திருவாசகம்

1.சிவபுராணம்
2.கீர்த்தித் திருஅகவல்
3.திரு அண்டப்பகுதி
4.போற்றித்_திருஅகவல்
5.திருச் சதகம்
6.நீத்தல் விண்ணப்பம்
7.திருவெம்பாவை
8.திரு அம்மானை
9.திருப்பொற்சுண்ணம்
10.திருக் கோத்தும்பி
11.திருத்தெள்ளேணம்
12.திருச் சாழல்
13.திருப் பூவல்லி
14.திரு உந்தியார்
15.திருத்_தோள்_நோக்கம்
16.திருப் பொன்னூசல்
17.அன்னைப் பத்து
18.குயில் பத்து
19.திருத் தசாங்கம்
20.திருப்பள்ளியெழுச்சி
21.கோயில்_மூத்த_திருப்பதிகம்
22.கோயில் திருப்பதிகம்
23.செத்திலாப் பத்து
24.அடைக்கலப் பத்து
25.ஆசைப் பத்து
26.அதிசயப் பத்து
27.புணர்ச்சிப் பத்து
28.வாழாப் பத்து
29.அருள் பத்து
30.திருக்கழுக்குன்றப் பதிகம்
31.கண்ட பத்து
32.பிரார்த்தனைப்_பத்து
33.குழைத்த பத்து
34.உயிருண்ணிப் பத்து
35.அச்சப் பத்து
36.திருப்_பாண்டிப்_பதிகம்
37.பிடித்த பத்து
38.திரு ஏசறவு
39.திருப் புலம்பல்
40.குலாப் பத்து
41.அற்புதப் பத்து
42.சென்னிப் பத்து
43.திரு வார்த்தை
44.எண்ணப் பதிகம்
45.யாத்திரைப் பத்து
46.திருப்படையெழுச்சி
47.திரு வெண்பா
48.பண்டாய நான்மறை
49.திருப் படையாட்சி
50.ஆனந்த மாலை
51.அச்சோப் பதிகம்

@1 சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குரு மணி-தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 5
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க
புறந்தார்க்கு சேயோன்-தன் பூம் கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20

கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25
புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி
பல் விருகம் ஆகி பறவை ஆய் பாம்பு ஆகி
கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்
செல்லாஅநின்ற இ தாவர_சங்கமத்துள் 30
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா விமலா விடை பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம்-தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்-தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும்
நலம்-தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம்-தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காஅட்டி
நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு 60

தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட 65
பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே
ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையும் ஆய் அல்லையும் ஆய்
சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார்-தம் கருத்தில் 75
நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்ற சுடர் ஒளி ஆய் சொல்லாத நுண் உணர்வு ஆய் 80

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம்
தேற்றனே தேற்ற தெளிவே என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினை பிறவி சாராமே
கள்ள புல குரம்பை கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல்_பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானை சொல்லி திருவடி கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடி கீழ்
பல்லோரும் ஏத்த பணிந்து 95
மேல்

@2 கீர்த்தித் திருஅகவல்

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்_இல் பல் குணம் எழில் பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5
என்னுடை இருளை ஏற துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூர
குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மா மலை மயேந்திரம்-அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10
கல்லாடத்து கலந்து இனிது அருளி
நல்லாளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப்பள்ளியில் பால்_மொழி-தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக_வாயவள் 15
விராவு கொங்கை நல்_தடம் படிந்தும்
கேவேடர் ஆகி கெளிறு-அது படுத்தும்
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மயேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும் 20

நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்
அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும்
வேறுவேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறு உடை ஈசன் இ புவனியை உய்ய 25
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி
குதிரையை கொண்டு குடநாடு-அதன் மிசை
சதிர்பட சாத்தாய் தான் எழுந்தருளியும்
வேலம்புத்தூர் விட்டேறு அருளி
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30
தர்ப்பணம்-அதனில் சாந்தம்புத்தூர்
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழு தழல் மேனி
சொக்கது ஆக காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35
நரியை குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன்-தனக்கு பரிமா விற்று
ஈண்டு கனகம் இசைய பெறாஅது
ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப 40

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திரஞாலம் காட்டிய இயல்பும்
மதுரை பெரு நல் மா நகர் இருந்து
குதிரை சேவகன் ஆகிய கொள்கையும் 45
ஆங்கு அது-தன்னில் அடியவர்க்கு ஆக
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தரகோசமங்கையுள் இருந்து
வித்தக வேடம் காட்டிய இயல்பும்
பூவணம்-அதனில் பொலிந்து இருந்து அருளி 50
தூ வண மேனி காட்டிய தொன்மையும்
வாதவூரினில் வந்து இனிது அருளி
பாத சிலம்பு ஒலி காட்டிய பண்பும்
திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55
பூவலம்-அதனில் பொலிந்து இனிது அருளி
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர் பந்தர் சயம் பெற வைத்து
நல் நீர் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு-அதனில் 60

குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும்
பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மா சித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உரு கொண்டு
காடு-அது-தன்னில் கரந்த கள்ளமும் 65
மெய்க்காட்டிட்டு வேண்டு உரு கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரியூரில் உகந்து இனிது அருளி
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70
தேவூர் தென்-பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்
தேன் அமர் சோலை திருவாரூரில்
ஞானம்-தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது-அதனில் ஈண்ட இருந்து 75
படிம பாதம் வைத்த அ பரிசும்
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து
மரு_ஆர்_குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80

சேவகன் ஆகி திண் சிலை ஏந்தி
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர்-தன்னில் இடம் பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழில்-அது காட்டியும்
ஐயாறு-அதனில் சைவன் ஆகியும் 85
துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்
கழுமலம்-அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று-அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம்-அதனில் அறம் பல அருளியும் 90
குற்றாலத்து குறியாய் இருந்தும்
அந்தம்_இல் பெருமை அழல் உரு கரந்து
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு
இந்திரஞாலம் போல வந்தருளி
எவ்வெவர் தன்மையும் தன்-வயின் படுத்து 95
தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திரதீபத்து சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தர தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மா மலை மகேந்திர வெற்பன் 100

அந்தம்_இல் பெருமை அருள் உடை அண்ணல்
எம்-தமை ஆண்ட பரிசு-அது பகரின்
ஆற்றல்-அது உடை அழகு அமர் திரு உரு
நீற்று கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம்-தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் 105
ஆனந்தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறு உடை மா பெரும் கருணையன்
நாத பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக்கடை-தன்னை கைக்கொண்டு அருளியும் 110
மூலம் ஆகிய மு_மலம் அறுக்கும்
தூய மேனி சுடர் விடு சோதி
காதலன் ஆகி கழுநீர் மாலை
ஏல்வு உடைத்து ஆக எழில் பெற அணிந்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115
பரிமாவின் மிசை பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழி அருள்புரிபவன்
பாண்டி நாடே பழம் பதி ஆகவும்
பக்தி செய் அடியாரை பரம்பரத்து உய்ப்பவன்
உத்தரகோசமங்கை ஊர் ஆகவும் 120

ஆதி_மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய
தேவதேவன் திரு பெயர் ஆகவும்
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலை ஆகவும்
எ பெரும் தன்மையும் எவ்வெவர் திறமும் 125
அ பரிசு-அதனால் ஆண்டுகொண்டருளி
நாயினேனை நலம் மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என
ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி
அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவர் 130
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்
மால்-அது ஆகி மயக்கம் எய்தியும்
பூதலம்-அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்
கால் விசைத்து ஓடி கடல் புக மண்டி 135
நாத நாத என்று அழுது அரற்றி
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக்கு அருளிய பரம_நாடக என்று
இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன் 140

பொலிதரு புலியூர் பொதுவினில் நடம் நவில்
கனி தரு செம் வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவரோடும்
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145
ஒலிதரு கைலை உயர் கிழவோனே
மேல்

@3 திரு அண்டப்பகுதி

அண்ட பகுதியின் உண்டை பிறக்கம்
அளப்பு_அரும் தன்மை வள பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன
இல் நுழை கதிரின் துன் அணு புரைய 5
சிறிய ஆக பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மா பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்து சூறை மாருதத்து 10
எறியது வளியின்
கொட்க பெயர்க்கும் குழகன் முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள் காப்பவை
காப்போன் கரப்பவை கருதா 15
கருத்துடை கடவுள் திருத்தகும்
அறுவகை சமயத்து அறுவகையோர்க்கும்
வீடுபேறு ஆய் நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன் நாள்-தொறும்
அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு 20

மதியில் தண்மை வைத்தோன் திண் திறல்
தீயில் வெம்மை செய்தோன் பொய் தீர்
வானில் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ்
நீரில் இன் சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25
மண்ணில் திண்மை வைத்தோன் என்றுஎன்று
எனை பல கோடி எனை பல பிறவும்
அனைத்து அனைத்து அ-வயின் அடைத்தோன் அஃதான்று
முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்_நேர்_இல்லோன்-தானே காண்க 30
ஏன தொல் எயிறு அணிந்தோன் காண்க
கான புலி_உரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினை-தொறும் நினை-தொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன் இசை வீணையில் இசைத்தோன் காண்க 35
அன்னது ஒன்று அ-வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன் மால் காணா பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க
சொல்_பதம் கடந்த தொல்லோன் காண்க 40

சித்தமும் செல்லா சேட்சியன் காண்க
பத்தி_வலையில் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க 45
இணைப்பு_அரும் பெருமை ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவி எ பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க
கற்பதும் இறுதியும் கண்டோன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55
தேவரும் அறியா சிவனே காண்க
பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60

புவனியல் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
குவளை கண்ணி கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க 65
பரமானந்தம் பழம் கடல்-அதுவே
கரு மா முகிலின் தோன்றி
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி
திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய
ஐம்புல பந்தனை வாள் அரவு இரிய 70
வெம் துயர் கோடை மா தலை கரப்ப
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர
எம்-தம் பிறவியில் கோபம் மிகுந்து
முரசு எறிந்து மா பெரும் கருணையில் முழங்கி
பூ புரை அஞ்சலி காந்தள் காட்ட 75
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள
செம் சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுற
கேத குட்டம் கையற ஓங்கி
இரு மு சமயத்து ஒரு பேய்த்தேரினை
நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம் 80

தவ பெரு வாயிடை பருகி தளர்வொடும்
அவ பெரும் தாபம் நீங்காது அசைந்தன
ஆயிடை வான பேரியாற்று அக-வயின்
பாய்ந்து எழுந்து இன்பம் பெரும் சுழி கொழித்து
சுழித்து எம் பந்த மா கரை பொருது அலைத்து இடித்து 85
ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள்
இரு வினை மா மரம் வேர் பறித்து எழுந்து
உருவ அருள்_நீர் ஓட்டா அரு வரை
சந்தின் வான் சிறை கட்டி மட்டு அவிழ்
வெறி மலர் குளவாய் கோலி நிறை அகில் 90
மா புகை கரை சேர் வண்டு உடை குளத்தின்
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு
தொண்ட உழவர் ஆர தந்த
அண்டத்து அரும்_பெறல் மேகன் வாழ்க 95
கரும் பண கச்சை கடவுள் வாழ்க
அரும் தவர்க்கு அருளும் ஆதி வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க
சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க 100

எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க
கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேர் அமை தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன் வாழ்க
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நால் திசை
நடப்பன நடாஅய் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇ 110
சொல்_பதம் கடந்த தொல்லோன்
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் 115
ஒழிவு_அற நிறைந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந்து அருளி
அழிதரும் ஆக்கை ஒழிய செய்த ஒள் பொருள்
இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120

ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய
போற்றா ஆக்கையை பொறுத்தல் புகலேன்
மரகத குவாஅல் மா மணி பிறக்கம்
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ 125
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறை திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130
இ தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு
அ தந்திரத்தில் அ-வயின் ஒளித்தும்
முனிவு அற நோக்கி நனி வர கௌவி
ஆண் என தோன்றி அலி என பெயர்ந்து
வாள் நுதல் பெண் என ஒளித்தும் சேண்-வயின் 135
ஐம்புலன் செல விடுத்து அரு வரை-தொறும் போய்
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும்
பண்டே பயில்-தொறும் இன்றே பயில்-தொறும் 140

ஒளிக்கும் சோரனை கண்டனம்
ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில்
தாள் தளை இடு-மின்
சுற்று-மின் சூழ்-மின் தொடர்-மின் விடேன்-மின்
பற்று-மின் என்றவர் பற்று முற்று ஒளித்தும் 145
தன்_நேர்_இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி
அறைகூவி ஆட்கொண்டு அருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150
அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி
தலை தடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
கட களிறு ஏற்றா தட பெரு மதத்தின் 155
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
கோல்_தேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்
வீழ்வித்து ஆங்கு அன்று
அருள் பெரும் தீயின் அடியோம் அடி குடில் 160

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்
தட கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்
சொல்லுவது அறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான் எனை செய்தது
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165
அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்லகில்லேன்
செழும் தண் பாற்கடல் திரை புரைவித்து
உவா கடல் நள்ளும் நீர் உள்_அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்-தோறும் 170
தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன் தழை
குரம்பை-தோறும் நாய்_உடல் அகத்தே
குரம்பு கொண்டு இன் தேன் பாய்த்தினன் நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்
எற்பு துளை-தொறும் ஏற்றினன் உருகுவது 175
உள்ளம் கொண்டோர் உரு செய்து ஆங்கு எனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னல் கனி தேர் களிறு என கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான் தேன் கலக்க 180

அருளொடு பராவமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியா பெற்றியோனே
மேல்

@4 போற்றித் திருஅகவல்

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூ_உலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர
போற்றி செய் கதிர் முடி திரு நெடுமால் அன்று
அடி முடி அறியும் ஆதரவு-அதனில் 5
கடும் முரண் ஏனம் ஆகி முன் கலந்து
ஏழ் தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர் அடி_இணைகள்
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில் 10
யானை முதலா எறும்பு ஈறு ஆய
ஊனம்_இல் யோனியின் உள் வினை பிழைத்தும்
மானுட பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம்_இல் கிருமி செருவினில் பிழைத்தும்
ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும் 15
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மு மதி தன்னுள் அ மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் 20

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தச_மதி தாயொடு தான் படும்
துக்க_சாகரம் துயரிடை பிழைத்தும் 25
ஆண்டுகள்-தோறும் அடைந்த அ காலை
ஈண்டியும் இருத்தியும் எனை பல பிழைத்தும்
காலை மலமொடு கடும் பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில் 30
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து
ஈர்க்கு இடை போகா இள முலை மாதர்-தம்
கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும் 35
பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள்
மத்த களிறு எனும் அவாவிடை பிழைத்தும்
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் 40

புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும்
ஆறு கோடி மாயா_சக்திகள்
வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின 45
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல் பசு குழாங்கள்
பற்றி அழைத்து பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும் 50
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமயவாதிகள் தம்தம் மதங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா_வாதம் என்னும்
சண்டமாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து 55
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்
கலா_பேதத்த கடு விடம் எய்தி
அதில் பெரு மாயை எனை பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியா
தழல்-அது கண்ட மெழுகு-அது போல 60

தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும்
படியே ஆகி நல் இடை_அறா அன்பின்
பசு மரத்து ஆணி அறைந்தால் போல 65
கசிவது பெருகி கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலம் ஆய் மெய் விதிர்த்து
சகம் பேய் என்று தம்மை சிரிப்ப
நாண்-அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண்-அது ஆக கோணுதல் இன்றி 70
சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரம_அதிசயம் ஆக
கற்றா மனம் என கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து 75
குருபரன் ஆகி அருளிய பெருமையை
சிறுமை என்று இகழாதே திருவடி இணையை
பிறிவினை அறியா நிழல்-அது போல
முன் பின் ஆகி முனியாது அ திசை
என்பு நைந்து உருகி நெக்குநெக்கு ஏங்கி 80

அன்பு எனும் ஆறு கரை-அது புரள
நன் புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கர_மலர் மொட்டித்து இருதயம் மலர
கண் களி கூர நுண் துளி அரும்ப 85
சாயா அன்பினை நாள்-தொறும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினை கெட
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90
கூடல் இலங்கு குரு மணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சே ஆர் வெல் கொடி சிவனே போற்றி 95
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனக குன்றே போற்றி
ஆஆ என்-தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100

இடரை களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி
தேச பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி 105
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செம் சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி 115
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூ_ஏழ் சுற்றமும் முரணுறு நரகிடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி
விரி கடல் உலகின் விளைவே போற்றி 125
அருமையில் எளிய அழகே போற்றி
கரு முகில் ஆகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130
தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி
வழுவு_இலா ஆனந்த_வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்_நேர்_நோக்கி மணாளா போற்றி 135
வானகத்து அமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி 145
சடையிடை கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுத கடலே போற்றி 150
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி 155
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி-தன்னின் கீழ் இரு_மூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடு உடைய சிவனே போற்றி
எ நாட்டவர்க்கும் இறைவா போற்றி 165
ஏன குருளைக்கு அருளினை போற்றி
மான கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
களம் கொள கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி 175
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை_நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190
திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி 195
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
தோளா முத்த சுடரே போற்றி
ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி
ஆரா_அமுதே அருளா போற்றி
பேர் ஆயிரம் உடை பெம்மான் போற்றி 200

தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தன சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மா மலை மேயாய் போற்றி 205
எம்-தமை உய்ய கொள்வாய் போற்றி
புலி முலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி
கரும்_குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210
படி உற பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நால்_நிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவு_அற நிறைந்த ஒருவ போற்றி 215
செழு மலர் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலை கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்_மாலை கொண்டருள் போற்றி 220

புரம் பல எரித்த புராண போற்றி
பரம்பரம் சோதி பரனே போற்றி
போற்றி போற்றி புயங்க பெருமான்
போற்றி போற்றி புராண_காரண
போற்றி போற்றி சயசய போற்றி 225
மேல்

@5 திருச்சதகம்


#1
மெய்-தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கை-தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்-தான் தவிர்ந்து உன்னை போற்றி சயசய போற்றி என்னும்
கை-தான் நெகிழவிடேன் உடையாய் என்னை கண்டுகொள்ளே

#2
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே

#3
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம்தம் மனத்தன பேச எஞ்ஞான்று-கொல் சாவதுவே

#4
சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர்-அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே

#5
தவமே புரிந்திலன் தண் மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அரு வினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு_கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே

#6
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லா கள்வனே நின்-தன் வார் கழற்கு அன்பு எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே

#7
முழுவதும் கண்டவனை படைத்தான் முடி சாய்ந்து முன் நாள்
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி_இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேல் கொண்டு உழிதருமே

#8
உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும்
இழிதரு காலம் எ காலம் வருவது வந்ததன் பின்
உழிதரு கால் அத்த உன் அடியேன் செய்த வல் வினையை
கழிதரு காலமும் ஆய் அவை காத்து எம்மை காப்பவனே

#9
பவன் எம்பிரான் பனி மா மதி கண்ணி விண்ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும்
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இ பரிசே
புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே

#10
புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே
தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை எ புன்மையரை
மிகவே உயர்த்தி விண்ணோரை பணித்தி அண்ணா அமுதே
நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே

#11
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிக பெரிதும் விரைகின்றேன்
ஆடக சீர் மணி குன்றே இடை_அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத்தே நின்று உருக தந்தருள் எம் உடையானே

#12
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு-அதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே எம்பெருமான் எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே

#13
வருந்துவன் நின் மலர் பாதம் அவை காண்பான் நாய்_அடியேன்
இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அ தமியேன் மற்று என்னே நான் ஆம் ஆறே

#14
ஆம் ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன் அன்பு உருகேன்
பூ_மாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே

#15
வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையும் ஆய் இன்மையும் ஆய்
கோன் ஆகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டு-
வான் ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

#16
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்-பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய்_அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே

#17
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவு வார் கழல்_இணைகள் காண்பாரோ அரியானே

#18
அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்_கழல் கீழ்
விரை ஆர்ந்த மலர் தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன்
தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேனே

#19
வேனல் வேள் மலர் கணைக்கும் வெள் நகை செம் வாய் கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்று போய்
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே

#20
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினை பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே

#21
வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே என கேட்டு வேட்ட நெஞ்சாய்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே

#22
வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று போது நான் வினை_கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆன ஆறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே

#23
ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர்
பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே

#24
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப்பேசி
பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே

#25
வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்-தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்-தன்
வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை
திண்ணம்-தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லி சிந்திக்கேனே

#26
சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி
வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை
தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே

#27
தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு
இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே

#28
கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டி பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை-தானே

#29
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற
செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்_கோவே

#30
தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே

#31
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்பு உருகி
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத_மலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை_இலி பிண நெஞ்சே
தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே

#32
அறிவு இலாத எனை புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மெய்ந்நெறி
எலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறுப்பானை
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே

#33
மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே
தேறுகின்றிலம் இனி உனை சிக்கென சிவன்-அவன் திரள் தோள் மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இ காயம்
கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே

#34
கிற்ற வா மனமே கெடுவாய் உடையான் அடி_நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர் திருப்பாதம்
முற்று_இலா இளம் தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன்
அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே

#35
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே

#36
புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு
உகுவது ஆவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் சுழற்கு அன்பு
நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி
மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே

#37
வினை என் போல் உடையார் பிறர் ஆர் உடையான் அடி_நாயேனை
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன்
இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே

#38
ஏனை யாவரும் எய்திடலுற்று மற்று இன்னது என்று அறியாத
தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறலை சிவனை என் சிவலோக
கோனை மான் அன நோக்கி-தன் கூறனை குறுகிலேன் நெடும் காலம்
ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே

#39
ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் தாள் தந்து
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல் நெறி காட்டி
தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன்
தீயில் வீழ்கிலேன் திண் வரை உருள்கிலேன் செழும் கடல் புகுவேனே

#40
வேனில் வேள் கணை கிழித்திட மதி சுடும் அது-தனை நினையாதே
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புக போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதல்பொருட்டு இனும் உண்டு உடுத்து இருந்தேனே

#41
இரு கை யானையை ஒத்திருந்து என் உள
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே

#42
உண்டு ஓர் ஒள் பொருள் என்று உணர்வார்க்கு எலாம்
பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை
தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்
கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே

#43
மேலை வானவரும் அறியாதது ஓர்
கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே
ஞாலமே விசும்பே இவை வந்து போம்
காலமே உனை என்று-கொல் காண்பதே

#44
காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர்
வாள் நிலா பொருளே இங்கு ஒர் பார்ப்பு என
பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு உனை
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே

#45
போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று
ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்
ஏற்று வந்து எதிர் தாமரை தாள் உறும்
கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே

#46
கொள்ளும்-கில் எனை அன்பரில் கூய் பணி
கள்ளும் வண்டும் அறா மலர் கொன்றையான்
நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே

#47
எந்தை யாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவு_அரும் செல்வனே

#48
செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழு
புல் வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள்
எல்லை_இல் கழல் கண்டும் பிரிந்தனன்
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே

#49
கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு
இட்ட அன்பரொடு யாவரும் காணவே
பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோடு இரண்டும் அறியேனையே

#50
அறிவனே அமுதே அடி_நாயினேன்
அறிவன் ஆக கொண்டோ எனை ஆண்டதும்
அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அருள் ஈசனே

#51
ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி
நாசனே நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்கமாட்டேன் கண்டாயே
தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே

#52
செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே

#53
போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ கொடியான் உயிர்-தான் உலவாதே

#54
உலவா காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனை காண்பான்
பல மா முனிவர் நனி வாட பாவியேனை பணிகொண்டாய்
மல மா குரம்பை-இது மாய்க்கமாட்டேன் மணியே உனை காண்பான்
அலவாநிற்கும் அன்பு இலேன் என் கொண்டு எழுகேன் எம்மானே

#55
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லை
கோனே உன்-தன் திருக்குறிப்பு கூடுவார் நின் கழல் கூட
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே

#56
உடையானே நின்-தனை உள்கி உள்ளம் உருகும் பெரும் காதல்
உடையார் உடையாய் நின் பாதம் சேர கண்டு இங்கு ஊர் நாயின்
கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே

#57
முடித்த ஆறும் என்-தனக்கே தக்கதே முன் அடியாரை
பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறு வேர்
பொடித்த ஆறும் இவை உணர்ந்து கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே

#58
தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம்
ஊனை உருக்கும் உடையானை உம்பரானை வம்பனேன்
நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்கு
தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம் என் தன்மையே

#59
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய் ஆன
புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ
என்னை நோக்குவார் யாரே என் நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்கு புகுவேனே

#60
புகுவேன் எனதே நின் பாதம் போற்றும் அடியார் உள் நின்று
நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்
நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும்
தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே

#61
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பு_இல்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி

#62
போற்றி ஓ நமச்சிவாய புயங்களே மயங்குகின்றேன்
போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை
போற்றி ஓ நமச்சிவாய புறம் எனை போக்கல் கண்டாய்
போற்றி ஓ நமச்சிவாய சயசய போற்றி போற்றி

#63
போற்றி என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ
காற்று இயமானன் வானம் இரு சுடர் கடவுளானே

#64
கடவுளே போற்றி என்னை கண்டுகொண்டு அருளு போற்றி
விட உளே உருக்கி என்னை ஆண்டிடவேண்டும் போற்றி
உடல்-இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி

#65
சங்கரா போற்றி மற்று ஓர் சரண் இலேன் போற்றி கோல
பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண்
மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி
இங்கு இ வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே

#66
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்தனன் உன்னை என்னை ஆளுடை பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடு இ வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே

#67
எம்பிரான் போற்றி வானத்தவர்-அவர் ஏறு போற்றி
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
செம் பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம்பலவ போற்றி
உம்பராய் போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி

#68
ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமள கொழுந்து போற்றி
வருக என்று என்னை நின்-பால் வாங்கிடவேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே

#69
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும் என் பொய்மை ஆட்கொண்டு அருளும் பெருமை போற்றி
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி

#70
போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய்
போற்றி எ உயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய்
போற்றி ஐம்புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கையானே

#71
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என் இது ஆம்
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே
புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே

#72
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும்
ஏக நின் கழல்_இணை அலாது இலேன் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலி-கணே
ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே

#73
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்-கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே

#74
வேண்டும் நின் கழல்-கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டுகொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும்
மாண்டுமாண்டு வந்துவந்து மன்ன நின் வணங்கவே

#75
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கி யாம் விசேடங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை_பங்க என்-கொலோ நினைப்பதே

#76
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால்
தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எ புறத்தது எந்தை பாதம் எய்தவே

#77
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இ வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன்-கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
இஃது அல்லாது நின்-கண் ஒன்றும்வண்ணம் இல்லை ஈசனே

#78
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஒர் நின் அலால்
தேசனே ஒர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே

#79
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே

#80
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள்
கருப்பு மட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்-கண் என்-கண் என்பது என்ன விச்சையே

#81
விச்சு கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம்
பிச்சை தேவா என் நான் செய்கேன் பேசாயே

#82
பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று
ஏசப்பட்டேன் இனி படுகின்றது அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே

#83
அடியேன் அல்லேன்-கொல்லோ தான் எனை ஆட்கொண்டிலை-கொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார்
செடி சேர் உடலம்-இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா
கடியேன் உன்னை கண்ணார காணும் ஆறு காணேனே

#84
காணும் ஆறு காணேன் உன்னை அ நாள் கண்டேனும்
பாணே பேசி என்-தன்னை படுத்தது என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன்
ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே

#85
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மா நகர் குறுக
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே

#86
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழுவாது சிவனே நின் தாள் சேர்ந்தாரே

#87
தாராய் உடையாய் அடியேற்கு உன் தாள்_இணை அன்பு
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல்கொண்டு அழுகேனே

#88
அழுகேன் நின்-பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னை தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னை பணிகேனே

#89
பணிவார் பிணி தீர்ந்தருளி பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால்
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே

#90
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறும் ஆறே

#91
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை
வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

#92
மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன்
மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே

#93
பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் போத என்று எனை புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை
இருத்தினாய் முறையோ என் எம்பிரான் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே

#94
இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே
கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே

#95
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே

#96
விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சக பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர்
நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே

#97
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ பணி போற்றி உம்பரார்-தம் பராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே

#98
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன்
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில் உரியனாய் உனை பருக நின்றது ஓர்
துப்பனே சுடர் முடியனே துணையாளனே தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே

#99
மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என் எனை முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என் எனை பாவ_நாச நின் சீர்கள் பாடவே

#100
பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன்
கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம்
வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே
மேல்

@6 நீத்தல் விண்ணப்பம்


#1
கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே

#2
கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய்
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய் நின் விழு தொழும்பின்
உள்ளேன் புறம் அல்லேன் உத்தரகோசமங்கைக்கு அரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எ காரணமே

#3
கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய்
வேர் உறுவேனை விடுதி கண்டாய் விளங்கும் திருவா
ரூர் உறைவாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
வாருறு_பூண்_முலையாள்_பங்க என்னை வளர்ப்பவனே

#4
வளர்கின்ற நின் கருணை கையில் வாங்கவும் நீங்கி இ-பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்ற செழும் சுடரே

#5
செழிகின்ற தீ புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே
வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே

#6
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறு நாய்கள்-தம் பொய்யினையே

#7
பொய்யவனேனை பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண் மிடற்று
மையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே

#8
தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்-கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோசமங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே

#9
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினை பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூ_உலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே

#10
பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையை போக்க பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே

#11
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே

#12
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே

#13
கடலினுள் நாய் நக்கி ஆங்கு உன் கருணை கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே

#14
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு உன் அருள் பெற்று துன்பத்தின்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே

#15
களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய் மெய் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே
எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே

#16
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே

#17
பொருளே தமியேன் புகலிடமே நின் புகழ் இகழ்வார்
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும்
அருளே அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே
இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே

#18
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
மருந்தினனே பிறவி பிணிப்பட்டு மடங்கினர்க்கே

#19
மடங்க என் வல்வினை காட்டை நின் மன் அருள் தீ கொளுவும்
விடங்க என்-தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சி கொம்பினையே

#20
கொம்பர் இல்லா கொடி போல் அலமந்தனன் கோமளமே
வெம்புகின்றேனை விடுதி கண்டாய் விண்ணர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே

#21
ஆனை வெம் போரில் குறும் தூறு என புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்து
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே

#22
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலி பெற்றியனே

#23
பெற்றது கொண்டு பிழையே பெருக்கி சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே
உற்று அடியேன் மிக தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே

#24
உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மா தட கை
பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய் குடம்-தன்னை எறும்பு எனவே

#25
எறும்பிடை நாங்கூழ் என புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடி போது-அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே

#26
பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரும் நீர் மடுவுள் மலை சிறு தோணி வடிவின் வெள்ளை
குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே

#27
கொழு மணி ஏர் நகையார் கொங்கை குன்றிடை சென்று குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய் முழுதும் கம்பித்து
அழும் அடியாரிடை ஆர்த்துவைத்து ஆட்கொண்டருளி என்னை
கழு மணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே

#28
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும் மண்ணும் எல்லாம்
கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் கருணாகரனே
துலங்குகின்றேன் அடியேன் உடையாய் என் தொழுகுலமே

#29
குலம் களைந்தாய் களைந்தாய் என்னை குற்றம் கொற்ற சிலை ஆம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை
அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்து உறவே

#30
மத்து உறு தண் தயிரின் புலன் தீ கதுவ கலங்கி
வித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண் தலை மிலைச்சி
கொத்து உறு போது மிலைந்து குடர் நெடு மாலை சுற்றி
தத்துறு நீறுடன் ஆர செம் சாந்து அணி சச்சையனே

#31
சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம்
விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனே ஒள் பட அரவ
கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே

#32
அடல் கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய் விட்டிடுதி கண்டாய் விழு தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே

#33
கண்டது செய்து கருணை_மட்டு பருகி களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து பணிசெய கூவித்து என்னை
கொண்டு என் எந்தாய் களையாய் களை ஆய குதுகுதுப்பே

#34
குதுகுதுப்பு இன்றி நின்று என் குறிப்பே செய்து நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய் விரை ஆர்ந்து இனிய
மதுமது போன்று என்னை வாழைப்பழத்தின் மனம் கனிவித்து
எதிர்வது எப்போது பயில்வி கயிலை பரம்பரனே

#35
பரம்பரனே நின் பழ அடியாரொடும் என் படிறு
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய் மென் முயல் கறையின்
அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம்
பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே

#36
பொதும்புறு தீ போல் புகைந்து எரிய புலன் தீ கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு
அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே

#37
அரைசே அறியா சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால்
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய் வெள் நகை கரும் கண்
திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா
வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை-தான் வந்து அடர்வனவே

#38
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே
தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே

#39
தனி துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த
வினை துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய
மன துணையே என்-தன் வாழ்_முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே
தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே

#40
வலை-தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண் மதியின் ஒற்றை
கலை தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும்
மலை தலைவா மலையாள் மணவாள என் வாழ்_முதலே

#41
முதலை செம் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி
விதலை செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த
சிதலை செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ
திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே

#42
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய் வெண் தலை முழையில்
பதி உடை வாள் அர பார்த்து இறை பைத்து சுருங்க அஞ்சி
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே

#43
மன்னவனே ஒன்றும் ஆறு அறியா சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேத மெய்ந்நூல்
சொன்னவனே சொல் கழிந்தவனே கழியா தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனே இ முழுதையுமே

#44
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரி தழல் முழுகும்
விழுது அனையேனை விடுதி கண்டாய் நின் வெறி மலர் தாள்
தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான்
பழுது செய்வேனை விடேல் உடையாய் உன்னை பாடுவனே

#45
பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்கு பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறி
தேடிற்றிலேன் சிவன் எ இடத்தான் எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன் கிடந்து உள் உருகேன் நின்று உழைத்தனனே

#46
உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழைதருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சு உண்
மழைதரு கண்டன் குணம்_இலி மானிடன் தேய் மதியன்
பழைதரு மா பரன் என்றுஎன்று அறைவன் பழிப்பினையே

#47
பழிப்பு_இல் நின் பாத பழம் தொழும்பு எய்தி விழ பழித்து
விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண் மணி பணிலம்
கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்த பெருமை
தழி சிறை நீரில் பிறை கலம் சேர்தரு தாரவனே

#48
தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண்
வீர என்-தன்னை விடுதி கண்டாய் விடின் என்னை மிக்கார்
ஆர் அடியான் என்னின் உத்தரகோசமங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான் என்று நின்னை சிரிப்பிப்பனே

#49
சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பை தொழும்பையும் ஈசற்கு என்று
விரப்பிப்பன் என்னை விடுதி கண்டாய் விடின் வெம் கரியின்
உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு
எரி பிச்சன் என்னையும் ஆளுடை பிச்சன் என்று ஏசுவனே

#50
ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய் செம் பவள வெற்பின்
தேசு உடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கி
காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ண கடையவனே
மேல்

@7 திருவெம்பாவை


#1
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண்
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி-தான்
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதி-வாய் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசு எல் ஓர் எம்பாவாய்

#2
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இரா_பகல் நாம்
பேசும்போது எப்போது இ போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேர்_இழையாய் நேர்_இழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு
கூசும் மலர் பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லை சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய்

#3
முத்து அன்ன வெள் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி
தித்திக்க பேசுவாய் வந்து உன் கடை திறவாய்
பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர்
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்

#4
ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ண கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணை துயின்று அவமே காலத்தை போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழு பொருளை
கண்ணுக்கு இனியானை பாடி கசிந்து உள்ளம்
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணி குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்

#5
மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவு_அரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளி கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏல_குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்

#6
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவு_அரியான்
தானே வந்து எம்மை தலையளித்து ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனை பாடு ஏல் ஓர் எம்பாவாய்

#7
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான்
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லாமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன் நெஞ்ச பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்

#8
கோழி சிலம்ப சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்
கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை
கேழ்_இல் விழு பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை_பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய்

#9
முன்னை பழம் பொருட்கும் முன்னை பழம் பொருளே
பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அ பெற்றியனே
உன்னை பிரானாக பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்

#10
பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர்
போது ஆர் புனை முடியும் எல்லா பொருள் முடிவே
பேதை ஒரு-பால் திருமேனி ஒன்று அல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோது_இல் குலத்து அரன்-தன் கோயில் பிணா பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏது அவனை பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்

#11
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன
கையால் குடைந்துகுடைந்து உன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல்
செய்யா வெண்ணீறு ஆடி செல்வா சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய்

#12
ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன் நல் தில்லை சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன் இ வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப
பூ திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம்
ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#13
பைம் குவளை கார் மலரால் செங்கமல பைம் போதால்
அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தம்-கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எம் கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புக பாய்ந்துபாய்ந்து நம்
சங்கம் சிலம்ப சிலம்பு கலந்து ஆர்ப்ப
கொங்கைகள் பொங்க குடையும் புனல் பொங்க
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#14
காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட
சீத புனல் ஆடி சிற்றம்பலம் பாடி
வேத பொருள் பாடி அ பொருள் ஆமா பாடி
சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடி
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்_வளை-தன்
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#15
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப
பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரை தான் பணியாள்
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவ பூண் முலையீர் வாயார நாம் பாடி
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#16
முன்னி கடலை சுருக்கி எழுந்து உடையாள்
என்ன திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னி பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல்
பொன் அம் சிலம்பில் சிலம்பி திரு புருவம்
என்ன சிலை குலவி நம்-தம்மை ஆள் உடையாள்-
தன்னில் பரிவு_இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே
என்ன பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய்

#17
செங்கண்-அவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால்
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்-பாலதா
கொங்கு உண் கரும் குழலி நம்-தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள்-தோறும் எழுந்தருளி
செங்கமல பொன் பாதம் தந்தருளும் சேவகனை
அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை
நங்கள் பெருமானை பாடி நலம் திகழ
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#18
அண்ணாமலையான் அடி கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணி தொகை வீறு அற்றால் போல்
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப
தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#19
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அ பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பர்_அல்லார் தோள் சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எ பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க
இங்கு இ பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்

#20
போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத_மலர்
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை_அடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய்
மேல்

@8 திரு அம்மானை


#1
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய
பொங்கு மலர் பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான்
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும்
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய்

#2
பாரார் விசும்பு உள்ளார் பாதாளத்தார் புறத்தார்
ஆராலும் காண்டற்கு அரியான் எமக்கு எளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனை பாடுதும் காண் அம்மானாய்

#3
இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்க சிவன் அவனி வந்தருளி
எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய்
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்
பந்தம் பறிய பரி மேல்கொண்டான் தந்த
அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய்

#4
வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பு_அரிய
தான் வந்து நாயேனை தாய் போல் தலையளித்திட்டு
ஊன் வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய்

#5
கல்லா மனத்து கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை
வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை
தில்லை நகர் புக்கு சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய்

#6
கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாம் காட்டி சிவம் காட்டி
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடு எய்த
ஆள்-தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய்

#7
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை
சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை
தாயானை தத்துவனை தானே உலகு ஏழும்
ஆயானை ஆள்வானை பாடுதும் காண் அம்மானாய்

#8
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றி கடவுள் கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு அ கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய்

#9
துண்ட பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோல மா ஊர்தியான்
கண்டம் கரியான் செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்ட முதல் ஆயினான் அந்தம்_இலா ஆனந்தம்
பண்டை பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும்
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய்

#10
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை
பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை பாடுதும் காண் அம்மானாய்

#11
செப்பு_ஆர் முலை_பங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்
அ பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய்

#12
மை பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும்
எ பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால்
இ பிறவி ஆட்கொண்டு இனி பிறவாமே காத்து
மெய்ப்பொருள்-கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எ பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய்

#13
கை ஆர் வளை சிலம்ப காது ஆர் குழை ஆட
மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப
செய்யானை வெண்ணீறு அணிந்தானை சேர்ந்து அறியா
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானை பாடுதும் காண் அம்மானாய்

#14
ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய்
ஏனை பிறவு ஆய் பிறந்து இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஒட்டு உகந்து
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய
கோன்-அவன் போல் வந்து என்னை தன் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய்

#15
சந்திரனை தேய்த்தருளி தக்கன்-தன் வேள்வியினில்
இந்திரனை தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து
சிந்தி திசைதிசையே தேவர்களை ஓட்டு உகந்த
செம் தார் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய்

#16
ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து
தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய்
வானோர் அறியா வழி எமக்கு தந்தருளும்
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய்

#17
சூடுவேன் பூம் கொன்றை சூடி சிவன் திரள் தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று
ஊடுவேன் செம் வாய்க்கு உருகுவேன் உள் உருகி
தேடுவேன் தேடி சிவன் கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய்

#18
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை
வெளி வந்த மால் அயனும் காண்பு_அரிய வித்தகனை
தெளி வந்த தேறலை சீர் ஆர் பெருந்துறையில்
எளிவந்து இருந்து இரங்கி எண்_அரிய இன் அருளால்
ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
அளி வந்த அந்தணனை பாடுதும் காண் அம்மானாய்

#19
முன்னானை மூவர்க்கும் முற்றும் ஆய் முற்றுக்கும்
பின்னானை பிஞ்ஞகனை பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாது இயலும் பாதியனை
தென் ஆனைக்காவானை தென் பாண்டி நாட்டானை
என்னானை என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை அம்மானை பாடுதும் காண் அம்மானாய்

#20
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்ற குதிரையின் மேல் வந்தருளி தன் அடியார்
குற்றங்கள் நீக்கி குணம் கொண்டு கோதாட்டி
சுற்றிய சுற்ற தொடர்வு அறுப்பான் தொல் புகழே
பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான்
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய்
மேல்

@9 திருப் பொற்சுண்ணம்


#1
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின்
சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்-மின்
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#2
பூ இயல் வார் சடை எம்பிராற்கு பொன் திரு சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர் வம்-மின்கள் வந்து உடன் பாடு-மின்கள்
கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன்
தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே

#3
சுந்தர நீறு அணிந்து மெழுகி தூய பொன் சிந்தி நிதி நிரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழில் சுடர் வைத்து கொடி எடு-மின்
அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#4
காசு அணி-மின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணி-மின்கள் கறை உரலை
நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி
பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#5
அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர்
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம்
செறிவு உடை மு_மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி
முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#6
உலக்கை பல ஓச்சுவார் பெரியோர் உலகம் எலாம் உரல் போதாது என்றே
கலக்க அடியவர் வந்து நின்றார் காண உலகங்கள் போதாது என்றே
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த
மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே

#7
சூடகம் தோள் வளை ஆர்ப்பஆர்ப்ப தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்பஆர்ப்ப
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#8
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#9
வையகம் எல்லாம் உரல்-அது ஆக மா மேரு என்னும் உலக்கை நாட்டி
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொன் உலக்கை வல கை பற்றி
ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#10
முத்து அணி கொங்கைகள் ஆடஆட மொய் குழல் வண்டு இனம் ஆடஆட
சித்தம் சிவனொடும் ஆடஆட செம் கயல் கண் பனி ஆடஆட
பித்து எம்பிரானொடும் ஆடஆட பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#11
மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப
பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி
தேடு-மின் எம்பெருமானை தேடி சித்தம் களிப்ப திகைத்து தேறி
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#12
மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை
ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும்
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள்
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#13
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர்
என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்கு
தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே

#14
சங்கம் அரற்ற சிலம்பு ஒலிப்ப தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே
பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே

#15
ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா
தேனை பழ சுவை ஆயினானை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#16
ஆவகை நாமும் வந்து அன்பர்-தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண் மேல்
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ
சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே

#17
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல்
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும்
ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே

#18
அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி
கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே

#19
வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி
கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல்
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே

#20
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு
பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே
மேல்

@10 திருக்கோத்தும்பி


#1
பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியா
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#2
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ

#3
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே
நினை-தொறும் காண்-தொறும் பேசும்-தொறும் எப்போதும்
அனைத்து எலும்பு உள் நெக ஆனந்த தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#4
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்ட பின்
என் அப்பன் என் ஒப்பு_இல் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ண பணித்து என்னை வா என்ற வான் கருணை
சுண்ண பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#5
அ தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன்
பொய் தேவு பேசி புலம்புகின்ற பூதலத்தே
பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற
மெய் தேவர் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#6
வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும்
சித்த விகார கலக்கம் தெளிவித்த
வித்தக தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#7
சட்டோ நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனை
கெட்டேன் மறப்பேனோ கேடுபடா திருவடியை
ஒட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#8
ஒன்று ஆய் முளைத்து எழுந்து எத்தனையோ கவடு விட்டு
நன்று ஆக வைத்து என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த
என் தாதை தாதைக்கும் எம் அனைக்கும் தம் பெருமான்
குன்றாத செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#9
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு
மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த
கருணை கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#10
நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம்
தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன் கருணை
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#11
வல் நெஞ்ச கள்வன் மன வலியன் என்னாதே
கல் நெஞ்சு உருக்கி கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன்
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#12
நாயேனை தன் அடிகள் பாடுவித்த நாயகனை
பேயேனது உள்ள பிழை பொறுக்கும் பெருமையனை
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#13
நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம்
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்
ஆன கருணையும் அங்கு உற்றே-தான் அவனே
கோன் என்னை கூட குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

#14
கரு ஆய் உலகினுக்கு அப்புறம் ஆய் இ புறத்தே
மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி
அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#15
நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எ இடத்தோம்
தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல்
வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான்
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#16
உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களிவந்த வான் கருணை
வெள்ள பிரான் எம்பிரான் என்னை வேறே ஆட்
கொள் அ பிரானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#17
பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்-தோறும்
மெய்யா கருதி கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயா என் ஆருயிரே அம்பலவா என்று அவன்-தன்
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#18
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடை தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

#19
கள்வன் கடியன் கலதி இவன் என்னாதே
வள்ளல் வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே
உள்ளத்து உறு துயர் ஒன்று ஒழியாவண்ணம் எல்லாம்
தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#20
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த
தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ
மேல்

@11 திருத்தெள்ளேணம்


#1
திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#2
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவி
கரு வேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை
அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும்
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#3
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து நம்மை
உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டு உலகம் எல்லாம்
சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#4
அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே
பவ_மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவம் ஆய செம் சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#5
அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரிய சிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பு எய்த கொண்டருளி
கரு வெந்து வீழ கடைக்கணித்து என் உளம் புகுந்த
திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#6
அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல்
வரை ஆடு மங்கை-தன் பங்கொடும் வந்து ஆண்ட திறம்
உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர்
திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#7
ஆஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன்
வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான்
பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே
தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#8
கறங்கு ஓலை போல்வது ஓர் காய பிறப்போடு இறப்பு என்னும்
அறம் பாவம் ஒன்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#9
கல் நார் உரித்து என்ன என்னையும் தன் கருணையினால்
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர்
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ

#10
கனவேயும் தேவர்கள் காண்பு_அரிய கனை கழலோன்
புன வேய் அன வளை தோளியோடும் புகுந்தருளி
நனவே எனை பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம்
சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ

#11
கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனை கலந்து ஆண்டலுமே
அயல் மாண்டு அருவினை சுற்றமும் மாண்டு அவனியின் மேல்
மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#12
முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்தி கடலுள் பதித்த பரஞ்சோதி
தித்திக்குமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#13
பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்-தம் பாடும்
ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட
நேர் பாடல் பாடி நினைப்பு_அர்¢ய தனி பெரியோன்
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#14
மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே
நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-
பாலே புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால்
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ

#15
உருகி பெருகி உளம் குளிர முகந்துகொண்டு
பருகற்கு இனிய பரம் கருணை தடம் கடலை
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#16
புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றி செயும்
பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ

#17
உவலை சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம்
சவலை கடல் உளனாய் கிடந்து தடுமாறும்
கவலை கெடுத்து கழல்_இணைகள் தந்தருளும்
செயலை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#18
வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும்
தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியா தன்மையனுக்கு
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணவு கெட்டு என் உள்ளமும் போய்
நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#19
விண்ணோர் முழு_முதல் பாதாளத்தார் வித்து
மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம்
கண்ணார வந்துநின்றான் கருணை கழல் பாடி
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ

#20
குலம் பாடி கொக்கு_இறகும் பாடி கோல் வளையாள்
நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்-தோறும்
அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
மேல்

@12 திருச்சாழல்


#1
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை
ஈசன்-அவன் எ உயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ

#2
என் அப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்
துன்னம் பெய் கோவணமா கொள்ளும்-அது என் ஏடீ
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா
தன்னையே கோவணமா சாத்தினன் காண் சாழலோ

#3
கோயில் சுடுகாடு கொல் புலி தோல் நல் ஆடை
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும்
காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ

#4
அயனை அனங்கனை அந்தகனை சந்திரனை
வயனங்கள் மாயா வடு செய்தான் காண் ஏடீ
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்
சயம் அன்றோ வானவர்க்கு தாழ் குழலாய் சாழலோ

#5
தக்கனையும் எச்சையும் தலை அறுத்து தேவர் கணம்
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தது-தான் என் ஏடீ
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தருளி அருள்கொடுத்து அங்கு
எச்சனுக்கு மிகை தலை மற்று அருளினன் காண் சாழலோ

#6
அலரவனும் மாலவனும் அறியாமே அழல் உரு ஆய்
நில முதல் கீழ் அண்டம் உற நின்றது-தான் என் ஏடீ
நில முதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் இருவரும் தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ

#7
மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலமுகத்தால் அவன் சடையில் பாயும்-அது என் ஏடீ
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பிலமுகத்தே புக பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ

#8
கோலாலம் ஆகி குரை கடல்-வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதிர்-தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ

#9
தென் பால் உகந்து ஆடும் தில்லை சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான் பெரும் பித்தன் காண் ஏடீ
பெண் பால் உகந்திலனேல் பேதாய் இரு நிலத்தோர்
விண்-பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

#10
தான் அந்தம்_இல்லான் தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் ஏடீ
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ

#11
நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ
கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர்
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ

#12
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்
வான் நாடர் கோவும் வழி அடியார் சாழலோ

#13
மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை
உலகு அறிய தீ வேட்டான் என்னும்-அது என் ஏடீ
உலகு அறிய தீ வேளாது ஒழிந்தனனேல் உலகு அனைத்தும்
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ

#14
தேன் புக்க தண் பனை சூழ் தில்லை சிற்றம்பலவன்
தான் புக்கு நட்டம் பயிலும்-அது என் ஏடீ
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம்
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ

#15
கட கரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ
தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில்
இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ

#16
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ

#17
அம்பலத்தே கூத்து ஆடி அமுது செய பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்-அது என் ஏடீ
நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியோ
எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ

#18
சலம் உடைய சலந்தரன்-தன் உடல் தடிந்த நல் ஆழி
நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ்
அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ

#19
அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம்
எம்பெருமான் உண்ட சதிர் எனக்கு அறிய இயம்பு ஏடீ
எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும்
தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ

#20
அரும் தவருக்கு ஆலின் கீழ் அறம் முதலா நான்கினையும்
இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ
அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்
திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ
மேல்

@13 திருப்பூவல்லி


#1
இணை ஆர் திருவடி என் தலை மேல் வைத்தலுமே
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ

#2
எந்தை எம் தாய் சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டி பிரான்
அந்த இடைமருதில் ஆனந்த தேன் இருந்த
பொந்தை பரவி நாம் பூவல்லி கொய்யாமோ

#3
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்
மாய பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல்வினையின்
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ

#4
பண் பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல்
விண் பட்ட பூத படை வீரபத்திரரால்
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ

#5
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்
ஊன் நாடி நாடி வந்து உட்புகுந்தான் உலகர் முன்னே
நான் ஆடிஆடி நின்று ஓலம் இட நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ

#6
எரி மூன்று தேவர்க்கு இரங்கி அருள்செய்தருளி
சிரம் மூன்று அற தன் திரு புருவம் நெரித்தருளி
உரு மூன்றும் ஆகி உணர்வு_அரிது ஆம் ஒருவனுமே
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ

#7
வணங்க தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து
இணங்க தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான்
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கூர பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#8
நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே
குறி செய்துகொண்டு என்னை ஆண்டபிரான் குணம் பரவி
முறி செய்து நம்மை முழுது உழற்றும் பழ வினையை
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ

#9
பல் நாள் பரவி பணி செய்ய பாத மலர்
என் ஆகம் துன்னவைத்த பெரியோன் எழில் சுடர் ஆய்
கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல்_இணைகள்
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ

#10
பேராசை ஆம் இந்த பிண்டம் அற பெருந்துறையான்
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான்
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ

#11
பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரம் ஆய்
கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ

#12
வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர்கட்கும்
கோன்-அவன் ஆய் நின்று கூடல்_இலா குண குறியோன்
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ

#13
அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி
நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்-தோறும்
நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை
பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#14
படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு
இடம் ஆக கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான்
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ

#15
அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும்
பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய
பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#16
திண் போர் விடையான் சிவபுரத்தார் போர் ஏறு
மண்-பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி
தண்டாலே பாண்டியன்-தன்னை பணிகொண்ட
புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#17
முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும்
பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்
பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#18
சீர் ஆர் திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ
தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ

#19
அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவு கொண்டு இ உலகில் பிள்ளையும் ஆய்
முத்தி முழு_முதல் உத்தரகோசமங்கை வள்ளல்
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ

#20
மா ஆர ஏறி மதுரை நகர் புகுந்தருளி
தே ஆர்ந்த கோலம் திகழ பெருந்துறையான்
கோ ஆகி வந்து எம்மை குற்றேவல் கொண்டருளும்
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ
மேல்

@14 திருஉந்தியார்


#1
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீ பற
ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற

#2
ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெரு மிகை உந்தீ பற

#3
தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்தது என்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற

#4
உய்ய வல்லார் ஒரு மூவரை காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இள முலை பொங்க நின்று உந்தீ பற

#5
சாடிய வேள்வி சரிந்திட தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திரநாதனுக்கு உந்தீ பற

#6
ஆஆ திருமால் அவி பாகம் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று உந்தீ பற
சதுர்முகன் தாதை என்று உந்தீ பற

#7
வெய்யவன் அங்கி விழுங்க திரட்டிய
கையை தறித்தான் என்று உந்தீ பற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற

#8
பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை
பார்ப்பது என்னே ஏடி உந்தீ பற
பணை முலை_பாகனுக்கு உந்தீ பற

#9
புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி
மரம்-தனில் ஏறினார் உந்தீ பற
வானவர் கோன் என்றே உந்தீ பற

#10
வெம் சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சியவா பாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற

#11
ஆட்டின் தலையை விதிக்கு தலை ஆக
கூட்டியவா பாடி உந்தீ பற
கொங்கை குலுங்க நின்று உந்தீ பற

#12
உண்ண புகுந்த பகன் ஒளித்து ஓடாமே
கண்ணை பறித்தவாறு உந்தீ பற
கரு கெட நாம் எல்லாம் உந்தீ பற

#13
நா_மகள் நாசி சிரம் பிரமன் பட
சோமன் முகன் நெரித்து உந்தீ பற
தொல்லை வினை கெட உந்தீ பற

#14
நான்மறையோனும் மகத்து இயமான் பட
போம் வழி தேடும் ஆறு உந்தீ பற
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற

#15
சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி நெரித்த ஆறு உந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற

#16
தக்கனார் அன்றே தலை இழந்தார் தக்கன்
மக்களை சூழ நின்று உந்தீ பற
மடிந்தது வேள்வி என்று உந்தீ பற

#17
பாலகனார்க்கு அன்று பாற்கடல் ஈந்திட்ட
கோல சடையற்கே உந்தீ பற
குமரன்-தன் தாதைக்கே உந்தீ பற

#18
நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற
உகிரால் அரிந்தது என்று உந்தீ பற

#19
தேரை நிறுத்தி மலை எடுத்தான் சிரம்
ஈர்_ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற
இருபதும் இற்றது என்று உந்தீ பற

#20
ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று உந்தீ பற
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற
மேல்

@15 திருத் தோள்நோக்கம்


#1
பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோள்_நோக்கம்

#2
என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு_அரிய
குன்றாத சீர் தில்லை அம்பலவன் குணம் பரவி
துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ

#3
பொருள் பற்றி செய்கின்ற பூசனைகள் போல் விளங்க
செருப்பு உற்ற சீர் அடி வாய் கலசம் ஊன் அமுதம்
விருப்புற்று வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து அங்கு
அருள் பெற்று நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ

#4
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக கருணையினால்
நிற்பானை போல என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி
நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன்
சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ

#5
நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன்
புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய புணர்ந்துநின்றான்
உலகு ஏழ் என திசை பத்து என தான் ஒருவனுமே
பல ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ

#6
புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம்
தம்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க
சித்தம் சிவம் ஆக்கி செய்தனவே தவம் ஆக்கும்
அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆடாமோ

#7
தீது இல்லை மாணி சிவ கருமம் சிதைத்தானை
சாதியும் வேதியன் தாதை-தனை தாள் இரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழ
பாதகமே சோறு பற்றினவா தோள்_நோக்கம்

#8
மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர்
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
ஆனந்த கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே
ஆனந்தம் ஆகி நின்று ஆடாமே தோள்_நோக்கம்

#9
எண் உடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்து
கண்_நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின்
எண்_இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம்

#10
பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூ குறைய
தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே
சங்கரன் எம் பிரான் சக்கர மாற்கு அருளிய ஆறு
எங்கும் பரவி நாம் தோள்_நோக்கம் ஆடாமோ

#11
காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன்
நா_மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை
சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா தோள்_நோக்கம் ஆடாமோ

#12
பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்
பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து
பரம் ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ

#13
ஏழை தொழும்பனேன் எத்தனையோ காலம் எல்லாம்
பாழுக்கு இறைத்தேன் பரம்பரனை பணியாதே
ஊழி முதல் சிந்தாத நல் மணி வந்து என் பிறவி
தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ

#14
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து உளம் புகலும்
கரை மாண்ட காம பெரும் கடலை கடத்தலுமே
இரை மாண்ட இந்திரிய பறவை இரிந்து ஓட
துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ

#15
பிணக்கு அற்று அவா அற்று பேதைமையும் பிணியும் அற்று
உணக்கு பசை அறுத்தான் உயிர் ஒன்றி நின்ற
குணக்குன்று வந்து என்னை ஆண்டலுமே என்னுடைய
கணக்கு அற்றவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ
மேல்

@16 திருப்பொன்னூசல்


#1
சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு
ஊர் ஆக தந்தருளும் உத்தரகோசமங்கை
ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி
போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ

#2
மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள்
தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு
ஊன் தங்கிநின்று உருக்கும் உத்தரகோசமங்கை
கோன் தங்கு இடைமருது பாடி குல மஞ்ஞை
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#3
முன் ஈறும் ஆதியும் இல்லான் முனிவர் குழாம்
பல் நூறு கோடி இமையோர்கள் தாம் நிற்ப
தன் நீறு எனக்கு அருளி தன் கருணை வெள்ளத்து
மன் ஊற மன்னும் மணி உத்தரகோசமங்கை
மின் ஏறும் மாட வியன் மாளிகை பாடி
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#4
நஞ்சு அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சு தோய் மாட மணி உத்தரகோசமங்கை
அம் சொலாள்-தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறி கருணை செய்து
துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#5
ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர்
காணா கடவுள் கருணையினால் தேவர் குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சு-தனை
ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கை
கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் குணம் பரவி
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#6
மாது ஆடு பாகத்தன் உத்தரகோசமங்கை
தாது ஆடு கொன்றை சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல் பிறவி
தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப்பான்
காது ஆடு குண்டலங்கள் பாடி கசிந்து அன்பால்
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#7
உன்னற்கு அரிய திரு உத்தரகோசமங்கை
மன்னி பொலிந்து இருந்த மா மறையோன்-தன் புகழே
பன்னி பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான்
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல்
என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில் பாடி
பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#8
கோல வரை குடுமி வந்து குவலயத்து
சால அமுது உண்டு தாழ் கடலின் மீது எழுந்து
ஞாலம் மிக பரி மேற்கொண்டு நமை ஆண்டான்
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம் பாடி
பூலித்து அகம் குழைந்து பொன்_ஊசல் ஆடாமோ

#9
தெங்கு உலவு சோலை திரு உத்தரகோசமங்கை
தங்கு உலவு சோதி தனி உருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொள்வான்
பங்கு உலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்கு உலவு கொன்றை சடையான் குணம் பரவி
பொங்கு உலவு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ
மேல்

@17 அன்னைப் பத்து


#1
வேத மொழியர் வெண்ணீற்றர் செம் மேனியர்
நாத பறையினர் அன்னே என்னும்
நாத பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர் இ நாதனார் அன்னே என்னும்

#2
கண் அஞ்சனத்தார் கருணை கடலினர்
உள் நின்று உருக்குவர் அன்னே என்னும்
உள் நின்று உருக்கி உலப்பு_இலா ஆனந்த
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்

#3
நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்

#4
ஆடு அர பூண் உடை தோல் பொடி பூசிற்று ஓர்
வேடம் இருந்த ஆறு அன்னே என்னும்
வேடம் இருந்த ஆறு கண்டுகண்டு என் உள்ளம்
வாடும் இது என்னே அன்னே என்னும்

#5
நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டி நல் நாடரால் அன்னே என்னும்
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை
ஆண்டு அன்பு செய்வரால் அன்னே என்னும்

#6
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர்
மன்னுவது என் நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்

#7
வெள்ளை கலிங்கத்தர் வெண் திருமுண்டத்தர்
பள்ளி குப்பாயத்தர் அன்னே என்னும்
பள்ளி குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு என்
உள்ளம் கவர்வரால் அன்னே என்னும்

#8
தாளி அறுகினர் சந்தன சாந்தினர்
ஆள் எம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆள் எம்மை ஆளும் அடிகளார்-தம் கையில்
தாளம் இருந்த ஆறு அன்னே என்னும்

#9
தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம்
நையும் இது என்னே அன்னே என்னும்

#10
கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே
இன்று எனக்கு ஆன ஆறு அன்னே என்னும்
மேல்

@18 குயிற்பத்து


#1
கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால்
சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய்

#2
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த எ உருவும் தன் உரு ஆய்
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்கு
பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனை கூவாய்

#3
நீல உருவின் குயிலே நீள் மணி மாடம் நிலாவும்
கோல அழகின் திகழும் கொடி மங்கை உள் உறை கோயில்
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வர கூவாய்

#4
தேன் பழ சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ
வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு-அது ஆய ஒருத்தன்
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய்

#5
சுந்தரத்து இன்ப குயிலே சூழ் சுடர் ஞாயிறு போல
அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியா
சிந்துர சேவடியானை சேவகனை வர கூவாய்

#6
இன்பம் தருவன் குயிலே ஏழ் உலகும் முழுது ஆளி
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன்
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை
கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி_நாதனை கூவாய்

#7
உன்னை உகப்பன் குயிலே உன் துணை தோழியும் ஆவன்
பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன்
மன்னன் பரி மிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன் சீர் புயங்கள் வர கூவாய்

#8
வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவி அவர் உன்னி நிற்ப ஒள் தழல் விண் பிளந்து ஓங்கி
மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன்
தாவி வரும் பரி பாகன் தாழ் சடையோன் வர கூவாய்

#9
கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே
சீர் உடை செங்கமலத்தின் திகழ் உரு ஆகிய செல்வன்
பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய்

#10
கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ
அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி
எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும்
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய்
மேல்

@19 திருத் தசாங்கம்


#1 எ
ஏர் ஆர் இளம் கிளியே எங்கள் பெருந்துறை கோன்
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன்
செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல்
எம் பெருமான் தேவர் பிரான் என்று

#2
ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் காதலவர்க்கு
அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும்
தென் பாண்டி நாடே தெளி

#3
தாது ஆடு பூம் சோலை தத்தாய் நமை ஆளும்
மாது ஆடும் பாகத்தான் வாழ் பதி என் கோதாட்டி
பத்தர் எல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும்
உத்தரகோசமங்கை ஊர்

#4
செய்ய வாய் பைம் சிறகின் செல்வீ நம் சிந்தை சேர்
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய்
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும்
ஆனந்தம் காண் உடையான் ஆறு

#5
கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடு_இல் பெருந்துறை கோன்
மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து
இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி
அருளும் மலை என்பது காண் ஆய்ந்து

#6
இ பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே
ஒப்பு ஆடா சீர் உடையான் ஊர்வது என்னே எப்போதும்
தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வ பெண் ஏத்து இசைப்ப
வான் புரவி ஊரும் மகிழ்ந்து

#7
கோல்_தேன் மொழி கிள்ளாய் கோது_இல் பெருந்துறை கோன்
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார்
அழுக்கு அடையா நெஞ்சு உருக மு_மலங்கள் பாயும்
கழுக்கடை காண் கைக்கொள் படை

#8
இன் பால் மொழி கிள்ளாய் எங்கள் பெருந்துறை கோன்
முன் பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால்
பிறவி பகை கலங்க பேரின்பத்து ஓங்கும்
பரு மிக்க நாத பறை

#9
ஆய மொழி கிள்ளாய் அள்ளூறும் அன்பர்-பால்
மேய பெருந்துறையான் மெய் தார் என் தீய வினை
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளி அறுகு ஆம் உவந்த தார்

#10
சோலை பசும் கிளியே தூ நீர் பெருந்துறை கோன்
கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும்
ஏதிலார் தூண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும்
கோது_இலா ஏறு ஆம் கொடி
மேல்

@20 திருப்பள்ளியெழுச்சி


#1
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
ஏற்று உயர் கொடி உடை யாய் எனை உடையாய் எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#2
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம்
திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே

#3
கூவின பூம் குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு
தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
யாவரும் அறிவு_அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#4
இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#5
பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#6
பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்
மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
இ பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#7
அது பழ சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மது வளர் பொழில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா
எது எமை பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்
பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே
செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே

#9
விண்ணக தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம்
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார்
எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#10
புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி
சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம்
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும்
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே
மேல்

@21 கோயில் மூத்த திருப்பதிகம்


#1
உடையாள் உன்-தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் பொன்னம்பலத்து எம்
முடியா முதலே என் கருத்து முடியும்வண்ணம் முன் நின்றே

#2
முன் நின்று ஆண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்று
பின் நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே
என் என்று அருள் இவர நின்று போந்திடு என்னாவிடில் அடியார்
உன் நின்று இவன் ஆர் என்னாரோ பொன்னம்பல கூத்து உகந்தானே

#3
உகந்தானே அன்பு உடை அடிமைக்கு உருகா உள்ளத்து உணர்வு இலியேன்
சகம்-தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ
மகம்-தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்கு உன்
முகம்-தான் தாராவிடின் முடிவேன் பொன்னம்பலத்து எம் முழு_முதலே

#4
முழு_முதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்-தனக்கும்
வழி முதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமி
கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும்-கொல்லோ என்று
அழும்-அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே

#5
அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே என்று உன் அருள் நோக்கி
இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன்
கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால்
பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ

#6
ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறர் எல்லாம்
பேசா நிற்பர் யான்-தானும் பேணா நிற்பேன் நின் அருளே
தேசா நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க
ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனி-தான் இரங்காயே

#7
இரங்கும் நமக்கு அம்பல கூத்தன் என்றுஎன்று ஏமாந்திருப்பேனை
அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ
நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று அருளாயே

#8
அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர் இங்கு
பொருளா என்னை புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பல கூத்தா
மருள் ஆர் மனத்தோடு உனை பிரிந்து வருந்துவேனை வா என்று உன்
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ

#9
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம்
தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் அவர் முன்னே
தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே

#10
நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி
பல்கால் உன்னை பாவித்து பரவி பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே
மேல்

@22 கோயில் திருப்பதிகம்


#1
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே
ஊறி நின்று என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே

#2
அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு
முன்பும் ஆய் பின்னும் முழுதும் ஆய் பரந்த முத்தனே முடிவு_இலா முதலே
தென் பெருந்துறையாய் சிவபெருமானே சீர் உடை சிவபுரத்து அரைசே

#3
அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை
புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே
திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே
உரை உணர்வு இறந்துநின்று உணர்வது ஓர் உணர்வே யான் உன்னை உரைக்கும் ஆறு உணர்த்தே

#4
உணர்ந்த மா முனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு_அரும் பொருளே
இணங்கு_இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே
குணங்கள்-தாம் இல்லா இன்பமே உன்னை குறுகினேற்கு இனி என்ன குறையே

#5
குறைவு_இலா நிறைவே கோது_இலா அமுதே ஈறு_இலா கொழும் சுடர் குன்றே
மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே
சிறை பெறா நீர் போல் சிந்தை-வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே

#6
இரந்துஇரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே இமையோர்
சிரம்-தனில் பொலியும் கமல சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே
கரந்தது ஓர் உருவே களித்தனன் உன்னை கண்ணுற கண்டுகொண்டு இன்றே

#7
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை
சென்றுசென்று அணுவாய் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே

#8
பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே
நீர் உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின் அருள் வெள்ள
சீர் உறு சிந்தை எழுந்தது ஓர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி

#9
சோதியாய் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே
தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே
யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே

#10
தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால்
சிந்தையே கோயில்கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே
மேல்

@23 செத்திலாப் பத்து


#1
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ள கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா
செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#2
புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும்
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து
பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை
செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#3
புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள்புரிந்தனை புரிதலும் களித்து
தலையினால் நடந்தேன் விடை பாகா சங்கரா எண்_இல் வானவர்க்கு எல்லாம்
நிலையனே அலை நீர் விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த
சிலையனே எனை செத்திட பணியாய் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#4
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம்
என்பர் ஆய் நினைவார் எனை பலர் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மர கண் என் செவி இரும்பினும் வலிது
தென் பராய்த்துறையாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே

#5
ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன்
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய்
சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே

#6
அறுக்கிலேன் உடல் துணிபட தீ புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன்
பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா
இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய்
சிறை-கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#7
மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே
நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியா
பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ
சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே

#8
போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை
கோது மாட்டி நின் குரை கழல் காட்டி குறிக்கொள்க என்று நின் தொண்டரில் கூட்டாய்
யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#9
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய்
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#10
அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில்
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே
வளைக்கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா
களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே
மேல்

@24 அடைக்கலப் பத்து


#1
செழு கமல திரள் அன நின் சேவடி நேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன்
புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா
அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே

#2
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்
பொறுப்பவனே அரா பூண்பவனே பொங்கு கங்கை சடை
செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வே
ரறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#3
பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்து பெரும் பிச்சு
தரும் பெருமான் சதுர பெருமான் என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற
அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#4
பொழிகின்ற துன்ப புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய்
சுழி சென்று மாதர் திரை பொர காம சுறவு எறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#5
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண்
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான்
அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#6
மாழை மை பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து
தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள்
வாழி எப்போது வந்து எ நாள் வணங்குவன் வல் வினையேன்
ஆழி அப்பா உடை யாய் அடியேன் உன் அடைக்கலமே

#7
மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டு
புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி
என்-கணிலே அமுது ஊறி தித்தித்து என் பிழைக்கு இரங்கும்
அம் கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#8
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர் அடிக்கே
கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் நின் குறிப்பு அறியேன்
பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம்
ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#9
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ்
மறிவு அறியா செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பது ஓர்
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவு அறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#10
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே
மேல்

@25 ஆசைப்பத்து


#1
கருட கொடியோன் காணமாட்டா கழல் சேவடி என்னும்
பொருளை தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஓ
இருளை துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும்
அருளை பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#2
மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் கூவிக்கொள்ளாய் கோவே ஓ
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஓ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#3
சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில்-இது சிதைய
கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குரு மணியே
தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி
ஆஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#4
மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம்
தொடர்ந்து எனை நலிய துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே
உடைந்து நைந்து உருகி உள் ஒளி நோக்கி உன் திரு மலர் பாதம்
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#5
அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை
புளியம்பழம் ஒத்திருந்தேன் இருந்தும் விடையாய் பொடி ஆடி
எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே ஓ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#6
எய்த்தேன் நாயேன் இனி இங்கு இருக்ககில்லேன் இ வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர் சேவடியானே
முத்தா உன்-தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#7
பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி
வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே
பேர் ஆயிரமும் பரவி திரிந்து எம் பெருமான் என ஏத்த
ஆரா_அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#8
கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழும தழுவிக்கொண்டு
எய்யாது என்-தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று
ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#9
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர
படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#10
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன்
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
மேல்

@26 அதிசயப் பத்து


#1
வைப்பு மாடு என்று மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே
செப்பு நேர் முலை மடவரலியர்-தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து
அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#2
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன்
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன்-தனை என் அடியான் என்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#3
முன்னை என்னுடை வல் வினை போயிட முக்கண்-அது உடை எந்தை
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்கு
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#4
பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது கேளீர்
ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே
செத்துப்போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#5
பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை
இரவு நின்று எரி ஆடிய எம் இறை எரி சடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#6
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு_எழுத்தும் என் ஏழைமை-அதனாலே
நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#7
பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை
இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை
முத்து மா மணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழு சோதி
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#8
நீக்கி முன் எனை தன்னொடு நிலாவகை குரம்பையில் புக பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்து
தூக்கி முன் செய்த பொய் அற துகள் அறுத்து எழுதரு சுடர் சோதி
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#9
உற்ற ஆக்கையின் உறு பொருள் நறு மலர் எழுதரு நாற்றம் போல்
பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#10
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல் வினை சிறு குடில் இது இத்தை
பொருள் என களித்து அரு நரகத்திடை விழ புகுகின்றேனை
தெருளும் மு_மதில் நொடி வரை இடிதர சின பதத்தொடு செம் தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே
மேல்

@27 புணர்ச்சிப்பத்து


#1
சுடர் பொன் குன்றை தோளா முத்தை வாளா தொழும்பு உகந்து
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கரு மால் பிரமன்
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை
புடைபட்டு இருப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#2
ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய
சேற்றில் அழுந்தா சிந்தைசெய்து சிவன் எம்பெருமான் என்று ஏத்தி
ஊற்று மணல் போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டு
போற்றி புகழ்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#3
நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆர் அமுதை அள்ளூறு உள்ளத்து அடியார் முன்
வேண்டும்தனையும் வாய்விட்டு அலறி விரை ஆர் மலர் தூவி
பூண்டு கிடப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#4
அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும்
சொல்லி பரவும் நாமத்தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை
புல்லி புணர்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#5
திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும்
அகழ பறந்தும் காணமாட்டா அம்மான் இ மா நிலம் முழுதும்
நிகழ பணிகொண்டு என்னை ஆட்கொண்டு ஆஆ என்ற நீர்மை எல்லாம்
புகழப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#6
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள்செய்ய
பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்றுஎன்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பு ஆய்
புரிந்து நிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#7
நினைய பிறருக்கு அரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை
தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம்
கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால்
புனையப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#8
நெக்குநெக்கு உள் உருகிஉருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றி
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி சிலிர்சிலிர்த்து
புக்குநிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#9
தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட
பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும்
ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத
போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#10
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம்
முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனை ஆண்ட
பார்ப்பானே எம் பரமா என்று பாடிப்பாடி பணிந்து பாத
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே
மேல்

@28 வாழாப்பத்து


#1
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால்
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#2
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும்
செம் பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
எம்பெருமானே என்னை ஆள்வானே என்னை நீ கூவிக்கொண்டருளே

#3
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
ஊடுவது உன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#4
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய்
தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#5
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்-கணே வைத்து
மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#6
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

#7
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
திரு உயர் கோல சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#8
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
செம் தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை
வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

#9
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
தேவர்-தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
மூ_உலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே
மா உரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#10
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்
மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே
மேல்

@29 அருட்பத்து


#1
சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே சுரி குழல் பணை முலை மடந்தை
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர்
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#2
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றி_கண்ணனே விண் உளார் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன்
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அருத்தமே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#3
எங்கள் நாயகனே என் உயிர் தலைவா ஏல வார் குழலி-மார் இருவர்
தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#4
கமல நான்முகனும் கார் முகில் நிறத்து கண்ணனும் நண்ணுதற்கு அரிய
விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#5
துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலை கண்கள் தோய் சுவடு
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#6
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#7
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள் மூன்று எரித்த
கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி
செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#8
முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டு_அறா மலர் பறித்து இறைஞ்சி
பத்தியாய் நினைந்து பரவுவார்-தமக்கு பரகதி கொடுத்து அருள்செய்யும்
சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#9
மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய்
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#10
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடை எம்பிரான் என்றுஎன்று
அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று
பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே
மேல்

@30 திருக்கழுக்குன்றப் பதிகம்


#1
பிணக்கு இலாத பெருந்துறை பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கு இலாதது ஓர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின்
கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#2
பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறை பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனை சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடை ஆய வெம்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#3
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவது அறிந்திலேன்
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே
கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#4
பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும்
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான்
பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும்
காண்_ஒணா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#5
கோல மேனி வராகமே குணம் ஆம் பெருந்துறை கொண்டலே
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமே கரி ஆக நான் உனை நச்சி நச்சிட வந்திடும்
காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#6
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய்
சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என
காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#7
இயக்கி-மார் அறுபத்துநால்வரை எண் குணம் செய்த ஈசனே
மயக்கம் ஆயது ஒர் மு_மல பழ வல் வினைக்குள் அழுந்தவும்
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை
கயக்கவைத்து அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#8
விடையனே விடம் உண்டு வேதம் விளைந்த விண்ணவர் வேந்தனே
இடையிலே உனக்கு அன்புசெய்து பெருந்துறைக்கு அன்று இருந்திலேன்
சடையனே சைவ நாதனே உனை சாரும் தொண்டரை சார்கிலா
கடையனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#9
நரி எலாம் தெரியாவணம் இந்த நாடு எலாம் அறியும்படி
பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும்
புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே
மேல்

@31 கண்டபத்து


#1
இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய்
அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனை
சிந்தை-தனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே

#2
வினை பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு
தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்தி கிடப்பேனை
எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே

#3
உரு தெரியா காலத்தே உள் புகுந்து என் உளம் மன்னி
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய்_அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே

#4
கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் ஆய் வந்து வனப்பு எய்தி இருக்கும்வண்ணம்
பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே

#5
சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டு தடுமாறும்
ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு
பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்து
கோது_இல் அமுது ஆனானை குலாவு தில்லை கண்டேனே

#6
பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும்
உறவினொடும் ஒழிய சென்று உலகு உடைய ஒரு முதலை
செறி பொழில் சூழ் தில்லைநகர் திருச்சிற்றம்பலம் மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே

#7
பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி
பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து பேராமே
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே

#8
அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி
விளைவு ஒன்றும் அறியாதே வெறுவியனாய் கிடப்பேனுக்கு
அளவு_இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே

#9
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை
ஓங்கி உளத்து ஒளி வளர உலப்பு இலா அன்பு அருளி
வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே

#10
பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி
பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே
மேல்

@32 பிரார்த்தனைப் பத்து


#1
கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள்
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்ப சுடர் காண்பான்
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே

#2
அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே
முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவாது உருக அருளாயே

#3
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த
இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனை கண்டார்
வெருளாவண்ணம் மெய் அன்பை உடையாய் பெற நான் வேண்டுமே

#4
வேண்டும் வேண்டும் மெய் அடியாருள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே
தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம்-கொல்
வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே

#5
மேவும் உன்-தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரமானந்த பழம் கடல் சேர்ந்து
ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே

#6
அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும்
புறமே கிடந்து புலை_நாயேன் புலம்புகின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய் அன்பு பேரா ஒழியாய் பிரிவு இல்லா
மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே

#7
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண
இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன்
உடையாய் நீயே அருளிதி என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே

#8
துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டரிடை புகுந்து
திணி ஆர் மூங்கில் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன்
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய
தணியாது ஒல்லை வந்தருளி தளிர் பொன் பாதம் தாராயே

#9
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம்
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா
பேரானந்தம் பேராமை வைக்கவேண்டும் பெருமானே

#10
மான் ஓர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனம் நெகா
நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனை உணர்ந்த உருகி பெருகும் உள்ளத்தை
கோனே அருளும் காலம்-தான் கொடியேற்கு என்றோ கூடுவதே

#11
கூடிக்கூடி உன் அடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடிவாடி வழி அற்றே வற்றல் மரம் போல் நிற்பேனோ
ஊடிஊடி உடையாயொடு கலந்து உள் உருகி பெருகி நெக்கு
ஆடிஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே
மேல்

@33 குழைத்த பத்து


#1
குழைத்தால் பண்டை கொடு வினை நோய் காவாய் உடையாய் கொடு வினையேன்
உழைத்தால் உறுதி உண்டோ-தான் உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று
அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே

#2
அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்று இருந்தேன்
கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆஆ என்று அருளி
செடி சேர் உடலை சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா
உடையாய் கூவி பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே

#3
ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை
இன்றே இன்றி போய்த்தோ-தான் ஏழை பங்கா எம் கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே நீ கொண்டால்
என்-தான் கெட்டது இரங்கிடாய் எண் தோள் முக்கண் எம்மானே

#4
மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இ
ஊனே புக என்-தனை நூக்கி உழல பண்ணுவித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக்கொள்ளும் நாள் என்றுஎன்று உன்னை கூறுவதே

#5
கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ
தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ
வேறு ஓர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின்
தேறும் வகை என் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ

#6
வேண்ட தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்-தன் விருப்பு அன்றே

#7
அன்றே என்-தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ எண் தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே

#8
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாய பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும்-அது அன்றி
ஆய கடவேன் நானோ-தான் என்னதோ இங்கு அதிகாரம்
காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே

#9
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர
எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும்-இது அல்லால்
மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும்
அண்ணா எண்ண கடவேனோ அடிமை சால அழகு உடைத்தே

#10
அழகே புரிந்திட்டு அடி_நாயேன் அரற்றுகின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னை பணிகொண்டாய்
புகழே பெரிய பதம் எனக்கு புராண நீ தந்தருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னை குழைத்தாயே
மேல்

@34 உயிருண்ணிப்பத்து


#1
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என்
மெய் நாள்-தொறும் பிரியா வினை கேடா விடை பாகா
செந்நாவலர் பசும் புகழ் திருப்பெருந்துறை உறைவாய்
எ நாள் களித்து எ நாள் இறுமாக்கேன் இனி யானே

#2
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு
ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான்
தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாதது ஓர் வளம் ஈந்தனன் எனக்கே

#3
எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன்
மன_வாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்தன் ஆக்கி
சின மால் விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் எனை செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே

#4
வினைக்கேடரும் உளரோ பிறர் சொல்லீர் வியன் உலகில்
எனை தான் புகுந்து ஆண்டான் எனது அன்பின் புரை உருக்கி
பினை தான் புகுந்து எல்லே பெருந்துறையில் உறை பெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடையானே

#5
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி
நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின்
தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர்
கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே

#6
கடலின் திரை-அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என்
உடலும் எனது உயிரும் புகுந்து ஒழியாவண்ணம் நிறைந்தான்
சுடரும் சுடர் மதி சூடிய திருப்பெருந்துறை உறையும்
படரும் சடை மகுடத்து எங்கள் பரன்-தான் செய்த படிறே

#7
வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப்பு இறப்பு சிவம் வேண்டார்-தமை நாளும்
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள்
பூண்டேன் புறம் போகேன் இனி புறம்போகல் ஒட்டேனே

#8
கோல்_தேன் எனக்கு என்கோ-குரை கடல்-வாய் அமுது என்கோ
ஆற்றேன் எங்கள் அரனே அரு மருந்தே எனது அரசே
சேற்று ஆர் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே உனை யானே

#9
எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனது அமுதே
செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம் என நெஞ்சில் மன்னி யான் ஆகி நின்றானே

#10
வான் பாவிய உலகத்தவர் தவமே செய அவமே
ஊன் பாவிய உடலை சுமந்து அடவி மரம் ஆனேன்
தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனல் ஆமே
மேல்

@35 அச்சப்பத்து


#1
புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன்
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி
மற்றும் ஓர் தெய்வம்-தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு
அற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#2
வெருவரேன் வேட்கை வந்தால் வினை கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரான் ஆம்
திரு உரு அன்றி மற்று ஓர் தேவர் எ தேவர் என்ன
அருவராதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#3
வன் புலால் வேலும் அஞ்சேன் வளை கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பு எலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா
அன்பு இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#4
கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன்
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு
அளி இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#5
பிணி எலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்
துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால்
திணி நிலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#6
வாள் உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன்
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன்
தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும்
ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#7
தகைவு இலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும்
முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி
அகம் நெகாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#8
தறி செறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா
செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்கமாட்டா
அறிவிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#9
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவார்-அவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#10
கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு
வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்திநின்று ஏத்தமாட்டா
ஆண் அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே
மேல்

@36 திருப்பாண்டிப் பதிகம்


#1
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம்
ஒருவரை ஒன்றும் இலாதவரை கழல்-போது இறைஞ்சி
தெரிவர நின்று உருக்கி பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை அன்றி உருவு அறியாது என்-தன் உள்ளம்-அதே

#2
சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம்
கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து
குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடி_கேடு கண்டீர்
மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே

#3
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்
பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே

#4
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு
இறைவன் கிளர்கின்ற காலம் இ காலம் எ காலத்துள்ளும்
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இரு நிலத்தே

#5
காலம் உண்டாகவே காதல் செய்து உய்-மின் கருது_அரிய
ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்_அரிய
ஆலம் உண்டான் எங்கள் பாண்டி பிரான் தன் அடியவர்க்கு
மூல_பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்து-மினே

#6
ஈண்டிய மாய இருள் கெட எ பொருளும் விளங்க
தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல் விரும்பு-மின் தாள்
பாண்டியனார் அருள் செய்கின்ற முத்தி பரிசு இதுவே

#7
மாய வன பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும்
போய் அறும் இ பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும்
சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே

#8
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த_வெள்ளத்திடை அழுத்தி
கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே
முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்து-மினே

#9
விரவிய தீ வினை மேலை பிறப்பு முந்நீர் கடக்க
பரவிய அன்பரை என்பு உருக்கும் பரம் பாண்டியனார்
புரவியின் மேல் வர புத்தி கொளப்பட்ட பூங்கொடியார்
மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே

#10
கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால்
வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால்
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே
தேற்றம் இலாதவர் சேவடி சிக்கென சேர்-மின்களே
மேல்

@37 பிடித்த பத்து


#1
உம்பர்கட்கு அரசே ஒழிவு_அற நிறைந்த யோகமே ஊத்தையேன்-தனக்கு
வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீர் உடை கழலே செல்வமே சிவபெருமானே
எம்பொருட்டு உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#2
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே வினையனேனுடைய மெய்ப்பொருளே
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து
கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே
இடைவிடாது உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#3
அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே
பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#4
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே
பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே
இருளிடத்து உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#5
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத்து உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#6
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி
பிறவி வேரறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே
இறவிலே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#7
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி
பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே
தேசு உடை விளக்கே செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#8
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா
சித்தனே பத்தர் சிக்கென பிடித்த செல்வமே சிவபெருமானே
பித்தனே எல்லா உயிரும் ஆய் தழைத்து பிழைத்து அவை அல்லை ஆய் நிற்கும்
எத்தனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#9
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு_இலா ஆனந்தம் ஆய
தேனினை சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#10
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என்
என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு_இலா மணியே
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி
இன்பமே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே
மேல்

@38 திருஏசறவு


#1
இரும்பு தரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என் என்பு உருக்கி
கரும்பு தரு சுவை எனக்கு காட்டினை உன் கழல்_இணைகள்
ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகள் எல்லாம்
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே உன் பேரருளே

#2
பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு
உண் ஆர்ந்த ஆர் அமுதே உடையானே அடியேனை
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன
கண்ணார உய்ந்த ஆறு அன்றே உன் கழல் கண்டே

#3
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில்
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே அடியேற்கு உன்
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம்பரனே

#4
பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
எச்சத்து ஆர் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என்
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே உன் திறம் நினைந்தே

#5
கற்று அறியேன் கலை_ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும்
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து
உற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்கு
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே

#6
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால்
உய்ஞ்சேன் எம்பெருமானே உடையானே அடியேனை
அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே

#7
என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா
தென்பாலை திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்
அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது
என்-பாலே நோக்கிய ஆறு அன்றே எம்பெருமானே

#8
மூத்தானே மூவாத முதலானே முடிவு_இல்லா
ஓத்தானே பொருளானே உண்மையும் ஆய் இன்மையும் ஆய்
பூத்தானே புகுந்து இங்கு புரள்வேனை கருணையினால்
பேர்த்தே நீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே

#9
மருவு இனிய மலர் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக
தெருவு-தொறும் மிக அலறி சிவபெருமான் என்று ஏத்தி
பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு
அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே

#10
நானேயோ தவம் செய்தேன் சிவாயநம என பெற்றேன்
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே
மேல்

@39 திருப்புலம்பல்


#1
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறு ஆடி
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின்
பூம் கழல்கள்-அவை அல்லாது எவை யாதும் புகழேனே

#2
சடையானே தழல் ஆடீ தயங்கு மூ_இலை சூல
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழ வெள்ளை
விடையானே விரி பொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான்
உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே

#3
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே
மேல்

@40 குலாப் பத்து


#1
ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து
தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிட குனித்து அடியேன்
ஆடும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#2
துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால்
செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும்
முடியேன் பிறவேன் எனை தன தாள் முயங்குவித்த
அடியேன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#3
என்பு உள் உருக்கி இரு வினையை ஈடு அழித்து
துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள் புகுத்த
அன்பின் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#4
குறியும் நெறியும் குணமும் இலா குழாங்கள்-தமை
பிறியும் மனத்தார் பிறிவு_அரிய பெற்றியனை
செறியும் கருத்தில் உருத்து அமுது ஆம் சிவபதத்தை
அறியும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#5
பேரும் குணமும் பிணிப்புறும் இ பிறவி-தனை
தூரும் பரிசு துரிசு அறுத்து தொண்டர் எல்லாம்
சேரும் வகையால் சிவன் கருணை தேன் பருகி
ஆரும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#6
கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய் காய் ஆகி
வம்பு பழுத்து உடலம் மாண்டு இங்ஙன் போகாமே
நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம் நான் அணுகும்
அம் பொன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#7
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய
மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு
அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#8
இடக்கும் கரு முருட்டு ஏன பின் கானகத்தே
நடக்கும் திருவடி என் தலை மேல் நட்டமையால்
கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை
அடக்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#9
பாழ் செய் விளாவி பயன்_இலியாய் கிடப்பேற்கு
கீழ் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு
தாள் செய்ய தாமரை சைவனுக்கு என் புன் தலையால்
ஆட்செய் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#10
கொம்மை வரி முலை கொம்பு அனையாள் கூறனுக்கு
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும்
அம்மை குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே
மேல்

@41 அற்புதப்பத்து


#1
மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு
தையலார் எனும் சுழி-தலை பட்டு நான் தலை தடுமாறாமே
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி
மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே

#2
ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே
சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி
வேந்தன் ஆய் வெளியே என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே

#3
நடித்து மண்ணிடை பொய்யினை பல செய்து நான் என எனும் மாயம்
கடித்த வாயிலே நின்று முன் வினை மிக கழறியே திரிவேனை
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை
அடித்துஅடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே

#4
பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய்
கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை
திருந்து சேவடி சிலம்பு-அவை சிலம்பிட திருவொடும் அகலாதே
அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே

#5
மாடும் சுற்றமும் மற்று உள போகமும் மங்கையர்-தம்மோடும்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே

#6
வணங்கும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது மங்கையர்-தம்மோடும்
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை
குணங்களும் குறிகளும் இலா குண கடல் கோமளத்தொடும் கூடி
அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே

#7
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள்
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே

#8
ஊசல் ஆட்டும் இ உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து என்னை
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு_அரியவன் உணர்வு தந்து ஒளி ஆக்கி
பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால்
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே

#9
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை
விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர் கழல் காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே

#10
செறியும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும்
கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி
அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே
மேல்

@42 சென்னிப்பத்து


#1
தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன்
மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான்
யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான்
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே

#2
அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய் சிவலோக_நாயகன் தென் பெருந்துறை சேவகன்
மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன்
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே

#3
நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன்
மங்கை-மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான்
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே

#4
பத்தர் சூழ பராபரன் பாரில் வந்து பார்ப்பான் என
சித்தர் சூழ சிவபிரான் தில்லை மூதூர் நடம்செய்வான்
எத்தன் ஆகி வந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணிகொள்வான்
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே

#5
மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான்
வேய தோள் உமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான்
காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே

#6
சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீ வினை கெடுத்து உய்யல் ஆம்
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்து இந்த மூ_உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே

#7
பிறவி என்னும் இ கடலை நீந்த தன் பேரருள் தந்தருளினான்
அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல்
உறவுசெய்து எனை உய்யக்கொண்ட பிரான்-தன் உண்மை பெருக்கம் ஆம்
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே

#8
புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய்-தனை ஒழிவித்திடும்
எழில்கொள் சோதி எம் ஈசன் எம்பிரான் என்னுடை அப்பன் என்றுஎன்று
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே

#9
வம்பனாய் திரிவேனை வா என்று வல் வினை பகை மாய்த்திடும்
உம்பரான் உலகு ஊடறுத்து அ புறத்தன் ஆய் நின்ற எம்பிரான்
அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும்
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே

#10
முத்தனை முதல் சோதியை முக்கண்_அப்பனை முதல் வித்தனை
சித்தனை சிவலோகனை திருநாமம் பாடி திரிதரும்
பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே
மேல்

@43 திருவார்த்தை


#1
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி
கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும்
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே

#2
மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன்
ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும்
கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே

#3
அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்த கூத்தன் அறு சமயம்
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த
பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து
மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே

#4
வேடு உரு ஆகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னை
தேட இருந்த சிவபெருமான் சிந்தனைசெய்து அடியோங்கள் உய்ய
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள்
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே

#5
வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மா கருணை கடல் ஆய் அடியார்
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள்
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே

#6
வேவ திரிபுரம் செற்ற வில்லி வேடுவன் ஆய் கடி நாய்கள் சூழ
ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில்
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று
கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே

#7
நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார்
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும்
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி
பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே

#8
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன்
மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன்
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே

#9
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான் சோதி மயேந்திரநாதன் வந்து
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக
கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே

#10
அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த
சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே
மேல்

@44 எண்ணப்பதிகம்


#1
பார் உரு ஆய பிறப்பு அறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே செங்கமல மலர் போல்
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே

#2
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னை பிரிந்து இங்கு ஒரு பொழுதும்
தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி
பிரியேன் என்றுஎன்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே

#3
என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழு_முதலே
இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே
நன்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே

#4
பத்து_இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காண
பித்து_இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய எம்பெருமானே
முத்து_அனையானே மணி_அனையானே முதல்வனே முறையோ என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனி பிரிந்து ஆற்றேனே

#5
காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர
பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே
தாணுவே அழிந்தேன் நின் நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால்
காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே

#6
பால் திருநீற்று எம் பரமனை பரம் கருணையோடு எதிர்ந்து
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன்
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்தி புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே
ஆற்றுவன் ஆக உடையவனே எனை ஆவ என்று அருளாயே
மேல்

@45 யாத்திரைப் பத்து


#1
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்க பெருமான் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வு ஆய் உருக்கும் வெள்ள கருணையினால்
ஆஆ என்னப்பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படு-மின்
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே

#2
புகவே வேண்டா புலன்களில் நீர் புயங்க பெருமான் பூம் கழல்கள்
மிகவே நினை-மின் மிக்க எல்லாம் வேண்டா போக விடு-மின்கள்
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட
தகவே உடையான்-தனை சார தளராது இருப்பார் தாம்தாமே

#3
தாமே தமக்கு சுற்றமும் தாமே தமக்கு விதி வகையும்
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக
கோமான் பண்டை தொண்டரொடும் அவன்-தன் குறிப்பே குறிக்கொண்டு
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே

#4
அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடு-மின் விளையாட்டை
கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை
செடி சேர் உடலை செல நீக்கி சிவலோகத்தே நமை வைப்பான்
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே

#5
விடு-மின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை
உடையான் அடிக்கீழ் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படு-மின்
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே
புடைபட்டு உருகி போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே

#6
புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு
இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம்
நிகழும் அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போமே

#7
நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே
நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படு-மின்
பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே

#8
பெருமான் பேரானந்தத்து பிரியாது இருக்க பெற்றீர்காள்
அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து
திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே

#9
சேர கருகி சிந்தனையை திருந்த வைத்து சிந்தி-மின்
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம்
ஆர பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர்
போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே

#10
புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இது செய்-மின் சிவலோக கோன் திருப்புயங்கன்
அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே
மேல்

@46 திருப்படை எழுச்சி


#1
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின்
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின்
ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள்
வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே

#2
தொண்டர்காள் தூசி செல்லீர் பக்தர்காள் சூழ போகீர்
ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்தீர்கள்
திண் திறல் சித்தர்களே கடை கூழை செல்-மின்கள்
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே
மேல்

@47 திருவெண்பா


#1
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல மெய் உருகி
பொய்யும் பொடி ஆகாது என் செய்கேன் செய்ய
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ
மருவாது இருந்தேன் மனத்து

#2
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என் செய்தேன் தீர்ப்பு_அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்-
தான் என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து

#3
செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து உறையுள் வேல் மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்

#4
முன்னை வினை இரண்டும் வேரறுத்து முன் நின்றான்
பின்னை பிறப்பு அறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்
வரும் துயரம் தீர்க்கும் மருந்து

#5
அறையோ அறிவார்க்கு அனைத்து உலகும் ஈன்ற
மறையோனும் மாலும் மால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது
இருந்து உறையும் என் நெஞ்சத்து இன்று

#6
பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம்
மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்து இறவா பேரின்பம் வந்து

#7
வாரா வழி அருளி வந்து எனக்கு மாறு இன்றி
ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி

#8
யாவர்க்கும் மேல் ஆம் அளவு_இலா சீர் உடையான்
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை யாவரும்
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு என் எம்பெருமான்
மற்று அறியேன் செய்யும் வகை

#9
மூவரும் முப்பத்துமூவரும் மற்று ஒழிந்த
தேவரும் காணா சிவபெருமான் மா ஏறி
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்

#10
இருந்து என்னை ஆண்டான் இணை_அடியே சிந்தித்து
இருந்து இரந்துகொள் நெஞ்சே எல்லாம் தரும் காண்
பெருந்துறையின் மேய பெரும் கருணையாளன்
மருந்து உருவாய் என் மனத்தே வந்து

#11
இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பு அமைத்து
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊர் ஆக கொண்டான் உவந்து
மேல்

@48 பண்டாய நான்மறை


#1
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா மால் அயனும்
கண்டாரும் இல்லை கடையேனை தொண்டு ஆக
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மாறு உரை

#2
உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்
வெள்ளம் தரும் பரியின் மேல் வந்த வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்து-மின்கள் வாழ்த்த
கருவும் கெடும் பிறவி காடு

#3
காட்டகத்து வேடன் கடலில் வலை வாணன்
நாட்டில் பரி பாகன் நம் வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அம் கமல பாதம்
மருளும் கெட நெஞ்சே வாழ்த்து

#4
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல் வினையை மாய்ப்பாரும்
தாழ்ந்து உலகம் ஏத்த தகுவாரும் சூழ்ந்து அமரர்
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை
நன்று இறைஞ்சி ஏத்தும் நமர்

#5
நண்ணி பெருந்துறையை நம் இடர்கள் போய் அகல
எண்ணி எழு கோகழிக்கு அரசை பண்ணின்
மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னி
கழியாது இருந்தவனை காண்

#6
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என
பேணும் அடியார் பிறப்பு அகல காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயார பேசு

#7
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய் பேச்சு இறந்த
மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி
பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் நல்ல
மருந்தின் அடி என் மனத்தே வைத்து
மேல்

@49 திருப்படை ஆட்சி


#1
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண் களிகூர்வது ஒர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே

#2
ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே
உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே
கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு-அது ஆகாதே
காரணம் ஆகும் மனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே
நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே
என்றும் என் அன்பு நிறைந்த பராவமுது எய்துவது ஆகாதே
ஏறு உடையான் எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே

#3
பந்த_விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே
பாவனை ஆய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே
அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே
ஆதி முதல் பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே
இந்திரஞால இடர் பிறவி துயர் ஏகுவது ஆகாதே
என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே

#4
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும் ஆகாதே
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே
நல் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுவது ஆகாதே
நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே
மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே
மா மறையும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே

#5
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாதே
வானவரும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே
கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே
காதல்செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்_இலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவது ஆகாதே
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே

#6
பொன்னியலும் திருமேனி வெண்ணீறு பொலிந்திடும் ஆகாதே
பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே
வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே
தான் அடியோமுடனே உய வந்து தலைப்படும் ஆகாதே
இன்னியம் எங்கும் நிறைந்து இனிது ஆக இயம்பிடும் ஆகாதே
என்னை முன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுந்தருளப்பெறிலே

#7
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே
துண்ணென என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே
பண்டு அறியாத பரானுபவங்கள் பரந்து எழும் ஆகாதே
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே
விண்ணவரும் அறியாத விழு பொருள் இ பொருள் ஆகாதே
எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப்பெறிலே

#8
சங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே
ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே
செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீர் அடியார்கள் சிவானுபவங்கள் தெரித்திடும் ஆகாதே
எங்கும் நிறைந்து அமுது ஊறு பரஞ்சுடர் எய்துவது ஆகாதே
ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப்பெறிலே
மேல்

@50 ஆனந்தமாலை


#1
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன் உலகம்
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் அமரர் எல்லாம்
கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த
என் நேர் அனையேன் இனி உன்னை கூடும்வண்ணம் இயம்பாயே

#2
என்னால் அறியா பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை உடையாய் அடிமைக்கு யார் என்பேன்
பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது
என் நாயகமே பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே

#3
சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி
தோலின் பாவைக்கூத்தாட்டு ஆய் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏற
கோலம் காட்டி ஆண்டானை கொடியேன் என்றோ கூடுவதே

#4
கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னை பயன் என்னே
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குரு மணியே
நடு ஆய் நில்லாது ஒழிந்த-கால் நன்றோ எங்கள் நாயகமே

#5
தாய் ஆய் முலையை தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே
தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்-தான் வேண்டாவோ

#6
கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
ஆஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ-தான்
சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ
தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே

#7
நரியை குதிரை பரி ஆக்கி ஞாலம் எல்லாம் நிகழ்வித்து
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே
மேல்

@51 அச்சோப் பதிகம்


#1
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை
பத்தி நெறி அறிவித்து பழ வினைகள் பாறும்வண்ணம்
சித்த மலம் அறுவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#2
நெறி அல்லா நெறி-தன்னை நெறியாக நினைவேனை
சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறி ஒன்றும் இல்லாத கூத்தன்-தன் கூத்தை எனக்கு
அறியும்வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#3
பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே
மையலுற கடவேனை மாளாமே காத்தருளி
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம்
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#4
மண்-அதனில் பிறந்து எய்த்து மாண்டு விழ கடவேனை
எண்ணம்_இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன்
சுண்ண வெண்ணீறு அணிவித்து தூ நெறியே சேரும்வண்ணம்
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#5
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்
உய்ஞ்சேன் நான் உடையானே அடியேனை வருக என்று
அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#6
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று வினை பெருக்கி
கொந்து குழல் கோல் வளையார் குவி முலை மேல் விழுவேனை
பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#7
தையலார் மையலிலே தாழ்ந்து விழ கடவேனை
பையவே கொடு போந்து பாசம் எனும் தாழுருவி
உய்யும் நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#8
சாதல் பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறி
காதலின் மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை
மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும்வண்ணம்
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#9
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை
மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன்-தான்
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#10
செத்திடமும் பிறந்திடமும் இனி சாவாது இருந்திடமும்
அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எ அறிவோ
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#11
படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திரிந்து அடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர் கான்றும் காண_ஒண்ணா
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#12
பாதி எனும் இரவு உறங்கி பகல் எமக்கே இரை தேடி
வேதனையில் அகப்பட்டு வெந்து விழ கடவேனை
சாதி குலம் பிறப்பு அறுத்து சகம் அறிய எனை ஆண்ட
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே