திருக்கோவையார்

அதிகாரங்கள்
1.இயற்கைப்புணர்ச்சி

2.பாங்கற் கூட்டம்

3.இடந்தலைப்பாடு

4.மதியுடம்படுதல்

5.இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்

6.முன்னுறவுணர்தல்

7.குறையுறவுணர்தல்

8.நாண நாட்டம்
9.நடுங்க நாட்டம்
10.மடல் திறம்

11.குறைநயப்புக்கூறல்

12.சேட்படை

13.பகற்குறி

14.இரவுக்குறி

15.ஒருவழித்தணத்தல்

16.உடன்போக்கு
17.வரைவுமுடுக்கம்

18.வரைபொருட்பிரிதல்

19.மணம்சிறப்புரைத்தல்

20.ஓதற்பிரிவு

21.காவற்பிரிவு

22.பகைதணிவினைப்பிரிவு

23.வேந்தற்கு உற்றுழிப்பிரிவு

24.பொருள்வயின் பிரிவு

25.பரத்தையிற்பிரிவு

பாடல் எண்கள்

1 || 101 || 201 || 301

2 || 102 || 202 || 302

3 || 103 || 203 || 303

4 || 104 || 204 || 304

5 || 105 || 205 || 305

6 || 106 || 206 || 306

7 || 107 || 207 || 307

8 || 108 || 208 || 308

9 || 109 || 209 || 309

10 || 110 || 210 || 310

11 || 111 || 211 || 311

12 || 112 || 212 || 312

13 || 113 || 213 || 313

14 || 114 || 214 || 314

15 || 115 || 215 || 315

16 || 116 || 216 || 316

17 || 117 || 217 || 317

18 || 118 || 218 || 318

19 || 119 || 219 || 319

20 || 120 || 220 || 320

21 || 121 || 221 || 321

22 || 122 || 222 || 322

23 || 123 || 223 || 323

24 || 124 || 224 || 324

25 || 125 || 225 || 325

26 || 126 || 226 || 326

27 || 127 || 227 || 327

28 || 128 || 228 || 328

29 || 129 || 229 || 329

30 || 130 || 230 || 330

31 || 131 || 231 || 331

32 || 132 || 232 || 332

33 || 133 || 233 || 333

34 || 134 || 234 || 334

35 || 135 || 235 || 335

36 || 136 || 236 || 336

37 || 137 || 237 || 337

38 || 138 || 238 || 338

39 || 139 || 239 || 339

40 || 140 || 240 || 340

41 || 141 || 241 || 341

42 || 142 || 242 || 342

43 || 143 || 243 || 343

44 || 144 || 244 || 344

45 || 145 || 245 || 345

46 || 146 || 246 || 346

47 || 147 || 247 || 347

48 || 148 || 248 || 348

49 || 149 || 249 || 349

50 || 150 || 250 || 350

51 || 151 || 251 || 351

52 || 152 || 252 || 352

53 || 153 || 253 || 353

54 || 154 || 254 || 354

55 || 155 || 255 || 355

56 || 156 || 256 || 356

57 || 157 || 257 || 357

58 || 158 || 258 || 358

59 || 159 || 259 || 359

60 || 160 || 260 || 360

61 || 161 || 261 || 361

62 || 162 || 262 || 362

63 || 163 || 263 || 363

64 || 164 || 264 || 364

65 || 165 || 265 || 365

66 || 166 || 266 || 366

67 || 167 || 267 || 367

68 || 168 || 268 || 368

69 || 169 || 269 || 369

70 || 170 || 270 || 370

71 || 171 || 271 || 371

72 || 172 || 272 || 372

73 || 173 || 273 || 373

74 || 174 || 274 || 374

75 || 175 || 275 || 375

76 || 176 || 276 || 376

77 || 177 || 277 || 377

78 || 178 || 278 || 378

79 || 179 || 279 || 379

80 || 180 || 280 || 380

81 || 181 || 281 || 381

82 || 182 || 282 || 382

83 || 183 || 283 || 383

84 || 184 || 284 || 384

85 || 185 || 285 || 385

86 || 186 || 286 || 386

87 || 187 || 287 || 387

88 || 188 || 288 || 388

89 || 189 || 289 || 389

90 || 190 || 290 || 390

91 || 191 || 291 || 391

92 || 192 || 292 || 392

93 || 193 || 293 || 393

94 || 194 || 294|| 394

95 || 195 || 295 || 395

96 || 196 || 296 || 396

97 || 197 || 297 || 397

98 || 198 || 298 || 398

99 || 199 || 299 || 399

100 || 200 || 300 || 400


களவியல் – முதல் அதிகாரம்

1 இயற்கைப் புணர்ச்சி

1.1 காட்சி

#1
திரு வளர் தாமரை சீர் வளர் காவிகள் ஈசர் தில்லை
குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ
மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து
உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே

மேல்
*1.2. ஐயம்

#2
போதா விசும்போ புனலோ பணிகளது பதியோ
யாதோ அறிகுவது ஏதும் அரிது யமன் விடுத்த
தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லை தில்லை
மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே

மேல்
*1.3. தெளிதல்

#3
பாயும் விடை அரன் தில்லை அன்னாள் படை கண் இமைக்கும்
தோயும் நிலத்து அடி தூ மலர் வாடும் துயரம் எய்தி
ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து
தேயும் மருங்குல் பெரும் பணை தோள் இ சிறு_நுதலே

மேல்
*1.4. நயப்பு

#4
அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ
புகல்கின்றது என்னை நெஞ்சு உண்டே இடை அடையார் புரங்கள்
இகல் குன்ற வில்லில் செற்றோன் தில்லை ஈசன் எம்மான் எதிர்ந்த
பகல் குன்ற பல் உகுத்தோன் பழனம் அன்ன பல் வளைக்கே

மேல்
*1.5. உட்கோள்

#5
அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லை சிந்தா
மணி உம்பரார் அறியா மறையோன் அடி வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழ மின்னும்
பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படை கண்களே

மேல்
*1.6. தெய்வத்தை மகிழ்தல்

#6
வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின்
துளை வழி நேர் கழி கோத்து என தில்லை தொல்லோன் கயிலை
கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த
விளைவை அல்லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே

மேல்
*1.7. புணர்ச்சி துணிதல்

#7
ஏழு உடையான் பொழில் எட்டு உடையான் புயம் என்னை முன் ஆள்
ஊழ் உடையான் புலியூர் அன்ன பொன் இ உயர் பொழில் வாய்
சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையா மனனே
யாழ் உடையார் மணம் காண் அணங்காய் வந்து அகப்பட்டதே

மேல்
*1.8. கல்வியுரைத்தல்

#8
சொற்பால் அமுது இவள் யான் சுவை என்ன துணிந்து இங்ஙனே
நற்பால் வினை தெய்வம் தந்து இன்று நான் இவள் ஆம் பகுதி
பொற்பு ஆர் அறிவார் புலியூர் புனிதன் பொதியில் வெற்பில்
கல் பாவிய வரைவாய் கடிது ஓட்ட களவகத்தே

மேல்
*1.9. இருவயின் ஒத்தல்

#9
உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன் தில்லை சிற்றம்பலத்து ஒருத்தன்
குணம் தான் வெளிப்பட்ட கொவ்வை செ வாய் இ கொடி இடை தோள்
புணர்ந்தால் புணரும்-தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்
மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே

மேல்
*1.10. கிளவி வேட்டல்

#10
அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல்
வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின்
பிளவு இயல் மின் இடை பேர் அமை தோள் இது பெற்றி என்றால்
கிளவியை என்றோ இனி கிள்ளையார் வாயில் கேட்கின்றதே

மேல்
*1.11. நலம் புனைந்துரைத்தல்

#11
கூம்பு அல் அம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருக குனிக்கும்
பாம்பு அலங்கார பரன் தில்லை அம்பலம் பாடலரின்
தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும்
ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே

மேல்
*1.12. பிரிவுணர்த்தல்

#12
சிந்தாமணி தெள் கடல் அமிர்தம் தில்லையான் அருளால்
வந்தால் இகழப்படுமே மட மான் விழி மயிலே
அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ
சிந்தாகுலமுற்று என்னோ என்னை வாட்டம் திருத்துவதே

மேல்
*1.13. பருவரல் அறிதல்

#13
கோங்கின் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் குறுகலர் ஊர்
தீங்கில் புக செற்ற கொற்றவன் சிற்றம்பலம் அனையாள்
நீங்கின் புணர்வு அரிது என்றோ நெடிது இங்ஙனே இருந்தால்
ஆங்கு இற்பழி ஆம் எனவோ அறியேன் அயர்கின்றதே

மேல்
*1.14. அருட்குணம் உரைத்தல்

#14
தேவரில் பெற்ற நம் செல்வ கடி வடிவு ஆர் திருவே
யாவரின் பெற்று இனி யார் சிதைப்பார் இமையாத முக்கண்
மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்-வாய்
பூ அரில் பெற்ற குழலி என் வாடி புலம்புவதே

மேல்
*1.15. இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்

#15
வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து
இரும் குன்ற வாணர் இளம்_கொடியே இடர் எய்தல் எம் ஊர்
பரும் குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர்
கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே

மேல்
*1.16. ஆடு இடத்து உய்த்தல்

#16
தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து
அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா
ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன்
துளி வளர் சாரல் கரந்து உங்ஙனே வந்து தோன்றுவனே

மேல்
*1.17. அருமை அறிதல்

#17
புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்பும் தன் பூம் கழலின்
துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய்
இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே

மேல்
*1.18. பாங்கியை அறிதல்

#18
உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன
பயில்கின்ற சென்று செவியுற நீள் படை கண்கள் விண்-வாய்
செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் தில்லை சிற்றம்பலத்து
பயில்கின்ற கூத்தன் அருள் எனல் ஆகும் பணி_மொழிக்கே

மேல்

* இரண்டாம் அதிகாரம்
*2 பாற்கற் கூட்டம்

*2.1. பாங்கனை நினைதல்

#19
பூம் கனை ஆர் புனல் தென் புலியூர் புரிந்து அம்பலத்துள்
ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே
பாங்கனை யான் அன்ன பண்பனை கண்டு இ பரிசு உரைத்தால்
ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே

மேல்
*2.2. பாங்கன் வினாதல்

#20
சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின்
துறை-வாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசை சூழல் புக்கோ
இறைவா தட வரை தோட்கு என்-கொலாம் புகுந்து எய்தியதே

மேல்
*2.3. உற்றது உரைத்தல்

#21
கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும்
பாம்பை பிடித்து படம் கிழித்து ஆங்கு அ பணை முலைக்கே
தேம்பல் துடி இடை மான் மடம் நோக்கி தில்லை சிவன் தாள்
ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே

மேல்
*2.4. கழறியுரைத்தல்

#22
உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய
களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை
வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல்
இளம் மான் விழித்தது என்றோ இன்று எம் அண்ணல் இரங்கியதே

மேல்
*2.5. கழற்றெதிர் மறுத்தல்

#23
சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லை சிற்றம்பலத்து
மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும்
பூணின் பொலி கொங்கை ஆவியை ஓவிய பொன் கொழுந்தை
காணின் கழறலை கண்டிலை மென் தோள் கரும்பினையே

மேல்
*2.6 கவன்றுரைத்தல்

#24
விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட விண்ணும் மண்ணும் முந்நீர்
கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை துன்றும்
அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல்
துலங்கலை சென்று இது என்னோ வள்ளல் உள்ளம் துயர்கின்றதே

மேல்
*2.7. வலியழிவுரைத்தல்

#25
தலைப்படு சால்பினுக்கும் தளரேன் சித்தம் பித்தன் என்று
மலைத்து அறிவார் இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை
மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே

மேல்
*2.8. விதியொடு வெறுத்தல்

#26
நல்வினையும் நயம் தந்தின்று வந்து நடுங்கு மின் மேல்
கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல
வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி
தொல்வினையால் துயரும் எனது ஆருயிர் துப்புறவே

மேல்
*2.9. பாங்கன் நொந்துரைத்தல்

#27
ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போல்
கோலத்தினாள் பொருட்டு ஆக அமிர்தம் குணம் கெடினும்
காலத்தினால் மழை மாறினும் மாறா கவி கை நின் பொன்
சீலத்தை நீயும் நினையாது ஒழிவது என் தீவினையே

மேல்
*2.10. இயல் இடங்கேட்டல்

#28
நின்னுடை நீர்மையும் நீயும் இவ்வாறு நினை தெருட்டும்
என்னுடை நீர்மை இது என் என்பதே தில்லை ஏர் கொள் முக்கண்
மன்னுடை மால் வரையோ மலரோ விசும்போ சிலம்பா
என் இடம் யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ம்_கொடிக்கே

மேல்
*2.11. இயலிடங் கூறல்

#29
விழியால் பிணை ஆம் விளங்கு இயலான் மயில் ஆம் மிழற்று
மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள்
கழியா கழல் தில்லை கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன்
கொழியா திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வமே

மேல்
*2.12. வற்புறுத்தல்

#30
குயிலை சிலம்பு அடி கொம்பினை தில்லை எம் கூத்தப்பிரான்
கயிலை சிலம்பில் பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செ வாய்
மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள்
பயில சிலம்பு எதிர் கூய் பண்ணை நண்ணும் பளிக்கறையே

மேல்
*2.13. குறிவழிச் சேறல்

#31
கொடும் கால் குல வரை ஏழு ஏழ் பொழில் எழில் குன்றும் அன்றும்
நடுங்காதவனை நடுங்க நுடங்கும் நடு உடைய
விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில்
தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே

மேல்
*2.14. குறிவழிக்காண்டல்

#32
வடி கண் இவை வஞ்சி அஞ்சும் இடை இது வாய் பவளம்
துடிக்கின்றவா வெற்பன் சொல் பரிசே யான் தொடர்ந்து விடா
அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல்
படிச்சந்தமும் இதுவே இவளே அ பணி_மொழியே

மேல்
*2.15. தலைவனை வியந்துரைத்தல்

#33
குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்
தவளை பயங்கரமாக நின்று ஆண்ட அவயவத்தின்
இவளை கண்டு இங்கு நின்று அங்கு வந்து அத்துணையும் பகர்ந்த
கவள களிற்று அண்ணலே திண்ணியான் இ கடலிடத்தே

மேல்
*2.16 கண்டமை கூறல்

#34
பணம் தாழ் அரவு அரை சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை
புணர்ந்து ஆங்கு அகன்ற பொரு கரி உன்னி புனத்து அயலே
மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய்
நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே

மேல்
*2.17. செவ்வி செப்பல்

#35
கயல் உளவே கமலத்து அலர் மீது கனி பவளத்து
அயல் உளவே முத்தம் ஒத்த நிரை அரன் அம்பலத்தின்
இயல் உளவே இணை செப்பு வெற்பா நினது ஈர்ம் கொடி மேல்
புயல் உளவே மலர் சூழ்ந்து இருள் தூங்கி புரள்வனவே

மேல்
*2.18. அவ்விடத்து ஏகல்

#36
எயில் குலம் முன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து
குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து
அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி அனம் நடக்கும்
மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே

மேல்
*2.19. மின்னிடை மெலிதல்

#37
ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று அளித்து ஒளித்த
ஆவி அன்னார் மிக்க அவாவினராய் கெழுமற்கு அழிவுற்று
ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம்
ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அரு வரையே

மேல்
*2.20. பொழில்கண்டு மகிழ்தல்

#38
காம்பு இணையால் களி மா மயிலால் கதிர் மா மணியால்
வாம் பிணையால் வல்லி ஒல்குதலால் மன்னும் அம்பலவன்
பாம்பு இணையா குழை கொண்டோன் கயிலை பயில் புனமும்
தேம்பிணை வார் குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே

மேல்
*2.21. உயிரென வியத்தல்

#39
நேயத்ததாய் நென்னல் என்னை புணர்ந்து நெஞ்சம் நெக போய்
ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலம் போல்
தேயத்ததாய் என்றன் சிந்தையதாய் தெரியின் பெரிதும்
மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே

மேல்
*2.22. தளர்வு அகன்று உரைத்தல்

#40
தாது இவர் போது கொய்யார் தையலார் அங்கை கூப்ப நின்று
சோதி வரிப்பந்து அடியார் சுனை புனல் ஆடல்செய்யார்
போது இவர் கற்பக நாடு புல்லென்ன தம் பொன் அடி பாய்
யாது இவர் மா தவம் அம்பலத்தான் மலை எய்துதற்கே

மேல்
*2.23. மொழிபெற வருந்தல்

#41
காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமல
தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறிய சிறிது
மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என்
ஆவி அன்றே அமிழ்தே அணங்கே இன்று அழிகின்றதே

மேல்
*2.24. நாணிக் கண் புதைத்தல்

#42
அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின்
இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் இன்னற்கு இடமாய்
உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை ஒதுங்க
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே

மேல்
*2.25. கண் புதைக்க வருந்தல்

#43
தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர்
சூழ செய்தான் அம்பலம் கைதொழாரின் உள்ளம் துளங்க
போழச்செய்யாமல் வை வேல் கண் புதைத்து பொன்னே என்னை நீ
வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே

மேல்
*2.26. நாண்விட வருந்தல்

#44
குரு நாள்_மலர் பொழில் சூழ் தில்லை கூத்தனை ஏத்தலர் போல்
வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று
ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன் வளர்ந்த
அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே

மேல்
*2.27. மருங்கணைதல்

#45
கோல தனி கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர்-தம்
சீலத்தன கொங்கை தேற்றகிலேம் சிவன் தில்லை அன்னாள்
நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது நுண் தேன் நசையால்
சால தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே

மேல்
*2.28. இன்றியமையாமை கூறல்

#46
நீங்க அரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும்
வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன்
தீம் கரும்பும் அமிழ்தும் செழும் தேனும் பொதிந்து செப்பும்
கோங்கு அரும்பும் தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே

மேல்
*2.29. ஆயத்து உய்த்தல்

#47
சூளாமணி உம்பர்க்கு ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு
ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே
தோளா மணியே பிணையே பல சொல்லி என்னை துன்னும்
நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே

மேல்
*2.30. நின்று வருந்தல்

#48
பொய்யுடையார்க்கு அரன் போல் அகலும் அகன்றால் புணரின்
மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும்
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான்
பை உடை வாள் அரவத்து அல்குல் காக்கும் பைம் பூம் புனமே

மேல்

* மூன்றாம் அதிகாரம்
*3 இடந்தலைப் பாடு

*3.1. பொழிலிடைச் சேறல்

#49
என் அறிவால் வந்தது அன்று இது முன்னும் இன்னும் முயன்றால்
மன் நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின் எறி செம் சடை கூத்தப்பிரான் வியன் தில்லை முந்நீர்
பொன் எறி வார் துறை-வாய் சென்று மின் தோய் பொழிலிடத்தே

மேல்

* நான்காம் அதிகாரம்
*4 மதியுடம்படுத்தல்

*4.1. பாங்கிடைச் சேறல்

#50
எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று
ஒளி சென்ற செம் சடை கூத்தப்பிரானை உன்னாரின் என்-கண்
தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து
அளி சென்ற பூம் குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே

மேல்
*4.2. குறையுறத் துணிதல்

#51
குவளை கரும் கண் கொடி ஏர் இடை இ கொடி கடைக்கண்
உவளை தனது உயிர் என்றது தன்னோடு உவமை இல்லா
தவளை தன்-பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல்
துவள தலைவந்த இன்னல் இன்னே இனி சொல்லுவனே

மேல்
*4.3. வேழம் வினாதல்

#52
இரும் களியாய் இன்று யான் இறுமாப்ப இன்பம் பணிவோர்
மருங்கு அளியா அனல் ஆட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு
ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள்
கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே

மேல்
*4.4. கலைமான் வினாதல்

#53
கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லை கார் பொழில்-வாய்
வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர்
இரும் கண் அனைய கணை பொரு புண் புணர் இ புனத்தின்
மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே

மேல்
*4.5. வழி வினாதல்

#54
சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் தன் சீர் அடியார்
குலம் பணிகொள்ள எனை கொடுத்தோன் கொண்டு தான் அணியும்
கலம் பணி கொண்டு இடம் அம்பலம் கொண்டவன் கார் கயிலை
சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே

மேல்
*4.6. பதி வினாதல்

#55
ஒருங்கு அட மூவெயில் ஒற்றை கணை கொள் சிற்றம்பலவன்
கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை
இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே
வருங்கள் தம் ஊர் பகர்ந்தால் பழியோ இங்கு வாழ்பவர்க்கு

மேல்
*4.7. பெயர் வினாதல்

#56
தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த
கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை
ஊர் என்ன என்னவும் வாய் திறவீர் ஒழிவீர் பழியேல்
பேர் என்னவோ உரையீர் விரை ஈர்ம் குழல் பேதையரே

மேல்
*4.8. மொழி பெறாது கூறல்

#57
இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் எம் உடையர்
வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இ புனத்தார்
விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டு அது அன்றேல்
சரதம் உடையர் மணி வாய் திறக்கின் சலக்கு என்பவே

மேல்
*4.9. கருத்தறிவித்தல்

#58
வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல்
தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல்
மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர்
பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே

மேல்
*4.10. இடை வினாதல்

#59
கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு
முலை கீழ் சிறிது இன்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்_கோன்
மலை கீழ் விழ செற்ற சிற்றம்பலவர் வண் பூம் கயிலை
சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே

மேல்

* ஐந்தாம் அதிகாரம்
*5 இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்

*5.1. ஐயறுதல்

#60
பல் இலன் ஆக பகலை வென்றோன் தில்லை பாடலர் போல்
எல் இலன் நாகத்தோடு ஏனம் வினா இவன் யாவன்-கொலாம்
வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர்
சொல் இலன் ஆ கற்ற வா கடவான் இ சுனை புனமே

மேல்
*5.2. அறிவு நாடல்

#61
ஆழம்-மன்னோ உடைத்து இ ஐயர் வார்த்தை அனங்கன் நைந்து
வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இ புனத்தே
வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய்
மாழை மெல் நோக்கி இடையாய் கழிந்தது வந்துவந்தே

மேல்

* ஆறாம் அதிகாரம்
*6 முன்னுற வுணர்தல்

*6.1. வாட்டம் வினாதல்

#62
நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து நெற்றி தனி கண்
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி
திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர் கூய்
வருத்தம் பயின்று-கொல்லோ வல்லி மெல்_இயல் வாடியதே

மேல்

* ஏழாம் அதிகாரம்
*7 குறையுற வுணர்தல்

*7.1. குறையுற்று நிற்றல்

#63
மடுக்கோ கடலின் விடு திமில் அன்றி மறி திரை மீன்
படுக்கோ பணிலம் பல குளிக்கோ பரன் தில்லை முன்றில்
கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீர் அணி ஈர் மலர் நும் கரி குழற்கே

மேல்
*7.2. அவன் குறிப்பறிதல்

#64
அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள்
கிளியை மன்னும் கடிய செல்ல நிற்பின் கிளர் அளகத்து
அளி அமர்ந்து ஏறின் வறிதே இருப்பின் பளிங்கு அடுத்த
ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே

மேல்
*7.3. அவள் குறிப்பறிதல்

#65
பிழை கொண்டு ஒருவி கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும்
முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன்
உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம்
தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே

மேல்
*7.4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்

#66
மெய்யே இவற்கு இல்லை வேட்டையின் மேல் மனம் மீட்டு இவளும்
பொய்யே புன தினை காப்பது இறை புலியூர் அனையாள்
மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய்
எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே

மேல்

* எட்டாம் அதிகாரம்
*8 நாண நாட்டம்

*8.1. பிறை தொழுகென்றல்

#67
மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ
பொய் வானவரில் புகாது தன் பொன் கழற்கே அடியேன்
உய்வான் புக ஒளிர் தில்லை நின்றோன் சடை மேலது ஒத்து
செ வான் அடைந்த பசும் கதிர் வெள்ளை சிறு பிறைக்கே

மேல்
*8.2. வேறுபடுத்துக் கூறல்

#68
அக்கின் தவா மணி சேர் கண்டன் அம்பலவன் மலயத்து
இ குன்ற வாணர் கொழுந்து இ செழும் தண் புனம் உடையாள்
அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே
ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே

மேல்
*8.3. கனையாடல் கூறி நகைத்தல்

#69
செ நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல்
அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும்
மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர்
இ நிறமும் பெறின் யானும் குடைவன் இரும் சுனையே

மேல்
*8.4. புணர்ச்சி உரைத்தல்

#70
பரும் கண் கவர் கொலை வேழ படையோன் பட படர் தீ
தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய்
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின்
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே

மேல்
*8.5. மதியுடம் படுதல்

#71
காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்த ஆங்கு இருவர்
ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம்
ஏகத்து ஒருவன் இரும் பொழில் அம்பலவன் மலையில்
தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே

மேல்

* ஒன்பதாம் அதிகாரம்
*9 நடுங்க நாட்டம்

*9.1.

#72
ஆவா இருவர் அறியா அடி தில்லை அம்பலத்து
மூவாயிரவர் வணங்க நின்றோனை உன்னாரின் முன்னி
தீ வாய் உழுவை கிழித்தது அந்தோ சிறிதே பிழைப்பித்து
ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே

மேல்

* பத்தாம் அதிகாரம்
*10 மடல் திறம்

*10.1. ஆற்றாது உரைத்தல்

#73
பொருளா எனை புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன்-பால்
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம்
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர்
அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே

மேல்
*10.2. உலகின்மேல் வைத்துரைத்தல்

#74
காய் சின வேல் அன்ன மின் இயல் கண்ணின் வலை கலந்து
வீசின போது உள்ளம் மீன் இழந்தார் வியன் தென் புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்து
பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே

மேல்
*10.3. தன் துணிபு உரைத்தல்

#75
விண்ணை மடங்க விரிநீர் பரந்து வெற்பு கரப்ப
மண்ணை மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும்
அண்ணல் மடங்கல் அதள் அம்பலவன் அருள் இலர் போல்
பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே

மேல்
*10.4. மடலேறும் வகையரைத்தல்

#76
கழிகின்ற என்னையும் நின்ற நின் கார் மயில்-தன்னையும் யான்
கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று
அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை அம் தேன்
பொழிகின்ற சாரல் நும் சீறூர் தெருவிடை போதுவனே

மேல்
*10.5. அருளால் அரிதென விலக்கல்

#77
நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா
கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை
உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து
மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன் அருளே

மேல்
*10.6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்

#78
அடி சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டுகொண்டு என்
முடி சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும்
கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு
படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்தே

மேல்
*10.7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்

#79
யாழும் எழுதி எழில் முத்து எழுதி இருளில் மென் பூ
சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி
ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இள மாம்
போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே

மேல்
*10.8. உடம்படாது விலக்கல்

#80
ஊர்வாய் ஒழிவாய் உயர் பெண்ணை திண் மடல் நின் குறிப்பு
சீர் வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர் தில்லை
கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி கற்பித்து கண்டால்
ஆர் வாய்தரின் அறிவார் பின்னை செய்க அறிந்தனவே

மேல்
*10.9. உடம்பட்டு விலக்கல்

#81
பை நாண் அரவன் படு கடல்-வாய் படு நஞ்சு அமுது ஆம்
மை நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன் இ
மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும்
இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே

மேல்

* பதினொன்றாம் அதிகாரம்
*11 குறை நயப்புக் கூறல்

*11.1. குறிப்பறிதல்

#82
தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி
தேதே எனும் தில்லையோன் சேய் என சின வேல் ஒருவர்
மாதே புனத்திடை வாளா வருவர் வந்து யாதும் சொல்லார்
யாதே செய தக்கது மது வார் குழல் ஏந்து_இழையே

மேல்
*11.2. மென்மொழியால் கூறல்

#83
வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ
எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர்
புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன
தெரியேம் உரையான் பிரியான் ஒருவன் இ தேம் புனமே

மேல்
*11.3. விரவிக் கூறல்

#84
நீ கண்டனை எனின் வாழலை நேர்_இழை அம்பலத்தான்
சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின்
வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு
பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே

மேல்
*11.4. அறியாள் போறல்

#85
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி
பொங்கும் புனல் கங்கை தாங்கி பொலி கழி பாறு உலவு
துங்க மலிதலை ஏந்தலின் ஏந்து_இழை தொல்லை பல் மா
வங்கம் மலி கலி நீர் தில்லை வானவன் நேர்வருமே

மேல்
*11.5. வஞ்சித்து உரைத்தல்

#86
புரம் கடந்தான் அடி காண்பான் புவி விண்டு புக்கு அறியாது
இரங்கிடு எந்தாய் என்று இரப்ப தன் ஈர் அடிக்கு என் இரண்டு
கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதும் காட்டிடு என்று
வரம் கிடந்தான் தில்லை அம்பல முன்றில் அ மாயவனே

மேல்
*11.6. புலந்து கூறல்

#87
உள்ளப்படுவன உள்ளி உரை தக்கவர்க்கு உரைத்து
மெள்ள படிறு துணி துணியேல் இது வேண்டுவல் யான்
கள்ள படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல்
கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே

மேல்
*11.7. வன்மொழியாற் கூறல்

#88
மேவி அம் தோல் உடுக்கும் தில்லையான் பொடி மெய்யில் கையில்
ஓவியம் தோன்றும் கிழி நின் எழில் என்று உரை உளதால்
தூவி அம் தோகை அன்னாய் என்ன பாவம் சொல்லாடல் செய்யான்
பாவி அந்தோ பனை மா மடல் ஏற-கொல் பாவித்ததே

மேல்
*11.8. மனத்தொடு நேர்தல்

#89
பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என புரி நோய்
என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார்
சொன்னார் எனும் இ துரிசு துன்னாமை துணை மனனே
என் ஆழ் துயர் வல்லையேல் சொல்லு நீர்மை இனியவர்க்கே

மேல்

* பன்னிரண்டாம் அதிகாரம்
*12. சேட்படை

*12.1. தழைகொண்டு சேறல்

#90
தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர்
பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப
ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம்
காமன் கணை கொண்டு அலைகொள்ளவோ முற்ற கற்றதுவே

மேல்
*12.2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்

#91
ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு
ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து
ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால்
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே

மேல்
*12.3. நிலத்தின்மை கூறிமறுத்தல்

#92
முன் தகர்த்து எல்லா இமையோரையும் பின்னை தக்கன் முத்தீ
சென்று அகத்து இல்லாவகை சிதைத்தோன் திருந்து அம்பலவன்
குன்றகத்து இல்லா தழை அண்ணல் தந்தால் கொடிச்சியருக்கு
இன்று அகத்து இல்லா பழி வந்து மூடும் என்று எள்குதுமே

மேல்
*12.4. நினைவறிவு கூறி மறுத்தல்

#93
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் எறி திரை நீர்
ஏழாய் எழு பொழிலாய் இருந்தோன் நின்ற தில்லை அன்ன
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால்
தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும் தழையே

மேல்
*12.5. படைத்து மொழியான் மறுத்தல்

#94
எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் மற்று இறை குறை உண்டு
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம்
குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி
பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே

மேல்
*12.6. நாணுரைத்து மறுத்தல்

#95
உறும் கள் நிவந்த கணை உரவோன் பொடியாய் ஒடுங்க
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய்
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம்
குறும் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் இ குன்றிடத்தே

மேல்
*12.7. இசையாமை கூறி மறுத்தல்

#96
நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா
குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே

மேல்
*12.8. செவ்வியிலள் என்று மறுத்தல்

#97
கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள
பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று
உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளி மிளிரும்
புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூம்_கொடியே

மேல்
*12.9. காப்புடைத்தென்று மறுத்தல்

#98
முனிதரும் அன்னையும் என் ஐயர் சாலவும் மூர்க்கர் இன்னே
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல்
பனி தரு திங்கள் அணி அம்பலவர் பகை செகுக்கும்
குனிதரு திண் சிலை கோடு சென்றான் சுடர் கொற்றவனே

மேல்
*12.10. நீயே கூறென்று மறுத்தல்

#99
அந்தியின்-வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில்
பந்தியின்-வாய் பலவின் சுளை பைம் தேனொடும் கடுவன்
மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய
முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே

மேல்
*12.11. குலமுறை கூறி மறுத்தல்

#100
தெங்கம்பழம் கமுகின் குலை சாடி கதலி செற்று
கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ உமை கூர்
பங்கு அம்பலவன் பரங்குன்றில் குன்று அன்ன மா பதைப்ப
சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே

மேல்
*12.12. நகையாடி மறுத்தல்

#101
சிலை ஒன்று வாள்_நுதல் பங்கன் சிற்றம்பலவன் கயிலை
மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும்
கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன்
கொலை ஒன்று திண்ணியவாறு ஐயர் கையில் கொடும் சிலையே

மேல்
*12.13. இரக்கத்தோடு மறுத்தல்

#102
மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே
மெய் தழையாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்து
கை தழை ஏந்தி கடமா வினாய் கையில் வில் இன்றியே
பித்து அழையாநிற்பரால் என்ன பாவம் பெரியவரே

மேல்
*12.14. சிறப்பின்மை கூறி மறுத்தல்

#103
அக்கும் அரவும் அணி மணி கூத்தன் சிற்றம்பலமே
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா
கொக்கும் சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும்
இ குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பினவே

மேல்
*12.15. இளமை கூறி மறுத்தல்

#104
உருகுதலை சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே
பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலை பொடியா
ஒரு குதலை சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே

மேல்
*12.16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்

#105
பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன் பார் கிழித்து
தொண்டால் இயலும் சுடர் கழலோன் தொல்லை தில்லையின்-வாய்
வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை
கண்டால் இயலும் கடன் இல்லை-கொல்லோ கருதியதே

மேல்
*12.17. நகை கண்டு மகிழ்தல்

#106
மத்தகம் சேர் தனி நோக்கினன் வாக்கு இறந்து ஊறு அமுதே
ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு
முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின்
வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழு துணையே

மேல்
*12.18. அறியாள் போன்று நினைவு கேட்டல்

#107
விண் இறந்தார் நிலம் விண்டலர் என்று மிக்கார் இருவர்
கண் இறந்தார் தில்லை அம்பலத்தார் கழுக்குன்றில்-நின்று
தண் நறும் தாது இவர் சந்தன சோலை பந்து ஆடுகின்றார்
எண்ணிறந்தார்அவர் யார் கண்ணதோ மன்ன நின் அருளே

மேல்
*12.19. அவயவம் கூறல்

#108
குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய்
கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர்
தவ வினை தீர்ப்பவன் தாழ் பொழில் சிற்றம்பலம் அனையாட்கு
உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே

மேல்
*12.20. கண் நயந்து உரைத்தல்

#109
ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என்
பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளி போன்று அவன் தோள்
பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம்
பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே

மேல்
*12.21. தழையெதிர்தல்

#110
தோலா கரி வென்றதற்கும் துவள்விற்கும் இல்லின் தொன்மைக்கு
ஏலா பரிசு உளவே அன்றி ஏலேம் இரும் சிலம்ப
மாலார்க்கு அரிய மலர் கழல் அம்பலவன் மலையில்
கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே

மேல்
*12.22. குறிப்பறிதல்

#111
கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் கரத்தில்
தழை காண்டலும் பொய் தழைப்ப முன் காண்பன் இன்று அம்பலத்தான்
உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால்
இழை காண் பணைமுலையாய் அறியேன் சொல்லும் ஈடு அவற்கே

மேல்
*12.23. குறிப்பறிந்து கூறல்

#112
தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபா
லவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும்
துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே

மேல்
*12.24. வகுத்துறைத்தல்

#113
ஏறும் பழி தழை ஏற்பின் மற்று ஏலாவிடின் மடல் மா
ஏறும் அவன் இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள்
ஏறும் அரன் மன்னும் ஈங்கோய் மலை நம் இரும் புனம் காய்ந்து
ஏறும் மலை தொலைத்தாற்கு என்னை யாம் செய்வது ஏந்து_இழையே

மேல்
*12.25. தழையேற்பித்தல்

#114
தெவ்வரை மெய் எரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டுகொண்ட
செ வரை மேனியன் சிற்றம்பலவன் செழும் கயிலை
அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான்
இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே

மேல்
*12.26. தழை விருப்புரைத்தல்

#115
பாச தளை அறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம் சூழ்
தேசத்தன செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன்
பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து
பூசிற்றிலள் அன்றி செய்யாதன இல்லை பூம் தழையே

மேல்

* பதின்மூன்றாம் அதிகாரம்
*13 பகற்குறி

*13.1. குறியிடங் கூறல்

#116
வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன்
தான் நுழையா இருளாய் புறம் நாப்பண் வண் தாரகை போல்
தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கான் மதியோன்
கான் உழை வாழ்வு பெற்று ஆங்கு எழில் காட்டும் ஒர் கார் பொழிலே

மேல்
*13.2. ஆடிடம் படர்தல்

#117
புயல் வளர் ஊசல் முன் ஆடி பொன்னே பின்னை போய் பொலியும்
அயல் வளர் குன்றில் நின்று ஏற்றும் அருவி திரு உருவின்
கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும்
தயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரை தண் புனத்தே

மேல்
*13.3. குறியிடத்துக் கொண்டு சேறல்

#118
தினை வளம் காத்து சிலம்பு எதிர் கூஉய் சிற்றில் முற்று இழைத்து
சுனை வளம் பாய்ந்து துணை மலர் கொய்து தொழுது எழுவார்
வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில்
புனை வளர் கொம்பர் அன்னாய் அன்ன காண்டும் புன மயிலே

மேல்
*13.4. இடத்துய்த்து நீங்கல்

#119
நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி
பரல் வேய் அறை உறைக்கும் பஞ்சு அடி பரன் தில்லை அன்னாய்
வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம்
குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே

மேல்
*13.5. உவந்துரைத்தல்

#120
பட மாசுண பள்ளி இ குவடு ஆக்கி அ பங்கய கண்
நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே
இடம் ஆ இருக்கலுற்றோ தில்லை நின்றவன் ஈர்ம் கயிலை
வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே

மேல்
*13.6. மருங்கணைதல்

#121
தொத்து ஈன் மலர் பொழில் தில்லை தொல்லோன் அருள் என்ன முன்னி
முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள்
ஒத்து ஈர்ம் கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க
பித்தீர் பணை முலைகாள் என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே

மேல்
*13.7. பாங்கியறிவுரைத்தல்

#122
அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அணி அணியும்
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண்
களி நீ என செய்தவன் கடல் தில்லை அன்னாய் கலங்கல்
தெளி நீ அனைய பொன்னே பன்னு கோலம் திரு_நுதலே

மேல்
*13.8. உண்மகிழ்ந்துரைத்தல்

#123
செழு நீர் மதி கண்ணி சிற்றம்பலவன் திரு கழலே
கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள் அகத்த
கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா
கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே

மேல்
*13.9. ஆயத்து உய்த்தல்

#124
கொழும் தாரகை முகை கொண்டல் அம் பாசடை விண் மடுவில்
எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில்
அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய்
செழும் தாது அவிழ் பொழில் ஆயத்து சேர்க திரு தகவே

மேல்
*13.10. தோழி வந்து கூடல்

#125
பொன் அனையான் தில்லை பொங்கு அரவம் புன் சடை மிடைந்த
மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த
மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள்
இன்னன யான் கொணர்ந்தேன் மணம் தாழ் குழற்கு ஏய்வனவே

மேல்
*13.11. ஆடிடம் புகுதல்

#126
அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர்
துறு கான் மலர் தொத்து தோகை தொல் ஆயம் மெல்ல புகுக
சிறு கால் மருங்குல் வருந்தாவகை மிக என் சிரத்தின்
உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே

மேல்
*13.12. தனிகண்டு உரைத்தல்

#127
தழங்கும் அருவி எம் சீறூர் பெரும இது மதுவும்
கிழங்கும் அருந்தி இருந்து எம்மோடு இன்று கிளர்ந்து குன்றர்
முழங்கும் குரவை இரவில் கண்டு ஏகுக முத்தன் முத்தி
வழங்கும் பிரான் எரியாடி தென் தில்லை மணி நகர்க்கே

மேல்
*13.13. பருவங் கூறி வரவு விலக்கல்

#128
தள்ளி மணி சந்தம் உந்தி தறுகண் கரி மருப்பு
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலை சிலம்பா
வெள்ளி மலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வன முலையே

மேல்
*13.14. வரைவு உடம்படாது மிகுத்துக் கூறல்

#129
மாடம் செய் பொன் நகரும் நிகர் இல்லை இ மாதர்க்கு என்ன
பீடம் செய் தாமரையோன் பெற்ற பிள்ளையை உள்ளலரை
கீடம் செய்து என் பிறப்பு கெட தில்லை நின்றோன் கயிலை
கூடம் செய் சாரல் கொடிச்சி என்றோ நின்று கூறுவதே

மேல்
*13.15. உண்மை கூறி வரைவு கடாதல்

#130
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைம் கார் வரை மீன் பரப்பி
சேய் தந்த வானகம் மானும் சிலம்ப தன் சேவடிக்கே
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில்
தாய் தந்தை கானவர் ஏனல் எம் காவல் இ தாழ்வரையே

மேல்
*13.16. வருத்தங் கூறி வரைவு கடாதல்

#131
மன்னும் திரு வருந்தும் வரையாவிடின் நீர் வரைவு என்று
உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம்
பன்னும் புகழ் பரமன் பரஞ்சோதி சிற்றம்பலத்தான்
பொன் அம் கழல் வழுத்தார் புலன் என்ன புலம்புவனே

மேல்
*13.17. தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்

#132
பனி துண்டம் சூடும் படர் சடை அம்பலவன் உலகம்
தனித்து உண்டவன் தொழும் தாளோன் கயிலை பயில் சிலம்பா
கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று
இனி கண்டிலம் பற்று சிற்றிடைக்கு என்று அஞ்சும் எம் அனையே

மேல்
*13.18. இற்செறி அறிவித்து வரைவு கடாதல்

#133
ஈ விளையாட நற விளைவு ஓர்ந்து எமர் மால்பு இயற்றும்
வேய் விளையாடும் வெற்பா உற்று நோக்கி எம் மெல்_இயலை
போய் விளையாடல் என்றாள் அன்னை அம்பலத்தான் புரத்தில்
தீ விளையாட நின்று ஏ விளையாடி திருமலைக்கே

மேல்
*13.19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்

#134
சுற்றும் சடை கற்றை சிற்றம்பலவன் தொழாது தொல் சீர்
கற்றும் அறியலரின் சிலம்பா இடை நைவது கண்டு
எற்றும் திரையின் அமிர்தை இனி தமர் இற்செறிப்பார்
மற்றும் சிலபல சீறூர் பகர் பெருவார்த்தைகளே

மேல்
*13.20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்

#135
வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின்
மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னே வயம் அம்பலத்து
குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய
கெழி உம்மவே பணை தோள் பல என்னோ கிளக்கின்றதே

மேல்
*13.21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்

#136
படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண்
இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர்
விடை ஆர் மருப்பு திருத்திவிட்டார் வியன் தென் புலியூர்
உடையார் கடவி வருவது போலும் உருவினதே

மேல்
*13.22. அயல் உரை உரைத்து வரைவு கடாதல்

#137
உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த
நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர் சென்று ஏத்தி நிற்கும்
திரு பனையூர் அனையாளை பொன் நாளை புனைதல் செப்பி
பொருப்பனை முன் நின்று என்னோ வினையேன் யான் புகல்வதுவே

மேல்
*13.23. தினை முதிர்வு வரைவு கடாதல்

#138
மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் வட வான் கயிலை
போது இடங்கொண்ட பொன் வேங்கை தினை புனம் கொய்க என்று
தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று
சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே

மேல்
*13.24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல்

#139
வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன்
கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார்
நொடிவார் நமக்கு இனி நோதக யான் உமக்கு என் உரைக்கேன்
தடிவார் தினை எமர் காவேம் பெரும இ தண் புனமே

மேல்
*13.25. தினையடு வெறுத்து வரைவு கடாதல்

#140
நினைவித்து தன்னை என் நெஞ்சத்து இருந்து அம்பலத்து நின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலை பொருப்பன் விருப்பின்
தினை வித்தி காத்து சிறந்து நின்றேமுக்கு சென்றுசென்று
வினை வித்தி காத்து விளைவு உண்டதாகி விளைந்ததுவே

மேல்
*13.26. வேங்கையடு வெறுத்து வரைவு கடாதல்

#141
கனை கடல் செய்த நஞ்சு உண்டு கண்டார்க்கு அம்பலத்து அமிழ்தாய்
வினை கெட செய்தவன் விண் தோய் கயிலை மயில் அனையாய்
நனை கெட செய்தனம் ஆயின் நமை கெட செய்திடுவான்
தினை கெட செய்திடுமாறும் உண்டோ இ திரு கணியே

மேல்
*13.27. இரக்கமுற்று வரைவு கடாதல்

#142
வழுவா இயல் எம் மலையர் விதைப்ப மற்று யாம் வளர்த்த
கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும்
செழு வார் கழல் தில்லை சிற்றம்பலவரை சென்று நின்று
தொழுவார் வினை நிற்கிலே நிற்பதாவது இ தொல் புனத்தே

மேல்
*13.28. கொய்தமை கூறி வரைவு கடாதல்

#143
பொருப்பர்க்கு யாம் ஒன்று மாட்டோம் புகல புகல் எமக்கு ஆம்
விருப்பர்க்கு யாவர்க்கும் மேலவர்க்கு மேல் வரும் ஊர் எரித்த
நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்து
கரு பற்று விட்டு என கொய்தற்றது இன்று இ கடி புனமே

மேல்
*13.29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்

#144
பரிவு செய்து ஆண்டு அம்பலத்து பயில்வோன் பரங்குன்றின்-வாய்
அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே
பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்றும் பெற்றி
இருவி செய் தாளின் இருந்து இன்று காட்டும் இளம் கிளியே

மேல்
*13.30. மயிலொடு கூறி வரைவு கடாதல்

#145
கணியார் கருத்து இன்று முற்றிற்று யாம் சென்றும் கார் புனமே
மணி ஆர் பொழில்காள் மறத்திர் கண்டீர் மன்னும் அம்பலத்தோன்
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால்
துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லு-மினே

மேல்
*13.31. வறும்புனம் கண்டு வருந்தல்

#146
பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் புலியூர் அரன் பொருப்பே
இது எனில் என் இன்று இருக்கின்றவாறு எம் இரும் பொழிலே
எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி
மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா மற்று இ வான் புனமே

மேல்
*13.32. பதி நோக்கி வருந்தல்

#147
ஆனந்த மா கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன பொன்னின்
தேன் உந்து மா மலை சீறூர் இது செய்யலாவது இல்லை
வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ
நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே

மேல்

* பதினான்காம் அதிகாரம்
*14 இரவுக் குறி

*14.1. இரவுக் குறி வேண்டல்

#148
மருந்து நம் அல்லல் பிறவி பிணிக்கு அம்பலத்து அமிர்தாய்
இருந்தனர் குன்றின்-நின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ
பொருந்தின மேகம் புதைந்து இருள் தூங்கும் புனை இறும்பின்
விருந்தினன் யான் உங்கள் சீறூர் அதனுக்கு வெள்_வளையே

மேல்
*14.2. வழியருமை கூறி மறுத்தல்

#149
விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில் நெறி மேல் மழை தூங்கு
அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் ஐய மெய்யே
இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது எழில் அம்பலத்து
பசும் பனி கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதியே

மேல்
*14.3. நின்று நெஞ்சுடைதல்

#150
மாற்றேன் என வந்த காலனை ஓலமிட அடர்த்த
கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி
மேல் தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே

மேல்
*14.4. இரவுக்குறி நேர்தல்

#151
கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ்
தூளி நிறைத்த சுடர் முடியோய் இவள் தோள் நசையால்
ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து
மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்_இயற்கே

மேல்
*14.5. உட்கோள் வினாதல்

#152
வரை அன்று ஒருகால் இரு கால் வளைய நிமிர்த்து வட்கார்
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர்
விரை என்ன மெல் நிழல் என்ன வெறியுறு தாது இவர் போது
உரை என்னவோ சிலம்பா நலம் பாவி ஒளிர்வனவே

மேல்
*14.6. உட்கொண்டு வினாதல்

#153
செம் மலர் ஆயிரம் தூய் கரு மால் திரு கண் அணியும்
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய்
அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே

மேல்
*14.7. குறியிடங்கூறல்

#154
பனை வளர் கை மா படாத்து அம்பலத்து அரன் பாதம் விண்ணோர்
புனை வளர் சாரல் பொதியின் மலை பொலி சந்து அணிந்து
சுனை வளர் காவிகள் சூடி பைம் தோகை துயில் பயிலும்
சினை வளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே

மேல்
*14.8. இரவுக் குறி ஏற்பித்தல்

#155
மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால்
செலவு அன்பர்க்கு ஒக்கும் சிவன் தில்லை கானலில் சீர் பெடையோடு
அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன்
செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே

மேல்
*14.9. இரவரவு உரைத்தல்

#156
மோட்டு அம் கதிர் முலை பங்கு உடை தில்லை முன்னோன் கழற்கே
கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி
நாட்டம் புதைத்து அன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம்
வேட்டம் திரி சரிவாய் வருவான் சொல்லு மெல்_இயலே

மேல்
*14.10. ஏதங்கூறி மறுத்தல்

#157
செழும் கார் முழவு அதிர் சிற்றம்பலத்து பெரும் திருமால்
கொழும் கான் மலர் இட கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர் போல்
முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய்
வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலையே

மேல்
*14.11. குறை நேர்தல்

#158
ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர் உய்ய அன்று
தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி
வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து
வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே

மேல்
*14.12. குறை நேர்ந்தமை கூறல்

#159
ஏனல் பசும் கதிர் என்றூழ்க்கு அழிய எழிலி உன்னி
கான குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா
யான் இற்றை யாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்று சென்றேன்
தேன் நக்க கொன்றையன் தில்லை உறார் செல்லும் செல்லல்களே

மேல்
*14.13. வரவுணர்ந்து உரைத்தல்

#160
முன்னும் ஒருவர் இரும் பொழில் மூன்றற்கு முற்றும் இற்றால்
பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார் தரும் பேர் அருள் போல்
துன்னும் ஒர் இன்பம் என்று ஓகை தம் தோகைக்கு சொல்லுவ போல்
மன்னும் அரவத்தவாய் துயில் பேரும் மயில் இனமே

மேல்
*14.14. தாய் துயில் அறிதல்

#161
கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன்
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண்
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து
தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே

மேல்
*14.15. துயிலெடுத்துச் சேறல்

#162
விண்ணுக்கு மேல் வியன் பாதல கீழ் விரி நீர் உடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்து தென் தில்லை நின்றோன் மிடற்றின்
வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின்
கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே

மேல்
*14.16. இடத்துய்த்து நீங்கல்

#163
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம்
தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த
இந்தீவரம் இவை காண் நின் இருள் சேர் குழற்கு எழில் சேர்
சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே

மேல்
*14.17. தளர்வகன்று உரைத்தல்

#164
காமரை வென்ற கண்ணோன் தில்லை பல் கதிரோன் அடைத்த
தாமரை இல்லின் இதழ் கதவம் திறந்தோ தமியே
பாம் அரை மேகலை பற்றி சிலம்பு ஒதுக்கி பையவே
நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே

மேல்
*14.18. மருங்கணைதல்

#165
அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து அஞ்சனம் எழுத
தகிலும் தனி வடம் பூட்ட தகாள் சங்கரன் புலியூர்
இகலும் அவரின் தளரும் இ தேம்பல் இடை ஞெமிய
புகிலும் மிக இங்ஙனே இறுமாக்கும் புணர் முலையே

மேல்
*14.19. முகங்கொண்டு மகிழ்தல்

#166
அழுந்தேன் நரகத்து யான் என்று இருப்ப வந்து ஆண்டுகொண்ட
செழும் தேன் திகழ் பொழில் தில்லை புறவில் செறு அகத்த
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு
எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே

மேல்
*14.20. பள்ளியிடத்து உய்த்தல்

#167
சுரும்பு உறு நீலம் கொய்யல் தமி நின்று துயில் பயின்மோ
அரும்பெறல் தோழியொடு ஆயத்து நாப்பண் அமரர் ஒன்னார்
இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர்
துரும்பு உற செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லை சூழ் பொழிற்கே

மேல்
*14.21. வரவு விலக்கல்

#168
நல் பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லை அன்ன
வில் பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் மெய்யே எளிதே
வெற்பக சோலையின் வேய் வளர் தீ சென்று விண்ணின் நின்ற
கற்பகச்சோலை கதுவும் கல் நாட இ கல் அதரே

மேல்
*14.22. ஆற்றாது உரைத்தல்

#169
பை வாய் அரவு அரை அம்பலத்து எம்பரன் பைம் கயிலை
செ வாய் கரும் கண் பெரும் பணை தோள் சிற்றிடை கொடியை
மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால்
இவ்வாறு இருக்கும் என்றே நிற்பது என்றும் என் இன் உயிரே

மேல்
*14.23. இரக்கங்கூறி வரைவு கடாதல்

#170
பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் மலர் கை
மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால்
செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண்
மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே

மேல்
*14.24. நிலவு வெளிப்பட வருந்தல்

#171
நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன்
நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள்
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர்
நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே

மேல்
*14.25. அல்லகுறி அறிவித்தல்

#172
மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய்
என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி
பொன் அங்கு அலர் புன்னை சேக்கையின்-வாய் புலம்புற்று முற்றும்
அன்னம் புலரும் அளவும் துயிலாது அழுங்கினவே

மேல்
*14.26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்

#173
சோத்து உன் அடியம் என்றோரை குழுமி தொல் வானவர் சூழ்ந்து
ஏத்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் துவள
ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து அவம் நீ
பேர்த்தும் இரைப்பு ஒழியாய் பழி நோக்காய் பெரும் கடலே

மேல்
*14.27. காமம் மிக்க கழிபடர் கிளவி

#174
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ்
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள்
ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர்ந்துறைவர்க்கு இவளோ
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே

மேல்
*14.28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி

#175
இன் நறவு ஆர் பொழில் தில்லை நகர் இறை சீர் விழவில்
பல் நிற மாலை தொகை பகலாம் பல் விளக்கு இருளின்
துன் அற உய்க்கும் இல்லோரும் துயிலின் துறைவர் மிக்க
கொன் நிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே

மேல்
*14.29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி

#176
தார் உறு கொன்றையன் தில்லை சடைமுடியோன் கயிலை
நீர் உறு கான்யாறு அளவில நீந்தி வந்தால் நினது
போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும்
சூர் உறு சோலையின்-வாய் வரற்பாற்றன்று தூங்கு இருளே

மேல்
*14.30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி

#177
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல்லம் கழி சூழ்
கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர்
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும்
மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே

மேல்
*14.31. நிலைகண்டு உரைத்தல்

#178
பற்று ஒன்று இலார் பற்றும் தில்லை பரன் பரங்குன்றில் நின்ற
புற்று ஒன்று அரவன் புதல்வன் என நீ புகுந்து நின்றால்
மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி
மற்றொன்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ் வகையே

மேல்
*14.32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்

#179
பூம் கணை வேளை பொடியாய் விழ விழித்தோன் புலியூர்
ஓங்கு அணை மேவி புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு
தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே
ஆங்கு அணைந்தார் நின்னையும் உளரோ சென்று அகன்றவரே

மேல்
*14.33. அலர் அறிவுறுத்தல்

#180
அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரம் கரத்தால்
அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள்
அலராவிருக்கும் படை கொடுத்தோன் தில்லையான் அருள் போன்று
அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய மெய் அருளே

மேல்

* பதினைந்தாம் அதிகாரம்
*15 ஒருவழித் தணத்தல்

*15.1. அகன்று அணைவு கூறல்

#181
புகழும் பழியும் பெருக்கின் பெருகும் பெருகி நின்று
நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இது நீ நினைப்பின்
அகழும் மதிலும் அணி தில்லையோன் அடி போது சென்னி
திகழும் அவர் செல்லல் போல் இல்லையாம் பழி சில்_மொழிக்கே

மேல்
*15.2. கடலொடு வரவு கேட்டல்

#182
ஆரம் பரந்து திரை பொரு நீர் முகில் மீன் பரப்பி
சீர் அம்பரத்தின் திகழ்ந்து ஒளி தோன்றும் துறைவர் சென்றார்
போரும் பரிசு புகன்றனரோ புலியூர் புனிதன்
சீர் அம்பர் சுற்றி எற்றி சிறந்து ஆர்க்கும் செறி கடலே

மேல்
*15.3. கடலொடு புலத்தல்

#183
பாண் நிகர் வண்டினம் பாட பைம்பொன் தரு வெண் கிழி தம்
சேண் நிகர் காவின் வழங்கும் புன்னை துறை சேர்ப்பர் திங்கள்
வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் வாய்திறவாய்
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே

மேல்
*15.4. அன்னமோடு ஆய்தல்

#184
பகன் தாமரை கண் கெட கடந்தோன் புலியூர் பழனத்து
அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து
முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது
அகன்றார் அகன்றே ஒழிவர்-கொல்லோ நம் அகன் துறையே

மேல்
*15.5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்

#185
உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்
கொள்ளுமவரில் ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் புலியூர்
விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி தூரல் கண்டாய்
புள்ளும் திரையும் பொர சங்கம் ஆர்க்கும் பொரு கடலே

மேல்
*15.6. கூடல் இழைத்தல்

#186
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து
ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று
ஆழி திருத்தி சுழி கணக்கு ஓதி நையாமல் ஐய
வாழி திருத்தி தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே

மேல்
*15.7. சுடரொடு புலம்பல்

#187
கார் தரங்கம் திரை தோணி சுறா கடல் மீனெறிவோர்
போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க
தீர்த்தர் அங்கன் தில்லை பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே

மேல்
*15.8. பொழுது கண்டு மயங்கல்

#188
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர் பற்று அற்றவர்க்கு
புகலோன் புகுநர்க்கு போக்கு அரியோன் எவரும் புகல
தகலோன் பயில் தில்லை பைம் பொழில் சேக்கைகள் நோக்கினவால்
அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே

மேல்
*15.9. பறவையடு வருந்தல்

#189
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்து இலங்கி
மின்னும் சடையோன் புலியூர் விரவாதவரின் உள்நோய்
இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இரும் கழி-வாய்
மன்னும் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்களே

மேல்
*15.10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்

#190
கரும் கழி காதல் பைம் கானலில் தில்லை எம் கண்டர் விண்டார்
ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற ஒற்றை சிலை சூழ்ந்து
அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர்
வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர் கைகளே

மேல்
*15.11 அன்னமோடு அழிதல்

#191
மூவல் தழீஇய அருள் முதலோன் தில்லை செல்வன் முந்நீர்
நாவல் தழீஇய இ நானிலம் துஞ்சும் நயந்த இன்ப
சேவல் தழீஇ சென்று தான் துஞ்சும் யான் துயிலா செயிர் எம்
காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களி அன்னமே

மேல்
*15.12. வரவு உணர்ந்து உரைத்தல்

#192
நில்லா வளை நெஞ்சம் நெக்குருகும் நெடும் கண் துயில
கல்லா கதிர் முத்தம் காற்றும் என கட்டுரைக்க தில்லை
தொல்லோன் அருள்கள் இல்லாரின் சென்றார் சென்ற செல்லல் கண்டாய்
எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்று இரக்கின்றதே

மேல்
*15.13. வருத்தமிகுதி கூறல்

#193
வளரும் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய்
தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும்
விளரும் விழும் எழும் விம்மும் மெலியும் வெண் மா மதி நின்று
ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே

மேல்

* பதினாறாம் அதிகாரம்
*16 உடன் போக்கு

*16.1. பருவங் கூறல்

#194
ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்
கராகம் பயின்று அமிழ்தம் பொதிந்து ஈர்ம் சுணங்கு ஆடகத்தின்
பராகம் சிதர்ந்த பயோதரம் இ பரிசே பணைத்த
இராகம் கண்டால் வள்ளலே இல்லையே எமர் எண்ணுவதே

மேல்
*16.2. மகட் பேச்சுரைத்தல்

#195
மணி அக்கு அணியும் அரன் நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர்
பணிய கருணை தரும் பரன் தில்லை அன்னாள் திறத்து
துணிய கருதுவது இன்றே துணி துறைவா நிறை பொன்
அணிய கருதுகின்றார் பலர் மேன்மேல் அயலவரே

மேல்
*16.3. பொன்னணி உரைத்தல்

#196
பாப்பணியோன் தில்லை பல் பூ மருவு சில்_ஓதியை நல்
காப்பு அணிந்தார் பொன் அணிவார் இனி கமழ் பூம் துறைவ
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று இவை ஏர் குழுமி
மா பணிலங்கள் முழுங்க தழங்கும் மண முரசே

மேல்
*16.4. அருவிலை உரைத்தல்

#197
எலும்பால் அணி இறை அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர்
நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம
சிலம்பா வடி_கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார்
கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவதே

மேல்
*16.5. அருமை கேட்டழிதல்

#198
விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழ போன்று இனி விம்மிவிம்மி
அசும்பு உற்ற கண்ணோடு அலறாய் கிடந்து அரன் தில்லை அன்னாள்
குயம் புற்று அரவு இடை கூர் எயிற்று ஊறல் குழல் மொழியின்
நயம் பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நல் நெஞ்சமே

மேல்
*16.6. தளர்வறிந்துரைத்தல்

#199
மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூம்
கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை
பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள்
பை தயங்கும் அரவம் புரையும் அல்குல் பைம்_தொடியே

மேல்
*16.7. குறிப்புரைத்தல்

#200
மாவை வந்து ஆண்ட மெல்நோக்கி-தன் பங்கர் வண் தில்லை மல்லல்
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன்
பூவை தந்தாள் பொன் அம் பந்து தந்தாள் என்னை புல்லிக்கொண்டு
பாவை தந்தாள் பைம் கிளி அளித்தாள் இன்று என் பைம்_தொடியே

மேல்
*16.8. அருமை உரைத்தல்

#201
மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ
கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம்
சொல்லிய சீர் சுடர் திங்கள் அம் கண்ணி தொல்லோன் புலியூர்
அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே

மேல்
*16.9. ஆதரங் கூறல்

#202
பிணையும் கலையும் வன் பேய்த்தேரினை பெரு நீர் நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே
இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லை தண் பூம்
பணையும் தடமும் அன்றே நின்னொடு ஏகின் எம் பைம்_தொடிக்கே

மேல்
*16.10. இறந்துபாடு உரைத்தல்

#203
இங்கு அயல் என் நீ பணிக்கின்றது ஏந்தல் இணைப்பது இல்லா
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை
பங்கய பாசடை பாய் தடம் நீ அ படர் தடத்து
செங்கயல் அன்றே கருங்கயல் கண் இ திரு நுதலே

மேல்
*16.11. கற்பு நலன் உரைத்தல்

#204
தாயின் சிறந்தன்று நாண் தையலாருக்கு அ நாண் தகை சால்
வேயின் சிறந்த மென் தோளி திண் கற்பின் விழுமிதன்று ஈங்
கோயில் சிறந்து சிற்றம்பலத்து ஆடும் எம் கூத்தப்பிரான்
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே

மேல்
*16.12. துணிந்தமை கூறல்

#205
குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய்
நற பாடலம் புனைவார் நினைவார் தம்பிரான் புலியூர்
மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்ன தகும் பெற்றியரே

மேல்
*16.13. துணிவொடு வினாவல்

#206
நிழல் தலை தீ நெறி நீர் இல்லை கானகம் ஓரி கத்தும்
அழல் தலை வெம் பரற்று என்பர் என்னோ தில்லை அம்பலத்தான்
கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல்
குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே

மேல்
*16.14. போக்கு அறிவித்தல்

#207
காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பலவன் கயிலை
சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் செறி திரை நீர்
தேயமும் யாவும் பெறினும் கொடார் நமர் இன்ன செப்பில்
தோயமும் நாடும் இல்லா சுரம் போக்கு துணிவித்தவே

மேல்
*16.15. நாணிழந்து வருந்தல்

#208
மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் என்னொடும் வளர்ந்த
பொற்பு ஆர் திரு நாண் பொருப்பர் விருப்பு புகுந்து நுந்த
கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக
இல்-பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே

மேல்
*16.16. துணிவெடுத்து உரைத்தல்

#209
கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை
நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா
அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள்
செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர் சீறடிக்கே

மேல்
*16.17. குறியிடங் கூறல்

#210
முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து
உன்னாதவர் வினை போல் பரந்து ஓங்கும் எனது உயிரே
அன்னாள் அரும்பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால்
பொன் ஆர் மணி மகிழ் பூ விழ யாம் விழை பொங்கு இருளே

மேல்
*16.18. அடியடு வழிநினைந்(து) அவன் உளம் வாடல்

#211
பனி சந்திரனொடு பாய் புனல் சூடும் பரன் புலியூர்
அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல் பழுத்த
கனி செம் திரள் அன்ன கல் கடம் போந்து கடக்கும் என்றால்
இனி சந்த மேகலையாட்கு என்-கொலாம் புகுந்து எய்துவதே

மேல்
*16.19. கொண்டு சென்று உய்த்தல்

#212
வைவந்த வேலவர் சூழ்வர தேர் வரும் வள்ளல் உள்ளம்
தெய்வம் தரும் இருள் தூங்கும் முழுதும் செழு மிடற்றின்
மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல்
மொய் வந்த வாவி தெளியும் துயிலும் இ மூதெயிலே

மேல்
*16.20. ஒம்படுத் துரைத்தல்

#213
பறந்து இருந்து உம்பர் பதைப்ப படரும் புரம் கரப்ப
சிறந்து எரியாடி தென் தில்லை அன்னாள் திறத்து சிலம்பா
அறம் திருந்து உன் அருளும் பிறிதாயின் அரு மறையின்
திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் இ சேண் நிலத்தே

மேல்
*16.21. வழிப்படுத்துரைத்தல்

#214
ஈண்டு ஒல்லை ஆயமும் ஒளவையும் நீங்க இ ஊர் கவ்வை தீர்த்து
ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று
ஆண்டு எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு
சேண் தில்லை மா நகர்-வாய் சென்று சேர்க திரு தகவே

மேல்
*16.22 மெல்லக் கொண்டேகல்

#215
பேண திருத்திய சீறடி மெல்ல செல் பேர் அரவம்
பூண திருத்திய பொங்கு ஒளியோன் புலியூர் புரையும்
மாண திருத்திய வான் பதி சேரும் இருமருங்கும்
காண திருத்திய போலும் முன்னா மன்னு கானங்களே

மேல்
*16.23. அடலெடுத்துரைத்தல்

#216
கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை
வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா மன்னும் அம்பலத்தோன்
அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும்
கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே

மேல்
*16.24. அயர்வு அகற்றல்

#217
முன்னோன் அருள் முன்னும் உன்னா வினையின் முனகர் துன்னும்
இன்னா கடறு இது இ போழ்தே கடந்து இன்று காண்டும் சென்று
பொன் ஆர் அணி மணி மாளிகை தென் புலியூர் புகழ்வார்
தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலமே

மேல்
*16.25. நெறி விலக்கிக் கூறல்

#218
விடலை உற்றார் இல்லை வெம் முனை வேடர் தமியை மென் பூ
மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு
அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி
கடலை உற்றான் கடப்பார் இல்லை இன்று இ கடும் சுரமே

மேல்
*16.26. கண்டவர் மகிழ்தல்

#219
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன்
பின் பணைத்தோளி வரும் இ பெரும் சுரம் செல்வது அன்று
பொன் பணைத்து அன்ன இறை உறை தில்லை பொலி மலர் மேல்
நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே

மேல்
*16.27. வழிவிளையாடல்

#220
கண்கள் தம்மால் பயன் கொண்டனம் கண்டு இனி காரிகை நின்
பண் கட மென் மொழி ஆர பருக வருக இன்னே
விண்கள்-தம் நாயகன் தில்லையில் மெல்_இயல் பங்கன் எம் கோன்
தண் கடம்பை தடம் போல் கடும் கானகம் தண்ணெனவே

மேல்
*16.28. நகரணிமை கூறல்

#221
மின் தங்கு இடையொடு நீ வியன் தில்லை சிற்றம்பலவர்
குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குரூஉ கமலம்
துன்று அம் கிடங்கும் துறைதுறை வள்ளை வெள்ளை நகையார்
சென்று அங்கு அடை தடமும் புடை சூழ்தரு சேண் நகரே

மேல்
*16.29. நகர் காட்டல்

#222
மின் போல் கொடி நெடு வான கடலுள் திரை விரிப்ப
பொன் போல் புரிசை வட வரை காட்ட பொலி புலியூர்
மன் போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் மடவாய்
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே

மேல்
*16.30. பதிபரிசுரைத்தல்

#223
செய் குன்று உவை இவை சீர் மலர் வாவி விசும்பு இயங்கி
நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை ஞாங்கர் எங்கும்
பொய் குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும்
எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம் ஏந்து_இழையே

மேல்
*16.31. செவிலி தேடல்

#224
மயில் என பேர்ந்து இள வல்லியின் ஒல்கி மெல் மான் விழித்து
குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே
பயில் என பேர்ந்து அறியாதவன் தில்லை பல் பூம் குழலாய்
அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே

மேல்
*16.32. அறத்தொடு நிற்றல்

#225
ஆள் அரிக்கும் அரிதாய் தில்லை யாவருக்கும் எளிதாம்
தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல்
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார்
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே

மேல்
*16.33. கற்பு நிலைக்கு இரங்கல்

#226
வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ
கெடுத்தான் கெடல் இல் தொல்லோன் தில்லை பல் மலர் கேழ் கிளர
மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கி தழீஇ மகிழ்வுற்று
எடுத்தாற்கு இனியனவே இனி யாவன எம் அனைக்கே

மேல்
*16.34. கவன்றுரைத்தல்

#227
முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி
சிறு வலக்காரங்கள் செய்த எல்லாம் முழுதும் சிதைய
தெறு வல காலனை செற்றவன் சிற்றம்பலம் சிந்தியார்
உறு வல கானகம் தான் படர்வான் ஆம் ஒளி_இழையே

மேல்
*16.35. அடிநினைந்திரங்கல்

#228
தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும்
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய்
ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம் அனைக்கே

மேல்
*16.36. நற்றாய்க்கு உரைத்தல்

#229
தழுவின கை இறை சோரின் தமியம் என்றே தளர்வுற்று
அழுவினை செய்யும் நையா அம் சொல் பேதை அறிவு விண்ணோர்
குழுவினை உய்ய நஞ்சு உண்டு அம்பலத்து குனிக்கும் பிரான்
செழுவின தாள் பணியார் பிணியால் உற்று தேய்வித்ததே

மேல்
*16.37. நற்றாய் வருந்தல்

#230
யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின்
தோழியை நீத்து என்னை முன்னே துறந்து துன்னார்கள் முன்னே
வாழி இ மூதூர் மறுக சென்றாள் அன்று மால் வணங்க
ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் அரும் சுரமே

மேல்
*16.38. கிளி மொழிக்கு இரங்கல்

#231
கொல் நுனை வேல் அம்பலவன் தொழாரின் குன்றம் கொடியோள்
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என அயரா
என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று
என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே

மேல்
*16.39. சுடரோடு இரத்தல்

#232
பெற்றேனொடும் கிள்ளை வாட முதுக்குறை பெற்றி மிக்கு
நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக
பெற்றேன் பிறவி பெறாமல் செய்தோன் தில்லை தேன் பிறங்கு
மல் தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர் வானவனே

மேல்
*16.40. பருவம் நினைந்து கவறல்

#233
வை மலர் வாள் படை ஊரற்கு செய்யும் குற்றேவல் மற்று என்
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய்
மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து
கை மலரால் கண்புதைத்து பதைக்கும் எம் கார்_மயிலே

மேல்
*16.41. நாடத் துணிதல்

#234
வேயின தோளி மெலியல் விண்ணோர் தக்கன் வேள்வியின்-வாய்
பாயின சீர்த்தியன் அம்பலத்தானை பழித்து மும்மை
தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து திசைதிசை தாம்
போயின எல்லை எல்லாம் புக்கு நாடுவன் பொன்னினையே

மேல்
*16.42. கொடிக்குறி பார்த்தல்

#235
பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன
மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால்
உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா
குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே

மேல்
*16.43. சோதிடங் கேட்டல்

#236
முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால்
இன்னும் கடி இ கடி மனைக்கே மற்று யாம் அயர
மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல்
உன்னுங்கள் தீது இன்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே

மேல்
*16.44. சுவடு கண்டறிதல்

#237
தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர்
முள் வன் பரல் முரம்பத்தின் முன் செய் வினையேன் எடுத்த
ஒள்வன் படை_கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அ
கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவனே

மேல்
*16.45. சுவடு கண்டிரங்கல்

#238
பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய்
கோல தவிசின் மிதிக்கின் பதைத்து அடி கொப்புள் கொள்ளும்
வேல் ஒத்த வெம் பரல் கானத்தின் இன்று ஓர் விடலை பின் போம்
கால் ஒத்தன வினையேன் பெற்ற மாண்_இழை கால் மலரே

மேல்
*16.46. வேட்ட மாதரைக் கேட்டல்

#239
பேதை பருவம் பின் சென்றது முன்றில் எனை பிரிந்தால்
ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள்
ஏதில் சுரத்து அயலானொடு இன்று ஏகினள் கண்டனையே
போதில் பொலியும் தொழில் புலி பல் குரல் பொன்_தொடியே

மேல்
*16.47. புறவொடு புலத்தல்

#240
புயல் அன்று அலர் சடை ஏற்றவன் தில்லை பொருப்பு அரசி
பயலன்-தனை பணியாதவர் போல் மிகு பாவம் செய்தேற்கு
அயலன் தமியன் அம் சொல் துணை வெம் சுரம் மாதர் சென்றால்
இயல் அன்று எனக்கிற்றிலை மற்று வாழி எழில் புறவே

மேல்
*16.48. குரவொடு வருந்தல்

#241
பாயும் விடையோன் புலியூர் அனைய என் பாவை முன்னே
காயும் கடத்திடை ஆடி கடப்பவும் கண்டு நின்று
வாயும் திறவாய் குழை எழில் வீச வண்டு ஓலுறுத்த
நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே

மேல்
*16.49. விரதியரை வினாவல்

#242
சுத்திய பொக்கணத்து என்பு அணி கட்டங்கம் சூழ் சடை வெண்
பொத்திய கோலத்தினீர் புலியூர் அம்பலவர்க்கு உற்ற
பத்தியர் போல பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர்
பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே

மேல்
*16.50. வேதியரை வினாவல்

#243
வெதிர் ஏய் கரத்து மென் தோல் ஏய் சுவல் வெள்ளை நூலின் கொண்மூ
அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் தில்லை அம்பலத்து
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல்
எதிரே வருமே சுரமே வெறுப்ப ஒர் ஏந்தலோடே

மேல்
*16.51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்

#244
மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இ மேதகவே
பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று
ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே
தூண்டா விளக்கு அனையாய் என்னையோ அன்னை சொல்லியதே

மேல்
*16.52. வியந்துரைத்தல்

#245
பூம் கயிலாய பொருப்பன் திரு புலியூரது என்ன
தீங்கை இலா சிறியாள் நின்றது இவ்விடம் சென்று எதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து கிடந்து அலற
ஆங்கு அயிலால் பணிகொண்டது திண் திறல் ஆண்தகையே

மேல்
*16.53. இயைபு எடுத்துரைத்தல்

#246
மின் தொத்து இடு கழல் நூபுரம் வெள்ளை செம்பட்டு மின்ன
ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்றே
நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான்
குன்றத்திடை கண்டனம் அன்னை நீ சொன்ன கொள்கையரே

மேல்
*16.54. மீள உரைத்தல்

#247
மீள்வது செல்வது அன்று அன்னை இ வெங்கடத்து அ கடமா
கீள்வது செய்த கிழவோனொடும் கிளர் கெண்டை அன்ன
நீள்வது செய்த கண்ணாள் இ நெடும் சுரம் நீந்தி எம்மை
ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே

மேல்
*16.55. உலகியல்பு உரைத்தல்

#248
சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும்
விரும்பினர்-பால் சென்று மெய்க்கு அணியாம் வியன் கங்கை என்னும்
பெரும் புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய
கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே

மேல்
*16.56. அழுங்கு தாய்க்கு உரைத்தல்

#249
ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவர் அல்குவர் போய்
தீண்டில் எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்-வாய்
தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற பழம் விழுந்து
பாண்டில் எடுத்த பல் தாமரை கீழும் பழனங்களே

மேல்

* பதினேழாம் அதிகாரம்
*17 வரைவு முடுக்கம்

*17.1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்

#250
எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண்
செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல்
உழும் கொலை வேல் திரு சிற்றம்பலவரை உன்னலர் போல்
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே

மேல்
*17.2. பெரும்பான்மை கூறி மறுத்தல்

#251
பரம் பயன் தன் அடியேனுக்கு பார் விசும்பு ஊடுருவி
வரம்பு அயன் மால் அறியா தில்லை வானவன் வானகம் சேர்
அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட
குரம்பையர்-தம் இடமோ இடம் தோன்றும் இ குன்றிடத்தே

மேல்
*17.3. உள்ளது கூறி வரைவு கூடாதல்

#252
சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெரும் தேன் இழுமென்று
இறால் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் இது எந்தை
உறாவரை உற்றார் குறவர் பெற்றாளும் கொடிச்சி உம்பர்
பெறா அருள் அம்பலவன் மலை காத்தும் பெரும் புனமே

மேல்
*17.4. ஏதங்கூறி இரவரவு விலக்கல்

#253
கடம்-தொறும் வாரண வல்சியின் நாடி பல் சீயம் கங்குல்
இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால்
படம்-தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை
தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே
மேல்
*17.5. பழிவரவுரைத்ததுப் பகல்வரவு விலக்கல்

#254
களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து
பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு
ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல்
வெளிறு உற்ற வான் பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே

மேல்
*17.6. தொழுதிரந்து கூறல்

#255
கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல்
குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா
கழி கட்டு இரவின் வரல் கழல் கை தொழுதே இரந்தேன்
பொழி கண் புயலின் மயிலின் துவளும் இவள் பொருட்டே

மேல்
*17.7. தாய் அறிவு கூறல்

#256
விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ
வண்ணன் சிவன் தில்லை மல் எழில் கானல் அரையிரவின்
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது
கண்ணும் சிவந்து அன்னை என்னையும் நோக்கினள் கார்_மயிலே

மேல்
*17.8. மந்தி மேல் வைத்து வரைவு கடாதல்

#257
வான் தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் கடுவன்
தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல்
மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான்
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே

மேல்
*17.9. காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல்

#258
நறை கள் மலி கொன்றையோன் நின்று நாடகம் ஆடு தில்லை
சிறை-கண் மலி புனல் சீர் நகர் காக்கும் செ வேல் இளைஞர்
பறை கண் படும்படும்-தோறும் படா முலை பைம் தொடியாள்
கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே

மேல்
*17.10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல்

#259
கலர் ஆயினர் நினையா தில்லை அம்பலத்தான் கழற்கு அன்பு
இலர் ஆயினர் வினை போல் இருள் தூங்கி முழங்கி மின்னி
புலரா இரவும் பொழியா மழையும் புண்ணில் நுழை வேல்
மலரா வரும் மருந்தும் இல்லையோ நும் வரையிடத்தே

மேல்
*17.11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்

#260
இற வரை உம்பர் கடவுள் பராய் நின்று எழிலி உன்னி
குறவரை ஆர்க்கும் குளிர் வரை நாட கொழும் பவள
நிற வரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல்
உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே

மேல்
*17.12. இரவும் பகலும் வரவு விலக்கல்

#261
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின்
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான்
விழியா வரும் புரி மென் குழலாள் திறத்து ஐய மெய்யே
பழியாம் பகல் வரின் நீ இரவு ஏதும் பயன் இல்லையே

மேல்
*17.13. காலங் கூறி வரைவு கடாதல்

#262
மை ஆர் கதலி வனத்து வருக்கை பழம் விழு தேன்
எய்யாது அயின்று இள மந்திகள் சோரும் இரும் சிலம்பா
மெய்யா அரியது என் அம்பலத்தான் மதி ஊர்கொள் வெற்பின்
மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே

மேல்
*17.14. கூறுவிக் குற்றல்

#263
தே மாம் பொழில் தில்லை சிற்றம்பலத்து விண்ணோர் வணங்க
நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின்
வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால்
தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே

மேல்
*17.15. செலவு நினைந்து உரைத்தல்

#264
வல்சியின் எண்கு வளர் புற்று அகழ மல்கும் இருள்-வாய்
செல்வு அரிதன்று-மன் சிற்றம்பலவரை சேரலர் போல்
கொல் கரி சீயம் குறுகாவகை பிடி தான் இடை செல்
கல் அதர் என் வந்தவாறு என்பவர் பெறின் கார்_மயிலே

மேல்
*17.16 பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல்

#265
வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர்
வேரிக்கு அளிக்கும் விழு மலை நாட விரி திரையின்
நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை
ஏர் இ களி கரு மஞ்ஞை இ நீர்மை என் எய்துவதே

மேல்

* பதினெட்டாம் அதிகாரம்
*18 வரை பொருட் பிரிதல்

*18.1. முலை விலை கூறல்

#266
குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின் குலத்திற்கும் வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால் நினையின்
இறை வில் குலா வரை ஏந்தி வண் தில்லையன் ஏழ் பொழிலும்
உறை வில் குலா நுதலாள் விலையோ மெய்ம்மை ஓதுநர்க்கே

மேல்
*18.2. வருமது கூறி வரைவுடம்படுத்தல்

#267
வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு
தொடுத்தன நீ விடுத்து எய்த துணி என்னை தன் தொழும்பில்
படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் தாம் பணியார்க்கு
அடுத்தன தாம் வரின் பொல்லாது இரவின் நின் ஆர் அருளே

மேல்
*18.3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல்

#268
குன்றம் கிடையும் கடந்து உமர் கூறும் நிதி கொணர்ந்து
மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர்
மன் தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே

மேல்
*18.4. நீயே கூறு என்றல்

#269
கேழ் ஏவரையும் இல்லோன் புலியூர் பயில் கிள்ளை அன்ன
யாழ் ஏர் மொழியாள் இர வரினும் பகல் சேறி என்று
வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி
தாழேன் என இடைக்கண் சொல்லி ஏகு தனி வள்ளலே

மேல்
*18.5. சொல்லாது ஏகல்

#270
வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனம் மகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும் வகை இல்லை சீர் அருக்கன்
குருட்டின் புக செற்ற கோன் புலியூர் குறுகார் மனம் போன்று
இருட்டின் புரி குழலாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே

மேல்
*18.6. பிரிந்தமை கூறல்

#271
நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த
எல்லா நிதியும் உடன் விடுப்பான் இமையோர் இறைஞ்சும்
மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால்
சொல்லா அழல் கடம் இன்று சென்றார் நம் சிறந்தவரே

மேல்
*18.7. நெஞ்சொடு கூறல்

#272
அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கு எல்லாம்
மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல்
திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால்
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே

மேல்
*18.8. நெஞ்சொடு வருந்தல்

#273
ஏர் பின்னை தோள் முன் மணந்தவன் ஏத்த எழில் திகழும்
சீர் பொன்னை வென்ற செறி கழலோன் தில்லை சூழ் பொழில்-வாய்
கார் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கலந்து அகன்றார்
தேர் பின்னை சென்ற என் நெஞ்சு என்-கொலாம் இன்று செய்கின்றதே

மேல்
*18.9. வருத்தம் கண்டு உரைத்தல்

#274
கான் அமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையாம்
மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும்
வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல்
தேன் அமர் சொல்லி செல்லார் செல்லல் செல்லல் திரு_நுதலே

மேல்
*18.10. வழியழுகி வற்புறுத்தல்

#275
மது மலர் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெம் கான்
கதுமென போக்கும் நிதியின் அருக்கும் முன்னி கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கம் ஒர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல்
இது மலர் பாவைக்கு என்னோ வந்தவாறு என்பர் ஏந்து_இழையே

மேல்
*18.11. வன்புறை எதிர் அழிந்து இரங்கல்

#276
வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி
பந்தாடு இரும் பொழில் பல் வரை நாடன் பண்போ இனிதே
கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல்
சிந்தாகுலம் உற்று பற்றின்றி நையும் திருவினர்க்கே

மேல்
*18.12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்

#277
மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்
செய் என்பதே செய்தவன் தில்லை சூழ் கடல் சேர்ப்பர் சொல்லும்
பொய் என்பதே கருத்தாயின் புரி குழல் பொன் தொடியாய்
மெய் என்பது ஏது மற்று இல்லை-கொலாம் இ வியல் இடத்தே

மேல்
*18.13. தேறாது புலம்பல்

#278
மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும்
என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும்
பொன் செய்த மேனியன் தில்லை உறாரின் பொறை அரிதாம்
முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே

மேல்
*18.14. காலம் மறைத்துரைத்தல்

#279
கரும் தினை ஓம்ப கடவுள் பராவி நமர் கலிப்ப
சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில்
பரிந்து எனை ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றில் துன்றி
விரிந்தன காந்தள் வெருவரல் கார் என வெள்_வளையே

மேல்
*18.15. தூது வர உரைத்தல்

#280
வென்றவர் முப்புரம் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளி
குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று
சென்றவர் தூது-கொல்லோ இருந்தேமையும் செல்லல் செப்பா
நின்றவர் தூது-கொல்லோ வந்து தோன்றும் நிரை_வளையே

மேல்
*18.16. தூது கண்டழுங்கல்

#281
வருவன செல்வன தூதுகள் ஏதில வான் புலியூர்
ஒருவனது அன்பரின் இன்ப கலவிகள் உள் உருக
தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை
இருவின காதலர் ஏது செய்வான் இன்று இருக்கின்றதே

மேல்
*18.17. மெலிவு கண்டு செவிலி கூறல்

#282
வேய் இன மென் தோள் மெலிந்து ஒளி வாடி விழி பிறிதாய்
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவள செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்கு அமரன் சிற்றம்பலத்தான்
சேயினது ஆட்சியில் பட்டனளாம் இ திருந்து_இழையே

மேல்
*18.18. கட்டு வைப்பித்தல்

#283
சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில
குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் குறுகா அசுரர்
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல்
அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே

மேல்
*18.19. கலக்கமுற்று நிறுத்தல்

#284
மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு
ஊட்டி அன்றே நிற்பது ஓடியவாறு இவள் உள்ளம் எல்லாம்
காட்டி அன்றே நின்ற தில்லை தொல்லோனை கல்லாதவர் போல்
வாட்டி அன்று ஏர் குழலார் மொழியாதன வாய் திறந்தே

மேல்
*18.20. கட்டுவித்திக் கூறல்

#285
குயில் இது அன்றே என்னலாம் சொல்லி கூறன் சிற்றம்பலத்தான்
இயல் இது அன்றே என்னல் ஆகா இறை விறல் சேய் கடவும்
மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த
அயில் இது அன்றே இது அன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே

மேல்
*18.21. வேலனை அழைத்தல்

#286
வேலன் புகுந்து வெறியாடுக வெண் மறி அறுக்க
காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லை நின்ற
மேலன் புகுந்து என்-கண் நின்றான் இருந்த வெண் காடு அனைய
பாலன் புகுந்து இ பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே

மேல்
*18.22. இன்னல் எய்தல்

#287
அயர்ந்தும் வெறி மறி ஆவி செகுத்தும் விளர்ப்பு அயலார்
பெயர்ந்தும் ஒழியாவிடின் என்னை பேசுவ பேர்ந்து இருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதின் ஒழியின் என் ஆதும் துறைவனுக்கே

மேல்
*18.23. வெறி விலக்குவிக்க நினைதல்

#288
சென்றார் திருத்திய செல்லல் நின்றார்கள் சிதைப்பர் என்றால்
நன்றா அழகிது அன்றே இறை தில்லை தொழாரின் நைந்தும்
ஒன்றாம் இவட்கும் மொழிதல் இல்லேன் மொழியாதும் உய்யேன்
குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே

மேல்
*18.24. அறத்தொடு நிற்றலை உரைத்தல்

#289
யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர் நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய
வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல்
தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே

மேல்
*18.25. அறத்தொடு நிற்றல்

#290
வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர்
உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர்
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து
கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே

மேல்
*18.26. ஐயந்தீரக் கூறல்

#291
குடிக்கு அலர் கூறினும் கூறா வியன் தில்லை கூத்தன தாள்
முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூம் துறைவற்கு முரி புருவ
வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும்
படிக்கு அலர் ஆம் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே

மேல்
*18.27. வெறி விலக்கல்

#292
விதியுடையார் உண்க வேரி விலக்கலம் அம்பலத்து
பதி உடையான் பரங்குன்றினில் பாய் புனல் யாம் ஒழுக
கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின்
மதி உடையார் தெய்வமே இல்லை-கொல் இனி வையகத்தே

மேல்
*18.28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல்

#293
மன களியாய் இன்று யான் மகிழ்தூங்க தன் வார் கழல்கள்
எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இரும் தண் கயிலை
சின களி யானை கடிந்தார் ஒருவர் செ வாய் பசிய
புன கிளி யாம் கடியும் வரை சாரல் பொருப்பிடத்தே

மேல்
*18.29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல்

#294
இளையாள் இவளை என் சொல்லி பரவுதும் ஈர் எயிறு
முளையா அளவின் முதுக்குறைந்தாள் முடி சாய்த்து இமையோர்
வளையா வழுத்தாவரு திருச்சிற்றம்பலத்து மன்னன்
திளையா வரும் அருவி கயிலை பயில் செல்வியையே

மேல்
*18.30. தேர் வரவு கூறல்

#295
கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லை கார் கடல்-வாய்
புள் இனம் ஆர்ப்ப பொரு திரை ஆர்ப்ப புலவர்கள்-தம்
வள் இனம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின்
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே

மேல்
*18.31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்

#296
பூரண பொன் குடம் வைக்க மணி முத்தம் பொன் பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்க தொல் மால் அயற்கும்
காரணன் ஏர் அணி கண்ணுதலோன் கடல் தில்லை அன்ன
வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே

மேல்
*18.32. ஐயுற்றுக் கலங்கல்

#297
அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் துன்ப இன்பம்
பட களியா வண்டு அறை பொழில் தில்லை பரமன் வெற்பின்
கட களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ
விட களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசே

மேல்
*18.33. நிதி வரவு கூறா நிற்றல்

#298
என் கடை-கண்ணினும் யான் பிற ஏத்தா வகை இரங்கி
தன் கடைக்கண் வைத்த தண் தில்லை சங்கரன் தாழ் கயிலை
கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார்
முன் கடை-கண் இது காண் வந்து தோன்றும் முழு நிதியே

மேல்

* கற்பியல் ( 19 – 25 அதிகாரங்கள்)

* பத்தொன்பதாம் அதிகாரம்
*19 மணம் சிறப்புரைத்தல்

*19.1. மணமுரசு கூறல்

#299
பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார்
முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம்
அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின்
புரை சந்த மேகலையாய் துயர் தீர புகுந்து நின்றே

மேல்
*19.2. மகிழ்ந்துரைத்தல்

#300
இரும் துதி என்-வயின் கொண்டவன் யான் எப்பொழுதும் உன்னும்
மருந்து திசைமுகன் மாற்கு அரியோன் தில்லை வாழ்த்தினர் போல்
இருந்து திவண்டன வால் எரி முன் வலம் செய்து இட-பால்
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அரும் தழையே

மேல்
*19.3. வழிபாடு கூறல்

#301
சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால்
கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த
வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே
கார் இயல் கண்டர் வண் தில்லை வணங்கும் எம் காவலரே

மேல்
*19.4. வாழ்க்கை நலங்கூறல்

#302
தொண்டு இனம் மேவும் சுடர் கழலோன் தில்லை தொல் நகரில்
கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல்
தண்டு இனம் மேவும் திண் தோளவன் யான் அவள் தன் பணிவோள்
வண்டினம் மேவும் குழலாள் அயல் மன்னும் இ அயலே

மேல்
*19.5. காதல் கட்டுரைத்தல்

#303
பொட்டு அணியான் நுதல் போய் இறும் பொய் போல் இடை என பூண்
இட்டு அணியான் தவிசின் மலர் அன்றி மிதிப்ப கொடான்
மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலனே

மேல்
*19.6. கற்பறிவித்தல்

#304
தெய்வம் பணி கழலோன் தில்லை சிற்றம்பலம் அனையாள்
தெய்வம் பணிந்து அறியாள் என்றும் நின்று திறை வழங்கா
தெவ்வம் பணிய சென்றாலும் மன் வந்து அன்றி சேர்ந்து அறியான்
பெளவம் பணி மணி அன்னார் பரிசு இன்ன பான்மைகளே

மேல்
*19.7. கற்புப் பயப்புரைத்தல்

#305
சிற்பம் திகழ்தரு திண் மதில் தில்லை சிற்றம்பலத்து
பொன் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின்
கற்பு அந்தி வாய் வடமீனும் கடக்கும் படி கடந்தும்
இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ம் களிறே

மேல்
*19.8. மருவுதல் உரைத்தல்

#306
மன்னவன் தெம் முனை மேல் செல்லுமாயினும் மால் அரி ஏறு
அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது வரகுணன் ஆம்
தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றை தேவர்க்கு எல்லாம்
முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே

மேல்
*19.9. கலவி இன்பம் கூறல்

#307
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு
ஆனந்த வெள்ளத்திடை திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர்
ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இ அணி நலமே

மேல்

* இருபதாம் அதிகாரம்
*20 ஓதற் பிரிவு

*20.1. கல்வி நலங்கூறல்

#308
சீர் அளவு இல்லா திகழ்தரு கல்வி செம்பொன் வரையின்
ஆர் அளவு இல்லா அளவு சென்றார் அம்பலத்துள் நின்ற
ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல்
ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர் ஏந்து_இழையே

மேல்
*20.2. பிரிவு நினைவுரைத்தல்

#309
வீதல் உற்றார் தலை மாலையன் தில்லை மிக்கோன் கழற்கே
காதல் உற்றார் நன்மை கல்வி செல்வீ தரும் என்பது கொண்டு
ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான்
போதல் உற்றார் நின் புணர் முலை உற்ற புரவலரே

மேல்
*20.3. கலக்கம் கண்டுரைத்தல்

#310
கல் பா மதில் தில்லை சிற்றம்பலம்-அது காதல் செய்த
வில் பா விலங்கல் எம் கோனை விரும்பலர் போல அன்பர்
சொல் பா விரும்பினர் என்ன மெல்_ஓதி செவி புறத்து
கொல் பா இலங்கு இலை வேல் குளித்து ஆங்கு குறுகியதே

மேல்
*20.4. வாய்வழி கூறித் தலைமகள் வருந்தல்

#311
பிரியாமையும் உயிர் ஒன்றாவதும் பிரியின் பெரிதும்
தரியாமையும் ஒருங்கே நின்று சாற்றினர் தையல் மெய்யின்
பிரியாமை செய்து நின்றோன் தில்லை பேர் இயல் ஊரர் அன்ன
புரியாமையும் இதுவே இனி என்னாம் புகல்வதுவே

மேல்

* இருபத்தொன்றாம் அதிகாரம்
*21 காவற்பிரிவு

*21.1. பிரிவு அறிவித்தல்

#312
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன் தில்லையான் அருளால் விரி நீர் உலகம்
காப்பான் பிரிய கருதுகின்றார் நமர் கார் கயல் கண்
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே

மேல்
*21.2. பிரிவு கேட்டு இரங்கல்

#313
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா
தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன்
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின்
துறு கள் புரி குழலாய் இதுவோ இன்று சூழ்கின்றதே

மேல்

* இருபத்திரண்டாம் அதிகாரம்
*22 பகை தணி வினைப் பிரிவு

*22.1. பிரிவு கூறல்

#314
மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம் போர் மிடைந்த
பகை தணித்தற்கு படர்தல் உற்றார் நமர் பல் பிறவி
தொகை தணித்தற்கு என்னை ஆண்டுகொண்டோன் தில்லை சூழ் பொழில்-வாய்
முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே

மேல்
*22.2. வருத்தம் தணித்தல்

#315
நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என இங்ஙனே
பொருப்பு உறு தோகை புலம்புறல் பொய் அன்பர் போக்கு மிக்க
விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழிய
திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திரு_நுதலே

மேல்

* இருபத்திமூன்றாம் அதிகாரம்
*23 வேந்தற்கு உற்றுழிப் பிரிவு

*23.1. பிரிந்தமை கூறல்

#316
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல்
மாது குலாய மெல் நோக்கி சென்றார் நமர் வண் புலியூர்
காது குலாய குழை எழிலோனை கருதலர் போல்
ஏது-கொலாய் விளைகின்றது இன்று ஒன்னார் இடும் மதிலே

மேல்
*23.2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்

#317
பொன்னி வளைத்த புனல் சூழ் நிலவி பொலி புலியூர்
வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல்
துன்னி வளைத்த நம் தோன்றற்கு பாசறை தோன்றும்-கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகிலே

மேல்
*23.3. வான் நோக்கி வருந்தல்

#318
கோலி திகழ் சிறகு ஒன்றின் ஒடுக்கி பெடை குருகு
பாலித்து இரும் பனி பார்ப்பொடு சேவல் பயில் இரவின்
மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே
போலி திரு நுதலாட்கு என்னதாம்-கொல் என் போதரவே

மேல்
*23.4. கூதிர் கண்டு கவறல்

#319
கருப்பு இனம் மேவும் பொழில் தில்லை மன்னன்-கண் ஆர் அருளால்
விருப்பு இனம் மேவ சென்றார்க்கும் சென்று அல்கும்-கொல் வீழ் பனி-வாய்
நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற
பொருப்பு இனம் ஏறி தமியரை பார்க்கும் புயல் இனமே

மேல்
*23.5. முன் பனிக்கு நொந்துரைத்தல்

#320
சுற்றின வீழ் பனி தூங்க துவண்டு துயர்க என்று
பெற்றவளே எனை பெற்றாள் பெடை சிறகான் ஒடுக்கி
புற்று இல வாள் அரவன் தில்லை புள்ளும் தம் பிள்ளை தழீஇ
மற்று இனம் சூழ்ந்து துயிலப்பெறும் இ மயங்கு இருளே

மேல்
*23.6. பின்பனி நினைந்து இரங்கல்

#321
புரம் அன்று அயர பொருப்பு வில் ஏந்தி புத்தேளிர் நாப்பண்
சிரம் அன்று அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் அனையாள்
பரம் அன்று இரும் பனி பாரித்தவா பரந்து எங்கும் வையம்
சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே

மேல்
*23.7. இளவேனில் கண்டு இன்னல் எய்தல்

#322
வாழும் படி ஒன்றும் கண்டிலம் வாழி இ மாம் பொழில் தேன்
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய்
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலம் ஆதரியா
கூழின் மலி மனம் போன்று இருளாநின்ற கோகிலமே

மேல்
*23.8. பருவங் காட்டி வற்புறுத்தல்

#323
பூண்பது என்றே கொண்ட பாம்பன் புலியூர் அரன் மிடற்றின்
மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர்
காண்பது அன்றே இன்று நாளை இங்கே வர கார் மலர் தேன்
பாண் பதன் தேர் குழலாய் எழில் வாய்த்த பனி முகிலே

மேல்
*23.9. பருவம் அன்று என்று கூறல்

#324
தெளிதரல் கார் என சீர் அனம் சிற்றம்பலத்து அடியேன்
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம்
துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று
அளிதர காந்தளும் பாந்தளை பாரித்து அலர்ந்தனவே

மேல்
*23.10. மறுத்துக் கூறல்

#325
தேன் திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் சிற்றம்பலத்து எம்
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண்
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல்
தோன்றி கடி மலரும் பொய்ம்மையோ மெய்யில் தோன்றுவதே

மேல்
*23.11. தேர் வரவு கூறல்

#326
திருமால் அறியா செறி கழல் தில்லை சிற்றம்பலத்து எம்
கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும்
வருமால் உடல் மன் பொருந்தல் திருந்த மணந்தவர் தேர்
பொரும் மால் அயில் கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன் நகர்க்கே

மேல்
*23.12. வினை முற்றி நினைதல்

#327
புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும்
மயல் ஓங்கு இரும் களி யானை வரகுணண் வெற்பின் வைத்த
கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும்
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன்று ஓர் திரு முகமே

மேல்
*23.13. நிலைலமை நினைந்து கூறல்

#328
சிறப்பின் திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர்-தம்
பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர்
நிற பொன் புரிசை மறுகினின் துன்னி மட நடை புள்
இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் எழில் நகர்க்கே

மேல்
*23.14. முகிலொடு கூறல்

#329
அருந்து ஏர் அழிந்தனம் ஆலம் என்று ஓலமிடும் இமையோர்
மருந்து ஏர் அணி அம்பலத்தோன் மலர் தாள் வணங்கலர் போல்
திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் செல்வி சீர் நகர்க்கு என்
வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே

மேல்
*23.15. வரவெடுத்துரைத்தல்

#330
பணி வார் குழை எழிலோன் தில்லை சிற்றம்பலம் அனைய
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டு வண் தேர்
அணிவார் முரிசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே

மேல்
*23.16. மறவாமை கூறல்

#331
கருங்குவளை கடி மா மலர் முத்தம் கலந்து இலங்க
நெருங்கு வளை கிள்ளை நீங்கிற்றிலள் நின்று நான்முகனோடு
ஒருங்கு வளை கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய்
மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலுமே

மேல்

* இருபத்திநான்காம் அதிகாரம்
*24 பொருள் வயின் பிரிவு

*24.1. வாட்டங் கூறல்

#332
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என
பனி வரும் கண் பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய்
துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப
நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே

மேல்
*24.2. பிரிவு நினைவுரைத்தல்

#333
வறியார் இருமை அறியார் என மன்னும் மா நிதிக்கு
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர்
அறியா அளவு நின்றோன் தில்லை சிற்றம்பலம் அனைய
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே

மேல்
*24.3. ஆற்றாது புலம்பல்

#334
சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு
எறி வாள் கழித்தனள் தோழி எழுதில் கரப்பதற்கே
அறிவாள் ஒழுகுவது அஞ்சனம் அம்பலவர் பணியார்
குறி வாழ் நெறி செல்வர் அன்பர் என்று அம்ம கொடியவளே

மேல்
*24.4. ஆற்றாமை கூறல்

#335
வான கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல்
கான கடம் செல்வர் காதலர் என்ன கதிர் முலைகள்
மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும்
தேன் நக்க தார் மன்னன் என்னோ இனி சென்று தேர் பொருளே

மேல்
*24.5. திணை பெயர்த்து உரைத்தல்

#336
சுருள் தரு செம் சடை வெண் சுடர் அம்பலவன் மலயத்து
இருள் தரு பூம் பொழில் இன் உயிர் போல கலந்து இசைத்த
அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து அத்தம் சென்றோ
பொருள் தரக்கிற்கின்றது வினையேற்கு புரவலரே

மேல்
*24.6. பொருத்தம் அறிந்து உரைத்தல்

#337
மூவர் நின்று ஏத்த முதலவன் ஆட முப்பத்துமும்மை
தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லை அம்பலம் சீர் வழுத்தா
பாவர் சென்று அல்கும் நரகம் அனைய புனை அழல் கான்
போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே

மேல்
*24.7. பிரிந்தமை கூறல்

#338
தென் மா திசை வசை தீர்தர தில்லை சிற்றம்பலத்துள்
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும்
பொன் மா புரிசை பொழில் திருப்பூவணம் அன்ன பொன்னே
வன் மா களிற்றொடு சென்றனர் இன்று நம் மன்னவரே

மேல்
*24.8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்

#339
ஆழி ஒன்று ஈர் அடியும் இலன் பாகன் முக்கண் தில்லையோன்
ஊழி ஒன்றாதன நான்கும் ஐம்பூதமும் ஆறு ஒடுங்கும்
ஏழ் இயன்ற ஆழ் கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து
வாழி அன்றோ அருக்கன் பெரும் தேர் வந்து வைகுவதே

மேல்
*24.9. இகழ்ச்சி நினைந்து அழிதல்

#340
பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை என் பிரியின்
தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும்
அரியான் அருள் இலர் போல் அன்ன என்னை அழிவித்தவே

மேல்
*24.10. உறவு வெளிப்பட்டு நிற்றல்

#341
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் தெள் நீர் கடல் நஞ்சு
ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின் எல்லாம்
காணும் திசை-தொறும் கார் கயலும் செம் கனியொடு பைம்
பூணும் புணர் முலையும் கொண்டு தோன்றும் ஒர் பூம்_கொடியே

மேல்
*24.11. நெஞ்சொடு நோதல்

#342
பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் இ பொங்கு வெம் கா
னின் நணி நிற்கும் இது என் என்பதே இமையோர் இறைஞ்சும்
மன் அணி தில்லை வள நகர் அன்ன அன்னநடையாள்
மின் அணி நுண் இடைக்கோ பொருட்கோ நீ விரைகின்றதே

மேல்
*24.12. நெஞ்சொடு புலத்தல்

#343
நாய்-வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட
தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை
பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து
சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே

மேல்
*24.13. நெஞ்சொடு மறுத்தல்

#344
தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய
பூ மேவிய பொன்னை விட்டு பொன் தேடி இ பொங்கு வெம் கான்
நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன
வாம் மேகலையை விட்டோ பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பதே

மேல்
*24.14. நாள் எண்ணி வருந்தல்

#345
தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின்
பண் நீர் மொழி இவளை பையுள் எய்த பனி தடம் கண்
ணுள் நீர் உக ஒளி வாடிட நீடு சென்றார் சென்ற நாள்
எண் நீர்மையின் நிலனும் குழியும் விரல் இட்டு அறவே

மேல்
*24.15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்

#346
சுற்றம் பலம் இன்மை காட்டி தன் தொல் கழல் தந்த தொல்லோன்
சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று திண் கோட்டின் வண்ண
புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப
கொற்றம் மருவு கொல் ஏறு செல்லா நின்ற கூர்ம் செக்கரே

மேல்
*24.16. பருவங் கண்டு இரங்கல்

#347
கண் நுழையாது விண் மேகம் கலந்து கண மயில் தொக்கு
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய்
மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல்
பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே

மேல்
*24.17. முகிலொடு கூறல்

#348
அல் படு காட்டில் நின்று ஆடி சிற்றம்பலத்தான் மிடற்றின்
முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி
வில் படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விரை மலர் தூய்
நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே

மேல்
*24.18. தேர் வரவு கூறல்

#349
பாவியை வெல்லும் பரிசு இல்லையே முகில் பாவை அம் சீர்
ஆவியை வெல்ல கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்து
காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் கதுமென போய்
மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே

மேல்
*24.19. இளையர் எதிர்கோடல்

#350
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலத்தான் அமைத்த
ஊழின் வலியது ஒன்று என்னை ஒளி மேகலை உகளும்
வீழும் வரி வளை மெல் இயல் ஆவி செல்லாத முன்னே
சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியதே

மேல்
*24.20. உள் மகிழ்ந்து உரைத்தல்

#351
மயில் மன்னு சாயல் இ மானை பிரிந்து பொருள் வளர்ப்பான்
வெயில் மன்னு வெம் சுரம் சென்றது எல்லாம் விடையோன் புலியூர்
குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப
துயில் மன்னு பூ அணை மேல் அணையா முன் துவளுற்றதே

மேல்

* இருபத்தைந்தாம் அதிகாரம்
*25 பரத்தையிற் பிரிவு

*25.1. கண்டவர் கூறல்

#352
உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வர ஒருங்கே
எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப இள மயில் ஏர்
கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு
அடுத்து அணிவாள் இளையோர் சுற்றும் பற்றினர் மாதிரமே

மேல்
*25.2. பொறை உவந்து உரைத்தல்

#353
சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர் சுருங்கும் மருங்குல்
பெரும் பொறையாட்டியை என் இன்று பேசுவ பேர் ஒலி நீர்
கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும்
அரும் பொறை ஆகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே

மேல்
*25.3. பொதுப்படக் கூறி வாடி யழுங்கல்

#354
அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர் உறு நோய்
ஒப்புற்று எழில் நலம் ஊரன் கவர உள்ளும் புறம்பும்
வெப்புற்று வெய்து உயிர்ப்புற்று தம் மெல் அணையே துணையா
செப்பு உற்ற கொங்கையர் யாவர்-கொல் ஆருயிர் தேய்பவரே

மேல்
*25.4. கன விழந்து உரைத்தல்

#355
தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல்
ஆவா கனவும் இழந்தேன் நனவு என்று அமளியின் மேல்
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய்
பாவாய் தழுவிற்றிலேன் விழித்தேன் அரும் பாவியனே

மேல்
*25.5. விளக்கொடு வெறுத்தல்

#356
செய் முக நீல மலர் தில்லை சிற்றம்பலத்து அரற்கு
கை முகம் கூம்ப கழல் பணியாரின் கலந்தவர்க்கு
பொய் முகம் காட்டி கரத்தல் பொருத்தம் அன்று என்றிலையே
நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே

மேல்
*25.6. வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல்

#357
பூம் குவளை பொலி மாலையும் ஊரன் பொன் தோள் இணையும்
ஆங்கு வளைத்துவைத்து ஆரேனும் கொள்க நள்ளார் அரணம்
தீங்கு வளைத்த வில்லோன் தில்லை சிற்றம்பலத்து அயல்வாய்
ஓங்கு வளை கரத்தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே

மேல்
*25.7. பள்ளியிடத்து ஊடல்

#358
தவம் செய்திலாத வெம் தீவினையேம் புன்மை தன்மைக்கு எள்ளாது
எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன்
சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார்
நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல் விடு நல் கலையே

மேல்
*25.8. செவ்வணி விடுக்க இல்லோர் கூறல்

#359
தணி உற பொங்கும் இ கொங்கைகள் தாங்கி தளர் மருங்குல்
பிணியுற பேதை சென்று இன்று எய்துமால் அரவும் பிறையும்
அணியுற கொண்டவன் தில்லை தொல் ஆய நல்லார்கள் முன்னே
பணி உற தோன்றும் நுடங்கு இடையார்கள் பயில் மனைக்கே

மேல்
*25.9. அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல்

#360
இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி கோலம் செய்து
குரவு அணையும் குழல் இங்கு இவளால் இ குறி அறிவித்து
அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை ஆங்கு ஒருத்தி
தர அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகளே

மேல்
*25.10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்

#361
சிவந்த பொன் மேனி மணி திருச்சிற்றம்பலம் உடையான்
சிவந்த அம் தாள் அணி ஊரற்கு உலகியலாறு உரைப்பான்
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல்
சிவந்த அம் சாந்தமும் தோன்றின வந்து திரு மனைக்கே

மேல்
*25.11. மனை புகல் கண்ட வாயிலவர் கூறல்

#362
குரா பயில் கூழை இவளின் மிக்கு அம்பலத்தான் குழையாம்
அரா பயில் நுண் இடையார் அடங்கார் எவரே இனி பண்டு
இராப்பகல் நின்று உணங்கு ஈர்ம் கடை இத்துணை போழ்தின் சென்று
கரா பயில் பூம் புனல் ஊரன் புகும் இ கடி மனைக்கே

மேல்
*25.12. முகமலர்ச்சி கூறல்

#363
வந்தான் வயல் அணி ஊரன் என சினவாள் மலர் கண்
செந்தாமரை செவ்வி சென்ற சிற்றம்பலவன் அருளான்
முந்தாயின வியன் நோக்கு எதிர் நோக்க முக மடுவின்
பைம் தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றனவே

மேல்
*25.13. கால நிகழ்வு உரைத்தல்

#364
வில்லி கை போதின் விரும்பா அரும் பாவியர்கள் அன்பில்
செல்லி கை போதின் எரி உடையோன் தில்லை அம்பலம் சூழ்
மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு
எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே

மேல்
*25.14. எய்தல் எடுத்துரைத்தல்

#365
புலவி திரை பொர சீறடி பூம் கலம் சென்னி உய்ப்ப
கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம்
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று
உலவு இயலாத்தனம் சென்று எய்தல் ஆயின ஊரனுக்கே

மேல்
*25.15. கலவி கருதிப் புலத்தல்

#366
செ வாய் துடிப்ப கரும் கண் பிறழ சிற்றம்பலத்து எம்
மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்
வெவ் வாய் உயிர்ப்பொடு விம்மி கலுழ்ந்து புலந்து நைந்தாள்
இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இன்_நகையே

மேல்
*25.16. குறிப்பறிந்து புலந்தமை கூறல்

#367
மலரை பொறா அடி மானும் தமியள் மன்னன் ஒருவன்
பலரை பொறாது என்று இழிந்து நின்றாள் பள்ளி காமன் எய்த
அலரை பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம் வணங்கா
கலரை பொறா சிறியாள் என்னை-கொல்லோ கருதியதே

மேல்
*25.17. வாயிலவர் வாழ்த்தல்

#368
வில்லை பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து
வல்லை பொலிவொடு வந்தமையான் நின்று வான் வழுத்தும்
தில்லை பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின்
மல்லை பொலி வயல் ஊரன் மெய்யே தக்க வாய்மையனே

மேல்
*25.18. புனல் வரவுரைத்தல்

#369
சூன் முதிர் துள்ளு நடை பெடைக்கு இல் துணை சேவல் செய்வான்
தேன் முதிர் வேழத்தின் மென் பூ குதர் செம்மல் ஊரன் திண் தோள்
மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ தில்லையான் அருளே
போல் முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புது புனலே

மேல்
*25.19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்

#370
சேயே என மன்னு தீம் புனல் ஊரன் திண் தோள் இணைகள்
தோயீர் புணர் தவம் தொன்மை செய்தீர் சுடர்கின்ற கொலம்
தீயே என மன்னு சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய்
வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே

மேல்
*25.20. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல்

#371
அரமங்கையர் என வந்து விழா புகும் அவ்வவர் வான்_
அரமங்கையர் என வந்து அணுகும் அவள் அன்று உகிரால்
சிரம் அங்கு அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் வழுத்தா
புர மங்கையரின் நையாது ஐய காத்து நம் பொற்பரையே

மேல்
*25.21. தன்னை வியந்துரைத்தல்

#372
கனல் ஊர் கணை துணை ஊர் கெட செற்ற சிற்றம்பலத்து எம்
அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் அமர புல்லும்
மினல் ஊர் நகையவர் தம்-பால் அருள் விலக்காவிடின் யான்
புனல் ஊரனை பிரியும் புனல் ஊர் கண் அ பூம்_கொடியே

மேல்
*25.22. நகைத்துரைத்தல்

#373
இறுமாப்பு ஒழியும் அன்றே தங்கை தோன்றின் என் எங்கை அம் கை
சிறு மான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண் தோள்
பெறு மாத்தொடும் தன்ன பேர் அணுக்கு பெற்ற பெற்றியனோடு
இறுமாப்பு ஒழிய இறுமாப்பு ஒழிந்த இணை முலையே

மேல்
*25.23. நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல்

#374
வேயாது செப்பின் அடைத்து தமி வைகும் வீயின் அன்ன
தீயாடி சிற்றம்பலம் அனையாள் தில்லை ஊரனுக்கு இன்று
ஏயா பழி என நாணி என்-கண் இங்ஙனே மறைத்தாள்
யாய் ஆம் இயல்பு இவள் கற்பு நல் பால இயல்புகளே

மேல்
*25.24. பாணன் வரவுரைத்தல்

#375
விறலியும் பாணனும் வேந்தற்கு தில்லை இறை அமைத்த
திறல் இயல் யாழ் கொண்டுவந்து நின்றார் சென்று இரா திசை போம்
பறல் இயல் வாவல் பகல் உறை மா மரம் போலும்-மன்னோ
அறல் இயல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே

மேல்
*25.25. தோழி இயற்பழித்தல்

#376
திக்கின் இலங்கு திண் தோள் இறை தில்லை சிற்றம்பலத்து
கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன
அக்கு இன் நகை இவள் நைய அயல்-வயின் நல்குதலால்
தக்கு இன்று இருந்திலன் நின்ற செ வேல் எம் தனி வள்ளலே

மேல்
*25.26. உழையர் இயற்பழித்தல்

#377
அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற அம்பலத்து அடியார்
என்பிடை வந்து அமிழ்து ஊற நின்று ஆடி இரும் சுழியல்
தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின்
வன் பெடை மேல் துயிலும் வயல் ஊரன் வரம்பு இலனே

மேல்
*25.27. இயற்பட மொழிதல்

#378
அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம் தண் கயிலை
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும் உண்டேல்
பஞ்சு ஆர் அமளி பிரிதல் உண்டோ எம் பயோதரமே

மேல்
*25.28. நினைந்து வியந்துரைத்தல்

#379
தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் சிற்றம்பலத்தான்
கள்ளம் புகு நெஞ்சர் காணா இறை உறை காழி அன்னாள்
உள்ளம் புகும் ஒருகால் பிரியாது உள்ளி உள்ளு-தொறும்
பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையளே

மேல்
*25.29. வாயில் பெறாது மகன் திறம் நினைதல்

#380
தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும்
வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வா
யான் வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான்
நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே

மேல்
*25.30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்

#381
கயல் வந்த கண்ணியர் கண் இணையால் மிகு காதரத்தான்
மயல் வந்த வாட்டம் அகற்றா விரதம் என் மா மதியின்
அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு
புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டு பொலிபவரே

மேல்
*25.31. வாயில் வேண்டத் தோழி கூறல்

#382
கூற்று ஆயின சின ஆளி எண்ணீர் கண்கள் கோள் இழித்தால்
போல் தான் செறி இருள் பொக்கம் எண்ணீர் கன்று அகன்ற புனிற்று
ஈற்றா என நீர் வருவது பண்டு இன்று எம் ஈசர் தில்லை
தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே

மேல்
*25.32. தோழி வாயில் வேண்டல்

#383
வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ்
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன்
புயம் தலை தீர புலியூர் அரன் இருக்கும் பொருப்பின்
கயம் தலை யானை கடிந்த விருந்தினர் கார்_மயிலே

மேல்
*25.33. மனையவர் மகிழ்தல்

#384
தேவி அங்கண் திகழ் மேனியன் சிற்றம்பலத்து எழுதும்
ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான்
மேவு இயம் கண்டனையோ வந்தனன் என வெய்து உயிர்த்து
காவியம் கண் கழுநீர் செவ்வி வெளவுதல் கற்றனவே

மேல்
*25.34. வாயின் மறுத்துரைத்தல்

#385
உடை மணி கட்டி சிறுதேர் உருட்டி உலாத்தரும் இ
நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா
விடை மணிகண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம்
கடை மணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே

மேல்
*25.35. பாணனொடு வெகுளுதல்

#386
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய்
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர்
வை கொண்ட ஊசி கொல் சேரியில் விற்று எம் இல் வண்ணவண்ண
பொய் கொண்டு நிற்கல் உற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே

மேல்
*25.36. பாணன் புலந்துரைத்தல்

#387
கொல் ஆண்டு இலங்கு மழு படையோன் குளிர் தில்லை அன்னாய்
வில் ஆண்டு இலங்கு புருவம் நெரிய செ வாய் துடிப்ப
கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று
பல்லாண்டு அடியேன் அடி வலம்கொள்வன் பணி_மொழியே

மேல்
*25.37. விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல்

#388
மத்த கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும்
தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து
முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடு என்னாத முன்னம்
கித்த கருங்குவளை செவ்வி ஓடி கெழுமினவே

மேல்
*25.38. ஊடல் தணிவித்தல்

#389
கவலம் கொள் பேய் தொகை பாய்தர காட்டிடை ஆட்டு உவந்த
தவல் அங்கு இலா சிவன் தில்லை அன்னாய் தழுவி முழுவி
சுவல் அங்கு இருந்த நம் தோன்றல் துணை என தோன்றுதலால்
அவலம் களைந்து பணி செயற்பாலை அரசனுக்கே

மேல்
*25.39. அணைந்த வழி யூடல்

#390
சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய்
வேல் தான் திகழ் கண் இளையார் வெகுள்வர் மெய் பாலன் செய்த
பால் தான் திகழும் பரிசினம் மேவும் படிறு உவவேம்
கால் தான் தொடல் தொடரேல் விடு தீண்டல் எம் கைத்தலமே

மேல்
*25.40. புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்

#391
செம் தார் நறும் கொன்றை சிற்றம்பலவர் தில்லை நகர் ஓர்
பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு
வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறு என் வள மனையில்
கொந்து ஆர் தடம் தோள் விடம் கால் அயில் படை கொற்றவரே

மேல்
*25.41. கலவி கருதிப் புலத்தல்

#392
மின் துன்னிய செம் சடைவெண் மதியன் விதியுடையோர்
சென்று உன்னிய கழல் சிற்றம்பலவன் தென்னம் பொதியில்
நன்றும் சிறியவர் இல் எமது இல்லம் நல் ஊர மன்னோ
இன்று உன் திருவருள் இத்துணை சாலும்-மன் எங்களுக்கே

மேல்
*25.42. மிகுத்துரைத்து ஊடல்

#393
செழுமிய மாளிகை சிற்றம்பலவர் சென்று அன்பர் சிந்தை
கழுமிய கூத்தர் கடி பொழில் ஏழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழு குடியீர்
விழுமிய அல்ல-கொல்லோ இன்னவாறு விரும்புவதே

மேல்
*25.43. ஊடல் நீட வாடி உரைத்தல்

#394
திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில்
இருந்தேன் உய வந்து இணை மலர் கண்ணின் இன் நோக்கு அருளி
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம்
வருந்தேல் அது அன்று இதுவோ வருவது ஒர் வஞ்சனையே

மேல்
*25.44. துனியழிந்து உரைத்தல்

#395
இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு என் நிலை இமையோர் இறைஞ்சும்
செயல் மன்னும் சீர் கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில்
புயல் மன்னு குன்றில் பொரு வேல் துணையா பொம்மென் இருள்-வாய்
அயல் மன்னும் யானை துரந்து அரி தேரும் அதரகத்தே

மேல்
*25.45. புதல்வன்மேல் வைத்துப் புலவிதீர்தல்

#396
கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களை கண் பிழைப்பித்து
எதிர்த்து எங்கு நின்று எ பரிசு அளித்தான் இமையோர் இறைஞ்சும்
மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார்
பொது தம்பலம் கொணர்ந்தோ புதல்வா எம்மை பூசிப்பதே

மேல்
*25.46. கலவி இடத்து ஊடல்

#397
சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண்
மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை
உலை மலி வேல் படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி
கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே

மேல்
*25.47. முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்தல்

#398
ஆறு ஊர் சடை முடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும்
மாறு ஊர் மழ விடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு
நீறு ஊர் கொடு நெறி சென்று இ செறி மென் முலை நெருங்க
சீறூர் மரை அதளில் தங்கு கங்குல் சிறு துயிலே

மேல்
*25.48. பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல்

#399
ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும்
மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே
மெய் உறவாம் இது உன் இல்லே வருக என வெள்கி சென்றாள்
கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகையே

மேல்
*25.49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்

#400
கார் அணி கற்பகம் கற்றவர் நல் துணை பாணர் ஒக்கல்
சீர் அணி சிந்தாமணி அணி தில்லை சிவனடிக்கு
தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர்
ஊருணி உற்றவர்க்கு ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே

மேல்