கல்லாடம்

** கல்லாடர் அருளிய கல்லாடம்

@1 கடவுள் வாழ்த்து

#1
** கணபதி துதி
திங்கள் முடி பொறுத்த பொன்மலை அருவி
கரு மணி கொழித்த தோற்றம் போல
இரு கவுள் கவிழ்த்த மத நதி உவட்டின்
வண்டு இனம் புரளும் வயங்கு புகர் முகத்த
செங்கதிர்த் திரள் எழு கரும் கடல் போல 5
முக் கண் மேல் பொங்கும் வெள்ளம் எறி கடத்த
பெரு மலைச் சென்னியில் சிறுமதி கிடந்து எனக்
கண் அருள் நிறைந்த கவின் பெறும் எயிற்ற
ஆறு_இரண்டு அருக்கர் அவிர் கதிர்க் கனலும்
வெள்ளை மதி முடித்த செம் சடை ஒருத்தன் 10
உடல் உயிர் ஆட ஆடுறும் அனலமும்
தென்கீழ்த் திசையோன் தெறுதரு தீயும்
ஊழித் தீப் படர்ந்து உடற்றுபு சிகையும்
பாசக் கரகம் விதி உடை முக்கோல்
முறிக்கலைச் சுருக்குக் கரம் பெறு முனிவர் 15
விழி விடும் எரியும் சாப வாய் நெருப்பும்
நிலை விட்டுப் படராது காணியில் நிலைக்கச்
சிறுகாற்று உழலும் அசை குழைச் செவிய
ஆம்பல் முக அரக்கன் கிளையொடு மறியப்
பெரும் காற்று விடுத்த நெடும் புழைக் கரத்த 20
கரு மிடற்றுக் கடவுளை செம் கனி வேண்டி
இடம் கொள் ஞாலத்து வலம் கொளும் பதத்த
குண்டு நீர் உடுத்த நெடும் பார் எண்ணமும்
எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும்
அளந்து கொடு முடித்தல் நின் கடன் ஆதலின் 25
வரி உடல் சூழக் குடம்பை நூல் தெற்றிப்
போக்கு வழி படையாது உள் உயிர் விடுத்தலின்
அறிவு புறம்போய உலண்டது போலக்
கடல் திரை சிறுக மலக்கு துயர் காட்டும்
உடல் எனும் வாயில் சிறை நடுவு புக்குப் 30
போகர் அணங்குறும் வெள்ளறிவேமும்
ஆரணம் போற்றும் நின் கால் உற வணங்குதும்
கால் முகம் ஏற்ற துளை கொள் வாய்க் கறங்கும்
விசைத்த நடை போகும் சகடக் காலும்
நீட்டி வலி தள்ளிய நெடும் கயிற்று ஊசலும் 35
அலமரு காலும் அலகைத் தேரும்
குறை தரு பிறவியின் நிறை தரு கலக்கமும்
என் மனத்து எழுந்த புன்மொழித் தொடையும்
அருள் பொழி கடைக்கண் தாக்கித்
தெருளுற ஐய முடிப்பை இன்று எனவே 40

#2
** முருகக் கடவுள் துதி
பாய் திரை உடுத்த ஞால முடிவு என்ன
முடங்கு உளை முகத்துப் பல் தோள் அவுணனொடு
மிடை உடு உதிரச் செம் களம் பொருது
ஞாட்பினுள் மறைந்து நடுவுறு வரத்தால்
வடவை நெடு நாக்கின் கிளைகள் விரிந்து என்னச் 5
செம் துகிர் படரும் திரைக் கடல் புக்குக்
கிடந்து எரி வடவையின் தளிர் முகம் ஈன்று
திரை எறி மலைகளின் கவடு பல போக்கிக்
கல் செறி பாசியின் சினைக் குழை பொதுளி
அகல் திரைப் பரப்பின் சடை அசைந்து அலையாது 10
கீழ் இணர் நின்ற மேற்பகை மாவின்
ஓர் உடல் இரண்டு கூறுபட விடுத்த
அழியாப் பேர் அளி உமைக் கண் நின்று
தன் பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி அரத்த நெடு வேலோய் 15
கீழ்மேல் நின்ற அக் கொடும் தொழில் கொக்கின்
கூறு இரண்டு ஆய ஒரு பங்கு எழுந்து
மாயாப் பெரு வரத்து ஒரு மயில் ஆகிப்
புடவி வைத்து ஆற்றிய பல் தலைப் பாந்தள்
மண் சிறுக விரித்த மணிப் படம் தூக்கி 20
விழுங்கிய பல் கதிர் வாய்-தொறும் உமிழ்ந்து என
மணி நிரை சிந்தி மண் புக அலைப்பக்
கார் விரித்து ஓங்கிய மலைத் தலைக் கதிர் என
ஓ அறப் போகிய சிறை விரி முதுகில்
புவனம் காணப் பொருளொடு பொலிந்தோய் 25
போழ்படக் கிடந்த ஒரு பங்கு எழுந்து
மின்னல் மாண்ட கவிர் அலர் பூத்த
சென்னி வாரணக் கொடும் பகை ஆகித்
தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடுத் திரள்
பொரியின் கொறிப்பப் புரிந்த பொருள் நாடித் 30
தாமரை பழித்த கை மருங்கு அமைத்தோய்
ஒருமையுள் ஒருங்கி இரு கை நெய் வார்த்து
நாரதன் ஓம்பிய செம் தீக் கொடுத்த
திருகு புரி கோட்டுத் தகர் வரு மதியோய்
முலை என இரண்டு முரண் குவடு மரீஇக் 35
குழல் காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய்
செம் கண் குறவர் கரும் காட்டு வளர்த்த
பைம் கொடி வள்ளி படர்ந்த புய மலையோய்
இமயம் பூத்த சுனை மாண் தொட்டில்
அறிவின் தங்கி அறு தாய் முலை உண்டு 40
உழல் மதில் சுட்ட தழல் நகைப் பெருமான்
வணங்கி நின்று ஏத்த குரு மொழி வைத்தோய்
ஓம் எனும் எழுத்தின் பிரமம் பேசிய
நான்மறை விதியை நடுங்கு சிறை வைத்துப்
படைப்பு முதல் மாய வான் முதல் கூடித் 45
தாதையும் இரப்பத் தளையது விடுத்தோய்
கூடம் சுமந்த நெடு முடி நேரி
விண் தடையாது மண் புகப் புதைத்த
குறுமுனி தேற நெடு மறை விரித்தோய்
ஆறு திரு எழுத்தும் கூறு நிலை கண்டு 50
நின் தாள் புகழுநர் கண்ணுள் பொலிந்தோய்
மணிக்கால் அறிஞர் பெரும் குடித் தோன்றி
இறையோன் பொருட்குப் பரணர் முதல் கேட்ப
பெரும் தமிழ் விரித்த அரும் தமிழ்ப் புலவனும்
பாய் பார் அறிய நீயே ஆதலின் 55
வெட்சி மலர் சூழ்ந்த நின் இரு கழல் கால்
குழந்தை அன்பினொடு சென்னி-தலைக் கொள்ளுதும்
அறிவு நிலை கூடாச் சில் மொழி கொண்டு
கடவுள் கூற உலவா அருத்தியும்
சநநப் பீழையும் தள்ளாக் காமமும் 60
தன் படு துயரமும் அடைவு கெட்டு இறத்தலும்
தென்புலக் கோமகன் தீத் தெறு தண்டமும்
நரகொடு துறக்கத்து உழல் வரு பீழையும்
நீளாது இம்பரின் முடித்து
மீளாக் காட்சி தருதி இன்று எனவே 65

@2 நூல்

#1
** தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்
அமுதமும் தருவும் பணிவரப் படைத்த
உடலக் கண்ணன் உலகு கவர்ந்து உண்ட
களவு உடை நெடும் சூர்க் கிளை களம் விட்டு ஒளித்த
அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் எனத்
தேக்கிய தேனுடன் இறால் மதி கிடக்கும் 5
எழு மலை பொடித்த கதிர் இலை நெடு வேல்
வள்ளி துணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
கறங்கு கால் அருவிப் பரங்குன்று உடுத்த
பொன் நகர்க் கூடல் சென்னி அம் பிறையோன்
பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக் 10
கொங்கு தேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப்
பொன் குவை தருமிக்கு அற்புடன் உதவி
என் உளம் குடிகொண்டு இரும் பயன் அளிக்கும்
கள் அவிழ் குழல் சேர் கருணை எம்பெருமான்
மலர்ப் பதம் நீங்கா உளப் பெரும் சிலம்ப 15
கல்லாக் கயவர்க்கு அரு நூல் கிளை மறை
சொல்லினர் தோம் எனத் துணை முலை பெருத்தன
பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர்
தவம் எனத் தேய்ந்தது துடி எனும் நுசுப்பே
கடவுள் கூறார் உளம் எனக் குழலும் 20
கொன்றை புறவு அகற்றி நின்ற இருள் காட்டின
சுரும்பு படிந்து உண்ணும் கழுநீர் போலக்
கறுத்துச் சிவந்தன கண் இணை மலரே
ஈங்கு இவை நிற்க சீறூர் பெரும் தமர்
இல்லில் செறிக்கும் சொல்லுடன் சில் மொழி 25
விள்ளும் தமியில் கூறினர்
உள்ளம் கறுத்துக் கண் சிவந்து உருத்தே

#2
** தாய் அறிவு கூறல்
பூ மணி யானை பொன் என எடுத்துத்
திங்களும் புயலும் பரிதியும் சுமந்த
மலை வரும் காட்சிக்கு உரிய ஆகலின்
நிறை உடைக் கல்வி பெறு மதி மாந்தர்
ஈன்ற செம் கவி எனத் தோன்றி நனி பரந்து 5
பாரிடை இன்பம் நீள் இடைப் பயக்கும்
பெரு நீர் வையை வளை நீர்க் கூடல்
உடல் உயிர் என்ன உறைதரும் நாயகன்
கடுக்கை மலர் மாற்றி வேப்பு அலர் சூடி
ஐ_வாய்க் காப்பு விட்டு அணி பூண் அணிந்து 10
விரி சடை மறைத்து மணி முடி கவித்து
விடைக் கொடி நிறுத்திக் கயல் கொடி எடுத்து
வழுதி ஆகி முழுது உலகு அளிக்கும்
பேர் அருள் நாயகன் சீர் அருள் போல
மணத்துடன் விரிந்த கைதை அம் கானத்து 15
ஓடா வென்றிப் பொலம் பூண் குரிசில்
சின்னம் கிடந்த கொடிஞ்சி மாத் தேர்
நொச்சிப் பூ உதிர் நள்ளிருள் நடுநாள்
விண்ணம் சுமந்து தோற்றம் செய்து எனத்
தன் கண் போலும் என் கண் நோக்கிக் 20
கள்வரைக் காணும் உள்ளம் போலச்
செம் மனம் திருகி உள்ளம் துடித்துப்
புறன் வழங்காது நெஞ்சொடு கொதித்தனள்
மாறாக் கற்பின் அன்னை
கூறாம் மதியத் திரு நுதல் கொடியே 25

#3
** வழியொழுகி வற்புறுத்தல்
பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினைப்
பொருத்தலும் பிரித்தலும் பொரு பகை காட்டலும்
உட்பகை அமைத்தலும் உணர்ந்து சொல் பொருத்தலும்
ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும்
செய்யா அமைச்சுடன் சேரா அரசன் 5
நாடு கரிந்து அன்ன காடு கடந்து இயங்கி
இடும்பை நிரப்பினர்க்கு ஈதலின் இறந்தோர்க்கு
இதழ் நிறை மது அம் தாமரை துளித்து என
விழி சொரி நீருடன் பழங்கண்கொண்டால்
உலகு இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க 10
மாறனும் புலவரும் மயங்குறு காலை
முந்துறும் பெரு மறை முளைத்து அருள் வாக்கால்
அன்பின் ஐந்திணை என்று அறுபது சூத்திரம்
கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்தது போல்
பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி மற்று அவர்க்குத் 15
தெளிதரக் கொடுத்த தென் தமிழ்க் கடவுள்
தழல் கண் தரக்கின் சரும ஆடையன்
கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என
நிறை நீர்க் கயத்துள் ஒரு தாள் நின்று
தாமரை தவம்செய்து அளியுடன் பெற்ற 20
திருமகட்கு அடுத்தது என் என்று
ஒருமை காண்குவர் துகிர் கிளைக் கொடியே

#4
** மயிலொடு கூறி வரைவு கடாதல்
அண்டம் ஈன்று அளித்த கன்னி முனிவாகத்
திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்
ஆயிர மணிக் கரத்து அமைத்த வான் படையுடன்
சயம் பெறு வீரனைத் தந்து அவன்-தன்னால்
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த 5
இருள் மனத் தக்கன் பெரு மகம் உண்ணப்
புக்க தேவர்கள் பொரு கடல் படையினை
ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய
கூடல் பெருமான் பொதியப் பொருப்பகத்து
அருவி அம் சாரல் இருவி அம் புனத்தினும் 10
மயிலும் கிளியும் குருவியும் படிந்து
நன்றிசெய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும்
குன்றா வாய்மை நின்று நிலை காட்டித்
தங்குவன கண்டும் வலி மனம் கூடி
ஏகவும் துணிந்தனம் எம் பெரும் படிறு 15
சிறிது நின்று இயம்ப உழை இனம் கேண்-மின் இன்று
ஊற்று எழும் இரு கவுள் பெரு மதத் கொலை மலைக்
கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓடப்
பிறை மதி அன்ன கொடுமரம் வாங்கித்
தோகையர் கண் எனச் சுடு சரம் துரக்கும் 20
எம்முடைக் குன்றவர் தம் மனம் புகுத இப்
புனக் குடிக் கணியர்-தம் மலர்க் கை ஏடு அவிழ்த்து
வரிப் புற அணில் வால் கரும் தினை வளை குரல்
கொய்யும் காலமும் நாள்பெறக் குறித்து
நிழலும் கொடுத்து அவர் ஈன்ற 25
மழலை மகார்க்கும் பொன் அணிந்தற்கே

#5
** இளமை கூறி மறுத்தல்
இரண்டு உடல் ஒன்றாய்க் கரைந்து கண்படாமல்
அளவியல் மண நிலை பரப்பும் காலம்
தளை கரை கடந்த காமக் கடல் உள்
புல் நுனிப் பனி என மன்னுதல் இன்றிப்
பீரம் மலர்ந்த வயாவு நோய் நிலையாது 5
வளை காய் விட்ட புளி அருந்தாது
செவ் வாய் திரிந்து வெள் வாய் பயவாது
மனை புகையுண்ட கரு மண் இடந்து
பவள வாயில் சுவை காணாது
பொன் குட முகட்டுக் கரு மணி அமைத்து எனக் 10
குங்குமக் கொங்கையும் தலைக் கண் கறாது
மலர அவிழ்ந்த தாமரைக் கயல் என
வரி கொடு மதர்த்த கண் குழியாது
குறிபடு திங்கள் ஒரு பதும் புகாது
பொன் பெயர் உடையோன் தன் பெயர் கடுப்பத் 15
தூணம் பயந்த மாண் அமர் குழவிக்கு
அரக்கர் கூட்டத்து அமர் விளையாட
நெருப்பு உமிழ் ஆழி ஈந்து அருள் நிமலன்
கூடல் மா நகர் ஆட எடுத்த
விரித்த தாமரை குவித்த தாளோன் 20
பேர் அருள் விளையாச் சீரிலர் போலத்
துலங்கிய அமுதம் கலங்கியது என்ன
இதழ் குவித்துப் பணித்த குதலையும் தெரியாது
முருந்து நிரைத்த திருந்து பல் தோன்றாது
தெய்வம் கொள்ளார் திணி மனம் என்ன 25
விரிதரு கூழையும் திரு முடி கூடாது
துணை மீன் காட்சியில் விளை கரு என்னப்
பார்வையில் தொழில்கள் கூர் விழி கொள்ளாது
மறுபுலத்து இடு பகை வேந்து அடக்கியது என
வடுத்து எழு கொலை முலை பொடித்தன அன்றே 30
செம் மகள் மாலை இம்முறை என்றால்
வழுத்தலும் வருதலும் தவிர்தி
மொழிக் குறி கூடாச் செவ் வேலோயே

#6
** சுவடு கண்டு அறிதல்
நிணம் உயிர் உண்ட புலவு பொறாது
தலை உடல் அசைத்து சாணை வாய் துடைத்து
நெய் குளித்து அகற்றும் நெடு வேல் விடலை
அந்தணர் உகும் நீர்க்கு அருள் கருவிருந்து
கோடா மறைமொழி நீடுறக் காணும் 5
கதிர் உடல் வழி போய்க் கல் உழை நின்றோர்
நெருப்பு உருத்து அன்ன செருத் திறல் வரைந்த
வாசகம் கண்டு மகிழ்ந்ததும் இவணே
துணை விளக்கு எரியும் நிலை விழிப் பேழ் வாய்த்
தோகை மண் புடைக்கும் காய் புலி மாய்க்க 10
வாய் செறித்திட்ட மாக் கடிப்பு இதுவே
செடித் தலைக் கார் உடல் இடிக் குரல் கிராதர்
மறைந்து கண்டு அக் கொலை மகிழ்வுழி இ நிலை
தவ நதி போகும் அரு மறைத் தாபதர்
நன்னர் கொள் ஆசி நாட்டியது இவ் உழை 15
கறை அணல் புயங்கன் எரி தழல் விடத்தை
மலை மறை அதகம் மாற்றிய அது போல்
கொடுமரக் கொலைஞர் ஆற்றிடைக் கவர
எண்ணாது கிடைத்த புண் எழு செரு நிலைக்
கை வளர் கொழுந்து மெய் பொடியாகு என 20
சிற்றிடைப் பெரு முலைப் பொன் தொடி மடந்தை தன்
கவைஇய கற்பினைக் காட்டுழி இதுவே
குரவம் சுமந்த குழல் விரித்திருந்து
பாடலம் புனைந்த கற்பதுக்கை இவ்விடனே
ஒட்டுவிட்டு உலறிய பராரை நெட்டாக் கோட்டு 25
உதிர் பறை எருவை உணவு ஊன் தட்டி
வளை வாய்க் கரும் பருந்து இடை பறித்து உண்ணக்
கண்டு நின்று உவந்த காட்சியும் இதுவே
செம் மணிச் சிலம்பும் மரகதப் பொருப்பும்
குடுமி அம் தழலும் அவண் இருள் குவையும் 30
முளைவரும் பகனும் அதனிடை மேகமும்
சே இதழ் முளரியும் கார் இதழ்க் குவளையும்
ஓர் உழைக் கண்ட உவகையது என்ன
எவ்வுயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின்
அண்டப் பெரும் திரன் அடைவு ஈன்று அளித்த 35
கன்னி கொண்டிருந்த மன் அருள் கடவுள்
மலை உருக் கொண்ட உடல் வாள் அரக்கர்
வெள்ளமும் சூரும் புள்ளியல் பொருப்பும்
நெடும் கடல் கிடங்கும் ஒருங்கு உயிர் பருகிய
மணி வேல் குமரன் முதல் நிலை வாழும் 40
குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன்
தாள் தலை தரித்த கோளினர் போல
நெடும் சுரம் நீங்கத் தம் கால்
அடும் தழல் மாற்றிய கால் குறி இவணே

#7
** நற்றாய் வருந்தல்
பொடித்து அரும்பாத சின் முலைக் கொடி மடந்தையள்
மணி மிளிர் பெரும் கட்கு இமை காப்பு என்ன
விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும்
தன்னை நின்று அளித்த என்னையும் ஒருவுக
பல் மணிக் கலன்கள் உடற்கு அழகு அளித்து என 5
சுற்றுடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக
பிணிமுக மஞ்ஞை செரு முகத்து ஏந்திய
மூ_இரு திருமுகத்து ஒரு வேலவற்கு
வானுற நிமிர்ந்த மலைத் தலை முன்றிலின்
மனவு அணி மடந்தை வெறியாட்டாளன் 10
வேல்மகன் குறத்தி மா மதி முதியோள்
தொண்டகம் துவைப்ப முருகியம் கறங்க
ஒருங்கு வந்து இமையா அரும் கடன் முற்றிய
பின்னர் நின்று எற்ற கைத்தாயையும் பிழைக்குக
கரும் தலைச் சாரிகை செவ் வாய்ப் பசுங்கிளி 15
தூவி அம் தோகை வெள் ஓதிமம் தொடர் உழை
இவையுடன் இன்பமும் ஒருவழி இழக்குக
சே இதழ் இலவத்து உடை காய்ப் பஞ்சி
புகை முரிந்து எழுந்து என விண்ணத்து அலமரக்
குழை பொடி கூவையின் சிறை சிறை தீந்த 20
பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ
உடை கவட்டு ஓமை உலர் சினை இருக்கும்
வளை கண் கூகையும் மயங்கி வாய் குழற
ஆசையின் தணியா அழல் பசி தணிக்கக்
காளி முன் காவல் காட்டிவைத்து ஏகும் 25
குழி கண் கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப
வேம் உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப
நெடும் தாள் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப
திசை-நின்று எழாது தழல் முகந்து ஏறிச்
சுடலையில் சூறை இடையிடை அடிக்கும் 30
பேர் அழல் கானினும் நாடும் என் உளத்தினும்
ஒருபால் பசும்_கொடி நிறை பாட்டு அயரப்
பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான்
வையகத்து உருவினர் மலரா அறிவினைப்
புலன் நிரை மறைத்த புணர்ப்பது போலக் 35
குளிர்கொண்டு உறையும் தெளி நீர் வாவியை
வள்ளை செங்கமலம் கள் அவிழ் ஆம்பல்
பாசடை மறைக்கும் கூடல் பெருமான்
செம் தாள் விடுத்து உறை அந்தர்கள்-தம்மினும்
மூவாத் தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர் 40
இரண்டு எனக் கவைத்த நல் ஆண்டருள் தோழியைச்
செரு விழும் இச்சையர் தமது உடல் பெற்ற
இன்புகள் நோக்கா இயல்பது போல
மருங்கு பின் நோக்காது ஒருங்கு விட்டு அகலப்
பொருந்தியது எப்படி உள்ளம் 45
அரும் தழல் சுரத்தில் ஒருவன் அன்பு எடுத்தே

#8
** செலவு நினைந்துரைத்தல்
உயிர் புகும் சட்டகம் உழி-தொறும் உழி-தொறும்
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர் புயல் குளிறும் எழு மலை புக்க
கட்டு உடைச் சூர் உடல் காமம்கொண்டு
பற்றி உட்புகுந்து பசும் கடல் கண்டு 5
மாவொடும் கொன்ற மணி நெடும் திரு வேல்
சேவல் அம் கொடியோன் காவல்கொண்டு இருந்த
குன்றம் உடுத்த கூடல் அம் பதி இறை
தொடர்ந்து உயிர் வவ்விய விடம் கெழு மிடற்றோன்
புண்ணியம் தழைத்த முன் ஓர் நாளில் 10
இரு விரல் நிமிர்த்துப் புரிவொடு சேர்த்துக்
குழை உடல் தலை விரி கைத்திரி கறங்க
ஒரு விரல் தெறித்தும் ஐ விரல் குவித்தும்
பெரு வாய் ஒரு முகப் படகம் பெருக்கத்
தடா உடல் உம்பர்த் தலைபெறும் முழவம் 15
நான் முகம் தட்டி நடு முகம் உரப்ப
ஒரு வாய் திறந்து உள் கடிப்பு உடல் விசித்த
சல்லரி அங்கைத் தலைவிரல் தாக்கக்
கயந்தலை அடி என கயிறு அமை கைத்திரி
இரு விரல் உயர்த்திச் செரு நிலை இரட்ட 20
இரு தலை குவிந்த நெட்டு உடல் தண்ணுமை
ஒரு முகம் தாழ்த்தி இரு கடிப்பு ஒலிப்பத்
திருமலர் எழுதிய வரை இருபத்தைந்து
அங்குலி இரண்டிரண்டு அணைத்து விளர் நிறீஇ
மு முகக் கயலுடன் மயிர்க் கயிறு விசித்த 25
கல்லவடத்திரள் விரல் தலை கறங்க
மரக்கால் அன்ன ஒரு வாய்க் கோதை
முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க
நாடு இரு முனிவர்க்கு ஆடிய பெருமான்
திருவடி வினவாக் கரு உறை மாக்கள் 30
நெஞ்சினும் கிடந்து நீண்ட வல் இரவில்
செல்லவும் உரியம் தோழி நில்லாது
எம் எதிர்ப்பு இன்றி இருந்து எதிர்ப்பட்டு
மறை வழி ஒழுகா மன்னவன் வாழும்
பழி நாட்டு ஆர்ந்த பாவம் போலச் 35
சேர மறைந்த கூர் இருள் நடுநாள்
அரிதின் போந்தனிர் என்று ஓர்
பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே

#9
** அறத்தொடு நிற்றல்
தன்னுழைப் பல உயிர் தனித்தனி படைத்துப்
பரப்பிக் காட்டலின் பதுமன் ஆகியும்
அவ் உயிர் எவ் உயிர் அனைத்தும் காத்தலின்
செவ்வி கொள் கரு முகில் செல்வன் ஆகியும்
கட்டிய கரை வரம்பு உட்புக அழித்து 5
நீர் தலை தரித்தலின் நிமலன் ஆகியும்
தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின்
அரி முதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்
மூன்று அழல் நான் மறை முனிவர் தோய்ந்து
மறை நீர் உகுத்தலின் மறையோன் ஆகியும் 10
மீனும் கொடியும் விரி திணை ஐந்தும்
தேன் உறை தமிழும் திரு உறை கூடலும்
மணத்தலின் மதிக் குல மன்னவன் ஆகியும்
நவ மணி எடுத்து நல் புலம் காட்டலின்
வளர் குறி மயங்கா வணிகன் ஆகியும் 15
விழைதரும் உழவும் வித்தும் நாறும்
தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும்
விரி திரை வையைத் திரு நதி சூழ்ந்த
மதுரை அம் பதி நிறை மைம்மலர்க் களத்தினன்
இணை அடி வழுத்தார் அணை தொழில் என்னக் 20
கைதை அம் கரை சேர் பொய்தல் பாவையோடு
இரு திரை எடுக்கப் பொரு திரை எடுத்தும்
பூழிப் போனகம் புதுவுடன் உண்டும்
சாய் தாள் பிள்ளை தந்து கொடுத்தும்
முட உடல் கைதை மடல் முறித்திட்டும் 25
கவைத் துகிர்ப் பாவை கண்ணி சூட்டக்
குவலயத் திரு மலர் கொணர்ந்து கொடுத்தும்
நின்றான் உண்டு ஒரு காளை
என்றால் இத் தொழில் செய்வது புகழே

#10
** தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்
வடி விழிச் சிற்றிடைப் பெரு முலை மடவீர்
தொழு-மின் வணங்கு-மின் சூழ்-மின் தொடர்-மின்
கட்டுதிர் கோதை கடி மலர் அன்பொடு
முண்டக முகையின் முலை-முகம் தரு-மின்
உருளின் பூழி உள்ளுற ஆடு-மின் 5
எதிர்-மின் இறைஞ்சு-மின் ஏத்து-மின் இயங்கு-மின்
கருப்புரம் துதைந்த கல் உயர் மணித் தோள்
வாசம் படரும் மருத்தினும் உறு-மின்
பெரும் கவின் முன் நாள் பேணிய அரும் தவம்
கண்ணிடை உளத்திடை காண்-மின் கருது-மின் 10
பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறி-மின்
யாழில் பரவு-மின் ஈங்கு இவை அன்றிக்
கலத்தும் என்று எழு-மின் கண் அளி காண்-மின்
வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு
புவி புனல் அனல் கால் மதி புலவோன் என 15
முழுதும் நிறைந்த முக்கண் பெருமான்
பனிக் கதிர் குலவன் பயந்து அருள் பாவையைத்
திருப் பெரு வதுவை பொருந்திய அ நாள்
சொன்றிப் பெரு மலை தின்று நனி தொலைத்த
கார் உடல் சிறுநகைக் குறும் தாள் பாரிடம் 20
ஆற்றாது அலைந்த நீர் நசை அடக்க
மறி திரைப் பெரு நதி வரவழைத்து அருளிய
கூடல் அம் பதி உறை குணப் பெரும் கடவுள்
முண்டகம் அலர்த்தும் முதிராச் சேவடி
தரித்த உள்ளத் தாமரை ஊரன் 25
பொன் துணர்த் தாமம் புரிந்து ஒளிர் மணித் தேர்
வீதி வந்தது வரலால் நம்தம்
ஏதம் தீர இரு மருங்கு எழுந்தே

#11
** கல்வி நலம் கூறல்
நிலையினின் சலியா நிலைமையானும்
பல உலகு எடுத்த ஒரு திறத்தானும்
நிறையும் பொறையும் பெறும் நிலையானும்
தேவர் மூவரும் காவலானும்
தமனியப் பராரைச் சயிலம் ஆகியும் 5
அளக்க என்று அமையாப் பரப்பினதானும்
அமுதமும் திருவும் உதவுதலானும்
பல துறை முகத்தொடு பயிலுதலானும்
முள் உடைக் கோட்டு முனை எறி சுறவம்
அதிர் வளை தடியும் அளக்கர் ஆகியும் 10
நிறை உளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை
தருதலின் வானத் தரு ஐந்து ஆகியும்
மறை வெளிப்படுத்தலின் கலைமகள் இருத்தலின்
அக மலர் வாழ்தலின் பிரமன் ஆகியும்
உயிர் பரிந்து அளித்தலின் புலம் மிசை போக்கலின் 15
படி முழுது அளந்த நெடியோன் ஆகியும்
இறுதியில் சலியாது இருத்தலானும்
மறுமை தந்து உதவும் இருமையானும்
பெண் இடம் கலந்த புண்ணியன் ஆகியும்
அருள் வழி காட்டலின் இரு விழி ஆகியும் 20
கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின்
நிறை உளம் நீங்காது உறை அருள் ஆகியும்
அவை முதல் ஆகி இருவினை கெடுக்கும்
புண்ணியக் கல்வி உள் நிகழ் மாக்கள்
பரிபுரக் கம்பலை இரு செவி உண்ணும் 25
குடக் கோச் சேரன் கிடைத்து இது காண்க என
மதி மலி புரிசைத் திருமுகம் கூறி
அன்பு உருத் தரித்த இன்பு இசைப் பாணன்
பெற நிதி கொடுக்க என உற விடுத்து அருளிய
மா தவர் வழுத்தும் கூடற்கு இறைவன் 30
இரு சரண் பெருகுநர் போலப்
பெருமதி நீடுவர் சிறுமதி_நுதலே

#12
** முன் நிகழ்வு உரைத்து ஊடல் தீர்த்தல்
குரவம் மலர்ந்த குவை இருள் குழலி
இருவேம் ஒருகால் எரி அதர் இறந்து
விரி தலை தோல் முலை வெள் வாய் எயிற்றியர்க்கு
அரும் புது விருந்து எனப் பொருந்தி மற்று அவர் தரும்
இடியும் துய்த்து சுரைக் குடம் எடுத்து 5
நீள் நிலைக் கூவல் தெளி புனல் உண்டும்
பழம் புல் குரம்பை இடம் புக்கு இருந்தும்
முடங்கு அதள் உறுத்த முகிழ் நகை எய்தியும்
உடனுடன் பயந்த கடல் ஒலி ஏற்றும்
நடை_மலை எயிற்றினிடைத் தலைவைத்தும் 10
உயர்ந்த இன்பதற்கு ஒன்றுவமும் உண்டு எனின்
முலை மூன்று அணைந்த சிலை நுதல் திருவினை
அரு மறை விதிக்கத் திருமணம் புணர்ந்து
மதிக் குலம் வாய்த்த மன்னவன் ஆகி
மேதினி புரக்கும் விதி உடை நல் நாள் 15
நடு ஊர் நகர் செய்து அடு பவம் துடைக்கும்
அருள் குறி நிறுவி அருச்சனை செய்த
தேவ நாயகன் கூடல் வாழ் இறைவன்
முண்டகம் மலர்த்தி முருகு அவிழ் இரு தாள்
உறைகுநர் உண்ணும் இன்பமே 20
அறையல் அன்றி மற்று ஒன்றினும் அடாதே

#13
** நிலவு வெளிப்பட வருந்தல்
நண்ணிய பாதி பெண்ணினர்க்கு அமுதம்
அடு மடைப் பள்ளியின் நடு அவதரித்தும்
திருவடிவு எட்டனுள் ஒரு வடிவு ஆகியும்
மு கணில் அருள் கண் முறைபெற முயங்கியும்
படி இது என்னா அடி முடி கண்டும் 5
புண்ணிய நீறு எனப் பொலி கதிர் காற்றியும்
நின்றனை பெருமதி நின் தொழுது ஏற்கும்
நன்னரின் செய்குறும் நன்றி ஒன்று உளதால்
ஆயிரம் தழல் கரத்து இருள்_பகை மண்டிலத்து
ஒரொரு பனிக் கலை ஒடுங்கி நின்று அடைதலின் 10
கொலை நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த
புகர்_முகப் புழைக் கை ஒருவிசை தடிந்தும்
மது இதழ்க் குவளை என்று அடு கண் மலர்ந்த
நெடும் சுனை புதைய புகுந்து எடுத்து அளித்தும்
செறி பிறப்பு இறப்பு என இரு வகை திரியும் 15
நெடும் கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை
முன்னையின் புனைந்தும் முகமன் அளித்தும்
தந்த எம் குரிசில் தனி வந்து எமது
கண் எனக் கிடைத்து எம் கண் எதிர் நடுநாள்
சமயக் கணக்கர் மதி வழி கூறாது 20
உலகியல் கூறி பொருள் இது என்ற
வள்ளுவன்-தனக்கு வளர் கவிப் புலவர் முன்
முதல் கவி பாடிய முக்கண் பெருமான்
மாதுடன் தோன்றிக் கூடலுள் நிறைந்தோன்
தன்னை நின்று உணர்ந்து தாமும் ஒன்று இன்றி 25
அடங்கினர் போல நீயும்
ஒடுங்கி நின்று அமைதி இ நிலை அறிந்தே

#14
** வரவு எடுத்துரைத்தல்
சலியாப் பராரைத் தமனியப் பொருப்பு எனும்
ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின்
மூடிய நால் திசை முகில் துகில் விரித்துப்
பொன் சிலை வளைத்து வாயில் போக்கிச்
சுருப்பு அணி நிரைத்த கடுக்கை அம் பொலம் தார் 5
நிரைநிரை நாற்றி நெடும் காய் மயிர் அமைத்து
ஊதையின் அலகிட்டு உறை புயல் தெளித்துப்
போற்றுறு திருவம் நால் திசைப் பொலிய
மரகதத் தண்டின் தோன்றி விளக்கு எடுப்பக்
குடத்தியர் இழுக்கிய அளை சிதறிய போல் 10
கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்பப்
பிடவு அலர் பரப்பிப் பூவை பூ இட்டு
உறவு இணை நட்பு கிளை வியப்பு எய்த
முகில் முழவு அதிர ஏழிசை முகக்கும்
முல்லை யாழொடு சுருதி வண்டு அலம்பக் 15
களபு அலர் சூடி புறவு பாட்டு எடுப்பப்
பசும் தழை பரப்பிக் கண மயில் ஆல
முல்லை அம் திருமகள் கோபம் வாய் மலர்ந்து
நல் மணம் எடுத்து நாள் அமைத்து அழைக்க
வரி வளை முன்கை வரவர இறப்பப் 20
போன நம் தனி நமர் புள் இயல் மான் தேர்
கடு விசை துரந்த கான்யாற்று ஒலியின்
எள்ளினர் உட்க வள் இனம் மடக்கி முன்
தோன்றினர் ஆதலின் நீயே மட மகள்
முன் ஒரு காலத்து அடு கொலைக்கு அணைந்த 25
முகில் உருப் பெறும் ஓர் கொடுமரக் கிராதன்
அரு மறைத் தாபதன் அமைத்திடு செம் மலர்
செருப்பு உடைத் தாளால் விருப்புடன் தள்ளி
வாய் எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த
அழுதம் கடத்து அள்ளும் மணி நீராட்டிப் 30
பின்னல் விட்டு அமைத்த தன் தலை மலர் இணைஇத்
தரு மலர் விண் புக மணி முடி நிறைத்து
வெள் வாய் குதட்டிய விழுது உடைக் கரும் தடி
வைத்து அமையா முன் மகிழ்ந்து உணவு உண்டு அவன்
மிச்சிலுக்கு இன்னும் இச்சைசெய் பெருமான் 35
கூடல் நின்று ஏத்தினர் குலக் கிளை போலத்
துணர் பெறு கோதையும் ஆரமும் புனைக
புதை இருள் துரக்கும் வெயில் மணித் திருவும்
தண்ணம் பிறையும் தலை பெற நிறுத்துக
இறை இருந்து உதவா நிறை வளைக் குலனும் 40
பெருஞ்சூடகமும் ஒருங்கு பெற்று அணிக
நட்டுப் பகையினர் உட்குடி போல
உறவுசெய்து ஒன்றா நகைதரும் உளத்தையும்
கொலையினர் நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும்
ஐம்பால் குழலையும் அணி நிலை கூட்டுக 45
விருந்து கொண்டு உண்ணும் பெரும் தவர் போல
நீங்காத் திரு உடை நலனும்
பாங்கில் கூட்டுக இன்பத்தில் பொலிந்தே

#15
** அழுங்கு தாய்க்கு உரைத்தல்
கல் உயர் வரை தோள் செம் மனக் குரிசிலும்
கல்லா தவறு உளம் புல்லிய குழலும்
இ மனை நிறை புகுந்து எழில் மணம் புணரக்
கோளொடு குறித்து வரும் வழி கூறிய
மறை வாய்ப் பார்ப்பான் மகனும் பழுது இலன் 5
சோதிடக் கலைமகள் தோற்றம் போலச்
சொரி வெள் அலகரும் பழுது_இல் வாய்மையர்
உடல் தொடு குறியின் வரும் வழி குறித்த
மூதறி பெண்டிரும் தீதிலர் என்ப
பெரும் திரள் கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து 10
வாய்ச்சொல் கேட்ட நல் மதியரும் பெரியர்
ஆய் மலர் தெரிந்திட்டு வான் பலி தூவித்
தெய்வம் பராய மெய்யரும் திருவினர்
கரும் கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த
பனைக்குடிப் பரதவர் கலத்தொடும் மறியச் 15
சுரி முகச் செவ் வாய்ச் சூல் வளை தெறிப்பக்
கழுக் கடை அன்ன கூர் வாய்ப் பெரும் கண்
பனை கிடந்து அன்ன உடல் முதல் துணிய
ஆருயிர் கவரும் கார் உடல் செம் கண்
கூற்றம் உருத்து எழுந்த கொள்கை போல 20
நெட்டு உடல் பேழ் வாய்ப் பெரும் சுறவு தடியும்
வரை நிரை கிடந்த திரை உவர் புகுந்து
நெடும் சடைக் கிடந்த குறும்பிறைக் கொழுந்தும்
கரு முகில் வெளுத்த திரு மிடற்று இருளும்
நுதல் மதி கிழித்த அழல் அவிர் நோக்கமும் 25
மறைத்து ஒரு சிறுகுடிப் பரதவன் ஆகிப்
பொன் தலைப் புணர் வலை கொடும் கரம் ஆக்கி
நெடும் கடல் கலக்கும் ஒரு மீன் படுத்த
நிறை அருள் நாயகன் உறைதரு கூடல்
வணங்கார் இனம் என மாழ்கிக் 30
குணம் குடி போய்வித்த ஆய் உளம் தவறே

#16
** வெறி விலக்கல்
உழை நின்றீரும் பிழை அறிந்தீரும்
பழம் குறி கண்ட நெடும் கண் மாதரும்
ஒன்று கிளக்க நின்று இவை கேண்-மின்
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த
குறுவெயிர்ப்பு ஒழுக்கு எனப் பிறை அமுது எடுக்கப் 5
படிறர் சொல் எனக் கடு நெஞ்சு இறைப்ப
அண்டப் பொன் சுவர் கொண்ட அழுக்கை
இறைத்துக் கழுவுவது என்னக் கங்கைத்
துறை கொள் ஆயிரம் முகமும் சுழல
அப் பெரும் கங்கை கக்கிய திரை எனக் 10
கொக்கின் தூவல் அப்புறம் ஆக
மாணிக்கத்தின் வளைத்த சுவர் எனப்
பாணிக்குள் பெய் செம் தழல் பரப்பத்
தன்னால் படைத்த பொன் அணி அண்டம்
எண் திக்கு அளந்துகொண்டன என்னப் 15
புரிந்த செம் சடை நிமிர்ந்து சுழல
மேருவின் முடி சூழ் சூரியராகத்
தயங்கிய மூன்று கண் எங்கணும் ஆகக்
கூடல் மா நகர் ஆடிய அமுதை
உண்டு களித்த தொண்டர்கள் என்ன 20
இ மது உண்ண உம்மையின் உடையோர்
முருக நாறப் பருகுதல்செய்க
வேலனும் வெறிக் களன் ஏறுதல் ஆக
அணங்காட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்கப்
பிணிதர விசித்த முருகியம் துவைக்க 25
ஐயவி அழலொடு செய்யிடம் புகைக்க
இன்னும் பல தொழிற்கு இ நிலை நின்று
மாறுபாடு கூறுதல் இலனே
ஈங்கு இவை நிற்க யாங்கள் அவ் அருவியில்
ஒழுகப் புக்குத் தழுவி எடுத்தும் 30
ஒரு மதி முறித்து ஆண்டு இரு கவுள் செருகிய
ஏந்து கோட்டு உம்பல் பூம் புனம் எம் உயிர்
அழிக்கப் புகுந்த கடைக்கொள் நாளில்
நெடும் கை வேலால் அடும் தொழில் செய்தும்
பெறும் உயிர் தந்து மருவி அளித்த 35
பொன் நெடும் குன்றம் மன்னிய தோளன்
செவ்வே தந்தமை துயர் இருப்ப
கூறு பெயரொடு வேறு பெயரிட்டு
மறி உயிர் உண்ணக் குறுகி வந்திருந்த
தெய்வம் கற்ற அறிவை 40
உய்யக் கூறில் ஓர் நெஞ்சிடம் பொறாதே

#17
** உலகியல்பு உரைத்தல்
பழமை நீண்ட குன்றக் குடியினள்
வருந்தாது வளர்த்தும் குடங்கை துயிற்றியும்
மானின் குழவியொடு கெடவரல் வருத்தியும்
பந்து பயிற்றியும் பொன் கழங்கு உந்தவும்
பாவை சூட்டவும் பூவை கேட்கவும் 5
உடைமை செய்த மடமையள் யான் என்று
எம் எதிர் கூறிய இ மொழி-தனக்குப்
பெருமை நோக்கின் சிறுமையது உண்டே
செறி திரைப் பாற்கடல் வயிறு நொந்து ஈன்ற
செம் மகள் கரியோற்கு அறுதி போக 10
மகவின் இன்பம் கடல் சென்றிலவால்
அன்றியும் விடிமீன் முளைத்த தரளம்
வவ்வினரிடத்தும் அவ் வழி ஆன
திரைக் கடல் குடித்த கரத்த மா முனிக்கும்
திங்கள் வாழ் குலம் தங்கும் வேந்தற்கும் 15
அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும்
தமிழ் எனும் கடலைக் காணிகொடுத்த
பொதியப் பொருப்பும் நெடு முதுகு வருந்திப்
பெற்று வளர்த்த கல் புடை ஆரம்
அணியும் மா மகிழ்நர் பதி உறை புகுந்தால் 20
உண்டோ சென்றது கண்டது உரைத்த
பள்ளிக் கணக்கர் உள்ளத்துப் பெற்ற
புறம் ஆர் கல்வி அற மா மகளைக்
கொண்டு வாழுநர்க் கண்டு அருகிடத்தும்
அவர் மன அன்னை கவரக் கண்டிலம் 25
பெருஞ் சேற்றுக் கழனி கரும்பு பெறு காலைக்
கொள்வோர்க்கு அன்றி அவ் வயல் சாயா
பூம் பணை திரிந்து பொதி அவிழ் முளரியில்
காம்பு பொதி நறவம் விளரியோடு அருந்திக்
கந்தித் தண்டலை வந்து வீற்றிருந்து 30
கடி மலர்ப் பொழிலில் சிறிது கண்படுத்து
மயக்கம் நிறை காமத்து இயக்கம் கொண்டு
நின்ற நாரணன் பரந்த மார்பில்
கலவாக் குங்குமம் நிலவியது என்னக்
கார் வான் தந்த பேர் கொள் செக்கரில் 35
வீதி-வாய்த் தென்றல் மெல்லென்று இயங்கும்
மூதூர்க் கூடல் வந்து அருள் முக்கணன்
காமனை அயனை நாமக் காலனைக்
கண்ணால் உகிரால் மலர் கொள் காலால்
சுட்டும் கொய்தும் உதைத்தும் தணித்த 40
விட்டு ஒளிர் மாணிக்க மலையின் ஒருபால்
அடங்கப் படர்ந்த பசும்_கொடி அதனை
வளர்த்த சேண் மலை உளத் துயர் கொண்டு
தொடர்ந்ததும் இலை கீழ் நடந்த சொல் கிடக்கப்
பாலைக் கிழத்தி திருமுன் நாட்டிய 45
சூலத் தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து
விடு தழல் உச்சம் படு கதிர் தாக்கப்
பாடல் சால் பச்சைக் கோடகக் காற்றை
மை_இல் காட்சிக் கொய் உளை நிற்ப
வயிற்றில் இருந்து வாய் முளைத்து என்ன 50
இரு கால் முகனிற்கு அருகாத் துரந்து
படும் அழல் நீக்கக் குடகடல் குளிக்கும்
நா வாய் குறியாத் தீ வாய் பாலையில்
தம்மில் இன்பம் சூளுடன் கூடி
ஒன்றி விளைந்து சென்றாட்கு உடைத்து 55
பொன் பதி நீங்கி உண்பதும் அடங்கி
முழங்கப் பெரும் குரல் கூஉய்ப்
பழங்கண் எய்தியது பேதைமை அறிவே

#18
** மகிழ்ந்து உரைத்தல்
குங்குமக் கோட்டு அலர் உணங்கல் கடுக்கும்
பங்கு உடைச் செம் கால் பாட்டு அளி அரி பிடர்க்
குருவில் தோய்ந்த அரி கெழு மரகதக்
கல் எனக் கிடப்பச் சொல்லிய மேனித்
திரு நெடுமாலுக்கு ஒருவிசை புரிந்து 5
சோதி வளர் பாகம் ஈந்து அருள் நித்தன்
முனிவர் ஏமுற வெள்ளி அம் பொதுவில்
மனமும் கண்ணும் கனியக் குனிக்கும்
புதிய நாயகன் பழ மறைத் தலைவன்
கைஞ்ஞின்றவன் செம் கால் கண்டவர் போல 10
விளக்கமும் புதுமையும் அளப்பு_இல் காட்சியும்
வேறு ஒப்பு எடுத்துக்கூறுவது நீக்கமும்
அறிவோர் காணும் குறியாய் இருந்தன
இரும் திண் போர்வைப் பிணி விசி முரசம்
முன்னம் எள்ளினர் நெஞ்சு கெடத் துவைப்ப 15
மணம்கொள் பேரணி பெரும் கவின் மறைத்தது என்று
எழு மதி குறைத்த முழுமதிக் கரும் கயல்
வண்டு மருவி உண்டு களியாது
மற்று அது பூத்த பொன் திகழ் தாமரை
இரண்டு முகிழ்செய்து நெஞ்சுறப் பெருகும் 20
வற்றா மேனி வெள்ளத்துள் மறிய
நுனித் தலை அந்தணர் கதழ் எரி வளர்த்துச்
சிவந்த வாய்-தொறும் வெண் பொரி சிதறச்
செம்மாந்து மணத்த அளிய கூர் எரி
மு முறை சுழன்று தாயர் உள் மகிழ 25
இல் உறை கல்லின் வெண் மலர் பரப்பி
இலவு அலர் வாட்டிய செம் கால் பிடித்துக்
களி தூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி
இரண்டு பெயர் காத்த தோலாக் கற்பு
முகனுறக் காணும் கரியோர் போல 30
இடப்பால் நிறுத்தி பக்கம் சூழ
வடமீன் காட்டி விளக்கு அணி எடுத்துக்
குல வாழ்த்து விம்ம மண அணிப் பக்கம்
கண் புலம் கொண்ட இப் பணி அளவும்
வாடி நிலைநின்றும் ஊடியே மாந்தும் 35
என் முகம் அளக்கும் கால் அக் குறியைத்
தாமரைக் கண்ணால் உட்புக அறிந்தும்
உலகம் மூன்றும் பெறுதற்கு அரியது என்று
எண்ணா வாய்மை எண்ணிக் கூறியும்
கல் உயர் நெடும் தோள் அண்ணல் 40
மல்லுறத் தந்த ஈர்ம் தழை தானே

#19
** பிறை தொழுகென்றல்
நெடு வளி உயிர்த்து மழை மதம் ஒழுக்கி
எழு மலை விழு மலை புடை மணி ஆக
மீன் புகர் நிறைந்த வான் குஞ்சர முகம்
வால் பெற முளைத்த கூன் கோடானும்
பேச நீண்ட பல் மீன் நிலைஇய 5
வானக் கடலில் தோணியதானும்
கொழுநர் கூடும் காம உததியைக்
கரை விட உகையும் நாவாயானும்
கள் அமர் கோதையர் வெள்_அணி_விழவில்
ஐங்கணை_கிழவன் காட்சியுள் மகிழ 10
இழைத்து வளைத்த கருப்பு வில்லானும்
நெடியோன் முதலாம் தேவர் கூடி
வாங்கிக் கடைந்த தேம்படு கடலில்
அழுதுடன் தோன்றிய உரிமையானும்
நின் திரு நுதலை ஒளி விசும்பு உடலில் 15
ஆடி நிழல் காட்டிய பீடதுவானும்
கரை அற அணியும் மானக் கலனுள்
தலை பெற இருந்த நிலை புகழானும்
மண்ணகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு
ஆயா அமுதம் ஈகுதலானும் 20
பாற்கடல் உறங்கும் மாயவன் போலத்
தவள மாடத்து அகல் முதுகு பற்றி
நெடும் கார் கிடந்து படும் புனல் பிழியும்
கூடல் வீற்றிருந்த நாடகக் கடவுள்
பொன் சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும் 25
தாளியும் அறுகும் வால் உழை எருக்கமும்
கரந்தையும் வன்னியும் மிடைந்த செம் சடையில்
இரண்டு_ஐஞ்ஞூறு திரண்ட முகம் எடுத்து
மண் புலன் அகழ்ந்து திக்கு நிலை மயக்கிப்
புரியாக் கதமோடு ஒருபால் அடங்கும் 30
கங்கையில் படிந்த பொங்கு தவத்தானும்
அ நெடு வேணியில் கண்ணி என இருந்து
தூற்றும் மறு ஒழிந்த ஏற்றத்தானும்
அணி வான் பெற்ற இப் பிறையைப்
பணிவாய் புரிந்து தாமரை_மகளே 35

#20
** ஆற்றாமை கூறல்
பொருப்பு மலி தோளினும் நெருப்பு உமிழ் வேலினும்
செம் திருமகளை செயம்கொள் மங்கையை
வற்றாக் காதலில் கொண்ட மதி அன்றிக்
களவு அலர் தூற்ற தளவு கொடி நடுங்க
வேயுள் அம் பட்டுப் பூவை கண் கறுக்கத் 5
தண்டா மயல் கொடு வண்டு பரந்து அரற்றக்
காலம் கருதித் தோன்றி கை குலைப்பத்
துன்பு பசப்பு ஊரும் கண் நிழல்-தன்னைத்
திரு மலர் எடுத்துக் கொன்றை காட்ட
இறை வளை நில்லாது என்பன நிலைக்கக் 10
கோடல் வளைந்த வள் அலர் உகுப்பக்
கண் துளி துளிக்கும் சாயாப் பையுளைக்
கூறுபட நாடி ஆசையொடு மயங்கிக்
கருவிளை மலர் நீர் அருகு நின்று உகுப்பப்
பேர் அழல் வாடை ஆருயிர் தடவ 15
விளைக்கும் காலம் முளைத்த காலை
அன்பும் சூளும் நண்பும் நடுநிலையும்
தடையா அறிவும் உடையோய் நீயே
எழுந்து காட்டிப் பாடுசெய் கதிர் போல்
தோன்றி நில்லா நிலைப் பொருள் செய்ய 20
மருங்கில் பாதி தரும் துகில் புனைந்தும்
விளை வயல் ஒடுங்கும் உதிர் நெல் உணவினும்
தம்மில் வீழுநர்க்கு இன்பம் என்று அறிந்தும்
தண் மதி கடும் சுடர் வெவ் அழல் கண் வைத்து
அளவாப் பாதம் மண் பரப்பு ஆகத் 25
தனி நெடு விசும்பு திருவுடல் ஆக
இரும் திசைப் போக்குப் பெரும் தோள் ஆக
வழு அறு திரு மறை ஓசைகள் அனைத்தும்
மொழிதர நிகழும் வார்த்தை ஆக
உள் நிறைந்து உழலும் பாடு இரண்டு உயிர்ப்புப் 30
பகல் இரவு ஒடுங்கா விடு வளி ஆக
அடு படைப் பூழியன் கடு முரண் பற்றி
இட்ட வெம் கொடும் சிறைப் பட்ட கார்க் குலம்
தளையொடு நிறை நீர் விடுவன போலப்
புரைசையொடு பாசம் அற உடல் நிமிர்ந்து 35
கூடமும் கந்தும் சேறு நின்று அலைப்ப
மூன்று மத நெடும் புனல் கான்று மயல் உவட்டி
ஏழு உயர் கரித் திரள் கதமொடு பிளிறும்
பெரு நகர்க் கூடல் உறைதரு கடவுளை
நிறையப் பேசாக் குறையினர் போலவும் 40
கல்லா மனனினும் செல்லுதி பெரும
இளமையும் இன்பமும் வளனும் காட்சியும்
பின்புற நேடின முன்பவை அன்றி
நுனித்த மேனித் திருவினட்கு அடைத்த
வினை தரும் அடைவின் அல்லது 45
புனையக் காணேன் சொல் ஆயினவே

#21
** தன்னுள் கையாறு எய்திடு கிளவி
நீர்நிலை நின்று கால் கறுத்து எழுந்து
திக்கு நிலை படர்ந்த முகில் பாசடையும்
இடையிடை உகளும் மீனாம் மீனும்
செம் முகில் பழ நுரை வெண் முகில் புது நுரை
எங்கும் சிதறிப் பொங்கி எழு வனப்பும் 5
பல தலைவைத்து முடியாது பாயும்
எங்கும் முகம் வைத்த கங்கைக் காலும்
கொண்டு குளிர் பரந்த மங்குல் வாவிக்குள்
முயல் எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கித்
தேவர் மங்கையர் மலர் முகம் பழித்துக் 10
குறையாப் பாண்டில் வெண்மையின் மலர்ந்த
மதித் தாமரையே மயங்கிய ஒருவேன்
நின்-பால் கேட்கும் அளி மொழி ஒன்று உள
மீன் பாய்ந்து மறிக்கத் திரையிடை மயங்கிச்
சூல் வயிறு உளைந்து வளை கிடந்து முரலும் 15
புன்னை அம் பொதும்பரில் தம்முடை நெஞ்சமும்
மீன் உணவு உள்ளியிருந்த வெண் குருகு எனச்
சோறு நறை கான்ற கைதைய மலரும்
பல தலை அரக்கர் பேரணி போல
மருங்கு கூண்டு எழுந்து கரும் காய் நெருங்கி 20
விளை கள் சுமந்த தலை விரி பெண்ணையும்
இன்னும் காணாக் காட்சிகொண்டு இருந்த
அன்னத் திரளும் பெரும் கரி ஆகச்
சொல்லா இன்பமும் உயிருறத் தந்து
நாள் இழைத்திருக்கும் செயிர் கொள் அற்றத்து 25
மெய்யுறத் தணந்த பொய்யினர் இன்று
நெடுமலை பெற்ற ஒரு மகள் காண
நான்முக விதியே தாளம் தாக்க
அந்த நான்முகனை உந்தி பூத்தோன்
விசித்து மிறை பாசத்து இடக்கை விசிப்ப 30
மூன்று புரத்து ஒன்றில் அரசு உடை வாணன்
மேருக் கிளைத்த தோள் ஆயிரத்தொடும்
எழு கடல் கிளர்ந்த திரள் கலி அடங்க
முகம் வேறு இசைக்கும் குடமுழவு இரட்டப்
புள் கால் தும்புரு மணம் கந்திருவர் 35
நான்மறைப் பயனாம் ஏழிசை அமைத்துச்
சருக்கரைக் குன்றில் தேன்மழை நான்று என
ஏழு முனிவர்கள் தாழும் மாதவர்
அன்பினர் உள்ளமொடு என்பு கரைந்து உருக
விரல் நான்கு அமைத்த அணி குரல் வீங்காது 40
நான்மறை துள்ளும் வாய் பிளவாது
காட்டி உள் உணர்த்தும் நோக்கம் ஆடாது
பிதிர் கனல் மணி சூழ் முடி நடுங்காது
வயிறு குழிவாங்கி அழு முகம் காட்டாது
நாசி காகுளி வெடி குரல் வெள்ளை 45
பேசாக் கீழிசை ஒருபுறமொட்டல்
நெட்டுயிர்ப்பெறிதல் எறிந்து நின்று இரட்டல்
ஓசை இழைத்தல் கழிபோக்கு என்னப்
பேசுறு குற்றம் அசைவொடும் மாற்றி
வண்டின் தாரியும் கஞ்ச நாதமும் 50
சிரல் வானிலையும் கழை இலை வீழ்வதும்
அருவி ஓசையும் முழவின் முழக்கமும்
வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியும்
இன்னும் என்று இசைப்பப் பன்னிய விதியொடு
மந்தரம் மத்திமம் தாரம் இவை மூன்றில் 55
துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல்
கூடிய கானம் அன்பொடு பரவப்
பூதம் துள்ளப் பேய் கை மறிப்ப
எங்கு உள உயிரும் இன்பம் நிறைந்து ஆட
நாடக விதியொடு ஆடிய பெருமான் 60
மதுரை மா நகர்ச் செழியன் ஆகிக்
கதிர் முடி கவித்த இறைவன் மா மணிக்
கால் தலைக் கொள்ளாக் கையினர் போல
நீங்கினர் போக்கும் ஈங்குழி வருவதும்
கண்டு அது கூறுதியாயின் 65
எண்தகப் போற்றி நின் கால் வணங்குதுமே

#22
** வேறுபடுத்துக் கூறல்
கண்ட காட்சி சேணின் குறியோ
என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ
சூர்ப் பகை உலகில் தோன்றினர்க்கு அழகு
விதிக்கும் அடங்கா என்பன விதியோ
என்னுடைக் கண்ணும் உயிரும் ஆகி 5
உள் நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி
மலைக் குஞ்சரத்தின் கடக் குழி ஆகி
நெடு மலை விழித்த கண்ணே ஆகி
அ மலைத் திரு நுதற்கு அழியாது அமைத்த
வெள்ளை கொள் சிந்துர நல் அணி ஆகித் 10
தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி
அமுதொடு கிடக்கும் நிறைமதிப் பக்கம்
ஒருபால் கிடந்த துணை மதி ஆகி
அருவி வீசப் பறவை குடிபோகி
விண்டு நறவு ஒழுக்கும் பாண்டில் இறாலாய் 15
இளமை நீங்காது காவல்கொள் அமுதம்
வரை_அரமாதர் குழுவுடன் அருந்த
ஆக்கி இடம் பதித்த வள்ளமும் ஆகி
இடை வளி போகாது நெருங்கு முலைக் கொடிச்சியர்
சிறு முகம் காணும் ஆடி ஆகி 20
சிறந்த ஒரு சுனை இ மலை ஆட
அளவாக் காதல் கைம்மிக்கு அணைந்தனள்
அவளே நீயாய் என் கண் குறித்த
தெருமரல் தந்த அறிவு நிலை கிடக்கச்
சிறிது நின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி 25
ஒரு கணன் நிலைக்க மருவுதியாயின்
இ நிலை பெயர உன்னும் அக் கணத்தில்
தூண்டா விளக்கின் ஈண்டு அவள் உதவும்
அவ்வுழி உறவு மெய்பெறக் கலந்து இன்று
ஒரு கடல் இரண்டு திருப் பயந்தாங்கு 30
வளைத்த நெடும் கார்ப் புனத்து இருவீரும்
மணி நிறை ஊசல் அணிபெற உகைத்தும்
கரும் கால் கவணிடைச் செம் மணி வைத்துப்
பெரும் தேன் இறாலொடு குறி விழ எறிந்தும்
வெண் துகில் நுடங்கி பொன் கொழித்து இழியும் 35
அருவி ஏற்றும் முழை மலை கூஉயும்
பெரும் சுனை விழித்த நீலம் கொய்தும்
கொடுமரம் பற்றி நெட்டு இதண் பொலிந்தும்
தினைக் குரல் அறையும் கிளிக் கணம் கடிந்தும்
வெள்ளி இரும்பு பொன் எனப்பெற்ற 40
மூன்று புரம் வேவ திரு நகை விளையாட்டு
ஒருநாள் கண்ட பெருமான் இறைவன்
மாதுடன் ஒன்றி என் மனம் புகுந்து
பேணா உள்ளம் காணாது நடந்து
கொலை களவு என்னும் பழுமரம் பிடுங்கிப் 45
பவச் சுவர் இடித்துப் புதுக்கக் கட்டி
அன்பு கொடு வேய்ந்த நெஞ்ச மண்டபத்துப்
பாங்குடன் காணத் தோன்றி உள் நின்று
பன் மலர்ச் சோலை விம்மிய பெரு மலர்
இமையோர்புரத்தை நிறை மணம் காட்டும் 50
கூடல் அம் பதி அகம் வீடுபெற இருந்தோன்
இரு தாள் பெற்றவர் பெறும் திருப் போல
மருவிய பண்ணை இன்பமொடு விளை நலம்
சொல்லுடன் அமராது ஈங்கு
வில்லுடன் பகைத்த செம் திரு_நுதலே 55

#23
** காமம் மிக்க கழிபடர் கிளவி
வானவர்க்கு இறைவன் நிலம் கிடைகொண்டு
திரு உடல் நிறை விழி ஆயிரத் திரளும்
இமையாது விழித்த தோற்றம் போலக்
கஞ்சக் கொள்ளை இடையற மலர்ந்து
மணம் சூழ் கிடந்த நீள் கரும் கழியே 5
கரும் கழி கொடுக்கும் வெள் இறவு அருந்தக்
கை பார்த்து இருக்கும் மடப் பெடை குருகே
பெடைக் குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு
காவல் அடைகிடக்கும் கைதை அம் பொழிலே
வெம்மையொடு கூடியும் தண்மை பொருந்தியும் 10
உலக இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர்
காலம் கோடா முறைமுறை தோற்ற
மணி நிரை குயிற்றிய மண்டபம் ஆகிப்
பொறை மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள்
களையாது உடுக்கும் பைம் துகில் ஆகி 15
வேனில் கிழவன் பேரணி மகிழ
முழக்காது தழங்கும் மா முரசு ஆகி
நெடியோன் துயிலாது அறிவொடு துயிலப்
பாயற்கு அமைந்த பள்ளியறை ஆகிச்
சலபதி ஆய்ந்து சேம நிலை வைத்த 20
முத்து மணி கிடக்கும் செறி இருள் அரங்காய்ப்
புலவு உடல் பரதவர் தம் குடி ஓம்ப
நாளும் விளைக்கும் பெரு வயல் ஆகிக்
கலம் எனும் நெடும் தேர் தொலையாது ஓட
அளப்பு அறப் பரந்த வீதியது ஆகிச் 25
சுறவ வேந்து நெடும் படை செய்ய
முழக்கமொடு வளைத்த அமர்க் களம் ஆகி
மகரத் தெய்வம் நாள் நிறைந்து உறைய
மணி விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி
நீர் நெய் வார்த்துச் சகரர் அமைத்த 30
தீ வளர் வட்டக் குண்டம் ஆகி
எண் திகழ் பகுவாம் இன மணிப் பாந்தள்
தண்டில் நின்று எரியும் தகளியது ஆகி
பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட
மாறிக் குனித்த நீறு அணி பெருமாற்கு 35
அமுத போனகம் கதுமென உதவும்
அடும் தீ மாறா மடைப்பள்ளி ஆகி
இன்னும் பலமாய் மன்னும் கடலே
நுங்கள் இன்பம் பெரும் துணை என்-பால்
தண்ணம்துறைவற்கு இன்று இவள் ஒருத்தி 40
நெருப்புறு மெழுகின் உள்ளம் வாடியும்
அருவி தூங்கக் கண்ணீர் கொண்டும்
அரவின் வாய் அரியின் பலவும் நினைந்தும்
நிலையாச் சூளின் நிலையா நெஞ்சம்
கொண்டனள் என் என என் முகம் நாடி 45
உற்ற வாய்மை சற்றும் தருகிலீர்
அன்று எனின் நும்மில் ஒன்றுபட்டு ஒருகால்
இவளோ துயரம் பெறுவது என் என்று
வினவாது இருக்கும் கேண்மை
மனனால் நாடில் சொல்லினும் கொடிதே 50

#24
** இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்
பொருப்பு வளன் வேண்டி மழைக் கண்திறப்பக்
குருகு பெயர்க் குன்றத்து உடல் பக எறிந்த
நெடுவேள் கடவுள் மயில் கொடி முன்றில்
பெரும் கிளை கூண்டு வெட்சி மலர் பரப்பி
இறால் நறவு அளாய செந்தினை வெள் இடி 5
தேக்கு இலை விரித்து நால் திசை வைத்து
மனவு அணி முதியோள் வரை அணங்கு அயர்ந்து
மூன்று காலமும் தோன்றக் கூற
வேலன் சுழன்று குறுமறி அறுப்பக்
கருவி நுனி கொள் நெறி இலை ஈந்தின் 10
முற்றிய பெரு நறவு எண்ணுடன் குடித்து
நெட்டு இலை அரம்பைக் குறுங்காய் மானும்
முளியம் தறிந்த கணைகொள் வாய்த் திரிகல்
ஒப்புடைத்தாய வட்ட வாய்த் தொண்டகம்
கோல் தலை பனிப்ப வான் விடு பெரும் குரல் 15
வீயாது துவைக்கும் கடன் மலைநாடர்
வருந்தி ஈன்றெடுத்த செந்திரு மட மகள்
ஒருவுக உள்ளத்துப் பெருகிய நடுக்கம்
எம் ஊர்ச் சேணும் நும் ஊர்க் குன்றமும்
பெரும் தவர் குழுவும் அரும் கதி இருப்பும் 20
பொதியமும் களிப்ப விரிதரு தென்றலும்
கனை கடல் குடித்த முனிவனும் தமிழும்
மேருவும் மூவர்க்கு ஓதிய புரமும்
உலகம் ஈன்று அளித்த உமையும் மா அறனும்
தேவர்க்கு அரசனும் காவல் தருவும் 25
வழுவா விதியும் எழுதா மறையும்
செங்கோல் வேந்தும் தங்கிய குடியும்
தவம் சூழ் இமயமும் கமம் சூல் மழையும்
எல்லையில் ஈங்கு இவை சொல்லிய அன்றிக்
கண்ணன் கரமும் வெண்ணெயும் போலப் 30
பாசடை புதைத்த நெட்டு ஆற்று ஏரியுள்
பூத்து அலர் விரித்த சேப்படு தாமரை
உள் வளை உறங்கும் வள் வாய்க் கூடல்
நிறைந்து உறை முக்கண் பெரும் திறல் அடிகள்
அடியவர்க்கு எவ்வளவு அது ஆம் 35
கொடி புரை நுசுப்பின் பெரு முலையோளே

#25
** நின்குறை நீயே சென்று உரை என்றல்
வேற்றுப் பிடி புணர்ந்து தீராப் புலவி
சுற்றமொடு தீர்க்க உய்த்த காதலின்
கரும் கை வெண் கோட்டுக் சிறு கண் பெரும் களிறு
உளத்து நின்று அளிக்கும் திருத் தகும் அருநூல்
பள்ளிக் கணக்கர்-பால் பட்டாங்குக் 5
குறிஞ்சிப் பெரும் தேன் இறாலொடு சிதைத்து
மென் நடைப் பிடிக்குக் கை பிடித்து உதவி
அடிக்கடி வணங்கும் சாரல் நாட
அந்தணர் இருக்கை அகல்வோர் சூழ்ந்து என
நல் நயம் கிடந்த பொன் நகர் மூடிப் 10
புலைசெய்து உடன்று நிலைநிலை தேய்க்கும்
தள்ளா மொய்ம்பின் உள் உடைந்து ஒருகால்
வேதியன் முதலா அமரரும் அரசனும்
போது தூய் இரப்ப புணரா மயக்கம்
நாரணன் நடித்த எழுவாய்த் தருக்கத்து 15
அறிவு நிலை போகி அருச்சனை விடுத்த
வெள்ள முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும்
அடுக்கு நிலை சுமந்த வலித் தடப் பொன்மலை
கடு முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி
ஆயிரம் தீ வாய் அரவு நாண் கொளுவி 20
மாதவன் அங்கி வளி குதை எழு நுனி
செம் சரம் பேர் உருள் அருக்கன் மதி ஆகத்
தேர் வரை வையம் ஆகத் திருத்திச்
சென்னி மலை ஈன்ற கன்னி வில் பிடிப்ப
ஒரு கால் முன் வைத்து இரு கால் வளைப்ப 25
வளைத்த வில் வட்டம் கிடைத்தது கண்டு
சிறுநகை கொண்ட ஒரு பெரும் தீயின்
ஏழ் உயர் வானம் பூழி படக் கருக்கி
அருச்சனை விடாது அங்கு ஒருப்படும் மூவரில்
இருவரைக் காவல் மருவுதல் ஈந்து 30
மற்றொருவற்கு வைத்த நடம் அறிந்து
குடமுழவு இசைப்பப் பெரும் அருள் நல்கி
ஒருநாள் அருச்சனை புரி நாடலர்க்கும்
அரும் பெறல் உளதாம் பெரும்பதம் காட்டி
எரியிடை மாய்ந்த கனல் விழி அரக்கர்க்கு 35
உலவாப் பொன்னுலகு அடைதர வைத்த
சுந்தரக் கடவுள் கந்தரக் கறையோன்
மாமி ஆடப் புணரி அழைத்த
காமரு கூடற்கு இறைவன் கழல் இணை
களிப்பு உடை அடியர்க்கு வெளிப்பட்டு என்ன 40
ஒரு நீ தானே மருவுதல் கிடைத்துக்
கள்ளமும் வெளியும் உள்ளம் உறை அனைத்தும்
விரித்துக் கூறி பொருத்தமும் காண்டி
ஈயா மாந்தர் பொருள் தேய்ந்து என்ன
நுண் இடை சுமந்து ஆற்றாது 45
கண்ணிய சுணங்கின் பெரு முலையவட்கே

#26
** இரவுக்குறி வேண்டல்
வள்ளியோர் ஈதல் வரையாது போல
எண் திசை கரு இருந்து இன மழை கான்றது
வெண் நகைக் கரும் குழல் செம் தளிர்ச் சீறடி
மங்கையர் உளம் எனக் கங்குலும் பரந்தது
தெய்வம் கருதாப் பொய்யினர்க்கு உரைத்த 5
நல்வழி மான புல் வழி புரண்டது
காலம் முடியக் கணக்கின் படியே
மறலி விடுக்க வந்த தூதுவர்
உயிர்-தொறும் வளைந்து என உயிர் சுமந்து உழலும்
புகர் மலை இயங்கா வகை அரி சூழ்ந்தன 10
வெள் உடல் பேழ் வாய்த் தழல் விழி மடங்கல்
உரிவை மூடி கரித் தோல் விரித்துப்
புள்ளி பரந்த வள் உகிர்த் தரக்கின்
அதள் பிறக்கிட்டு குதி பாய் நவ்வியின்
சருமம் உடுத்து கரும் பாம்பு கட்டி 15
முன் புகு விதியின் என்பு குரல் பூண்டு
கருமா எயிறு திருமார்பு தூக்கி
வையகத்து உயிர்கள் வழக்கு அறல் கருதித்
தொய்யில் ஆடும் கடன் உடைக் கன்னியர்
அண்ணாந்த வன முலைச் சுண்ணமும் அளறும்
எழிலி வான் சுழலப் பிளிறு குரல் பகட்டு இனம் 20
துறை நீர் ஆடப் பரந்த கார் மதமும்
பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து
சிஞ்சை இடங்கரை பைம் சிலைச் சேலை
உடல் புலவு மாற்றும் படத் திரை வையை
நிறை நீர் வளைக்கும் புகழ் நீர்க் கூடல் 25
வெள்ளியம் பொதுவில் கள் அவிழ் குழலொடும்
இன்ப நடம் புரியும் தேவ நாயகன்
அருவி உடல் கயிறும் சுனை மதக் குழியும்
பெரும் தேன் செவியும் கரும் தேன் தொடர்ச்சியும்
ஓவா பெரு மலைக் குஞ்சரம் மணக்க 30
வளம் தரும் உங்கள் தொல் குடிச் சீறூர்க்கு
அண்ணிய விருந்தினன் ஆகி
நண்ணுவன் சிறு நுதல் பெரு விழியோளே

#27
** நகர் அணிமை கூறல்
புயல் கார்ப் பாசடை எண்படப் படர்ந்த
வெள்ளப் பெரு நதி கொள்ளை முகம் வைத்து
நீட நிறை பாயும் வான வாவிக்குள்
ஒரு செந்தாமரை நடு மலர்ந்து என்ன
மூ அடி வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு 5
ஒரு தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய
கரும் கடல் வண்ணன் செம் கரும் கரத்து
ஒன்றால் இரு மலை அன்று ஏந்தியது என
உந்தி ஒழுக்கு ஏந்திய வன முலையாட்டியும்
வரை பொரும் மருமத்து ஒரு திறன் நீயும் 10
முழை வாய் அரக்கர் பாடு கிடந்து ஒத்த
நிறை கிடைப் பொற்றை வரை கடந்து இறந்தால்
எரி தழல் குஞ்சி பொறி விழி பிறழ் எயிற்று
இருள் உடல் அந்தகன் மருள்கொள உதைத்த
மூவாத் திருப்பதத்து ஒரு தனிப் பெருமான் 15
எண்ணில் பெறாத அண்டப் பெரும் திரள்
அடைவு ஈன்று அளித்த பிறை நுதல் கன்னியொடும்
அளவாக் கற்பம் அளி வைத்து நிலைஇய
பாசடை நெடும் காடு காணிகொள் நீர்நாய்
வானவில் நிறத்த நெட்டு உடல் வாளைப் 20
பேழ் வாய் ஒளிப்ப வேட்டுவப் பெயர் அளி
இடை உறழ் நுசுப்பின் குரவை வாய்க் கடைசியர்
களை கடும் தொழில் விடுத்து உழவு செறு மண்டப்
பண் கால் உழவர் பகடு பிடர் பூண்ட
முடப் புது நாஞ்சில் அள்ளல் புக நிறுத்திச் 25
சூடு நிலை உயர்த்தும் கடும் குலை ஏறப்
பைம் குவளை துய்க்கும் செம் கண் கவரி
நாகொடு வெருண்டு கழைக் கரும்பு உழக்க
அமுத வாய் மொழிச்சியர் நச்சு விழி போல
நெடும் குழை கிழிப்பக் கடும் கயல் பாயும் 30
தண்ணம் பழனம் சூழ்ந்த
கண் இவர் கூடல் பெரு வளம் பதியே

#28
** அறியாள் போன்று நினைவு கேட்டல்
பற்றலர்த் தெறுதலும் உவந்தோர்ப் பரித்தலும்
வெம் சுடர் தண் மதி எனப் புகழ் நிறீஇய
நெட்டு இலைக் குறும் புகர்க் குருதி வேலவ
வேதியன் படைக்க மாலவன் காக்கப்
பெறாததோர் திரு உருத்தான் பெரிது நிறுத்தி 5
அமுது அயில் வாழ்க்கைத் தேவர்_கோன் இழிச்சிய
மத மலை இரு_நான்கு பிடர் சுமந்து ஓங்கிச்
செம்பொன் மணி குயிற்றிய சிகரக் கோயிலுள்
அமையாத் தண் அளி உமையுடன் நிறைந்த
ஆலவாய் உறைதரும் மூலக் கொழும் சுடர் 10
கருவி வானம் அடிக்கடி பொழியும்
கூடம் சூழ்ந்த நெடு முடிப் பொதியத்துக்
கண் நுழையாது காட்சிகொளத் தோற்றிய
வெறி வீச் சந்தின் நிரை இடை எறிந்து
மற்றது வேலிகொள வளைத்து வளர் ஏனல் 15
நெடும் கால் குற்றுழி இதண் உழை காத்தும்
தேவர்_கோமான் சிறை அரி புண்ணினுக்கு
ஆற்றாது பெரு முழை வாய் விட்டுக் கலுழ்ந்து எனக்
கமம் சூல் கொண்மூ முதுகு குடியிருந்து
வான் உட்க முரற்றும் மலைச் சுனை குடைந்தும் 20
பிரசமும் வண்டும் இரவி தெறு மணியும்
வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்துத்
துகில் நான்று நுடங்கும் அருவி ஏற்றும்
மறு அறு செம் மணி கால் கவண் நிறுத்தி
நிறைமதி கிடக்கும் இறால் விழ எறிந்தும் 25
எதிர் சொல் கேட்பக் கால் புகத் திகைத்த
நெருக்கு பொழில் புக்கும் நெடு மலை கூயும்
நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்றப்
பைம் காடு நகைத்த எண் மலர் கொய்தும்
மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம் 30
செம்பொன் செய்த வரிப் பந்து துரந்தும்
இனைய பல் நெறிப் பண்ணை எங்கும்
அளவாக் கன்னியர் இவருள்
உளம் ஆம் வேட்கையள் இன்னள் என்று உரையே

#29
** சுடரோடு இரத்தல்
ஈன்ற என் உளமும் தோன்ற மொழி பயின்ற
வளை வாய்க் கிள்ளையும் வரிப் புனை பந்தும்
பூவையும் கோங்கின் பொன் அலர் சூட்டிய
பாவையும் மானும் தெருள்பவர் ஊரும்
நெடும் திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினைப் 5
பெரு வளி மலக்கச் செயல் மறு மறந்தாங்குச்
சேர மறுக முதுக்குறை உறுத்தி
எரி தெறும் கொடும் சுரத்து இறந்தனளாக
நதிக் கடம் தறுகண் புகர் கொலை மறுத்த
கல்_இபம் அதனைக் கரும்புகொள வைத்த 10
ஆலவாய் அமர்ந்த நீலம் நிறை கண்டன்
மறி திரைப் பரவைப் புடை வயிறு குழம்பத்
துலக்கு மலை ஒருநாள் கலக்குவ போல
உழுவை உகிர் உழக்கும் ஏந்து கோட்டு உம்பல்
உரிவை மூடி ஒளியினை மறைத்துத் 15
தரைபடு மறுக்கம் தடைந்தன போல
விண்ணுற விரித்த கரு முகில் படாம் கொடு
மண்ணகம் உருகக் கனற்றும் அழல் மேனியை
எடுத்து மூடி எறி திரைப் பழனத்துப்
பனிச் சிறுமைகொள்ளா முள் அரை முளரி 20
வண்டொடு மலர்ந்த வண்ணம் போலக்
கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி
மலர் தலை உலகத்து இருள் எறி விளக்கும்
மன் உயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும்
மறை உகு நீர்க்குக் கருவும் கரியும் 25
வடிவம் எட்டினுள் மகிழ்ந்த ஒன்றும்
சேண் குளம் மலர்ந்த செந்தாமரையும்
சோற்றுக் கடன் கழிக்கப் போற்று உயிர் அழிக்கும்
ஆசைச் செருநர்க்கு அடைந்து செல் வழியும்
அருளும் பொருளும் ஆகித் 30
திருவுலகு அளிக்கும் பருதி வானவனே

#30
** இன்னல் எய்தல்
வள் உறை கழித்துத் துளக்கு வேல் மகனும்
அன்பும் மயில் கழுத்தும் மலையடியும்
நெல் பிடித்து உரைக்கும் குறியினோளும்
நடுங்கு அஞர் உற்ற பழங்கண் அன்னையரும்
அயரா வெறியில் தண்டா வரு நோய் 5
ஈயாது உண்ணுநர் நெடும் பழி போலப்
போகாக் காலை புணர்க்குவது என் ஆம்
நான்கு எயிற்று ஒருத்தல் பிடர்ப்பு ஒலி வரைப்பகை
அறுகால் குளிக்கும் மதுத் தொடை ஏந்த
முள் தாள் செம் மலர் நான் முகத்து ஒருவன் 10
எண்ணி நெய் இறைத்து மண அழல் ஓம்பப்
புவி அளந்து உண்ட திரு நெடுமாலோன்
இரு கரம் அடுக்கிப் பெரு நீர் வார்ப்ப
ஒற்றை ஆழியன் முயல் உடல் தண்_சுடர்
அண்டம் விளர்ப்பப் பெரு விளக்கு எடுப்ப 15
அளவாப் புலன் கொள விஞ்சையர் எண்மரும்
வள்ளையில் கருவியில் பெரும் புகழ் விளைப்ப
முனிவர் செம் கரம் சென்னி ஆக
உருப்பசி முதலோர் முன்வாழ்த்து எடுப்ப
மு முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட 20
கூடற்கு இறைவன் இரு தாள் இருத்தும்
கவையா வென்றி நெஞ்சினர் நோக்கப்
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்
பீரமும் நோயும் மாறின்
வாரித் துறைவற்கு என் ஆதும்மே 25

#31
** நெஞ்சொடு நோதல்
பொருள் செயல் அருத்தியின் எண் வழி தடைந்து
நால் திசை நடக்கும் அணங்கின் அவயவத்து
அலைதரு தட்டைக் கரும்புற மலை மடல்
கடல் திரை உகளும் குறும் கயல் மானும்
கடும் கான் தள்ளி தடைதரு நெஞ்சம் 5
கயிலைத் தென்-பால் கானகம் தனித்த
தேவர் நெஞ்சு உடைக்கும் தாமரை ஏவின்
மணக்கோல் துரந்த குணக் கோ மதனைத்
திருக்குளம் முளைத்த கண் தாமரை கொடு
தென்கீழ்த்திசையோன் ஆக்கிய தனி முதல் 10
திரு மா மதுரை எனும் திருப் பொன்_தொடி
என் உயிர் அடைத்த பொன் முலைச் செப்பின்
அளவு அமர் இன்பம் கருதியோ அன்றிப்
புறன் பயன் கொடுக்கும் பொருட்கோ ஆழி
வளர் முலை இன்பு எனின் மறித்து நோக்கு-மதி 15
பெரும் பொருள் இன்பு எனின் பிறிது தடை இன்றே
யாதினைக் கருதியது ஒன்றை
ஓதல் வேண்டும் வாழிய பெரிதே

#32
** வேழம் வினாதல்
தன் உடல் அன்றிப் பிறிது உண் கனை இருள்
பகல் வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போலப்
பெரு நிலவு கான்ற நீறு கெழு பரப்பில்
அண்டநாடவர்க்கு ஆருயிர் கொடுத்த
கண்டக் கறையோன் கண் தரு நுதலோன் 5
முன் ஒரு நாளில் நால் படை உடன்று
செழியன் அடைத்த சென்னி பாட
எள்ளரும் கருணையின் நள்ளிருள் நடுநாள்
அவன் எனத் தோன்றி அரும் சிறை விடுத்த
முன்னவன் கூடல் மூதூர் அன்ன 10
வெண் நகைச் செவ் வாய்க் கரும் குழல் மகளிர்
செம் மணி கிடந்த நும் பசும் புனத்து உளறி
வாய் சொரி மழை மதத் தழை செவிப் புழைக் கைக்
குழி கண் பரூஉத் தாள் கூர்ம் கோட்டு ஒருத்தல்
சினை தழை விளைத்த பழுமரம் என்ன 15
அறுகால் கணமும் பறவையும் கணையும்
மேகமும் பிடியும் தொடர
ஏகியது உண்டேல் கூறுதிர் புரிந்தே

#33
** உலகின்மேல் வைத்து உரைத்தல்
இருளொடு தாரகை இரண்டினை மயக்கிக்
குழல் என மலர் என மயல்வரச் சுமந்து
வில்லினைக் குனித்துக் கணையினை வாங்கிப்
புருவம் கண் என உயிர்விடப் பயிற்றி
மலையினைத் தாங்கி அமுதினைக் கடைந்து 5
முலை எனச் சொல் என வர வர வைத்து
மெய்யினைப் பரப்பிப் பொய்யினைக் காட்டி
அல்குல் இடை என நெஞ்சு உழலக் கொடுத்து
முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி
அடி என உடல் என அலமரல் நிறீஇ 10
மூரி வீழ்ந்த நெறிச் சடை முனிவர்
சருக்கம் காட்டும் அரு மறை சொல்லி
உள்ளம் கறுத்துக் கண் சிவந்து இட்ட
மந்திரத் தழல் குழி தொட்டு வயிறு வருந்தி
முன்பின் ஈன்ற பேழ் வாய்ப் புலியினைக் 15
கைதை முள் செறிந்த கூர் எயிற்று அரவினைக்
கார் உடல் பெற்ற தீ விழிக் குறளினை
உரிசெய்து உடுத்துச் செம் கரம் தரித்துச்
செம்மலர் பழித்த தாள் கீழ்க் கிடத்தி
அருள் நடம் புரிந்த தேவர் நாயகன் 20
ஒரு நாள் மூன்று புரம் தீக் கொளுவ
பொன்மலை பிடுங்கிக் கார் முகம் என்ன
வளைத்த ஞான்று நெடு விண் தடையக்
கால் கொடுத்து அன்ன கந்திகள் நிமிர்ந்து
நெருக்கு பொழில் கூடல் அன்ன செம் மகளிர் 25
கண் எனும் தெய்வக் காட்சியுள் பட்டோர்
வெண்_பொடி எருக்கம் என்பு பனை கிழியினை
பூசி அணிந்து பூண்டு பரி கடவிக்
கரத்தது ஆக்கி அ நோ
அருத்தி மீட்பர் நிலை வல்லோரே 30

#34
** அல்லகுறி அறிவித்தல்
வற்றிய நரம்பின் நெடும் குரல் பேழ் வாய்க்
குழி விழிப் பிறழ் பல் தெற்றல் கரும் கால்
தாளிப் போந்தின் தரு மயிர்ப் பெரும் தலை
விண் புடைத்து அப்புறம் விளங்கு உடல் குணங்கு இனம்
கானம் பாடிச் சுற்றி நின்று ஆடச் 5
சுழல் விழிச் சிறுநகைக் குட வயிற்று இரு குழைச்
சங்கக் குறும் தாள் பாரிடம் குனிப்பத்
தேவர் கண் பனிப்ப முனிவர் வாய் குழறக்
கல்லவடத்திரள் மணி வாய்த் தண்ணுமை
மொந்தை கல்லலசு துத்தரி ஏங்கக் 10
கட்செவி சுழலத் தாழ் சடை நெறிப்ப
இதழி தாது உதிர்ப்ப பிறை அமுது உகுக்க
வெள்ளியம்பலத்துள் துள்ளிய பெருமான்
கூடல் மா நகர் அன்ன பொன்_கொடி
இரவிக்கு அண்ணிய வைகறை-காறும் 15
அலமரல் என்னை-கொல் அறிந்திலம் யாமே
வெண் முத்து அரும்பிப் பசும்பொன் மலர்ந்து
கடைந்த செம்பவளத் தொத்துடன் காட்டும்
இரும்பு கவைத்து அன்ன கரும் கோட்டுப் புன்னைச்
சினை முகம் ஏந்திய இணர்கொள் வாய்க் குடம்பையின் 20
எக்கர்ப் புளினம் வெண்மையிட மறைக்கும்
சிறை விரி தூவிச் செம் கால் அன்னம்
குறும் பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇச்
சேவலும் இனமும் சூழும்
காவில் மாறித் துயில் அழுங்குதற்கே 25

#35
** நலம் புனைந்துரைத்தல்
அருள் தரும் கேள்வி அமையத் தேக்கப்
பற்பல ஆசான் பாங்கு செல்பவர் போல்
மூன்று வகை அடுத்த தேன் தரு கொழு மலர்
கொழுதிப் பாடும் குணச் சுரும்பு இனங்காள்
உளத்து வேறு அடக்கி முகமன் கூறாது 5
வேட்கையின் நீயிர் வீழ் நாள்_பூ இனத்துள்
கார் உடல் பிறை எயிற்று அரக்கனைக் கொன்று
வச்சிரத் தடக் கை வரைப்பகை சுமந்த
பழ உடல் காட்டும் தீராப் பெரும் பழி
பனிமலை பயந்த மாதுடன் தீர்த்து அருள் 10
பெம்மான் வாழும் பெரு நகர்க் கூடல்
ஒப்புறு பொன் தொடிச் சிற்றிடை மடந்தை-தன்
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு
நானம் நீவி நாள்_மலர் மிலைந்து
கூடி உண்ணும் குணத்தினர் கிளை போல் 15
நீடிச் செறிந்து நெய்த்து உடல் குளிர்ந்த
கரும் குழல் பெரு மணம் போல
ஒருங்கும் உண்டேல் பேசுவிர் எமக்கே

#36
** நாண் இழந்து வருந்தல்
மை குழைத்து அன்ன தொள்ளி அம் செறுவில்
கூர் வாய்ப் பறை தபு பெரும் கிழ நாரை
வஞ்சனை தூங்கி ஆரல் உண்ணும்
நீங்காப் பழனப் பெரு நகர்க் கூடல்
கரம் மான் தரித்த பெருமான் இறைவன் 5
பொன் பழித்து எடுத்த இன்புறு திருவடி
உளம் விழுங்காத களவினர் போல என்
உயிரொடும் வளர்ந்த பெரு நாண் தறியினை
வெற்பன் காதல் கால் உலை வேலையில்
வலி உடைக் கற்பின் நெடு வளி சுழற்றிக் 10
கட்புலன் காணாது காட்டை கெட உந்தலின்
என் போல் இ நிலை நின்றவர் படைக்கும்
பேறு ஆங்கு ஒழிக பெரு நாண் கற்பினர்
என் பேறுடையர் ஆயில்
கற்பில் தோன்றாக் கடன் ஆகுகவே 15

#37
** தோழி இயற்பழித்து உரைத்தல்
வடமீன் கற்பின் எம் பீடு கெழு மடந்தை
பெரும் கடல் முகந்து வயிறு நிறை நெடும் கார்
விண் திரிந்து முழங்கி வீழாதாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போலக்
கற்பு நாண் மூடிப் பழங்கண்கொள்ள 5
உயர் மரம் முளைத்த ஊரி போல
ஓருடல்செய்து மறு மனம் காட்டும்
மாண் இழை மகளிர் வயின் வைகுதலால்
கரு முகிற்கு அணி நிறத் தழல் கண் பிறை எயிற்று
அரி தரு குட்டி ஆய பன்னிரண்டினைச் 10
செங்கோல் முளையிட்டு அருள் நீர் தேக்கிக்
கொலை களவு என்னும் படர் களை கட்டுத்
திக்குப் படர் ஆணை வேலி கோலித்
தருமப் பெரும் பயிர் உலகு பெற விளைக்கும்
நால் படை வன்னியர் ஆக்கிய பெருமான் 15
முள் உடைப் பேழ் வாய்ச் செம் கண் வரால் இனம்
வளை வாய்த் தூண்டில் கரும் கயிறு பரிந்து
குவளைப் பாசடை முண்டகம் உழக்கி
நெடும் கால் பாய்ந்து படுத்த ஒண் தொழில்
சுருங்கை வழி அடைக்கும் பெரும் கழிப் பழனக் 20
கூடற்கு இறைவன் இரு தாள் விடுத்த
பொய்யினர் செய்யும் புல்லம் போலப்
பேரா வாய்மை ஊரன்
தாரொடு மயங்கிப் பெருமையும் இலனே

#38
** பொழுது கண்டு மயங்கல்
கோடிய கோலினன் செருமுகம் போலக்
கனை கதிர் திருகிக் கல் சேர்ந்து முறை புகப்
பதினெண் கிளவி ஊர் துஞ்சிய போல்
புள் குலம் பொய்கை-வாய் தாள்கொள
வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி 5
இருள்மகள் கொண்ட குறுநகை போல
முல்லையும் மௌவலும் முருகு உயிர்த்து அவிழத்
தணந்தோர் உளத்தில் காமத் தீப் புக
மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர் விட
அன்றில் புல் சேக்கை புக்கு அலகு பெடை அணைய 10
அந்தணர் அரு மறை அரும் கிடை அடங்க
முதிர் கனி மூலம் முனிக் கணம் மறுப்பக்
கலவையும் பூவும் தோள் முடி கமழ
விரி வலை நுளையர் நெய்தல் ஏந்தித்
துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப 15
நீர்_அரமகளிர் செவ் வாய் காட்டிப்
பசும் தாள் சேக் கொள் ஆம்பல் மலரத்
தோளும் இசையும் கூறிடும் கலையும்
அருள் திரு எழுத்தும் பொருள் திரு மறையும்
விரும்பிய குணமும் அரும் திரு உருவும் 20
முதல் எண் கிளவியும் விதமுடன் நிரையே
எட்டும் ஏழும் சொற்றன ஆறும்
ஐந்தும் நான்கும் அணி தரு மூன்றும்
துஞ்சல்_இல் இரண்டும் சொல் அரும் ஒன்றும்
ஆருயிர் வாழ அருள் வர நிறுத்திய 25
பேர் அருள் கூடல் பெரும் பதி நிறைந்த
முக்கண் கடவுள் முதல்வனை வணங்கார்
தொக்க தீப் பெருவினை சூழ்ந்தன போலவும்
துறவால் அறனால் பெறல்_இல் மாந்தர்
விள்ளா அறிவின் உள்ளமும் என்னவும் 30
செக்கர்த் தீயொடு புக்க நல் மாலை
என் உயிர் வளைந்த தோற்றம் போல
நால் படை வேந்தன் பாசறை
யோர்க்கும் உளையோ மனத் திறன் ஓதுகவே

#39
** ஆடு இடத்து உய்த்தல்
முன்னி ஆடுக முன்னி ஆடுக
குமுதமும் வள்ளையும் நீலமும் குமிழும்
தாமரை ஒன்றில் தடைந்து வளர்செய்த
முளரி நிறை செம்மகள் முன்னி ஆடுக
நின் பெறு தவத்தினை முற்றிய யானும் 5
பல குறி பெற்று இவ் உலகு உயிர் அளித்த
பஞ்சின் மெல் அடிப் பாவை கூறு ஆகிக்
கரும் குருவிக்குக் கண்ணருள் கொடுத்த
வெண் திருநீற்றுச் செக்கர் மேனியன்
கிடையில் தாபதர் தொடை மறை முழக்கும் 10
பொங்கர்க் கிடந்த சூல் கார்க் குளிறலும்
வல்லியைப் பரியும் பகடு விடு குரலும்
யாணர்க் கொடிஞ்சி நெடும் தேர் இசைப்பும்
ஒன்றி அழுங்க நின்ற நிலை பெருகி
மாதிரக் களிற்றினைச் செவிடுறக் கொடுக்கும் 15
புண்ணியக் கூடலுள் நிறை பெருமான்
திருவடி சுமந்த அருளினர் போலக்
கரும் தேன் உடைத்துச் செம் மணி சிதறிப்
பாகல் கோட்டில் படர் கறி வணக்கிக்
கல்லென்று இழிந்து கொல்லையில் பரக்கும் 20
கறங்கு இசை அருவி அம் சாரல்
புறம்பு தோன்றி நின்-கண் ஆகுவனே

#40
** விரதியரை வினாதல்
நிலவு பகல் கான்ற புண்ணிய அருள் பொடி
இருவினை துரந்த திருவுடல் மூழ்கி
நடு உடல் வரிந்த கொடிக் காய்ப் பத்தர்
சுத்தி அமர் நீறுடன் தோள் வலன் பூண்டு
முடங்கு வீழ் அன்ன வேணி முடி கட்டி 5
இரு_நான்கு குற்றம் அடி அறக் காய்ந்து இவ்
ஆறு எதிர்ப்பட்ட அரும் தவத் திருவினர்
தணியாக் கொடும் சுரம் தரும் தழல் தாவிப்
பொன் உடல் தேவர் ஒக்கலொடு மயங்கிக்
கொண்மூப் பல் திரைப் புனலுடன் தாழ்த்திப் 10
பொதுளிய தருவினுள் புகுந்து இமையாது
மருந்து பகுத்து உண்டு வல் உயிர் தாங்கும்
வட்டை வந்தனை என வழங்கும் மொழி நிற்க
தாய் கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள்
பாங்கியைப் புல்லினள் அயலும் சொற்றனள் 15
மக்கள் பறவை பரிந்து உளம் மாழ்கினள்
பாடலம் புதுத் தார்க் காளை பின் ஒன்றால்
தள்ளா விதியின் செல்குநள் என்று
தழல் விழிப் பேழ் வாய்த் தரக்கின் துளி முலை
பைம் கண் புல்வாய் பால் உணக் கண்ட 20
அருள் நிறை பெருமான் இருள் நிறை மிடற்றோன்
மங்குல் நிறை பூத்த மணி உடுக் கணம் எனப்
புன்னை அம் பெதும்பர்ப் பூ நிறை கூடல் நும்
பொன் அடி வருந்தியும் கூடி
அன்னையர்க்கு உதவல் வேண்டும் இக் குறியே 25

#41
** அவயவம் கூறல்
வீதிகுத்திய குறும் தாள் பாரிடம்
விண் தலை உடைத்துப் பிறை வாய் வைப்பக்
குணங்கு இனம் துள்ள கூளியும் கொட்ப
மத்தியந்தணன் வரம்சொலி விடுப்பத்
தில்லை கண்ட புலிக்கால்_முனிவனும் 5
சூயை கைவிடப் பதஞ்சலி ஆகிய
ஆயிரம் பணாடவி அரும் தவத்து ஒருவனும்
கண்ணால் வாங்கி நெஞ்சு அறை நிறைப்பத்
திருநடம் நவின்ற உலகு உயிர்ப் பெருமான்
கடல் மாக் கொன்ற தீப் படர் நெடு வேல் 10
உருள் இணர்க் கடம்பின் நெடும் தார்க் கண்ணியன்
அரிமகள் விரும்பிப் பாகம் செய்து
களியுடன் நிறைந்த ஒரு பரங்குன்றமும்
பொன் அம் தோகையும் மணி அரிச் சிலம்பும்
நிரைத் தலைச் சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும் 15
வண்டு கிளை முரற்றிய பாசிலைத் துளவும்
மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க
மரக்கால் ஆடி அரக்கர்க் கொன்ற
கவைத் தலை மணி வேல் பிறைத் தலைக் கன்னி
வட-பால் பரிந்த பலி மணக் கோட்டமும் 20
சூடகம் தோள்வளை கிடந்து வில் வீச
யாவர்-தம் பகையும் யாவையின் பகையும்
வளனில் காத்து வருவன அருளும்
ஊழியும் கணம் என உயர் மகன் பள்ளியும்
உவாமதி கிடக்கும் குண்டு கடல் கலக்கி 25
மருந்து கைக் கொண்டு வானவர்க்கு ஊட்டிய
பாகப் பக்க நெடியோன் உறையுளும்
தும்பி உண்ணாத் தொங்கல் தேவர்
மக்களொடு நெருங்கிய வீதிப் புறமும்
மது நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கிச் 30
சூர் அரக் கன்னியர் உடல் பனிசெய்யும்
கடைக்கால் மடியும் பொங்கர்ப் பக்கமும்
ஊடி ஆடுநர்த் திரையொடு பிணங்கித்
தோழியின் தீர்க்கும் வையைத் துழனியும்
அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து 35
நின்றுநின்று ஓங்கி நிலை அறம் பெருக்கும்
ஆனாப் பெரும் புகழ் அருள் நகர்க் கூடல்
பெண் உடல் பெற்ற சென்னி அம் பிறையோன்
பொன் தகடு பரப்பிய கரு மணி நிரை என
வண்டும் தேனும் மருள் கிளை முரற்றி 40
உடைந்து உமிழ் நறவு உண்டு உறங்கு தார்க் கொன்றையன்
திருவடி புகழுநர் செல்வம் போலும்
அண்ணாந்து எடுத்த அணிவுறு வன முலை
அவன் கழல் சொல்லுநர் அருவினை மானும்
மலை முலைப் பகை அட மாழ்குறும் நுசுப்பு 45
மற்று அவன் அசைத்த மாசுணம் பரப்பி
அமைத்தது கடுக்கும் மணிப் பாம்பு அல்குல்
ஆங்கவன் தரித்த கலைமான் கடுக்கும்
இரு குழை கிழிக்கும் அரி மதர் மலர்க் கண்
புகர் முகப் புழை_கை துயில்தரு கனவில் 50
முடங்கு_உளை கண்ட பெரும் துயர் போல
உயிரினும் நுனித்த அவ் உருக் கொடு
பொன்மலை பனிப்பினும் பனியா
என் உயிர் வாட்டிய தொடி இளம்_கொடிக்கே

#42
** வன்புறை எதிரழிந்து இரங்கல்
ஈன்ற செம் சூழல் கவர் வழி பிழைத்த
வெறி விழிப் பிணர் மருப்பு ஆமான் கன்றினை
மென் நடைக் குழை செவிப் பெறா வெறும் கரும் பிடி
கணிப் பணைக் கவட்டும் மணல் சுனைப் புறத்தும்
தழைக் குற மங்கையர் ஐவனம் துவைக்கும் 5
உரல் குழி நிரைத்த கல் அறைப் பரப்பும்
மானிட மாக்கள் அரக்கி கைப் பட்டு என
நாச் சுவை மடிக்கும் உணவு உதவாது
வைத்துவைத்து எடுக்கும் சாரல் நாடன்
அறிவும் பொறையும் பொருள் அறி கல்வியும் 10
ஒழுக்கமும் குலனும் அமுக்கு அறு தவமும்
இனிமையும் பண்பும் ஈண்டவும் நன்றே
வெடி வால் பைம் கண் குறுநரி இனத்தினை
ஏழிடம் தோன்றி இனன் நூற்கு இயைந்து
வீதி போகிய வால் உளைப் பரவி 15
ஆக்கிய விஞ்சைப் பிறை முடி அந்தணன்
கொண்டோற்கு ஏகும் குறி உடை நல் நாள்
அன்னையர் இல்லத்து அணி மட மங்கையர்
கண்டன கவரும் காட்சி போல
வேலன் பேசி மறி செகுத்து ஓம்பிய 20
காலம் கோடா வரை வளர் பண்டம்
வருவன வாரி வண்டு இனம் தொடரக்
கண் கயல் விழித்துப் பூத் துகில் மூடிக்
குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து
கரும் கால் மள்ளர் உழவச் சேடியர் 25
நிரைநிரை வணங்கி மதகு எதிர்கொள்ளத்
தண் நடைக் கணவன் பண்புடன் புணரும்
வையை மா மாது மணத்துடன் சூழ்ந்த
கூடல் பெருமான் பொன் பிறழ் திருவடி
நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போலச் 30
சலியாச் சார்பு நிலை அற நீங்கி
அரந்தையுற்று நீட நின்று இரங்கும்
முருந்து எயிற்று இளம்பிறைக் கோலம்
திருந்திய திருநுதல் துகிர் இளம்_கொடியே

#43
** அன்னமோடு அழிதல்
கவைத் துகிர் வடவையின் திரள் சிகை பரப்பி
அரை பெறப் பிணித்த கல் குளி மாக்கள்
உள்ளம் தீக்கும் உவர்க் கடல் உடுத்த
நாவலம் தண் பொழில் இன்புடன் துயில
உலகு அற விழுங்கிய நள்ளென் கங்குல் 5
துயிலாக் கேளுடன் உயிர் இரை தேரும்
நெட்டு உடல் பேழ் வாய்க் கழுதும் உறங்கப்
பிள்ளையும் பெடையும் பறை வரத் தழீஇச்
சுற்றமும் சூழ்ந்து குருகு கண்படுப்பக்
கீழ் அரும்பு அணைந்த முள் அரை முளரி 10
இதழ்க் கதவு அடைத்து மலர்க் கண் துயில
விரி சினை பொதுளிய பாசிலை ஒடுக்கிப்
பூவொடும் வண்டொடும் பொங்கரும் உறங்கப்
பால் முகக் களவின் குறும் காய்ப் பச்சிணர்
புள் கால் பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த 15
மயிர்_குறை_கருவித் துணைக் குழை அலைப்ப
வரிந்த இந்தனச் சுமை மதி அரவு இதழி
அகன்று கட்டு அவிழ்ந்த சேகரத்து இருத்தி
வீதியும் கவலையும் மிக வளம் புகன்று
பொழுது கண் மறைந்த தீ வாய்ச் செக்கர் 20
தணந்தோர் உள்ளத்துள் உறப் புகுந்த பின்
கார் உடல் காட்டிக் கண்ட கண் புதைய
அல் எனும் மங்கை மெல்லெனப் பார்க்க
முரன்று எழு காநம் முயன்று வாது இயைந்த
வட புல விஞ்சையன் வைகு இடத்து அகன் கடைத் 25
தென் திசைப் பாணன் அடிமை யான் எனப்
போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி
உந்தித் தோற்றம் ஓசை நின்று ஒடுங்கப்
பாலையில் எழுப்பி அமர் இசை பயிற்றித்
தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும் 30
தாரியில் காட்டித் தரும் சாதாரி
உலகு உயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க
இசை விதி பாடிய இசை_பகை துரந்த
கூடற்கு இறையோன் தாள் விடுத்தோர் என
என் கண் துஞ்சா நீர்மை 35
முன் கண்டு ஓதாது அவர்க்கு நம் குருகே

#44
** சொல்லாது ஏகல்
இலது எனின் உளது என்று உள்ளமொடு விதித்தும்
சொல்லா நிலை பெறும் சூளுறின் மயங்கிச்
செய்குறி குணனும் சிந்தையுள் திரிவும்
உழை நின்று அறிந்து பழங்கண் கவர்ந்தும்
கண் எதிர் வைகி முகன் கொளின் கலங்கியும் 5
வழங்குறு கிளவியின் திசை என மாழ்கியும்
ஒரு திசை நோக்கினும் இருக்கினும் உடைந்தும்
போக்கு என உழையர் அயர்ப்பிடை கிளப்பினும்
முலை குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம்
செம் மணி கரிந்து தீத்தர உயிர்த்தும் 10
போம் என வாய்ச் சொல் கேட்பினும் புகைந்தும்
கொள்ளார் அறுதியும் கொண்டோர் இசைத்தலும்
ஈது எனக் காட்டிய மயல் மடவரற்கு
முன் ஒரு வணிகன் மகப்பேறு இன்மையின்
மருமான்-தன்னை மகவு எனச் சடங்குசெய்து 15
உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி
முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி
அப் புலத்து உயிர்கொடுத்து அருள் பொருள் கொண்ட பின்
மற்று அவன் தாயம் வவ்வுறு மாக்கள்
காணி கைக்கொண்ட மறு நிலை மைந்தனை 20
நிரைத்துக் கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும்
மைந்தனும் கேளிரும் மதி முடிக் கடவுள் நின்
புந்தி ஒன்று இன்றிப் புகல் இலன் என்று அயர்
அவ்வுழி ஒருசார் அவன் மாதுலன் என
அறிவு ஒளி நிறைவே ஓர் உருத் தரிந்து வந்து 25
அருள் வழக்கு ஏறி அவர் வழக்கு உடைத்த
கூடல் நாயகன் தாள்பணியார் என
எவ்வழிக் கிளவியின் கூறிச்
செவ்விதின் செல்லும் திறன் இனி யானே

#45
** தெளிதல்
நின்று அறி கல்வி ஒன்றிய மாந்தர்
புனை பெரும் கவியுள் தரு பொருள் என்ன
ஓங்கிப் புடை பரந்து அமுதம் உள் ஊறிக்
காண் குறி பெருத்துக் கச்சது கடிந்தே
எழுத்து மணி பொன் பூ மலை என யாப்புற்று 5
அணிபெறு முலை மேல் கோதையும் ஒடுங்கின
செங்கோல் அரசன் முறைத் தொழில் போல
அமுதமும் கடுவும் வாளும் படைத்த
மதர் விழித் தாமரை மலர்ந்து இமைத்து அமர்ந்தன
செய் குறை முடிப்பவர் செனனம் போலப் 10
பத மலர் மண் மிசைப் பற்றிப் படர்ந்தன
அமுதம் பொடித்த முழுமதி என்ன
முகம் வியர்ப்பு உறுத்தின உள்ளமும் சுழன்றன
இதழியும் தும்பையும் மதியமும் கரந்து
வளை விலை மாக்கள் வடிவு எடுத்தருளி 15
முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால்
வீதி கூறி விதித்த முன் வரத்தால்
கரு முகில் விளர்ப்ப அறல் நீர் குளிப்பக்
கண் புதை யாப்புத் திணி இருள் விடிய
உடல்-தொறும் பிணித்த பாவமும் புலரக் 20
கண்ட நீள் கதுப்பினர் கை குவி பிடித்துக்
குருகு அணி செறித்த தனி முதல் நாயகன்
குருகும் அன்னமும் வால் வளைக் குப்பையை
அண்டமும் பார்ப்பும் ஆம் என அணைக்கும்
அலை நீர்ப் பழன முது நகர்க் கூடல் 25
ஒப்புடைத்தாய இப் பொன் தொடி மடந்தை
அணங்கினள் ஆம் என நினையல்
பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே

#46
** கூதிர்கண்டு கவறல்
பசி மயல் பிணித்த பிள்ளை வண்டு அரற்ற
ஆசையின் செறிந்த பொங்கர்க் குலத் தாய்
அருப்பு முலைக் கண் திறந்து உமிழ் மதுப் பால்
சினை மலர்த் துணைக் கரத்து அன்புடன் அணைத்துத்
தேக்கிட அருத்தி அலர் மலர்த் தொட்டில் 5
காப்புறத் துயிற்றும் கடி நகர்க் கூடல்
அருளுடன் நிறைந்த கரு உயிர் நாயகன்
குரவு அரும்பு உடுத்த வால் எயிற்று அழல் விழிப்
பகு வாய்ப் பாம்பு முடங்கல் ஆக
ஆலவாய் பொதிந்த மதி_முடித் தனி முதல் 10
சேக் கொள் முளரி அலர்த்திய திருவடி
கண் பருகாத களவினர் உளம் போல்
காருடன் மிடைந்த குளிறு குரல் கண முகில்
எம் உயிர் அன்றி இடை கண்டோர்க்கும்
நெஞ்சு அறை பெரும் துயர் ஓவாது உடற்றக் 15
கவையா நெஞ்சமொடு பொரு வினைச் சென்றோர்
கண்ணினும் கவரும்-கொல்லோ
உள் நிறைந்திருந்த வாழிய மனனே

#47
** முகிலொடு கூறல்
கரும் குழல் செவ் வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு
உளத் துயர் ஈந்து கண் துயில் வாங்கிய
ஆனா இன்னல் அழிபடக் காண்பான்
விரி பொரி சிந்தி மண மலர் பரப்பித்
தெய்வக் குலப் புகை விண்ணொடும் விம்ம 5
இரு நால் திசையும் உண் பலி தூவி
நால் நூல் மாக்கள் நணிக் குறி சொற்றுப்
பக்கம் சூழ்ந்த நெடு நகர் முன்றில்
கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர்க் காலும்
வெண் கார் பெய்யும் நாள் குறித்து உழுநரும் 10
சூல் நிறைந்து உளையும் சுரி வளைச் சாற்றும்
இனக் கயல் உண்ணும் களிக் குருகு இனமும்
வரைப் பறை அரிந்த வாசவன் தொழுது
நிரைநிரை விளம்பி வழி முடி நடுநரும்
நாறு கழி துற்ற சகடு ஈர்க்குநரும் 15
தாமரை பாடும் அறுகால் கிளியும்
உறைத்து எறி கம்பலை உம்பரைத் தாவி
முடித் தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும்
அள்ளல் பழனத்து அணி நீர்க் கூடல்
நீங்காது உறையும் நிமிர் சடைப் பெருமான் 20
உரகன் வாய் கீண்ட மாதவன் போல
மண் அகழ்ந்து எடுத்து வரு புனல் வையைக்
கூலம் சுமக்கக் கொட்டாள் ஆகி
நரைத் தலை முதியோள் இடித்து அடு கூலிகொண்டு
அடைப்பது போல உடைப்பது நோக்கிக் 25
கோமகன் அடிக்க அவன் அடி வாங்கி
எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக்கு எல்லாம்
அவ் அடி கொடுத்த அருள் நிறை நாயகன்
திரு மிடற்று இருள் எனச் செறிதரும் மா முகில்
எனது கண் கடந்து நீங்கித் 30
துனைவுடன் செல்லல் ஒருங்குபு புரிந்தே

#48
** தழை விருப்பு உரைத்தல்
அறுகும் தும்பையும் அணிந்த செம் சடையும்
கலைமான் கணிச்சியும் கட்டிய அரவமும்
பிறிதும் கரந்து ஒரு கானவன் ஆகி
அருச்சுனன் அரும் தவம் அழித்து அமர் செய்து அவன்
கொடுமரத் தழும்பு திருமுடிக்கு அணிந்து 5
பொன் உடை ஆவம் தொலையாது சுரக்கப்
பாசுபதக் கணை பரிந்து அருள்செய்தோன்
வாசவன்_மகள் புணர்ந்து மூன்று எரி வாழத்
தென்கடல் நடுத் திடர்செய்து உறைந்து இமையவர்
ஊர் உடைத்து உண்ணும் சூர் உடல் துணித்த 10
மணி வேல் குமரன் களி மகிழ்செய்த
பேர் அருள் குன்றம் ஒரு-பால் பொலிந்த
அறப் பெரும் கூடல் பிறைச் சடைப் பெருமான்
திருவடிப் பெரும் தேன் பருகுநர் போல
மணமுடன் பொதுளிய வாடா மலர்த் தழை 15
ஒரு நீ விடுத்தனை யான் அவை கொடுத்தனன்
அவ் வழி கூறின் அத் தழை வந்து
கண் மலர் கவர்ந்தும் கை மலர் குவித்தும்
நெட்டுயிர்ப்பு எறிய முலை-முகம் நெருக்கியும்
ஊடியும் வணங்கியும் உவந்து அளி கூறியும் 20
பொறை அழி காட்சியள் ஆகி
நிறை அழிந்தவட்கு நீ ஆயினவே

#49
** விரவிக் கூறல்
வியர் அமுது அரும்பி முயல் கண் கறுத்துத்
தண்ணம் நின்று உதவலின் நிறைமதி ஆகிப்
பொன்னம் பொகுட்டுத் தாமரை குவித்து
நிறை அளி புரக்கும் புது முகத்து அணங்கு நின்
ஒளி வளர் நோக்கம் உற்றனையாயின் 5
இன் உயிர் வாழ்க்கை உடலொடும் புரக்கலை
ஒரு தனி அடியாற்கு உதவுதல் வேண்டி
மண்ணவர் காண வட்டணை வாள் எடுத்து
ஆதி சாரணை அடர் நிலைப் பார்வை
வாளுடன் நெருக்கல் மார்பொடு முனைதல் 10
பற்றி நின்று அடர்த்தல் உள் கையின் முறித்தல்
ஆநநத்து ஒட்டல் அணி மயில் புரோகம்
உள் கலந்து எடுத்தல் ஒசிந்து இடம் அழைத்தல்
கையொடு கட்டல் கடிந்து உள் அழைத்தல் என்று
இவ் வகைப் பிறவும் எதிர் அமர் ஏறி 15
அவன் பகை முறித்த அருள் பெரும் கடவுள்
கூடல் அம் கானல் பெடையுடன் புல்லிச்
சேவல் அன்னம் திரு மலர்க் கள்ளினை
அ மலர் வள்ளம் ஆக நின்று உதவுதல்
கண்டுகண்டு ஒருவன் மாழ்கி 20
விண்டு உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே

#50
** ஊடல் தணிவித்தல்
அவ்வுழி அவ்வுழிப் பெய் உணவு உன்னி
முகன் தரும் இருசெயல் அகன் பெறக் கொளுவும்
புல்லப் பாண்மகன் சில்லையும் இன்றி
இன்பக் கிளவி அன்பினர்ப் போக்கி
முடித் தலை மன்னர் செருக்கு நிலை ஒருவிப் 5
பொன்னுறு ஞாழல் பூவுடன் கடுக்கும்
பேழ் வாய்ப் புலி உகிர் சிறு குரல் விளங்க
அமுதம் துளிக்கும் குமுத வாய் குதட்டிப்
பழம் கொள் தத்தை வழங்கு சொல் போலும்
மழலைக் கிளவியும் இருநிலத்து இன்பமும் 10
ஒரு வழி அளிக்கும் இரும் கதிர்ச் சிறுவனைத்
தழல் விழி மடங்கல் கொலை அரிக் குருளையைப்
பொன்மலை கண்ட பொலிவு போல
மணி கெழு மார்பத்து அணிபெறப் புகுத்தலின்
கறங்கு இசை அருவி அறைந்து நிமிர் திவலையும் 15
துருத்தி வாய் அதுக்கிய குங்குமக் காண்டமும்
குற மகார் கொழிக்கும் கழை நித்திலமும்
நெடு நிலை அரங்கில் பரிபெறு தரளமும்
புனம் பட எறிந்த கார் அகில் தூமமும்
அந்தணர் பெருக்கிய செம் தீப் புகையும் 20
வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும்
கந்தி விரி படிந்த மென் சிறை வண்டும்
சந்தனப் பொங்கர்த் தழை சிறை மயிலும்
முன்றில் அம் பெண்ணைக் குடம்பை கொள் அன்றிலும்
ஒன்றினொடு ஒன்று சென்று தலைமயங்கும் 25
குழகன் குன்றக் கூடல் அம் பதி நிறை
மஞ்சு அடை குழல் பெறு செம் சடைப் பெருமான்
அரும் தமிழ்க் கீரன் பெரும் தமிழ்ப் பனுவல்
வாவியில் கேட்ட காவி அம் களத்தினன்
திருக்கண் கண்ட பெருக்கினர் போல 30
முளரி அம் கோயில் தளைவிட வந்து
நல் அறம் பூத்த முல்லை அம் திருவினள்
நின் உளத்து இன்னல் மன் அறக் களைந்து
பொருத்தம் காண்டி வண்டு ஆரும்
அருத்தி அம் கோதை மன்னவன்-பாலே 35

#51
** குலமுறை கூறி மறுத்தல்
பெரு மறை நூல் பெறு கோன் முறை புரக்கும்
பெருந்தகை வேந்தன் அரும் குணம் போல
மணந்தோர்க்கு அமுதும் தணந்தோர்க்கு எரியும்
புக்குழிப்புக்குழிப் புலன் பெறக் கொடுக்கும்
மலையத் தமிழ்க் கால் வாவியுள் புகுந்து 5
புல் இதழ்த் தாமரைப் புது முகை அவிழ்ப்ப
வண்டு இனம் படிந்து மதுக் கவர்ந்து உண்டு
சே இதழ்க் குவளையின் நிரைநிரை உறங்கும்
நிலை நீர் நாடன் நீயே இவளே
மலை உறை பகைத்து வான் உறைக்கு அணக்கும் 10
புள் குலம் சூழ்ந்த பொருப்பு உடைக் குறவர்-தம்
பெரும் தேன் கவரும் சிறுகுடி மகளே
நீயே ஆயமொடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி
மாயா நல் அறம் வளர் நாட்டினையே
இவளே தொண்டகம் துவைப்ப தொழில் புனம் வளைந்து 15
பகட்டு இனம் கொல்லும் பழிநாட்டவளே
நீயே எழு நிலை மாடத்து இள முலை மகளிர்
நடம்செயத் தரள வடம் தெறு நகரோய்
இவளே கடம் பெறு கரிக் குலம் மடங்கல் புக்கு அகழத்
தெறித்திடு முத்தம் திரட்டு வைப்பினளே 20
நீயே அணி கெழு நவமணி அலர் எனத் தொடுத்த
பொன் கொடித் தேர் மிசைப் பொலிகுவை அன்றே
இவளே மணி வாய்க் கிள்ளை துணியாது அகற்ற
நெட்டு இதண் ஏறும் இப் புனத்தினளே
ஆதலின் பெரும் புகழ் அணைகுதியாயின் 25
நாரணன் படரத் தேவர் கெட்டு ஓட
வளி சுழல் விசும்பின் கிளர் முகடு அணவிக்
கரு முகில் வளைந்து பெருகிய போல
நிலை கெடப் பரந்த கடல் கெழு விடத்தை
மறித்து அவர் உயிர்பெறக் குறித்து உண்டருளித் 30
திருக்களம் கறுத்த அருள் பெரு நாயகன்
கூடல் கூடினர் போல
நாடல் நீ இவள் கழைத் தோள் நசையே

#52
** உரிய காவற் பிரிவு அறிவித்தல்
நடைத் திரைப் பரவை நால் கடல் அணைத்து
வரையறுத்து அமைந்த வகை நான்கு ஆக
விதிவரத் திருத்திய மேதினிப் பொறையைக்
குரு மணி விரித்தலின் தேனொடு கிடந்து
மாயாது தொடுத்த மண மலர் சுமத்தலின் 5
வரை என நிறுத்திய திரு உறை பெரும் தோள்
தரித்தும் அணைத்தும் தான் எனக் கண்டும்
செய்ததும் அன்றித் திரு மனம் பணைத்துக்
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்
விடையா வடந்தை செய் வெள்ளி அம் சிலம்பினும் 10
தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும்
கொண்டல் வந்து உலவும் நீலக் குவட்டினும்
கோடை சென்று உடற்றும் கொல்லிக் கிரியினும்
பிறந்தவர் பிறவாப் பெரும் பதி அகத்தும்
முடிந்தவர் முடியா மூதூரிடத்தும் 15
கண்டவர் காணாக் காட்சி செய் நகரினும்
வேதத் தலையினும் விதி ஆகமத்தினும்
கல்வியர் உளத்தும் கவர் நெஞ்சகத்தும்
தெய்வம் விடுத்துப் பொய் கொள் சிந்தையினும்
கொலையினர்-கண்ணும் குன்றாது இயைந்து 20
வெளியுறத் தோன்றி இருளுற மறைந்த
விஞ்சை வந்தருளிய நஞ்சு அணி மிடற்றோன்
சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும்
சின்னக்குறளும் செழும் கார் போலப்
பெரு மறை முழங்கும் திரு நகர்க் கூடல் 25
ஒப்புற்று அடை மலர் சுமந்த
மைப் புறக் கூந்தல் கொடி வணங்கு இடையே

#53
** உள் மகிழ்ந்து உரைத்தல்
நுனிக் கவின் நிறைந்த திருப் பெரு வடிவினள்
உயிர் வைத்து உடலம் உழன்றன போல
நெடும் பொருள் ஈட்ட நின் பிரிந்து இறந்து
கொன்று உணல் அஞ்சாக் குறியினர் போகும்
கடும் சுரம் தந்த கல் அதர் வெப்பம் 5
தேவர் மருந்தும் தென் தமிழ்ச் சுவையும்
என் உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்திக்
குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்த நின்
பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடா முன்
வீழ் சுற்று ஒழுக்கிய பராரைத் திரு வடக் 10
குளிர் நிழல் இருந்து குணச் செயல் மூன்றும்
உடலொடு படரும் நிலை நிழல் போல
நீங்காப் பவத் தொகை நிகழ் முதல் நான்கும்
உடன் நிறைந்து ஒழியா உட்பகை ஐந்தும்
மதிஞரின் பழித்த வடு இரு_மூன்றும் 15
அணுகாது அகற்றிப் பணி முனி நால்வர்க்கு
அறம் முதல் நான்கும் பெற அருள்செய்த
கூடல் பெருமான் நீடு அருள் மூழ்கி
இரு பதம் உள் வைத்து இருந்தவர் வினை போல்
போயின துனைவினை நோக்கி 20
ஏகின எனக்கே அற்புதம் தருமே

#54
** புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல்
கொன்றை அம் துணரில் செவ்வழி குறித்தும்
வால் உழை எருக்கில் வளர் உழை பாடியும்
கூவிளம் கண்ணியில் குலக் கிளை முரற்றியும்
வெண்கூதளத்தில் விளரி நின்று இசைத்தும்
வண்டும் தேனும் ஞிமிறும் சுரும்பும் 5
உமிழ் நறவு அருந்தி உறங்கு செஞ் சடையோன்
மது மலர் பறித்துக் திருவடி நிறைத்த
நான்மறைப் பாலனை நலிந்து உயிர் கவரும்
காலனைக் காய்ந்த காலினன் கூடல்
திரு மருங்கு அணைந்து வரு புனல் வையை 10
வரை புரண்டு என்னத் திரை நிரை துறையகத்து
அணந்து எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள்
மதி நுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை
ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும்
ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும் 15
முழுக்கியும் தபுத்தியும் முலை ஒளி நோக்கியும்
விளி மொழி ஏற்றும் விதலையின் திளைத்தும்
பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும்
நிறுத்தியும் நிறைத்தும் நெறித்தும் செறித்தும்
எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும் 20
கட்டியும் கலத்தியும் கமழ்த்தியும் மறைத்துச்
செய்தன எல்லாம் செய்யலர் போல என்
நெட்டு இலை பொலிந்த பொன் நிறை திரு உறையுளில்
பாசடைக் குவளைச் சுழல் மணக் காட்டினைக்
கரு வரிச் செம் கண் வரால் இனம் கலக்க 25
எரி அலர் முண்டகத்து அடவி திக்கு எறிய
வெள் உடல் கரும் கண் கயல் நிரை உகைப்ப
மரகதப் பன்னத்து ஆம்பல் அம் குப்பையைச்
சொரி எயிற்றுப் பேழ் வாய் வாளைகள் துவைப்பப்
படிந்து சேடு எறியும் செம் கண் கவரியும் 30
மலை சூழ் கிடந்த பெரும் குலப் பரப்பை
மலை கொடு மலைந்த முதுநீர் வெள்ளமும்
மிடைந்து வயல் திரிந்து முதுகு சரிந்து உடைந்து
சிறியோன் செரு என முறியப் போகி
உழவக் கணத்தைக் குலக் குடி புகுத்தும் 35
பெரு நீர் ஊரர் நிறை நீர் விடுத்துச்
செறிந்தது என் எனக் கேட்டி
மறிந்துழை விழித்த மறி நோக்கினளே

#55
** தன்னை வியந்து உரைத்தல்
விடம் கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய்க்
கண்டல் முள் முளைத்த கடி எயிற்று அரவக்
குழுவினுக்கு உடைந்து குளிர் மதி ஒதுங்கத்
தெய்வப் பிறை இருந்த திரு நுதல் பேதையைக்
கண்டுகண்டு அரவம் மயில் எனக் கலங்க 5
நெடும் சடைக் காட்டினை அடும் தீக் கொழுந்து எனத்
தலை ஏது அலையா நகுதலை தயங்க
அணி தலை மாலையை நிறைமதித் திரள் எனப்
புடைபுடை ஒதுங்கி அரவு வாய் பிளப்ப
ஒன்றினுக்கொன்று துன்றிய நடுக்கொடு 10
கிடந்து ஒளி பிறழும் நெடும் சடைப் பெருமான்
படை நான்கு உடன்று பஞ்சவன் துரந்து
மதுரை வவ்விய கருநடர் வேந்தன்
அருகர்ச் சார்ந்து நின்று அரன் பணி அடைப்ப
மற்றவன்-தன்னை நெடும் துயில் வருத்தி 15
இறையவன் குலத்து முறையர் இன்மையினால்
குருதித் தாரை கல்லொடு பிறங்க
மெய் அணி அளறாக் கை முழம் தேய்த்த
பேர் அன்பு உருவப் பசுக் காவலனை
உலகினில் தமது முக்குறியாக 20
மணி முடி வேணியும் உருத்திரக் கலனும்
நிலவு உமிழ் புண்ணியப் பால் நிறச் சாந்தமும்
அணிவித்து அருள் கொடுத்து அரசன் ஆக்கி
அடு மால் அகற்றி நெடுநாள் புரக்க
வையகம் அளித்த மணி ஒளிக் கடவுள் 25
நெடு மதில் கூடல் விரி புனல் வையையுள்
பிடி குளிசெய்யும் களிறது போல
மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை
மருமமும் தோளினும் வரையறப் புல்லி
ஆட்டுறும் ஊரன் அன்புகொள் நலத்தினைப் 30
பொன்னுலகு உண்டவர் மண்ணுலகு இன்பம்
தலை நடுக்குற்ற தன்மை போல
ஒன்று அற அகற்றி உடன் கலந்திலனேல்
அன்ன ஊரனை எம் இல் கொடுத்துத்
தேரினும் காவினும் அடிக்கடி கண்டு 35
நெட்டுயிர்ப்பு எறிந்து நெடும் கண் நீர் உகுத்துப்
பின்னும் தழுவ உன்னும் அவ் ஒருத்தி
அவளே ஆகுவள் யானே தவல் அரும்
கரு நீர்க் குண்டு அகழ் உடுத்த
பெரு நீர் ஆழித் தொல் உலகுழிக்கே 40

#56
** புதல்வன் மேல்வைத்துப் புலவி தீர்தல்
அடியவர் உளத்து இருள் அகற்றலின் விளக்கும்
எழு மலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும்
கரும் கடல் குடித்தலின் பெரும் தழல் கொழுந்தும்
மா உயிர் வௌவலின் தீ விழிக் கூற்றும்
என் உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும் 5
நச்சின கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும்
கரு வழி நீக்கலின் உயர் நிலைக் குருவும்
இரு நிலம் காத்தலின் மதி உடை வேந்தும்
ஆகிய மணி வேல் சேவல் அம் கொடியோன்
வானக மங்கையும் தேன் வரை வள்ளியும் 10
இரு புறம் தழைத்த திரு நிழல் இருக்கும்
ஒரு பரங்குன்றம் மருவிய கூடல்
பெரு நதிச் சடை மிசைச் சிறுமதி சூடிய
நாயகன் திருவடி நண்ணலர் போலப்
பொய் பல புகன்றும் மெய் ஒழித்து இன்பம் 15
விற்று உணும் சேரி விடாது உறை ஊரன்
ஊருணி ஒத்த பொது வாய்த் தம்பலம்
நீயும் குதட்டினை ஆயின் சேயாய்
நரம்பு எடுத்து உமிழும் பெரு முலைத் தீம் பாற்கு
உள்ளமும் தொடாது விள் அமுது ஒழுகும் 20
குதலை வாய் துடிப்பக் குலக் கடை உணங்கியும்
மண் உறு மணி எனப் பூழி மெய் வாய்த்தும்
பொலன் மணி விரித்த உடை மணி இழுக்கியும்
சுட்டியும் சிகையும் சேர்ந்து கண் பனித்தும்
பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் 25
மறிக் கண் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில்
சென்று அழியாது நின்று அயர் காண்பன்
உறுவதும் இப் பயன் அன்றேல்
பெறுகுவது என் பால் இன்று நின் பேறே

#57
** கலவி கருதிப் புலத்தல்
நடை_மலை பிடித்த சொரி எயிற்று இடங்கரை
ஆழி வலவன் அடர்த்தன போலப்
புன் தலை மேதி புனல் எழ முட்டிய
வரி உடல் செம் கண் வரால் உடன் மயங்க
உள் கவைத் தூண்டில் உரம் புகுந்து உழக்கும் 5
நிறை நீர் ஊர நெஞ்சகம் பிரிக்கும்
பிணி மொழிப் பாணன் உடன் உறை நீக்கி
நூலொடு துவளும் தோல் திரை உரத்தின்
மால் கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய்
வெள்ளி முகிழ்த்த ஒரு கண் பார்ப்பான் 10
கோலுடன் படரும் குறுநகை ஒருவிப்
பூ விலைத் தொழில்மகன் காவல் கைவிட்டுத்
திக்கு விண் பெருகத் திருமதி கைலை
நாமகள் பெரும் கடல் நால் கோட்டு ஒருத்தல்
புண்ணியம் இவை முதல் வெள் உடல் கொடுக்கும் 15
புகழ்க் கவிப் பாடகர் புணர்ச்சி இன்பு அகற்றி
எல்லாக் கல்வியும் இகழ்ச்சிசெய் கலவியர்
பெரு நகைக் கூட்டமும் கழிவுசெய்து இவ்விடை
மயக்குறு மாலை மா மகள் எதிர
ஒருவழிப் படர்ந்தது என் அத் திரு முகம் 20
ஆயிரம் எடுத்து வான் வழிப் படர்ந்து
மண் ஏழ் உருவி மறியப் பாயும்
பெரும் கதத் திருநதி ஒருங்குழி மடங்க
ஐம்பகை அடக்கிய அரும் தவ முனிவன்
இரந்தன வரத்தால் ஒரு சடை இருத்திய 25
கூடல் பெருமான் குரை கழல் கூறும்
செம்மையர் போலக் கோடாது
எம்மையும் நோக்கிச் சிறிது கண்புரிந்தே

#58
** வழிபாடு கூறல்
நிரை இதழ் திறந்து மது வண்டு அருந்தும்
விருந்து கொள் மலரும் புரிந்து உறை மணமும்
செந்தமிழ்ப் பாடலும் தேக்கிய பொருளும்
பாலும் சுவையும் பழமும் இரதமும்
உடலும் உயிரும் ஒன்றியது என்னக் 5
கண்டும் தெளிந்தும் கலந்த உள் உணர்வால்
பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய
இன்பு அமர் சொல்லி நண்பும் மனக் குறியும்
வாய்மையும் சிறப்பும் நிழல் எனக் கடவார்
விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும் 10
அளகைக்கு இறையும் அரும் பொருள் ஈட்டமும்
கண்ணனும் காவலும் முனியும் பசுவும்
ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தன போல்
நீடி நின்று உதவும் கற்பு உடை நிலையினர்
தவம் கற்று ஈன்ற நெடும் கற்பு அன்னை 15
முன் ஒரு நாளில் முதல் தொழில் இரண்டினர்
பன்றியும் பறவையும் என்று உருவெடுத்துக்
கவையா உளத்துக் காணும் கழலும்
கல்வியில் அறிவில் காணும் முடியும்
அளவு சென்று எட்டா அளவினர் ஆகி 20
மண்ணும் உம்பரும் அகழ்ந்தும் பறந்தும்
அளவா நோன்மையில் நெடுநாள் வருந்திக்
கண்ணினில் காணாது உளத்தினில் புணராது
நின்றன கண்டு நெடும் பயன் படைத்த
திரு அஞ்செழுத்துக் குறையாது இரட்ட 25
இரு நிலம் உருவிய ஒரு தழல் தூணத்து
எரி மழு நவ்வி தமருகம் அமைத்த
நால் கரம் நுதல் விழி தீப் புகை கடுக் களம்
உலகு பெற்றெடுத்த ஒரு தனிச் செல்வி
கட்டிய வேணி மட்டு அலர் கடுக்கை 30
ஆயிரம் திரு முகத்து அருள் நதி சிறுமதி
பகை தவிர் பாம்பும் நகை பெறும் எருக்கமும்
ஒன்றிய திருவுரு நின்று நனி காட்டிப்
பேர் அருள் கொடுத்த கூடல் அம் பதியோன்
பதம் இரண்டு அமைத்த உள்ளக் 35
கதி இரண்டாய ஓர் அன்பினரே

#59
** ஆதரம் கூறல்
நெடு வரைப் பொங்கர்ப் புனம் எரி காழ் அகில்
கரும் புகை வானம் கையுறப் பொதிந்து
தரு நிழல் தேவர்-தம் உடல் பனிப்பப்
படர்ந்து எறி கங்கை விடும் குளிர் அகற்றும்
பொன்னம் பொருப்ப நின் உளத்து இயையின் 5
கனல் தலைப் பழுத்த திரள் பரல் முரம்பு
வயல் வளை கக்கிய மணி நிரைப் பரப்பே
அதர் விரிந்து எழுந்து படர் புகை நீழல்
பொதுளிய காஞ்சி மருது அணி நிழலே
தீ வாய்ப் புலிப்பல் செறி குரல் எயிற்றியர் 10
கழுநீர் மலையும் வயல் மாதினரே
அயல் புலம் எறியும் எயினர் மரத் துடி
நெடு நகர் இரட்டும் களி அரி கிணையே
இருள் கலர் புலன் எனச் சுழல் தரும் சூறை
மது மலர் அளைந்த மலயக் காலே 15
எழு சிறை தீயும் எருவையும் பருந்தும்
குவளை அம் காட்டுக் குருகொடு புதாவே
வலி அழி பகடு வாய் நீர்ச் செந்நாய்
தழை மடி மேதியும் பிணர் இடங்கருமே
பட்டு உலர் கள்ளி நெற்று உடை வாகை 20
சுருள் விரி சாலியும் குலை அரம்பையுமே
வட திருஆலவாய் திருநடுவூர்
வெள்ளியம்பலம் நள்ளாறு இந்திரை
பஞ்சவனீச்சரம் அஞ்செழுத்து அமைத்த
சென்னி மா புரம் சேரன் திருத்தளி 25
கன்னி செங்கோட்டம் கரியோன் திரு உறை
விண் உடைத்து உண்ணும் கண்ணிலி ஒருத்தன்
மறி திரைக் கடலுள் மா எனக் கவிழ்ந்த
களவு உடல் பிளந்த ஒளி கெழு திரு வேல்
பணி_பகை ஊர்தி அருள் கொடி இரண்டுடன் 30
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த
அருவி அம் சாரல் ஒரு பரங்குன்றம்
சூழ்கொள இருந்த கூடல் அம் பெருமான்
முழுதுற நிறைந்த இரு பதம் புகழார்
போம் வழி எனும் கடும் சுரம் மருதம் 35
மாமை ஊர்தரும் மணி நிறத்து இவட்கே

#60
** முகம் கண்டு மகிழ்தல்
நிறைமதி புரையாது நிறைமதி புரையாது
தேரான் தெளிவு எனும் திருக்குறள் புகுந்தும்
குறை மதி மனனே நிறைமதி புரையாது
உவர்க் கடல் பிறந்தும் குறை உடல் கோடியும்
கரும் கவைத் தீ நாப் பெரும் பொறிப் பகு வாய்த் 5
தழல் விழிப் பாந்தள் தான் இரை மாந்தியும்
மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும்
தணந்தோர்ச் சினத்தும் மணந்தோர்க்கு அளித்தும்
குமுதம் அலர்த்தியும் கமலம் குவித்தும்
கடல் சூழ் உலகில் மதி நடு இகந்தும் 10
பெரு மறை கூறி அறை விதி-தோறும்
முத்தழற்கு உடையோன் முக்கண் கடவுள் என்று
அறுத்திடும் வழக்குக் கிடக்க ஒருகால்
வான் வரநதிக் கரை மருள் மகம் எடுத்த
தீக் குணத் தக்கன் செருக்களம்-தன்னுள் 15
கண்-தொறும் விசைத்த கருப்புத் தரளமும்
வளை உமிழ் ஆரமும் சுரி முகச் சங்கும்
வலம்புரிக் கூட்டமும் சலஞ்சலப் புஞ்சமும்
நந்து இனக் குழுவும் வளம்-வயின் நந்தி
உழவக் கணத்தர் படை வாள் நிறுத்தும் 20
கூடற்கு இறையோன் குரை கழல் படையால்
ஈர்_எண் கலையும் பூழிபட்டு உதிர
நிலனொடு தேய்ப்புண்டு அலமந்து அலறியும்
சிதைந்து உறைந்து எழு பழித் தீ மதி புரையாது
முண்டகம் விளர்த்தி முதிராது அலர்ந்தும் 25
அமுதம் நின்று உறைந்தும் அறிவு அறிவித்தும்
தீக் கதிர் உடலுள் செல்லாதிருந்தும்
திளையாத் தாரைகள் சேரா
முளையா வென்றி இவள் முகம் மதிக்கே

#61
** கற்புப் பயப்பு உரைத்தல்
ஏழ் கடல் வளைந்த பெரும் கடல் நாப்பண்
பத்துடை_நூறு பொற்பு அமர் பரப்பும்
ஆயிரத்து இரட்டிக் கீழ் மேல் நிலையும்
யோசனை அடுத்த மாசறு காட்சிப்
பளிங்கப் பொருப்பின் திடர் கொள் மூதூர் 5
களவு உடை வாழ்க்கை உள மனக் கொடியோன்
படர் மலை ஏழும் குருகு அமர் பொருப்பும்
மா எனக் கவிழ்ந்த மறி கடல் ஒன்றும்
கடும் கனல் பூழிபடும்படி நோக்கிய
தாரை எட்டு உடைய கூர் இலை நெடு வேல் 10
கால் படைக் கொடியினன் கருணையொடு அமர்ந்த
புண்ணியக் குன்றம் புடை பொலி கூடல்
பிறைச் சடை முடியினன் பேர் அருள் அடியவர்க்கு
ஒருகால் தவறா உடைமைத்து என்னப்
பிரியாக் கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த 15
நெடும் கயல் எறி விழிக் குறும் தொடித் திருவினள்
தெய்வம் என்று ஒருகால் தெளியவும் உளத்து இலள்
பல உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும்
இரு புல வேந்தர் மறுபுலப் பெரும் பகை
நீர் வடுப் பொருவ நிறுத்திடப் படரினும் 20
ஏழ் உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த
தன் பழம் கூடம் தனி நிலை அன்றி
உடு நிறை வானப் பெரு முகடு உயரச்
செய்யும் ஓர் கூடம் புணர்த்தின்
நெய்ம்மிதி உண்ணாது அவன் கடக் களிறே 25

#62
** வாழ்க்கை நலம் கூறல்
பெண் எனப் பெயரிய பெருமகள் குலனுள்
உணா நிலன் உண்டு பராய அப் பெரும் தவம்
கண்ணுற உருப்பெறும் காட்சியது என்னக்
கரு உயிர்த்து எடுத்த குடி முதல் அன்னை
நின்னையும் கடந்தது அன்னவள் அரும் கற்பு 5
அரி கடல் மூழ்கிப் பெறும் அருள் பெற்ற
நிலமகள் கடந்தது நலனவள் பொறையே
இருவினை நாடி உயிர்-தொறும் அமைத்த
ஊழையும் கடந்தது வாய்மையின் மதனே
கற்பகம் போலும் அற்புதம் பழுத்த 10
நின் இலம் கடந்தது அன்னவள் இல்லம்
பேரா வாய்மை நின் ஊரனைக் கடந்தது
மற்று அவள் ஊரன் கொற்ற வெண்குடையே
ஏழ் உளைப் புரவியோடு எழு கதிர் நோக்கிய
சிற்றிலை நெரிஞ்சில் பொன் பூ என்ன 15
நின் முகக் கிளையினர் தம்மையும் கடந்தனர்
மற்று அவள் பார்த்த மதிக் கிளையினரே
உடல் நிழல் மான உனது அருள் நிற்கும்
என்னையும் கடந்தனள் அன்னவட்கு இனியோள்
கொலை மதில் மூன்றும் இகல் அறக் கடந்து 20
பெரு நிலவு எறித்த புகர் முகத் துளைக் கைப்
பொழி மதக் கறையடி அழிதரக் கடந்து
களவுத் தொழில்செய் அரிமகன் உடலம்
திரு நுதல் நோக்கத்து எரிபெறக் கடந்து
மாறுகொண்டு அறையும் மதி நூல் கடல் கிளர் 25
சமயக் கணக்கர்-தம் திறம் கடந்து
புலனொடு தியங்கும் பொய் உளம் கடந்த
மலருடன் நிறைந்து வான் வழி கடக்கும்
பொழில் நிறை கூடல் புதுமதிச் சடையோன்
மன் நிலை கட வா மனத்தவர் போல 30
ஒன்னலர் இடும் திறைச் செலினும்
தன் நிலை கடவாது அவன் பரித் தேரே

#63
** பள்ளியிடத்து ஊடல்
நீர்_அரமகளிர் நெருக்குறப் புகுந்து
கண் முகம் காட்டிய காட்சியது என்னப்
பெரும் குலை மணந்த நிறை நீர்ச் சிறைப் புனல்
மணி நிறப் படாம் முதுகு இடையறப் பூத்துச்
சுரும்பொடு கிடந்த சொரி இதழ்த் தாமரை 5
கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது
நிழல்-தலை மணந்த புனல் கிடவாது
விண் உடைத்து உண்ணும் வினைச் சூர் கவர்ந்த
வானவர் மங்கையர் மயக்கம் போலப்
பிணர்க் கரு மருப்பின் பிதிர்பட உழக்கி 10
வெண் கார்க் கழனிக் குருகு எழப் புகுந்து
கடுக்கைச் சிறு காய் அமைத்த வால் கருப்பை
இணை எயிறு என்ன இடையிடை முள் பயில்
குறும் புதல் முண்டகம் கரும்பு எனத் துய்த்துச்
செம் கண் பகடு தங்கும் வயல் ஊரர்க்கு 15
அரு மறை விதியும் உலகியல் வழக்கும்
கருத்து உறை பொருளும் விதிப்பட நினைந்து
வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி
ஐந்திணை வழுவாது அகப்பொருள் அமுதினைக்
குறுமுனி தேறவும் பெறு முதல் புலவர்கள் 20
ஏழ்_எழு பெயரும் கோது அறப் பருகவும்
புலன் நெறி வழக்கில் புணர் உலகவர்க்கும்
முன் தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும்
நின்று அறிந்து உணர்த்தவும் தமிழ்ப் பெயர் நிறுத்தவும்
எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன் 25
மெய்த் தவக் கூடல் விளைபொருள் மங்கையர்
முகத்தினும் கண்ணினும் முண்டக முலையினும்
சொல்லினும் தொடக்கும் புல்லம் போல
எம்மிடத்து இலதால் என்னை
தம் உளம் தவறிப் போந்தது இவ்விடனே 30

#64
** வழிப்படுத்து உரைத்தல்
செங்கோல் திருவுடன் தெளிந்து அறம் பெருக்கிய
மறுபுல வேந்தன் உறு படை எதிர்ந்த
கொடுங்கோல் கொற்றவன் நெடும் படை அனைத்தும்
சேர வறந்த திருக் தகு நாளில்
அவன் பழிநாட்டு நடுங்கும் நல் குடிகள் 5
கண்ணொடு கண்ணில் கழறிய போல
ஒருவரின்ஒருவர் உள்ளத்து அடக்கித்
தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி
அம்பல் தூற்றும் இவ் ஊர் அடக்கிக்
கடல் கிடந்து அன்ன நிரைநிரை ஆய 10
வெள்ளமும் மற்றையர் கள்ளமும் கடந்து
தாயவர் மயங்கும் தனித் துயர் நிறுத்திப்
பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்துக்
கிடைப்பல் வல் யானே நும்மைத் தழைத்து எழு
தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும் 15
பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும்
முடைத் தலை எரி பொடி உடைமையின் பாலையும்
ஆமையும் சலமும் மேவலின் மருதமும்
கடுவும் சங்கமும் ஒளிர்தலின் நெய்தலும்
ஆகத் தனது பேர் அருள் மேனியில் 20
திணை ஐந்து அமைத்த இணையிலி நாயகன்
வரும் தொழில் அனைத்தும் வளர் பெரும் பகலே
எரி விரிந்து அன்ன இதழ்ப் பல் தாமரை
அருள் முகத் திருவொடு மலர் முகம் குவிய
மரகதப் பாசடை இடையிடை நாப்பண் 25
நீலமும் மணியும் நிரை கிடந்து என்ன
வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ் விரிப்பக்
குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவிப்
பாசடைக் குடம்பையூடு கண்படுப்பத்
துணையுடன் சகோரம் களியுடன் பெயர்ந்து 30
விடும் அமுது அருந்த விண்ணத்து அணக்கச்
சுரி வளைச் சாத்து நிறைமதி தவழும்
எறி திரைப் பழனக் கூடல்
செறிக இன்று அம்ம திருவொடும் பொலிந்தே

#65
** கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
இரு நிலம் தாங்கிய வலி கெழு நோன்மைப்
பொன் முடிச் சயிலக் கணவன் புணர்ந்து
திரு எனும் குழவியும் அமுது எனும் பிள்ளையும்
மதி எனும் மகவும் மலர் உலகு அறியக்
கண்ணொடு முத்தம் கலுழ்ந்து உடல் கலங்கி 5
வாய்விட்டு அலறி வயிறு நொந்து ஈன்ற
மனன் எழு வருத்தமது உடையை ஆதலின்
பெரு மயல் எய்தா நிறையினள் ஆக
என் ஒரு மயிலும் நின் மகள் கொண்டு
தோன்றி நின்று அழியாத் துகள் அறு பெரும் தவம் 10
நிதி எனக் கட்டிய குறுமுனிக்கு அருளுடன்
தரளமும் சந்தும் எரி கெழு மணியும்
முடங்கு_உளை அகழ்ந்த கொடும் கரிக் கோடும்
அகிலும் கனகமும் அருவி கொண்டு இறங்கிப்
பொருநை அம் கன்னிக்கு அணி அணி பூட்டும் 15
செம்பு உடல் பொதிந்த தெய்வப் பொதியமும்
உவட்டாது அணையாது உணர்வு எனும் பசியெடுத்து
உள்ளமும் செவியும் உருகி நின்று உண்ணும்
பெரும் தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த
தோடு அணி கடுக்கைக் கூடல் எம் பெருமான் 20
எவ்வுயிர் இருந்தும் அவ் உயிர் அதற்குத்
தோன்றாது அடங்கிய தொன்மைத்து என்ன
ஆர்த்து எழு பெரும் குரல் அமைந்து நின்று ஒடுங்கி நின்
பெரும் தீக் குணனும் ஒழிந்து உளம் குளிரும்
இப் பெரு நன்றி இன்று எற்கு உதவுதி 25
எனின் பதம் பணிகுவல் அன்றே நன்கு அமர்
பவள வாயும் கிளர் பச்சுடம்பும்
நெடும் கயல் விழியும் நிறை மலை முலையும்
மாசறப் படைத்து மணியுடன் நிறத்த
பெரு முகில் வயிறளவு ஊட்டித் 30
திரு உலரு அளிக்கும் கடல் மட மகளே

#66
** பிரிவுணர்த்தல்
நிலை உடைப் பெரும் திரு நேர்படு காலைக்
காலால் தடுத்துக் கனன்று எதிர் கறுத்தும்
நனி நிறை செல்வ நாடும் நல் பொருளும்
எதிர்பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும்
தாமரை நிதியும் வால் வளைத் தனமும் 5
இல்லம் புகுதரில் இரும் கதவு அடைத்தும்
அரி அயன் அமரர் மலை வடம் பூட்டிப்
பெரும் கடல் வயிறு கிடங்கு எழக் கடைந்த
அமுதம் உள்கையில் உதவுழி ஊற்றியும்
மெய் உலகு இரண்டினுள் செய்குநர் உளரேல் 10
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை
நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன்
முழுது உற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி முன்
வேடம் துறவா விதி உடைச் சாக்கியன்
அருள் கரை காணா அன்பு எனும் பெரும் கடல் 15
பல நாள் பெருகி ஒரு நாள் உடைந்து
கரை நிலையின்றிக் கையகன்றிடலும்
எடுத்து அடைக் கல் மலர் தொடுத்தவை சாத்திய
பேர் ஒளி இணையாக் கூடல் மா மணி
குல மலைக் கன்னி என்று அருள் குடியிருக்கும் 20
விதி நிறை தவறா ஒரு பங்கு உடைமையும்
பறவை செல்லாது நெடு முகடு உருவிய
சேகரத்து இறங்கும் திருநதித் துறையும்
நெடும் பகல் ஊழி நினைவுடன் நீந்தினும்
அரும் கரை இறந்த ஆகமக் கடலும் 25
இளங்கோவினர்கள் இரண்டு அறி பெயரும்
அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்துப்
பறந்தும் அகழ்ந்தும் படி இது என்னாது
அறிவு அகன்று உயர்ந்த கழல் மணி முடியும்
உடைமையன் பொன் கழல் பேணி 30
அடையலர் போல மருள் மனம் திரிந்தே

#67
** ஊடல் நீட வாடி உரைத்தல்
நிரை வளை ஈட்டமும் தரளக் குப்பையும்
அன்னக் குழுவும் குருகு அணி இனமும்
கரும் கோட்டுப் புன்னை அரும்பு உதிர் கிடையும்
முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும்
அலவன் கவைக் கால் அன்ன வெள் அலகும் 5
வாலுகம் பரப்பி வலை வலிது ஒற்றினர்க்கு
ஈது என அறியாது ஒன்றி வெள்ளிடையாம்
மாது உடைக் கழிக்கரைச் சேரி ஓர் பாங்கர்ப்
புள்ளொடு பிணங்கும் புள் கவராது
வெள் இறவு உணங்கல் காவலாக 10
உலகு உயிர் கவரும் கொடு நிலைக் கூற்றம்
மகள் எனத் தரித்த நிலை அறிகுவனேல்
விண் குறித்து எழுந்து மேலவர்ப் புடைத்து
நான்முகன் தாங்கும் தேன் உடைத் தாமரை
இதழும் கொட்டையும் சிதறக் குதர்ந்து 15
வானவர் இறைவன் கடவு கார் பிடித்துப்
பஞ்சு எழப் பிழிந்து தண் புனல் பருகி
ஐந்து எனப் பெயரிய நெடு மரம் ஒடித்துக்
கண் உளத்து அளவா எள் உணவு உண்டு
பொரி எனத் தாரகைக் கணன் உடல் குத்தி 20
அடும் திறல் இனைய கொடும் தொழில் பெருக்கிய
மாயா வரத்த பெரும் குருகு அடித்து
வெண் சிறை முடித்த செம் சடைப் பெருமான்
கூடற்கு இறையோன் குறி உருக் கடந்த
இரு பதம் உள் வைத்தவர் போல 25
மருவுதல் ஒருவும் மதி ஆகுவனே

#68
** பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
சிலை நுதல் கணை விழித் தெரிவையர் உளம் என
ஆழ்ந்து அகன்று இருண்ட சிறை நீர்க் கயத்துள்
எரி விரிந்து அன்ன பல இதழ்த் தாமரை
நெடு மயல் போர்த்த உடல் ஒருவேற்குக்
குரு மணி கொழிக்கும் புனல் மலைக் கோட்டுழி 5
நின் பதி மறைந்த நெட்டு இரவகத்துள்
குருகும் புள்ளும் அருகு அணி சூழத்
தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமிப்
பெரும் துயில் இன்பம் பொருந்துபு நடுநாள்
காணும் நின் கனவினுள் கவர் மனத்தவரைக் 10
கொய் உளைக் கடு மான் கொளுவிய தேரொடு
பூ உதிர் கானல் புறம் கண்டனன் எனச்
சிறிதொரு வாய்மை உதவினையாயில்
சேகரம் கிழித்த நிறைமதி உடலம்
கலை கலை சிந்திய காட்சியது என்னக் 15
கடு_மான் கீழ்ந்த கட_மலைப் பல் மருப்பு
எடுத்தெடுத்து உந்தி மணிக் குலம் சிதறிக்
கிளைஞர்கள் நச்சாப் பொருளினர் போலச்
சாதகம் வெறுப்பச் சரிந்து அகழ்ந்து ஆர்த்துத்
திரள் பளிங்கு உடைத்துச் சிதறுவது என்ன 20
வழி எதிர் கிடந்த உலமுடன் தாக்கி
வேங்கையும் பொன்னும் ஓருழித் திரட்டி
வரை_அரமகளிர்க்கு அணி அணி கொடுத்துப்
பனைக் கைக் கட_மா எருத்து உறு பூழி
வண்டு எழுந்து ஆர்ப்ப மணி எடுத்து அலம்பி 25
மயில் சிறை ஆல வலி_முகம் பனிப்ப
எதிர் சுனைக் குவளை மலர்ப் புறம் பறித்து
வரையுடன் நிறைய மாலையிட்டாங்கு
நெடு முடி அருவி அகிலொடு கொழிக்கும்
கைலை வீற்றிருந்த கண்_நுதல் விண்ணவன் 30
நாடகக் கடவுள் கூடல் நாயகன்
தாமரை உடைத்த காமர் சேவடி
நிறை உளம் தரித்தவர் போலக்
குறை உளம் நீங்கி இன்பு ஆகுவனே

#69
** பதி பரிசு உரைத்தல்
எரி தெறற்கு அரிய பொடி பொறுத்து இயங்கினை
முகில் தலை சுமந்த ஞிமிறு எழுந்து இசைக்கும்
பொங்கருள் படுத்த மலர் கால் பொருந்துக
கரும் கடத்து எறிந்த கொடும் புலிக்கு ஒதுங்கினை
வரி உடல் செம் கண் வரால் இனம் எதிர்ப்ப 5
உழவக் கணத்தர் உடைவது நோக்குக
கொலைஞர் பொலிந்த கொடித் தேர்க்கு அணங்கினை
வேதியர் நிதி மிக விதி மகம் முற்றி
அவ் விரதத் துறையாடுதல் கெழுமிப்
பொன் உருள் வையம் போவது காண்க 10
ஆறலை எயினர் அமர்க் கலிக்கு அழுங்கினை
பணைத்து எழு சாலி நெருக்குபு புகுந்து
கழுநீர் களைநர்-தம் கம்பலை காண்க
தழல் தலைப் பழுத்த பரல் முரம்பு அடுத்தனை
சுரி முகக் குழு வளை நிலவு எழச் சொரிந்த 15
குளிர் வெண் தரளக் குவால் இவை காண்க
அலகை நெட்டு இரதம் புனல் எனக் காட்டினை
வன்மீன் நெடும் கயல் பொது வினையகத்துக்
கிடங்கு எனப் பெயரிய கரும் கடல் காண்க
காகளம் பூசல் துடி ஒலி ஏற்றனை 20
குடுமி அம் சென்னியர் கரு முகில் விளர்ப்பக்
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேள்-மதி
அமரர்கள் முனிக் கணத்தவை முன் தவறு
புரிந்து உடன் உமை கண் புதைப்ப மற்று உமையும்
ஆடகச் சயிலச் சேகரம் தொடர்ந்த 25
ஒற்றை அம் பசும் கழை ஒல்கிய போல
உலகு உயிர்க்கு உயிர் எனும் திருவுரு அணைந்து
வளைக் கரம் கொடு கண் புதைப்ப அவ்வுழியே
உலகு இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர்
பிரமன் உட்பட்ட நில உயிர் அனைத்தும் 30
தமக்கு எனக் காட்டும் ஒளிக் கண் கெடலும்
மற்று அவர் மயக்கம் கண்டு அவர் கண் பெறத்
திரு நுதல் கிழித்த தனி விழி நாயகன்
தாங்கிய கூடல் பெரு நகர்
ஈங்கு இது காண்க முத்து எழில் நகைக் கொடியே 35

#70
** தேறாது புலம்பல்
புள் பெயர்க் குன்றமும் எழு வகைப் பொருப்பும்
மேல் கடல் கவிழ் முகப் பொரி உடல் மாவும்
நெடும் கடல் பரப்பும் அடும் தொழில் அரக்கரும்
என் உளத்து இருளும் இடை புகுந்து உடைத்த
மந்திரத் திரு வேல் மறம் கெழு மயிலோன் 5
குஞ்சரக் கொடியொடும் வள்ளி அம் கொழுந்தொடும்
கூறாக் கற்பம் குறித்து நிலைசெய்த
புண்ணியம் குமிழ்த்த குன்று உடைக் கூடல்
நிறைந்து உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான்
பேர் அருள் அளித்த மா தவர் போல 10
முன் ஒருநாளில் உடல் உயிர் நீ என
உள்ளம் கரிவைத்து உரைசெய்த ஊரர்
தம் மொழி திரிந்து தவறு நின்றுளவேல்
அவர் குறை அன்றால் ஒருவன் படைத்த
காலக் குறி-கொல் அன்றியும் முன்னைத் 15
தியங்கி உடல் ஈட்டிய கரும் கடு வினையால்
காலக் குறியை மனம் தடுமாறிப்
பின்முன் குறித்த நம் பெரு மதி அழகு-கொல்
நனவிடை நவிற்றக் கனவிடைக் கண்ட
உள் எழு கலக்கத்துடன் மயங்கினமால் 20
குறித்த இவ் இடைநிலை ஒன்றே
மறிக் குலத்து உழையின் விழி நோக்கினளே

#71
** பொழுது கண்டு மயங்கல்
ஆயிரம் பணாடவி அரவு வாய் அணைத்துக்
கரு முகில் நிறத்த கண்ணனின் சிறந்து
நிறை உடல் அடங்கத் திரு விழி நிறைத்துத்
தேவர் நின்று இசைக்கும் தேவனின் பெருகிக்
குரு வளர் மரகதப் பறை தழை பரப்பி 5
மணி திரை உகைக்கும் கடலினின் கவினி
முள் எயிற்று அரவம் முறித்து உயிர் பருகிப்
பொள்ளென வானத்து அசனியின் பொலிந்து
பூதம் ஐந்து உடையும் காலக் கடையினும்
உடல் தழை நிலைத்த மறம் மிகு மயிலோன் 10
புரந்தரன் புதல்வி எயினர்-தம் பாவை
இரு பால் இலங்க உலகு பெற நிறைந்த
அருவி அம் குன்றத்து அணி அணி கூடற்கு
இறையவன் பிறையவன் கறை கெழு மிடற்றோன்
மலர்க் கழல் வழுத்தும் நம் காதலர் பாசறை 15
முனைப்பது நோக்கி என் முனை அவிழ் அற்றத்துப்
பெரும் பகலிடையே பொதும்பரில் பிரிந்த
வளை கண் கூர் உகிர்க் கூக்குரல் மொத்தையைக்
கரும் கண் கொடி இனம் கண் அறச் சூழ்ந்து
புகை உடல் புடைத்த விட வினை போல 20
மனம் கடந்து ஏறா மதில் வளைத்து எங்கும்
கரு நெருப்பு எடுத்த மறம் அருள் மாலை
நின் வரற்கு ஏவர் நல்குநர் நின் வரல்
கண்டு உடல் இடைந்தன காட்டுவல் காண்-மதி
மண் உடல் பசந்து கறுத்தது விண்ணமும் 25
ஆற்றாது அழன்று காற்றின் முகம் மயங்கி
உடு எனக் கொப்புள் உடல் நிறை பொடித்தது
ஈங்கு இவற்று அடங்கிய இரு திணை உயிர்களும்
தம் உடல் மயங்கின ஒடுங்கின உறங்கின
அடங்கின அவிந்தன அயர்ந்தன கிடந்தன 30
எனப் பெறின் மாலை என் உயிர் உளைப்பதும்
அவர் திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க
உள்ளது மொழிமோ நீயே விண்ணுழை
வந்தனை என்னில் வரு குறி கண்டிலன்
மண்ணிடை எனினே அவ்வயினான 35
கூடி நின்றனை எனின் குறி தவறாவால்
தேம் படர்ந்தனன் எனின் திசை குறிக்குநரால்
ஆதலின் நின் வரவு எனக்கே
ஓதல் வேண்டும் புலன் பெறக் குறித்தே

#72
** வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
திருமலர் இருந்த முதியவன் போல
நான் முகம் கொண்டு அறி நன்னர் நெஞ்சு இருந்து
வேற்று அருள் பிறவி தோற்றுவித்து எடுத்து
நிலம் இரண்டு அளந்த நெடு முகில் மான
அரக்கர்-தம் கூட்டம் தொலைத்து நெய் உண்டு 5
களிற்று உரி புனைந்த கண்_நுதல் கடுப்ப
வில் எடுத்து ஒன்னலர் புரம் எரியூட்டி
இனைய எவ்வுலகும் தொழுது எழு திரு வேல்
சரவணத்து உதித்த அறு முகப் புதல்வன்
பரங்குன்று உடுத்த பயன் கெழு கூடல் 10
பெரு நகர் நிறைந்த சிறுபிறைச் சென்னியன்
மால் அயன் தேடி மறை அறிந்து அறியாத்
தன் உரு ஒன்றில் அருள் உரு இருத்திய
ஆதி நாயகன் அகன் மலர்க் கழல் இணை
நண்ணலர் கிளை போல் தம் மனம் திரிந்து நம் 15
துறைவன் தணக்க அறிகிலம் யாமே
பிணர் முடத் தாழை விரி மலர் குருகு என
நெடும் கழிக் குறும் கயல் நெய்தலுள் மறைந்தும்
புன்னை அம் பொதும்பர்க் குழை முகம் குழை-முகம்
கரும் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை 20
அரும்பு எனச் சுரும்பு இனம் அலர நின்று இசைத்தும்
கலம் சுமந்து இறக்கும் கரி இனம் பொருப்பு என
பருகிய முகில் குலம் படிந்து கண்படுத்தும்
பவள மின் கவைக் கொடி வடவையின் கொழுந்து எனச்
சுரி வளை குளிக்குநர் கலனிடைச் செறிந்தும் 25
வெள் இறவு உண்ண விழைந்து புகு குருகு இனம்
கரும் கழி நெய்தலைக் காவல்செய் கண் என
அரவு எயிற்று அணி முள் கைதையுள் அடங்கியும்
விண் தொட எழுந்து விழும் திரைக் குழுவினை
அரி வினைக்கு அடங்கிய மலை இனம் வரவு எனக் 30
குளிர் மணல் கேணியுள் கொம்பினர் படர்ந்தும்
முயங்கிய உள்ளம் போகி
மயங்கிய துறை இனம் ஒருங்குழி வளர்ந்தே

#73
** அயல் அறிவு உரைத்து அவள் அழுக்கம் எய்தல்
ஆடகச் சயிலத்து ஓர் உடல் பற்றிக்
கலி திரைப் பரவையும் கனன்று எழு வடவையும்
அடியினும் முடியினும் அணைந்தன போலப்
பசும் தழைத் தோகையும் செம் சிறைச் சேவலும்
தாங்கியும் மலர்க் கரம் தங்கியும் நிலைத்த 5
பேர் ஒளி மேனியன் பார் உயிர்க்கு ஓர் உயிர்
மாவுடைக் கூற்றம் மலர் அயன் தண்டம்
குறுமுனி பெறும் மறை நெடு மறை பெறா முதல்
குஞ்சரக் கோதையும் குறமகள் பேதையும்
இருந்தன இரு புறத்து எந்தை என் அமுதம் 10
பிறந்து அருள் குன்றம் ஒருங்குறப் பெற்ற
மா தவக் கூடல் மதிச் சடைக் காரணன்
இரு பதம் தேறா இருள் உளம் ஆம் என
இவள் உளம் கொட்ப அயல் உளம் களிப்ப
அரும் பொருள் செல்வி எனும் திருமகட்கு 15
மானிட மகளிர்தாமும் நின்று எதிர்ந்து
புல் இதழ்த் தாமரை இல் அளித்து எனவும்
உலகு விண் பனிக்கும் ஒரு சயமகட்குத்
தேவர்-தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து
வீரம் அங்கு ஈந்த பின் விளிவது மானவும் 20
இருள் உடல் அரக்கியர் கலைமகள் கண்டு
தென் தமிழ் வட கலை சில கொடுத்து எனவும்
நீர்_அரமகளிர் பாந்தள் அம் கன்னியர்க்கு
ஆர் எரி மணித் திரள் அருளியது எனவும்
செம் மலர்க் குழல் இவள் போய் அறிவுறுத்தக் 25
கற்றதும் கல்லாது உற்ற ஊரனை
அவள் தர இவள் பெறும் அரந்தை அம் பேறினுக்கு
ஒன்றிய உவமம் இன்று இவண் உளவால்
மற்றவள் தர நெடும் கற்பே
உற்று இவள் பெற்றாள் என்பதும் தகுமே 30

#74
** பிரிந்தமை கூறல்
மலரவன் பனிக்கும் கவினும் குலமீன்
அருகிய கற்பும் கருதி உள் நடுங்கித்
திருமகள் மலர் புகும் ஒரு தனி மடந்தை இன்று
இரு கடல் ஓருழி மருவியது என்னச்
செருப் படை வேந்தர் முனை மேல் படர்ந்த நம் 5
காதலர் முனைப் படை கனன்று உடற்றும் எரியால்
முடம்படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த
நெடும் சால் போகிக் கடும் கயல் துரக்கும்
மங்கையர் குழை பெறு வள்ளையில் தடைகொண்டு
அவர் கரும் கண் எனக் குவளை தழை பூத்த 10
இருள் அகச் சோலையுள் இரவு எனத் தங்கிய
மற்ற தன் சேக்கையுள் வதிபெறும் செம் கால்
வெள் உடல் ஓதிமம் தன்னுடைப் பெடை எனப்
பறைவரத் தழீஇப் பெற்று உவை-தம் கம்பலைக்கு
ஆற்றாது அகன்று தேக்கு வழி கண்ட 15
கால் வழி இறந்து பாசடை பூத்த
கொள்ளம் புகுந்து வள் உறை வானத்து
எழில் மதி காட்டி நிறை வளை சூல் உளைந்து
இடங்கரும் ஆமையும் எழு வெயில் கொளுவும்
மலை முதுகு அன்ன குலை முகடு ஏறி 20
முழுமதி உடுக் கணம் அக-வயின் விழுங்கி
உமிழ்வன போல சுரி முகச் சூல் வளை
தரளம் சொரியும் பழனக் கூடல்
குவளை நின்று அலர்ந்த மறை எழு குரலோன்
இமையவர் வேண்ட ஒரு நகை முகிழ்ப்ப 25
ஓருழிக் கூடாது உம்பரில் புகுந்து
வான் உடைத்து உண்ணும் மறக் கொலை அரக்கர் முப்
பெரு மதில் பெற்றன அன்றோ
மருவலர் அடைந்த முன் மறம் கெழு மதிலே

#75
** கலக்கங் கண்டு உரைத்தல்
பெரும் துயர் அகற்றி அறம் குடி நாட்டி
உளச் சுருள் விரிக்கும் நலத் தகு கல்வி ஒன்று
உளது எனக் குரிசில் ஒரு மொழி சாற்றப்
பேழ் வாய்க் கொய் உளை அரி சுமந்து எடுத்த
பல் மணி ஆசனத்து இருந்து செவ்வானின் 5
நெடும் சடைக் குறும் சுடர் நீக்கி ஐந்து அடுக்கிய
ஆறு_ஐஞ்ஞூறொடு வேறு நிரை அடுத்த
பல் மணி மிளிர் முடி பலர் தொழக் கவித்து
பல் தலைப் பாந்தள் சுமை திருத் தோளில்
தரித்து உலகு அளிக்கும் திருத் தகு நாளில் 10
நெடுநாள் திருவயிற்று அருளுடன் இருந்த
நெடும் சடை உக்கிரன் பயந்தருள் நிமலன்
மற்று அவன்-தன்னால் வடவையின் கொழுந்து சுட்டு
ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும்
விளர்த்துநின்று அணங்கி வளைக் குலம் முழங்கும் 15
கரும் கடல் பொரிய ஒருங்கு வேல் விடுத்த
அதற்கு அருள் கொடுத்த முதல் பெரு நாயகன்
வெம்மையும் தண்மையும் வினை உடற்கு ஆற்றும்
இரு சுடர் ஒரு சுடர் புணர் விழி ஆக்கி முன்
விதியவன் தாரா உடலொடு நிலைத்த 20
முத்தமிழ்க் கூடல் முதல்வன் பொன் தாள்
கனவினும் காணாக் கண்ணிலர் துயரும்
பகுத்து உண்டு ஈகுநர் நிலைத் திரு முன்னர்
இல் எனும் தீச் சொல் இறுத்தனர் தோமும்
அனைத்து உயிர் ஓம்பும் அறத்தினர் பாங்கர்க் 25
கோறல் என்று அயலினர் குறித்தன குற்றமும்
நன்று அறி கல்வியர் நாட்டுறு மொழி புக்கு
அவ் அரண் இழந்தோர்க்கு அரு விடம் ஆயதும்
ஒரு கணம் கூடி ஒருங்கே
இரு செவி புக்கது ஒத்தன இவட்கே 30

#76
** முன்பனிக்கு நொந்து உரைத்தல்
கடல் மகள் உள் வைத்து வடவை மெய் காயவும்
மலைமகள் தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும்
மாசறு திருமகள் மலர் புகுந்து ஆயிரம்
புறவிதழ்ப் புதவு அடைத்து அதன் வெதுப்பு உறுக்கவும்
சயமகள் சீற்றத் தழல் மனம் வைத்துத் 5
திணி புகும் வென்றிச் செரு அழல் கூடவும்
ஐயர் பயிற்றிய விதி அழல் ஓம்பவும்
அவ் அனற்கு அமரர் அனைவரும் அணையவும்
முன் இடைக்காடன் பின் எழ நடந்து
நோன்புறு விரதியர் நுகர உள் இருந்து என 10
நெஞ்சகம் நிறைந்து நினைவினுள் மறைந்து
புரை அறும் அன்பினர் விழி பெறத் தோற்றி
வானவர் நெடு முடி மணித் தொகை திரட்டிப்
பதுக்கைசெய் அம்பலத் திருப் பெரும் பதியினும்
பிறவாப் பேர் ஊர்ப் பழ நகரிடத்தும் 15
மகிழ் நடம் பேய் பெறும் வடவனக் காட்டினும்
அரு மறை முடியினும் அடியவர் உளத்தினும்
குனித்து அருள் நாயகன் குல மறை பயந்தோன்
அரும் தமிழ்க் கூடல் பெரும் தவர் காண
வெள்ளியம்பலத்துள் துள்ளிய ஞான்று 20
நெருப்பொடு சுழலவும் விருப்பெடுத்து அவ் அழல்
கையினில் கொள்ளவும் கரி உரி மூடவும்
ஆக்கிய பனிப் பகைக் கூற்று இவை நிற்க
ஆங்கு அவர் துயர்பெற ஈன்ற என் ஒருத்தி
புகல் விழும் அன்பு அதற்கு இன்றி 25
மகவினைப் பெறலாம் வரம் வேண்டினளே

#77
** மறவாமை கூறல்
மரு வளர் குவளை மலர்ந்து முத்து அரும்பிப்
பசும் தாள் தோன்றி மலர் நனி மறித்து
நெட்டு எறி ஊதை நெருப்பொடு கிடந்து
மணி புறம் கான்ற புரி வளை விம்மி
விதிப்பவன் விதியா ஓவம் நின்று என என் 5
உள்ளமும் கண்ணும் நிலையுறத் தழீஇனள்
உவணக்_கொடியினன் உந்தி மலர்த் தோன்றிப்
பார் முதல் படைத்தவன் நடுத் தலை அறுத்துப்
புனிதக் கலன் என உலகு தொழக் கொண்டு
வட்டம் முக்கோணம் சதுரம் கார் முகம் 10
நவத்தலை தாமரை வளை வாய்ப் பருந்து எனக்
கண்டன மகம்-தொறும் கலி பெறச் சென்று
நறவு இரந்து அருளிய பெரியவர் பெருமான்
கூக்குரல் கொள்ளாக் கொலை தரு நவ்வியும்
விதிர் ஒளி காற்றக் கனல் குளிர் மழுவும் 15
இரு கரம் தரித்த ஒரு விழி நுதலோன்
கூடல் ஒப்புடையாய் குல உடுத் தடவும்
தலை மதில் வயிற்றுள் படும் அவர் உயிர்க் கணம்
தனித்தனி ஒளித்துத் தணக்கினும் அரிது எனப்
போக்கு அற வளைந்து புணர் இருள் நாளும் 20
காவல் காட்டிய வழியும்
தேவர்க் காட்டும் பாசறையினுமே

#78
** அணைந்த வழி ஊடல்
மதியம் உடல் குறைத்த வெள்ளாங்குருகு இனம்
பைம் கால் தடவிச் செம் கயல் துரந்து உண்டு
கழுக் கடை அன்ன தம் கூர் வாய்ப் பழிப் புலவு
எழில் மதி விரித்த வெண் தளை இதழ்த் தாமரை
மலர் மலர் துவட்டும் வயல் அணி ஊர 5
கோளகைக் குடிலில் குனிந்து இடைந்து அப்புறத்து
இடைநிலை அற்ற படர் பெரு வெளியகத்து
உடல் முடக்கு எடுத்த தொழில் பெரு வாழ்க்கைக்
கவைத் தலைப் பிறை எயிற்று இருள் எழில் அரக்கன்
அமுதம் உண்டு இமையாதவரும் மங்கையரும் 10
குறவரும் குறவத் துணையரும் ஆகி
நிலம் பெற்று இமைத்து நெடு வரை இறும்பிடைப்
பறவை உண்டு ஈட்டிய இறால் நறவு அருந்தி
அ நிலத்தவர் என அடிக்கடி வணங்கும்
வெள்ளி அம் குன்றகம் உள்ளுறப் புகுந்து ஒரு 15
தேவனும் அதன் முடி மேவும் உளனாம்
எனப் புயம் கொட்டி நகைத்து எடுத்து ஆர்க்கப்
பிலம் திறந்து அன்ன பெரு வாய் ஒரு பதும்
மலை நிரைத்து ஒழுக்கிய கரம் இருபத்தும்
விண் உடைத்து அரற்றவும் திசை உட்க முரியவும் 20
தாமரை அக-வயின் சே இதழ் வாட்டிய
திருவடிப் பெருவிரல் தலை நக நுதியால்
சிறிது மலை உறைத்த மதி முடி அந்தணன்
பொன் அணி மாடம் பொலி நகர்க் கூடல்
ஆவண வீதி அனையவர் அறிவுறின் 25
ஊருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என்
இணை முலை நன்னர் இழந்தன அது போல்
மற்று அவர் கவை மனம் மாழ்கிச்
செற்றம் நின் புகைவர் இக் கால் தீண்டலையே

#79
** பொறை உவந்து உரைத்தல்
உலர் கவட்டு ஓமைப் பொரி சினைக் கூகையும்
வீசு கோட்டு ஆந்தையும் சேவலோடு அலமரத்
திரை விழிப் பருந்து இனம் வளை உகிர்ப் படையால்
பார்ப்பு இரை கவரப் பயன் உறும் உலகில்
கடன் அறும் யாக்கைக் கவர் கடன் கழித்துத் 5
தழல் உணக் கொடுக்க அதன் உணவிடையே
கை விளக்கு எடுத்துக் கரை இனம் கரையப்
பிணம் பிரித்து உண்ணும் குணங்கு இனம் கொடுப்பச்
சூல் பேய் ஏற்ப இடாகினி கரப்பக்
கண்டு உளம் தளிர்க்கும் கருணை அம் செல்வி 10
பிறை நுதல் நாட்டி கடு வளர் கண்டி
இறால் நறவு அருவி எழு பரங்குன்றத்து
உறை சூர்ப் பகையினன் பெறு திரு வயிற்றினள்
ஒரு பால் பொலிந்த உயர் நகர்க் கூடல்
கடுக்கை அம் சடையினன் கழல் உளத்து இலர் போல் 15
பொய் வரும் ஊரன் புகல் அரும் இல் புக
என் உளம் சிகைவிட்டு எழும் அனல் புக்க
மதுப் பொழி முளரியின் மாழ்கின என்றால்
தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும்
தைவரல் ஏற்றும் கனவினும் தடைந்தும் 20
திரைக் கடல் தெய்வம் முன் தெளி சூள் வாங்கியும்
பொருள் கான் தடைந்தும் பாசறைப் பொருந்தியும்
போக்கு அரும் கடும் சுரம் போக முன் இறந்தும்
காவலில் கவன்றும் கல்வியில் கருதியும்
வேந்து விடைக்கு அணங்கியும் விளை பொருட்கு உருகியும் 25
நின்ற இவட்கு இனி என் ஆம்
கன்றிய உடலுள் படும் நனி உயிரே

#80
** வாயிலவர் வாழ்த்தல்
நிலை நீர் மொக்குளின் விளைவாய்த் தோன்றி
வான் தவழ் உடல் கறை மதி எனச் சுருங்கிப்
புல்லர் வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும்
சீறுணவு இன்பத் திருந்தா வாழ்க்கையைக்
கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்துப் 5
புலன் அறத் துடைத்த நலன் உறு கேள்வியர்
ஆரா இன்பப் பேர் அமுது அருந்தித்
துறவு எனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர்
வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலாப்
பேர் ஒளி நாயகன் கார் ஒளி மிடற்றோன் 10
மண் திரு வேட்டுப் பஞ்சவன் பொருத
கிள்ளியும் கிளையும் கிளர் படை நான்கும்
திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட
எரி வாய் உரகர் இருள் நாட்டு உருவக்
கொலைக் கொண்டு ஆழி குறி உடன் படைத்து 15
மறியப் புதைத்த மறம் கெழு பெருமான்
நீர் மாக் கொன்ற சேயோன் குன்றமும்
கல்வியும் திருவும் காலமும் கொடியும்
மாடமும் ஓங்கிய மணி நகர்க் கூடல்
ஆலவாயினுள் அருளுடன் நிறைந்த 20
பவளச் சடையோன் பதம் தலை சுமந்த
நல் இயல் ஊர நின் புல்லம் உள் மங்கையர்
ஓவிய இல்லம் எம் உறையுள் ஆக
கேளாச் சிறுசொல் கிளக்கும் கலதியர்
இவ்வுழி ஆயத்தினர்களுமாக 25
மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய்
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக
மலர்ச் சுமைச் சேக்கை மது மலர் மறுத்த இத்
திரு மனம் கொள்ளாச் சேக்கையது ஆக
நின் உளம் கண்டு நிகழ் உணவு உன்னி 30
நாணா நவப் பொய் பேணி உள் புணர்த்தி
யாழொடு முகமன் பாணனும் நீயும்
திருப் பெறும் அயலவர் காண
வரப்பெறு மா தவம் பெரிது உடையேமே

#81
** வறும்புனம் கண்டு வருந்தல்
உள்ளிருந்து எழுந்து புறம்பு நின்று எரியும்
அளவாத் திரு மணி அளித்தலானும்
கொலை முதிர் கடமான் முதிர் முகம் படர்ந்து
கொழும் சினை மிடைந்து குளிரொடு பொதுளிய
நெடு மரத்து இளம் கா நிலைத்தலானும் 5
பாசடை உம்பர் நெடும் சுனை விரிந்த
பேர் இதழ்த் தாமரை பெருகலானும்
நெடு விசும்பு அணவும் பெரு மதி தாங்கி
உடையா அமுதம் உறைதலானும்
இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால் 10
வாடாத் தேவர்கள் மணத்தலானும்
நூறு உடை மகத்தில் பேறு கொண்டு இருந்த
புரந்தரன் போலும் பொன் எயில் எறிந்த
மணி வேல் குமரன் திரு வளர் குன்றம்
பேர் அணி உடுத்த பெரு நகர்க் கூடல் 15
கோயில்கொண்டிருந்த குணப் பெரும் குன்றம்
அரும் தவக் கண்ணினோடு அடைந்த மா முனி-பால்
பேர் இருள் மாயைப் பெண் மகவு இரக்க
உவர் முதல் கிடந்த சுவை ஏழ் அமைத்துக்
கொடுத்த மெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய 20
எழு நிறச் சகரர்கள் ஏழ் அணி நின்று
மண் புக மூழ்கிய வான் பரி பிணிக்கப்
பல் முக விளக்கின் பரிதியின் தோட்டிய
வேலைக் குண்டு அகழ் வயிறு அலைத்து எழுந்த
பெரும் கார்க் கரும் கடு அரும்பிய மிடற்றோன் 25
எறிந்து வீழ் அருவியும் எரி மணி ஈட்டமும்
உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும்
திரு முத்தமிழும் பெருகு தென்மலையத்து
ஆரப் பொதும்பர் அடை குளிர் சாரல்
சுரும்புடன் விரிந்த துணை மலர்க் கொடியே 30
விண் விரித்து ஒடுக்கும் இரவி வண் கவிகைக்கு
இட்டுறை காம்பு என விட்டு எழு காம்பே
மரகதம் சினைத்த சிறை மயில் குலமே
நீலப் போதும் பேதையும் விழித்த
பொறி உடல் உழையே எறி புன மணியே 35
பாசிழைப் பட்டு நூல் கழி பரப்பிய
கிளை வாய்க் கிளைத்த வளை வாய்க் கிளியே
மைந்தர் கண் சென்று மாதர் உள் தடைந்த
பொழி மதுப் புது மலர்ப் போக்கு உடைச் சுரும்பே
வெறி முதிர் செம்மல் முறி முகம் கொடுக்கும் 40
சந்தனப் பொதும்பர்த் தழை சினைப் பொழிலே
கொள்ளை அம் சுகமும் குருவியும் கடிய
இரு கால் கவணிற்கு எரி மணி சுமந்த
நெடும் கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே
நெருநல் கண்ட எற்கு உதவிய இன்பம் 45
இற்றையின் கரந்த இருள் மனம் என்னே
இவண் நிற்கவைத்த ஏலாக் கடுங்கண்
கொடுத்து உண்டவர் பின் கரந்தமை கடுக்கும்
ஈங்கு இவை கிடக்க என் நிழல் இரும் புனத்து
இருந்து ஒளிர் அரும் தேன் இலதால் நீரும் 50
நின் புனம் அல்ல என்று என் புலம் வெளிப்பட
அறைதல் வேண்டும் அப் புனம் நீரேல்
முன்னம் கண்டவன் அன்று என்று
உன்னா உதவுதல் உயர்ந்தோர் கடனே

#82
** நெஞ்சொடு வருந்தல்
வடமொழி விதித்த இசை நூல் வழக்குடன்
அடுத்தன எண்_நான்கு அங்குலி அகத்தினும்
நாற்பதிற்று_இரட்டி நால் அங்குலியினும்
குறுமையும் நெடுமையும் கோடல்பெற்று ஐதாய்
ஆயிரம் தந்திரி நிறை பொது விசித்துக் 5
கோடி மூன்றில் குறித்து மணி குயிற்றி
இரு நிலம் கிடத்தி மனம் கரம் கதுவ
ஆயிரத்தெட்டில் அமைந்தன பிறப்புப்
பிறவிப் பேதத்து உறையது போல
ஆரியப் பதம் கொள் நாரதப் பேரியாழ் 10
நன்னர் கொள் அன்பால் நனி முகம் புலம்ப
முந்நான்கு அங்குலி முழு உடல் சுற்றும்
ஐம்பதிற்று_இரட்டி ஆறுடன் கழித்த
அங்குலி நெடுமையும் அமைத்து உள் தூர்ந்தே
ஒன்பது தந்திரி உறுத்தி நிலை நீக்கி 15
அறுவாய்க்கு ஆ இரண்டு அணைத்து வரை கட்டித்
தோள் கால் வதிந்து தொழிற்படத் தோன்றும்
தும்புருக் கருவியும் துன்னி நின்று இசைப்ப
எழு என உடம்பு பெற்று எண்பது அங்குலியின்
தந்திரி நூறு தழங்கிய முகத்த 20
கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல
நிறைமதி வட்டத்து முயல் உரி விசித்து
நாப்பண் ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து
அ நரம்பு இருபத்தாறு அங்குலி பெற
இடக்கரம் துவக்கி இடக்கீழ் அமைத்துப் 25
புற விரல் மூன்றின் நுனி விரல் அகத்தும்
அறுபத்திரண்டு இசை அனைத்து உயிர் வணக்கும்
மருத்துவப் பெயர்பெறும் வானக் கருவி
தூங்கலும் துள்ளலும் துவக்க நின்று இசைப்ப
நான்முகன் முதலா மூவரும் போற்ற 30
முனிவர் அஞ்சலியுடன் முகமன் இயம்பத்
தேவர்கள் அனைவரும் திசைதிசை இறைஞ்ச
இன்பப் பசும்_கொடி இடப் பால் படர
வெள்ளி அம் குன்றம் விளங்க வீற்றிருந்த
முன்னவன் கூடல் முறை வணங்கார் என 35
அரவப் பசும் தலை அரும்பு அவிழ் கணைக் கால்
நெய்தல் பாசடை நெடும் காட்டு ஒளிக்கும்
கண் எனக் குறித்த கரும் கயல் கணத்தை
வெள் உடல் கூர் வாய்ச் செம் தாள் குருகு இனம்
அரவு எயிறு அணைத்த முள் இலை முடக் கைதைகள் 40
கான்று அலர் கடி மலர்க் கரந்து உறைந்து உண்ணும்
கரும் கழி கிடந்த கானல் அம் கரை-வாய்
மெய் படு கடும் சூள் மின் எனத் துறந்தவர்
சுவல் உளைக் கவனப் புள் இயல் கலிமான்
நோக்கம் மறைத்த பரிதி கொள் நெடும் தேர்ப் 45
பின்னொடும் சென்ற என் பெரும் பீழை நெஞ்சம்
சென்றுழிச் சென்றுழிச் சேறலும் உளவோ
அவ் வினைப் பயனுழி அரும் தவம் பெறுமோ
இடைவழி நீங்கி என் எதிர் உறும்-கொல்லோ
அன்றியும் நெடுநாள் அமைந்து உடன் வருமோ 50
யாது என நிலைக்கிலன் மாதோ
பேதை கொள்ளாது ஒழி மனம் கடுத்தே

#83
** காப்புச் சிறைமிக்க கையறு கிளவி
கடு வினை அங்குரம் காட்டி உள் அழுக்காறு
எண் திசைச் சாகை கொண்டு இருள் மனம் பொதுளிக்
கொடும் கொலை வடுத்துக் கடும் பழிச் சடை அலைந்து
இரண்டு_ஐஞ்ஞூறு திரண்ட அக் காவதம்
சுற்றுடல் பெற்று துணைப் பதினாயிரம் 5
மற்று அது நீண்டு மணி உடல் போகி
ஐம்பது_நூறுடன் அகன்று சுற்று ஒழுக்கிப்
பெரும் களவு இணர் தந்து அவை கீழ்க் குலவிய
விட மாக் கொன்ற நெடு வேல் குளவன்
குன்று அமர் வள்ளி அம் கொடியொடு துவக்கிப் 10
பன்னிரு கண் விழித்து என் வினை துரக்கும்
அருள் பரங்குன்றம் உடுத்து அணி கூடல்
குறும்பிறை முடித்த நெடும் சடை ஒருத்தனைத்
தெய்வம் கொள்ளார் சிந்தையது என்னக்
கிடந்த வல் இரவில் கிளர் மழை கான்ற 15
அயலும் உம்பரும் அடக்கு புனல் ஒருவித்
தே அருள் கல்லார் சிந்தையின் புரண்ட
கவலையும் கால் குறி கண்டு பொழில் துள்ளும்
இமையாச் சூரும் பல கண்டு ஒருங்காத்
துடியின் கண்ணில் துஞ்சாக் கண்ணினர் 20
கடியும் துனைவில் கையகன்று எரி மணித்
தொகை இருள் கொல்லும் முன்றில் பக்கத்து
இணை முகப் பறை அறை கடிப்பு உடைத் தோகை
வயிற்றுள் அடக்கி வளை கிடைகிடக்கும்
முழக்கி மெய் கவரும் முகக் கொலை ஞாளி 25
அதிர் குரைப்பு அடக்கி இல் புறத்து அணைந்த நம்
பூம் புனல் ஊரனை பொருந்தா நெடும் கண்
அன்னையின் போக்கிய அரும் பெரும் தவறு
மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும்
மயங்காத் தேவர் மருந்து வாய் மடுக்க 30
முகம் கவிழ் வேலையில் அறம் குடிபோகிய
மாய வல் அரக்கர் தட்டிக்
காய் பார் உகுத்த விதி ஒத்ததுவே

#84
** மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்
நால் கடல் வளைத்த நால் நிலத்து உயிரினை
ஐந்தரு_கடவுள் அவன் புலத்தினரை
நடந்து புக்கு உண்டும் பறந்து புக்கு அயின்றும்
முத்தொழில் தேவரும் முருங்க உள் உறுத்தும்
நோன் தலைக் கொடும் சூர்க் களவு உயிர் நுகர்ந்த 5
தழல் வேல் குமரன் சால் பரங்குன்றம்
மணியொடும் பொன்னொடும் மார்பு அணி அணைத்த
பெரும் திருக் கூடல் அரும் தவர் பெருமான்
இரு சரண் அகலா ஒருமையர் உளம் என
சுடர் விளக்கு எடு-மின் கோதைகள் தூக்கு-மின் 10
பூவும் பொரியும் தூவு-மின் எழுது-மின்
சுண்ணமும் தாதும் துணைத் துகள் தூற்று-மின்
கரும் பெயல் குளிரின் களி மயில் என்னக்
கிளர்ந்து அயர்வாட்கு முன் கிளர் வினைச் சென்றோர்
உடல் உயிர் தழைக்கும் அருள் வரவு உணர்த்த 15
முல்லை அம் படர் கொடி நீங்கிப் பிடவச்
சொரி அலர் தள்ளி துணர்ப் பொலம் கடுக்கைக்
கிடைதரவு ஒருவிக் களவு அலர் கிடத்திப்
பூவை அம் புது மலர் போக்கி அரக்கு அடுத்த
கழுவிய திரு மணி கால் பெற்று என்ன 20
நல் பெரும் தூது காட்டும்
அற்புதக் கோபத் திரு வரவு அதற்கே

#85
** வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல்
பழுதறு தெய்வம் காட்டப் பண்டையின்
உழுவல் நலத்தால் ஓர் உயிர் என்றும்
கடும் சூள் தந்தும் கை புனை புனைந்தும்
பூழி அம் போனகம் பொதுவுடன் உண்டும்
குழமகக் குறித்தும் சில மொழி கொடுத்தும் 5
கையுறை சுமந்தும் கடித் தழை தாங்கியும்
உயிரின் தளர இரங்கியும் உணங்கியும்
பனையும் கிழியும் படைக்குவன் என்றும்
இறடி அம் சேவற்கு எறி கவண் கூட்டியும்
புனமும் எம் உயிரும் படர் கரி தடிந்தும் 10
அழுங்குறு புனல் எடுத்து அகில் புகை ஊட்டியும்
ஒளிர் மணி ஊசல் பரிய இட்டு உயர்த்தும்
இரவினில் தங்க எளிவரல் இரந்தும்
இருவி அம் புனத்திடை எரி உயிர்ப்பெறிந்தும்
தெரிந்து அலர் கொய்தும் பொழில் குறி வினவியும் 15
உடலொடும் பிணைந்த கை ஆய் துயில் ஒற்றிச்
செறி இருள் குழம்பகம் சென்று பளிங்கு எடுத்த
இல் பொழில் கிடைக்குமளவும் நின்று உலைந்தும்
பல் நாள் பல் நெறி அழுங்கினர் இன்று
முகன் ஐந்து மணத்த முழவம் துவைக்க 20
ஒரு கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து
மூ உடல் அணைத்த மு முகத்து ஒரோ முகத்து
எண் கடிப்பு விசித்த கல்லல் செறிய
இருள் குறள் ஊன்றி எம் அருள் களி ஆற்றி
உருள் வாய்க் கொக்கரை உம்பர்நாட்டு ஒலிக்கக் 25
கரம் கால் காட்டித் தலையம் இயக்கி
இதழ் அவிழ் தாமரை எனும் தகுணித்தம்
துவைப்ப நின்று அமை கரத்துக் கவைகள் தோற்றிக்
கரிக் கால் அன்ன மொந்தை கலித்து இரங்கத்
துடி எறிந்து இசைப்பத் துகளம் பரப்பி 30
வள்ளம் பிணைத்த செம் கரடிகை மல்க
எரியகல் ஏந்தி வெம் புயங்கம் மிசை ஆக்கி
எரி தளிர்த்து அன்ன வேணியில் குழவிப்
பசும் பிறை அமுதொடு நிரம்பியது என்ன
மதுக் குளிர் மத்தமும் மிலைத்து ஒரு மறு பிறை 35
மார்பமும் இருத்தியது என்னக் கூன் புறத்து
ஏனக் கோடு வெண்_பொடிப் புறத்து ஒளிரப்
பொலன் மிளிர் மன்றப் பொதுவகம் நாடித்
தனிக் கொடி காண எவ்விடத்து உயிர் தழைப்ப
ஆடிய பெருமான் அமர்ந்து நிறை கூடல் 40
கனவினும் வினவாதவரினும் நீங்கிச்
சூளும் வாய்மையும் தோற்றி
நீளவும் பொய்த்தற்கு அவர் மனம் கரியே

#86
** தோழி இயற்பழித்தல்
பாசடைக் கரும் கழி படர் மணல் உலகமும்
எழு மலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி
வரை உலகு அனைத்தும் வருவது போலத்
திரை நிரை திரைத்துக் கரை கரைக் கொல்லும்
வையை நீர் விழவு புகுந்தனம் என ஒரு 5
பொய்யினள் அன்றி மெய்யினை நீயும்
பொலம் பூண் பெயர்ந்து உறை பூணை அருள் தரும்
குளிர்ச்சி நீங்கிக் கொடுங்கோல் வேந்து எனச்
சேக் கொள் கண்ணை செம் மொழிப் பெயர்தந்து
ஒன்றுடன் நில்லா மொழியை மறுத்த 10
முதிரா நாள் செய் முண்டகம் மலர்ந்து
கவிழ்ந்த முகத்தை எக்-கண் மனம் தோன்ற
அரும்பிய நகையை அன்றே நின் கேழ்
என் கண் கண்ட இவ்விடை என் உளம்
மன்னி நின்று அடங்காக் குடுமி அம் பெரும் தழல் 15
பசும் கடல் வளைந்து பருகக் கொதித்த
தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல் செய்
விண்ணகம் புடைத்து நெடு வரை கரக்கும்
கொடும் சூர்க் கொன்ற கூரிய நெடு வேல்
குன்றக் குறவர் கொம்பினுக்கு இனியன் 20
குருகு ஒலி ஓவாப் பனிமலை வாவி
வயிறு வாய்த்து அழகு குழவி அம் கிழவோன்
வாழ் பரங்குன்று எனும் மணி அணி பூண்ட
நான்மறை புகழும் கூடலம் பெருமான்
வான் முதல் ஈன்ற மலைமகள்-தன்னொடும் 25
முழுது உணர் ஞானம் எல்லாம் உடைமை
முழுது அனுக்கிரகம் கெழு பரம் அநாதி
பாசம் இலாமை மாசறு நிட்களம்
அவிகாரக் குறி ஆகிய தன் குணம்
எட்டும் தரித்து விட்டு அறு குற்றம் 30
அருச்சனை வணக்கம் பர உயிர்க்கு அன்பு அகம்
பேர் அருள் திருநூல் பெரும் துறவு எங்கும்
நிறை பொருள் அழுந்தல் அருள் இனக் கூட்டம்
இருள் பவம் நடுங்கல் எனும் குணம் எட்டும்
தமக்கும் படைக்க விதிப் பேற்று அடியவர் 35
நிலை அருள் கற்பு என நெடும் கற்புடையோள்
முன் உறின் அவள் மனம் ஆங்கே
நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே

#87
** புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்
மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும்
நகைத் தொகை கூட்டிக் கவைத்து எழு சொல்லில்
அமுதமும் கடுவும் விழியில் வைத்து அளிக்கும்
இரு மனப் பொய் உளத்து ஒரு மகள்-தன்னைக்
கரியோன் கடுப்பத் துகில் கவர்ந்து ஒளிர 5
விதியினும் பன்மை செய் முகம் படைத்து அளவாச்
சோதியின் படைக் கண் செல உய்த்து அரும்பு செய்
முண்டக முலையின் சாந்து அழித்து அமைத் தோள்
எழுதிய கழைக் கரும்பு எறிந்தும் நூல் வளர்த்த
கோதை வகை பரிந்தும் மணிக் கலன் கொண்டு 10
கழைத் தோள் நெகிழத் தழை உடல் குழையத்
திரை எதிர் தள்ளி மலர்த் துகில் கண் புதைத்து
ஒள் நிற வேங்கையின் தாதும் பொன்னும்
சுண்ணமும் கலந்து திமிர்ந்து உடல் ஊற்றி
வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டு அலர் சூட்டி 15
இறால் புணர் புதுத் தேன் ஈத்து உடன் புணரும்
வையையில் மறித்தும் அன்னவள்-தன்னுடன்
கெழுமிய விழவுள் புகு-மதி நீயே
கவை நாக் கட்செவி அணந்து இரை துய்த்த
பாசுடல் பகு வாய்ப் பீழை அம் தவளையும் 20
பேழ் வாய்த் தழல் விழித் தரக்கு அடித்து அவிந்த
நிலம் படர் தோகைக் குலம் கொள் சேதாவும்
அவ்வுழி மாத்திரை அரை எழு காலைத்
திரு நுதல் கண்ணும் மலைமகள் பக்கமும்
எரி மழு நவ்வியும் பெறும் அருள் திருவுருவு 25
எடுத்து உடன் அந்தக் கடுக் கொலை அரவினைத்
தீ வாய்ப் புலியினைத் திருத் தவர் நகைப்ப
எடுத்து அணி பூண உரித்து உடை உடுப்ப
முனிவரும் தேவரும் கர மலர் முகிழ்ப்பத்
தருவன அன்றி மலரவன் அவன் தொழில் 30
நாரணன் ஆங்கு அவன் கூர் உடைக் காவல்
சேரத் துடைக்கும் பேர் அருள் நாளின்
முத் தொழிலில் தன் முதல் தொழில் ஆக்கி
ஒரு தாள் தாரை கொள் முக் கவைச் சுடர் வேல்
தலை இருந்து அரும் கதி முழுதும் நின்று அளிக்கும் 35
திரு நகர்க் காசிப் பதியகத்து என்றும்
வெளியுறத் தோன்றிய இருள் மணி மிடற்றோன்
நேமி அம் குன்று அகழ் நெடு வேல் காளையன்
தன் பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு
இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும் 40
பெரும் புனல் ஊர எம் இல்லம்
அரும் புனல் வையைப் புது நீர் அன்றே

#88
** வருத்தம் தணித்தல்
வேலி அம் குறும் சூல் விளை காய்ப் பஞ்சு இனம்
பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டு என
நிறை நாண் வேலி நீங்கித் தமியே
ஓருழி நில்லாது அலமரல்கொள்ளும் என்
அரும் துணை நெஞ்சம் நிற்கு உறும் பயன் கேள்-மதி 5
மண்ணுளர் வணங்கும் தன்னுடைத் தகைமையும்
இருள் அறு புலனும் மெய்ப் பொருள் உறும் கல்வியும்
அமரர் பெற்று உண்ணும் அமுது உருக் கொண்டு
குறும் சொல் குதட்டிய மழலை மென் கிளவியில்
விளரி உள் விளைக்கும் தளர் நடைச் சிறுவனும் 10
நின் நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும்
துவரத் தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன்
பொம்மல் அம் கதிர் முலை புணர்வுறும்-கொல் எனச்
சென்றுசென்று இரங்கலை அன்றியும் தவிர்மோ
நெட்டு உகிர்க் கரும் கால் தோல் முலைப் பெரும் பேய் 15
அமர் பெற்று ஒன்னலர் அறிவுறப் படரப்
பேழ் வாய் இடாகினி கால் தொழுது ஏத்திக்
கையடை கொடுத்த வெள் நிண வாய்க் குழவி
ஈமப் பெரு விளக்கு எடுப்ப மற்று அதன்
சுடு பொடிக் காப்பு உடல் துளங்கச் சுரி குரல் 20
ஆந்தையும் கூகையும் அணி தாலுறுத்த
ஓரி பாட்டு எடுப்ப உவணமும் கொடியும்
செம் செவிச் சேவல் கவர் வாய்க் கழுகும்
இட்ட செம் பந்தர் இடையிடைக் கால் எனப்
பட்டு உலர் கள்ளியம்-பால் துயில்கொள்ளும் 25
சுள்ளி அம் கானிடைச் சுரர் தொழுது ஏத்த
மரகதத் துழாயும் அ நிறக் கிளியும்
தோகையும் சூலமும் தோளில் முன்கையில்
மருங்கில் கரத்தினில் வாடாது இருத்திப்
போர் வலி அவுணர் புகப் பொருது உடற்றிய 30
முக் கண் பிறை எயிற்று எண் தோள் செல்வி
கண்டு உளம் களிப்ப கனை கழல் தாமரை
வானக வாவியூடு உற மலர
ஒரு தாள் எழு புவி ஒருவத் திண் தோள்
பத்துத் திசையுள் எட்டு அவை உடைப்ப 35
ஒரு நடம் குலவிய திருவடி உரவோன்
கூடல் அம் பதியகம் பரவி
நீட நின்று எண்ணார் உளம் என நீயே

#89
** பாணனொடு வெகுளுதல்
ஊர் நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினைக்
குவளை வடி பூத்த கண் தவள வாள் நகைக்
குறும் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ
கவிர் அலர் பூத்த செம் செம்மை வில் குடுமி
மஞ்சு அடை கிளைத்த வரிக் குறு முள் தாள் 5
கூர் அரிவாளின் தோகை அம் சேவல்_
கொடியோன் குன்றம் புடை வளர் கூடல்
கணிச்சி அம் கைத்தலத்து அருள் பெரும் காரணன்
உலகு உயிர் மகவு உடைப் பசும்_கொடிக்கு ஒரு பால்
பகுத்து உயிர்க்கு இன்பம் தொகுத்த மெய்த் துறவினன் 10
முளரி நீர்ப் புகுத்திய பத மலர்த் தாள் துணை
மணி முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின்
வளர் மறித் தகர் எனத் திரிதரும் பாண்மகன்
எனக் குறித்து அறிகிலம் யாமே எமது
மணி ஒளிர் முன்றில் ஒருபுடை நிலை நின்று 15
அன்ன ஊரர் புல்லமும் விழுக் குடிக்கு
அடாஅக் கிளவியும் படாஅப் பழியும்
எங்கையர் புலவியில் இயம்பின நம்-பால்
தனது முன் புன்மொழி நீளத் தந்தும்
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெறப் புனைந்தும் 20
கட்டிய பொய் பரப்பு அனைத்தும் நிற்கு உறுத்தின்
பேர் எறுழ்ச் சகரர் ஏழ் எனப் பறித்த
முதிர் திரை அடிக்கும் பரிதி அம் தோழம்
காட்டை உள் இம்பர் காணத்
தோட்டி நின்று அளிக்கும் தொன்மை அது பெறுமே 25

#90
** பாணன் புலந்து உரைத்தல்
இலவு அலர் தூற்றி அனிச்சம் குழைத்துத்
தாமரை குவித்த காமர் சீறடித்
திருவினள் ஒரு நகை அரிதினின் கேண்மோ
எல்லாம் தோற்ற இருந்த தோற்றமும்
தன்னுள் தோன்றித் தான் அதில் தோன்றாத் 5
தனி நடை நிறையும் ஒரு தனிக் கோலத்து
இரு வடிவு ஆகி பழ மறை வேதியன்
நான்மறைத் தாபதர் முத்தழல் களம் புக்கு
அரக்கர் துய்த்து உடற்றும் அதுவே மானப்
பாசடை மறைத்து எழு முளரி அம் கயத்துள் 10
காரான் இனங்கள் சேடு எறிந்து உழக்கும்
கூடற்கு இறையவன் காலன் காய்ந்தோன்
திருநடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை
எங்கையர் குழுமி எமக்கும் தங்கையைப்
புணர்த்தினன் பாண் தொழில் புல்லன் என்று இவனைக் 15
கோலின் கரத்தின் தோலின் புடைப்பக்
கிளை முள் செறிந்த வேலி அம் படப்பைப்
படர் காய்க்கு அணைந்த புன் கூழை அம் குறுநரி
உடையோர் திமிர்ப்ப வரும் உயிர்ப்பு ஒடுக்கி
உயிர் பிரிவுற்றமை காட்டி அவர் நீங்க 20
ஓட்டம் கொண்டன கடுக்கும்
நாட்டவர் தடைய மற்று உதிர்ந்து நடந்ததுவே

#91
** பாணன் வரவு உரைத்தல்
வாய் வலம் கொண்ட வயிற்று எழு தழலுக்கு
ஆற்றாது அலந்து காற்று எனக் கொட்புற்று
உடை திரை அருவி ஒளி மணி காலும்
சேயோன் குன்று அகத் திருப் பெறு கூடல்
கொழும் சுடர் கிளைத்த நெடும் சடைப் புயங்கன் 5
பவளம் தழைத்த பத மலர் சுமந்த நம்
பொரு புனல் ஊரனைப் பொது என அமைத்த
அக் கடி குடி மனையவர் மனை புகுத்தி
அறுவாய் நிறைந்த மதிப்புறத்தோ என
சுரை தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து 10
அளி தார் பாடும் குரல் நீர் வறந்த
மலைப் புள் போல நிலைக் குரல் அணைந்து ஆங்கு
உணவு உளம் கருதி ஒளி இசை பாட
முள் தாள் மறுத்த முண்டகம் தலை அமைத்து
ஒருபால் அணைந்த இவ் உயர் மதிப் பாணற்கு 15
அடுத்தனை உதவ வேண்டும்
கடுத் திகழ் கண்ணி அக் கல்லை இக் கணமே

#92
** அன்னமோடு ஆய்தல்
வெறி மறி மடைக் குரல் தோல் காய்த்து என்ன
இருக்கினும் இறக்கினும் உதவாத் தேவர்-தம்
பொய் வழிக் கதியகம் மெய் எனப் புகாத
விழி உடைத் தொண்டர் குழீஇ முடி தேய்ப்பத்
தளிர்த்துச் சிவந்த தண்டை அம் துணைத் தாள் 5
சேயோன் பரங்குன்று இழை எனச் செறித்துத்
தமிழ்க் கலை மாலை சூடித் தாவாப்
புகழ்க் கலை உடுத்துப் புண்ணியக் கணவன்
பல் நெறி வளம் நிறப் பூட்சியின் புல்லும்
தொல் நிலைக் கூடல் துடி_இடை அகத்தனை 10
அன்பு உளத்து அடக்கி இன்பம் உண்ணார் எனச்
சேவல் மண்டலித்துச் சினை அடைகிடக்கும்
கைதை வெண் குருகு எழ மொய் திரை உகளும்
உளை கடல் சேர்ப்பன் அளி விடம் தணிப்ப
நீலமும் கரும் கொடி அடம்பும் சங்கமும் 15
கண்ணிற்கு இடையில் களத்தில் கழிதந்து
அலர்ந்தும் உலர்ந்தும் உடைந்தும் அனுங்கலின்
வட்கு உடை மையல் அகற்றி அன்பு ஒருகால்
கூறவும் பெறுமே ஆறது நிற்க
இவள் நடை பெற்றும் இவள் பயின்றும் இரங்கியும் 20
ஓருழி வளர்ந்த நீர இவ் அன்னம்
அன்று எனத் தடையாக் கேண்மை
குன்றும் அச் சூளினர்-தம்மினும் கொடிதே

#93
** வழி அருமை கூறி மறுத்தல்
முதுக்குறை பெண்டிர் வரத்து இயல் குறிப்ப
வழி முதல் தெய்வதம் வரைந்து மற்று அதற்குப்
பருக் காடு உறுத்திப் பலி முதல் பராவக்
கிழமை அவ் அயலினர் நா உடன்று ஏத்தப்
பக்கம் சூழுநர் குரங்கம் மண் படப் 5
பெற்று உயிர்த்த அரும் பொன் தொடி மடந்தை-தன்
இரு விழி பொலி அத் திரு நகர்ப்புறத்துக்
கரியுடன் உண்ணார் பழி உளம் ஒத்த
இருள் உடைப் பெரு முகில் வழி தெரிந்து ஏகன்-மின்
அரிமான் உறுத்த நூற்றுவர் மதித்த 10
புடை மனச் சகுனி புள்ளி அம் கவற்றில்
ஐம் தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு
ஒலிவர ஓதிமம் எரி மலர்த் தவிசு இருந்து
ஊடு உகள் சிரலைப் பச்சிறவு அருந்தும்
பழனக் குருநாடு அளி பதி தோற்று 15
முன்னுறும் உழு-வயின் பன்னிரு வருடம்
கண்டீரவத்தொடு கறையடி வளரும்
குளிர் நிழல் அடவி இறைகொண்டு அகன்ற பின்
அனைத்து உள வஞ்சமும் அழித்து நிரை மீட்சி
முடித்துத் தமது முடியாப் பதி புக 20
ஊடி முறையே எமக்கு உள மண் கருதிச்
சேறி என்று இசைப்பச் செல் பணித் தூதினர்க்கு
ஒரு கால் அளித்த திரு மா மிடற்றோன்
பாடல் சான்ற தெய்வக்
கூடல் கூடார் குணம் குறித்து எனவே 25

#94
** பருவம் காட்டி வற்புறுத்தல்
அளிகள் பாட்டு எடுப்பப் புறவு பாட்டு ஒடுங்கக்
காந்தள் அம் கடுக்கைக் கனல் தனம் மலரக்
கோடல் ஈன்று கொழு முனை கூம்பப்
பிடவமும் களவும் ஒடு நிறை பூப்ப
வான்புறம் பூத்த மீன் பூ மறையக் 5
கோபம் ஊர்தர மணி நிரை கிடப்பத்
தென்கால் திகைப்ப வடகால் வளரப்
பொறி விழிப் பாந்தள் புற்று அளை வதிய
வரி உடல் ஈயல் வாய்-தொறும் எதிர்ப்ப
இடிக் குரல் ஆனேற்று இனம் எதிர் செறுப்பப் 10
பொரிக் குறி மட மான் சுழித் தலைக் கவிழ
முடை உடல் அண்டர் படலிடம் புகுதக்
கோவியர் அளையுடன் குலனொடு குளிர்ப்பக்
காயாக் கண்கொள முல்லை எயிறு உறழ
முசுக்கலை பிணவுடன் முழை உறை அடங்கக் 15
கண மயில் நடன் எழக் காளி கூத்து ஒடுங்கச்
சாதகம் முரல் குரல் வாய் மடை திறப்ப
மாக் குயில் மாழ்கிக் கூக்குரல் அடைப்பப்
பனிக்கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப
உடை நறவு உண்டு வருடை வெறுப்ப 20
அகில் சுடு பெரும் புனம் உழு பதன் காட்ட
வெறி விழிச் சவரர் மா அடி ஒற்ற
மணந்து உடன் போகுநர்க்கு உயங்கு வழி மறுப்பப்
புலிக் குரல் எயிற்றியர் பூவினில் பரப்பக்
குழவி அம் கதிர் பெறத் திருமலர் அணங்க 25
இனத்தொடு கயிரவம் எதிரெதிர் மலரக்
குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற
நிலமகள் உடலமும் திங்களும் குளிர
ஒலி கடல் இப்பி தரளம் சூல்கொள
இவை முதல் மணக்க எழுந்த கார் கண்டை 30
வறு நீர் மலர் என மாழ்கலை விடு-மதி
மறை அடி வழுத்திய மறைவனத்து ஒருநாள்
மணிச் சுடர் நறு நெய் கவர் மதிக் கருப்பைக்கு
இரு வகை ஏழ் எனும் திரு உலகு அனைத்தும்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல 35
இரு புறம் போற்ற ஒரு தேர் வரத்தினர்க்கு
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படரப்
பாசறை சென்ற நாள் நிலம் குழிய
எண்ணி விரல் தேய்ந்த செம் கரம் கூப்புக
கொய் தளிர் அன்ன மேனி 40
மொய் இழை பூத்த கவின் மலர்_கொடியே

#95
** பள்ளியிடத்து ஊடல்
பெரு நிலத் தேவர்கள் மறை நீர் உகுப்ப
மற்று அவர் மகத்துள் வளர் அவி மாந்த
விடையோன் அருச்சனைக்கு உரிமையின் முன்னவன்
அன்னவன்-தன்னுடன் கடிகை ஏழ் அமர
அன்றியும் இமையாக் கண் எனல் காட்ட 5
ஆயிரம் பணாடவி அரவு கடு வாங்கத்
தேவர் உண் மருந்து உடல் நீட நின்று உதவ
உடல் முனி செருவினர் உடல் வழி நடப்ப
நாரணன் முதலாம் தேவர் படை தோற்றத்
தண் மதிக் கலைகள் தான் அற ஒடுங்க 10
எரிந்து எழும் அரக்கர் ஏனையர் மடிய
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப
அவன் தரும் உலகத்து அரும் தொழில் ஓங்கப்
பாசுடல் உளை மா ஏழ் அணி பெற்ற
ஒரு கால் தேர் நிறைந்து இருள் உடைத்து எழுந்த 15
செங்கதிர் விரித்த செம் திரு மலர்த் தாமரைப்
பெரும் தேன் அருந்தி எப் பேர் இசை அனைத்தினும்
முதல் இசைச் செவ்வழி விதிபெறப் பாடி அத்
தாது உடல் துதைந்த மென் தழைச் சிறை வண்டு இனம்
பசும் தாள் புல் இதழ்க் கரும் தாள் ஆம்பல் 20
சிறிது உவா மதுவமும் குறைபெற அருந்தி அப்
பாசடைக்கு உலகவர் பயிலாத் தாரியை
மருளொடு குறிக்கும் புனல் அணி ஊர
தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப
உழல் தேர் பத்தினன் மகவு என நாறி 25
முனி தழல் செல்வம் முற்றிப் பழம் கல்
பெண் வரச் சனகன் மிதிலையில் கொடுமரம்
இறுத்து அவன் மகள் புணர்ந்து எரி மழு_இராமன்
வில் கவர்ந்து அன்னை வினையுள் வைத்து ஏவத்
துணையும் இளவலும் தொடரக் கான் படர்ந்து 30
மாக் குகன் நதி விட ஊக்கி வனத்துக்
கராதி மாரீசன் கவந்தன் உயிர் மடித்து
இரு சிறைக் கழுகினர்க்கு உலந்த கடன் கழித்து
எறி வளிமகனை நட்டு ஏழு மரத்தினுக்கு
அரிக்குக் கரும் கடற்கு ஒரோவொரு கணை விடுத்து 35
அக் கடல் வயிறடைத்து அரக்கன் உயிர் வௌவி
இலங்கை அவ் அரக்கற்கு இளையோன் பெறுக எனத்
தமது ஊர் புகுந்து முடி சுமந்தோர்க்கும்
நான்முகத்தவர்க்கும் இரு பால் பகுத்த
ஒரு நுதல் கண்ணவன் உறைதரு கூடல் 40
தெளி வேல் கண் குறுந்தொடியினர் காணின்
நின்-பால் அளியும் நீங்கி
இன்பும் இன்று ஒழிக்கும் எம் கால் தொடல் சென்மே

#96
** நெறி விலக்கிக் கூறல்
வனப்பு உடை அனிச்சம் புகை மூழ்கியது என
இவ் அணங்கு அவ் அதர்ப் பேய்த்தேர்க்கு இடைந்தனள்
தென் திசைக் கோமகன் பகடு பொலிந்து அன்ன
கறையடிச் சென்னியின் நக நுதி போக்கிக்
குருத்து அயில் பேழ் வாய்ப் பல் படைச் சீயம் 5
அதர்-தொறும் குழுவும் அவற்றினும் மற்றவன்
கடும் கால் கொற்றத்து அடும் தூதுவர் எனத்
தனி பார்த்து உழலும் கிராதரும் பலரே
ஒரு கால் இரதத்து எழு பரி பூட்டி
இரு வான் போகிய எரி சுடர்க் கடவுள் 10
மா தவராம் என மேல் மலை மறைந்தனன்
மின் பொலி வேலோய் அன்பினர்க்கு அருளும்
கூடல் பதி வரும் ஆடல் பரியோன்
எட்டெட்டு இயற்றிய கட்டு அமர் சடையோன்
இரு சரண் அடைந்த மறுவிலர் போல 15
அருளுடன் தமியை வாடினை ஐய
தண்ணீர் வாய் தரும் செம் நிறச் சிதலை
அதவு உதிர் அரிசி அன்ன செந்தினை
நுண் பதம் தண் தேன் விளங்கனி முயல் தசை
வெறிக் கண் கவை அடிக் கடும் கால் மேதி 20
அன்பு மகப் பிழைத்துக் கல் அறைப் பொழிந்த
வறள் பால் இன்ன எம்முழை உள அயின்று
கார் உடல் அனுங்கிய பைம் கண் கறையடி
சென்னி தூங்கி நின்றது காட்டும்
நெடு மரை அதள் வேய் சில் இடக் குரம்பையில் 25
மற்று அதன் தோலில் உற்று இருவீரும்
கண்படுத்து இரவி கீறும் முன்
எண்பட நும் பதி ஏகுதல் கடனே

#97
** ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி
வெறிக் குறும் கதுப்பின் வெள் எயிற்று எயிற்றியர்
செம் மணி சுழற்றித் தேன் இலக்கு எறிதரப்
பெருக்கெடுத்து இழிதரும் வெள்ளப் பிரசக்
கான்யாறு உந்தும் கல் வரை நாட
சொல் தவறு உவக்கும் பித்தினர் சேர் புலன் 5
சிறிதிடைத் தெருள்வதும் உடனுடன் மருள்வதும்
ஆம் எனக் காட்டும் அணி இருள் மின்னலின்
நிணம் புணர் புகர் வேல் இணங்கு துணையாகக்
காமம் ஆறுள் கவர்தரும் வெகுளுநர்
படிறு உளம் கமழும் செறிதரு தீ உறழ் 10
கொள்ளிவாய்க் குணங்கு உள்ளு-தோறு இவரிய
மின்மினி உமிழும் துன் அலர் கள்ளியை
அன்னை என்று அணைதரும் அரைஇருள் யாமத்துக்
கடும் சுடர் இரவி விடும் கதிர்த் தேரினை
மூல நிசாசரர் மேல் நிலம் புடைத்துத் 15
துணைக் கரம் பிடித்து எனத் தோற்றிடும் பொழில் சூழ்
கூடல் பதி வரும் குணப் பெரும் குன்றினன்
தாமரை பழித்த இரு சரண் அடையாக்
கோளினர் போலக் குறி பல குறித்தே
ஐந்து அமர் கதுப்பினள் அமைத் தோள் நசைஇத் 20
தருவின் கிழவன்தான் என நிற்றி
நின் உயிர்க்கு இன்னல் நேர்தரத் திருவின்
தன் உயிர்க்கு இன்னல் தவறில ஆஆ
இரண்டு உயிர் தணப்பு என எனது கண் புணர இக்
கொடு வழி இவ் வரவு என்றும் 25
விடுவது நெடும் புகழ் அடு வேலோயே

#98
** மெலிவு கண்டு செவிலி கூறல்
கதிர் நிரை பரப்பும் மணி முடித் தேவர்கள்
கனவிலும் காணாப் புனைவரும் திருவடி
மாநிலம் தோய்ந்தோர் வணிகன் ஆகி
எழு கதிர் விரிக்கும் திரு மணி எடுத்து
வரையாக் கற்புடன் நான்கு எனப் பெயர்பெற்று 5
ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள்
மிடலொடு விரித்துச் சருக்கம் பாழி
வீயா விந்தம் பதம் நிரை நாதம்
மறைப்புப் புள்ளி மந்திரம் ஒடுக்கம் என்று
இனையவை விரித்துப் பல பொருள் கூறும் 10
வேதம் முளைத்த ஏதம்_இல் வாக்கால்
குடுமிச் சேகரச் சமன் ஒளி சூழ்ந்த
நிறைதரு நான்கின் நிகழ்ந்தன குறியும்
குருவிந்தம் செளகந்தி கோவாங்கு
சாதரங்கம் எனும் சாதிகள் நான்கும் 15
தேக்கின் நெருப்பின் சேர்க்கின் அங்கையின்
தூக்கின் தகட்டின் சுடர் வாய் வெயிலின்
குச்சையின் மத்தகக் குறியின் ஓரத்தின்
நெய்த்துப் பார்வையின் நேர்ந்து சிவந்தாங்கு
ஒத்த நற்குணம் உடைய பன்னிரண்டும் 20
கருகி நொய்தாதல் காற்று வெகுளி
திருகல் முரணே செம்மண் இறுகல்
மத்தகக் குழிவு காசம் இலைச்சுமி
எச்சம் பொரிவு புகைதல் புடாயம்
சந்தை நெய்ப்பிலி எனத் தரு பதினாறு 25
முந்திய நூலில் மொழிந்தன குற்றமும்
சாதகப் புள்-கண் தாமரை கழுநீர்
கோபம் மின்மினி கொடும் கதிர் விளக்கு
வன்னி மாதுளம் பூவிதை என்னப்
பன்னு சாதரங்க ஒளிக் குணம் பத்தும் 30
செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம்
முயலின் சோரி சிந்துரம் குன்றி
கவிர் அலர் என்னக் கவர் நிறம் எட்டும்
குருவிந்தத்தில் குறித்தன நிறமும்
அசோகப் பல்லவம் அலரி செம்பஞ்சு 35
கோகிலக் கண் நீடு இலவு அலர் செம்பு எனத்
தரு செளகந்தி தன் நிறம் ஆறும்
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை
குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும்
திட்டை ஏறு சிவந்த விதாயம் 40
ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை
மணி கோகனகம் கற்பம் பாடி
மாங்கி சகந்தி வளர் காஞ்சு உண்டை என்று
ஆங்கு ஒரு பதின்மூன்று அடைந்தன குற்றமும்
இவை எனக் கூறிய நிறை அருள் கடவுள் 45
கூடல் கூடா குணத்தினர் போல
முன்னையள் அல்லள் முன்னையள் அல்லள்
அமுத வாய்க் கடு விழிக் குறும் தொடி நெடும் குழல்
பெரும் தோள் சிறுநகை முன்னையள் அல்லள்
உலகியல் மறந்த கதியினர் போல 50
நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின
பகழி செய் கம்மியர் உள்ளம் போல
ஐம்புலக் கேளிரும் ஒருவாய்ப் புக்கன
அதிர் உவர்க் கொக்கின் களவு உயிர் குடித்த
புகர் இலை நெடு வேல் அறு முகக் குளவன் 55
தகரம் கமழும் நெடு வரைக் காட்சி
உற்றனள் ஆதல் வேண்டும்
சிற்றிடைப் பெரும் தோள் தே_மொழி தானே

#99
** தேர்வரவு கூறல்
வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து
வழி நடம் தனது மரக்கால் அன்றி
முதல் தொழில் பதுமன் முன்னா அவ்வுழி
மான் தலைக் கரத்தினில் கூடை வயக்கித்
தூக்கல் வளையுடன் தொடர்ப் பதம் எறிந்து 5
மற்று அதன் தாள் அம் புத்திரி ஆக
நிமிர்த்து எறி காலில் கடைக்கண் கிடத்திப்
பாணியில் சிரம் பதித்து ஒரு நடை பதித்துக்
கொடுகொட்டிக்குக் குறி அடுத்து எடுக்கும்
புங்கவம் வாரம் புடை நிலை பொறுத்துச் 10
சச்ச புடத்தில் தனி எழு மாத்திரை
ஒன்றை விட்டு ஒரு சீர் இரண்டுற உறுத்தி
எடுத்துத் துள்ளிய இன முத்திரைக்கு
மங்கலப் பாணி மாத்திரை நான்குடன்
சென்று எறிந்து ஒடுங்கும் துறுமிடை திருத்தி 15
ஞெள்ளலில் குனித்த இரு மாத்திரைக்குப்
பட்டடை எடுக்கப் புலிதம் பரப்பிப்
புறக் கால் மடித்துக் குறித்து எறி நிலையம்
பதினான்கு அமைத்து விடு மாத்திரைக்கு
வனமும் பிதாவும் பாணியில் வகுத்து 20
வட்டம் கொடுக்கும் இந்திரை பணிக்கு
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து
வலவை இடாகினி மண் இருந்து எடுத்த
காலுடன் சுழல ஆடிய காளி
நாணி நின்று ஒடுங்கத் தானும் ஓர் நாடகம் 25
பாண்டரங்கத்து ஒரு பாடு பெற்று அமைந்த
மோகப் புயங்க முறைத் துறை தூக்கி
அதற்குச் சாரணி அருள் கரம் ஒன்றில்
பாணி இரண்டும் தாளம் ஆக்கி
ஒரு தாள் மிதித்து விண் உற விட்ட 30
மறு தாள் மலரில் மலர்க் கரம் துடக்கிப்
பார்ப்பதிப் பாணியைத் துடி மணி எடுப்பச்
சுருதியைத் தண்டி வலிகொண்டு அமைப்ப
முதல் ஏழ் அதனை ஒன்றினுக்கு ஏழ் என
வீணை பதித்துத் தானம் தெரிக்க 35
முன் துடி மணியில் ஒற்றிய பாணியை
நாதம் கூட்டி மாத்திரை அறுத்து
மாங்கனி இரண்டில் ஆம் கனி ஒன்றால்
முன் ஒரு நாளில் முழுக் கதி அடைந்த
அம்மைப் பெயர் பெறும் அருள் பேய் குனிப்பப் 40
பூதமும் கூளியும் பேயும் நடிப்ப
அமரர் கண் களிப்ப ஆடிய பெருமான்
மதுரை அம் பதி எனும் ஒரு கொடி மடந்தை
சீறிதழ்ச் சாதிப் பெருமணம் போல
நின் உளம் நிறைந்த நெடும் கற்பு அதனால் 45
வினை உடல் புணர வரும் உயிர் பற்றிப்
புண்ணியம் தொடரும் புணர்ச்சி போலக்
காலமுற்று ஒடுங்கும் நீள் முகில் கூட்டமும்
மணி தரு தெருவில் கொடி தரு தேரும்
நால் குறிப் புலவர் கூட்டு எழு நனி புகழ் 50
மருந்து அயில் வாழ்க்கையர் மணி நகர் உருவின
உருள் எழு பூமியும் அவ் உருள் பூண்ட
கலிமான் துகளும் கதிர் மறை நீழலின்
நின்று முன் இட்ட நிறை அணி பொறுத்துப்
பரும் குலைக் கயத்துள் கரும் தாள் கழுநீர் 55
நிறைவினுள் பூத்த தாமரை ஒன்று என
நின் உயிர் ஆயம் நாப்பண்
மன்னுக வேந்தன் வரவினுக்கு எழுந்தே

#100
** தூது கண்டு அழுங்கல்
வளைந்து நின்று உடற்றும் மலி குளிர்க்கு உடைந்து
முகில் துகில் மூடி மணி நெருப்பு அணைத்துப்
புனம் எரி கார் அகில் புகை பல கொள்ளும்
குளவன் வீற்றிருந்த வளர் புகழ்க் குன்றமும்
புதவு தொட்டு எனத் தன் புயல் முதிர் கரத்தினை 5
வரன்முறை செய்த கூன் மதிக் கோவும்
தெய்வம் மறைத்த செழும் தமிழ்ப் பாடலும்
ஐந்தினில் பங்குசெய்து இன்பு வளர் குடியும்
தவல் அரும் சிறப்பொடு சால்புசெய்து அமைந்த
முது நகர்க் கூடலுள் மூவாத் தனி முதல் 10
ஏழிசை முதலில் ஆயிரம் கிளைத்த
கானம் காட்டும் புள் அடித் துணையினர்
பட்டடை எடுத்து பாலையில் கொளுவிக்
கிளையில் காட்டி ஐ முறை கிளத்திக்
குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி 15
விளரி எடுத்து மத்திமை விலக்கி
ஒற்றைத் தாரி ஒரு நரம்பு இரட்ட
விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்திக்
குருவி விண் இசைக்கும் அந்தரக் குலிதம்
புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி 20
விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்துத்
தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும்
ஆங்கு அவை நான்கும் அணி உழை ஆக்கிப்
பூரகம் கும்பகம் புடை எழு விளரி
துத்தம் தாரம் கைக்கிளை அதனுக்கு 25
ஒன்றினுக்கு ஏழு நின்று நனி விரித்துத்
தனி முகம் மலர்ந்து தம் இசை பாடக்
கூளியும் துள்ள ஆடிய நாயகன்
இணை அடி ஏத்தும் அன்பினர்க்கு உதவும்
திருவறம் வந்த ஒருவன் தூதுகள் 30
இன்பமும் இயற்கையும் இகழாக் காமமும்
அன்பும் சூளும் அளியுறத் தந்து என்
நெஞ்சமும் துயிலும் நினைவும் உள்ளமும்
நாணமும் கொண்ட நடுவினர் இன்னும்
கொள்வதும் உளதோ கொடுப்பதும் உளதோ 35
சேய் குறி இனிய ஆயின்
கவ்வையின் கூறுவிர் மறைகள் விட்டு எமக்கே
** கல்லாடம் முற்றும்