யுத்த காண்டம் 3 – கம்பராமாயணம்

20. படைத்தலைவர் வதை படலம்
21. மகரக்கண்ணன் வதைப் படலம்
22. பிரமாத்திரப் படலம்
23. சீதை களம்காண் படலம்
24. மருத்துமலைப் படலம்
25. களியாட்டுப் படலம்
26. மாயாசீதைப் படலம்
27. நிகும்பலை யாகப் படலம்
28. இந்திரசித்து வதைப் படலம்
29. இராமன் சோகப் படலம்
30. படைக்காட்சிப் படலம்
31. மூலபல வதைப் படலம்

20 படை தலைவர் வதை படலம்


#1
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப
போர் தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் புகுந்து மொய்த்தார்
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார்
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை

#2
மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து இங்கு
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி
போவது புரிதிர் என்ன புகறலும் பொறாத தூதர்
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார்

#3
ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழி
தானைகள் வீய நின்ற தலைமகன் தனிமை ஓரார்
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார்
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்றார்

#4
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய்
முற்றிய கோபம் முருங்க முனிந்தான்
இற்றிதுவோ இவர் சேவகம் என்னா
பற்று-மின் என்றனன் வெம்மை பயின்றான்

#5
என்றலும் எய்தினர் கிங்கரர் என்பார்
பின்றலினோரை வலிந்து பிடித்தார்
நின்றனர் ஆயிடை நீல நிறத்தான்
கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான்

#6
ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின்
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம
கோல் தரு திண் பணை கொட்டினிர் கொண்டு ஊர்
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே

#7
அ கணனே அயில் வாளினர் நேரா
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார்
புக்கனர் அ பொழுதில் புகழ் தக்கோய்
தக்கிலது என்றனன் மாலி தடுத்தான்

#8
அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனோர்
வெம் சமம் வேறலும் வென்றியது இன்றாய்
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார்

#9
அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா
தந்திரம் வானவர் தானவர் என்றும்
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே

#10
வருணன் நடுங்கினன் வந்து வணங்கி
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான்
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய்
பருணிதர் தண்டம் இது அன்று பகர்ந்தால்

#11
பத்து ஒரு நாலு பகுத்த பரப்பின்
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார்
வித்தக யார் இனி வீரம் விளைப்பார்

#12
பாசமும் இற்றது பாதியின் மேலும்
நாசமும் உற்றது நம்பி நடந்தாய்
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா
நீசரை ஈருதியோ நெடு நாசி

#13
வாழி இலக்குவன் என்ன மறுக்குற்று
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார்
ஏழு கடல் துணையோ இனி நாசி
ஊழி அறுத்திடினும் உலவாதால்

#14
தூது நடந்தவனை தொழுது அ நாள்
ஓது நெடும் செரு அஞ்சி உடைந்தார்
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார்
பாதியின் மேலுளர் நாசி படைத்தார்

#15
விட்டிலை சீதையை ஆம் எனின் வீரர்
ஒட்டிய போரினில் ஆர் உளர் ஓடார்
வெட்டுதி நாசியை வெம் தொழில் வல்லோர்
பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான்

#16
ஆறினன் என்பது அறிந்தனர் அன்னார்
தேறினர் நின்றனர் சிந்தை தெளிந்தார்
சீறிய நெஞ்சினர் செம் கணர் ஒன்றோ
கூறினர் தம் நிலை செய்கை குறித்தார்

#17
உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ
மின் நகு வானிடை ஏகி விரைந்தான்
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய்

#18
இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால்
மு பகல் தீர்கிலம் ஆவி முடிப்போம்
வெப்பு அகலா எரி வெம் தழல் வெந்த
செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தெரிந்தோய்

#19
விட்டனை எம்மை விடுத்து இனி வெம் போர்
பட்டனர் ஒன்று படுத்தனர் ஒன்றோ
கெட்டனர் என்பது கேளலை என்னா
ஒட்டினார் ஆவி முடிக்க உவந்தார்

#20
அன்னவர் தம்மொடும் ஐ_இரு வெள்ளம்
மின்னு படை கை அரக்கரை விட்டான்
சொன்ன தொகைக்கு அமை யானை சுடர் தேர்
துன்னு வய பரியோடு தொகுத்தான்

#21
நெய் அழல் வேள்வி நெடும் பகை நேர் விண்
தைவரு சூரியசத்துரு என்பான்
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர்
வெய்யவன் வச்சிரம் வென்ற எயிற்றான்

#22
என்றவரோடும் எழுந்து உலகு ஏழும்
வென்றவன் ஏவலின் முன்னம் விரைந்தார்
சென்றன மால் கரி தேர் பரி செல்வ
குன்று_இனம் என்ன நடந்தனர் கொட்பால்

#23
விண்ணை விழுங்கிய தூளியின் விண்ணோர்
கண்ணை விழுங்குதலின் கரை காணார்
எண்ணை விழுங்கிய சேனையை யாரும்
பண்ணை விழுங்க உணர்ந்திலர் பண்பால்

#24
கால் கிளர் தேரொடும் கால் வரையோடும்
மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச
மால் கடலானது மா படை வாள்கள்
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால்

#25
பேரி கலித்தன பேர் உலகை சூழ்
ஏரி கலித்தன ஆம் என யானை
கார் இகலி கடலோடு கலித்த
மாரி கலித்து என வாசி கலித்த

#26
சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
நின்று பிணங்கிய கல்வியின் நில்லா
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன ஓடை
குன்று நடந்தன-போல் கொலை யானை

#27
மாக நெடும் கரம் வானின் வழங்கா
மேக நெடும் புனல் வாரின வீசி
போக விலங்கின உண்டன போலாம்
காக நெடும் களி யானை களிப்பால்

#28
எரிந்து எழு பல் படையின் ஒளி யாணர்
அரும் கல மின் ஒளி தேர் பரி யானை
பொருந்திய பண் ஒளி தார் ஒளி பொங்க
இரிந்தது பேர் இருள் எண் திசை-தோறும்

#29
எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான்
வெய்து இவண் வந்தவன் மாயையின் வெற்றி
செய்தவனே-கொல் தெரித்தி இது என்றான்
ஐயம் இல் வீடணன் அன்னது உரைப்பான்

#30
முழை குல சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான்
மழை குரல் தேரின் மேலான் மாபெரும்பக்கன் மன்னோ

#31
சிகை நிற கனல் பொழி தெறு கண் செக்கரான்
பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான்
நகை நிற பெரும் கடைவாயை நக்குவான்
புகைநிற கண்ணவன் பொலம் பொன் தேரினான்

#32
பிச்சரின் திகைத்தன பெற்றி பேச்சினான்
மு சிரத்து அயிலினான் மூரி தேரினான்
இ சிரம் உம்மதே என வந்து எய்துவான்
வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான்

#33
காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர்
வால் உளை புரவியன் மடித்த வாயினான்
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும்
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான்

#34
சூரியன் பகைஞன் அ சுடர் பொன் தேரினன்
நீரினும் முழக்கினன் நெருப்பின் வெம்மையான்
ஆரிய வேள்வியின் பகைஞன் ஆம்-அரோ
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான்

#35
சாலி வண் கதிர் நிகர் புரவி தானையான்
மூல வெம் கொடுமையின் தவத்தின் முற்றினான்
சூலியும் வெருக்கொள தேரில் தோன்றுவான்
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான்

#36
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும்
போர் தொழில் புரிந்தன புலவர் போக்கு இலார்
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே

#37
கல் எறிந்தன கடை உருமின் கார் என
வில் எறிந்தன கணை விசும்பின் மேகத்து
செல் எறிந்தன என சிதறி வீழ்ந்தன
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என

#38
கடம் படு கரி பட கலின மா பட
இடம் படு சில்லியின் ஈர்த்த தேர் பட
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில்
படம் படும் என படும் கவியின் கல் பல

#39
கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும்
நிலை நெடும் காலொடும் நிமிர்ந்த வாலொடும்
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும்
தலையொடும் போம் விசைத்து எறிந்த சக்கரம்

#40
ஆண்தகை கவி_குல வீரர் ஆக்கையை
கீண்டன புவியினை கிழித்த மாதிரம்
தாண்டுவ குல பரி மனத்தின் தாவுவ
தூண்டினர் கை விசைத்து எறிந்த தோமரம்

#41
சில்லி அம் தேர் கொடி சிதைய சாரதி
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர்
வில்லொடு கழுத்து இற பகட்டை வீட்டுமால்
கல்லென கவி_குலம் வீசும் கல்-அரோ

#42
கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை
அரகம் முந்தின நெடும் கவியின் ஆக்கையில்
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே

#43
வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி
கால் பிடித்து அடிக்கும் அ கரியினை கவி
தோல் பிடித்து அரக்கரை எறியும் சூர் முசு
வேல் பிடித்து எறிவர் அ முசுவை வெம் கணார்

#44
முற்படு கவி_குலம் முடுக வீசிய
கல் பட களம் படும் அரக்கர் கார் கடல்
பல் படு தலை பட படுவ பாதகர்
வில் படு கணை பட குரங்கின் வேலையே

#45
கிச்சு உறு கிரி பட கிளர் பொன் தேர் நிரை
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி
எச்சு உறு துயரிடை எய்த ஈத்து உணா
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என

#46
மீயவர் யாவரும் விளிய வெம் கரி
சேயிரும் குருதியில் திரிவ சோர்வு இல
நாயகர் ஆளொடும் அவிய நவ்வி தம்
பாயொடும் வேலையில் திரியும் பண்பு என

#47
படையொடு மேலவர் மடிய பல் பரி
இடை இடைதர விழுந்து இழிந்த பண்ணன
கடல் நெடும் குருதிய கனலி காலுறு
வடவையை நிகர்த்தன உதிர வாயன

#48
எயிற்றொடு நெடும் தலை இட்ட கல்லொடும்
வயிற்றிடை புக பல பகலும் வைகிய
பயிற்றியர் ஆயினும் தெரிக்கும் பண்பு இலார்
அயிர்ப்பர் தம் கணவரை அணுகி அ நலார்

#49
தூம கண்ணனும் அனுமனும் எதிரெதிர் தொடர்ந்தார்
தாமத்து அங்கதன் மாபெரும்பக்கனை தடுத்தான்
சேம திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார்
வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார்

#50
சூரியன்_பெரும்_பகைஞனும் சூரியன்_மகனும்
நேர் எதிர்ந்தனர் நெருப்பு உடை வேள்வியின் பகையும்
ஆரியன் தனி தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார்
வீர வச்சிரத்து_எயிற்றனும் இடபனும் மிடைந்தார்

#51
வெம் கண் வெள் எயிற்று அரக்கரில் கவி_குல வீர
சிங்கம் அன்ன போர் வீரரில் தலைவராய் தெரிந்தார்
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார்
பொங்கு வெம் செரு தேவரும் நடுக்குற பொருதார்

#52
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற
மின்னும் வெள் எயிற்று அரக்கர்-தம் சேனையில் வீரன்
அன்ன வெம் சமத்து ஆறு வெள்ளத்தையும் அறுத்தான்
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான்

#53
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம்
அப்பொடு ஒத்தன கடுத்தில ஆர்கலி முழுதும்
செப்பு உருக்கு என தெரிந்தது மீன் குலம் செருக்கி
துப்பொடு ஒத்தன முத்து_இனம் குன்றியின் தோன்ற

#54
தத்து நீர் கடல் முழுவதும் குருதியாய் தயங்க
சித்திர குல பல் நிற மணிகளும் சேந்த
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல்
மத்தகத்து உகு தரளமும் வளை சொரி முத்தும்

#55
அதிரும் வெம் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில்
கதிரவன் செழும் சே ஒளி கற்றை அம் கரத்தால்
எதிரும் வல் இருள் கரி இறுத்து எழு முறை மூழ்கி
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என உதித்தான்

#56
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன்
துரக்க வெம் சுடர் கதிரவன் புறத்து இருள் தொலைக்க
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல
நிரக்கும் நல் ஒளி பரந்தன உலகு எலாம் நிமிர

#57
நிலை கொள் பேர் இருள் நீங்கலும் நிலத்திடை நின்ற
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி

#58
நிலம் தவாத செந்நீரிடை நிண கொழும் சேற்றில்
புலர்ந்த காலையில் பொறி வரி அம்பு எனும் தும்பி
கலந்த தாமரை பெரு வனம் கதிரவன் கரத்தால்
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம்

#59
தேரும் யானையும் புரவியும் விரவின தேவர்
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும்
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி
பாரின் வீழ்ந்தன போன்றன கிடந்தன பரந்து

#60
எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர் எரி வீழ்
அல்லி சுற்றிய கோதையர் களம் புகுந்து அடைந்தார்
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார்
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர்

#61
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல்
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார்
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது
பிணங்கு பேய்களின் வாய்களை பிளந்தனர் பிடித்தே

#62
சுடரும் வெள் வளை தோளி தன் கொழுநனை தொடர்வாள்
உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள்
குடரும் ஈரலும் கண்ணும் ஓர் குறு நரி கொள்ள
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள்

#63
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள்
நரிகள் ஈர்த்தன வணங்கவும் இணங்கவும் நல்கா
இரியல்போவன தொடர்ந்து அயல் இன படை கிடைந்த
அரிய நொந்திலர் அலத்தக சீறடி அயர்ந்தார்

#64
நலம் கொள் நெஞ்சினர் தம் துணை கணவரை நாடி
விலங்கல் அன்ன வான் பெரும் பிண குப்பையின் மேலோர்
அலங்கல் ஓதியர் அரும் துணை பிரிந்து நின்று அயரும்
பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார்

#65
சிலவர் தம் பெரும் கணவர்-தம் செரு தொழில் சினத்தால்
பலரும் வாய் மடித்து உயிர் துறந்தார்களை பார்த்தார்
அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள்
கலவியின் குறி காண்டும் என்று ஆம் என கனன்றார்

#66
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார்
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல்
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார்

#67
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர
போர் யாக்கைகள் நாடி அ பொரு களம் புகுந்தார்
பேர் யாக்கையின் பிண பெரும் குன்றிடை பிறந்த
சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார்

#68
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும்
புகைவெங்கணனும் பொருவார் பொரவே
மிகை சென்றிலர் பின்றிலர் வென்றிலரால்
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார்

#69
ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன்
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்-மேல்
வை அம் சிலை ஆறு வழங்கினனால்
மொய் அஞ்சன மேகம் முனிந்து-அனையான்

#70
பாழி புயம் அம்பு உருவ படலும்
வீழி கனி போல் புனல் வீச வெகுண்டு
ஆழி பெரும் தேரை அழித்தனனால்
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான்

#71
சில்லி பொரு தேர் சிதைய சிலையோடு
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்
வில் இற்றது இலக்குவன் வெம் கணையால்
புல்லி தரை இட்டனன் நேர் பொருவான்

#72
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து
அலைய திருகி பகு வாய் அனல் கால்
தலை கைக்கொடு எறிந்து தணிந்தனனால்

#73
மாபக்கனும் அங்கதனும் மலைவார்
தீபத்தின் எரிந்து எழு செம் கணினார்
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார்
தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால்

#74
ஐம்பத்தொரு வெம் கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன் மொய் தொழிலான்
வெம்பி களியோடு விளித்து எழு திண்
கம்ப கரி உண்டை கடாய் எனவே

#75
ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
கார் ஓடும் நிற கத நாகம் அனான்
தேரோடும் எடுத்து உயர் திண் கையினால்
பாரோடும் அடுத்து எறி பண்பிடையே

#76
வில்லை செல வீசி விழுந்து அழியும்
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா
சொல்லின் பிழையாதது ஓர் சூலம் அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால்

#77
சூலம் எனின் அன்று இது தொல்லை வரும்
காலம் என உன்னு கருத்தினனாய்
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர்
ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால்

#78
உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா
கிளர்ந்தானை இரண்டு கிழி துணையாய்
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான் வலி நன்று என அங்கதனே

#79
மா மாலியும் நீலனும் வானவர்-தம்
கோமானொடு தானவர் கோன் இகலே
ஆமாறு மலைந்தனர் அன்று இமையோர்
பூ மாரி பொழிந்து புகழ்ந்தனரால்

#80
கல் ஒன்று கடாவிய காலை அவன்
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும்
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய்
நில் என்று இடை சென்று நெருக்கினனால்

#81
அற்று அ தொழில் எய்தலும் அ கணனே
மற்ற புறம் நின்றவன் வந்து அணுகா
கொற்ற குமுதன் ஒரு குன்று கொளா
எற்ற பொரு தேர் பொடி எய்தியதால்

#82
தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை
வாளால் மடிவித்து வலித்து அடர்வான்
தோள் ஆசு அற வாளி துரந்தனனால்
மீளா வினை நூறும் விடைக்கு இளையான்

#83
மின்-போல் மிளிர் வாளொடு தோள் விழவும்
தன் போர் தவிராதவனை சலியா
என் போலியர் போர்-எனின் நன்று இது ஓர்
புன் போர் என நின்று அயல் போயினனால்

#84
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும்
பேர் வீரனை வாசி பிடித்தவனை
யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா
போர் வீரர் உவந்து புகழ்ந்தனரால்

#85
வேள்வி பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர் கணையால்
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம்
போழ்வித்தனன் ஆர் உயிர் போயினனால்

#86
மல்லல் தட மார்பன் வடி கணையால்
எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன்
வில் அற்றது தேரொடு மேல் நிமிரும்
கல் அற்ற கழுத்தொடு கால்களொடும்

#87
தன் தாதையை முன்பு தடுத்து ஒரு நாள்
வென்றானை விலங்கலின் மேனியனை
பின்றாத வலத்து உயர் பெற்றியனை
கொன்றான் கவியின் குலம் ஆளுடையான்

#88
இடபன் தனி வெம் சமம் உற்று எதிரும்
விட வெம் கண் எயிற்றவன் விண் அதிர
கடவும் கதழ் தேர் கடவ ஆளினொடும்
பட அங்கு ஒரு குன்று படர்த்தினனால்

#89
திண் தேர் அழிய சிலை விட்டு ஒரு தன்
தண்டோடும் இழிந்து தலத்தினன் ஆய்
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு
எண் தோளனும் உட்கிட எற்றினனால்

#90
அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா
இடையுண்ட மலை குவடு இற்றது-போல்
முடியும் எனும் எல்லையில் முந்தினனால்
நெடியன் குறியன் எனும் நீர்மையினான்

#91
கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை
படைத்தானை நெடும் புகழ் பைம் கழலான்
புடைத்தான் அகல் மார்பு பொடி சிதற

#92
எற்றி பெயர்வானை இட கையினால்
பற்றி கிளர் தண்டு பறித்து எறியா
வெற்றி கிளர் கைக்கொடு மெய் வலி போய்
முற்ற தனி குத்த முடிந்தனனால்

#93
காத்து ஓர் மரம் வீசுறு கை கதழ்வன்
போத்து ஓர் புலி போல் பனசன் புரள
கோத்து ஓட நெடும் குருதி புனல் திண்
மா தோமரம் மார்பின் வழங்கினனால்

#94
கார் மேலினனோ கடல் மேலினனோ
பார் மேலினனோ பகல் மேலினனோ
யார் மேலினனோ இன என்று அறியாம்
போர் மேலினன் வாசி எனும் பொறியான்

#95
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று
ஆறாயிர வானவரும் அறிவின்
தேறா வகை நின்று திரிந்துளதால்
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே

#96
கண்ணின் கடுகும் மனனின் கடுகும்
விண்ணில் படர் காலின் மிக கடுகும்
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய்
மண்ணில் திரியாத வய பரியே

#97
மா புண்டரவாசியின் வட்டணை-மேல்
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால்
பூ புண் தர ஆவி புறத்து அகல
கோப்புண்டன வானர வெம் குழுவே

#98
நூறும் இரு நூறும் நொடிப்பு அளவின்
ஏறும் நுதி வேலின் இறைப்பொழுதில்
சீறும் கவி சேனை சிதைக்கும் எனா
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால்

#99
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் வெம்
காற்றின் படை கொண்டு கடந்தனனால்

#100
குலைய பொரு சூலன் நெடும் கொலையும்
உலைவுற்றில உய்த்தலும் ஓய்வு இலன் ஒண்
தலை அற்று உகவும் தரை உற்றிலனால்
இலைய பரி மேல் கொள் இருக்கையினான்

21 மகரக்கண்ணன் வதை படலம்


#1
இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால்
சென்று ஊதின தும்பிகள் தென் திசையான்
வன் தூதரும் ஏகினர் வஞ்சனையான்
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய்

#2
ஏகி தனி மன்னன் இருந்துழி புக்கு
ஓகை பொருள் இன்று என உள் அழியா
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம்
சோகத்தொடு இறைஞ்சினர் சொல்லினரால்

#3
சொன்னார் அவர் சொல் செவியில் தொடர்வோன்
இன்னாத மனத்தின் இலங்கையர்_கோன்
வெம் நாகம் உயிர்த்து என விம்மினனால்
அன்னான் நிலை கண்டு அயல் நின்று அறைவான்

#4
முந்தே என தாதையை மொய் அமர்வாய்
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல்
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ
எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ

#5
யானே செல எண்ணுவென் ஏவுதியேல்
தான் நேர்வது தீது எனவே தணிவேன்
வானே நிலனே முதல் மற்றும் எலாம்
கோனே எனை வெல்வது ஓர் கொள்கையதோ

#6
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள்
பெரும் திரு கழித்திலாதாள் கணவனை கொன்று பேர்ந்தோன்
கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான்

#7
அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான்
வெவ் வழியவனும் பெற்ற விடையினன் தேர் மேற்கொண்டான்
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான்

#8
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை
மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி
பின்னுடைத்தாக பேரி கடல் பட பெயர்ந்த தூளி
பொன்னுடை சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய போனான்

#9
சோணிதக்கண்ணனோடு சிங்கனும் துரக திண் தேர்
தாள்முதல் காவல் பூண்டு செல்க என தக்கது என்னா
ஆள் முதல் தானையோடும் அனைவரும் தொடர போனான்
நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான்

#10
பல் பெரும் பதாகை பத்தி மீமிசை தொடுத்த பந்தர்
எல்லவன் சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய
தொல் வன யானை அம் கை விலாழி நீர் துவலை தூற்ற
செல்வன கவியின் சேனை அமர் தொழில் சிரமம் தீர்ந்த

#11
முழங்கின யானை வாசி ஒலித்தன முரசின் பண்ணை
தழங்கின வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள
வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும்
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக

#12
வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில் வெம் போர்
செய்தன செருக்கி சென்று நெருக்கினர் தலைவர் செற்றி
கையொடு கைகள் உற்று கலந்தன கல்லும் வில்லும்
எய்தன எறிந்த யானை ஈர்த்தன கோத்த சோரி

#13
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி
மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச
கானகம் இடியுண்டு என்ன கவி_குலம் மடியும் கவ்வி
போனகம் நுகரும் பேய்கள் வாய் புற புடைப்பொடு ஆர்ப்ப

#14
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி
மெய் நிறத்து எறிந்து கொல்வர் வானர வீரர் வீரர்
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி
மொய் நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் அரக்கர் முன்பர்

#15
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன
திண் திறல் அரக்கன் கொற்ற பொன் தடம் சில்லி தேரை
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு
கொண்டல்-மேல் ஓட்டி சென்றான் குரங்கு_இன படையை கொன்றான்

#16
இந்திரன் பகைஞனே-கொல் என்பது ஓர் அச்சம் எய்தி
தந்திரம் இரிந்து சிந்த படை பெரும் தலைவர் தாக்கி
எந்திரம் எறிந்த என்ன ஏவுண்டு புரண்டார் எய்தி
சுந்தர தோளினானை நோக்கி நின்று இனைய சொன்னான்

#17
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும்
முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி
நின்னுடைத்து ஆயது ஆமே இன்று அது நிமிர்வது என்றான்
பொன்னுடை தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான்

#18
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான்
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய்
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய
ஏயது சொன்னாய் என்றான் இசையினுக்கு இசைந்த தோளான்

#19
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம்
பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான்

#20
சொரிந்தன பகழி எல்லாம் சுடர் கடும் கணைகள் தூவி
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே

#21
ஏவுண்டு துளக்கம் எய்தா இரத்தக பரிதி ஈன்ற
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான்
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான்

#22
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி
பொன் நெடும் தடம் தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான்

#23
மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும்
சோரியன் விசும்பினூடு ஓர் இமைப்பிடை தோன்றாநின்றான்
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம்
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான்

#24
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன ஊழி நாளின்
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும்
கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி
பொரு முறை மயங்கி சுற்றும் இரியலின் கவிகள் போன

#25
போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்பு போர்ப்ப
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த
ஆயிரம்_கோடி மேலும் அவிந்தன கவிகள் ஐயன்
மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான்

#26
நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி
காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும்
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான்
நூற்று இதழ் கமலக்கண்ணன் அகற்றுவென் நொடியில் என்றான்

#27
காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள்
கோல வன் சிலையில் கோத்த கொடும் கணையோடும் கூட்டி
மேலவன் துரத்தலோடும் விசும்பின் நின்று இரிந்து வெய்தின்
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும்

#28
அ துணை அரக்கன் நோக்கி அந்தர வானம் எல்லாம்
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல
பத்திகள் கோடி_கோடி பரப்பினன் அதனை பார்த்த
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான்

#29
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ
தேயத்தான் என்னா-வண்ணம் கரந்தனன் தெரிந்திலாதான்
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான்

#30
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான்
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர்
தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான்

#31
அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் அரக்கன் யாக்கை
புயல் பட குருதி வீசி படியிடை புரள்தலோடும்
வெயில் படைத்து இருளை ஓட்டும் காலத்தின் விடிதலோடும்
துயில் கெட கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை

#32
குருதியின்கண்ணன் வண்ண கொடி நெடும் தேரன் கோடை
பருதியின் நடுவண் தோன்றும் பசும் சுடர் மேக பண்பன்
எரி கணை சிந்தி காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான்
விரி கடல் தட்டான் கொல்லன் வெம் சின தச்சன் வெய்யோன்

#33
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான்
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான்

#34
கரத்தினில் திரியாநின்ற மரத்தினை கண்டமாக
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி
உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான்
சிரத்தினில் குதித்தான் தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார்

#35
எரியும் வெம் குன்றின் உம்பர் இந்திரவில் இட்டு என்ன
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான்

#36
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான்
சிங்கன் வெம் கணையன் வில்லன் தார் அணி தேரின் மேலான்
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான்

#37
பாய்ந்தவன் தோளில் மார்பில் பல்லங்கள் நல்ல பண்போடு
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான்
காய்ந்தனன் கனலி நெய்யால் கனன்றது போல காந்தி
ஏய்ந்து எழு தேரினோடும் இமைப்பிடை எடுத்து கொண்டான்

#38
தேரொடும் எடுத்தலோடு நிலத்திடை குதித்த செம் கண்
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச
பாரிடை வீழ்தலோடும் அவன் சிரம் பறித்து மாயா
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான்

#39
தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும் கவியின் தானை
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை
பராவ_அரும் கோடி ஐந்தும் வெள்ளம் நால் ஐந்தும் பட்ட
இராவணன் தூதர் போனார் படைக்கலம் எடுத்திலாதார்

22 பிரமாத்திர படலம்


#1
கரன் மகன் பட்டவாறும் குருதியின்கண்ணன் காலின்
சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான்
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான்

#2
கூயினன் நுந்தை என்றார் குன்று என குவிந்த தோளான்
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான்
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான்

#3
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான்

#4
வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட
பொலம் கொடி நெடும் தேர் ஏறி போர் பணை முழங்க போனான்
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை
குலங்களும் தேரும் மாவும் குழாம் கொள குழீஇய அன்றே

#5
கும்பிகை திமிலை செண்டை குறடு மா பேரி கொட்டி
பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர் பணவம் தூரி
கம்பலி உறுமை தக்கை கரடிகை துடி வேய் கண்டை
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே

#6
யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை
சேனையோர் சுழலும் தாரும் சேண் தர புலம்ப மற்றை
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே

#7
சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம்
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல்
சிங்கத்தின் முழக்கம் வாசி சிரிப்பு தேர் இடிப்பு திண் கைம்
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே

#8
வில் ஒலி வயவர் ஆர்க்கும் விளி ஒலி தெழிப்பின் ஓங்கும்
ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும்
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும்
கல்லொலியோடும் கூட கடல் ஒலி கரந்தது அன்றே

#9
நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின்
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்-மேல் தொடர்ந்து வீச
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே

#10
ஆயிர கோடி திண் தேர் அமரர்_கோன் நகரம் என்ன
மேயின சுற்ற தான் ஓர் கொற்ற பொன் தேரின் மேலான்
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும்
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான்

#11
சென்று வெம் களத்தை எய்தி சிறையொடு துண்டம் செம் கண்
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப
பின்றல் இல் வெள்ள தானை முறை பட பரப்பி பேழ் வாய்
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான்

#12
புரந்தரன் செருவில் தந்து போயது புணரி ஏழும்
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை
கரந்தது வயிற்று கால வலம்புரி கையில் வாங்கி
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச ஊதினான் திசைகள் சிந்த

#13
சங்கத்தின் முழக்கம் கேட்ட கவி பெரும் தானை யானை
சிங்கத்தின் நாதம் வந்து செவி புக விலங்கு சிந்தி
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான்

#14
கீண்டன செவிகள் நெஞ்சம் கிழிந்தன கிளர்ந்து செல்லா
மீண்டன கால்கள் கையின் விழுந்தன மரனும் வெற்பும்
பூண்டன நடுக்கம் வாய்கள் புலர்ந்தன மயிரும் பொங்க
மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ

#15
செம் கதிர் செல்வன் சேயும் சமீரணன் சிறுவன்-தானும்
அங்கத பெயரினானும் அண்ணலும் இளைய கோவும்
வெம் கதிர் மௌலி செம் கண் வீடணன் முதலாம் வீரர்
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம்

#16
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம்
உடைப்புறு புனலின் ஓட ஊழி_நாள் உவரி ஓதை
கிடைத்திட முழங்கி ஆர்த்து கிளர்ந்தது நிருதர் சேனை
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார்

#17
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல்
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல்
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல்

#18
விடையின்-மேல் கலுழன்-தன்-மேல் வில்லினர் விளங்குகின்ற
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார்
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர்

#19
நீலனை முதலாய் உள்ள நெடும் படை தலைவர் நின்றார்
தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான் சமைந்த காலை
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன்
மேல் அமர் விளைவை உன்னி விலக்கினன் விளம்பலுற்றான்

#20
கடவுளர் படையை நும்-மேல் வெய்யவன் துரந்த-காலை
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ
படை உளதனையும் இன்று எம் வில் தொழில் பார்த்திர் என்றான்

#21
அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி
இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும்
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி

#22
தேரின்-மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும்
வீரருள் வீரன் கண்டான் விழுந்தன விழுந்த என்னும்
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும்
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல்

#23
யானை பட்டனவோ என்றான் இரதம் இற்றனவோ என்றான்
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான்
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான்
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான்

#24
செய்கின்றார் இருவர் வெம் போர் சிதைக்கின்ற சேனை நோக்கின்
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள
எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான்

#25
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும்
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும்
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற
தும்பியை நோக்கும் வீரர் சுந்தர தோளை நோக்கும்

#26
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண்
தலைகளை நோக்கும் வீரர் சரங்களை நோக்கும் தாக்கி
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும்
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும்

#27
ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை
ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால்
போயின பகழி வேக தன்மையை புரிந்து நோக்கும்
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும்

#28
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற
எறிவன எய்வ பெய்வ எற்றுறு படைகள் யாவும்
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால்
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும்

#29
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும்
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம்
பயிறலை பறவை பாரில் படிகிலா பரப்பை பார்க்கும்

#30
அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும்
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும்
சிங்க_ஏறு அனைய வீரர் கடுமையை தெரிகிலாதான்

#31
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும்
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும்
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும்

#32
ஆயிரம்_கோடி தேரும் அரக்கரும் ஒழிய வல்ல
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை
போயின குரக்கு தானை புகுந்திலது அன்றே பொன் தேர்
தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா

#33
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான்

#34
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா
தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர் சிலர் படைகள் சிந்தி
பாரிடை இருந்து வீழ்ந்து பதைத்தனர் பைம் பொன் இஞ்சி
ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார்

#35
அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர்
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான்

#36
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம்_கோடி தேரும்
புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின்
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட தேவர் உட்க

#37
மாற்றம் ஒன்று இளையவன் வளை வில் செம் கரத்து
ஏற்றினன் வணங்கி நின்று இயம்புவான் இகல்
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர்
தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால்

#38
காக்கவும் கற்றிலன் காதல் நண்பரை
போக்கவும் கற்றிலன் ஒருவன் போய் பிணி
ஆக்கவும் கற்றிலன் அமரில் ஆர் உயிர்
நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால்

#39
இந்திரன்_பகை எனும் இவனை என் சரம்
அந்தரத்து அரும் தலை அறுக்கலாது எனின்
வெம் தொழில் செய்கையன் விருந்தும் ஆய் நெடு
மைந்தரில் கடை என படுவன் வாழியாய்

#40
நின்னுடை முன்னர் யான் நெறி இல் நீர்மையான்
தன்னுடை சிரத்தை என் சரத்தின் தள்ளினால்
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ

#41
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என்
சுடு சரம் இவன் தலை துணிக்கலாது-எனின்
முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய்

#42
வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள்
அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர்
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன
நல் அறம் ஆர்த்தது நமனும் ஆர்த்தனன்

#43
முறுவல் வாள் முகத்தினன் முளரிக்கண்ணனும்
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின்
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர் வேறு இனி விளைவது யாது என்றான்

#44
சொல் அது கேட்டு அடி தொழுது சுற்றிய
பல் பெரும் தேரொடும் அரக்கர் பண்ணையை
கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான்

#45
அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை
சிங்கமும் நடுக்குற திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தனன் கடலும் தள்ளுற

#46
எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம்
முழு முரண் தண்டு வேல் முசுண்டி மூ_இலை
கழு அயில் கப்பணம் கவண் கல் கன்னகம்
விழு மழைக்கு இரட்டி விட்டு அரக்கர் வீசினார்

#47
மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்து என
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன
கான் எலாம் துணிந்து போய் தகர்ந்து காந்தின
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால்

#48
ஆயிரம் தேர் ஒரு தொடையின் அச்சு இறும்
பாய் பரி குலம் படும் பாகர் பொன்றுவர்
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால்

#49
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும்
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும்
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம்
முடி அறும் முரசு அறும் முழுதும் சிந்துமால்

#50
இன்னது ஓர் உறுப்பு இவை இனைய தேர் பரி
மன்னவர் இவர் இவர் படைஞர் மற்றுளோர்
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால்
சின்னபின்னங்களாய் மயங்கி சிந்தலால்

#51
தந்தையர் தேரிடை தனயர் வன் தலை
வந்தன தாதையர் வயிர வான் சிரம்
சிந்தின காதலர்க்கு இயைந்த தேரிடை
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன

#52
செம் பெரும் குருதியின் திகழ்ந்த செம் கண் மீன்
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என
தும்பை அம் தொடையலர் தட கை தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன

#53
தடிவன கொடும் சரம் தள்ள தள்ளுற
மடிவன கொடிகளும் குடையும் மற்றவும்
வெடி படு கடல் நிகர் குருதி வெள்ளத்தில்
படிவன ஒத்தன பறவை பந்தரே

#54
சிந்துரங்களின் பருமமும் பகழியும் தேரும்
குந்து வல் நெடும் சிலை முதல் படைகளும் கொடியும்
இந்தனங்களாய் இறந்தவர் விழி கனல் இலங்க
வெந்த வெம் பிணம் விழுங்கின கழுதுகள் விரும்பி

#55
சில்லி ஊடு அற சிதறின சில சில கோத்த
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய
புல்லி மண்ணிடை புரண்டன சில சில போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட திரிந்தன வெறிய

#56
அலங்கு பல் மணி கதிரன குருதியின் அழுந்தி
விலங்கு செம் சுடர் விடுவன வெளி இன்றி மிடைந்த
குலம் கொள் வெய்யவர் அமர் கள தீயிடை குளித்த
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம்

#57
ஆன காலையில் இராமனும் அயில் முக பகழி
சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனை தூண்டி
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய
தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன்

#58
பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர் பரவை
வல் விலங்கல் போல் அரக்கர்-தம் குழாத்தொடு மடிய
வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான்
சொல் விலங்கலன் சொல்லினன் இராவணன் தோன்றல்

#59
இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும்
பொருது பொன்றுதல் புரிதிரோ உறுவது புகலும்
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான்

#60
வாளின் திண் சிலை தொழிலினின் மல்லினின் மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில்
கோளுற்று உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான்
சூளுற்றேன் இது சரதம் என்று இலக்குவன் சொன்னான்

#61
முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து உனக்கு
பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென் இது முடியேனேல்
என் பிறந்ததனால் பயன் இராவணற்கு என்றான்

#62
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே
விலக்குவென் என விடையவன் விலக்கினும் வீரம்
கலக்குவென் இது காணும் உன் தமையனும் கண்ணால்

#63
அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால்
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால்

#64
கும்பகன்னன் என்று ஒருவன் நீர் அம்பிடை குறைத்த
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன்
எம்பிமாருக்கும் என் சிறு தாதைக்கும் இருவீர்
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான்

#65
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த
புரக்கும் நன் கடன் செய உளன் வீடணன் போந்தான்
சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள்
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன்

#66
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய
பால் நல் வேலையை பருகுவ சுடர் முக பகழி
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான்

#67
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர
சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி
எங்கும் வெம் கணை ஆக்கினன் இராவணன் சிறுவன்

#68
இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று
உளையும் வெம் சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில்

#69
பச்சிமத்தினும் மருங்கினும் முகத்தினும் பகழி
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர்

#70
மெய்யில் பட்டன பட படாதன எலாம் விலக்கி
தெய்வ போர் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான்

#71
பிறகின் நின்றனன் பெருந்தகை இளவலை பிரியான்
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான்
இறவு கண்டிலர் இருவரும் ஒருவரை ஒருவர்
விறகின் வெந்தன விசும்பிடை செறிந்தன விசிகம்

#72
மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க
காடு எரிந்தன கன வரை எரிந்தன கனக
வீடு எரிந்தன வேலைகள் எரிந்தன மேகம்
ஊடு எரிந்தன ஊழியின் எரிந்தன உலகம்

#73
படம் கொள் பாம்பு_அணை துறந்தவற்கு இளையவன் பகழி
விடம் கொள் வெள்ளத்தின்-மேல் அவன் விடுவன விலக்கி
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும்
மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான்

#74
தேர் அழிந்திட சேம தேர் பிறிது இலன் செறிந்த
ஊர் அழிந்திட தனி நின்ற கதிரவன் ஒத்தான்
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார்
சூர் அழிந்திட துரந்தனன் சுடு சரம் சொரிந்தான்

#75
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல்
கொற்ற தோளினும் இலக்குவன் புயத்தினும் குளித்து
முற்ற எண் இலா முரண் கணை தூர்த்தனன் முரண் போர்
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய

#76
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அற கழல
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி
சிங்க_ஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான்

#77
கண்ட கார் முகில் வண்ணனும் கமல கண் கலுழ
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள
விண்டது அண்டது என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர்

#78
கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடை கரந்தான்
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி
பண்ணவற்கு இவன் பிழைக்குமேல் படுக்கும் நம் படையை
எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான்

#79
ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய்
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இ உலகம்
மூன்றையும் சுடும் ஒருவனால் முடிகலது என்றான்
சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடை தம்பி

#80
மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை
அறிந்து தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான்
பிறிந்து போவதே கருமம் இப்பொழுது என பெயர்ந்தான்
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார்

#81
செம் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்-மேல் செல்வான்
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார்
வெம் சினம் தரு களிப்பினர் வானர வீரர்

#82
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான்
கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கரந்தான்

#83
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன்
முற்கொள்வேன் எனும் முயற்சியன் மறை முறை மொழிந்த
சொல் கொள் வேள்வி போய் தொடங்குவான் அமைந்தவன் துணிவை
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார்

#84
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி
தனுவும் வெம் கணை புட்டிலும் கவசமும் தட கைக்கு
இனிய கோதையும் துறந்தனர் இருவரும் இமையோர்
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர் வாழ்த்தினர் பல்-கால்

#85
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி
தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த
பார்க்கிலேன் முந்தி படுவதே நன்று என பட்டான்

#86
இரவும் நன் பகலும் பெரு நெடும் செரு இயற்றி
உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு
வரவு தாழ்த்தது வீடண வல்லையின் ஏகி
தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன்

#87
இன்னதே கடிது இயற்றுவென் என தொழுது எழுத்து
பொன்னின் மௌலியன் வீடணன் தமரொடும் போனான்
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையை கடந்தான்
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான்

#88
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து
மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால்
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும்
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான்

#89
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும்
சிந்தையுள் புக செப்பினன் அனையவன் திகைத்தான்
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான்

#90
தன்னை கொல்லுகை துணிவரேல் தனக்கு அது தகுமேல்
முன்னர் கொல்லுகை முயல்க என்று அறிஞரே மொழிந்தார்
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன்
வெல் நல் போர் படை விடுதலே நலம் இது விதியால்

#91
தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அ படை தொடுத்தே
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர்
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான்

#92
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற
துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின்
பின்னை நின்றது புரிவென் என்று அன்னவன் பேச
மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும்

#93
வெள்ளம் நூறுடை வெம் சின சேனையை வீர
அள் இலை படை அகம்பனே முதலிய அரக்கர்
எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி
கொள்ளை வெம் செரு இயற்றுதி மனிதரை குறுகி

#94
மாயை என்றன வல்லவை யாவையும் வழங்கி
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய்
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான்

#95
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான்
சென்று தேர்-மிசை ஏறினன் இராக்கதர் செறிந்தார்
குன்று சுற்றிய மத கரி குலம் அன்ன குறியார்

#96
கோடி_கோடி நூறு_ஆயிரம் ஆயிரம் குறித்த
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த
ஓடு தேர் குலம் உலப்பு இல ஓடி வந்து உற்ற
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த

#97
படைக்கலங்களும் பரு மணி பூண்களும் பரு வாய்
இடை கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும் எறிப்ப
புடை பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள
விடை குலங்கள் போல் இராக்கத பதாதியும் மிடைந்த

#98
கொடி குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள
இடி குழீஇ எழு மழை பெரும் குலங்களை இரித்த
அடி குழீஇயிடும் இடம்-தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த
பொடி குழீஇ அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த

#99
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி
போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க

#100
தடித்து மீன்_குலம் விசும்பிடை தயங்குவ சலத்தின்
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின்
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திட பிறழ்ந்து
பொடித்த வெம் பொறி புகையொடும் போவன போல்வ

#101
சொன்ன நூறுடை வெள்ளம் அன்று இராவணன் துரந்த
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி
முன்னம் வேலையை முழுவதும் குடித்தது முறை ஈது
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை

#102
சங்கு பேரியும் காளமும் தாளமும் தலைவர்
சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா
பொங்கும் ஓதையும் புரவியின் அமலையும் பொலம் தேர்
வெம் கண் ஓலமும் மால் என விழுங்கிய உலகை

#103
புக்கதால் பெரும் போர் படை பறந்தலை புறத்தில்
தொக்கதால் நெடு வானர தானையும் துவன்றி
ஒக்க ஆர்த்தன உறுக்கின தெழித்தன உருமின்
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி

#104
குன்று கோடியும் கோடி-மேல் கோடியும் குறித்த
வென்றி வானர வீரர்கள் முகம்-தொறும் வீச
ஒன்றின் நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார்
பொன்றி வீழ்ந்தன பொரு கரி பாய் பரி பொலம் தேர்

#105
மழுவும் சூலமும் வலயமும் நாஞ்சிலும் வாளும்
எழுவும் ஈட்டியும் தோட்டியும் எழு முனை தண்டும்
தழுவும் வேலொடு கணையமும் பகழியும் தாக்க
குழவினோடு பட்டு உருண்டன வானர குலங்கள்

#106
முற்கரங்களும் முசலமும் முசுண்டியும் முளையும்
சக்கரங்களும் பிண்டிபாலத்தொடு தண்டும்
கப்பணங்களும் வளையமும் கவண் உமிழ் கல்லும்
வெற்பு_இனங்களை நுறுக்கின கவிகளை வீழ்த்த

#107
கதிர் அயில் படை குலம் வரன்முறை முறை கடாவ
அதிர் பிண பெரும் குன்றுகள் பட பட அழிந்த
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட
எதிர் நடக்கில குரக்கு_இனம் அரக்கரும் இயங்கார்

#108
யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர் எவரும்
தேவர் ஆதலின் அவரொடும் விசும்பிடை திரிந்தார்
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார்

#109
சுரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா
அரக்கரை பெரும் தேவர்கள் ஆக்கின அமலன்
சரத்தின் வேறு இனி பவித்திரம் உளது என தகுமோ

#110
அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான்
இந்து வெள் எயிற்று அரக்கரும் யானையும் தேரும்
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம்
சிந்தினான் சரம் இலக்குவன் முகம்-தொறும் திரிந்தான்

#111
கும்பகன்னன் ஆண்டு இட்டது வயிர வான் குன்றின்
வெம்பு வெம் சுடர் விரிப்பது தேவரை மேல்_நாள்
தும்பையின் தலை துரந்தது சுடர் மணி தண்டு ஒன்று
இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான்

#112
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால்
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம்
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான்

#113
வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல்
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல்
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும்
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான்

#114
கிளர்ந்தாரையும் கிடைத்தாரையும் கிழித்தான் கனல் விழித்தான்
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான் இரு கரத்தால்
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால்
அளந்தான் முனம் இவனே என இமையோர்களும் அயிர்த்தார்

#115
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல்
முத்தின் பொலி முழு மேனியன் முகில் விண் தொடு மெய்யால்
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன்
தொத்த பொலி கனக கிரி வெயில் சுற்றியது ஒத்தான்

#116
இடித்தான் நிலம் விசும்போடு என இட்டான் அடி எழுந்தான்
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால்
பிடித்தான் மத கரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா
அடித்தான் உயிர் குடித்தான் எடுத்து ஆர்த்தான் பகை தீர்த்தான்

#117
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான்
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான்

#118
தேர் ஏறினர் பரி ஏறினர் விடை ஏறினர் சின வெம்
கார் ஏறினர் மழை ஏறினர் கலை ஏறினர் பல வெம்
போர் ஏறினர் புகழ் ஏறினர் புகுந்தார் புடை வளைந்தார்
நேர் ஏறினர் விசும்பு ஏறிட நெரித்தான் கதை திரித்தான்

#119
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன்
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும்
பொரு சினம் திருகி வென்றி போர் கள மருங்கில் புக்கார்
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார்

#120
தொகும் படை அரக்கர் வெள்ளம் துறை-தொறும் அள்ளி தூவி
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை
அகம்பனை கண்டான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான்

#121
மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும்
தலை தடம் தேரன் வில்லன் தாருகன் என்னும் தன்மை
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான்
சிலை தொழில் குமரன் கொல்ல தொல்லை நாள் செருவில் தீர்ந்தான்

#122
பாகசாதனனும் மற்றை பகை அடும் திகிரி பற்றும்
ஏக சாதனனும் மூன்று புரங்கள் பண்டு எரித்துளோனும்
போக தாம் ஒருவர் மற்று இ குரங்கொடு பொர கற்றாரே
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான்

#123
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம்
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான்
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும் விரைவின் வந்தான்

#124
தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கி தெற்ற
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன
வாரொடு தொடர்ந்த பைம் பொன் கழலினன் வருதலோடும்
சூரொடும் தொடர்ந்த தண்டை சுழற்றினான் வயிர தோளான்

#125
எற்றின எறிந்த வல்லை ஏயின எய்த பெய்த
முற்றின படைகள் யாவும் முறை முறை முறிந்து சிந்த
சுற்றின வயிர தண்டால் துகைத்தனன் அமரர் துள்ள
கற்றிலன் இன்று கற்றான் கதையினால் வதையின் கல்வி

#126
அகம்பனும் காண காண ஐ_இரு_கோடி கைம்மா
முகம் பயில் கலின பாய்மா முனை எயிற்று அரக்கர் மூரி
நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன் நூழில் தீர்த்தான்
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான்

#127
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான்

#128
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில்
சுடு கனல் பொறிகள் வெம் கண் தோன்றிட கொடி தேர் தூண்டி
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி
முடுகுற சென்று குன்றின் முட்டினான் முகிலின் ஆர்ப்பான்

#129
சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும்
தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின்
வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண

#130
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில்
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம்
தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த
சாரதி புரள வீர தண்டினால் கண்டம் செய்தான்

#131
வில்லினால் இவனை வெல்லல் அரிது எனா நிருதன் வெய்ய
மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன்
கொல்லினால் இயன்றது ஆங்கு ஓர் கொடு முனை தண்டு கொண்டான்
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான்

#132
தாக்கினார் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி
ஓக்கினார் ஊழின் ஆர்ப்பு கொட்டினார் கிட்டினார் கீழ்
தூக்கினார் சுழற்றினார் மேல் சுற்றினார் எற்ற எற்ற
நீக்கினார் நெருக்கினார் மேல் நெருக்கினார் நீங்கினார் மேல்

#133
தட்டினார் தழுவினார் மேல் தாவினார் தரையினோடும்
கிட்டினார் கிடைத்தார் வீசி புடைத்தனர் கீழும் மேலும்
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார்

#134
மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத
வெய்யவன் தன் கை தண்டால் விலக்கினான் விலக்கலோடும்
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே

#135
கையொடு தண்டு நீங்க கடல் என கலக்கம் உற்ற
மெய்யொடு நின்ற வெய்யோன் மிடலுடை இட கை ஓச்சி
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை
ஒய்யென வயிர குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த

#136
அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறு அனைய தண்டு
பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்று என்னா
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால்
குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம்

#137
மீட்டும் அ கையால் வீசி செவி தலத்து எற்ற வீழ்ந்தான்
கூட்டினான் உயிரை விண்ணோர் குழாத்திடை அரக்கர் கூட்ட
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும்

#138
ஆர்க்கின்ற குரலும் கேளான் இலக்குவன் அசனி ஏற்றை
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் வீரன்
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை
போர் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான்

#139
வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின்
யோசனை ஏழு சென்றான் அங்கதன் அதனுக்கு அப்பால்
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன் அப்பால்
ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான்

#140
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார்
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல்
முற்றினன் இரண்டு மூன்று காவதம் ஒழிய பின்னும்
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற

#141
இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின் என்னா
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான்
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய

#142
ஆனையின் கோடும் பீலி தழைகளும் ஆரத்தோடு
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர வீசும்
பேன வெண் குடைய ஆய குருதி பேர் ஆறு கண்டான்

#143
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல்
வீசின பகழி அற்ற தலையொடும் விசும்பை முட்டி
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற ஊழி நாளில்
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான்

#144
அருளுடை குரிசில் வாளி அந்தரம் எங்கும் தாம் ஆய்
தெருள் உற தொடர்ந்து வீசி செல்வன தேவர் காண
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண
சுருளுடை சடையின் கற்றை சுற்று என சுடர்வ கண்டான்

#145
நெய் உற கொளுத்தப்பட்ட நெருப்பு என பொருப்பின் ஓங்கும்
மெய் உற குருதி தாரை விசும்பு உற விளங்கி நின்றது
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம்
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான்

#146
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி
தாள் எலாம் குலைய ஓடி திரிவன தாங்கல் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான்

#147
மிடல் கொளும் பகழி வானின் மாரியின் மும்மை வீசி
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார்
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான்

#148
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம்
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான்
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான்

#149
ஆர்த்த பேர் அமலை கேளா அணுகினன் அனுமன் எல்லா
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல்
பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான்

#150
அரி குல வீரர் ஐய யாண்டையர் அருக்கன் மைந்தன்
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே
விரி இருள் பரவை சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும்
தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான்

#151
போயினார் போயவாறும் போயினது அன்றி போரில்
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் ஐய யாரும்
மேயினார் மேய போதே தெரியுறும் விளைந்தது என்றான்
தாயினான் வேலையோடும் அயிந்திர பரவை-தன்னை

#152
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர்
தந்திரம் அதனை தெய்வ படையினால் சமைப்பின் அல்லால்
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான்

#153
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல்
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்த பற்றி
மின் எயிற்று அரக்கர்-தம்-மேல் ஏவினான் வில்லின் செல்வன்

#154
முக்கணான் படையை மூட்டி விடுதலும் மூங்கில் காட்டில்
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம்
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார்

#155
தேவர்-தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான்
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார்

#156
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற
பூ வர்க்கம் இமையோர் தூவ பொலிந்தனன் தூதர் போனார்

#157
இலங்கையர் கோனை எய்தி எய்தியது உரைத்தார் நீவிர்
விலங்கினிர் போலும் வெள்ளம் நூற்றை ஓர் வில்லின் வேழ
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான்

#158
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்க தாழா
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான்

#159
காலம் ஈது என கருதிய இராவணன் காதல்
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கத பூசுரர் கொணர்ந்தார்

#160
அம்பினால் பெரும் சமிதைகள் அமைத்தனன் அனலில்
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான்
கொம்பு பல்லொடு கரிய வெள்ளாட்டு இரும் குருதி
வெம்பு வெம் தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான்

#161
வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறு வெறி வயங்கி
நலம் சுரந்தன பெரும் குறி முறைமையின் நல்க
குலம் சுரந்து எழு கொடுமையன் வரன்முறை கொண்டே
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான்

#162
விசும்பு போயினன் மாயையின் பெருமையான் மேலை
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா
அசும்பு விண்ணிடை அடங்கினன் முனிவரும் அறியா
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார

#163
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர்
வினையம் எண்ணினன் இந்திர வேடத்தை மேவி
துனை வலத்து அயிராவத களிற்றின்-மேல் தோன்றி
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான்

#164
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான்
வெருக்கொள பெரும் கவி படை குலைந்தது விலங்கி

#165
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான்
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர்
சேடர் சிந்தனை முனிவர்கள் அமர் பொர சீறி
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார்

#166
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி
முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த யாம் முயன்ற
துனி இது என்-கொலோ சொல்லுதி விரைந்து என சொன்னான்

#167
இன்ன காலையின் இலக்குவன் மேனி-மேல் எய்தான்
முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம்
பொன்னின் மால் வரை குரீஇ இனம் மொய்ப்பது போல
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த

#168
கோடி_கோடி நூறு_ஆயிரம் கொடும் கணை குழாங்கள்
மூடி மேனியை முற்றுற சுற்றின மூழ்க
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான்

#169
அனுமன் இந்திரன் வந்தவன் என்-கொல் ஈது அமைந்தான்
இனி என் எற்றுவென் களிற்றினோடு எடுத்து என எழுந்தான்
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க
நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான்

#170
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட
தருக்கி வெம் சரம் தலைத்தலை மயங்கின தைக்க
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான்

#171
அங்கதன் பதினாயிரம் அயில் கணை அழுந்த
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான்
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான்
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க

#172
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க
காலனார் முகம் கண்டனன் இடபன் விண் கலந்தான்
ஆலமே அன்ன பகழியால் பனசனும் அயர்ந்தான்
கோலின் மேவிய கூற்றினால் குமுதனும் குறைந்தான்

#173
வேலை தட்டவன் ஆயிரம் பகழியால் வீழ்ந்தான்
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார்
கால வெம் தொழில் கயவனும் வானகம் கண்டான்
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான்

#174
கனகன் ஆயிரம் கணை பட விண்ணிடை கலந்தான்
அனகன் ஆயின சங்கனும் அ கணத்து அயர்ந்தான்
முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான்
புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு என புரண்டான்

#175
விந்தம் அன்ன தோள் சதவலி சுசேடணன் வினதன்
கெந்தமாதனன் இடும்பன் வன் ததிமுகன் கிளர
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார்

#176
மற்றை வீரர்கள் யாவரும் வடி கணை மழையால்
முற்றும் வீந்தனர் முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர்
எற்று வான் திரை கடலொடும் பொருது சென்று ஏற
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட

#177
தளைத்து வைத்தது சதுமுகன் பெரும் படை தள்ளி
ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின்
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம்
முளை புடைத்தன ஒத்தன வானரம் முடிந்த

#178
குவளை கண்ணினை வான் அர_மடந்தையர் கோட்டி
துவள பாரிடை கிடந்தனர் குருதி நீர் சுற்றி
திவள கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய
பவள காடுடை பாற்கடல் ஒத்தது அ பரவை

#179
விண்ணில் சென்றது கவி_குல பெரும் படை வெள்ளம்
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து என கலந்தார்
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார்
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார்

#180
பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர்
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன்
பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார்
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா வீடு

#181
நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர்
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர்
செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர்
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார்

#182
வெம் கண் வானர குழுவொடும் இளையவன் விளிந்தான்
இங்கு வந்திலன் இராமன் இப்போது என இகழ்ந்தான்
சங்கம் ஊதினன் தாதையை வல்லையில் சார்ந்தான்
பொங்கு போரிடை புகுந்துள பொருள் எலாம் புகன்றான்

#183
இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான்
துறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியை தொலைத்து
சிறந்த நண்பரை கொன்று தன் சேனையை சிதைக்க
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை

#184
அன்னதே என அரக்கனும் ஆதரித்து அமைந்தான்
சொன்ன மைந்தனும் தன் பெரும் கோயிலை தொடர்ந்தான்
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான்
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான்

#185
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி மேல் வீரன்
மொய்கொள் போர் களத்து எய்துவாம் இனி என முயன்றான்

#186
கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான்
வெள்ள வெம் கள பரப்பினை பொருக்கென விழித்தான்
தள்ளி தாமரை சேவடி நுடங்கிட தளர்ந்தான்

#187
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி
ஊக்கினான் தடம் தாமரை திரு முகத்து உதிரம்
போக்கினான் நிண பறந்தலை அழுவத்துள் புக்கான்
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான்

#188
சுக்கிரீவனை நோக்கி தன் தாமரை துணை கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான்
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான்
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான்

#189
கடல் கடந்து புக்கு அரக்கரை கருமுதல் கலக்கி
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ
உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான்

#190
முன்னை தேவர்-தம் வரங்களும் முனிவர்-தம் மொழியும்
பின்னை சானகி உதவியும் பிழைத்தன பிறிது என்
புன்மை செய் தொழில் என் வினை கொடுமையால் புகழோர்
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான்

#191
புன் தொழில் புலை அரசினை வெஃகினேன் பூண்டேன்
கொன்று ஒருக்கினென் எந்தையை சடாயுவை குறைத்தேன்
இன்று ஒருக்கினென் இத்தனை வீரரை இருந்தேன்
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ

#192
தமையனை கொன்று தம்பிக்கு வானர தலைமை
அமைய நல்கினென் அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்
கமை பிடித்து நின்று உங்களை இத்துணை கண்டேன்
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான்

#193
விடை குலங்களின் இடை ஒரு விடை கிடந்து என்ன
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான்
படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன் பழி பார்த்து
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான்

#194
உடலிடை தொடர் பகழியின் ஒளிர் கதிர் கற்றை
சுடருடை பெரும் குருதியில் பாம்பு என சுமந்த
மிடலுடை பண மீமிசை தான் பண்டை வெள்ள
கடலிடை துயில்வான் அன்ன தம்பியை கண்டான்

#195
பொருமினான் அகம் பொங்கினான் உயிர் முற்றும் புகைந்தான்
குரு மணி திரு மேனியும் மனம் என குலைந்தான்
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான்
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான்

#196
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்த்திலன் ஒன்றும்
வியர்த்திலன் உடல் விழித்திலன் கண் இணை விண்ணோர்
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும்
பெயர்த்திலன் உயிர் பிரிந்திலன் கருணையால் பிறந்தான்

#197
தாங்குவார் இல்லை தம்பியை தழீஇக்கொண்ட தட கை
வாங்குவார் இல்லை வாக்கினால் தெருட்டுவார் இல்லை
பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர் பட்ட
தீங்குதான் இது தமியனை யார் துயர் தீர்ப்பார்

#198
கவந்த பந்தமும் கழுதும் தம் கணவரை காணா
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்
உவந்த சாதகத்து ஈட்டமும் ஓரியின் ஒழுங்கும்
நிவந்த அல்லது பிறர் இல்லை களத்திடை நின்றார்

#199
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர்
சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார்
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின எவையும்
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி

#200
முகைய நாள்_மலர் கிழவற்கும் முக்கணான் தனக்கும்
நகையும் நீங்கிய திருமுகம் கருணையின் நலிந்த
தொகையுள் நின்றவர்க்கு உற்றது சொல்லி என் தொடர்ந்த
பகையில் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது பரிவால்

#201
அண்ணலும் சிறிது உணர்வினோடு அயா_உயிர்ப்பு அணுக
கண் விழித்தனன் தம்பியை தெரிவுற கண்டான்
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும்

#202
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன்
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன்
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன்

#203
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய்
நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால்

#204
ஊறாநின்ற புண்ணுடையாய்-பால் உயிர் காணேன்
ஆறாநின்றேன் ஆவி சுமந்தேன் அழிகின்றேன்
ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே

#205
பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய்
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி
துயில்கின்றாயோ இன்று இ உறக்கம் துறவாயோ

#206
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல்
பயிரா எல்லை பாதகனேற்கும் பரிவு உண்டோ
செயிரோ இல்லா உன்னை இழந்தும் திரிகின்றேன்
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா

#207
வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து ஓர் விடம் அம்மா
வாழ்விக்கும் என்று எண்ணினென் முன்னே வருவித்தேன்
சூழ்வித்து என்னை சுற்றினரோடும் சுடுவித்தேன்
தாழ்வித்தேனோ இத்தனை கேடும் தருவித்தேன்

#208
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும்
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன்
எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ

#209
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன்
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான்
பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்ப பொறையாற்றார்
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால்

#210
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால்
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய்
இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ

#211
சான்றோர் மாதை தக்க அரக்கன் சிறை தட்டால்
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல்
தோன்றாவோ என் வில் வலி வீர தொழில் அம்மா

#212
வேலை பள்ள குண்டு அகழிக்கும் விராதற்கும்
காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும் கரனுக்கும்
மூல பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும்
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா

#213
இருந்தேனானால் இந்திரசித்தே முதலாய
பெரும் தேராரை கொன்று பிழைக்க பெறுவேனேல்
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன்
பொருந்தேன் நான் இ பொய் பிறவிக்கும் பொறை அல்லேன்

#214
மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும்
ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை
தாதாய் காண சால நினைந்தேன் தளர்கின்றேன்
போதாய் ஐயா பொன் முடி என்னை புனைவிப்பான்

#215
பாசமும் முற்ற சுற்றிய போதும் பகையாலே
நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன்
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன்
தேசமும் மற்று என் கொற்ற நலத்தை சிரியாரோ

#216
கொடுத்தேன் அன்றே வீடணனுக்கு குலம் ஆள
முடித்து ஓர் செல்வம் யான் முடியாதே முடிகின்றேன்
படித்தேன் அன்றே பொய்ம்மை குடிக்கு பழி பெற்றேன்
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன்

#217
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த
பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி
ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான்

#218
கண்டார் விண்ணோர் கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார்
கொண்டார் துன்பம் என் முடிவு என்னா குலைகின்றார்
அண்டா ஐயா எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார்

#219
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம்
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல்
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால்
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே

#220
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான்
கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ

#221
ஈன்றாய் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி அரசர் இல் பிறந்தாய்
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம்
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம்
போன்றது இல்லை ஆளுடையாய் பொய்யும் புகல புக்காயோ

#222
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி
பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய் பரமேட்டி

#223
துன்ப விளையாட்டு இதுவேயும் நின்னை துன்பம் தொடர்பு இன்மை
இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால்
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம்
முன்பு பின்பு நடு இல்லாய் முடிந்தால் அன்றி முடியாவே

#224
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப
வெருவாதிருந்தோம் நீ இடையே துன்பம் விளைக்க மெலிகின்றோம்
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல்
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ

#225
அம்பரீடற்கு அருளியதும் அயனார் மகனுக்கு அளித்ததுவும்
எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம்
வெம்பு துயரம் நீ உழக்க வெளி காணாது மெலிகின்றோம்
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ

#226
என்ப பலவும் எடுத்து இயம்பி இமையாதோரும் இடர் உழந்தார்
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்
புன்கண் நிருதர் பெரும் தூதர் போனார் அரக்கனிடம் புக்கார்

#227
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில்
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால்
முன்வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார்

23 சீதை களம் காண் படலம்


#1
பொய்யார் தூதர் என்பதனால் பொங்கி எழுந்த உவகையன் ஆய்
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி விளைந்தபடி
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான்

#2
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின்
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான்

#3
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம்
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார்

#4
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள்
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்
தண் தாமரை பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள்
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ

#5
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன்
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள்
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன்
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார்

#6
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள்
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார்

#7
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின்
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள்
கனத்தின் நிறத்தான் தனை பெயர்த்தும் கண்டாள் கயலை கமலத்தால்
சினத்தின் அலைப்பாள் என கண்ணை சிதைய கையால் மோதினாள்

#8
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் கொதித்தாள் பதைத்தாள் குலைவுற்றாள்
துடித்தாள் மின் போல் உயிர் கரப்ப சோர்ந்தாள் சுழன்றால் துள்ளினாள்
குடித்தாள் துயரை உயிரோடும் குழைத்தாள் உழைத்தாள் குயில் அன்னாள்

#9
விழுந்தாள் புரண்டாள் உடல் முழுதும் வியர்த்தாள் அயர்த்தாள் வெதும்பினாள்
எழுந்தாள் இருந்தாள் தளிர் கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள்
கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும்
தொழும் தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்ற தொடங்கினாள்

#10
உற மேவிய காதல் உனக்கு உடையார்
புறம் ஏதும் இலாரொடு பூணகிலாய்
மறமே புரிவார் வசமாயினையோ
அறமே கொடியாய் இதுவோ அருள்தான்

#11
முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால்
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா
விதியே கொடியாய் விளையாடுதியோ

#12
கொடியேன் இவை காண்கிலேன் என் உயிர் கோள்
முடியாய் நமனே முறையோ முறையோ
விடியா இருள்-வாய் எனை வீசினையே
அடியேன் உயிரே அருள் நாயகனே

#13
எண்ணா மயலோடும் இருந்தது நின்
புண் ஆகிய மேனி பொருந்திடவோ
மண்ணோர் உயிரே இமையோர் வலியே
கண்ணே அமுதே கருணாகரனே

#14
மேவி கனல் முன் மிதிலை பதி என்
பாவி கை பிடித்தது பண்ணவ நின்
ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ்
தேவிக்கு அமுதே மறையின் தெளிவே

#15
உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு
ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால்
மெய்யே வினை எண்ணி விடுத்த கொடும்
கைகேசி கருத்து இதுவோ களிறே

#16
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும்
வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா
புகை ஆடிய காடு புகுந்து உடனே
பகை ஆடியவா பரிவு ஏதும் இலேன்

#17
இன்று ஈகிலையேல் இறவு இ இடை மான்
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன்
நின்று ஈவது நின்னை நெடும் செருவில்
கொன்று ஈவது ஒர் கொள்கை குறித்தலினோ

#18
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும்
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால்
மெய் ஆகிய வாசகமும் விதியும்
பொய் ஆன என் மேனி பொருந்துதலால்

#19
மேதா இளையோய் விதியார் விளைவால்
போதா நெறி எம்மொடு போதுறு நாள்
மூது ஆனவன் முன்னம் முடிந்திடு எனும்
மாதா உரையின்-வழி நின்றனையோ

#20
பூவும் தளிரும் தொகு பொங்கு அணை-மேல்
கோவும் துயில துயிலாய் கொடியார்
ஏவு உன் தலை வந்த இரும் கணையால்
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ

#21
மழு வாள் உறினும் பிளவா மனனோடு
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான்
விழுவேன் அவன் மேனியின் மீதில் எனா
எழுவாளை விலக்கி இயம்பினளால்

#22
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு
கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள்
தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள்

#23
மாய மான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும்
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்
நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால்
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய்

#24
கண்ட அ கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும்
தண்ட வாள் அரக்கர் பாவ செய்கையும் தருமம் தாங்கும்
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும்
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால்

#25
ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய்

#26
ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகம் ஓர் ஏழும் ஏழும்
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம்
வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிர் எலாம் வெருவல் அன்னை
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால்

#27
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை
பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ

#28
தேவரை கண்டேன் பைம் பொன் செம் கரம் சிரத்தில் ஏந்தி
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி
ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை
கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல்

#29
மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால்
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள்
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள்

#30
அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன்
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால்
முன்னமே முடிந்தது அன்றே என்றனள் முளரி நீத்தாள்

#31
நாண் எலாம் துறந்தேன் இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும்
பூண் எலாம் துறந்தேன் என் தன் பொரு சிலை மேகம்-தன்னை
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன்
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள்

#32
தையலை இராமன் மேனி தைத்த வேல் தடம் கணாளை
கைகளின் பற்றி கொண்டார் விமானத்தை கடாவுகின்றார்
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல்
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார்

24 மருத்துமலை படலம்


#1
போயினள் தையல் இப்பால் புரிக என புலவர் கோமான்
ஏயின கருமம் நோக்கி ஏகிய இலங்கை வேந்தன்
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான்

#2
நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை விடத்தை தானே
தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான்

#3
விளைந்தவாறு உணர்கிலாதான் ஏங்கினான் வெதும்பினான் மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான்
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான்
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான்

#4
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம்
பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா
முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால்
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே

#5
ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி
போயினது இல்லை வாயால் புலம்பலன் பொருமி பொங்கி
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன் தெரிய நோக்கி
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான்

#6
அந்தணன் படையால் வந்தது என்பதும் ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான்

#7
உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான்

#8
பாசம் போய் இற்றால் போல பதுமத்தோன் படையும் இன்னே
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை
வீசும் போர் களத்து வீய்ந்த வீரரும் மீள்வர் வெய்ய
நீசன் போர் வெல்வது உண்டோ என்றனன் நெறியில் நின்றான்

#9
உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த
துணைவர்கள் துஞ்சல் இல்லார் உளர் எனின் துருவி தேடி
கொணர்குவென் விரைவின் என்னா கொள்ளி ஒன்று அம் கை கொண்டான்
புணரியின் உதிர வெள்ளத்து ஒரு தனி விரைவின் போனான்

#10
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண்
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட
ஆயிர கோடி யானை பெரும் பிணத்து அமளி மேலான்
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான்

#11
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினை குளிர செய்தான்

#12
உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி
வியர்ப்பு உளதாக கண்கள் விழித்தன மேனி மெல்ல
பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக
அயர்த்திலன் இராம நாமம் வாழ்த்தினன் அமரர் ஆர்த்தார்

#13
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய்
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான்
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான்

#14
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன்
துன்பொடும் துயிலன் ஆனான் உணர்வு இனி தொடர்ந்த பின்னே
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும்
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான்

#15
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல்
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான்

#16
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம்
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்
என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான்
மின் எரி ஒளியில் சென்றார் சாம்பனை விரைவில் கண்டார்

#17
எரிகின்ற மூப்பினாலும் ஏவுண்ட நோவினாலும்
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும்
தெரிகின்றது இல்லா மம்மர் சிந்தையன் எனினும் வீரர்
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான் செவிகளால் வயிர தோளான்

#18
அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன் தானோ
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ
வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார்
புரக்க உள்ளாரே என்ன கருதினன் பொருமல் தீர்ந்தான்

#19
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மை தேற்றி
அந்தம்_இல் குணத்திர் யாவிர் அணுகினிர் என்றான் ஐய
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான்

#20
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற
இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா
உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான்

#21
விரிஞ்சன் வெம் படை என்றாலும் வேதத்தின் வேதம் அன்ன
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல்
தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான்
பெருந்தகை துன்ப வெள்ள துயில் உளான் பெரும என்றான்

#22
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே
இன் உயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால்
என் அது கிடக்க தாழா இங்கு இனி இமைப்பின் முன்னர்
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான்

#23
எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும்
முழுதும் இ உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி-தானும்
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி

#24
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால்
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால்
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி மொய்ம்ப

#25
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும்
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின்
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும்

#26
மேருவினை கடந்து அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால்
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும்
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும்
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி

#27
மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான்

#28
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர்
உன்னி அமைத்தனர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இ உலகம் மூன்றும்
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால்

#29
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும்
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும்
பொய்ம் மருங்கின் நில்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான்

#30
ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும்
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான்
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான்

#31
கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த மணி ஆர கோவை போன்ற
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா
தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச
நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா

#32
வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான
கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான்

#33
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும்
பொழிந்தன மீன் தொடர்ந்து எழுந்த பொருப்பு_இனமும் தரு குலமும் பிறவும் பொங்கி
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம்

#34
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால்
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம்

#35
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான்
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீரிடை படுத்து பறித்தனன் நம் துயர் என்றார் தேவர் எல்லாம்

#36
மேகத்தின் பதம் கடந்து வெம் கதிரும் தண் கதிரும் விரைவில் செல்லும்
மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான்

#37
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும்
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன்
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால்
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார்

#38
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின்
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார்

#39
உரு என்றார் சிலர் சிலர்கள் ஒளி என்றார் சிலர் சிலர்கள் ஒளிருமேனும்
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும்
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர்

#40
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள்
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம்

#41
தொடுத்த நாள்_மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர்
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன்
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம்
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம்

#42
தேவரும் முனிவர்-தாமும் சித்தரும் தெரிவைமாரும்
மூ-வகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார்
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த
பூவுடை அமரர் தெய்வ தரு என விசும்பில் போனான்

#43
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும்
கமையுடை முனிவர் மற்றும் அறன் நெறி கலந்தோர் எல்லாம்
அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கு அப்பால்
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான்

#44
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும்
தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி
படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான்
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான்

#45
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர்
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான்

#46
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான்
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான்

#47
எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான்
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும்
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான்

#48
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான்
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில்
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான்

#49
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல்
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும்
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான்

#50
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க
மரு விரி துளப மௌலி மா நில கிழத்தியோடும்
திருவோடும் இருந்த மூல தேவையும் வணக்கம் செய்தான்

#51
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய் கதிர் பரப்பி ஐந்து கதிர் முக கமலம் காட்டி
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான்

#52
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற
அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான்

#53
பூ அலர் அமைந்த பொற்பின் கிரணங்கள் பொலிந்து பொங்க
தேவர்-தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில்
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான்

#54
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல்
உத்தரகுருவை உற்றான் ஒளியவன் கதிர்கள் ஊன்றி
செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான்

#55
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின்
பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான்

#56
கால் திசை சுருங்க செல்லும் கடுமையான் கதிரின் செல்வன்
மேல் திசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான்

#57
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி
பொரு அரும் இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும்
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான்

#58
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான்
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான்

#59
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும்
பெரியவன் அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான்
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும்
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான்

#60
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான்
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான் புலவன் சொன்ன
நல் குன்றம் அதனை கண்டான் உணர்ந்தனன் நாகம் முற்ற
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன

#61
பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான்

#62
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால்
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும்
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால்

#63
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால்
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான்
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான்
பொங்கிய விசும்பிடை கடிது போகுவான்

#64
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான்
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான்

#65
அ தலை அன்னவன் அனையன் ஆயினான்
இ தலை இருவரும் இசைய எய்தினார்
கை தலத்தால் அடி வருடும் காலையில்
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ

#66
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும்
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா
புண்டரீக தடம் தருமம் பூத்து என

#67
நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன் புகழ்
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார்
தூக்கிய தலையினர் தொழுத கையினர்
ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை

#68
ஏவிய காரியம் இயற்றி எய்தினை
நோவிலை வீடணா என்று நோக்கி பின்
தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும்
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ

#69
ஐயன்மீர் நம் குலத்து அழிவு இது ஆதலின்
செய்வகை பிறிது இலை உயிரின் தீர்ந்தவர்
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின்
பொய் இலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர்

#70
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய
பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா
காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன்

#71
மாயை இ மான் என எம்பி வாய்மையான்
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்
போயினென் பெண் உரை மறாது போனதால்
ஆயது இ பழியுடை மரணம் அன்பினீர்

#72
கண்டனென் இராவணன் தன்னை கண்களால்
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர்
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான்
பண்டுடை தீவினை பயந்த பண்பினால்

#73
தேவர்-தம் படைக்கலம் தொடுத்து தீயவன்
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும்
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வென்றியால்

#74
நின்றிலென் உடன் நெறி படைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்
பொன்றினர் நமர் எலாம் இளவல் போயினான்
வென்றிலென் அரக்கனை விதியின் வெம்மையால்

#75
ஈண்டு இவண் இருந்து அவை இயம்பும் ஏழைமை
வேண்டுவது அன்று இனி அமரின் வீடிய
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடை
காண்டலே நலம் பிற கண்டது இல்லையால்

#76
எம்பியை துணைவரை இழந்த யான் இனி
வெம்பு போர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ

#77
இளையவன் இறந்த-பின் எவ்வம் என் எனக்கு
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என்
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என்
விளைவுதான் என் மறை விதி என் மெய்ம்மை என்

#78
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வெனேல்
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி
கரக்குவது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ

#79
தாதையை இழந்த-பின் சடாயு இற்ற-பின்
காதலின் துணைவரும் மடிய காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன்
சீதையை உவந்துளான் என்பர் சீரியோர்

#80
வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அற
கொன்றனென் அயோத்தியை குறுகினேன் குணத்து
இன் துணை எம்பியை இன்றி யான் உளேன்
நன்று அரசாளும் அ அரசும் நன்று-அரோ

#81
படியின்-மேல் காதலின் யாதும் பார்க்கிலென்
முடிகுவென் உடன் என முடிய கூறலும்
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய்
நொடிகுவது உளது என நுவல்வதாயினான்

#82
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை
முன்னமே அறிகுவேன் மொழிதல் தீது அது
என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம்
பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய்

#83
அம்புயத்து அயன் படை ஆதல் தேறினென்
உம்பியை உலப்பு அரும் உருவை ஊன்றிட
வெம்பு போர் களத்திடை வீழ்த்த வென்றியான்
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால்

#84
அன்னவன் படைக்கலம் அமரர் தானவர்
தன்னையும் விடின் உயிர் குடிக்கும் தற்பர
உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ

#85
பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான்
அரும் துயர் அளவு இலாது அரற்றுவானை யான்
மருந்து இறை பொழுதினில் கொணர்குவாய் என
பொருந்தினன் வட திசை கடிது போயினான்

#86
பனி வரை கடந்தனன் பருப்பதங்களின்
தனி அரசின் புறம் தவிர சார்ந்துளன்
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும்
துனி வரு துன்பம் நீ துறத்தி தொல்லையோய்

#87
யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான்
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர்
வேனிலான் மேனியாய் மருந்தை மெய் உற

#88
ஆர்கலி கடைந்த நாள் அமுதின் வந்தன
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன
மேருவின் உத்தரகுருவின்-மேல் உள
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின

#89
தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள்
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள்
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால்

#90
சல்லியம் அகற்றுவது ஒன்று சந்துகள்
புல்லுற பொருத்துவது ஒன்று போயின
நல் உயிர் ஈகுவது ஒன்று நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய்

#91
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி
தரு நெறி தருமமே காட்ட தாழ்க்கிலன்
அருமையது அன்று எனா அடி வணங்கினான்
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான்

#92
பொன்_மலை-மீது போய் போக பூமியின்
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி

#93
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர கார் வரை
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை
தடை இலாது உடற்றுறு சண்டமாருதம்
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால்

#94
மீன்_குலம் குலைந்து உக வெயிலின் மண்டிலம்
தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான்
தேன்_குலம் கலங்கிய நறவின் சென்றவால்

#95
வேர்த்தன தூரொடு விசும்பை மீ செல
போர்த்தன மலையொடு மரனும் முன்பு போல்
தூர்த்தன வேலையை காலின் தோன்றலும்
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான்

#96
மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண்
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள
குழீஇயின குமுறின கொள்கை கொண்டதால்
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே

#97
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள்
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என
வெறிது உலகு என கொடு விசும்பின் மீச்செலும்
உறு வலி கலுழனே ஒத்து தோன்றினான்

#98
பூதலத்து அரவொடு மலைந்து போன நாள்
ஓதிய வென்றியன் உடற்றும் ஊற்றத்தன்
ஏதம் இல் இலங்கை அம் கிரி-கொடு எய்திய
தாதையும் ஒத்தனன் உவமை தற்கு இலான்

#99
தோன்றினன் என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன் நிலத்து அடி கடவுள் ஓங்கல்தான்
வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின் அனுமன் எய்தினான்

#100
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார்
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார்

#101
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில்
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய கண்டன
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ

#102
சுழன்றன நெடும் கணை கரந்த புண் கடுத்து
அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள்
சுழன்றில உலகு எலாம் தொழுவ தொங்கலின்
குழன்ற பூம் குஞ்சியான் உணர்வு கூடினான்

#103
யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ் கடல்
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும்
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான்
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான்

#104
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற
வீங்கிய தோள்களால் தழுவி வெம் துயர்
நீங்கினன் இராமனும் உலகில் நின்றில
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர்

#105
அரம்பையர் வாழ்த்து ஒலி அமுத ஏழ் இசை
நரம்பு இயல் கின்னரம் முதல் நன்மையே
நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா
விரும்பின முனிவரும் வேதம் பாடினார்

#106
வேதம் நின்று ஆர்த்தன வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன புகழும் ஆர்த்தன
ஓதம் நின்று ஆர்த்தன ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன தேவர் ஆர்த்தனர்

#107
உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும்
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா
சுந்தரவில்லியை தொழுது சூழ வந்து
அந்தணன் படையும் நின்று அகன்று போயதால்

#108
ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ
தாயின் அன்பனை தழுவினான் தனி
நாயகன் பெரும் துயரம் நாம் அற
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான்

#109
எழுது குங்கும திருவின் ஏந்து கோடு
உழுத மார்பினான் உருகி உள் உற
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாள் உற
தொழுத மாருதிக்கு இனைய சொல்லுவான்

#110
முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம் மாண்டுளோம்
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய்

#111
அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே
மொழியும்-கால் தரும் உயிரும் முற்றுமே
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை
வழியும் காத்து நம் மரபும் காத்தனை

#112
தாழ்வும் ஈங்கு இறை_பொழுது தக்கதே
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான்
ஏழும் வீயும் என் பகர்வது எல்லை நாள்
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ

#113
இன்று வீகலாது எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால்

#114
மற்றையோர்களும் அனுமன் வண்மையால்
பெற்ற ஆயுளார் பிறந்த காதலார்
சுற்றும் மேவினார் தொழுது வாழ்த்தினார்
உற்றவாறு எலாம் உணர கூறினான்

#115
உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார்
பொய்த்த சிந்தையார் இறுதல் போக்குமால்
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய்

#116
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா
குன்று தாங்கி அ குரிசில் போயினான்

25 களியாட்டு படலம்


#1
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம்
கின்னரர் முதலோர் பாட முகத்திடை கிடந்த கெண்டை
கன்னி நன் மயில் அன்னாரை நெடும் களியாட்டம் கண்டான்

#2
அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர்
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர் இயக்கர் கோது இல்
கரும்பினும் இனிய சொல்லார் சித்தர் தம் கன்னிமார்கள்
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார்

#3
மேனகை இலங்கு வாள் கண் திலோத்தமை அரம்பை மெல்லென்
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப
ஆனகம் முரசம் சங்கம் முருட்டொடும் இரட்ட ஆடி

#4
தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் சுருளின் தோய்ந்த
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய்
மூடுண்ட முறுவல் முத்தும் முள்ளுண்ட முளரி செம்_கண்
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள்

#5
முளை கொழும் கதிரின் கற்றை முறுவல் வெண் நிலவும் மூரி
ஒளி பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும் ஒண் பொன்
விளக்கையும் விளக்கும் மேனி மிளிர் கதிர் பரப்பும் வீச
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ

#6
நல் பெரும் கல்வி செல்வம் நவை அறு நெறியை நண்ணி
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றி
பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடி கலந்தது கள்ளின் வேகம்

#7
பல பட முறுவல் வந்து பரந்தன பனித்த மெய் வேர்
இலவு இதழ் துடித்த முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற
சிலை நிகர் புருவம் நெற்றி குனித்தன விளர்த்த செ வாய்

#8
கூந்தல் அம் பார கற்றை கொந்தள கோல கொண்டல்
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர்
பூம் துகிலோடும் பூசல் மேகலை சிலம்பு பூண்ட
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார்

#9
கோத்த மேகலையினோடும் துகில் மணி குறங்கை கூட
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு
வேத்தவை கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் மேலாம்
சீர்த்தவர் செய்ய தக்க கருமமே செய்தார் என்ன

#10
பாணியின் தள்ளி கால மாத்திரை படாது பட்ட
நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும்
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன்
தூணியின் அடைத்த அம்பின் கொடும் தொழில் துறந்த கண்ணார்

#11
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர்
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன
வெம் குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க

#12
ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர்
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால்
ஆனையை விளம்பி தேரை அபிநயம் தெரிக்கலுற்றார்

#13
அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை
தொழுகுவார் துயில்வர் துள்ளி தூங்குவர் துவர் வாய் இன் தேன்
ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர்-மேல் ஒருவர் புக்கு
முழுகுவர் குருதி வாள் கண் முகிழ்த்து இடை மூரி போவர்

#14
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும்
மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி

#15
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண்
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி
பூ பிறழ்ந்து உருவம் வேறாய் பொலிந்தது ஓர் பழனம் போன்ற

#16
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும்
இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை
துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி
புயல் பொரு கூந்தல் பார கற்றையின் புனையலுற்றார்

#17
முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார்
இ தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே

#18
ஆடலும் களியின் வந்த அமலையும் அமுதின் ஆன்ற
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார்
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம்
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும்

#19
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க
துறு சுவல் புரவி தூங்கி துணுக்குற அரக்கர் உட்க
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன

#20
முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர் முழு கண் வேலால்
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும்
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால்

#21
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல்
ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம்
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான்

26 மாயா சீதை படலம்


#1
மைந்தனும் மற்றுளோரும் மகோதர பெயரினானும்
தந்திர தலைமையோரும் முதியரும் தழுவ தக்க
மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட
அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறிய சொன்னான்

#2
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே
வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல்
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை
பங்கயத்து அண்ணல் மீளா படை பழுதுற்ற பண்பால்

#3
இலங்கையின்-நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான்
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும்
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால்

#4
நீரினை கடக்க வாங்கி இலங்கையாய் நின்ற குன்றை
பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார்
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ

#5
முறை கெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின்
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும்
இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமே தான்
அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா

#6
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய

#7
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி
வேலையை வென்று கும்பகருணனை வீட்டினானை
ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ அமரின் வெல்வார்
சூலியை பொருப்பினோடும் தூக்கிய விசய தோளாய்

#8
மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும்
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார்
வெறிது நம் வென்றி என்றான் மாலி மேல் விளைவது ஓர்வான்

#9
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி
பட்டனர் அரக்கர் என்னின் படைக்கலம் படைத்த எல்லாம்
கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல் கிளி அனாளை
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை வீய

#10
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர்
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி
சிந்தினென் மனித்தரோடு அ குரங்கினை தீர்ப்பென் என்றான்
வெம் திறல் அரக்கர் வேந்தன் மகன் இவை விளம்பலுற்றான்

#11
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல்
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால்
விளைவு இலது ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா

#12
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும்
மேல் நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யின் சொன்ன
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே

#13
அனையது வேறு நிற்க அன்னது பகர்தல் ஆண்மை
வினையன அன்று நின்று வீழ்ந்தது வீழ்க வீர
இனையல் நீ மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம்

#14
அன்னது நல்லதேயால் அமைதி என்று அரக்கன் சொன்னான்
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான்

#15
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன
போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார்

#16
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார்
அ தலை தம்பிமாரும் தாயரும் அடுத்துளோரும்
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற
பொத்திய துன்பம் மூள சேனையும் தாமும் போவார்

#17
போகலர் என்ற போதும் அனுமனை ஆண்டு போக்கி
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார்
ஏகிய கருமம் முற்றி யான் அவண் விரைவின் எய்தி
வேக வெம் படையின் கொன்று தருகுவென் வென்றி என்றான்

#18
அன்னது புரிதல் நன்று என்று அரக்கனும் அமைய அம் சொல்
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான்
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல்
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான்

#19
அ தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய எண்ணி
தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர் சார்ந்தான்
பத்துடை ஏழு சான்ற வானர பரவை பற்றி
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது எ உலகும் காண

#20
எண்_இல கோடி பல் படை யாவும்
மண்ணுறு காவல் திண் மதில் வாயில்
வெண் நிற மேகம் மின் இனம் வீசி
நண்ணின போல்வ தொல் நகர் நாண

#21
ஆசைகள்-தோறும் அள்ளின கொள்ளி
மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம்
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின்
வீசின வானின் மீன் விழும் என்ன

#22
வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை
குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும்
செம் சரம் என்ன சென்றன மென்மேல்

#23
கை அகல் இஞ்சி காவல் கலங்க
செய்ய கொழும் தீ சென்று நெருங்க
ஐயன் நெடும் கார் ஆழியை அம்பால்
எய்ய எரிந்தால் ஒத்தது இலங்கை

#24
பரல் துறு தொல் பழுவத்து எரி பற்ற
நிரல் துறு பல் பறவை குலம் நீளம்
உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம்
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை

#25
மூ_உலகத்தவரும் முதலோரும்
மேவின வில் தொழில் வீரன் இராமன்
தீவம் என சில வாளி செலுத்த
கோபுரம் இற்று விழுந்தது குன்றின்

#26
இ தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான்
உய்த்த பெரும் கிரி மேருவின் உப்பால்
வைத்து நெடும் தகை மாருதி வந்தான்

#27
அறை அரவ கழல் மாருதி ஆர்த்தான்
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர்
சிறை அரவ கலுழன் கொடு சீறும்
இறை அரவ_குலம் ஒத்தது இலங்கை

#28
மேல் திசை வாயிலை மேவிய வெம் கண்
காற்றின் மகன் தனை வந்து கலந்தான்
மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான்
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான்

#29
சானகி ஆம்-வகை கொண்டு சமைத்த
மான் அனையாளை வடி குழல் பற்றா
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான்

#30
வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர்
எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவி
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான்
அந்தம்_இல் மாருதி அஞ்சி அயர்ந்தான்

#31
கண்டவளே இவள் என்பது கண்டான்
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான்
கொண்டு இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான்

#32
யாதும் இனி செயல் இல் என எண்ணா
நீதி உரைப்பது நேர் என ஓரா
கோது_இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய்
மாதை ஒறுத்தல் வசை திறம் அன்றோ

#33
நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்
நூல்_முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல்

#34
மண் குலைகின்றது வானும் நடுங்கி
கண் குலைகின்றது காணுதி கண்ணால்
எண் குலை நெஞ்சில் இரங்கல் துறந்தாய்
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ

#35
என்-வயின் நல்கினை ஏகுதி என்றால்
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின்
அன்வயம் ஏதும் அறிந்திலை ஐயா
பன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு அன்றோ

#36
எந்தை உவந்த இலங்கு_இழை-தன்னை
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ
சிந்துவென் வாளினில் என்று செறுத்தான்
இந்திரசித்தவன் இன்ன இசைத்தான்

#37
போ-மின் அடா வினை போயது போலாம்
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி
கா-மின் அது இன்று கனல் கரி ஆக
வேம் அது செய்து இனி மீள்குவென் என்றான்

#38
தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர்
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார்
வெம்பு கடும் கனல் வீசிடும் என் கை
அம்புகளோடும் அவிந்தனர் அம்மா

#39
இப்பொழுதே கடிது ஏகுவென் யான் இ
புட்பக மானம்-அதில் புக நின்றேன்
தப்புவரே அவர் சங்கை இலா என்
வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால்

#40
ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான்
வாளின் எறிந்தனன் மா கடல் போலும்
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான்

#41
தென் திசை நின்று வடாது திசை-கண்
பொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான்
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான்
வென்றி நெடும் கிரி போல விழுந்தான்

#42
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான்
தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான்
ஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான்
ஏயன பன்னினன் இன்னன சொன்னான்

#43
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும்
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும்
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான்

#44
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி
விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் போய் மெலியும் வெம் தீ
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான்

#45
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல்
விடிந்தது என்று இருந்தேன் மீள வெம் துயர் இருளின் வெள்ளம்
படிந்தது வினைய செய்கை பயந்தது பாவி வாளால்
தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா

#46
பெரும் சிறை கற்பினாளை பெண்ணினை கண்ணின் கொல்ல
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன்
இரும் சிறை அழுந்துகின்றேன் எம்பிரான் தேவி பட்ட
அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா

#47
பாதக அரக்கன் தெய்வ பத்தினி தவத்துளாளை
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே
காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா

#48
கல்விக்கு நிமிர்ந்த கீர்த்தி காகுத்தன் தூதன் ஆகி
சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை
வெல்விக்க வந்து நின்னை மீட்பிக்க அன்று வெய்தின்
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன்

#49
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன
செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற
அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்ல
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால்

#50
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன்
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி

#51
விண்டு நின்று ஆக்கை சிந்த புல் உயிர் வீட்டிலாதேன்
கொண்டு நின்றானை கொல்ல கூசினேன் எதிரே கொல்ல
கண்டு நின்றேன் மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன்

#52
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின்
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன்
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான்

#53
உற்றதை உணர்த்தி பின்னை உலகுடை ஒருவனோடும்
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின்
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான்

#54
சிங்க_ஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான்
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான்
பொங்கிய பொருமல் வீங்கி உயிர்ப்பொடு புரத்தை போர்ப்ப
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான்

#55
வீழ்ந்தவன் தன்னை வீரன் விளைந்தது விளம்புக என்னா
தாழ்ந்து இரு தடக்கை பற்றி எடுக்கவும் தரிக்கிலாதான்
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால்
போழ்ந்தனன் என்ன கூறி புரண்டனன் பொருமுகின்றான்

#56
துடித்திலன் உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் துள்ளி கண்ணீர்
பொடித்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் பொருமி உள்ளம்
வெடித்திலன் விம்மி பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன்
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும்

#57
சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா
கற்பகம் அனைய வள்ளல் கரும் கழல் கமல கால்-மேல்
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம்

#58
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான்
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவ பேசான்
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும்
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான்

#59
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும்
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனை பார்த்தும்
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனான்

#60
தொல்லையது உணர தக்க வீடணன் துளக்கம் உற்றான்
எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான்
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான்

#61
சீத நீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி
போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம்
பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும்
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல

#62
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன்
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா
தேற்றுவான் நினைந்து தம்பி இவை இவை செப்பலுற்றான்

#63
முடியும் நாள் தானே வந்து முற்றினால் துன்ப முந்நீர்
படியுமாம் சிறியோர் தன்மை நினக்கு இது பழியிற்றாமால்
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல்

#64
தையலை துணை இலாளை தவத்தியை தரும கற்பின்
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி
வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம்
உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ

#65
அரக்கர் என் அமரர்தாம் என் அந்தணர்தாம் என் அந்த
குருக்கள் என் முனிவர்தாம் என் வேதத்தின் கொள்கைதான் என்
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால்
இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே

#66
முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து
அழுவதே நன்று நம்-தம் வில் தொழில் ஆற்றல் அம்மா

#67
புக்கு இ ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து அரக்கன் போன
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே

#68
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம்
இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே

#69
மன்றல் அம் கோதையாளை தம் எதிர் கொணர்ந்து வாளின்
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின்
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல்

#70
அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் ஓர்
கனவு கண்டனனே என்ன கதுமென எழுந்து காணும்
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான்

#71
இலங்கையை இடந்து வெம் கண் இராக்கதர் என்கின்றாரை
பொலம் குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும்
குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம்-மேல்
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும்

#72
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய
புறம் கிடந்து உழைப்பது என் இப்பொழுது இறை புவனம் மூன்றும்
கறங்கு என திரிந்து தேவர் குலங்களை கட்டும் என்னா
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான்

#73
மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல்
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி

#74
தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சார
போயினன் என்ற மாற்றம் செவி துளை புகுதலோடும்
மேயின வடுவின் நின்ற வேதனை களைய வெந்த
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான்

#75
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான்

#76
தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும்
ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென் அதனை ஐய
பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ

#77
நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான்
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான் வினையேன் வந்த
மனை பொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும்
எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன்

#78
தாதைக்கும் சடாயுவான தாதைக்கும் தமியள் ஆய
சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே

#79
உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும்
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து அவன் கொன்று வீழ்ந்தால்
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து நல்க
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார்

#80
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய்
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம்
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள்
காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான்

#81
அ இடத்து இளவல் ஐய பரதனை அமரின் ஆர்க்க
எ விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான்

#82
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட
வீ கொண்டு வீழ யானோ பரதனும் வெய்ய கூற்றை
கூய்க்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல்
போய் கண்டு கோடி அன்றே என்றனன் புழுங்குகின்றான்

#83
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல்
கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின்
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென்

#84
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து என் தோள்-மேல்
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய்
பொழுது இறை தாழ்ப்பது என்னோ புட்பகம் போதல் முன்னம்
குழுவொடும் கொண்டு தோள்-மேல் கணத்தினின் குதிப்பென் கூற்றின்

#85
கொல்ல வந்தானை நீதி கூறினென் விலக்கி கொள்வான்
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை
வெல்லவும் தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான்
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன்

#86
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென்
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும்
புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம்

#87
ஏறுதும் என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி ஈண்டு
கூறுவது உளது துன்பம் கோளுற குலுங்கி உள்ளம்
தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன்
ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால்

#88
பத்தினி-தன்னை தீண்டி பாதகன் படுத்த-போது
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை
சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின்

#89
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர்
சமைவது செய்வது என்று வீடணன் விளம்ப தக்கது
அமைக என்று இராமன் சொன்னான் அந்தரத்து அவனும் சென்றான்

#90
வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான்
தண்டலை இருக்கை-தன்னை பொருக்கென சார்ந்து தானே
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை

#91
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை
பேர்ப்பன செம் சொலாள் அ திரிசடை பேச பேர்ந்தாள்
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை

#92
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும்
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான்
வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான்

#93
வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும்
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான்
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று என துணிவு கொண்டான்
தாழ்வித்த முடியன் வீரன் தாமரை சரணம் தாழ்ந்தான்

#94
இருந்தனள் தேவி யானே எதிர்ந்தனன் கண்களால் நம்
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான்
முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான்

#95
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம்

27 நிகும்பலை யாக படலம்


#1
வீரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன்-தன்னை மெய்யோடு
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால்

#2
என்றலும் இறைஞ்சி யாகம் முடியுமேல் யாரும் வெல்லார்
வென்றியும் அரக்கர் மேற்றே விடை அருள் இளவலோடும்
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான்
நன்று அது புரிதிர் என்று நாயகன் நவில்வதானான்

#3
தம்பியை தழுவி ஐயன் தாமரை தவிசின் மேலான்
வெம் படை தொடுக்கும் ஆயின் விலக்குமது அன்றி வீர
அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த-காலை
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான்

#4
முக்கணான் படையும் ஆழி முதலவன் படையும் முன் நின்று
ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஓய
தக்கவாறு இயற்றி மற்று உன் சிலை வலி தருக்கினாலே
புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய்

#5
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய்

#6
பதைத்து அவன் வெம்மை ஓடி பல் பெரும் பகழி மாரி
விதைப்பன விதையா நின்று விலக்கினை மெலிவு மிக்கால்
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தை கருதி ஓட்டி
வதை தொழில் புரிதி சாப நூல் நெறி மறப்பிலாதாய்

#7
தொடுப்பதன்-முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள்-தோறும்
தடுப்பன தடுத்தி எண்ணம் குறிப்பினால் உணர்ந்து தக்க
கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின்
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரகின் மிக்காய்

#8
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி ஏற்ற
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய்
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும்
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய்

#9
இ சிலை இயற்கை மேல்_நாள் தமிழ் முனி இயம்பிற்று எல்லாம்
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல்
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற
கை சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும்

#10
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த
தூணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி
தாணுவின் தோற்றத்தானை தழுவினன் தழுவலோடும்
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார்

#11
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான்

#12
மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும்
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன்

#13
பொலம் கொண்டல் அனைய மேனி புரவலன் பொருமி கண்ணீர்
நிலம் கொண்டு படர நின்று நெஞ்சு அழிவானை தம்பி
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே

#14
தான் பிரிகின்றிலாத தம்பி வெம் கடுப்பின் செல்லா
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும்
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான்

#15
சேனாபதியே முதல் சேவகர்தாம்
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்
கான் ஆர் நெறியும் மலையும் கழிய
போனார்கள் நிகும்பலை புக்கனரால்

#16
உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன்
கொண்டான் உறைகின்றது-போல் குலவி
விண்-தானும் விழுங்க விரிந்தனை
கண்டார் அ அரக்கர் கரும் கடலை

#17
நேமி பெயர் யூகம் நிரைத்து நெடும்
சேமத்தது நின்றது தீவினையோன்
ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாம கடல் நின்றது ஓர் பான்மையதை

#18
கார் ஆயின வெம் கரி தேர் கலி மா
தார் ஆயிர கோடி தழீஇயது தான்
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல்
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை

#19
பொன் தேர் பரிமா கரிமா பொரு தார்
எற்றே படை வீரரை எண்ணிலமால்
உற்று ஏவிய யூகம் உலோகமுடை
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை

#20
வண்ண கரு மேனியின்-மேல் மழை வாழ்
விண்ணை தொடு செம் மயிர் வீசுதலால்
அண்ணல் கரியான் அனல்_அம்பு அட வெம்
பண்ணை கடல் போல்வது ஓர் பான்மையதை

#21
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும்
பழம் கார்முகம் ஒத்த பணை குலமும்
தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால்
முழங்கா முகில் ஒத்தன மும் முரசே

#22
வலியான இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடும் கடல் தான் எனலாய்
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள்
மெலியாதவர் ஆர்த்தனர் விண் கிழிய

#23
ஆர்த்தார் எதிர் ஆர்த்த அரக்கர்_குலம்
போர் தார் முரசங்கள் புடைத்த புக
தூர்த்தார் இவர் கல் படை சூல் முகிலின்
நீர் தாரையின் அம்பு அவர் நீட்டினரால்

#24
மின்னும் படை வீசலின் வெம் பகை-மேல்
பன்னும் கவி சேனை படிந்துளதால்
துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து
அன்னங்கள் படிந்தனவாம் எனலாய்

#25
வில்லும் மழுவும் எழுவும் மிடலோர்
பல்லும் தலையும் உடலும் படியில்
செல்லும் பொறி சிந்தின சென்றனவால்
கல்லும் மரமும் கரமும் கதுவ

#26
வாலும் தலையும் வயிறும் உடலும்
காலும் கரமும் தரை கண்டனவால்
கோலும் மழுவும் எழுவும் கொழுவும்
வேலும் கணையும் வளையும் விசிற

#27
வென்றி சிலை வீரனை வீடணன் நீ
நின்று இ கடை தாழுதல் நீதியதோ
சென்று இ கடி வேள்வி சிதைத்திலையேல்
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும்

#28
தேவாசுரரும் திசை நான்முகனும்
மூவா முதல் ஈசனும் மூ_உலகின்
கோ ஆகிய கொற்றவனும் முதலோர்
மேவாதவர் இல்லை விசும்பு உறைவோர்

#29
பல்லார் படை நின்றது பல் அணியால்
பல் ஆர் படை நின்றது பல் பிறை வெண்
பல்லார் படை நின்றது பல்_இயம் உம்பல்
ஆர் படை நின்றது பல் படையே

#30
அ காலை இலக்குவன் அ படையுள்
புக்கான் அயில் அம்பு பொழிந்தனனால்
உக்கார் அ அரக்கரும் ஊர் ஒழிய
புக்கார் நமனார் உறை தென் புலமே

#31
தேறா மத மால் கரி தேர் பரிமா
நூறு_ஆயிர கோடியின் நூழில்பட
சேறு ஆர் குருதி கடலில் திடராய்
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால்

#32
வாம கரி தான் அழி வார் குழி வன்
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின்
தாம தலை உக்க தழங்கு எரியின்
ஓமத்தை நிகர்த்த உலப்பு இலவால்

#33
சிலையின் கணையூடு திறந்தன திண்
கொலை வெம் களி மால் கரி செம்_புனல் கொண்டு
உலைவு இன்று கிடந்தன ஒத்துளவால்
மலையும் சுனையும் வயிறும் உடலும்

#34
வில் தொத்திய வெம் கணை எண்கின் வியன்
பல் தொத்திய-போல் படிய பலவும்
முற்ற சுடர் மின்மினி மொய்த்துள வன்
புற்று ஒத்த முடி தலை பூழியன

#35
படு மாரி நெடும் கணை பாய்தலினால்
விடும் ஆறு உதிர புனல் வீழ்வன வன்
தடுமாறு நெடும் கொடி தாழ் கடல்-வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால்

#36
மின் ஆர் கணை தாள் அற வீச விழுந்து
அன்னார் உதிரத்துள் அழுந்துதலால்
ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால்
செம் நாகம் விழுங்கிய திங்களினை

#37
கொடு நீள் கரி கையொடு தாள் குறைய
படு நீள் குருதி படர்கின்றனவால்
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால்
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால்

#38
கரி உண்ட களத்திடை உற்றன கார்
நரி உண்டி உகப்பன நண்ணினவால்
இரியுண்டவர் இன்_இயம் இட்டிடலால்
மரியுண்ட உடல் பொறை மானினவால்

#39
வாயில் கனல் வெம் கடு வாளி_இனம்
பாய பரும குலம் வேவனவால்
வேய் உற்ற நெடும் கிரி மீ வெயில் ஆம்
தீ உற்றன ஒத்த சின கரியே

#40
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர்
தலை-மேல் முடியை தரை தள்ளுதலால்
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால்
நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால்

#41
மா வாளிகள் மா மழை போல் வரலால்
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர்
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம்
மா ஆளிகளோடு மறிந்தனரால்

#42
அங்கம் கிழிய துணி பட்டதனால்
அங்கு அங்கு இழிகுற்ற அமர் தலைவர்
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து
அம் கங்கள் நிரம்பி அலம்பியதால்

#43
வன் தானையை வார் கணை மாரியினால்
முன் தாதை ஓர் தேர்-கொடு மொய் பல தேர்
பின்றா எதிர் தானவர் பேர் அணியை
கொன்றான் என எய்து குறைத்தனனால்

#44
மலைகளும் மழைகளும் வான மீன்களும்
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என
உலைய வெம் கனல் பொதி ஓமம் உற்றவால்
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ

#45
வாரணம் அனையவன் துணிப்ப வான் படர்
தார் அணி முடி பெரும் தலைகள் தாக்கலால்
ஆரண மந்திரம் அமைய ஓதிய
பூரண மணி குடம் உடைந்துபோயதால்

#46
தாறு கொள் மதகரி சுமந்து தாமரை
சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால்

#47
தெரி கணை விசும்பிடை துணிப்ப செம் மயிர்
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும்
உரும் என வீழ்தலும் அனலுக்கு ஓக்கிய
எருமைகள் மறிந்தன மறியும் ஈர்ந்தவால்

#48
அம் கடம் கழிந்த பேர் அருவி குன்றின்-நின்று
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர்
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின்
அங்கு அடங்கினர் தொடர் பகழி அஞ்சினார்

#49
கால் தலத்தொடு துணிந்து அழிய காய் கதிர்
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார்
வேல் தலத்து ஊன்றினர் துளங்கும் மெய்யினர்
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார்

#50
பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர் போக்கிலார்
தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார்
தம் குடர் முதுகிடை சொரிய தள்ளுவார்

#51
மூடிய நெய்யொடு நறவம் முற்றிய
சாடிகள் பொரியொடு தகர்ந்து தள்ளுற
கோடிகள் பல படும் குழாம் குழாங்களாய்
ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே

#52
கால் என கடு என கலிங்க கம்மியர்
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என
பால் உறு பிரை என கலந்து பல் முறை
வேல் உறு சேனையை துணித்து வீழ்த்தினான்

#53
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல்
மண் தலம் மறி கடல் அன்ன மா படை
விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும்
தண்டலை ஆம் என கிடந்த தன்மையை

#54
மிடலின் வெம் கட கரி பிணத்தின் விண் தொடும்
திடலும் வெம் புரவியும் தேரும் சிந்திய
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன்

#55
நூறு நூறு_ஆயிர கோடி நோன் கழல்
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின்
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன்

#56
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து
அஞ்சினர் சிலர் சிலர் அடைகின்றார் சிலர்
வெம் சின வீரர்கள் மீண்டிலாதவர்
துஞ்சினர் துணை இலர் என துளங்கினார்

#57
ஓம வெம் கனல் அவிந்து உழை கலப்பையும்
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன்
தூம வெம் கனல் என பொலிந்து தோன்றினான்

#58
அ கணத்து அடு களத்து அப்பு மாரியால்
உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம்
தொக்கனர் அரக்கனை சூழ்ந்து சுற்றுற
புக்கது கவி பெரும் சேனை போர் கடல்

#59
ஆயிரம் மலருடை ஆழி மா படை
ஏ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும்
தூயவன் சிலை வலி தொழிலும் துன்பமும்
மேயின வெகுளியும் கிளர வெம்பினான்

#60
மெய் குலைந்து இரு நில மடந்தை விம்முற
செய் கொலை தொழிலையும் சென்ற தீயவர்
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டவர்
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான்

#61
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின்
மோனமும் பாழ்பட முடிவு இலா முரண்
சேனையும் பாழ்பட சிறந்த மந்திரத்து
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான்

#62
வெள்ளம் ஐ_ஐந்துடன் விரிந்த சேனையின்
உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால்
எள்ள அரு வேள்வி நின்று இனிது இயற்றுதல்
பிள்ளைமை அனையது சிதைந்து பேர்ந்ததால்

#63
தொடங்கிய வேள்வியின் தூம வெம் கனல்
அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே
இடம் கொடு வெம் செரு வென்றி இன்று எனக்கு
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால்

#64
அங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலென்
சிங்கினென் என்பது ஓர் எளிமை தேய்வுற
இங்கு நின்று இவை இவை நினைவது என் இனி
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ

#65
மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல்
அந்தரத்து அமரரும் மனிதர்க்கு ஆற்றலன்
இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ

#66
என்று அவன் பகர்கின்ற எல்லை வல் விசை
குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும்
பொன்றின கரிகளும் கவிகள் போக்கின
சென்றன பெரும் படை இரிந்து சிந்தின

#67
ஒதுங்கினர் ஒருவர் கீழ் ஒருவர் புக்குற
பதுங்கினர் நடுங்கினர் பகழி பாய்தலின்
பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர்
மதம் புலர் களிறு என சீற்றம் மாறினர்

#68
வீரன் வெம் கணையொடும் கவிகள் வீசிய
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன
போர் நெடும் கால் பொர பொழியும் மா மழை
தாரையும் மேகமும் படிந்த தன்மைய

#69
திரை கடல் பெரும் படை இரிந்து சிந்திட
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன்
வர கதம் சிறப்பன மாற்றம் கூறுவான்

#70
தடம் திரை பரவை அன்ன சக்கர யூகம் புக்கு
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே
தொடர்ந்து போய் அயோத்தி-தன்னை கிளையொடும் துணிய நூறி
நடந்தது எப்பொழுது வேள்வி முடிந்ததே கருமம் நன்றே

#71
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும்
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே

#72
அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ

#73
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும்
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும்
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே

#74
பாசமோ மலரின் மேலான் பெரும் படைக்கலமோ பண்டை
ஈசனார் படையோ மாயோன் நேமியோ யாதோ இன்னம்
வீச நீர் விரும்புகின்றீர் அதற்கு நாம் வெருவி சால
கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார்

#75
வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும்
பரம் கொள் வானவரின் தெய்வ படைக்கலம் படைத்தவாறும்
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும்
சிரங்களை துணித்தும் என்ன கண்டது திறம்பினோமோ

#76
விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும் விரிஞ்சன் தானும்
படம் துடிக்கின்ற நாக பாற்கடல் பள்ளியானும்
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும் சாதல் திண்ணம்
இடம் துடிக்கின்றது உண்டே இருந்திரோ இயம்புவீரே

#77
கொல்வென் என்று உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின்
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ

#78
மூ-வகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல்
தேவர்கள் முனிவர் மற்றும் திற திறத்து உலகம் சேர்ந்தார்
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான்

#79
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள்
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க
முன்னரே வந்து இ மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான்

#80
மூண்ட போர்-தோறும் பட்டு முடிந்த நீர் முறையின் தீர்ந்து
மீண்ட போது அதனை எல்லாம் மறத்திரோ விளிதல் வேண்டி
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம்
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான

#81
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக குரங்கு வெள்ளம்
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும்
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே

#82
யானுடை வில்லும் என் பொன் தோள்களும் இருக்க இன்னும்
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல்
கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ
வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர்

#83
வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர் கிளத்தல் வேண்டா
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற
சூழ்க்கின்ற வீரம் என் கை சரங்களாய் தோன்றும் அன்றே

#84
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன்
வெற்றிதான் இரண்டும் தந்தீர் விரைவது வெல்லற்கு ஒல்லா
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க
கற்றிரோ இன்னம் மாண்டு கிடத்திரோ நடத்திரோதான்

#85
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட
மின்மின்-கொள் கவசம் இட்டான் வீக்கினான் தூணி வீர
பொன் மின்-கொள் கோதை கையில் பூட்டினான் பொறுத்தான் போர் வில்
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி

#86
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண்
மோதினார் கணத்தின் முன்னே முழுவதும் முருக்கி முற்ற
காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும்
போதினான் தானும் இன்று புகுந்தது பெரும் போர் என்றார்

#87
இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே
பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும்
உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார்

#88
நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும்
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும்
மீண்டன மறிந்து சோர விழுந்தன விழுந்த மெய்யே
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை

#89
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும்
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி
புடைத்து இரிந்து ஓடும் வேலை புனல் என இரியலுற்றார்
கிடைத்த பேர் அனுமன் ஆண்டு ஓர் நெடும் கிரி கிழித்து கொண்டான்

#90
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி
கல் எடாநின்றது என்னே போர்க்களத்து அமரர் காண
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான்

#91
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா
சொல் எடுத்து அமரர் சொன்னார் தாதையும் துணுக்கமுற்றான்

#92
வீசினன் வயிர குன்றம் வெம் பொறி குலங்கள் விண்ணின்
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம்

#93
குண்டலம் நெடு வில் வீச மேருவின் குவிந்த தோளான்
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச
விண் தலத்து எறிந்த குன்றம் வெறும் துகள் ஆகி வீழ
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார்

#94
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில்
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில்
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த

#95
வெதிர் ஒத்த சிகர குன்றின் மருங்கு உற விளங்கலாலும்
எதிர் ஒத்த இருளை சீறி எழுகின்ற இயற்கையாலும்
கதிர் ஒத்த பகழி கற்றை கதிர் ஒளி காட்டலாலும்
உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான்

#96
ஆயவன் அயர்தலோடும் அங்கதன் முதல்வர் ஆனோர்
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில்
போயவன் எங்கே நின்றான் என்றனன் பொருள் செயாதான்

#97
வெம்பினர் பின்னும் மேன்மேல் சேறலும் வெகுண்டு சீயம்
தும்பியை தொடர்வது அல்லால் குரங்கினை சுளிவது உண்டோ
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான்
தம்பியை காட்டி தாரீர் சாதிரோ சலத்தின் என்றான்

#98
அனுமனை கண்டிலீரோ அவனிலும் வலியரோ என்
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர்
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே

#99
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி
குன்றமும் மரமும் வீசி குறுகினார் குழாங்கள்-தோறும்
சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார்

#100
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி
விடுகின்றது அன்றோ வென்றி அரக்கனாம் காள மேகம்
இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே
முடுகு என்றான் அரக்கன் தம்பி நம்பியும் சென்று மூண்டான்

#101
வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான்
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான்
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர்
சிந்தாகுலம் துறந்தார் அவன் நெடும் சாரிகை திரிந்தான்

#102
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன்
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்-மிசை உயர்ந்தான்
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும்
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான்

#103
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும்
பேய் ஒப்பன பசி ஒப்பன பிணி ஒப்பன பிழையா
மாய கொடு வினை ஒப்பன மனம் ஒப்பன கழுகின்
தாய் ஒப்பன சில வாளிகள் துரந்தான் துயில் துறந்தான்

#104
அ அம்பினை அ அம்பினின் அறுத்தான் இகல் அரக்கன்
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான்
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும்
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான

#105
ஆயோன் நெடும் குருவி குலம் என்னும் சில அம்பால்
போய் ஓடிட துரந்தான் அவை பொறியோ என மறிய
தூயோனும் அத்துணை வாளிகள் தொடுத்தான் அவை தடுத்தான்
தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான்

#106
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும்
புல்லும் சிறு கொடியும் இடை தெரியா-வகை புரிய
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன்
சில்லின் முதிர் தேரும் சின வய மாருதி தாளும்

#107
இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்ன
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார்
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார்
பொரு வீரையும் பொரு வீரையும் பொருதாலென பொருதார்

#108
விண் செல்கில செல்கின்றன விசிகம் என இமையோர்
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர்
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல்
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா

#109
எரிந்து ஏறின திசை யாவையும் இடி ஆம் என பொடியாய்
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின்
சொரிந்து ஏறின சுடு வெம் கணை தொடும் தாரகை முழுதும்
கரிந்து ஏறின உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ

#110
வெடிக்கின்றன திசை யாவையும் விழுகின்றன இடி வந்து
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா
கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல்
பொடிக்கின்றன பொறி வெம் கனல் இவை கண்டனர் புலவோர்

#111
கடல் வற்றின மலை உக்கன பருதி கனல் கதுவுற்று
உடல் பற்றின மரம் உற்றன கனல் பட்டன உதிரம்
சுடர் வற்றின சுறு மிக்கது துணிபட்டு உதிர் கணையின்
திடர் பட்டது பரவை குழி திரிவுற்றது புவனம்

#112
எரிகின்றன அயில் வெம் கணை இரு சேனையும் இரிய
திரிகின்றன புடை நின்றில திசை சென்றன சிதறி
கரி பொன்றின பரி மங்கின கவி சிந்தின கடல்-போல்
சொரிகின்றன பொரு செம்_புனல் தொலைகின்றன கொலையால்

#113
புரிந்து ஓடின பொரிந்து ஓடின புகைந்து ஓடின புகை போய்
எரிந்து ஓடின கரிந்து ஓடின இடம் ஓடின வலமே
திரிந்து ஓடின பிரிந்து ஓடின செறிந்து ஓடின திசை-மேல்
சரிந்து ஓடின கரும் கோள் அரிக்கு இளையான் விடு சரமே

#114
நீர் ஒத்தன நெருப்பு ஒத்தன பொருப்பு ஒத்தன நிமிரும்
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன்
தேர் ஒத்தன விடை மேலவன் சிரிப்பு ஒத்தன உலகின்
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம்

#115
ஏம தடம் கவசத்து இகல் அகலத்தன இருவோர்
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர
தாமத்தன மார்பத்தன சரணத்தன தம்தம்
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள்

#116
எ நாளினின் எ தேவர்கள் எ தானவர் எவரே
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார்
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார்

#117
வேகின்றன உலகு இங்கு இவர் விடுகின்றன விசிகம்
போகின்றன சுடர் வெந்தன இமையோர்களும் புலர்ந்தார்
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார்
நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய

#118
மீன் உக்கது நெடு வானகம் வெயில் உக்கது சுடரும்
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம்
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால்
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும்

#119
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான்
கை கார்முகம் வளைய சில கனல் வெம் கணை கவசம்
புக்கு ஆகமும் கழன்று ஓடிட இளம் கோளரி பொழிந்தான்

#120
தெரிந்தான் சில சுடர் வெம் கணை தேவேந்திரன் சின மா
இரிந்து ஓடிட துரந்து ஓடின இமையோரையும் முன்_நாள்
அரிந்து ஓடின எரிந்து ஓடின அவை கோத்து அடல் அரக்கன்
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற

#121
குருதி புனல் சொரிய குணம் குணிப்பு இல்லவன் குண-பால்
பருதிப்படி பொலிவுற்றதை இளம் கோளரி பார்த்தான்
ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான்
பொருது இ கணம் வென்றான் என சர மாரிகள் பொழிந்தான்

#122
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார்
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார்
தத்தா ஒரு தடம் தேரினை தொடர்ந்தான் சரம் தலை-மேல்
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான்

#123
பதைத்தான் உடல் நிலைத்தான் சில பகு வாய் அயில் பகழி
விதைத்தான் அவன் விலக்காத-முன் விடை-மேல் வரு விமலன்
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான்

#124
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அ கணை கழிய
அவச தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார்
திவசத்து எழு கதிரோன் என தெரிகின்றது ஓர் கணையால்
துவசத்தையும் துணித்தே அவன் மணி தோளையும் துளைத்தான்

#125
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் உடல் தரித்தான்
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல்
விள்ளா நெடும் கவசத்திடை நுழையாது உக வெகுண்டான்

#126
மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா
குறித்து ஆயிரம் பரி தேரவன் விடுத்தான் அவை குறி பார்த்து
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன்
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான்

#127
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல்
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா
செல்லும் கொடும் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான்
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான்

#128
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா
முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான்
எ தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் வென்றாய்
பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான்

#129
கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன்
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான்

#130
அனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு தடுத்தான்
புனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு பொறுத்தான்
கன வெம் கதிரவன் வெம் படை துரந்தான் மனம் கரியான்
சின வெம் திறல் இளம் கோளரி அதுவே கொடு தீர்த்தான்

#131
இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான்
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா தொடுத்து அமைந்தான்
செதுகா படை தொடுப்பேன் என நினைந்தான் திசைமுகத்தோன்
முது மா படை துரந்தான் இனி முடிந்தாய் என மொழிந்தான்

#132
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன்
தானும் முனிவரரும் பிற தவத்தோர்களும் அறத்தோர்
கோனும் பிற பிற தேவர்கள் குழுவும் மனம் குலைந்தார்
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார்

#133
ஊழிக்கடை இறும் அத்தலை உலகு யாவையும் உண்ணும்
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான்
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான்

#134
மாட்டான் இவன் மலரோன் படை முதல் போது தன்வலத்தால்
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான்
காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் என சமைந்தான்

#135
நன்று ஆகுக உலகுக்கு என முதலோன் மொழி நவின்றான்
பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான்
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான்
நின்றான் அது துரந்தான் அவன் நலம் வானவர் நினைந்தார்

#136
தான் விட்டது மலரோன் படை-எனின் மற்று இடைதருமே
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான்
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார்

#137
உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால்
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும்
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி

#138
படை அங்கு அது படரா-வகை பகலோன் குல மருமான்
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான்
தொடை ஒன்றினை கணை மீமிசை துறுவாய் இனி என்றான்
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம்

#139
விண்ணோர் அது கண்டார் வய வீரர்க்கு இனி மேன்மேல்
ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார்
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து
எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான்

#140
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம்
வேராய் முழு முதல் காரண பொருளாய் வினை கடந்தோர்
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர்

#141
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா
புறத்தார் புகுந்து அகத்தார் என புகுந்து அன்னது புரப்பார்
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார்
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார்

#142
உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும்
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும்
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன்
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால்

#143
நெடும் பாற்கடல் கிடந்தாரும் பண்டு இவர் நீர் குறை நேர
விடும் பாக்கியம் உடையார்களை குலத்தோடு அற வீட்டி
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம்
அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான்

#144
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம்
பிறிந்தோம் இனி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தோம்
எறிந்தோம் பகை முழுதும் இனி தீர்ந்தோம் இடர் கடந்தோம்
செறிந்தோர் வினை பகைவா என தொழுதார் நெடும் தேவர்

#145
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன்
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார்
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா
தூயோன்-மிசை உலகு யாவையும் தடுமாறிட துரந்தான்

#146
சேமித்தனர் இமையோர் தமை சிரத்து ஏந்திய கரத்தால்
ஆம் இ தொழில் பிறர் யாவரும் அடைந்தார் பழுது அடையா
காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான்
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான்

#147
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான்
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான்
மீ சென்றிலது அயல் சென்று அது விலங்கா வலம் கொடு மேல்
போய்த்து அங்கு அது கனல் மாண்டது புகை வீய்ந்தது பொதுவே

#148
ஏத்து ஆடினர் இமையோர்களும் கவியின் குலம் எல்லாம்
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர்
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம்
பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய்-கொடு புகழ்ந்தார்

#149
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான்
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான்

#150
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே
தீர்ப்பான் படை தொடுப்பேன் என தெரிந்தான் அது தெரியா
மீ பாவிய இமையோர்_குலம் வெருவுற்றது இப்பொழுதே
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா

#151
தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே
தானே பிறர் அறியாதது தந்தேன் என சமைந்தான்
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான்

#152
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான்
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான்
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான்

#153
சூலங்கள் மழுவும் சுடு சுணையும் கனல் சுடரும்
ஆலங்களும் அரவங்களும் அசனி குலம் எவையும்
காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய்
சாலங்களும் நிமிர்கின்றன உலகு எங்கணும் தான் ஆய்

#154
ஊழி கனல் ஒரு-பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும்
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும்
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு
ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய

#155
இரிந்தார் குல நெடும் தேவர்கள் இருடி குலத்து எவரும்
பரிந்தார் இது பழுது ஆகிலது இறுவான் எனும் பயத்தால்
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய

#156
பார்த்தான் நெடும் தகை வீடணன் உயிர் காலுற பயத்தால்
வேர்த்தான் இது விலக்கும் தரம் உளதோ முதல் வீரா
தீர்த்தா என அழைத்தான் அதற்கு இளம் கோளரி சிரித்தான்
போர்த்தார் அடர் கவி வீரரும் அவன் தாள் நிழல் புகுந்தார்

#157
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல்
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான்
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன்
சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான்

#158
அ பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து அதை அழிப்பாய்
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா
எ பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது ஒர் இமைப்பின்

#159
விண் ஆர்த்தது மண் ஆர்த்தது மேலோர் மணி முரசின்
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர்
எண் ஆர்த்தது மறை ஆர்த்தது விசயம் என இயம்பும்
பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால்

#160
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை
மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான்
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான்
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார்

#161
தெய்வ படை பழுது உற்றது என கூசுதல் சிதைவால்
எய் வித்தகம் உளது அன்னது பிழையாது என இசையா
கை வித்தகம் அதனால் சில கணை வித்தினன் அவையும்
மொய் வித்தகன் தடம் தோளினும் நுதல் சூட்டினும் மூழ்க

#162
வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர் மிகு திறலோர்
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார்
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான்
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான்

#163
முரண் தடம் தண்டும் ஏந்தி மனிதரை முறையை குன்றி
பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று
இரட்டுறும் முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்றாயை
புரட்டுவென் தலையை இன்று பழியொடும் ஒழிவென் போலாம்

#164
விழி பட முதல்வர் எல்லாம் வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து
வழி பட உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும்
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார்

#165
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம்
வேர் உளதனையும் வீரர் இராவணனோடு மீளார்
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா

#166
முந்தை_நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தையாரை செருவிடை சாய தள்ளி
கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கை கொண்ட
எந்தையார் அரசு செய்வது இ பெரும் பலம் கொண்டேயோ

#167
பனி மலர் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம்
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார்
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய்
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே

#168
சொல்வித்தும் பழித்தும் நுங்கை மூக்கினை துணிந்தோராலே
எல் வித்தும் படை கை உங்கள் தமையனை எங்களோடும்
கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ

#169
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் இராமன் அம்பால்
புழுதியே பாயல் ஆக புரண்ட நாள் புரண்டு மேல் வீழ்ந்து
அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி
தொழுதியோ யாதோ செய்ய துணிந்தனை விசய தோளாய்

#170
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும்
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான்
தானுடை செல்வம் துய்க்க தகுதியே சரத்தினோடும்
வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான்

#171
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி
செவ்விதின் துளக்கி மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான்

#172
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும்
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன்
துறந்திலேன் மெய்ம்மை பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால்
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே

#173
உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும்
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம்
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே
பெண்டிரின் திறம்பினாரை துறந்தது பிழையிற்று ஆமே

#174
மூ-வகை உலகும் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த
தேவர்-தம் தேவன் தேவி கற்பினில் சிறந்துளாளை
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி
போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ

#175
வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும்
உம்மையே புகழும் பூண துறக்கமும் உமக்கே ஆக
செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தை தேறும்
எம்மையே பழியும் பூண நரகமும் எமக்கே ஆக

#176
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன்
புறத்தினில் புகழே ஆக பழியோடும் புணர்க போக
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான்

#177
பெறும் சிறப்பு எல்லாம் என் கை பிறை முக பகழி பெற்றால்
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன்
உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின் வெய்யோன்

#178
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான்

#179
கோல் ஒன்று துணிதலோடும் கூற்றுக்கும் கூற்றம் அன்னான்
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும்
நூல் ஒன்று வரி விலானும் அதனையும் நுறுக்கி வீழ்த்தான்

#180
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க
கால்-கொடு காலின் கூடி கை தொடர் கனக தண்டால்
கோல் கொளும் ஒருவனோடும் கொடி தடம் தேரில் பூண்ட
பால் கொளும் புரவி எல்லாம் படுத்தினான் படியின் மேலே

#181
அழிந்த தேர்-மீது நின்றான் ஆயிர கோடி அம்பு
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும்
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான்

#182
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி
போர் தொழில் புரியலாகாது என்பது ஓர் பொருளை உன்னி
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும்
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான்

28 இந்திரசித்து வதை படலம்


#1
விண்ணிடை கரந்தான் என்பார் வஞ்சனை விளைக்கும் என்பார்
கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான்

#2
தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை
நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண
படம் குறை அரவம் ஒத்தாய் உற்றது பகர்தி என்றான்

#3
சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க சுற்றி
வேள்வியை சிதைய நூறி வெகுளியால் எழுந்து வீங்கி
ஆள்வினை ஆற்றல்-தன்னால் அமர் தொழில் தொடங்கி ஆர்க்கும்
தாழ்வு இலா படைகள் மூன்றும் தொடுத்தனென் தடுத்துவிட்டான்

#4
நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால் படை நின்றானை
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடி கொண்டாய்
சலம் செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே

#5
முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்-மேல்
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன்
கிட்டிய போதும் காத்தான் இன்னமும் கிளர வல்லான்
சுட்டிய வலியினாலே கோறலை துணிந்து நின்றான்

#6
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான்

#7
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே

#8
முன்னையோர் இறந்தோர் எல்லாம் இ பகை முடிப்பர் என்றும்
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும்
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால்
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன்

#9
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா
காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால்

#10
வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின்
பொன்றுதல் ஒரு காலத்து தவிருமோ பொதுமைத்து அன்றோ
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ

#11
விட்டனென் சீதை-தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ
பட்டனென் என்ற போதும் எளிமையின் படுகிலேன் யான்
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன்

#12
சொல்லி என் பலவும் நீ நின் இருக்கையை தொடர்ந்து தோளில்
புல்லிய பகழி வாங்கி போர் தொழில் சிரமம் போக்கி
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய்
வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான்

#13
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய்
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய்
கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி என்னா
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான்

#14
படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன்-பால்
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான்

#15
இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி
விலங்கல் அம் தோளாய் நின்னை பிரிகலம் விளிதும் என்று
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும்
கலங்கலிர் இன்றே சென்று மனிதரை கடப்பென் என்றான்

#16
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய்
உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும்
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான்

#17
ஏயினன் இன்னன் ஆக இலக்குவன் எடுத்த வில்லான்
சேய் இரு விசும்பை நோக்கி வீடண தீயோன் அப்பால்
போயினன் ஆதல் வேண்டும் புரிந்திலன் ஒன்றும் என்பான்
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான்

#18
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும்
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின்
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம்

#19
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும்
குடர் மறுகிட மலை குலைய நிலம் குழியொடு கிழிபட வழி படரும்
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின்
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம்

#20
ஆர்த்தது நிருதர்-தம் அனிகம் உடன் அமரரும் வெருவினர் கவி_குலமும்
வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடு கணை சிதறினன் அடு தொழிலோன்
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண்
போர் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால்

#21
வீடணன் அமலனை விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல்
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில்
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால்

#22
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர்
போயின போயின திசை நிறைய புரள்பவர் முடிவு இலர் பொரு திறலோர்
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல்

#23
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின்
கொற்றவன் விடு கணை முடுகி அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு
உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல்
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால்

#24
ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட
தூயினன் அயில் முக விசிகம் நெடும் துளைபட விழி கனல் சொரிய முனிந்து
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து
ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால்

#25
வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில்
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால்
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம்
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால்

#26
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம்
சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின்
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட முறை முறை சிதறினனால்

#27
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான்
போர் உறு புரவிகள் படுகிலவால் புனை பிணி துணிகில பொரு கணையால்
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால்
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய

#28
உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலா
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது அ பொலம் பொன் திண் தேர்

#29
துள்ளு பாய் புரவி தேரும் முறை முறை தானே தூண்டி
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல்
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க

#30
வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன்
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ

#31
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும்
கை தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா யாக்கை
மொய் கணை கோடி_கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான்
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான்

#32
தேரினை கடாவி வானில் செல்லினும் செல்லும் செய்யும்
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி
வீர மெய் பகலின் அல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன்

#33
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான்
வென்றி இப்போதே கோடும் காண் என விளம்பும் எல்லை

#34
செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும்
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்
வெம்பு பொன் தேரில் தோன்றும் விசையினும் அரக்கன் மெய்யோடு
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால்

#35
விடிந்தது பொழுதும் வெய்யோன் விளங்கினன் உலகம் மீதாய்
இடும் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய
கொடும் சின மாய செய்கை வலியொடும் குறைந்து குன்ற
முடிந்தனன் அரக்கன் என்னா முழங்கினர் உம்பர் முற்றும்

#36
ஆர் அழியாத குலத்து அந்தணன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும் சிலை கரத்து இருந்த போதும்
போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள்
வீர இது ஆணை என்றான் வீடணன் விளைவது ஓர்வான்

#37
பச்சை வெம் புரவி வீயா பல்லிய சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின்
விச்சையின் கணவன் ஆனான் வின்மையால் வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி

#38
மணி நெடும் தேரின் கட்டு விட்டு அது மறிதலோடும்
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி
பணை நெடு முதலும் நீங்க பாங்கு உறை பறவை போல

#39
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி
பொழிந்தனன் இளைய வீரன் கணைகளால் துணித்து போக்க
மொழிந்து இறா-வகையில் விண்ணை முட்டினான் உலகம் மூன்றும்
கிழிந்தன என்ன ஆர்த்தான் கண்டிலர் ஓசை கேட்டார்

#40
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த
புல்லினார் நிலத்தை நின்ற வானர வீரர் போகார்

#41
காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன்
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால் திசைகள் எங்கும்
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான் இடைவிடாமல்

#42
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல்
குறைந்தனன் இருண்ட மேக குழாத்திடை குருதி கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான்

#43
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம்
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான்
விலை அறா மணி பூணோடும் வில்லொடும் நிலத்து வீழ

#44
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும்
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில்
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன

#45
படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையை பற்றி
கடித்தது போல கோல விரல்களால் இறுக கட்டி
பிடித்த வெம் சிலையினோடும் பேர் எழில் வீரன் பொன் தோள்
துடித்தது மரமும் கல்லும் துகள் பட குரங்கும் துஞ்ச

#46
அந்தரம் அதனில் நின்ற வானவர் அருக்கன் வீழா
சந்திரன் வீழா மேரு மால் வரை தகர்ந்து வீழா
இந்திரசித்தின் பொன் தோள் இற்று இடைவிழுந்தது என்றால்
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார்

#47
மொய் அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால் அ
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார்

#48
அன்னது நிகழும் வேலை ஆர்த்து எழுந்து அரியின் வெள்ளம்
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம்
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால்
பொன் நெடு நாட்டை எல்லாம் புது குடி ஏற்றிற்று அன்றே

#49
காலம் கொண்டு எழுந்த மேக கருமையான் செம்மை காட்டும்
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான்

#50
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான்
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம்
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான்

#51
மறைகளே தேற தக்க வேதியர் வணங்கல்-பால
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின்
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான்

#52
நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்பு கண்ணான்
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி
பூ மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள்

#53
அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம்
பற்றிய குலத்தோடும் உடல் நிறை பகழியோடும்
எற்றிய கால காற்றால் மின்னொடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்து-என்ன வீழ்ந்தது சோரன் யாக்கை

#54
விண் தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் மின்னு வீசும்
குண்டல துணைகளோடும் கொந்தள குஞ்சி செம் கேழ்
சண்ட வெம் கதிரின் கற்றை தழையொடும் இரவிதான் அம்
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல்

#55
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும்
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமா-போல்
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற
எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் படையும் விட்டார்

#56
வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும்
செல்லாது அ இலங்கை வேந்தற்கு அரசு என களித்த தேவர்
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது
கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார்

#57
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல்
புரந்தரன் முதல்வர் ஆய நான்மறை புலவர் பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர்
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால்

#58
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது சரங்கள் பாய சிந்திய சிரத்த ஆகி
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த

#59
ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை
தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும்
பூ கிளர் பந்தர் நீழல் அனுமன்-மேல் இளவல் போனான்

#60
வீங்கிய தோளன் தேய்ந்து மெலிகின்ற விழியன் மீதுற்று
ஓங்கிய முடியன் திங்கள் ஒளி பெறு முகத்தன் உள்ளால்
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று
ஓங்கிய உவகையாளன் இந்திரன் உரைப்பதானான்

#61
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன்
வில்லியர் ஒருவர் நல்க துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன்
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ

#62
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல்
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன்
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய
என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான்

#63
வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை
சரதம் போர் வென்று மீளும் தருமமே தாங்க என்பான்
விரதம் பூண்டு உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான்

#64
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல்
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார்

#65
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான்
கொழுந்து எழும் செக்கர் கற்றை வெயில் விட எயிற்றின் கூட்டம்
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக

#66
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள்
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும்
சிலையினை நோக்கும் தேவர் செய்கையை நோக்கும் செய்த
கொலையினை நோக்கும் ஒன்றும் உரைத்திலன் களிப்பு கொண்டான்

#67
காள மேகத்தை செக்கர் கலந்து-என கரிய குன்றில்
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில்
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான்

#68
தூக்கிய தூணி வாங்கி தோளொடு மார்பை சுற்றி
வீக்கிய கவச பாசம் ஒழித்து அது விரைவின் நீக்கி
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி
போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி

#69
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று
வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால்

29 இராவணன் சோக படலம்


#1
ஓத_ரோதன வேலை கடந்துளார்
பூதரோதரம் புக்கு என போர்த்து இழி
சீதரோத குருதி திரை ஒரீஇ
தூதர் ஓடினர் தாதையின் சொல்லுவார்

#2
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார்
சென்று இலங்கு அயில் தாதையை சேர்ந்துளார்

#3
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர் பொறையோடு நடுங்குவார்
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என
சொல்லினார் பயம் சுற்ற துளங்குவார்

#4
மாடு இருந்தவர் வானவர் மாதரார்
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும்
வீடும் இன்று இ உலகு என விம்முவார்
ஓடி எங்கணும் சிந்தி ஒளித்தனர்

#5
சுடர் கொழும் புகை தீ விழி தூண்டிட
தடற்று வாள் உருவி தரு தூதரை
மிடற்று வீசல் உறா விழுந்தான்-அரோ
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே

#6
வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான்
காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும்
போய் பிறந்து இ உலகை பொதியும் வெம்
தீ பிறந்துளது இன்று என செய்ததால்

#7
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து
இடம் பிறங்கி வலம்பெயர்ந்து ஈடு உற
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ
விடம் பிறந்த கடல் என வெம்பினான்

#8
திருகு வெம் சின தீ நிகர் சீற்றமும்
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட
இருபது என்னும் எரி புரை கண்களும்
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர்

#9
கடித்த பல்_குலம் கல் குலம் கண் அற
இடித்த காலத்து உரும் என எங்கணும்
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர்
வெடித்த வாய்-தொறும் பொங்கின மீ செல

#10
மைந்தவோ எனும் மா மகனே எனும்
எந்தையோ எனும் என் உயிரே எனும்
உந்தினேன் உனை நான் உளெனே எனும்
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான்

#11
புரந்தரன் பகை போயிற்று அன்றோ எனும்
அரந்தை வானவர் ஆர்த்தனரோ எனும்
கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும்
நிரந்தரம் பகை நீங்கினரோ எனும்

#12
நீறு பூசியும் நேமியும் நீங்கினார்
மாறு குன்றொடு வேலை மறைந்துளார்
ஊறு நீங்கினராய் உவணத்தினோடு
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால்

#13
வான மானமும் வானவர் ஈட்டமும்
போன போன திசை இடம் புக்கன
தானம் ஆனவை சார்கில சார்குவது
ஊன மானிடர் வென்றிகொண்டோ எனும்

#14
கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு
கட்ட மானிடன் கொல்ல என் காதலன்
பட்டு ஒழிந்தனனே எனும் பல் முறை
விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால்

#15
எழும் இருக்கும் நடக்கும் இரக்கம் உற்று
அழும் அரற்றும் அயர்க்கும் வியர்க்கும் போய்
விழும் விழிக்கும் முகிழ்க்கும் தன் மேனியால்
உழும் நிலத்தை உருளும் புரளுமால்

#16
ஐயனே எனும் ஓர் தலை யான் இனம்
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை
கையனேன் உனை காட்டி கொடுத்த நான்
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை

#17
எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை

#18
நீலம் காட்டிய கண்டனும் நேமியும்
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம்
தோலும் காட்டி துரந்தனை மீண்டும் நின்
ஓலம் காட்டிலையோ எனும் ஓர் தலை

#19
துஞ்சும் போது துணை பிரிந்தேன் எனும்
வஞ்சமோ எனும் வாரலையோ எனும்
நெஞ்சு நோவ நெடும் தனியே கிடந்து
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை

#20
காகம் ஆடு களத்திடை காண்பெனோ
பாகசாதனன் மௌலியொடும் பறித்து
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின்
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை

#21
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார்
மேல் இனி தவிர்கிற்பர்-கொல் வீர நின்
கோல வில் குரல் கேட்டு குலுங்கி தம்
தாலியை தொடல் என்னும் மற்று ஓர் தலை

#22
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர்
ஊற்றம் தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல்
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை

#23
இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழி நாள்
பொன்னின் வான் அன்ன போர் களம் புக்கனன்
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான்

#24
தேவரே முதலாகிய சேவகர்
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார்
மூ-வகை பேர் உலகின் முறைமையும்
ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார்

#25
அழுதவால் சில அன்பின போன்று அடி
தொழுதவால் சில தூங்கினவால் சில
உழுத யானை பிணம் புக்கு ஒளித்தவால்
கழுதும் புள்ளும் அரக்கனை காண்டலும்

#26
கோடி_கோடி குதிரையின் கூட்டமும்
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும்
ஓடை யானையும் தேரும் உருட்டினான்
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம்

#27
மெய் கிடந்த விழி வழி நீர் உக
நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான்
மொய் கிடந்த சிலையொடு மூரி மா
கை கிடந்தது கண்டனன் கண்களால்

#28
பொங்கு தோள் வளையும் கணை புட்டிலோடு
அங்கதங்களும் அம்பும் இலங்கிட
வெம் கண் நாகம் என பொலி மெய் கையை
செம் கையால் எடுத்தான் சிரம் சேர்த்தினான்

#29
கல் திண் மார்பில் தழுவும் கழுத்தினில்
சுற்றும் சென்னியில் சூட்டும் சுழல் கணோடு
ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால்
முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான்

#30
கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ
பெய் கண் தாரை அருவி பெரும் திரை
மொய் கண்டார் திரை வேலையை மூடவே

#31
அப்பு மாரி அழுந்திய மார்பை தன்
அப்பு மாரி அழுது இழி யாக்கையின்
அப்பும் மார்பில் அணைக்கும் அரற்றுமால்
அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ

#32
பறிக்கும் மார்பின் பகழியை பல் முறை
முறிக்கும் மூர்ச்சிக்கும் மோக்கும் முயங்குமால்
எறிக்கும் வெம் கதிரோடு உலகு ஏழையும்
கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால்

#33
தேவரோடு முனிவரும் சீரியோர்
ஏவரோடும் இடம் இன்றி நின்றவன்
மூவரோடும் உலகு ஒரு மூன்றொடும்
போவதே-கொல் முனிவு எனும் பொம்மலான்

#34
கண்டிலன் தலை காந்தி அ மானிடன்
கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன்
புண் திறத்தன நெஞ்சன் பொருமலன்
விண் திறந்திட விம்மி அரற்றினான்

#35
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் நெற்றி கண்ணன்
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன்
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க
புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும்

#36
எரி உண அளகை மூதூர் இந்திரன் இருக்கை எல்லாம்
பொரி உண உலகம் மூன்றும் பொது அற புரந்தேன் போலாம்
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால்

#37
பூண்டு ஒரு பகை-மேல் புக்கு என் புத்திரனோடும் போனார்
மீண்டிலர் விளித்து வீழ்ந்தார் விரதியர் இருவரோடும்
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும்
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை

#38
கந்தர்ப்பர் இயக்கர் சித்தர் அரக்கர்-தம் கன்னிமார்கள்
சிந்து ஒக்கும் சொல்லினார் உன் தேவியர் திருவின் நல்லார்
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால்
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன்

#39
சினத்தொடும் கொற்றம் முற்ற இந்திரன் செல்வம் மேவ
நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால்
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார்

#40
என்பன பலவும் பன்னி எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி
அன்பினால் மகனை தாங்கி அரக்கியர் அரற்றி வீழ
பொன் புனை நகரம் புக்கான் கண்டவர் புலம்பும் பூசல்
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே

#41
கண்களை சூல்கின்றாரும் கழுத்தினை தடிகின்றாரும்
புண் கொள திறந்து மார்பின் ஈருளை போக்குவாரும்
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும்
எண்களில் பெரிய ஆற்றார் இரும் துயர் பொறுக்கல் ஆற்றார்

#42
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி
போதலை புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுத கண்டார்
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே

#43
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய
தேவியர் குழாங்கள் சுற்றி சிரத்தின் மேல் தளிர் கை சேர்த்தி
ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப ஒல்லை
கோ இயல் கோயில் புக்கான் குருதி நீர் குமிழி கண்ணான்

#44
கரும் குழல் கற்றை பாரம் கால் தொட கமல பூவால்
குரும்பையை புடைக்கின்றாள் போல் கைகளால் முலை-மேல் கொட்டி
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள்

#45
தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல்
நிலையின்-மேல் மிதிக்கும் தாளன் ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள்
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள்

#46
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும்
வியர்த்திலள் நெடிது போது விம்மலள் மெல்ல மெல்ல
அயர்த்தனள் அரிதின் தேறி வாய் திறந்து அரற்றலுற்றாள்

#47
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன்
சிலையினால் அரியை வெல்ல காண்பது ஓர் தவம் முன் செய்தேன்
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவு இலாதேன்

#48
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால
மொய்யனே முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன்
உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே

#49
தாள் அரி சதங்கை ஆர்ப்ப தவழ்கின்ற பருவம் தன்னில்
கோள் அரி இரண்டு பற்றி கொணர்ந்தனை கொணர்ந்து கோபம்
மூளுற பொருத்தி மாட முன்றிலில் முறையினோடு
மீள அரு விளையாட்டு இன்னம் காண்பெனோ விதியிலாதேன்

#50
அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள்
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண
வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம்
எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ

#51
இயக்கியர் அரக்கிமார்கள் விஞ்சையர் ஏழைமார்கள்
முயல் கறை பயிலா திங்கள் முகத்தியர் முழுதும் நின்னை
மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே
அயர்த்தனை உறங்குவாயோ அமர் பொருது அலசினாயோ

#52
முக்கணான் முதலினோரை உலகு ஒரு மூன்றினோடும்
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம்
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு
உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா

#53
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம்
வெம் சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டது இல்லை
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ

#54
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம்
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால்
கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன் அரக்கர் கோமான்

#55
ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சி
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன்
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான்

#56
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின்
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம்
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய்

#57
தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை
வெள்ளிய மருப்பு சிந்த வீசிய விசயத்து ஒள் வாள்
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால்

#58
மங்கையை குலத்துளாளை தவத்தியை முனிந்து வாளால்
சங்கை ஒன்று இன்றி கொன்றால் குலத்துக்கே தக்கான் என்று
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும்
செம் கையும் கொட்டி உன்னை சிரிப்பரால் சிறியன் என்னா

#59
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய்
வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ

#60
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை
வென்று மீண்டு இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ
பொன்றினள் சீதை இன்றே புரவல புதல்வன் தன்னை
கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான்

#61
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன்
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான்

30 படை காட்சி படலம்


#1
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும்
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர்
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர்
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை பணி என் என்றார்

#2
ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான்
கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார்

#3
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக மேல் மேல்
கண்ணுற அருமை காணா கற்பத்தின் முடிவில் கார் போல்
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி

#4
வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா
ஈட்டிய முரசின் ஆர்ப்பை இடிப்பு எதிர் முழங்கமாட்டா
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின்
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல

#5
உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற
தொலைவு அரும் தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின நிமிர்ந்து நின்றான்
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால்

#6
மேற்பட விசும்பை முட்டி மேருவின் விளங்கி விண்ட
நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை
கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன

#7
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம்
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன

#8
அது-பொழுது அரக்கர்_கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்தி
பொதுவுற நோக்கலுற்றான் ஒரு நெறி போக போக
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும்
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான்

#9
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல்
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார்

#10
சாக தீவினின் உறைபவர் தானவர் சமைத்த
யாகத்தில் பிறந்து இயைந்தவர் தேவரை எல்லாம்
மோகத்தின் பட முடித்தவர் மாயையின் முதல்வர்
மேகத்தை தொடும் மெய்யினர் இவர் என விரித்தார்

#11
குசையின் தீவினின் உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும்
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார்
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு இவரால்
விசையம்தாம் என நிற்பவர் இவர் நெடு விறலோய்

#12
இலவ தீவினின் உறைபவர் இவர்கள் பண்டு இமையா
புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதர பொருதார்
நிலவை செம் சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார்
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார்

#13
அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு
என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேரு
குன்றை கொண்டு போய் குரை கடல் இட அற குலைந்தோர்
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர்

#14
பவள குன்றினின் உறைபவர் வெள்ளி பண்பு அழிந்து ஓர்
குவளை கண்ணி அங்கு இராக்கத கன்னியை கூட
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின்
திவள பாற்கடல் வறள்பட தேக்கினர் சில நாள்

#15
கந்தமாதனம் என்பது இ கரும் கடற்கு அப்பால்
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி அதில் வாழ்வோர்
அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர்
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ

#16
மலயம் என்பது பொதிய மாமலை அதில் மறவோர்
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும்
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார்

#17
முக்கர கையர் மூ இலை வேலினர் முசுண்டி
சக்கரத்தினர் சாபத்தர் இந்திரன் தலைவர்
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய்

#18
மறலியை பண்டு தம் பெரும் தாய் சொல வலியால்
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின்
விறல் கெட சிறையிட்டு அயன் இரந்திட விட்டோர்
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள்

#19
வேதாள கரத்து இவர் பண்டு புவியிடம் விரிவு
போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம்
பாதாளத்து உறைவீர் என நான்முகன் பணிப்ப
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார்

#20
நிருதி தன் குல புதல்வர் நின் குலத்துக்கு நேர்வர்
பருதி தேவர்கட்கு என தக்க பண்பினர் பான
குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பார்
இருள் நிறத்தவர் ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார்

#21
பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த
காரணத்தினின் ஆதியின் பயந்த பைம் கழலோர்
பூரண தடம் திசை-தொறும் இந்திரன் புலரா
வாரணத்தினை நிறுத்தியே சூடினர் வாகை

#22
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர்
இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர்
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன்
உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க

#23
காளியை பண்டு கண்ணுதல் காட்டிய-காலை
மூள முற்றிய சின கொடும் தீயிடை முளைத்தோர்
கூளிகட்கு நல் உடன்பிறந்தோர் பெரும் குழுவாய்
வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார்

#24
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர்
கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர்
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார்

#25
சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான்
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால்
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு
ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால்

#26
காலன் மார்பிடை சிவன் கழல் பட பண்டு கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர்
சூலம் ஏந்தி முன் நின்றவர் இ நின்ற தொகையார்
ஆலகாலத்தின் அமிழ்தின் முன் பிறந்த போர் அரக்கர்

#27
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர்
கடவ தீந்த வெம் புரத்திடை தோன்றிய கழலோர்

#28
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய
நினையவும் குறித்து உரைக்கவும் அரிது இவர் நிறைந்த
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின்
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா

#29
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர்
இருவர் என்றவர் தம்மையும் ஒரு கையோடு எற்றி
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய
நிருப என்றனர் தூதுவர் இராவணன் நிகழ்த்தும்

#30
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள்
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார்
பித்தர் இ படைக்கு எண் சிறிது என்றனர் பெயர்ந்தார்

#31
படை பெரும் குல தலைவரை கொணருதிர் என்-பால்
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய் அமைவுற்று
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான்

#32
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார்
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார்
போது தூவினர் வணங்கினர் இராவணன் பொலன் தாள்
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட

#33
அனையர் யாவரும் அருகு சென்று அடி முறை வணங்கி
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி
மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன்

#34
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால்
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ
இரியல் தேவரை கண்டனம் பகை பிறிது இல்லை
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார்

#35
மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார்
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும்
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார்
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான்

#36
கும்பகன்னனோடு இந்திரசித்தையும் குலத்தின்
வெம்பு வெம் சினத்து அரக்கர்-தம் குழுவையும் வென்றார்
அம்பினால் சிறு மனிதரே நன்று நம் ஆற்றல்
நம்ப சேனையும் வானரமே என நக்கார்

#37
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ்
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு
இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை

#38
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி
வன்னி என்பவன் புட்கர தீவுக்கு மன்னன்
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான்

#39
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம்
கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற
கிற்றும் கேட்டிரேல் என்றனன் கிளத்துவான் துணிந்தான்

#40
பரிய தோளுடை விராதன் மாரீசனும் பட்டார்
கரிய மால் வரை நிகர் கர தூடணர் கதிர் வேல்
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை
ஒரு விலால் ஒரு நாழிகை பொழுதினின் உலந்தார்

#41
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும்
ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இ நாள்
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி

#42
இங்கு வந்து நீர் வினாயது என் எறி திரை பரவை
அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம்
உங்கள் வான் செவி புகுந்திலதோ முழங்கு ஓதை

#43
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில்
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை
போயது அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம்
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால்

#44
கொற்ற வெம் சிலை கும்பகன்னனும் நுங்கள் கோமான்
பெற்ற மைந்தரும் பிரகத்தன் முதலிய பிறரும்
மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார்
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம்

#45
மூல தானை என்று உண்டு அது மும்மை நூறு அமைந்த
கூல சேனையின் வெள்ளம் மற்று அதற்கு இன்று குறித்த
கால செய்கை நீர் வந்துளீர் இனி தக்க கழலோர்
சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில்

#46
ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி
திருகு வெம் சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து
பொருது தூது உரைத்து ஏகியது அரக்கியர் புலம்ப
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து

#47
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம்
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில்
கொண்டு வந்தது மேருவுக்கு அப்புறம் குதித்து

#48
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள்
பொது இயற்கை தீர் கற்புடை பத்தினி பொருட்டால்
விதி விளைத்தது அ வில்லியர் வெல்க நீர் வெல்க
முதுமொழி பதம் சொல்லினென் என்று உரை முடித்தான்

#49
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான்
புன்மை நோக்கினென் நாணினால் பொருதிலேன் என்றான்
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான்

#50
மூது உணர்ந்த இ முது மகன் கூறிய முயற்சி
சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல்
ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால்
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும்

#51
விட்டம் ஆயினும் மாதினை வெம் சமம் விரும்பி
பட்ட வீரரை பெறுகிலெம் பெறுவது பழியால்
முட்டி மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால்
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை

#52
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே
சென்று மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி
வென்று மீளுதும் வெள்குதுமேல் மிடல் இல்லா
புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார்

31 மூலபல வதை படலம்


#1
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான்
தானவ பெரும் கரிகளை வாள் கொண்டு தடிந்தான்

#2
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி
கனை திரை கடல் சேனையை கலந்தது காணா
வினையம் மற்று இலை மூல மா தானையை விரைவோடு
இனையர் முன் செல ஏவுக என்று இராவணன் இசைத்தான்

#3
ஏவி அ பெரும் தானையை தானும் வேட்டு எழுந்தான்
தேவர் மெய் புகழ் தேய்த்தவன் சில்லி-அம் தேர்-மேல்
காவல் மூ-வகை உலகமும் முனிவரும் கலங்க
பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான்

#4
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை
குழுவி ஈண்டியது என்பரால் குவலயம் முழுதும்
தழுவி விண்ணையும் திசையையும் தடவும் அ தானை

#5
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும்
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல்
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால்

#6
அறத்தை தின்று அரும் கருணையை பருகி வேறு அமைந்த
மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர்
நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய்
புறத்தும் பொங்கிய பங்கியர் காலனும் புகழ்வார்

#7
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர்

#8
மால் வரை குலம் பரல் என மழை குலம் சிலம்பா
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார்
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர்
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார்

#9
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் உடனே
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்
தண்ணின் நீர் முறை தப்பிடின் தட கையால் தடவி
விண்ணின் மேகத்தை வாரி வாய் பிழிந்திடும் விடாயர்

#10
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை
சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி
அறைந்து கற்ற மா தண்டினர் அசனியின் ஆர்ப்பர்

#11
சூலம் வாங்கிடின் சுடர் மழு எறிந்திடின் சுடர் வாள்
கோல வெம் சிலை பிடித்திடின் கொற்ற வேல் கொள்ளின்
சால வான் தண்டு தரித்திடின் சக்கரம் தாங்கின்
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார்

#12
ஒருவரே வல்லர் ஓர் உலகத்தினை வெல்ல
இருவர் வேண்டுவர் ஏழ் உலகத்தையும் இறுக்க
திரிவரேல் உடன் திரிதரும் நெடு நிலம் செவ்வே
வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால்

#13
மேகம் எத்தனை அத்தனை மால் கரி விரிந்த
நாகம் எத்தனை அத்தனை நளிர் மணி தேர்கள்
போகம் எத்தனை அத்தனை புரவியின் ஈட்டம்
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி

#14
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின்
பன்னு பல்லணம் பருமம் மற்று உறுப்பொடு பலவும்
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த
சின்னம் உள்ளன இல்லன மெய்ம் முற்றும் தெரிந்தால்

#15
இ பெரும் படை எழுந்து இரைந்து ஏக மேல் எழுந்த
துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீ தூர்ப்ப
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி

#16
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர்
நிலையும் அ புறத்து உலகங்கள் யாவையும் நிரம்ப
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ

#17
கடம் பொறா மத களிறு தேர் பரி இடை கடவ
படம் பொறாமையின் நனம் தலை அனந்தனும் பதைத்தான்
விடம் பொறாது இரி அமரர்-போல் குரங்கு_இனம் மிதிக்கும்
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த

#18
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே மள்ளர்
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார்

#19
ஆர்த்த ஓசையோ அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ
கார் திண் மால் கரி முழக்கமோ வாசியின் கலிப்போ
போர்த்த பல்_இயத்து அரவமோ நெருக்கினால் புழுங்கி
வேர்த்த அண்டத்தை வெடித்திட பொலிந்தது மேன்மேல்

#20
வழங்கு பல் படை மீனது மத கரி மகரம்
முழங்குகின்றது முரி திரை பரியது முரசம்
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத
புழுங்கு வெம் சின சுறவது நிறைபுடை புணரி

#21
தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்-தம் தானை
பசும் புல் தண் தலம் மிதித்தலின் கரி படு மதத்தின்
அசும்பின் சேறு பட்டு அளறு பட்டு அமிழுமால் அடங்க
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல்-மேல் இலங்கை

#22
படியை பார்த்தனர் பரவையை பார்த்தனர் படர் வான்
முடியை பார்த்தனர் பார்த்தனர் நெடும் திசை முழுதும்
வெடியை பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர் மிடைந்த
கொடியை பார்த்தனர் வேர்த்தனர் வானவர் குலைந்தார்

#23
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல்
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால்
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார்

#24
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார்
முடிந்தது எம் வலி என்றனர் ஓடுவான் முயல்வார்

#25
ஒருவரை கொல்ல ஆயிரம் இராமர் வந்து ஒருங்கே
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால் என் ஆம்
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ

#26
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர்
ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம்
பொன்றுவிப்பது ஓர் விதி தந்ததாம் என புகன்றான்

#27
புற்றின்-நின்று வல் அரவு_இனம் புறப்பட பொருமி
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல்
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி
கொற்ற வீரரை பார்த்திலது இரிந்தது குலைவால்

#28
அணையின்-மேல் சென்ற சில சில ஆழியை நீந்த
புணைகள் தேடின சில சில நீந்தின போன
துணைகளோடு புக்கு அழுந்தின சில சில தோன்றா
பணைகள் ஏறின மலை முழை புக்கன பலவால்

#29
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த
புடைத்து செல்குவர் விசும்பினும் என்றன போதோன்
படைத்த திக்கு எலாம் பரந்தனர் என்றன பயத்தால்

#30
அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன்-அவனும்
பிரியகிற்றிலர் இறைவனை நின்றனர் பின்றார்
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும் எறி நீர்
விரியும் வேலையும் கடந்தனர் நோக்கினன் வீரன்

#31
இ கொடும் படை எங்கு உளது இயம்புதி என்றான்
மெய் கொடும் திறல் வீடணன் விளம்புவான் வீர
திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர்
புக்கு அழைத்திட புகுந்துளது இராக்கத புணரி

#32
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால்
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர்

#33
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம்
மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ்
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான்

#34
கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும் கிளர
காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா
ஓட்டின் மேற்கொண்ட தானையை பயம் துடைத்து உரவோய்
மீட்டி-கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான்

#35
சென்று சேனையை உற்றனன் சிறை சிறை கெடுவீர்
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான்
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால்
வென்றி வெம் திறல் படை பெரும் தலைவர்கள் மீண்டார்

#36
மீண்டு வேலையின் வட கரை ஆண்டு ஒரு வெற்பின்
ஈண்டினார்களை என் குறித்து இரிவுற்றது என்றான்
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார்

#37
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள்
செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின்
பொரு இல் மற்றவர் இற்றிலர் யாரொடும் பொருவார்
இருவர் வில் பிடித்து யாவரை தடுத்து நின்று எய்வார்

#38
புரம் கடந்த அ புனிதனே முதலிய புலவோர்
வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார்
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார்
குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம்

#39
ஊழி ஆயிர கோடி நின்று உருத்திரனோடும்
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன்-அவனும்
சூழ ஓடினார் ஒருவனை கொன்று தம் தோளால்
வீழுமா செய்ய வல்லரேல் வென்றியின் நன்றே

#40
என் அப்பா மற்று இ எழுபது வெள்ளமும் ஒருவன்
தின்ன போதுமோ தேவரின் வலியமோ சிறியேம்
முன் இ பார் எலாம் படைத்தவன் நாள் எலாம் முறை நின்று
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம்

#41
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார்
ஆயிரம் தலை அதற்கு இரட்டி கையர் ஐயா
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால்

#42
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் அவன் செய்தது அறிதி
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய்

#43
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர்
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம்

#44
தாம் உளார் அலரே புகழ் திருவொடும் தரிப்பார்
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய்
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார்

#45
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய்
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய்

#46
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம்
கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார்

#47
அஞ்சினாம் பழியும் பூண்டாம் அம் புவி யாண்டும் ஆவி
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின்
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே

#48
தானவரோடும் மற்றை சக்கர தலைவனோடும்
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய்

#49
எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான்

#50
நாணத்தால் சிறிது போது நலங்கினன் இருந்து பின்னர்
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம்
காணத்தான் நிற்கத்தான் அ கறை மிடற்றவற்கும் ஆமே
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ

#51
தேவரும் அவுணர்-தாமும் செரு பண்டு செய்த காலம்
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும்
பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ

#52
மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன்
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன்
ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும்
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ

#53
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர்
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின்
கலியினும் கொடியர் கற்ற படைக்கல கரத்தர் என்றால்
மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டால்

#54
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும்
ஏகுதும் மீள இன்னும் இயம்புவது உளதால் ஐய
மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும்

#55
எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள்
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின்

#56
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல்
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான்

#57
ஈண்டிய தானை நீங்க நிற்பது என் யாமே சென்று
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம் போதும் என்னா
மீண்டனர் தலைவர் எல்லாம் அங்கதனோடும் வீரன்
மூண்ட வெம் படையை நோக்கி தம்பிக்கு மொழிவதானான்

#58
அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான்
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என தொலையும் தன்மை
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால்

#59
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால் கவியின் சேனை
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால்
தாக்கி இ படையை முற்றும் தலை துமிப்பளவும் தாங்கி
நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம்

#60
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன்
அ புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன் அயலே வந்து
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார்
வெப்புறுகின்றது உள்ளம் வீர நீ அன்றி வில்லோர்

#61
மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான்
வீரன் மற்று அதனை கேட்ட இளையவன் விளம்பலுற்றான்

#62
அன்னதே கருமம் ஐய அன்றியும் அருகே நின்றால்
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது
சென்னியில் சுமந்த கையர் தேவரே போல யாமும்
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி

#63
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய்
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால்
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன்
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான்

#64
ஐய நிற்கு இயலாது உண்டோ இராவணன் அயலே வந்துற்று
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால்
மொய் அமர் களத்தின் உன்னை துணை பெறான் என்னின் முன்ப
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே

#65
ஏரை கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான்-தன்
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம்
வீரர்க்கும் வீர நின்னை பிரிகலன் வெல்லும் என்பேன்

#66
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த
வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான்
ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான்

#67
வீடண நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி வெம்மை
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம்
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின்
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான்

#68
சூரியன்_சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன்
ஆரியன் பின்பு போனான் அனைவரும் அதுவே நல்ல
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார்
வீரியன் பின்னர் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம்

#69
வில்லினை தொழுது வாங்கி ஏற்றினான் வில் நாண் மேரு
கல் என சிறந்ததேயும் கருணை அம் கடலே அன்ன
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி

#70
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனை
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி
வீசின படையும் அம்பும் மிடைதலும் விண்ணோர் ஆக்கை
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோம கூடம்

#71
கண்ணனே எளியேம் இட்ட கவசமே கடலே அன்ன
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற
எண்ணமே முடித்தி என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம்

#72
முனிவரே முதல்வர் ஆய அற துறை முற்றினோர்கள்
தனிமையும் அரக்கர் தானை பெருமையும் தரிக்கலாதார்
பனி வரு கண்ணர் விம்மி பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார்

#73
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம்
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம்
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையால்
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று மாலி பொய்க்குமோ

#74
புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர் பொருந்தினார்
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள்
விரைந்து புள்ளின் மீது விண்ணுளோர்களோடு மேவினான்
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான்

#75
தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால்
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை
பேருமாறும் நம்மிடை பிழைக்குமாறும் எங்ஙனே

#76
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை
குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும்
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன்
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய்

#77
கதம் புலர்ந்த சிந்தை வந்த காவல் யானை மாலொடு
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம்
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால்
விதம் புலர்ந்தது என்னின் வென்ற வென்றி சொல்ல வேணுமோ

#78
வெறித்து இரிந்த வாசியோடு சீய மாவும் மீளியும்
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம்
முறித்து எழுந்து அழுந்த யானை வீசும் மூசு பாகரை
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால்

#79
இ நிமித்தம் இ படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர்
துன்னிமித்தம் என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார்
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல்
மின் நிமிர்த்தது அன்ன வாளி வேதநாதன் வீசினான்

#80
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா
மீளி மேலும் வீரர் மேலும் வீரர் தேரின் மீதினும்
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா
தூளி மேலும் ஏற ஏற வீரன் வாளி தூவினான்

#81
மலை விழுந்தவா விழுந்த மான யானை மள்ளர் செ
தலை விழுந்தவா விழுந்த தாய வாசி தாள் அறும்
சிலை விழுந்தவா விழுந்த திண் பதாகை திங்களின்
கலை விழுந்தவா விழுந்த வெள் எயிற்ற காடு எலாம்

#82
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம்
கோடை மாரி போல வாளி கூட ஓடை யானையும்
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால்
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால்

#83
விழித்த கண்கள் கைகள் மெய்கள் வேறலை கழுத்தினில்
தெழித்த வாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினை
பழித்த வாளி சிந்த நின்று பட்ட அன்றி விட்ட கோல்
கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே

#84
தொடுத்த வாளியோடு வில் துணிந்து விழும் முன் துணிந்து
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன்
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர்
தடுத்து வீரர்-தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால்

#85
குரம் துணிந்து கண் சிதைந்து பல்லணம் குலைந்து பேர்
உரம் துணிந்து வீழ்வது அன்றி ஆவி ஓட ஒண்ணுமோ
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால்
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே

#86
ஊர உன்னின் முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால்
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம்
தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால்
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே

#87
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும்
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால்
முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே
பட்டு வந்த போல் விழுந்த என்ன தன்மை பண்ணுமே

#88
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான்
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே

#89
கொடி குலங்கள் தேரின் மேல யானை மேல கோடை நாள்
இடி குலங்கள் வீழ வெந்த காடு போல் எரிந்தவால்
முடி குலங்கள் கோடி_கோடி சிந்த வேகம் முற்றுறா
வடி குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால்

#90
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற
துற்ற வெம்மை கைம்மிக சுறுக்கொள சுவைத்ததால்
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால்

#91
போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி பொங்கினார்
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால்
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும்
தேர் எரிந்த வீரர்-தம் சிரம் பொடிந்து சிந்தவே

#92
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என
துடித்த யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்-தம்
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின்
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே

#93
கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும்
போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால்
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே

#94
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும்
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால்
பூழி பெற்ற வெம் களம் குளம் பட பொழிந்த பேர்
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ

#95
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல்
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார்
சுற்றும் வீழ் தலை குலங்கள் சொல்லு கல்லு மாரி-போல்
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார்

#96
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின்
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால்
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால்
விழித்து எழுந்து வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம்

#97
தெய்வ நெடும் படை கலங்கள் விடுவர் சிலர் சுடு கணைகள் சிலையில் கோலி
எய்வர் சிலர் எறிவர் சிலர் எற்றுவர் சுற்றுவர் மலைகள் பலவும் ஏந்தி
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால்
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ

#98
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற
பார்ப்பர் பலர் நெடு வரையை பறிப்பர் பலர் பகலோனை பற்றி சுற்றும்
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார்

#99
எறிந்தனவும் எய்தனவும் எடுத்தனவும் பிடித்தனவும் படைகள் எல்லாம்
முறிந்தன வெம் கணைகள் பட முற்றின சுற்றின தேரும் மூரி மாவும்
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான்

#100
சொல் அறுக்கும் வலி அரக்கர் தொடு கவசம் துகள் படுக்கும் துணிக்கும் யாக்கை
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும்
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ

#101
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின்
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம்

#102
வேல் செல்வன சத கோடிகள் விண்-மேல் நிமிர் விசிக
கோல் செல்வன சத கோடிகள் கொலை செய்வன மலை-போல்
தோல் செல்வன சத கோடிகள் துரகம் தொடர் இரத
கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான்

#103
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும்
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார்
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார்

#104
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர்
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார்
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால்

#105
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல்
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால்

#106
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின்
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார்
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார்

#107
அடுக்குற்றன மத யானையும் அழி தேர்களும் பரியும்
தொடுக்குற்றன விசும்பூடு உற சுமந்து ஓங்கின எனினும்
மிடுக்குற்றன கவந்த குலம் எழுந்து ஆடலின் எல்லாம்
நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன

#108
பட்டார் உடல் படு செம்_புனல் திருமேனியில் படலால்
கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள்
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான்
ஒட்டார் உடல் குருதி குளித்து எழுந்தானையும் ஒத்தான்

#109
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட சிரம் போய்
மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா
காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால்
ஈ ஒத்தன நிருத_குலம் நறவு ஒத்தனன் இறைவன்

#110
மொய்த்தாரை ஒர் இமைப்பின்-தலை முடுக தொடு சிலையால்
தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால்
கைத்தார் கடும் களிறும் கன தேரும் களத்து அழுந்த
குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால்

#111
பிரிந்தார் பலர் இரிந்தார் பலர் பிழைத்தார் பலர் உழைத்தார்
புரிந்தார் பலர் நெரிந்தார் பலர் புரண்டார் பலர் உருண்டார்
எரிந்தார் பலர் கரிந்தார் பலர் எழுந்தார் பலர் விழுந்தார்
சொரிந்தார் குடல் துமிந்தார் தலை கிடந்தார் எதிர் தொடர்ந்தார்

#112
மணி குண்டலம் வலயம் குழை மகரம் சுடர் மகுடம்
அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகல
துணியுண்டவர் உடல் சிந்தின சுடர்கின்றன தொடரும்
திணி கொண்டலினிடை மின் குலம் மிளிர்கின்றன சிவண

#113
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின்
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல்
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர்
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான்

#114
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான்
ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும்
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான்

#115
பள்ளம் படு கடல் ஏழினும் படி ஏழினும் பகையின்
வெள்ளம் பல உள என்னினும் வினையம் பல தெரியா
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார்
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான்

#116
நானாவித பெரும் சாரிகை திரிகின்றது நவிலார்
போனான் இடை புகுந்தான் என புலன் கொள்கிலர் மறந்தார்
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே
ஆனான் வினை துறந்தான் என இமையோர்களும் அயிர்த்தார்

#117
சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல்
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர்
துண்ட பட கடும் சாரிகை திரிந்தான் சரம் சொரிந்தான்
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான்

#118
களி யானையும் நெடும் தேர்களும் கடும் பாய் பரி கணனும்
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும்
வெளி வானகம் இலதாம்-வகை விழுந்து ஓங்கிய பிண பேர்
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான்

#119
அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்
அம்பரங்களொடும் களி யானையும்
அம்பு அரங்க அழுந்தின சோரியின்
அம்பரம் கம் அரும் கலம் ஆழ்ந்து என

#120
கேட கங்கண அம் கையொடும் கிளர்
கேடகங்கள் துணிந்து கிடந்தன
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே

#121
அங்கதம் களத்து அற்று அழி தாரொடும்
அம் கதம் களத்து அற்று அழிவுற்றவால்
புங்கவன் கணை புட்டில் பொருந்திய
புங்க வன் கணை புற்று அரவம் பொர

#122
தம் மனத்தில் சலத்தர் மலை தலை
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ
தெம் முனை செரு மங்கை தன் செம் கையால்
அம்மனை குலம் ஆடுவ போன்றவே

#123
கயிறு சேர் கழல் கார் நிற கண்டகர்
எயிறு வாளி பட துணிந்து யானையின்
வயிறு-தோறும் மறைவன வானிடை
புயல்-தொறும் புகு வெண் பிறை போன்றவே

#124
வென்றி வீரர் எயிறும் விடா மத
குன்றின் வெள்ளை மருப்பும் குவிந்தன
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை
ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால்

#125
ஓவிலார் உடல் உந்து உதிர புனல்
பாவி வேலை உலகு பரத்தலால்
தீவு-தோறும் இனிது உறை செய்கையர்
ஈவு இலாத நெடு மலை ஏறினார்

#126
விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும்
புண் நிறைந்த புனலின் நிறைந்தன
மண் நிறைந்தன பேர் உடல் வானவர்
கண் நிறைந்தன வில் தொழில் கல்வியே

#127
செறுத்த வீரர் பெரும் படை சிந்தின
பொறுத்த சோரி புக கடல் புக்கன
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும்
அறுத்து மீனம் உலந்த அனந்தமே

#128
ஒல்வதே இ ஒருவன் இ ஊகத்தை
கொல்வதே நின்று குன்று அன யாம் எலாம்
வெல்வது ஏதும் இலாமையின் வெண் பலை
மெல்வதே என வன்னி விளம்பினான்

#129
கோல் விழுந்து அழுந்தா-முனம் கூடி யாம்
மேல் விழுந்திடினும் இவன் வீயுமால்
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர்
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர்

#130
ஆயிரம் பெரு வெள்ளம் அரைபட
தேய நிற்பது பின் இனி என் செய
பாயும் உற்று உடனே என பன்னினான்
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான்

#131
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா
சுற்றும் முற்றும் வளைந்தன தூவின
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள்
பற்றி மேகம் பொழிந்து என பல் படை

#132
குறித்து எறிந்தன எய்தன கூற்றுற
தறித்த தேரும் களிறும் தரை பட
மறித்த வாசி துணித்து அவர் மா படை
தெறித்து சிந்த சர மழை சிந்தினான்

#133
வாய் விளித்து எழு பல் தலை வாளியில்
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல்
பேய் விளிப்ப நடிப்பன பெட்புறும்
தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால்

#134
நெய் கொள் சோரி நிறைந்த நெடும் கடல்
செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள்
வைய மங்கை பொலிந்தனள் மங்கல
செய்ய கோலம் புனைந்தன செய்கையாள்

#135
உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்பு-போல் குருதி புனல் சுற்றலால்
தப்பிற்று அ உரை இன்று ஓர் தனுவினால்

#136
ஒன்றுமே தொடை கோல் ஒரு கோடிகள்
சென்று பாய்வன திங்கள் இளம் பிறை
அன்று போல் எனல் ஆகியது அ சிலை
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர்

#137
எடுத்தவர் இரைத்தவர் எறிந்தவர் செறிந்தவர் மறங்கொடு எதிரே
தடுத்தவர் சலித்தவர் சரிந்தவர் பிரிந்தவர் தனி களிறு-போல்
கடுத்தவர் கலித்தவர் கறுத்தவர் செறுத்தவர் கலந்து சரம் மேல்
தொடுத்தவர் துணிந்தவர் தொடர்ந்தனர் கிடந்தனர் துரந்த கணையால்

#138
தொடுப்பது சுடர் பகழி ஆயிரம் நிரைத்தவை துரந்த துறை போய்
படுப்பது வய பகைஞர் ஆயிரரை அன்று பதினாயிரவரை
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல்
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ

#139
தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடை குழை தொகுத்து
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார்
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ

#140
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம்
மீன குலம் ஒத்தன கடல் படை இனத்தொடும் விளிந்துறுதலால்

#141
ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார்
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும்
ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர்

#142
மூல முதல் ஆய் இடையும் ஆய் இறுதி ஆய் எவையும் முற்றும் முயலும்
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும்
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் குரை கடல் எழும்
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால்

#143
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர்
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன்
நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும்
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார்

#144
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும்
பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும்
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால்
கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார்

#145
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல்
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற
தாங்கினர் படை தலைவர் நூறு சத கோடியர் தடுத்தல் அரியார்

#146
தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா
ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால்
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின்
தூரும்-வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால்

#147
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும்
தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம்
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர்
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ

#148
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய
புக்கு அணையலுற்றனர் மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார்
திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால்
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால்

#149
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர்
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம்
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய்

#150
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும்
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால்
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான்
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார்

#151
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும்
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால்
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் நல் அறம் நடக்கும் அதனை
வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார்

#152
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார்
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர்
கரக்க முழை தேடி உழல்கின்றிலிர்கள் இன்று ஒரு கடும் பகலிலே
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும் இவரை

#153
என்று பரமன் பகர நான்முகனும் அன்ன பொருளே இசைதலும்
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம்
துன்று நெடு வாளி மழை மாரியினும் மேலன துரந்து விரைவின்
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ

#154
மகர மறி கடலின் வளையும் வய நிருதர்
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர்
பகர அரிய பதம் விரவ அமரர் பழ
நகரம் இடம் அருக அனையர் நலிவு பட

#155
உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள்
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர்
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின்
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ

#156
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும்
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி
அலையும் அரியது ஒரு திசையும் இலது அணுக

#157
இனைய செரு நிகழும் அளவின் எதிர் பொருத
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய
அனைய படை நெளிய அமரர் சொரி மலர்கள்
நனைய விசையின் எழு துவலை மழை பொழிய

#158
இரியல் உறு படையை நிருதர் இடை விலகி
எரிகள் சொரியும் நெடு விழியர் இழுதையர்கள்
திரிக திரிக என உரறு தெழி குரலர்
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ

#159
உலகு செவிடு பட மழைகள் உதிர உயர்
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய
விலகியது திமிலம் விளையும்-வகை விளைய

#160
அழகிது அழகிது என அழகன் உவகையொடு
பழகும் அதிதியரை எதிர்கொள் பரிசு பட
விழைவின் எதிர அதிர் எரிகொள் விரி பகழி
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய

#161
தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர்
அனகனொடும் அமரின் முடுகி எதிர எழு
கனக வரை பொருவ கதிர் கொள் மணி இரதம்

#162
பாறு படு சிறகு கழுகு பகழி பட
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி
வேறு படர் படர இரவி சுடர் வலையம்
மாறு பட உலக நிரைகள் அளறு பட

#163
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய
உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய
இரு கை ஒரு களிறு திரிய விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் முறை திரிய

#164
சிவனும் அயனும் எழு திகிரி அமரர்_பதி
அவனும் அமரர் குலம் எவரும் முனிவரொடு
கவனம் உறு கரணம் இடுவர் கழுது இனமும்
நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில

#165
தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை
ஏவர் அறிவுறுவர் இறுதி முதல் அறிவின்
மூவர் தலைகள் பொதிர் எறிவர் அற முதல்வ
பூவை நிறவ என வேதம் முறை புகழ

#166
எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு
வெய்ய களிறு பரியாளொடு இரதம் விழ
ஒய்ய ஒரு கதியின் ஓட உணர் அமரர்
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ

#167
அண்ணல் விடு பகழி யானை இரதம் அயல்
பண்ணு புரவி படை வீரர் தொகு பகுதி
புண்ணினொடு குறிகள் புள்ளி என விரைவின்
எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ

#168
சுருக்கம் உற்றது படை சுருக்கத்தால் இனி
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால்
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ

#169
மாலியை மாலியவானை மால் வரை
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார்
சாலிகை யாக்கையர் தணப்பு இல் வெம் சர
வேலியை கடந்திலர் உலகை வென்றுளார்

#170
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம்
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும்
மூண்டு அற முருக்கிய ஊழி காலத்தில்
தூண்டுறு சுடர் சுட சுருங்கி தொக்க-போல்

#171
புரம் சுடு கடவுளும் புள்ளின் பாகனும்
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும்
உரம் சுடுகிற்கிலர் ஒருவன் நாமுடை
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும்

#172
ஆயிர வெள்ளம் உண்டு ஒருவர் ஆழி சூழ்
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர்
மேயின பெரும் படை இதனை ஓர் விலால்
ஏ எனும் மாத்திரத்து எய்து கொன்றனன்

#173
இடை படும் படாதன இமைப்பிலோர் படை
புடைபட வலம்கொடு விலங்கி போகுமால்
படை படும் கோடி ஓர் பகழியால் பழி
கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால்

#174
பண்டு உலகு உய்த்தவனோடும் பண் அமை
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார்
அண்டர்கள் விசும்பினின்று ஆர்க்கின்றாருழை
கண்டிலம் இவன் நெடு மாய கள்வனால்

#175
கொன்றனன் இனி ஒரு கோடி_கோடி மேற்று
அன்று எனின் பதுமம் மேற்று ஆகில் வெள்ளம் ஆய்
நின்றது நின்று இனி நினைவது என் பெற
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான்

#176
விழித்துமோ இராவணன் முகத்து மீண்டு யாம்
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால்
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம்
கழித்தும் இ ஆக்கையை புகழை கண்ணுற

#177
இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின்
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம்
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனி
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான்

#178
இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம்
அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல்
விளக்கினில் வீழ்ந்து-என விதிகொடு உந்தலால்
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார்

#179
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள்
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம்
கழு இகல் கப்பணம் முதல கை படை
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார்

#180
காந்தருப்பம் எனும் கடவுள் மா படை
வேந்தருக்கு அரசனும் வில்லின் ஊக்கினான்
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என
போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை

#181
மூன்று கண் அமைந்தன ஐம் முகத்தன
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடுவ
வான் தொட நிமிர்வன வாளி மா மழை
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த

#182
ஐ_இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற
எய் எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால்
செய் தவத்து இராவணன் மூல சேனையே

#183
மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம்
பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர்
யாப்புறு காதலர் இராவணற்கு அவர்

#184
மா தட மேருவை வளைந்த வான் சுடர்
கோத்து அகல் மார்பிடை அணியும் கொள்கையார்
பூ தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார்

#185
நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின்
வெம் முனை இராவணன் தனையும் வெல்லுமால்
இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ
செம்மையில் தனி தனி செய்துமோ செரு

#186
எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இ நெடியோனை
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல்
வெல்லோம் வெல்லோம் என்றனன் வன்னி மிடலோரும்
தொல்லோன் சொல்லே நன்று என அஃதே துணிவுற்றார்

#187
அன்னார்-தாமும் ஆர்கலி ஏழும் என ஆர்த்தார்
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம்
கொன்னே ஊதி தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார்
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம்

#188
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல்
தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான்
போர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் புகழ் சங்கம்
ஆர்த்தால் ஒத்தது அ ஒலி எல்லா உலகுக்கும்

#189
பல் ஆயிர கோடியர் பல் படை நூல்
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார்
எல்லா உலகங்களும் ஏறிய போர்
வில்லாளர் அரக்கரின் மேதகையார்

#190
வென்றார் உலகங்களை விண்ணவரோடு
ஒன்றா உயர் தானவர் ஓதம் எலாம்
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும்
தின்றார் எதிர் சென்று செறிந்தனரால்

#191
வளைத்தார் மத யானையை வன் தொழுவில்
தளைத்தார் என வந்து தனி தனியே
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர்
விளைத்தார் இமையோர்கள் வெதும்பினரால்

#192
விட்டீய வழங்கிய வெம் படையின்
சுட்டீய நிமிர்ந்த சுடர் சுடரும்
கண் தீயும் ஒருங்கு கலந்து எழலால்
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும்

#193
தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தெழிப்பு ஒலியும்
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும்
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும்
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும்

#194
எல்லாரும் இராவணனே அனையார்
வெல்லா உலகு இல்லவர் மெய் வலியார்
தொல்லார் படை வந்து தொடர்ந்தது எனா
நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால்

#195
ஊழி கனல் போல்பவர் உந்தின போர்
ஆழி படை அம்பொடும் அற்று அகல
பாழி கடை நாள் விடு பல் மழை போல்
வாழி சுடர் வாளி வழங்கினனால்

#196
சூரோடு தொடர்ந்த சுடர் கணைதான்
தாரோடு அகலங்கள் தடிந்திடலும்
தேரோடு மடிந்தனர் செம் கதிரோன்
ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர்

#197
கொல்லோடு சுடர் கணை கூற்றின் நிண
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால்
செல்லோடு எழு மா முகில் சிந்தின-போல்
வில்லோடும் விழுந்த மிடல் கரமே

#198
செம்போடு உதிர திரை ஆழியின்-வாய்
வெம்பு ஓடு அரவ_குலம் மேல் நிமிரும்
கொம்போடும் விழுந்தன ஒத்த குறைந்து
அம்போடும் விழுந்த அடல் கரமே

#199
முன் ஓடு உதிர திரை மூதுலகை
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய்
மின்னோடும் விழுந்தன மேகம் என
பொன் ஓடை நெடும் கரி புக்கனவால்

#200
மற வெற்றி அரக்கர் வல கையொடும்
நறவ குருதி கடல் வீழ் நகை வாள்
சுறவு ஒத்தன மீது துடித்து எழலால்
இறவு ஒத்தன வாவும் இன பரியே

#201
தாம சுடர் வாளி தடிந்து அகல
பாம குருதி படிகின்ற படை
சேம படு கேடகம் மால் கடல் சேர்
ஆமை குலம் எத்தனை அத்தனையால்

#202
காம்போடு பதாகைகள் கார் உதிர
பாம்போடு கடல் படிவுற்றனவால்
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல்

#203
மண்ட படு சோரியின் வாரியின் வீழ்
கண்ட தொகை கவ்விய காலொடு தோள்
முண்ட கிளர் தண்டு அன முள் தொகு வன்
துண்ட சுறவு ஒத்த துடித்தனவால்

#204
தெளிவுற்ற பளிங்கு உறு சில்லி-கொள் தேர்
விளிவுற்றுக வேறுற வீழ்வனதாம்
அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ்
ஒளி முற்றிய திங்களை ஒத்துளவால்

#205
நிலை கோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலை கோடலின் மன் குறி கோளுறுமேல்
சிலை கோடிய-தோறும் சிர திரள் வன்
மலை கோடியின் மேலும் மறிந்திடுமால்

#206
திண் மார்பின்-மிசை செறி சாலிகையின்
கண் வாளி கடை சிறை காண நுழைந்து
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால்

#207
பாறு ஆடு களத்து ஒருவன் பகலின்
கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே
நூறு ஆயின யோசனை நூழில்கள் சால்
மாறாது உழல் சாரிகை வந்தனனால்

#208
நின்றாருடன் நின்று நிமிர்ந்து அயலே
சென்றார் எதிர் சென்று திரிந்திடலால்
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர்
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார்

#209
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று
அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய்
வெம் கோப நெடும் படை வெம் சரம் விட்டு
எங்கேனும் வழங்குவர் எய்குவரால்

#210
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார்
இரவு அன்று இது ஓர் பகல் என்பர்களால்
கரவு அன்று இது இராமர் கணக்கு_இலரால்
பரவை மணலின் பலர் என்பர்களால்

#211
ஒருவன் ஒருவன் மலை போல் உயர்வோன்
ஒருவன் படை வெள்ளம் ஓர் ஆயிரமே
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ

#212
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண்
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால்
போர்-மேலும் இராமர் புகுந்து அடர்வார்

#213
என்னும்படி எங்கணும் எங்கணுமாய்
துன்னும் சுழலும் திரியும் சுடரும்
பின்னும் அருகும் உடலும் பிரியான்
மன்னன் மகன் வீரர் மயங்கினரால்

#214
படு மத கரி பரி சிந்தின பனி வரை இரதம் அவிந்தன
விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின
கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும்

#215
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி
சேனை காவலர் ஆயிரம் பேர் படின் கவந்தம் ஒன்று எழுந்தாடும்
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும்
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே

#216
ஊன் ஏறு படை கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்-தோறும்
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்
வான் ஏறினார்கள் தேரும் மலைகின்ற வயவர் தேரும்
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான்

#217
காய் இரும் சிலை ஒன்றேனும் கணை புட்டில் ஒன்றதேனும்
தூய் எழு பகழி மாரி மழை துளி தொகையின் மேல
ஆயிரம் கைகள் செய்த செய்தன அமலன் செம் கை
ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆனது அன்றே

#218
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால்
மெய்யுற உணர்ந்தோம் வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா

#219
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும்
எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார்
பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார்
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார்

#220
வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும்
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால் கொற்ற
வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர்

#221
குடைக்கு எலாம் கொடிகட்கு எல்லாம் கொண்டன குவிந்த கொற்ற
படைக்கு எலாம் பகழிக்கு எல்லாம் யானை தேர் பரிமா வெள்ள
கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி
அடைக்கலாம் அறிஞர் யாரே என்றனர் முனிவர் அப்பால்

#222
கண்டத்தின் கீழும் மேலும் கபாலத்தும் கடக்கல் உற்ற
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன

#223
கோடி ஐ_இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும்
வீடி நின்று அழிவது என்னே விண்ணவர் படைகள் வீசி
மூடுதும் இவனை என்று யாவரும் மூண்டு மொய்த்தார்

#224
விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படை ஈறாக
கொண்டு ஒருங்கு உடனே விட்டார் குலுங்கியது அமரர் கூட்டம்
அண்டமும் கீழ் மேலாக ஆகியது அதனை அண்ணல்
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான்

#225
தான் அவை தொடுத்த போது தடுப்ப அரிது உலகம் தானே
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால்
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான்

#226
ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து வீழ்ந்தார்
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும்
போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி

#227
நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார்
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான்
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான்

#228
தாய் படை துடைய செல்வம் ஈக என தம்பிக்கு ஈந்து
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி
தோய் படை தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார்

#229
தீ மொய்த்த அனைய செம் கண் அரக்கரை முழுதும் சிந்தி
பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற நின்றான்
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும்
ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான்

#230
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான்

#231
ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ள
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு
ஏகினன் இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல்

#232
இ வழி இயன்ற எல்லாம் இயம்பினாம் இரிந்து போன
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற
வெவ் வழி அரக்கர்_கோமான் செய்கையும் இளைய வீரன்
எவ்வம் இல் ஆற்றல் போரும் முற்றும் நாம் இயம்பலுற்றாம்