திருமந்திரம் – நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் தந்திரங்கள்

4.நான்காம் தந்திரம் (884 – 1418)


#884
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தை
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை
ஏற்றுகின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே

மேல்

#885
ஓரெழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி
ஈரெழுத்தாலே இசைந்து அங்கு இருவராய்
மூவெழுத்தாலே முளைக்கின்ற சோதியை
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே

மேல்

#886
தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும்
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே

மேல்

#887
ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவர தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும் அ தாண்டவம்
ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே

மேல்

#888
தாண்டவம் ஆன தனி எழுத்து ஓரெழுத்து
தாண்டவம் ஆனது அனுகிரக தொழில்
தாண்டவ கூத்து தனிநின்ற தற்பரம்
தாண்டவ கூத்து தமனியம் தானே

மேல்

#889
தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகார உகாரம் அதாய் நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவ கூத்துக்கு
தானே தனக்கு தராதலம் தானே

மேல்

#890
தராதல மூலைக்கு தற்பர மா பரன்
தராதலம் வெப்பு நமசிவாய ஆம்
தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும்
தராதல யோகம் தயாவாசி ஆமே

மேல்

#891
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம் என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே

மேல்

#892
ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை
ஆனந்தமோடும் அறிய வல்லார்கட்கு
ஆனந்த கூத்தாய் அகப்படும் தானே

மேல்

#893
படுவது இரண்டும் பல கலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக்கரங்கள்
படுவது சங்கார தாண்டவ பத்தி
படுவது கோணம் பரந்திடும்வாறே

மேல்

#894
வாறே சதாசிவ மாறு இலா ஆகமம்
வாறே சிவகதி வண்டு உறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொது ஆகும் மன்றின் அமலமே

மேல்

#895
அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம்
அலமம் திரோதாயி ஆகும் ஆனந்தம் ஆம்
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே

மேல்

#896
தானே தனக்கு தலைவியுமாய் நிற்கும்
தானே தனக்கு தன் மலையாய் நிற்கும்
தானே தனக்கு தன் மயமாய் நிற்கும்
தானே தனக்கு தலைவனும் ஆமே

மேல்

#897
தலைவனுமாய் நின்ற தற்பரக்கூத்தனை
தலைவனுமாய் நின்ற சற்பாத்திரத்தை
தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞான
தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே

மேல்

#898
இணையார் திருவடி எட்டெழுத்து ஆகும்
இணையார் கழல் இணை ஈரஞ்சு அது ஆகும்
இணையார் கழல் இணை ஐம்பத்தொன்று ஆகும்
இணையார் கழல் இணை ஏழாயிரமே

மேல்

#899
ஏழாயிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழாயிரத்தும் எழு கோடி தான் ஆகி
ஏழாயிரத்து உயிர் எண்_இலா மந்திரம்
ஏழாய் இரண்டாய் இருக்கின்றவாறே

மேல்

#900
இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி
இருக்கின்ற மந்திரம் இ வண்ணம் தானே

மேல்

#901
தானே தனக்கு தகுநட்டம் தான் ஆகும்
தானே அகார உகாரம் அதாய் நிற்கும்
தானே ரீங்கார தத்துவ கூத்துக்கு
தானே உலகில் தனிநடம் தானே

மேல்

#902
நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும்
நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து
நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம்
நடம் சிவலிங்கம் நலம் செம்பு பொன்னே

மேல்

#903
செம்பு பொன் ஆகும் சிவாய நம என்னில்
செம்பு பொன் ஆக திரண்டது சிற்பரம்
செம்பு பொன் ஆகும் சிரீயும் கிரீயும் என
செம்பு பொன் ஆன திரு அம்பலமே

மேல்

#904
திரு அம்பலம் ஆக சீர் சக்கரத்தை
திரு அம்பலம் ஆக ஈராறு கீறி
திரு அம்பலம் ஆக இருபத்தஞ்சு ஆக்கி
திரு அம்பலம் ஆக செபிக்கின்றவாறே

மேல்

#905
வாறே சிவாய நமச்சிவாய நம
வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை
வாறே அருளால் வளர் கூத்து காணலாம்
வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே

மேல்

#906
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறி கிஞ்சுகத்து ஆகும்
பொன்னான மந்திரம் புகை உண்டு பூரிக்கில்
பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே

மேல்

#907
பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும்
பொன் பாதம் காண திருமேனி ஆயிடும்
பொன் பாத நல் நடம் சிந்தனை சொல்லுமே

மேல்

#908
சொல்லும் ஒரு கூட்டில் புக்கு சுகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துடனே வரும்
சொல்லினும் பாச சுடர் பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே

மேல்

#909
சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல்
சூக்குமம் ஆன வழி இடை காணலாம்
சூக்குமம் ஆன வினையை கெடுக்கலாம்
சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே

மேல்

#910
ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம் ஹரீம் அம் க்ஷம் ஆம் ஆகுமே

மேல்

#911
மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியாம்
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்னும்
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே

மேல்

#912
கூத்தே சிவாயநம மசி ஆயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவயநம ஆயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் நமசிவாய கோள் ஒன்றுமாறே

மேல்

#913
ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்க கூத்தே

மேல்

#914
இருந்த இ வட்டங்கள் ஈராறு இரேகை
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே

மேல்

#915
தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும்
தான் ஒன்றும் அ நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும்
தான் ஒன்றிலே ஒன்று அ அரன் தானே

மேல்

#916
அரகர என்ன அரியது ஒன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே

மேல்

#917
எட்டுநிலை உள எம் கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிட
பட்டது மந்திரம் பான்மொழி பாலே

மேல்

#918
மட்டு அவிழ் தாமரை மாது நல்லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே

மேல்

#919
ஆலயம் ஆக அமர்ந்த பஞ்சாக்கரம்
ஆலயம் ஆக அமர்ந்த இ தூலம் போய்
ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம்
ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே

மேல்

#920
இருந்த இ வட்டம் இருமூன்று இரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்து ஆக
இருந்த அறைகள் இருபத்தஞ்சு ஆக
இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே

மேல்

#921
மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஒகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இரு கண் சிகாரமாய்
நகார வகார நல் காலது நாடுமே

மேல்

#922
நாடும் பிரணவ நடு இரு பக்கமும்
ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது
நாடு நடுவுள் முக நமசிவாய
வாடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே

மேல்

#923
ஆயும் சிவாயநம மசிவாயந
ஆயும் நமசிவாய யநமசிவா
ஆயுமே வாயநமசி எனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே

மேல்

#924
அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின்
அடையும் அறை ஒன்றுக்கு கீழ் எழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்து ஐம்பத்தொன்றும் அமர்ந்ததே

மேல்

#925
அமர்ந்த அரகர ஆம் புறவட்டம்
அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள்வட்டம்
அமர்ந்த அசபை ஆம் அதன் உள்வட்டம்
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே

மேல்

#926
சூல தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூல தலையினில் சூழும் ஓங்காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆல பதிக்கும் அடைவது ஆமே

மேல்

#927
அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகாரம் அது அஞ்சாம்
அது ஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம்
பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே

மேல்

#928
பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்
நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம்
ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே

மேல்

#929
இயலும் இ மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறிய தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே

மேல்

#930
ஆறெட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும்
ஏறிட்டு அதன் மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாயநம என்ன
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டு போமே

மேல்

#931
அண்ணல் இருப்பது அவள் அக்கரத்துளே
பெண்ணின் நல்லாளும் பிரான் அ கரத்துளே
எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திட
புண்ணியவாளர் பொருள் அறிவார்களே

மேல்

#932
அவ்விட்டு வைத்து அங்கு அர இட்டு மேல் வைத்து
இவ்விட்டு பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுற கண்ட பின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே

மேல்

#933
அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்கு
சவ் உண்டு சத்தி சதாசிவன் தானே

மேல்

#934
அஞ்செழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம்
அஞ்செழுத்து ஆகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத்துள்ளே அமர்ந்து இருந்தானே

மேல்

#935
கூத்தனை காணும் குறி பல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கையராய் நிற்பர்
கூத்தனை காணும் குறி அது ஆமே

மேல்

#936
அ திசைக்கு உள்நின்ற அனலை எழுப்பியே
அ திசைக்கு உள்நின்ற நவ் எழுத்து ஓதினால்
அ திசைக்கு உள்நின்ற அந்த மறையனை
அ திசைக்கு உள்ளுறவு ஆக்கினன் தானே

மேல்

#937
தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிட
தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே

மேல்

#938
கல் ஒளியே என நின்ற வடதிசை
கல் ஒளியே என நின்றனன் இந்திரன்
கல் ஒளியே என நின்ற சிகாரத்தை
கல் ஒளியே என காட்டி நின்றானே

மேல்

#939
தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும்
தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே

மேல்

#940
மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திட காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப்பெற்ற
மறையவன் அஞ்செழுத்தாம் அது ஆகுமே

மேல்

#941
ஆகின்ற பாதமும் அ ந-வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம்
ஆகின்ற சி இரு தோள் வ-வாய் கண்ட பின்
ஆகின்ற அ சுடர் அ இயல்பு ஆமே

மேல்

#942
அ இயல்பு ஆய இருமூன்று எழுத்து ஐந்தையும்
செ இயல்பு ஆக சிறந்தனன் நந்தியும்
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில்
பவ் இயல்பு ஆக பரந்து நின்றானே

மேல்

#943
பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம்
வரம் தரு மந்திரம் வாய்த்திட வாங்கி
துரந்திடு மந்திரம் சூழ் பகை போக
உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே

மேல்

#944
ஓம் என்று எழுப்பி தன் உத்தம நந்தியை
நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை
ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள்
மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே

மேல்

#945
ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும்
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்துள் நிற்க
பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே

மேல்

#946
பரமாய அஞ்சு எழுத்துள் நடு ஆக
பரமாய நவசிம பார்க்கில் மவயநசி
பரமாய சியநமவ ஆம் பரத்து ஓதில்
பரம் ஆய வாசிமயநமாய் நின்றே

மேல்

#947
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே

மேல்

#948
நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம்
மன்றதுவாய் நின்ற மாய நல் நாடனை
கன்றது ஆக கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே

மேல்

#949
கொண்ட இ சக்கரத்துள்ளே குணம் பல
கொண்ட இ சக்கரத்துள்ளே குறி ஐந்தும்
கொண்ட இ சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும்
கொண்ட இ சக்கரத்துள் நின்ற கூத்தே

மேல்

#950
வெளியில் இரேகை இரேகையில் அ தலை
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவமந்திரமே

மேல்

#951
அகார உகார சிகார நடுவாய்
வகாரமோடு ஆறும் வளியுடன் கூடி
சிகாரமுடனே சிவன் சிந்தைசெய்ய
ஒகார முதல்வன் உவந்து நின்றானே

மேல்

#952
அற்ற இடத்தே அகாரம் அது ஆவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிட
செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே

மேல்

#953
அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால்
உவ் என்ற முத்தி உருகி கலந்திடும்
மவ் என்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே

மேல்

#954
நீரில் எழுத்து இ உலகர் அறிவது
வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை
யார் இ எழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே

மேல்

#955
காலை நடுவுற காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்தி தானே

மேல்

#956
நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று
பாவிகள் அத்தின் பயன் அறிவார் இல்லை
ஓவியராலும் அறிய ஒண்ணாது அது
தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே

மேல்

#957
அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம்
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே

மேல்

#958
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம் பண்ணாநிற்கும்
சந்தி செய்யாநிற்பர் தாம் அறிகிலர்
அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே

மேல்

#959
சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற
ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன
பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே

மேல்

#960
அருவினில் அம்பரம் அங்கு எழும் நாதம்
பெருகு துடி இடை பேணிய விந்து
மருவி அகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறு மந்திரமே

மேல்

#961
விந்துவும் நாதமும் மேவி உடன்கூடி
சந்திரனோடே தலைப்படுமாயிடில்
அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி ஆமே

மேல்

#962
ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலார்
ஆறெழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள்
வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு
ஓரெழுத்தாலே உயிர் பெறலாமே

மேல்

#963
ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர்
சோதி எழுத்தினில் ஐயிருமூன்று உள
நாத எழுத்திட்டு நாடி கொள்ளீரே

மேல்

#964
விந்துவிலும் சுழி நாதம் எழுந்திட
பந்த தலைவி பதினாறு கலை அதாம்
கந்தர ஆகரம் காலுடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே

மேல்

#965
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்து ஆமே

மேல்

#966
அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்
அஞ்செழுத்தால் இ அகல் இடம் தாங்கினன்
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே

மேல்

#967
வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தை
சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்கு
சார்ந்த வினை துயர் போக தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடையோனே

மேல்

#968
உண்ணும் மருந்தும் உலப்பு_இலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலுமாய் நிற்கும்
விண்-நின்று அமரர் விரும்பி அடிதொழ
எண்-நின்று எழுத்து அஞ்சும் ஆகி நின்றானே

மேல்

#969
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெய பாலனும் ஆமே

மேல்

#970
வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன்
சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து
ஓரெழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே

மேல்

#971
நாலாம் எழுத்து ஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவில வல்லார்கட்கு
நாலாம் எழுத்து அது நல் நெறி தானே

மேல்

#972
இயைந்தனள் ஏந்திழை என் உளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயம்-தனை ஓரும் பதம் அது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்று அறுத்தேனே

மேல்

#973
ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை
ஓமத்திலே உதம்பண்ணும் ஒருத்தி-தன்
நாம நமசிவ என்று இருப்பாருக்கு
நேம தலைவி நிலவி நின்றாளே

மேல்

#974
பட்ட பரிசே பரம் அஞ்சு எழுத்து அதின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர
நட்டம் அது ஆடும் நடுவே நிலயம் கொண்டு
அட்ட தேசு அ பொருள் ஆகி நின்றாளே

மேல்

#975
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும் முப்பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமா
அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே

மேல்

#976
நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதல்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்து அகத்தானே

மேல்

#977
அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்க வல்லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம் புகலாமே

மேல்

#978
ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடி பரையொடும்
சந்திசெய்வார்க்கு சடங்கு இல்லை தானே

மேல்

#979
மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமும் ஆகும்
தெருள்வந்த சிவனார் சென்று இவற்றாலே
அருள் தங்கி அ சிவம் ஆவது வீடே

மேல்

#980
அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்த பின்
நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே

மேல்

#981
சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓத
சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும்
சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே

மேல்

#982
சிகார வகார யகாரம் உடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்து நின்றானே

மேல்

#983
ந-முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள்
அ முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சி-முதல் உள்ளே தெளிய வல்லார்கட்கு
தம் முதல் ஆகும் சதாசிவம் தானே

மேல்

#984
நவமும் சிவமும் உயிர்பரம் ஆகும்
தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அ
சிவம் என்பது ஆனாம் எனும் தெளிவுற்றதே

மேல்

#985
கூடிய எட்டும் இரண்டும் குவிந்து அறி
நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து
ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள்
தேடி அதனை தெளிந்து அறியீரே

மேல்

#986
எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு என
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே

மேல்

#987
எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில்
வட்டத்திலே அறை நாற்பத்தெட்டும் இட்டு
சிட்ட அஞ்செழுத்தும் செபி சீக்கிரமே

மேல்

#988
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இ மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனை பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய் சிவசக்கரத்தானே

மேல்

#989
பட்டன மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே

மேல்

#990
சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே

மேல்

#991
வித்தாம் செக மயம் ஆக வரை கீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டி பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும்
பத்தாம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே

மேல்

#992
கண்டு எழுந்தேன் கமல மலர் உள் இடை
கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்து
பண்டு அழியாத பதி வழியே சென்று
நண்பு அழியாமே நம எனல் ஆமே

மேல்

#993
புண்ணிய வானவர் பூமழை தூவி நின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தை
கண் என உன்னி கலந்து நின்றாரே

மேல்

#994
ஆறெழுத்தாவது ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்துநாலு என்பர்
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே

மேல்

#995
எட்டினில் எட்டு அறை இட்டு ஓர் அறையிலே
கட்டிய ஒன்று எட்டாய் காண நிறை இட்டு
சுட்டி இவற்றை பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே

மேல்

#996
ந-முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அ-முதல் ஆகிய எட்டிடை உற்றிட்டு
உ-முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல்
உ-முதல் ஆயவன் உற்று நின்றானே

மேல்

#997
நின்ற அரசு அம் பலகை மேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்று எழுகையுள் பூசி சுடரிடை
தன்ற வெதுப்பு இட தம்பனம் காணுமே

மேல்

#998
கரண இரளி பலகை யமன் திசை
மரணமிட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை
முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே

மேல்

#999
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாச பலகையில்
காங்கு அரு மேட்டில் கடு பூசி விந்து விட்டு
ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே

மேல்

#1000
உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலையில் பஞ்சகாயத்தை பாரித்து
முச்சதுரத்தின் முதுகாட்டில் வைத்திட
வைச்ச பின் மேலோர் மாரணம் வேண்டிலே

மேல்

#1001
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்து இட்டு
வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதினாயிரம் வேண்டிலே

மேல்

#1002
எண்ணா கருடணை ஏட்டின் யகாரம் இட்டு
எண்ணா பொன் ஒளி எழு வெள்ளி பூசிடா
வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி
எண்ணா எழுத்தோடு எண்ணாயிரம் வேண்டிலே

மேல்

#1003
அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல்
வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே

மேல்

#1004
சாங்கம் அது ஆகவே சந்தொடு சந்தனம்
தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில்
பாங்கு பட பனி நீரால் குழைத்து வைத்து
ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பொடே

மேல்

#1005
அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே
பொன் செய் விளக்கும் புகை தீபம் திசை-தொறும்
துன்பம் அகற்றி தொழுவோர் நினையும்-கால்
இன்புடனே வந்து எய்திடும் முத்தியே

மேல்

#1006
எய்தி வழிப்படில் எய்தாதன இல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வம் முன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே

மேல்

#1007
நண்ணும் பிற தாரம் நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத்தியம் அனுசந்தான
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம் என்னும்
மன்னும் மனம் பவனத்தொடு வைகுமே

மேல்

#1008
வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகு சிவயோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே

மேல்

#1009
அறிவரும் ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடி புலம்புகின்றார்கள்
நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில்
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே

மேல்

#1010
இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதயம்
மருள் அறியாமையும் மன்னும் அறிவு
மருள் இவை விட்டு அறியாமை மயக்கும்
மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே

மேல்

#1011
தான் அவன் ஆக அவனே தான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆக
போனவன் அன்பு இது நாலாம் மரபுற
தானவன் ஆகும் ஓர் ஆசித்த தேவரே

மேல்

#1012
ஓங்கார உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும்
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே

மேல்

#1013
நம அது ஆசனம் ஆன பசுவே
சிவம் அது சித்தி சிவமாம் பதியே
நம அற ஆதி நாடுவது அன்றாம்
சிவம் ஆகும் மாமோனம் சேர்தல் மெய்வீடே

மேல்

#1014
தெளிவரும் நாளில் சிவ அமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அ பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே

மேல்

#1015
நவகுண்டம் ஆனவை நான் உரைசெய்யின்
நவகுண்டத்து உள் எழு நல் தீபம் தானும்
நவகுண்டத்து உள் எழு நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான் உரைப்பேனே

மேல்

#1016
உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்
நகைத்து எழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடும் முப்புரம் பார் அங்கியோடே
மிகைத்து எழு கண்டங்கள் மேல் அறியோமே

மேல்

#1017
மேல் அறிந்து உள்ளே வெளிசெய்த அ பொருள்
கால் அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பார் அறிந்து அண்டம் சிறகு அற நின்றது
நான் அறிந்து உள்ளே நாடி கொண்டேனே

மேல்

#1018
கொண்ட இ குண்டத்தின் உள் எழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பு எல்லாம்
இன்று சொல் நூலாய் எடுத்து உரைத்தேனே

மேல்

#1019
எடுத்த அ குண்டத்து இடம் பதினாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்து அனல் உள் எழ கண்டு கொள்வார்க்கே
கொதித்து எழும் வல்வினை கூடகிலாவே

மேல்

#1020
கூட முக்கூடத்தின் உள் எழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்கு எழ
நாடி கொள்வார்கட்கு நல் சுடர் தானே

மேல்

#1021
நல் சுடர் ஆகும் சிரம் முக வட்டம் ஆம்
கைச்சுடர் ஆகும் கருத்துற்ற கைகளில்
பை சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும்
நல் சுடராய் எழும் நல்லது என்றாளே

மேல்

#1022
நல்லது என்றாளே நமக்குற்ற நாயகம்
சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம்
மெல்ல நின்றாளை வினவகில்லாதவர்
கல் அதன் தாளையும் கற்றும் வின்னாளே

மேல்

#1023
வின்னா இளம்பிறை மேவிய குண்டத்து
சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே

மேல்

#1024
இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக
நடம் கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்கு
சகம் கொண்ட கை இரண்டாறும் தழைப்ப
முகம் கொண்ட செஞ்சுடர் முக்கணனார்க்கே

மேல்

#1025
முக்கணன் தானே முழு சுடர் ஆயவன்
அ கணன் தானே அகிலமும் உண்டவன்
தி கணன் ஆகி திகை எட்டும் கண்டவன்
எ கணன் தானுக்கும் எந்தை பிரானே

மேல்

#1026
எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்
தந்தை-தன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்து அங்கு இருத்தலான்
மைந்தன் இவன் என்று மாட்டி கொள்ளீரே

மேல்

#1027
மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள்
ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ
நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே

மேல்

#1028
நல் ஒளியாக நடந்து உலகு எங்கும்
கல் ஒளியாக கலந்து உள் இருந்திடும்
சொல் ஒளியாக தொடர்ந்த உயிர்க்கு எலாம்
கல் ஒளி கண்ணுளும் ஆகி நின்றானே

மேல்

#1029
நின்ற இ குண்டம் நிலை ஆறுகோணமாய்
பண்டையில் வட்டம் பதைத்து எழும் ஆறாறும்
கொண்ட இ தத்துவம் உள்ளே கலந்து எழ
விண்ணுளும் என்ன எடுக்கலும் ஆமே

மேல்

#1030
எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தை
கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாக
படித்து எண்ணும் நா எழு கொம்பு ஒரு நாலும்
அடுத்து எழு கண்ணானது அந்தம் இலாற்கே

மேல்

#1031
அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை
அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை
அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை
அந்தம் இல்லானை அறிந்து கொள் பத்தே

மேல்

#1032
பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்த மெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி-பாலே

மேல்

#1033
பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சு
கால் பதி பத்து முகம் பார்த்து கண்களும்
பூ பதி பாதம் இரண்டு சுடர் முடி
நாற்பது சோத்திரம் நல் இருபத்தஞ்சே

மேல்

#1034
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியை கூடுதல் முத்தியே

மேல்

#1035
முத்தி நல் சோதி முழு சுடர் ஆயவன்
கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்று அற நாடி பரந்து ஒளி ஊடு போய்
செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே

மேல்

#1036
சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இ குண்டமும்
ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்த ஐம்பூதமும் பார்க்கின்ற வன்னியை
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே

மேல்

#1037
மெய் கண்டமாம் விரி நீர் உலகு ஏழையும்
உய் கண்டம் செய்த ஒருவனை சேரு-மின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய் கண்டம் இல்லா பொருள் கலந்தாரே

மேல்

#1038
கலந்து இரு பாதம் இரு கரம் ஆகும்
மலர்ந்து இரு குண்ட மகாரத்து ஓர் மூக்கு
மலர்ந்து எழு செம் முகம் மற்றை கண் நெற்றி
உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே

மேல்

#1039
உத்தமன் சோதி உளன் ஒரு பாலனாய்
மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும்
பச்சி மதிக்கும் பரந்து குழிந்தன
சத்திமான் ஆக தழைத்த கொடியே

மேல்

#1040
கொடி ஆறு சென்று குலாவிய குண்டம்
அடி இரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படி ஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதனம் ஆமே

மேல்

#1041
மாதனம் ஆக வளர்கின்ற வன்னியை
சாதனம் ஆக சமைந்த குரு என்று
போதனம் ஆக பொருந்த உலகு ஆளும்
பாதனம் ஆக பரிந்தது பார்த்தே

மேல்

#1042
பார்த்திடம் எங்கும் பரந்து எழு சோதியை
ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை
காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்து உடல் கோடி உகம் கண்டவாறே

மேல்

#1043
உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகம் கண்ட யோகி உள்நாடி எழுப்பும்
பயம் கண்டு கொண்ட இ பாய் கரு ஒப்ப
சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே

மேல்

#1044
சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளை ஆறு பூநிலை
போதனை போது ஐஞ்சு பொய் கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே

மேல்

#1045
மா மாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில்
தாம் ஆன மந்திரம் சத்தி-தன் மூர்த்திகள்
ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே

மேல்

#1046
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துர
பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி
இருள் புரை ஈசி மனோன்மணி என்ன
வரு பலவாய் நிற்கும் மா மாது தானே

மேல்

#1047
தானா அமைந்த அ முப்புரம் தன்னிடை
தான் ஆன மூ உரு ஓர் உரு தன்மையள்
தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே

மேல்

#1048
நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அ போதம் தந்து ஆளுமே

மேல்

#1049
தாள் அணி நூபுரம் செம்பட்டு தான் உடை
வார் அணி கொங்கை மலர் கன்னல் வாளி வில்
ஏர் அணி அங்குச பாசம் எழில் முடி
கார் அணி மா மணி குண்டலகாதிக்கே

மேல்

#1050
குண்டலகாதி கொலை வில் புருவத்தாள்
கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர் முடி மா மதி
சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே

மேல்

#1051
நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றல் இல் மோகினி மா திரு குஞ்சிகை
நன்று அறி கண்டிகை நாற்கால் கரீடணி
துன்றிய நல் சுத்த தாமரை சுத்தையே

மேல்

#1052
சுத்த அம் பார தனத்தி சுகோதயள்
வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை
அத்தகை யாவும் அணோரணி தானுமாய்
வைத்த அ கோல மதி அவள் ஆகுமே

மேல்

#1053
அவளை அறியா அமரரும் இல்லை
அவள் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை
அவள் அன்றி ஊர் புகுமாறு அறியேனே

மேல்

#1054
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அரு உருவாம் அவள் என்பர்
அறிவார் கருமம் அவள் இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத்தானே

மேல்

#1055
தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மாதேவி
ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர் காவலன்
வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம்
கோன் எங்கும் நின்ற குறி பல பாரே

மேல்

#1056
பராசத்தி மா சத்தி பல வகையாலும்
தரா சத்தியாய் நின்ற தன்மை உணராய்
உரா சத்தி ஊழிகள்-தோறும் உடனே
புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே

மேல்

#1057
போகம் செய் சத்தி புரி குழலாளொடும்
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்-தொறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே

மேல்

#1058
கொம்பு அனையாளை குவி முலை மங்கையை
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியை
செம்பவள திருமேனி சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே

மேல்

#1059
வைத்த பொருளும் மருவு உயிர் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரை
சித்த கரண செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தை தலை அவள் ஆமே

மேல்

#1060
தலைவி தட முலை மேல் நின்ற தையல்
தொலைவில் தவம் செயும் தூய் நெறி தோகை
கலை பல வென்றிடும் கன்னி என் உள்ளம்
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே

மேல்

#1061
நின்றவள் நேரிழை நீள் கலையோடுற
என்றன் அகம் படிந்து ஏழ் உலகும் தொழ
மன்றது ஒன்றி மனோன்மணி மங்கலி
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே

மேல்

#1062
ஒத்து அடங்கும் கமலத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி
சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே

மேல்

#1063
உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி
மணம் கமழ் பூங்குழலாள் மங்கையும் தானும்
புணர்ந்து உடனே நிற்கும் போதரும்-காலை
கணிந்து எழுவார்க்கு கதி அளிப்பாளே

மேல்

#1064
அளி ஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி
தெளியுறு வித்து சிவகதி காட்டி
ஒளியுற வைத்து என்னை உய்ய உண்டாளே

மேல்

#1065
உண்டு இல்லை என்றது உரு செய்து நின்றது
வண்டு இல்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டலம் மூன்றுற மன்னி நின்றாளே

மேல்

#1066
நின்றாள் அவன்-தன் உடலும் உயிருமாய்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடு அங்கையாளே

மேல்

#1067
ஏடு அங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடு-மின் சென்னி வாய் தோத்திரம் சொல்லுமே

மேல்

#1068
தோத்திரம் செய்து தொழுது துணை அடி
வாய்த்திட ஏத்தி வழிபடுமாறு இரும்பு
ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு
ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகுமாம் ஆதிக்கே

மேல்

#1069
ஆதி விதம் மிக தண் தந்த மால் தங்கை
நீதி மலரின் மேல் நேரிழை நாமத்தை
பாதியில் வைத்து பல்-கால் பயில்விரேல்
சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே

மேல்

#1070
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேத ஆதி நூலின் விளங்கும் பராபரை
ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்ல அருளாலே

மேல்

#1071
அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள் பெற்ற சிந்தை புவனாபதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே

மேல்

#1072
ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை
ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே

மேல்

#1073
ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரை பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே

மேல்

#1074
தானே தலைவி என நின்ற தற்பரை
தானே உயிர் வித்து தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும் நல் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே

மேல்

#1075
பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்து
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே

மேல்

#1076
அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாக
சிந்தை கமலத்து எழுகின்ற மா சத்தி
அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே

மேல்

#1077
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழி சாரார் சதிர்பெற
போகும் திரிபுரை புண்ணியத்தோரே

மேல்

#1078
புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ் மதி
பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு
திண்ணிய சிந்தை-தன் தென்னனும் ஆமே

மேல்

#1079
தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங்கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரி பிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே

மேல்

#1080
ஓதிய நந்தி உணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்தெழு நாள் புணர் மதி
சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே

மேல்

#1081
சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலு அம் கரம் உள நாகபாச அங்குசம்
மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு
மேல் அங்கமாய் நின்ற மெல்லியலாளே

மேல்

#1082
மெல்லியல் வஞ்சி விடமி கலை ஞானி
சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை
கல் இயல் ஒப்பது காணும் திருமேனி
பல் இயல் ஆடையும் பல் மணி தானே

மேல்

#1083
பல் மணி சந்திர கோடி திருமுடி
சொல் மணி குண்டல காதி உழை கண்ணி
நல் மணி சூரிய சோம நயனத்தாள்
பொன் மணி வன்னியும் பூரிக்கின்றாளே

மேல்

#1084
பூரித்த பூ இதழ் எட்டினுக்கு உள்ளே ஓர்
ஆரியத்தாள் உண்டு அங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்துநால்வரும்
சாரித்து சத்தியை தாங்கள் கண்டாரே

மேல்

#1085
கண்ட சிலம்பு வளை சங்கு சக்கரம்
எண் திசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொடு எண் திசை தாங்கும் அருட்செல்வி
புண்டரிகத்தினுள் பூசனையாளே

மேல்

#1086
பூசனை கந்தம் புனை மலர் மா கோடி
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம் இலாத மணி மந்திர யோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே

மேல்

#1087
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன் போல தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவி நல் காரணி காணே

மேல்

#1088
காரணி மந்திரம் ஓதும் கமலத்து
பூரணகும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே

மேல்

#1089
அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம் உரைத்தானே

மேல்

#1090
உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடு முறை எண்ணி
பிரை சதம் எட்டும் முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம் செய்தானே

மேல்

#1091
தாம குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி
ஓம பெருஞ்சுடர் உள்ளெழு நுண் புகை
மேவித்து அமுதொடு மீண்டது காணே

மேல்

#1092
காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணு நம என்று பேசும் தலை மேலே
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி
பூணு நடு என்ற அந்தம் சிகையே

மேல்

#1093
சிகை நின்ற அந்த கவசம் கொண்டு ஆதி
பகை நின்ற அங்கத்தை பார் என்று மாறி
தொகை நின்ற நேத்திர முத்திரை சூலம்
வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே

மேல்

#1094
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறி
பொருத்தி அணிவிரல் சுட்டி பிடித்து
நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்தவிரல் இரண்டு உள் புக்கு பேசே

மேல்

#1095
பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை
கூசம் இலாத சகாரத்தை முன் கொண்டு
வாசி பிராணன் உபதேசம் ஆகைக்கு
கூசிய விந்து உடன் கொண்டு கூவே

மேல்

#1096
கூவிய சீவன் பிராணன் முதலாக
பாவிய ச-உடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்து நின்றாளே

மேல்

#1097
நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்து
சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே

மேல்

#1098
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நால் திசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர் பன்மை சோதி பராபரை
ஆற்றலொடாய் நிற்கும் ஆதி முதல்வியே

மேல்

#1099
ஆதி வயிரவி கன்னி துறை மன்னி
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம்
பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம்
ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே

மேல்

#1100
கோல குழலி குலாய புருவத்தள்
நீல குவளை மலர் அன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி
மேலை சிவத்தை வெளிப்படுத்தாளே

மேல்

#1101
வெளிப்படு வித்து விளை அறிவித்து
தெளி படுவித்து என் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்து கதிர்ப்படு சோதி
ஒளி படுவித்து என்னை உய்ய கொண்டாளே

மேல்

#1102
கொண்டனள் கோலம் கோடி அநேகங்கள்
கண்டனள் எண் எண் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே

மேல்

#1103
தையல் நல்லாளை தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையை
பைய நின்று ஏத்தி பணி-மின் பணிந்த பின்
வெய்ய பவம் இனி மேவகிலாவே

மேல்

#1104
வேய் அன தோளி விரை உறு மெல் மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடை முடி சூலினி சுந்தரி
ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே

மேல்

#1105
இனியது என் மூலை இருக்கும் குமரி
தனி ஒரு நாயகி தானே தலைவி
தனி படுவித்தனள் சார்வு படுத்து
நனி படுவித்து உள்ளம் நாடி நின்றாளே

மேல்

#1106
நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்து
கூடி இருந்த குமரி குலக்கன்னி
பாடக சீறடி பைம்பொன் சிலம்பு ஒலி
ஊடகம் மேவி உறங்குகின்றாளே

மேல்

#1107
உறங்கும் அளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கை கழுத்து ஆர புல்லி
பிறங்கு ஒளி தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல் ஐயா என்று உபாயம் செய்தாளே

மேல்

#1108
உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்து
சுவாவை விளக்கும் சுழி அகத்து உள்ளே
அவாவை அடக்கி வைத்து அஞ்சல் என்றாளே

மேல்

#1109
அம் சொல் மொழியாள் அருந்தவ பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீர் உடை சேயிழை
தஞ்சம் என்று எண்ணி தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே

மேல்

#1110
ஆருயிராயும் அருந்தவ பெண்பிள்ளை
கார் இயல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரி என் உள்ளம் குலாவி நின்றாளே

மேல்

#1111
குலாவிய கோல குமரி என் உள்ளம்
நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலை தலையாளே

மேல்

#1112
கலைத்தலை நெற்றி ஓர் கண் உடை கண்ணுள்
முலை தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலை தலை ஆய தெரிவினை நோக்கி
அலைத்த பூங்கொம்பினள் அங்கு இருந்தாளே

மேல்

#1113
இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லி
திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியின் ஆளே

மேல்

#1114
ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே

மேல்

#1115
இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நம சிவ என்னும்
அயன் தனை யோரும் பதம் அது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே

மேல்

#1116
பிதற்றி கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி அருளும் முதல்வி
கயல் திகழ் முக்கண்ணும் கம்பலை செவ்வாய்
முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே

மேல்

#1117
உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள்
பிள்ளை தடம் உள்ளே பேச பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயை
கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே

மேல்

#1118
கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னி அம் ஐவரை பெற்றனள் தூய்மொழி
பன்னிய நல் நூல் பகவரும் அங்கு உள
என்னே இ மாயை இருள் அது தானே

மேல்

#1119
இருள் அது சத்தி வெளியது எம் அண்ணல்
பொருள் அது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருள் அது சிந்தையை தெய்வம் என்று எண்ணில்
அருள் அது செய்யும் எம் ஆதி பிரானே

மேல்

#1120
ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதிபரா பரை மேல் உறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே

மேல்

#1121
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவம் ஆய் நிற்பள்
ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே

மேல்

#1122
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண் துறை
நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே

மேல்

#1123
வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவி
தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள்
எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனை காண அனாதியும் ஆமே

மேல்

#1124
ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே

மேல்

#1125
அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகல் இடத்து ஆதி பிரானை
அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே

மேல்

#1126
உணர்ந்து இலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர்-தங்கள்
கணங்களை தன் அருள்செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே

மேல்

#1127
கும்ப களிறு ஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணி முடி வண்ணனும்
இன்ப கலவி இனிது உறை தையலும்
அன்பில் கலவியுள்ளாய் ஒழிந்தாரே

மேல்

#1128
இன்ப கலவியில் இட்டு எழுகின்றது ஓர்
அன்பில் புக வல்லனாம் எங்கள் அப்பனும்
துன்ப குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பில் பராசத்தி என் அம்மை தானே

மேல்

#1129
என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கு அற்று
உன் அம்மை ஊழி தலைவனும் அங்கு உளன்
மன் அம்மை ஆகி மருவி உரைசெய்யும்
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே

மேல்

#1130
தார் மேல் உறைகின்ற தண் மலர் நான் முகன்
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள
பூ மேல் உறைகின்ற-போது அகம் வந்தனள்
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே

மேல்

#1131
ஆணையமாய் வரும் தாதுள் இருந்தவர்
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின்
பாழ் நயம் ஆய பரத்தை அறிந்த பின்
தாள் நயம் ஆய அனாதனன் தானே

மேல்

#1132
தானே எழுந்த இ தத்துவநாயகி
வான் நேர் எழுந்து மதியை விளக்கினள்
தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடம் உடை மன்று அறியீரே

மேல்

#1133
அறிவான மாயையும் ஐம்புல கூட்டத்து
அறிவான மங்கை அருள் அது சேரில்
பிறியா அறிவு அறிவார் உளம் பேணும்
நெறியாய சித்தம் நினைந்து இருந்தாளே

மேல்

#1134
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம் செய்யாமல் அருளுடன் தூங்க
பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே

மேல்

#1135
பாலனும் ஆகும் பராசத்தி தன்னொடு
மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட
மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்பட
சாலவுமாய் நின்ற தற்பரத்தாளே

மேல்

#1136
நின்ற பராசத்தி நீள் பரன்-தன்னொடு
நின்று அறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும்
நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிடும் தானே

மேல்

#1137
மரு ஒத்த மங்கையும் தானும் உடனே
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார்
கரு ஒத்து நின்று கலங்கின-போது
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே

மேல்

#1138
சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதி அதாம் வண்ணத்தாளே

மேல்

#1139
ஆறி இருந்த அமுத பயோதரி
மாறி இருந்த வழி அறிவார் இல்லை
தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன்
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே

மேல்

#1140
உடையவன் அங்கி உருத்திர சோதி
விடை அவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடை அது ஆகிய சாதகர் தாமே

மேல்

#1141
தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது
பார் மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள
பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார் மேல் உறைகின்ற பைந்தொடியாளே

மேல்

#1142
பைங்கொடியாளும் பரமன் இருந்திட
திண் கொடி ஆக திகழ் தரு சோதியாம்
விண் கொடி ஆகி விளங்கி வருதலால்
பெண் கொடி ஆக நடந்தது உலகே

மேல்

#1143
நடந்தது அ மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்
படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே
தொடர்ந்தது உள் வழி சோதி அடுத்தே

மேல்

#1144
அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத்தே செல
முடுக்கும் தாமரை முச்சதுரத்தே

மேல்

#1145
முச்சதுரத்தே எழுந்த முளை சுடர்
எ சதுரத்தும் இடம் பெற ஓடிட
கைச்சதுரத்து கடந்து உள் ஒளிபெற
எ சதுரத்தும் இருந்தனள் தானே

மேல்

#1146
இருந்தனள் தன் முகம் ஆறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை-தோறும்
குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோ முகம் அம்பே

மேல்

#1147
அம்பு அன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய
செம்பொன் செய் யாக்கை செறி கமழ் நாள்-தொறும்
நம்பனை நோக்கி நவிலுகின்றாளே

மேல்

#1148
நவிலும் பெரும் தெய்வம் நால்மறை சத்தி
துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம்
அகிலமும் அண்டம் முழுதும் செம்மாந்து
புகலும் முச்சோதி புனைய நிற்பாளே

மேல்

#1149
புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள்
வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி-தன்னை
புனைய வல்லாளையும் போற்றி என்பேனே

மேல்

#1150
போற்றி என்பேன் புவனாபதி அம்மை என்
ஆற்றல் உள் நிற்கும் அருந்தவ பெண்பிள்ளை
சீற்றம் கடிந்த திருநுதல் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கோள் பைந்தொடியே

மேல்

#1151
தொடி ஆர் தட கை சுகோதய சுந்தரி
வடிவு ஆர் திரிபுரையாம் மங்கை சங்கை
செடி ஆர் வினை கெட சேர்வரை என்று என்று
அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே

மேல்

#1152
மெல் இசை பாவை வியோமத்தின் மென் கொடி
பல் இசை பாவை பயன் தரு பைங்கொடி
புல் இசை பாவையை போக துரந்திட்டு
வல் இசை பாவை மனம் புகுந்தாளே

மேல்

#1153
தாவித்த அ பொருள் தான் அவன் எம் இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவி பராசத்தி மேலொடு கீழ் தொடர்ந்து
ஆவிக்கும் அ பொருள் தான் அது தானே

மேல்

#1154
அது இது என்பார் அவனை அறியார்
கதி வர நின்றது ஓர் காரணம் காணார்
மது விரி பூங்குழல் மா மங்கை நங்கை
திதம் அது உன்னார்கள் தேர்ந்து அறியாரே

மேல்

#1155
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
தான் இதழ் ஆனவை நாற்பத்துநால் உள
பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்
தான் இதழ் ஆகி தரித்திருந்தாளே

மேல்

#1156
தரித்திருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி
விரித்திருந்தாள் அவள் வேதப்பொருளை
குறித்திருந்தாள் அவள் கூறிய ஐந்து
மறித்திருந்தாள் அவள் மாது நல்லாளே

மேல்

#1157
மாது நல்லாளும் மணாளன் இருந்திட
பாதி நல்லாளும் பகவனும் ஆனது
சோதி நல்லாளை துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை ஆமே

மேல்

#1158
வெள்ளடையான் இரு மா மிகு மா மலர்
கள் அடையார் அ கமழ் குழலார் மனம்
அள் அடையானும் வகை திறமாய் நின்ற
பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே

மேல்

#1159
பெண் ஒரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற
பெண் உடை ஆணிடை பேச்சு அற்றவாறே

மேல்

#1160
பேச்சு அற்ற நல் பொருள் காணும் பெருந்தகை
மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம்
காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே

மேல்

#1161
ஆலிக்கும் கன்னி அரிவை மனோன்மணி
பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும்
வேலை தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே

மேல்

#1162
உகந்து நின்றான் நம்பி ஒண்ணுதல் கண்ணோடு
உகந்து நின்றான் நம்முழை புக நோக்கி
உகந்து நின்றான் இ உலகங்கள் எல்லாம்
உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே

மேல்

#1163
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி
புத்தக சீறடி பாவை புணர்வினை
தொத்த கருத்து அது சொல்லகிலேனே

மேல்

#1164
சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம்
சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள்
வெல்ல ஒண்ணாத வினை தனிநாயகி
மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே

மேல்

#1165
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரை தண் கடல் கண்ணே

மேல்

#1166
கண் உடையாளை கலந்து அங்கு இருந்தவர்
மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணா
பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர்
விண் உடையார்களை மேலுற கண்டே

மேல்

#1167
கண்டு எண் திசையும் கலந்து வரும் கன்னி
பண்டு எண் திசையும் பராசத்தியாய் நிற்கும்
விண்டு எண் திசையும் விரை மலர் கைக்கொண்டு
தொண்டு எண் திசையும் தொழ நின்ற கன்னியே

மேல்

#1168
கன்னி ஒளி என நின்ற இ சந்திரன்
மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி இருப்பிடம் சேர் பதினாறுடன்
பன்னி இருப்ப பராசத்தி ஆமே

மேல்

#1169
பராசத்தி என்றென்று பல் வகையாலும்
தரா சத்தி ஆன தலை பிரமாணி
இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும்
குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே

மேல்

#1170
உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி
உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன்
புணர்ந்து ஒரு காலத்து போகம் அது ஆதி
இணைந்து பரம் என்று இசைந்து இது தானே

மேல்

#1171
இது அ பெருந்தகை எம்பெருமானும்
பொது அ கல்வியும் போகமும் ஆகி
மதுவ குழலி மனோன்மணி மங்கை
அது அ கல்வியுள் ஆயுழி யோகமே

மேல்

#1172
யோக நல் சத்தி ஒளிபீடம் தான் ஆகும்
யோக நல் சத்தி ஒளிமுகம் தெற்கு ஆகும்
யோக நல் சத்தி உதரநடு ஆகும்
யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே

மேல்

#1173
தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற
வார்ந்து எழு மாயையும் மந்தமதாய் நிற்கும்
ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிட
கூர்ந்து எழுகின்றனள் கோல்வளைதானே

மேல்

#1174
தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை
தான் ஆன ஆறும் ஈரேழும் சமகலை
தான் ஆன விந்து சகமே பரம் எனும்
தான் ஆம் பரவாதனை என தக்கதே

மேல்

#1175
தக்க பராவித்தை தான் இருபானேழில்
தக்கு எழு ஓரும் திரம் சொல்ல சொல்லவே
மிக்கிடும் எண் சத்தி வெண் நிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொல் முத்திரையாளே

மேல்

#1176
முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ்ஞானத்தள்
தத்துவமாய் அல்லவாய சகலத்தள்
வைத்த பராபரனாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே

மேல்

#1177
கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பை குலாம் கன்னி
பொங்கிய குங்குமத்து ஒளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும் அகிலம் கனி
தங்கும் அவள் மனை தான் அறிவாயே

மேல்

#1178
வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிது உடை பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரசனுக்கு
தாயும் மகளும் தாரமும் ஆமே

மேல்

#1179
தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள்
காரண காரியம் ஆகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பார் அளவாம் திசை பத்து உடையாளே

மேல்

#1180
பத்து முகம் உடையாள் நம் பராசத்தி
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான் வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே

மேல்

#1181
கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறியளாய் உலகு ஏழும் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேருயிராளி பிறிவு அறுத்தாளே

மேல்

#1182
பிறிவு இன்றி நின்ற பெருந்தகை பேதை
குறி ஒன்றி நின்றிடும் கோமள கொம்பு
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே
அறிவு ஒன்ற நின்றனள் ஆருயிர் உள்ளே

மேல்

#1183
உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர்-தம்
கள்ளத்தை நீக்கி கலந்து உடனே புல்கி
கொள்ள தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டி புரிந்தே

மேல்

#1184
புரிந்து அருள்செய்கின்ற போகமா சத்தி
இருந்து அருள்செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே

மேல்

#1185
இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவி
திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி
நிரந்தரம் ஆகிய நிர்_அதிசயமொடு
பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே

மேல்

#1186
அது இது என்னும் அவாவினை நீக்கி
துதி அது செய்து சுழியுற நோக்கில்
விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும்
மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே

மேல்

#1187
மூன்று மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்று உள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மா மாயை
ஏன்றனள் ஏழிரண்டு இந்துவொடு ஈறே

மேல்

#1188
இந்துவின்-நின்று எழு நாதம் இரவி போல்
வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறு அது தானே

மேல்

#1189
ஈறு அது தான் முதல் எண்ணிரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோவசமாய் எழில்
தூறு அது செய்யும் சுகந்த சுழி அது
பேறு அது செய்து பிறந்திருந்தாளே

மேல்

#1190
இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாக
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணி
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே

மேல்

#1191
மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவி சடங்கு செய்தாரே

மேல்

#1192
சடங்கு அது செய்து தவம்புரிவார்கள்
கடம்-தனில் உள்ளே கருதுவராகில்
தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை-பாலே

மேல்

#1193
பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி
சீலத்தை நீக்க திகழ்ந்து எழு மந்திரம்
மூலத்து மேல் அது முத்து அது ஆமே

மேல்

#1194
முத்து வதனத்தி முகம்-தொறும் முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக்கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே

மேல்

#1195
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி
தாவிய நல் பத தண் மதியம் கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே

மேல்

#1196
உள் ஒளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள்
வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும்
கள் அவிழ் கோதை கலந்து உடனே நிற்கும்
கொள்ள விசுத்தி கொடி அமுதம் ஆமே

மேல்

#1197
கொடியது இரேகை குரு உள்ளிருப்ப
படியது வாருனை பைங்கழல் ஈசன்
வடிவு அது ஆனந்தம் வந்து முறையே
இடு முதல் ஆறங்கம் ஏந்திழையாளே

மேல்

#1198
ஏந்திழையாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலை முதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே

மேல்

#1199
சத்தி என்பாள் ஒரு சாதக பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியை பாழில் உகுத்த அப்பாவிகள்
கத்திய நாய் போல் கதறுகின்றாரே

மேல்

#1200
ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்கு
கார் ஏர் குழலி கமல மலர் அன்ன
சீர் ஏயும் சேவடி சிந்தைவைத்தாளே

மேல்

#1201
சிந்தையில்வைத்து சிராதியிலே வைத்து
முந்தையில் வைத்து தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவு-அதிலே வைத்து
சந்தையில் வைத்து சமாதி செய்வீரே

மேல்

#1202
சமாதி செய்வார்கட்கு தான் முதல் ஆகி
சிவாதியில் ஆரும் சிலைநுதலாளை
நவாதியில் ஆக நயந்து அது ஓதில்
உவாதி அவளுக்கு உறைவிலது ஆமே

மேல்

#1203
உறைபதி-தோறும் முறைமுறை மேவி
நறை கமழ் கோதையை நாள்-தொறும் நண்ணி
மறையுடனே நிற்கும் மற்று உள்ள நான்கும்
இறை தினை போதினில் எய்திடல் ஆமே

மேல்

#1204
எய்திடல் ஆகும் இருவினையின் பயன்
கொய் தளிர் மேனி குமரி குலாம் கன்னி
மை தவழ் கண்ணி நல் மாதுரி கையொடு
கை தவம் இன்றி கருத்துறும்வாறே

மேல்

#1205
கருத்துறும் காலம் கருதும் மனமும்
திருத்தி இருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண் மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே

மேல்

#1206
ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என
ஓம என்று ஓதி எம் உள்ளொளியாய் நிற்கும்
தாம நறும் குழல் தையலை கண்ட பின்
சோம நறு மலர் சூடி நின்றாளே

மேல்

#1207
சூடிடும் அங்குச பாச துளை வழி
கூடும் இரு வளை கோலக்கை குண்டிகை
நாடும் இருபத நல் நெடு ருத்திரம்
ஆடிடும் சீர் புனை ஆடகம் ஆமே

மேல்

#1208
ஆம் அயன் மலரான் ஈசன் சதாசிவன்
தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம்
காமனும் சாமன் இரவி கனல் உடன்
சோமனும் வந்து அடி சூட நின்றாளே

மேல்

#1209
சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளம் கொடி நின் மலி நேரிழை
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று
ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே

மேல்

#1210
அண்டம் முதலாய் அவனி பரியந்தம்
கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்ட அதனாலே

மேல்

#1211
ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம்
சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும்
கோலி வந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே

மேல்

#1212
மேலாம் அருந்தவம் மேல் மேலும் வந்து எய்த
காலால் வருந்தி கழிவர் கணத்திடை
நாலாம் நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன்
மேலாம் எழுத்தினள் ஆமத்தினாளே

மேல்

#1213
ஆமத்து இனிது இருந்த அன்ன மயத்தினள்
ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம நமசிவ என்று இருப்பார்க்கு
நேம துணைவி நிலாவி நின்றாளே

மேல்

#1214
நிலாமயம் ஆகிய நீள் படிகத்தின்
சிலாமயம் ஆகும் செழும் தரளத்தின்
சுலாமயம் ஆகும் சுரி குழல் கோதை
கலாமயம் ஆக கலந்து நின்றாளே

மேல்

#1215
கலந்து நின்றாள் கன்னி காதலனோடும்
கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம்
கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம்
கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே

மேல்

#1216
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் அது ஆமே

மேல்

#1217
பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண் புயம்
மோக முகம் ஐந்து முக்கண் முகம்-தொறும்
நாகம் உரித்து நடம்செய்யும் நாதர்க்கே

மேல்

#1218
நாதனும் நாலொன்பதின்மரும் கூடி நின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை
வேதனும் ஈரொன்பதின்மரும் மேவி நின்று
ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே

மேல்

#1219
ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள்
ஆகி நின்றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே

மேல்

#1220
ஆயிழையாளொடும் ஆதி பரம் இடம்
ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள
ஆய மனம்-தொறும் அறுமுகம் அவை தனில்
ஏய வார் குழலி இனிது நின்றாளே

மேல்

#1221
நின்றனள் நேரிழையோடுடன் நேர்பட
இன்று என் அகம்படி ஏழும் உயிர்ப்பு எய்தும்
துன்றிய ஓர் ஒன்பதின்மரும் சூழலுள்
ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே

மேல்

#1222
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும்
குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடி
கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே

மேல்

#1223
ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும்
மா மது மண்டலம் மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிட
கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே

மேல்

#1224
ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி
ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும்
ஆகும் பராபரையோடு அ பரையவள்
ஆகும் அவள் ஐங்கருமத்தள் தானே

மேல்

#1225
தான் நிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயம் உடையார் அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து
ஆனாம் பரசிவம் மேலது தானே

மேல்

#1226
தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை ஓம் எனும் அ உயிர் மார்க்கமே

மேல்

#1227
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியவள் ஆகும்
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே

மேல்

#1228
நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்கு
பின் அறிவு ஆகும் பிரான் அறி அ தடம்
செந்நெறி ஆகும் சிவகதி சேர்வார்க்கு
தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே

மேல்

#1229
சன்மார்க்கம் ஆக சமைதரு மார்க்கமும்
துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்க தேவரும் நல்நெறி ஆவதும்
சன்மார்க்க தேவியும் சத்தி என்பாளே

மேல்

#1230
சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை
அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்த-கால்
மத்தில் ஏற வழி அதுவாமே

மேல்

#1231
அது இது என்ற அவமே கழியாதே
மது விரி பூங்குழல் மங்கை நல்லாளை
பதி மது மேவி பணிய வல்லார்க்கு
விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே

மேல்

#1232
வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும்
வென்றிடல் ஆகும் வினை பெரும் பாசத்தை
வென்றிடல் ஆகும் விழை புலன்-தன்னையும்
வென்றிடு மங்கை-தன் மெய் உணர்வோர்க்கே

மேல்

#1233
ஓர் ஐம்பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம்பரியத்து வந்த பரம் இது
மாரன் குழலாளும் அ பதி தானும் முன்
சாரும் பதம் இது சத்தியம் ஆமே

மேல்

#1234
சத்தியினோடு சயம்புவும் நேர்படில்
வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும்
சித்தது மேவி திருந்திடுவாரே

மேல்

#1235
திருந்து சிவனும் சிலைநுதலாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த
அருந்திட அ இடம் ஆரமுது ஆக
இருந்தனள் தான் அங்கு இளம்பிறை என்றே

மேல்

#1236
என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு
மன் தரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதி நின்றாளே

மேல்

#1237
நின்றனள் நேரிழையாளொடு நேர்பட
ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே

மேல்

#1238
தோன்றிடும் வேண்டுரு ஆகிய தூய் நெறி
ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல் கலை
மான் தரு கண்ணியும் மாரனும் வந்து எதிர்
சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே

மேல்

#1239
ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம் அதா நெறி ஆகி நின்றாளே

மேல்

#1240
நெறி அதுவாய் நின்ற நேரிழையாளை
பிறிவது செய்யாது பிஞ்ஞகனோடும்
குறியது கூடி குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே

மேல்

#1241
ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிட
தேம் மயன் நாளும் தெனாதென என்றிடும்
மா மயம் ஆனது வந்து எய்தலாமே

மேல்

#1242
வந்து அடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்திசையோர்களும்
கொந்து அணியும் குழலாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழி நவில்வீரே

மேல்

#1243
நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்து எரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவி கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே

மேல்

#1244
தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு_இலி
பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்ப பராசத்தி போற்றே

மேல்

#1245
பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர்
அற்கொடி மாது உமை ஆர்வ தலைமகள்
நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை
வில் கொடி மாதை விரும்பி விளங்கே

மேல்

#1246
விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கு இருள் நீங்க
களம் கொள் மணியுடன் காம வினோதம்
உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே

மேல்

#1247
தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை
விடம் கொள் பெரும் சடை மேல் வரு கங்கை
ஒடுங்கி உமையொடும் ஓர் உரு ஆமே

மேல்

#1248
உருவம் பல உயிராய் வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில்
புரிவளைக்கைச்சி எம் பொன் அணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே

மேல்

#1249
மாயம் புணர்க்கும் வளர்சடையான் அடி
தாயம் புணர்க்கும் சலநதி அமலனை
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி
ஆயம் புணர்க்கும் அ யோனியும் ஆமே

மேல்

#1250
உணர்ந்து ஒழிந்தேன் அவனாம் எங்கள் ஈசனை
புணர்ந்து ஒழிந்தேன் புவனாபதியாரை
அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதி-தன் பாதம்
பிணைந்து ஒழிந்தேன் தன் அருள்பெற்றவாறே

மேல்

#1251
பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்து அறிவார்கட்கு
பொன் தாள் உலகம் புகல் தனியாமே

மேல்

#1252
தனிநாயகன்-தனோடு என் நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர்
பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி
கனியாய் நினைவது என் காரணம் அம்மையே

மேல்

#1253
அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும்
இ மனை செய்த இ நில மங்கையும்
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே

மேல்

#1254
அம்மையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை
அம்மையோடு அத்தனும் யானும் உடன் இருந்து
அம்மையொடு அத்தனை யான் புரிந்தேனே

மேல்

#1255
ஏரொளி உள் எழு தாமரை நால் இதழ்
ஏரொளி விந்துவினால் எழு நாதம் ஆம்
ஏரொளி அ கலை எங்கும் நிறைந்த பின்
ஏரொளி சக்கரம் அ நடு வன்னியே

மேல்

#1256
வன்னி எழுத்து அவை மா பலம் உள்ளன
வன்னி எழுத்து அவை வானுற ஓங்கின
வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம்
வன்னி எழுத்து இடுவார் அது சொல்லுமே

மேல்

#1257
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அ பதி அ எழுத்து ஆவன
சொல்லிடு நூறொடு நாற்பத்துநால் உரு
சொல்லிடும் சக்கரமாய் வரும் மேல் அதே

மேல்

#1258
மேல் வரும் விந்துவும் அ எழுத்தாய் விடும்
மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல் வரும் அ பதி அ எழுத்தே வரின்
மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே

மேல்

#1259
ஞாலம் அதுவாக விரிந்தது சக்கரம்
ஞாலம் அதுவாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம் அதுவாயிடும் அ பதி யோசனை
ஞாலம் அதுவாக விரிந்தது எழுத்தே

மேல்

#1260
விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்து அது சக்கரமாக
விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே

மேல்

#1261
அப்பு அதுவாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அ அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே

மேல்

#1262
ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்து அவை
ஆகாச அ எழுத்து ஆகி சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறி-மினே

மேல்

#1263
அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அ எழுத்து அ பதியோர்க்கும்
அறிந்திடும் அ பகலோன் நிலையாமே

மேல்

#1264
அ முதல் ஆறும் அ ஆதி எழுத்து ஆகும்
அ முதல் ஆறும் அ அம்மை எழுத்து ஆகும்
இ முதல் நாலும் இருந்திடும் வன்னியே
இ முதல் ஆகும் எழுத்து அவை எல்லாம்

மேல்

#1265
எழுத்து அவை நூறொடு நாற்பத்துநாலும்
எழுத்து அவை ஆறு அது அ நடு வன்னி
எழுத்து அவை அ நடு அ சுடர் ஆகி
எழுத்து அவைதான் முதல் அந்தமும் ஆமே

மேல்

#1266
அந்தமும் ஈறு முதலா நவை அற
அந்தமும் அ பதினெட்டுடன் ஆதலால்
அந்தமும் அ பதின்மூன்றில் அமர்ந்த பின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே

மேல்

#1267
ஆவினம் ஆனவை முந்நூற்றறுபது
ஆவினம் அ பதினைந்து இனமாயுறும்
ஆவினம் அ பதினெட்டுடனாயுறும்
அவினம் அ கதிரோன் வர வந்தே

மேல்

#1268
வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பது இராசியும்
வந்திடும் நாள் அது முந்நூற்றறுபதும்
வந்திடும் ஆண்டு வகுத்து உரை அவ்வியே

மேல்

#1269
அவ்வினம் மூன்றும் அ ஆடு அதுவாய் வரும்
எவ்வினம் மூன்றும் கிளர் தரு ஏரதாம்
சவ்வினம் மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இ இனம் மூன்றும் இராசிகள் எல்லாம்

மேல்

#1270
இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின்
இராசியுள் சக்கரம் என்று அறி விந்துவாம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்த பின்
இராசியுள் சக்கரம் நின்றிடுமாறே

மேல்

#1271
நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து எல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அ பதி அ எழுத்தே வரில்
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே

மேல்

#1272
தாரகை ஆக சமைந்தது சக்கரம்
தாரகை மேல் ஓர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நல் பகலோன் வர
தாரகை தாரகை தாரகை கண்டதே

மேல்

#1273
கண்டிடும் சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திட
கண்டிடும் வன்னி கொழுந்து அன ஒத்த பின்
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே

மேல்

#1274
கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும்
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே

மேல்

#1275
நின்றது அண்டமும் நீளும் புவி எலாம்
நின்ற இ அண்டம் நிலைபெற கண்டிட
நின்ற இ அண்டமும் மூல மலம் ஒக்கும்
நின்ற இ அண்டம் பலமது விந்துவே

மேல்

#1276
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரை அதாம்
விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே

மேல்

#1277
வீசம் இரண்டு உள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடும் மேலுற
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்த பின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே

மேல்

#1278
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில்
விரிந்தது உள் கட்டம் எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது ஆமே

மேல்

#1279
விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்த இ ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தாளே

மேல்

#1280
விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக
விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும்
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே

மேல்

#1281
மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரிவட்டம் ஆம்
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை
பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே

மேல்

#1282
உன்னிட்ட வட்டத்தில் ஒத்து எழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை
தன்னிட்டு எழுந்த தகைப்பு அற பின் நிற்க
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே

மேல்

#1283
பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் தடம் எங்கும்
நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்ற நுண்பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே

மேல்

#1284
அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேல் எழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே

மேல்

#1285
கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம்
மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்து எழு மாரணம்
ஆறு இயல்பாக மதித்து கொள்வார்க்கே

மேல்

#1286
மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும்
மதித்து அங்கு எழுந்தவை காரணமாகில்
கொதித்து அங்கு எழுந்தவை கூடகிலாவே

மேல்

#1287
கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடு இயல்பாக அமைந்து செறிந்திடும்
பாடி உள் ஆக பகைவரும் வந்துறார்
தேடி உள் ஆக தெளிந்து கொள்வார்க்கே

மேல்

#1288
தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளிந்த அகாரத்தை அ நடு ஆக்கி
குளிர்ந்த வரனை கூடி உள் வைத்து
வளிந்து அவை அங்கு எழு நாடிய-காலே

மேல்

#1289
கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம்
ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய்
பாலித்து எழுந்து பகை அற நின்ற பின்
மாலுற்ற மந்திரம் மாறி கொள்வார்க்கே

மேல்

#1290
கொண்ட இ மந்திரம் கூத்தன் எழுத்ததாய்
பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின்
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நம எனே

மேல்

#1291
அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்த அ சத்தம் இ மேல் இவை குற்றம்
அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக
அறிந்து வலம் அது ஆக நடவே

மேல்

#1292
நடந்து வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனை கண் அது போக்கி
தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது
படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே

மேல்

#1293
ஆ மேவ பூண்டு அருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டு அங்கு
ஆமே தமருகம் பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே

மேல்

#1294
கை அவை ஆறும் கருத்துற நோக்கிடும்
மெய் அது செம்மை விளங்கு வயிரவன்
துய்யர் உளத்தில் துளங்கு மெய்யுற்றதாய்
பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே

மேல்

#1295
பூசனை செய்ய பொருந்தி ஓர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆடுமால்
பூசனை சாந்து சவாது புழுகு நெய்
பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே

மேல்

#1296
வேண்டியவாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்ற பின்
வேண்டியவாறு வரும் வழி நீ நட
வேண்டியவாறு அதுவாகும் கருத்தே

மேல்

#1297
சாம்பவி மண்டல சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாம்
காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும்
நாம் பதம் கண்ட பின் நாடறிந்தோமே

மேல்

#1298
நாடு அறி மண்டலம் நல்ல இ குண்டத்து
கோடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி
பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி
ஏடு அற நாலைந்து இடவகை ஆமே

மேல்

#1299
நாலைந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம்
நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கமாய்
நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே

மேல்

#1300
ஆறிருபத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும்
வேறு உருவாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாயநம என்று
கூறு-மின் கூறில் குறைகளும் இல்லையே

மேல்

#1301
குறைவதும் இல்லை குரை கழல் கூடும்
அறைவதும் ஆரணம் அ எழுத்து ஆகி
திறம் அது ஆக தெளிய வல்லார்க்கு
இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே

மேல்

#1302
காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆக
காணும் கனகமும் காரிகை ஆமே

மேல்

#1303
ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆக
போமே அது தானும் போம் வழியே போனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே

மேல்

#1304
பகை இல்லை என்றும் பணிந்தவர்-தம்பால்
நகை இல்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும்
வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை
தகை இல்லை தானும் சலம் அது ஆமே

மேல்

#1305
ஆரும் உரைசெய்யலாம் அஞ்சு எழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம்
பாரும் விசும்பும் பகலும் அதி அதி
ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே

மேல்

#1306
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும்
குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடி
கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே

மேல்

#1307
ககராதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை
அகராதி ஓர் ஆறு அரத்தமே போலும்
சகராதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை
ககராதி மூவித்தை காமிய முத்தியே

மேல்

#1308
ஓரில் இதுவே உரையும் இ தெய்வத்தை
தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள்
வாரி திரிகோணம் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயம் தானே

மேல்

#1309
ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தியாக சிவகுரு
யோகம் பராசத்தி உண்மை எட்டு ஆமே

மேல்

#1310
எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்து
கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது
ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே

மேல்

#1311
ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி
ஓதி குருவின் உபதேசம் கொண்டு
நீ தங்கும் அங்க நியாசம்-தனை பண்ணி
சாதம் கெட செம்பில் சட்கோணம் தான் இடே

மேல்

#1312
சட்கோணம்-தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு
அக்கோணம் மாறின் தலையில் ரீங்காரமிட்டு
எக்கோணமும் சூழ எழில்வட்டம் இட்டு பின்
மிக்கு ஈரெட்டு அக்கரம் அ முதல் மேல் இடே

மேல்

#1313
இட்ட இதழ்கள் இடை அந்தரத்திலே
அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டு
கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம்
இட்டு வாமத்து ஆங்கு கிரோங்கு என்று மேவிடே

மேல்

#1314
மேவிய சக்கரம் மீது வலத்திலே
கோவை அடையவே குரோம் சிரோம் என்று இட்டு
தாவு இல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவை புவனாபதியை பின் பூசியே

மேல்

#1315
பூசிக்கும் போது புவனாபதி-தன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணி
பேசிய பிராண பிரதிட்டை அது செய்து
தேசுற்றிடவே தியானம் அது செய்யே

மேல்

#1316
செய்ய திருமேனி செம்பட்டு உடை தானும்
கையில் படை அங்குச பாசத்தோடு அபய
மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி
துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே

மேல்

#1317
தோல் போர்வை நீக்கி துதித்து அடைவில் பூசித்து
பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி
நால் பால நாரதாய சுவாகா என்று
சீர் பாக சேடத்தை மாற்றி பின் சேவியே

மேல்

#1318
சேவிப்பதன் முன்னே தேவியையும் உத்வாகனத்தால்
பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு
யாவருக்கும் எட்டா இயந்திரராசனை
நீ வைத்து சேமி நினைந்தது தருமே

மேல்

#1319
நவாக்கரி சக்கரம் நான் உரைசெய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி ஆக
நவாக்கரி எண்பத்தொரு வகை ஆக
நவாக்கரி அ கிலீ சௌ முதல் ஈறே

மேல்

#1320
சௌ முதல் ஔவொடு ஹௌவுடனாம் கிரீம்
கௌவுளும் ஐயுளும் கலந்து இரீம் சிரீம் என்று
ஒவ்வில் எழும் கிலீம் மந்திர பாதமா
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னே

மேல்

#1321
நவாக்கரியாவது நான் அறி வித்தை
நவாக்கரி உள் எழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலம் தரும் தானே

மேல்

#1322
நலம்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடி
சிரம்தரு தீவினை செய்வது அகற்றி
வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே

மேல்

#1323
கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே

மேல்

#1324
நினைத்திடும் அ சிரீம் அ கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறும்
நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர்தருவாளே

மேல்

#1325
நேர்தரும் அ திருநாயகி ஆனவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே

மேல்

#1326
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய் கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே

மேல்

#1327
அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே

மேல்

#1328
அறிந்திடுவார்கள் அமரர்களாக
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய் புனல் சூடி
முரிந்திடுவானை முயன்றிடு நீரே

மேல்

#1329
நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பார் அணியும் ஹிரீம் முன் ஸ்ரீம் ஈறாம்
தார் அணியும் புகழ் தையல் நல்லாள்-தனை
கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே

மேல்

#1330
கண்டும் கொள்ளும் தனிநாயகி-தன்னையும்
மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும்
பண்டு கொளும் மரம் ஆய பரஞ்சுடர்
நின்று கொளும் நிலை பேறுடையாளே

மேல்

#1331
பேறுடையாள்-தன் பெருமையை எண்ணிடில்
நாடு உடையார்களும் நம்வசம் ஆகுவர்
மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை
கூறு உடையாளையும் கூறு-மின் நீரே

மேல்

#1332
கூறு-மின் எட்டு திசைக்கும் தலைவியை
ஆறு-மின் அண்டத்து அமரர்கள் வாழ்வு என
மாறு-மின் வையம் வரும் வழி தன்னையும்
தேறு-மின் நாயகி சேவடி சேர்ந்தே

மேல்

#1333
சேவடி சேர செறிய இருந்தவர்
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர்
பூ அடி இட்டு பொலிய இருந்தவர்
மா அடி காணும் வகை அறிவாரே

மேல்

#1334
ஐ முதலாக வளர்ந்து எழு சக்கரம்
ஐ முதலாக அமர்ந்து இரீம் ஈறு ஆகும்
அ முதலாகி அவர்க்கு உடையாள்-தனை
மை முதலாக வழுத்திடு நீயே

மேல்

#1335
வழுத்திடும் நாவுக்கு அரசி இவள் தன்னை
பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம்
தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை
முகத்துளும் முன் எழ கண்டு கொள்ளீரே

மேல்

#1336
கண்ட இ சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்ட இ மந்திரம் கூத்தன் குறி அதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே

மேல்

#1337
மெல்லியல் ஆகிய மெய்ப்பொருளாள்-தனை
சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல் இயல் ஆக பரந்து எழு நாள் பல
நல் இயல்பாலே நடந்திடும் தானே

மேல்

#1338
நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொல் பொருள் தானும்
கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆக
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே

மேல்

#1339
பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா
நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு
மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம்
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே

மேல்

#1340
வணங்கிடும் தத்துவநாயகி-தன்னை
நலங்கிடு நல் உயிர் ஆனவை எல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினைதானே

மேல்

#1341
தானே கழறி தணியவும் வல்லனாய்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்
தானே தனிநடம் கண்டவள் தன்னையும்
தானே வணங்கி தலைவனும் ஆமே

மேல்

#1342
ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்ற அ தையலும்
ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே

மேல்

#1343
புண்ணியன் ஆகி பொருந்தி உலகு எங்கும்
கண்ணியன் ஆகி கலந்து அங்கு இருந்திடும்
தண்ணியன் ஆகி தரணி முழுதுக்கும்
அண்ணியன் ஆகி அமர்ந்திருந்தானே

மேல்

#1344
தான் அது கம்இரீம் கௌ அது ஈறாம்
நானது சக்கரம் நன்று அறிவார்க்கு எலாம்
கானது கன்னி கலந்த பராசத்தி
கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே

மேல்

#1345
ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இ சிந்தையில் காரணம் காட்டி
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள்வார்க்கே

மேல்

#1346
அறிந்திடும் சக்கரம் அருச்சனையோடே
எறிந்திடும் வையத்து இடர் அவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே

மேல்

#1347
புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம்
குகை இல்லை கொல்வது இலாமையினாலே
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம்
சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே

மேல்

#1348
சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்து எழுமேல் வினை காணகிலாதவர்
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறு ஒளி தானே

மேல்

#1349
ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறாம்
களி அது சக்கரம் கண்டு அறிவார்க்கு
தெளிவது ஞானமும் சிந்தையும் தேற
பணிவது பஞ்சாக்கரம் அது ஆமே

மேல்

#1350
ஆமே சதாசிவநாயகி ஆனவள்
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள்
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள்
ஆமே அனைத்து உயிர்-தன்னுளும் ஆமே

மேல்

#1351
தன்னுளும் ஆகி தரணி முழுதும் கொண்டு
என்னுளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண்ணுளும் நீர் அனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே

மேல்

#1352
காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செய
காணலும் ஆகும் கருத்துற நில்லே

மேல்

#1353
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாக
கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக
கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொருள் ஆகுமே

மேல்

#1354
மெய்ப்பொருள் ஔ முதல் ஹௌ அது ஈறா
கைப்பொருள் ஆக கலந்து எழு சக்கரம்
தற்பொருள் ஆக சமைந்த அமுதேஸ்வரி
நல்பொருள் ஆக நடு இருந்தாளே

மேல்

#1355
தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி
கால் அது கொண்டு கலந்துற வீசிடின்
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின்
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே

மேல்

#1356
கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின்
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின்
மாடு இல்லை காணும் வரும்வழி கண்ட பின்
காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே

மேல்

#1357
உற்ற இடம் எல்லாம் உலப்பு_இல் பாழ் ஆக்கி
கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை
சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே

மேல்

#1358
நின்றிடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெற கண்டிட
நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே

மேல்

#1359
விளக்கு ஒளி ஸௌ முதல் ஔ அது ஈறா
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப்பொருள் ஆகும்
விளக்கு ஒளி ஆகிய மின்கொடியாளை
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே

மேல்

#1360
விளங்கிடும் மேல் வரும் மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும்
விளங்கிடும் மெய்ந்நின்ற ஞானப்பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே

மேல்

#1361
தானே வெளி என எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளி அது ஆனவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்து உள அண்ட சகலமே

மேல்

#1362
அண்டத்தின் உள்ளே அளப்பரிது ஆனவள்
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார்களே

மேல்

#1363
கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம்
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை
சிலப்பு அறியார் சில தேவரை நாடி
தலைப்பறி ஆக சமைந்தவர் தானே

மேல்

#1364
தானே எழுந்த அ சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்து இட்டு வைத்த பின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த வரை எண்பத்தொன்றுமே

மேல்

#1365
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே

மேல்

#1366
ஏய்ந்த மரவுரி-தன்னில் எழுதிய
வாய்ந்த இ பெண் எண்பத்தொன்றில் நிரைத்த பின்
காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும்
ஆய்ந்தலத்து ஆம் உயிராகுதி பண்ணுமே

மேல்

#1367
பண்ணிய பொன்னை பரப்பு அற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின்
துண்ணென நேய நல் சேர்க்கலும் ஆமே

மேல்

#1368
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே

மேல்

#1369
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச்சிறு கொங்கை கலந்து எழு கன்னியை
தச்சிது ஆக சமைந்த இ மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே

மேல்

#1370
சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு
முந்தை கிலீம் எழ முன் இருந்தாளே

மேல்

#1371
இருந்தனர் சத்திகள் அறுபத்துநால்வர்
இருந்தனர் கன்னிகள் எண் வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர் சக்கரத்தே
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே

மேல்

#1372
கொண்ட கனகம் குழை முடி ஆடையாய்
கண்ட இ முத்தம் கனல் திருமேனியாய்
பண்டு அமர் சோதி படர் இதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே

மேல்

#1373
உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும்
மணந்து எழும் ஓசை ஒளி அது காணும்
தணந்து எழு சக்கரம் தான் தருவாளே

மேல்

#1374
தருவழி ஆகிய தத்துவ ஞானம்
குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று
கருவழி ஆகும் கணக்கை அறுத்து
பெருவழி ஆக்கும் பேரொளி தானே

மேல்

#1375
பேரொளி ஆய பெரிய பெருஞ்சுடர்
சீர் ஒளி ஆகி திகழ் தரு நாயகி
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம்
பார் ஒளி ஆகி பரந்து நின்றாளே

மேல்

#1376
பரந்த கரம் இரு பங்கயம் ஏந்தி
குவிந்த கரம் இரு கொய் தளிர் பாணி
பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம்
இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே

மேல்

#1377
மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகி
பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே

மேல்

#1378
பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்து இரு கையின் மலர் அவை ஏந்த
சிறந்தவர் ஏத்தும் சிரீம் தனம் ஆமே

மேல்

#1379
தனம் அது ஆகிய தையலை நோக்கி
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில்
கனம் அவை அற்று கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்தி அது ஆமே

மேல்

#1380
ஆகின்ற மூலத்து எழுந்த முழு மலர்
போகின்ற பேரொளியாய மலரதாய்
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின்
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே

மேல்

#1381
ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத்து அறுவகை ஆனவள்
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத்து அறு வகை சூழவே

மேல்

#1382
சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதமாய்
ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்து அமர் பாசமே

மேல்

#1383
பாசம் அது ஆகிய வேரை அறுத்திட்டு
நேசம் அது ஆக நினைத்து இரும் உம்முளே
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில்
காசினி மேல் அமர் கண்_நுதல் ஆகுமே

மேல்

#1384
கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி
பண்ணுறு நாதம் பகை அற நின்றிடில்
விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே

மேல்

#1385
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தை
கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும்
விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே

மேல்

#1386
தாங்கிய நாபி தட மலர் மண்டலத்து
ஓங்கி எழும் கலைக்குள் உள் உணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே

மேல்

#1387
நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம்
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம்
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே

மேல்

#1388
அன்று இரு கையில் அளந்த பொருள் முறை
இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை
மன்று அது காணும் வழி அது ஆகவே
கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே

மேல்

#1389
காரணி சத்திகள் ஐம்பத்திரண்டு என
காரணி கன்னிகள் ஐம்பத்திருவராய்
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும்
காரணி தன் அருள் ஆகி நின்றாளே

மேல்

#1390
நின்ற இ சத்தி நிலை பெற நின்றிடில்
கண்ட இ வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில்
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினில் ஆடும் மணி அது காணுமே

மேல்

#1391
கண்ட இ சத்தி இருதய பங்கயம்
கொண்ட இ தத்துவநாயகி ஆனவள்
பண்டை அ வாயு பகையை அறுத்திட
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே

மேல்

#1392
இருந்த இ சத்தி இருநாலு கையில்
பரந்த இ பூங்கிளி பாசம் மழுவாள்
கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு
உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே

மேல்

#1393
உகந்தனள் பொன் முடி முத்து ஆரம் ஆக
பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி
மலர்ந்து எழு கொங்கை மணி கச்சு அணிந்து
தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே

மேல்

#1394
பச்சை இவளுக்கு பாங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய்
எச்ச இடைச்சி இனிது இருந்தாளே

மேல்

#1395
தாளதின் உள்ளே தாங்கிய சோதியை
கால் அது ஆக கலந்து கொள் என்று
மால் அது ஆக வழிபாடு செய்து நீ
பால் அது போல பரந்து எழு விண்ணிலே

மேல்

#1396
விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடை
கண் அமர் கூபம் கலந்து வருதலால்
பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது
தண் அமர் கூபம் தழைத்தது காணுமே

மேல்

#1397
கூபத்து சத்தி குளிர் முகம் பத்து உள
தாபத்து சத்தி தயங்கி வருதலால்
ஆபத்து கைகள் அடைந்தன நாலைந்து
பாசம் அறுக்க பரந்தன சூலமே

மேல்

#1398
சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானமாய்
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு
கால் அம் பூ பாசம் மழு கத்தி கைக்கொண்டு
கோலம் சேர் சங்கு குவிந்தகை எண் அதே

மேல்

#1399
எண் அமர் சத்திகள் நாற்பத்துநாலுடன்
எண் அமர் சத்திகள் நாற்பத்துநால்வராம்
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே

மேல்

#1400
கடந்தவள் பொன் முடி மாணிக்க தோடு
தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆக
படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாத சிலம்பு
மடந்தை சிறியவள் வந்து நின்றாளே

மேல்

#1401
நின்ற இ சத்தி நிரந்தரம் ஆகவே
கண்டிடும் மேரு அணிமாதி தான் ஆகி
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே

மேல்

#1402
உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது
கண்ட இ சத்தி சதாசிவநாயகி
கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும்
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே

மேல்

#1403
நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்
பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும்
கல் மணி தாமரை கையில் தமருகம்
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே

மேல்

#1404
பூசனை சத்திகள் எண்ணைவர் சூழவே
நேசவள் கன்னிகள் நாற்பத்து நேர் அதாய்
காசினி சக்கரத்து உள்ளே கலந்து அவள்
மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே

மேல்

#1405
தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியை
பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம்
கார் அது போல கலந்து எழு மண்ணிலே

மேல்

#1406
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாயநம என்று
கண்ணில் எழுந்தது காண்பரிது அன்று-கொல்
கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே

மேல்

#1407
என்று அங்கு இருந்த அமுத கலையிடை
சென்று அங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண் அடை
கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே

மேல்

#1408
அமுதம் அது ஆக அழகிய மேனி
படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே
குமுதம் அது ஆக குளிர்ந்து எழு முத்து
கெமுதம் அது ஆகிய கேடு_இலி தானே

மேல்

#1409
கேடு_இலி சத்திகள் முப்பத்து அறுவரும்
நாடு_இலி கன்னிகள் நாலொன்பதின்மரும்
பூ_இலி பூ இதழ் உள்ளே இருந்தவர்
நாள்_இலி தன்னை நணுகி நின்றார்களே

மேல்

#1410
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திட
கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு
விண்ட ஔகாரம் விளங்கின அன்றே

மேல்

#1411
விளங்கிடும் வானிடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து
சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே

மேல்

#1412
ஆமே அதோ முகம் மேலே அமுதமாய்
தாமே உகாரம் தழைத்து எழும் சோமனும்
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது
பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே

மேல்

#1413
பொன் கொடியாளுடை பூசனை செய்திட
அ களி ஆகிய ஆங்காரம் போயிடும்
மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுளே
பிற்கொடி ஆகிய பேதையை காணுமே

மேல்

#1414
பேதை இவளுக்கு பெண்மை அழகு ஆகும்
தாதை இவளுக்கு தாணுவுமாய் நிற்கும்
மாதை அவளுக்கு மண்ணும் திலகமாய்
கோதையர் சூழ குவிந்திட காணுமே

மேல்

#1415
குவிந்தனர் சத்திகள் முப்பத்திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழ
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே
இருந்தனள் காணும் இடம் பல கொண்டே

மேல்

#1416
கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடுமால்
இன்று என் மனத்துளே இல் அடைந்து ஆளுமே

மேல்

#1417
இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே

மேல்

#1418
ஆனை மயக்கும் அறுபத்துநால் தறி
ஆனை இருக்கும் அறுபத்துநால் ஒளி
ஆனை இருக்கும் அறுபத்துநால் அறை
ஆனையும் கோடும் அறுபத்துநாலிலே

மேல்

5.ஐந்தாம் தந்திரம் (1419 – 1572)


#1419
ஊரும் உலகமும் ஒக்க படைக்கின்ற
பேரறிவாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுலகு ஆளி இலங்கு எழும்
தாரணி நால் வகை சைவமும் ஆமே

மேல்

#1420
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கண்டு
சித்தும் அசித்தும் சேர்வுறாமே நீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று
நித்தம் பரம் சுத்தம் சைவர்க்கு நேயமே

மேல்

#1421
கற்பன கற்று கலை மன்னும் மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேவி துரிசு அற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவ சித்தாந்தரே

மேல்

#1422
வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர்
பூதாந்தம் போதாந்தம் ஆக புனம் செய்ய
நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே

மேல்

#1423
இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து
இணையார் இணை குழை ஈர் அணை முத்திரை
குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது
அணைவாம் சரியை கிரியையினார்க்கே

மேல்

#1424
காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து
ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே

மேல்

#1425
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமாம்
கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே

மேல்

#1426
ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன்
மோன திசையும் முழு எண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே

மேல்

#1427
பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம்
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே

மேல்

#1428
கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி
பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞான உதய உண்மை முத்தியோன்
பாடுறு சுத்த சைவ பத்த நித்தனே

மேல்

#1429
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே

மேல்

#1430
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருள் சத்தியாய் எங்கும் ஆமே

மேல்

#1431
சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகி
சித்தும் அசித்தும் தெரியா சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்து உள தானே

மேல்

#1432
தன்னை பரனை சதாசிவன் என்கின்ற
மன்னை பதி பசு பாசத்தை மாசு அற்ற
முன்னை பழ மல முன் கட்டை வீட்டினை
உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே

மேல்

#1433
பூரணம் தன்னிலே வைத்து அற்ற அ போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு
நேர் என ஈராறு நீதி நெடும் போகம்
காரணமாம் சுத்த சைவர்க்கு காட்சியே

மேல்

#1434
மாறாத ஞான மதிப்பு அற மாயோகம்
தேறாத சிந்தையை தேற்றி சிவம் ஆக்கி
பேறு ஆன பாவனை பேணி நெறிநிற்றல்
கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே

மேல்

#1435
வேதாந்தம் கண்டோர் பிரமம் இத்தியாதரர்
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள்
வேதாந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டுளோர்
சாதாரணம் அன்ன சைவர் உபாயமே

மேல்

#1436
விண்ணினை சென்று அணுகா வியன் மேகங்கள்
கண்ணினை சென்று அணுகா பல காட்சிகள்
எண்ணினை சென்று அணுகாமல் எணப்படும்
அண்ணலை சென்று அணுகா பசு பாசமே

மேல்

#1437
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தை பாதத்தால்
சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே

மேல்

#1438
வேடம் கடந்து விகிர்தன்-தன்பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்று
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்பட
சாடும் சிவபோதகர் சுத்த சைவரே

மேல்

#1439
உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும்
மடலான மா மாயை மற்று உள்ள நீவ
படலான கேவல பாசம் துடைத்து
திடமாய் தனையுறல் சித்தாந்த மார்க்கமே

மேல்

#1440
சுத்த சிவன் உரை தான் அதில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்தி வித்தாம் மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே

மேல்

#1441
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம்
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்
தான் என்று நான் என்றும் சாற்றகில்லேனே

மேல்

#1442
சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால்
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும்
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும்
பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே

மேல்

#1443
நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்-மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே

மேல்

#1444
உயிர்க்குயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை
உயிர் பெறு ஆவாகனம் புற பூசை
செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே

மேல்

#1445
நாடு நகரமும் நல் திருக்கோயிலும்
தேடி திரிந்து சிவபெருமான் என்று
பாடு-மின் பாடி பணி-மின் பணிந்த பின்
கூடிய நெஞ்சத்து கோயிலாய் கொள்வனே

மேல்

#1446
பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அ தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் சென்று எய்துவோர்களே

மேல்

#1447
சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் தான் அவன் ஆயினோர்
சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோரே

மேல்

#1448
கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை
அரிய சிவன் உரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை ஆமே

மேல்

#1449
சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன் நகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்கவைத்தானே

மேல்

#1450
சமையம் பல சுத்தி தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே

மேல்

#1451
பத்து திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு
எத்திக்கு இலர் இல்லை என்பதின் அமலர்க்கு
ஒத்து திருவடி நீழல் சரண் என
தத்தும் வினை கடல் சாராது காணுமே

மேல்

#1452
கானுறு கோடி கடி கமழ் சந்தனம்
வானுறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே

மேல்

#1453
கோன கன்று ஆயே குரை கழல் ஏத்து-மின்
ஞான கன்று ஆகிய நடுவே உழிதரும்
வான கன்று ஆகிய வானவர் கைதொழு
மான கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே

மேல்

#1454
இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம்
அது பணிசெய்கின்றவள் ஒரு கூறன்
இது பணி மானுடர் செய் பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே

மேல்

#1455
பத்தன் கிரியை சரியை பயில்வுற்று
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே

மேல்

#1456
அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்
செம்பொன் செய் மேனி கமல திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள்
என்பினுள் சோதி இலங்குகின்றானே

மேல்

#1457
நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றி
தறி இருந்தால் போல் தம்மை இருத்தி
சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணரா
குறி அறிவாளர்க்கு கூடலும் ஆமே

மேல்

#1458
ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே

மேல்

#1459
பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு
நாவி அணைந்த நடு தறி ஆமே

மேல்

#1460
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியை
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே

மேல்

#1461
எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலை பாச பிறவியும் நீங்கா
அழித்தலை சோமனோடு அங்கி அருக்கன்
வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே

மேல்

#1462
விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்யுரை ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும்
விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே

மேல்

#1463
பேணில் பிறவா உலகு அருள்செய்திடும்
காணில் தனது கலவியுளே நிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே

மேல்

#1464
ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்_இலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன் என்றே அன்புறுவார்களே

மேல்

#1465
யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர்
ஆக தகு கிரி ஆதி சரியை ஆம்
தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே

மேல்

#1466
யோக சமயமே யோகம் பல உன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்
யோக நிர்வாணமே உற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண் சித்தியுற்றலே

மேல்

#1467
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று
ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே

மேல்

#1468
சத்தமும் சத்த மனனும் தகுமனம்
உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும்
சித்தம் என்று இ மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே

மேல்

#1469
தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும்
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே

மேல்

#1470
இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும்
வருக்கம் சராசரம் ஆகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே
திருக்கிலா ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்க்கே

மேல்

#1471
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர் மன்னும் பேரருளாளன்
குறியும் குணமும் குரை கழல் நீங்கா
நெறி அறிவார்க்கு இது நீர்த்தொனியாமே

மேல்

#1472
ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள்
ஏனம் விளைந்து எதிரே காண் வழி-தொறும்
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே

மேல்

#1473
ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும்
தான் இ குலத்தோர் சரியை கிரியையே

மேல்

#1474
ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி
ஞான கிரியையே நல் முத்தி நாடலே

மேல்

#1475
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன்
கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே

மேல்

#1476
ஞான சமயமே நாடும் தனை காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள்
ஞான அபிடேகமே நற்குரு பாதமே

மேல்

#1477
சாற்றும் சன்மார்க்கமாம் தற்சிவ தத்துவம்
தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்
கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே

மேல்

#1478
சைவ பெருமை தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே

மேல்

#1479
தெரிசிக்க பூசிக்க சிந்தனை செய்ய
பரிசிக்க கீர்த்திக்க பாதுகம் சூட
குருபத்தி செய்யும் குவலயத்தோர்க்கு
தரு முத்தி சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே

மேல்

#1480
தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார்
தெளிவு அறியாதவர் தீரார் பிறப்பே

மேல்

#1481
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று
மோனமது ஆம் மொழி பால்முத்தர் ஆவதும்
ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும்
தான் அவனாயுறல் ஆன சன்மார்க்கமே

மேல்

#1482
சன்மார்க்கத்தார்க்கு முகத்தொடு பீடமும்
சன் மார்க்கத்தார்க்கும் இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத்தார்க்கு வருக்கம் தெரிசனம்
எ மார்க்கத்தார்க்கும் இயம்புவன் கேண்-மினோ

மேல்

#1483
சன்மார்க்க சாதனம் தான் ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய் நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரிய துரிசு அற்றார்
சன்மார்க்கம் தான் அவன் ஆகும் சன்மார்க்கமே

மேல்

#1484
சன்மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்கு
பின்மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால்
நன்மார்க்கம் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்கம் என்ன சுருதி கைக்கொள்ளுமே

மேல்

#1485
அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூல பகுதியும்
பின்னிய ஞானமும் போதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே

மேல்

#1486
பசு பாசம் நீக்கி பதியுடன் கூட்டி
கசியாத நெஞ்சம் கசிய கசிவித்து
ஒசியாத உண்மை சொருபோதயத்துற்று
அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே

மேல்

#1487
மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன்மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதோர்
மார்க்கம் சன்மார்க்கமாம் சித்த யோகமே

மேல்

#1488
சன்மார்க்கம் தானே சகமார்க்கம் ஆனது
மன்மார்க்கமாம் முத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து
உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே

மேல்

#1489
மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும்
உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே

மேல்

#1490
யோக சமாதியின் உள்ளே அகல் இடம்
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோக சமாதியின் உள்ளே உள சத்தி
யோக சமாதி உகந்தவர் சித்தரே

மேல்

#1491
யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியது
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே

மேல்

#1492
ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி
போதாலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே

மேல்

#1493
பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர் மன வாளால்
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே

மேல்

#1494
வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும்
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும்
உளம் கனிந்து உள்ளம் உகந்திருப்பார்க்கு
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே

மேல்

#1495
மேவிய சற்புத்திரமார்க்கம் மெய்த்தொழில்
தாவிப்பதாம் சகமார்க்கம் சக தொழில்
ஆவது இரண்டும் அகன்று சகமார்க்க
தேவியோடு ஒன்றல் சன்மார்க்க தெளிவு அதே

மேல்

#1496
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்ற சற்புத்திரமார்க்கம் ஆகுமே

மேல்

#1497
அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறுகா நரை அன்னம் தாமரை நீலம்
குறுகா நறு மலர் கொய்வன கண்டும்
சிறுகால் அறநெறி சேரகிலாரே

மேல்

#1498
அரும் கரை ஆவது அ அடி நீழல்
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம்
ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே

மேல்

#1499
உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி
வியந்தும் அரன் அடிக்கே முறை செய்-மின்
பயந்தும் பிறவிப்பயன் அது ஆகும்
பயந்து பரிக்கில் அ பான்மையன் ஆமே

மேல்

#1500
நின்று தொழுவன் கிடந்து எம்பிரான்-தன்னை
என்றும் தொழுவன் எழில் பரஞ்சோதியை
துன்று மலர் தூவி தொழு-மின் தொழும்-தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே

மேல்

#1501
திரு மன்னும் சற்புத்திர மார்க்க சரியை
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின்
கரு மன்னும் பாசம் கைகூம்ப தொழுது
இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே

மேல்

#1502
எளியன் நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி
அளி தொழில் செய்வது தான் தாசமார்க்கமே

மேல்

#1503
அது இது ஆதி பரம் என்று அகல்வர்
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதிவழியே சென்று வேந்தனை நாடும்
அது இது நெஞ்சில் தணிக்கின்றவாறே

மேல்

#1504
அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறி கழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாள்-தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே

மேல்

#1505
அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ
கண் அவன் என்று கருதும் அவர்கட்கு
பண் அவன் பேரன்பு பற்றி நின்றானே

மேல்

#1506
வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும்
பாசி குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின்
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை
நேசத்து இருந்த நினைவு அறியாரே

மேல்

#1507
சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால்
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பாலோகம் இல்லா பரன் உரு ஆமே

மேல்

#1508
சமயம் கிரியையில் தன் மனம் கோயில்
சமய மனு முறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனை தேறல் மூன்றாம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே

மேல்

#1509
பாசம் பசு ஆனது ஆகும் இ சாலோகம்
பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம்
பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம்
பாசம் கரை பதி சாயுச்சியமே

மேல்

#1510
தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றி கைகூடா
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர்
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே

மேல்

#1511
சயிலலோகத்தினை சார்ந்த பொழுதே
சயிலம் அது ஆகும் சராசரம் போல
பயிலும் குருவின் பதி புக்க-போதே
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே

மேல்

#1512
சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம்-தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவம்-தன்னை சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தம் சாயுச்சியமே

மேல்

#1513
சாயுச்சியம் சாக்கிராதீதம் சாருதல்
சாயுச்சியம் உபசாந்தத்து தங்குதல்
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா
சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே

மேல்

#1514
இருட்டு அறை மூலை இருந்த கிழவி
குருட்டு கிழவனை கூடல் குறித்து
குருட்டினை நீங்கி குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே

மேல்

#1515
தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில்
ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும்
தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு
ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே

மேல்

#1516
இருள் நீக்கி எண்_இல் பிறவி கடத்தி
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள் நீங்கா வானவர் கோனொடும் கூடி
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே

மேல்

#1517
இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே

மேல்

#1518
மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே

மேல்

#1519
கன்னி துறைபடிந்து ஆடிய ஆடவர்
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து இலர்
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து உண்டேல்
பின்னை பிறவி பிறிது இல்லை தானே

மேல்

#1520
செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
மை வென்று அகன்ற பகடுரி போர்த்த வெம்
கையன் இவன் என்று காதல் செய்வீரே

மேல்

#1521
எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்
தையலும் தானும் தனிநாயகம் என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு
கையில் கருமம் செய் காட்டது ஆமே

மேல்

#1522
கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்
வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல்
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே

மேல்

#1523
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனை
கண்ணுற்று நின்ற கனி அது ஆகுமே

மேல்

#1524
பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குற பெண் குவி முலை கோமளவல்லி
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே

மேல்

#1525
தாங்கு-மின் எட்டு திசைக்கும் தலைமகன்
பூம் கமழ் கோதை புரிகுழலாளொடும்
ஆங்கு அது சேரும் அறிவுடையார்கட்கு
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே

மேல்

#1526
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பல் மலர் தூவி பணிவன்
அணுகியது ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே

மேல்

#1527
இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குரு என வந்து குணம் பல நீக்கி
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

மேல்

#1528
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை உன்னி
அரவம்செய்யாமல் அவளுடன் சேர
பரிவொன்றில் ஆளும் பராபரை தானே

மேல்

#1529
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே

மேல்

#1530
ஆயத்துள் நின்ற அறு சமயங்களும்
காயத்துள் நின்ற கடவுளை காண்கிலா
மாய குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்தில் உற்று பதைக்கின்றவாறே

மேல்

#1531
உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ள தலைவன் கருத்து அறியார்களே

மேல்

#1532
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே

மேல்

#1533
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமய பொருளும் அவன் அலன்
தேறு-மின் தேறி தெளி-மின் தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனை புகலாமே

மேல்

#1534
சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம்
தவம் அல்லது இல்லை தலைப்படுவார்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள்
தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே

மேல்

#1535
அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவர் ஆக மிகவும் விரும்பி ஏம்
உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே

மேல்

#1536
சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம்
பவகதி பாச பிறவி ஒன்று உண்டு
தவகதி-தன்னொடு நேர் ஒன்று தோன்றில்
அவகதி மூவரும் அ வகை ஆமே

மேல்

#1537
நூறு சமயம் உளவா நுவலும்-கால்
ஆறு சமயம் அ ஆறு உட்படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா
வீறு பரநெறி இல்லா நெறி அன்றே

மேல்

#1538
கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன் எங்கும் தோய்வுற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார்
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே

மேல்

#1539
மயங்குகின்றாரும் மதி தெளிந்தாரும்
முயங்கி இருவினை முழை முகப்பு ஆச்சி
இயங்கி பெறுவரேல் ஈறு அது காட்டில்
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே

மேல்

#1540
சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு
மாயன் மயக்கிய மானுடராம் அவர்
காயம் விளைக்கும் கருத்து அறியார்களே

மேல்

#1541
வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
பழி அது பார் மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறிவாளன்-தன் சொல் வழி முன்நின்று
அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே

மேல்

#1542
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர்
நாதம் அது ஆக அறியப்படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்
ஆதியும் அ நெறி ஆகி நின்றானே

மேல்

#1543
அரன்நெறி அப்பனை ஆதி பிரானை
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரன் அறியாவிடில் பல் வகை தூரமே

மேல்

#1544
பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன்
பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும்
துரிசு அற நீ நினை தூய் மணிவண்ணன்
அரிது அவன் வைத்த அறநெறி தானே

மேல்

#1545
ஆன சமயம் அது இது நன்று எனும்
மாய மனிதர் மயக்கம் அது ஒழி
கானம் கடந்த கடவுளை நாடு-மின்
ஊனம் கடந்த உரு அது ஆமே

மேல்

#1546
அ நெறி நாடி அமரர் முனிவரும்
செந்நெறி கண்டார் சிவன் என பெற்றார் பின்
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்
செல் நெறி செல்லார் திகைக்கின்றவாறே

மேல்

#1547
உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை
அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே

மேல்

#1548
வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்
கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்
சுழி நடக்கும் துயரம் அது நீக்கி
பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே

மேல்

#1549
வழி சென்ற மாதவம் வைகின்ற-போது
பழி செல்லும் வல்வினை பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே

மேல்

#1550
இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும்
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே

மேல்

#1551
பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி
தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர்
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர்
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே

மேல்

#1552
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே

மேல்

#1553
தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர்
பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர்
கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள்
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே

மேல்

#1554
அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறி அது கண்டும் கொடுவினையாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே

மேல்

#1555
மன்னும் ஒருவன் மருவும் மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள்
துன்னி மனமே தொழு-மின் துணை_இலி
தன்னையும் அங்கே தலைப்படல் ஆமே

மேல்

#1556
ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று
ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்கா சமயத்துள் நின்று ஒழிந்தார்களே

மேல்

#1557
இமையவர்-தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமைய அங்கு உழல்கின்ற ஆதி பிரானே

மேல்

#1558
ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்றது போல இரு முச்சமயமும்
நன்று இது தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே

மேல்

#1559
சைவ பெருமை தனிநாயகன்-தன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய்
வைய தலைவனை வந்து அடைந்து உய்-மினே

மேல்

#1560
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழ வழி நாடி
இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு
அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே

மேல்

#1561
ஆமாறு உரைக்கும் அறு சமயாதிக்கு
போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம்ஆம் வழி ஆக்கும் அ வேறு உயிர்கட்கும்
போமாறு அ ஆதார பூங்கொடியாளே

மேல்

#1562
அரன்நெறி ஆவது அறிந்தேனும் நானும்
சிர நெறி தேடி திரிந்த அந்நாளும்
உர நெறி உள்ள கடல் கடந்து ஏறும்
தர நெறி நின்ற தனிச்சுடர் தானே

மேல்

#1563
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே

மேல்

#1564
ஈரும் மனத்தை இரண்டு அற வீசு-மின்
ஊரும் சகாரத்தை ஓது-மின் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னிய
தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே

மேல்

#1565
மினல் குறியாளனை வேதியர் வேதத்து
அனல் குறியாளனை ஆதி பிரான்-தன்னை
நினை குறியாளனை ஞான கொழுந்தின்
நய குறி காணில் அரன்நெறி ஆமே

மேல்

#1566
ஆய்ந்து உணரார்களின் ஆன்மா சதுர் பல
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன்நெறி
பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கைதொழு
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே

மேல்

#1567
சைவ பெருமை தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே

மேல்

#1568
இ தவம் அ தவம் என்று இரு பேர் இடும்
பித்தரை காணின் நகும் எங்கள் பேர் நந்தி
எ தவமாகில் என் எங்கு பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே

மேல்

#1569
ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள
தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே

மேல்

#1570
ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓத கடலும் உயிர்களுமாய் நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே

மேல்

#1571
ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர்
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கைதொழ
ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே

மேல்

#1572
அறிய ஒண்ணாத அ உடம்பின் பயனை
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே

மேல்

6.ஆறாம் தந்திரம் (1573 – 1703)


#1573
பத்தி பணித்து பரவும் அடி நல்கி
சுத்த உரையால் துரிசு அற சோதித்து
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு ஆமே

மேல்

#1574
பாசத்தை கூட்டியே கட்டி பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலால் நாட்டத்தது
ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே

மேல்

#1575
சித்திகள் எட்டொடும் திண்சிவம் ஆக்கிய
சுத்தியும் எண் சத்தி தூய்மையும் யோகத்து
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளில் பயிலுமே

மேல்

#1576
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல்கலால்
எல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தலால்
சொல்லார்ந்த நல்குரு சுத்த சிவமே

மேல்

#1577
தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உன கண்டு உரையாலே
மூவா பசு பாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே

மேல்

#1578
சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர்
பொய் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர்
அத்தன் இவன் என்று அடிபணிவாரே

மேல்

#1579
உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மை பார்
திண்மையும் ஒண்மை சிவம் ஆய அ அரன்
வண்மையும் எட்டெட்டு சித்தி மயக்கமும்
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே

மேல்

#1580
சிவனே சிவஞானி ஆதலால் சுத்த
சிவனே என அடி சேர வல்லார்க்கு
நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும்
பவம் ஆனது இன்றி பரலோகம் ஆமே

மேல்

#1581
குருவே சிவம் என கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே

மேல்

#1582
சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே
சித்தம் யாவையும் திண்சிவம் ஆன-கால்
அத்தனும் அ இடத்தே அமர்ந்தானே

மேல்

#1583
தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த
கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை
வான் நந்தி என்று மகிழும் ஒருவற்கு
தான் நந்தி அங்கி தனிச்சுடர் ஆமே

மேல்

#1584
திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மை
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர ஒண்ணாதே

மேல்

#1585
பத்தியும் ஞான வைராக்கியமும் பர
சித்திக்கு வித்து ஆம் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அ முளை
சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே

மேல்

#1586
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே

மேல்

#1587
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி
சிவம் ஆன ஞானம் சிவபரத்தே ஏக
சிவம் ஆன ஞானம் சிவானந்தம் நல்குமே

மேல்

#1588
அறிந்து உணர்ந்தேன் இ அகல் இடம் முற்றும்
செறிந்து உணர்ந்து ஓதி திருவருள் பெற்றேன்
மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இ பிறவியை நானே

மேல்

#1589
தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனை கண்டுகொண்டேனே

மேல்

#1590
இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே
பசைந்து எழும் ஈசரை பாசத்து உள் ஏக
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே

மேல்

#1591
தாள் தந்த போதே தலை தந்த எம் இறை
வாள் தந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள்
பாடின் முடி வைத்து பார் வந்து தந்ததே

மேல்

#1592
தான் அவன் ஆகி சொரூபத்து வந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி
தான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே

மேல்

#1593
உரை அற்று உணர்வு அற்று உயிர்பரம் அற்று
திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்து
கரை அற்ற சத்தாதி நான்கும் கடந்த
சொரூபத்து இருத்தினன் சொல் இறந்தோமே

மேல்

#1594
குரவன் உயிர் முச்சொரூபமும் கைக்கொண்டு
அரிய பொருள் முத்திரை ஆக கொண்டு
பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று
உருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே

மேல்

#1595
பேச்சு அற்ற இன்பத்து பேரானந்தத்திலே
மாச்சு அற்ற என்னை சிவம் ஆக்கி ஆள்வித்து
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே

மேல்

#1596
இதயத்தும் நாட்டத்தும் என்தன் சிரத்தும்
பதிவித்த பாத பராபரன் நந்தி
கதி வைத்தவாறும் மெய் காட்டியவாறும்
விதி வைத்தவாறும் விளம்ப ஒண்ணாதே

மேல்

#1597
திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கி
பெருவடி வைத்து அந்த பேர் நந்தி-தன்னை
குரு வடிவில் கண்ட கோனை எம் கோவை
கரு வழி ஆற்றிட கண்டுகொண்டேனே

மேல்

#1598
திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே

மேல்

#1599
மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை
மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும்
பால் வைத்த சென்னி படர் ஒளி வானவன்
தாள் வைத்தவாறு தரிப்பித்தவாறே

மேல்

#1600
கழல் ஆர் கமல திருவடி என்னும்
நிழல் சேர பெற்றேன் நெடுமால் அறியா
அழல் சேரும் அங்கியுள் ஆதி பிரானும்
குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே

மேல்

#1601
முடி மன்னராய் மூவுலகம் அது ஆள்வர்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்
முடி மன்னராய் நின்ற தேவர்கள் ஈசன்
குடி மன்னராய் குற்றம் அற்று நின்றாரே

மேல்

#1602
வைத்தேன் அடிகள் மனத்தினுள்ளே நான்
பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அ வேதத்தின் அந்தமே

மேல்

#1603
அடி சாரலாம் அண்ணல் பாதம் இரண்டும்
முடி சார வைத்தனர் முன்னை முனிவர்
படி சார்ந்த இன்ப பழவடி வெள்ள
குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே

மேல்

#1604
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்-தன் இணை அடி தானே

மேல்

#1605
நீங்கா சிவானந்த ஞேயத்தே நின்றிட
பாங்கு ஆன பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே

மேல்

#1606
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவு அறிவாரே

மேல்

#1607
தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம்
தான் என்று அவன் என்று இரண்டும் தனில் கண்டு
தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால்
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே

மேல்

#1608
வைச்சன ஆறாறு மாற்றி எனை வைத்து
மெச்ச பரன்-தன் வியாத்துவம் மேல் இட்டு
நிச்சயம் ஆக்கி சிவம் ஆக்கி ஞேயத்தால்
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே

மேல்

#1609
முன்னை அறிவு அறியாத அ மூடர் போல்
பின்னை அறிவு அறியாமையை பேதித்தான்
தன்னை அறிய பரன் ஆக்கி தன்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே

மேல்

#1610
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணாய் என வந்து காட்டினன் நந்தியே

மேல்

#1611
மோனம் கைவந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனம் கைவந்தோர்க்கு சித்தியும் முன் நிற்கும்
மோனம் கைவந்து ஊமையாம் மொழி முற்றும் காண்
மோனம் கைவந்து ஐங்கருமமும் முன்னுமே

மேல்

#1612
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்
வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி
உய் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே

மேல்

#1613
மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற
மூல சொரூபன் மொழி ஞாதுருவனே

மேல்

#1614
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை
மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு
அறப்பதி காட்டும் அமரர் பிரானே

மேல்

#1615
பிறந்தும் இறந்தும் பல் பேதைமையாலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்து
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே

மேல்

#1616
அறவன் பிறப்பு_இலி யாரும் இலாதான்
உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மை
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே

மேல்

#1617
நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியின் நெருஞ்சில் முள் பாயகிலாவே

மேல்

#1618
கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும்
நாடி வளைந்தது நான் கடவேன் அலேன்
ஆடல் விடை உடை அண்ணல் திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையான் தானே

மேல்

#1619
உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு
உழவன் அதனை உழவு ஒழிந்தானே

மேல்

#1620
மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூற்றுவன்
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா_இலி
கார் துறந்தார்க்கு அவன் கண்_நுதலாய் நிற்கும்
பார் துறந்தார்க்கே பதம் செயல் ஆமே

மேல்

#1621
நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது
போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து
ஏக படம் செய்து உடம்பு இடம் ஆமே

மேல்

#1622
அகன்றார் வழி முதல் ஆதி பிரானும்
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தாள் பலபல சீவனும் ஆகும்
நயன்றான் வரும் வழி நாம் அறியோமே

மேல்

#1623
தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழலியின் கஞ்சுளி பட்டது
வேம்பு ஏறி நோக்கினன் மீகாமன் கூரையில்
கூம்பு ஏறி கோயிலில் பூக்கின்றவாறே

மேல்

#1624
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே

மேல்

#1625
எம் ஆருயிரும் இருநில தோற்றமும்
செம் மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர் அல்லால்
இ மாதவத்தின் இயல்பு அறியாரே

மேல்

#1626
பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே

மேல்

#1627
இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெரும் தன்மையாளரை பேதிக்க என்றே
இருந்து இந்திரன் எவரே வரினும்
திருந்து நும்தம் சிந்தை சிவன் அவன்-பாலே

மேல்

#1628
கரந்தும் கரந்திலன் கண்ணுக்கும் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண்மதியானே

மேல்

#1629
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே

மேல்

#1630
அமைச்சரும் ஆனை குழாமும் அரசும்
பகைத்து எழும் பூசல் உட்பட்டார் நடுவே
அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே

மேல்

#1631
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின்
பார்த்த அ பார்வை பசுமரத்தாணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே

மேல்

#1632
தவம் வேண்டு ஞானம் தலைபட வேண்டில்
தவம் வேண்டா ஞான சமாதி கைகூடில்
தவம் வேண்டா அ சகமார்க்கத்தோர்க்கு
தவம் வேண்டா மாற்றம்-தனை அறியாரே

மேல்

#1633
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்ளுற்றால்
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதி கைகூடினால்
போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே

மேல்

#1634
கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே

மேல்

#1635
விளைவு அறிவார் பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய்யுரை செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய்யறம் செய்வார்
விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே

மேல்

#1636
கூடி தவம்செய்து கண்டேன் குரை கழல்
தேடி தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடி தவம்செய்வதே தவம் இவை களைந்து
ஊடில் பல உலகோர் எத்தவரே

மேல்

#1637
மனத்து உறை மா கடல் ஏழும் கைநீந்தி
தவத்திடையாளர் தம் சார்வத்து வந்தார்
பவத்திடையாளர் அவர் பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே

மேல்

#1638
மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்து
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன் ஒளி ஆமே

மேல்

#1639
ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்தான செய்வது தான் தவம் தானே

மேல்

#1640
இலை தொட்டு பூ பறித்து எந்தைக்கு என்று எண்ணி
மலர் தொட்டு கொண்டேன் வரும் புனல் காணேன்
தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம்
தலை தொட்டு கண்டேன் தவம் கண்டவாறே

மேல்

#1641
படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு
இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும்
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே

மேல்

#1642
ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சி போய்
ஈற்று கரடிக்கு எதிர்ப்பட்டதன் ஒக்கும்
நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே

மேல்

#1643
பழுக்கின்றவாறும் பழம் உண்ணும் ஆறும்
குழ கன்று துள்ளிய கோணியை பல்-கால்
குழ கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள்
இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே

மேல்

#1644
சித்தம் சிவம் ஆக செய் தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால்
சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம்
சித்தம் சிவம் ஆதல் செய் தவ பேறே

மேல்

#1645
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம்
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம்
பிரான் அருளில் பெருந்தன்மையும் உண்டு
பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே

மேல்

#1646
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே

மேல்

#1647
புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே

மேல்

#1648
முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து
நல் நின்று உலகில் நடுவுயிராய் நிற்கும்
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே

மேல்

#1649
சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவன் அருளால் வினை சேரகிலாமை
சிவன் அருள் கூடின் அ சிவலோகம் ஆமே

மேல்

#1650
புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி
நண்ணி விளக்கு என ஞானம் விளைந்தது
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள் பெற்ற-போதே

மேல்

#1651
காய தேர் ஏறி மன பாகன் கை கூட்ட
மாய தேர் ஏறி மங்கும் அவை உணர்
நேய தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்
ஆய தேர் ஏறி அவன் இவன் ஆமே

மேல்

#1652
அ-உலகத்தே பிறக்கில் உடலொடும்
அ உலகத்தே அருந்தவர் நாடுவர்
அ உலகத்தே அரன் அடி கூடுவர்
அ உலகத்தே அருள் பெறுவாரே

மேல்

#1653
கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு ஆம்
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம்
சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம்
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே

மேல்

#1654
நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியை
தேடுவன் தேடி சிவபெருமான் என்று
கூடுவன் கூடி குறை கழற்கே செல்ல
வீடும் அளவும் விடுகின்றிலேனே

மேல்

#1655
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே

மேல்

#1656
ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மானம் நலம் கெடும் வையகம் பஞ்சமாம்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே

மேல்

#1657
இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள
நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறை நாடி நாள்-தோறும் நாட்டினில்
மன்பதை செப்பம்செயின் வையம் வாழுமே

மேல்

#1658
இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த
வழிகுலத்தோர் வேடம் பூண்பர் தே ஆக
பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்
கழிகுலத்தோர்கள் களையப்பட்டோரே

மேல்

#1659
பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்து
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே

மேல்

#1660
பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர்
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும்
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே

மேல்

#1661
தவம் மிக்கவரே தலையான வேடர்
அவம் மிக்கவரே அதி கொலை வேடர்
அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அ வேடம்
தவம் மிக்கவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே

மேல்

#1662
பூதி அணிவது சாதனம் ஆதியில்
காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீது இல் சிவயோகி சாதனம் தேரிலே

மேல்

#1663
யோகிக்கு இடும் அதுவுள் கட்டு கஞ்சுளி
தோகைக்கு பாசத்து சுற்றும் சடை அது ஒன்று
ஆகத்து நீறு அணி ஆங்கு அ கபாலம்
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே

மேல்

#1664
காது அணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊது நல் சங்கும் உயர் கட்டி கப்பரை
ஏதம் இல் பாதுகம் யோகாந்தம் ஆதனம்
ஏதல் இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே

மேல்

#1665
நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம்
பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே

மேல்

#1666
கங்காளன் பூசும் கவச திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே

மேல்

#1667
அரசுடன் ஆல் அத்தி ஆகும் அக்காரம்
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே

மேல்

#1668
ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர்
ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்-பால்
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே

மேல்

#1669
புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை
நல்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணி
துன்ஞானத்தோர் சமய துரிசு உள்ளோர்
பின்ஞானத்தோர் ஒன்றும் பேசகில்லாரே

மேல்

#1670
சிவஞானிகட்கும் சிவயோகிகட்கும்
அவம் ஆன சாதனம் ஆகாது தேரில்
அவமாம் அவர்க்கு அது சாதனம் நான்கும்
உவமானம் இல்பொருள் உள்ளுறலாமே

மேல்

#1671
கத்தி திரிவர் கழுவடி நாய் போல்
கொத்தி திரிவர் குரக்களி ஞாளிகள்
ஒத்து பொறியும் உடலும் இருக்கவே
செத்து திரிவர் சிவஞானியோர்களே

மேல்

#1672
அடியார் அவரே அடியார் அலாதார்
அடியாரும் ஆகார் அ வேடமும் ஆகார்
அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அலாதார் அடியார்கள் அன்றே

மேல்

#1673
ஞானிக்கு சுந்தர வேடமும் நல்லவாம்
தான் உற்ற வேடமும் தன் சிவயோகமே
ஆன அ வேடம் அருள் ஞான சாதனம்
ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே

மேல்

#1674
ஞானத்தினால் பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனி ஆலயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே

மேல்

#1675
தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அ சிவம் ஆன இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
ஏனமும் நந்தி பதம் முத்தி பெற்றதே

மேல்

#1676
அருளால் அரனுக்கு அடிமை அது ஆகி
பொருளாம் தனது உடல் பொன் பதி நாடி
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர்
தெருளாம் அடிமை சிவவேடத்தோரே

மேல்

#1677
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே

மேல்

#1678
மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று
கயலுற்ற கண்ணியர் கை இணக்கு அற்று
தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகி
செயலற்று இருப்பார் சிவவேடத்தாரே

மேல்

#1679
ஓடும் குதிரை குசை திண்ணம் பற்று-மின்
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே
நாடு-மின் நந்தியை நம் பெருமான்-தன்னை
தேடும் இன்ப பொருள் சென்று எய்தலாமே

மேல்

#1680
குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழுமாறே

மேல்

#1681
மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி
நினைப்பின் அதனினில் நிழலையும் காணார்
வினை பயன் போக விளக்கியும் கொள்ளார்
புற கடை இச்சித்து போகின்றவாறே

மேல்

#1682
ஏய் எனில் என் என மாட்டார் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும்
தாய் முலை ஆவது அறியார் தமர் உளோர்
ஊன் நிலை செய்யும் உரு_இலி தானே

மேல்

#1683
வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின்
பேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே

மேல்

#1684
பஞ்ச துரோகத்து இ பாதகர் தம்மை
அஞ்ச சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்ச செய்து இ புவி வேறே விடாவிடில்
பஞ்சத்து உளாய் புவி முற்றும் பாழ் ஆகுமே

மேல்

#1685
தவத்திடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்று அறியாதவர் எல்லாம்
பவத்திடை நின்றது ஓர் பாடு அது ஆமே

மேல்

#1686
கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
நின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்று இவை இறை-பால் இயற்கை அல்லவே

மேல்

#1687
விடிவது அறியார் வெளி காண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உண்மை கட்டு-மின் காண்-மின்
விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே

மேல்

#1688
வைத்த பசு பாச மாற்று நெறி வைகி
பெத்தம் அற முத்தன் ஆகி பிறழுற்று
தத்துவம் உன்னி தலை படாது அவ்வாறு
பித்தான சீடனுக்கு ஈயப்பெறாதானே

மேல்

#1689
மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவன் அசல் சீடன் ஆமே

மேல்

#1690
தொழில் அறிவாளர் சுருதி கண் ஆக
பழுது அறியாத பரமகுருவை
வழி அறிவார் நல் வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே

மேல்

#1691
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே

மேல்

#1692
பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி
சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே

மேல்

#1693
கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக
உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக
எள்ளத்தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி அறிய சிவபதம் தானே

மேல்

#1694
சோதி விசாகம் தொடர்ந்து இரு தேள் நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது
ஆதியும் ஏதும் அறியகிலானே

மேல்

#1695
தொழில் ஆரமாம் மணி தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடம் கொண்ட-போதே
விழலார் விறலாம் வினை அது போக
கழல் ஆர் திருவடி கண்டருளாமே

மேல்

#1696
சாத்திகனாய் பரதத்துவம் தான் உன்னி
ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்த வல்லான் அவன் சற்சீடன் ஆமே

மேல்

#1697
சத்தும் அசத்தும் எவ்வாறு என தான் உன்னி
சித்தை உறுக்கி சிவனருள் கைகாட்ட
பத்தியின் ஞானம் பெற பணிந்தான் அந்த
சத்தியில் இச்சை தகுவோன் சற்சீடனே

மேல்

#1698
அடிவைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா
அடிவைத்த மா முடி மாய பிறவி
அடிவைத்த காய அருள் சத்தியாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற்றுளோனே

மேல்

#1699
சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன்-பால் ஆக
சாராத சாதக நான்கும் தன்-பால் உற்றோன்
ஆராயும் ஞானத்தனாம் அடிவைக்கவே

மேல்

#1700
உணர்த்தும் அதிபக்குவர்க்கே உணர்த்தி
இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டு
குணக்கொடு தெற்கு உத்தரபச்சிமம் கொண்டு
உணர்த்து-மின் நாவுடையாள்-தன்னை உன்னியே

மேல்

#1701
இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி
குறை அது கூறி குணம் கொண்டு போற்ற
சிறை உடல் நீ அற காட்டி சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே

மேல்

#1702
வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கை புனல் வழி மாற்றி சித்தாந்தத்து
வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற்சீடன் ஆமே

மேல்

#1703
சற்குணம் வாய்மை தயா விவேகம் தண்மை
சற்குரு பாதமே சாயை போல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளிய தெளிவோர்தல்
அற்புதமே தோன்றல் ஆகும் சற்சீடனே

மேல்

7.ஏழாம் தந்திரம் (1704 – 2121)


#1704
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே

மேல்

#1705
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி
போதாலயத்து அவிகாரம்-தனில் போத
மேதாதி ஆதாரம் மீதான உண்மையே

மேல்

#1706
மேல் என்றும் கீழ் என்று இரண்டு அற காணும்-கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகி பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே

மேல்

#1707
ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி
போதாலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே

மேல்

#1708
மேதாதியாலே விடாது ஓம் என தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால்
ஆதாரம் செய்போகம் ஆவது காயமே

மேல்

#1709
ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றும் குறி கொண்-மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே

மேல்

#1710
ஆகும் உடம்பும் அழிக்கின்ற அ உடல்
போகும் உடம்பும் பொருந்தியவாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே

மேல்

#1711
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
மேய அறிவாய் விளைந்தது தானே

மேல்

#1712
இலிங்கம் அது ஆவது யாரும் அறியார்
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்
இலிங்கம் அது ஆவது எண்ணெண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே

மேல்

#1713
உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவன் தானே

மேல்

#1714
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்
ஆகமது அத்துவா ஆறும் சிவமே

மேல்

#1715
ஏத்தினர் எண்_இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தென்றல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்த புறம்நின்று
காத்தனர் என்னும் கருத்து அறியாரே

மேல்

#1716
ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள்
தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே

மேல்

#1717
தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை
மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே

மேல்

#1718
தூய விமானமும் தூலம் அது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நல் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திரலிங்கம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே

மேல்

#1719
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும் அ கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம்
உய்த்ததின் சாதனம் பூமணலிங்கமே

மேல்

#1720
துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல் இரதம் சலம்
வன்திறல் செங்கல் வடிவு உடை வில்வம் பொன்
தென்தியங்கு ஒன்றை தெளி சிவலிங்கமே

மேல்

#1721
மறையவர் அர்ச்சனை வண் படிகந்தான்
இறையவர் அர்ச்சனை ஏய பொன் ஆகும்
குறைவு இலா வசியர்க்கு கோமளம் ஆகும்
துறையுடை சூத்திரர் தொல் வாணலிங்கமே

மேல்

#1722
அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி
எது உணரா வகை நின்றனன் ஈசன்
புது உணர்வான புவனங்கள் எட்டும்
இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே

மேல்

#1723
அகல் இடமாய் அறியாமல் அடங்கும்
உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே
பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன்
புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே

மேல்

#1724
போது புனை கழல் பூமி அது ஆவது
மாது புனை முடி வானகம் ஆவது
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும்
ஆதியுற நின்றது அ பரிசு ஆமே

மேல்

#1725
தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரை பொரு நீர் அது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை
கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே

மேல்

#1726
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

மேல்

#1727
உலந்திலர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்ய
புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம்தரு தேவரை வந்தி செய்யீரே

மேல்

#1728
கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்
தாயில் கொண்டால் போல் தலைவன் என்னுள் புக
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே

மேல்

#1729
கோயில் கொண்டான் அடி கொல்லை பெரு மறை
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே

மேல்

#1730
கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து
தேடு முகம் ஐந்து செம் கணின் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே

மேல்

#1731
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன்
மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்த சிவனொடும்
சாதாரணம் ஆம் சதாசிவம் தானே

மேல்

#1732
ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தியுள் அ திசை பத்தே

மேல்

#1733
அ திசைக்குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அ திசைக்குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அ திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு
அ திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே

மேல்

#1734
சமயத்து எழுந்த அவத்தை ஈரைந்து உள
சமயத்து எழுந்த இராசி ஈராறு உள
சமயத்து எழுந்த சரீரம் ஆறெட்டு உள
சமயத்து எழுந்த சதாசிவம் தானே

மேல்

#1735
நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு
நடுவு படிகம் நல் குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால்
அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே

மேல்

#1736
அஞ்சு முகம் உள ஐம்மூன்று கண் உள
அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள
அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே

மேல்

#1737
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவம் முப்பத்தாறே

மேல்

#1738
தத்துவமாவது அருவம் சராசரம்
தத்துவமாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமுமாய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவன் தானே

மேல்

#1739
கூறு-மின் நூறு சதாசிவன் எம் இறை
வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும்
ஏறு உரைசெய் தொழில் வானவர் தம்மொடு
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே

மேல்

#1740
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே

மேல்

#1741
சத்தி தான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம்
அத்தகு கோரம் மகுடத்து ஈசானனே

மேல்

#1742
நாணு நல் ஈசானம் நடுவுச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகந்து தற்புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம் ஆம் சத்தி நல் பாதமே

மேல்

#1743
நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண்ணாம்
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே

மேல்

#1744
எண்_இல் இதயம் இறை ஞான சத்தியாம்
விண்ணில் பரை சிரம் மிக்க சிகையாதி
வண்ண கவசம் வனப்பு உடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத்திரத்திலே

மேல்

#1745
சத்தி நாற்கோணம் சலமுற்று நின்றிடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நல்வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே

மேல்

#1746
மால் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே

மேல்

#1747
ஒன்றியவாறும் உடலின் உடன் கிடந்து
என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது
தென் தலைக்கு ஏற திருந்தும் சிவனடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே

மேல்

#1748
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொருளானை
கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே

மேல்

#1749
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட
தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில்
ஓங்கிய ஆதியும் அந்தமுமாம் என
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே

மேல்

#1750
தன் மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடும்
தன் மேனி-தானும் சதாசிவமாய் நிற்கும்
தன் மேனி தற்சிவன் தற்சிவானந்தமாம்
தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே

மேல்

#1751
ஆரும் அறியார் அகாரம் அவன் என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே

மேல்

#1752
இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம்
இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறை விந்து நாதமே

மேல்

#1753
அகாரம் முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகாரம் முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் அது ஆமே

மேல்

#1754
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதி பீட நாதமே
போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே

மேல்

#1755
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே

மேல்

#1756
தான் நேர் எழுகின்ற சோதியை காணலாம்
வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம்
பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன்
தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே

மேல்

#1757
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்து அதே பீட நாத இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே

மேல்

#1758
சத்தி நல் பீடம் தகு நல்ல ஆன்மா
சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும்
சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம்
சத்தி நல் ஆன்மா சதாசிவம் தானே

மேல்

#1759
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற-போது
நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும்
இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே

மேல்

#1760
பராபரன் எந்தை பனி மதி சூடி
தராபரன் தன் அடியார் மன கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்து உறைந்தானே

மேல்

#1761
பிரான் நல்ல நாம் எனில் பேதை உலகம்
குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன்
அரா நின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொரா நின்றவர் செய்ய புண்ணியன் தானே

மேல்

#1762
அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று
சென்று நின்று எண் திசை ஏத்துவர் தேவர்கள்
என்றும் நின்று ஏத்துவன் எம் பெருமான்-தனை
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே

மேல்

#1763
உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும்
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தரு என நல்கும் சதாசிவன் தானே

மேல்

#1764
நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண்
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தானே

மேல்

#1765
தேவர் பிரானை திசைமுகநாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி
யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே

மேல்

#1766
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்தகையானொடும் கன்னி உணரினும்
மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே

மேல்

#1767
ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை
பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே

மேல்

#1768
சத்திக்கு மேலே பராசத்தி-தன் உள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூ ஒளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே

மேல்

#1769
கொழுந்தினை காணில் குவலயம் தோன்றும்
எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டு எழ கண்டவன் சிந்தை உளானே

மேல்

#1770
எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே

மேல்

#1771
சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி
சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்து
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே

மேல்

#1772
சத்தி சிவன்-தன் விளையாட்டு தாரணி
சத்தி சிவமுமாம் சிவன் சத்தியும் ஆகும்
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை
சத்திதான் என்றும் சமைந்து உரு ஆகுமே

மேல்

#1773
குரைக்கின்ற வாரி குவலய நீரும்
பரக்கின்ற காற்று பயில்கின்ற தீயும்
நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே

மேல்

#1774
வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்கு
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே

மேல்

#1775
ஒன்று என கண்டே எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடியிணை நான் அவனை தொழ
வென்று ஐம்புலனும் மிக கிடந்து இன்புற
அன்று என் அருள்செய்யும் ஆதி பிரானே

மேல்

#1776
மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன்
பலம் தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி
பலம் தரும் லிங்கம் பராநந்தி ஆமே

மேல்

#1777
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடலுற
மேவப்படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கில் பரகதி தானே

மேல்

#1778
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அற பார்த்து கைவைத்து
நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வு ஆக்கி
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே

மேல்

#1779
உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவார் பரமும் பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்ய கொண்டானே

மேல்

#1780
பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அ பொருள்
உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது
வைச்ச பதம் இது வாய் திறவாதே

மேல்

#1781
பெட்டடித்து எங்கும் பிதற்றி திரிவேனை
ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின்
தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே

மேல்

#1782
தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம்
கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே

மேல்

#1783
கூடும் உடல் பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்று அற நீக்கியே
கூடிய தான் அவனாம் குளிக்கொண்டே

மேல்

#1784
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை
கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் என ஒன்றும் கூறகிலேனே

மேல்

#1785
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தை பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே

மேல்

#1786
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே

மேல்

#1787
காய பரப்பில் அலைந்து துரியத்து
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்கு
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே

மேல்

#1788
நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்
ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்றவாறே

மேல்

#1789
அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே

மேல்

#1790
நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே

மேல்

#1791
பெருந்தன்மை தான் என யான் என வேறாய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே
திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே

மேல்

#1792
இரு பதம் ஆவது இரவும் பகலும்
உரு அது ஆவது உயிரும் உடலும்
அருள் அது ஆவது அறமும் தவமும்
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே

மேல்

#1793
காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும்
வேண்டி கிடந்து விளக்கொளியான் நெஞ்சம்
ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே

மேல்

#1794
குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே

மேல்

#1795
தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை
ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் என
சார்ந்து அறிவான் பெருந்தன்மை வல்லானே

மேல்

#1796
தானே அறியும் வினைகள் அழிந்த பின்
நானே அறிகிலன் நந்தி அறியும்-கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின்
தேனே அனைய நம் தேவர் பிரானே

மேல்

#1797
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான் அறிந்தார் அறியாது மயங்கினர்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறியான் பின்னை யார் அறிவாரே

மேல்

#1798
அருள் எங்கும் ஆன அளவை அறியார்
அருளை நுகர அமுதானதும் தேரார்
அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார்
அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே

மேல்

#1799
அறிவில் அணுக அறிவது நல்கி
பொறி வழி ஆசை புகுத்தி புணர்ந்திட்டு
அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே

மேல்

#1800
அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்து இளைப்பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே

மேல்

#1801
அருளால் அமுத பெரும் கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே

மேல்

#1802
பாசத்தில் இட்டது அருள் அந்த பாசத்தின்
நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்த கூட்டத்தின்
நேசத்து தோன்றா நிலை அருள் ஆமே

மேல்

#1803
பிறவா நெறி தந்த பேரருளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே

மேல்

#1804
அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய்
அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே

மேல்

#1805
ஆயும் அறிவோடு அறியாத மா மாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
மாய பல இந்திரியம் அவற்றுடன்
ஆய அருள் ஐந்தும் ஆம் அருள்செய்கையே

மேல்

#1806
அருளே சகலமுமாய பவுதிகம்
அருளே சராசரமாய அகிலம்
இருளே வெளியே எனும் எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே

மேல்

#1807
சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து
தவம் ஆன ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவம் அவை ஆகி நடிப்பவன் தானே

மேல்

#1808
அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே
இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றா
தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீரொளி ஆமே

மேல்

#1809
தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும்
தானே வியாபி தலைவனும் ஆமே

மேல்

#1810
தலை ஆன நான்கும் தனது அருவாகும்
அலையா அருவுரு ஆகும் சதாசிவம்
நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும்
துலையா இவை முற்றுமாய் அல்லது ஒன்றே

மேல்

#1811
ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி
நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை
துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன
நின்றது தான் விளையாட்டு என்னுள் நேயமே

மேல்

#1812
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆய குடிலையுள் நாதம் அடைந்திட்டு
போய கலை பல ஆக புணர்ந்திட்டு
வீய தகா விந்து ஆக விளையுமே

மேல்

#1813
விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனி மாயை மிக்க மா மாயை
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம்
அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே

மேல்

#1814
அருளில் தலை நின்று அறிந்து அழுந்தாதார்
அருளில் தலை நில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளில் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே

மேல்

#1815
வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆராவமுது அளித்து ஆனந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே

மேல்

#1816
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையை
கூடியவாறே குறியா குறி தந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருளுற்றே

மேல்

#1817
உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும்
பற்றிய மாயா படலம் என பண்ணி
அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே

மேல்

#1818
விளக்கினை ஏற்றி வெளியை அறி-மின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே

மேல்

#1819
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள்
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே

மேல்

#1820
புறமே திரிந்தேனை பொன் கழல் சூட்டி
நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த
திறம் ஏது என்று எண்ணி திகைத்து இருந்தேனே

மேல்

#1821
அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும்
பொருள் அது என்ற புகலிடம் ஒன்றும்
மருள் அது நீங்க மனம் புகுந்தானை
தெருளுறும் பின்னை சிவகதி ஆமே

மேல்

#1822
கூறு-மின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆருயிர்
தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே

மேல்

#1823
உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே

மேல்

#1824
வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்கு
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும்
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே

மேல்

#1825
பால் மொழி பாகன் பராபரன் தான் ஆகும்
மான சதாசிவன்-தன்னை ஆவாகித்து
மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு
சீல் முகம் செய்ய சிவன் அவன் ஆகுமே

மேல்

#1826
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனை கழல் ஈசனை காண அரிதாம்
கனை கழல் ஈசனை காண்குற வல்லார்
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே

மேல்

#1827
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சு அமுதாம் உபசாரம் எட்டெட்டொடும்
அஞ்சலியோடும் கலந்து அர்ச்சித்தார்களே

மேல்

#1828
புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு
அண்ணல் அது கண்டு அருள்புரியாநிற்கும்
எண்_இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே

மேல்

#1829
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசு கேள்
ஒத்த மெய்ஞ்ஞானத்து உயர்ந்தார் பதத்தை
சுத்தமதாக விளக்கி தெளிக்கவே
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே

மேல்

#1830
மறப்புற்று இ வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே

மேல்

#1831
ஆராதனையும் அமரர் குழாங்களும்
தீரா கடலும் நிலத்தும் அதாய் நிற்கும்
பேர் ஆயிரமும் பிரான் திருநாமமும்
ஆரா வழி எங்கள் ஆதி பிரானே

மேல்

#1832
ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழ
தான் அந்தம் இல்லா தலைவன் அருள் அது
தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர்
பார் ஐங்குணமும் படைத்து நின்றானே

மேல்

#1833
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி
மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர்
தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே

மேல்

#1834
வெள்ள கடல் உள் விரிசடை நந்திக்கு
உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு
கள்ள கடல் விட்டு கைதொழ மாட்டாதார்
அள்ளல் கடலுள் அழுந்துகின்றாரே

மேல்

#1835
கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து
வழிப்படுவார் மலர் மொட்டு அறியார்கள்
பழிப்படுவார் பலரும் பழி வீழ
வெளிப்படுவோர் உச்சி மேவி நின்றானே

மேல்

#1836
பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர
வயனங்களால் என்றும் வந்து நின்றானே

மேல்

#1837
ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன்
மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற
தீர்த்தனை யாரும் துதித்து உணராரே

மேல்

#1838
தேவர்களோடு இசை வந்து மண்ணோடுறும்
பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை
மூவரில் பன்மை முதல்வனாய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே

மேல்

#1839
உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்தி
பிழைப்பு இன்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே

மேல்

#1840
வென்று விரைந்து விரை பணி என்றனர்
நின்று பொருந்த இறை பணி நேர்பட
துன்று சல மலர் தூவி தொழுதிடில்
கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே

மேல்

#1841
சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்ற-கால்
மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே

மேல்

#1842
ஆவி கமலத்தின் அப்புறத்து இன்புற
மேவி திரியும் விரிசடை நந்தியை
கூவி கருதி கொடுபோய் சிவத்திடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே

மேல்

#1843
சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை
பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே

மேல்

#1844
பெருந்தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள
வரும் தன்மையாளனை வானவர் தேவர்
தரும் தன்மையாளனை தாங்கி நின்றாரே

மேல்

#1845
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமம் திரசுத்தி
சமைய நிர்வாணம் கலாசுத்தி ஆகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே

மேல்

#1846
ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே

மேல்

#1847
ஆகின்ற நந்தி அடி தாமரை பற்றி
போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே

மேல்

#1848
கானுறு கோடி கடி கமழ் சந்தனம்
வானுறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே

மேல்

#1849
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயல் அறல் தானே

மேல்

#1850
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சு-மின் நச்சி நம என்று நாமத்தை
விச்சு-மின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சு-மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே

மேல்

#1851
புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகுமாம்
பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகுமாம்
எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால்
பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே

மேல்

#1852
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்கா தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே

மேல்

#1853
இந்துவும் பானுவும் என்று எழுகின்றது ஓர்
விந்துவும் நாதமும் ஆகி மீதானத்தே
சிந்தனை சாக்கிராதீதத்தே சென்றிட்டு
நந்தியை பூசிக்க நல் பூசை ஆமே

மேல்

#1854
மன பவனங்களை மூலத்தால் மாற்றி
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றி
புனிதன் அருள்-தனில் புக்கு இருந்து இன்பத்து
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே

மேல்

#1855
பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான் கொள்வன் தாழ்சடையோனே

மேல்

#1856
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்த தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே

மேல்

#1857
பட மாட கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாட கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாட கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
பட மாட கோயில் பகவற்கு அது ஆமே

மேல்

#1858
தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று
எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே

மேல்

#1859
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை
யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது
மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம் அதுவாம் தேர்ந்து கொள்வீரே

மேல்

#1860
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகர் இலை என்பது நிச்சயம் தானே

மேல்

#1861
ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர்
கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில்
நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை
பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே

மேல்

#1862
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே

மேல்

#1863
சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட
பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான் நொந்துநொந்து வருமளவும் சொல்ல
பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே

மேல்

#1864
அழிதகவு இல்லா அரன் அடியாரை
தொழுதகை ஞாலத்து தூங்கு இருள் நீங்கும்
பழுதுபடா வண்ணம் பண்பனை நாடி
தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே

மேல்

#1865
பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகி
புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்து நின்று ஊழி-தோறு ஊழி
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே

மேல்

#1866
வித்தகம் ஆகிய வேடத்தர் உண்ட ஊண்
அத்தன் அயன் மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே

மேல்

#1867
தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும்
ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ் வினை தீர்க்கும் அ பொன் உலகம் ஆமே

மேல்

#1868
திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில்
பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும்
அக குறை கேடு இல்லை அ உலகுக்கே

மேல்

#1869
அ உலகத்தே பிறந்த அ உடலொடும்
அ உலகத்தே அருந்தவம் நாடுவர்
அ உலகத்தே அரன் அடி கூடுவர்
அ உலகத்தே அருள்பெறுவாரே

மேல்

#1870
கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்திசையோரும் வந்து என் கைத்தலத்தினுள்
உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே

மேல்

#1871
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே

மேல்

#1872
பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா
கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே

மேல்

#1873
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர்
புயங்களும் எண் திசை போது பாதாள
மயங்கா பகிரண்ட மா முடி தானே

மேல்

#1874
அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும்
அகம் படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே

மேல்

#1875
கழிவு முதலும் காதல் துணையும்
அழிவும் அதாய் நின்ற ஆதி பிரானை
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே

மேல்

#1876
என் தாயோ என் அப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில் வண்ணன் நேர் எழுத்தாயே

மேல்

#1877
துணிந்தார் அகம் படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதி பிரானை
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடல் ஆமே

மேல்

#1878
தலை மிசை வானவர் தாள் சடை நந்தி
மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும்
பல மிசை செய்யும் படர்சடையோனே

மேல்

#1879
அறியா பருவத்து அரன் அடியாரை
குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே

மேல்

#1880
அவன்-பால் அணுகியே அன்பு செய்வார்கள்
சிவன்-பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்-பால் அணுகியே நாடும் அடியார்
இவன்-பால் பெருமை இலயம் அதாமே

மேல்

#1881
முன் இருந்தார் முழுதும் எண்கண தேவர்கள்
எண்_இறந்து தன்-பால் வருவர் இருநிலத்து
எண் இருநாலு திசை அந்தரம் ஒக்க
பன்னிரு காதம் பதம்செய்யும் பாரே

மேல்

#1882
சிவயோகி ஞானி செறிந்த அ தேசம்
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடும் நல் இயல் காணும்
பவயோகம் இன்றி பரலோகம் ஆமே

மேல்

#1883
மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன்
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன்
மேல் உணர்வார் மிகு ஞாலத்து அமரர்கள்
மேல் உணர்வார் சிவன் மெய்யடியார்களே

மேல்

#1884
எட்டு திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுது என்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம்
விட்டு கிடக்கில் விருப்பு அறியாரே

மேல்

#1885
அ சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர்
உச்சி அம் போது ஆக உள் அமர் கோவிற்கு
பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து
இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே

மேல்

#1886
விச்சு கலம் உண்டு வேலி செய் ஒன்று உண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம் கெட்டு அ செய் அறுத்து உண்ண மாட்டாதார்
இச்சைக்கு பிச்சை இரக்கின்றவாறே

மேல்

#1887
பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை-தன்னில்
பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்ய
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டி
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே

மேல்

#1888
பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை
இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார்
இரந்து உண்டு தன் கழல் எட்ட செய்தானே

மேல்

#1889
வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன்
தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொர இருந்தான் புகலே புகல் ஆக
வர இருந்தால் அறியான் என்பது ஆமே

மேல்

#1890
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடியார் சரீரத்திடை
பொங்கார் புவனத்தும் புண்ணியலோகத்தும்
தங்கார் சிவனை தலைப்படுவாரே

மேல்

#1891
மெய் அக ஞானம் மிக தெளிந்தார்களும்
கை அக நீண்டார் கடைத்தலைக்கே செல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வர இருந்தாரே

மேல்

#1892
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பால் ஆன மோன மொழியில் பதிவித்து
மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய
கோலாகலம் கெட்டு கூடு நல் முத்தியே

மேல்

#1893
துரியங்கள் மூன்றும் சொருகிடன் ஆகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே

மேல்

#1894
சாம்பவி நந்தி-தன் அருள் பார்வையாம்
ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை
ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம் பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே

மேல்

#1895
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால்
ஏனை சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே

மேல்

#1896
வாக்கும் மனமும் இரண்டு மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே
ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே

மேல்

#1897
யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்-கால்
ஆக தகு வேத கேசரி சாம்பவி
யோகத்து கேசரி யோக முத்திரையே

மேல்

#1898
யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை
போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி
ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே

மேல்

#1899
துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கமாம்
அவா அறு ஈரை வகை அங்கம் ஆறும்
தவா அறு வேதாந்த சித்தாந்த தன்மை
நவா அகமோடு உன்னல் நல் சுத்த சைவமே

மேல்

#1900
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கு முத்திரை கண்ட சமயமே

மேல்

#1901
தூ நெறி கண்ட சுவடு நடு எழும்
பூ நெறி கண்டது பொன் அகமாய் நிற்கும்
மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே

மேல்

#1902
வளர் பிறையில் தேவர்-தம் பாலின் மன்னி
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி
தளர்வு இல் பிதிர் பதம் தங்கி சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே

மேல்

#1903
தான் இவை ஒக்கும் சமாதி கைகூடாது
போன வியோகி புகலிடம் போந்து பின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே

மேல்

#1904
தான் இ வகையே புவியோர் நெறி தங்கி
ஆன சிவயோகத்து ஆமாறாம் அ விந்து
தான் அதில் அந்த சிவயோகி ஆகு முன்
ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே

மேல்

#1905
சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால்
தவலோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடி
சிவயோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர்
புவலோகம் போற்று நல் புண்ணியத்தோரே

மேல்

#1906
ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால்
தான் அற மோன சமாதியுள் தங்கியே
தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வுற்றே

மேல்

#1907
செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்து நீர் சேர்வது சித்தினை கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே

மேல்

#1908
உன்ன கருவிட்டு உரவோன் அரன் அருள்
பன்ன பரனே அருட்குலம் பாலிப்பன்
என்ன புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி
தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே

மேல்

#1909
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்து
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல்
இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே

மேல்

#1910
அந்தம்_இல் ஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடு எலாம் வெப்புற தீயினில்
நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு
வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே

மேல்

#1911
எண்_இலா ஞானி உடல் எரி தாவிடில்
அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணின் மழை விழா வையகம் பஞ்சமாம்
எண்_அரு மன்னர் இழப்பார் அரசே

மேல்

#1912
புண்ணியமாம் அவர் தம்மை புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே

மேல்

#1913
அந்தம்_இல் ஞானி அருளை அடைந்த-கால்
அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தம்_இல் இன்ப அருள் பெறுவாரே

மேல்

#1914
நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து
குவை மிகு சூழ ஐம் சாண் ஆக கோட்டி
தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கி
பவம் அறு நல்குகை பத்மாசனமே

மேல்

#1915
தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை
நல் மலர் சோலை நகரின் நல் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே

மேல்

#1916
நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாத நவ பாத நேர்விழ
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே

மேல்

#1917
பஞ்சலோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப்படுத்ததன் மேல் ஆசனம் இட்டு
முஞ்சிப்படுத்து வெண்ணீறு இட்டு அதன் மேலே
பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே

மேல்

#1918
நள் குகை நால் வட்டம் படுத்ததன் மேல் சார
கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும்
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே

மேல்

#1919
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து
போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடுவீரே

மேல்

#1920
விரித்த பின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறி போனகம் இளநீரும்
குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை
தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே

மேல்

#1921
மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உகத்தால் மஞ்சனம் செய்து பார்
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே

மேல்

#1922
ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து
மேதகு சந்நிதி மேவு தரம் பூர்வம்
காதலில் சோடசம் காண் உபசாரமே

மேல்

#1923
உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும்
உதய குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதிகள் மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே

மேல்

#1924
செய்திடும் விந்து பேத திறன் ஐயைந்தும்
செய்திடும் நாத பேத திறனால் ஆறும்
செய்திடும் மற்று அவை ஈரிரண்டில் திறம்
செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே

மேல்

#1925
வந்திடு பேதம் எலாம் பரவிந்து மேல்
தந்திடு மா மாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இ நான்கும் மேவா விளங்குமே

மேல்

#1926
விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகராதி
வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து
களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி
உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே

மேல்

#1927
அந்தமும் ஆதியும் ஆகி பராபரன்
வந்த வியாபி எனலாய அ நெறி
கந்தம் அது ஆகிய காரண காரியம்
தந்து ஐங்கருமமும் தான் செய்யும் வீயமே

மேல்

#1928
வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்ப
காய ஐம்பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே

மேல்

#1929
புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து
நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை
உற மகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே

மேல்

#1930
கொண்ட இ விந்து பரமம் போல் கோது அற
நின்ற படம் கடமாய் நிலைநிற்றலில்
கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மா மாயை ஆகுமே

மேல்

#1931
அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி
இது வித்திலே உள ஆற்றை உணரார்
மது வித்திலே மலர் அன்னம் அது ஆகி
பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே

மேல்

#1932
வித்தினில் அன்றி முளை இல்லை அ முளை
வித்தினில் அன்றி வெளிப்படுமாறு இல்லை
வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல
அ தன்மை ஆகும் அரன்நெறி காணுமே

மேல்

#1933
அருந்திய அன்னம் அவை மூன்று கூறாம்
பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்ன
திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே

மேல்

#1934
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒரு புல் பனி போல்
அரிய துளி வந்து ஆகும் ஏழ்மூன்றின்
மருவிய விந்து வளரும் காயத்திலே

மேல்

#1935
காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு
காயத்துள் தன் மனம் ஆகும் கலா விந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே

மேல்

#1936
அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே

மேல்

#1937
பார்க்கின்ற மாதரை பாராது அகன்று போய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி
பார்க்கின்ற கண் ஆசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே

மேல்

#1938
தானே அருளால் சிவயோகம் தங்காது
தானே அ காமாதி தங்குவோனும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும்
ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே

மேல்

#1939
மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில்
ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள்
ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே

மேல்

#1940
ஆறு ஐந்து பன்னொன்றும் அன்றி சகமார்க்கம்
வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம் தோடு
ஏறும் இருபத்தொரு நாளிடை தோங்கும்
ஆறின் மிகுத்து ஓங்கும் அ காலம் செய்யவே

மேல்

#1941
செய்யும் அளற்று இருநால் முகூர்த்தமே
எய்யும் கலை காலம் இந்து பருதி கால்
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி
செய்க வலமிடம் தீர்ந்து விடுக்கவே

மேல்

#1942
விடும் காண் முனைந்து இந்திரியங்களை போல்
நடுங்காது இருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
படும் காதல் மாதின்-பால் பற்று அற விட்டு
கடுங்கால் கரணம் கருத்துற கொண்டே

மேல்

#1943
கொண்ட குணனே நலனே நல் கோமளம்
பண்டை உருவே பகர் வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உள் செல்ல கண்டு ஏவிடே

மேல்

#1944
விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே
தொட்டுறும் காலங்கள் தோன்ற கருதிய
கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மை சீர்
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே

மேல்

#1945
பார்த்திட்டு வைத்து பரப்பு அற்று உரு பெற்று
வார் செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இரு திங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம் உள்ளவே

மேல்

#1946
வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை
வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை
வித்தினில் வித்தை விது அற உணர்வரேல்
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே

மேல்

#1947
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும்
கருத்தது வித்தாய் காரண காரியம்
கருத்து உறுமாறு இவை கற்பனை தானே

மேல்

#1948
ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும்
அழியா பிராணன் அதி பலம் சத்தி
ஒழியாத புத்தி தபம் செபம் மோனம்
அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே

மேல்

#1949
வற்ற அனலை கொளுவி மறித்து ஏற்றி
உற்ற சுழி அனல் சொருகி சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்று உண்பவரே சிவயோகியாரே

மேல்

#1950
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறை அமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே

மேல்

#1951
அண்ணல் உடலாகி அ அனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடை கட்டி கலந்து எரித்து
உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே

மேல்

#1952
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின்றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரிய
செறிவாய் இருந்து சேரவே மாயுமே

மேல்

#1953
மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்ன
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே

மேல்

#1954
காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன்
காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன்
காலங்களின் விந்து செற்றுற்ற காரிகை
காலின்-கண் வந்த கலப்பு அறியாரே

மேல்

#1955
கலக்கு நாள் முன்னாள் தன்னிடை காதல்
நல தக வேண்டில் அ நாரி உதர
கலத்தின் மலத்தை தண் சீதத்தை பித்தை
விலக்குவன செய்து மேல் அணைவீரே

மேல்

#1956
மேலாம் நிலத்து எழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்தி குறிவழியே சென்று
பாலாம் அமிர்து உண்டு பற்று அற பற்றினால்
மால் ஆனது மாள மாளும் அ விந்துவே

மேல்

#1957
விந்து விளையும் விளைவின் பயன் முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாதமும் நாதத்தால் பேதமும்
தந்து உணர்வோர்க்கு சயம் ஆகும் விந்துவே

மேல்

#1958
விந்து என் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியினாலே நயம் தெரித்து
அந்தம்_இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றி
சந்திரன் சார்புற தண் அமுது ஆமே

மேல்

#1959
அமுத சசி விந்து ஆம் விந்து மாள
அமுத புனல் ஓடி அங்கியின் மாள
அமுத சிவ போகம் ஆதலால் சித்தி
அமுத பலாவனம் ஆங்குறும் யோகிக்கே

மேல்

#1960
யோகம் அ விந்து ஒழியா வகை புணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா
போகம் சிவபோகம் போகி நல் போகமா
மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே

மேல்

#1961
மாதரிடத்தே செலுத்தினும் அ விந்து
காதலினால் விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிர் ஆசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே

மேல்

#1962
சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால்
ஏற்றிய மூலத்து அழலை எழ மூட்டி
நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே

மேல்

#1963
விந்துவும் நாதமும் மேவ கனல் மூல
வந்தவன் நன் மயிர்க்கால்-தோறும் மன்னிட
சிந்தனை மாற சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும் மெய் காயத்தில் வித்திலே

மேல்

#1964
வித்து குற்று உண்பான் விலை அறியாதவன்
வித்து குற்று உண்ணாமல் வித்து சுட்டு உண்பவன்
வித்து குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன்
வித்து குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே

மேல்

#1965
அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு
மன்ன பிராணனாம் விந்து மறித்திட்டு
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட
வன்ன திரு விந்து மாயும் காயத்திலே

மேல்

#1966
அன்னம் பிராணன் என்றார்க்கும் இரு விந்து
தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்கு
சொன்னமுமாம் உரு தோன்றும் எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே

மேல்

#1967
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை
சென்று பராசத்தி விந்து சயம் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே

மேல்

#1968
தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை
வானே உயர் விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே

மேல்

#1969
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்த இ பல் உயிர் மன் உயிர்க்கு எலாம்
அந்தமும் ஆதியுமாம் மந்திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே

மேல்

#1970
வறுக்கின்றவாறும் மனத்து உலா வெற்றி
நிறுக்கின்றவாறும் அ நீள் வரை ஒட்டி
பொறிக்கின்றவாறும் அ பொல்லா வினையை
அறுக்கின்ற நாள் வரும் அத்தி பழமே

மேல்

#1971
விந்துவும் நாதமும் மேவி உடன் கூடி
சந்திரனோடே தலைப்படும் ஆயிடில்
அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே

மேல்

#1972
மனத்தொடு சத்து மனம் செவி அன்ன
இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அ காமத்தை நாடிலே

மேல்

#1973
சத்தமும் சத்த மனமும் மன கருத்து
ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அ இடம் தானே

மேல்

#1974
உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவியதன் முலை மேவிய கீழ் அங்கி
கரு முலை மீமிசை கை கீழில் காலாம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே

மேல்

#1975
செஞ்சுடரோன் முதல் ஆகிய தேவர்கள்
மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம்
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி
அம் சுடர் ஆக வணங்கும் தவமே

மேல்

#1976
பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம்
புகலவனாய் நின்ற புண்ணிய நாதன்
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும்
பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே

மேல்

#1977
ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும்
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்றவாறே

மேல்

#1978
தானே உலகுக்கு தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்கு சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே

மேல்

#1979
வலைய முக்கோணம் வட்டம் அறுகோணம்
துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட்டு இதழாம்
மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே

மேல்

#1980
ஆதித்தன் உள்ளில் ஆன முக்கோணத்தில்
சோதித்து இலங்கும் நல் சூரியன் நாலாம்
கேதமுறும் கேணி சூரியன் எட்டில்
சோதி-தன் ஈரெட்டில் சோடசம் தானே

மேல்

#1981
ஆதித்தனோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றி கழிந்தது
சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற
வேதப்பொருளை விளங்குகிலீரே

மேல்

#1982
பாருக்கு கீழே பகலோன் வரும் வழி
யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே

மேல்

#1983
மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும்
கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே

மேல்

#1984
பாரை இடந்து பகலோன் வரும் வழி
யாரும் அறியார் அரும் கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ் என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே

மேல்

#1985
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல் வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே

மேல்

#1986
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம்
ஆதித்தனோடே அடங்குகின்றாரே

மேல்

#1987
உருவி புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக்கிடக்கும் துறை அறிவார் இல்லை
சொருகிக்கிடக்கும் துறை அறிவாளர்க்கு
உருகிக்கிடக்கும் என் உள்ளன்பு தானே

மேல்

#1988
எறி கதிர் ஞாயிறு மின் பனி சோரும்
எறி கதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே

மேல்

#1989
சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே

மேல்

#1990
ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி
ஆகும் கலையிடை நான்கு எனலாம் என்பார்
ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற
ஆகும் அ பூரனை ஆம் என்று அறியுமே

மேல்

#1991
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அ ஒளி
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது
பேரண்டத்தூடே பிறங்கு ஒளியாய் நின்றது
ஆர் அண்டத்தக்கார் அரியத்தக்காரே

மேல்

#1992
ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும்
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை
முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார்
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே

மேல்

#1993
விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து
அந்த அபரம் பரம் நாதம் ஆகியே
வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து
உந்தும் அருணோதயம் என்ன உள்ளத்தே

மேல்

#1994
உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான்
தெள்ளும் பரநாதத்தின் செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே

மேல்

#1995
தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும்
மூவர் பிரான் என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே

மேல்

#1996
பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை
மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று
கை இருள் நீங்க கலந்து எழுந்தானே

மேல்

#1997
தனிச்சுடர் எற்றி தயங்கு இருள் நீங்க
அனித்திடும் மேலை அரும் கனி ஊறல்
கனி சுடராய் நின்ற கயிலையில் ஈசன்
நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே

மேல்

#1998
நேர் அறிவாக நிரம்பிய பேரொளி
போர் அறியாது புவனங்கள் போய் வரும்
தேர் அறியாத திசை ஒளியாய் இடும்
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே

மேல்

#1999
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன்
கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும்
சென்றிடத்து எட்டு திசை எங்கும் போய்வரும்
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே

மேல்

#2000
நாபி கண் நாசி நயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடும் சோதியை
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே

மேல்

#2001
அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும்
சென்றிடு ஞான சிவப்பிரகாசத்தால்
ஒன்றும் இரு சுடராம் அருணோதயம்
துன்று இருள் நீங்குதல் போல தொலைந்ததே

மேல்

#2002
கடம்கடம்-தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அ பரிசு ஆமே

மேல்

#2003
தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும்
தானே அயன் மால் என நின்று தாபிக்கும்
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன்
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே

மேல்

#2004
தெய்வ சுடர் அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல் அனல் மாருதம் வானகம்
சைவ பெரும்பதி தாங்கிய பல் உயிர்
ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே

மேல்

#2005
உன்னும் அளவில் உணரும் ஒருவனை
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்னமயம் என்று அறிந்து கொண்டேனே

மேல்

#2006
அன்னம் இரண்டு உள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைபிரியாது அன்ன
தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்ற-கால்
பின்ன மட அன்னம் பேறு அணுகாதே

மேல்

#2007
வைகரி ஆதியும் மாயா மலாதியும்
பொய் கரி ஆன புருடாதி பேதமும்
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்து
செய் கரி ஈசன் அனாதியே செய்ததே

மேல்

#2008
அணுவில் அணுவினை ஆதி பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே

மேல்

#2009
படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போல
சுடர் கொண்ட அணுவினை தூவழி செய்ய
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி
நடர் கொண்ட நல் வழி நாடலும் ஆமே

மேல்

#2010
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணு அற நின்ற கலப்பது உணரார்
இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி
தணிவு அற நின்றான் சராசரம் தானே

மேல்

#2011
மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில்
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே

மேல்

#2012
ஏனோர் பெருமையின் ஆயினும் எ இறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே

மேல்

#2013
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும்
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னை
கண்டு சிவன் உரு கொள்வர் கருத்துளே

மேல்

#2014
மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து
ஆய குரு அருளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர்
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே

மேல்

#2015
கற்ற பசுக்கள் கதறி திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
மற்றை பசுக்கள் வறள் பசு தானே

மேல்

#2016
கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என்
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே

மேல்

#2017
சீவன் என சிவன் என்ன வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே

மேல்

#2018
குண விளக்கு ஆகிய கூத்தப்பிரானும்
மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம்
பண விளக்கு ஆகிய பல் தலை நாகம்
கண விளக்கு ஆகிய கண்காணி ஆகுமே

மேல்

#2019
அறிவாய் அறியாமை நீங்கி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவு ஆகி நின்ற அ சீவனும் ஆகுமே

மேல்

#2020
ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே

மேல்

#2021
சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார்
அவமாம் மலம் ஐந்தும் ஆவது அறியார்
தவம் ஆன செய்து தலைப்பறிகின்றார்
நவம் ஆன தத்துவம் நாடகிலாரே

மேல்

#2022
நாள்-தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார்
நாள்-தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார்
நாள்-தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கலால்
நாள்-தோறும் நாடார்கள் நாள் வினையாளரே

மேல்

#2023
ஆக மதத்தன ஐந்து களிறு உள
ஆக மத தறியோடு அணைகின்றில
பாகனும் எய்த்து அவை தாமும் இளைத்த பின்
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே

மேல்

#2024
கருத்தின் நல் நூல் கற்று கால்கொத்தி பாகன்
திருத்தலும் பாய்மா திகைத்தன்றி பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழி நடவாதே

மேல்

#2025
புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம் வழி ஒன்பது தானே

மேல்

#2026
அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே

மேல்

#2027
ஐவர் அமைச்சருள் தொண்ணூற்றறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆள கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க்கு இறையிறுத்து ஆற்றகிலோமே

மேல்

#2028
சொல்லகில்லேன் சுடர் சோதியை நாள்-தொறும்
சொல்லகில்லேன் திருமங்கையும் அங்கு உள
வெல்லகில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்ல நின்றோடும் குதிரை ஒத்தேனே

மேல்

#2029
எண்_இலி இல்லி அடைத்து அ இருட்டறை
எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே

மேல்

#2030
விதியின் பெரு வலி வேலை சூழ் வையம்
துதியின் பெரு வலி தொல்வான் உலகம்
மதியின் பெரு வலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெரு வலி நீர் வலி தானே

மேல்

#2031
குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம்
வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே

மேல்

#2032
கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம்
அடக்கலுமுறும் அவன் தானே அமரன்
விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே

மேல்

#2033
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

மேல்

#2034
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி
கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே

மேல்

#2035
ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே

மேல்

#2036
பெருக்க பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என்
விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம்
பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே

மேல்

#2037
இளைக்கின்றவாறு அறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன்
தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க
துளை கொண்டது அ வழி தூங்கும் படைத்தே

மேல்

#2038
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி
சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டு இட்டு
ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில்
வேய்ந்து கொள் மேலை விதி அது தானே

மேல்

#2039
நடக்கின்ற நந்தியை நாள்-தோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையை பைய ஒடுக்கி
குறிக்கொண்ட சிந்தை குறி வழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே

மேல்

#2040
சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடு-மின்கள்
குன்று விழ அதில் தாங்கலும் ஆமே

மேல்

#2041
போற்றி இசைத்து புனிதன் திருமேனியை
போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால்
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே

மேல்

#2042
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்றவாறு சிலபல பேசில்
வரி கொண்ட மை சூழ் வரை அது ஆமே

மேல்

#2043
கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்து-மின்
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வருடைய புலன்களும் ஐந்தே

மேல்

#2044
உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன்
கணு இன்றி வேதாகம நெறி காணான்
பணி ஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே

மேல்

#2045
மந்திர தந்திர மா யோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்து பார்ப்பவர்
சிந்தனை செய்யா தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு ஆமே

மேல்

#2046
ஆமாறு அறியாதோன் மூடன் அதி மூடன்
காமாதி நீங்கா கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்து அறிவிப்போன் அறிவிலோன்
கோமான் அலன் அசத்து ஆகும் குரவனே

மேல்

#2047
கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே

மேல்

#2048
குருடர்க்கு கோல்காட்டி செல்லும் குருடர்
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன் பின்
குருடரும் வீழ்வர்கள் முன் பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே

மேல்

#2049
தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள் தந்து தன்னை அறிய தர வல்லோன்
தாள் தந்து தத்துவாதீதத்து சார் சீவன்
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே

மேல்

#2050
தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள்
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம்
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்
தவிர வைத்தான் பிறவி துயர் தானே

மேல்

#2051
கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போல
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்து பிறவியில் வந்து அணுகானே

மேல்

#2052
பாசத்தை நீக்கி பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம் அற நீக்குவோர்
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்று
பூசற்கு இரங்குவோர் போத குரு அன்றே

மேல்

#2053
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற
நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே

மேல்

#2054
பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே

மேல்

#2055
தானே என நின்ற சற்குரு சந்நிதி
தானே என நின்ற தன்மை வெளிப்படில்
தானே தனை பெற வேண்டும் சதுர் பெற
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே

மேல்

#2056
வரும் வழி போம் வழி மாயா வழியை
கருவழி கண்டவர் காணா வழியை
பெரும் வழியா நந்தி பேசும் வழியை
குரு வழியே சென்று கூடலும் ஆமே

மேல்

#2057
குரு என்பவனே வேதாகமம் கூறும்
பரஇன்பன் ஆகி சிவயோகம் பாவித்து
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி
வரு நல் குரவன்-பால் வைக்கலும் ஆமே

மேல்

#2058
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் காட்டி
சித்தும் அசித்தும் சிவபரத்தே சேர்த்து
சுத்தம் அசுத்தம் அற சுகமான சொல்
அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே

மேல்

#2059
உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்று அறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே

மேல்

#2060
எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்
வல்லார் புலனும் வரும்-கால் உயிர் தோன்றி
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே
செல்லா சிவகதி சேர்தல் விளையாட்டே

மேல்

#2061
ஈன பிறவியில் இட்டது மீட்டு ஊட்டி
தானத்துள் இட்டு தனை ஊட்டி தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்-தன் செய்கையே

மேல்

#2062
அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம்
சித்தொடு சித்து அற தெளிவித்த சீவனை
சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை
சத்துடன் ஐங்கருமத்து இடும் தன்மையே

மேல்

#2063
ஈசத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம்
பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை
நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை
தேசத்தை எல்லாம் தெளியவைத்தானே

மேல்

#2064
மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம்
ஆணிப்பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது
பேணி கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே

மேல்

#2065
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாச பற்று ஈங்கு அறுமாறே
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்று அறிவிப்போன் இறையே

மேல்

#2066
ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால்
மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே

மேல்

#2067
கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம் இல்லை காணும்-கால்
கண்காணி ஆக கலந்து எங்கும் நின்றானை
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே

மேல்

#2068
செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்து
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே

மேல்

#2069
பத்தி விற்று உண்டு பகலை கழிவிடு
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்து குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே

மேல்

#2070
வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானம் இலாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடையோர்க்கே

மேல்

#2071
காய குழப்பனை காய நல் நாடனை
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை
தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்து அறியாரே

மேல்

#2072
கண்காணியாகவே கை அகத்தே எழும்
கண்காணியாக கருத்துள் இருந்திடும்
கண்காணியாக கலந்து வழி செய்யும்
கண்காணி ஆகிய காதலன் தானே

மேல்

#2073
கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை
மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை
என் இது ஈசன் இயல்பு அறியாரே

மேல்

#2074
காணாத கண்ணில் படலமே கண் ஒளி
காணாதவர்கட்கும் காணாத அ ஒளி
காணாதவர்கட்கும் கண் ஆம் பெரும் கண்ணை
காணாது கண்டார் களவு ஒழிந்தாரே

மேல்

#2075
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி
அ தன்மை ஆதல் போல் நந்தி அருள் தர
சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே

மேல்

#2076
பிரான்மயம் ஆக பெயர்ந்தன எட்டும்
பரா மயம் என்று எண்ணி பள்ளி உணரார்
சுரா மயம் உன்னிய சூழ்வினையாளர்
நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே

மேல்

#2077
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம்
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே

மேல்

#2078
உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும்
அயர் அறிவு இல்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும்
பயிரும் கிடந்து உள்ள பாங்கு அறியாரே

மேல்

#2079
உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும்
உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கு அறியாரே

மேல்

#2080
உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும்
சில ஆணி ஆகிய தேவர் பிரானை
தலைவாணி செய்வது தன்னை அறிவதே

மேல்

#2081
தான் அந்தமாம் என நின்ற தனிச்சுடர்
ஊன் அந்தமாய் உலகாய் நின்ற ஒண் சுடர்
தேன் அந்தமாய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி
கோன் அந்தம் இல்லா குணத்து அருள் ஆமே

மேல்

#2082
உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும்
கல்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை
நல் முதல் ஏறிய நாமம் அற நின்றால்
தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே

மேல்

#2083
இந்தியம் அந்த கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது
தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும்
முந்து உளம் மன்னும் ஆறாறு முடிவிலே

மேல்

#2084
வித்து பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்ற தம் வாழ்நாள் அறிகிலா பாவிகள்
உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார்
முற்று ஒளி தீயின் முனிகின்றவாறே

மேல்

#2085
போது சடக்கென போகின்றது கண்டும்
வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறியகில்லார்களே

மேல்

#2086
கடன் கொண்டு நெல் குத்து கையரை ஊட்டி
உடம்பினை ஓம்பி உயிரா திரிவர்
தடம்கொண்ட சாரல் தழல் முருடு ஏறி
இடம்கொண்டு உடலார் கிடக்கின்றவாறே

மேல்

#2087
விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன
பரம் தன்னை ஓரா பழிமொழியாளர்
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே

மேல்

#2088
நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும்
என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும்
அன்றி உலகம் அது இது தேவென்று
குன்று கையாலே குறைப்பட்டவாறே

மேல்

#2089
இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து
இன்பத்துளே நினைக்கின்ற இது மறந்து
துன்பத்துளே சிலர் சோறொடு கூறை என்று
துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே

மேல்

#2090
பெறுதற்கு அரிய பிறவியை பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியது ஓர் பேறு இழந்தாரே

மேல்

#2091
ஆர்வ மனமும் அளவு இல் இளமையும்
ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்து
தீர வருவது ஓர் காம தொழில் நின்று
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே

மேல்

#2092
இ பரிசே இளஞாயிறு போல் உரு
அ பரிசு அங்கியின் உள் உறை அம்மானை
இ பரிசே கமலத்து உறை ஈசனை
மெய் பரிசே வினவாது இருந்தோமே

மேல்

#2093
கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு
நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள்
பாடகில்லார் அவன் செய்த பரிசு அறிந்து
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே

மேல்

#2094
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர்
நஞ்சு எம் பிரான் என்று நாதனை நாள்-தொறும்
துஞ்சும் அளவும் தொழு-மின் தொழாவிடில்
அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே

மேல்

#2095
மிருகம் மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர் செய்த அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார் பயன் கொள்வர்
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே

மேல்

#2096
நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனை
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை
ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று
நாதியே வைத்து அது நாடுகின்றேனே

மேல்

#2097
இரும் தேன் மலர் அளைந்து இன்புற வண்டு
பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வரும் தேன் நுகராது வாய் புகு தேனை
அரும் தேனை யாரும் அறியகிலாரே

மேல்

#2098
கருத்து அறியாது கழிந்தன காலம்
அருத்தி உள்ளான் அமராபதி நாதன்
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம்
வருத்தி நில்லாது வழுக்குகின்றாரே

மேல்

#2099
குதித்து ஓடி போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே

மேல்

#2100
கரை அருகு ஆறா கழனி விளைந்த
திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும்
வரை அருகு ஊறிய மா தவம் நோக்கின்
நரை உருவா செல்லும் நாள் இலவாமே

மேல்

#2101
வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து
இரவு அறிவானை எழும் சுடர் சோதியை
அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று
விரவு அறியாமலே மேல் வைத்தவாறே

மேல்

#2102
மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி
இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்து அலமந்து படு துயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தை செய்யீரே

மேல்

#2103
செல்லும் அளவும் செலுத்து-மின் சிந்தையை
வல்ல பரிசால் உரை-மின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை
நல்ல வரன் நெறி நாடு-மின் நீரே

மேல்

#2104
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினை-மின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே

மேல்

#2105
போற்றிசெய் அம் தண் கயிலை பொருப்பனை
நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனை
காற்று இசைக்கும் கமழ் ஆக்கையை கைக்கொண்டு
கூற்று உதைத்தான் தன்னை கூறி நின்று உய்-மின்னே

மேல்

#2106
இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில்
புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின்
எக்காலத்து இ உடல் வந்து எமக்கு ஆனது என்
அ காலம் உன்ன அருள் பெறலாமே

மேல்

#2107
போகின்ற ஆறே புகுகின்ற அ பொருள்
ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடு-மின்
ஆகின்ற அ பொருள் அக்கரை ஆகுமே

மேல்

#2108
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னை
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே

மேல்

#2109
கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனை
பாடி உளே நின்று பாதம் பணி-மின்கள்
ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு
நீடிய ஈற்று பசு அது ஆமே

மேல்

#2110
விடுகின்ற சீவனார் மேல் எழும்-போது
நடு நின்று நாடு-மின் நாதன்-தன் பாதம்
கெடுகின்ற வல் வினை கேடு இல் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவரோடே

மேல்

#2111
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே

மேல்

#2112
இன்புறுவீர் அறிந்தே எம் இறைவனை
அன்புறுவீர் தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்து
பண்புறுவீர் பிறவி தொழிலே நின்று
துன்புறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே

மேல்

#2113
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே

மேல்

#2114
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன்
பேர்ந்து அவர்க்கு இன்னா பிறவி கொடுத்திடும்
கூர்ந்து அவர்க்கே குரை கழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரை சென்று உணர்வாரே

மேல்

#2115
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன்
அத்தகு சோதி அது விரும்பாரே

மேல்

#2116
நியமத்தன் ஆகிய நின்மலன் வைத்த
உகம் எத்தனை என்று ஒருவரும் தேறார்
பவமத்திலே வந்து பாய்கின்றதல்லால்
சிவம் அத்தை ஒன்றும் தெளியகில்லாரே

மேல்

#2117
இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சு ஒத்த காலத்து தூய் மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை
நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே

மேல்

#2118
பஞ்சமும் ஆம் புவி சற்குரு-பால் முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்-தம்மை
அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும்
செஞ்ச நிற்போரை தெரிசிக்க சித்தியே

மேல்

#2119
சிவனை வழிபட்டார் எண்_இலா தேவர்
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்று இல்லை
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடில் கூடலும் ஆமே

மேல்

#2120
நரரும் சுரரும் பசு பாசம் நண்ணி
கருமங்களாலே கழிதலில் கண்டு
குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால்
பரம் என்றல் அன்றி பகர் ஒன்றும் இன்றே

மேல்

#2121
ஆட்கொண்டவர் தனிநாயகன் அன்புற
மேற்கொண்டவர் வினை போய் அற நாள்-தொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே

மேல்