அழகர் கிள்ளைவிடு தூது

**பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய
**அழகர் கிள்ளை விடுதூது

@0 காப்பு

#0
தெள்ளு தமிழ் அழகர் சீபதி வாழ்வார் மீது
கிள்ளைவிடுதூது கிளத்தவே பிள்ளைக்
குருகு ஊரத் தானே சங்கு ஊர் கமுகில் ஏறும்
குருகூர் அத்தான் நேசம்கூர்

@1 கிளியின் சிறப்புகள் (1-66)

#1
கார் கொண்ட மேனிக் கடவுள் பெயர் கொண்டு
நீர் கொண்ட பாயல் நிறம் கொண்டு சீர் கொண்ட

#2
வை அம்பு அடைக்கும் மதனையும் மேல் கொண்டு இன்பம்
செய்யும் கிளி அரசே செப்பக் கேள் வையம் எலாம்

#3
வேளாண்மை என்னும் விளைவுக்கு நின் வார்த்தை
கேளாதவர் ஆர் காண் கிள்ளையே நாளும்

#4
மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும் இல்லாமல்
செலுத்திய கால் தேரை முழுத் தேராய் பெலத்து இழுத்துக்

#5
கொண்டு திரி பச்சைக் குதிராய் உனக்கு எதிரோ
பண்டு திரி வெய்யோன் பரி ஏழும் கண்ட

#6
செகம் முழுதும் நீ ஞான தீபமும் நீ என்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய் வகைவகையாய்

#7
எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை ஆயினும் உன்
ஐ வண்ணத்துள்ளே அடங்குமே மெய் வண்ணம்

#8
பார்க்கும் பொழுதில் உனைப் பார்ப்பதி என்பார் என்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய் நாக்குத்

#9
தடுமாறுவோரை எல்லாம் தள்ளுவரே உன்னை
விடுவார் ஒருவர் உண்டோ விள்ளாய் அடு போர்

#10
மறம் தரு சீவகனார் மங்கையரில் தத்தை
சிறந்தது நின் பேர் படைத்த சீரே பிறந்தவர்

#11
ஆரும் பறவைகளுக்கு அச்சுதன் பேரும் சிவன்-தன்
பேரும் பகர்ந்தால் பிழை அன்றோ நேர்பெறு வி

#12
வேகி ஒரு கூடு விட்டு மறு கூடு அடையும்
யோகி உனக்கு உவமை உண்டோ காண் நீ கீரம்

#13
ஆகையால் ஆடை உனக்கு உண்டே பாடகமும்
நீ கொள்வாய் காலாழி நீங்காயே ஏகாத

#14
கற்புடையாய் நீ என்றால் காமனையும் சேர்வாயே
அற்புடைய பெண் கொடி நீ ஆகாயோ பொற்புடையோர்

#15
துன்னிய சாயுச்யம் சுக ரூபம் ஆகையால்
அன்னது நின் சொரூபம் அல்லவோ வன்னி

#16
பரிசித்த எல்லாம் பரிசுத்தம் என்றோ
உருசித்த உன் எச்சில் உண்பார் துரிசற்றோர்

#17
இன் சொல்லைக் கற்பார் எவர் சொல்லும் நீ கற்பாய்
உன் சொல்லைக் கற்க வல்லார் உண்டோ காண் நின் போலத்

#18
தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோர் யார் உள் உணர்ந்த

#19
மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டம் அறப்
பாலனத்தாலே பசி தீர்ப்பாய் மேல் இனத்தோர்

#20
நட்டார் எனினும் நடந்துவரும் பூசை-தனை
விட்டார் முகத்தில் விழித்திடாய் வெட்டும் இரு

#21
வாள் அனைய கண்ணார் வளர்க்க வளர்வாய் உற வில்
லாளனை நீ கண்டால் அகன்றிடுவாய் கேளாய்

#22
இரு வடிவு கொண்டமையால் எங்கள் பெரிய
திருவடிகள் வீறு எல்லாம் சேர்வாய் குருவாய்ச்

#23
செபதேசிகர்க்கு எல்லாம் தென் அரங்கர் நாமம்
உபதேசமாக உரைப்பாய் இப முலையார்

#24
சித்தம் களிகூரச் செவ் இதழில் ஆடவர் போல்
முத்தம்கொடுக்க முகம் கோணாய் நித்தம் அவர்

#25
செவ் இதழ் உன் மூக்கால் சிவந்ததோ உன் மூக்கில்
அவ் இதழின் சிவப்பு உண்டானதோ செவ்வி இழந்து

#26
அண்டருக்குத் தோற்றான் அடல் வேள் ஆனானை நீ
கொண்டு இழுத்தால் ஆகும் குறை உண்டோ உண்டு அடக்கி

#27
ஆயுவை நீட்ட அரும் தவத்தோர் பூரகம்செய்
வாயுவை உன் பின்னே வரவழைப்பாய் தேயசு ஒளிர்

#28
மைப் பிடிக்கும் வேல் கண் மலர்_மாதும் சங்கரியும்
கைப் பிடிக்க நீ வங்கணம் பிடித்தாய் மெய்ப் பிடிக்கும்

#29
பச்சை நிறம் அச்சுதற்கும் பார்ப்பதிக்கும் உன்றனக்கும்
இச்சை பெற வந்த விதம் எந்த விதம் மெச்சும்

#30
குருகே உன் நாக்குத்தான் கூழை நாக்கு ஆனது
அரி கீர்த்தனத்தினால் அன்றோ தெரிவையர்கள்

#31
ஆர்த்த விரல் உன் முகம் ஒப்பாகையாலே கையைப்
பார்த்து முகமதனைப் பார் என்பார் சீர்த்திக்

#32
கிரியையிலே காணுங்கால் கிள்ளை அடையாத
பெரிய தனம் வீண் அன்றோ பேசாய் தெரியுங்கால்

#33
தேறு கனி காவேரி சிந்து கோதாவிரியும்
வீறு பெறுமே நீ விரும்பினால் கூறில் அனம்

#34
உன்னுடைய ஊண் அன்றோ ஊதப் பறந்து போம்
சின்ன வடிவு அன்றோ செழும் குயிலும் என்னே

#35
முது வண்டு இனம்தான் முடிச்சு அவிழ்த்தாலும்
மது உண்டாற்பின்னை வாய் உண்டோ எதிரும்

#36
கரும் புறா வார்த்தை கசப்பு என்று சொல்ல
வரும் புறாவுக்கும் ஒரு வாயோ விரும்பு மயில்

#37
உற்ற பிணிமுகமே உன் போல் சுக ரூபம்
பெற்ற பறவை பிற உண்டோ கற்று அறியும்

#38
கல்வியும் கேள்வியும் நீ கைக்கொண்டாய் சாரிகைக்கு உன்
செல்வமதில் அள்ளித் தெளித்தாயோ சொல் வேதம்

#39
என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்_வேள்
தன் பரியே உனக்குச் சாரதி யார் வன் போரில்

#40
மேவும் சிவன் விழியால் வேள் கருகி நாண் கருகிக்
கூவும் பெரிய குயில் கருகிக் பாவம் போல்

#41
நின்று மறுப்படும் நாள் நீதான் நடுப் படையில்
சென்றும் மறுப்படாதே வந்தாய் என்றும் மாக்

#42
காய்க்கும் கனி அல்லால் காய் பூ என்றால் நாக்கு
மூக்கு மறுப்பாய் முகம் பாராய் ஆக்கம்

#43
வரையாமல் நன்மை வரத்தினை நல்கும்
அரி தாளை நீ விட்டு அகலாய் இரு கை

#44
உனக்கு இல்லை உன் சிறகு இரண்டும் எனக்கு இல்லை
எனக்கும் உனக்கும் பேதம் ஈதே மனைக்குள்

#45
இதமாய் மனிதருடனே பழகுவாய் அன்
பதனால் முறையிட்டு அழைப்பாய் மது உண்டு

#46
அளிப்பிள்ளை வாய் குழறும் ஆம்பரத்தில் ஏறிக்
களிப் பிள்ளைப் பூம் குயிலும் கத்தும் கிளிப்பிள்ளை

#47
சொன்னத்தைச் சொல்லும் என்று சொல்லப் பெயர் கொண்டாய்
பின் அத்தைப் போலும் ஒரு பேறு உண்டோ அன்னம் இன்றிப்

#48
பால் குடிக்கும் பச்சைக்குழந்தை நீ ஆனாலும்
கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே மால் பிடித்தோர்

#49
கைச் சிலை_வேளால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம் படைத்து இருந்தாய் அச்ச

#50
மனப் பேதையார் மால் வனம் சுடவோ வன்னி
எனப் பேர் படைத்தாய் இயம்பாய் அனத்தை

#51
நிலவோ என்பார்கள் நெடும் துயர் வேழத்தைக்
கொலவோ அரி வடிவம் கொண்டாய் சிலை_நுதலார்

#52
கொள்ளை விரகக் கொடும் படையை வெல்லவோ
கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ உள்ளம்

#53
மிக உடை மாதர் விதனம் கெடவோ
சுக வடிவு நீ கொண்டாய் சொல்லாய் தகவு உடைய

#54
தத்தை அடைந்தவர் ஏதத்தை அடையார் என்னும்
வித்தை அடைந்தாய் உனை யார் மெச்ச வல்லார் முத்தமிழோர்

#55
மா ரதி பாரதியார்க்கு உன்னை உவமானிப்பார்
ஆர் அதிகம் ஆர் தாழ்வு அறைந்திடாய் ஊர் அறிய

#56
நெய்யில் கை இட்டாலும் நீதான் பசுமை என்றே
கையிட்டுச் சுத்தீகரிக்கலாம் மெய்யின்

#57
வடிவும் வளைந்த மணி மூக்கும் மாயன்
கொடியில் இருப்பவர்-தம் கூறோ நெடிய மால்

#58
விண்டு தறித்து ஊது வேணு கானத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ கொண்ட சிறகு

#59
அல் இலங்கு மெய்யானை அன்று அழித்து வீடணன் போய்த்
தொல் இலங்கை கட்டு புதுத் தோரணமோ நல் வாய்

#60
மழலை மொழிதான் மணிவண்ணன் செம் கைக்
குழலின் இசைதானோ கூறாய் அழகுக்

#61
கிளிப்பிள்ளாய் தெள் அமுதக் கிள்ளாய் நலங்குக்
குளிப் பிள்ளாய் இன்ப ரசக் குஞ்சே வளிப்பிள்ளை-

#62
தன்னைத் தாய் போல் எடுத்துச் சஞ்சரிக்கும் சம்பத்தாய்
பின்னைத் தாய் கையில் உறை பெண் தத்தாய் பொன் ஒத்தாய்

#63
முத்தி நகர் ஏழில் ஒன்றே முத்தமிழ் வல்லாறில் ஒன்றாய்
ஒத்த தனித் தவ்வரிப் பேர் உற்றது ஒன்றே சுத்தம் உறும்

#64
ஐந்து பூதத்தில் ஒன்றே ஆன படை நான்கில் ஒன்றே
முந்து முதலான பொருள் மூன்றில் ஒன்றே வந்த

#65
இரு பயனில் ஒன்றே இமையே விழியே
பருவ விழியில் உறை பாவாய் ஒரு நாரில்

#66
ஏற்றும் திருமாலை எய்தப்போய் ஊர் எல்லாம்
தூற்றும் அலர் கொண்ட கதை சொல்லக் கேள் தோற்றி

@2 அழகர் சிறப்பு (67-96)

#67
அரி வடிவுமாய்ப் பின் அரன் வடிவும் ஆகிப்
பெரியதொரு தூணில் பிறந்து கரிய

#68
வரைத் தடம் தோள் அவுணன் வன் காயம் கூட்டி
அரைத்திடும் சேனை அருந்தி உருத்திரனாய்ப்

#69
பண்ணும் தொழிலைப் பகைத்து நிலக் காப்பும் அணிந்து
உண்ணும் படி எல்லாம் உண்டு அருளி வெண்ணெயுடன்

#70
பூதனை தந்த பால் போதாமலே பசித்து
வேதனையும் பெற்று வெளி நின்று பாதவத்தை

#71
தள்ளு நடையிட்டுத் தவழ்ந்து விளையாடும்
பிள்ளைமை நீங்காத பெற்றியான் ஒள்_இழையார்

#72
கொல்லைப் பெண்ணைக் குதிரை ஆக்கும் திருப்புயத்தான்
கல்லைப் பெண் ஆக்கும் மலர்க் காலினான் சொல் கவிக்குப்

#73
பாரம் முதுகு அடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆர் அமுது கடைந்த அங்கையான் நாரியுடன்

#74
வன் கானகம் கடந்த வாட்டத்தான் வேட்டுவர்க்கு
மென் கால் நகங்கள் தந்த வீட்டினான் என் காதல்

#75
வெள்ளத்து அமிழ்ந்தினோன் வேலைக்கு மேல் மிதந்தோன்
உள்ளத்து உள்ளான் உலகுக்கு உப்பாலன் தெள்ளிதின்

#76
வெட்டவெறுவெளியிலே நின்றும் தோற்றாதான்
கிட்ட இருந்தும் கிடையாதான் தட்டாது என்

#77
எண்ணிலே மாயன் எனும் பேரினால் ஒளிப்போன்
கண்ணன் எனும் பெயரால் காண்பிப்போன் எண்ணுங்கால்

#78
எங்கும் இலாது இருந்தே எங்கும் நிறைந்து இருப்போன்
எங்கும் நிறைந்து இருந்தே எங்கும் இலான் அங்கு அறியும்

#79
என்னை எனக்கு ஒளித்து யான் என்றும் காணாத
தன்னை எனக்கு அருளும் தம்பிரான் முன்னை வினை

#80
கொன்று மல மாயைக் கூட்டம் குலைத்து என்னை
என்றும் தனியே இருத்துவோன் துன்று பிற

#81
மாவும் நான் மன் உயிரும் நான் அவ் இருவரையும்
ஏவுவான்தானும் நான் என்று உணர்த்தக் கோவலர்-பால்

#82
ஆனுமாய் ஆன்கன்றும் ஆகி அவற்றை மேய்ப்
பானுமாய் நின்ற பரஞ்சோதி மா நகரப்

#83
பேர் இருள் நீக்கப் பெரும் தவம் வேண்டா உடலில்
ஆர் உயிர் கூட்ட அயன் வேண்டா பாரும் எனச்

#84
சங்கத் தொனியும் தடம் குழல் ஓசை எனும்
துங்கத் தொனியும் தொனிப்பிப்போன் பொங்கும் அலை

#85
மோதும் பரன் ஆதிமூலம் இவன் என்றே
ஓதும் கரி ஒன்று உடைய மால் மூதுலகைத்

#86
தந்திடுவோனும் துடைப்போன்தானும் நான் என்று திரு
உந்தியால் வாயால் உரைத்திடுவோன் பைந்தமிழால்

#87
ஆதிமறை நான்கையும் நாலாயிரத்து நல் கவியால்
ஓதும் பதினொருவர் உள்ளத்தான் பாதம் எனும்

#88
செந்தாமரை மலரில் சிந்திய தேன் போல
மந்தாகினி வழியும் வண்மையான் சந்ததமும்

#89
ஆன்ற உலகம் அறிவும் அறியாமையுமாத்
தோன்றத் துயிலாத் துயில்கொள்வோன் ஈன்றவளைத்

#90
தெள்ளு மணி வாயில் காட்டிச் செகம் புறமும்
உள்ளும் இருப்பது உணர்வித்தோன் கொள்ளைக்

#91
கவற்சி தரு சென்மக் கடலில் கலந்த
அவிச்சை உவர் வாங்க முகில் ஆனோன் நிவப்பா

#92
மடங்கும் பர சமய வாத நதி வந்து
அடங்கக் கருங்கடலும் ஆனோன் உடம்பில்

#93
புணர்க்க ஒரு கிரணம் போலும் எனையும் கொண்டு
அணைக்க மணி நிறமும் ஆனோன் பணைக்கும்

#94
விசைப் பூதல ஊசல் மீதில் இருப்போனும்
அசைப்போனும் தான் ஆகும் அண்ணல் இசைத்து இசைத்து

#95
ஊன் பிடிக்கும் வேடர் ஒரு பார்வையால் நூறு
மான் பிடிக்கின்ற வகை என்னத் தான் படைத்த

#96
என் பிறவி எண்பத்துநான்கு நூறாயிரமும்
தன் பிறவி பத்தால் தணித்திடுவோன் முன்பு புகழ்ந்து

@3 பத்து அங்கங்கள் (97-123)
**அழகர் மலை

#97
ஏத்தி இருவர் நீங்காது இருக்கையாலே கேச
வாத்திரி என்னும் அணி பெற்றுக் கோத்திரமாம்

#98
வெம் காத்திரம் சேர் விலங்குகளை மாய்த்திடலால்
சிங்காத்திரி என்னும் சீர் மருவி எம் கோமான்

#99
மேய்த்த நிரை போல வெற்புகள் எல்லாம் சூழ
வாய்த்த நிரையில் ஒரு மால் விடையாய்ப் பார்த்திடலால்

#100
இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும் பேர்
மன்னிய சோலை மலையினான் எந்நாளும்
**சிலம்பாறு

#101
பொன் சிலம்பில் ஓடும் சாம்பூநதம் போல் மாணிக்க
நல் சிலம்பில் ஓடும் நதி ஆகிக் கல் சிலம்பில்

#102
இந்திரன் போலும் இடபாசலம் அவன் மேல்
வந்த விழி போலும் வளச் சுனைகள் முந்து திரு

#103
மாலுடைய தோளின் மணி மார்பின் முத்தாரம்
போல வரு நூபுர நதியான் சீலம் உறு
**தென்பாண்டி நாடு

#104
பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகளும் பார்மகளுக்கு
முன் இரு கை காது முலை முகம் கால் பின்னகம் கண்

#105
காட்டும் அவற்றுள் கனகவரை மீது புகழ்
தீட்டும் புனல்நாடும் தென்நாடும் நாட்டமாம்

#106
அந் நாடு இரண்டில் அருள் சேர் வலக் கண் எனும்
நல் நாடாம் தென்பாண்டி நாட்டினான் பொன் உருவச்
**திருமாலிரும்சோலை எனும் ஊர்

#107
சந்த்ர வடிவாம் சோமச்சந்திர விமானத்தை
இந்திர விமானம் இது என்றும் மந்த்ர விரு

#108
துக்கொடி ஏறு துசத்தம்பம் வல்லிசா
தக்கொடி ஏறு கற்ப தாரு என்றும் மிக்கோர்க்கு

#109
ஒரு வாழ்வானோனை உபேந்திரனே என்றும்
திருமலை ஆண்டானைத் தேவகுரு என்றும்

#110
நண்ணிய சீர் பெற்ற நம்பி முதலோரை
விண்ணவர்_கோன் ஆதி விபுதர் என்றும் எண்ணுதலால்

#111
ஆர் பதியான அமராபதி போலும்
சீர்பதியான திரு_பதியான் மார்பு இடத்தில்
**துளசி மாலை

#112
எண்ணும் கலன் நிறத்தோடு இந்திரவில் போல் பசந்த
வண்ணம் தரும் துளப_மாலையான் உள் நின்று
**அத்வைதம் எனும் யானை

#113
உருக்கும் வயிணவமாம் ஓங்கும் மதம் பொங்கத்
திருக் கொம்புதான் துதிக்கை சேர நெருக்கிய

#114
பாகம் ஒத்த வைகானதம் பாஞ்சராத்திரமாம்
ஆகமத்தின் ஓசை மணி ஆர்ப்பெடுப்ப மோகம் அறு

#115
மட்டும் பிணிக்கும் வடகலையும் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறாக விட்டுவிடா

#116
வான் அந்தம் ஆன மலர்த் தாள் கண்ட அத்துவி
தானந்தம் என்ற களி யானையான் தான் அந்த
**வேதப்புரவி

#117
வர்க்கத்துடன் எழுந்து வாயில் நுரை கடந்து
கற்கி வடிவு நலம் காண்பித்துச் சொர்க்கத்தில்

#118
ஏறும் கதி காட்டி எய்தும் அணுத் தோற்றி
வீறும் பல கலையும் வென்று ஓடி ஆறு அங்கம்

#119
சாற்றிய தன் அங்கமாய்க் கொண்டு தாரணியில்
போற்றிய வேதப் புரவியான் பாற்கடலில்
**கருடக்கொடி

#120
புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும்
சக்கரமும் போலத் தலை சுழன்று தொக்க விசை

#121
வற்றும் பொழுது விழ வாசுகியைச் சேடனைப்
பற்றும் கருடப் பதாகையான் சுற்றிய தன்
**மும்முரசு

#122
குன்றில் அரியும் கரியும் கொண்மூவும் நின்று அதிர
முன்றில் அதிர் மும்முரசினான் என்றும்
**ஆணை

#123
அவன் அசையாமல் அணு அசையாது என்னும்
தவ நிலை ஆணை தரித்தோன் நவநீதம்

@4 அழகரின் பெருமை உரைத்தல் (124-139)
** இறைவனின் உடல்

#124
மேனியில் சிந்தியதும் மென் கையில் ஏந்தியதும்
வானில் உடுவும் மதியும் எனத் தான் உண்டோன்

#125
செங்கதிரும் வெண்கதிரும் என்னத் திருவிழியும்
சங்கமும் சக்கரமும் தாங்கினோன் அங்கண் உலகு
**உலகும் இறைவனும்

#126
உண்ட கனி வாயான் உறையும் திருவயிற்றான்
கொண்டபடி ஈன்ற கொப்பூழான் மண்டி

#127
அளந்த திருத்தாளான் அன்று ஏற்ற கையான்
விளைந்த பொருள் காட்டும் மெய்யான் உளம்கொண்டு

#128
இடந்த மருப்பினான் ஏந்து முதுகான்
படம்-தனில் வைத்த மணிப் பாயான் தொடர்ந்த வினை

#129
முட்டு அறுக்கும் தன் நாமம் முன்னித் திருநாமம்
இட்டவருக்கு ஈவோன் இகபரங்கள் எட்டெழுத்தால்

#130
பிஞ்சு எழுத்தாய் நையும் பிரமலிபி என்னும் பேர்
அஞ்சு எழுத்தை மூன்று எழுத்தது ஆக்குவோன் வஞ்சம் அறத்

#131
தங்கள் குன்று எங்கிருந்தும் சங்கரன் ஆதியோர்
நங்கள் குன்று ஈது என்ன வரு நண்புடையோன் அங்கு ஓர்

#132
வயமுனிக்குக் கண் இரண்டும் மாற்றினோன் போற்றும்
கயமுனிக்குக் கண் கொடுத்த கண்ணன் நயம் உரைக்கின்

#133
அஞ்சு_படையோன் எனினும் அஞ்சாமல் அங்கையில் வா
சம்செய்யும் உத்யோகச் சக்கரத்தான் எஞ்சாது

#134
விண் நலம் கொள் பொன் இலங்கை வெற்றியாய்க் கொண்டாலும்
மண்ணில் அங்கைத் தானமாய் வாங்குவோன் பண் இலங்கும்

#135
ஏர் அணி பொன் அரங்கத்து எம்பிரான் போல் எவர்க்கும்
தார் அணி நல்காத தம்பிரான் கார் அணியும்

#136
செம் கைத்தலத்திடத்தும் தென்மதுரை ஊரிடத்தும்
சங்கத்து அழகன் எனும் தம்பிரான் எங்கும்

#137
திருப்பாது உதைக்கும் செழும் கருடனுக்கும்
திருப்பாதுகைக்கும் அரசு ஈந்தோன் விருப்ப முகம்

#138
சந்திரன் ஆன சவுந்திரவல்லியுடன்
சுந்தரராசன் எனத் தோன்றினோன் அந்தம்

#139
சொல நலம் கொள் தோள் அழகால்
சுந்தரத்தோளன் மலையலங்காரன் என் வந்தோன் பலவிதமாய்

@5 அழகரை வணங்கி பேறு பெற்றவர் (140-142)
**வழிபட்டவர்கள்

#140
நண்ணிய தெய்வத்தை நரர் எல்லாம் பூசித்த
புண்ணியமே தன்னை வந்து பூசித்தோன் கள் நனைய

#141
பாத கமலம் பரவு மலயத்துவசன்
பாதக மலம் பறித்திடுவோன் கோது_இல்

#142
அரணாம் புயங்கள் உறும் அம்பரீடற்குச்
சரணாம்புயங்கள் தருவோன் திருநாளில்

@6 கோடைத் திருவிழாபற்றி விவரித்தல் (143-165)
** கோடைத் திருவிழா

#143
சந்தக் கா ஊடு தவழ்ந்து வரும் தென்றல் கால்
மந்தக்கால் ஆக மருவுங்கால் சிந்திக்கும்

#144
வாடைத் துளி போல் மலர்த் தேன் துளி துளிக்கும்
கோடைத் திருவிழாக் கொண்டு அருளி நீடு விடைக்
**மதுரை

#145
குன்றில் உற்ற வெள்ளம் கொழுந்து ஓடி வையை-தனில்
சென்று எதிர்த்து நிற்பது எனச் சீபதியோர் அன்று எதிர்த்துக்

#146
கூடலின் கூடல் எனும் கூடல் திருநகரில்
ஏடு அலர் தாரான் எழுந்தருளி ஆடலுடன்
**தல்லாகுளம்

#147
கல் ஆகு உளங்கள் கரையப் பணிவார் முன்
தல்லாகுளம் வந்து சார்ந்து அருளி மெல்ல
**வையை

#148
நரலோகம் மீது நடந்து வருகின்ற
பரலோகம் என்று சிலர் பார்க்கச் சுரலோகத்து

#149
இந்த்ர விமானம் இது என்றும் இது சோமச்
சந்த்ர விமானமே தான் என்றும் முந்திய அட்

#150
டாங்க விமானம் அவை இரண்டும் எனவே
தாங்கு விமானம்-தனில் புகும் முன் தீங்கு_இலார்

#151
உன்னி விமானம் உரத்து எடுக்கும் போது
அனந்தன் சென்னி மணி ஒன்று தெறித்து எழுந்தது என்னவே

#152
உம்பரில் வெய்யோன் உதயம்செயக் குதிரை
நம்பிரான் ஏறி நடந்தருளி அம்பரத்தில்

#153
கோடி கதிரோனும் கோடி பனி மதியும்
ஓடி நிரையா உதித்த என நீடிய

#154
பொன் கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்து இலங்க
வில் கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்பச் சொற்கத்து

#155
இயலும் கரியும் அதில் எற்றும் முரசும்
புயலும் உருமேறும் போலக் கயல் இனத்தை

#156
அள்ளும் திரை வையை ஆறுள் பரந்து நர
வெள்ளம் கரை கடந்து மீதூர வள்ளல்

#157
திருத்தகு மேகம் போல் செல்லுதலால் நீர் தூம்
துருத்தி மழை போல் சொரியக் கருத்துடனே

#158
வாட்டம் அற வந்து வரம் கேட்கும் அன்பருக்குக்
கேட்ட வரம் ஊறும் கிணறு போல் நாட்டமுடன்

#159
காணிக்கை வாங்கி அன்பர் கை கோடி அள்ளி இடும்
ஆணிப்பொன் கொப்பரை முன்னாக வரக் காணில்

#160
புரந்தரற்கு நேர் இது என்று போற்றி இசைப்ப ஓர் ஆ
யிரம் திருக்கண் வையை நதி எய்தி உரம் தரித்த
**வண்டியூர் மண்டபம்

#161
வார் மண்டு கொங்கை மனம் போல் விலங்கு வண்டி
யூர் மண்டபத்தில் உவந்து இருந்து சீர் மண்டு

#162
மாயனுக்கு வாகனமாய் வா என்று சேடனைத்தான்
போய் அழைக்க வெய்யோன் புகுந்திடலும் தூயோன்

#163
மருளப் பகலை மறைத்தவன் இப்போது
இருளைப் பகல் செய்தான் என்னத் தெருளவே

#164
அங்கிக் கடவுளும் வந்து அன்பருடன் ஆடுதல் போல்
திங்கள் கடவுள் சேவிப்பது போல் கங்குல்

#165
கரதீபமும் வாணக் காட்சியும் காண
வர தீப ரூபமாய் வந்த திருமால்

@7 தலைவி அழகரைக் கண்டு காமுற்றது பற்றி உரைத்தல் (166-171)
**தலைவி அழகரைக் காணல்

#166
அவனி பரிக்கும் அனந்தாழ்வான் மீது
பவனிவரக் கண்டு பணிந்தேன் அவன் அழகில்

#167
பின்னழகு முன்னழகாம் பேரழகைக் காணும் முன்னே
முன்னழகைக் கண்டே நான் மோகித்தேன் பின்னழகு

#168
தானே கண்டாலும் தனக்குத் துயர் வரும் என்று
ஏனோரை நோக்கி எழுந்து அருள ஆனோன்

#169
விமலத் திருமுகமும் மென் மார்பில் மேவும்
கமலத் திரு முகமும் கண்டேன் அமலன்

#170
அரவணையான் என்பதும் உண்டு அண்ணல் அரன் போல
இரவு அணையான் என்பதும் உண்டு ஏனும் பரவைத்

#171
திருவணையான் என்று தினம் செப்புவது பொய் என்று
உருவு அணையும் மாதர்க்கு உரைத்தேன் மரு அணையும்

@8 அழகர் காதலால் துயர் செய்வதாய்க் குற்றம் சாட்டுதல் (172-184)
** தலைவி அழகரிடம் தன் நிலை உரைத்தல்

#172
செம் கரத்தில் அன்று திருடிய வெண்ணெய் போலச்
சங்கு இருக்க என் சங்குதான் கொண்டீர் கொங்கை

#173
மலை அருவி நீர் உமக்கு மாலிருஞ்சோலைத்
தலை அருவி நீர் தானோ சாற்றீர் விலை இலாப்

#174
பொன் கலை ஒன்று இருந்தால் போதாதோ அன்று புனை
வற்கலையிலே வெறுப்பு வந்ததோ நல் கலைதான்

#175
ஆரம் சேர் கொங்கைக்கு அளித்தது அறியீரோ
சோரம் திரும்பத் தொடுத்தீரோ ஈரம் சேர்

#176
நூலாடையாம் எங்கள் நுண் ஆடைதாம் உமக்குப்
பாலாடை ஆமோ பகருவீர் மால் ஆகி

#177
மொய்த்து இரையும் எங்கள் மொழி கேளீர் பாற்கடலில்
நித்திரைதான் வேகவதி நீரில் உண்டோ இத் தரையில்

#178
பொங்கு நிலா வெள்ளம் பொருந்திற்றோ பாற்கடல்தான்
அங்கு நிலாது உம்மோடு அணைந்ததோ கங்குல் எனும்

#179
ஆனை கெசேந்திரன் ஆகில் அதன் மேல் வரு வன்
மீனையும் விட்டு விடலாமோ கானச்

#180
சதிரிளமாதர்-தமக்கு இரங்குவீர் நெஞ்சு
அதிர் இளமாதர்க்கு இரங்க ஒணாதோ முதிர் கன்றைக்

#181
கொட்டத்து வெண் பால் குனிந்து கறப்பார் முலையில்
விட்டுக் கறப்பதையும் விட்டீரோ கிட்டப் போய்

#182
மென் பால் தெறித்த வியன் முலையைப் பால்குடம் என்று
அன்பால் எடுத்தது அறியீரோ மின்_போல்வார்

#183
செவ் இதழின் மேலே தெறித்த வெண்ணெய் உண்பது போல்
அவ் இதழை உண்டது அயர்த்தீரோ செவ்வி தழை

#184
குன்று அன்று எடுத்தீர் குளிரும் அமுதம் கடைந்தீர்
சென்று அன்று பாம்பின் நடம்செய்தீரே என்றுஎன்று

@9 அழகர் சோலைமலை திரும்பிவிட்டார் எனக் கூறல் (185-187)
** தேனூரில் இருந்தருளிய பின் அழகர் சோலைமலை திரும்புதல்

#185
கொண்ட பஞ்சாயுதன் மேல் கொள்கை பெறத் தேனூர்
மண்டபம் சார்வாய் வலம்கொண்டு பண்டை

#186
விரசையுடன் வைகுந்த வீடும் இது என்னப்
புரசைமலை காத்தோன் புகுந்தான் வரிசை

#187
உபசாரம் கொண்டு அருளி ஓர் சிவிகை மீது
தபசு ஆர் அம் சீபதியைச் சார்ந்தான் இபம் உண்ட

@10 கிளியிடம் தலைவி தன் விரக வேதனை உரைத்தல் (188-209)
** தலைவியின் காதல் வேதனை

#188
வெள்ளில்கனி ஆனேன் வேதனை ஈன்றவன்தான்
உள்ளில் கனியானே ஊர்ந்து வரும் பிள்ளைமதி

#189
செவ்வை மதியோ திரைக் கடல் வாய் சிறிதோ
கொவ்வை இதழார் மொழிதான் கூற்று அன்றோ எவ்வமுறும்

#190
கால்_தேரினானும் ஒரு காலன் அன்றோ உருக்கி
ஊற்றாத சேமணியும் ஒன்று உண்டோ வேற்றுக்

#191
கிளையோடு வாடிக்கிடந்தாலும் சுட்டுத்
துளையாக் குழலும் உண்டோ சொல்லாய் கிளி_அரசே
**கிளியை வேண்டல்

#192
என் கூடு பொன் கூடும் இந்த நிறத்தினால்
உன் கூடும் என் கூடும் ஒன்று காண் என் கூட்டில்

#193
மாங்கனி உண்டு வளம் சேர் செழும் கொவ்வைத்
தீம் கனி உண்டு ஆசினி உண்டு பாங்கில்

#194
குழையும் மனம் உண்டு குழம்பிய பால் உண்டு
உழையே தெளி பாலும் உண்டு விழைவு அறிந்து

#195
ஊட்டுவேன் உன்னை உருப் பசியாய் என்ன நலங்கு
ஆட்டுவேன் பட்டாடையால் துடைப்பேன் கூட்டில்

#196
அரசாய் இருத்தி ஆலத்தியெடுத்துப்
புரை தீர் நறையும் புகைப்பேன் அருகே

#197
இளவெயிலில் காய்வித்து எடுத்து ஒருகால் முத்தி
வளை பயில் கையின் மேல் வைத்துத் துளபம் அணி

#198
ஈசன் திருநாமம் எல்லாம் என் போல் உனக்குப்
பாசம் தொலையப் பயிற்றுவேன் பேசு என்றே
** பிறபொருட்கள் தூதுக்குப் பயன்படா என்றல்

#199
ஈடுபட்ட வெள்ளை எகினத்தைத் தூதுவிட்டால்
சூடுபட்டார் துணிந்து சொல்வாரோ கூடு கட்டி

#200
அன்பாய் வளர்த்த தாயார்க்கு உதவாக் கோகிலம்தான்
என்பால் அருள்வைத்து இயம்புமோ தன் பேர்

#201
அரி என்று சொன்னால் அளி என்று சொல்லும்
வரி வண்டு பேசி வருமோ விரகம்செய்

#202
வன் கால திக்கின் மலை-வாய் இருக்கின்ற
தென்காலும் என் காதல் செப்புமோ பொன் காதல்

#203
வண்டு அலையும் தாரான் முன் மாதரை எல்லாம் தூற்றும்
கொண்டலையும் தூதுவிடக் கூடுமோ உண்ட

#204
படி ஏழும் காக்கும் பரம் கருணையான் முன்
கொடியோரும் போவாரோ கூறாய் அடியார்கள்
** கிளியின் தகுதி

#205
அங்கு இருந்தால் கீர்த்தனம்செய்வாய் அடுத்த நாச்சியார்
பங்கு இருந்தால் கையில் பறந்து இருப்பாய் எங்கிருந்து

#206
வந்தாய் என்றால் மாலிருஞ்சோலையினிலிருந்து
எந்தாய் உனைத் தொழ வந்தேன் என்பாய் அந்த

#207
சவுந்தரவல்லி எனும் தற்சொரூபிக்கும்
உவந்து அலர் சூடி_கொடுத்தாளுக்கும் சிவந்த

#208
கடுகு இலேசம் கோபம் காணாமல் என் மால்
வடுகிலே சொல்வாய் வகையாய் அடு கிலே

#209
சம் கெடுப்பாய் சங்கு எடுக்கும் சச்சிதானந்தர் அணி
கொங்கு எடுக்கும் தாமம் கொடுவருவாய் அங்கு அடுக்கின்

@11 அழகர் இருக்கும் இடம் (210-213)
** இறைவன் இருக்குமிடத்தின் அடையாளம்

#210
ஓர் உகத்தில் ஆல் ஆகி ஓர் உகத்திலே அரசாய்
ஓர் உகத்திலே வில்லுவம் ஆகி ஓர் உகத்தில்

#211
புத்திரதீபமுமாய்ப் புங்கவர்க்கு ஆறாம் தருவாய்ச்
சத்தி தரும் ஓர் தரு உண்டு மொய்த்த

#212
ஒரு கோடி கா உண்டு ஒரு கோடி ஆறு உண்டு
ஒரு கோடி பூம் சுனையும் உண்டு திறம் சேர்

#213
அறம் காக்கும் யோகிகள் போல் அல்லும் பகலும்
உறங்காப்புளிதானும் உண்டு திறம் சேர்

@12 அழகர் அவையில் இருப்போர் (214-229)

#214
பிதா மகனோடு உறையும் பெற்றி விளங்கப்
பிதாமகன் வந்து புகழ் பேசச் சதாகால

#215
மும் திரமாய் வாழும் உபேந்திரன் அங்கு இல்லை என
இந்திரனார் வந்து அங்கு இனிது இறைஞ்சப் பிந்திய

#216
தம்பியர் மூவருக்கும் தானே அரசு ஈந்த
நம்பி திருத்தாளை நம்பினோர் வெம் பிறவித்

#217
தேகம் பவித்திரம் செய் சீரங்கராசபட்டர்
ஆகும் ப்ரசித்தராம் அர்ச்சகரும் மோகமுறும்

#218
கங்குல் மல மாயை கன்மம் விளங்காமல்
செம் கையில் ஓங்கு திரிதண்டு ஏந்திச் சங்கை அறச்

#219
செய்யும் திருமாலிருஞ்சோலைச் சீயர் என
வையம் விளங்க வரும் மா தவரும் பொய் இல்லா

#220
ஞான தீபம் காட்டி நன்னெறி காட்டு என்று ஒர் உபமான
தீபம் காட்டி வந்து நின்று மேனாளில்

#221
முத்தமிழ்க்குப் பின் போவார் முன் போகப் பின்போன
அத்தன் திருமலை ஆண்டானும் பத்தியினால்

#222
வையம் கார்வண்ணனையே வாழ்த்த வரும் தோழப்
பையங்கார் என்னும் ஆசாரியரும் மெய் அன்பாம்

#223
சிட்டர்கள் தேவர்களாகத் தினம் பரவும்
பட்டர்களாம் வேதபாரகரும் விட்டு எனும்

#224
சோதி கருணைக் கடல் தோன்றிக் கரசர
ணாதியுடன் வந்த அமுதாரும் மூதுலகில்

#225
தண் அம் துழாய் அழகன் தங்கும் திருமலை போல்
நண்ணும் திருமலைநம்பிகளும் உள் நின்ற

#226
மாலை மலை சோலைமலையையே நம்புதலால்
சோலைமலைநம்பி என்னும் தூயோரும் மேலை

#227
விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம்
தரும் சடகோபநம்பிதாமும் பெரும் சீர்

#228
வரி எழுதிக் கற்ற திருமாலிருஞ்சோலைப்
பிரியர் எனும் சீர்கருணப்பேரும் கிரியில் இருந்து

#229
ஆளும் கடவுள் அருளே துணையாய் எந்
நாளும் சீகாரியம்செய்நாயகரும் தாள் வணங்க

@13 தூது உரைக்க வேண்டிய வேளை (230-235)

#230
ஆர்த்த திருவோலக்கமாய் இருப்பன் அப்பொழுது உன்
வார்த்தை திருச்செவியில் வாயாது சேர்த்தியிலே

#231
மெல்ல எழுந்தருளும் வேளை பார்த்து அவ் வேளை
சொல்ல எழுந்து ஒருவர் சொல்லாமுன் வெல்லும் மதன்

#232
அம்பு அலர் தூற்ற அடர்த்து வரும் முன்னே
வம்பலர் தூற்ற வரும் முன்னே கும்பமுனி

#233
வாயில் நுரை அடங்க வந்த கடல் அடங்கத்
தாயின் உரை அடங்கத் தத்தையே நீ உரையாய்

#234
உன் பேர் சுவாகதம் என்று ஓதுகையால் உனக்கும்
அன்பு ஏர் சுவாகதம் உண்டாகும் காண் முன்பு ஒருநாள்

#235
கோசலை கையில் குருசில் உனைப் புகழ்ந்து
பேசின் உனைப் புகழ்ந்து பேசார் ஆர் நேசமுடன்

@14 மாலை வாங்கிவர வேண்டல் (236-239)

#236
எம்முடைய மாலை இரு புயத்து மாலை கேள்
உம்முடைய மாலை உதவீரேல் அம்மை திருக்

#237
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதை ஆர் மாலை-தனைத் தம்-மின் என்பாய் நீதி

#238
அடுப்பவர் யாவர்க்கும் ஆடித்தியாகம்
கொடுப்பவன் இல்லை என்று கூறான் தடுக்கும்

#239
அரு மாலை நீக்கும் அழகன் புயத்து
மரு மாலை நீ வாங்கி வா
***