சுந்தர காண்டம் – கம்பராமாயணம்

படலங்கள்

0. கடவுள் வாழ்த்து
1. கடல்தாவு படலம்
2. ஊர்தேடு படலம்
3. காட்சிப் படலம்
4. உருக்காட்டுப் படலம்
5. சூடாமணிப் படலம்
6. பொழில் இறுத்த படலம்
7. கிங்கரர் வதைப் படலம்
8. சம்புமாலி வதைப் படலம்
9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
10. அக்க குமாரன் வதைப் படலம்
11. பாசப் படலம்
12. பிணிவீட்டுப் படலம்
13. இலங்கை எரியூட்டு படலம்
14. திருவடி தொழுத படலம்

0 கடவுள் வாழ்த்து


#1
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும்
விலங்கிய விகார பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார்

1 கடல் தாவு படலம்


#1
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான்
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான்

#2
கண்டனன் இலங்கை மூதூர் கடி பொழில் கனக நாஞ்சில்
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த
வெண் தள களப மாட வீதியும் பிறவும் எல்லாம்
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான்

#3
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள்-தோறும் புறத்து உராய் புரண்டு பேர்வ
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல
குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான

#4
புகல்_அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளை சீயம் பொங்கி
உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின்
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம்

#5
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள
மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின்
மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும்
கை உற மரங்கள் பற்றி பிளிறின களி நல் யானை

#6
பொன் பிறழ் சிமய கோடு பொடியுற பொறியும் சிந்த
மின் பிறழ் குடுமி குன்றம் வெரிம் உற விரியும் வேலை
புன் புற மயிரும் பூவா கட்புலம் புறத்து நாறா
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ

#7
தேக்கு உறு சிகர குன்றம் திரிந்து மெய் நெரிந்து சிந்த
தூக்குறு தோலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம்
தாக்குறு செருவில் நேர்ந்தார் தாள்_அற வீச தாவி
மேக்குற விசைத்தார் என்ன பொலிந்தனர் விஞ்சை வேந்தர்

#8
தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிர தாழ்ந்து
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மா குன்றம்
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே

#9
தாது உகு நறு மென் சாந்தம் குங்குமம் குலிகம் தண் தேன்
போது உகு பொலன் தாது என்று இ தொடக்கத்த யாவும் பூசி
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ
ஓதிய குன்றம் கீண்டு குருதி நீர் சொரிவது ஒத்த

#10
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார்
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி முற்றா
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார்

#11
வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும் நடுக்கம் எய்தி
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர்
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல
கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார்

#12
ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர்
ஏறினர் இட்டு நீத்த பைம் கிளிக்கு இரங்குகின்றார்

#13
இ திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும்
மு திறத்து உலகத்தாரும் முறைமுறை விரைவில் மொய்த்தார்
தொத்து உறு மலரும் சாந்தும் சுண்ணமும் இனைய தூவி
வித்தக சேறி என்றார் வீரனும் விரைவது ஆனான்

#14
குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல்
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்

#15
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம்
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும்
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ

#16
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை
தோள் விசை துணைகள் பொங்க கழுத்தினை சுருக்கி தூண்டும்
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம்
மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன்

#17
ஆயவன் எழுதலோடும் அரும் பணை மரங்கள் யாவும்
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம்
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும்
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான

#18
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும்
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும்
விசை இலவாக தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த

#19
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம்
போவது புரியும் வீரன் விசையினால் புணரி போர்க்க
தூவின கீழும் மேலும் தூர்த்தன சுருதி அன்ன
சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ

#20
கீண்டது வேலை நல் நீர் கீழ் உற கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன
ஆண்தகை அதனை நோக்கி அரவினுக்கு அரசன் வாழ்வும்
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான்

#21
வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையை கிழிய வீசி
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர்
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின்
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார்

#22
துள்ளிய மகர மீன்கள் துடிப்பு_அற சுறவு தூங்க
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய ஊழி காலின்
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ

#23
இடுக்கு உறு பொருள்கள் என் ஆம் எண் திசை சுமந்த யானை
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம்
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள்
முடுக்குற கடலில் செல்லும் முத்தலை கிரியும் ஒத்தான்

#24
கொட்புறு புரவி தெய்வ கூர் நுதி குலிசத்தாற்கும்
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும்
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை
புட்பக விமானம்தான் அ இலங்கை-மேல் போவது ஒத்தான்

#25
விண்ணவர் ஏத்த வேத முனிவரர் வியந்து வாழ்த்த
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான்

#26
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர்
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல்
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான்

#27
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம்
குழைவு உற திசைகள் கீற மேருவும் குலுங்க கோட்டின்
முழை உடை கிரிகள் முற்ற முடிக்குவான் முடிவு காலத்து
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான்

#28
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும்
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான்

#29
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும்
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான்

#30
கேழ் உலாம் முழுநிலாவின் கிளர் ஒளி இருளை கீற
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான்
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும்
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான்

#31
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட
குடல் எலாம் அவுணர் சிந்த குன்று என குறித்து நின்ற
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ
கடல் எலாம் கலங்க தாவும் கலுழனும் அனையன் ஆனான்

#32
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர்
மேலின் மேல் நின்ற-காறும் சென்ற கூலத்தன் விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான்

#33
வெளித்து பின் வேலை தாவும் வீரன் வால் வேதம் ஏய்க்கும்
அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும்
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே

#34
மேருவை முழுதும் சூழ்ந்து மீதுற்ற வேக நாகம்
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால்

#35
குன்றோடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சீயம்
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும்
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள் விசையின் தம்மின்
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ

#36
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால்
விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர்
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே

#37
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்ன
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும்
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம்

#38
பொரு_அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது வேகம்
தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும்
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும்

#39
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும்
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே

#40
மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப
ஓயா அருவி திரள் உத்தரியத்தை ஒப்ப
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான்
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி

#41
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி
கொழுந்து ஓடி நின்ற கொழும் குன்றை வியந்து நோக்கி
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான்

#42
நீர் மேல் படரா நெடும் குன்று நிமிர்ந்து நிற்றல்
சீர் மேல் படராது என சிந்தை உணர்ந்து செல்வான்
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி விண்ணோர்
ஊர் மேல் படர கடிது உம்பரின் மீது உயர்ந்தான்

#43
உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம்
சிந்தாகுலம் உற்றது பின்னரும் தீர்வு இல் அன்பால்
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே

#44
வேற்று புலத்தோன் அலென் ஐய விலங்கல் எல்லாம்
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச
வீற்று பட நூறிய வேலையின் வேலை உய்த்து
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த

#45
அன்னான் அரும் காதலன் ஆதலின் அன்பு தூண்ட
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய்

#46
கார் மேக வண்ணன் பணி பூண்டனன் காலின் மைந்தன்
தேர்வான் வருகின்றனன் சீதையை தேவர் உய்ய
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய்

#47
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி
இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால்
பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான்

#48
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி
விரை தாமரை வாள் முகம் விட்டு விளங்க வீரன்
சிரித்தான் அளவே சிறிது அ திசை செல்ல நோக்கி
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான்

#49
வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல்
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ

#50
முன்பில் சிறந்தார் இடை உள்ளவர் காதல் முற்ற
பின்பில் சிறந்தார் குணம் நன்று இது பெற்ற யாக்கைக்கு
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்-கண் உண்டே

#51
ஈண்டே கடிது ஏகி இலங்கை விலங்கல் எய்தி
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே
மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை
பூண்டான் அவன் கட்புலம் பின்பட முன்பு போனான்

#52
நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என்
தேர் மேல் குதிகொண்டவன் இ திறன் சிந்தை-செய்தான்
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான்

#53
மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி
தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள்

#54
பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி
கோள் வாய் அரியின் குலத்தாய் கொடும் கூற்றும் உட்க
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள்

#55
தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய்
ஆயே விரைவுற்று எனை அண்மினை வண்மையாள
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள்

#56
பெண்பால் ஒரு நீ பசி பீழை ஒறுக்க நொந்தாய்
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல்
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால்
நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள்

#57
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள்
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய்
சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான்

#58
அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து
விக்காது விழுங்க நின்றாள் அது நோக்கி வீரன்
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான்

#59
நீண்டான் உடனே சுருங்கா நிமிர் வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர்
மீண்டான் அது கண்டனர் விண் உறைவோர்கள் எம்மை
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார்

#60
மின்-மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ
என் மேல் முடியாதன என்று இனிது ஏத்தி நின்றாள்
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து போனான்

#61
கீதங்கள் இசைத்தனர் கின்னரர் கீதம் நின்ற
பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க
பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன பூசுரேசர்
வேதங்கள் இயம்பினர் தென்றல் விருந்து செய்ய

#62
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும்
கந்தார வீணை களி செம் செவி காது நுங்க

#63
வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ
பொங்கு ஆர்கலி புனல் தர பொலிவதே போல்
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள்
அங்காரதாரை பெரிது ஆலாலம் அன்னாள்

#64
காத கடும் குறி கணத்து இறுதி கண்ணாள்
பாத சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப
வேத கொழும் சுடரை நாடி நெடு மேல்_நாள்
ஓதத்தின் ஓடும் மதுகைடவரை ஒத்தாள்

#65
துண்ட பிறை துணை என சுடர் எயிற்றான்
கண்டத்திடை கறை உடை கடவுள் கைம்மா
முண்டத்து உரித்த உரியால் முளரிவந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்து அனைய வாயாள்

#66
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன்
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருளோடும்
தின்றாள் ஒருத்தி இவள் என்பது தெரிந்தான்

#67
பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும்
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான்

#68
சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும்
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய்
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான்

#69
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால்
விண்பாலவர்க்கும் உயிர் வீடுறுதல் மெய்யே
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும்
உண்பேன் ஒருத்தி அது ஒழிப்பது அரிது என்றாள்

#70
திறந்தாள் எயிற்றை அவள் அண்ணல் இடை சென்றான்
அறம்தான் அரற்றியது அயர்ந்து அமரர் எய்த்தார்
இறந்தான் என கொடு ஓர் இமைப்பு அதனின் முன்னம்
பிறந்தான் என பெரிய கோள் அரி பெயர்ந்தான்

#71
கள் வாய் அரக்கி கதற குடர் கணத்தில்
கொள் வார் தட கையன் விசும்பின் மிசை கொண்டான்
முள் வாய் பொருப்பின் முழை எய்தி மிக நொய்தின்
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான்

#72
சாகா வர தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான்
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான்

#73
ஆர்த்தார்கள் வானவர்கள் தானவர் அழுங்கா
வேர்த்தார் விரிஞ்சனும் வியந்து மலர் வெள்ளம்
தூர்த்தான் அகன் கயிலையில் தொலைவு இலோனும்
பார்த்தான் முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார்

#74
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும்
கீண்டான் இமைப்பினிடை மேரு கிரி கீழா
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான்

#75
சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ
முற்றா முடிந்த நெடு வானினிடை முந்நீரில்
தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை
உற்றால் விலங்கும் இடையூறு என உணர்ந்தான்

#76
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம்
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான்

#77
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி
விசும்பிடை செல்லும் வீரன் விலங்கி வேறு இலங்கை மூதூர்
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான்

#78
மேக்குற செல்வோன் பாய வேலை-மேல் இலங்கை வெற்பு
நூக்குறுத்து அங்கும் இங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை
போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை
தாக்குற தகர்ந்து சாயும் கலம் என தக்கது அன்றே

#79
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான்

2 ஊர் தேடு படலம்


#1
பொன் கொண்டு இழைத்த மணியை கொடு பொதிந்த
மின் கொண்டு அமைத்த வெயிலை கொடு சமைத்த
என் கொண்டு இயற்றிய என தெரிகிலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்

#2
நாகாலயங்களொடு நாகர் உலகும் தம்
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும்
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற

#3
மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி
மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி
பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம்

#4
பஞ்சி ஊட்டிய பரட்டு இசை கிண்கிணி பதும
செம் செவி செழும் பவளத்தின் கொழும் சுடர் சிதறி
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ

#5
நான நாள் மலர் கற்பக நறு விரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை
தேன் அவாம் விரை செழும் கழுநீர் துயில்-செய்ய
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப

#6
குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய
மழலை மென் மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல் நெடும் தட மணி சுவர்-தொறும் துவன்றும்
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய

#7
இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும்
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை
நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும்

#8
மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின்
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால்
திணியும் நல் நெடும் திருநகர் தெய்வ மா தச்சன்
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அ தொழில்கள்

#9
மரம் அடங்கலும் கற்பகம் மனை எலாம் கனகம்
அர_மடந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு அமரர்
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால்

#10
தேவர் என்பவர் யாரும் இ திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர் என்னின்
மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும்
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ

#11
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய்
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க
ஆரியம் தனி ஐம் கர களிறும் ஓர் ஆழி
சூரியன் தனி தேவருமே இ நகர் தொகாத

#12
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும்
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர்
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி
ஏழும் அல்லன ஈண்டு உள குதிரைகள் எல்லாம்

#13
தழங்கு பேரியின் அரவமும் தகை நெடும் களிறு
முழங்கும் ஓதையும் மூரி நீர் முழக்கொடு முழங்கும்
கொழும் குழல் புது குதலையர் நூபுர குரலும்
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும்

#14
மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த
குரகத தடம் தேர்_இனம்-அவை பயில் கொட்டில்
இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இ நகர்க்கு

#15
திருகு வெம் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை
பருகும் இ நகர் துன் ஒளி பாய்தலின் பசும்பொன்
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி

#16
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும்
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும் அ வேலை

#17
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ விரிஞ்சன்
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ அறியாத
தொய்யல் சிந்தையேம் யாவரை எவ்வகை துதிப்பேம்

#18
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும்
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி
ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்
மேரு எங்ஙனம் விளர்க்குமோ முழுமுற்றும் வெள்கி

#19
முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி
பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார்
கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல்
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார்

#20
தீய செய்குநர் தேவரால் அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான்

#21
கறங்கு கால் புகா கதிரவன் ஒளி புகா மறலி
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின்

#22
கொண்ட வான் திரை குரை கடல் இடையதாய் குடுமி
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற எழிலால்
பண்டு அரா_அணை பள்ளியான் உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்து இருந்தது இ அணி நகர் அமைதி

#23
பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால்
ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி
கூடுவாரிடை இன்_இயம் கொட்டுவார் முட்டு_இல்
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார்

#24
வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால்
ஏனை நாகியர் அரு நட கிரியை ஆய்ந்திருப்பார்

#25
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர்
விழையும் போகமே இங்கு இது வாய்கொடு விளம்பின்
குழையும் நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும்

#26
பொன்னின் மால் வரை-மேல் மணி பொழிந்தன பொருவ
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க
பன்னி நாள் பல பணி உழந்து அரிதினின் படைத்தான்
சொன்ன வானவர் தச்சன் ஆம் இ நகர் துதிப்பான்

#27
மகர வீணையின் மந்தர கீதத்தின் மறைந்த
சகர வேலையின் ஆர் கலி திசைமுகம் தடவும்
சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும்

#28
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன்
துளிக்கும் கற்பக தண் நறும் சோலைகள்-தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன்

#29
தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செ வாய்
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல்
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து
ஆறல் மாந்தினர்அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர்

#30
எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில்
கறுத்த மேனியில் பொலிந்தன ஊடலில் கனன்று
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி
குறித்த கோலங்கள் பொலிந்தில அரக்கர்-தம் குஞ்சி

#31
விளரி சொல்லியர் வாயினால் வேலையுள் மிடைந்த
பவள காடு என பொலிந்தது படை நெடும் கண்ணால்
குவளை கோட்டகம் கடுத்தது குளிர் முக குழுவால்
முளரி கானமும் ஒத்தது முழங்கு நீர் இலங்கை

#32
எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய் இன்று-காறும்
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால்
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா

#33
காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும்
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர்
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல்

#34
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும்
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார்
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால் பஞ்சி குன்றா
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ

#35
கள் உற கனிந்த பங்கி அரக்கரை கடுத்த காதல்
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ
வெள் உறுப்பு எயிற்ற செய்ய தலையன கரிய மெய்ய
உள் உற களித்த குன்றின் உயர்ச்சிய ஓடை யானை

#36
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம்
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர்
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம் வெள்குகின்றார்
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார்

#37
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே
கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும் இ வீதி எல்லாம்

#38
வடங்களும் குழையும் பூணும் மாலையும் சாந்தும் யானை
கடங்களும் கலின மா விலாழியும் கணக்கு_இலாத
இடங்களின் இடங்கள்-தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம்
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ

#39
வில் படை பெரிது என்கேனோ வேல் படை மிகும் என்கேனோ
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ
கற்பணம் தண்டு பிண்டிபாலம் என்று இனைய காந்தும்
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில்

#40
என்றனன் இலங்கை நோக்கி இனையன பலவும் எண்ணி
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல்
குன்றிடை இருந்தான் வெய்யோன் குட கடல் குளிப்பது ஆனான்

#41
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான்
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான்
தீவினை என இருள் செறிந்தது எங்குமே

#42
கரித்த மூன்று எயில் உடை கணிச்சி வானவன்
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனனாம் என பொலியும் பொற்பதே

#43
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம்
பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம்
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே

#44
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும்
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே

#45
அ வழி அ இருள் பரந்த ஆயிடை
எ வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்
செ வழி மந்திர திசையர் ஆகையால்
வெவ் வழி இருள் தர மிதித்து மீச்செல்வார்

#46
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார் எழில்
சந்திரன் உலகினை சார்குவார் சலத்து
அந்தகன் உறையுளை அணுகுவார் அயில்
வெம் தொழில் அரக்கனது ஏவல் மேயினார்

#47
பொன்னகர் மடந்தையர் விஞ்சை பூவையர்
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர்
முன்னின பணி முறை மாறி முந்துவார்
மின் இனம் மிடைந்து என விசும்பின் மீச்செல்வார்

#48
தேவரும் அவுணரும் செம் கண் நாகரும்
மேவரும் இயக்கரும் விஞ்சை வேந்தரும்
யாவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார்
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார்

#49
சித்திர பத்தியின் தேவர் சென்றனர்
இத்துணை தாழ்த்தனம் முனியும் என்று தம்
முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும்
உத்தரீயங்களும் சரிய ஓடுவார்

#50
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய்
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர்
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே

#51
வந்தனன் இராகவன் தூதன் வாழ்ந்தனன்
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா
அந்தம்_இல் கீழ் திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் என பொலிந்து தோன்றிற்றே

#52
கற்றை வெண் கவரி போல் கடலின் வெண் திரை
சுற்றும் நின்று அலமர பொலிந்து தோன்றிற்றால்
இற்றது என் பகை என எழுந்த இந்திரன்
கொற்ற வெண்குடை என குளிர் வெண் திங்களே

#53
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை
முரிந்து உயர் பாற்கடல் முகந்து மூரி வான்
சொரிந்ததே ஆம் என துள்ளும் மீனொடும்
விரிந்தது வெண் நிலா மேலும் கீழுமே

#54
அரும் தவன் சுரபியே ஆதி வான் மிசை
விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே

#55
எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர்
விண்ணிடை தொத்தின போன்ற மீன் எலாம்

#56
எல்லியின் நிமிர் இருள் குறையும் அ இருள்
கல்லிய நிலவின் வெண் முறியும் கவ்வின
புல்லிய பகை என பொருவ போன்றன
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம்

#57
வீசுறு பசும் கதிர் கற்றை வெண் நிலா
ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே

#58
இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர்
பகழியின் செலவு என அனுமன் பற்றினால்
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை அன்னவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே

#59
அ வழி அனுமனும் அணுகலாம் வகை
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான்
செ வழி ஒதுங்கினன் தேவர் ஏத்த போய்
வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான்

#60
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும்
ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி
கேழ் அரிய பொன் கொடு சமைத்த கிளர் வெள்ளத்து
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான்

#61
கலங்கல்_இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால்
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே
விலங்கி அகல்கின்றன விரைந்து என வியந்தான்

#62
தெவ் அளவு இலாத இறை தேறல் அரிது அம்மா
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான்

#63
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர்
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணை
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான்

#64
மேருவை நிறுத்தி வெளி செய்தது-கொல் விண்ணோர்
ஊர் புக அமைந்த படுகால்-கொல் உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான்

#65
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான்

#66
வெள்ளம் ஒரு நூறொடு இருநூறும் மிடை வீரர்
கள்ள வினை வெவ் வலி அரக்கர் இரு கையும்
முள் எயிறும் வாளும் உற முன்னம் முறை நின்றார்
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான்

#67
சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி
கோல் கணையம் நேமி குலிசம் சுரிகை குந்தம்
பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார்

#68
அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் வசிக்கும்
வெம் குசைய பாசம் முதல் வெய்ய பயில் கையர்
செம் குருதி அன்ன செறி குஞ்சியர் சினத்தோர்
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார்

#69
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும்
விளக்கு_இனம் இருட்டினை விழுங்கி ஒளி கால
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான்

#70
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே
கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார்
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும்
வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் என்றான்

#71
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல்
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின்
அரும் கடன் முடிப்பது அரிது ஆம் அமர் கிடைக்கின்
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள் என நினைத்தான்

#72
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர்
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால்
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான்

#73
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர்
வாழ்நாள் அன்னாள் போவதின் மேலே வழி நின்றாள்
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள்

#74
எட்டு தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும்
தொட்டு பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள்
முட்டி போரில் மூ_உலகத்தை முதலோடும்
கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள்

#75
பாராநின்றாள் எண் திசை-தோறும் பலர் அப்பால்
வாராநின்றாரோ என மாரி மழையே போல்
ஆராநின்றாள் நூபுரம் அச்சம் தரு தாளாள்
வேரா நின்றாள் மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள்

#76
வேல் வாள் சூலம் வெம் கதை பாசம் விளி சங்கம்
கோல் வாள் சாபம் கொண்ட கரத்தாள் வட குன்றம்
போல்வாள் திங்கள்_போழின் எயிற்றாள் புகை வாயில்
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள்

#77
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள்
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும்
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்

#78
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள் தெளி நூல் யாழ்
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள் அறை தும்பி
கந்தாரத்தின் இன் இசை பாடி களி கூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள்

#79
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன்
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான்

#80
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய்
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம்
பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள்

#81
களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம் மூள
விளியா நின்றே நீதி நலத்தின் வினை ஓர்வான்
அளியால் இ ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான்

#82
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம்
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால்
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள்

#83
நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான்
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர்
புக்கால் அன்றி போகலென் என்றான் புகழ் கொண்டான்

#84
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன்
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான்
நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள்

#85
கொல்வாம் அன்றேல் கோளுறும் இ ஊர் எனல் கொண்டாள்
வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும்
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில்
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள்

#86
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை
கடித்தான் நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல்
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண்ணென எண்ணம் பிழையாதான்

#87
இற்று சூலம் நீறு எழல் காணா எரி ஒப்பாள்
மற்றும் தெய்வ பல் படை கொண்டே மலைவாளை
உற்று கையால் ஆயுதம் எல்லாம் ஒழியாமல்
பற்றி கொள்ளா விண்ணில் எறிந்தான் பழி இல்லான்

#88
வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல்
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள்
கழங்கும் பந்தும் குன்று-கொடு ஆடும் கரம் ஓச்சி
தழங்கும் செம் தீ சிந்த அடித்தாள் தகவு இல்லாள்

#89
அடியா-முன்னம் அம் கை அனைத்தும் ஒரு கையால்
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும்
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள்

#90
விழுந்தாள் நொந்தாள் வெம் குருதி செம்புனல் வெள்ளத்து
அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி
எழுந்தாள் யாரும் யாரையும் எல்லா உலகத்தும்
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று இவை சொன்னாள்

#91
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக
எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர்
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து இந்த சிறுமை செய்தேன்
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள்

#92
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம்
முத்தனை வினவினேற்கு முரண் வலி குரங்கு ஒன்று உன்னை
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான்

#93
அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும்
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள்

#94
வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளைவும் அஃது என்று
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ
பூரியர் இலங்கை மூதூர் பொன் மதில் தாவி புக்கான்
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான்

#95
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன்
தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான்

#96
மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான்
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும்
மின்மினி அல்லனோ அ வெயில் கதிர் வேந்தன் அம்மா

#97
பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன் மதில் நடுவண் பூத்து
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம்

#98
என்றனன் இயம்பி வீதி ஏகுதல் இழுக்கம் என்னா
தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார
சென்றனன் என்ப மன்னோ தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான்

#99
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும்
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும்
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான்
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான்

#100
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல்
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல்

#101
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை
காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர்

#102
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர்
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை

#103
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ்
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல்
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள்
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை

#104
சந்த பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில் தம்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை

#105
திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம
அருத்திய பயிர்க்கு நீர் போல் அரு நறவு அருந்துவாரை

#106
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள
தூதுளம் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த
காதல் அம் கள் உண்டார் போல் முறைமுறை களிக்கின்றாரை

#107
வில் படர் பவள பாதத்து அலத்தகம் எழுதி மேனி
பொற்பு அளவு இல்லா வாச புனை நறும் கலவை பூசி
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன்
கற்பகம் கொடுக்க வாங்கி கலன் தெரிந்து அணிகின்றாரை

#108
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார்
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர சிலம்பு விம்மி
ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை

#109
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி
துள் இடை புருவம் கோட்டி துடிப்ப வேர் பொடிப்ப தூய
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி
கள்ளிடை தோன்ற நோக்கி கணவரை கனல்கின்றாரை

#110
ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுத வாரி
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய்
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை

#111
நலன் உறு கணவர்-தம்மை நவை உற பிரிந்து விம்மும்
முலை உறு கலவை தீய முள் இலா முளரி செம் கேழ்
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை

#112
ஏதி அம் கொழுநர் தம்-பால் எய்திய காதலாலே
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார்
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை

#113
சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப இல் உறை தெய்வம் போற்றி
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி
மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை

#114
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய யாணர்
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி
முழை தொடர் சங்கு பேரி முகில் என முழங்க மூரி
மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை

#115
பள்ளியில் மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி
ஒள்ளிய கலவி பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்
மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை

#116
ஓவியம் அனைய மாதர் ஊடினர் உணர்வோடு உள்ளம்
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய யாணர்
தூவி அம் பேடை என்ன மின் இடை துவள ஏகி
ஆவியும் தாமுமே புக்கு அரும் கதவு அடைக்கின்றாரை

#117
கின்னர மிதுனம் பாட கிளர் மழை கிழித்து தோன்றும்
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து
பன்னக மகளிர் சுற்றி பலாண்டு இசை பரவ பண்ணை
பொன் நகர் வீதி-தோறும் புது மனை புகுகின்றாரை

#118
கோவையும் குழையும் மின்ன கொண்டலின் முரசம் ஆர்ப்ப
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப
பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு
பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை

#119
இயக்கியர் அரக்கிமார்கள் நாகியர் எஞ்சு_இல் விஞ்சை
முயல் கறை இலாத திங்கள் முகத்தியர் முதலினோரை
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும்
கயக்கம்_இல் துயிற்சி கும்பகருணனை கண்ணின் கண்டான்

#120
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின்
வாசவன் மணி முடி கவித்த மண்டபம்
ஏசுற விளங்கியது இருளை எண் வகை
ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது

#121
அன்னதன் நடுவண் ஓர் அமளி மீமிசை
பன்னக அரசு என பரவைதான் என
துன் இருள் ஒருவழி தொக்கது ஆம் என
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே

#122
முன்னிய கனை கடல் முழுகி மூ-வகை
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு
மன் நெடும் கற்பக வனத்து வைகிய
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே

#123
வானவர் மகளிர் கால் வருட மா மதி
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர்
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர்
தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றமே

#124
மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால்
நாசியின் அளவையின் நடத்த கண்டவன்
கூசினன் குதித்தனன் விதிர்த்த கையினான்

#125
பூழியின் தொகை விசும்பு அணவ போய் புகும்
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே

#126
பகை என மதியினை பகுத்து பாடு உற
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்பு பொங்கிய
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே

#127
தடை புகு மந்திரம் தகைந்த நாகம் போல்
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான்
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல்
புடை பெயரா நெடும் கடலும் போலவே

#128
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர்
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான்
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான்
ஏவனோ இவன் மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான்

#129
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த
இறுகு திண் புயம் இருபதும் இவற்கு இலை என்னா
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான்

#130
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை
கவித்து நீங்கிட சில பகல் என்பது கருதா
செவிக்கு தேன் என இராகவன் புகழினை திருத்தும்
கவிக்கு நாயகன் அனையவன் உறையுளை கடந்தான்

#131
மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர்
ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள்
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல் பலவும்
நாடி ஏகினன் இராகவன் புகழ் எனும் நலத்தான்

#132
மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில்
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும்
நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்
அணுவில் மேருவில் ஆழியான் என செலும் அனுமன்

#133
ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான்
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான்

#134
பளிக்கு வேதிகை பவளத்தின் கூடத்து பசுந்தேன்
துளிக்கும் கற்பக பந்தரில் கருநிறத்தோர்-பால்
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான்

#135
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான்
குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன் என கொண்டான்
செற்றம் நீங்கிய மனத்தினன் ஒரு சிறை சென்றான்
பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடை புக்கான்

#136
முந்து அரம்பையர் முதலினர் முழுமதி முகத்து
சிந்துரம் பயில் வாய்ச்சியர் பலரையும் தெரிந்து
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான்
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான்

#137
ஏதி ஏந்திய தட கையர் பிறை எயிறு இலங்க
மூதுரை பெரும் கதைகளும் பிதிர்களும் மொழிவார்
ஓதில் ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர்
காது வெம் சின களியினர் காவலை கடந்தான்

#138
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறு-வகை முகமும்
திக்கு நோக்கிய புயங்களும் சில கரந்தனையான்
ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானை
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான்

#139
வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன்
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பல நாள்
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான்

#140
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் என புகறல்
சிவனை நான்முகத்து ஒருவனை திரு நெடுமால் ஆம்
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ

#141
என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா
துன்று மாளிகை ஒளிகள் துரிசு_அற துருவி
சென்று தேடினன் இந்திரசித்தினை தீர்ந்தான்

#142
அக்கன் மாளிகை கடந்து போய் மேல் அதிகாயன்
தொக்க கோயிலும் தம்பியர் இல்லமும் துருவி
தக்க மந்திர தலைவர் மா மனைகளும் தாவி
புக்கு நீங்கினன் இராகவன் சரம் என புகழோன்

#143
இன்னர் ஆம் இரும் பெரும் படை தலைவர்கள் இருக்கை
பொன்னின் மாளிகை ஆயிர_கோடியும் புக்கான்
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான்
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியை தொடர்ந்தான்

#144
தனி கட களிறு என ஒரு துணை இலான் தாய
பனி கடல் பெரும் கடவுள் தன் பரிபவம் துடைப்பான்
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான்
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியை கண்டான்

#145
பாழி நல் நெடும் கிடங்கு என பகர்வரேல் பல பேர்
ஊழிக்காலம் நின்று உலகு எலாம் கல்லினும் உலவாது
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள்
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான்

#146
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான்
தாய வேலையின் இரு மடி விசை கொடு தாவி
போய காலத்தும் போக்கு அரிது என்பது புகன்றான்
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான்

#147
மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழ
தூக்கினால் அன்ன தோயத்தது ஆய் துயர்
ஆக்கினான் படை அன்ன அகழியை
வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ

#148
ஆனை மும் மதமும் பரி ஆழியும்
மான மங்கையர் குங்கும வாரியும்
நானம் ஆர்ந்த நறை குழல் ஆவியும்
தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால்

#149
உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்
கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல்
சென்னம் காகம் குணாலம் சிலம்புமே

#150
நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய
இலக்கண களிறோடு இள மெல் நடை
குல பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால்

#151
நறவு நாறிய நாள் நறும் தாமரை
துறைகள்-தோறும் முகிழ்த்தன தோன்றுமால்
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு
உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ

#152
பளிங்கு செற்றி குயிற்றிய பாய் ஒளி
விளிம்பும் வெள்ளமும் மெய் தெரியாது மேல்
தெளிந்த சிந்தையரும் சிறியார்களோடு
அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ

#153
நீலமே முதல் நல் மணி நித்திலம்
மேல கீழ பல் வேறு ஒளி வீசலால்
பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ என காட்டுமே

#154
அன்ன வேலை அகழியை ஆர்கலி
என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட
துன்ன_அரும் கடி மா நகர் துன்னினான்
பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம்

#155
கரிய நாழிகை பாதியில் காலனும்
வெருவி ஓடும் அரக்கர்-தம் வெம் பதி
ஒருவனே ஒரு பன்னிரு யோசனை
தெருவு மும்மை நூறு_ஆயிரம் தேடினான்

#156
வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும்
பாரியும் அடங்கின அடங்கியது பாடல்
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மை
தூரியம் அடங்கின தொடங்கியது உறக்கம்

#157
இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும்
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண்
பிறங்கு இணர் நறும் குழலர் அன்பர் பிரியாதோர்
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார்

#158
வடம் தரு தடம் கொள் புய மைந்தர் கலவி போர்
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில் போலும்
மடந்தையர் தடம் தன முகட்டிடை மயங்கி
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம்

#159
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்
தூம நறையின் துறை பயின்றிலர் துயின்றார்

#160
பண் இமை அடைத்த பல கள்_பொருநர் பாடல்
விண் இமை அடைத்து என விளைந்தது இருள் வீணை
தண் இமை அடைத்தன தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம்

#161
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம்
எரிந்தன பிரிந்தவர்-தம் எஞ்சு தனி நெஞ்சம்

#162
இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கை
துளக்கியது தென்றல் பகை சோர உயர்வோரின்
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா
விளக்கு ஒளி என சுழல்வ மெல்லியர்கள் மேனி

#163
நித்தம் நியம தொழிலர் ஆய் நிறையும் ஞானத்து
உத்தமர் உறங்கினர்கள் யோகியர் துயின்றார்
மத்த மத வெம் களிறு உறங்கின மயங்கும்
பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம்

#164
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும்
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவி போய்
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் வினை பகையை வென்றான்

#165
போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களா
தாரகை குழுவின் தழுவி தொடர்
நாரியர்க்கு உறைவு ஆம் இடம் நண்ணினான்

#166
முயல் கரும் கறை நீங்கிய மொய் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினார்
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான்

#167
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும்
இழைந்த நூலினும் இன் இளம்_காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான்

#168
அத்திரம் புரை யானை அரக்கன்-மேல்
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர்
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற
சித்திரங்கள் என இருந்தார் சிலர்

#169
அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து
உள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர்

#170
பழுது_இல் மன்மதன் எய் கணை பல் முறை
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர்
அழுது செய்வது என் ஆணை அரக்கனை
எழுதலாம்-கொல் என்று எண்ணுகின்றார் சிலர்

#171
ஆவது ஒன்று அருளாய் எனது ஆவியை
கூவுகின்றிலை கூறலை சென்று எனா
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற
பூவையோடும் புலம்புகின்றார் சிலர்

#172
ஈர தென்றல் இழுக மெலிந்து தம்
பார கொங்கையை பார்த்தனர் பாதகன்
வீர தோள்களின் வீக்கம் நினைந்து உயிர்
சோர சோர துளங்குகின்றார் சிலர்

#173
நக்க செம் மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில் பல் பகல்
ஒக்க ஆசை உலக்க உலந்தவர்
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர்

#174
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளி துயில்
நாளினால் செவியில் புகும் நாம யாழ்
தேளினால் திகைப்பு எய்துகின்றார் சிலர்

#175
கவ்வு தீ கணை மேருவை கால் வளைத்து
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய
செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர்

#176
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
ஆவினான் புகழ் அம் கை நரம்பினால்
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர்

#177
இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய்
அனையவன் குலத்து ஆய் இழையார் இடம்
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான்

#178
எரி சுடர் மணியின் செம் கேழ் இள வெயில் இடைவிடாது
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய்
ஒரு சிறை இருந்து போன உள்ளத்தோடு ஊடுவாரும்

#179
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி
புகை என தும்பி சுற்ற புது மலர் பொங்கு சேக்கை
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி
மிகை ஒடுங்காத காம விம்மலின் வெதும்புவாரும்

#180
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும்

#181
பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி
வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும்

#182
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும்

#183
பன்னக அரசர் செம் கேழ் பணா மணி வலிதின் பற்றி
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை
மன்னவர் முடியும் பூணும் மாலையும் பணையம் ஆக
பொன் அணி பலகை சூது துயில்கிலர் பொருகின்றாரும்

#184
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல்
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண
பொன்னகர் தரள பந்தர் கற்பக பொதும்பர் பொன்_தோள்
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும்

#185
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார்
வீணையும் குழலும் தம்தம் மிடறும் வேற்றுமையின் தீர்ந்த
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும்

#186
தண்டலை வாழை அன்ன குறங்கிடை அல்குல் தட்டில்
கொண்ட பூம் துகிலும் கோவை கலைகளும் சோர கூர்ம் கள்
உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீச குரவையில் குழறுவாரும்

#187
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி
பிச்சரின் பிதற்றி அல்குல் பூம் துகில் கலாபம் பீறி
குச்சரி திறத்தின் ஓசை களம் கொள குழு கொண்டு ஈண்டி
சச்சரி பாணி கொட்டி நிறை தடுமாறுவாரும்

#188
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும்

#189
இ திறத்து அரக்கிமார்கள் ஈர்_இரு கோடி ஈட்டம்
பத்தியர் உறையும் பத்தி படர் நெடும் தெருவும் பார்த்தான்
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான்
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான்

#190
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார்
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி
களம் தவா நெடும் கருவியில் கைகளில் செயிரியர் கலை கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார்

#191
புரியும் நல் நெறி முனிவரும் புலவரும் புகல் இலா பொறைகூர
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு எஞ்ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள்
சொரியும் வெம் கதிர் துணை முலை குவை சுட கொடிகளின் துடிக்கின்றார்

#192
சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை திரிந்து சிந்தனை சிந்த
முறுகு காதலின் வேதனை உழப்பவர் முயங்கிய முலை முன்றில்
இறுகு சாந்தமும் எழுதிய குறிகளும் இன் உயிர் பொறை ஈர
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார்

#193
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம்

#194
கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம்
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான்

#195
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன்
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் காமரம் கனி யாழின்
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற

#196
விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையர் வெகுள்வு உற்றால்
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல்
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும்
பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார்

#197
இன்ன தன்மையின் எரி மணி விளக்கங்கள் எழில் கெட பொலிகின்ற
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான்
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான்

#198
எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும்
பொற்பும் யானும் இ இலங்கையும் அரக்கரும் பொன்றுதும் இன்று என்றான்

#199
மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின்
தான் இயக்கியோ தானவர் தையலோ ஐயுறும் தகை ஆனாள்
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான்

#200
இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை
மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள்
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான்

#201
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகை-தன்னில்
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான்

#202
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர்
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும்
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடு வானம்
கலந்து இடித்தன வெடித்தன பூரண மங்கல கலசங்கள்

#203
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம்
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா
எ குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும்
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான்

#204
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும்
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில்
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை

#205
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய
முழை கொள் மேருவின் முகட்டிடை கனகனை முருக்கிய முரண் சீயம்
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை

#206
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று
தூய வெண் கவரி திரள் இயக்கிட சுழி படு பசும் காற்றின்
மீய கற்பக தேன் துளி விராயன வீழ்-தொறும் நெடு மேனி
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை

#207
குழந்தை வெண் மதி குடுமியின் நெடு வரை குலுக்கிய குல தோளை
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற
பழம் தழும்பினுக்கு இடைஇடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற

#208
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல்
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை

#209
கொண்ட பேர் ஊக்கம் மூள திசை-தொறும் குறித்து மேல்_நாள்
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும்
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை

#210
வெள்ளி வெண் சேக்கை வெந்து பொறி எழ வெதும்பும் மேனி
புள்ளி வெண் மொக்குள் என்ன பொடித்து வேர் கொதித்து பொங்க
கள் அவிழ் மாலை தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப
ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை

#211
தே இயல் நேமியானின் சிந்தை மெய் திருவின் ஏக
பூ இயல் அமளி மேலா பொய் உறக்கு உறங்குவானை
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின்
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை

#212
மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன்
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை

#213
மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூருமேனும்
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார்
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை

#214
தழுவா நின்ற கரும் கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய்
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர்
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை

#215
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி
மாடு உழுத நறும் கலவை வய களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை

#216
கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ
விண்டன கண்கள் கீண்டு வெடித்தன கீழும் மேலும்
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான்
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி

#217
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம்
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என்
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே

#218
நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான் நன்_நுதலை
பிடித்து வாழ் அரக்கனார் யான் கண்டும் பிழைப்பாரோ
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி
முடித்து இ ஊர் முடித்தால் மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக

#219
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால்
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால்
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான்

#220
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும்
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ
மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறை தெரினும்
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான்

#221
இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக
கற்றை பூம் குழலாளை சிறை வைத்த கண்டகனை
முற்ற போர் முடித்தது ஒரு குரங்கு என்றால் முனை வீரன்
கொற்ற போர் சிலை தொழிற்கு குறை உண்டாம் என குறைந்தான்

#222
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார்
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை பூவை
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்

#223
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா
குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான்
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில்
பொன் துன்னும் மணி பூணாள் இலள் என்ன பொருமுவான்

#224
கொன்றானோ கற்பு அழியா குல மகளை கொடும் தொழிலால்
தின்றானோ எ புறத்தே செறிந்தானோ சிறை சிறியேன்
ஒன்றானும் உணரகிலேன் மீண்டு இனி போய் என் உரைக்கேன்
பொன்றாத பொழுது எனக்கு இ கொடும் துயரம் போகாதால்

#225
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன்
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால்
புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ
விண்டவரோடு உடன் வீயாது யான் வாளா விளிவேனோ

#226
கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால் கனம்_குழையை
விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான்
எண்ணியது முடிக்ககிலேன் இனி முடியாது இருப்பேனோ
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால்

#227
ஏழு_நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இ இலங்கை
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை
ஊழியான் பெரும் தேவி ஒருத்தியுமே யான் காணேன்
ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ

#228
வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக
கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும்
மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ

#229
வானவரே முதலோரை வினவுவெனேல் வல் அரக்கன்
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால்
ஏனையர்கள் எங்கு உரைப்பார் எவ்வண்ணம் தெரிகேனோ
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன்

#230
எருவைக்கு முதல் ஆய சம்பாதி இலங்கையில் அ
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால்
கரு வைக்கும் நெடு நகரை கடலிடையே கரையாதே
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ

#231
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால்
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை
முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான்

#232
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன்
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான்
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான்
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான்

3 காட்சி படலம்


#1
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி
தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை
வீடுவேன் மற்று இ விலங்கல்-மேல் இலங்கையை வீட்டி

#2
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன்
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார்
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த
துன்று_அல் ஓதிதன் நிலை இனி சொல்லுவான் துணிந்தாம்

#3
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள்

#4
துயில் என கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்
வெயிலிடை தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்
மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலி குழாத்து அகப்பட்டது அன்னாள்

#5
விழுதல் விம்முதல் மெய் உற வெதும்புதல் வெருவல்
எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணி
தொழுதல் சோருதல் துளங்குதல் துயர் உழத்து உயிர்த்தல்
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்

#6
தழைத்த பொன் முலை தடம் கடந்து அருவி போய் தாழ
புழைத்த போல நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால்
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணை நெடும் கண்கள்
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள்

#7
அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம்
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள்
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள்

#8
துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை
வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள்

#9
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி
பரிதிவானவன் குலத்தையும் பழியையும் பாரா
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால்
கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்

#10
கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உற கவ்வி
சுமை உடை கற்றை நிலத்து இடை கிடந்த தூ மதியை
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின்
குமையுற திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள்

#11
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள்
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்

#12
கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம் என குழையா
புண் திறந்ததில் எரி நுழைந்தால் என புகைவாள்

#13
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில்
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும்
மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள்

#14
என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ
முன்னை ஊழ்வினை முடிந்ததோ என்று என்று முறையால்
பன்னி வாய் புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள்

#15
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும்
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும்
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும்
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள்

#16
வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணை பகல் வையார்
தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ
தன் குல பொறை தன் பொறை என தணிந்தானோ
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள்

#17
பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி
கொற்ற மா நகர் கொண்டு இறந்தார்களோ குறித்து
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான்
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள்

#18
முரன் என தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர் போல்
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம் என பொருமா
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் என கவல்வாள்

#19
தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர்
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என
மும் மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள்

#20
மெய் திருப்பதம் மேவு என்ற போதினும்
இ திரு துறந்து ஏகு என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்

#21
தேங்கு கங்கை திருமுடி செம் கணான்
வாங்கு கோல வட வரை வார் சிலை
ஏங்கு மாத்திரத்து இற்று இரண்டாய் விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள்

#22
இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய
பன் நலம் பதினாயிரம் படை
கன்னல் மூன்றில் கள பட கால் வளை
வில் நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள்

#23
ஆழ நீர் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்

#24
மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
கைத்தலங்களை கைகளின் நீக்கி வேறு
உய்த்த போது தருப்பையில் ஒண் பதம்
வைத்த வேதிகை செய்தி மனக்கொள்வாள்

#25
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால்
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன்
திரங்கு செம் சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள்

#26
பரித்த செல்வம் ஒழிய படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன்
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை
சிரித்த செய்கை நினைந்து அழு செய்கையாள்

#27
மழுவின் வானினன் மன்னரை மூ_எழு
பொழுதில் நூறி புலவு உறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரி வில்
தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள்

#28
ஏக வாளி அ இந்திரன் காதல் மேல்
போக ஏவி அது கண் பொடித்த நாள்
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள்

#29
வெவ் விராதனை மேவு_அரும் தீவினை
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர்
செவ்விராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள்

#30
இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலின்
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற
பொருந்தலும் துயில் நறை களி பொருந்தினார்

#31
ஆயிடை திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள்-தன்னை நோக்கினாள்
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள்

#32
நலம் துடிக்கின்றதோ நான் செய் தீவினை
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ
பொலம் துடி மருங்குலாய் புருவம் கண் முதல்
வலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன்

#33
முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என்
நனி துடிக்கின்றன ஆய்ந்து நல்குவாய்

#34
மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெற
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே

#35
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால்
எஞ்சல ஈண்டு தாம் இடம் துடிக்குமால்
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள்

#36
என்றலும் திரிசடை இயைந்த சோபனம்
நன்று இது நன்று எனா நயந்த சிந்தையாள்
உன் துணை கணவனை உறுதல் உண்மையால்
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள்

#37
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற
இன் நிற தேன் இசை இனிய நண்பினால்
மின் நிற மருங்குலாய் செவியில் மெல்லென
பொன் நிற தும்பி வந்து ஊதி போயதால்

#38
ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என்
வாயது கேள் என மறித்தும் கூறுவாள்

#39
துயில்_இலை ஆதலின் கனவு தோன்றல
அயில்_விழி அனைய கண் அமைந்து நோக்கினேன்
பயில்வன பழுது இல பழுதின் நாடு என
வெயிலினும் மெய்யன விளம்ப கேட்டியால்

#40
எண்ணெய் பொன் முடி-தொறும் இழுகி ஈறு_இலா
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்-மேல்
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தென் புலம் நவை_இல் கற்பினாய்

#41
மக்களும் சுற்றமும் மற்றுளோர்களும்
புக்கனர் அ புலம் போந்தது இல்லையால்
சிக்கு_அற நோக்கினென் தீய இன்னமும்
மிக்கன கேட்க என விளம்பல் மேயினாள்

#42
ஆண்தகை இராவணன் வளர்க்கும் அ அனல்
ஈண்டில பிறந்தவால் இனம் கொள் செம் சிதல்
தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால் வான ஏறு எறிய கீழை நாள்

#43
பிடி மதம் பிறந்தன பிறங்கு பேரியும்
இடி என முழங்குமால் இரட்டல் இன்றியே
தடி உடை முகில்_குலம் இன்றி தா இல் வான்
வெடிபட அதிருமால் உதிரும் மீன் எலாம்

#44
வில்_பகல் இன்றியே இரவு விண்டு_அற
எல் பகல் எறித்துளது என்ன தோன்றுமால்
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும் புலவு காலுமால்

#45
திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கு எலாம்
எரியுமால் கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியுமால் மங்கல கலசம் சிந்தின
விரியுமால் விளக்கினை விழுங்குமால் இருள்

#46
தோரணம் முறியுமால் துளங்கி சூழி மால்
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறலின் பொங்குமால்

#47
விண் தொடர் மதியினை பிளந்து மீன் எழும்
புண் தொடர் குருதியின் பொழியுமால் மழை
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற

#48
மங்கையர் மங்கல தாலி மற்றையோர்
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே
கொங்கையின் வீழ்ந்தன குறித்த ஆற்றினால்
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால்

#49
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன்
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன
துன்_அரும் சுடர் சுட சுறுக்கொண்டு ஏறிற்றால்
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே

#50
என்றனள் இயம்பி வேறு இன்னும் கேட்டியால்
இன்று இவண் இப்பொழுது இயைந்தது ஓர் கனா
வன் துணை கோளரி இரண்டு மாறு இலா
குன்றிடை உழுவை அம் குழு கொண்டு ஈண்டியே

#51
உரம் பொருத மத கரி உறையும் அ வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால்

#52
ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி செய்யவள்
நாயகன் திருமனை-நின்று நல்_நுதல்
மேயினள் வீடணன் கோயில் மென்_சொலாய்

#53
பொன் மனை புக்க அ பொரு_இல் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள்

#54
இ இடை அண்ணல் அ இராமன் ஏவிய
வெவ் விடை அனைய போர் வீர தூதனும்
அ இடை எய்தினன் அரிதின் நோக்குவான்
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான்

#55
அ-வயின் அரக்கியர் அறிவுற்று அம்மவோ
செவ்வை இல் துயில் நமை செகுத்தது ஈது எனா
எ-வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார்
வெவ் அயில் மழு எழு சூல வெம் கையார்

#56
எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர்
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர்
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர்
துண்ணென துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார்

#57
ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும்
நீ அனையவர் முகம் நோக்கி தேம்பினாள்
நாயகன் தூதனும் விரைவில் நண்ணினான்
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான்

#58
அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர்
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர்
இருக்குநர் பலர் இதற்கு ஏது என் எனா
பொருக்கென அவரிடை பொருந்த நோக்கினான்

#59
விரி மழை குலம் கிழித்து ஒளிரும் மின் என
கரு நிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குரு நிறத்து ஒரு தனி கொண்டல் ஊழியான்
இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை

#60
கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள்
மட கொடி சீதையாம் மாதரே-கொலாம்
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும்
தடத்திடை இருந்தது ஓர் அன்ன தன்மையாள்

#61
எள் அரும் உருவின் அ இலக்கணங்களும்
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில
கள்ள வாள் அரக்கன் அ கமலக்கண்ணனார்
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா

#62
மூ-வகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்
ஆவதே ஐயம் இல் அரவின் நீங்கிய
தேவனே அவன் இவள் கமல_செல்வியே

#63
வீடினது_அன்று அறன் யானும் வீகலேன்
தேடினென் கண்டனென் தேவியே எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகை தேன் உண்டான்

#64
மாசுண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர்
தேசுண்ட திங்களும் என்ன தேய்ந்துளாள்
காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ

#65
புனை கழல் இராகவன் பொன் புயத்தையோ
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும்
சனகர்-தம் குலத்தையோ யாதை சாற்றுகேன்

#66
தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால்
யாவது இங்கு இனி செயல் அரியது எம்பிராற்கு
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ

#67
கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின்
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள
ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன்
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம்

#68
வெம் கனல் முழுகியும் புனலுள் வீக்கியும்
நுங்குவ அருந்துவ நீக்கி நோற்பவர்
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ

#69
பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல்
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றில அவன் கமலக்கண்களே

#70
முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார்
இனியவள்தான் அலாது யாரும் இல்லையால்
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம்

#71
தருமமே காத்ததோ சனகன் நல் வினை
கருமமே காத்ததோ கற்பின் காவலோ
அருமையே அருமையே யார் இது ஆற்றுவார்
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கல்-பாலதோ

#72
செல்வமோ அது அவர் தீமையோ இது
அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார்
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால்

#73
என்று இவை இனையன எண்ணி வண்ண வான்
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண்
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின்
துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான்

#74
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும்
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான்

#75
உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவ
செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல அரம்பையர் குழாம் புடை சுற்ற
கருப்புர சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமளகந்தம்
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப

#76
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்ப கிண்கிணி கலையொடும் கலிப்ப
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர

#77
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால்
இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப

#78
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ
சூல் நிற கொண்மூ கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க

#79
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள்
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ
கேள்-தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முக_மலர் இரவினும் கிளர

#80
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ
மின் நிற கதிரின் சுற்றிய பசும்பொன் விரல்-தலை அவிர் ஒளி காசின்
கல் நிற கற்றை நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின

#81
சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த
பொன் நெடுவரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடைஇடை பொலிய
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர்
பன்னிருவரினும் இருவரை தவிர்வுற்று உதித்தது ஓர் படி ஒளி பரப்ப

#82
பயில் எயிற்று இரட்டை பணை மருப்பு ஒடிய படியினில் பரிபவம் சுமந்த
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச

#83
அம் கயல் கரும் கண் இயக்கியர் துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம்
குங்கும கொம்மை குவி முலை கனிவாய் கோகிலம் துயர்ந்த மென் குதலை
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க

#84
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர
இளையவர் மிடறும் இ நிலை இசைப்ப கின்னரர் முறை நிறுத்து எடுத்த
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப

#85
அன்ன பூம் சதுக்கம் சாமரை உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண்
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப

#86
தந்திரி நெறியில் தாக்கு உறு கருவி தூக்கினர் எழுவிய சதியின்
முந்துறு குணிலோடு இயைவு உறு குறட்டில் சில்லரி பாண்டிலில் முறையின்
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல்
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட

#87
அந்தியில் அநங்கன் அழல்பட துரந்த அயில் முக பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன்
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப

#88
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர்
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய

#89
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும்
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப
வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க

#90
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல

#91
கேடகத்தோடு மழு எழு சூலம் அங்குசம் கப்பணம் கிடுகோடு
ஆடக சுடர் வாள் அயில் சிலை குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும்
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும்
குடக தட கை சுடு சினத்து அடு போர் அரக்கியர் தலை-தொறும் சுமப்ப

#92
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி

#93
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே

#94
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண்
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள்

#95
கூசி ஆவி குலைவுறுவாளையும்
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்
காசு இல் கண் இணை சான்று என கண்டனன்
ஊசல் ஆடி உளையும் உளத்தினான்

#96
வாழி சானகி வாழி இராகவன்
வாழி நான்மறை வாழியர் அந்தணர்
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான்
ஊழி-தோறும் புதிது உறும் கீர்த்தியான்

#97
அ இடத்து அருகு எய்தி அரக்கன்தான்
எ இடத்து எனக்கு இன் அருள் ஈவது
நொவ் இடை குயிலே நுவல்க என்றனன்
வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான்

#98
ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட
கூசி கூசி இனையன கூறினான்

#99
இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால் எனை
கொன்று இறந்த பின் கூடுதியோ குழை
சென்று இறங்கி மறம் தரு செம் கணாய்

#100
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என்
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில்
திலகமே உன் திறத்து அனங்கன் தரு
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ

#101
பூம் தண் வார் குழல் பொன் கொழுந்தே புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன் உயிர்
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய்
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ

#102
நோற்கின்றார்களும் நுண் பொருள் நுண்ணிதின்
பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல்
வார் குன்றா முலை என் சொல் மவுலியால்
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால்

#103
பொருளும் யாழும் விளரியும் பூவையும்
மருள நாளும் மழலை வழங்குவாய்
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின்
அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ

#104
ஈண்டு நாளும் இளமையும் மீண்டில
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய
வேண்டு நாள் வெறிதே விளிந்தால் இனி
யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ

#105
இழவு எனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக
குழை முகத்து நின் சிந்தனை கோடினால்
பழக நிற்புறும் பண்பு இவை காமத்தோடு
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே

#106
பெண்மையும் அழகும் பிறழா மன
திண்மையும் முதல் யாவையும் செய்ய ஆய்
கண்மையும் பொருந்தி கருணை படா
வண்மை என்-கொல் சனகரின் மடந்தையே

#107
வீட்டும் காலத்து அலறிய மெய் குரல்
கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ
நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன்
ஊட்டும் காலத்து இகழ்வது உறும்-கொலோ

#108
தக்கது என் உயிர் வீடு எனின் தாழ்கிலா
தொக்க செல்வம் தொலையும் ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ

#109
தேவர் தேவியர் சேவடி கைதொழும்
தா இல் மூ_உலகின் தனி நாயகம்
மேவுகின்றது நுன்கண் விலக்கினை
ஏவர் ஏழையர் நின்னின் இலங்கு_இழாய்

#110
குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி அருளுதியால் எனா
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன்
படியின் மேல் விழுந்தான் பழி பார்க்கலான்

#111
காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம்
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள்

#112
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள்

#113
மேருவை உருவல் வேண்டின் விண் பிளந்து ஏகல் வேண்டின்
ஈர்_எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய்
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ

#114
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய்
உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம்
நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம்

#115
பத்து உள தலையும் தோளும் பல பல பகழி தூவி
வித்தக வில்லினாற்கு திருவிளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும்
சத்தியை போலும் மேல் நாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய்

#116
தோற்றனை பறவைக்கு அன்று துள்ளு நீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம்
கூற்றினுக்கு அன்றே வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ

#117
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும்
மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை
வில் தொடை இராமன் கோத்து விடுதலும் விலக்குண்டு எல்லாம்
இற்று இடைந்து இறுதல் மெய்யே விளக்கின் முன் இருள் உண்டாமோ

#118
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவ தனி சரம் துரந்த மேரு
என் துணை கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா

#119
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ
சிலை எடுத்து இளையவன் நிற்க சேர்ந்திலை
தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ

#120
ஏழை நின் ஒளித்துறை இன்னது ஆம் என
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள்
ஆழியும் இலங்கையும் அழிய தாழுமோ
ஊழியும் திரியும் உன் உயிரொடு ஓயுமோ

#121
வெம் சின அரக்கரை வீய்த்து வீயுமோ
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால்
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ

#122
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
வெங்கணாய் புன் தொழில் விலக்கி மேற்கொளாய்
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம்
எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ

#123
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின்
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன்
தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின்
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால்

#124
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான்
செரு வரும்-காலை என் மெய்ம்மை தேர்தியால்
பொரு_அரும் திரு இழந்து அநாயம் பொன்றுவாய்

#125
பொற்கணான் தம்பி என்று இனைய போர் தொழில்
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார்
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும்
இற்கணார் இறந்திலர் இறந்து நீங்கினார்

#126
பூவிலோன் ஆதியாக புலன்கள் போம் நெறியில் போகா
தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார்
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய்
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய்

#127
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும்
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி
தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ

#128
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார்
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார்
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர் பிறர் யார் சொல்லாய்

#129
தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும்
புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலெம் புகுந்த போதே
கொன்று அருள் நின்னால் அன்னார் குறைவது சரதம் கோவே
என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய்

#130
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும்
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி
சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும்
சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ

#131
ஆயிரம் தட கையால் நின் ஐ_நான்கு கரமும் பற்றி
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம்
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா

#132
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ

#133
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம்
மின் திறப்பன ஒத்தன வெயில் விடு பகு வாய்
குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின்
திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை

#134
வளர்ந்த தாளினன் மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை
பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான்
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப

#135
அன்ன காலையில் அனுமனும் அருந்ததி கற்பின்
என்னை ஆளுடை நாயகன் தேவியை என் முன்
சொன்ன நீசன் கை தொடுவதன் முன் துகைத்து உழக்கி
பின்னை நின்றது செய்குவென் என்பது பிடித்தான்

#136
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி
பனியின் வேலையில் இலங்கையை கீழ் உற பாய்ச்சி
புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென்
இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான்

#137
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான்
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம்
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின்
மீண்டு நின்று ஒரு தன்மையால் இனையன விளம்பும்

#138
கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின்
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ
வெல்வதும் தோற்றல்-தானும் விளையாட்டின் விளைந்த மேல்_நாள்

#139
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும்
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார்

#140
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல்
தேன் என்பது அறிந்த சொல்லாய் தேவர்தாம் யாவரே எம்
கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால்

#141
வென்றோரும் இருக்க யார்க்கும் மேலவர் விளிவு இலாதோர்
என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ

#142
மூவரும் தேவர்-தாமும் முரண் உக முற்றும் கொற்றம்
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின்
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய்

#143
சிற்றியல் சிறுமை ஆற்றல் சிறு தொழில் மனிதரோடே
முற்றிய தா இல் வீர முனிவு என்கண் விளையாதேனும்
இற்றை இ பகலில் நொய்தின் இருவரை ஒரு கையாலே
பற்றினென் கொணரும் தன்மை காணுதி பழிப்பு இலாதாய்

#144
பதவிய மனிதரேனும் பைந்தொடி நின்னை தந்த
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர்
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின்
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும்

#145
பள்ள நீர் அயோத்தி நண்ணி பரதனே முதலினோர் ஆண்டு
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின்
வெள்ள நீர் மிதிலையோரை வேரறுத்து எளிதின் எய்தி
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய்

#146
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான்

#147
போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கி கான்ற
தூய வெண் மதியம் ஒத்த தோகையை தொடர்ந்து சுற்றி
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான் உடன்று மிக்கார்

#148
முன் முன் நின்றார் கண் கனல் சிந்த முடுகுற்றார்
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி
கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம்

#149
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன்
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன்
செய்யும் புன்மை யாது-கொல் என்றார் சிலர் எல்லாம்

#150
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும்
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய்
புண்ணில் கோல் இட்டாலன சொல்லி பொது நோக்காது
எண்ணி காணாய் மெய்ம்மையும் என்றார் சிலர் எல்லாம்

#151
புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய்
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம்

#152
இன்னோரன்ன எய்திய காலத்து இடை நின்றாள்
முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு அம்மா
பின்னே வாளா பேதுறுவீரேல் பிழை என்றாள்
அன்னே நன்று என்றாள் அவர் எல்லாம் அமைவுற்றார்

#153
அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல
பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார்
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார்
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள்

4 உரு காட்டு படலம்


#1
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார்
வேண்ட துஞ்சார் என்று ஒரு விஞ்ஞை வினை செய்தான்
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார்

#2
துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள்
அஞ்சா நின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள்
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள்

#3
கரு மேகம் நெடும் கடல் கா அனையான்
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான்
உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான்
வருமே உரையாய் வலியாய் வலியே

#4
கல்லா மதியே கதிர் வாள் நிலவே
செல்லா இரவே சிறுகா இருளே
எல்லாம் எனையே முனிவீர் நினையா
வில்லாளனை யாதும் விளித்திலிரோ

#5
தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ
நிழல் வீரை அனானுடனே நெடு நாள்
உழல்வீர் கொடியீர் உரையாடிலிரோ

#6
வாராது ஒழியான் எனும் வண்மையினால்
ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன்
தீராய் ஒரு நாள் வலி சேவகனே
நாராயணனே தனி நாயகனே

#7
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ
வருவென் சில நாளினில் மா நகர்வாய்
இரு என்றனை இன் அருள்தான் இதுவோ
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ

#8
பேணும் உணர்வே உயிரே பெரு நாள்
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ

#9
முடியா முடி மன்னன் முடிந்திடவும்
படி ஏழும் நெடும் துயர் பாவிடவும்
மடியா நெறி வந்து வளம் புகுதும்
கொடியார் வரும் என்று குலாவுவதோ

#10
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள்
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள்
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான்
பொன்றும் பொழுதே புகழ் பூணும் எனா

#11
பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன்
அறை இரும் கழலவன் காணும் ஆசையால்
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர்
சிறை இருந்தேனை அ புனிதன் தீண்டுமோ

#12
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன்
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ

#13
சொல் பிரியா பழி சுமந்து தூங்குவேன்
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று-அரோ
கற்பு உடை மடந்தையர் கதையில் தான் உளோர்
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால்

#14
பிறர் மனை எய்திய பெண்ணை பேணுதல்
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்
புறன் அலர் அவன் உற போது போக்கி யான்
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன்

#15
எ பொழுது இ பெரும் பழியின் எய்தினேன்
அ பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன்
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான்
துப்பு அழிந்து உய்வது துறக்கம் துன்னவோ

#16
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர்
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர்
துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன்
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே

#17
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என்
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ

#18
வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர்
வெல்லினும் வெல்க போர் விளிந்து வீடுக
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்
சொல்லிய என் பழி அவரை சுற்றுமோ

#19
வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர்
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன்
கரும் தனி முகிலினை பிரிந்து கள்வர் ஊர்
இருந்தவள் இவள் என ஏச நிற்பெனோ

#20
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள்
இல் புக தக்கலை என்னில் யானுடை
கற்பினை எ பரிசு இழைத்து காட்டுகேன்

#21
ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு
போது உலாம் மாதவி பொதும்பர் எய்தினாள்

#22
கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான்
கொண்டனன் துணுக்கம் மெய் தீண்ட கூசுவான்
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா
தொண்டை வாய் மயிலினை தொழுது தோன்றினான்

#23
அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால்
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பு இலர் தவத்தை மேவலால்
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன்

#24
ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன் அதற்கு காரணம்
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ

#25
ஐயுறல் உளது அடையாளம் ஆரியன்
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள
கை உறு நெல்லி அம் கனியின் காண்டியால்
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான்

#26
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும்
வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும்
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா

#27
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ

#28
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான்
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள்

#29
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை
தூயவன் பிரிந்த பின்பு தேடிய துணைவன் தொல்லை
காய் கதிர் செல்வன் மைந்தன் கவி_குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான்

#30
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின்
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன் தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான்

#31
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி
பின்னவற்கு அரசு நல்கி துணை என பிடித்தான் எங்கள்
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின்
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன்

#32
எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள
குழுவின உம் கோன் செய்ய குறித்தது குறிப்பின் உன்னி
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட

#33
துப்பு உறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும்
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து
அ புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன

#34
புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள் பொதிந்து தூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகல குறியினாலே
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ

#35
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ

#36
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன்
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை
மேயின படர்ந்து தீர அனையவன் விடுத்தான் என்னை
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன் பழியை வென்றான்

#37
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்
ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள்

#38
படி உரைத்து எடுத்து காட்டும் படித்து அன்று படிவம் பண்பில்
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர்
துடி_இடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான்

#39
சே இதழ் தாமரை என்று சேண் உளோர்
ஏயினர் அதன் துணை எளியது இல்லையால்
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின்
பாய் திரை பவளமும் குவளை பண்பிற்றால்

#40
தளம் கெழு கற்பக முகிழும் தண் துறை
இளம் கொடி பவளமும் கிடக்க என் அவை
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன்
இளம் கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்து_இழாய்

#41
சிறியவும் பெரியவும் ஆகி திங்களோ
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி
எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன

#42
பொருந்தில நிலனொடு போந்து கானிடை
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு
இருந்தது நின்றது புவனம் யாவையும்
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ

#43
தாங்கு அணை பணிலமும் வளையும் தாங்கு நீர்
வீங்கு அணை பணி மிசை மேகம் அன்னவன்
பூம் கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு
ஆம் கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே

#44
அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை
மறம் கிளர் மத கரி கரமும் நாணின
குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ

#45
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ

#46
பொரு_அரு மரகத பொலன் கொள் மால் வரை
வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ
திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே

#47
நீடுறு கீழ் திசை நின்ற யானையின்
கோடு உறு கரம் என சிறிது கூறலாம்
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா
தாள் தொடு தட கை வேறு உவமை சாலுமே

#48
பச்சிலை தாமரை பகல் கண்டால் என
கை செறி முகிழ் உகிர் கனகன் என்பவன்
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில்
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே

#49
திரண்டில ஒளி இல திருவின் சேர்வு இல
முரண் தரு மேரு வில் முரிய மூரி நாண்
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று
இரண்டு இல புயங்களுக்கு உவமம் ஏற்குமோ

#50
கடல் படு பணிலமும் கன்னி பூகமும்
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ உரக பள்ளியான்
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க எங்களால்

#51
அண்ணல்-தன் திரு முகம் கமலம் ஆம் எனின்
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ
வெண் மதி பொலிந்து அது மெலிந்து தேயுமால்

#52
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய்
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும்
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும்
மூரல் வெண் முறுவல் பூவா பவளமோ மொழியல்-பாற்றே

#53
முத்தம்-கொல்லோ முழுநிலவின் முறியின் திறனோ முறை அமுத
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த-கொல்லோ துறை அறத்தின்
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்

#54
எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின்
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ
தள்ளா ஓதி கோபத்தை கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ

#55
பனிக்க சுரத்து கரன் முதலோர் கவந்த படையும் பல் பேயும்
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும்
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும்
குனிக்க குனித்த புருவத்துக்கு உவமம் நீயே கோடியால்

#56
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம்
ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால்
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ்
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ

#57
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம்
பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ

#58
புல்லல் ஏற்ற திருமகளும் பூவும் பொருந்த புலி ஏழும்
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ

#59
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார்
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான்

#60
நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும்
எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய்

#61
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறை செல்வம்
பூண்டு அதனை நீங்கி நெறி போதலுறு நாளின்
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன்
யாண்டையது கான் என இசைத்ததும் இசைப்பாய்

#62
எள் அரிய தேர் தரு சுமந்திரன் இசைப்பாய்
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள்
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும்
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும்

#63
மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர்
தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால்
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள்

#64
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்-கொல் என்கோ
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை

#65
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்
பழம் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்
உழந்து விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் ஒத்தாள்

#66
வாங்கினள் முலை குவையில் வைத்தனள் சிரத்தால்
தாங்கினள் மலர் கண் மிசை ஒற்றினள் தடம் தோள்
வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே

#67
மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர்
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம்
நோக்கும் நுவல கருதும் ஒன்றும் நுவல்கில்லாள்
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள்

#68
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ

#69
இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி

#70
இ தகையள் ஆகி உயிர் ஏமுற விளங்கும்
முத்த நகையாள் விழியில் ஆலி முலை முன்றில்
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய்
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள்

#71
மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே
இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள்

#72
பாழிய பணை தோள் வீர துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின்
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள்

#73
மீண்டு உரை விளம்பலுற்றாள் விழுமிய குணத்தோய் வீரன்
யாண்டையான் இளவலோடும் எ வழி எய்திற்று உன்னை
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள்
தூண் திரள் தடம் தோளானும் உற்றது சொல்லலுற்றான்

#74
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான்
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான்
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான்
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால்

#75
இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான்
மெய் குரல் சாபம் பின்னை விளைந்தது விதியின் வெம்மை
பொய் குரல் இன்று பொல்லா பொருள் பின்பு பயக்கும் என்பான்
கை குரல் வரி வில்லானும் இளையவன் வரவு கண்டான்

#76
கண்ட பின் இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த
புண்டரிக கணானும் உற்றது புகல கேட்டான்
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான்
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ

#77
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம்
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன்

#78
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான்
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான்

#79
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன்
சுந்தரி நின்னை செய்த வஞ்சனை சொல்ல சொல்ல
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ

#80
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால்
நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம்
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி

#81
எ வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள் யாது
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி
வெவ்விய விதியின் கொட்பால் வீடினன் கழுகின் வேந்தன்
எவ்விய வரி வில் செம் கை இருவரும் இடரின் வீழ்ந்தார்

#82
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார்
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா
புயல் தொடு குடுமி குன்றும் கானமும் கடிது போனார்

#83
அ வழி நின்னை காணாது அயர்த்தவர் அரிதின் தேறி
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான்

#84
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய்
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல்
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான்

#85
போது ஆயின போது உன் தண் புனல் ஆடல் பொய்யோ
சீதா பவள கொடி அன்னவள் தேடி என்கண்
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா
கோதாவரியை சினம் கொண்டனன் கொண்டல் ஒப்பான்

#86
குன்றே கடிது ஓடினை கோமள கொம்பர் அன்ன
என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு
ஒன்றே அமையும் உனுடை குலம் உள்ள எல்லாம்
இன்றே பிளவா எரியா கரி ஆக்க என்றான்

#87
பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான்

#88
வேறுற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று உயிர் பெற்று இயல்பும் சில தேறலுற்றான்

#89
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும்
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும்
சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும்
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய

#90
உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின்
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட
கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான்

#91
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண்
அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா
பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார்

#92
அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அ புறத்து ஓர்
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான்
துயர்வு உற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான்

#93
ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின்
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை
மேயான் வருவான் என விட்டனன் மேவு-காறும்
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும்

#94
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக
வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான்

#95
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள்
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள்

#96
நையுறு சிந்தையள் நயன் வாரியின்
தொய்யல் வெம் சுழியிடை சுழிக்கும் மேனியள்
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை
எய்தியது எ பரிசு இயம்புவாய் என்றாள்

#97
சுருங்கு_இடை உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்கு உடை உணர்வினோர் ஓய்வு_இல் மாயையின்
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல்
கரும் கடல் கடந்தனென் காலினால் என்றான்

#98
இ துணை சிறியது ஓர் ஏண்_இல் யாக்கையை
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ
சித்தியின் இயன்றதோ செப்புவாய் என்றாள்
முத்தினும் நிலவினும் முறுவல் முற்றினாள்

#99
சுட்டினன் நின்றனன் தொழுத கையினன்
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடு முகடு எய்தி நீளுமேல்
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான்

#100
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான்
வெவ் வழி பூதம் ஓர் ஐந்தின் மேலதோ
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே

#101
ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய
மெய் துறு மரம்-தொறும் மின்மினி குலம்
மொய்த்து உளவாம் என முன்னும் பின்னரும்
தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம்

#102
கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய
விண்தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மைய
குண்டலம் இரண்டும் அ கோளின் மா சுடர்
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே

#103
ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா
ஆணியை அனுமனை அமைய நோக்குவான்
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன்

#104
எண் திசை மருங்கினும் உலகம் யாவினும்
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன் தானும் தன் கமலக்கண்களால்

#105
எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல்
விழுந்தது நிலம் மிசை விரிந்த வெண் திரை
தழைந்தன புரண்டன மீனம்தாம் எலாம்

#106
வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள்
அஞ்சினேன் இ உரு அடக்குவாய் என்றாள்

#107
முழுவதும் இ உரு காண முற்றிய
குழு இலது உலகு இனி குறுகுவாய் என்றாள்
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களை
தழுவினளாம் என தளிர்க்கும் சிந்தையாள்

#108
ஆண்தகை அனுமனும் அருளது ஆம் எனா
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீ செல்வான்
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான்
தூண்டல்_இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள்

#109
இடந்தாய் உலகை மலையோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும்
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய் எனினும் பயன் இன்றால்
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய்

#110
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய்
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை
ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ

#111
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின்
செறிவும் ஈதே செயல் ஈதே தேற்றம் ஈதே தேற்றத்தின்
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால்
வெறியர் அன்றோ குணங்களான் விரிஞ்சன் முதலாம் மேலானோர்

#112
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி வீரற்கு
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி
உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன்
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால்

#113
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும்
மீண்டேன் என்னை ஒறுத்தாரை குலங்களோடும் வேரறுத்தேன்
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும் புகழே அன்றி புன் பழியும்
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள்

#114
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே
வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின்
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம்
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன்

#115
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ

#116
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன்
நீலன் இடபன் குமுதாக்கன் பனசன் சரபன் நெடும் சாம்பன்
காலன் அனைய துன்மருடன் காம்பன் கயவன் கவயாக்கன்
ஞாலம் அறியும் நளன் சங்கன் விந்தன் துவிந்தன் மதன் என்பான்

#117
தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர்
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ

5 சூடாமணி படலம்


#1
உண்டு துணை என்ன எளிதோ உலகின் அம்மா
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள்
அண்ட முதல் நாயகனது ஆவி அனையாளை
கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான்

#2
கேட்டி அடியேன் உரை முனிந்தருளல் கேளான்
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினை அன்றால்
ஈட்டி இனி என் பல இராமன் எதிர் நின்னை
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம்

#3
பொன் திணி பொலம்_கொடி என் மென் மயிர் பொருந்தி
துன்றிய புயத்து இனிது இருக்க துயர் விட்டாய்
இன் துயில் விளைக்க ஓர் இமைப்பின் இறை வைகும்
குன்றிடை உனை கொடு குதிப்பென் இடை கொள்ளேன்

#4
அறிந்து இடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்
முறிந்து உதிர நூறி என் மன சினம் முடிப்பேன்
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்-பால்
வெறும் கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன்

#5
இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என்
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து எதிர் தடுப்பான்
விலங்கினரை நூறி வரி வெம் சிலையினோர்-தம்
பொலம் கொள் கழல் தாழ்குவென் இது அன்னை பொருள் அன்றால்

#6
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன்
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில்
பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள்
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம்

#7
புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்
விண்டவர் வலத்தையும் விரித்து உரை-செய்கேனோ
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன்
கண்டு வருகிற்றிலென் என கழறுகேனோ

#8
இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி நிருத_குலம் முடித்து வினை முற்றி
பொருக்க அகல்க என்னினும் அது இன்று புரிகின்றேன்

#9
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன்
சிந்தை உறு வெம் துயர் தவிர்ந்து தெளிவோடும்
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால்

#10
வேறு இனி விளம்ப உளதன்று விதியால் இ
பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய்
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள்
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான்

#11
ஏய நல் மொழி எய்த விளம்பிய
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு
ஆய தன்மை அரியது அன்றால் என
தூய மென் சொல் இனையன சொல்லுவாள்

#12
அரியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என்
பெரிய பேதைமை சில் மதி பெண்மையால்

#13
வேலையினிடையே வந்து வெய்யவர்
கோலி நின்னொடும் வெம் சரம் கோத்த-போது
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால்
சாலவும் தடுமாறும் தனிமையோய்

#14
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன்
வென்றி வெம் சிலை மாசுணும் வேறு இனி
நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ

#15
கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில்
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள்
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ

#16
வெற்றி நாண் உடை வில்லியர் வில் தொழில்
முற்ற நாண் இல் அரக்கியர் மூக்கொடும்
அற்ற நாணினர் ஆயின போது அன்றி
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ

#17
பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர்
என்பு மால் வரை ஆகிலதே எனின்
இல் பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல்
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்

#18
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்

#19
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய்
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ

#20
தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர் மெய்யின் இமைப்பின் முன்
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால்
கீண்டு கொண்டு எழுந்து ஏகினன் கீழ்மையால்

#21
மேவு சிந்தை_இல் மாதரை மெய் தொடின்
தேவு வன் தலை சிந்துக நீ என
பூவில் வந்த புராதனனே புகல்
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால்

#22
அன்ன சாவம் உளது என ஆண்மையான்
மின்னும் மௌலியன் மெய்ம்மையன் வீடணன்
கன்னி என்-வயின் வைத்த கருணையாள்
சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான்

#23
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின்
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும்
நாயகன் வலி எண்ணியும் நானுடை
தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன்

#24
ஆண்டு-நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலைநின்றது
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால்

#25
தீர்விலேன் இது ஒரு பகலும் சிலை
வீரன் மேனியை மானும் இ வீங்கு நீர்
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன்
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால்

#26
ஆதலான் அது காரியம் அன்று ஐய
வேத நாயகன்-பால் இனி மீண்டனை
போதல் காரியம் என்றனள் பூவை அ
கோது இலானும் இனையன கூறினான்

#27
நன்று நன்று இ உலகு உடை நாயகன்
தன் துணை பெருந்தேவி தவ தொழில்
என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினான்
நின்ற சங்கை இடரொடு நீங்கினான்

#28
இருளும் ஞாலம் இராவணனால் இது
தெருளும் நீ இனி சில் பகல் தங்குறின்
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம்
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான்

#29
இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கி பகர்ந்தது நீதியோய்
பின்னை ஆவி பிடிக்ககிலேன் அந்த
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ

#30
ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர்
தாரம்தான் அலளேனும் தயா எனும்
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன்
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய்

#31
ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை
காத்து இருந்த தனக்கே கடன் இடை
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய்

#32
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர்
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன்
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய்

#33
சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால்
மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா

#34
வந்து எனை கரம் பற்றிய வைகல்-வாய்
இந்த இ பிறவிக்கு இரு மாதரை
சிந்தையாலும் தொடேன் என்ற செ வரம்
தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய்

#35
ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியை
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்

#36
அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணி
புரசை யானையின் வீதியில் போதவும்
விரசு கோலங்கள் காண விதி இலேன்
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன்

#37
தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும்
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ

#38
எந்தை யாய் முதலிய கிளைஞர் யார்க்கும் என்
வந்தனை விளம்புதி கவியின் மன்னனை
சுந்தர தோளனை தொடர்ந்து காத்து போய்
அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய்

#39
இ திறம் அனையவள் இயம்ப இன்னமும்
தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை
ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ

#40
வீவாய் நீ இவண் மெய் அஃதே
ஓய்வான் இன் உயிர் உய்வானாம்
போய் வான் அ நகர் புக்கு அன்றோ
வேய்வான் மௌலியும் மெய் அன்றோ

#41
கைத்து ஓடும் சிறை கற்போயை
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம்
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்
இத்தோடு ஒப்பது யாது உண்டே

#42
நல்லோய் நின்னை நலிந்தோரை
கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல எம் கோனும்
வில்லோடும் செல வேண்டாவோ

#43
நீந்தா இன்னலில் நீந்தாமே
தேய்ந்து ஆறாத பெரும் செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தார் யார்

#44
நன்று ஆய் நல்வினை நல்லோரை
தின்றார் தம் குடர் பேய் தின்ன
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு
என்றானுக்கு இவை ஏலாவோ

#45
மாட்டாதார் சிறை வைத்தோயை
மீட்டாம் என்கிலம் மீள்வாமேல்
நாட்டார் நல்லவர் நல் நூலும்
கேட்டார் இ உரை கேட்பாரோ

#46
பூண்டாள் கற்புடையாள் பொய்யாள்
தீண்டா வஞ்சகர் தீண்டா-முன்
மாண்டாள் என்று மனம் தேறி
மீண்டால் வீரம் விளங்காதோ

#47
கெட்டேன் நீ உயிர் கேதத்தால்
விட்டாய்-என்றிடின் வெவ் அம்பால்
ஒட்டாரோடு உலகு ஓர் ஏழும்
சுட்டாலும் தொலையா அன்றோ

#48
முன்னே கொல்வான் மூ_உலகும்
பொன்னே ஓங்கிய போர் வில்லான்
என்னே நின் நிலை ஈது என்றால்
பின்னே செம்மை பிடிப்பானோ

#49
கோள் ஆனார் உயிர் கோளோடும்
மூளா வெம் சினம் முற்று ஆகா
மீளாவேல் அயல் வேறு உண்டோ
மாளாதோ புவி வானோடும்

#50
தாழி தண் கடல்-தம்மோடும்
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று
ஆழி கையவன் அம்பு அம்மா
ஊழி தீ என உண்ணாவோ

#51
படுத்தான் வானவர் பற்றாரை
தடுத்தான் தீவினை தக்கோரை
எடுத்தான் நல்வினை எ நாளும்
கொடுத்தான் என்று இசை கொள்ளாயோ

#52
சில் நாள் நீ இடர் தீராதாய்
இன்னா வைகலின் எல்லோரும்
நல் நாள் காணுதல் நன்று அன்றோ
உன்னால் நல் அறம் உண்டானால்

#53
புளிக்கும் கண்டகர் புண்ணீருள்
குளிக்கும் பேய் குடையும்-தோறும்
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ

#54
ஊழியின் இறுதியின் உரும் எறிந்து என
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி
தாழ் இரும் குருதியால் தரங்க வேலைகள்
ஏழும் ஒன்றாக நின்று இரைப்ப காண்டியால்

#55
சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும்
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர்
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால்

#56
விண்ணின் நீளிய நெடும் கழுதும் வெம் சிறை
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும்
புண்ணின் நீர் புணரியில் படிந்து பூவையர்
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால்

#57
கரம் பயில் முரசு_இனம் சுறங்க கை தொடர்
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம்
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில்
குரங்குகள் முறைமுறை முனிப்ப காண்டியால்

#58
புரை உறு புன் தொழில் அரக்கர் புண் மொழி
திரை உறு குருதி யாறு ஈர்ப்ப செல்வன
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால்

#59
வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான்
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால்
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால்

#60
தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின
பாக்கியம் அனைய நின் பழிப்பு_இல் மேனியை
நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால்
காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ண காண்டியால்

#61
மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய
நீல் உறு திசை கரி திரிந்து நிற்பன
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில்
கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால்

#62
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான்
வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல்
போர்த்து எழு பொலம் கொடி இலங்கை பூழியோடு
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால்

#63
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர்
வேலை மிக்கு ஆற்றொடு மீள வேலை சூழ்
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால்

#64
அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய்
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய
கணம் கொடு குரக்கு_இனம் குளிப்ப காண்டியால்

#65
செப்புறல் என் பல தெய்வ வாளிகள்
இ புறத்து அரக்கரை முருக்கி ஏகின
மு புறத்து உலகையும் முடிக்க மூட்டலால்
அ புறத்து அரக்கரும் அவிய காண்டியால்

#66
ஈண்டு ஒரு திங்கள் இ இடரின் வைகுதல்
வேண்டுவது அன்று யான் விரைவின் வீரனை
காண்டலே குறை பினும் காலம் வேண்டுமோ
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ

#67
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர்
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா
பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்திலா
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம்

#68
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும்
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ

#69
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ

#70
இ நிலை உடையவள் தரிக்கும் என்றியேல்
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன்
கைம் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன்
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான்

#71
தீர்த்தனும் கவி_குலத்து இறையும் தேவி நின்
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல்
தூர்த்தன இலங்கையை சூழ்ந்து மா குரங்கு
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ

#72
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர்
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ
விண் உறு கலுழன்-மேல் விளங்கும் விண்டுவின்
கண்ணனை என் நெடும் புயத்தில் காண்டியால்

#73
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை
பொங்கு வெம்_கதிர் என பொலிய போர் படை
இங்கு வந்து இறுக்கும் நீ இடரும் ஐயமும்
சங்கையும் நீங்குதி தனிமை நீங்குவாய்

#74
குரா வரும் குழலி நீ குறித்த நாளினே
விராவு_அரு நெடும் சிறை மீட்கிலான்-எனின்
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன்

#75
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள்
ஓகை கொண்டு களிக்கும் மனத்தள் உயர்ந்தாள்
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள்
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள்

#76
சேறி ஐய விரைந்தனை தீயவை எல்லாம்
வேறி யான் இனி ஒன்றும் விளம்பலென் மேலோய்
கூறுகின்றன முன் குறி உற்றன கோமாற்கு
ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள்

#77
நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள்
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால்
வேக வெம் படை விட்டது மெல்ல விரிப்பாய்

#78
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன்
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என்
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள்
சொன்ன மெய் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய்

#79
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம்
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள்
தன் திரு துகிலில் பொதிவுற்றது தானே
வென்றது அ சுடர் மேலொடு கீழ் உற மெய்யால்

#80
வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா
வீங்கினான் வியந்தான் உலகு ஏழும் விழுங்கி
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும்

#81
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான்
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார்
சஞ்சலம் புரி சக்கரவாகமுடன் தாழ்
கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம்

#82
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின்
வேந்தன் அன்னது மெல்லியல்-தன் திருமேனி
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான்

#83
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள்
ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய்
கோடி என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள்

#84
தொழுது வாங்கினன் சுற்றிய தூசினன் முற்ற
பழுது உறாவகை பந்தனை செய்தனன் வந்தித்து
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு
எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால்

6 பொழில் இறுத்த படலம்


#1
நெறி கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்
பொறி குல மலர் பொழிலிடை கடிது போவான்
சிறு தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான்
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான்

#2
ஈனம் உறு பற்றலரை எற்றி எயில் மூதூர்
மீன நிலையத்தின் உக வீசி விழி மானை
மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால்
ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன்

#3
வஞ்சனை அரக்கனை நெருக்கி நெடு வாலால்
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால்
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ

#4
கண்ட நிருத கடல் கலக்கினென் வலத்தின்
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள் மலர் குழல் பிடித்து
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ

#5
மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால்
ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம்
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான்

#6
இ பொழிலினை கடிது இறுக்குவென் இறுத்தால்
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர் வந்தால்
துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால்

#7
வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்
வெம் திறல் அரக்கனும் விலக்க அரு வலத்தால்
முந்தும் எனின் அன்னவன் முடி தலை முசித்து என்
சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன்

#8
என்று நினையா இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான்

#9
முடிந்தன பிளந்தன முரிந்தன நெரிந்த
மடிந்தன பொடிந்தன மறிந்தன முறிந்த
இடிந்தன தகர்ந்தன எரிந்தன கரிந்த
ஒடிந்தன ஒசிந்தன உதிர்ந்தன பிதிர்ந்த

#10
வேரொடு மறிந்த சில வெந்த சில விண்ணில்
காரொடு செறிந்த சில காலினொடு வேலை
தூரொடு பறிந்த சில தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில உக்க சில நெக்க

#11
சோனை முதல் மற்றவை சுழற்றிய திசை போர்
ஆனன நுகர குளரும் ஆன அடி பற்றா
மேல் நிமிர விட்டன விசும்பின் வழி மீ போய்
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த

#12
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக இடிந்தன குல கிரிகளோடு
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த

#13
முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும்-வகை வீசின களித்த திசை யானை
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ

#14
விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும்
துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும்
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார்
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ

#15
பொன் திணி மணி பரு மரன் திசைகள் போவ
மின் திரிவ ஒத்தன வெயில் கதிரும் ஒத்த
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழின்
தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த

#16
புள்ளினொடு வண்டும் மிஞிறும் கடி-கொள் பூவும்
கள்ளும் முகையும் தளிர்களோடு இனிய காயும்
வெள்ள நெடு வேலையிடை மீன்_இனம் விழுங்கி
துள்ளின மரன் பட நெரிந்தன துடித்த

#17
தூவிய மலர்_தொகை சுமந்து திசை-தோறும்
பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா

#18
இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும்
தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூர
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர்

#19
வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும்
வானினிடை வீசிய இரும் பணை மரத்தால்
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான

#20
எண்_இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே
தண்ணென் மழை போல் இடை தழைந்தது சலத்தால்
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள்
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான்

#21
தேன் உறை துளிப்ப நிறை புள் பல சிலம்ப
பூ நிறை மணி தரு விசும்பினிடை போவ
மீன் முறை நெருக்க ஒளி வாளொடு வில் வீச
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன

#22
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர்
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும்
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும்
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ

#23
ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர்
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என
தான கற்பக தண்டலை விண்தலம்
போன புக்கன முன் உறை பொன்னகர்

#24
மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம்
துணி படுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர்
திணி சுவர் தலம் சிந்தி செயற்கு_அரும்
பணி படுத்து உயர் குன்றம் படுத்து-அரோ

#25
வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்
பாங்கர் சண்பக பத்தி பறித்து அயல்
மாங்கனி பணை மட்டித்து மாற்றியே

#26
சந்தனங்கள் தகர்ந்தன தாள் பட
இந்தனங்களின் வெந்து எரி சிந்திட
முந்து அனங்க வசந்தன் முகம் கெட
நந்தனங்கள் கலங்கி நடுங்கவே

#27
காமரம் களி வண்டு கலங்கிட
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு
தாம் அரங்க அரங்கு தகர்ந்து உக
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே

#28
குழையும் கொம்பும் கொடியும் குயில்_குலம்
விழையும் தண் தளிர் சூழலும் மென் மலர்
புழையும் வாச பொதும்பும் பொலன் கொள் தேன்
மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே

#29
பவள மா கொடி வீசின பல் மழை
துவளும் மின் என சுற்றிட சூழ் வரை
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன
கவள யானையின் ஓடையின் காந்தவே

#30
பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம்
இற எடுத்த இடி குரல் ஓசையும்
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின்
புற நிலத்தையும் கைம்மிக போயதே

#31
பாடலம் படர் கோங்கொடும் பண் இசை
பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே

#32
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல்
விண்தலம் புக நீள் மரம் வீழ்ந்தவே

#33
தாமரை தடம் பொய்கை செம் சந்தனம்
தாம் அரைத்தன ஒத்த துகைத்தலின்
காமரம் களி வண்டொடும் கள்ளொடும்
காமர் அ கடல் பூ கடல் கண்டவே

#34
சிந்துவாரம் திசை-தொறும் சென்றன
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன
தந்து ஆரம் புதவொடு தாள் அற
தம் துவாரம் துகள் பட சாய்ந்தவே

#35
நந்தவானத்து நாள் மலர் நாறின
நந்த வானத்து நாள் மலர் நாறின
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல்

#36
புல்லும் பொன் பணை பல் மணி பொன் மரம்
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால்
எல்லில் இட்டு விளக்கிய இந்திரன்
வில்லும் ஒத்தன விண் உற வீசின

#37
ஆனை தானமும் ஆடல் அரங்கமும்
பான தானமும் பாய் பரி பந்தியும்
ஏனை தார் அணி தேரொடும் இற்றன
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே

#38
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர்
இயக்குற திசை-தோறும் எறிந்தன
வெயில் கதிர் கற்றை அற்று உற வீழ்ந்தன
புயல் கடல்-தலை புக்கன போல்வன

#39
பெரிய மா மரமும் பெரும் குன்றமும்
விரிய வீசலின் மின் நெடும் பொன் மதில்
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ
இரியல்போன இலங்கையும் எங்கணும்

#40
தொண்டை அம் கனி வாய் சீதை துயக்கினால் என்னை சுட்டாய்
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீச
கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல்
உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான்

#41
காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய விளக்கலாலே விளங்கின உலகம் எல்லாம்

#42
கதறின வெருவி உள்ளம் கலங்கின விலங்கு கண்கள்
குதறின பறவை வேலை குளித்தன குளித்திலாத
பதறின பதைத்த வானில் பறந்தன பறந்து பார் வீழ்ந்து
உதறின சிறையை மீள ஒடுக்கின உலந்து போன

#43
தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம்
கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள்
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால்
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ

#44
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும்
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா

#45
உறு சுடர் சூடை காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
அறிகுறியாக விட்டாள் ஆதலான் வறியள் அந்தோ
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான்

#46
தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான்
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான்
ஊழியின் இறுதி காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான்

#47
இன்னன நிகழும் வேலை அரக்கியர் எழுந்து பொங்கி
பொன்மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார்
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார்

#48
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்
தூயவர் துணிதல் உண்டோ நும்முடை சூழல் எல்லாம்
ஆய மான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன்

#49
என்றனள் அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல்போகி
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய போனார்
நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா
தன் தட கைகள் நீட்டி பற்றினன் தாதை ஒப்பான்

#50
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால்
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக
விண் கொள நிவந்த மேரு வெள்கு உற வெதும்பி உள்ளம்
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம்

#51
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும்
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண
பங்கயத்து ஒருவன் தானே பசும்பொனால் படைத்தது அம்மா

#52
தூண் எலாம் சுடரும் காசு சுற்று எலாம் முத்தம் செம்பொன்
பேணல் ஆம் மணியின் பத்தி பிடர் எலாம் ஒளிகள் விம்ம
சேண் எலாம் விரியும் கற்றை சேயொளி செல்வற்கேயும்
பூணலாம் எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே

#53
வெள்ளியங்கிரியை பண்டு வெம் தொழில் அரக்கன் வேரோடு
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல்

#54
விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம்
பட்டன பொடிகள் ஆன பகுத்தன பாங்கு நின்ற
சுட்டன பொறிகள் வீழ துளங்கினர் அரக்கர்-தாமும்
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்

#55
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு
பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய்
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார்
பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர்

#56
அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார்
கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம்
கிரி படு குவவு திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச
எரி படு துகிலின் நொய்தின் இற்றது கடி கா என்றார்

#57
சொல்லிட எளியது அன்றால் சோலையை காலின் கையின்
புல்லொடு துகளும் இன்றி பொடிபட நூறி பொன்னால்
வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச
சில் இடம் ஒழிய தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார்

#58
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும்
தேட அரு வேரம் வாங்கி இலங்கையும் சிதைத்தது அம்மா
கோடரம் ஒன்றே நன்று இது இராக்கதர் கொற்றம் சொற்றல்
மூடரும் மொழியார் என்ன மன்னனும் முறுவல் செய்தான்

#59
தேவர்கள் பின்னும் மன்ன அதன் உரு சுமக்கும் திண்மை
பூவலயத்தை அன்றோ புகழ்வது புலவர் போற்றும்
மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார்

#60
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட
எண் திசை சுமந்த மாவும் தேவரும் இரியல்போக
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான்

7 கிங்கரர் வதை படலம்


#1
அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும் ஆழி
வெருவரு முழக்கும் ஈசன் வில் இறும் ஒலியும் என்ன
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம்
இருபது செவியினூடும் நுழைந்தது அ எழுந்த ஓசை

#2
புல்லிய முறுவல் தோன்ற பொறாமையும் சிறிது பொங்க
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி
கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான்

#3
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி
பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர்
ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும்
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார்

#4
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல்
தேனினும் களிப்பு செய்யும் சிந்தையர் தெரிந்தும் என்னின்
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ

#5
திருகுறும் சினத்து தேவர் தானவர் என்னும் தெவ்வர்
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர்
பொரு குறும்பு ஏன்று வென்றி புணர்வது பூ உண் வாழ்க்கை
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்

#6
கட்டிய வாளர் இட்ட கவசத்தர் கழலர் திக்கை
தட்டிய தோளர் மேகம் தடவிய கையர் வானை
எட்டிய முடியர் தாளால் இடறிய பொருப்பர் ஈட்டி
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார்

#7
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை
தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர்
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர்

#8
சக்கரம் உலக்கை தண்டு தாரை வாள் பரிசம் சங்கு
முற்கரம் முசுண்டி பிண்டிபாலம் வேல் சூலம் முட்கோல்
பொன் கர குலிசம் பாசம் புகர் மழு எழு பொன் குந்தம்
வில் கரும் கணை விட்டேறு கழுக்கடை எழுக்கள் மின்ன

#9
பொன் நின்று கஞலும் தெய்வ பூணினர் பொருப்பு தோளர்
மின் நின்ற படையும் கண்ணும் வெயில் விரிக்கின்ற மெய்யர்
என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார்
முன் நின்றார் முதுகு தீய பின் நின்றார் முடுகுகின்றார்

#10
வெய்துறு படையின் மின்னர் வில்லினர் வீசு காலர்
மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர்
கை பரந்து உலகு பொங்கி கடையுகம் முடியும்-காலை
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார்

#11
பனி உறு செயலை சிந்தி வேரமும் பறித்தது அம்மா
தனி ஒரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார்
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி
முனிவுறு மனத்தின் தாவி முந்துற முடுகுகின்றார்

#12
எற்றுறு முரசும் வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும்
சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும்
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில்
நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க

#13
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும்
புருவமும் சிலையும் கோட்டி புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்
ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும்
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும்

#14
வாள் உறை விதிர்க்கின்றாரும் வாயினை மடிக்கின்றாரும்
தோள் உற தட்டி கல்லை துகள்பட துகைக்கின்றாரும்
தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும்
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும்

#15
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார்
அனைவரும் அமரின் உயர்ந்தார் அகலிடம் நெளிய நடந்தார்
அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார்
அனைவரும் அமரரை வென்றார் அசுரரை உயிரை அயின்றார்

#16
குறுகின கவசரும் மின் போல் குரை கழல் உரகரும் வன் போர்
முறுகின பொழுதின் உடைந்தார் முதுகிட முறுவல் பயின்றார்
இறுகின நிதியின் கிழவன் இசை கெட அளகை எறிந்தார்
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார்

#17
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால்
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால்
அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால்
தரையினை எடும் எடும் என்றால் ஒருவர் அது அமைதல் சமைந்தார்

#18
தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற வெம் போர்
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய்
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார்
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார்

#19
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல்
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார்
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய்
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார்

#20
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால்
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான்
வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட வெளியிடை விண் நோய்
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான்

#21
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான்
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர்
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான்

#22
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார்
பவனனின் முடுகி நடந்தார் பகல் இரவு உற மிடைகின்றார்
புவனியும் மலையும் விசும்பும் பொரு_அரு நகரும் உடன் போர்
துவனியில் அதிர விடம் போல் சுடர் விடு படைகள் துரந்தார்

#23
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார்
முழைகளின் இதழ்கள் திறந்தார் முது புகை கதுவ முனிந்தார்
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார்
கழை தொடர் வனம் எரியுண்டால் என எறி படைஞர் கலந்தார்

#24
அறவனும் அதனை அறிந்தான் அருகினில் அழகின் அமைந்தார்
இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான்
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான்
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான்

#25
பருவரை புரைவன வன் தோள் பனிமலை அருவி நெடும் கால்
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார்
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான்

#26
பறை புரை விழிகள் பறிந்தார் படியிடை நெடிது படிந்தார்
பிறை புரை எயிறும் இழந்தார் பிடரொடு தலைகள் பிளந்தார்
குறை உயிர் சிதற நெரிந்தார் குடரொடு குருதி குழைந்தார்
முறைமுறை படைகள் எறிந்தார் முடை உடல் மறிய முறிந்தார்

#27
புடையொடு விடு கனலின் காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார்
தொடையொடு முதுகு துணிந்தார் சுழிபடு குருதி சொரிந்தார்
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார்
இடைஇடை மலையின் விழுந்தார் இகல் பொர முடுகி எழுந்தார்

#28
புதைபட இருளின் மிடைந்தார் பொடியிடை நெடிது புரண்டார்
விதைபடும் உயிரர் விழுந்தார் விளியொடு விழியும் இழந்தார்
கதையொடு முதிர மலைந்தார் கணை பொழி சிலையர் கலந்தார்
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார்

#29
அயல் அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார்
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார்
புயல் தொடு கடலின் விழுந்தார் புடை புடை சிதைவொடு சென்றார்
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார்

#30
பற்றி தாளொடு தோள் பறித்து எறிந்தனன் பாரின்
இற்ற வெம் சிறை வெற்பு_இனம் ஆம் என கிடந்தார்
கொற்ற வாலிடை கொடும் தொழில் அரக்கரை அடங்க
சுற்றி வீசலின் பம்பரம் ஆம் என சுழன்றார்

#31
வாள்கள் இற்றன இற்றன வரி சிலை வயிர
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழு சூலம்
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம்
தாள்கள் இற்றன இற்றன படை உடை தட கை

#32
தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம்
தெறித்த பைம் கழல் தெறித்தன சிலம்பொடு பொலம் தார்
தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள்
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி

#33
உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வுற்று
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள்
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம்

#34
தாள்களால் பலர் தட கைகளால் பலர் தாக்கும்
தோள்களால் பலர் சுடர் விழியால் பலர் தொடரும்
கோள்களால் பலர் குத்துகளால் பலர் தம் தம்
வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார்

#35
ஈர்க்க பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்க பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்க பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்க பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்

#36
ஓடி கொன்றனன் சிலவரை உடல் உடல்-தோறும்
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால்
சாடி கொன்றனன் சிலவரை பிணம்-தொறும் தடவி
தேடி கொன்றனன் சிலவரை கறங்கு என திரிவான்

#37
முட்டினார் பட முட்டினான் முறைமுறை முடுகி
கிட்டினார் பட கிட்டினான் கிரி என நெருங்கி
கட்டினார் பட கட்டினான் கைகளால் மெய்யில்
தட்டினார் பட தட்டினான் மலை என தகுவான்

#38
உறக்கினும் கொல்லும் உணரினும் கொல்லும் மால் விசும்பில்
பறக்கினும் கொல்லும் படரினும் கொல்லும் மின் படை கை
நிற கரும் கழல் அரக்கர்கள் நெறி-தொறும் பொறிகள்
பிறக்க நின்று எறி படைகளை தட கையால் பிசையும்

#39
சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய் திணிய
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை

#40
கருது காலினும் கையினும் வாலினும் கட்டி
சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான்
நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்
குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின்

#41
எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற
கொடி திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த
தட கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த
பிடி குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய

#42
தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்
தம் தம் மாதரை தம் கழலால் சிலர் சமைத்தார்
தம் தம் மாக்களை தம் படையால் சிலர் தடிந்தார்
எற்றி மாருதி தட கைகளால் விசைத்து எறிய

#43
ஆடல் மா களிறு அனையவன் அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான்
கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான்
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான்

#44
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர்
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர்
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி

#45
ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்
தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான்
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல்
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி

#46
ஆக இ செரு விளைவுறும் அமைதியின் அரக்கர்
மோகம் உற்றனர் ஆம் என முறைமுறை முனிந்தார்
மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார்
மேகம் ஒத்தனர் மாருதி வெய்யவன் ஒத்தான்

#47
அடல் அரக்கரும் ஆர்த்தலின் அலைத்தலின் அயர
புடை பெருத்து உயர் பெருமையின் கருமையின் பொலிவின்
மிடல் அயில் படை மின் என விலங்கலின் கலங்கும்
கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான்

#48
கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார்
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும்
உரகர் ஒத்தனர் அனுமனும் கலுழனே ஒத்தான்

#49
மானம் உற்ற தம் பகையினால் முனிவுற்று வளைந்த
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த
ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர்
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன்

#50
எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலின்
பொய்த குத்தின பொதுத்தன துளைத்தன போழ்ந்த
கொய்த சுற்றின பற்றின குடைந்தன பொலிந்த
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால்

#51
கார் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும்
வேர்க்க வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
போர் குழாத்து எழு பூசலின் ஐயனை புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில்

#52
மேவும் வெம் சினத்து அரக்கர்கள் முறைமுறை விசையால்
ஏவும் பல் படை எத்தனை கோடிகள் எனினும்
தூவும் தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்த
பூவும் புண்களும் தெரிந்தில மாருதி புயத்தில்

#53
பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின்
உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின்
அயர்ந்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார்
வெயர்த்திலன் மிசை உயிர்த்திலன் நல் அற வீரன்

#54
எஞ்சல்_இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார்
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று
எஞ்சினார் இல்லை அரக்கரில் வீரர் மற்று யாரே

#55
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார்
நந்தவானத்து நாயகர் ஓடினர் நடுங்கி
பிந்து காலினர் கையினர் பெரும் பயம் பிடரின்
உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார்

#56
விரைவின் உற்றனர் விம்மினர் யாது ஒன்றும் விளம்பார்
கரதலத்தினால் பட்டதும் கட்டுரைக்கின்றார்
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார்
அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான்

#57
இறந்து நீங்கினரோ இன்று என் ஆணையை இகழ்ந்து
துறந்து நீங்கினரோ அன்றி வெம் சமர் தொலைந்தார்
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான்
நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான்

#58
சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர்
புலம் தெரி பொய் கரி புகலும் புன்கணார்
குலங்களின் அவிந்தனர் குரங்கினால் என்றார்

#59
ஏவலின் எய்தினர் இருந்த எண் திசை
தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான்
யாவது என்று அறிந்திலிர் போலுமால் என்றான்
மூ-வகை உலகையும் விழுங்க மூள்கின்றான்

#60
மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார்
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான்
வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை
கேட்டதோ கண்டதோ கிளத்துவீர் என்றான்

#61
கண்டனம் ஒரு-புடை நின்று கண்களால்
தெண் திரை கடல் என வளைந்த சேனையை
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர்
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார்

8 சம்புமாலி வதை படலம்


#1
கூம்பின கையன் நின்ற குன்று என குவவு திண் தோள்
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா
வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி
தாம்பினின் பற்றி தந்து என் மன சினம் தணித்தி என்றான்

#2
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர்
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான்

#3
தன்னுடை தானையோடும் தயமுகன் தருக என்று ஏய
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின்
மின் உடை பரவையோடும் வேறுளோர் சிறப்பின் விட்ட
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான்

#4
உரும் ஒத்த முழக்கின் செம் கண் வெள் எயிற்று ஓடை நெற்றி
பருமித்த கிரியின் தோன்றும் வேழமும் பதுமத்து அண்ணல்
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி
சொரி முத்த மாலை சூழும் துகில் கொடி தடம் தேர் சுற்ற

#5
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி
கூற்றினை ஏற்றி அன்ன குல பரி குழுவ குன்றின்
தூற்றினின் எழுப்பி ஆண்டு தொகுத்து என கழல் பைம் கண்ண
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம்

#6
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம்
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம்
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ

#7
எத்திய அயில் வேல் குந்தம் எழு கழு முதல ஏந்தி
குத்திய திளைப்ப மீதில் குழுவின மழை மா கொண்டல்
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல
சித்திர பதாகை ஈட்டம் திசை-தொறும் செறிவ செல்வ

#8
பல்_இயம் துவைப்ப நல் மா பணிலங்கள் முரல பொன் தேர்
சில்லிகள் இடிப்ப வாசி சிரித்திட செறி பொன் தாரும்
வில்லும் நின்று இசைப்ப யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப விண் தோய்
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ

#9
மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கி தோன்ற
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய
பொன் நகர் தகர்ந்து பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப

#10
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர் அ தேர்க்கு
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா
போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போலாம்
தீயவன் தடம் தேர் சுற்றி தெற்றென சென்ற சேனை

#11
வில் மறை கிழவர் நானா விஞ்சையர் வரத்தின் மிக்கார்
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார்
தொல் மற குலத்தர் தூணி தூக்கிய புறத்தர் மார்பின்
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள்

#12
பொரு திசை யானை ஊரும் புனிதரை பொருவும் பொற்பர்
சுரிபடை தொழிலும் மற்றை அங்குச தொழிலும் தொக்கார்
நிருதியின் பிறந்த வீரர் நெருப்பு இடை பரப்பும் கண்ணர்
பரிதியின் பொலியும் மெய்யர் படு மத களிற்றின் பாகர்

#13
ஏர் கெழு கதியும் சாரி பதினெட்டும் இயல்பின் எண்ணி
போர் கெழு படையும் கற்ற வித்தக புலவர் போரில்
தேர் கெழு மறவர் யானை சேவகர் சிரத்தில் செல்லும்
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார்

#14
அ நெடும் தானை சுற்ற அமரரை அச்சம் சுற்ற
பொன் நெடும் தேரில் போனான் பொருப்பிடை நெருப்பின் பொங்கி
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில்
மின்னிட வெயிலும் வீச வில் இடும் எயிற்று வீரன்

#15
நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்-தானும்
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான்

#16
கேழ் இரு மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும்
ஊழ் இரும் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான்
சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிட சுடரும் சோதி
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான்

#17
செல்லொடு மேகம் சிந்த திரை கடல் சிலைப்பு தீர
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம் வீரன்
வில் என இடிக்க விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான்

#18
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில்
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர பூவும்
குன்றமும் பிளக்க வீரன் புயத்திடை கொட்டி ஆர்த்தான்

#19
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார்
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி
வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார்

#20
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை
மூண்டு இரு புடையும் முன்னும் முறைமுறை முடுக ஏவி
தூண்டினன் தானும் திண் தேர் தோரணத்து இருந்த தோன்றல்
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள்

#21
ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக
மொய் மயிர் சேனை பொங்க முரண் அயில் உகிர்வாள் மொய்த்த
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக

#22
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய
பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப மூரி பல்_இயம் குமுற பற்றி
செயிர் கொள் வாள் அரக்கர் சீற்றம் செருக்கினர் படைகள் சிந்தி
வெயில்கள் போல் ஒளிகள் வீச வீரன் மேல் கடிது விட்டார்

#23
கரும் கடல் அரக்கர்-தம் படைக்கலம் கரத்தால்
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான்
விரிந்தன பொறி குலம் நெருப்பு என வெகுண்டு ஆண்டு
இருந்தவன் கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான்

#24
இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான்
திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார்
விரிந்தவர் குவிந்தவர் விலங்கினர் கலந்தார்
பொருந்தினர் நெருங்கினர் களம் பட புடைத்தான்

#25
எறிந்தன எய்தன இடி உரும் என மேல்
செறிந்தன படைக்கலம் இட கையின் சிதைத்தான்
முறிந்தன தெறும் கரி முடிந்தன தடம் தேர்
மறிந்தன பரி நிரை வல கையின் மலைந்தான்

#26
இழந்தன நெடும் கொடி இழந்தன இரும் கோடு
இழந்தன நெடும் கரம் இழந்தன வியன் தாள்
இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு
இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை

#27
நெரிந்தன தடம் சுவர் நெரிந்தன பெரும் பார்
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால்
நெரிந்தன கொடிஞ்சிகள் நெரிந்தன வியன் தார்
நெரிந்தன கடும் பரி நெரிந்தன நெடும் தேர்

#28
ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த
இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த
மடிந்தன மறிந்தன முறிந்தன மலை போல்
படிந்தன முடிந்தன கிடந்தன பரி மா

#29
வெகுண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்
மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார்
சுருண்டனர் புரண்டார் தொலைந்தனர் மலைந்தார்

#30
கரி கொடு கரிகளை கள பட புடைத்தான்
பரி கொடு பரிகளை தலத்திடை படுத்தான்
வரி சிலை வயவரை வயவரின் மடித்தான்
நிரை மணி தேர்களை தேர்களின் நெரித்தான்

#31
மூளையும் உதிரமும் முழங்கு இரும் குழம்பு ஆய்
மீள் இரும் குழைபட கரி விழுந்து அழுந்த
தாளொடும் தலை உக தட நெடும் கிரி போல்
தோளொடும் நிருதரை வாளொடும் துகைத்தான்

#32
மல்லொடு மலை மலை தோளரை வளை வாய்
பல்லொடும் நெடும் கர பகட்டொடும் பரும் தாள்
வில்லொடும் அயிலொடும் விறலொடும் விளிக்கும்
சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான்

#33
புகை நெடும் பொறி புகும் திசை-தொறும் பொலிந்தான்
சிகை நெடும் சுடர் விடும் தேர்-தொறும் சென்றான்
தகை நெடும் கரி-தொறும் பரி-தொறும் சரித்தான்
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான்

#34
வென்றி வெம் புரவியின் வெரிநினும் விரவார்
மன்றல் அம் தார் அணி மார்பினும் மணி தேர்
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ்
குன்றினும் கடையுகத்து உரும் என குதித்தான்

#35
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா
இருவினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும்
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான்

#36
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர்
நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான்
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார்
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான்

#37
கொடி தடம் தேரொடும் குரகத குழுவை
அடித்து ஒரு தட கையின் நிலத்திடை அரைத்தான்
இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பை
பிடித்து ஒரு தட கையின் உயிர் உக பிழிந்தான்

#38
கறுத்து எழு நிறத்தினர் எயிற்றினர் கயிற்றார்
செறுத்து எரி விழிப்பவர் சிகை கழு வலத்தார்
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார்
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான்

#39
சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள்
மிக்கன தேர் பரி குடை கொடி விரவி
உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி
புக்கன கடலிடை நெடும் கர பூட்கை

#40
எட்டின விசும்பினை எழு பட எழுந்த
முட்டின மலைகளை முயங்கின திசையை
ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள்

#41
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான்
தேனே புரை கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான்
தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான்

#42
காற்றின் கடிய கலின புரவி நிருதர் களத்து உக்கார்
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா
வீற்று செல்லும் வெளியோ இல்லை அளியன் விரைகின்றான்

#43
ஏதி ஒன்றால் தேரும் அஃதால் எளியோர் உயிர் கோடல்
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய்
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய்
போதி என்றான் பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான்

#44
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான்
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி
ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான்

#45
செய்தி செய்தி சிலை கை கொண்டால் வெறும் கை திரிவோரை
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான்
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன
எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான்

#46
முற்ற முனிந்தான் நிருதன் முனியா முன்னும் பின்னும் சென்று
உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா
சுற்றும் நெடும் தேர் ஓட்டி தொடர்ந்தான் தொடரும் துறை காணான்
வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான்

#47
சலித்தான் ஐயன் கையால் எய்யும் சரத்தை உக சாடி
ஒலி தார் அமரர் கண்டார் ஆர்ப்ப தேரினுள் புக்கு
கலித்தான் சிலையை கையால் வாங்கி கழுத்தினிடை இட்டு
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ

#48
குதித்து தேரும் கோல் கொள் ஆளும் பரியும் குழம்பு ஆக
மிதித்து பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான்
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார்

#49
பரிந்து புலம்பும் மகளிர் காண கணவர் பிணம் பற்றி
விரிந்த குருதி பேராறு ஈர்த்து மனைகள்-தொறும் வீச
இரிந்தது இலங்கை எழுந்தது அழுகை இன்று இங்கு இவனாலே
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால்

#50
புக்கார் அமரர் பொலம் தார் அரக்கன் பொரு_இல் பெரும் கோயில்
விக்காநின்றார் விளம்பல் ஆற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம்
உக்கார் சம்புவாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார்

#51
என்னும் அளவில் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான்
உன்ன உன்ன உதிர குமிழி விழியூடு உமிழ்கின்றான்
சொன்ன குரங்கை யானே பிடிப்பென் கடிது தொடர்ந்து என்றான்
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார்

9 பஞ்ச சேனாபதிகள் வதை படலம்


#1
சிலந்தி உண்பது ஓர் குரங்கின்-மேல் சேறியேல் திறலோய்
கலந்த போரில் நின் கட்புல கடும் கனல் கதுவ
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை

#2
இலங்கு வெம் சினத்து அம் சிறை எறுழ் வலி கலுழன்
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின்
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும்
குலுங்கும் வன் துயர் நீங்குமால் வெள்ளியம் குன்றம்

#3
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார்
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார்
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின்
முறுவல் பூக்கும் அன்றே நின்ற மூவர்க்கும் முகங்கள்

#4
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச
வென்றி இல்லவர் மெல்லியோர்-தமை செல விட்டாய்
நன்றி இன்று ஒன்று காண்டியேல் எமை செல நயத்தி
என்று கைதொழுது இறைஞ்சினர் அரக்கனும் இசைந்தான்

#5
உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார்
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார்
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர்
தொலைவு இல் தானையை கதுமென வருக என சொன்னார்

#6
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார்
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த
மீன வான் இடு வில் என படைக்கலம் மிடைந்த

#7
தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து
போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட
வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த

#8
விரவு பொன் கழல் விசித்தனர் வெரிம் உற்று விளங்க
சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர் சமைய
கருவி புக்கனர் அரக்கர் மா பல்லணம் கலின
புரவி இட்ட தேர் பூட்டின பருமித்த பூட்கை

#9
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை
சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை
வீறு செய்தன அ பரி கலின மா விலாழி

#10
வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும்
முழங்கு வெம் களிற்று அதிர்ச்சியும் மொய் கழல் ஒலியும்
தழங்கு பல்_இயத்து அமலையும் கடையுகத்து ஆழி
முழங்கும் ஓதையின் மு மடங்கு எழுந்தது முடுகி

#11
ஆழி தேர் தொகை ஐம்பதினாயிரம் அஃதே
சூழி பூட்கைக்கு தொகை அவற்று இரட்டியின் தொகைய
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி
பாழி தோள் நெடும் படைக்கல பதாதியின் பகுதி

#12
கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின்
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க
காய்த்து அமைந்த வெம் கதிர் படை ஒன்று ஒன்று கதுவி
தேய்த்து எழுந்தன பொறி குலம் மழை குலம் தீய

#13
தொக்கது ஆம் படை சுரி குழல் மடந்தையர் தொடி கை
மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி
ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர ஒருவர்
புக்கு மீண்டிலர் என்று அழுது இரங்கினர் புலம்பி

#14
கை பரந்து எழு சேனை அம் கடலிடை கலந்தார்
செய்கைதாம் வரும் தேரிடை கதிர் என செல்வார்
மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார்
ஐவரும் பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார்

#15
முந்து இயம் பல கறங்கிட முறைமுறை பொறிகள்
சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார்
வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார்
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார்

#16
வாசவன் வய குலிசமும் வருணன் வன் கயிறும்
ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும்
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும்
ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார்

#17
சூர் தடிந்தவன் மயிலிடை பறித்த வன் தொகை
பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடை பறித்த
மூரி வெம் சிறகு இடை இட்டு தொடுத்தன முறுக்கி
வீர சூடிகை நெற்றியின் அயல் இட்டு விசித்தார்

#18
பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார்
நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி
மின் திணிந்தன ஓடையின் வீர பட்டத்தர்

#19
நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர்
பதியொடும் பெரும் திரு பறித்த பண்டை நாள்
விதி என அன்னவன் வெந்நிட்டு ஓடவே
பொதியொடும் வாரிய பொலன் கொள் பூணினார்

#20
இந்திரன் இசை இழந்து ஏகுவான் இகல்
தந்தி முன் கடாவினன் முடுக தாம் அதன்
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல்
உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார்

#21
பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின்
கோல் நினைத்திலன் என உலகம் கூறலும்
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான்
காலனை காலினில் கையில் கட்டினார்

#22
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல்
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன்
கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார்

#23
தோல் கிளர் திசை-தொறும் உலகை சுற்றிய
சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும்
கால் கிளர்ந்து ஓங்கினும் காலம் கையுற
மால் கடல் கிளரினும் சரிக்கும் வன்மையார்

#24
இ வகை ஐவரும் எழுந்த தானையர்
மொய் கிளர் தோரணம் அதனை முற்றினார்
கையொடு கை உற அணியும் கட்டினார்
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான்

#25
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின்
தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும்
பொருக்கென நோக்கிய புரந்தராதியர்
இரக்கமும் அவலமும் துளக்கும் எய்தினார்

#26
இற்றனர் அரக்கர் இ பகலுளே எனா
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான்
முற்றுற சுலாவிய முடிவு இல் தானையை
சுற்றுற நோக்கி தன் தோளை நோக்கினான்

#27
புன் தலை குரங்கு இது போலுமால் அமர்
வென்றது விண்ணவர் புகழை வேரொடும்
தின்ற வல் அரக்கரை திருகி தின்றதால்
என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண்ணிலார்

#28
ஆயிடை அனுமனும் அமரர்_கோன் நகர்
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு
மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான்

#29
வீங்கிய வீரனை வியந்து நோக்கிய
தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம்
வாங்கிய சிலையினர் வழங்கினார் படை
ஏங்கிய சங்கு_இனம் இடித்த பேரியே

#30
எறிந்தனர் எய்தனர் எண்_இறந்தன
பொறிந்து எழு படைக்கலம் அரக்கர் போக்கினார்
செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுற
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான்

#31
உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர்
செற்றுற நெருக்கினர் செருக்கும் சிந்தையர்
மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து
எற்றுவென் என எழு அனுமன் ஏந்தினான்

#32
ஊக்கிய படைகளும் உருத்த வீரரும்
தாக்கிய பரிகளும் தடுத்த தேர்களும்
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல்
தூக்கிய கரிகளும் புரள நூக்கினான்

#33
வார் மத கரிகளின் கோடு வாங்கி மா
தேர் பட புடைக்கும் அ தேரின் சில்லியால்
வீரரை உருட்டும் அ வீரர் வாளினால்
தார் உடை புரவியை துணிய தாக்குமால்

#34
இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி வேறு
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால்
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால்

#35
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு
ஆயிரம் தேர் பட அரைக்குமால் அழித்து
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால்

#36
உதைக்கும் வெம் கரிகளை உழக்கும் தேர்களை
மிதிக்கும் வன் புரவியை தேய்க்கும் வீரரை
மதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண்ணிடை
குதிக்கும் வன் தலையிடை கடிக்கும் குத்துமால்

#37
விசையின் மான் தேர்களும் களிறும் விட்டு அகல்
திசையும் ஆகாயமும் செறிய சிந்துமால்
குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும்
பிசையுமால் அரக்கரை பெரும் கரங்களால்

#38
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா
மீ உற தட கையால் வீரன் வீசு-தோறு
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே

#39
தாரொடும் உருளொடும் தட கையால் தனி
வீரன் விட்டு எறிந்தன கடலின் வீழ்வன
வாரியின் எழும் சுடர் கடவுள் வானவன்
தேரினை நிகர்த்தன புரவி தேர்களே

#40
மீ உற விண்ணிடை முட்டி வீழ்வன
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன
வாயிடை எரி உடை வடவை போன்றவை

#41
வரிந்து உற வல்லிதின் சுற்றி வாலினால்
விரிந்து உற வீசலின் கடலின் வீழ்குநர்
திரிந்தனர் செறி கயிற்று அரவினால் திரி
அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார்

#42
வீரன் வன் தட கையால் எடுத்து வீசிய
வார் மத கரியினின் தேரின் வாசியின்
மூரி வெம் கடல் புக கடிதின் முந்தின
ஊரின் வெம் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின

#43
பிறை குடை எயிற்றின பிலத்தின் வாயின
கறை புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின
உறைப்புறு படையின உதிர்ந்த யாக்கைகள்
மறைத்தன மகர தோரணத்தை வான் உற

#44
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன்
அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள
பொன்றுவது அல்லது புறத்து போவரோ

#45
முழுமுதல் கண்_நுதல் முருகன் தாதை கைம்
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினின் பொலம் கழல் அரக்கர் ஈண்டிய
குழுவினை களம் பட கொன்று நீக்கினான்

#46
உலந்தது தானை உவந்தனர் உம்பர்
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை
கலந்தது அழும் குரலின் கடல் ஓதை
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார்

#47
ஈர்த்து எழு செம்_புனல் எக்கர் இழுக்க
தேர் துணை ஆழி அழுந்தினர் சென்றார்
ஆர்த்தனர் ஆயிரம் ஆயிரம் அம்பால்
தூர்த்தனர் அஞ்சனை தோன்றலும் நின்றான்

#48
எய்த கடும் கணை யாவையும் எய்தா
நொய்து அகலும்படி கைகளின் நூறா
பொய்து அகடு ஒன்று பொருந்தி நெடும் தேர்
செய்த கடும் பொறி ஒன்று சிதைத்தான்

#49
உற்று உறு தேர் சிதையா-முன் உயர்ந்தான்
முற்றின வீரனை வானில் முனிந்தான்
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான்
எற்றினன் அஃது அவன் வில்லினில் ஏற்றான்

#50
முறிந்தது மூரி வில் அம் முறியே கொடு
எறிந்த அரக்கன் ஒர் வெற்பை எடுத்தான்
அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான்

#51
ஒழிந்தவர் நால்வரும் ஊழி உருத்த
கொழுந்துறு தீ என வெம் சிலை கோலா
பொழிந்தனர் வாளி புகைந்தன கண்கள்
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள்

#52
ஆயிடை வீரனும் உள்ளம் அழன்றான்
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான்
மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான்
தீயவர் அ சிலையை பொடிசெய்தார்

#53
தொடுத்த தொடுத்த சரங்கள் துரந்த
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற
மிடல் தொழிலான் விடு தேரொடு நொய்தின்
எடுத்து ஒருவன்-தனை விண்ணில் எறிந்தான்

#54
ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம்
நீந்தியது ஓடி நிமிர்ந்தது வேகம்
ஓய்ந்தது வீழ்வதன்-முன் உயர் பாரில்
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான்

#55
மதித்த களிற்றினில் வாள் அரி_ஏறு
கதித்தது பாய்வது போல் கதி கொண்டு
குதித்தனன் மால் வரை மேனி குழம்ப
மிதித்தனன் வெம் சின வீரருள் வீரன்

#56
மூண்ட சினத்தவர் மூவர் முனிந்தார்
தூண்டிய தேரர் சரங்கள் துரந்தார்
வேண்டிய வெம் சமம் வேறு விளைப்பார்
யாண்டு இனி ஏகுதி என்று எதிர் சென்றார்

#57
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம்
அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில்
இரண்டை இரண்டு கையில் கொடு எழுந்தான்

#58
தூக்கின பாய் பரி சூதர் உலைந்தார்
வீங்கின தோளவர் விண்ணின் விசைத்தார்
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன்
ஓங்கினன் மாருதி ஒல்லையின் உற்றான்

#59
கால் நிமிர் வெம் சிலை கையின் இறுத்தான்
ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான்
ஏனைய வெம் படை இல்லவர் எஞ்சார்
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார்

#60
வெள்ளை எயிற்றர் கறுத்து உயர் மெய்யர்
பிள்ள விரித்த பெரும் பில வாயர்
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார்
ஒள்ளிய வீரன் அருக்கனை ஒத்தான்

#61
தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு
ஏம்பல் இலார் இரு தோள்கள் இறுத்தான்
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார்
ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான்

#62
நின்றனன் ஏனையன் நின்றது கண்டான்
குன்றிடை வாவுறு கோள் அரி போல
மின் திரி வன் தலை மீது குதித்தான்
பொன்றி அவன் புவி தேரொடு புக்கான்

#63
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார்
வெம் சின அரக்கர் ஐவர் ஒருவனே வெல்லப்பட்டார்
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான்

#64
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார்
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார்
கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும்
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார்

#65
இறுக்குறும் இன்னே நம்மை குரங்கு என இரங்கி ஏங்கி
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும்
சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார்

#66
தானையும் உலந்தது ஐவர் தலைவரும் சமைந்தார் தாக்க
போனவர் தம்மில் மீண்டோம் யாம் அமர் புரிகிலாமை
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார்

10 அக்ககுமாரன் வதை படலம்


#1
கேட்டலும் வெகுளி வெம் தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை
தாள் துணை தொழுது மைந்தன் தடுத்து இடை தருதி என்றான்

#2
முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன்
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல்
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம்
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய்

#3
அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க
கொண்டனை என்முன் தன்னை பணி என நெஞ்சம் கோடல்
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும்
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான்

#4
கொய் தளிர் கோதும் வாழ்க்கை கோடரத்து உருவு கொண்டு
கைதவம் கண்ணி ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான்
எய்தினான் இமையா முக்கண் ஈசனே என்ற போதும்
நொய்தினின் வென்று பற்றி தருகுவென் நொடியில் நுன்-பால்

#5
துண்ட தூண் அகத்து தோன்றும் கோளரி சுடர் வெண் கோட்டு
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால்
தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல்

#6
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான்
புனை மலர் தாரினானும் போர் அணி அணிந்து போனான்

#7
ஏறினன் என்ப மன்னோ இந்திரன் இகலின் இட்ட
நூறொடு நூறு பூண்ட நொறில் வய புரவி நோன் தேர்
கூறினர் அரக்கர் ஆசி குமுறின முரச கொண்மூ
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப

#8
பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண் தேர்
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி

#9
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர்
ஏறிய தேரர் சூழ்ந்தார் இறுதியின் யாவும் உண்பான்
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார்

#10
மந்திர கிழவர் மைந்தர் மதி நெறி அமைச்சர் மக்கள்
தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு
அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர்
எந்திர தேரர் சூழ்ந்தார் ஈர்_இரண்டு இலக்கம் வீரர்

#11
தோமரம் உலக்கை சூலம் சுடர் மழு குலிசம் தோட்டி
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு
காமரு கணையம் குந்தம் கப்பணம் கால நேமி

#12
என்று இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி
மின் திரண்டு அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச
துன்று இரும் தூளி பொங்கி துறுதலால் இறுதிசெல்லா
பொன் திணி உலகம் எல்லாம் பூதலம் ஆய மாதோ

#13
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம்
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள்
தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற

#14
உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர்
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல்
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ

#15
மெயில் கர மணிகள் வீசும் விரி கதிர் விளங்க வெய்ய
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக அஃதும்
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர்
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற

#16
ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வய புரவி ஒல்கி
தூங்கின வீழ தோளும் கண்களும் இடத்து துள்ள
வீங்கின மேகம் எங்கும் குருதி நீர் துள்ளி வீழ்ப்ப
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ

#17
வெள்ள வெம் சேனை சூழ விண் உளோர் வெருவி விம்ம
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும்
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான்

#18
இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்கு சீயம்
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி
சுந்தர தோளை நோக்கி இராமனை தொழுது சொன்னான்

#19
எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல் யான் முன் நோற்ற
புண்ணியம் உளதாம் எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான்
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின் என்றான்

#20
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன்
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன்
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன்
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான்

#21
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான்
கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான்

#22
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான்

#23
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா
இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன்
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென் ஒழிவுறாமல்
கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான்

#24
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை
போர்த்தது பொழிந்தது அம்மா பொரு படை பருவ மாரி
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும்
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான்

#25
எறிந்தன நிருதர் வெய்தின் எய்தன படைகள் யாவும்
முறிந்தன வீரன் மேனி முட்டின மூரி யானை
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர

#26
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல்
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை
போயவர் உயிரும் போகி தென் புலம் படர்தல் பொய்யாது
ஆயிர கோடி தூதர் உளர்-கொலோ நமனுக்கு அம்மா

#27
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர்
பொர உற்ற பொழுது வீரன் மு மடங்கு ஆற்றல் பொங்க
விரவி போய் கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் ஆனான்
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார்

#28
பிள்ளப்பட்டன நுதல் ஓடை கரி பிறழ் பொன் தேர் பரி பிழையாமல்
அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர்
கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான் ஐம் புலன் வென்றானே

#29
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள்
பேரே பட்டன என்றார் சிலர் சிலர் பரியே பட்டன பெரிது என்றார்
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார்
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே

#30
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய்
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான்
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே

#31
கொன்றான் உடன் வரு குழுவை சிலர் பலர் குறைகின்றார் உடல் குலைகின்றார்
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும்
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான்

#32
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண
கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார்
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ
பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார்

#33
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி
வெய்தாயின பல விட்டான் வீரனும் வேறு ஓர் படை இலன் மாறா வெம்
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான்

#34
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர்
பாரில் சென்றது பரி பட்டன அவன் வரி வில் சிந்திய பகழி கோல்
மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும்
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான்

#35
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும்
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின்
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன்
பொரு கையால் இடை பிதிர்வித்தான் முறி பொறி ஓடும்படி பறியாவே

#36
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண்
தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும்
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று
மீளா-வகை புடை சுற்றிக்கொண்டது பற்றி கொண்டனன் மேலானான்

#37
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால்
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால
கொற்ற திண் சுவல் வயிர கைகொடு குத்தி புடை ஒரு குதிகொண்டான்

#38
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன்
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான்

#39
புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் சிலர் சிலர் பொதி பேயின்
பண்டாரத்திடை இட்டார் தம் உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்த
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார்
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார்

#40
மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார்
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார்
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார்
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார்

#41
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம்
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார்
மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார்
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார்

#42
குண்டல குழை முக குங்கும கொங்கையார்
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே
விண்டு அலத்தக விரை குமுத வாய் விரிதலால்
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே

#43
கதிர் எழுந்து அனைய செம் திரு முக கணவன்மார்
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார்
அதி நலம் கோதை சேர் ஓதியோடு அன்று அ ஊர்
உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே

#44
தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல்
ஓவியம் புரை நலார் விழு-தொறும் சிலர் உயிர்த்து
ஏவு கண்களும் இமைத்திலர்களாம் இது எலாம்
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம்

#45
ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால்
வீடினார் வீடினார் மிடை உடல் குவைகள்-வாய்
நாடினார் மட நலார் நவை இலா நண்பரை
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார்

#46
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள்
ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள்

#47
ஏந்தினாள் தலையை ஓர் எழுத_அரும் கொம்பு அனாள்
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை
வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா
பூம் தளிர் கைகளான் மெய் உற புல்லினாள்

#48
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக
புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள்
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள்

#49
தா அரும் திரு நகர் தையலார் முதல்
ஏவரும் இடை விழுந்து இரங்கி ஏங்கினார்
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா
தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தையார்

11 பாச படலம்


#1
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை
வெவ் விழி எரி உக வெகுளி வீங்கினான்
எ வழி உலகமும் குலைய இந்திர
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான்

#2
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல்
உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான்
புரம் சுட வரி சிலை பொருப்பு வாங்கிய
பரஞ்சுடர் ஒருவனை பொருவும் பான்மையான்

#3
ஏறினன் விசும்பினுக்கு எல்லை காட்டுவ
ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர்
கூறின கூறின சொற்கள் கோத்தலால்
பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே

#4
ஆர்த்தன கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன்
சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள்-தாமும் தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார்

#5
தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான்
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான்
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான்

#6
வேல் திரண்டனவும் வில்லு மிடைந்தவும் வெற்பு என்றாலும்
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம்
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை
ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே

#7
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின்
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர்
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான்

#8
தாள் இணை வீழ்ந்தான் தம்பிக்கு இரங்குவான் தறுகணானும்
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான்
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க
மீளி போல் மொய்ம்பினானும் விலக்கினன் விளம்பலுற்றான்

#9
ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம்

#10
கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ
பைம் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதி சேனை
இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல் குரங்கு அது எந்தாய்
சங்கரன் அயன் மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே

#11
திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற
முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்
அக்கனை கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி
புக்கு இனி வென்றும் என்றால் புலம்பு அன்றி புலமைத்து ஆமோ

#12
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும்
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா
போயினன் அமரர் கோவை புகழொடு கொண்டு போந்தான்

#13
ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண்
குழி வெம் கோப மாவும் துவன்றிய நிருதர் சேனை
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான்

#14
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம்
வென்றவன் இவன் என்றாலும் வீரத்தே நின்ற வீரன்
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல்
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார்

#15
இலை குலாம் பூணினானும் இரும் பிண குருதி ஈரத்து
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர்
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா

#16
வெப்பு அடைகில்லா நெஞ்சில் சிறியது ஓர் விம்மல் கொண்டான்
அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும்
ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே
எ படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்றான்

#17
கண் அனார் உயிரே ஒப்பார் கை படைக்கலத்தின் காப்பார்
எண்ணல் ஆம் தகைமை இல்லார் இறந்து எதிர் கிடந்தார் தம்மை
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா
புண்ணுளே கோல் இட்டு அன்ன மானத்தால் புழுங்குகின்றான்

#18
கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும் கரனார் பாடும்
யானுடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம்
மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும்
ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான்

#19
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிண குவடு இடறி செல்வான்
தேய்ப்புண்ட தம்பி யாக்கை சிவப்புண்ட கண்கள் தீயில்
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான்

#20
தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மா சீயம்
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண்
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான்

#21
வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையை கருதி ஆவி
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார்
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய்

#22
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி
தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன

#23
ஈண்டு இவை நிகழ்வுழி இரவி தேர் என
தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை
மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனின்
ஆண்தகை வனை கழல் அனுமன் நோக்கினான்

#24
வென்றேன் இதன் முன் சில வீரரை என்னும் மெய்ம்மை
அன்றே முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா
ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பது உள்ளது
இன்றே சமையும் இவன் இந்திரசித்து என்பான்

#25
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை
பட்டால் அதுவே அ இராவணன் பாடும் ஆகும்
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை
விட்டு ஏகும் அது அன்றி அரக்கரும் வெம்மை தீர்வார்

#26
ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ஒண்மையானை
கொன்றேன் எனின் இந்திரனும் துயர் கோளிம் நீங்கும்
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே
வென்றேன் அ இராவணன் தன்னையும் வேரொடு என்றான்

#27
அ காலை அரக்கரும் யானையும் தேரும் மாவும்
மு கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றி
புக்கானின் முன் புக்கு உயர் பூசல் பெருக்கும் வேலை
மிக்கானும் வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு மிக்கான்

#28
உதையுண்டன யானை உருண்டன யானை ஒன்றோ
மிதியுண்டன யானை விழுந்தன யானை மேல் மேல்
புதையுண்டன யானை புரண்டன யானை போரால்
வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல்

#29
முடிந்த தேர் குலம் முறிந்தன தேர் குலம் முரண் இற்று
இடிந்த தேர் குலம் இற்றன தேர் குலம் அச்சு இற்று
ஒடிந்த தேர் குலம் உக்கன தேர் குலம் நெக்கு
படிந்த தேர் குலம் பறிந்தன தேர் குலம் படியில்

#30
சிரன் நெரிந்தவும் கண் மணி சிதைந்தவும் செறி தாள்
தரன் நெரிந்தவும் முதுகு இற சாய்ந்தவும் தார் பூண்
உரன் நெரிந்தவும் உதிரங்கள் உமிழ்ந்தவும் ஒளிர் பொன்
குரன் நெரிந்தவும் கொடும் கழுத்து ஒடிந்தவும் குதிரை

#31
பிடியுண்டார்களும் பிளத்தலுண்டார்களும் பெரும் தோள்
ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ
கடியுண்டார்களும் கழுத்து இழந்தார்களும் கரத்தால்
அடியுண்டார்களும் அச்சமுண்டார்களும் அரக்கர்

#32
வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர்
விட்ட விட்ட வெம் படைகளும் வீரன்-மேல் வீழ்ந்த
சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல்
பட்ட பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த

#33
சிகை எழும் சுடர் வாளிகள் இராக்கதர் சேனை
மிகை எழும் சினத்து அனுமன்-மேல் விட்டன வெந்து
புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போத
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம்

#34
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் சிந்தி
பாரின் வீழ்தலும் தான் ஒரு தனி நின்ற பணை தோள்
வீரர் வீரனும் முறுவலும் வெகுளியும் வீங்க
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான்

#35
புரந்தரன் தலை பொதிர் எறிந்திட புயல் வானில்
பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப
நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன்
சிரம் துளங்கிட அரக்கன் வெம் சிலையை நாண் தெறித்தான்

#36
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம்
கீண்டதாம் என கிரி உக நெடு நிலம் கிழிய
நீண்ட மாதிரம் வெடிபட அவன் நெடும் சிலையில்
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான்

#37
நல்லை நல்லை இ ஞாலத்துள் நின் ஒக்க நல்லார்
இல்லை இல்லையால் எறுழ் வலிக்கு யாரொடும் இகல
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு
எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான்

#38
நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும்
கோளுக்கு எல்லையும் கொடும் தொழிற்கு எல்லையும் கொடியீர்
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன்
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான்

#39
இ சிரத்தையை தொலைப்பென் என்று இந்திரன் பகைஞன்
பச்சிரத்தம் வந்து ஒழுகிட வானவர் பதைப்ப
வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள்
அ சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமன்

#40
குறிது வான் என்று குறைந்திலன் நெடும் சினம் கொண்டான்
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி
சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான்

#41
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான்
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த
மேக நாதனும் மயங்கினனாம் என வியந்தான்

#42
நீண்ட வீரனும் நெடும் தட கைகளை நீட்டி
ஈண்டு வெம் சரம் எய்தன எய்திடா-வண்ணம்
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர்
பூண்ட பேயொடு சாரதி தரைப்பட புடைத்தான்

#43
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான்
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால்
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான்

#44
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா
கொற்ற மாருதி மற்றவன் தேர் மிசை குதித்து
பற்றி வன் கையால் பறித்து எழுந்து உலகு எலாம் பல கால்
முற்றி வென்ற போர் மூரி வெம் சிலையினை முறித்தான்

#45
முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர்
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால்
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா
எறிந்த இந்திரன் இட்ட வான் சிலையினை எடுத்தான்

#46
நூறு நூறு போர் வாளி ஓர் தொடை கொடு நொய்தின்
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான்
ஊறு தன் நெடு மேனியில் பல பட ஒல்கி
ஏறு சேவகன் தூதனும் சிறிது போது இருந்தான்

#47
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார்
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி
தூர்த்த வாளிகள் துணிபட முறைமுறை சுற்றி
போர்த்த பொன் நெடு மணி முடி தலையிடை புடைத்தான்

#48
பார மா மரம் முடி உடை தலையிடை படலும்
தாரையின் நெடும் கற்றைகள் சொரிவன தயங்க
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி
சோர நின்று உடல் துளங்கினன் அமரரை தொலைத்தான்

#49
நின்று போதம் வந்துறுத்தலும் நிறை பிறை எயிற்றை
தின்று தேவரும் முனிவரும் அவுணரும் திகைப்ப
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க
ஒன்று போல்வன ஆயிரம் பகழி கோத்து உய்த்தான்

#50
உய்த்த வெம் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப
கைத்த சிந்தையன் மாருதி நனி தவ கனன்றான்
வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான்

#51
கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன்-முன்னம்
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன்
புண்ணின் மீ சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப
விண்ணின் மீ சென்று தேரொடும் பார் மிசை வீழ்ந்தான்

#52
விழுந்து பார் அடையா-முனம் மின் எனும் எயிற்றான்
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில்
செழும் திண் மா மணி தேர் குலம் யாவையும் சிதைய
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான்

#53
ஏறு தேர் இலன் எதிர் நிற்கும் உரன் இலன் எரியின்
சீறு வெம் சினம் திருகினன் அந்தரம் திரிவான்
வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் விரிஞ்சன்
மாறு இலா பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான்

#54
பூவும் பூ நிற அயினியும் தீபமும் புகையும்
தா இல் பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான்
தேவு யாவையும் உலகமும் திருத்திய தெய்வ
கோவில் நான்முகன் படைக்கலம் தட கையில் கொண்டான்

#55
கொண்டு கொற்ற வெம் சிலை நெடு நாணொடும் கூட்டி
சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய்
விண் துளங்கிட மேருவும் துளங்கிட விட்டான்

#56
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண்
பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி
துணிக்க உற்று உயர் கலுழனும் துணுக்குற சுற்றி
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க

#57
திண்ணென் யாக்கையை திசைமுகன் படை சென்று திருக
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின்
கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள்
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான்

#58
சாய்ந்த மாருதி சதுமுகன் படை எனும் தன்மை
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல்
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான்
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான்

#59
உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்
சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை
பற்றி ஈர்த்தனர் ஆர்த்தனர் தெழித்தனர் பலரால்

#60
குரக்கு நல் வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும்
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர்
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமன்

#61
கறுத்த மாசுணம் கனக மா மேனியை கட்ட
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன்
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு
புறத்து சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான்

#62
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல்
அந்தரத்தினும் விசும்பினும் திசை-தொறும் ஆர்ப்பார்
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை மொழியின்
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது அ இலங்கை

2 பிணி வீட்டு படலம்


#1
எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின்
கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள்
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின்
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார்

#2
மை தடம் கண்ணியர் மைந்தர் யாவரும்
பை தலை அரவு என கனன்று பைதலை
இத்தனை பொழுதுகொண்டு இருப்பதோ எனா
மொய்த்தனர் கொலை செய்ய முயல்கின்றார் சிலர்

#3
நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின்
கிச்சிடை இடும் என கிளக்கின்றார் சிலர்

#4
எந்தையை எம்பியை எம் முனோர்களை
தந்தனை போக என தடுக்கின்றார் பலர்
அந்தரத்து அமரர்-தம் ஆணையால் இவன்
வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர்

#5
ஓங்கல் அம் பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி
ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர்

#6
கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர்
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய
குண்டல முகத்தியர் உவகை கூரவே

#7
வடி உடை கனல் படை வயவர் மால் கரி
கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின்
இடி பட சிதைந்த மால் வரையின் இல் எலாம்
பொடிபட கிடந்தன கண்டு போயினான்

#8
முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்பு தோள்
கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர்

#9
ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர்
போர்ப்பு உற செயலினை புகழ்கின்றார் பலர்
பார்ப்புற பார்ப்புற பயத்தினால் பதைத்து
ஊர் புறத்து இரியலுற்று ஓடுவார் பலர்

#10
காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு
பூம் துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம்
தேர்ந்து உறு பொருள் பெற எண்ணி செய்யு-மின்
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர்

#11
ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன்
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா
களி வரு சிந்தையால் காண்டி நங்களை
சுளிகிலையாம் என தொழுகின்றார் சிலர்

#12
பைம் கழல் அனுமனை பிணித்த பாந்தளை
கிங்கரர் ஒரு-புடை கிளர்ந்து பற்றினார்
ஐம்பதினாயிரர் அளவு_இல் ஆற்றலர்
மொய்ம்பினின் எறுழ் வலி கருளன் மும்மையார்

#13
திண் திறல் அரக்கர்-தம் செருக்கு சிந்துவான்
தண்டல்_இல் தன் உரு கரந்த தன்மையான்
மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உரு
கொண்டனன் அந்தகன்-கொல் என்றார் பலர்

#14
அரமிய தலம்-தொறும் அம் பொன் மாளிகை
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும்
முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர்
நிரை வளை மகளிரும் நிருத மைந்தரும்

#15
கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன்
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால்
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன்
அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் என்பார் பலர்

#16
அரம்பையர் விஞ்சை நாட்டு அளக வல்லியர்
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர்
கரும்பு இயல் சித்தியர் இயக்கர் கன்னியர்
வரம்பு_அறு சும்மையர் தலைமயங்கினார்

#17
அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது
விரை குழல் சீதை-தன் மெலிவு நோக்கியோ
இரக்கமோ அறத்தினது எளிமை எண்ணியோ

#18
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான்
மீண்டிலன் வேறலும் விரும்பலுற்றிலன்
ஈண்டு இதுவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனை
காண்டலே நலன் என கருத்தின் எண்ணினான்

#19
எந்தையது அருளினும் இராமன் சேவடி
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர்
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும்
சிந்துவென் அயர்வுறு சிந்தை சீரிதால்

#20
வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து
அளவுறு முதியரும் அறிய ஆணையால்
விளைவினை விளம்பினால் மிதிலை நாடியை
இளகினன் என்-வயின் ஈதல் ஏயுமால்

#21
அல்லதூஉம் அவனுடை துணைவர் ஆயினார்க்கு
எல்லையும் தெரிவுறும் எண்ணும் தேறலாம்
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து உரை
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே

#22
வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும்
கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும்
மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையான்
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால்

#23
ஆதலான் அரக்கனை எய்தி ஆற்றலும்
நீதியும் மன கொள நிறுவி நின்றவும்
பாதியின் மேல்செல நூறி பைப்பைய
போதலே கருமம் என்று அனுமன் போயினான்

#24
கடவுளர்க்கு அரசனை கடந்த தோன்றலும்
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ
விடை பிணிப்புண்டது போலும் வீரனை
குடை கெழு மன்னன் இல் கொண்டு போயினான்

#25
தூதுவர் ஓடினர் தொழுது தொல்லை நாள்
மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின்
காதலன் மரை மலர் கடவுள் வாளியால்
ஏதில் வானரம் பிணிப்புண்டதாம் என்றார்

#26
கேட்டலும் கிளர் சுடர் கெட்ட வான் என
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின்
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர்
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான்

#27
எல்லை_இல் உவகையால் இவர்ந்த தோளினன்
புல்லுற மலர்ந்த கண் குமுத பூவினன்
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து என் ஆணையால்
கொல்லலை தருக என கூறுவீர் என்றான்

#28
அ உரை தூதரும் ஆணையால் வரும்
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார்
இ உரை நிகழ்வுழி இருந்த சீதையாம்
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம்

#29
இறுத்தனன் கடி பொழில் எண்ணிலோர் பட
ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர்
வெறுத்தனள் சோர்வுற வீரற்கு உற்றதை
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள்

#30
ஓவியம் புகையுண்டது போல் ஒளிர்
பூவின் மெல்லியல் மேனி பொடி உற
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும்
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள்

#31
உற்று உண்டாய விசும்பை உருவினாய்
முற்றுண்டாய் கலை யாவையும் முற்றுற
கற்றுண்டாய் ஒரு கள்ள அரக்கனால்
பற்றுண்டாய் இதுவோ அற பான்மையே

#32
கடல் கடந்து புகுந்தனை கண்டகர்
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ
இடர்கள் தந்தனை வந்து இடர் மேலுமே

#33
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு
ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய
பாழி காட்டி அரும் பழி காட்டினாய்

#34
கண்டு போயினை நீள் நெறி காட்டிட
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ

#35
ஏய பன்னினள் இன்னன தன் உயிர்
தேய கன்று பிடியுற தீங்கு உறும்
தாயை போல தளர்ந்து மயங்கினாள்
தீயை சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள்

#36
பெரும் தகை பெரியோனை பிணித்த போர்
முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும்
அரும் தவ பயனால் அரசு ஆள்கின்றான்
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான்

#37
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த
பொலம் கொள் மா மணி வெள்ளியங்குன்று என பொலிய

#38
புள் உயர்த்தவன் திகிரியும் புரந்தரன் அயிலும்
தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும்
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள்
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க

#39
துன்று செம் மயிர் சுடர் நெடும் கற்றைகள் சுற்ற
நின்று திக்குற நிரல்பட கதிர் குழாம் நிமிர
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன

#40
மரகத கொழும் கதிரொடு மாணிக்க நெடு வாள்
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி
உரகர்_கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப

#41
குவித்த பல் மணி குப்பைகள் கலையொடும் கொழிப்ப
சவி சுடர் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க
புவி தடம் படர் மேருவை பொன் முடி என்ன
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப

#42
சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய
பந்தி வெண் முத்தின் அணிகலன் முழுநிலா பரப்ப
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன

#43
வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய
திண்மைக்கும் தனி உறையுளாம் முழு முகம் திசையில்
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும்
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற

#44
ஏக_நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற

#45
வானரங்களும் வானவர் இருவரும் மனிதர்
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும்
தூ நவின்ற வேல் அரக்கர்-தம் குழுவொடு சுற்ற

#46
கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூட
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும்
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த
வீடு மீட்குறும் மேனகை-மேல் நகை விளங்க

#47
பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும்
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர்
ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க

#48
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர்
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல்
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய

#49
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த
அம் கய தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா
பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு இந்துவே போன்று

#50
இருந்த எண் திசை கிழவனை மாருதி எதிர்ந்தான்
கரும் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தை சிந்தி
உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான்

#51
உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன்
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்
திறங்கள் என் பல சிந்திப்பது இவன் தலை சிதறி
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான்

#52
தேவர் தானவர் முதலினர் சேவகன் தேவி
காவல் கண்டு இவண் இருந்தவர் கட்புலன் கதுவ
பாவகாரி தன் முடி தலை பறித்திலென் என்றால்
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை என்றான்

#53
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி
ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது அது கொடிது அம்மா
தேடி வந்தது ஓர் குரங்கு எனும் வாசகம் சிறிதோ

#54
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி
மீண்ட போது உண்டு வசைப்பொருள் வென்றிலேன் எனினும்
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ

#55
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின்
சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான்

#56
கொல்லலாம் வலத்தனும் அல்லன் கொற்றமும்
வெல்லலாம் தரத்தனும் அல்லன் மேலை நாள்
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை
வெல்லலாம் இராமனால் பிறரும் வெல்வரோ

#57
என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன்
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால்
அன்னவே காலங்கள் கழியும் ஆதலான்
துன்ன அரும் செரு தொழில் தொடங்கல் தூயதோ

#58
ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம் என
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால்

#59
இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான் என
அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்
பொங்கு வெம் செவிடை பொழுது போக்கினால்

#60
ஆதலான் அமர்_தொழில் அழகிற்று அன்று அரும்
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான்
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால்
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான்

#61
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர்
ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்கு
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது
ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான்

#62
புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடம்
தவனை உற்று அரி உருவான ஆண்தகை
சிவன் என செம் கணான் என செய் சேவகன்
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான்

#63
நோக்கிய கண்களால் நொறில் கனல் பொறி
தூக்கிய அனுமன் மெய் மயிர் சுறுக்கொள்
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை
வீக்கிய அவன் உடல் விசித்த பாம்பினே

#64
அன்ன ஓர் வெகுளியன் அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற
என் இவண் வரவு நீ யாரை என்று அவன்
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான்

#65
நேமியோ குலிசியோ நெடும் கணிச்சியோ
தாமரை கிழவனோ தறுகண் பல் தலை
பூமி தாங்கு ஒருவனோ பொருது முற்றுவான்
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்

#66
நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ
தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ

#67
அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின்
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ
முந்து ஒரு மலருளோன் இலங்கை முற்றுற
சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ

#68
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம்
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால்
சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான்
வேரொடும் அமரர்-தம் புகழ் விழுங்கினான்

#69
சொல்லிய அனைவரும் அல்லென் சொன்ன அ
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென்
அல்லி அம் கமலமே அனைய செம் கண் ஓர்
வில்லிதன் தூதன் யான் இலங்கை மேயினேன்

#70
அனையவன் யார் என அறிதியாதியேல்
முனைவரும் அமரரும் மூவர் தேவரும்
எனையவர் எனையவர் யாவர் யாவையும்
நினைவு அரும் இருவினை முடிக்க நின்றுளோன்

#71
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர்
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும்
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம்
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான்

#72
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின்
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன்
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம்

#73
போதமும் பொருந்து கேள்வி புரை அறு பயனும் பொய் தீர்
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும்
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின்
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன்

#74
காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும்
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான்
போர் அணங்கு இடங்கர் கவ்வ பொது நின்று முதலே என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான்

#75
மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளி_பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்

#76
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர்
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்

#77
அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன்
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன்
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான்

#78
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண்
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான்

#79
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான்

#80
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால்
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான்
அன்னவன் தேவி-தன்னை அங்கதன் நாடலுற்ற
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான்

#81
தேவியை நாடி வந்த செம் கணாற்கு எங்கள் கோமான்
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன
ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும்
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான்

#82
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி
மேய வெம் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன்
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான்

#83
உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை
வெம் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள் தொழில் மேற்கொண்டீரேல்
எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால்
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ

#84
தம்முனை கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை
நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான்

#85
துணர்த்த தாரவன் சொல்லிய சொற்களை
புணர்த்து நோக்கி பொது நின்ற நீதியை
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும்
குணத்தினானும் இனையன கூறினான்

#86
தூது வந்தது சூரியன் கான்முளை
ஏது ஒன்றிய நீதி இயைந்தன
சாது என்று உணர்கிற்றியேல் தக்கன
கோது இறந்தன நின்-வயின் கூறுவாம்

#87
வறிது வீழ்த்தனை வாழ்க்கையை மன் அறம்
சிறிதும் நோக்கலை தீமை திருத்தினாய்
இறுதி உற்றுளது ஆயினும் இன்னும் ஓர்
உறுதி கேட்டி உயிர் நெடிது ஓம்புவாய்

#88
போய் இற்றீர் நும் புலன் வென்று போற்றிய
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம்
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள்
தீயின் தூயவளை துயர் செய்ததால்

#89
இன்று வீந்தது நாளை சிறிது இறை
நின்று வீந்தது அலால் நிறை நிற்குமோ
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை
வென்று வீங்கிய வீக்கம் மிகுத்ததால்

#90
தீமை நன்மையை தீர்த்தல் ஒல்லாது எனும்
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய
நோய்மையால் துடைக்கின்றனை நோக்கலாய்

#91
திறம் திறம்பிய காம செருக்கினால்
மறந்து தம்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால்
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார்

#92
நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர்
ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால்
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை
தாம தாரினர் எண்ணினும் சால்வரோ

#93
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு
இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும்
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர்
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர்

#94
இச்சை தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகை உற நாண் இலன்
பச்சை மேனி புலர்ந்து பழி படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ

#95
ஓதநீர் உலகு ஆண்டவர் உன் துணை
போத நீதியர் ஆர் உளர் போயினார்
வேத நீதி விதி வழி மேல்வரும்
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ

#96
வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால்
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின்
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே

#97
பாரை ஞூறுவ பற்பல பொன் புயம்
ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும்
ஊரை ஞூறும் கடும் கனல் உட்பொதி
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ

#98
புரம் பிழைப்பு அரும் தீ புக பொங்கியோன்
நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய
வரம் பிழைக்கும் மறை பிழையாதவன்
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ

#99
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ
வேறும் இன்னும் நகை ஆம் வினை தொழில்
தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய்

#100
பிறந்துளார் பிறவாத பெரும் பதம்
சிறந்துளார் மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய்
இறந்துளார் பிறர் யாரும் இராமனை
மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால்

#101
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும்
ஓது பல் கிளையும் உயிரும் பெற
சீதையை தருக என்று என செப்பினான்
சோதியான் மகன் நிற்கு என சொல்லினான்

#102
என்றலும் இவை சொல்லியது எற்கு ஒரு
குன்றின் வாழும் குரங்கு-கொலாம் இது
நன்று நன்று என மா நகை செய்தனன்
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான்

#103
குரக்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும்
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும்
புரத்தினுள் தரும் தூது புகுந்த பின்
அரக்கரை கொன்றது அஃது உரையாய் என்றான்

#104
காட்டுவார் இன்மையால் கடி காவினை
வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை
வீட்டினேன் பின்னும் மென்மையினால் உந்தன்
மாட்டு வந்தது காணும் மதியினால்

#105
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக
மின்னும் வாள் எயிற்றின் சினம் வீங்கினான்
கொல்-மின் என்றனன் கொல்லியர் சேர்தலும்
நில்-மின் என்றனன் வீடணன் நீதியான்

#106
ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை
நீண்ட கையன் வணங்கினன் நீதியாய்
மூண்ட கோபம் முறையது அன்றாம் எனா
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான்

#107
அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய்
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய்

#108
பூதல பரப்பின் அண்ட பொகுட்டினுள் புறத்துள் பொய் தீர்
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர்
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த
தூதரை கொன்றுளார்கள் யாவரே தொல்லை நல்லோர்

#109
பகை புலன் நணுகி உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார்
மிகை புலன் அடக்கி மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட
தகை புல கருமத்தோரை கோறலின் தக்கார் யார்க்கும்
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே

#110
மு தலை எஃகன் மற்றை முராந்தகன் முனிவன் முன்னா
அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால்
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ
இ தலை எய்தினானை கொல்லுதல் இழுக்கம் இன்னும்

#111
இளையவள்-தன்னை கொல்லாது இரு செவி மூக்கொடு ஈர்ந்து
விளைவு உரை என்று விட்டார் வீரர் ஆய் மெய்ம்மை ஓர்வார்
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான்

#112
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும்
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா
தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார்

#113
ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல்
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா
மேய தெய்வ படைக்கலத்தை மீட்டான் அமரர் போர் வென்றான்
ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார்

#114
நாட்டின் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே
வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற தேரும் விசி துறந்த
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த
பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை

#115
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற
எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார்

#116
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான்

#117
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப வீடும் உணர்ந்தே விரைவு இல்லா
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும்
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான்

#118
வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து வெள்ளிடையில்
போந்து புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற
ஏந்து நெடு வால் கிழி சுற்றி முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய்
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க

#119
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம்
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார்
புக்க படைஞர் புடை காப்போர் புணரி கணக்கர் புறம் செல்வோர்
திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால்

#120
அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர்
சிந்த நூறி சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார்

#121
ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும்
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள்
வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து_உயிர்த்தாள்

#122
தாயே அனைய கருணையான் துணையை ஏதும் தகைவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில்
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனை சுடல் என்றாள்

#123
வெளுத்த மென் தகையவள் விளம்பும் ஏல்வையின்
ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான்
தளிர்த்தன மயிர் புறம் சிலிர்ப்ப தண்மையால்
குளிர்ந்தது அ குரிசில் வால் என்பு கூரவே

#124
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும்
முற்றுறு மும்மை செம் தீ முப்புரம் முருங்க சுட்ட
கொற்றவன் நெற்றி கண்ணின் வன்னியும் குளிர்ந்த அன்றே

#125
அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி
குண்டமும் குளிர்ந்த மேகத்து உரும் எலாம் குளிர்ந்த கொற்ற
சண்ட வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா_இல்
மண்டலம் குளிர்ந்த மீளா நரகமும் குளிர்ந்த மாதோ

#126
வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி வெம் தீ
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை
கற்பினால் இயன்றது என்பான் பெரியது ஓர் களிப்பன் ஆனான்

#127
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான்

#128
முழுவதும் தெரிய நோக்கி முற்றும் ஊர் முடிவில் சென்றான்
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி
தழுவினன் இரண்டு_நூறு_ஆயிரம் புய தட கை தாம்போடு
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம்

#129
இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார்
முற்றினார் உலந்தார் ஐயன் மொய்ம்பினோடு உடலை மூழ்க
சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான் அரவின் சுற்றம்
பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் விசும்பின் ஓர்-பால்

#130
துன்னவர் புரத்தை முற்றும் சுடு தொழில் தொல்லையோனும்
பன்னின பொருளும் நாண பாதகர் இருக்கை பற்ற
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான்

#131
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால்
துப்பு உறழ் மேனி அண்ணல் மேரு வில் குழைய தோளால்
முப்புரத்து எய்த கோலே ஒத்தது அம் மூரி போர் வால்

#132
வெள்ளியின் பொன்னின் நானா விளங்கு பல் மணியின் விஞ்சை
தெள்ளிய கடவுள் தச்சன் கை முயன்று அரிதின் செய்த
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான்
ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான்

#133
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும்
காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான்

13 இலங்கை எரியூட்டு படலம்


#1
கொடியை பற்றி விதானம் கொளுத்தியே
நெடிய தூணை தழுவி நெடும் சுவர்
முடிய சுற்றி முழுதும் முருக்கிற்றால்
கடிய மா மனை-தோறும் கடும் கனல்

#2
வாசல் இட்ட எரி மணி மாளிகை
மூச முட்டி முழுதும் முருக்கலால்
ஊசலிட்டு என ஓடி உலைந்து உளை
பூசலிட்ட இயல் புரம் எலாம்

#3
மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை
பிணியின் செம் சுடர் கற்றை பெருக்கலால்
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார்
அணி வளை கை நல்லார் அமைந்துளார்

#4
வானகத்தை நெடும் புகை மாய்த்தலால்
போன திக்கு அறியாது புலம்பினார்
தேன் அகத்த மலர் பல சிந்திய
கானகத்து மயில் அன்ன காட்சியார்

#5
கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீ சொரிந்தனர் வீரரும் மாதரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும்
தீ கொளுந்தினவும் தெரிகின்றிலார்

#6
இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்
சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற
கல்லி தம் இயல்பு எய்தும் கருத்தர் போல்

#7
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய் அடி
தாய் அளந்து உலகங்கள் தர கொள்வான்
மீ எழுந்த கரியவன் மேனியின்
போய் எழுந்து பரந்தது வெம் புகை

#8
நீலம் நின்ற நிறத்தன கீழ் நிலை
மாலின் வெம் சின யானையை மானுவ
மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால்
தோல் உரிந்து கழன்றன தோல் எலாம்

#9
மீது இமம் கலந்தால் அன்ன வெம் புகை
சோதி மங்கல தீயொடு சுற்றலால்
மேதி மங்குலின் வீழ் புனல் வீழ் மட
ஓதிமங்களின் மாதர் ஒதுங்கினார்

#10
பொடித்து எழுந்த பெரும் பொறி போவன
இடி குலங்களின் வீழ்தலும் எங்கணும்
வெடித்த வேலை வெதும்பிட மீன் குலம்
துடித்து வெந்து புலர்ந்து உயிர் சோர்ந்தவால்

#11
பருகு தீ மடுத்து உள்ளுற பற்றலால்
அருகு நீடிய ஆடக தாரைகள்
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன
திருகு பொன் நெடும் தண்டின் திரண்டவால்

#12
உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால்
வரை நிவந்தன பல் மணி மாளிகை
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ
தரையும் வெந்தது பொன் எனும் தன்மையால்

#13
கல்லினும் வலிதாம் புகை கற்றையால்
எல்லி பெற்றது இமையவர் நாடு இயல்
வல்லி கோலி நிவந்தன மா மணி
சில்லியோடும் திரண்டன தேர் எலாம்

#14
பேய மன்றினில் நின்று பிறங்கு எரி
மாயர் உண்ட நறவு மடுத்ததால்
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால்
தீயர் அன்றியும் தீமையும் செய்வரால்

#15
தழுவு இலங்கை தழங்கு எரி தாய் செல
வழு_இல் வேலை உலையின் மறுகின
எழு கொழும் சுடர் கற்றை சென்று எய்தலால்
குழுவு தண் புனல் மேகம் கொதிக்கவே

#16
பூ கரிந்து முறி பொறி ஆய் அடை
நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய்
மீ கரிந்து நெடும் பணை வேர் உற
கா கரிந்து கரும் கரி ஆனவே

#17
தளை கொளுத்திய தாவு எரி தாமணி
முளை கொளுத்தி முகத்திடை மொய்த்த பேர்
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன
வளை குளப்பின் மணி நிற வாசியே

#18
எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகை
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர் கோளும் உற
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல்
விழுந்து முற்றினர் கூற்றை விழுங்குவார்

#19
கோசிக துகில் உற்ற கொழும் கனல்
தூசின் உத்தரிகத்தொடு சுற்றுறா
வாச மை குழல் பற்ற மயங்கினார்
பாசிழை பரவை படர் அல்குலார்

#20
நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர்
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார்
புலவியின் கரை கண்டவர் அமுது உக புணரும்
கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல்

#21
பஞ்சரத்தொடு பசு நிற கிளி வெந்து பதைப்ப
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப
குஞ்சரத்து அன கொழுநரை தழுவுறும் கொதிப்பால்
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார்

#22
வரையினை புரை மாடங்கள் எரி புக மகளிர்
புரை இல் பொன் கலன் வில்லிட விசும்பிடை போவார்
கரை இல் நுண் புகை படலையில் கரந்தனர் கலிங்க
திரையினுள் பொலி சித்திர பாவையின் செயலார்

#23
அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம்
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப
பகரும் ஊழியில் கால வெம் கடும் கனல் பருகும்
மகர வேலையின் வெந்தன நந்தனவனங்கள்

#24
மினல் பரந்து எழு கொழும் சுடர் உலகு எலாம் விழுங்கி
நினைவு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால்
சினை பரந்து எரி சேர்ந்திலா நின்றவும் சில வெம்
கனல் பரந்தவும் தெரிகில கற்பக கானம்

#25
மூளும் வெம் புகை விழுங்கலின் சுற்றுற முழு நீர்
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி
பூளை வீய்ந்து அன்ன போவன புணரியில் புனல் மீன்
மீள யாவையும் தெரிந்தில முகில் கணம் விசைப்ப

#26
மிக்க வெம் புகை விழுங்கலின் வெள்ளியங்கிரியும்
ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ
பக்க வேலையின் படியது பாற்கடல் முடிவில்
திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா

#27
கரிந்து சிந்திட கடும் கனல் தொடர்ந்து உடல் கதுவ
உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார்
விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் தானும்
எரிந்து வேகின்ற ஒத்தது எறி திரை பரவை

#28
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற
நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறு கொள நீங்கி
கரும் கடல்-தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி

#29
வில்லும் வேலும் வெம் குந்தமும் முதலிய விறகாய்
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி
தொல்லை நல் நிலை தொடர்ந்த பேர் உணர்வு அன்ன தொழிலால்
சில்லி உண்டையின் திரண்டன படைக்கல திரள்கள்

#30
செய் தொடர் கன வல்லியும் புரசையும் சிந்தி
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய
மொய் தட செவி நிறுத்தி வால் முதுகினில் முறுக்கி
கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா

#31
வெருளும் வெம் புகை படலையின் மேற்செல வெருவி
இருளும் வெம் கடல் விழுந்தன எழுந்தில பறவை
மருளின் மீன் கணம் விழுங்கிட உலந்தன மனத்து ஓர்
அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய

#32
நீரை வற்றிட பருகி மா நெடு நிலம் தடவி
தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா
மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல்
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ

#33
வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி
போனபோன திக்கு அறிகிலர் அனைவரும் போனார்
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர் இலங்கை
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார்

#34
நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்க
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின்
பாவைமார் நறும் குழல்களும் பரிமளம் கமழ்ந்த

#35
சூழும் வெம் சுடர் தொடர்ந்திட யாவரும் தொடரா
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில்
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும்

#36
பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில்
நின்று சுற்று எரி பருகிட நெகிழ்வு உற உருகி
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த

#37
அனைய காலையில் அரக்கனும் அரிவையர் குழுவும்
புனை மணி பொலி புட்பக விமானத்து போனார்
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும்
வினை இலாமையின் வெந்தது அ விலங்கல்-மேல் இலங்கை

#38
ஆழி தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும்
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான்

#39
கரங்கள் கூப்பினர் தம் கிளை திருவொடும் காணார்
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய்
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால்
குரங்கு சுட்டது ஈது என்றலும் இராவணன் கொதித்தான்

#40
இன்று புன் தொழில் குரங்கு-தன் வலியினால் இலங்கை
நின்று வெந்து மா நீறு எழுகின்றது நெருப்பு
தின்று தேக்கிடுகின்றது தேவர்கள் சிரிப்பார்
நன்று நன்று போர் வலி என இராவணன் நக்கான்

#41
உண்ட நெருப்பை
கண்டனர் பற்றி
கொண்டு அணைக என்றான்
அண்டரை வென்றான்

#42
உற்று அகலா-முன்
செற்ற குரங்கை
பற்று-மின் என்றான்
முற்றும் முனிந்தான்

#43
சார் அயல் நின்றார்
வீரர் விரைந்தார்
நேருதும் என்றார்
தேரினர் சென்றார்

#44
எல்லை இகந்தார்
வில்லர் வெகுண்டார்
பல் அதிகார
தொல்லர் தொடர்ந்தார்

#45
நீர் கெழு வேலை நிமிர்ந்தார்
தார் கெழு தானை சமைந்தார்
போர் கெழு மாலை புனைந்தார்
ஓர் எழு வீரர் உயர்ந்தார்

#46
விண்ணினை வேலை விளிம்பு ஆர்
மண்ணினை ஓடி வளைந்தார்
அண்ணலை நாடி அணைந்தார்
கண்ணினின் வேறு அயல் கண்டார்

#47
பற்றுதிர் பற்றுதிர் என்பார்
எற்றுதிர் எற்றுதிர் என்பார்
முற்றினர் முற்றும் முனிந்தார்
கற்று உணர் மாருதி கண்டான்

#48
ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார்
கால் கொடு கை கொடு கார் போல்
வேல் கொடு கோலினர் வெம் தீ
வால் கொடு தானும் வளைந்தான்

#49
பாதவம் ஒன்று பகுத்தான்
மாதிரம் வாலின் வளைத்தான்
மோதினன் மோத முனிந்தார்
ஏதியும் நாளும் இழந்தார்

#50
நூறிட மாருதி நொந்தார்
ஊறிட ஊன் இடு புண்ணீர்
சேறு இட ஊர் அடு செம் தீ
ஆறிட ஓடினது ஆறாய்

#51
தோற்றினர் துஞ்சினர் அல்லார்
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார்
காற்றின் மகன் கலை கற்றான்
கூற்றினும் மும் மடி கொன்றான்

#52
மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
மொய்ம்பினர் வீரர் முடிந்தார்
ஐம்பதினாயிரர் அல்லார்
பைம் புனல் வேலை படிந்தார்

#53
தோய்த்தனன் வால் அது தோய
காய்ச்சின வேலைகலந்தார்
போய் சிலர் பொன்றினர் போனார்
ஏச்சு என மைந்தர் எதிர்ந்தார்

#54
சுற்றினன் தேரினர் தோலா
வில் தொழில் வீரம் விளைத்தார்
எற்றினன் மாருதி எற்ற
உற்று எழுவோரும் உலந்தார்

#55
விட்டு உயர் விஞ்சையர் வெம் தீ
வட்ட முலை திரு வைகும்
புள் திரள் சோலை புறத்தும்
சுட்டிலது என்பது சொன்னார்

#56
வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்
வெம் திறல் வீரன் வியந்தான்
உய்ந்தனென் என்ன உயர்ந்தான்
பைம்_தொடி தாள்கள் பணிந்தான்

#57
பார்த்தனள் சானகி பாரா
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள்
வார்த்தை என் வந்தனை என்னா
போர் தொழில் மாருதி போனான்

#58
தெள்ளிய மாருதி சென்றான்
கள்ள அரக்கர்கள் கண்டால்
எள்ளுவர் பற்றுவர் என்னா
ஒள் எரியோனும் ஒளித்தான்

14 திருவடி தொழுத படலம்


#1
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது
ஆங்கு ஒரு குடுமி குன்றை அருக்கனின் அணைந்த ஐயன்
வீங்கினன் உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீரன்
பூம் கழல் தொழுது வாழ்த்தி விசும்பிடை கடிது போனான்

#2
மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும்
கொய் நாகம் நறும் தேன் சிந்தும் குன்றிடை குதியும் கொண்டான்

#3
போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர்-மன்னோ
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா

#4
அழுதனர் சிலவர் முன் நின்று ஆர்த்தனர் சிலவர் அண்மி
தொழுதனர் சிலவர் ஆடி துள்ளினர் சிலவர் அள்ளி
முழுதுற விழுங்குவார் போல் மொய்த்தனர் சிலவர் முற்றும்
தழுவினர் சிலவர் கொண்டு சுமந்தனர் சிலவர் தாங்கி

#5
தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி
மேல் முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று
தாம் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார்

#6
தாள்களில் மார்பில் தோளில் தலையினில் தட கை-தம்மில்
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள்
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார்

#7
வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை
காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம்
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான்

#8
என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி தாழா
நின்றனர் உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்
சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல்-பாலை
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன்

#9
ஆண்தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமைய சொல்லி
பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று போரில்
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்பு சிந்தி
மீண்டதும் விளம்பான் தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி

#10
பொருதமை புண்ணே சொல்ல வென்றமை போந்த தன்மை
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத
கருதலர் பெருமை தேவி மீண்டிலா செயலே காட்ட
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார்

#11
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை
சேவகன் தேவி தன்னை கண்டமை விரைவின் செப்பி
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம்
போவது புலமை என்ன பொருக்கென எழுந்து போனார்

#12
ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான்

#13
மு தலை எஃகினாற்கும் முடிப்ப_அரும் கருமம் முற்றி
வித்தக தூதன் மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம்

#14
கார் வரை இருந்தனன் கதிரின் காதலன்
சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான்
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான்

#15
தண்டல் இல் நெடும் திசை மூன்றும் தாயினர்
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன்
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான்

#16
ஆரியன் அரும் துயர் கடலுள் ஆழ்பவன்
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும்
மூரி வெம் பழியொடும் முடிந்ததாம் என
சூரியன் புதல்வனை நோக்கி சொல்லுவான்

#17
குறித்த நாள் இகந்தன குன்ற தென் திசை
வெறி கரும் குழலியை நாடல் மேயினார்
மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய்

#18
மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா
பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார்-கொலோ
தேண்டினர் இன்னமும் திரிகின்றார்-கொலோ

#19
கண்டனர் அரக்கரை கறுவு கைம்மிக
மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால்
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா
தண்டல்_இல் நெடும் சிறை தளை பட்டார்-கொலோ

#20
கூறின நாள் அவர் இருக்கை கூடலம்
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள்
ஆறினர் அரும்_தவம் அயர்கின்றார்-கொலோ
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான்

#21
என்புழி அனுமனும் இரவி என்பவன்
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான்
பொன் பொழி தட கை அ பொரு_இல் வீரனும்
அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான்

#22
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்-தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்

#23
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன்
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான்

#24
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா
ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான்
வீங்கின தோள் மலர் கண்கள் விம்மின
நீங்கியது அரும் துயர் காதல் நீண்டதே

#25
கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

#26
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன்
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான்

#27
பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள்
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள்

#28
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான்
வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய்

#29
வில் பெரும் தடம் தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன்
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன்

#30
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின்
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா
பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ

#31
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய்
காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல்

#32
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன்
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த
கண் அகன் கமலத்து அண்ணல் கருத்திலாள் தொடுத்தல் கண்ணின்
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார்

#33
தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை
கீண்டிலது அனந்தன் உச்சி கிழிந்திலது எழுந்து வேலை
மீண்டில சுடர்கள் யாவும் விழுந்தில வேதம் செய்கை
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ

#34
சோகத்தாள் ஆய நங்கை கற்பினால் தொழுதற்கு ஒத்த
மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை
பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள் பதுமத்தாளும்
ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள்

#35
இலங்கையை முழுதும் நாடி இராவணன் இருக்கை எய்தி
பொலம் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கி போந்தேன்
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன்

#36
அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா

#37
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன்
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை
வெய்து உரை சொல்ல சீறி கோறல் மேற்கொண்டுவிட்டான்

#38
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார்

#39
அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக
உன்னினள் கொடி ஒன்று ஏந்தி கொம்பொடும் உறைப்ப சுற்றி
தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன்
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில்

#40
வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும்
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால்
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள்
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள்

#41
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும்
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள்
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய்

#42
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால்
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற

#43
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி
வீங்கினள் வியந்தது அல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள்

#44
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம்
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல்
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள்

#45
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள்
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள்
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள்

#46
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி
கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல்
உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான்

#47
பை பைய பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி
மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான்
ஐயனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி

#48
பொடித்தன உரோமம் போந்து பொழிந்தன கண்ணீர் பொங்கி
துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார்

#49
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ
ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன் என்றலோடும்
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான்

#50
எழுக வெம் படைகள் என்றான் ஏ எனும் அளவில் எங்கும்
முழு முரசு எற்றி கொற்ற வள்ளுவர் முடுக்க முந்தி
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்ன பொங்கி
வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே

#51
வீரரும் விரைவில் போனார் விலங்கல் மேல் இலங்கை வெய்யோன்
பேர்வு இலா காவற்பாடும் பெருமையும் அரணும் கொற்ற
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார்

#52
அ நெறி நெடிது செல்ல அரி_குலத்து அரசனோடும்
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை
இ நெடும் பழுவ குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர்
பன்னிரு பகலில் சென்று தென் திசை பரவை கண்டார்