@1 புண்ணிய விளக்கம் #1 பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும் கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும் ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே. #2 கரு மால் அகற்றும் இறப்பு-அதனைக் களையும் நெறியும் காட்டுவிக்கும் பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும் அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே. #3 வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும் ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் செய்ய மலர்க் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே. #4 கோல மலர்த் தாள் துணை வழுத்தும் குலத் தொண்டு அடையக் கூட்டுவிக்கும் நீல மணி_கண்டப் பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும் ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே. #5 வஞ்சப் புலக் காடு எறிய அருள் வாளும் அளிக்கும் மகிழ்வு அளிக்கும் கஞ்சத்தவனும் கரியவனும் காணற்கு அரிய கழல் அளிக்கும் அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே. #6 கண் கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டி-தனை விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்குத் தோற்றுவிக்கும் அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே. #7 நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனைத் தூய விடை மேல் வரும் நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும் ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே. #8 எண்ண இனிய இன் அமுதை இன்பக் கருணைப் பெரும்_கடலை உண்ண முடியாச் செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும் அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே. #9 சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே. #10 உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவைக் கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும் அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே. #11 உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனைக் கற்ற மனத்தில் புகும் கருணைக் கனியை விடை மேல் காட்டுவிக்கும் அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே @2. அருள் நாம விளக்கம் #1 வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும் ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய்த் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. #2 தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால் இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. #3 மின்னும் நுண் இடைப் பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. #4 பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில் என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய்த் தொண்டர்-தங்கள் நாச் சுவை பெற ஊறி ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. #5 வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம் இரைக்கும் மாக் கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ எனக் கனிவுடன் உயர்ந்தோர் உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. #6 வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. #7 நண்ணும் மங்கையர் புழு மல_குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய் எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய்ப் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. #8 பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால் பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய் எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து சந்தமாம் புகழ் அடியரில் கூடிச் சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. #9 மட்டு இல் மங்கையர் கொங்கையை விழைந்தாய் மட்டிலாததோர் வன் துயர் அடைந்தாய் எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. #10 நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளகப் பதுமங்கள்-தோறும் உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே. @3. ஸ்ரீ சிவஷண்முகநாம ஸங்கீர்த்தன லகரி #1 பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய்ப் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகித் தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமைத் துதித்தவர் திருமுன் பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. #2 சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச் சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய் போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம் ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. #3 ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய் காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகிக் கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ எனக் கூவி நம் துயராம் ஆலம் சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. #4 மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகித் தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா எனச் செப்பி நம் துயராம் அரிட்டை ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. #5 இல்லை என்பதே பொருள் எனக் கொண்டோர் ஈன வாயிலில் இடர்ப்படுகின்றாய் எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகித் தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற அல்லல் ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. #6 கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகிப் பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. #7 ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி இருக்கின்றாய் இனி இ சிறு பொழுதும் சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. #8 ஈர்ந்த நெஞ்சினார் இடம்-தனில் இருந்தே இடர்கொண்டாய் இனி இச் சிறு பொழுதும் பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி ஓர்ந்து சண்முக சரவணபவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு எனவே ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. #9 கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக் காத்திருக்கலை கடுகி இப் பொழுதும் இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி எமைப் புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர எனவே அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. #10 உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இப் பொழுதும் குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே. @4. நமச்சிவாய ஸங்கீர்த்தன லகரி #1 சொல் அவாவிய தொண்டர்-தம் மனத்தில் சுதந்தரம் கொடு தோன்றிய துணையைக் கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச் செல் அவாவிய பொழில் திருவொற்றித் தேனைத் தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை நமச்சிவாயத்தை நான் மறவேனே. #2 அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை நட்டம் ஆடிய நடன நாயகத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே. #3 உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தமப் பொருளைத் தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவைச் சிவ தருமத்தின் பயனைப் பம்பு சீர் அருள் பொழிதரு முகிலைப் பரம ஞானத்தைப் பரம சிற்சுகத்தை நம்பினோர்களை வாழ்விக்கும் நலத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே. #4 மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரைப் பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையைப் பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள் நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே. #5 உள் நிறைந்து எனை ஒளித்திடும் ஒளியை உண்ணஉண்ண மேல் உவட்டுறா நறவைக் கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை நண்ணி ஒற்றியூர் அமர்ந்து அருள் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே. #6 திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும் மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே. #7 பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே. #8 உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும் படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும் புடை அடுத்தவர் தமை மறந்தாலும் பொன்னை வைத்த அப் புதை மறந்தாலும் நடை அடுத்தவர் வழி மறந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறவேனே. #9 வன்மை செய்திடும் வறுமை வந்தாலும் மகிழ்வுசெய் பெரு வாழ்வு வந்தாலும் புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும் தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும் சான்ற மேலவர்-தமை அடைந்தாலும் நன்மை என்பன யாவையும் அளிக்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே. #10 இன்னும் பற்பல நாள் இருந்தாலும் இ கணம்-தனிலே இறந்தாலும் துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்து உழன்றாலும் என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் நன்னர் நெஞ்சகம் நாடி நின்று ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே. @5. நற்றுணை விளக்கம் #1 எஞ்சவேண்டிய ஐம்புலப் பகையால் இடர்கொண்டு ஓய்ந்தனை என்னினும் இனி நீ அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும் விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா நஞ்சை வேண்டிய நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. #2 காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே ஓவு இல் மா துயர் எற்றினுக்கு அடைந்தாய் ஒன்றும் அஞ்சல் நீ உளவு அறிந்திலையோ நாவின்_மன்னரைக் கரை-தனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. #3 நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனைக் கொளுவிய நுதல் தீ நாட்டமுற்றதோர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. #4 எம்மை வாட்டும் இப் பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே அம்ம ஒன்று நீ அறிந்திலை போலும் ஆல_கோயிலுள் அன்று சுந்தரர்க்காய் செம்மை மா மலர்ப் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் நம்மை ஆளுடை நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. #5 ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ நாடுகின்றவர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. #6 மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் விலங்குறாப் பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. #7 மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான் மற்றை வானவர் முற்றிலும் அழிவார் ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே கோலும் ஆயிரம்கோடி அண்டங்கள் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும் நாலு மா மறைப் பரம்பொருள் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. #8 கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே அந்த வண்ண வெள் ஆனை மேல் நம்பி அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும் நம்-தம் வண்ணமாம் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. #9 வீர மாந்தரும் முனிவரும் சுரரும் மேவுதற்கொணா வெள்ளியங்கிரியைச் சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ நாரம் ஆர் மதிச் சடையவன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. #10 தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே. @6. திருஅருள் வழக்க விளக்கம் #1 தோடு_உடையார் புலித்தோல்_உடையார் கடல் தூங்கும் ஒரு மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் ஓடு_உடையார் ஒற்றியூர்_உடையார் புகழ் ஓங்கிய வெண் காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே. #2 வண்ணப் பல் மா மலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்து எமது திண்ணப்பர் சாத்தும் செருப்பு அடி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய் உண்ணப் பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்தக் கண்டே கண்ணப்ப நிற்க எனக் கை தொட்டார் எம் கடவுளரே. #3 செல் இடிக்கும் குரல் கார் மத வேழச் சின உரியார் வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வடப் பொன்_வெற்பாம் வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே. #4 ஏழியல் பண் பெற்று அமுதோடு அளாவி இலங்கு தமிழ்க் கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்த நல் சீர் வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே காழியில் தன் உருக் காட்டினரால் எம் கடவுளரே. #5 நாட்டில் புகழ்பெற்ற நாவுக்கரசர் முன்_நாள் பதிகப் பாட்டிற்கு இரக்கம்_இல்லீர் எம்பிரான் எனப் பாட அன்றே ஆட்டிற்கு இசைந்த மலர் வாழ்த்தி வேதம் அமைத்த மறைக் காட்டில் கதவம் திறந்தனரால் எம் கடவுளரே. #6 பைச்சு ஊர் அரவப் பட நடத்தான் அயன் பற்பல நாள் எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையாப் பதம் ஏய்ந்து மண் மேல் வைச்சு ஊரன் வன் தொண்டன் சுந்தரன் என்னும் நம் வள்ளலுக்குக் கச்சூரில் சோறு இரந்து ஊட்டினரால் எம் கடவுளரே. #7 ஏணப் பரி செஞ்சடை முதலான எல்லாம் மறைத்துச் சேணப் பரிகள் நடத்திடுகின்ற நல் சேவகன் போல் மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்கவாசகர்க்காய்க் காணப் பரி மிசை வந்தனரால் எம் கடவுளரே. #8 எல்லாம் செய வல்ல சித்தரின் மேவி எழில் மதுரை வல்லாரின் வல்லவர் என்று அறியா முடி_மன்னன் முன்னே பல்லாயிர அண்டமும் பயம் எய்தப் பராக்கிரமித்துக் கல்லானை தின்னக் கரும்பு அளித்தார் எம் கடவுளரே. #9 மால் எடுத்து ஓங்கிய மால் அயன் ஆதிய வானவரும் ஆல் அடுத்து ஓங்கிய அந்தணனே என்று அடைந்து இரண்டு பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காணப் பகர்செய் மன்றில் கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே. #10 மால் பதம் சென்ற பின் இந்திரர் நான்முகர் வாமனர் மான் மேல் பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல் மற்றுள்ளோ ரால் பதம் கொண்ட பல் ஆயிரம்கோடி அண்டங்கள் எல்லாம் கால் பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்கார் எம் கடவுளரே. @7 சிவ புண்ணியத் தேற்றம் #1 கடவுள் நீறு இடாக் கடையரைக் கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே #2 போற்றி நீறு இடாப் புலையரைக் கண்டால் போக போக நீர் புலம் இழந்து அவமே நீற்றின் மேனியர்-தங்களைக் கண்டால் நிற்க நிற்க அ நிமலரைக் காண்க சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனியப் பெரும் தனு எடுத்து எயிலைக் காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பைக் கைலை ஆளனைக் காணுதல் பொருட்டே #3 தெய்வ நீறு இடாச் சிறியரைக் கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக சைவ நீறு இடும் தலைவரைக் கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க செய்பவன் செயலும் அவை உடனே செய்விப்பானுமாய்த் தில்லை அம்பலத்துள் உய்வதே தரக் கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே #4 தூய நீறு இடாப் பேயர்கள் ஒன்று சொல்லுவார் எனில் புல்லென அடைக்க தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடைத் திரு_முகம் கொடுத்து ஆய பாணற்குப் பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே #5 நல்ல நீறு இடா நாய்களின் தேகம் நாற்றம் நேர்ந்திடில் நண் உயிர்ப்பு அடக்க வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இத் தூய் நெறி ஒன்றாம் அல்லல் நீக்கி நல் அருள்_கடல் ஆடி ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே. #6 அருள்செய் நீறு இடார் அமுது உனக்கு இடினும் அ மலத்தினை அருந்துதல் ஒழிக தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அத் திரு அமுது உண்க இருள் செய் துன்பம் நீத்து என்னுடை நாவே இன்ப நல் அமுது இனிது இருந்து அருந்தி மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே. #7 முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன் சத்தி வேல் கரத் தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே. #8 இனிய நீறு இடா ஈன நாய்ப் புலையர்க்கு எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மைக் கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக இனிய நல் நெறி ஈது காண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே. #9 நாட நீறு இடா மூடர்கள் கிடக்கும் நரக இல்லிடை நடப்பதை ஒழிக ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன் அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே. #10 நிலைகொள் நீறு இடாப் புலையரை மறந்தும் நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான் அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே. @8. முத்தி உபாயம் #1 ஒற்றி ஊரனைப் பற்றி நெஞ்சமே நிற்றி நீ அருள் பெற்றி சேரவே. #2 சேர நெஞ்சமே தூரம் அன்று காண் வாரம் வைத்தியேல் சாரும் முத்தியே. #3 முத்தி வேண்டுமேல் பத்தி வேண்டுமால் சத்தியம் இது புத்தி நெஞ்சமே. #4 நெஞ்சமே இது வஞ்சமே அல பிஞ்சகன் பதம் தஞ்சம் என்பதே. #5 என்பது ஏற்றவன் அன்பு-அது ஏற்று நீ வன்பு மாற்றுதி இன்பம் ஊற்றவே. #6 ஊற்றம் உற்று வெண்_ நீற்றன் ஒற்றியூர் போற்ற நீங்குமால் ஆற்ற நோய்களே. #7 நோய்கள் கொண்டிடும் பேய்கள் பற்பலர் தூய்தன் ஒற்றியூர்க்கு ஏய்தல் இல்லையே. #8 இல்லை இல்லை காண் ஒல்லை ஒற்றியூர் எல்லை சேரவே அல்லல் என்பதே. @9. அவலத் தழுங்கல் #1 ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் வாது இயம்புறும் வஞ்சகருடனே வாய் இழுக்குற வன்மைகள் பேசி ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில் தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. #2 கல் இகந்தவன் நெஞ்சகக் கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும் மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில் இல் இகந்த என் மீது எனக்கே-தான் இகலும் கோபமும் இருக்கின்றதானால் தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. #3 கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே எய் தவத் திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே செய் தவத் திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. #4 அழுத_பிள்ளைக்கே பால் உணவு அளிப்பாள் அன்னை என்பர்கள் அழ வலி இல்லாக் கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே தொழுது நின் அடி துதிக்கின்றோர்க்கெனவே துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயலாம் செழுது மாதவி மலர் திசை மணக்கத் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. #5 உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன் வெள்ளியோ எனப் பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்னத் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. #6 விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் ஒருப்படாத இ என்னளவு இனி உன் உள்ளம் எப்படி அப்படி அறியேன் திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. #7 நிலையிலா உலகியல் படும் மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன் விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறிக் கூட்டு என விளம்பேன் அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் அற்பனேன் திரு_அருள் அடைவேனே சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. #8 காயம் என்பது ஆகாயம் என்று அறியேன் கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன் சேய நல் நெறி அணித்து எனக் காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் தூய நின் அடியவருடன் கூடித் தொழும்புசெய்வதே சுகம் எனத் துணியேன் தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. #9 புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் என் இனிப் படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செயப் புகுகேன் மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கித் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. #10 அடியனேன்_அலன் என்னினும் அடியேன் ஆக நின்றனன் அம்மை இம்மையினும் கடியனேன் பிழை யாவையும் பொறுக்கக் கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே புன்னை அம் சடைப் புங்கவர் ஏறே செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே. @10. பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல் #1 வானை நோக்கி மண் வழி நடப்பவன் போல் வயங்கும் நின் அருள் வழியிடை நடப்பான் ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய் மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. #2 வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம் தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய் கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தைக் கொண்டு அமர்ந்திடும் குணப் பெரும் குன்றே தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கித் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. #3 வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர்ப் பதத்தில் பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய் மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் சித்தி வேண்டிய முனிவரர் பரவித் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. #4 கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் நலம் இலாது நின் அருள் பெற விழைந்த நாயினேன் செயும் நவை பொறுத்து அருள்வாய் மலம் இலாத நல் வழியிடை நடப்போர் மனத்துள் மேவிய மா மணிச் சுடரே சிலம் இலாஞ்சம் ஆதிய தருப் பொழில்கள் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. #5 போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடைப் புனித நின் அடியைச் சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய் கூர்க்கும் நெட்டு இலை வேல் படைக் கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையைத் தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. #6 ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில் ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய் நாட உன்னியே மால் அயன் ஏங்க நாயினேன் உளம் நண்ணிய பொருளே தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. #7 முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத் துதல் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெறுவேனோ நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே சிதல் இலா வளம் ஓங்கி எந்நாளும் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. #8 கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால் எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ அல்லை உந்திய ஒண் சுடர்_குன்றே அகில கோடிகட்கு அருள் செயும் ஒன்றே தில்லை நின்று ஒளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. #9 நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே செய்யினால் பொலிந்து ஓங்கி நல் வளங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. #10 நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனைக் கூவி நின்று ஆள்வாய் கார் சொரிந்து எனக் கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே தேர் சொரிந்த மா மணித் திரு_வீதித் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே. @11. அபராதத் தாற்றாமை #1 துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன் துட்டனேன் தூய்மை ஒன்று இல்லா எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம் பசுபதியே அச்சிலை விரும்பும்அவர் உளத்து அமுதே ஐயனே ஒற்றியூர் அரைசே. #2 தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன் தோகையர் மயக்கிடை அழுந்தி ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே ஓங்கி வான் அளவும் பொழில் செறி ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே. #3 கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் திரப்படும் கருணைச் செல்வமே சிவமே தெய்வமே தெய்வநாயகமே உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே. #4 இல்லை என்பதனுக்கு அஞ்சிடேன் நாய்க்கும் இணை_இலேன் இழிவினேன் துயர்க்கு ஓர் எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே. #5 மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திடச் சிறிதும் எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில் வந்து அருள் விழி விருந்தே கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே. #6 முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன் எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின் கட்டியே தேனே சடை உடைக் கனியே காலமும் கடந்தவர் கருத்தே. #7 கருது என அடியார் காட்டியும் தேறாக் கல்_மன குரங்கு_அனேன் உதவா எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும் என் உறவே. #8 வைதிலேன் வணங்காது இகழ்பவர்-தம்மை வஞ்சனேன் நின் அடியவர்-பால் எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே உய்திறம் உடையோர் பரவும் நல் ஒற்றியூர்-அகத்து அமர்ந்து அருள் ஒன்றே. #9 தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் எவ்வணப் பொருப்பே என் இரு கண்ணே இடையிடாப் பசிய செம்பொன்னே செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர்ச் செழும் தேனே. #10 வாதமே புரிவேன் கொடும் புலி_அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப் புனிதமே புது மணப் பூவே பாதமே சரணம் சரணம் என்றன்னைப் பாதுகாத்து அளிப்பது உன் பரமே. @12. அருளியல் வினாவல் #1 தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் ஏன் எனக் கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ. #2 பூங்கொடி இடையைப் புணர்ந்த செந்தேனே புத்தமுதே மறைப் பொருளே வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே தீங்கு ஒடியாத வினையனேன் எனினும் செல்வ நின் கோயில் வந்து அடைந்தால் ஈங்கு ஒடியாத அருள் கணால் நோக்கி ஏன் எனாது இருப்பதும் இயல்போ. #3 துப்பு நேர் இதழி மகிழ்ந்த கல்யாண சுந்தரா சுந்தரன் தூதா மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினும் நின் கோயிற்கு எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ. #4 கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே மங்கல் இல்லாத வண்மையே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே துங்க நின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் எங்கு வந்தாய் நீ யார் எனவேனும் இயம்பிடாது இருப்பதும் இயல்போ. #5 நன்று வந்து அருளும் நம்பனே யார்க்கும் நல்லவனே திரு_தில்லை மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே துன்று நின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் என்று வந்தாய் என்று ஒரு சொலும் சொல்லாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ. #6 பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே பத்தர்கட்கு அருள்செயும் பரமே மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ. #7 முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்றன் அருள் பெரும் கோயில் வந்து அடைந்தால் என் இது சிவனே பகைவரைப் போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ. #8 நல்லவர் பெறும் நல் செல்வமே மன்றுள் ஞான_நாடகம் புரி நலமே வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகு அறிந்தது நீ இல்லை என்றாலும் விடுவனோ சும்மா இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ. #9 பொதுவில்-நின்று அருளும் முதல் தனிப் பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண் எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ. #10 பொன்னையுற்றவனும் அயனும் நின்று அறியாப் புண்ணியா கண் நுதல் கரும்பே மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடித் துணை அறிய என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ. @13. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம் #1 தாயின் மேவிய தற்பரமே முல்லை வாயில் மேவிய மா மணியே உன்றன் கோயில் மேவி நின் கோ மலர்த் தாள் தொழா தே இல் மேவி இருந்தனன் என்னையே. #2 தில்லை வாய்ந்த செழும் கனியே திரு முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின் எல்லை சேர இன்று எ தவம் செய்ததே. #3 வளம் கொளும் முல்லைவாயிலில் மேவிய குளம் கொளும் கண் குரு மணியே உனை உளம்கொளும்படி உன் திரு_கோயில் இக் களம் கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே. #4 மலைவு இலா முல்லைவாயிலில் மேவிய விலை_இலா மணியே விளக்கே சற்றும் குலைவு_இலாதவர் கூடும் நின் கோயிலில் தலை நிலாவத் தவம் என்-கொல் செய்ததே. #5 சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில் ஏர் சிறக்கும் இயல் மணியே கொன்றைத் தார் சிறக்கும் சடைக் கனியே உன்றன் ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே. #6 சேல் கொள் பொய்கைத் திரு_முல்லைவாயிலில் பால் கொள் வண்ணப் பரஞ்சுடரே விடை மேல் கொள் சங்கரனே விமலா உன்றன் கால் கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ. #7 வண்ண மா முல்லைவாயிலின் மேவிய அண்ணலே அமுதே அரைசே நுதல்_ கண்ணனே உனைக் காண வந்தோர்க்கு எல்லாம் நண்ண அரும் துயர் நல்குதல் நன்றதோ. #8 மண்ணின் ஓங்கி வளர் முல்லைவாயில் வாழ் கண் உள் மா மணியே கரும்பே உனை எண்ணும் அன்பர் இழிவடைந்தால் அது பண்ணும் நின் அருள் பாரிடை வாழ்கவே. #9 தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ் கோது_இலாத குணப் பெரும் குன்றமே வாது இலாது உனை வாழ்த்த வந்தோர்-தமை ஏதிலார் என்று இருப்பதும் என்-கொலோ. #10 தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே மருந்தே சற்றும் கூசிடாமல் நின் கோயில் வந்து உன் புகழ் பேசிடாத பிழை பொறுத்து ஆள்வையே. @14. காட்சிப் பெருமிதம் #1 திரை படாத செழும் கடலே சற்றும் உரைபடாமல் ஒளிசெய் பொன்னே புகழ் வரைபடாது வளர் வல்லி கேச நீ தரை படாக் கந்தை சாத்தியது என்-கொலோ. #2 சிந்தை நின்ற சிவாநந்தச் செல்வமே எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே தந்தையே வலிதாயத் தலைவ நீ கந்தை சுற்றும் கணக்கு அது என்-கொலோ. #3 வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே மாலை கொண்ட வளர் வல்லி கேசனே பாலை கொண்ட பராபர நீ பழம் சேலை கொண்ட திறம் இது என்-கொலோ #4 பன்னுவார்க்கு அருளும் பரமேட்டியே மன்னும் மா மணியே வல்லி கேசனே உன்ன நீ இங்கு உடுத்திய கந்தையைத் துன்னுவார் இல்லையோ பரஞ்சோதியே #5 கடுத்த தும்பிய கண்ட அகண்டனே மடுத்த நல் புகழ் வாழ் வல்லி கேச நீ தொடுத்த கந்தையை நீக்கித் துணிந்து ஒன்றை உடுத்துவார் இலையோ இ உலகிலே. #6 ஆல் அடுத்த அரும் பொருளே திரு மால் அடுத்து மகிழ் வல்லி கேச நீ பால் உடுத்த பழம் கந்தையைவிடத் தோல் உடுப்பதுவே மிகத் தூய்மையே #7 துன்னும் மா மருந்தே சுடரே அருள் மன்னும் மாணிக்கமே வல்லி கேசரே துன்னு கந்தையைச் சுற்றி நிற்பீர் எனில் என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே. #8 மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை வாசி மேவிவரும் வல்லி கேச நீர் தூசில் கந்தையைச் சுற்றி ஐயோ பர தேசி போல் இருந்தீர் என்-கொல் செய்வனே. #9 தேரும் நல் தவர் சிந்தை எனும் தலம் சாரும் நல் பொருளாம் வலிதாய நீர் பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர் யாரும் அற்றவரோ சொலும் ஐயரே. #10 மெல்லிதாய விரை மலர்ப் பாதனே வல்லிதாயம் மருவிய நாதனே புல்லிதாய இக் கந்தையைப் போர்த்தினால் கல் இதாய நெஞ்சம் கரைகின்றதே. @15. கொடைமடப் புகழ்ச்சி #1 திரப்படும் திருமால் மயன் வாழ்த்தத் தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் வரப்படும் திறத்தீர் உமை அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர் உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. #2 வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் எனக் கொண்டீர் வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ ஒள்ளியீர் உமை அன்றி ஒன்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. #3 கள்ளம் அற்ற வாக்கரசும் புத்திரரும் களிக்கவே படிக்காசு அளித்து அருளும் வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் எள்ள அரும் புகழ்த் தியாகர் என்று ஒரு பேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. #4 அண்மையாகும் சுந்தரர்க்கு அன்று கச்சூர் ஆல_கோயிலில் சோறு இரந்து அளித்த வண்மை கேட்டு இங்கு வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்குச் சிறுமையும் உண்டோ உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. #5 சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மைச் சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் இந்த வண்ணம் நீர் இருந்திடுவீரேல் என் சொலார் உமை இ உலகத்தார் உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. #6 கல்லையும் பசும்பொன் எனப் புரிந்த கருணை கேட்டு உமைக் காதலித்து இங்கு வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் இல்லை நீர் பிச்சையெடுக்கின்றீரேனும் இரக்கின்றோர்களும் இட்டு உண்பர் கண்டீர் ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. #7 துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்றலே உமைத் துணை என நம்பி வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் அளிக்கும் தன்மையீர் வாழ்ந்து இவண் இருக்க அடியனேன் அலைகின்றதும் அழகோ ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. #8 குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் எனக் கொளும் குண_கடல் என்றே மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல் கடையனேன் எந்தக் கடைத்தலைச் செல்கேன் உற்ற நல் துணை உமை அன்றி அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. #9 பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு எனப் புகழ்ந்திடக் கேட்டு மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் ஐய நும் அடி அன்றி ஓர் துணையும் அறிந்திலேன் இஃது அறிந்து அருளீரேல் உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. #10 தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் கோயிலாக என் நெஞ்சகத்து அமர்ந்த குணத்தினீர் என்றன் குறை அறியீரோ ஓய் இலாது நல் தொண்டருக்கு அருள்வான் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே. @16. திருஅருள் வேட்கை #1 மன் அமுதாம் உன் தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே இன் அமுதம் ஓர்பொழுதும் இட்டு அறியேன் ஆயிடினும் முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன் என் அமுதே இன்னும் இரக்கம்-தான் தோன்றாதோ. #2 தோன்றாத் துணையாகும் சோதியே நின் அடிக்கே ஆன்று ஆர்த்த அன்போடு அகம் குழையேன் ஆயிடினும் ஊன் தார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன் தேன் தார்ச் சடையாய் உன் சித்தம் இரங்காதோ. #3 காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும் போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன் நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ. #4 இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும் நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன் கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே. #5 கொண்டல்_நிறத்தோனும் குணிக்க அரிய நின் அடிக்கே தொண்டு அறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும் எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே. #6 சாரா வறும் சார்பில் சார்ந்து அரைசே உன்னுடைய தார் ஆர் மலர்_அடியைத் தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும் நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன் ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே. #7 ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின் சீர் மதிக்க நின் அடியைத் தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும் கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன் ஏர் மதிக்கும் ஒற்றியூர் எந்தை அளி எய்தாயோ. #8 தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும் வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன் தூய்க் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ. #9 அறியாப் பருவத்து அடியேனை ஆட்கொண்ட நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும் குறியாப் பொருளே உன் கோயிலிடை வந்து நின்றும் பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே. #10 பார் நடையாம் கானில் பரிந்து உழல்வதல்லது நின் சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும் நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன் வார்_நடையார் காணா வளர் ஒற்றி மன் அமுதே. @17. அபராத விண்ணப்பம் #1 தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத்து எண்ணி நீ கோபம் மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே. #2 உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திருவுள்ளத்தில் கொண்டே வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே. #3 கழல் கொள் உன் அருமைத் திரு_அடி_மலரைக் கருதிடாப் பிழை-தனைக் குறித்தே விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே அழல் அயில் கரத்து எம் ஐயனை ஈன்ற அப்பனே அயனும் மால் அறியாத் தழல் நிறப் பவள_குன்றமே ஒற்றித் தனி நகர் அமர்ந்து அருள் தகையே. #4 வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனைக் குறித்தே வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா ஏடகத்து அமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே. #5 நாணம் ஒன்று இல்லா நாயினேன் பிழையை நாடி நின் திருவுளத்து அடைத்தே வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே பூண் அயில் கரத்து ஓர் புத்தமுது எழுந்த புண்ணியப் புனித வாரிதியே. #6 அஞ்செழுத்து ஓதி உய்ந்திடாப் பிழையை ஐய நின் திருவுளத்து எண்ணி வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்து இருத்திய அருள்_கடலே சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே #7 நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனைக் குறியேல் வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே அம்பிகாபதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே. #8 சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனைக் குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர்ப் பொருளே. #9 துரும்பினேன் பிழையைத் திருவுளத்து அடையேல் துய்ய நின் அருள்_கடல் ஆட விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே #10 கட்டினேன் பாபக் கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே சுட்டு இலாப் பொருளே சுகப் பெரும் கடலே தூய்த் திருவொற்றியூர்த் துணையே தட்டு இலாக் குணத்தோர் புகழ்செயும் குகனைத் தந்து அருள்தரும் தயாநிதியே. @18. அறிவரும் பெருமை #1 நாயினும் கடையேன் என் செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும் தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை என்-கொல் என்று அறியேன் மாயினும் அல்லால் வாழினும் நினது மலர்_அடி அன்றி ஒன்று ஏத்தேன் காயினும் என்னைக் கனியினும் நின்னைக் கனவினும் விட்டிடேன் காணே. #2 காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள் மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே கோண் பதர் நெஞ்சக் கொடியனேன் எந்தக் கொள்கை கொண்டு அறிகுவது ஐயா பூண்பது பணியாய் பொதுவில் நின்று ஆடும் புனித நின் அருள் அலாது இன்றே. #3 இன்று வந்து எனை நீ அடிமைகொள்ளாயேல் எவ்வுலகத்தரும் தூற்ற நன்று நின்றன் மேல் பழி வரும் என் மேல் பழி இலை நவின்றனன் ஐயா அன்று வந்து ஒரு சேய்க்கு அருள் புரிந்து ஆண்ட அண்ணலே ஒற்றியூர் அரசே நின்று சிற்சபைக்குள் நடம்செயும் கருணா_நிலையமே நின்மலச் சுடரே. #4 சுடர் கொளும் மணிப் பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய் படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சைப் பரிந்து உண்ட கருணை அம்பரமே குடர் கொளும் சூலப் படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே. #5 உடைமை வைத்து எனக்கு இன்று அருள்செயாவிடினும் ஒப்பு_இலாய் நின் அடிக்கு எனையே அடைமைவைத்தேனும் நின் அருள் பொருள் இங்கு அளித்திடவேண்டும் இன்று எவைக்கும் கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே. #6 பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன் ஓர்த்து_நிற்கின்றார் பரவு நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே. #7 உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது எனக் கசிந்து உருகா மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன் நிறவனே வெள்ளை நீறு அணிபவனே நெற்றி மேல் கண்ணுடையவனே அறவனே தில்லை அம்பலத்து ஆடும் அப்பனே ஒற்றியூர்க்கு அரைசே. #8 கரைபடா வஞ்சப் பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் திரைபடாக் கருணைச் செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற்கு இனிய நல் அமுதே. #9 நல் அமுது_அனையார் நின் திரு_அடிக்கே நண்புவைத்து உருகுகின்றனரால் புல் அமுது_அனையேன் என் செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பது ஒன்று அறியேன் சொல் அமுது அனைய தோகை ஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக் கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே. #10 என்னை நின்னவனாக் கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி அன்னை அப்பனுமாய்ப் பரிவுகொண்டு ஆண்ட அண்ணலே நண்ண அரும் பொருளே உன்ன அரும் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும் என் உறவே நன்னர் செய்கின்றோய் என் செய்வேன் இதற்கு நன்கு கைம்மாறு நாயேனே. @19. அருள்விடை வேட்கை #1 போகம் கொண்ட புணர் முலை மாது ஒரு பாகம் கொண்ட படம்பக்கநாதரே மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின் மோகம் கொண்ட எம் முன் நின்று அருளிரோ. #2 தவள நீற்று மெய்ச் சாந்த வினோதரே பவள மேனிப் படம்பக்கநாதரே கவள வீற்றுக் கரி உரி போர்த்த நீர் இவளை ஒற்றிவிட்டு எங்ஙனம் சென்றிரோ. #3 சீலம் மேவித் திகழ் அனல் கண் ஒன்று பாலம் மேவும் படம்பக்கநாதரே ஞாலம் மேவும் நவையை அகற்ற முன் ஆலம் உண்டவர்_அல்லிர்-கொல் ஐயரே. #4 உடை கொள் கோவணத்து உற்ற அழகரே படை கொள் சூலப் படம்பக்கநாதரே கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர் இடையில் ஒற்றி விட்டு எங்ஙனம் சென்றிரோ. #5 நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம் பறைய நின்ற படம்பக்கநாதரே உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர் குறை இலா ஒற்றிக் கோயில்-கண் உள்ளிரோ. #6 வணம் கொள் நாக மணித் தலை ஐந்து உடைப் பணம் கொள் செல்வப் படம்பக்கநாதரே கணம் கொள் காமனைக் காய்ந்து உயிர் ஈந்த நீர் வணங்குவார்க்கு என்-கொல் வாய் திறவாததே. #7 நாட நல் இசை நல்கிய மூவர்-தம் பாடல் கேட்கும் படம்பக்கநாதரே வாடல் என்று ஒரு மாணிக்கு அளித்த நீர் ஈடில் என்னளவு எங்கு ஒளித்திட்டிரோ. #8 சுலவு காற்று அனல் தூய மண் விண் புனல் பலவும் ஆகும் படம்பக்கநாதரே நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர் குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ. #9 அடியர் நெஞ்சத்து அருள்_பெரும்_சோதி ஓர் படிவம் ஆகும் படம்பக்கநாதரே நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர் மிடியனேன் அருள் மேவ விரும்பிரோ. #10 மதி கொள் அன்பர் மனம் எனும் திவ்வியப் பதி கொள் செல்வப் படம்பக்கநாதரே விதி கொள் துன்பத்தை வீட்டி அளித்த நீர் துதி கொள்வீர் என் துயரைத் துரத்துமே. @20. எழுத்தறியும் பெருமான் மாலை #1 சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே நிந்தையுறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே. #2 மத்தனை வன்_நெஞ்சகனை வஞ்சகனை வன் பிணி கொள் பித்தனை வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை முத்து_அனையாய் உன்றன் முளரித் தாட்கு ஆளாக்க எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே. #3 நல் நெறி சேர் அன்பர்-தமை நாடிடவும் நின் புகழின் செம் நெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு என் அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே. #4 மைப் படியும் கண்ணார் மயல் உழக்கச்செய்வாயோ கைப் படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம் எப்படியோ ஐயா எழுத்தறியும்_பெருமானே. #5 நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும் பொல்லாத நெஞ்சப் புலையனேன் இ உலகில் சொல்லா மன_நோயால் சோர்வுற்று அலையும் அல்லல் எல்லாம் அறிவாய் எழுத்தறியும்_பெருமானே. #6 தீது அறிவேன் நன்கு அணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும் வாது அறிவேன் வஞ்சகனேன் வல்_வினையேன் வாய்மை_இலேன் சூது அறிவேன் மால் அயனும் சொல்ல அரிய நின் பெருமை யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே. #7 மாறாத வன் பிணியால் மாழாந்து நெஞ்சு அயர்ந்தே கூறாத துன்பக் கொடும்_கடற்குள் வீழ்ந்து அடியேன் ஆறாது அரற்றி அழுகின்றேன் நின் செவியில் ஏறாதோ ஐயா எழுத்தறியும்_பெருமானே. #8 உள் நாடும் வல்_வினையால் ஓயாப் பிணி உழந்து புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே கண்ணாளா உன்றன் கருணை எனக்கு அளிக்க எண்ணாயோ ஐயா எழுத்தறியும்_பெருமானே. #9 புன் செய்கை மாறாப் புலைய மட மங்கையர்-தம் வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன் கொன் செய்கை மாறாத கூற்றன் வருவானேல் என் செய்வேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே. #10 சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம் கொங்கு உடைய கொன்றைக் குளிர்ச் சடையாய் கோதை ஒரு பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால் எங்கு அடைவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே. #11 மன்றினிடை நடம்செய் மாணிக்க மா மலையே வென்றி மழுக் கை உடைய வித்தகனே என்றென்று கன்றின் அயர்ந்து அழும் என் கண்ணீர் துடைத்து அருள என்று வருவாய் எழுத்தறியும்_பெருமானே. #12 மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர் தென் அளவும் வேணிச் சிவமே என ஒருகால் சொன்ன அளவில் சொன்னவர்-தம் துன்பு ஒழிப்பாய் என்பர் அது என்னளவில் காணேன் எழுத்தறியும்_பெருமானே. #13 மின்_போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும் தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையாப் பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல் என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே. #14 பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளைப் புண்ணியர்கள் தாம் மாந்தி நின் அடிக் கீழ்ச் சார்ந்து நின்றார் ஐயோ நான் காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே. #15 பன்ன அரும் இப் பார் நடையில் பாடு உழன்ற பாதகனேன் துன்னிய நின் பொன்_அடியைச் சூழாதேன் ஆயிடினும் புல் நிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்பு உனக்கே என் அருமைத் தாய் நீ எழுத்தறியும்_பெருமானே. #16 வீட்டுக்கு அடங்கா விளையாட்டு_பிள்ளை எனத் தேட்டுக்கு அடங்காத தீ மனத்தால் ஆம் துயரம் பாட்டுக்கு அடங்கா நின் பத்தர் அடிப் புகழ் போல் ஏட்டுக்கு அடங்காது எழுத்தறியும்_பெருமானே. #17 பன்னும் மனத்தால் பரிசு இழந்த பாதகனேன் துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால் நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன் இன்னும் அறியாயோ எழுத்தறியும்_பெருமானே. #18 கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில் புல்லை மதித்து ஐயோ பைம் பூ இழந்த பொய் அடியேன் ஒல்லை படுகின்ற ஒறு வேதனை-தனக்கு ஓர் எல்லை அறியேன் எழுத்தறியும்_பெருமானே. #19 பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியைப் போற்றாத கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன் இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய் என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே. #20 மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர் ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல் கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்து அடியார் ஏசுவரே ஒற்றி எழுத்தறியும்_பெருமானே. #21 ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள் சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல் நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே. #22 நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலாப் பொய்_அடியேன் ஊக்கம் இலா நெஞ்சத்தின் ஓட்டு அகலச்செய்வாயேல் தூக்கம் இலா ஆனந்தத் தூக்கமன்றி மற்றும் இங்கு ஓர் ஏக்கம்_இலேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே. #23 போகின்ற வஞ்சகரைப் போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆ ளாகின்ற மேலோர் அடி வழுத்தா நாயேற்குப் பாகின் தனிச் சுவையின் பாங்கு ஆகும் நின் அருளை ஈகின்றது என்றோ எழுத்தறியும்_பெருமானே. #24 ஊழை அகற்ற உளவு அறியாப் பொய்யன் இவன் பீழை மனம் நம்மைப் பெறாது அ மனம் கொடிய தாழை என எண்ணி என்னைத் தள்ளிவிட்டால் என் செய்வேன் ஏழை நான் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே. #25 மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம் கடுக்க முடியாப் புலனால் கட்டிச் சுமக்கவைத்த தொடுக்க முடியாத துன்பச் சுமையை இனி எடுக்க முடியாதே எழுத்தறியும்_பெருமானே. #26 முள் அளவு நெஞ்ச முழுப் புலைய மாதர்களாம் கள் அளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற் றெள் அளவும் உண்டோ எழுத்தறியும்_பெருமானே. #27 பண்ண முடியாப் பரிபவம் கொண்டு இ உலகில் நண்ண முடியா நலம் கருதி வாடுகின்றேன் உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும் எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே. #28 வெம் கொளித் தேள் போன்ற வினையால் வெதும்பி மனம் அங்கு ஒளிக்காது உன்னை அழைத்து அழுது வாடுகின்றேன் இங்கு ஒளிக்கா நஞ்சம் உண்ட என் அருமை அப்பா நீ எங்கு ஒளித்தாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே. #29 பித்தளைக்கும் காமப் பெரும் பேய் மயக்கும் மயல் வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம் கொத்து அனைத்தாம் வஞ்சம் கொலை முதலாம் பாவங்கள் இத்தனைக்கும் நான் காண் எழுத்தறியும்_பெருமானே. #30 ஒல்லையே நஞ்சு அனைத்தும் உண்ட தயாநிதி நீ அல்லையோ நின்று இங்கு அயர்வேன் முன்வந்து ஒரு சொல் சொல் ஐயோ ஒற்றியூர்த் தூய திரு_கோயிலுள் நீ இல்லையோ ஐயா எழுத்தறியும்_பெருமானே. #31 நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய் மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடைப் பட்டு அவமே இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே. @21. நெஞ்சொடு நேர்தல் #1 ஒக்க நெஞ்சமே ஒற்றியூர்ப் படம் பக்கநாதனைப் பணிந்து வாழ்த்தினால் மிக்க காமத்தின் வெம்மையால் வரும் துக்கம் யாவையும் தூர ஓடுமே. #2 ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டி நீ நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள் பாடும் எம் படம்பக்கநாதன் தாள் நாடு நாடிடில் நாடு நம்மதே. #3 நம்பு நெஞ்சமே நன்மை எய்து மால் அம்புயன் புகழ் அண்ணல் ஒற்றியூர்ப் பம்பு சீர்ப் படம்பக்கன் ஒன்னலார்-தம் புரம் சுடும் தம்பிரானையே. #4 தம்பலம் பெறும் தையலார் கணால் வெம்பலம் தரும் வெய்ய நெஞ்சமே அம்பலத்தினில் அமுதை ஒற்றியூர்ச் செம் பலத்தை நீ சிந்தைசெய்வையே. #5 செய்யும் வண்ணம் நீ தேறி நெஞ்சமே உய்யும் வண்ணமாம் ஒற்றியூர்க்கு உளே மெய்யும் வண்ண மாணிக்க வெற்பு அருள் பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே. #6 வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர் ஆண்டு நின்று அருள் அரசின் பொன்_பதம் பூண்டுகொண்டு உளே போற்றி நிற்பையேல் யாண்டும் துன்பம் நீ அடைதல் இல்லையே. #7 இல்லை உண்டு என எய்தி ஐயுறும் கல்லை ஒத்த என் கன்ம நெஞ்சமே ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல் நல்லை நல்லை நீ நட்பின் மேலையே. #8 மேலை அந்தகன் வெய்ய தூதுவர் ஓலை காட்டும் முன் ஒற்றியூரில் வாழ் பாலை சேர் படம்பக்கநாதர்-தம் காலை நாடி நற்கதியின் நிற்பையே. #9 நிற்பது என்று நீ நீல நெஞ்சமே அற்ப மாதர்-தம் அவலம் நீங்கியே சிற்பரன் திரு_தில்லை அம்பலப் பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே. #10 போற்றி ஒற்றியூர்ப் புண்ணியன் திரு_ நீற்றினான்-தனை நினைந்து நிற்பையேல் தோற்ற அரும் பரஞ்சோதி நல் அருள் ஊற்று எழும் கடல் ஒக்க நெஞ்சமே. @22. திருப்புகழ் விலாசம் #1 துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்திச் செங்கண் மால் அயன் தேடியும் காணாச் செல்வ நின் அருள் சேர்குவது என்றோ எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. #2 கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே அண்ணலே திரு_ஆலங்காட்டு உறையும் அம்மை அப்பனே அடியனேன்-தன்னைத் திண்ணமே அடித் தொழும்பனாய்ச் செய்வாய் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. #3 விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனைத் தரும் கனிவு_உடையவனே இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. #4 கஞ்சன் ஓர் தலை நகத்து அடர்த்தவனே காமன் வெந்திடக் கண்விழித்தவனே தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. #5 ஏல வார் சூழலாள் இடத்தவனே என்னை ஆண்டவனே எனது அரசே கோலமாக மால் உருக்கொண்டும் காணாக் குரை கழல் பதக் கோமளக் கொழுந்தே ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே சீலம் மேவிய தவத்தினர் போற்றத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. #6 ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே வீறு கொன்றை அம் சடை உடைக் கனியே வேதம் நாறிய மென் மலர்ப் பதனே தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்தத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. #7 மாறு பூத்த என் நெஞ்சினைத் திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. #8 மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே ஆலின் கீழ் அறம் அருள்_புரிந்தவனே அர என்போர்களை அடிமைகொள்பவனே காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கித் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. #9 நாட்டும் முப்புரம் நகைத்து எரித்தவனே நண்ணி அம்பலம் நடம்செயும் பதனே வேட்டு வெண் தலைத் தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே கோட்டு மேருவைக் கோட்டிய புயனே குற்றமும் குணமாக் குறிப்பவனே தீட்டும் மெய்ப் புகழ்த் திசை பரந்து ஓங்கத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. #10 அம்பலத்துள் நின்று ஆட வல்லானே ஆன் இவர்ந்து வந்து அருள்_புரிபவனே சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள் செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே. @23. திருச்சாதனத் தெய்வத் திறம் #1 உடையாய் உன் அடியவர்க்கும் அவர் மேல் பூண்ட ஒண் மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ அடையாளம் என்ன ஒளிர் வெண் நீற்றுக்கும் அன்பு_இலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என் பாவி நாவைச் சற்றும் இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். #2 கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் பண்ணுதல் சேர் திரு_நீற்றுக் கோலம்-தன்னைப் பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே நண்ணுதல் சேர் உடம்பு எல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என் கொடிய நாவை அந்தோ எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். #3 வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளைக் கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை நஞ்சம் உணக் கொடுத்து மடித்திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால் எஞ்சலுறச் சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். #4 அருள் பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆர்_அமுதே நினைப் புகழேன் அந்தோ வஞ்ச மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதி_இலேனை வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். #5 பெரும் கருணைக் கடலே என் குருவே முக்கண் பெருமானே நினைப் புகழேன் பேயேன் அந்தோ கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளைக் கழிக்கின்றேன் பயன் அறியாக் கடையனேனை ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். #6 தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர்க் கொழுந்தே நின் பதத்தைத் துதியேன் வாதில் விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை உழுகின்ற நுகப் படை கொண்டு உலையத் தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். #7 விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனைத் துதியேன் விரைந்து வஞ்சக் கருப் பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளைக் கழிக்கின்றேன் கரு நெஞ்சக் கள்வனேனைப் பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லாப் புழுத் தலையில் சோரி புறம் பொழிய நீண்ட இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். #8 அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்_பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடாப் போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனைச் செக்கிடை வைத்து உடல் குழம்பிச் சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேரச் சேர்த்து எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். #9 அன்புடன் நின் பதம் புகழாப் பாவி நாவை அறத் துணியேன் நின் அழகை அமர்ந்து காணாத் துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத் தொழாக் கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் வன்பு அற நின்றனை வணங்காத் தலையை அந்தோ மடித்திலேன் ஒதியே போல் வளர்ந்தேன் என்னை இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். #10 தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சைத் தீமூட்டிச் சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன் கோவே நின் அடியர்-தமைக் கூடாப் பொய்மைக் குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ நா ஏற நினைத் துதியேன் நலம் ஒன்று இல்லேன் நாய்க் கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணுகின்றோர்க்கு ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய். @24. தியாக வண்ணப் பதிகம் #1 கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற ஏர் ஆர் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே. #2 தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற கண் ஆர் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் பண் ஆர் இன் சொல் பதிகம் கொண்டு படிக்காசு அளித்த பரமன் ஓர் பெண் ஆர் பாகன் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சை பெருமானே. #3 பத்தர்க்கு அருளும் பாவையொடும் வேல் பாலனொடும் தான் அமர்கின்ற நித்தக் கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கு ஒன்று அருளானேல் சித்தப் பெருமான் தில்லைப் பெருமான் தெய்வப் பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே. #4 மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கு ஒன்று அருளானேல் மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான் பின்னும் சடையான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே. #5 அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற தணியாக் கோலம் கண்டு களிக்கத் தகையாது எமக்கு ஒன்று அருளானேல் மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் பிணி போக்கிடுவான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே. #6 சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன் மாற்கு இறை ஆனான் பேதம் இல்லான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே. #7 வெற்றிப் படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற மற்று இக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கு ஒன்று அருளானேல் கற்றைச் சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான் பெற்றத்து இவர்வான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே. #8 வரம் மன்றலினார் குழலாளொடும் வேல் மகனாரொடும் தான் அமர்கின்ற திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியாப் பரிவுற்றான் பிரமன் தலையான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே. #9 அறம் கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடும் தான் அமர்கின்ற திறம் கொள் கோலம் கண்டு களிப்பான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் பிறங்கும் சடையான் ஒற்றித் தியாக_பெருமாள் பிச்சைப் பெருமானே. #10 தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் ஈசா என நின்று ஏத்திக் காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் காசு ஆர் அரவக் கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்றுப் பேசார்க்கு அருளான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே. @25. ஆடலமுதப் பத்து #1 சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே அந்தி வான் நிறத்து ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. #2 மாய நெஞ்சமோ நின் அடி வழுத்தா வண்ணம் என்றனை வலிக்கின்றது அதனால் தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. #3 உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும் என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. #4 என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான் உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல் இன்னது என்று அறியாமல் இருளில் இடர்கொள்வேன் அன்றி என் செய்வேன் சிவனே அன்னது உன் செயல் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. #5 பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடிப் பாவையார் மயல் படிந்து உழைப்பதனால் சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே காவி நேர் விழி மலை_மகள் காணக் கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் ஆவி ஈந்து அருள் ஒற்றி எம் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. #6 மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் நாட நாடிய நலம் பெறும் அதனால் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும் ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப்புலியூர் அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. #7 கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால் விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர்ப் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே அலங்குகின்ற சீர் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. #8 மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண் இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால் உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி அறைவது என்ன நான் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. #9 ஒரு கணப்பொழுதேனும் நின் அடியை உள்கிடாது உளம் ஓடுகின்றதனால் திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை அருகு அணைத்து அருள் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. #10 யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன் தீது செய்யினும் பொறுத்து எனைச் சிவனே தீய வல்_வினைச் சேர்ந்திடா வண்ணம் பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய்ப் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே ஆது காண்டி எம் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே. @26. திருஅடிச் சரண்புகல் #1 ஓடல் எங்கணும் நமக்கு என்ன குறை காண் உற்ற நல் துணை ஒன்றும் இல்லார் போல் வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய்க் கூடல் நேர் திருவொற்றியூர் அகத்துக் கோயில் மேவி நம் குடி முழுது ஆளத் தாள் தலம் தரும் நமது அருள் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. #2 ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே ஓங்கி வாழ் ஒற்றியூரிடை அரவும் ஒளி கொள் திங்களும் கங்கையும் சடை மேல் தாங்கி வாழும் நம் தாணுவாம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. #3 கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே காம ஐம்புலக் கள்வரை வீட்டி வயம் அளிக்குவன் காண்டி என் மொழியை மறுத்திடேல் இன்று வருதி என்னுடனே உயவு அளிக்கும் நல் ஒற்றியூர் அமர்ந்து அங்கு உற்று வாழ்த்திநின்று உன்னுகின்றவர்க்குத் தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. #4 சண்ட வெம் பவப் பிணியினால் தந்தை தாய் இலார் எனத் தயங்குகின்றாயே மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே ஒண் தலத் திருவொற்றியூரிடத்தும் உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர் தண் தலத்தினும் சார்ந்த நம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. #5 விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமலத் தடம் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. #6 பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிகச் செய்ய தீந்தமிழ்த் தேறல் உண்டு அருளைத் தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. #7 நாட்டமுற்று எனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால் வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பிக் கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்குத் தாள் தலம் தரும் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. #8 உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறாப் பவத்தைத் தடுக்க வேண்டி நல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. #9 மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே போகம் நீக்கி நல் புண்ணியம் புரிந்து போற்றி நாள்-தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச் சாகை நீத்து அருள் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. #10 பசியெடுக்கும் முன் அமுது சேகரிப்பார் பாரினோர்கள் அப் பண்பு அறிந்திலையோ வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்திலக் குவை நெறிப்பட ஓங்கிச் சசி எடுக்கும் நல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே. @27.சிவானந்தப் பத்து #1 இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. #2 ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம் அழிவு இல் இன்பமுற்று அருகு இருக்கின்றார் வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய் வைய வாழ்க்கையின் மயங்குகின்றனன் மேல் வருவது ஓர்ந்திலன் வாழ்வு அடைவேனோ செய்ய வண்ணனே ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. #3 மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகிச் சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம் செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. #4 இருக்கு அவாவுற உலகு எலாம் உய்ய எடுத்த சேவடிக்கு எள்ளளவேனும் உருக்கம் ஒன்று இலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மை மற்று அன்றே தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண் திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. #5 எண்பெறா வினைக்கு ஏதுசெய் உடலை எடுத்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் நண்புறாப் பவம் இயற்றினன் அல்லால் நன்மை என்பது ஓர் நாளினும் அறியேன் வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ திண் பெறாநிற்க அருள் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. #6 பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திருத் தண் அளி புரிவாய் கோதை நீக்கிய முனிவர்கள் காணக் கூத்து உகந்து அருள் குணப் பெரும் குன்றே தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. #7 வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையைத் துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி விஞ்சு நெஞ்சர்-தம் அடித் துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அப் பெரும் பயன் பெறவே தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ செஞ்சொல் ஓங்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. #8 புல்லனேன் புவி நடையிடை அலையும் புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய அல்லல் என்பதற்கு எல்லை ஒன்று அறியேன் அருந்துகின்றனன் விருந்தினன் ஆகி ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் செல்லல் நீக்கிய ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. #9 எளியனேன் பிழை இயற்றிய எல்லாம் எண்ணின் உட்படாவேனும் மற்று அவையை அளிய நல் அருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்று அல ஆதலின் ஈண்டே களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக் கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா தெளிய ஓங்கிய ஒற்றி என் அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. #10 வெறிபிடிக்கினும் மகன்-தனைப் பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும் நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்குப் பொறி பிடித்த நல் போதகம் அருளிப் புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. @28.சந்நிதி முறையீடு #1 ஒற்றி மேவிய உத்தமனே மணித் தெற்றி மேவிய தில்லை அப்பா விழி நெற்றி மேவிய நின்மலனே உனைப் பற்றி மேவிய நெஞ்சம் உன் பாலதே. #2 பாலின் நீற்றுப் பரஞ்சுடரே மலர்க் காலின் ஈற்றுக் கதி பெற ஏழையேன் மாலின் ஈற்று மயக்கு அறல் என்று கல் ஆலின் ஈற்றுப் பொருள் அருள் ஆதியே. #3 ஆதியே தில்லை அம்பலத்து ஆடல்செய் சோதியே திரு_தோணிபுரத்தனே ஓதியே தரும் ஒற்றி அப்பா இது நீதியே எனை நீ மருவாததே. #4 வாதம் ஓதிய வஞ்சரைக் காணில் ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீதமோ அன்றி நேரும் அநீதமோ ஓதம் ஓது ஒலி ஒற்றித் தலத்தனே. #5 தலத்தனே தில்லைச் சங்கரனே தலைக் கலத்தனே நெற்றிக்கண்ணுடையாளனே நலத்தனே ஒற்றி நாயகனே இந்த மலத்தனேனையும் வாழ்வித்தல் மாண்பு அதே. #6 மாண் கொள் அம்பல மாணிக்கமே விடம் ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன் ஏண் கொள் சேவடி இன் புகழ் ஏத்திடாக் கோண் கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே. #7 உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் எய்த நான் செய்யும் வண்ணம் தெரிந்திலன் செல்வமே பெய்யும் வண்ணப் பெரு முகிலே புரம் எய்யும் வண்ணம் எரித்து அருள் எந்தையே. #8 எந்தையே தில்லை எம் இறையே குகன் தந்தையே ஒற்றித் தண் அமுதே என்றன் முந்தை ஏழ் பவ மூட மயக்கு அறச் சிந்தை ஏதம் திருந்த அருள்வையே. #9 திருந்த நான்மறைத் தில்லைச் சிற்றம்பலத்து இருந்த ஞான இயல் ஒளியே ஒற்றிப் பொருந்த நின்று அருள் புண்ணியமே இங்கு வருந்த என்றனை வைத்தது அழகு-அதோ. #10 வைத்த நின் அருள் வாழிய வாழிய மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே உய்த்த நல் அருள் ஒற்றி அப்பா எனைப் பொய்த்த சிந்தை விட்டு உன்றனைப் போற்றவே. #11 போற்றவைத்தனை புண்ணியனே எனைச் சாற்றவைத்தனை நின் புகழ்த் தன்மையைத் தேற்றவைத்தனை நெஞ்சைத் தெளிந்து அன்பை ஊற்றவைத்தனை உன் ஒற்றி மேவியே. @29. தவத்திறம் போற்றல் #1 வில்வத்தொடும் பொன் கொன்றை அணி வேணிப் பெருமான் ஒற்றி நகர் செல்வப் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகைக் கல் வைப்பு உடைய மனம் களிக்கக் கண்கள் களிக்கக் கண்டு நின்றேன் இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. #2 கூடும்படி முன் திருமாலும் கோலம் ஆகிப் புவி இடந்து தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி நாடும் புகழ் சேர் ஒற்றி நகர் நாடிப் புகுந்து கண்டேனால் ஈடும் அகன்றேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. #3 ஆர்க்கும் கடல்-கண் அன்று எழுந்த ஆலகாலம் அத்தனையும் சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தைக் கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. #4 உள்ளும் புறமும் நிறைந்து அடியார் உள்ளம் மதுரித்து ஊறுகின்ற தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தைக் கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே எள்ளல் இகந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. #5 ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவைக் கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய்க் கண்டேன் கண்ட காட்சி-தனை யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. #6 மறப்பை அகன்ற மனத்து உரவோர் வாழ்த்த அவர்க்கு வான் கதியின் சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தைப் பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய்ப் பேர்_ஆனந்தம் பெறக் கண்டேன் இறப்பைத் தவிர்த்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. #7 வில்லாம்படிப் பொன்_மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான் செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தைக் கல்லாம் கொடிய மனம் கரையக் கண்டேன் பண்டு காணாத எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. #8 ஒல்லை எயில் மூன்று எரி கொளுவ உற்று நகைத்தோன் ஒற்றி_உளான் தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி கல்லை அளியும் கனி ஆக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர் எல்லை அறியேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. #9 துன்னும் சோமசுந்தரனார் தூய மதுரை நகர் அளித்த தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகைப் பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. #10 முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடு பொன் சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியைக் கல் நின்று உருகா நெஞ்சு உருகக் கண்டேன் கண்ட காட்சி-தனை என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ. @30. நெஞ்சுறுத்த திரு நேரிசை #1 பொன் ஆர் விடை_கொடி எம் புண்ணியனைப் புங்கவனை ஒன்னார் புரம் எரித்த உத்தமனை மன்னாய அத்தனை நம் ஒற்றியூர் அப்பனை எல்லாம்_வல்ல சித்தனை நீ வாழ்த்துதி நெஞ்சே. #2 நெஞ்சே உலக நெறி நின்று நீ மயலால் அஞ்சேல் என் பின் வந்து அருள் கண்டாய் எஞ்சாத் தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றிச் சிவ_கொழுந்தை வாழ்த்துதும் நாம் சென்று #3 சென்றுசென்று நல்காத செல்வர் தலைவாயிலிலே நின்றுநின்று வாடுகின்ற நெஞ்சமே இன்று திரு ஒற்றியப்பன் தாள்_மலரை உன்னுதியேல் காதலித்து மற்று இசைப்பது எல்லாம் வரும். #4 வரு_நாள் உயிர் வாழும் மாண்பு அறியோம் நெஞ்சே ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல் திருநாளைப் போவான் தொழும் மன்றில் புண்ணியனை ஒற்றியில் தாய் ஆவான் திரு_அடி அல்லால். #5 அல் ஆலம் உண்ட மிடற்று ஆர்_அமுதை அற்புதத்தைக் கல் ஆல நீழல் அமர் கற்பகத்தைச் சொல் ஆர்ந்த விண்மணியை என் உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது. #6 கருதாயோ நெஞ்சே கதி கிடைக்க எங்கள் மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும் என் அருமைத் தெய்வதமே என் அருமைச் சற்குருவே என் அருமை அப்பாவே என்று. #7 என்றும் உனக்கு ஆளாவேன் என் நெஞ்சே வன்_நெஞ்சர் ஒன்றும் இடம் சென்று அங்கு உழலாதே நன்று தரும் ஒற்றியப்பன் பொன்_அடியை உன்னுகின்றோர்-தம் பதத்தைப் பற்றி நிற்பையாகில் பரிந்து. #8 பரிந்து உனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம் எரிந்து விழ நாம் கதியில் ஏறத் தெரிந்து விடையானை ஒற்றியூர் வித்தகனை மாது ஓர் புடையானை நெஞ்சமே போற்று. #9 போற்றுதி என் நெஞ்சே புரம் நகையால் சுட்டவனை ஏற்று உகந்த பெம்மானை எம்மவனை நீற்று ஒளி சேர் அம்_வண்ணத்தானை அணி பொழில் சூழ் ஒற்றியூர்ச் செம்_வண்ணத்தானைத் தெரிந்து. #10 தெரிந்து நினக்கு அனந்தம் தெண்டன் இடுகின்றேன் விரிந்த நெஞ்சே ஒற்றியிடை மேவும் பரிந்த நெற்றிக் கண்ணானை மால் அயனும் காணப்படாதானை எண்ணாரை எண்ணாதே என்று. #11 என்று என்று அழுதாய் இலையே என் நெஞ்சமே ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற செம்மைத் தொழும்பர் தொழும் சீர் ஒற்றியூர் அண்ணல் நம்மைத் தொழும்புகொள்ளும் நாள். #12 நாள் ஆகும் முன் எனது நல் நெஞ்சே ஒற்றியப்பன் தாள் ஆகும் தாமரைப் பொன் தண் மலர்க்கே ஆளாகும் தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர்ச் சமுகம் பார்த்து மகிழ்வாய் அதுவே பாங்கு. #13 பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியாத் தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள் உற்று அமர்ந்த பாகத்து எம் ஒற்றியப்பன் பொன்_அருளைப் பெற்று அமர்தி நெஞ்சே பெரிது. #14 பெரியானை மாதர்ப் பிறை_கண்ணியானை அரியானை அங்கணனை ஆர்க்கும் கரி யானைத் தோலானைச் சீர் ஒற்றிச் சுண்ண வெண்_நீற்றானை மேலானை நெஞ்சே விரும்பு. #15 விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள் அரும் பித்து அளைந்து உள் அயர்ந்தே திரும்பி விழி நீர் கொண்டும் காணாத நித்தன் ஒற்றியூரன் அடிச் சீர் கொண்டு நெஞ்சே திகழ். #16 திகழ்கின்ற ஞானச் செழும் சுடரை வானோர் புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் நிகழ்கின்ற ஒற்றிக் கனியை உலகு உடைய நாயகத்தை வெற்றித் துணையை நெஞ்சே வேண்டு. #17 வேண்டாமை வேண்டுவது மேவாத் தவம்_உடையோர் தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை ஒன்றுவ போல் நெஞ்சே நீ ஒன்றி ஒற்றியூரன்-பால் சென்று தொழு கண்டாய் தினம். #18 தினம்-தோறும் உள் உருகிச் சீர் பாடும் அன்பர் மனம்-தோறும் ஓங்கும் மணியை இனம்-தோறும் வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர்ப் போத மலரை நெஞ்சே போற்று. #19 போற்றார் புரம் பொடித்த புண்ணியனை விண்ணவர்கள் ஆற்றாத நஞ்சம் உண்ட ஆண்தகையைக் கூற்று ஆவி கொள்ளும் கழல் கால் குரு மணியை ஒற்றி இடம் கொள்ளும் பொருளை நெஞ்சே கூறு. #20 கூறு உமையாட்கு ஈந்து அருளும் கோமானைச் செம் சடையில் ஆறு மலர்க் கொன்றை அணிவோனைத் தேறு மனம் உள்ளவர்கட்கு உள்ளபடி உள்ளவனை ஒற்றி அமர் நள்ளவனை நெஞ்சமே நாடு. #21 நாடும் சிவாய நம என்று நாடுகின்றோர் கூடும் தவ நெறியில் கூடியே நீடும் அன்பர் சித்த மனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் உத்தமனை நெஞ்சமே ஓது. #22 ஓது நெறி ஒன்று உளது என் உள்ளமே ஓர்தி அது தீது நெறி சேராச் சிவ நெறியில் போது நெறி ஓதம் பிடிக்கும் வயல் ஒற்றியப்பன் தொண்டர் திருப் பாதம் பிடிக்கும் பயன். #23 பயன் அறியாய் நெஞ்சே பவம் சார்தி மாலோடு அயன் அறியாச் சீர் உடைய அம்மான் நயன்_அறியார் உள்ளத்து அடையான் உயர் ஒற்றியூரவன் வாழ் உள்ளத்தவரை உறும். #24 தவராயினும் தேவர்-தாமாயினும் மற்று எவராயினும் நமக்கு இங்கு என்னாம் கவராத நிந்தை அகன்றிட என் நெஞ்சமே ஒற்றியில் வாழ் எந்தை அடி வணங்காரேல். #25 ஏலக் குழலார் இடைக் கீழ்ப் படும் கொடிய ஞாலக் கிடங்கரினை நம்பாதே நீல மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் பணி கண்டாய் அன்னோன் பதம். #26 பதம் தருவான் செல்வப் பயன் தருவான் மன்னும் சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என் நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே தஞ்சம் என்றால் ஒற்றியப்பன்-தான். @31. சிகாமணி மாலை #1 வல்_வினையேனை இ வாழ்க்கைக் கடல்-நின்றும் வள்ளல் உன்றன் நல் வினை வாழ்க்கைக் கரையேற்றி மெய் அருள் நல்கு கண்டாய் கொல் வினை யானை உரித்தோய் வயித்தியநாத குன்றாச் செல் வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே #2 பொய்யே புலம்பிப் புழு தலை நாயின் புறத்தில் உற்றேன் மெய்யே உரைக்கும் நின் அன்பர்-தம் சார்பை விரும்புகிலேன் பை ஏல் அரவு_அனையேன் பிழை நோக்கிப் பராமுகம் நீ செய்யேல் வயித்தியநாதா அமரர் சிகாமணியே #3 கல்லேன் மனக் கருங்கல்லேன் சிறிதும் கருத்து அறியாப் பொல்லேன் பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறை சிறிதும் இல்லேன் எனினும் நின்-பால் அன்றி மற்றை இடத்தில் சற்றும் செல்லேன் வயித்தியநாதா அமரர் சிகாமணியே #4 ஆர்ப்பார் கடல் நஞ்சு அமுது செய்தாய் நின் அடிக்கு அன்பு இன்றி வேர்ப்பார்-தமக்கும் விருந்து அளித்தாய் வெள்ளி வெற்பு எடுத்த கார்ப்பாளனுக்கும் கருணைசெய்தாய் கடையேன் துயரும் தீர்ப்பாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே #5 நானே நினக்குப் பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர்த் தாள் தானே எனக்குத் துணைசெயல் வேண்டும் தயாநிதியே கோனே கரும்பின் சுவையே செம் பாலொடு கூட்டும் நறும் தேனே வயித்தியநாதா அமரர் சிகாமணியே #6 மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால் வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்கு கண்டாய் உருவாய் அருவும் ஒளியும் வெளியும் என்று ஓத நின்ற திரு ஆர் வயித்தியநாதா அமரர் சிகாமணியே #7 தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றித் தட_முலையார் அவ நேயம் மேற்கொண்டு அலைகின்ற பேதைக்கு அருள் புரிவாய் நவ நேயம் ஆகி மன_வாக்கு இறந்த நடு ஒளியாம் சிவனே வயித்தியநாதா அமரர் சிகாமணியே #8 ஐ_வாய்_அரவில் துயில்கின்ற மாலும் அயனும் தங்கள் கை வாய் புதைத்துப் பணிகேட்க மேவும் முக்கண் அரசே பொய் வாய் விடா இப் புலையேன் பிழையைப் பொறுத்து அருள் நீ செய்வாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே #9 புல்வாயின் முன்னர்ப் புலிப் போத்து என என் முன் போந்து நின்ற கல் வாய் மனத்தரைக் கண்டு அஞ்சினேனைக் கடைக்கணிப்பாய் அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும் செல்வா வயித்தியநாதா அமரர் சிகாமணியே #10 ஆர்த்து ஆர் கடல் நஞ்சு அமுது செய்தாய் என்னை அன்பர்கள்-பால் சேர்த்தாய் என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திரு_அருள் கண் பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த தீர்த்தா வயித்தியநாதா அமரர் சிகாமணியே #11 அற_தாயை ஓர் புடை கொண்டு ஓர் புடை மண் அளந்த முகில்_ நிறத்தாயை வைத்து உலகு எல்லாம் நடத்தும் நிருத்த அண்ட_ புறத்தாய் என் துன்பம் துடைத்து ஆண்டு மெய் அருள் போதம் தந்த திறத்தாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே #12 அலை ஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்-தம் நிலை ஓர்சிறிதும் அறியேன் எனக்கு உன் நிமல அருள் மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற சிலையோய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே #13 ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும் பிணியால் நான் கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்தியநாத என்றே வான் கொண்ட நின் அருள் சீர் ஏத்துகின்ற வகை அறியேன் தேன் கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே #14 களி வேதனும் அந்தக் காலனும் என்னைக் கருத ஒட்டா ஒளிவே தரத் திருவுள்ளம் செய்வாய் அன்பர் உள்ளம் என்னும் தளி வேதனத்து உறும் தற்பரமே அருள் தண் அமுதத் தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே #15 மால் விடை மேல் கொண்டு வந்து எளியேனுடை வல்_வினைக்கு மேல் விடை ஈந்திட வேண்டும் கண்டாய் இதுவே சமயம் நீல் விடம் உண்ட மிடற்றாய் வயித்தியநாத நின்-பால் சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே @32. கலி முறையீடு #1 பொய் விடுகின்றிலன் என்று எம் புண்ணியா கைவிடுகின்றியோ கடையனேன்-தனைப் பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ பெய் விடம் அனைய என் பிழை பொறுக்கவே. #2 பொறுக்கினும் அன்றி என் பொய்மை நோக்கியே வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டு பின் சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே. #3 செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப் புல்லலும் கொண்ட என் பொய்மை கண்டு நீ கொல்லலும் தகும் எனைக் கொன்றிடாது அருள் மல்லலும் தகும் சடா_மகுட வள்ளலே. #4 வள்ளலே நின் அடி_மலரை நண்ணிய உள்ளலேன் பொய்மையை உன்னி என்னை ஆட் கொள்ளலே இன்று எனில் கொடிய என்றனை எள்ளலே அன்றி மற்று என் செய்கிற்பனே. #5 செய்ய நன்று அறிகிலாச் சிறியனேன்-தனைப் பொய்யன் என்று எண்ணி நீ புறம்பொழிப்பையேல் வைய நின்று ஐயவோ மயங்கல் அன்றி யான் உய்ய நின்று உணர்குவது ஒன்றும் இல்லையே. #6 இல்லை என்பது இலா அருள்_வெள்ளமே தில்லை மன்றில் சிவ_பரஞ்சோதியே வல்லை யான் செயும் வஞ்சம் எலாம் பொறுத்து ஒல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே. #7 இல்லையே என்பது இங்கு இல்லை என்று அருள் நல்லையே நீ அருள் நயந்து நல்கினால் கல்லையே அனைய என் கன்ம நெஞ்சகம் ஒல்லையே வஞ்சம் விட்டு உவக்கும் உண்மையே #8 உண்மையே அறிகிலா ஒதியனேன் படும் எண்மையே கண்டும் உள் இரக்கம் வைத்திலை அண்மையே அம்பலத்து ஆடும் ஐய நீ வண்மையே அருள் பெரு வாரி அல்லையோ #9 அல்லல் அம் கடலிடை ஆழ்ந்த நாயினேன் சொல் அலங்கு அடல் விடைத் தோன்றல் நின் அருள் மல்லல் அம் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால் கல் அலங்கு அடல் மனம் கனிதல் மெய்மையே. #10 மெய்மையே அறிகிலா வீணனேன் இவன் உய்மையே பெற உனை உன்னி ஏத்திடாக் கைமையே_அனையர்-தம் கடையில் செல்லவும் பொய்மையே உரைக்கவும் புணர்த்தது என்-கொலோ. #11 என்னுடை வஞ்சக இயற்கை யாவையும் பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின் றன்னுடை அன்பர்-தம் சங்கம் சார்ந்து நான் நின்னுடைப் புகழ்-தனை நிகழ்த்தச் செய்கவே. #12 நிகழும் நின் திரு_அருள் நிலையைக் கொண்டவர் திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன் அகழும் மால் ஏனமாய் அளவும் செம் மலர்ப் புகழுமாறு அருளுக பொறுக்க பொய்மையே. @33. எதிர்கொள் பத்து #1 ஆனந்தக் கூத்தனை அம்பலத்தானை அற்புதத் தேனை எம் ஆதிப் பிரானைத் தேன் நந்து அக் கொன்றை அம் செஞ்சடையானைச் செங்கண் விடையனை எம் கண்மணியை மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை ஈனம் தக்காது எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே #2 அடுத்தவர்க்கு எல்லாம் அருள்_புரிவானை அம்பலக் கூத்தனை எம் பெருமானைத் தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானைச் சங்கரன்-தன்னை என் தந்தையைத் தாயைக் கடுத் ததும்பும் மணி_கண்டத்தினானைக் கண்_நுதலானை எம் கண் அகலானை எடுத்து எனைத் துன்பம் விட்டு ஏறவைத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே #3 மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை ஆலம் அமுதின் அருந்தல் செய்தானை ஆதியை ஆதியோடு அந்தம்_இலானைக் காலன் வருந்தி விழ உதைத்தானைக் கருணை_கடலை என் கண்_அனையானை ஏல மணி குழலாள்_இடத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே #4 சுந்தரர்க்காக முன் தூது_சென்றானைத் தூயனை யாவரும் சொல்ல_அரியானைப் பந்தம் அறுக்கும் பராபரன்-தன்னைப் பத்தர் உளம்கொள் பரஞ்சுடரானை மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை எம்-தமை ஆண்டு நல் இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே #5 அன்பர்கள் வேண்டும்-அவை அளிப்பானை அம்பலத்தே நடம் ஆடுகின்றானை வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானைத் துன்பம் தவிர்த்துச் சுகம் கொடுப்பானைச் சோதியைச் சோதியுள் சோதியை நாளும் என் பணிகொண்டு எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே #6 கண்_நுதலானை என் கண் அமர்ந்தானைக் கருணாநிதியைக் கறை_மிடற்றானை ஒள் நுதலாள் உமை வாழ் இடத்தானை ஒருவனை ஒப்பு இலா உத்தமன்-தன்னை நண்ணுதல் யார்க்கும் அருமையினானை நாதனை எல்லார்க்கும் நல்லவன்-தன்னை எண்ணுதல் செய்து எனக்கு இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே #7 வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானைக் கள் விரை ஆர் மலர்க் கொன்றையினானைக் கற்பகம்-தன்னை முக் கண் கொள் கரும்பை உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை எள் வினை ஒன்றும் இலாதவன்-தன்னை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே #8 பெண் அமர் பாகனைப் பேர்_அருளோனைப் பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னைக் கண் அமர் நெற்றிக் கடவுள் பிரானைக் கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் பண் அமர் பாடல் பரிசு அளித்தானைப் பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை எண் அமராத எழில்_உடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே #9 வளம் கொளும் தில்லைப் பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னைக் களங்கம்_இலாத கருத்து_உடையானைக் கற்பனை முற்றும் கடந்துநின்றானை உளம்கொளும் என்றன் உயிர்த் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை இளம்பிறை சூடிய செஞ்சடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே #10 குற்றம் எல்லாம் குணமாகக் கொள்வானைக் கூத்து_உடையானைப் பெண் கூறு_உடையானை மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானைப் பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானைப் பிறை முடியோனைப் பெம்மானை எம்மானை எற்றி என் துன்பம் எலாம் ஒழித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே @34. நெஞ்சொடு நேர்தல் #1 அணி கொள் கோவணக் கந்தையே நமக்கு இங்கு அடுத்த ஆடை என்று அறி மட நெஞ்சே கணி கொள் மா மணிக் கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணிக் கண்டிகை கண்டாய் பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமைச் சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே. #2 செய்த நன்றி மேல் தீங்கு இழைப்பாரில் திருப்பும் என்றனைக் திருப்புகின்றனை நீ பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய் கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய் கொடிய நெஞ்சமே மடியகிற்றிலையே. #3 இலை எனாது அணுவளவும் ஒன்று ஈய எண்ணுகின்றிலை என் பெறுவாயோ கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அக் கூற்றினும் கொடியாய் தலையின் மாலை தாழ் சடை உடைப் பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் புலையினார்கள்-பால் போதியோ வீணில் போகப்போக இப் போக்கினில் அழிந்தே. #4 அழிந்த வாழ்க்கையின் அவலம் இங்கு அனைத்தும் ஐயம் இன்றி நீ அறிந்தனை நெஞ்சே கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே. #5 தேன் நெய் ஆடிய செம் சடைக் கனியைத் தேனை மெய் அருள் திருவினை அடியர் ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர் கோனை ஆனந்தக் கொழும் கடல் அமுதைக் கோமளத்தினைக் குன்ற_வில்லியை எம் மானை அம்பல_வாணனை நினையாய் வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே. #6 இன்னும் எங்ஙனம் ஏகுகின்றனையோ ஏழை நெஞ்சமே இங்கும்அங்கும்-தான் முன்னை நாம் பிறந்து உழன்ற அத் துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் மற்று நாம் பிறவா வகை வருமே. #7 பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் துறந்து நாம் பெறும் சுகத்தினை அடையச் சொல்லும் வண்ணம் நீ தொடங்கிடில் நன்றே. #8 நன்று செய்வதற்கு உடன்படுவாயேல் நல்ல நெஞ்சமே வல்ல இவ்வண்ணம் இன்று செய்தி நீ நாளை என்பாயேல் இன்று இருந்தவர் நாளை நின்றிலரே ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார் அன்று முன்னரே கடந்தனர் அன்றி அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே. #9 அன்றின் நேர்கிலை நம்முடைப் பெருமான் அஞ்செழுத்தையும் அடிக்கடி மறந்தாய் ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர் முன்றில் காத்தனை அவ்வளவேனும் முயன்று காத்திலை முன்னவன் கோயில் துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே. #10 தூய நெஞ்சமே சுகம் பெற வேண்டில் சொல்லுவாம் அது சொல் அளவு அன்றால் காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரைக் கைவிடுத்ததன் மேல் பாய ஆணவப் பகை கெட முருக்கிப் பகல் இரா இலாப் பாங்கரின் நின்றே ஆய ஆனந்தக் கூத்து உடைப் பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே. @35. நெஞ்சறை கூவல் #1 கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கயப் பதத்தார் ஒண் கண் மாதரார் நடம் பயில் ஒற்றியூர் அமர்ந்து வாழ்வுற்றவர்க்கே நம் மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ்ப் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே. #2 கரிய மால் அன்று கரிய மா ஆகிக் கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அப் பேர்-தனை அகலார் உரிய சீர் கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர்-தம் புயம் புனைய வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே. #3 திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர்ப் பதத்தார் கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மைக் காத்து அளிப்பதே கடன் எனக் கொண்டார் உருவின் நின்றவர் அரு என நின்று ஓர் ஒற்றியூரிடை உற்றனர் அவர்க்கு மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர்ப் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே. #4 கரும் பை நாக அணைக் கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் துரும்பை நாட்டி ஓர் விஞ்சையன் போலத் தோன்றி நின்று அவர் துரிசு அறுத்திட்டோன் தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்துத் தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து வரும் பைஞ் சீர்த் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே. #5 வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான் நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மலப் பெருமான் சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித் தூயனால் அவர் துணைத் திரு_தோட்கு மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே. #6 கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகிக் காலில் போந்து முன் காண அரும் முடியார் அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றித் தேவர் காண் அவர் திரு_முடிக் காட்ட மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே. #7 சூழு மால் அயன் பெண்ணுருவெடுத்துத் தொழும்புசெய்திடத் தோன்றி நின்று அவனைப் போழும் வண்ணமே வடுகனுக்கு அருளும் பூத_நாதர் நல் பூரணானந்தர் தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்-தாம் வாழும் கோயிற்குத் திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே. #8 விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் நதியும் கொன்றையும் நாகமும் பிறையும் நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார் பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர்ப் பரமர் காண் அவர்-தாம் வதியும் கோயிற்குத் திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே. #9 குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதைக் கொண்டு அருள் புரிவோர் உளம்கொள் அன்பர்-தம் உள்ளகத்து இருப்போர் ஒற்றியூர் இடம் பற்றிய புனிதர் களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் எனக் கண்டவர் அவர்-தம் வளம் கொள் கோயிற்குத் திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே. #10 பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனைப் பாற்றிய பதத்தார் திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் அணி கொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர் அழகர் அங்கு அவர் அமைந்து வீற்றிருக்கும் மணி கொள் கோயிற்குத் திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே. @36. நெஞ்சைத் தேற்றல் #1 சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி ஒற்றியூர்க்கு இன்று வருதியேல் அங்கு மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து வாழ்கின்றார் அவர் மலர்_அடி வணங்கி நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே. #2 தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து மாது வேண்டிய நடன நாயகனார் வள்ளலார் அங்கு வாழ்கின்றார் கண்டாய் ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே. #3 இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார்-பால் இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ கரக்கின்றோர்களைக் கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும் புரக்கின்றோர் மலர்ப் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலைச் சிலையார் உரக் குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே. #4 கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான் சோலை சூழ் ஒற்றித் தொல் நகர்ப் பெருமான் அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான் வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே. #5 இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே பலவு வாழை மாக் கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி நிலவு வெண் மதிச் சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே. #6 மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே. #7 மறப்பு_இலாச் சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும் இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே வறப்பு_இலான் அருள்_கடல் அவன் அமர்ந்து வாழும் ஒற்றியின் வருதி என்னுடனே. #8 காலம் செல்கின்றது அறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலை காண் நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் ஏலம் செல்கின்ற குழலி ஓர் புடையார் இருக்கும் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி ஞாலம் செல்கின்ற துயர் கெட வரங்கள் நல்குவார் அவை நல்குவன் உனக்கே. #9 சென்று நீ புகும் வழி எலாம் உன்னைத் தேட என் வசம் அல்ல என் நெஞ்சே இன்று அரைக் கணம் எங்கும் நேர்ந்து ஓடாது இயல்கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி அன்று வானவர் உயிர்பெற நஞ்சம் அருந்தி நின்ற எம் அண்ணலாரிடத்தே நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே. #10 கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல் அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனை நீ அம்மை இம்மையும் அகன்றிடாமையினால் தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித் தலத்தினுக்கு இன்று என்றன்னுடன் வருதி மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே. @37. நெஞ்சறிவுறூஉ #1 என்னது அன்று காண் வாழ்க்கையுள் சார்ந்த இன்ப_துன்பங்கள் இரு_வினைப் பயனால் மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் உன்ன நல் அமுதாம் சிவபெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க்கு இன்றே இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. #2 துன்ப வாழ்வினைச் சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய் வன்பு-அதாகிய நீயும் என்னுடனே வருதியோ அன்றி நிற்றியோ அறியேன் ஒன்பதாகிய உரு உடைப் பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கு இன்றே இன்ப வாழ்வு உறச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. #3 ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி_மலர் நினையாய் வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய் கூட்டுகின்ற நம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர்க் கோயில் சூழ்ந்து இன்பம் ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. #4 வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே நஞ்சம் ஆயினும் உண்குவை நீ-தான் நானும் அங்கு அதை நயப்பது நன்றோ தஞ்சம் என்றவர்க்கு அருள்தரும் பெருமான் தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக்கு இன்றே எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. #5 உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே உப்பிலிக்கு உவந்து உண்ணுகின்றவர் போல் வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே தண்மை மேவிய சடை உடைப் பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. #6 நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும் நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே ஆடும் அம்பல_கூத்தன் எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத்து இன்றே ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. #7 கூறும் ஓர் கணத்து எண்ணுறும் நினைவு கோடிகோடியாய்க் கொண்டு அதை மறந்து மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில் ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால் ஈறு_இல் இன்புறச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. #8 யாது கண்டனை அதனிடத்தெல்லாம் அணைகின்றாய் அவமாக நிற்கு ஈந்த போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் கோது நீக்கி நல் அருள்தரும் பெருமான் குலவும் ஒற்றியூர்க் கோயிலுக்கு இன்றே ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. #9 விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் துச்சை நீ படும் துயர் உனக்கு அல்லால் சொல் இறந்த நல் சுகம் பலித்திடுமோ பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால் இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. #10 தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் நீக்கமுற்றிடா நின்மலன் அமர்ந்து நிகழும் ஒற்றியூர் நியமத்திற்கு இன்றே ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே. @38 நெடுமொழி வஞ்சி #1 வார்க் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப் பார்க்கின்றாய் எனைக் கெடுப்பதில் உனக்குப் பாவமே அலால் பலன் சிறிது உளதோ ஈர்க்கின்றாய் கடும் காமமாம் புலையா இன்று சென்று நான் ஏர்பெறும் ஒற்றி ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே. #2 கொடிய மாதர்கள் இடையுறும் நரகக் குழியில் என்றனைக் கொண்டுசென்று அழுத்திக் கடிய வஞ்சனையால் எனைக் கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே இடிய நெஞ்சகம் இடர் உழந்து இருந்தேன் இன்னும் என்னை நீ ஏன் இழுக்கின்றாய் ஒடிவு இல் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே. #3 பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனைப் பிடித்து அழ வீழ்த்தி வாதையுற்றிடவைத்தனை ஐயோ மதி இல் காமமாம் வஞ்சக முறியா ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் ஓதும் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே. #4 கோவம் என்னும் ஓர் கொலைப் புலைத் தலைமைக் கொடியனே எனைக் கூடி நீ நின்ற பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண் சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாய் எனில் சதுர்_மறை முழக்கம் ஓவு இல் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே #5 சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள் ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் இரக்கின்றோர் தரின் அது கொளற்கு இசைவாய் சோர்ந்திடாது நான் துய்ப்பவும் செய்யாய் சுகம் இலாத நீ தூர நில் இன்றேல் ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே. #6 மோகம் என்னும் ஓர் மூடரில் சிறந்தோய் முடிவு இலாத் துயர் மூல இல் ஒழுக்கில் போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம் சோக_வாரியில் அழுந்தவும் இயற்றிச் சூழ்கின்றாய் எனைத் தொடர்ந்திடேல் தொடரில் ஓகை ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே. #7 மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை அடியார்க்கு உதவும் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே. #8 அமைவு அறிந்திடா ஆணவப் பயலே அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண் எமை நடத்துவோன் ஈது உணராமல் இன்று நாம் பரன் இணை அடி தொழுதோம் கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் எனக் கருதிட மயக்கேல் உமையன் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே. #9 கருமையாம் அகங்கார மர்க்கடவா கடையனே உனைக் கலந்ததனாலே அருமையாக நாம் பாடினோம் கல்வி அற அறிந்தனம் அருளையும் அடைந்தோம் இருமை இன்பமும் பெற்றனம் என்றே எனை மதித்து நான் இழிவடைந்தனன் காண் ஒருமை ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே. #10 வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய் தண்மை இன்று இதற்கு இது எனத் துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய் அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும் உண்மை ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே. @39. பற்றின் திறம் பகர்தல் #1 வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம் ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக் கோணரை முருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே. #2 மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்து நின்று ஏத்தாப் பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகை சேர் கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே. #3 அண்டனை எண் தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல கண்டனை அடியர் கருத்தனைப் பூத கணத்தனைக் கருதி நின்று ஏத்தா மிண்டரைப் பின்றா வெளிற்றரை வலிய வேற்றரைச் சீற்றரைப் பாபக் குண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே. #4 நாதனைப் பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனைச் சாம கீதனை ஒற்றிக்கு இறைவனை எங்கள் கேள்வனைக் கிளர்ந்து நின்று ஏத்தாத் தீதரை நரகச் செக்கரை வஞ்சத்து இருட்டரை மருட்டரைத் தொலையாக் கோதரைக் கொலை செய் கோட்டரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே. #5 நம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனைக் கச்சிக் கம்பனை ஒற்றிக் கங்கை வேணியனைக் கருத்தனைக் கருதி நின்று ஏத்தா வம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக் கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே. #6 சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றை_தாரனைச் சராசர சடத்துள் உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தாக் கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே. #7 கஞ்சனைச் சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனைக் கண்ணனைக் காத்த தஞ்சனை ஒற்றி_தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்து நின்று ஏத்தா வஞ்சரைக் கடைய மடையரைக் காம_மனத்தரைச் சினத்தரை வலிய நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே. #8 தாமனை மழு மான் தரித்த செங்கரனைத் தகையனைச் சங்கரன்-தன்னைச் சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்து நின்று ஏத்தா ஊமரை நீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகை கொள் நாமரை நரக_நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே. #9 ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத் தேசனைத் தலைமை தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்து நின்று ஏத்தா நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரைத் தீயரைத் தரும_ நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே. #10 நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச் சுத்தனை ஒற்றித் தலம் வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்து நின்று ஏத்தா மத்தரைச் சமண_வாதரைத் தேர_வறியரை முறியரை வைண_ நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே. @40. அடிமைத் திறத் தலைசல் #1 தேவர் அறியார் மால் அறியான் திசை மா முகத்தோன்-தான் அறியான் யாவர் அறியார் திருவொற்றி அப்பா அடியேன் யாது அறிவேன் மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும் காவல் அமுதும் நறும் தேனும் கைப்ப இனிக்கும் நின் புகழே. #2 புகழே விரும்பிப் புலன் இழந்தேன் போந்து உன் பதத்தைப் போற்றுகிலேன் இகழேன் எனை நான் ஒற்றி அப்பா என்னை மதித்தேன் இருள் மனத்தேன் திகழ் ஏழ் உலகில் எனைப் போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை அகழேன் எனினும் எனை ஆளாது அகற்றல் அருளுக்கு அழகு அன்றே. #3 அன்றும் அறியார் மா தவரும் அயனும் மாலும் நின் நிலையை இன்றும் அறியார் அன்றி அவர் என்றும் அறியார் என்னில் ஒரு நன்றும் அறியேன் நாய்_அடியேன் நான் எப்படி-தான் அறிவேனோ ஒன்றும் நெறி ஏது ஒற்றி அப்பா ஒப்பார் இல்லா உத்தமனே. #4 ஒப்பார் இல்லா ஒற்றி அப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்-தம் வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் இப் பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு விப்பார் நமனார் என்பதை நான் நினையாது அறிவை விடுவித்தேனே. #5 விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை அடுத்தேன் ஒற்றி அப்பா உன் அடியை நினையேன் அலமந்தேன் படுத்தே நமன் செக்கிடும்போது படிறேன் யாது படுவேனோ. #6 படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனிச் சிறிதும் கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி அடுவேன்_அல்லேன் திருவொற்றி அப்பா உன்றன் அருள் உண்டே #7 உண்டோ எனைப் போல் மதி_இழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய திண் தோள் இலங்கும் திரு_நீற்றைக் காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் எண் தோள் உடையாய் என்று இரங்கேன் இறையும் திரும்பேன் இ அறிவைக் கொண்டே உனை நான் கூடுவன் நின் குறிப்பு ஏதொன்றும் அறியேனே. #8 அறியேன் உன்றன் புகழ்ப் பெருமை அண்ணா ஒற்றி அப்பா நான் சிறியேன் எனினும் நினை அன்றித் தெறியேன் மற்றோர் தேவர்-தமை வெறியேன் பிழையைக் குறித்து எனைக் கைவிட்டால் என் செய்வேன் அடியேன் நெறியே தருதல் நின் கடன் காண் நின்னைப் பணிதல் என் கடனே. #9 கடனே அடியர்-தமைக் காத்தல் என்றால் கடையேன் அடியன் அன்றோ உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ளத் துயரும் தவிர்த்திலையே விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே அடன் ஏர் விடையாய் திருவொற்றி அப்பா உனை நான் அயர்ந்திலனே. #10 இலனே மற்று ஓர் துணை சிறிதும் என்னே காமம் எனும் கடலில் மலனேன் வருந்தக் கண்டு இருத்தல் மணியே அருளின் மரபு அன்றே அலனே அயலான் அடியேன் நான் ஐயா ஒற்றி அப்பா நல் நலன் நேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன். #11 நாடி அலுத்தேன் என்னளவோ நம்பா மன்றுள் நன்கு நடம் ஆடி மகிழும் திருவொற்றி அப்பா உன்றன் அருள்_புகழைக் கோடி அளவில் ஒரு கூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும் தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே. @41. அவத் தொழிற் கலைசல் #1 அணங்கு_அனார் களபத் தன மலைக்கு இவரும் அறிவிலேன் என்பு காத்து உழலும் சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே உணங்கு வெண் தலைத் தார் புனை திருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே. #2 தேவரே அயனே திரு நெடுமாலே சித்தரே முனிவரே முதலா யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் தா_இல் வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர் ஓவு_இல் மா தவம் செய்து ஓங்கு சீர் ஒற்றியூர் அமர்ந்து அருள்செயும் ஒன்றே. #3 ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம் நொந்து இளைக்கின்றது இன்னும் நன்று நின் தன்மை நான் அறிந்து ஏத்தல் நாய் அரசாளல் போல் அன்றோ சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே. #4 மணித் தலை நாகம் அனைய வெம் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கிப் பிணித் தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ கணித்தலை அறியாப் பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே அணித் தலை அடியர்க்கு அருள் திருவொற்றி அப்பனே செப்ப அரும் பொருளே. #5 ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற இப் பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும் துப்புரவு_ஒழிந்தோர் உள்ளகத்து ஓங்கும் சோரியே ஒற்றியூர்த் துணையே. #6 துணை_இலேன் நினது திரு_அடி அல்லால் துட்டனேன் எனினும் என்றன்னை இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் எனச் செயல் நின் அருள் இயல்பே அணை_இலாது அன்பர் உள்ளகத்து ஓங்கும் ஆனந்த_வெள்ளமே அரசே பணையில் வாளைகள் பாய் ஒற்றி அம் பதியில் பரிந்து அமர்ந்து அருள்செயும் பரமே. #7 பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மலக் கங்குல் இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன் எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே. #8 வாழ்வது நின்றன் அடியரோடன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன் தாழ்வது நினது தாட்கு அலால் மற்றைத் தாட்கு எலாம் சரண் எனத் தாழேன் சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை ஆள்வது கருதின் அன்றி என் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே. #9 ஐயனே மாலும் அயனும் நின்று அறியா அப்பனே ஒற்றியூர் அரசே மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப் பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதிப் பொன்_அருள் செயாதிருப்பாயோ கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்து அருள்செய்வது உன் கடனே. #10 செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை வைவது உன் அடியர் அன்றி இ உலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே. @42. நாள் அவத்து அலைசல் #1 இன்று_இருந்தவரை நாளை இ உலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ என்று இரும் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டு உடுத்து அவமே சென்று இருந்து உறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ மன்று இருந்து ஓங்கும் மணிச் சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே. #2 தாவியே இயமன் தமர் வரும் அ நாள் சம்பு நின் திரு_அருள் அடையாப் பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண் கூவியே எனக்கு உன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய் வகை அறியேன் வாவி ஏர்பெறப் பூஞ் சோலை சூழ்ந்து ஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே. #3 நீரின் மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பிப் பாரின் மேல் அலையும் பாவியேன்-தனக்குப் பரிந்து அருள்பாலியாய் என்னில் காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அக் காலன் வந்திடில் எது செய்வேன் வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே. #4 கரும் கணம் சூழக் கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான் வரும் கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என் செய வல்லேன் பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர் மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான் புகும் ஒற்றியூர் வாழ்வே. #5 கன்னியர் அளகக் காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ அன்னியன் என்றே கழித்திடில் உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா என் இயல் அறியேன் நமன்_தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ மன்னிய வன்னி மலர்ச் சடை மருந்தே வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே. #6 பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையைப் பாடுதல் ஒழிந்து நீர்ப் பொறி போல் நசிக்கும் இ உடலை நம்பினேன் என்னை நமன்_தமர் வருத்தில் என் செய்கேன் விசிக்கும் நல் அரவக் கச்சினோய் நினது மெய் அருள் அலது ஒன்றும் விரும்பேன் வசிக்கும் நல் தவத்தோர்க்கு அருள்செய ஓங்கி வளம் பெறும் ஒற்றியூர் வாழ்வே. #7 கான்ற சோறு அருந்தும் சுணங்கனின் பல நாள் கண்ட புன் சுகத்தையே விரும்பும் நான்ற நெஞ்சகனேன் நமன்_தமர் வரும் நாள் நாணுவது அன்றி என் செய்கேன் சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா மான் தனிக் கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே. #8 மடிக்குறும் நீர் மேல் எழுத்தினுக்கு இடவே மை வடித்து எடுக்குநர் போல நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன் பாவியேன்-தனக்கு அருள் புரியாய் வடிக்குறும் தமிழ் கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே. #9 அங்கையில் புண் போல் உலக வாழ்வு அனைத்தும் அழிதரக் கண்டு நெஞ்சு அயர்ந்தே பங்கமுற்று அலைவதன்றி நின் கமல_பாதத்தைப் பற்றிலேன் அந்தோ இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய் மங்கை ஓர் புடை கொள் வள்ளலே அழியா வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே. #10 கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும் குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே. @43. அவல மதிக்கு அலைசல் #1 மண்ணை மனத்துப் பாவியன் யான் மடவாருள்ளே வதிந்து அளிந்த புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதி போல் இருக்கின்றேன் தண் நல் அமுதே நீ என்னைத் தடுத்து இங்கு ஆளத் தக்கதுவே. #2 தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய் துக்கம்-அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன் எனில் மிக்க அடியார் என் சொல்லார் விண்ணோர் மண்ணோர் என் புகலார் செக்கர் நிறத்துப் பொன்_மேனித் திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே. #3 கரும்பே ஒற்றியூர் அமர்ந்த கனியே உன்றன் கழல் அடியை விரும்பேன் அடியார் அடி_தொண்டில் மேவேன் பொல்லா விடம் அனைய பெரும் பேய் மாதர் பிணக் குழியில் பேதை மனம் போந்திடச் சூறைத் துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணை ஒன்று அறியேன் துனியேனே. #4 துனியே பிறத்தற்கு ஏது எனும் துட்ட மடவார் உள் ததும்பும் பனி ஏய் மலம் சூழ் முடை நாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய் கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றிக் காவலனே. #5 வலமே உடையார் நின் கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன் மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர்ச் சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பு அறியேன் நலமே ஒற்றி நாடு_உடையாய் நாயேன் உய்யும் நாள் என்றோ. #6 நாளை வருவது அறியேன் நான் நஞ்சம் அனைய நங்கையர்-தம் ஆளை அழுத்தும் நீர்க் குழியில் அழுந்தி அழுந்தி எழுந்து அலைந்தேன் கோளை அகற்றி நின் அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே. #7 முத்தி முதலே முக்கண் உடை மூரிக் கரும்பே நின் பதத்தில் பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில் தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே. #8 மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்-தம் தனமே என்னும் மலை ஏறிப் பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் இனமே என்னை நீ அன்றி எடுப்பார் இல்லை என் அரசே. #9 என்னைக் கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்- தன்னைக் கொடுத்தார் நான் அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லது செம் பொன்னைக் கொடுத்தும் பெற அரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன் இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே. #10 எற்றுக்கு அடியர் நின்றது நின் இணைத் தாள்_மலரை ஏத்த அன்றோ மற்று இக் கொடியேன் அஃது இன்றி மடவார் இடை வாய் மணிப் பாம்பின் புற்றுக்கு உழன்றேன் என்னே என் புந்தி எவர்க்குப் புகல்வேனே கற்றுத் தெளிந்தோர் புகழ் ஒற்றி-கண் ஆர்ந்து ஓங்கும் கற்பகமே. #11 ஓங்கும் பொருளே திருவொற்றியூர் வாழ் அரசே உனைத் துதியேன் தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து அலைக்கத் தூங்கும் மடவார் புலை நாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன் வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே. @44. ஆனா வாழ்வின் அலைசல் #1 துள்ளி வாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக் கொள்ளிவாய்ப் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன் உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் அள்ளி வாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே. #2 ஒற்றியூர் அமரும் ஒளி கெழு மணியே உன் அடி உள்கி நின்று ஏத்தேன் முற்றி ஊர் மலினக் குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறைக் குவையைச் சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் எனச் சூழ்ந்து அழி உடலைப் பற்றி ஊர் நகைக்கத் திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே. #3 அரியது நினது திரு_அருள் ஒன்றே அ அருள் அடைதலே எவைக்கும் பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம் கூட்டிச் சரி எனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப் பிரியமுற்று அலைந்தேன் ஏழை நான் ஒற்றிப் பெரும நின் அருள் எனக்கு உண்டே. #4 பெரும நின் அருளே அன்றி இ உலகில் பேதையர் புழு மலப் பிலமாம் கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன் தரும_வாரிதியே தடம் பணை ஒற்றித் தலத்து அமர் தனி முதல் பொருளே துரும வான் அமுதே அடியனேன்-தன்னைச் சோதியாது அருள்வது உன் பரமே. #5 அருள்வது உன் இயற்கை உலகு எலாம் அறியும் ஐயவோ நான் அதை அறிந்தும் மருள்வது என் இயற்கை என் செய்வேன் இதனை மனம்கொளாது அருள் அருளாயேல் தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கைத் திடர் மலைச் சிகரத்தில் ஏறி உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ . #6 உண்டு நஞ்சு அமரர் உயிர்பெறக் காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னைக் கண்டு நெஞ்சு உருகிக் கண்கள் நீர் சோரக் கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் வண்டு நின்று அலைக்கும் குழல் பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கிக் குண்டு நீர் ஞாலத்திடை அலைகின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே. #7 அன்று நீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்ட ஆரூரனார் உன்னைச் சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கிச் சென்ற நின் கருணையைக் கருதி ஒன்று-தோறு உள்ளம் உருகுகின்றனன் காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்து என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனைக் கைவிடேல் இனியே. #8 இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் கனிய அக் கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் துனிய இ உடல்-கண் உயிர் பிரிந்திடுங்கால் துணை நினை அன்றி ஒன்று அறியேன் தனிய மெய்ப் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே #9 இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக் குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறும் குழி அளற்றில் பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி நிறையும் வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே. #10 நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் பொறி_இலேன் பிழையைப் பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடித் துணை ஏத்தும் அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள் அறுத்தவனே. @45. அருள் திறந்து அலைசல் #1 நறை மணக்கும் கொன்றை நதிச் சடில நாயகனே கறை மணக்கும் திரு நீல_கண்டப் பெருமானே உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ. #2 அலை வளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்தி நிதம் தலை வளைக்கும் செங்கமலத் தாள்_உடையாய் ஆள்_உடையாய் உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றி அப்பா உன்னுடைய மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ. #3 ஆறு அடுத்துச் சென்ற எங்கள் அப்பருக்கா அன்று கட்டுச் சோறு எடுத்துச் சென்ற துணையே சுயம் சுடரே ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனைப் பாரேனோ. #4 சைவத் தலைவர் தவத்தோர்கள்-தம் பெருமான் மெய் வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே உய் வைத்த உத்தமனே ஒற்றி அப்பா உன்னுடைய தெய்வப் புகழ் என் செவி நிறையக் கேளேனோ. #5 பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே தேடுகின்றோர் தேட நிற்கும் தியாக_பெருமானே ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி கண்டு அல்லல் எலாம் தீரேனோ. #6 பூண் நாகம் ஆடப் பொது நடிக்கும் புண்ணியனே சேண் நாகம் வாங்கும் சிவனே கடல் விடத்தை ஊணாக உள் உவந்த ஒற்றி அப்பா மால் அயனும் காணாத நின் உருவைக் கண்டு களியேனோ. #7 கொள்ளுவார் கொள்ளும் குல மணியே மால் அயனும் துள்ளுவார் துள் அடக்கும் தோன்றலே சூழ்ந்து நிறம் உள்ளுவார் உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ. #8 செவ்வண்ண மேனித் திரு_நீற்றுப் பேர்_அழகா எவ்வண்ணம் நின் வண்ணம் என்று அறிதற்கு ஒண்ணாதாய் உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றி அப்பா உன் வடிவம் இவ்வண்ணம் என்று என் இதயத்து எழுதேனோ. #9 மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும் குன்று_உடையாய் என்னக் குறை தவிர்த்த கோமானே ஒன்று_உடையாய் ஊர் விடையாய் ஒற்றி அப்பா என்னுடைய வன் துடையாய் என்று உன் மலர்_அடியைப் போற்றேனோ. #10 குற்றம் செயினும் குணமாக் கொண்டு அருளும் நல் தவர்-தம் உள்ளம் நடு நின்ற நம்பரனே உற்றவர்-தம் நல் துணைவா ஒற்றி அப்பா என் கருத்து முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ. #11 வஞ்ச மடவார் மயக்கும் மயக்கு ஒழிய நஞ்சம் அணி கண்டத்து நாதனே என்றென்று உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய கஞ்ச மலர்_அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ. #12 இன்னல் உலக இருள் நடையில் நாள்-தோறும் துன்ன வரும் நெஞ்சத் துடுக்கு அழிய நல்லோர்கள் உன்னலுறும் தெள் அமுதே ஒற்றி அப்பா என் வாய் உன் றன் அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ. #13 பெண்மணியே என்று உலகில் பேதையரைப் பேசாது என் கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே ஒண் மணியே தேனே என்று ஒற்றி அப்பா உன்றனை நான் பண் மணம் செய் பாட்டில் பரவித் துதியேனோ. #14 மானம்_இலார் நின் தாள் வழுத்தாத வன்_மனத்தார் ஈனர் அவர்-பால் போய் இளைத்தேன் இளைப்பாற ஊனம்_இலார் போற்றுகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய ஞான அடியின் நிழல் நண்ணி மகிழேனோ. #15 கல்லார்க்கு இதம் கூறிக் கற்பு அழிந்து நில்லாமல் எல்லார்க்கும் நல்லவனே என் அரசே நல் தருமம் ஒல்லார் புரம் எரித்த ஒற்றி அப்பா உன் அடிக்கே சொல்லால் மலர் தொடுத்துச் சூழ்ந்து அணிந்து வாழேனோ. #16 கற்பவற்றைக் கல்லாக் கடையரிடம் சென்று அவர் முன் அற்ப அற்றை_கூலிக்கு அலையும் அலைப்பு ஒழிய உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய நல் பதத்தை ஏத்தி அருள் நல் நலம்-தான் நண்ணேனோ. #17 தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில் சிந்தை-தான் சென்று தியங்கி மயங்காமே உந்தை என்போர் இல்லாத ஒற்றி அப்பா உன் அடிக் கீழ் முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ. #18 பொய் ஒன்றே அன்றிப் புறம்பு ஒன்றும் பேசாத வை ஒன்றும் தீ நாற்ற வாயார்க்கும் மேலானேன் உய் என்று அருள் ஈயும் ஒற்றி அப்பா உன்னுடைய மெய் ஒன்று நீற்றின் விளக்கம் அது பாரேனோ. #19 தூக்கமும் முன் தூங்கிய பின் சோறு இலையே என்னும் அந்த ஏக்கமுமே அன்றி மற்று ஓர் ஏக்கம் இலா ஏழையனேன் ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடிக் கீழ் நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ. #20 வாது புரிந்து ஈன மடவார் மதித்திடுவான் போது நிதம் போக்கிப் புலம்பும் புலை நாயேன் ஓதும் மறையோர் குலவும் ஒற்றி அப்பா ஊரனுக்காத் தூதுசென்ற நின் தாள் துணைப் புகழைப் பாடேனோ. #21 பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசைப் பற்று அறுத்தே உன் ஆசை கொண்டே என் ஒற்றி அப்பா நான் மகிழ்ந்து உன் மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றைப் பாரேனோ. #22 கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு துள்ளுண்ட நெஞ்சத் துடுக்கு அடக்கி அன்பர்கள்-தம் உள் உண்ட தெள் அமுதே ஒற்றி அப்பா உன்றனை நான் வெள்ளுண்ட நந்தி விடை மீதில் காணேனோ. #23 பேராத காமப் பிணி கொண்ட நெஞ்சகனேன் வாராத ஆனந்த வாழ்வு வந்து வாழ்ந்திடவே ஓராதார்க்கு எட்டாத ஒற்றி அப்பா உன்னுடைய நீர் ஆர் சடை மேல் நிலவொளியைக் காணேனோ. #24 வன் நெஞ்சப் பேதை மடவார்க்கு அழிந்து அலையும் கல்_நெஞ்சப் பாவியன் யான் காதலித்து நெக்குருகி உன் நெஞ்சத்து உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய வெல் நஞ்சு அணி மிடற்றை மிக்கு வந்து வாழ்த்தேனோ. #25 புண்ணியம் ஓர்போதும் புரிந்து அறியாப் பொய்யவனேன் எண்ணியதோர் எண்ணம் இடர் இன்றி முற்றியிட உள் நிலவு நல் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய தண் நிலவு தாமரைப் பொன்_தாள் முடியில் கொள்ளேனோ. #26 நன்று இது என்று ஓர்ந்தும் அதை நாடாது நல் நெறியைக் கொன்று இது நன்று என்னக் குறிக்கும் கொடியவன் யான் ஒன்றும் மனத்து உள் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய வென்றி மழுப் படையின் மேன்மை-தனைப் பாடேனோ. #27 மண் கிடந்த வாழ்வின் மதி மயக்கும் மங்கையரால் புண் கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம் அற ஒண் கிடந்த முத் தலை வேல் ஒற்றி அப்பா நாரணன்-தன் கண் கிடந்த சேவடியின் காட்சி-தனைக் காணேனோ. #28 கூட்டு விக்குள் மேல் எழவே கூற்றுவன் வந்து ஆவி-தனை வாட்டுவிக்கும் காலம் வரும் முன்னே எவ்வுயிர்க்கும் ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றி அப்பா நீ உலகை ஆட்டுவிக்கும் அம்பலத்து உன் ஆட்டம்-அதைப் பாரேனோ. #29 மின் ஒப்பாம் வாழ்வை வியந்து இடருள் வீழ்ந்து அலைந்தேன் பொன் ஒப்பாய் தெய்வ மணப் பூ ஒப்பாய் என்னினுமே உன் ஒப்பார் இல்லாத ஒற்றி அப்பா உன்னுடைய தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையைப் பாரேனோ. #30 சீலம் அற நிற்கும் சிறியார் உறவிடை நல் காலம் அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்-தம் ஓலம் அற நஞ்சு அருந்தும் ஒற்றி அப்பா உன்னுடைய நீல மணி மிடற்றின் நேர்மை-தனைப் பாரேனோ. #31 சீர் புகழும் மால் புகழும் தேவர் அயன்-தன் புகழும் யார் புகழும் வேண்டேன் அடியேன் அடி நாயேன் ஊர் புகழும் நல் வளம் கொள் ஒற்றி அப்பா உன் இதழித் தார் புகழும் நல் தொழும்பு சார்ந்து உன்-பால் நண்ணேனோ. #32 ஆதவன்-தன் பல் இறுத்த ஐயற்கு அருள் புரிந்த நாத அரனே என்று நாத் தழும்புகொண்டு ஏத்தி ஓத வளம் மிக்க எழில் ஒற்றி அப்பா மண்ணிடந்தும் மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ. #33 கல்லைப் புறம்கண்ட காய் மனத்துக் கைதவனேன் தொல்லைப் பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே ஒல்லைத் திரு_அருள் கொண்டு ஒற்றி அப்பா உன்னுடைய தில்லைப் பொதுவின் திரு_நடனம் காணேனோ. #34 கடையவனேன் கல்_மனத்தேன் கைதவனேன் வஞ்ச நடையவனேன் நாணிலியேன் நாய்க்கு_இணையேன் துன்பு ஒழிய உடையவனே உலகு ஏத்தும் ஒற்றி அப்பா நின்-பால் வந்து அடைய நின்று மெய் குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ. #35 வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில் பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன் ஓதை கடற்கரை வாய் ஒற்றி அப்பா வாழ்த்துகின்றோர் தீதை அகற்றும் உன்றன் சீர் அருளைச் சேரேனோ. #36 பொய்யர்க்கு உதவுகின்ற புன்மையினேன் வன்மை செயும் வெய்யல் கிரிமி என மெய் சோர்ந்து இளைத்து அலைந்தேன் உய்யற்கு அருள்செய்யும் ஒற்றி அப்பா உன் அடி சேர் மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ. @46. திரு விண்ணப்பம் #1 சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில் பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனைப் பரிந்திலீரானால் வழக்கு இருப்பது இங்கு உமக்கும் என்றனக்கும் வகுத்துக் கூறுதல் மரபு மற்று அன்றால் புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ. #2 அழுது நெஞ்சு அயர்ந்து உமை நினைக்கின்றேன் ஐய நீர் அறியாததும் அன்றே கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் எனக் கழறினன் அல்லால் பழுது பேசினது ஒன்று இலை ஒற்றிப் பதியில் வாழ் படம்பக்க நாயகரே பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ. #3 முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்துப் பின்னை ஒன்றும் வாய்ப் பேச்சிலீரானால் பித்தர் என்று உமைப் பேசிடலாமே என்னை நான் பழித்திடுகின்றதல்லால் இகழ்கிலேன் உமை எழில் ஒற்றி உடையீர் புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ. #4 வன்மை பேசிய வன் தொண்டர் பொருட்டாய் வழக்குப் பேசிய வள்ளல் நீர் அன்றோ இன்மையாளர் போல் வலிய வந்திடினும் ஏழையாம் இவன் என்று ஒழித்திட்டால் தன்மை அன்று அது தருமமும் அன்றால் தமியனேன் இன்னும் சாற்றுவது என்னே பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ. #5 உறங்குகின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணுகின்றதும் உடுப்பதும் மயக்குள் இறங்குகின்றதும் ஏறுகின்றதுமாய் எய்க்கின்றேன் மனம் என்னினும் அடியேன் அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர் புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ. #6 கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார் அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ. #7 விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும் நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ. #8 கொடிய நஞ்சு அமுது ஆக்கிய உமக்கு இக் கொடியனேனை ஆட்கொள்ளுதல் அரிதோ அடியர்-தம் பொருட்டு அடிபடுவீர் எம் ஐய நும் அடிக்கு ஆட்பட விரைந்தேன் நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ. #9 வினையினால் உடல் எடுத்தனனேனும் மேலை_நாள் உமை விரும்பிய அடியேன் எனை இன்னான் என அறிந்திலிரோ நீர் எழுமைச் செய்கையும் இற்று என அறிவீர் மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன் புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ. #10 பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அப் பிழை சிறிது அன்றோ மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல் உழை புரிந்து அருள்வீர் எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலை காண் புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ. @47. பிரசாத விண்ணப்பம் #1 பசை இலாக் கருங்கல் பாறை நேர் மனத்துப் பதகனேன் படிற்று உரு அகனேன் வசை_இலார்க்கு அருளும் மாணிக்க மணியே வள்ளலே நினைத் தொழல் மறந்து நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன் தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. #2 அன்னை போன்று அடியர்க்கு அருத்தியில் அருத்தும் அப்ப நின் அடியினை காணாது என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் புன்னை அம் சடை எம் புண்ணிய ஒளியே பூத_நாயக என்றன் உடலம் தன்னை நீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. #3 கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை மண்ணினால் நிறைத்தல் என உணவு அருந்தி மலம் பெற வந்தனன் அதனால் எண்ணினால் அடங்கா எண்_குண_குன்றே இறைவனே நீ அமர்ந்து அருளும் தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. #4 நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ பொன் முனம் நின்ற இரும்பு என நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் தன் முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. #5 குழிக்கு மண் அடைக்கும் கொள்கை போல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால் செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் தழிக்கொளும் வயல் சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. #6 கமரிடை மல நீர் கவிழ்த்தல் போல் வயிற்றுக் கடன்கழித்திட்டனன் அல்லால் அமரிடைப் புரம் மூன்று எரித்து அருள் புரிந்த ஐயனே நினைத் தொழல் மறந்தேன் சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. #7 அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர எனத் தொழல் மறந்தே இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால் கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆகத் தருமம் நின்று ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. #8 கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் நண்ணுதல் பொருட்டு ஓர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்-தம் உள்ளத்து அண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. #9 கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர் சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால் செற்றம் அற்று உயர்ந்தோர் சிவசிவ சிவ மாதேவ ஓம் அரகர எனும் சொல் சற்றும் விட்டு அகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. #10 முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர் தறை படர்ந்து ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே. @48. வழிமொழி விண்ணப்பம் #1 நீலனேன் கொடும் பொய்_அலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ ஆலம் உண்ட நின் தன்மை மாறுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே சீலம் மேவிய ஒற்றி அம் பரனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே. #2 கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும் மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே திண்ணம் ஈந்து அருள் ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே. #3 நல்லன்_அல்லன் நான் ஆயினும் சிறியேன் நான் அறிந்ததோ நாடு அறிந்தது காண் சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன் வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே. #4 இரக்கம் என்பது என்னிடத்து இலை என நீ இகழ்தியேல் அஃது இயல்பு மற்று அடியேன் பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே திரக் கண்_நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத் திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே. #5 யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன் தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் போது போகின்றதன்றி என் மாயப் புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண் சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே. #6 தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமைத் தொழுது ஏத்தா நாய்க்கும் நாய் எனும் பாவியேன் பிழையை நாடி நல் அருள் நல்கிடாதிருந்தால் ஏய்க்கும் மால் நிறக் காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தைத் தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே. #7 ஆட்டுகின்ற நீ அறிந்திலை போலும் ஐவர் பக்கம் நான் ஆடுகின்றதனைக் காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அக் கருணையை உலகில் நாட்டுகின்றனையாயில் இக் கொடிய நாய்க்கும் உன் அருள் நல்கிடவேண்டும் தீட்டுகின்ற நல் புகழ் ஒற்றி அரசே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே. #8 உய்ய ஒன்று இலேன் பொய்யன் என்பதனை ஒளித்திலேன் இந்த ஒதியனுக்கு அருள் நீ செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்திலேன் இது வஞ்சமும் அன்றே செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே. #9 வாடுகின்றனன் என்றனை இன்னும் வருந்தவைக்கினும் மறந்திடேன் உன்னைப் பாடுகின்றனன் பாவியேன் என்னைப் பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய் தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே. #10 சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும் செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே. @49. சிறுமை விண்ணப்பம் #1 இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்துச் சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #2 மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின் அருள் வாழ்வுற அடையாச் சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #3 உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையைத் தேடல் செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #4 வெல்லுகின்றனர் வினைப் புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம் செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல் புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #5 ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடு நின்று எய்க்கின்றேன் பவம் என்னும் அக் குழியில் தேறுகின்றிலேன் சிக்கெனச் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் கூறுகின்றது என் கடவுள் நீ அறியாக் கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #6 கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால் சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண் புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #7 அல்லல் என்னை விட்டு அகன்றிட ஒற்றி அடுத்து நிற்கவோ அன்றி நல் புலியூர்த் தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் ஒல்லை இங்கு வா என்று அருள் புரியாது ஒழிதியேல் உனை உறுவது எவ்வணமோ புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #8 ஞால வாழ்க்கையை நம்பி நின்று உழலும் நாய்களுக்கெலாம் நாய்_அரசு ஆனேன் சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #9 சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் நித்தம் நின் அடி அன்றி ஒன்று ஏத்தேன் நித்தனே அது நீ அறியாயோ புத்த அரும் தமிழ் ஒற்றியூர் அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #10 தத்து மத்திடைத் தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. #11 பரிந்திலேன் அருள் பாங்குறும் பொருட்டாய்ப் பந்தபாசத்தைப் பறித்திடும் வழியைத் தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே. @50. ஆற்றா விண்ணப்பம் #1 அன்னையில் பெரிதும் இனிய என் அரசே அம்பலத்து ஆடல்செய் அமுதே பொன்னை ஒத்து ஒளிரும் புரி சடைக் கனியே போதமே ஒற்றி எம் பொருளே உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் என்னை விட்டிடில் நான் என் செய்வேன் ஒதி போல் இருக்கின்ற இ எளியேனே. #2 எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லாக் களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய்திலை அருள் கரும்பே அளியனே திரு_சிற்றம்பலத்து ஒளியே அரு_மருந்தே வடவனத்துத் தனியனே ஒற்றித் தலத்து அமர் மணியே தயை_இலி போல் இருந்தனையே. #3 இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என் துயர் அறிந்திலை போலும் முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் வருந்தனையேல் என்று உரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும் உண்டேயோ. #4 உண்ட நஞ்சு இன்னும் கண்டம் விட்டு அகலாது உறைந்தது நாள்-தொறும் அடியேன் கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பைக் கண்டுகண்டு உளம்-அது நெகவே விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ அண்டர்கட்கு அரசே அம்பலத்து அமுதே அலைகின்றேன் அறிந்திருந்தனையே. #5 தனையர் செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கு அல என்பார் வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ உனை அலாது இறந்தும் பிறந்தும் இ உலகில் உழன்றிடும் தேவரை மதியேன் எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே. #6 ஏன்றுகொண்டு அருளவேண்டும் இ எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள் ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர் நான்றுகொண்டிடுவரேனும் மற்று அவர் மேல் நா எழாது உண்மை ஈது இதற்குச் சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே. #7 சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிடக் கபம் இழுத்து உந்தும் மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே. #8 கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று நடம் பொழி பதத்தாய் நடுங்குகின்றனன் காண் நான் செயும் வகை எது நவிலே. #9 வகை எது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்து எனை ஆளும் தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடைத் தமியன் நீ நின்ற திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னைப் பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே. #10 கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்வி கற்று உழன்றனன் கருணை சொற்பனம் அதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் என மலம் துய்த்தேன் விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன் அற்பனேன்-தன்னை ஆண்ட நின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே. @51. இரங்கல் விண்ணப்பம் #1 பற்று நோக்கிய பாவியேன்-தனக்குப் பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே மற்று நோக்கிய வல்_வினை அதனால் வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின் அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே. #2 கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் கோடிகோடியாம் குணப் பழுது_உடையேன் கடிய வஞ்சகக் கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன் அடியன் ஆகுவது எவ்வணம் என்றே ஐய ஐய நான் அலறிடுகின்றேன் ஒடிய மும்மலம் ஒருங்கு_அறுத்தவர் சேர் ஒற்றி மேவிய உலகு_உடையோனே. #3 காமம் என்பதோர் உருக் கொடு இ உலகில் கலங்குகின்ற இக் கடையனேன்-தனக்குச் சேமம் என்பதாம் நின் அருள் கிடையாச் சிறுமையே இன்னும் செறிந்திடுமானால் ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே. #4 மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம் கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலாக் கல்_மனக் கொடியேன் எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினைக் கயிற்றால் உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே. #5 வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம் மருட்சி மேவியது என் செய்கேன் உன்-பால் வருவதற்கு ஒரு வழியும் இங்கு அறியேன் தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால் உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே. #6 யாதும் உன் செயலாம் என அறிந்தும் ஐய வையம் மேல் அவர் இவர் ஒழியாத் தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்துக் கோது செய் மல_கோட்டையைக் காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே. #7 பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவப் பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன் அந்தமட்டினில் இருத்தியோ அன்றி அடிமை வேண்டி நின் அருள் பெரும் புணையை உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே. #8 ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன் ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் வானம் மேவிய அமரரும் அயனும் மாலும் என் முனம் வலி_இலர் அன்றே ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே. #9 அளிய நெஞ்சம் ஓர் அறிவுரு ஆகும் அன்பர்-தம் புடை அணுகிய அருள் போல் எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினைக் களைந்து மெய்ப் போத ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே. #10 நாக_நாட்டதின் நலம்பெற வேண்டேன் நரகில் ஏகு என நவிலினும் அமைவேன் ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன் தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் எனச் சாற்றிடில் தரியேன் ஓகை நாட்டிய யோகியர் பரவும் ஒற்றி மேவிய உலகு_உடையோனே. @52.காதல் விண்ணப்பம் #1 வஞ்சக வினைக்கு ஓர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன் தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் எஞ்சலில் அடங்காப் பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே. #2 நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய்ப் பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய்ப் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்குத் தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ கற்பது கற்றோர் புகழ் திருவொற்றிக் காவல்கொள் கருணை அம் கடலே. #3 முன்னை வல்_வினையால் வஞ்சக மடவார் முழுப் புலைக் குழி விழுந்து இளைத்தேன் என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதிப் பின்னை எவ்வணம்-தான் எய்துவது அறியேன் பேதையில்பேதை நான் அன்றோ கன்னலே தேனே ஒற்றி எம் அமுதே கடவுளே கருணை அம் கடலே. #4 மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனம் தளர்ந்து அழுங்கி நாள்-தோறும் எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் இல்லிடை மல்லிடுகின்றேன் விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் உனது மெல் அடிக்கு அடிமைசெய்வேனோ கண்ணினுள் மணியே ஒற்றி அம் கனியே கடவுளே கருணை அம் கடலே. #5 அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர்த் தொகைக்குளும் எனைப் போல் இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண் தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே. #6 ஞானம் என்பதில் ஓர் அணுத்துணையேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன் ஈனம் என்பதனுக்கு இறை எனல் ஆனேன் எவ்வணம் உய்குவது அறியேன் வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடித் தொழும்புசெய்வேனோ கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே. #7 ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் சீல வாழ்வு அடையும் செல்வம் இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவதேயோ நீல மா மிடற்றுப் பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே காலன் நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே. #8 மாலொடு நான்கு_வதனனும் காணா மலர்_அடிக்கு அடிமைசெய்து இனிப்பாம் பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே. #9 சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடாக் கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும் வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை அற்று நின்றவர்க்கும் அரிய நின் திரு_தாட்கு அடிமைசெய்து ஒழுகுவனேயோ கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே. #10 மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலாக் கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் கறை மணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் காவல்கொள் கருணை அம் கடலே. @53. பொருள் விண்ணப்பம் #1 உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய்ச் சென்றுசென்று உலைந்தே கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன் இலகும் அன்பர்-தம் எய்ப்பினில் வைப்பே இன்ப_வெள்ளமே என்னுடை உயிரே திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே. #2 எண்ணிலா நினைப்புற்றதின் வழியே இன்ப_துன்பங்கள் எய்தி என் நெஞ்சம் கண் இலாக் குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே. #3 ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய்க் காணுறக் கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் மாணுறக் களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே சேணுறத் தரும் ஒற்றி நாயகமே செல்வமே பரசிவ பரம்பொருளே. #4 யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் காதுகின்றது என் வஞ்சக நெஞ்சம் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் ஓது மா மறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிர மணியே தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே. #5 சொல்லும் சொல்லளவு அன்று காண் நெஞ்சத் துடுக்கு அனைத்தும் இங்கு ஒடுக்குவது எவனோ கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் அல்லும்_எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே. #6 இம்மை இன்பமே வீடு எனக் கருதி ஈனர் இல்லிடை இடர் மிக உழந்தே கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே செம்மை மேனி எம் ஒற்றியூர் அரசே செல்வமே பரசிவ பரம்பொருளே. #7 நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம் கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் அன்ன ஊர்தியும் மாலும் நின்று அலற அடியர்-தங்கள் உள் அமர்ந்து அருள் அமுதே தென் இசைப் பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே. #8 புலைய மங்கையர் புணர் முலைக் குவட்டில் போந்து உருண்டு எனைப் புலன் வழிப் படுத்திக் கலைய நின்றது இக் கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே சிலை விலாக் கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே. #9 தந்தை தாய் மனை மக்கள் என்று உலகச் சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே. #10 கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் கடியது ஆதலின் கசிந்திலது இனி இக் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர்த் துணையே செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே. @54. கொடி விண்ணப்பம் #1 மாலை ஒன்று தோள் சுந்தரப் பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்டது எனவே ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை வேலை ஒன்று அல மிகப் பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. #2 பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன் பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன் ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. #3 உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அப் பணிகள் தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னைத் தண்டிப்பீர் எனில் சலித்து உளம் வெருவேன் துப்பு இடா எனக்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. #4 கூலி என்பது ஓர் அணுத்துணையேனும் குறித்திலேன் அது கொடுக்கினும் கொள்ளேன் மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர்ப் பயிர்க்கே ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள்கிற்பீர் சூலி ஓர் புடை மகிழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே #5 தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமைத் தேவர் இல்லை அத் தெளிவுகொண்டு அடியேன் ஆர்ந்து நும் அடிக்கு அடிமைசெய்திடப் பேர் ஆசைவைத்து உமை அடுத்தனன் அடிகேள் ஓர்ந்து இங்கு என்றனைத் தொழும்புகொள்ளீரேல் உய்கிலேன் இஃது உம் பதம் காண்க சோர்ந்திடார் புகழ் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. #6 புதியன் என்று எனைப் போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமைப் பதியவைத்தனன் ஆயினும் அந்தப் பழம் கணக்கினைப் பார்ப்பதில் என்னே முதியன்_அல்லன் யான் எப் பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் துதி-அது ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. #7 ஒழுக்கம்_இல்லவன் ஓர் இடத்து அடிமைக்கு உதவுவான்-கொல் என்று உன்னுகிற்பீரேல் புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம் போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள் பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அப் பரிசினர் ஆவர் தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. #8 பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மைப் பேசுகின்றவர் பேச்சினைக் கேட்டும் இச்சை நிற்கின்றது உம் அடிக்கு ஏவல் இயற்றுவான் அந்த இச்சையை முடிப்பீர் செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிகத் தியங்குகின்றனன் காண் துச்சை நீக்கினோர்க்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. #9 ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அக் கடல் கடைய ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் சாலம் செய்வது தகை அன்று தருமத் தனிப் பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. #10 முத்தி நேர்கிலாத் தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும் சுத்தியாகிய சொல் உடை அணுக்கத் தொண்டர்-தம்முடன் சூழ்த்திடீரெனினும் புத்தி சேர் புறத் தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே துத்தி ஆர் பணியீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. #11 என்ன நான் அடியேன் பல பல கால் இயம்பி நிற்பது இங்கு எம்பெருமானீர் இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர் பன்ன என் உயிர் நும் பொருட்டாகப் பாற்றி நும் மிசைப் பழிசுமத்துவல் காண் துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே. @55. நாடக விண்ணப்பம் #1 மடுக்கும் நீர் உடைப் பாழ்ங்கிணறு-அதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் எடுக்கின்றோர் என இடையில் கைவிடுதல் இரக்கம்_உள்ளவர்க்கு இயல்பு அன்று கண்டீர் தடுக்கிலாது எனைச் சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு நடுக்கு_இலார் தொழும் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #2 வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன் கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழக் கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ நண்மை ஒற்றியீர் திரு_சிற்றம்பலத்துள் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #3 குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றைப் பூசுகின்றனன் புனித நும் அடி-கண் உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண் நல் தவத்தர் வாழ் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #4 உள்ளது ஓதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகுளோர் இந்த உறுதி கொண்டு அடியேன் கள்ளம் ஓதிலேன் நும் அடி அறியக் காம வேட்கையில் கடலினும் பெரியேன் வள்ளலே உமது அருள் பெறச் சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர் நள்ளல்_உற்றவர் வாழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #5 அரந்தையோடு ஒரு வழிச்செல்வோன்-தனை ஓர் ஆற்று வெள்ளம் ஈர்த்து அலைத்திட அவனும் பரந்த நீரிடை நின்று அழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப்பாரோ கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்கக் கண்டு இருக்கின்றது கடனோ நரந்தம் ஆர் பொழில் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #6 பிறவிக் கண்_இலான் கைக்கொளும் கோலைப் பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ மறவிக் கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ உற இக் கொள்கையை உள்ளிரேல் இதனை ஓதிக்கொள் இடம் ஒன்று இலை கண்டீர் நற இக்கு ஓங்கிய ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #7 வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார் வண்கை உள்ளவர் மற்று அது போலக் கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை மலிய உண்டிட வருகின்றேன் வரும் முன் மாற்றுகிற்பிரேல் வள்ளல் நீர் அன்றோ நலியல் நீக்கிடும் ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #8 பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப் புலையன் ஆண்டவன் புகழ் உரைப்பானேல் உய்ய வைப்பன் ஈது உண்மை இ உலகில் ஒதியனேன் புகல் ஓர் இடம் அறியேன் ஐய நும் அடிக்கு ஆட்செயல் உடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ நையல் அற்றிட அருள் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #9 தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச் சமைவர் என்பது சற்றும் இன்று உலகில் எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ அருள் பங்கய விழியீர் நந்த ஒண் பணை ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #10 கல்வி வேண்டிய மகன்-தனைப் பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ பல் விதங்களால் பணி செயும் உரிமைப் பாங்கு நல்கும் அப் பரம் உமக்கு அன்றே நல்_விதத்தினர் புகழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. #11 மண்ணில் அல்லவன் நல்லவரிடத்து ஓர் வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால் எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் நண்ணி மாதவன் தொழும் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே. @56. திருவண்ண விண்ணப்பம் #1 கண்ணப்பா என்று அருளும் காளத்தி அப்பா முன் வண்ணப் பால் வேண்டும் மதலையைப் பால்_வாரிதியை உண் அப்பா என்று உரைத்த ஒற்றி அப்பா வந்து அருள எண் அப்பா என்று அழும் இ ஏழை முகம் பாராயோ. #2 மஞ்சு படும் செம் சடில வள்ளலே உள்ளுகின்றோர் உஞ்சுபடும் வண்ணம் அருள் ஒற்றியூர் உத்தமனே நஞ்சு படும் கண்டம் உடை நம் பரனே வன் துயரால் பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ. #3 கண் ஆர் அமுதே கரும்பே என் கண்ணே என் அண்ணா உன் பொன் அருள்-தான் ஆர்ந்திடுமோ அல்லது என்றும் நண்ணாதோ யாது நணுகுமோ என்று உருகி எண்ணாதும் எண்ணும் இந்த ஏழை முகம் பாராயோ. #4 நாடிய சீர் ஒற்றி நகர்_உடையாய் நின் கோயில் நீடிய நல் சந்நிதியில் நின்றுநின்று மால் அயனும் தேடி அறி ஒண்ணாத் திரு_உருவைக் கண்டு உருகிப் பாடி அழுது ஏங்கும் இந்தப் பாவி முகம் பாராயோ. #5 வாங்கி மலை வில் ஆக்கும் மன்னவனே என் அரசே ஓங்கி வளம் தழுவும் ஒற்றியூர் உத்தமனே தூங்கிய துன்பச் சுமை சுமக்க மாட்டாது ஏங்கி அழுகின்ற இந்த ஏழை முகம் பாராயோ. #6 தொண்டர்க்கு அருளும் துணையே இணை_இல் விடம் உண்டு அச்சுதற்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே சண்டப் பவ நோயால் தாய் இலாப் பிள்ளை எனப் பண்டைத் துயர்கொளும் இப் பாவி முகம் பாராயோ. #7 உள் திகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே மட்டு இலங்கும் உன்றன் மலர்_அடியைப் போற்றாது தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண் எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ. #8 நச்சை மிடற்று அணிந்த நாயகனே ஓர் பாகம் பச்சை நிறம் கொண்ட பவளத் தனி மலையே மிச்சை தவிர்க்கும் ஒற்றி வித்தகனே நின் அருட்கே இச்சை கொடு வாடும் இந்த ஏழை முகம் பாராயோ. #9 மால் அயர்ந்தும் காணா மலர்_அடியாய் வஞ்ச வினைக் கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் சேல் அயர்ந்த கண்ணார் தியக்கத்தினால் உன் அருள் பால் அயர்ந்து வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ. #10 சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய் அடியர் சந்தமுறும் நெஞ்சத் தலத்து அமர்ந்த தத்துவனே நந்தவனம் சூழ் ஒற்றி நாயகனே வாழ்க்கை எனும் பந்தம்-அதில் வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ. #11 தில்லையிடை மேவும் எங்கள் செல்வப் பெரு வாழ்வே ஒல்லை அடியார்க்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசை-தனக்கு எல்லை அறியாத இந்த ஏழை முகம் பாராயோ. #12 விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே மதி_இழந்தோர்க்கு ஏலா வளர் ஒற்றி வானவனே நிதி_இழந்தோர் போல் அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப் பதி விரும்பி வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ. @57. மருட்கை விண்ணப்பம் #1 யாது செய்குவன் போது போகின்றது அண்ணலே உமது அன்பருக்கு அடியேன் கோது செய்யினும் பொறுத்து அருள் புரியும் கொள்கையீர் எனைக் குறுகிய குறும்பர் வாதுசெய்கின்றார் மனம் தளர்கின்றேன் வலி_இலேன் செயும் வகை ஒன்றும் அறியேன் மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே. #2 எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடிக் கனக்கும் வன் பவக் கடலிடை வீழ்த்தக் கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்- தனக்கு மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திடத் தக்கது அன்று இலை காண் மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே. #3 எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல் ஆழ்ந்து இளைக்கின்றேன் இனி என் செய்வன் அடியேன் தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல் வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே. #4 என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன் வன்பு_இறந்தவர் புகழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே. #5 காமம் என்னும் ஓர் காவலில் உழன்றே கலுழ்கின்றேன் ஒரு களைகணும் அறியேன் சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன் ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே. #6 இன்பம் என்பது விழைந்து இடர் உழந்தேன் என்னை ஒத்த ஓர் ஏழை இங்கு அறியேன் துன்பம் என்பது பெரும் சுமையாகச் சுமக்கின்றேன் அருள் துணை சிறிது இல்லேன் அன்பர் உள்ளகத்து அமர்ந்திடும் தேவர் அடிக் குற்றேவலுக்கு ஆட்படுவேனோ வன்பர் நாடுறா ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே. #7 ஊழ்வினைப்படி எப்படி அறியேன் உஞற்றுகின்றனன் உமது அருள் பெறவே தாழ்வினைத் தரும் காமமோ எனைக் கீழ்த் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் பாழ் வினைக் கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால் வாழ்வினைத் தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே. #8 இறப்பு_இலார் தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத்தானும் மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண் குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ வறிப்பு இலா வயல் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே. #9 சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே அஞ்சிஅஞ்சி நான் அலைகின்றேன் என்னை அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன் துஞ்சினால் பின்பு சுகம் பலித்திடுமோ துணை_இலார்க்கு ஒரு துணை என இருப்பீர் மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே. #10 அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்கு ஆசைவைத்த என் அறிவின்மை அளவைச் சொல்லவோ முடியாது எனை ஆளத் துணிவு கொள்விரோ தூயரை ஆளல் அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண் மல்லல் ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி அனையீரே. @58. கொடைமட விண்ணப்பம் #1 நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின் பொன் போன்ற ஞானப் புது மலர்த் தாள் துணைப் போற்றுகிலேன் என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய் மின் போன்ற வேணியனே ஒற்றி மேவிய வேதியனே. #2 வேதியனே வெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே நீதியனே மன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும் ஆதியனே எமை ஆண்டவனே மலையாள் மகிழும் பாதியனே எம் பராபரனே முக்கண் பண்ணவனே. #3 பண்ணவனே பசு பாசத்தை நீக்கும் பரம்பரனே மண்ணவனேனை மகிழ்ந்தவனே மலம் மாற்றுகின்ற விண்ணவனே வெள் விடையவனே வெற்றி மேவும் நெற்றிக் கண்ணவனே எனைக் காத்தவனே ஒற்றிக் காவலனே. #4 காவலனே அன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டு அவிழ்த்த பாவலனே தொழும் பாணன் பரிசுறப் பாட்டு அளித்த நாவலனே தில்லை நாயகனே கடல் நஞ்சை உண்ட மா_வலனே முக்கண் வானவனே ஒற்றி மன்னவனே. #5 மன்னவனே கொன்றை மாலையனே திருமால் அயற்கு முன்னவனே அன்று நால்வர்க்கும் யோக முறை அறம்-தான் சொன்னவனே சிவனே ஒற்றி மேவிய தூயவனே என்னவனே ஐயம் ஏற்பவனே எனை ஈன்றவனே. #6 ஈன்றவனே அன்பர் இன் உயிர்க்கு இன்புறும் இன் அமுதம் போன்றவனே சிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே ஆன்றவனே எமது உள்ளும் புறம்பும் அறிந்து நின்ற சான்றவனே சிவனே ஒற்றி மேவிய சங்கரனே. #7 சங்கரனே அரனே பரனே நல் சராசரனே கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே நம் கரம் மேவிய அம் கனி போன்று அருள் நாயகனே செங்கரன் நேர் வணனே ஒற்றி மேவிய சின்மயனே. #8 சின்மயனே அனல் செங்கையில் ஏந்திய சேவகனே நன்மையனே மறை நான்முகன் மாலுக்கு நாட அரிதாம் தன்மையனே சிவசங்கரனே எம் சதாசிவனே பொன்_மயனே முப்புராந்தகனே ஒற்றிப் புண்ணியனே. #9 புண்ணியனே எமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள் அளிக்கும் திண்ணியனே நல் சிவஞான நெஞ்சில் தெளிந்த அருள் அண்ணியனே கங்கை ஆறு அமர் வேணியில் ஆர்ந்த மதிக் கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே. #10 கண்டவனே சற்றும் நெஞ்சு உருகாக் கொடும் கள்வர்-தமை விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் உண்டவனே மற்றும் ஒப்பு ஒன்று இலாத உயர்வு-தனைக் கொண்டவனே ஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே. @59. சிறு விண்ணப்பம் #1 பண்ணால் உன் அருள்_புகழைப் பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகைப் பார்த்துப்பார்த்துக் கண்ணார உளம் குளிரக் களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #2 எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல இப் பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #3 இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர் இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே வன்பு_உடையார்-தமைக் கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத் துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம் அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #4 விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழத் துதித்து விளங்குகின்றார் நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமலக் கஞ்சம் அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #5 பொய்யாத நின் அடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்து நினைப் போற்றுகின்றார் நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னைச் சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் ஐயா என் அப்பா என் அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #6 தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன் இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #7 வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்சச் செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ சாரம் இலேன் ஆசாரம் இல்லேன் சித்த சாந்தம் இலேன் இரக்கம்_இலேன் தகவும் இல்லேன் ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #8 வண்மை பெறு நின் அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய்து ஆனந்த வயத்தே நின்றார் பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் ஒண்மை இலேன் ஒழுக்கம் இலேன் நன்மை என்பது ஒன்றும் இலேன் ஒதியே போல் உற்றேன் மிக்க அண்மையில் வந்து அருள்_புரிவோய் என்னே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #9 உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம் இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும் வம்பு அவிழ் பூங் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் அம்பலத்து எம் அரசே இ வாழ்க்கைத் துன்பில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. #10 கொலை அறியாக் குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன் நிலை அறியேன் நெறி ஒன்றும் அறியேன் எங்கும் நினை அன்றித் துணை ஒன்றும் அறியேன் சற்றும் அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ. @60. பெரு விண்ணப்பம் #1 இருள் ஆர் மனத்தேன் இழுக்கு உடையேன் எளியேன் நின்னை ஏத்தாத மருள் ஆர் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன் அருள் ஆர் அமுதப் பெருக்கே என் அரசே அது நீ அறிந்து அன்றோ தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ. #2 உண்மை அறியேன் எனினும் எனை_உடையாய் உனையே ஒவ்வொருகால் எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை வண்மை உடையாய் என் செய்கேன் மற்று ஓர் துணை இங்கு அறியேனே. #3 எளியேன் இழைத்த பெரும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு இன்பு அளித்தாய் களியேன்-தனை நீ இனி அந்தோ கைவிட்டிடில் என் கடவேனே ஒளியே முக்கண் செழும் கரும்மே ஒன்றே அன்பர் உறவே நல் அளியே பரம_வெளியே என் ஐயா அரசே ஆர்_அமுதே. #4 காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன் ஏமக் கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் நாமக் கவலை ஒழித்து உன் தாள் நண்ணும்அவர்-பால் நண்ணுவித்தே தாமக் கடிப் பூம் சடையாய் உன்றன் சீர் பாடத் தருவாயே. #5 எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே. #6 பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பதப் புகழை மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவரே மறைகள் நாலே அறியாது எனில் சிறியேன் நானோ அறிவேன் நாயக என் மேலே அருள்கூர்ந்து எனை நின் தாள் மேவுவோர்-பால் சேர்த்து அருளே. #7 கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதிச் சடையோய் பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை எண்ணாது உழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே. #8 பொய் ஓர் அணியா அணிந்து உழலும் புலையேன் எனினும் புகலிடம்-தான் ஐயோ நினது பதம் அன்றி அறியேன் இது நீ அறியாயோ கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே. #9 இன்னே எளியேன் பொய்_உடையேன் எனினும் அடியன் அலவோ நான் என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே அன்னே என்றன் அப்பா என் ஐயா என்றன் அரசே செம் பொன்னே முக்கண் பொருளே நின் புணர்ப்பை அறியேன் புலையேனே. #10 வஞ்ச மடவார் மயல் ஒரு பால் மணியே நின்னை வழுத்தாத நஞ்சம்_அனையார் சார்பு ஒரு பால் நலியும் வாழ்க்கைத் துயர் ஒரு பால் விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால் எஞ்சல் இலவாய் அலைக்கின்றது என் செய்கேன் இ எளியேனே. @61. திருக்காட்சிக் கிரங்கல் #1 மண் ஏயும் வாழ்க்கையிடை மாழாந்து வன் பிணியால் புண் ஏயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன் பண் ஏயும் இன்பப் பரஞ்சுடரே என் இரண்டு கண்ணே உன் பொன்_முகத்தைக் காணக் கிடைத்திலனே. #2 மருள் ஆர்ந்த வல்_வினையால் வன் பிணியால் வன் துயரால் இருள் ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன் தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமே நின் அருள் ஆர்ந்த முக்கண் அழகு-தனைக் கண்டிலனே. #3 வல் ஆர் முலையார் மயல் உழந்த வஞ்சகனேன் பொல்லார் புரம் எரித்த புண்ணியனே பொய் மறுத்த நல்லார் தொழும் தில்லை நாயகனே நன்று அளித்த அல் ஆர் களத்தின் அழகு-தனைக் கண்டிலனே. #4 நோயால் மெலிந்து உன் அருள் நோக்குகின்ற நொய்யவனேன் தாயானவனே என் தந்தையே அன்பர்-தமைச் சேயாய் வளர்க்கும் சிவனே சிவனே எம் தூயா நின் பொன் தோளின் சுந்தரத்தைக் கண்டிலனே. #5 வல் நேர் முலையார் மயல் உழந்த வன்_மனத்தேன் அன்னே என் அப்பா என் ஐயா என் ஆர்_அமுதே மன்னே மணியே மலையாள் மகிழ் உனது பொன் நேர் இதழிப் புயம் காணப்பெற்றிலனே. #6 நண்ணும் வினையால் நலிகின்ற நாய்_அடியேன் எண்ணும் சுகாதீத இன்பமே அன்பு_உடையோர் கண்ணும் கருத்தும் களிக்க வரும் கற்பகமே பெண் ஒரு-பால் வாழும் உருப் பெற்றி-தனைக் கண்டிலனே. #7 தெவ் வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன் இவ்வண்ணம் என்று அறிதற்கு எட்டாத வான் பொருளே அவ்வண்ணமான அரசே அமுதே நின் செவ் வண்ண மேனித் திறம் காணப்பெற்றிலனே. #8 அல் வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாய்_அடியேன் சொல் வைத்த உண்மைத் துணையே இணைத் தோள் மேல் வில்வத் தொடை அணிந்த வித்தகனே நின்னுடைய செல்வத் திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே. #9 பொத்து ஏர் மயலால் புழுங்குகின்ற பொய்_அடியேன் கொத்து ஏர் செழும் கொன்றைக் குன்றமே கோவாத முத்தே எவர்க்கும் முழு_முதலே முத்திக்கு வித்தே நின் பொன்_அடிக் கீழ் மேவி நிற்க கண்டிலனே. #10 நீதி_இலார் வாயிலிடை நின்று அலைந்த நெஞ்சகனேன் சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல் பாதி நிலா ஓங்கும் பரமே நீ ஒற்றி நகர் வீதி உலா வந்த எழில் மெய் குளிரக் கண்டிலனே. @62. திரு அருட் கிரங்கல் #1 ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில் என் அப்பா உன் பொன் அடிக்கே அன்பு_இலேன் ஆனாலும் தப்பாது அகம் மெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற இப் பாதகத்தேற்கு இரங்கினால் ஆகாதோ. #2 எஞ்சா இடரால் இரும் பிணியால் ஏங்கி மனம் பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச் செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பா நீ அஞ்சாதே என்று உன் அருள்கொடுத்தால் ஆகாதோ. #3 பற்றும் செழும் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும் குற்றம் குணமாகக் கொள்ளும் குண_கடலே மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே பெற்றிங்கு அடியேன் பிணி கெடுத்தால் ஆகாதோ. #4 எந்தையே என்பவர்-தம் இன் அமுதே என் உரிமைத் தந்தையே தாயே தமரே என் சற்குருவே சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயா என் நிந்தையே நீங்க நிழல் அளித்தால் ஆகாதோ. #5 உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே கொள்ளும் சிவானந்தக் கூத்தா உன் சேவடியை நள்ளும் புகழ் உடைய நல்லோர்கள் எல்லாரும் எள்ளும் புலையேன் இழிவு ஒழித்தால் ஆகாதோ. #6 கோதை ஓர் கூறு உடைய குன்றமே மன்று அமர்ந்த தாதையே ஒற்றித் தலத்து அமர்ந்த சங்கரனே தீதையே நாள்-தோறும் செய்து அலைந்து வாடும் இந்தப் பேதையேன் செய்த பிழை பொறுத்தால் ஆகாதோ. #7 முத்திக்கு வித்தே முழு மணியே முத்தர் உளம் தித்திக்கும் தேனே சிவமே செழும் சுடரே சத்திக்கும் நாதத் தலம் கடந்த தத்துவனே எத்திக்கும் இல்லேன் இளைப்பு ஒழித்தால் ஆகாதோ. #8 வஞ்சம்_இலார் உள்ளம் மருவுகின்ற வான் சுடரே கஞ்சம்_உளான் போற்றும் கருணைப் பெரும் கடலே நஞ்சு அமுதாக் கொண்டு அருளும் நல்லவனே நின் அலது ஓர் தஞ்சம்_இலேன் துன்பச் சழக்கு ஒழித்தால் ஆகாதோ. #9 சேய் பிழையைத் தாய் அறிந்தும் சீறாள் பொறுப்பாள் இ நாய் பிழையை நீ பொறுக்க ஞாயமும் உண்டு ஐயாவே தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுறச் சஞ்சலத்தால் வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ. #10 கண்ணுள் மணி போல் கருதுகின்ற நல்லோரை எண்ணும் கணமும் விடுத்து ஏகாத இன் அமுதே உண்ணும் உணவுக்கும் உடைக்கும் முயன்று ஓடுகின்ற மண்_உலகத்து என்றன் மயக்கு அறுத்தால் ஆகாதோ. @63. எண்ணத் திரங்கல் #1 எளியேன் நின் திருமுன்பே என் உரைக்கேன் பொல்லாத களியேன் கொடும் காமக் கல்_மனத்தேன் நன்மை இலா வெளியேன் வெறியேன்-தன் மெய்ப் பிணியை ஒற்றியில் வாழ் அளியோய் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. #2 முன்னே செய் வெம் வினை-தான் மூண்டதுவோ அல்லது நான் இன்னே பிழை-தான் இயற்றியது உண்டோ அறியேன் பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை அன்னே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. #3 இப் பாரிடை உனையே ஏத்துகின்ற நாயேனை வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை எப்பாலவர்க்கும் இறைவனாம் என் அருமை அப்பா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. #4 ஓவா மயல் செய் உலக நடைக்குள் துயரம் மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய் நோயைச் சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ ஆஆ நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. #5 பொய்யாம் மல இருட்டுப் பொத்தரிடை வீழ்ந்து உழலும் கையாம் நெறியேன் கலங்க வந்த வெம் பிணியை மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என் ஐயா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. #6 இ மா நிலத்தில் இடர் உழத்தல் போதாதே விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியைச் செம் மான் மழுக் கரம் கொள் செல்வச் சிவமே என் அம்மான் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. #7 புரை சேரும் நெஞ்சப் புலையனேன் வன் காமத் தரை சேரும் துன்பத் தடம் கடலேன் வெம் பிணியை விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம் அரைசே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. #8 இத் தாரணியில் எளியோரைக் கண்டு மிக வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய்ப் பிணியைக் கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என் அத்தா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. #9 மறி ஏர் விழியார் மயக்கினிடை மாழாந்த சிறியேன் அடியேன் தியங்க வந்த வல் நோயைச் செறிவே பெறும் தொண்டர் சிந்தை-தனில் ஓங்கும் அறிவே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. #10 துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை வன்பே செய்து உள்ளம் மயக்கி நின்ற வன் நோயை இன்பே அருள்கின்ற என் ஆர்_உயிரே என் அன்பே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே. @64. நெஞ்சு நிலைக் கிரங்கல் #1 ஆளாக நின் பொன்_அடிக்கு அன்புசெய்திட ஐய நெடு நாளாக இச்சை உண்டு என்னை செய்கேன் கொடு நங்கையர்-தம் மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் கேளாது அலைகின்றதால் ஒற்றி மேவும் கிளர் ஒளியே. #2 ஒளியாய் ஒளிக்குள் ஒளிர் ஒளியே ஒற்றி உத்தம நீ அளியாவிடில் இதற்கு என்னை செய்கேன் அணங்கு_அன்னவர்-தம் களியால் களித்துத் தலைதெரியாது கயன்று உலவா வளியாய்ச் சுழன்று இவண் மாயா மனம் எனை வாதிப்பதே. #3 மாயா மனம் எவ்வகை உரைத்தாலும் மடந்தையர்-பால் ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு நாயாகினும் கைவிடார் உலகோர் உனை நான் அடுத்தேன் நீயாகிலும் சற்று இரங்கு கண்டாய் ஒற்றி நின்மலனே. #4 மலம் சான்ற மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம் சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே வலம் சான்ற நல் துணை மற்று அறியேன் ஒற்றி வானவனே நலம் சான்ற ஞானத் தனி முதலே தெய்வ நாயகனே. #5 நாயினும் கீழ்ப்பட்ட என் நெஞ்சம் நன்கு அற்ற நங்கையர்-பால் ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன் ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த தாயினும் நல்லவனே ஒற்றி மேவும் தயாநிதியே. #6 நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம் சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனைத் தாழலர்-தம் விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_ மதி ஏர் சடை அண்ணலே ஒற்றியூர் ஒளி மாணிக்கமே. #7 மாணாத என் நெஞ்சம் வல் நஞ்சு அனைய மடந்தையர்-பால் நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம் கோணாத உள்ளத் திரு_கோயில் மேவிக் குலவும் ஒற்றி_ வாணா என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே. #8 வாழாத நெஞ்சம் எனை அலைத்து ஓடி மடந்தையர்-பால் வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் தாழாத குற்றம் பொறுத்து அடியேன்-தனைத் தாங்கிக்கொள்வாய் சூழாதவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்_குன்றமே. #9 குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தைக் குழியில் மனம் சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே நன்றே சதானந்த நாயகமே மறை நான்கினுக்கும் ஒன்றே உயர் ஒளியே ஒற்றியூர் எம் உயிர்_துணையே #10 துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_ கணையால் இளைக்கின்றது என்னை செய்கேன் என்றன் கண் இரண்டின் இணையாம் பரஞ்சுடரே அழியா நலமே இன்பமே பணை ஆர் திருவொற்றியூர் அரசே எம் பரம்பொருளே. #11 பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம் இருளே புரிகின்றது என்னை செய்கேன் அடியேன் மயங்கும் மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ அருளே அருள்_கடலே ஒற்றி மா நகர் ஆள்பவனே. @65. தனிமைக் கிரங்கல் #1 ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த அயன் முன் ஆகிய ஐவரை அளித்து நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனைத் தாக்க எண்ணியே தாமதப் பாவி தலைப்பட்டான் அவன்றனை அகற்றுதற்கே ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே. #2 கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்துப் பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண் குணத்தினில் கொடும் தாமதன் எனும் இக் கொடிய வஞ்சகன் ஒடிய மெய்ப் போதம் உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே. #3 இமைக்கும் அவ்வளவேனும் நெஞ்சு ஒடுங்கி இருக்கக் கண்டிலேன் இழிவு கொள் மலத்தின் சுமைக்கு நொந்துநொந்து ஐயவோ நாளும் துயர்கின்றேன் அயர்கின்ற என் துயரைக் குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூடப் பெற்றிலேன் கூறுவது என்னே உமைக்கு நல் வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே. #4 சென்ற நாளில் ஓர் இறைப் பொழுதேனும் சிந்தை ஓர் வகை தெளிந்ததன்று அது போய் நின்ற நாளினும் நிற்கின் என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே. #5 கோடி நாவினும் கூறிட அடங்காக் கொடிய மாயையின் நெடிய வாழ்க்கையினை நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனை ஓர் நாளும் எண்ணிலேன் நன்கு அடைவேனே வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும் ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தமப் பொருளே. #6 அன்பு-அது என்பதைக் கனவினும் காணேன் ஆடுகின்றனன் அன்பரைப் போல வன் பவத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக்கில்லேன் துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத் தொழுது வாழ்த்தி நல் சுகம் பெறுவேனே ஒன்பது ஆகிய உரு உடைப் பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே. #7 முன்னை நான் செய்த வல்_வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத்து உலகில் என்னை நான் கண்டது அந்த நாள் தொடங்கி இந்த நாள் மட்டும் இருள் என்பது அல்லால் பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப் பேச என் உளம் கூசுகின்றது காண் உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே. #8 கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்பத் தெள் நிலா முடிச் சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுறப் புனைவோர் உள் நிலாவிய ஆனந்தப் பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே. #9 உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலகப் பித்திலே இன்னும் தொத்துகின்றது காண் வண்மை ஒன்று இலேன் எண்மையின் அந்தோ வருந்துகின்றனன் வாழ்வு அடைவேனோ ஒண்மை அம்பலத்து ஒளிசெயும் சுடரே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே. #10 நையுமாறு எனைக் காமம் ஆதிகள் தாம் நணுகி வஞ்சகம் நாட்டுகின்றது நான் செய்யும் ஆறு இதற்கு அறிந்திலன் எந்தாய் திகைக்கின்றேன் அருள் திறம் பெறுவேனே வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே உய்யுமாறு அருள் அம்பலத்து அமுதே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே. @66. கழிபகற் கிரங்கல் #1 ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல் நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் பூண்டது உண்டு நின் புனித நல் ஒழுக்கே பூண்டது இல்லை என் புன்மையை நோக்கி ஈண்ட வந்து அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே. #2 ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் பாழையே பலன் தருவது என்று எண்ணிப் பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து ஏழையேற்கு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே. #3 ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் மான்று கொண்ட இ வஞ்சக வாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன் சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசைத் தயவுகொண்டு என்னை ஏன்றுகொண்டு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே. #4 அம்மை அப்பன் என் ஆர்_உயிர்த் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடைத் தேவன் இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனைச் சேர்த்து அருளாயேல் எம்மையில் பெறுவேன் சிறு நாயேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே. #5 தாயர் ஆதியர் சலிப்புறுகிற்பார் தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார் நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடைச் சேர்த்திடாது ஒழித்தால் ஏயர் கோனுக்கு அன்று அருளும் எம் பெருமான் என் செய்கேன் நரகிடை இடும் போதே. #6 முன்னை நான் செய்த வல்_வினைச் சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும் அன்னை போலும் என் ஆர்_உயிர்த் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி தன்னை நேர் சிவஞானம் என் கரையைச் சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் இன்னும் நின் அருள் ஈந்திலை அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே. #7 உண்ணுகின்றதும் உறங்குகின்றதும் மேல் உடுத்துகின்றதும் உலவுகின்றதும் மால் நண்ணுகின்றதும் நங்கையர் வாழ்க்கை நாடுகின்றதும் நவை உடைத் தொழில்கள் பண்ணுகின்றதும் ஆன பின் உடலைப் பாடை மேல் உறப் படுத்துகின்றதும் என்று எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே. #8 கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் இல்லை நல்லை நின் அருள் எனக்கு அதனால் இல்லை இல்லை நீ இரக்கம்_இல்லாதான் அல்லை இல்லையால் அருள்தராது இருத்தல் அடியனேன் அளவாயின் இங்கு இடர்க்கே எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே. #9 பொங்கு மாயையின் புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும் புலப் பகைவர்களால் இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர்ப் பெரும் கடலில் தங்கும் ஆசை அம் கராப் பிடித்து ஈர்க்கத் தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே. #10 அரக்கன் அல்லன் யான் அரக்கனே எனினும் அரக்கனுக்கும் முன் அருள் அளித்தனையே புரக்க என்னை நின் அருள் கடன் என்றே போற்றுகின்றனன் புலையரில் புலையேன் உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில் இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே. @67. அர்ப்பித் திரங்கல் #1 தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ எனத் தருக்கொடும் இருந்தேன் எம் பிரான் நினக்கு ஏழையேன் அளவில் இரக்கம் ஒன்று இலை என்னென்பது இன்னும் நம் பிரான் என நம்பி நிற்கின்றேன் நம்பும் என்றனை வெம்பிடச் செயினும் செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. #2 துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன் சொல்வது என்னை என் தொல் வினை வசத்தால் இட்ட நல் வழி அல் வழி எனவே எண்ணும் இ வழி இரண்டிடை எனை நீ விட்டது எவ்வழி அவ்வழி அகன்றே வேறும் ஓர் வழி மேவிடப்படுமோ சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. #3 ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன் மேல் உறக்குகின்றனை உறங்குகின்றனன் பின் காட்டுகின்றனை காணுகின்றனன் நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன் ஆட்டுகின்றனை ஆடுகின்றனன் இ அகில கோடியும் அவ்வகையானால் தீட்டும் அன்பருக்கு அன்ப நின்றனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. #4 கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் எண்_இலா இடையூறு அடுத்ததனால் இளைக்கின்றேன் எனை ஏன்றுகொள்வதற்கு என் உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண் தெள் நிலா முடிச் சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. #5 மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் நச்சுகின்றனன் நச்சினும் கொடியேன் நன்மை எய்தவோ வன்மையுற்றிடவோ இச்சை நன்று அறிவாய் அருள்செய்யாது இருக்கின்றாய் உனக்கு யான் செய்தது என்னே செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. #6 நாடும் தாயினும் நல்லவன் நமது நாதன் என்று உனை நாடும் அப்பொழுதே வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப் பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. #7 மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன் அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்றுப் பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. #8 மாறுகின்றனன் நெஞ்சகம் அஞ்சி வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல் கூறுகின்றது என் என்று அயர்கின்றேன் குலவித் தேற்றும் அக் கொள்கையர் இன்றி ஏறுகின்றனன் இரக்கம்_உள்ளவன் நம் இறைவன் இன்று அருள் ஈகுவன் என்றே தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. #9 தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் நாயினும் கடையேன் படும் இடரை நாளும் கண்டனை நல் அருள்செய்யாய் ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. #10 வானும் வையமும் அளிக்கினும் உன்-பால் மனம்வைத்து ஓங்குவர் வள்ளல் நின் அடியார் நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் நாடி நின் அருள் நலம் பெற விழைதல் கூனும் ஓர் முடக் கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே. @68. அச்சத் திரங்கல் #1 துறையிடும் கங்கைச் செழும் சடைக் கனியே சுயம்பிரகாசமே அமுதில் கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணைக் கடவுளே கண் நுதல் கரும்பே குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடும் துயரால் அலைந்து ஐயா முறையிடுகின்றேன் அருள்தராது என்னை மூடன் என்று இகழ்வது முறையோ. #2 இகழ்ந்திடேல் எளியேன்-தன்னை நீ அன்றி ஏன்றுகொள்பவர் இலை அந்தோ அகழ்ந்து எனது உளத்தைச் சூறைகொண்டு அலைக்கும் அஞர் எலாம் அறுத்து அருள் புரிவாய் புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப் பொருப்பினும் பொதுவினும் நிறைந்து திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வதத் தருவே செல்வமே சிவ_பரம் பொருளே. #3 பொருள் எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே புத்தமுதே குண_பொருப்பே இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளிப் பிழம்பே இன்பமே என் பெரும் துணையே அருள் எலாம் திரண்ட ஒரு சிவ_மூர்த்தி அண்ணலே நின் அடிக்கு அபயம் மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே. #4 ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணைத் திவலையே எனினும் ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன் நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர் வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே. #5 பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனிப் பொருளே அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்த நல் செல்வமே அமுதே இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன் கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே. #6 விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என் செய்கேன் என் பிழை பொறுத்துத் தளைத்தவன் துயர் நீத்து ஆள வல்லவர் நின்றனை அன்றி அறிந்திலன் தமியேன் கிளைத்த வான் கங்கை நதிச் சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே. #7 சிற்பர சிவனே தேவர்-தம் தலைமைத் தேவனே தில்லை அம்பலத்தே தற்பர நடம்செய் தாணுவே அகில சராசர காரணப் பொருளே அற்பர்-தம்மிடம் செல் பற்பல துயரால் அலைதருகின்றனன் எளியேன் கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ. #8 என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் என்று நின் அடியர்க்கு ஏவல்செய்திடும் நாள் என்று எனது அகத் துயர் அறும் நாள் மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது ஒன்றுறும் ஒன்றே அருள்மயமான உத்தம வித்தக மணியே. #9 வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரி கடல் ஆழ்ந்தனன் அந்தோ அத்தகவேனை எடுப்பவர் நின்னை அன்றி எங்கணும் இலை ஐயா மத்தகக் கரியின் உரி புனை பவள வண்ணனே விண்ணவர் அரசே புத்து அக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள் எலாம் புரிந்து அருள்பவனே. #10 அருள்பவன் நின்னை அல்லதை இங்கும் அங்கும் மற்று எங்கும் இன்று அது போல் மருள்பவன் என்னையல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே. @69. புறமொழிக் கிரங்கல் #1 கேள் அனம்-தான் ஒரு போது உண்டனை மனக் கேதம் அற நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய் ஏளனம் செய்குவர் நீ அருளாவிடில் என் அப்பனே #2 அப்பா நின் பொன் அருள் என் மேல் தயை செய்து அளித்திலையேல் துப்பானவும் ஒரு போது துவ்வாது சுழன்றனையே இப் பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ செப்பாய் என அரிப்பார் சிரிப்பார் இச் செகத்தவரே #3 தீது செய்தேற்கு அருள்செய்வான் நின் சித்தம் திரும்பிலையேல் தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால் யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே #4 தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில் பிரியாமை வைத்து அருள்செய்திலையேல் எனைப் பெற்றவளும் பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே பரியாசை செய்குவளால் அயலார் என் பகருவதே #5 எண்ணாமல் நாய்_அடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி அண்ணா நின் சித்தம் இரங்காய் எனில் இங்கு அயலவர்-தாம் பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு ஒண்ணாது இ வண்மை விரதம் என்றால் என் உரைப்பதுவே #6 பொய்யான வஞ்சகனேன் பிழை யாவும் பொறுத்து உன் அருள் செய்யாய் எனில் எது செய்குவன் யான் இச் செகதலத்தோர் எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய் அய்யா என் இன் அமுதே அரசே எனது ஆண்டவனே #7 உன் உள்ளம் கொண்டேற்கு அருளாய் எனில் இ உலகர் பொய்யாம் என் உள்ளம் கொண்ட களவு அறியாதுநின்று ஏட இங்கே நின் உள்ளம் கொள் விரதப் பயன் யாது நிகழ்த்து எனவே முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே #8 முந்து ஓகை கொண்டு நின் தண் அருள்_வாரியின் மூழ்குதற்கு இங்கு அந்தோ என் துன்பம் துடைத்து அருளாய் எனில் ஆங்கு உலகர் வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று இந்து ஓர்தரு சடையாய் விடையாய் என்னை ஏசுவரே #9 ஆசும் படி இல் அகங்காரமும் உடையான் என்று எண்ணிப் பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர் ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணிஎண்ணிக் கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே #10 ஐ தட்டிடும் நெஞ்சகத்தேன் பிழைகளை ஆய்ந்து வெறும் பொய் தட்டு இகல் உடையேற்கு உன் கருணை புரிந்திலையேல் வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே கைதட்டி வெண் நகைசெய்வர் கண்டாய் அருள் கற்பகமே @70. கருணை பெறா திரங்கல் #1 நன்றி ஒன்றிய நின் அடியவர்க்கே நானும் இங்கு ஒரு நாய்_அடியவன் காண் குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர்த் துணையே ஒன்றின் ஒன்றிய உத்தமப் பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே. #2 தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே ஏது செய்தனனேனும் என்றன்னை ஏன்றுகொள்வது எம் இறைவ நின் இயல்பே ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் ஓது செய்வது ஒன்று என் உயிர்த் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே. #3 சென்ற நாளினும் செல்கின்ற நாளில் சிறியனேன் மிகத் தியங்குறுகின்றேன் மன்ற நான் இவண் இவ்வகை ஆனால் வள்ளலே நினை வழுத்தும் ஆறு எதுவோ என்றனால் இனி ஆவது ஒன்று இலை உன் எண்ணம் எப்படி அப்படி இசைக உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே. #4 மையல் வாழ்க்கையில் நாள்-தொறும் அடியேன் வருந்தி நெஞ்சகம் மாழ்குவது எல்லாம் ஐய ஐயவோ கண்டிடாதவர் போல் அடம்பிடிப்பது உன் அருளினுக்கு அழகோ செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடைத் தென் முகம் நோக்கி உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே. #5 மண்ணகச் சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்று அதன் வன்மைகள் எல்லாம் எண்ணஎண்ண என் நெஞ்சகம் பதைப்புற்று ஏங்கிஏங்கி நான் இளைப்புறுகின்றேன் அண்ணல் நின் திரு_அருள் துணை அடைந்தால் அமைந்து வாழ்குவன் அடை வகை அறியேன் உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே. #6 அன்னை அப்பனும் நீ என மகிழ்ந்தே அகம் குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன் என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் பொன்னை ஒத்த நின் அடி துணை மலரைப் போற்றுவார்க்கு நீ புரிகுவது இதுவோ உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே. #7 நீலம் இட்ட கண் மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர் வழி நான் ஒரு வழியாய் ஞாலம் இட்ட இ வாழ்க்கையில் அடியேன் நடுங்கி உள்ளகம் நலியும் என் தன்மை ஆலம் இட்டு அருள் களத்த நீ அறிந்தும் அருள் அளித்திலை ஆக மற்று இதனை ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே. #8 கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்துக் கண்டும் என் குறை அகற்றாது நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ அடியர்-தம் துயர் கண்டிடில் தரியார் ஐயர் என்பர் என் அளவு அஃது இலையோ ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே. #9 என்னென்று ஏழையேன் நாணம் விட்டு உரைப்பேன் இறைவ நின்றனை இறைப் பொழுதேனும் உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே. #10 அடியனேன் மிசை ஆண்டவ நினக்கு ஓர் அன்பு இருந்தது என்று அகங்கரித்திருந்தேன் கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனைப் போல் எனை நினைத்தே நெடிய இத்துணைப் போதும் ஓர்சிறிதும் நெஞ்சு இரங்கிலை சஞ்சலத்து அறிவும் ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே. @71. திரு அருட் பதிகம் - திரு அண்ணாமலை #1 வளம் கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால் அயன் வழுத்தும் குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் தளம் கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்க நீ இருத்தல் கண்டு உவத்தல் உளம் கிளர் அமுதே துளங்கு நெஞ்சகனேன் உற்று அருணையில் பெற அருளே #2 அன்பர்-தம் மனத்தே இன்பமுற்று அவைகள் அளித்து அவர் களித்திடப் புரியும் பொன் பொலி மேனிக் கருணை அம் கடலே பொய்யனேன் பொய்மை கண்டு இன்னும் துன்பமுற்று அலையச் செய்திடேல் அருணைத் தொல் நகரிடத்து உனது எழில் கண்டு என்பு உளம் உருகத் துதித்திடல் வேண்டும் இ வரம் எனக்கு இவண் அருளே #3 பூத்திடும் அவனும் காத்திடுபவனும் புள் விலங்கு உருக் கொடு நேடி ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்று நல்லோர்கள் சாற்றிடும் அது கேட்டு உவந்தனன் நினது சந்நிதி உற எனக்கு அருளே #4 அருள் பழுத்து ஓங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமல நித்தியமே தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமைச் செல்வமே அருணை அம் தேவே இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் பொருள் பழுத்து ஓங்கும் சந்நிதி முன்னர்ப் போந்து உனைப் போற்றுமாறு அருளே #5 மறையும் அ மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர் மேல் இறையும் மா தவனும் இறையும் இன்னவன் என்று எய்திடா இறைவனே அடியேன் பொறையும் நல் நிறையும் அறிவும் நல் செறிவும் பொருந்திடாப் பொய்யனேன் எனினும் அறையும் நல் புகழ் சேர் அருணையை விழைந்தேன் அங்கு எனை அடைகுவித்து அருளே #6 தேடுவார் தேடும் செல்வமே சிவமே திரு அருணாபுரித் தேவே ஏடு வார் இதழிக் கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே பாடுவார்க்கு அளிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து நாடுவார் புகழும் நின் திரு_கோயில் நண்ணுமா எனக்கு இவண் அருளே #7 உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும் திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இடப் பாலும் கண்டு அடியேன் கலக ஐம்புலன் செய் துயரமும் மற்றைக் கலக்கமும் நீக்குமா அருளே #8 அருள் பெரும் கடலே ஆனந்த நறவே அடி நடு அந்தமும் கடந்த தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி இருள் பெரும் கடல் விட்டு ஏற நின் கோயிற்கு எளியனேன் வர வரம் அருளே #9 கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா அருணை எம் கோவே பரசிவானந்த அமுதமே அற்புத நிலையே இருள் நிலம் புகுதாது எனை எடுத்தாண்ட இன்பமே அன்பர்-தம் அன்பே பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனைப் போற்றும்வாறு அருளே #10 ஏது செய்திடினும் பொறுத்து அருள் புரியும் என் உயிர்க்கு ஒரு பெரும் துணையே தீது செய் மனத்தார்-தம்முடன் சேராச் செயல் எனக்கு அளித்த என் தேவே வாதுசெய் புலனால் வருந்தல்செய்கின்றேன் வருந்துறா வண்ணம் எற்கு அருளித் தாது_செய்பவன் ஏத்து அருணை அம் கோயில் சந்நிதிக்கு யான் வர அருளே @72. பிரசாதப் பதிகம் #1 சரதத்தால் அன்பர் சார்ந்திடும் நின் திரு விரதத்தால் அன்றி வேறு ஒன்றில் தீருமோ பரதத் தாண்டவனே பரிதிப்புரி வரதத்து ஆண்டவனே இ வருத்தமே. #2 வேதனேனும் விலக்குதற்பாலனோ தீதனேன் துயர் தீர்க்கும் வயித்திய நாதனே உன்றன் நல் அருள் இல்லையேல் நோதல் நேரும் வன் நோயில் சிறிதுமே. #3 அருந்தினால் அன்பு அகம் குளிர் ஆனந்த விருந்தினால் மகிழ்வித்து அருள் அண்ணலே வருந்தி நாட வரும் பிணி நின் அருள் மருந்தினால் அன்றி மற்றொன்றில் தீருமோ. #4 மாலும் நான்கு_வதனனும் மா மறை நாலும் நாட அரும் நம் பரனே எவ ராலும் நீக்க அரிது இ வருத்தம் நின் ஏலும் நல் அருள் இன்று எனில் சற்றுமே. #5 தேவராயினும் தேவர் வணங்கும் ஓர் மூவராயினும் முக்கண நின் அருள் மேவுறாது விலக்கிடற்பாலரோ ஓவுறாத உடல் பிணி-தன்னையே. #6 வைய நாயக வானவர் நாயக தையல் நாயகி சார்ந்திடும் நாயக உய்ய நின் அருள் ஒன்றுவது இல்லையேல் வெய்ய நோய்கள் விலகுவது இல்லையே. #7 கல்லை வில்லில் கணித்து அருள்செய்ததோர் எல்லை இன்றி எழும் இன்ப_வெள்ளமே இல்லை இல்லை நின் இன் அருள் இல்லையேல் தொல்லை நோயின் தொடக்கு-அது நீங்கலே. #8 நீதி மா தவர் நெஞ்சிடை நின்று ஒளிர் சோதியே முத்தொழில் உடை மூவர்க்கும் ஆதியே நின் அருள் ஒன்றும் இல்லையேல் வாதியாநிற்கும் வன் பிணி யாவுமே. #9 பத்தர் நித்தம் பயில் பரிதிப்புரி உத்தமப் பொருளே உன் அருள்-தனைப் பெத்தம் அற்றிடப் பெற்றவர்க்கு அல்லது நித்தம் உற்ற நெடும் பிணி நீங்குமோ. #10 சைவ சிற்குணர் தம் உளம் மன்னிய தெய்வ தற்பரனே சிவனே இங்கு உய்வதற்கு உன் அருள் ஒன்றும் இல்லையேல் நைவதற்கு நணுகுவ நோய்களே. @73. பிரார்த்தனைப் பதிகம் #1 அப்பு ஆர் மலர்ச் சடை ஆர்_அமுதே என் அருள்_துணையே துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுகக் கடலே வெப்பு ஆர்தரு துயரால் மெலிகின்றனன் வெற்று அடியேன் இப் பார்-தனில் என்னை அப்பா அஞ்சேல் என ஏன்றுகொள்ளே. #2 ஏன்றுகொள்வான் நமது இன் உயிர் போல் முக்கண் எந்தை என்றே சான்றுகொள்வாய் நினை நம்பி நின்றேன் இத் தமி அடியேன் மான்றுகொள்வான் வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல் ஞான்றுகொள்வேன் அன்றி யாது செய்வேன் இந்த நானிலத்தே. #3 நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர் சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே குலத் தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே புலத்தே இழிதகையேன் பிழை யாவும் பொறுத்து அருளே. #4 அருள் ஆர் அமுதப் பெரும் கடலே தில்லை அம்பலத்தில் பொருள் ஆர் நடம் புரி புண்ணியனே நினைப் போற்றுகிலேன் இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன் மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே. #5 வாயார நின் பொன்_மலர்_தாள் துணையே வழுத்துகிலேன் ஓயா இடர் உழந்து உள் நலிகின்றனன் ஓ கெடுவேன் பேயாய்ப் பிறந்திலன் பேயும் ஒவ்வேன் புலைப் பேறு உவக்கும் நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான் இங்ஙனே. #6 நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல் அருள் நீ தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு ஏன் செய்தனை என நின் தடுப்பார் இலை என் அரசே வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையக்தே. #7 வையகத்தே இடர் மாக் கடல் மூழ்கி வருந்துகின்ற பொய்யகத்தேனைப் புரந்து அருளாமல் புறம்பொழித்தால் நையகத்தேன் எது செய்வேன் அந்தோ உள் நலிகுவன் காண் மெய்யகத்தே நின்று ஒளிர்தரும் ஞான விரி சுடரே. #8 விரி துயரால் தடுமாறுகின்றேன் இந்த வெவ்வினையேன் பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான் அரிது கண்டாய் அடைவேன் எனல் ஆயினும் ஐய மணிப் புரி துவர் வார் சடையாய் நீ உவப்பில் புரியில் உண்டே. #9 உண்டோ என் போல் துயரால் அலைகின்றவர் உத்தம நீ கண்டு ஓர்சிறிதும் இரங்குகிலாய் இக் கடையவனேன் பண்டு ஓர் துணை அறியேன் நின்னை அன்றி நின் பற்றி நின்றேன் எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே. #10 கடலே அனைய துயர் மிகையால் உள் கலங்கும் என்னை விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது அடல் ஏறு உவந்த அருள்_கடலே அணி அம்பலத்துள் உடலே மருவும் உயிர் போல் நிறை ஒற்றியூர் அப்பனே. @74. திருப்புகற் பதிகம் #1 வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன் தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல் மாக நதியும் மதியும் வளர் சடை எம் ஏக இனி மற்று எனக்கு ஆர் இரங்குவரே #2 கள்ள மனத்துக் கடையோர்-பால் நாணுறும் என் உள்ள மெலிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல் எள்ளும் உலகில் எனக்கு ஆர் இரங்குவரே #3 பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம் பெருமான் உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும் அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல் என்னை முகம் பார்த்து எனக்கு ஆர் இரங்குவரே #4 துன் உடைய வியாக்கிரமத் தோல்_உடையான் தான் இருக்கப் பொன்_உடையார் பக்கம் புகுவானேன் என்று இருப்பேன் தன்னுடைய துன்பம் தவிர்த்து இங்கு அருளாயேல் என்_உடையாய் மற்று இங்கு எனக்கு ஆர் இரங்குவரே #5 வன்கண்ணர்-தம்மை மதியாது உன் பொன் அடியின்- தன்கண் அடியேன்-தன் சஞ்சல வன் நெஞ்சகத்தின் புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல் என் கண்_அனையாய் எனக்கு ஆர் இரங்குவரே #6 தோன்றுவதும் மாய்வதும் ஆம் சூழ்ச்சி இடைப்பட்டு அலைந்து மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை ஏன்றுகொளாய் என்னில் எனக்கு ஆர் இரங்குவரே #7 தீது முற்றும் நாளும் செயினும் பொறுத்து அருளும் சாது முற்றும் சூழ்ந்த தயாநிதி நீ என்று அடைந்தேன் கோது முற்றும் தீரக் குறியாயேல் நன்மை என்பது ஏதும் அற்ற பாவிக்கு எவர்-தான் இரங்குவரே #8 துன்றிய மா_பாதகத்தோன் சூழ் வினையை ஓர் கணத்தில் அன்று தவிர்த்து ஆண்ட அருள்_கடல் நீ என்று அடுத்தேன் கன்றுறும் என் கண் கலக்கம் கண்டும் இரங்காயேல் என்றும் உளாய் மற்று இங்கு எவர்-தான் இரங்குவரே #9 கோடாமே பன்றி தரும் குட்டிகட்குத் தாய் ஆகி வாடா முலை கொடுத்த வள்ளல் என நான் அடுத்தேன் வாடா என்று உன் அருளில் வாழ்வான் அருள் இலையேல் ஈடு ஆரும் இல்லாய் எனக்கு ஆர் இரங்குவரே #10 கல்லா நடையேன் கருணை_இலேன் ஆனாலும் நல்லார் புகழும் நமச்சிவாயப் பெயரே அல்லாது பற்று ஒன்று அறியேன் அருளாயேல் எல்லாம் உடையாய் எனக்கு ஆர் இரங்குவரே @75. சிந்தைத் திருப் பதிகம் #1 விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின் இடை ஆர்த்து நின்று அழும் இ ஏழை முகம் பாராமே நடை ஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க்கு ஈயாத உடையார்க்கோ என்னை_உடையாய் உதவுவதே #2 கற்றே அறியாக் கடைப் புலையேன் ஆனாலும் உற்றே நின்றன்னை நினைந்து ஓதுகின்றேன் அல்லாமே மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிரச் சற்றே இரங்கித் தயவு செய்தால் ஆகாதோ #3 கல்லாரொடும் திரிந்து என் கண்ணே நின் தாள் வழுத்தும் நல்லார்-தமைக் காண நாணுகின்றேன் ஆனாலும் வல்லாய் நின்றன்னை அன்றி மற்று ஒன்று அறியேன் நான் எல்லாம் அறிவாய்க்கு இதனை இயம்பல் என்னே #4 கள்ள நெறி கொள்ளும் கடை நாயேன் என்னினும் நின் வள்ளல் மலர்_தாளே வழுத்துகின்றேன் என்னுடைய உள்ள மெலிவோடு உடல் மெலிவும் கண்டும் அந்தோ எள்ளளவும் எந்தாய் இரங்காது இருந்தனையே #5 சீர் துணையார் தேடும் சிவனே நின்றன்னை அன்றி ஓர் துணையும் இல்லேன் நின் ஒண் பொன்_பதம் அறிய கார் துணையா நாடும் கலாபி என நாடுகின்றேன் ஆர் துணை என்று ஐயா அகல இருந்தனையே #6 பேய்_அனையாரோடும் பிழை புரிந்தேன் ஆனாலும் நாய்_அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன் தீ அனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும் தாய்_அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே #7 வெள்ளம் மருவும் விரி சடையாய் என்னுடைய உள்ள விரிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் தள்ள அரிய நின் அருள் ஓர் சற்றும் புரியாமே கள்ள வினைக்கு என் உளத்தைக் கைகாட்டி நின்றனையே #8 என் உரிமைத் தாய்க்கும் இனியாய் நின் ஐந்தெழுத்தை உன்னு நிலைக்கு என்னை உரித்தாக்க வேண்டுதியேல் மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனைக் காத்து அயர்ந்தேன்- தன்னுடைய எண்ணம்-தனை முடிக்க வேண்டுவதே #9 குற்றம் எலாம் நல்ல குணமாகக் கொண்டு அருளும் உற்ற_துணை நீயே மற்று ஓர் துணையும் இல்லை என்றே நல் தலைமையாம் உனது நாமம் நவில்கின்றேன் கற்றவனே என்றனை நீ கைவிடில் என் செய்வேனே #10 அறியாப் பருவத்து அறிவுறுத்தி ஆட்கொண்ட நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை பொறி ஆர் நின் நாமம் புகலுவதே அன்றி மற்றை வெறியார் வன் நாமம் ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேனே @76. உய்கைத் திருப் பதிகம் #1 திருவும் சீரும் சிறப்பும் திறலும் சற் குருவும் கல்வியும் குற்றம் இல் கேள்வியும் பொரு இல் அன்னையும் போக்கு அறு தந்தையும் தரும வெள் விடைச் சாமி நின் நாமமே #2 பொய்யனேன் பிழை யாவும் பொறுத்து அருள் செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால் அய்யனே முக்கணா இ அடியனேற்கு உய்ய வேறு புகல் இலை உண்மையே #3 கள்ள நெஞ்சகனேனும் கடையனேன் வள்ளல் நின் மலர் வார் கழல் பாதமே உள்ளுவேன் மற்றை ஓர் தெய்வ நேயமும் கொள்ளலேன் என் குறிப்பு அறிந்து ஆள்கவே #4 வஞ்ச மாதர் மயக்கம் கனவினும் எஞ்சுறாது இதற்கு என் செய்குவேன் என்றன் நெஞ்சம் அ மயல் நீங்கிட வந்து எனைத் தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே #5 பற்று நெஞ்சகப் பாதகனேன் செயும் குற்றம் யாவும் குணம் எனக் கொண்டு அருள் உற்ற எள்துணையேனும் உதவுவாய் கற்ற நல் தவர் ஏத்தும் முக்கண்ணனே #6 மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும் பதியும் ஈந்து எம் பசுபதி மெய் நெறிக் கதியின் வைப்பது நின் கடன் வன் கடல் வதியும் நஞ்சம் அணி மணி_கண்டனே #7 நீடு வாழ்க்கை நெறி வரு துன்பினால் வாடும் என்னை வருந்தல் என்று உன் பதம் பாடும் வண்ணம் நல் பாங்கு அருள்வாய் மன்றுள் ஆடும் முக்கண் அருள் பெரு வெள்ளமே #8 சிந்தை நொந்து இ சிறிய அடியனேன் எந்தை என்று உனை எண்ணிநிற்கின்றனன் இந்து சேகரனே உன்றன் இன் அருள் தந்து காப்பது உன்றன் கடன் ஆகுமே #9 உன்னை நாடும் என் உள்ளம் பிறரிடைப் பொன்னை நாடும் புதுமை இது என்-கொலோ மின்னை நாடும் நல் வேணிப் பிரான் இங்கே என்னை நாடி எனக்கு அருள்செய்கவே #10 இழை பொறுத்த முலையவர்க்கு ஏற்ற என் பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும் மழை பொறுக்கும் வடிவு_உடையோன் புகழ் தழை பொறுக்கும் சடை முடித் தந்தையே #11 மூடனேன் பிழை முற்றும் பொறுத்து உனைப் பாடவே அருள் பாங்கு எனக்கு ஈதியேல் நாட வேறு மனையிடை நண்ணி நான் வாட வேண்டுவது என்னை எம் வள்ளலே #12 மின் ஒப்பு ஆகி விளங்கும் விரி சடை என் அப்பா எனக்கு இன் அருள் ஈந்து நின் பொன் ஒப்பாம் துணைப் பூம் பதம் போற்றியே உன்னப் பாங்கின் உயர் நெறி உய்க்கவே @77. ஆனந்தப் பதிகம் #1 குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டைக் காத்துக் குணம்_இலியாய்ப் படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனைப் பரிந்து அருளிப் பொடி கொள் வெள்ளைப் பூச்சு அணிந்த பொன்னே உன்னைப் போற்றி ஒற்றிக் கடி கொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே. #2 சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி ஈதல் இரக்கம் எள்ளளவும் இல்லாது அலையும் என்றனை நீ ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து ஒற்றியூர்ச் சென்று உனைப் பாடக் காதல் அறிவித்து ஆண்டதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே. #3 அற்ப அளவும் நிச்சயிக்கலாகா உடம்பை அருமைசெய்து நிற்பதலது உன் பொன்_அடியை நினையாக் கொடிய நீலன் எனைச் சற்ப அணியாய் நின்றன் ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின் புகழைக் கற்ப அருள்செய்தனை அதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே. #4 உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே கொண்டு காக்கைக்கு இரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியன் எனை விண்டு அறியா நின் புகழை விரும்பி ஒற்றியூரில் நினைக் கண்டு வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே. #5 நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான் வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை ஆய்க்கும் இனிய அப்பா உன் ஒற்றியூரை அடைந்து இருளைக் காய்க்கும் வண்ணம் செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே. #6 குருதி நிறைந்த குறும் குடத்தைக் கொண்டோன் வழியில் சென்று இடவாய் எருதின் மனத்தேன் சுமந்து நலம் இழந்து திரியும் எய்ப்பு ஒழிய வருதி எனவே வழி அருளி ஒற்றியூர்க்கு வந்து உன்னைக் கருதி வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே. #7 பாவம் எனும் ஓர் பெரும் சரக்குப் பையை எடுத்துப் பண்பு அறியாக் கோவம் எனும் ஓர் குரங்கு ஆட்டும் கொடியேன்-தன்னைப் பொருட்படுத்தித் தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே. #8 பொள்ளல் குடத்தின் புலால் உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன் இழந்தே துள்ளற்கு எழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை உள்ளற்கு அறிவு தந்து உன்றன் ஒற்றியூர்க்கு வந்து வினைக் கள்ளப் பகை நீக்கிடச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே. #9 கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லாக் கூரை-தனை நாட்டும் பரம வீடு எனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு காட்டும் கருணைசெய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே. #10 ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பைத் தாங்குகின்ற தூணத் தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை மாணப் பரிவால் அருள் சிந்தாமணியே உன்றன் ஒற்றி நகர் காணப் பணித்த அருளினுக்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே. #11 புண்ணும் வழும்பும் புலால் நீரும் புழுவும் பொதிந்த பொதி போல நண்ணும் கொடிய நடை_மனையை நான் என்று உளறும் நாயேனை உண்ணும் அமுதே நீ அமர்ந்த ஒற்றியூர் கண்டு என் மனமும் கண்ணும் களிக்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே. @78 திரு வண்ணப் பதிகம் #1 திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணைப் பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே. #2 எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க நண்ணும் மன மாயையாம் காட்டைக் கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே. #3 பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமாப் புகலும் மூவுலகு நீத்துப் புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளித் துணையினால் வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே #4 கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உறக் கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவப் புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்கக் கார் கொண்ட இடி ஒலிக் கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே #5 படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயைப் பார்த்துக் களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாகத் திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீரத் துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய்க் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே #6 எழு வகைப் பிறவிகளுள் எப் பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக வழு வகைத் துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே கழி வகைப் பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே #7 பற்றுவது பந்தம் அப் பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இப் புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அச் சுழல் மனம் அடக்க வருமோ கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே #8 எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே #9 சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திரப் படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடைக் கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே #10 நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே ஊன் முகச் செயல் விடுத்து உள் முகப் பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே கான் முகக் கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே @79. போற்றித் திருப் பதிகம் #1 அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே அடியனேன் மனத்தகத்து எழுந்த இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனைப் பாடும் தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே #2 மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி அணி மதி முடியோய் போற்றி இ ஏழைக்கு அருள் அமுது அருளுக போற்றி பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னைத் தாங்குக போற்றி நின் பதமே #3 நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடித் தயா நிதியே #4 நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி மதி முடிக் கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி #5 போற்றி என் உயிர்க்கு ஓர் இன்பமே அன்பர் புரி தவக் காட்சியே போற்றி போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி போற்றி என் பெரிதாம் செல்வமே கருணைப் பூரண வெள்ளமே போற்றி போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடிப் போதே #6 போத ஆனந்த போகமே என்னைப் புறம்பு இட நினைத்திடேல் போற்றி சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி #7 போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி #8 துணை முலை மடந்தை எம் பெருமாட்டி துணைவ நின் துணை அடி போற்றி புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி இணை_இல் பேர்_இன்ப அமுது அருள் கருணை இறைவ நின் இணை அடி போற்றி கணை எனக் கண்ணன்-தனைக் கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி #9 அடியனேன் பிழைகள் பொறுத்து அருள் போற்றி அயல் எனை விட்டிடேல் போற்றி கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குணப் பெரும் குன்றமே போற்றி நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி படி மிசைப் பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே #10 நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே @80. விண்ணப்பப் பதிகம் - திரு ஆரூர் #1 தண் ஆர் மதி போல் சீதள வெண் தரளக் கவிகைத் தனி நிழல் கீழ்க் கண் ஆர் செல்வச் செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் பெண் ஆர் பாகப் பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே எண்ணாநின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே #2 இரங்காது இருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்த மன_ குரங்கால் அலைப்புண்டு அலைகின்ற கொடிய பாவி இவன் என்றே உரம் காதலித்தோர் சிரிப்பார் நான் உலகத் துயரம் நடிக்கின்ற அரங்காக் கிடப்பேன் என் செய்வேன் ஆரூர் அமர்ந்த அரு மணியே #3 மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ணப் பவள மா மலையே அணியால் விளங்கும் திருவாரூர் ஆரா_அமுதே அடிச் சிறியேன் தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன் திணி ஆர் முருட்டுக் கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே #4 தெரியத் தெரியும் தெரிவு_உடையார் சிவாநுபவத்தில் சிறக்கின்றார் பிரியப் பிரியும் பெரும் பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன் துரியப் பொருளே அணி ஆரூர்ச் சோதி மணி நீ தூய அருள் புரியப் பெறுவேன் எனில் அவர் போல் யானும் சுகத்தில் பொலிவேனே #5 பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதானந்தக் கடல் ஆடி மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணி நீ வழங்காயேல் மெலிவேன் துன்ப_கடல் மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல் நலிவேன் அந்தோ அந்தோ நின் நல்ல கருணைக்கு அழகு அன்றே #6 கருணை_கடலே திருவாரூர்க் கடவுள் சுடரே நின்னுடைய அருணக் கமல மலர்_அடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல் வருணக் கொலை மா_பாதகனாம் மறையோன்-தனக்கு மகிழ்ந்து அன்று தருணக் கருணை அளித்த புகழ் என்னாம் இ நாள் சாற்றுகவே #7 இ நாள் அடியேன் பிழைத்த பிழை எண்ணி இரங்காய் எனில் அந்தோ அ நாள் அடிமைகொண்டனையே பிழை யாது ஒன்றும் அறிந்திலையோ பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ என் நாயகனே திருவாரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே #8 உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒரு நாளேனும் ஒழிந்திடவும் வெள்ளக் கருணை இறையேனும் மேவி இடவும் பெற்று அறியேன் கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத் தள்ளத் தகுமோ திருவாரூர் எந்தாய் எந்தாய் தமியேனே #9 எந்தாய் ஒரு நாள் அருள் வடிவின் எளியேன் கண்டு களிப்பு அடைய வந்தாய் அந்தோ கடை நாயேன் மறந்து விடுத்தேன் மதி கெட்டேன் செந்தாமரைத் தாள் இணை அன்றே சிக்கென்று இறுகப் பிடித்தேனேல் இந்து ஆர் சடையாய் திருவாரூர் இறைவா துயர் அற்று இருப்பேனே #10 இருப்பு மனத்துக் கடை நாயேன் என் செய்வேன் நின் திரு_அருளாம் பொருப்பில் அமர்ந்தார் அடியர் எலாம் அந்தோ உலகப் புலை ஒழுக்காம் திருப்பில் சுழன்று நான் ஒருவன் திகைக்கின்றேன் ஓர் துணை காணேன் விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண் ஆர் வியன் அமுதே @81. தரிசனப் பதிகம் #1 திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுதத் திரள் அனைய உரு ஆர் அறிவானந்த நடம் உடையார் அடியார்க்கு உவகை நிலை தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் இரு_வாதனை அற்று அந்தோ நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ. #2 பொன்_நாயகனும் புரந்தரனும் பூ_வாழ்பவனும் புகழ்ந்து ஏத்த மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் அன்னார் அறிவானந்த நடம் ஆடும் கழல் கண்டு அகம் குளிர்ந்தேன் என் நாயகனார் அவர் கழலை இன்னும் ஒரு கால் காண்பேனோ. #3 தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார் வாயிற்கு இனிய புகழ் உடைய வள்ளல் அவர்-தம் திரு_அழகைக் கோயிற்கு அருகே சென்று மனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன் ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ. #4 புன்கண் அகற்றும் மெய் அடியார் போற்றும் பொன்_அம்பல நடுவே வன்கண் அறியார் திரு_நடம்செய் வரதர் அமுதத் திரு_முகத்தை முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் என் கண்_அனையார் அவர் முகத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ #5 அன்புற்று அடியார் தொழுது ஏத்த அணி ஆர் மணிப் பொன்_அம்பலத்தே வன்புற்று அழியாப் பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார் மன் புற்று அரவு ஆர் கச்சு இடையின் வயங்க நடம்செய்வது கண்டேன் இன்புற்று அடியேன் அவர் நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ #6 இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே அ மால் அறியா அடிகள் அடி அசைய நடம்செய்வது கண்டேன் எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான் எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ #7 சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமைக் கண்டேன் பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்தப் பிரிவினைக் கீழ் எறியேன் அந்தோ அவர்-தம்மை இன்னும் ஒரு கால் காண்பேனோ #8 அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்-தமைத் தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன் மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன் இருள் ஏர் மனத்தேன் அவர்-தமை நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ #9 அன்னோ திரு_அம்பலத்தே எம் ஐயர் உருக் கண்டேன் அது-தான் பொன்னோ பவளப் பொருப்பு அதுவோ புது மாணிக்க மணித் திரளோ மின்னோ விளக்கோ விரி சுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ #10 பொன் என்று உரைக்கும் அம்பலத்தே புனிதனார்-தம் அழகு இயலை உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் என்னென்று உரைப்பேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ @82. அபராத விண்ணப்பம் #1 உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே இலகு அம்பரத்தே பரம்பரமாய் இன்ப நடம் செய் எம் இறையே கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட்டிட நீ கருதுதியோ திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே #2 அன்று ஓர் பொருளாய் அடியேனை ஆட்கொண்டு அருளி அறிவு அளித்தாய் இன்றோ சிறியேன் பிழை கருதி இரங்காது அகற்ற எண்ணுதியோ குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய் நன்றோ கருணைப் பெரும் கடலே ஆளாய் இந்த நாயினையே #3 நாய்க்கும் கடையேன் பிழை அனைத்தும் நாடில் தவத்தால் நல்கிய நல் தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார் வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே #4 பேதைப் பருவத்து எனை வலியப் பிடித்து ஆட்கொண்ட பெருமானே போதைக் கழிப்பான் வீண் புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல் வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே ஓதைக் கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே #5 உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே நரைத்தார் இறந்தார் அவர்-தம்மை நான் கண்டிருந்தும் நாணாமே விரைத் தாள்_மலரைப் பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் திரைத் தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே #6 செய்வேன் தீமை நலம் ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை வைவேன் அன்றி வாழ்த்தேன் என் வண்ணம் இந்த வண்ணம் எனில் உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால் நைவேன் அலது இங்கு என் செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே #7 எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால் நண்ணி நலிவைத் தவிராயேல் என் செய்திடுவேன் நாயகனே கண்ணி நலியப் படும் பறவைக் கால் போல் மனக் கால் கட்டுண்ணப் பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே #8 பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பதப் பணியே புரியும் இனத்தாரொடும் கூடிப் புனிதனாக வேண்டும் எனத் திரியும் அடிமைச் சிறியேனுக்கு இரங்காது இருந்தால் சில் நாள் பின் எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே #9 என் செய்திடுவேன் புலை நாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம் நின் பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல் புன்செய் விளவிப் பயன்_இலியாய்ப் புறத்தில் கிடத்தி என அடியார் வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே #10 வாழா மனத்தின் வழி சென்று வாளா நாளைக் கழிக்கின்ற பாழாம் உலகச் சிறு நடையில் பாவியேனைப் பதிவித்தாய் ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன் ஏழாம் நரகுக்கு ஆளாவேன் அல்லால் புகல் என் எளியேற்கே #11 எளியேன் கருணைத் திரு_நடம் செய் இணைத் தாள்_மலர் கண்டு இதயம் எலாம் களியேன் கருங்கல் பாறை எனக் கிடக்கின்றேன் இக் கடையேனை அளியே பெருக ஆளுதியோ ஆள்கிலாயோ யாது ஒன்றும் தெளியேன் அந்தோ அந்தோ என் செய்வேன் விலங்கில் சிறியேனே #12 சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னைச் சீறுதியோ எறியேம் எனக் கொண்டு இரங்குதியோ இவ்வாறு அவ்வாறு என ஒன்றும் அறியேன் அவல_கடல் அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன் பிறியேன் என்னைப் பிரிக்கினும் பின் துணையும் காணேன் பெருமானே #13 காணேன் நினது திரு_அருளைக் கண்டார்-தமது கழல் தலை மேல் பூணேன் உலகச் சிறு நடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச் சுமக்கும் தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே #14 சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமைச் சூழ்ந்து வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவல_கடலில் சலியாமே வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே #15 வினையே பெருக்கிக் கடை நாயேன் விடயச் செருக்கால் மிக நீண்ட பனையே என நின்று உலர்கின்றேன் பாவியேனுக்கு அருளுதியோ நினையே நினையாப் பிழை கருதி நெகிழவிடவே நினைதியோ அனையே அனையாய் திரு_குறிப்பை அறியேன் ஈது என்று அடியேனே #16 அடியேன் முடுகிச் செயும் பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோ இக் கொடியேன் நினைக்கும்-தொறும் உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன் செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் பொடியே திகழும் வடிவு_உடையாய் யாது புரிவேன் புலையேனே #17 புலையே புரியும் மனம் போன போக்கே அல்லால் புண்ணிய நல் நிலையே அறியேன் சிறியேனுக்கு அருளல் அழகோ நிறைந்த குண_ மலையே மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே #18 கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்திக் கடு வினையேன் மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே #19 அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன் படியார் பலரும் பல பேசிச் சிரியாநின்றார் பரந்து இரவும் விடியாநின்றது என் புரிவேன் இன்னும் கருணை விளைத்திலையே கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குண_குன்றே #20 குன்றா நிலை நின்று அருள் அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன் நான் நன்றாம் நெறி சென்று அறியாதே மனம் செல் வழியே நடக்கின்றேன் பொன்றா மணியே அவர்க்கு அருளி என்னை விடுத்தல் புகழ் அன்றே என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே #21 என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னைப் பொருளாய் எண்ணி மகிழ்ந்து அ நாள் அடிமைகொண்டு அளித்தாய் யார்க்கோ வந்த விருந்து எனவே இ நாள் இரங்காது இருக்கின்றாய் எங்கே புகுவேன் என் புரிவேன் நின்னால் அன்றிப் பிறர்-தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே #22 நின்-பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடு வினையேன் வன்பால் மன_பேய்-தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன் தென் பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே @83. கலி விண்ணப்பம் #1 செறியாத நெஞ்சக வஞ்சகனேன் இச் சிறு தலத்தே அறியாது அறிந்தவன் போல் சில செய்திடல் ஐய நின் தாள் குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே முறியாது அருள்செய்தியோ தெரியேன் எந்தை முன்னியதே #2 தீது ஒன்றுமே கண்டு அறிந்தது அல்லால் பலன் சேர நலம் யாது ஒன்றும் நான் கண்டு அறியேன் அறிந்தவன் என்ன இங்கே போது ஒன்று போக்குகின்றேன் பிழை யாவும் பொறுத்து அருள்வாய் மாது ஒன்று பாகத் துணை அன்றி நல் துணை மற்று இலையே #3 எல்லாம் தெரிந்த இறைவா நின் தண் அருள் எய்துகிலாப் பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்து அருள்வாய் கல்லா மனக் கடையாலே கடைவைத்துக் கண்டது துன்பு அல்லால் அணுத்துணையும் அறியேன் இன்பம் ஆவதுவே #4 மண்ணுடையாரிடை வாளா மனம் செல வைத்தது அலால் எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன் புண்ணுடையாரின் புலம்புகின்றேனைப் பொறுத்து அருள் முக் கண்_உடையாய் கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே #5 தாழாத துன்பச் சமுத்திரத்தே இத் தனி அடியேன் வீழாத வண்ணம் கருணைசெய்வாய் என்னை வேண்டி அ நாள் ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே வாழா வகை எனை இ நாள் விடுத்தல் வழக்கு அலவே #6 ஊன் செய்த வெம் புலைக் கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து நான் செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன் ஏன் செய்தனை எனக் கேளாது மேலும் இரங்குகின்றாய் வான் செய்த நாத நின் தண் அருள் வண்ணம் என் வாழ்த்துவனே #7 ஆயாது நான் செயும் குற்றங்களைக் கண்டு அறியில் பெற்ற தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே ஓயாது செய்யும்-தொறும் பொறுத்து ஆளும் உனை எளியேன் வாயால் உரைக்கவும் மாட்டேன் அந்தோ என்ன வன்மை இதே #8 ஒன்றும் தெரிந்திட மாட்டாப் பருவத்து உணர்வு தந்தாய் இன்றும் தருதற்கு இறைவா நின் உள்ளம் இயைதி-கொலோ கன்றும் கருத்தொடு மாழ்குகின்றேன் உன் கழல் அடிக்கே துன்றும் கருத்து அறியேன் சிறியேன் என் துணிவு அதுவே #9 ஆஆ என எனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன் வாவா என அழைப்பார் பிறர் இல்லை மறந்தும் என்றன் நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே #10 பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால் எள்ளத்திலே சிறிது ஆயினும் நான் செல்வது இல்லை எந்தாய் கள்ளத்திலே சொல்லுகின்றேன்_அல நின் கழல் இணை என் உள்ளத்திலே நின்ற ஆங்கு அவை காண்க உடையவனே @84 கருணை விண்ணப்பம் #1 நல்லார்க்கு எல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாய்_அடியேன் பொல்லார்க்கு எல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால் எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது அல்லால் வழக்கு என் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே. #2 இடமே பொருளே ஏவலே என்றென்று எண்ணி இடர்ப்படும் ஓர் மடமே உடையேன்-தனக்கு அருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த நடமே உடையோய் நினை அன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத் திடமே அருள்-தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே. #3 தெரித்தாலன்றிச் சிறிதேனும் தெரிவு ஒன்று இல்லாச் சிறியேனைப் பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல் தரித்தாய் அடியேன் பிழை பொறுக்கத் தகும் காண் துன்பம் தமியேனை அரித்தால் கண்டு இங்கு இரங்காமை அந்தோ அருளுக்கு அழகேயோ. #4 அருள் ஓர்சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற்கு அடியேன்-பால் தெருள் ஓர்சிறிதும் இலையே என் செய்கேன் எங்கள் சிவனேயோ மருளோர் எனினும் தமை நோக்கி வந்தார்க்கு அளித்தல் வழக்கு அன்றோ பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிது அன்றே. #5 புதியேன் அல்லேன் நின் அடிமைப் பொருத்தம் இல்லேன்_அல்லேன் யான் மதியேன் வேற்றுத் தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் துதியேன் நின்னை விடுவேனோ தொண்டனேனை விடல் அழகோ நதி ஏர் சடையோய் இன் அருள் நீ நல்கல் வேண்டும் நாயேற்கே. #6 நாயேன் துன்ப_கடல் வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கு இங்கு ஈயேன் ஒன்றும் இல்லேன் நான் என் செய்கேனோ என்னுடைய தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ. #7 சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும் வண்ணம் தெரிப்பார் நினக்கும் எவர் கண்டாய் தேவர் தேடற்கு அரியானே. #8 அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும் பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே. #9 அன்றும் சிறியேன் அறிவு அறியேன் அது நீ அறிந்தும் அருள்செய்தாய் இன்றும் சிறியேன் அறிவு அறியேன் இது நீ அறிந்தும் அருளாயேல் என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம் தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே. #10 சொல்லற்கு அரிய பெரிய பரஞ்சுடரே முக்கண் சுடர்க் கொழுந்தே மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த அல்லல்_கடல்-நின்று எனை எடுத்தே அருள்வாய் உன்றன் அருள் நலமே. @85. அடிமைப் பதிகம் #1 ஆள்வினையால் பயனுறுவார் அசதியாட அந்தோ இப் புலை நாயேன் அன்பால் நின்-பால் வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன் கேள்வி இலாத் துரைத்தனமோ அலது நாயேன் கிளக்கும் முறை கிளக்கிலனோ கேட்டிலாயே #2 கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலாக் குணத்தவர்-பால் கிட்டுகின்றோய் ஏட்டில் ஆயிரம்கோடி எனினும் சற்றும் எழுத முடியாக் குறை கொண்டு இளைக்கின்றேன் நான் சேட்டியாவிடினும் எனைச் சேட்டித் தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையைத் தேர்தியாயில் நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும் #3 வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர்க் கொழுந்தே என் உயிர்க்குத் துணையே என்னை ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே ஈண்டு ஆவ எனச் சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே #4 என்னை அறியாப் பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என் றன்னை இன்று விடத் துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணைத் தகவுக்கு எந்தாய் உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று முன்னை வினைப் பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவது என்னே #5 என் நாணை அறிந்தும் என்னை அந்தோ அந்தோ இவ்வகை செய்திடத் துணிந்தாய் என்னே எந்தாய் நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே #6 உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்னக் கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மனத் துயர் போம் வகை அருள மதித்திடாயே #7 வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும் தகை அறியேன் நலம் ஒன்றும் அறியேன் பொய்ம்மை-தான் அறிவேன் நல்லோரைச் சலம்செய்கின்ற மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்தப் பாவி உயிர்விடத் துணிவேன் பகர்ந்திட்டேனே #8 இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின் மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் துட்டன் என விடத் துணிதியாயில் அந்தோ சூறையுறு துரும்பு எனவும் சுழன்று வானில் விட்ட சிலை எனப் பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே #9 விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியாச் சிறு பருவத்து என்னை ஆண்டு நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே #10 நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி இலை அறியேன் மற்றவரைக் கனவிலேனும் எள்துணை ஓர் துணை எனவும் எண்ணுறேன் நல் கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும் அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே @86. உள்ளப் பஞ்சகம் #1 நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றைத் தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் பேர் ஆயிரத்தது பேரா வரத்தது பேர்_உலகம் ஓரா வளத்தது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே. #2 மட்டுப்படாதது மா மறையாலும் மலப் பகையால் கட்டுப்படாதது மால் ஆதியர்-தம் கருத்தினுக்கும் தட்டுப்படாதது பார் முதல் பூதத் தடைகளினால் ஒட்டுப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே. #3 பேதப்படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும் சேதப்படாதது நன்று இது தீது இது எனச் செய்கைகளால் ஏதப்படாதது உள் எட்டப்படாதது இங்கு யாவர்கட்கும் ஓதப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே. #4 தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறைப் பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீக் கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள ஒண்ணா நிலையது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே. #5 பிறவா நெறியது பேசா நிலையது பேசில் என்றும் இறவா உருவது உள் ஏற்றால் வருவது இருள் அகன்றோர் மறவாது உடையது மாது ஓர் புடையது வாழ்த்துகின்றோர் உறவாய் இருப்பது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே. @87. சரணப் பதிகம் #1 மதி வார் சடை மா மணியே அருள் வள்ளலே நல் நிதியே திரு அம்பலத்து ஆடல்செய் நித்தனே நின் துதியேன் எனினும் உனை அன்றித் துணை_இலேன் என் பதியே எனது எண்ணம் பலிக்கும்படிக்கு அருளே #2 படி மேல் அடியேன் உனை அன்றி ஓர் பற்று_இலேன் என் முடி மேல் அடி வைத்து அருள்செய்திட முன்னு கண்டாய் கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே பொடி மேல் விளங்குந் திரு_மேனி எம் புண்ணியனே #3 புண்ணாம் மனம் சஞ்சலித்து உள்ளம் புலர்ந்து நின்றேன் அண்ணா எனை ஆட்கொள வேண்டும் அகற்றுவாயேல் கண் ஆர் களைகண் பிறிது ஒன்று இலை கள்ளனேனை எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே #4 செய்வேன் அவம் அன்றித் தவம் ஒன்றும் செய்து அறியேன் நைவேன் பிழை யாவும் பொறுத்து அருள் நல்குவாயேல் உய்வேன் அலது உய் வகை இன்று மன்று ஓங்குகின்றாய் வைவேன் துதிப்பேன் உனை என்றும் மறந்திலேனே #5 மறவாது உனை வாழ்த்தும் மெய் அன்பரை மா நிலத்தே இறவா வகை ஆட்கொண்டு அருளிய ஈசனே மெய் உறவு ஆகிய நின் பதம் அன்றி ஒன்று ஓர்கிலேன் நான் பிறவா நெறி தந்து அருள் என்பது என் பேசிடாயே #6 என்னே இனும் நின் அருள் எய்திலன் ஏழையேனை முன்னே வலிந்து ஆட்கொண்டது இன்று முனிந்ததேயோ பொன் ஏர் அணி அம்பலத்து ஆடிய புண்ணியா என் அன்னே அரசே அமுதே அருள் ஆண்டவனே #7 ஆண்டாய் எனை ஏழ் பிறப்பும் உனை அன்றி ஒன்றும் தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க வேண்டாது அயலார் எனக் காண்பது என் மெய்யனே பொன்_ ஆண்டான் திரு எய்த நஞ்சைக் களம் நாட்டினோயே #8 நாட்டார் நகைசெய்வர் என்றோ அருள் நல்கிலாய் நீ வீட்டார் நினை என் நினைப்பார் எனை மேவிலாயேல் தாள் தாமரை அன்றித் துணை ஒன்றும் சார்ந்திலேன் என் மாட்டாமை அறிந்து அருள்வாய் மணி மன்று_உளானே #9 மன்று ஆடிய மா மணியே தனி வானவா ஓர் மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன் பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று நன்றாய் இரவும்_பகலும் உனை நாடுமாறே #10 மாறா மன மாயையினால் மதி மாழ்கி மாழ்கி ஏறாமல் இறங்குகின்றேன் இதற்கு என் செய்வேன் தேறா உளத்தேன்-தனை ஏறிடச்செய்தி கண்டாய் பேறா மணி அம்பலம் மேவிய பெற்றியானே #11 ஆன் ஏறி வந்து அன்பரை ஆட்கொளும் ஐயனே எம் மானே மணி மன்றில் நடம் புரி வள்ளலே செம் தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ- தானே எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே @88. நெஞ்சொடு நெகிழ்தல் #1 சீர் தருவார் புகழ்ப் பேர் தருவார் அருள் தேன் தருவார் ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார் ஏர் தருவார் தரு ஆர் ஒற்றியூர் எம் இறைவர் அன்றி யார் தருவார் நெஞ்சமே இங்கும் அங்கும் இயம்புகவே. #2 வாடக் கற்றாய் இஃது என்னை நெஞ்சே இசை வாய்ந்த சிந்து பாடக் கற்றாய்_இலை பொய் வேடம் கட்டிப் படி மிசைக் கூத்து ஆடக் கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார் நீடக் கற்றார் புகழ் ஒற்றி எம்மானை நினை இனியே. #3 சோடு இல்லை மேல் வெள்ளைச் சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை பாடு இல்லை கையில் பணம் இல்லை தேகப் பருமன் இல்லை வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே #4 நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில் கண்டும் பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ வாராதிருப்பது என் வாரும் என்பார் இந்த வஞ்சகர்-பால் சேராது நல் நெஞ்சமே ஒற்றியூரனைச் சேர் விரைந்தே. #5 பொய் விரிப்பார்க்குப் பொருள் விரிப்பார் நல் பொருள் பயனாம் மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பணப் பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே. #6 வாழைக் கனி உணமாட்டாது வானின் வளர்ந்து உயர்ந்த தாழைக் கனி உணத் தாவுகின்றோரில் சயிலம் பெற்ற மாழைக் கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே ஏழைக் கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே. #7 காய் ஆர் சரிகைக் கலிங்கம் உண்டேல் இக் கலிங்கம் கண்டால் நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் வாயார் இடம் செலல் நெஞ்சே விடைதர வல்லை அன்றே. #8 துட்ட வஞ்சக நெஞ்சகமே ஒன்று சொல்லக் கேள் கடல் சூழ் உலகத்திலே இட்டம் என்-கொல் இறையளவேனும் ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால் நட்டம் மிக்குறல் கண்டுகண்டு ஏங்கினை நாணுகின்றிலை நாய்க்கும் கடையை நீ பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே. #9 பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளைப் பேசற்கொண்ணாத் துரிய நிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்கும் உள்ள தொன்மை-தன்னை அரிய பரம்பரமான சிதம்பரத்தே நடம் புரியும் அமுதை அந்தோ உரிய பரகதி அடைதற்கு உன்னினையேல் மனனே நீ உய்குவாயே. #10 சொல் நிலைக்கும் பொருள் நிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர் தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும் முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய்ச் சுத்த நல் நிலைக்கும் நிலையாய பசுபதியை மனனே நீ நவின்றிடாயே. #11 மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ புண் முகத்தில் சுவை விரும்பும் எறும்பு என வாளா நாளைப் போக்குகின்றாய் சண் முகத்து எம்பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பிரானை உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே. #12 மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகித் திரிந்தும் உளம் மாலாய்ப் பின்னும் வால் எடுத்துக்கொண்டு நடந்து அணி விடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீ அக் கால் எடுத்துக்கொண்டு சுமந்திட விரும்புகிலை அந்தோ கருதும் வேதம் நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே. #13 உலகம் ஏத்திநின்று ஓங்க ஓங்கிய ஒளி கொள் மன்றிடை அளி கொள் மா நடம் இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடைக் கருத்தே. @89. பொதுத் தனித் திருவெண்பா #1 வந்திக்கும் மெய் அடியார் மால் அற்ற ஓர் மனத்தில் சந்திக்கும் எங்கள் சயம்புவே பந்திக்கும் வன் மலக் கட்டு எல்லாம் வலி கெட்டு அற நினது நின்மலக் கண் தண் அருள்-தான் நேர் #2 சங்கரா முக்கண் சயம்புவே தாழ் சடை மேல் பொங்கு அராத் திங்கள் பொலிந்தோனே வெம் கரா வாய்-நின்று பிள்ளை வரப் பாடும் வன் தொண்டர்க் காய் நின்று சந்து உரைத்தது ஆர் #3 நீலக் களம் கொண்ட நீடு ஒளியே நீள் கங்கை கோலச் சடைக்கு அணிந்த கோமளமே ஞாலத்தில் அந்தோ சிறியேன் அருள் இன்றி வாடுவது சந்தோடமோ நின்றனக்கு #4 நான் சிறியேன் என்னினும் இ நானிலத்தில் நான் செய் பிழை- தான் சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் அங்ஙனமேனும் உன் அருள் பெருமைக்கு இ பெருமை எங்ஙனம் என்று உள்ளம் எழும் #5 ஆவித் துணையே என் ஆர்_அமுதே நின் வடிவைப் பாவித்து உள் நையேன் இப் பாவியேன் சேவித்து வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்துத் தாழ்த்தேன் என் செய்தேன் தவம் #6 உன்னை நினைந்து இங்கே உலாவுகின்றேன் அன்றி எந்தாய் பின்னை நினைப்பு ஒன்றும் பெற்றிலேன் என்னை விடாதே நின் பொன் அடியை மேவார் சேர் துன்பம் கொடாதே எனை ஏன்றுகொள் #7 என் அரசே நின் அடிக் கீழ் என் இடரை நீக்கு என நான் சொன்னது அலால் தாயுடனும் சொன்னேனோ இன்னும் இந்தத் துன்பச் சுமையைச் சுமக்க முடியாது என்னால் அன்பர்க்கு அருள்வோய் அருள் #8 அன்னே என் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் ஆதரவே என்னே நின் உள்ளம் இரங்கிலையே பொன்னே உடையாரிடை என் உளம் நொந்து வாடிக் கடையேன் படும் துயரைக் கண்டு #9 பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில் இகலில் இடையை இரட்டித் தகவின் அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர் திரு_சிற்சபையானைத் தேர்ந்து #10 தாதாதாதாதாதாதாக் குறைக்கு என் செய்குதும் யாம் தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே எந்தாய் எனப் புகழவே #11 பொய் கண்டாய் காமப் புது மயக்கில் போய் உழலக் கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட பொன்னே_அனையார்-பால் போய் வணங்கக் கற்றிலையோ என்னே நின் தன்மை மனமே #12 இ வழியில் செல்லாதே என்_உடையான்-தன் அடி சேர் அ வழியில் செல் என்று அடிக்கடிக்குச் செவ் வழியில் சொன்னாலும் கேட்கிலை நீ துட்ட மனமே உனக்கு இங்கு என்னால் உறவு ஏது இனி #13 கால்வாங்கிய உள் கதவம் கொளும் அகத்தின் பால் வாங்கிய கால் பரம்பரனே மால் வாங்கு அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழைப் பெரிது ஆர ஓர் மொழியைப் பேசு @90. திருக்குறிப்பு நாட்டம் #1 ஆற்றுக்கே பிறைக் கீற்றுக்கே சடை ஆக்கிச் சேவடி தூக்கி ஆர்_உயிர்ப் பேற்றுக்கே நடிப்பாய் மணி மன்றில் பெருந்தகையே சோற்றுக்கே இதம் சொல்லிப் பேதையர் சூழல்வாய்த் துயர் சூழ்ந்து மேல் திசைக் காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ #2 ஞாலத்தார்-தமைப் போலத் தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு சீலத்தார் சிவமே எவையும் எனத் தேர்ந்தனரால் சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தைத் தாவி நான் பெரும் பாவி ஆயினன் ஏலத்து ஆர் குழலாள் இடத்தாய் எனை எண்ணுதியோ #3 அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன் நண்ணலே அறியேன் கடையேன் சிறு நாய்_அனையேன் பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலிப் பேயனேன் கொடும் பேதையேன் பிழை கண்ணலே புரியாது இனும் மீட்கக் கருதுதியோ #4 வல்லி ஆனந்தவல்லி சேர் மணவாளனே அருளாளனே மலை வில்லியாய் நகைத்தே புரம் வீழ்த்த விடையவனே புல்லி யான் புலைப் போகம் வேட்டு நின் பொன் அடித் துணைப் போகம் போக்கினேன் இல்லி ஆர் கடம் போல் இருந்தேன் எனை எண்ணுதியோ @91. தனித் திருப் புலம்பல் #1 திங்கள் விளங்கும் சடைத் தருவைத் தீம் பால் சுவையைச் செந்தேனைச் செங்கை மருவும் செழும் கனியைச் சீர் ஆர் முக்கண் செங்கரும்பை மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வைப் பவள மலை-தன்னை எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே #2 அன்பர் இதய_மலர்க் கோயில் அமர்ந்த பரமானந்தத்தைத் துன்பம் அகலச் சுகம் அளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை வன்பரிடத்தின் மருவாத மணியை மணி ஆர் மிடற்றானை இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணாது இருந்தேனே #3 ஒருமைப் பயனை ஒருமை நெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப் பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை அருமைக் களத்தில் கருமை அணி அம்மான்-தன்னை எம்மானை இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணாது இருந்தேனே #4 கறை ஓர் கண்டத்து அணிந்து அருளும் கருணாநிதியைக் கண்_நுதலை மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியைப் பொறையோர் உள்ளம் புகுந்து ஒளிரும் புனித ஒளியைப் பூரணனாம் இறையோன்-தன்னை அந்தோ நான் என்னே எண்ணாது இருந்தேனே @92. பரம ராசியம் #1 விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசியப் பரம்பரப் பொருளே #2 செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மனச் செறிவு என்பது அறியேன் கொடியனேன் கொடும் கொலை பயில் இனத்தேன் கோளனேன் நெடு நீள வஞ்சகனேன் அடியனேன் பிழை அனைத்தையும் பொறுத்து உன் அன்பர்-தங்களோடு இன்புற அருள்வாய் படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசியப் பரம்பரப் பொருளே @93. திருப்புகழ்ச்சி #1 திருவுளம் தெரியேன் திகைப்புறுகின்றேன் சிறியரில் சிறியனேன் வஞ்சக் கரு உளக் கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ வெருவுறுகின்றேன் அஞ்சல் என்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் மருவும் மா கருணைப் பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே #2 தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும் ஆயும் இன்பமும் அன்பும் மெய் அறிவும் அனைத்தும் நீ என ஆதரித்து இருந்தேன் ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன் சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடைத் திகழ் ஒளி விளக்கே #3 அருள் பழுத்து ஓங்கும் கற்பகத் தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே அருள் எனும் அமுதம் தரும் ஒரு கடலே அருள் கிரணம் கொளும் சுடரே அருள் ஒளி வீசும் அரும்_பெறல் மணியே அருள் சுவை கனிந்த செம்பாகே அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே @94. தனித் திரு விருத்தம் #1 நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும் பார் பூத்த பச்சைப் பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே #2 வீழாக ஞான்ற செவ் வேணிப் பிரான் என் வினை இரண்டும் கீழாக நான் அதன் மேலாக நெஞ்சக் கிலேசம் எல்லாம் பாழாக இன்பம் பயிராக வாய்க்கில் அப்பால் பிறவி ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே #3 ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே #4 செம்பவளத் தனிக் குன்றே அருளானந்தச் செழும் கனியே முக்கண் உடைத் தேவே மூவா அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே #5 நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேட அருள் நாட்டம் கொண்டு பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்தப் படிவம் ஆகி ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம் #6 மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி பிறை முடிச் சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி #7 செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுளக் குறிப்பையும் தெரியேன் உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுகேன் புலையனேன் புகல் அறியேனே #8 நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்தக் கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த பதியை உனைப் பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்சச் சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இத் தமியனேனே #9 தாய் தடை என்றேன் பின்னர்த் தாரமே தடை என்றேன் நான் சேய் தடை என்றேன் இந்தச் சிறு தடை எல்லாம் தீர்ந்தும் தோய் தடைச் சிறியேன் இன்னும் துறந்திலேன் எனைத் தடுக்க ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே #10 எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன் விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டுப் பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே #11 மின்னைப் போல் இடை மெல்லியலார் என்றே விடத்தைப் போல் வரும் வெம் மனப் பேய்களைப் பொன்னைப் போல் மிகப் போற்றி இடை நடுப் புழையிலே விரல் போதப் புகுத்தி ஈ- தன்னைப் போல் முடை நாற்றச் சலத்தையே சந்தனச் சலம்-தான் எனக் கொள்கின்றேன் என்னைப் போல்வது நாய்க் குலம்-தன்னிலும் இல்லை அல்லது எவற்றினும் இல்லையே #12 கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே #13 மன் உயிர்க்குத் தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான மின் உடற்குத் தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ என் உயிர்க்குத் துணைவா நின் ஆணை ஒன்றும் அறியேன் நான் இரங்கிடாயே #14 மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும் தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழும் தேனே சோதியே நீ போற்று அரிய சிறியேனைப் புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணைச் சிறியனேனே #15 உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச நள் உணர்வேன் சிறிதேனும் நலம் அறியேன் வெறித்து உழலும் நாயின் பொல்லேன் வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே #16 கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னைக் கனவிலேனும் மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே எனத் துதியேன் வஞ்சம் இல்லா நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே #17 இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடாது இருக்கின்றார் கடையனேற்கே தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனைத் தழுவிலேனே #18 கஞ்ச மலர்த் தவிசு இருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற அஞ்ச நடை அம்மை கண்டு களிக்கப் பொன்_அம்பலத்தில் ஆடுகின்ற எஞ்சல் இலாப் பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும் வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே #19 வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர் பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இப் படி மிசை யான் வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ தேம் புக்கும் வார் சடைத் தேவே கருணைச் சிவ_கொழுந்தே #20 அட முடியாது பல் ஆற்றாலும் ஏழைக்கு அடுத்த துன்பம் பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய் திட முடியால் அயன் மால் வணங்கும் துணைச் சேவடியாய் தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே #21 பொல்லா வாழ்க்கைத் துயரம் எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்து அழுந்திப் பல்லார் நகைக்கப் பாவி படும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும் கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் எல்லாம் உடையீர் மால் விடையீர் என்னே இரங்கி அருளீரே #22 பொன்னை உடையார் மிகும் கல்விப் பொருளை உடையார் இவர் முன்னே இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும் மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே #23 ஆயும் வஞ்சக நெஞ்சன் இ அடியனேன் ஐயா நீயும் வஞ்சக நெஞ்சன் என்றால் இந்த நிலத்தே ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும் தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய் #24 நானும் பொய்யன் நின் அடியனேன் தண் அருள் நிதி நீ- தானும் பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர் ஊனும் உள்ளமும் உயிரும் அண்ணிக்கின்ற உரவோய் #25 நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும் ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின் தேசுறு சீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை ஆசு அகலும் வண்ணம் அருள் புரிந்தால் ஆகாதோ #26 ஆற்றால் விளங்கும் சடையோய் இ ஏழை அடியனும் பல் ஆற்றால் வருந்தும் வருத்தம் எல்லாம் முற்று அறிந்தும் இன்னம் ஆற்றாது இருத்தல் நின் பேர்_அருள் ஆற்றுக்கு அழகு-கொலோ ஆற்றாமை மேற்கொண்டு அழுதால் எவர் எனை ஆற்றுவரே #27 படியே அளந்த மாலவனும் பழைய மறை சொல் பண்ணவனும் முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே அடியார்களுக்கே இரங்கி முனம் அடுத்த சுர_நோய் தடுத்தது போல் படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே. #28 அருள் ஆர்_அமுதே அரசே நின் அடியேன் கொடியேன் முறையேயோ இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ தெருள் ஓர்சிறிதும் அறியாதே திகையாநின்றேன் முறையேயோ #29 ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ அழியாக் கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ பொழியாப் புயலே_அனையார்-பால் புகுவித்தனையே முறையேயோ இழியாத் திரிதந்து உழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ #30 மதி ஒளிர் கங்கைச் சடைப் பெரும் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில் பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன் கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வக் களிப்பையே கருதுகின்றனனே #31 மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர்த் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன் இன்றாக நாள் கழியில் என்னே செய்கேன் இணை முலையார் மையலினால் இளைத்துநின்றேன் என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே. #32 வெள்ளம் கொண்டு ஓங்கும் விரி சடையாய் மிகு மேட்டில்-நின்றும் பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர் உள்ளம் கொண்டு ஓங்கும் அவமே பருத்த ஒதி_அனையேன் கள்ளம் கொண்டு ஓங்கும் மனத்து உறுமோ உறில் காண்குவனே #33 ஐயா முக்கண் கொண்ட ஆர்_அமுதே அருள் ஆர் பவள மெய்யா மெய்ஞ்ஞான விளக்கே கருணை விளங்கவைத்த மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ பொய்யா என் செய்வல் அருளாய் எனில் எங்குப் போதுவனே #34 நாராயணன் திசை நான்முகன் ஆதியர் நண்ணி நின்று பாராயணம் செயப்பட்ட நின் சேவடிப் பங்கயம் மேல் சீராயணம் பெறப் பாடும் திறம் ஓர்சிறிதும் இலேன் ஆராய் அணங்குற நின்றேன் பொன் மன்றத்து அமர்ந்தவனே #35 பேய் கொண்ட நெஞ்சகப் பாழால் வரும் என் பெரும் துயரை வாய் கொண்டு அனந்தர் அனந்தர்க்கும் சொல்லவராது எனில் இ நாய் கொண்டு உரைக்க வருமோ என் செய்குவன் நச்சு மரக் காய் கொண்டு வாழைக் கனியைக் கைவிட்ட கடையவனே #36 வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் நல் மானம் காத்து அருளும் அருள்_கடலே ஆனந்த நடம் செய் வாழ்வே பொன் மான் அம்பினைப் பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே #37 வைவம் என்று எழுகின்றவர்-தமக்கும் நல் வாழ்வு செய்வம் என்று எழுகின்ற மெய்த் திரு_அருள் செயலும் சைவம் என்பதும் சைவத்தில் சாற்றிடும் தலைமைத் தெய்வம் என்பதும் என்னளவு இல்லை என் செய்வேன் #38 ஐயரே உமது அடியன் நான் ஆகில் அடிகள் நீர் எனது ஆண்டவர் ஆகில் பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும் தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்பச் சச்சிதானந்தத் தனி நடம் புரியும் மெய்யரே மிகு துய்யரே தரும விடையரே என்றன் விழி அமர்ந்தவரே #39 எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலைத் தொழில் கடையேன் வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்சக் குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே #40 பொன் அளிக்கும் நல் புத்தியும் தந்து நின் றன் அருள் துணைத் தாள்_மலர்த் தியானமே மன்ன வைத்திட வேண்டும் எம் வள்ளலே என்னை நான் பல கால் இங்கு இயம்பலே #41 தாயும் தந்தையும் சற்குரு_நாதனும் ஆயும் தெய்வமும் நீ என்று அறிந்தனன் பாயும் மால் விடை ஏறும் பரமனே நீயும் கைவிட என்னை நினைத்தியோ #42 ஒழியா மயல்கொண்டு உழல்வேன் அவமே அழியா வகையே அருள்வாய் அருள்வாய் பொழியா மறையின் முதலே நுதல் ஏய் விழியாய் விழியாய் வினை தூள்படவே #43 உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட இலகு வான் ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்றே அலகு_இல் ஆனந்த நாடகம் செய்யும் அம் பொன் சேவடிக்கு அபயம் என்னையும் திலக நீ விழைவாய் நடராச சிகாமணியே #44 என் இரு கண்காள் உமது பெரும் தவம் எப் புவனத்தில் யார்-தான் செய்வர் முன் இருவர் காணாமல் அலைந்தனரால் இனும் காண முயலாநின்றார் நல் நிருபர் தொழுது ஏத்தும் அம்பலத்தே ஓர் இடத்து ஓர் நாள் ஆதித்தர் பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியைப் பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே #45 சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அத் திரளோர் சற்றும் காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள் ஆணாகப் பிறந்து அடியேன் அரும் தவம் என் புரிந்தேனோ அறிகிலேன் முன் பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இப் பிறப்பே என் பிறப்பாம் அந்தோ #46 இருள் அற ஓங்கும் பொதுவிலே நடம் செய் எம் குருநாதன் எம் பெருமான் அருள் எனும் வடிவம் காட்டி ஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித் தெருளுற அருமைத் திரு_கையால் தடவித் திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் பொருளுற இருந்து ஓர் வாக்கு அளித்து என் உள் புகுந்தனன் புதுமை ஈது அந்தோ #47 பொன் என்கோ மணி என்கோ புனித ஒளித் திரள் என்கோ பொற்பின் ஓங்கும் மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான் என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி #48 வஞ்சகர்க்கு எல்லாம் முதலாய் அறக் கடையாய் மறத் தொழிலே வலிக்கும் பாவி நெஞ்சகத் துன்மார்க்கனை மா_பாதகனைக் கொடியேனை நீசனேனை அஞ்சல் எனக் கருணை புரிந்து ஆண்டுகொண்ட அருள்_கடலை அமுதைத் தெய்வக் கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளைப் பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே #49 நாதா பொன்_அம்பலத்தே அறிவானந்த நாடகம் செய் பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டு எல்லாம் ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே #50 கந்த நாள்_மலர்க் கழல் இணை உளத்து உறக் கருதுகின்றவர்க்கு எல்லாம் பந்த நாண் வலை அவிழ்த்து அருள் சிதம்பரை பரம் பரையுடன் ஆடும் அந்த நாள் மகிழ்வு அடைபவர் உளர் சிலர் அவர் எவர் எனில் இங்கே இந்த நாள் முறை திறம் பலராய் உயிர்க்கு இதம் செயும் அவர் அன்றே @95. அறநிலை விளக்கம் #1 மருவு ஆணைப் பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அப் பெண் உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும் கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பைக் கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி எனக் கூறவொணாதே @96. அருள்நிலை விளக்கம் #1 மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்பக் கேளீர் நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே @97. திருமருந் தருள் நிலை #1 பனக_அணைத் திரு நெடுமால் அயன் போற்றப் புலவர் எலாம் பரவ ஓங்கும் கனக மணி அம்பலத்தே பெரிய மருந்து ஒன்று இருக்கக் கண்டேன் கண்டேன் அனக நடத்தது சச்சிதானந்த வடிவு அது பேர்_அருள் வாய்ந்துள்ளது என் அகம் அமர்ந்திருப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா #2 திரு நெடுமால் அயன் தேடத் துரிய நடு ஒளித்தது எனத் தெளிந்தோர் சொல்லும் ஒரு கருணை மருந்து திரு அம்பலத்தே இருந்திடக் கண்டு உவந்தேன் அந்தோ அருவுருவம் கடந்தது பேர்_ஆனந்த வடிவு அது நல் அருள் வாய்ந்துள்ளது இருமையும் நன்கு அளிப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா @98. திரு அருள் விலாசம் #1 ஆண்டவன் நீ ஆகில் உனக்கு அடியனும் நான் ஆகில் அருள்_உடையாய் இன்று இரவில் அருள் இறையாய் வந்து நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்துப் புரிதி இது விளங்கும் எனப் புகல்வாய் தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணைத் தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே #2 திரு_நெறி மெய்த் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இச் சிறியேன் பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடாத் தெய்வ மறை இது எனப் பின்பு உணர்ந்தேன் ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் தெருள் நெறி தந்து அருளும் மறைச் சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே @99. சிவ சிதம்பர சங்கீர்த்தனம் #1 உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும் கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும் இலக ஒன்று இரண்டு எனல் அகன்றதோர் இணை_இல் இன்பமாம் இதயம் என்பதும் திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் #2 வரம் உறும் சுதந்தர சுகம் தரும் மனம் அடங்கு சிற்கன நடம் தரும் உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறைச் சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் #3 நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம் சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம் வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும் சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் #4 அருள் அளித்து மெய் அன்பர்-தம்மை உள்ளங்கை நெல்லி போல் ஆக்குகின்றதும் பொருள் அளித்து நான்மறையின் அந்தமே புகலுகின்றதோர் புகழ் அளிப்பதும் வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம் தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் #5 பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும் சுத்தமும் தெறா வித்தமும் தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும் நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற் சித்தமும் செலாப் பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் @100. அம்மை திருப்பதிகம் #1 உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முகக் கந அமுதும் உதவு கடலே அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே #2 கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மனக் கரிசு அற உணர்ந்து கேட்டுக் காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே #3 இக் கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கணப் போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் தெக்கணம் நடக்க வரும் அக் கணம் பொல்லாத தீக் கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே எக் கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே அக் கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே #4 பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமளத் தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே #5 பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழப் பகலான சகலமுடன் இரவான கேவலப் பகையும் தடாதபடி ஓர் தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திருச் சரணமே சரணம் அருள்வாய் உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே #6 சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்துத் துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால் காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு எனச் சுழல்கின்றதே தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இத் தமியனேன் என் செய்குவேன் ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே #7 மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனைத் தமது வசமாக உளவு கண்டு மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலைச் சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே #8 வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுறக் கண்டும் இப் புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே #9 ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடித் தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிடப் பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே #10 நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுறக் கொண்டு நின் அடிப் பூசைசெய்து வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய்ச் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே @101. கலைமகளார் திருப் பதிகம் #1 தவள மலர்க் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையைச் சாந்தம் பூத்த குவளை மலர்க் கண்ணாளைப் பெண் ஆளும் பெண் அமுதைக் கோது இலாத பவள இதழ்ப் பசும் கொடியை நான்முகனார் நா ஓங்கும் பாவை-தன்னைக் கவள மத கயக் கொம்பின் முலையாளைக் கலை மாதைக் கருதுவோமே #2 சங்கம் வளர்ந்திட வளர்ந்த தமிழ்_கொடியைச் சரச்சுவதி-தன்னை அன்பர் துங்கம் உறக் கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞானத் தோகை-தன்னைத் திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னைத் தங்க மலை முலையாளைக் கலையாளைத் தொழுது புகழ் சாற்றுகிற்பாம் #3 கலை பயின்ற உளத்து இனிக்கும் கரும்பினை முக்கனியை அருள்_கடலை ஓங்கும் நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த நான்முகனார் நீண்ட நாவின் தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச் சிலை பயின்ற நுதலாளைக் கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே @102. நற்றாய் கவன்றது #1 திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள் மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதிச் சடை வள்ளலே என்பாள் இருவருக்கு அரிய ஒருவனே எனக்கு இங்கு யார் துணை நின் அலாது என்பாள் வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே #2 ஓடுவாள் தில்லைத் திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகித் தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்_வினையேன் பெற்ற மகளே #3 உலகு எலாம் தழைப்பப் பொதுவினில் ஓங்கும் ஒரு தனித் தெய்வம் என்கின்றாள் இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள் அலகு_இலாக் கருணை அமுதன் என்கின்றாள் அன்பர்கட்கு அன்பன் என்கின்றாள் திலக வாள் நுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற்று அழுங்குகின்றாளே #4 திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள் உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள் கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் மரு எலாம் மயங்கும் மலர்க் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே #5 மின் இணைச் சடில விடங்கன் என்கின்றாள் விடைக் கொடி விமலன் என்கின்றாள் பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள் என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள் துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே #6 கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் பெரும் களி துளும்ப வடவனத்து ஓங்கும் பித்தரில் பித்தன் என்கின்றாள் ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள் தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே #7 மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரை என்கின்றாள் வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள் ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள் பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே #8 திருத் தகு தில்லைத் திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் பெருத்த குங்குமப் பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் மருத் தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் குருத் தகு குவளைக் கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே #9 அம்பலத்து ஆடும் அழகனைக் காணாது அருந்தவும் பொருந்துமோ என்பாள் கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் வம்பு அணி முலைகள் இரண்டும் நோக்கிடுவாள் வள்ளலைப் பரிகிலீர் என்பாள் உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே @103. சல்லாப லகரி #1 சுந்தர நீறு அணி சுந்தரர் நடனத் தொழில்_வல்லார் வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதே நீ மந்தணம் இது கேள் அம் தனம் இல நம் வாழ்வு எல்லாம் அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே #2 நம் பலமாம் என நல் மனை புக்கார் நடராஜர் எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன் வம்பு அல மடவாய் எம்முடை இன்ப வாழ்வு எல்லாம் அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே *