வி – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கு
விச்சிக்கோ
விச்சியர்பெருமகன்
விச்சை
விசயம்
விசி
விசும்பு
விசை
விசைப்பு
விசையம்
விட்டம்
விடக்கு
விடத்தர்
விடம்
விடர்
விடரி
விடலை
விடியல்
விடிவு
விடை
விண்
விண்ட
விண்டு
விண்ணோர்
வித்தகம்
வித்தகர்
வித்தம்
வித்தாயம்
வித்து
விதலை
விதவை
விதி
விதிர்
விதிர்ப்பு
விதுப்பு
விதும்பு
விம்மு
விய
வியங்கொள்
வியம்கொள்
வியமம்
வியர்
வியர்ப்பு
வியல்
வியலுள்
வியலூர்
வியன்
விரகியர்
விரகு
விரவு
விராய்
விராய
விராவு
விரான்
விரி
விரிச்சி
விரிவு
விரீஇ
விருந்து
விரை
விரைஇ
வில்லியாதன்
விலங்கல்
விலங்கு
விலைநலப்பெண்டிர்
விலைஞர்
விலைமாறு
விலைவன்
விலோதம்
விழவு
விழவுக்களம்
விழா
விழு
விழுக்கு
விழுப்புண்
விழுமம்
விழுமா
விழுமிதின்
விழுமிது
விழுமிய
விழுமியம்
விழுமியோர்
விழுமுறு
விழை
விழைவு
விளக்கம்
விளக்கு
விளக்குறு
விளங்கில்
விளங்கு
விளம்பழம்
விளம்பு
விளர்
விளர்ப்பு
விளரி
விளவு
விளி
விளிம்பு
விளியர்
விளிவு
விளை
விளையல்
விளையாட்டி
விளையுட்டு
விளையுள்
விளைவு
விற
விறகு
விறல்
விறலவன்
விறலி
வினவல்
வினவு
வினா
வினாய்
வினாய
வினை
வினைஇ
வினைஞர்
வினைவர்

விக்கு

(வி) விக்கலெடு, hiccup

என்னை
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா
அன்னை அலறி படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா – கலி 51/9-13

அவன் எனது
வளையணிந்த முன்கையைப் பற்றி அழுத்த, மருண்டுபோய்
அன்னையே! இவன் செய்வதைப் பாரேன்” என்று கூவிவிட,
அன்னையும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடிவர, அவனை, நான்
“நீர் உண்ணும்போது விக்கினான்” என்று சொல்ல,

மேல்


விச்சிக்கோ

(பெ)
விச்சிக்கோ சங்ககால மன்னர்களில் ஒருவன். விச்சிமலை நாட்டின் அரசன். விச்சிக்கோ, விச்சிக்கோன், விச்சியர்
பெருமகன் என்றெல்லாம் சங்கநூல்களில் இவன் குறிப்பிடப்படுகிறான்.
பாரி இறந்தபின் கபிலர் பாரிமகளிரை அழைத்துக்கொண்டு சென்று அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு
இவனை வேண்டினார். விச்சிக்கோ பாரிமகளிரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே – புறம் 200/8

விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரனத்தையுமுடைய விச்சிக்கோவே

மேல்


விச்சியர்பெருமகன்

(பெ) பார்க்க : விச்சிக்கோ

வில் கெழு தானை விச்சியர்பெருமகன் – குறு 328/5

விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய விச்சியரின் தலைவன்

மேல்


விச்சை

(பெ) கல்வி, learning, education

கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை_கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/4-7

கற்பித்த ஆசிரியனின் நெஞ்சம் நோகும்படி, அவன் வறுமையில் அவனோடு பகிர்ந்து உண்ணாமல், தான் கற்ற
கல்விக்குக்
கேடுசெய்தவனுடைய பொருளைப் போல் தானாகவே அழிந்து போவான்,
தனது வறுமைக் காலத்தில் தனக்கு உதவியோருக்கு, அவரது வறுமைக் காலத்தில் அவருக்கு உதவாதவன்,
அவனது
பிற்காலத்திலும் அது அவனைப் பழிதீர்க்காமல் விடாது;

மேல்


விசயம்

(பெ) 1. கருப்பஞ்சாறு, Juice of the sugarcane
2. கருப்பட்டி, jaggery
3. பாகு, (sugar)syrup
4. வெற்றி, victory, triumph

1

எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் – பெரும் 260-262

ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய
கருப்பஞ்சாற்றைக் (கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்தோறும்,
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்

2

விசயம் கொழித்த பூழி அன்ன – மலை 444

கருப்புக்கட்டியைக் கொழித்த பொடியையொத்த
– நச்.உரை

3.

அயிர் உருப்பு_உற்ற ஆடு அமை விசயம்
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 625,626

கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)
உள்ளீட்டோடெ பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,

4.

விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 91,92

வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க

மேல்


விசி

1. (வி) 1. இறுகக்கட்டு, fasten tightly
2. புடை, விம்மு, become swollen, over-stretched, as the abdomen from over-eating
– 2. (பெ) இறுக்கம், இறுக்கமாகக் கட்டுதல், tightening

1.1

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு – மலை 1-3

கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்
விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன்

1.2

பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறையாக
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி – புறம் 61/4-6

பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை
புதிய நெல்லினது வெள்ளிய சோற்றுக்கு மேலீடாகக் கொண்டு
விலாப்புடைப்பக்கம் விம்ம உண்டு
(இங்கேயும் விசித்தல் – இறுக்கமாதல் – என்ற பொருள் குறிப்பால் உணர்த்தப்படுதலைக் காண்க)

2

வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/2,3

வளம்பொருந்திய வாரினால்
இறுகப் பிணித்துக் கட்டிய அடிக்கும் கோலினையுடைய தெளிந்த ஒலியினதாகிய கிணைப்பறையின்

மேல்


விசும்பு

(பெ) ஆகாயம், sky
விசும்பு என்பது சூரிய சந்திரர், விண்மீன்கள், மேகங்கள், மேலோகத்தார், தெய்வமகளிர், பறவைகள் ஆகியோர்
வழிச்செல்லும் பகுதி.

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி – பெரும் 1,2

அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி,
பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு

நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே – நற் 348/1,2

நிலவானது, நீல நிற விசும்பில் பல கதிர்களைப் பரப்பி
பால் மிகுந்த கடலைப் போல ஒளியைப் பரப்பி விளங்குகிறது;

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல – நற் 231/1,2

மேகங்கள் சிறிதுமில்லாமல் விளங்கிய நீலமணி நிறத்ததான விசும்பில்
வணங்கக்கூடிய மரபினதான ஏழு மீன்களான சப்தரிஷிமண்டலம் போல

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 7,8

கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள்,
மின்னலாகியவாள் பிளந்த வானிடத்தே பெரிய துளியைச் சிதறி

நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர் – மது 581-583

நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்
தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய
நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்,

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல
உரம் தலை கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர்
அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே – திரு 120-125

கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்,
வலிமையை(த் தன்னிடத்து)க் கொண்ட உருமேற்றின் இடி(யைப் போன்று ஒலிக்கும்)முரசுடன்
பல பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அகவ,
வானமே வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு,
உலகமக்களால் புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழினையுடைய
அலைவாய் என்னும் ஊரில் ஏற எழுந்தருளுதலும் (அவன்)நிலைபெற்ற பண்பே

மேல்


விசை

1. (வி) 1. விரைவுபடுத்து, cause to move swiftly
2. கடுமையாக்கு, be forceful
3. துள்ளு, leap, hop
– 2. (பெ) 1. உந்துசக்தி, power, force
2. வேகம், speed

1.1

விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண் குருகு வாப்பறை வளைஇ – அகம் 273/1,2

வானில் வேகங்கொண்டு எறிந்த கூதாளியின் மாலை போல்
பசிய காலையுடைய வெள்ளாங்குருகு தாவும் சிறகினை வளைத்து

1.2

கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் – பெரும் 437-440

வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின
கூடத்து எழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின்
இறப்பில் உறையும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
இனிய துயில் (நீங்கி)விரைந்தோடும் பொன் துஞ்சுகின்ற; அகன்ற அரண்மனையிடத்தே
விசைத்து எறி = ஓங்கிஎறி ; விசைத்து அடி = ஓங்கிஅடி

1.3

நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெருந்தோள் தாலம் பூசல்மேவர – புறம் 120/14,15

நறிய நெய்யிலே கடலை துள்ள, சோற்றை ஆக்கி
பெரிய தோளையுடைய மனையாள் உண்கலன்களைக் கழுவ

2.1

உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 170,171

இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் சக்தியுடன்
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,

2.2

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்
—————- ———————— —————
வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின் – மலை 203-210

காய்ந்து, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்,
உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி, கைகளைத் தட்டி,
பரந்துபட்டுக்கிடக்கும் மலைகளின் புதர்க்காடுகளில் கூட்டமாகத்திரியும் யானைகள்
பகலில் (வந்து)நிற்கும் நிலையைக் குலைக்கின்ற கவண்கள் விடும் மூர்க்கத்தனமான கற்கள்,
———————- ———————– ——————
வருகின்ற வேகம் குறையமாட்டா, (எனவே)மரங்களில் ஒளிந்துநின்று (ப் பின்)கடந்துசெல்லுங்கள்-

மேல்


விசைப்பு

(பெ) துள்ளி எழல், jumping out with force

விட்ட குதிரை விசைப்பின் அன்ன – குறு 74/1

அவிழ்த்துவிட்ட குதிரை துள்ளி எழுந்தாற்போன்று

மேல்


விசையம்

(பெ) பார்க்க : விசயம் –

2

விசையம் கொழித்த பூழி அன்ன – மலை 444

சருக்கரையைக் கொழித்த பொடியை ஒத்த
– பொ.வே.சோ.உரை விசயம் – சருக்கரை, அது விசையம் என அகரம் ஐகாரமாயிற்று

மேல்


விட்டம்

(பெ) உத்திரம், cross beam

ஒல்கி, இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என – அகம் 167/12,13

தளர்ந்து, செங்கல்லாலான நீண்ட சுவரிலுள்ள உத்திரம் வீழ்ந்ததாக

மேல்


விடக்கு

(பெ) இறைச்சி, meat, flesh

மீன் தடிந்து விடக்கு அறுத்து – பட் 176

மீனை வெட்டி, பின்னர் இறைச்சியையும் அறுத்து

விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/6

ஊன் துண்டங்களோடு கூடிய பெருவிருந்தை நினைத்துக்கொண்டு இருக்க

இன்றைய பேச்சு வழக்கில் இதனை வெடுக்கு என்பர். சங்க இலக்கிய வழக்கில் ‘புலவு நாறு’ என்ற
தொடர் இப்போது ‘வெடுக்கு வீசி’ என்று சொல்லப்படுகிறது.

மேல்


விடத்தர்

(பெ) விடத்தேரை, Ashy babool, Dichrostachys cinerea

திரி காய் விடத்தரொடு கார் உடை போகி – பதி 13/14

முறுக்கிய காய்களையுடைய விடத்தேரை மரங்களுடன், கரிய உடை மரங்கள் நெடிது வளர்ந்து

மேல்


விடம்

(பெ) விஷம், நஞ்சு, poison

விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42

நஞ்சை உடைய பாம்பின் உடலையும், உயிரையும் உண்ணும் கருடன்

மேல்


விடர்

(பெ) 1. நிலப்பிளப்பு, fissure, cleft
2. மலை வெடிப்பு, crevice, gap in mountain slope
3. மலைச்சரிவில் ஏற்பட்ட பிளப்பினால் ஆகிய குகை, cave in a mountain slope

1

கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி
சிறுமையுற்ற களையா பூசல் – மலை 311-314

(குட்டியைக்)கையில் பிடிப்பதை மறந்த கரிய விரலையுடைய மந்தி,
எளிதாய் அணுகமுடியாத பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் (தாவுதலை முற்றிலும்)கற்றுக்கொள்ளாத குட்டிக்காக
தளிர்களை மேய்ந்து (வளர்ந்த) உடம்பினையுடைய சுற்றத்தோடே கூடிநின்று
துன்பப்பட்ட (யாராலும்)களையமுடியாத பெரிய அமளியும்;

கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் – அகம் 47/5-7

சூறாவளி வெப்பமுறச் செய்த, பக்கங்களில் நீண்டும், கூரான கொழுந்துவிட்டும் எரியும் நெருப்பு
பிளவுகளும் குகைகளும் கொண்ட மலைச் சரிவில் பரந்து விரிதலால், அதனுடன் சேர்ந்து,
மூங்கில் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி மான் கூட்டத்தை விரட்டும்

2

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய – திரு 313,314

கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
பெரும் பாறைகளின் வெடிப்பாகிய முழைஞ்சிலே சேர,

விடர் முகை செறிந்த வெம் சின இரும் புலி – நற் 158/5

மலையின் பிளப்புகளிலுள்ள குகையில் பதுங்கியிருக்கும் மிக்க சினமுள்ள பெரிய புலி

மேல்


விடரி

(பெ) மலைப்பிளப்பு, crevice on the mountain

விடரி அம் கண்ணி பொதுவனை சாடி – கலி 101/22

மலைப்பிளவிலே பூத்த பூவைக் கொண்ட தலைமாலை அணிந்த இடையனைத் துவட்டி
விடரி – மலைப்பிளப்பு – மா,இராசமாணிக்கனார் உரை விளக்கம்

மேல்


விடலை

(பெ) 1. இளைஞன், youth
2. வீரன், warrior

1

புது கலத்து அன்ன கனிய ஆலம்
போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம்
தண்ணிய இனிய ஆக
எம்மொடும் சென்மோ விடலை நீயே – ஐங் 303

புதிய மண்பாண்டத்தைப் போன்ற நிறத்தையுடைய கனிகளைக் கொண்ட ஆலமரம்,
பறவைகள் தன்னைவிட்டுப் போவதைத் தடுத்து நிறுத்தும் தன்மையுடைய கடினமான பாலை வழி
குளிர்ச்சிபொருந்தியதாகவும், இனிமையானதாகவும் ஆகும்படி
என்னையும் அழைத்துக்கொண்டு செல்வாயாக, இளங்காளையாகிய நீ

சுடர் தொடி குறு_மகள் இனைய
எனை பயம் செய்யுமோ விடலை நின் செலவே – ஐங் 305/3,4

ஒளிவிடும் தோள்வளையைக் கொண்ட இளையமகள் வாடும்படியாக,
என்ன பயனைத் தருமோ, இளங்காளையே! உனது பயணம்?

2

வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே – புறம் 237/14

வெளிய வேலையுடைய வீரன் போய் இறந்துபட்டான்

மேல்


விடியல்

(பெ) பொழுது விடிகின்ற நேரம், break of day, dawn

1. கிழக்கில் வெள்ளி முளைக்கின்ற காலம்.

விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் – பொரு 71,72

விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே

2.வானம் வெளுக்கின்ற நேரம்.

வான்_கண் விரிந்த விடியல் – மலை 257

வானம் துயிலெழுந்த விடியற்காலத்தே,

3.பறவைகள் துயில் எழும் நேரம்.

நள்ளிருள் விடியல் புள் எழ போகி – பெரும் 155

செறிந்த இருள் (போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று,

4.நள்ளிரவுக்கு அடுத்து வரும் காலம்.

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ
பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/1-3

காலையும் பகலும் செயலற்ற மாலையும்
ஊர் உறங்கும் நள்ளிரவும் விடியலும் என்று இந்தப்
பொழுதுகள் இடையே தெரியின் பொய்யானது காமம்

மேல்


விடிவு

(பெ) துன்பம் நீங்கி இன்பம் வருகை, Approach of good times; dawn of happiness

திருமருத முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 7/83-85

திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்
கழுத்து மாலைகளத் தன் தலைமேல் சூட்டிக்கொள்ளும் அச்சந்தரும் ஆழமான நீரைக்கொண்ட வையையே!
– உன்னால் கிடைக்கும் இன்பமான பயனைப் பாடி, துன்பம் நீங்கப்பெற்று மகிழ்வோமாக!

மேல்


விடை

(பெ) 1. எருது, bull
2. ஆட்டுக்கிடா, ram

1

பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/5

பல பசுக்களையுடைய இடையர்கள் வேகமுள்ள காளையை அடக்குவதைக் காண்பதற்காக

2

மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1

மதுச்சாடியை வாய் திறப்பவும், ஆட்டுக்கிடாயை வீழ்ப்பவும்

மேல்


விண்

பெ) 1. வானம், sky
2. மேலுலகம், heaven

1.

ஞாயிறு, திங்கள், மீன்கள், மேகங்கள் நடமாடும் இடம்

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் – பரி 23/12
விண் இவர் விசும்பின் மீனும் – புறம் 302/10
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி – அகம் 294/1

மிக உயரமாக இருக்கும் மலை, கட்டிடமாடம் போன்றவற்றை, ’விண் பொரு’, ’விண் தோய்’, ’விண் உயர்’,
’விண் உற ஓங்கு’ என்று குறிப்பிடுவது உண்டு

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299
விண் பொர நிவந்த வேயா மாடத்து – பெரும் 348
விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள் – குறி 196
விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் – அகம் 69/10
விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே – அகம் 167/4
விண் பொரு நெடு வரை கவாஅன் – அகம் 173/17
விண் பொரு புகழ் விறல் வஞ்சி – புறம் 11/6
கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை – புறம் 35/19
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர் – புறம் 175/6

விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த – பெரும் 369
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 226
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் – குறு 241/6
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/6
விண் தோய் மா மலை சிலம்பன் – குறு 362/6
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/38
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு – அகம் 8/12
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை – அகம் 135/11
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 179/1
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – புறம் 151/2
விண் தோய் தலைய குன்றம் பிற்பட – புறம் 379/13
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் – புறம் 391/2

விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
விண் உயர் அரண் பல வௌவிய – ஐங் 443/4
விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் – பதி 30/29
விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும் – புறம் 56/6

விண் உற ஓங்கிய பல் படை புரிசை – மது 352
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து – அகம் 281/10

2

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை – திரு 107,108

விண்ணுலகத்திற்குச் செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது
ஒரு கை

மேல்


விண்ட

(பெ.அ) 1. மலர்ந்த, blossomed
2. வாய் பிளந்த, with opened mouth

1

வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/3

வண்டுகள் கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள்

2

விண்ட கட கரி மேகமொடு அதிர – பரி 23/51

பிளிறுகின்ற மதயானை மேகத்தின் முழக்கத்தைப் போல் முழங்க,
விண்ட – பிளிறிய ;விள்ளுதல் என்னும் வினையடியாகப் பிறந்த பெயரெச்சம், விள்ளுதல் – திறத்தல்
அது வாய்திறத்தல் என்னும் பொருள்பட்டு அதன் காரியமாகிய பிளிற்றொலியை ஈண்டுக் குறித்து நின்றது
என்க.- பொ.வே.சோ.உரை விளக்கம்.

மேல்


விண்டு

(பெ) மலை, mountain

தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 202,203

தெற்கு நாட்டு இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு
வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,

மேல்


விண்ணோர்

(பெ) தேவர், celestials

விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணி பூணவற்கு – பரி 5/31,32

அந்த விண்ணவரின் வேள்வியின் முதல்வனான
விரிந்த கதிர்களையுடைய மணிகளைப் பூண்டிருக்கும் இந்திரனுக்கு,

மேல்


வித்தகம்

(பெ) திறமை, சாமர்த்தியம், ability, skill

வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று – பரி 9/68,69

திறமையோடு போரிட்டு வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப்
பெரிதும் பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்;

மேல்


வித்தகர்

(பெ) வல்லவர், skilfuls, able persons

அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/24,25

அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள
விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல

மேல்


வித்தம்

(பெ) சூதாட்டத்தில் அல்லது தாய ஆட்டத்தில் ஓர் எறியில் விழும் எண், A cast in dice play

முத்து உறழ் மணல் எக்கர் அளித்த_கால் முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள்
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ – கலி 136/5-8

முத்துப்போன்ற வெண்மணலில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சூதாட்டத்தில் முதல் உருட்டில்
பத்து எண்ணிக்கையைப் பெற்றவன் மனத்தைப் போல் மகிழ்ந்து சிறந்தவள்
அவ்வாறு அன்புசெய்வதிலிருந்து நீ விலகிப்போக, தன் அழகெல்லாம் வாடிப்போய், அந்த உருட்டில்
சிறிய எண்ணிக்கையைப் பெற்றுத் தோற்றவனைப் போலக் கொடும் துயரில் வருந்தமாட்டாளோ?

நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால்
மறு_வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள்
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள்
சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – 136/13-16

நறிய மலர்கள் உதிர்ந்துகிடக்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது
மறுதாயம் கிட்டியவன் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
பிரிந்து போவேன் என்று அறிவித்து நீ பிரியக் கருதிய உன் பொருட்டாய்
பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ?
– முன் ஆயம், முதலிலே இடப்படும் தாயம். தாயம் என்பது சூதாட்டத்தில் காயைப் புகுத்தற்கு வேண்டிய எண்.
– நச்.உரை, பெ.விளக்கம்

மேல்


வித்தாயம்

(பெ) சிறுதாயம், a small number in the cast of dice

முட தாழை முடுக்கருள் அளித்த_கால் வித்தாயம்
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள்
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/9-12

வளைந்து கிடக்கும் தாழையின் குறுகிய வெளியில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சிறு தாயம் வேண்ட
உருட்டும்போது அதனையே கிடைக்கக் கண்டவனின் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
கொடுப்பதில் சிறந்தவனே! நீ பிரிய எண்ணினால், சிறு தாயம் வேண்டியபோது பெரும் எண்ணிக்கை பெற்று
கட்டிவைத்த பந்தயப் பொருளை இழந்தவனைப் போலப் பெரும் துயரில் வருந்தமாட்டாளோ?
வித்தம் – சிறுதொகை, ஆயம் – தாயம் – மா.இரா. உரை விளக்கம்

மேல்


வித்து

1. (வி) விதை, sow
– 2. (பெ) விதை, seed

1

அருவி பரப்பின் ஐவனம் வித்தி
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும் – குறு 100/1,2

அருவி விழும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து
பெரிய இலைகளைக் கொண்ட மலைமல்லிகையொடு பசிய மரல் கொடியைக் களையெடுக்கும்

2

வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு – புறம் 230/13

தளர்ந்த குடியையுடைய உழவன் விதையை உண்டாற்போல

மேல்


விதலை

(பெ) நடுங்குதல், shivering

பனி படு பைதல் விதலை பருவத்து – பரி 11/75

பனி மிகுதலானே குளிரால் நடுங்குதலையுடைய (முன்பனிப்) பருவத்தின்கண்

மேல்


விதவை

(பெ) கூழ், gruel

விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை – புறம் 326/10

விழுக்காகிய தசையைப் பெய்து சமைக்கப்பட்ட தயிரோடு கூடிய கூழை

மேல்


விதி

(பெ) 1. அமைக்கும் முறை, direction, recipe
2. நியதி, rule
3. காசிபன், kasyapa

1

விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20

விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவன் செய்த மேனிப் பூச்சுக்குரிய கலவையைப் போல,

அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/24,25

அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள
விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல

2

ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 94-96

ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்

3.

திதியின் சிறாரும் விதியின் மக்களும் – பரி 3/6

திதியின் சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும்,
– பதினொரு பிரமர்களுள் ஒருவனாகிய காசிபன் ஈண்டு விதி எனப்பட்டான்; ஆதித்தர் பன்னிருவர் காசிபன்
மக்கள் என்பது புராணக்கதை – பொ.வே.சோ உரை விளக்கம்.

மேல்


விதிர்

(வி) 1. சிதறு, scatter
2. துண்டாக்கு, cut into piecces
3. ஊற்று, சொரி, pour
4. தெளி, sprinkle
5. உதறு, shake off

1

நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும் – புறம் 188/5

நெய்யை உடைய சோற்றை உடம்பின்கண் படச் சிதறியும்

யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர – அகம் 333/1,2

யா மரத்தின் ஒள்ளிய தளிரில் அரக்குப்பொடியைச் சிதறினாற் போன்ற, நின்
உடம்பினது மேனியின்கண் அழகிய பசலை பரக்க

2

நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் – பெரும் 309,310

நெடிய மரமாகிய மாவின் நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட,
ஊறவைத்தல் நன்கமைந்த ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர்

3.

குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு – பதி 88/11

இரத்தம் ஊற்றிக் கலந்து குவிக்கப்பட்டிருக்கும் குன்று போன்ற சோற்றுக் குவியலுடன்

4.

விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி
காமர் சேவல் – அகம் 103/3,4

தெளித்தன போலும் அழகிய சிறிய பலவாய புள்ளிகளையுடைய
அழகிய குறும்பூழ் சேவல்

உருக்கு_உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன – நற் 21/6

உருக்கிய நறுமணமுள்ள நெய்யில் பாலைத் தெளித்தாற்போல்

5.

புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால்
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ
அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்
நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
நீங்கி புறங்கடை போயினாள் – கலி 115/4-12

ஆட்டினத்து ஆயர்மகன் சூடி வந்த ஒரு
முல்லைச் சரத்தையும், தலைமாலையையும், மெல்லிய இயல்புடையவளே!
என்னுடைய கூந்தலுக்குள் வைத்து முடிந்திருந்தேன், தோழியே! என் செவிலித்தாய்
என்னுடைய தலைக்கு வெண்ணெய் தடவுவதற்காக என் கூந்தலை விரித்துவிட
என் தாயும், தந்தையும் வீட்டிலே இருக்கும்போது, செவிலித்தாய் பதறிப்போக,
என் தாயின் முன் விழுந்தது அந்தப் பூ;
அதனை ஏன் என்று அவள் கேட்கவுமில்லை, கோபப்படவும் இல்லை,
நெருப்பைக் கையால் தொட்டவர் அக் கையைப் பிதிர்க்குமாறு போலக் கையைப் பிதிர்த்து
வீட்டைவிட்டு நீங்கி வாசலுக்கு வெளியே சென்றாள்
– நச்.உரை.
விதிர்த்திட்டு – நடுங்கி உதறி – மா.இரா. விளக்கம்.

பருமம் களையா பாய் பரி கலி மா
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 179,180

சேணம் களையப்பெறாத பாயும் ஓட்டத்தையுடைய செருக்கின குதிரைகள்
கரிய சேற்றையுடைய தெருவில் (தம்மேலே)வீசும் துளிகளை உடல் குலுக்கி உதற,

6.

ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
தண் நறும் சாந்தம் கமழும் தோள்மணந்து – அகம் 186/11,12

மிக்க தண்மை வாய்ந்த முழவினைக் குறுந்தடியால் அடிக்கவும்
தண்ணிய நறிய சந்தனம் நாறும் தோளையுடையவளை மணம்புரிந்து

மேலே குறிப்பிட்ட ஐந்து வகையான விதிர்ப்புகளை உற்றுநோக்குங்கால், விதிர்த்தலில் ஒரு விரைவான செயல்
(quick action) தெரிகிறது. எனவே, இங்குக் கூறப்பட்டுள்ள ’எறி குணில் விதிர்ப்ப’ என்பதிலும் ஒரு விரைவான
செயல் இருக்கவேண்டும். இங்குக் குறிப்பிடப்படும் முழவினைத் தடியால் விதிர்ப்பது என்பது, ஒரு மண
நிகழ்வின் போது நடப்பதாகும்.

’எறி குணில் விதிர்ப்ப — தோள் மணந்து’

என்று வருவதால், தற்காலத்துத்
திருமணங்களில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும்நேரத்தில் எழுப்பப்படும் கெட்டிமேளம் போல்
அன்றைக்கும் விரைவாக முழவு அடிக்கப்படுவதையே பாடலாசிரியர்

‘எறி குணில் விதிர்ப்ப

என்கிறார் என்று
தோன்றுகிறது.

மேல்


விதிர்ப்பு

(பெ) 1. நடுக்கம், trembling
2. சுழற்றுதல், brandishing

1

எழில் மாடத்து
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு_உற்று
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற
செய் தொழில் கொள்ளாது மதி செத்து சிதைதர – பரி 10/45-48

அழகிய அந்த மாடத்தில்
கையால் புனையப்பட்ட பாயும் வேங்கைப் புலியைக் கண்டு, அச்சங்கொண்டு,
மை போன்ற கரிய அந்த இளம் பெண்யானை, அந்த இளைய பெண்கள் நடுக்கமெய்த
பாகரின் அடக்கும் தொழிலுக்கும் அடங்காது, தன் மதி கெட்டுச் சிதைந்து ஓட

2

ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் – பரி 11/50

ஆற்றில் அணிஅணியாக, வெண்மையான வாளைச் சுழற்றுவோரும், ஒளிரும் குத்துவேலை
ஏந்திக்கொண்டிருப்போரும்

மேல்


விதுப்பு

(பெ) 1. நடுக்கம், trembling
2. வேட்கை, desire
3. விரைவு, haste

1

கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்விடம் அறியேம் ஆகி ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி
சூருறு மஞ்ஞையின் நடுங்க – குறி 162-169

கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி, தன் தலைமைக்குத் தக்கதாக
கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையை(ச் சுருட்டி) பரந்த நிலத்தே எறிந்து,
கோபம் விளங்கும் மதத்தால் மனம் செருக்கி, மரங்களை முறித்து,
மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்,
உயிர்பிழைப்பதற்குரிய இடத்தை (எங்கும்)அறியேமாய், சடுதியாக,
சீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு,
நடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று,
தெய்வமகளிரேறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க

2

குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை
————- ———————- —————–
கொடியோர் சென்ற தேஎத்து மடியாது
இனையை ஆகி செல்-மதி
வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – அகம் 163/9-14

மலையையும் நடுங்கச் செய்வது போன்ற குளிரைக் கொண்டவாடைக் காற்றே
——————– ———————-
கொடியராய என் தலைவர் சென்ற திசையில் அயராது
இதுபோலவே இருந்து செல்வாயாக
பொருளீட்டும் தொழிலில் பெருவேட்கை கொண்டவர் என்னை நினைத்துப்பார்க்கவும் செய்வார்

3.

ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு
கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/11-15

ஒள்ளிய நிறமுடைய வலிய புலி பாய்ந்ததாக, திரண்ட அடியினையும்
வெள்ளிய கொம்பினையுமுடைய களிறு முழக்கிய ஒலியினைக் கேட்டு அஞ்சி
தன் கன்றினைவிட்டு ஓடிய புல்லென்ற தலையினையுடைய இளைய பிடியானை
கையைத் தலைமீது வைத்துக்கொண்ட மயக்கம் தங்கிய விரைவுடன்
தம் மகவினைக் காணாதொழிந்த பெண்டிர் போல அக் கன்றினைத் தேடித்திரியும்

மேல்


விதும்பு

(பெ) விரைவு, haste

வானோர்
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர்
விதும்பு_உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/22-24

விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண் அமைந்தவர்
விரைந்த விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக்கொள்ள

மேல்


விம்மு

(வி) தேம்பியழு, heave a sob, as a child

இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள்
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள்-மன்னே இன்றே
மை அணல் காளை பொய் புகல் ஆக
அரும் சுரம் இறந்தனள் என்ப – நற் 179/1–9

வீட்டில் முளைத்தெழுந்த வயலைக்கொடியை ஈற்றுப்பசு தின்றுவிட
தான் விளையாடும் பந்தை நிலத்தில் எறிந்து, விளையாட்டுப்பொம்மையைத் தூக்கிப்போட்டுத்
தன் அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட என் காரியக்காரியான சிறுமகள்,
மானின் மருண்ட பார்வையைப் போன்ற தன் மயக்கந்தரும் பார்வையோடு
நானும் தாயும் ஊட்டிவிட தேன்கலந்த
இனிய பாலை அருந்தாமல், ஏக்கங்கொண்டு விம்மி அழுதுகொண்டு
நேற்றைக்குக்கூட அவ்வாறே இருந்தாள்; இன்றோ,
கரிய மீசையும் தாடியையுமுடைய காளையொருவனின் பொய்மொழிகளை ஆதரவாகக் கொண்டு
கடப்பதற்கரிய பாலைவழியில் சென்றுவிட்டாள் என்கின்றனர்,
விம்மு_உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/10

மேல்


விய

(வி) 1. அதிசயி, ஆச்சரியப்படு, wonder
2. நன்கு மதி, esteem, admire

1

வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9

வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு கைம்மிக்கது

2

மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – புறம் 192/11-13

நன்மையான்
மிக்கவரை பெரிதும் மதித்தலும் இலம்
சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலம்

மேல்

வியங்கொள் – (வி) பார்க்க : வியம்கொள்

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க
செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114

நெய்தல் மணற்பரப்பில் எனது பாவையைக் கிடத்திவிட்டு
உனது குறிப்பிட்ட இடத்துக்கு வந்தேன், நன்கு செய்த தேரையுடைய தலைவனே!
அங்குப் போகின்றேன்; செல்ல நீ விடுப்பாயாக; இரவு வருவதால்
ஆரல் மீனைத் தின்று நிறைந்த வயிற்றையுடைய
நாரை மிதித்துவிடும் என் பாவையின் நெற்றியை.

மேல்


வியம்கொள்

(வி) 1. ஏவு, order, command, ஏவலை மேற்கொள், obey the command
2. வழிவிடு, வழியேசெல், give way, go by the way

1,2

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க
செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114

நெய்தல் மணற்பரப்பில் எனது பாவையைக் கிடத்திவிட்டு
உனது குறிப்பிட்ட இடத்துக்கு வந்தேன், நன்கு செய்த தேரையுடைய தலைவனே!
அங்குப் போகின்றோம்; அவளைப் போகும்படி நீயே ஏவுவாயாக; இரவு வருவதால்
ஆரல் மீனைத் தின்று நிறைந்த வயிற்றையுடைய
நாரை மிதித்துவிடும் என் பாவையின் நெற்றியை
வியங்கொள்ளல் – ஏவலை மேற்கொள்ளல் – உ.வே.சா உரை விளக்கம்

செல வியங்கொண்மோ – செல்ல நீ விடுப்பாயாக – வியங்கொள்ளல் – விடுத்தல் – செல்ல விடு என்றவாறு –
பொ.வே.சோ. உரை, விளக்கம்.

செலவியம் – செல்லவிடுதல் – ச.வே.சு.உரை விளக்கம்.

நிலம் தப இடூஉம் ஏணி புலம் படர்ந்து
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார்
ஏவல் வியம்கொண்டு இளையரொடு எழுதரும்
ஒல்லார் யானை காணின்
நில்லா தானை இறை கிழவோயே – பதி 54/12-17

எதிர்ப்பாரின் நிலப்பகுதி குறைவுபடும்படி அமைக்கப்பட்ட, அவரின் எல்லைக்குட்பட்ட நிலத்துப்பாசறையில் தங்கி,
ஒலிக்கின்ற முகப்பையுடைய முரசம் பாசறையின் நடுவில் முழங்க,
வலக்கையில் தண்டினை ஏந்தியவராய், போரினைச் செய்வதற்காக,
முரசின் ஏவலை மேற்கொண்டு இளைய வீரருடன் நிற்கின்ற,
உன்னுடன் உடன்படாதோரின் யானைப் படையைக் கண்டால்,
நில்லாமல் சென்று தாக்கும் சேனைகளையுடைய அரசுரிமை உடையவனே!

2

படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ
ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை
ஆங்கு வியம்கொள்-மின் அது அதன் பண்பே – மலை 423-427

‘தனக்குப் படியாதாரை அழித்த (யாருக்கும்)அடங்குதல் இல்லாத ஆளுமையுள்ளவனும்,
(பூங்)கொடிபோன்றவளின் கணவனும் ஆகிய (நன்னனிடம்) செல்கின்றோம்’ என்று சொன்னால்,
தசைகளையும் கிழங்குகளையும் இறையாகப்பெற்றவராய் (அவற்றை உமக்குக்)கொடுத்து,
(உம்மைப்)பேணுபவர் அன்றி, வருத்துபவர்கள் இல்லை;
(பின்னர்)அங்கே (அவர்)போகச்சொன்ன வழியைக் கொள்வீர் – அதுவே அக்காட்டின் தன்மையாம்

கண்டல் வேலி கழி சூழ் படப்பை
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என
வியம்கொண்டு ஏகினை ஆயின் – நற் 363/1-3

கண்டல் மரங்களால் ஆன வேலியும், கழி சூழ்ந்துகிடக்கும் கொல்லையையுமுடைய
தெளிந்த கடலையுடைய நாட்டுக்குச் செல்வேன் யான் என்று
வழியினை மேற்கொண்டு போவாயாயின்

சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக
சொல்லிய சொல்லும் வியம்கொள கூறு – கலி 114/8-11

“தன்னுடைய விருப்பத்தைப் பற்றி ஒரு சொல்லும் சொல்லாத பேதையிடம், இளம்பெண்ணே! ‘ஏடா!
இந்தத் திருமணம் உனக்கில்லாமல் உன் கையைவிட்டுப்போகும், அதற்கும் நெடுநாள் இல்லை,
அந்த மணம் உனக்கே வரவேண்டுமென்று உறுதியாய் எண்ணுவாய்’, என்று இவ்வாறாக
நீ சொல்லிய சொல்லும் உன் ஏவலை அவன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி சொல்;
– வியங்கொளக்கூறுதலாவது – ஏவியதனைக் கேட்டாங்கு உடனே செய்யுமாறு திறம்படக் கூறுதல் என்க.
– நச்.உரை- பெ.விளக்கம்.

வியம் என்ற பெயர்ச்சொல்லுக்கு (1) ஏவல், கட்டளை order, command (2) வழி, way, course என்ற இரண்டு
பொருள் உள்ளதாக அகராதிகள் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியத்தில் வியம் என்ற சொல் கொள் என்ற
வினையுடன், வியம்கொள் (வியங்கொள்) என்றே சேர்த்து ஒரே தொடராகவே வரக் காண்கிறோம்.

மேல்


வியமம்

(பெ) வியத்தற்குரியது, பாராட்டத்தக்கது, That which is worthy of admiration

வியமமே வாழி குதிரை – கலி 96/31

இக் குதிரை பெரிதும் வியப்பே, நீ வாழ்வாயாக
விய என்னும் உரிச்சொல் முதனிலையாகப் பிறந்து வியமம் எனப் பெயர்பட நின்றது.அம் அசை. இனி விஷமம்
என்னும் வடமொழி என்பாரும் உளர்.
– நச். உரை, விளக்கம்.

மேல்


வியர்

1. (வி) உடலில் வியர்வை தோன்று, sweat, perspire
– 2. (பெ) வியர்வை, sweat, perspiration

1

பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் – குறு 84/1

முதுகோடு பெயர்த்தெடுத்துத் தழுவினேன், எனக்கு வியர்க்கிறது என்றாள்,

2

மெய்யது வியரே மிடற்றது பசும் புண் – புறம் 100/2

உடம்பின்கண்னது வேர்ப்பு, மிடற்றின்கண்ணது ஈரம் புலராத பசிய புண்

மேல்


வியர்ப்பு

(பெ) வியர், வியர்வை, perspiration, sweat

வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை – புறம் 386/7,8

உண்பனவற்றைச் சுடச்சுட உண்டு வியர்த்தலை அன்றி
தொழில்செய்து மெய்வருந்தி வியர்வை கொள்ளாவண்ணம்

மேல்


வியல்

(பெ) 1. பெருமை, greatness
2. அகலம், பரப்பு, width, extension
3. மிகுதி, abindance

1

வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/5

பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கள்தாழியை

2

விழவு நின்ற வியல் மறுகின் – மது 328

விழாக்கோலம் நிலைபெற்ற அகன்ற தெருவினையும்,

அகல் நகர் வியல் முற்றத்து – பட் 20

அகன்ற மனையின் பரந்த முற்றத்தில்

3.

வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை – அகம் 364/10

கொடிய சினத்தினையுடைய அரசனது மிகப்பெரிய பாசறைக்கண்ணே

மேல்


வியலுள்

(பெ) அகன்ற இடம், wide open space

முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண் – மலை 350

முரசுகள் தூக்கம்(=ஓய்வு) அறியாத அகன்ற ஊரினில்(கொண்டாடும்)

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/1-3

விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்
கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில்
வல்லவன் அல்லன்; வாழ்க! அவன் தலைமாலை!

மேல்


வியலூர்

(பெ) சங்க கால நன்னன் என்பானின் ஊர், a city belonging to the sangam chieftain nannan

நறவு மகிழ் இருக்கை நன்னன் வேள்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின்
அலர் முலை ஆகம் புலம்ப – அகம் 97/12-14

கள்ளுண்டு மகிழும் இருக்கையினையுடைய நன்னன் வேண்மானது
வயலைக்கொடி சூழ்ந்த வியலூரினை ஒத்த நினது
பரந்த முலையையுடைய மார்பகம் தனித்து வருந்த

மேல்


வியன்

(பெ) பார்க்க : வியல்

நெடு நீர துறை கலங்க
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு – பதி 33/4,5

ஆழமான நீரையுடைய குளங்களின் துறைகள் கலங்குமாறு
அதனை மூழ்கடிப்பதுபோல் தங்கிய பெரும் படையோடு

விரி கடல் வியன் தானையொடு – மது 180

விரிந்த கடலைப் போன்ற அகற்சியையுடைய படையுடன்

மேல்


விரகியர்

(பெ) காமவயப்பட்டோர், those who long for sexual love

விரகியர் வினவ வினா இறுப்போரும் – பரி 19/49

காமவயப்பட்டிருப்போர் எழுப்பிய வினாக்களுக்கு விடையிறுப்போரும்,

மேல்


விரகு

(பெ) 1. உபாயம், expedient
2. தின்பண்டம், confectionery
3. பயன், use
4. விவேகம், discretion

1

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 1-3

இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,
விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேற்றுப்புலத்தை எய்த நினைத்த உபாயத்தை அறிந்த பொருநனே

2

வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ – பொரு 108

வெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைக் கொணர்ந்து (எங்களை)இருத்தி
– உபாயங்களாற் பண்ணுதலால் விரகு என்றார், ஆகுபெயர்

3.

நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரி தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே – நற் 380

நெய்யும், தாளிப்புப் புகையும் படிந்து, என் உடம்புடன்
அழுக்கடைந்துள்ளது என் ஆடையும்; தோள்களும்
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;
தூய அணிகலன்கள் அணிந்த மகளிர் வாழும் சேரியில் தோன்றும்
தேரையுடைய தலைவனுக்கு நாம் ஒத்துவரமாட்டோம்; அதனால்,
பொன் போன்ற நரம்பைக் கொண்ட இனிய ஓசையைக் கொண்ட சிறிய யாழை
இசைப்பதில் வல்லவன் என்றாலும், என்னை வணங்கிநிற்கவேண்டாம்;
கொண்டுபோய்விடு, பாணனே! உன்னுடைய குளிர்ந்த துறையையுடைய மருதநிலத்தானை!
சிறந்த என் வீட்டிலிருந்து பாடவேண்டாம்; என் உள்ளம் அதற்கு ஒருப்படாது; நீண்ட நேரம் நிற்பதால்
குதிரைகளும் தாம் தேரில் பூட்டப்பட்டிருக்கும் நிலையை வெறுக்கின்றன;
பயனில்லாத சொற்களைச் சொல்லவேண்டாம், நான் விரும்பியது எனக்கு இல்லாத போது
விரகு – பயன் – ஔவை.சு.து.உரை, விளக்கம்

4.

விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக
கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை – கலி 76/12,13

வேண்டாம் என்று தள்ளிவைக்கப்பட்ட மகளிர் விவேகம் இன்றி கூறிய சொற்கள் பொய்யாக இருக்க,
அவறைக் கடிந்துகூறாதது மட்டுமன்றி என்னை இடித்துரைக்கவும் வந்துவிட்டாய்?

மேல்


விரவு

(வி) 1. கல, mix, mingle, blend
2. கட்டு, பொருத்து, bind, be joined
3 பரந்திரு, be spread

1

விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ – அகம் 212/14

பல மொழியும் கலந்த பாசறையைத் தான் வேண்டுமிடங்களில் அமைத்து

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27

செறிவைக் கொண்ட மேற்பகுதியையுடைய, (பலவிதமாய்க்)கலந்த பூக்களுள்ள அகன்ற பொழில்கள்

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47

இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,
– வரி விரவு கச்சு என மாறுக.

பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின்
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 70-72

(ஆறலைப்போர்)எய்த கணைகளின் வலியைத் தொலைத்த புண்கள் தீர்ந்த மார்பினையும்;
(மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள்
மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க,
– பொ.வே.சோ.உரை
விரவு வரிக் கச்சு என்றதனை, வரி விரவிய கச்சு என மாறிக் கோடலுமாம்.

2.

இந்தப் பொருள் எந்த அகராதியிலும் காணப்படவில்லை. செய்யுள் உரைகளினின்றும் பெறப்படுகிரது.

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47

இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,
– வரி விரவு கச்சு என மாறுக.
– இனி, வாள் விரவிய கச்சு, வரிக்கச்சு எனினுமாம். வாள் விரவுதலாவது வாளைச் சேரக் கட்டின என்றவாறு.
வரிக் கச்சு – வரிந்து கட்டின கச்சென்க.

பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின்
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 70-72

(ஆறலைப்போர்)எய்த கணைகளின் வலியைத் தொலைத்த புண்கள் தீர்ந்த மார்பினையும்;
(மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள்
மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க,
– பொ.வே.சோ.உரை
விரவு வரிக் கச்சு என்றதனை, வரி விரவிய கச்சு என மாறிக் கோடலுமாம்.

இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும், விரவுக்குரிய முதல் பொருளும் ஒத்துவரக் காண்கிறோம்.

3.

இந்தப் பொருளும் எந்த அகராதியிலும் காணப்படவில்லை. செய்யுள் உரைகளினின்றும் பெறப்படுகிரது.

நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை – அகம் 25/1,2

நீண்ட கரையினைக் கொண்ட காட்டாற்றின் வேகம் மிக்க நீர் அற்றொழிய
விளங்கும் அறலாம் தன்மை கொண்ட விரவிய மணலையுடைய அகன்ற துறையிடத்துள்ள
– விரவிய மணலையுடைய – நாட்டார் உரை
– மணல் பரந்த – மாணிக்கம் உரை.
– பரந்த மணல் – செயபால் உரை
– மணல் பரந்த – ந.சி.கந்தையா உரை
– பரந்து கிடக்கின்ற மணல் – பொ.வே.சோ.உரை
– விரவு மணல் – வந்து கலந்த மணலுமாம்.- பொ.வே.சோ.உரை விளக்கம் – விரவுக்குரிய பொருள் – 1
– விரவு மணல் – mixed sand – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு – விரவுக்குரிய பொருள் –

1

விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் – அகம் 108/12

புள்ளிகள் விரவிய மயிலைக் கண்டு அஞ்சி
– நாட்டார் உரை
– புள்ளிகள் விரவிக்கிடக்கும் – புலி. உரை
– விரவிய புள்ளிகளையுடைய – பொ.வே.சோ.உரை
விரவு பொறி மஞ்ஞை – peacock with spread spots – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு

மேல்


விராய்

(வி.எ) கலந்து, getting mixed

மராஅ மலரொடு விராஅய் – அகம் 99/8

வெண்கடப்பம் பூக்களொடு விரவி

மேல்


விராய

(வி.எ) 1. விரவிய – கலந்த
2. விரவிய – சுற்றிக்கொண்ட, கட்டிப்போட்ட, coil up, as rope,

1

நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68

(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல,

இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி – பதி 42/10

இஞ்சியினையும் பூவினையும் கலந்த வாடாத மாலையை அணிந்து,

2

வெருவார்
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி – புறம் 370/23,24

அஞ்சாத வீரர்
கூட்டத்தின் தன்னுடைய கால்களைச் சுற்றிக்கொள்ளும் வரி பொருந்திய குடரை ஒருங்குசேர்த்து

மேல்


விராவு

(பெ) விரவுதல், கலத்தல், mingling

நரை விராவுற்ற நறு மென் கூந்தல் – நெடு 152

நரை கலத்தலுற்ற நறிய மெல்லிய மயிரினையுடைய

மேல்


விரான்

(பெ) சங்க வள்ளல்களில் ஒருவன், a philanthropist chieftain of sangam period
விராலி மலைக்குஅடியில் இருக்கும் இருப்பையூர் என்ற ஊரை ஆண்ட வள்ளல்.

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல் நலம் தொலையினும் தொலைக – நற் 350/4,5

தேர்க்கொடை கொடுப்பதில் சிறந்த விரான் என்பானின் இருப்பையூர் போன்ற என்
பழைய அழகு தொலைந்துபோனாலும் போகட்டும்

விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண் விராஅன் இருப்பை அன்ன
இவள் அணங்கு உற்றனை போறி – ஐங் 58/1-3

மலை போலக் குவித்த வெண்ணெல் அறுத்த கதிர்க்குவியல்களையும்,
கொடைத்தன்மையிலும் சிறந்த விரான் என்பானின் இருப்பை நகரைப் போன்ற
இவள்மீது காதல்வேட்கை பெருகித் துன்பப்பட்டாய் போலும்!

மேல்


விரி

(வி) 1. பெரிதாகு, பர, expand, spread out, be vast
2. மலர், blossom, unfold
3. அவிழ், நெகிழ், become loosened
4. பரப்பு, spread out
5. நீளத்தைப் பெரிதாக்கு, cause to expand, extend

1

விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல் – பொரு 71,72

விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே,

விரி கடல் வேலி வியல்_அகம் விளங்க – சிறு 114

பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி

பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102

பாம்பின் படத்தைப் போல பரந்த அல்குலுக்கு நறுக்கின தழையைக் கட்டி உடுத்தி

விரி நூல் அந்தணர் விழவு தொடங்க – பரி 11/78

விரிந்த மெய்நூல்களைக் கற்றறிந்த அந்தணர் திருவிழாவைத் தொடங்க
விரி நூல் அந்தணர் – Brahmins who know the vast books வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு

2

முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது – சிறு 183

முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்

3.

கவரி முச்சி கார் விரி கூந்தல் – பதி 43/1

கவரிமானின் மயிர் சேர்த்த உச்சிக் கொண்டையினையும், மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும்

4.

நன் பல, வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த – குறி 197,198

நல்ல பலவாகிய,கச்சைகளைப் பரப்பிவிட்ட களம் போல அழகு மிக்குப் பொலிவுற்ற

மேல்


விரிச்சி

(பெ) யாரோ ஒருவர் தற்செயலாகக் கூற, அது நிமித்தமாகக் கொள்ளப்படும் கூற்று,
accuidental utterance of an unknown person taken as good omen

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை
அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல் 6-11

பெரிய மழையைப் பெய்த சிறு(பொழுதாகிய) துன்பமூட்டும் மாலைக் காலத்து
அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்,
யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன்
உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின்
அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி,
பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க –

நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா – புறம் 280/6,7

நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும்
செம்மையுடைய முதுபெண்டானவள் சொல்லிய சொற்களும் குறையுடையவாயுள்ளன

மேல்


விரிவு

(பெ) பூத்தல், blossoming

நின் உறு விழுமம் கூற கேட்டு
வருமே தோழி நன் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/23-26

நீ படுகின்ற பாட்டை நான் கூறக்கேட்டு
வருகின்றார், தோழியே! நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவர்!
வேங்கை மரங்கள் பூக்கின்ற நல்ல நாளை எதிர்நோக்கியிருந்து,
பருத்து இறங்குகின்ற இந்தப் பெருத்த தோள்காரியை மணமுடித்துச் செல்வதற்கு.

மேல்


விரீஇ

(வி.எ) மலர்ந்து, விரிந்து என்பதன் சொல்லிசை அளபெடை, having blossomed

பேஎய் தலைய பிணர் அரை தாழை
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன்
வயிறு உடை போது வாலிதின் விரீஇ
புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின் – அகம் 130/5-8

பேய் போலும் தலையினையுடைய சருச்சரை வாய்ந்த அரையினையுடைய தாழையின்
முள்ளாகிய பற்களையுடைய நீண்ட புற இதழ்கள் பலவும் ஒருங்கே காத்து நிற்க
அதன் வயிற்றினை இடமாகவுடைய பூ தூயதாய் விரிந்து
புலால் நாற்றத்தைத் தாக்கி ஒழிந்த மலர் நாற்றம் கமழும் இடத்தின்கண்

மேல்


விருந்து

(பெ) 1. விருந்தினர், guest
2. விருந்தினரை உபசரித்து வழங்கும் சிறப்பான உணவு, feast
3. புலன்களுக்கு / மனத்திற்கு மகிழ்வூட்டக்கூடியது, a treat, delight
4. ஏதேனும் புதிய ஒன்று, புதுமை, any new thing, newness, novelty

1

பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வர கரைந்த காக்கையது பலியே – குறு 210/2-6

கூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு, தொண்டி
முழுவதும் ஒருசேர விளைந்த வெண்ணெல்லால் ஆக்கிய சூடான சோற்றை
ஏழு பாத்திரங்களில் வைத்து ஏந்திக் கொடுத்தாலும், அது சிறிதாகும் என் தோழியே!
உனது பெரிய தோள்களை நெகிழ்த்த துன்பம் தீர
விருந்தினர் வரும்படி கரைந்த காக்கைக்கு இடும் பலி

2

விருந்து எவன் செய்கோ தோழி சாரல்
——————- ————- ——————
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே – நற் 112

விருந்து என்ன படைப்போம் தோழி! மலைச்சாரலில்
——————- ————- ——————
ஒலிக்கின்ற வலிய இடியுடன் செறிவாகக் கலந்துவந்த இந்த மழைக்கு

3.

வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட
கார் தொடங்கின்றே காலை இனி நின்
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக
வடி மணி நெடும் தேர் கடைஇ
வருவர் இன்று நம் காதலோரே – ஐங் 468

வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க,
கார்காலம் தொடங்கிவிட்டது குறித்த பருவத்தில்; இனிமேல் உன்
அழகாய் இறங்கும் பருத்த தோள்களுக்கு நல்ல விருந்தாக
நன்கு வடித்த மணிகள் கட்டப்பட்ட நெடிய தேரைச் செலுத்தி
வருவார், இன்று, நம் காதலர்.

4.

அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
விருந்தின் பாணி கழிப்பி – மலை 538,539

அளவற்ற வலிமைகொண்ட கடவுளை வாழ்த்திய பின்னர்,
(உமக்கே உரித்தான)புதிய பாடல்களைப் பாடி

ஆர் கலி வானம் தலைஇ நடுநாள்
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – நற் 53/5-8

பெருத்த முழக்கமிடும் மேகங்கள் கூடிவந்து நள்ளிரவில்
மிகுந்த மழையைப் பொழிந்ததாக, காட்டின் பாறைகளில் மோதி வரும் ஆற்றின்
காய்ந்த சருகுகளோடும், உதிர்ந்த மலர்க் கொத்துக்களோடும் வரும்
புதிய சுவையான நீர் மருந்தும் ஆகும்

பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே – நற் 103/6-9

பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,
குறிதப்பாத வேட்டையை மேற்கொண்டு சென்ற, கணவனான ஆண்நாய்,
தன் அன்பில் பொய்க்காத மரபினையுடைய தன் பெண்நாயை நினைத்து வருந்துகின்ற
புதிய வழித்தடமான கொடிய பாலைநிலத்தில் வருந்துகின்றேன் நான்!

கரும் கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரும் சினை
விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் – நற் 167/1,2

கரிய கொம்பினையுடைய புன்னையின் மேலோங்கி வளைந்த பெரிய கிளையிலிருந்து
புதியதாய் வந்த வெண்குருகுகள் ஒலிக்குமாயின்

விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்
துறை கெழு கொண்க – நற் 172/7-9

புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல
வலம்புரியாக வெண்சங்கு ஒலிக்கும் ஒளிர்கின்ற நீரையுடைய
துறையைச் சேர்ந்த கொண்கனே!

அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே – குறு 33

தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்.
தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ?
இரந்து உண்ணும் உணவினையுடைய நன்கு வளர்ச்சி பெறாத மேனியோடு
இந்தப் புது ஊரிலும் பெரும் சிறப்புடையவனாயிருக்கிறான்

விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என – பதி 71/19

புதிதாகத் தாம் தேடிய செல்வத்தோடு, தமது முன்னோர் தேடிவத்த பெரும் செல்வமும் அழிந்துபோயின என்று,

விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் – அகம் 54/1,2

புதிதாய் முளைத்த அரசர்கள் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட
(நம்)வேந்தனும் கொடிய பகைமை தீர்ந்தனன்;

பேஎய் வெண்தேர் பெயல் செத்து ஓடி
தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும் – அகம் 241/9-12

வெள்ளிய பேய்த்தேரை மழைஎன்று கருதி ஓடி
தாகம்பட்ட தனித்த முதிர்ந்த பெரிய கலைமான்
அவ்விடத்தினின்றும் மீண்டூறைதல் மாட்டாது, அப் பேய்த்தேர் அசையும் இடமாய
புதிய வெவ்விய காட்டின்கண்ணே வருத்தமுற்றுத் தங்கிக்கிடக்கும்

விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/7

முன்பு அறியாத புதியதொரு வருத்தத்தையுடையர்

வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக்குரல் தடாரி – புறம் 369/20,21

குற்றமில்லாத புதிதாகப் போர்க்கப்பட்ட தோலையுடைய
அரித்த ஓசையையுடைய தடாரிப் பறையை

மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர – பரி 6/40

மெலியர் அல்லாத வலியவர் புதுப்புனலுக்குள் பாய்ந்து விளையாட

மேல்


விரை

1. (வி) 1. வேகமாகச்செல், be speedy, swift, fast
2. அவசரப்படு, hasten, hurry
– 2. (பெ) 1. நறுமணம், fragrance, scent
2. நறுமணப்பொருள், perfume

1.1

புரி உளை கலி_மான் தேர் கடவுபு
விரி தண் தார் வியல் மார்ப விரைக நின் செலவே – கலி 124/20,21

சுருள் சுருளான பிடரி மயிரைக் கொண்ட விரைந்தோடும் குதிரை பூட்டிய உன் தேரினைச் செலுத்தி
மலர்ந்த குளிர்ந்த மாலையையுடைய அகன்ற மார்பினையுடையவனே! விரைந்துசெல்லட்டும் உனது பயணம்.

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123

வானமே வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு

1.2

உள்ளம் பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்கா தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் – நற் 284/3-8

நம் உள்ளத்தை வசமாக்கிக்கொண்டவளிடம், நெஞ்சம்
“அவளின் துன்பத்தைத் தீர்க்கத் திரும்பிச் செல்வோம்” என்று சொல்லும்;
“மேற்கொண்ட பணியை முடிக்காமல் அதற்கு இடையூறு விளைவிப்பது
வந்த நோக்கத்தையும் அடையாமல், பழிச்சொல்லையும் கொண்டுசேர்க்கும்” என்று
உறுதிப்பாட்டை தூக்கிநிறுத்தித் தாமதித்து, அறிவானது
“சிறிதளவுகூட கூடுதல் அவசரப்படவேண்டாம்” என்று சொல்லும்;

முளவு_மா வல்சி எயினர் தங்கை
இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய
சொல்லினேன் இரக்கும் அளவை
வெல் வேல் விடலை விரையாதீமே – ஐங் 364

முள்ளம்பன்றியை உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான
இளமையும் மாநிறமும் உடைய பாலைநிலப் பெண்ணுக்கு உன் நிலையைப் புரிந்துகொள்ளும்படி
எடுத்துக் கூறினேன்; அவளது உடன்பாட்டை நான் இரந்து பெறும் வரை
வெல்லுகின்ற வேலையுடைய இளங்காளையே! நீ அவசரப்படவேண்டாம்.

2.1

விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188

(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து

வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் – சிறு 155

மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்

2.2

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235

சிறிய பசுமஞ்சளோடு மணமுள்ள சந்தனம் முதலியவற்றையும் தெளித்து,

நன் நெடும் கூந்தல் நறு விரை குடைய – மது 552

நல்ல நீண்ட கூந்தலில் மணமிக்க நறுமணத் தைலத்தை ஊடுருவித்தேய்க்க

மேல்


விரைஇ

(வி.எ) 1. விரவி, கலந்து, mixed with
2. விரவி, பரப்பி, spread out

1

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218

சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து, மறியை அறுத்து,

2

வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை – பெரும் 263-265

மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின்,

மேல்


வில்லியாதன்

(பெ) சங்ககால மன்னர்களின் ஒருவன், a chieftain in sangam period
இவனது முழுப்பெயர் ஓய்மான் வில்லியாதன். இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்.
புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் புறநானூறு 379-ஆம் பாடலில் இவனது வள்ளண்மையைப் போற்றிப்
பாடியுள்ளார். இப் பாடலில் இவன் ‘நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.
இந்த வில்லியாதனைப் பாடிய இந்தப் புலவர் ஓய்மான் நல்லியாதனின் கொடையையும் (புற, 376) பாராட்டிப்
பாடியுள்ளார். இதே புலவர் புறம் 176-இல் ஓய்மான் நல்லியக்கோடன் என்பானைப் பற்றியும் பாடியுள்ளார்.
பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் ஓய்மானாட்டு
நல்லியக்கோடன் அப்பாடலில் ‘நன்மா இலங்கைத் தலைவன்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான்.
இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லியக்கோடன், நல்லியாதன், வில்லியாதன் என்னும் பெயர் கொண்ட
மூவர் ஓய்மானாட்டில் சற்றேறக் குறைய ஒரே காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் எனத் தெரியவருகிறது.
இவர்கள் மூவரும் அண்ணன் தம்பியராய் அடுத்தடுத்தோ, ஆங்காங்கேயோ செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள்
என்பது புலனாகிறது.

நெல் அமல் புரவின் இலங்கை கோமான்
வில்லியாதன் கிணையேம் பெரும – புறம் 379/6,7

நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுடைய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவனான
ஓய்மான் வில்லியாதனுக்குக் கிணைப்பொருநராவோம், பெருமானே

மேல்


விலங்கல்

(பெ) மலை, மலைபோல் நிற்கும் மதில், mountain, huge wall obstructing like a hill

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல் – மலை 297-299

ஒளிர்கின்றதும் ஏந்திநிற்பதுமான கொம்பினையுடைய (தன்)இனத்தைப்பிரிந்த ஒற்றை ஆண்யானை,
குறுக்குமலையில் மிக உயரமான பரண் (மீது இருக்கும்)குறவர்களின்
நிலத்தில் புகுந்து (பயிர்களைத்)தின்ன, (அதனை விரட்ட, அவர்கள்)ஆர்வத்துடன் சுற்றிவளைத்து ஏற்படுத்தும்
ஓசையும்;

கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் – பதி 16/1,2

மலைச் சிகரங்களோடு மாறுபடுவது போன்று கட்டிய, வளைந்த பார்க்குமிடங்களையுடைய வெளிமதிலை
அடுத்துள்ள,
ஒரு நாட்டைக் கண்டது போன்ற அகன்ற இடைவெளியைக் கொண்ட அம்புக்கட்டுகள் இருக்கும் நடுமதிலையும்
அடுத்து,
– புற மதிலைக் கடந்து போதருவார்க்குக் குறுக்கே மலை போல் நிற்றலின் விலங்கல் என்றும் கூறினார்.

மேல்


விலங்கு

1. (வி) 1. குறுக்கிடு, lie across, be transverse
2. ஒதுங்கு, step aside
3. மாறுபடு, change, become different
4. விலகு, நீங்கு, leave, go away
5. கடந்து செல், go past
6. மாட்டு, fasten on, hook
7. தவிர், avoid
8. தடு, obstruct, hinder
9. விலக்கு, turn aside, put out of the way
10. வளை, bend
11. தவறுசெய், err
– 2. (பெ) 1. குறுக்கு, that which is crosswise
2. மிருகம், animal

1.1

மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 17/22, அகம் 153/19, அகம் 187/24

மேகங்கள் பொருந்திய பெரிய மலைகள் குறுக்கிட்டு நிற்கும் சுரநெறியில்

1.2

துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261

விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி,

1.3

ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம்
தேறல் எளிது என்பாம் நாம் – கலி 60/23-25

“உலக ஒழுக்கத்திலிருந்து மாறுபட்டு தெருவில் நின்றுகொண்டு ஒருவன்
கூறும் சொல்லை உண்மையென்று எடுத்துக்கொண்டு, அதன் தன்மையை உணராமல்
அவனை நம்பி எளிதாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொல்லுவோம் நாம்”

1.4

இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10

இருள் செறிந்த நடுயாமத்தே நெறி தடுமாறுதலான் விலகி

1.5

புடையல் கழல் கால் புல்லி குன்றத்து
நடை அரும் கானம் விலங்கி – அகம் 295/13,14

ஒலிக்கின்ற வீரக் கழலணிந்தபுல்லி என்பானது வேங்கடமலையைச் சார்ந்த
செல்லற்கு அரிய காட்டினைக் கடந்து
– நாட்டார் உரை

1.6

ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட
மாலை போல் தூங்கும் சினை – கலி 106/26-29

காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்தி எடுத்த கொத்தான குடல்களைத்
தொங்கவிட்டவாறே தூக்கிக்கொண்டு பறந்த பருந்துகளின் வாயிலிருந்து வழுக்கி விழ, அவை
ஆலமரத்தின் மேலும், கடம்ப மரத்தின்மேலும் தெய்வங்களுக்கு அணிவிப்பதற்காக விலங்க இட்டுவைத்த
மாலையைப் போல தொங்கிக்கொண்டிருந்தன மரக்கிளைகளில்
– நச். உரை
விலங்கிட்ட – மாட்டிவிட்ட – பெ.விளக்கம்

1.7

நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின் – பொரு 46

நல்ல உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்த்தலால்

1.8

வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினை இடை விலங்கல போலும் – நற் 252/5,6

இதுவரை துணியாத நெஞ்சம் இப்போது முடிவுசெய்ய, ஆராய்ந்து தொடங்கிய
செயல்முனைப்பினைத் தடுக்கவில்லை போலும்

யாரீரோ எம் விலங்கியீஇர் என – அகம் 390/14

எம்மைத் தடுப்பீர் நீவிர் யாவிரோ என

1.9

சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய் – புறம் 205/7,8

சிறியனவும் பெரியனவும் ஆகிய புழைகளைப் போக்கற விலக்கிய
மானினது திரட்சியைத் தொலைத்த கடிய செலவையுடைய சினமிக்க நாயையும்

இன்று நம்
செய்_வினை ஆற்று_உற விலங்கின்
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே – அகம் 33/18-20

இன்று நமது
செய்யப்படும் இவ்வினையை இந்த இடைநெறியில் உற்ற அளவில் விலக்குவையாயின்
பிறர் சிரிக்கத்தக்க இகழ்ச்சியை அடைவாய் அல்லவா?

1.10

வில் என விலங்கிய புருவத்து வல்லென
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் – புறம் 361/15,16

வில் போல் வளைந்த புருவத்தையும், வல்லென ஒரு சொல்
நல்கின் நா அஞ்சுதற்கேதுவாகிய முள் போன்ற பற்களையுமுடைய மகளிர்
– ஔவை.சு.து.உரை

1.11

கடவுள் கடி நகர்-தோறும் இவனை
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை கூறு – கலி 84/6-9

தெய்வங்கள் மிகுதியாக இருக்கும் கோயில்கள்தோறும் இவனை
சுற்றிக்காண்பித்துக் கொண்டுவா என்று சொல்ல, அப்படியே சென்றாய்! தவறுசெய்துவிட்டாய்!
நெஞ்சில் ஈரமில்லாத இவனுடைய தந்தையின் பரத்தையர்களுக்குள்
யாருடைய வீட்டில் தங்கியிருந்தாய்? கூறு!”
விலங்கினை – தப்பினாய் – நச்.உரை
விலங்கினை – தவறினை – பெ.விளக்கம்

2.1

பேஎம் நிலைஇய இரும் பௌவத்து
கொடும் புணரி விலங்கு போழ
கடும் காலொடு கரை சேர
நெடும் கொடி மிசை இதை எடுத்து – மது 76-79

அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,
வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு,
வேகமான காற்றால் (ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு,
நெடிய கொடியை உச்சியில் உடையவாய், பாய் விரித்து

2.2

நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலை
பல் வேறு விலங்கும் எய்தும் நாட – அகம் 2/7-9

நறிய பூக்களாலான படுக்கையில் களிப்புற்றுத் தூங்கும்
எண்ணி முயலாத இன்பத்தை எளிதாக, நின் மலையிலுள்ள
பல்வேறு விலங்குகளும் எய்தும் நாடனே!

மேல்


விலைநலப்பெண்டிர்

(பெ) விலைமகளிர், women, who engage in sexual intercourse for money

முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூற
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/7-11

முன்னுள்ளோராகிய வேந்தர் விண்ணுலகம் செல்லக்கண்டு வைத்தும் உடன் செல்லாது, யான் இப்பொழுதும்
தம் நலத்தைப் பிறர்க்கு விற்கும் மகளிர் போல, பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ
நிலையாக இருக்கிறேன் யான் வாழ்க என்று பலவகையாலும் மாண்புற்ற
நிலமாகிய மகள் புலம்பிய காஞ்சியும்
உண்டென்று அறிவுடையோர் கூறுவர்

மேல்


விலைஞர்

(பெ) விற்போர், persons engaged in selling things

பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர்
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 405,406

பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,
மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க –

மேல்


விலைமாறு

(பெ) பண்டமாற்று, barter, exchange of goods

நெல்லின் நேரே வெண் கல் உப்பு என
சேரி விலைமாறு கூறலின் – அகம் 140/7,8

நெல்லுக்கு ஒத்த அளவினதே வெள்ளிய கல்லுப்பு என்று
சேரியில் பண்டமாற்றாகிய விலை கூறலின்

மேல்


விலைவன்

(பெ) பொருளுக்காகக் கொல்கிறவன், a person who kills for benefit

விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன் – புறம் 152/9

விலை ஏதுவாகக் கொன்றானாக மாட்டான், செல்வத்தை மிக உடையவனாக இருந்தான்.

மேல்


விலோதம்

(பெ) விலோதனம், பெரிய கொடி, large flag

திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – மது 449,450

திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத்
தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுகையினால்

மேல்


விழவு

(பெ) 1. தெய்வங்களுக்கு எடுக்கப்படும் திருவிழா, festivel for a deity
2. மணவிழா போன்ற இல்ல விழா, festivel at home, like marriage

1

வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உரு கெழு பெரியோர்க்கு
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்க – மது 457-460

வாடாத பூக்களையும், இமைக்காத கண்ணினையும்,
அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு,
அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க q

விழவு அறா வியல் ஆவணத்து
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 158-160

விழாக்கோலம் நீங்காத அகன்ற அங்காடித் தெருவினில் –
குற்றம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட
மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்

2

பொன்னுடை நெடு நகர் புரையோர் அயர
நன் மாண் விழவில் தகரம் மண்ணி
ஆம் பல புணர்ப்ப செல்லாள் – அகம் 385/5-7

செல்வம் மிக்க பெரிய மனையில் மேலோர் மணம் முடித்துவைக்க
நல்ல சிறப்புற்ற மணவிழாவில் மயிர்ச்சாந்தினைப் பூசி
மற்றும் பொருந்திய பல சிறப்புக்களையும் செய்விக்க மணந்து செல்லாளாய்

மேல்


விழவுக்களம்

(பெ) விழா எடுக்கும் இடம்,
the place where the events of the festivel / occassion are performed

வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் – குறி 191-194

அகன்ற ஊர்களில்
விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக
அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண்
கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல்

குன்ற வேலி சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மண நாள் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர் கலி விழவு_களம் கடுப்ப – அகம் 232/6-11

குன்றங்களாய வேலியினையுடைய சீறூரிடத்தே
மன்றத்தின்கண்ணுள்ள வேங்கை மரங்கள் மணநாலாகிய காலத்தே பூத்த
மணியை ஒத்த அரும்பு மலர்ந்த பொன் போன்ற பூக்கள் பரந்து
அகன்ற பாறைகளை அழகுறுத்தும் முற்றத்திலே, குறவர்கள்
மனைக்கண்ணுள்ள ஆடுதல் வல்ல மகளிரொடு குரவை ஆடும்
ஆரவாரமிக்க விழாக்களத்தை ஒப்ப

மேல்


விழா

(பெ) பார்க்க : விழவு

பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து – பட் 255

பெரிய திருநாள் முடிந்துபோன, அச்சம் மிகுந்த, மன்றத்தில்

ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி – கலி 83/14,15

ஆலமரத்தின் கீழ் இருக்கும் இறைவனின் அழகு பொருந்திய மகனின் விழா
தொடங்கிவிட்டதோ என்று மனம் களித்து விரைந்து வெளியே வந்து பார்க்க,

மேல்


விழு

1. (வி) கீழ் நோக்கி விசையுடன் இறங்கு, fall down
– 2. (பெ.அ) சிறந்த, மேன்மையான, excellent, lofty

1

விழுந்த மாரி பெரும் தண் சாரல் – நற் 244/1

விழுந்த மழையால் பெரிதும் குளிர்ந்துபோன மலைச்சாரலில்

2

பொன் மலிந்த விழு பண்டம் – மது 81

பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை

வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர் – அகம் 35/6

வில்லையே ஏராகக் கொண்ட வாழ்க்கையை உடைய, சிறப்பாக அம்பு எய்யும் மறவர்கள்

மேல்


விழுக்கு

(பெ) தசையுடன் சேர்ந்த இறுகிய கொழுப்பு, suet, hard fat

விழுக்கொடு விரைஇய வெள் நிண சுவையினள் – புறம் 371/22

தசையோடு விரவிய வெள்ளிய கொழுப்பைத் தின்று சுவைகாண்பவளாய்

மேல்


விழுப்புண்

(பெ) 1. போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்,
Wound of a warrior on his face or breast received in battle, considered as a
symbol of bravery
2. மிகுந்த துன்பம் தரும் புண், grievous wound

1

களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 171,172

யானையை (முன்னர்)க் கொன்ற பெரும் செயலையுடைய வீரரின்,
சுடர்விடும் வாளினால் ஏற்பட்ட விழுப்புண்ணைக் காண்பதற்காக (பாசறையைவிட்டு)வெளியில் வந்து,

2

கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 302-304

(வளைந்த வரிகளைக்கொண்ட)புலி பாய்ந்ததால் (தம்)கணவர் மார்பில்(ஏற்பட்ட)
நீண்ட பிளவாகிய துன்பம் தரும் புண்ணை ஆற்றுவதற்காக, காக்கக்கூடியது என
(ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர்
பாடலோசையும்;

மேல்


விழுமம்

(பெ) இடும்பை, துன்பம், Distress, affliction;

ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி – அகம் 18/9,10

ஒருநாள் (நீ) துன்பம் அடைந்தாலும், அடுத்த நாள்
வாழ்பவள் அல்லள் என் தோழி,

மேல்


விழுமா

(வி) மேன்மையடை, நன்மையடை, attain benefit

விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு ————–
—————— ——————– —————-
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய் தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே – நற் 320/10

ஊரில் திருவிழாவும் முடிவடைந்தது; முழவுகளும் கட்டித்தொங்கவிடப்பட்டன;
எதனை நினைத்துக்கொண்டிருக்கிறாள் இவள் என்று கேட்பாயாயின்,
தழை அணிந்து அசைவாடும் அல்குலையுடையவளாய், தெருவில்
இளையோள் நடந்து சென்ற அந்த ஒரு நிகழ்ச்சிக்கே, ——————-
—————– ——————————– ———–
கல்லென்ற ஓசையுடையதாயிருந்தது ஊர் முழுதும்; அதனால்
வீட்டுக்கதவுகளை இறுக்கப் பூட்டி, அழகிய வளையணிந்த
எழில் மிக்க மாந்தளிர் மேனியையுடைய மகளிர்
நன்மையடைந்தனர் தமது கணவன்மாரைக் காத்துக்கொண்டு

மேல்


விழுமிதின்

(வி.அ) சிறப்பாக, excellently

விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 128

சீரிதாகக் கீழே வளர்ந்தன கொழுவிய கொடியினையுடைய கவலை
விழுமிதின் – சீரிதாக; சிறப்புடையதாக, விழுமம் சீர்மையும், சிறப்பும், இடும்பையும் – (தொல்-உரி-55)
– பொ.வே.சோ உரை விளக்கம்.

விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய் – நற் 315/9,10

பெருமையாக நாம் கருதிக் கொண்ட நம் நட்பு எளிதில்
தவறாகத் துன்பம் தருவதை நன்கு அறியாதிருக்கின்றாய்,

மேல்


விழுமிது

(பெ) சிறந்தது, that which is great, sublime

கேளார் ஆகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல்
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ – குறு 253/1-4

யாரும் சொல்லக் கேட்டிருக்கமாட்டார்; தோழி! கேட்டிருந்தால்
தாம் ஈட்டச்சென்ற சிறந்த பொருள் கைகூடாமற்போனாலும், நெகிழ்ந்த நூலால் கட்டிய
மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையில், சிறந்த அழகு நீங்கிய உனது
இந்நாளின் துயர் தீரும்படி இன்னும் நீட்டித்துக்கொண்டிராமல் திரும்ப வருவார்;

மேல்


விழுமிய

1. (பெ.அ) சிறந்த, great, excellent, sublime, noble
– 2. (வி.அ) விழுமிதாக, சிறப்பாக, greatly

1

விழுமிய பெரியோர் சுற்றம் ஆக – மது 227

சீரிய பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு

2

பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய
விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்-மின் – மது 735,736

பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே கொன்று,
சீரிய புண்ணால் வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்;

மேல்


விழுமியம்

(த.ப.வி.மு) (நாங்கள்) சிறப்புடையோம், we are great

மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மின்
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர் – புறம் 78/4-7

மாறுபடுதற்கு அரிய மார்பத்தை மதியாராய் ஆர்த்து எழுந்திருந்து
சிறப்புடையேம், படையாற் பெரியேம், யாங்கள், நம்மிற்
பொருவானும் இளையன், கொள்ளையும் பெரிது என
இகழ்ந்து வந்த நிலையில்லாத வீரர்

மேல்


விழுமியோர்

(பெ) 1. வானுலகத்தார், celestial beings
2. சிறந்தோர், excellent persons
3. பெரும் வீரர்கள், great warriors

1

உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகலையே – மது 200,201

உயர்ந்த வானுலகத்துத் தேவரும் (பகைவராய்)வந்தாலும்,
(அப்)பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து நடக்கமாட்டாய்;

2

தண் கடல் நாடன் ஒண் பூ கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ
விழைவு கொள் கம்பலை கடுப்ப – மது 524-526

குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு
விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப

3.

களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் – பதி 45/4,5

களிற்றை எறிந்ததால் நுனிமடிந்து கொறுவாய்ப்பட்டுப்போன வேலினைக் கொண்ட
சிறந்த போர்வீரர் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய,

வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய – புறம் 41/2

வேல் நெருங்கிய படையினையுடைய பெரியோர் மாண்டுபோக

மேல்


விழுமுறு

(வி) 1. துன்புறு, be distressed or afflicted
2. இறந்துபடு, meet death

1

நிறை அழிந்து எழுதரு தானைக்கு
சிறையும் தானே தன் இறை விழுமுறினே – புறம் 314/6,7

நிறைக்கு அடங்காது முந்துற்று எழுந்துவரும் பகைவர் படைக்கு
அதனைத் தடுத்து நின்று காக்கும் அணையாய் நிற்பவனும் அவனே, போரில் தன் வேந்தன்
துன்பமுறுங்காலத்தில்

2

சிறு கண் யானை வேந்து விழுமுறவே – புறம் 316/12

சிறிய கண்களையுடைய யானையையுடையோனாகிய பகை வேந்தன் போரில் இறந்தானாக.

மேல்


விழை

(வி) விரும்பு, wish, desire

செறுநரும் விழையும் செம்மலோன் என – நற் 50/9

வேண்டாதவரும் விரும்பும் வீறு கொண்டவன் என்று

விழையா உள்ளம் விழையும் ஆயினும் – அகம் 286/8

அறனல்லாவற்றை என்றும் விரும்பா உள்ளம் ஒரோவழி மயங்கி விரும்புமாயினும்

மேல்


விழைவு

(பெ) விருப்பம், desire

தண் கடல் நாடன் ஒண் பூ கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ
விழைவு கொள் கம்பலை கடுப்ப – மது 524-526

குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு
விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப

மேல்


விளக்கம்

(பெ) 1. விளக்கு, lamp
2. மோதிரம், ring
3. ஒளி, light

1

நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 48,49

நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி
(பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட –

2

பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தட கை தொடியொடு சுடர்வர – மது 719,720

பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம்
வலி பொருந்தின பெரிய கையில் வீர வளையோடு விளக்கம் வர

செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144

சிவந்த விரலில் மாட்டிய சிவந்த நிறத்தையுடைய (முடக்கு அல்லது நெளி என்னும்)மோதிரத்தையும்;(கொண்டு)

3.

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள – பரி 4/25

அனைத்தையும் அழிக்கவல்ல உன் வெம்மையும், அனைத்தையும் தெளிவுறுத்தும் உன் ஒளியும் ஞாயிற்றில்
இருக்கின்றன

மேல்


விளக்கு

1. (வி) 1. விவரி, விரிவாக எடுத்துரை, explain, explicate
2. தெளிவாகக் காட்டு, show clearly
3. பலர் அறியச்செய், make something wellknown
4. தெளிவாக்கு, illustrate, elucidate
5. விளங்கச்செய், make shine
– 2. (பெ) 1. ஒளிகொடுக்கும் சாதனம், lamp
2. வெளிச்சம், light

1.1

நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் – மலை 77-80

நல்லோர் கூடியிருக்கும் நாவால் (சிறந்தவற்றை)உரைக்கும் அவையில்,
(சொல்)வன்மையில்லாதவர் எனினும் (அவர்)தரப்பை மறைத்து, தம்மிடம் சென்றோரை,
(தம் பொருளைச்)சொல்லிக் காட்டி, (திரும்பத் திரும்ப)சோர்வடையாமல் விவரித்து,
நன்றாக நடத்தும் அவனுடைய அவைமக்களின் சீலத்தையும்

1.2

அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றிய
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க
தனியன் வந்து பனி அலை முனியான் – அகம் 272/4-6

அச்சம்தரும் பிளப்பாகிய குகைகளிலுள்ள அரிய இருளைப் போக்கிய
மின் போல் விளங்கும் வேல், தான் செல்லும் நெறியினைக் காட்ட
நம் தலைவன் தமியனாய் வந்து பனி அலைத்தலை வெறானாகி

1.3

வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி
அரிய தந்து குடி அகற்றி
பெரிய கற்று இசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன் மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி – மது 764-770

இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர்
பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு,
அரியவான பொருள்களைக் கொணர்ந்து (எல்லார்க்கும் கொடுத்து), குடிமக்களைப் பெருக்கி,
பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து,
கடல் நடுவே ஞாயிறு போன்றும்,
பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும்,
பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாக விளங்கி,

1.4

ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போல திசை விளக்கும்மே – திரு 96-98

ஒரு முகம்.
எஞ்சிய பொருள்களைச் (சான்றோர்)காவலுறும்படி ஆராய்ந்துணர்ந்து,
திங்கள் போலத் திசைகளெல்லாவற்றையும் தெளிவாக்கி நிற்கும்;
திசைவிளக்குதலாவது, இறைப்பொருள் தனது வியாபகமெல்லாம் உயிர்கள் உணர்ந்து இன்புறுமாறு
உணர்த்துதல் என்க – பொ.வே.சோ.உரை விளக்கம்.

1.5

மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும் – பதி 32/2

நாற்புறத்தையும் விளங்கச் செய்யும் நற்குணங்களும், நடுவுநிலைமையும்

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக – கலி 119/1

அகன்ற உலகத்தை வெளிச்சமாக்கும் தன் பல கதிர்களையே வாயாகக்கொண்டு

2.1

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்

பட் 247

அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய

பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85
பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175
ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 317
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42

பார்க்க : ஓதிமவிளக்கு
பார்க்க : பாண்டில்-3
பார்க்க : பாவைவிளக்கு

2.2

காய் சின முன்பின் கடுங்கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – மது 691,692

எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவர்
(பகைவரின்)ஊரைச் சுடுகின்ற வெளிச்சத்தில் கொண்டுவந்த பசுத்திரளும்
– ச.வே.சு.உரை

மேல்


விளக்குறு

(வி) 1. விளக்குகளை ஏற்று, light the lamp
2. ஒளிபெறச்செய், ஒளிரச்செய், brighten, give splendour to

1

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி – அகம் 141/9

தெருக்களில் விளக்குகளை ஏற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு

2

பெரு வரை சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/12,13

பெரிய மலையிலுள்ள எமது சீறூரின் தெருவினை இருளகற்றி விளங்கச் செய்தலாலே
இரவினுமிழந்தாள் ஆவாள்

தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப மே தக பொலிந்து – மது 704,705

பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால்
நிலம் பிரகாசமடைந்து மேன்மை தகப் பொலிவுபெற்று

மேல்


விளங்கில்

(பெ) ஒரு சங்க கால ஊர், a city in sangam period
விளங்கில் என்னும் ஊர் சங்ககாலத்தில் அரபிக்கடல் ஓரத்தில் இருந்தது. இந்த விளங்கில் செல்வச்செழிப்பு
மிக்கதாயிருந்தது. இதன் மாடங்கள் மணிகள் பதிக்கப்பெற்றவை (புறம் 84).
இதைக் கடலன் என்பவன் ஆண்டான். இவன் பகைவரின் வேற்படையையும், யானைப்படையையும் அழிக்கும்
ஆற்றல்மிக்கவன். சிறந்த வள்ளல். எனவே மா வண் கடலன் என்று போற்றப்படுகிறான் (அகம் 81)

விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை கடு மான் பொறைய – புறம் 53/4,5

விளங்கிய சீர்மையையுடைய விளங்கிற்குப் பகைவரான் வந்த இடும்பையைத் தீர்த்த
போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானையையும் விரைந்த குதிரையையும் உடைய பொறையனே

— சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையின் ஆட்சிக்குட்பட்டிருந்த விளங்கில் என்னும் ஊரைப் பகைவர்
முற்றுகையிட்டு வருத்தமுறுவித்தாராக, இவன் யானைப்படையும், குதிரைப்படையும் சிறப்புறக்கொண்டு
சென்று பகைவரை வெருட்டி விளங்கிலரை உய்வித்தனன் என்பர் ஔவை.சு.து.

— சேரர் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் இருந்த இந்த ஊரைச் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சூறையாடித்
தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான் என்னும் விக்கிப்பீடியா.

விழுமம் என்பதற்குச் சிறப்பு, இடும்பை என்ற இரு பொருளும் இருப்பதால் இவ்வாறு கருத்துக்கள்
மாறுபடுகின்றன.

மேல்


விளங்கு

(வி) 1. ஒளிர், பிரகாசி, shine
2. திகழ், சிறப்பாக இரு, be renowned, illustrious
3. தெளிவாக இரு, பொருள் புரியும்படி இரு, be clear, understand the meaning

1

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3

ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடை

2

திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்க
காமர் கவினிய பேரிளம் பெண்டிர் – மது 461-465

திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப்
பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து,
தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல
தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி,
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,

முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன் மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி – மது 768-770

கடல் நடுவே ஞாயிறு போன்றும்,
பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும்,
பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாகத் திகழ்ந்து

3.

சிறந்த வேதம் விளங்க பாடி – மது 468

சிறந்த வேதங்களைத் தமக்குப் பொருள்தெரியும்படி ஓதி,

மேல்


விளம்பழம்

(பெ) ஒரு பழம், விளாம்பழம், விளவு, Wood-apple, Feronia elephantum, Limonia acidissima

விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி – நற் 12/1

விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
– பல்லாண்டுகளாய்த் தொடர்ந்து வெண்ணெய் கடைந்தெடுக்கும் பானை விளாம்பழத்தின் மணம் கமழும்
என்னும் வழக்கு இன்றும் நாட்டுமக்களிடையே நிலவுகிறது. -ஔவை.சு.து.விளக்கம்

மேல்


விளம்பு

(வி) சொல், கூறு, speak, say

வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் – பரி 19/43

முருகனுக்காகச் செய்யப்படும் வேள்வியின் அழகுத்தன்மையை எடுத்துச்சொல்வோரும்

மேல்


விளர்

1. (வி) வெளுத்திரு, be pale
– 2. (பெ) 1. வெண்மை, whiteness
2. வெண்மையான கொழுப்பு, fat which is white in colour
3. வெண்மையான ஊன், pale flesh
4. இளமையானது, முற்றாதது, that which is young, immature

1

விளர்த்த
வளை இல் வறும் கை ஓச்சி – புறம் 254/3,4

வெளுத்த
வளையில்லாத வறிய கையைத் தலைமேலே வைத்து

2.1

அணில்வரி கொடும் காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது – புறம் 246/4,5

அணிலினது வரி போலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட
விதை போன்ற நல்ல வெள்ளிய நறிய நெய் தீண்டாமல்

விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர் – புறம் 359/5

வெள்ளிய தசையைத் தின்றதனால் வெவ்விய புலால் நாறும் மெய்யினையுடையராய்

அவரை
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக – புறம் 120/10,11

அவரையினது
கொழுவிய கொடியின்கண் வெள்ளைக் காய் அறுக்கும் செவ்வியாக

2.2

நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி – நற் 41/7,8

நெய் பெய்து சமைத்த
கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில்

விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் – அகம் 89/10

கொழுப்பினையுடைய ஊனைத்தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள்

2.3

குறும் தாள் ஏற்றை கொழும் கண் அம் விளர்
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/8,9

குறுகிய கால்களையுடைய பன்றியின் கொழுவிய ஊன் துண்டங்களான நல்ல வெள்ளிய ஊனை
நறிய நெய்யைஉருக்கி அதன்கண் பெய்து நாட்காலையில் சோற்றுணவோடு கொடுத்து

2.4

விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப – நற் 172/7

புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல

மேல்


விளர்ப்பு

(பெ) வெளுப்பு, paleness

பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின்
வளை இல் வறும் கை ஓச்சி – புறம் 253/4,5

பசிய மூங்கில் பட்டை ஒழித்தாற் போன்று வெளுத்திருந்த
வளை இல்லாத வறிய கையை தலைமேலே ஏற்றிக்கொண்டு

மேல்


விளரி

(பெ) 1. இரங்கற் பண், melody-type suited for mourning
2. ஏழிசையில் ஆறாவது, The sixth note of the gamut

1

சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப – குறு 336/3

சிறிய நாவினையுடைய ஒளிரும் மணிகள் விளரிப்பண்ணைப்போல இசைப்ப
– விளரி – இரங்கற்பண்; நெய்தல் நிலத்துக்கு உரியது – உ.வே.சா

விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4

விளரிப்பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை ஓட்டுவேன்

2

விளரி நரம்பின் நயவரு சீறியாழ் – அகம் 279/11

விளரி என்னும் நரம்பினது இனிமை பொருந்திய சிறிய யாழின் இசை

மேல்


விளவு

(பெ) விளா, ஒரு மரம், பார்க்க: விளம்பழம்

களவும் புளித்தன விளவும் பழுநின – அகம் 394/1

களாவும் பழுத்துப் புளிப்புச்சுவையை எய்தின, விளாவும் முதிர்ந்து பழுத்தன

உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் – நற் 24/2

உடும்பு அடைந்துகிடந்ததைப் போன்ற நெடிய செதில்களையுமுடைய விளாமரத்திலிருந்து

பொரி அரை விளவின் புன் புற விளை புழல் – அகம் 219/14

பொரி அரை விளவின் – of the wood apple trees with rough and cracked trunks –
வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு

பார்க்க:

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் – நற் 3/2

பொரிந்த அடியினையுடைய வேப்பமரத்தினது புள்ளியிட்டாற் போன்ற நிழலின்கண்
– ஔவை.சு.து.உரை

மேல்


விளி

1. (வி) 1. அழை, call
2. இற, die
3. அழி, perish, be ruined
4. பாடு, sing
5. தணி, குறை, subside, lessen, abate
6. நில், தடைப்படு, cease, be interrupted
7. கழி, pass, pass away
– 2. (பெ) 1. ஓசை, ஒலி, sound
2. சொல், பேச்சு, குரல், word, speech, voice
3. இசை, இசைப்பாட்டு, music, song
4. கூப்பிடுதல், calling
5. அழைப்பொலி, sound of calling
6. பேரோசை, முழக்கம், roar

1.1

புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 404,405

புலி வந்ததால், (தன்னைக்)கைவிட்டு ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி,
ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமானபாதையில் சென்றுகடந்து

1.2

திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை-கொல்லோ நீயே – அகம் 126/16,17

திதியன் என்பானொடு போரிட்டு மடிந்த அன்னி என்பானைப் போல
நீ இறந்துபடுவை போலும்.

1.3

புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/9,10

பறவைகள் எழுப்பும் ஒலியை மணியின் ஓசையாக எண்ணி உற்றுக்கேட்டு
வலி அழிந்து சோர்ந்துபோகிறது அவரை முற்றிலும் நம்பியிருந்த என் நெஞ்சம்.

காடு கவின் அழிய உரைஇ கோடை
நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்
கண்விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/12-14

காடுகள் அழகு கெடவும், கோடை பரவி
நிலைபெர்று நீரினை உறிஞ்சுதலால் வற்றிய அழகிய பெரிய நெடிய மூங்கிலின்
கணுக்கள் பிளக்கத் தெறித்துவிழும் கழுவப்பெறாத முத்துக்கள்

1.4

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ – மலை 7,8

இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,
பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும் நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு,

1.5

விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21

சற்றும் குறையாத பிரிவுத்துன்பத்தால் வருந்தி நிற்கும் என் தோழி,

1.6

விளியாது
உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை – குறு 316/3,4

இடைவிடாமல்
வலிய கடல் மோதுகின்ற மணல் விரவிக்கிடக்கும் அடைத்தகரையில்

அளி இன்று பிணி இன்று விளியாது நரலும்
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல – கலி 128/5,6

நம்மீது இரக்கமில்லாமல், நம்மைப்போல் துயரமும் இல்லாமல், ஓயாமல் குரலெழுப்புகின்ற
அழகிய கடற்கரைச் சோலையின் தலைவனைக் கண்டவளைப் போல

1.7

நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி
யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/20,21

நீ கூறும் பொய்ச்சூள் உனக்குத் தெய்வகுற்றம் ஏற்படுத்துமாயின் அதனால் விளையும் கேடு, இனி
யார்மேல் இறங்குமோ கூறு!”

2.1

வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும்
மறை காப்பாளர் உறை பதி – பெரும் 300,301

வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும்
வேதத்தைக் காக்கின்றோர் இருக்கின்ற ஊரிடத்தே

தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும் – நற் 142/6,7

கைத் தண்டினை இன்னொரு காலாக ஊன்றிப் பிடித்து, ஒடுங்கிய நிலையில் உதடுகளை மடித்து எழுப்பும்
சீழ்க்கையொலியினால்
சிறிய தலையினையுடைய ஆட்டுக் கூட்டத்தை வேறுபக்கம் போகாதவாறு மயங்கச் செய்து
தங்கியிருக்கவைக்கும்

2.2

வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி
கிள்ளை ஓப்பியும் – குறி 100,101

பெருத்த ஓசையுடன் தெளிந்த சொற்களை நடுநடுவே சொல்லி
கிளியை ஓட்டியும்

கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும் – அகம் 17/13,14

கடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள்
உயர்ந்த பெரிய மலையில் மோதி எதிரொலிக்கும்

2.3

பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 221,222

பற்பல இடங்களிலுள்ள இடையர்கள்
ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப

2.4

கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 329

கிளியை விரட்டுகின்ற பெண்கள் கூப்பிடுதலால் பிறந்த ஆரவாரமும்;

2.5

வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி – நற் 305/7

வரிகளை முதுகில் கொண்ட புறாவின் தனிமைத்துயருடன் கூடிய தெளிந்த அழைப்பொலியைக் கேட்டு

2.6

தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே – நற் 316/9,10

மழைத்துளியைப் பெய்யும் குளிர்ந்த கார்காலத்தைச் செய்து
இடிமுழக்கத்தை எழுப்பியது அகன்ற வானப்பரப்பில்.
விளி இடிக்குரல் – ஔவை.சு.து.உரை விளக்கம்

மேல்


விளிம்பு

(பெ) ஓரம், Border, edge, rim

வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 175/1

தமது தடித்த தோளின் மேற்புறத்தை உரசிய வேகம் அமைந்த வலிய வில்லில் வைத்து

மேல்


விளியர்

(பெ) இரைச்சல் போடுபவர், roaring men

துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர்
கணையர் கிணையர் கை புனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட – நற் 108/2-5

தன் துணையினின்றும் பிரிந்த கொடிய யானை
அணுகுவதைக் கண்ட அழகிய குடியிருப்பின் கானவர்
அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும்
கூவிப் பேரிரைச்சல் எழுப்பியவராய் தமது குடியின் புறத்தே ஆரவாரிக்கும் நாட்டினனே!

மேல்


விளிவு

(பெ) 1. தணிதல், subsiding
2. உறக்கம், sleep
3. முடிவு, end

1

விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து – நற் 208/1-3

வெற்றி பொருந்திய ஒளிரும் அணிகலன்கள் நெகிழும்படியாக விம்மி அழுது,
அரித்தோடும் நீராய் தெளிந்த கண்ணீர்த்துளிகள் முலைகளினிடையே விழுந்து நனைக்க,
சற்றும் குறையாமல் மனமுருகி அழும் கண்ணுடனே பெரிதும் நிலைகெட்டு,

2

காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது
வரி அதள் படுத்த சேக்கை – அகம் 58/3,4

காட்டில் தேடுகின்ற வேட்டையில் துயிலும் இடம் பெறாமல்
புலித்தோல் விரித்த படுக்கையில்,

3.

கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் – அகம் 162/5,6

கடுமையாக இடிக்கும் இடியுடன் விரைந்த நீரைச் சிதறி
முடிவிடம் அறியாவாறு மேகம் பெய்தலைச் செய்யும் நடு இரவில்

மேல்


விளை

(வி) 1. பயிர் முதலியன வளர், உற்பத்தியாகு, grow, be produced
2. முற்று, முதிர், mature, ripen
3. உண்டாகு, come into being
4. உற்பத்திச் செய், உண்டாக்கு, raise, produce
5. ஒன்றன் தன்மையைக் கொண்டிரு, possess the property of something else
6. நிகழ், occur
7. பின் நிகழ்வாக ஆகு, பலனாக அமை, result in

1

சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி – பெரும் 131

மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை

உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை – நற் 138/1

உவர் நிலத்தில் உற்பத்தியாகும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை

2

விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு – மலை 109

முற்றிய தயிர் (கீழே விழுந்து ஏற்பட்ட)சிதறலைப்போல் பூக்கள் உதிர்ந்து,

வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர் – குறு 141/1

வளைந்த வாயையுடைய சிறிய கிளிகள் விளைந்து முற்றிய தினையின்மேல் வீழாதபடி விரட்ட

நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195

நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை

3.

நனை விளை நறவின் தேறல் மாந்தி – அகம் 221/1

அரும்பினின்றும் உண்டாகிய கள்ளின் தெளிவைப் பருகி

4.

மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு – குறு 371/2,3

மேகங்கள் படியும் மலைச்சரிவில் மலைநெல்லை விதைத்து
அருவிநீரால் விளைவிக்கும் நாட்டினனால்

5.

அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த – சிறு 101

அமிழ்தின் தன்மைகொண்ட இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும்
அமிழ்து விளைதலாவது – அமிழ்தின் தன்மையைத் தான் உடைத்தாதல்

6.

காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி
ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது
தா தா என்றாளுக்கு தானே புறன் தந்து
வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது
நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது
ஓஓ பெரிதும் வியப்பு – பரி 24/34-40

ஒரு காதற்பரத்தையின் காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட,
அதனை நீர் இழுத்துச் செல்ல,
அவனது இல்பரத்தை அதனை எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக்
கண்டு, அதனைக்
கொடு, கொடு என்று கேட்ட காதற்பரத்தைக்கு, “இது தானாகவே எங்கிருந்தோ வந்து
என் கூந்தலில் சூட்டிக்கொண்டது” என்று சொல்ல, “இது எப்படி நடந்தது? அவ்வாறு விளைந்ததற்கு
வருந்தமாட்டேன், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில்
நீ இங்கு இருப்பாய் என அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது
ஓஓ இது பெரிதும் வியப்பிற்குரியது”

7.

இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன்
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கை பெரும் கரும்_கூத்து – கலி 65/24-29

பெரிய புலியைப் பிடிப்பதற்கு விரித்த வலையினில், ஒரு
ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல், காதலனுடனான
சந்திப்பு கெடும்படியாகவும், நம் ஊருக்கெல்லாம்
பெரும் பேச்சாகவும் ஆகி முடிந்துபோனது, என்றைக்கும் தனக்குத்
தொழிலாகக் கொண்ட முதிய பார்ப்பானின்
காம வேட்கை என்னும் பெரிய கேலிக்கூத்து!

மேல்


விளையல்

(பெ) நன்றாக விளைந்தது / முதிர்ந்தது, that which is grown / ripened fully

விழு தலை பெண்ணை விளையல் மா மடல் – குறு 182/1

செழித்த உச்சியையுடைய பனையின் நன்கு விளைந்த பெரிய மடலால் செய்த குதிரைக்கு

களமர்க்கு அரித்த விளையல் வெம் கள் – புறம் 212/2

களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க கள்

மேல்


விளையாட்டி

(பெ) விளையாட்டுப்பெண், சிறுமி, playful girl

பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் – நற் 110/7-9

பந்தல்கால்களுக்கிடையே ஓடி
செவிலியரின் கெஞ்சலை மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள்,
இல்லறத்துக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கிருந்து கற்றுக்கொண்டாளோ?

மேல்


விளையுட்டு

(பெ) விளைவுடையது, one which has the yield

சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக – பொரு 246,247

செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,
ஓராயிரம் கலம் என்னும் அளவில் நெல் விளைவுடையது ஆக

மேல்


விளையுள்

(பெ) 1. விளைச்சல், மகசூல், produce, crop
2. விளைந்தது, உற்பத்தியானது, poduce, that which is matured

கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக – மது 106-109

பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்
பெரிய மேகம் மழையை மறைத்துக்கொண்டாலும்,
(நாள்தோறும் முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும்,
மிகுந்த நீர் மாறாது (வருகையினால்)விளைச்சல் பெருக

வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171

மூங்கில் குழாய்க்குள் பெய்தலுற்று விளைவித்ததான தேனால் செய்த கள்ளின் தெளிவை

மேல்


விளைவு

(பெ) விளைதல், விளைச்சல், மகசூல், produce, crop

வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலை தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி – பட் 5-8

மேகம் பொய்த்தாலும் தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற),
(குடகு)மலையை உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்)
நீர் பரந்து பொன்(போல் விளைச்சல்) செழித்துப்பெறுகும் – (28-பெரிய சோழநாட்டில்),
விளைதல் தொழில் அற்றுப்போகாத அகன்ற வயல்களில்,

மேல்


விற

(வி) 1. அடர்ந்திரு, செறிவாக இரு, be dense, close
2. வெருவு, அஞ்சு, fear

1

ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த
வராஅல் அருந்திய சிறு சிரல் – அகம் 286/5,6

ஊரிலுள்ள இளைய பெண்கள் குற்றுங்கால் செறிந்த
இரால் மீனைத் தின்ற சிறிய சிரற்பறவை

பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து – நெடு 93-97

கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு –
நிலாவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள
நீர்த்தூம்பின் (மீனின்)பிளந்த வாயாகப் பகுத்த உருளி நிறைகையினால்,
கலங்கி விழுகின்ற அருவியின் ஓசை(யும்) செறிந்து

2

கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து இயல – அகம் 378/7

கொம்புகள் பொருந்திய இளைய கடாக்கள் இலியைக் கேட்டு அஞ்சி இரிய
விறந்து – அஞ்சி – நாட்டார் உரை, விளக்கம்
– விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (தொல். சொல். 348) – Tamil Lexicon

மேல்


விறகு

(பெ) எரிக்கப்பயன்படும் மரக்கட்டை, firewood

வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்
கரும் புகை செம் தீ மாட்டி – சிறு 155,156

மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்
கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி,

செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 498-500

சிவந்த தீயைக் கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய
களிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும்,
ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன்

நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446

(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி

மேல்


விறல்

(பெ) 1. வெற்றி, victory
2. வலிமை, strength
3. விசேடம், சிறப்பியல்பு, Distinctive excellence

1

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38

‘கோழியின் உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு உயர்ந்த வென்று அடுகின்ற வெற்றியையுடைய கொடி

2

வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55

வென்று அழிக்கும் திறலையுடைய போர்க்களத்தைப் பாடி, தோளை அசைத்து

3.

பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் – புறம் 42/12

பெரிய விசேடத்தையுடைய புதுவருவாயை உடைத்தாய்
– ஔவை.சு.து.உரை

விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 3

தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்

வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும் – நற் 85/2

மூங்கில்போலும் பருத்த தோளிடத்துச் சிறந்த தொடியும் முன்கையிடத்து வளையும் நெகிழ்ந்து வீழவும்
– தொடியும் வளையும் ஏனை அணிவகையிற் சிறந்தமை விளங்க விறலிழை என்றார்
– ஔவை.சு.து.உரை, விளக்கம்

மேல்


விறலவன்

(பெ) வெற்றியையுடையவன், man of success

புதல்வன் தழீஇயினன் விறலவன்
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே – குறு 359/5,6

புதல்வனைத் தழுவினான் வெற்றியையுடைய நம் தலைவன்;
அந்தப் புதல்வனின் தாய் அவனின் முதுகை இருகைகளாலும் இறுக்கிக்கொண்டாள் –

மேல்


விறலி

(பெ) ஆடிப்பாடிப் பரிசில் பெற்று வாழ்பவள், female minstrel

கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/11

நல்ல கலன்களைப் பரிசிலாகப் பெறும் விறலி ஆடுகின்ற இவ்வூரில்

செல்லாயோ தில் சில் வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப
பாணர் பைம் பூ மலைய இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு மரீஇய மைந்தின்
தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/21-31

செல்வாயாக! சிலவாகிய வளைகளை அணிந்த விறலியே!
மலர்ந்த வேங்கை மரத்தைப் போல ஒளிரும் அணிகலன்களை அணிந்து
மென்மையான இயல்பினையுடைய மகளிரின் அழகு நலம் சிறந்திருக்க,
பாணர்கள் பசும்பொன் மாலையைச் சூடியிருக்க, இளையவர்கள்
இனிய களிப்பால் வழுவாத மெல்லிய சொற்களை விருப்பத்துடன் பேசி
நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியினராய் பெரிய போர்க்களத்தை வாழ்த்த,
அங்குசம் காட்டும் குறிப்பினை மீறாமல் – தந்தத்தின் பூண்கள் இறுக்க அணியப்பெற்று
பாகரின் ஏவுதலின்படி, கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் சிதறும்படியாக,
காட்டினில் தோன்றி பரந்து உயர்ந்து நின்று, நாட்டிலுள்ளோர் காணும்படி ஒளிரும் காட்டுத்தீயைப் போன்ற
சினத்தைக் கைவிட்டு – நடக்கின்ற, வலிமையுடைய
வேண்டும் தொழிலை விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான்.

மேல்


வினவல்

1. (எ.வி.மு) கேட்கவேண்டாம், do not enquire
– 2. (பெ) கேட்டல், asking

1

செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று வருவாரை
என் திறம் யாதும் வினவல் வினவின்
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு – கலி 19/7-13

போ, இப்போது போய் நீ மேற்கொள்ளும் பொருளீட்டும் தொழில் முடியுந்தறுவாயில்
அன்பு அற்றுப்போகுமாறு மாறுபட்டு, நான் வேண்டுமென்றே பிரிந்துவந்த என் மனைவி
எப்படி இருக்கிறாள் என்று தெரியுமா? என்று இங்கிருந்து அங்கு வருவாரிடம்
என்னுடைய நிலைமை பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்; அப்படிக் கேட்டால்,
ஞாயிற்றைப் போல விளங்கும் உன் தலைமைச் சிறப்பெல்லாம் அழிந்துபோகுமாறு
உன்னுடைய குற்றமற்ற அருமையான பணிகள் முற்றுப்பெறாமல், அங்கு ஓர்
அவலநிலை உருவாகக் கூடும்

2

மாவின் நறு வடி போல காண்-தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான் என தேற்றி பல் மாண்
தாழ கூறிய தகை சால் நன் மொழி
மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/7-14

மாவின் நறும் பிஞ்சு போல, காணுந்தோறும்
ஆசை குறையாத மகிழ்ந்த நோக்கினை உடைய மைதீட்டிய கண்களை
நினையாது கழிந்த நாளில் சிறிதுநேரங்கூட
வாழமாட்டேன் நான்’ – என்று ஆறுதல் கூறி பல்வேறு மாண்புகளும்
தாழ்ந்துபோகும்படி கூறிய உயர்வான நல்ல சொற்களை
மறந்துவிட்டீர் போலத் தோன்றுகிறீர் எனக்கு” எனச் சிறந்த உனது
பற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாக
வினவுதல் நீங்காத, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது

மேல்


வினவு

(வி) 1. கேள்விகேள், ask
2. விசாரி, enquire
3. சொல்வதைக் கேள், செவிமடு, listen to, pay attention to

1

நும் கோ யார் என வினவின் எம் கோ
இரு முந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச்சென்று
கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி – பதி 20/1-5

உம்முடைய அரசன் யார் என்று கேட்பீராயின், எமது அரசன்
கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த,
அவனுடன் முரண்பட்டோரை எதிர்த்துச் சென்று,
அவரின் காவல் மரமான கடம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்த மிக்க சினமும், வலிமையும் கொண்ட
நெடுஞ்சேரலாதன் ஆவான்; வாழ்க அவன் சூடியிருக்கும் தலைமாலை

2

அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி
சென்மோ வாழி தோழி – நற் 365/4,5

அகன்ற வயல்களையும் தோட்டங்களையும் உடைய அவனது ஊருக்கு வழிகேட்டுப்
போவோமா? வாழ்க, தோழியே!

3.

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க_வழி எல்லாம் கூறு
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை
காயாமை வேண்டுவல் யான் – கலி 82/4-7

தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக”;
“சொல்கிறேன், விரும்பிக்கேட்பது போல் கேட்டு அதன் பின்னே
வெகுளாதிருக்க வேண்டுகிறேன் நான்”

மேல்


வினா

1. (வி) பார்க்க :வினவு
2. (பெ) கேள்வி, question

1

சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன்
தேரொடு திரிதரும் பாகனை பழிப்பேமோ – கலி 68/16,17

சேரிதோறும் சென்று நீ இருக்கும் வீட்டைக் கேட்டறிந்துகொள்பவனாய்த்
தேரோடு சுற்றித்திரியும் பாகனையே பழிப்போமா?

ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் – குறி 2-5

செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்(பற்றி)
அகன்ற உட்புறங்களையுடைய ஊரில் (அந் நோய்பற்றி)அறிந்தோரைக் கேட்டும்,
(கடவுளரை)வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித பூக்களைத் தூவியும்,

2

விரகியர் வினவ வினா இறுப்போரும் – பரி 19/49

காமவயப்பட்டிருப்போர் கேள்விகேட்க, அந்தக் கேள்விகளுக்கு விடையிறுப்போரும்

மேல்


வினாய்

(வி.எ) வினவி, asking for, enquiring

மாசு அற மண்_உற்ற மணி ஏசும் இரும் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/16-19

மாசறக் கழுவப்பட்ட நீல மணியையே ஏளனம்செய்யும் கரிய கூந்தல்
பூ அணிந்து வண்டுகள் ஆரவாரிக்கும் அழகைப் பெறுவதை விரும்பமாட்டேன்,
சோகப் பாட்டை இசைத்துக்கொண்டு உன் பாணன், என் வீட்டுக்கு
நீ போன பரத்தையர் வீட்டைப்பற்றி வினவிக்கொண்டு வராமலிருப்பதைப் பெறுவேனாயி
– நீ சேர்ந்த இல் வினாய்- நீ சென்றிருக்கின்ற பரத்தையர் வீடு யாது என வினவி – நச்.உரை, பெ.விளக்கம்

செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/12

தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற நெறியினை வினவி

மேல்


வினாய

– (வி.எ) வினவிய, கேட்ட, asked

கண்ட பொழுதே கடவரை போல நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின்
கொண்டது எவன் எல்லா யான் – கலி 108/22-24

கடன்வாங்கியவரைக் கண்டபொழுதே, கடன் கொடுத்தவர்
தான் கொடுத்த பொருளைப் பற்றிக் கேட்கத்தொடங்குவது போல நீ கேட்கும்படியாக உன்னிடம்
நான் வாங்கிய கடன்தான் என்ன, ஏடா!”

மேல்


வினை

(பெ) 1. செயல், தொழில், Act, action, deed, work
2. தொழில்திறம், வேலைப்பாடு, கைத்தொழில்,
workmanship, craftmanship, Efficiency or skill, as in an art or craft
3. போர், war
4. மேற்கொண்ட செயல், work on hand
5. இப்பிறப்பில் இன்ப,துன்பங்களுக்குக் காரணமான முற்பிறப்பில் செய்த செயல்,
நல்வினை தீவினை என இருவகைப்பட்ட பூர்வகருமம்,
Karma, as the accumulated result of deeds done in former births

1

முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ
செய் .வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275

முலை படர்ந்த கல்லின் மேலாக ஏறி நின்று
கண்டு வருவோம், செல்வோம் தோழி!
மாலையில் ஊர்வந்து சேரும் காளையையுடைய பசுவினங்களின்
புல்லை உண்ட நல்ல பசுக்கள் பூண்டிருக்கும் மணியோசையோ?
செய்யக் கருதிய கருமத்தை முடித்த மனநிறைவான உள்ளத்தோடு
வலிய வில்லையுடைய இளைஞர்கள் தன் இருபக்கமும் பாதுகாக்க,
ஈரமான மணலையுடைய காட்டாற்றுப்பக்கம் வரும்
தேரின் மணியோசையோ? அங்கு ஒலிப்பனவாக உள்ளவற்றை

2

யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101

யவனர் பண்ணின தொழில் மாட்சிமைப்பட்ட பாவை
வினை மாண் பாவை – தொழில் திறத்தால் மாட்சிமைப்பட்ட பாவை

3.

தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது – முல் 18-20

பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)போர்வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி),

ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169

நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலைப் பயின்ற யானையின்

4.

வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே – அகம் 47/2,3

இவ்விடத்தில் வந்த வேலையை முடித்தோமென்றால், மிகவும் விரைவாக
எழுவாயாக, நெஞ்சே நீ வாழ்வாயாக

5.

கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான்
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும் – கலி 21/10,11

தமக்குரியவர் இவர்தான் என்றுகொள்ளாமல், செல்வமானது
அவரவரின் பழைய நல்வினை, தீவினைகளையொட்டி ஆள்விட்டு ஆள் மாறிச் சென்று தங்கியிருக்கும்

மேல்


வினைஇ

(வி.எ) வினாவி, enqiring

இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின்
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ
துறையும் மான்றன்று பொழுதே சுறவும்
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என – அகம் 300/14-18

மிக்க ஆரவாரமுடைய அழகிய எமது சீறூரின்கண் வரின்
விரைய எதிர்கொண்டு அழைத்து மெல்லென விசாரித்து
நீர்த்துறையும், பொழுது மயங்கிவிட்டது, சுறாக்களும்
அலைபெருகி ஏறலின் பகையாகின
இருண்டுவிட்டது, தலைவனே! செல்லற்க என்று

மேல்


வினைஞர்

(பெ) தொழில்வல்லோர், Workers; artisans, artificers

கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 257,258

வன் தொழில் செய்யும் தச்சரின் செயல்திறம் நிறைந்து,
ஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு

கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 210-212

கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்
முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்

நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக – மது 539

அகன்ற இடத்தையுடைய (பிறநாட்டு)வணிகர் (இங்குச் செய்த)அணிகலன்களை (வாங்கி)எடுத்துச்செல்ல,

நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சி – அகம் 186/2,3

வலிய தூண்டிற்கயிற்றினையுடைய மீன்பிடிப்போர், மீன் இரை கோத்த முள்ளினைப் பற்றியதை உணர்ந்து
இழுக்கும்
மீன் மிக்க நீர்நிலையில்

ஓவியர்கள் கண்ணுள்வினைஞர் எனப்படுகிறார்.

எ வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி – மது 516-518

பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
ஓவியரும், பிறரும் கூடி

மேல்


வினைவர்

(பெ) தொழில்செய்வோர், professionalist

வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/7,8

வலி மிகும் சினத்தால் வாளை உருவிக்கொண்டு நின்ற மன்னர்களைச்
சமாதானம் செய்யும் வழியை நாடி அவர்களை நண்பர்களாக்க முயலும் சான்றோர் போல மாறி மாறித் திரியும்,

பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் – கலி 68/1,2

இந்த உலகம் பொதுவானது என்ற பேச்சே பிறர்க்கு இல்லாமல் உலக முழுதும் ஆளும் மா மன்னர்க்கு
அறிவு நிறைந்த அறவுரைகள் கூறும் இயல்புள்ள அமைச்சர்கள் போல,

அலவு_உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/5-7

வருத்தமுற்றுக் குடிமக்கள் கூக்குரலிட, அறநெறி கெட்டுப் பொருளின்மேல் ஆசைகொண்டு,
கொலைக்கு அஞ்சாத கொடிய அமைச்சரால் தனது நல்லாட்சியில் பிறழ்ந்த அரசனின் ஆட்சியின் கீழ் வாழும்
நாட்டு மக்களின் உள்ளங்களைப் போல் வற்றிக் காய்ந்துபோன உயர்ந்த மரங்களைக் கொண்ட கொடிய பாலை
வழியில்

கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகி – நற் 86/5,6

கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த
சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி

மேல்