*திருவருட்பா &7 கீர்த்தனைப் பகுதி @1 நாமாவளிகள் #1 சிவசிவ கஜ முக கண நாதா சிவ கண வந்தித குண நீதா. #2 சிவசிவ சிவசிவ தத்துவ போதா சிவகுரு பரசிவ சண் முக நாதா #3 அம்பலத்து அரசே அரு_மருந்தே ஆனந்தத் தேனே அருள் விருந்தே. #4 பொது நடத்து அரசே புண்ணியனே புலவர் எலாம் புகழ் கண்ணியனே. #5 சிவசிவ சிவசிவ சின்மய தேஜா சிவ சுந்தர குஞ்சித நடராஜா #6 மலை தரு மகளே மட மயிலே மதி முக அமுதே இளம் குயிலே. #7 ஆனந்தக் கொடியே இளம்_பிடியே அற்புதத் தேனே மலை மானே. #8 படன விவேக பரம்பர வேதா நடன சபேச சிதம்பர நாதா. #9 அரி பிரமாதியர் தேடிய நாதா அரகர சிவசிவ ஆடிய பாதா. #10 அந்தண அங்கண அம்பர போகா அம்பல நம்பர அம்பிகை பாகா. #11 அம்பர விம்ப சிதம்பர நாதா அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா. #12 தந்திர மந்திர யந்திர பாதா சங்கர சங்கர சங்கர நாதா. #13 கருணாநிதியே சபாபதியே கதி மா நிதியே பசுபதியே. #14 சபாபதி பாதம் தபோப்ரசாதம் தயாநிதி போதம் சதோதய வேதம். #15 கனக சிதம்பர கங்கர புரஹர அனக பரம்பர சங்கர ஹரஹர. #16 சகல கலாண்ட சராசர காரண சகுண சிவாண்ட பராபர பூரண. #17 சிதம் பிரகாசா பரம் பிரகாசா சிதம்பரேசா சுயம் பிரகாசா. #18 ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரஞ் ஜோதி ஜோதி ஜோதி அருள் ஜோதி ஜோதி ஜோதி சிவம். #19 அருள் பிரகாசம் பரப் பிரகாசம் அகப் பிரகாசம் சிவப் பிரகாசம். #20 நடப் பிரகாசம் தவப் பிரகாசம் நவப் பிரகாசம் சிவப் பிரகாசம். #21 போகம் சுக போகம் சிவ போகம் அது நித்தியம் ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம். #22 இக்கரை கடந்திடில் அக்கரையே இருப்பது சிதம்பர சர்க்கரையே. #23 என் உயிர் உடம்பொடு சித்தம்-அதே இனிப்பது நடராஜ புத்தமுதே. #24 நல மங்கலம் உறும் அம்பல நடனம் அது நடனம் பல நன்கு அருள் சிவ சங்கர படனம் அது படனம். #25 ஐயர் திரு_சபை ஆடகமே ஆடுதல் ஆனந்த நாடகமே. #26 கனகாகரபுரஹர சிரகரதர கருணாகர பரசுரவர ஹரஹர. #27 கனக_சபாபதி பசுபதி நவபதி அனக உமாபதி அதிபதி சிவபதி. #28 உத்தர ஞான சிதம்பரமே சித்தி எலாம் தரும் அம்பரமே. #29 கருணாம்பர வரகர சிவபவபவ அருணாம்பரதர ஹரஹர சிவசிவ. #30 அம்பலவா சிவ மா தேவா வம்பு அல வா இங்கு வாவாவா. #31 நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே நல்ல எலாம் செய வல்லவனே. #32 ஆனந்த நாடகம் கண்டோமே பர மானந்த போனகம் கொண்டோமே. #33 வேதாந்த பராம்பர சவுதய நாதாந்த நடாம்பர ஜயஜய. #34 ஏகாந்த சர்வேச சமோதம யோகாந்த நடேச நமோநம. #35 ஆதாம்பர ஆடக அதிசய பாதாம்புஜ நாடக ஜயஜய. #36 போதாந்த புரேச சிவாகம நாதாந்த நடேச நமோநம. #37 சகள உபகள நிட்கள நாதா உகள சததள மங்கள பாதா. #38 சந்ததமும் சிவ சங்கர பஜனம் சங்கிதம் என்பது சற்சன வசனம். #39 சங்கர சிவசிவ மா தேவா எங்களை ஆட்கொள வாவாவா. #40 அரகர சிவசிவ மா தேவா அருள் அமுதம் தர வாவாவா. #41 சத பரி சத உப சத மத வித பவ சிதபரி கதபத சிவசிவ சிவசிவ. #42 அரகர வர சுப கரகர பவபவ சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ. #43 ஜால கோல கனகாம்பர சாயக காலகால வனகாம்பர நாயக. #44 நடன சிகாமணி நவ மணியே திடன் அக மா மணி சிவ மணியே. #45 நடமிடும் அம்பல நல் மணியே புடமிடு செம்பு அல பொன் மணியே. #46 உவட்டாது சித்திக்கும் உள் அமுதே தெவிட்டாது தித்திக்கும் தெள் அமுதே. #47 நடராஜ வள்ளலை நாடுதலே நம் தொழிலாம் விளையாடுதலே. #48 அருள் பொது நடமிடு தாண்டவனே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவனே. #49 நடு நாடி நடு நாடி நடமாடு பதியே நடராஜ நடராஜ நடராஜ நிதியே. #50 நடுநாடியொடு கூடி நடமாடும் உருவே நடராஜ நடராஜ நடராஜ குருவே. #51 நடு நாடி இடை நாடி நடமாடும் நலமே நடராஜ நடராஜ நடராஜ பலமே. #52 ஆயவாய நேய ஞேய மாய ஞாயவாதியே தூயவாய காய தேய தோய மேய ஜோதியே. #53 ஆதவாத வேத கீத வாதவாத வாதியே சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே. #54 அங்க சங்க மங்கை பங்க ஆதி ஆதி ஆதியே துங்க புங்க அங்க லிங்க ஜோதி ஜோதி ஜோதியே. #55 அத்த முத்த அத்தமுத்த ஆதி ஆதி ஆதியே சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே. #56 அஞ்சல் அஞ்சல் என்று வந்து என் நெஞ்சு அமர்ந்த குழகனே வஞ்ச நஞ்சம் உண்ட கண்ட மன்றுள் நின்ற அழகனே. #57 தொண்டர் கண்டுகண்டு மொண்டுகொண்டு உள் உண்ட இன்பனே அண்டர் அண்டம் உண்ட விண்டு தொண்டு மண்டும் அன்பனே. #58 கந்த தொந்த பந்த சிந்து சிந்த வந்த காலமே எந்தஎந்த சந்தம் முந்தும் அந்த வந்த கோலமே. #59 என்றும் என்றின் ஒன்று மன்றுள் நன்று நின்ற ஈசனே ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்று அது என்ற தேசனே. #60 எட்ட எட்டி ஒட்ட ஒட்டும் இட்டது இட்ட கீர்த்தியே அட்ட வட்டம் நட்டம் இட்ட சிட்ட வட்ட மூர்த்தியே. #61 சேர் இகார சார வார சீர் அகார ஊரனே ஓர் உகார தேர தீர வார வார தூரனே. #62 வெய்ய நொய்ய நைய நைய மெய் புகன்ற துய்யனே ஐயர் ஐய நையும் வையம் உய்ய நின்ற ஐயனே. #63 பாச நாச பாப நாச பாத தேச ஈசனே வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே. #64 வர கேசாந்த மகோதய காரிய பர பாசாந்த சுகோதய சூரிய. #65 பளித தீபக சோபித பாதா லளித ரூபக ஸ்தாபித நாதா. #66 அனிர்த கோப கருணாம்பக நாதா அமிர்த ரூப தருணாம்புஜ பாதா. #67 உபல சிரதல சுப கண வங்கண சுபல கரதல கண பண கங்கண. #68 அம்போருக பத அரகர கங்கர சம்போ சிவசிவ சிவசிவ சங்கர. #69 நடராஜ மாணிக்கம் ஒன்று அதுவே நண்ணுதல் ஆணி_பொன் மன்றதுவே. #70 நடராஜ பலம் அது நம் பலமே நடமாடுவது திரு_அம்பலமே. #71 அபய வரத கரதல புரி காரண உபய பரத பத பர பரிபூரண. #72 அகர உகர சுபகர வர சினகர தகர வகர நவ புர சிர தினகர. #73 வகர சிகர தினகர சசிகர புர மகர அகர வர புர ஹர ஹரஹர. #74 உரிய துரிய பெரிய வெளியில் ஒளியில் ஒளி செய் நடனனே பிரிய அரிய பிரியம் உடைய பெரியர் இதய படனனே. #75 அகில புவன உயிர்கள் தழைய அபயம் உதவும் அமலனே அயனும் அரியும் அரனும் மகிழ அருளும் நடன விமலனே. #76 அகர உகர மகர வகர அமுத சிகர சரணமே அபர சபர அமன சமன அமல நிமல சரணமே. தகர ககன நடன கடன சகள அகள சரணமே சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே. #77 அனக வனஜ அமித அமிர்த அகல அகில சரணமே அதுல அனத அசுத அசல அநில அனல சரணமே. தனக கனக சபைய அபய சரத வரத சரணமே சதுர சதர சகச சரித தருண சரண சரணமே. #78 உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே. இளகும் இதய_கமலம் அதனை இறைகொள் இறைவ சரணமே இருமை ஒருமை நலமும் அருளும் இனிய சமுக சரணமே. #79 அடியும் நடுவும் முடியும் அறிய அரிய பெரிய சரணமே அடியர் இதய வெளியில் நடனம்-அது செய் அதிப சரணமே. ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே. #80 அறிவுள் அறியும் அறிவை அறிய அருளும் நிமல சரணமே அவசமுறு மெய் அடியர் இதயம் அமரும் அமல சரணமே. எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே. #81 நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே நினையும் எனையும் ஒருமை புரியும் நெறியில் நிறுவு சரணமே. வனையும் மதுர அமுத உணவு மலிய உதவு சரணமே மருவு சபையில் நடன வரத வருக வருக சரணமே. #82 சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா. #83 வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா. #84 நினைக்கில் நெஞ்சம் இனிக்கும் என்ற நிருத்த மன்றில் ஒருத்தனே நினைக்கும் அன்பர் நிலைக்க நின்று பொருத்துகின்ற கருத்தனே. #85 மயங்கி நெஞ்சு கலங்கி நின்று மலங்கினேனை ஆண்டவா வயங்கி நின்று துலங்கும் மன்றில் இலங்கு ஞான தாண்டவா. #86 களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே. #87 தடுத்த மலத்தைக் கெடுத்து நலத்தைக் கொடுத்த கருணைத் தந்தையே தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே. #88 எச்ச நீட்டி விச்சை காட்டி இச்சையூட்டும் இன்பனே அச்சம் ஓட்டி அச்சு நாட்டி வைச்சு உள் ஆட்டும் அன்பனே. #89 பொது நிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொது நலம் உடையது பொது நடமிடுவது அது பரம் அது பதி அது பொருள் அது சிவம் அரஅர அரஅர அரஅர அரஅர. #90 நவ நிலை தருவது நவ வடிவு உறுவது நவ வெளி நடுவது நவநவ நவம் அது சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ. #91 நான் சொன்ன பாடலும் கேட்டாரே ஞான சிதம்பர நாட்டாரே. #92 பலத்தில் தன் அம்பலத்தில் பொன்_அம்பலத்தில் துன்னும் நலத்தனே பலத்தில் பன்னும் பரத்தில் துன்னும் பரத்தில் மன்னும் குலத்தனே. #93 நீ என் அப்பன் அல்லவா நினக்கும் இன்னம் சொல்லவா தாயின் மிக்க நல்லவா சர்வ சித்தி வல்லவா. #94 ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே. #95 சூது மன்னும் இந்தையே சூடல் என்ன விந்தையே கோது விண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே. #96 அன்பு முந்து சிந்தையே அம்பலம் கொள் விந்தையே இன்பம் என்பன் எந்தையே எந்தை தந்தை தந்தையே. #97 ஞான சித்திபுரத்தனே நாத சத்தி பரத்தனே வானம் ஒத்த தரத்தனே வாத வித்தை வரத்தனே. #98 இனித் துயர் பட_மாட்டேன் விட்டேனே என் குரு மேல் ஆணையிட்டேனே. #99 இனிப் பாடு பட_மாட்டேன் விட்டேனே என் அப்பன் மேல் ஆணை இட்டேனே. #100 சன்மார்க்கம் நல் மார்க்கம் நல் மார்க்கம் சக மார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம். #101 நடராஜர் பாட்டே நறும் பாட்டு ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு. #102 சிதம்பரப் பாட்டே திரு_பாட்டு ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெரு_பாட்டு. #103 அம்பலப் பாட்டே அருள் பாட்டு அல்லாத பாட்டு எல்லாம் மருள் பாட்டு. #104 நாத பரம்பரனே பர நாத சிதம்பரனே நாத திகம்பரனே தச நாத சுதந்தரனே. #105 ஞான நடத்தவனே பர ஞானி இடத்தவனே ஞான வரத்தவனே சிவஞான புரத்தவனே. #106 ஞான சபாபதியே மறை நாடு சதாகதியே தீன தயாநிதியே பர தேவி உமாபதியே. #107 நகப் பெரும் சோதி சுகப் பெரும் சோதி நவப் பெரும் சோதி சிவப் பெரும் சோதி அகப் பெரும் சோதி நடப் பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி. #108 உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவப் பெருவாதி அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி. #109 தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு. #110 சந்தம் இயன்று அந்தணர் நன்று சந்ததம் நின்று வந்தனம் என்று சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு. #111 பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே. #112 புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே நரையாத வரமே நடியாத நடமே நடராஜ நிதியே நடராஜ நிதியே. #113 சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே நவ நீத மதியே நவ நாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே. #114 தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே நவ வார நடமே சுவகார புடமே நடராஜ பரமே நடராஜ பரமே. #115 துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே நதி ஆர நிதியே அதிகார பதியே நடராஜ குருவே நடராஜ குருவே. #116 வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே நயமான உரையே நடுவான வரையே நடராஜ துரையே நடராஜ துரையே. #117 பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே திரு_நடனம் பர குரு நடமே சிவ நடம் அம்பர நவ நடமே. #118 அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி. #119 அமல சபாபதி அபய சபாபதி அமுத சபாபதி அகில சபாபதி நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி. #120 நீடிய வேதம் தேடிய பாதம் நேடிய கீதம் பாடிய பாதம் ஆடிய போதம் கூடிய பாதம் ஆடிய பாதம் ஆடிய பாதம். #121 சாக்கிய வேதம் தேக்கிய பாதம் தாக்கிய ஏதம் போக்கிய பாதம் சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் தூக்கிய பாதம் தூக்கிய பாதம். #122 ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம். #123 சஞ்சிதம் வீடும் நெஞ்சு இத பாதம் தம் சிதம் ஆகும் சஞ்சித பாதம் கொஞ்சு இதம் மேவும் ரஞ்சித பாதம் குஞ்சித பாதம் குஞ்சித பாதம். #124 எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் எண்ணியவாறே நண்ணிய பேறே புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன் புண்ணியவானே புண்ணியவானே. #125 தொத்திய சீரே பொத்திய பேரே துத்திய பாவே பத்திய நாவே சத்தியம் நானே நித்தியன் ஆனேன் சத்தியவானே சத்தியவானே. #126 எம் புலப் பகையே எம் புலத்து உறவே எம் குலத் தவமே எம் குலச் சிவமே அம்பினில் கனலே அந்தணர்க்கு இறையே அம்பலத்து அரசே அம்பலத்து அரசே. #127 இன்பு உடைப் பொருளே இன் சுவைக் கனியே எண்_குணச் சுடரே இந்து அகத்து ஒளியே அன்பு உடைக் குருவே அம்புயற்கு இறையே அம்பலத்து அமுதே அம்பலத்து அமுதே. #128 பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே. #129 அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே. #130 தரு வளர் நிழலே நிழல் வளர் சுகமே தடம் வளர் புனலே புனல் வளர் நலனே திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே. #131 உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே. #132 கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே. #133 மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே. #134 இயல் கிளர் மறையே மறை கிளர் இசையே இசை கிளர் துதியே துதி கிளர் இறையே செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே. #135 புரை அறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே. #136 நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே. #137 புத்தம் தரும் போதா வித்தம் தரும் தாதா நித்தம் தரும் பாதா சித்தம் திரும்பாதா. #138 அம்பல_வாணனை நாடினனே அவன் அடியாரொடும் கூடினனே. தம்பதமாம் புகழ் பாடினனே தந்தன என்று கூத்தாடினனே. #139 நாதாந்த நாட்டுக்கு நாயகரே நடராஜரே சபாநாயகரே. #140 நான் சொல்லும் இது கேளீர் சத்தியமே நடராஜ எனில் வரும் நித்தியமே. #141 நல்லோர் எல்லார்க்கும் சபாபதியே நல் வரம் ஈயும் தயாநிதியே. #142 நடராஜர்-தம் நடம் நல் நடமே நடம் புரிகின்றதும் என்னிடமே. #143 சிவகாமவல்லிக்கு மாப்பிள்ளையே திருவாளன் நான் அவன் சீர்ப் பிள்ளையே. #144 சிவகாமவல்லியைச் சேர்ந்தவனே சித்து எல்லாம் செய்திடத் தேர்ந்தவனே. #145 இறவா_வரம் தரு நல் சபையே என மறை புகழ்வது சிற்சபையே. #146 என் இரு கண்ணுள் இருந்தவனே இறவாது அருளும் மருந்தவனே. #147 நனம் தலை வீதி நடந்திடு சாதி நலம் கொளும் ஆதி நடம் புரி நீதி தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி. #148 அஞ்சோடு அஞ்சு அவை ஏலாதே அங்கோடு இங்கு எனல் ஆகாதே அந்தோ வெம் துயர் சேராதே அஞ்சோகம் சுகம் ஓவாதே தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா. #149 அம்பலத்து ஒரு நடம் உரு நடமே அரு நடம் ஒரு நடம் திரு_நடமே எம் பலத்து ஒரு நடம் பெரு நடமே இதன் பரத்திடு நடம் குரு நடமே. #150 ஓத அடங்காது மடங்காது தொடங்காது ஓகை ஒடுங்காது தடுங்காது நடுங்காது சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி. #151 ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி. #152 வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி. #153 கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம். #154 எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம். #155 பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர. #156 அம்பல_வாணர்-தம் அடியவரே அருள் அரசாள் மணி முடியவரே. #157 கையறவு இலாது நடுக் கண் புருவப் பூட்டு கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு. #158 அருள்_பெரும்_சோதியைக் கண்டேனே ஆனந்தத் தெள் அமுது உண்டேனே. இருள் பெரும் மாயையை விண்டேனே எல்லாம் செய் சித்தியைக் கொண்டேனே. #159 கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே கனகசபையான் என்று ஊதூது சங்கே பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே பூசை பலித்தது என்று ஊதூது சங்கே. #160 பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே. #161 தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே ஏம சபையான் என்று ஊதூது சங்கே. #162 அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே. #163 என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே பொன் உருத் தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே. #164 சிவம் ஆக்கிக் கொண்டான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே. #165 தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே. #166 நாத முடியான் என்று ஊதூது சங்கே ஞானசபையான் என்று ஊதூது சங்கே பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே பலித்தது பூசை என்று ஊதூது சங்கே. #167 என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே. #168 இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே. #169 கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே. #170 எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே. #171 கருணாநிதியர் என்று ஊதூது சங்கே கடவுள் அவனே என்று ஊதூது சங்கே அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே அம்பலச் சோதி என்று ஊதூது சங்கே. #172 தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே தலைவன் அவனே என்று ஊதூது சங்கே பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே. #173 ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே தத்துவச் சோதி என்று ஊதூது சங்கே. #174 பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே. #175 சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்புத் துன்பம் எலாம் இன்றோடே போச்சு. #176 ஐயர் அருள் சோதி அரசாட்சி எனது ஆச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவித் துன்பம் எலாம் இன்றோடே போச்சு. #177 ஈசன் அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம் ஏறிக் கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம் தேசுறும் அ மாட நடுத் தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம். #178 மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி மேவும் அதன் மேல் உலகில் வீறும் அரசாட்சி சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி செப்பல் அரிதாம் இதற்கு என் அப்பன் அருள் சாட்சி. #179 துரிய மலை மேல் உளது ஓர் சோதி வள நாடு தோன்றும் அதில் ஐயர் நடம் செய்யும் மணி வீடு தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு. #180 சொல்லால் அளப்ப அரிய சோதி வரை மீது தூய துரியப் பதியில் நேய மறை ஓது எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது. #181 சிற்பொதுவும் பொற்பொதுவும் நான் அறியலாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவது என் பேச்சு இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு என் பிறவித் துன்பம் எலாம் இன்றோடே போச்சு. #182 வலது சொன்ன பேர்களுக்கு வந்தது வாய்த் தாழ்வு மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு வலது புஜம் ஆட நம்-பால் வந்தது அருள் வாழ்வு மற்று நமைச் சூழ்ந்தவர்க்கும் வந்தது நல் வாழ்வு. #183 அம்பலத்தில் எங்கள் ஐயர் ஆடிய நல் ஆட்டம் அன்பொடு துதித்தவருக்கு ஆனது சொல்லாட்டம் வம்பு சொன்ன பேர்களுக்கு வந்தது மல்லாட்டம் வந்த தலையாட்டம் இன்றி வந்தது பல் ஆட்டம். #184 நாத்திகம் சொல்கின்றவர்-தம் நாக்கு முடை நாக்கு நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு. #185 எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத என்றோடு இந்தனம் நன்றாம் அங்கண எம் கோ மங்கள எஞ்சா நெஞ்சக சந்தேகம் கெட நந்தா மந்திர சந்தோடம் பெற வந்தாள் அந்தண சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர. #186 நஞ்சோ என்றிடு நம் கோபம் கெட நன்றே தந்தனை நந்தா மந்தண நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர. #187 சந்திர தர சிர சுந்தர சுர வர தந்திர நவ பத மந்திர புர நட சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ. #188 வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #189 ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #190 தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #191 ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #192 ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே நாக நடோதயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #193 ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே நாடக நாயகனே நான் அவன் ஆனவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #194 ஆரியனே சிவனே ஆரணனே பவனே ஆலயனே அரனே ஆதரனே சுரனே நாரியனே வரனே நாடியனே பரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #195 ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #196 தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #197 ஆடிய நாடகனே ஆல் அமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே. #198 விரை சேர் சடையாய் விடையாய் உடையாய் விகிர்தா விபவா விமலா அமலா வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா விம்ப சிதம்பரனே. அரைசே குருவே அமுதே சிவமே அணியே மணியே அருளே பொருளே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம் பதியே. #199 உருவே உயிரே உணர்வே உறவே உரையே பொருளே ஒளியே வெளியே ஒன்றே என்றே நன்றே தந்தாய் உம்பரின் அம்பரனே. அருவே திருவே அறிவே செறிவே அதுவே இதுவே அடியே முடியே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம் பதியே. #200 வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கள ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர. #201 பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர. #202 நாத பால சுலோசன வர்த்தன ஜாத ஜால விமோசன நிர்த்தன. #203 சிற்சபை அப்பனை உற்றனனே சித்தி எலாம் செயப்பெற்றனனே. #204 பரம மந்த்ர சகளாகன கரணா படன தந்த்ர நிகமாகம சரணா. #205 அனந்த கோடி குணகர கர ஜொலிதா அகண்ட வேத சிரகர தர பலிதா. #206 பரிபூரண ஞான சிதம்பர பதி காரண நாத பரம்பர. #207 சிவ ஞான பதாடக நாடக சிவ போத பரோகள கூடக. #208 சகல லோக பரகாரக வாரக சபள யோக சர பூரக தாரக. #209 சத்வ போதக தாரண தன்மய சத்ய வேதக பூரண சின்மய. #210 கருணாநிதியே குண நிதியே கதி மா நிதியே கலா நிதியே. தருணாபதியே சிவபதியே தனி மா பதியே சபாபதியே. #211 அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி. #212 சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி. #213 ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி. #214 கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி கூத்தாடுகின்றோம் என்று சின்னம் பிடி அடி முடியைக் கண்டோம் என்று சின்னம் பிடி அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி. #215 அப்பர் வருகின்றார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்வதற்கு என்று சின்னம் பிடி செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி. #216 தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி. #217 வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடுத் தெரிந்து சின்னம் பிடி சாகாத தலை அறிந்து சின்னம் பிடி சாகாத கல்வி கற்றுச் சின்னம் பிடி. #218 மீதான நிலை ஏறிச் சின்னம் பிடி வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி வேதாகமம் கடந்து சின்னம் பிடி வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி. #219 பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி. #220 சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி இத் தாரணியில் என்று சின்னம் பிடி இதுவே தருணம் என்று சின்னம் பிடி. #221 அருள் சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு. ** கண்ணிகள் @2. பாங்கிமார் கண்ணி #1 அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே அவர் ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் பாங்கிமாரே #2 ஆடுகின்ற சேவடி மேல் பாங்கிமாரே மிக ஆசை கொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே #3 இன்ப வடிவாய்ச் சபையில் பாங்கிமாரே நட மிட்டவர் மேல் இட்டம்வைத்தேன் பாங்கிமாரே #4 ஈன உடற்கு இச்சைவையேன் பாங்கிமாரே நட னேசர்-தமை எய்தும் வண்ணம் பாங்கிமாரே #5 உத்தமர் பொன்_அம்பலத்தே பாங்கிமாரே இன்ப உரு ஆகி ஓங்குகின்றார் பாங்கிமாரே #6 ஊன உலகைக் கருதேன் பாங்கிமாரே மன்றில் உத்தமருக்கு உறவு ஆவேன் பாங்கிமாரே #7 கற்பனை எல்லாம் கடந்தார் பாங்கிமாரே என்றன் கற்பனைக்கு உட்படுவாரோ பாங்கிமாரே #8 கண்டிலர் நான் படும் பாடு பாங்கிமாரே மூன்று கண்_உடையார் என்பார் ஐயோ பாங்கிமாரே #9 கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம் கரையார் என்னளவிலே பாங்கிமாரே #10 கள்ளம் ஒன்றும் அறியேன் நான் பாங்கிமாரே என்னைக் கைவிடவும் துணிவாரோ பாங்கிமாரே #11 கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமாரே இன்று கைநழுவவிடுவாரோ பாங்கிமாரே #12 கண்டவர் எல்லாம் பழிக்கப் பாங்கிமாரே என்றன் கன்னியழித்தே ஒளித்தார் பாங்கிமாரே #13 காமனைக் கண்ணால் எரித்தார் பாங்கிமாரே என்றன் காதலைக் கண்டு அறிவாரோ பாங்கிமாரே #14 காவலை எல்லாம் கடந்து பாங்கிமாரே என்னைக் கைகலந்த கள்ளர் அவர் பாங்கிமாரே #15 காண விழைந்தேன் அவரைப் பாங்கிமாரே கொண்டு காட்டுவாரை அறிந்திலேன் பாங்கிமாரே #16 கிட்ட வர வேண்டும் என்றார் பாங்கிமாரே நான் கிட்டும் முன்னே எட்ட நின்றார் பாங்கிமாரே #17 கின்னரம் கேள் என்று இசைத்தார் பாங்கிமாரே நான் கேட்பதன் முன் சேட்படுத்தார் பாங்கிமாரே #18 கிள்ளையைத் தூதா விடுத்தேன் பாங்கிமாரே அது கேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே #19 கீத வகை பாடிநின்றார் பாங்கிமாரே அது கேட்டு மதி மயங்கினேன் பாங்கிமாரே #20 கீழ்மை குறியாமல் என்னைப் பாங்கிமாரே மனக் கேண்மை குறித்தாரே அன்று பாங்கிமாரே #21 கீடம்_அனையேன் எனையும் பாங்கிமாரே அடிக் கே அடிமைகொண்டார் அன்று பாங்கிமாரே #22 குற்றம் எல்லாம் குணமாகப் பாங்கிமாரே கொள்ளும் கொற்றவர் என் கொழுநர் காண் பாங்கிமாரே #23 குற்றம் ஒன்றும் செய்து அறியேன் பாங்கிமாரே என்னைக் கொண்டு குலம் பேசுவாரோ பாங்கிமாரே #24 குஞ்சிதப் பொன் பாதம் கண்டால் பாங்கிமாரே உள்ள குறை எல்லாம் தீரும் கண்டீர் பாங்கிமாரே #25 கூற்று உதைத்த பாதம் கண்டீர் பாங்கிமாரே நங்கள் குடிக்கு எல்லாம் குல_தெய்வம் பாங்கிமாரே #26 கூற அரிய பதம் கண்டு பாங்கிமாரே களி கொண்டு நிற்க விழைந்தேன் நான் பாங்கிமாரே #27 கூடல் விழைந்தேன் அவரைப் பாங்கிமாரே அது கூடும் வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே @3. வெண்ணிலாக் கண்ணி #1 தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே #2 நாத முடி மேல் இருந்த வெண்ணிலாவே அங்கே நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே #3 சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே நானும் தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே #4 இரா_பகல் இல்லா இடத்தே வெண்ணிலாவே நானும் இருக்க எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே #5 தேசு நிறமாய் நிறைந்த வெண்ணிலாவே நானும் சிவமயம்-அதாய் விழைந்தேன் வெண்ணிலாவே #6 போத நடு ஊடு இருந்த வெண்ணிலாவே மலப் போதம் அற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே #7 ஆரும் அறியாமல் இங்கே வெண்ணிலாவே அரு ளாளர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே #8 அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே எங்கள் ஐயர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே #9 வேத முடி மேல் இருந்த வெண்ணிலாவே மல வேதை உள ஏது சொல்லாய் வெண்ணிலாவே #10 குண்டலி-பால் நின்று இலங்கும் வெண்ணிலாவே அந்தக் குண்டலிப் பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே #11 ஆதி அந்தம் என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த ஆதி அந்தம் ஆவது என்ன வெண்ணிலாவே #12 வித்து இலாமலே விளைந்த வெண்ணிலாவே நீ-தான் விளைந்த வண்ணம் ஏது சொல்லாய் வெண்ணிலாவே #13 முப்பொருளும் ஒன்று அது என்பார் வெண்ணிலாவே அந்த மூன்றும் ஒன்றாய் முடிந்தது என்ன வெண்ணிலாவே #14 நான் அதுவாய் நிற்கும் வண்ணம் வெண்ணிலாவே ஒரு ஞான நெறி சொல்லு கண்டாய் வெண்ணிலாவே #15 ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே என்னை நான் அறியச் சொல்லு கண்டாய் வெண்ணிலாவே #16 வாசி வாசி என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த வாசி என்ன பேசு கண்டாய் வெண்ணிலாவே #17 ஐந்தலைப் பாம்பு ஆட்டுகின்றார் வெண்ணிலாவே அவர் அம்பலத்தில் நின்றது என்ன வெண்ணிலாவே #18 ஓர் எழுத்தில் ஐந்து உண்டு என்பார் வெண்ணிலாவே அது ஊமை எழுத்து ஆவது என்ன வெண்ணிலாவே #19 அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர் ஆடுகின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே #20 அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர் ஆடும் வகை எப்படியோ வெண்ணிலாவே #21 அணுவில் அணுவாய் இருந்தார் வெண்ணிலாவே எங்கும் ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே #22 அண்ட பகிரண்டம் எல்லாம் வெண்ணிலாவே ஐயர் ஆட்டம் என்று சொல்வது என்ன வெண்ணிலாவே #23 ஆம்பரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே என்னை ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே @4. முறையீட்டுக் கண்ணி #1 பற்று நினைத்து எழும் இப் பாவி மனத் தீமை எலாம் உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #2 எள் ஏதம் நின்னிடத்தே எண்ணுகின்ற-தோறும் அதை உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #3 துன்னுகின்ற தீமை நின்-பால் சூழ்ந்து உரைக்கும்-தோறும் அதை உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #4 எள்ளுகின்ற தீமை நின்-பால் எண்ணுகின்ற-தோறும் அதை உள்ளுகின்ற போதில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #5 மிக்க நிலை நிற்க விரும்பேன் பிழைகள் எலாம் ஒக்க நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #6 கோகோ எனும் கொடியேன் கூறிய குற்றங்கள் எலாம் ஓஓ நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #7 பித்து மனக் கொடியேன் பேசியவன் சொல்லை எலாம் ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #8 தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமை எலாம் ஓர்ந்து நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #9 நிறுத்தி அறியேன் நிகழ்த்தியவன் சொல்லை உறுத்தி நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #10 தோன்றி விரியும் மனத் துட்டனேன் வன்_பிழையை ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா #11 எண்ணி நினைப்பது இன்றி நினை எள்ளி உரைத்ததனை உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா #12 கடையவனேன் வைத கடும் சொல் நினைக்கும்-தோறும் உடையவனே என்னுடைய உள்ளம் உருகுதடா #13 பித்தன் எனத் தீமை பிதற்றியது எண்ணும்-தோறும் உத்தமனே என்னுடைய உள்ளம் உருகுதடா #14 மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில் ஒன்றை நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா #15 வெருவாமல் ஐயோ விளம்பிய சொல் எல்லாம் ஒருவா நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா #16 புலைக் கொடியேன் புன் சொல் புகன்றது எண்ணும்-தோறும் உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா #17 ஈடு இல் பெரும் தாயில் இனியாய் நின் தண் அருள்-பால் ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா #18 புரைத்த மன வஞ்சப் புலையேன் திரு_அருளை உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா #19 நாடி நினையா நவை_உடையேன் புன் சொல் எலாம் ஓடி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா #20 வெப்பு இல் கருணை விளக்கு_அனையாய் என் பிழையை ஒப்பி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா #21 அஞ்சல் என்றாய் நின்-பால் அடாத மொழி பேசியதை அஞ்சி நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #22 மெய் ஓர்சிறிதும் இலேன் வீண் மொழியால் ஊடியதை ஐயோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #23 இத் தாரணிக்குள் எங்கும் இல்லாத தீமை செய்தேன் அத்தா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #24 பொய்யால் விரிந்த புலை மனத்தேன் செய் பிழையை ஐயா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #25 இப் பாவி நெஞ்சால் இழுக்கு உரைத்தேன் ஆங்கு அதனை அப்பா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #26 எண்ணாக் கொடுமை எலாம் எண்ணி உரைத்தேன் அதனை அண்ணா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #27 வெம் மால் மனத்து வினையேன் புகன்றது எலாம் அம்மா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #28 எச் சோடும் இல்லாது இழிந்தேன் பிழைகள் எலாம் அச்சோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #29 வந்து ஓடி நை மனத்து வஞ்சகனேன் வஞ்சம் எலாம் அந்தோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #30 ஓவாக் கொடியேன் உரைத்த பிழைகள் எலாம் ஆஆ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #31 கரை சேர ஒண்ணாக் கடையேன் பிழையை அரைசே நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #32 மருள்_உடையேன் வஞ்ச மனத் தீமை எல்லாம் அருள்_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #33 ஈண்டவனேன் வன் சொல் இயம்பியதை என்னுடைய ஆண்டவனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #34 வற்புதனேன் வஞ்ச மனப் பிழையை மன்று ஆடும் அற்புதனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #35 துன்பு_உடையேன் புன் மொழிகள் தூற்றியதை எவ்வுயிர்க்கும் அன்பு_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா #36 கொதிக்கின்ற வன் மொழியால் கூறியதை ஐயோ மதிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #37 சினம்கொண்ட போது எல்லாம் செப்பிய வன் சொல்லை மனம்கொள்ளும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #38 செய்த நன்றி எண்ணாச் சிறியவனேன் நின் அருளை வைத்து எண்ணும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #39 பொய்த்த மனத்தேன் புகன்ற கொடும் சொற்கள் எலாம் வைத்து நினைக்கும்-தோறும் வாளிட்டு அறுக்குதடா #40 பொங்குகின்ற தீமை புகன்றது எலால் எண்ணிஎண்ணி மங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #41 ஊடுகின்ற சொல்லால் உரைத்ததனை எண்ணிஎண்ணி வாடுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #42 உயங்குகின்றேன் வன் சொல் உரைத்ததனை எண்ணி மயங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #43 சொல் விளைவு நோக்காதே சொன்னது எலாம் எண்ணு-தொறும் வல்_வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா #44 மேல் விளைவு நோக்காதே வேறு சொன்னது எண்ணு-தொறும் மால் வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா #45 விஞ்சகத்தால் அந்தோ விளம்பியதை எண்ணு-தொறும் வஞ்சகத்தேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா #46 விலங்குகின்ற நெஞ்ச விளைவை எண்ணும்-தோறும் மலங்குகின்றேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா #47 தூய்மை இலா வன் மொழியால் சொன்ன எலாம் எண்ணு-தொறும் வாய்மை_இலேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா #48 கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி வலிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #49 நீட்டுகின்ற வஞ்ச நெடும்சொல் எலாம் நெஞ்சகத்தே மாட்டுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #50 பொருந்துகின்ற வஞ்சப் புதுமை எண்ணி ஐயோ வருந்துகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #51 வெருவிக்கும் வஞ்ச வெறும் சொல் எலாம் நெஞ்சில் வருவிக்கும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா #52 ஊடும் போது உன்னை உரைத்த எலாம் நாய்_அடியேன் நாடும் போது எல்லாம் என் நாடி நடுங்குதடா #53 வாய்க் கடையா வன் சொல் வழங்கிய என் வன் மனத்தை நாய்க் கடையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா #54 கன்றி உரைத்த கடும் சொல் கடுவை எலாம் நன்றி_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா #55 புன்மையினால் வன் சொல் புகன்ற புலைத் தன்மை எலாம் நன்மை_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா #56 ஊன் எண்ணும் வஞ்ச உளத்தால் உரைத்த எலாம் நான் எண்ணும்-தோறும் என்றன் நாடி நடுங்குதடா #57 வஞ்சனையால் அஞ்சாது வன் சொல் புகன்ற எலாம் நஞ்சு_அனையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா #58 கோண நெடு நெஞ்சக் குரங்கால் குதித்த எலாம் நாணம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா #59 ஊனம் இலா நின்னை உரைத்த கொடும் சொல்லை எலாம் ஞானம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா #60 எற்றே மதி_இலியேன் எண்ணாது உரைத்ததனைச் சற்றே நினைத்திடினும் தாது கலங்குதடா #61 இனி ஏது செய்வேன் இகழ்ந்து உரைத்த சொல்லைத் தனியே நினைத்திடினும் தாது கலங்குதடா #62 நாய்_அனையேன் எண்ணாமல் நலங்கியவன் சொல்லை எலாம் தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா #63 நிற்கு உருகா வஞ்ச நினைவால் நினைத்த எலாம் சற்குருவே எண்ணு-தொறும் தாது கலங்குதடா #64 வெம் நரகில் வீழும் விளைவால் விளம்பியதை என் அரசே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா #65 நன்கு அறியேன் வாளா நவின்ற நவை அனைத்தும் என் குருவே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா #66 ஆவது அறியாது அடியேன் இகழ்ந்த கொடும் பாவம் நினைக்கில் பகீரென்று அலைக்குதடா #67 வந்திப்பு அறியேன் வழங்கியவன் சொல்லை எலாம் சிந்திக்கில் உள்ளே திடுக்கிட்டு அழுங்குதடா #68 குற்றம் நினைத்த கொடும் சொல் எலாம் என் உளத்தே பற்ற நினைக்கில் பயமாய் இருக்குதடா #69 எள்ளுகின்ற தீமை எடுத்துரைத்தேன் ஆங்கு அதனை விள்ளுகின்ற-தோறும் உள்ளம் வெந்து வெதும்புதடா @5. திருவடிக் கண்ணி #1 மின்_இடையாள் காண விளங்கும் மன்றில் ஆடுகின்றாய் என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா #2 வன்ன அமுதே இன்பம் மலிய மன்றில் ஆடுகின்றாய் என் அமுதே உன்றன் இணை அடி-தான் நோவாதா #3 நண்ணிய மெய் அன்பர் நயக்க மன்றில் ஆடுகின்றாய் புண்ணியனே உன்றனது பொன் அடி-தான் நோவாதா #4 அன்பர் இன்பம் கொள்ள நடம் அம்பலத்தே ஆடுகின்றாய் இன்பு உருவாம் உன்றன் இணை அடி-தான் நோவாதா #5 நூல் உணர்வாம் நுண்ணுணர்வின் நோக்க நடம் ஆடுகின்றாய் மால் அறியா உன்றன் மலர்ப் பாதம் நோவாதா #6 எள்ளல் அற அம்பலத்தே இன்ப நடம் ஆடுகின்றாய் வள்ளலே உன்றன் மலர்_அடி-தான் நோவாதா #7 சைவம் நிலைத்துத் தழைத்து ஓங்க ஆடுகின்றாய் தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா #8 எல்லாரும் இன்புற்றிருக்க நடம் ஆடுகின்றாய் வல்லாரின் வல்லாய் மலர்_பாதம் நோவாதா #9 அவமே கழிந்து இன்பம் அன்பர் கொள ஆடுகின்றாய் சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா #10 தற்பரமாம் மன்றில் தனி நடனம் ஆடுகின்றாய் சிற்பரமே உன்றன் திரு_மேனி நோவாதா #11 வில்வ வேர் மாலை மிளிர்ந்து அசைய ஆடுகின்றாய் செல்வமே உன்றன் திரு_மேனி நோவாதா @6. பேரன்புக் கண்ணி #1 கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன் அற்புதச் சிற்றம்பலத்தில் அன்பு வைத்தேன் ஐயாவே #2 ஈடணைகள் நீக்கி நமக்கு இன்பு அளிக்கும் என்று மன்றில் ஆடும் திரு_அடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே #3 நான் அந்தம் எய்தா நலம் பெறவே எண்ணி மன்றில் ஆனந்த நாடகத்துக்கு அன்பு வைத்தேன் ஐயாவே #4 வாடல் அறச் சாகா_வரம் கொடுக்கும் என்று மன்றில் ஆடல் அடிப் பொன்_மலர்க்கே அன்பு வைத்தேன் ஐயாவே #5 பொற்பு உறவே பொன்றாப் பொருள் அளிக்கும் என்று மன்றில் அற்புதப் பொன் சேவடிக்கே அன்பு வைத்தேன் ஐயாவே #6 ஈனம் மறுத்து என்றும் இறவாமை நல்கும் என்றே ஞான மணி மன்றிடத்தே நண்பு வைத்தேன் ஐயாவே #7 ஓர் துணை நின் பொன் அடி என்று உன்னுகின்றேன் உன்னை அன்றி ஆர் துணையும் வேண்டேன் என் அன்பு உடைய ஐயாவே #8 பூசைசெய்து பெற்ற உன்றன் பொன் அடி மேல் அன்றி அயல் ஆசை ஒன்றும் இல்லை எனக்கு அன்பு உடைய ஐயாவே #9 இச்சை நின் மேல் அன்றி எனக்கு எள்ளளவும் வேறும் ஒன்றில் இச்சை இலை நின் ஆணை என் அருமை ஐயாவே #10 எப்படி நின் உள்ளம் இருக்கின்றது என்னளவில் அப்படி நீ செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே #11 எவ்வண்ணம் நின் கருத்து இங்கு என்னளவில் எண்ணியதோ அவ்வண்ணம் செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே #12 தேசுறு நின் தண் அருளாம் தெள் அமுதம் கொள்ள உள்ளே ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே #13 மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே #14 நாசம் இலா நின் அருளாம் ஞான மருந்து உண்ண உள்ளே ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே ** ஆடற் பாடல்கள் @7. சிலதா ஸம்வாதம் #1 தண் மதி ஒண் முகப் பெண்மணியே உன்னைத் தான் கொண்ட நாயகர் ஆரேடி அண்மையில் பொன் அணி அம்பலத்து ஆடல் செய் ஐயர் அமுதர் அழகரடி #2 செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன் செங்கை பிடித்தவர் ஆரேடி அங்கு அயலார் அன்று பொன்_அம்பலத்து எங்கள் ஆனந்தத் தாண்டவ ராஜனடி #3 கன்னல் சுவை மொழி மின்_இடையாய் உன்னைக் கன்னியழித்தவர் ஆரேடி உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய் உத்தமர் ஆனந்த சித்தரடி #4 தீமை இலாத பெண் மா மயிலே உன்னைச் சேர்ந்து கலந்தவர் ஆரேடி தாமம் முடிக்கு அணிந்து அம்பலத்தே இன்பத் தாண்டவம் செய்யும் சதுரரடி #5 அன்ன நடைப் பெண்கள் ஆர்_அமுதே உன்னை அன்பில் புணர்ந்தவர் ஆரேடி துன்னல் உடையினர் அம்பலத்தே நின்ற தூய திரு_நடராயரடி #6 கார் அளகப் பெண் சிகாமணியே உன்றன் கற்பை அழித்தவர் ஆரேடி பேர்_அளவைக் கடந்து அம்பலத்தே நின்ற பித்தர் பரானந்த நித்தரடி @8. வினா உத்தரம் #1 ஆகமமும் ஆரணமும் அரும் பொருள் என்று ஒருங்குரைத்த ஏக உரு ஆகி நின்றார் இவர் ஆர் சொல் தோழி மாக நதி முடிக்கு அணிந்து மணி மன்றுள் அனவரத நாக மணி மிளிர நடம் நவில்வார் காண் பெண்ணே #2 அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு அனுபவமாகின்றது என்னடி தாயே தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே #3 அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு அனுபவமாகின்றது என்னடி தாயே செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே @9. நடேசர் கொம்மி #1 * பல்லவி கொம்மி அடிப் பெண்கள் கொம்மி அடி இரு கொங்கை குலுங்கவே கொம்மி அடி #2 * அநுபல்லவி நம்மை ஆளும் பொன்_அம்பல_வாணனை நாடிக் கொம்மி அடியுங்கடி பதம் பாடிக் கொம்மி அடியுங்கடி * சரணங்கள் #3 காமம் அகற்றிய தூயன் அடி சிவ காம சவுந்தரி நேயனடி மா மறை ஓது செவ் வாயனடி மணி மன்று எனும் ஞான ஆகாயனடி #4 ஆனந்தத் தாண்டவ ராஜனடி நமை ஆட்கொண்டு அருளிய தேஜனடி வான் அந்த மா மலை மங்கை மகிழ் வடி வாளனடி மணவாளனடி #5 கல்லைக் கனிவிக்கும் சுத்தனடி முடி கங்கைக்கு அருளிய கர்த்தனடி தில்லைச் சிதம்பர சித்தனடி தேவ சிங்கமடி உயர் தங்கமடி #6 பெண் ஒரு பால் வைத்த மத்தனடி சிறு பிள்ளைக் கறி கொண்ட பித்தனடி நண்ணி நமக்கு அருள் அத்தனடி மிக நல்லனடி எல்லாம்_வல்லனடி #7 அம்பலத்து ஆடல் செய் ஐயனடி அன்பர் அன்புக்கு எளிதரும் மெய்யனடி தும்பை முடிக்கு அணி தூயனடி சுயஞ் சோதியடி பரஞ்சோதியடி @10. சண்முகர் கொம்மி #1 குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி துறவர் வணங்கும் புகழாண்டி அவன் தோற்றத்தைப் பாடி அடியுங்கடி #2 மா மயில் ஏறி வருவாண்டி அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி தீமை இலாத புகழாண்டி அவன் சீர்த்தியைப் பாடி அடியுங்கடி #3 பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும் பாவிகள்-தம்மை அடையாண்டி என் இரு கண்கள் அனையாண்டி அவன் ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி #4 வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த வேடர்-தனை எலாம் வென்றாண்டி தீங்கு செய் சூரனைக் கொன்றாண்டி அந்தத் தீரனைப் பாடி அடியுங்கடி. #5 சீர் திகழ் தோகை மயில் மேலே இளஞ் செஞ்சுடர் தோன்றும் திறம் போலே கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள். #6 ஆறு முகங்களில் புன்சிரிப்பும் இரண்டு_ஆறு புயம் திகழ் அற்புதமும் வீறு பரஞ்சுடர் வண்ணமும் ஓர் திரு மேனியும் பாருங்கள் வெள் வளைகாள். #7 ஆனந்தமான அமுதனடி பரமானந்த நாட்டுக்கு அரசனடி தான் அந்தம் இல்லாச் சதுரனடி சிவ சண்முகன் நம் குரு சாமியடி. #8 வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத முடி திகழ் பாதனடி நாத வடிவு கொள் நீதனடி பரநாதம் கடந்த நலத்தனடி. #9 தத்துவத்து உள்ளே அடங்காண்டி பர தத்துவம் அன்றித் துடங்காண்டி சத்துவ ஞான வடிவாண்டி சிவ சண்முக நாதனைப் பாடுங்கடி. #10 சச்சிதானந்த உருவாண்டி பர தற்பர போகம் தருவாண்டி உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த உத்தம தேவனைப் பாடுங்கடி. #11 அற்புத மான அழகனடி துதி அன்பர்க்கு அருள்செய் குழகனடி சிற்பர யோகத் திறத்தனடி அந்தச் சேவகன் கீர்த்தியைப் பாடுங்கடி #12 சைவந் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்தப் பேர் கொண்டு அழைத்தாண்டி பொய் வந்த உள்ளத்தில் போகாண்டி அந்தப் புண்ணியன் பொன்_அடி போற்றுங்கடி. #13 வாசி நடத்தித் தருவாண்டி ஒரு வாசியில் இங்கே வருவாண்டி ஆசு இல் கருணை உருவாண்டி அவன் அற்புதத் தாள்_மலர் ஏத்துங்கடி. #14 இரா_பகல் இல்லா இடத்தாண்டி அன்பர் இன்ப உளம்கொள் நடத்தாண்டி அராப்பளி ஈந்த திடத்தாண்டி அந்த அண்ணலைப் பாடி அடியுங்கடி. #15 ஒன்று இரண்டு ஆன உளவாண்டி அந்த ஒன்று இரண்டு ஆகா அளவாண்டி மின் திரண்டு அன்ன வடிவாண்டி அந்த மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி. @11. பந்தாடல் #1 * பல்லவி ஆடேடி பந்து ஆடேடி பந்து ஆடேடி பந்து ஆடேடி பந்து * சரணங்கள் #2 வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய்த் திசை நோக்கினேன் சீர்த் திகழ் சித்தி ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #3 இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவாப் பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #4 இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவாப் பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டுச் சேர்ந்தது தோழி துன்பாலே அசைந்தது நீக்கி என்னோடே சுத்த சன்மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #5 சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன் உத்தரம் எனும் ஓர் பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #6 தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலைத் தவிர்த்தே எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்கச் சோதி என்று ஓதிய வீதியை விட்டே அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #7 வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி இங்கே களிப்பது நன்று இந்த உலகோ ஏதக் குழியில் இழுக்கும் அதனால் அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #8 சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன் உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன் தவமே புரிகின்றார் எல்லாரும் காணத் தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #9 துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச் சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே எஞ்சாத அருளாலே யான் பெற்றுக்கொண்டேன் இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #10 ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி காரமும் மிகு புளிச் சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #11 துதி செயும் முத்தரும் சித்தரும் காணச் சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞானப் பதி செயும் சித்திகள் பற்பலவாகப் பாரிடை வானிடைப் பற்பல காலம் விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து. #12 பூவாமலே நிதம் காய்த்த இடத்தும் பூ ஆர் மலர் கொண்டு பந்து ஆடாநின்றேன் சாவா_வரம் தந்து வாழ்வாயோ பந்தே சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே. @12. திரு உந்தியார் #1 இரவு விடிந்தது இணை அடி வாய்த்த பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற பால் அமுது உண்டேன் என்று உந்தீபற. #2 பொழுது விடிந்தது பொன்_பதம் வாய்த்த தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற தூயவன் ஆனேன் என்று உந்தீபற. #3 தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன் ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற இன் அமுது உண்டேன் என்று உந்தீபற. #4 துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது இன்பம் கிடைத்தது என்று உந்தீபற எண்ணம் பலித்தது என்று உந்தீபற. #5 ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது தீனம் தவிர்ந்தது என்று உந்தீபற சிற்சபை கண்டேன் என்று உந்தீபற. #6 திரை அற்றுவிட்டது செஞ்சுடர் தோன்றிற்று பரை ஒளி ஓங்கிற்று என்று உந்தீபற பலித்தது பூசை என்று உந்தீபற. #7 உள் இருள் நீங்கிற்று என் உள் ஒளி ஓங்கிற்றுத் தெள் அமுது உண்டேன் என்று உந்தீபற தித்திக்க உண்டேன் என்று உந்தீபற. #8 எந்தையைக் கண்டேன் இடர் எலாம் நீங்கினேன் சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற. #9 தந்தையைக் கண்டேன் நான் சாகா_வரம் பெற்றேன் சிந்தை களித்தேன் என்று உந்தீபற சித்து எலாம் வல்லேன் என்று உந்தீபற. #10 முத்தியைப் பெற்றேன் அ முத்தியினால் ஞான சித்தியை உற்றேன் என்று உந்தீபற சித்தனும் ஆனேன் என்று உந்தீபற. @13. உபதேச வினா #1 வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் நாதாந்தத் திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி. #2 தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும் எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி. #3 சின்மய வெளியிடைத் தன்மயம் ஆகித் திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும் என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி. #4 நவ நிலை மேல் பர நாதத் தலத்தே ஞானத் திரு_நடம் நான் காணல் வேண்டும் மவுனத் திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி. #5 ஆறாறுக்கு அப்புறம் ஆகும் பொதுவில் அது அதுவா நடம் நான் காணல் வேண்டும் ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்து இங்கு இறப்பாயோ தோழி. #6 வகார வெளியில் சிகார உருவாய் மகாரத் திரு_நடம் நான் காணல் வேண்டும் விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி. #7 நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும் சூதாம் தற்போதத்தைச் சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி. #8 அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திரு_நடம் நான் காணல் வேண்டும் செறிவில் அறிவு ஆகிச் செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ந் நெறி வெல்வாயோ தோழி. #9 என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திரு_நடம் நான் காணல் வேண்டும் நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி. #10 துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதித் திரு_நடம் நான் காணல் வேண்டும் கரியைக் கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய்ப் பழி பூண்பாயோ தோழி. #11 தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் கொத்து அறு வித்தைக் குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி @14. நெஞ்சொடு நேர்தல் #1 அடங்கும் நாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே தொடங்கும் நாள் நல்லது அன்றோ நெஞ்சே தொடங்கும் நாள் நல்லது அன்றோ. #2 வல்லவாறு எல்லாமும் வல்லானைக் காணற்கே நல்ல நாள் எண்ணிய நாள் நெஞ்சே நல்ல நாள் எண்ணிய நாள். #3 காலம் கடந்த கடவுளைக் காணற்குக் காலம் கருதுவது ஏன் நெஞ்சே காலம் கருதுவது ஏன். #4 ஆலம் அமுது ஆக்கும் அண்ணலைக் காணற்குக் காலம் கருதுவது ஏன் நெஞ்சே காலம் கருதுவது ஏன். #5 தடை யாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே தடை யாதும் இல்லை கண்டாய் நெஞ்சே தடை யாதும் இல்லை கண்டாய். #6 கையுள் அமுதத்தை வாயுள் அமுது ஆக்கப் பையுள் உனக்கு என்னையோ நெஞ்சே பையுள் உனக்கு என்னையோ. #7 என் உயிர்_நாதனை யான் கண்டு அணைதற்கே உன்னுவது என்னை கண்டாய் நெஞ்சே உன்னுவது என்னை கண்டாய். #8 நான் பெற்ற செல்வத்தை நான் பற்றிக் கொள்ளற்கே ஏன் பற்றுவாய் என்பது ஆர் நெஞ்சே ஏன் பற்றுவாய் என்பது ஆர். #9 தத்துவாதீதத் தலைவனைக் காணற்குத் தத்துவம் உன்னுவது ஏன் நெஞ்சே தத்துவம் உன்னுவது ஏன். #10 ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச் சற்றும் விக்கல் வராது கண்டாய் நெஞ்சே விக்கல் வராது கண்டாய். @15.மங்களம் #1 புங்கவர் புகழும் மாதங்க முகம் திகழ் எங்கள் கணேசராம் துங்கற்கு மங்களம் #2 போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற நீதராம் சண்முகநாதற்கு மங்களம் #3 பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை ஈசர் எமது நடராஜற்கு மங்களம் #4 பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற வாமி எனும் சிவகாமிக்கு மங்களம் #5 புங்கம் மிகும் செல்வம் துங்கம் உறத் தரும் செங்கமலத் திரு_மங்கைக்கு மங்களம் #6 பூண் இலங்கும் தன வாணி பரம்பர வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம் #7 புண்ணியர் ஆகிய கண்ணியராய்த் தவம் பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம் ** வருகைப் பாடல்கள் @16. சண்முகர் வருகை #1 வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே வள்ளி மணாளரே வாரும் புள்ளி மயிலோரே வாரும் #2 சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று சண்முகநாதரே வாரும் உண்மை வினோதரே வாரும் #3 பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று பொன்னான வேலரே வாரும் மின் ஆர் முந்நூலரே வாரும் #4 காகம் கரைந்தது காலையும் ஆயிற்று கண் நுதல் சேயரே வாரும் ஒள் நுதல் நேயரே வாரும் #5 செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர் செங்கல்வராயரே வாரும் எம் குருநாதரே வாரும் #6 அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர் ஆறு முகத்தோரே வாரும் மாறு இல் அகத்தோரே வாரும் #7 சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர் சூரசங்காரரே வாரும் வீர சிங்காரரே வாரும் #8 வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் வேலாயுதத்தோரே வாரும் காலாயுதத்தோரே வாரும் #9 சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர் தேவர்கள் தேவரே வாரும் மூவர் முதல்வரே வாரும் #10 பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் பன்னிரு_தோளரே வாரும் பொன்_மலர்_தாளரே வாரும் #11 மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது மா மயில் வீரரே வாரும் தீமை இல் தீரரே வாரும் #12 தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் சுப்பிரமணியரே வாரும் வைப்பின் அணியரே வாரும் @17. அம்பலவாணர் வருகை #1 * பல்லவி வாரீர் சிதம்பர வல்லி சிவகாம வல்லி மணாளரே வாரீர் மணி மன்ற_வாணரே வாரீர். * சரணங்கள் #2 அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே திரு அம்பல_வாணரே வாரீர் அன்பு_உடையாளரே வாரீர். #3 அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளிய அந்தணரே இங்கு வாரீர் அம்பலத்து ஐயரே வாரீர். #4 அன்பு_உருவானவர் இன்புற உள்ளே அறிவு_உருவாயினீர் வாரீர் அருள்_பெரும்_ஜோதியீர் வாரீர். #5 அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும் அரும் பெருஞ் சித்தரே வாரீர் அற்புதரே இங்கு வாரீர். #6 அம்மையுமாய் எனக்கு அப்பனும் ஆகி என் அன்பனும் ஆயினீர் வாரீர் அங்கணரே இங்கு வாரீர். #7 அல்லல் அறுத்து என் அறிவை விளக்கிய அம்பல_வாணரே வாரீர் செம்பொருள் ஆயினீர் வாரீர். #8 அப்பு அணி பொன் முடி அப்பன் என்று ஏத்தும் மெய் அன்பருக்கு அன்பரே வாரீர் இன்பம் தர இங்கு வாரீர். #9 அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும் அடிக் கமலத்தீரே வாரீர் நடிக்க வல்லீர் இங்கு வாரீர். #10 அண்டர்க்கு அரும் பதம் தொண்டர்க்கு எளிதில் அளித்திட வல்லீரே வாரீர் களித்து என்னை ஆண்டீரே வாரீர். #11 அம்பரமான சிதம்பர நாடகம் ஆட வல்லீர் இங்கு வாரீர் பாடல் உவந்தீரே வாரீர். #12 ஆதி அனாதி என்று ஆரணம் போற்றும் அரும் பெரும் ஜோதியீர் வாரீர் ஆனந்த நாடரே வாரீர். #13 ஆகம வேதம் அனேக முகம் கொண்டு அருச்சிக்கும் பாதரே வாரீர் ஆர்_உயிர்_நாதரே வாரீர். #14 ஆசு அறும் அந்தங்கள் ஆறும் புகன்ற நல் ஆரியரே இங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர் #15 ஆல நிழல்-கண் அமர்ந்து அறம் சொன்ன நல் ஆரியரே இங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர். #16 ஆர்_அமுது ஆகி என் ஆவியைக் காக்கின்ற ஆனந்தரே இங்கு வாரீர் ஆடல் வல்லீர் இங்கு வாரீர். #17 ஆதரவாய் என் அறிவைத் தெளிவித்து அமுதம் அளித்தீரே வாரீர் ஆடிய பாதரே வாரீர். #18 ஆதார மீதானத்து அப்பாலும் காண்டற்கு அரும் பெரும் ஜோதியீர் வாரீர் கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். #19 ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதியரே இங்கு வாரீர் வேதியரே இங்கு வாரீர். #20 ஆடல்கொண்டீர் திரு_அம்பலத்தே என்றன் பாடல்கொண்டீர் இங்கு வாரீர் கூட வல்லீர் இங்கு வாரீர். #21 ஆக்கம் கொடுத்து என்றன் தூக்கம் தடுத்த என் ஆண்டவரே இங்கு வாரீர் தாண்டவரே இங்கு வாரீர். #22 ஆபத்தை நீக்கி ஓர் தீபத்தை ஏற்றி என் ஆணவம் போக்கினீர் வாரீர் காண வந்தேன் இங்கு வாரீர். #23 இது தருணம் தருணம் தருணம் என் இறையவரே இங்கு வாரீர் இடர் தவிர்த்து ஆட்கொண்டீர் வாரீர். #24 இச்சையின் வண்ணம் எனக்கு அருள்செய்ய இது தருணம் இங்கு வாரீர் இன் அமுது ஆயினீர் வாரீர். #25 இன்பம் கொடுத்தே என் துன்பம் கெடுத்து உள் இருக்கின்ற நாதரே வாரீர் இருக்கின் பொருள் ஆனீர் வாரீர். #26 இரவும்_பகலும் இதயத்தில் ஊறி இனிக்கும் அமுதரே வாரீர் இனித் தரியேன் இங்கு வாரீர். #27 இன்னும் தாழ்த்து அங்கே இருப்பது அழகு அன்று இது தருணம் இங்கு வாரீர் இருமையும் ஆயினீர் வாரீர். #28 இடர் தவிர்த்து இன்பம் எனக்கு அளித்து ஆளற்கு இது தருணம் இங்கு வாரீர் இனியவரே இங்கு வாரீர் #29 இறையும் பொறுப்பு அரிது என் உயிர்_நாதரே இத் தருணம் இங்கு வாரீர் இத நடம் செய்கின்றீர் வாரீர். #30 இம்மையிலே எனக்கு அம்மையின் இன்பம் இது என்று அளித்தீரே வாரீர் இதயத்து இருந்தீரே வாரீர். #31 இங்கு_அங்கு என்னாமலே எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்தீரே வாரீர் இந்து எழில் வண்ணரே வாரீர். #32 இணை ஒன்றும் இல்லா இணை அடி என் தலை ஏறவைத்தீர் இங்கு வாரீர் இறுதி_இலீர் இங்கு வாரீர். #33 ஈன்றாளும் எந்தையும் என் குருவும் எனக்கு இன்பமும் ஆயினீர் வாரீர் அன்பருக்கு அன்பரே வாரீர். #34 ஈனம் அறுத்து மெய்ஞ்ஞான விளக்கு என் இதயத்தில் ஏற்றினீர் வாரீர் உதயச் சுடரினீர் வாரீர். #35 ஈடு அறியாத மெய்_வீடு தந்து அன்பரை இன்புறச்செய்கின்றீர் வாரீர் வன்பர்க்கு அரியீரே வாரீர். #36 ஈது இயல் என்று நின்று ஓதிய வேதத்திற்கு எட்டாது இருந்தீரே வாரீர் நட்டார்க்கு எளியீரே வாரீர். #37 ஈசர் எனும் பல தேசர்கள் போற்றும் ந டேசரே நீர் இங்கு வாரீர் நேசரே நீர் இங்கு வாரீர். #38 ஈசர் பலிக்கு உழல் நேசர் என்று அன்பர்கள் ஏச நின்றீர் இங்கு வாரீர் நாசம்_இல்லீர் இங்கு வாரீர். #39 ஈறு அறியா மறையோன் என்று அறிஞர் இயம்ப நின்றீர் இங்கு வாரீர் வயம் தருவீர் இங்கு வாரீர். #40 ஈதல் கண்டே மிகக் காதல்கொண்டேன் எனக்கு ஈதல் செய்வீர் இங்கு வாரீர் ஓத அரியீர் இங்கு வாரீர். #41 ஈடணை அற்ற நெஞ்சூடு அணைவுற்று மற்று ஈடு_அணையீர் இங்கு வாரீர் ஆட வல்லீர் இங்கு வாரீர். #42 ஈண்டு அறிவு ஓங்கிடத் தூண்டு அறிவு ஆகி உள் ஈண்டுகின்றீர் இங்கு வாரீர் ஆண்டவரே இங்கு வாரீர். #43 உள்ளதே உள்ளது விள்ளது என்று எனக்கு உள்ளது உரைசெய்தீர் வாரீர் வள்ளல் விரைந்து இங்கு வாரீர். #44 உருவாய் அருவாய் உரு_அருவாய் அவை ஒன்றும்_அல்லீர் இங்கு வாரீர் என்றும் நல்லீர் இங்கு வாரீர். #45 உறவும் பகையும் உடைய நடையில் உறவும் எண்ணேன் இங்கு வாரீர் பிறவும் நண்ணேன் இங்கு வாரீர். #46 உள்ளக் கருத்தை நான் வள்ளற்கு உரைப்பது என் உள்ளத்து இருந்தீரே வாரீர் விள்ளற்கு அரியீரே வாரீர். #47 உய்ய வல்லார்க்கு அருள்செய்ய வல்லீர் நானும் உய்ய வல்லேன் இங்கு வாரீர் செய்ய வல்லீர் இங்கு வாரீர். #48 உடையவர் ஆர் இக் கடையவனேனுக்கு உடையவரே இங்கு வாரீர் சடையவரே இங்கு வாரீர். #49 உறங்கி இறங்கும் உலகவர் போல நான் உறங்க_மாட்டேன் இங்கு வாரீர் இறங்க_மாட்டேன் இங்கு வாரீர். #50 உண்டு உடுத்து இன்னும் உழல_மாட்டேன் அமுது உண்டி விரும்பினேன் வாரீர் உண்டி தர இங்கு வாரீர். #51 உன்னு-தோறு உன்னு-தோறு உள்ளே இனிக்கின்ற உத்தமரே இங்கு வாரீர் உற்ற_துணை ஆனீர் வாரீர். #52 உம் ஆணை உம் ஆணை உம்மை அல்லால் எனக்கு உற்றவர் மற்று இலை வாரீர் உற்று அறிந்தீர் இங்கு வாரீர். #53 ஊன நடம் தவிர்த்து ஆன நடம் காட்டு மோன நடேசரே வாரீர் ஞான நடேசரே வாரீர். #54 ஊரும்_இல்லீர் ஒரு பேரும்_இல்லீர் அறி வோரும் இல்லீர் இங்கு வாரீர் யாரும் இல்லீர் இங்கு வாரீர். #55 ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற வீறு_உடையீர் இங்கு வாரீர் நீறு_உடையீர் இங்கு வாரீர். #56 ஊன்று நும் சேவடி சான்று தரிக்கிலேன் ஏன்றுகொள்வீர் இங்கு வாரீர் ஆன்றவரே இங்கு வாரீர். #57 ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என ஏற்றம் அருள்செய்வீர் வாரீர் தேற்றம் அருள்செய்வீர் வாரீர். #58 ஊடல்_இல்லீர் எனைக் கூடல் வல்லீர் என்னுள் பாடல் சொல்வீர் இங்கு வாரீர் ஆடல் நல்லீர் இங்கு வாரீர். #59 ஊக்கம் கொடுத்து என்றன் ஏக்கம் கெடுத்து அருள் ஆக்கம் அடுத்தீரே வாரீர் தூக்கம் தவிர்த்தீரே வாரீர். #60 ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று ஓமை அறிவித்தீர் வாரீர் சேமஞ் செறிவித்தீர் வாரீர். #61 ஊகம்_இலேன் பெற்ற தேகம் அழியாத யோகம் கொடுத்தீரே வாரீர் போகம் கொடுத்தீரே வாரீர். #62 ஊதியம் தந்த நல் வேதியரே உண்மை ஓதிய நாதரே வாரீர் ஆதி அனாதியீர் வாரீர். #63 என் குறை தீர்த்து என் உள் நன்கு உறைவீர் இனி என் குறை என் முன்னீர் வாரீர் தன் குறை இல்லீரே வாரீர். #64 என் உயிர் ஆகி என்றன் உயிர்க்கு உள்ளே ஓர் இன் உயிர் ஆயினீர் வாரீர் என் உயிர்_நாதரே வாரீர். #65 என்-கண் அருள்செய்து என் புன்கண் விலக்கிய என் கண்_அனையீரே வாரீர் மின் கண்_நுதலீரே வாரீர். #66 எல்லா உயிர்களும் நல்லார் எனத் தொழும் எல்லாம்_வல்லீர் இங்கு வாரீர் சொல்லா நிலையினீர் வாரீர். #67 எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல் எட்டும்படி செய்தீர் வாரீர் எட்டு_உருவாயினீர் வாரீர் #68 என்று கண்டாய் இது நன்று கொண்டு ஆளுக என்று தந்தீர் இங்கு வாரீர் அன்று வந்தீர் இன்று வாரீர். #69 எச் சமயங்களும் பொய்ச் சமயம் என்றீர் இச் சமயம் இங்கு வாரீர் மெய்ச் சமயம் தந்தீர் வாரீர். #70 என்-பால் களிப்பொடும் அன்பால் ஒன்று ஈந்து இதை இன்பால் பெறுக என்றீர் வாரீர் தென்-பால் முகம் கொண்டீர் வாரீர். #71 எச்ச உரை அன்று என் இச்சை எல்லாம் உமது இச்சை கண்டீர் இங்கு வாரீர் அச்சம் தவிர்த்தீரே வாரீர். #72 எண்ணம் எல்லாம் உமது எண்ணம் அல்லால் வேறு ஓர் எண்ணம் எனக்கு இல்லை வாரீர் வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். #73 ஏராய நான்முகர் நாராயணர் மற்றும் பாராயணம் செய்வீர் வாரீர் ஊர் ஆயம் ஆயினீர் வாரீர். #74 ஏமம் மிகும் திரு வாம சுகம் தரும் ஏம சபேசரே வாரீர் சோம சிகாமணி வாரீர். #75 ஏதம் இலாப் பர நாத முடிப் பொருள் ஏது அது சொல்லுவீர் வாரீர் ஈதல் உடையீரே வாரீர். #76 ஏக பராபர யோக வெளிக்கு அப்பால் ஏக வெளி நின்றீர் வாரீர் ஏகர் அனேகரே வாரீர். #77 ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல் ஏறவைத்தீர் இங்கு வாரீர் தேறவைத்தீர் இங்கு வாரீர். #78 ஏகாந்த நல் நிலை யோகாந்தத்து உள்ளது என் ஏகாந்தம் சொல்லினீர் வாரீர் தேகாந்தம் இல்லீரே வாரீர். #79 ஏகாத கல்வி-தான் சாகாத கல்வி என் றே காதலால் சொன்னீர் வாரீர் வேகாத_காலினீர் வாரீர். #80 ஏடு ஆயிரம் என்னை கோடா மொழி ஒன்றே ஏடா என்றீர் இங்கு வாரீர் ஈடு_ஆவார் இல்லீரே வாரீர். #81 ஏசாத தந்திரம் பேசாத மந்திரம் ஈசான மேல் என்றீர் வாரீர் ஆசு ஆதி இல்லீரே வாரீர். #82 ஏன் என்பார் வேறு இலை நான் அன்பால் கூவுகின் றேன் என்-பால் ஏன் என்பீர் வாரீர் ஆனின் பால் ஆடுவீர் வாரீர். #83 ஐந்து மலங்களும் வெந்து விழ எழுத்து ஐந்தும் செயும் என்றீர் வாரீர் இந்து சிகாமணி வாரீர். #84 ஐயமுற்றேனை இ வையம் கரி ஆக ஐயம் தவிர்த்தீரே வாரீர் மெய் அம்பலத்தீரே வாரீர். #85 ஐயர் நடம் புரி மெய்யர் என்றே உணர்ந்து ஐயர் தொழ நின்றீர் வாரீர் துய்யர் உளம் நின்றீர் வாரீர். #86 ஐவணங் காட்டும் நும் மெய் வணம் வேட்டுநின்று ஐவணர் ஏத்துவீர் வாரீர் பொய் வணம் போக்குவீர் வாரீர். #87 ஒன்றே சிவம் அதை ஒன்று சன்மார்க்கமும் ஒன்றே என்றீர் இங்கு வாரீர் நன்றே நின்றீர் இங்கு வாரீர். #88 ஒப்பார்_இல்லீர் உமக்கு இப் பாரில் பிள்ளை நான் ஒப்பாரி அல்ல காண் வாரீர் முப்பாழ் கடந்தீரே வாரீர் #89 ஒத்த இடம்-தன்னில் நித்திரை செய் என்றீர் ஒத்த இடம் காட்ட வாரீர் சித்த சிகாமணி வாரீர். #90 ஒட்டு மற்று இல்லை நான் விட்டுப் பிரிகலேன் ஒட்டுவைத்தேனும் மேல் வாரீர் எட்டு_குணத்தீரே வாரீர். #91 ஒருமை நிலையில் இருமையும் தந்த ஒருமையினீர் இங்கு வாரீர் பெருமையினீர் இங்கு வாரீர். #92 ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர் உண்மை சொன்னேன் இங்கு வாரீர் பெண்மை இடம் கொண்டீர் வாரீர். #93 ஓங்கார நாடகம் பாங்காகச் செய்கின்ற ஓங்கார நாடரே வாரீர் ஆங்காரம் நீக்கினீர் வாரீர். #94 ஓங்கும் பிண்டாண்டங்கள் தாங்கும் பெருவெளி ஓங்கு நடேசரே வாரீர் பாங்கு செய்வீர் இங்கு வாரீர். #95 ஓசையின் உள்ளே ஓர் ஆசை உதிக்க மெல் ஓசை செய்வித்தீரே வாரீர் பாசம் அறுத்தீரே வாரீர். #96 ஓராது உலகினைப் பாராது இரு நினக்கு ஓரா வகை என்றீர் வாரீர் பேரா நிலை தந்தீர் வாரீர். #97 ஓடாது மாயையை நாடாது நல் நெறி ஊடாது இரு என்றீர் வாரீர் வாடாது இரு என்றீர் வாரீர். #98 ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்து அருள் ஓலக்கம் காட்டினீர் வாரீர் காலக் கணக்கு_இல்லீர் வாரீர். #99 ஓடத்தில் நின்று ஒரு மாடத்தில் ஏற்றி மெய் யூடு அத்தைக் காட்டினீர் வாரீர் வேடத்தைப் பூட்டினீர் வாரீர். #100 ஓமத்திலே நடு_சாமத்திலே எனை ஓமத்தன் ஆக்கினீர் வாரீர் சாம் அத்தம் நீக்கினீர் வாரீர். #101 ஓம் என்பதற்கு முன் ஆம் என்று உரைத்து உடன் ஊம் என்று காட்டினீர் வாரீர் நாம் என்று நாட்டினீர் வாரீர். #102 ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே செவ்வியன் ஆக்கினீர் வாரீர் ஒவ்வி ஒன்று ஆக்கினீர் வாரீர். #103 கண்_அனையீர் உம்மைக் காண என் ஆசை கடல் பொங்குகின்றது வாரீர் உடல் தங்குகின்றது வாரீர். #104 கண்டு அணைந்தால் அன்றிக் காதல் அடங்காது என் கண்மணியீர் இங்கு வாரீர் உள்_மணியீர் இங்கு வாரீர். #105 கட்டிக்கொண்டு உம்மைக் கலந்துகொளல் வேண்டும் காரணரே இங்கு வாரீர் பூரணரே இங்கு வாரீர். @18. அம்பலவாணர் ஆட வருகை #1 * பல்லவி ஆட வாரீர் என்னோடு ஆட வாரீர் அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆட வாரீர். * சரணங்கள் #2 தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனித் தலைமைப் பெரும் பதியீர் ஆட வாரீர் வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர் தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர். என்னுடைய நாயகரே ஆட வாரீர் #3 திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் பெரு வாய்மைப் பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். #4 வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் ஏற்ற தனித் தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். #5 இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் நல்லார் சொல் நல்லவரே ஆட வாரீர் நல் தாயில் இனியவரே ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். #6 ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். #7 சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் சொல் மார்க்கப் பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். #8 அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர் பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். #9 பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டுக் காலை இதே ஆட வாரீர் ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனித் தலைமைப் பெரும் பதியீர் ஆட வாரீர் ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். #10 கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். #11 நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர் விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் எச் சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர். இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். #12 என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் என் உரிமைத் தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனித் தந்தையரே ஆட வாரீர் என் ஒருமைச் சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர். @19. அம்பலவாணர் அணைய வருகை #1 * பல்லவி அணைய வாரீர் என்னை அணைய வாரீர் அணி வளர் சிற்றம்பலத்தீர் அணைய வாரீர். * சரணங்கள் #2 இயற்கை உண்மை வடிவினரே அணைய வாரீர் எல்லாம் செய் வல்லவரே அணைய வாரீர் இயற்கை விளக்கத்தவரே அணைய வாரீர் எல்லார்க்கும் நல்லவரே அணைய வாரீர் இயற்கை இன்பம் ஆனவரே அணைய வாரீர் இறைமை எலாம் உடையவரே அணைய வாரீர் இயற்கை நிறைவு ஆனவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #3 உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர் கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர் அலக் அறியாப் பெருமையரே அணைய வாரீர் அற்புதப் பொன் சோதியரே அணைய வாரீர் இலகு சபாபதியவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #4 பொதுவில் நடிக்கின்றவரே அணைய வாரீர் பொற்பு உடைய புண்ணியரே அணைய வாரீர் மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர் விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர் இது தருணம் இறையவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #5 வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடிப் பொருளவரே அணைய வாரீர் அனை மாலைக் காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதிப் பதியீர் அணைய வாரீர் புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் எனை மாலையிட்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #6 சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர் உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர் பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர் இறுதி தவிர்த்து ஆண்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #7 சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனித் தலைமைப் பெரும் பதியீர் அணைய வாரீர் ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர் ஓதி உணர்வ அரியவரே அணைய வாரீர் உள்ளபடி உரைத்தவரே அணைய வாரீர் ஈது இசைந்த தருணம் இங்கே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #8 அன்பாட்டை விழைந்தவரே அணைய வாரீர் அருள் சோதி வடிவினரே அணைய வாரீர் துன்பாட்டை ஒழித்தவரே அணைய வாரீர் துரிய நிறை பெரியவரே அணைய வாரீர் பின்பாட்டுக் காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர் என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #9 அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர் புரைக் கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனிப் புண்ணியரே அணைய வாரீர் வரைக் கணம் செய்வித்தவரே அணைய வாரீர் மன்றில் நடிக்கின்றவரே அணைய வாரீர் இரைக்கு அணவு தருணம் இதே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #10 கருணை நடம் செய்பவரே அணைய வாரீர் கண்மணியில் கலந்தவரே அணைய வாரீர் அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர் தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர் இருள் நிறைந்தார்க்கு அறிவரியீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #11 சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர் ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர் ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்றத் அணைய வாரீர் ஏர் அகத்தே அமர்ந்து அருள்வீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். #12 கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர் புலந்து அறியேன் விரைகின்றேன் அணைய வாரீர் புணர்வதற்குத் தருணம் இதே அணைய வாரீர் அலந்தவிடத்து அருள்கின்றீர் அணைய வாரீர் அரை_கணமும் இனித் தரியேன் அணைய வாரீர் இலந்தை நறும் கனி_அனையீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். ** ஆனந்தக் களிப்புகள் @20.. நல்ல மருந்து #1 * பல்லவி நல்ல மருந்து இ மருந்து சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து * சரணங்கள் #2 அருள் வடிவான மருந்து நம்முள் அற்புதமாக அமர்ந்த மருந்து இருள் அற ஓங்கும் மருந்து அன்பர்க்கு இன்பு உருவாக இருந்த மருந்து #3 சஞ்சலம் தீர்க்கும் மருந்து எங்கும் தானே தான் ஆகித் தழைக்கும் மருந்து அஞ்சல் என்று ஆளும் மருந்து சச்சி தானந்தமாக அமர்ந்த மருந்து #4 வித்தகமான மருந்து சதுர்_ வேத முடிவில் விளங்கும் மருந்து தத்துவாதீத மருந்து என்னைத் தானாக்கிக்கொண்ட தயாள மருந்து #5 பிறப்பை ஒழிக்கும் மருந்து யார்க்கும் பேசப்படாத பெரிய மருந்து இறப்பைத் தவிர்க்கும் மருந்து என்னுள் என்றும் மதுரித்து இனிக்கும் மருந்து #6 நான் அதுவாகும் மருந்து பர ஞான வெளியில் நடிக்கும் மருந்து மோந வடிவாம் மருந்து சீவன் முத்தர் உளத்தே முடிக்கும் மருந்து #7 புத்தமுது ஆகும் மருந்து பார்த்த போதே பிணிகளைப் போக்கும் மருந்து பத்தர் அருந்தும் மருந்து அநு பானமும் தானாம் பரம மருந்து #8 மால் அயன் தேடும் மருந்து முன்னம் மார்க்கண்டரைக் காக்க வந்த மருந்து காலனைச் சாய்த்த மருந்து தேவர் காணும் கனவினும் காணா மருந்து #9 தற்பரயோக மருந்து உப சாந்தர் உளத்திடைச் சார்ந்த மருந்து சிற்பரயோக மருந்து உயர் தேவர் எல்லாம் தொழும் தெய்வ மருந்து #10 அம்பலத்து ஆடும் மருந்து பர மாநந்த வெள்ளத்து அழுத்தும் மருந்து எம் பலம் ஆகும் மருந்து வேளூர் என்னும் தலத்தில் இருக்கும் மருந்து #11 சேதப்படாத மருந்து உண்டால் தேன் போல் இனிக்கும் தெவிட்டா மருந்து பேதப்படாத மருந்து மலை_ பெண் இடம்கொண்ட பெரிய மருந்து #12 ஆர்க்கும் அரிதாம் மருந்து தானே ஆதி அநாதியும் ஆன மருந்து சேர்க்கும் புநித மருந்து தன்னைத் தேடுவோர்-தங்களை நாடு மருந்து #13 புண்ணியர்க்கான மருந்து பரி பூரணமாகப் பொருந்து மருந்து எண்ணிய இன்ப மருந்து எமது எண்ணம் எல்லாம் முடித்திட்ட மருந்து #14 பால் வண்ணம் ஆகும் மருந்து அதில் பச்சை நிறமும் படர்ந்த மருந்து நூல் வண்ணம் நாடும் மருந்து உள்ளே நோக்குகின்றோர்களை நோக்கும் மருந்து #15 பார்க்கப் பசி போம் மருந்து தன்னைப் பாராதவர்களைச் சேரா மருந்து கூர்க்கத் தெரிந்த மருந்து அநு கூல மருந்து என்று கொண்ட மருந்து #16 கோது இலாது ஓங்கும் மருந்து அன்பர் கொள்ளைகொண்டு உண்ணக் குலாவும் மருந்து மாது ஒரு பாக மருந்து என்னை வாழ்வித்த என் கண்மணியாம் மருந்து #17 ஏக உருவாம் மருந்து மிக்க ஏழைகளுக்கும் இரங்கும் மருந்து சோகம் தவிர்க்கும் மருந்து பரஞ் சோதி என்று அன்பர் துதிக்கும் மருந்து #18 கோமளம் கூடும் மருந்து நலம் கொடுக்கத் துசம் கட்டிக்கொண்ட மருந்து நாம் அளவாத மருந்து நம்மை நாம் அறியும்படி நண்ணும் மருந்து #19 செல்வம் தழைக்கும் மருந்து என்றும் தீரா வினை எலாம் தீர்த்த மருந்து நல் வந்தனை கொள் மருந்து பர நாதாந்த வீட்டினுள் நண்ணும் மருந்து #20 வாய் பிடியாத மருந்து மத வாதமும் பித்தமும் மாய்க்கும் மருந்து நோய் பொடியாக்கும் மருந்து அன்பர் நோக்கிய நோக்கினுள் நோக்கும் மருந்து #21 பெண்_ஆசை தீர்க்கும் மருந்து பொருள் பேர்_ஆசை எல்லாம் பிளக்கும் மருந்து மண்_ஆசை தீர்க்கும் மருந்து எல்லாம் வல்ல மருந்து என்று வாழ்த்தும் மருந்து #22 என்றும் கெடாத மருந்து வரும் எல்லாப் பிணிக்கும் இதுவே மருந்து துன்றும் சிவோக மருந்து நம்மைச் சூழ்ந்து இருமைக்கும் துணையாம் மருந்து #23 கண் ஒளி காட்டும் மருந்து அம்மை கண்டு கலந்து களிக்கும் மருந்து விண் ஒளி ஆகும் மருந்து பர_ வீடு தரும் கங்கை வேணி மருந்து #24 காயாம்பூ வண்ண மருந்து ஒரு கஞ்ச மலர் மிசைக் காணும் மருந்து தாயாம் கருணை மருந்து சித். சதாசிவம் ஆன மெய்ஞ்ஞான மருந்து #25 அளவைக் கடந்த மருந்து யார்க்கும் அருமை அருமை அருமை மருந்து உளவில் கிடைக்கும் மருந்து ஒன்றும் ஒப்பு உயர்வு இல்லாது உயர்ந்த மருந்து #26 தன்மயம் ஆகும் மருந்து சிவ சாதனர் நெஞ்சில் தழைக்கும் மருந்து சின்மய ஜோதி மருந்து அட்ட_ சித்தியும் முத்தியும் சேர்க்கும் மருந்து #27 மறந்தால் ஒளிக்கும் மருந்து தன்னை மறவாதவர் உள் வழங்கும் மருந்து இறந்தால் எழுப்பும் மருந்து எனக்கு என்றும் துணையாய் இருக்கும் மருந்து #28 கரும்பில் இனிக்கும் மருந்து கடும் கண்டகர்க்கு எல்லாம் கசக்கும் மருந்து இரும்பைக் குழைக்கும் மருந்து பேர்_ இன்ப வெள்ளத்தே இழுக்கும் மருந்து #29 அணி மணி கண்ட மருந்து அருள் ஆநந்த சுத்த அகண்ட மருந்து பிணி தவிர் இன்ப மருந்து யார்க்கும் பேசா மருந்து என்று பேசும் மருந்து #30 மூவர்க்கு அரிய மருந்து செல்வ முத்துக் குமாரனை ஈன்ற மருந்து நாவிற்கு இனிய மருந்து தையல் நாயகி கண்டு தழுவும் மருந்து @21. ஞான மருந்து #1 * பல்லவி ஞான மருந்து இ மருந்து சுகம் நல்கிய சிற்சபாநாத மருந்து. * சரணங்கள் #2 அருள்_பெரும்_சோதி மருந்து என்னை ஐந்தொழில் செய்தற்கு அளித்த மருந்து பொருள் பெரும் போக மருந்து என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. #3 எல்லாம் செய் வல்ல மருந்து என்னுள் என்றும் விடாமல் இனிக்கும் மருந்து சொல்லால் அளவா மருந்து சுயம் ஜோதி அருள்_பெரும்_ஜோதி மருந்து. #4 காணாது காட்டும் மருந்து என்றன் கையில் பொன் கங்கணம் கட்டும் மருந்து ஆண் ஆகிப் பெண் ஆம் மருந்து அது ஆகி மணி மன்றில் ஆடும் மருந்து. #5 சுத்த சன்மார்க்க மருந்து அருள் சோதி மலையில் துலங்கும் மருந்து சித்து உரு ஆன மருந்து என்னைச் சித்து எலாம் செய்யச்செய்வித்த மருந்து. #6 அன்பர்க்கு எளிய மருந்து மற்றை ஐவர்க்கும் காண்டற்கு அரிய மருந்து என் பற்றில் ஓங்கும் மருந்து என்னை இன்ப நிலையில் இருத்தும் மருந்து. #7 நாதாந்த நாட்டு மருந்து பர ஞான வெளியில் நடிக்கும் மருந்து போதாந்தர்க்கு எய்தும் மருந்து என்னுள் பொன் அடி காட்டிப் புணர்ந்த மருந்து. #8 ஆதி அனாதி மருந்து திரு அம்பலத்தே நடம் ஆடும் மருந்து ஜோதி மயமாம் மருந்து என்னைச் சோதியாது ஆண்ட துரிய மருந்து. #9 ஆறு அந்தத்து ஓங்கும் மருந்து அதற்கு அப்பாலுக்கப்பாலும் ஆன மருந்து ஊறந்தம் இல்லா மருந்து எனக் குள்ளே கலந்த உறவா மருந்து. #10 என் உயிர்க்கு அன்பாம் மருந்து கலந்து என் உயிர்க்கு உள்ளே இருந்த மருந்து என் உயிர் காக்கும் மருந்து என்றும் என் உயிர் ஆகிய இன்ப மருந்து. #11 என் அறிவு உட்கொள் மருந்து என்றும் என் அறிவு ஆகி இலங்கும் மருந்து என் அறிவு இன்ப மருந்து என்னுள் என் அறிவுக்கு அறிவு என்னும் மருந்து #12 என் குரு ஆன மருந்து என்றும் என் தெய்வம் ஆகி இருக்கும் மருந்து என் அன்னை என்னும் மருந்து என்றும் என் தந்தை ஆகிய இன்ப மருந்து. #13 என் பெரு வாழ்வாம் மருந்து என்றும் என் செல்வம் ஆகி இருக்கும் மருந்து என் உயிர் நட்பாம் மருந்து எனக்கு எட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து. #14 என் இறை ஆன மருந்து மகிழ்ந்து எனக்குத் தன் பொன்_மேனி ஈந்த மருந்து தன் அறிவு ஆகும் மருந்து என்னைத் தந்த மருந்து என்றன் சொந்த மருந்து. #15 உள்ளத்தின் உள்ளாம் மருந்து என்றன் உயிருக்கு அனாதி உறவாம் மருந்து தெள்ளத் தெளிக்கும் மருந்து என்னைச் சிவம் ஆக்கிக்கொண்ட சிவாய மருந்து. #16 மெய்ப்பொருள் என்னும் மருந்து எல்லா வேதாகமத்தும் விளங்கும் மருந்து கைப்பொருள் ஆன மருந்து மூன்று கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து. #17 மதியில் விளைந்த மருந்து யார்க்கும் மதிக்கப்படாத பொன் வண்ண மருந்து கதி தரும் இன்ப மருந்து அருள் கண்ணால் என்றன்னைக் கலந்த மருந்து. #18 கற்பூர ஜோதி மருந்து பசும் கற்பூர நல் மணம் காட்டும் மருந்து பொன் பூவின் ஓங்கும் மருந்து என் தற் போதம் தவிர்த்த சிற்போத மருந்து. #19 மேலை வெளியாம் மருந்து நான் வேண்டும்-தோறு எல்லாம் விளையும் மருந்து சாலை விளக்கு மருந்து சுத்த சமரச சன்மார்க்க சங்க மருந்து. #20 என்னைத் தான் ஆக்கும் மருந்து இங்கே இறந்தாரை எல்லாம் எழுப்பும் மருந்து துன்னும் மெய்ச் சோதி மருந்து அருள் சோதியால் என்னைத் துலக்கும் மருந்து. #21 பொய்யர்க்கு அரிதாம் மருந்து என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து கையில் கிடைத்த மருந்து சிவ காமக்கொடியைக் கலந்த மருந்து. #22 ஆணவம் தீர்க்கும் மருந்து பர மானந்தத் தாண்டவம் ஆடும் மருந்து மாணவ வண்ண மருந்து என்னை வலிய அழைத்து வளர்க்கும் மருந்து. #23 வான் நடுவான மருந்து என்னை மா மணி மேடை மேல் வைத்த மருந்து ஊனம் தவிர்த்த மருந்து கலந்து உள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து. #24 மலை இலக்கான மருந்து என்றன் மறைப்பைத் தவிர்த்த மெய் வாழ்க்கை மருந்து கலை நலம் காட்டும் மருந்து எங்கும் கண் ஆகிக் காணும் கனத்த மருந்து. #25 அற்புத ஜோதி மருந்து எல்லாம் ஆகி அன்று ஆகி அமர்ந்த மருந்து தற்பதம் தந்த மருந்து எங்கும் தானே தான் ஆகித் தனித்த மருந்து. #26 தன்னை அளித்த மருந்து என்றும் சாகாத நல் வரம் தந்த மருந்து பொன் அடி ஈந்த மருந்து அருள் போனகம் தந்த புனித மருந்து. #27 கண்ணுக்கு இனிய மருந்து என்றன் கைப்பொருளாம் தங்கக்கட்டி மருந்து எண்ணுக்கு அடங்கா மருந்து என்னை ஏதக் குழிவிட்டு எடுத்த மருந்து. #28 சுட்டப் படாத மருந்து என்றன் தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து எட்டுதற்கு ஒண்ணா மருந்து நான் எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து. #29 உன்னற்கு அரிதாம் மருந்து எனக்கு உள்ளும் புறத்தும் உலாவும் மருந்து தன்னந்தனித்த மருந்து சுத்தச் சாக்கிராதீதச் சபேச மருந்து. #30 ஒன்றில் ஒன்று ஆன மருந்து அந்த ஒன்றில் இரண்டு ஆகி ஓங்கும் மருந்து அன்றி மூன்று ஆன மருந்து நான்கு ஆகி ஐந்து ஆகி அமர்ந்த மருந்து. #31 வெளிக்குள் வெளியாம் மருந்து எல்லா வெளியும் கடந்து விளங்கும் மருந்து ஒளிக்குள் ஒளியாம் மருந்து எல்லா ஒளியும் தான் ஆகிய உண்மை மருந்து. #32 ஆறாறுக்கு அப்பால் மருந்து அதற்கு அப்புறத்து ஈர்_ஆறுக்கு அப்பால் மருந்து ஈறு ஆதி இல்லா மருந்து என்னை எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து. #33 ஆரணத்து ஓங்கும் மருந்து அருள் ஆகமம் ஆகி அண்ணிக்கும் மருந்து காரணம் காட்டும் மருந்து எல்லாம் கண்ட மருந்து என்னுள் கொண்ட மருந்து. #34 மலம் ஐந்து நீக்கும் மருந்து புவி வான் அண்டம் எல்லாம் வளர்க்கும் மருந்து நலம் மிக்கு அருளும் மருந்து தானே நான் ஆகித் தான் ஆளும் நாட்டு மருந்து. @22. சிவசிவ ஜோதி #1 * பல்லவி சிவசிவ சிவசிவ ஜோதி சிவ சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி சிவசிவ சிவசிவ ஜோதி. * சரணங்கள் #2 சிற்பரமாம் பரஞ்ஜோதி அருள் சித்து எல்லாம்_வல்ல சிதம்பர ஜோதி தற்பர தத்துவ ஜோதி என்னைத் தான் ஆக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி. #3 சித்து உருவாம் சுயம் ஜோதி எல்லாம் செய்திட வல்ல சிதம்பர ஜோதி அத்துவிதானந்த ஜோதி என்னை ஆட்கொண்டு அருளும் சிற்றம்பல ஜோதி. #4 சின்மயமாம் பெரும் ஜோதி அருள் செல்வம் அளிக்கும் சிதம்பர ஜோதி தன்மயமாய் நிறை ஜோதி என்னைத் தந்த மெய் ஜோதி சதானந்த ஜோதி. #5 ஆதி ஈறு இல்லா முன் ஜோதி அரன் ஆதியர்-தம்மை அளித்த பின் ஜோதி ஓதி உணர்வ அரும் ஜோதி எல்லா உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. #6 மன்னிய பொன் வண்ண ஜோதி சுக வண்ணத்ததாம் பெரு மாணிக்க ஜோதி துன்னிய வச்சிர ஜோதி முத்து ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி. #7 பார் முதல் ஐந்துமாம் ஜோதி ஐந்தில் பக்கம் மேல் கீழ் நடுப் பற்றிய ஜோதி ஓர் ஐம்பொறியுரு ஜோதி பொறிக்கு உள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி. #8 ஐம்புலமும் தான் ஆம் ஜோதி புலத்து அகத்தும் புறத்தும் மலர்ந்து ஒளிர் ஜோதி பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றைப் பொறி புலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. #9 மனம் ஆதி எல்லாம் ஆம் ஜோதி அவை வாழ அகம் புறம் வாழ்கின்ற ஜோதி இனமான உள் அக ஜோதி சற்றும் ஏறாது இறங்காது இயக்கும் ஓர் ஜோதி. #10 முக்குணமும் மூன்று ஆம் ஜோதி அவை முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி எக் குணத்து உள்ளுமாம் ஜோதி குணம் எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி. #11 பகுதி மூன்று ஆகிய ஜோதி மூலப் பகுதிகள் மூன்றும் படைத்து அருள் ஜோதி பகுதி பல ஆக்கும் ஜோதி சற்றும் விகுதி ஒன்று இன்றி விளக்கிய ஜோதி. #12 கால முதல் காட்டும் ஜோதி கால காரணத்து அப்பால் கடந்து ஒளிர் ஜோதி கோலம் பல ஆகும் ஜோதி ஒன்றும் குறிக்கப்படாச் சிற்குணப் பெரும் சோதி. #13 தத்துவம் எல்லாம் ஆம் ஜோதி அந்தத் தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி அத்துவிதப் பெரும் ஜோதி எல்லாம் அருளில் விளங்க அமர்த்திய ஜோதி. #14 சத்தர்கள் எல்லாம் ஆம் ஜோதி அவர் சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி முத்தர் அனுபவ ஜோதி பர முத்தியாம் ஜோதி மெய்ச் சித்தியாம் ஜோதி. #15 ஆறு அந்தத்தே நிறை ஜோதி அவைக்கு அப்புறத்து அப்பாலும் ஆகிய ஜோதி வீறும் பெருவெளி ஜோதி மேலும் வெட்டவெளியில் விளங்கிய ஜோதி. #16 பேர்_அருள் ஜோதியுள் ஜோதி அண்ட பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி வாரம் முற்று ஓங்கிய ஜோதி மனம் வாக்குக்கு எட்டாததோர் மா மணி ஜோதி. #17 ஒன்றான பூரண ஜோதி அன்பில் ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி என்றா ஒளிர்கின்ற ஜோதி என்னுள் என்றும் விளங்கிய என் உயிர் ஜோதி. #18 மெய்யே மெய் ஆகிய ஜோதி சுத்த வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி துய்ய சிவானந்த ஜோதி குரு துரியத் தலத்தே துலங்கிய ஜோதி. #19 சிவ மயமாம் சுத்த ஜோதி சுத்த சித்தாந்த வீட்டில் சிறந்து ஒளிர் ஜோதி உவமை இல்லாப் பெரும் ஜோதி எனது உள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. #20 என்னைத் தான் ஆக்கிய ஜோதி இங்கே இறந்தாரை எல்லாம் எழுப்பும் ஓர் ஜோதி அன்னைக்கும் மிக்கு அருள் ஜோதி என்னை ஆண்டு அமுதம் தந்த ஆனந்த ஜோதி. #21 சித்தம் சிவம் ஆக்கும் ஜோதி நான் செய்த தவத்தால் தெரிந்த உள் ஜோதி புத்தமுது ஆகிய ஜோதி சுக பூரணமாய் ஒளிர் காரண ஜோதி. #22 தம்பத்தில் ஏற்றிய ஜோதி அப்பால் சார் மணி மேடை மேல் தான் வைத்த ஜோதி விம்பப் பெருவெளி ஜோதி அங்கே வீதியும் வீடும் விளக்கிய ஜோதி. #23 சுக மயம் ஆகிய ஜோதி எல்லா ஜோதியும் ஆன சொரூப உள் ஜோதி அகமிதம் தீர்த்து அருள் ஜோதி சச்சி தானந்த ஜோதி சதானந்த ஜோதி. #24 நித்த பரானந்த ஜோதி சுத்த நிர்_அதிசயானந்த நித்திய ஜோதி அத்துவிதானந்த ஜோதி எல்லா ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி. #25 பொய்யாத புண்ணிய ஜோதி எல்லாப் பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி நையாது அருள்செய்த ஜோதி ஒரு நானும் தானும் ஒன்றாய் நண்ணிய ஜோதி. #26 கண்ணில் கலந்து அருள் ஜோதி உள- கண் உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி எண்ணில்படாப் பெரும் சோதி நான் எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி. #27 விந்து ஒளி நடு ஜோதி பர விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி நம் துயர் தீர்த்து அருள் ஜோதி பர நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி. #28 தான் அன்றி ஒன்று இலா ஜோதி என்னைத் தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி நான் இன்று கண்டதோர் ஜோதி தானே நான் ஆகி வாழ்ந்திட நல்கிய ஜோதி. #29 தன் நிகர் இல்லதோர் ஜோதி சுத்த சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி என்னுள் நிறைந்த மெய் ஜோதி என்னை ஈன்று ஐந்தொழில் செய் என்று ஏவிய ஜோதி. #30 அச்சம் தவிர்த்த மெய் ஜோதி என்னை ஆட்கொண்டு அருளிய அம்பல ஜோதி இச்சை எலாம் தந்த ஜோதி உயிர்க்கு இங்கும் அங்கு என்னாமல் எங்கும் ஆம் ஜோதி. #31 காலையில் நான் கண்ட ஜோதி எல்லாக் காட்சியும் நான் காணக் காட்டிய ஜோதி ஞாலமும் வானும் ஆம் ஜோதி என்னுள் நான் ஆகித் தான் ஆகி நண்ணிய ஜோதி. #32 ஏகாந்தம் ஆகிய ஜோதி என்னுள் என்றும் பிரியாது இருக்கின்ற ஜோதி சாகாத வரம் தந்த ஜோதி என்னைத் தான் ஆக்கிக்கொண்டதோர் சத்திய ஜோதி. #33 சுத்த சிவ மய ஜோதி என்னை ஜோதி மணி முடி சூட்டிய ஜோதி சத்தியம் ஆம் பெரும் ஜோதி நானே தான் ஆகி ஆளத் தயவு செய் ஜோதி. @23. ஜோதியுள் ஜோதி #1 * பல்லவி ஜோதியுள் ஜோதியுள் ஜோதி சுத்த ஜோதி சிவ ஜோதி ஜோதியுள் ஜோதி ஜோதியுள் ஜோதியுள் ஜோதி. * சரணங்கள் #2 சிவமே பொருள் என்று தேற்றி என்னைச் சிவ வெளிக்கு ஏறும் சிகரத்தில் ஏற்றிச் சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #3 வித்து எல்லாம் ஒன்று என்று நாட்டி அதில் விளைவு பலபல வேறு என்று காட்டிச் சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #4 சொல் வந்த அந்தங்கள் ஆறும் ஒரு சொல்லாலே ஆம் என்று அச் சொல்லாலே வீறும் செல்வம் கொடுத்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #5 தம் கோல் அளவு எனக்கு ஓதிச் சுத்த சமரச சத்திய சன்மார்க்க நீதிச் செங்கோல் அளித்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #6 ஆபத்தை நீக்கி வளர்த்தே சற்றும் அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே தீபத்தை வைத்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #7 மெய் ஒன்று சன்மார்க்கமே-தான் என்றும் விளங்கப் படைப்பு ஆதி மெய்த் தொழில் நீ-தான் செய் என்று தந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #8 என்-பால் வருபவர்க்கு இன்றே அருள் ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே தென்-பால் இருந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #9 துரியத் தலம் மூன்றின் மேலே சுத்த துரியப் பதியில் அது அதனாலே தெரியத் தெரிவது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #10 பரை தூக்கிக் காட்டிய காலே ஆதி_ பரை இவர்க்கு அப்பால் அப்பால் என்று மேலே திரை தூக்கிக் காட்டுதல் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #11 தற்பரமே வடிவு ஆகி அது தன்னைக் கடந்து தனி உரு ஆகிச் சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #12 நவ வெளி நால் வகை ஆதி ஒரு நடு வெளிக்கு உள்ளே நடத்திய நீதிச் சிவ வெளியாம் இது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #13 மேரு வெற்பு உச்சியின்-பாலே நின்று விளங்கும் ஓர் தம்பத்தின் மேலுக்கு மேலே சேரும் ஓர் மேடை மேல் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #14 ஆரண வீதிக் கடையும் சுத்த ஆகம வீதிகள் அந்தக் கடையும் சேர நடுக் கடை பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #15 பாடல் மறைகள் ஓர் கோடி அருள் பாத உருவ சொரூபங்கள் பாடி தேட இருந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #16 நீடு சிவாகமம் கோடி அருள் நேருறப் பாடியும் ஆடியும் ஓடித் தேட இருந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #17 பத்தி நெறியில் செழித்தே அன்பில் பாடும் மெய் அன்பர் பதியில் பழுத்தே தித்தித்து இருப்பது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #18 பித்தாடும் மாயைக்கு மேலே சுத்தப் பிரம வெளியினில் பேர்_அருளாலே சித்தாடுகின்றது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #19 தரு நெறி எல்லாம் உள்வாங்கும் சுத்த சன்மார்க்கம் என்று ஓர் தனிப் பேர்கொண்டு ஓங்கும் திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #20 எம் பொருள் எம் பொருள் என்றே சொல்லும் எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே செம்பொருள் என்பது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #21 சைவம் முதலாக நாட்டும் பல சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும் தெய்வம் இது வந்து பாரீர் திரு_சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #22 எள்ளல்_இல் வான் முதல் மண்ணும் அமுது எல்லாம் இதில் ஓர் இறையளவு என்னும் தெள் அமுதாம் இது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #23 எத்தாலும் ஆகாதே அம்மா என்றே எல்லா உலகும் இயம்புதல் சும்மா செத்தாரை மீட்பது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #24 பிறந்துபிறந்து உழன்றேனை என்றும் பிறவாது இறவாப் பெருமை தந்து ஊனைச் சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #25 வருவித்த வண்ணமும் நானே இந்த மா நிலத்தே செயும் வண்ணமும் தானே தெரிவித்து அருளிற்றுப் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #26 பாரிடம் வானிடம் மற்றும் இடம் பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் சேர் இடமாம் இது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #27 உய் பிள்ளை பற்பலர் ஆவல் கொண்டே உலகத்து இருப்ப இங்கு என்னைத் தன் ஏவல் செய் பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #28 உருவும் உணர்வும் செய்நன்றி அறி உளமும் எனக்கே உதவியத் அன்றித் திருவும் கொடுத்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #29 எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நான் எண்ணியவாறே இனிது தந்து என்னைத் திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. #30 பேர்_உலகு எல்லாம் மதிக்கத் தன் பிள்ளை என்று என்னைப் பெயரிட்டு அழைத்தே சீர் உறச் செய்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி. @24. ஆடிய பாதம் #1 *பல்லவி ஆடிய பாதம் மன்று ஆடிய பாதம் ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம். * சரணங்கள் #2 பாடிய வேதங்கள் தேடிய பாதம் பத்தி செய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம் நாடிய மாதவர் நேடிய பாதம் நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் #3 தீராத வல்_வினை தீர்க்கின்ற பாதம் தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம் வாரா_வரவு ஆகி வந்த பொன் பாதம் வஞ்ச மனத்தில் வசியாத பாதம். #4 ஆரா_அமுது ஆகி அண்ணிக்கும் பாதம் அன்பர் உளத்தே அமர்ந்து அருள் பாதம் நாராயணன் விழி நண்ணிய பாதம் நான் புனை பாடல் நயந்த பொன் பாதம். #5 நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம் நாத முடிவில் நடிக்கின்ற பாதம் வல்லவர் சொல் எல்லாம்_வல்ல பொன் பாதம் மந்திர யந்திர தந்திர பாதம். #6 எச் சமயத்தும் இலங்கிய பாதம் எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம் அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம் ஆனந்த நாட்டுக்கு அதிபதி பாதம் #7 தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம் தெள் அமுதாய் உளம் தித்திக்கும் பாதம் மூவரும் காணா முழு_முதல் பாதம் முப்பாழுக்கு அப்பால் முளைத்த பொன் பாதம். #8 துரிய வெளிக்கே உரிய பொன் பாதம் சுக மயம் ஆகிய சுந்தரப் பாதம் பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம் பேறு எல்லாம் தந்த பெரும் புகழ்ப் பாதம். #9 சாகா_வரம் தந்த தாரகப் பாதம் சச்சிதானந்த சதோதய பாதம் தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம் திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். #10 ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம் ஒன்றாய் இரண்டு ஆகி ஓங்கிய பாதம் தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம். #11 ஐவண்ணமும் கொண்ட அற்புதப் பாதம் அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம் கை வண்ண நெல்லிக் கனி ஆகும் பாதம் கண்ணும் கருத்தும் கலந்த பொன் பாதம். #12 ஆர்_உயிர்க்கு ஆதாரம் ஆகிய பாதம் அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம் சார் உயிர்க்கு இன்பம் தருகின்ற பாதம் சத்திய ஞான தயாநிதி பாதம். #13 தாங்கி எனைப் பெற்ற தாய் ஆகும் பாதம் தந்தையும் ஆகித் தயவு செய் பாதம் ஓங்கி என் உள்ளே உறைகின்ற பாதம் உண்மை விளங்க உரைத்த பொன் பாதம். #14 எண்ணியவாறே எனக்கு அருள் பாதம் இறவா நிலையில் இருத்திய பாதம் புண்ணியர் கையுள் பொருள் ஆகும் பாதம் பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். #15 ஆறு அந்தத்துள்ளும் அமர்ந்த பொன் பாதம் ஆதி அனாதியும் ஆகிய பாதம் மாறு அந்தம் இல்லா என் வாழ் முதல் பாதம் மண் முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். #16 அருள்_பெரும்_ஜோதி அதாகிய பாதம் அம்மையும் அப்பனும் ஆகிய பாதம் பொருள் பெரும் போகம் புணர்த்திய பாதம் பொன் வண்ணம் ஆகிய புண்ணிய பாதம். #17 நாரணன் ஆதியர் நாட அரும் பாதம் நான் தவத்தால் பெற்ற நல் துணைப் பாதம் ஆரணம் ஆகமம் போற்றிய பாதம் ஆசை_விட்டார்க்கே அணிமை ஆம் பாதம். @25. அருள் அற்புதம் #1 * பல்லவி அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே * சரணங்கள் #2 சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது சித்தாடுகின்ற திரு_நாள் பிறந்தது கல் பத நெஞ்சக் கரிசு துறந்தது கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது #3 செத்தார் எழுகின்ற திரு_நாள் அடுத்தது சிவ நெறி ஒன்றே எங்கும் தலையெடுத்தது இத் தாரணி முதல் வானும் உடுத்தது இறவா_வரம்-தான் எனக்குக் கொடுத்தது #4 ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது ஈன அந்த மாயை இருள் வினை சோர்ந்தது என் அருள் சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது #5 சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்கொண்டனன் நித்திய ஞான நிறை அமுது உண்டனன் நிந்தை உலகியல் சந்தையை விண்டனன் #6 வஞ்சகர் அஞ்சினர் வாய் மூடிச் சென்றனர் வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர் தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர் சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர் #7 புறம் கூறினார் எல்லாம் புல் எனப் போயினர் பொன் படிக் கீழ்ப்புறம் மீளவும் மேயினர் மறம் கூறினோம் என் செய்வோம் என்று கூயினர் வாழிய என்று சொல் வாயினர் ஆயினர் #8 வெவ் வினைக் காடு எலாம் வேரொடு வெந்தது வெய்ய மாமாயை விரிவு அற்று நொந்தது செவ்விய ஞானம் சிறப்புற வந்தது சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது #9 சாதி சமயச் சழக்கு எலாம் அற்றது சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது மேதியில் சாகாத வித்தையைக் கற்றது மெய் அருள் சோதி என் உள்ளத்தில் உற்றது @26. ஆணிப்பொன் அம்பலம் #1 * பல்லவி ஆணி_பொன்_அம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி அம்மா அற்புதக் காட்சியடி * சரணங்கள் #2 ஜோதி மலை ஒன்று தோன்றிற்று அதில் ஒரு வீதி உண்டாச்சுதடி அம்மா வீதி உண்டாச்சுதடி. #3 வீதியில் சென்றேன் அ வீதி நடு ஒரு மேடை இருந்ததடி அம்மா மேடை இருந்ததடி. #4 மேடை மேல் ஏறினேன் மேடை மேல் அங்கு ஒரு கூடம் இருந்ததடி அம்மா கூடம் இருந்ததடி. #5 கூடத்தை நாட அக் கூடம் மேல் ஏழ் நிலை மாடம் இருந்ததடி அம்மா மாடம் இருந்ததடி. #6 ஏழ் நிலைக்குள்ளும் இருந்த அதிசயம் என் என்று சொல்வனடி அம்மா என் என் என்று சொல்வனடி. #7 ஓர் நிலை-தன்னில் ஒளிர் முத்து வெண் மணி சீர் நீலம் ஆச்சுதடி அம்மா சீர் நீலம் ஆச்சுதடி. #8 பாரோர் நிலையில் கருநீலம் செய்ய பவளமதாச்சுதடி அம்மா பவளமதாச்சுதடி. #9 மற்றோர் நிலையில் மரகதப் பச்சை செம் மாணிக்கம் ஆச்சுதடி அம்மா மாணிக்கம் ஆச்சுதடி. #10 பின் ஓர் நிலையில் பெரு முத்து வச்சிரப் பேர் மணி ஆச்சுதடி அம்மா பேர் மணி ஆச்சுதடி. #11 வேறு ஓர் நிலையில் மிகும் பவளத் திரள் வெண் மணி ஆச்சுதடி அம்மா வெண் மணி ஆச்சுதடி. #12 புகலோர் நிலையில் பொருந்திய பல் மணி பொன் மணி ஆச்சுதடி அம்மா பொன் மணி ஆச்சுதடி. #13 பதியோர் நிலையில் பகர் மணி எல்லாம் படிகமதாச்சுதடி அம்மா படிகமதாச்சுதடி. #14 ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம் இசைந்த பொன் தம்பமடி அம்மா இசைந்த பொன் தம்பமடி. #15 பொன் தம்பம் கண்டு ஏறும் போது நான் கண்ட புதுமை என் சொல்வனடி அம்மா புதுமை என் சொல்வனடி. #16 ஏறும் போது அங்கே எதிர்ந்த வகை சொல என்னளவு அல்லவடி அம்மா என்னளவு அல்லவடி. #17 ஆங்காங்கே சத்திகள் ஆயிரமாயிரம் ஆக வந்தார்களடி அம்மா ஆக வந்தார்களடி. #18 வந்து மயக்க மயங்காமல் நான் அருள் வல்லபம் பெற்றனடி அம்மா வல்லபம் பெற்றனடி. #19 வல்லபத்தால் அந்த மா தம்பத்து ஏறி மணி முடி கண்டேனடி அம்மா மணி முடி கண்டேனடி. #20 மணி முடி மேல் ஓர் கொடு முடி நின்றது மற்றது கண்டேனடி அம்மா மற்றது கண்டேனடி. #21 கொடு முடி மேல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன் கோயில் இருந்ததடி அம்மா கோயில் இருந்ததடி. #22 கோயிலைக் கண்டு அங்கே கோபுர வாயிலில் கூசாது சென்றனடி அம்மா கூசாது சென்றனடி. #23 கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் கோடி பல் கோடியடி அம்மா கோடி பல் கோடியடி. #24 ஆங்கு அவர் வண்ணம் வெள் வண்ணம் செவ் வண்ணம் முன் ஐ வண்ணம் ஆகுமடி அம்மா ஐ வண்ணம் ஆகுமடி. #25 அங்கு அவர் எல்லாம் இங்கு ஆர் இவர் என்னவும் அப்பாலே சென்றனடி அம்மா அப்பாலே சென்றனடி. #26 அப்பாலே சென்றேன் அங்கு ஓர் திரு_வாயிலில் ஐவர் இருந்தாரடி அம்மா ஐவர் இருந்தாரடி. #27 மற்றவர் நின்று வழி காட்ட மேல் ஓர் மணி வாயில் உற்றேனடி அம்மா மணி வாயில் உற்றேனடி. #28 எண்ணும் அ வாயிலில் பெண்ணோடு ஆணாக இருவர் இருந்தாரடி அம்மா இருவர் இருந்தாரடி. #29 அங்கு அவர் காட்ட அணுக்கத் திரு_வாயில் அன்பொடு கண்டேனடி அம்மா அன்பொடு கண்டேனடி. #30 அத் திரு_வாயிலில் ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாளடி அம்மா அம்மை இருந்தாளடி. #31 அம்மையைக் கண்டேன் அவள் அருள் கொண்டேன் அமுதமும் உண்டேனடி அம்மா அமுதமும் உண்டேனடி. #32 தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேனடி அம்மா சந்நிதி கண்டேனடி. #33 சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறு அது சாமி அறிவாரடி அம்மா சாமி அறிவாரடி. @27. அருட் காட்சி #1 வானத்தின் மீது மயில் ஆடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி மயில் குயில் ஆச்சுதடி. #2 துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்று ஆடும் வள்ளலைக் கண்டேனடி அக்கச்சி வள்ளலைக் கண்டேனடி. #3 சாதி சமயச் சழக்கை விட்டேன் அருள் சோதியைக் கண்டேனடி அக்கச்சி சோதியைக் கண்டேனடி. #4 பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்று ஆடும் ஐயரைக் கண்டேனடி அக்கச்சி ஐயரைக் கண்டேனடி. @28. ஆனந்தப் பரிவு #1 நான் அந்தம் அடையாது எந்நாளினும் உள்ளவன் ஆகி நடிக்கும் வண்ணம் ஆனந்த நடம் புரிவான் ஆனந்த அமுது அளித்தான் அந்தோ அந்தோ. #2 சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக ஆதி நடம் புரிகின்றான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ. #3 துரிய பதம் அடைந்த பெரும் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்கு அரிய பதம் எனக்கு அளித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ. #4 மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில் அருள்_பெரும்_சோதிப் பெருமான் அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ. #5 துன்பம் எலாம் ஒருகணத்தில் தொலைத்து அருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க அன்பு_உடையான் அம்பலத்தான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ. #6 பந்தம் எலாம் தவிர்த்து அருளிப் பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற அந்தம் எலாம் கடந்திடச்செய்து அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ. #7 பேராலும் அறிவாலும் பெரியர் எனச் சிறப்பாகப் பேச நின்றோர் ஆராலும் பெறல் அரியது யாது அதனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ. #8 தினைத்தனையும் அறிவு அறியாச் சிறியன் என நினையாமல் சித்தியான அனைத்தும் என்றன் வசம் ஆக்கி அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ. #9 பொதுவாகிப் பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்பப் பொருள்-தான் யாதோ அது நானாய் நான் அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ. #10 மருள் வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலும் மாய்வு இலாத அருள் வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற்று ஆடுகின்றேன் அந்தோ அந்தோ #11 எக் கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு அக்கரை சேர்த்து அருள் எனும் ஓர் சர்க்கரையும் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ @29. மெய்யருள் வியப்பு #1 * பல்லவி எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ. * சரணங்கள் #2 தனக்கு நிகர் இங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்று அதே தாவிப் போகப்போக நூலின் தரத்தில் நின்றதே கனக்கத் திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே கலக்கம் நீக்கித் தூக்கிவைத்தாய் நிலை பொருந்தவே. #3 இங்கு ஓர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போகப்போக நூலின் இழை போல் நுணுகவே அங்கே திகைத்து நடுங்கும் போது என் நடுக்கம் நீக்கியே அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே. #4 இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே விரவில் தனித்து அங்கு என்னை ஒரு கல் மேட்டில் ஏற்றியே விண்ணில் உயர்ந்த மாடத்து இருக்க விதித்தாய் போற்றியே. #5 மேலைப் பால் சிவகங்கை என்னும் ஓர் தீர்த்தம்-தன்னையே மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னையே ஏலத் துகிலும் உடம்பும் நனையாது எடுத்ததே ஒன்றோ எடுத்து என் கரத்தில் பொன் பூண் அணிந்த இறைவன் நீ அன்றோ. #6 என்னது உடலும் உயிரும் பொருளும் நின்னது அல்லவோ எந்தாய் இதனைப் பெறுக என நான் இன்று சொல்லவோ சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே. #7 அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லையே அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே எப்பாலவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லையே எனக்கும் நின் மேல் அன்றி உலகில் இச்சை இல்லையே. #8 அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே மேவிப் பிடித்துக்கொள்ளும்-தோறும் உவகை ஆளுதே. #9 தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே தகும் ஐந்தொழிலும் வேண்டும்-தோறும் தருதல் வல்லையே வினவும் எனக்கு என் உயிரைப் பார்க்க மிகவும் நல்லையே மிகவும் நான் செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லையே. #10 என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகுதே என்னை விழுங்கி எங்கும் இன்ப_வெள்ளம் பெருகுதே உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்குதே உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே. #11 உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற்றே அன்போர் அணுவும் இல்லா எனக்கு இங்கு அருளல் ஆயிற்றே. #12 நினைக்க நினைக்கத் தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே நின்-பால் அன்றிப் பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே எனைத் துன்பு ஒழித்து ஆட்கொண்ட நின்னை அன்னை என்பனோ எந்தாய் அன்பு_இலேன் நின் அடிக்கு முன்னை அன்பனோ. #13 உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ உன்-பால் அன்றிப் பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ என்னைக் கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ எந்தாய் நின்னைக் கொடுக்க என்-பால் இன்று வருதியோ. #14 நெடுநாள் முயன்றும் காண்டற்கு அரிய நிலையைக் காட்டியே நிறைந்து என் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டியே நடு நாடிய நின் அருளுக்கு என் மேல் என்ன நாட்டமோ நாய்க்குத் தவிசு இட்டனை நின்றனக்கு இங்கு இது ஓர் ஆட்டமோ. #15 நாகாதிபனும் அயனும் மாலும் நறுமுறு என்னவே ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்னவே சாகாக் கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவையே சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே. #16 யாது கருதி என்னை ஆண்டது ஐய ஐயவோ யான் உன் அடிப் பொன் துணைகட்கு வந்து தொழும்புசெய்யவோ ஓது கடவுள் கூட்டம் அனைத்தும் அடிமை அல்லவோ உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்லவோ. #17 தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கினேனையே தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்கவே புகுவித்தாயை என் வாய் துடிப்பது ஏத்தித் துதிக்கவே. #18 தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தையே தனியே நின்னை நினைக்கக் கிளர்வது எனது சிந்தையே நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக்கொடுத்த பண்பனே நான் செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்பனே. #19 ஏறா நிலையில் விரைந்துவிரைந்து இங்கு என்னை ஏற்றியே இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே மாறாக் கருணை என் மேல் வைக்க வந்தது என்னையோ மதி_இலேன் நின் அருட்குச் செய்த தவம்-தான் முன்னையோ. #20 இடமும் வலமும் இது என்று அறியாது இருந்த என்னையே எல்லாம் அறிவித்து அருள்செய் கருணை என்னை என்னையே நடமும் நடம் செய் இடமும் எனக்கு நன்று காட்டியே நாயினேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே. #21 விதுவும் கதிரும் இது என்று அறியும் விளக்கம் இன்றியே விழித்து மயங்கினேன்-பால் பெரிய கருணை ஒன்றியே அதுவும் அதுவும் இது என்று எனக்குள் அறியக் காட்டியே அடியனேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே. #22 இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணியே இரவும்_பகலும் மயங்கினேனை இனிது நண்ணியே அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டியே அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே. #23 அண்டத்து அகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லுதே அவனே எல்லாம்_வல்லான் என்று மறைகள் சொல்லுதே பிண்டத்து அகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதியே பேயேன் அளவில் விளங்குகின்றது என்ன நீதியே. #24 கருணாநிதி நின்றன்னைக் காணக் கண்கள் துடிக்குதே காண்போம் என்று நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே அருள் நாடகம் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே. #25 அருள் ஆர் சோதி என்னுள் விளங்க அளித்த காலத்தே அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்தது இந்த ஞாலத்தே பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னையோ பொன் என்று ஐய மதிப்பது உதவாத் துரும்பு-தன்னையோ. #26 எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருக்கும் தன்மையே இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மையே தனக்கு உள்ளது தன் தலைவர்க்கு உளது என்று அறிஞர் சொல்வதே சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே. #27 கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்ததே கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே தருணத்து உண்டு மகிழ்வுற்றேன் அ மகிழ்ச்சி சொல்லவே தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்தது அல்லவே. #28 என் ஆர்_உயிர்க்குத் துணைவ நின்னை நான் துதிக்கவே என்ன தவம் செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே பொன் ஆர் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே புலையனேனுக்கு அளித்த கருணை மிகவும் பெரியதே. #29 என் கண்மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காணவே என்ன தவம் செய்தேன் முன் அயனும் அரியும் நாணவே புன்கண் ஒழித்துத் தெள் ஆர் அமுதம் புகட்டி என்னையே பொருளாய் எண்ணி வளர்க்கின்றாய் நீ எனக்கு ஓர் அன்னையே. #30 அறிவு_இலேன் செய் குற்றம் அனைத்தும் பொறுத்தது அன்றியே அமுதும் அளித்தாய் யார் செய்வார்கள் இந்த நன்றியே செறிவு இலாத பொறியும் மனமும் செறிந்து நிற்கவே செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே. #31 ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலையே யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையுமே. #32 அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே ஆசைப்பட்டது அறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டியே பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம்-தன்னையே பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே. #33 வேதாகமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன்றாகவே விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போகவே பூதாதிகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்றுமே பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்றுமே. #34 வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய் மணக்குதே வஞ்ச வினைகள் எனை விட்டு ஓடித் தலை வணக்குதே எள்ளாது உனது புகழைக் கேட்கச் செவி நயக்குதே எந்தாய் தயவை எண்ணும்-தோறும் உளம் வியக்குதே. #35 இறைவா நின்னைக் கனவிலேனும் யான் மறப்பனோ எந்தாய் உலகத்தவர்கள் போல் நான் இனி இறப்பனோ மறை வாசகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியிலே வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியிலே. #36 தலைவா எனக்குக் கருணை அமுதம் தர இ தலத்திலே தவம் செய்தேன் அத் தவமும் உன்றன் அருள் வலத்திலே அலை வாரிதியில் துரும்பு போல அயனும் மாலுமே அலைய எனக்கே அளிக்கின்றாய் நீ மேலும் மேலுமே. #37 உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்னவே உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம்-அது ஆயிற்றே. #38 மயங்கும்-தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கியே மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே உயங்கும் மலங்கள் ஐந்தும் பசை அற்று ஒழிந்து வெந்ததே உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே. #39 எனக்கும் நின்னைப் போல நுதல் கண் ஈந்து மதனையே எரிப்பித்தாய் பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனையே சினக்கும் கூற்றை உதைப்பித்து ஒழித்துச் சிதைவு மாற்றியே தேவர் கற்பம் பலவும் காணச்செய்தாய் போற்றியே. #40 கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்றுமே கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே உள்ளது உரைக்கின்றேன் நின் அடி மேல் ஆணை முன்னையே உள்ளே விளங்கிக் காண்கின்றாய்க்கு இங்கு ஒளிப்பது என்னையே. #41 என்னை அடிமைகொண்டாய் நானும் நினக்கு நல்லனோ எல்லாம்_வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்லனோ முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டியே மூவர்க்கு அரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே. #42 சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண் களிக்கவே துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிமளிக்கவே ஓதி உணர்தற்கு அரிய பெரிய உணர்வை நண்ணியே ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் நின் அருளை எண்ணியே. #43 ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே ஏற்றிக் களிக்கவைத்தாய் அதன் மேல் இலங்கு குன்றிலே வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப் பொன் காசுமே. #44 இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மையே என்-பால் செய்யவைத்தாய் இது நின் அருளின் தன்மையே அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கியே அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமையாக்கியே. #45 அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதியே அரசே எனக்குள் விளங்கும் ஆதியாம் அனாதியே ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணையாளனே ஒன்றாய் ஒன்றில் உபயம் ஆகி ஒளிரும் தாளனே. #46 பாலும் தேனும் கலந்தது என்ன என்னுள் இனிக்கவே பரம ஞான அமுதம் அளிக்கின்றாய் தனிக்கவே ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவது என்பரே இன்று நோக்கி ஓர_வாரன் என்பர் அன்பரே. #47 ஐயா நான் செய் பிழைகள் ஏழு கடலில் பெரியதே அனைத்தும் பொறுத்த தயவு பிறருக்கு அரியது அரியதே மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே. #48 பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்டமும் போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும் நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமுமே நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமுமே. #49 எட்டும் இரண்டும் இது என்று எனக்குச் சுட்டிக்காட்டியே எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக்கூட்டியே துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடர் உள் ஏற்றியே தூண்டாது என்றும் விளங்கவைத்தாய் உண்மை சாற்றியே. #50 அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவன் ஆகியே அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகியே பொருளாய் எனையும் உளம்கொண்டு அளித்த புனித நாதனே போற்று நாத முடிவில் நடம் செய் கமல பாதனே. #51 உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்தனே உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரமமே மன்றில் பரமானந்த நடம் செய்கின்ற பிரமமே. #52 அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ளமே அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ளமே பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே புனித வானத்துள்ளே விளங்கும் புரண ஞானமே. #53 சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்பு-அது என்னவே சாற்றப் புகினும் சாலார் அருளின் பெருமை உன்னவே அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியிலே அனந்தத்து ஒன்று என்று உரைத்தும் சாலா நின் பொன் அடியிலே. #54 அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவரே ஆறாறு அகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவரே இப் பார் ஆதி பூதம் அடங்கும் காலும் நின்னையே ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐயம் என்னையே. #55 என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டியே இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னையே. #56 எண்ணும்-தோறும் எண்ணும்-தோறும் என்னுள் இனிக்குதே இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்குதே கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றிப் பிறர்-பால் செல்லுமோ கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ. #57 விந்தோநாத வெளியும் கடந்து மேலும் நீளுதே மேலை வெளியும் கடந்து உன் அடியர் ஆணை ஆளுதே அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லையே அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லையே. #58 இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனி நான் விடுவனோ எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற்றே கோவே உன்றன் அருள் சிற்சோதி என்னது ஆயிற்றே. #59 காய்க்கும் பருவம்-தன்னைப் பழுத்த பருவம் ஆக்கியே கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலைத் தூக்கியே நாய்க்குத் தவிசு இட்டு ஒரு பொன் முடியும் நன்று சூட்டியே நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டியே. #60 கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலைத் தூக்கியே புல்லை முடிக்கும் அணிகின்றாய் என் புன் சொல்_மாலையே புனைந்து என் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின் பொன் காலையே. #61 சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே தனித்து உன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொன் பாதமே உலக விடயக் காட்டில் செல்லாது எனது போதமே. #62 அருளும் பொருளும் பெற்றேன் அடியன் ஆகி நானுமே அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள் சிற்சோதியே என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்ற தாதியே. #63 காம_கடலைக் கடந்து வெகுளி_கடலை நீந்தினேன் கடிய மயக்க_கடலைத் தாண்டி அடியை ஏந்தினேன் சேமப் பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன் சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன். #64 தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம்-அது ஆயிற்றே சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற்றே ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன் எந்தாய் கருணை அமுது உண்டு இன்பப் பொருப்பில் ஓங்கினேன். #65 உறவு பகை என்று இரண்டும் எனக்கு இங்கு ஒன்று-அது ஆயிற்றே ஒன்று என்று இரண்டு என்று உளறும் பேதம் ஓடிப் போயிற்றே மறவு நினைவு என்று என்னை வலித்த வலிப்பு நீங்கினேன் மன்றில் பரமானந்த நடம் கண்டு இன்பம் ஓங்கினேன். #66 உன்னைக் கண்டுகொண்டேன் கண்டவுடன் இங்கு என்னையே உலகம் எல்லாம் கண்டுகொண்ட உவப்பு இது என் ஐயே என்னைக் கண்டுகொண்ட காலத்து இறைவ நின்னையே யாரும் கண்டுகொண்டார் இல்லை ஆங்கு அது என் ஐயே. #67 மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயினேன் வள்ளல் கருணை அமுது உண்டு இன்ப நாட்டான் ஆயினேன் குலத்தில் குறியில் குணத்தில் பெருமைகொள்ளா நாயினேன் கோது_இல் அமுது உண்டு எல்லா நலமும் உள்ளான் ஆயினேன். #68 கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயினேன் கருணை அமுது உண்டு இன்ப நாட்டுக்கு உடையன் ஆயினேன் விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயினேன் விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயினேன். #69 அயனும் மாலும் தேடித்தேடி அலந்து போயினார் அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார் மயனும் கருத மாட்டாத் தவள மாடத்து உச்சியே வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே. #70 வல்லாய் உனது கருணை அமுது என் வாய்க்கு வந்ததே மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்ததே எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே இறவாது என்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்ததே. #71 சிற்றம்பலத்தில் நடம் கண்டவர் கால் பொடி கொள் புல்-அதே சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய்ய வல்லதே பற்று அம்பலத்தில் வைத்தார்-தம்மைப் பணியும் பத்தரே பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே. #72 சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய் என்று என்னையே செல்வப் பிள்ளை ஆக்கி வளர்க்கின்றாய் இது என் ஐயே தெருட்டித் திரு_பொன்_பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டியே திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே. #73 அடியன் ஆக்கிப் பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே அடிகள் ஆக்கிக்கொண்டாய் என்னை அவலம் நீக்கியே படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே பதியும் ஓர_வாரன் என்பர் பரிவு தேக்கியே. #74 அண்ணா எனையும் பொருள் என்று எண்ணி இரவும்_பகலுமே அகத்தும் புறத்தும் திரிகின்றாய் இ உலகு என் புகலுமே தண் ஆர் அமுதம் மிகவும் எனக்குத் தந்தது அன்றியே தனியே இன்னும் தருகின்றாய் என் அறிவின் ஒன்றியே. #75 வேதாகமத்தின் அடியும் நடுவும் முடியும் மற்றுமே வெட்டவெளி-அது ஆகி விளங்கக் கண்டேன் முற்றுமே நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்டதே நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்டதே. #76 புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் தழுவற்கு அரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் தனித்து அப்பால் ஓர் தவள மாடத்து இருந்து தேறினேன். #77 கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லையே கனி-அது ஆக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத்து எல்லையே உடையாய் துரியத் தலத்தின் மேல் நின்று ஓங்கும் தலத்திலே உன்-பால் இருக்கவைத்தாய் என்னை உவந்து வலத்திலே. #78 அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையுமே எறிந்து அப் பாடு முழுதும் பெரிய இன்பம் ஆயிற்றே எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்தம் ஆயிற்றே. #79 பனிரண்டு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே துனியாது அந்தப் பாடு முழுதும் சுகம்-அது ஆயிற்றே துரையே நின் மெய் அருள் இங்கு எனக்குச் சொந்தம் ஆயிற்றே. #80 ஈர்_ஆறு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்பம் ஆயிற்றே இறைவா நின் மெய் அருள் இங்கு எனக்குச் சொந்தம் ஆயிற்றே. #81 பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாயரே பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயிலோ நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக்காயிலோ. #82 சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வமே சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே என்னை அவத்தைக் கடல்-நின்று இங்ஙன் எடுத்த தெய்வமே எல்லா நலமும் தரும் இன் அமுதம் கொடுத்த தெய்வமே. #83 அச்சம் தீர்த்து இங்கு என்னை ஆட்கொண்டு அருளும் அமுதனே அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்து உள் அமர்ந்த அமுதனே இச்சை யாவும் முடித்துக் கொடுத்து உள் இலங்கும் குரவனே என்றும் இறவாக் கல்வி அடியேற்கு ஈய்ந்த குரவனே. #84 உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னையே ஓதாது உணர உணரும் உணர்வை உதவும் அன்னையே தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச்செய்த அப்பனே செல்வப் பிள்ளை ஆக்கி என் உள் சேர்ந்த அப்பனே. #85 இரவும்_பகலும் என்னைக் காத்து உள் இருக்கும் இறைவனே எல்லா உலகும் புகழ எனை மேல் ஏற்றும் இறைவனே கரவு நினையாது எனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே களித்து என்றனையும் சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவனே. #86 சற்றும் வருந்தப் பாராது என்னைத் தாங்கும் நேயனே தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேயனே முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே. #87 நேயா நின்னை நினைக்கநினைக்க நெஞ்சம் களிக்குதே நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர் துளிக்குதே ஓயாது உனது பெருமை நினைக்க உவகை நீடுதே உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடித் தேடுதே. #88 பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடுதே பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே என்னே பிறர்-தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்புதே எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்புதே. #89 மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவரே மனிதர் கண்ணில் பட்ட புல்லும் மரமும் தேவரே அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவரே அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவரே. #90 வாழ்வே நினது நடம் கண்டவரைச் சுத்தர் என்பனோ மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்பனோ ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்பனோ. #91 சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மையே தேவர் கண்டுகொண்டு வணங்குகின்றார் இம்மையே தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்தரே தகும் ஐந்தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்தரே. #92 ஐவராலும் நின்னை அறிதற்கு அருமை அருமையே ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமையே பொய் வராத வாய் கொண்டு உன்னைப் போற்றும் அன்பரே பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்பரே. #93 என்னைக் காட்டி என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடியே புந்தி களிக்கவைத்தாய் அழியாது என்னை நாடியே. #94 அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே அறிந்தேன் அங்கைக் கனி போல் அவற்றில் உள்ள செய்தியே பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே பேசிப்பேசி வியக்கின்றேன் இப் பிறவி-தன்னையே. #95 சிற்றம்பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டியே சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தித் திறத்தைக் காட்டியே குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே கோவே நீயும் என்னுள் கலந்துகொண்டாய் நாட்டியே. #96 சுத்த நிலையின் நடு நின்று எங்கும் தோன்றும் சோதியே துரிய வெளியைக் கடந்து அப்பாலும் துலங்கும் சோதியே சித்தர் உளத்தில் சுடர்செய்து ஓங்கும் தெய்வச் சோதியே சிற்றம்பலத்தில் நடம் செய்து எனக்குள் சிறந்த சோதியே. #97 அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதியே அதன் பின் பிள்ளை ஆக்கி அருள் இங்கு அளித்த சோதியே நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே நானும் நீயும் ஒன்று என்று உரைத்து நல்கு சோதியே. #98 நீயே வலிந்து இங்கு என்னை ஆண்ட நீதிச் சோதியே நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதியே தாயே என வந்து என்னைக் காத்த தருமச் சோதியே தன்மை பிறரால் அறிதற்கு அரிய தலைமைச் சோதியே. #99 சாகா_கல்வி எனக்குப் பயிற்றித் தந்த சோதியே தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே ஏகாக்கரப் பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே. #100 சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழியே துரிய வெளியின் நடு நின்று ஓங்கும் சோதி வாழியே சூது இலா மெய்ச் சிற்றம்பலத்துச் சோதி வெல்கவே துலங்கப் பொன்_அம்பலத்தில் ஆடும் சோதி வெல்கவே. #101 சுத்த சிவ சன்மார்க்க நீதிச் சோதி போற்றியே சுக வாழ்வு அளித்த சிற்றம்பலத்துச் சோதி போற்றியே சுத்த சுடர்ப் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே ** பண்கள் @30. வளர்பதி விளக்கம் #1 உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே. #2 ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே ஒளி உயிர் வளர்தரும் உணர்வே வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே வளி வளர் அசைவே அசை வளர் வளியே வளி அசை வளர்தரு செயலே அளி வளர் அனலே அனல் வளர் அளியே அளி அனல் வளர் சிவ பதியே. #3 அடி வளர் இயலே இயல் வளர் அடியே அடி இயல் வளர்தரு கதியே முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே. #4 சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே வரம் வளர் நிறையே நிறை வளர் வரமே வரம் நிறை வளர்தரு வயமே பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே. #5 திரு வளர் வளமே வளம் வளர் திருவே திரு வளம் வளர்தரு திகழ்வே உரு வளர் வடிவே வடி வளர் உருவே உரு வடி வளர்தரு முறைவே கரு வளர் அருவே அரு வளர் கருவே கரு அரு வளர் நவ கதியே குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே. #6 நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே பொறை வளர் புவியே புவி வளர் பொறையே புவி பொறை வளர்தரு புனலே துறை வளர் கடலே கடல் வளர் துறையே துறை கடல் வளர்தரு சுதையே மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே. #7 தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே நவம் வளர் புரமே புரம் வளர் நவமே நவ புரம் வளர்தரும் இறையே துவம் வளர் குணமே குணம் வளர் துவமே துவ குணம் வளர்தரு திகழ்வே சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே. #8 நடம் வளர் நலமே நலம் வளர் நடமே நடம் நலம் வளர்தரும் ஒளியே இடம் வளர் வலமே வலம் வளர் இடமே இடம் வலம் வளர்தரும் இசைவே திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே. #9 அது வளர் அணுவே அணு வளர் அதுவே அது அணு வளர்தரும் உறவே விது வளர் ஒளியே ஒளி வளர் விதுவே விது ஒளி வளர்தரு செயலே மது வளர் சுவையே சுவை வளர் மதுவே மது உறு சுவை வளர் இயலே பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே. #10 நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே மதி வளர் நலமே நலம் வளர் மதியே மதி நலம் வளர்தரு பரமே கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே. @31. ஞானோபதேசம் #1 கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே தண் ஏர் ஒண் மதியே எனைத் தந்த தயாநிதியே உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே. #2 வளியே வெண் நெருப்பே குளிர் மா மதியே கனலே வெளியே மெய்ப்பொருளே பொருள் மேவிய மேல் நிலையே அளியே அற்புதமே அமுதே அறிவே அரசே ஒளியே உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே. #3 அன்பே என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே என்பே உள் உருகக் கலந்து என்னுள் இருந்தவனே இன்பே என் அறிவே பரமே சிவமே எனவே உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே. #4 தனையா என்று அழைத்தே அருள் சத்தி அளித்தவனே அனையாய் அப்பனுமாய் எனக்கு ஆரியன் ஆனவனே இனையாது என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே. #5 துப்பு ஆர் செம் சுடரே அருள் சோதி சுகக் கடலே அப்பா என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே இப் பாரில் பசிக்கே தந்த இன் சுவை நல் உணவே ஒப்பாய் ஒப்ப அரியாய் எனக்கு உண்மை உரைத்து அருளே. #6 என்றே என்றுள் உறும் சுடரே எனை ஈன்றவனே நன்றே நண்பு எனக்கே மிக நல்கிய நாயகனே மன்று ஏர் மா மணியே சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே ஒன்றே என் துணையே எனக்கு உண்மை உரைத்து அருளே. #7 திருவே தெள் அமுதே அருள் சித்த சிகாமணியே கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம் உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே. #8 தடை யாவும் தவிர்த்தே எனைத் தாங்கிக்கொண்டு ஆண்டவனே அடையா அன்பு_இலர்-பால் எனக்கு அன்பொடு தந்த பெரும் கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே உடையாய் உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே. #9 பெண்ணாய் ஆண் உருவாய் எனைப் பெற்ற பெருந்தகையே அண்ணா என் அரசே திரு_அம்பலத்து ஆடுகின்றோய் எண்ணா நாய்_அடியேன் களித்திட்ட உணவை எலாம் உண்ணாது உண்டவனே எனக்கு உண்மை உரைத்து அருளே. #10 நந்நாலும் கடந்தே ஒளிர் ஞான சபாபதியே பொன் ஆரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே. @32. ஆரமுதப் பேறு #1 விரை சேர் பொன்_மலரே அதில் மேவிய செந்தேனே கரை சேர் முக்கனியே கனியில் சுவையின் பயனே பரை சேர் உள் ஒளியே பெரும்பற்று அம்பலம் நடம் செய் அரைசே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே. #2 விண் ஆர் செம் சுடரே சுடர் மேவிய உள் ஒளியே தண் ஆர் வெண் மதியே அதில் தங்கிய தண் அமுதே கண் ஆர் மெய்க் கனலே சிவகாமப் பெண் காதலனே அண்ணா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே #3 துப்பு ஆர் செம் சடையாய் அருள் சோதிச் சுகக் கடலே செப்பா மேல் நிலைக்கே சிறியேனைச் செலுத்தியவா எப்பாலும் புகழும் பொது இன்ப நடம் புரியும் அப்பா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே #4 மெய்யா மெய் அருளே என்று மேவிய மெய்ப்பொருளே கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் ஐயா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே. #5 பொறி வேறு இன்றி நினை நிதம் போற்றும் புனிதருளே குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதிக் கொழும் சுடரே செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_ அறிவே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே. #6 முத்தா முத்தர் உளே ஒளிர்கின்ற முழு_முதலே சித்தா சித்தி எலாம் தர வல்ல செழும் சுடரே பித்தா பித்தன் எனை வலிந்து ஆண்ட பெருந்தகையே அத்தா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே. #7 தன் நேர் இல்லவனே எனைத் தந்த தயாநிதியே மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே அன்னே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே. #8 ஒளியே அ ஒளியின் நடு உள் ஒளிக்குள் ஒளியே வெளியே எவ்வெளியும் அடங்கின்ற வெறுவெளியே தளியே அம்பலத்தே நடம் செய்யும் தயாநிதியே அளியே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே. #9 மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே தெருளே ஓர் வடிவாய் உறச் செய்த செழும் சுடரே பொருளே சிற்சபை வாழ்வுறுகின்ற என் புண்ணியனே அருளே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே. #10 முன்பே என்றனையே வலிந்து ஆட்கொண்ட முன்னவனே இன்பே என் உயிரே எனை ஈன்ற இறையவனே பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ் அன்பே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே. #11 பவனே வெம் பவ நோய்-தனைத் தீர்க்கும் பரஞ்சுடரே சிவனே செம்பொருளே திரு_சிற்றம்பலம் நடிப்பாய் தவ நேயம் பெறுவார்-தமைத் தாங்கி அருள் செய வல் லவனே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.. #12 தேனாய்த் தீம் பழமாய்ச் சுவை சேர் கரும்பாய் அமுதம்- தானாய் அன்பர் உளே இனிக்கின்ற தனிப் பொருளே வானாய்க் கால் அனலாய்ப் புனலாய் அதில் வாழ் புவியாய் ஆனாய் தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே. #13 பொடி ஏற்கும் புயனே அருள் பொன்_அம்பலத்து அரசே செடியேற்கு அன்று அளித்தாய் திரு_சிற்றம்பலச் சுடரே கடியேற்கு அன்னை எனும் சிவகாமக் கொடை_உடையாய் அடியேற்கு இன்று அளித்தாய் அருள் ஆர்-அமுதம்-தனையே. ** கீர்த்தனங்கள் @33. இன்னந் தயவு #1 * பல்லவி இன்னம் தயவு வரவிலையா உனக்கு என் மீதில் என்ன வர்மம் சொலையா * சரணங்கள் #2 அன்னம்பாலிக்கும் தில்லைப் பொன்_அம்பலத்தில் ஆடும் அரசே அரசே அரசே என்று அலறவும் #3 சின்னஞ்சிறு வயதில் என்னை அடிமைகொண்ட சிவமே சிவமே சிவமே என்று அலறவும் #4 முன்னம் பிழை பொறுத்தாய் இன்னம் பொறாதுவிட்டால் முறையோ முறையோ முறையோ என்று அலறவும் #5 தன்னை அறியா என்னை இன்னலுறச் செய்தாயே தகுமோ தகுமோ தகுமோ என்று அலறவும் #6 பண்டு மகிழ்ந்து எனை ஆட்கொண்டு கருணைசெய்த பரமே பரமே பரமே என்று அலறவும் #7 கொண்டு குலம் பேசுவார் உண்டோ உலகில் எங்கள் குருவே குருவே குருவே என்று அலறவும் @34. அபயம் அபயம் #1 * பல்லவி அபயம் அபயம் அபயம். * சரணங்கள் #2 உபயம்-அதாய் என் உறவாய்ச் சிதம்பரச் சபையில் நடம் செயும் சாமி பதத்திற்கே #3 எம் பலத்தால் எம்மை ஏன்றுகொளத் தில்லை அம்பலத்து ஆடும் எம் ஐயர் பதத்திற்கே #4 தவ சிதம்பரம் ஆகித் தன்மயமாய்ச் செயும் சிவ_சிதம்பர மகாதேவர் பதத்திற்கே #5 ஒன்றும் பதத்திற்கு உயர் பொருள் ஆகியே என்றும் என் உள்ளத்து இனிக்கும் பதத்திற்கே #6 வான் அந்தமாம் தில்லை மன்றிடை என்றும் நின்று ஆனந்த_தாண்டவம் ஆடும் பதத்திற்கே #7 நாராயணனொடு நான்முகன் ஆதியர் பாராயணம் செயும் பதும பதத்திற்கே #8 அன்பர் செயும் பிழை ஆயிரமும் பொறுத்து இன்பம் அளிக்குநம் ஈசர் பதத்திற்கே #9 குற்றம் செயினும் குணமாகக் கொண்டு நம் அற்றம் தவிர்க்கு நம் அப்பர் பதத்திற்கே #10 செம்பொருள் ஆகிச் சிதம்பரத்தே என்றும் நம் பொருள் ஆன நடேசர் பதத்திற்கே #11 வெச்சென்ற மாயை வினை ஆதியால் வந்த அச்சம் தவிர்க்கும் நம் ஐயர் பதத்திற்கே #12 எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்கும் நம் புண்ணியனார் தெய்வப் பொன் அடிப் போதுக்கே #13 மன் அம்பரத்தே வடிவில் வடிவு ஆகிப் பொன்_அம்பலத்து ஆடும் பொன் அடிப் போதுக்கே #14 நாத முடியில் நடம் புரிந்து அன்பர்க்குப் போதம் அளிக்கின்ற பொன் அடிப் போதுக்கே #15 உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான சச்சிதானந்தத் தனி நடப் போதுக்கே #16 சித்தமும் உள்ளமும் தித்தித்து இனிக்கின்ற புத்தமுது ஆகிய பொன் அடிப் போதுக்கே @35. அஞ்சாதே நெஞ்சே * பல்லவி #1 அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே. #2 வஞ்சம்_இலார் நாம் வருந்திடில் அப்போதே அஞ்சல் என்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #3 துய்யர் அருள்_பெரும்_ஜோதியார் நம்முடை அய்யர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் #4 மண்ணில் நமை அண்ட வள்ளலார் நம்முடை அண்ணல் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் #5 இப் புவியில் நம்மை ஏன்றுகொண்டு ஆண்ட நம் அப்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் #6 சித்தர் எலாம் வல்ல தேவர் நமை ஆண்ட அத்தர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் #7 சோதி அருள் பெருஞ் சோதியார் நம்முடை ஆதி இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் #8 தாண்டவனார் என்னைத் தான் தடுத்து ஆட்கொண்ட ஆண்டவனார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #9 வன்பர் மனத்தை மதியாதவர் நமது அன்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் #10 தெருள்_உடையார் எலாஞ் செய்ய வல்லார் திரு அருள்_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #11 நம்மை ஆட்கொள்ள நடம் புரிவார் நமது அம்மையினோடு இதோ அம்பலத்து இருக்கின்றார் #12 தன்னை ஒப்பார் சிற்சபை நடம் செய்கின்றார் அன்னை ஒப்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #13 பாடுகின்றார்க்கு அருள் பண்பினர் ஞானக் கூத் தாடுகின்றார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #14 காதரிப்பார்கட்குக் காட்டிக்கொடார் நம்மை ஆதரிப்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #15 நீள வல்லார்க்கு மேல் நீள வல்லார் நம்மை ஆள வல்லார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #16 இன்பு_உடையார் நம் இதயத்து அமர்ந்த பேர்_ அன்பு_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #17 உபய பதத்தை நம் உச்சி மேல் சூட்டிய அபயர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் #18 வேண்டு கொண்டார் என்னை மேல் நிலைக்கு ஏற்றியே ஆண்டுகொண்டார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #19 எச்சம் பெறேல் மகனே என்று என்னுள் உற்ற அச்சம் தவிர்த்தவர் அம்பலத்து இருக்கின்றார் #20 நமுதன் முதல் பல நன்மையுமாம் ஞான அமுதர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் #21 செடிகள் தவிர்த்து அருள் செல்வம் அளிக்கின்ற அடிகள் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் #22 விரசு உலகு எல்லாம் விரித்து ஐந்தொழில் தரும் அரசு_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார் #23 செறிவு_உடையார் உளத்தே நடம் செய்கின்ற அறிவு_உருவார் இதோ அம்பலத்து இருக்கின்றார் @36. தெண்டனிட்டேன் #1 * பல்லவி தெண்டனிட்டேன் என்று சொல்லடி சுவாமிக்கு நான் தெண்டனிட்டேன் என்று சொல்லடி. #2 * அநுபல்லவி தண்டலை விளங்கும் தில்லைத் தலத்தில் பொன்_அம்பலத்தே கண்டவர் மயங்க வேடம்கட்டி ஆடுகின்றவர்க்கு * சரணங்கள் #3 கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே கனிந்த புன்னகை ஆடக் கருணைக் கடைக்கண் ஆட அற்பு ஆர் பொன்_அம்பலத்தே ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டே என்னை ஆட்டம் கண்டாருக்கு #4 இழிந்தாலும் நம்மை இங்கே ஏற்றுவார் என்று அடைந்தால் ஏற்றுவார் போலே பின்னும் இழியவைப்பாருக்குப் பழம்-தான் நழுவி மெல்லப் பாலில் விழுந்தது என்னப் பசப்பிப்பசப்பி அன்பர் பண்டம் பறிப்பவர்க்கு #5 சுட்ட திரு_நீறு பூசித் தொந்தோம் என்று ஆடுவார்க்குத் தோன்று தலை மாலை அணி தோள் விளங்க வருவார்க்குப் பிட்டுக்கு ஆசைப்பட்டு மாறன் பிரம்படி பட்டவர்க்குப் பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ளத் தவ வேடருக்கு #6 வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய்பவருக்கு மாசு பறித்தவர் கையில் காசு பறிக்கின்றவர்க்குத் தாழ்ந்தாரை அடிக்கடி தாழக் காண்பவருக்குத் தான் ஆகி நான் ஆகித் தனியே நின்றவருக்கு #7 ஆதி அந்தம் நடு இல்லா ஆனந்த நாடருக்கு அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்குச் சோதி மயமாய் விளங்கும் தூய வடிவாளருக்குத் தொண்டர் குடி கெடுக்கவே துஜம்கட்டிக்கொண்டவர்க்கு #8 பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய்ப் பண்பு உரைத்துத் தூதன் என்றே பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு வீட்டுக்கு ஆசைப்படுவாரை வீட்டை விட்டுத் துரத்தியே வேட்டாண்டியாய் உலகில் ஓட்டாண்டி ஆக்குவார்க்கு #9 தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தவர்க்குச் சாதி குலம் அறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு ஏய தொழில் அருளும் என் பிராண_நாயகர்க்கு ஏமாந்தவரை எல்லாம் ஏமாத்தும் ஈசருக்கு @37. வருவார் அழைத்துவாடி #1 * பல்லவி வருவார் அழைத்துவாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே. #2 * அநுபல்லவி திரு ஆர் பொன்_அம்பலத்தே செழிக்கும் குஞ்சிதபாதர் சிவ_சிதம்பர போதர் தெய்வச் சபாநாதர் * சரணங்கள் #3 சிந்தை களிக்கக் கண்டு சிவானந்த மது உண்டு தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரி கொண்டு இந்த வெளியில் நடமிடத் துணிந்தீரே அங்கே இதைவிடப் பெருவெளி இருக்குது என்றால் இங்கே #4 இடுக்கு இலாமல் இருக்க இடம் உண்டு நடம் செய்ய இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டு ஐய ஒடுக்கில் இருப்பது என்ன உளவு கண்டுகொள்வீர் என்னால் உண்மை இது வஞ்சம் அல்ல உம் மேல் ஆணை என்று சொன்னால் #5 மெல் இயல் சிவகாமவல்லியுடன் களித்து விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து எல்லை_இல் இன்பம் தரவும் நல்ல சமயம்-தான் இது இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்ற போது @38. என்ன புண்ணியம் #1 * பல்லவி என்ன புண்ணியம் செய்தேனோ அம்மா நான் என்ன புண்ணியம் செய்தேனோ. #2 * அநுபல்லவி மன்னர் நாதர் அம்பலவர் வந்தார் வந்தார் என்று திரு_ சின்ன நாதம் என் இரண்டு செவிகளின் உள் சொல்கின்றதே. * சரணங்கள் #3 பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய் அருள் நாடகம் புரியும் கருணாநிதியர் உன்னை ஆள வந்தார் வந்தார் என்று எக்காள நாதம் சொல்கின்றதே. #4 பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் பத்தி_வலையுள் படுவார் சத்தியர் நித்தியர் மன்றில் ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே. #5 எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார் மந்திர மா மன்றில் இன்பம் தந்த நடராஜர் உன்னை மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே. #6 ஓதி எந்தவிதத்தாலும் வேதியனும் தேர்வு_அரியார் ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் ஆதி அந்தம் காண்ப அரிய ஜோதி சுயம் ஜோதி உன்னோடு ஆட வந்தார் வந்தார் என்றே நாடி நாதம் சொல்கின்றதே. #7 அற்புதப் பேர்_அழகாளர் சொல் பதம் கடந்துநின்றார் அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார் சிற்பரர் எல்லாமும் வல்ல தற்பரர் விரைந்து இங்கு உன்னைச் சேர வந்தார் வந்தார் என்று ஓங்கார நாதம் சொல்கின்றதே. #8 ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர் காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னைக் காண வந்தார் வந்தார் என்றே வேணு நாதம் சொல்கின்றதே. #9 பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர் வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க வலிய வந்தார் வந்தார் என்றே வலிய நாதம் சொல்கின்றதே. @39. இவர்க்கும் எனக்கும் #1 * பல்லவி இவர்க்கும் எனக்கும் பெரு வழக்கு இருக்கின்றது அது என்றும் தீரா வழக்குக் காணடி. #2 * அநுபல்லவி எவர்க்கும் பெரியவர் பொன்_அம்பலத்தே நடம் இட்டார் எனக்கு மாலையிட்டார் இதோ வந்தார். * சரணங்கள் #3 அன்று இதோ வருகின்றேன் என்று போனவர் அங்கே யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே இந்தக் கதவை மூடு இவர் போவது இனி எங்கே. #4 அவரவர் உலகத்தே அறிந்து அலர் தூற்றப்பட்டேன் அன்று போனவர் இன்று வந்து நிற்கின்றார் கெட்டேன் இவர் சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் இந்தக் கதவை மூடு இனி எங்கும் போக ஒட்டேன். #5 சின்ன வயதில் என்னைச் சேர்ந்தார் புன்னகையோடு சென்றார் தயவால் இன்று வந்தார் இவர்க்கு ஆர் ஈடு என்னை விட்டு இனி இவர் எப்படிப் போவார் ஓடு இந்தக் கதவை மூடு இரட்டைத் தாள்கோலைப் போடு. @40. இது நல்ல தருணம் #1 * பல்லவி இது நல்ல தருணம் அருள்செய்ய இது நல்ல தருணம். #2 * அநுபல்லவி பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே கேளும் பொய் ஏதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். * சரணங்கள் #3 மதித்த சமய மத வழக்கு எல்லாம் மாய்ந்தது வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது கொதித்த லோகாசாரக் கொதிப்பு எல்லாம் ஒழிந்தது கொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது. #4 குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று குதித்த மன முருட்டுக் குரங்கு முடங்கிற்று வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது விந்தை செய் கொடு மாயைச் சந்தையும் கலைந்தது. #5 கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று தாபமும் சோபமும் தான்தானே சென்றது தத்துவம் எல்லாம் என்றன் வசம் நின்றது. #6 கரையா எனது மனக் கல்லும் கரைந்தது கலந்துகொளற்கு என் கருத்தும் விரைந்தது புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று பொய்படாக் காதல் ததும்பி மேல் பொங்கிற்று. @41.இராக ஆலாபனத் திருப்பாடல்கள் **1. அருள்மொழி வியப்பு #1 உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே 5 உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலைச் சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய்ப் போத நெறியே அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே ஐம்பூதம் ஆதி நீ அல்லை அத் தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே 10 அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே 15 அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் எனச் சொல் பதியே இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே 20 என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே 25 காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய்ப் போதம் உண்டு கனி மதுரம் ஒழுகு செம் பதிகச் செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணியக் கதி உலகு அறிந்து உய்யவே 30 கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமைக் காப்பது உன் கடன் என்றுமே #2 தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டைத் தினம்-தோறும் நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் தான் படிக்கும் அனுபவம் காண் தனிக் கருணைப் பெருந்தகையே. #3 வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழும் கனித் தீம் சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. **2. திருவடித் தியானம் #4 எழு வகைப் பிறவிகளுள் எப் பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக வழு வகைத் துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே கழி வகைப் பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே #5 பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே. #6 காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே. **3. தியான வைபவம் #7 நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பதத் தியானம் உண்டாயில் அரசே தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே. #8 இளவேனில் மாலையாய்க் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய்த் தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால் போல் தழைத்திடும் நிலாக் காலமாய்த் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசைப் பாடல் இடமாய் களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய்க் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடிக் கழல் நிழல் சுகம் நிகருமே வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே **4. அன்புருவம் #9 அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே. #10 தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீசத் தடம் பொழில் பூ மணம் வீசத் தென்றல் வீச எண் அமுதப் பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீசத் தண் பனி_நீர் எடுத்து வீசப் பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்டப் பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓடக் கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொளத் தரும் கருணைக் கடவுள் தேவே #11 பாங்கு உள நாம் தெரிதும் எனத் துணிந்து கோடிப் பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே **5. முறையீடு #12 பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இப் பாவி பார்க்கில் கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே. #13 நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிரக் காணேனோ கண்டு வாரி உண்ணேனோ ஆனந்தக் கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பாத் தொண்டுபண்ணேனோ நின் புகழைப் பாடேனோ வாயாரப் பாவியேனே. #14 பண்ணால் உன் அருள்_புகழைப் பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகைப் பார்த்துப்பார்த்துக் கண்ணார உளம் குளிரக் களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #15 மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனைத் தமது வசமாக உளவு கண்டு மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலைச் சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே #16 நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே **6.நிரஹங்கர நிலை #17 தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித் திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன். #18 பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே. #19 திருத் தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடிச் சிறியேன் சென்னி மிசை வருமோ உருத் தகு நானிலத்திடை நீள் மலத் தடை போய் ஞான உருப் படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பிப் பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ அருத் தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே. #20 அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்தச் செவ் வண்ணம் பழுத்த தனித் திரு_உருக் கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன் இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ மவ்வண்ணப் பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே. #21 அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே. #22 நான் மறந்தேன் எனினும் எனைத் தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் பால் மறந்த குழவியைப் போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே. **7. இன்ப வடிவம் #23 கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவைத் தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே. #24 தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனிப் பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே அனித்தம் அறத் திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே. #25 பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே. **8.ஆனந்தாநுபவம் #26 நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகித் தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே. #27 உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக் கொள்ளானை என் பாட்டைக் குறிக்கொண்டானைக் கொல்லாமை விரதம் எனக் கொண்டார்-தம்மைத் தள்ளானைக் கொலை புலையைத் தள்ளாதாரைத் தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே. #28 கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே. #29 காய் எலாம் கனி எனக் கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்குக் கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புதக் காட்சியே கனக_மலையே தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனித் தலைவனே நின் பெருமையைச் சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற-தோறும் அந்தோ #30 வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே. **9. நடராஜ ஸ்வரூபம் #31 அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரமாயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே. #32 வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனைத் தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் பொடித் திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி. #33 மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உருப் புனைந்தே ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடிப் பெருமை யார் உரைப்பார் தோழி. #34 பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே. #35 சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்குச் சேர்ந்த புறச் சமயப் பேர் பொருந்துவதோ என்றாய் பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எப் பெயர் ஒவ்வாதோ அச் சமயத் தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞானத் திரு_கூத்துக் கண்ட அளவே தெளியும் இது தோழி. **10. சன்மார்க்க சித்திப்பேறு #36 தனித் தலைமைப் பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே #37 காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனைச் சார்வீரே. #38 சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனித் தலைவர் ஒருத்தர் அவர்-தாமே வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே. #39 கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணைத் தேவே உலகத் திரள் எல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே. #40 நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே. *