மோ – முதல் சொற்கள்

மோ

(வி) முகர், மூக்கால் நுகர், smell

நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8

அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்;

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த_காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே – அகம் 5/22-26

(தன்) மார்பில் ஒடுக்கிய தன் புதல்வனின் சிறிய தலையிலுள்ள
தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை
மோந்து பெருமூச்சுவிட்ட நேரத்தில், (அதன் வெப்பத்தால்)அந்த சிறந்த மலர்கள்
பவளம் போல் ஒளி இழந்து தம் அழகு அழிந்த தோற்றத்தைக்
கண்டு தவிர்த்துவிட்டோம் நாம் செல்வதை,

மேல்


மோக்கல்

(பெ) முகர்ந்து பார்த்தல், smelling

நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8

அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்;

(கையில்)சுற்றியதோடு அமையாது மோந்தும் பார்த்தான் என அச்செயலை விதத்தற்கு
மோக்கலும் மோந்தான் என்றாள்.- நச்.உரை விளக்கம்

மேல்


மோகூர்

(பெ) சங்க காலத்து ஊர், a city during sangam period
மோகூர் சங்ககாலத்து ஊர். இது இக்காலத்தில் திருமோகூர் என்னும் பெயரினைப் பெற்றுள்ளது.
சங்ககாலக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் காலத்தில் இந்த மோகூரின் அரசன் பழையன்.
மோகூரில் வேந்தரும் வேளிரும் கூடினர். அவர்களுடன் செங்குட்டுவன் போரிட்டு அவர்களை வென்றதோடு
அவ்வூர் காவல்மரமான வேம்பையும் வெட்டி வீழ்த்தினான்.

பார்க்க : பழையன்-1

வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/7-9

வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,

மேல்


மோசி

(பெ) ஒரு சங்ககாலப்புலவர், a poet of sangam period

பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வம்_உற்று
உள்ளி வருநருலைவு நனி தீர – புறம் 158/12-14

பெரிய மலைநாடனாகிய பேகனும், திருந்திய சொல்லையுடைய
மோசி என்னும் புலவரால் பாடப்பெற்ற ஆயும் ஆசைப்பட்டுத்
தன்னை நினைந்து வருவாருடைய வறுமை மிகவும் நீங்க

இங்கே மோசி என்று குறிப்பிடப்படும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவார். இவர்
ஆய் அண்டிரனைப் பாடியுள்ள ஒன்பது பாட்டுக்கள் புறநானூற்றில் உண்டு (புறம் 127 – 135

மேல்


மோசை

(பெ) மோதிரம், ring, Finger-ornament, probably of the shape of plantain-flower

படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம்
மெல் விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/1-5

நீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின்
வளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு
ஒளிரும் இழையணிந்த மகளிரின் ஒளிவிடும் வளையல்களோடு பிணிப்புற்ற
மெல்லிய விரல்களிலுள்ள மோதிரம் போல, காந்தளின்
வளமையான இதழ்களில் தோய்கின்ற, வானத்தை எட்டும் மலைநாட்டினனே!

மேல்


மோடு

(பெ) 1. பெருமை, greatness
2. உயரம், height
3. பருத்த வயிறு, large stomach, belly

1

கணம்_கொள் இடு மணல் காவி வருந்த
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/37,38

திரளாக வந்து குவியும் மணல் குவியலினால் கருங்குவளை மலர்கள் வருந்த,
பிணங்கிவருகின்ற கருமை தங்கிய பெருமையுடையனவாகிய அலைகள் மணலைக் கரைத்து அருள்செய்யும்

2

ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் – நற் 124/4,5

ஈங்கையின்
மொட்டுக்களும் மலரான புனமல்லிகையும் உயரமான மணல் குன்றின்மேல்

3.

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 50,51

பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்

மோட்டு எருமை முழு_குழவி – பட் 14

பருத்த வயிற்றையுடைய எருமை (ஈன்ற)முதிர்ந்த கன்றுகள்

மேல்


மோதகம்

(பெ) கொழுக்கட்டை, A bolus-like preparation of rice-flour

கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626

உள்ளீட்டோடே பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,

மேல்


மோரியர்

(பெ) மௌரியர், வடநாட்டு அரசர், The Maurya
மௌரியப் பேரரசினைச் சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது.
கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது.
இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப்
பரப்பளவை 50 லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான்.
கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியர் தமிழ்நாட்டிற்கும்
படையெடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் வெற்றிபெற்றதாகச் செய்திகள் இல்லை

இதற்குரிய சான்று சங்கப்பாடலில் உள்ளது.

கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில்
மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.
எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது.

வெல்கொடி
துனை கால் அன்ன, புனை தேர் கோசர்
தொன் மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெவ் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
பணியாமையின், பகை தலைவந்த
மா பெரும் தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர்
——————————— ——————–
தேக்கு அமல் சோலை – அகம் 251/6-18

வெல்லும் கொடியினையுடைய
விரையும் காற்றைப் போன்ற அஇ செய்யப்பெற்ற தேரினையுடைய கோசர் என்பார்
மிக்க தொன்மை வாய்ந்த ஆலமரத்தின் அரிய கிளைகளையுடைய மன்றத்தே
இனிய ஓசையையுடைய முரசம் குறுந்தடியால் அடிக்கப்பெற்று ஒலிக்க
பகைவரது போர் முனையை அழித்த காலத்தே, மோகூரை ஆளும் பழையன் என்பான்
பணிந்து வாராமையின் அவன்பால் பகை ஏறட்டுக் கொண்டவராகிய
குதிரைகள் பொருந்திய சேனையினையுடைய புதிய மோரியர் என்பார்
புனையப்பெற்ற தேர் உருளை தடையின்றிச் செல்லுதற்பொருட்டு உடைத்து வழியாக்கிய
விளங்கும் வெள்ளிய அருவிகளையுடைய மலை நெறிக்கு அப்பாற்பட்ட
——————————– ——————————–
தேக்குமரங்கள் நிறைந்த காடாகிய

வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.

ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர் – அகம் 281/4-12

நுடங்கும் தன்மை வாய்ந்த இளமை பொருந்திய மயில்கழித்த தோகையை
நீண்ட வாரினால் வலிய வில்லில்வைத்துக் கட்டி, அந்த வலிய வில்லில்
அழகிய நெடிய நாணின் விளிம்பிற்குப் பொருந்திய விரைவுத்தன்மையுடைய
மிக்க ஒலி ஒலிக்கும் விரைந்த செலவு பொருந்திய கடிய அம்புகளையுடைய
மாறுபாடு மிக்க வடுகர் தமக்கு முன்னே துணையாகி வர, மோரியர் என்பார்
தென் திசை நாடுகளைப் பற்ற எண்ணிப் போந்த வருகைக்கு
வான் அளாய உயர்ந்த பனியுடைய பெரிய மலையினை
தமது ஒள்ளிய கதிர்களையுடைய அழ்ழி தடையின்றிச் செல்லப் போழ்ந்து வழியாக்கிய
பாறைகளைக் கடந்து நம் தலைவர் போய்விட்டார்.

இப்போதுள்ள மங்களூர் மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு
தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது.
வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.

விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும் – அகம் 69/10-12

விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
திண் கதிர் திகிரி திரிதர குறைத்த
உல்க இடைகழி அறைவாய் – புறம் 175/6-8

என்ற செய்திகளும் இதனை உறுதிப்படுத்தும்.

மோரியராவர் சக்கரவாளச் சக்கரவர்த்திகள்; விச்சாதரரும் நாகரும் என்ப – என்பார் ஔவை.சு.து.அவர்கள்.

மேல்


மோரோடம்

(பெ) ஒரு மரம்/மரத்தின் மலர், செங்கருங்காலி, Red catechu

பராரை பாதிரி குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு – நற் 337/4-6

பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,
நறுமணம் கமழும் செங்கருங்காலி மலருடன் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அடைத்துவைத்துள்ள
செப்பினைத் திறந்துவைத்ததைப் போன்ற நறுமணம் சேர்ந்து

மேல்


மோவாய்

(பெ) மீசை, தாடி, வாயின் கீழ்ப்புறம், mustasch, beard, chin
முகவாய் என்பது மோவாய் எனத் திரிந்து நின்றது, ஈண்டு முகவாயின்கண் உள்ள மயிரைக் குறித்தது
இது மீசை; தாடியுமாம் என்பார் ஔவை.சு.து.அவர்கள்.

முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/5

வளைந்த முதுகினைக் கொண்ட இறா மீனின் நீண்ட மீசையையுடைய ஆண்

புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை – அகம் 133/2

மெல்லிய கால்களையும் தாடியினையுமுடைய ஆண் வெள்ளெலி

குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் – புறம் 257/3,4

குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும்
செவியிறந்து முன்னே தாழ்ந்த கதுப்பினையுமுடையவனாய்

மேல்


மோழைமை

(பெ) நயமான சொற்கள், sweet words

தேம் கலந்து அளைஇய தீம்பால் ஏந்தி
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்
மறுத்த சொல்லள் ஆகி – அகம் 207/14-16

தேனைப் பெய்து நன்கு கலந்து இனிய பாலை ஏந்திக்கொண்டு
கூந்தலைக் கோதி நயமொழிகளைக் கூறவும்
மறுத்துரைப்பாள் ஆகி
– வே.நாட்டார் உரை. மோழைமை – தாழ்ந்த மொழி என்பார் அவர்.

மேல்