2. நாககுமார காவியம்


@0. காப்பு

#1
மணியும் நல் கந்த முத்தும் மலிந்த முக்குடை இலங்க
அணி மலர்ப் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணி பாதம் பண்ணவர்-தமக்கும் எம்-தம்
இணை கரம் சிரசில் கூப்பி இயல்புறத் தொழுதும் அன்றே.

@1. முதல் சருக்கம்
**தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்

#1
செம் தளிர்ப் பிண்டியின் கீழ்ச் செழு மணி மண்டபத்துள்
இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்து அரியாசனத்தின்
அந்தமாய் அமர்ந்த கோவின் அருள் புரி தீர்த்த காலம்
கொந்து அலர் ராசன் நாககுமரன் நல் கதை விரிப்பாம்.

#2
திங்கள் முந்நான்கு யோகம் தீ_வினை அரிய நிற்பர்
அங்கபூ ஆதி நூலுள் அரிப்பு அறத் தெளிந்த நெஞ்சில்
தங்கிய கருணை ஆர்ந்த தவ முனி அவர்கள் சொன்ன
பொங்கு நல் கவி_கடல்-தான் புகுந்து நீர்த்து எழுந்தது அன்றே.
**அவை அடக்கம்

#3
புகைக் கொடி உள் உண்டு என்றே பொற்பு நல் ஒளி விளக்கை
இகழ்ச்சியின் நீப்பார் இல்லை ஈண்டு நல் பொருள் உணர்ந்தோர்
அகத்து இனி மதியில் கொள்வார் அரியரோ எனது சொல்லைச்
செகத்தவர் உணர்ந்து கேட்கச் செப்புதற்பாலது ஆமே.
**கேட்போர் பெறு பயன்

#4
வெவ்_வினை வெகுண்டு வாரா விக்கி நன்கு அடைக்கும் வாய்கள்
செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம்
கவ்விய கருமம் எல்லாம் கணத்தினில் உதிர்ப்பை ஆக்கும்
இ வகைத் தெரிவுறுப்பார்க்கு இனிது வைத்து உரைத்தும் அன்றே.
**மகத நாட்டுச் சிறப்பு

#5
நாவலந்தீபம் நூற்றை நண்ணு தொண்ணூறு கூறில்
ஆவதன் ஒரு கூறு ஆகும் அரிய நல் பரத கண்டம்
பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி
மேவும் மின் முகில் சூழ் சோலை மிக்கது ஓர் மகதநாடு.
**இராசமாகிரிய நகரம்

#6
திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்து இனிது உறையும் நாட்டுள்
இசையும் நல் பாரிசாத இன மலர்க் காவும் சூழ்ந்த
அசைவு_இலா அமர லோகத்து அது நிகரான மண்ணுள்
இசை உலாம் நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே.

#7
கிடங்கு அருகு இஞ்சி ஓங்கிக் கிளர் முகில் சூடிச் செம்பொன்
கடங்கள் வைத்து இலங்கு மாடம் கதிர் மதி சூட்டினால் போல்
படம் கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே
இடம் கொண்ட இன்பம் உம்பர் இடத்தையும் எச்சும் அன்றே.
**சிரேணிக ராசனின் செங்கோல்ஆட்சி

#8
பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம் மடங்காம்
பூரித்த தார்கள் வேய்ந்த பொன் குடை எழுந்த மேகம்
வாரித்து இசைந்து அளிக்கும் வண் கை அம் பொன் திண்_தோளான்
சீரித்தது அலங்கல்_மார்பன் சிரேணிகராசன் ஆமே.

#9
ஆறில் ஒன்று இறைகொண்டு ஆளும் அரசன் மா தேவி அன்னப்
பேறு உடை நடை வேல்_கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள் பேர்
வீறு உடைச் சாலினீ தாம் இடை தவழ் கொங்கை கொண்டை
நாறு உடைத் தார் அணிந்த நகை மதி_முகத்தினாளே.

#10
மற்றும் எண்ணாயிரம் பேர் மன்னனுக்கு இனிய மாதர்
வெற்றி வேல்_விழியினாரும் வேந்தனும் இனிய போகம்
உற்று உடன் புணர்ந்து இன்பத்து உவகையுள் அழுந்தி அங்குச்
செற்றவர்ச் செகுத்துச் செங்கோல் செலவிய காலத்து அன்றே.
**வரவீரநாதரின் வருகையை வனபாலன் தெரிவித்தல்

#11
இஞ்சி சூழ் புரத்து மேல்-பால் இலங்கிய விபுலம் என்னும்
மஞ்சி சூழ் மலையின் மீது வரவீரநாதர் வந்து
இஞ்சி மூன்று இலங்கும் பூமி ஏழிறை இருக்கை வட்டம்
அம் சிலம்பார்கள் ஆட அமரரும் சூழ்ந்த அன்றே.

#12
வனம் மிகு அதிசயங்கள் வனபாலன் கண்டு வந்து
நனை மது மலர்கள் ஏந்தி நல் நகர் புகுந்து இராசன்
மனை-அது மதில் கடந்து மன்னனை வணங்கிச் செப்ப
மனம் மிக மகிழ்ந்து இறைஞ்சி மா முரசு அறைக என்றான்.
**மன்னன் தன் சுற்றம் சூழச் சென்று முனிவரை வணங்குதல்

#13
இடி முரசு ஆர்ப்பக் கேட்டும் இயம்பிய அத் தினத்தின்
படு மத யானை தேர் மா வாள் நாற்படையும் சூழக்
கடி மலர் சாந்தும் ஏந்திக் காவலன் தேவியோடும்
கொடி நிரை பொன் எயிற்குக் குழுவுடன் சென்ற அன்றே.

#14
பொன் எயில் குறுகிக் கைம்மாப் புரவலன் இழிந்து உள் புக்கு
நல் நிலத்து அதிசயங்கள் நர_பதி தேவியர்க்குப்
பன்னுரை செய்து காட்டிப் பரமன்-தன் கோயில்-தன்னை
இன் இயல் வலம்கொண்டு எய்தி ஈசனை இறைஞ்சினானே.

#15
நிலமுறப் பணிந்து எழுந்து நிகர்_இல் அம் சினையின் முற்றிக்
கலன் அணி செம்பொன்_மார்பன் கால் பொரு கடலில் பொங்கி
நலம் உறு தோத்திரங்கள் நாதன்-தன் வதனம் நோக்கிப்
பல மனம் இன்றி ஒன்றிப் பல துதி செப்பலுற்றான்.
**வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்

#16
பொறியொடு வல்_வினை வென்ற புனிதன் நீயே பூ நான்கு மலர்ப் பிண்டிப் போதன் நீயே
புற இதழ் சேர் மரை மலர் மேல் விரல் நால் விட்டுப் பொன் எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே
அறவி பணி பண அரங்கத்து அமர்ந்தாய் நீயே ஐங்கணை வில் மன்மதனை அகன்றாய் நீயே
செறி புகழ் சேர் சித்திநகர்-தன்னை ஆளும் சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே.

#17
கஞ்ச மலர் திரு மார்பில் தரித்தாய் நீயே காலம் ஒரு மூன்று உணர்ந்த கடவுள் நீயே
பஞ்சாத்தி தான் உரைத்த பரமன் நீயே பரம நிலை ஒன்று எனவே பணித்தாய் நீயே
துஞ்சா நல் உலகு தொழும் தூயன் நீயே தொல்_வினை எல்லாம் எரித்த துறவன் நீயே
செம் சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே.

#18
அறவன் நீ அமலன் நீ ஆதி நீயே ஆரியன் நீ சீரீயன் நீ அனந்தன் நீயே
திரிலோக லோகமொடு தேயன் நீயே தேவாதி_தேவன் எனும் தீர்த்தன் நீயே
எரி மணி நல் பிறப்பு உடைய ஈசன் நீயே இருநான்கு குணம் உடைய இறைவன் நீயே
திரிபுவனம் தொழுது இறைஞ்சும் செல்வன் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே.

#19
முனிவர்-தமக்கு இறையான மூர்த்தி நீயே மூவா முதல்வன் எனும் முத்தன் நீயே
இனிமை ஆனந்த சுகத்து இருந்தாய் நீயே இயல் ஆறு பொருள் உரைத்த ஈசன் நீயே
முனிவு முதல் இல்லாத முனைவன் நீயே முக்குடையின் கீழ் அமர்ந்த முதல்வன் நீயே
செனித்து இறக்கும் மூப்பு இறப்பும் தீர்த்தாய் நீயே சிரீவர்த்தமானன்எனும் தீர்த்தன் நீயே.

#20
நவபதம் நல் நயம் ஆறு நவின்றாய் நீயே நல் முனிவர் மனத்து இசைந்த நாதன் நீயே
உவமை_இலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே உத்தமர்-தம் இருதயத்துள் உகந்தாய் நீயே
பவ மயமாம் இரு_வினையைப் பகர்ந்தாய் நீயே பரம நிலை அமர்ந்த பரமன் நீயே
சிவமயமாய் நின்ற திகழ் தேசன் நீயே சிரீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே.

#21
துதிகள் செய்து பின் தூய் மணி நல் நிலத்து
அதி கொள் சிந்தையின் அம்பிறப் பணிந்து உடன்
நெதி இரண்டு என நீடிய தோளினான்
யதி கொள் பண்ணவர் பாவலன் புக்கதே.

#22
சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்
இறைவன் நல் மொழி இப் பொருள் உட்கொண்டு
அறைஅமர்ந்து உயிர்க்கு அற_மழையைப் பெயும்
துறவன் நல் சரண் தூய்தின் இறைஞ்சினான்.
**தவராசராம் கௌதமர் பாதம் பணிந்து தருமம் கேட்டல்

#23
மற்று அ மா முனி ஏர் மலராம் பதம்
உற்று உடன் பணிந்து ஓங்கிய மன்னவன்
நல் தவர்க்கு இறையான நல் கௌதமர்
வெற்றி நல் சரண் வேந்தன் இறைஞ்சினான்.

#24
இரு கரத்தின் இறைஞ்சிய மன்னனும்
பொரு கயல்_கணிப் பூம் குழை மாதரும்
தரும தத்துவம் சன முனிவர்க்கு உரை
இருவரும் இயைந்து இன்புறக் கேட்ட பின்.
**நாக பஞ்சமி கதைஉரைக்க மன்னன் வேண்டுதல்

#25
சிரி நல் பஞ்சமி செல்வக் கதையினை
செறி கழல் மன்னன் செப்புக என்றலும்
அறிவு காட்சி அமர்ந்து ஒழுக்கத்தவர்
குறி உணர்ந்து அதன் கூறுதல் உற்றதே.
**மகத நாட்டு மன்னன் சயந்தரனும் அவன் சுற்றத்தாரும்

#26
நாவலந்தீவின் நல் பரதத்திடை
மா வலர் மன்னர் மன்னும் மகதம் நல்
கூவும் கோகிலம் கொள் மதுத் தார் அணி
காவும் சூழ்ந்த கனகபுரம் அதே.

#27
அ நகர்க்கு இறையான சயந்தரன்
நல் மனைவி விசால நல் நேத்திரை
தன் சுதன் மதுத் தார் அணி சீதரன்
நன்கு அமைச்சன் நயந்தரன் என்பவே.

#28
மற்றும் தேவியர் மன்னும் எண்ணாயிரர்
வெற்றி வேந்தன் விழைந்து உறுகின்ற நாள்
பற்ற வாணிகன் பல் பொருள் பொன் கலத்து
உற்ற மாதர் படத்து உருக் காட்டினான்.

#29
மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்த பின்
கின்னரியோ கிளர் கார் மாதரோ
இன்ன ரூபம் மிக்கார் இது என்றலும்
மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான்.
**வாசவன் மறுமொழி

#30
சொல் அரிய சுராட்டிர தேசத்துப்
பல் சனம் நிறை பரங்கிரியாநகர்
செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி
நல் சுதை அவள் நாமம் பிரிதிதேவி.
**சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்துஅரசி ஆக்குதல்

#31
அ வணிகன் அவளுடை ரூபத்தைச்
செவ்விதில் செப்பச் சீர் உடை மன்னனும்
மௌவல் அம் குழல் மாதரைத்-தான் அழைத்துத்
தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன்.

#32
மன்னன் இன்புற்று மா தேவி ஆகவே
நன்மைப் பட்டம் நயந்து கொடுத்த பின்
மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன ஆற்றின் இயைந்து உடன் செல்லும் நாள்.
**பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு

#33
வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும்
நயந்து போந்தனர் நல் மலர்க் காவினுள்
பெயர்ந்து பல்லக்கின் ஏறிப் பிரிதிதேவி
கயந்தம் நீரணி காண்டற்குச் சென்ற நாள்.

#34
வாரணத்தின் முன் மார்க்கத்து நின்றவள்
வார் அணி கொங்கை யார் அவள் என்றலும்
ஏர் அணி முடி வேந்தன் மா தேவி என்று
தார் அணி குழல் தாதி உரைத்தனள்.
**பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்

#35
வேல் விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னைக்
கால் மிசை வீழ எண்ணிக் காண்டற்கு நின்றாள் என்று
பால் மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து
நூல் மொழி இறைவன் பாதம் நோக்கி நன்கு இறைஞ்சினாளே.
**ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்

#36
கொல்லாத நல் விரதக் கோமான் நினைத் தொழுதார்
பொல்லாக் கதி அறுத்துப் பொற்பு உடைய முத்தி-தனைச்
செல்லற்கு எளிது என்றே சே_இழையாள் தான் பரவி
எல்லா வினை செறிக்கும் இயல் முனியைத் தான் பணிந்தாள்.
**முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்

#37
பணிபவட்கு நன்கு உரையில் பரம முனி வாழ்த்த
அணிபெறவே நல் தவமும் ஆமோ எனக்கு என்றாள்
கணிதம்_இலாக் குணச் சுதனைக் கீர்த்தியுடனே பெறுவை
மணி விளக்கமே போன்ற மாதவனும் தான் உரைத்தான்,

#38
நின்ற சனம் தன்னுடனே நீடு போய்த் தவம்பட்டுப்
பின்றை அறவுரைகள் பெருமிதமாய்க் கேட்டு விதி
வென்ற பரமன் அடி விமலமாய்த் தான் பணிந்து
அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல் மகிழ்ந்தாள்.

#39
நல் தவன் உரைத்த சொல்லை நறு மலர்க் கோதை கேட்டு
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசிழைப் பரவை அல்குல்
உற்ற தன் குழலினாரோடு உறு தவன் பாதம்-தன்னில்
வெற்றியின் இறைஞ்சி வந்து வியன் மனை புகுந்து இருந்தாள்.

@2. இரண்டாம் சருக்கம்
**சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்

#40
வன விளையாடல் ஆடி மன்னன் தன் மனை புகுந்து
மனம் மகிழ் கோதை-தன்னை மருவிய காதலாலே
புனலின் நீ ஆடல் இன்றிப் போம் பொருள் புகல்க என்ன
கன வரை_மார்பன் கேட்பக் காரிகை உரைக்கும் அன்றே.

#41
இறைவன் ஆலயத்துள் சென்று இறைவனை வணங்கித் தீய
கறை_இலா முனிவன் பாதம் கண்டு அடி பணிந்து தூய
அறவுரை கேட்டேன் என்ன அரசன் கேட்டு உளம் மகிழ்ந்து
பிறை நுதல் பேதை தன்னால் பெறு சுவை_கடலுள் ஆழ்ந்தார்.
**பிரிதிதேவி கண்ட கனவு

#42
இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்து
மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம்
இருள் மனை இமில் ஏறு ஒன்றும் இளம் கதிர் கனவில் தோன்றப்
பொரு_இலாள் கண்டு எழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே.
**சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்

#43
வேந்தன் கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துள் சென்று
சேம் தளிர்ப் பிண்டியின் கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப் பயன் நுவல என்றான்
ஏந்து இள_முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார்.
**புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்

#44
அ முனி அவரை நோக்கி அருந்து நல் கனவு-தன்னைச்
செம்மையின் இருவர்கட்கும் சிறுவன் வந்து உதிக்கும் என்றும்
கம்பம்_இல் நிலங்கள் எல்லாம் காத்து நல் தவமும் தாங்கி
வெம்பிய வினை அறுத்து வீடு நன்கு அடையும் என்றார்.
**புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்

#45
தனையன் வந்து உதித்த பின்னைத் தகு குறிப்பு உண்டோ என்று
புனை மலர் அலங்கல்_மார்பன் புரவலன் மற்றும் கேட்ப
நினை-மின் அக் குறிகள் உண்டு என் நேர்மையில் கேட்பிர் ஆயின்
தினை அனைப் பற்றும் இல்லாத் திகம்பரன் இயம்புகின்றான்.
**திகம்பர முனிவரின் மறுமொழி

#46
பொன் எயிலுள் வீற்றிருக்கும் புனிதன் திரு_கோயில்
நின் சிறுவன் சரணத்தால் நீங்கும் திரு_கதவம்
நல் நாக வாவி-தனில் நழுவப் பதமும் உண்டாம்
மன் நாகம் மாவினொடு மதம் அடக்கிச் செலுத்திடுவான்.

#47
அருள் முனி அருளக் கேட்டு அரசன் தன் தேவி-தன்னோடு
இருவரும் இறைஞ்சி ஏத்தி எழில் மனைக்கு எழுந்து வந்து
பரு முகில் தவழும் மாடப் பஞ்ச நல் அமளி-தன்னில்
திரு நிகர் மாது மன்னன் சேர்ந்து இனிது இருக்கும் அ நாள்.
**பிரிதிதேவி கருக் கொள்ளுதல்

#48
புண் தவழ் வேல் கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
மண் இனிது உண்ண எண்ணும் மைந்தன் பூவலயம் ஆளும்
பண்ணுகக் கிளவி வாயில் பரவிய தீரும் சேரும்
கண்ணிய மிச்சம் மின்னைக் கழித்திடும் உறுப்பு இது ஆமே.
**புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்

#49
திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன் நல் தினத்தில் தோன்றப்
பொங்கு நீர்க் கடல் போல் மன்னன் புரிந்து நல் உவகை ஆகித்
தங்கு பொன் அறை திறந்து தரணி உள்ளவர்க்குச் சிந்திச்
சிங்கம் நேர் சிறுவன் நாமம் சீர் பிரதாபந்தன் என்றார்.
**பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்

#50
பிரிதிவிதேவி ஓர் நாள் பெரும் குழுத் தேவிமாரும்
அரிய நல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி
விரி நிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்திப்
பரிவு உள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே.
**ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்

#51
சிறுவன்-தன் சரணம் தீண்டச் சினாலயம் கதவு நீங்கப்
பிறை நுதல் தாதி-தானும் பிள்ளை விட்டு உள் புகுந்தாள்
நறை மலர் வாவி-தன்னுள் நல் சுதன் வீழக் காணாச்
சிறை அழி காதல் தாயும் சென்று உடன் வீழ்ந்தாள் அன்றே.

#52
கறை கெழு வேலினான் தன் காரிகை நீர் மேல் நிற்பப்
பிறை எயிற்று அரவின் மீது பெற்றிடும் தனையன் கண்டு
பறை இடி முரசம் ஆர்ப்பப் பாங்கினால் எடுத்து வந்து
இறைவனை வணங்கி ஏத்தி இயல் மனை புகுந்தான் அன்றே.
**நாககுமாரன் எனப் பெயர் பெற்றது

#53
நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்து என்று எண்ணி
நாக நல் குமரன் என்று நர_பதி நாமம் செய்தான்
நாகம் நேர் அகலத்தானை நா_மகள் சேர்த்தி இன்ப
நாக இந்திரனைப் போல நர_பதி இருக்கும் அ நாள்.
**கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்

#54
கின்னரி மனோகரீ என் கெணிகை நல் கன்னிமாரும்
அன்னவர் தாயும் வந்தே அரசனைக் கண்டு உரைப்பார்
என்னுடைச் சுதையர் கீதம் இறைவ நின் சிறுவன் காண்க
என்று அவள் கூற நன்று என்று இனிதுடன் கேட்கின்றாரே.

#55
இசை அறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்று என்று
அசைவு_இலா மன்னன்-தானும் அதிசய மனத்தன் ஆகித்
திசை விளக்கு_அனையாள் மூத்தாள் தெரிந்து நீ என்-கொல் என்ன
வசை இன்றி மூத்தாள்-தன்னை மனோகரி நோக்கக் கண்டேன்.
**நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்

#56
பல கலம் அணிந்த அல்குல் பஞ்ச நல் சுகந்தனீயும்
துலங்கு தன் சுதையர்-தம்மை தூய் மணிக் குமரற்கு ஈந்தாள்
அலங்கல் வேல் குமரன்-தானும் ஆ இழை மாதர்-தாமும்
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்து இன்ப_கடலுள் ஆழ்ந்தார்.
**நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்

#57
நாகம் மிக்க கதம் கொண்டு ஓடி நகர் மாடம் அழித்துச் செல்ல
நாக நல் குமரன் சென்று நாகத்தை அடக்கிக் கொண்டு
வேகத்தின் விட்டு வந்து வேந்த நீ கொள்க என்ன
வாகு நல் சுதனை நோக்கி யானை நீ கைக்கொள் என்றான்.

#58
மற்று ஓர் நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு
உற்ற ஊர் வீதி-தோறும் ஊர்ந்து தீக்கு ஓடி ஆட்டி
வெற்றி வேல் வேந்தன் காட்ட விழைந்து நீ கொள்க என்றான்
பற்றியே கொண்டு போகிப் பவனத்தில் சேர்த்தினானே.
**நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்

#59
அறவுரை அருளிச் செய்த அ முனி குறித்த நான்கும்
திறவதின் எய்தி நல்ல சீர் கலைக்_கடலை நீந்திப்
படு மதக் களிறும் தேர் மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம்
பிறை-அது போல் வளர்ந்து பீடு உடைக் குமரன் ஆனான்.
**விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்

#60
தூசு நீர் விசால_கண்ணி சுதனைக் கண்டு இனிது உரைப்பாள்
தேச நல் புரங்கள் எங்கும் திகழ் பணி குமரன் கீர்த்திப்
பேசவொணா வகையில் கேட்டேன் பெரும் தவம் இல்லை நீயும்
ஏசுற இகழ் ஒன்று இன்றி இனி உனைக் காக்க என்றாள்.
**சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்

#61
சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என் என்று ஏகி
குறி கொண்டு ஆயிரத்தினோரைக் கொன்றிடும் ஒருவனாகச்
செறியும் ஐஞ்ஞூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை
அறிவினில் கூட்டிக்கொண்டு அமர்ந்து இனிது இருக்கும் அ நாள்.
**நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்

#62
குமரனும் நல் மாதரும் குச்சம் என்னும் வாவியுள்
மமர நீரில் ஆடவே வன்ன மாலை குங்குமம்
சுமர ஏந்திப் பட்டுடன் தோழி கொண்டுபோகையில்
சமையும் மாடம் மீமிசைச் சயந்தரன் இருந்ததே.
**விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்

#63
வேந்தன் பக்கம் கூறும் நல் விசாலநேத்திரையவள்
போந்தனள் மனைவியால் புணரும் சோரன்-தன்னிடம்
பூம் தடத்தைச் சுற்றிய பொற்பு உடைக் கரை மிசை
ஏந்து_இழையாள் நிற்பக் கண்டு இனிச் சுதன் பணிந்ததே.
** பொய்பேசிய மூத்த மனைவியை மன்னன் கடிதலும்,
** நாககுமாரன் சுற்றம்சூழ மனை திரும்புதலும்

#64
பொய்யுரை புனைந்தவளைப் புரவலனும் சீறினான்
நையும் இடை மாதரும் நாக நல் குமரனும்
செய்ய மாலை சாந்து பட்டுச் செம்மையுடன் தாங்கியே
வெய்ய வேல் கண் தாயுடன் வியன் மனை அடைந்தனன்.
**பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை

#65
மன்னன்-தன் தேவியை மாதே எங்கு போனது என்
நின்னுடைப் புதல்வன் நீராடல் காணப் போனது என்
நின்னுடன் மனை-தனில் ஈண்டு இனிதின் ஆடல் என்
நல் நகர்ப்புறத் தனையன் ஆடல் நீங்க என்றனன்.
**தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்

#66
அரசன் உரைத்து ஏகினான் அகமகிழ்வும் இன்றியே
சிரசு இறங்கித் துக்கமாய்ச் சீர் கரத்து இருந்தனள்
விரகு நல் குமரனும் வியந்து வந்து கேட்டனன்
அரசன் உரை சொல்லக் கேட்டு ஆனை மிசை ஏறினான்.

#67
வாத்தியம் முழங்கவும் மத வாரணம் அடக்கவும்
ஏத்து அரிய வீதி-தொறும் ஈடு_இல் வட்ட சாரியும்
பார்த்து அரிய நடனமும் பல்லியங்கள் ஆர்ப்பவே
சீற்றமொடு உலாச்செலச் சீர் அரசன் கேட்டனன்.
**அரசன் சினந்து நாககுமாரனின் நற்பொருள் கவரச்செய்தல்

#68
நன் அடியார் சொல்லினர் நாக நல் குமரன் என்
இன்னுரையை மீறினன் இனி அவன் மனை புகுந்து
பொன் அணிகள் நல் பொருள் நாடி மிக்கு அவர் கொள
என்று அரசன் கூறலும் இனப் பொருள் கவர்ந்தனர்.
**நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்

#69
ஆடும் வாரணம் மிசை அண்ணல் வந்து இழிதர
நீடு மாளிகை அடைய நீர்மை நற்றாய் கூறலும்
ஆடும் சூது மனை புகுந்து அரசர்-தம்மை வென்ற பின்
கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான்.
**அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்

#70
அரசர்கள் அனைவரும் அதிகராசனைத் தொழ
அரவ மணி ஆரமும் ஆன முத்து மாலையும்
கரம்-அதில் கடகமும் காய் பொன் கேயூரமும்
எரி மணிகள் இலதை வேந்து என்ன இக் கூற்று என.
**நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்

#71
சூதினால் செயித்து நின் சுதன் அணிகள் கொண்டனன்
சூதில் ஆட என்னுடன் சுதன் அழைப்ப வந்த பின்
சூதினில் துடங்கி நல் சுதனும் தந்தை அன்பினில்
சூது இரண்டு ஆட்டினும் சுதன் மிகச் செயித்தனன்.
** தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு
** ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்

#72
இனிய சூதில் ஆடலுக்கு இசைந்த தேச மன்னரை
இனியதாயப் பொருள்களை இயல்பினால் கொடுத்து உடன்
தனையனும் மனை புகுந்து தாய் பொருள் கொடுத்த பின்
அணி அரசர் ஆரமும் அவரவர்க்கு அளித்தனன்.
**புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்

#73
மன்னவன் தன் ஏவலால் மா நகர்ப்புறத்தினில்
நல் நகர் சமைத்து இனிதின் நல் சுதன் இருக்க என்று
அ நகரின் நாமமும் அலங்கரியபுரம் எனத்
தன் நகரின் மேவும் பொன் தார் அணிந்த காளையே.

@3. மூன்றாம் சருக்கம்
**கவிக்கூற்று

#74
அரிவையர் போகம்-தன்னில் ஆன நல் குமரன்-தானும்
பிரிவு இன்றி விடாது புல்லிப் பெரு மலர்க் காவு சேர்ந்து
பரிவுடன் இனிதின் ஆடிப் பாங்கினால் செல்லும் நாளில்
உரிமையால் தோழர் வந்துசேர்ந்தது கூறல் உற்றேன்.
**நாககுமாரனின் தோழர் வரலாறு

#75
பார் அணி சூரசேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள்
ஊர் அணி கொடிகள் ஓங்கும் உத்தரமதுரை-தன்னில்
வார் அணி கொங்கைமார்க்கு மாரன் நேர் செயவர்மாவின்
சீர் அணி தேவி நாமம் செயவதி என்பது ஆகும்.
**வியாள-மாவியாளரின் தோற்றம்

#76
வேய்ந்த வெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும்
சேர்ந்து இரு புதல்வர் தோன்றிச் செவ்வியால் செல்லும் நாளில்
காந்தி நல் தவத்தோர் வந்தார் கடவுள் நேர் தூமசேனர்
வேந்தன் வந்து அடி வணங்கி விரித்து ஒன்று வினவினானே.

#77
என்னுடைய புதல்வர்-தாமும் இனி அரசாளும் ஒன்றோ
அன்னியன் சேவை ஒன்றோ அடிகள் நீர் அருளிச்செய்-மின்
துன்னிய புதல்வர்-தாமும் ஒருவனைச் சேவைபண்ணும்
என்று அவர் குறியும் சொல்ல எழில் முடி புதல்வர்க்கு ஈந்தான்.
**வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்

#78
மன்னன் போய் வனம் அடைந்து மா முனி ஆகி நிற்பப்
பின்னவர் அமைச்சன்-தன் மேல் பெரு நிலப் பாரம் வைத்துத்
தன் இறை தேடிப் போந்தார் தரை_மகள் திலதம் போலும்
பன்னக நகரம் நேர் ஆம் பாடலிபுரம் அது ஆமே.
**பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்

#79
நல் நகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும்
தன்னவன் தேவி பேரும் தக்க சிரீமதி ஆம் அம் பொன்
கிண்ணம் போல் முலையாள் புத்ரி கேணிகாசுந்தரி என்பாள் ஆம்
விண் உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார்.

#80
மன்னனைக் கண்டிருப்ப மாவியாளன் தகமை கண்டு
தன்னுடைப் புதல்வி-தன்னைத் தான் அவன் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி-தன்னைச் சுந்தரி வியாளனுக்கு
மன் இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே.
**நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்

#81
சிறு தினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறு மலர்க் கோதை வேலான் நாக நல் குமரன் கண்டு
சிறு மலர் நெற்றிக் கண்ணும் சேரவே மறையக் கண்டு
சிறியன் யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழுற்றானே.
**சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால் அடித்து மாய்த்தல்

#82
செல்வனைக் கொல்வது என்று சிரீதரன் சேனை வந்து
பல் சன மனையைச் சூழப் பண்பு உடை வியாளன் கண்டு
வல்லை நீர் வந்தது என்ன வள்ளலை வதைக்க என்றார்
கொல் களி யானைக் கம்பம் கொண்டு உடன் சாடினானே.
**சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும், அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்

#83
சேனை-தன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனை மேல் குமரன் தோன்றி அவனும் வந்து எதிர்த்த போது
மான வேல் மன்னன் கேட்டு மந்திரி-தன்னை ஏவ
கோன் அவர் குமரன் கண்டு கொலைத் தொழில் ஒழித்தது அன்றே.
**மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி

#84
நாக நல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும்
வேக நின் மனைக்குச் சூரன் வெகுண்டவன் வந்தான் என்ன
போக நீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன
ஆகவே அவன் முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான்.
**நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்

#85
நயந்தரன் சென்று உரைப்பான் நல் அறிவு இன்றி நீயே
செயம்-தனில் ஒருவன் கையில் சேனை-தன் மரணம் கண்டும்
நயந்து அறியாத நீயே நல் மனை புகுக என்றான்
பயந்து தன் சேனையோடும் பவனத்தில் சென்ற அன்றே.
**நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்

#86
தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன் தாய்க்கு உரைத்து
தந்தி மேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறி
நந்திய வியாளன்-தன் ஊர் மதுரையில் புக்கு இருந்து
அந்தம்_இல் உவகை எய்தி அமர்ந்து இனிது ஒழுகும் நாளில்.
**மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்

#87
மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்
அ நகர்ப்புறத்தினில் ஆடல் மேவலின்
இன் இசை வீணை வேந்து இளையர் ஐஞ்ஞூற்றுவர்
அன்னவர்க் கண்டு மிக்கு அண்ணல் உரைத்தனன்.

#88
எங்கு உளிர் யாவர் நீர் எங்கு இனிப் போவது என்று
அங்கு அவர் தம்முளே அறிந்து ஒருவன் சொலும்
தங்கள் ஊர் நாமமும் தந்தை_தாய் பேர் உரைத்து
இங்கு இவர் என் கையில் வீணை கற்பவர்களே.
**வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி

#89
நந்து காம்பீர நாட்டின் நகரும் காம்பீரம் என்னும்
நந்தனராசன் தேவி நாமம் தாரணி ஆம் புத்திரி
கந்தம் ஆர் திரிபுவனாரதி கை வீணை-அதனில் தோற்று
என் தமரோடும் கூட எங்கள் ஊர்க்கு ஏறச் சென்றோம்.
**திரிபுவனாரதியை வீணையினால் வென்று நாககுமாரன் நன்மணங் கொள்ளல்

#90
வெற்றி வேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று
வில் புருவ தனத்தாளை வீணையின் வென்றுகொண்டு
கற்புடையவள்-தன் காம_கடலிடை நீந்தும் நாளில்
உற்றது ஓர் வணிகனைக் கண்டு உவந்து அதிசயத்தைக் கேட்டான்.
**வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி

#91
தீது_இல் பூந்திலகம் என்னும் சினாலயம்-அதனின் முன்னில்
சோதி மிக்க கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம்
ஓதிய குரலன் ஆகி ஒருவன் நின்று அலறுகின்றான்
ஏது என்று அறியேன் என்றான் எரி மணிக் கடக_கையான்.
**வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்

#92
குன்று எனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டு வந்து
சென்று அந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று
வென்று அந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன் அந்த மண்டபத்தின் முகம் மலர்ந்து இனிது இருந்தான்.
**வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்

#93
பூசலிட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீ யார்
ஆசை என் மனைவி-தன்னை அதிபீம அசுரன் கொண்டு
பேசவொணா மலை முழஞ்சுள் பிலத்தினில் வைத்திருந்தான்.

#94
இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன்
விம்முறு துயர் சொல் கேட்டு வீரன் அக் குகை காட்டு என்னச்
செம்மையில் சென்று காட்டச் செல்வனும் சிறந்து போந்து
அ மலைக் குகை வாய்-தன்னில் அண்ணலும் உவந்து நின்றான்.
**வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்

#95
வியந்தர தேவன் வந்து வந்தனைசெய்து நிற்ப
இந்த நல் கிராதன் தேவி-தனை விடுவித்த பின்புச்
சந்திரகாந்தி வாளும் சாலம் மிக்கு அமளி-தானும்
கந்த நல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே.
**வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்

#96
அங்கு நின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன்
இங்கு உள மலைவாரத்தில் இரணிய குகை உண்டு என்னக்
குங்குமம் அணிந்த மார்பன் குமரன் கேட்டு அங்குச் சென்றான்
அங்கு உள இயக்கி வந்து அடி பணிந்து இனிது சொல்வாள்.

#97
இனி உனக்கு ஆளர் ஆனோம் ஈரிரண்டு ஆயிரவர்
என அவள் சொல்ல நன்று என்று இனி ஒரு காரியத்தின்
நினைவன் யான் அங்கு வா என் நீங்கி நல் குமரன் வந்து
வனசரன்-தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான்.
**வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்

#98
வாள் கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக்
காலினைப் பற்றி ஈர்ப்பக் கன நிதி கண்டு காவல்
ஆள் எனத் தெய்வம் வைத்து அருகன் ஆலையத்துள் சென்று
தோள் அன தோழன் கூடத் தொல் கிரிபுரத்தைச் சேர்ந்தான்.
**கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்

#99
அ நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவி-தானும்
மன்னிய முலையினாள் பேர் வனமாலை மகள் நல் நாமம்
நல் நுதல் கணை விழியை நாக நல் குமரனுக்குப்
பன்ன அரும் வேள்வி-தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே.
**புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்

#100
தாரணி வனராசற்குத் தாயத்தான் ஒருவன்-தன்னைச்
சீர் அணி குமரன் தோழன் சிறந்து அணி மாமன் கூடப்
பார் அணி வெற்றி கொண்டு புண்டரபுரத்தை வாங்கி
ஏர் அணி வனராசற்கு எழில்பெறக் கொடுத்த அன்றே.
**நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்

#101
சொல்ல அரும் நாடு இழந்து சோம நல் பிரபன் போகி
எல்லை_இல் குணத்தின் மிக்க எமதரர் அடி வணங்கி
நல் அருள் சுரந்து அளிக்கும் நல் தவ முனிவன் ஆகி
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்துநின்றான்.

@4..நான்காம் சருக்கம்
**சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்

#102
சுப்பிரதிட்டம் எனும் புரம் ஆள்பவன்
செப்பு வன்மை செயவர்மராசன்-தன்
ஒப்பு_இல் பாவையும் ஓவியம் போல் செம்பொன்
செப்பு நேர் முலையாள் நல் செயவதி.

#103
மக்கள் சேத்தி அபேத்தியர் என்று இவர்
மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லும் நாள்
பக்க நோன்பு உடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான்.

#104
இருவர் என் சுதர் என்னுடை ராச்சியம்
மருவி ஆளுமோ மற்று ஒரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்து அறிவிக்க எனத்
திரு_முடி மன்ன செப்புவன் கேள் என்றார்.
**முனிவர் மன்னனுக்கு உரைத்தவை

#105
புண்டிரம் எனும் புரப் புரவலன்-தனைக்
கண்திறந்து உந்திடும் காவலன்-தனை
அண்டி நல் சேவையார் ஆவராம் எனப்
பண் திறத் தவத்தவர் பண்ணுரை கேட்ட பின்.
**செயவர்மன் புதல்வரின் அரசாட்சி

#106
மக்கள் மிசை நிலம் மன்னவன் வைத்து உடன்
மிக்க குணத்துவம் வீறுடன் கொண்டு தன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி ஆளும் நாள்.
**சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்

#107
நல் அரும் தவச் சோமப்பிரபரும்
எல்லை_இல் குண இருடிகள்-தம்முடன்
தொல் புகழ்ப் புரம் சுப்பிரதிட்டத்தின்
நல்ல காவில் நயந்து இருந்தார்களே.

#108
செயவர்மன் சுதர் சீர் நல் தவர்களை
நயம் அறிந்து சேர் நன் அடியைப் பணிந்து
இயம்பும் இ முனி இப்ப துறந்தது என்
செயந்தரன் சுதன் சீற்றத்தின் ஆனதே.
**செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்

#109
என்று அவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்து
சென்று நல் குமரன்-தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்று உமக்கு ஆளர் ஆனோம் என்று அவர் கூற நன்று என்
குன்று சூழ் வன சாலத்துக் குமரன் சென்று இருந்த அன்றே.

#110
அடி மரத்து இருப்ப அண்ணல் அ நிழல் திரிதல் இன்றித்
கடி கமழ் மார்பன்-தன்னைக் காத்து உடன் இருப்பப் பின்னும்
விட மரப் பழங்கள் எல்லாம் வியந்து நல் துய்த்து இருந்தார்
கொடி மலர்க் காவு-தன்னுள் கோமகன் இருந்த போழ்தில்.
**ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளல்

#111
அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடி பணிந்து இனிய கூறும்
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவ முனி குறி உரைப்ப
புஞ்சிய வனத்து இருந்தோம் புரவலன் நின்னிடத்தின்
எஞ்சல்_இல் குறியன் காணாய் எமக்கு நீ இறைவன் என்றார்.
**கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்

#112
அரிய நல் உரையைக் கேட்டு அவ்வணம் களி சிறந்து
உரிய நல் அவர்களோடும் உவந்து உடன் எழுந்து சென்று
கிரிநகர்-தன்னைச் சேரக் கேட்டு நல் நகரைச் சென்றான்
அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன் மனை புகுந்து இருந்தான்.

#113
அரிவரராசன் தேவி அருந்ததி அனைய கற்பின்
மிருகலோசனை என்பாளாம் மிக்க நல் மகள்-தன் பேரும்
சுரி குழல் கரும் கண் செ வாய்த் துடி இடைக் குணவதீயைப்
பிரவிச்சோதனன் இச்சித்துப் பெரு நகர் வளைந்தது அன்றே.

#114
நாக நல் குமரன் கேட்டு நாற்படையோடும் சென்று
வேக நல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி
நாக நல் எருத்தின் வந்து நகர் புகுந்து இருப்ப மிக்க
போகம் மிக்க குணவதீயைப் புரவலன் கொடுத்தது அன்றே.
**நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்

#115
வேல் விழி அமிர்து_அன்னாளை வேள்வியால் அண்ணல் எய்திக்
கால் சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போகம் எல்லாம் பருகி இன்புற்று நாளும்
நூல் நெறி வகையில் துய்த்தார் நுண் இடை துவள அன்றே.

#116
கலை அணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம்
சிலை உயர்ந்து இனிய திண் தோள் செம்மலும் பிரிதல் இன்றி
நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்_இன்றிச் செல்லும் நாளுள்
உலைதல்_இல் உறு_வலீயான் ஊர்ச் சயந்தகிரி அடைந்தான்.
**நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்

#117
வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி
தாமம் ஆர் மார்பன் மிக்க தக்க நல் பூசைசெய்து
சேமமாம் முக்குடைக் கீழ் இருந்து அரியாசனத்தின்
வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே.
**முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்

#118
முத்து இலங்கு முக்குடைக் கீழ் மூர்த்தி திருந்து அடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்_உலகம் ஆண்டுவந்து
இத் தலமும் முழுது ஆண்டு இரும் களிற்று எருத்தின் மிசை
நித்தில வெண்குடைக் கீழ் நீங்காது இருப்பவரே.

#119
கமல மலர் மீது உறையும் காட்சிக்கு இனி மூர்த்தி
அமல மலர்ப் பொன் சரணை அன்பாய்த் தொழுபவர்கள்
இமையவர்கள்_உலகத்து இந்திரராய்ப் போய் உதித்து
இமையவர்கள் வந்து தொழ இன்புற்று இருப்பாரே.

#120
அரியாசனத்தின் மிசை அமர்ந்த திரு_மூர்த்தி
பரிவாக உன் அடியைப் பணிந்து பரவுவர்கள்
திரிலோகமும் தொழவே தேவாதி_தேவருமாய்
எரி பொன் உயிர் விளங்கி இனிய முத்தி சேர்பவரே.
**வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி

#121
இணை_இலா இறைவனை ஏத்தி இவ்வகையினால்
துணை இனிய தோழன்மார் சூழ்ந்து உடன் இருந்த பின்
கணை சிலை பிடித்து ஒருவன் கண்டு ஒர் ஓலை முன் வைத்து
இணை கரமும் கூப்பி நின்று இனிது இறைஞ்சிக் கூறுவான்.

#122
வற்சை எனும் நாட்டினுள் வான் புகழும் கௌசம்பி
செற்றவரினும் மிகு சூரன் சுபசந்திரன்
வெற்பு நிகர் கற்பினாள் வேந்தன் மகாதேவியும்
நல் சுகாவதி எனும் நாமம் இனிது ஆயினாள்.

#123
அன்னவர்-தம் புத்திரிகளான ஏழு பேர்களாம்
நல் சுயம்பிரபையும் நாக சுப்பிரபையும்
இன்ப நல் பிரபையும் இலங்கு சொர்ணமாலையும்
நங்கை நல் பதுமையும் நாகதத்தை என்பரே.

#124
வெள்ளியின் மலையில் மேகவாகனன் துரந்திடக்
கள் அவிழ் மா சுகண்டன் அவன் வந்து உடன்
கிள்ளை அம் மொழியினாரைக் கேட்டு உடன் பெறுகிலன்
வெள்ளை அம் கொடி நகர வேந்தனை வதைத்தனன்.

#125
வேந்தனுக்கு இளையன் உன்னை வேண்டி ஓலையே தர
சேர்ந்தவன் அளித்த ஓலை வாசகம் தெளிந்த பின்
நாந்தகம் அயில் கணை நலம்பெறத் திரித்து உடன்
போந்து அவனைக் கொன்றனன் பூ அலங்கல் மார்பனே.
**நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்

#126
அபிசந்திரன்-தன் புரம் அத்தினாகம் ஏகியே
சுபமுகூர்த்த நல் தினம் சுபசந்திரன் சுதைகளும்
அபிசந்திரன்-தன் மகளாம் சுகண்டன் சுதையுடன்
செப மந்திர வேள்வியால் செல்வன் எய்தி இன்புற்றான்.

#127
நங்கைமார்கள்-தன்னுடன் நாக நல் குமரனும்
இங்கிதக் களிப்பினால் இசைந்து இனிப் புணர்ந்துடன்
பொங்கு நகர்ப் புறத்தினில் பூவளவன் மேவியே
திங்கள் சேர் செய்குன்றினும் சேர்ந்து இனிது ஆடும் நாள்.
**அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்

#128
அவந்தி என்னும் நாட்டினுள் ஆன உஞ்சை நீள் நகர்
உவந்த மன்னன் நாமமும் ஓங்கும் செயசேனன் ஆம்
அவன்-தன் நல் மனைவியரான நல் செயசிரீ ஆம்
சிவந்த பொன் நிற மகள் சீர் உடைய மேனகி.

#129
பாடலீபுரத்து இருந்த பண்பு மாவியாளனும்
நாடி வந்து இருந்தனன் நன்கு உஞ்சை நகர்-தனில்
சேடி கண்டு மேனகிக்குச் செப்ப வந்து கண்டவள்
நாடி அவள் போயினள் நல் நிதிப் புரிசையே.

#130
அ நகர் விட்டு ஏகினன் ஆன மாவியாளனும்
சென்று தன் தமையனைச் சேவடி பணிந்த பின்
நன்றுடன் வணங்கினன் நாக நல் குமரனை
இன்று இவன்-தான் யார் என என் தம்பி அவன் என்னலும்.

#131
மின்னின் இடை நேர் இழை மேனகி என ஒரு
மன்மதனை இச்சியாள் மாவியாளன் சொல்லலும்
அ நகரில் செல்லலும் அரிவையர் தரித்திட
மன்னன் அம்பு வேள்வியால் மன்னி நல் புணர்ந்தனன்.
**மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று நாககுமாரன் பெறுதல்

#132
மற்றும் ஒன்று உரைத்தனன் மதுரை மா நகரியில்
உற்றிருந்த சிரீமதி ஓர்ந்து நாடகம்-தனில்
வெற்றி முழவு ஏழ் இயம்ப வீறுடைய வல்லவன்
பற்றுடன் அவள் பதியாம் பார் மிசை மேல் என்றனன்.
**மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட அதிசயம் இயம்பக் கேட்டல்

#133
அங்கு சென்று அ அண்ணலும் அவளை வென்று கொண்டனன்
பொங்கும் இக் குழலியர்ப் புணர்ந்து உடன் இருந்த பின்
வங்கம் மீது வந்த ஓர் வணிகனை வினவுவான்
எங்கு உள அதிசயம் இயம்புக நீ என்றனன்.
**வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்

#134
பொங்கும் ஆழியுள் ஒரு பூதிலகமாபுரம்
புங்கவன்-தன் ஆலையம் பொங்கு சொன்ன வண்ணம் முன்
நங்கைமார் ஐஞ்ஞூற்றுவர் நாள்-தொறும் ஒலிசெய்வார்
அங்கு அதற்குக் காரணம் யான் அறியேன் என்றனன்.
**நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை

#135
தனது வித்தை-தன்னையே தான் நினைக்க வந்த பின்
மனத்து இசைந்த தோழரோடு வள்ளல் தீபம் சென்று நல்
கனகமய ஆலையம் கண்டு வலம்கொண்டு உடன்
சினன் அடி பணிந்து முன் சிறந்து மிக்கு இருந்தனர்.
**ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற, அதன் காரணம் குமாரன் வினாவுதல்

#136
ஒரு நிரையாய் மங்கையர் ஓசைசெய்யக் கேட்ட பின்
திரு அலங்கல் மார்பினான் சேர அழைத்து அவர்களை
அருகன் ஆலையத்து முன் அலறும் நீங்கள் யார் எனத்
தரணிசுந்தரி அவள் அவற்கு இது என்று கூறுவாள்.
**ஐந்நூற்றுவருள் தரணிசுந்தரி தங்கள் நிலையெடுத்துரைத்தல்

#137
அரிய வெள்ளி மா மலை ஆடும் கொடி ஏமிடை
பிரிதிவிதிலகம் எங்கள் பேர் உடைய நல் நகர்
வரதிரட்சகன் எமர் தந்தையை மருகனுக்குக்
கருதி எம்மைக் கேட்டனன் கண்ண வாயுவேகனே.

#138
எந்தையும் கொடாமையால் எரி என வெகுண்டனன்
எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே
இந்த நல் வனத்து இருந்தான் என்று அவளும் கூறலும்
அந்த வாயுவேகனை அண்ணல் வதைசெய்தனன்.
**வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர் ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல்

#139
அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல் வேள்வியால் எய்தி
நெஞ்சில் அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்த பின்
அஞ்சுநூற்றுவர் படர்கள் ஆளர் ஆகி வந்தனர்
தஞ்சமாய் அவர் தொழுது அகம் மகிழ்ந்து செல்லும் நாள்.
**கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை நாககுமாரன் கூடி மகிழ்தல்

#140
கலிங்கம் என்னும் நாட்டினுள் கனகமய இஞ்சி சூழ்ந்து
இலங்கு ரத்னபுரம் இ நகர்க்கு மன்னவன்
துலங்கு சந்திரகுப்தன் தோகை சந்திரம்மதி
பெலம்கொள் இவர் நல் மகள் பேர் மதனமஞ்சிகை.

#141
நாக நல் குமரன் சென்று நம் மந்திர வேள்வியால்
வாகனம் இனிதின் இன்று மதனமஞ்சிகையொடும்
தாகம் மிக்கு உடையனாய்த் தான் லயப் பருகினான்
நாக நல் புணர்ச்சி போல் நன்கு உடன் இருந்தரோ.
** கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன்
** பெற்றுப் போகந் துய்த்தல்

#142
கங்கை நீர் அணிந்து இலங்கும் கங்காள நல் நாட்டினுள்
திங்கள் தவழ் மாடம் நல் திலகபுர மன்னவன்
பொங்கு மகுடம் முடி பொற்பு விசையந்தரன்
இங்கித மனைவி பேர் இயல் விசையை என்பளே.

#143
இலக்கணை எனும் மகள் இலக்கணம் உடையவள்
மிக்க அண்ணலும் சென்று மெய்ம்மை வேள்வி தன்மையால்
அக்கணத்து அவன் எய்தி அவள்-தன் போகம் துய்த்த பின்
தொக்க காவு-தன் உளே தொல் முனிவர் வந்தரோ.
** நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து
** தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்

#144
ஊற்றினைச் செறித்திடும் உறு தவனுடைச் சாரணை
நாற்ற மிக்க குமரனும் நன்புறப் பணிந்த பின்
ஏற்ற அறம் கேட்டு உடன் இருந்து இலக்கணையின் மேல்
ஏற்ற மோகம் என் என இயல் முனி உரைப்பரே.

@5..ஐந்தாம் சருக்கம்
**நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு

#145
நாவலந்தீவு-தன்னுள் நன்கு அயிராவதத்தின்
மேவும் மின் முகில் சூழ் மாட வீதசோகப்புரத்துக்
காவி நல் விழி மாதர்க்குக் காமன் விக்கிரமராசன்
தா_இல் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே.

#146
மனைவி தன் தனதத்தைக்கு மகன் நாகதத்தன் ஆகும்
வனை மலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் தேவிப்
புனை மலர்க் கோதை நல்லாள் பொற்பு உடை வசுமதிக்கு
மனையின் நல் மகள்-தன் நாமம் இயல் நாகவசு என்பாள் ஆம்.

#147
நண்புறு நாகதத்தன் நாக நல் வசு என்பாளை
அன்புறு வேள்வி-தன்னால் அவளுடன் புணர்ந்து சென்றான்
பண்புறு நல் தவத்தின் பர முனி தத்த நாமர்
இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே.

#148
நாகதத்தன் சென்று அந்த நல் முனி சரணடைந்து
வாகு நல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான்
போக புண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில்
ஏக நல் தினத்தின் நன்று இடர் பசி ஆயிற்று அன்றே.

#149
தரும நல் தியானம்-தன்னால் தன்னுடை மேனி விட்டு
மருவின் ஆன சோதமத்தின் வானவன் ஆகித் தோன்றி
வரு கயல் விழியாள் நாகவசுவும் வந்து அமரனுக்கு
மருவிய தேவி ஆகி மயலுறுகின்ற அன்றே.

#150
அங்கு ஐந்து பல்லம் ஆயுள் அமரனாய்ச் சுகித்துவிட்டு
இங்கு வந்து அரசன் ஆனாய் இனி அந்தத் தேவி வந்து
தங்கு நின் மனைவி ஆனாள் தவ முனி உரைப்பப் பின்னும்
எங்களுக்கு அந்த நோன்பு இனிது வைத்து அருள என்றான்.
**நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல்

#151
திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்த பங்குனியில் ஆதல்
பொங்கு அனல் ஆடி ஆதல் பூரண பக்கம்-தன்னில்
அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு
தங்கும் ஆண்டு ஐந்து நோற்றால் தான் ஐந்து திங்கள் அன்றே.

#152
இந்த நல் கிரமம்-தன்னில் இனிமையின் நோன்பு நோற்று
அந்தம்_இல் அருகர் பூசை அருள் முனி தானம் செய்தால்
இந்திர பதமும் பெற்று இங்கு வந்து அரசர் ஆகிப்
பந்த தீ_வினையை வென்று பஞ்சமகதியும் ஆமே.
** முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள
** அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன்வந்து அழைத்தல்

#153
என்று அவர் உரைப்பக் கேட்டு இறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை
சென்று தன் பவனம் புக்கான் சே_இழையோடு மன்னன்
நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்து இறைஞ்சி
உன்னுடைத் தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான்.
**நாககுமாரன் தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும் பிறரோடும் திரும்புதல்

#154
அமையும் நன்கு அமைச்சன் சொல்லை அரு மணி_மார்பன் கேட்டு
சமையும் நாற்படையும் சூழச் சால் இலக்கணையினோடும்
இமையம் போல் களிற்றின் ஏறி இனிய நல் தோழன்மாரும்
இமையவர்க்கு இறைவன் போல எழில்பெறப் புக்க அன்றே.
**மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல்

#155
தாதை எதிர்கொள்ள அவன் தாழ்ந்து அடி பணிந்தான்
ஆதரவில் நல் மகனை அன்புற எடுத்தும்
போதம் மிகப் புல்லிய பின் போந்தனர் மனைக்கே
ஏதம்_இல் சீர் இன்புற இனிதுடன் இருந்தார்.
** நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து
** அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு முடிசூட்டித் துறவு பூணுதலும்

#156
வெற்றியுடன் வேள்விசெய்த வேல்_விழியினாரை
உற்றுடனே மாதரை ஒருங்கு அழைக்க வந்தார்
சித்திர நல் பாவையரைச் சேர்ந்து உடன் இருந்தான்
பற்று_அறச் செயந்தரனும் பார் மகன் மேல் வைத்தான்.

#157
நாககுமரன்-தனக்கு நல் மகுடம் சூட்டிப்
போக உபபோகம் விட்டுப் புரவலனும் போகி
ஆகமன் அடைக்கும் முனியவர் அடி பணிந்து
ஏக மனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான்.
**பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்

#158
இரு_வினை கெடுத்தவனும் இன்ப_உலகு அடைந்தான்
பிரிதிவி நல் தேவியும் தன் பெருமகனை விட்டு
சிரிமதி எனும் துறவி சீர் அடி பணிந்து
அரிய தவம் தரித்து அவளும் அச்சுதம் அடைந்தாள்.
** நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள் அளித்தலும்,
** தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி யாக்குதலும்

#159
வேந்தன் அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான்
ஆய்ந்த பல தோழர்களுக்கு அவனிகள் அளித்துக்
சேர்ந்த தன் மனைவியருள் செய லக்கணை-தன்னை
வாய்ந்த மகாதேவி பட்டம் வன்மைபெற வைத்தான்.
**இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல்

#160
இலக்கணையார்-தன் வயிற்றில் நல் சுதன் பிறந்தான்
மிக்க அவன்-தன் நாமமும் மிகு தேவகுமாரன்
தொக்க கலை சிலை அயில் பயின்று மிகு தொல் தேர்
ஒக்க மிக்க களிறுடனே ஊர்ந்து தினம் சென்றான்.
**நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்

#161
புரிசை எழ நிலத்தின் மிசை பொற்புற விளங்கும்
அரிய அரியாசனத்தில் அண்ணல் மிக ஏறி
எரி பொன் முடி மன்னர்கள் எண்ணாயிரவர் சூழ
இரு கவரி வீச இனி எழில்பெற இருந்தான்.
** மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு பூணவே
** அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்

#162
அரசன் இனிது இயல்பினின் அமர்ந்திருக்கும் அளவில்
பரவு முகில் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி
விரவி மிகு குமரன் மிசை வீறு முடிசூட்டி
அரிய தவம் தாங்க அவன் அன்புடன் எழுந்தான்.

#163
அமலமதி கேவலியின் அடி_இணை வணங்கி
விமலன் உருக்கொண்டனன் நல் வேந்தர் பலர் கூட
கமல_மலராள் நிகர் நல் காட்சி இலக்கணையும்
துமில மனைப் பதுமை எனும் துறவர் அடி பணிந்தாள்.
**நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல்

#164
நறும் குழல் இலக்கணையும் நங்கைமார்-தம் கூட
உறு தவம் தரித்துக்கொண்டு உவந்து அவர் செல்லும் நாளுள்
மறு_இல் சீர் முனிவனாய நாககுமாரன் தானும்
இறுகு வெவ்_வினைகள் வென்று இனிச் சித்தி சேர்ந்தது அன்றே.

#165
வியாள மாவியாளர்-தாமும் விழுத் தவத்து அனயை என்னும்
நயா உயிர் தியானம்-தன்னால் நாலிரு வினைகள் வென்று
செயத் துதி தேவர் கூறிச் சிறந்த பூசனையும் செய்ய
மயா இறப்புப் பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே.

#166
அரும் தவ யோகம்-தன்னால் அச்சேத்திய அபேத்தியர்-தம்
இரு_வினை-தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார்
மருவு நல் தவத்தினாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம்
திரு நிறைச் சோதம் ஆதி சேர்ந்து இன்பம் துய்த்தார் அன்றே.

#167
நாக நல் குமரற்கு ஆயுள் நான்கு ஆண்டு ஐஞ்நூற்று இரட்டி
ஆகும் நல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி
போக பூமி ஆண்ட பொரு_இல் எண்ணூறு ஆண்டு
ஆகும் நல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்கு அது ஆமே.

#168
மறு_அறு மனையவர்க்கும் மா தவர்-தமக்கும் ஈந்த
பெறும் இரு நிலங்கள் எங்கும் பெயர்ந்து நல் கேவலியாய்
அற மழை பொழிந்த காலம் அறுபத்தாறு ஆண்டு சென்றார்
உறு தவர் தேவர் நான்கும் முற்று எழு குழாத்தினோடே.
**நூற் பயன்

#169
இதன் கதை எழுதி ஓதி இன்புறக் கேட்பவர்க்கும்
புதல்வர் நல் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து
கதம் உறு கவலை நீங்கிக் காட்சி நல் அறிவு முன்பாய்ப்
பதம் மிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே.
**உலகிற்கு அறவுரை

#170
அறம் இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்கு அரண் இல்லை என்றும்
மறம் இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லை என்றும்
திறம் இது உணர்ந்து தேறித் தீ_கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம்-இதை விட்டு அறத்தில் வாழு-மின் உலகத்தீரே.
*