கலும்
இன்னும் வாரார் இனி எவன் செய்கு என
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண்
இரும் பிடி தட கை மான நெய் அருந்து
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் 5
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்-மார் காண்பின்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாட
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறி இடை
பைம் கொடி பாகல் செம் கனி நசைஇ
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை 10
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த 15
கழல் கால் பண்ணன் காவிரி வட-வயின்
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த
அணங்கு உடை வன முலை தாஅய நின்
சுணங்கு இடை வரித்த தொய்யிலை நினைந்தே 20

#178 குறிஞ்சி பரணர்
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி
பறை கண் அன்ன நிறை சுனை பருகி
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி 5
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர்
பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக 10
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர
கிளை அமல் சிறுதினை விளை குரல் மேய்ந்து
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள்
பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும் 15
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி
எல்லையும் இரவும் என்னாது கல்லென
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என
கனவினும் பிரிவு அறியலனே அதன்_தலை 20
முன் தான் கண்ட ஞான்றினும்
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே

#179 பாலை கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
வெண் தேர் ஓடும் கடம் காய் மருங்கில்
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு
சிறு கண் யானை நெடும் கை நீட்டி
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது 5
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடு வாய் செம் கணை கொடு வில் ஆடவர்
நன் நிலை பொறித்த கல் நிலை அதர
அரம்பு கொள் பூசல் களையுநர் காணா
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை 10
முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய்
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ
மதி ஏர் வாள் நுதல் புலம்ப
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே

#180 நெய்தல் கருவூர் கண்ணம்பாளனார்
நகை நனி உடைத்தால் தோழி தகை மிக
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி
வீ ததை கானல் வண்டல் அயர
கதழ் பரி திண் தேர் கடைஇ வந்து
தண் கயத்து அமன்ற ஒண் பூ குவளை 5
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
பின்னு புறம் தாழ கொன்னே சூட்டி
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே
புலவு நாறு இரும் கழி துழைஇ பல உடன் 10
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ
படப்பை நின்ற முட தாள் புன்னை
பொன் நேர் நுண் தாது நோக்கி
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே 15

#181 பாலை பரணர்
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய்
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின்
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ 5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் 10
பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர்
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை 15
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன்
ஆலமுற்றம் கவின் பெற தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கை செய் பாவை துறை-கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசை 20
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல்
புகாஅர் நன் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்
பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள்
அணங்கு சால் அரிவை இருந்த 25
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே

#182 குறிஞ்சி கபிலர்
பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ
தீம் பழ பலவின் சுளை விளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட 5
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவி தண் புதல் குருதியொடு துயல் வர
முளவு_மா தொலைச்சும் குன்ற நாட
அரவு எறி உருமோடு ஒன்றி கால்வீழ்த்து
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல் 10
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும்
பனியொடு கலுழும் இவள் கண்ணே அதனால்
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ
உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க 15
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே

#183 பாலை கருவூர் கலிங்கத்தார்
குவளை உண்கண் கலுழவும் திருந்து_இழை
திதலை அல்குல் அம் வரி வாடவும்
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும்
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று 5
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி
குவவு திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி
இரும் கிளை கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே மாலை 10
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற
பனி அலை கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே 15

#184 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும் எனக்கும்
இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள்
அரும் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு 5
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டை கோட்ட குறு முள் கள்ளி
புன் தலை புதைத்த கொழும் கொடி முல்லை
ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி 10
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர்
அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க
செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்று 15
செக்கர் வானம் சென்ற பொழுதில்
கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே

#185 பாலை பாலைபாடிய பெருங்கடுங்கோ
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை
நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய
பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து
இரும்பின் இன் உயிர் உடையோர் போல
வலித்து வல்லினர் காதலர் வாடல் 5
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் 10
பெரு விழா விளக்கம் போல பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே

#186 மருதம் பரணர்
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சி கலித்த தாமரை
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை
இரும் கயம் துளங்க கால் உறு-தொறும் 5
பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே நட்பே
கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட 10
ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து
இன்னும் பிறள்-வயினானே மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் பழையன் 15
காவிரி வைப்பின் போஒர் அன்ன என்
செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே 20

#187 பாலை மாமூலனார்
தோள் புலம்பு அகல துஞ்சி நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் 5
தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூ தொடை விழவின் தலை நாள் அன்ன
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு 10
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்
கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து
எல் விருந்து அயர ஏமத்து அல்கி
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து 15
வேனில் வெற்பின் கானம் காய
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை 20
வாள் வாய் சுறவின் பனி துறை நீந்தி
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே

#188 குறிஞ்சி வீரை வௌவௌயன் தித்தனார்
பெரும் கடல் முகந்த இரும் கிளை கொண்மூ
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ
போர்ப்பு-உறு முரசின் இரங்கி முறை புரிந்து
அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர்
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் 5
கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும்
மின் உடை கருவியை ஆகி நாளும்
கொன்னே செய்தியோ அரவம் பொன் என
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி
பொலிந்த ஆயமொடு காண்_தக இயலி 10
தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்
குற_மகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ வாழிய மழையே

#189 பாலை கயமனார்
பசும் பழ பலவின் கானம் வெம்பி
விசும்பு கண் அழிய வேனில் நீடி
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு
விழவு படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி 5
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
வெம் வரை அத்தம் சுட்டி பையென
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன்
திதலை அல்குல் குறு_மகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை என்றும் 10
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே 15

#190 நெய்தல் உலோச்சனார்
திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எல் பட
வரு திமில் எண்ணும் துறைவனொடு ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே
அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள் 5
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை
பொதும்பில் புன்னை சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய ஒரு நாள்
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்
உழை கடல் வழங்கலும் உரியன் அதன்_தலை 10
இரும் கழி புகாஅர் பொருந்த தாக்கி
வய சுறா எறிந்து என வலவன் அழிப்ப
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரை மணி புரவி விரை நடை தவிர
இழுமென் கானல் விழு மணல் அசைஇ 15
ஆய்ந்த பரியன் வந்து இவண்
மான்ற மாலை சேர்ந்தன்றோ இலனே

#191 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்
அத்த பாதிரி துய் தலை புது வீ
எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ
வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி
தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர்
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி 5
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர்
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி
ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை 10
அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி
சென்று வினை எண்ணுதி ஆயின் நன்றும்
உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி
அறல் என விரிந்த உறல் இன் சாயல் 15
ஒலி இரும் கூந்தல் தேறும் என
வலிய கூறவும் வல்லையோ மற்றே

#192 குறிஞ்சி பொதும்பில்கிழான் வெண்கண்ணனார்
மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைம் தார்
செம் வாய் சிறு கிளி சிதைய வாங்கி 5
பொறை மெலிந்திட்ட புன் புற பெரும் குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள்
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை
மை படு விடர்_அகம் துழைஇ ஒய்யென 10
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி
பெரு வரை சிறுகுடி மறுகு விளக்கு-உறுத்தலின்
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல்
உரும் இறைகொண்ட உயர் சிமை
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே 15

#193 பாலை மதுரை மருதன் இளநாகனார்
கான் உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த
பொரு_களத்து ஒழிந்த குருதி செம் வாய்
பொறித்த போலும் வால் நிற எருத்தின் 5
அணிந்த போலும் செம் செவி எருவை
குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து
அரும் கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட
விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி
கொல் பசி முது நரி வல்சி ஆகும் 10
சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை
பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி
முருந்து ஏர் முறுவல் இளையோள்
பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே

#194 முல்லை இடைக்காடனார்
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை
ஏர் இடம்படுத்த இரு மறு பூழி
புறம் மாறுபெற்ற பூவல் ஈரத்து
ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால்
வித்திய மருங்கின் விதை பல நாறி 5
இரலை நன் மான் இனம் பரந்தவை போல்
கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர்
கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
கவை கதிர் இரும் புறம் கதூஉ உண்ட 10
குடுமி நெற்றி நெடு மா தோகை
காமர் கலவம் பரப்பி ஏமுற
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து
கிளி கடி மகளிரின் விளி பட பயிரும் 15
கார்-மன் இதுவால் தோழி போர் மிக
கொடுஞ்சி நெடும் தேர் பூண்ட கடும் பரி
விரி உளை நன் மான் கடைஇ
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே

#195 பாலை கயமனார்
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு_மகள்
திருந்து வேல் விடலையொடு வரும் என தாயே
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனை மணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் என்ப யானும் 5
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்
இன் நகை முறுவல் ஏழையை பல் நாள்
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய
நலம் புனை உதவியும் உடையன்-மன்னே 10
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல
அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி
சிறு பை நாற்றிய பல் தலை கொடும் கோல்
ஆகுவது அறியும் முதுவாய் வேல
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் 15
மாறா வரு பனி கலுழும் கங்குலில்
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்
எம் மனை முந்துற தருமோ
தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே

#196 மருதம் பரணர்
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு 5
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் ஊர
தொடுகலம் குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய 10
கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை
அன்னிமிஞிலியின் இயலும்
நின் நல தகுவியை முயங்கிய மார்பே

#197 பாலை மாமூலனார்
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம்
இனையல் வாழி தோழி முனை எழ 5
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்
மறம் மிகு தானை கண்ணன்_எழினி
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ
தோள் தாழ்பு இருளிய குவை இரும் கூந்தல் 10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு
இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர
பள்ளி கொள்ளும் பனி சுரம் நீந்தி 15
ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே

#198 குறிஞ்சி பரணர்
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து
கார் விரை கமழும் கூந்தல் தூ வினை 5
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின்
இள மழை சூழ்ந்த மட மயில் போல
வண்டு வழி படர தண் மலர் வேய்ந்து
வில் வகுப்பு-உற்ற நல் வாங்கு குடைச்சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து 10
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில்
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் 15
ஏர் மலர் நிறை சுனை உறையும்
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே

#199 பாலை கல்லாடனார்
கரை பாய் வெண் திரை கடுப்ப பல உடன்
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர
சிலம்பி வலந்த வறும் சினை வற்றல் 5
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ
திரங்கு மரல் கவ்விய கையறு தொகுநிலை
அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய 10
கெடு மான்_இன நிரை தரீஇய கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல்
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும்
ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப 15
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல்
தடையின மன்னும் தண்ணிய திரண்ட
பெரும் தோள் அரிவை ஒழிய குடாஅது
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய 20
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
இழந்த நாடு தந்து அன்ன
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே

#200 நெய்தல் உலோச்சனார்
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்
புலால் அம் சேரி புல் வேய் குரம்பை
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் 5
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப
பொம்மல் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற 10
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே

#201 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறல் போர் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து 5
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனி துறை பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு
அலரும் மன்று பட்டன்றே அன்னையும் 10
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று
எவன் கையற்றனை இகுளை சோழர்
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும்
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது
வான் புகு தலைய குன்றத்து கவாஅன் 15
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை
தோல் முலை பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே

#202 குறிஞ்சி ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
வயங்கு வெள் அருவிய குன்றத்து கவாஅன்
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் 5
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி
சிறு பல் மின்மினி போல பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள்
உத்தி அரவின் பை தலை துமிய 10
உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி
தேராது வரூஉம் நின்-வயின்
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே 15

#203 பாலை கபிலர்
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள்
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் 5
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இ வறு மனை ஒழிய தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற 10
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான்
அன்னேன் அன்மை நன் வாய் ஆக
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடை-உறாஅது எய்தி முன்னர்
புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர் 15
செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே

#204 முல்லை மதுரை காமக்கணி நப்பாலத்தனார்
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை
கடல் போல் தானை கலி_மா வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை
சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே
கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில் 5
கணம்_கொள் வண்டின் அம் சிறை தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து
செல்க பாக நின் நல் வினை நெடும் தேர்
வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை 10
பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி
தண்டலை கமழும் கூந்தல்
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே

#205 பாலை நக்கீரர்
உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என
பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே 5
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர
நாம் அழ துறந்தனர் ஆயினும் தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி 10
பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர்
காவிரி படப்பை பட்டினத்து அன்ன
செழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துக தில்ல
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி 15
நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில்
கடாஅ யானை கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி
புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர 20
மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை
கூப்பிடூஉ உகளும் குன்றக சிறு நெறி
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே

#206 மருதம் மதுரை மருதன் இளநாகனார்
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ்
பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை
மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம்
சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு 5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்
மாரி ஈங்கை மா தளிர் அன்ன
அம் மா மேனி ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆரா காதலொடு தார் இடை குழைய 10
முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர்
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து
அடு போர் வேளிர் வீரை முன்துறை
நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை
பெரும் பெயற்கு உருகி ஆங்கு 15
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே

#207 பாலை மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து
படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்
நிரை பர பொறைய நரை புற கழுதை 5
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல் 10
தெண் கண் உவரி குறை குட முகவை
அறன் இலாளன் தோண்ட வெய்து_உயிர்த்து
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி
கூழை உளர்ந்து மோழைமை கூறவும் 15
மறுத்த சொல்லள் ஆகி
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே

#208 குறிஞ்சி பரணர்
யாம இரவின் நெடும் கடை நின்று
தேம் முதிர் சிமைய குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் 5
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று 10
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் என
படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து
உரு வினை நன்னன் அருளான் கரப்ப
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர் 15
குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல்
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை
அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல்
உப்பு சிறை நில்லா வெள்ளம் போல
நாணு வரை நில்லா காமம் நண்ணி 20
நல்கினள் வாழியர் வந்தே ஓரி
பல் பழ பலவின் பயம் கெழு கொல்லி
கார் மலர் கடுப்ப நாறும்
ஏர் நுண் ஓதி மாஅயோளே

#209 பாலை கல்லாடனார்
தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே
பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன்
நேரா எழுவர் அடிப்பட கடந்த 5
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என
ஆழல் வாழி தோழி அவரே
மாஅல் யானை மற போர் புல்லி
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து 10
உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல்
முள்ளூர் மன்னன் கழல் தொடி காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த
செம் வேர் பலவின் பயம் கெழு கொல்லி 15
நிலை பெறு கடவுள் ஆக்கிய
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே

#210 நெய்தல் உலோச்சனார்
குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர்
எறி_உளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட
விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர்
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து 5
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்
பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி
தான் இவண் வந்த-காலை நம் ஊர்
கானல் அம் பெரும் துறை கவின் பாராட்டி
ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன் 10
சாயல் மார்பின் பாயல் மாற்றி
கைதை அம் படு சினை கடும் தேர் விலங்க
செலவு அரிது என்னும் என்பது
பல கேட்டனமால் தோழி நாமே

#211 பாலை மாமூலனார்
கேளாய் எல்ல தோழி வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம்
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வய களிறு உரி-தொறும்
தண் மழை ஆலியின் தாஅய் உழவர் 5
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்
குழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய 10
கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி
நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை 15
நீர் ஒலித்த அன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே

#212 குறிஞ்சி பரணர்
தா இல் நன் பொன் தைஇய பாவை
விண் தவழ் இள வெயில் கொண்டு நின்று அன்ன
மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால்
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற
முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய் 5
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி
அணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்று
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் 10
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று
விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை 15
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து
செரு செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த 20
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது
எளியள் அல்லோள் கருதி
விளியா எவ்வம் தலைத்தந்தோயே

#213 பாலை தாயங்கண்ணனார்
வினை நவில் யானை விறல் போர் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி 5
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும்
வால் நிண புகவின் வடுகர் தேஎத்து
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது 10
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல
பல் கதிர் வாங்கிய படு_சுடர் அமையத்து
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
வெல் போர் வானவன் கொல்லி குட வரை 15
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள்
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்
சென்று தாம் நீடலோ இலரே என்றும்
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை 20
வலம் படு வென்றி வாய் வாள் சோழர்
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல்
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே

#214 முல்லை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
அகல் இரு விசும்பு_அகம் புதைய பாஅய்
பகல் உடன் கரந்த பல் கதிர் வானம்
இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை 5
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே
அமரும் நம் வயினதுவே நமர் என
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை 10
படு சுவல் கொண்ட பகு வாய் தெண் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே 15

#215 பாலை இறங்கு குடி குன்ற நாடன்
விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர்
வேறு பன் மொழிய தேஎம் முன்னி
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல-வயின் ஏந்தி
செலல் மாண்பு உற்ற நும்-வயின் வல்லே 5
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல
கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லா காட்சி
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் 10
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை
கூர் நுதி செம் வாய் எருவை சேவல்
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் 15
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே

#216 மருதம் ஐயூர் முடவனார்
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள்
தான் புனல் அடைகரை படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை 5
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர்
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர்
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்
கழனி உழவர் குற்ற குவளையும்
கடி மிளை புறவின் பூத்த முல்லையொடு 10
பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர் செல்லி கோமான்
எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல்
ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய
பெரும் களிற்று எவ்வம் போல 15
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே

#217 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
பெய்து புறம் திறந்த பொங்கல் வெண் மழை
எஃகு உறு பஞ்சி துய் பட்டு அன்ன
துவலை தூவல் கழிய அகல் வயல்
நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ
கோடை பூளையின் வாடையொடு துயல்வர 5
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர
கோழ் இலை அவரை கொழு முகை அவிழ
ஊழ்-உறு தோன்றி ஒண் பூ தளைவிட 10
புலம்-தொறும் குருகு இனம் நரல கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என
செப்புவல் வாழியோ துணை உடையீர்க்கே 15
நல்கா காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி நோய் பொர
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு
எயிறு தீ பிறப்ப திருகி
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே 20

#218 குறிஞ்சி கபிலர்
கிளை பாராட்டும் கடு நடை வய களிறு
முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி
பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து 5
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள்
விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல்
தடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை
படாஅ ஆகும் எம் கண் என நீயும்
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி 10
வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும்
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய்
வர எளிது ஆக எண்ணுதி அதனால்
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் 15
அடைய முயங்கேம் ஆயின் யாமும்
விறல் இழை நெகிழ சாஅய்தும் அதுவே
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு 20
ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெரும் சாரல் பகல் வந்தீமே

#219 பாலை கயமனார்
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்
வாராயோ என்று ஏத்தி பேர் இலை
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி 5
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால்
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி
பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள்
அறன் இலாளனொடு இறந்தனள் இனி என 10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர் 15
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை
மட தகை மெலிய சாஅய்
நடக்கும்-கொல் என நோவல் யானே

#220 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ
தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும்
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர்
கடாஅ யானை குழூஉ சமம் ததைய
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் 5
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின்
அரும் கடி நெடும் தூண் போல யாவரும்
காணல் ஆகா மாண் எழில் ஆகம்
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே 10
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின்
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும்
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து
காதல் மாறா காமர் புணர்ச்சியின் 15
இரும் கழி முகந்த செம் கோல் அம் வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
நெடும் கதிர் கழனி தண் சாய்க்கானத்து
யாணர் தண் பணை உறும் என கானல்
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் 20
நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே

#221 பாலை கயமனார்
நனை விளை நறவின் தேறல் மாந்தி
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல் 5
மதி உடம்பட்ட மை அணல் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின்
தண் நறு முச்சி புனைய அவனொடு
கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை 10
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ
இரும் பிடி இரியும் சோலை
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே

#222 குறிஞ்சி பரணர்
வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை
கான நாடன் உறீஇய நோய்க்கு என்
மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென்
முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் 5
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇ
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டி 10
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்
சென்மோ வாழி தோழி பன் நாள்
உரவு உரும் ஏறொடு மயங்கி
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே 15

#223 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர்
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி
ஆழல் வாழி தோழி கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர் 5
காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின்
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் 10
அம் பணை நெடும் தோள் தங்கி தும்பி
அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட
நன் முகை அதிரல் போதொடு குவளை
தண் நறும் கமழ் தொடை வேய்ந்த நின் 15
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே

#224 முல்லை ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலை சாத்தனார்
செல்க பாக எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி 5
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி
சாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தக
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில் 10
தெறி நடை மரை கணம் இரிய மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த
திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல்
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என 15
சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால்
அரும் கடி வியன் நகர் நோக்கி
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே

#225 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி நாளை
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற 5
அகலா அம் துளை கோடை முகத்தலின்
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல்
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து
யாத்த தூணி தலை திறந்தவை போல் 10
பூத்த இருப்பை குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செம் நிலத்து உதிர
மழை துளி மறந்த அம் குடி சீறூர்
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் 15
செறி தொடி முன்கை நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே

#226 மருதம் பரணர்
உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாண் இலை மன்ற யாணர் ஊர
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை
குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின்
பழன பைம் சாய் கொழுதி கழனி 5
கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும்
வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான்
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய
விடியல் வந்த பெரு நீர் காவிரி 10
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி 15
போர் அடு தானை கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே

#227 பாலை நக்கீரர்
நுதல் பசந்தன்றே தோள் சாயினவே
திதலை அல்குல் வரியும் வாடின
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி
இனையல் வாழி தோழி நனை கவுள் 5
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணி பொன் இணர்
புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
செம் நில படு நீறு ஆடி செரு மலைந்து 10
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்
வருநர் வரையா பெருநாள் இருக்கை 15
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து 20
எல் உமிழ் ஆவணத்து அன்ன
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே

#228 குறிஞ்சி அண்டர் மகன் குறுவழுதியார்
பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டி
தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில்
கண் என மலர்ந்த மா இதழ் குவளை
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி 5
பகலே இனிது உடன் கழிப்பி இரவே
செல்வர் ஆயினும் நன்று-மன் தில்ல
வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ 10
புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய்
இரும் பிடி இரியும் சோலை
பெரும் கல் யாணர் தம் சிறுகுடியானே

#229 பாலை மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
பகல் செய் பல் கதிர் பருதி_அம்_செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் 5
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண்
நெடும் சேண் இடைய குன்றம் போகி
பொய் வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக வல்லென
பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள் 10
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப
பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி
நன் மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி தோழி சினைய 15
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை
செம் கண் இரும் குயில் நயவர கூஉம்
இன் இளவேனிலும் வாரார் 20
இன்னே வருதும் என தெளித்தோரே

#230 நெய்தல் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்
பெரும் தண் மா தழை இருந்த அல்குல்
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் 5
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்
இ மனை கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ மாதராய் என 10
கடும் பரி நன் மான் கொடிஞ்சி நெடும் தேர்
கைவல் பாகன் பையென இயக்க
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில்
அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கி
சிறிய இறைஞ்சினள் தலையே 15
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே

#231 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்
செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர்
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர் 5
படு_களத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை
கள்ளி அம் பறந்தலை களர்-தொறும் குழீஇ
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக
வருவர் வாழி தோழி பொருவர் 10
செல் சமம் கடந்த செல்லா நல் இசை
விசும்பு இவர் வெண்குடை பசும் பூண் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சி
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே 15

#232 குறிஞ்சி கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
காண் இனி வாழி தோழி பானாள்
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின்
மாஅல் யானை புலி செத்து வெரீஇ
இரும் கல் விடர்_அகம் சிலம்ப பெயரும்
பெரும் கல் நாடன் கேண்மை இனியே 5
குன்ற வேலி சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மண நாள் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் 10
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும்
விரவு பூ பலியொடு விரைஇ அன்னை
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே 15

#233 பாலை மாமூலனார்
அலமரல் மழை கண் மல்கு பனி வார நின்
அலர் முலை நனைய அழாஅல் தோழி
எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என
ஊன் இல் யானை உயங்கும் வேனில் 5
மற படை குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர் பேணிய உதியஞ்சேரல்
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல்
கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு 10
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு-உறாஅ
பொருள்-வயின் நீடலோ இலர் நின்
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே 15

#234 முல்லை பேயனார்
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி
புல் உளை கலி_மா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய 5
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப
கால் என மருள ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர்
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை 10
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள
அம் சிறை வண்டின் மென் பறை தொழுதி
முல்லை நறு மலர் தாது நயந்து ஊத
எல்லை போகிய புல்லென் மாலை
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் 15
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நன் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே

#235 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
அம்ம வாழி தோழி பொருள் புரிந்து
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும்
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து
விண்டு முன்னிய கொண்டல் மா மழை 5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப
வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ
சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய 10
களவன் மண் அளை செறிய அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க
நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றி
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை 15
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதைய சாஅய்
என்னள்-கொல் அளியள் என்னாதோரே

#236 மருதம் பரணர்
மணி மருள் மலர முள்ளி அமன்ற
துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்
அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி
வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு 5
பனி படு சாய் புறம் பரிப்ப கழனி
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ
மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன் நன்றும்
உய்ந்தனென் வாழி தோழி அல்கல் 10
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப
கொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை 15
ஆட்டன்அத்தியை காணீரோ என
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போல 20
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே

#237 பாலை தாயங்கண்ணனார்
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து 5
இன்னா கழியும் கங்குல் என்று நின்
நன் மா மேனி அணி நலம் புலம்ப
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல்
செம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறை
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு 10
இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்
வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து 15
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே

#238 குறிஞ்சி கபிலர்
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என
மட மான் வல்சி தரீஇய நடுநாள்
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து 5
மட கண் ஆமான் மாதிரத்து அலற
தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி
இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
பெரும் கல் நாட பிரிதி ஆயின் 10
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ்
கழல் தொடி தட கை கலி_மான் நள்ளி
நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்து 15
போந்தை முழு_முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே

#239 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
அளிதோ தானே எவன் ஆவது-கொல்
மன்றும் தோன்றாது மரனும் மாயும்
புலி என உலம்பும் செம் கண் ஆடவர்
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய 5
விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி
புள்ளி தொய்யில் பொறி படு சுணங்கின்
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய 10
ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே
நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என
குறு நெடும் புலவி கூறி நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே 15

#240 நெய்தல் எழுஉப்பன்றி நாகன் குமரனார்
செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப
இனி புலம்பின்றே கானலும் நளி கடல்
திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில் 5
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில்
அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும் நீயும்
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி 10
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே 15

#241 பாலை காவன் முல்லை பூதனார்
துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவர் என முனியாது
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்
பிரியா காதலொடு உழையர் ஆகிய
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை 5
மூங்கில் இள முளை திரங்க காம்பின்
கழை நரல் வியல்_அகம் வெம்ப மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனம் தலை
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி
தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை 10
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய்
வட்ட கழங்கின் தாஅய் துய் தலை
செம் முக மந்தி ஆடும் 15
நன் மர மருங்கின் மலை இறந்தோரே

#242 குறிஞ்சி பேரிசாத்தனார்
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினை
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை
பைம் தாள் செந்தினை கொடும் குரல் வியன் புனம் 5
செம் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னை 10
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்
செலவர துணிந்த சேண் விளங்கு எல் வளை
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள்
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய 15
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ்
முயங்கல் இயைவது-மன்னோ தோழி
நறை கால்யாத்த நளிர் முகை சிலம்பில்
பெரு மலை விடர்_அகம் நீடிய சிறியிலை
சாந்த மென் சினை தீண்டி மேலது 20
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரை_அக வெற்பன் மணந்த மார்பே

#243 பாலை கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
அவரை ஆய் மலர் உதிர துவரின
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை
கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு 5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ கல்லென
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை 10
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை
அறியுநம் ஆயின் நன்று-மன் தில்ல
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று
அனைத்தால் தோழி நம் தொல்_வினை பயனே 15

#244 முல்லை மதுரை மள்ளனார்
பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன
சேய் உயர் சினைய மா சிறை பறவை
பகல் உறை முது மரம் புலம்ப போகி
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
கடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசை 5
வண்டு_இனம் தவிர்க்கும் தண் பத காலை
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு
இனிது-கொல் வாழி தோழி என தன்
பல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்ப
அரும் துயர் உடையள் இவள் என விரும்பி 10
பாணன் வந்தனன் தூதே நீயும்
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி
நெடும் தேர் ஊர்-மதி வலவ
முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே

#245 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார்
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில் 5
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர் எல் உற
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்
மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள் 10
கான யானை வெண் கோடு சுட்டி
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனை பாக்கத்து அல்கி வைகுற
நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ 15
குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண்
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடும் கவலைய கானம் நீந்தி
அம் மா அரிவை ஒழிய 20
சென்மோ நெஞ்சம் வாரலென் யானே

#246 மருதம் பரணர்
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக
நெடு நீர் பொய்கை துணையொடு புணரும்
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு 5
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப நெருநை அலரே
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் 10
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே

#247 பாலை மதுரை மருதம் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நன் மாண் ஆகம் புலம்ப துறந்தோர்
அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை
கரும் கோட்டு இருப்பை வெண் பூ முனையின் 5
பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும்
அரிய கானம் என்னார் பகை பட
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி 10
படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமை
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே

#248 குறிஞ்சி கபிலர்
நகை நீ கேளாய் தோழி அல்கல்
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ
இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற 5
தறுகண் பன்றி நோக்கி கானவன்
குறுகினன் தொடுத்த கூர் வாய் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என
எய்யாது பெயரும் குன்ற நாடன் 10
செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர
இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை
வல்லே என் முகம் நோக்கி 15
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே

#249 பாலை நக்கீரனார்
அம்ம வாழி தோழி பல் நாள்
இ ஊர் அம்பல் எவனோ வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்
பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி 5
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇ
நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார் 10
பல் பூ கானத்து அல்கு நிழல் அசைஇ
தோகை தூவி தொடை தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற
புலவு களம் துழைஇய துகள் வாய் கோடை
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த 15
வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி
உழைமான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே

#250 நெய்தல் செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர
கணம்_கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட 5
கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கி
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன்
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய் 10
அம் வலை பரதவர் கானல் அம் சிறுகுடி
வெவ் வாய் பெண்டிர் கவ்வையின் கலங்கி
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது கங்குலானே

#251 பாலை மாமூலனார்
தூதும் சென்றன தோளும் செற்றும்
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்
வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின்
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் 5
தங்கலர் வாழி தோழி வெல் கொடி
துனை கால் அன்ன புனை தேர் கோசர்
தொன் மூதாலத்து அரும் பணை பொதியில்
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் 10
பணியாமையின் பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை 15
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி
மா நிலம் நெளிய குத்தி புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடை போகி
அரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரே 20

#252 குறிஞ்சி நக்கண்ணையார்
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி
உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலை
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி 5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை
துய் அவிழ் பனி மலர் உதிர வீசி 10
தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல்
எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டு
பெரும் குளம் காவலன் போல
அரும் கடி அன்னையும் துயில் மறந்தனளே

#253 பாலை நக்கீரர்
வைகல்-தோறும் பசலை பாய என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென
அன்னையும் அமரா முகத்தினள் அலரே
வாடா பூவின் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன் 5
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து
ஆழல் வாழி தோழி வடாஅது
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய 10
பகை முனை அறுத்து பல் இனம் சாஅய்
கணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்து
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று
தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய
அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த 15
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி
கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெருமகன்
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து 20
உள்ளுப தில்ல தாமே பணை தோள்
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின்
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்ன நின் திரு முகத்து 25
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே

#254 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல்
செம் முது செவிலியர் பல பாராட்ட
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ
மனை உறை புறவின் செம் கால் சேவல் 5
துணையொடு குறும் பறை பயிற்றி மேல் செல
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும்
நம்-வயின் நினையும் நன் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி 10
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும்
பணை நிலை முனைஇய வினை நவில் புரவி
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப
நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமிய
தளவ முல்லையொடு தலைஇ தண்ணென 15
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான்
சொல்லிய அளவை நீடாது வல்லென
தார் மணி மா அறிவுறாஅ
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே 20

#255 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம்
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் 5
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே அழி படர் அகல
வருவர்-மன்னால் தோழி தண் பணை
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் 10
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி
பலவு காய் புறத்த பசும் பழ பாகல்
கூதள மூது இலை கொடி நிரை தூங்க
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை 15
கடி மனை மாடத்து கங்குல் வீச
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய
நிரை வளை ஊரும் தோள் என
உரையொடு செல்லும் அன்பினர் பெறினே

#256 மருதம் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி அகன் துறை
பகு வாய் நிறைய நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு 5
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர
பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே
கையகப்பட்டமை அறியாய் நெருநை
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை 10
ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து
பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக
தொல் புகழ் நிறைந்த பல் பூ கழனி
கரும்பு அமல் படப்பை பெரும் பெயர் கள்ளூர் 15
திரு நுதல் குறு_மகள் அணி நலம் வவ்விய
அறன் இலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய்
முறி ஆர் பெரும் கிளை செறிய பற்றி
நீறு தலைப்பெய்த ஞான்றை 20
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே

#257 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
வேனில் பாதிரி கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம்
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின்
பொம்மல் ஓதி பொதுள வாரி 5
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொள
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை 10
மெல் இறை பணை தோள் விளங்க வீசி
வல்லுவை-மன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலை செல் நெறி காண்-மார்
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து 15
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல்
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும்
துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ
வெள் அரா மிளிர வாங்கும் 20
பிள்ளை எண்கின் மலை வயினானே

#258 குறிஞ்சி பரணர்
நன்னன் உதியன் அரும் கடி பாழி
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள்
துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை 5
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து
மாய இருள் அளை மாய் கல் போல
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி 10
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வர
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக
காமம் கைம்மிக உறுதர
ஆனா அரு படர் தலைத்தந்தோயே 15

#259 பாலை கயமனார்
வேலும் விளங்கின இளையரும் இயன்றனர்
தாரும் தையின தழையும் தொடுத்தன
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து
குறு முறி ஈன்றன மரனே நறு மலர் 5
வேய்ந்தன போல தோன்றி பல உடன்
தேம் பட பொதுளின பொழிலே கானமும்
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்
பால் என பரத்தரும் நிலவின் மாலை
போது வந்தன்று தூதே நீயும் 10
கலங்கா மனத்தை ஆகி என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி
தெற்றி உலறினும் வயலை வாடினும்
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனி நின் நயந்த 15
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னும் தோய்க நின் முலையே

#260 நெய்தல் மோசி கரையனார்
மண்டிலம் மழுக மலை நிறம் கிளர
வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை
கண்டல் கானல் குருகு_இனம் ஒலிப்ப
திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய 5
செக்கர் தோன்ற துணை புணர் அன்றில்
எக்கர் பெண்ணை அக மடல் சேர
கழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனை
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ
எல்லை பைப்பய கழிப்பி எல் உற 10
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள்
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
அன்பு இலாளன் அறிவு நயந்தேனே 15

#261 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ காண்வர
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர்
தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல்
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக 5
சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி
ஏகு என ஏகல் நாணி ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய்
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு 10
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை
அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே 15

#262 குறிஞ்சி பரணர்
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி
பகடு பல பூண்ட உழவு-உறு செம் செய்
இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது 5
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன்
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர் 10
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும் 15
வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன்
கொண்டல் மா மலை நாறி
அம் தீம் கிளவி வந்த மாறே

#263 பாலை கருவூர் கண்ணம்பாளனார்
தயங்கு திரை பெரும் கடல் உலகு தொழ தோன்றி
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்ப பாஅய் நன் நிலம்
பயம் கெட திருகிய பைது அறு காலை
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு 5
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார்
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ 10
ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க
இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே 15

#264 முல்லை உம்ப காட்டு இளங்கண்ணனார்
மழை இல் வானம் மீன் அணிந்து அன்ன
குழை அமல் முசுண்டை வாலிய மலர
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூ
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு 5
நீர் திகழ் கண்ணியர் ஊர்-வயின் பெயர்தர
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி
கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர் 10
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடை
காய் சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர இறுத்த தானை
வெம் சின வேந்தன் பாசறையோரே 15

#265 பாலை மாமூலனார்
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை 5
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி
நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல்
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து
ஒண் தொடி நெகிழ சாஅய் செல்லலொடு 10
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய
நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து
அணங்கு அரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க 15
துகள் அற விளைந்த தோப்பி பருகி
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர் பூசா வாயர்
ஒராஅ உருட்டும் குடுமி குராலொடு
மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும் 20
செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ
வெம் முனை அரும் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதா தூக்கிய பொருளே

#266 மருதம் பரணர்
கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின்
அந்தி பராஅய புது புனல் நெருநை
மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்
இளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇ 5
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண்
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து
ஆடினை என்ப மகிழ்ந அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் 10
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது 15
அவலம் அன்று-மன் எமக்கே அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய் 20
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே

#267 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து
அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை 5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை
மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர
மை பட்டு அன்ன மா முக முசு இனம்
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென 10
வெதிர் படு வெண்ணெல் வெ அறை தாஅய்
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர் அல்லர் நாளும்
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை 15
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த
தோளே தோழி தவறு உடையவ்வே

#268 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
அறியாய் வாழி தோழி பொறி வரி
பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த
குருதி செம் களம் புலவு அற வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய 5
காமம் கலந்த காதல் உண்டு எனின்
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி
நாணும் நட்பும் இல்லோர் தேரின்
யான் அலது இல்லை இ உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது 10
முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே

#269 பாலை மதுரை மருதன் இளநாகனார்
தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க
நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக
ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார் 5
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் 10
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் 15
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப
வண்டல் பாவை உண்துறை தரீஇ
திரு நுதல் மகளிர் குரவை அயரும் 20
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கை
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின்
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த
ஒண் செங்கழுநீர் அன்ன நின்
கண் பனி துடை-மார் வந்தனர் விரைந்தே 25

#270 நெய்தல் சாகலாசனார்
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்
புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும்
மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை 5
பராஅரை புன்னை வாங்கு சினை தோயும்
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே
கொய் சுவல் புரவி கைவண் கோமான்
நல் தேர் குட்டுவன் கழுமலத்து அன்ன
அம் மா மேனி தொல் நலம் தொலைய 10
துஞ்சா கண்ணள் அலமரும் நீயே
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை
சேவலொடு புணரா சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே 15

#271 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
பொறி வரி புறவின் செம் கால் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி 5
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு
நிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினே 10
வல்வது ஆக நும் செய்_வினை இவட்கே
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும்
பழம் தூங்கு விடர்_அகத்து எழுந்த காம்பின்
கண் இடை புரையும் நெடு மென் பணை தோள் 15
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே

#272 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்து
புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல்
அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க 5
தனியன் வந்து பனி அலை முனியான்
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பை 10
குறி இறை குரம்பை நம் மனை-வயின் புகுதரும்
மெய் மலி உவகையன் அ நிலை கண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவ செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேள் பரவும் அன்னை அன்னோ 15
என் ஆவது-கொல் தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே

#273 பாலை ஔவையார்
விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ
ஆர்கலி வள-வயின் போதொடு பரப்ப
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்
நலம் கவர் பசலை நலியவும் நம் துயர் 5
அறியார்-கொல்லோ தாமே அறியினும்
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு
தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு 10
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை
ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி
புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம் 15
நில வரை எல்லாம் நிழற்றி
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே

#274 முல்லை இடை காடனார்
இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து
இகு பெயல் அழி துளி தலைஇ வானம்
பருவம் செய்த பானாள் கங்குல்
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி 5
திண் கால் உறியன் பானையன் அதளன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ 10
முள் உடை குறும் தூறு இரிய போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே

#275 பாலை கயமனார்
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி
இளமை தகைமையை வள மனை கிழத்தி
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என 5
யாம் தன் கழறும்-காலை தான் தன்
மழலை இன் சொல் கழறல் இன்றி
இன் உயிர் கலப்ப கூறி நல்_நுதல்
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்
ஏதிலாளன் காதல் நம்பி 10
திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ
குருளை எண்கின் இரும் கிளை கவரும்
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய
இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம்
நெருநை போகிய பெரு மட தகுவி 15
ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும்
கூழை நொச்சி கீழது என் மகள்
செம் புடை சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ கண் உடையீரே

#276 மருதம் பரணர்
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சி பைபய
கடி இலம் புகூஉம் கள்வன் போல
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு 5
ஆவது ஆக இனி நாண் உண்டோ
வருக தில் அம்ம எம் சேரி சேர
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண
தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல 10
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன்
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு-உற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்
பரந்து வெளிப்படாது ஆகி
வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே 15

#277 பாலை கருவூர் நன்மார்பன்
தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய்
பகல் அழி தோற்றம் போல பையென
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார்
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கடையல் அம் குரல வாள் வரி உழுவை 5
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்
சிறு கண் பன்றி வரு_திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை
பொத்து உடை மரத்த புகர் படு நீழல் 10
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின்
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய்
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறன் உடை சேவல் 15
போர் புரி எருத்தம் போல கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம தானே
வாரார் தோழி நம் காதலோரே 20

#278 குறிஞ்சி
குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படை தானை
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி
உரும் உரறு அதிர் குரல் தலைஇ பானாள் 5
பெரு மலை மீமிசை முற்றின ஆயின்
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை
இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி
வருவது மாதோ வண் பரி உந்தி
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை 10
பனி பொரு மழை கண் சிவப்ப பானாள்
முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய
தணிவு அரும் துயரம் செய்தோன்
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே 15

#279 பாலை இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர் என 5
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா நாளும்
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை 10
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி 15
கையறு நெஞ்சினள் அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே

#280 நெய்தல் அம்மூவனார்
பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி
பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள்
நலம் சால் விழு பொருள் கலம் நிறை கொடுப்பினும் 5
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும்
பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின் 10
தருகுவன்-கொல்லோ தானே விரி திரை
கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்
தேன் இமிர் அகன் கரை பகுக்கும்
கானல் அம் பெரும் துறை பரதவன் எமக்கே

#281 பாலை மாமூலனார்
செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை 5
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து 10
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே

#282 குறிஞ்சி தொல் கபிலன்
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப 5
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார்
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு 10
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்
சாய் இறை திரண்ட தோள் பாராட்டி
யாயும் அவனே என்னும் யாமும் 15
வல்லே வருக வரைந்த நாள் என
நல் இறை மெல் விரல் கூப்பி
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே

#283 பாலை மதுரை மருதன் இளநாகனார்
நன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி
சில் உணா தந்த சீறூர் பெண்டிர் 5
திரி-வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும்
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமை கரி மரம்
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி 10
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்க
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என
புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து
ஊட்டு-உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப 15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே

#284 முல்லை இடைக்காடனார்
சிறியிலை நெல்லி காய் கண்டு அன்ன
குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி
இன் துயில் எழுந்து துணையொடு போகி 5
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன்_புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்
விசைத்த வில்லர் வேட்டம் போகி
முல்லை படப்பை புல்வாய் கெண்டும் 10
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே

#285 பாலை காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று
ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர்
காடு தேர் மட பிணை அலற கலையின் 5
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி
இரும் புலி வேங்கை கரும் தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி 10
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே காதலர்
வாராய் தோழி முயங்குகம் பலவே 15

#286 மருதம் ஓரம்போகியார்
வெள்ளி விழு தொடி மென் கருப்பு உலக்கை
வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி
ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த 5
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர
விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி 10
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர் தெரியும்-காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன 15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே

#287 பாலை குடவாயிற்கீரத்தனார்
தொடி அணி முன்கை தொகு விரல் குவைஇ
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை
மரை ஏறு சொறிந்த மா தாள் கந்தின்
சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர் 5
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க 10
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்கு-உறு வரி நிழல் அசையினம் நோக்க
அரம்பு வந்து அலைக்கும் மாலை
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே

#288 குறிஞ்சி விற்றூற்று மூதெயினனார்
செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை
சாரல் வேங்கை படு சினை புது பூ
முருகு முரண் கொள்ளும் உருவ கண்ணியை
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் 5
எவ்வம் கூரிய வைகலும் வருவோய்
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணி
கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி 10
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும்
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அற 15
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்
அம் தீம் கிளவி தந்தை காப்பே

#289 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும்
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும் 5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும் உயவும் ஆய் மட தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி 10
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
பகு வாய் பல்லி படு-தொறும் பரவி 15
நல்ல கூறு என நடுங்கி
புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே

#290 நெய்தல் நக்கீரர்
குடுமி கொக்கின் பைம் கால் பேடை
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய
கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர்
நுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு என
அல்கு-உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது 5
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும்
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன்
கழி சேர் புன்னை அழி பூ கானல்
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் 10
மணவா முன்னும் எவனோ தோழி
வெண் கோட்டு யானை விறல் போர் குட்டுவன்
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை
சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ 15
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே

#291 பாலை பாலை பாடிய பெரும் கடுங்கோ
வானம் பெயல் வளம் கரப்ப கானம்
உலறி இலை இல ஆக பல உடன்
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி 5
புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு
உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல்
சிறு பல் மின்மினி கடுப்ப எ வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர் 10
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப
பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர
உவலை சூடிய தலையர் கவலை
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும்
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர 15
சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி
மறு மருப்பு இளம் கோடு அதிர கூஉம் 20
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே போது என
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்
நல் எழில் மழை கண் நம் காதலி
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே 25

#292 குறிஞ்சி கபிலர்
கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து
அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறி
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ
மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறி புரி
ஏதில் வேலன் கோதை துயல்வர 5
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானை
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள்
வரை இடை கழுதின் வன் கை கானவன் 10
கடு விசை கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி சாரல்
வேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉ
பலவின் பழத்துள் தங்கும்
மலை கெழு நாடன் மணவா-காலே 15

#293 பாலை காவன்முல்லை பூதனார்
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்து அனைய ஆக பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்
துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெம் களரி 5
குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி
உகாஅ மென் சினை உதிர்வன கழியும்
வேனில் வெம் சுரம் தமியர் தாமே
செல்ப என்ப தோழி யாமே 10
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து
இன்னா மொழிதும் என்ப
என் மயங்கினர்-கொல் நம் காதலோரே

#294 முல்லை கழார்க்கீரன் எயிற்றியார்
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி
துள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உற
புள்ளி நுண் துவலை பூ அகம் நிறைய
காதலர் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலர 5
துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரை பைம் பூ பயில அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச 10
சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள்
காய் சின வேந்தன் பாசறை நீடி
நம் நோய் அறியா அறன் இலாளர்
இ நிலை களைய வருகுவர்-கொல் என
ஆனாது எறிதரும் வாடையொடு 15
நோனேன் தோழி என் தனிமையானே

#295 பாலை மாமூலனார்
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி
வேங்கை வென்ற வெருவரு பணை தோள் 5
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி
பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும்
கல் உடை அதர கானம் நீந்தி
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து 10
அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்
புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து
நடை அரும் கானம் விலங்கி நோன் சிலை
தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர் 15
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண் 20
மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே

#296 மருதம் மதுரை பேராலவாயார்
கோதை இணர குறும் கால் காஞ்சி
போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல்
அரி மதர் மழை கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடி 5
புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின்
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்
பன் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும்
பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல் 10
கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன்
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே

#297 பாலை மதுரை மருதன் இளநாகனார்
பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும்
ஆனா நோயொடு அழி படர் கலங்கி
நம்-வயின் இனையும் இடும்பை கைம்மிக
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின்
இரும் கவின் இல்லா பெரும் புன் தாடி 5
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் 10
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்
நீர் முள் வேலி புலவு நாறு முன்றில்
எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் 15
சிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்கு
எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம் நம்மொடு
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே

#298 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை 5
தண் துளி அசை வளி தைவரும் நாட
கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது
இரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் 10
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி
தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண்
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர் எந்தை 15
கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள்
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு
இனையல் வாழி தோழி நம் துறந்தவர் 20
நீடலர் ஆகி வருவர் வல்லென
கங்குல் உயவு துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே

#299 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
எல்லையும் இரவும் வினை-வயின் பிரிந்த
முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை 5
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு
விசும்பு கண் புதைய பாஅய் பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய்
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்
செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என 10
வைகு நிலை மதியம் போல பையென
புலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்த
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப 15
கால் நிலை செல்லாது கழி படர் கலங்கி
நா நடுக்கு-உற்ற நவிலா கிளவியொடு
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா
பருவரல் எவ்வமொடு அழிந்த 20
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே

#300 நெய்தல் உலோச்சனார்
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை
எல்லை தண் பொழில் சென்று என செலீஇயர் 5
தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல்
செறி தொடி திருத்தி பாறு மயிர் நீவி
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து
தீம் ஆயினள் இவள் ஆயின் தாங்காது 10
நொதுமலர் போல பிரியின் கதுமென
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால்
சேணின் வருநர் போல பேணா
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின்
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ 15
துறையும் மான்றன்று பொழுதே சுறவும்
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என
எமர் குறை கூற தங்கி ஏமுற
இளையரும் புரவியும் இன்புற நீயும் 20
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே

#301 பாலை அதியன் விண்ணத்தனார்
வறன்-உறு செய்யின் வாடுபு வருந்தி
படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி
நல்குநர் ஒழித்த கூலி சில் பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு 5
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை
சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர 10
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ
முளரி தீயின் முழம் அழல் விளக்கத்து
களரி ஆவிரை கிளர் பூ கோதை
வண்ண மார்பின் வன முலை துயல்வர 15
செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன
குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும்
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு 20
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென
தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர்
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் காணின் வழி நாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் 25
அதுவே மருவினம் மாலை அதனால்
காதலர் செய்த காதல்
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே

#302 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும்
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்
பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் 5
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல் 10
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே 15

#303 பாலை ஔவையார்
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து
பேஎய் கண்ட கனவின் பன் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்
மறம் மிகு தானை பசும் பூண் பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை 5
மா இரும் கொல்லி உச்சி தாஅய்
ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர்
புலம் கந்து ஆக இரவலர் செலினே
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் 10
நிரை பறை குரீஇ இனம் காலை போகி
முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி பொழுது பட
படர் கொள் மாலை படர்தந்து ஆங்கு
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் 15
ஐயம் தெளியரோ நீயே பல உடன்
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர்
வழி நடை சேறல் வலித்திசின் யானே 20

#304 முல்லை இடைக்காடனார்
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று
குரூஉ துளி பொழிந்த பெரும் புலர் வைகறை 5
செய்து விட்டு அன்ன செம் நில மருங்கில்
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய 10
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்
மணி மிடை பவளம் போல அணி மிக
காயாம் செம்மல் தாஅய் பல உடன்
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப 15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர் நம் அருளாதோர் என
நம் நோய் தன்-வயின் அறியாள் 20
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே

#305 பாலை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
பகலினும் அகலாது ஆகி யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை 5
பருகு அன்ன காதலொடு திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ
அருள் இலாளர் பொருள்-வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து 10
யான் எவன் உளனோ தோழி தானே
பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய்
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லென
கனை எரி பிறப்ப ஊதும் 15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே

#306 மருதம் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ
பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய
முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் 5
கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல் உடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி 10
இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி
தண் நறும் கமழ் தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து எம்
மணல் மலி மறுகின் இறந்திசினோளே 15

#307 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்
சிறு நுதல் பசந்து பெரும் தோள் சாஅய்
அகல் எழில் அல்குல் அம் வரி வாட
பகலும் கங்குலும் மயங்கி பையென
பெயல் உறு மலரின் கண் பனி வார
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து 5
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து
இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை
பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும் 10
புற்று உடை சுவர புதல் இவர் பொதியில்
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து
உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும் புறா பெடையொடு பயிரும்
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே 15

#308 குறிஞ்சி பிசிராந்தையார்
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை
வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின்
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ 5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட
இரவின் வருதல் எவனோ பகல் வரின்
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தா கல் முகை இதணத்து
சிறுதினை படு கிளி எம்மொடு ஓப்பி 10
மல்லல் அறைய மலிர் சுனை குவளை
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணை துஞ்சி பொழுது பட
காவலர் கரந்து கடி புனம் துழைஇய
பெரும் களிற்று ஒருத்தலின் பெயர்குவை 15
கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே

#309 பாலை கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்
வய வாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய் 5
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை
களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார் கோடியர்
பெரும் படை குதிரை நல் போர் வானவன் 10
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு
நாம் செலின் எவனோ தோழி காம்பின்
வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது
இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம் 15
தண் பெரும் படாஅர் வெரூஉம்
குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டே

#310 நெய்தல் நக்கீரனார்
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து
பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின்
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு 5
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும்
தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெரு மடம் உடையரோ சிறிதே அதனால்
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப 10
இன்று இவண் விரும்பாதீமோ சென்று அ
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து 15
உரும் இசை புணரி உடைதரும்
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே

#311 பாலை மாமூலனார்
இரும் பிடி பரிசிலர் போல கடை நின்று
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை
எழுதி அன்ன திண் நிலை கதவம்
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என
திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர் 5
இம்மை உலகத்து இல் என பன் நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப
வரு வழி வம்பலர் பேணி கோவலர்
மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி 10
செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும்
புல்லி நன் நாட்டு உம்பர் செல் அரும்
சுரம் இறந்து ஏகினும் நீடலர்
அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே

#312 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி
இரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது 5
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி
வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார் 10
ஓடு புறம் கண்ட தாள் தோய் தட கை
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போல
கொடி பட மின்னி பாயின்றால் மழையே

#313 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என
அணி கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும்
குளித்து பொரு கயலின் கண் பனி மல்க
ஐய ஆக வெய்ய உயிரா 5
இரவும் எல்லையும் படர் அட வருந்தி
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய
பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து
வருவர் வாழி தோழி பெரிய 10
நிதியம் சொரிந்த நீவி போல
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை
நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி
ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல 15
இல்-வழி படூஉம் காக்கை
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே

#314 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
நீலத்து அன்ன நீர் பொதி கருவின்
மா விசும்பு அதிர முழங்கி ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப
மறி உடை மட பிணை தழீஇ புறவின் 5
திரி மருப்பு இரலை பைம் பயிர் உகள
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி
கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன்
வாய் செல வணக்கிய தா பரி நெடும் தேர் 10
ஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடை
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப
இ நிலை வாரார் ஆயின் தம் நிலை
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என
கடவுள் கற்பின் மடவோள் கூற 15
செய்_வினை அழிந்த மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல் தீர வந்தோய்
இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி
வேலி சுற்றிய வால் வீ முல்லை
பெரும் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின் 20
இன் நகை இளையோள் கவவ
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே

#315 பாலை குடவாயில் கீரத்தனார்
கூழையும் குறு நெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண்
கண் துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும் 5
அறியாமையின் செறியேன் யானே
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அரும் கடி வியல் நகர் சிலம்பும் கழியாள்
சேண் உற சென்று வறும் சுனை ஒல்கி
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி 10
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப
வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமென
கூர் வேல் விடலை பொய்ப்ப போகி
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின் 15
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே

#316 மருதம் ஓரம்போகியார்
துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து 5
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள்
ஊர் கொள்கல்லா மகளிர் தர_தர
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ 10
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை
அது புலந்து உறைதல் வல்லியோரே
செய்யோள் நீங்க சில் பதம் கொழித்து
தாம் அட்டு உண்டு தமியர் ஆகி
தே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்ப 15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்
அறியார் அம்ம அஃது உடலுமோரே

#317 பாலை வடமோதம் கிழார்
மாக விசும்பின் மழை தொழில் உலந்து என
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் 5
முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப
பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து 10
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்
மரன் ஏமுற்ற காமர் வேனில்
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து 15
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம் என்ற பருவம் ஆண்டை
இல்லை-கொல் என மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல 20
வந்து நின்றனரே காதலர் நம் துறந்து
என் உழியது-கொல் தானே பன் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நன் நுதல் பாஅய பசலை நோயே

#318 குறிஞ்சி கபிலர்
கான மான் அதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமு நனி உரறும்
அரவும் புலியும் அஞ்சு_தகவு உடைய
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
வரை இழி அருவி பாட்டொடு பிரசம் 5
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழ விறல் நனம் தலை பய மலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்று தலையாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய 10
என் கண்டு பெயரும்-காலை யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே 15

#319 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர்
படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை 5
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை
பொன் வீ வேங்கை புது மலர் புரைய
நன் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின் 10
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய் குழை
தளிர் ஏர் அன்ன தாம் அரு மதுகையள்
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள்
செல்வேம் என்னும் நும் எதிர் 15
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே

#320 நெய்தல் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
ஓங்கு திரை பரப்பின் வாங்கு விசை கொளீஇ
திமிலோன் தந்த கடுங்கண் வய மீன்
தழை அணி அல்குல் செல்வ தங்கையர்
விழவு அயர் மறுகின் விலை என பகரும்
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப 5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும்
நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்
தடவு நிலை புன்னை தாது அணி பெரும் துறை 10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடும் தேர்
வண்டல் பாவை சிதைய வந்து நீ
தோள் புதிது உண்ட ஞான்றை
சூளும் பொய்யோ கடல் அறி கரியே

#321 பாலை கயமனார்
பசித்த யானை பழங்கண் அன்ன
வறும் சுனை முகந்த கோடை தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்ப
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு
குதிர் கால் இருப்பை வெண் பூ உண்ணாது 5
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை
படு மணி இன நிரை உணீஇய கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்
கன்று உடை மட பிடி களிறொடு தடவரும்
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர் 10
துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ
கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு
எல்லி முன் உற செல்லும்-கொல்லோ
எ வினை செயும்-கொல் நோகோ யானே
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ 15
யாய் அறிவுறுதல் அஞ்சி
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே

#322 குறிஞ்சி பரணர்
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர
பாம்பு எறி கோலின் தமியை வைகி 5
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்
ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி 10
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல்
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமை
புகல் அரும் பொதியில் போல
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே 15

#323 பாலை பறநாள் பெருங்கொற்றனார்
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின்
செய்வோர் ஏ சொல் வாட காதலர்
வருவர் என்பது வாய்வது ஆக
ஐய செய்ய மதன் இல சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சி பைய 5
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி
காணிய வம்மோ கற்பு மேம்படுவி
பலவு பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து
யானை செல் இனம் கடுப்ப வானத்து
வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின் 10
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு
ஆலி அழி துளி தலைஇ
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே

#324 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்
விருந்தும் பெறுகுநள் போலும் திருந்து இழை
தட மென் பணை தோள் மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
வளரா பிள்ளை தூவி அன்ன
வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில் 5
பறை கண் அன்ன நிறை சுனை-தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சால
தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய
வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்-கண் வரித்த 10
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக
செல்லும் நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே 15

#325 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி காதலர்
வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர்
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது 5
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள்
அள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம் 10
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல்
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலி-உறீஇ 15
எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலை போகி 20
ஒழிய சென்றோர் மன்ற
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே

#326 மருதம் பரணர்
ஊரல் அம் வாய் உருத்த தித்தி
பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல்
நல்லள் அம்ம குறு_மகள் செல்வர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில் 5
இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன
நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
இழை அணி யானை சோழர் மறவன்
கழை அளந்து அறியா காவிரி படப்பை 10
புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல் போல்
பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே

#327 பாலை மருங்கூர் பாகை சாத்தன் பூதனார்
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன் பகல் அமையமும் இரவும் போல
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெம் சுரம் நன் நசை துரப்ப 5
துன்னலும் தகுமோ துணிவு இல் நெஞ்சே
நீ செல வலித்தனை ஆயின் யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
ஆவி அம் வரி நீர் என நசைஇ
மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை 10
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின்
அம் வரி உரிவை அணவரும் மருங்கின்
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த
மை நிற உருவின் மணி கண் காக்கை 15
பைம் நிணம் கவரும் படு பிண கவலை
சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர்
கோல் கழிபு இரங்கும் அதர
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே

#328 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்
முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைம் தலை இடறி பானாள்
இரவின் வந்து எம் இடை முலை முயங்கி 5
துனி கண் அகல வளைஇ கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம்
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு 10
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று
கழை தின் யாக்கை விழை களிறு தைவர
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே 15

#329 பாலை உறையூர் முதுகூத்தனார்
பூ கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அம் குடி சீறூர்
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர் 5
கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகை
பகடு அயா கொள்ளும் வெம் முனை துகள் தொகுத்து
எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து
ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை 10
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்
புலி புக்கு ஈனும் வறும் சுனை
பனி படு சிமைய பல் மலை இறந்தே

#330 நெய்தல் உலோச்சனார்
கழி பூ குற்றும் கானல் அல்கியும்
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும்
இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும்
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர்
அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு 5
செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன்
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்று-கொல்லோ தானே எய்தியும்
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ 10
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண் மணல் குவவு மிசையானும்
எக்கர் தாழை மடல்-வயினானும்
ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
சிறுகுடி பரதவர் பெரும் கடல் மடுத்த 15
கடும் செலல் கொடும் திமில் போல
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே

#331 பாலை மாமூலனார்
நீடு நிலை அரைய செம் குழை இருப்பை
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
பைம் குழை தழையர் பழையர் மகளிர் 5
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய
சென்றோர் அன்பு இலர் தோழி என்றும்
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ் 10
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்த
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே

#332 குறிஞ்சி கபிலர்
முளை வளர் முதல மூங்கில் முருக்கி
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய
பொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனை
குருதி செம் கோட்டு அழி துளி கழாஅ 5
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரை தக்க சாயலன் என நீ 10
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடை படாஅ முயக்கமும்
தண்டா காதலும் தலை நாள் போன்மே 15

#333 பாலை கல்லாடனார்
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின் 5
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள்
வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி
நீடலர் வாழி தோழி கோடையில்
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது
தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய 10
வேனில் வெளிற்று பனை போல கை எடுத்து
யானை பெரு நிரை வானம் பயிரும்
மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து
நாள் இடைப்படாமை வருவர் நமர் என
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாது 15
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக
வருவர் ஆயினோ நன்றே வாராது
அவணர் காதலர் ஆயினும் இவண் நம்
பசலை மாய்தல் எளிது-மன் தில்ல
சென்ற தேஎத்து செய்_வினை முற்றி 20
மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே

#334 முல்லை மதுரை கூத்தனார்
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெரும் களிற்று தட கை புரைய கால் வீழ்த்து 5
இரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி
பெயல் தொடங்கின்றால் வானம் வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப 10
நால் உடன் பூண்ட கால் நவில் புரவி
கொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராது
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ் 15
பொலிவன அமர்த்த உண்கண்
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே

#335 பாலை மதுரை தத்தம் கண்ணனார்
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென்-மன்னே யானை தன்
கொல் மருப்பு ஒடிய குத்தி சினம் சிறந்து 5
இன்னா வேனில் இன் துணை ஆர
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம்
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார்
ஆடு கொள் முரசின் அடு போர் செழியன் 10
மாட மூதூர் மதில் புறம் தழீஇ
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால்
தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த
குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின்
பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு 15
வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய
நாள் உற தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத்து அன்ன அணி கிளர் புது பூ
வார்-உறு கவரியின் வண்டு உண விரிய
முத்தின் அன்ன வெள் வீ தாஅய் 20
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக
பூவொடு வளர்ந்த மூவா பசும் காய்
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று
அமிழ்தம் ஊறும் செம் வாய் 25
ஒண் தொடி குறு_மகள் கொண்டனம் செலினே

#336 மருதம் பாவை கொட்டிலார்
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை
பாசி பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின் 5
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்
காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன் 10
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
ஏசுப என்ப என் நலனே அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின
கொல் களிற்று யானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர் போல் சேறல் 15
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின் வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் சோழர் 20
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை
ஆரியர் படையின் உடைக என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே

#337 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனி
பேர் அமர் மழை கண் புலம் கொண்டு ஒழிய
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின்
அவணது ஆக பொருள் என்று உமணர் 5
கண நிரை அன்ன பல் கால் குறும் பொறை
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை
படை உடை கையர் வரு_திறம் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே 10
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர
கொடி விடு குருதி தூங்கு குடர் கறீஇ
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை 15
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை
கள்ளி நீழல் கதறு வதிய
மழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடை
எமியம் கழிதந்தோயே பனி இருள்
பெரும் கலி வானம் தலைஇய 20
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே

#338 குறிஞ்சி மதுரை கணக்காயனார்
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்
பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன் 5
அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன்
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்
துணை ஈர் ஓதி மாஅயோள்-வயின்
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும் 10
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன்
அகல் இரும் கானத்து கொல்லி போல
தவாஅலியரோ நட்பே அவள்-வயின் 15
அறாஅலியரோ தூதே பொறாஅர்
விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள்
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து
வழங்கல் ஆனா பெரும் துறை 20
முழங்கு இரு முந்நீர் திரையினும் பலவே

#339 பாலை நரை முடி நெட்டையார்
வீங்கு விசை பிணித்த விரை பரி நெடும் தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றால் பொழுதே முற்பட 5
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்க காமம் தட்ப
கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய
இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி
ஒரு தலை படாஅ உறவி போன்றனம் 10
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவு அரியோளே

#340 நெய்தல் நக்கீரர்
பன் நாள் எவ்வம் தீர பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி
மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்பு-உறுதல் ஒழிக தில் அம்ம 5
செல்லா நல் இசை பொலம் பூண் திரையன்
பல் பூ கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் 10
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என
நின் திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே 15
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர்
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் 20
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு
முன்றில் தாழை தூங்கும்
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே

#341 பாலை ஆவூர் மூலங்கிழார்
உய் தகை இன்றால் தோழி பைபய
கோங்கும் கொய் குழை உற்றன குயிலும்
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள் 5
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல்
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி
குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர்
பொன் தகை நுண் தாது உறைப்ப தொக்கு உடன் 10
குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும்
யாணர் வேனில்-மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே

#342 குறிஞ்சி மதுரை கணக்காயனார்
ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் 5
ஆ கொள் மூதூர் களவர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட
பல் செரு கடந்த செல் உறழ் தட கை
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ 10
நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அம்
வரை அர_மகளிரின் அரியள்
அம் வரி அல்குல் அணையா-காலே

#343 பாலை மதுரை மருதன் இளநாகனார்
வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள்
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் 5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை 10
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார்
நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை
புறம் நிறை பண்டத்து பொறை அசாஅ களைந்த
பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று 15
உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண்
சின் மொழி பொலிந்த துவர் வாய்
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே

#344 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வள மழை பொழிந்த வால் நிற களரி
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என
தொகு முகை விரிந்த முட கால் பிடவின்
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர்
கை மாண் தோணி கடுப்ப பையென 5
மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடை உறாஅ அளவை வல்லே
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க
நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரி புரவி
வயக்கு-உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து 10
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ
பயப்பு உறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே

#345 பாலை குடவாயில் கீரத்தனார்
விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கி
தண் பதம் படுதல் செல்க என பன் மாண்
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ்
கான்_அமர்_செல்வி அருளலின் வெண் கால்
பல் படை புரவி எய்திய தொல் இசை 5
நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழில் குன்றத்து
கரும் கால் வேங்கை செம் பூ பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
சின் நாள் கழிக என்று முன்_நாள் 10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார்
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப
உறை கழிந்து உலந்த பின்றை பொறைய
சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த 15
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ
செம் மணல் சிறு நெறி கம்மென வரிப்ப
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
கல் கண் சீக்கும் அத்தம் 20
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே

#346 மருதம் நக்கீரர்
நகை நன்று அம்ம தானே இறை மிசை
மாரி சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறை சேவல்
வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் 5
காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை
மென் கழை கரும்பின் நன் பல மிடைந்து
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்தி கொண்ட வல் வாய் கொடும் சிறை
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய 10
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப
மகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்தி 15
எம் மனை வாராய் ஆகி முன்_நாள்
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனை
குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர்
இழை அணி யானை பழையன்மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் 20
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளிவளவன் நல் அமர் சாஅய்
கடும் பரி புரவியொடு களிறு பல வவ்வி
ஏதில் மன்னர் ஊர் கொள
கோதைமார்பன் உவகையின் பெரிதே 25

#347 பாலை மாமூலனார்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய
சால் பெரும் தானை சேரலாதன்
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்ன 5
கவ்வை தூற்றும் வெவ் வாய் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய
சென்றனர் ஆயினும் செய்_வினை அவர்க்கே
வாய்க்க தில் வாழி தோழி வாயாது
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து 10
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு
கெடு மக பெண்டிரின் தேரும் 15
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே

#348 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
என் ஆவது-கொல் தானே முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி
பயிர்ப்பு உறு பலவின் எதிர் சுளை அளைஇ
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் 5
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல்
பாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டு
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர்
முறி தழை மகளிர் மடுப்ப மாந்தி
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து-உழி 10
யானை வவ்வின தினை என நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நன் மொழி தேறிய நெஞ்சே

#349 பாலை மாமூலனார்
அரம் போழ் அம் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய
எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே 5
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள
திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை 10
எரி மருள் கவளம் மாந்தி களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே

#350 நெய்தல் சேந்தன் கண்ணனார்
கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப
எறி திரை ஓதம் தரல் ஆனாதே
துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின்
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே 5
கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி
வடி மணி நெடும் தேர் பூண ஏவாது
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி 10
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென
கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண்
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே 15

#351 பாலை பொருந்தில் இளங்கீரனார்
வேற்று நாட்டு உறையுள் விருப்பு-உற பேணி
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற 5
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை
அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில்
புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம்
மறுதரல் உள்ளமொடு குறுக தோற்றிய
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி 10
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண்
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்து அணை மீது பொருந்து-உழி கிடக்கை
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என 15
உள்ளு-தொறு படூஉம் பல்லி
புள்ளு தொழுது உறைவி செவி முதலானே

#352 குறிஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார்
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளை தலைவன் கல்லா கடுவன்
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆக கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை 5
முழவன் போல அகப்பட தழீஇ
இன் துணை பயிரும் குன்ற நாடன்
குடி நன் உடையன் கூடுநர் பிரியலன்
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் 10
நல்லை காண் இனி காதல் அம் தோழீஇ
கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும் 15
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே

#353 பாலை மதுரை அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார்
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும்
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும்
கனவு கழிந்து அனைய ஆகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் 5
இ நிலை அறியாய் ஆயினும் செம் நிலை
அமை ஆடு அம் கழை தீண்டி கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல
கடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டு 10
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து 15
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பி தண்ணென
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி 20
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதி புனை_இழை குணனே

#354 முல்லை மதுரை தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார்
மத வலி யானை மறலிய பாசறை
இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
கறவை பல் இனம் புறவு-தொறு உகள
குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து 5
இளையர் ஏகுவனர் பரிய விரி உளை
கடு நடை புரவி வழிவாய் ஓட
வலவன் வள்பு வலி உறுப்ப புலவர்
புகழ் குறி கொண்ட பொலம் தார் அகலத்து
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய 10
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீது இலாட்டி திரு நுதல் பசப்பே

#355 பாலை தங்கால் பொற்கொல்லனார்
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்
மூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை
வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் 5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்
தாது உகு தண் பொழில் அல்கி காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி 10
புலந்தனம் வருகம் சென்மோ தோழி
யாமே எமியம் ஆக நீயே
பொன் நயந்து அருள் இலை ஆகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே

#356 மருதம் பரணர்
மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறை
உகு வார் அருந்த பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசி பிணி
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என் 5
பொன் தொடி முன்கை பற்றினன் ஆக
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே
தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் நாவினேன் ஆகி மற்று அது 10
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர்
கடும் பகட்டு யானை சோழர் மருகன்
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார்
கதவம் முயறலும் முயல்ப அதாஅன்று 15
ஒலி பல் கூந்தல் நம்-வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பே 20

#357 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய
தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து 5
புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இரும் கானத்து வழங்கல் செல்லாது
பெரும் களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும்
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல்
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் 10
திருந்து இழை பணை தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்து அன்ன நின் 15
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே

#358 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்
காமர் பீலி ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி
கண் நேர் இதழ தண் நறும் குவளை 5
குறும் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின் அன்னோ 10
என் என உரைக்கோ யானே துன்னிய
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்ப தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே 15

#359 பாலை மாமூலனார்
பனி வார் உண்கணும் பசந்த தோளும்
நனி பிறர் அறிய சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்
நீடினர்-மன்னோ காதலர் என நீ
எவன் கையற்றனை இகுளை அவரே 5
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது
அரும் சுர கவலை அசைஇய கோடியர்
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை 10
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்
பொய்யா நல் இசை மா வண் புல்லி
கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள்
முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை
அருவி துவலையொடு மயங்கும் 15
பெரு வரை அத்தம் இயங்கியோரே

#360 நெய்தல் மதுரை கண்ணத்தனார்
பல் பூ தண் பொழில் பகல் உடன் கழிப்பி
ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன்
குட-வயின் மா மலை மறைய கொடும் கழி
தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்ப 5
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்று இவள்
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் 10
பாணி பிழையா மாண் வினை கலி_மா
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி
நெடும் தேர் அகல நீக்கி பையென
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப 15
இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன் என
நன் மலர் நறு வீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே

#361 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
தூ மலர் தாமரை பூவின் அம் கண்
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் 5
கவவு புலந்து உறையும் கழி பெரும் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்
பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சே
கரியா பூவின் பெரியோர் ஆர 10
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று
சின் மொழி அரிவை தோளே பன் மலை
வெம் அறை மருங்கின் வியன் சுரம் 15
எவ்வம் கூர இறந்தனம் யாமே

#362 குறிஞ்சி வெள்ளிவீதியார்
பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு 5
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின்
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே 10
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்
நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே 15

#363 பாலை மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
நிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇ
அகல் இரு விசும்பில் பகல் செல சென்று
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய
பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரை 5
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப
பொலம் செய் காசின் பொற்ப தாஅம்
அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த
கொலை வெம் கொள்கை கொடும் தொழில் மறவர் 10
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல்
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும்
இன்னா வெம் சுரம் இறந்தோர் முன்னிய 15
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து
எய்த வந்தனரே தோழி மை எழில்
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே

#364 முல்லை மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மாதிரம் புதைய பாஅய் கால்வீழ்த்து
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன
நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன் 5
சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ
முல்லை இல்லமொடு மலர கல்ல
பகு வாய் பைம் சுனை மா உண மலிர
கார் தொடங்கின்றே காலை காதலர்
வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை 10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக
கொலை குறித்து அன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே

#365 பாலை மதுரை மருதன் இளநாகனார்
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை
அத்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானை கதுவாய் வள் உகிர் 5
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர் காணா
என்றூழ் வெம் சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு 10
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரி அரை வேங்கை
தண் கமழ் புது மலர் நாறும்
அம்_சில்_ஓதி ஆய் மட_தகையே 15

#366 மருதம் குடவாயில் கீரத்தனார்
தாழ் சினை மருதம் தகைபெற கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி
கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன்
காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் 5
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர்
தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு
நரை மூதாளர் கை பிணி விடுத்து 10
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன
நலம் பெறு பணை தோள் நன் நுதல் அரிவையொடு
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தன் பிழைத்தமை அறிந்து 15
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே

#367 பாலை பரணர்
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய
முனை உழை இருந்த அம் குடி சீறூர் 5
கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர்
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் 10
கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்ற அம்ம
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல் 15
செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே

#368 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
தொடு தோல் கானவன் சூடு-உறு வியன் புனம்
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய 5
குறும் பொறை அயலது நெடும் தாள் வேங்கை
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் 10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள்
கழியாமையே வழிவழி பெருகி
அம் பணை விளைந்த தே கள் தேறல்
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர் 15
எவன்-கொல் வாழி தோழி கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி_விழவின் அன்ன
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே

#369 பாலை நக்கீரர்
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு
மங்கையர் பல பாராட்ட செம் தார்
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்
சே இழை மகளிர் ஆயமும் அயரா 5
தாழியும் மலர் பல அணியா கேழ் கொள
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்
பாவையும் பலி என பெறாஅ நோய் பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய் 10
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக
கடல் அம் தானை கைவண் சோழர்
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன
நிதி உடை நன் நகர் புதுவது புனைந்து 15
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை
மணி அணி பலகை மா காழ் நெடு வேல்
துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியா தேஎத்து அரும் சுரம் மடுத்த 20
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி
சிறப்பும் சீரும் இன்றி சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ 25
மேயினள்-கொல் என நோவல் யானே

#370 நெய்தல் அம்மூவனார்
வளை வாய் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகல் இலை புன்னை புகர் இல் நீழல்
பகலே எம்மொடு ஆடி இரவே
காயல் வேய்ந்த தேயா நல் இல் 5
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே
வாழலென் என்றி ஆயின் ஞாழல்
வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல் 10
தண் அரும் பைம் தார் துயல்வர அந்தி
கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு
நீயே கானல் ஒழிய யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து
ஆடு_மகள் போல பெயர்தல் 15
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே

#371 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
அம் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி
குறு நெடும் துணைய மறி புடை ஆட
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை 5
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து 10
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே

#372 குறிஞ்சி பரணர்
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண்
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த
அரும் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து 5
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி
நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் 10
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்
பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி
தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர்
கோண் தணி எயிலின் காப்பு சிறந்து 15
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே

#373 பாலை பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
முனை கவர்ந்து கொண்டு என கலங்கி பீர் எழுந்து
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து
பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்ச
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில்
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று 5
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை 10
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்து-உற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து
பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி
மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் 15
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல
துயில் துறந்தனள்-கொல் அளியள் தானே

#374 முல்லை இடைக்காடனார்
மா கடல் முகந்து மாதிரத்து இருளி
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ
போழ்ந்த போல பல உடன் மின்னி
தாழ்ந்த போல நனி அணி வந்து 5
சோர்ந்த போல சொரிவன பயிற்றி
இடியும் முழக்கும் இன்றி பாணர்
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன
இன் குரல் அழி துளி தலைஇ நன் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை 10
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணி மண்டு பவளம் போல காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய
கார் கவின் கொண்ட காமர் காலை 15
செல்க தேரே நல் வலம் பெறுந
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின்
திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொளவே

#375 பாலை இடையன் சேந்தன் கொற்றனார்
சென்று நீடுநர் அல்லர் அவர்-வயின்
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை
அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலை 5
கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்
அத்த எருவை சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல்
எழூஉ திணி தோள் சோழர் பெருமகன் 10
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார்
செம்பு உறழ் புரிசை பாழி நூறி
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி
கொன்ற யானை கோட்டின் தோன்றும் 15
அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்
ஆழல-மன்னோ தோழி என் கண்ணே

#376 மருதம் பரணர்
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
கல்லா யானை கடி புனல் கற்று என
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை
ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண 5
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை
ஒண் பொறி புனை கழல் சே அடி புரள
கரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்று
இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து 10
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ
நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய 15
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை
குரங்கு உளை புரவி குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே

#377 பாலை மாறோக்கத்து காமக்கணி நப்பாலத்தனார்
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறி பட மறுகி
நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல் ஊழ் புக்கு பயன் நிரை கவர 5
கொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய
வரி நிற சிதலை அரித்தலின் புல்லென்று
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் 10
இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
இசை பட பெய்தல் ஆற்றுவோரே 15

#378 குறிஞ்சி காவட்டனார்
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறும் தாது உதிர
காமர் பீலி ஆய் மயில் தோகை 5
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை
கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல
ஆடு கள வயிரின் இனிய ஆலி
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும் 10
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிர
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும் 15
அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி
நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு
அள் இலை பலவின் கனி கவர் கைய 20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்து
பாடு இன் அருவி சூடி
வான் தோய் சிமையம் தோன்றலானே

#379 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய
தெருளாமையின் தீதொடு கெழீஇ
அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே
நினையினை ஆயின் எனவ கேள்-மதி 5
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குல்
கனவின் அற்று அதன் கழிவே அதனால்
விரவு-உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி 10
சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
ஈண் பல் நாற்றம் வேண்டு-வயின் உவப்ப
செய்வு-உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கின் 15
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின்
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி
செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு
உழை புறத்து அன்ன புள்ளி நீழல் 20
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர
ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு
பிடி இடு பூசலின் அடி பட குழிந்த 25
நிரம்பா நீள் இடை தூங்கி
இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே

#380 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும்
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி
முன்_நாள் போகிய துறைவன் நெருநை
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன் 5
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி நல் பாற்று இது என
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே
உது காண் தோன்றும் தேரே இன்றும்
நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது 10
துணிகுவன் போலாம் நாணு மிக உடையன்
வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறு-மதி நீயே

#381 பாலை மதுரை இளங்கௌசிகனார்
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும்
அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் 5
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை
எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி 10
பச்சூன் கொள்ளை சாற்றி பறை நிவந்து
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானை
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய 15
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண
நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை
எதிர் மலர் இணை போது அன்ன தன் 20
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே

#382 குறிஞ்சி கபிலர்
பிறர் உறு விழுமம் பிறரும் நோப
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப 5
அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு
அறிய கூறல் வேண்டும் தோழி
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழும் கோள் பலவின் பழம் புணை ஆக 10
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன்-உறல் அறியா சோலை
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே

#383 பாலை கயமனார்
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ
காடும் கானமும் அவனொடு துணிந்து
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என 5
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய
வினை அமை வரல் நீர் விழு தொடி தத்த
கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு 10
ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும்
ஆர நீர் ஊட்டி புரப்போர்
யார் மற்று பெறுகுவை அளியை நீயே

#384 முல்லை ஒக்கூர் மாசாத்தியார்
இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து என
புரிந்த காதலொடு பெரும் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய்
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் 5
கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல் இயல் அரிவை இல்-வயின் நிறீஇ
இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ 10
உரை-மதி வாழியோ வலவ என தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனை கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளே

#385 பாலை குடவாயில் கீரத்தனார்
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல்
என் ஓர் அன்ன தாயரும் காண
கைவல் யானை கடும் தேர் சோழர்
காவிரி படப்பை உறந்தை அன்ன
பொன் உடை நெடு நகர் புரையோர் அயர 5
நன் மாண் விழவில் தகரம் மண்ணி
யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல் அறை கவாஅன்
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ 10
வளை உடை முன்கை அளைஇ கிளைய
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை
அகல் அமை அல்குல் பற்றி கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்
தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி 15
உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதே

#386 மருதம் பரணர்
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர
நாணினென் பெரும யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி
எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன் 5
நிறை திரள் முழவு தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர்
கணையன் நாணிய ஆங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் 10
சேரியேனே அயல் இலாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை
தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர
நுதலும் கூந்தலும் நீவி
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே 15

#387 பாலை மதுரை மருதன் இளநாகனார்
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய்
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர்
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு
அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர் 5
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்
அம் வரி சிதைய நோக்கி வெம் வினை
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ
வரி புற இதலின் மணி கண் பேடை 10
நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள்
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது 15
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்று ஆங்கு பெயரும் கானம்
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே 20

#388 குறிஞ்சி ஊட்டியார்
அம்ம வாழி தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெம் வாய் தட்டையின்
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளை குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல்
பெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பி 5
ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனம் ஆக
மை ஈர் ஓதி மட நல்லீரே 10
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்து உழி போகல் உறுமோ மற்று என
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட
சொல்லி கழிந்த வல் வில் காளை 15
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என
அன்னை தந்த முது வாய் வேலன்
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் 20
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின்
வினவின் எவனோ மற்றே கனல் சின
மையல் வேழம் மெய் உளம் போக
ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி_வழி ஒற்றி 25
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே

#389 பாலை நக்கீரனார்
அறியாய் வாழி தோழி நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் 5
பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு
அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும்
என் புறந்தந்து நின் பாராட்டி
பல் பூ சேக்கையின் பகலும் நீங்கார்
மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து 10
இரப்போர் ஏந்து கை நிறைய புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர்
சிறு புன் கிளவி செல்லல் பாழ்பட
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல் 15
வானவரம்பன் நன் நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல்
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை 20
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி
வலம் படு வென்றியொடு சிலம்பு_அகம் சிலம்ப
படு மழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே

#390 நெய்தல் அம்மூவனார்
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி
கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள 5
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த
பல் குழை தொடலை ஒல்கு-வயின் ஒல்கி
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும்
அம் வாங்கு உந்தி அமை தோளாய் நின் 10
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என
சிறிய விலங்கினம் ஆக பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீஇர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற 15
சில் நிரை வால் வளை பொலிந்த
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே

#391 பாலை காவன் முல்லை பூதனார்
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர்
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி 5
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை
பழ அணி உள்ளப்படுமால் தோழி
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி
படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ 10
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை
குன்று புகு பாம்பின் தோன்றும்
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே

#392 குறிஞ்சி மோசிகீரனார்
தாழ் பெரும் தட கை தலைஇய கானத்து
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன
பண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇ
பின்னிலை முனியான் ஆகி நன்றும் 5
தாது செய் பாவை அன்ன தையல்
மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின்
தீது இன்று ஆக நீ புணை புகுக என
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன்
அழி_தக பெயர்தல் நனி இன்னாதே 10
ஒல் இனி வாழி தோழி கல்லென
கண மழை பொழிந்த கான் படி இரவில்
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென 15
மற புலி உரற வாரணம் கதற
நனவு-உறு கட்சியின் நன் மயில் ஆல
மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின் 20
வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற 25
விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே

#393 பாலை மாமூலனார்
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு
கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி 5
கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ
வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் 10
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா
களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் 15
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழி புல்லி
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் 20
நீடலர் வாழி தோழி தோடு கொள்
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப
தகரம் மண்ணிய தண் நறு முச்சி
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ்
வேனில் அதிரல் வேய்ந்த நின் 25
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே

#394 முல்லை நன்பலூர் சிறுமேதாவியார்
களவும் புளித்தன விளவும் பழுநின
சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர்
இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு 5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக
இளையர் அருந்த பின்றை நீயும்
இடு முள் வேலி முட கால் பந்தர்
புது கலத்து அன்ன செம் வாய் சிற்றில்
புனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயர 10
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள்
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ குறு முயல்
மன்ற இரும் புதல் ஒளிக்கும் 15
புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே

#395 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
தண் கயம் பயந்த வண் கால் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன
நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண்
பனி வார் எவ்வம் தீர இனி வரின்
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் 5
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை
அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடி
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு 10
மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்
திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து
ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே 15

#396 மருதம் பரணர்
தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடி தேர்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி 5
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின்
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே 10
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ 15
ஆரியர் அலற தாக்கி பேர் இசை
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து
வெம் சின வேந்தரை பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே

#397 பாலை கயமனார்
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர்
மணன் இடையாக கொள்ளான் கல் பக
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் 5
எளிய ஆக ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு என
தணிந்த பருவம் செல்லான் படர்தர
துணிந்தோன் மன்ற துனை வெம் காளை
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி 10
போழ் புண் படுத்த பொரி அரை ஓமை
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு
கோடை வெம் வளிக்கு உலமரும் 15
புல் இலை வெதிர நெல் விளை காடே

#398 குறிஞ்சி இம்மென்கீரனார்
இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ
மென் தோள் நெகிழ சாஅய் கொன்றை
ஊழ்-உறு மலரின் பாழ் பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து 5
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழை கண் தெண் பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழ நின்
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ 10
கரை பொரு நீத்தம் உரை என கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலை
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி
நயன் அற துறத்தல் வல்லியோரே 15
நொதுமலாளர் அது கண்ணோடாது
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புறந்தர நந்தி ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
பல் பூ கானத்து அல்கி இன்று இவண் 20
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
குய வரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமை கழையின் நரலும் அவர்
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே 25

#399 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
சிமைய குரல சாந்து அருந்தி இருளி
இமைய கானம் நாறும் கூந்தல்
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் 5
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ 10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் 15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே

#400 நெய்தல் உலோச்சனார்
நகை நன்று அம்ம தானே அவனொடு
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து
கானல் அல்கிய நம் களவு அகல
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை
நூல் அமை பிறப்பின் நீல உத்தி 5
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினை
குரல் வார்ந்து அன்ன குவவு தலை நந்நான்கு
வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ 10
பூ பொறி பல் படை ஒலிப்ப பூட்டி
மதி உடை வலவன் ஏவலின் இகு துறை
புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர்
கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி
பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல் 15
கால் கண்டு அன்ன வழிபட போகி
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை
பூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடு 20
நேமி தந்த நெடு_நீர் நெய்தல்
விளையா இளம் கள் நாற பல உடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும்
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்
பாடு எழுந்து இரங்கு முந்நீர் 25
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே