மணிமேகலை

0 . பதிகம்
1. விழாவறை காதை 11. பாத்திரம் பெற்ற காதை 21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை
2. ஊரலர் உரைத்த காதை 12. அறவணர்த் தொழுத காதை 22. சிறைசெய் காதை
3. மலர்வனம் புக்க காதை 13. ஆபுத்திரன் திறன் அறிவித்த காதை 23. சிறைவிடு காதை
4. பளிக்கறை புக்க காதை 14. பாத்திர மரபு கூறிய காதை 24. ஆபுத்திரநாடு அடைந்த காதை
5. மணிமேகலா தெய்வம் வந்து
தோன்றின காதை
15. பாத்திரம்கொண்டு பிச்சை புக்க காதை 25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை 16. ஆதிரை பிச்சையிட்ட காதை 26. வஞ்சிமாநகர் புக்க காதை
7. துயிலெழுப்பிய காதை 17. உலக அறவி புக்க காதை 27. சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை 18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை 28. கச்சிமாநகர் புக்க காதை
9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை 29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
10. மந்திரம் கொடுத்த காதை 20. உதயகுமரனை வாளால் எறிந்த காதை 30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

#0 பதிகம்

இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி
தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம்
சாகை சம்பு-தன் கீழ் நின்று 5
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு
வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பாபதியினள்
செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும்

கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட 10
அமர முனிவன் அகத்தியன்-தனாது
கரகம் கவிழ்த்த காவிரி பாவை
செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல்
பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற
ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் 15
ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு
ஆணு விசும்பின் ஆகாயகங்கை
வேணவா தீர்த்த விளக்கே வா என
பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு

அன்னை கேள் இ அரும் தவ முதியோள் 20
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடா செங்கோல் சோழர்-தம் குலக்கொடி
கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை 25
தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி
கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
தெய்வ கருவும் திசைமுக கருவும்
செம்மலர் முதியோன் செய்த அ நாள்

என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் 30
நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு
பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என
சிதைந்த நெஞ்சின் சித்திராபதி-தான் 35
வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும்
மணிமேகலை-தான் மா மலர் கொய்ய
அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும்
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை

பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் 40
பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன்
துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்
மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்
உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் 45
சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம்
ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள்
தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும்
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை

பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும் 50
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும்
தீபதிலகை செவ்வனம் தோன்றி
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும்
பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு 55
யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கை பாத்திரம் ஆபுத்திரன்-பால்

சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் 60
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி
பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும்
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில்
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று 65
ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும்
அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன்

வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி 70
மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம்
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன்
ஆய்_இழை-தன்னை அகலாது அணுகலும்
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை 75
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள்
தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும்
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை

சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும் 80
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்
ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி
ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் 85
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
நவை அறு நன்பொருள் உரைமினோ என
சமய கணக்கர் தம் திறம் கேட்டதும்
ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து

பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் 90
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு
பவ திறம் அறுக என பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளி கேட்ப 95
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு
ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்

# 1 விழாவறை காதை

உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர்
பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று 5
மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள்
மேலோர் விழைய விழா கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என
அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது

கவரா கேள்வியோர் கடவார் ஆகலின் 10
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இ திறம் தம்தம் இயல்பினின் காட்டும்
சமய கணக்கரும் தம் துறை போகிய
அமய கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும் 15
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள்
கொடி தேர் தானை கொற்றவன் துயரம்

விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் 20
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க
இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நர
புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் 25
ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்

கூற்று-கண் விளிக்கும் குருதி வேட்கை 30
முரசு கடிப்பு இகூஉம் முது குடி பிறந்தோன்
திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக மன்னவன்
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக
தீவக சாந்தி செய்தரு நல் நாள் 35
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்

இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி 40
பொன்நகர் வறிதா போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்பு-மின் 45
காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும்
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின்
பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து
முத்து தாமம் முறையொடு நாற்று-மின்

விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் 50
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின்
கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்து-மின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக 55
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின்

ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் 60
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின்
பற்றாமாக்கள்-தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின்
வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் 65
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி

பசியும் பிணியும் பகையும் நீங்கி 70
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்

# 2 ஊரலர் உரைத்த காதை

நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவக சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாரா
தணியா துன்பம் தலைத்தலை மேல் வர 5
சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை வருக என கூஉய்
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என

வயந்தமாலையும் மாதவி துறவிக்கு 10
அயர்ந்து மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி 15
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய்
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல்
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்

பண் யாழ் கரணமும் பாடை பாடலும் 20
தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும்
கந்துக கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காய கரணமும் கண்ணியது உணர்தலும் 25
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
கால கணிதமும் கலைகளின் துணிவும்

நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த 30
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி 35
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
காதலன் உற்ற கடும் துயர் கேட்டு
போதல்-செய்யா உயிரொடு நின்றே

பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து 40
நல் தொடி நங்காய் நாணு துறந்தேன்
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் 45
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
பத்தினி பெண்டிர் பரப்பு_நீர் ஞாலத்து
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை

கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள் 50
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை 55
அரும் தவ படுத்தல் அல்லது யாவதும்
திருந்தா செய்கை தீ தொழில் படாஅள்
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய்
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன்

மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி 60
அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடும் துயர் கூற
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் 65
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக என்று அருளி
ஐவகை சீலத்து அமைதியும் காட்டி
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன்

மை தட கண்ணார்-தமக்கும் எ பயந்த 70
சித்திராபதிக்கும் செப்பு நீ என
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்தமாலையும்
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் 75

#3 மலர்வனம் புக்க காதை

வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த 5
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கி காரிகை
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர்

இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட 10
மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் 15
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு
தணியா துன்பம் தலைத்தலை எய்தும்

மணிமேகலை-தன் மதி முகம்-தன்னுள் 20
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் 25
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய்
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம்
பாராவார பல் வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்

இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் 30
ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன் 35
தாரன் மாலையன் தமனிய பூணினன்
பாரோர் காணா பலர் தொழு படிமையன்
எடுத்தனன் எ கொண்டு எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்

ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி 40
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணி பூ கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகின் 45
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்

வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் 50
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை 55
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்

ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் 60
பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த 65
தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்

கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் 70
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின்
ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும்
வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் 75
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான்

அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் 80
செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள்
மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று
அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி
மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ 85
சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கனம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி

உண்ணா நோன்போடு உயவல் யானையின் 90
மண்ணா மேனியன் வருவோன்-தன்னை
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன்
எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது 95
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும்
தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூம் தேறலில் மெய் தவத்தீரே

உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் 100
கண்டால் எம்மையும் கையுதிர்க்கொண்ம் என
உண்ணா நோன்பி-தன்னொடும் சூளுற்று
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன் 105
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை
ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு

அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் 110
தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும் 115
சுரியல் தாடி மருள் படு பூ குழல்
பவள செ வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல்

காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை 120
அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடி கோலத்து பேடு காண்குநரும் 125
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும்
மை_அறு படிவத்து வானவர் முதலா
எ வகை உயிர்களும் உவமம் காட்டி

வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய 130
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணி கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ் 135
பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ
செம் வாய் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவா சுற்று உடை பூம் துகில்

தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர 140
தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை
பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள்
காண்-மினோ என கண்டு நிற்குநரும் 145
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய

தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் 150
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுந-கொல்லோ மடந்தை-தன் நடை
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பன-கொலோ தையல்-தன்னுடன் 155
பை கிளி-தாம் உள பாவை-தன் கிளவிக்கு
எஞ்சல-கொல்லோ இசையுந அல்ல
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல்

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் 160
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் 165
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை
சித்திர செய்கை படாம் போர்த்ததுவே
ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை

தொழுதனள் காட்டிய சுதமதி-தன்னொடு 170
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என்

# 4 பளிக்கறை புக்க காதை

பரிதி_அம்_செல்வன் விரி கதிர் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் 5
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி
பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை

அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப 10
கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா
கொம்பர் இரு குயில் விளிப்பது காணாய்
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் 15
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்
மாதர் நின் கண் போது என சேர்ந்து

தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் 20
அம் சிறை விரிய அலர்ந்த தாமரை
செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட 25
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய

கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து 30
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்கு கால் எடுத்த வங்கம் போல
காழோர் கையற மேலோர் இன்றி 35
பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும்
பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர்

ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது 40
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால் வரை நிலனொடு படர்ந்து என
காலவேகம் களி மயக்குற்று என
விடு பரி குதிரையின் விரைந்து சென்று எய்தி 45
கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி
அணி தேர் தானையொடு அரசிளங்குமரன்
மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது

ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன் 50
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி
ஆடக செய்வினை மாடத்து-ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி
தகர குழலாள்-தன்னொடு மயங்கி 55
மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின்
எட்டிகுமரன் இருந்தோன்-தன்னை
மாதர்-தன்னொடு மயங்கினை இருந்தோய்

யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் 60
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் 65
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலையொடு
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி

வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது 70
இது யான் உற்ற இடும்பை என்றலும்
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல 75
மாட வீதியில் மணி தேர் கடைஇ
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ
தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும்
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று

என் மேல் வைத்த உள்ளத்தான் என 80
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் 85
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல்
பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை

நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை 90
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி
பல் மலர் பூம் பொழில் பகல் முளைத்தது போல்
பூ மர சோலையும் புடையும் பொங்கரும்
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம்
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை 95
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன்
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ
விளையா மழலை விளைந்து மெல் இயல்

முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன-கொல் 100
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி
வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல்
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை என
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி 105
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும்
இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்

செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ 110
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை 115
பற்றின் பற்றிடம் குற்ற கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்-பால் உடையது

மக்கள் யாக்கை இது என உணர்ந்து 120
மிக்கோய் இதனை புறமறிப்பாராய்
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர்
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவையின்
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் 125

#5 மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
பொரு முக பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து 5
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ

சூழ்வோன் சுதமதி-தன் முகம் நோக்கி 10
சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருக செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைம்_தொடி நங்கை 15
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காம கடந்த வாய்மையள் என்றே
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ

நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் 20
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு_இழை என்றே
கல்லென் பேர் ஊர் பல்லோர் உரையினை 25
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி

ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் 30
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள்
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முது_மகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ_வினை பயத்தான் பிழை மணம் எய்திய 35
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய

வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு 40
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே
தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் 45
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டு என்ன
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி

என் மகள் இருந்த இடம் என்று எண்ணி 50
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர்காள் நும் சரண் என்றோனை
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம் 55
அறவோர் உளீரோ ஆரும் இலோம் என
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்

கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் 60
பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
என் உற்றனிரோ என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி-அதனால்
அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு 65
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி

சங்கதருமன் தான் எமக்கு அருளிய 70
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன்
இன்ப செவ்வி மன்பதை எய்த
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் 75
அற கதிர் ஆழி திறப்பட உருட்டி
காம கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என

அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் 80
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
பளிக்கறை திறந்து பனி மதி முகத்து
களி கயல் பிறழா காட்சியள் ஆகி 85
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை 90
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என
மது மலர் குழலாள் மணிமேகலை-தான்
சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழா அணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம் 95
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ

குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் 100
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ
காம கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று 105
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி

பல் மலர் சிறந்த நல் நீர் அகழி 110
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை 115
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்

குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் 120
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும்
அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய
தன் உறு பெடையை தாமரை அடக்க
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு 125
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரி குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவள செம் கால் பறவை கானத்து

குவளை மேய்ந்த குட கண் சேதா 130
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழி படர
அந்தி அந்தணர் செம் தீ பேண
பைம் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளர 135
கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிரா துன்பமோடு

அந்தி என்னும் பசலை மெய்யாட்டி 140
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்

#6 சக்கரவாள கோட்டம் உரைத்த காதை

அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர்-தம்-கண் எய்திய குற்றம்
தோன்று-வழி விளங்கும் தோற்றம் போல
மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர 5
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர்
வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல்
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய
உருவு கொண்ட மின்னே போல

திருவில் இட்டு திகழ்தரு மேனியள் 10
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
ஈங்கு நின்றீர் என் உற்றீர் என 15
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்

புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் 20
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கரவாள கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது 25
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப
வஞ்ச விஞ்ஞையன் மாருதவேகனும்
அம் செம் சாயல் நீயும் அல்லது
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்

சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் 30
சக்கரவாள கோட்டம் அஃது என
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன்
ஈங்கு இதன் காரணம் என்னையோ என
ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன்
மாதவி மகளொடு வல் இருள் வரினும் 35
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ
நாம பேரூர்-தன்னோடு தோன்றிய
ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது
ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து

தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும் 40
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செம் வாய் கடுத்த நோக்கின் 45
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை

உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் 50
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில்
காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும்
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் 55
நால் வேறு வருண பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்ட அன்ன
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும்

அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் 60
நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்து காவலர்
உண்டு கண்படுக்கும் உறையுள் குடிகையும்
தூம கொடியும் சுடர் தோரணங்களும்
ஈம பந்தரும் யாங்கணும் பரந்து 65
சுடுவோர் இடுவோர் தொடு குழி படுப்போர்
தாழ்-வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும்

எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி 70
நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த தொழு விளி பூசலும்
பிறவோர் இறந்த அழு விளி பூசலும்
நீள் முக நரியின் தீ விளி கூவும்
சாவோர் பயிரும் கூகையின் குரலும் 75
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும்
நல் நீர் புணரி நளி கடல் ஓதையின்
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது

தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி 80
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து
புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும் 85
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து-ஆங்கு
இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும்

பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் 90
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் 95
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்

கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ 100
அழல் வாய் சுடலை தின்ன கண்டும்
கழி பெரும் செல்வ கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என 105
சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறிய சாற்றி
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து

அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு 110
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறித்த கையை தீ நாய்
உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும் 115
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்

கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி 120
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து 125
தண்டா களிப்பின் ஆடும் கூத்து
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு
எம் அனை காணாய் ஈம சுடலையின்

வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என 130
தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
பார்ப்பான்-தன்னொடு கண் இழந்து இருந்த இ
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ 135
துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய்
தகவு இலை-கொல்லோ சபாபதி என
மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ

ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் 140
கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
என் உற்றனையோ எனக்கு உரை என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற 145
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன்
ஈம புறங்காட்டு எய்தினோன்-தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போல கிடந்தனன் காண் என

அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா 150
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும்
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என்
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் 155
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்

ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் 160
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள்
அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்த ஈம புறங்காட்டு 165
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும்
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும்

மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் 170
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
ஆழி தாழி அகவரை திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே 175
நால் வகை மரபின் அரூப பிரமரும்
நால்_நால் வகையின் உரூப பிரமரும்
இரு வகை சுடரும் இரு_மூ வகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்

பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் 180
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என 185
சம்பாபதி-தான் உரைத்த அ முறையே
எங்கு வாழ் தேவரும் உரைப்ப கேட்டே
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின்

சம்பாபதி-தன் ஆற்றல் தோன்ற 190
எங்கு வாழ் தேவரும் கூடிய இடம்-தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
நடுவு நின்ற மேரு குன்றமும்
புடையின் நின்ற எழு வகை குன்றமும்
நால் வகை மரபின் மா பெரும் தீவும் 195
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும்
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும்

பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து 200
மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண்
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின்
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார்
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க 205
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய

பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ 210
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது-தான் என்

#7 துயிலெழுப்பிய காதை

மணிமேகலை-தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட
உதயகுமரன் உறு துயர் எய்தி
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என 5
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
முன்னர் தோன்றி மன்னவன் மகனே
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்

மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை 10
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின்
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் 15
சுதமதி-தன்னை துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இ நகர் காண
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
ஆதி-சால் முனிவன் அறவழிப்படூஉம்

ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் 20
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர்
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் 25
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர்
ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள்
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள்
ஈங்கு நிகழ்வன ஏது பல உள

மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் 30
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என்
நாமம் செய்த நல் நாள் நள் இருள் 35
காமன் கையற கடு நவை அறுக்கும்
மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே
நனவே போல கனவு அகத்து உரைத்தேன்
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று

அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் 40
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்
கூடிய குயிலுவ கருவி கண் துயின்று 45
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்

பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது 50
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்
விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி 55
அமளி துஞ்சும் ஐம்படை தாலி
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்

இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் 60
கா உறை பறவையும் நா உள் அழுந்தி
விழவு களி அடங்கி முழவு கண் துயின்று
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடுநாள்
கோமகன் கோயில் குறு நீர் கன்னலின்
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் 65
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறை அழி யானை நெடும் கூ விளியும்
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்

முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் 70
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழ செருக்கு உற்ற அனந்தர் பாணியும்
அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து
புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம் 75
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும்
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என

இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் 80
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர்
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும் 85
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில்
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி

மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த 90
சக்கரவாள கோட்டத்து-ஆங்கண்
பலர் புக திறந்த பகு வாய் வாயில்
உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும்
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புத பாவை 95
மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ
திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின்
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே
துரக தானை துச்சயன் தேவி

தயங்கு இணர் கோதை தாரை சாவுற 100
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே
மாருதவேகனோடு இ நகர் புகுந்து
தாரை தவ்வை-தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய் 105
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு

நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் 110
காவலாளர் கண் துயில்-கொள்ள
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க
புகர் முக வாரணம் நெடும் கூ விளிப்ப 115
பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப
பணை நிலை புரவி பல எழுந்து ஆல
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப

பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப 120
கடவுள் பீடிகை பூ பலி கடைகொள
கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள
குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ
கொடுப்போர் கடை-தொறும் பண்ணியம் பரந்து எழ
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து 125
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும்
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
மா நகர் வீதி மருங்கில் போகி
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்

மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் 130
நல் மணி இழந்த நாகம் போன்று அவள்
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்
துன்னியது உரைத்த சுதமதி தான்-என்

#8 மணிபல்லவத்து துயருற்ற காதை

ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல்
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு
விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின் 5
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும்

வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் 10
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர் பள்ளி
துஞ்சு துயில் எழூஉம் அம்_சில்_ஓதி
காதல் சுற்றம் மறந்து கடைகொள
வேறு இடத்து பிறந்த உயிரே போன்று
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள் 15
கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மா கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப
உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது

சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை 20
நனவோ கனவோ என்பதை அறியேன்
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய்
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள் 25
வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன்
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என
திரை தவழ் பறவையும் விரி சிறை பறவையும்
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்

அன்ன சேவல் அரசன் ஆக 30
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
பாசறை மன்னர் பாடி போல
வீசு நீர் பரப்பின் எதிர்எதிர் இருக்கும்
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் 35
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ் துயர் எய்திய விழும கிளவியின்
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி

எம் இதில் படுத்தும் வெம் வினை உருப்ப 40
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து
ஐயாவோ என்று அழுவோள் முன்னர்
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி 45
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று
பதும சதுரம் மீமிசை விளங்கி
அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே

நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது 50
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி 55
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள்

இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே 60
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்

#9 பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள்
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன
தலை மேல் குவிந்த கையள் செம் கண்
முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின்
இடமுறை மும் முறை வலமுறை வாரா 5
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய்

காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் 10
வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு
பூருவ தேயம் பொறை கெட வாழும்
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன்
மைத்துனன் ஆகிய பிரமதருமன் 15
ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய்
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள்
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே

பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் 20
நாக நல் நாட்டு நானூறு யோசனை
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும்
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம்
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே 25
பறையின் சாற்றி நிறை அரும் தானையோடு
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை

சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப 30
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும்
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி
சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய 35
அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து
உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள்
அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும்
இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி

அலத்தக சீறடி அமுதபதி வயிற்று 40
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன்
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில்
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய 45
இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்
எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால்

தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை 50
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின்
கவேர கன்னி பெயரொடு விளங்கிய
தவா களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி 55
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர்
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு

அற செவி திறந்து மற செவி அடைத்து 60
பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என
சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் 65
காதலன் பிறப்பு காட்டாயோ என
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம்
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை

ஆங்கு அ தெய்வதம் வாராதோ என 70
ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என்

#10 மந்திரம் கொடுத்த காதை

அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் 5
முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க

சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் 10
இள வள ஞாயிறு தோன்றியது என்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம்
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன்
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே 15
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும்

இலக்குமி கேளாய் இராகுலன்-தன்னொடு 20
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின்
இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன்
தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து 25
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை

நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச 30
இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும்
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு 35
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும்
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும்
எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என

அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் 40
நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்
உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய
உதயகுமரன் அவன் உன் இராகுலன்
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம்
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் 45
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன்

இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் 50
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி 55
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி
அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன்

பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் 60
ஆதி முதல்வன் அற_ஆழி_ஆள்வோன்
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த 65
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ

பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என 70
அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது
சென்று கைதொழுது சிறப்பு செய்தலின்
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை 75
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்

விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் 80
அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன்
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள்
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ 85
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து
சிறந்த கொள்கை சே_இழை கேளாய்

மக்கள் யாக்கை உணவின் பிண்டம் 90
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என்

#11 பாத்திரம் பெற்ற காதை

மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல்லவத்திடை மணிமேகலை-தான்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி
காவதம் திரிய கடவுள் கோலத்து 5
தீவதிலகை செவ்வனம் தோன்றி
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும்
எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது

பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் 10
போய பிறவியில் பூமி அம் கிழவன்
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர்
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ 15
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும்
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த

தீவதிலகை செவ்வனம் உரைக்கும் 20
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெரும் கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் 25
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர் இது கேள்

தரும தலைவன் தலைமையின் உரைத்த 30
பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர்
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர்
பண்டை பிறவியர் ஆகுவர் பைம்_தொடி
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக 35
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள்
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது
மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி

இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து 40
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதி தலைவனொடு பொருந்தி தோன்றும்
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் 45
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது

தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் 50
நறு மலர் கோதை நின் ஊர்-ஆங்கண்
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம்
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி
தீவதிலகை-தன்னொடும் கூடி 55
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில்
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள்

மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி 60
மாரனை வெல்லும் வீர நின் அடி
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி
துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி 65
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி
தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி
வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி
நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி 70
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர்
போதி நீழல் பொருந்தி தோன்றும்
நாதன் பாதம் நவை கெட ஏத்தி
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் 75
குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் 80
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் 85
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்பு செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி 90
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் 95
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும்
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்

திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி 100
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
வெயில் விளங்கு அமயத்து விளங்கி தோன்றிய
சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன்
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் 105
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன்
துய்ப்போர்-தம் மனை துணி சிதர் உடுத்து

வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி 110
வெயில் என முனியாது புயல் என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி
தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே 115
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர்
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை

அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் 120
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப
தீவதிலகை-தன் அடி வணங்கி
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி 125
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு
வானூடு எழுந்து மணிமேகலை-தான்
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழு நாள் வந்தது என் மகள் வாராள்

வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் 130
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே
துரக தானை துச்சயன் தேவி
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி 135
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன்
வாய்வதாக மானிட யாக்கையில்
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு

அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின் 140
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் 145
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என்

#12 அறவணர் தொழுத காதை

ஆங்கு அவர்-தம்முடன் அறவண அடிகள்
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய்
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன் உறைவிடம் குறுகி
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி 5
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும்
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும்
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை

அணி_இழை-தன்னை அகற்றிய வண்ணமும் 10
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை
களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் 15
வெம் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால்

பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் 20
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம்
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும்
தெய்வம் போய பின் தீவதிலகையும்
ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும்
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை 25
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்
ஆபுத்திரன் திறம் அறவணன்-தன்-பால்
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்
போக என மடந்தை போந்த வண்ணமும்

மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் 30
மணிமேகலை உரை மாதவன் கேட்டு
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த 35
அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம்
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய
பாதபங்கய மலை பரவி செல்வேன்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்

துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் 40
மா பெரும் தானை மன்ன நின்னொடும்
தேவியர்-தமக்கும் தீது இன்றோ என
அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
புது கோள் யானை முன் போற்றாது சென்று 45
மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம்
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப

பழ_வினை பயன் நீ பரியல் என்று எழுந்தேன் 50
ஆடும் கூத்தியர் அணியே போல
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என
மணிமேகலை முன் மட_கொடியார் திறம்
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த 55
நறு மலர் கோதாய் நல்கினை கேளாய்
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி

அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு 60
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது
தண் பனி விழுங்கிய செம் கதிர் மண்டிலம்
உண்டு என உணர்தல் அல்லது யாவதும்
கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது 65
சலாகை நுழைந்த மணி துளை அகவையின்
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும்
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என

சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் 70
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்
சக்கரவாளத்து தேவர் எல்லாம்
தொக்கு ஒருங்கு ஈண்டி துடிதலோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து 75
விரி கதிர் செல்வன் தோன்றினன் என்ன
ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில்
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி

இரும் பெரு நீத்தம் புகுவது போல 80
அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம்
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம்
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன்
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர 85
புத்த ஞாயிறு தோன்றும்-காலை
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்

ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா 90
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம்
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும்
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் 95
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர்

இன்னா பிறவி இகந்தோர் ஆதலின் 100
போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி
மாதர் நின்னால் வருவன இ ஊர்
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள 105
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்
ஆதி முதல்வன் அரும் துயர் கெடுக்கும்
பாதபங்கய மலை பரசினர் ஆதலின்

ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு 110
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய்
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை 115
மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசி_பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின்

மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட 120
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என்

#13 ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய்
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து 5
கொண்டோ பிழைத்த தண்டம் அஞ்சி
தென் திசை குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி

தோன்றா துடவையின் இட்டனள் நீங்க 10
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர்
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் 15
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே

காதலி-தன்னொடு கைதொழுது எடுத்து 20
நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என
தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையா முன்னர்
நாவிடை நல்_நூல் நன்கனம் நவிற்றி
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் 25
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்
அ பதி-தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின்
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில்
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி

வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி 30
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து
கள்ள வினையின் கடும் துயர் பாழ்பட 35
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும்
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி
அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன்
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி

அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம் 40
கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று
அலை கோல்-அதனால் அறைந்தனர் கேட்ப 45
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை
கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து
காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்

நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் 50
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை 55
முது மறை அந்தணிர் முன்னியது உரைமோ
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை

தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ 60
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன் 65
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என

ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் 70
ஈங்கு இவன்-தன் பிறப்பு யான் அறிகுவன் என
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை 75
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும்
வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்

பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி 80
காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தென்-கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின் 85
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி
தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன்
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்

சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் 90
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என
ஆபுத்திரன் பின்பு அமர் நகை-செய்து
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் 95
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ
சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே 100
தாதை பூதியும் தன் மனை கடிதர
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்தி 105
சிந்தாவிளக்கின் செழு கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பல பீடிகை
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர்
ஐய கடிஞை கையின் ஏந்தி

மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி 110
காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்கு உற்றோர்
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன்-தான் என் 115

#14 பாத்திர மரபு கூறிய காதை

ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ
துயில்வோன்-தன்னை தொழுதனர் ஏத்தி 5
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும்
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த
கேள் இது மாதோ கெடுக நின் தீது என

யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து 10
தேவி சிந்தாவிளக்கு தோன்றி
ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே 15
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும்
சிந்தாதேவி செழு கலை நியமத்து
நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி

ஏனோர் உற்ற இடர் களைவாய் என 20
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும்
தொக்கு உடன் ஈண்டி சூழ்ந்தன விடாஅ 25
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்

தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி 30
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என 35
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்
ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது

அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் 40
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்
யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை 45
உண்டி-கொல்லோ உடுப்பன-கொல்லோ
பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும்
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு

இரப்போர் காணாது ஏமாந்திருப்ப 50
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும்
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன்
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்
பன்னீராண்டு பாண்டி நல் நாடு 55
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப
பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின்
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை

ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி 60
விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும்
நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்ப கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
ஆபுத்திரன்-தான் அம்பலம் நீங்கி 65
ஊர்ஊர்-தோறும் உண்போர் வினாஅய்
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை
இருந்தாய் நீயோ என்பார் இன்மையின்

திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள 70
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் 75
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி

கால் விசை கடுக கடல் கலக்குறுதலின் 80
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும்
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி 85
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன்

சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது 90
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன்
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு
உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி 95
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன்
என் உற்றனையோ என்று யான் கேட்ப
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்
குண திசை தோன்றி கார் இருள் சீத்து

குட திசை சென்ற ஞாயிறு போல 100
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன்
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என்

#15 பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை

இன்னும் கேளாய் இளம் கொடி மாதே
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ
தண்ணென் சாவக தவள மால் வரை
மண்முகன் என்னும் மா முனி இட-வயின்
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது 5
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி
ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம்
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த

ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து 10
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும்
குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன்
அடர் பொன் முட்டை அகவையினான் என
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய 15
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தற்காத்து அளித்த தகை ஆ-அதனை
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப

தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு 20
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின்
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் 25
போதி தலைவனொடு பொருந்திய போழ்தத்து
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது
போதி மாதவன் பூமியில் தோன்றும்

காலம் அன்றியும் கண்டன சிறப்பு என 30
சக்கரவாள கோட்டம் வாழும்
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய
அந்தில் பாவை அருளும் ஆயிடின்
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும் 35
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன்
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்

மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் 40
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் 45
துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்

அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை 50
வெண்_திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்து-ஆங்கு
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என
மாதவன் உரைத்தலும் மணிமேகலை-தான் 55
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு
பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும்
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும்

மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் 60
கொடி கோசம்பி கோமகன் ஆகிய
வடி தேர் தானை வத்தவன் தன்னை
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய
உஞ்ஞையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு 65
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
மது மலர் குழலாள் வந்து தோன்றி
பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது

திப்பியம் என்றே சிந்தை நோய் கூர 70
மண மனை மறுகில் மாதவி ஈன்ற
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின்
பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் 75
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை

நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் 80
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை
மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப
சாபம் பட்டு தனி துயர் உறூஉம்
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் 85
காய சண்டிகை எனும் காரிகை-தான் என்

#16 ஆதிரை பிச்சையிட்ட காதை

ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர்
பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள்
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய்
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி 5
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி

காணம் இலி என கையுதிர்க்கோடலும் 10
வங்கம் போகும் வாணிகர்-தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ் மலை 15
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நல் மரம் பற்றி
போயினன்-தன்னோடு உயிர் உய போந்தோர்
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல்

உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர்-தம்முடன் 20
சாதுவன்-தானும் சாவுற்றான் என
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
ஊரீரேயோ ஒள் அழல் ஈமம்
தாரீரோ என சாற்றினள் கழறி
சுடலை கானில் தொடு குழிப்படுத்து 25
முடலை விறகின் முளி எரி பொத்தி
மிக்க என் கணவன் வினை பயன் உய்ப்ப
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்

உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது 30
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப
தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் 35
யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி
நக்க சாரணர் நாகர் வாழ் மலை

பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் 40
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
வங்கம்-தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி 45
பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என்
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்

அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும் 50
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் 55
நக்க சாரணர் நயம் இலர் தோன்றி
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன்
தானே தமியன் வந்தனன் அளியன்
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும்

மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் 60
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள்
சுற்றும் நீங்கி தொழுது உரையாடி
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய்
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால்
போந்தருள் நீ என அவருடன் போகி 65
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன் பிணவோடு இருந்தது போல
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி

பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி 70
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன்
ஈங்கு நீ வந்த காரணம் என் என
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் 75
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து
வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என
அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும்

பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு 80
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின்
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும்
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் 85
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்

உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் 90
கண்டனை ஆக என கடு நகை எய்தி
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர்
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை
செவ்வனம் உரை என சினவாது இது கேள் 95
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின்
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ

போனார்-தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது 100
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ 105
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்

தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும் 110
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும்
நன்று சொன்னாய் நல் நெறி படர்குவை
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி 115
மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும்
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன்
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம்
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என

பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை 120
உண்டேம் அவர்-தம் உறு பொருள் ஈங்கு இவை
விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து
சந்திரதத்தன் என்னும் வாணிகன்
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி 125
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து
தன் மனை நன் பல தானமும் செய்தனன்
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என

மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் 130
புனையா ஓவியம் போல நிற்றலும்
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் 135

#17 உலக அறவி புக்க காதை

பத்தினி பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து 5
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி

அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று 10
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி
பட்டேன் என்-தன் பழ வினை பயத்தால்
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி 15
துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும்
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள்

துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும் 20
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன்
விஞ்சையன்-தன்னொடு என் வெவ் வினை உருப்ப
தென் திசை பொதியில் காணிய வந்தேன்
கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த 25
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன்
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர்

இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி 30
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின்
பூ கமழ் பொய்கை ஆட சென்றோன்
தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்த கரும் கனி சிதைத்தேன்
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் 35
கண்டனன் என்னை கரும் கனி சிதைவுடன்
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு

மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் 40
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தி தீயால் தனி துயர் உழந்து
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு 45
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம்
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை
வாடு பசி உழந்து மா முனி போய பின்

பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் 50
அலவலை செய்திக்கு அஞ்சினன் அகன்ற
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன்-தன்னால்
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன் 55
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக

நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி 60
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன்
சம்பு தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் 65
பல நாள் ஆயினும் நிலனொடு போகி
அ பதி புகுக என்று அவன் அருள்-செய்ய
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்
இந்திர கோடணை விழவு அணி வரு நாள்

வந்து தோன்றி இ மா நகர் மருங்கே 70
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமேகலை என் வான் பதி படர்கேன்
துக்கம் துடைக்கும் துகள்_அறு மாதவர் 75
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில்
பலர் புக திறந்த பகு வாய் வாயில்
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை
ஊர்ஊர்-ஆங்கண் உறு பசி உழந்தோர்

ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் 80
இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி
வல முறை மு முறை வந்தனை-செய்து அ 85
உலக அறவியின் ஒரு_தனி ஏறி
பதியோர்-தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய

தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி 90
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து
கருவி மா மழை தோன்றியது என்ன
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது 95
யாவரும் வருக ஏற்போர்-தாம் என
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என்

#18 உதயகுமரன் அம்பலம் புக்க காதை

ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின்
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி
தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான் 5
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர்

இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது 10
காதலன் வீய கடும் துயர் எய்தி
போதல்-செய்யா உயிரொடு புலந்து
நளி இரும் பொய்கை ஆடுநர் போல
முளி எரி புகூஉம் முது குடி பிறந்த
பத்தினி பெண்டிர் அல்லேம் பலர்-தம் 15
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே
பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்
நறும் தாது உண்டு நயன் இல் காலை

வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் 20
வினை ஒழி-காலை திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம்
தாபத கோலம் தாங்கினம் என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி 25
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை

பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி 30
மற்று அவன்-தன்னால் மணிமேகலை-தனை
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின்
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்க கூத்தியர் 35
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து
வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ

குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் 40
கடும் தேர் வீதி காலில் போகி
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை
பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர் 45
திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி
வெண் திரை விரிந்த வெண் நிற சாமரை

கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச 50
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன்
மாதவி மணிமேகலையுடன் எய்திய
தாபத கோலம் தவறு இன்றோ என
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப 55
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நல் நலம் கவினி
காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது

உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய 60
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன்
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் 65
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது
ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர்
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம்

ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த 70
முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம்
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பியதூஉம்
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் 75
அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும்
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என்
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று

இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் 80
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றனள்
தெய்வம்-கொல்லோ திப்பியம்-கொல்லோ
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல 85
சித்திராபதி தான் சிறு நகை எய்தி
அ திறம் விடுவாய் அரசிளங்குருசில்
காம கள்ளாட்டிடை மயக்குற்றன
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்

மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி 90
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும்
மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய
அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய் 95
தங்கா வேட்கை-தனை அவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்
கன்னி காவலும் கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவு உறின் காவலும்

நிறையின் காத்து பிறர்பிறர் காணாது 100
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர்-தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ 105
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை

பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல் 110
கோன்முறை அன்றோ குமரற்கு என்றலும்
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி
காடு அமர் செல்வி கடி பசி களைய 115
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து
பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும்
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி

உடம்போடு என்-தன் உள்ளகம் புகுந்து என் 120
நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பு என சென்று 125
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி

அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும் 130
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும்
தொன்று காதலன் சொல் எதிர்மறுத்தல்
நன்றி அன்று என நடுங்கினள் மயங்கி
கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் 135
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்

மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு 140
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ
கேட்டனை ஆயின் வேட்டது செய்க என
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சர குடிகை-தன் அகம் புக்கு ஆங்கு 145
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என
தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதி
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய்

மணிமேகலை தான் வந்து தோன்ற 150
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு
குச்சர குடிகை குமரியை மரீஇ
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த
காயசண்டிகை-தன் கையில் காட்டி
மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை 155
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன்
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்

பவள செ வாய் தவள வாள் நகையும் 160
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும்
முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும்
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை
கவை முள் கருவியும் ஆகி கடிகொள
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி 165
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என
முதியாள் உன்-தன் கோட்டம் புகுந்த

மதி வாள் முகத்து மணிமேகலை-தனை 170
ஒழிய போகேன் உன் அடி தொட்டேன்
இது குறை என்றனன் இறை_மகன்-தான் என்

#19 சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை

முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற
ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன்
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை 5
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
உதயகுமரன் உள்ளம் கலங்கி
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே

செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் 10
பை_அரவு அல்குல் பலர் பசி களைய
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
முத்தை முதல்வி அடி பிழைத்தாய் என
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் 15
பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறை கோட்டு

நீல யானை மேலோர் இன்றி 20
காமர் செம் கை நீட்டி வண்டு படு
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர்-தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த 25
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின்
உறையுள் குடிகை உள்வரி கொண்ட

மறு_இல் செய்கை மணிமேகலை தான் 30
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிடலீயான்
காய்பசி_ஆட்டி காயசண்டிகை என
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி 35
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என
முதியாள் கோட்டத்து அக-வயின் இருந்த

அமுதசுரபியை அங்கையின் வாங்கி 40
பதி_அகம் திரிதரும் பைம் தொடி நங்கை
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை 45
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும்
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும்

யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி 50
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அ நாள்
நீரின் பெய்த மூரி வார் சிலை
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு 55
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய
வரி குயில் பாட மா மயில் ஆடும்

விரை பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் 60
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மட மயில் பேடையும் தோகையும் கூடி
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் 65
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி

பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் 70
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண்
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும்
பாசிலை செறிந்த பசும் கால் கழையொடு 75
வால் வீ செறிந்த மராஅம் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும்
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்

நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் 80
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர் 85
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர்
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர்

பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் 90
ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து
குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து 95
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும்
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும்
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன்
செம்மலர் செம் கை காட்டுபு நின்று

மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும் 100
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திர கிணறும் இடும் கல் குன்றமும்
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும்
பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும்
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும் 105
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி
மகத வினைஞரும் மராட்ட கம்மரும்
அவந்தி கொல்லரும் யவன தச்சரும்
தண் தமிழ் வினைஞர்-தம்மொடு கூடி

கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை 110
பவள திரள் கால் பல் மணி போதிகை
தவள நித்தில தாமம் தாழ்ந்த
கோண சந்தி மாண் வினை விதானத்து
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து 115
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப

வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி 120
முறம் செவி யானையும் தேரும் மாவும்
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர்
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை
ஆர் புனை தெரியல் இளங்கோன்-தன்னால் 125
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை
வலி கெழு தட கை மாவண்கிள்ளி
ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை

கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் 130
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர்
அரு சிறைக்கோட்டத்து அக-வயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு 135
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ என்றலும்
வருக வருக மட_கொடி-தான் என்று

அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் 140
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார்
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் 145
விரை தார் வேந்தே நீ நீடு வாழி
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர்
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை
வானம் வாய்க்க மண் வளம் பெருகுக

தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது 150
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று 155
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும்
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த

பெரும் தவர்-தம்மால் பெரும் பொருள் எய்த 160
கறையோர் இல்லா சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என்

#20 உதயகுமரனை காஞ்சனன் வாளால் எறிந்த காதை

அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால்
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம்
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான்
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் 5
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு

வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் 10
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று 15
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து

பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய 20
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான்
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் 25
காயசண்டிகை என கையறவு எய்தி
காஞ்சனன் என்னும் அவள்-தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூ மர சோலையும்

மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் 30
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை
மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய 35
வான வாழ்க்கையர் அருளினர்-கொல் என
பழைமை கட்டுரை பல பாராட்டவும்
விழையா உள்ளமொடு அவன்-பால் நீங்கி
உதயகுமரன்-தன்-பால் சென்று

நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி 40
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய் 45
இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய்

சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின 50
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ
புலவு புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளை தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய் 55
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று

திரங்கிய விரல்கள் இவையும் காணாய் 60
வாழை தண்டே போன்ற குறங்கு இணை
தாழை தண்டின் உணங்கல் காணாய்
ஆவ கணை கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ 65
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என

விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும் 70
தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும்
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி
பவள கடிகையில் தவள வாள் நகையும் 75
குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி
மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள்

புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் 80
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன்
ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும்
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
வளை சேர் செம் கை மணிமேகலையே
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி 85
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ
வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து

வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து 90
வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை
கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை
உயாவு துணையாக வயாவொடும் போகி
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல 95
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெம் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல

ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த 100
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே
வெம் சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என 105
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன்
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி
காயசண்டிகையை கைக்கொண்டு அந்தரம்
போகுவல் என்றே அவள்-பால் புகுதலும்

நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க 110
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
அணுகல் அணுகல் விஞ்சை காஞ்சன
மணிமேகலை-அவள் மறைந்து உரு எய்தினள்
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
வானம் போ_வழி வந்தது கேளாய் 115
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசை போகார்
போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம்

விந்தம் காக்கும் விந்தா கடிகை 120
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள்
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய்
வெவ் வினை செய்தாய் விஞ்சை காஞ்சன 125
அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என்

#21 கந்திற்பாவை வருவது உரைத்த காதை

கடவுள் எழுதிய நெடு நிலை கந்தின்
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில்
முதியாள் கோட்டத்து அக-வயின் கிடந்த
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் 5
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில்
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை
அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும்
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என

தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி 10
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம்
தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து 15
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்

அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் 20
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின்
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ என
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி 25
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும்
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண்
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல்
நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம்

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் 30
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை
தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல்
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் 35
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன்

திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் 40
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான்
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம்
அறிதலும் அறிதியோ அறிந்தனை ஆயின்
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என 45
தெய்வ கிளவியில் தெய்வம் கூறும்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்

பிரமதருமனை பேணினிர் ஆகி 50
அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்
விடியல் வேலை வேண்டினம் என்றலும்
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி
காலை தோன்ற வேலையின் வரூஉ
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து 55
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை
சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்ற
தோளும் தலையும் துணிந்து வேறாக

வாளின் தப்பிய வல் வினை அன்றே 60
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு
இராகுலன் தன்னை இட்டு அகலாதது
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய
அவல வெவ் வினை என்போர் அறியார்
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் 65
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்
மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும்

ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை 70
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய்
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் 75
இடு சிறை நீக்கி இராசமாதேவி
கூட வைக்கும் கொட்பினள் ஆகி
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி
தீது கூற அவள்-தன்னொடும் சேர்ந்து

மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு 80
காதலி நின்னையும் காவல் நீக்குவள்
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால்
புரையோர் பேணி போகலும் போகுவை
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து 85
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
தீவதிலகையின் தன் திறம் கேட்டு
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்

ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் 90
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும்
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும்
முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும் 95
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன்
அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும்
துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும்

பூத விகார புணர்ப்பு என்போர்களும் 100
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள்
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த 105
நறு மலர் கோதை எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு
ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க

காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை 110
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய்
அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
வாயே என்று மயக்கு ஒழி மடவாய்
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் 115
எழுதிய பாவையும் பேசா என்பது
அறிதலும் அறிதியோ அறியாய்-கொல்லோ
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்

கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் 120
முது மர இடங்களும் முது நீர் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் 125
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய்

மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன் 130
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின்
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்
மாந்தர் அறிவது வானவர் அறியார்
ஓவியச்சேனன் என் உறு துணை தோழன் 135
ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம்
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து

நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் 140
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம்
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என
தேறேன் அல்லேன் தெய்வ கிளவிகள்
ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும்
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன் 145
வருவது கேளாய் மட கொடி நல்லாய்
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்

ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த 150
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி
தையல் நின் பயந்தோர்-தம்மொடு போகி
அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின்
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் 155
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம்
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும்

ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள 160
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள்
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற 165
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும்-காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும்

தாயரும் நீயும் தவறு இன்று ஆக 170
வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய்
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின்
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் 175
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி

இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை 180
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்
ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி 185
மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என
துவதிகன் உரைத்தலும் துயர் கடல் நீங்கி
அவதி அறிந்த அணி இழை நல்லாள்
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்

உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் 190

#22 சிறை செய் காதை

கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப
நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப
சா துயர் கேட்டு சக்கரவாளத்து 5
மாதவர் எல்லாம் மணிமேகலை-தனை
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும்
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய

வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து 10
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய
வேலும் கோலும் அருட்கண் விழிக்க 15
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே
இன்றே அல்ல இ பதி மருங்கில்

கன்றிய காம கள்ளாட்டு அயர்ந்து 20
பத்தினி பெண்டிர்-பால் சென்று அணுகியும்
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும்
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர்
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால்
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் 25
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
இ நகர் காப்போர் யார் என நினைஇ
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற

காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் 30
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய்
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின்
பரசுராமன் நின்-பால் வந்து அணுகான்
அமர முனிவன் அகத்தியன்-தான் அது 35
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும்
சுகந்தன் காத்தல் காகந்தி என்றே
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள்

தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் 40
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன்
நீ வா என்ன நேர்_இழை கலங்கி
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் 45
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன்
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள்

பூத சதுக்கம் புக்கனள் மயங்கி 50
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனை அறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினை-கொல்லோ பூத சதுக்கத்து 55
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும்
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ 60
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய்
பிசியும் நொடியும் பிறர் வாய் கேட்டு
விசி பிணி முழவின் விழா கோள் விரும்பி
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது 65
நிறை உடை பெண்டிர்-தம்மே போல
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது

பெட்டாங்கு ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல 70
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம்
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
பின்_முறை அல்லது என் முறை இல்லை
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் 75
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன்

இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த 80
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே
தருமதத்தனும் தன் மாமன் மகள்
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி
தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் 85
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை

உலக அறிவியின் ஊடு சென்று ஏறி 90
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய்
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என
நா உடை பாவை நங்கையை எடுத்தலும்
தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் 95
மையல் ஊரோ மன மாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன்
இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி

மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் 100
தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என
நா உடை பாவையை நலம் பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து 105
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின்
தருமதத்தனும் தன் மாமன் மகள்
விரி தரு பூ குழல் விசாகையை அல்லது
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என

கொண்ட விரதம் தன்னுள் கூறி 110
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின்
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு 115
என் செய்தனையோ இரு நிதி செல்வ
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின்

நீட்டித்து இராது நின் நகர் அடைக என 120
தக்கண மதுரை தான் வறிது ஆக
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் 125
அல்லவை கடிந்த அவன்-பால் சென்று
நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என்

நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன 130
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய்
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன்
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன்
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா 135
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழு துணை ஆவது
தானம் செய் என தருமதத்தனும்

மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி 140
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம்
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால்
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள்
அமரர் அருளால் அகல் நகர் இடூஉம்
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண் 145
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த

விரி பூ மாலை விரும்பினன் வாங்கி 150
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செம் கை
நீல குஞ்சி நீங்காது ஆகலின்
ஏறிய செம் கை இழிந்திலது இந்த 155
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து

வாழிய எம் கோ மன்னவ என்று 160
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன்
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து
நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர்
இன்றும் உளதோ இ வினை உரைம் என 165
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்

கடியப்பட்டன ஐந்து உள அவற்றில் 170
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் தம்-பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே 175
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள்
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்

மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான் 180
முற்றா முலையினள் முதிரா கிளவியள்
செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும்
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்
ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் 185
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின்

காயசண்டிகை-தன் கணவன் ஆகிய 190
வாய் வாள் விஞ்ஞையன் ஒருவன் தோன்றி
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின்
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன்
உதயகுமரன் ஒழியான் ஆக 195
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்ஞயன்-தன்னையும் கூஉய்

விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என 200
வஞ்ச விஞ்ஞையன் மனத்தையும் கலக்கி
ஆங்கு அவன்-தன் கை வாளால் அம்பலத்து
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்
சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி 205
யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்று எனின் இன்றால்

மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் 210
துயர் வினையாளன் தோன்றினன் என்பது
வேந்தர்-தம் செவி உறுவதன் முன்னம்
ஈங்கு இவன்-தன்னையும் ஈமத்து ஏற்றி
கணிகை_மகளையும் காவல்-செய்க என்றனன்
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் 215

#23 சிறை விடு காதை

மன்னவன் அருளால் வாசந்தவை எனும்
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும்
திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும்
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் 5
பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள்
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை

தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி 10
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து
செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும்
தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என
மூத்து விளிதல் இ குடி பிறந்தோர்க்கு 15
நா புடைபெயராது நாணு தகவுடைத்தே
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் என படுமோ நின் மகன் மடிந்தது
மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன்

துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் 20
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள்
பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து 25
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன்
கரும்பு உடை தட கை காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும்
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு

சிறை தக்கன்று செங்கோல் வேந்து என 30
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி 35
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று
அங்கு அவள்-தனை கூஉய் அவள்-தன்னோடு
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு
அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம்

எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே 40
மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது-செய்யா அறிவினள் ஆக
கல்லா இளைஞன் ஒருவனை கூஉய்
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து 45
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்
பான்மை கட்டுரை பலர்க்கு உரை என்றே
காணம் பலவும் கை நிறை கொடுப்ப
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த

பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் 50
தேவி வஞ்சம் இது என தெளிந்து
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப
காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் 55
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின்
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என

பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப 60
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது 65
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண

விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் 70
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ
உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை
எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே 75
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்

மற்று உன் மகனை மாபெருந்தேவி 80
செற்ற கள்வன் செய்தது கேளாய்
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே 85
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின்
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என
மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா
தெய்வ கட்டுரை தெளிந்ததை ஈறா

உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து 90
மற்றும் உரை செயும் மணிமேகலை-தான்
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பது-செய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லா கயவன் கார் இருள் தான் வர
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் 95
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும்
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்

காதல பயந்தோய் கடும் துயர் களைந்து 100
தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால்
தையால் உன்-தன் தடுமாற்று அவலத்து
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய்
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு
காருக மடந்தை கணவனும் கைவிட 105
ஈன்ற குழவியொடு தான் வேறாகி
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன்
பதியோர் அறியா பான்மையின் வளர்க்க

ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் 110
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும்
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட
கான வேட்டுவன் கடு கணை துரப்ப
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி 115
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்
கேட்டும் அறிதியோ வாள் தட கண்ணி

கடாஅ யானை முன் கள் காமுற்றோர் 120
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ 125
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர்
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்

கற்ற கல்வி அன்றால் காரிகை 130
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் 135
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என
ஞான நல் நீர் நன்கனம் தெளித்து
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து

மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 140
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப
தேறு படு சில் நீர் போல தெளிந்து
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள்
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை 145
காதல பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என்

#24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை

மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல் முது கணிகை-தன் சூழ்ச்சியில் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க 5
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும்
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள

மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் 10
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும்
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன்
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ 15
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல்
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்
மாபெருந்தேவி மாதர் யாரினும்
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று

மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் 20
பரந்து படு மனை-தொறும் பாத்திரம் ஏந்தி
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடக கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின்
மன்னவன் மகனே அன்றியும் மாதரால் 25
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா

இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற 30
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை
தானே தமியள் ஒருத்தி தோன்ற
இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தா
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் 35
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும்
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த

மலர் வாய் அம்பின் வாசம் கமழ 40
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள்
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே
வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி 45
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்

அன்னாள் ஒருத்தியை கண்டிரோ அடிகள் 50
சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான்
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி 55
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அ நாள்
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன்

ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது 60
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள்
தீவக சாந்தி செய்யா நாள் உன்
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
மணிமேகலை-தன் வாய்மொழியால் அது
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் 65
ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழா கோள் மறவேல் என்று

மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ 70
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின்
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என
அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி
நல் மனம் பிறந்த நாடக கணிகையை 75
என் மனை தருக என இராசமாதேவி
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை

புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி 80
நின்னொடு போந்து நின் மனை புகுதாள்
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி
மணிமேகலை திறம் மாதவி கேட்டு
துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல்
தெளியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து 85
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன்
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர
தேவியும் ஆயமும் சித்திராபதியும்

மாதவி மகளும் மாதவர் காண்டலும் 90
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால்
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும்
இணை வளை நல்லாள் இராசமாதேவி
அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி 95
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின்
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என்
காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து

மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என 100
தேவி கேளாய் செய் தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே இது கேள்
பேதைமை செய்கை உணர்வே அருஉரு 105
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினை பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்

அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் 110
பேதைமை என்பது யாது என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் 115
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான்

சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி 120
வினை பயன் விளையும்-காலை உயிர்கட்கு
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீ_வினை என்பது யாது என வினவின்
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காம தீ விழைவு 125
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல்
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என 130
பத்து வகையால் பயன் தெரி புலவர்
இ திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர்
நல்_வினை என்பது யாது என வினவின் 135
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கி தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி

மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர் 140
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின்
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
இ திறம் பலவும் இவற்றின் பகுதியும் 145
முத்து ஏர் நகையாய் முன்னுற கூறுவல்
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
தேவியும் ஆயமும் சித்திராபதியும்

மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின் 150
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள்
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு 155
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா
மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த

அந்தி மாலை ஆய்_இழை போகி 160
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர்
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து 165
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும்
மன்னவன் யார் என மாதவன் கூறும்
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்

பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் 170
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும்
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் 175
அகை மலர் பூம் பொழில் அரும் தவன்-தான் என்

#25 ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை

அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து
தருமசாவகன்-தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்த
திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் 5
ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்

இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன 10
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம்
கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி
கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி 15
காவிரி படப்பை நல் நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி

ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி 20
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய்
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது 25
பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய்
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ
பூம் கமழ் தாரோன் முன்னர் புகன்று
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து

வெய்யவன் குட-பால் வீழா முன்னர் 30
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்
பூ நாறு அடைகரை எங்கணும் போகி
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை 35
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி

பெருமகன்-தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் 40
விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின்
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் 45
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும்
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
இன்னா பிறவி இழுக்குநர் இல்லை
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம்

போற்று-மின் அறம் என சாற்றி காட்டி 50
நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர்
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை
கரியவன் இட்ட காரணம்-தானும் 55
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது

பீடிகை பொறுத்த பின்னர் அல்லது 60
வானவன் வணங்கான் மற்று அ வானவன்
பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியை
தரும பீடிகை சாற்றுக என்றே
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும்
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது 65
அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு

தந்தை முனியா தாய் பசு ஆக 70
வந்த பிறவியும் மா முனி அருளால்
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
மா முனி அருளால் மக்களை இல்லோன்
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் 75
ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும்
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து

செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க 80
அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி
நாடகம் கண்டு பாடல் பான்மையின்
கேள்வி இன் இசை கேட்டு தேவியர்
ஊடல் செவ்வி பார்த்து நீடாது
பாடக தாமரை சீறடி அணிந்து 85
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி
மதி முக கரும் கண் செம் கடை கலக்க

கருப்பு_வில்லி அருப்பு கணை தூவ 90
தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து
தூ அற துறத்தல் நன்று என சாற்றி
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது
மணிமேகலை-தான் காரணம் ஆக என்று 95
அணி மணி நீள் முடி அரசன் கூற
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி

நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் 100
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என 105
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்க்கு
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா

நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் 110
தாய் ஒழி குழவி போல கூஉம்
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே 115
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்
மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு

மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த 120
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்
அரசும் உரிமையும் அகநகர் சுற்றமும்
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என
கலம் செய் கம்மியர் வருக என கூஉய்
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி 125
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும்
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி

காவலன்-தன்னொடும் கடல் திரை உலாவும் 130
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும்
தரும பீடிகை இது என காட்ட
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை 135
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை
மை_அறு மண்டிலம் போல காட்ட
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய்

மாரி நடுநாள் வயிறு காய் பசியால் 140
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என 145
அமுதசுரபி அங்கையில் தந்து என்
பவம் அறுவித்த வானோர் பாவாய்
உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும்
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி

தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் 150
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து
தென்மேற்காக சென்று திரை உலாம் 155
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி

அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு 160
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை
அ நாள் நின்னை அயர்த்து போயினர்
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் 165
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால்

அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய 170
என்பு உடை யாக்கை இருந்தது காணாய்
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய 175
மடவரல் நல்லாய் நின்றன் மா நகர்
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்
நாக நல் நாடு ஆள்வோன்-தன் மகள்
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்

பனி பகை வானவன் வழியில் தோன்றிய 180
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து 185
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய

கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் 190
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
நல் மணி இழந்த நாகம் போன்று 195
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என

இட்டனள் சாபம் பட்டது இதுவால் 200
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தட கை வானவன் போல
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க
ஒரு_தனி போயினன் உலக மன்னவன்
அரும் தவன்-தன்னுடன் ஆய்_இழை தாயரும் 205
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள்
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்

முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் 210
அற அரசு ஆண்டதும் அறவணன்-தன்-பால்
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின்
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்
துன்னிய தூ மணல் அகழ தோன்றி 215
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி
தான் பிணி அவிழா தகைமையது ஆகி
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி

மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து 220
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய்
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி
அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும்
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் 225
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு
அறம் எனப்படுவது யாது என கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது 230
கண்டது இல் என காவலன் உரைக்கும்
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன்
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என 235
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும்
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று
அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என்

#26 வஞ்சி மாநகர் புக்க காதை

அணி_இழை அந்தரம் ஆறா எழுந்து
தணியா காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து 5
வணங்கி நின்று குணம் பல ஏத்தி
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது
கற்பு கடன் பூண்டு நும் கடன் முடித்தது
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப

ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் 10
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம்
இது நீர் முன் செய் வினையின் பயனால்
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு 15
தாய மன்னவர் வசுவும் குமரனும்
சிங்கபுரமும் செழு நீர் கபிலையும்
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி

யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு 20
பல் கலன் கொண்டு பலர் அறியாமல்
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
பண்ட கலம் பகர் சங்கமன் தன்னை
கண்டனர் கூற தையல் நின் கணவன்
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் 25
தீ தொழிலாளன் தெற்றென பற்றி
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி

ஏங்கி மெய்பெயர்ப்போள் இறுவரை ஏறி 30
இட்ட சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்
மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம் 35
அ வினை இறுதியின் அடு சின பாவம்
எ வகையானும் எய்துதல் ஒழியாது
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல

நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி 40
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும்
கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின்
அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து 45
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி
போதி மூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதி தோற்றமும்

அ நிலை எல்லாம் அழிவுறு வகையும் 50
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி
எண் அரு சக்கரவாளம் எங்கணும்
அண்ணல் அற கதிர் விரிக்கும்-காலை
பைம்_தொடி தந்தையுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் 55
துன்ப கதியில் தோற்றரவு இன்றி
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
துறவி உள்ளம் தோன்றி தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்

அ திறம் ஆயினும் அநேக காலம் 60
எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய 65
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என

மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த 70
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் 75
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய

நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன 80
கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க
தேரும் மாவும் செறி கழல் மறவரும்
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து 85
கனக விசயர் முதல் பல வேந்தர்
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை

செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் 90
வில் திறல் வெய்யோன்-தன் புகழ் விளங்க
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள்
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின்
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என்

#27 சமய கணக்கர் தம் திறம் கேட்ட காதை

நவை அறு நன்பொருள் உரை-மினோ என
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என
வேத வியாதனும் கிருத கோடியும் 5
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புற
தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்
காண்டல் கருதல் உவமம் ஆகமம்

ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு 10
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு
எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால்
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும்
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் 15
நண்ணிய மூக்கால் நாற்றனும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி 20
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சூட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும்
கருத்து அளவு அவது 25
குறிக்கொள் அனுமானத்து அனுமேய
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம்

இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் 30
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன்
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல்
முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு 35
இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி

காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் 40
உவமம் ஆவது ஒப்புமை அளவை
கவய_மா ஆ போலும் என கருதல்
ஆகம அளவை அறிவன் நூலால்
போக புவனம் உண்டு என புலங்கொளல்
அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை 45
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல்
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து

எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் 50
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை
தவாது அ இடத்து தான் இலை என்றல்
மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது நாராச திரிவில் 55
கொள்ள தகுவது காந்தம் என கூறல்
எட்டு உள பிரமாண ஆபாசங்கள்
சுட்டுணர்வோடு விரிய கோடல் ஐயம்
தேராது தெளிதல் கண்டு உணராமை

எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் 60
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது
எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல்
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல்
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா 65
மையல் தறியோ மகனோ என்றல்
தேராது தெளிதல் செண்டு வெளியில்
ஓராது தறியை மகன் என உணர்தல்
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று

அண்டலை முதலிய கண்டும் அறியாமை 70
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன
சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல்
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல்
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது 75
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று
பிறர் சொல கருதல் இ பெற்றிய அளவைகள்
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்

மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் 80
தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
உவமானம் அருத்தாபத்தி அபாவம்
இவையே இப்போது இயன்று உள அளவைகள் 85
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர்படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன
இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று

எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் 90
கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்து துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் 95
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர்
தேவன் இட்ட முட்டை என்றனன்
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன்

கற்பம் கை சந்தம் கால் எண் கண் 100
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்று
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இலை அது நெறி எனும்
வேதியன் உரையின் விதியும் கேட்டு 105
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற
எ திறத்தினும் இசையாது இவர் உரை என
ஆசீவக நூல் அறிந புராணனை
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என

எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் 110
புல்லி கிடந்து புலப்படுகின்ற
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு
அ அணு உற்றும் கண்டும் உணர்ந்திட
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் 115
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அ வகை அறிவது உயிர் எனப்படுமே

வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து 120
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் 125
ஆதி இல்லா பரமாணுக்கள்
தீது உற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
முது நீர் அணு நில அணுவாய் திரியா

ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா 130
அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவா கூடும் பலவும்
பின்னையும் பிரிந்து தன் தன்மைய ஆகும்
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் 135
வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்
நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்

ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் 140
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே
இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திடமாட்டா 145
ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர்
தேரார் பூத திதட்சியுள் ஏனோர்
மாலை போதில் ஒரு மயிர் அறியார்
சால திரள் மயிர் தோற்றுதல் சாலும்

கரும் பிறப்பும் கருநீல பிறப்பும் 150
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்று இ ஆறு பிறப்பினும் மேவி
பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர்
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர் 155
அழியல் வேண்டார் அது உறற்பாலார்
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்
அது மண்டலம் என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்

உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் 160
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும்
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது
மற்கலி நூலின் வகை இது என்ன 165
சொல் தடுமாற்ற தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை நீ உரை நின்னால்
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை
அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு

மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன் 170
இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்
அதன்மாத்திகாயமும் காலா காயமும்
தீது இல் சீவனும் பரமாணுக்களும்
நல்_வினையும் தீ_வினையும் அ வினையால் 175
செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த
ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும்
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று

நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே 180
தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்
நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம்
பயற்று தன்மை கெடாது கும்மாயம் 185
இயற்றி அ பயறு அழிதலும் ஏது
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித்து ஆகி அதன் மாத்திகாயமும்

எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 190
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும்
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
சீவன் உடம்போடு ஒத்து கூடி 195
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்
சீர்-சால் நல்_வினை தீ_வினை அவை செயும்
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய்

அரு வினை பயன் அனுபவித்து அறுத்திடுதல் 200
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின்
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்
தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய்
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்
எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என 205
சொல்லுதல் மூல பகுதி சித்தத்து
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு
அதன்-கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்-கண்
வாயு வெளிப்பட்டு அதன்-கண் அங்கி

ஆனது வெளிப்பட்டு அதன்-கண் அப்பின் 210
தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு
அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு
ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும்
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும்
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் 215
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும்
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும்
நில கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய்

வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என 220
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த
பூத விகாரத்தால் மலை மரம் முதல்
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவை சென்று அடங்கி
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் 225
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்
அறிதற்கு எளிதாய் மு குணம் அன்றி
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி
எப்பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி

அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் 230
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே 235
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என

செயிர் அற செப்பிய திறமும் கேட்டு 240
வைசேடிக நின் வழக்கு உரை என்ன
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது
குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை 245
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான்
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்

பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் 250
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம் முதல் அநேகம் 255
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின்

சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை 260
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
பூத வாதியை புகல் நீ என்ன
தாதகி பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு 265
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும்

உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 270
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும்
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும்
உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்
இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே 275
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முற்பிறப்பை எய்த பெறுதலின்

அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும் 280
தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எ வகை அறிவாய் 285
மெய்யுணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அறிய
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என
உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என்

#28 கச்சி மாநகர் புக்க காதை

ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும்
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் 5
சுரும் குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும்
புவி காவலன்-தன் புண்ணிய நல் நாள்

சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் 10
மேலை மாதவர் பாதம் விளக்கும்
சீல உபாகர் செம் கை நறு நீரும்
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் 15
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும்
என்று இ நீரே எங்கும் பாய்தலின்
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி

தாமரை குவளை கழுநீர் ஆம்பல் 20
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த 25
வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும்
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு
கடை காப்பு அமைந்த காவலாளர்

மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் 30
பல் மீன் விலைஞர் வெள் உப்பு பகருநர்
கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர்
மை நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகும் இருங்கோவேட்களும்
செம்பு செய்ஞரும் கஞ்சகாரரும் 35
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்

மாலைக்காரரும் கால கணிதரும் 40
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப
நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும்
பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு
இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும் 45
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின்
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்
பால் வேறு ஆக எண் வகை பட்ட
கூலம் குவைஇய கூல மறுகும்

மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் 50
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் 55
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும்
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்

புது கோல் யானையும் பொன் தார் புரவியும் 60
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்
வேணவா மிகுக்கும் விரை மர காவும்
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் 65
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்

இந்திர விகாரம் என எழில் பெற்று 70
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர்
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள்
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்
தான பயத்தால் சாவக மன்னவன் 75
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி

மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள 80
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு
இறவாது இ பதி புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் தன் நாடு எய்த
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும்
புக்க பின் அந்த பொய் உருவுடனே 85
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி

மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் 90
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என்
நல்_வினை பயன்-கொல் நான் கண்டது என
தையல் கேள் நின் தாதையும் தாயும்
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற
துன்புற விளிந்தமை கேட்டு சுகதன் 95
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே

மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் 100
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம்
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள்
துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும் 105
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்
இலங்கா தீவத்து சமனொளி என்னும்
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்

கரு முகில் படலத்து ககனத்து இயங்குவோர் 110
அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின்
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து
கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி
முன் தவம் உடைமையின் முனிகலை ஏத்தி
பங்கய சே அடி விளக்கி பான்மையின் 115
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம்
பாத்திரத்து அளித்து பல பல சிறப்பொடு
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்

அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை 120
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல்
துன்பம் நீங்க சொரியும் அ நாள்
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை
முன்னோன் கோவலன் மன்னவன்-தனக்கு
நீங்கா காதல் பாங்கன் ஆதலின் 125
தாங்கா நல் அறம் தானும் கேட்டு
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி
தன்னான் இயன்ற தனம் பல கோடி
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து

தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய 130
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம்
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ
தண்டா காட்சி தவத்தோர் அருளி
காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ 135
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது
இன்னும் கேளாய் நல் நெறி மாதே
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும்
தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால்

ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து 140
பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம்
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி
காதலி-தன்னொடு கபிலை அம் பதியில்
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று
அற்புத கிளவி அறிந்தோர் கூற 145
சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும்
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ

தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் 150
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின்
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள்
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர்
அன்னதை அன்றியும் அணி_இழை கேளாய் 155
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய்

ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் 160
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி
வட திசை மருங்கின் வானத்து இயங்கி 165
தேவர் கோமான் காவல் மா நகர்
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை

பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு 170
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து
தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி
செம் பொன் மா சினை திருமணி பாசடை
பைம் பூ போதி பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக 175
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும்
வையம் காவலன் தன்-பால் சென்று
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்

நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் 180
அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு
தங்காது இ பதி தருமத வனத்தே
வந்து தோன்றினள் மா மழை போல் என
மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி
கந்தில்_பாவை கட்டுரை எல்லாம் 185
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி
ஆய் வளை நல்லாள்-தன்னுழை சென்று
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ
கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ

நலத்தகை நல்லாய் நல் நாடு எல்லாம் 190
அலத்தல்-காலை ஆகியது அறியேன்
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர்
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின்
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் 195
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்
தாங்கா மாரியும் தான் நனி பொழியும்
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால்

கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது 200
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது 205
இ இடம் என்றே அ இடம் காட்ட
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்
பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய

அங்கு அ பீடிகை இது என அறவோன் 210
பங்கய பீடிகை பான்மையின் வகுத்து
தீவதிலகையும் திரு மணிமேகலா
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற 215
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி
பங்கய பீடிகை பசி_பிணி மருந்து எனும்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என

பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் 220
மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் 225
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும்

நீரும் நிலமும் காலமும் கருவியும் 230
சீர் பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப
வசி தொழில் உதவி வளம் தந்தது என
பசி_பிணி தீர்த்த பாவையை ஏத்தி
செல்லும்-காலை தாயர்-தம்முடன் 235
அல்லவை கடிந்த அறவண அடிகளும்
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி

நன்று என விரும்பி நல் அடி கழுவி 240
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின்
பாசிலை திரையலும் பளிதமும் படைத்து
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் 245

#29 தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை

இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
தன் மகள் பீலிவளை தான் பயந்த
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி 5
தனி கல கம்பள செட்டி கைத்தரலும்
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்

மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது 10
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப
தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன்
நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் 15
முன்னிய வங்கம் முங்கி கேடு உற
பொன்னின் ஊசி பசும் கம்பளத்து
துன்னியது என்ன தொடு கடல் உழந்துழி
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா

வழுவா சீலம் வாய்மையின் கொண்ட 20
பான்மையின் தனாது பாண்டு கம்பளம்
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து
நாடன் ஆவோன் நளி நீர் பரப்பின்
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என 25
பவ்வத்து எடுத்து பாரம்-இதை முற்றவும்
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும்
பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே
சாரணர் அறிந்தோர் காரணம் கூற

அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை 30
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும்
அன்றே கனவில் நனவு என அறைந்த
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் 35
பகரும் நின் பொருட்டால் இ பதி பதர்ந்தனம்
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும்
தீவதிலகையும் இ_திறம் செப்பினள்

ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே 40
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும்
நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே
அ உரு என்ன ஐ வகை சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன 45
நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன
சுட்டுணர்வை பிரத்தியக்கம் என சொலிவிட்டனர்

நாம சாதி குணம் கிரியைகள் 50
மற்று அவை அனுமானத்தும் அடையும் என
காரண காரிய சாமானிய கருத்து
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது
கனலில் புகை போல் காரிய கருத்தே
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் 55
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில்
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல்

புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது 60
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம்
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல்
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல்
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை
பொருத்தம் இன்று புனல் போல் என்றல் 65
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்
வைதன்மிய திட்டாந்தம் ஆகும்
தூய காரிய ஏது சுபாவம்
ஆயின் சத்தம் அநித்தம் என்றல்

பக்கம் பண்ணப்படுதலால் எனல் 70
பக்க தன்ம வசனம் ஆகும்
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது
அநித்தம் கடம் போல் என்றல் சபக்க
தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது
பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல் 75
விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல்
செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல்

பக்க தன்ம வசனம் ஆகும் 80
இன்மையின் கண்டிலம் முயல்_கோடு என்றல்
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது
தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல்
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்
இ வகை ஏது பொருள் சாதிப்பன 85
என்னை காரியம் புகை சாதித்தது என்னின்
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும்
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும்

புகை இ நெருப்பை சாதித்தது என்னின் 90
நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான
ஊர்த்த சாமம் கௌடில சாமம்
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்
மேல் நோக்கி கறுத்திருப்ப பகைத்திருப்ப
தாமே நெருப்பை சாதிக்க வேண்டும் 95
அன்னுவயம் சாதிக்கின் முன்னும்
கழுதையையும் கணிகையையும்
தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து

கழுதையை கண்ட இடத்தே கணிகையை 100
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின்
நாய் வால் இல்லா கழுதையின் பிடரில்
நரி வாலும் இலையா காணப்பட்ட 105
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்
அரிதாம் அதனால் அதுவும் ஆகாது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்

திட்டாந்தத்திலே சென்று அடங்கும் 110
பக்கம் ஏது திட்டாந்தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில்
வெளிப்பட்டுள்ள தன்மியினையும்
வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம்
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் 115
தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான்
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை
பற்றி நாட்டப்படுவது அதில் தன்மி

சத்தம் சாத்திய தன்மம் ஆவது 120
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
மூன்றாய் தோன்றும் மொழிந்த பக்கத்து
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக்கின் பொருள்-தன்னால் பக்கத்து 125
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல்
விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று

அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது 130
ஆஅகாசம் போல் என்று ஆகும்
பண்ணப்படுதலும் செயலிடை தோன்றலும்
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு
மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க 135
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என
சாதன்மியம் எனப்படுவது தானே
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை

வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் 140
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை
இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன
தீய பக்கமும் தீய ஏதுவும்
தீய எடுத்துக்காட்டும் ஆவன
பக்க போலியும் ஏது போலியும் 145
திட்டாந்த போலியும் ஆம் இவற்றுள்
பக்க போலி ஒன்பது வகைப்படும்
பிரத்தியக்க விருத்தம் அனுமான
விருத்தம் சுவசன விருத்தம் உலோக

விருத்தம் ஆகம விருத்தம் அப்பிரசித்த 150
விசேடணம் அப்பிரசித்த
விசேடியம் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் என
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் 155
சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல்
மற்று அனுமான விருத்தம் ஆவது
கருத்து அளவையை மாறாக கூறல்
அநித்திய கடத்தை நித்தியம் என்றல்

சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் 160
என் தாய் மலடி என்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
இலகு மதி சந்திரன் அல்ல என்றல்
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல்
அநித்த வாதியா உள்ள வைசேடிகன் 165
அநித்தியத்தை நித்தியம் என நுவறல்
அப்பிரசித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை

குறித்து சத்தம் விநாசி என்றால் 170
அவன் அவிநாசவாதி ஆதலின்
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
அப்பிரசித்த விசேடியம் ஆவது
எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற 175
பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான்
என்றால் அவன் அநான்மவாதி
ஆதலின் தன்மி அப்பிரசித்தம்
அப்பிரசித்த உபயம் ஆவது

மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் 180
ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்
பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து
சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம்
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும்
தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம் 185
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம்
கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில்

வேறு சாதிக்க வேண்டாது ஆகும் 190
ஏது போலி ஓதின் மூன்று ஆகும்
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என
உபய அசித்தம் அன்னியதரா அசித்தம்
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம்
என நான்கு அசித்தம் உபய அசித்தம் 195
சாதன ஏது இருவர்க்கும் இன்றி
சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல்
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்

சத்தம் செயலுறல் அநித்தம் என்னின் 200
சித்தம் வெளிப்பாடு அல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்த அசித்தம் ஆவது
ஏது சங்கயமாய் சாதித்தல்
ஆவி பனி என ஐயுறா நின்றே 205
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல்
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின்

ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு 210
தன்மி அசித்தம் அநைகாந்திகமும்
சாதாரணம் அசாதாரணம் சபக்கைகதேச
விருத்தி விபக்க வியாபி
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி உபயைகதேச விருத்தி 215
விருத்த வியபிசாரி என்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும்
ஏது பொதுவாய் இருத்தல் சத்தம்
அநித்தம் அறியப்படுதலின் என்றால்

அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும் 220
செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ
ஆகாசம் போல நித்தத்து அறிவோ
என்னல் அசாதாரணம் ஆவது தான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏது
சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல் 225
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
என்னின் கேட்கப்படல் எனும் ஏது
பக்கத்து உள்ளது ஆயின் அல்லது
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்

சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் 230
சபக்கைகதேச விருத்தி விபக்க
வியாபி ஆவது ஏது சபக்கத்து
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும்
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின் 235
என்றால் அநித்தம் என்ற ஏது
செயலிடை தோன்றாமைக்கு சபக்கம்
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்

அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் 240
அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல்
அழிந்து செயலில் தோன்றாதோ எனல்
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி ஆவது ஏது விபக்கத்து
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் 245
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின்
அநித்த ஏது செயலிடை தோன்றற்கு
விபக்க ஆகாயத்தினும் மின்னினும்
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது

சபக்க கட ஆதிகள் தம்மில் 250
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல்
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல்
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல்
உபயைகதேச விருத்தி ஏது
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி 255
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம்
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்
அமூர்த்த ஏது நித்தத்தினுக்கு
சபக்க ஆகாச பரமாணுக்களின்

ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம் 260
பரமாணுவின் நிகழாமையானும்
விபக்கமான கட சுக ஆதிகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
ஏக தேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று
அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ 265
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின்

ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு 270
சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
சத்தத்துவம் போல் என சாற்றிடுதல்
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னை திருத்தக விளம்பின் 275
தன்ம சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மி சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம்

என்ன நான்கு வகையது ஆகும் அ 280
தன்ம சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
பண்ணப்படுதலின் என்றால் பண்ணப்படுவது
அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட 285
ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு
அநித்தம் சாதித்தலான் விபரீதம்
தன்ம விசேட விபரீத சாதனம்
சொன்ன ஏது சாத்திய தன்மம்

தன்னிடை விசேடம் கெட சாதித்தல் 290
கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்
சயன ஆசனங்கள் போல என்றால்
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது
சயன ஆசனத்தின் பரார்த்தம் போல் கண் முதல் 295
இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து
சயன ஆசனவானை போல் ஆகி
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்
சாதிக்கிற நிர் அவயவமாய் உள்ள

ஆன்மாவை சா அவயவம் ஆக 300
சாதித்து சாத்திய தன்மத்தின்
விசேடம் கெடுத்தலின் விபரீதம்
தன்மி சொரூப விபரீத சாதனம்
தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை
ஏது தானே விபரீதப்படுத்தல் 305
பாவம் திரவியம் கன்மம் அன்று
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ
குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால்
சாமானிய விசேடம் போல் என்றால்

பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் 310
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத்து இல்லாமையினும்
திட்டாந்தத்தில் சாமானிய விசேடம் 315
போக்கி பிறிது ஒன்று இல்லமையானும்
பாவம் என்று பகர்ந்த தன்மியினை
அபாவம் ஆக்குதலான் விபரீதம்
தன்மி விசேட விபரீத சாதனம்

தன்மி விசேட அபாவம் சாதித்தல் 320
முன்னம் காட்டப்பட்ட ஏதுவே
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம்
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம்
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன 325
தாமே திட்டாந்த ஆபாசங்கள்
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன்
கூறப்பட்டன இங்கண் அவற்றுள்
சாதன்மிய திட்டாந்த ஆபாசம்

ஓதில் ஐந்து வகை உளதாகும் 330
சாதன தன்ம விகலமும் சாத்திய
தன்ம விகலமும் உபய தன்ம
விகலமும் அநன்னுவயம் விபரீதான்னுவயம்
என்ன வைதன்மிய திட்டாந்த
ஆபாசமும் ஐ வகைய 335
சாத்தியா வியாவிருத்தி
சாதனா வியாவிருத்தி
உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம்
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்

சாதன தன்ம விகலம் ஆவது 340
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனில்
திட்டாந்த பரமாணு 345
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான்
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும்
சாத்திய தன்ம விகலம் ஆவது

காட்டப்பட்ட திட்டாந்தத்தில் 350
சாத்திய தன்மம் குறைவுபடுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
புத்தி போல் என்றால்
திட்டாந்தமாக காட்டப்பட்ட 355
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம்
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும்
உபய தன்ம விகலம் ஆவது

காட்டப்பட்ட திட்டாந்தத்திலே 360
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
அன்றியும் அது-தான் சன்னும் அசன்னும்
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள
உபய தன்ம விகலம் ஆவது
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் 365
கொள்ளும் இரண்டும் குறைய காட்டுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
கடம் போல் எனின் திட்டாந்தமாக

காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி 370
சாத்தியமாய் உள நித்தத்துவமும்
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்
அசன்னா உள்ள உபய தன்ம விகலம்
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம்
என்னும் இரண்டும் குறைய காட்டுதல் 375
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம்
ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்

சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் 380
இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு
அதன்-கண் இன்மையானே குறையும்
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் 385
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
இரண்டனுடைய உண்மையை காட்டுதல்
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும்

அன்னுவயம் சொல்லாது குடத்தின்-கண்ணே 390
கிருத்தம் அநித்தம் காணப்பட்ட
என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
விபரீதான்னுவயம் வியாபகத்து உடைய
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்
சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின் 395
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என
வியாப்பியத்தால் வியாபகத்தை கருதாது
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என
வியாபகத்தால் வியாப்பியத்தை கருதுதல்

அப்படி கருதின் வியாபகம் வியாப்பியத்தை 400
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்
வைதன்மிய திட்டாந்தத்து
சாத்தியா வியாவிருத்தி ஆவது
சாதன தன்மம் மீண்டு
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் 405
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது
அமூர்த்தமும் அன்று பரமாணு போல் எனின்
அப்படி திட்டாந்தமாக காட்டப்பட்ட

பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின் 410
சாதன அமூர்த்தம் மீண்டு
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல்
சாதனா வியாவிருத்தி ஆவது
சாத்திய தன்மம் மீண்டு
சாதன தன்மம் மீளாது ஒழிதல் 415
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது
அமூர்த்தமும் அன்று கன்மம் போல் என்றால்
வைதன்மிய திட்டாந்தமாக

காட்டப்பட்ட கன்மம் 420
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
சாத்தியமான நித்தியம் மீண்டு
சாதனமான அமூர்த்தம் மீளாது
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
வைதன்மிய திட்டாந்தத்தினின்று 425
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்
உண்மையின் உபயா வியாவிருத்தி
இன்மையின் உபயா வியாவிருத்தி
என இரு வகை உண்மையின்

உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண் 430
சாத்திய சாதனம் மீளாதபடி
வைதன்மிய திட்டாந்தம் காட்டல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
அமூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என்றால் 435
வைதன்மிய திட்டாந்தமாக காட்டப்பட்ட
ஆகாசம் பொருள் என்பாற்கு
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள

அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின் 440
உபயா வியாவிருத்தி ஆவது
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம்
மூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என
வைதன்மிய திட்டாந்தம் காட்டில் 445
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு
ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
மீட்சியும் மீளாமையும் இலை ஆகும்

அ வெதிரேகம் ஆவது சாத்தியம் 450
இல்லா இடத்து சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால் என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப்படுவது அல்லாது அதுவும் 455
அன்று எனும் இ வெதிரேகம் தெரிய
சொல்லாது குடத்தின்-கண்ணே பண்ணப்படுதலும்
அநித்தமும் கண்டேம் ஆதலான்
என்னின் வெதிரேகம் தெரியாது

விபரீத வெதிரேகம் ஆவது 460
பிரிவை தலைதடுமாறா சொல்லுதல்
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்
என்றால் என்று நின்ற இடத்து
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே 465
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ
இடத்து நித்தமும் இல்லை என்றால்
வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால்

காட்டும் அனுமான ஆபாசத்தின் 470
மெய்யும் பொய்யும் இ திற விதியால்
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்து என்

#30 பவத்திறம் அறுகென பாவை நோற்ற காதை

தானம் தாங்கி சீலம் தலை நின்று
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
புத்த தன்ம சங்கம் என்னும்
மு திற மணியை மும்மையின் வணங்கி
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் 5
முரணா திரு அற மூர்த்தியை மொழிவோன்
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப
துடிதலோகம் ஒழிய தோன்றி

போதி மூலம் பொருந்தி இருந்து 10
மாரனை வென்று வீரன் ஆகி
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏம கட்டுரை
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும்
சிறந்து அருள்கூர்ந்து திருவாய் மொழிந்தது 15
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும்
இலக்கு அண தொடர்தலின்
மண்டில வகையாய் அறிய காட்டி

எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி 20
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின்
தக்க தக்க சார்பில் தோற்றம் என
சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால்
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் 25
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய்
தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய்
குற்றமும் வினையும் பயனும் விளைந்து

நிலை இல வறிய துன்பம் என நோக்க 30
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி 35
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய்
நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி
பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய்
பண்ணுநர் இன்றி பண்ணப்படாதாய்

யானும் இன்றி என்னதும் இன்றி 40
போனதும் இன்றி வந்ததும் இன்றி
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய
பேதைமை செய்கை உணர்வே அருஉரு 45
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்

அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் 50
பேதைமை என்பது யாது என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் 55
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால்

சொல்லப்பட்ட கருவில் சார்தலும் 60
கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி
வினைப்பயன் விளையும்-காலை உயிர்கட்கு
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீ_வினை என்பது யாது என வினவின்
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் 65
கொலையே களவே காம தீ விழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல்
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும்

வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று 70
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என
பத்து வகையால் பயன் தெறி புலவர்
இ திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர் 75
நல்_வினை என்பது யாது என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கி தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து

தேவரும் மக்களும் பிரமரும் ஆகி 80
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே
அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப 85
வாயில் ஆறும் ஆயும்-காலை
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும்
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப

நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் 90
வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை
பற்று எனப்படுவது பசையிய அறிவே
பவம் எனப்படுவது கரும ஈட்டம்
தரும் முறை இது என தாம்தாம் சார்தல்
பிறப்பு எனப்படுவது அ கருமம் பெற்றியின் 95
உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய்
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்

மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் 100
தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்
சாக்காடு என்பது அருஉரு தன்மை
யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல்
பேதைமை சார்வா செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் 105
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும்
அருஉரு சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்

நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் 110
வேட்கை சார்ந்து பற்று ஆகுமே
பற்றின் தோன்றும் கரும தொகுதி
கரும தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறை தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு 115
அவலம் அரற்று கவலை கையாறு என
தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப
ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி
பேதைமை மீள செய்கை மீளும்

செய்கை மீள உணர்ச்சி மீளும் 120
உணர்ச்சி மீள அருஉரு மீளும்
அருஉரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் 125
வேட்கை மீள பற்று மீளும்
பற்று மீள கரும தொகுதி
மீளும் கரும தொகுதி மீள
தோற்றம் மீளும் தோற்றம் மீள

பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்பு 130
சாக்காடு அவலம் அரற்று கவலை
கையாறு என்று இ கடை_இல் துன்பம்
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி
ஆதி கண்டம் ஆகும் என்ப
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் 135
காரண வகைய ஆதலானே
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன

முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின் 140
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று
கரும ஈட்டம் என கட்டுரைப்பவை
மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
குற்றமும் வினையு ஆகலானே
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே 145
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம்
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின்
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்

புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி 150
கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை
முன்னி செல்வது மூன்றாம் சந்தி
மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் 155
உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும்
உணர்வும் உருவும் உடங்க தோன்றி
புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்
காலம் மூன்றும் கருதும்-காலை

இறந்த காலம் என்னல் வேண்டும் 160
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்றம் என்று இவை சொல்லும்-காலை 165
எதிர் காலம் என இசைக்கப்படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவலம் அரற்று கவலை கையாறுகள்
குலவிய குற்றம் என கூறப்படுமே

அவாவே பற்றே பேதைமை என்று இவை 170
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும்
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை
நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை
குற்றமும் வினையும் பயனும் துன்பம் 175
பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா
எ பொருளுக்கும் ஆன்மா இலை என
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்
உணர்வே அருஉரு வாயில் ஊறே

நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே 180
அவலம் அரற்று கவலை கையாறு என
நுவலப்படுவன நோய் ஆகும்மே
அ நோய் தனக்கு
பேதைமை செய்கை அவாவே பற்று
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் 185
துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை

உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன 190
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின்
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் 195
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு

தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ 200
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும்
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல்
இயைந்துரை என்பது எழுத்து பல கூட 205
சொல் என தோற்றும் பல நாள் கூடிய
எல்லையை திங்கள் என்று வழங்குதல்
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும்

சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி 210
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும்
சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும்
காரணம் இன்றி காரியம் நேர்தல்
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் 215
முயல்_கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல்
நான்கு நயம் என தோன்றப்படுவன
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க
காரண காரியம் ஆகிய பொருள்களை

ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் 220
வீற்று_வீற்றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும்
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு
ஒன்றிய காரணம் உதவு காரியத்தை
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் 225
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும்
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல்
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன்
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும்

அ பொருளிடை பற்று ஆகாது என்றும் 230
செய்வானொடு கோட்பாடு இலை என்றும்
எய்து காரணத்தால் காரியம் என்றும்
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
வினா விடை நான்கு உள 235
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை என
தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால்
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும்

செத்தான் பிறப்பானோ பிறவானோ 240
என்று செப்பின்
பற்று இறந்தானோ அல் மகனோ எனல்
மிக கூறிட்டு மொழிதல் என விளம்புவர்
வினாவின் விடுத்தல் முட்டை முந்திற்றோ
பனை முந்திற்றோ என கட்டுரை செய் 245
என்றால் எ முட்டைக்கு எ பனை என்றல்
வாய் வாளாமை ஆகாய பூ
பழைதோ புதிதோ என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்

கட்டும் வீடும் அதன் காரணத்தது 250
ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என
தனித்து பார்த்து பற்று அறுத்திடுதல் 255
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக

இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று 260
முன் பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீபம் நன்கனம் காட்ட
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு
பவ திறம் அறுக என பாவை நோற்றனள் என்