அபிராமி அந்தாதி

** அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி

#0 கணபதி காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனிக் கணபதியே நிற்க கட்டுரையே

#1 ஞானமும் நல்வித்தையும் பெற
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க் கமலை
துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத் துணையே

#2 பிரிந்தவர் ஒன்று சேர
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர்ப் பூம்
கணையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே

#3 குடும்பக் கவலையிலிருந்து விடுபட
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே

#4 உயர் பதவிகளை அடைய
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடை மேல்
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே

#5 மனக்கவலை தீர
பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

#6 மந்திர சித்தி பெற
சென்னியது உன் பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே

#7 மலையென வரும் துன்பம் பனியென நீங்க
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலது ஓர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே

#8 பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள் மலர்த் தாள் என் கருத்தனவே

#9 அனைத்தும் வசமாக
கருத்தன எந்தை-தன் கண்ணன வண்ணக் கனக வெற்பின்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செம் கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே

#10 மோட்ச சாதனம் பெற
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதா மறையின்
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே

#11 இல்வாழ்க்கையில் இன்பம் பெற
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வான் அந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தான் அந்தம் ஆன சரணாரவிந்தம் தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே

#12 தியானத்தில் நிலைபெற
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

#13 வைராக்கிய நிலை எய்த
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே

#14 தலைமை பெற
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் அளியே

#15 பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

#16 முக்காலமும் உணரும் திறன் உண்டாக
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

#17 கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
அதிசயமான வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்-தம்
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே

#18 மரண பயம் நீங்க
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொன் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே

#19 பேரின்ப நிலையடைய
வெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களி நின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே

#20 வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

#21 அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
மங்கலை செம் கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பொன் கொடியே

#22 இனிப் பிறவா நெறி அடைய
கொடியே இள வஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே

#23 எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்-தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

#24 நோய்கள் விலக
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

#25 நினைத்த காரியம் நிறைவேற
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே

#26 சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே

#27 மனநோய் அகல
உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பத யுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே

#28 இம்மை மறுமை இன்பங்கள் அடைய
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புது மலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே

#29 எல்லா சித்திகளும் அடைய
சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா
சத்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே

#30 அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே

#31 மறுமையில் இன்பம் உண்டாக
உமையும் உமை_ஒரு_பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

#32 துர்மரணம் வராமலிருக்க
ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேர்_இழையே

#33 இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவி முலை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே

#34 சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
வந்தே சரணம்புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைம் தேன் அலங்கல் பரு மணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே

#35 திருமணம் நிறைவேற
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்-
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழுப் பொருளே

#36 பழைய வினைகள் வலிமை பெற
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

#37 நவமணிகளைப் பெற
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின்
பைக்கே அணிவது பல் மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே

#38 வேண்டியதை வேண்டியவாறு அடைய
பவளக் கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல்
தவளத் திரு நகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடி இடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

#39 கருவிகளைக் கையாளும் வலிமை பெற
ஆளுகைக்கு உன்தன் அடித் தாமரைகள் உண்டு அந்தகன்-பால்
மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே

#40 பூர்வ புண்ணியம் பலன்தர
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே

#41 நல்லடியார் நட்புப் பெற
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூம் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

#42 உலகினை வசப்படுத்த
இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே

#43 தீமைகள் ஒழிய
பரிபுரச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரி புர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை
எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே

#44 பிரிவுணர்ச்சி அகல
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர்-தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டுசெய்தே

#45 உலகோர் பழியிலிருந்து விடுபட
தொண்டுசெய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய் தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே

#46 நல்நடத்தையோடு வாழ
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப் பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே

#47 யோகநிலை அடைய
வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே

#48 உடல் பற்று நீங்க
சுடரும் கலை மதி துன்றும் சடை முடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே

#49 மரணத் துன்பம் இல்லாதிருக்க
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக் கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே

#50 அம்பிகையை நேரில் காண
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

#51 மோகம் நீங்க
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்-தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி-தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே

#52 பெருஞ்செல்வம் அடைய
வையம் துரகம் மத கரி மா மகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே

#53 பொய்யுணர்வு நீங்க
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில்வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே

#54 கடன் தீர
இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர்-தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்-மின்களே

#55 மோனநிலை எய்த
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அரு மறைக்கு
முன்னாய் நடு எங்கும் ஆய் முடிவு ஆய முதல்வி-தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே

#56 யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப் பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே

#57 வறுமை ஒழிய
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்-பால்
செய்ய பசும் தமிழ்ப் பாமாலையும் கொண்டுசென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே

#58 மனஅமைதி பெற
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புய முலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே

#59 பிள்ளைகள் நல்லவர்களாக வளர
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவ நெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே

#60 மெய்யுணர்வு பெற
பாலினும் சொல் இனியாய் பனி மா மலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே

#61 மாயையை வெல்ல
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கைச்சியே

#62 எத்தகைய அச்சமும் அகல
தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செம் கைக் கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே

#63 அறிவு தெளிவோடு இருக்க
தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே

#64 பக்தி பெருக
வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன் ஒருபொழுதும் திருமேனி பிரகாசம் இன்றிக்
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே

#65 ஆண்மகப்பேறு அடைய
ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப் பெருமாற்குத் தடக் கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே

#66 கவிஞராக
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடிச் செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு
வில்லவர்-தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே

#67 பகைவர்கள் அழிய
தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே

#68 நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும்
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாமசுந்தரி சீறடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே

#69 சகல சௌபாக்கியங்களும் அடைய
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

#70 நுண் கலைகளில் சித்தி பெற
கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி-தன் பேரழகே

#71 மனக்குறைகள் தீர
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே

#72 பிறவிப் பிணி தீர
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கில்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே

#73 குழந்தைப் பேறு உண்டாக
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

#74 தொழிலில் மேன்மை அடைய
நயனங்கள் மூன்று உடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே

#75 விதியை வெல்ல
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

#76 தனக்கு உரிமையானதைப் பெற
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே

#77 பகை அச்சம் நீங்க
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

#78 சகல செல்வங்களையும் அடைய
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல்
அப்பும் களப அபிராமவல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழும் கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே

#79 கட்டுகளில் இருந்து விடுபட
விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ் வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே

#80 பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட
கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என்-கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே

#81 நன்னடத்தை உண்டாக
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்று இலேன் என்-கண் நீ வைத்த பேர் அளியே

#82 மன ஒருமைப்பாடு அடைய
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும்
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே

#83 ஏவலர் பலர் உண்டாக
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக் கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே

#84 சங்கடங்கள் தீர
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண் நூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

#85 துன்பங்கள் நீங்க
பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே

#86 ஆயுத பயம் நீங்க
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணி_மொழியே

#87 செயற்கரிய செய்து புகழ் பெற
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே

#88 எப்போதும் அம்பிகை அருள் பெற
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்-தம்
புரம் அன்று எரியப் பொருப்பு வில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப் பாகம் சிறந்தவளே

#89 யோக சித்தி பெற
சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்ற அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

#90 கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
வருந்தா வகை என் மனத் தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே

#91 அரசாங்கச் செயலில் வெற்றி பெற
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன்
புல்லிய மென் முலை பொன் அனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்து எழ வெண் பகடு ஊரும் பதம் தருமே

#92 மனநிலை பக்குவமடைய
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்தன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே

#93 உள்ளத்தில் ஒளி உண்டாக
நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே

#94 மனநிலை தூய்மையாக
விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து
சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே

#95 மன உறுதி பெற
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாத குணக்
குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே

#96 எங்கும் பெருமை பெற
கோமளவல்லியை அல்லி அம் தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகல கலா மயில்-தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே

#97 புகழும் அறமும் வளர
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்-தம் கோன்
போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொரு படைக் கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

#98 வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்குக்
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே

#99 அருள் உணர்வு வளர
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடைக் கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே

#100 அம்பிகையை மனத்தில் காண
குழையைத் தழுவிய கொன்றை அம் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரி அம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே

#101 நூற்பயன்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அம் குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே
**