வளையாபதி கிடைத்துள்ள பாடல்கள்


#1
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்து மாண்
திலகம் ஆய திறல்அறிவன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்

#2
துக்கம் துடைக்கும் துகள் அறு காட்சிய
நிக்கந்த வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடி வீழ்ந்து உலகியல் செய்த பின்
அ கதை யாழ் கொண்டு அமைவர பண்ணி

#3
நீல நிறத்தனவாய் நெய் கனிந்து போது அவிழ்ந்து
கோலம் குயின்ற குழல் வாழி நெஞ்சே
கோலம் குயின்ற குழலும் கொழும் சிகையும்
கால கனல் எரியின் வேம் வாழி நெஞ்சே
கால கனல் எரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவது என் வாழி நெஞ்சே

#4
வித்தகர் செய்த விளங்கு முடி கவித்தார்
மத்தக மாண்பு அழிதல் காண் வாழி நெஞ்சே
மத்தக மாண்பு அழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நில் வாழி நெஞ்சே
உத்தம நன்னெறிக்கண் நின்று ஊக்கம் செய்தியேல்
சித்தி படர்தல் தெளி வாழி நெஞ்சே

#5
வினை பல வலியினாலே வேறுவேறு யாக்கை ஆகி
நனி பல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல் உயிர்க்கு
மனிதரின் அரியது ஆகும் தோன்றுதல் தோன்றினாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம்

#6
உயர்குடி நனி உள் தோன்றல் ஊனம் இல் யாக்கை ஆதல்
மயர்வு அறு கல்வி கேள்வி தன்மையால் வல்லர் ஆதல்
பெரிது உணர் அறிவே ஆதல் பேரறம் கோடல் என்று ஆங்கு
அரிது இவை பெறுகலோடே பெற்றவர் மக்கள் என்பார்

#7
நாடும் ஊரும் நனி புகழ்ந்து ஏத்தலும்
பீடுறும் மழை பெய்க என பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால் மிகு பத்தினிக்கு ஆவதே

#8
பள்ள முதுநீர் பழகினும் மீன் இனம்
வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்
கள் அவிழ் கோதையர் காமனோடு ஆயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள் நீ

#9
உண்டியுள் காப்பு உண்டு உறுபொருள் காப்பு உண்டு
கண்ட விழுப்பொருள் கல்விக்கு காப்பு உண்டு
பெண்டிரை காப்பது இலம் என்று ஞாலத்து
கண்டு மொழிந்தனர் கற்று அறிந்தோரே

#10
எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர் துளி
புல் பனி உக்க மரத்து இலை நுண் மயிர்
அத்துணையும் பிறர் அம் சொலினார் மனம்
புக்கனம் என்று பொதி அறைபட்டார்

#11
தனி பெயல் தண் துளி தாமரையின் மேல்
வளி பெறு மாத்திரை நின்றற்று ஒருவன்
அளிப்பவன் காணும் சிறு வரை அல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவனை கையார்

#12
பொறை இலா அறிவு போக புணர்வு இலா இளமை மேவ
துறை இலா வனச வாவி துகில் இலா கோல தூய்மை
நறை இலா மாலை கல்வி நலம் இலா புலமை நன்னீர்
சிறை இலா நகரம் போலும் சேய் இலா செல்வம் அன்றே

#13
ஆக்க படுக்கும் அரும் தளைவாய் பெய்விக்கும்
போக்க படுக்கும் புலை நரகத்து உய்விக்கும்
காக்கப்படுவன இந்திரியம் ஐந்தினும்
நாக்கு அல்லது இல்லை நனி பேணுமாறே

#14
தாரம் நல் வதம் தாங்கி தலை நின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல் மிகு விண்ணவர்
சீரின் ஏத்தி சிறப்பு எதிர் கொள்பவே

#15
பெண்ணின் ஆகிய பேர் அஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெரு வினை மேல்வரும்
என்னது ஆயினும் ஏதில் பெண் நீக்குமின்

#16
பொய்யன்மின் புறம் கூறன்மின் யாரையும்
வையன்மின் வடிவல்லன சொல்லி நீர்
உய்யன்மின் உயிர் கொன்று உண்டு வாழுநாள்
செய்யன்மின் சிறியாரொடு தீயன்மின்

#17
கள்ளன்மின் களவாயின யாவையும்
கொள்ளன்மின் கொலை கூடி வரு மறம்
எள்ளன்மின் இலர் என்று எண்ணி யாரையும்
நள்ளன்மின் பிறர் பெண்ணொடு நண்ணன்மின்

#18
துற்று உளவாக தொகுத்து விரல் வைத்தது
எற்றுக்கு அஃது என்னின் இது அதன் காரணம்
அற்றம் இல் தானம் எனை பல ஆயினும்
துற்று அவிழ் ஒவ்வா துணிவு என்னுமாறே

#19
ஆற்றுமின் அருள் ஆருயிர்மாட்டு எல்லாம்
தூற்றுமின் அறம் தோம் நனி துன்னன்மின்
மாற்றுமின் கழி மாயமும் மானமும்
போற்றுமின் பொருளா இவை கொண்டு நீர்

#20
பொருளை பொருளா பொதிந்து ஓம்பல் செல்லாது
அருளை பொருளா அறம் செய்தல் வேண்டும்
அருளை பொருளா அறம் செய்து வான்கண்
இருள் இல் இயல்பு எய்தாது என்னோ நமரங்காள்

#21
தகாது உயிர் கொல்வானின் மிகாமை இலை பாவம்
அவா விலையில் உண்பான் புலால் பெருகல் வேண்டும்
புகா வலை விலங்காய் பொறாது பிற ஊன் கொன்று
அவா விலையில் விற்பானும் ஆண்டு அதுவே வேண்டுமால்

#22
பிறவி கடல்அகத்து ஆராய்ந்து உணரின்
தெறுவதில் குற்றம் இலார்களும் இல்லை
அற வகை ஓரா விடக்கு மிசைவோர்
குறைவின்றி தம் சுற்றம் தின்றனர் ஆவர்

#23
உயிர்கள் ஓம்புமின் ஊன் விழைந்து உண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகழ்ந்து ஒரீஇ
கதிகள் நல்லுரு கண்டனிர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர்

#24
பொருளோடு போகம் புணர்தல் உறினும்
அருளுதல் சான்ற அரும் தவம் செய்ம்மின்
இருள் இல் கதி சென்று இனி இவண் வாரீர்
தெருளல் உறினும் தெருண்மின் அதுவே

#25
தவத்தின் மேல் தவ திறை தனக்கு அலது அரிதே
மயக்கு நீங்குதல் மனம் மொழியொடும் செயல் செறிதல்
உவத்தல் காய்தலொடு இலாது பல் வகை உயிர்க்கு அருளை
நயத்து நீங்குதல் பொருள்தனை அனையதும் அறி நீ

#26
எண் இன்றியே துணியும் எவ்வழியானும் ஓடும்
உள்நின்று உருக்கும் உரவோர் கோடல் இன்றாம்
நண் இன்று ஏயும் நயவாரை நயந்து நிற்கும்
கண் நின்று காமம் நனி காமுறுவாரை வீழ்க்கும்

#27
சான்றோர் உவர்ப்ப தனி நின்று பழிப்ப காணார்
ஆன்றாங்கு அமைந்த குரவர் மொழி கோடல் ஈயார்
வான் தாங்கி நின்ற புகழ் மாசுபடுப்பர் காமன்
தான் தாங்கி விட்ட கணை மெய்ப்படுமாயின் அக்கால்

#28
மா என்று மடல் ஏறுப மன்றுதோறும்
பூ என்று எருக்கின் இணர் சூடுப புன்மைகொண்டே
பேய் என்று எழுந்து பிறர் ஆர்ப்பவும் நிற்பர் காம
நோய் நன்கு எழுந்து நனி காழ்க்கொள்வது ஆயினக்கால்

#29
நக்கே விலா இறுவர் நாணுவர் நாணும் வேண்டார்
புக்கே கிடப்பர் கனவும் நினைகையும் ஏற்பர்
துற்று ஊண் மறப்பர் அழுவர் நனி துஞ்சல் இல்லார்
நற்றோள் மிகை பெரிது நாடு அறி துன்பம் ஆக்கும்

#30
அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரி வளை முன்கை புனை இழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே

#31
பீடு இல் செய்திகளால் களவில் பிறர்
வீடு இல் பல்பொருள் கொண்ட பயன் என
கூடி காலொடு கைகளை பற்றி வைத்து
ஓடல் இன்றி உலைய குறைக்குமே

#32
பொய்யின் நீங்குமின் பொய் இன்மை பூண்டு கொண்டு
ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்
வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றி
கௌவையில் உலகு எய்துதல் கண்டதே

#33
கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்களால் நலிவு உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்கு ஆகுதல்
ஐயம் இல்லை அது கடிந்து ஓம்புமின்

#34
உலகுடன் விளங்க உயர் சீர்த்தி நிலை கொள்ளின்
நிலையில் கதி நான்கின் இடைநின்று தடுமாறும்
அலகில் துயர் அஞ்சின் உயிர் அஞ்ச வரும் வஞ்ச
கொலை ஒழிமின் என்று நனி கூறினர் அறிந்தார்

#35
வெள்ளம் மறவி விறல் வேந்தர் தீ தாயம்
கள்வர் என்று இவ்வாறின் கை கரப்ப தீர்ந்து அகலும்
உள்ளில் ஒரு பொருளை ஒட்டாது ஒழிந்தவர்
எள்ளும் பெரும் துயர் நோய் எவ்வம் இகப்பவோ

#36
ஒழிந்த பிற அறன் உண்டு என்பார் உட்க
அழிந்து பிறர் அவாம் வம்ப பொருளை
இழந்து சிறிதானும் எய்தாது ஒழிந்தார்
அழிந்து பெரும் துயர் நோய்க்கு அல்லாபவரே

#37
இன்மை இளிவாம் உடைமை உயிர்க்கு அச்சம்
மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிது ஆகி
புன்மை உறுக்கும் புரை இல் பொருளை
துன்னாது ஒழிந்தார் துறவோ விழுமிதே

#38
ஈண்டல் அரிதாய் கெடுதல் எளிது ஆகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பல தரூஉம்
மாண்பு இல் இயற்கை மருவு இல் அரும் பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே

#39
இல் எனின் வாழ்க்கையும் இல்லை உண்டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லை உண்டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்என்று காட்டும் புணர்வதும் அன்றே

#40
வேல் கண் மடவார் விழைவு ஒழிய யாம் விழைய
கோல் கண் நெறிகாட்ட கொல் கூற்று உழைய தாம்
நாற்பது இகந்தாம் நரை தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே

#41
இளமையும் நிலையாவால் இன்பமும் நின்ற அல்ல
வளமையும் அஃதே போல் வைகலும் துன்ப வெள்ளம்
உள என நினையாதே செல்கதிக்கு என்றும் என்றும்
விளை நிலம் உழுவார் போல் வித்து நீர் செய்து கொண்மின்

#42
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை அவை உள்வழி
பற்றா வினையாய் பலபல யோனிகள்
அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே

#43
உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்து கழுவுதல் என் ஒக்கும்
பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குறுமாறு

#44
தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய் நிலவிற்கு அழிவு எய்தின
நானம் தோய் குழல் நமக்கு உய்தல் உண்டோ
மானம் தீர்ந்தவர் மாற்றம் பொய் அல்லவால்

#45
பருவந்து சால பலர்கொல் என்று எண்ணி
ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்கு உளன் என்னுமாறே

#46
உய்த்து ஒன்றி ஏர் தந்து உழ உழுது ஆற்றவும்
வித்து இன்றி பைம் கூழ் விளைக்குறல் என் ஒக்கும்
மெய் தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு
எய்த்து உழந்தேதான் இடர்ப்படுமாறே

#47
குலம் தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும்
நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகி
புலம்பு இல் பொருள் தர புன்கண்மை உண்டோ

#48
கெட்டேம் இது எம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனி மிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லி பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்ட வந்து ஓரிடத்து ஏகி நிற்பவே

#49
தெண்ணீர் பரந்து திசைதோறும் போய் கெட்ட
எண்ணெய் கொண்டு ஈட்டற்கு இவறுதல் என் ஒக்கும்
பெண் மனம் பேதித்து ஒருப்படுப்பேன் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்பு எண்ணுமாறே

#50
நீள் முகை கையால் கிழித்து மோக்குமாறு
மாண் வினை பாவை மறை நின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துழி போது செய்து
ஆணை பெண் ஐய அணைக்குறுமாறே

#51
யாறொடு யாழ் ஞெலிகோல் நிலவார் கொடி
பாறொடு பத்தினி மா போல் ஒழுகு என்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கு இவை
வேறு ஓர் இடத்து வெளிப்படல் நன்றாம்

#52
ஆய் குரங்கு அம் சிறை வண்டினம் போல்க என்று
பாயிரம் இன்றி பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான் பொருள் தந்து நின் தோள் நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய

#53
வாரி பெருக பெருகிய காதலை
வாரி சுருங்க சுருக்கிவிடுதலின்
மாரி பெருக பெருகி அற அறும்
வார் புனல் ஆற்றின் வகையும் புரைப

#54
எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு
அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்கு
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப

#55
கரணம் பல செய்து கையுற்றவர்கட்கு
அரணம் எனும் இலர் ஆற்றில் கலந்து
திரணி உபாயத்தில் திண் பொருள் கோடற்கு
அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப

#56
நாள்தொறும் நாள்தொறும் நந்திய காதலை
நாள்தொறும் நாள்தொறும் நய்ய ஒழுகலின்
நாள்தொறும் நாள்தொறும் நந்தி உயர்வு எய்தி
நாள்தொறும் தேயும் நகை மதி ஒப்ப

#57
வனப்பு இலர் ஆயினும் வளமை உளோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்ப
புனத்திடை பூத்த பூங்கொடி ஒப்ப

#58
தம்கண் பிறந்த கழி அன்பினார்களை
வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன் பொருள் ஏற்றி எழ நின்ற வணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ் கலம் ஒப்ப

#59
ஒத்த பொருளால் உறுதி செய்வார்களை
எத்திறத்தானும் வழிபட்டு ஒழுகலின்
பைத்து அரவு அல்குல் பொன் பாவையின் நல்லவர்
பத்தினி பெண்டிர் படியும் புரைப

#60
வீ பொருளானை அகன்று புறனும் ஓர்
மா பொருளான் பக்கம் மாண நயத்தலின்
மேய் புலம் புல் அற மற்றோர் புலம் புகு
மாவும் புரைப மலர் அன்ன கண்ணார்

#61
நுண்பொருளானை நுகர்ந்திட்டு வான் பொருள்
நன்கு உடையானை நயந்தனர் கோடலின்
வம்பு இள மென் முலை வாள் நெடும் கண்ணவர்
கொம்பிடை வாழும் குரங்கும் புரைப

#62
முருக்கு அலர் போல் சிவந்து ஒள்ளியரேனும்
பருக்கொடு இல்லவர் பக்கம் நினையார்
அருப்பு இள மென் முலை அம் சொல் அவர்தாம்
வரி சிறை வண்டின் வகையும் புரைப

#63
மக்கள் பயந்து மனையறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமை குணம் என்ப
பைத்து அரவு அல்குல் படிற்றுரையாரொடு
துய்த்து கழிப்பது தோற்றம் ஒன்று இன்றே

#64
நகை நனி தீது துனி நன்றி யார்க்கும்
பகை நனி தீது பணிந்தீயாரோடும்
மிகை மிகு பொருள் என்று இறத்தல் இலரே
வகை மிகு வான் உலகு எய்தி வாழ்பவரே

#65
பெண்டிர் மதியார் பெரும் கிளைதான் அது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெள் தறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர் தம் மக்களும் ஒட்டார்

#66
சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நனி மதிப்பார் அல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்என்று போதலை மெய் என்று கொள் நீ

#67
தொழுமகன் ஆயினும் துற்று உடையானை
பழு மரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமியரேனும் வெறுக்கை உலந்தால்
பழு மரம் வீழ்ந்த பறவையின் போப

#68
பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும்
அருளில் அறனும் அமைச்சு இல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மை இது என்றே
மருளில் புலவர் மனங்கொண்டு உரைப்ப

#69
அந்தகன் அந்தகற்கு ஆறு சொலல் ஒக்கும்
முந்து செய் குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்கு அறிவு இல்லான் அஃது அறியாதவற்கு
இன்புறு வீட்டின் நெறி சொல்லுமாறே

#70
பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும்
கன்னல்அம் கரும்புதான் கமுகை காய்ந்து எழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களான் முகம் புதைக்குமே

#71
பண்ணால் திறத்தில் பழுது இன்றி மேம்பட்ட
தொண்ணூற்றுஅறு வகை கோவையும் வல்லவன்
விண் ஆறு இயங்கும் விறலவர் ஆயினும்
கண் நாறி நோக்கி கடு நகை செய்வான்

#72
அன்றை பகல் கழிந்தாள் இன்று இராப்பகற்கு
அன்றில் குரலும் கறவை மணி கறங்க
கொன்றை பழ குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரம்பு நரம்பு என ஆர்ப்பவும்
*

பாடல்கள் – 72
அடிகள் – 292
சொற்கள் – 1477
தனிச் சொற்கள் – 1116