4. சூளாமணி


@0. பாயிரம்
**கடவுள் வாழ்த்து

#1
வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்-கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும்
சென்றான் திகழும் சுடர் சூழ் ஒளி மூர்த்தியாகி
நின்றான் அடிக் கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்.
**நூல்நுதலியபொருள்

#2
அம் கண் உலகிற்கு அணிவான் சுடராகி நின்றான்
வெங்கண் வினை போழ்ம் திருவச் சரண் சென்ற மேல் நாள்
பைங்கண் மதர்வைப் பகு வாய் அரி_ஏறு போழ்ந்த
செம் கண் நெடியான் சரிதம் இது செப்பலுற்றேன்.
**அவை அடக்கம்

#3
கொற்றங்கொள் நேமி நெடுமால் குணம் கூற இப்பால்
உற்று இங்கு ஒர் காதல் கிளரத் தமிழ் நூற்கலுற்றேன்
மற்று இங்கு ஒர் குற்றம் வருமாயினும் நங்கள்_போல்வார்
அற்றங்கள் காப்பார் அறிவில் பெரியார்கள் அன்றே.
**நூலரங்கேற்றிய களனும், கேட்டோரும்

#4
நா மாண்பு உரைக்கும் குறை என் இது நாம வென் வேல்
தேம் மாண் அலங்கல் திருமால் நெடுஞ்சேந்தன் என்னும்
தூ மாண் தமிழின் கிழவன் சுடர் ஆர மார்பின்
கோமான் அவையுள் தெருண்டார் கொளப்பட்டது அன்றே.

#5
செம் கண் நெடியான் திறம் பேசிய சிந்தைசெய்த
நங்கள் மறுவும் மறு அன்று நல்லார்கள் முன்னர்
அம் கண் விசும்பின் இருள் போழ்ந்து அகல் வான் எழுந்த
திங்கள் மறுவும் சிலர் கை தொழச் செல்லும் அன்றே.
**நூல் வந்த வழி

#6
விஞ்சைக்கு இறைவன் விரை சூழ் முடி வேந்தன் மங்கை
பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடிப் பாவை பூ ஆர்
வஞ்சிக் கொடி போல்பவள் காரணமாக வந்த
செம் சொல் புராணத்து உரையின்வழிச் சேறும் அன்றே.

@1. நாட்டுச் சருக்கம்
**சுரமை நாட்டின் சிறப்பு

#7
மஞ்சு சூழ் மணி வரை எடுத்த மால் அமர்
இஞ்சி சூழ் அணி நகர் இருக்கை நாடது
விஞ்சை நீள் உலகுடன் விழாக்கொண்டு_அன்னது
துஞ்சும் நீள் நிதியது சுரமை என்பவே.
**கயல்களும் கண்களூம்

#8
பங்கயம் காடுகொண்டு அலர்ந்த பாங்கு எலாம்
செங்கயல் இனம் நிரை திளைக்கும் செல்வமும்
மங்கையர் முகத்தன மதர்த்த வாள் அரி
அம் கயல் பிறழ்ச்சியும் அறாத நீரவே.
**வயல்களும் ஊர்களும்

#9
ஆங்கு அவர் அணி நடை அன்னத் தோட்டன
தீம் குரல் மழலையால் சிலம்பும் தண்பணை
வீங்கு இள முலையவர் மெல் என் சீறடி
ஓங்கு இரும் சிலம்பினால் சிலம்பும் ஊர்களே.
**பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை

#10
நிழல் அகம் தவழ்ந்து தேன் நிரந்து தாது சேர்
பொழில் அகம் பூவையும் கிளியும் பாடுமே
குழல் அகம் குடைந்து வண்டு உறங்கும் கோதையர்
மழலையும் யாழுமே மலிந்த மாடமே.
**வண்டுகளுங் கொங்கைகளும்

#11
காவியும் குவளையும் நெகிழ்ந்து கள் உமிழ்
ஆவி உண்டு அடர்த்த தேன் அகத்து மங்கையர்
நாவியும் குழம்பும் உண் நகிலம் நல் தவம்
மேவி நின்றவரையும் மெலிய விம்முமே.
**சுரமை நாட்டின் நானிலவளம்

#12
வான் இலங்கு அருவிய வரையும் முல்லை வாய்த்
தேன் இலங்கு அருவிய திணையும் தேறல் சேர்
பானல் அம் கழனியும் கடலும் பாங்கு அணி
நானிலம் கலந்து பொன் நரலும் நாடு அதே.
**குறிஞ்சி நிலம்

#13
முன்றில் எங்கும் முருகு அயர் பாணியும்
சென்று வீழ் அருவித் திரள் ஓசையும்
வென்றி வேழ முழக்கொடு கூடி வான்
ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம்.
**முல்லை நிலம்

#14
ஏறு கொண்டு எறியும் பணைக் கோவலர்
கூறு கொண்டு எழு கொன்றை அம் தீம் குழல்
காறு_கொண்டவர் கம்பலை என்று இவை
மாறுகொண்டு சிலம்பும் ஒர் மாடு எலாம்.
**மருத நிலம்

#15
அணங்கு_அனார் அணவு ஆடல் முழவமும்
கணம்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்
மணம்கொள் வார் முரசும் வயல் ஓதையும்
இணங்கி எங்கும் இருக்கும் ஒர்பால் எலாம்.
**நெய்தல் நிலம்

#16
கலவர் இன்னியமும் கடலச் சிறார்
புலவு நீர்ப் பொரு பூண் எறி பூசலும்
நிலவு வெண் மணல் நீள் இரும் கானல் வாய்
உலவும் ஓதமும் ஓங்கும் ஒர்பால் எலாம்.
**குறிஞ்சி நிலம்

#17
கை விரிந்தன காந்தளும் பூம் சுனை
மை விரிந்தன நீலமும் வான் செய் நாள்
மெய் விரிந்தன வேங்கையும் சோர்ந்த தேன்
நெய் விரிந்தன நீள் இரும் குன்று எலாம்.
**முல்லை நிலம்

#18
கொன்றையும் குருந்தும் குலைக் கோடலும்
முன்றில் ஏறிய முல்லை அம் பந்தரும்
நின்று தேன் நிரந்து ஊத விரிந்து அரோ
மன்று எலாம் மணம் நாறும் மருங்கினே.
**மருதம்

#19
நாற விண்டன நெய்தலும் நாள்_மதுச்
சேறு விண்ட செந்தாமரைக் கானமும்
ஏறி வண்டு இனம் ஊன்ற இழிந்த தேன்
ஊறி வந்து ஒழுகும் ஒருபால் எலாம்.
**நெய்தல்

#20
கோடு உடைந்து_அன தாழையும் கோழ் இருள்
மோடு உடைந்து_அன மூரிக் குவளையும்
தோடு உடைந்தன சூகமும் கற்பகக்
காடு உடைந்தன போன்று உள கானலே.
**குறிஞ்சி

#21
நீல ஆலவட்டத்தின் நிறம்கொளக்
கோலும் பீலிய கோடு உயர் குன்றின் மேல்
ஆலும் மா மழை நீள் முகில் ஆர்த்-தொறும்
ஆலும் மா மயில் ஆலும் ஒர்பால் எலாம்.
**முல்லை

#22
நக்க முல்லையும் நாகு இளம் கொன்றையும்
உக்க தாது அடர்கொண்டு ஒலி வண்டு அறா
எக்கர் ஈர் மணல் கிண்டி இளம் பெடைப்
பக்கம் நோக்கும் பறவை ஒர்பால் எலாம்.
**மருதம்

#23
துள் இறாக் கவுள்கொண்டு சுரும்பொடு
கள் அறாத செந்தாமரைக் கானகத்
துள் அறாது உதைந்து ஓகை இரட்டுறப்
புள் அறாது புலம்பின பொய்கையே.
**நெய்தல்

#24
வெண் முளைப் பசும் தாமரை மென் சுருள்
முள் முளைத் திரளோடு முனிந்துகொண்டு
உள் முளைத்து இள அன்னம் உழக்கலால்
கள் முளைத்த தடத்த கழி எலாம்.
**குறிஞ்சி

#25
காந்தள் அம் குலையால் களி வண்டு இனம்
கூந்து இளம் பிடி வீசக் குழாங்களோடு
ஏந்து சந்தனச் சாரல் இரும் கைமா
மாந்தி நின்று உறங்கும் வரை மாடு எலாம்,
**முல்லை

#26
தார் செய் கொன்றை தளித்த தண் தேறல் உண்டு
ஏர்செய்கின்ற இளம் புல் இரும் குழைக்
கார்செய் காலை கறித்-தொறும் மெல்லவே
போர்செய் மா இனம் பூத் தண் புறணியே.
**மருதம்

#27
அள் இலைக் குவளைத் தடம் மேய்ந்து அசைஇக்
கள் அலைத்த கவுள் கரு மேதி பால்
உள் அலைத்து ஒழுகக் குடைந்து உண்டலால்
புள் அலைத்த புனல புலங்களே.
**நெய்தல்

#28
கெண்டை அம் சினை மேய்ந்து கிளர்ந்து போய்
முண்டகத் துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார் கரை மா மகரக் குழாம்
கண்டு நின்று கனலும் கழி எலாம்.
**குறிஞ்சி

#29
கண் நிலாம் கழையின் கதிர்க் கற்றையும்
மண் நிலாம் குரல் வார் தினை வாரியும்
எண்_இல் ஆங்க விளைவன ஈட்டமும்
உண்ணில் ஆங்கு உலவாமை உயர்ந்தவே.
**முல்லை

#30
பேழ்த்த காயின பேர் எள் பிறங்கு இணர்
தாழ்த்த காயின தண் அவரைக் கொடி
சூழ்த்த காய்த் துவரை வரகு என்று இவை
மூழ்த்த போன்று உள முல்லை நிலங்களே.
**மருதம்

#31
மோடு கொண்டு எழும் மூரிக் கழைக் கரும்பு
ஊடு கொண்ட பொதும்பரொடு உள் விராய்த்
தோடு கொண்ட பைங்காய் துவள் செந்நெலின்
காடு கொண்டு உள கண் அகல் நாடு எலாம்.
**நெய்தல்

#32
சங்கு நித்திலமும் தவழ் இப்பியும்
தெங்கு அம் தீம் குலை ஊறிய தேறலும்
வங்க வாரியும் வார் அலை வாரியும்
தங்கு வாரிய தண் கடல் நாடு எலாம்.
**திணை மயக்கம் [ மலர்]

#33
கொடிச்சியர் புனத்து அயல் குறிஞ்சி நெய் பகர்
இடைச்சியர் கதுப்பு அயல் கமழும் ஏழை அம்
கடைச்சியர் களை எறி குவளை கானல் வாய்த்
தொடுத்து அலர் பிணையலார் குழலுள் தோன்றுமே.
**திணை மயக்கம் [ ஒலி ]

#34
கலவர்-தம் சிறுபறை இசையில் கைவினைப்
புலவர் தேம் பிழி மகிழ் குரவை பொங்குமே
குலவு கோல் கோவலர் கொன்றைத் தீம் குழல்
உலவு நீள் அசுணமா உறங்கும் என்பவே.
**சுரமை நாட்டின் சிறப்பு

#35
மாக் கொடி மாணையும் மெளவல் பந்தரும்
கார்க் கொடி முல்லையும் கலந்து மல்லிகைப்
பூக் கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக் கடி கமழ்ந்து தான் துறக்கம் ஒக்குமே.

@2. நகரச் சருக்கம்
**சுரமை நாட்டுப் போதனமா நகரம்

#36
சொன்ன நீர் வளமைத்து ஆய சுரமை நாட்டு அகணி சார்ந்து
மன்னன் வீற்றிருந்து வைக நூலவர் வகுக்கப்பட்ட
பொன் அவிர் புரிசை வேலிப் போதனம் என்பது உண்டு ஓர்
நல் நகர் நாகலோகம் நகுவது ஒத்து இனியது ஒன்றே.
**நகரத்தின் அமைதி

#37
சங்கம் மேய் தரங்க வேலித் தடம் கடல் பொய்கை பூத்த
அம் கண் மா ஞாலம் என்னும் தாமரை அலரின் அம் கேழ்ச்
செம் கண் மால் சுரமை என்னும் தேம் பொகுட்டு அகத்து வைகும்
நங்கையர் படிவம் கொண்ட நலத்தது நகரம் அன்றே.
**அகழியும் மதிலரணும்

#38
செம் சுடர்க் கடவுள் திண் தேர் இவுளி கால் திவள ஊன்றும்
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து
அம் சுடர் இஞ்சி ஆங்கு ஓர் அகழ் அணிந்து அலர்ந்த தோற்றம்
வெம் சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீது இட்டன்றே.
**அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு

#39
இரும்பு இடு தொடரின் மாவின் எழு முதல் பிணித்த யானைக்
கரும்பு இடு கவளம் ஊட்டும் கம்பலை கலந்த காவின்
அரும்பிடை அலர்ந்த போதின் அல்லி உண்டு அரற்றுகின்ற
சுரும்பொடு துதைந்து தோன்றும் சூழ் மதில் இருக்கை எல்லாம்.
**மாடங்களின் மாண்பு

#40
மான் அளாம் மதர்வை நோக்கின் மை அரி மழை_கணார்-தம்
தேன் அளாம் உருவம் கண்ணிச் செல்வர் தோள் திளைக்கும் மாடம்
கான் அளாம் காமவல்லி கற்பகம் கலந்த கண் ஆர்
வான் அளாய் மலர்ந்து தோன்றும் மணி வரை அனையது ஒன்றே.

#41
அகில் எழு கொழும் புகை மஞ்சின் ஆடவும்
முகில் இசை என முழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடி_அனார் மின்னின் தோன்றவும்
இகலின மலையொடு மாடம் என்பவே.
**மாடங்களின் சிறப்பு

#42
கண் எலாம் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண் நிலாத் தவழ் மணித் தலமும் சார்ந்து அரோ
மண்ணினால் இயன்றில மதலை மாடமே.
**மாடத்திற் பலவகை ஒலிகள்

#43
மாட வாய் மணி முழா இசையும் மங்கையர்
ஆடுவார் சிலம்பு இணை அதிரும் ஓசையும்
பாடுவார் பாணியும் பயின்று பல் கலம்
மூடி மாண் நகர் அது முரல்வது ஒக்குமே.
**வண்டுகளின் மயக்கம்

#44
தாழி வாய்க் குவளையும் தண் என் ஓதியர்
மாழை வாள் நெடும் கணும் மயங்கி வந்து சென்று
யாழ் அவாம் இன் குரல் ஆலித்து ஆர்த்து அரோ
ஏழை வாய்ச் சுரும்பு இனம் இளைக்கும் என்பவே.
**கடைத்தெரு

#45
பளிங்கு போழ்ந்து இயற்றிய பலகை வேதிகை
விளிம்பு தோய் நெடும் கடை வீதி வாய் எலாம்
துளங்கு பூ_மாலையும் சுரும்பும் தோன்றலால்
வளம்கொள் பூம் கற்பக வனமும் போலுமே.
**சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்

#46
காவி வாய்க் கரும்_கணார் காமர் பூம் சிலம்பு
ஆவி வாய் மாளிகை அதிரக் கேள்-தொறும்
தூவி வான் பெடை துணை துறந்த-கொல் என
வாவி வாய் இள அனம் மயங்கும் என்பவே.
**அரசர் தெருவழகு

#47
விலத் தகைப் பூம் துணர் விரிந்த கோதையர்
நலத் தகைச் சிலம்பு அடி நவில ஊட்டிய
அலத்தகக் குழம்பு தோய்ந்து அரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே.
**செல்வச் சிறப்பு

#48
கள் நிலாம் கடி மலர்க் குவளைக் கற்றையும்
வெண் நிலாத் திரள் என விளங்கும் ஆரமும்
வண்ண வான் மல்லிகை வளாய மாலையும்
அண்ணல் மா நகர்க் கவைக்கு அரிய அல்லவே.
**மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி

#49
தேம் பழுத்து இனிய நீர் மூன்றும் தீம் பலா
மேம் பழுத்து அளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் குவைகளும் மது_தண்டு ஈட்டமும்
தாம் பழுத்து உள சில தவள மாடமே.
**இன்ப உலகம்

#50
மைந்தரும் மகளிரும் மாலை காலை என்று
அந்தரப்படுத்தவர் அறிவது இன்மையால்
சுந்தரப் பொன் துகள் துதைந்த பொன் நகர்
இந்திர உலகம் வந்து இழிந்தது ஒக்குமே.
**பயாபதி மன்னன் மாண்பு

#51
மற்று அ மா நகர் உடை மன்னன் தன் உயர்
ஒற்றை வெண்குடை நிழல் உலகிற்கு ஓர் உயிர்ப்
பெற்றியான் பயாபதி என்னும் பேர் உடை
வெற்றி வேல் மணி முடி வேந்தர் வேந்தனே.
**பயாபதி மன்னன் சிறப்பு

#52
எண்ணினர் எண் அகப்படாத செய்கையான்
அண்ணியர் அகன்றவர் திறத்தும் ஆணையான்
நண்ணுநர் பகைவர் என்று இவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யன் அம் தானை மன்னனே.
**மக்கட்குப் பகையின்மை

#53
நாம வேல் நர_பதி உலகம் காத்த நாள்
காமவேள் கவர் கணை கலந்தது அல்லது
தாம வேல் வயவர்-தம் தழல் அம் கொல் படை
நாம நீர் வரைப்பகம் நலிவது இல்லையே.
**குடிகளை வருத்தி இறை கொள்ளாமை

#54
ஆறிலொன்று அறம் என அருளின் அல்லது ஒன்று
ஊறுசெய்து உலகினின் உவப்பது இல்லையே
மாறிநின்றவரையும் வணக்கின் அல்லது
சீறிநின்று எவரையும் செகுப்பது இல்லையே.
**மன்னனின் முந்நிழல்

#55
அடி நிழல் அரசரை அளிக்கும் ஆய் கதிர்
முடி நிழல் முனிவரர் சரணம் மூழ்குமே
வடி நிழல் வனை கதிர் எஃகின் மன்னவன்
குடை நிழல் உலகு எலாம் குளிர நின்றதே.
**இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்

#56
மன்னிய பகைக் குழாம் ஆறும் வையகம்
துன்னிய அரும் பகைத் தொகையும் இன்மையால்
தன்னையும் தரையையும் காக்கும் என்பது அ
மன்னவன் திறத்து இனி மருள வேண்டுமோ.
**அரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்

#57
மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறு சால்
நூலினால் பெரியவர் நுழைந்த சுற்றமா
ஆலும் நீர் அன்னமோடு அரச அன்னமே
போல நின்று உலகினைப் பொதுமை நீக்கினான்.
**அரசர் சுற்றத்தின் இயல்பு

#58
கொதி நுனைப் பகழியான் குறிப்பின் அல்லது ஒன்று
இது நமக்கு இசைக்க என எண்ணும் எண்_இலார்
நொதுமலர் வெருவுறா நுவற்சியாளர் பின்
அது அவன் பகுதிகள் அமைதி வண்ணமே.
**அரசியர்

#59
மற்று அவன் தேவியர் மகர வார் குழைக்
கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார்
இற்றது இ மருங்குல் என்று இரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் முற்றியார்.
**அரசியர் இயல்பு

#60
பஞ்சு அனுங்கு அடியினார் பரந்த அல்குலார்
செம் சுணங்கு இள முலை மருங்கு சிந்தினார்
வஞ்சி அம் குழைத் தலை மதர்வைக் கொம்பு தம்
அம் சுடர் இணர்க்கு ஒசிந்த அனைய ஐம்மையார்.
**காமம் பூத்த காரிகையர்

#61
காமத் தொத்து அலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்
தாமத்து ஒத்து அலர்ந்து தாழ்ந்து இருண்ட கூந்தலார்
தூமத்துச் சுடர் ஒளி துளும்பு தோளினார்
வாமத்தின் மயங்கி மை மதர்த்த வாள் கணார்.
**பட்டத்து அரசிகள் இருவர்

#62
ஆயிரர் அவர் அவர்க்கு அதிகத் தேவியர்
மா இரு விசும்பினின் இழிந்த மாண்பினார்
சே இரும் தாமரைத் தெய்வம் அன்னர் என்று
ஏய் உரை இலாதவர் இருவர் ஆயினார்.
**பெருந்தேவியர் இருவரின் பெற்றி

#63
தீம் கரும்பு அமிழ்தம் ஊட்டித் தேன் அளாய்ப் பிழிந்த போலும்
ஓங்கு இரும் கடல் அம் தானை வேந்து அணங்கு உறுக்கும் இன் சொல்
வீங்கு இரும் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி
தாங்க அரும் கற்பின் தங்கை சசி என்பாள் சசியோடு ஒப்பாள்.
**மங்கையர்க்கரசியராகும் மாண்பு

#64
பூம் குழை மகளிர்க்கு எல்லாம் பொன் மலர் மணிக் கொம்பு அன்ன
தேம் குழல் மங்கைமார்கள் திலகமாய்த் திகழ நின்றார்
மா கொழுந்து அசோகம் என்று ஆங்கு இரண்டுமே வயந்தகாலத்து
ஆங்கு எழுந்து அவற்றை எல்லாம் அணிபெற அலரும் அன்றே.
**இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்

#65
பெருமகன் உருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்
மருவினும் புதிய போலும் மழலை அம் கிளவியாலும்
திரு_மகள் புலமை ஆக்கும் செல்வி என்று இவர்கள் போல
இருவரும் இறைவன் உள்ளத்து ஒருவராய் இனியர் ஆனார்.
**மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்

#66
மன்னவன் ஆவி ஆவார் மகளிர் அ மகளிர்-தங்கள்
இன் உயிர் ஆகி நின்றான் இறைமகன் இவர்கள்-தங்கட்கு
என்னை-கொல் ஒருவர்-தம் மேல் ஒருவர்க்கு இங்கு உள்ளம் ஓட
முன்னவன் புணர்த்த ஆறு அ மொய் மலர்_கணையினானே.
**மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்

#67
சொல் பகர்ந்து உலகம் காக்கும் தொழில் புறத்து ஒழிய வாங்கி
மல் பகர் அகலத்தானை மனத்திடைப் பிணித்து வைத்தார்
பொற்பு அகம் கமழப் பூத்த தேம் துணர் பொறுக்கல் ஆற்றாக்
கற்பகக் கொழுந்தும் காமவல்லி அம் கொடியும் ஒப்பார்.
**மாலாகி நிற்கும் மன்னன்

#68
மங்கையர் இருவர் ஆகி மன்னவன் ஒருவன் ஆகி
அங்கு அவர் அமர்ந்தது எல்லாம் அமர்ந்து அருள் பெருகி நின்றான்
செங்கயல் மதர்த்த வாள் கண் தெய்வ மா மகளிர்-தோறும்
தங்கிய உருவம் தாங்கும் சக்கரன் தகைமை ஆனான்.

#69
முற்றும் நீர் வளாகம் எல்லாம் முழுதுடன் நிழற்றும் மூரி
ஒற்றை வெண்குடையின் நீழல் உலகு கண்படுப்ப ஓம்பிக்
கொற்றவன் நெடும்_கணார்-தம் குவி முலைத் தடத்து மூழ்கி
மற்று அவற்கு அரசச் செல்வம் இன்னணம் அமர்ந்தது அன்றே.

@3. குமாரகாலச் சருக்கம்
**தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல்

#70
ஆங்கு அவர் திரு வயிற்று அமரர் கற்பம் ஆண்டு
ஈங்கு உடன் இழிந்து வந்து இருவர் தோன்றினார்
வாங்கு நீர்த் திரை வளர் வளையும் அக் கடல்
ஓங்கும் நீர் நிழலும் ஒத்து ஒளிரும் மூர்த்தியார்.
**மிகாபதி விசயனைப் பெறுதல்

#71
பெண் நிலாம் தகைப் பெருந்தேவி பேர் அமர்க்
கண்ணில் ஆம் களி வளர் உவகை கைம்மிகத்
தண் நிலா உலகு எலாம் தவழ்ந்து வான் கொள
வெண் நிலா சுடர் ஒளி விசயன் தோன்றினான்.
**சசி திவிட்டனைப் பெறுதல்

#72
ஏர் அணங்கு இளம் பெருந்தேவி நாளுறச்
சீர் அணங்கு அவிர் ஒளித் திவிட்டன் தோன்றினான்
நீர் அணங்கு ஒளி வளை நிரந்து விம்மின
ஆர் அணங்கு அலர் மழை அமரர் சிந்தினார்.
**விசயதிவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்

#73
திசை எலாம் தெளிந்தன தேவர் பொன் நகர்
இசை எலாம் பெரும் சிறப்பு இயன்ற ஏற்பவர்
நசை எலாம் அவிந்தன நலியும் தீ_வினைப்
பசை எலாம் பறந்தன பலர்க்கும் என்பவே.
**மைந்தர்களிருவரும் மங்கையர் மனத்தைக் கவர்தல்

#74
செய்த மாண் நகரியில் சிறந்து சென்றுசென்று
எய்தினார் குமரர் ஆம் பிராயம் எய்தலும்
மை துழாம் நெடும்_கணார் மனத்துள் காமனார்
ஐது உலாம் கவர் கணை அரும்புவைத்தவே.
**விசயனுடைய உடல், கண், குஞ்சி,காது

#75
காமரு வலம்புரி கமழும் மேனியன்
தாமரை அக இதழ் தடுத்த கண்ணினன்
தூ மருள் இருள் துணர்ந்த அனைய குஞ்சியன்
பூ மரு பொலம் குழை புரளும் காதினன்.
**மாலை,மார்பு , நிறம் ,தோள், நடை ஆகியவை

#76
வாடல்_இல் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
தாள் தவழ் தட_கையன் தயங்கு சோதியன்
கோடு உயர் குன்று எனக் குலவு தோளினன்
பீடு உடை நடையினன் பெரிய நம்பியே.
**திவிட்டனுடய உடல் முதலியன

#77
பூவை அம் புது மலர் புரையும் மேனியன்
தூ விரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீ விரி ஆம்பலின் சிவந்த வாயினன்
மா விரி திரு மறு அணிந்த மார்பினன்.
**கை முதலியன

#78
சங்கு இயல் வலம்புரி திகிரி என்று இவை
தங்கிய அம் கையன் அடித் தண் போதினன்
மங்கல மழ களிறு அனைய செல்கையன்
இங்கு முன் மொழிந்தவற்கு இளைய நம்பியே.
**இருவரும் இளமை எய்துதல்

#79
திரு விளைத்து உலகு கண்மலரத் தெவ்வர்-தம்
புரி வளை நல் நகர்ச் செல்வம் புல்லென
வரி வளைத் தோளியர் மனத்துள் காம_நோய்
எரி வளைத்திடுவதோர் இளமை எய்தினார்.
**மைந்தர்கள் இருவரும் மங்கயர்கட்குத் தோன்றுதல்

#80
உவர் விளை கடல் கொடிப் பவளம் ஓட்டிய
துவர் இதழ் வாயவர் துளங்கும் மேனியர்
அவர்கள்-தம் அருள்-கொலோ அனங்கன் ஆய் மலர்
கவர் கணை கடைக்கணித்து உருவு காட்டினார்.
**மங்கையர் மயங்குதல்

#81
கடல் ஒளி மணி_வணன் கனவில் வந்து எமது
உடலகம் வெறுவிதாய் உள்ளம் வவ்வினான்
விடல்_இலன் எம் உயிர் விடுக்கும்-கொல் என
மடவரலவர் குழாம் மயக்கமுற்றதே.
**நங்கையர் மனத்தில் விசயன்

#82
வார் வளை_வண்ணன் என் மனத்து உளான் பிறர்
ஏர் வளர் நெடும் கணுக்கு இலக்கம்_அல்லனால்
கார் வளர் கொம்பு_அனார் இவர்கள் காம_நோய்
ஆர் வளர்த்தவர்-கொல் என்பவரும் ஆயினார்.
**மங்கையர் மாட்சி

#83
கண் நிலாம் கவின் ஒளிக் காளைமார் திறத்து
உள் நிலா எழுதரு காம ஊழ் எரி
எண்_இலாச் சுடர் சுட விரிந்தும் நாண் விடாப்
பெண் அலால் பிறிது உயிர் பெரியது இல்லையே.
**காதல் தீ வளர்க்கும் காளைப் பருவம்

#84
திரு வளர் செல்வர் மேல் சென்ற சிந்தை_நோய்
ஒருவரின் ஒருவர் மிக்கு உடையராதலால்
உரு வளர் கொம்பு_அனார் உள்ளம் காய்வது ஓர்
எரி வளர்த்திடுவது ஓர் இளமை எய்தினார்.
**அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்

#85
மற்று ஒர் நாள் அமரிகைக் கொடிகொள் மா மணிச்
சுற்று வான் சுடர் ஒளி தழுவிச் சூழ் மலர்
முற்றி வண்டு இனம் விடா முடி கொள் சென்னி அக்
கொற்றவன் இளையவர் குழைய வைகினான்.
**அரசன் உறங்குதல்

#86
மஞ்சு உடை மணி நகு மாலை மண்டபத்து
அம் சுடர் அகில் புகை அளைந்து தேன் அளாய்ப்
பஞ்சு உடை அமளி மேல் பள்ளியேற்பவன்
செம் சுடர் இரிவது ஓர் திறத்தன் ஆயினான்.
**உடற் பாதுகாப்பாளர்கள்

#87
மன்னவன் துயில்விடுத்து அருள மைந்தர் பொன்
துன்னிய உடையினர் துதைந்த கச்சையர்
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்
அன்னவர் அடி முதல் காவல் நண்ணினார்.
**திருப்பள்ளி எழுச்சி

#88
தங்கிய தவழ் ஒளி தடாவி வில் இட
மங்கல உழைக்கலம் மருங்கு சேர்ந்தன
அங்கு அவன் கண் கழூஉ அருளிச் செய்தனன்
பங்கய_முகத்தர் பல்லாண்டு கூறினார்.
**அந்தணர் வாழ்த்து கூற அரசன் அவர்களை வணங்குதல்

#89
அந்தணர் ஆசு இடை கூறி ஆய் மலர்ப்
பைந்துணர் நெடு முடி பயில ஏற்றினார்
செம் துணர் நறு மலர் தெளித்துத் தேவர்-மாட்டு
இந்திரன்_அனையவன் இறைஞ்சி ஏத்தினான்.

#90
விரை அமர் கோதையர் வேணுக் கோலினர்
உரை அமர் காவல் பூண் கடையின் ஊடு போய்
முரசு அமர் முழங்கு ஒலி மூரித் தானையன்
அரசவை மண்டபம் அடைவது எண்ணினார்.
**அரசன் வாயிலை அடைதல்

#91
பொன் அவிர் திரு_அடி போற்றி போற்றி என்று
அன்ன மெல் நடையவர் பரவ ஆய் துகில்
கன்னியர் கவரி கால் எறியக் காவலன்
முன்னிய நெடும் கடை முற்றம் முன்னினான்.
**மெய்க்காப்பாளர் அரசனைக் காத்தல்

#92
மஞ்சு இவர் வள நகர் காக்கும் வார் கழல்
நஞ்சு இவர் வேல் நர_பதியை ஆயிடை
வெம் சுடர் வாளினர் விசித்த கச்சையர்
கஞ்சுகியவர்கள் மெய் காவல் ஓம்பினார்.
**அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்

#93
வாச நீர் தெளித்து அலர் பரப்பி வானகம்
ஏசு நீள் இருக்கைய இலங்கு சென்னிய
மூசு தேன் நெடும் கடை மூன்றும் போய்ப் புறத்து
ஓசை நீள் மண்டபம் உவந்தது எய்தினான்.
**வேறு – மண்டபத்திற்குள் புகுதல்

#94
பளிங்கு ஒளி கதுவப் போழ்ந்த பலகை கண் குலவச் சேர்த்தி
விளங்கு ஒளி விளிம்பில் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுள்
துளங்கு ஒளி பவளத் திண் கால் சுடர் மணி தவழும் பூமி
வளம் கவின்று அனையது ஆய மண்டபம் மலிரப் புக்கான்.
**அரசன் அணையில் வீற்றிருக்கும் காட்சி

#95
குஞ்சரக் குழவி கவ்விக் குளிர் மதிக் கோடு போலும்
அம் சுடர் எயிற்ற ஆளி அணி முகம் மலர ஊன்றிச்
செம் சுடர் அணி பொன் சிங்காசனம் மிசைச் சேர்ந்த செல்வன்
வெம் சுடர் உதயத்து உச்சி விரிந்த வெய்யவனோடு ஒத்தான்.
**அரசன் குறிப்பறிந்து அமர்தல்

#96
பூ மரு புரிந்த நுண் நூல் புரோகிதன் பொறி வண்டு ஆர்க்கும்
மா மலர் அணிந்த கண்ணி மந்திரக் கிழவர் மன்னார்
ஏம் மரு கடல் அம் தானை இறைமகன் குறிப்பு நோக்கித்
தாமரைச் செம் கண்-தம்மால் பணித்த தானத்தர் ஆனார்.
**சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்

#97
முன்னவர் இருந்த பின்னை மூரி நீர் உலகம் காக்கும்
மன்னவன் கழலைத் தங்கள் மணி முடி நுதியில் தீட்டிப்
பின் அவன் பணித்த தானம் பெறும் முறை வகையின் சேர்ந்தார்
மின் இவர் கடகப் பைம்பூண் வென்றி வேல் வேந்தர் எல்லாம்.
**படைத் தலைவர்கள் உடனிருத்தல்

#98
வழி முறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்
விழு மலர் அடி-கண் மிக்க அன்பினார்; வென்றி நீரார்;
எழு வளர்த்து அனைய தோளார் இளையவர் இன்ன நீரார்
உழையவராக வைத்தான் ஓடை மால் களிற்றினானே.
**புலவர்கள் வருதல்

#99
காவலன் என்னும் செம்பொன் கற்பகம் கவின்ற போழ்தில்
நாவலர் என்னும் வண்டு நகை முகப் பெயரின் ஆய
பூ அலர் பொலிவு நோக்கிப் புல மயம் களிப்ப ஆகிப்
பா அலர் இசையின் தோன்றப் பாடுபு பயின்ற அன்றே.
**இசைப் புலவர்கள் வாழ்த்து கூறுதல்

#100
பண் அமை மகர நல் யாழ்ப் பனுவல் நூல் புலவர் பாடி
மண் அமர் வளாகம் எல்லாம் மலர்ந்த நின் புகழோடு ஒன்றி
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்
கண் அமர் உலகம் காக்கும் கழல் அடி வாழ்க என்றார்.

#101
மஞ்சு உடை மலையின் வல்லி தொடர வான் வணங்க நின்ற
அம் சுடர்க் கடவுள் காத்த அரும் குலம் மலரத் தோன்றி
வெம் சுடர் எஃகம் ஒன்றின் வேந்து கண் அகற்றி நின்ற
செம் சுடர் முடியினாய் நின் கோல் இது செல்க என்றார்.
**வாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை

#102
இன்னணம் பலரும் ஏத்த இனிதின் அங்கு இருந்த வேந்தன்
பொன் அணி வாயில் காக்கும் பூம் கழலவனை நோக்கி
என்னவரேனும் ஆக நாழிகை ஏழு-காறும்
கல் நவில் தோளினாய் நீ வரவிடு காவல் என்றான்.
**நிமித்திகன் வரவு

#103
ஆயிடை அலகு_இல் மெய்ந்நூல் அளவு சென்று அடங்கி நின்றான்
சேய் இடை நிகழ்வது எல்லாம் சிந்தையில் தெளிந்த நீரான்
மேய் இடைபெறுவன் ஆயின் வேந்து காண்குறுவன்-கொல்லோ
நீ இடை அறி சொல் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான்.
**அரசன் நிமித்திகனை வரவேற்றல்

#104
ஆங்கு அவன் அரசர்_கோமான் குறிப்பு அறிந்து அருளப்பட்டீர்
ஈங்கு இனிப் புகு-மின் என்றான் இறைவனை அவனும் சேர்ந்தான்
வீங்கு இரும் தானையானும் வெண் மலர் பிடித்த கையால்
ஓங்கு இரும் தானம் காட்டி உவந்து இனிது இருக்க என்றான்.
**நிமித்திகன் தன் ஆற்றலை காட்டத் தொடங்குதல்

#105
உற்ற தன் ஒழுக்கிற்கு ஏற்ப உலகு உபசாரம் நீக்கிக்
கொற்றவன் குறிப்பு நோக்கி இருந்த பின் குண_குன்று ஒப்பான்
முற்றிய உலகின் மூன்று காலமும் முழுதும் நோக்கிக்
கற்ற நூல் புலமை-தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான்.
**அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்

#106
கயம் தலைக் களிற்றினாய் ஓர் கனாக் கண்டது உளது கங்குல்
நயந்து அது தெரியின் நம்பி நளி கடல்_வண்ணன்-தன்னை
விசும்பகத்து இழிந்து வந்து ஓர் வேழம் வெண் போது சேர்ந்த
தயங்கு ஒளி மாலை சூட்டித் தன் இடம் அடைந்தது அன்றே.
**கனவின் பயனை நிமித்திகன் கூறுதல்

#107
மல் மலர்ந்து அகன்ற மார்ப மற்று அதன் பயனும் கேள்மோ
நல் மலர் நகைகொள் கண்ணி நம்பி-தன் நாமம் ஏத்தி
மின் மலர்ந்து இலங்கு பைம்பூண் விஞ்சை வேந்து ஒருவன் வந்து
தன் மகள் ஒருத்தி-தன்னைத் தந்தனன் போகும் என்றான்.
**தூதன் ஒருவன் வருவான் என்றல்

#108
கள் பகர் திவலை சிந்தும் கடி கமழ் குவளைக் கண்ணித்
திட்பமாம் சிலையினாய் நீ தெளிக நாள் ஏழு சென்றால்
ஒட்பமாய் உரைக்க_வல்லான் ஒருவன் ஓர் ஓலை கொண்டு
புட்பமாகரண்டம் என்னும் பொழிலகத்து இழியும் என்றான்.
**நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல்

#109
என்று அவன் இயம்பக் கேட்டே இருந்தவர் வியந்து நோக்கிச்
சென்று உயர் திலகக் கண்ணித் திவிட்டன் இத் திறத்தனேயாம்
ஒன்றிய உலகம் எல்லாம் ஒரு குடை நீழல் காக்கும்
பொன் திகழ் அலங்கல் மார்ப போற்றி பொய் அன்று இது என்றார்.
**அரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல்

#110
உரை அமைந்து இருப்ப இப்பால் ஓது நாழிகை ஒன்று ஓட
முரசம் ஒன்று அதிர்த்தது ஓங்கி அதிர்தலும் முகத்தினாலே
அரசவை விடுத்த வேந்தன் அகத்த நூலவரை நோக்கி
வரை உயர் மாடக் கோயில் மந்திரசாலை சேர்ந்தான்.
**அரசன் பேசுதல்

#111
கங்குல் வாய்க் கனவு அவன் கருதிச் சொற்றதும்
மங்கலப் பெரும் பயன் வகுத்த வண்ணமும்
கொங்கு அலர் தெரியலான் கூறிக் கொய் மலர்த்
தொங்கல் ஆர் நெடு முடி சுடரத் தூக்கினான்.
**அமைச்சர்கள் பேசுதல்

#112
சூழும் நீர் உலகு எலாம் தொழுது தன் அடி
நீழலே நிரந்து கண்படுக்கும் நீர்மையான்
ஆழி அம் கிழவனாய் அலரும் என்பது
பாழி அம் தோளினாய் பண்டும் கேட்டுமே.
**திவிட்டன் சிறந்தவனே என்றல்

#113
நல் தவம்_உடையனே நம்பி என்று பூண்
வில் தவழ் சுடர் ஒளி விளங்கும் மேனி அக்
கொற்றவன் குறிப்பினை அறிந்து கூறிய
மற்று அவர் தொடங்கினார் மந்திரத்து_உளார்.
**திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்

#114
சங்க_லேகையும் சக்கர_லேகையும்
அங்கை உள்ளன ஐயற்கு ஆதலால்
சங்க_பாணியான் சக்கராயுதம்
அங்கை ஏந்தும் என்று அறையல் வேண்டுமே.
**வித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்

#115
விஞ்சையர் உலகு உடை வேந்தன்-தன் மகள்
வஞ்சி அம் கொடி இடை மயில் அம் சாயலாள்
எஞ்சல்_இன்று இயங்கி வந்து இழியுமாய்விடில்
அஞ்சி நின்று அ உலகு ஆட்சி செல்லுமே.
**பளிங்குமேடை யமைத்துக் காவல் வைப்போம் என்றல்

#116
நாம் இனி மற்று அவன் மொழிந்த நாளினால்
தே மரு சிலாதலம் திருத்தித் தெய்வமாம்
தூ மரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே.
**அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்

#117
என்று அவர் மொழிந்த பின் இலங்கு பூணினான்
நன்று அது பெரிதும் என்று அருளி நாள்-தொறும்
சென்று அவன் காக்க என மொழிந்து தேம் குழல்
இன் துணையவர்கள்-தம் கோயில் எய்தினான்.
**துருமகாந்தன் பொழிலையடைதல்

#118
எரி படு விரி சுடர் இலங்கு பூணினான்
திரு அடி தொழுது செல் துருமகாந்தனும்
வரி படு மதுகரம் முரல வார் சினைச்
சொரி படு மது மலர்ச் சோலை நண்ணினான்.

@4. இரதநூபுரச் சருக்கம்
**நுதலிப்புகுதல்

#119
புரிசை நீள் மதில் போதன மா நகர்
அரசர் வார்த்தை அவ்வாறு அது நிற்கவே
விரை செய் வார் பொழில் விஞ்சையர் சேடி மேல்
உரையை யாம் உரைப்பான் உற நின்றதே.
**வெள்ளிமலை

#120
நிலவு வெண் சுடர் பாய் நிலம் ஒப்ப நீண்டு
உலவு நீள் கடல் தீண்டி உயர்ந்து போய்
இலகு வில் மணி வான் இயல் மாடு எலாம்
விலக நின்றது விஞ்சையர் குன்றமே.
**தேவர் உடளொளிக்குச் செவ்வான் ஒளி சிறிது ஒத்தல்

#121
தொக்க வானவர் சூழ் குழலாரொடும்
ஒக்க ஆங்கு உளராய் விளையாடலால்
உக்க சோதிகள் சோலையின் ஊடு எலாம்
செக்கர் வானகமும் சிறிது ஒக்குமே.
**பொழிலில் தார் மணம்

#122
அவிழுங் காதலராய் அர_மங்கையர்
பவழ வாய் அமுதம் பருகிக் களி
தவழும் மென் முலை புல்லத் ததைந்த தார்
கமழ நின்றன கற்பகச் சோலையே.
**பொழிலிற் குளிர்ச்சி

#123
கிளரும் சூழ் ஒளிக் கின்னர தேவர்-தம்
வளரும் பூண் முலையாரொடு வைகலால்
துளரும் சந்தனச் சோலைகள் ஊடு எலாம்
நளிரும் தெய்வ நறும் குளிர் நாற்றமே.
**வாடையின் வருகை

#124
மங்குல் வாடை மந்தார் வனம் மீ துழாய்ப்
பொங்கு தாதொடு பூ மதுக் கொப்பளித்து
அங்கராகம் அளாய் அர_மங்கையர்
கொங்கை வாரிகள் மேல் குதிகொள்ளுமே.
**தழைப் படுக்கை

#125
தேன் அகத்து உறையும் செழும் சந்தனக்
கானகத் தழையின் கமழ் சேக்கை மேல்
ஊனகத்தவர் போகம் உவந்து அரோ
வானகத்தவர் வைகுவர் வைகலே.
**பாறையில் மகரந்தப்பொடி

#126
மஞ்சு தோய் வரை மைந்தரொடு ஆடிய
அம்_சில்_ஓதியர் ஆர் அளகப் பொடி
பஞ்சு அராகம் பதித்த பளிக்கு அறைத்
துஞ்சு பாறைகள் மேல் துதைவுற்றதே.
**பாறையில் அடிக்குறி

#127
மாதரார் நடை கற்கிய வான் இழிந்து
ஊது வண்டு உண ஊழ் அடி ஊன்றிய
பாதராகம் பதித்த பளிக்கு அறை
காதலார்-தம் கண் கவர்கின்றவே.
**அருவிநீரில் மல்லிகை மணம்

#128
ஆகு பொன் அறை மேல் அருவித் திரள்
நாக கன்னியர் ஆடலின் ஞால் கை மா
வேக மும்மத வெள்ளம் அளாவிய
போக மல்லிகை நாறும் புனல்களே.
**சேடி நாட்டின் சிறப்பு

#129
பூக்கள் ஆவன பொன் மரை பூம் பொழில்
காக்கள் ஆவன கற்பகச் சோலைகள்
வீக்கு வார் கழல் விஞ்சையர் சேடி மேல்
ஊக்கி யாம் உரைக்கின்றது இங்கு என்-கொலோ.
**இரதநூபுரச் சக்கரவாள நகரம்

#130
வரையின் மேல் மதி கோடு உற வைகிய
திருவ நீள் ஒளித் தென் திசைச் சேடி மேல்
இரதநூபுரச்சக்கரவாளம் என்று
உரைசெய் பொன் நகர் ஒன்று உளது என்பவே.
** வாழையின் மாண்பு

#131
அம் பொன் மாலையார் களித் தலத்து எழுந்து அரத்த வாய்க்
கொம்பு_அனார் கொடுத்த முத்த நீர ஆய கோழ் அரைப்
பைம்பொன் வாழை செம்பொனே பழுத்து வீழ்ந்த சோதியால்
வம்பு பாய்ந்து வந்து ஒசிந்து சாறு சோர்வ மானுமே.
**பாக்கு மரங்கள்

#132
வேய் நிழல் நிலா இலங்கு வெள்ளி விம்மு பாளை-வாய்ப்
பாய் நிழல் பசும் கதிர்ப் பரூஉ மணிக் குலை குலாய்ச்
சேய் நிழல் செழும் பொனால் திரண்ட செம் பழத்தவாய்ப்
போய் நிழல் பொலிந்து வீழ்வ போன்ற பூக ராசியே.
**மாடங்களும் மரங்களும்

#133
காந்தி நின்ற கற்பக நிழல் கலந்து கையறப்
பாய்ந்து எரிந்த போல் விரிந்து பாரிசாதம் ஏர்செய
வாய்ந்து எரிந்த செம்பொன் மாட வாயில் ஆறு கண்கொளப்
போந்து எரிந்த போல் மரம் புறம் பொலிந்து இலங்குமே.
**இன்பத்திடையே தென்றல்

#134
மாசு_இல் கண்ணி மைந்தரோடு மங்கைமார் திளைத்தலில்
பூசு சாந்து அழித்து இழிந்த புள்ளி வேர்பு உலர்த்தலால்
வாசம் உண்ட மாருதம் தென் வண்டு பாட மாட-வாய்
வீச வெள்ளிலோத்திரப் பொதும்பர் பாய்ந்து விம்முமே.
**பலவகை மரங்கள்

#135
ஆம் துணர்த் தமாலமும் அசோக பல்லவங்களும்
தாம் துணர்த்த சந்தனத் தழைத் தலைத் தடாயின
மா துணர்ப் பொதும்பர் வந்து வைக மற்று அது ஊன்றலால்
தேம் துணர்ச் சுமந்து ஒசிந்து அசைந்த தேவதாரமே.
**இன்ப துன்பம்

#136
தெய்வ யாறு காந்தள் அம் சிலம்பு தேம் கொள் பூம் பொழில்
பெளவ முத்த வார் மணல் பறம்பு மெளவல் மண்டபம்
எவ்வ மாடும் இன்ன போல் இடங்கள் இன்பம் ஆக்கலால்
கவ்வை ஆவது அ நகர்க்கு மாரனார் செய் கவ்வையே.
**சுவலனசடி

#137
மற்று அ மா நகர்க்கு வேந்தன் மான யானை மன்னர்_கோன்
அற்றம் இன்றி நின்ற சீர் அழல் பெயர்ப் புணர்ச்சியான்
முற்று முன் சடிப் பெயர் சொல் மூன்று உலஃகும் ஆன்று எழப்
பெற்று நின்ற பெற்றியான் பீடு யாவர் பேசுவார்.
**சுவலனசடியின் பெருமை

#138
இங்கண் ஞாலம் எல்லை சென்று இலங்கு வெண்குடை நிழல்
வெம் கண் யானை வேந்து இறைஞ்ச வென்றியின் விளங்கினான்
கொங்கு கொண்டு வண்டு அறைந்து குங்குமக் குழம்பு அளாய்
அங்கராகம் அங்கு அணிந்து அலர்ந்த ஆர மார்பினான்.
**கல்விநலம் முதலியன

#139
விச்சை ஆய முற்றினான் விஞ்சையார்கள் அஞ்ச நின்று
இச்சை ஆய எய்தினான் ஏந்து செம்பொன் நீள் முடிக்
கச்சை யானை மான வேல் கண் இலங்கு தாரினான்
வெச்செனும் சொல் ஒன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான்.
**அம் மன்னவன்பால் ஒரு குற்றம்

#140
வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவன்
ஒற்றை அம் தனிக் கோல் உலகு ஓம்பும் நாள்
குற்றம் ஆயது ஒன்று உண்டு குணங்களால்
அற்ற கீழ்_உயிர் மேல் அருளாமையே.
**அவ்வரசன் ஆட்சியில் நடுங்கியன

#141
செம்பொன் நீள் முடியான் செருவின் தலை
வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்
நம்பி ஆள்கின்ற நாளில் நடுங்கின
கம்ப மாடக் கதலிகை போலுமே.
**ஆடவர் மேல் வளைந்த வில்

#142
மின்னு ஆர்ந்த மந்தார விளங்கு இணர்
துன்னு தொல் முடியான் ஒளி சென்ற நாள்
மன்னும் ஆடவர் மேல் வளைந்திட்டன
பொன்_அனார் புருவச் சிலை போலுமே.
**உண்ணாத வாய்கள்

#143
வெண் நிலாச் சுடரும் தனி வெண்குடை
எண்_இலாப் புகழான் இனிது ஆண்ட நாள்
உண்_இலாப் பல வாய் உள ஆயின
கண்_அனாரொடு காமக் கலங்களே.
**அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்

#144
மாக் கண் வையம் மகிழ்ந்து தன் தாள் நிழல்
நோக்கி வைக நுனித்து அவன் ஆண்ட நாள்
தாக்கு அணங்கு_அனையார் தம தாயரால்
வீக்கப்பட்டன மென் முலை விம்முமே.
**கடியவையுங் கொடியவையும்

#145
வடிய வாளவன் ஆளவும் வாய்களில்
கடிய ஆயின கள் அவிழ் தே மலர்
அடிய வாய்ப் பயப்பட்டு அடங்கா அலர்க்
கொடிய ஆயின கொங்கு அவிழ் சோலையே.
**அரசன் மனைவி வாயுவேகை

#146
மாயம் மாய நின்றான் வரை மார்பிடை
மேய பூ_மகள் போல விளங்கினாள்
தூய ஆம் முறுவல் துவர் வாயவள்
வாயுவேகை என்பாள் வளர் கொம்பு_அனாள்.
**வாயுவேகையின் மேன்மை

#147
பைம்பொன் பட்டம் அணிந்த கொல் யானையான்
அம் பொன் பட்ட நறும் குழலார்க்கு எலாம்
செம்பொன் பட்டம் செறிந்த திரு நுதல்
அம் பொன் பட்டு_உடையாள் அணி ஆயினாள்.
**இருவரின் இன்பநிலை

#148
கோவை வாய் குழல் அம் குளிர் கொம்பு_அனாள்
காவி வாள் நெடும் கண்ணி அக் காவலற்கு
ஆவியாய் அணங்காய் அமிழ்தாய் அவன்
மேவும் நீர்மையளாய் விருந்து ஆயினாள்.
**அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்

#149
முருக்கு வாயவள் முள் எயிற்று ஏர் நகை
உருக்க வேந்தன் ஒருங்கு உறைகின்ற நாள்
பெருக்கமாகப் பிறந்தனன் பெய் கழல்
அருக்ககீர்த்தி என்பான் அலர் தாரினான்.
**சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்

#150
நாம நல் ஒளி வேல் நம்பி நங்கையாய்
ஏம நல் உலகின் இழிந்து அம் நகைத்
தாம மல்லிகை மாலைச் சயம்பவை
காமவல்லியும் காமுறத் தோன்றினாள்.
**சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு

#151
கங்கை நீர் அன ஞான்ற கதிர் இளம்
திங்களால் தொழப்பட்டது செக்கர் வான்
மங்கைமார் பிறப்பும் மட மாதர் இ
நங்கையால் தொழப்பாடு நவின்றதே.
**முகம் , கண், புருவம், இடை ஆகியவை

#152
வண்டு சூழ் மலர் போன்று அளகக் கொடி
கொண்டு சூழ்ந்தது குண்டல வாள் முகம்
கெண்டை கண் கிளரும் புருவம் சிலை
உண்டு-கொல் என உண்டு மருங்குலே.
**புருவங்கள் துவளுதல்

#153
காதின் மீது அணி கற்பகத் தொத்து இணர்
ஊது தேன் இறகு ஊன்றி இருத்-தொறும்
போது தேர் முகத்தும் புருவக் கொடி
நோதலே-கொல் நொசிந்து உள ஆம்களே.
**சுயம்பிரபையின் அழகு

#154
விண் அணங்க விழித்து விளங்கு ஒளி
மண் அணங்குறவே வளர்வு எய்திய
பெண் அணங்கு இது தோன்றிய பின்-கொலோ
கண் அணங்குறு காரிகை கண்டதே.

#155
கொங்கை போதருவான் குமிழ்கின்றன
அங்கராகம் அணிந்ததை அன்றியும்
நங்கை நாகரிகம் பொறை நாள்_மதுத்
தங்கு வார் கொடியில் தளர்வித்ததே.
**வளருதல்

#156
மங்குல் தோய் வரை மன்னவன் தொல் குடி
நங்கை போற்றி என்று ஏத்தி நறும் குழல்
மங்கைமார் பலர் காப்ப வளர்ந்து தன்
கொங்கையால் சிறிதே குழைவு எய்தினாள்.
**பற்கள் தோன்றுதல்

#157
வாம வாள் நெடு நோக்கி மடம் கனி
தூம வார் குழலாள் துவர் வாயிடை
நாம நள் ஒளி முள் எயிறு உள் எழு
காமன் ஆள் அரும்பில் கடி கொண்டவே.
**சுயம்பிரபை வித்தைகளடைதல்

#158
மஞ்சு தோய் வரையார் அஞ்சும் மாண்பினால்
அம்_சில்_ஓதி நினைப்பின் அகத்தவாய்
விஞ்சை-தாம் பணிசெய்தல் விரும்பினன்
எஞ்சிலா வகையால் இணர் கொண்டவே.
**சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்

#159
நங்கை தோன்றிய பின் நகை வேலினாற்கு
அம் கண் ஞாலம் அமர்ந்து அடிமைத் தொழில்
தங்க நீள் முடியால் தலை நின்றனர்
வெம் கண் யானை விளங்கு ஒளி வேந்தரே.
**வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்

#160
நங்கையாள் வளர்ந்து காம நறு முகை துணரவைத்து
மங்கையாம் பிராயம் எய்தி வளரிய நின்ற நாளும்
பைங்கண் மால் யானையாற்குப் பருவம் வந்து இறுத்தது என்றாள்
வங்க-வாய்ப் பவழச் செவ்வாய் வயந்த மா திலகை என்பாள்.
**வேனில் வரவைக் கூறுதல்

#161
தேம் குலாம் அலங்கல் மாலைச் செறி கழல் மன்னர் மன்ன
பூம் குலாய் விரிந்த சோலைப் பொழி மதுத் திவலை தூவக்
கோங்கு எலாம் கமழமாட்டாக் குணம்_இலார் செல்வமே போல்
பாங்கு எலாம் செம்பொன் பூப்ப விரிந்தது பருவம் என்றாள்.
**வண்டுகள் களிப்பு

#162
வேய்ந்து இணர் ஒசிந்த சோலை வேனிலான் வென்றி ஓகைத்
தேம் துணர் கொடுப்ப மூழ்கித் தேறல் வாய் நெகிழ மாந்தித்
தாம் துணர் துணையோடு ஆடிச் சாறு கொண்டு ஊறும் ஏர் ஆர்
மாம் துணர் ஒசிய ஏறி மதர்த்தன மணி வண்டு எல்லாம்.
**இசைக்குப் பரிசில்

#163
கடி மலர்_கணையினான்-தன் கழல் அடி பரவிக் காமர்
படி மலர்த் தும்பி என்னும் பாண் படை தொடர்ந்து பாடக்
கொடி வளர் மகளிர் பூம் கள் குடைந்து நீர் குடி-மின் என்று
வடி மலர் வள்ளத்து ஏந்த வாய் மடுத்திட்ட அன்றே.
**தீயிடத்துக் கரியைப்போல் மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல்

#164
அம் சுடர் முருக்கின் அம் கேழ் அணி மலர் அணிந்து கொம்பர்த்
துஞ்சு இடை பெறாது தும்பி துவன்றி மேல் துகைக்கும் தோற்றம்
செம் சுடர் இலங்கும் செம் தீக் கரும் சுடர்க் கந்துள் சிந்தி
மஞ்சு உடை மயங்கு கானம் மண்டிய வகையிற்று அன்றே.
**வண்டுகள் மயக்கமும் தெளிவும்

#165
அம் தழை அசோகம் பூத்த அழகு கண்டு அவாவின் நோக்கி
வெம் தழல் பிறங்கல் என்று வெருவிய மறு_இல் தும்பி
கொந்து அவிழ்ந்து உமிழப்பட்ட குளிர் மதுத் திவலை தூவச்
செம் தழல் பிறங்கல் அன்மை தெளிந்து சென்று அடைந்த அன்றே.
**மாமரமும் மனந்திரிந்த செல்வரும்

#166
மா சினை கறித்த துண்டம் துவர்த்தலின் மருங்கு நீண்ட
பூம் சினை முருக்கம் சோலைப் பூக்கள் வாய் ஆர மாந்தித்
தீம் சுவை மிழற்றுகின்ற சிறு குயில் செல்வரேனும்
தாம் சுவை திரிந்த பின்றைச் சார்பவர் இல்லை அன்றே.
**பொழில்கள் புலம்புதல்

#167
கோவை வண்டு ஊதுகின்ற குரவு எனும் குரை கொள் மாதர்
பாவை கொண்டு ஆடுகின்ற பருவத்தே பயின்ற காமன்
ஆவி கொண்டு இவளைக் கைவிட்டு அகலுமோ என்று தத்தம்
பூவையும் கிளியும் கொண்டு புலம்பின பொழில்கள் எல்லாம்.
**அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்

#168
வயந்தம் ஆங்கு உணர்த்தக் கேட்டே மன்னவன் மக்களோடும்
உயர்ந்த தன் உரிமையோடும் உரிமை காப்பவர்களோடும்
கயந்தலைக் களிரும் தேரும் வையமும் கவின ஏறி
நயந்தனன் நகரின் நீங்கி மனோவனம் நண்ணினானே.
**அரசனைப் பொழில் வரவேற்றல்

#169
கோமான் சென்று அணைதலுமே கொங்கு அணிந்த மலர் தூவித்
தேமா நின்று எதிர்கொள்ளச் சிறு குயில் போற்று இசைத்தனவே
வாம் மான் தேர் மன்னற்கு மங்கலம் சொல் மகளிரைப் போல்
தூ மாண்ட இளம் கொடி தம் தளிர்க் கையால் தொழுதனவே.
**மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்

#170
கடி வாச மலர் விண்ட கமழ் தாது கழலவற்கு
வடி வாசப்பொடியாக வன வல்லி சொரிந்தனவே
புடை வாசம்கொள மாலம் பூம் கவரி எடுத்து எறியக்
குடை மாகம் என ஏந்திக் கோங்கம் போது அவிழ்ந்தனவே.
**புகழ் பாடிப் பூவிறைத்தல்

#171
கொடி ஆடும் நெடு நகரக் கோமான்-தன் குணம் பரவி
அடி பாடுமவர்கள் என அணி வண்டு முரன்றனவே
வடி வாய வேலவற்கு மலர்ச் சின்னம் சொரிவன போல்
கொடு வாய கிளி கோதிக் குளிர் நறும் போது உகுத்தனவே.
**தென்றல் வீசுதல்

#172
குரவகத்து குடைந்து ஆடிக் குளிர் நறவம் கொப்பளித்து ஆர்த்து
அரவ வண்டு இன் இசை பாட அருவி நீர் அளைந்து உராய்
விரை மலர்ந்த துணர் வீசி விரை ஞாற வரு தென்றல்
புரவலன்-தன் திரு முடி மேல் போது அலர அசைத்ததே.
**அரசன் பெண்களுக்கு பொழில் வளங்காட்டி விளையாடுதல்

#173
இன்னவாறு இளவேனில் எதிர்கொள்ள எழில் யானை
மன் அவாம் தனிச் செங்கோல் மற வேல் வையக வேந்தன்
தன் அவாம் மடவாரைத் தான் உவந்து பொழில் காட்டி
மின் அவாம் இடை நோவ விளையாட அருளினான்.
**இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது

#174
எரி அணிந்த இளம் பிண்டி இணர் ஆர்ந்த இடம் எல்லாம்
பொரி அணிந்த புன்கு உதிர்ந்து பூ நாறும் துறை எல்லாம்
வரி அணிந்து வண்டு ஊத வளர்கின்ற இளவேனில்
புரி அணிந்த குழலீர் நும் செல்வம் போல் பொலிந்ததே.
**கைகளும் இடைகளும்

#175
கார் அணிந்த குழலீர் நும் கைத்தலங்கள் தகை நோக்கிச்
சீர் அணிந்த செழும் பிண்டி தளிர் ஈன்று திகழ்ந்தனவே
வார் அணிந்த முலையீர் நும் மருங்குல்-தனின் வகை நோக்கி
ஏர் அணிந்த குருக்கத்தி இளம் கொடித்தாய் ஈன்றனவே.
**மாந்தளிர் முதலியவை

#176
மா தளிர் இங்கு இவை நுமது நிறம் கொண்டு வளர்ந்தனவே
ஏந்து இளம் தீம் குயில் இவை நும் சொல் கற்பான் இசைந்தனவே
தேன் தளங்கு குழலீர் நும் செவ்வாயின் எழில் நோக்கித்
தாம் தளிர் மென் முருக்கு இனிய தாதோடு ததைந்தனவே.
**கண்மலர்

#177
காவியும் செங்கழுநீரும் கமலமும் கண் விரிந்து நளி
வாவியும் மண்டபமும் எழில் மதனனையும் மருட்டுமே
தூவி அரும் கிளி அன்ன சொல்லினீர் துணை_இல்லார்
ஆவி உய்ந்துள்ளார் ஆதல் அரிதே இ இளவேனில்.
**அரசன் திருக்கோயிலை அடைதல்

#178
இன்னணம் இளையவர் மருள ஈண்டு சீர்
மன்னவன் வயந்தம் ஆட்டு அருளி மா மணிக்
கல் நவில் புரிசையுள் கடவுட்கு ஆக்கிய
பொன் நவில் திரு நகர் பூவொடு எய்தினான்.
**திருக்கதவம் திறத்தல்

#179
உலம் உறை தோளினான் உவகை கூர்ந்தனன்
குல முறை வழிபடும் தெய்வக் கோயிலை
வலம் முறை வந்தனன் வரலும் மா மணிக்
கலம் உறை கதிர் நகைக் கபாடம் போழ்ந்ததே.
**சுடர் விளங்குதல்

#180
பிணி நிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன
மணி நிலை விசும்பொடு வரங்கள் ஈவன
கணி நிலை இலாத் திறல் கடவுள் தானகம்
மணி நிலைச் சுடர் ஒளி மலர்ந்து தோன்றவே.
**அரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல்

#181
மெய் மயிர் எறிந்து ஒளி துளும்பும் மேனியன்
கை முகிழ் முடித் தடம் கதழச் சேர்த்தினான்
வெம்மை செய் வினைத் துகள் விளிய வென்றவன்
செம்மலர்த் திருந்து அடி சீரின் ஏத்தினான்.
**எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்

#182
அணியாதும் ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மூர்த்தி
கணியாது முழுது உணர்ந்த கடவுள் என்று அறையுமே
கணியாது முழுது உணர்ந்த கடவுள் என்று அறைந்தாலும்
அணி ஞாலம்_உடையாயை அறிவாரோ அரியரே.
**படைக்கலந் தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றல்

#183
பகை நாறும் அயில் படைகள் பயிலாத திரு மூர்த்தி
இகல் மாற வென்று உயர்ந்த இறைவன் என்று அறையுமே
இகல் மாற வென்று உயர்ந்த இறைவன் என்று அறைந்தாலும்
அகல் ஞாலம்_உடையாயை அறிவாரோ அரியரே.
**ஒருமருவுமற்ற நின்னை எல்லோரும் உணரார் என்றல்

#184
திரு மறுவு வலன் அணிந்து திகழ்கின்ற திரு மூர்த்தி
ஒரு மறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்துமே
ஒரு மறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்துகினும்
அரு மறையை விரித்தாயை அறிவாரோ அரியரே.
**அரசன் கோயில் வாயிலையடைதல்

#185
இன்னணம் இறைவனை ஏத்தி ஏந்தல்-தன்
சென்னியுள் சேர்த்திய சேடப் பூவினன்
கல் நவில் திரு மணிக் கபாடம் தாழ் உறீஇ
முன்னிய திரு நகர் முற்றம் முன்னினான்.
**சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்

#186
ஆர் அணங்கு அவிர் ஒளி எரிய ஆயிடைச்
சாரணர் விசும்பின்-நின்று இழிந்து தாதை-தன்
ஏர் அணி வள நகர் வலம்கொண்டு இன்னணம்
சீர் அணி மணிக் குரல் சிலம்ப வாழ்த்தினார்.
**வரிப்பாட்டு- அச் சாரணர் இறைவனை ஏத்துதல்

#187
விரை மணந்த தாமரை மேல் விண் வணங்கச் சென்றாய்
உரை மணந்து யாம் பரவ உள் மகிழ்வாய்_அல்லை
உள் மகிழ்வாய்_அல்லை எனினும் உலகு எல்லாம்
கண் மகிழ நின்றாய்-கண் காதல் ஒழியோமே.

#188
முருகு அணங்கு தாமரையின் மொய் மலர் மேல் சென்று
அருகு அணங்கி ஏத்தியது மகிழ்வாய்_அல்லை
அது மகிழ்வாய்_அல்லை எனினும் பெயராக்
கதி மகிழ நின்றாய்-கண் காதல் ஒழியோமே.

#189
மணம் மயங்கு தாமரை மேல் வான் வணங்கச் சென்றாய்
குணம் மயங்கி யாம் பரவக் கொண்டு உவப்பாய்_அல்லை
கொண்டு உவப்பாய்_அல்லை எனினும் குளிர்ந்து உலகம்
கண்டு உவப்ப நின்றாய்-கண் காதல் ஒழியோமே.
**முனிவர்கள் போற்றுதலைக்கேட்ட உயிர்கள் தீ_வினை தீர்த்தல்

#190
தீது_அறு முனிவர்-தம் செல்வன் சேவடிக்
காதலின் எழுவிய காமர் இன் இசை
ஏதம் இன்று எவ்வளவு இசைத்தது அவ்வளவு
ஓதிய உயிர்க்கு எலாம் உறுகண் தீர்ந்தவே.
**சமணமுனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்

#191
இறைவனை இன்னணம் ஏத்தித் தம் தொழில்
குறைவு_இலா முடிந்த பின் குண_குன்று_ஆயினார்
மறம் மலி மன்னனை நோக்கி மற்று அவற்கு
அற மழை பொழிவது ஓர் ஆர்வம் எய்தினார்.
**சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்

#192
தென்றலும் செழும் மதுத் திவலை மாரியும்
என்றும் நின்று அறாதது ஓர் இளம் தண் பிண்டியும்
நின்று ஒளி திகழ்வது ஓர் நிலாக் கல்வட்டமும்
சென்று அவர் அமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே.
**அரசன் சென்று பணிதல்

#193
வென்றவன் திரு நகர் விளங்கு வேதிகை
முன்றில் சேர்ந்து இருந்தனர் முனிவர் ஆதலும்
மின் தவழ் விளங்கு வேல் வென்றி வேந்தனும்
சென்று அவர் திருந்து அடி முடியில் தீட்டினான்.
**முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி அமரச் செய்தல்

#194
பாசிடைப் பரப்பு உடைப் பழன நாடனை
ஆசிடை கொடுத்து அவர் இருக்க என்றலும்
தூசு உடை மணிக் கலை மகளிர் சூழ்தர
ஏசு இடை இலாதவன் இருக்கை எய்தினான்.
**முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன் வணங்குதல்

#195
தாள் உயர் தாமரைத் திருவும் தண் கதிர்
நீள் எழில் ஆரமும் நிழன்ற கண் குலாம்
தோள் இணை செவ்வியோ என்னச் சூழ் ஒளி
வாளவன் மணி முடி வணங்கி வாழ்த்தினான்.
**சடியரசன் வணங்கிச் சகநந்தனனை நோக்கிக் கூறுதல்

#196
முனிவருள் பெரியவன் முகத்து நோக்கி ஒன்று
இனிது உளது உணர்த்துவது அடிகள் என்றலும்
பனி மலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனிய மற்று இன்னணம் கடவுள் கூறினான்.
**தன் கருத்தையுணர்ந்து முனிவர் கூற அரசன் அவரைப் பணிதல்

#197
துன்னிய வினைப் பகை துணிக்கும் தொன்மை சால்
இன் உரை அமிழ்து எமக்கு ஈ-மின் என்பதாம்
மன்ன நின் மனத்து உளது என்ன மா மணிக்
கல் நவில் கடகக் கை கதழக் கூப்பினான்.
**சாரணர் அறிவுரை – பிறவிகள் அளவிடற் கரியன என்றல்

#198
மெய்யறிவு_இலாமை என்னும் வித்தினில் பிறந்து வெய்ய
கையறு வினைகள் கைபோய்க் கடும் துயர் விளைத்த போழ்தில்
மையுற உழந்து வாடும் வாழ் உயிர்ப் பிறவி மாலை
நெய் உற நிழற்றும் வேலோய் இனைத்து என நினைக்கல் ஆமோ.
**நற்சார்பு கிடைக்கும் வரையிலும் உயிர்கள் பிறந்து வருந்தும் என்றல்

#199
சூழ் வினை துரப்பச் சென்று சூழ் வினைப் பயத்தினாலே
வீழ் வினை பிறிதும் ஆக்கி வெய்துற விளிந்து தோன்றி
ஆழ் துயர் உழக்கும் அந்தோ அளி அற்ற அறிவு_இல் சாதித்
தாழ் வினை விலக்கும் சார்வு தலைப்படா அளவும் என்றான்.
**அருகக்கடவுள் திருவடிகளே பிறவிப்பிணியை ஓழிக்கும் என்றல்

#200
காதி அம் கிளைகள் சீறும் காமரு நெறிக்கும் கண்ணாய்ப்
போதி அம் கிழவர்-தங்கள் தியானத்துப் புலம் கொண்டு ஏத்தி
ஆதி அந்து அகன்று நின்ற அடிகளே சரணம் கண்டாய்
மா துயர் இடும்பை தீர்க்கும் சரண் எனப்படுவ மன்னா.
**இரத்தினத் திரயம்

#201
மெய்ப்பொருள் தெரிதல் மற்று அப் பொருள் மிசை விரிந்த ஞானம்
அப் பொருள் வழாத நூலின் அரும் தகை ஒழுக்கம் தாங்கி
இப் பொருள் இவைகள் கண்டாய் இறைவனால் விரிக்கப்பட்ட
கைப்பொருளாகக் கொண்டு கடைப்பிடி கன பொன் தாரோய்.
**இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்

#202
உற்று அடு பிணியும் மூப்பும் ஊழ் உறு துயரும் நீக்கிச்
சுற்றி நின்று உலகம் ஏத்தும் சுடர் ஒளி உருவம் தாங்கிப்
பெற்றது ஓர் வரம்பு_இல் இன்பம் பிறழ்வு_இலா நிலைமை கண்டாய்
மற்று அவை நிறைந்த மாந்தர் பெறப்படும் நிலைமை மன்னா.
**அறிவுரை கேட்டோர் மகிழ்ச்சி யடைதல்

#203
அரும் துயர் அறுக்கும் மாண்பின் ஆர் அமிர்து அவைகள் மூன்றும்
திருந்த நன்கு உரைப்பக் கேட்டே தீ_வினை இருள்கள் போழும்
விரிந்த நல் அறிவின் சோதி விளங்கலின் சனங்கள் எல்லாம்
பரிந்து அகம் கழுமத்து ஏறிப் பவம் பரிந்தவர்கள் ஒத்தார்.
**அரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்

#204
மன்னிய முனிவன் வாயுள் மணி கொழித்து அனைய ஆகிப்
பன்னிய பவங்கள் தீர்க்கும் பயம் கெழு மொழிகள்-தம்மால்
கல் நவில் கடகத் தோளான் காட்சி அம் கதிர்ப்புச் சென்றான்
பின் அவன் உரிமை-தானும் பெரு வதம் மருவிற்று அன்றே.
**சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்

#205
மன்னவன் மட_மகள் வணங்கி மற்று அவர்
இன் உரை அமுதம் உண்டு எழுந்த சோதியள்
பன்னி ஒர் நோன்பு மேற்கொண்டு பாங்கினால்
பின் அது முடிப்பது ஓர் பெருமை எண்ணினாள்.
**அரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து செல்லுதல்

#206
முனிவரர் திருந்து அடி வணங்கி மூசு தேன்
பனி மலர் விரவிய படலை மார்பினான்
கனி வளர் பொழிலிடைக் கடவுள் நல் நகர்
இனிதினின் வலம் முறை எய்தி ஏகினான்.
**அரசன் பொழிலில் விளையாடி நகரத்தை அடைதல்

#207
வாம மேகலையவர் மனத்தில் வார் பொழில்
காமவேள் இடம்கொள அருளிக் கண் ஒளிர்
தாம வேல் இளையவர் காப்பத் தாழ் கதிர்
நாம வேல் நர_பதி நகரம் நண்ணினான்.
**சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச் செல்லுதல்

#208
அக நகர் அரைசரோடு அரைசன் சென்ற பின்
சகத் அபி நந்தனர் என்னும் சாரணர்
மிக நவின்று இறைவனை வணங்கி விண்ணிடைப்
பகல் நகு சுடர் ஒளி படர ஏகினார்.
**சுயம்பிரபை நோன்பினால் மேம்படுதல்

#209
அழல் கொடி எறித்-தொறும் சுடரும் ஆடகம்
நிழல் கொடி அது என நிறைந்த காரிகைக்
குழல் கொடி_அனையவள் கொண்ட நோன்பினால்
எழில் கொடி சுடர்வது ஓர் இயற்கை எய்தினாள்.
**மனநலத்தின் மாட்சி

#210
முகைத்த வார் முல்லையை முருக்கும் மெல் இயல்
தகைத்த வார் குழலவள் தன்மை ஆயினும்
வகுத்தவாறு உயர்ந்தன நோன்பு மாசு_இலா
அகத்து மாண்பு_உடையவர்க்கு அரியது இல்லையே.
**நோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்

#211
இந்திர உலகமும் வணக்கும் ஈடு உடைத்
தந்திர நோன்பு ஒளி தவழத் தையலாள்
மந்திர நறு நெய்யால் வளர்ந்து மாசு_இலா
அந்தர அழல் கொடி அனையள் ஆயினாள்.
**நோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்தல்

#212
தாங்க அரும் சுடர் ஒளி சக்கரவாளம் என்று
ஓங்கு இரும் பெயர் கொள் நோன்பு உயர நோற்ற பின்
தீம் கரும்பு அனைய சொல் சிறுமி தெய்வதக்கு
ஆங்கு ஒரு பெரும் சிறப்பு அயர்தல் மேயினாள்.
**சுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்கல்

#213
தண் அவிர் நிலாச் சுடர் தவழும் அ வரைக்-
கண் அவிர் சென்னி மேல் கடவுள் தானம் அஃது
அண்ணல் அம் கோ_மகள் அருச்சித்து ஆயிடை
விண்ணவர் உலகமூம் வியப்ப ஏத்தினாள்.
**வரிப்பாட்டு – சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்

#214
ஆதி அம் கடவுளை அரு மறை பயந்தனை
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கினை
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கிய
சேதி அம் செல்வ நின் திரு_அடி வணங்கினம்.

#215
காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை
தேம் மலர் மாரியை திரு மறு மார்பனை
மா மலர் வண்ண நின் மலர்_அடி வணங்கினம்.

#216
ஆர் அருள் பயந்தனை ஆழ் துயர் அவித்தனை
ஓர் அருள் ஆழியை உலகு உடை ஒருவனை
ஓர் அருள் ஆழியை உலகு உடை ஒருவனை
சீர் அருள் மொழிய நின் திரு_அடி தொழுதனம்.
**சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்

#217
கரு வடி நெடு நல் வேல்_கண்ணி இன்னணம்
வெருவு உடை வினைப் பகை விலக்கும் வீறு சால்
மருவு உடை மொழிகளால் பரவி வாமன
திரு_அடிச் சேடமும் திகழச் சூடினாள்.
**சுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்

#218
வான் உயர் கடவுளை வயங்கு சேவடித்
தேன் உயர் திரு மலர்ச் சேடம் கொண்ட பின்
மான் உயர் நோக்கியர் பரவ மங்கை தன்
கோன் உயர் வள நகர்க் கோயில் முன்னினாள்.
**சுயம்பிரபை தன் தந்தைக்கு வழி பாட்டுப் பொருள் கொடுத்தல்

#219
வெம் சுடர் வேலவர்க்கு உணர்த்தி மெல்லவே
பஞ்சு உடைச் சேவடி பரவச் சென்று தன்
அம் சுடர் மெல் விரல் சிவப்ப ஆழியின்
செம் சுடர் அம் கையில் சேட நீட்டினாள்.
**அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள் சொல்லத் தொடங்குதல்

#220
அல்லியின் அரவ வண்டு இரிய ஆய் மலர்
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
முல்லை அம் சிகழிகை முச்சி மோந்து இவை
சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான்.
**ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்

#221
தேம் துணர் பல உளவேனும் செம் குழை
மா துணர் வயந்தனை மலரத் தோன்றுமே
பூம் துணர் ஓதி நீ பிறந்து பொன் செய் தார்
வேந்து வந்து இறைஞ்ச யான் விளங்குகின்றதே.

#222
கங்கை நீர் பாய்ந்துழிக் கடலும் தீர்த்தம் ஆம்
அம் கண் நீர் உலகு எலாம் அறியப்பட்டது
நங்கை நீ பிறந்ததன் பின்னை நம் குடி
வங்க நீர் வரைப்பு எலாம் வணக்கப்பட்டதே.

#223
போது உலாம் தாமரை பூத்த பொய்கையைத்
தீது உலாம் கீழ்_உயிர் தீண்டச் செல்லல
மாது உலாம் மடந்தை நீ பிறந்து இ மண்டிலம்
ஏதிலார் இடை திறம் இகந்து நின்றதே.

#224
வானகத்து இளம்பிறை வளர வையகம்
ஈனகத்து இருள் கெட இன்பம் எய்துமே
நானகக் குழலி நீ வளர நம் குடி
தான் அகத்து இருள் கெடத் தயங்குகின்றதே.

#225
கண் பகர் மல்லிகை கமழக் காதலால்
சண்பகத் தனி வனம் தும்பி சாரும் நீ
பெண் பகர் திரு_அனாய் பிறந்து நம் குடி
மண் பகர் உலகு எலாம் மகிழச் செல்லுமே.

#226
கொவ்வை அம் துவர் இதழ்க் கோல வாயவட்கு
இவ்வகை அணியன கூறி ஈண்டு நும்
அவ்வை-தன் கோயில் புக்கு அடிசில் உண்க என
மவ்வல் அம் குழலியை மன்னன் ஏயினான்.
**கட்டளையும் மகிழ்ச்சியும்

#227
பல் கலம் பெரியன அணியில் பாவை-தன்
அல்குல் நோம் எனச் சிலம்பு அணிந்து மெல்லவே
செல்க என் திரு_மகள் என்று செம்பொனால்
மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான்.
**அரசன் தன் மகளைப் பற்றி மனத்தில் எண்ணுதல்

#228
மண் அரும் கலம் எலாம் வலிதின் வவ்வினும்
விண் அரும் கலம் எலாம் விதியின் எய்தினும்
பெண் அரும் கலம் இது பெறுதல் மானுடர்க்கு
எண்_அரும் தகைத்து என இறைவன் எண்ணினான்.
**தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்

#229
மை அணி வரையின் வாழ் மன்னர் தொல் குடிக்
கை அணி நெடு நல் வேல் காளைமார்களுள்
நெய் அணி குழல் இவட்கு உரிய நீர்மையான்
மெய் அணி பொறியவன் எவன்-கொல் வீரனே.
**மங்கையர் இயற்கை

#230
பொலம் கலக்கு உரியவாம் பொரு_இல் மா மணி
இலங்கலம் என்னல ஈயம் சேர்த்தினும்
குலம் கலந்து இல்வழிக் குரவர் கூட்டினும்
அலங்கல் அம் குழலியர் அன்று என்கிற்பவோ.
**தாய் தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்

#231
அந்தை தாம் உறுவது கருதி ஆர் உயிர்த்
தந்தை தாய் என்று இவர் கொடுப்பின் தையலார்
சிந்தை தாய்_இலாதவர் திறத்தும் செவ்வனே
நொந்து தாம் பிறிது உரை நொடிய வல்லரோ.
**காமமுங் காதலும்

#232
காதலால் அறிவது காமம் காதலே
ஏதிலார் உணர்வினால் எண்ணல் ஆவது அன்று
ஆதலால் மாதராள் திறத்தில் ஆணைநூல்
ஓதினார் உரை வழி ஒட்டற்பாலதே.
**அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்

#233
தன் உணர் பொறி பிறர்-தங்கள் கூட்டு என
இன்னணம் இரு வகைத்து இறைவர் வாழ்க்கையே
தன் உணர் பொறிப் புலம் தன்னின் ஆம் பிறிது
இன்னணம் இயற்றுக என்று அமைச்சர் ஏவுவார்.
**அரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்

#234
தண்ணிய தடத்தவே எனினும் தாமரை
விண் இயல் கதிரினால் விரியும் வேந்தரும்
புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரால் அலர்தல் காண்டுமே.
**அமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது நடைபெறும் என்றல்

#235
மால் அமர் நெடும் கடல் மதலை மாசு_இலாக்
கால் அமைந்து ஒழுகுமேல் கரையும் காணுமே
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
வேலவர் ஒழுக்கமும் வேலை காணுமே.
**உலகம் பலவிதம்

#236
ஒன்று நன்று என உணர்ந்து ஒருவன் கொள்ளுமேல்
அன்று அது என்று ஒருவனுக்கு அறிவு தோன்றுமே
நின்றது ஒன்று உண்டு இனி நீதிநூலினோடு
ஒன்றி நின்றவர் உரை உலகம் ஒட்டுமே.
**ஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள் உண்டென எண்ணல்

#237
அந்தணர் ஒழுக்கமும் அரைசர் வாழ்க்கையும்
மந்திரம் இல்லையேல் மலரும் மாண்பு_இல
இந்திரன் இறைமையும் ஈர்_ஐஞ்ஞாற்றுவர்
தந்திரக் கிழவர்கள் தாங்கச் செல்லுமே
**அமைச்சர்களை அழைக்குமாறு கட்டளையிடுதல்

#238
என்று தன் மனத்தினான் எண்ணி ஈண்டு சீர்
நின்ற நூல் கிழமையின் நீதிமாக்களை
ஒன்றி நீர் தருக என உழைக் குற்றேவலார்
சென்று அவர்க்கு அருள் இது என்று செப்பினார்

@5. மந்திரசாலைச் சருக்கம்
**அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்

#239
செம் சினைத் தெரியலான் அருளிச் செய்தது
தம் செவிக்கு இசைத்தலும் தணப்பு_இல் கேள்வியார்
அஞ்சினர் நடுங்கினர் ஆகி ஆயிடை
நஞ்சு இவர் வேலினான் பாதம் நண்ணினார்
**மந்திரசாலையின் அமைப்பு

#240
உள்ளுள் நின்று ஒலி புறப்படாதது ஒண் சிறைப்
புள்ளும் அல்லாதவும் புகாத நீரது
வெள்ளி வெண் விளிம்பினால் விளங்கு வேதிகை
வள்ளல்-தன் மந்திரசாலை வண்ணமே
**அரசன் பேசத் தொடங்குதல்

#241
ஆங்கு அமர்ந்து அமைச்சரோடு அரைசர்_கோமகன்
பூம் கமழ் மண்டபம் பொலியப் புக்க பின்
வீங்கு ஒளி மணிக் குழை மிளிர்ந்து வில் இட
ஈங்கு இவை மொழிந்தனன் இறைவன் என்பவே
**மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்

#242
மண் இயல் வளாகம் காக்கும் மன்னவர் வணக்கல்_ஆகாப்
புண்ணிய நீரரேனும் புலவரால் புகலப்பட்ட
நுண்ணிய நூலின் அன்றி நுழை பொருள் உணர்த்தல் தேற்றார்
எண்ணிய துணிந்து செய்யும் சூழ்ச்சியும் இல்லை அன்றே
**அமைச்சர் மாண்பு

#243
வால் வளை பரவி மேயும் வளர் திரை வளாகம் எல்லாம்
கோல் வளைவுறாமல் காக்கும் கொற்றவன் நெடியனேனும்
மேல் விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்
நூல் விளை புலவர் அன்றே நுணங்கு போது அணங்கு தாரீர்
**அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே

#244
சுற்று நின்று எரியும் செம்பொன் மணி முடி சுடரச் சூட்டி
வெற்றி வெண்குடையின் நீழல் வேந்தன் வீற்றிருக்குமேனும்
மற்று அவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும்
அற்றம்_இல் அரசும் கோலும் ஆபவர் அமைச்சர் அன்றே
**அமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்

#245
வீங்கு நீர் உலகம் காக்கும் விழு நுகம் ஒருவனாலே
தாங்கலாம் தன்மைத்து அன்று தளை அவிழ் தயங்கு தாரீர்
பாங்கு_அலார் பணியச் சூழும் நூலவர் பாகம் ஆகப்
பூம் குலாம் அலங்கல் மாலைப் புரவலன் பொறுக்கும் அன்றே
**அரசன் முகமன் பொழிதல்

#246
அற்றம் இன்று உலகம் காக்கும் அரும் தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்தவாறு கழிப்பது கடனது ஆகும்
மற்று அவற்கு உறுதி நோக்கி வரு பழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செருக்கும் சூழ்ச்சி தெருண்டவர் கடவ அன்றே
**அரசனும் அமைச்சர்களும்

#247
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்
அறிந்தவை அமர்ந்து செய்யும் அமைதியான் அரசன் ஆவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி
அறிந்தவை இயற்றுகிற்கும் அமைதியார் அமைச்சர் ஆவார்
**தோள்வலியும் சூழ்ச்சியும்

#248
வாள் வலித் தடக் கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்
தோள் வலி சூழ்ச்சி என்று ஆங்கு இரு வகைத் தொகையிற்று ஆகும்
ஆள் வலித் தானையார்கட்கு ஆதியது அழகிதேனும்
கோள் வலிச் சீயம் ஒப்பீர் சூழ்ச்சியே குணம் அது என்றான்
**சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்

#249
ஊழ் வரவு அன்னதேனும் ஒரு வகைக் கருமம் எல்லாம்
சூழ்பவர் சூழ்ந்து சூழும் சூழ்ச்சியுள் தோன்றும் அன்றே
யாழ் பகர்ந்து இனிய தீம் சொல் அமிர்தனாரேனும் சூழ்ச்சி
வாழ்பவர் வல்லர் ஆயின் மன்னராய் மலர்ப அன்றே
**சூழ்சியே அரசன் ஆற்றல்

#250
ஆற்றல் மூன்று ஓதப்பட்ட அரசர்கட்கு அவற்றில் மிக்க
ஆற்றல்-தான் சூழ்ச்சி என்பது ஆதலால் அதனை ஆயும்
ஆற்றலார் அமைச்சர் ஆக அமைச்சரோடு அமர்ந்து செல்லும்
ஆற்றலான் அரசன் ஆகின் அரியது ஒன்று இல்லை அன்றே
**இன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்

#251
வடம் திகழ் முலையினார்-தம் காமத்தின் மதர்த்த மன்னர்க்கு
அடைந்தவர் மாண்பும் ஆங்கு ஒன்று இல்லையேல் அரசர் வாழ்க்கை
கடம் தவழ் கடாத்த வேழம் களித்த பின் கல்வி மாணா
மடம் தவழ் ஒருவன் மேல்கொண்டு அன்னது ஓர் வகையிற்று ஆமே
**சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்

#252
சுந்தரச் சுரும்பு உண் கண்ணிச் சூழ் கழல் அரசர் வாழ்க்கை
தந்திரம் அறிந்து சூழ்வான் சூழ்ச்சி சார்ந்து அமையல் வேண்டும்
மந்திரம் வழுவுமாயின் வாள் எயிற்று அரவு காய்ந்து
தந்திரம் தப்பினால் போல் தன்னையே தபுக்கும் அன்றே
**அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்

#253
எடுத்தனன் இலங்கு சாதி எழிலொடு திகழுமேனும்
அடுத்தன நிறத்தது ஆகும் அணி கிளர் பளிங்கு போல
வடுத் தவ மலர்ந்து நுண் நூல் மதியவர் வினையின் மாட்சி
கொடுத்தவாம் நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப அன்றே
**உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்

#254
மன்னும் நீர் வளாகம் எல்லாம் வணக்குதல் வல்லீர் ஆய
பன்னு நூல் புலவீர் முன்னர்ப் பல பகர்ந்து உரைப்பது என்னை
என்னை நீர் இறைவன் ஆக்கி இராப்பகல் இயற்ற அன்றே
இன்ன நீர் இன்ப வெள்ளம் இயைந்து யான் உயர்ந்தது என்றான்
**அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்

#255
கொங்கு உடை வயிரக் குன்றின் கொழும் சுடர் விளக்கிட்டு ஆங்கு
நம் குடி விளங்க வந்த நங்கை-தன் நலத்திற்கு ஒத்தான்
தம் குடி விளங்க நின்ற தன்மையான் எவன்-கொல் என்றான்
சங்கு உடைந்து அனைய தாழைத் தட மலர்த் தொடையலானே
**அமைச்சர்கள் பதிலுரைத்தல்

#256
இறை இவை மொழியக் கேட்டே இருந்தவர் இறைஞ்சி ஏத்தி
அறை கழல் அரவத் தானை அணி முடி அரசர்_ஏறே
நிறை புகழ் உலகம் காத்து நிலாக நின் இறைமை என்று
முறைமுறை மொழியலுற்று முன்னிய முகத்தர் ஆனார்
**சச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்

#257
பணிந்து மற்று ஏனையார் பாங்கு இருப்ப நூல் பலவும் நோக்கித்
துணிந்து தன் புலைமை தோன்றச் சச்சுதன் சொல்லலுற்றான்
இணைந்து நின்று உலவும் தும்பி இடையிடை இருண்டு தோன்ற
அணிந்து நின்று அலரும் பைந்தார் அணி மணி முடியினாற்கே
**சூரியன் தோன்றச் சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்

#258
பொழில் கதிர் பரப்பி வந்து பொங்கு இருள் புதைய நூறும்
தொழில் கதிர்_கடவுள் தோன்றச் சூரியகாந்தம் என்னும்
எழில் கதிர்ப் பிறங்கல் வட்டம் எரி உமிழ்ந்திடுவது அன்றே
அழல் கதிர் இலங்கும் செவ்வேல் அதிர் கழல் அரசர்_கோவே
**அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்

#259
கோணை நூற்று அடங்கமாட்டாக் குணம்_இலார் குடர்கள் நைய
ஆணை நூற்று அடங்கக் காக்கும் அரசர்-தம் அருளினாலே
பேணும் நூல் புலவர் மாண்பும் பெருகுவது உருவத் தார் மேல்
பூணும் நூல் பொலிந்து தோன்றும் பொன் வரை மார்ப என்றான்
**திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்

#260
சூழ் கதிர் தொழுதி மாலைச் சுடர் பிறை_கடவுள் தோன்றித்
தாழ் கதிர் சொரிந்த போழ்தில் சந்திரகாந்தம் என்னும்
வீழ் கதிர் விளங்கு வட்டம் வெள்ள நீர் விரியும் அன்றே
போழ் கதிர் பொழிந்து பொங்கிப் புலால் நிணம் பொழியும் வேலோய்
**நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்

#261
கண்ணளித்து உலகம் எல்லாம் கவின்பெறக் காவல் பூண்டு
தண் அளித் தயங்கு செங்கோல் தாரவர் தவத்தினாலே
மண் அளித்து இனிய நூலோர் மந்திரம் மலரும் என்றான்
விண் அளித்து இலங்கும் வெள்ளி விரிந்த வெண்குடையினாற்கே
**பொறுமையின் பெருமை

#262
கண்ணிய கடாத்த வேழம் கவுளினான் உரிஞப்பட்டும்
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப ஆயின்
மண் இயல் வளாகம் எல்லாம் வழி நின்று வணங்கும் அன்றே
**அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்

#263
நிறம் தலைமயங்க வெம்பி நெடும் கடல் சுடுவது ஆயின்
இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு இடர் எல்லை உண்டோ
மறம் தலைமயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின்
அறம் தலைமயங்கி வையம் அரும் படர் உழக்கும் அன்றே

#264
மண் குளிர்கொள்ளக் காக்கும் மரபு ஒழிந்து அரசர்-தங்கள்
விண் குளிர்கொள்ள ஓங்கும் வெண்குடை வெதும்பும் ஆயின்
கண் குளிர்கொள்ளப் பூக்கும் கடி கயத் தடமும் காவும்
தண் குளிர்கொள்ளுமேனும் தாம் மிக வெதும்பும் அன்றே
**அரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை

#265
தீ_இனம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியும் ஆயின்
போய் இனம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மையாலே
வேய் இனம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்
மா இனம் படர்ந்தது எல்லாம் வையகம் படரும் அன்றே
**அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை

#266
மறம் தலைமயங்கி வையத்து ஒருவரையொருவர் வாட்ட
இறந்து அலையுறாமை நோக்கி இன் உயிர் போலக் காக்கும்
அறம் தலைநின்ற வேந்தர் அடி நிழல் அன்றி யார்க்கும்
சிறந்தது ஒன்று இல்லை கண்டாய் திரு மணி திகழும் பூணோய்

#267
ஒருமையால் துன்பம் எய்தும் ஒருவனை உம்மையாலே
திருமையால் முயங்கும் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி
இருமையும் ஒருமையாலே இயற்றலின் இறைவன் போலப்
பெருமையை உடைய தெய்வம் பிறிது இனி இல்லை அன்றே
**உலகத்திற்குக் கண்கள் மூன்று

#268
கண் எனப்படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல ஓடும் வெய்யவன் என்னும் பேரார்
எண்ணினுள் தலை-கண் வைத்த கண் அஃது இல்லை ஆயின்
மண்ணினுக்கு இருளை நீக்கும் வகை பிறிது இல்லை மன்னா
**இவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்

#269
குடி மிசை வெய்ய கோலும் கூற்றமும் பிணியும் நீர் சூழ்
படி மிசை இல்லை ஆயின் வானுள் யார் பயிறும் என்பார்
முடி மிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி
அடி மிசை நரலும் செம்பொன் அதிர் கழல் அரசர்_ஏறே
**அரசர்களைப்போல மக்கள் இலர்

#270
தண் சுடர்க் கடவுள் போலத் தாரகைக் குழாங்கள் தாமே
விண் சுடர் விளக்கம் ஆக விளங்கல வேந்தர் போல
மண் சுடர் வரைப்பின் மிக்க மக்களும் இல்லை கண்டாய்
கண் சுடர் கனலச் சீறும் கமழ் கடாக் களிற்று வேந்தே
**அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்

#271
அரும் தவம் அரைச_பாரம் இரண்டுமே அரிய தம்மை
வருந்தியும் உயிரை ஓம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
திருந்திய இரண்டும் தத்தம் செய்கையில் திரியும் ஆயின்
பெரும் துயர் விளைக்கும் அன்றே பிறங்கு தார் நிறம் கொள் வேலோய்
**விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்

#272
அந்தரம் திரியும் செய்கை அமரர்-தம் அரசு வேண்டி
இந்திர உலகம் காணும் நெறி அவை யாவை என்னின்
மந்திரம் வழாத வாய்மை மா தவம் முயறல் அன்றேல்
தந்திரம் தழுவிச் செங்கோல் தளர்வு_இலன் தரித்தல் என்றான்
**அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது

#273
மரம் தலை இணங்கி வான் தோய் மணி வளர் வயிர_குன்றம்
உரம் தனக்கு உயர ஏந்தி உய்த்திடும் ஒருவற்கேனும்
அரும் தவம் அரைச_பாரம் அவை பொறை அரிது கண்டாய்
இரந்தவர்க்கு ஈட்டப்பட்ட இருநிதிக் கிழவ என்றான்
**சூழ்ச்சியின் மாண்பு

#274
உரிதினின் ஒருவன் செய்த ஊழ்_வினை உதயஞ் செய்து
விரிதலின் அதனது உண்மை விளங்கினால் போல வேந்தர்
கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினால் கருதும் வண்ணம்
எரி தவழ்ந்து இலங்கும் வேலோய் எண்ணுவது எண்ணம் என்றான்

#275
பஞ்சி நன்று ஊட்டப்பட்ட மாதுளம் பருவ வித்தும்
மஞ்சி நின்று அகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்
அஞ்சி நின்று அனலும் வேலோய் சூழ்ச்சியும் அன்னதேயால்
வெம் சொல் ஒன்று உரைக்கமாட்டா விடு சுடர் விளங்கு பூணோய்
**செய்திகூறத் தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங்கக் கூறல்

#276
கொற்ற வேல் மன்னர்க்கு ஓதும் குணம் எலாம் குழுமி வந்து
முற்றும் நின்று உருவுகொண்ட மூர்த்தி நின் முன்னர் யாங்கள்
இற்று என உரைக்கும் நீதி ஓது நூல் எல்லை காணக்
கற்றவர் முன்னை ஏனோர் கதை ஒத்துக் காட்டும் அன்றே
**செவ்வி கேட்டல்

#277
தேன் மகிழ் தெரியலாய் நின் திருக் குலம் தெளிப்ப வந்த
பால் மகிழ்ந்து அனைய தீம் சொல் பவழ வாய்ப் பரவை அல்குல்
வான் மகிழ் மணம்கொள் மேனி அணங்கினுக்கு உரிய கோனை
யான் மகிழ்ந்து உணர்த்தக் கேட்பின் இடை சிறிது அருளுக என்றான்
**விஞ்சையர் சேடி வண்ணனை

#278
மஞ்சு இவர் மால் வரைச் சென்னி வடமலை
விஞ்சையர் வாழும் விழா அணி நல் உலகு
அஞ்சு இயல்வு_இல்லோய் அது மற்று அமரர்கள்
துஞ்சு இயல் இல்லாத் துறக்கம் அனைத்தே
**அது விண்ணுலகத்தைப் போன்றது

#279
மண் இயல் வாழ்நர்க்கும் வான்_உலகு ஒப்பது
புண்ணியம்_இல்லார் புகுதற்கு அரியது
கண்ணிய கற்பகக் கானம் கலந்தது
விண் இயல் இன்பம் விரவிற்று இனிதே
**எல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது

#280
எல்லா இருதுவும் ஈனும் பொழிலினது
எல்லா நிதியும் இயன்ற இடத்தினது
எல்லா அமரர் கணமும் இராப்பகல்
எல்லாப் புலமும் நுகர்தற்கு இனிதே

#281
பொன் இதழ்த் தாமரை பொய்கையுள் பூப்பன
பொன் இதழ்த் தாமம் பொழில்-வாய் அவிழ்ப்பன
பொன் இதழ்த் தாது மணி நிலம் போர்ப்பன
பொன் இதழ்த் தாது துகளாய்ப் பொலிவன
**அந்நாட்டுப் பொழில் முதலியன

#282
கானங்கள் ஆவன கற்பகம் காமுகர்
தானங்கள் ஆவன சந்தனத் தாழ் பொழில்
நானங்கள் ஆவன நாவி நறு விரை
வானங்கள் ஆம் வகை மற்றும் ஒன்று உண்டோ

#283
மணிக் கல் படாதன மண்டபம் செம்பொன்
குணிக்கப்படாதன குளிர் புனல் நீத்தம்
கணிக்கப்படாத கதிர் மணிக் குன்றம்
பிணிக்கப்படாதவர் யார் அவை பெற்றால்
**வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்

#284
ஆங்கு அதன் மேல அறுபது மா நகர்
தீம் கதிர் மண்டிலம் சேர்ந்து திளைப்பன
நீங்க அரு மா நகர்-தம்முள் நிலா விரிந்து
ஓங்கிய சூளாமணியின் ஒளிர்வது
**இரத்தின பல்லவம்

#285
மரத்தினும் மண்ணினும் மாடங்கள் யாவும்
திருத்தின_இல்லது செம்பொன் உலகில்
புரத்தினை வெல்வது பொன் நகர் பூம் தண்
இரத்தினபல்லவம் என்பது ஒன்று உண்டே
**அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது

#286
வளைத் தகை மங்கையர் மைந்தரொடு ஆடி
முளைத்து எழு காம முடிவு_இலர் ஆகித்
திளைத்தலின் நல் நகர் தெய்வ உலகம்
களித்து இழிந்த அன்னது ஓர் கவ்வை உடைத்தே
**அந்நகரத்தில் வாழ்வோர் வருந்திச் செய்யும் தொழில்

#287
ஆடவர் கொம்பு_அனையார் இளையாரவர்
பாடகம் மெல் ஏர் பரவிய சீறடி
தோடு அலர் தொங்கல் அம் குஞ்சியுள் தோயவைத்து
ஊடல் உணர்த்தும் தொழிலது ஒன்று உண்டே
**வருத்தமுள்ள நகர்

#288
சிலைத் தடம் தோளவர் செம் சாந்து அணிந்த
மலைத் தட மார்பிடை மை மதர்க் கண்ணார்
முலைத் தடம் பாய முரிந்து முட வண்டு
இலைத் தடத்து ஏங்கும் இரக்கம் உளதே
**முரிவன பல

#289
வனைந்தன போலும் வளர்ந்த முலையார்
இனைந்து தம் காதல இன்பக் கனிகள்
கனிந்து களித்து அகங் காமம் கலந்து உண
முனிந்து புருவம் முரிவ பலவே
**அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்

#290
செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரள் எனும்
அ வாய் அமிர்தம் உண்டார் பலர் ஆடவர்
ஒவ்வாது இளைப்பர் ஒசிந்தனர் ஓடு அரி
மை வாள் நெடும் கண் மலக்கம் பெரிதே
**அந்நகரத்தில் வாழ்பவரை வருந்தச் செய்வது

#291
வளர்வன போலும் மருங்குல்கள் நோவத்
தளர்வன போல்பவர் தாமக் குழல் மேல்
கிளர்வன போது இள வாசம் கிளைத்து உண்டு
உளர்வன போதரும் ஊதை உளதே
**அந்நகரத்தே அஞ்சி மறைவன

#292
பஞ்சு ஆர் அகல் அல்குல் பாவையர் பூண் முலைச்
செம் சாந்து அணிந்து திகழ்ந்த மணி வண்டு
மஞ்சு ஆர் பொழிலுள் வளர் பெடை கண்டு அதற்கு
அஞ்சா ஒளிக்கும் மயலது அதுவே
**இன்றமிழியற்கை யின்பம்

#293
பாசிலை மென் தழைப் பள்ளியுள் பாவையர்
தூசினுள் நின்று சொரி மணிக் கோவையும்
பூசின சாந்தும் பிணையலும் போர்த்து இடை
மூசின வண்டின் மொய் பொழில் எல்லாம்
**காதல் தூது

#294
காம இலேகையும் கற்பக மாலையும்
சேம மணி நகைச் செப்பினுள் ஏந்துபு
தூமக் குழலவர் தூது திரிபவர்
தாமத் தெருவிடை தாம் பலர் கண்டாய்
**காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில்

#295
தாமத் தொடையல் பரிந்து தமனிய
வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்
காமக் கடலைக் கலக்கும் கழலவர்
தீமைத் தொழிலவை தேர்ந்துள அன்றே
** மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்

#296
பொன் நகர்-தன்னை ஆள்வான் புரந்தரன் அனைய மாண்பின்
மன்னவன் மயூரகண்டன் மற்று அவன் தேவிமாருள்
மின் அவிர் மருங்குல் நீலாங்கனை என விளங்கி நின்றாள்
அன்னவள் புதல்வன் கண்டாய் அச்சுவக்கிரீவன் என்பான்
**அச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது

#297
அதிர் கழல் அலங்கல் வேலோய் அச்சுவக்கிரீவன் என்னும்
பொதி அவிழ் பொலம்கொள் பைந்தார்ப் புரவலன் திகிரி எய்தி
மதி தவழ் குன்றம் எல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்
கொதி தவழ் வேலினான்-தன் குறிப்பொடு கூடிற்று அன்றே
**அச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்

#298
சுற்றம் மாண்பு_உடைமையாலும் சூழ் கதிர்த் திகிரி ஆளும்
கொற்றம் ஆங்கு உடைமையாலும் குலத்தது பெருமையாலும்
கற்ற மாண் விஞ்சையாலும் கருதிய முடித்தலாலும்
வெற்றி வேலவனோடு ஒப்பார் வேந்தர் மற்று இல்லை வேந்தே
**அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்

#299
தம்பியர் நீலத்தேரோன் தயங்கு தார் நீலகண்டன்
வம்பு உயர் மகரப் பேழ் வாய் வயிரமாகண்டன் வண்டும்
தும்பியும் துவைக்கும் தொங்கல் சுகண்டன் என்று இவர்கள் கண்டாய்
வெம்பிய உருமுத் தீயும் கூற்றமும் வெதுப்பும் நீரார்
**அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்

#300
படையினது அமைதி கூழின் பகுதி என்று இவற்றின் பல் மாண்பு
உடையவர் எவனொடு ஒப்பார் ஒருவர் மற்று இல்லை வேந்தே
விடயம் ஒன்று இன்றி வென்ற விடு சுடர் ஆழி ஆளும்
நடையவன் உவப்பின் ஞாலம் பிறர்-உழை நடப்பது என்றான்
**அமைச்சனும் நிமித்திகனும்

#301
ஆணை_நூல் அமைச்சன் ஆவான் அரிமஞ்சு அவனது ஆற்றல்
கோணை நூற்பவரைத் தன் சொல் குறிப்பின் மேல் நிறுத்த வல்லான்
பேணும் நூல் நிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்
காணும் நூல் புலமை யாரும் காண்பவர் இல்லை கண்டாய்
**அச்சுவக்கிரீவன் தன்மை

#302
தன் அலால் தெய்வம் பேணார் சார்ந்தவர் தானும் சார்ந்தார்க்கு
என் அலால் இவருக்கு உற்றார் இல்லை என்று இரங்கும் நீரான்
பொன் எலாம் நெதியம் ஆரப் பொழிந்திடுகின்ற பூமி
மன் எலாம் அவனை அன்றி வணங்குவது_இல்லை மன்னா
**அச்சுவக்கண்டனது தோள்வன்மை

#303
குளிறு வாள் உழுவை_அன்னான் குமார காலத்து முன்னே
களிறு நூறு எடுக்கலாகாக் கல் திரள் கடகக் கையால்
ஒளிறு வாள் உழவன் ஏந்தி உருட்டி வட்டு ஆட அன்றே
வெளிறு_இலாக் கேள்வியானை விஞ்சையர் அஞ்சியிட்டார்
**அச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்

#304
முன் தவம் உடைமையாலே மூரி நீர் உலகம் எல்லாம்
மற்று அவன் ஏவல் கேளா மன்னவர் இல்லை மன்னா
செற்று அவன் நலிதல் அஞ்சித் திறைகொடுத்து அறிவித்து அன்றே
நல் தவ நங்கை தோன்றா முன்னம் நாம் ஆண்டது எல்லாம்
**சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்

#305
ஈங்கு நம் குலக் கொம்பு ஒப்பாள் பிறந்த பின் இனியன் ஆகித்
தேம் கமழ் அலங்கல் வேலோன் திறைகொளல் ஒழிந்து செல்லும்
ஆங்கு அவன் திறங்கள் எல்லாம் அறிதியால் ஆணை வேந்தே
தீங்கு யான் உணர்த்திற்று உண்டோ திரு_அடி தெளிக என்றான்
**சுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்

#306
மற்று அவற்கு உரியள் நங்கை என்பது என் மனத்தினோடும்
உற்று வந்துளது சால உறுதியும் உடையது ஒக்கும்
வெற்றி வேல் விஞ்சையாரும் அஞ்சுவர் மின் செய் பைம்பூண்
கொற்றவ குறிப்பு உண்டாயின் கொடுப்பது குணம்-கொல் என்றான்
**பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்

#307
சுடர் மணி மருங்குல் பைங்கண் சுளி முகக் களி நல் யானை
அடர் மணிக் கதிரும் பைம்பொன் மாலையும் அணிந்த சென்னித்
தொடர் மணிப் பூணினாற்குச் சச்சுதன் சொல்லக் கேட்டே
படர் மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகரலுற்றான்
** சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்

#308
நூல் ஆராய்ந்து நுண் பொறி கண்ணும் நொடி_வல்லான்
மேலார் ஆயும் மேதைமையாலும் மிக நல்லான்
தோலா நாவின் சச்சுதன் சொல்லும் பொருள் எல்லாம்
வேல் ஆர் கையாய் மெய்ம்மைய அன்றே மிகை ஆலோ
**அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்

#309
தேனும் வண்டும் தீது_இல பாடும் செறி தாரோய்
யானும் கண்டேன் அச்சுவகண்டன் திறம் அஃதே
மானம் கொண்ட மா ரதர் போர்_ஏறு அனையாய் ஓர்
ஊனம் கண்டேன் ஒட்டினும் ஒட்டேன் உரைசெய்கேன்
**பிறந்த நாட் குறிப்புக் கூறல்

#310
மானக் கோதை மாசு_அறு வேலோய் வரவு எண்ணி
நானக் கோதை நங்கை பிறந்த நாளானே
வானக் கோளின் மாண்பு உணர்வார்கள் மறு_இல்லாத்
தானக் கோளில் சாதக ஓலை தலைவைத்தார்

#311
காவிப் பட்டம் கள் விரி கானல் கடல் நாடன்
மேவிப் பட்டம்பெற்றவன் காதல் மேயானால்
ஏவிப் பட்டம் ஈந்தவர் எல்லாம் இனிது ஏத்தும்
தேவிப் பட்டம் சேர்பவள் அன்றே திரு_அன்னாள்

#312
நம் கோன் நங்கை நல் மகன் ஆகி நனி வந்தான்
தம் கோன் ஏவத் தான் இளவேந்தாய்த் தலை நின்றான்
எம் கோன் என்றே இ உலகு ஏத்தும் இயல்-தன்னால்
செங்கோல் இன்பம் சேர்பவன் அன்றே செரு வேலோன்

#313
என்றால் அன்று அச் சாதக ஓலை எழுதிற்றால்
குன்றா வென்றிக் குன்று உறழ் யானைக் கொலை வேலோய்
நன்றாம் நங்கைக்கு ஒன்றிய காமப் பருவத்தால்
நின்றான் அன்றே இன் துணை ஆகும் நிலை மேயான்
**சாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்

#314
ஆழிக் கோமான் அச்சுவகண்டன் அவனுக்கே
ஊழிக் காலம் ஓடின என்னும் உரையாலும்
தாழிக் கோலப் போது அன கண்ணாள் தகுவாளோ
சூழிக் கோலச் சூழ் களி யானைச் சுடர் வேலோய்
**அச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்

#315
கண் ஆர் கோதைக் காமரு வேய்த் தோள் கனகப் பேர்
மண்ணார் சீர்த்திச் சித்திரை என்னும் மட மாது இன்று
எண் ஆர் இன்பக் காதலி ஆகி இயல்கின்றாள்
பெண் ஆர் சாயல் பெற்றனள் தேவிப் பெறு பட்டம்
**இரத்தின கண்டன் இளவரசன்

#316
வானோர் உட்கும் மக்கள் ஓர் ஐஞ்ஞூற்றுவர்-தம்முள்
ஈனோர் உட்கும் இரத்தினகண்டன் என நின்றான்
ஏனோர் உட்கும் இன் இளவேந்தாய் இயல்கின்றான்
ஊனோர் உட்கும் ஒண் சுடர் நஞ்சு ஊறு ஒளி வேலோய்
**மன்னன் வினாதல்

#317
அன்னான் ஆயின் ஆதலின் நன்றே அவன் அல்லால்
என்னான் ஆவான் என்றனன் வேந்தன் எனலோடும்
இன்னான் இன்னான் இ நகர் ஆள்வான் இவன் என்றே
அன்னான் அன்னாற்கு அ நகர் எல்லாம் அறிவித்தான்
**சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்

#318
மை ஆர் சென்னி மால் வரை ஆளும் வய மொய்ம்பில்
கை ஆர் எஃகில் காளைகள்-தம்முள் கமழ் கோதை
மெய்யா மேவும் மேதகுவானை மிக எண்ணிக்
கொய்யா விம்மும் கொங்கு அலர் தாரோய் கொடு என்றான்
** பவச்சுதன் கூற்று
**பவனஞ்சன் மாண்பு

#319
கேடு_இல் இ மலையின் மேலால் கின்னரகீதம் ஆளும்
தோடு இலங்கு உருவத் தொங்கல் சுடர் முடி அரசன் செம்மல்
பாடல் வண்டு இமிரும் பைந்தார்ப் பவனஞ்சன் என்ப பாரித்து
ஆடல் அம் புரவி வல்ல அரசிளங்குமரன் என்றான்
**அமிழ்தபதி நாட்டு வேகரதன்

#320
அளந்து அறிவு அரிய செய்கை அமிழ்தமாபதியை ஆளும்
வளம் தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண் தார்
விளங்கு ஒளி உருவத் திண் தோள் வேகமாரதனை அன்றே
இளம் களி உழுவையாக இரு நிலம் புகழ்வது என்றான்
**மேகபுரத்துப் பதுமரதன்

#321
வேழத்தால் பொலிந்த சோலை மேகமாபுரம் அது ஆளும்
ஆழித் தேர் அரவத் தானை அரசர்_கோன் புதல்வன் அம் தார்ப்
பாழித் தோள் உருவச் செம் கண் பதுமத்தேர்ப் பெயரினானை
ஊழி_தீ என்று வேந்தர் உட்குவது உருவத் தாரோய்
**இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்

#322
இலங்கு ஒளி மாட வீதி இரத்தினபுரம் அது ஆளும்
உலம் கெழு வயிரத் திண் தோள் ஒளி முடி அரசன் செம்மல்
அலங்கல் அம் புரவித் தானை அரும் கலத் தேரின் பேரன்
குலம் கெழு குரிசில் கண்டாய் கொண்டல் வான் உருமோடு ஒப்பான்
**கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்

#323
நங்கள் மால் வரையின் மேலோன் நல் நகர் கீதம் என்னும்
திங்கள் மால் புரிசை வேலிச் செழு நகர் அரசன் செம்மல்
அம் கண் மா ஞாலம் ஆளும் அரிகண்டன் அவனை விண் மேல்
செம் கண் மால் முனியுமேனும் செய்வது ஒன்று இல்லை கண்டாய்
**திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்

#324
சேந்து எரி செம்பொன் வீதித் திரிபுரம் அதனை ஆளும்
வாய்ந்து எரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல் ஆடு
ஏந்து தோள் அரசர் போர் ஏறு இவன் நளிதாங்கன் என்பான்
காய்ந்து எரி கனலின் வெய்யோன் கல்வியால் கடலோடு ஒப்பான்
**சித்திரகூடத்து அரசன் ஏமாங்கதன்

#325
செம் தளிர் புதைந்த சோலைச் சித்திரகூடம் ஆளும்
அம் தளிர் அலங்கல் மாலை அரசர்_கோன் சிறுவன் அம் தார்
இந்திரன் புதல்வன் அன்னான் ஏந்தல் ஏமாங்கதற்கு இ
மந்திர உலகின் வாழும் மன்னர் மாறு இல்லை மன்னா
**அச்சுவபுரத்துக் கனக சித்திரன்

#326
அரு மணி அடுத்த வீதி அச்சுவபுரம் அது ஆளும்
திரு மணி திகழும் பூணான் பெருமகன் சிறை வண்டு என்னும்
கரு மணி துதைந்த பைந்தார்க் கனகசித்திரனை அன்றே
ஒரு மணி திலதம் ஆக உடையது நிலம் அது என்றான்
**சிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்

#327
சீர் அணி முழவம் ஓவாச் சிரீநிலை அதனை ஆளும்
கார் அணி தடக் கை வேந்தன் கான்முளை கன பொன் ஆர்ந்த
தேர் அணி அரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான்
தார் அணி மார்பன் அன்றே தரணிக்கு ஒர் திலதம் ஆவான்
**கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது

#328
கற்றவர் புகழும் சீர்த்திக் கனகபல்லவத்தை ஆளும்
கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்
செற்றவர்ச் செருக்கும் செய்கை செரு_வல்லான் சிங்ககேது
மற்று அவன் பிறந்த பின்னாம் மண்_மகள் மகிழ்ந்தது என்றான்
**இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்

#329
இஞ்சி சூழ் எரி பொன் மாடத்து இந்திரன் மிசைந்த நாமச்
சஞ்சயம் உடைய கோமான் தாள்முளை தரணி எல்லாம்
அஞ்சும் நீர் அலங்கல் வேலான் அருஞ்சயன் அவனை நங்கள்
மஞ்சு சூழ் மலைக்கு ஓர் சூளாமணி எனக் கருதும் மன்னா

#330
ஈங்கு இவர்-தம்முள் யாவர் இலங்கு இரும் பவழச் செவ்வாய்க்
கோங்கு இவர் குவி மென் கொங்கைக் கொம்பினுக்கு உரிய காளை
ஆங்கு அவன்-தன்னை ஆராய்ந்து அறிந்து அருள்செய்க என்றான்
வாங்கு இரும் பரவை முந்நீர் மணி கொழித்து அனைய சொல்லான்
**பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்

#331
மன்னர் நீள் முடி மெல் மணித் தொத்து ஒளி
துன்னு சேவடியாற்குச் சுருங்கவே
பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும்
அன்னதே என்று எல்லார்களும் ஒட்டினார்
**சுதசாகரன் என்பவன் சொல்லுதல்

#332
அல்லி நாள்_மலர்த் தாரும் முத்தாரமும்
வல்லி ஆங்கு அணி சாந்தும் வனைந்து உராய்
மல்லினால் மலி மார்பற்கு மற்று இவை
சொல்லினான் சுதசாகரன் என்பவே
**பவச்சுதன் கூறியது உண்மை என்றல்

#333
ஆழி ஆள்கின்ற அச்சுவகண்டன் மேல்
பாழி ஆகின்ற திண் தோள் பவச்சுதன்
சூழி யானையினாய் சொலப்பட்டன
ஊழியார் உரையும் ஒத்து உள கண்டாய்
**பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்

#334
ஆயினும் சிறிது உண்டு அறி வண்டு இனம்
பாயினும் பனிக்கும் படர்க் கோதை-தன்
வேயினும் பணைக்கின்ற மென் தோள் பிறர்
தோயினும் பகையாம் சுடர் வேலினாய்
**அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்

#335
வண்டு அவாம் முடி மன்னருள் மற்று அவன்
தண்டம் ஆற்றுநர் தாம் இலையால் சிறிது
உண்டு யான் உரைப்பான் உறுகின்றது
விண்டு வாழுநர் மேல் நகும் வேலினாய்
**சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்

#336
போகம் ஆண்ட இச் சேடியோர் பொன் நகர்க்கு
ஏக நாயகனாய் இனிது ஆள்பவன்
மேகவாகனன் என்று உளன் வீழ் மத
வேக மால் களிறும் மிகு வேலினான்
**மேகவாகனன் மனைவி மேகமாலினி

#337
நாக மாலைகள் மேல் நகு வண்டு இனம்
ஏக மாலையவாய் இசை கைவிடாத்
தோகை மா மயில் போல் சுரி கூந்தலாள்
மேகமாலினி என்று உரை மிக்கு உளாள்
**அவர்களுடைய மகன் விச்சுவன்

#338
தேவி மற்று அவள் தெய்வம் வழிபட
மேவி வந்தனன் விச்சுவன் என்பவன்
ஓவு_இல் தொல் புகழான் உளன் கூற்றமும்
ஏவி நின்று இனிது ஆண்டிடும் ஈட்டினான்
**விச்சுவன் பெருமை

#339
மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு
உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய
ஐயனால் பிற ஆர் அஞர் நீங்கி இ
வையம் ஆயது எல்லாம் வளர்கின்றதே
**இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்

#340
மங்குல் வான்_உலகு ஆண்டு வரத்தினால்
இங்கு வந்தனன் ஈண்டு அளி ஈந்த பின்
திங்கள் வாள் ஒளியில் திகழ் சோதியாய்த்
தங்குவான் உலகில் தகை சான்றதே

#341
தன்னின் ஆய் விளைவித்து இருளைத் தவிர்த்து
இன்னன் ஆக என்று எண்ணிய எண்ணமோடு
அன்னன் ஆதலினால் அவன் மேல் பிறர்
என்னரேனும் இன்னாதன எண்ணிலார்
**சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்

#342
காம்பின் வாய்ந்த மென் தோளி அக் காதலன்
தீம் பல் மாலை நல் மார்பகம் சேருமேல்
ஆம்பல் மாலையும் ஆய் கதிர்த் திங்களும்
தாம் பல் மாலையும் சார்ந்தது அனைத்து அரோ
**விச்சுவன் தங்கை

#343
நம்பி தங்கை நகை மலர்க் கற்பகக்
கொம்பின் அன்னவள் கொங்கு அணி கூந்தலாள்
அம்பின் நீண்டு அரி சிந்திய மாக் கயல்
வம்பில் நீண்ட மை வாள் நெடும்_கண்ணினாள்
**அவளுடைய பெயர் சோதிமாலை

#344
கோது_இல் மாலைகள் மேல் குதிகொண்டு எழு
கீத மாலைய கின்னர வண்டு இனம்
ஊதி மாலையவாய் உறையும் குழல்
சோதிமாலை என்பாள் சுடர்ப் பூணினாள்
**சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்

#345
வெம்பு மால் களி யானை விலக்கு நீர்
நம்பி ஞாயிறு சேர் பெயராற்கு அணி
அம்பின் நீள் அரி வாள் நெடும்_கண்ணவள்
வம்பு சேர் முலை வாரி வளாகமே
**சுதசாகரன் முடிவுரை

#346
இன்னவாறு இசையப்பெறின் யாவரும்
என்னவாறு இகப்பவர் இன்மையால்
அன்னவாறு அருள் உண்டு எனில் ஆய்ந்து யான்
சொன்னவாறு கொண்டீ சுடர் வேலினோய்
**சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்

#347
கொங்கு வண்டு அலைந்த தாரான் குறிப்பு அறிந்து இவைகள் எல்லாம்
அங்கு அவன் மொழிந்த பின்னை அவனையும் அமைதி கூறி
நங்கை-தன் தாதை தோழர் நால்வருள் நால்வனாவான்
தொங்கல் அம் துணர் கொள் மார்பின் சுமந்திரி சொல்லலுற்றான்
**எல்லோரையும் விலக்கிக் கூறுதல்

#348
அண்ணல் அம் களிகொள் யானை அச்சுவகண்டன் மூத்தாற்கு
எண்ணலும் தகுவது அன்றால் இவன் பணி அகற்றல் ஆற்றாக்
கண் நலம் கவரும் வேலோர்க்கு ஈயினும் கருமம் அன்றால்
பெண் நலம் கனிந்த பேதை இருப்பதும் பெருமை அன்றே
**விச்சுவனை விலக்கிக் கூறுதல்

#349
சூழ் கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திரகாந்தம் ஆளும்
தாழ் கதிர் ஆரம் மார்பில் தமனியக் குழையினான்-தன்
போழ் கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக்கு உரிமை செய்ய
ஆழ் கதிர் விலங்கல் ஆளும் அரச அஃது அரிது கண்டாய்
**விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்

#350
மங்கையர் முகத்தில் நீண்டு மை கடை மதர்ப்ப மாந்தி
அம் கயல் பிறழ்வ போலும் ஐ அரி அடர்த்த வாள் கண்
பங்கயச் செம்_கணான் மேல் படைத்தொழில் பயின்ற போழ்தும்
தங்கிய மனத்தன் ஆகித் தளர்வு_இலன் தவத்தின் மிக்கான்
**விச்சுவன் இயல்பு

#351
மண் கனி முழவச் சீரும் மடந்தையர் தூக்கும் மற்றும்
பண் கனி பாடல் ஆடல் பாணியும் பயின்று மேவான்
விண் கனிந்து அனைய இன்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்
கண் கனி உருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய்
**மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்

#352
செறி கழலவற்குத் தாதை சித்திரகூடம் என்னும்
அறிவரன் கோயில் எய்தி அணி விழவு அயர்த்த காலை
இறுதியில் அவதி ஞானி யசோதரன் என்னும் பேர
உறுவனை வணங்கிக் கேட்டான் மகன் திறம் உலம் கொள் தோளான்
**அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்

#353
பங்கயப் பழன வேலிப் பவகிரி அரசன் பைந்தார்
தங்கிய தடம் கொள் மார்பன் சயசேனன் அவற்குத் தேவி
செங்கயல் நெடும் கண் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை
வெம் களி யானை வல்ல விசயபத்திரன் என்பானே

#354
மந்திரத்து அரசர்_கோவே மற்று அவன் வையம் காக்கும்
தந்திரம் துறந்து நோற்று மறைந்த சாசாரம் என்னும்
இந்திர உலகம் எய்தி ஏழொடு ஈர்_ஐந்து முந்நீர்
அந்தர காலம் தேவர்க்கு அரசனாய் ஆண்டுவந்தான்

#355
ஆதலால் அமர போகம் நுகர்ந்தவன் அரைசர் செல்வம்
போது உலாம் அலங்கல் மார்ப பொருள் என மருளல்செல்லான்
தீது எலாம் அகல நோற்றுச் சிவகதி சேரும் என்று அக்
கோது_இலா முனிவன் சொன்ன உரை இவை கூறக் கேட்டாம்
**இறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்

#356
அம்மையால் தவங்கள் தாங்கி அலர்ந்த நல் அறிவினாலும்
இம்மையான் உடம்பு நீங்கி இகந்து போம் இயற்கையாலும்
செம்மையால் கடவுள் தானம் சேர்வதே சிந்தையாற்கு
மெய்ம்மையால் கருமச் சுற்றம் வேண்டுவது இல்லை வேந்தே
**சுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்

#357
வார் அணி முரசம் ஆர்ப்ப வயிரொடு வளைகள் ஏங்கத்
தாரவர் குழாங்கள் ஈண்டச் சயமரம் அறைதுமேனும்
ஆர் அவிர் ஆழியானை அஞ்சுதும் அறியலாகா
கார் விரி தடக் கை வேந்தே கழலவர் கருமம் என்றான்
**ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்

#358
ஒன்று நாம் கருதிச் சூழின் ஊழ் அது விளைவு தானே
கன்றி நாம் கருதிற்று இன்றி மற்றொர்வாறாக நண்ணும்
என்றும் நாம் துணிந்த செய்கை இதன் திறத்து என்னமாட்டாம்
இன்று நாம் துணிதுமாயின் இனிச் சிறிது உரைப்பன் என்றான்
**சதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்

#359
வீழ் புரி விளங்கும் நூலோய் மேலும் நம் குலத்து_உளார்கட்கு
ஊழ் புரிந்து உறுதி கூறும் உயர் குலம் மலர நின்றான்
தாழ் புரி தயங்கும் நுண் நூல் சதவிந்து மொழிந்தவாற்றால்
யாழ் புரி மழலையாள்-கண் ஆவதை அறிதும் என்றான்
**சுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்

#360
என்று அவன் மொழிந்த போழ்தின் ஏனையார் இனிதின் நோக்கி
மின் தவழ் விளங்கு வேலோய் மெய் இனும் மேவல் வேண்டும்
சென்று அவன் மனையுள் நீயே வினவு எனச் சேனை வேந்தன்
நன்றவர் மொழிந்த எல்லாம் நல்லவா நயந்து கேட்டான்
**அமைச்சர்கள் அரசனை அவையைக் கலைக்குமாறு கூறுதல்

#361
இந்திரன் அனைய நீரோய் இனிப் பிறிது எண்ணல் வேண்டா
மந்திரம் நீளுமாயின் வருவன அறியல் ஆகா
சந்திரன் தவழ நீண்ட தமனியச் சூலம் நெற்றி
அந்தரம் திவளும் ஞாயில் கோயில் புக்கு அருளுக என்றார்
**அரசன் அரண்மனையை அடைதல்

#362
மந்திரக் கிழவர்-தம்மை மனை புக விடுத்து மன்னன்
சுந்தரச் சுரும்பும் தேனும் சூழ் கழல் நிரையும் ஆர்ப்ப
அந்தர மகளிர் போல்வார் வரன் முறை கவரி வீச
அந்தரக் கடைகள் நீங்கி அகல் நகர் அருளிப் புக்கான்
** நண்பகலாதல்

#363
மிகு கதிர் விலங்கல் ஆர் வேந்தன் தேன் உடைந்து
உகு கதிர் மண்டபம் ஒளிர ஏறலும்
தொகு கதிர் சுடுவன பரப்பிச் சூழ் ஒளி
நகு கதிர் மண்டிலம் நடுவண் நின்றதே

#364
கண் திரள் கழை வளர் கரும்பு கை மிகுத்து
ஒண் திரள் வெள் இலை உரிஞ்சும் ஓடை மா
வெண் திரள் மணி புடை சிலம்ப விட்டன
வண் திரள் கிளையொடு வளைகள் ஆர்த்தவே

#365
ஒலி விழா வண்டு இனம் ஊத ஊறு தேன்
மலி விழாப் பிணையலும் மணம்கொள் சாந்தமும்
பலி விழாப் பதாகையும் பரந்து பாடுவார்
கலி விழாக் கழுமின கடவுள் தானமே

#366
குண்டு நீர்க் குழு மலர்க் குவளைப் பட்டமும்
மண்டு நீர் மரகத மணிக் கல் வாவியும்
கொண்டு நீர் இளையவர் குடையக் கொங்கொடு
வண்டு நீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே

#367
பங்கயத் துகள் படு பழன நீர்த் திரை
மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
அங்கு அவர் அரிசனம் அழித்த சேற்றினும்
குங்குமக் குழம்பினும் குழம்பு கொண்டவே

#368
அம் கள் வாய்க் கயம் வளர் ஆம்பல் தூம்பு உடைப்
பொங்கு காடு ஏர்பட ஞெறித்துப் பூவொடு
கொங்கை-வாய்க் குழலவர் குளிப்ப விட்டன
திங்கள் வாள் முக ஒளி திளைப்ப விண்டவே

#369
மா இரும் பனித் தடம் படிந்து மை அழி
சே அரி நெடு மலர்க் கண்கள் சேந்து எனத்
தாயரை மறைக்கிய குவளைத் தாது தேன்
பாய மோந்து இறைஞ்சினார் பாவைமார்களே
**ஈரணிப்பள்ளி வண்ணனை

#370
சந்தனத் துளித் தலை ததும்பச் சாந்து அளைந்து
அந்தரத்து அசைப்பன ஆலவட்டமும்
எந்திரத் திவலையும் இயற்றி ஈர் மணல்
பந்தருள் பாலிகைக் குவளை பாய்த்தினார்

#371
குரு மணித் தாமரைக் கொட்டை சூடிய
திரு மணிப் பீடமும் செதுக்கம் ஆயவும்
பரு மணிப் பளிங்கு என விளங்கு வான் பலி
அரு மணிக் கொம்பு_அனார் அலர ஊட்டினார்
**பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்

#372
அன்னணம் பொழுது கண்ணகற்ற ஆயிடைப்
பன்ன அரும் கால_நூல் பயின்ற பண்பு உடைக்
கன்னல் அம் கருவியோர் கழிந்த நாழிகை
மன்னவன் அடி முதல் உணர்த்தி வாழ்த்தினார்
**மன்னன் உண்ணுதல்

#373
வார் அணி முலையவர் பரவ மன்னவன்
ஈரணிப் பள்ளி புக்கு அருளினான் இரந்து
ஏர் அணி இன்னியம் இசைத்த இன்பமோடு
ஆர் அணி தெரியலான் அமிர்தம் மேயினான்
**அரசன் தெருவில் நடந்து செல்லுதல்

#374
வெள் இழை பொலிந்து ஒளி துளும்பும் மேனியன்
வள் இதழ் மல்லிகை மலர்ந்த மாலையான்
அள் இதழ்ப் புது மலர் அடுத்த வீதி மேல்
கள் இதழ்க் கண்ணியான் காலின் ஏகினான்
**அரசன் நடந்து செல்லுதல்

#375
பொன் அவிர் மணிக் கழல் புலம்பத் தேன் இனம்
துன் அலர் தொடையலில் சுரும்போடு ஆர்த்து எழ
மன்னவன் நடத்-தொறும் மகர குண்டலம்
மின் மலர்ந்து இலங்கு வில் இலங்க விட்டவே
**மெய்க்காவலர் வேந்தனைச் சூழ்தல்

#376
நெய் இலங்கு எஃகினர் நிறைந்த விஞ்சையர்
கை இலங்கு ஈட்டியர் கழித்த வாளினர்
மெய் இலங்கு உறையினர் விசித்த கச்சையர்
வையகம் காவலன் மருங்கு சுற்றினார்
**அரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்

#377
சுரும்பு சூழ் பிணையலும் சுண்ண மாரியும்
கரும்பு சூழ் கிளவியர் சொரிந்து கை தொழ
நிரம்பு நூல் நிமித்திகன் மாட நீள் கடை
அரும்பு சூழ் தெரியலான் அருளின் எய்தினான்
**நிமித்திகன் அரசனை வரவேற்றல்

#378
எம் குலம் விளங்க இங்கு அருளி வந்த வெம்
கொங்கு அலர் தெரியலாய் கொற்றம் கொள்க என
மங்கல உழைக்கலம் பரப்ப மன்னனுக்கு
அங்கு அலர் கேள்வியான் ஆசிகூறினான்
**அரசன் மண்டபத்தை அடைதல்

#379
கொண்டு அமர்ந்து அகில் புகை கழுமிக் கோதை வாய்
விண்டு அமர்ந்து ஒழுகுவ மதுக்கள் வீழ்ந்து உராய்
வண்டு அமர்ந்து ஒலிசெய மருங்குல் கொண்டது ஓர்
மண்டப மணித் தலம் மன்னன் எய்தினான்
**அரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்

#380
தழை அவிழ் சந்தனப் பொதும்பு போல் மது
மழை தவழ் மண்டபம் மலிர வீற்றிருந்து
உழையவர் குறிப்பு அறிந்து அகல ஒண் சுடர்க்
குழையவன் குமரி-தன் கருமம் எண்ணினான்
**நிமித்திகன் பேசத் தொடங்குதல்

#381
கனைத்து எதிர் கதிர் மணிக் கடகம் சூடிய
பனைத் திரள் அனைய தோள் படலை மாலையான்
மனத்தினை மறுவு_இல் நூல் வாயினால் சொல
நினைத்து இவை விளம்பினான் நிமித்த நீதியான்
**அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்

#382
மணம் கமழ் மது மலர் அலங்கல் மாலை போல்
வணங்கு எழில் நுடங்கு இடை மாழை நோக்கி நம்
கணம் குழை கருமம் ஆம் கருதிற்று என்றனன்
அணங்கு எழில் விரிந்த நூல் அலர்ந்த நாவினான்
**தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்

#383
வெண் நிலா விரிந்து என விளங்கும் மாலையள்
கண் நிலாம் கவர் தகைக் கண்ணி மன்னனை
மண் நிலாம் மறுகிடை வலம்கொண்டு எய்தினாள்
எண்ணில் ஆங்கு அது திரு எதிர்ந்த வண்ணமே

#384
பொன் சுலாம் சுடர் இழை பொறுத்த பூண் முலை
மின் சுலாம் நுடங்கு இடை மெல்லியாள் திறம்
என் சொலால் இன்றி யான் இயம்பும் நீரதோ
மன் சுலா அகல நின்று அலரும் வாளினாய்
**சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்

#385
ஆதி நாள் அறக் கதிர் ஆழி தாங்கிய
சோதியான் திரு_மொழி விளக்கித் தோன்றுமால்
போதுவார் புரி குழல் பொலம் கொம்பு அன்ன இ
மாதராள் வன முலைக்கு உரிய மைந்தனே
**சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்

#386
அம் மயில்_அனையவள் திறத்தின் ஆரியன்
செம்மையில் விளம்பிய செல்வம் கேட்டலும்
மெய்ம்மையில் தெரிந்து ஒளி துளும்பும் மேனியன்
பொய்ம்மை_இல் புகழவன் பொலிந்து தோன்றினான்
**மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்

#387
முன்னிய உலகுகள் விடுத்த மூர்த்தியான்
மன்னிய திரு_மொழி அகத்து மாதராள்
என்னை-கொல் விரிந்தவாறு எனலும் மன்னனுக்கு
அன்னவன் ஆதி மாபுராணம் ஓதினான்
**உலகங்கள் எண்ணிறந்தன என்றல்

#388
மூ வகை உலகினுள் நடுவண் மூரி நீர்த்
தீவினது அகலமும் சிந்து வட்டமும்
ஓவு_அல ஒன்றுக்கொன்று இரட்டி கண்ணறை
ஏவலாய் விரிந்தவை எண்_இறந்தவே
**உலக அமைப்பு உரைத்தல்

#389
மந்தர நெடு மலை நடுவின் வாய்ந்தது
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
நந்திய நளி சினை நாவல் மா மரம்
அந்தரத்து உடையது இ அவனி வட்டமே
**உலகில் உள்ளன

#390
குல கிரி ஆறு கூர் கண்டம் ஏழ் குலாய்
மலை திரை வளர் புனல் ஏழ் இரண்டதாய்க்
கொலை தரு வேலினாய் கூறப்பட்டது இ
வலை திரை நெடும் கடல் அவனிவட்டமே

#391
மாற்று_அறு மண்டிலம்-அதனுள் ஊழியால்
ஏற்று_இழிபு உடையன இரண்டு கண்டமாம்
தேற்றிய இரண்டினும் தென்முகத்தது
பாற்று_அரும் புகழினாய் பரத கண்டமே
**பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது

#392
மற்று அது மணி மயம் ஆகிக் கற்பகம்
பொன் திரள் அணி பொழில் போக பூமியாய்
முற்றிய ஊழி மூன்று ஏறி மீள் வழிப்
பிற்றகை ஊழி இவண் பிரமர் தோன்றினார்
**போக காலம் கழிதல்

#393
வெம் கதிர்ப் பரிதியும் விரைவு தண் பனி
அம் கதிர் வளையமும் ஆதி ஆயின
இங்கு இவர் படைத்தனர் இழிந்தது இவ்வகை
பொங்கிய புரவியாய் போக காலமே
**அருகக் கடவுள் தோற்றம்

#394
ஊழி மூன்றாவது ஓய்ந்து இறுதி மன் உயிர்
சூழ் துயர் பல கெடச் சோதி மூர்த்தியாய்
ஏழ் உயர் உலகுடன் பரவ ஈண்டு அருள்
ஆழி அம் கிழமை எம் அடிகள் தோன்றினார்
**உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது

#395
ஆர் அருள் தழுவிய ஆழிக்கு ஆதியாம்
பேர் அருள் மருவிய பிரான்-தன் சேவடி
கார் இருள் கழிதரக் கண் கவின்று அரோ
சீர் அருள் சரண் என உலகம் சேர்ந்ததே
**அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்

#396
அலந்தவர் அழி பசி அகற்றும் வாயிலும்
குலங்களும் குணங்களும் கொணர்ந்து நாட்டினான்
புலம் கிளர் பொறி நுகர்வு இலாத புண்ணியன்
நலம் கிளர் திரு_மொழி நாதன் என்பவே
**பரதன் என்னும் அரசன்

#397
ஆங்கு அவன் திரு_அருள் அலரச் சூடிய
வீங்கிய விரி திரை வேலி காவலன்
ஓங்கிய நெடும் குடை ஒருவன் ஆயினான்
பாங்கு உயர் பரிதி வேல் பரதன் என்பவே
**பரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்

#398
ஆழியால் அகல் இடம் வணக்கி ஆண்டவன்
பாழியா நவின்ற தோள் பரதன் ஆங்கு ஒர் நாள்
ஊழியான் ஒளி மலர் உருவச் சேவடி
சூழி மால் யானையான் தொழுது வாழ்த்தினான்
**பரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்

#399
கதிர் அணி மணி முடி வணங்கிக் காவலன்
எதிரது வினவினான் இறைவன் செப்பினான்
அதிர் தரு விசும்பிடை அமிர்த மாரி சோர்
முதிர் தரு முகிலிடை முழங்கிற்று என்னவே
**அருகக் கடவுள் கூறுதல்

#400
என் முதல் இருபத்தீரிருவர் நாதர்கள்
நின் முதல் ஈரறு வகையர் நேமியர்
மன் முதல் பலவர் கேசவர்கள் மாற்றவர்
தொன் முதல் அவர் தொகை ஒன்பது ஒன்பதே
**முதல் வாசுதேவனை மொழிதல்

#401
மன்னவ நின் மகன் மரிசி மாற்று இடைப்
பொன் அவிர் போதனம் உடைய பூம் கழல்
கொல் நவில் வேலவன் குலத்துள் தோன்றினான்
அன்னவன் கேசவர்க்கு ஆதி ஆகுமே
**அவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்

#402
கேசவனார் திறம் கிளப்பின் வெண் மலை
காசு_அறு வனப்பினோர் கன்னி ஏதுவால்
ஆசு_அற அச்சுவக்கிரீவன் ஆவியும்
தேசு_அறு திகரியும் செவ்வன வெளவுமே
**பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்

#403
தேர் அணி கடல் படைத் திவிட்டன் சென்று பின்
ஆர் அணி அறக் கதிர் ஆழி நாதனாம்
பார் அணி பெரும் புகழ்ப் பரத என்றனன்
சீர் அணி திரு_மொழித் தெய்வத் தேவனே
**அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்

#404
ஆதியும் அந்தமும் நடுவும் நம்மதே
ஓத நீர் உலகு உடை உரிமை என்று அரோ
காது வேல் அரசர்_கோக் களிப்புற்றான் இது
போது சேர் அலங்கலாய் புராண நீர்மையே
**மாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்

#405
அன்னணம் புராணநூல் அகத்துத் தோன்றிய
கல் நவில் இலங்கு தோள் காளையானவன்
மின் நவில் விசும்பின்-நின்று இழிந்து வீங்கு நீர்
மன்னிய வரைப்பகம் மலிரத் தோன்றினான்

#406
திரு அமர் சுரமைநாடு அணிந்து செம்பொனால்
பொருவு_அரு போதனம் உடைய பூம் கழல்
செரு அமர் தோளினான் சிறுவர் ஆகிய
இருவருள் இளையவன் ஈண்டு அ நம்பியே
**அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்

#407
கான் உடை விரி திரை வையம் காக்கிய
மானுட உடம்பினான் மறைந்து வந்த அத்
தேன் உடை அலங்கலான் தெய்வ மார்பகம்
தான் அடைந்து அமர்வதற்கு உரியள் தையலே
**திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்

#408
ஆங்கு அவற்கு ஈந்த பின் ஆழி தாங்கிய
ஈங்கு அவன் கொன்று உனக்கு இரண்டு சேடியும்
தாங்கிய திருவினால் தரும் மற்று என்றலும்
வீங்கிய உவகையன் வேந்தன் ஆயினான்
**சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின்
** வாயைப் பிளப்பான் என்றல்

#409
கொங்கு அலர் தெரியலான் திறத்தில் கொள் குறி
இங்கு யான் இசைத்ததே அமையும் அல்லது ஓர்
திங்கள் நாள் அகவையில் திவிட்டன் ஆங்கு ஒரு
சிங்கம் வாய் பிளந்திடும் தெளி ஈது என்னவே

#410
நிமித்திகன் உரைத்ததும் நிறைந்த சோதியான்
உமைத் தகை இலாதது ஓர் உவகை ஆழ்ந்து கண்
இமைத்திலன் எத்துணைப் பொழுதும் ஈர் மலர்ச்
சுமைத் தகை நெடு முடி சுடரத் தூக்கினான்
**சடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்

#411
இரு நிலத் தலைமகன் இயன்ற நூல்_கடல்
திரு நிதிச் செல்வன் அச் செம்பொன் மாரியாச்
சொரி நிதிப் புனல் உடைச் சோதிமாலை என்று
அரு நிதி வளம் கொள் நாடு ஆள நல்கினான்
**அரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்

#412
மன்னவன் பெயர்ந்து போய் வாயுவேகை-தன்
பொன் நகர் புக்கனன் பொழுதும் சென்றது
கன்னி-தன் பெருமையும் கருமச் சூழ்ச்சியும்
அன்ன மெல் நடையவட்கு அறியக் கூறினான்
**மக்கட்பேற்றின் மாண்பு கூறல்

#413
தொக்கு இள மலர்த் துதைவு இலாத சோலையும்
புக்கு இளம் தாமரை நகாத பொய்கையும்
மிக்கு இளம்பிறை விசும்பு இலாத அந்தியும்
மக்களை இலாதது ஓர் மனையும் ஒக்குமே
**குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்

#414
தலைமகன் தாள்-தனக்கு ஆகச் சாகைய
நிலைமை கொள் மனைவியா நிமிர்ந்த பூம் துணர்
நலம் மிகு மக்களா முதியர் தேன்களாக்
குலம் மிகு கற்பகம் குளிர்ந்து தோன்றுமே
**நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்

#415
சூழி நீள் முகத்தன துளை_கை_மாவொடு
மாழை நீள் மணி இவை எளிய மாண்பினால்
வாழும் நீர் மக்களைப் பெறுதல் மாதரார்க்கு
ஆழி நீர் வையகத்து அரியது ஆவதே
**நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்

#416
தகளி-வாய்க் கொழும் சுடர் தனித்தும் கோழ் இருள்
நிகளவாய்ப் பிளந்து அகம் சுடர நிற்குமே
துகள்_இலாச் சுடர் மணி துளும்பு பூணினாய்
மகள் எலாத் திசைகளும் மலிர மன்னினாள்
**மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்

#417
வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மா மணி
நலம் புரி பவித்திரம் ஆகும் நாம நீர்
பொலம் புரி மயில்_அனாய் பயந்த பூம் கொடி
குலம் புரிந்தவர்க்கு எலாம் கோலம் ஆகுமே
**நீ சிறப்படைந்தாய் எனல்

#418
மக்களை இலாதவர் மரத்தொடு ஒப்ப என்று
ஒக்க நின்று உரைப்பது ஓர் உரையும் மூய்த்து நீர்
நக்க வான் இளம்பிறை வளர்ந்த நாள் கதிர்ச்
செக்கர் வான் அனையது ஓர் திருவும் எய்தினாய்
**சுயம்பிரபையின் பெருமை

#419
மாவினை மருட்டிய நோக்கி நின் மகள்
பூவினுள் மடந்தை பொன் பூவை நாள் ஒளித்
தேவனுக்கு அமிர்தமாம் தெய்வமாம் என
ஓவு_இல் நூல் புரோகிதன் உணர ஓதினான்
**வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்

#420
மத்த வார் மத களிற்று உழவன் மற்று இவை
ஒத்தவாறு உரைத்தலும் உவகை கைம்மிக
முத்த வாள் முகிழ் நகை அடக்கி மொய் குழல்
தொத்து வார் பிணையலாள் தொழுது சொல்லினாள்
**சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்

#421
மின் அவிர் மணி முடி வேந்தர் வேந்த இக்
கன்னி நின் அருளினே கருதப்பட்டனள்
மன்னவர் அருள்_இலர் ஆயின் மக்களும்
பின் அவர் பெறுவது ஓர் பெருமை இல்லையே

#422
பிடிகளை மகிழ் களிற்று அரசர் பெய் மலர்
முடிகளின் மணி பொர முரலும் மொய் கழல்
அடிகளது அருளினால் அம் பொன் சாயல் இக்
கடி கமழ் குழலினாள் கவினும் எய்தினாள்
**அரசன் இன்புற்றிருத்தல்

#423
திரு மனைக் கிழத்தி-தன் தேம் கொள் சில் மொழி
மரு மணி முடியினான் மகிழ்ந்து மற்று அவள்
பரு மணிப் பூண் முலை பாய மார்பிடை
அரு மணித் தெரியல் தேன் அழிய வைகினான்
**மறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்

#424
மற்றை நாள் மகனையும் அமைச்சர்-தம்மையும்
கொற்ற வாள் தட_கையான் கூவிக் கொண்டு இருந்து
இற்று யான் கருதியது என்று தொல்லை_நூல்
கற்ற நாவலனது கதையும் சொல்லினான்
**சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்

#425
வீங்கிய முலையவள் திருவும் வெம் முலைக்கு
ஓங்கிய முகிலவன் உரிய பெற்றியும்
தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்
தேங்கிய உவகையர் தெரிந்து சொல்லினார்
**பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்

#426
தெய்வமே திரி குழல் சிறுமி ஆவதற்கு
ஐயமே ஒழிந்தனம் அனலும் வேலினாய்
செய்யது ஓர் தூது இனித் திவிட்டன் தாதையாம்
வெய்ய வேலவன் உழை விடுத்தும் வேந்தனே
**மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்

#427
கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு
உற்றன உற்ற உய்த்து உரைக்கும் ஆற்றலான்
மற்று அவன் மருசியே அவனை நாம் விடச்
சுற்றமும் கருமமும் சொல்ல வல்லனே
**மரீசியைத் தூது அனுப்புதல்

#428
காரியம் துணிந்தவர் மொழியக் காவலன்
மாரி அம் தட_கையான் வருக என்று ஒரு
சீரிய திருமுகம் சிறப்பொடு ஈந்தனன்
ஆரியன் கழல் அடி அவனும் வாழ்த்தினான்
**மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்

#429
மன்னவன் பணியொடு மருசி வானிடை
மின் அவிர் முகில் குழாம் முழங்கும் வீதி போய்த்
துன்னினன் சுரமைநாட்டு அகணி சூடிய
பொன் நகர் புறத்தது ஓர் பொழிலின் எல்லையே
**வண்டினம் களியாட்டயர்தல்

#430
புது மலர்ப் புட்பமாகரண்டம் என்னும் அப்
பொது மலர்ப் பூம் பொழில் புகலும் பொம்மென
மது மலர் பொழிதர மழலை வண்டு இனம்
கது மலர் இணையொடு கலவி ஆர்த்தவே.

@6. தூதுவிடு சருக்கம்
**பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன

#431
மரு இனியன மது விரிவன மலர் அணிவன வகுளம்
திரு மருவிய செழு நிழலன செம் குழையன தேமா
வரி மருவிய மதுகரம் உண மணம் விரிவன நாகம்
பொரி விரிவன புது மலர் என புன்கு உதிர்வன புறனே
**சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்

#432
நிழல் நகுவன நிமிர் தழையன நிறை குளிர்வன சாந்தம்
எழில் நகுவன இள மலர் என எழு சண்பக நிகரம்
குழல் நகுவன மதுகரம் நிரை குடைவன பல குரவம்
அழல் நகுவன அலர் நெரிதர அசை நிலைய அசோகம்
**இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை

#433
எழுது உருவின எழு தளிர் என இணர் அணிவன இரதம்
இழுது உருவின கொழு மலரிடை எழில் பொலிவன மதுகம்
கழுது உருவின கஞல் இலையன கழி மடலின் கைதை
பொழுது உருவின அணி பொழிலின பொழி தளிர் என புன்னை
**மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு

#434
வளர் கொடியன மணம் விரிவன மல்லிகையொடு மெளவல்
நளிர் கொடியன நறு விரை அக நறு மலரன நறவம்
குளிர் கொடியன குழை மாதவி குவி முகையன கொகுடி
ஒளிர் கொடியன உயர் திரளினொடு ஒழுகு இணரன ஓடை
**கோங்கு முதலியன

#435
குடை அவிழ்வன கொழு மலரின குளிர் களியன கோங்கம்
புடை அவிழ்வன புது மலரன புன்னாகமொடு இலவம்
கடி அவிழ்வன கமழ் பாதிரி கலி களிகைய சாகம்
இடை அவிழ்வன மலர் அளவு_இல இது பொழிலினது இயல்பே
**பொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு

#436
மது மகிழ்வன மலர் குடைவன மணி வண்டொடு தும்பி
குதி மகிழ்வன குவி குடையன நுதி கோதுபு குயில்கள்
புது மகிழ்வன பொழிலிடையன புணர் துணையன பூவை
விதி மகிழ்பவர் மதி மகிழ்வுற விரவுற்றன விரிவே
**மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்

#437
அது அழகு தன் அகம் மகிழ்வுற அலர் தாரவன் அடைய
இது அழகியது இவண் வருக என எழு புள்ளொலி இகவா
விதி வழகு உடை விரி இலையிடை வெறி விரவிய வேரிப்
பொதி அவிழ்வன புது மலர் அணி பொய்கைக் கரை புக்கான்
**பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்

#438
புணர் கொண்டு எழு பொய்கைக் கரை பொரு திவலைகள் சிதறாத்
துணர் கொண்டன கரை மா நனி துறு மலர் பல தூவா
வணர் கொண்டன மலலுற்று அலை வளர் வண்டு இனம் எழுவா
இணர் கொண்டு எதிர் எழு தென்றலின் எதிர்கொண்டது அ இடமே
**விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்

#439
புனல் விரவிய துளிர் பிதிர்வது புரி முத்து அணி மணல் மேல்
மினல் விரவிய சுடர் பொன் ஒளிர் மிளிர் வேதிகை மிகை ஒண்
கனல் விரவிய மணி இடை கனகம் கணி அணி திரளின்
அனல் விரவிய அலர் அணியது ஒர் அசோகம்-அது கண்டான்
**மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட
**மரீசி திகைத்தல்

#440
அதனின் நிழல் அவன் அடைதலும் அது காவலனாவான்
பொதியின் அவிழ் மலர் சிதறுபு பொலிக என்று உரை புகலா
மதியின் ஒளி வளர்கின்றது ஒர் மணியின் சிலை காட்ட
இது என் என இது என் என வினையன் பல சொன்னான்
**நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்

#441
மினல் கொடி விலங்கிய விலங்கல் மிசை வாழும்
புனல் கொடி மலர்த் தொகை புதைத்த பொலி தாரோய்
நினக்கு என இயற்றிய நிலா நிழல் மணிக் கல்
மனக்கு இனிதின் ஏறினை மகிழ்ந்து இரு-மின் என்றான்
**இதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ என்று மரீசி கேட்டல்

#442
அழல் கதிர் இயங்கு அற அலங்கு இணர் அசோகம்
நிழல் கதிர் மரத்தகையது ஆக நினைகில்லேன்
பொழில் கடவுள் பொன் இடம் இது என்னை புகுமாறு என்று
எழில் கதிர் விசும்பிடை இழிந்தவன் மொழிந்தான்
**துருமாந்தகன் மரீசிக்குப் பதிலுரத்தல்

#443
நிலா வளர் நிழல் கதிர் நிமிர்ந்து ஒளி துளும்பும்
சிலாதலம் இதற்கு உரிய தெய்வம் எனல் வேண்டா
அலாதவர் இதற்கு உரியர்_அல்லர் அவர் ஆவிர்
உலாவிய கழல் தகையினீர் என உரைத்தான்
**அங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்

#444
என்ன இது வந்த வகை என்னின் இது கேள்-மின்
நல் நகர் இதற்கு இறைவன் முன்னம் நனி நண்ணித்
தன் நிகர் இகந்தவன் அங்கதன் எனும் பேர்ப்
பொன் அருவி நூல் கெழு புரோகிதன் உரைத்தான்
**தூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்

#445
மின் அவிர் விளங்கு சுடர் விஞ்சை உலகு ஆளும்
வில் நவில் தடக் கை விறல் வேல் ஒருவன் வேண்டி
மன்ன நின் மகற்கு ஒரு மகள் கருமம் உன்னி
இன்னவன் இனைப் பகலுள் ஈண்டு இழியும் என்றான்
**அச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்

#446
மடங்கலை அடும் திறல் நெடுந்தகை-தன் மாறாய்
அடங்கலர் அடங்க அடும் ஆழி அஃது ஆள்வான்
உடங்கு அவன் உடன்று எரி துளும்ப வரும் வந்தால்
நடந்தவன் நடுங்க அடும் நம்பி இவன் என்றான்
**தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்

#447
ஆங்கு அவன் மொழிந்த பின் அடங்கலரை அட்டான்
தேம் கமழ் பொழில் திகழ் சிலாதலம் இது ஆக்கி
ஈங்கு அவன் இழிந்த பின் எழுந்து எதிர்கொள் என்ன
நீங்கலன் இருந்தனன் நெடுந்தகை இது என்றான்
**மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின்
** வழிப்பயணத் துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்

#448
என்று அவன் மொழிந்த பின் இருந்தனன் இருப்பச்
சென்று அவன் வழிச்சிரமை தீர்-மின் என நால்வர்
பொன் தவழ் பொருந்து இழை அணங்கின்_அனையாரை
மின் தவழ் விளங்கு கொடி வேந்தனும் விடுத்தான்
**பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்

#449
பொன் அவிர் மணிக் கலை சிலம்பொடு புலம்ப
மின் அவிர் மணிக் குழை மிளிர்ந்து ஒளி துளும்பச்
சின்ன மலர் துன்னு குழல் தேறலொடு சோர
அன்னம் என அல்ல என அன்னணம் நடந்தார்

#450
நலம் கனி மடந்தையர் நடத்-தொறும் இணர்ப் போது
அலங்கல் அளகக் கொடி அயல் சுடர ஓடி
விலங்கு புருவக் கொடி முரிந்து வெருவு எய்த
மலங்கின விலங்கின மதர்த்த அவர் வாள் கண்

#451
அலத்தகம் அலைத்தன அடித்தலம் அரற்றும்
கலைத்-தலை மலைத்து விரிகின்ற கடி அல்குல்
முலை-தலை முகிழ்த்து ஒளி துளும்பியுள முத்தம்
மலை-தலை மயில் கணம் மருட்டும் அவர் சாயல்
**வண்டுகள் ஒலித்தல்

#452
கணம் கெழு கலாவம் ஒளி காலும் அகல் அல்குல்
சுணங்கு எழு தடத் துணை முலை சுமை இடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்கு
இணங்கு துணையாய் ஞிமிறு இரங்கின எழுந்தே
**இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க

#453
முலைத் தொழில் சிலைத் தொழிலின் ஆர் உயிர் முருக்கும்
நிலைத் தொழில வென்று உளம் நினைத்து ஒழுக இன்பக்
கலைத் தொழில்கள் காமன் எய் கணைத் தொழில்கள் எல்லாம்
கொலைத் தொழில் கொள் வாள் கணின் அகத்த குறி கண்டீர்

#454
துடித்த துவர் வாயொடு துளும்பும் நகை முத்தம்
பொடித்த வியர் நீரொடு பொலிந்த சுடர் ஓலை
அடுத்த திலகத்தினொடு அணிந்த அளகத்தார்
வடித்த சிறு நோக்கொடு முகத் தொழில் வகுத்தார்
**வண்டுகள் மயக்கம்

#455
பூ விரி குழல் சிகை மணிப் பறவை போகா
ஆவி கொள் அகில் புகையுள் விம்மி அவர் ஒண் கண்
காவி என ஊதுவன கைத்தலம் விலங்க
மேவி இவை காந்தள் என வீழ மிக நொந்தார்

#456
சுரும்பொடு சுழன்றுள குழல் தொகை எழில் கை
கரும்பொடு கலந்துள களித்த அவர் தீம் பண்
நரம்பொடு நடந்துள விரல் தலை எயிற்று ஏர்
அரும்பொடு பொலிந்த துவர் வாய் அமிர்தம் அன்றே

#457
கணம் குழை மடந்தையர் கவின் பிறழ் இரும் கண்
அணங்குற விலங்கு-தொறு அகம் புலர வாடி
மணம் கமழ் அலங்கல் உடை மைந்தர்-தம் மனம் தாழ்
வணங்கு இடை வணங்கு-தொறு அணங்கு என வணங்கும்
**மைந்தர்கள் கலங்கி மெலிதல்

#458
நெய் அலர் குழல் தொகை நெருப்பின் அடும் என்பார்
மை அலர் நெடும் கண் இவை வல்ல கொலை என்பார்
தொய்யில் இள மென் முலையில் நீர் சுடுதிர் ஆயின்
உய்யலம் எனத் தொழுது மைந்தர்கள் உடைந்தார்

#459
நாம நூல் கலை விச்சையின் நல் நெறி இவை-தாம்
தாம நீள் குழல் தளர் நடை உருவு கொண்டு_அனையார்
வாம மேகலை மடவரல் இவர்களை வளர்த்தார்
காம நூலினுக்கு இலக்கியம் காட்டிய வளர்த்தார்
**அம் மாதர்களின் தன்மை

#460
இனிய வீங்கிய இள முலை இவர்களை வளர்த்தார்
பனியின் மென் மலர் அலர்ந்தன உவகையில் பயில்வார்
கனிபவேல் இவர் கடல் விளை அமிர்து எனக் கனிவார்
முனிபவேல் இவர் அனங்கன் ஐங்கணை என முனிவார்

#461
புலவி-தானும் ஓர் கலவியை விளிப்பதோர் புலவி
கலவி-தானும் ஓர் புலவியை விளைப்பதோர் கலவி
குலவு வார் சிலை மதனன் ஐங்கணையொடு குலவி
இலவு வாய் உடை இளையவர் உடையன இவையே

#462
மன்னுவார் சிலை மதனன் ஓர் வடிவு கொண்டிலாதான்
தன்னை நாமும் ஓர் தகைமையில் தணத்தும் என்று இருப்பார்
என்னை பாவம் இங்கு இவர்களைப் படைத்தனன் இதுவால்
பின்னை ஆங்கு அவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே.

#463
வாம மேகலை முதல்-நின்று வயிற்று இடை வளர்ந்த
சாம லேகைகள் மயிர் நிரை அல தல மீது
காம நீர் எரி அகத்து கனன்று எழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணை முலை உறவே
**சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்

#464
சனங்கள் தாம் சில தவங்களைத் தாங்குதும் எனப் போய்
வனங்கள் காப்பவர் உளர் என முனிவ மற்று அன்றேல்
தனங்கள்-தாம் தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த
கனம் கொள் வெம் முகம் கறுப்பது என் காரணம் உரையீர்

#465
தூம மென் புகை துழாவி வண்டு இடையிடை துவைக்கும்
தாம ஓதியர்-தம் முகத்தன பிறர் மனத்த
காம நீள் சிலை கணையொடு குனிவ கண்டாலும்
யாம் எம் இன் உயிர் உடையம் என்று இருப்பது இங்கு எவனோ
**மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்

#466
என்று மைந்தர்கள் இடருற எழுதிய கொடி போல்
சென்று கற்பக வனம் அன செறி பொழில் அடைந்தார்
இன்று காமுகர் படையினை இடர்பட நடந்த
வென்றி காமனுக்கு உரைத்தும் என்று இரைத்து அளி விரைந்த
** பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்

#467
ஆடை கைத்தலத்து ஒருத்தி கொண்டது அங்கு அடைப்பை தன்
மாடு கைத்தலத்து ஒருத்தி கொண்டது மணிக் கலம்
சேடி கைத்தலத்தன செறி மணித் திகழ்வ செம்
கோடி கைத்தலத்தன குளிர் மணிப் பிணையலே
**மற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்

#468
வண்ணச் சந்தங்கள் நிறைந்தன மணிச் செப்பு வளர் பூம்
கண்ணிச் சந்தங்கள் நிறைந்தன கரண்டகம் கமழ் பூம்
சுண்ணச் சந்தங்கள் நிறைந்தன சுடர் மணிப் பிரப்போடு
எண்ணச் சந்தங்கள் படச் சுமந்து இளையவர் இசைந்தார்
**மகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்

#469
தகளி வெம் சுடர் எனத் திகழ் மணிக் குழை தயங்க
மகளிர் மங்கல உழைக்கலம் சுமந்தவர் பிறரோடு
உகளும் மான் பிணை அனையவர் உழைச் செல ஒளிர் தார்த்
துகள்_இல் விஞ்சையன் துணிந்தனன் துறக்கம் ஈது எனவே
**மரீசிக்கு வேண்டுவன புரிதல்

#470
துறக்கம் புக்கவர் பெறுவன இவை எனத் துணியா
வெறிக் கள் விம்மிய விரை விரி தாரவன் இருப்பச்
சிறைக் கண் நோக்கமும் சிறு நகைத் தொழில்களும் சுருக்கி
அறை-கண் மாந்தனுக்கு அதிதி அம் தொழிலினில் அமைந்தார்
**மங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்

#471
ஆட்டினார் வெறி கமழ்வன அணி கிளர் நறு நீர்
தீட்டினார் நறும் சாந்தமும் சிறிது மெய் கமழச்
சூட்டினார் சிலர் நறு மலர் அறு_சுவை அடிசில்
ஊட்டினார் அவன் அமரருள் ஒருவன் ஒத்து ஒளிர்ந்தான்
**மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்

#472
வயந்த முன்னிய திலகை கல்லியாணிகை வடிவு ஆர்
வியந்தசேனை மென் கமலமாலதை என விளம்பும்
இயங்கு பூம் கொடி அனையவர் இயல்புகள் நினையா
வயங்கு தொல் புகழ் அம்பரசரன் மகிழ்ந்து இருந்தான்
** பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள்
** புறப்படுதல்

#473
ஆங்கு எழில் பொலிந்தவன் இருந்த பின் அலங்கு தார்
வீங்கு எழில் பொலிந்தானை வேந்தன் ஏவ வீவு_இல் சீர்ப்
பூம் கழல் பொலம் குழைத் திவிட்டனோடு போர்க் கதம்
தாங்கு எழில் பெரும் கை யானை சங்க_வண்ணன் ஏறினான்
**யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு

#474
தம்பியோடு சங்க_வண்ணன் அம் பொன் மாலை தாழ் முகப்
பைம்பொன் ஓடை வீழ் மணிப் பகட்டு எருத்தம் ஏறினான்
செம்பொன் மா மலைச் சிகைக் கரும் கொண்மூவினோடு எழூஉம்
வம்ப வெண் நிலா இலங்கு திங்கள் போல மன்னினான்
**விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்

#475
ஆர்த்த பல்லியக் குழாம் அதிர்த்த குஞ்சரக் குழாம்
தேர்த்த வீரர் தேர்க் குழாம் திசைத்த பல் சனக் குழாம்
போர்த்த சாமரக் குழாம் புதைத்த வெண் கொடிக் குழாம்
வேர்த்த வேந்தர் பல் குழாம் விரைந்த கூந்தல்_மாக் குழாம்
**விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்

#476
பாடுவார் வணங்குவார் பலாண்டு கூறி வாழ்த்துவார்
ஆடுவாரோடு ஆர்வ மாந்தர் அன்னர் இன்னர் ஆய பின்
சூடும் மாலை சோரவும் தொடு ஆர மாலை வீழவும்
மாட வாயில் மேல் எலாம் மடந்தைமார் மயங்கினார்

#477
கொண்டல் ஆர்ந்த பொன் என் இக் குழல் கொடிக் குழாம் அனார்
மண்டலம் நிறைந்த திங்கள் வட்டம் ஒத்த வாள் முகம்
குண்டலம் கொழும் பொன் ஓலை என்று இரண்டு கொண்டு அணீஇ
வண்டு அலர்ந்து மாலை தாழ்ந்து மாட வாய் மறைந்தவே

#478
கூடு தும்பி ஊடு தோய் குழல் தொகைத் துணர் துதைந்து
ஓடும் மேல் எருத்திடைக் குலைந்த கோதையோடு உலாய்
மாட வாயில் மாலை ஞால மாடம் ஏறு மாதரார்
ஆடும் மஞ்ஞை கோடு கொள்வது என்னல் ஆவது ஆயினார்

#479
தொண்டை வாய் மடந்தைமார்கள் சுடிகை வட்ட வாள் முகம்
கொண்ட கோல நீர ஆய கோடி மாடம் மேல் எலாம்
வண்டு சூழ்ந்த பங்கய மலர்க் குழாம் இணைப்படூஉக்
கெண்டையோடு நின்று அலைந்த கேழவாய்க் கிளர்ந்தவே
**விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்

#480
மாலை தாழும் மாட-வாய் நிலத்தகத்து மங்கைமார்
வேல் அவாய நெடிய கண் விலங்கி நின்று இலங்கலால்
சால வாயில்-தாம் எலாம் ஒர் தாமரைத் தடத்திடை
நீல மா மலர்க் குழாம் நிரந்து அலர்ந்த நீரவே

#481
சுண்ண_மாரி தூவுவார் தொடர்ந்து சேர்ந்து தோழிமார்
வண்ண ஆர வளை தயங்கு முன்கை மேல் வணங்குவார்
நண்ணி நாண் ஒழிந்து சென்று நம்பிமார்கள் முன்னரே
கண்ணி தம்-மின் என்று இரந்து கொண்டு நின்று கண்ணுவார்

#482
பாடுவார் முரன்ற பண் மறந்து ஒர்வாறு பாடியும்
ஆடுவார் மறந்து அணி மயங்கியர் மையாடியும்
சூடுவான் தொடுத்த கோதை சூழ் குழல் மறந்து கண்
நாடு வாய் நிழற்கு அணிந்து நாணுவாரும் ஆயினார்

#483
இட்ட வில் இரட்டையும் இரண்டு கெண்டை போல்பவும்
விட்டு இலங்கு தொண்டை அம் கனிப் பிழம்பொடு உள் விராய்ச்
சுட்டி சூட்டு அணிந்து சூளி மை மணி சுடர்ந்து நீள்
பட்டம் வேய்ந்த வட்டம் அல்லது இல்லை நல்ல பாங்கு எலாம்

#484
அலத்தகக் குழம்பு தம் அடித்தலத்து ஒர் பாகமா
நிலத்தலத்து ஒர் பாகமா நீடு வாயில் கூடுவார்
கலைத்-தலைத் தொடுத்த கோவை கண் நெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலைத் தழல் சிதர்ந்த போன்ற மாட வாய் எலாம்

#485
பாடகம் துளங்கவும் பசும்பொன் ஓலை மின்னவும்
சூலகம் துளும்பவும் சுரும்பு சூழ்ந்து பாடவும்
ஊடகம் கசிந்து ஒசிந்து நின்று சென்று வந்து உலாய்
நாடகங்கள் நல் நகர்-கண் நங்கைமார் நவிற்றினார்
**மாதர்கள் மயக்கம்

#486
மாலையால் விளங்கியும் பொன் வாசச் சுண்ணம் வீசியும்
சால வாயில் ஆறு சந்தனக் குழம்பு சிந்தியும்
நீல வாள் நெடும்_கணார் நிரந்து நெஞ்சு தாழ் ஒரீஇ
ஞாலம் ஆளும் நம்பிமாரின் மாலும் ஆகி நண்ணினார்

#487
வேய் மறிந்த தோள் விளர்த்து வெவ் உயிர்ப்பொடு உள் விராய்த்
தோ மறிந்த சூழ் துகில் நெகிழ்ந்து உடுத்து வீழ்ந்து அசைஇப்
பூ மறிந்த தேம் குழல் முடிப் பொதிந்து வீழ்த்து உலாய்த்
தாம் மறிந்த முல்லை வாய தாது உகுத்து உடங்கினார்
**விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்

#488
கொங்கு வார் மலர்த் தடத்து அமர்ந்த கோதைமார்களோடு
அங்கராகம் வீற்றிருந்து அணிந்த ஆரம் மாகுலாய்
மங்கைமார்கள் கண்ணும் வண்டும் மாலையும் மனங்களும்
தங்கும் மார்பின் நம்பிமார்கள் தானை சோலை சார்ந்ததே
**விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்

#489
மான் அளாய நோக்கினார் மனம் கலந்து பின் செல
வான் அளாய சோலை வாயில் மன்ன வீரர் துன்னலும்
கான் அளாய போது அணிந்து காவி விம்மு கள் அளைஇத்
தேன் அளாவு வண்டு கொண்டு தென்றல் சென்று எழுந்ததே
**விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்

#490
செம் முகப் பசும்பொன் ஓடை வெண் மருப்பு இணைக் கரு
வெம் முகத்து வீழ் கடாத்து வேழம் நின்று இழிந்த பின்
கைம்-முகத்து வேல் இலங்கு காமர்தாம்-கொல் என்று சென்று
அம் முகத்து தும்பி வண்டு தேனொடு ஆடி ஆர்த்தவே
**பொழிலின் காட்சி

#491
தாது நின்ற தேறல் நீர் தளித்து இவற்றின் மேல் அளி
கோதுகின்ற போது கொண்டு சிந்தி நம்பிமார்களை
மாது நின்ற மாதவிக் கொடிகள் தம் தளிர்க் கையால்
போதுக என்று இடங்கள் காட்டுகின்ற போல் பொலிந்தவே
**பூங்காவின் பொதுக்காட்சி

#492
போது உலாய வேரி மாரி சாரலாய்ப் பொழிந்து தேன்
கோதலால் நெரிந்த தாது கால் குடைந்து கொண்டு உறீஇ
மாது உலாய வண்டு இரைத்து மங்குல் கொண்டு கண் மறைத்து
ஏதிலார்க்கு இயங்கல் ஆவது அன்று சோலை வண்ணமே
**தென்றல் வீசுதல்

#493
போது உலாய பூம் பொதும்பர் மேல தென்றல் வீசலால்
தாது உலாய போது அணிந்து தாழ்ந்து தாம வார் குழல்
மாதரார்கள் போல வல்லி மார்பு புல்லி மைந்தரைக்
காதலால் வளைப்ப போன்று காவினுள் கலந்தவே
**விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்

#494
புல்லி வண்டு அமர்ந்து தங்கு பூம் தழைப் பொதும்பிடை
மல்லிகைக் கொடிக் கலந்து மெளவல் சூட வெளவு நீர்
வல்லி மண்டபங்கள் சென்று மாதவிக் கொழுந்து அணி
அல்லி மண்டபத்து அயல் அசோகம் ஆங்கண் எய்தினார்
**விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்

#495
பஞ்சு இலங்கும் அல்குலார் பலாண்டு கூற ஆண்டு போய்
மஞ்சு இலங்கு அசோக நீழல் மன்ன வீரர் துன்னலும்
விஞ்சையன் மகிழ்ந்து எழுந்து வென்றி வீரர்-தங்களுக்கு
அஞ்சலித் தடக் கை கூப்பி ஆர்வம் மிக்கு இறைஞ்சினான்
**நீர் எம்மை வணங்குவது ஏன் என்று விசயன் மரீசியைக் கேட்டல்

#496
ஆங்கு அவன் இறைஞ்சலும் மலர்ந்த திங்கள் நீள் ஒளிப்
பூம் கழல் பொலம் குழைப் பொலிந்து இலங்கு தாரினான்
நீங்க அரும் குணத்தின் நீவிர் நீடு குரவர் ஆதலில்
ஈங்கு எமக்கு நீர் பணிந்தது என்னை என்று இயம்பினான்
**விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்

#497
பால் நிறக் கதிர் நகை பரந்த சோதியானையும்
நீல் நிறக் கரும் கடல் நிகர்க்கும் மேனியானையும்
வான் நெறி-கண் வந்தவன் மகிழ்ந்து கண்மலர்ந்து தன்
நூல் நெறி-கண் மிக்க நீர்மை ஒக்க நின்று நோக்கினான்
**மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்

#498
வேல் கொள் தானை வீரர்-தம்மை விஞ்சையன் வியந்து நீள்
நூல் கொள் சிந்தை கண் கடாவ நோக்கிநோக்கி ஆர்கலன்
கால்கள் கொண்டு கண்ணி-காறும் உள் மகிழ்ந்து கண்டு கண்
மால் கொள் சிந்தையார்கள் போல மற்றும்மற்றும் நோக்கினான்
**மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்

#499
வேரி மாலை விம்மவும் விளங்கு பூண் துளும்பவும்
தாரொடு ஆரம் மின்னவும் தயங்கு சோதி கண்கொள
ஆர நோக்ககில்லன் அன்னன் அரச நம்பிமார்களைச்
சார ஆங்கு ஒர் கல் தலத்து இருந்து தான் விளம்பினான்
**விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்

#500
செம்பொன் வான் அகட்டு இழிந்து தெய்வ யானை உள் மறைஇ
வம்பு நீர் வரைப்பகம் வணக்க வந்த மாண்பு உடை
நம்பிமீர்கள் நுங்கள் பாதம் நண்ணி நின்று இறைஞ்சுவார்
அம் பொன் மாலை மார்பினீர் அரும் தவம் செய்தார்களே

#501
திங்கள் வெண் கதிர்ச் சுடர்த் திலத வட்டம் என்று இரண்டு
இங்கண் மால் உயிர்க்கு எலாம் எளிய்ய என்று தோன்றலும்
தங்கள் சோதி சாரல் ஆவ அல்ல அன்ன நீரவால்
எங்கள் முன்னை நுங்கள் தன்மை என்று பின்னை ஏத்தினான்
**தந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்

#502
இமைகள் விட்ட நோக்கம் ஏற இன்ன போல்வ சொல்லலும்
அமைக மாற்றம் நும்மை எங்கள் அடிகள் காண ஏகுவாம்
சுமை கொள் மாலை தொடு களிற்று எருத்தம் ஏறுக என்றனர்
சிமை கொள் தேவர் போல நின்று திகழுகின்ற சோதியார்
**மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்

#503
அம் பொன் மாலை கண் கவர்ந்து அலர்ந்த செல்வ வெள்ளம் ஏய்
வெம்பும் மால் களிற்று எருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப்
பைம்பொன் மாலை வார் மதப் பரூஉக் கை ஈர் உவாக்கள் மீச்
செம்பொன் மாலை மார்பர் சேர்ந்து தேவரில் துளும்பினார்
**மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்

#504
கதிர் நகைக் கபாட வாயில் கதலிகைக் கனக நெற்றி
மதி நக உரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்
புது நகர் இழைத்து முந்து பொலம் கலத் தொகையும் பூவும்
எதிர் நகைத்து உகைத்து மாதர் எதிர்கொள நகரம் சேர்ந்தார்
**மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை

#505
விரைக் கதிர் அலங்கல் செம் கேழ் விண் இயங்கு ஒருவனோடும்
வரைக்கு எதிர்ந்து இலங்கும் மார்பின் மன்னவ குமரச் செல்வர்
எரிக் கதிர் ஏற்றைக் காலம் எழு நிலாப் பருவம் ஏக
நிரைத்து எழும் இருதும் அன்று நிரந்தது ஓர் சவியர் ஆனார்
**தெருவிற் செல்லுதல்

#506
வார் கலந்து இலங்கு கொம்மை வன முலை மகளிர் இட்ட
ஏர் கலந்து எழுந்த தூம வியன் புகை கழுமி நானம்
நீர் கலந்து உகுத்த மாலை நிறம் மதுத் திவலை சிந்தக்
கார் கலந்து இருண்ட போலும் கண் அகல் தெருவுள் சென்றார்
**அரண்மனையின் வாயிலை அடைதல்

#507
தெளிர் முத்த மணலும் செம்பொன் சுண்ணமும் சிதர்ந்து தீம் தேன்
தளிர் முத்தம் மலரும் போதும் சாந்தமும் உழக்கி வண்டு ஆர்
ஒளிர் முத்த முறுவலார்-தம் உழைக்கலம் கலந்து மாலைக்
குளிர் முத்தம் நிழற்றும் கோயில் பெரும் கடை குறுகச் சென்றார்
**பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்

#508
மற்று அவர் அடைந்த போழ்தின் வாயிலோர் உணர்த்தக் கேட்டு
கொற்றவன் அருவி தூங்கும் குளிர் மணிக் குன்றம் போல
முற்றி நின்று இலங்கும் செம்பொன் முடி மிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் சென்று ஓர் கனக கூடத்து இருந்தான்
**பயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்

#509
மன்னவ குமரரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்து
இன் அருள் புரிந்த வேந்தன் இடை அறிந்து இனிதின் எய்திக்
கல் நவில் தோளினான்-தன் கழல் அடி தொழுது நின்றான்
அன்னவர்க்கு இருக்கைத் தானம் அரசனும் அருளிச் செய்தான்
**பயாபதி மன்னன் வீற்றிருக்கும் காட்சி

#510
வீரியக் குமரரோடும் விஞ்சை அம் செல்வனோடும்
காரியக் கிழவர் சூழக் கவின்று கண் குளிரத் தோன்றி
ஆரியன் அலர்ந்த சோதி அரும் கலப் பீடம் நெற்றித்
தாரகை அணிந்து தோன்றும் சந்திர சவியன் ஆனான்
**மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்

#511
அலகை_இல் தானை வேந்தன் அம்பரசரனை நோக்கி
உலகு உபசாரம் மாற்றம் உரைத்தலுக்கு உரிய கூறி
விலகிய கதிர ஆகி விளங்கு ஒளிக் கடகக் கையான்
மலர் அகம் கழுமப் போந்து மனம் மகிழ்ந்து இருந்த போழ்தின்
**மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்

#512
விஞ்சையன் எழுந்து தம் கோன் வெள்ளி வேதண்டம் நோக்கி
அஞ்சலித் தடக் கை கூப்பி அரக்கு இலச்சினையின் வைத்த
எஞ்சல்_இல் ஓலை காட்ட இறைமகன் குறிப்பு நோக்கி
வஞ்சம்_இல் வயங்கு கேள்வி மதிவரன் கரத்தில் வாங்கி
**மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்

#513
நிகர் இகந்து அழகிது ஆகி நெரி வடுப்படாத வேழப்
புகர் முகப் பொறியதாய புகழ்ந்த சொல் அகத்துப் போகா
மகர வாய் மணிக் கண் செப்பின் மசி கலந்து எழுதப்பட்ட
பகர அரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக்கின்றான்
** திருமுகச் செய்தி

#514
போதனத்து இறைவன் காண்க இரதநூபுரத்தை ஆளும்
காது வேல் மன்னன் ஓலை கழலவன்-தனக்கு நாளும்
ஆதிய அடிசில் ஒண் கேழ் அஞ்சனம் உள்ளிட்டு எல்லாம்
தீது தீர் காப்புப் பெற்றுச் செல்க என விடுத்தது அன்றே

#515
அல்லதூஉம் கருமம் ஆவது அலங்கு தார் இவுளித் திண் தேர்
வல்லவன் இளைய நம்பிக்கு உரியளா வழங்கப்பட்டாள்
மல்லக மார்பினான்-தன் மருமகள் இவளைக் கூவி
வல்லிதில் கொடுக்க மன்னன் வாழ்க தன் கண்ணி மாதோ
**திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்

#516
என்றவன் ஓலை வாசித்து இருந்தனன் இறைவன் கேட்டு
வென்றி அம் பெருமை விச்சாதரர் என்பார் எம்மின் மிக்கார்
இன்று இவன் விடுத்தது இவ்வாறு என்-கொலோ என்று சிந்தித்து
ஒன்று மற்று உரைக்கமாட்டாது இருந்தனன் உரம் கொள் தோளான்
**மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்

#517
தீட்ட அரும் திலதக் கண்ணிச் செறி கழல் அரசர்_கோமான்
மீட்டு உரை கொடாது சால விம்மலோடு இருப்ப நோக்கி
வாட்ட அரும் பெருமை எம் கோன் ஓலையை மதியா ஆறு என்று
ஓட்ட அரும் கதத்தன் ஆகிக் கேசரன் உரைக்கலுற்றான்
**மருசி சினந்து கூறுவன

#518
முன்னம் ஓர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர்-தம்மால்
என்னவரேனும் ஆக இகழ்ந்திடப்படுப போல் ஆம்
அன்னதே உலக வார்த்தை ஆவது இன்று அறியும் வண்ணம்
மின் நவின்று இலங்கும் வேலோய் நின்-உழை விளங்கிற்று அன்றே

#519
பூ விரி உருவக் கண்ணிப் பொலம் குழை இலங்கு சோதித்
தேவரே எனினும் தோன்றச் சில் பகல் செல்ப ஆயில்
ஏவரே போல நோக்கி இகழ்ந்து உரைத்து எழுவது அன்றே
மா விரி தானை மன்னா மனிதரது இயற்கை என்றான்

#520
வரை மலி வயங்கு தோளாய் வியாதியால் மயங்கினார்க்குச்
சுரை மலி அமிர்தத் தீம் பால் சுவை தெரிந்து உண்ணல் ஆமோ
விரை மலி விளங்கு பைம் தார் விஞ்சையர் செல்வம்-தானும்
நுரை மலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகரல் ஆமோ

#521
அறவிய மனத்தர் அன்றி அழுங்குதல் இயல்பினார்க்குப்
பிறவியை அறுக்கும் காட்சிப் பெரு நிலை எய்தல் ஆமோ
வெறி மயங்கு உருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்தல் ஆமோ

#522
அரும் கடி கமழும் தாரை அழி மதக் களிற்றின் ஆற்றல்
மரம் கெடத் தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ
இரங்கிடு சிறு புன் வாழ்க்கை இ நிலத்தவர்கட்கு என்றும்
வரம் கிடந்து எய்தல் ஆமோ மற்று எமர் பெருமை மன்னா

#523
உள்ளிய மரம் கொள் சோலை மண் மிசை உறையும் மாந்தர்
ஒள்ளியரேனும் தக்கது உணர்பவர் இல்லை போலாம்
வெள்ளி அம் சிலம்பின் என் கோன் விடுத்ததே ஏதுவாக
எள்ளி ஓர் உரையும் ஈயாது இருந்தனை இறைவ என்றான்
**பயாபதி மன்னன் பதில் உரைத்தல்

#524
ஆங்கு அவன் உரைப்பக் கேட்டே அம்பரசரனை நோக்கித்
தேம் கமழ் அலங்கல் மார்ப சிவந்து உரையாடல் வேண்டா
ஓங்கிய ஓலை மாற்றக்கு உரியவாறு உரைக்கமாட்டாது
ஈங்கு யான் இருந்தது என்றான் எரி சுடர் வயிரப் பூணான்

#525
வெம் சுடர் தெறு தீ விச்சாதரர் என்பார் மிக்க நீரார்
செம் சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியும் காலை
மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக்கு அவர்கள்-தம்மோடு
எஞ்சிய தொடர்ச்சி இன்பம் எய்துதற்கு அரிது மாதோ

#526
ஈட்டிய ஊன் செய் யாக்கை எம்-உழை இன்னவாறு
வாட்டம்_இல் வயங்கு கண்ணி மணி முடி மன்னன் ஓலை
காட்டி நீ உரைத்த எல்லாம் கனவு எனக் கருதின் அல்லால்
மீட்டு அது மெய்ம்மையாக வியந்து உரை விரிக்கல் ஆமோ

#527
இன்னவன் இன்ன நீரான் இன்னவே எய்துக என்று
முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வது அல்லால்
பின்னவன் பிறந்து தன்னால் பெறுதலுக்கு உரிய ஆய
துன்னுவது என்று உக்கு ஆன்று துணியுமோ சொல்ல என்றான்

#528
மெய்ப் புடை தெரிந்து மேலை விழுத் தவம் முயன்று நோற்றார்க்கு
ஒப்பு உடைத்து உங்கள் சேரி உயர் நிலைச் செல்வம் எல்லாம்
எப்படி முயறுமேனும் எங்களுக்கு எய்தல் ஆகாது
அப்படி நீயும் முன்னர் மொழிந்தனை அன்றே என்றான்
**விஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்

#529
இறைவன் ஆங்கு உரைத்த சொல் கேட்டு என்னை பாவம் பொருந்தாக்
கறையவாம் மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற்று ஓரேன்
பொறையினால் பெரியன் பூபன் சிறியன் யான் என்று நாணி
அறிவினால் பெரிய நீரான் அவிந்தன கதத்தன் ஆனான்
**பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்

#530
கிளர்ந்து ஒளி துளும்பும் மேனிக் கேசரரோடு மண் மேல்
வளர்ந்து ஒளி திவளும் பூணோர் மண_வினை முயங்கல் இல் என்று
அளந்து அறிவு அரிய சீரோற்கு ஐயம் ஈது அகற்றுக என்று ஆங்கு
உளர்ந்தனன் உணர்வின் ஊக்கி உரைக்கிய எடுத்துக் கூறும்
**விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்

#531
மஞ்சு இவர் மணம் கொள் சோலை மணி வரைச் சென்னி வாழும்
விஞ்சையர் விச்சையாலே விழுமியர் என்பது அல்லால்
அஞ்சல்_இல் தானை வேந்தே மனிதரே அவரும் யாதும்
வெம் சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை இன்மை கேள்மோ
**விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்

#532
மண் நவில் முழவின் மா நீர்ப் பவபுரம் உடைய மன்னன்
பண் நவில் களி நல் யானைப் பவனவேகற்குத் தேவி
கண் நவில் வடிவின் காந்திமதி அவள் காதல் பாவை
வண்ண வில் புருவ வாள் கண் வாயுமாவேகை என்பாள்

#533
மற்று அவளோடும் வந்தேன் மன்னன் யான் மருசி என்பேன்
அற்றம்_இல் கேள்வி எந்தை அஞ்சுமான் என்னும் பேரான்
பெற்ற தாய் அருசிமாலை பெரு_மகள் அருளினால் யான்
கற்ற நூல் பல்ல ஆகும் கரு மணிக் கடகக் கையாய்

#534
அலகை சால் ஆதி காலத்து அரசர்கள் தொடர்ச்சி எல்லாம்
உலக நூல் பலவும் ஓதி உணர்ந்தனன் உரைப்பக் கேள்மோ
விலகிய கதிர ஆகி விடு சுடர் வயிரக் கோலத்
திலகம் வீற்றிருந்த கண்ணித் திரு முடிச் செல்வ என்றான்
**மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்

#535
ஆதிநாள் அரசர்-தங்கள் அரும் குலம் ஐந்தும் ஆக்கி
ஓத நீர் உலகின் மிக்க ஒழுக்கமும் தொழிலும் தோற்றித்
தீது தீர்ந்திருந்த பெம்மான் திரு_அடி சாரச் சென்று
நீதி நூற்று உலகம் காத்து நிலம் திரு மலர நின்றான்

#536
மூசி நாள் சுரும்பு பாய முருகு உடைந்து உருக்கும் சோலைக்
காசிநாட்டு அரசன் செங்கோல் கதிர் முடிக் கச்சன் என்பான்
மாசு_இல் நால் கடல் அம் தானை மன்ன மற்று அவற்குத் தேவி
தூசினால் துளும்பும் அல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய்

#537
வேய்ந்து அகம் நிழற்றும் கோதை மிளிர் மணிக் கலாப வட்டம்
போந்து அகம் திகழ்ந்து மின்னுப் பூம் துகில் பொலிந்த அல்குல்
ஆய்ந்து அகம் கமழும் கோதை அவள் பெற்ற அரச சிங்க
நாந்தகக் கிழவர் கோவே நமி என்பான் நலத்தின் மிக்கான்

#538
அங்கு அவன் அரசு வேண்டான் அறக் கடல் படைத்த நாதன்
பங்கயம் கமழும் மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியானப் போழ்தில் தாழ்ந்து தன் தடக் கை கூப்பிப்
பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான்
**அருகக் கடவுள் வணக்கம்

#539
அலகு_இலா ஞானத்து அகத்து அடங்க நுங்கி
உலகு எலாம் நின்னுள் ஒளித்தாயும் நீயே
ஒளித்தாயும் நீயே உயிர்க்கு எலாம் கண்ணா
அளித்தாயும் காத்தாயும் நீயே வாழி அற வேந்தே

#540
அழல் நாறும் வெம் கதிரோன் நாண அலராது
நிழல் நாறும் மூர்த்தியாய் நின்றாயும் நீயே
நின்றாயும் நீயே நிறை பொருள் எல்லைக்-கண்
சென்றாயும் வென்றாயும் நீயே வாழி திருமாலே

#541
நிறை தரு கேவலத்தோய் நின் அடியார்க்கு எல்லாம்
குறைதல்_இல் இன்பம் கொடுப்பாயும் நீயே
கொடுப்பாயும் நீயே எம் குற்றேவேல் வேண்டாய்
விடுத்தாயும் நீத்தாயும் நீயே வென்ற பெருமானே
**நமிபாடிய இசையின் தன்மை

#542
என்று அவன் பாடக் கேட்டே இறைஞ்சின குறிஞ்சி ஏகா
நின்றன விலங்கு சாதி நிலம் கொண்ட பறவை எல்லாம்
அன்று மெய்மறந்து சேர்ந்தார் கின்னரர் அமரர் தாழ்ந்தார்
வென்றவன் தியானத்து உள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே
**நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்

#543
மணம் நிரைத்து இலங்கும் தாரோய் மற்று அவன் உலோகநாதன்
குணம் நிரைத்து இசைத்த கீதம் கேட்டலும் மணி கொள் கோவைக்
கணம் நிரைத்து இலங்கும் காய் பொன் முடி மிசை ஈர்_ஐஞ்ஞாறு
பணம் நிரைத்து இலங்கப் புக்கான் பணதரர் அரசன் அன்றே
**நமியை வணங்குதல்

#544
பன்னகர் உலகம் காக்கும் பாய் கதிர்ப் பசும்பொன் மேனி
மின் அவிர் வயிரச் சூட்டு விடு சுடர் மணிப் பொன் பூணான்
தன் நிகர் இகந்த தோன்றல் சரண் எனப் பரமன் பாதம்
மன்னர்கட்கு அரசன் முன்னை வலம்கொடு வணக்கம் செய்தான்
**நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை

#545
தேம் துணர் இலங்கு கண்ணித் தேவன் அத் தேவர்_கோனைத்
தீம் தொடை நரம்பின் தெய்வச் செழும் குரல் சிலம்ப ஏத்தப்
பூம் துணர்க் கற்பலோகம் புடைபெயர்ந்திட்ட போற்றா
வேந்து உடை மானம் எல்லாம் வேலினால் விடுத்த வேந்தே
**ஆதிசேடன் நமியரசனை வினவுதல்

#546
மாண்ட தன் நிலைமை உள்ளி வரு பொருள் மெய்ம்மை நோக்கித்
தூண்டிய சுடரின் நின்ற தியானத்தைத் துளங்குவாய் போல்
ஈண்டு வந்து இசைக் குற்றேவல் எம் இறை அடி-கண் செய்தாய்
வேண்டுவது எவன்-கொல் என்றான் மிடை மணிப் பூணினானே
**நமியரசன் விடையிறுத்தல்

#547
பண் மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரன் பணிந்து மாற்றத்து
உள் மிசைத் தொடர்பு நோக்கி உறு_வலி அதனைக் கேளா
விண்மிசையவர்கள் போல வேண்டிய விளைக்கும் செல்வ
மண் மிசைப் பெறுவன் ஆக மற்று இது என் மனத்தது என்றான்
**ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்

#548
இச்சை அங்கு உரைப்ப கேட்டு ஆங்கு இமையவர் இயற்கை எய்தும்
விச்சையும் துணையும் வெள்ளி விலங்கலும் கொடுத்து வேந்தாய்
நிச்சமும் நிலாக என்று நிறுவிப் போய் நிலத்தின் கீழ்த் தன்
அச்சம்_இல் உலகம் சேர்ந்தான் ஆயிரம் பணத்தினானே
**நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்

#549
ஆங்கு அவன் குலத்து உளான் எம் அதிபதி அவனோடு ஒப்பாய்
ஓங்கிய குலமும் செல்வப் பெருமையும் உடைய நீயும்
ஈங்கு இரு குலத்து_உளீர்க்கும் கருமம் வந்து இசைத்த போழ்தின்
நீங்கு_அரு நறு நெய் தீம் பால் சொரிந்தது ஓர் நீர்மைத்து என்றான்
**பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்

#550
தம் குலத் தொடர்ச்சி கூறித் தானவன் இருந்த போழ்தின்
நும் குல நிலைமை எல்லாம் நூலின் நீ உரைத்தவாறே
எம் குல நிலைமை யானும் உரைப்பன் என்று எடுத்துக்கொண்டு
பொங்கு அலர்ப் பிணையலான்-தன் புரோகிதன் புகலலுற்றான்
**அங்கனிமித்திகன் கூறுதல்

#551
யாவனால் படைக்கப்பட்டது உலகு எலாம் யாவன் பாத்தது
ஏவனால் வணக்கப்பட்டது யாவனது அகலம் சேர்ந்து
பூவினாள் பொறி ஒன்று ஆனாள் புண்ணிய உலகம் காண
ஏவினான் யாவன் நம்மை யாவனது உலகம் எல்லாம்

#552
மற்று அவன் அருளின் வந்தான் மரகத மணிக் குன்று ஒப்பச்
சுற்றி நின்று இலங்கும் சோதித் தோள் வலி எனும் பேரான் அக்
கொற்றவன் உலகம் காத்த கோன் முறை வேண்டி அன்றே
கற்றவர் இன்று-காறும் காவல் நூல் கற்பது எல்லாம்
**வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்

#553
கொடி வரைந்து எழுதப்பட்ட குங்குமக் குவவுத் தோளான்
இடி முரசு அதிரும் தானை இறைத் தொழில் மகனுக்கு ஈந்து
கடி மணம் அனுக்கும் தெய்வக் கழல் அடி அரசர்-தங்கள்
முடி பொர முனிவின் தான் போய் முனிவன முன்னினானால்
**கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்

#554
விண் உயர் விளங்கு கோட்டு விடு சுடர் விளங்கமாட்டாக்
கண் உயர் கதலி வேலிக் கார்க் கயிலாய நெற்றிப்
புண்ணியக் கிழவன் போகிப் பொலம் கலம் புலம்ப நீக்கித்
திண்ணிய தியானச் செம் தீச் செம் சுடர் திகழ நின்றான்
**வாகுவலியின் தவநிலைமை

#555
கழல் அணிந்து இலங்கு பாதம் கலந்தன கரும் கண் புற்றத்து
அழல் அணிந்து எழுந்த ஐ வாய் அரு மணி ஆடும் நாகம்
பொழில் அணிந்து எழுந்த வல்லி புதைந்தன பூமிநாதன்
குழல் அணிந்து எழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம்

#556
அரு முடி அரசர் தாழ்ந்த அடி மிசை அரவம் ஊரக்
கரு வடி நெடும் கண் நல்லார் கலந்த தோள் வல்லி புல்ல
மருவு உடை உலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்
திரு உடை அடிகள் நின்ற திறம் இது தெரியலாமோ

#557
வண்டு அவாம் குவளைக் கண்ணி மன்னர்-தம் மகுட கோடி
விண்டவாம் பிணையல் உக்க விரி மதுத் துவலை மாரி
உண்ட வான் கழல்கள் சூழ்ந்த திரு_அடி அரவம் ஊரக்
கண்டவாறு இங்கணார்க்கும் கருதுவது அரிது கண்டாய்

#558
அடுக்கிய அனிச்சப்பூவின் அமளி மேல் அரத்தச் செவ்வாய்
வடிக் கயல் நெடும்_கணார்-தம் வளைக் கையால் வளைத்த மார்பில்
தொடுக்கிய தொடுத்த போலும் துறு மலர்க் கத்தி மாதர்
கொடிக் கையால் இடுக்கல்-தன் மேல் கொற்றவன் குலவப்பட்டான்

#559
புல்லிய பொலம் கொம்பு ஒப்பார் புலவியுள் கலவி சென்று
மெல்லிய மாலை-தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல் உயர் அலர்ந்த மார்பின் மாதவிப் பேதை ஆர்த்த
வல்லிகள் விடுக்கமாட்டா மனத்தினன் மன்னன் ஆனான்
**வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்

#560
ஓவல்_இல் குணங்கள் என்னும் ஒளிர் மணிக் கலங்கள் தாங்கித்
தேவர்கள் உலகம் எல்லாம் செழு மணம் அயர்ந்து கூட்டக்
கேவலப் பெண் என்பாள் ஓர் கிளர் ஒளி மடந்தை-தன்னை
ஆவியுள் அடக்கிப் பின்னை அமரர்க்கும் அரியன் ஆனான்
**வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்

#561
எங்கள் கோன் இவன்-கண்-நின்று மிக்கு உயர் குலத்து வேந்தர்
தங்கள் ஓர் புறஞ்சொல் வாராத் தன்மையால் உலகம் காத்தார்
அங்கு அவர் வழிக்-கண் தோன்றி அகல் இடம் வணங்க நின்ற
இங்கு இவன் பெருமை நீயும் அறிதியால் ஏந்தல் என்றான்
**மருசி மேலுங் கூறத்தொடங்குதல்

#562
குடித் தொடர் இரண்டும் கேட்டே குறுமயிரெறிந்து கண்ணுள்
பொடித்த நீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தனர் இருந்த வேந்தர்
அடுத்து எரி அலர்ந்த செம்பொன் அணி மணி முடியினான் அங்கு
எடுத்து உரை கெடாத முன்னம் கேசரன் இதனைச் சொன்னான்
**வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்

#563
இப்படித்து ஆயின் பண்டை இசைந்தது சுற்றம் என்னை
அப்படி அரிய செய்த அடிகள் எம் அரசன் ஆய
கைப் புடை இலங்கு செவ்வேல் கச்சற்கு மருகனார் என்று
ஒப்பு உடைப் புராண நல் நூல் உரைப்பது யான் அறிவன் என்றான்

#564
மன்னவன் மனத்தினால் தம் இறைவனை வணங்கி வாழ்த்திப்
பின் அவன்-தன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்
முன்னிய உலக நூலும் குலங்களும் முறையும் உள்ளிட்டு
இன்னவாறு அறியும் நீரோர் இல்லை நின் போல என்றான்
**அரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்

#565
மந்திரக் கிழவர் கண்ணா மக்கள் தன் தாள்கள் ஆகச்
சுந்தர வயிரத் திண் தோள் தோழராச் செவிகள் ஒற்றா
அந்தர உணர்வு நூலா அரசு எனும் உருவு கொண்ட
எந்திரம் இதற்கு வாயாத் தூதுவர் இயற்றப்பட்டார்
**சிறந்த தூதுவன் சிறப்பு

#566
ஆதி நூல் அமைச்சர்க்கு ஓது மாண்பு எலாம் அமைந்து நின்றான்
தூதனாச் சொல்லின் சொல்லாச் சூழ் பொருள் இல்லை போலாம்
ஏதிலார்க்கு ஆவது உண்டோ இன்னன புகுந்த போழ்தில்
கோது_இலாக் குணங்கள் தேற்றிக் கொழித்து உரை கொளுத்தல் என்றான்
**பயாபதி மரிசியைப் பாராட்டல்

#567
மற்று இ மாண்பு உடைய நின்னை உடைய அ மன்னர்_மன்னன்
எற்றை நூற்று எய்தமாட்டான் இதன் திறம் நிற்க எம்மைச்
சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்
பெற்றி யாம் பிறவி-தன்னால் பெறும் பயன் பெற்றது என்றான்
**பயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்

#568
இன்று யான் நின்னை முன்வைத்து இனிச் சில உரைக்கல் வேண்டா
ஒன்றி யான் உரைக்கற்பால உரையையும் உணர்த்தி நீயே
வென்றியால் விளங்கு தானை விஞ்சை அம் கிழவன் கண்ணா
நின்று யான் வாழ்வது அல்லால் நினைப்பு இனி இல்லை மன்னோ

#569
கொற்றவன் குறிப்பு இது ஆயின் கூவித் தன் அடியன்மாரை
உற்றது ஓர் சிறு குற்றேவற்கு உரியராய்க் கருதித் தானே
அற்றம்_இல் அலங்கல் வேலோன் அறிந்து அருள்செய்வது அல்லால்
மற்று யான் உரைக்கும் மாற்றம் உடையனோ மன்னற்கு என்றான்
**மருசிக்குச் சிறப்புச் செய்தல்

#570
தூதன் மற்று அதனைக் கேட்டே தொழுது அடி வணங்கிச் செங்கோல்
ஏதம்_இல் புகழினாய் யான் அடி வலங்கொள்வன் என்னப்
போது சேர் அலங்கலானும் பொலம் கலம் பொறுக்கலாகாச்
சோதிய சுடரச் சேர்த்திப் பெரும் சிறப்பு அருளிச் செய்தான்
**மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்

#571
அற்றைநாள் அங்குத் தாழ்ப்பித்து அகல் நகர்ச் செல்வம் தன்னோடு
உற்றவன் உவப்பக் கூறி உரிமை நாடகங்கள் காட்டிப்
பிற்றைநாள் குரவர்-தம்மைப் பின் சென்று விடு-மின் என்று
மற்று அவர்க்கு அருளிச் செய்தான் மருசியும் தொழுது சென்றான்
**மருசி தனது நகரத்தை அடைதல்

#572
உலன் நலன் அடு திண் தோள் ஊழி வேல் ஓடை யானைச்
சலநலசடி என் பேர்த் தாமரைச் செம்_கணான்-தன்
குல நலம் மிகு செல்கைக் கோவொடு ஒப்பார்கள் வாழும்
நலன் அமர் நளி சும்மைத் தொல் நகர் நண்ணினானே

@7. சீயவதைச் சருக்கம்
**மரீசி சடி மன்னனைக் காண்டல்

#573
மற்ற மா நகர் மருசி புக்க பின்
கொற்ற வேலவன் கோயில் மா நெதி
முற்று வான் கடை மூன்றும் சென்று கோன்
சுற்று வார் கழல் தொழுது துன்னினான் .

#574
விலங்கு வார் குழை மிளிர்ந்து வில் இடக்
கலந்து மா மணிக் கடகம் மின்செய
அலங்கல் வேலினான் அங்கையால் அவற்கு
இலங்கு மா நிலத்து இருக்கை ஏவினான்
**சடிமன்னன் மரீசியின் கருத்தைக் குறிப்பாலுணர்தல்

#575
தொகுத்த மாண்பு உடைத் தூதன் மன்னவன்
வகுத்த மா மணித் தலத்தின் மேல் மனத்து
அகத்தினால் அமர்ந்து இருப்ப ஆங்கு அவன்
முகத்தினால் பொருள்_முடிவு கண்ணினான்

#576
தூதனின் முகப் பொலிவினால் சுடர்க்
காது வேலினான் கருமம் முற்றுற
ஓதி ஞானி போல் உணர்ந்த பின் அது
கோது_இல் கேள்வியான் தொழுது கூறினான்
** மரீசியின் கூற்று

#577
வெல்க வாழி நின் வென்றி வார் கழல்
செல்க தீயன சிறக்க நின் புகழ்
மல்க நின் பணி முடித்து வந்தனன்
பில்கும் மும்மதப் பிணர்க்கை யானையாய்

#578
இங்கு நின்று போய் இழிந்த சூழலும்
அங்கு வேந்தனை அணைந்த வாயிலும்
பொங்கு தானையான் புகன்ற மாற்றமும்
தொங்கல் மார்பினாய் சொல்லுகேன் எனா

#579
அள் இலைச் செழும் பலவின் ஆர் சுளை
முள் உடைக் கனி முறுகி விண்டெனக்
கள் உறைத்-தொறும் கழுமி ஊற்று அறா
வள் இலைப் பொழில் மகிழ்ந்து புக்கதும்

#580
முள் அரைப் பசு முளரி அம் தடத்
துள் இரைத்து எழும் ஒலிசெய் வண்டு இனம்
கள் இரைத்து உகக் கண்டு வண் சிறைப்
புள் இரைப்பது ஓர் பொய்கை சார்ந்ததும்

#581
நித்திலம் மணி நிரந்து வெள்ளி வேய்
பத்தி சித்திரப் பலகை வேதிகை
சித்திரங்களில் செறிந்து காமனார்
அத்திரம் என அசோகம் கண்டதும்

#582
தண் நிழல் சுடர்த் தமனியத்தினால்
மண் நிழல் கொள மருங்கு சுற்றிய
வெண் நிழல் சுடர் விளங்கு கல்தலம்
கண் நிழல் கொளக் கண்ட காட்சியும்

#583
சுரிந்த குஞ்சியன் சுடரும் மேனியன்
எரிந்த பூணினன் இலங்கு தாரினன்
வரிந்த கச்சையன் ஒருவன் வந்து வண்டு
இரிந்து பாய இங்கு ஏறுக என்றதும்

#584
மற்று அவன் தனக்கு உரைத்த மாற்றமும்
கொற்றவன் விடக் கொம்பு_அனார் சிலர்
உற்ற மங்கலக் கலங்களோடு உடன்
முற்ற ஊண் தொழில் முடிந்த பெற்றியும்

#585
பங்கயத்து அலர்ச் செம் கண் மா முடித்
திங்கள் வண்ணனும் செம்பொன் நீள் குழைப்
பொங்கு வெண் திரைப் புணரி வண்ணனும்
அங்கு வந்ததும் அவர்கள் சொற்றதும்

#586
நல் புறத்தன நாற்பதாம் வயது
இப்புறத்தன இளம் கரும் கைம்மா
மொய்ப் புறத்து மேல் முழங்கு தானையோடு
அப்புறத்து அரசவை அடைந்ததும்

#587
மன்னவன் கழல் வணங்கி நின்றதும்
பின் அவன்-தனால் இருக்கை பெற்றதும்
பொன் நிறப் பொறி புகழ்ந்த சாதகம்
துன்னி வாசகம் தொழுது கொண்டதும்

#588
ஓட்டு_இல் தானையான் ஓலை வாசகம்
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான்
மீட்டு ஒர் சொல் கொடா விம்மிதத்தனாய்
ஈட்டு மோனியாய் இருந்த பெற்றியும்

#589
இருந்த மன்னன் மேல் எடுத்த மாற்றமும்
வருந்தி மற்றவன் மறுத்த வண்ணமும்
புரிந்து தொல் குலம் புகன்ற பெற்றியும்
அரும் தகைத் தொடர்பு அமைந்த ஆக்கமும்

#590
பின்னை மன்னவன் பேணி நல் மொழி
சொன்ன வண்ணமும் சுற்றம் ஆயதும்
பொன் நகைக் குலம் பொலிந்து கண்கொள
இன் நகைச் சிறப்பு அருளி ஈந்ததும்

#591
அரும் கலக் குழாத்து அரசன் தேவிமார்
பெரும் குலத்தவர் பெயர்ந்து கண்டதும்
ஒருங்கு மற்று உளோர் உரைத்த வார்த்தையும்
சுருங்கு_இல் கேள்வியான் தொழுது சொல்லினான்
** பயாபதி மன்னனின் பெருமையை மரீசி கூறல்

#592
சொன்ன வார்த்தை இஃது இருக்கச் சொல்லுவது
இன்னம் ஒன்று உள அடிகள் யான் பல
மன்னர்-தங்களை மகிழ்ந்து கண்டனன்
அன்ன நீர்மையார் அரசர் இல்லையே

#593
கற்ற நூல் பிறர் கற்ற நூல் எலாம்
முற்ற நோக்கினும் முற்ற நோக்கல
உற்ற நூல் எலாம் உற்ற நூல்களாய்ப்
பெற்ற நூல் அவன் பெற்றி வண்ணமே

#594
எரியும் ஆணையான் குளிரும் ஈகையான்
பெரியன் பெற்றியால் சிறியன் நண்பினான்
அரியன் வேந்தர்கட்கு எளியன் ஆண்டையார்க்கு
உரியன் ஓங்குதற்கு ஓடை யானையான்

#595
எல்லை நீர் உலகு இனிது கண்பட
வெல்லும் வேலவன் விளங்கு தண் அளி
இல்லையேல் உலகு இல்லையாம் என
நல்லனே அவன் நாம வேலினாய்

#596
கற்ற நூலினர் கலந்த காதலால்
உற்ற போழ்து உயிர் கொடுக்கும் ஆற்றலால்
கொற்ற வேலவன் குடையின் நீழலார்
சுற்ற மாண்பினர் சுடரும் வேலினாய்

#597
கோது_இலார் குல மக்கள் மாக்கள் மற்று
ஏதிலார் என இயைந்தது இன்மையார்
ஆதலால் தமர் பிறர்கள் ஆவது அங்கு
ஓதில் ஆர் அவர்க்குள் அஃது இல்லையே

#598
வையம் இன்புறின் மன்னன் இன்புறும்
வெய்யது ஒன்று உறில் தானும் வெய்து உறும்
செய்ய கோலினாய் செப்பலாவது அன்று
ஐய தாரினான் அருளின் வண்ணமே

#599
வீவு_இல் வீங்கு நீர் வேலி வாழ்பவர்க்கு
ஆவி ஆபவர் அரசர் ஆதலால்
காவல் ஓவும்-கொல் என்று கண்படான்
மா வல் தானை அ மன்னர்_மன்னனே
** விசயதிவிட்டரின் பண்பு

#600
மங்குல் மா மழை மாரி வண்_கையான்
பொங்கு காதலால் புதல்வர் தாமும் மற்று
இங்கண் வேந்தர்கட்கு ஏனை மான்-கண் முன்
சிங்க ஏறு எனச் செப்பும் நீரரே

#601
கை அவாச் சிலைக் காமன் இங்கு இரு
மெய்யினால் வெளிப்பட்ட நீரதால்
வையம் ஆள்பவன் புதல்வர் வார் கழல்
ஐயன்மார்கள்-தம் அழகின் வண்ணமே

#602
சங்க_வண்ணனார் தம்பி-தானும் நீர்
பொங்கு கார் முகில் புரையும் மேனியன்
அம் கண் இ உலகு ஆள நாட்டிய
மங்கலப் பொறி மன்ன காண்டியால்

#603
செம் கண் மாலவன் தெய்வ மார்பகம்
பங்கயத்து மேல் பாவை-தன்னுடன்
நம் குல_கொடி நங்கை சேர்வதற்கு
இங்கன் மா தவம் எவன்-கொல் செய்ததே
**மரீசி திவிட்டனும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்

#604
நங்கை அங்கு அவன் நலத்திற்கு ஒப்பவள்
இங்கு இவட்கு வேறு ஏந்தல் இல் இவர்
பொங்கு புண்ணியம் புணர்த்தவாறு இது
வெம் கண்_அனையாய் வியக்கும் நீரதே
**சடி மன்னன் மரீசிக்குச் சிறப்பு செய்தல்

#605
என்று கூறலும் ஏந்து நீள் முடி
வென்றி நீள் புகழ் வேக யானையான்
அன்று மற்று அவற்கு அருளி ஈந்தனன்
இன்று மின் சுடர் நிதியின் நீத்தமே
**சடிமன்னன் அமைச்சரை வினாதல்

#606
மற்று அவன்-தனை மனை புகப் பணித்து
உற்ற மந்திரத்தவர்களோடு இருந்து
எற்று நாம் இனிச் செய்வது என்றனன்
வெற்றி நீள் குடை வேந்தர்_வேந்தனே
**அமைச்சரின் விடை

#607
செம் கண் நீள் முடிச் செல்வ சென்று ஒரு
திங்கள் நாளினுள் திவிட்டன் ஆங்கு ஒரு
சிங்கம் வாய் பகத் தெறுவன் என்பது
தங்கு கேள்வியான் தான் முன் சொன்னதே

#608
ஆதலால் அஃது அறியும் வாயிலா
ஓதும் மாண்பினான் ஒருவன் ஒற்றனாய்த்
தீது_இல் தானையாய் செல்ல வைப்பதே
நீதியாம் என நிகழ்த்தினார் அரோ
**மன்னன் ஒற்றாய்தல்

#609
உய்த்து உணர்ந்து அவர் உரைத்த நீதி மேல்
வைத்த ஒற்றினன் மன்னன் ஆன பின்
அத்திறத்தனே அமர்ந்த சிந்தையன்
ஒத்த சுற்றமோடு உவகை எய்தினான்
** அச்சுவகண்டன் செய்தியைக் கூறுவாம் எனல்

#610
இத் திசைக்-கண் இவ்வாறு இது செல்லும் நாள்
அத் திசைக்-கண் அஞ்சப்படும் ஆழியான்
எத்திசைக்கும் வெய்யோன் இயல் முன்னுற
வைத்து இசைத்தனம் மற்றதும் கூறுவாம்
** அச்சுவக்சுண்டன் காமக் களியாட்டம் கூறுவன

#611
பஞ்சி மேல் மிதிக்கில் பனிக்கும் தகை
அம்_சில்_ஓதியர் அம் முலை நாஞ்சிலா
மஞ்சு தோய் வரை மார்பம் மடுத்து உழத்
துஞ்சல் ஓவும் தொழிலினன் ஆயினான்

#612
முத்த வாள் நகை மொய் பவளத் துணி
ஒத்த வாய் அமுது ஒண் கடிகைத் திரள்
வைத்த வாயினனாய் மடவார்கள்-தம்
சித்த வாரிகளுள் சென்று தங்கினான்

#613
ஆரம் தங்கிய மார்பனும் அம் தளிர்க்கு
ஆரும் கொம்பு_அனையாரும் கலந்துழித்
தாரும் கொங்கைகளும் பொரத் தாம் சில
வாரம்பட்டு அணி வண்டு இனம் ஆர்த்தவே

#614
வண்டு தோய் மது வாக்கி வள்ளத்தினுள்
கொண்டு கொம்பு_அனையார்கள் கொடுப்ப அஃது
உண்டு மற்று அவர் ஒண் துவர் வாய் ஒளித்
தொண்டை அம் கனி இன் சுவை எய்தினான்

#615
தாம மென் குழலார் தடம் கண் எனும்
தேம் மயங்கிய செங்கழுநீர் அணி
காமம் என்பது ஒர் கள்அது உண்டு அரோ
யாமமும் பகலும் மயர்வு எய்தினான்

#616
சுற்று வார் முலையார்-தம் துகில் தடம்
உற்று மூழ்கும் பொழுது முனிவு அவர்
உற்ற போழ்து உணர்த்தும் பொழுதும் அலால்
மற்று ஒர் போழ்து_இலன் மன்னவன் ஆயினான்

#617
மண் கனிந்த முழவின் மடந்தையர்
கண் கனிந்திடும் நாடகக் காட்சியும்
பண் கனிந்த இன் தீம் குரல் பாடலும்
விண் கனிந்திடவே விழைவு எய்தினான்

#618
வாவியும் மது மண்டபச் சோலையும்
தூவி மஞ்ஞை துதைந்த செய்குன்றமும்
பாவும் வெண் மணலும் புனல் பட்டமும்
மேவும் நீர்மையனாய் விளையாடினான்

#619
மின்னும் செம் கதிர் மண்டிலம் வெய்து ஒளி
துன்னும் திங்கள் பனிச் சுடர் தண்ணிது
என்னும் இத்துணையும் அறியான் களித்து
அன்னன் ஆயினன் அச்சுவகண்டனே
**அச்சுவக்கண்டனின் அரசியல்

#620
சீறில் தேர்ந்து உணர்வு இன்றிச் செகுத்திடும்
மாறு உண்டு என்பது ஓர் மாற்றம் பொறான் மனம்
தேறின் யாரையும் தேறும் செருக்கொடு இவ்
வாறு சென்றது அவற்கு அரசு என்பவே
**பூமகள் அச்சுவக்கண்டன் ஆட்சியிலிருந்தகலச் செவ்வி தேர்தல்

#621
தோடு மல்கு சுரும்பு அணி கோதையர்
கோடி மென் துகில் குய்யத் தடம் படிந்து
ஆடித் தன் அணையாமையில் பூ_மகள்
ஊடலுற்று இடம் பார்த்து உளள் ஆயினாள்
**சதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு அரசியலறம் கூறல்

#622
ஆங்கு ஒர் நாள் இறைபெற்று அறிவின் கடல்
தாங்கினான் சதவிந்து என்பான் உளன்
நீங்கலாப் புகழான் தன் நிமித்திகன்
வீங்கு வெல் கழலாற்கு விளம்பினான் .
**அரசர்க்குரிய அறுவகைப் பகைகள்

#623
மன்ன கேள் வளை மேய் திரை மண்டிலம்-
தன்னை ஆள்பவர்க்கு ஓதின தம்-கணே
பன்னின் ஆறு பகைக் குலமாம் அவை
முன்னம் வெல்க என்றான் முகம் நோக்கினான்

#624
தன்னை வென்ற தண் தார் வய வேந்தனைப்
பின்னை வேறல பிறர்க்கு அரிது ஆதலால்
மன்ன மற்று அவன் ஆளும் வரைப்பகம்
பொன்னின் மாரி பொழிந்திடும் நன்று அரோ

#625
மாசு_இல் தண்டு அன்ன தோள் மன்ன மன்னிய
கோசு_இல் தண்டத்தன் ஆய்விடின் கொற்றவன்
ஏசு_இறு அண்டம் பரவ இ வையகம்
ஆசு_இல் தண்டத்தனாய் இனிது ஆளுமே

#626
பெற்ற தன் முதலாப் பின் பெறாததும்
சுற்றி வந்து அடையும்படி சூழ்ந்து சென்று
உற்ற வான் பொருள் காத்து உயர் ஈகையும்
கற்றவன் பிறர் காவலன் ஆகுவான்

#627
அருக்கன் தன் அறிவு ஆக அலர்ந்த நீர்த்
திருக் கவின்ற செல்வச் செழும் தாமரை
செருக்கு எனப்படும் திண் பனி வீழுமேல்
முருக்கும் மற்று அதனை முகத் தாரினாய்

#628
இகழ்ச்சியில் கெடுவார்களை எண்ணுக
மகிழ்ச்சியுள் மதி மைந்துறும் போது எனப்
புகழ்ச்சி நூலுள் புகன்றனர் பூவினுள்
திகழ்ச்சி செல் பொன் மணி முடி மன்னனே
**அரசே! நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல்

#629
நெறியில் நீதிக்-கண் நேர் இவை ஒப்பவும்
அறிதி நீ அவை நிற்க அழன்று நீ
செறுதியேனும் செம்பொன் முடி மன்ன ஓர்
உறுதி யான் உரைப்பான் உறுகின்றதே
**அச்சுவக்கண்டனும் அங்ஙனமாயின் அவ்வுறுதி யாது கூறுதி எனல்

#630
என்றலும் இணர் வேய் முடி மாலையான்
நன்று சொல்லுக என்று நகை மணிக்
குன்றம் அன்ன திண் தோள் மிசைக் குண்டலம்
சென்று மின் சொரியச் செவி தாழ்த்தினான்
**நிமித்திகன் கூறல்

#631
பூமி மேல் புரிசை மதில் போதனம்
நாம நல் நகர் ஆளும் நகை மலர்த்
தாம நீள் முடியான்-தன் புதல்வர்கள்
காமவேள்_அனையார் உளர் காண்டியால்

#632
ஏந்து தோளவருள் இளையான் நமக்கு
ஆய்ந்த தொல் பகை ஆகும் என்றே உறப்
போந்து ஒர் புன்சொல் நிமித்தம் புறப்பட
வேந்த யான் மனத்தின் மெலிகேன் அரோ
**அச்சுவக்கண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்

#633
முத்த நீள் முடியாய் முன்னம் மற்று அதற்கு
ஒத்தவாறு உணர்ந்தீ என என் செயும்
மைத் தகை மனத்தான் மனித்தன் எனக்
கைத்தலம் கதிர் வீச மறித்தனன்
**அச்சுவக்கண்டன் கூறுதல்

#634
மிகையின் வந்த விச்சாதர வேந்தர்-தம்
தொகையை வென்ற என் தோள் உளவாப் பிற
பகை இனிப் படர்ந்து என் செயும் என்றனன்
நகை கொள் நீள் முடி நச்சரவம்_அனான்
**அச்சுவக்கண்டனின் சினமொழிகள்

#635
மாசு_இல் ஆலவட்டத்து எழும் மாருதம்
வீச விண் தொடு மேரு துளங்குமோ
பேசின் மானிடப் பேதைகள் ஆற்றலால்
ஆசு_இல் தோள் இவை-தாம் அசைவு எய்துமோ

#636
வேழத்தின் மருப்புத் தடம் வீறுவ
வாழைத்தண்டினுள் ஊன்ற மழுங்குமோ
ஆழித்தானவர் தானையை அட்ட என்
பாழித் தோள் மனித்தர்க்குப் பணியுமோ

#637
வேக மாருதம் வீச விண்-பால் சிறு
மேக சாலம் விரிந்து எதிர் செல்லுமோ
ஏகம் ஆய என் சீற்றம் அஞ்சாது எதி
ராக மானுடர்-தாம் அசைகிற்பவோ

#638
குலிசம் இந்திரன் கொண்டு பணிக்குமேல்
மலையின் மா சிகரங்களும் வீழ்த்திடும்
நிலைய வெம் சுடர் ஆழி நினைப்பனேல்
தொலைவு_இல் வானவர் தோளும் துணிக்குமே

#639
விச்சை மற்றவர்-தம்மை விடுப்பது ஓர்
இச்சை என்-கண் உண்டாம் எனில் யாவரே
அச்சம் இன்றி நிற்பார் அ நிமித்த நூல்
பொச்சல் ஆம்-கொல் புலந்து எழு நீர்மையாய்

#640
புலவர் சொல் வழி போற்றிலன் என்பது ஓர்
அலகு_இல் புன்சொலுக்கு அஞ்சுவன் அல்லதேல்
உலகம் ஒப்ப உடன்று எழுமாயினும்
மலைவன் மற்று அதன்-கண் மதிப்பு இல்லையே

#641
ஆதலால் அதற்கேற்றது அமைச்சர்கள்
ஓதியாங்கு உணர்ந்தீக என்று ஒட்டினான்
யாதும் தன்-கண் அல்லார் செயற்கு ஏன்றது ஓர்
ஏதம் உண்டு எனும் எண்ணம்_இல்லாதவன்
**அச்சுவக் கண்டன் அமைச்சர் கூறுதல்

#642
அலங்கல் ஆழியினான் அது கூறலும்
கலங்கு நூல் கருமத் தொழில் மாக்கள்-தாம்
புலம் கொள் சூழ்ச்சியர் ஆகிப் புகன்றனர்
உலம் கொள் தோளவனுக்கு உணர்வு_ஆயினார்

#643
எரியும் தீத் திரள் எள் துணைத்து ஆயினும்
கரியச் சுட்டிடும் காந்திக் கனலுமேல்
தெரியின் தொல் பகை தான் சிறிது ஆயினும்
விரியப் பெற்ற பின் வென்றிடுகிற்குமே

#644
முள் கொள் நச்சுமரம் முளையாகவே
உட்கி நீக்கின் உகிரினும் கொல்லலாம்
வட்கி நீண்டதன் பின் மழுவும் தறு
கண் குடாரமும் தாம் களைகிற்பவோ

#645
சிறிய என்று இகழார் பகை சென்றுசென்று
அறியலாவ அன்றால் அணி மா மலர்
வெறியும் வேரியும் விம்மி விரிந்து தேன்
செறியும் தொங்கல் செம்பொன் முடி மன்னனே
**அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறுதல்

#646
அஞ்சி நின்று அவர் கூறிய பின் அரி
மஞ்சு என்பவன் சொல்லும் மற்று ஆங்கு அவன்
செஞ்செவே பகையாம் எனில் தேர்ந்து கண்டு
எஞ்சு_இல் தொல் புகழாய் பின்னை எண்ணுவாம்

#647
பகை_அலாதவரைப் பகை ஆக்கலும்
நகை_இல் தீ_மனத்தாரை நண்பு எண்ணலும்
முகையின் வேய்ந்த மென் மொய் மலர்க் கண்ணியாய்
மிகையின் மற்று அவை பின்னை வெதுப்புமே
**அரிமஞ்சு கூறும் சூழ்ச்சி

#648
அறியத் தேறும் திறத்தது எவ்வாறு எனில்
திறையிற்கு என்று விடுதும் விட்டால் திறை
முறையில் தந்து முகமன் மொழிந்து எதிர்
குறையில் கொற்றவ குற்றம் அங்கு இல்லையே
**அச்சுவக்கண்டன் மகிழ்ந்து தூதுவிடுதல்

#649
என்றலும் இது நன்று என வேந்து ஒளி
நின்ற நீள் முடி நீடு இணர்க் கண்ணியான்
சென்று தூதுவர்-தாம் திறை கொள்க என
வென்றி வேலவன் மேல் விடை ஏயினான்
**அத்தூதர்களின் பண்பு

#650
ஊட்டு அரக்கு உண்ட கோலர் ஒண் கோலத்தர்
ஓட்டு அரும் பொறி ஒற்றிய ஓலையர்
நாட்டியம் உணர்வார் ஒரு நால்வர் சேண்
மோட்டு எழில் முகில் சூழ் நெறி முன்னினார்
** தூதர் போதன நகரத்தை எய்துதல்

#651
தீது_அறு தென்மலை மாதிரம் முன்னுபு
தூதுவர் சூழ் சுடர் சூடிய சூளிகை
ஓதினர் ஓதி உலப்பு_அற ஓங்கிய
போதன மா நகர் புக்கனர் அன்றே
**அந்நகரச் சிறப்பு

#652
செம் சுடர் மின் ஒளி சென்று பரந்திட
மஞ்சொடு வைகிய மா மணி மாளிகை
வெம் சுடர் வீதி விலக்குவ கண்டு தம்
விஞ்சையர் செல்வம் வெறுத்தனர் அன்றே

#653
மூரி முழா ஒலி விம்மி முரன்று எழு
கார் இமிழ் ஆர்கலியான் மயில் ஆலுவ
சோரி முழா விழவில் தெரு துற்ற பின்
சீர் இமிழால் பொலிவு எய்தினர் சென்றே

#654
சூளிகை சூடிய சூல இலைத் தலை
மாளிகை மேல் மழை மா முகில் போழ்தலின்
நீளிய நீர் அருவித் திரள் வீழ்வன
காளைகள் தாதை நகர்ப் பல கண்டார்

#655
கூடுநர் கோவை மணிக் கலை உக்கவும்
ஊடினர் சிந்திய ஒண் சுடர் மாலையும்
மூடிய மூரி நெடும் தெரு ஒப்பவும்
ஊடு செலற்கு அரிதாய் இடருற்றார்

#656
மூரி நடைக் களி யானை மதத்தினொடு
ஏரின் நடைக் கலிமா-தம் விலாழியும்
ஓரி நுரைப்ப உகுத்த பெரும் கடை
வேரி வெறிக்களம் ஒப்பது கண்டார்
**தூதர்கள் அரண்மனையை அடைதல்

#657
வண்டு படக் குவளைப் பிணை நக்கு அலர்
விண்ட மதுப் பருகிக் களியின் மதர்
கொண்டு நடைக் களி அன்னம் இரைப்பது ஒர்
மண்டு புனல் புரிசைப் பதி சார்ந்தார்

#658
கோயில் முகத்தது கோடு உயர் சூளிகை
வேயின் முகத்து அதின் மா மழை வீழ்வது
ஞாயில் முகத்த நகைத் திரள் முத்து அணி
வாயில் முகத்து மடுத்து இது சொன்னார்
**தூதர்கள் தம் வருகை அறிவிக்கும்படி வாயிலோனுக் குரைத்தல்

#659
வேய் தலை நீடிய வெள்ளி விலங்கலின்
ஓய்தல்_இல் ஒண் சுடர் ஆழியினான் தமர்
வாய்தலில் நின்றனர் வந்து என மன்னன் முன்
நீ தலை சென்று உரை நீள் கடை காப்போய்
**பயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்

#660
என்று அவர் கூற இரும் கடைக் காவலன்
நன்று என நாறு ஒளி நீள் முடியான் அடி
மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
ஒன்றிய போதக என்பது உரைத்தான்
**தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்

#661
பொன் அவிர் நீள் கடை காவலன் போதக
என்னலின் எய்தி இலங்கு ஒளி நீள் முடி
மன்னவன் வார் கழல் வாழ்த்தி மடக்கிய
சொல் நவில் ஓலை கை தொழுதனர் ஈந்தார்
**அந்த ஓலையைப் படித்தல்

#662
வாசகன் மற்று அது வாசினை செய்த பின்
மாசு_அகல் நீள் முடி மன்னவன் முன் இவை
தேசு அகம் மூசிய ஆழியன் சீர்த் தமர்
ஓசைகள் ஓலை கொடு ஒப்ப உரைத்தார்
** தூதர்கள் கூறும் செய்தி

#663
ஊடு அகம் ஓடி எரிந்து ஒளி முந்துறும்
ஆடகம் ஆயிர கோடியும் அல்லது
சூடக முன்கையர் தோடு அக மெல் அடி
நாடகர் ஆயிரம் நாரியர்-தம்மையும்

#664
தெண் திரை சிந்திய சங்கொடு செம் கதிர்
எண் தரளம் பவழக்கொடி ஈட்டமும்
கண் திரள் முத்தொடு காழ் அகில் அம் துகில்
பண் தரு நீரனவும் பல் பண்டமும்

#665
வெண் கதிர் முத்து அகில் வேழ மருப்பொடு
கண்கவர் சாமரை வெண் மயிரின் கணம்
தண் கதிர் வெண்குடையாய் தரல் வேண்டும் இது
ஒண் சுடர் ஆழியினான் உரை என்றார்
** பயாபதியின் மனநிலை

#666
வேந்தன் மற்று அதனைக் கேட்டே வேற்றுவன் எறிந்த கல்லைக்
காந்திய கந்ததாகக் கவுள் கொண்ட களிறு போலச்
சேந்தவர் உரைத்த மாற்றம் சிந்தையுள் அடக்கி வைத்து
நாந்தகக் கிழவர் கோமான் நயம் தெரி மனத்தன் ஆனான்
** பயாபதியின் சிந்தனை

#667
கருத்தும் மாண் குலனும் தேசும் கல்வியும் வடிவும் தம்மில்
பொருத்தினால் பழிக்கலாகாப் புலைமை மிக்கு உடையரேனும்
ஒருத்தனுக்கொருத்தன் கூறக் கேட்டு உற்றுச் செய்து வாழத்
திருத்தினான் இறைவனே காண் செய்வினைக் கிழவன் என்பான்

#668
மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித் தாம் படைக்கப்பட்ட
நிதியினை நுகர்ந்தும் என்று நினைத்து இனிது இருந்த போழ்தில்
பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத் தாம் பிறர்க்கு நீட்டும்
விதியினை விலக்கமாட்டா மெலிபவால் வெளிய நீரார்

#669
ஒளியினால் பெரியன் ஆய ஒருவனுக்கு உவப்பச் செய்து ஓர்
அளியினால் வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்துகின்றாம்
தெளிய நாம் இதனைக் கண்டும் செய்வினைத் திறங்கள் ஓராம்
அளியமோ அளியம் சால அறிவினால் பெரியமே காண்

#670
அன்று நாம் முயலப்பட்ட வினைகள் மற்று அனைய ஆனால்
இன்று நாம் அவலித்து என்னை இனிச் செய்வது எண்ணின் நல்ல
வென்றியான் விளங்கும் ஆழியவர்கட்கு மேலை வேந்தர்
ஒன்றியாங்கு உவப்பித்து ஆண்டது உரைப்பக் கேட்டு உணர்ந்தாம் அன்றே
**பயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்

#671
என்று தன் மனத்தின் எண்ணி இலங்கு கோல் கையர் ஆகி
நின்ற கேசரரை நோக்கி நில மன்னன் அனைய சொன்னார்க்கு
ஒன்றி யாம் இங்கண் உள்ளது ஒருப்படுத்து உய்ப்பக் கொண்டு
சென்று நும் இறைவர்க்கு எம் வாய் இன் உரை தெரி-மின் என்றான்
**பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைத்தல்

#672
ஆளிகட்கு அரசன் அன்ன அரசர்_கோன் அதனைக் கூறி
வாளி வில் தடக் கை வெம் போர் மணி வரை அனைய மார்பின்
காளைகள் இதனைக் கேட்பில் கனல்பவால் அவரை இன்னே
மீளுமாறு அமைப்பன் என்று வேண்டுவ விதியின் ஈந்தான் .
** பயாபதி திறை நல்குதல்

#673
செய்ய வாய்ப் பசும்பொன் ஓலைச் சீறடிப் பரவை அல்குல்
ஐய நுண் மருங்கு நோவ அடிக் கொண்ட குவவுக் கொங்கை
வெய்யவாய்த் தண்ணென் நீலம் விரிந்து என விலங்கி நீண்ட
மையவாம் மழைக் கண் கூந்தல் மகளிரை வருக என்றான்

#674
அணி முழா அனைய தோளான் அருளியது அறிந்த போழ்தின்
மணி முழாச் சிலம்பக் கொண்ட மண்டல அரங்கின் அம் கண்
குணி முழாப் பெயர்த்த பணி குயிற்றுதல் இலயம் கொண்ட
கணி முழா மருங்குல் பாடல் கலிப்பு இவை தவிர்த்துச் சென்றார்

#675
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான் குழாம் என்ன ஆங்கண்
வெம் சுடர் விளங்கும் மாடத்து இடைநிலை விரவித் தோன்றி
வஞ்சி நல் மருங்குல் நோவ மணி நகைக் கலாவம் மின்னச்
செம் சுடர்ச் சிலம்பு பாடத் தேன் திசை பரவச் சேர்ந்தார்

#676
மாடு எலாம் எரிந்து மின்னும் வயிரக் குண்டலத்தோடு அம் பொன்
தோடு உலாம் துளங்கித் தோன்றும் சுடிகை வாள் முகத்து நல்லார்
பாடலால் நரம்பின் தெய்வம் படிவம் கொண்டு அனைய நீரார்
ஆடலால் அரம்பை ஒப்பார் அவரில் ஆயிரரை ஈந்தான்

#677
காய்ந்து ஒளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப்
பாய்ந்து எழு சுடர்ச் சங்கு ஈன்ற பரு மணித் தரளக் கோவை
ஏந்து எழில் காகதுண்டம் மருப்பு இணை கவரிக் கற்றை
ஆய்ந்து எழில் மகரப் பூணான் உவப்பன அனைத்தும் ஈந்தான்
**பயாபதி திறை நல்கியதை விசயதிவிட்டர்கள் காண்டல்

#678
அம் சுடர் வயிரப் பூணான் அருளினன் விடுப்ப ஆங்கண்
விஞ்சையர் விமானம் தோன்ற மேல் அரும் கலங்கள் ஏற்றிச்
செம் சுடர் திலகச் செவ்வாய் மகளிரை விமானம் சேர்த்திக்
கஞ்சிகை மறைக்கும் போழ்தில் காளைகள் அதனைக் கண்டார்
**திவிட்டன் அந்நிகழ்ச்சியை வினாதல்

#679
என் இது விளைந்தவாறு இத் தூதுவர் யாவர் என்று
கல் நவில் வயிரத் திண் தோள் கடல்_வண்ணன் வினவ யாரும்
சொல் நவின்று உரைக்கமாட்டார் துட்கென்று துளங்க ஆங்கு ஓர்
கொல் நவில் பூதம் போலும் குறள்மகன் இதனைச் சொன்னான்
**குறளன் கூற்று

#680
அறை கழல் அரவத் தானை அச்சுவக்கிரீவன் என்பான்
நிறை புகழ் ஆழி தாங்கி நிலம் எலாம் பணிய நின்றான்
திறை தரவேண்டும் என்று விடுதரச் செரு அம் தானை
இறைவனும் அருளிச் செய்தான் இது இங்கு விளைந்தது என்றான்
** திவிட்டன் சீற்றம்

#681
திறைக் கடன் என்னும் அத் தீச்சொல் கேட்டலும்
நிறைக் கடல் நிரம்பிய நெஞ்சத் தீக்கலுள்
முறை கெட முளைப்பது ஓர் முனிவின் ஒள் எரி
கறைப்படு படையவன் கனல மூட்டினான்

#682
முடித் தலை முத்து உதிர்ந்தாங்கு நெற்றி மேல்
பொடித்தன சிறு வியர்ப் புள்ளி ஒள் எரி
அடுத்து எழு சுடரகத்து உக்க நெய்த் துளி
கடுத்த செம் கண்ணும் நீர்த் திவலை கான்றவே

#683
படத்திடைச் சுடர் மணி தீண்டப்பட்டு எரி
கடுத்திடும் அரவு எனக் கனன்ற நோக்கமோடு
அடுத்து எரிந்து அழல் நகை நக்குநக்கு இவை
எடுத்து உரை கொடுத்தனன் இளைய காளையே
** திவிட்டன் சினமொழிகள்

#684
உழுது தம் கடன் கழித்து உண்டு வேந்தரை
வழிமொழிந்து இன்னணம் வாழும் மாந்தர் போல்
எழுதிய திறை இறுத்து இருந்து வாழ்வதேல்
அழகு இது பெரிது நம் அரச வாழ்க்கையே

#685
நாளின் உம் திறை நுமக்கு உவப்பத் தந்து நாடு
ஆளுதும் அன்று எனில் ஒழிதுமேல் எம
தோளினும் தொடு கழல் வலியினானும் இ
வாளினும் பயன் எனை மயரி மாந்தர்காள்

#686
விடம் உடை எரிக் கொடி விலங்கு நோக்கு உடை
அடல் உடைக் கடுத் தொழில் அரவின் ஆர் அழல்
படம் உடை மணி கொளக் கருதிப் பார்ப்பது ஓர்
மடம் உடை மனத்தன் உம் மயரி மன்னனே

#687
இரும் கலிப் படையினும் இகலினாலும் எம்
அரும் கலம் இவை பெறற்கு அரியது ஆவது ஓர்
மருங்கு உளது எனின் அது மகளிரால் சில
பெரும் கலம் தாங்கினால் பெறலும் ஆகுமே

#688
பாழியால் மெலிந்தவர் திறத்துப் பண்டு எலாம்
ஆழியால் வெருட்டி நின்று அடர்த்திர் போலும் அஃது
ஏழைகாள் இனி ஒழிந்திட்டுச் செவ்வனே
வாழுமாறு அறிந்து உயிர் காத்து வாழ்-மினே

#689
அன்று எனில் திறைகொளக் கருதின் ஆங்கு ஒரு
குன்றின் மேல் பெறுவது என் வந்து கொள்க யான்
நின்று தன் நெஞ்சகம் நிறைய வீழ்வன
வென்றி அம் பகழியும் விசும்பும் ஈவனே

#690
இறை வளை மகளிர் போல் கழறி என்னை எம்
குறை இது கூறு-மின் சென்று தூதிர்காள்
திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வது ஓர்
முறை உளது எனின் அது முயன்று கொள்கவே

#691
உட்க ஆங்கு உரைத்தலும் ஒளிர் பொன் மாழையும்
கள் கமழ் கோதையர் கணமும் மீண்டது
வட்கி நம் இறைவற்கு வலிது தெவ் எனத்
துட்கெனும் மனத்தினர் தூதர் ஏகினார்
**தூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்

#692
போகிய தூதர் தம் கோன் பொலம் கழல் தொழுதல் அஞ்சி
ஆகியது அறிந்து சூழும் அரிமஞ்சு அவனைக் கண்டே
ஏகிய புகழினானைக் கண்டதும் ஈயப்பட்ட
தோகை அம் சாயலார்-தம் குழாங்களும் நெதியும் சொல்லி

#693
மீட்டு இளம் குமரர் கண்டு விடு சுடர் இலங்க நக்கு
மோட்டு இளம் கண்ணி தீய முனிந்து அழல் முழங்க நோக்கி
ஊட்டு இலங்கு உருவக் கோலோர் தங்களுக்கு உரைத்த எல்லாம்
தோட்டு இலங்கு உருவத் தொங்கல் அமைச்சற்குச் சொல்லியிட்டார்
**அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல்

#694
அரும் பெறல் அறிவின் செல்வன் அரிமஞ்சு அதனைக் கேட்டே
பெரும் பகை அதனைக் கேட்டால் பெரியவன் சிறிதும் நோனான்
இரும் பகை இதனை என்-கொல் விலக்குமாறு என்று தானே
சுரும்பு இவர் தொடையல் மார்பன் சூழ்ச்சி கொள் மனத்தன் ஆனான்

#695
மின் தொடர்ந்து இலங்கு பூணான் விளைவுறா இளைமை-தன்னால்
நன்று தீது என்னும் தேர்ச்சி நவின்றிலன் ஆதலால் யான்
ஒன்ற ஓர் மாயம் காட்டி உளைவித்துக் குறுக ஓடிக்
குன்றிடைச் சீயம்-தன் மேல் கொளப் புணர்த்திடுவன் என்றான்
**அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்

#696
அன்னணம் மனத்தினாலே இழைத்து அரிகேது என்னும்
மின் அணங்கு உருவப் பைம் பூண் விஞ்சையன்-தன்னைக் கூவிக்
கல் நவில் தோளினாற்குக் கருமம் ஈது என்று காட்டி
மன்னும் ஓர் மாயச் சீயம் ஆகு என வகுத்துவிட்டான்
**அம்மாயச்சிங்கத்தின் தன்மை

#697
ஒள் எரி நெறிப்பட்டு அன்ன சுரி உளை மலை கண் போழும்
வள் உகிர் மதர்வைத் திங்கள் குழவி வாள் எயிற்றுப் பைங்கண்
உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய்க்
கொள் அரி உருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான்
**அவ்வரிமாவின் செயல்

#698
இலைத் தடம் சோலை வேலி இமவந்தம் அடைந்து நீண்ட
சிலைத் தடம் தோளினார்-தம் சிந்துநாடு-அதனைச் சேர்ந்து
மலைத் தடம் பிளந்து சிந்த மண் புடைபெயர முந்நீர்
அலைத்து உடன் கலங்கி விண் பால் அதிர நின்று உரறியிட்டான்
**அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்

#699
பொடித் தலை புலம்பிக் கானம் போழ்ந்து மா நெரிந்து வீழ
அடித்து அலை கலங்கி வேழம் பிடிகளோடு அலறி ஆழப்
புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க
இடித்தலின் மனித்தர் எல்லாம் எயிறுற இறுகிச் சோர்ந்தார்
**அரிமஞ்சு திவிட்டன்பால் தூதுவிடல்

#700
அப்படி அவனை அவ்வாறு அமைத்த பின் அமைச்சன் ஆங்கண்
மெய்ப் புடை தெரிந்து சொன்ன தூதுவர் அவரை மீட்டே
இப்படி இவைகள் சொல்லிப் பெயர்-மின் நீர் என்று வென்றிக்
கைப்படை நவின்ற வெம் போர்க் காளையைக் கனற்ற விட்டான்

#701
ஆங்குத் தூதுவர் அதிர் முகில் ஆறு சென்று இழிந்து
பூம் கண் தேம் மொழிப் போதனத்து இறைவன்-தன் புதல்வர்
வீங்கு பைம் கழல் விடு சுடர் மிடை மணிப் பூணோர்
ஓங்கு தானையோடு உலாப்போந்த இடம் சென்று ஈது உரைத்தார்
**தூதர்கள் திவிட்டனுக்கு இயம்புதல்

#702
திறையின் மாற்றமும் திறையினை விலக்கிய திறமும்
குறை என்று எங்களைக் குமர நீ பணித்ததும் கூற
அறையும் பைம் கழல் ஆழி அம் தடக் கை எம் அரைசன்
நறையும் குஞ்சியான் நன்றுநன்று எனச் சொல்லி நக்கான்

#703
தளையின் விண்டு தேன் தயங்கிய தடம் கொள் தார் மார்ப
இளையை என்பதும் எங்கள் வாய்க் கேட்ட பின் இறைவன்
ஒளியும் ஆற்றலும் தன்-கண் ஒன்று உள்ளதும் நினையான்
அளியன் பிள்ளைதான் உரைத்த என்று அழன்றிலன் அமர்ந்தான்
**தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்

#704
அறியுமாயில் தன் அரும் பெறல் நாட்டினை அரிய
எறியும் மின் உரும் என இடித்து இறுவரை முழையுள்
உறையும் கோளரி ஒழிக்கலான் நமக்கு உவந்து ஈயும்
திறையும் மீட்கிய வலித்த அச் செருக்கு உடைச் சிறியோன்
**திவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்

#705
என்று மற்று அது மொழி-மின் என்று உரைத்து எமை விடுத்தான்
என்ற மாற்றம் அஃது இசைத்தலும் இளையவன் என்னே
சென்ற நாட்டகம் சிலம்ப நின்று இடித்து உயிர் அலறக்
கொன்று ஒர் கோளரி கொடுமுடி உறைவதோ என்றான்
**அயனின்றோர் அவ்வரிமா உளதெனல்

#706
உளது வாழி நின் ஒலி புனல் சிந்து நல் நாட்டில்
களைதல் யாவர்க்கும் அரியது கன மணிக் குன்றின்
உளது கோளரி உரும் என இடித்து உயிர் பருகி
அளவு_இல் நீள் முழை உறைகின்றது அடிகள் என்று உரைத்தார்
**திவிட்டன் அவ்வரிமாவைக் கொல்வேன் என்று சூளுரைத்தல்

#707
ஆயின் மற்று அதன் அரு வரைப்பிலம் என அகன்ற
வாயைப் போழ்ந்து உடல் இரு பிளப்பா வகுத்திடுவன்
ஏ இப் பெற்றியே விளைத்திலன் ஆயின் நும் வேந்தன்
பேயின் பேசிய பிள்ளையே ஆக என்று பெயர்ந்தான்

#708
புழல் கைத் திண் நுதி மருப்பின பொரு களிறு இவை-தாம்
நிழல்-கண் நோக்கி நின்று அழன்றன நிலையிடம் புகுக
அழல் கண் நாறுப அடு படை தொடுதலை மடியாத்
தொழில்_கணாளரும் தவிர்க எனச் சூளுற்று மொழிந்தான்

#709
இவரும் மா மணிக் கொடுஞ்சிய இவுளித் தேர் காலாள்
கவரி நெற்றிய புரவி தம் காவிடம் புகுக
எவரும் என்னொடு வரப்பெறார் தவிர்க என எழில் சேர்
உவரிநீர்_வண்ணன் உழையவர் ஒழியுமாறு உரைத்தான்
**விசயன் திவிட்டனுடன் செல்ல நினைத்தல்

#710
நகர மா சனம் இரைப்பது தவிர்த்த பின் நளி நீர்ப்
பகரும் மா கடல் படிவம்கொண்ட_அனையவன் படரச்
சிகர மால் வரை தெளிந்தனன் திருவ மார்பினன் பின்
மகர மா கடல் வளை_வண்ணனுடன் செல வலித்தான்
**இருவரும் அவ்வரிமா வதியும் இடம் எய்துதல்

#711
புழல் கை மால் களிற்று எருத்திடைப் புரோசையில் பயின்ற
கழல் கொள் சேவடி கரு வரை இடை நெறி கலந்த
அழல் கொள் வெம் பொடி அவை மிசை புதைய அ அரிமான்
தொழில் கொண்டு ஆர் உயிர் செகுக்கின்ற சூழல் சென்று அடைந்தார்
**அம்மாய அரிமாவின் முழக்கம்

#712
அடைந்த வீரரைக் காண்டலும் அழல் உளை அரிமா
உடைந்த போக ஓர் இடி இடித்து என உடன்று இடிப்ப
இடிந்து போயின இறுவரைத் துறுகல் அங்கு உடனே
பொடிந்து போயின பொரி என நெரிவொடு புரளா
**அவ்வரிமாவின் எதிரில் திவிட்டன் போர்க்கோலம் பூண்டு முழங்குதல்

#713
காளை காள் ஒளி முகில்_வண்ணன் கழல்களை விசியாத்
தோளின் மேல் செலச் சுடர் விடு கடகங்கள் செறியாச்
சூளி மா மணித் தொடர் கொண்டு சுரி குஞ்சி பிணியா
ஆளி மொய்ம்பன் அங்கு ஆர்த்தனன் உடைந்தது அ அரியே
**அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்

#714
எங்குப் போவது என்று உடை நெறி இறுவரை நெரியப்
பைங்கண் கோளரி உருவுகொண்டவன் மிசைப் படர்ந்து
வெம் கண் கூற்றமும் திசைகளும் விசும்பொடு நடுங்கச்
செம் கண் கார் ஒளி நெடியவன் விசையினால் சிறந்தான்
**திவிட்டன் ஓடும் தன்மை

#715
கழல் அங்கு ஆர்த்தில காள்களும் நிலம் உறா முடங்கா
அழலும் செம் சுடர்க் கடகக் கை அவை புடைபெயரா
குழலும் குஞ்சியும் மாலையும் கொளுவிய தொடரும்
எழிலும் தோளிலும் எருத்திலும் கிடந்தில எழுந்தே

#716
மரங்கள் வேரொடும் கீழ்ந்து என வழி தொடர்ந்து எழுந்த
நிரந்த மான்களும் பறவையும் நிலம் கொண்டு பதைத்த
அரம் கொள் வெம் பரல் அணி வரைக் கொடுமுடி அவைதாம்
உரம் கொள் தோளவன் விரல் நுதி உற உடைந்து ஒழிந்த
**அம்மாய அரிமா குகையிற் புக்கொளிதல்

#717
மூடியிட்டன முகில் கணம் முரன்று இடை நொறுங்காய்க்
கூடியிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங்கு
ஆடியிட்டன வன_தெய்வம் அரி_உருவுடையான்
ஓடியிட்டனன் ஒளி வரை முழையகத்து ஒளிந்தான்
**அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாரவாரத்தே துயில் நீத்து எழுதல்

#718
உலத்தின் வீங்கிய ஒளி மணிச் சுடர் அணி திணி தோள்
நலத்தின் வீங்கிய நளிர் புகழ் இளையவன் விரையின்
நிலத்தின் கம்பமும் நெடு வரை அதிர்ச்சியும் எழுவப்
பிலத்தின் வாழ் அரி_அரசு தன் துயில் பெயர்ந்ததுவே
**திவிட்டன் முழக்கம்

#719
ஈங்கு வாழிய இருள் கெழு முழையகத்து ஒளித்தாய்
ஓங்கு மால் வரை பிளந்திடுகு என உளைந்து உரவோன்
ஆங்கு அ மா முழை முகத்து உலகு அதிர நின்று ஆர்த்தான்
வீங்கு வாய் திறந்து ஒலித்தது விலங்கலில் சிலம்பே
**அக்குகைவாழ் அரிமாவின் முழக்கம்

#720
அதிர ஆர்த்தலும் அழன்று தன் எயிற்றிடை அலர்ந்த
கதிரும் கண்களில் கனல் எனச் சுடர்களும் கனல
முதிர்வு_இல் கோளரி முனிந்து எதிர் முழங்கலின் நெரிந்து
பிதிர்வு சென்றது பெரு வரை பிளந்தது அப் பிலமே

#721
எரிந்த கண் இணை இறுவரை முழை நின்ற அனைத்தும்
விரிந்த வாயொடு பணைத்தன வெளி உகிர் பரூஉத் தாள்
சுரிந்த கேசரம் சுடர் அணி வளை எயிற்று ஒளியால்
இரிந்தது ஆயிடை இருள் நின்று அங்கு எழுந்தது அ அரியே
**அவ்வரிமா வெளிப்படுதல்

#722
தாரித்திட்ட தன் தறுகண்மைக் குணங்களின் உலகை
வாரித்திட்டு இவண் வந்தது ஓர் அரி என மதியாப்
பூரித்திட்ட தன் பெரு வலியொடு புகழ் அரிமாப்
பாரித்திட்டது பனி விசும்பு_உடையவர் பனித்தார்
**திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்

#723
அளைந்து மார்பினுள் இழிதரு குருதியைக் குடிப்பான்
உளைந்து கோளரி எழுதலும் உளை மிசை மிதியா
வளைந்த வாள் எயிற்றிடை வலித் தடக் கையில் பிடித்தான்
பிளந்து போழ்களாய்க் கிடந்தது அப் பெரு வலி அரியே
**அமரர்களின் வியப்பு

#724
சீயம் ஆயிரம் செகுத்திடும் திறலது வயமா
ஆய ஆயிரமாயிரம் அடு திறல் அரிமா
ஏ எனாமுன் இங்கு அழித்தனன் இவன் எனத் தத்தம்
வாயின் மேல் விரல் வைத்து நின்று அமரர்கள் மருண்டார்

#725
அழிந்த கோளரிக் குருதி அது அடும் கடம் களிற்றோடு
ஒழிந்த வெண் மருப்பு உடைந்தவும் ஒளி முத்த மணியும்
பொழிந்து கல் அறைப் பொலிவது குலிகச் சேறு அலம்பி
இழிந்த கங்கையின் அருவி ஒத்து இழிந்த அவ்விடத்தே
**திவிட்டனின் சால்புடைமை

#726
யாதும் மற்று அதற்கு உவந்திலன் வியந்திலன் இகலோன்
ஓத நித்திலம் புரி வளை ஒளியவன் குறுகி
ஏதம் மற்று இது கடிந்தனன் இன்னினி அடிகள்
போதும் போதனபுரத்துக்கு என்று உரைத்தனன் புகழோன்

#727
தம்பி ஆற்றல் கண்டு உவந்து தன் மனம் தளிர்த்து ஒளியால்
வம்பு கொண்டவன் போல் நின்று வளை_வண்ணன் மொழிந்தான்
நம்பி நாம் இனி நளி வரைத் தாழ்வர் கண்டு அல்லால்
இம்பர் போம்படித்து அன்று செம் குருதியது இழிவே
** திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல்

#728
ஆங்கண் மால் வரை அழகு கண்டு அரைசர்கள் பரவும்
வீங்கு பைம் கழல் இளையவன் வியந்து கண் மலரச்
ஈங்கு இ மாண்பின இனையன இவை என இனிதின்
வாங்கு நீர் அணி வளை_வண்ணன் உரைக்கிய வலித்தான்

#729
புள்ளும் கொல்லென ஒலிசெயும் பொழில் புடை உடைய
கள்ளின் நுண் துளி கலந்து கால் அசைத்-தொறும் கமழ
உள்ளும் தாது கொண்டு ஊது வண்டு அறாதன ஒளி சேர்
வெள்ளென் தோன்றுவ கயம் அல்ல பளிக்கு அறை விறலோய்

#730
காள் ஐ வண்ணத்த களி வண்டு கதுவிய துகளால்
தாளை மூசிய தாமரைத் தடம் பல அவற்றுள்
ஆளி மொய்ம்ப அங்கு அகல் இலை அலரொடும் கிழிய
வாளை பாய்வன கயம் அல்ல வனத் திடர் மறவோய்

#731
மன்னும் வார் துளித் திவலைய மலை மருங்கு இருண்டு
துன்னும் மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோடு அதிர்வ
இன்னவாம் பல உருவுகள் இவற்றினுள் இடையே
மின்னும் வார்ந்தன முகில் அல்ல களிறுகள் விறலோய்

#732
உவரி மாக் கடல் நுரை என ஒளிர்தரு மயிர
அவரை வார் புனத்து அருந்தி மேய் அருவி நீர் பருகி
இவரும் மால் வரை இள மழை தவழ்ந்து என இவையே
கவரிமாப் புடைபெயர்வன கடல்_வண்ண காணாய்

#733
துள்ளி வாரும் புனல் துளங்கும் பாறைக்கல் அத்
துள் உராவிக் கிடந்து ஒளிரும் ஒண் கேழ் மணி
நள் இராவின்-தலை நகுப வானத்திடைப்
பிள்ளை நாள் அம் பிறை பிறழ்தல் போலுங்களே

#734
வழையும் வாழைத் தடம் காடும் மூடிப் புடம்
கழையும் வேயும் கலந்து இருண்டு காண்டற்கு அரும்
முழையும் மூரி மணிக் கல்லும் எல்லாம் நினது
இழையின் அம் பொன் ஒளி எரிப்பத் தோன்றுங்களே

#735
பருவம் ஓவா முகில் படலம் மூடிக் கிடந்து
இரவு உண்டு ஏனைப் பகல் இல்லை ஒல்லென்று இழிந்து
அருவி ஓவா புரண்டு அசும்பு பற்றித் தட
வரையின் தாழ்வார் நிலம் வழங்கலாகார்களே

#736
சூரல் அப்பித் தொடர்ந்து அடர் துளங்கும் அரில்
வேரலோடும் மிடைந்து இருண்டு விண்டு விடார்
ஊரல் ஓவாது அனன்று உயிரை உண்டிடுதலால்
சாரல் ஆகாதன சாதி சாலப் பல

#737
பரிய பாறைத் திரள் படர்ந்த போலக் கிடந்து
இரிய வேழங்களை விழுங்கி எங்கும் தமக்கு
உரிய தானம் பெறா உறங்கி ஊறும் கொளாப்
பெரிய பாம்பும் உள பிலம் கொள் பேழ் வாயவே

#738
அவைகள் கண்டாய் சில அரவம் ஆலிப்பன
உவைகள் கண்டாய் சில உளியம் ஒல்லென்பன
இவைகள் கண்டாய் சில வேழ வீட்டம் பல
நவைகள் கண்டாய் இவை நம்_அலாதார்க்கு எலாம்

#739
குழல் கொள் தும்பிக் கணம் கூடி ஆட நகும்
எழில் கொள் தாரோய் விரைந்து இயங்கல் இங்கு உள்ள நின்
கழல்கள் ஆர்க்குங்களே கலங்கி மேகக் குழாம்
பொழில்கள் வெள்ளத்திடைப் புரள நூறுங்களே

#740
ஆக்கலாகா அசும்பு இருந்து கண்ணிற்கு ஒரு
நீக்க நீங்கா நிலம் போலத் தோன்றிப் புகில்
காக்கலாகா களிறு ஆழ ஆழும் புறம்
தூக்கந்தூங்கும் தொளி தொடர்ந்து பொன்றுங்களே

#741
இது இத் தாழ்வார் நிலத்து இயற்கை மேலால் பல
மதியம் பாரித்து என மணிக் கல் பாறையின் மிசை
நிதியம் பாரித்து ஒளி நிழன்று துஞ்சல் நிலைக்
கதியின் வாழ்வாரையும் கண்கள் வாங்குங்களே

#742
இருது வேற்றுமை இன்மையால்
சுருதி மேல் துறக்கத்தினோடு
அரிது வேற்றுமை ஆகவே
கருது வேம் தடம் கையினாய்

#743
தொல்லுறு சுடர் போலும் சூழ் ஒளி மணிப் பாறை
கல் அறை அவை கோங்கின் கடி மலர் கலந்து உராய்
மல் உறு வரை மார்ப வளர் ஒளியின் முளைக்கும்
எல் உறு சுடர் வானத்து எழிலவாய் இனியவ்வே

#744
திரைத்த சாலிகை
நிரைத்த போல் நிரந்து
இரைப்ப தேன்களே
விரை கொள் மாலையாய்

#745
வரை-வாய் நிவந்த வடு மா அடு மா
விரைவாய் நிவந்து விரியா விரியா
புரை-வாய் அசும்பு புலரா புலரா
இரவாய் இருள்செய் இடம் மேய் இடமே

#746
இளையார் இளையாருடனாய் முலையின்
வளை ஆர் வளையார் மனம் வேண்டு உருவம்
விளையா விளையாட்டு அயரும் தொழில்-தான்
தளையார் தளை ஆர் பொழிலின் தடமே

#747
அளி ஆடும் அ மரங்கள் அ மரங்கள் மகிழ்ந்து ஆனா
விளையாடும் விதம் மலர்ந்த விதம் மலர்ந்த மணி தூவும்
வளையார் கண் மகிழ்பவால் மகிழ்பவால் மலர் சோர்வ
இளையாரை இனையவே இனையவே இடம் எல்லாம்

#748
தாம் மரைத் தடத்திடை மலர்ந்த சாரல்-வாய்த்
தாமரைத் துளையொடு மறலித் தா_இல் சீர்த்
தாமரைத் தகு குணச் செல்வன் சண்பகம்
தாம் அரைத் தடித்து அலர் ததைந்து தோன்றுமே

#749
நாகம் சந்தனத் தழை கொண்டு நளிர் வண்டு கடிவ
நாகம் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்து தாது உமிழ்வ
நாகம் செம் சுடர் நகு மணி உமிழ்ந்து இருள் கடிவ
நாகம் மற்று இது நாகர்-தம் உலகினை நகுமே

#750
நகு மலரன நறவம் அவை சொரிவன நறவம்
தொகு மலரன துருக்கம் அவை தருவன துருக்கம்
அக மலரன அசோகம் அவை தருவ அசோகம்
பகு மலரன பாங்கர் பல மலையன பாங்கர்

#751
அணங்கு அமர்வன கோடல் அரிது அவை பிறர் கோடல்
வணம் கிளர்வன தோன்றி வகை சுடர்வன தோன்றி
இணங்கு இணர்வன இஞ்சி எரி பொன் புடை இஞ்சி
மணம் கமழ்வன மருதம் வரை அயல் வன மருதம்

#752
சாந்தும் தண் தழையும் சுரமங்கையர்க்கு
ஏந்தி நின்றன இ மலை ஆரமே
வாய்ந்த பூம் படையும் மலர்க் கண்ணியும்
ஈந்த சாகைய இ மலை ஆரமே

#753
இயங்கு கின்னரர் இன்புறு நீரவே
தயங்குகின்றன தான மந்தாரமே
பயங்கொள்வார் பயங்கொள்ப அனைத்தையும்
தயங்குகின்றன தானம் மந்தாரமே

#754
பொன் விரிந்து அனைய பூம் கோங்கும் வேங்கையும்
முன் விரிந்து உக்கன மொய்த்த கல் தலம்
மின் விரிந்து இடையிடை விளங்கி இந்திரன்
வில் முரிந்து இருள் முகில் வீழ்ந்த போலுமே

#755
நிழல் பொதி நீல மா மணிக் கல் அம் திரள்
பொழில் பொதி அவிழ்ந்த பூப் புதைந்து தோன்றுவ
தழல் பொதிந்து எனத் துகில் தரித்த காஞ்சியர்
குழல் பொதி துறு மலர்க் கொண்டை போலுமே

#756
மேவு வெம் சுடர் ஒளி விளங்கு கல் தலம்
தா_இல் பூம் துகளொடு ததைந்து தோன்றுவ
பூ உக இளையவர் திளைத்த பொங்கு அணைப்
பாவு செம் துகில் உடைப் பள்ளி போலுமே

#757
அழல் அணி அசோகம் செம் தாது அணிந்து தேன் அரற்ற நின்று
நிழல் அணி மணிக் கல் நீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
குழல் அணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசி
எழில் அணி திகழ நின்றால் எனைய நீர் அனையது ஒன்றே

#758
இணைந்து தேன் முழங்க விண்ட ஏழிலம்பாலை வெண் பூ
மணந்து தாது அணிந்து தோன்றும் மரகத மணிக் கல் பாறை
கணம் கெழு களி வண்டு ஆலப் பாசடை கலந்த பொய்கை
தணந்து ஒளி விடாத வெண் தாமரை ததைந்து அனையது ஒன்றே

#759
கார் இருள் குவளைக் கண்ணிக் கதிர் நகைக் கன பொன் தோட்டுக்
கூர் இருள் சுரிபட்டு அன்ன குழல் அணி கொடிறு உண் கூந்தல்
பேர் இருள் கிழியத் தோன்றும் பிறை எயிற்று அமர நோக்கின்
சூர்_அர_மகளிர் வாழும் இடம் இவை சுடர்ப எல்லாம்

#760
வார் இரு புடையும் வீக்கி வடம் சுமந்து எழுந்து வேங்கை
ஏர் இரும் சுணங்கு சிந்தி எழுகின்ற இளம் மென் கொங்கைக்
கார் இரும் குழல் அம் கொண்டைக் கதிர் நகைக் கனகப் பைம் பூண்
நீரர மகளிர் கண்டாய் நிறை புனல் தடத்து வாழ்வார்

#761
மேகம் மேல் தவழ்ந்து வேய்கள் மிடைந்து கீழ் இருண்ட தாழ்வர்
ஏக மா மலையின் நெற்றி இரும் சுனைத் தடங்கள் எல்லாம்
நாக மா மகளிர் என்னும் நங்கையர் குடையப் பொங்கி
மாகம் மேல் தரங்கம் சிந்தி மணி அறை கழுவும் அன்றே

#762
ஆவி வீற்றிருந்த காதலவரொடு கவரி வேய்ந்து
நாவி வீற்றிருந்த நாறும் நளிர் வரைச் சிலம்பின் மேயார்
காவி வீற்றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய்
பாவின் வீற்றிருந்த பண்ணின் அமுதினால் படைக்கப்பட்டார்

#763
அலங்கு இணர் அணிந்த விஞ்சை அரிவையர் இடங்கள் கண்டாய்
விலங்கலின் விளங்குகின்ற வெள்ளி வெண் கபாட மாடம்
இலங்கு ஒளி மகரப் பைம் பூண் இயக்கியர் இடங்கள் கண்டாய்
நலம் கிளர் பசும்பொன் கோயில் நகுகின்ற நகரம் எல்லாம்

#764
போய் நிழல் துளும்பும் மேனிப் புணர் முலை அமிர்து_அனாரோடு
ஆய் நிழல் துளும்பு அ வானோர் அசதியாடு இடங்கள் கண்டாய்
சேய் நிழல் திகழும் செம்பொன் திலத வேதிகைய ஆய
பாய் நிழல் பவழச் செம் கால் பளிக்கு மண்டபங்கள் எல்லாம்

#765
எழில் மணிச் சுடர் கொள் மேனி இமையவர் இடங்கள் கண்டாய்
முழு மணிப் புரிசை வேலி முத்த மண்டபத்த ஆய
கழு மணிக் கபாட வாயில் கதிர் நகைக் கனக ஞாயில்
செழும் மணிச் சிகர கோடிச் சித்திரகூடம் எல்லாம்

#766
தும்பி வாய் துளைக்கப்பட்ட கீசகம் வாயுத்-தன்னால்
வம்பு அவாம் குழலின் ஏங்க மணி அறை அரங்கம் ஆக
உம்பர் வான் மேக சாலம் ஒலி முழாக் கருவி ஆக
நம்ப தேன் பாட மஞ்ஞை நாடகம் நவில்வ காணாய்

#767
பொன் அவிர் மகரப் பைம் பூண் பொலம் குழை இலங்கு சோதிக்
கல் நவில் வயிரத் திண் தோள் கடல்_வண்ணன் உவப்பக் காட்டி
மன் நவின்று இறைஞ்சும் செய்கை வளை_வண்ணன் மலையின் மேலால்
இன்னன பகர்ந்து சொல்லும் எல்லையுள் நீங்கலுற்றார்

#768
பாசிலைப் பாரிசாதம் பரந்து பூ நிரந்த பாங்கர்
மூசின மணி வண்டு ஆர்க்கும் முருகு_அறா மூரிக் குன்றம்
காய் சின வேலினான்-தன் கண் களிகொள்ளக் காட்டி
யோசனை எல்லை சார்ந்து பின்னை இஃது உரைக்கலுற்றான்

#769
வலி கற்ற மதர்வைப் பைம் கண் வாள் எயிற்று அரங்கச் சீயம்
கலி கற்ற களிறு உண் பேழ் வாய்க் கலிங்கினான் இழிந்து போந்து
குலிகச் சேறு அலம்பிக் குன்றம் கொப்புளித்திட்டது ஒப்ப
ஒலி கற்ற உதிர நீத்தம் ஒழுகுவது இன்னம் நோக்காய்
** விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்

#770
வெம்ப ஏங்கு உயிரை எல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிச்
கம்பமா உலகம்-தன்னைக் கண்டிடும் களிகொள் சீயம்
நம்ப நீ அழித்தது அல்லால் நகை எயிற்றதனை நண்ணல்
வம்பு_அறா மகரப் பைம் பூண் வானவர்-தமக்கும் ஆமோ

#771
ஆங்கு நீ முனிந்த போழ்தின் அரி அது அகல நோக்கி
வாங்கு நீர்_வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றேன்
ஓங்கு நீள் மலையின் தாழ்வார் ஒலி புனல் உதிர_யாறு
வீங்கி வந்து இழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன்

#772
குன்றிற்கு மருங்கு வாழும் குழூஉக் களிற்று இனங்கள் எல்லாம்
அன்றைக்கன்று அலறக் கொன்று உண்டு அகல் இடம் பிளப்பச் சீறி
வென்றிக்-கண் விருப்பு நீங்கா வெம் கண் மா இதனைக் கொன்றாய்
இன்றைக்கொண்டு உலகம் எல்லாம் இனிது கண்படுக்கும் அன்றே
**அரசரின் முதற் கடமை

#773
உரை செய் நீள் உலகின் வாழும் உயிர்களுக்கு உறுகண் கண்டால்
வரை செய் தோள் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
திரை செய் நீர் உலகம் காக்கும் செய்கை மேல் படைக்கப்பட்ட
அரசர்-தம் புதல்வர்க்கு ஐயா அறம் பிறிது அதனில் உண்டோ
**யாக்கையால் எய்தும் பயன்

#774
கற்றவர் கடவுள் தானம் சேர்ந்தவர் களைகண்_இல்லார்
அற்றவர் அந்தணாளர் அன்றியும் அனைய நீரார்க்கு
உற்றது ஓர் இடுக்கண் வந்தால் உதவுதற்கு உரித்து_அன்று ஆயில்
பெற்ற இ உடம்பு-தன்னால் பெறும் பயன் இல்லை மன்னா
**இறவாது நிற்போர் இவர் எனல்

#775
மன் உயிர் வருத்தம் கண்டும் வாழ்வதே வலிக்கும் ஆயில்
அன்னவன் ஆண்மையாவது அலி பெற்ற அழகு போலாம்
என்னை யான் கொடுத்தும் வையத்து இடுக்கண் நோய் கெடுப்பன் என்னும்
நின்னையே போலும் நீரார் நிலம் மிசை நிலவி நின்றார்
**ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்

#776
ஒருவனது இரண்டு யாக்கை ஊன் பயில் நரம்பின் யாத்த
உருவமும் புகழும் என்று ஆங்கு அவற்றின் ஊழ் காத்து வந்து
மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்ற யாக்கை
திரு அமர்ந்து உலகம் ஏத்தச் சிறந்து பின் நிற்கும் அன்றே
** விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்

#777
என்று தம் கதையோடு இரு நீள் முகில்
குன்று சூழ்ந்த குழு மலர்க் கானகம்
சென்று ஒர் வெம் கடம் சேர்ந்தனர் உச்சி மேல்
நின்று வெய்யவனும் நிலம் காய்த்தினான்
**விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்

#778
ஆங்கு அ வெம் கடம் சேர்ந்த பின் ஐய காண்
ஈங்கு இ வெம் கடும் கானகத்து ஈடு என
ஏங்கும் நீர்க் கடல்_வண்ணனுக்கு இன்னணம்
வீங்கு வெண் திரை_வண்ணன் விளம்பினான்

#779
முழை உடைந்து அழல் காலும் முரம்பு அயல்
கழை உடைந்து உகும் கண் கவர் நித்திலம்
மழை உடைந்து உகும் நீர் என வாய் மடுத்து
உழை உடைந்து உகுகின்றன ஊங்கு எலாம்

#780
மிக்க நீள் கழை மேல் விளைவுற்று அழல்
ஒக்க ஓடி உறைத்தலினான் மிசை
உக்க நெல் பொரியுற்று ஒரு சார் எலாம்
தொக்க கல் தலம் மேல் துடிக்கின்றவே

#781
ஈங்கு வெம் கதிரோன் எறிப்ப நிழல்
வேம்-கொல் என்று ஒளித்திட்டு இபம் வீழ்ந்து சேர்
பாங்கு_அலார் மனை போலப் பறைந்து அரோ
ஓங்கி நின்று உலவுற்றன ஓமையே

#782
அற்ற நீர் அழுவத்திடை நெல்லியின்
வற்றல் அம் சினை ஊடு வலித்து அரோ
மற்று அ வெவ் வெயிலும் நிழல்-வாய் அழல்
உற்று வீழ்ந்தது போன்று உள ஆங்கு எலாம்

#783
பைத் தலைப் பட நாகம் அழன்று தம்
பொய்த்து அளைத்-தலை போதரக் கார் செய்வான்
கைத்தலம் முகிழ்க்கின்றன காந்தள் என்று
அத் தலைச் சில மான் அயர்வு எய்துமே

#784
விசையினோடு வெண்தேர் செலக் கண்டு நீர்
நசையின் ஓடிய நவ்வி இரும் குழாம்
இசை_இல் கீழ்மகன் கண் இரந்து எய்திய
வசை_இல் மேன்மகன் போல வருந்துமே

#785
துடியர் தொண்டகப் பாணியர் வாளியர்
கொடிய செய்து முனைப் புலம் கூட்டுணும்
கடிய நீர்மையர் கானகம் காக்கும் நின்
அடியர் அல்லது அல்லார் அவண் இல்லையே
** விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்

#786
அங்கு அ வெம் கடம் கடந்து அலங்கு தார் இலங்கு பூண்
சிங்கம் வென்ற செங்கண்மாலொடு அம் பொன் மாலை வெண் கடாம்
திங்கள்_வண்ணன் வெம் கண் யானை வேந்து சேர்ந்த நாடு சார்ந்து
இங்கண் இன்னஇன்ன காண் எனப் புகழ்ந்து இயம்பினான்
**முல்லை நிலத்தின் மாண்பு

#787
மாலும் வாரி திங்கள் மூன்றும் வந்து அறாத மாண்பினால்
ஆலும் மா வல் தானை நம் அடிகள் ஆளும் நாட்டு அகம்
கால மாண்பின் அன்றியும் கார் கவின்ற நீரவே
போலும் மாண்பின் ஏர் கலந்து பொங்கு நீர புறணியே

#788
கொண்டல் வாடை என்னும் கூத்தன் யாத்த கூத்தின் மாட்சியால்
விண்ட மா மலர்ப் பொதும்பு அரங்கமா விரும்பும் நீர்
வண்டு பாட வல்லி என்னும் மாதர் ஆடும் நாடகம்
கண்டு கொன்றை பொன் சொரிந்த காந்தள் கை மறித்தவே

#789
கை மலர்த்த காந்தளும் கரிய நீர்க் கருவிளை
மை மலர்த் தடம் கண் நேர் வகுத்து அலர்ந்த வட்டமும்
மொய் மலர்ப் பொதும்பின் மேல் முறுவலித்த முல்லையும்
கொய் மலர்க் குழல் திரட்சி கொண்டு காய்த்த கொன்றையும்

#790
தொண்டை வாய் நிறம் கொளக் கனிந்து தூங்குகின்றவும்
வண்டு பாய வார் கொடி மருங்கு உலாய் வளர்ந்தவும்
கண்ட பால் எலாம் கலந்து கண் கவற்றும் ஆதலால்
விண்டு மாலை மாதராரின் மேவு நீர கானமே

#791
தண் நிலா விரிந்த முல்லை தாது சேர் தளிர் மிடைந்து
எண்ணிலாய சாயல் அம் இடா மணல் பிறங்கல் மேல்
பண்ணிலாய வண்டு பாடு பாங்கரோடு பாங்கு அணிந்து
வெண் நிலா விரிந்த எல்லை போலும் இங்கு ஒர் பால் எலாம்

#792
தேன் அவாவி மூசுகின்ற தேம் பிறழ் பூ தாம் கலந்து
கான நாவல் கொம்பினில் கனிந்து கால் அசைந்து அவற்று
ஏனை மாடு வண்டு இருந்து இருண்ட கானம் இங்கு இதற்கு
ஊனமாய் இருள் பிழம்பு உறங்குகின்றது ஒக்குமே

#793
வாய் இதழ்த் திறம் கொளக் கனிந்த தொண்டை வந்து ஒசிந்து
தூ இதழ்த் துணர் துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்
பா இதழ்ப் பரப்பின் மேல் அரத்த கோபம் ஊர்ந்து அயல்
சே இதழ்ப் பொலிந்த காடு செக்கர் வானம் ஒக்குமே

#794
ஆடு இணர்க் கொடிப் படர் அகில் பொதும்பு அயல் பொலிந்த
கூடு இணர்க் குழாம் நிலைக் கொழும் மலர்க் குமிழ் மிசைக்
கோடு இணர்க் குலைக்கு ஒசிந்த கொன்றை விண்ட தாது சோர்ந்து
ஓடு இணர்ச் சுடர்ப் பொன் உக்க தானம் ஒக்கும் ஊங்கு எலாம்

#795
பார் மகிழ்ந்த பைம் சுருள் பயிர் மிசைப் பயின்று எழுந்து
ஏர் கலந்து பாசிலைப் பரப்பின் ஊடு இரைத்து அரோ
கார் மகிழ்ந்த கார் மயில் கலாபம் மொய்த்த கானகம்
நீர் மகிழ்ந்த நீர்க் கடல் நிரந்தது ஒக்கும் நீரதே

#796
ஏறு கொண்ட கோவலர் ஏந்து தண்ணவக் குரல்
மாறுகொண்ட கோடியர் மணி முழா முழங்கலின்
தூறு கொண்ட தோகை மஞ்ஞை ஆடல் கண்டு கண் மகிழ்ந்து
சாறு கொண்டு மான் கணம் தயங்கு நீர சார் எலாம்

#797
கார் மணந்த கான யாறு கல் அலைத்து இழிந்து ஒலிக்கும்
நீர் மணந்த நீள் கரை நிரைத்து எழுந்த நாணல் சூழ்
வார் மணல் பிறங்கல் மாலை வல்லி விண்ட தாது அணிந்து
தார் மணந்த வார மார்ப யாகசாலை போலுமே

#798
கறவை கன்று வாய் மிகுத்த அமிழ்தினோடு கண் அகல்
புறவின் மா மரை முலைப் பொழிந்த பால் நெகிழ்ந்து எழப்
பறவை உண்டு பாடவும் பால் பரந்த பூமியின்
நறவு விண்ட நாகு முல்லை வாய் திறந்து நக்கவே
**விசய திவிட்டர்கள் முல்லைநிலங்கடந்து மருதனிலம் எய்துதல்

#799
வேரல் வேலி மால் வரைக் கவானின் வேய் விலங்கலின்
சாரல் மேகம் நீர் முதிர்ந்து தண் தளி துளித்தலால்
மூரல் வாய் அசும்பு அறாத முல்லை விள்ளும் எல்லை போய்
நீர வாளை பூவின் வைகும் நீள் பரப்பு நண்ணினார்
**விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்

#800
புது நாள்_மலர் விண்டு பொழிந்து இழியும்
மது நாறு புனல் மருதத்தினை மற்று
இது காண் என இன்னன சொல்லினனே
விது மாண் மிகு சோதி விளங்கு ஒளியான்

#801
அயல் ஓதம் இரட்ட அலம்பு ஒலி நீர்
வயல் ஓதம் மயங்க மயங்க அதிர்ந்து
இயல் ஓதை இளம் சிறை அன்னம் எழக்
கயல் ஓடி ஒளிப்பன காண் கழலோய்

#802
வள வாசம் நிலப் பல இன் சுளையும்
இள வாழையின் இன் எழில் அம் கனியும்
கள மாங்கனியின் திரளும் கலவிக்
குளம் ஆயின யோசனை கொண்டனவே

#803
வன மாவின் இரும் கனி உண்டு மதர்த்து
இன வாளை இரைத்து எழுகின்றன காண்
கன வாழை மடல் கடுவன் மறையப்
புன வானர மந்தி புலம்புவ காண்

#804
வளமா நிலை மேதி மருப்பின் இட
இள வாழை நுதிக் கமழ் தேன் ஒழுகிக்
குளம் ஆர் குளிர் தாமரைக் கொண்ட நகைத்
தள-வாய் உகுகின்றன காண் தகவோய்

#805
இவை செந்நெலிடை கருநீல வனம்
அவை அ நெலிடை கழுநீர் அழுவம்
உவை ஒண் துறை விண்டு ஒளி விம்ம நகும்
நவை வென்றன தாமரை நாள்_மலரே

#806
கழை ஆடு கரும்பின் நறைக் கடிகைப்
பொழி சாறு அடு வெம் புகை பொங்கி அயல்
தழையோடு உயர் சோலைகள் தாம் விரவி
மழை ஆடும் மலைத் தடம் ஒத்து உளவே
**மருத நிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்

#807
கருநீலம் அணிந்த கதுப்பின் அயல்
கருநீலம் அணிந்தன கண் இணைகள்
கருநீல மணிக் கதிர் கட்டி எனக்
கருநீலம் அணிந்த கரும் குழலே

#808
வளர் செங்கிடையின் எழில் வைத்த நுதல்
வளர் செங்கிடையின் ஒளி வவ்விய வாய்
வளர் செங்கிடையின் வளை ஆடும் வயல்
வளர் செங்கிடை மா மலர் மல்கு சிகை

#809
வயல் ஆம்பல் நெறித்த வகைத் தழையள்
வயல் ஆம்பல் மிலைத்த அடிச் சவியள்
வயல் ஆம்பல் மலிந்த பரப்பு உடையள்
வயல் ஆம் பல் மலர்த் தொகை மாலையினாள்

#810
வளர் தாமரை அல்லி மலர்த்திய கை
வளர் தாமரை அல்லி மயக்கும் ஒளி
வளர் தாமரை அல்லி மகிழ்ந்தனள் போல்
வளர் தாமரை அல்லி வனத்திடையாள்

#811
நளிர் வார் கழலாய் புகழ் நாடி நயந்து
ஒளிர் வார் குழலாள் ஒரு மாது அவளுள்
உளர் வார் கனியும் மதுவும் தெகிழத்
கிளர் பார்வை உறக் கிளர்கின்றது கேள்

#812
மதி காண நிமிர்ந்த மதில் சிகரம்
நுதி மாளிகை மேல நுடங்கு கொடி
கதிரோன் ஒளி மாழ்க எழுந்து கலந்
தது காண் நமது ஆர் ஒளி மா நகரே

#813
அற வேதியர் ஆகுதி அம் புகை ஆ
ருற வேதிகை விம்மிய ஒண் புறவம்
நிற வேதிகை மீது நிமிர்ந்த பொழில்
புற வேதிகை ஏறுவ காண் புகழோய்
**விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்

#814
இன்னன இளையவற்கு இயம்பும் எல்லையுள்
பொன் நகர் அடைந்தனர் பொழுதும் சென்றது
நல் நகர் இரைத்தது நரன்ற இன்னியம்
மன்னவ குமரரும் வறுமை நீங்கினார்

#815
இளம் களிக் குஞ்சரம் இரட்டித்து ஆயிரம்
துளங்கு ஒளிக் கலினமாத் தூளி எல்லைய
வளம் கெழு குமரரை வலம்கொண்டு எய்தின
அளந்து அறிந்திலம் அகல் படையின் எல்லையே

#816
துன்னிய துணர் இளம் தோன்றி மென் கொடி
மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்ட போல்
கன்னியர் கைவிளக்கு ஏந்தக் காவலன்
பொன் இயல் வள நகர் பொலியத் தோன்றினார்

#817
காவி அம் கரும்_கணார் கமழ ஊட்டிய
ஆவி அம் கொழும் புகை தழுவி ஆய் மலர்க்
கோவை அம் குழு நிலை மாடம் யாவையும்
பாவிய பனி வரைப் படிவம் கொண்டவே

#818
மல்லிகை மணம் கமழ் மதுப் பெய் மாலையும்
முல்லை அம் பிணையலும் மொய்த்த பூண் கடை
எல் இயங்கு இளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன
தொல்லை அம் கடி நகர் துயில்வ போன்றவே
**பயாபதி மக்களைத் தன்பால் அழைத்தல்

#819
செம்பொன் மா மணி நகர்ச் செல்வ வீதியுள்
கொம்பு_அனார் அடி தொழக் கோயில் எய்தலும்
நம்பிமார் வருக என நாறும் நீர் ஒளி
அம் பொன் மா மணி முடி அரசன் ஏயினான்
**விசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்

#820
அருளுவது என்-கொல் என்று அஞ்சி வெம் சுடர்
இருள் உக எழுந்தது ஒத்து இருந்த கோன் அடிச்
சுருளுறு குஞ்சிகள் துதையத் தாழ்ந்தனர்
மருளுறு மனத்தினன் மன்னன் ஆயினான்
**பயாபதி மக்களைத் தழுவுதல்

#821
திரு வரை அனைய தோள் சிறுவர்-தம்மை அக்
கரு வரை அனைய வெம் களி நல் யானையான்
இருவரும் வருக என இரண்டு தோளினும்
ஒரு வரை அகலத்தின் ஒடுங்கப் புல்லினான்

#822
மான் அவாம் மத களிற்று உழவன் மக்கள்-தம்
தேன் அவாம் செழு மலர் செறிந்த குஞ்சியுள்
கான மா மலர்த் துகள் கழுமி வீழ்ந்தன
வான் அவாம் தட_கையான் மகிழ்ந்து நோக்கினான்

#823
என்னை நும் ஈர் அலர்க் குஞ்சி-தம்முள் இத்
துன்னிய வனத் துகள் துதைந்த ஆறு என
மன்னவன் அருளலும் மகர வார் குழை
மின் இவர் மணிக் கழல் விசயன் செப்பினான்
**விசயன் தந்தைக்குத் திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல்

#824
போற்றி நம் புறணி சூழ் காடு பாழ்செய்வான்
சீற்றம் மிக்கு உடையது ஓர் சீயம் சேர்ந்தது
வேற்றுவன் தமர்கள் வந்து உரைப்ப எம்பி இ
ஆற்றல் சால் அடியன் சென்று அதனை நீக்கினான்
**பயாபதியின் கழி பேருவகை

#825
யானும் அங்கு இவனொடும் அடிகள் ஏகினேன்
வான் உயர் இமகிரி மருங்கில் என்று பூம்
தேன் உயர் அலங்கலான் சிறுவன் சொல்லலும்
தான் உயிர் தளிர்ப்பது ஓர் சவியன் ஆயினான்

#826
சுடர் ஒளி மிகு சோதி சூழ் கழல் காளைமார் தம்
அடர் ஒளி முடி மன்னன் ஏவலான் ஆய் பொன் நாகம்
தொடர் ஒளி சுடர் ஞாயில் சூளிகை சூழும் நெற்றிப்
படர் ஒளி நெடு வாயில் பள்ளியம்பலங்கள் சேர்ந்தார் .

@8. கல்யாணச் சருக்கம்
**கவிக்கூற்று

#827
செம் கண் மால் சிங்கம் வென்று செழு மலர்த் திலதக் கண்ணித்
திங்கள் மா வண்ணனோடும் திரு நகர் பெயர்ந்த பின்னை
அம் கண் மாற்கு உரிய நங்கை அரும் பெறல் அவட்குத் தாதை
வெம் கண் மால் களிறு_அன்னான்-தன் திறம் இனி விளம்பலுற்றேன்.

#828
உற்ற வான் குழவித் திங்கள் ஒளி முழை அகட்டுப் போந்து
முற்றுவான் முளைத்த போலும் எயிறு உடை மூரிச் சிங்கம்
மற்று அ மால் அழித்தது எல்லாம் வானம் ஆறாகச் சென்ற
ஒற்றனால் உணர்ந்து வேந்தன் உவகை அம் கடலுள் ஆழ்ந்தான்.
**சடிவேந்தன் மணவினைக்கு ஏற்பாடு செய்தல்

#829
கரியவாய் விலங்கி நீண்டு களிக் கயல் இரண்டு தம்முள்
பொரிய போகின்ற போலும் பொங்கு அரித் தடம் கண் பேதைக்கு
உரிய மாலவற்குச் சென்று கொடுப்பன் என்று உலகம் காக்கும்
பெரியவன் தமரோடு எண்ணிக் கடிவினை பெருக்கலுற்றான்.
**சடிவேந்தன் மணவினையின் மேல் போதனபுரம் செல்லும் சமயம் தன் நகருக்குக்
**காவலாக வைத்த எண்மரின் விவரம்

#830
கிளர் ஒளி மாடக் கோயில் கின்னரர் கெழுவல் ஓவா
வளர் ஒளி வயங்கு தோன்றல் வருத்தமானத்து மன்னன்
உளர் ஒளி உமிழும் பூணான் பிரீதிவர்த்தனன் என்று ஓதும்
தளர் ஒளி தயங்கும் மேனித் தாமரைச் செம்_கணானே.

#831
மண் நலம் கனியும் சாதி மணி முழா அதிரும் மாடக்
கண் நலம் கனியும் தோன்றல் கந்தருவ நகரம் காப்பான்
விண் நலம் கனியும் சீர்த்தி விருக வெல் கடி கொள் பேரான்
பெண் நலம் கனியும் நீர்மை பெருகிய உருவத் தோளான்.

#832
பூ மரு பொலம் கொள் சோலைப் பொன் அணி புரிசை வேலிக்
காமரு கபாட வாயில் கந்தமாதனத்தைக் காப்பான்
தேம் மரு திலதக் கண்ணித் திவாகரதேவன் என்பான்
தாமரை தயங்கு சோதித் தார் அணி துரகத் தேரான்.

#833
சுந்தரப் பொடியும் பூவும் சுரும்பொடு துதைந்து வீசிச்
சந்திரன் தவழும் மாடச் சக்கிரவாள மன்னன்
மந்தரம் மலைக்கும் யானை வச்சிரதாடன் என்பான்
அந்தரத்து அமரர் கோமான் அணிந்து போந்து அனைய நீரான்.

#834
கார் அணங்கு உருவ மேகம் கருவுகொண்டு அதிர்ந்து வெய்யோன்
தேர் அணங்குறுக்கும் மாடத் தேவரவணத்துச் செல்வன்
ஏர் அணங்குறுக்கும் பைம் தார் இரமியதரன் என்று எங்கும்
சீர் அணங்குறுக்கும் செய்கைச் செம் சுடர்த் திலகப் பூணான்.

#835
கண் நிலாம் கனக மாடக் கதலிகை முகிலோடு ஆடி
விண் நிலா இருண்டு தோன்றும் விசயகூடத்து மன்னன்
வெண் நிலா விரிந்த பூணான் வேகமாரதன் நீள் முந்நீர்
மண் எலாம் வணங்க நின்ற மழ களிற்று அரசோடு ஒப்பான்.

#836
மெல் நரம்பு அனுக்கும் தீம் சொல் மெல்லியலார்-தம் பாடல்
கின்னரம் பிணிக்கும் செய்கைக் கிருதமாதனத்தைக் காப்பான்
கை நவின்று இலங்கும் செம் வேல் காவலன் கருடன் சேர்ந்த
மெய் நவின்று இலங்கும் செம்பொன் அங்கதம் விளைந்த பேரான்.

#837
ஓங்கு நீர்ப் புரிசை வேலி ஒண் துறைக் குவளை வேய்ந்த
தூங்கு நீர் உடுத்த பாங்கில் சோபனம் உடைய தோன்றல்
தேங்கு நீர்க் கடல் அம் தானைச் சித்திரதரன் இ வையம்
தாங்கு நீர் ஒளியோடு ஒன்றித் தண் அளி தயங்க நின்றான்.

#838
என்று இவர் எண்மர்-தம்மை இரதநூபுரத்துள் ஆனா
நின்று நீர் கா-மின் என்று நிறீஇய பின் நீதி மன்னன்
ஒன்றிய உலகம் எல்லாம் ஒருங்குடன் விழுங்கலுற்றுச்
சென்று உயர் கடலோடு ஒக்கும் சேனை பண்அமைக்க என்றான்.
**யானை

#839
வெண் நிலாக் குழவித் திங்கள் மேகத்துப் பதித்த போலும்
ஒண் நிலா உருவக் கோட்ட ஓடை மால் களிற்றின் மேலோர்
பண் எலாம் அணிந்து தோன்றப் பருமித்துக் கருவி ஏற்றிக்
கண் நிலாம் பதாகை சேர்த்திக் காழ் அகில் கழுமவிட்டார்.
**குதிரை

#840
கட்டிய கம்மச் செய்கைக் கதிர் மணிக் கனகச் சூலம்
பட்டமொடு இலங்கப் பண்ணிப் பக்கரை பதைப்ப யாத்து
மட்டு அவிழ் அலங்கல் வீரர் சேர்தலும் வலத்து முன்னால்
கொட்டிய குரத்த ஆலித்து எழுந்தன குதிரைச் சேனை.
**தேர்

#841
மணித் தொழில் வளைந்த சூட்டின் மறுப்பு அறுத்து இயற்றப்பட்ட
அணித் தொழில் ஆரக் கோவை ஆடகக் கொடிஞ்சி அம் பொன்
துணித்து இடை பதித்த தட்டின் சுடர் மணித் துரகத் திண் தேர்
கணித் அளப்பு_அரிய நீர கல்லெனக் கலந்த அன்றே.
**காலாட்கள்

#842
ஒட்டிய கலிங்கத் தாள் மேல் திரைத்து உடுத்து உருவக் கோடிப்
பட்டிகை பதைப்ப யாத்துப் பரட்டையம் நரல வீக்கிக்
கட்டிய கழலர் தாரர் கதிரொடு கனலும் வாளர்
மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார்.
**சடிமன்னன் தம்பியின் புறப்பாடு

#843
இன் இசை அமரர் பேர் கொண்டு இயன்ற மா நகரம் காக்கும்
பொன் நவில் கடகப் பைம் பூண் புரந்தரன் அனைய மாண்பின்
மன்னவற்கு இளைய வேந்தன் வயங்கு எரிப் பெயர் கொள் தேரான்
கன்னியைக் காக்கும் நீர்மைக் கடல் படை பரப்பிச் சென்றான்.
**சடிமன்னனுடைய மருகன் புறப்படுதல்

#844
அம் கலம் மலர்ந்த தோன்றல் அரிபுரத்தவர்கள் கோமான்
பொங்கு அலர் அணிந்த பைம் தார்ப் புலிப் பெயர்ப் பொலம் கொள் தேரான்
மங்கலக் களிற்றினான்-தன் மருமகன் மகர முந்நீர்த்
தங்கு ஒலி மிகுத்த தானையொடு கதிர் எறிப்பச் சார்ந்தான்.
**சடிவேந்தன் மகன் அருக்ககீர்த்தியின் புறப்பாடு

#845
வார் அணி முரசம் ஆர்ப்ப வரி வளை வயிரொடு ஏங்கத்
தார் அணி மறவர் சூழத் தமனியக் கலங்கள் தாங்கி
ஆர் அணி உருவத் திண் தேர் ஆனை மேல் அருக்ககீர்த்தி
நீர் அணி கடல் அம் தானை நிலம் நெளி பரப்பி நின்றான்.
**சடிமன்னன் ஒரு விமானத்தை நிருமித்தல்

#846
சேனை பண்அமைத்துச் சென்று திருக் கடை செறிந்த போழ்தில்
தானையுள்படுநர் மாண்பின் தாரவர் தொழுது கூற
வேல் நவில் தடக் கை வேந்தன் விண் இயல் விமானம் ஒன்று
வானவில் உமிழ்ந்து மின்ன மனத்தினால் நிருமித்திட்டான்.
**விமான வருணனை

#847
மற்று அதன் வடிவு கேட்பின் மரகத மணிக் கல்-தன் மேல்
பெற்ற தன் நிலையிற்று ஆகிப் பெருகிய வளமை தோன்றிச்
சுற்றிய பசும்பொன் சோதி சொரிந்து போய்த் துறக்கம் காண
முற்றிய முகட்டு நீலக் குவட்டிடை முடிந்தது அன்றே.

#848
பாரித்த பவழத் திண் கால் பளிங்கு போழ் பலகை-தன் மேல்
பூரித்த சுடரின் செம்பொன் போதிகைப் புடங்கள்-தோறும்
மூரித் தண் சுடர் வெண் முத்தின் பரூஉத் திரள் முயங்கி ஞால
வேரித் தண் துவலை கால மாலைகள் விசித்த அன்றே.

#849
தடுத்து வில் உமிழும் செம்பொன் தண்டிகைத் திரள்கள் தாங்க
மடுத்தன வயிரத் தம்பம் மாட நீள் மதலை-தோறும்
தொடுத்தன சுரும்பு பாயும் துணர் அணி தயங்கு மாலை
அடுத்தன நிறத்தவாக அழுத்தின மணிகள் எல்லாம்.

#850
ஊன்றிய மகரப் பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து
நான்றன மணி செய் தாமம் நகை முகம் நிறைந்த சோதி
கான்றன கனக சாலம் கலந்தன கங்கணீகம்
தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில்.

#851
அம் சிறைப் பறவைச் சாதி ஆவிப்ப அணிந்து மேலால்
விஞ்சையர் மிதுனத் தேவர் விண் இயங்கு உருவம் எல்லாம்
செம் சுடர் எறிப்பச் சேர்ந்து செம் கதிர்ப் பரவை சிந்தி
வெம் சுடர் விலங்க நீண்டு விண்ணிடை விரிந்தது அன்றே..

#852
வார் அணி பசும்பொன் வாழை மரகதக் கமுகொடு ஓங்கித்
தோரணத் தூண்கள்-தோறும் சுடர் மணி சிலம்ப நான்று
நீர் அணி நிழல் கொள் முத்த மணல் மிசை நிரந்து தோன்றிப்
பூரண குடங்கள் செம்பொன் கொழும் கதிர் புதைந்த கீழால்..

#853
கொழும் திரள் வயிரக் கோடிக் கூர் முளை செறித்துச் செம்பொன்
செழும் திரள் புடகம் சேர்ந்த திரு வளர் கபாட வாயில்
பொழிந்த தண் சுடர ஆகிப் பொலம் தொடர் புலம்பத் தூங்கி
எழுந்து ஒலி சிலம்ப விம்மி இணர்கொண்ட மணிகள் எல்லாம்..

#854
பாய் கதிர்ப் பளிங்கில் கோத்துப் பரு மணி வயிரம் சூழ்ந்த
ஆய் கதிர்ச் சால வாயில் அகில் அயாவுயிர்த்த ஆவி
மா இரு விசும்பின் மான்று மழை தவழ் குன்றம் போலச்
சேயவர்க்கு உருவம் காட்டித் தேம் நிரை கொண்ட அன்றே..

#855
செம்பொன் அம் களியில் செய்து சித்திரம் தெளிப்பத் தீட்டி
வம்ப வெண் முத்தச் சாந்தின் மட்டித்து மணிகள் எல்லாம்
நம்பிய ஒளியவாகத் தெளித்து நன்கு எழுதப்பட்டுத்
தம் புலம் தெரிந்து தோன்றும் தடத்தின தலங்கள் எல்லாம்..

#856
பாடகம் இலங்கச் செம் கேழ்ச் சீறடிப் பரவை அல்குல்
நாடக மகளிர் ஆடும் நாடக அரங்கும் நன் பொன்
மாடு அகம் தெளிப்ப வேய்ந்த மண்டபத் தலமும் வண்ண
ஆடகம் அணிந்த கூட நிலைகளும் அயல எல்லாம்..

#857
மரகத மணிகள் ஈன்ற கதிர் எனும் தளிர்கள் வார்ந்து
சொரி கதிர் வயிரம் கான்ற சுடர் எனும் கொழுந்து தோன்றிப்
புரி கதிர் முத்தம் என்னும் புது நகை அரும்பு பம்பி
விரி கதிர்ச் செம்பொன் பூத்து விண் அணங்குறுப்ப வீங்கி..
**சயம்பவையை அழைத்துவர மன்னன் பணித்தல்

#858
கதிர் நகைக் கன பொன் சோதிக் கனக சாலங்கள் என்னும்
மது நகப் பருகி மான்ற மணி வண்டு மயங்கி வானோர்
விதி நகும் விமானம் என்னும் கற்பகம் விரிந்த போழ்தில்
பதி நகர்க்கு இறைவன் பாவை சயம்பவை வருக என்றான்..
**சயம்பவையின் செயல்

#859
இன்னது அருள் மன்னவனது என்று கடை காக்கும்
கன்னியர் உணர்த்தலின் இணர்க் கொடி கடுப்பாள்
பன்னிய பளிக்கறை ஒர் பஞ்சணையின் மேலாள்
மன்னும் மணி மாடம் மிசை மஞ்ஞையின் இழிந்தாள்..

#860
மாக மலை அன்ன மணி மாட நிலையுள்ளால்
போகம் மிகு பூம் தவிசின் மீது புதைவுற்ற
வாகை வன மாலை புனை மன்னன் மகள் செல்வாள்
மேக படலத்திடை மினல்கொடியொடு ஒத்தாள்..

#861
அங்கையின் அயில் படையர் ஆண்_உடையர் பூணர்
கொங்கை வளராத குழலார்கள் புடை காப்பப்
பங்கய முகத்தவர் பலாண்டு பல கூறி
நங்கை அடி போற்றி என நங்கை நடை கற்றாள்.

#862
காவல் மிகு கன்னிநகர் கன்னியர்கள் காக்கும்
வாவி அகில் நாறும் மணி வாயில் அவை நீங்கி
நாவி கமழ் கொம்பு அனைய நங்கை நகை வேலான்
தேவி அமர் கோயிலது செவ்வனம் அடைந்தாள்.

#863
மௌவல் மலர் வேய்ந்து மது நாறும் மணி ஐம்பால்
கொவ்வை துயில் கொண்ட துவர் வாய்க் கொடியொடு ஒப்பாள்
தெய்வ மணம் நாறு திரு மேனி புறம் காக்கும்
அவ்வையரொடு எய்தி முதல் அவ்வை அடி சேர்ந்தாள்.
**வாயு வேகையின் செயல்

#864
வணங்கிய கனம்_குழையை வாங்கி முலை நோவக்
குணம் கெழு குலத் தலைவி கொண்டு மிசை புல்லி
மணம் கமழ் குழல் சிகையுள் வண்டு இரிய மோந்து ஆங்கு
அணங்கின்_அனையாள் உவகை ஆழ் கடலுள் ஆழ்ந்தாள்.

#865
செம்பொன் அணி சீரியன சேரின் இடை நோம் என்று
அம் பொன் அணி நொய்யன அணிந்து அலர் மிலைச்சி
வம்பின் அணி வாள் கண் இடை மை பிறழ வைத்துக்
கொம்பின்_அனையாள் குளிருமாறு குயில்வித்தாள்.
**சயம்பவை விமானமேற் கொள்ளல்

#866
அன்ன வகை தேவி மகளோடு அமரும் எல்லை
முன்னு முக ஓரையொடு மூர்த்த நலம் நோக்கி
மன்னு புலவோர்கள் சொல மன்னன் மகள்-தன்னை
இன் நகை விமான தலம் ஏறுக இனிது என்றான்.

#867
தொண்டை தொலைவித்த துவர் வாய் மகளிர் சூழக்
கண்டு வளர் தாயரொடு கஞ்சுகியர் காப்ப
விண்டு வளர் சோதி கொள் விமானமது சேர்வாள்
வண்டு வளர் கற்ப முறை வான் மகளொடு ஒத்தாள்.

#868
முன்னி முடிவித்த மிகு விஞ்சையின் முதிர்ந்தார்
அன்ன நடையாட்கு அடிமை ஆர்வமொடு அடைந்தார்
பின்னிவிடு கூந்தலர் பிடித்த அயில் வாளர்
கன்னியர் இராயிரவர் கன்னி புடை காத்தார்.

#869
அம் சுடர் மணிக் குழவி ஆடு கழல் மாடம்
பஞ்சு உடைய பந்து கிளி பாவையொடு பூவை
மஞ்சு உடைய மின்னின்_அனையாள் மகிழும் நீர
செம் சுடர் விமானமது சேர்ந்தன செறிந்தே.

#870
கற்பக மலர்ப் பிணையல் சேர்ந்து கமழ்கின்ற
பொற்பு அமை செம் கோடிகமொடு ஆடை புதைவுற்ற
நல் புடைய பேழை நறும் சாந்து நனி பெய்த
செப்பொடு கடப்பகம் மடுத்தன செறிந்தே.

#871
பெரும் கலம் நிறைந்த மிகு பெட்டகமோடு எல்லா
அரும் கலமும் ஆர்ந்த அறையாயின பின் ஆய் பொன்
நெருங்கு ஒளி நிறைந்த மிகு சோதி நிழல் சூழப்
பெரும் கலி விமானமது சென்றது பெயர்ந்தே.
**பலவகைச் சம்பிரமங்கள்

#872
முரசம் ஆர்த்தன முரன்றன முரி வளை முகிலிடை வயிர் ஏங்க
அரியொடு ஆகுளி ஆலித்த அதிர்ந்தன அணி முழவு அருகு எல்லாம்
விரை செல் மாவொடு விரவின களிறுகள் மிடைந்தன கடுமான் தேர்
புரைசை யானையின் எருத்திடை அரசனும் புகழொடு பொலிவுற்றான்.

#873
சிகர யானையின் கவிழ் மணி சிலம்பின சிலம்பின பணிலங்கள்
முகர வாயின பணவங்கள் முரன்றன முரன்றன முகில் எல்லாம்
மகர மால் கடல் வரை மிசை எழுந்து என எழுந்தது படை மாற்றம்
நகர வாயிலின் புறம் பணை நடுங்கின நடுங்கின கொடி எல்லாம்.

#874
ஒளிறு வாள் படை உளர்ந்தது கிளர்ந்தனர் உழைக் கல உழையோர்கள்
களிறு காத்திரம் உறுத்தலின் நெறித் தலை கரு முகில் நெரிவுற்ற
குளிறும் இன்னியம் குழுமலில் செழு மலைக் கொடுமுடி உடன் ஆர்த்த
வெளிறு_இல் கேள்வியான் பெரும் படை விசும்பிடை நிரந்து ஒளி விரிந்தன்றே
**சயம்பவைக்கு அவள்தோழி நாட்டுவளங் காட்டல்

#875
அமிதம் ஆகிய பெரும் படை அகல் கடல் அகல் விசும்பு அழகு எய்த
அமிதமாகிய பெரு வரை நிமிர் சிகை-அதன் அயல் அமர்ந்து ஏக
அமிதமாகிய நிலைத் தலை மலை அணி அருவிகள் அவை எல்லாம்
அமிதமாபவை சயம்பவைக்கு அடி தொழுது அவையவை அறிவித்தாள்.

#876
நங்கை காண் இது நம் மலைக்கு உம்பர் அப் பொன் மலைப் புடை வீழும்
கங்கை யாறு இதன் கரையன கற்பகக் காவுகள் இவை கண்டாய்
இங்கு நாம் இரு விசும்பிடை இயங்கலின் சிறிய ஒத்து உளவேனும்
அங்கணார்க்கு நம் உலகினை அளப்ப ஒத்து உள அவை அறியுங்கால்.

#877
இரைக்கும் அம் சிறைப் பறவைகள் எனப் பெயர் இன வண்டு புடை சூழ
நுரைக் கள் என்னும் அக் குழம்பு கொண்டு எதிர்ந்து எழ நுடங்கிய இலையத்தால்
திரைக் கரங்களில் செழும் மலைச் சந்தனத் திரள்களைக் கரை மேல் வைத்து
அரைக்கும் மற்று இது குண_கடல் திரையொடும் பொருது அலது அவியாதே.

#878
முந்து மற்று இதன் முதல் மலைப் பிறந்து நம் மலைஅது முழைப் பேரும்
சிந்து என்பது வலத்தது செழும் கலம் சிதர்கின்ற நிகழ் யாறு
நுந்து பொன் ஒளித் திரை எனும் கரதலப் புடங்களின் நுரை என்னும்
பந்து பொங்க நின்று அடித்திடத் திளைப்பது ஒத்து உளது அது பகருங்கால்.

#879
உயரும் சந்தனப் பொழில் அலைத்து ஒளிர் மணிக் கலங்களை உமிழ்ந்திட்டுப்
பெயரும் தெள் திரைப் பிறங்கலுள் பிணங்கிய பெரு வரை அகில் தேக்கி
வயிர வேதிகை மலைவது கோபுர வாய்-தலின் படி தீண்டி
அயிரை வார் கரைக் குடகடல் திரையொடு பொருது அலது அவியாதே.

#880
தேன் நெய் பாலொடு கலந்தன சில் மொழிச் சிறு நுதல் திருவே நம்
சேனை மா முகில் படலங்கள் மிசைச் செலச் சினை முகில் முரலக் கேட்டு
ஏனை யானைகள் இணை என இருந்திட இரும் கை மா இனம் காக்கும்
கான யானைகள் கரு வரை அனையன கனல்வன இவை காணாய்.

#881
பேய் மையானம் கொண்டு இருந்து அன்ன பெரு வரை நெரிதரத் திரை சிந்தித்
தீமை யானைகள் செவி உகு செறி கடாம் திளைத்தலில் திசை நாறிப்
போய் மையானம் கொண்டு இழிதரும் பெரும் திசைப் புடையன புனல் யாறு
சேய்மையான் நமக்கு ஒளிர் முத்தின் பரு வடம் தெளிப்ப ஒத்து உள பாவாய்.

#882
கருவி வானத்தின் அகடு தொட்டன என நிலத்திடைக் கவின்செய்ய
மருவி நம் கட்கு மணி வட்டுச் சிதர்ப்ப ஒத்து உள சில மலை எல்லாம்
அருவி வெண் திரை சொரிகின்ற அரு வரைக் குவடுகள் அவை முன்னால்
பரவை வெண் கொடி எடுத்து நம் படைக்கு எதிர் எழுவது ஒத்து உள பாவாய்.

#883
அலங்கல் வார் குழல் அமிர்து அன்ன சில் மொழி அரிவை நம் மருங்கு எல்லாம்
விலங்கல் போல்வன வெண் மருப்பு இரட்டைய வேழங்கள் விளையாடி
இலங்கு மால் வரை இறுவரைத் தடம் குத்தி இடந்திட இரு பாலும்
கலம்கொள் பேழைகள் கவிழ்ந்து எனக் கதிர் மணி சொரிகின்ற அவை காணாய்.

#884
அம் கண் மால் வரை அருவி தம் தடக் கையில் புடைத்து நின்று அமர்ந்து ஆடிப்
பைம் கண் செம் முகப் பரூஉக் கை அம் பகடு தம் பால் பிடிக் கணம் புடை சூழச்
செம் கல் தூளி தம் செவிப் புறத்து எறிதலின் சிகரங்கள் இடை எல்லாம்
பொங்கிக் குங்குமப் பொடி ஒத்துப் பொலிகின்ற பொலம்_கொடி புடை நோக்காய்.

#885
துளங்கு வார் குழைத் துவர் இதழ்த் துடி இடைச் சுடர் நுதல் சுரி கோதாய்
விளங்கு வெம் கதிர் விலங்கிய விசும்பிடை இயங்குதல் புலன்கொள்ளாப்
பளிங்கின் ஒள் அறைப் பரப்பிடைப் பாய்வித்த பரு மணி நெடு மான் தேர்
வளம் கொள் நம் படைக் கடலிடை மறித்தவை சுழல்கின்ற வகை நோக்காய்.

#886
எடுத்த மாருதம் எறிதலின் நெகிழ்ந்தன சிகழிகை இணரோடும்
தொடுத்த மாலைகள் துணர்கொளப் புனைவன துகில் இடை புடை சோர
உடுத்த காஞ்சியின் ஒளி மணிக் கதிர் நகைப் பட்டங்கள் உடையாக
அடுத்து வீழும் ஒர் அணி இழை இளையவள் படுகின்றது அது காணாய்.

#887
மல்கு மும்மத மழ களிறு உழக்கலின் மயங்கிய மழை மேகம்
பில்கும் நுண் துளி உறைத்தலின் பனித்த நம் பெரும் படை மடவார்கள்
நல்கு காதலர் அகலத்துள் ஒடுங்குதல் பலர் முன்னை நனி நாணி
மெல்கு பூம் துகில் விரித்தவா வருகின்ற விதலைகள் மிக நோக்காய்.

#888
இலைய நாடகத்து எழில் கெழு விமானம் அஃது இயல்கின்ற விசை-தன்னால்
மலை இனம்மொடு வருவ ஒத்து உள அவை வரவு_இல மடன்_நோக்கி
உலைவு_இல் வையகத்து ஒளிசெயும் பகலவன் உறு சுடர் சொரிகின்ற
வலையம் கை_அல வருவது மற்று இதன் சலத்தது வலி கண்டாய்.
**யாவரும் போதன புரத்தை அடைதல்

#889
இன்ன போல்வன இளையவட்கு உழையவள் இனியன பல காட்டிப்
பன்னும் ஆயிடைப் பழனங்கள் வளாவிய படு கலி நெடு நீத்தம்
துன்னும் நீர் வயல் சுரமியத்து அகணியுள் சுடர் அணி நகர் சார்ந்து
தென்னென் தேன் நிமிர் திருநிலையகம் எனும் செறி பொழில்அது சேர்ந்தார்.
**ஒரு சோலையில் யாவரும் தங்கிய வருணனை

#890
மோடு விட்டு அலர் மொய் மலர்க் காவினுள்
பாடிவிட்டது பாவை-தன் கோன் படை
கூடிவிட்டு இடையாரன கோதை மேல்
மூடிவிட்டு அமர் தேன் முரிவித்தவே.

#891
ஆர்ந்த வெம் களி யானைக் கவுள் புடை
வார்ந்து வீழ் மதம் மூசிய வண்டு இனம்
சோர்ந்து வீங்கு எருத்தில் தொடர் கண்ணிடைப்
பேர்ந்து வீழ்வன போலப் பிறழ்ந்தவே.

#892
முந்தி நின்று இமிர் தேன் முரன்று ஆக்கிய
மந்த இன் இசை வாங்க வனத்திடைச்
சந்தனத் தடம் தாளொடு சார்ந்தன
கந்தினைக் கனலும் களி யானையே.

#893
குங்குமக் குளிர் பூ நெரி தூளி மேல்
பொங்கு உளைக் கலிமாக்கள் புரண்டு வில்
தங்கு ஒளிப் பலகைத் தலம் பாவிய
மங்கலப் பெரும் பந்தியின் வந்தவே.

#894
பட்டம் ஆர் நெடும் தேர் பைம்பொனால் மிடை
கொட்டில் சேர்ந்தன கோன் உறை கோயிலும்
வட்டமாக வகுத்தனர் வான் உலகு
இட்டமாய் வந்து இழிந்தது போலுமே.

#895
செம்பொன் மாளிகையும் வயிரத் திரள்
தம்பம் உற்ற தமனியக் கூடமும்
அம் பொன் ஆடரங்கும் அகில் சேக்கையும்
வம்பு நீர்மையவாய் வளம் கொண்டவே.

#896
தெள்ளு வண் பவழத் திரள் ஊன்றிய
வெள்ளி மண்டபமும் விரை நாறுப
பள்ளி அம்பலமும் பகல் கோயிலும்
வள்ளல் நல் நகர் வாய் மலிவுற்றவே.

#897
வௌவு நீரென்ன வாவியும் மாடு எலாம்
தெய்வம் நாறுவ தேம் கொள் செய்குன்றமும்
மௌவல் மண்டபமும் மணல் தாழ்வரும்
எவ்வ பாலும் இசைந்து உள என்பவே.

#898
கொற்றவன் கொடிக் கோயில் புறம்பணை
சுற்றி விட்டது சுற்றும் பெரும் படை
மற்றை மன்னர் எல்லாம் வனத்தின் புடை
முற்றி முன்னினர் முத்து அணி மாலையார்.

#899
கன்னி மூது எயில் சூழ் கடி காவினுள்
கன்னி தாதை கண் ஆர் நகர் இஞ்சியுள்
கன்னிமார் பலர் காக்கும் கடையது ஓர்
கன்னிமாநகர் கன்னிக்கு இயற்றினார்.

#900
மின்னின் ஆர்ந்த விமானத் தலத்திடைப்
பொன்_அனார் பலர் போற்ற இழிந்து தன்
மன்னன் ஆர் அருளால் மணி மாளிகைக்
கன்னிமாநகர் எய்தினள் கன்னியே.
**சடிமன்னனுடைய வரவு கேட்ட பயாபதி செயல்

#901
மற்று அவர் இருத்தலும் மருசி சென்று பின்
சுற்று நீர் வள வயல் சுரமைநாடு உடைக்
கொற்றவன் கழலடி தொழுது கூறலும்
வெற்றி வேலவன் ஒளி துளும்ப வீங்கினான்.
**அயலிலுள்ளார்க்கு இட்ட கட்டளை

#902
ஏர் அணி மணிக் கலம் அணிக யாரும் மென்
தார் அணி வள நகர் அறைக கோடணை
தோரணம் திசை-தொறும் சுடர நாட்டுக
பூரண பொன் குடம் பொலிய வைக்கவே.

#903
இரவலர் இரு நெதி கவர்க ஈண்டு இயல்
புரவலர் வருக எனப் போக தூதுவர்
திரு அலர் சினகரன் செல்வப் பொன் நகர்
விரவு அலர் மழையொடு விழவு செய்கவே.

#904
எரி மணிச் சுடர் அணி இலங்கு நங்கை-தன்
திரு மணிக் காவினுள் செல்லும் செய்கையால்
புரி மணிப் பொலம் குழைப் பொம்மல் வெம் முலைக்
குரு மணிக் கொம்பு_அனார் கோலம் செய்கவே.
**அடுத்து இருப்பது அடையாற்றுச் சூளாமணிப் பதிப்பில் கூறப்பட்டுள்ளது.

#904-1
மங்கல மண்ணு நீர் நமக்கு மாண்பின
பொங்கு ஒலிப் புடை மணிப் பூட்கைக் குஞ்சரம்
செங்கொளி பொன் பொடி எறிந்த செய்கைய
கொங்கு அலர் பெரும் படை கோலம் செய்கவே

#905
உழைக் கல மகளிரொடு உவந்து செல்வன
புழை_கைய இளம் பிடி புகுந்து பண்ணுக
தழல் புகை நவின்ற கைத் தானை வீரர் தம்
அழல் படையொடு புகுந்து அமைக காவலே.
**பயாபதி மருசிக்கு மரியாதை செய்தல்

#906
இன்னன உழையவர்க்கு அருளி ஏந்து தோள்
மன்னவன் மருசியை மருளக் கட்டுரைத்து
என்னொடும் பெயர்தி நும் பாடிக்கு என்று ஒரு
பொன் நகர் மாளிகை புகுக என்று ஏயினான்.
**மந்திரக் கிழவருடன் ஆலோசித்தல்

#907
வேண்டுப அவன் திறத்து அருளி வேந்தர்_கோன்
ஈண்டிய மந்திரக் கிழவர்க்கு என்னை யாம்
காண் தகு திறலவன் காணும் ஆறு என
ஆண்டகைக்கு அவர்களும் அறியச் செப்பினார்.

#908
விண் இயல் விஞ்சையர்க்கு இறைவன் வேந்தரால்
கண்ணிய பெரும் குலக் கடலுள் தோன்றினான்
நண்ணிய தொடர்ச்சியும் நமிக்-கண் நண்ணுமால்
எண்ணுவ அவன் திறத்து இறைவ இல்லையே.

#909
குலத்தினும் குணத்தினும் கொண்ட கோலமாம்
நலத்தினும் நின்னொடு நிகர்க்கும் நன்மையன்
மலைத்தலில் வயத்தினும் பெரியன் மல்லினும்
உலத்தினும் பெருகிய உருவத் தோளினான்.

#910
ஆதலால் அவன் திறத்து யாது செய்யினும்
ஏதம் ஆங்கு இல்லை கோல் இறைவ என்றனர்
கோது_இலாக் குணம் புரி குன்று_அனாற்கு ஒரு
நீதிநூல் கடலின் நின்று அனைய நீர்மையார்.
**பயாபதி தன் அரண்மனையை அடைதல்

#911
ஆங்கு அவர் மொழியக் கேட்டே அறிவினுக்கு அரசர் என்று
வாங்கு இரும் கடல் அம் தானை மன்னவன் மகிழ்ந்து மற்றைப்
பூம் குழை மகளிர் காக்கும் பொன் அணி வாயில் போகித்
தேம் கமழ் அலங்கல் மார்பன் திரு நகர் முற்றம் சேர்ந்தான்.
**மருசியை அனுப்ப அவன் செய்த ஏற்பாடுகள்

#912
அடு கடாம் ஆவி நாறும் அழி மதம் கருவி வீழத்
தொடு கடா வயிரத் தோட்டி உடையன தொடர்கள் ஊன்ற
விடு கொடா வியாளம் நிற்ப மெல்ல வன் பணிகள் செய்யும்
படு கடாக் களிறும் தேரும் புரவியும் பண்ணுக என்றான்.
**யானையின் வருகை

#913
பணித்த சொல்-அதனைக் கேட்டே பகை நிலைக் கந்தினோடும்
பிணித்த பொன் தொடர் கண் விட்டுப் பெயர்ந்த கால் நிகளம் நீக்கி
மணித் தொடர் மருங்கின் வீழ்த்து வரி புரிக் கச்சை வீக்கி
அணித் தகைப் பாகர் பண்ணிக் கொடி எடுத்து அருகு சேர்ந்தார்
**தேர்களின் வருகை

#914
செம்பொன் செய் கிடுகு கோத்துத் திகிரி-வாய்ப் புளகம் சேர்த்திப்
பைம்பொன் செய் பரவைத் தட்டில் பரு மணி பதித்த திண் தேர்
கம்பம் செய்து உலகம் எல்லாம் கை வளைக் கொள்வ போல
அம் பொன் செய் கொடுஞ்சி நெற்றி கொடி எடுத்து அணைந்த அன்றே.
**புரவிகள் வருகை

#915
முற்றத்தான் எரியும் செம்பொன் முகன் அணி கருவி சேர்த்திச்
சுற்றும் தாது அணிந்து காமர் சூழ் மணிக் கோவை சூழ்ந்து
மற்றுத் தாம் வகுக்கற்பால மங்கல மரபில் பண்ணிப்
பொன் தத்து ஆர்க் கவரி வேய்ந்து பொருகின்ற புரவி எல்லாம்.
**காலாட்கள் வருகை

#916
ஒட்டிய ஊழின் அன்றி உயிர் கொளல் ஒழிக என்று
சுட்டினர் மொழிப ஆயில் கூற்றமும் துளங்கும் நீரார்
கட்டிய கழலர் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்
மட்டு உயர் அலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார்.
**வரிசைகளுடன் மருசியை அனுப்புதல்

#917
அன்னணம் தானை பண்ணி அணைந்த பின் அமைச்சரோடு
மன்னவன் மருங்கில் நின்ற மருசியை வருக என்று
பொன் நுதல் வேழம் ஒன்று பொலம் கலம் புலம்ப ஏற்றி
முன்னுற நின்று காதல் முறுவலோடு அருளிச் செய்தான்.
**பயாபதி சித்திரதரனுக்கு இட்டகட்டளை

#918
தேம் கமழ் அலங்கல் மார்பன் சித்திரதரனைக் கூவிப்
பாங்கு அமை பஞ்சும் பட்டும் துகில்களும் பரப்பி மேலால்
வீங்கிய சுடரவாய மிடை மணிக் கலன்கள் விஞ்சை
நீங்க அரும் திறலினான்-தன் நெடு நகர் நிறைக்க என்றான்.

#919
பொன் அணிகலத்தின் குப்பை புரி மணிக் கோவைப் போர்வை
மன்னிய வயிரக் குன்றம் வலம்புரி மணியின் கோவை
பின்னிய பவழ வல்லிப் பிறங்கலோடு அனைய எல்லாம்
கொல் நவில் வேலினான்-தன் கோயில் முன் குவிக்க என்றான்.

#920
ஆண்டுற இரைந்து வேகித்து அழல்கின்ற மதுவின் தண்டோடு
ஈண்டி நின்று இன வண்டு ஆர்க்கும் இன் சுவை நறவின் சாதி
வேண்டுநர் வேண்டுமாறு விருந்து அயர்ந்து உயரும் வண்ணம்
தீண்ட அம் விஞ்சை வேந்தன் திரு நகர்ச் செறிக்க என்றான்.

#921
தேங்கனி குழவித் தீ நீர் செம் பழத் திரள் இன் கண்ணி
பாங்கு அமை பளிதச் சாதி பாசிலைத் தழையின் கற்றை
தீம் கழைக் கரும்பின் கட்டி திரள் நறைக் கடிகை இன்ன
தோம் கலந்திலாத சொல்லான் தொல் நகர்ச் சொரிக என்றான்.

#922
கண்ணியும் கமழும் சூட்டும் கற்றையாக் கட்டப்பட்ட
தண்ணிய மலரும் தாம மாலையும் சதங்கை-தம்மோடு
எண்ணிய வண்ண மாலை எழில் நகர் எல்லை எல்லாம்
விண் இயல் விமான வீதி வெறி கொள மிடைவி வேலோய்.

#923
குங்குமக் குழம்பு கொட்டிச் சந்தனத் தொளி கண்கூட்டி
அம் கலுழ் விரையின் சேற்றோடு அக நகர் அளறு செய்து
மங்குல் ஆய் விசும்பு மூட அகில் புகை மயங்க மாட்டிப்
பொங்கு பொன் சுண்ணம் வீசி மணவினை புனைவி என்றான்.
**பயாபதி தன் மக்களை வரும்படி ஏவுதல்

#924
அனையன அவனை ஏவி அரசிளங்குமரர்-தம்மைப்
புனை மலர்க் கண்ணி சூடிப் பொன் எழில் ஆரம் தாங்கி
நனை கவுள் வேழம் ஏறி நம்மொடு வருக என்றான்
கனை குரல் முரசம் ஆர்க்கும் கடி படைக் கால வேலான்.
**தன் பட்டத்து யானையை வருவித்தல்

#925
திங்களை இரண்டு கூறாச் செய்து முன் செறித்த போல
மங்கல வடிவின் வந்த வலன் உயர் வயிரக் கோட்டுச்
செம் களி விதிர்த்த போலும் செம் பொறிச் சிறு கண் வேழம்
வெம் களி வியாளம் வல்ல விறல்அது வருக என்றான்.
**பட்டத்து யானையின் வருணனை

#926
அருள் அறிந்து உழையர் ஓடி அரசுவா வருக என்ன
மருளி வண்டு உழலும் தாரை மழ களிறு-அதனை மேய்ப்பான்
இருள் இரும் குன்றம் ஏய்க்கும் இரும் பிணர் எருத்தம் ஏறி
வெருவரு மொழியில் தேறி மேல்முறைத் தொழிலன் ஆனான்.

#927
அரசுவா அதனோடு ஆடி இயல் அறிந்து அணைந்த பாகன்
புரைசை தான் நெகிழ்த்து மற்றோர் புது வடம் புரள வீக்கி
உரைசெய் கால் சுவடு நுங்கச் செறித்து ஒன்று புறத்தது ஆக்கி
நிரை செய் கால் நிகளம் விட்டு நிலத்தவர் ஏறுக என்றான்.

#928
பின் அவன் ஏறித் தூசப் பெரு வடம் பிடித்த பின்னைப்
பொன் அவிர் தொடர் கண்விட்டுப் புறத்துக் கால் புரோசை கோத்து
மன்னவன் அருளுமாறு மங்கலக் கோலம் செய்வான்
துன்ன அரும் கவை முள் கோலோர் சூழ்ந்து வந்து அணைக என்றான்.

#929
கரும்பொடு முடித்த காய் நெல் கதிர் அணிக் கவளக் கற்றை
இரும்பு உடை வயிரக் கோட்டின் இடையன பயிரி நீக்கிச்
சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையும் அகல வாரி
அரும்பு உடை அலங்கல் மார்பன் அரத்த நீர் எறிவித்தானே.

#930
குங்குமக் குழம்பு கொட்டிச் சந்தன வெள்ளை கொண்டு
மங்கல வயிரக் கோட்டு வலம்கொள வரைந்து மற்றுச்
சங்கினது உருவினாலும் வலம்புரிச் சவியினாலும்
அங்கு அதன் பாகத் தீரத்து அருகு எலாம் அணிவித்திட்டான்.

#931
பொன் திரள் கடிகை பூட்டிப் புரி மணி ஓடை சேர்த்தி
முற்றிய புளகச் சூழி முகம் புதைத்து இலங்க வீழ்த்துச்
சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர் நிலைப் பட்டம் சேர்த்திக்
கற்றை அம் கவரிக் கண்ணி கருண மூலத்து வைத்தான்.

#932
தார் அணி தயங்கச் சாத்தித் தவிசின் மேல் விரித்து மஞ்சில்
ஏர் அணி திரு_வில் ஏய்ப்ப இரு வடம் விலங்க வீக்கிச்
சீர் அணி மணிகள் வீழ்த்துச் செம்பொன் செய் சுண்ணம் சிந்திக்
கார் அணி மின்னின் தோன்றக் கதலிகை நடுவித்தானால்.
**பயாபதி யானையின்மேல் ஏறுதல்

#933
வேழம் ஆங்கு அணிந்த பின்னை வேந்தர் போற்று இசைப்ப ஏறிச்
சூழ் ஒளி ஆரம் மின்னச் சுடர்க் குழை திரு வில் வீச
ஏழையர் கவரி ஏந்த எரி கதிர் விரிவது ஒத்தான்
ஊழி நீர் உலகம் காக்கும் முழவுத் தோள் உருவத் தாரான்.

#934
ஒத்து நின்று உலகம் எல்லாம் ஒருங்குடன் குளிர ஓம்பி
வித்தகர் புகழும் ஏர் ஆர் வெள்ளி வெண் குடை ஒன்று ஓங்கி
முத்த வெண் மாலை நான்று முடி மிசை நிழற்ற மூரி
மத்த மால் களிறு நுந்தி வள நகர் மருளச் சென்றான்.
**பயாபதி சடிமன்னனைச் சந்திக்கப்புறப்பட்ட வருணனை

#935
அரசு_இறை அரசரொடு எழுதலும் அதிர்தரு
முரசு எறி இமிழ் இசை முழவொடு கழுமின
திரை செறி நெடு வரை கடை-தொறு திசைதிசை
கரை செறி கடல் ஒலி கடுகியது எனவே.

#936
துளைபடு குழல் இசை துடியொடு சிறுபறை
கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர
வளையொடு வயிர் இசை மருவின மழை என
வளைபடு மணி அரவு அறிவு அயர்வுறவே.

#937
சொரிவன மலர் மழை சுழல்வன எழு புகை
இரிவன மதுகரம் இருள்வன திசைமுகம்
எரிவன சுடர் மணி எழுவன கதலிகை
தெரிவன அரியன தெருவொடு திசையே.

#938
கொடியொடு குடை இடை மிடைவன இருள்செய
முடியொடு சுடர் குழை முளை வெயில் ஒளிசெய
அடியொடு புனை கழல் அரசு_இறை படை எழ
இடையிடை இரவொடு பகல் இசைவனவே.

#939
புரவிய குரமுகம் இடு-தொறு பொடி எழு
அருவி கொள் மத மழை பொழி-தொறும் அளறு எழும்
மருவிய மனிதரும் மனம் நனி அயர்வுறு
தெருவுகள் படுவது சிலர் இடை தெரிவார்.

#940
செரு இயல் களிறுகள் செவி புடை அரவமும்
உரு இயல் இவுளிகள் ஒலி கலி அரவமும்
கருவி கொள் வயவர்கள் கழல் நரல் அரவமும்
விரவிய செவி பிற விளிகொளல் இலவே.

#941
வளையவர் மனம் நிறை அழிதரு வடிவு உடை
இளையவர் இருபுறவுரைகளின் இடையிடை
திளையொடு நகை நனி சில பல கனிவன
விளைவு_உடையவர்களும் விழைவுறு தகவே.

#942
குயிலுவர் ஒலியொடு குடமுழவு அதிர்வொடு
மயில் இன மகளிர்-தம் அவிநய மட நடை
அயில் இயல் அரசர்-தம் அருகு அவை பெருகலின்
இயலிய வள நகர் இடம் இடம் இலவே.
**சடிமன்னன் எதிர்கொள வருதல்

#943
சுரமையர் அதிபதி வரும் என மருசி சென்று
அருமை கொள் புகழற்கு அறைதலின் எதிர்கொள
வரம் மிகு நெடு வரை மணி முடி நெடியவன்
உரம் மிகு படை எழு உரை நனி அரிதே.

#944
கரு வரை வருவன என உள களிறுகள்
பெரு வரை அருவிகள் என உள பெயர் கொடி
அரு வரை அடு புலி என உளர் இளையவர்
பரு வரை இறை புடை எழுவது ஓர் படையே.
**இருபடைகளின் வருணனை

#945
நிலம்_மிசையவர் படை நிலம் நெளிவுற வரும்
மலை_மிசையவர் படை மலை நெரிவுற வரும்
அலை திரை ஒலி கடல் அவை புடைபெயர்தரும்
நிலை பெரிது அரிது இபம் நெடு வரை நிரையே.

#946
முகிலிடை புகும் முறை புரவிகள் எனின் அவை
முகிலிடை புகுவது ஒர் முறைமையை உடையன
அகில் இடு நுழை புகை அவை கமழ்வன எனின்
அகில் இடு நுழை புகை அவர் புகழ் அதுவே.

#947
வன மலர் பொழிவன மழை முகில் மழை முகில்
இனம் மலர் இடையிடை விரை மழை சொரிவன
கனம் மலி கழல் மணி வரையவன் உழையவர்
இனம் மலி அமரரின் இழிவநர் சிறிதே.

#948
அலர் மிசை இளையவர் அடி இட அடி இடம்
இலை மிசை இயல்பவர் இயல்புகள் எழில் நலம்
நிலம்_மிசையவரொடு நிலம் நடை படர்க என
மலை_மிசையவர் இறை அருளிய வகையே.

#949
சங்கு போல் ஒளியவன் தாதை-தன் படை
கங்கை போல் படர்ந்தது கலக்கும் காதலால்
இங்கு நீர் யமுனையின் இழிவது ஒத்தது
மங்குல் சேர் மணி வரை மன்னன் தானையே.

#950
மா இயல் கடல் படை மயங்கி வானிடைப்
பூ இயல் இணரொடு கவரி பொங்கலால்
பாவிய பனித் திரைப் பரவை பாற்கடல்
மேவிய விசும்பிடை விரிந்தது ஒத்ததே.

#951
கழுமிய முகிலொடு களிறு கால் மிடைந்து
ஒழுகிய அருவி நீர் உகுக்கும் ஆதலால்
மழை முகில் மழ களிறு என்னும் வேற்றுமை
உழையவர் உழையவர்க்கு உணர்த்தல் வேண்டுமே.

#952
புண்ணிய மணி நிரை பரந்து பூ உதிர்ந்து
எண் இயல் கொடி மிடைந்து இருண்டு பாங்கு எலாம்
கண் இயல் கவரி மாக் கலந்து கானகம்
மண் இயல் பரவையாய் வருவது ஒக்குமே.

#953
நந்திய சுடர் மணி நாக மீமிசைப்
பைம் துகில் கதலிகை பரந்து தோன்றுவ
நந்திய சுடர் மணி நாக மீமிசைப்
பைம் துகில் கதலி கை பரந்த போலுமே.

#954
கணம் கெழு கவரிகள் கலந்து காழ் அகில்
அணங்கு இவர் நாவி கால் அளைந்து நாறலால்
இணங்கிய கடல் படைப் பரவை இ வழி
மணம் கமழ் இமகிரி வருவது ஒக்குமே.

#955
காமரு பூம் குழைக் காம வல்லிகள்
தாம் அரி_அனையவர் தயங்கி உண்மையால்
காமரு பூம் குழைக் காமவல்லிகள்
தம் அரி அனையது அத் தானை வண்ணமே.

#956
மணி மருங்கு உடையன வயிரக் கோட்டின
அணி மருங்கு அருவிய வரைகள் அன்னவால்
மணி மருங்கு உடையன வயிரக் கோட்டின
அணி மருங்கு அருவிய அரச வேழமே.

#957
மஞ்சு இவர் மணி வரை மகளிர் சீறடி
விஞ்சை அம் தொழில் இயல் விடுத்த மெல் இயல்
பஞ்சின் மேல் மிதிப்பினும் பதைத்துப் பையவே
அஞ்சி மேல் இவர்வதற்கு ஆர்வம் செய்யுமே.
**மன்னர் இருவரும் சந்தித்தல்

#958
மணி வரை அரசனும் மகர மால் கடல்
அணி வரை நிலம் உடை ஆணை வேந்தனும்
கணி வரை பொழுதினால் கண்ணுற்றார் அரோ
பணி வரை இலாத் தொழில் பரவைத் தானையார்.
**வரவேற்பு

#959
அம் மலர் அலங்கலான் தடக் கை என்னும் அ
மொய் மலர்த் தாமரை முகிழ்க்கும் எல்லையுள்
மை மலர் நெடு வரை மன்னன் மற்றவன்
செம் மலர் அங்கையில் செறியப் புல்லினான்.

#960
வலம்புரி_வண்ணனும் மகர மால் கடல்
நலம் புரி நல் ஒளி நம்பி-தானும் அ
உலம் புரி தோளினான் ஒளி கொள் பைம் கழல்
கலம் புரி தடக் கையால் கதழக் கூப்பினார்.

#961
காமரு கவின் ஒளிக் காளைமார்களைத்
தாமரைச் செம் கணால் தழுவிப் பின் அவர்
பூ மரு பொன் வரை அகலம் புல்லினான்
சாமரை நல் நுதல் தடக் கை யானையான்.

#962
எழில் விரி நெடு வரை இறைவன்-தன் மகன்
அழல் விரி சுடர் ஒளி அருக்ககீர்த்தியும்
பொழில் அணி போதனத்து இறைவன் பொன் அணிக்
கழலவன் அடி இணை கையில் கூப்பினான்.

#963
ஆங்கு அவன் அழகு கண் பருக மற்றவன்
ஆங்கு எழு அனைய தோள் தழுவித் தன்னொடும்
ஓங்கிய மழ களிற்று உம்பர் ஏற்றினான்
வீங்கிய கனை கழல் வேந்தர்_வேந்தனே.

#964
மன்னிய விஞ்சை வேந்தன் தம்பியும் மருகன்-தானும்
துன்னிய சுரமை நாடன் தொடு கழல் தொழுதலோடும்
பின்னிய காதல் வெள்ளம் பெருகிய விரிவிற்று ஆகிப்
பொன் இயல் கழலினாற்கு ஓர் பொங்கு ஒளி புணர்ந்தது அன்றே.

#965
வெம் சுடர் ஆழி ஆளும் விறலவற்கு இளைய_தாதை
மஞ்சு உடை விஞ்சை நாடன் மலர் அடி வணங்கி மற்ற
வஞ்சம்_இல் புகழினான்-தன் மனத்தையும் வணங்கியிட்டான்
செம் சுடர் இலங்கு பூணான் திறல் சிறீபாலன் என்பான்.

#966
ஆய்ந்த சீர் அரசர் ஆங்குக் கலந்த பின் அமுத வெள்ளம்
பாய்ந்தது பரவை நல் நீர்ப் பாற்கடல் பரந்ததே போல்
ஏந்திய காதல் கூர எழில் நகர் பெயர்ந்து புக்கார்
காந்திய கனகப் பைம் பூண் கரு வரை அனைய தோளார்.

#967
எழில் கொள் கந்து அனைய திண் தோள் இளையரோடு அரசர் ஈண்டிப்
பொழிலகம் தழீஇய சோலைப் பொன் நகர்க் கோயில் புக்குத்
தழு மலர்க் கோதை நல்லார் பலாண்டு இசை ததும்ப வாழ்த்தச்
செழு மலர்த் திரள்கள் தாழும் சித்திரகூடம் சேர்ந்தார்.
**இருவேந்தரும் குமரரோடு ஆசனத்தில் அமர்தல்

#968
வெள் ஒளி எயிற்றுப் பேழ் வாய் விரி உளை அரச சீயம்
ஒள் ஒளி தவழ வேந்தும் ஒளி மணி அணையின் மேலோர்
கள் ஒளி கமழும் கோதை மகளிர்கள் கவரி வீசத்
தெள் ஒளிக் குமரரோடும் இருந்தனர் திருந்து வேலோர்.
**சடிமன்னன் வந்த காரியத்தைப் பயாபதி வினவல்

#969
காமரு மகளிர் வீசும் கன மணிப் பவழத் திண் கால்
சாமரை பயந்த தென்றல் தகை முடித் தாது சிந்தப்
பூ மரு பொறி வண்டு ஆர்ப்பப் பொலிந்து அவர் இருந்த போழ்தின்
ஏமரு கடல் அம் தானை இரு நிலக் கிழவன் சொன்னான்.
**வரவேற்பு

#970
விண்ணிடை இழிந்து வந்த விண்ணவர் கிழவன் ஒப்பாய்
மண்ணிடை என்னை இங்கு ஓர் பொருள் என மதித்து வந்தது
எண்ணிடை உணரும் மாந்தர்க்கு இடை தெரி அரியது ஒன்றால்
கண்ணிடை உமிழும் செம் தீக் கடாக் களிற்று உழவ என்றான்.
**சடிமன்னன் மறுமொழி

#971
ஏங்கு நீர் வளாகம் காக்கும் இக்குவா மன்னர்_ஏறே
தூங்கு நீர் மருத வேலிச் சுரமைநாடு உடைய தோன்றால்
ஏங்கு நீர் அமிர்தின் தீர்த்தம் சென்றனர் தெளித்தல் அன்றே.
ஓங்கு நீர் உலகம்-தன்னுள் உயர்ந்தவர்க்கு உரியது என்றான்.

#972
வருதற்கு முதலும் முன்பே மருசி வந்து உணர்த்தக் கேட்டாய்
பொருதல்-கண் அரிய வேலோய் புராணநூல் புலவர் யாரும்
கருதல்-கண் அரிய கண்ணி கடல்_வண்ணற்கு உரியள் என்னத்
தருதற்கு மகிழ்ந்து வந்தேன் தாழம் ஈங்கு ஒழிக என்றான்.
**விசயதிவிட்டர் அருக்ககீர்த்தியுடன் புறப்படல்

#973
அன்னணம் அரசர் பேசி இருந்த பின் அருக்கனோடும்
பொன் அணி புரிசை வேலிப் புது நகர் புகுக என்று
மன்னவ குமரர்-தம்மை மணி வரை அரசன் ஏவப்
பின் அவர் வேழம் ஏறிப் பெயர்ந்தனர் போதுகின்றார்.
**சயம்பவை திவிட்டனைக் காணல்

#974
ஆயிடை அரச சீயம்_அனையவர் பெயரும் போழ்தின்
வேய் உடை அருவிச் சாரல் வெள்ளி வேய் விலங்கல் நாடன்
தீ உடை இலங்கு வேலான் திரு_மகள் அமிர்து இன் சாயல்
வீ உடை அலங்கல் ஞான்ற மிடை மணி விமானம் சேர்ந்தாள்.

#975
பொலம் கலம் புலம்ப ஆயம் புடை நின்று போற்றுக் கூவ
அலங்கலும் குழலும் தாழ அணி ஞிமிறு அரவம்செய்ய
இலங்கல் அம் கனக மாடத்து எழு நிலை ஏறலுற்றாள்
விலங்கலின் குவடு சேரும் மெல் இயல் தோகை_போல்வாள்.
**அமிர்தப் பிரபை

#976
ஆயத்துள் அலர் கொம்பு_அன்னாள் அமிர்தமாபிரபை என்ற
வேய் ஒத்த பணை மென் தோளி மிடை மணிக் கபாடம் நீக்கி
வாயில்-கண் வருக நங்கை வள நகர் காண்க என்று
கோயில்-கண் அருகு செல்லும் குமரரைக் காட்டினாளே.

#977
விண் அதிர்த்து அனைய ஆகித் திசைமுகம் சிலம்ப வீங்கிக்
கண் அதிர் முரசும் சங்கும் கடல் பெயர் முழக்கமாக
மண் அதிர்கொள்ளச் செல்லும் மைந்தர்கள் யார்-கொல் என்னும்
எண் அதிர் மனத்தினாட்குத் தோழி மற்று இதனைச் சொன்னாள்.

#978
முன்னவன் நம்பி வெய்யோன்_பெயரவன் முழவுத் தோளான்
பின்னவன் சுரமை வேந்தன் பெருமகன் அவற்குத் தம்பி
கல் நவில் வயிரத் தோளான் கரு முகில் உருவக் காளை
இன்னவன் என்னலோடும் இலங்கு ஒளி முறுவல் கொண்டாள்.
**சயம்பிரபை

#979
நீல மா மணிக் குன்று ஏய்ப்ப நிழல் எழுந்து இலங்கும் மேனிக்
கோல வாய் அரச காளை குங்குமக் குவவுத் தோளான்
மேல் அவாம் நெடும் கண் ஓட மீட்டு அவை விலக்க மாட்டாள்
மாலை வாய்க் குழலி சால மம்மர் கொள் மனத்தள் ஆனாள்.

#980
தாமரை அனைய கண்ணும் தடக் கையும் பவழ வாயும்
பூ மரு பூவைக் கண்ணிப் புது மலர் ஒளியும் காட்டித்
தூ மரு நீலம் என்னும் மணி துணர்ந்து அனைய குஞ்சிக்
காமரு காளை கன்னி கண்களைச் சிறைகொண்டிட்டான்.

#981
சிறை என்பது இல்லைச் செவ்வே செம் புனல் சிறக்கும் ஆயின்
நிறை என்பது இல்லைக் காமம் நேர் நின்று பெருகும் ஆயின்
நிறை நின்றது உளது என்பார் சென்று அரும் பெறல் இவளது உள்ளம்
நறை நின்று கமழும் குஞ்சி நம்பி-பால் பட்டது அன்றே.

#982
கோள் நின்ற மதியம் போலக் குழை முகம் சுடரக் கோட்டித்
தாள் நின்ற குவளைப் போதில் தாது அகம் குழைய மோந்து
வாள் நின்ற நெடும் கண் காளை வடிவினுக்கு இவர மற்றை
நாண் நின்று விலக்க நங்கை நடுவு நின்று உருகுகின்றாள்.

#983
அவ்வழி அமுதம் பூத்த அரும் கலக் கொம்பைத் தம் கோன்
இவ்வழி வருக என்றது அவள் தமர் இசைப்பக் கேட்டு
மை வழி நெடும்_கணாளும் மனம் புக்க குரிசில்-தன்னைச்
செவ்வழி மழலை நாணே எழினியா மறைத்துச் சென்றாள்.
**சடிமன்னன் சயம்பவையைப் பயாபதிக்குக் காட்டலும் அவன் பாராட்டலும்

#984
ஆயிரம் கண்_இலாதார்க்கு அழகு காண்பு அரிய நங்கை
வேய் இரும் பணை மென் தோளார் மெல் அடி பரவச் சென்று
மா இரும் செல்வத் தாதை மலர் அடி வணங்கி நின்றாள்
சேய் இரும் குன்றம் ஈன்ற செழும் மணிச் சலாகை போல்வாள்.

#985
மங்கையை வலத்துக் கொண்டு மாலையும் குழலும் தோடும்
அங்கையால் திருத்தி மாமன் அடிகளைப் பணிக என்று
செங்கயல்_கண்ணி தாதை செவ் விரல் குவியப் பற்றிப்
பங்கயப் பழன நாடன் பாத மூலத்து வைத்தான்.

#986
மருமகள் வணங்க முன்னே வலப் புடைக் குறங்கின் ஏற்றிக்
கருமை கொள் குவளை_கண்ணி கழி நலக் கதிர்ப்பு நோக்கித்
திரு_மகள் இவளைச் சேரும் செய் தவம் உடைய காளை
அருமை கொள் திகிரி ஆள்தற்கு ஐயம் ஒன்று இல்லை என்றான்.

#987
அரும் கல மகளிர்க்கு ஏற்ற அழகு எலாம் தொகுத்து மற்றோர்
இரும் கலி உலகம் காணப் படைத்தவன் இயற்றினான்-கொல்
ஒருங்கு அலர்ந்து உலகின் மிக்க மகளிரது உருவம் எல்லாம்
பெரும் கல அல்குல்-தன்பால் புகுந்து-கொல் பெயர்ந்தது என்றான்.

#988
அரும் தவம் உடையனே யான் அன்று எனில் அணங்கு போலும்
பெரும் தகை நங்கை-தன்னைப் பெற்றவன் தாதை என்னும்
திருந்திய மொழியும் தெய்வச் செல்வமும் தெய்வம் அன்னீர்
பொருந்திய தொடர்பும் எய்தப் புணருமோ புவியின் என்றான்.
**சயம்பவை தன் இருப்பிடம் சேறல

#989
ஆங்கு அமர்ந்து அரசர் பேசி அலர் மிசை அணங்கு_அன்னாளைப்
பூம் கமழ் சோலை வேலிப் பொன் நகர் புகுக என்னத்
தேம் கமழ் குழலினாரும் தாயரும் செவ்வி காப்ப
வீங்கு ஒளி விமானத்து உச்சி வெண் நிலா முற்றம் சேர்ந்தாள்.
**சயம்பவையின் காதல் நோய்

#990
மது நனைந்து அலர்ந்த தாரான் திறத்தை யான் மறப்பன் என்னின்
விதி நனி துரப்ப மீட்டும் நினைப்பதே விளைக்கும் உள்ளம்
இது நனி அறியுமோ இ உலகம் என்று இதயத்தோடும்
புது நனை விரிந்த கோதைப் பொன்_அனாள் புலம்பு கொண்டாள்.

#991
காதலார்-திறத்துக் காதல் ஆக்கிய காதலாரை
ஏதிலார் போல நோக்கின் இரு மடங்காக எய்தும்
போது உலாம் சிலையினான்-தன் பொரு கணைக்கு இலக்கம் செய்யும்
ஆதலால் காம நோய்க்கு ஓர் அரு மருந்து இல்லை அன்றே.

#992
தேம் மிடை கானல் வேலிச் செழு மணல் குவாலும் குன்றும்
பூ மிடை தடமும் காவும் புக்கவர்க்கு அரணம் ஆகா
தாம் உடை மனமும் கண்ணும் நிறைவும் தம் பால ஆகா
காம் உடை மனத்தினார்கட்கு யார் உளர் களைகண் ஆவார்.
**திவிட்டனைச் சேர்ந்தோர் சயம்பவையைக் காணவருதல்

#993
அனையவள் அரச கன்னி ஆகிய பொழுதின் இப்பால்
புனை மலர் அலங்கல் மார்பின் பூமி அம் கிழவன் தேவி
வன மலர் உருவக் கண்ணி மணி_வண்ணன் மார்பு தோயும்
கன மணிப் பூணினாளைக் காண்க என விடுக்கப்பட்டார்.

#994
மதுகரி வயந்தசேனை என இவர் ஆதியாகப்
புது மலர்க் கொடியும் பூவும் துணர்களும் புணர்ந்த பேரார்
கதிர் அன கலங்கள் தாங்கிக் காப்பு மங்கலங்கள் ஏந்தி
எதிர்தரும் இளமையார் ஓராயிரத்தெண்மர் சூழ்ந்தார்.

#995
மா தவக் குலத்து_உளார்கள் மாதவசேனை உள்ளிட்டு
ஓதிய பெயரின் மிக்கார் உலகு அறி கலையின் வல்லார்
கோதையும் குழையும் தோடும் குளிர் முத்த வடமும் தாங்கிப்
போது இவர் குழலி தாதை பொன் நகர் முன்னினாரே

#996
நல்_நுதலவரும் நம்பி தாயரும் நடையில் தூய
பொன் நுதல் பிடியும் தேரும் வையமும் இழிந்து புக்கு
மன்னனை வணங்கி அன்னோன் பணி கொண்டு மடந்தை கோயில்
இன் இசை மகளிர் முன் சென்று எதிர்கொள எய்தினாரே.

#997
பொன் இயல் அமளி மேலாள் பூ_அணை மருங்கு தீண்டக்
கன்னியர் கவரிக் கற்றை கை வலன் அசைப்பக் காய் பொன்
இன் இசைக் குழை வில் வீச இனிதின் அங்கு இருந்த நங்கை
துன்னிய மகளிர்-தம்மைத் தமர் தொழுது உணர்த்தக் கண்டாள்.
**சயம்பவையின் புன்னகை

#998
வலம்கொண்டு தொழுது வாழ்த்தி மற்றவர் அடைந்த போதின்
உலம் கொண்ட வயிரத் தோளான் உழைக்கல மகளிர் என்று
நலம்கொண்டு ஓர் ஆர்வம் கூர நகை முகம் முறுவல் தோன்றிப்
புலம் கொண்டது அதனைக் காப்பான் பூ ஒன்று நெரித்து மோந்தாள்.
**கண்கொள்ளாக்காட்சி

#999
விண் விளக்குறுக்கும் திங்கள் சுடர் நுதல் விளக்கினாலும்
பெண் விளக்குறுக்கும் மேனி பெருகிய ஒளியினாலும்
பண் விளக்குறுக்கும் இன் சொல் பாவை அப் பாவைமாரைக்
கண் விளக்குறுக்குமாற்றால் காண்டலுக்கு அரியள் ஆனாள்.

#1000
செம் சிலம்பு ஒலிக்கும் செல்வச் சீறடித் தெய்வப் பாவை
பஞ்சு இலங்கு அணையின் மேலாள் பரந்து ஒளி திரு_வில் வீச
மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை நுடங்கும் மின் போல்
அம் சிலம்பு அடியினார்-தம் அறிவினை அயர்வித்திட்டாள்.
**மாதவசேனை சயம்பவையின் உருவத்தைத் தீட்டல்

#1001
மற்று அவர் காணும் போழ்தின் மாதவசேனை என்பாள்
சுற்றிய பளிங்கில் சோதிச் சுவர் மிசை எரித்துத் தோன்ற
இற்று இவள் உருவம் என்றாங்கு இதயத்துள் எழுதி வைத்துப்
பிற்றை ஓர் பலகை-தன் மேல் பெய்_வளை எழுதலுற்றாள்.
**மாதவ சேனையின் கூற்று

#1002
பண்களை மருட்டும் இன் சொல் பாவையைப் பருகலுற்ற
கண்களை மருள நீர் உம் கண்கள் என் கண்களாகப்
பெண்களை மருட்டும் சாயல் பேதையைக் காண்-மின் என்று
மண்களை மருட்டும் சீர் நும் மாமியார் அடிகள் சொன்னார்.

#1003
ஆதலால் அவர்க்குச் சொல்லும் மாற்றம் ஒன்று அருளிச் செய்-மின்
மாது உலாம் சாயல் என்ன மாதவசேனை என்பாள்
ஏதம் ஆங்கு இல்லை அன்றே எங்கள் முன் மொழிய என்றாள்
கோது_இலாக் குணக் கொம்பு_அன்னாள் குறு நகை முறுவல் கொண்டாள்.
**அமிர்தமா பிரபையின் கூற்று

#1004
அங்கு அவள் குறிப்பு நோக்கி அமுதமாபிரபை என்னும்
மங்கலத் தோழி கூறும் மாமியார் அடிகள்-தம்மை
எங்களின் செய்கையதாக இணை அடி பணி-மின் என்றாள்
செம் கனி கனிந்த செவ்வாய்ச் சிறு நுதல் பெரிய_கண்ணாள்.
**மாதவசேனை திரும்புதல்

#1005
ஆங்கு அவள் மொழிந்த போழ்தின் அணங்கினை வணங்கி மற்று அத்
தீம் கனி அமிர்தம் அன்ன திரு மொழிப் பண்ணிகாரம்
வாங்கு நீர் உலகம் காக்கும் மன்னவன் பட்டத் தேவி
ஓங்கு இரும் கற்பினாளுக்கு உய்ப்பள் என்று உணர்த்திப் போந்தாள்.

#1006
பளிங்கு இயல் பலகை-தன் மேல் பாவையது உருவம் தான் முன்
தெளிந்தவாறு எழுதிக் கொண்டு செம் துகில் உறையின் மூடி
வளம் தரு கோயில் முன்னி மணி_வண்ணன் பயந்த தேவி
அளந்து அறிவு அரிய கற்பின் அமிர்து_அனாள் அருகு சேர்ந்தாள்.
**மாதவசேனை தான் வரைந்த ஓவியத்தைக் காட்டலும் திவிட்டன்தாயின் மகிழ்ச்சியும்

#1007
மை அகத்து அலர்ந்த வாள் கண் மாதவசேனை சென்று
வையகத்து அரசன் தேவி மலர் அடி வணங்கலோடும்
மெய் அகத்து உவகை கூர விரும்பித் தன் அருகு கூவிக்
கையகத்தது என் என்னக் கன்னியது உருவம் என்றாள்.

#1008
அணி கலம் பரிந்து நங்கை அணி மருள் உருவம் தந்த
மணி மருள் முறுவல் செவ்வாய் மாதவசேனைக்கு ஈந்து
பணிவரும் பலகை-தன் மேல் பாவையைக் காண்டும் என்றாள்
துணிவரும் பவழத் துண்டம் துடிக்கின்றது அனைய வாயாள்.

#1009
மணி தெளித்து அமைக்கப்பட்ட வண்ணமே வண்ணம் ஆகத்
துணிய முன் கலந்து செய்த துகிலிகைத் தொழில்கள் நோக்கி
அணியினது ஒளிகளோ இ அணங்கினது உருவமோ இக்
கணி நலம் கருதலாகாக் கண் கவர் சோதி என்றாள்.

#1010
பழுது இயல் இலாத பாவை உருவம் ஓர் படியினாலும்
எழுதுதற்கு அரிது யார்க்கும் இலங்கு ஒளி உருவ மேனி
மொழிதலுக்கு அரிதால் அத்தை முருகு வேய் குழலி மற்று உன்
தொழு தகை அருளின் அன்றே துணிந்து யான் எழுதிற்று என்றாள்.
**சயம்பவையின் குறிப்பை மாதவசேனை தெரிவிக்கத் திவிட்டன் தாய் மகிழ்தல்

#1011
அல்லதும் மடந்தை தோழியவளது முகத்தினால் ஓர்
சில் அணி மழலைச் செவ்வாய்த் திரு மொழி பிறந்தது உண்டு
வல்லி தன் மொழி போய் நீர் எம் மாமியார் அடிகட்கு எம் வாய்
எல்லையில் கிழமை-தன்னால் இறைஞ்சுக என்பது என்றாள்.

#1012
என்று அவள் மொழிந்த போழ்தில் இலங்கு ஒளிப் பலகை-தன் மேல்
மின் தவழ் மேனியாளை மென் பணைத் தோளில் புல்லி
இன்று இனிது ஆகும் அன்றே இரும் தவப் பயங்கள் நம்-பால்
ஒன்றின விளைந்த என்று ஆங்கு ஒளியினால் புதியள் ஆனாள்.
**திவிட்டன் தாய் அவ்வோவியத்தைத் தன்மகனுக்குக் காட்டும்படி மாதவசேனையை
** ஏவலும் அவள் செயலும்

#1013
போது அவிழ் அலரி நாறும் புரி குழல் உருவப் பாவை
சோதி சூழ் வடிவு நம்பி சுடர் மணி_வண்ணன் காண
மாதவசேனை காட்ட வல்லையோ என்ன ஐயற்கு
ஓதுவது உணரின் அன்றே அடிகள் யாம் உருவம் என்றாள்.

#1014
மற்று அவள் தொழுது போகி மணி_வண்ணன் மகிழ்ந்த கோயில்
சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர் மணி வாயில் நண்ணி
இற்றென இசைத்துப் புக்கு ஆங்கு இளையவன் கழல் கை கூப்ப
எற்று நீ வந்தது என்றாற்கு இது எனா எடுத்துச் சொன்னாள்.

#1015
அரும் கலம் உலகின் மிக்க அரசர்க்கே உரிய அன்றிப்
பெரும் கலம் உடையரேனும் பிறர்க்கு அவை பேணல் ஆகா
இரும் கலி முழவுத் தோளாய் எரி மணிப் பலகை மேல் ஓர்
நெருங்கு ஒளி உருவம் கொண்டு நின்னை யான் நினைந்து வந்தேன்.
**ஓவியத்தைக் கண்ணுற்ற திவிட்டன் செயல்

#1016
அப்படித்தாயின் காண்பாம் என்றனன் அரச நம்பி
மைப்பு உடை நெடும்_கணாளும் மருங்கு நின்றவரை நீக்கிக்
கைப் புடைப் பலகை மேலால் கன்னியது உருவம் காட்ட
மெய்ப் புடை தெரியமாட்டான் விருந்து கொள் மனத்தன் ஆனான்.
**திவிட்டன் வினாவும் மாதவ சேனையின் மறுமொழியும்

#1017
வானவர் மகள்-கொல் விஞ்சை மாது-கொல் மண்_உளாள்-கொல்
தேன் இவர் குழலி மற்று இத் திரு நுதல் மடந்தை என்ன
மான் இவர் நோக்கி அன்னோர் மகள் அல்லள் மற்று நின்ற
ஊன் இவர் அலங்கல் வேலோய் உய்த்து உணர்ந்து அருளுக என்றாள்.
**திவிட்டன் சயம்பவை என அறிதல்

#1018
மண் மிசை மகளிர் இன்ன வடிவு_உடையவர்கள் இல்லை
விண் மிசை மடந்தை அல்லளாய்விடின் விஞ்சை வேந்தன்
கண் மிசை நவிலும் காதல் கன்னியது உருவம் ஆம் என்று
எண் மிசை இவரும் போழ்தின் இது என அவளும் சொன்னாள்.
**திவிட்டன் காதல் நோயுற்றமை

#1019
கன்னியது உருவம் காளை காண்டலும் கேடு_இல் காமன்
பொன் இயல் கழலன் தாரன் பூட்டிய சிலையன் ஆகி
மன்னிய வில் கை நோக்கி மலர் அணி கணையும் நோக்கித்
துன்னிய பொழுது நோக்கிச் சுடு சரம் தொடுக்கலுற்றான்.

#1020
மண் இயல் வளாகம் எல்லாம் மகிழ்ந்து உடன் வணங்கும் போழ்தும்
உள் நனி மகிழ்தல் செல்லா ஒளி உடை உருவக் காளை
கண் இயல் காதலாள்-தன் கண்ணிய உருவம் கண்டே
வெண்ணெயின் குன்றம் தீயால் வெதும்புகின்றதனோடு ஒத்தான்.

#1021
மாகத்து மதியம் அன்ன வாள் நுதல் மடந்தை-தன்னை
ஆகத்துள் அடக்கிப் பின்னும் அணி நுதல் அழகு நோக்கி
நாகத்தை நடுக்கும் அல்குல் நங்கை-தன் திறத்துக் காம
வேகத்தை மெல்லமெல்ல வில்_வலான் பெருக்கியிட்டான்.

#1022
குழலை யான் திருத்திக் கோதை சூட்டுவன் குறிப்பு உண்டாயின்
மழலை வாய் திறந்து ஓர் மாற்றம் அருளுக மடந்தை என்னும்
நிழல் அவாம் பகழி போலும் நெடும் கண் நோக்கு என்னும் வெய்ய
அழலினால் அளியன் ஆவி அடுவதோ அழகு இது என்னும்.

#1023
சீறடிப் பரடு தோயும் சிலம்பு இணை திருந்தவைப்பன்
வீறு உடை நங்கை என்றன் கவான் மிசை இருத்தி என்னும்
சேறு உடைக் கோதை மேலால் சிறந்து வார் கூந்தல் கையால்
வேறிடத்து உருவல் செய்ய விரும்பிய மனத்தன் ஆனான்.

#1024
அம் துகில் அசைத்தது ஓர் கை அவிழ்ந்து அசைகின்றது என்னும்
பைம் தளிர் மேனி-தன் மேல் பல் மணிக் கலங்கள் தீண்டும்
செம் தளிர் புரையும் மேனிச் சே_இழை திறத்தில் காம
வெம் தழல் கனல மூட்டி வில்_வலான் மெலியலுற்றான்.
**சூரியாத்தமன வருணனை

#1025
வாளை ஆம் நெடும் கண் நல்லாள் மணவினை தொடங்கும் காலம்
நாளை யான் நமர்களோடு சூழ்ந்து வந்து அறிவல் என்று
காளை-பால் பட்டு வெய்யோன் குட திசைக் கன பொன் குன்றில்
சூளி வாய் அருவி மாலைச் சுடர் முடிச் சென்னி சேர்ந்தான்.

#1026
விண் இயல் உருவ வீதி மேல்-நின்றும் இழிந்து வெய்யோன்
கண் இயல் விலங்கல் நெற்றி கதிர் என்னும் கையின் ஊன்றி
மண் இயல் மரத்தின் சாகை நுதி பிடித்து அவையும் விட்டுப்
பண் இயல் பிறிது ஒன்று ஆகிப் பையவே மறைந்து போனான்.

#1027
வெய்யவன் என்னும் செம் தீச் சுடரினால் வெதும்பப்பட்டு
மை ஒளி பரந்த போன்று கருகின திசைகள் மற்று
மொய் அழல் மேல் அவிந்த தழல் மீள மூள்வதே போல்
செய்யது ஓர் உருவம் மேல்-பால் திசைமுகம் சிறந்தது அன்றே.
**மாலைக்கால வருணனை

#1028
கள் உலாம் கழனி நீத்துக் கரும் கயல் கவுளுள் கொண்டு
புள் எலாம் குடம்பை சேர்ந்து பார்ப்பு இனம் புறந்தந்து ஓம்பி
உள் உலா உவகை கூரத் துணை புணர்ந்து ஒலித்து வைக
வள்ளலார் மனத்துக்கு எஃகாய் மாலை வந்து இறுத்தது அன்றே.

#1029
காதலார் அகன்ற போழ்தில் கற்பு உடை மகளிர் போலப்
போது எலாம் குவிந்த பொய்கைத் தாமரை பொலிவு நீங்க
மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் சிறு வெள்ளாம்பல்
தாது எலாம் அலர நக்குத் தம்மையே மிகுத்த அன்றே.

#1030
செய் ஒளிச் செக்கர் என்னும் செம் புனல் பரந்து தேறி
வெய் ஒளி நிறைந்த நீல விசும்பு என்னும் மணி கொள் பொய்கை
மை இருள் என்னும் சேற்றுள் வளர் திங்கள் கதிர்கள் என்னும்
மொய் இளம் கமல நாளம் வளையங்கள் முளைத்த அன்றே.

#1031
அங்கு ஒளி விசும்பில் தோன்றி அந்தி வான் அகட்டுக் கொண்ட
திங்கள் அம் குழவி பால் வாய்த் தீம் கதிர் முறுவல் நோக்கித்
தங்கு ஒளி விரிந்த ஆம்பல் தாமரை குவிந்த ஆங்கே
எங்கு உளர் உலகுக்கு எல்லாம் ஒருவராய் இனிய நீரார்.

#1032
மண வாய மல்லிகையின் மது நனைந்து வண் கனிகள் மதர்ப்ப வீசி
இணர் வாய வன முல்லை இதழ் வாரி இளம் திங்கள் கதிர் காலூன்றித்
துணைவு ஆய சுரும்பு இரங்க அரவிந்த வனத்து உதிர்ந்த துகளும் சீத்துத்
திணை வாய கருங்குவளை திளைத்து அசைக்கும் தென்றலும் ஒன்று உடைத்தே மாலை.

#1033
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய்ப் பாண்டில்
நெய் பருகு கொழும் சுடரின் அகில் ஆவியிடை நுழைந்து நிழல் கால் சீப்பப்
பை பருகும் மணி உமிழ்ந்து பண நாகம் இரை தேரும் பருவ மாலை
கை பெருகு காம நோய்_உடையவர்க்கு ஓர் கனல் போல வருமே காணில்.

#1034
கணி மிடற்ற நற வேங்கை அவிர் சுணங்கின் மடவார்-தம் கை மேல் கொண்டு
பணி மிடற்று மொழி பயிற்றும் பைங்கிளியின் செவ்வழி இன் இசை மேல் பாட
மணி மிடற்ற செம் கண்ண பவழக் கால் கபோதங்கள் மதலை-தோறும்
மணி மிடற்றினால் அகவ அனங்கனையும் அனல்விக்கும் அளியம் மாலை.
**சயம்பவை சினாலயத்தை அடைதல்

#1035
வெம் சுடர் வேல் இளையவன் ஆங்கு இனையனவின் மெலிவு எய்த விசும்பு செல்லும்
விஞ்சை அரையன் மட மா மகள் நிலை யாது என வினவில் விளம்பக் கேள்-மின்
பஞ்சு இலங்கு தேர் அல்குல் பாடகக் கால் பாவையர்கள் பலர் பாராட்டச்
செம் சுடரோன் மறை பொழுதில் சினவரன்-தன் திரு_கோயில் சென்று சார்ந்தாள்.
**சயம்பவையின் வழிபாடு

#1036
திண் நிலைய மணிக் கதவம் தாழ் திறந்து திரு_விளக்குத் திகழ மாட்டி
விண் இயல் அம் நறும் புகையும் காழ் அகிலும் விசும்பு இவர்ந்து விம்ம மூட்டிக்
கண்ணியுடன் வெறி மலரும் நறும் பொடியும் கமழ் சாந்தும் கையின் ஏந்திப்
பண் இயல நரம்பு இசை மேல் பரமனையே பணி_மொழியாள் பரவாநின்றாள்.
**வரிப்பாட்டு

#1037
மணம் கமழும் தாமரை இன் மதுத் திவலை கொப்பளித்து மதர்த்து வாமன்
அணங்கு இவர் சேவடியின் அழகு எழில் ஏர் ஓர் ஒளி பருகி அலரும் போலும்
அணங்கு இவர் சேவடியின் அழகு எழில் ஏர் ஓர் ஒளி பருகி அலரும் ஆயின்
வணங்கினவர் ஒளி விரிந்து களி சிறந்து மதி மகிழல் மருளோ அன்றே.

#1038
அரும்பி வரும் அரவிந்தம் அறிவரனது அடி நிழல் அது அடைந்தோம் என்று
சுரும்பு இவரி இசை பாடச் செம்மாந்து சுடர் உமிழ்ந்து துளும்பும் போலும்
சுரும்பு இவரி இசை பாடச் செம்மாந்து சுடர் உமிழ்ந்து துளும்பும் ஆயின்
விரும்பினராய்த் தொழுது எழுவார் மெய் மறப்பும் உள் மகிழ்வும் வியப்போ அன்றே.

#1039
அழல் அணங்கு தாமரை ஆர் அருள் ஆழி உடைய கோன் அடிக் கீழ்ச் சேர்ந்து
நிழல் அணங்கி முருகு உயிர்த்து நிரந்து அலர்ந்து தோடு ஏந்தி நிழற்றும் போலும்
நிழல் அணங்கி முருகு உயிர்த்து நிரந்து அலர்ந்து தோடு ஏந்தி நிழற்றும் ஆயின்
தொழில் அணங்கு மனம்_உடையார் சூழ் ஒளியும் வீழ் களிப்பும் சொல்லோ அன்றே.

#1040
மணி மருள் திரு_மொழி வாமன் சேவடி
அணி மருள் உருவு உடை அமிர்து இன் சாயலாள்
பணி மொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள்
பிணி மொழி பிறவி நோய் பெயர்க என்னவே.
**சயம்பவை நிலாமுற்றத்தை அடைல்

#1041
வென்றவன் திரு_அடி வணங்கி மெல்லவே
சென்று தன் வள நகர்ச் செம்பொன் மாளிகை
நின்று ஒளி விரிவது ஓர் நிலவு வேதிகை
முன்றில் சென்று எய்தினாள் முகிழ்த்த வேட்கையாள்.
**சந்திரோதய வருணணை

#1042
செய்யவன் செம் கதிர் சுருக்கச் செக்கர் வான்
பையவே கருகலும் பரவை பால் கதிர்
ஐயவே அவிர் கதிர் அரும்பு வந்தது
வையமே தொழப்படும் வளர் வெண் திங்களே.

#1043
இரும் கயத்து எழில் மலர் நிரந்து மேலது ஓர்
சுருங்கை அங்கு அவிழ்ந்து எனத் தோன்றும் மீன் குழாம்
அரும்பிய பசலை வான் அகட்டுத் தாரகை
ஒருங்கு இயன்று ஒளி நகை உமிழ நோக்கினாள்.
**சயம்பவை வருந்துதல்

#1044
திங்கள் அம் கொழுநனைச் சேர்ந்து தாரகை
அங்கு ஒளி முகிழ் நகை அரும்பும் ஆதலால்
மங்கல மணமகன் மணந்த போது அலால்
எங்கு உளது இளையவர்க்கு இளைமை இன்பமே.

#1045
என்று தன் அகம் புடை இயலக் காளையால்
ஒன்றிய உள்ள நோய் ஒளிக்கலுற்றனள்
இன்று இவள் அகத்தது காம நோய் எனப்
பொன் தவழ் பசலை மெய் புகலலுற்றதே.
**சயம்பவை நாணும்படி தோழியர் தனித்தனியே கூறுதல்

#1046
ஆயின திரு_அனாள் ஆயத் தோழியர்
வேய் எனத் திரண்ட தோள் விளங்கும் மேனியாள்
மேயின குறிப்பினை அறிந்து மெல்லவே
பாயின பணி மொழி பலவும் கூறினார்.

#1047
விஞ்சையர் உலகினும் இனிது வீங்கு நீர்
மஞ்சு இவர் பொழில் அணி மண் என்று ஓதினாள்
அம் சில மொழியவள் ஒருத்தி ஆங்கு அயர்
பஞ்சு இலங்கு அகல் அல்குல் பாவை பாங்கினே.

#1048
பனி வரைப் பாங்கரும் பருவச் சோலையும்
தனியவர்க்கு இனல் நனி பயக்குந் தன் மனக்கு
இனியவர் எவ்வழி இசைவர் அவ்வழித்
துனி வரவு_இல் என ஒருத்தி சொல்லினாள்.

#1049
காதலார் காதன்மை கலந்து காதலர்க்கு
ஏதிலார் அயலராய் இயல்ப ஆய்விடில்
சாதலும் பிறத்தலும் இலாத தானமும்
கோது எனக் கொள்-மின் என்று ஒருத்தி கூறினாள்.

#1050
திணை விராய்ப் பொய்கையும் திகிரிப் புள்ளினுக்கு
இணை இராப் பிரிந்த பின் எரியொடு ஒக்குமால்
துணைவரால் தனியவர் திறத்துச் சொல்லின் ஓர்
புணைவர் ஆம் படியவர் இல்லைப் பொன்_அனீர்.

#1051
முல்லையின் முருகு கொப்புளித்து மூரல் வாய்
மல்லிகை இணர்த் துணர் மயக்கும் மாருதத்து
எல்லியும் இளம்பிறைக் கதிரும் என்பவால்
மெல்லியலவர்களை மெலிவுசெய்யவே.

#1052
விரை செறி புரி குழல் வேல் கண் நங்கை-தன்
புரை செறி கடிவினை நாளைப் போழ்து என
முரைசு எறி இமிழ் இசை முழங்கக் கேட்டனன்
உரை செறி மறுகில் என்று ஒருத்தி கூறினாள்.

#1053
நாளை நாள் என்பது நனித்தும் சேய்த்து என
வாளையாம் நெடும்_கணீர் மயங்கி என்னை இக்
கோளை யாம் விசும்பிடைக் குளிர் வெண் திங்களார்
தாளை யாம் வணங்குபு தாழ்ந்து கேட்டுமே.

#1054
காமனும் கணைப் பயன் கொண்டு கண்களால்
நாமும் நல் நல்_வினை நுகரும் நாள் அவாய்
யாமம் இங்கு ஒருங்குடன் அகல என்று போய்
வாமன்-தன் நகர் உழை வரம் கொள்வாம்-கொலோ.

#1055
இன்னன நகை மொழி இன்பக் கோட்டியோடு
அன்ன மெல் நடையவள் அமர ஆயிடை
மன்னவற்கு ஏழ் இசைத்து எழுந்த தூரியம்
கன்னியும் கடி கமழ் அமளி ஏறினாள்.
**இரவு வருணனை

#1056
மல்லிகை மணம் கமழ் மாலை போகலும்
பல்லியம் அவிந்தன பரந்த பால் கதிர்
மெல்லவே மெல்லவே சுருங்கி வீங்கு நீர்
எல்லை சென்று ஒளித்தது அ இள வெண் திங்களே.

#1057
நல்_வினை கழிதலும் நலியும் தீவினை
செல்வதே போல் இருள் செறிந்து சூழ்ந்தது
பல் வினை மடிந்தன படர்ந்தது ஆயிடை
வல்_வினைக் கயவரே வழங்கும் கங்குலே.

#1058
மாட வாய்ச் சுடர் ஒளி மழுங்கி மங்கையர்
ஆடுவார் முழவம் கண் அயர்ந்த யாழொடு
பாடுவார் பாணியும் சுருங்கி நல் நகர்
ஆடு நீர்க் கடல் திரை அவிந்தது ஒத்ததே.

#1059
மடந்தையர் முலை முகம் மடுத்த மார்பினர்
அடைந்து தேன் உறங்கிய அலங்கல் மாலையார்
மிடைந்த தோள் தழூஉப் பிணை நெகிழ மெல்லவே
இடம்கழித் தொழில் ஒழிந்து இளையர் துஞ்சினார்.

#1060
மதுக் கடை வழி பிழித் திவலை நா வளைத்து
ஒதுக்கமும் வெறி அயர் களனும் ஊடு உலாய்ச்
செதுக்கமும் பலி பெறு தெருவும் தேர்ந்து போய்க்
கதுப் புகுந்து உறங்குபு கழுதும் சோர்ந்தவே.

#1061
இடம் சிறை இளம் பெடைக்கு ஈந்து பார்ப்பின் மேல்
தடம் சிறை வலத்தது கோலித் தாம் தமது
ஒடுங்கு தாள் முடங்க வைத்து உறங்குகின்றன
புடம் கொள் பூம் பொழிலிடைப் புள்ளின் சேவலே.

#1062
கனைந்த தம் காதலில் கனவிக் கண் திறந்து
இனைந்த போன்று இடையிடை நோக்கி இன் குரல்
புனைந்து அகம் புணர் பெடை புல்லி மெல்லவே
அனந்தருள் முரன்றன அன்றில் சேவலே.
**தூங்காதோர் இருவர் என்றல்

#1063
மன்னிய மணித் தடத்து ஆம்பல் வாய் குடைந்து
இன் இயல் மாருதம் இயங்கும் கங்குல்-வாய்க்
கன்னியும் காளையும் ஒழியக் கார் இருள்
துன்னிய உலகு எலாம் துயில்கொண்டிட்டதே
**வைகறைப் பொழுது

#1064
நள்ளிருள் இடையது நடப்ப வைகறை
புள் இமிழ் இசையொடு புகுந்து போம் வழித்
தெள்ளிய மதியவன் செய்த தீமை போல்
மெள்ளவே கனை இருள் மெலிவு சென்றதே.

#1065
கிளர்த்தன கிலுகிலுப்பு அரவப் புள் குலாம்
வளர்த்தன மகர_யாழ் மருளி இன் இசை
தளர்த்தன கரும் கடல் தரங்கத் தன்னமே
விளர்த்தது குண திசை வேலை வட்டமே.
**சூரியோதய வருணனை

#1066
ஆணைசெய்து அரசு வீற்றிருப்ப ஆயிடைக்
கோணை செய் குறும்பு கூர் மடங்கும் ஆறு போல்
சேண் உயர் திகிரியான் கதிர் சென்று ஊன்றலும்
பாணியால் கரந்த முன் பரந்த சோதியே.

#1067
விளித்தன புலரி வெண் சங்கம் வேரியால்
களித்தன கய மலர்த் தொழுதி அ மலர்
ஒளித்து முன் உறங்கிய ஒலி வண்டு ஆர்த்தன
தெளித்தது செறி பொழில் தேம் பெய் மாரியே.

#1068
தூண்டிய சுடர் விளக்கு அன்ன கன்னியோடு
ஆண்டகை அழல் வலம்செய்யும் ஆர் அணி
காண் தகை உடைத்து அது காண்டும் நாம் என
ஈண்டிய கதிரவன் உதயம் ஏறினான்.

#1069
உருகின பனி பொதி பாறை உக்க நீர்
பருகின பகலவன் பரவை வெம் கதிர்
கருகின கயம் வளர் ஆம்பல் கண்கொளப்
பெருகின திசைமுகம் பெயர்ந்தது ஒத்தவே.
**கவிக்கூற்று

#1070
நிறைந்தார் கடி நல்_வினை நீதியினால்
அறைந்தாங்கு அது சென்றது சென்ற வகை
சிறந்தாளொடு காளை திறத்து உரை யாம்
மறந்தாம் அது வல்லவர் சொல்லுகவே.
**முரசறைதல்

#1071
குரு மா மணி வேய் குடை மும்மை உடைப்
பெருமான் அடி பேணிய பூசனை நாள்
கரு மால் களி யானைகள் மேல் கன பொன்
அரு மா முரசு ஆர்ப்ப அறைந்தனரே.

#1072
முரசும் முழவின் குழுவும் முடி சேர்
அரசன் நகரார் குழுவும் கெழுமி
விரையும் புகையும் மலரும் பலியின்
இரையும் நெடு வீதி நிறைத்தனவே.

#1073
பிடியும் களிறும் பிறவும் நெரிவுற்று
அடியும் இட ஆம் இடம் இன்று இலகும்
கொடியும் குடையும் குளிர் சாமரமும்
முடியின் சுடரும் மிசை மூடினவே.
**திருமண வருணனை

#1074
வழுவு_இல் நெறி வாமன மா நகர்-வாய்
விழவு இன்னணமாக விதித்தனராய்க்
கழுவும் மணி போல்பவள்-தன் கடி நாள்
எழுவும் முரசு எங்கும் இயம்பினவே.

#1075
நடை மாலை நடந்தது நந்தி-முகம்
புடை மாலை புகுந்தனர் புண்ணிய நீர்
இடை மாலை நிகழ்ந்து ஒர் ஏத்தரவம்
கடை மாலை நிகழ்ந்தது காப்பு அணியே.

#1076
திரை சங்கு ஒலியோடு சிறந்தன போல்
முரைசு அங்கு ஒலியோடு முழங்கி எழ
உரை சங்கு ஒலியோடு உணரா வகையால்
அரைசு அங்கு ஒலியோடு எழ ஆர்த்தனவே.

#1077
துணி முத்த நகைத் துவர் வாய் இளையார்
கணி முத்து அணி சிந்திய கண் விரவி
மணி முத்த மணல் திடல் ஆகி மறைத்து
அணி முத்து உமிழ் வீதி அடுக்குநவே.

#1078
துகில் ஆர் கொடி பொங்கின தொங்கல் நிமிர்ந்து
அகில் ஆர் புகை ஆவி அடுத்தமையால்
பகலானொடு வந்து இரவும் பகலே
இகலாது உடனாகி இயைந்து உளவே.

#1079
பலர் மன்னிய பாடலும் ஆடலுமே
வலம் மன்னி மயங்கி முயங்குதலால்
நில மன்னவரும் நெடு மால் வரை மேல்
குல மன்னவரும் குளிர் தூங்கினரே.

#1080
அகல் வானிடை அங்கு இழி வானவரும்
முகில் ஆறு இழி விஞ்சையரும் முடுகிப்
பகலானொடு தாரை பரந்தன போல்
புகலால் ஒளி போந்தது பொன் நகரே.

#1081
வட மேரு முகட்டு அலரும் மலரும்
புட மேரு பொலிந்து அலரும் மலரும்
தட மேல் உள பொன் அவிழ் தாமரையும்
திடம் மேவிய விஞ்சையர் சிந்தினரே.

#1082
அணி வேண்டினர் கொள்ள அடுத்தனவும்
மணி வேண்டினர் கொள்ள வகுத்தனவும்
கணி வேண்டின நாள் கழியும் துணையும்
பணி வேண்டினர் வீதி பரந்தனவே.

#1083
நறவு உண்டு ஒருபால் நகுவார் ஒருபால்
புறவுண்டு அகலா அமிர்தம் புணர்வார்
உறவுண்டு அமரத் தொடர்பால் உறைவார்
பிற உண்டையும் இன்னன பின்னினவே.

#1084
இழிகின்றனர் விஞ்சையர் எத்திசையும்
பொழிகின்றது பொன் மழையும் மழையுள்
சுழிகின்றது தொல் சன வெள்ளம் அதற்கு
ஒழிகின்றது நாம் உரையாததுவே.

#1085
தாமரை முகத் தமனியக் குடம் அவற்றால்
சாமரை முகத்தன மதக் களிறு-தம் மேல்
பூ மரை முகத்து எறி புனல் திரை முகந்து
தூ மரை முகத்து அரசர் சென்று பலர் சூழ்ந்தார்.

#1086
வண்டு படு மாலையர் மடப் பிடிகள்-தம் மேல்
மண்டு அயல் உழைக் கல மழைக் கண் மடவார்கள்
எண் திசையும் எங்கும் இடம் இன்றி மிடைவுற்றார்
கண்ட வரை மேல் விரவு கார் மயிலொடு ஒத்தார்.
**திவிட்டன் மணவறைக்கு வருகை

#1087
மாளிகை நிரைத்த மணி மாட நகர் முன்னால்
ஆளி அரசு ஏந்தும் மணி ஆசனமதன் மேல்
காளை கழல் வேந்தர் பலர் சூழ்தர இருந்தான்
நாளொடு பொலிந்த நகை மா மதியம் ஒத்தான்.

#1088
அங்கண் அயிராவணம் இரண்டு உடன் எடுத்த
மங்கல மணிக் கலச நீர் சொரிய ஆடிப்
பொங்கு திரை ஒன்று இரு புயல் பொலிய ஏந்தித்
தங்கு புனல் பெய்த தட மால் வரையொடு ஒத்தான்.

#1089
மன்னர்கள் சொரிந்த மணி நீர் அருவி ஆடிப்
பின்னை மலர் மாரி அகல் வானினவர் பெய்ய
மின் அவிர் விளங்கு சுடர் வேல் விடலை மெய்யில்
பொன் அணி புனைந்து புது வேள்வி நகர் புக்கான்.
**சயம்பவையின் நீராட்டு

#1090
மங்குல் மழை சூழும் மணி மால் வரையின் மேல் ஆர்
கங்கை முதல் நீர் அருவி கொண்டு கலி வானம்
எங்கும் இடம் இன்றி எழில் விஞ்சையர் இழிந்தார்
நங்கை மண நீர் அணியை நாம் ஒழிவது என்னோ

#1091
ஆறு குல மால் வரையின் மேல் அருவி நீரும்
வீறு பெறு மெல்_இயலை ஆட்டிய பின் மீட்டும்
நாறு மலர் நந்தனவனத்தனவொடு எல்லா
வேறுபடு பூ மழையும் ஆட விளைவித்தார்.

#1092
சாந்து சொரி மாரி பொழிகின்ற தகையோடும்
தேம் துவலை வீசி உளர்கின்றது ஒரு தென்றல்
வேந்தர் உலகம்-கொல் மிசை விண்-கொல் இஃது என்று
மாந்தர் மருள்வாரும் மகிழ்வாரும் உளர் ஆனார்.
**சயம்பவை மணவரை அடைந்தமை

#1093
மங்கல வனப்பினது ஒர் கோடி மடி தாங்கி
அங்கு ஒலி விசும்பினவர் தந்த அணி சேர்த்திப்
பங்கய முகத்தவர் பலாண்டு இசை பராவச்
செங்கயல் நெடும்_கணவள் வேள்வி நகர் சேர்ந்தாள்.
**புரோகிதன் செயல்

#1094
நங்கை மண வேள்வி நகர் எய்துவதன் முன்னைப்
பொங்கு புரி நூல் அனலர் தாமரை புனைந்து ஆர்
மங்கல உழைக்கலம் நிரைத்த மண மாடம்
அங்கு அது புகுந்து அழல் வளர்க்கிய அமைந்தார்.
**மங்கலச் சடங்கு

#1095
சாந்து மெழுகிட்ட தட மா மணி நிலத்தைச்
சேர்ந்து திகழ் பொன் இயல் சலாகை நுதி தீட்டிப்
பேர்ந்தும் ஒரு கால் விரை பெருக்கி மெழுகிட்டான்
ஆய்ந்த மறை ஓதி அதன் ஆர் இடம் அறிந்தான்.

#1096
பருத்த மணி முத்த மணல் பாய் சதுரமாகத்
திருத்தி ஒரு வால் வளை பயின்று திடர் சூழத்
தருப்பையின் நுனித் தலை வடக்கொடு கிழக்காய்ப்
பரப்பினன் அதற்கும் ஒரு வால் வளை பயின்றான்.

#1097
நான்முகன் வலத்து நல் இடத்தும் ஒரு காவல்
மேல்முகமிருந்து குண பால் வெறுவிது ஆகப்
பால் முறை பயின்ற பருதிக் கடிகை பாய்த்தித்
தான் முறையின் ஓது சமிதைத் தொழுதி சார்ந்தான்.
**முகூர்த்தகாலத்தில் பலரும் வருதல்

#1098
ஆயிடை நடுக்கடல்_உளான் அமரர்_ஆசான்
ஏய்_உடையனாய் அசுர_மந்திரி எழுந்தான்
போய் உடை விசும்பின் மதியும் புகுதுகின்றான்
மே உடை அணிந்த கணி வேலை இது என்றான்.
**மணவேள்வி

#1099
அங்கு முன் வளர்த்த அழலே கடவுளாக
மங்கையை மணக் குழுவின் முன்னை வரை வேந்தன்
கொங்கு விரி தாரவற்கு நீரொடு கொடுத்தான்
நங்கையொடு நாள்_மலர்_உளாளையும் மடுத்தான்.

#1100
மன்னி அழல் வேள்வியில் அவற்கு வலமாகப்
பின்னிய தருப்பைகள் பிடித்து அவை விடுத்து ஆங்கு
அன்னம்_அனையாளொடு அயில் வேலவன் இருந்தான்
கன்னியொடு இயைந்த கதிர் மா மதியம் ஒத்தான்.

#1101
கந்துள் உமிழும் கரிய சூழ் புகைகள் விம்ம
வந்து சுடர் ஏந்தி வலனே சுழல மாட்டி
அந்தணனும் அங்கு அழல் அமைத்து மிக வேட்டான்
மைந்தனும் மடந்தையை மனத்தின் மிக வேட்டான்.

#1102
பொங்கு அழல் செய் வேள்வி முறை போற்றலும் எழுந்தான்
அங்கையின் அணங்கின் அணி மெல் விரல் பிடித்து
மங்கையொடு காளை வலனாக வருகின்றான்
கங்கையொடு இயைந்து வரு கார்க் கடலொடு ஒத்தான்.

#1103
கை மலரின் வீரன் அவள் கை முகிழ் பிடிப்ப
மெய் மயிரெறிந்து மணி வேர் நுதல் அரும்பிச்
செய்ய தன சீறடிகள் செவ்வன் இடமாட்டா
அ மயிலின் நாண்-அதனை யாவர் அறைகிற்பார்.
**தானத்தின் சிறப்பு

#1104
பின்னும் உள வேள்வி முறை சென்ற பல பேசி
இன்னணம் இயன்ற எரி ஓம்பு தொழிலார்க்குப்
பொன்னொடும் மணிக் குவியல் போந்து பொழிகின்றார்
கன்னி தமர் காளை தமர் என்று இவர் கலந்தே.

#1105
அங்கம் இருமூன்றும் மறை நான்கு அலகு_இல் கற்பம்
இங்கு முடி விஞ்சை என இன்ன கரைகண்ட
பொங்கு எரிய வேள்வி வல் புரோகிதன் அவற்குச்
சங்கநிதி என்ன நெதி மாரி தருவித்தார்.
**அருந்ததி காட்டல்

#1106
வான நெறி எங்கும் வளர் சோதி வடமீனைக்
கான மயில்_அன்னவள்-தன் முன்னை நனி காட்ட
யானும் இவள் போல் உலகு காண இயல்வேனோ
ஈனமொடு நாணம்_இலனோ என இகழ்ந்தாள்.
**வந்தவர் பாராட்டிச் செல்லல்

#1107
என மணவினைகள் செல்ல இன்னணம் எய்துக என்று
புன வரை கானம் முன்னி மா தவம் போகுவாரும்
இனம் மலி செல்வம் மற்றும் இப்படி வருவது உண்டோ
கனவினும் என்ன மாந்தர் கண்டு மீள்வாரும் ஆனார்.
**பள்ளியறையைச் சேர்தல்

#1108
இடி படு முரசில் சாற்றி ஏற்பவர் ஆசை தீரச்
சுடர் விடு மணியின் மாரி பொன்னொடு சொரிய ஏவிக்
கடி படு நெடிய மாடம் கன்னியோடு ஏறினானால்
முடிவு கொள் உலகம் எய்தும் இன்ப மா மூர்த்தி ஒப்பான்.
**காதல் வெள்ள வருணனை

#1109
கழுமிய காகதுண்டம் கமழ்-தொறும் காள மேகம்
குழுமியது அனைய மாடக் குவட்டிடை அமளி சேர்வார்
விழு மலர்ப் பிணை_அன்னாளும் விடலையும் மேரு நெற்றிச்
செழும் மணிச் சிலை சென்று ஏறும் தெய்வ மா மிதுனம் ஒத்தார்.

#1110
பொன் இயல் கொடியின் ஒல்கிப் பூ_அணைப் பொருந்தும் பாவை
கன்னி நாண் ஏற்றம் காளை கண் களி கொள்ள நோக்கிப்
பின் அவள் ஒடுங்க வாங்கிப் பெரு வரை அகலம் சேர்த்தி
இன் நகை மழலை கேட்பான் என்-கொல் இ மிகை நாண் என்றான்.

#1111
நின்ற நாண் எனும் நீள் கன்னிச் சிறை விண்டு காளை திண் தோள்
குன்றினால் செறிக்கப்பட்ட குமரி நீர் அமிர்த யாறு
சென்று தேன் பகர்ந்து செம்பொன் கலம் சிந்தித் திளைத்து விம்மி
அன்று அவன் ஆர்வ வெள்ளக் கடலிடை அழுந்திற்று அன்றே.

#1112
பருவத்தால் அரும்பிப் போதாய்ப் பையவே அலர்ந்து முற்றி
மருவித் தேம் கனி கொண்டு உள்ளால் மனம் கொள வழிந்த காமத்
திரு ஒத்த களியின் தீம் சாறு ஆர உண்டு ஆரமாட்டார்
உருவத்தால் இருவர் ஆகி உள்ளத்தால் ஒருவர் ஆனார்.

#1113
உலவிய அலங்கல் மாலை ஒளி மலர் உடைய மார்பில்
குலவிய மணி முத்தோடும் குவி முலைக் குவடு பாயக்
கலவியும் களிப்பும் காமப் புலவியும் கலந்து சால
நிலவிய மது உண்டார் போல் நெஞ்சு உண மயங்கியிட்டார்.

#1114
அடிக் கலம் திருத்தி அம் மென் புரி குழல் சுருளை நீவி
முடிக்கு அலர் அணிந்து காதல் முகிழ் நகை முகிழ்ப்பப் புல்லிக்
கடைக்கணி ஆய காளை கவான் மிசை இருத்திக் காமர்
குடிக்கு அணி ஆய கொம்பு கேட்க மற்று இதனைச் சொன்னான்.
**திவிட்டன் சயம்பவையின் நலம்பாராட்டல்

#1115
செங்குவளை நாறும் திரு_மேனி செவ்வாயும்
அம் குவளை ஈர் இதழும் ஆம்பலுமே நாறுமால்
இங்கு இவளை முன் படைத்த தேவன் என் இன் உயிரைப்
பைம் குவளை மாலையாட்கு ஆளாய்ப் படைத்தானே.

#1116
அன்பு உருகு காமத் தீ மாட்டி அளிய என்
என்பு உருக வேவ இணை நெடும் கண் பூம் பாவை
முன் பெருகு முந்நீர் அமுதாய் விளைத்து இனிய
மின் பருகு நுண்_இடையார் மெல் உருவம் கொண்டதே.

#1117
பானல் நெடும் கண் இவையே பகழியா
வேனில் உடை வேந்தன் வென்றிக்கு நோற்றானே
யானும் அளியத்தேன் இத்துணை ஓர் காலமும்
தேன் ஆர் நறு மேனி தீண்டுதற்கு நோற்றேனே.

#1118
காவி ஆகின்ற கரு மா மழை_கண்ணி
மேவி யான் உண்ணும் அமிர்தாய் விருந்து ஆகி
ஆவி ஆகின்றாள் அரு மருந்தும் ஆகின்றாள்
பாவியேன் பாவைக்கு ஓர் ஆளே ஆகின்றேனே.

#1119
செம்பவழம் ஏய்ப்பத் திகழ்ந்து இலங்கு சீறடியின்
வம்பு அழகு நோக்கி வழிபடுவதே சாலும்
அம் பவழ வாயும் அளகம் சேர் வாள் நுதலும்
எம் பவமோ நுங்க யாம் எம்மை அறியேமே.

#1120
வண்டே மடந்தை மணி ஐம்பால் மேவி இருந்து
உண்டே என நுடங்கும் நுண் மருங்கு நோவியீர்
தண் தேன் காணீர் உம் தளிர் மேனி நாற்றத்தால்
பண்டே போல் வந்து பயிலாது போ-மினே.

#1121
கள்ள மட_நோக்கி தன்னைக் கரந்து எனது
உள்ளத்தின் வைப்பின் உருவம் அது காணேன்
மெள்ள என் தோள் அணைவாள் என்னும் விருப்பு ஆராது
எள்ளும் மனத்தினுக்கு எய்திற்று அறியேனே.

#1122
காதலால் வந்து என் கவான் மேல் இருப்பினும்
ஏதிலாள் போலும் இமைப்பின் இமையாதே
போது உலாம் வாள் முகமே நோக்கிப் பொலிவேன் என்
மாதராள் நாணும் யான் வாழும் ஆறு ஓரேனே.

#1123
உலம் பாராட்டுந் தோளவன் ஒண் பூம் குழலாளை
நலம் பாராட்டி நாகு இள முல்லை நகுவிக்கும்
வலம் பாராட்டி வந்தது ஒர் மாரிப் புயல் ஒத்தான்
குலம் பாராட்டும் கொம்பும் ஒர் முல்லைக் கொடி ஒத்தாள்.
**காதலர் சோலையை அடைதல்

#1124
தேன் ஆர் கோதைச் செங்கயல் வாள் கண் சிறைகொள்ள
ஊன் ஆர் வேலான் உள்ளம் இழந்தான் உழையாரை
மேனாள் போல மெய்ப்படமாட்டான் விளையாடும்
கான் ஆர் சோலைக் காவகம் புக்கான் கமழ் தாரான்.
**சோலையில் நிகழ்ந்தன

#1125
தண் தார் ஈன்று செம் தளிர் ஏந்தித் தழல் பூத்த
வண்டு ஆர் பிண்டி வார் தளிர் நீழல் மணி வட்டம்
கண்டு ஆங்கு ஏறிக் காரிகையோடு விளையாடிப்
பண் தான் கொண்ட பாவையார் பாடல் இசை கேட்டான்.
**மகளிர் வரிப்பாட்டு

#1126
வரை வேந்தன் மட மகளை மணி ஏர் மேனி நிறம் கொண்டு
விரை ஏந்து தளிர் ஈனல் விழையாய் வாழி தேமாவே
விரை ஏந்து தளிர் ஈனில் வேனில் தென்றல் அலர்தூற்ற
நிரை ஏந்து வடு நீயே படுதி வாழி தேமாவே.

#1127
அடி மருங்கின் அரசு இறைஞ்ச ஆழி ஆள்வான் பெருந்தேவி
கொடி மருங்கின் எழில் கொண்டு குழையல் வாழி குருக்கத்தி
கொடி மருங்கின் எழில் கொண்டு குழைவாய் ஆயில் பலர் பறிப்பக்
கடி மருங்கில் புக்கு அலரே காண்டி வாழி குருக்கத்தி.

#1128
வணங்கி வையம் தொழ நின்ற மன்னன் காதல் மட மகள் போல்
மணங்கள் நாறும் பூம் பாவை வளரல் வாழி நறும் குரவே
மணங்கள் நாறும் பூம் பாவை வளர்த்தி ஆயில் இளையரால்
கணங்களோடு பறிப்புண்டி கண்டாய் வாழி நறும் குரவே.

#1129
இன்னணம் இளையவர் பாடக் கேட்டலும்
மன்னவன் மட மகள் முகத்து வாள் நிலா
மின்னி ஓர் அணி நகை முகிழ்த்து மீள்வது
கல் நவில் தோளவன் கண் கொண்டிட்டவே.
**சோலையினின்று மீளுதல்

#1130
உழையவர் அடி முதல் பரவ ஒண் சுடர்க்
குழையவள் ஒளி மனம் கவரக் கோடு உயர்
மழை தவழ் மாலைய மாடம் ஏறினான்
முழை அமர் அரி அரசு அனைய மொய்ம்பினான்.

@9. அரசியற் சருக்கம்

#1131
நாவியே கமழும் தொங்கல் நகை மணி வயிரப் பூணான்
ஆவியின் அகத்து_உளாளும் அரு வரை அகலத்தாளும்
தேவியே ஆக அன்ன திருவொடும் இருவர் ஆவான்
பூவினுள் மடந்தை வந்து புகுந்தவாறு உரைக்கலுற்றேன்.
**ஒற்றன் கூற்று

#1132
கண் மிசை கனிந்த ஒற்றன் கூற்று காதல் கனி படு செல்வம் முந்நீர்
உண் மிசை உக்கு ஓர் நச்சுத் துள்ளி வந்து உறைப்பதே போல்
விண் மிசை இழிந்து வந்த ஒற்றன் ஓர் வெம் சொல் மாற்றம்
மண் மிசை இருந்த விஞ்சை மன்னனை வணங்கிச் சொன்னான்.

#1133
விரை செலல் இவுளித் தேரோய் விஞ்சையர் உலகம் ஆளும்
அரைசர்கள் திகிரி வேந்தன் அச்சுவகண்டனோடும்
திரை செல உரறி ஞாலம் தின்னிய கடல்கள் ஏழும்
கரை செல வருவ போல் நம் மேல் வரக் கருதுகின்றார்.
**சடிமன்னன் கூற்று

#1134
அரைசர்கள் வருக போக அது பண்டே அறிந்தது அன்றே
வரை செறி சிங்க ஏறு மணி_வண்ணன் அழித்த ஞான்றே
விரை செறி பொழில் கொள் சோலை விஞ்சையர் உலகில் பட்டது
உரை சிறிது என்னலோடும் ஒற்றனும் உரைக்கலுற்றான்.
**ஒற்றன் கூற்று

#1135
அருளுமாறு அடிகள் கேள்மோ அரியரசு-அதனை யாரும்
மருளுமாறு இளைய காளை வாய் பிளந்திட்ட வார்த்தை
தெருளுமாறு ஒருவன் சொல்லக் கேட்டலும் சேணில் வாழ்வார்
வெருளுமாறு உள்ளம் எல்லாம் வெருண்டு மெய் விதலை கொண்டார்.

#1136
விஞ்சையர் உலகம் எல்லாம் வெய்துற விரிந்த மாற்றம்
அஞ்சினன் மறைத்துச் சில் நாள் அமைச்சு அரிமஞ்சு என்பான்
வஞ்சனைச் சீயம் ஆய வார் கழலவனைக் கூவி
எஞ்சல்_இல் புகழினானுக்கு இன்னணம் இசைப்பித்தானே.

#1137
சொரி கதிர் வயிரப் பைம் பூண் அரசர்கள் பலரும் சூழ
எரி கதிர் ஆழி ஆள்வான் இனிதின் இங்கு இருந்த போழ்தின்
அரியது கேட்க என்ன அரிகேது என்பான் ஆங்குப்
பெரியது ஓர் வியப்புச் சென்று பட்டது பேசினானால்.
**அச்சுவகண்டன் சினங்கொள்ளல்

#1138
கரியவன் வளைந்த வெள்ளை எயிற்றவன் காள மேகம்
பெரியது ஒன்று இரண்டு கொம்மைப் பிறை கவ்வியிருந்தது_அன்னான்
அரியது அங்கு என்னை என்னை என அரிகேது சொன்ன
உரை எதிர் கபில வட்டக் கண் எரி உமிழ்ந்த மாதோ.

#1139
மடித்த வாய் எயிறு கவ்வி மருங்கின் ஓர் வயிரக் கல் தூண்
அடித்தனன் அசனி வீழ அரு வரை நெரிவதே போல்
படித்தலை நடுங்க மற்று அப் பரூஉத் திரள் வயிரத் தம்பம்
தொடித் தலை சிதைந்து நுங்கத் துகள் எழுந்து ஒழிந்தது அன்றே.
**அரிகேதுவை அச்சுவகண்டன் இகழ்தல்

#1140
விஞ்சையர் அதனைக் கண்டு மெய் பொதிர் எறிந்து விம்ம
வெம் சினம் கனன்று மீட்டும் விஞ்சையன் அவனை நோக்கி
வஞ்சனை மனத்தர் ஆய மனிசரை வலியர் என்பாய்
அஞ்சினை பெரிதும் ஏடா என்றனன் அசனி ஒப்பான்.

#1141
நிலத்திடை மக்கள் ஆற்றல் நின்னைப் போல் அஞ்சுவார்க்கு
மலைத் துணை பெருகிக் காட்டும் மற்று அது இங்கு எம்மனோர்க்கு ஓர்
இலைத்ததும் இல்லை மன்னோ என்றனன் இரண்டு திங்கள்
பிலத்திடை பொடித்த போலும் பிறழ்ந்து இலங்கு எயிற்றினானே.
**அரிகேதுவின் நினைப்பு

#1142
கனை கதிர்க் கடகக் கையால் கல் திரள் உதிர எற்றிச்
சின அழல் எறிப்ப நோக்கிச் சிவந்தனன் தெழித்தலோடு
மனம் நனி மயங்கி மற்ற விஞ்சையர் அஞ்ச நின்ற
நனை மலர் அலங்கல் கேது நகை கொண்ட மனத்தன் ஆனான்.

#1143
அடு குரல் அரச சீயம் அதனை ஓர் ஆம்பல் தாள் போல்
நொடி வரை அளவில் கீறி நுனித்தது வியத்தல் செய்யாக்
கடி வரை அலங்கல் மார்பின் காளையே பெரியன் என்று
தட வரை அனைய தோளான் தன்னுளே வியந்து நின்றான்.

#1144
இன்று இவன் அனலும் போழ்தின் எதிர் நின்று கனற்றி என்னை
சென்று அவன் ஆற்றல் தானே கண்ட பின் தேறும் அன்றே
என்று தன் மனத்தில் எண்ணி இயைந்தவா முகமன் சொல்லிக்
குன்று உடை அரசன் முன்னைக் கூப்பிய கையன் ஆனான்.
**திவிட்டனைக் கட்டிக் கொணருங்கள் என்ற அச்சுவக்கிரீவன் கட்டளையிடுமளவில்
** ஒருவன் வந்து சயம்பவையின் திருமணச் செய்தியைக் கூறியது

#1145
அமர் நனி தொடங்குமேனும் ஆர்த்து நீர் கொணர்-மின் என்று
குமரனைக் குறித்த வெம் சொல் குறை சென்று முடியும் எல்லைத்
தமருள் அங்கு ஒருவன் வந்து சக்கிரவாளம்-தன்னுள்
நமரது நிலையும் நங்கை போந்தது நடுங்கச் சொன்னான்.
**அச்சுவகண்டன் மேன்மேலும் சினங்கொள்ளல்

#1146
அடிகள் இ அவனி-தன் மேல் இழிந்ததும் அணங்கோடு_ஒப்பாள்
கடிவினை நிலையும் அன்றே கண்டு வந்து ஒருவன் கூறச்
சுடு சொல் இஃது ஒழிக என்று துணைச் செவி புதைத்து வல்லே
முடி முதல் துளங்கத் தூக்கி முனிவினை முடிவு கொண்டான்.

#1147
பெருகினான் வெகுளி கண்ணுள் பிறந்தது பிறங்கு செம் தீ
உருகினான் போன்று தோன்ற மயிர்த் துளை உகுத்த தெள் நீர்
திருகினான் எயிறு செவ்வாய் கறித்தனன் திசைகளோடும்
அருகினோர் நடுங்க நோக்கி அழல் நகை அடுத்து நின்றான்.

#1148
மலைகளை மறித்து மற்றோர் மறி கடல் நடுவண் இட்டு அ
அலை திரை மகர முந்நீர் அது இது ஆக்குவேன்-கொல்
உலகினை உள்ளம் கைக்கொண்டு உளையா உருட்டியிட்டு என்
பல புனை மடந்தை-தன் கீழ்ப் பதித்திடுவேன்-கொல் என்றான்.
**அச்சுவக்கிரீவன் அரசர் பலரை வருவித்தல்

#1149
அனன்று அனன்று அவைகள் பேசி அமையும் அ அரசர் தீமை
மனம்கொளப்படுவது ஆயின் மணி வரை உலகின் வாழும்
சனங்களைத் திரட்டிப் பின்னைத் தக்கது ஒன்று அறிவன் என்றான்
சினம் கெழு காலன் மற்றோர் காலன் மேல் சிவந்தது ஒப்பான்.
**அரசர் வடிவு

#1150
சிறந்து எரி அனலோடு ஒப்பான் பணி கொண்டு திசைகள் ஓடி
அறைந்தனர் முரசில் சாற்றி அறைதலும் அரசர் எல்லாம்
மறைந்தன உலகம் என்ன மாய்ந்தன திசைகள் என்னப்
பறந்தனர் விசும்பு போர்ப்பக் கடல் படை பரப்பி வந்தார்.
**அரசரின் செயல்

#1151
மற்று அவர் அடைந்து வெய்யோன் மலர்_அடி வணங்கி நின்று
செற்றவன் இருந்த ஆறும் செம் கண் தீ உமிழ்ந்த ஆறும்
எற்றிய வயிரத் திண் தூண் நெரிந்து இடை கிடந்த ஆறும்
உற்றன பிறவும் நோக்கி உள்ளங்கள் நடுங்கியிட்டார்.
**அரசர் கூற்று

#1152
சுரி உளைத் துளைகள் ஆவி விடுகின்ற சுழலும் செம் கண்
கரு முகில் நுடங்கு மின் போல் புருவங்கள் முரிந்து நீங்கான்
பெரியது ஓர் முனிவு கொண்டான் பிறை எயிற்று அரியோடு ஒப்பான்
எரியினுள் விளியலுற்றார் யார்-கொலோ அளியர் என்பார்.

#1153
ஞாலம் மேல் திரிந்து நாளும் உயிர்களை நடுங்கப் பார்க்கும்
காலனைக் கதம்பட்டான்-கொல் அன்று எனில் கற்பம் ஆள்வார்
மேல் எனக்கு இருப்பார் போலும் என வெகுண்டு அனல்கின்றான்-கொல்
வேலை நீர் உலகின் மற்று இ வெகுளிக்கு முதல் என் என்பார்.

#1154
ஊழிகள் பெயர்க்கலுற்று இ உலகினைப் பிறிது ஒன்று ஆக்கி
வாழ் உயிர் ஒருங்கு வாரி மறி கடல் நடுவண் பெய்வான்
சூழிய தொடங்குகின்றதாம்-கொலோ சொல்லின் ஈடு ஒன்று
ஆழியான் வெகுளிக்கு உண்டோ யார் இரையாவது என்பார்.

#1155
தானவர் அரக்கர் பண்டே தஞ்சமாம் இவற்கு மண் மேல்
ஊனவர் மனித்தர் ஏக உவனுக்கு ஓர் துகளும் ஆகார்
வானவர் இவற்கு மாறாய் வருபவர் மதிப்பின் இல்லை
ஏனவர் முனிவு செய்வார் யார் பிறர் உரை-மின் என்பார்.

#1156
இற்றது இ உலகம் என்பார் எரிந்தன திசைகள் என்பார்
அற்றன மகர முந்நீர் அகம் புலர்ந்து ஒழியும் என்பார்
மற்று இனி மொழியல் வேண்டா வருவன அறியலாகா
உற்ற பின் அறிதும் என்று ஆங்கு உரை ஒழிவாரும் ஆனார்.
**அச்சுவக்கிரீவன் கூற்று

#1157
அச்சமோடு உலகம் இன்றே அவிந்தன பொன்றும் என்பார்
நச்சு எரி நகையினாலே நடுங்கின திசைகள் என்பார்
இச்சைகள் பிறந்தவாற்றால் இனையன நினையும் போழ்தில்
கச்சை அம் களி நல் யானைக் காவலன் கனன்று சொன்னான்.

#1158
இரதநூபுரத்தை ஆள்வான் புதல்வியை உனை வஞ்சித்துப்
புரி மனுசர்க்கு ஈ வாக்கே புகன்றனன் போலும் என்ற
உரை தனக்கு உரைத்தவாறே உரைத்தனன் உலகம் எல்லாம்
இரை தனக்கு என்றும் ஆற்றா எரி படு வெகுளித் தீயான்.
**மன்னரின் வீரக்கூற்று

#1159
முரைசு ஒலி முழையின் உள்ளான் முழங்குகின்றதனோடு ஒப்ப
விரை ஒலி விளங்கு தாரான் விளம்பிய வெகுளி மாற்றம்
அரைசர்கள் ஆங்குக் கேட்டார் அடிகள் மற்று இதற்கோ இவ்வாறு
உரைசெல முனிவது என்று ஓர் ஒல்லொலி எழுந்தது அன்றே.

#1160
செழு மலர் அலங்கல் மார்பன் செம் கண் தீ உமிழக் கண்டும்
எழு மலர்ந்து அனைய திண் தோள் இவை சுமந்து இருப்பது என்னே
கழுகு போம் களத்து வென்று கதலிகை நடுதும் அன்றேல்
விழவு அயர் விசும்பினார்க்கு விருந்தினம் ஆதும் என்பார்.

#1161
ஏவது செய்து வாழும் யாம் உளமாக எம் கோ
நோவது செய்த வேந்தர் நுனித்து உயிர் வாழ்பவாயில்
சாவு அது போக வாழ்க்கை தவம் தலை நிற்றல் ஒன்றோ
வீவதுசெய்தல் ஒன்றோ நமக்கு இனி விளைவது என்பார்.

#1162
நாண் தொழில் மகளிர் முன்னும் நகைக் கிளை ஆயத்துள்ளும்
வீண் தொழில் விளம்பி என்னை வீரங்கள் வெறிய ஆக
ஆண் தொழில் புகுந்தது அம்மா அதோ இனிது ஆயிற்று என்று
தூண் தொழ வளர்த்த தத்தம் தோள்களை நோக்குகிற்பார்.

#1163
நாள் வடுப்படாமை நம்மைப் புறந்தந்தாற்கு உதவி நங்கள்
தோள் வடுப்படாமை மன்னன் புகழ் வடுப்படுதல் உண்டோ
வாள் வடுப் பிளவு போலும் கண்ணியை மகிழ்ந்த காளை
கேள் வடுப்படரும் பூசல் கேட்டிரா நாளை என்பார்.

#1164
இனி இருந்து என்னை பாவம் எழு-மின் போய்ப் பொருதும் என்பார்
முனிவன செய்த வேந்தன் முடித் தலை கொணர்தும் என்பார்
கனி வளர் கிளவியாளைக் கைப்பற்றித் தருதும் என்பார்
பனி வரை அரசர் மாற்றம் பற்பல பரிதி வேலோய்.
**கனகசித்திரன் அச்சுவ கண்டனுக்கு கூறிய உறுதி

#1165
சினம் எனப்பட்ட தீயுள் பிறந்தது செருக்கு நல் நீர்
மன உணவு உண்டு மானப் பூ நின்ற வயிர ஒள் வாள்
அனல் அது ஒன்று அகத்ததாக ஆர் அமர் குருதி வேட்டுக்
கனல்வது ஓர் கால ஒள் வாள் கடைக்கணித்து ஒருவன் சொன்னான்.

#1166
தோள்களைப் புடைத்து வீக்கித் துணைக் கரம் கொட்டி ஆர்த்து
வாள்களைத் துடைத்து நோக்கி வகை செய்வது எளிது யார்க்கும்
நீள் கதிர் இமைக்கும் ஒள் வாள் முகம்பெற நெருப்புச் சிந்தித்
தாள்களை வெதுப்பும் வெம் போர் தாங்குவது அரியது என்றான்.

#1167
தானவர் எனினும் இப் போர் இழந்து போய்த் தரணி வாழும்
ஊனமர் உலகம் ஆளும் ஊழி ஒன்று இது அன்று ஆயில்
வானவர் உலகும் மண்ணும் வந்து நின் வாயில் பற்றி
ஈனமொடு உறக்கம் காட்டியிடுவன் யான் தெளி இது என்றான்.

#1168
வாளினால் செரு உண்டேனும் மாயம் மற்று ஆகுமேனும்
தோளினால் ஆகுமேனும் சொல் எலாம் ஒழிக மற்று அக்
காளை-தன் உயிரினோடும் கன்னியைக் கொணர்ந்து தந்து
தாளிலே இட்ட பின்றைத் தவிர்க நின் சீற்றம் என்றான்.

#1169
ஆளிகட்கு அரசன் பாங்கு ஓர் குறுநரி அறிவு இல்லாது
மீளிமை பொறாது வெம்பி வெகுண்டு எழுகின்றது என்றால்
நாளினும் நங்கள்_போல்வார் நகைசெயப்படுவது அன்றே
வாள் ஒளி வயிரம் மின்னும் மணி முடி மன்னர் கோவே.

#1170
ஆதலால் எங்களால் அங்கு ஆவது ஒன்று இல்லை ஆயில்
போது உலாம் அலங்கல் மார்ப பொருவது பொருந்திற்று என்னும்
காதலால் கனகசித்திரன் கட்டுரை அதனைக் கேட்டே
கோது_இலா மாரி பெய்த கோடை அம் குன்றம் ஒத்தான்.
**வச்சிரகண்டன் கூற்று

#1171
மற்று அவன் உரைத்த போழ்தின் வச்சிரகண்டன் என்பான்
கொற்றவற்கு இளைய காளை கோத் தொழில் பாகம் பூண்டான்
இற்றதால் எங்கள் ஆண்மை யாங்களும் இழிந்து நிற்பச்
செற்றது ஓர் படை உண்டாயிற்று என்று கண் சிவந்திட்டானே.

#1172
மகர மால் கடலை அல்லால் சிறு கயம் மதலை சேரா
சிகர மால் யானை வேந்தே தானவர் செரு அன்று ஆயின்
நிகர்_அலா நீசர்-தம் மேல் நீ செலற்பாலது என்று
புகர் எரி அவிக்கலுற்றான் பொழி மழை பொழிவது ஒத்தான்.
**அச்சுவகண்டன் கோபந் தணிந்தமை

#1173
வேறுவேறு ஆகி நின்று வெம் சினம் செருக்கி விஞ்சைக்கு
ஏறு_அனான் தம்பிமாரும் மக்களும் இன்ன போல்வ
கூறினார் கூறலோடும் குரை அழல் அவிவதே போல்
ஆறினான் என்னை செய்யும் ஆய பண்பு அது அது ஆனால்.
**அவன் மந்திரசாலையை அடைதல்

#1174
அரசர்கள் நெறியில் கண்டீர் யாம் பிழைப்பு இலாமை என்று
முரசு என அதிரும் பேழ் வாய் முழங்கு இசை மொழியில் சாற்றி
வரை செறிந்து அனைய தோளான் மந்திரசாலை சேர்ந்தான்
உரை செறிந்து அங்குப் பட்ட சூழ்ச்சியும் உணர்ந்து போந்தேன்.
**அரிமஞ்சுவின் கூற்று

#1175
கன்னி-தன் திறத்துச் சீறிக் காவலன் கனலக் கண்டீர்
என் இனிக் கருதுகின்றது என்றனன் எரியும் ஆழி
மன்னவற்கு உணர்வும் கண்ணும் மாற்றமும் வலியும் தோளும்
அன்னவன் அமைச்சர்க்கு ஏறாம் அவன் அரிமஞ்சு என்பான்.
**தூமகேது கூறியது

#1176
அணி நகர் மேககூடம்-அதனை ஆண்டு அரிய செய்கை
துணிபவன் தூமகேது சூழ்ந்தனன் சொல்லலுற்றான்
மணி வரைப் பிறந்து மாண்ட அரும் கலம் மன்னர் கோமான்
பணி வரை அன்றி யாரே பெறுபவர் பகர்-மின் என்றான்.
**அங்கார வேகன் கூறியவை

#1177
வரை-தன் மேல் தழலின் பேர் ஆர் வள நகர்-அதனை ஆளும்
அரசன் அங்காரவேகன் அதனைக் கேட்டு அழன்று சொல்வான்
இரதநூபுரத்தை ஆள்வான் இகழ்ந்தனன் பெரிதும் நம்மைப்
பொருது அவன் கிளையை முந்நீர்ப் புறங்கரைப் படுத்தும் என்றான்.
**அரிசேனன் கூறியது

#1178
மல்லினால் மலர்ந்த மார்பீர் மறைந்து நாம் இருந்து வல்ல
சொல்லினால் வெல்லலாமேல் சொல்லு-மின் இன்னும் அன்றி
வில்லினால் விரவு தானைச் செருவினுள் வீரம்-தன்னால்
வெல்லலாம் என்னின் என்னை விடு-மின் போய்ப் பொருவல் என்றான்.

#1179
பூவினும் பொருதல் வேண்டா சூழ்ச்சியே பொருந்த நோக்கி
ஆவது காண்டல் ஆகும் அரசர்க்கு நீதி என்று
சாவதை அஞ்சுவார்க்கும் தகைமை_இல்லவர்க்கும் அன்றே
ஓவுதல் இன்றி ஓதி வைத்தது அங்கு ஒருவன் என்றான்.

#1180
அழல் அவிர் அலங்கல் வேலோன் அ அரிசேனன் என்பான்
கழலவன் காதல் தோழன் கனன்று அவன் கருதிச் சொன்ன
மொழி எதிர் உலகம் ஆள்வான் உவந்து அவன் முகத்தை நோக்கிப்.
பழி பெரிது ஒழியச் சொன்னான் படைத்திறலாளன் என்றான்.
**கருடத்துவசன் கூறியது

#1181
பொருவதோ எளிது யாங்கள் பொரும் திறம் உரை-மின் என்னை
மருவிய மனிதப் போரோ வான் கெழு தெய்வப் போரோ
இருமையின் இயன்ற போரோ யாது நாம் துணிவது என்றான்
விரி சிறை உவணம் சேர்ந்த வென்றி நல் கொடியினானே.

#1182
செப்பிய மாற்றம் கேட்டே திறல் சிறீசேனன் என்பான்
திப்பியர் புகழும் செல்வத் திருநிலை அகம்-அது ஆள்வான்
அப்படித்தாயில் கேள்-மின் அறிந்தவர் அறைந்தவாறு என்று
இப் படை நிலைமை ஓரான் எடுத்தெடுத்து இயம்புகின்றான்.

#1183
பொரு படைத் தொகை ஓர் மூன்று போர்த் தொழில் தானும் மூன்றே
மரு உடை மனுடம் தெய்வம் இருமையும் என்ன மற்ற
வெருவு உடைப் படையின் குப்பை மேலது நான்கு வீற்றது
இரு படை ஒழிந்து நின்ற இவையும் பாங்கு உடைய என்றான்.

#1184
அத்திரம் ஆதி ஆக ஓதிய நான்கும் விஞ்சை
தொத்து எரி சுடரும் ஒள் வாள் என இரண்டு ஆகும் முன்னாம்
வைத்த உட்கடையது ஏனை ஒழிந்தது பரம மாயை
இத் திறத்து இனைய என்றான் எரி மணி இமைக்கும் பூணான்.

#1185
படைக் கல விகற்பும் போரின் பகுதியும் பரப்பின் ஆங்கண்
இடைப் புகுந்து உரைப்பின் சாலப் பெருகும் அஃது இருக்க என்று
நடப்பது மக்களோடு மக்கள் போர் நல்லவேனும்
புடைப்பு_இல புகுதுமாயில் புறனுரை புணர்க்கும் என்றான்.

#1186
விஞ்சையர் பொருவராயில் விஞ்சையில் பொருதும் அன்றி
வஞ்சனை இன்றி மக்கள் பொருபவேல் மக்கள் போரே
எஞ்சுதல் இன்றி ஏற்ற பொருதும் என்று இன்ன சூழ்ந்து
நஞ்சு_அனாற்கு உரைப்பக் கேட்டு நன்று அது துணி-மின் என்றான்.

#1187
ஆய்ந்தவரோடு போதந்து ஆழியான் அருவிக் குன்றில்
காய்ந்து வந்து இறுத்த பின்றைக் கடி நகர் நமது தன் மேல்
சேந்து எரித்திடுதும் என்று தென் மலை அரசர் சென்றார்
வாய்ந்து மற்று ஒழிந்த மன்னர் மேல் வர வலித்திருந்தார் என்றான்
**சடிமன்னன் ஒற்றன் மொழிகளை மற்றவருக்கு அறிவித்தல்

#1188
ஒற்றன் ஆங்கு உரைப்பக் கேட்டே ஒளியவன் பெயரனோடும்
சுற்றம் ஆயவரும் சூழ் நீர்ச் சுரமைநாடு உடைய கோவும்
மற்று அவன் புதல்வர்-தாமும் வருக என வந்தார் மாற்றம்
உற்றவாறு அறியச் சொன்னான் ஒளி வரை அரசர்_கோவே.
**பயாபதியைச் சார்ந்தவர் சிந்தனை

#1189
விச்சையின் செருக்கினாலும் வீங்கு தோள் தருக்கினாலும்
கச்சை அம் களிற்றோடு ஏனைக் கவனமா வலத்தினாலும்
அச்சுவக்கிரீவன் ஆதி அரசர்கள் அழன்று வெம் போர்
நச்சி மேல் வருபவாயின் நன்று அது போல்வது உண்டோ.

#1190
எரி எனச் சுரிந்த கேசத்து இருள் எனத் திரண்ட மேனிப்
பெரியன வளைந்த வெள்ளை எயிற்றினர் பிலம்கொள் வாயர்
அரியன செய்ப அன்றே அசுரர் என்று உருவு கண்டே
இரிவனர் ஓடுவாருள் நம்மையும் எண்ணிற்று என்பார்.

#1191
எரி பொங்க எழுந்த வெள்ளை எயிற்றிடை இலங்க நக்குப்
புருவங்கள் நெரிய ஏற்றிப் புகுந்து நாம் வெருட்டும் போழ்தில்
உருவங்கள் பெரியவாறும் உள்ளங்கள் சிறியவாறும்
செரு அங்கண் விளைந்த போழ்தில் காட்டுதும் தெருட்டி என்பார்.

#1192
இமையவர் அரசன்-தானும் இகல்செயக் கருதி வந்தால்
அமையும் அஃது அஞ்சலாமோ ஆண் கடன் அதுவது ஆனால்
நவையினர் உளர் என்று அஞ்சி நடுங்கினர்-தமக்கு நாளும்
சுவை பெறு தோளும் வாளும் சொல்லு-மின் சுருங்க என்பார்.

#1193
மான் அமர் நெடும்_கணார்-தம் மனம் என வெஃகி மைந்தர்
ஊனம்_இல் அகலம் மூழ்கி உள்ளுறச் சிவந்த ஒள் வாள்
ஈனமா மருங்கின் ஆராது இரைக்கு இடைந்து அனல்ப இன்று
தானவர் குருதி மாந்தித் தம் பசி தணியும் என்பார்.

#1194
ஆள் வரை அனைய தானை அச்சுவக்கிரீவன் என்னும்
நீள் வரை மருங்கில் தாழ்ந்த திரு எனும் அருவி நீத்தம்
தாள் வரை இழிந்து வந்து தகை மணி நீல_வண்ணன்
வாள் வரை அகலம் என்னும் கரும் கடல் மடுக்கும் அன்றே.

#1195
ஆதலால் அதனுள் நாமும் அயில் படைப் புணைகள் பற்றி
ஏதிலா மன்னர் என்னும் இரு மரக் கடப்பு வாரி
மீது உலாம் வெகுளி என்னும் வெவ் அழல் முழங்க மாட்டிக்
காதலார் கண்கள் பூப்பக் காய்த்துதும் கைகோள் என்பார்.
**அருக்க கீர்த்தி கூறியது

#1196
உயிரினும் மதிக்கற்பாலது உள்ளப் பேர் உறையின் உள்ளது
அயில் தரும் பனிக்கும் திண்மை மான நாண்-அதனை ஏற்றி
வயிர வில் மனத்தது ஆகக் கையது வையம் காக்கும்
செயிர்_இல் வில்-அதனை நோக்கிச் செம் கதிர்ப் பெயரன் சொன்னான்.

#1197
அடும் திறல் வெகுளிக் காற்றோடு அருக்கப் பேர் உடைய மேகம்
கொடும் சிலை குலவக் கோலிக் குருதி நீர் வெள்ளம் ஓடக்
கடும் கணை என்னும் தாரை கலந்து மேல் பொழிய வேந்தர்
நடுங்கினர் பனிக்கும் போழ்தின் நம்மையும் அறிவது என்றான்.
**விசயன் கூற்று

#1198
அலை கடல்_வண்ணன் தம்முன் அலர் குழை புரளும் காதில்
சிலை படு வயிரத் தோளான் செம் கதிர் முறுவல் தோன்றி
இலை படு வயிரப் பைம் பூண் இமையவர் அல்லர் ஆயின்
மலை படு கிருமியோ நம் மாறு நிற்பனகள் என்றான்.

#1199
வானவர் மருள நாஞ்சில் மற்று இது மடுத்து மாற்றார்
தேன் அமர் அகலம் என்னும் செறுவு செம் சால்கள் போக்கி
ஊன் அமர் குழம்பு பொங்க உழுதிட்டு வென்றி வித்தி
ஏனவர் செவிகள் ஆர இரும் புகழ் விளைப்பன் என்றான்.
**திவிட்டன் கூற்று

#1200
இன்னன பிறவும் ஏனை இரு நிலத்து அரசர் பேச
மன்னவ_குமரன் மாமன் மலர் அடி வணங்கி வாழ்த்தி
மின்னொடு விளங்கு வேலோய் உளம் கொடு விளம்பி என்னை
என்னொடு படுவது அன்றே இனி இப்பால் வருவது என்றான்.
**சடிமன்னன் திவிட்டனுக்கு மந்திரம் கொடுத்தது

#1201
ஆங்கு அவன் மொழிந்த போழ்தின் அமையும் இஃது அறிவது அன்றே
தேம் கமழ் அலங்கல் மார்ப இனிச் சிறிது உண்டு நின்றது
ஓங்கிய விஞ்சை நின்னால் உள்ளத்துக் கொள்ளற்பால
ஈங்கு இவை என்னலோடும் இறைவனைத் தொழுதுகொண்டான்.
**திவிட்டன் மந்திர தேவதைகளுக்கு இட்டபணி

#1202
மந்திர எழுத்து வள்ளல் உள்ளத்துப் பொறித்த போழ்தே
அந்தர விசும்பில் தெய்வம் அணுகின பணி என் என்னா
வெம் திறல் விஞ்சைக்கு ஏற்ற வியன் சிறப்பு இயற்றி வேலோன்
நும் தொழில் புகுந்த போழ்தின் நோக்கு-மின் எம்மை என்றான்.
**அச்சுவகண்டன் விடுத்த தூதுவர் வருகை

#1203
ஓதிய விஞ்சை வாய்ப்ப உலகு அடிப்படாது நின்ற
ஆதி சால் அமர கற்பம் ஆம் என அமரும் காலைத்
தூதுவர் உருவக் காளை செவி சுடு சரம் பெய் தூணி
மாதிரத்து ஒசிந்தவே போல் வந்து ஒருங்கு இருவர் நின்றார்.
**தூதுவர் கூற்று

#1204
பொன் அவிர் திகிரி ஆளும் புரவலர் உரைப்ப வந்த
மன்னவன் தமரம் யாமே வாய் மொழி கேள்-மின் மன்னீர்
கன்னியைத் தருதிரோ அக் கன்னியை மகிழ்ந்த காளை
இன் உயிர் தருதிரோ இ இரண்டில் ஒன்று உரை-மின் என்றார்.
**திவிட்டன் கோபங் கொள்ளுதல்

#1205
கடுத்தவர் கன்னி பேர் உரைக்கக் கண்களுள்
பொடித்தன புகைத் திரள் பொழிந்த தீப் பொறி
அடுத்து எழுகின்றது ஓர் ஆவி ஆர் அழல்
மடுத்தது மனத்திடை மைந்தற்கு என்பவே.
**விசயனது சினம்

#1206
கண் கனல் உமிழ்ந்து தம் புலமும் காணல
வெண் கதிர் மணி முத்தம் விதிர்க்கும் மேனியன்
புண்களுள் எஃகு எறிந்து அனைய புன்சொலால்
விண்களை வெதுப்பினன் வீரன் என்பவே.

#1207
நகு-தொறும் அழல் கொடி நடுங்கும் நுண் துளி
உகு-தொறும் மயிர்த் துளை உயிர்க்கும் வெம் புகை
புகு-தொறும் செவி சுடு புன்சொல் ஆர் அழல்
மிகு-தொறும் விசும்புற நிமிர்ந்து காட்டினான்.

#1208
தோற்றமும் சுடர் ஒளி வடிவும் முன் இலா
வேற்றுமை உடையவாய் விரிந்து தோன்றின
மாற்றம் அஃது ஒழிந்தனன் மனித்தன் அன்மையைத்
தேற்றினன் திரு மகிழ் தெய்வக் காளையே.
**அமரர் செயல்

#1209
மாண்டன மாற்றலர் நாள்கள் பூ_மகள்
ஈண்டு வந்து இவனொடு திளைக்கலுற்றனள்
காண்டும் இக் காளை-தன் கன்னிப் போர் எனா
ஈண்டினர் விண்ணிடை அமரர் என்பவே.
**திவிட்டனது கட்டளை

#1210
தூதுவர் முறைப்படும் தொன்மையால் இவண்
தீதுரை கொணர்ந்து நம் செவிகள் சுட்ட இப்
பேதையர் பிழைத்தது பொறுக்கல் வேண்டுமால்
போதலே பொருள் இவர் போக போகவே.
**மற்ற வேந்தர் கூற்று

#1211
வில்லவன் மொழிதலும் வீர வேந்தர்கள்
ஒல்லென ஒலித்து எழுந்து உடன்று சொல்லுவார்
கல் உயர் கரு வரை கருதியாம் இவை
சொல்லியது எனச் சிலர் சுருங்கச் சொல்லினார்.

#1212
ஆழியும் அகலத்த திருவும் வாங்கி இப்
பாழி அம் தோளினான் பால ஆக்கினால்
ஏழையும் எம்மையும் அறியும் என்றனர்
வாழை மேல் வயிரம் கூர்த்து அனைய மாண்பினார்.

#1213
வாள் நிலா மணி நகை முறுவலாள் திறத்து
ஏண்_இலார் இயம்புவது இயம்பின் அல்லது
காணலாம் எல்லையுள் புகுந்து கட்டுரை
பேணலாம் பிறபிற பீடு காண்பதே.

#1214
கலை மிசை இனிய சொல் கன்னி காளை-தன்
நிலை மிசை அலங்கல் மார்பு இசையக் கேட்டும் ஓர்
மலை மிசை மறைந்து வாய் உரைக்கும் வல்லது இல்
சிலை மிசைத் தோளினான் சேவகங்களே.

#1215
துன்னி வந்து இவன் அடி தொழுவனேல் உயிர்
தன்னதாம் அன்று எனில் தனது அன்று ஆதலால்
மன் உயிர் உவக்குமோ மானம் வேண்டுமோ
என் அவன் உவப்பது என்று எண்ணி வம்-மினே.
**தூதுவர் செல்ல அசரீரி கூறியது

#1216
என்று அவர் மொழிதலும் எழுந்து தூதுவர்
சென்றனர் ஆயிடைத் தெய்வ வாய் மொழி
வென்று வீற்றிருக்கும் இ விடலையே என
நின்றது நில_மகள் பரிவு நீங்கினாள்.

#1217
வரி வளை முரன்றன வான துந்துபி
திரிவன அறைந்தன செம் கண் தீப் பட
முரிவன வீரர்-தம் புருவம் மூரி வில்
பரிவு இறை இன்றி இவன் பாடி வட்டமே.
**நன்னிமித்தங்கள்

#1218
ஆளி ஏறு_அனையவன் அணி பொன் மேனி மேல்
நீள் ஒளி தவழ்ந்தது நெடும் கண் ஏழையர்
தோளும் அங்கு இட வயின் துடித்த வீரர் கை
வாளும் பூநின்றன மலர்ந்தது உள்ளமே.
**பகைப்புலத்தில் தீயசகுனம்

#1219
அரசிளங்குமரனை அனற்றும் மாற்றலர்
முரசினுள் மணி அரவு உறைந்த முத்து அணி
நிரை சுடர் நெடும் குடை அகடு நெய் கனி
பிரசங்கள் புரைபுரை விலங்கப் பெய்தவே.

#1220
கதிர் மணித் தேர்க் கொடிஞ்சு ஏறிக் காக்கைகள்
எதிரெதிர் சிலம்பின எரிந்த மாதிரம்
உதிர நீர்ப் புது மழை சொரிந்த உச்சியின்
அதிர்தரு கவந்தங்கள் ஆடியிட்டவே.

#1221
விடவரும் இயல்புகள் திரிந்து மெல் இயல்
மடவரலவரொடு மாறுபட்டனர்
பட அரவு அல்குலார் காதில் பையெனச்
சுடர் தரு குழைகள்-தாம் அழிந்து சோர்ந்தவே.

#1222
தூ ஒளி மணி முடி சுடரும் கிம்புரி
நா வளைக்கொண்டன நாம வென்றி வேல்
பூ ஒளி மழுங்கின போர் செய் ஆடவர்
ஏ விளை கொடும் சிலை இற்று வீழ்ந்தவே.

#1223
உள் அடி உமைத்துமைத்து அழன்ற மேனியும்
கள் அவிழ் கண்ணியும் கரிந்த கண்களும்
எள்ளுநர்க்கு இட வயின் துடித்த ஏழையர்
வள் இதழ்க் கரும் கணும் வலம் துடித்தவே.
**பகைமன்னர் உறுதி

#1224
வான மீன் உச்சியுள் நின்ற மாற்றலர்
தானையுள் நடுவு வீழ்ந்து அதிரத் தங்களுக்கு
ஊனம் உண்டு என்பதை உணர்ந்தும் உள்ளிடை
மானம் அஃது ஒழிந்திலர் மறம்கொள் மன்னரே.
**தூதுவர் உரைகேட்ட அச்சுவகண்டன் செயல்

#1225
போகிய தூதுவர் பொன் அவிர் ஆழியொடு
ஏகிய நாள் உடையாற்கு இதுவால் என
ஆகிய வாய் மொழி கூறலும் ஆயிடை
நாகம் அழன்று எறி நச்சு என நக்கான்.

#1226
மண் திணி மா நில மன்னரை மால் வரை
ஒண்_தொடி தாதையொடு ஊழ் உயிர் வௌவித்
திண் திறல் பேசிய அச் சிறியானையும்
கொண்டனிர் கூடுதிரோ கடிது என்றான்.
**படை எழுச்சி

#1227
ஆழியினான் அது கூறலும் ஆயிடை
வாழியரோ என மால் வரை வாழ்பவர்
சூழிய ஆனைகள் மாவொடு தேர் பல
தாழலர் பண்ணினர் தாமும் எழுந்தார்.

#1228
கார் அணி கண் முரசு ஆர்த்த கறங்கின
நீர் அணி சங்கம் நிரைந்தன வெம் பறை
தார் அணி தானை சிலம்பின தாழ்ந்தனர்
போர் அணி விஞ்சையர் பூமியின் மேலே.

#1229
குடையும் கொடியும் குளிர் சாமரையும்
படையும் முடியும் பல சின்னமுமே
இடையும் புடையும் இரு பால் அகமும்
அடையும் படையும் அறிதற்கு அரிதே.

#1230
பொன் தவழ் தேர் கலிமாவொடு போதகம்
என்று இவை எங்கும் இடம் பிறிது இன்றி
நின்றன நின்றது வாள் படை அப் படை
சென்று பெரும் திசை ஆர்த்தனர் சேர்ந்தார்

#1231
கொண்டல் கிளர்ந்து பரந்து குவிந்து அலை
மண்டுவ போல் மண மா நகர் முன்னி
விண் தவழ் மின்னிடு வாளினர் வில்லினர்
எண் திசையும் இருள் கூர இழிந்தார்.
**இருபடையும் பொருதல்

#1232
படை என்றலுமே படை பாரதுவும்
இடையின்றி எழுந்தது இரண்டு கடல்
விடை இன்றி வெகுண்டு எழுகின்றன போல்
புடை இன்றி நிரந்தன போர்த் தொழிலே.
**தேர், குதிரை

#1233
காரொடு கார் கடலோடு கரும் கடல்
சீரொடு சென்று எதிர்நேர்வன போல்வன
தேரொடு தேர் கலிமாவொடு மா பல
போரொடு வந்து புகுந்தன அன்றே.
**காலாள், யானைப்போர்

#1234
இலை ஏர் அயில் வாளியொடு எண் திசையும்
சிலையே என உண்டு சிலைத் தொழுதி
மலையே மலையோடு மலைந்தன போல்
கொலை வேழமொடு ஏற்றன குஞ்சரமே.
**குதிரைகளின் செயல்

#1235
கொடி மேல் உடை யானைகள் கும்பம் உதைத்து
அடி மேலனவாக எழுந்து அரசர்
முடி மேலனவாய் முகில் மேலனவாய்ப்
படி மேலன ஆயின பாய் பரியே.
**தேர்களின் செயல்

#1236
ஒரு பால் முடி மேல் உருள் ஆழி உதைத்து
இரு பாலும் எழுந்து எறி பாறு செலப்
பொருபாலவர் கண் சுழலப் பொரு தேர்
வரு பால் அறியாமை மயங்கினவே.
**யானைகளின் செயல்

#1237
நெறி ஆர் நிரை மாவொடு தேர்கள் எடுத்து
எறியா உதையா நுதல் ஏறு கரம்
பறியா முறியாப் படையோர் படையுள்
செறியா மத யானை திரிந்தனவே.
**காலாட்களின் செயல்

#1238
கடுநீரவர் கண் எரிகொண்டு கனன்று
இடி நீர் உருமின் எதிரே எறிய
வடி நீரன வாள் இடையே முரியாப்
படு மீன் என வீழ்ந்து பதைத்தனவே.
**வில் அறுபட்டமை

#1239
வடி நூல் நுதி கவ்விய வாளையொடும்
விடும் மீன் எறி தூண்டில் விசைத்தன போல்
அடும் நாண் இடை ஏறிய அம்பினொடு
நெடு நாண் அற விற்கள் நிமிர்ந்தனவே.
**அருக்ககீர்த்தியின் போர்

#1240
ஆர் அழலான் பெயரான் அணி வெம் சிலை
போர் அழல் வார் கணை மாரி பொழிந்தது
சீர் கெழு விஞ்சையர் செம் தடி நுந்துபு
நீர் கெழு வெள்ளம் நிரந்ததை அன்றே.

#1241
தென்மலையார் திறன் மன்னவன் மன்னிய
வில் மலைவார் தனி இன்மையின் விஞ்சையர்
பொன் மலை ஒன்றொடு போர்செய மேவிய
மன் மலை போல எழுந்து மலைந்தார்.

#1242
கோள் என நாள் என மின்னுபு குன்று எறி
வேள்_அனையான் மிசை விஞ்சையர் வெம் சுடர்
வாளினர் வில்லினர் மால் வரை போல்வன
தோளினர் தாளினர் தோன்றினர் அன்றே.

#1243
தோன்றிய விஞ்சையர் மேல் தொடு வெம் கணை
கான்றது திண் சிலை கான்றலுமே திசை
மான்றது மங்குல் பரந்தது கார் இருள்
நான்றது நண்ணலர் நண்ணலர் ஆனார்.

#1244
தூணி முகத்தது சோர்வு_இல் ஒர் கை ஒரு
பாணி முகத்தது பண்புறு வெம் சிலை
வேணு முகத்தது மண்டலம் வெம் கணை
காணும் முகத்ததுவோ உணர் காலே

#1245
ஒன்று தொடுத்தது ஒர் ஆயிரமாம் பல
என்று தொடுத்தன எண்_இலவாம் சரம்
அன்று தொடுத்து அவன் எய்தன வையகம்
நின்று தொடுத்து நிரந்தன அன்றே.

#1246
விண் மிசை ஏறிய வெம் சரம் விஞ்சையர்
கண் மிசை ஏறலுமே கடிதே திசை
எண் மிசை இன்றி இருண்டனவோ என
மண் மிசை வீழ்ந்து மயங்கினர் அன்றே.

#1247
இருள் பாயினவால் இது என் எனவே
மருள்வார் வெருள்வார் மறைவார் மறிவார்
தெருள்வார் திரிவார் செரு ஆர் கணையால்
உருள்வார்களும் ஆகி உடைந்தனரே.

#1248
உடைந்திடு படையிடை ஒலி கொள் மால் வரை
இடைந்திடும்படி எழுந்து இடறி ஏகினார்
படம் தொடின் உடன்று எழு பணிகள் போல் பகை
கடைந்திடும் கடும் திறல் கால வீரரே.

#1249
இடு தவிசொடு தொடர்பு இரிய வெந்து அகத்து
அடு சரம் படு-தொறும் அலறி வாலதி
நெடிது என நிறுத்தி நீர் உகுத்து நீள் செவி
மடிதர முடுகின மான யானையே.

#1250
முரசுகள் உடைந்தன முடிகள் மூழ்கின
அரசுகள் அவிந்தன அரவத் தேர்க் குழாம்
விரை செலல் இவுளிகள் இடறி வெம் தடி
நிரை செல இழிந்தது குருதி நீத்தமே.
**அச்சுவக்கிரீவனுக்கு ஒரு தூதன் போரழிந்த செய்தியைத் தெரிவித்தல்

#1251
கால் எதிர் கடல் உடைந்திட்டது ஒப்ப நம்
பாலது படை உடைந்திட்டது இன்று என
மால் எதிர் கடல் படை மான வேந்தனைக்
கோல் எதிர் கையவன் தொழுது கூறினான்.

#1252
நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே
போல் பயம் பலவொடு புகழ்களே தரும்
வேல் பயம் கொண்டனர் தெவ்வர் நம் தமர்
கால் பயம் கொண்டனர் கால வேலினாய்.
**பூமியரசர் விஞ்சை வீரரை இகழ்ந்தமை.

#1253
பெரிய வாய் பிறை எயிறு இலங்க நக்குநக்கு
உரிய வாள் எரி எழ முறுக்கி நம்மொடு
பொரிய வந்தார்களும் புறந்தந்தார் இனி
அரியது என் என நக்கார் அவனி மன்னரே.

#1254
கலையினைக் கடந்த சொல் கன்னி காதலன்
அலையினுக்கு உடைந்திலர் அருக்கன் கையது ஓர்
சிலையினுக்கு உடைந்து தம் சிறுமை நாணி நம்
மலையினுக்கு அடைந்திலர் மான மன்னரே.
**அச்சுவக்கிரீவன் செயல்

#1255
ஒன்று வில் இரண்டு தோள் ஒருவன் எய்யவே
இன்று நம் படை உடைந்திட்டதாய்விடின்
நன்று போர் நமர்களது என்று நக்கனன்
குன்று போல் பெருகிய குவவுத் தோளினான்.
**வேறொரு தூதுவன் உரைத்தமை

#1256
இரதநூபுரத்தின் மேல் எழுந்த வேந்தரும்
பொருது தாம் அழிந்து அமர் புறக்கிட்டு ஓடினார்
அரிதினின் விளைவதை அன்றி யாவரும்
கருதிய முடிப்பவர் இல்லை காண்-மினே.

#1257
பாழிப் போர் உடைந்தனர் பகைவர்க்கு இன்று என
ஆழிப் போர்த் தடக் கையாற்கு அவர்கள் நீர்மையைத்
தாழிப் பேர் விலன் தமன் ஒருவன் கூறினான்
ஊழிப் பேர் எரியுள் நெய் சொரிந்தது ஒப்பவே.
**அச்சுவக்கிரீவனது வருத்தமும் கட்டளையும்

#1258
விண் மிசை சென்றவர் மெலிவும் வேற்றவர்
மண் மிசை சென்றவர் மறிந்த மாற்றமும்
புண் மிசை எஃகம் புக்கு ஒளிப்ப போல் மனத்து
உள் மிசை ஒழி படை ஆகி ஊன்றவே.
**இரதாவர்த்தம்

#1259
இருந்து இனி என்னை ஈங்கு எழுக என்று போய்ப்
பெரும் தகை அரும் கலப் பெயர் கொள் குன்றின் மேல்
பரந்தன படையொடு பாடி விட்டனன்
கரும் திரள் முகில் புரை காள மேனியான்.
**அவன் தம்பியர் வருகை

#1260
அச்சுவக்கிரீவனுக்கு இளையர் ஆயினோர்
கச்சை அம் கரும் களி யானை வல்லவர்
விச்சையர் கடல் படை பரப்பி விண் மிசை
நச்சு எரி உமிழ்தரும் நகையர் தோன்றினார்.
**நீலரதன் கூறியது

#1261
இளையருள் பெரியவன் சொல்லும் எம் இறைக்கு
உளைவன செய்தவர் உயிரை மற்று அவர்
கிளையொடும் கீண்டு அரசு ஆடும் அன்று எனில்
வளையொடும் தலை முடித்து இருந்து வாழ்துமே.
**நீலகண்டன் கூறியது

#1262
மாலும் ஆங்கு உடையர்-கொல் மனிதர் நம்மொடு
போலுமால் பொரலுறுகின்றது என்று தன்
கோல வால் வளை எயிறு இலங்க நக்கனன்
நீல மா மணிக்கண்டன் என்னும் காளையே.
**வைரகண்டன் கூறியது

#1263
முளைந்த வாள் எயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன்
விளைந்த தார் வெறி கொள வைகும் வேற்றவர்
உளைந்த போர் நிலத்தினுள் உருள்ப என்றனன்
வளைந்த வாள் எயிற்றவன் வயிரகண்டனே.
**சுகண்டன் கூறியது

#1264
ஒத்து இலங்கு ஒண் சிறை உவணன்-தன்னொடு
பைத்து இலங்கு அரவுகள் பகைப்ப போன்ம் எனக்
கைத்தலம் கையொடு புடைத்து நக்கனன்
தொத்து இலங்கு அலங்கலான் சுகண்டன் என்பவே.
**அச்சுவக் கண்டனது கட்டளை

#1265
தம்பியர் மொழி எனும் தயங்கும் மாரியால்
வெம்பிய கொடு மனம் குளிர்ந்து வெய்யவன்
நம் பெயர் முனிந்தவர் நயந்த மண் மிசை
நும் பெயர் நிறுத்து-மின் என்று நோக்கினான்.
**திவிட்டன் வந்த படையினை எதிர்த்தல்

#1266
நஞ்சினை நஞ்சு சென்று எரிக்கலுற்ற போல்
விஞ்சையர் வெம் சினம் பெருக்கி மேல்வர
வஞ்சம்_இல் மணி_ஒளி_வண்ணன் தானையும்
எஞ்சல்_இன்று எழுந்து எதிரூன்றி ஏற்றதே.
**இருபடைகளும் பொரும் வருணனை

#1267
விண்ணினது அளவு மேல்வந்த வேல் படை
மண்ணினது அளவு மாறு ஏற்ற வாள் படை
கண்ணிய கடல் படை இரண்டு-தம்மையும்
எண் இனி நமக்கு எளிதாவது இல்லையே.

#1268
கடல் இரண்டு உள எனில் கடுக்கும் அக் கடல்
இடை நிலம் உடைமையின் என்றும் ஒப்பு_இல
அடல் அரும் படையவை இரண்டும் அவ்வழி
அடல் அரும் படையவை இரண்டும் ஒக்குமே.

#1269
திண் திறல் தேர்களே செறிந்த என்னவும்
கொண்ட போர் வேழமே குழீஇய என்னவும்
விண் தவழ் புரவியே மிடைந்த என்னவும்
கண்டவர் கண்டுழிக் கலந்து தோன்றுமே.

#1270
கை வலப் படையினர் கழலர் கச்சையர்
செவ் அலர்க் கண்ணியர் செம் கண் ஆடவர்
இ உலகு இவர்க்கு இடம் இல்லை முன் இவர்
எவ்வுலகு உடையவர் என்னத் தோன்றினார்.

#1271
அன்று போர் மலைந்தது தானை ஆயிடைச்
சென்று போர் படும் இடம் திசைகள் இன்மையால்
நின்று போர் ஆடவர் நேர் ஒப்பார்களோடு
ஒன்று போர் உலகினை ஊழி ஒத்ததே.

#1272
பேரினும் பெருகிய சின்னம்-தன்னினும்
தாரினும் மாறுமாறு எறிந்து தம்முளே
தேரினும் தேரினும் திளைக்கின்றார் சிலர்
காரினும் பெரிது அவர் கணை பெய் மாரியே.

#1273
தாளிடை மிடைந்தன தாள்கள் தம்முளே
தோளிடை மிடைந்தன தோள்கள் தோளிடை
வாளிடை மிடைந்தன வாள்கள் மற்று இவை
நாள் இடைப்படும்-கொலோ நாங்கள் சொல்லினே.

#1274
குடை நிலம் மறைப்பவும் கொடிகள் போர்ப்பவும்
இடை நிலம் இருள் மெழுக்கிட்டது ஆயிடைப்
படை நிலவி இலங்கவும் பணிகள் மின்னவும்
இடை நிலம் இடையிடை இலங்கித் தோன்றுமே.

#1275
கருப்பு உடைக் கைகளால் புடைத்துக் கண்களுள்
நெருப்பொடு நெருப்பு எதிர் எறிப்ப யானைகள்
மருப்பொடு மருப்பு இடை மிடைந்து மான்று அரோ
பொருப்பொடு பொருப்பு அவை பொருவ போன்றவே.

#1276
கறங்கு எனக் கால_சக்கரங்கள்-தாம் என
மறம் கிளர் மன்னர்-தம் மகுட நெற்றியும்
உறங்கல்_இல் கடாக் களிற்று உச்சி மேலுமாய்த்
திறம் கிளர் புரவிகள் திரிதர்கின்றவே.

#1277
செம்பு இயல் கிடுகின செம்பொன் தட்டின
அம்பு பெய் தூணிய அரவத் தேர்க் குழாம்
வெம்பிய கணை மழை விரவி வில்லொடு
வம்பு பெய் மழை முகில் பொருவ போன்றவே.

#1278
இன்னவர் இன்னுழி இன்ன செய்ப என்று
என்னவர் அறிவும் அங்கு இடைபுகா வகை
மின் அவிர் எஃகினும் மிடைந்த வாளினும்
மன்னவர் செருத் தொழில் மயங்கியிட்டவே.

#1279
அச்சம்_உடையார் அகல்க ஆற்றுபவர் ஏற்க
எச்சம்_இல் குடி_தலைவர் போக என எங்கும்
கச்சையர் கரும் கழலர் காலனையும் நோனார்
வெச்சென விழித்து விறல் வீரர் திரிகின்றார்.

#1280
ஏற்றவர் இமைப்பினும் இகழ்ந்து எறிதல் செய்யார்
தோற்றவர் புறக்கொடையும் நாணி மிக நோக்கார்
வேற்றவரை வீர நெறி காண்-மின் இது என்று
தேற்றுவனர் போல் அவுணர் சென்று திரிகின்றார்.

#1281
தார் உடைய மார்பினிடை சார் கணை குளிப்ப
வேரொடு பறித்தனர் எழுத்து வரி நோக்கிப்
பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி
நேர்படுதும் என்று சிலர் நேடுபு திரிந்தார்
**அரிசேனன் போரேற்று வருதல்

#1282
கேடகம் இடத்தது வலக்கை கிளர் ஒள் வாள்
ஆடகம் அடுத்த அணி பூணன் அலர் தாரான்
தோடு அகம் அடுத்த துதை கண்ணியொடு துன்னார்
ஊடு அகம் மடுத்து ஒருவன் உந்தி நனி வந்தான்.

#1283
வெறி மின் விரிகின்ற விறல் ஆழி இறை தோழன்
அறி-மின் பெயர் யான் அ அரிசேனன் என நின்றே
எறி-மின் எதிர் என்னொடு இகல் வல்லிர் உளராயின்
மறி-மின் அது அன்றி உயிர் வாழலுறின் என்றான்.
**வியாக்கிரரதன் அவனை எதிர்த்தல்

#1284
அங்கு அவன் மொழிந்த மொழி கேட்டலும் அருக்கன்
வெம் கணை தெரிந்தது விலக்கி விறல் வெய்யோய்
இங்கு இவன் நினக்கு நிகரோ என விசைத்தே
பொங்கு புலித் தேர்ப் பெயரன் போந்து பொரலுற்றான்.

#1285
பொன்னை அணி கொண்ட புனை கேடகம் எடுத்து
மின்னை உமிழ்கின்ற சுடர் வாள் மிளிர வீசி
நின்னை அறியாதவர்கள் நின்று இரிய வந்தாய்
என்னை அறியாய் அறி இனித் தவிர்தி என்றான்.

#1286
நின்னை அறிவன் பெரிதும் நின் முறையளாய
கன்னியை ஒர் காளை பிறன் எய்துவது கண்டும்
மன்னும் மண இல்லுள் வயிறார அயில்கின்றாய்க்கு
இன்னும் உளவோ புதிய என்று மிக நக்கான்.

#1287
கன்னியர் தம் பான்மை வழி செல்ப அது கண்டாய்
முன்னிய மொழிப் புலவர் நூல் முறைமை ஏடா
அன்னது அறியாதவன் அயக்கிரிவன் அன்றே
என்னை அறியாமை நினக்கு இன்னும் உளது என்றான்.

#1288
வாய் உரை இருக்க நம் வாளின் ஒளி வாயால்
தீ_உரை செகுத்து மலைக என்று செயிர் கொண்டு
காய் எரி விழித்தனர் களித்தனர் தெளிர்த்தார்
மா இரு விசும்பிடை மடுத்து மலைகுற்றார்.

#1289
தங்கு ஒளி தயங்கு மணி கேடகமும் ஏனைச்
செம் களி மயிர்ப் புளக சேடகமும் ஏந்தித்
திங்களொடு ஞாயிறு திளைத்து இரு விசும்பின்
அங்கண் மலைகின்ற உளவேல் அவையும் ஒத்தார்.

#1290
போர் இகலி ஆரமொடு பூண் மணிகள் மின்ன
நேர் இகலும் வாள்களொடு கேடகம் நிழற்றச்
சாரிகை கறங்கு என மலைந்து சுழல்கின்றார்
நீர் அக வளாகம் அடு சக்கரம் நிகர்த்தார்.

#1291
ஓவு_இல் அயில் வீசும் ஒருவன் அது விலக்கும்
காவலொடு மீளும் ஒருவன் அவர் கருத்தின்
ஆவது அது அன்றி அயல் நின்றவர்கள் காணும்
பாவனையர் அல்லர் பல பாடி இனி என்னோ.

#1292
கொந்து எரி இரும்பு எறிஞர் கொல் செய் களன் ஒத்தும்
வந்து வன வேங்கை மலர் கால் சிதர்வ போன்றும்
நுந்தியவர் வீசும் ஒளி வாள் நுதிகள் தாக்கிச்
சிந்தின தழல் பொறி சிதர்ந்த திசை எல்லாம்.

#1293
ஆள் அடும் அடல் தகையனாய அரிசேனன்
தோளொடு துதைந்து எறியும் வாள்-அதனை நோக்கிக்
கோளொடு மடுத்த குளிர் மா மதியம் ஏய்ப்ப
வாளொடு மடுத்து மணி கேடகம் மறைத்தான்.

#1294
ஆங்கு முன் எறிந்து பெயர்கின்ற அரிசேனன்
பூம் கமழ் அலங்கல் உடை மார்பம் இரு போழாய்
நீங்க எறிந்தான் நெடிய மாற்கு இளைய காளை
ஓங்கிய விசும்பினவர் கண்டனர் ஒளித்தார்.

#1295
அழலான் பெயரவன் மைத்துன அரிசேனனை எறியக்
கழலான் கடல் ஒளியான் தமர் கலந்து ஆர்த்தனர் கரிய
நிழலான் தமர் கரிந்தார் சிலர் இரிந்தார் பலர் நெரிந்தார்
தழல் ஆர் அயில் வலன் ஏந்துபு சார்ந்தார் தலை சரிந்தார்.

#1296
அரிசேனன் ஆங்கு அழிவாதல் கண்டு அயில் வாள் ஒளி மிளிரா
விரி சீர் வட்ட மணி கேடகம் சுழலா நகு வருவான்
பரி சேர் அணி உயர் தேர் மிகு பல யானையும் எறியாத்
திரி சாரிகை நிகரானவர் உளரோ திறல் வினவும்.

#1297
சிகரி முடி திரு மா மணி செறி குண்டலம் இலங்கத்
திகிரிப் படை அரசன் திறல் சிறக்க எனப் புகழ்ந்து
பகரும் நல குணசேனனும் பருவம் முகில் இடி போல்
புகரும் மத களிறு என்னவும் புலி என்னவும் திரிவான்.

#1298
அருக்ககீர்த்தி-தன்,
பெருக்கம் வாழ்த்தியே
திருக்கை வேலினான்
எரிக்கும் ஆற்றலான்.

#1299
பொன் அம் குன்றவன்,
மின்னும் வாளினன்
மன்னன் தோழனாம்
முன்னி வந்தனன்.

#1300
வந்தவன் பெயர்
இந்திரன் எனும்
கந்து கொல் களிறு
உந்து காமனே.

#1301
இருவரும் எதிர்,
பொருதும் வேலையின்
அருகு நின்றவர்,
வெருவி ஓடினார்.

#1302
வாளினால் ஒரு,
தோளை வீழ்த்த ஓர்
தோளினால் அவன்,
வாளை இட்டனன்.

#1303
இட்ட வாள் கரம்
ஒட்டித் தட்டிப்பின்
நட்டம் ஆகு என,
வெட்டி வீழ்த்தினான்.

#1304
குணசேனன் வீழக் கண்டு கூற்றினும் கொடிய நீரான்
இணை சேனை-தன்னுள் உள்ளோன் இயம்பிய களிப்பின் மிக்கான்
கணை சேர்ந்த தூணித் தோளான் கைச் சிலை பிடித்துக் கொண்டு
திணை சேர வருக என்று வரசேனன் திகழ்ந்து நின்றான்.

#1305
மற்று அவன் நிற்பது ஓர்ந்து மத களிறு அனைய காளை
கொற்றவன் அருக்ககீர்த்தி குணம் புகழ்ந்து ஆடிப் பாடிக்
கற்றவன் கலைகள் எல்லாம் காமுகன் என்னும் பேரான்
பற்றிய வில்லும் அம்பும் பாங்குடன் பரித்து வந்தான்.

#1306
வில் ஒரு கையின் ஏந்தி வெம் கணை குழைய வாங்கிச்
சொல்ல அரும் மாரி போலத் தொடுத்து அவன் விடுத்தலோடும்
மல்லுறு காளை-தன் மேல் வராமலே விலக்கியிட்டுக்
கல்லெனக் கலங்கி வீழக் கைச் சிலை கணை ஏறிட்டான்.

#1307
கார் செயல் முழங்கி ஆர்ப்பக் காளையும் கனன்று மிக்க
வார் சிலை வணங்க வாங்கி வாய் புக விடுத்தலோடும்
போர்செயும் களத்து வீழ்ந்தான் புகழ் வரசேன என்னத்
தார் செய் தானவர்கள்-தம்முள் தானவன் ஒருவன் வந்தான்.
**அரிகேதனன் செயல்

#1308
குடர் மாலைகள் தலை சூடின குழவித் தலை குழையாப்
படர் காதினுள் அவை பெய்தன பகு வாய் அது குருதித்
தொடர் மா மழை மத யானை கை துணியா அவை இடையே
சுடர் மாலைகள் விடு சூலமொடு ஒருவன் திரிகின்றான்.

#1309
கள் ஆவது குருதிப் புனல் கலன் ஆவது கையே
நள்ளாதவர் உடலம் பிற கறியாவது நமக்கு என்று
உள்ளாதவர் உளராம்-கொல் இ உலகின் என உரையா
விள்ளாதவர் சிலர் பின் செல விரல் வீளைகள் விளியா.

#1310
களி யானையின் எயிறு ஆயின பறியா அவை கறியா
அளியாது பல் படையாளர்கள் அடையார்களை உடனே
ஒளி வாள் இடையிடை விட்டு உடல் உருவா உயிர் பருகாத்
தெளியாது எதிர் வருவார் அயில் உருவா வகை செறியா.

#1311
எரி போல்வன சுரி பங்கியொடு இருள் போல் இருள் மெய்யோடு
அரி போல் அதிர் அகல் வானுற நிமிரா அடி புடையாப்
பரி போல்வன பிடியா உடல் அடியா இடைபடு தேர்
பொரி போல் எழ உதையா இவன் வருகின்றது ஒர் பொலிவே.

#1312
ஆழிப்படை_உடையான் தன் அரிகேதனன் என்போன்
பாழிப் படை பொருவாரொடு பயில் போர் அலது அறியேன்
ஏழைப் படை இதுவோ எனக்கு எதிர் ஆகுவது ஆயில்
வாழிப் படை பொருது என் என வையா நனி வந்தான்.
**சார்த்தூலகன் அவனை எதிர்த்தல்

#1313
கள்ளால் களி_இலனால் இகல் களம் மண்டிய செருவின்
உள்ளால் களியுற்றான் இவன் உயிர் உண்க என உருவி
நள்ளாதவர் தலை வவ்விய நகை வாள்-அது வீசித்
தள்ளாதவன் எதிரே மிகு சார்த்தூலகன் ஏற்றான்.
**அரிகேதனன் மாயச் செயல்கள்

#1314
வரையால் என முகிலால் என இருளால் என மறியும்
திரை ஆர் கடல் அளவே செல விரியும் நனி சிறுகும்
நிரையா முகில் முடி தேய்தர நிமிரும் நிலம் இதனுள்
புரையார் இடம் மறையும் இது பொருகின்றது ஒர் பொலிவே.

#1315
மாலைத் தலை வளர் மா மதி நிகரும் வளை எயிறும்
சோலைத் தலை மலை போல்வன தோளும் இவை உடையான்
காலைத் தலை இளஞாயிறு புரை வான் மிசை கதுவாச்
சூலத் தலை நுதியால் அவன் ஆகம் துளையிட்டான்.
**சார்த்தூலகன் அவனைக் கொல்லல்

#1316
இடுவானை அ இடு சூலமொடு உடலும் இரு துணியாப்
பட வீசினன் அயில் வாள்-அது படலும் பல மாயன்
அடை வாய்மையின் உருவம் முதல் அதுவே தனது ஆகத்
தட மால் வரை என வீழ்தலும் உடைவார் தமர் ஆனார்.
**தூமகேதனன் போரேற்றல்

#1317
வாழும் நாள் உலந்து மற்று அவன் மண் மேல் மலை என மறிதலும் மலை மேல்
ஆழியான் தமர்கள் அஞ்சினார் அஞ்சும் ஆயிடை அடு திறல்_உடையான்
ஊழி நாள் எரியும் கூற்றமும் உருமும் ஒப்பவன் கைப் படை நவின்றான்
சூழி மால் யானைத் துளை மதம் செறிப்பத் தோன்றினான் தூமகேதனனே.

#1318
மலை எடுத்திடுகோ மா நிலம் பிளக்கோ மறி கடல் அற இறைத்திடுகோ
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ
சிலை இடத்து_உடையார் கணை வலத்து_உடையார் சிலர் நின்று செய்வது ஈங்கு என்னோ
நிலையிடத்தவருள் நிகர் எனக்கு உளரேல் நேடு-மின் சென்று என நின்றான்.
**சுவலனரதன் தூமகேதனனை நெருங்குதல்

#1319
வண்டு இனம் பாடும் மாலையன் வரித்த கச்சினன் வயிரப் பூண் நிரைத்த
தண்டினன் கழலன் தமனியத் தாரான் சார்ந்தனன் சார்தலும் அவனைக்
கண்டனன் அன்றே கடல் ஒளி மேனிக் காளை-தன் மாமனுக்கு இளையான்
உண்டு இனி நமக்கு ஓர் போர் என எதிரே உவந்து சென்றவற்கு இவை உரைத்தான்.
**சுவலனரதன் கூறியது

#1320
மலை எடுத்திடுவாய் மா நிலம் பிளப்பாய் மறி கடல் அற இறைத்திடுவாய்
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய்
நிலையிடத்து உளரோ நிகர் எனக்கு என்பாய் நின்றனை நிகர் உனக்கு ஆகித்
தொலைவிடத்து அல்லால் சொல் இவை நுங்கட்கு ஒழியுமோ தூமகேதனனே.
**தூமகேதனன் செயல்

#1321
என்றலும் அது கேட்டு எரி உடைத் தேரோன் என்பவனாம் இவன் என்றே
நன்றுநன்று என்று நக்கனன் நக்கே நாண்_இலர் நம் மலை வாழ்வார்
இன்று எனக்கு எதிராய் நீ-கொலோ பொருவாய் என்றனன் இனையன மொழியாக்
குன்றினும் பெரியான் கூற்றினும் வெய்யோன் கொண்டனன் தண்டு கை வலித்தே.
**இருவரும் பொருதிறன்

#1322
இன்று எனக்கு எதிராய் நீ-கொலோ பொருவாய் என்று இகழ்ந்து உரைத்தனை ஏடா
நின்று எனக்கு எதிராம் நீர்மையர் நின் போல் நிரம்ப வாய் திறந்து உரைப்பவரோ
என்றனன் எனலும் எதிர் தெழித்து அவனும் எழுந்தனன் எழுந்தனன் இவனும்
அன்று போர் மலைந்தார் அதிர்ந்தது இ உலகம் அமர் ஒழித்து அரசரும் நின்றார்.

#1323
ஆர்த்தன திசைகள் அதிர்ந்தது இ உலகம் அலை கடல் கலங்கின இருளால்
போர்த்தது விசும்பு புலம்பின விலங்கல் புரண்டன பொரு வரைத் துறுகல்
சார்த்தினர் புடைக்கும் தண்டினர் எதிரத் தாங்கியும் வாங்கியும் தடுத்தும்
வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால் விசும்பினை மயங்கவே திரிந்தார்.

#1324
கண்டவர்க்கு எல்லாம் கண்_உளார் போல்வார் காண்டலுக்கு அரிது அவர் உருவம்
தண்டினது ஒலியும் தங்கள் ஆர்ப்பு இசையும் தயங்கு தார் ஆரமும் விரவி
எண் திசை மருங்கும் இடைநிலத்திடையும் இருள் கெழு விசும்பினது அகமும்
கொண்டன சிலம்பு குலுங்கின விலங்கல் கூற்றமும் தலை பனித்ததுவே.
**தூமகேதுவீழ அவனைச் சார்ந்தார் நடுங்குதல்

#1325
தட்டுப் போர்-அதனுள் தமனியக் கடிப்பும் தாரினோடு ஆரமும் சரியப்
பட்டுப்போய் உருண்டான் அவருள் அங்கு ஒருத்தன் பரு வரை கரியது ஒன்று அனையான்
துட்டப் போர் யானைத் தூமகேதனனும் தோற்குமோ ஒருவனுக்கு என்று
மட்டுப் போது அணிந்த மணி முடி மன்னர் மயங்கினார் மானமும் இழந்தார்.
**அங்காரவேகன் திவிட்டனது சேனையின் மேல் வருதல்

#1326
பொருது ஆங்கு அழிந்து புகை கேது வீழ அரிகேது முன்னம் முடிய
எரி தாங்கு வேலொடு இனி ஈங்கு நின்று பெறுகின்றது என்னை எழுக என்று
அரிது ஆங்கண் ஆவது எளிதாகுமாறு ஒர் அமர் செய்கை கொண்டு பிறர் முன்
கரி தாங்கள் ஆன கழல் மன்னர் ஏறு வரும் அங்கு ஒர் காளை கடிதே.

#1327
கணி கொண்டு அலர்ந்த நற வேங்கையோடு கமழ்கின்ற காந்தள் இதழால்
அணி கொண்டு அலர்ந்த வன மாலை சூடி அகில் ஆவி குஞ்சி கமழ
மணி குண்டலங்கள் இரு பாலும் வந்து வரையாக மீது திவளத்
துணி கொண்டு இலங்கு சுடர் வேலினோடு வருவான் இது என்-கொல் துணிவே.
**தேவசேனன் அவனை எதிர்க்கச் செல்லுதல்

#1328
அரு மாலை வேல் வல் அழல்வேகன் ஆகும் அவன் ஆயில் ஆக அமைக
எரி மாலை வேல் வல் இளையார்கள் நிற்க இவன் என்னொடு ஏற்க எனவே
பொரு மாலை வாள் கை பொலி கேடகத்தன் அணி போது இலங்கு முடியன்
செரு மாலை மன்னர் இறை தேவசேனன் எதிரே சிவந்து செலவே.
**அங்காரவேகன் கூறியது

#1329
மலை மேலும் என்னை மதியாது வாழ்தி மனிசர்க்கு வந்து படையாய்
நிலம் மேலும் நின்று பொருவான் நினைந்து வருவாய் நினக்கு இது உறுமே
சலம் மேலும் இன்ன உடையாயை வென்று தலை கொண்ட பின்னை நுமரைக்
குலம் வேர் களைந்து குடி பொன்றுவிப்பன் இது யான் மகிழ்ந்த குணனே.
**தேவசேனனுடைய மறுமொழியும் இருவரும் பொருதலும்

#1330
மலை மேலும் நின்னை மதியாது வாழ்வன் மனிதர்க்கு வந்து படையாய்
நிலம் மேலும் நின்று பொருவான் புகுந்த நிலை கண்டு நின்றும் இஙனே
சலமே உரைத்தி இதுவோ உன் ஆண்மை தழல்வேக என்ன எதிரே
உலம் ஏசு தோளின் ஒளி வேலினோடும் ஒருவான் எதிர்ந்து பொருவான்.

#1331
வாள் வீசும் ஆறும் வடி வேலின் வந்த வடி வேல் விலங்கும் வகையும்
தோள் வீசும் ஆறும் அவை மீளும் ஆறும் இடை சொல்லும் வீர மொழியும்
தாள் வீசு போழ்து கழல் ஓங்கு மாறும் எதிர் தாங்கள் ஆர்க்கும் ஒலியும்
நாள் வீயல் அன்றி உரை வீய யாவர் நவில்வார் நமக்கும் அரிதே.

#1332
மாலால் எதிர்ந்து மலைவாயை நீடு பொரவைப்பது என்னை இனி என்
வேலால் அழிப்பன் என வேல் எறிந்து விறல் வேகன் ஆர்ப்ப மறவோன்
மேலால் இலங்கு மணி கேடகத்தின் ஒரு பால் விலங்கி ஒரு பால்
தோலாத வாளின் எறியத் துணிந்து சுடர் கான்று வீழ்ந்தது அதுவே.

#1333
எய் வேல் அறுத்து வறியானை நோக்கி எறியாது நிற்ப அவன் ஓர்
நெய் வேல் பெயர்த்து நிருமித்து அஃது ஏந்தி உரும் ஒத்து நேர்ந்து பொருதான்
வெவ் வேல் தெருட்டி ஒரு தோள் நிமிர்த்தி விரல் ஒன்று சுட்டி வரவே
வை வேலினோடும் நிமிர்கின்ற தோளை அற வீசினான் அ மறவோன்.
**அங்கார வேகன் இறத்தல்

#1334
நெய்யுற்ற வேலும் ஒரு தோளும் வீழ ஒரு தோளின் நீடு செருவைச்
செய்யுற்ற போழ்தின் எதிரே விலங்கி இது தேவசேனன் மொழியும்
கையுற்றது ஒன்று கவலேல் உனக்கு இது உறுமாறு போக எனவும்
மையுற்ற காளை வருவானை வாளின் உயிர் வவ்வினாம் அ மறவோன்.
**சுவணகேது தோன்றுதல்

#1335
தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல் தாதை மைத்துனனாம்
சேமம் ஆர்ந்த தனிச் செங்கோல் தேவசேனன் கை வாளால்
சாம_வண்ணன் தழல்வேகன் சாய்ந்தான் சாய்ந்த பொழுதத்தே
தூமம் ஆரம் கமழ் குஞ்சிச் சுவணகேது தோன்றினனால்.
**அவன் உறுதி

#1336
அஃதே அஃதே அங்காரவேகன் ஆங்கு ஓர் அயில் வாளால்
வெய்து ஆங்கு உற்று வீடினனால் நன்றேநன்றே மறுமாற்றம்
மை தோய் மலையும் மண்ணகமும் நமதாச் செய்வென் செய்யேனேல்
செய் தார் அமரர் உலகு ஆள்வன் இரண்டிலொன்று திண்ணம் இதே.
**சடிமன்னன் அவனை ஏற்றல்

#1337
என்னா இரண்டு மருங்கினும் மற்று இள நல் யானைக் குழாம் சூழப்
பொன் ஆர் தேரும் புரவிகளும் மிடைந்து பூமி பொறை கூர
முன்னால் செல்ல வருவானை முந்நீர்_வண்ணன்-தன் மாமன்
மின் ஆர் விளங்கு விறல் வேலான் கண்டே வெகுண்டு மேல் சென்றான்.

#1338
கால் நல் புரவி கலிமாவோடு எதிர்ந்த கரும் கை மத வேழம்
மான யானை-தம்மோடே மலைந்த தேரும் மாறு ஏற்ற
ஈனம் இல்லா இளையாரோடு இளையார் திளைத்தார் இவ்வகையே
தானை தம்முள் தாக்கலுறத் தாமும் தம்முள் தலைப்பெய்தார்.
**சுவணகேதுவின் உரை

#1339
அருவி இலங்கும் மத யானை அனல ஊன்றி அணை போழ்தில்
குரவரோடு படை பொருதல் கூடிற்று அறன்று குல வேந்தே
பொருவர் என்னப்படுவார் அங்கு ஒருவர் போந்து பொர ஒருவர்
ஒருவி நிற்றல் உரம்-கொல்லோ என்றான் உவணம் ஏந்தினான்.
**சடிமன்னனின் மறுமொழி

#1340
குரவர் என்னும் உபசாரம் இருக்கக் கோதை மிளிர் வேலாய்
பொருவர் ஆயின் யாரோடும் பொருவர் பூமி வேண்டுபவர்
ஒருவி நிற்பது உரம்-கொல்லோ என்னும் உரையும் உணர்தி இவண்
இருவேமுள்ளும் யார் பால் அஃது உறுவது என்றான் ஒளி முடியான்.

#1341
ஆக அமைக அதுவே அ அரச நீதி ஆகிவிடில்
போக பொருவன் எனப் புகைந்து பொரு வெம் சிலை ஒன்று இடன் ஏந்தி
வேக யானை செல உந்திச் சிறு நாண் எறிந்து வெம் சரங்கள்
மாகம் எல்லாம் உடன் நடுங்கத் தொடங்கினான் அ மழை_போல்வான்.

#1342
தொடங்குகின்ற சுடு சரங்கள் சுருங்கி ஒரு கை செவி-காறும்
முடங்கும் ஒரு கை சிலை வளையா நிமிரும் கண்டது இத்துணையே
இடங்கள் இன்றி விசும்பு எல்லாம் இருள ஈர்க்கோடு ஈர்க்கு உதையத்
தடங்கல் இன்றி அடு சரமே மிடைந்த தரணி வட்டம் எல்லாம்.

#1343
சொல்லால் மலிந்த புகழினான் சுவணகேது சொரிகின்ற
கல் ஆர் கொண்டல் பெயல் போலும் கணையின் மாரி கழல் வேந்தன்
வில்லால் செய்த விசாலவட்டம் மேலும் நாலு மருங்கினுமாய்க்
கொல்லால் செய்த வேலாற்குக் குடையாய் நின்று கவித்ததே.

#1344
வில்லால் செய்த விசாலவட்டம்-தன்னால் அந்தில் விலக்கப்பட்டு
எல்லாத் திசையும் சரம் சிந்தி இருள வீழும் எல்லை-தன்னுள்
சொல்லால் புகழ்தற்கு அரியான்-பால் தூணி வறியவாதலும் திண்
மல்லால் செய்த தோளான் மேல் மாய வெம் போர் செய்குற்றான்.

#1345
செய்யலுற்ற மாயம்-அதும் சிலையும் நிலையும் சுருங்கிய வைத்து.
எய்யலுற்ற பகழியையும் எண்ணி வேந்தன் எதிர் செறுப்பான்
மையலுற்ற மத யானை மலைப்ப உந்தி மாற்றானை
நையலுற்றாய் என உரையா நாம வாளி சிந்தித்தான்.

#1346
தொடுத்தான் தொழுத வாளி-அது சுவணகேது கையகத்து
மடுத்த சிலையும் பகழியும் வெம் மனத்துக் கொண்ட மாயம்-அதும்
அடுத்துத் துணித்து அப்புறம் ஏகி அரசர் குழாங்கள் இரியப் பாய்ந்து
உடுத்த தூவி தோன்றாமை நிலத்தினுள் புக்கு ஒளித்ததுவே.

#1347
அம்பும் சிலையும் கைம்மறிய அகத்த விஞ்சை துணிப்புண்டு
வெம்புகின்ற மனத்தினனாய் வெய்யோன் மீட்டு விறலோன் மேல்
வம்பு கொண்ட வளையங்கள் கணையம் விட்டுவிட்டு ஏறு
செம்பொன் ஆழி இவை எல்லாம் சென்று பாயச் சிந்தித்தான்.

#1348
இப்பால் இவர்கள் பொரும் பொழுதில் யானை இரண்டும் எதிர் தாக்கிக்
கை-பால் எடுத்துக் கறை மருப்பு மிடைந்து கண்கள் எரி சிந்தி
மெய்-பால் எடுத்துக் குத்தியும் மெய் விலங்கிப் பாய்ந்தும் ஒன்றொன்றைப்
பொய்-பால் இன்றி எடுத்திட்டுப் புடைத்தும் பெயர்த்தும் பொருதனவே.

#1349
துண்ட வேகப் புள்_உயர்த்தான் துளைக் கை யானைச் சுடர் முடியான்
புண்டரீகக் கொலையானைக் குடைந்து போகும் பொழுது-அகத்துக்
கொண்ட வாளன் கேடகத்தன் குதி கொள் வான் போல் எழுந்து எதிரே
மண்டு வானை வய வேந்தன் கண்டு வாளி சிந்தினான்.
**சுவணகேது அழிதல்

#1350
மடுத்த வாளும் கேடகமும் கவசக் கண்ணும் மார்பகமும்
அடுத்துக் குத்தினால் போலக் கழிந்தது அம்பு கழிதலுமே
எடுத்து மறிக்கப்பட்டான் போல் இலங்கு பூணும் ஆரமும் தேம்
தொடுத்த தாம மாலையும் முன் சொரிய வீழ்ந்தான் சுடர் வேலான்.
**அவன் படை சிதறிப்போதல்

#1351
தூவி ஆர் சுவணக் கொடி
மேவினான் படவே மிகை
மாவினார் படை வாரி போர்
ஓவி ஆங்கு உடைவுற்றதே.
**சிரீசேனன் போர் மீது செல்லல்

#1352
வென்று வேற்றவர் நின்றனர்
என்ற மாற்றம் இசைத்தலும்
நன்றுநன்று என நக்கு மேல்
சென்றனன் சிறீசேனனே.

#1353
கடைந்த கார்க் கடல் போல் கலந்து
உடைந்த ஆள் படை ஓடு நீர்க்கு
அடைந்த வான் சிறை ஆயினான்
மிடைந்த வேல் படை வீரனே.
**ஓடும் தம்மினத்தார்க்கு அவன் கூறியது

#1354
விஞ்சை வேந்தர்களே மிகை
அஞ்சுவார் என ஆயிடை
நஞ்சு_அனார்களை நக்கு வை
வெம் சொல் ஆன விளம்பினான்

#1355
வாளர் வார் கழல் வீக்கிய
தாளர் தாம் உடைந்து ஓடினால்
நாளை நாண் உடை நங்கைமார்
தோளை நாண்_இலர் தோயவே.

#1356
பொன்றும் இ உடலின் பொருட்டு
என்றும் நிற்கும் இரும் புகழ்
இன்று நீர் கழிந்தீர்களால்
குன்றின் மேல் குடை வேந்திர்காள்.

#1357
மான மா மணி வீழ்த்து உயிர்க்கு
ஊனமாம் என ஓடுவீர்
ஈன வார் மயிர்க்கு ஏதமாம்
கான மா அது காணுமே.
**சிரீசேனன் ஆயுதத்தைப் பிரயோகித்தல்

#1358
ஈண்ட இன்னன சொல்லலும்
மீண்டு விஞ்சையர் ஏற்றனர்
ஆண் தகைச் சுடர் ஆயிடைத்
தூண்டினான் சுடர் வேலினான்.
**இருபடைகளும் பட்ட அவதி

#1359
மிண்ட வாளினர் விஞ்சையர்
மண்டினார் எதிர் மண்டலும்
கண்டகண்டம் அது ஆயினார்
விண்டனர் படை வீரரே.

#1360
கருவிப் புட்டிலின் கண்டமும்
பொரு வில் பக்கரைப் போழ்களும்
விரவி வெம் கள வாய் எலாம்
புரவித் துண்டங்கள் போர்த்தவே.

#1361
உருப்பு நீர ஒள் வாள்களால்
நெருப்பு நீரவர் வீசலும்
பொருப்பு வீழ்வன போன்றன
மருப்பு நீள் மத யானையே.

#1362
சீர் முகந்த செம் சேற்றினுள்
ஆர் முகம் புக ஆழ்ந்து அரோ
நீர் முகம் நிலம் உற்ற பொன்
தேர் முகம் சிதைவுற்றதே.
**சிரீசேனன் முன்னணிக்கு வருதல்

#1363
மாலும் வாள் படைப் போரினுள்
ஆலும் மா மிசை ஆனவன்
காலன் காண் என வந்தனன்
சீலமான சிறீசேனனே.
**அவன் கூறியது

#1364
மண்ணின் மேல் வருவாரொடு
மண்ணின் மேல் செரு வல்லனே
விண்ணின் மேல் வருவாரொடு
விண்ணின் மேல் செரு வல்லனே.
**சிறீபாலன் சிறீசேனனொடு போர்செய வருதல்

#1365
வாய்ந்த போர் இவை வல்லிரேல்
ஏந்து-மின் படை போந்து எனக்
காய்ந்த கட்டுரை கேட்டலும்
சேர்ந்தனன் சிறீபாலனே.
**சிறீபாலன் ஒரு குதிரை மேற்கொள்ளல்

#1366
உவரி ஓங்கு திரை எனக்
கவரி வேய்ந்த கலினமா
இவர ஏறினான் அரோ
எவரும் அஞ்சும் ஈட்டினான்.
**இருவரும் போர் செய்தல்

#1367
திரிவு_இல் சாரிகைச் செயல்
புரவி சேர்ந்து பொங்கின
வரி வில் வாளி மன்னரும்
மருவு போர் மயங்கினார்.

#1368
வில்லும் வாளும் வேல்களும்
சொல்லினால் தொழில் கொளீஇ
எல்லை இன்று பொழுது எலாம்
தொல் அமர் தொடங்கினார்.

#1369
வெல்லும் நீர் அ விஞ்சையன்
வில்லும் வீசு குந்தமும்
வல்லிதின் மடித்தனன்
மல் அலர்ந்த மார்பினான்.

#1370
அற்ற குந்தம் வில்லினால்
செற்றலன் தெழித்து மேல்
கொற்றவன்-தன் கோகின் மேல்
வெற்றி வாளின் வீசினான்.

#1371
ஒளி தயங்கும் ஒண் புயத்து
எளிதமா எறிந்த வாள்
துளிதமா உடற்றினான்
பளிதம் நாறும் மேனியான்.

#1372
தளி தயங்கு தண் மதுக்
களி தயங்கு கண்ணியால்
குளித வாளின் உற்ற புண்
எளிதமா இலங்குமே.

#1373
இட்ட வாள் இறுத்த பின்
விட்ட மாவின் மேல் செலாத்
துட்டமாத் துரந்தனன்
மட்டு வார்த்த மாலையான்.

#1374
மாதி போகும் மான மா
மீது போக விட்டவன்
சோதி கூடு சுடர் முடிக்கு
ஏதம் ஆக எண்ணினான்.

#1375
எண்ணினன் எடுப்பலும்
கண்ணி அஃது கருதி மா
மண்ணில் வாவி ஆங்கு மேல்
விண்ணின் மேலும் மிக்கதே.

#1376
கொண்ட தன் குசைக் குறி
கண்டு மன்னு கதியினால்
விண் தலத்தின் மீது போய்.
அண்டயத்து அடுத்ததே.
**சிரீசேனன் அழிதல்

#1377
வானின் வாவு விஞ்சையன்
மான மா மணி முடி
ஏனை மன்னன் ஏதியான்
மீனின் வந்து வீழ்ந்ததே.
**அவன் சேனை பின்னிட்டோடல்

#1378
திரு நிலை அகம் உடைச் செல்வன் செம் கதிர்
விரி நிலை மணி முடி மிளிர்ந்து வீழ்தலும்
பொரு நிலை அழிந்து பின் புறக்கொடுத்தது
பரு நிலை மலையவர் பரவைத் தானையே.

#1379
வேய் உடை வெள்ளி சேர் விலங்கல் வேந்தர்கள்
ஆயிடை உடைதலும் ஆழியான் மகன்
காய்வு உடை மனத்தவன் கனகசித்திரன்
சேயிடை புகுந்தனன் நின்று செப்பினான்.
**கனகசித்திரன் வீர உரை

#1380
உருவிய வாளினன் உடுத்த கச்சினன்
வெருவர விழித்தனன் வீரம் வேட்டு மாடு
ஒருவனை ஒருவன் அங்கு அஞ்சி ஓடுமேல்
அருவருப்பு உடையது அ ஆண்மை ஆகுமே.

#1381
மதி தொடு நெடு வரை மான விஞ்சையர்
விதி படு மனிசரை வெருவி மீண்டனர்
அதிசயம் இது என அலர நக்கனன்
கதிர் விடு வளை எயிறு உடைய காளையே.

#1382
உடைந்தவர் மனங்களை உருவ வீழ்த்திடும்
மடந்தையர் வடிக் கண் அம்பு அல்ல ஆய்விடின்
மிடைந்தவர் தொடங்கிய வீரக் கோட்டியுள்
அடைந்தவர் அடு படைக்கு அஞ்சல் வேண்டுமோ.

#1383
தான் உடம்பு இறந்ததன் பின்னும் தன் திறல்
வானுடன் புகழ்தர நிற்கும் மண் மிசை
மானுடர் உயிர்கொள மானம்_இல்லிர்காள்
ஊன் உடம்பு இதன்பொருட்டு உடையல் வேண்டுமோ.

#1384
நெய்யினால் நிழன்று நீர் நின்ற நீள் ஒளி
வெய்ய வாள் அமரிடை வெருவியிட்ட தம்
கையினால் கருனையின் கவளம் கொள்ளிய
ஐயன்மார் போந்தது என்று அசதியாடினான்.
**கனகசித்திரன் போரிடுதல்

#1385
இன்னணம் மொழிந்து எதிர் தெழித்து மாற்றலர்
மன்னிய கடல் படை மண்டி வாளினால்
கல் நவில் தோளினான் கண்டங்கண்டமாத்
துன்னிய துணி பல தொடரத் தோன்றினான்.

#1386
விலங்கு வேல் கொண்டு ஐயை உந்தி வேற்றவர்
மலங்க மேல்செல்வது மானம் ஆம் எனப்
பொலம் கலம் கழலொடு புலம்பப் பூமி மேல்
அலங்கலான் நடந்து அமர் அழுவம் தாங்கினான்.

#1387
பத்திரக் கடிப்பினன் பைம்பொன் தாரினன்
சித்திர மணித் தொடர் திளைக்கும் தானையன்
கத்திகைக் கண்ணியன் காணும் பால் எலாம்
தொத்து இணர்க் குஞ்சியான் காளை தோன்றினான்.

#1388
வம்ப மா இரு துணிபட்ட மாவொடு
செம்பொனால் இயன்ற தேர் சிந்தி வீழ்ந்தன
கம்ப மா ஒழிந்தன களிறு காளை வாள்
வெம் புலால் விரையினும் வெறுத்தது இல்லையே.

#1389
வார் குலாம் கரும் கழல் மன்னர் ஏற்றவர்
நீர் குலாம் குருதியுள் குளிப்ப நேர் இனி
ஆர்-கொல் ஏற்பவர் என அஞ்ச வெம் சினக்
கார் குலாம் உரும் எனக் காளை தோன்றினான்.

#1390
காளை நம் கனை கழல் கனகசித்திரன்
வாள் அமர் அழுவத்து மண்டினான் எனக்
கேளவர் மொழிதலும் கிரீவன் தம்பிமார்
ஆள் இவர் கடல் படை அனன்று எழுந்ததே.
**அச்சுவக்கிரீவன் தம்பிமார் போரிடுதல்

#1391
வெருவி முன் உடைந்துபோய்ப் பெயர்ந்து வேற்றவர்
ஒருவு_இல் வாள் அழுவம் வந்து உந்தும் அ படை
உரவு நீர் இரும் கடல் ஓதம் போந்த பின்
அரவ நீர் வேலை மீது அலைப்பது ஒத்ததே.

#1392
மன்னவற்கு இளையவர் வயிர மால் வரை
அன்னவர் அயில் படை அரச வீரர்கள்
துன்னலர்க்கு அரும் படர் தோன்றத் தோன்றுபு
முன்னினர் கனன்று போர் முறுக முட்டினார்.

#1393
கண் இடை சிவந்து கை சுட்டிக் காய்ந்து தம்
பண்ணுடை மழ களிறு உந்தினார் படை
எண் இடை இடும் இடம் இன்றி எங்கணும்
மண்ணிடையவரொடு மயங்கி நின்றதே.
**இருதிறப்போர் நிகழ்ச்சி

#1394
இலை தடுமாறின பகழி எங்கணும்
சிலை தடுமாறின சிலைத்த தேர்க் குழாம்
மலை தடுமாறின போல மான்று அரோ
தலை தடுமாறின தடக் கை வேழமே.

#1395
முரிந்தன ,மணி நெடும் தேர்கள் முத்து உக
நெரிந்தன களிறு உடை மருப்பு நேர் முகம்
சரிந்தன தலை பல தறுகண்_இல்லவர்
இரிந்தனர் இழிந்தது குருதி நீத்தமே.

#1396
மரை மயிர் அணிந்தன மான மாப் பல
திரை என உருண்டன திலக வெண்குடை
நுரை என நிவந்தன நுந்தும் அப் புனல்
கரை எனக் கிடந்தன களிற்றின் கூவையே.

#1397
பெருகிய குருதியுள் பிறங்கு செம் தடி
அருகு உடை அளற்றினுள் அழுந்திப் பாகமே
சொரி கதிர்க் கோடக முடிகள் தோன்றலால்
பொரு களம் புற்று எடுக்கின்றது ஒக்குமே.
**யானைப்போர்

#1398
மாடு அடைந்து எதிர்ந்து தம் வயிரத் தண்டினால்
பீடு அடைந்தவர் பிடர் புடைப்ப ஆனையின்
கோடு உடைந்து உதிர்ந்தன கொடு முள் கேதகைத்
தோடு உடைந்து ஒருவழித் தொகுத்தல் ஒத்தவே.

#1399
குழை சுடர்ந்து இலங்கு தார் அரசர் கோல மாண்
இழை சுடர் தோள்களால் எறிய யானையின்
தழை செவி மத முகத்து ஒளிக்கும் சக்கரம்
மழை சொரி முகில் புகு மதியம் ஒத்தவே.

#1400
செரு வரை அனைய தோள் மன்னர் சேனையுள்
அரு வரை புகு மயில் அனைய ஆயின
கரு வரை அனையன களி நல் யானையின்
பெரு வரை முகம் புகும் பிண்டிபாலமே.

#1401
மண் இயல் மன்னர் கை முறுக்கி விட்டிடக்
கண் இயல் யானை மேல் கணையம் பாய்வன
திண்ணிய நெடு வரைச் சென்னி மீமிசை
விண் இயல் விளங்கு மீன் விழுவ போன்றவே.

#1402
கடுத்து வீழ் கடாக் களிற்று உழவர்-தம் தலை
அடுத்த கீசகம்-தமோடு அற்று வீழ்வன
தொடுத்த தேன் தொடர்ந்த ஈப் பிறங்கலோடு உடன்
உடுத்த மால் வரை மருங்கு உருள்வ ஒத்தவே.
**தேர்வீரர் செயல்

#1403
அணியமும் ஆரமும் கொடிஞ்சும் கோலுமாத்
துணி வினைக் கவனமாத் துரக்கும் பாகரா
மணி அவிர் தேர் எனும் மதலை நாயகர்
பணிவு_அரும் குருதி நீர்ப் பவ்வத்து ஓட்டினார்.
**குருதிப் பெருக்கம்

#1404
நுதலிய செருநிலக் குருதி நீரினுள்
முதலையின் முதுகு என நிவந்த தோற்பரம்
கதலிகை காம்பொடு கடுகித் தாமரை
மதலை அம் தாள் அணை வாளை போன்றவே.

#1405
கை வரை ஒழுகிய கணையம் பாய்ந்து தம்
மெய் வரை நிரைத்திட விழுந்த யானைகள்
நெய் வரை நீள் நிலத் தலத்து மேல் பல
மொய் வரை முனை அடிப்புண்ட ஒத்தவே.

#1406
ஊடு அகம் ஒளிர் மணி நாகம் கவ்விய
நாள் தக விரி மதி நடுங்கி வீழ்வ போல்
ஆடக மணி அவிர் கடகக் கையொடு
கேடகம் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே.

#1407
துளைப்படு புண் உமிழ் சோரி பாய்ந்து எழக்
களிப்படு சிலம்பின கவந்தம் ஆடுவ
முளைப்பு உடை முடைத் திடை சுடர மூட்டிய
விளக்கிடு குற்றியின் விரிந்து தோன்றுமே.
**விசயன் வீரம்

#1408
அஞ்சலர் அமர்க் களம் என்னும் ஆர் வயல்
விஞ்சையர் குருதி நீர் வெள்ளம் தேர்த்து எழ
வெம் சின நாஞ்சிலால் உழுது வெள்ளியான்
தஞ்சம் ஆர் தன் புகழ் தயங்க வித்தினான்.
**அச்சுவக்கிரீவனின் இளையோர் வினவுதல்

#1409
வெளியவன் மிளிர் மரை புரையும் செம்_கணான்
அளியினன் அமர்க் களம் கடாக்கொள்கின்ற அ
விளையவன் யார் என வினவிக் கேட்டனர்
கிளை அமர் கிரீவனுக்கு இளைய வீரரே.
**விசயனை எதிர்த்தல்

#1410
சுரமையர் அதிபதி தோம்_இல் மாக்களுள்
பெரியவன் இவன் எனப் பிறந்த செற்றமோடு
எரி அவிர் வெகுளியார் இளைய காளை இங்கு
ஒருவன் மேல் நால்வரும் யானை ஓட்டினார்.

#1411
இரத்தினகண்டனும் ஏனை வீரரும்
வரைத்தனர் வரு படை வீதி வாய் எலாம்
எரித்தனர் நால்வரும் இளைய காளையை
முரித்திடு முனிவினர் ஆகி முற்றினார்.
**விசயன் அடங்கினன் என்று ஒலி எழுந்தது

#1412
அடங்கினன் அரசிளங்குமரனோ என
உடன் கலந்து ஒல் ஒலி எழுந்தது ஆயிடை
மடங்கல்_இல் கரும் கடல் மலங்கிற்று ஒத்தது
தடம் கமழ் சுரமைநாட்டு அரசன் தானையே.
**புதிய உதவி விசயனுக்குக் கிடைத்தலும் அவன் போரிடுதலும்

#1413
எரி புரை உளைகளோடு இலங்கு வெண் பிறை
விரிவன என விளங்கு எயிற்றொடு ஆயிடை
அரி அரசு அடைந்தது ஒன்று அதனை ஏறினான்
புரி வகை நாஞ்சிலும் புதியது எய்தினான்.

#1414
தெய்வ வாய் நாஞ்சிலும் செம் கண் சீயமும்
ஐயன் ஆங்கு எய்தலும் அதிர ஆர்த்தது
வையம் ஆள் இளையவன் தானை மாற்றலர்
மையன் மா யானைகள் மயங்கியிட்டவே.

#1415
பொரு படை புகைந்தவர் வழங்கும் ஆயிடைச்
செரு உடையவர் அகன் செல்வ மார்பகம்
உரு உடை நாஞ்சிலால் உழுதிட்டான் அரோ
மருவுடையவர்-தமை மயக்கும் மைந்தனே.
**கனகசித்திரன் போர்க்கு வருதல்

#1416
ஒருவன் ஓர் நாஞ்சிலால் ஊழி_தீப் புரை
இருவரோடு இருவரை யானை நான்கொடு
செருவினுள் அமர் வெலக் கேட்டுச் சேர்ந்தனன்
கரு வரை அனைய தோள் கனக காமனே.
**கனகசித்திரன் மாய்தல்

#1417
காளை அக் கனகசித்திரனும் காய்ந்து தன்
வாளை வாய் துடைத்து எதிர் மடுப்ப மற்று அவன்
தோளையும் சுடர் கெழு நாஞ்சில் வாயினால்
ஆளி ஏறு_அனையவன் அழுந்த ஊன்றினான்.
**இரத்தினகண்டன் நிலை

#1418
வனை கதிர் இலங்கு தோள் வயிரகண்டனோடு
அனைவரும் அலாயுதற்கு அமர் தொலைந்ததும்
கனகசித்திரனது பாடும் கண்டு அரோ
அனல்படு மனத்தன் அங்கு ஒருவன் ஆயினான்.
**அவன் போரிடுதல்

#1419
பொடித் தலை நிலத்தவர் போரும் ஆண்மையும்
முடித்திடுகு என முனிந்து எழுந்து மூரி வான்
மடுத்தது ஓர் வரை-தனை வயிரக் கைகளால்
எடுத்தனன் இரத்தினக்கிரீவன் என்பவே.

#1420
வரிந்து வீழ் கச்சையன் வனைந்த தாடியன்
முரிந்து எழு புருவத்தன் முழங்கு தீ என
எரிந்தனன் இறுவரை எடுத்து மேல்செல
இரிந்தது சுரமையர் இறைவன் தானையே.
**அருக்ககீர்த்தி அம்புவிடல்

#1421
ஆங்கு அவன் அடைதலும் அருக்ககீர்த்தி கை
வாங்கு வில் புகுந்தது வாளி ஒன்று அவன்
ஓங்கு இரும் தூணியில் சுடர்ந்தது ஒல்லெனத்
தாங்க அரும் திறலவன் தாரித்து ஏவினான்.

#1422
தொடுத்ததும் துரந்ததும் விடலை தோளிடை
மடுத்ததும் கிழித்ததும் மண்ணினுள் புகக்
கடுத்ததும் கண்டு நின்றவர்கள்-தம்மையும்
படுத்தது பகலவன் பகழி என்பவே.
**இரத்தின கண்டன் மாய்தல்

#1423
வரையொடு வரை என மறிந்து மண்ணின் மேல்
விரை உடை அலங்கலான் வீழும் ஆயிடைத்
திரையொடு கனை கடல் கலங்கிச் சிந்தின
புரை உடை விலங்கலும் புலம்பு கொண்டவே.
**அச்சுவகண்டனுக்கு அறிவித்தல்

#1424
தம்பியர் பாடும் மக்கள் இறந்ததும் தனக்குப் பாங்காய்
வெம்பிய வீரர் போருள் விளிந்ததும் விரைவின் ஓடிச்
செம்பினை உருக்கி வெய்தாய்ச் செவி முதல் சொரிந்ததே போல்
அம் பொன் செய் ஆழியானுக்கு உரைத்தனர் அரக்கு உண் கோலார்.
**அவன் செயல்

#1425
ஆங்கு அவர் மொழிந்த போழ்தின் அரு வரை கரியது ஒப்பான்
ஈங்கு இவர் மாற்றம் நன்று ஈண்டு இருந்து இனி என்னை என்னா
வாங்கு நீர் உலகில் வாழும் உயிர்களை வாரிக்கொண்டு
வீங்கு நீர்க் கடலுள் பெய்யும் விஞ்சையை விடுக்க நேர்ந்தான்.
**சண்டவேகையிடம் கூறல்

#1426
ஓர்ந்து அவன் மனத்து விஞ்சை ஒரு புடை எய்தலோடும்
சார்ந்தது சண்டவேகை பணிபணி என்று சார
வார்ந்த நீர் உலகின் வாழும் மனிதரை வல்லை ஏகி
தேர்ந்துகொண்டு ஒருவர் இன்றித் தெய்வமே செகுத்திடு என்றான்.
**சண்டவேகை கூற்றுவனிடம் கூறுதல்

#1427
கொடியவன் விடுத்த போழ்தில் கூற்றுவன்-தன்னைக் கூவி
வடி எயிறு இலங்க நக்கு வாழிய தோள்கள் இன்று
விடு கதிர் ஆழி வெய்யோன் வேண்ட என் வாயுள் பட்டு
முடியும் இ உலகம் நீயும் முறைத் தொழில் முடித்தி என்ன.
**பேய்களின் செயல்

#1428
அணங்குகள் குழுமி யாமும் பெரு வயிறு ஆர்தும் என்று
துணங்கை கோத்து ஆடி நக்குச் சுடர் இலைச் சூலம் ஏந்தி
வணங்குபு சூழ மற்று அ மா பெரும் தெய்வம் வந்து
மணம் கமழ் சுரமைநாடன் தானை மேல் மடுத்தது அம்மா.
**பேய்களின் வருணனை

#1429
பட்டு அடி நெடிய வீங்கு பரட்டின நொடிக்கும் கால
ஒட்டிய வயிற்ற வற்றல் உகிரிடை மயிர முன்கை
கட்டிய கண்ணி பீலித் தலையின கழல்காய் போல
வட்டமாய் உருளும் கண்ண கணங்கள் வந்து இரைத்த அன்றே.
**சண்டவேகையின் செயல்

#1430
வரைகளை உருள உந்தி வந்தது ஓர் சண்ட வாயு
நிரை கிளர் சுடரது ஆகி நிமிர்ந்தது ஓர் உருவச் செம் தீ
திரைகளை மறிய வீசிச் சிறந்தது ஓர் அழுவ முந்நீர்
விரை கிளர் உருவத் தெய்வம் இது படை விடுத்த ஆறே.

#1431
வரைகளும் மரனும் மண்ணும் மறித்திடும் வாயுச் செம் தீப்
புரை கிளர் பொடிகள் ஆரப் புணர்த்திடும் புணர்த்த போழ்தில்
திரை கிளர் பரவை முந்நீர் திரைத்துக்கொண்டு ஒழுகும் இஃதால்
கிளர் உலகைத் தெய்வம் உண்ணிய உடன்ற ஆறே.
**விசயன் சேனை மயக்குற்றது

#1432
மருங்கு அவை புணர்த்த பின்னை வானக வளாகம் எல்லாம்
கரும் கல் ஒன்று அகன்ற மேலால் கவித்தது கவித்தலோடும்
இரும் கலி உலகம் எல்லாம் இருள் கொள வெருவி நோக்கிப்
பொரும் கலி அரசர் தானை போக்கிடம் அற்றது அன்றே.

#1433
வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்தர் உந்தித்
தாளொடு தாள்கள் தாக்கித் தலையொடு தலைகள் முட்டித்
தோளொடு தோள்கள் தேய்ப்பச் சுடர் அணி சுடர்ந்து சிந்த
ஆள் உடை அரசன் தானை அரவமோடு உடைந்தது அன்றே.
**திவிட்டன் உண்மை அறிதல்

#1434
அன்னணம் உடைந்த போழ்தின் அருக்கனை முகத்து நோக்கி
என் இது விளைந்தவாறு என்று இரும் கடல்_வண்ணன் கேட்பக்
கல் நவில் வயிரத் தோளாய் காய்ந்தவன் விடுக்க ஈண்டு
மன் உயிர் உண்ணும் சண்டவேகையாம் வருவது என்றான்.

#1435
செற்றலன் விடுத்த பின்றைச் செகுத்து உயிர் பருகின் அல்லால்
மற்று இது மறிதல் இல்லை மறிப்பவர் பிறரும் இல்லை
இற்று இதன் நிலைமை என்ன இரும் கடல்_வண்ணன் நக்கு ஆங்கு
அற்றம்_இல் அலங்கல் வேலோய் அஞ்சினை போல்தி என்றான்.
**திவிட்டன் பேருருக் கொள்ளல்

#1436
பேய் எரி உமிழ்ந்து நம் மேல் வரும் எனப் பேசுகின்றாய்
நீ பெரிது இனியை என்னா நெடியவன் அதனை நோக்கிக்
காய் எரி சுடர் விட்டாங்குக் கனன்றனன் கனலலோடும்
மா இரு விசும்பும் அஞ்சும் வடிவினன் வள்ளல் ஆனான்.

#1437
நலம் புரி செய்கை மேனாள் பெற்ற நல் தோழனே போல்
உலம் புரி உருவத் தோளாற்கு உற்ற போழ்து உதவலுற்று
வலம்புரி வலத்தது ஆக இடத்தது ஓர் வயிர வல் வில்
கலம் புரி கன பொன் பூணான் கைவந்து புகுந்த அன்றே.
**திவிட்டன் தோற்றம்

#1438
நெதி சொரி சங்கம் ஏந்தி நெடும் சிலை இடம் கைக் கொண்டு
விதி தரு நீல மேனி விரிந்து ஒளி துளும்ப நின்றான்
மதி ஒரு பாலது ஆக வானவில் மருங்கு கோலிப்
புதியது ஓர் பருவ மேகம் போந்து எழுகின்றது ஒத்தான்.
**திவிட்டன் உரப்பலும் சண்டவேகை தாழ்தலும்

#1439
வலம்புரி சிலம்ப வாய் வைத்து இரும் சிலை வளைய ஏற்றிக்
கலம் புரி கன பொன் ஆழிக் கை விரல் கதிர்ப்பச் சூட்டி
உலம் புரி வயிரத் தோளான் உரப்பினான் உரப்பலோடும்
சலம் புரி தெய்வம் அஞ்சித் தன் உரு அடைந்தது அன்றே.

#1440
நிலத்திடை நின்று வான முடியுற நிமிர்ந்து கண்ணின்
புலத்தினது அளவு நீங்கிப் பொம்மென உயிர்த்து விம்மிப்
பிலத்தினது அளவில் பேழ் வாய் பிறழ்ந்து இலங்கு எயிற்றது ஆகிச்
சலத்தினைப் புரிந்த தெய்வம் தலை பனித்து உடைந்தது அன்றே.
**அச்சுவகண்டன் போர்க்கெழுதல்

#1441
தெய்வம் ஆங்கு உடைந்து தன் பால் படையினைத் திரைத்துக் கொண்டு
மை இரு விசும்பின் ஏறக் கண்ட பின் மாற்று வேந்தன்
கையினைப் புடைத்துக் கண்கள் சிவந்து வாய் எயிறு கவ்வி
வையகம் நடுங்க நோக்கி மழ களிறு அணைக என்றான்.
**திவிட்டன் அச்சுவகண்டனுடன் போரிடல்

#1442
மாலும் மால் களிறு நுந்தி மற்று அவன் வருதலோடும்
ஆலும் மால் புரவித் திண் தேர் அரசனது அரவத் தானை
வேலினான் உடங்கு நில்லாது உடைந்திட வெகுண்டு நோக்கி
நீல மா மணிக் குன்று ஒப்பான் நெடும் சிலை இடம் கைக் கொண்டான்.
**கருடன் வருகை

#1443
வாய்ந்த நல் வயிரத் துண்டம் வளைந்து ஒளி துளும்ப வள் ஆல்
சேந்தன சிறு கணோடு திசைமுகம் சிறகு-தம்மால்
வேய்ந்து என விரித்து வீசி விசும்பிடை இழிந்து வந்து
காய்ந்து எரி கணையினாற்குக் கருடனும் உழையன் ஆனான்.
**அச்சுவகண்டன் உரை

#1444
கருடனை வலம் கொண்டு ஏறிக் கார்முகம் கையின் ஏந்தி
மருள் தரு விசும்பின் ஏறி மணி_வண்ணன் எதிர்ந்த போழ்தின்
இருள் தனக்கு எய்திற்று ஓரான் எரி கதிர் ஆழி வேந்தன்
பொருள் தனக்கு இனி இலாத புகழ்ச்சிகள் புகலலுற்றான்.

#1445
தானவர் நின்னைப் போலத் தம் திறல் அறிவு_இலாதார்
ஈனவர் இரங்கி வீழ்ந்தார் ஏனையர் தொழுது வாழ்ந்தார்
வானவர் என்னை அஞ்சி வானிடை மறைந்து செல்வார்
ஊனவர் தம்முள் நீயே உயிர் எனக்கு இழக்கலுற்றாய்.

#1446
மண்ணுள் வாழ் சிதலைச் சேர்தி மற்று அவை வாழும் நாள்கள்
எண்ணி ஆங்கு இகந்த பின்னை இறகு பெய்து எழுங்கள் போலாம்
கண்ணினால் அதனை நீயும் கருடப்புள்-அதனை ஏறி
விண்ணின் ஆறு எதிர்ந்து வந்தாய் வேற்கு இரையாகி என்றான்.

#1447
மாறு_அலா மனிதர்-தம் மேல் வண் சுடர் ஆழியானும்
சீறினான் என்ற போழ்தில் சிறுசொலாய் நிற்கும் என்று
தேறினார் மொழிகள் கொண்டு செவி சுடு சொற்கள் கேட்டும்
ஆறினேன் என்பது ஓராய் அளியத்தாய் அனல்விக்கின்றாய்.
**திவிட்டன் விடை

#1448
என்றலும் அதனைக் கேட்டே இரும் கடல்_வண்ணன் நக்கு
நன்றுநன்று உரைத்தி மீட்டும் நல்லையே பெரிதும் ஏடா
குன்றின் மேல் இருந்து நீ நின் குழுவினுள் மொழிவது அல்லால்
இன்று வந்து என் முன் நின்றும் இது-கொலோ கருதிற்று என்றான்.
**அச்சுவகண்டன் சரமழை பொழிதல்

#1449
சிறியவன் உரைகள் வந்து என் செவி சுடும் பொறுக்கல் ஆற்றேன்
எறி கடல் வளாகம்-தன்னுள் இவன் பெயர் ஒழிப்பன் என்று
செறி மணிக் கடகக் கையால் திண் சிலை குழைய வாங்கிப்
பொறி நுதல் யானை மேலான் சர_மழை பொழிவிக்கின்றான்.

#1450
கடுத்து அவன் எய்த போழ்தில் கருடன் தன் சிறகு-தன்னால்
புடைத்திட நெரிந்துப் பொங்கிச் சரங்கள் போய்ப் புரள நோக்கி
விடைத் திறல் விடலை-தன் மேல் வெம்பிய மனத்தன் ஆகிப்
படைத் திறலாளன் தெய்வப் படைத் தொழில் பறைக்கலுற்றான்.
**அச்சுவகண்டன் நாகாத்திரம் விடுதல்

#1451
காய் இரும்பு அனைய வெய்யோன் கரு மணி_வண்ணன்-தன் மேல்
ஆயிரம் பணத்ததாய அரு மணி ஆடும் நாகம்
மா இரும் புகழினான்-தன் வன் சிலை வாங்கி எய்யச்
சேய் இரும் சுடர்கள் சிந்தித் தீ உமிழ்ந்து ஓடிற்று அன்றே.
**திவிட்டன் கருடத்திரம் விடுதல்

#1452
கண்டனன் அதனை மற்று அக் கரும் கடல்_வண்ணன் கண்டே
ஒண் திறல் உவணப் புள்ளின் உருவின் ஓர் தெய்வ அம்பு
கொண்டனன் தொடுத்தலோடும் கொடும் சிறை நுடங்க வீசித்
துண்டமா நாகம்-தன்னைத் துண்டத்தால் துணித்தது அன்றே.
**அச்சுவகண்டன் ஆக்னேயாஸ்திரம் விடுதல்

#1453
ஆயிடை அனன்று மீட்டும் அழல் உமிழ் ஆழி வேந்தன்
தீயொடு புணர்த்த போழ்து அத் தெய்வ அம்பு எய்தலோடும்
வேய் உடை விலங்கல் சுட்டு விசும்பு இடை வெம்ப வெம்பிச்
சேயிடை எரிந்து சிந்திச் செல்வன் மேல் சென்றது அன்றே.
**திவிட்டன் வருணாத்திரம் விடுதல்

#1454
கார்_அணி_வண்ணன் கண்டே கதிர் மணிக் கடகக் கையால்
வாருணம் என்னும் அம்பு வாங்கினன் தொடுத்தலோடும்
சீர் அணி விசும்பும் மண்ணும் திசைகளும் இருளச் சேர்ந்து
நீர் அணி புயலின் தாரை நிரந்து வீழ்ந்து அவித்தது அன்றே.
**அச்சுவகண்டன் நித்திராபாணத்தை விடுதல்

#1455
விண்களை வெதுப்பும் நீர்மை வெய்யன் உள் வெகுண்டு மீட்டும்
கண்களைத் துயிற்றும் அம்பு தொடுத்தனன் தொடுத்தலோடும்
மண்களை மயக்கி மாக்கள் துயில்கொள மரங்கள் சாயப்
புண்களை அணையும் வேலான் படை முகம் புக்கது அன்றே.
**திவிட்டன் அதற்கு மாறாக ஓர் அம்பு விடுதல்

#1456
அயில் உடை அனல் செய் வேலோன் அதனையும் அறிந்து மற்றுத்
துயில் விடைசெய்யும் அம்பு தொடுத்தனன் தொடுத்தலோடும்
வெயில் இடை விரிந்து விண் பால் விளங்கி வீழ் இருளை நீக்கப்
பயில் உடை உலகம் தேறிப் பட்டதும் உணர்ந்தது அன்றே.
**அச்சுவக்கிரீவன் ஆழிவிடுதல்

#1457
சீற்றமொடு இரியும் செல்வத் தெய்வ அம்பு எய்த எல்லாம்
மாற்றினன் மறுப்ப நோக்கி மற்று அவன் மாற்றலான் பேர்_
ஆற்றலை அறிந்து வெய்ய ஆழிகை ஏந்தி இன்னும்
ஏற்றனை பொருதியோ என்று இலங்கு எயிறு இலங்க நக்கான்.
**திவிட்டன் கூற்று

#1458
தாழியாது எய்யும் தெய்வப் படை முதல் அழிந்தும் சாலப்
பாழியான் மெலிந்தும் பண்டைப் பாவனை பயிற்றி என்னை
ஆழியால் வெருட்டலுற்றாய் அலந்தனை பெரிதும் என்றான்
சூழி மால் யானை வல்ல சுரமைநாட்டு இளைய கோவே.
**ஆழியின் செயல்

#1459
புனை கதிர் ஆர மார்பன் புகைந்து கை முறுக்கி விட்ட
கனை கதிர்த் திகிரி கான்ற கன சுடர் வளைக்கப்பட்டு
முனை கதிர் கானச் செம் தீ முழங்கி மேல் மூடப்பட்ட
வனை கதிர்க் குன்றம் போல மணி_வண்ணன் மறைந்து போனான்.

#1460
உலம் கொண்ட வயிரத் தோளாற்கு உற்றதை உணரமாட்டார்
நிலம் கொண்டு மனிதர் ஆழ நிரந்து அழல் உமிழ்ந்து நேமி
புலம் கொண்ட வயிரக் குன்றின் புடை வரும் பரிதி போல
வலம்கொண்டு வந்து மைந்தன் வலப் புடை நின்றது அன்றே.
**திவிட்டன் ஆழியைத் திருப்பிவிடல்

#1461
கல் நவில் கடகத் தோளான் கண்டு கை தொழுதுகொண்டு
மின் அவிர் விளங்கும் நேமி விடுத்தனன் விடுத்தலோடும்
மன்னனை மார்பு கீண்டு மணி முடி எறிந்து மற்றைப்
பொன் அவிர் ஓடை யானைப் புகர் நுதல் புக்கது அன்றே.
**அச்சுவகண்டன் அழிவு

#1462
கழலவன் கனன்று விட்ட கதிர் நகை நேமி போழ
மழ களி யானை தன் மேல் மறிந்து வீழ்கின்ற மன்னன்
நிழல் அவிர் விலங்கல் நெற்றி நிமிர்ந்தது ஓர் காள மேகம்
அழலவன் திகிரி பாய அற்று வீழ்கின்றது ஒத்தான்.

#1463
நெறி-தலை திரிவு_இலான் மேல் நினைவு_இலான் மொழியப்பட்ட
மறுதலை முடிக்கும் ஏதுவாய் வழி அழிப்பதே போல்
பொறி-தலை மணந்த காளை மேல் வரப் புணர்த்த நேமி
செறிதலை இலாத மன்னன்-தன்னையே செகுத்தது அன்றே.
**அச்சுவகண்டன் வீழ்ச்சியைக் கண்டோர் கூறுதல்

#1464
கொலை யானை மேல் ஓர் குளிர் வெண் குடைக் கீழ்ப்
பல யானை மன்னர் பலர் போற்ற வந்தான்
மலை ஆகம் போழாக மற்று இவனோ சாய்ந்தான்
நிலையாமை சால நிலைபெற்றது அன்றே.

#1465
நெருநல் நெடும் குடைக் கீழ் நேமி முன் செல்லப்
பொரு நல் வய வேந்தர் போற்றி இசைப்ப வந்தான்
செரு நல் மற நேமி சென்ற அதுவே போழ
எரி பொன் மணி முடியான் இன்று இவனோ சாய்ந்தான்.

#1466
தான் எறிந்த நேமி தனக்கே பகை ஆகித்
தேன் எறிந்த தாரான் சிறு வரைக்-கண் வீடினான்
யான் அறிந்தவாற்றால் எளிய உலகத்தில்
வான் அறிந்த வாழ்க்கையும் மாயமே போலுமால்.

#1467
வலியும் அடு திறனும் வாழ்வும் வனப்பும்
பொலிவும் கடைபோகா பூமி மேல் வாழ்வீர்
கலியன்-மின் என்று இதனைக் காட்டுவான் போல
மலி பொன் மணி_முடியான் மற்று இவனோ மாய்ந்தான்.

#1468
மாக மழை_வண்ணன் மாற்றான் மேல் விட்டெறிந்த
வேக விறல் ஆழி மீட்டே பெயர்ந்து தன்
போக வரை மார்பம் போழ்படுப்பப் பொன்றினான்
ஆகுவது ஆம் அதனை யாவர் அறிகிற்பார்.
**இறந்தவனை அவன் தேவியர் காணல்

#1469
இன்னன கண்டார் மொழிந்து இரங்கும் ஆயிடை
அன்னம்_அனையார் அயகண்டன் தேவிமார்
பொன் அவிர் பூம்_குழையார் பொங்கு ஏந்து இளம்_முலையார்
மின் அவிர் நுண்_இடையார் மேல் வந்து அணுகினார்.
**பெருந்தேவி உயிர்நீத்தல்

#1470
வண்டு ஆர் மணி_முடியான் மார்பு துணி கிடப்பக்
கண்டாள் பெருந்தேவி கண்டே தன் கை சோர்ந்து
வெண் தாரை வேல் நெடும் கண் நீர் மூழ்கி மேல் பிறழ
விண்டாள் உயிர் பின்னும் வெற்று உடலம் ஆயினாள்.
**பிறமகளிர் செயல்

#1471
கோதை சரியக் கொடி மருங்குல் ஏர் அழிய
மாதர் மட மஞ்ஞை மா நிலத்து வீழ்வன போல்
காதலன் மார்பு அகலம் கண்டே தம் கண் புடைத்துப்
பேதை மட மகளிர் வீழ்ந்தார் பிணை_அன்னார்.

#1472
வாங்கு கொடி முறுக்கி மா நிலத்து விட்டன போல்
தாங்கார் புரண்டு தலை தடுமாறாய்க் கிடந்து அங்கு
ஏங்கினார் எத்துணை ஓர் போழ்தும் அங்கு அழிந்து எழுந்து
நீங்காத ஆர்_உயிரார் நீராய் உருகினார்.

#1473
அரைசர்_கோவே அடல் ஆழி வலவ ஆர்க்கும் தோலாதாய்
புரிசை நகரம் நூற்றொருபது உடையாய் பூமி முழுது ஆண்டாய்
உரை செய்து உலகம் பாராட்டும் ஒளியாய் ஓடை யானை மேல்
வரை செய்து அனைய திரள் தோளாய் மறிதல் பொருளோ வய வேந்தே.

#1474
வானும் மண்ணும் உடன் அஞ்சும் வரையாய் மன்னர் மணி முடி மேல்
தேனும் வண்டும் பல சென்று திளைக்கும் செம்பொன் செறி கழலாய்
நான மண்ணி அகில் தேக்கி நாவி கமழும் எழில் ஆகம்
ஈன மண்ணில் இவர் காணக் கிடத்தல் இனிதோ இகல் வேந்தே.

#1475
குழவி நாயிற்று எழில் ஏய்க்கும் குழம்பு ஆர் கோலக் குங்குமமே
மெழுகி மீது ஓர் மணி ஆரம் வீசிக் கிடந்த விரை ஆகம்
ஒழுகு குருதிச் சேறு ஆடி ஓடை யானை நுதல் மீது
வழுவி வீழ்ந்த வகை நாடின் மாயம் போலும் மற வேந்தே.

#1476
பொன்னின் ஆய அமளி மேல் பூவின் ஆய அணை பொருந்தி
அன்னம்_அனையார் அடி வருட அமரும் பள்ளி அமராதே
மன்னும் இங்கு ஓர் மத யானை நுதல் மேல் மறிந்து மணி முடி சாய்த்து
என்னும் உரையாய் துயில்கோடல் இசையோ எங்கள் பெருமானே.

#1477
மகரப் பைம் பூண் மடவார்கள் வயிரக் குழையும் பொன் தோடும்
தகரக் குழலும் அளகமும் திருத்திப் பயின்ற தாழ் தடக் கை
சிகரம் அனைய மத யானைச் செவி மேல் சரிந்து செம் குருதி
பகரக் கழுகு பாராட்டக் கிடத்தல் தகுமோ படை வேந்தே.

#1478
வெய்ய சுடரோன் தண் கதிரோன் என ஈங்கு இவர்கள் மதில் இயங்கார்
பைய வந்து தாமரையின் பரவைத் தடத்தும் மாளிகை மேல்
ஐய தலத்தும் மெல விரிந்து அது அயலார் செல்லும் ஆணையாய்
செய்ய குருதிச் சேறு ஆடிச் சிறு மானிடர்க்கே தோற்றாயே.

#1479
பணம் கொள் நாகம் பல சூழ்ந்து பகல் செய் மணியின் சுடர் ஏந்தி
அணங்கி அகலாது உழை நிற்கும் ஆணை உடைய அடல் வேந்தே
வணங்கி வந்து பல தெய்வம் வழிபாடு ஆற்றும் மறை நேமிக்
குணம் கொள் படையாய் கூடாரும் உளரோ நினக்குக் கோமானே.

#1480
பெரு மா மழைக் கண் மாதேவி பிணையின் மாழ்கி இவண் அழிய
வரும் மா முரசம் பிறர் பெயர் கொண்டு அறைய ஆழி அயல் நீங்கத்
திருமாநகரம் செல்வம் முற்றும் சிதையக் கண்டும் சீறாயால்
உருமால் என்னும் திறலினாய் உலகம் வேண்டாது ஒழிந்தாயோ.

#1481
மூரி முந்நீர் உலகங்கள் முழுதும் காவல் முனிந்தாயோ
யாரும் இல்லா அடியோங்கள் வழிபாடு ஆற்ற மாட்டாயோ
சீரின் மன்னும் வள நாடும் தெய்வப் படையும் செல்வமும் நீ
பாரின் மன்னர் பிறர் கொள்ளப் பணித்தது என்னோ படை வேந்தே.

#1482
தொழுதும் சூழ்ந்தும் அடி பற்றித் தொடர்ந்தும் சுரும்பு உண் கோதை நிலை
வழுவ மயங்கி மாழாந்தும் மருண்டும் தெருண்டும் மடவார்கள்
அழுத கண்ணீர் அகல் ஞாலத்து அரசர் உருக அருவியாய்
ஒழுக நெடுமால் முனிவு என்னும் ஊழி_தீயும் அவிந்ததே.
**அச்சுவக்கிரீவனைத் தகனம் செய்தல்

#1483
மஞ்சு தோயும் வரையார்-தம் மன்னன்-தன்னை மத யானை
அஞ்சு தோன்ற நுதலின் இழித்து அந்தணாளார் மெய் தீண்டிப்
பஞ்சும் துகிலும் பூம் பட்டும் பாயப் பள்ளி,,படுத்து அதன் மேல்
வஞ்சம் இல்லாப் புகழானை வயங்கு செம் தீ வாய்ப் பெய்தார்.
**தம்பியர் முதலியோர்களைத் தகனம் செய்தல்

#1484
மன்னன் தம்பிமார்களையும் மக்கள்-தமையும் மற்று ஒழிந்த
பொன் அம் புனை தார் வேந்தரையும் பொருது பட்ட போர்க்களம் மீது
என்னும் சாடும் எரி வாய்ப் பெய்து இரங்கி அழுது ஆங்கு ஏகினரால்
உன்னி வந்த முடிக்ககிலாது உடைந்த வேந்தன் உழையாரே
**உரிமை மகளிர் தாபத நிலை எய்தல்

#1485
ஆவியாய அயக்கிரீவற்கு அமிர்தம் பூத்த அம் சாயல்
தேவிமார்கள் கலன் அழித்துச் சேணி உலகம் சென்று எய்தி
வீவு_இல் காமன் வரு வீதி கற்பு வேலியால் விலக்கித்
தா_இல் நிறையின் தாழ்-அதனால் பொறியின் வாயில் தாழ்ப்பெய்தார்.
**திவிட்டனைத் தேவரும் பிறரும் கொண்டாடுதல்

#1486
எரி வளர் ஒளி தரு நேமி எய்திய
திரு வளர் படர் ஒளிச் செம் கண் மாலவன்
கரி வளர் குஞ்சி மேல் சொரிந்த பூ_மழை
வரி வளை முரசொடு மயங்கி ஆர்த்தவே.
**விசும்பிடை அசரீரி

#1487
அரிதினின் அவன் எய்த தெய்வ அம்புகள்
உரிதினின் அறுத்து ஒளிர் நேமி கொண்டது
பெரிது இது சித்திரம் என்று பேர்_ஒலி
விரிதரு விசும்பிடை விரவி நின்றதே.
**எஞ்சிய விஞ்சையரின் வேண்டுகோள்

#1488
வெம் சினம் செருக்கொடு வீய மானமும்
விஞ்சையர் ஒழிந்தனர் ஒழிந்து வீரனை
மஞ்சு இவர் மணி வரை வண்ண வாழிய
அஞ்சினம் பெரிது என அடி வணங்கினார்.
**திவிட்டன் அருளுதல்

#1489
அஞ்சிய மன்னர்கட்கு அருளி ஆயிடைத்
துஞ்சிய மன்னவன் தமரம் தோம்_இல் சீர்
விஞ்சையர் உலகினில் மீண்டு வாழ்க என
எஞ்சல்_இல் கடி முரசு அறைய ஏயினான்.
**அவன் தன் பாடி வீடடைதல்

#1490
கரு முகில்_வண்ணனும் கருடன் மேல் இழிந்து
உரும் என அதிர்தரும் ஓடை யானை மேல்
பொரும் இகல் வேந்தர் போற்று இசைப்பப் போந்து அரோ
பரி மிகு படை விடு பாடி நண்ணினான்.
**விசயனும் திவிட்டனும் தந்தையை வணங்கல்

#1491
விரிதரு திங்களின் விளங்கும் மேனியன்
பெரியவன்-தன்னொடும் பெயர்ந்து தாதை-தன்
திரு அமர் சேவடி சென்று தாழ்ந்தனன்
கரு வரை அனைய தோள் கன பொன் தாரினான்.
**பாயபதி அருகில் நின்ற அரசரிடம் கூறுதல்

#1492
மக்களது ஆற்றலால் மலர்ந்த கண்ணினன்
மிக்கு மேல் விரிந்து ஒளி துளும்பும் மேனியன்
தொக்க நீர்ச் சுரமைநாடு உடைய கோன் இவை
பக்க நின்று அரசர்கள் பணியச் சொல்லினான்.
**அரசன் மக்களுக்கு முடிகூட்டக் கருதல்

#1493
தீது_அறு மணி முடிச் செல்வக் காளையர்
தாதை என்று இயல் உரை தவத்தின் எய்தினேன்
ஆதலால் இவர்-தமது அரச கோலம் எம்
காதல் அம் கண் இவை காணல் ஆகுமே.

#1494
என்று அவன் மொழிதலும் இலங்கு நீள் முடி
மின் தவழ் அவிர் ஒளி விஞ்சை வேந்தனோடு
ஒன்றிய அரசர்கள் உவந்து சூட்டினார்
அன்று அவர்க்கு அரசியல் முரசம் ஆர்த்தவே.
**அரசர்கள் அபிஷேகம் செய்தல்

#1495
கங்கையும் சிந்துவும் என்னும் மா நதி
தங்கு நீர் எனையவும் தந்து தாமரை
பொங்கிய முகத்த பொன் குடங்களால் பல
மங்கல மரபினால் மன்னர் ஆட்டினார்.
**தேவர் அபிஷேகம் செய்தல்

#1496
திரு மணி நிழல் ஒளித் தெய்வ வான் படை
பரு மணிப் பாற்கடல் பரவை நீர் முகந்து
எரி மணிக் குடங்களின் ஏந்தி ஏந்தல்-தன்
சுரி மணிக் குஞ்சி மேல் சொரிந்தது என்பவே.
**வித்தியாதரர் அபிஷகம் செய்தல்

#1497
வெம் திறல் விறல் ஒளி விஞ்சை வேந்தரும்
மந்தர மணி மலை மலரும் அ மலை
அந்தர அருவியும் விரவி ஆட்டினார்
இந்திரன்_அனையவற்கு இறைஞ்சி என்பவே.
**காப்பணிவித்தல்

#1498
திரு_மகள் பரிவொடு சென்று சார்தரும்
உருவினும் ஒளியினும் உலகம்-தன்னின் மேல்
மருவிய நூல்-அது மரபினானும் அக்
கரு முகில்_வண்ணனைக் காவல் நாட்டினார்.
**முடிசூட்டுதல்

#1499
விட்டு எரி மணி வரை நேமி வேந்தனை
அட்டு இவன் எய்தினான் ஆழி ஆதலால்
மட்டு இவர் அலங்கலான் வாசுதேவன் என்று
ஒட்டிய ஒளி முடி ஒன்று சூட்டினார்.
**விசயனுக்கு முடி சூட்டுதல்

#1500
பெருகிய மிகு திறல் பெரிய நம்பியை
மருவிய புகழ் பல தேவ நீள் முடி
கருவிய மரபினால் கவித்துக் காவலன்
திரு அமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார்.
**திவிட்டனிடம் ஆழியொழிந்த படைகளும் வந்து சேர்ந்தன

#1501
இரும் கலி விழவினோடு அரசு இயற்றலும்
பெரும் கலி விழவின தெய்வம் பேணுவ
சுருங்கல்_இல் சுடர் ஒளி துளும்பத் தோன்றல்-பால்
அரும் கலம் ஒழிந்தவும் அடைந்த என்பவே.

#1502
சக்கரம் தண்டு வாள் சங்கு வில் குடை
மிக்கு எரி மணி இவை எய்தி வீரியன்
மக்களுள் அரசர்கள் வணங்கும் தெய்வமாய்த்
தொக்கு எரி சுடர் ஒளி துளும்பத் தோன்றினான்.
**பின்னும் அடைந்தவை

#1503
சென்று உயர் வலம்புரி செம்பொன் தாமரை
என்று இயல் பெயரின இரண்டும் மா நிதி
ஒன்று அல மணிகளும் ஒளி பொன் மாழையும்
நின்று இவை சொரிந்து ஒளி நிழற்றுகின்றவே.
**சக்கராயுதம் கோயிலைச் சார்தல்

#1504
மிக்கு எரி சுடர் முடி சூடி வேந்தர்கள்
தொக்கவர் அடி தொழத் தோன்றும் தோன்றலால்
அக்கிரப் பெரும் சிறப்பு எய்தி ஆயிடைச்
சக்கரப் பெரும் செல்வச் சாலை சார்ந்தவே.
**பிறவும் கோயில்களைச் சார்தல்

#1505
அரும் கலப் பெரும் தெய்வம் அவையும் தத்தமக்கு
ஒருங்கு செய் வள நகர் அடைந்த ஒண் சிறை
சுருங்கல்_இல் கருடற்குச் சுடரும் தோன்றலால்
பெரும் கலி மாளிகை பேணப்பட்டதே.
**புலவர் திவிட்டனது வரலாறு கூறுதல்

#1506
முரசு வீற்றிருந்து அதிர் மூரித் தானையன்
அரசு வீற்றிருந்தனன் பின்னை ஆயிடைக்
கரை செய் நீர்க் கரும் கடல் வேலி காவலற்கு
உரைசெய் நூல் சரிதைகள் புலவர் ஓதினார்.

#1507
ஆதி நாள் அரசியல் நீதி ஆங்கு எடுத்து
ஓதினார் புலவர்கள் ஓதும் ஆயிடைத்
தீது_இலார் திகிரி அம் செல்வர் செய்கை மேல்
கோது_இலாத் திறல் சில கூறப்பட்டவே.

#1508
எழு வகை அரும் கலம் இரண்டு மா நிதி
தழுவின சனபதம் ஈர்_எண்ணாயிரம்
விழவு அணி நகர்களும் வேந்தர் கூட்டமும்
எழுவினம் உரைப்பின் இ எண்ணம் என்பவே.
**கோடிக்குன்ற வரலாறு கூறுதல்

#1509
வன் திறல் மலி பலதேவர்-தம்மொடு
சென்றவர் செற்றலர்ச் செகுத்துப் பின்னரே
குன்றம் ஒன்று எடுத்தலும் கொணர்ந்து கூறினார்
பொன்றல்_இல் புராணநூல் புலவர் என்பவே.
**திவிட்டன் கூற்று

#1510
ஆங்கு அவர் மொழிதலும் அரும் கலக் குழாம்
ஈங்கு இவை என்னினும் முன்னம் எய்தினார்
வாங்கு நீர் மணலினும் பலர்-கொலோ என
வீங்கிய செருக்கு_இலன் வீரன் ஆயினான்.
**திவிட்டன் கோடிக்குன்றத்தைப் பெயர்த்து உயர்த்தல்

#1511
அறிபவர் அவை அவை மொழியக் கேட்டலும்
நெறிபடு நீதி மேல் நிறைந்த சிந்தையன்
எறி கடல் படையினோடு எழுந்து சென்று அரோ
குறுகினன் கோடி மா சிலை வன் குன்றமே.

#1512
எரி மணிக் கடகக் கை இரண்டும் ஊன்றி அப்
பெரு மணி நிலம் பிலமாகக் கீழ் நுழைத்து
அரு மணி நெடு வரை அதனை ஏந்தினான்
திரு மணி நெடு முடிச் செல்வன் என்பவே.

#1513
கை நிலம் புக நுழைந்து எடுப்பக் கல்லென
மை நில நெடு வரை மறிய மற்று அதன்
செம் நில முழை முகம் சிலம்பும் சீரினால்
அ நிலம் வாய் திறந்து அழைப்பது ஒத்ததே.
**குன்றம் பெயர்ந்த தோற்றம்

#1514
பிலங்களுள் உறைவன பெரிய நாகத்தின்
புலம் கெழு திரட்சிய புச்சம் தாழ்வன
அலங்கலான் எடுத்திட அகழ்ந்து எழுந்த அ
விலங்கலின் விழு கதிர் வேர்கள் ஒத்தவே.

#1515
குழுவிய குவளை அம் குண்டு மாச் சுனை
ஒழுகிய அருவி நீர் உக்கு வீழ்வன
கழுமிய நிலம் விட எடுப்பக் கார் வரை
அழுவதன் கண்ணுள் நீர் அழிவது ஒத்ததே.

#1516
தழுவிய தட வரைத் தாழ்வர் வாய் எலாம்
குழுமிய கொழு முகில் வழுவி வீழ்வன
செழு வரை செறிய முன் உடுத்த செம் துகில்
அழிவன அருகு வந்து அசைந்தது ஒத்தவே.
**திவிட்டன் குன்றுடன் நின்ற கோலம்

#1517
ஒன்று தன் செறி குறங்கு ஊன்றிக் கைத்தலம்
ஒன்றினான் ஒளி வரை உயர ஏந்துபு
நின்றனன் நெடியவன் நீல மா மணிக்
குன்றம் ஓர் குன்றம் கொண்டு எழுந்தது ஒப்பவே.

#1518
பொரு மாலை வேல் அரசர் போற்று இசைப்பப் பூவின்
அரு மா மழை பெய்து அமர் உலகம் ஆர்ப்பக்
கரு மால் நெடு வரையோர் கைத்தலத்தின் ஏந்தித்
திரு மா மணி_வண்ணன் செம்மாந்து நின்றான்.

#1519
அடி மேல் பூம் கழல்கள் அம் பொன் இலங்கு
முடி மேல் சூளாமணி முளைத்த சோதி
கடி மேல் விரி தாரோன் கைத்தலத்தது அன்று
படி மேல் மணி அருவி பாரித்த குன்றமே.

#1520
வரை எடுத்த மாணிக்க நீள் கடகக் கையால்
உரை எடுப்பான் போல் நிமிர்ந்து நோக்காது நிற்ப
விரை எடுத்த பூம் தார் விறல் வேந்தர் அஞ்சிப்
புரை எடுத்த மா மகரப் பொன் முடிகள் சாய்த்தார்.
**திவிட்டன் கோடிக்குன்றை அது முன்னிருந்த இடத்தில் வைத்துத்
** தன் யானையின் மீது ஏறிக் கொள்ளல்

#1521
கோடிக் குன்றம் கோடு இயல் போலும் குவவுத் தோள்
கோடிக்குன்றம் கொண்டு அது மீட்டே கொள நாட்டிக்
கோடிக்குன்றம் போந்து என நின்ற கொலை வேழம்
கோடிக் குன்ற மன்னவன் ஏறிக் குளிர்வித்தான்.

#1522
தாம் மரை தங்கும் தண் புன வேலித் தடம் நீந்தித்
தாமரை தங்கும் தண் புனல் நல் நாட்டகம் எய்தித்
தாம் அரை தங்கும் தண் சுடர் ஒண் பொன் கலை நல்லார்
தாமரை தங்கும் தண் புகழ் பாடத் தகை பெற்றான்.

#1523
மாலைத் தண் கேழ் மா மதி போலும் வளர் சோதி
மாலைத் தண் கேழ் மா மணி முத்தக் குடை நீழல்
மாலைத் தண் கேழ் வண் புனல் நாடார் மகிழ்வு எய்தும்
மால் ஐத் தண் கேழ் மால் கடல் வட்டம் வளாயிற்றே.

#1524
மை ஆர் சென்னி மாளிகை முன்றில் மலர் மேயும்
மை ஆர் பொய்கைத் தண் புனல் நாடன் வரலோடும்
மை ஆர் கண்ணின் ஆம் பயம் எல்லாம் மடவார் இம்
மை யாம் இன்றே எய்தினம் என்றே மகிழ்வுற்றார்.
**திவிட்டன் முதலியோர் நகர்புக்கது

#1525
ஆம்பல் நாணும் செம் துவர்_வாயார் அமிர்து ஊறி
ஆம்பல் நாணும் தேம் மொழி நல்லார் அலர் தூவி
ஆம் பல் நாணும் விட்டனர் ஆர்வக் களிகூர
ஆம்பல் நாணும் பல் புகழான் அ நகர் புக்கான்.

#1526
தாமரை நாறும் தண் பணை எல்லாம் மகிழ் நாறச்
சாமரை வீசத் தாழ் குழை செம்பொன் சுடர் வீசத்
தேம் மரையாளும் சே_இழையாளுந் திருமாலும்
பூ மரை வேலிப் போதனம் என்னும் நகர் புக்கார்.
**நகரையலங்கரித்தல்

#1527
முன் வாயில் முகம் எல்லாம் முத்து அடுத்துத் தாமரை வெண் முளைகள் பாய்த்தி
மின் வாய மணிக் கலசம் பொன் செந்நெல் கதிர் சூட்டி விளங்க வைத்துப்
பொன் வாழை மரகதப் பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி
மன் வாய் இ வள நகரார் மணி மாலை தொடர்ந்து ஒலிப்ப வகுத்தார் அன்றே.
**நகரார் எதிர்கொள்ளுதல்

#1528
சூழ் இணர் மென் மல்லிகையும் வளையமும் மின் சூட்டும் எழில் துதையச் சூட்டி
யாழ் அகவி மணி வண்டும் அணி ஞிமிறு மதுகரமும் இசைப்பச் செய்ய
காழ் அகிலும் நறும் சாந்தும் கடி வாசப் பூம் பொடியும் கமழ்ந்து கைபோய்
ஏழ்_உலகும் மணம் கொடுப்ப எழில் நகரார் எதிர்கொள்ள இறைவன் புக்கான்.
**மாளிகைக் கதவம் திறந்தது

#1529
கோபுரமுங் கழிந்து குளிர் நகரை வலம்கொடு வீதி குடையோன் செல்ல
நூபுரமும் மேகலையும் கலந்து ஒலிப்ப நுண் மருங்குல் நுடங்க ஓடி
மா புரத்து மாளிகை-தம் மணிக் கதவம் தாழ் திறந்து மனத்தின் தாழும்
வேய் புரையும் மென் பணைத் தோள் மெல்_இயலார் மெல்லவே திறந்தார் அன்றே.
**புகழ்ச்சி

#1530
போர் மேகம் அன்ன திறல் பொரு களிற்று மேல் அரசர் போற்றுக் கூவச்
சீர் மேகம் எனச் செறி கண் இடி முரசம் கடிது அதிர்ந்து திசை மேல் ஆர்ப்ப
நீர் மேக முத்தின் நெடும் தண் குடைக் கீழ் நிழல் துளும்பும் நேமி தாங்கும்
கார்_மேக_வண்ணன் இவன் வருவானைக் காண்-மினோ கண்கள் ஆர.

#1531
செந்தாஅமரை புரையும் செழும் கண்ணும் தடக் கையும் பவள வாயும்
அம் தாஅமரை நாறும் அடி இணையும் அவை அவையே காண்-மின் காண்-மின்
நம் தாஅமரை நாடன் நகை இலங்கு மணி ஆரம் நவின்ற மார்பம்
பைம் தாஅமரை மடந்தை பாராட்டப் பொலிந்து இலங்கும் படியும் காண்-மின்.

#1532
உரல் கால முறச் செவிய ஓங்கு எருத்தின் ஓடை மால் யானை மேல் ஒளி சூழ் மாலை
நிரல் கால மணி நிரைத்த நெடும் குடைக் கீழ் முடி நிழற்ற நெடுமால் பின்னே
சரல் கால சந்திரன் ஓர் தட வரை மேல் வெண் முகில் கீழ்த் தயங்கியாங்கே
அரக்கு_ஆம்பல் வாயினிர் இ வருநன் அலர் தாரான் மற்று அவன் சீர் காண்-மின்.

#1533
சேது_ஆம்பல் வீழ்ந்து அனைய செவ்வாயும் செங்குவளை திளைத்த கண்ணும்
மீது ஆர்ந்த வெண் நிலாச் சுடர் ஒளியும் வெள்ளிக் குன்று அனைய தோளும்
போது ஆர்ந்த கரும் குஞ்சி மணி தொடர்ந்தால் போல் புறம் தாழ்ந்து இருண்டவாறும்
காது ஆர்ந்த குழை தாழக் கதிர் உமிழ்ந்த திரு முகத்தின் கதிர்ப்பும் காண்-மின்.
**சயம்பிரபையின் தோற்றம்

#1534
வேய் காயும் மென் பணைத் தோள் வெண் சந்தனம் மெழுகி முத்தம் தாங்கி
ஏகாயம் இட்ட வெண் துகிலின் மகளிர் உழை நின்று ஏத்த
ஆகாயம் இயல்கின்ற அரு மணி நல் விமானத்தின் அகத்தாள் போலும்
மா காய வரை ஆளும் மன்னர் கோன் மட மகளை வம்-மின் காண்பாம்.
**கூந்தல்

#1535
அரு மணி நீள் விமானத்தின் ஆகாயப் பளிங்கு இயன்ற விளிம்பினாலும்
திரு மணியின் ஒளி மேனி நிழல் எறிப்பத் திகழ்ந்து இலங்கு தெய்வப் பாவை
கரு மணியின் கதிர் குழற்றிக் கடை சுருட்டிக் கைசெய்து வளர்த்த போலும்
புரி மணி ஒண் குழல் திகழப் பொன் அணை மேல் இனிது இருந்த பொலிவு காண்-மின்.
**கண்

#1536
மா நீலம் இடை பதித்து வெண்_பளிங்கில் செவ்வரத்த இரேகை வாங்கிப்
பால் நீர வேல் வடிவுபடத் திருத்தித் தாமரையுள் பாரித்து அன்ன
தூ நீல வாள் நெடும் கண் குழை முகத்தின் உள் இலங்கத் தோன்றுகின்ற
வாய் நீல மணி ஐம்பால் இ அணங்கு வரை_அணங்கோ அன்றோ காண்-மின்.
**ஒப்பனைகள்

#1537
எழுதாது மை ஒளிரும் இரு மருங்கும் எறித்து இடையே செம் கேழ் ஓடித்
தொழுதாற்கு வரம்கொடுக்கும் தடம் கண்ணி துணை முலையின் வளாகம் சூழ
இழுதாய குங்குமத்தால் இலதையையும் கொழுந்தினையும் இழைத்தார் பின்னும்
முழுதார முத்து அணிந்தார் நுண் மருங்குல் உளதாக முயன்றார்_அல்லர்.

#1538
போது ஆவியே கமழ்ந்து புரை வட்டம் பொன் இழையால் பொலிந்து தோன்றி
ஊது ஆவியால் நுடங்கும் ஒள் அரத்த நுண் கலிங்கம் ஒன்று சேர்த்தி
மீது ஆடி வில் உமிழும் மிடை மணி ஒண் கலாபங்கள் மிளிர வீக்கி
யாதானும் இவர் அடக்கம் இவள் அல்குல் அகலாமை அறிந்து செய்தார்.

#1539
கந்தாரம் கொள வீக்கிக் கடி விரிந்து பூம் பாளை கமழும் காலை
நந்தாஅவனத்து இளையார் எழுவு யாழ் நரம்பினுக்கும் நலம் சால் இன் சொல்
மந்தார மலர் கமழும் மணி ஐம்பால் மை மதர்த்த மழைக் கண் மாதர்
செந்தாஅமரை அடியின் செவ்வியும் மற்று இதுவாயின் தெய்வமே ஆம்.
**நகரமாந்தரின் செயல்

#1540
இன்னன பலவும் காட்டி இளையவர் காணும் போழ்தின்
மன்னவர் அரசர்-தம் மேல் மாலையும் மலரும் சிந்தி
மின் அவிர் சிவிறி-தம்மால் விரை பொழி தாரை வீக்கித்
தொல் நகர் ஆர்வம் என்னும் களித் தொழில் தொடங்கிற்று அன்றே.

#1541
செம்பொன் செய் பொடியினாலும் சிவிறியின் தாரையாலும்
அம் பொன் செய் மலரினாலும் அகில் புகை ஆவியாலும்
பைம்பொன் செய் பதாகையாலும் பரந்து இருள்பட்ட வீதி
கம்பம் செய் யானையானைக் கண் விளக்குறுத்த அன்றே.
**கன்னியர் செயல்

#1542
மன்னிய புகழினான் மேல் வாங்கு வில் புருவம் ஆக
மின் அவிர் பகழி கண்ணாப் புரிசை வெண் மாடம் ஆகத்
துன்னிய சால வாயில் துளைகளே துளைகள் ஆகக்
கன்னியர் எய்து தத்தம் கடி நகர் காவல் கொண்டார்.
**நகரமாந்தர் செயல்

#1543
ஆடுவார் அணங்கு கொள்வார் ஆர்வம்செய் கருவி வீக்கிப்
பாடுவார் கண்டு கூறிப் பரவுவார் பணிந்து முன்னால்
கூடுவார் கொற்றம் கொள்ளக் கூறுவார் ஆகி எங்கும்
ஊடு போக்கு அரியது ஆக ஒளி நகர் உழையர் சூழ்ந்தார்.
**சூரியாத்தமனம்

#1544
அங்கு உலாம் கொடியினாலும் அகில் புகையாலும் எங்கும்
மங்குலாய் விசும்பு மூட மழுங்கிய சுடரன் ஆகி
இங்கு உலா விளங்கமாட்டேன் இனி என எண்ணி வெய்யோன்
கொங்கு உலாம் குளிர் கொள் சோலைக் குட வரைக் குவடு சேர்ந்தான்.
**உடன் வந்தவர் ஆங்காங்குச் சென்று உறைதல்

#1545
மணி வரை அரசன் மற்றை வாழ் நகர்க் கோயில் புக்கான்
பணி வரை உழையர் ஆகிப் பயாபதி பக்கம் நின்றார்
தணி வரை இலாத செய்கைத் தத்தமக்கு இயன்ற கோயில்
அணி வரை அனைய திண் தோள் அருக்கனோடு அரசர் சேர்ந்தார்.
**திவிட்டன் சயம்பிரபையின் கோயிலை அடைதல்

#1546
மஞ்சு உடை மாடக் கோயில் வளை_வணன் புக்க பின்னைச்
செம் சுடர் மகரப் பூணான் திரு எதிர்கொள்ளச் சென்று
விஞ்சை அம் பாவை மேய விடை மணி விமானம் சேர்ந்தான்
எஞ்சல்_இல் செல்வம்-தன்னால் இந்திரன் இரட்டியுள்ளான்.
**சயம்பிரபையைப் பட்டத்துத் தேவியாக்க முரசறைதல்

#1547
மாலை ஆங்கு அடைந்த போழ்தில் மங்கலத் தேவிப் பட்டம்
காலை ஆம் அணிவது என்று கண் அதிர் முரசில் சாற்றிப்
பாலை யாழ் மழலையாளைக் காப்பு அணி பயின்ற செல்வம்
வேலை சூழ் உலகம் எல்லாம் விம்முற விளைந்தது அன்றே.
**விடியல் வருணனை

#1548
அங்கு ஒளி விளக்கினாலும் அணிகலச் சுடரினாலும்
திங்களை அனைய செல்வி திரு நுதல் ஒளியினாலும்
மங்கல மரபிற்று அல்லா மயங்கு இருள் மறைந்து போகக்
கங்குலும் மெல்லமெல்லக் கையகன்றிட்டது அன்றே.
**திவிட்டன் தேவியின் மாளிகையை அடைதல்

#1549
கார் இருள் அகன்ற போழ்தில் கமலினி என்னும் செல்விக்கு
ஓர் உருள் ஆழி வெய்யோன் அருளிய உதயம் சேர்ந்தான்
ஆர்_இருள் அனைய கூந்தற்கு அருளிய மனத்தன் ஆகிப்
பேர்_அருள் ஆழியானும் பெயர்ந்து பொன் மாடம் சேர்ந்தான்.
**தேவிப்பட்டம் கொண்டது

#1550
விஞ்சையர் உலகும் மண்ணும் விண்ணும் ஒன்றாயதே போல்
செம் சுடர் மணியும் பொன்னும் மாலையும் விரையும் சேர்த்தி
அம் சுடர் வயிரப் பைம் பூண் அலை கடல்_வண்ணன்-தன்னால்
பஞ்சு உடை அல்குல் பாக அரசொடு பட்டம் கொண்டாள்.
**சுவலனசடி விடைபெற்றுப் போதல்

#1551
தேவி-தன் தாதைக்கு ஏற்ற பெரும் சிறப்பு இயற்றிச் செல்வன்
வேய் விரி வெள்ளிக் குன்றின் விஞ்சையர் உலகம் எல்லாம்
ஓவு_இல புகழினானுக்கு உடன் கொடுத்து உரிமையோடும்
பூ விரி உருவத் தாரான் பின் சென்று விடுத்துப் போந்தான்.
**திவிட்டன் கவலையற்ற நிலை

#1552
தெவ்வர் அங்கு இன்மையாலும் திசையினில் வணக்கற்பால
அவ்வழி இன்மையாலும் அரு மணி_வண்ணன் ஆங்கு
மௌவல் அம் குழலியாலும் மணி நில மடந்தையாலும்
செவ்வலர்த் திருவினாலும் செருக்கிய களியன் ஆனான்.

#1553
தேவர்கள் திசைமுகம் காப்ப மா நிதி
ஓவு_அல இரண்டும் நின்று ஒருங்கு வீழ்தர
மேவிய அரும் கலம் விளங்க நோக்கிய
காவலன் செல்வ நீர்க் கடலுள் மூழ்கினான்.

#1554
திரு அமர் தாமரைச் செம்பொன் ஆய் இதழ்
மருவிய திரு அடி வாமன் பொன் நகர்
விரவிய விழவொடு வேள்விக்கு ஒத்து அரோ
கருவிய வள நகர் கண் குளிர்ந்ததே.

@10. சுயம்வரச் சருக்கம்
**கவிக்கூற்று

#1555
தேவரும் மனிதர்-தாமும் செறி கழல் விஞ்சையாரும்
மேவரும் தகைய செல்வம் விருந்துபட்டனகள் தோற்ற
மா அரசு அழித்த செம் கண் மணி_வண்ணன் மகிழ்ந்த காலைத்
தா_அரும் செல்வம் ஒன்று தலைவந்தது உரைக்கலுற்றேன்.
**திவிட்டன் மகளிர் வலைப்படுதல்

#1556
பால் நிலா நிறை வெண் திங்கள் பனிக் கதிர் பரப்பியாங்கு
மேல் நிலா விரியும் வெள்ளி வெண் குடை விசும்பு காப்பக்
கோன் இலா உலகம் ஓம்ப நிறீஇய பின் குவளை_வண்ணன்
மான் நிலா மடக் கண் நோக்கின் மகளிர்-தம் வலையில் பட்டான்.
**திவிட்டன் உயர்ந்து விளங்குதல்

#1557
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி முகட்டு ஓர் தெய்வக்
குரு மணி உமிழுஞ் சோதி குலவிய ஒளி கொள் வட்டம்
புரி மணி ஓத வேலிப் புதை இருள் இரியல் செய்யக்
கரு மணி_வண்ணன் தானே கதிரவன் தொழிலும் பூண்டான்.

#1558
தேம் கமழ் தெய்வச் செம்பொன் தாமரை சுரி வெண் சங்கம்
ஈங்கு இவை நெதிகள் ஆக ஏழரதனங்கள் எய்தி
ஆங்கு அமர் செல்வம்-தன்னால் அற்றைக்கன்று அமர்ந்த மாதோ
ஓங்கினன் உருவத்தாலும் வில் எண்பது உயர்ந்த தோளான்.

#1559
தெய்வங்கள் செப்பின் ஈர்_எண்ணாயிரம் திசை நின்று ஓம்ப
மை_அறு மன்னர் ஈர்_எண்ணாயிரர் வணங்க வான் மேல்
நொய்து இயல் விஞ்சை வேந்தர் நூற்றொருபதின்மர் தாழக்
கையமை திகிரியானைக் காமனே கலவிக்கின்றான்.

#1560
மன்னவர் மகளிர் ஈர்_எண்ணாயிரர் மயிலொடு ஒப்பார்
அன்னவர் அமிர்தச் செப்பு ஏர் அணி முலைக் குவடு பாயப்
பின்னிய தாது மல்கப் பில்கிய தேம் பெய் மாரி
துன்னிய சுரும்பொடு ஏங்கத் துணர் உடைகின்ற அன்றே.
**பாரிசாதத்துக்கு மணஞ்செய்விக்க எண்ணல்

#1561
அன்னணம் இயலும் நாளுள் அக்கிரத்தேவி தன் கோன்
பொன் அணி உலகின் வந்த பூ விரி பாரிசாதம்
மன் இயல் அரும்பு வைப்ப மற்று அதனோடு சேர்த்திக்
கன்னிய காமவல்லிக் கடிவினை காணல் உற்றாள்.
**திவிட்டனுக்கு அறிவித்தல்

#1562
சுரும்பு இவர் சோலை வேலித் துணர் விரி பாரிசாதம்
அரும்பிய பருவச் செல்வம் அடிகளுக்கு அறிவி என்று
பெரும் பிணா ஒருத்தி-தன்னைப் பெய்_வளை விடுத்தலோடும்
விரும்பினள் சென்று வேந்தற்கு இறைஞ்சி விண்ணப்பம்செய்தாள்.

#1563
அடிகள் முன் அடித்தியாரால் அங்கை நீர் குளிர ஊட்டி
வடிவு கொள் தளிர்கள் முற்றி மகன் என வளர்க்கப்பட்ட
கடி கமழ் பாரிசாதம் அதனோடு ஒர் காமவல்லிக்
கொடி மணம் புணர்க்கலுற்ற குறிப்பு அறி நீ சென்று என்றார்.
**விண்ணப்பத்துக்குத் திவிட்டன் இசைதல்

#1564
என்று அவள் மொழிந்த போழ்தின் இலங்கு ஒளி முறுவல் தோன்றி
நன்று அது பெரிது யாமும் நங்கை-தன் மகனைக் காண்டும்
என்று அவன் அருளக் கேட்டே இளையவள் பெயர்ந்து போக
மின் தவழ் வேலினாற்கு விதூடகன் உழையன் ஆனான்.
**விதூடகன் தோற்றம்

#1565
காது பெய் குழையும் செம்பொன் சுருளையும் கலந்து மின்னப்
போது அலர் குஞ்சி ஆங்கு ஓர் பூம் துணர் வடத்தின் வீக்கி
ஓதிய மருங்குல்-தன் மேல் ஒரு கை வைத்து ஒரு கை-தன்னால்
மீதியல் வடகம் பற்றி வெண் நகை நக்கு நின்றான்.
**அவன் செயல்

#1566
மூடிய புகழினாற்கு முகிழ் நகை பயந்து காட்டும்
கோடிய நிலையின் முன்னால் குஞ்சித்த வடிவன் ஆகிப்
பாடிய சாதிப் பாடல் பாணியோடு இலயம் கொள்ள
ஆடு இயல் எடுத்துக்கொண்டு ஆங்கு அந்தணன் ஆடுகின்றான்.
**விதூடகன் கூத்தாடல்

#1567
பாடு பாணி இலயம் பல தோற்றி
ஆடியாடி அசதித் தொழில் செய்ய
நாடிநாடி நனி நன்று என நக்கான்
நீடு நீடு முடியால் நெடியானே.

#1568
காது கொண்டன கன பொன் குழை சோர
மீது கொண்ட வடகம் புடை மேவ
வாதியாதி முழுகும் வயிறு என்னாப்
பூதி மீது புரளா நரல்கின்றான்.

#1569
மாதவன் வயிறு பற்றி நரன்றாற்கு
ஏதம் என்னை என ஏந்தல் வினாவ
ஊதியூதி வயிறு உள் அளவு எல்லாம்
மோதகங்கள் முழுகும் பல என்றான்.
**மன்னனும் விதூடகனும் உரையாடல்

#1570
என்று தின்றனை பல் மோதகம் என்ன
என்று தின்றனவும் அல்ல இனிப் போய்ச்
சென்று தேவி கடி காவின் விழாவில்
நின்று தின்னலுறுகின்றன என்றான்.

#1571
மாதவன் மொழிய மன்னவன் நக்கு ஆங்கு
ஏதம் என்னை பெரிது எய்தினை என்றே
வேத நாவின் விறல் வேதியர்க்கு அல்லால்
ஈதல் இல்லை இனி என் செய்தி என்றான்.

#1572
வேதம் வல்லவரை வென்றிடுகிற்கும்
வாதம் வல்லன் அதனால் பெறுகிற்பன்
வாதம் வெல்லும் வகையும் என் மாண்பும்
மாது பண்டும் அறியும் மற வேலோய்.

#1573
வாதம் வெல்லும் வகை யாது அது என்னில்
ஓதி வெல்லலுறுவார்களை என் கை
கோது கொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்.
**திவிட்டன் பொழிலினுட் புகுதல்

#1574
நன்று வாதம் இது காண்டும் எனப் போய்ச்
சென்று சோலை மதில் சேருபு வாயில்
ஒன்று காவல் உழையாரொடு கூடிப்
பொன்று_இலாத புகழான் பொழில் புக்கான்.
**விதூடகன் கனி காண்டல்

#1575
நீடு செம்பொன் முடியாற்கு எதிர் நிந்தா
வேடம் மேவிய விதூடகன் ஓடி
ஓடியாடி வருவான் உயர் காவில்
கூடி வீழ்வன கொழும் கனி கண்டான்.
**அவன் உரை

#1576
கண்டுகண்டு தன கண் கனி-தம் மேல்
மண்டிமண்டி வர வாய் எயிறு ஊறக்
கொண்டுகொண்டு குவியா இவை காணாய்
உண்டும்உண்டும் என ஓடி உரைத்தான்.
**மன்னன் விடை

#1577
நல்ல அல்ல கனி முன்னைய நாம் இ
எல்லை செல்ல உறும் என்னலும் ஆயின்
வல்லைவல்லை வருவாய் என முன்னால்
ஒல்லையொல்லை ஒலி பாடி நடந்தான்.
**பொழில் வருணனை

#1578
சந்து மாவொடு தடாய் இடம் எல்லாம்
கொந்து தேனொடு குலாய் இணர் கூடி
வந்து தாழ்ந்து மது மாரி தயங்கித்
தந்து தாது பொழியும் பொழில் தானே.

#1579
மாவின் மேல் வளர் அ மாதவி வைத்த
தா_இலாத தழை சார்வன நோக்கிக்
காவு காமர் கனி கண்டது கையால்
கூவும் ஓடி அவை கொள்குவம் என்றான்.
**கனி சிந்தியது கண்டு முனிவடைதல்

#1580
கூடி வண்டு குடையும் குளிர் காவில்
ஓடி மண்டி வருவான் ஒரு பாலால்
சேடு கொண்ட கனி சிந்தின கண்டு
மூடு கொண்ட மதியன் முனிவுற்றான்.
**விதூடகன் வினா

#1581
ஏவல் இன்றி எரி வெம் கதிரோனும்
போவல் என்று நினையாப் புனை கோயில்
ஓவல்_இன்றி உடையாய் சிறிதேனும்
காவல் இன்று கடி கா இது என்றான்.

#1582
பொன்னின் ஆய புரிசைத் தளம் மேலும்
மன்னு வாளர் மறவோர் பலர் காப்பர்
என்னை காவல் இஃது இல் வகை என்றான்
மின்னு வார்ந்து மிளிரும் சுடர் வேலோன்.
**திவிட்டன் கூற்று

#1583
அரு முகத்த கனி ஆயின எல்லாம்
ஒரு முகத்தனகள் அன்றி உதிர்த்துத்
தரு முகத்தர் வருவார் தறுகண்ணார்
கரு முகத்தர் உளர் காவல்கள் இல் என்றான்.
**விதூடகன் செயல்

#1584
யாவர் யாவர் அவர் எங்கு உளர் என்னக்
காவு மேவும் முசுவின் கலை காட்ட
ஆ அவர் கள்வர் அதனால் எழு நாம் போய்த்
தேவி காவு நனி சேர்குவம் என்றான்.

#1585
கள்வர் தாம் பலர் எனக் கடல்_வண்ணன்
உள் விராவு நகை சேர் உரை கேட்டே
வெள்கி வேந்தன் அருகே இரு பாலும்
பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான்.
**தமாலிய வீதியைக்கண்டு விதூடகன் மருளல்

#1586
தாழ் தளிர் பொதுளிய தமால வீதியை
ஏழை கண்டு இருள் என வெருள யாவதும்
சூழ் இருள் அன்று இது சோலை காண் என
வீழ் இணர்க் கண்ணியான் வெருவு நீக்கினான்.
**விதூடகன் மேலும் மருண்டு வினாதல்

#1587
வால் இதழ் வீழ்தரு மகிழ் தன் தாள் முதல்
சாலிகை புக்கது தயங்கு தாரினாய்
சோலையும் அமர்த் தொழில் தொடங்குமோ என
வேலை_நீர்_வண்ணனை வெருண்டு நோக்கினான்.

#1588
அஞ்சல் இங்கு அமர்த் தொழில் இல்லை யாவதும்
மஞ்சு இவர் மகிழம்-தன் வயவு நோய் கெடூஉப்
பஞ்சு இவர் அல்குலார் பவழ வாயினால்
அம் சுவை நறவம் ஈங்கு உமிழ ஆனதே.
**திவிட்டன் தன் நண்பன் மருட்சியை நீக்கல்

#1589
ஆங்கு அதன் ஆவியால் அரவத் தேன் எழா
ஈங்கு இதன் தாள் முதல் இருள மொய்த்தன
ஓங்கிய கேள்வியாய் உணர்ந்து கொள்க என
வீங்கிய கழலவன் விளங்கச் சொல்லினான்.
**பின்னும் விதூடகன் கேட்டலும் மன்னன் விடையிறுத்தலும்

#1590
முள் அரை முருக்கினோடு எழுந்த மல்லிகை
வள் இதழ் குருதியின் வடிவில் ஊழ்த்தன
கள் அவிழ் கண்ணியாய் விரியும் நாள் எனத்
தெள்ளிதின் அவற்றையும் தெளியச் செப்பினான்.

#1591
கடி மிசை விரிதரும் காமர் கொம்பரின்
முடி மிசை எழுதரு முறி கொள் ஈர்ம் தளிர்
அடி மிசை ஈன்றது இ அசோகம் என்-கொலோ
கொடி மிசை எழுதிய குவவுத் தோளினாய்.

#1592
இலைத் தலை ஈர்ம் தளிர் அல்ல ஈங்கு இதன்
மலைத்தகு வயவுநோய் தீர வைத்தன
கலைத் தலை மகளிர் தம் காமர் சீறடி
அலத்தகச் சுடர் என அறியக் காட்டினான்.
**விதூடகன் கூற்று

#1593
காவி வாய் விலங்கிய கரும் கண் வெம் முலைத்
தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும்
மேவி ஆங்கு அலர்ந்திடும் நின்னை வென்றதால்
ஆவியார் அசோகினது அமைதி வண்ணமே.
**மன்னன் விதூடகனுடன் விளையாடினான்

#1594
மாதவன் மொழிதலும் மன்னன் ஆங்கு ஒரு
போதினால் புடைத்தனன் புடைத்தலோடும் இங்கு
ஏதிலாள் ஒருத்திக்கா என்னைச் செய்த இத்
தீது எலாம் தேவிக்குத் தெரியச் செப்புவேன்.
**திவிட்டன் ஒரு சிலாவட்டத்தின் மீது ஏறினான்

#1595
என்றலும் எரி மணிக் கடகக் கையினால்
அன்று அவன் கைத்தலம் பிடித்து அங்கு யாவதும்
இன்_திறல் இனிச் செய்தல் இல் எனச் சொலிச்
சென்று ஒரு மணிச் சிலாவட்டம் ஏறினான்.
**விதூடகன் செயல்

#1596
சொரி கதிர் மணிச் சிலாவட்டம் சேர்ந்தனன்
அருகு நின்று அந்தணன் அமர்ந்து நோக்கியே
வெருவிய மனத்தினன் விதலை மேனியன்
பெருகிய தலையினன் பெயர்ந்து பின்றினான்.
**விதூடகன் பூதங் காண்டலும் திவிட்டன் அவன் மயக்கம் தீர்த்தலும்

#1597
யாது கண்டனை என இதனுள் வாழ்வது ஓர்
பூதம் உண்டு அது புடைத்து உண்ணும் ஆதலால்
ஏதம் உண்டு இங்கு இனி இருப்பின் வல்லையே
போத என்று அந்தணன் புலம்பிக் கூறினான்.

#1598
யாது அதன் உரு என அலர் பொன் ஓலையும்
சோதி சூழ் சுடர் மணிக் குழையும் துன்னிய
காதொடு கண் பிறழ்ந்து உளது கை குறிது
ஊதிய வயிற்றது என்று உருவம் ஓதினான்.

#1599
மின் நிழல் பூணவன் மெல்ல நக்கு அது
நின் நிழல் காண் அது நிற்க நின் உரை
என் நிழல் என்னொடும் இயங்கின் அல்லது
கல் நிழல் உள் புகின் காண்டல் ஆகுமோ.

#1600
நின் நிழல் ஆவது தெளிய நின் தொழில்
இ நிழல் காண் என இறைஞ்சி நோக்குபு
தன் நிழல் தான் செய்வ செய்யத் தான் தெளிந்து
இன் நிழல் இருந்தனன் இலங்கு நூலினான்.

#1601
திருந்திய மணி நகைத் தேவி இவ்வழி
வரும்துணைப் பொழுதும் இ மணிச் சிலாதலம்
பொருந்தின பொழில் நலம் காண்டும் என்று அரோ
இருந்தனர் இருவரும் இனிதின் என்பவே.
**சயம்பிரபை சோலைக்கு வருதல்

#1602
மின் அவிர் விளங்கு மணி மேகலை மிழற்றப்
பொன் அவிர் சிலம்பு ஒலி போந்து புடை சாற்றக்
கன்னியர் நிரந்து பலர் காவலொடு சூழ
அன்னம் என வந்து அரசி ஆர் பொழில் அடைந்தாள்.
**அவள் தன்னை மறைத்துக் கொண்டு நிற்றல்

#1603
மாலை அமர் சிந்தையொடு வார் பொழில் மருங்கின்
வேலை அமர் கண்ணி விளையாடுதல் விரும்பி
மேலை அமர் விஞ்சையின் மறைந்து விரை நாறும்
சோலை அமர் தோகை எனவே தொழுது நின்றாள்.
**திவிட்டன் இருக்கை

#1604
மாதவன் மருட்ட மழை_வண்ணன் மணி வட்டம்
சோதி விடு சூழ் சுடர் வளாவ அதன் மேலால்
தாது படு போது தவிசாம் என அடுத்த
மீது படு பொங்கு அணையின் மெல்லென இருந்தான்.
**கவிக்கூற்று

#1605
பந்து அணையும் மெல் விரலி பாடகம் ஒடுக்கி
வந்து அணையும் எல்லை உள் மயங்கி ஒரு மாற்றம்
அந்தணன் வினாவ அகம் மீது நினைவானாய்
கந்து அணைவு_இலாத களி யானை பல வல்லான்.
**விதூடகன் வினா

#1606
நிலத்தவள்-கொல் அன்றி நெடு மால் வரை_உளாள்-கொல்
அலத்தக அடிச்சுவடு அசோகின் மிசை வைத்தாள்
உலத் தகைய தோள் அணி கொள் மார்ப உரை என்ன
வலத் தகையன் ஆய மணி_வண்ணன் மொழிகின்றான்.
**திவிட்டன் விடை

#1607
செய்யன செறிந்தன திரண்ட விரல் சால
ஐய தசை ஆர்ந்த அடியின் அழகினாலே
மெய்யும் அறிவன் வினவில் விஞ்சையன் மடந்தை
வையம் உடையாற்கு உரிய மாதர் அவள் என்றான்.
**சயம்பிரபையின் செயல்

#1608
என்றலும் இரண்டு கரு நீல மலர்க் கண்ணும்
சென்று கடை சேந்து சிறு வாள் நுதல் வியர்த்தாள்
அன்று அரசன் ஆவி உருகும்படி அனன்று
மின் தவழும் மேனியொடு தேவி வெளிப் பட்டாள்.
**அரசியைக் கண்ட அந்தணன் செயல்

#1609
தாது இவர் கரும் குழலி-தன்னை முகம் நோக்கி
மாதவன் நடுங்கி வளர் பூம் பொழில் மறைந்தான்
காதலனும் அங்கு உரிய கட்டுரை மறந்திட்டு
ஏதம் இனி என்-கொல் விளைகின்றது என நின்றான்.
**மன்னன் வேண்டுகோள்

#1610
மன்னன் மகளே மகர வார் குழல் மடந்தாய்
அன்னம்_அனையாய் அமிர்தின் மேலும் அமிர்து ஒப்பாய்
என்னை இவண் உற்றது என என்னும் இலை என்னா
முன்னு புருவக் கொடி முரிந்து முனிவுற்றாள்.
**தேவியின் கூற்று
**அரசன் அவளடி தாழ்தல்

#1611
ஆங்கு அவளொடு ஈங்கு விளையாடு நனி நீ யான்
பூம் கமழும் மாடம் எனதே புகுவன் என்றாள்
தாங்கலன் எழுந்து தகை நீல மணி_வண்ணன்
ஓங்கு முடி சீறடியின் மேல் ஒளிர வைத்தான்.
**அரசி குற்றஞ்சாட்டுதலும் அரசன் இரங்கலும்

#1612
மற்று அ நெடுமால் மகர மா முடி வணங்கக்
கற்றனை தவப் பெரிது கைதவமும் என்ன
உற்றது ஒர் பிழைப்பு உடையனாய்விடின் உணர்ந்து
முற்ற முறைசெய்து அருளு மொய் குழலி என்றான்.
**விதூடகனை இழுத்துவரச் செய்தல்

#1613
மன்னன் ஒர் பிழைப்பும் இலன் மாதவனை நாடி
இன்னினி இவண் கொணர்-மின் என்ன உழையோர்கள்
முன் அவன் மறைந்த முருகு ஆர் பொழிலின் உள்ளே
துன்னுபு தொடர்ந்து துகில் பற்றுபு கொணர்ந்தார்.
**தேவிசினம்தீர்தல்

#1614
பேதைமை கலந்து பிறழ் கண்ணினொடு ஒடுங்கும்
மாதவனை நோக்கி மணி வாய் முறுவல் தோற்றிக்
கோதைகளில் யாத்து இவனை நீர் கொணர்-மின் என்றாள்
போது விரி தேம் குழலி பூம் பொழில் அணைந்தாள்.

#1615
மன்னவன் மருட்ட மணி யாழ் மழலை மாதர்
முன்னிய முகத்து முறுவல் கதிர் முகிழ்ப்ப
இன்ன அருள் பெற்றனன் இனிப் பெரிதும் என்னா
அன்னம்_அனையாளை அணி மார்பினில் அணைத்தான்.
**விதூடகன் விடுதலை பெறுதல்

#1616
போது இவர் அலங்கலொடு பூண் முலை ஞெமுங்கக்
காதலன் முயங்குபு கலந்து இனிது இருந்து
மாதவனும் ஏதம் இலன் ஆதலின் மடந்தாய்
தீது படு சீற்றம் ஒழி என்று தெளிவித்தான்.
**அவன் செயல்

#1617
இட்ட தளை-தம்மொடு இரு தோளும் இடை வீக்கிக்
கட்டி விடு பூம் பிணையல் கைவிடலும் மெய்யுள்
ஒட்டிவிடு காதலொடு வந்து உருவுகொண்டு
பட்ட பல பாடலினொடு ஆடல் பல செய்தான்.
**கனிகளைக் கண்டு அவன் பாடுதல்

#1618
ஓடுமே மனம் ஓடுமே
கூடுமோ தணி கோதையாய்
காடு சேர் கனி காண்-தொறும்
ஓடுமே மனம் ஓடுமே.

#1619
ஊறுமே எயிறு ஊறுமே
வீறு சேர் விரி கோதையாய்
சேறு சேர் கனி காண்-தொறும்
ஊறுமே எயிறு ஊறுமே.

#1620
வேண்டுமே மனம் வேண்டுமே
பூண்ட பொன் அணி மார்பினாய்
நீண்ட மாங்கனி காண்-தொறும்
வேண்டுமே மனம் வேண்டுமே.
**பாரிசாத காமவல்லி திருமணத் தொடக்கம்

#1621
இன்னன பாடி ஆட ஈர்ம் கனி பலவும் கூவி
முன்னவன் ஆர ஊட்டி முறுவலோடு அமர்ந்த பின்னை
மன்னிய பாரிசாதம் மணமகனாக நாட்டிக்
கன்னி அம் காமவல்லி கடிவினை தொடங்கலுற்றார்.

#1622
திரு மணி நிழற்றும் செம்பொன் திலதம் மா முடியினானும்
குரு மணிக் கொம்பர் அன்ன கொழும் கயல் நெடும்_கணாளும்
பரு மணி பதித்த பைம்பொன் வேதிகைப் பாரிசாதம்
அரு மணி அரும்பித் தாழ்ந்த அம் தளிர்ப் பொதும்பர் சார்ந்தார்.
**தேவியர் யாவரும் அருகே வருதல்

#1623
வரி வளை வயிரொடு ஏங்க வார் அணி முரசம் ஆர்ப்பக்
கரு வளர் கன பொன் சோலைக் கறங்கு இசை பரந்த போழ்தில்
திரு வளர் அலங்கல் மார்பின் செம்_கணான் தேவிமார்கள்
உரு வளர் கொம்பர்_அன்னாள் அருள் அறிந்து உழையர் ஆனார்.
**அவர்களினிடையே நின்ற திவிட்டன் நிலை

#1624
செங்கயல் உருவ வாள் கண் தேவி-தன் குறிப்பில் சேர்ந்த
மங்கையர் வனப்பு நோக்கி மணி_வண்ணன் மகிழ்ந்து மற்று அப்
பொங்கிய இள மென் கொங்கை மகளிர்-தம் புருவ வில்லால்
அம் கயல் நெடும் கண் என்னும் பகழியால் அழுத்தப்பட்டான்.

#1625
குடங்கையின் அகன்று நீண்டு குவளையின் பிணையல் செற்று
மடம் களி மதர்வைச் செம் கண் மான் பிணை மருட்டி மையால்
புடம் கலந்து இருள்பட்டு உள்ளால் செவ்வரி பரந்த வாள் கண்
இடம் கழி மகளிர் சூழ இந்திரன் இருந்தது ஒத்தான்.
**பாரிசதத்திற்குக் கோலம் செய்யக் கட்டளையிடுதல்

#1626
ஆங்கு அவரோடு மற்று அ அணி பொழிற்கு அரசன் ஆய
பாங்கு அமை பாரிசாதம் பருவம்செய் பொலிவு நோக்கி
ஈங்கு இவற்கு இசைந்த கோலம் இனிதினின் இயற்றுக என்றான்
ஓங்கிய உருவத் தார் மேல் ஒளி நிலா உமிழும் பூணான்.
**பாரிசாதத்தை அலங்கரித்தல்

#1627
எந்திரம் இழிந்த தாரை அருவி நீர் இனிதின் ஆட்டிக்
கந்து எனத் திரண்ட திண் தோள் கனக சாலங்கள் காட்டிப்
பைம் தழைப் பொழிலுக்கு எல்லாம் அரசு எனப் பட்டம் சேர்த்தி
அம் தளிர்க் கொம்பர்-தோறும் அணி பல அணிந்தார் அன்றே.
**காமவல்லிக்கு மணக்கோலம் செய்து அதன் மணமகனோடு சேர்த்தல்

#1628
கன்னி அம் காமவல்லிக் கனம் குழை மடந்தை-தன்னை
மன்னவன் தேவிமார்கள் மணவினைக் கோலம்செய்து
பின் அதனோடு சேர்த்திப் பெருகிய களியர் ஆனார்
இன் நகைப் புதல்வர் செல்வம் யாவரே இனிது என்னாதார்.
**திவிட்டன் சயம்பிரபை ஆகிய இருவர் மனத்துள் காமம் செறிதல்

#1629
மாதரார் மனத்தினுள்ளும் மணி_வண்ணன் நினைப்பினுள்ளும்
காதலும் செறிந்ததாகக் காமனும் உழையனாகப்
போது அலர் பருவச் சோலைப் பொழில் நலம் நுகரும் போழ்தில்
ஓதநீர்_வண்ணன் அங்கு ஓர் உபாயத்தால் ஒளிக்கலுற்றான்.
**திவிட்டன் தன்னை மறைத்துக் கொள்ளல்

#1630
பொன் அவிர் குழையினாரைப் பொழில் விளையாடல் ஏவி
மன்னவன் மதலை மாட வள நகர் அணுகுவான் போல்
தன்னை மெய் மறைத்து ஓர் விஞ்சை தாழ் இருள் எழினியாகப்
பின்னை மாதவனும் தானும் பிணை_அனார் உழையன் ஆனான்.
**தேவியர் பொழில் விளையாடல்

#1631
மன்னவன் மறைந்தது எண்ணி மாபெருந்தேவி மற்று அப்
பொன் அவிர் கொடி_அன்னாரைப் பொழில் விளையாடல் ஏவக்
கன்னி அம் கோலம்செய்து கதிர் மணிக் கலங்கள் தாங்கி
இன் நகை மழலை தோற்றி இளையவர் இனையர் ஆனார்.
**அவர்கள் செய்து கொண்ட ஒப்பனைகள்

#1632
அம் பொன் செய் கலாப அல்குல் அம் தழை புனைந்த வஞ்சிக்
கொம்பு அஞ்சு மருங்குல் நோவக் குவி முலை முறிகொண்டு அப்பிச்
செம்பொன் செய் சுருளை மின்னச் செவி மிசைத் தளிர்கள் சேர்த்திக்
கம்பம்செய் களிற்றினான்-தன் கண்களைக் களிப்பித்திட்டார்.

#1633
விரவு அம் பூம் தளிரும் போதும் மிடைந்தன மிலைச்சுவாரும்
அரவம் பூம் சிலம்பு செய்ய அம் தளிர் முறி கொய்வாரும்
மரவம் பூம் கவரி ஏந்தி மணி வண்டு மருங்கு சேர்த்திக்
குரவம் பூம் பாவை கொண்டு குழவி ஓலுறுத்துவாரும்.
**மாலை சூடுதல்

#1634
பாவையும் விலங்கு சாதிப் படிமமும் பறப்பை-தாமும்
கோவையும் முகத்தும் ஆக்கிக் குலவிய இதழதாக
ஓவியர் புனைந்த போலும் ஒளி மலர்ப் பிணையல் மாலை
தேவியர் மருளச் செய்து சிகழிகை சேர்த்துவாரும்.
**தேவியர் சயம்பிரபையைக் கொண்டாடுதல்

#1635
அரு மலர்த் தழையும் போதும் அடியுறையாக ஏந்தித்
திரு மலர்ப் பாவை அன்ன தேவியைச் செவ்வி காண்பார்
உரு மலர் இழைத்த பாவை ஒளி மணம் நயந்து மாதோ
குரு மலர்க் கொம்பின் ஒல்கிக் குரவையின் மயங்குவாரும்.
**அரசனைப்பாடுதல்

#1636
சிகரமாய் இலங்கு சென்னித் தென்மலைச் சாந்து மூழ்கிப்
பகரும் மா மணி வண்டு ஓவாப் பணை முலைப் பாரம் தாங்கித்
தகர வார் குழல் பின் தாழத் தாழ் குழை திரு வில் வீச
மகர யாழ் எழுவி மன்னன் வண் புகழ் பாடுவாரும்.
**வட்டிகைத் தொழில்

#1637
வட்டிகைப் பலகை-தன் மேல் மணி_வண்ணன் வடிவு தீட்டி
ஒட்டிய வடிவில் தம்மை ஊடலோடு இருப்பக் கீறித்
திட்டமிட்டு உருவ நுண் நூல் துகிலிகை தெளிர்ப்ப வாங்கிப்
பட்டமும் குழையும் தோடும் பையவே கனிவிப்பாரும்.
**செய்யுளின்பம் ஊட்டல்

#1638
மாம் பொழில் மருங்கு சூழ்ந்த மணிச் சிலாதலத்து மேலால்
காம்பு அழி பணை மென் தோள் மேல் கரும் குழல் துவண்டு வீழப்
பூம் பொழில் விளங்கத் தோன்றும் பொன் இதழ் மறிந்து நோக்கித்
தேம் பொழி செய்யுள் இன்பம் செவி முதல் சேர்த்துவாரும்.
**ஊசலாடல்

#1639
கோதையும் குழைவு இன் பட்டின் கொய்சகத் தலையும் தாழ
மாதர் வண்டு ஒருங்கு பேர மழையிடை நுடங்கும் மின் போல்
போது அலர் பொதும்பில் தாழ்ந்த பொன் எழில் ஊசல்-தன் மேல்
ஓதநீர்_வண்ணன் பாடி நூழில் ஊழ் இயங்குவாரும்.
**வாழைக்குருத்தில் உகிரால் உருவம் கிள்ளல்

#1640
கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலைக் கன மடல் குமரி வாழை
உள் எழு சுருளை வாங்கி ஒளி உகிர் நுதியின் ஊன்றிப்
புள் எழு தடமும் போர் மான் தொழுதியும் மிதுனம் ஆய
ஒள் எழில் உருவும் கிள்ளி உழையவர்க்கு அருளுவாரும்.
**பிற விளையாடல்கள்

#1641
மயில்-உடை ஆடல் கண்டு மகிழ்ந்து மெய்ம்மயங்கி நிற்பார்
குயிலொடு மாறுகொள்வார் குழை முகம் சுடரக் கோட்டிக்
கயிலொடு குழல் பின் தாழக் கண்டு நீர் கொள்-மின் என்று ஆங்கு
அயில் இடைப் பகழி வாள் கண் அங்கையின் மறைத்து நிற்பார்.

#1642
செழும் மலர்த் தாது கொய்து மெல் விரல் சிவந்த என்பார்
விழு மலர்த் துகள் வந்து ஊன்ற மெல் அடி மெலிந்த என்பார்
கொழு மலர்ப் பிணையல் தாங்கிக் கொடி இடை ஒசிந்த என்பார்
எழு மலர்த்து அனைய தோளான் தேவியர் இனையர் ஆனார்.
**மகளிரும் சோலையும்

#1643
கொடி மருங்குல் தாமே கொடியாய் நுடங்க
வடி நெடும் கண் நோக்கம் மணி வண்டாய் ஓட
அடி மலரும் கைத்தலமும் அம் தளிராய்த் தோன்றக்
கடி நறும் பூம் சோலையைக் காரிகையார் வென்றார்.

#1644
மணம் கமழும் பூ மேனி வாசம் கமழ
அணங்கு இவரும் சோலை அலர் நாற்றம் எய்திக்
கணம் குழையீர் யாம் உமக்குக் கைமாறு இலேம் என்று
இணங்கு இணரும் போதும் எதிர் ஏந்தித் தாழ்ந்த.

#1645
அம் தார் அசோகம் அசோகம் அவர்க்கு ஈந்த
செம் தார்த் திலகம் திலகமாய்ச் சேர்ந்தன
வந்தார்க்கும் ஆ ஆதும் என்பன போல் மா தழைந்த
கொந்து ஆர் பூம் சோலைக்கு உலகு அறிவோ கூடின்றே.
**தேவியர் ஒரு செய்குன்றம் சேர்தல்

#1646
வெள்ளித் திரள் மேல் பசும்பொன் மடல் பொதிந்து
அள்ளுறு தேம் கனி அதாய் பொன் திரள் அசைந்து
புள் உறு பொன் வாழைக் கானம் புடை அணிந்த
தெள்ளும் மணி அருவிச் செய்குன்றம் சேர்ந்தார்.

#1647
கஞ்சுகி மாந்தரும் காவல் முதியாரும்
மஞ்சு இவர் சாரல் மணி அறையும் வார் பொதும்பும்
துஞ்சு மழை தவழும் சோலைகளும் சோதித்துச்
செம்_சொலவர் போய்த் திசை காவல் கொண்டாரே.

#1648
தோகை மட மஞ்ஞை சோலைப் பரப்பின போல்
மாக மழை_வண்ணன் காதல் மடந்தையர்கள்
ஆகம் மணி சூழ் சாரல் ஐய இரும் பொழில்-வாய்ப்
போக மணி புரளக் கலை புலம்பப் புக்கார்.
**செய்குன்றிற் செயல்

#1649
அரை இலங்கு மேகலை ஆர்ப்பின் அயல
வரை இலங்கு மேகலை மாறே நின்று ஆர்க்கும்
புரை இலங்கு பொன் சிலம்பு தான் சிலம்பும் போழ்தில்
நிரை இலங்கு பொன் சிலம்பு நேரே சிலம்பும்.

#1650
கொங்கு உண் குழலார் குழல் ஏர் மணி மழலை
தங்கின் அவை கொண்டு தானும் எதிர் மிழற்றும்
அம் கணவர் செய்வ செய்து அசதியாடின்றே
செம் கண் நெடியான் கடி காவில் செய்குன்றே.
**நகரும் சிற்றிலும் இழைத்தல்

#1651
மருவி மழை தவழும் மை ஓங்கு சாரல்
அருவி கொழித்த அரு மணிகள் வாரித்
தெருவு படத் திருத்திச் சீலம் புனைவார்
உருவ நகர் இழைப்பார் ஒண் நுதலார் ஆனார்.

#1652
மரகத ஈர்ம் கதிரை வார் புல் தளிர் என்று
உரை தரு காரிகையார் ஊன்றி மிதித்துத்
திரை தவழச் சீறடிகள் நோவ நடந்து
விரை தரு பூம் படை மேல் மெல்ல அசைந்தார்.
**அருவியாடல்

#1653
வெம்பு அரிய தண் சாரல் வேரூரி அக் கொழுந்து
தம் பருவச் சோலை தழைத்த தகை நோக்கி
எம் பெருமான் போலும் எழில இவை என்று
வம்பு உருவம் தோன்ற மணி அருவி ஆடுவார்.
**சந்திரகாந்தக் கல் துளித்தலும் மகளிர் மழையென மருளலும்

#1654
செம் களி தோய்ந்து உள் சிவந்த சீறடியார் வாள் முகத்தின்
தங்கு ஒளி பாய்ந்து உள் எறித்த தண் காந்தம் மா மணி
திங்கள் ஒளி கருதித் தெள் நீர்த் துளி சிதற
மங்குல் மழை அயிர்த்து வார் பொழிலின்-வாய் மறைவார்.
**மாணிக்கக் கதிரை அசோகந்தளிரென்று அயிர்த்தல்

#1655
வம்பத் திரள் உருவின் மாணிக்கச் செம் கதிரை
அம் பொன் சிலம்பின் அசோகம் தளிர் என்று
தம் பொன் சுடர் ஆழி மெல் விரலால் தைவந்து
கொம்பின் குழைந்து குறு முறுவல் கொண்டு அகல்வார்.
**மாணிக்கத்தைக் காயா என்று மயங்குதல்

#1656
விண்டு சுடர் தயங்கு மேதகு மா மாணிக்கம்
கண்டு கவின் விரிந்த காயாம் துணர் இவை
கொண்டு குழற்கு அணிதும் என்று கொளலுறுவார்
வண்டு வழி படர வாள் கண் புதைத்து இயல்வார்.
**ஆயோ என்று கூவிக் கிளிகளை மகிழ்வித்தல்

#1657
வேய் ஓங்கு சாரல் விளை புனம் காவல் கொண்டு
ஆயோ என மொழியும் அ மழலை இன் இசையால்
போய் ஓங்கு பூம் சோலை வாழும் புனக் கிளிகள்
மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார்.
**சிலர் மாணிக்கப்பாறை மீதேறுதல்

#1658
பூம் தளிர் தாழ்ந்த பொழில் தயங்கு பொன் வரை-வாய்
ஈர்ம் தளிர் மேனியார் இவ்வாறு இனிது இயலக்
காந்தள் அம் குன்றின் கன பொன் மணி அறை மேல்
ஏந்து இளம் கொங்கை மகளிர் சிலர் இயைந்தார்.
**வள்ளி பாடுதல்

#1659
பைம்பொன் அறை மேல் பவழம் உரலாக
வம்ப மணி பெய்து வான் கேழ் மருப்பு ஓச்சி
அம் பொன் மலை சிலம்ப அம்மனை வள்ளையுடன்
கம்பம் செய் யானைக் கரியவனைப் பாடினார்.

#1660
கோடி சிலை எடுத்தான் கோள் அரிமா வாய் போழ்ந்தான்
ஆடு இயல் யானை அயக்கிரீவனை அடித்தான்
வீடு_இல் மணி அருவி வெண் மலையும் கைப்பிடித்தான்
வாடல்_இல் பூம் கண்ணி மா மேக_வண்ணனே.

#1661
வலம்புரி வாய்வைத்தான் வார் சிலை கைக்கொண்டான்
சலம் புரி சண்டை தலை பனிப்புக் கண்டான்
பொலம் புரி தாமரையாள் பொன் ஆகம் தோய்ந்தான்
கலம் புரி வண் தடக் கை கார் மேக_வண்ணனே.

#1662
செம்பொன் செய் ஆழியான் சேதாம்பல் நீள் முடியான்
அம் பொன் நிதியும் அரும் கலமும் கைப்படுத்தான்
நம்பு மணி மேனி நங்கை நலம் நுகர்ந்தான்
கம்பம் செய் யானைக் கரு மேக_வண்ணனே.
**திவிட்டன் தெய்வமொன்றினை வேழமாகி வரச் செய்தல்

#1663
மடந்தையர் பாட ஆங்கு மாபெருந்தேவி நிற்ப
அடைந்து அவரோடும் ஆடும் ஆர்வ நீர் வெள்ளம் வாங்க
உடைந்து அழி மனத்தன் வேந்தன் உழையது ஓர் தெய்வம் கூவிப்
படம் தவா முகத்து வேழம் ஆகு எனப் பணித்துவிட்டான்.

#1664
மை வரை ஒன்று கோல மணி தயங்கு அருவி தாழ
ஐவனம் கலந்த சாரல் அருகு வந்து அணைவதே போல்
தெய்வம் ஓர் வேழம் ஆகிச் செய் கடாம் திரண்டு வீழ
மை வரு நெடும் கண் நல்லார் நடுங்க வந்து அணைந்தது அன்றே.
**மடந்தையர் நடுக்கம்

#1665
கயில் கலந்து இருண்டு தாழ்ந்த கரும் குழல் மருங்கு சோர
வெயில் கலந்து இலங்கும் செம்பொன் மிடை மணிக் குழை வில் வீச
அயில் கலந்து இலங்கு வேல் கண் ஐ அரி பிறழ ஓடி
மயில் கலந்து இரிந்த போல மடந்தையர் நடுங்கினாரே.
**திவிட்டன் சுயம் பிரபையின் அச்சம் தீர்த்தல்

#1666
நாண்-தனால் நிறைந்த நங்கை நடுங்குபு நுடங்கி நோக்கி
யாண்டையார் அடிகள் என்னும் ஆயிடை அஞ்சல் பொன்னே
ஈண்டையேன் என்னை பட்டது என்று சென்று அணுகினானால்
வேண்டிய விளைத்துக் கொள்ளும் விழுத் தவம் விளைத்து வந்தான்.
**திவிட்டன் தேவியைத் தேற்றல்

#1667
மலை முக மத நல் யானை மற்று அது மறித்து நங்கை
முலை முகம் நெருங்கப் புல்லி முருகு வேய் கோதை சூட்டிக்
கலை முகம் திருத்திக் காதில் கன பொன் செய் சுருளை நீவி
இலை முகம் கலந்த செம்பொன் கலங்களை இலங்க வைத்தான்.
**கதிரவன் உச்சியை அடைதல்

#1668
மங்கையர்-தம்மை எல்லாம் மணி_வண்ணன் மருட்டி மற்று இக்
கொங்கு அவிழ் குளிர் கொள் சோலைக் குன்றின்-நின்று இழிந்த போது
வெம் கதிர் விரிந்த வெய்யோன் விசும்பிடை வெதும்பி வேவச்
செம் கதிர்க் கூடம்குத்திச் செந்நடுவாக நின்றான்.
**அவர்கள் வாவி சார்தல்

#1669
அணங்கு_அனார் நுதலின் மேலில் அரும்பிய ஆரத் தெள் நீர்
மணம் கமழ் அலங்கல் மார்பன் மனத்தினை வாங்க மற்று அக்
கணம் குழை மடந்தைமாரைக் கடி புனல் ஆடல் காண்பான்
மணம் கொள் பூம் துணர் கொள் சோலை மண்டு நீர் வாவி சார்ந்தான்.
**வாவிகளின் வருணனை

#1670
சாந்து நீர் நிறைந்த வாவி தயங்கு செங்குவளை வாவி
பூம் துகள் அவிழ்ந்த பொன் தாமரை மலர் புதைந்த வாவி
தேம் துணர் அகன்ற தெள் நீர்த் திரு மணி உருவ வாவி
வாய்ந்தன காட்டிக்காட்டி உழையவர் வணங்கி நின்றார்.
**மன்னவன் தன் தேவியரோடு வாவியுட்புகுதல்

#1671
அன்னவாறு அமைந்த தெள் நீர் அலை புனல் ஆடும் போழ்தில்
இன்னவாறு இயற்றுக என்று ஆங்கு உழையரை மறைய ஏவிப்
பொன் அவாம் சுணங்கு போர்த்த புணர் முலை மகளிரோடு
மன் அவாம் வயிரத் தோளான் வலஞ்சுழி வாவி புக்கான்.
**வாவியின் தன்மை

#1672
மலங்கு பாய் தயங்கு பொய்கை மணிக் கல் வாய் அடுத்த செம்பொன்
கலிங்கின் ஆறு இழிந்து கீழே கலந்து வந்து எழுந்த தெள் நீர்
அலங்கலான் மடந்தைமார்கட்கு அரும் புணையாக வீங்கி
வலம் குலாய்ச் சுழிந்து வாய்த்த வாவி-வாய் மடுத்தது அன்றே.
**நீர் விளையாடல்

#1673
அலை புனல் பெருகலோடும் அலை கடல்_வண்ணன்-தன்னை
மலை புனை கொடியின் புல்லி மடந்தையர் மயங்குவாரும்
மிலை புனை கோதை சோர விடு புணை தழுவுவாரும்
கலை புனை துகிலும் தோடும் ஒழியப் போய்க் கரை கொள்வாரும்.

#1674
ஆர் புனல் சுழித்து வாங்க அனையராய் அணி பொன் வாவி
நீர் புனை தடத்தின் உள்ளால் நிலை கொண்டு நெடும் கண் சேப்பத்
தார் புனை மார்பன்-தன் மேல் தரங்க நீர் ஒருங்கு தூவி
வார் புனை முலையின் நல்லார் மயங்கு அமர் தொடங்கினாரே.

#1675
திரள் இரும் சிவிறி வீக்கிச் செழும் மழைத் தாரை பெய்வார்
மருள் இரும் பிணையல் மாலைப் படை பல வழங்கிச் சூழ்வார்
சுருள் இரும் தோடு வாங்கித் தோள் மிசை துளங்க வீழ்ப்பார்
இருள் இரும் குழலினார்கள் இறைவன் மேல் இனையர் ஆனார்.
**மன்னன் தோற்று நிற்றல்

#1676
சாந்து எழு சிவிறித் தாரை சதுர் முகமாக வீக்கிப்
பாய்ந்தன பவழச் செம் கேழ் அங்கையால் படுத்த தெள் நீர்
வேய்ந்தன திவலை ஆகி விழுந்தன வேரி மாலை
நாந்தகக் கிழவன் பொய்யே நங்கைமார்க்கு உடைந்து நின்றான்.

#1677
காரை_ஆர்_வண்ணன் மாலைக் கால்படை உடைந்த போழ்தில்
தேரையாய்க் குறளுஞ் சிந்தும் மிதந்தன சில்ல சிந்தி
வேரி ஆர் குவளை வேய்ந்த மெல்லியலவர்க்குத் தோற்ற
ஓரையாய் முதலை ஆகிக் கூன் படை ஒளித்த அன்றே.
**வாலி வற்றி விடுதல்

#1678
வென்றனம் வீரன்-தன்னை வீக்கு-மின் சிவிறித் தாரை
சென்று எனச் சிறந்த காதல் தேவியர் திளைக்கும் போழ்தில்
ஒன்றிய உழையர் கீழ் நீர் ஓப் பறித்திடுதலோடும்
நின்று அகம் சுழிந்த தெள் நீர் நெரேலென இழிந்தது அன்றே.
**மகளிர் நாணமுறல்

#1679
மாலையும் துகிலும் வாரி வார் புனல் ஒழுகும் போழ்தின்
ஆலையின் கரும்பின் இன் சொல் அணங்கு_அனார் அவிழத் தத்தம்
கோல மென் துகில்கள் தாங்கிக் குழை முகம் சுடரக் கோட்டி
வேலை_நீர்_வண்ணன் முன்னர் நாணினால் மெலிவு சென்றார்.

#1680
அரு மணிக் கலாப அல்குல் அவிழ் துகில் அசைத்து மீட்டும்
திரு மணி_வண்ணனோடும் தேவியர் திளைத்துத் தெள் நீர்ப்
புரி மணிப் பொன் செய் வாவிப் புணை புறம் தழுவிப் புக்கார்
கரு மணி வண்டும் தேனும் கையுறக் கலந்தது அன்றே.
** விளையாடல்

#1681
கொங்கைகள் துளும்ப நீர் குடைந்தும் கொய் தளிர்
அங்கையின் நோன் புணை தழுவி ஆடியும்
செங்கயல் கண் மலர் சிவப்ப மூழ்கியும்
மங்கையர் புனல் தொழில் மயங்கிற்று என்பவே.
**புனல் இருள் பட்டது

#1682
அடித்தலத்து அலத்தகம் குழுமிக் குங்குமப்
பொடிக் கலந்து அந்தி வான் படைத்த பூம் புனல்
வடிக் கலந்து இலங்கு வாள் நெடும் கண் மைக் குழம்பு
இடிக் கலந்து இருளும் அங்கு இயற்றப்பட்டதே.
**புனல் அளறுபடல்

#1683
கொங்கை-வாய்க் குங்குமக் குழம்பும் கோதை-வாய்
மங்கைமார் சிதர்ந்தன வாசச் சுண்ணமும்
செம் கண் மால் அகலத்து விரையும் தேர்த்து அரோ
அம் கண் மால் இரும் புனல் அளறுபட்டதே.
**திரைகள் இளைத்துத் தோன்றின

#1684
அணங்கு_அனார் அகல் அல்குல் அலைத்தும் ஆங்கு அவர்
சுணங்கு சூழ் இள முலை துளும்பத் தாக்கியும்
வணங்கு பூம் கொடி இடை வளைத்தும் வாவி-வாய்
அணங்கு நீர்த் திரை அவை அணைப்ப ஒத்தவே.
**தாமரையின் செயல்

#1685
வடம் தவழ் இள முலை விம்ம மங்கையர்
குடைந்திட எழுந்த நீர் குளித்த தாமரை
மடந்தையர் குளித்து எழும் போழ்தின் வாள் முகம்
அடைந்தது ஓர் பொலிவினை அறிவித்திட்டவே.
**புனல் கரையேறி மீண்டது

#1686
வளைத் தகை ஒண் பணைத் தோளிமாரொடு
திளைத்து அகம் கழுமிய தரங்கத் தெள் புனல்
இளைத்து அவர் மணிக் கரை ஏறச் சீறடி
திளைத்து முன் சிறிதிடம் சென்று மீண்டதே.
**அரசன் முதலியோர் ஒரு மண்டபமடைதல்

#1687
பொழுது செல் நாழிகை எல்லை பூம் கழல்
தொழுது வந்து இளையவர் உணர்த்தத் தொண்டை வாய்
எழுதிய கொடி_அனார் சூழ ஈர்ம் பொழில்
பழுது உழை இலாப் பகல் கோயில் எய்தினான்.
**தேவியின் செயல்

#1688
தேவியர் திரு மணி மேனி நீர் துடைத்து
ஆவி அம் புனை துகில் அல்குல் மேல் உடீஇக்
காவி அம் கண்ணினார் காகதுண்டத்தின்
ஆவியால் ஈர்ம் குழல் ஆவி ஊட்டினார்.

#1689
தண் நிறத் தண் கழுநீரின் நெய்தலின்
கள் நிறக் கரும் கடை இதழும் பெய்து இடை
தண் நறும் தமனகக் கொழுந்தும் சார்த்திய
ஒண் நிறப் பிணையல் அன்று உவக்கப்பட்டதே.

#1690
பொன்மலைக் காவியில் திமிர்ந்து பூம் கமழ்
தென்மலைச் சந்தனம் செறிந்து தாமரை
நல் மலர்த் தாது மீது அப்பி நங்கைமார்
மென் முலைத் தடங்களும் விருந்து பட்டவே.

#1691
கண் அகம் குளிர்ப்பக் கல்லாரக் கற்றையும்
தண் நறும் குவளை தாம் எறித்த தாமமும்
ஒண் நிறத் தாமரை ஒலியலும் தழீஇ
எண் அரும் பெரும் கவின் இளையர் எய்தினார்.

#1692
காமரு நிறத்த கல்லாரக் கற்றைகள்
சாமரை எனத் தமர் அசைப்பத் தாமரை
தேம் மரு குடை இலை கவிப்பத் தேவியர்
பூ மரு மடந்தையர் போன்று தோன்றினார்.

#1693
தேவர்கள் திசைமுகம் காப்பத் தீம் சுவை
ஆவி ஆர் அமிர்து அயின்று இருந்த ஆயிடைப்
பாவையர் கரும் கணால் பருகுவார்கள் போல்
மா அரசு அழித்தவன் மருங்கு சுற்றினார்.
**ஆங்கோர் விஞ்சையன் தோன்றல்

#1694
வஞ்சி அம் கொம்பு_அனாரும் மன்னனும் இருந்த போழ்தின்
விஞ்சையன் ஒருவன் தோன்றி விசும்பின் ஆறு இழிந்து வந்து
மஞ்சு இவர் சோலை வாயில் வாயிலோன் வாயிலாக
அஞ்சன_வண்ணன் செந்தாமரை அடி வணங்கினானே.
**வந்தவனை உபசரித்தல்

#1695
வந்தவன் வணங்கலோடும் மாமனை நுதலி என்னை
கந்து அணை யானை வேந்தன் கழல் அடி செவ்வியோ என்று
அந்தம்_இல் ஆழி ஆள்வான் வினவலின் அருளுமாறு என்று
இந்திரன் அனைய நீராற்கு இறைஞ்சலும் இருக்க என்றான்.
**விஞ்சையன் கொண்டுவந்த நிருபம்

#1696
உரிமையோடு இருந்த போழ்தின் உணர்த்துதற்கு உரித்து என்று எண்ணித்
திருமுகம் தொழுது காட்டத் தேவி-தன் மருங்கு நின்ற
உரிமை கொள் உழையர் உள்ளாள் ஒருத்தி வாசித்து உணர்த்த
அரு முடி ஒழிய எல்லா அணிகளும் அவனுக்கு ஈந்தான்.
**விஞ்சையின் செய்தி கூறல்

#1697
கனி வளர் கிளவியாரும் கதிர் மணிக் கலங்கள் வாங்கிப்
பனி மதி விசும்பின் வந்தான்-பால் வரப் பணித்த பின்னை
இனி இது பெயர்த்தும் நீயே உரை என எடுத்துக்கொண்டு
துனி வளர் இலங்கு வேலான் கழல் அடி தொழுது சொன்னான்.

#1698
சுடர் மலைத்து இருண்ட சோலைச் சுரேந்திரகாந்தம் என்னும்
வடமலை நகரம் ஆளும் மன்னவன் தேவி பெற்ற
தட மலர்ப் பெரிய வாள் கண் தையல் மற்று அவளை எம் கோன்
விடம் அலைத்து இலங்கு செவ்வேல் வெய்யவன் பெயரன் வேட்டான்.
**அதனைக் கேட்டுத் திவிட்டன் மகிழ்தல் ; சூரியாத்தமனம்

#1699
என்று அவன் பெயர்த்தும் சொல்ல இன்ப நீர் வெள்ளம் மூழ்கி
மின் தவழ் இலங்கும் வேலான் விஞ்சையன் அவனைப் போக்கிச்
சென்று தன் கோயில் சேர்ந்தான் செம் கதிர்த் திகிரியானும்
மன்று அழல் சுருங்க முந்நீர் அலை கடல் அழுவம் பாய்ந்தான்.
**மாலை

#1700
அழலவன் குளித்த பின்னை அணங்கு இவர் அந்தி என்னும்
மழலை அம் கிளவிச் செவ்வாய் மடந்தையும் அடைந்த போழ்தில்
குழல் அமர் கிளவியார்-தம் கூந்தலுள் குளித்து விம்மி
எழில் அகில் ஆவி போர்ப்ப இரு விசும்பு இருண்டது அன்றே.
**இரவு

#1701
விரவின பரவை பல் மீன் மிடை மணிக் கலாபம் ஆக
மருவின பரவை அல்குல் மயங்கு இருள் துகிலை வாங்கிப்
புரி_வணன் மதியம் என்பான் பொழி கதிர்த் தடக் கை நீட்டி
இரவு எனும் மடந்தை செல்வம் நுகரிய எழுந்து போந்தான்.
**திவிட்டன் இன்பம் நுகர்தல்

#1702
ஏர் அணி விசும்பின் அம் கேழ் எழு நிலா விரிந்த போழ்தில்
சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் சிகழிகைப் பவழ_வாயார்
கார்_அணி_வண்ணன் என்னும் கரும் களி வேழம்-தன்னை
வார் அணி இளம் மென் கொங்கை வாரியுள் வளைத்துக்கொண்டார்.

#1703
பங்கய முகத்து நல்லார் பவழ வாய்க் கவளம் கொண்டு
பொங்கிய களியது ஆகி மயங்கிய பொருவு_இல் வேழம்
குங்குமப் பொடி நின்று ஆடிக் குவட்டு இளம் கொங்கை என்னும்
தங்கு ஒளி மணி முத்து ஏந்தும் தடத்திடை இறைஞ்சிற்று அன்றே.

#1704
வேய் மருள் உருவத் தோளார் வெம் முலைத் தடங்கள் என்னும்
பூ மரு தடத்துள் தாழ்ந்து பொன் பொடி புதைய ஆடிக்
காமரு காமம் என்னும் கரும் கயம் படிந்து சென்று
தேம் மரு குழல் அம் சாயல் தேவி கைப் பட்டது அன்றே.

#1705
காதலால் உரிமை பாங்கில் கடி கமழ் காமவல்லித்
தாது எலாம் ததர்ந்து சிந்தத் திளைத்த அத் தடக் கை வேழம்
மாதராள் அமிழ்து இன் சாயல் தோட்டியால் வணக்கப்பட்டுப்
போது உலாம் புணர் மென் கொங்கைக் குவட்டிடைப் பூண்டது அன்றே.
**சுயம்பிரபையின் வாயினுள் மதி புகுதல்

#1706
செங்கயல்_கண்ணினாளும் செல்வனும் திளைத்துத் தீம் தேன்
பொங்கிய அமளி மேலால் புணர் முலை நெருங்கப் புல்லித்
தங்கிய பொழுதில் தாழ்ந்து தண் கதிர் மதியம் தானே
மங்கை-தன் பவழச் செவ்வாய் மடுத்து அகம் அடைந்தது அன்றே.
**தேவி அஞ்சியலறல்

#1707
அடைந்தது மதியம் ஆக ஆயிடை அரசன் திண் தோள்
மிடைந்த தோள் நெகிழ விம்மி மெல்_இயல் வெருவலோடும்
மடங்கலை அலைக்கும் நீரான் தெருட்டினன் வினவ ஆர
வடம் தவழ் இளம் மென் கொங்கை மாதராள் மிழற்றினாளே.
**மன்னன் அவளைத் தேற்றல்

#1708
வணங்கி இ உலகம் எல்லாம் மகிழ்ந்து கண் பருகும் நீர்மை
அணங்கு இவர் சிறுவன் வந்து உன் அணி வயிற்று அகத்துப் பட்டான்
கணம் குழை அஞ்சல் என்று கரு மணி_வண்ணன் தேற்றப்
பணம் குலாம் பரவை அல்குல் பாவையும் பரிவு தீர்ந்தாள்.
**சூரியோதயம்

#1709
கங்குல்-வாய் மடந்தை கண்ட கனவு மெய் ஆகல் வேண்டி
மங்குல் வான் அகட்டுச் சென்று மதியவன் மறைந்த பின்னை
அங்கு உலாய் இருளை நீக்கும் ஆயிரம் கதிரினானும்
கொங்கு உலாம் குழலி காணும் குழவி-அது உருவம் கொண்டான்.
**சுயம்பிரபையின் கருப்பப் பொலிவு

#1710
குலம் புரி சிறுவனைத் தரித்துக் கோல மா
நிலம் புரி நிழல் ஒளி நிரந்து தோன்றலால்
வலம்புரி மணிக் கரு இருந்தது அன்னது ஓர்
நலம் புரி திருவினள் நங்கை ஆயினாள்.

#1711
மின் இலங்கு அவிர் ஒளி மேனி மெல்லவே
தொல் நலம் பெயர்ந்து பொன் சுடர்ந்து தோன்றலால்
மன் இலங்கு அரு மணி வளர வாள் உமிழ்
பொன் நிலம் புரைவது ஓர் பொலிவும் எய்தினாள்.
**புதல்வற் பேறு

#1712
கோள் நலம் பொலிந்து விண் குளிரக் குங்குமத்
தோள் நலம் பொலிந்தது ஓர் தோன்றலோடு தன்
கேள் நலம் பொலிதரக் கிளரும் சோதி அம்
நாள் நலம் பொலிதர நம்பி தோன்றினான்.
**நகரமாந்தர் மகிழ்ச்சி

#1713
பொலிக எனும் ஒலிகளும் பொன் செய் மா மணி
ஒலி கல ஒலிகளும் விரவி ஊழி நீர்
கலி கெழு கனை கடல் கலங்கி அன்னது ஓர்
பலி கெழு முரசு ஒலி பரந்து ஒலித்ததே.

#1714
துளைபடு குழல் இசை துடியொடு ஆர்ப்பவும்
வளை படு கறங்கு இசை வயிரொடு ஏங்கவும்
தளைபடு தகை மலர் மாலை தாது உகக்
கிளை படு வள நகர் கிலுகிலுத்ததே.

#1715
தொத்து இளம் கடி மலர் துதைந்த கோதையார்
மொய்த்து இளம் குமரரோடு ஆடும் முன்கடை
மத்தளப் பாணியும் மதன கீதமும்
கைத்தலத் தாளமும் கலந்து இசைத்தவே.

#1716
சிறை நகர் சீத்தன திலதம் முக்குடை
இறை நகர் விழவு அணி இயன்ற நீண்டு நீர்த்
துறை நகர் சுண்ணம் நெய் நாவி தூங்கின
நிறை நகரவர் தொழில் நினைப்பு இகந்தவே.
**சினகரத்திற் செய்தவை

#1717
சுண்ணம் நெய் எழு பகல் ஆடித் தொல் நகர்
நண்ணிய நான நீர் ஆடி நம்பியைப்
புண்ணியாவாசனம் செய்து புங்கவன்
திண்ணிய அடி மலர்ச் சேடம் சேர்த்தினார்.
**சுற்றத்தார் வருதல்

#1718
வழுவல்_இல் நாஞ்சிலான் வண் பொன் ஆழியான்
தழு மலர் அலங்கலான் தாதை-தான் எனச்
செழும் மலர் அணி குழல் தேவிமார் என
எழு பெரும் கிளைகளும் இனிதின் ஈண்டினார்.
**அவர்கள் குழவியைத் தழுவி மோந்து மகிழ்தல்

#1719
எழுதரு பரிதி அம் குழவி ஏய்ப்பது ஓர்
தொழு தகை வடிவொடு நம்பி தோன்றலும்
தழுவினர் முயங்கினர் முயங்கித் தம் உளே
ஒழிவு_இலா உவகை நீர்க் கடலுள் மூழ்கினார்.
**அந்தணர் முதலியோர் வாழ்த்துதல்

#1720
அறத் தகை அந்தணர் குழுவும் ஆடல் வேல்
மறத் தகை மன்னவர் குழுவும் மா நகர்த்
திறத் தகு முதியரும் ஈண்டிச் செல்வனைப்
பொறுத்தனர் பொலிவுரை புடை பொழிந்ததே.
**திவிட்டன் அந்தணர் முதலியோருக்கு அரதன முதலியவை அளித்தல்

#1721
குரு மணிக் கோவையும் குளிர் பொன் குன்றமும்
அரு மணிக் கலங்களும் அரத்த ஆடையும்
புரி மணி வள நகர் புகுந்து கொள்க எனக்
கரு மணி ஒளியவன் கவரக் காட்டினான்.
**நாமகரணம்

#1722
திருவொடு திசைமுகம் தெளிர்ப்பத் தோன்றினான்
திருவொடு வென்றியில் சேரும் ஆதலால்
திருவொடு திகழ்தர விசயன் என்று அரோ
திரு உடை மார்பனை நாமம் சேர்த்தினார்.
**விமானம் வருகை

#1723
விஞ்சையர் உலகிற்கும் விடுத்தும் ஓகை என்று
அஞ்சன_வண்ணன் அங்கு அருளும் ஆயிடை
மஞ்சு உடை விசும்பின்-நின்று இழிந்து வந்தது
செம் சுடர் உமிழ்வது ஓர் செம்பொன் மானமே.

#1724
மணி நகு விமானம் ஒன்று இழிந்து வந்து நம்
அணி நகர் அணுகினது அடிகள் என்றலும்
பணிவரை கொணர்-மின் நீர் பாங்கின் என்றனன்
துணி நகு சுடர் ஒளி துளும்பும் வேலினான்.

#1725
மஞ்சு சூழ் மழை நுழை மானம்-தன் உளோர்
விஞ்சையர் மடந்தையர் விளங்கும் மேனியர்
கஞ்சுகியவரொடும் இழிந்து காவலன்
இஞ்சி சூழ் நகர் அணி இருக்கை எய்தினார்.

#1726
பொலிக எனப் புரவலன் பொன் செய் நீள் முடி
மலிதரு நறு நெய் அ மகளிர் பெய்தலும்
கலிதரு கனை கடல் அன்ன காதலோடு
ஒலிதரு நகை ஒலி உவந்து எழுந்ததே.

#1727
நாவி கால் தழுவி மன் நறு நெய் ஆடிய
பாவைமார்-தங்களைப் பாவை கோயிலுக்கு
ஏவி ஆங்கு இருந்த பின் இறைவற்கு இன்னணம்
தேவி_கோன் தமன் தொழுது ஒருவன் செப்பினான்.
**தூதன் கூறிய செய்தி

#1728
எங்கள் கோன் எறி கதிர்ப் பெயரன் நீர் மலர்க்
கொங்கு சேர் அலங்கலான் குளிரத் தங்கினாள்
மங்குல் தோய் மணி வரை மன்னன்-தன் மகள்
தொங்கல் சூழ் சுரி குழல் சோதிமாலையே.

#1729
மங்குல் வான் மழை கெழு மின்னின் மன்னவன்
தொங்கல் வாய் மடந்தை கண் துயிலும் ஆயிடைக்
கங்குல்-வாய்க் கதிர் மதி கவானின் மேலிருந்து
அம் கண் மால் விசும்பு அகம் அலர்வித்திட்டதே.

#1730
தெண் கதிர்த் திரு மணி கனவில் சேர்ந்த பின்
கண் கதிர்த்து இளம் முலை கால் பணைத்தன
தண் கதிர்த் தமனியப் பாவை போல்வது ஓர்
ஒண் கதிர்த் திரு_மகள் உருவம் எய்தினாள்.
**வயா

#1731
வான் இவர் மணி நகை விமானம் ஏறவும்
கான் இவர் கற்பகச் சோலை காணவும்
மான் இவர் நோக்கினாள் வயாவினாள் அது
தேன் இவர் அலங்கலாய் தீர்க்கப்பட்டதே.
**அமிதசேனன் பிறப்பு

#1732
மாணிக்கம் அரும்பிய வண் பொன் மா நிலத்து
ஆணிப் பொன்_அனையவள் அனையள் ஆய பின்
கோள் நிற்கும் விசும்பிடைக் குழவித் திங்களும்
நாணிப்போம் உருவொடு நம்பி தோன்றினான்.

#1733
தேம் மரு செங்கழுநீரின் செவ் இதழ்
காமரு பவழ வாய் கமழும் கண் மலர்
தாமரை அக இதழ் புரையும் தானும் ஓர்
பூ மரு தமனியக் குழவி போலுமே.

#1734
வானிடை மணி விளக்கு எரிந்த வண்டொடு
தேன் உடை மலர் மழை சிதர்ந்தது அவ்வழி
மீன் உடை விரி திரை வெண் சங்கு ஆர்த்தன
தான் உடை ஒளி திசை தவழ்ந்து எழுந்ததே.
**பெயரிடுதல்

#1735
அளப்பு அரும் திறல் உடை அரசர் தொல் குடை
அளப்பு அரும் திறலினோடு அலரத் தோன்றினான்
அளப்பு அரும் திறலினன் அமிததேசன் என்று
அளப்பு அரும் திறல் பெயர் அமரக் கூறினார்.

#1736
ஐயனது அழகு கண் பருக அவ்வழி மை அணி
மழை முகில்_வண்ணன் மாமனார்
வையகம் உடையவற்கு உணர்த்தி வா என
நெய்யொடு வந்தனன் நிலைமை இன்னதே.
**தூதனை யுபசரித்தல்

#1737
என்று அவன் மொழிதலும் இலங்கு நேமியான்
நின்று அகம் சுடர்தரும் நிதியின் நீத்தம் அங்கு
அன்று அவற்கு அருளினன் அரச செல்வமோடு
ஒன்றினன் உவந்து தன் உலகம் எய்தினான்.

#1738
விண்டார் இல்லா வெம் திறலோன் பொன் சுடர் ஆழித்
தண் தார் மார்பன்-தன் மகன் நல் மா மணியே போல்
கண்டார் கண் களிகூருஞ் செல்வக் கவின் எய்தி
வண்டு ஆர் ஐம்பால் மங்கையர் காப்ப வளர்கின்றான்.

#1739
கண் கவர் சோதிக் காமரு தெய்வம் பல காப்பத்
தண் கமழ் போதில் தாமரை ஆளும் தகை வாழ்த்த
விண் கவர் சோதித் தண் கதிரோன் போல் விரிவு எய்தி
மண் கவர் சோதித் தண் கதிர்_வண்ணன் வளர்கின்றான்.
**தவழ்தல்

#1740
செம்பொன் கோவைக் கிண்கிணி ஏங்கத் திலதம் சேர்
அம் பொன் கோவைப் பல் மணி மின் இட்டு அரை சூழப்
பைம்பொன் கோவைப் பாடக மென் சீறடி நல்லார்-
தம் பொன் கோவைப் பூண் முலை முன்றில் தவழ்கின்றான்.

#1741
போது ஆர் பொய்கைப் போது அவிழ் பொன் தாமரை காட்டி
மாது ஆர் சாயல் மங்கையர் கூவ மகிழ்வு எய்திக்
காது ஆர் செம்பொன் தாழ் குழை மின்னின் கதிர் வீசத்
தாது ஆர் பூவின் தண் தவிசு ஏறித் தவழ்கின்றான்.

#1742
கண்ணின் செல்வம் கண்டவர் கண்டே மனம் விம்ம
மண்ணின் செல்வம் வைகலும் வைகல் மகிழ்வு எய்தி
விண்ணின் செல்வச் செம் கதிரோன் போல் விளையாடித்
தண் என் செல்கைப் பொன் உருள் வாங்கித் தளர்கின்றான்.
**கல்வி கற்பித்தல்

#1743
ஐ ஆண்டு எல்லை ஐயன் அணைந்தான் அவனோடும்
ஐ ஆர் இன்பக் காதலி நாவின் மகள் ஆகப்
பொய்யாக் கல்விச் செல்வர்கள்-தம்மால் புணர்வித்தான்
நெய் ஆர் செவ் வேல் நீள் ஒளி நேமிப் படையானே.
**மகள் பிறப்பு

#1744
காம_செல்வன் என்று உலகு எல்லாம் களி தூங்கும்
ஏமச் செல்வ நம்பியொடு இன்னும் இளையாகச்
சேமச் செல்வன் தேவி பயந்தாள் திசை எல்லாம்
ஓமச் செல்வம் கொண்டு இனிது ஏத்தும் ஒளியாளே.
**பெயரிடுதல்

#1745
பார் ஆர் செல்கைப் பல் கிளை எல்லாம் உடன் ஈண்டிப்
பேரா வென்றிக்கு ஒன்றியவாறு பெயர் இட்டுச்
சீர் ஆர் ஓகை விஞ்சையர் சேணி செல விட்டுக்
கார்_ஆர்_வண்ணன் காதலொடு இன்பக் கடல் ஆழ்ந்தான்.

#1746
ஐயன் தானும் அவ்வகையாலே வளர்வு எய்த
மை உண் கண்ணி மாபெருந்தேவி மகிழ் தூங்கத்
தெய்வம் பேணிப் பெற்றனர் பேணும் திருவே போல்
மெய்யின் சோதி சூழ் ஒளி மின்னின் பெயராளும்.

#1747
தே தா என்றே தேனொடு வண்டு திசை பாடும்
போது ஆர் சாயல் பூம் கொடி போலப் பொலிவு எய்தித்
தாது ஆர் கோதைத் தாயரொடு ஆயம் புடை சூழ
மாது ஆர் சாயல் மா மயில்_அன்னாள் வளர்கின்றாள்.

#1748
மழலைக் கனி வாய் மணி வண்டு வருடி மருங்கு பாராட்ட
அழல் நக்கு அலர்ந்த அரவிந்த அமளி சேர்ந்த இள அன்னம்
கழனிச் செந்நெல் கதிர் என்னும் கவரி வீசக் கண்படுக்கும்
பழனக் குவளை நீர் நாடன் பாவை வார்த்தை பகருற்றேன்.

#1749
செம்பொன் சிலம்பும் கிண்கிணியும் செல்வச் செம் சீறடி போற்ற
வம்பத் துகிலின் வடம் சூழ்ந்த அல்குல் மணிமேகலை மருட்ட
அம் பொன் சுருளை இரு பாலும் அளக வல்லி அருகு இலங்கப்
பைம்பொன் சுடிகை நிழல் துளங்கப் படர்ந்து ஆடு ஆயம் படிந்தாளே.
**பந்தாடல்

#1750
நங்கை நல்லார் பாராட்ட நகையாட்டு ஆயம் புகலோடும்
மங்கை மடவார் பந்தாடல் மயங்கி ஆடல் மணி நிலத்துக்
கொங்கை சேர்ந்த குங்குமத்தின் குழம்பும் கோதை கொய் தாதும்
அங்கராகத் துகளும் பாய்ந்து அந்தி வானம் அடைந்ததுவே.

#1751
காவி நாணும் கண்ணார் தம் கையின் ஏந்தும் கந்துகங்கள்
ஆவி தாமும் உடையன போல் அடிக்கும்-தோறும் அடங்காது
பூவின் ஆர்ந்த மணி நிலத்துப் பொங்கி எழுந்து பொன் ஏந்தி
நாவி நாறும் இளம் கொங்கைத் தடங்கள் சென்று நணுகியவே.

#1752
கரிய குழலும் பொன் தோடும் செய்ய வாயும் கதிர் முறுவல்
மரிய திசையும் மதி மயங்கும் அம் பொன் முகத்து மடவார்கள்
திரியத் தம்மைப் புடைத்தாலும் சென்று சேர்ந்து திளைக்குமால்
அரிய செய்யும் காமுகர் போல் அளிய அந்தோ அடங்காவே.

#1753
செம்பொன் சுருளை மெல் விரலால் திருத்திச் செறிந்த தேர் அல்குல்
வம்பத் துகிலின் வடம் சூழ்ந்து மணிமேகலையும் தான் ஏற்றி
அம் பொன் குரும்பை மென் முலை மேல் அணிந்த பொன் ஞாண் அருகு ஒடுக்கிப்
பைம்பொன் திலத நுதல் ஒதுக்கிப் பாவை பந்து கைக் கொண்டாள்.

#1754
கந்து ஆடு மால் யானைக் கார்_வண்ணன் பாவை கரு மேகக் குழல் மடவார் கை சோர்ந்து நிற்பக்
கொந்து ஆடும் பூம் குழலும் கோதைகளும் ஆடக் கொய் பொலம் துகில் அசைத்த கொய்சகம் தாழ்ந்து ஆட
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆடப்
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆடப் பணை மென் தோள் நின்று ஆடப் பந்து ஆடுகின்றாள்.

#1755
கந்துகங்கள் கைத்தலத்தால் ஏறுண்டு பொங்கிக் கரும் கண்ணும் தாமும் உறக் கலந்து எழுந்த போழ்தின்
வந்தனவும் சென்றனவும் வானத்தின் மேலும் மணி நிலத்து மீதும் நெறி மறிகுவன ஆகி
அம் துகிலினிடைத் தோயும் அகல் அல்குல் தீண்டும் அணி மருங்கு சூழும் மணி ஆர் வடமும் தாக்கும்
கொந்து அவிழும் பூம் குழலும் கோதைகளும் மூழ்கும் குவளை வாள் கண்ணி வரு குறிப்பு அறியமாட்டாள்.

#1756
நறு மாலை வந்து அலைப்ப நல் மேனி நோமால் நங்காய் இப் பந்தாடல் நன்று அன்றாம் என்பார்
இறுமால் இ மின் மருங்குல் என் பாவம் என்பார் இளம் முலை மேல் ஏர் வடம் வந்து ஊன்றுமால் என்பார்
செறுமால் இங்கு இவை காணில் தேவிதான் என்பார் செம் கண் மால் காணுமேல் சீறானோ என்பார்
பெறுமாறு தாயரும் தோழியரும் நின்று பிணை_அனாள்-தன் மேல் பல் மொழி மிழற்றுகின்றார்.

#1757
நீர் ஆலிக்கட்டி நிரந்து எழுந்து பொங்கி நிழல் தயங்கும் பொன் அறை மேல் நின்று ஆடுகின்ற
கார் ஆலி மஞ்ஞை களி சிறந்தால் போலக் கரும் குழலி பந்தாடல் காதலித்த போழ்தில்
சீர் ஆலி மால்_வண்ணன் தேவியும் தானும் செவ்வரத்த நுண் எழினி சேர்ந்து ஒருங்கு நோக்கி
வார் ஆலி மென் கொங்கை மை அரிக் கண் மாதர் வருந்தினாள் நங்கை இனி வருக ஈங்கு என்றார்.

#1758
அரு மணி முடியவன் அருள் இது என்றலும்
பரு மணிப் பந்து கை விட்டுப் பாவை தன்
புரி மணிக் குழல் புறம் தாழப் போந்து அரோ
கரு மணி ஒளியவன் கழல் சென்று எய்தினாள்.

#1759
மங்கையை வலப் புடைக் குறங்கின் மேல் இரீஇ
அங்கையால் அணி நுதல் அரும்பு நீர் துடைத்து
எங்கும் இல் உவகையோடு இனிது இருந்த பின்
நங்கை-தன் நலம் கிளர் மேனி நோக்கினான்.

#1760
இளமையால் எழுதரும் இணை மென் கொங்கையின்
வளமையால் பொலிதரும் வனப்பின் மாட்சியால்
குளம் ஐயால் நற விரி குவளைக் கண்ணியான்
உளம் அயாவுயிர்ப்பது ஓர் உவகை எய்தினான்.

#1761
செல்வியைத் திருக் குழல் திருத்தித் தேவி-தன்
அல்குல் மேல் இனிதின் அங்கு இருவி ஆயிடை
மல்கு பூ மந்திரசாலை மண்டபம்
பில்கு பூம் தெரியலான் பெயர்ந்து போயினான்.

#1762
அருத்தம் நூலவரொடும் ஆய்ந்து மற்று அவர்
கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான்
திருத் தகு சுயம்வர முரசம் திண் களிற்று
எருத்தின் மேல் அறைக என இறைவன் ஏயினான்.

#1763
வாலிய சந்த மென் சேறு மட்டித்துப்
பீலி அம் தழையொடு பிணையல் வேய்ந்தன
பால் இயல் பலி பெறு முரசம் பண்மையில்
ஆலி அங்கு அதிர் கொள அதிர்ந்து அறைந்தவே.

#1764
வாழ்க நம் மன்னவன் வாழ்க வையகம்
ஆழ்க நம் அரும் பகை அலர்க நல் அறம்
வீழ்க தண் புனல் பயிர் விளைக மா நிலம்
தாழ்க மற்று அரும் துயர் சாற்றக் கேள்-மினே.

#1765
புள் அணி வார் பொழில் பொன் செய் மா நகர்
உள் அணி பரப்பு-மின் உயர்-மின் தோரணம்
வெள் அணி விரும்பு-மின் விருந்து போற்று-மின்
கள் அணி மலரொடு கலங்கள் பெய்ம்-மினே.

#1766
இன்றை நாள் உள்ளுறுத்து ஈர்_ஐ ஞாள்களும்
மன்றல் அம் சுயவரம் வரைந்தது ஆதலால்
ஒன்றி வாழ் அரசரோடு உலகம் ஈண்டுக
என்றுதான் இடி முரசு அறைந்தது என்பவே.

#1767
கொடி படு நெடு நகர்க் கோயில் வீதி-வாய்
இடிபடு மழை முகில் என்ன இன்னணம்
கடி படு முரசு கண் அதிர்ந்த கார் என
மடி படு மாட-வாய் மயில்கள் மான்றவே.

#1768
முரசொடு வரி வளை மூரித் தானையோடு
அரசரும் அரசர்_அல்லாரும் ஆயிடைத்
திரை செறி கனை கடல் சென்று தேர்த்து எனப்
புரை செறி புரிசையின் புறணி முற்றினார்.

#1769
வெண்மலைச் சென்னி மேல் விஞ்சை வேந்தரும்
கண் மலைத்து இழிதரும் கடல் அம் தானையர்
விண் மலைத்து இழிதரும் விளங்கு சோதியர்
எண் மலைச் சிலம்பிடை இறைகொண்டு ஈண்டினார்.

#1770
அ வரை அரைசர்_கோன் அருக்கன் தன் மகன்
செவ் வரை அனைய தோள் செல்வன்-தன்னொடும்
மை வரை நெடும் கண் அம் மடந்தை-தன்னொடும்
இ வரை அரைசு எதிர்கொள்ள எய்தினான்.

#1771
பொன் நகர்ப் புறத்தது ஓர் புரிசை வார் பொழில்
தன் அகத்து இயற்றிய தயங்கு பொன் நகர்
மன்னர்கட்கு இறைவன் வந்து இருப்ப மண் மிசை
இ நகர்க்கு இறைவனும் எதிர்கொண்டு எய்தினான்.

#1772
கண் சுடர் இலங்கு வேல் காள_வண்ணனும்
வெண் சுடர் ஒளியவன்-தானும் விஞ்சையர்
தண் சுடர்த் தமனிய_வண்ணன்-தன்னொடும்
மண் சுடர் உறுப்பது ஓர் வகையர் ஆயினார்.

#1773
இரு புடைக் கிளைகளும் விரவி இன்னணம்
தெரு உடைத் திசைமுகம் தெளிப்பத் தேர்த்து அரோ
மரு உடை மகர நீர் வளாகம் வானவர்
உருவு உடை உலகம் வந்து இழிந்தது ஒத்ததே.

#1774
சிகை மணி அழுத்திய செம்பொன் சென்னிய
நகை மணிக் கோபுர வாயில் நான்கொடு
வகை மணித் தலத்தது ஓர் மதலை மாளிகை
தொகை மணித் தொழில் பல தொடரத் தோற்றினார்.

#1775
பளிங்கு இயல் பலகையும் பவழத் தூண்களும்
விளங்கு பொன் கலங்களும் வெள்ளி வேயுளும்
இளம் கதிர் முத்தமும் இயற்றி இன்னணம்
வளம் கவின்று அனையது அ மதலை மாடமே.

#1776
மீன் முக விசும்பிடை விரிந்த வெண் நிலாப்
பால் முகம் தொகுப்பன பனிக்கும் வேதிகை
மேல் முகம் திருத்திய வெள்ளி முன்றிலான்
நான் முக மருங்கினும் நகுவது ஒக்குமே.

#1777
அங்கு அதற்கு ஐந்து கோல் அளவின் ஆடரங்கு
இங்கு வந்து இறுத்தன என்னும் ஈட்டன
செம் கதிர்ப் பவழக் கால் நிரைத்த செம்பொனால்
மங்கலச் செய்கைய மஞ்சு சூழ்ந்தவே.

#1778
விளிம்பிடை மரகத வேதி கட்டிய
வளம் பெறு மணி நகை மஞ்சம் மீமிசை
இளம் பெரும் சுரி உளை அரி நின்று ஏந்திய
உளம் பொலி ஆசனம் உயர விட்டவே.

#1779
மண் தங்கு மகர ஆசனத்து மென் மயில்
கண்டங்கள் புரைவன கன பொன் கொட்டைய
அண்டம் கொள் அன்ன மென் தூவி ஆர்த்தன
எண் தங்கு மணியன இயற்றப்பட்டவே.

#1780
வாரித் தண் கதிர் மணி முத்தம் மாலையும்
பாரித்த பளிங்கு எழில் பழித்த கோவையும்
பூரித்த பொழி கதிர்ப் பொன் செய் தாமமும்
வேரித் தண் பிணையலும் மிடையப்பட்டவே.

#1781
மஞ்சு உடை மாளிகை மிடை மணித் தலம்
பஞ்சு உடைத் தவிசுகள் பரப்பிப் பூ அடுத்து
அம் சுடர் இடு புகை அடர்ந்து எழுந்து அரோ
வெம் சுடர்க் கடவுளை விருந்து செய்தவே.

#1782
சயமர மாளிகை இயற்றிச் சந்தனப்
பய மர நிழல் ஒளி மஞ்சம் பாவின
விய மரத் தொழிலவர் வினை முடிந்தது என்று
இயமரத் தொழுதிகள் எழுந்து இசைத்தவே.

#1783
மங்கல நாழிகை வந்த மன்னர்கள்
இங்கு வந்து ஏறுக என்று சாற்றலும்
சங்கொலி பரந்தன தயங்கும் மா முரசு
அங்கு ஒலித்து எழுந்தன அரசர் தோன்றினார்.
**வேற்றரசர்

#1784
எரி மணி வயிரப் பூணான் இக்குவா குலத்துள் தோன்றி
அரு மணிப் புரிசை வேலி அயோத்தி ஆள்கின்ற வேந்தன்
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திரு வில் வீசப்
புரி மணி ஆரம் தாழப் பொன் நகர் பொலியப் புக்கான்.

#1785
குழவி அம் பரிதி_போல்வான் குருகுலம் குளிரத் தோன்றி
அழுவம் நீர்ப் புரிசை வேலி அத்தினபுரம்-அது ஆள்வான்
முழவங்கள் இரண்டு செம்பொன் முளைக் கதிர்க் கனகவல்லி
தழுவியது அனைய தோளான் தன் ஒளி தயங்கச் சார்ந்தான்.

#1786
நண்டு பொன் கிளைக்கும் நாடன் நாதவன் குலத்துள் தோன்றிக்
குண்டலபுரம்-அது ஆளும் குங்குமக் குவவுத் தோளான்
கண்டிகை தவழப் பூண்டு கதிர் மணி முடியின் மேலால்
வண்டுகள் பரவச் சென்று வள நகர் மருளப் புக்கான்.

#1787
ஊழி காண்பு அரிய தோன்றல் உக்கிர குலத்து வேந்தன்
வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி மன்னன்
சூழி மால் யானை உந்திச் சுடர் குழை திரு வில் வீச
ஏழையர் கவரி வீச எழில் நகர் இசைப்பச் சென்றான்.

#1788
சொரி மது கலந்த சோலைச் சூரியபுரம்-அது ஆளும்
அரி குலத்து அரசர்_கோமான் அவிர் மணி ஆரம் தாங்கிப்
பொரும் மலைப் பகடு நுந்திப் புயல் அலைத்து இருண்டு வீழ்ந்த
புரி மலர்க் குஞ்சி தாழப் பொன் நகர் புகழப் புக்கான்.

#1789
சொல் மலர்ந்து உலகம் ஏத்தும் சுடரவன் மருகன் தோலா
மன் மலர்ந்து இலங்கு செய்கை வளம் கெழு மதுரை ஆள்வான்
தென்மலை வளர்ந்த தெய்வச் சந்தனம் திளைத்த மார்பன்
மின் மலர் ஆரம் தாங்கி வியல் நகர் விரும்பப் புக்கான்.

#1790
ஐம் பெரும் குலத்தராய அரசரும் பிறரும் ஆங்கண்
கம்பு எறி களி நல் யானைக் கடல் படை புறத்தது ஆக
வம்பு எறி வளாகம் செம்பொன் மஞ்சங்கள் மலிர ஏறி
வெம் பரி விளங்கும் தானை வேலவர் விளங்குகின்றார்.

#1791
திருந்திய திலதக் கண்ணித் தே_இளங்குமரன் போலும்
அரும் தகை அரச நம்பி அடு திறல் அமிததேசன்
பரந்த பின் பசலைகூரப் பனிக் கதிர் வருவதே போல்
விரிந்து ஒளி சுடர வேந்தர் விளங்கு ஒளி மழுங்கச் சென்றான்.

#1792
மழை புரை மதத்தது ஆய மழ களி யானை-தன் மேல்
வழை வளர் சோலை சேர்ந்த மணி வண்டு மறிவவே போல்
எழுது எழில் அழகன்-தன் மேல் இளையவர் கரும் கண் வீழ்ந்து
விழவு அயர் நகரின் வந்த வேந்தரை விட்ட அன்றே.

#1793
வரை செறிந்து அனைய செம்பொன் மஞ்சங்கள் மலிரத் தோன்றி
அரைசர்கள் இருந்த போழ்தில் ஆழியம் தடக் கை வேந்தன்
விரை செறி குழல் அம் கூந்தல் மெல்_இயல் வருக என்றான்
முரைசு ஒலி கலந்த சங்கு வயிரொடு முரன்ற அன்றே.
**இளவரசர் வருகை

#1794
மன்னவன் மடந்தை மணி மாட நிலை உள்ளால்
பொன் அமளி மேல் அடுத்த பொங்கு அணையின் மேலாட்கு
அன்னம்_அனையார் அடிகளார் அருள் இது என்றார்
இன் நகைய பூம் தவிசின்-நின்று இனிது இழிந்தாள்.

#1795
வஞ்சி_அனையார் மணி தொடர்ந்த சுடர் ஞாணால்
அம் சில இரும் குழல் அசைத்து அயில் பிடித்தார்
கஞ்சுக முகத்த முலை கச்சு மிக வீக்கி
மஞ்சு இவரும் மா மயில்_அனார் மருங்கு சூழ்ந்தார்.

#1796
ஆயமொடு தாயர் இடையாள் அரசர்-தங்கள்
நேயம் மிகு நெஞ்சின் இடையாளும் மடவாளாய்ப்
பாய மதி தாரகையொடு ஓரை பட ஏகித்
தூய மணி நீர் நிலைகள்-தோறும் இவர்வது ஒத்தாள்.

#1797
வண்டு வழி செல்ல வய மன்னர் மதி செல்லக்
கண்டவர்கள் கண்கள் களி கொண்டு அருகு செல்ல
எண் திசையும் ஏத்து ஒலியொடு இன் ஒலிகள் செல்ல
விண்ட மலர் அல்லி மிசை மெல்ல நனி சென்றாள்.

#1798
அம் மெல் அடி தாம் அரைசர் ஆவியொடு நோவச்
செம் மெல் இதழ் வாயொடு அவர் சிந்தனை துடிப்ப
வெம் முலைகளோடு அவர்கள் காதல் மிக வீங்க
மை மலர் நிகர்க்கும் மணி மாளிகை அடைந்தாள்.

#1799
பொன்னே நல் மணிக் கொம்பே பூமி மேல் ஆர் அணங்கே போற்றி போற்றி
அன்னே எம் அரசர் குலத்து அவிர் விளக்கே ஆர் அமிர்தே போற்றி உன்றன்
மின் நேர் நுண் இடை நோமால் மென் மலர் மேல் மென்மெலவே ஒதுங்காய் என்று
மன் ஏர் செய் அயில் நெடும் கண் மங்கைமார் போற்று இசைப்ப மாடம் புக்காள்.

#1800
அணி தயங்கு சோபான வீதி-வாய் அணங்கு_அனையார் அடியீடு ஏத்த
மணி தயங்கு மாளிகை மேல் வாள் நிலா வளர் முன்றில் மருங்கு சூழ்ந்து
கணி தயங்கு வினை நவின்ற கண்டத்துத் திரை மகளிர் கையின் நீக்கித்
துணி தயங்கு வேல் அரசர் மனம் துளங்கச் சுடர்ந்து இலங்கித் தோன்றினாளே.

#1801
வடி அரத்தம் இடை வழித்துக் கரும் கண்ணும் செம்பொன்னால் வளைத்த சூரல்
கொடி அரத்த மெல் விரலால் கொண்டு அரசர் குல வரவு கொழிக்கும் நீராள்
முடி அரக்குப் பூம் கண்ணி மூரித் தேர் வேந்தர்-தமை முறையாக் காட்டிப்
படி அரக்கும் பாவைக்குப் பைபையவே இனைய மொழி பகராநின்றான்.
**இக்குவா குலத்தரசன்

#1802
அங்கு ஆர அலர் கதிர மணி சுடரும் அரியணை மேல் அமர்ந்து தோன்றித்
தங்கு ஆரம் மணி நிழற்றும் தட வரை ஆர் அகலத்தான் தகரம் நாறும்
கொங்கு ஆர வார் குழலார் குவி முலைகள் முகம் பொருத குவவுத் தோளான்
இங்கு ஆரும் நிகர்_இல்லா இக்குவா குலத்து இறைவன் இருந்த கோவே.

#1803
ஆதியான் அருள் ஆழி தாங்கினான் ஆயிரச் செம் கதிரோன் நாணும்
சோதியான் சுரர் வணங்கு திரு_அடியான் சுடு நீறா நினையப்பட்ட
காதியான் அருளிய பொன் கதிர் கொள் முடி கவித்து ஆண்டார் மருகன் கண்டாய்
ஓதி யான் மொழியின் இவன் உறு வலிக்கு நிகர் ஆவார் உளரோ வேந்தர்.

#1804
ஆழித் தேர் ஒன்று ஏறி அலை கடலின் நடு ஓட்டி அமரர் தந்த
மாழைத் தேர் மருங்கு அறா மணி முடியும் அணிகலமும் திறையா வவ்வி
ஊழித் தேர் அரசு இறைஞ்ச உலகு எலாம் ஒரு குடைக் கீழ் உறங்கக் காத்த
பாழித் தோள் பரதன் பின் இவன் இவனால் நில மடந்தை பரிவு தீர்ந்தாள்.

#1805
இன்னவனது உயர் குலமும் இளமையும் இங்கு இவன் வடிவும் சொல்லவேண்டா
மன்னவன்-தன் மட மகளே மற்று இவனுக்கு இட மருங்கின் மஞ்சம் சேர்ந்து
பொன் அவிரும் மணி அணை மேல் பொழி கதிர் ஈண்டு எழுந்தது போல் பொலிந்து தோன்றும்
கொல் நவின்ற வேல் குமரன் குரு குலத்தார் கோன் இவனே கூறக் கேளாய்.

#1806
அருள் ஆழி அற அரசன் அருளினால் அகல் ஞாலம் பரிவு தீர்த்தான்
உருள் ஆழி_உடையர் இவன் அடைவின் மிக்க கடைப் பணி கொண்டு உழையோர் போல
இருள் ஆழி நிழல் துளும்பும் எரி பொன் மணி நெடு முடி சாய்த்து இறைஞ்சப்பட்டான்
மருள் ஆழும் கழி வனப்பின் மற்று இவனே குல முதல்-கண் வயவோன் கண்டாய்.

#1807
சூழ் இரும் திண் கடல் தானை உடன் துளங்கச் சுரர் கொணர்ந்து சொரிந்த மாரித்
தாழ் இரும் பல் புயல் தாங்கிச் சரகூடம் சந்தித்த தகையோன்_அன்னோன்
யாழ் இரங்கு மணி வண்டும் இலங்கு இழையார் கரும் கண்ணும் மருங்கு நீங்கா
வீழ் இரும் பொன் சுடர் ஆர வரை மார்பன் இவன் சீர் யான் விளம்பவேண்டா.

#1808
இங்கு இவனது இட மருங்கின் எழில் வயங்கு மணி மஞ்சம் இலங்க ஏறிச்
சங்கு இவர் வெண் சாமரையும் தாழ் குழையும் நீள் சுடரும் தயங்கி வீசக்
குங்குமம் சேர் கொழும் பொடியில் புரண்டு தன் நிறம் சிவந்த குளிர் முத்தாரம்
செம் கதிரோன் ஒளி பருகும் செவ்வரை நேர் அகலத்தான் திறமும் கேளாய்.

#1809
தகரம் நாறு இரும் சோலைச் சயம்பூல் தான் துறவு அரசாய் நின்ற காலை
மகர யாழ் நரம்பு இயக்கி வரம் கொண்டு வடமலை மேல் உலகம் ஆண்ட
சிகர மால் யானையான் வழி மருகன் செம் தாமம் தவழ்ந்து தீம் தேன்
பகரும் மா மணி முடியான் அமரருமே பாராட்டும் படியன் பாவாய்.

#1810
சக்கரர் தாம் பிறந்து உவரித் தரங்க நீர் வளாகம் எல்லாம் தம் கீழ்க் கொண்ட
உக்கிர மெய்க் குலத்து அரசன் ஒளி வேல் இ இளையவனது உருவே கண்டாய்
அக்கிர நல் பெருந்தேவி மட மகளே அரசு அணங்கும் அணங்கே இன்னும்
விக்கிரமக் கடல் தானை விறல் வேந்தர் இவர் சிலரை விளம்பக் கேளாய்.
**குண்டலபுரத்தார் கோமான்

#1811
ஏலம் செய் பைம் கொடி இன் இணர் ததைந்து பொன் அறை மேல் கொழுந்து ஈன்று ஏறிக்
கோலம் சேர் வரை வேலிக் குண்டலத்தார் கோமான் இக் கொலை வேல் காளை
ஞாலங்கள் உடன் பரவும் நாதவன்-தன் குலவிளக்கு நகை வேல் நம்பி
போல் இங்கண் அரசு இல்லை பொன் ஆர வரை மார்பன் பொலிவும் காணாய்.
**சூரியத்தார் கோமான்

#1812
சொரி மலர்த் தண் மலர் அணிந்த சோலை சூழ் சூரியத்தார் கோமான் தோலா
அரி குலத்தார் போர் ஏறு இ அரி ஏறு போல் இருந்த அரச காளை
வரி மலர்த்தும் மணி வண்டு புடை வருடும் மாலையார் மகளிர் வாள் கண்
புரி மலர்த் தண் வரை அகலம் புணராதார் புண்ணியங்கள் புணராதாரே.
**பாண்டியன்

#1813
வேலை-வாய்க் கரும் கடலுள் வெண் சங்கும் மணி முத்தும் விரவி எங்கும்
மாலை வாய்க் கரும்பு அறா அகல் பண்ணை தழீஇ அருகே அருவி தூங்கும்
சோலை-வாய் மலர் அணிந்த சூழ் குழலார் யாழ் இசையால் துளைக் கை வேழம்
மாலை வாய் நின்று உறங்கும் மதுரை சூழ் வள நாடன் வடிவும் காணாய்.

#1814
கண் சுடர்கள் விட அனன்று கார் மேகம் என அதிரும் களி நல் யானை
விண் சுடரும் நெடும் குடைக் கீழ் விறல் வேந்தன் திறம் இதனை விளம்பக் கேளாய்
தண் சுடரோன் வழி மருகன் தென்மலை மேல் சந்தனமும் செம்பொன் ஆரத்து
ஒண் சுடரும் விரவிய நல் வரை மார்பன் உலகிற்கு ஓர் திலதம் கண்டாய்.
**கரபுரத்தரசன்

#1815
மழைக்கு அரும்பும் கொடி முல்லை மருங்கு ஏற வரம்பு அணைந்து தடாவி நீண்ட
கழைக் கரும்பு கண் ஈனும் கரபுரத்தார் கோமான் இக் கதிர் வேல் காளை
இழைக்கு அரும்பும் இளம் முலையாய் எரி கதிரோன் வழி மருகன் இவன் நீர் ஈர்ம் தண்
தழைக் கரும்பின் முருகு உயிர்க்கும் தார் அகலம் சார்ந்தவர்கள் தவஞ்செய்தாரே.
**உறந்தைக்கோன்

#1816
வண்டு அறையும் அரவிந்த வனத்து உலாய் மதர்த்து எழுந்த மழலை அன்னம்
உண் துறை முன் விளையாடி இளையவர்கள் நடை பயிலும் உறந்தைக் கோமான்
கொண்டு அறையும் இடி முரசும் கொடி மதிலும் குளிர் புனலும் பொறியும் பூவும்
ஒண் துறையும் மும்மூன்றும் உடைய கோவே இவனது எழிலும் காணாய்.
**ஏமாங்கத நாடன்

#1817
தழல் அவாம் தாமரையின் ஈர் இதழும் செங்குவளைத் தாதும் வாரி
அழல் அவாம் செம் தோகை அலங்கு பொலம் கதிர்ச் செந்நெல் அலைத்த வாடை
பழன-வாய்ப் பைம் கரும்பின் வெண் போது பவழக் கால் செம்பொன் மாடத்து
எழினி வாய்க் கொணர்ந்து அசைக்கும் இயல் ஏமாங்கத நாடன் இவனே கண்டாய்.
**மகதை கோ

#1818
காந்தள் அம் கள் கமழ் குலையால் களி வண்டு களிறு அகற்றும் கலிங்கநாடன்
பூம் தளவம் கமழ் சாரல் பொன் அறை சூழ் தண் சிலம்பன் அன்றே பொன்னே
ஏந்து இளம் சிங்காதனத்தின் இனிது இருந்த இளவரசன் இப்பால் ஆனோன்
மாம் தளிர்கள் மருங்கு அணிந்த மணி அருவிக் குன்று உடைய மகதைக் கோவே.

#1819
அங்கநாடு உடையவர் கோன் அவ் இருந்தான் இவ் இருந்தான் அவந்திக் கோமான்
கொங்கு வார் பொழில் அணிந்த கோசலத்தார் கோமான் இக் குவளை_வண்ணன்
கங்கை தான் இரு கரையும் கதிர் மணியும் பசும்பொன்னும் கலந்து சிந்தி
வங்க-வாய்த் திரை அலைக்கும் வள நாடன் இவன் போலும் வை வேல் காளை.

#1820
வஞ்சியின் மெல் இடையவளை வால் நிலா வளர் முன்றில் வலமாய்ச் சூழ்ந்து
பஞ்சியின் மெல் அடி நோவ நடை பயிற்றிப் படை வேந்தர் பலரைக் காட்டி
மஞ்சு இவரும் மாளிகையின் வட மருங்கின் மணி மஞ்சம் மலிரத் தோன்றும்
விஞ்சையர்-தம் உலகு ஆளும் விறல் வேந்தர் குழாம் காட்டி விரித்துச் சொன்னாள்.
**வித்தியாதர அரசர்

#1821
மாடு இலங்கும் மழை தவழ்ந்து மணி அருவி பொன் அறை மேல் வரன்றி வண் பூம்
தோடு இலங்கு கற்பகமும் சுரபுன்னை வனங்களுமே துதைந்து வெள்ளிக்
கோடு இலங்கும் நெடு வரை மேல் குடை வேந்தர் இவர் குணங்கள் கூறக் கேட்பின்
ஏடு இலங்கு பூங்கோதாய் இமையவரின் வேறாயது இமைப்பே கண்டாய்.

#1822
அங்கு அவவர் வள நகரும் குல வரவும் அவயவமும் அறையும் போழ்தில்
வெம் கதிரோன் பெயரவனுக்கு இளவரசு இவ் வேந்தன் எனா முன்னம் தானே
கொங்கு இவரும் கரும் குழலி பெரும் தடம் கண் இரும் குவளை பிணையல் போலச்
செம் கதிரோன் என இருந்த திருந்து வேல் இளையவன் மேல் திளைத்த அன்றே.

#1823
கடாம் மிகு களி நல் யானைக் கவுள் இழி கான வீதி
விடா மிகை சுழன்று வீழும் விரை கவர் மணி வண்டே போல்
படாம் முகக் களிற்றினான்-தன் பவழக் குன்று அனைய மார்பில்
தடா முகை அலங்கல்-தன் மேல் தையல் கண் சரிந்த அன்றே.

#1824
ஏட்டின் ஆர் குழலினாளுக்கு உழையவள் இன்னன் என்று
காட்டினாள் ஆவது அல்லால் காரிகை தன்னின் முன்னம்
ஓட்டினாள் நிறையும் கண்ணும் உள்ளமும் களித்தது அங்கே
பாட்டினால் என்னை போக பான்மையே பலித்தது அன்றே.

#1825
விண்டு அழி நிறையள் ஆகி மெல்லவே நடுங்கி நாணி
வண்டு இவர் மாலை நோக்கி மாதராள் மறைதலோடும்
கொண்டது ஓர் குமரன் போல்வான் குங்குமக் குவவுத் தோள் மேல்
ஒண்_தொடி மாலை வீழ்த்தாள் உலகு ஒலி படைத்தது அன்றே.

#1826
ஆர்த்தது அங்கு அரவத் தானை ஆலித்த முரசும் சங்கும்
தேர்த்தன மலரும் செம்பொன் சுண்ணமும் திசைகள் எல்லாம்
போர்த்தன பதாகை பொங்கிப் பூமி அம் கிழவர் உள்ளம்
வேர்த்தன வேர்த்துத் தாமே வெய்துயிர்த்து ஒழிந்த அன்றே.

#1827
புனைவு-தான் இகந்த கோதைப் பொன்_அனாள் பூமி பாலர்
நினைவு-தான் இகந்து காளை வடிவு எனும் நிகளம் சேர
வினைகள் தாம் விளையுமாறு யாம் வேண்டியவாறு வாரா
இனையதால் வினையின் தன்மை என நினைந்து ஆறினாரே.

#1828
நெய்த்-தலைப் பால் உக்காங்கு நெடு வரை உலகின் வந்த
மைத்துன குமரன்-தன்னை மட_மொழி மாலை சூட்ட
இத்தலை அரசர்_கோமான் எரி கதிர் ஆழி வேந்தன்
கைத்தலை வேலினாற்குக் கடிவினை முடிவித்தானே.

#1829
விண்ணகம் புகழும் நீர்மை விழுக் கலம் பரப்பி ஆர
மண்ணக வளாகத்து உள்ள மன்னரால் மண்ணு நீர் தந்து
எண் அகன் புகழினாரை எழில் ஒளி துளும்ப ஆட்டிப்
புண் அகம் கமழும் வேலான் பொன் மழை பொழிவித்தானே.

#1830
தரு மணல் மணி முத்தாகத் தண்டுலம் இயற்றிக் கான் யாற்று
அரு மணல் தருப்பை சூழ்ந்து ஆங்கு அதன் மிசை பரிதி பாய்த்திப்
பெரு மணம் மன்னற்கு ஏற்ற சமிதையால் பெருக்கப்பட்ட
திரு மணி உருவில் செம் தீச் செல்வத்தில் சிறந்தது அன்றே.

#1831
தங்கு அழல் வேள்வி முற்றித் தையல் அக் காளையோடும்
பொங்கு அழல் வலம்செய் போழ்தில் குழை முகம் பொறித்த தெள் நீர்
பைம் கழல் அமரர் பண்டு படைத்த நீர் அமிர்தப் புள்ளி
அங்கு எழு மதியம்-தன் மேல் அரும்பியாங்கு அணிந்த அன்றே.

#1832
மன்னவ குமரன் ஆங்கு மடந்தையைப் புணர்ந்து மாடத்து
இன் அகில் அமளி மேலால் இளம் முலைத் தடத்து மூழ்க
அன்னவன் தாதை செங்கோல் ஆணை வேல் அருக்ககீர்த்தி
தன் அமர் மடந்தைக்கு ஏற்ற சயமரம் அறைவித்தானே.

#1833
சயமரம் அறைந்த நல் நாள் தமனிய மஞ்சம் பாவி
இயமரம் துவைப்ப ஏறி இகல் மன்னர் இருந்த போழ்தில்
பய மலை மன்னன் பாவைக்கு அவரவர் பண்பு கூறிக்
கய மலர் நெடும்_கணாள் ஓர் காரிகை காட்டினாளே.

#1834
வரி கழல் மன்னர் என்னும் மணி நெடும் குன்றம் எல்லாம்
சுரி குழல் மடந்தை என்னும் தோகை அம் மஞ்ஞை நோக்கி
எரி கதிர் ஆழி வேந்தன் திருமகன் என்னும் செம்பொன்
விரி கதிர் விலங்கல் திண் தோள் குவட்டினை விரும்பிற்று அன்றே.

#1835
மாதராள் சுதாரை வாள் கண் மலரொடும் மணி வண்டு ஆர்க்கும்
போது உலாம் பிணையல் வீரன் பொன் வரை அகலம் சூழ
ஏதிலா மன்னர் வாட இரு புடைக் கிளைஞர் எல்லாம்
காதலால் களித்துச் செல்வக் கடிவினை முடிவித்தாரே.

#1836
கழல் வலம் புரிந்த நோன் தாள் கடல்_வண்ணன் புதல்வன் காமர்
குழல் வலம் புரிந்த கோதை குழை முகம் வியர்ப்ப வேட்டான்
அழல் வலம் புரிந்து சூழ்ந்து ஆங்கு அத் தொழில் முடித்த பின்னைத்
தழல் வலம் புரிந்த வேலான் தட முலை வாரி சார்ந்தான்.

#1837
மாதர் அம் சாயலாளும் மணி_வண்ணன் சிறுவன்-தானும்
ஓது அம் நீர் இன்பம் என்னும் ஒலி கடல் தரங்கம் மூழ்கச்
சோதி அம் பெயரினாளும் சுடரவன் புதல்வன்-தானும்
காதலில் களித்துத் தங்கள் கன வரை உலகம் சார்ந்தார்.

#1838
எரி விசயம் கோ ஏந்தி மன்னர் என்னும்
அரி விசயம் கெட நின்ற ஆணை வேலான்
திரு விசயன் திரு அன்ன செல்வியோடும்
மருவி சயம் கெழு கோயில் மலர்ந்து புக்கான்.

#1839
இனையனவாம் மிகு செல்வம் இங்கும் ஆக்கிப்
புனை மலர் வானவர் போகம் புணர்க்கும் பெற்றி.
வினை-அதனின் விளைவு இன்னது என்று நாளும்
நினை-மின்மோ நெறி நின்று நீர்மை மிக்கீர்.

@11.துறவுச் சருக்கம்

#1840
மன்னிய புகழினான் தன் மகன் வழிச் சிறுவர்-வாயின்
இன் நகை மழலை கேட்டு ஆங்கு இனிதினின் இருந்து பின்னர்
பன்னும் மெய்த் துறவில் புக்கான் பயாபதி மன்னர்_மன்னன்
அன்னதன் பகுதி-தன்னை அறியுமா பகரலுற்றேன்.
**திவிட்டனும் அவன் மக்களும் பயாபதியை அணுகுதல்

#1841
திரு மகிழ் அலங்கல் மார்பின் செம்_கணான் வணங்கச் செல்வப்
பெரு மகிழ்வு எய்தி வேந்தன் பிரசாபதி பெரிய வாள் கண்
உரிமையோடு இருந்த போழ்தின் ஒலி கலன் ஒலிப்ப ஓடி
அருமை கொள் திகிரி_ஆள்வான் சிறுவர் சென்று அணுகினாரே.
**தவத்தின் பயனைப் பயாபதி உணர்தல்

#1842
ஆங்கு அவர் அணைந்த போழ்தில் அமிர்து கொப்புளித்த போலும்
தேம் கமழ் பவழச் செவ்வாய் முறுவல் நீர் பருகித் தேங்கி
ஈங்கு இவை அனைய தோற்றி இன்பமே பெருக நின்ற
வீங்கிய தவத்திற்கு இன்னும் வித்திடல்பாலது என்றான்.
**நல்வினை

#1843
அலகுடன் விளங்கும் அம் பொன் குடை நிழல் அரசர் சூழ
உலகு உடன் வணங்க ஓடை உயர் களிற்று எருத்தம் மேலால்
பல குடை பணியச் செல்லும் பண்பு இது நமக்குத் தந்த
நலன் உடைத்து அளிய நங்கள் நல்_வினைத் தெய்வம் அன்றே.
**மேலும் அவன் எண்ணுதல்

#1844
தன்னை ஓர் அரசன் ஆக்கித் தரங்கம் நீர் வளாகம் ஆள்வித்து
இன் உயிராகச் செல்லும் நல்_வினை என்னும் இன்ன
முன் உபகாரி-தன்னை முதல் கெட முயலும் கீழ்மை
நன்னர்_இல் மன்னன் அன்றே நரகங்கட்கு அரசன் ஆவான்.

#1845
சென்ற நாள் பெயருமேனும் செல்வமும் செருக்கும் ஆக்கி
நின்ற நாள் நிலவுமேனும் நெறி நின்று வருந்தவேண்டா
இன்று போல் வாழ்தும் அன்றே இப்படித்து அன்றி யாங்கள்
பொன்றும் நாள் வருவது ஆயின் வாழ்க்கை ஓர் பொருளது அன்றே.
**வாழ்வு நிலையற்றது

#1846
எரி புரை எழிலது ஆய இளம் தளிர் இரண்டு நாளில்
மரகத உருவம் எய்தி மற்று அது பசலைகொண்டு
சருகு இலை ஆகி வீழ்ந்து கரிந்து மண் ஆதல் கண்டும்
வெருவு_இலர் வாழ்தும் என்பார் வெளிற்றினை விலக்கலாமோ.
**தவம் சிறந்தது எனத் துணிதல்

#1847
பிறந்தனர் பிறந்து சாலப் பெருகினர் பெருகிப் பின்னை
இறந்தனர் என்பது அல்லால் யாவரும் இன்று-காறும்
மறைந்து உயிர் வாழாநின்றார் இல்லையால் வாழி நெஞ்சே
சிறந்தது தவத்தின் மிக்கது இன்மையே சிந்தி கண்டாய்.
**உடலின் இழிவு

#1848
பிறந்து நாம் புறம்செய்கின்ற பேதை இ உடலம்-தானும்
இறந்த நாள் போல்வது இன்றாய் இற்றையின் நாளை வேறாய்ப்
பறைந்து நாம் பற்றப்பற்றப் பற்று விட்டு அகலும் ஆகில்
சிறந்தனர் பிறர்கள் யாரே சிந்தை நீ சிந்தி என்றான்.

#1849
தொகை மலர் அலங்கல் சூடித் தூ நறும் சுண்ணம் அப்பிப்
புகை நனி கமழ ஊட்டிப் புறம்செயப்பட்ட மேனி
சிகையின் ஓர் சிறுமுள் தீண்டச் சிதைந்து அழுக்கு ஒழுகும் ஆயின்
நகை பெரிது உடைத்து நாணாம் இதனை நாம் மகிழ்தல் நெஞ்சே.

#1850
ஒழுகிய முடையும் நீரும் முதல கையிகப்ப ஊறும்
அழுகல் இ அள்ளல் யாக்கை அகம் புறம் ஆயிற்று ஆயில்
கழுகொடு கவரும் காக்கை கைத்தடி கொண்டு காத்தும்
அழகு உள சுழலும் மன்னோ ஆயிரச் சாதி மாதோ.

#1851
வல்_வினை விளைத்த மாந்தர் மற்று அதன் வித்தும் மாட்டிப்
புல்_வினை கானம் அண்டிப் புலியின் வாய்ப் பட்டதே போல்
நல்_வினை இனிதின் ஊட்டும் நல்_வினை முதல்-கண் மாறி
இல் வினை இன்பம் வெஃகி இறுபவே அறிவு_இலாதார்.
**பயாபதி தன் அமைச்சருடன் ஆராய்தல்

#1852
இன்னன பலவும் சிந்தித்து இருந்தது மிகை என்று எண்ணி
மன்னவன் உழையர்-தம்மால் மந்திரத்தவரைக் கூவிப்
பொன் அவிர் பவழத் திண் கால் புரி மணிக் கூடம் எய்திக்
தன் அமர் அமைச்சரோடு தான் அமர்ந்திருந்து சொன்னான்.
**நிலைத்த செல்வத்துக்கு வரும் ஊனங்கள் யாவை என்று அவன் வினாதல்

#1853
மலை பயில் களி நல் யானை மன்னரால் வவ்வல் இன்றாய்க்
கலை பயில் மகளிர் கண் போல் கள்வர் கைப்படாது நாளும்
நிலையின செல்வக்கு ஊனம் நிகழ்வன உரை-மின் என்றான்
இலை பயில் மகரப் பைம் பூண் எரி மணிக் கடகக் கையான்.
**அமைச்சர் இறுத்த விடை

#1854
ஆள்வினை மாட்சி என்னும் இரண்டினும் அரசு காத்துத்
தோள் வினைக் களவு காவல் உள் வழித் துன்னல் செல்லா
வாள் வினைத் தடக் கை வேந்தே வருவது மற்றும் உண்டோ
கோள் வினை பயின்ற கூற்றம் குறுகலது ஆயின் என்றார்.
**கூற்றத்தார் கொள்ளற்பாலன யாவை என்ற வினாவும் அதற்கு விடையும்

#1855
கோள் வினை பயின்ற கூற்ற அரசனால் கொள்ளற்பால
கேள் வினை பயின்ற நூலின் கிளர்ந்து நீர் உரை-மின் என்ன
வாள் வினை புரிந்த தோளான் மனத்ததை உணர்ந்து மாதோ
நாள் வினை புரிந்து நங்கள் உயிர் நிறை கொள்ளும் என்றார்.
**கூற்றுவனை வெல்லும் உபாயம் யாது என்று வினவல்

#1856
சந்தினால் தவிர்க்கல் ஆமோ சார்பினால் ஒழிக்கல் ஆமோ
பந்தியா முன்னம் தாமே பகைத்து இருந்து உய்யல் ஆமோ
வெம் திறல் காலன்-தன்னை மேற்சென்று வெல்லல் ஆமோ
உய்ந்து உயிர் யாங்கள் வாழும் உபாயம் நீர் உரை-மின் என்றான்.
**அமைச்சர் விடை

#1857
பீழைமை பலவும் செய்து பிணிப் படை பரப்பி வந்து
வாழ் உயிர்ப்பு ஒழித்து வவ்வி வலிந்து உயிர் வாங்கி உண்ணும்
கூழைமை பயின்ற கூற்ற அரசனைக் குதிக்கும் சூழ்ச்சி
பாழி அம் தடக் கை வேந்தே பயின்றிலம் யாங்கள் என்றார்.
**அரசன் கூறுதல்

#1858
ஆயின் அக் காலன் பாணியாம் பிற அரச செல்வம்
மேயினம் களித்து யாங்கள் விழைந்து உயிர் வாழும் வாழ்க்கை
பாயிய எழுந்த வேங்கை பாரிக்கும் அளவில் பைம் புல்
மா இரும் சுருளை மேயும் மான் மறி போலும் என்றான்.
**குரவர் கூற்று

#1859
அரும் களி யானை வேந்தே அத்துணைப் பாணி உண்டோ
கரும் களி மத நல் யானை வாய் புகு கவளமே போல்
பெரும் களியாளன் காலன் பிறை எயிறு அணிந்து நின்ற
இரும் களி யாணர் வாழ்விற்கு இமைப்பிடை பெரிது கண்டாய்.
**காலனைக் கடப்பதற்கு மார்க்கம் கூறுகழு என்று அரசன் அமைச்சரை வினாதல்

#1860
இன் உயிர் அழியும் போழ்தும் இறைவனுக்கு உறுதி அல்லால்
முன்னிய முகமன் மாட்டா முற்றிய அறிவினாரை
மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழ் உயிர் வவ்வும் காலன்-
தன்னை நாம் இகந்து சேரும் சரண் பிறிது உரை-மின் என்றான்.
**முனிவரைக் கேட்குமாறு அமைச்சர் கூறல்

#1861
இனியன போன்று தோன்றி நுகர்ந்தவற்கு இறுதிசெய்யும்
கனி புரை கிளவி நீக்கிக் கண்_அனார் கருத்து உள் கொண்டு
துனிவன நினையும் காலன் துணிவன துணியும் சூட்சி
முனிவரை வணங்கிக் கேட்டு முயறுமோ அடிகள் என்றார்.

#1862
குருகு அயாவுயிர்க்கும் சோலைக் குளிர் அணிப் பழன நாட
முருகு அயாவுயிர்க்கும் பூ ஆர் முறி மிடை படலை மாலைத்
திரு அயாவுயிர்க்கும் மார்பன் செறி தவர் சரண மூலத்து
அருகு அயாவுயிர்ப்பின் அல்லால் அரண் பிறிது ஆவது உண்டோ.
**பயாபதி துயர்நீங்கிய மனத்தனாதல்

#1863
எரிகின்ற சுடரில் நெய் பெய்து இடு திரி தூண்டியாங்கு
விரிகின்ற புலமை வீரர் மொழிதலும் காதி-தன்னால்
பரிகின்ற உரிமை வல்ல படர் ஒழி மனத்தன் ஆனான்
சொரிகின்ற மதுவின் மாரித் துவலையில் நனைந்த தாரான்.

#1864
கரும்பு அணி மொழியினார்-தம் கரும் தடம் கண்ணும் வண்டும்
சுரும்பு அணை முலையின் ஆரும் தொடையலும் துதைந்த மார்பன்
அரும்பு அணி அசோக நீழல் அடிகளது அணி பொன் கோயில்
விரும்பு அணி விழவு சாற்றி வியன் முரசு அறைக என்றான்.
**அருகன் விழா

#1865
ஒளியவன் உலகம்-தன்னுள் கரந்தவன் உயிர்கள் உய்யும்
அளியவன் அருள்செய் ஆழி_உடையவன் அடிமை செய்வார்க்கு
எளியவன் எந்தை பெம்மாற்கு இயற்றிய விழவின் மிக்க
களியவர் என்ப செம்பொன் கதிர் முடி சூடுவாரே.

#1866
அருள் புரி அழல் அம் சோதி ஆழியான் ஆதி_இல்லான்
மருள் புரி வினைகட்கு என்றும் மறுதலை ஆய வாமன்
இருள் புரி உலகம் சேரா இயல் நெறி பயந்த பெம்மான்
பொருள் புரி விழவு காண்பார் புண்ணிய உலகம் காண்பார்.

#1867
கண்ணிய அறிவன் செல்வ விழவினுள் களித்த மாந்தர்
புண்ணியத் துகள்கள் என்னும் பொன் சுண்ணம் புதைய ஆடிப்
பண் இயல் மொழியினார்-தம் கரும் கண்ணால் பருகும் நீர்மை
விண் இயல் உருவம் எய்தி விளங்கி வீற்றிருப்பர் அன்றே.
**நகரம் விழவணி காண்டல்

#1868
எல்லை சால் முரசில் சாற்றி இன்னன அறைதலோடும்
மல்லல் மா நகரம் கேட்டே வான் உலகு இழிந்ததே போல்
முல்லை வான் கண்ணி சூடி முகிழ் நகைக் கலன்கள் தாங்கிச்
செல்லும் வாய்-தோறும் செல்வ விழவு அணி தேர்த்தது அன்றே.

#1869
இன் இசை முரசம் கேட்டே மெய் பெரிது இனிய கேட்டாம்
மன்னிய நங்கள் வாழ் நாள் வாழ்க நம் இறைவன் என்னாப்
பொன் இயல் மலரும் சாந்தும் சுண்ணமும் புகையும் பொங்கத்
துன்னிய நகர மாந்தர் துறக்கம்_பெற்றவர்கள் ஒத்தார்.
**திருவிழா நடைபெறல்

#1870
பூரண மணிக் குடம் நிரைத்த பொன் அணி
தோரணம் எடுத்தன துதைந்த வெண் கொடி
வார் அணி முரசொடு வளைகள் ஆர்த்து அரோ
கார் அணி கடல் ஒலி கைதவிர்த்ததே.

#1871
விரையினால் மெழுகிய வீதி வாய் எலாம்
திரையின் ஆர் செழும் மணி முத்தம் சிந்தினார்
உரையினால் என்னை அ ஒளி கொள் மா நகர்
புரையினால் பொன் உலகு இழிந்தது ஒத்ததே.
**அகிற்புகை மாளிகைகளைச் சூழ்தல்

#1872
கழுமிய காழ் அகில் ஆவி காமரு
செழும் மணி மாளிகைச் சென்னி சூழ்வது
விழு மணி விளங்கிய விலங்கல் மீமிசைத்
தழுவிய இளம் மழை தவழ்வது ஒத்ததே.
**அந்தணர்

#1873
வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் வழித்து
ஒண் திரள் மல்லிகை ஒலியல் சூடினார்
வண் திரள் மணி முத்தும் வயிரச் சாதியும்
கொண்டு இயல் அணியொடு கோலம் தாங்கினார்.

#1874
வெண் மருப்பு இரட்டைய வேழம் மீமிசைக்
கண் மருட்டுறுப்பன கமலப் பூப் பலி
விண் மருட்டுறுப்பன ஏந்தி வேதியர்
மண் மருட்டுறுப்பது ஓர் வகையின் மன்னினார்.
**வேந்தர்

#1875
செம் மலர்க் கண்ணியர் செம்பொன் தாரினர்
கொய் மலர்க் குங்குமம் குழைந்த சாந்தினர்
கை மலர் மணி நகைக் கடகம் வில்லிட
மெய் மலர் அணியினர் வேந்தர் ஆயினார்.

#1876
செம் நிறக் குவளை கைசெய்த சூட்டினர்
அ நிறம் தழுவிய அரத்த ஆடையர்
மெய் நிறம் செய்யன வேழம் மீமிசைக்
கை நிற மலரொடு கலந்து தோன்றினார்.
**வணிகர்

#1877
பொன் மலர்க் கண்ணியர் பொன் செய் சுண்ணம் மொய்
மின் மலர் மேனி மேல் விளங்க அப்பினார்
மென் மலர் அணி நகை மிளிரும் கோலமோடு
இன் மலர் இருநிதி_கிழவர் ஈண்டினார்.

#1878
பேர் ஒளிப் பீதக உடையர் பைம்பொனால்
ஆர் ஒளி தழுவிய அலர் செய் பூப் பலி
போர் ஒளி யானை மேல் நிரைத்துப் போந்தனர்
வார் அணி வன முலையவரொடு என்பவே.
**அரசன் விழாவிற்கெழுதல்

#1879
நகரம் ஆங்கு எழுந்த பின் நரலும் சங்கொடு
முகுர வாய் மணி முரசு அதிரும் மூரி நீர்
மகர மால் கரும் கடல் மருளும் தானையான்
சிகர மால் யானை மேல் செல்வன் தோன்றினான்.
**குதிரைகள் பல

#1880
வேல் புரை கண்ணியர் கவரி வீச வெண்
பால் புரை பவழக் கால் குடையின் நீழலான்
மால் புரை கரும் கடல் வளாகம் காவலன்
கால் புரை புரவி அம் கடலுள் தோன்றினான்.
**களிறு ஈட்டம்

#1881
புதம் எழு புரவிகள் புடை பரந்திட
மத மழை பொழிவன வயிரக் கோட்டன
கதம் அழல் எழ உமிழ் தகைய காண் நில
விதம் எழு களிறுகள் பல மிடைந்தவே.
**பிற விழாச் செய்திகள்

#1882
ஆர்த்தன பல்லியம் அதிர்ந்த குஞ்சரம்
தேர்த்தன தேர்க் குழாம் திகைத்த பல் உயிர்
போர்த்தன கொடி மிடை பொழிந்த பூ_மழை
வேர்த்தன விளிந்தன வினைகள் என்பவே.

#1883
விரிந்து உயர் வெள்ளி வெண் குடையின் மாடு எலாம்
திருந்திய சாமரை திசைகள் தேர்த்தன
பரந்து எழு பாற்கடல் பரவை வெண் திரை
நிரந்து எழு நுரையொடு நிரைத்த ஒத்தவே.

#1884
பீலி அம் தழை பிணித்திட்ட வட்டமும்
ஆலி அங்கு அசைப்பன ஆலவட்டமும்
மேல் இயங்கு ஒளியவன் மறைய வேய்ந்து அரோ
கால் இயங்கிட இடம் காண்கிலார் அரோ.

#1885
சந்தனம் செறிந்தன செப்பும் தண் புகைக்
கந்தமே நிறைந்தன கரண்டகங்களும்
கொந்து மொய் மலர் நிறை கோடிகங்களும்
உந்தி ஒன்று ஒன்றினை ஊன்றுகின்றவே.

#1886
நிரந்தன பூப் பலி நிரை கொள் மாரியாய்ச்
சொரிந்தன சுரும்பு இவர் துணர் கொள் பூ_மழை
பரந்தன மங்கலப் பதாகை அவ்வழிக்
கரந்தன கரு_வினைக் குழாங்கள் என்பவே.

#1887
பாடுவார் பலாண்டு இசை பரவுவார் பரந்து
ஆடுவார் அறிவனைப் பரவியார்களும்
கூடுவார் குழுவு மெய் குழுமி எங்கணும்
ஊடுதான் வியல் இடம் உள்ளது இல்லையே.
**பயாபதியின் செயல்

#1888
நொவ் வகை வினைப் பகை அகற்றி நூல் நெறி
செவ் வகை மொழிந்தவன் செல்வச் சேவடிக்கு
இவ்வகை எழு வகை விழவு செல்வுழி
நெய் வகை வேலவன் நிலைமை கேட்கவே.
**சினகரம் சேர்தல்

#1889
நீர்ப் பலி விரைப் பலி நிரந்து தேன் இமிர்
பூப் பலி என இவை நிரைத்துப் புண்ணியன்
சீர்ப் பொலி சினகரம் சென்று சேர்ந்தனன்
ஆர்ப்பு ஒலி தழுவிய அரவத் தானையான்.
**நகர் வலம்

#1890
கோடு உயர் கோபுர வாய்தல் சேர்ந்து தன்
நீடு உயர் மழ களிறு இருவித் தான் இழிந்து
ஏடு உயர் இன மலர் ஏந்தி ஈர்ம் பொழில்
மாடு உயர் வள நகர் வலம்கொண்டு எய்தினான்.
**அருகக் கடவுள் தரிசனம்

#1891
மன்னவன் அணைதலும் மலர்ந்த வாள் நிலாப்
பொன் அணி வள நகர் அகத்துப் பொங்கு அரி
துன்னிய அணை மிசைத் துளங்கும் சோதியோடு
அன்னணம் அசோகு அமர் அடிகள் தோன்றினார்.
**ஆசனம்

#1892
குஞ்சரத் தடக் கைய குழவிச் சென்னிய
மஞ்சு இவர் தோற்றத்து மகர வாயொடு
செம் சுடர் மணி நிரை அழுத்திச் செம்பொனால்
அம் சுடர் உமிழ்வது அ அணையின் வண்ணமே.

#1893
ஏழு இயல் உலகில் உள் இருளும் கையகன்று
ஆழ் இயல் வினைகளோடு அவிய ஆயிரம்
தாழ் ஒளி சுடரவன்-தன்னைக் காண ஓர்
சூழ் ஒளி மண்டிலம் சுடரத் தோன்றுமே.
**கவரி

#1894
கழுமிய பால் நிலாக் கதிரின் கற்றைகள்
செழும் மணித் திரள் மிசைச் செறிந்த போல்வன
எழு வளர்த்து அனைய தோள் இயக்கர் ஏந்தின
தொழு தகை உருவின கவரி தோன்றுமே.
**குடை

#1895
பருகல் ஆம் பால் நிலாப் பரந்த மா மணி
அருகு எலாம் அணிந்து அகடு அம் பொன் ஆர்ந்து மேல்
பெருகல் ஆம் சுடர் ஒளி பிறங்கி நின்றது அம்
முருகு உலாம் பிண்டியான் குடையின் மும்மையே.

#1896
அழல் வளர்த்து அனையன தழையும் அ அழல்
தழல் வளர்த்து அனையன மலரும் தாமரைப்
பொழில் வளர் வளையமும் பொதுளி வண்டு இனம்
குழை வளர் அசோகின் மேல் குளிறுகின்றவே.

#1897
மா மழைக் கண்ணியர் மருங்கு போல்வன
தூம் மழை வளர் கொடி துவன்றிப் பத்திகள்
பா மழை உருவுகள் பலவும் தோன்றவே
பூ_மழை பொன் நிலம் புதைய வீழ்ந்தவே.
**வானவர் வாத்தியவொலி

#1898
மொய்த்து இலங்கு அலர் மழை முருகு உலாவிய
மைத்தலை விசும்பிடை மயங்க வானவர்
கைத்தலம் பரவிய காமர் இன்னியம்
எத்திசை மருங்கினும் இரங்கித் தோன்றுமே.
**கின்னரர்

#1899
மை ஞலம் பருகிய கரும் கண் மா மணிப்
பை ஞலம் பருகிய பரும அல்குலார்
மெய் ஞலம் விஞ்சையர் விரவ மேல் எலாம்
கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே.

#1900
எரி மணி நெடு முடி இமைப்பின் செம் கண் அப்
புரி மணி_வண்ணனும் பொன் செய் ஆழி அத்
திரு மணி_வண்ணனும் தேவிமார்களும்
அரு மணி_வண்ணனுக்கு அருகு தோன்றினார்.

#1901
ஒண் தமர் மணிகளும் ஒளிர் பொன் சாதியும்
கொண்டனர் இயற்றிய கோலச் செய்கையால்
கண்டவர் கண் கவர் நகரம் காண்டலும்
விண்டு உதிர் வினையினன் வேந்தன் ஆயினான்.

#1902
பணியொடு நறு விரை மெழுகிப் பல் மலர்
அணி உடை அனையன பலவும் செய்த பின்
மணி முடி நிலம் உற வணங்கி வாமன் மேல்
துணிபடு வினையினன் துதி தொடங்கினான்.

#1903
மூ வடிவினால் இரண்டு சூழ் சுடரும் நாண முழுது உலகம் மூடி எழில் முளை வயிரம் நாற்றித்
தூ வடிவினால் இலங்கு வெண் குடையின் நீழல் சுடரோய் உன் அடி போற்றிச் சொல்லுவது ஒன்று உண்டால்
சேவடிகள் தாமரையின் சே இதழ்கள் தீண்டச் சிவந்தனவோ சேவடியின் செம் கதிர்கள் பாயப்
பூ வடிவு கொண்டனவோ பொங்கு ஒளிகள் சூழ்ந்து புலம்கொளாவால் எமக்கு எம் புண்ணியர்-தம் கோவே.

#1904
கரு மாலை வெவ்_வினைகள் கால் தளர நூறிக் கடை_இலா ஒண் ஞானக் கதிர் விரித்தாய் என்றும்
அரு மாலை நல் நெறியை முன் பயந்தாய் என்றும் அடியேம் உன் அடி பரவும் ஆறு அறிவது அல்லால்
திருமாலே தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் திரு வணங்கு சேவடியாய் தேவாதி_தேவ
பெருமானே நின் பெருமை நன்கு உணரமாட்டார் பிணங்குவார்-தம்மை வினைப் பிணக்கு ஒழிக்கல் ஆமே.

#1905
ஒளி ஆகி உலகு ஆகி நீ விரிந்தாய் என்கோ உலகு எலாம் நின் ஒளியின் உள் அடங்கிற்று என்கோ
அளி ஆர உலகம் நீ ஆள்கின்றாய் என்கோ அமர் உலகு தான் நின்னது அடி அடைந்தது என்கோ
விளியாத மெய்ப்பொருளை நீ விரித்தாய் என்கோ நீ விரித்தவாறே மெய்ப்பொருள் விரிந்தது என்கோ
தெளியாமல் இல்லை நின் திரு_அடிகள் மெய்ம்மை தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கல் ஆமே.

#1906
களி யானை நால் கோட்டது ஒன்று உடைய செல்வன் கண் ஒர் ஆயிரம் உடையான் கண் விளக்கம் எய்தும்
ஒளியானை ஊழி முதல்_ஆனானை ஓங்கி உலகு அளவும் ஆகி உயிர்-தமக்கு உறுகண் செய்யா
அளியானை ஆர் அழல் அம் சோதி வாய் சூழ்ந்த அருள் ஆழி யானை இணை அடி பரவுவார்கட்கு
எளியானை எந்தை பெருமானையே அல்லால் இறையாக ஈங்கு ஒருவர் எண்ணும் ஆறு என்னே.

#1907
தெருளாமையால் வினவற்பாலது ஒன்று உண்டு திரு_அடிகள் செம்பொன் ஆர் அரவிந்தம் ஏந்த
இருள் ஆழி ஏழு உலகும் சூழ் ஒளியின் மூழ்க இமையாத செம் கண்ணின் இமையோர் வந்து ஏத்த
உருள் ஆழியானும் ஒளி மணி முடி மேல் கை வைத்து ஒரு பாலில் வர உலக நின் உழையது ஆக
அருள் ஆழி முன் செல்லப் பின் செல்வது என்னோ அடிப் படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ.

#1908
வானோர்-தம் உலகு உடைய மால் நீல_வண்ணன் மகிழ்ந்து இறைஞ்சும் மாலை அணி மணி முடி மேல் வைகா
ஊன் ஆரும் மற ஆழி ஓடை மால் யானை உடையான்-தன் ஒளி முடியின் மேல் உரையோம் நிற்கத்
தேன் ஆரும் அரவிந்தம் சென்று ஏந்தும் போழ்து திரு_அடிகள் செம் தோடு தீண்டாவே ஆகில்
ஆனா இ மூ உலகும் ஆள் உடைய பெம்மான் அடி உறுவார் இன்மைதாம் அறிவுண்டது அன்றே.

#1909
தேன் அருளி மந்தாரச் செம் தாமம் தாழ்ந்து திரள் அரைய செம்பவளம் வம்பாக ஊன்றி
வான் அருளி மாணிக்கச் செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன்
யான் அருள வேண்டி அடி_இணை பணியும் போழ்து இமையவர்_கோன் ஆயிரச் செம்_கணான் வந்து
தான் அருளும் ஆறு என்று தாள் பணியும் போழ்தும் தகை ஒன்றதேல் இறைமை தக்கதே அன்றே.

#1910
விண்டு ஆங்கு வெவ்_வினை வெரூஉ உதிர நூறி விரிகின்ற மெய்ஞ்ஞானச் சுடர் விளக்கும் மாட்டிக்
கண்டார்கள் நின் நிலைமை கண்டு ஒழுக யான் நின் கதிர் மயங்கு சோதியால் கண் விளக்கப்பட்டுத்
தண் தாஅமரை மலரின் மேல் நடந்தாய் என்றும் தமனீயப் பொன் அணையின் மேல் அமர்ந்தாய் என்றும்
வண்டு ஆர் அசோகின் நிழல்-வாய் அமர்ந்தாய் என்றும் வாழ்த்தினால் வாராயோ வானவர்-தம் கோவே.

#1911
கரு ஆர்ந்த பொருள் நிகழ்வும் காலங்கள் மூன்றும் கடை_இலா நல் ஞானக் கதிர் அகத்த ஆகி
ஒருவாது இங்கு அ ஒளியின் உள்ள ஆகில் உலகு எல்லாம் நின் உளத்தே ஒளிக்கவேண்டா
திரு ஆர்ந்த தண் மார்ப தேவாதி_தேவ திரள் அரைய செம் தளிர் அசோகு அமர்ந்த செல்வ
வருவாரும் வையகமும் நீயும் வேறு ஆகி மணி மேனி மாலே மயக்குவது இங்கு என்னோ.

#1912
செம் கண் நெடு மாலே செறிந்து இலங்கு சோதித் திரு முயங்கு மூர்த்தியாய் செய்ய தாமரையின்
அம் கண் அடி வைத்து அருளும் ஆதியாய் ஆழி அற அரசே என்று நின் அடி பணிவது அல்லால்
எங்கண் இடர் அகலுமாறு இ நிலைமை எய்தி இருள் உலகம் நீக்கும் அருள் தருக நீ என்று
வெம் கண் இரு_வினையை அற வென்றாய் முன் நின்று விண்ணப்பம்செய்யும் விழுத் தகைமை உண்டோ.

#1913
என்று நன்கு ஏத்தி இறைஞ்சி இறைவனைச்
சென்று உயர் சேவடிச் சேடம் தலை வைத்து
வென்றவன் கோயில் வலம்கொண்டு மீண்டும் ஒர்
பொன் தவழ் வேதிகை மண்டபம் புக்கான்.
**சாரணர்

#1914
ஆங்கு ஒர் முனிவன் அரும் தவப் பல் குணம்
தாங்கிய மா மலை அன்ன தகையவன்
பூம் கமழ் சேவடிப் போது தன் பொன் முடி
தாங்கிய தாம நுதியால் துடைத்தான்.

#1915
ஆற்றில் அமைந்த அரும் தவத்தால் வினை
ஊற்றுச் செறித்த ஒரு பெயர் மா தவன்
மாற்று அரு மந்திர வாய் மொழி ஆயிடை
ஏற்றன கொண்டு ஆங்கு இறைவன் இருந்தான்.
**அமைச்சர் வேண்டுகோள்

#1916
வணங்கி மணி முடி மன்னன் இருப்ப
மணம் கமழ் கண்ணியர் மந்திர மாந்தர்
அணங்கும் அற அமிர்து ஊட்டி அடிகள்
பிணங்கும் பிறவிகள் பேர்த்து உய்-மின் என்றார்.
**முனிவன் கூற்று

#1917
வன்ன மணி முடி மன்னன் இருந்திட
இன் இயல் செல்வம் எனைப் பல எய்திய
மன்னன் அறியும் திரு அற மாண்பினை
என்னை வினவியது என்னை-கொல் என்றான்.
**அமைச்சர் கூற்று

#1918
அடிகள் அடிசில் அமைந்தது அயில்வான்
முடிய முயலும் முறைமை அறியான்
நெடிதின் அது அறும் நீர்மையும் ஓரான்
வடிவு அமர் செல்வன் வகையும் அதுவே.
**முனிவன் செயல்

#1919
மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை
அந்தரம் வாழும் அமரர் வழிபடும்
தந்திரம் சான்ற தவத்திற்கு அரசனும்
இந்திரன்_அன்னாற்கு எடுத்து உரைக்கின்றான்.
**முனிவர் உபதேசம்

#1920
கதியும் கதியினுள் துப்பும் அத் துப்பின்
விதி செய் வினையும் வினை வெல் வகையும்
மதியவர் காமுறும் வீட்டது மாண்பும்
அதிபதி கேள் என்று அரும் தவன் சொன்னான்.

#1921
ஓடும் சகடத்து உருளும் ஒளி கொள
வீடு_இல் ஒருவன் விசிறும் வளையமும்
ஆடும் துகளும் எனச் சுழன்று ஆர் உயிர்
நாடும் கதி அவை நான்கு உள கண்டாய்.

#1922
நரகர் விலங்கு மனிதர் நல் தேவர்
விரவினவர்-தம் விகற்பம் உரைப்பின்
பெருகும் உரை என்று பெய் மலர்த் தாரோன்
உருக ஒருவாறு உறுவன் உரைத்தான்.
**நரகர் கதி

#1923
கீழாம் நரகம் கிளத்தும் படலங்கள்
ஏழாய் இருபத்திரட்டியோடு ஒன்பது
போழாம் அவற்றுள் அவர்கள் புகலிடம்
பாழாம் இலக்கம் எண்பஃது உடன் நான்கே.
**நரகங்களின் பெயர்

#1924
இருளின் இருளும் இருளும் புகையும்
அருள்_இல் அளறும் மணலும் பரலும்
மருளின் மணியும் என இப் பெயர
பொருள்_இல் நரகங்கள் போதரக் கொள் நீ.

#1925
ஆங்கண் நரகம் அடைந்தார் படு துயர்
ஈங்கண் உரைப்பின் எமக்கும் பனி வரும்
வாங்கி அவற்றின் முதலதன் வார்த்தைகள்
பாங்கின் மொழிவன் பனி மலர்த் தாரோய்.

#1926
பத்தடம் பத்தொடு மூன்றாம் அவற்றிடை
ஒத்த உறையுள் இலக்கம் ஒர் முப்பது
கொத்து எரி வெம்பு அவர் கும்பிக் குழியவை
இத்துணை என்பது ஒர் எல்லை இலவே.

#1927
பேழைப் பிளவும் பிலத்தின் முகங்களும்
தாழிப் பதலையும் போலும் தகையன
ஆழப் பரந்த அழுகல் அளறு அவை
பீழைப் பதகர் பிறக்கும் இடமே.
**வேதனைகள்

#1928
குழி படு கும்பிக் கரு_வாய் பெருகி
அழுகல் உடம்பு இவை அங்கு நிறைந்தால்
வழுவி அனல் படு பாறை-கண் வைகிப்
புழுவின் உருள்வ பொரிவ பொடிவ.

#1929
புழுவின் உருண்டு பொடிந்தவர் பொங்கி
எழுவர் புகைஇந்து எழுந்த பின் மீட்டும்
வழுவினர் வீழ்வர் மறிந்தும் அவ்வாறே
ஒழிவு இலாது ஏனை உள்ளவை எல்லாம்.

#1930
அந்தோ அறனே என அழைப்பார்களை
வந்தோம் எனச் சொல்லி வாங்குபவர் இல்லை
வெந்தே விளிந்தும் ஒழியார் விழுத் துயர்
முந்தே இனைய முயன்றனர் புக்கார்.

#1931
அன்னணம் வேதனை எய்தும் அவர்களைத்
துன்னி உளர் சிலர் தூர்த்தத் தொழிலவர்
முன்னதின் செய்த வினையின் முறை பல
இன்னணம் எய்து-மின் என்று இடர்செய்வார்.

#1932
தங்கு இருள் போதில் தலைச்சென்று அயன் மனை
அங்கு மகிழ்ந்தாளவள் இவள் காண் எனச்
செம் கனலே என வெம்பிய செம்பினில்
பொங்கு அனல் பாவைகள் புல்லப் புணர்ப்பார்.

#1933
கொள்ளும் இவை எனக் கூட்டில் வளர்த்த தம்
வள் உகிர்ப் பேழ் வாய் ஞமலி வடிவுகள்
அள்ளிக் கதுவ அலறி அயலது
முள்ளில் புனை மரம் ஏற முயல்வார்.

#1934
மேய அப் பருவம் விரும்பிய மீன் இனம்
காயப் பெரும் தடி காண்-மின் இவை எனத்
தீயைப் பருகிய செப்புத் திரளவை
வாயைப் பெருகப் பிளந்து மடுப்பார்.

#1935
மறிப் பல கொன்றும் மடப் பிணை வீழ்த்தும்
கறிப் பல வெஃகிக் கறித்தவர்-தம்மை
உறுப்புறுப்பாக அரிந்தரிந்து ஊட்டி
ஒறுப்பர் சிலரை அவரும் ஒரு பால்.

#1936
இடைப் பல சொல்லி எளியவர்-தம்மை
உடைப் பொருள் வெஃகி ஒறுத்த பயத்தான்
முடைப் பொலி மேனியை முள் மத்திகையால்
புடைப்ப நடுங்கிப் புரள்வர் ஒரு சார்.

#1937
வெறுப்பனவே செய்து மேல் ஆயவரைக்
குறிப்பு_அல சொல்லிய நாவைக் கொடிற்றால்
பறிப்பர் பரிய வயிர முள் கொண்டு
செறிப்பர் உகிர் வழி ஏறச் சிலரே.

#1938
பொரிப்பர் சிறைசெய்து பொங்கு எரி மாட்டிக்
கரிப்பர் கனல் படு கார் அகல் ஏற்றித்
திரிப்பர் பலரையும் செக்கு உரலுள் பெய்து
உரிப்பர் உடலை அவரும் ஒரு பால்.

#1939
பழுப் பல பற்றிப் பறிப்பர் பதைப்ப
மழுப் பல கொண்டு அவர் மார்பம் பிளப்பர்
கழுப் பல ஏற்றி அகைப்பர் கடிதே
விழுப் பெரும் பூணோய் வினையின் விளைவே.

#1940
பறிப்பர் பலர் அவர் கைகளைப் பற்றிச்
செறிப்பர் விரல்களைச் சீவுவர் மேனி
நெறிப்பர் எலும்பு நிரந்து உடன் வீழ
மறிப்பர் மலை மிசை மற்றும் ஒரு சார்.

#1941
சாவ நலிந்திடும் தண்ணீர்ப் பிணி பெரிது
ஆ என்று அலறும் அவரை அரு நஞ்சின்
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்து உண்டு
நாவும் அழுக நரல்வர் ஒரு சார்.

#1942
அழல் இவை ஆற்றோம் என அழன்று ஓடி
நிழல் இவையாம் என நீள் பொழில் புக்கால்
தழல் வளி தாமே தலை வழி சிந்தக்
கழல்வனர் வீழ்ந்து கரிவர் ஒரு சார்.

#1943
முல்லை முகை மலர்த் தாரோய் முதல் புரை
அல்லல் எனைப் பல ஆயிர கோடிகள்
எல்லை_இல் துன்பம் இவற்றின் இரு மடி
புல்லினர் கீழ்க்கீழ்ப் புரைபுரை-தோறும்.

#1944
விளிவு_இல் துயரொடு மேல் பொங்கி வீழும்
அளவும் அவர்கள் முறையும் பிறவும்
அளவு_இல கீழ்க்கீழ் இரட்டி அறைந்தேன்
உளர் ஒளி ஞானம் அஃது ஒன்றும் ஒழித்தே.

#1945
பெய்யா அரு நஞ்சும் பேர்_அழல் குட்டமும்
செய்யாக் குழிகளும் சீ நீர்த் தடங்களும்
நையா நரகர் இடம் இவை நாறினும்
உய்யா பிற உயிர் ஓசனைக்-கண்ணே.

#1946
எழு வில் முழம் மூன்று அறு விரல் என்ப
வழுவின் முதல் அதன் கீழ்ப் புரை வாழ்வார்
ஒழிவு_இல பொங்குவர் ஓசனை ஏழ் மேல்
முழு வில் ஐஞ்ஞூற்றொடு முக் காவதமே.

#1947
ஆண்டுச் சிறுமை பதினாயிரம் உள
நீண்டவர் வாழ்நாள் நிறைவு கடல் எல்லை
ஈண்டு இதன் கீழ்க்கீழ்ப் பெருகி வரும் எங்கும்
வேண்டில் சிறுமை தம் மேலோர் நிறைவே.

#1948
மூன்றும் ஒர் ஏழும் ஒழி பஃதும் பத்தினோடு
ஏன்ற நல் ஏழும் இருபத்திரண்டும் என்று
ஆன்ற அலை கடல் முப்பத்துமூன்றும் என்று
ஊன்றின கீழ்க்கீழ் உயர்ந்தன வாழ்நாள்.

#1949
முடை கொள் முழுச் செவி ஒண் பல் பதகர்
உடை அந்தலி இருப்பு உண்பது நஞ்சே
புடையவர் காணிய போர் நனி மூட்ட
மிடைவர் படுகொண்டு வேதனை மிக்கார்.

#1950
வேவார் அழலுள் விளியார் அளற்றினுள்
ஓவார் புகையுள் உகையா உழல்பவர்
ஆஆ அளிய நரகர் படு துயர்
ஏ ஆர் சிலையாய் இரங்கும் தகைத்தே.

#1951
ஆங்கு உண்டு எனப்படும் ஆழ் துயர் வீழ்பவர்
தேம் கொண்ட பைம் தார்த் திறல் மன்ன யார் எனில்
தாம் கொண்ட தாரம் மறுத்துப் பிறன் வரைப்
பூம் கொண்டைமாரைப் புணரும் அவரும்.

#1952
உள்ளம் கொடியார் உயிர்க் கொலை காதலர்
வெள்ளம் கொடியன மேவிப் பிறன் பொருள்
கொள்ளும் கொடுமைக் குணத்தின் மனித்தரும்
நள்ளலர்ச் சாய்த்தோய் நரகம் அடைவார்.

#1953
நல் அறம் காய்ந்து நலிந்து பொருள் படைத்து
இல் அறம் செய்யாது இறுகுபவர்களும்
புல் அறம் புல்லாப் புலவரை வைது உரைத்து
அல் அறம் செய்யும் அறிவு_இல்லவரும்.

#1954
தெண் திரை வாழும் திமிலும் கலங்களும்
கொண்டு இரையாக உயிர் கொல்லும் சாதியும்
கண்டிடு காதனை நின்னால் செயப்படும்
தண்டிகள்-தம்மொடும் சார்த்தினை கொள் நீ.

#1955
ஆறா நரக அழலினுள் ஆழ்பவர்
தேறார் திரு அறம் தேறினும் நல் வதம்
ஏறார் சிலர் நனி ஏறினும் நில்லலர்
வேறாய் இனிச் சொல்ல வேண்டுவது உண்டோ.
**விலங்குகதித்துன்பம்

#1956
விலங்குடன் சாதி விரிப்பில் பெருகும்
உலம் கொண்ட தோள் மன்ன ஓர் அறிவு ஆதி
புலம் கொண்ட ஐம்பொறி ஈறாப் புணர்ந்த
நலம் கொண்ட ஞாலத்தின் நாடி உணர் நீ.

#1957
நின்று வருந்தும் நிகோதப் பிறவியுள்
ஒன்று அறிவு எய்தி உழக்கும் உயிர் பல
அன்றிச் சிறிது உண்டு அவற்றினும் அவ்வழிச்
சென்று பெயர்வ சில உள கண்டாய்.

#1958
ஓர் அறிவு ஆகி உழக்கும் உயிர்களைப்
பேர் அறிவாரும் பிறர் இல்லை இன்னவை
யார் அறிவார் அழியும் திறம் யாது எனில்
கூர் அறிவு_இல்லவர் கொன்றிடுகின்றார்.

#1959
உயிர் தொகை ஆறனுள் ஒன்று ஒழித்து ஏனைப்
பெயர்த் தொகை பெற்ற பிறவிகள் தம்மைப்
பயிர்த்தலும் இன்றி உலகம் பதைப்பச்
செயிர்த்தவர் போலச் செகுத்திடும் கண்டாய்.

#1960
ஏனை ஒழிந்த இயங்கு நல் சாதிகள்
ஆனை முதலா அளிய விலங்குகள்
மானுடர் பற்றி வலிந்து நலிந்திட
ஊன் நெய் உருகும் உழக்கும் ஒரு பால்.

#1961
ஊர்ந்தும் உழுதும் உறு பாரம் ஏந்தியும்
சாய்ந்த விலங்குகள் தாள் உடைந்து ஆழ்தர
ஈர்ந்தும் அறுத்தும் இறைச்சி உவப்பவர்
தேர்ந்து செகுப்பவும் தேயும் சிலவே.

#1962
தடி விலை வாழ்நர் தடிந்திடப்பட்டும்
முடி வலை வாழ்நர் முருக்க முரிந்தும்
கொடு வில் எயினர்கள் கொல்லக் குறைந்தும்
விடல்_இல வேதனை வேந்த விலங்கே.

#1963
அந்தோ அளிய விலங்குகள் யார்-கண்ணும்
நொந்தோம் எனச் சென்று நோக்கின் நுனிப்பொடு
வந்தோம் என நின்ற மாண்பு_உடையார்களும்
உய்ந்து ஓய்ந்து ஒழிய முயன்றிடுகின்றார்.
**முனிவரே அறிபவை

#1964
கன்னியர் வேட்கை கடவுள் அரும் பிணி
துன்னிய துன்ப விலங்கின் சுடு துயர்
என்னும் இவற்றினை எம்_போல்பவர் அன்றி
மன்ன அறிபவர் மற்று இல்லை மன்னோ.

#1965
வலிய முழங்கினும் நாறினும் வட்கி
நலியும் இவை என நையும் ஒரு பால்
பலி பெறு தெய்வங்கள் மேலிட்டுப் பாற்றும்
கலியவர் கையுள் கழியும் ஒரு பால்.

#1966
கண்களில் நோக்கியும் காதலின் உள்ளியும்
மண்களிடை விட்டு வைகியும் புல்லியும்
தண் கமழ் தார் மன்ன தாயர் வளர்ப்புழி
எண்களையின்று இடர் எய்தும் ஒரு பால்.

#1967
இன்னன துன்பமொடு இ விலங்கு ஆகுநர்
என்னவர் என்னின் இவை நனி கேள் இனி
மன்னிய மா தவம் மேற்கொண்டும் மாயங்கள்
பின்னை முயல்வார் பிறப்பும் அதுவே.

#1968
பொருளிடை மாயம் புணர்த்தும் பிறரை
மருளிகள் ஆக மயக்குமவரும்
இருளுடை உள்ளமொடு ஏதங்கள் எண்ணா
அருள்_இலவரும் அவை நனி ஆவார்.

#1969
பற்றொடு பற்றி முனிந்தார் பலபல
செற்றம் நவின்றார் செறுப்பொடு சென்றவர்
சுற்றம் அழிக்கும் துவர்ப் பகை துன்னினர்
மற்று இ விலங்கு எய்தும் மன் உயிர் மன்னா.

#1970
இல்லை உயிர் என்றும் இல்லை பிறப்பு என்றும்
நல்லன தீயன நாடில் இல என்றும்
பல்லன சொல்லிப் படுத்து உண்ணும் பாவிகள்
நில்லாது செல்வர் நிகோத கதியே.
**மக்கட்கதி

#1971
மாக மழை வண் கை மன்னவ மக்களும்
ஏக கதியினர் ஏய விகற்பினர்
சேகர் மிலைச்சர் மனிதர்கள் திப்பியர்
போக மனிதர் எனப் பொருட்பட்டார்.
**சேகர்

#1972
பத்து வகைய பரத இரேவதத்து
அத்தகு கால இழிவின் அகத்தவர்
சித்தம் தெளிவு_இலர் சீலம் அடைவு_இலர்
செத்த அறிவினர் சேகர் அவரே.
**மிலேச்சர்

#1973
தீவினுள் வாழும் குமானுயர் தேசத்து
மேவி உறையும் மிலைச்சர் எனப் பெயர்
ஆவர் அவருள் மிலைச்சர் அவரையும்
வீவு_அரும் தாரோய் விலங்கினுள் வைப்பாம்.

#1974
வாலும் நெடியர் வளைந்த எயிற்றினர்
காலும் ஒரோவொன்று உடையர் கலை_இலர்
நாலும் செவியர் நவைசெய் மருப்பினர்
சீலம் அடைவு_இலர் தீவினுள் வாழ்வார்.

#1975
மக்கள் பிறப்பு எனும் மாத்திரம் அல்லது
மிக்க வெளிற்று விலங்குகளே அவர்
நக்க உருவினர் நாணா ஒழுக்கினர்
தொக்கனர் மண்ணே துளைத்து உண்டு வாழ்வார்.

#1976
பூவும் பழனும் நுகர்ந்து பொழில் மரம்
மேவி உறையும் மிலைச்சர் மிகப் பலர்
ஓவலர் வாழ்வது ஒரு பளிதோபம் என்று
ஏவல் சிலை மன்ன எண்ணி உணர் நீ.
**மனிதர்

#1977
தேச மிலைச்சரில் சேர்வுடையாரவர்
மாசு_இல் மனிதர் வடிவினர் ஆயினும்
கூசு_இல் மனத்தர் கொடும் தொழில் வாழ்க்கையர்
நீசர் அவரையும் நீரின் இழிப்பாம்.

#1978
கூடல் மிலைச்சர் குமானுடர் என்று இவர்
ஏடு அவிழ் தாரோய் எவர் ஆபவர் எனில்
கோடிக் குதர்க்கம் உரைத்துக் குணங்களை
நாடினர் கொள்ளா நலம்_இலவரும்.

#1979
அடங்கா மரபினவர்கட்கு அடங்கார்
விடம் கார் மணந்த விடக்கும் பிறவும்
உடங்கு ஆய்ந்து உணக் கொடுப்பாரும் உயர்ந்தோர்
தொடங்கா வினைகள் தொடங்குமவரும்.

#1980
அன்ன பிறவியுள் ஆங்கு அவராபவர்
இன்னும் சிலவர் இழி கதி-பால் பட்டுத்
துன்னிய போழ்தே சுருங்கி ஒழிபவர்
என்னும் பிறர்கள் அறிவிற்கு இகந்தார்.

#1981
மக்கள் வதியும் இரண்டரைத் தீவினுள்
தக்க நிலத்துப் பிறந்தவர்-தம்முளும்
முக்குலத்தாரொடும் கூடா முயற்சியர்
ஒக்கலைப் போல்வார் பலரும் உளரே.

#1982
முக்குலத்தாரொடும் மூடத் தொழுதியர்
தக்க தகா என்பது ஓராத் தகையவர்
மக்கள் எனப்படுவார்_அலர் மற்று அவர்
பக்கம் கிடக்கும் பதர் எனக் கொள் நீ.

#1983
நல்ல நிலங்கள் நலம் கொள் வடிவுகள்
இல்லை அமர்ந்துழித் தோன்றல் என இவை
எல்லை_இல் யோனிகள் எல்லாம் இகந்து எய்தல்
அல்லி அம் தாரோய் அரிது பெரிதே.

#1984
அண்ணை அலி குருடு ஆதி அவர்களை
மண் உயர் ஞாலத்து மானுடராக வைத்து
எண்ணுநர் யார் உளர் எல்லாம் அமையினும்
பெண்ணின் பிறவியும் பீடு உடைத்து அன்றே.

#1985
எண்பத்துநான்கு எனும் நூறாயிரம் உள
பண்பு ஒத்த சாதிப் பவம் என்ப மற்று அவை
கண் பற்றும் தாரோய் களிப்பது ஒர் நல்_வினைத்
திண் பற்று உடையவர் இ உடல் சேர்வார்.

#1986
சார்ந்த பொழுதே தலை_நாள் கருவினுள்
வார்ந்து வழுவாது அமைந்து வளரினும்
ஈர்ம் தண் கமழ் நறும் தாரோய் இடர் பல
கூர்ந்து வருப யாம் கூற உலவா.

#1987
குழவி அரும் சுரம் சென்று குமர
அழுவ அடவி அரிதின் இகந்தால்
கிழவு எனும் எல்லை கெழீஇயினர் சார்ந்து
வழுவினர் செல்வது மற்று ஓர் கதியே.
**மனித வின்பம் தாழ்ந்தது

#1988
ஆனை துரப்ப அரவு உறை ஆழ் குழி
நால் நவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர்
தேனின் அழி துளி நக்கும் திறத்தது
மானுயர் இன்பம் மதித்தனை கொள் நீ.

#1989
அன்பும் பிறவும் அமைந்து ஆங்கு அகத்து இருந்து
இன்பம் கருதும் இருவர்க்கு இடை பல
துன்பங்கள் தோன்றும் தொடர்ப்பாடு உள எனில்
முன்பு அவை இல் எனின் முற்றும் தொழிலே.
**நன் மாண்பு

#1990
இன்ன நிலைமை இதனுள் பிறந்தவர்
மன்னும் ஒன்று உண்டு வதத்தால் பெறுவது
பொன் இயல் சேர் கற்ப போக நிலங்களில்
துன்னும் முயற்சி துணியும் திறமே.
**முயற்சி துணி திறம்

#1991
துன்னும் முயற்சி துணியும் திறம் அவை
பன்னி உரைப்பில் பலவாய்ப் பெருகினும்
தன் இயல் தானம் தவமொடு பூசனை
என்னும் இ நான்கு என எண்ணி உணர் நீ.

#1992
தலையும் இடையும் கடையுமாச் சாற்றும்
நிலைமைய தானம் நிழல் மணிப் பூணோய்
உலைவில் ஏற்போன் உடன் ஈபவன் ஈயும்
மலைவு_இல் பொருள் இன்ன மாட்சிய மன்னா.

#1993
ஐமை அமைந்தார்க்கு எழுமை அமைந்தவர்
இம்மை நினையார் அமை பதம் ஈவழி
மும்மைக்கு மும்மடங்காய முறைமையில்
பொய்ம்மையில் புண்ணியம் போர்க்கும் புகுந்தே.
**இரப்போர்

#1994
துறவி அடக்கை பிறர்க்கு நன்று ஆற்றல்
உறவினர்க்கு ஓம்புதல் மெய்த் தலைப்பாடு என்று
அறிவர் அறைந்தாங்கு அறைந்தனன் தான் அங்கு
உறைவு_இலன் ஏற்பவற்கு ஏற்ற குணனே.
**வள்ளல்

#1995
போது இசைவு ஆற்றல் பொன்று தறுகட்பம்
ஈதற்கு இவறுதல் ஏற்பவர்-மாட்டு எழு
காதல் கழி பற்று_இலாமை தெரிந்து அறிவு
ஏதம்_இன்று ஈவான் குணம் இவை ஏழே.
**தன்னியல்

#1996
தானும் அடங்கி அடங்கினர்க்கு ஏந்திய
ஊனம் உயிர்களுக்கு எல்லாம் உணர்வது
ஞான ஒழுக்கம் பெருகும் நலத்ததை
ஈனம்_இல் இன்பம் நிலங்கட்கு வித்தே.

#1997
கடை நின்றவர் உறுகண் கண்டு இரங்கி
உடைய தம் ஆற்றலில் உண்டி கொடுத்தோர்
படை கெழு தானைய பல் களி யானைக்
குடை கெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே.
**பொருள்

#1998
ஊறு பல செய்து உயிர்கட்கு இடர்செய்யும்
வீறு_இல் பொருளை வினையவர்க்கு ஈந்தவன்
ஏறும் பயன் இஃது என்று இனி யான் சொல்லின்
நாறு இணர்த் தாரோய் நகுவது உடைத்தே.

#1999
தன் கைப்பொருளும் இழந்து தனக்கு ஒரு
புன்கண் கதி செல்லும் வாயில் புணர்ப்பவன்
வன்கண் பதகர்க்கு வான் பொருள் கைக்கொடுத்து
என் கைப்பணி கொள்-மின் என்பவன் ஒத்தான்.
**தானப்பயன்

#2000
ஒத்த குணங்கள் அமைந்து ஆங்கு உறுவர்க்குத்
தத்துவம் தேறியவன் செய்த தானங்கள்
முத்திறத்துள்ளும் படாது முடி மன்ன
உத்தம தேவருள் உய்க்கும் உணர் நீ.

#2001
மிக்க விரதம் விரி பல ஆயினும்
தொக்கன ஐந்தில் சொலும் மூன்றில் நான்கினில்
ஒக்க அவற்றின் உறு பயம் சொல்லிடில்
தக்கவர்க்கு ஒத்து அதில் தன்னம் குறைவே.
**விரதம்

#2002
எல்லா விரதம் இயல்பு ஒக்கும் ஆயினும்
அல்லா விரதம் மனையாயவர்கட்குக்
கொல்லா விரதம் குடை மன்ன ஆம் எனின்
வெல்லா வகை இல்லை வீங்கு எழில் தோளாய்.
**தவத்தின் இயல்பு

#2003
தம்மை உடையவர் தாங்கும் தவத்து இயல்
எம்மை வினவின் எமக்கும் உரைப்பு அரிது
உம்மை உலகத்து ஒளிபடும் ஊக்கமோடு
இம்மை இகந்தார்க்கு இசையும் அதுவே.

#2004
தவம்செய்து வந்தார் தவ நிலை நிற்பார்
அவம்செய்து வந்தார்க்கு அரிது பெரிதும்
பவம்செய்து மாக்கள் பரியும் அது-தான்
எவன் செய்தும் என்னை ஈர் மலர்த் தாரோய்.

#2005
தெருண்டவர் மேற்கொளும் செய் தவச் செல்வம்
இரண்டும் பலவும் இயலாய்ப் பெருகும்
மருண்டு இனி என் அவை வந்த பொழுதே
முரண் தரு தோள் மன்ன முற்ற உணர் நீ.
**பூசனைப்பயன்

#2006
உலகங்கள் மூன்றும் உடைய பெருமாற்கு
அலகை_இல் பூசனை ஆற்ற முயன்றால்
திலகம் இவர் எனத் தேவர்கள் ஆவர்
விலகும் சுடர் ஒளி வீங்கு எழில் தோளாய்.
**புண்ணிய வாயில் ஏழ்

#2007
புண்ணிய வாயில் என நாம் புகழ்ந்து உரை
கண்ணிய நான்காய் அடங்கினும் காவல
நுண்ணிய நூல் வழி நோக்கி நுனித்தவர்
எண்ணிய வாயில்கள் இன்னும் உளவே.

#2008
அருளும் தெருளும் குணத்தின்-கண் ஆர்வமும்
பொருள் ஒன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும்
மருள்_இல் தவமும் வாலிய ஞானமும்
இருள்_அறு தியான நிகழ்வும் என்று ஏழே.
**அருள்

#2009
ஆர்_உயிர் யாதொன்று இடர் உறும் ஆங்கு அதற்கு
ஓர் உயிர் போல உருகி உயக்கொள்ள
நேரின் அது முடியாது எனின் நெஞ்சகத்து
ஈரம் உடைமை அருளின் இயல்பே.
**தெருள்

#2010
வையினும் வாழ்த்தினும் வாளா இருப்பினும்
வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு
மையல் மும்மூடப் பகுதி மயக்கு_இன்மை
செய்ய மனத்தோர் தெருளின் திறமே.
**குணத்தின்கண் ஆர்வம்

#2011
அறிவர் அடி முதல் ஆர்வம் பெருக்கல்
உறுவர் ஒழுக்கம் உவத்தல் முதலா
இறுதி_இல் பல் குண நோக்கம் என்று இன்ன
செறிதல்_இல் ஆர்வங்கள் செல்வம் தருமே.
**புகழ்

#2012
ஆற்றல் வகையால் அரும் தவம் மேற்கொண்டு
நோற்று நுனித்தல் ஒழுக்கம் தலை நிற்றல்
போற்றி உரைத்தல் புகழ்ச்சி நிகழ்வு இஃது
ஏற்றும் இரு விசும்பு ஈர் மலர்த் தாரோய்.
**தவம்

#2013
அற்ற துவர்ப்பினர் ஆகும் அரு நிலை
உற்றவர்க்கு இவ்வாறு ஒழுக்கம் தலை நிற்றல்
நல் தவம் என்று இங்கு நாங்கள் மொழிந்தது
மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா.
**ஞானம்

#2014
நூல் பொருள் கேட்டு நுனித்தோர் உணர்வது
மால் படை கூட்டும் மயங்கு இருள் தீர்ப்பது
மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கு அது
நாற்படையோய் நல்ல ஞான நிகழ்வே.
**தியானம்

#2015
சென்று பெருகும் தியான நிகழ்ச்சியும்
ஒன்ற உரைப்பின் ஒரு நால் வகைப்படும்
நன்றியின் மாற்றினை நல்கும் இரண்டு அல்லன
வென்றி விசும்பொடு வீடும் தருமே.

#2016
போற்றிய புண்ணியப் பொன் சுண்ணம் முன் புகழ்வு
ஆற்றி முயல்வார்க்கு அக நிகழ்வாம் அவை
மாற்றி அவற்றை மறுதலையாக் கொளின்
பாற்றி உழப்பிக்கும் பாக நிகழ்வே.

#2017
காட்சி எனும் பெயர்க் கதிர் விளக்கு ஏற்றிய
மாட்சி_உடையார் வதம் இலர் ஆயினும்
ஆட்சிக்கு அரிது அன்று அமர்_உலகு அல்லது
மீட்சி_இல் பேர்_இன்ப வெள்ளத்து உழவே.

#2018
மெய்ப்பொருள் தேறுதல் காட்சி விளக்கு அது
செய்ப்படும் ஆயின் வினை எனும் தீ இருள்
அப்படி மானும் நிலை அன்று அதனை நின்
கைப்பொருளாக் கொள் கதிர் மணிப் பூணோய்.
**தெய்வ மனிதர்

#2019
தெய்வ மனிதரவரைத் தெளிவுறின்
ஐய விசயனும் ஆழி வலவனும்
எய்த இவர் முதல் ஈர்_ஒன்பதின்மர் இ
வையம் அருள வருநர் உளரே.
**பிரதி வாசுதேவர்

#2020
ஆழி இழந்த அயகண்டன் ஆதியாப்
பாழி வல வன் பகைவர் மும்மூவரும்
வீழ உரைத்தேன் வியன் பெரு ஞாலத்துள்
ஊழி-தொறு ஊழி உலப்பு_இல கண்டாய்.
**சக்கரவர்த்திகள்

#2021
தேய வினை வெல்லும் தெய்வ மனிதருள்
நீயும் ஒருவனை நின் குலத்து ஆதி-கண்
பாய விழுச் சீர்ப் பரதனை உள்ளுறுத்து
ஆய திகிரியவரும் அவரே.
**தீர்த்தங்கரர்

#2022
தீர்த்தம் சிறக்கும் திரு மறு மார்பரும்
பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுநரும்
ஓர்த்து இ உலகினுள் உத்தமர் மற்று அவர்
தார்த் தங்கும் மார்ப தவத்தின் வருவார்.
**போக மனிதர்

#2023
தக்க மிகு தானம் முதலாய தலை நிற்கும்
மக்கள் இவர் ஆவர் மத யானை மற வேலோய்
புக்கு அவருளே படுவர் போக நிலம் சார்ந்தார்
ஒக்க அவர் தன்மையும் உரைக்க உலவாவே.

#2024
உத்தமர்கள் ஏனை இடையோர்கள் கடையோராம்
முத்தகையர் ஆவர் அவர் மூரி நெடு வேலோய்
பத்து வகை மா தவம் இயற்றிய பயத்தால்
அத்தகைய செய்கையும் அவர்க்கு அனைய கண்டாய்.

#2025
அங்கு இருவர் தம்பதிகள் செய்கையை அறைந்தால்
இங்கு இருவர் செய்கை-தமை எண்ணி அறிவாய் நீ
தம் குரவரோடு இருவர் மாறு இருவர் தாமாய்
இங்கு இருவர் தேவர்கள் வளர்ப்ப இயல்கின்றார்.

#2026
நக்க குழவிப் பருவம் நாற்பதினொடு ஒன்பான்
ஒக்க வரும் நாள்கள் கலையோடு உடன் நிறைந்தால்
மிக்க ஒளி சூழ்ந்து மிளிர் மேனியவர் ஆகித்
தக்க இளமைப் பருவம் எய்தினர்கள் தாமே.

#2027
கொம்பு அழகு கொண்ட குழை நுண் இடை நுடங்க
வம்பு அழகு கொண்ட மணி மென் முலை வளர்ந்து ஆங்கு
அம் பவழ வாயுள் அணி முள் எயிறு இலங்கச்
செம்பவழ மேனியவள் கன்னிமை சிறந்தாள்.

#2028
நீல மணி கண்டு அனைய குஞ்சிகள் நிறைந்தான்
ஞாலம் அளி கொண்ட நளிர் தாமரை முகத்தான்
கோல மணி மால் குவடு குங்குமம் அடுத்தால்
போலும் மணி மேனியொடு காளை பொலிவுற்றான்.

#2029
தாது படு சண்பகம் இகந்த நறு மேனிக்
காது புனை காமர் குழை பொன் சுருளை மின்ன
மீது படு கற்பக இளம் தளிர் மிலைச்சிப்
போது புனை கோதையவள் பூம் பொழில் அணைந்தாள்.

#2030
பவழ வரை அன்ன திரள் தோள் பரவை மார்பன்
தவழும் மணி ஆரமொடு தார் மணி தயங்கக்
கவழ மனை மேவு களி யானை என வந்து ஆங்கு
அவிழும் மலர் ஈர்ம் பொழிலுள் ஐயனும் அணைந்தான்.

#2031
கன்னியவள் மேல் இளைய காளை இரு கண்ணும்
மன்னு கமழ் தாமரையின் வாய் இதழ் அலங்கல்
பின்னி என வீழ்ந்த பிணை அன்ன அவள் கண்ணும்
துன்னும் இரு நீலம் என வந்து எதிர் துதைந்த.

#2032
நையும் என நின்ற இடையாள் குணம் ஓர் நான்கும்
வையம் மகிழ் காளை இவன் மாண்ட குணம் நான்கும்
ஐயென அகன்றன அணைந்தனர் கனிந்தார்
மெய்யும் மிடைவுற்ற இதுவால் விதியின் வண்ணம்.

#2033
அன்று முதல் மூன்று அளவு பல்லம் முடி-காறும்
சென்று பெருகிக் களி சிறந்து நனி காமம்
என்றும் இடையின்றி இமையாரின் நுகர்வார்க்கு
நின்றது பிராயம் அதுவே நிழலும் வேலோய்.
**போகநிலம்

#2034
கங்குல் அவண் இல்லை கலி இல்லை நலிவு இல்லை
அங்கு அவர்கள் நாள் இடை கழித்து அமிர்து அயின்றால்
எங்கும் இல இன்ப எழில் எய்தல் தரும் ஈதால்
தங்கிய தவத்து அரசர்க்கு ஈந்த பயன் தானே.

#2035
அன்ன மிகு போகம் அவர் எய்தி விளையாடி
முன்னம் முடி பல்லம் அவை மூன்று உடன் முடித்தால்
பின்னும் அவர் தம் வழி பிறந்தவரை நோக்கி
மன்னும் இனிது ஏறுவது வான்_உலகம் மன்னோ.

#2036
பல்லம் முதலோர் பகுதி மூன்று இரண்டும் ஒன்றும்
அல்ல இருவர்க்கு அமிர்தும் அ முறையின் ஏறும்
நல்ல நிலம் காலம் உயர்வு என்று இவைகள் நாடிச்
சொல்ல உலவா இவர்கள் செய்கை சுடர் வேலோய்.

#2037
செம்பவழம் வெண் பளிங்கு பைம் தளிர் சிறக்கும்
வம்பு அழகு கொண்ட மணி மேனி அவர் பூ ஆர்
கொம்பு அவிழும் சண்பகங்கள் முல்லை இணர்க் கோங்கம்
அம் பவழ வண்ணம் முதலானவர் மெய் நாற்றம்.

#2038
நலங்கள் மிகு நம் உலகில் நன்மை மிகு நீரால்
புலங்கள் மிகு போகமொடு போக நிலத்து உள்ளால்
விலங்கொடு உள வாழ் பறவை அ உடம்பு விட்டால்
கலங்கள் மிகு கற்ப நிலம் ஏறுவன கண்டாய்.
**தேவர்கதித் துன்பம்

#2039
பூ விரியும் நறு மேனிப் பொன் இலங்கு நிமிர் சோதித்
தேவர்கள்-தம் திறம் உரைத்தல் தேவருக்கும் அரிது எனினும்
நா விரவி நாம் உரைப்ப நால் வகையாய் விரியும் அவை
ஓவு_அரிய பெரும் புகழாய் ஒரு வகையால் உரைப்பக் கேள்.

#2040
ஈர்_ஐவர் பவணர்களும் இரு_நால்வர் வியந்தரரும்
ஒர் ஐவர் சோதிடரும் ஒரு பதின் மேல் அறுவர் எனும்
கார் ஐயமுறு கையாய் கற்பகரும் மீ_உலகில்
சீர் ஐயம் இல்லாத திரு மலர்த் தார்த் தேவரே.

#2041
உற்றவர்க்கு மேலவர்கள் ஒன்பதின்மர் ஒன்பதின்மர்
மற்றவர்க்கு மேலவர் ஐவகையர் அவர் மேலவர்கள்
இற்று அவரது எண் வகையாம் இவர்க்கு என்றும் இல்லாத
செற்றம் நோய் செயிர் பகை என்று இவை முதல செல உணர் நீ.
**பவணர்

#2042
அரு மணியின் ஒளி நிழற்றும் ஆயிரமாம் பணம் அணிந்த
திரு மணி சேர் முடியவரும் தீ ஒழுகு சிகையருமாப்
பரு மணிய படலம் சேர் பவணத்துப் பதின்மர்கள் ஒண்
குரு மணி கொள் நெடு முடியாய் கூறுபாடு உடையவரே.
**வியந்தரர்

#2043
கின்னரர்கள் முதலாய வியந்தரரைக் கிளந்து உரைப்பின்
இன்ன நரர்_உலகத்துள் எவ்வழியும் உளர் ஆகி
மெல் நரம்பின் இசை கேட்டும் வெறி அயர்வு கண்டு உவந்தும்
மன்னவரை வணங்கியும் தம் மனம் மகிழ்வர் ஒரு சாரார்.

#2044
குல கிரியும் மலை_அரசும் குளிர் பொழிலும் நளிர் கயமும்
பல கிரியும் தீவகமும் படு கடலும் படி நகரும்
உலகு இரிய வெளிப்பட்டும் ஒளி கரந்தும் உறைந்து இயல்வர்
அலகு இரியும் பல குணத்தோய் அமரர்கள் ஏனைப் பலரே.
**சோதிடர்

#2045
சந்திரரும் சூரியரும் தாரகையும் நாள்_மீனும்
வெம் திறல கோள்களும் ஆம் என விளங்கி விசும்பு ஆறா
மந்தரத்தை வலம் சூழ்ந்து வருபவரும் நிற்பவரும்
சுந்தரம் சேர் மணி முடியாய் சுடர்பவரும் சோதிடரே.

#2046
எண்ணிய முத்தேவர்களும் இவர் மடந்தையவரும் ஆய்க்
கண் இயல் தூ நல் காட்சிக் கதிர் விளக்குத் தூண்டினார்
நண்ணுபவோ எனின் நண்ணார் நல் விரதம் தலைநின்று
புண்ணியங்கள் படைத்தார் அக் குழுவினிடைப் பொலிவாரே.

#2047
காதலரில் பிழையாராய்க் கள் ஊன் தேன் கடிந்து அகற்றி
ஈதலோடு இல் இருக்கும் இளம் பிடியர் முதலாயார்
ஓதின முத்தேவராய் உயர்ந்தவர்க்குள் உயர்ந்துளராய்ச்
சோதியும் பேர் எண்_குணனும் துப்புரவும் துன்னுவரே.
**கற்பகர்

#2048
மந்தர மா நெடு மலையின் மத்தகத்து மேல் கூற்றின்
அந்தரப் பேர் உலகத்துள் அமரரை மற்று அறையுங்கால்
இந்திரவில் என வெளிப்பட்டு இமையவர்கள் தொழுது ஏத்தச்
சுந்தர நல் மணிப் படிவம் எனச் சுடர்ந்து தோன்றுவரே.

#2049
அலர் மாரி மேல் சொரிவார் அமிர்த நீர் ஆட்டுவார்
பல மாண்ட கலன் அணிந்து பலாண்டு இசைப்பார் பாடுவார்
மலர் மாண்ட மணிக் கவரி மருங்கு அசைப்பார் மடந்தையரைச்
சிலர் மாணச் சேர்த்துவார் தேவர் ஆயது பொழுதே.

#2050
ஆடாதும் ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மேனி
வாடாத கண்ணியினர் மழுங்காத பூம் துகிலர்
ஏடு ஆர்ந்த தொங்கலராய் இன்ப நீர்ப் பெரு வெள்ளம்
நீடு ஆரக் குளித்து ஆடும் நிலைமையரே அவர் எல்லாம்.

#2051
பொன் மாட நெடு நிலத்தார் புகல் அமளி அணை மேலார்
கல் மாடு பொன் வளரும் கதிர் மணிக் குன்றதன் மேலார்
மின் மாடு மிளிர்ந்து இலங்கும் விமானத்தார் எனின் அல்லால்
சொல் மாடு பிறிது இல்லைச் சுவர்க்கம் சேர்ந்தவர்கட்கே.

#2052
கந்தருவக் கோட்டி உள்ளார் கண் கனிய நாடகம் கண்டு
இந்திரனோடு இனிது இருந்து இளம் பிடியார் பாராட்டச்
சுந்தர மா மணி மாடச் சூளிகையர் எனின் அல்லால்
அந்தர மேல் பிறிது இல்லை அமரர்_உலகு அடைந்தவர்க்கே.

#2053
கந்தாரம் களித்து அனைய பனி மொழியார் கண் கவர
மந்தார வனத்து இடையார் மணி முழவின் இசை அரங்கம்
மந்தார மணி அரங்கின் எனும் வார்த்தை அவை அல்லால்
செம் தாரோய் தேவர்கள் செய் திறல் தொழில் மற்று உடையரே.

#2054
தீர்த்தங்கள் திறந்தவர்க்குச் சிறப்போடு திசை எல்லாம்
தேர்த்து அங்கண் ஒளி பரப்பச் செல் பொழுதும் தம் உலகில்
கார்த் தங்கும் மயில்_அனையார் காமம் சேர் கனி கோட்டி
தார்த் தங்கு வரை மார்ப தம் உருவின் அகலாரே.

#2055
இமையாத செம் கண்ணர் இரவு அறியார் பகல் அறியார்
அமையாத பிறப்பு அறியார் அழல் அறியார் பனி அறியார்
சுமை ஆகி மணி மாலை சுடர்ந்து இலங்கு நெடு முடியார்
அமையாத நல் உலகில் நகை மணிப் பூண் அமரரே.
**தேவர் குணஞ் செய்தல்

#2056
அணு அளவாய்ச் சிறுகுதல் மற்று அதிநுட்பம் மிகப் பெருகல்
நணியவர் போல் நினைத்துழியே நண்ணுறுதல் விழை தகைமை
பணியின் அமைத்திடல் குறிப்பில் பல உருவும் நனி கோடல்
துணிவு அமையும் நெடு வேலோய் சுரர் உடைய குணங்களே.
**தேவர் அடையும் துன்பம்

#2057
அளி தரும் செங்கோல் உடையோய் அமரருக்கும் அந்தரம் உண்டு
ஒளியோடு பேர்_இன்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்து உளவாம்
தெளிதரு நல் காட்சியது திருந்திய மேல் நெடுந்தகையோர்க்கு
எளி தகவும் பெரும்பாலும் பெறல் ஏனோர்க்கு அரியவே.

#2058
கனை கதிராக் கதிர் கலந்து கண் இலங்கு திரு_மூர்த்தி
புனை கதிர் ஒண் மணிப் படிவம் பொழிந்தது போல் பொலிந்து அதன் மேல்
வனை கதிரின் மணி முடியும் மாணிக்கக் கடகமும் என்று
இன முதலாச் சுடர்ந்து இனிதின் இயல்பாய் நின்று எரியுமே.

#2059
செழும் திரள் பூம் பாவைகளும் திகழ் மணியின் சுடர்க் கொழுந்தும்
எழுந்து இலங்கும் மேனியராய் எரியும் மணிக் கலம் தாங்கி
மொழிந்து உலவாக் காரிகையார் முலை முற்றா இளமையார்
அழிந்து அலராக் காரிகைமார் அமர்_அரசர் தேவியரே.

#2060
இன்பமே பெரிது ஆகி இடையறவு இன்றி இமைப்பு அளவும்
துன்பம் ஒன்று இல்லாத துறக்கத்தில் பெரும் செல்வம்
மன் பெரும் மா தவத்தினால் வரும் ஒரு நாள் ஈறு உடையது
அன்பு அதன்-கண் மிசையே என்று அடிகள் தரு பொருள் தெளிந்தார்.

#2061
பவணத்தார்க்கு ஒரு கடலாம் மிகை அமரும் பல்லம் ஒன்றாம்
இவண் ஒத்த அமரருக்கும் இரு விசும்பில் சுடரவர்க்கும்
சிவண் ஒத்த உயர் வாழ்நாள் சென்ற பினர்ச் செல் கதியும்
அவண் ஒத்த தத்தமது விதி வகையாம் அதிபதியே.

#2062
இரண்டு ஆகும் முதலவர்கட்கு ஏழ் ஈர்_ஐந்து ஈர்_ஏழாய்த்
திரண்டு இரண்டாய் மூவுலகத்து ஒழிந்தவர் சேர்பு இரண்டு இரண்டாய்
அரண் தக வந்து ஏறிப் பின் ஆரண அச்சுதர் உலகின்
மருண்டு ஆய மணி முந்நீர் பதினொன்றற்கு இருமடியே.

#2063
ஆங்கு அவர் மேல் அமர்_அரசர் மும்மூவர்க்கு ஒரோ ஒன்றாய்
ஓங்கினர் மேல் ஒன்பதின்மர்க்கு ஒன்று ஒன்றாய் அவர் மேலார்
பாங்கின் உறப் பெறுகுவன பதினைந்திற்கு இருமடி மேல்
வாங்கு ஒலி நீர் ஒரு மூன்று வாழ்வு என்ப மணி முடியாய்.

#2064
ஆயிடைய அமர்_அரசர் திறம் வினவின் அணங்கு அணை ஆர்
வேய் இடை மென் பணைப் பொன் தோள் விழைவு இன்றிப் பெரிது ஆகி
ஏய் இடை ஓர் அறவு இன்றா இன்பம் செய் திரு_மூர்த்தி
சேய் இடை ஒள் ஒளி நிழற்றச் செம்மாந்தார் இருந்தாரே.

#2065
ஊன் இலா உறுப்பு அமையா ஒளிய மா உலகு எல்லாம்
பால் நிலாப் பரந்து எறிப்பப் பளிங்கினது படிவம் போல்
மேல் நிலாம் மணி_அனையார் வெண் சங்கு ஏர் இலைச்சையாம்
கோன்_இலா அவரின் மிக்கவர் இல்லைக் குடை வேந்தே.

#2066
அப்பாலது அத்திதியாம் அதனில் அமைந்தால் ஊண் இன்று
ஒப்பாரும் பிறிது இவண் இன்று ஊழி நாள் பெயர்ந்து இழிவு இன்று
எப்பாலும் திரிவு இன்று ஓர் இயல்பாய இன்பத்தான்
மெய்ப்பாலது அ அரைசர் வீற்றிருக்கும் வியன் உலகே.
**அறவுரை

#2067
கதி நான்கும் கதி சேரும் வாயிலும் இவ்விவை இதனால்
விதி மாண்ட நரகமும் புன் விலங்குகளும் சேராமை
மதி மாண்ட நல் காட்சி வழி நின்று தவம் தாங்கில்
நிதி மாண்ட பெரும் செல்வ நீங்காத இயல்பு என்றான்.

#2068
உறுதிகள் நன்கு உரைக்குங்கால் உபசாரம் உரைப்பதோ
அறுதி_இல் பேர்_அருளீர் என்று அரசன் ஆங்கு அடி தொழலும்
இறுதி_இலாப் பேர்_இன்பம் எய்தும் ஆறு எடுத்து உரைத்தான்
மறுதரவு_இல் கதி படரும் மா தவத்து வரம்பு_ஆயோன்.

@12. முத்திச் சருக்கம்
**வீடுபேற்றுக்குரிய நெறி

#2069
இரு வகை வினைகளும் இல்லது இவ்வழி
வருவகை இலாததும் மறு_இல் மா தவர்
பெரு வழியாச் செலும் பெயர்வு_இல் சூளிகைக்கு
ஒரு வழி அல்லது இங்கு உரைப்பது இல்லையே.
**பிறப்பின் பெற்றி

#2070
பிறந்தவன் பொறிப் புலக்கு இவரும் அப் புலம்
சிறந்த பின் விழைவொடு செற்றம் செய்திடும்
மறைந்து அவை வாயிலா வினைகள் ஈட்டினால்
இறந்தவன் பின்னும் அ இயற்கை எய்துமே.
**தூயோர் மாட்சி

#2071
பிறவிச் சக்கரம் இது பெரிதும் அஞ்சினான்
துறவிக்-கண் துணிகுவன் துணிந்து தூயனாய்
உறவிக்-கண் அருள் உடை ஒழுக்கம் ஓம்பினான்
மறவிக்-கண் இலாதது ஓர் மாட்சி எய்துமே.
**வீடடையும் வீரர்

#2072
காட்சியும் ஞானமும் கதிர்த்துத் தன் பொறி
மாட்சியை வெலீஇ மனம் தூயன் ஆய பின்
நாள் செய்து நவிற்றிய தியான வீதியான்
மீட்சியில் வீட்டு_உலகு எய்தும் வீரனே.
**வீட்டின் இயல்பு

#2073
கடை_இல் எண்_குணத்தது காம ராகர்கள்
இடை நனி இலாதது இல் இயற்கை இல்லது
மிடையொடு விழைவு வேரறுத்த வீரர்கள்
அடைவது ஓர் நிலை பிறர்க்கு அறியல் ஆகுமோ.

#2074
மணி மலர்ந்து உமிழ் ஒளி வனப்பும் சந்தனத்
துணி மலர்ந்து உமிழ்தரும் தண்மைத் தோற்றமும்
நணி மலர் நாற்றமும் என்ன அன்னதால்
அணிவு_அரு சிவகதி ஆவது இன்பமே.
**பயாபதியின் மனவுறுதி

#2075
வடு_அறு மா தவன் உரைப்ப மாண்பு உடை
அடிகளது அற அமிர்து உண்ட ஆற்றலான்
முடிவு கொள் உலகு எய்த முயல்வன் என்றனன்
விடு கதிர் மணி முடி வென்றி வேந்தனே.

#2076
மிக்கு எழு போதி கை விலக்கல் தக்கது அன்று
ஒக்க நன்று உடன்படல் உலகம் ஏன்று எனத்
தக்க வாய் மொழி தவத்து அரசன் நேர்ந்திலன்
தொக்க வான் புகழவற்கு அமைச்சர் சொல்லினார்.

#2077
இருள் பிலத்து அரும் படர் எய்திப் பல் புகழ்வு
அருள் ததை_இலன் நலிந்து உண்ண ஆழ்பவன்
பொருள் தகு வாயில் பெற்று உய்ந்து போம் வழி
உருட்டுவான் ஒருவனை உவந்து நாடுமோ.
**அமைச்சர் கூற்று

#2078
அரும் சிறைப் பிணி உழந்து அலைப்புண்டு அஞ்சுவான்
பெரும் சிறை-தனைப் பிழைத்து உய்ந்து போய பின்
கரும் சிறைக் கயவர் கைப்பட்டு வெம் துயர்
தரும் சிறைக் களமது சென்று சாருமோ.

#2079
பிணிபடு பிறவி நோய் பெயர்க்கும் மா தவம்
துணிபவன் தன்னொடு தொடர்ச்சி நோக்குமோ
அணி முடி துற-மின் எம் அடிகள் என்றனர்
மணி முடி மன்னவற்கு அமைச்சர் என்பவே.
**புத்திமதி

#2080
என அவர் மொழிதலும் எழுந்து போதியின்
சினை மலர் இலங்கு வேல் சிறுவர்-தங்களை
வன மலர்க் கண்ணியான் கூவி மற்றவர்க்கு
இனல்_இலான் இ உரை எடுத்துச் செப்பினான்.
**திருமகள் இயல்பு

#2081
பொருள்_இலார்க்கு இவ்வழிப் பொறியின் போகமும்
அருள்_இலார்க்கு அறத்தின் ஆம் பயனும் நூல் வழி
உருள்வு_இலா மனத்தவர்க்கு உணர்வும் போல் மனம்
தெருள்_இலார்க்கு இசைவு_இலள் திருவின் செல்வியே.

#2082
திரு_மகள் நிலைமையும் செல்வர் கேட்டிரேல்
மருவிய மனிதரை இகந்து மற்று அவள்
பொருவு_அறு புகழினர் புதிய காமுறும்
ஒருவர்-கண் உறவு_இலள் உணர்ந்து கொள்-மினே.

#2083
புண்ணியம் உலர்ந்த பின் பொருள்_இலார்களைக்
கண்_இலர் துறந்திடும் கணிகைமார்கள் போல்
எண்ணிலள் இகழ்ந்திடும் யாவர்-தம்மையும்
நண்ணிய நண்பு_இலள் நங்கை வண்ணமே.

#2084
உற்று நன்கு ஒருவர்-கண் நிற்குமாய்விடின்
மற்று அவர் குணங்களை மறைத்து மாண்பு இலாச்
செற்றமும் சினங்களும் செருக்கும் செய்திடும்
கற்றவர்-தம்மையும் கழற நோக்குமே.

#2085
அம்பு என நெடிய கண் கணிகையார்-தமை
நம்பிய இளையவர் பொருளின் இனையுமால்
வம்பு இன மணி வண்டு வருடும் தாமரைக்
கொம்பினை மகிழ்ந்தவர் குணங்கள் என்பவே.

#2086
ஆதலால் அவள் திறத்து அன்புசெய்யன்-மின்
ஏதிலார் என இகழ்ந்து ஒழியும் யாரையும்
காதலார் ஆபவர் கற்ற மாந்தரே
போது உலாம் அலங்கலீர் புரிந்து கேள்-மினே.
**பூமகளியல்பு

#2087
நில_மகள் நிலைமையும் நெறியில் கேட்டிரேல்
குலம்_இலர் குணம்_இலர் என்னும் கோள்_இலள்
வலம் மிகு சூழ்ச்சியார் வழியள் மற்று அவள்
உலம் மிகு வயிரத் தோள் உருவத் தாரினீர்.

#2088
தன் உயர் மணலினும் பலர்கள் தன் நலம்
முன் நுகர்ந்து இகந்தவர் மூரித் தானையீர்
பின்னும் வந்தவரொடும் சென்று பேர்ந்திலள்
இன்னும் அஃது அவள்-தனது இயற்கை வண்ணமே.

#2089
வெற்றி வேல் மணி முடி வேந்தர்-தம்மொடும்
உற்றது ஓர் உரிமைகள் இல்லள் யாரொடும்
பற்று இலள் பற்றினர் பாலள் அன்னதால்
முற்று நீர்த் துகில் உடை முது பெண் நீர்மையே.

#2090
அடி மிசை அரசர்கள் வணங்க ஆண்டவன்
பொடி மிசை அப்புறம் புரள இப்புறம்
இடி முரசு அதிர ஒர் இளவல்-தன்னொடு
கடி புகும் அவளது கற்பின் வண்ணமே.

#2091
இன்னன இவள்-தனது இயற்கை ஆதலால்
அன்னவள் பொருள் என ஆர்வம் செய்யன்-மின்
மன் உயிர் காவல் நும் மக்கள் தாங்கினால்
பின்னை நும் கருமமே பேணற்பாலிரே.
**பயாபதி துறவு

#2092
மீன் இவர் விரி திரை வேலி காவல் மேல்
ஊன் இவர் வேலினீர் உங்கள்பாலதால்
யான் இனி எனக்கு அரசு ஆக்கலுற்றனன்
தேன் இவர் அலங்கலீர் செவ்வி காண்-மினே.

#2093
உற்ற நாள் சில உமக்கு என்னொடு அல்லது
மற்ற நாள் பல அவை வருவ ஆதலால்
கற்ற மாண் சிந்தையீர் கவற்சி நீங்கு-மின்
இற்றை யான் துணிந்தது என்று இறைவன் செப்பினான்.
**மக்கள் கூற்று

#2094
என்றலும் இளையவர் இறைஞ்சிக் கை தொழுது
இன்று யாம் அடிகளைப் பிழைத்தது என் என
ஒன்றும் நீர் இலீர் என உரை ஒழிந்து அரோ
அன்று அவர்க்கு அயலவன் ஆகிச் செப்பினான்.

#2095
ஆவியாய் அரும் பெறல் அமிர்தம் ஆகிய
தேவிமார்-தங்களைக் கூவிச் செவ்வனே
காவி ஆய் நெடும் கணீர் கருதிற்று என் என
மேவினார் தவம் அவர் வேந்தன் முன்னரே.
**அமைச்சர் துறத்தல்

#2096
இமைப்பதும் பெரு மிகை இனி இருந்து என
நமைப்பு உறு பிறவி நோய் நடுங்க நோற்கிய
அமைச்சரும் அரசர்_கோன் அருளினால் தம்
சுமைப் பெரும் பாரத்தின் தொழுதி நீக்கினார்.

#2097
அணி முடி அமரர் தந்து ஆற்றப் பாற்கடல்
மணி முடி அமிர்த நீர் ஆடி மா தவர்
பணியொடு பல் மணிக் கலன்கள் நீக்கினான்
துணிவொடு சுரமைநாடு உடைய தோன்றலே.
**முடியைக் கடலில் எறிதல்

#2098
அரு முடி துறந்தனன் அரசன் ஆயிடைத்
திரு முடி மணித் துணர் தேவர் கொண்டு போய்ப்
பரு முடி நிரை அனப் பரவைப் பாற்கடல்
பெரு முடி அமைக எனப் பெய்யப்பட்டதே.

#2099
முரைசு அதிர் முழங்கு ஒலி மூரித் தானையும்
திரை செறி வளாகமும் சிறுவர்க்கு ஈந்து போய்
அரைசரும் ஆயிரர் அரைசர்_கோனொடு
விரை செறி மணி முடி விலங்க நீக்கினார்.

#2100
முடிகளும் கடகமும் முத்தின் ஆரமும்
சுடர் விடு குழைகளும் துளும்பு பூண்களும்
விடு சுடர்க் கலங்களும் விட்டெறிந்தவை
படு சுடர் தாம் எனப் பரந்து இமைத்தவே.

#2101
வரி வளை_வண்ணனும் மறம் கொள் நேமி அத்
திரு வளர் மார்பனும் செல்வன் சென்னி மேல்
எரி வளர் மணி முடி இழியும் ஆயிடைப்
புரி வளைக் கடல் எனப் புலம்பு கொண்டனர்.
**விசய திவிட்டர் துயரம்

#2102
காதலர் ஆயினும் காதல் கையிகந்து
ஏதிலர் ஆயினம் அடிகட்கு இன்று என
ஊதுலை மெழுகின் நின்று உருகினார் அவர்
போது அலர் கண்களும் புனல் படைத்தவே.

#2103
முடி கெழு மன்னர் முன் இறைஞ்ச நம்மைத் தம்
கடி கமழ் அகலத்துக் கொண்ட காதல் எம்
அடிகளும் அயலவர் போல ஆயினார்
கொடிது இது பெரிது எனக் குழைந்து போயினார்.

#2104
தாது உக அகலத்துத் தாமம் வாங்கியும்
மீது வந்து ஏறியும் மேவல் செய்யும் நம்
கோதுகம் யாவர் கொண்டாடுவார் எனப்
போது உகு அ முடியினர் புலம்பொடு ஏகினார்.
**முனிவர் சமாதானங் கூறல்

#2105
நின்றிலா நிலைமையின் நீங்கி நின்றது ஓர்
வென்றியால் உலகுடன் வணக்கும் வீரியம்
இன்று கோன் புரிந்ததற்கு இரங்கல் வேண்டுமோ
என்று தான் இளையரை முனிவர் தேற்றினார்.

#2106
அணங்கு சால் அடிகளது அருள் அதாய்விடில்
பிணங்கி நாம் பிதற்றிய பேதை வாய் மொழி
குணங்கள்தாம் அல்ல கோன் குறிப்பும் அன்று என
வணங்கினார் மணி முடி மான வீரரே.
**மன்னர் நகருக்கு ஏகல்

#2107
திரு உடை அடிகள்-தம் சிந்தைக்கு ஏதமாம்
பரிவொடு பன்னி நாம் பயிற்றில் என்று தம்
எரி விடு சுடர் முடி இலங்கத் தாழ்ந்து போய்
மரு உடை வள நகர் மன்னர் துன்னினார்.
**வேற்படைப் பிரிவு

#2108
பால் படு செல்வமும் பரவை ஞாலமும்
கால் பொடி ஆகவும் கருதிற்று இன்மையால்
ஏற்புடைத்து அன்று நம் அடிமை ஈண்டு என
வேல் படை வீரனைத் தொழுது மீண்டதே.
**பயாபதி தவம் மேற்கொள்ளல்

#2109
வேல் படை விடுத்து வீரத்து அ அரசு-அதனை மேவி
நூல் படை முனிவர் கண்ணா நோக்கிய நயத்தன் ஆகிப்
பால் படு விரதம் நோன்மைப் படைப் பெரும் தலைவர் ஐவர்
மேல் படை செய்யச் செல்லும் வினைவரை விலக்க வைத்தான்.

#2110
குணப் படை இலக்கம் எண்பான் குலவு நான்கு ஆகும் சீலக்
கணப் படை பதினெட்டு ஆகும் ஆயிரம் கருவி ஆகத்
துணைப் படை பிறர்க்குச் செய்யும் துன் நயத்து அளவும் நீக்கி
மணப்பு உடை சிந்தை என்னும் மடந்தையைச் செறிய வைத்தான்.

#2111
செறிவு எனப்படுவ மூன்று செழும் மதில் செறியச் செய்து
பொறி எனும் வாயில் ஐந்து பொன் கதவு அடைத்து மாற்றி
அறிவு அமை சிந்தையின் மாட்டு அகம் படி உழையர் ஆக்கிக்
கறை_இல் ஈர்_அறுவர் நிற்ப இறைவராக் காக்கவைத்தான்.

#2112
படை கெழு புரிசை வெல்வார் புறம் நின்று பதின்மர் காக்க
விடையவர் தம் உளாரே உழையர் ஈர்_அறுவர் ஆக
உடைய தன் உலகம் மூன்றும் ஒருவழிப் படுக்கலுற்று
மிடை கெழு வினைவர் தானை மெலிய மேற்சென்றுவிட்டான்.

#2113
பின் அணி யோகு நான்மை அபரகாத்திரம் பெற்று ஏனைத்
தன் அவயவங்கள் முற்றித் தயங்கு நூல் மனங்கள் ஓவாது
உன்னிய திசையின் உய்க்கும் உணர்வு எனும் வயிரத் தோட்டி
இன் இயல் ஞான வேழத்து எழில் எருத்து தேறினானே.

#2114
தருக்கு எயில் காப்பு வாங்கத் தடக் கை மால் பகடு நுந்தித்
திருக் கிளர் குணம் மேல் சேடிச் செழும் மலைக் குவட்டின் ஓட்டி
முருக்கிய உருவு வேட்கை முனைப்புலம் அகற்றி முற்றிச்
செருக்கிய வினைவர் வாழும் திண் குறும்பு அழிக்கலுற்றான்.

#2115
நிறை_இலார் பொறுத்தல் ஆற்றா நிலை இது நிறைந்த நோன்மைக்
கறை_இல் ஈர்_ஆறுக்கு ஒத்த கண்ணியர் கவரி வீச
முறையினால் பெருகும் உள்ளச் சமாதி நீர் முறுக உண்ட
குறைவு_இலாத் தியானம் என்னும் கொற்ற வாள் உருவிக்கொண்டான்.

#2116
விண்கள் தாம் செய்யும் வெய்ய வினைவர்கட்கு அரணம் ஆகிக்
கண் கடாம் மறைக்கும் ஓர் ஏழ் கடிவினை பொடிசெய்திட்டே
எண்கள் தாம் நவின்ற ஈர் எண் கொடி மதில் கோட்டை கட்டி
எண்கள் தாம் உடைய எண்மர் குறும்பரை எறிந்து வீழ்த்தார்.

#2117
ஈடு_இலர் வெகுளி உள்ளிட்டு எண்மரை எறியத் தீயுள்
பேடு வந்து ஒன்று பாய்ந்து முடிந்தது முடிந்த பின்னை
ஓடி வந்து ஒருத்தி வீழ்ந்தாள் உழையவர் அறுவர் பட்டார்
ஆடவன்-தானும் போழ்து கழித்து வந்து ஒருவன் ஆழ்ந்தான்.

#2118
பின்னும் ஓர் நால்வர் தெவ்வர் முறைமுறை பிணங்கி வீழ்ந்தார்
அன்னவர் தம்முளானே குறைப் பிணம் ஒருவன் ஆகித்
தன்னை மெய் பதைப்ப நோக்கி அவனையும் தபுப்ப நோனார்
துன்னிய துயிலும் ஏனைத் துளக்கம்செய்து இருவர் பட்டார்.

#2119
ஆங்கு அவர் அழிந்த பின்னை அரசர் ஐ_இருவரோடும்
தாங்கி ஈர்_இருவர் தாக்கித் தலை துணிப்புண்ட பின்னை
வீங்கிய அனந்த ஞான்மை விழு நிதி முழுதும் கைக்கொண்டு
ஓங்கிய உலகிற்கு எல்லாம் ஒரு பெரும் கிழவன் ஆனான்.
**பயாபதி கேவலமடந்தையை மணத்தல்

#2120
நெடிது உடன் ஆய தெவ்வர் நால்வரை நீறுசெய்திட்டு
அடிகள் பின் முடிவு என்பாளை அகப்படுத்து அனையராக
இடி முரசு அதிரும் தானை அரசரோடு இங்கண் ஈண்டிக்
கடி கமழ் அமரர் வீரன் கடிவினை முடிவித்தாரே.

#2121
கொடிகளும் குடையும் கோலக் கவரியும் அமரர்-தங்கள்
முடிகளும் மடந்தைமாரும் முகிழ் நகைக் கலன்களும் செற்று
அடியிடும் இடம் இன்று ஆகி மூடி ஆகாயம் எல்லாம்
கடி கமழ் மலரும் சாந்தும் சுண்ணமும் கலந்த அன்றே.

#2122
பொன் அரிமாலை பூவின் பொழி மதுப் பிணையல் முத்தின்
மின் இவர் விளங்கும் தாமம் என இவை விரவி வீசித்
துன்னிய வினைவர் கூட்டம் துணித்து வீற்றிருந்த கோனைப்
பன்னிய துதியர் ஆகி அமரர்கள் பரவுகின்றார்.
**பயாபதியை அமரர் பரவுதல்

#2123
கரு மால் வினை அரசு கால் தளர நூறிப்
பெருமான் முடிவு என்னும் பெண் அரசி-தன்னை
ஒருவாமை வேட்டு எய்தி ஊழி பெயர்ந்தாலும்
வருமாறு இலாத வள நகரம் புக்கானே.

#2124
சிந்தை மடவாள் தொடுத்த தியான வாள்
வெந்து வினை வேந்தர் வீடிய பின் விட்டெறிந்து
முந்து முடிவு என்னும் கன்னி முலை முயங்கி
வந்து பெயரா வள நகரம் புக்கானே.

#2125
அலகு_இல் பெரும் குணத்தோன் ஆவரணம் நீக்கி
உலகம் அலோகம் உடனே விழுங்கிப்
புலவன் முடிவு என்னும் பூம் கொடியும் தானும்
நிலவு சிவகதியுள் நீங்காது நின்றான்.

#2126
இனையன பல பரவி இறைஞ்சி ஏத்தி இமையவர்கள்
கனை எரி மிகு வேள்வி கலந்து செய்து களிப்பு எய்தி
அனையவர் அற ஆழி அமிர்தம் நீங்காது அகத்து ஆடிப்
புனை அவிர் சுடர் ஒளியார் புகழ்ந்து தத்தம் இடம் புக்கார்.
**பயாபதி சூளாமணியாய்த் திகழ்தல்

#2127
களம் காண் வகை உடைந்து காலர் காமர் கையகல
விளங்காத் திசை இன்றி விளங்க வீரன் மெய்ப்பொருளை
உளம் காண் கேவலப் பேர்_ஒளியால் இம்பர்_உலகு எல்லாம்
துளங்காது உயர்ந்து உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான்.

#2128
அரு மால் வினை அகல அமரர் நாளும் அடி பரவப்
பெருமான் பிரசாபதி பிரமலோகம் இனிது ஆளத்
திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தாமரைத் தடக் கைக்
கரு மால் கடல் வரைத்த கண் ஆர் ஞாலம் காக்கின்றான்.

#2129
தம் கோன் அமர்_உலகம் இனிதின் ஆளத் தரங்க நீர்ப்
பொங்கு ஓதம்-அது உடுத்த பூமி எல்லாம் பொது நீக்கிச்
செங்கோல் இனிது ஓச்சித் தேவர் காப்பத் திருமாலும்
அம் கோல் வேல் அரசர் அடி பாராட்ட ஆள்கின்றான்.
**விசய திவிட்டரை வாழ்த்துதல்

#2130
வலம்புரி_வண்ணனும் மகர முந்நீர் மணி மேனி
உலம் புரி தோளினனும் உலகம் எல்லாம் உடன் வணங்கச்
சலம் புரி வினை வென்ற தம் கோன் செந்தாமரை அடிக் கீழ்
நலம் புரி விழவு இயற்றி நாளும்நாளும் மகிழ்கின்றார்.
*