நந்திக் கலம்பகம்


@1 தற்சிறப்புப் பாயிரம்
** கடவுள் வாழ்த்து
** பிள்ளையார்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#1
மும்மைப் புவனம் முழுது ஈன்ற முதல்வி ஓடும் விடைப்பாகன்
அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிது அகன்று
தம் இன் முத்தம் கொள நோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன்
செம்மை முளரி மலர்த் தாள் எம் சென்னி மிசையில் புனைவாமே
** சிவபெருமான்
** தரவு கொச்சகக் கலிப்பா

#2
பொருப்பு_அரையன் மடப் பாவை புணர் முலையின் முகடு தைத்த
நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப
பருப் புரசை மத யானைப் பல்லவர் கோன் நந்திக்குத்
திருப் பெருக அருளுக நின் செழு மலர்ச் சேவடி தொழவே
** திருமால்
** வஞ்சித்துறை

#3
கரியின் முனம் வரும்
அரியின் மலர் பதம்
உருகி நினைபவர்
பெருமை பெறுவரே
** கலைமகள் முதலிய கடவுளர்கள்
** நேரிசை வெண்பா

#4
திரு வாணியைக் குருவைத் தென்முனியைப் போற்றத்
தரு வாணி ஆண்மை இறை சாரும் உரு ஆணி
ஐங்கரனைச் சங்கரனை ஆறுமுகத்தோன் உமையைப்
பங்கில் வைப்பார்க்கு இல்லை பவம்

@2 நூல்
** மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
** தரவு

#1
மண் தலமாய் அம்பரமாய் மாருதமாய் வார் புனலாய்
ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு
அமை வடிவோ வளை வடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ
செவ் வடிவோ பொன் வடிவோ சிவனே நின் திருமேனி
அரு வரையின் அகம் குழைய அனல் அம்பு தெரிந்து அவுணர் 5
பொரு மதில்கள் அவை மூன்றும் பொன்றுவித்த புனிதற்கும்
குரு மணி சேர் அணி முறுவல் குலக் கங்கை நதி பாயத்
திரு முடியைக் கொடுத்தாற்கும் செம்பாகம் திறம்பிற்றே
இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலைக்
குல கிரியும் அரு மறையும் குளிர் விசும்பும் வறிதாக 10
அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ்
உலகு_உடையான் திரு முடியும் உள்ளமுமே உவந்தனையே
** அராகம்
செழு மலர் துதைதரு தெரி கணை மதனனது
எழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை
அரு வரை அடி எழ முடுகிய அவுணனது 15
ஒரு பது முடி இற ஒரு விரல் நிறுவினை
** தாழிசை
வீ சிகையில் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய்த் தொடுத்த
வாசிகையின் ஊடே வெண்மதிக் கொழுந்தைச் சொருகினையே
பாய் புலியின் உரி அசைத்த பல புள்ளிப் படிவம் எலாம்
ஆயிர வாய் கரும் கச்சை அழல் உமிழ அசைத்தனையே 20
சோர் மதத்த வார் குருதி சோனை நீர் எனத் துளிப்ப
ஏர் மதத்த கரி உரிவை ஏகாசம் இட்டனையே
திசை நடுங்கத் தோன்றிற்று நீ உண்ட திறல் நஞ்சம்
உயிர் நடுங்கத் தோன்றிற்று நீ உதைத்த வெம் கூற்றம்
** முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்
அனைத்து உலகில் பிறப்பும் நீ 25
அனைத்து உலகில் இறப்பும் நீ
அனைத்து உலகில் துன்பமும் நீ
அனைத்து உலகில் இன்பமும் நீ
வானோர்க்குத் தாதையும் நீ
வந்தோர்க்குத் தந்தையும் நீ 30
ஏனோர்க்குத் தலைவனும் நீ
எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ
** இருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்
ஊழி நீ உலகு நீ
உருவும் நீ அருவும் நீ
ஆழி நீ அமுதம் நீ 35
அறமும் நீ மறமும் நீ
** தனிச்சொல்
என ஆங்கு
** நேரிசை ஆசிரியச் சுரிதகம்
ஒரு பெரும் கடவுள் நின் பரவுதும் எம் கோன்
மல்லை வேந்தன் மயிலை காவலன்
பல்லவர் தோன்றல் பைம் தார் நந்தி 40
வடவரை அளவும் தென்பொதி அளவும்
விடையுடன் மங்கல விசயமும் நடப்ப
ஒரு பெரும் தனிக் குடை நீழல்
அரசு வீற்றிருக்க அருளுக எனவே
** தலைவி கூற்று
** நேரிசை வெண்பா

#2
எனதே கலை வளையும் என்னதே மன்னர்
சின ஏறு செம் தனிக் கோல் நந்தி இன வேழம்
கோ மறுகில் சீறிக் குருக்கோட்டை வென்று ஆடும்
பூ மறுகில் போகாப் பொழுது
** கிள்ளைவிடு தூது
** கட்டளைக் கலித்துறை

#3
பொழுது கண்டு ஆய் அதிர்கின்றது போக நம் பொய்யற்கு என்றும்
தொழுதுகொண்டேன் என்று சொல்லு கண்டாய் தொல்லை நூல் வரம்பு
முழுது கண்டான் நந்தி மல்லை அம் கானல் முதல்வனுக்குப்
பழுது கண்டாய் இதைப் போய்ப் பகர்வாய் சிறைப் பைங்குருகே
** தோழி கூற்று தலைவனை வேண்டல்
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#4
குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கிக் கூசும் கங்குல்
குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை
அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ
திருகு சினக் கடக் களிற்றுச் செங்கோல் நந்தி
தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த
சுரிகை வினைப் பகைஞர் உடல் துண்டம் ஆகத்
துயில் உணர்ந்த வல் ஆண்மைத் தொண்டை வேந்தே
** வெற்றி முரசச் சிறப்பு
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#5
தொண்டை வேந்தன் சோணாடன் தொல் நீர் அலங்கல் முந்நீரும்
கொண்ட வேந்தர் கோன் நந்தி கொற்ற வாயில் முற்றத்தே
விண்ட வேந்தர் தம் நாடும் வீரத் திருவும் எம் கோனைக்
கண்ட வேந்தர் கொண்-மின்கள் என்னும் கன்னிக் கடுவாயே
** செவிலி தலைவிக்குக் கூறல்
** எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#6
கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே
அடு வார் மருப்பின் அயிராவதத்தின் அடு போர் செய் நந்தி வருமே
கொடு வார் புனைந்து நகு வாள் படைக் கண் மடவார் இடைக்குள் மனமே
வடுவாய் இருக்கும் மகளே இ முன்றில் மணி ஊசல் ஆடல் மறவே
** தோள் வகுப்பு
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#7
மற மத கரி திசை நிறுவின மணி நகையவர் மனம் நகுவன
விறல் அரசர்கள் மனம் நெகிழ்வன விரை மலர் களி முலை பொருவன
திறல் உடையன தொடை புகழ்வன திகழ் ஒளியன புகழ் ததைவன
நறு மலர் அணி அணி முடியன நய பர நின திருப் புயமதே
** தலைவி வாடைக்கு வருந்துதல்
** கலிவிருத்தம்

#8
புயங்களில் பூவைமார் பொங்கு கொங்கையின்
நயம் கொளத் தகு புகழ் நந்தி கச்சி சூழ்
கயங்களில் கடி மலர் துழாவிக் காமுகர்
பயம்கொளப் புகுந்தது பருவ வாடையே
** தலைவி இரங்கல்
** எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#9
வாடை நோக வீசுமால் அம் மாரன் வாளி தூவுமால்
ஆடல் ஓதம் ஆர்க்குமால் என் ஆவி காக்க வல்லனோ
ஏடு உலாவு மாலை சேர் இராசன் மல்லை நந்தி தோள்
கூடினால் அலர் வராது கொங்கு விம்மு கோதையே
** தலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#10
கோதை சோரில் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவல்
சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய்
காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு
மாதர் இவரோடு உறுகின்றாய் வாழி மற்று என் மட நெஞ்சே
** தோழி கூற்று
** அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#11
நெஞ்சு ஆகுலமுற்று இங்ஙனே மெலிய நிலவின் கதிர் நீள் எரியாய் விரியத்
துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சினக் கலியின்
வெம் சாயல் மறைத்த தனிக் குடையான் விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே
** தன் மன்னன் மாண்பை படைவீரன் எடுத்தியம்புதல்
** கட்டளைக்கலித்துறை

#12
விடுதிர்-கொல்லோ வள நாடு உடை வீர அரசற்கு முன் நின்று
இடுதிர்-கொல்லோ பண்டு இறுக்கும் திறை எரி கானத்து உம்மை
அடுதிர்-கொல்லோ திறல் நந்தி எம் கோன் அயிராவதத்தில்
படுதிர்-கொல்லோ படை மன்னீர் என்னாம் உங்கள் பாவனையே
** கார் வரவு கண்ட தோழி தலைவியை ஆற்றுப்படுத்துதல்
** வஞ்சி விருத்தம்

#13
வனை வார் குழல் வேணியும் வாடை கண் நீர்
நனை வார் துகிலும் இவை நாளும் இரா
வினை வார் கழல் நந்தி விடேல் விடுகின்
கனை ஆர் முரசு ஒத்தது கார் அதிர்வே
** யானை மறம் கண்டோர் கூற்று
** தரவு கொச்சகக் கலிப்பா

#14
அதிர் குரல மணி நெடும் தேர் அவனி நாரணன் களிற்றின்
கதிர் ஒளிய வெண் மருப்புக் கன வயிரம் செறிந்ததால்
மதுரை-கொலோ அடு புலிக் கோன் நகரி-கொலோ மாளிகை சாய்ந்து
எதிரெதிரே கெட நின்றது எவ்வூர்-கொல் அறியோமால்
** நந்தி மன்னன் திருவடிச் சிறப்பு
** நேரிசை வெண்பா

#15
ஓம மறைவாணர் ஒண் பொன் கழல் வேந்தர்
தாம முடிக்கு அணிந்த தாளிப்புல் கோ மறுகில்
பாவு அடிக் கீழ்ப் பல் யானைப் பல்லவர் கோன் நந்தி-தன்
சேவடிக் கீழ்க் காணலாம் சென்று
** யானை மறம் கண்டோர் கூற்று
** கட்டளைக் கலித்துறை

#16
சென்று அஞ்சி மேல் செம் கண் வேழம் சிவப்பச் சிலர் திகைப்ப
அன்றும் சினத்தார் இனம் அறுத்தார் போலும் அஃதஃதே
குன்றம் செய் தோள் நந்தி நாட்டம் குறி குருக்கோட்டையின் மேல்
சென்று அஞ்சப்பட்டது எல்லாம் படும் மாற்றலர் திண் பதியே
** நந்தி மன்னன் வீரம்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#17
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல்
கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா
நிதி தரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி
மதியிலி அரசர் நின் மலர் அடி பணிகிலர் வானகம் ஆள்வாரே
** தலைவன் மடலேறத் துணிதல்
** கலி விருத்தம்

#18
ஆள் குலாம் கடல் படை அவனி நாரணன்
தோள் குலாம் மது மலர்த் தொண்டை வாய்ச்சியர்
வாள் குலாம் கண்ணினால் வளைத்த மம்மர் நோய்
மீட்கலாம் மடல் கையில் விரவுமாகிலே
** தோழி தலைவனை இயற்பழித்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#19
விரவாத மன்னர் எலாம் விண் ஏற வெள்ளாற்று வெகுண்டோன் தொண்டைக்கு
இரவாத பரிசு எல்லாம் இரந்து ஏற்றும் பாவைமீர் எல் ஈர் வாடை
வர வாதையுற்று இருந்து வருந்துவார் பலர் என்றும் வாழி வாழி
பர வாதை நந்தி செங்கோல் இதுவாகில் அது பார்க்கும் பரிசு நன்றே
** தலைவன் இரவுக் குறியீடு இடையீட்டினால் வருந்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#20
நன்றும் நெடிதாய் அவிர்கின்றது இரா நலிகின்றது மாருதசாலம் எனக்கு
என்று இன் நிலவு என்னும் இளம்பிறையும் எரியே சொரிகின்றது யாது செய்கோ
அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல்
இன்று என் உயிர் அன்னவள் கொங்கையை விட்டு எங்ஙன் துயில்கின்றன ஏழையனே
** வாழ்த்து
** வஞ்சித்துறை

#21
ஏழைமார் துணை
வாழி நந்தி தண்
நீழல் வெண்குடை
ஊழி நிற்கவே
** தலைமகளின் வருத்தம் கண்ட செவிலி கூற்று
** எழுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#22
நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள் கடை நெடுந்தகை
வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன்
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல்
ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இத் திறன் உரைத்திடே
** பாண் கண்டோர் கூற்று
** இணைக்குறள் ஆசிரியப்பா

#23
உரை வரம்பு இகந்த உயர் புகழ்ப் பல்லவன்
அரசர் கோமான் அடு போர் நந்தி
மா வெள்ளாற்று மேவலர்க் கடந்த
செரு வேல் உயர்வு பாடினன்-கொல்லோ
நெருநல் துணி அரைச் சுற்றிப் 5
பரடு திறப்பத் தன்னால் பல் கடைத்
திரிந்த பாணன் நறும் தார் பெற்றுக்
காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
புதுப் பூப் பொலன் கலன் அணிந்து
விளங்கு ஒளி ஆனனன் இப்போது 10
இளம் களி யானை எருத்தம் மிசையன்னே
** இயலிடம் கூறல் தலைவன் கூற்று
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#24
அன்ன மடம் மயிலை ஆளி மத யானை நந்தி வறியோர்
சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு
அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அம் கை அகல் வான்
மின்னை மெலிவாளை நூலின் இடையாளை நேர்வ மயிலே
** தலைவன் தன் நெஞ்சொடு கிளத்தல்
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#25
மயில் கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே
மான் கண்டால் மானுக்கே வாடி மாதர்
குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின்
கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர்
எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன்
இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி
அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்னப் பேடை
அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன்
** நந்தி மன்னன் வீரச் சிறப்பு
** கலி விருத்தம்

#26
நூல் கடல் புலவன் நுரை வெண் திரை
நால் கடற்கு ஒரு நாயகன் நந்தி-தன்
கோல் கடைப் புருவம் துடிக்கும் துணை
வேல் கடல் படை வேந்தர்-தம் வீரமே
** இதுவும் அது
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#27
வீர தீரன் நல் விறல் அவிர் கஞ்சுகன் வெறியலூர்ச் செரு வென்றோன்
ஆர்வமா உளம் நின்றவர் அன்பன் மற்று அவன் பெரும் கடை நின்ற
சேர சோழரும் தென்னரும் வடபுலத்து அரசரும் திறை தந்த
வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே
** உடன் போக்கறிந்து செவிலி வருந்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#28
கவரிச் செந்நெல் காடு அணி சோலைக் காவிரி வள நாடன்
குமரிக் கொண்கன் கங்கை மணாளன் குரை கழல் விறல் நந்தி
அமரில் தெள்ளாற்று அஞ்சிய நெஞ்சத்து அரசர்கள் திரள் போகும்
இவ் அரிக் கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே
** ஊசல்
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#29
ஓடு அரிக் கண் மட நல்லீர் ஆடாமோ ஊசல்
உத்தரியப் பட்டு ஆட ஆடாமோ ஊசல்
ஆடகப் பூண் மின் ஆட ஆடாமோ ஊசல்
அம் மென் மலர்க் குழல் சரிய ஆடாமோ ஊசல்
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண் அருளிச் செய்த
கோ முற்றப் படை நந்தி குவலய மார்த்தாண்டன்
காடவற்கு முன் தோன்றல் கை வேலைப் பாடிக்
காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல்
** செவிலி கூற்று
** கலி விருத்தம்

#30
ஊசல் மறந்தாலும் ஒண் கழல் அம்மானை
வீசல் மறந்தாலும் மெல்லியல் என் பேதை
பூசல் இலங்கு இலை வேல் பொன் கழல் நந்தி நின
பாசிலை அம் தொண்டை அல்லது பாடாளே
** நந்தி மன்னனின் அரண்மனைச் சிறப்பு
** நேரிசை வெண்பா

#31
பாடிய நாவலரோ வேந்தரோ பல் புரவிப்
பீடு இயல் மா களிற்றார் பிச்சத்தார் கூடார்
படை ஆறு சாயப் பழையாறு வென்றான்
கடை ஆறு போந்தார் கலந்து
** தலைவன் தலைவியின் நலம்புனைந்துரைத்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#32
கலம் கொள் அலங்கல் வேல் நந்தி கச்சிநாட்டோன் நவன் கழல்
புலம் கொள் ஒளிய நல்லோர்க்கும் புகல்கின்றோர்க்கும் பொன் ஆரம்
நலம் கொள் முறுவல் முகம் சாய்த்து நாணாநின்று மெல்லவே
விலங்கல் வைத்த மின் நோக்கின் மேலும் உண்டோ வினையேற்கே
** தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவியை இற்செறிப்பறிவுறுத்தல்
** கட்டளைக் கலித்துறை

#33
வினையின் சிலம்பன் பரிவும் இவள்-தன் மெலிவும் மென் பூம்
தினையும் விளைந்தது வாழி தன் மீறு தெள்ளாற்று நள்ளார்
முனையும் அன்று ஏக முனிந்த பிரான் முனையில் பெரும் தேன்
வனையும் வடவேங்கடத்தார் தண் சாரலின் வார் புனமே
** தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#34
புனத்து நின்ற வேங்கை மேல் புகைந்து எழுந்த ஆனையின்
சினத்தை அன்று ஒழித்த கைச் சிலைக் கை வீரர் தீரமோ
மனத்துள் நின்ற வெம் சினம் மலைத்தல் கண்டு அதிர்ந்த மான்
வனத்து அகன்று அதிர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பு அதே
** தலைவி கூற்று
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#35
ஆர்க்கின்ற கடல் ஓதம் ஆர்க்கும் ஆறும்
அசைகின்ற இளம் தென்றல் அசையும் ஆறும்
கூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும்
காணலாம் குருக்கோட்டை குறுகா மன்னர்
போர்க்கின்ற புகர் முகத்துக் குளித்த வாளி
பூதலத்து வடிம்பு அலம்பப் பூண்ட வில்லோன்
பார்க்கு ஒன்று செம் தனிக் கோல் பைம் தார் நந்தி
பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே
** தலைவன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தல்
** கலி விருத்தம்

#36
ஞான்ற வெள் அருவி இருவி எங்கள் பொன்
தோன்றல் வந்திடில் சொல்லு-மின் ஒண் சுடர்
போன்ற மன்னவன் நந்தி-தன் பூதரத்து
ஈன்ற வேங்கை இரும் கணிச் சூழ்ச்சியே
** மன்னன் உலாக் கண்ட தலைவி கூற்று
** அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

#37
சூழி வன் மத யானையின் பிடர்படு சுவடு இவை சுவட்டின் கீழ்
வாழி இ நில மன்னவர் வந்து அனுதினம் இறைஞ்சிய வடுக் கண்டோம்
ஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடும் கயிறு அடிபட்ட
பாழி மன் நெடும் தோள் வடுக் கண்டிலம் பல்லவ பகர்வாயே
** தோழி கூற்று
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#38
பகரம் கொள் நெடும் திவலை பனி விசும்பில் பறித்து எறியப் பண்டு முந்நீர்
மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை
சிகரங்கள் போல் மடியத் தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி
நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே
** இதுவும் அது
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#39
நங்கள் கோத் தொண்டை வேந்தன் நாம வேல் மன்னர்க்கு எல்லாம்
தங்கள் கோன் அங்கநாடன் சந்திர குலப் பிரகாசன்
திங்கள் போல் குடையின் நீழல் செய்ய கோல் செலுத்தும் என்பர்
எங்கள் கோல் வளைகள் நில்லா விபரிதம் இருந்தவாறே
** இதுவும் அது
** கட்டளைக் கலித்துறை

#40
ஆறா விறல் அடு போர் வன்மையால் அமர் ஆடி அப்பால்
பாறு ஆர் களிற்று உயர் பல்லவர் கோன் நந்தி மல்லை அன்றிக்
கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால்
நாறாது இவள் திரு மேனியும் நாம் என்-கொல் நாணுவதே
** எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#41
நாணாது இத் திரு மடவார் முன்பு நின் நன் பொன் கழல் இணை தொழுதாரில்
பூண் ஆகத்து ஒளிர் பொலனாகச் செய்த புது மென் தொண்டை அது அருளாயே
வாணாளைச் சுளி களி யானைப் படை வய வேல் அடையலர் குல காலா
கோணாமைக்கு ஒரு குறை உண்டோ உரை கொங்கா நின்னது செங்கோலே
** இதுவும் அது
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#42
செம் கோல் வளைக் கை இவளும் துவண்டு செறி மாமை வாட எழில் ஆர்
அம் கோல் வளைக் கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ
தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல்
வெம் கோல் நிமிர்த்து அவரையும் சிவந்த விறல் நந்தி மேல் மொழிவையே
** தலைவன் கார்கண்டு பாகனொடு கிளத்தல்
** கலிநிலைத்துறை

#43
மொழி ஆர் தொண்டைப் பல் மலர் முற்றும் தெரு வந்து
விழியாள் என்றும் மேனி வெளுத்து உற மெலிவாளே
ஒழியா வண் கைத் தண் அருள் நந்தி-தன் ஊர்மட்டோ
வழியாம் தமரக் கடல் வட்டத்து ஒரு வண் கோவே
** தலைவி இரங்கல் நிலவை வெறுத்துரைத்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#44
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன்
உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை
குருகோடு வயல் படர் காவிரியில்
குலவும் புயல் கண்டு புகார் மணலில்
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலைப்
பெருமானது பேர் அணி நீள் முடி மேல்
தரு கோதை நினைந்து அயர்வேன் மெலியத்
தழல் வீசுவதோ குளிர் மா மதியே
** தோழி கூற்று தன் நெஞ்சொடு கூறியது
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#45
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை
மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல்
கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாடக்
களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம்
பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி
பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை
விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால்
வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே
** தலைவி கூற்று வெறிவிலக்கல் பற்றி விளம்புதல்
** தரவு கொச்சகக் கலிப்பா

#46
மாட்டாதே இத்தனை நாள் மால் நந்தி வான் வரைத் தோள்
பாட்டாதே மல்லையர் கோன் பரி யானைப் பருச் சுவடு
காட்டாதே கைதைப் பொழில் உலவும் காவிரி நீர்
ஆட்டாதே வைத்து என்னை ஆயிரமும் செய்தீரே
** பாங்கன் தலைவனை வியத்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#47
செய்ய வாய் மிகக் கரிய கண் வன முலை செறிந்து இறு மருங்குல் கொம்பு
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர்க் குழல் என்றால்
வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐப் போய்
நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே
** தலைவன் தலைவியின் கண்ணயந்துரைத்தல்
** கட்டளைக் கலித்துறை

#48
அளவு கண்டால் குடங்கைத் துணை போலும் அரசர் புகும்
வளவு கண்டான் நந்தி மானோதயன் வையம்-தன்னில் மகிழ்
தளவு கண்டால் அன்ன வெள் நகையால் தமியேனது உள்ளம்
களவுகண்டார் முகத்துக் கண்களாய கயல் குலமே
** பாட்டுடைத் தலைவன் பெருமை கூறல்
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#49
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த
குடித் தொழிலும் கொள் படையின் குறையும் கொற்றச்
சில அளவும் சிந்தியாத் தெவ்வர் தேயத்
தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி
புல அரசைப் புறங்கண்ட புகழ் சேர் கோவே
பூவலயம்-தனில் கரியாய் நின்ற மன்னா
சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால்
சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டைக் கோவே
** தோழி தலைவியின் நிலை கிளத்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#50
கோவேம் மாலை மாலையர்க்கு ஓகோவே வேண்டும் நிலவோ கண்
கோவே மாலை மாலை அது கொண்டார் குறுகும் ஆறு அறியேன்
கோவே மாலை நீள் முடி ஆர் கொற்ற நந்தி கச்சியுளார்
கோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே
** இதுவும் அது
** எழுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#51
ஆகிடுக மாமை அணி கெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர்
போகிடுக சங்கு புறகிடுக சேரி பொரு புணரி சங்கு வளை மென்
நாகு இடறு கானல் வள மயிலை ஆளி நயபரனும் எங்கள் அளவே
யே கொடியன் ஆக இவை இயையும் வஞ்சி இனி உலகில் வாழ்வது உளதோ
** தலைவன் தலைவியின் இடைச்சிறுமையை வியத்தல்
** நேரிசை வெண்பா

#52
உளமே கொடி மருங்கு உண்டு இல்லை என்னில்
இள முலைகள் எவ்வாறு இருக்கும் கிளர் ஒளிய
தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-
தன் மயிலை_அன்னாள் தனக்கு
** தலைவன் புறத்தொழுக்கத்தைத் தலைவி கூறி வருந்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#53
தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கித் தன்-பால்
எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர்
சினக் கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே
** பாங்கி கூற்று
** எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#54
தார் வட்டக் கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று
ஏர் வட்டத் தனி மதி வெள்ளிக் குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ
போர்வட்டச் சிலை உடைவாள் பற்றிய பொரு கடல் மல்லைப் புரவலனே
பார்வட்டத் தனி மத யானைப் படை உடையாய் பல்லவர் அடல் ஏறே
** இதுவும் அது
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#55
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம்
மடலேறிட வாகை புனைந்த பிரான் வடவேங்கடநாடு உடை மன்னர் பிரான்
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலைப் பெருமானது பேரருள் நீள் முடி மேல்
மிடல் ஏறிய கோதை நினைந்து அயர்வாள் மெலியத் தழல் வீசும் இ மா மதியே
** தலைவி வேனிற் பருவங்கண்டு வருந்துதல்
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#56
மலர்ச் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம்
வரிக் குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம்
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம்
தீவினையேற்கு அத் தென்றல் தீ வீசும் காலம்
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாடக் கச்சிப்
பனிக் கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம்
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம்
அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம்
** தோழி கூற்று
** கலி விருத்தம்

#57
காலவினைவாணர் பயில் காவிரி நல் நாடா
ஞாலம் ஒரு கோலின் நடாவு புகழ் நந்தி
நீல மயில் கோதை இவள் நின் அருள் பெறாளேல்
கோல வளை கோடல் இது மன்னர் புகழ் அன்றே
** தலைவன் கையுறை மலரை ஏற்பித்தல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#58
புரவலன் நந்தி எங்கள் பொன்னி நல் நாட்டு மன்னன்
வர மயில் போற்று சாயல் வாள் நுதல் சேடி காணும்
குரவு அலர் பொழிலில் கோலக் கோட்டு இடை இல்லையாகில்
இரவு அலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்குவேனே
** தலைவி இரங்கல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#59
நல்கும் நந்தி இ நானிலம் காவலன் மாரவேள் நளிர் முத்தம்
மல்கு வெண்குடைப் பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல்
மெல்கு தொண்டையும் தந்து அருள்கிலன் விடை மணியொடும் விடியாத
அல்லினோடும் வெண் திங்களினொடும் உளன் உய்வகை அறியேனே
** தலைவன் தலைவியின் உறுப்புநலம் புனைந்துரைத்தல்
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#60
அறம் பெருகும் தனிச் செங்கோல் மாயன் தொண்டை
அம் கனி போல் சிவந்து திரு முகத்துப் பூத்து
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும்
வல்லி இடை மணி முறுவல் முத்துச் சால
நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள்
நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை
செறிந்து உளவே முலை சிலையே புருவம் ஆகி
அவர் நம்மைச் சிந்தை நோய் திருத்தினாரே
** பாட்டுடைத் தலைவன் வீரச் சிறப்பு
** இணைக்குறள் ஆசிரியப்பா

#61
திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்
பொது இன்றி ஆண்ட பொலம் பூண் பல்லவ
தோள் துணை ஆக மா வெள்ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணால் நந்தி நின்
திரு வரு நெடும் கண் சிவக்குமாகின் 5
செருநர் சேரும் பதி சிவக்கும்மே
நிறம் கிளர் புருவம் துடிக்கின் நின் கழல்
இறைஞ்சா மன்னர்க்கு இடம் துடிக்கும்மே
மை இல் வாள் உறை கழிக்குமாகின்
அடங்கார் பெண்டிர் 10
பூண் முலை முத்தப் பூண் கழிக்கும்மே
கடுவாய் போல் வளை அதிர நின்னொடு
மருவா மன்னர் மனம் துடிக்கும்மே
மா மத யானை பண்ணின்
உதிரம் மன்னும் நின் எதிர் மலைந்தோர்க்கே 15
** செவிலித்தாய் கூற்று
** நேரிசை வெண்பா

#62
ஓராதே என் மகளைச் சொன்னீரே தொண்டை மேல்
பேராசை வைக்கும் பிராயமோ நேராதார்
ஆள் வலியால் கொண்ட அகன் ஞாலம் அத்தனையும்
தோள் வலியால் கொண்ட துயக்கு
** பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்
** கட்டளைக் கலித்துறை

#63
துயக்குவித்தான் துயில் வாங்குவித்தான் துயில்வித்து இவளை
வயக்குவித்தான் உள்ளம் வஞ்சனையால் மலர்க் காவகத்து
முயக்குவித்தான் துகில் வாங்குவித்தான் முனம் நின்று இவளை
மயக்குவித்தான் நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே
** சம்பிரதம்
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#64
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின்
மற்றைக் கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ணக் காண்-மின்
இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று
அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி
அவனி நாராயணன் பார் ஆளும் கோமான்
குட்டு அன்றே மழை நீரைக் குடங்கை கொண்டு
குரை கடலைக் குடிக்கின்றேன் குடிக்கின்றேனே
** தலைவி இரங்கல்
** கட்டளைக் கலித்துறை

#65
குடக்கு உடை வேந்தன் தென்னாடு உடை மன்னன் குணக்கினொடு
வடக்கு உடையான் நந்தி மானோதயன் இந்த வையம் எல்லாம்
படக் குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பார் அறியத்
துடக்கு உடையாரை அல்லால் சுடுமோ இச் சுடர்ப் பிறையே
** தோழி கூற்று
** கலி விருத்தம்

#66
பிறை தவழ் செம் சடைப் பிறங்கல் நாரணன்
அறை கழல் முடித்தவன் அவனி நாரணன்
நறை கெழு தொண்டையோன் தொண்டை கண்ட பின்
இறை கெழு சங்கு உயிர் இவளுக்கு ஈந்ததே
** தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி செறிப்பறிவுறுத்தல்
** கலி விருத்தம்

#67
ஈகின்றது புனமும் தினை யாமும் பதி புகும் நாள்
ஆகின்றது பருவம் இனி ஆகும் வகை அறியேன்
வாழ்கின்றதொர் புகழ் நந்தி-தன் வடவேங்கடமலை வாய்த்
தேய்கின்றதொர் உருவத்தொடு திரிவாரது திறமே
** மன்னன் வீரத்தைப் படைவீரன் பகர்தல்
** எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#68
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம்
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே
நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழத்
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே
** தலைவன் தலைவியின் பேரழகை வியந்துரைத்தல்
** கலி விருத்தம்

#69
அரி பயில் நெடு நாட்டத்து அஞ்சனம் முழுது ஊட்டிப்
புரி குழல் மட மானைப் போதரவிட்டாரால்
நரபதி எனும் நந்தி நல் மயிலாபுரியில்
உருவுடை இவள் தாயர்க்கு உலகொடு பகை உண்டோ
** மதங்கியார்
** தரவு கொச்சகக் கலிப்பா

#70
பகை இன்றிப் பார் காக்கும் பல்லவர் கோன் செங்கோலின்
நகையும் வாண்மையும் பாடி நன்று ஆடும் மதங்கிக்குத்
தகையும் நுண் இடை அதிரத் தன பாரம் அவற்றோடு
மிகை ஒடுங்கா முன் இக் கூத்தினை விலக்க வேண்டாவோ
** செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்
** கலிநிலைத்துறை

#71
வேண்டார் எண்ணும் வேந்தர் பிராற்கே மெய் அன்பு
பூண்டாள் நங்காய் அன்று இவள் என்றால் பொல்லாதோ
மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவு ஆறி
மீண்டான் நந்திக்கு என் மகள் தோற்கும் வெண் சங்கே
** தலைவி இரங்கல்
** வெண்டுறை

#72
வெண் சங்கு உறங்கும் வியன் மாதர் முற்றத்து விடியவே வான்
வண் சங்கு ஒலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன்
தண் செங்கோல் நந்தி தனிக் குடைக் கீழ் வாழாரின்
கண் சிம்புளியா நோய் யாமோ கடவோமே
** இதுவும் அது
** கலி விருத்தம்

#73
கடல் கூதிர் மொய்த்த கழிப் பெண்ணை நாரை
மடல் கூறு-தோறும் மலி மல்லை கங்குல்
அடற்கு ஊடு சாவே அமையாது அவர் வை
திடற்கு ஊறுவேனுக்கு ஏது ஆவி உண்டோ
** தோழி கூற்று
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#74
உள் திரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே
ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடித்
தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவித்
தமிழ்த் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா
விண் தொடு திண் கிரி அளவும் வீரம் செல்லும்
விடேல் விடுகு நீ கடவும் வீதி-தோறும்
திண் தறுகண் மாத் தொழுத பாவைமார்க்குச்
செங்கோலன் அல்லையோ நீ செப்பட்டே
** தோழி தலைவியின் உறுப்பு நலனை எழுதுதல் அரிதெனல்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#75
பட்ட வேந்தர்-தம் பூணொடும் பாவைமார் நாண் நெடும் தெள்ளாற்றில்
வட்ட வெம் சிலை நாண் இடக் கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள்
விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம்
இட்ட பொட்டினோடு இள முலைப் போகமும் எழுதவும் ஆகாதே
** கலி நிலைத்துறை

#76
ஆகாது போகம் அயில் வினைத்து அகன்று அலவன் கை
போகாத சங்கும் அருளார் என்ற போது வண்டோ
** தோழி தலைவியின் நிலைகண்டு வருந்தியுரைத்தல்
** கட்டளைக் கலித்துறை

#77
காவி அனந்தம் எடுத்தான் மதன் கைக் கரும்பு எடுத்தான்
மேவி அனந்த வனம் புகுந்தான் இனி வேட்டம் செய்வான்
ஆவி அனந்தம் உண்டோ உயிர் தான் விட்டு அகலும் முன்னே
தேவு இயல் நந்திக்கு அங்கு ஆர் ஓடிச் செய்குவர் விண்ணப்பமே
** மறம்
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#78
அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா
செம்பொன் செய் மணி மாடத் தெள்ளாற்றில் நந்தி பதம் சேரார் ஆனைக்
கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே
** செவிலி தன்னை நொந்துரைத்தல்
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்

#79
பாவையர் பரிந்து தாங்கும் பனி மலர் செறிந்த செந்தில்
கோவை ஏய் நந்தி காக்கும் குளிர் பொழில் கச்சி_அன்னாள்
பூவையும் பந்தும் தந்து புல்லினாள் என்னை என்னே
மா இயல் கானம் போந்தது அறிகிலேன் மதியிலேனே
** தோழி கூற்று
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்

#80
நீண்டதாம் கங்குல் எங்கும் நிறைந்ததாம் வாடை பொங்கி
மூண்டதாம் மதியினோடே முயங்கு தார் வழங்கும் தெள்ளாற்று
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம்
தூண்டினான் நந்தி இந்தத் தொண்டைநாடு உய கோவே
** நற்றாய் இரங்கல்
** வெண்டுறை

#81
கோலக் கொடி அன்னவர் நீள் செறுவில்
குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை
காலைப் பொழுதின் எழு கன்னியர்-தம்
கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய்
மாலத் தெள்ளாறு எறிந்த மானோதயன் குடைக் கீழ்
ஞாலத்தோடு ஒத்ததே நான் பெற்ற நறும் கொம்பே
** தோழி கூற்று
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#82
கொம்பு உயர்வாம் மை நாகம் எதிர்வந்த நந்தி
குல வீரர் ஆகம் அழியத்
தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற
தலை மான வீர துவசன்
செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாயச்
செரு வென்ற பாரி முடி மேல்
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை
வளை கொண்டது என்ன வலமே
** தலைவனது சிறப்பு
** குறள்வெண்செந்துறை

#83
வலம் வரு திகிரியும் இடம் வரு பணிலமும்
மழை தவழ் கொடி போலக்
குல மயில் பாவையும் எறி கடல் வடிவமும்
இவையிவை கொண்டாயே
** தோழி கூற்று
** கலி விருத்தம்

#84
கொண்டல் உறும் பொழில் வண்டினம் ஆம் மணி
வண்டல் இடும் கடல் மல்லை காவலனே
பண்டை மராமரம் எய்த பல்லவனே
தொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே
** தலைவி தன் தோழியர்களைப் பார்த்துக் கூறல்
** நேரிசை வெண்பா

#85
தோளால் மெலியாமே ஆழ் கடலால் சோராமே
வாளா பெறலாமே வாயற்றீர் கேளாதார்
குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும்
அம் சரங்கள் ஆர்த்தான் அருள்
** தோழி கூற்று
** அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#86
அருளானது எங்கையர்க்கே அன்னாய் என்று இயம்பிடும் எம் கன்னி செம் சொல்
தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள்
இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன்
மருளாமே நல் கடம்பூர் வான் ஏற வளைந்து வென்ற மன்னர் ஏறே
** இதுவும் அது
** அறுசீரடி ஆசிரிய விருத்தம்

#87
ஏறுபாய விளைவித்தது எல்லாம் வார்க் குங்குமக் கொங்கை
வீறுபாயக் கொடுக்கின்ற விடலை யார் கோ என்கின்றீர்
மாறுபாயப் படை மன்னர் மாவும் தேரும் தெள்ளாற்றில்
ஆறு பாயச் சிவந்த தோள் இணை காவிரிநாடு ஆள்வானே
** இதுவும் அது
** கலி விருத்தம்

#88
ஆயர் வாய்க் குழற்கு ஆற்றுறுகின்றிலள்
ஏயும் மாங்குயிற்கு என்னை-கொல் ஆவதே
தேயம் ஆர் புகழ்த் தேசபண்டாரி தன்
பாயல் மேல் வரல் பார்த்து நின்றாளுக்கே
** தலைவி கூற்று புள்ளொடு புகலல்
** கட்டளைக் கலித்துறை

#89
துளவு கண்டாய் பெறுகின்றிலம் சென்று இனிச் சொல்ல வல்ல
அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட
விளவு கண்டால் அன்ன மேனி கண்டாய் விறல் மாரன் செய்த
களவு கண்டாய் நந்தி மல்லை அம் கானல் கடல் கம்புளே
** மன்னன் மாலையின் மாண்பு
** நேரிசை வெண்பா

#90
என்னை யானே புகழ்ந்தேன் என்னாதே எப்புவிக்கும்
மன்னர் கோன் நந்தி வரதுங்கன் பொன் முடியின்
மேல் வருடும் தொண்டை விரை நாறும் இன்னமும் என்
கால் வருடும் சேடியர்-தம் கை
** தலைவன் தலைவியின் இடையை வியத்தல்
** நேரிசை வெண்பா

#91
கைக் குடம் இரண்டும் கனகக் கும்பக் குடமும்
முக்குடமும் கொண்டால் முறியாதே மிக்க புகழ்
வேய்க் காற்றினால் விளங்கும் வீர நந்தி மா கிரியில்
ஈக் காற்றுக்கு ஆற்றா இடை
** நந்தியின் கொடைப் பெருமை
** நேரிசை வெண்பா

#92
இந்தப் புவியில் இரவலர் உண்டு என்பது எல்லாம்
அந்தக் குமுதமே அல்லவோ நந்தி
தடம் கைப் பூபாலன் மேல் தண் கோவை பாடி
அடங்கப் பூபாலர் ஆனார்
** நந்தியின் நாட்டில் முத்துச் சிறப்பு
** கட்டளைக் கலித்துறை

#93
அடி விளக்கும் துகில் ஆடை விளக்கும் அரசர் பந்திப்
பிடி விளக்கும் எங்கள் ஊரார் விளக்கும் பெரும் புகழால்
படி விளக்கும் நந்தி எம் கோன் பெரும் படைவீட்டுக்கு எல்லாம்
விடிவிளக்கும் இதுவே நாங்கள் பூண்பதும் வெண் முத்தமே
** நந்திமன்னன் வருகைச் சிறப்பு
** நேரிசை வெண்பா

#94
ஏம வரை சலிக்கும் ஏழ் ஆழியும் கலங்கும்
காம வயிரி களங்கு அறுக்கும் சோமன்
வரு நந்தி யானத்து மானாரை விட்டுப்
பொரு நந்தி போந்த பொழுது
** நந்திமன்னன் வீரம்
** கட்டளைக் கலித்துறை

#95
ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர் வனமும்
தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு
ஊரும் அரவமும் தா மரைக் காடும் உயர் வனமும்
தேரும் உடைத்து என்பரே தெவ்வர் வாழும் செழும் பதியே
** தலைவன் தன் தேர்ப்பாகனுக்குக் கழறல்
** கட்டளைக் கலித்துறை

#96
திருத்து ஏர் புகழ் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில்
மருத் தேர் குழலிக்குக் கார் முந்துமாகின் மகுட ரத்னப்
பரித் தேரும் பாகும் அங்கு என் பட்டவோ என்று பங்கயக் கை
நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே வஞ்சி நெஞ்சு உலர்ந்தே
** தலைவி கார்ப்பருவங்கண்டு வருந்துதல்
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#97
சிவனை முழுதும் மறவாத சிந்தையான் செய முன் உறவு தவிராத நந்தி ஊர்க்
குவளை மலரின் மது ஆரும் வண்டுகாள் குமிழி சுழியில் விளையாடு தும்பியே
அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே
கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே
** நந்தி மன்னன் மாலைச் சிறப்பு
** நேரிசை வெண்பா

#98
தொடர்ந்து பலர் இரந்த தொண்டை அம் தார் நாங்கள்
நடந்த வழிகள்-தொறும் நாறும் படர்ந்த
மலை கடாம்பட்டு அனைய மால் யானை நந்தி
முலைகள் தாம் பட்டு அசையா முன்
** தலைவி வருந்தல்
** தரவு கொச்சகக் கலிப்பா

#99
நம் ஆவி நம் கொழுநர்பாலதா நம் கொழுநர்-
தம் ஆவி நம்பாலது ஆகும் தகைமையினால்
செம் மால் ஐ நந்தி சிறுகுடிநாட்டு அன்னமே
தம் ஆவி தாம் உடையர் அல்லரே சாகாமே
** காலம்
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரய விருத்தம்

#100
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம்
மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம்
கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம்
செம் கை முகில் அனைய கொடைச் செம்பொன் பெய் ஏகத்
தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம்
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழைக் காலம்
அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம்
** இதுவும் அது
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#101
அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம்
ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம்
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின் மகிழ்ந்து
பொன் பவள வாய் திறந்து பூச் சொரியும் காலம்
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன்
தியாகி எனும் நந்தி தடம் தோள் சேராக் காலம்
என்னை அவர் அற மறந்து போனாரே தோழி
இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம்
** தலைவி பாணரைப் பழித்துரைத்தல்
** நேரிசை வெண்பா

#102
ஈட்டு புகழ் நந்தி பாண நீ எங்கையர்-தம்
வீட்டு இருந்து பாட விடிவளவும் காட்டில் அழும்
பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி
நாய் என்றாள் நீ என்றேன் நான்
** செவிலி இரங்குதல்
** கட்டளைக்கலித்துறை

#103
கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கிக் குன்று அகழ் ஆக்கித் தெவ்வர்
நாட்டை மிதிக்கும் கடாக் களிற்றான் நந்தி நாட்டினில் பொன்
தோட்டை மிதித்து அந்தத் தோட்டு ஊடு பாய்ந்து சுருள் அளகக்
காட்டை மிதிக்கும் கயல்_கண்ணியோ சுரம் கால்வைப்பதே
** தலைவி வருந்தல்
** நேரிசை வெண்பா

#104
செம் தழலின் சாற்றைப் பிழிந்து செழும் சீதச்
சந்தனம் என்று ஆரோ தடவினார் பைந்தமிழை
ஆய்கின்ற கோன் நந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மெய்
** பாலனைப் பழித்தல்
** கட்டளைக் கலித்துறை

#105
சதிர் ஆக நந்திபரன்-தனைக் கூடிய தையலரை
எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம்
அதிர் ஆக்கித் தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட
பதர் ஆக்கி என்னையும் பற்றாமல் ஆக்கிய பாலகனே
** மேகவிடுதூது
** நேரிசை வெண்பா

#106
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறும்
கூடு வருகுது என்று கூறுங்கள் நாடியே
நந்திச் சீராமனுடை நல் நகரில் நல்_நுதலைச்
சந்திச்சீர் ஆமாகில் தான்
** நிலவைப் பழித்தல்
** தரவு கொச்சகக் கலிப்பா

#107
மண் எலாம் உய்ய மழை போல் வழங்கு கரத்
தண் உலா மாலைத் தமிழ் நந்தி நல் நாட்டில்
பெண் இலா ஊரில் பிறந்தாரைப் போல வரும்
வெண்ணிலாவே இந்த வேகம் உனக்கு ஆகாதே
** நந்திமன்னன் கொடைச் சிறப்பு
** நேரிசை வெண்பா

#108
செய்ய கமலத் திருவுக்கு முன் பிறந்த
தையல் உறவு தவிர்ந்தோமே வையம்
மணக்கும் பெரும் புகழான் மானபரன் நந்தி
இணக்கம் பிறந்த நாள் இன்று
** கையறுநிலை
** எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#109
வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி
கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள்
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நம் தயாபரனே
** [இப் பாடல் வேறு சுவடிகளில் சில வேறுபாடுகளுடன்
** கீழ்க் கண்டவாறு காணப்படுகின்றது]
வான் உறை மதியில் புக்கது உன் தட்பம் மறி கடல் புக்கது உன் பெருமை
கான் உறை புலியில் புக்கது உன் சீற்றம் கற்பகம் புக்கது உன் கொடைகள்
தேன் உறை மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் புக்கது உன் மேனி
யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே எந்தை பிரானே
** தலைவன் தலைவியின் உறுப்புநலனைப் புகழ்தல்
** கட்டளைக் கலித்துறை

#110
வார் ஊரும் மென் முலை வார்த்தை கண்டு ஊரும் மதி முகத்தில்
வேர் ஊரும் மேனி வியன் தளிர் ஊரும் விசயனுக்குத்
தேர் ஊரும் மால் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில்
கார் ஊர் குழலிக்குக் காதளவு ஊரும் கடைக்கண்களே
** மிகைப் பாடல்கள்
** நேரிசை வெண்பா

#111
ஊரைச் சுடுமோ உலகம்-தனைச் சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன் நேரே
பொருப்பு வட்டமான முலைப் பூவையரே இந்த
நெருப்பு வட்டமான நிலா
** வஞ்சி விருத்தம்

#112
புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும்
உரம் பெற்றன ஆவன உண்மை அன்னான்
சரம் பற்றிய சாபம் விடும் தனையே
** எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#113
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே
காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ
நண்ணும் பனை ஓலைச் சுருள் அரசன் திருமுகமோ
நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன்
பண்ணும் புகழ் எட்டுத் திசை ஏகம்பலவாணா
பாபத் திறலோ நந்தி-தன் மறவோர்களிடத்தே
பெண் என்பவன் வாயைக் கிழி தூதன் செவி அறடா
பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே
** எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#114
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம்
பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம்
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம்
வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம்
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம்
ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம்
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம்
இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம்
** நேரிசை வெண்பா

#115
இரும்பு உழுத புண்ணிற்கு இடு மருந்தோ அன்றோ
அரும் துயரம் தீர்க்கும் அனையே பெரும் புலவர்-
தன் கலியைத் தீர்க்கும் தமிழாகரன் நந்தி
என் கலியைத் தீர்ப்பானிலன்
**