3.இசிறத்துக் காண்டம்-1

தேவையான படலத்தின்
மீது சொடுக்குக

1.ஈமான் கொண்ட படலம்
2.மதீனத்தார் வாய்மை
கொடுத்த படலம்

3.யாத்திரைப் படலம்
4.விடமீட்ட படலம்
5.சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்
6.உம்மி மகுபதுப் படலம்
7.மதீனம் புக்க படலம்
8.கபுகாபுப் படலம்
9.விருந்திட்டு ஈமான்
கொள்வித்த படலம்

10.உகுபான் படலம்
11.சல்மான் பாரிசுப் படலம்
12.ககுபத்துல்லாவை
நோக்கித் தொழுத படலம்

13.ஓநாய் பேசிய படலம்
14.வத்தான் படைப் படலம்
15.பாத்திமா திருமணப் படலம்
16.சீபுல் பகுறுப் படலம்
17.புவாத்துப் படலம்
18.அசீறாப் படலம்
19.பத்னுன்னகுலாப் படலம்
20.பதுறுப் படலம்
21.சவீக்குப் படலம்
22.குதிரிப் படலம்
23.தீயம்றுப் படலம்
24.அபிறாபிகு வதைப் படலம்
25.அசனார் பிறந்த படலம்

1. ஈமான் கொண்ட படலம்


$3.1.1

#2346
மணி திரண்டு அனைய திண் தோள் முகம்மது மக்கம் மீதில்
அணிபெற இருந்து வல்லோன் அருளொடும் மதீனத்து ஏகி
பணி பரித்து உவந்து வந்த பாரில் குபிர் இருள் படலம் நீக்கி
திணி சுடர் நிலா தீன் ஓங்க செய்தவை எடுத்து சொல்வாம்

மேல்
$3.1.2

#2347
கதி மனைக்கு உரிய தாரை காட்டும் நல் வினையும் ஊழல்
பதி செய் தீவினையும் மாறுபட்டு ஒரு தலம் சேர்ந்து என்ன
விதி மறை கதிர் மெய் தீனும் வெம் குபிர் களையும் ஒன்றாய்
பொது அற கலந்து மக்கா புரத்தினில் இருக்கும் நாளில்

மேல்
$3.1.3

#2348
பாய் திரை பரவை சூழ்ந்த படிக்கு அணி திலதம் ஆவி
ஆய மக்காவின் கச்சில் அணிபெற ஐம்பத்தாறு
தேய மானிடரும் கூண்ட திரளொடும் மதீனம் என்னும்
தூய மா நகரத்தோரும் வந்தனர் துலங்க அன்றே

மேல்
$3.1.4

#2349
வால் வளை தரளம் சிந்தும் வாவி சூழ் மதீனா வாழும்
மேலவன் அசுஅது என்னும் விறல் உடை படலை தோளான்
காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும்
சீல நம் நபியை காண சிந்தையில் சிந்தித்தானே

மேல்
$3.1.5

#2350
தன் உயிர் என்ன நீங்கார் தலைமையின் உரிய தோழர்
பன்னிருவருக்கு நேர்ந்த பண்புடன் நெறிகள் கூறி
பின் அகபா என்று ஓதும் பெரும் தலத்து உறைந்து காட்சி
மன்னிய முகம்மதின் தண் மலர் பதம் வந்து கண்டார்

மேல்
$3.1.6

#2351
மக்க மா நகரில் வாழும் முகம்மது பாதம் போற்றி
பக்கலில் இருந்து அன்பாக பரிவொடும் கலிமா ஓதி
மிக்க தீன் பெருகி செல்வம் விளங்கிட ஈமான் கொண்டு
தக்க நல் வணக்கத்து உற்ற சறுத்தினை கருத்துள் கொண்டார்

மேல்
$3.1.7

#2352
நல் வழிக்கு உரியராகி நடுக்கம் ஒன்று இன்றி தங்கள்
கல்பினில் கசடு நீத்து கர கமலங்கள் நீட்டி
செல்வ நம் நயினார் செவ்வி திரு கரத்திடத்தில் சேர்த்தி
பல்விதம் வரினும் வார்த்தை படி தவறிலம் யாம் என்றார்

மேல்
$3.1.8

#2353
வெற்றி வாள் முகம்மது உள்ளம் வேண்டிய வார்த்தைப்பாடு
முற்று உற முடித்து தீனின் முறைமையில் தலைவராகி
நல் தவமுடையீர் மேலும் நல் வழி சிதையா வண்ணம்
உற்ற ஒருவரை இன்று எங்களுடன் படுத்திடுக என்றார்

மேல்
$3.1.9

#2354
இதத்த நல் மொழியதாய் பன்னிருவரும் உரைத்த மாற்றம்
மதித்து மா மறையில் தேர்ந்த முசுஇபை வள்ளல் கூவி
விதித்த நல் நெறி வழாமல் குறானையும் விரித்து காட்டி
பதித்தலத்து இவர்க்கு உற்றோர்க்கும் நல்வழிப்படுத்தும் என்றார்

மேல்
$3.1.10

#2355
வடிவு உறை அசுஅதோடு முசுஇபு மகிழ்வின் காமர்
அடல் அரி இறசூலுல்லா அம்புய பதத்தில் தாழ்ந்து
படர் ஒளி குலவும் மாட பதி கடந்து அடவி நீந்தி
புடை வளம் பலவும் நோக்கி போயினர் மதீனம் மூதூர்

மேல்
$3.1.11

#2356
கோட்டு உடை மலரின் மன்றல் குலவிய மதீனம் புக்கி
தோள் துணை அசுஅதோடு முசுஇபு தோன்றல்-தானும்
பாட்டு அளி முரலும் தாம தலைவர் பன்னிருவர் சூழ
வேட்டமுற்று ஆதி தூதர் விரித்த தீன் விளக்கம் செய்தார்

மேல்
$3.1.12

#2357
இல்லகத்து இருந்து தீனின் இயல் மறை முறை வழாது
சொல்லிய முசுஇபோடு தொடை புயத்து அசுஅதும் ஓர்
தொல் இருள் கிடந்தது என்ன சுடரவன் கதிர் புகாது
பல்லியம் அளிகள் ஆர்க்கும் பல் மலர் காவில் புக்கார்

மேல்
$3.1.13

#2358
தண்டலை இடத்தில் புக்கி தடத்தின் சம்பரத்துள் ஆடிக்
கொண்டு ஒலுக் கவின செய்து குதா-தனை வணங்கி ஏத்தி
மண்டலம் புரக்கும் வள்ளல் முகம்மது-தமையும் போற்றி
விண் தலை தடவும் கோட்டு தருவின் வீற்றிருந்தார் அன்றே

மேல்
$3.1.14

#2359
உரம் தனி உருகி ஆதி உறுதி நாயகனுக்கு அன்பாய்
சிரம் தரை தீண்ட தீனோர் செய் முறை வணக்கம் செய்தோர்
மரம் தரும் நீழல் வைகும் மாந்தர்கள் தெரியா வண்ணம்
கரந்து அதிசயித்து நோக்கி கறுத்து ஒரு காளை நின்றான்

மேல்
$3.1.15

#2360
குறித்து நோக்கி அ சஃது என்னும் கொற்றவன் கருத்தினூடு
வெறுத்து இ ஊரிடை மக்காவில் விளைந்த வல் வினைகள் எல்லாம்
பொறுத்தது காணும் என்ன புழுங்கி பூம் பொழிலின் நீழல்
இறுத்தவர்க்கு எதிர்கொடாமல் எழுந்து போய் உசைதை சார்ந்தான்

மேல்
$3.1.16

#2361
நறும் கதிர் குலவும் மாட மக்க மா நகரில் ஹாஷிம்
பெறும் குலத்து ஒருவன் தோன்ற பெரும் பகை விளைந்து அ ஊரும்
உறங்கின செல்வம் மாறி ஒருவருக்கொருவர் ஆகா
மறம் கிளர் மனத்தர் ஆகி மாறுபட்டு இருந்தார் அன்றே

மேல்
$3.1.17

#2362
அன்னவன் மாய வஞ்ச மதத்தினுள்ளாய் என் அன்னை
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி
இ நகர்-தனையும் மார்க்கத்து ஈடுபட்டு ஒழிய நின்றான்
உன்னுவது என்-கொல் நள்ளார் ஊன் புலால் உணங்கும் வேலோய்

மேல்
$3.1.18

#2363
மதியிலியவராய் மக்க மா நகரவரை போல் இ
பதியினில் புகுந்தும் பின்முன் பார்ப்பது பழுது கோறல்
விதி இது சரதம் என்ன சகுது உளம் வெகுண்டு செம் தேன்
உதிர்தரும் படலை திண் தோள் உசைது நெஞ்சு உழுக்க சொன்னான்

மேல்
$3.1.19

#2364
சாது உரை எனும் வேல் உள்ளம் தைத்திட மார்க்கம் மாறும்
பாதகம் இ ஊருள்ளும் படர்ந்ததோ பலரும் காணில்
பேதுறும் முன்னம் யாமே பெரும் பகை துடைத்து கோடற்கு
ஏது போதம் சொல் என்றான் இவன் அதற்கு எடுத்து சொல்வான்

மேல்
$3.1.20

#2365
குரவரில் ஒருவன் முன்னோன் கொல்வதற்கு உலகம் கொள்ளாது
அரு மறை மாறி நின்றோர் ஆர் உயிர் இழந்தார் என்ன
தெரிவரும் ஆற்றால் உன்னை தெறுபவர் இலை யான் கொன்றால்
பரிவுறும் பழியை சாரும் சாரவும் படுவது அன்றே

மேல்
$3.1.21

#2366
அன்னதால் மார்க்கம் மாறும் அவர் உயிர் செகுப்ப வேண்டி
மின்னிய கதிர் வாள் தாங்கி விரைக என சகுது வீறா
சொன்ன சொல் மறாது உசைது கோறலை துணிந்து சென்றான்
மன்னிய மலர் தேன் தாது மாரி ஒத்து உதிர்க்கும் காவில்

மேல்
$3.1.22

#2367
மருங்கினில் விசித்த கச்சும் வல கரம் தாங்கும் வாளும்
கரும் கரி கரத்தின் நீண்ட கரம் தனி வீச்சும் கோப
நெருங்கிய நோக்கும் வேர்வை நித்தில பனிப்புமாக
ஒருங்கினில் சோலை புக்கும் உசைதை கண்டு ஐயமுற்றார்

மேல்
$3.1.23

#2368
இங்கு இவன் இ ஊருள்ளார்க்கு இயல்புறும் தலைவன் வேகம்
தங்கிய மனத்தினோடும் சார்ந்தனன் சார்தல் நோக்கின்
வெம் கொலை விளைத்தல் வேண்டும் என உரை விரித்து சொன்னார்
பொங்கு சீர் அசுஅது என்போர் புண்ணிய முசுஇபுக்கே

மேல்
$3.1.24

#2369
வருபவன்-தன்னை நோக்கி மனம் மறுகுவது அன்று அல்லா
திருவருள் நம்-பால் உண்டு தெருட்சியில் சிறிது சொல்லால்
விரைவொடும் அவன்-தன் உள்ளம் விளக்குவன் காண்டிர் என்ன
முருகு உலா அசுஅதுக்கு முசுஇபு அன்புற சொன்னாரால்

மேல்
$3.1.25

#2370
மாரி தண் அலர்கள் சிந்தும் வனத்தினில் வடி வாள் ஏந்தி
வீரத்தின் விழைவு கூர மென் மனம் புழுங்கி விம்ம
கோரத்தின் கடைக்கண் அங்கி கொழுந்து எழ உசைது நோக்கி
பாரை தீன்படுத்தி நின்றோர் பயப்பட வெகுண்டு சொல்வான்

மேல்
$3.1.26

#2371
வியன் உறு மக்க மூதூர் வேறுபட்டு ஒழிய செய்தோர்-
வயின் உறைந்து இவணின் வந்து வழிகெட மதீனத்தார்க்கு
பயிலுதல் தொடுத்தீர் மாற்றம் பகர்வது தவிர்ந்து நீங்கி
அயல் அகல்வதுவே நுங்கட்கு அடவு என அறிய வேண்டும்

மேல்
$3.1.27

#2372
என் உரை மறுத்து இ ஊரில் இருந்திரேல் குருதி சிந்த
மின் அவிர் வடி வாட்கு ஆவி விருந்துசெய்திடுவன் வேறு
பன்னுவது என்-கொல் சூழ்ச்சி தருமத்தால் பகர்ந்தேன் என்றான்
பொன் அவிர் அலங்கல் திண் தோள் புரவலன் உசைது என்போனே

மேல்
$3.1.28

#2373
கடுத்து நின்று உரைத்த மாற்றம் காவலன் முசுஇபு ஓர்ந்து
தொடுத்து எடுத்து உரைத்த வாய்மை எங்கட்கு சூழ்ச்சித்து ஆகும்
அடுத்தவர்க்கு அறம் ஈது அன்றோ ஆயினும் ஒரு சொல் கேட்டு என்
னிடத்தினில் சிறிது போழ்து இங்கிருந்து எழுந்திடுக என்றார்

மேல்
$3.1.29

#2374
ஈங்கு இவன் உரைக்கும் வாய்மை இதம் அலது அயிதமேனும்
பாங்கொடும் அறிவோம் என்றே இதயத்துள் படுத்தி கொல்லும்
தீங்கினை ஒரு-பால் சேர்த்தி செவ்விதின் இருந்தான் செம் தேன்
பூம் குலாய் விரிந்த சோலை புது நிழல் பரப்பின் அன்றே

மேல்
$3.1.30

#2375
ஒருவனை இறசூல்-தம்மை உளத்தினில் இருத்தி யார்க்கும்
தெரிதர பிசுமில் ஓதி தீன் முதல் முறைமைத்தாய
விரிதரும் குறானை ஓதி காட்டினர் விளைந்த தீமை
கரு எனும் நினைவு சிந்தி கட்டு அழிந்து ஓட அன்றே

மேல்
$3.1.31

#2376
மூதுரை மறையின் தீம் சொல் முசுஇபு ஆண்டு உரைப்ப கேட்டு
காது உளம் குளிர்ந்து பொல்லா கசடு எறிந்து அறிவின் ஆழ்ந்து
பாதகம் பலியா வண்ணம் பாரில் தொல் விதியினால் இ
மா தவம் கிடைக்கப்பெற்றது இன்று என மகிழ்வுகூர்ந்தார்

மேல்
$3.1.32

#2377
நிலத்தும் விண்ணிடத்தும் உற்றோர் நின்ற நல் நெறியும் ஈதே
சொல தகா தூயோன் தூது என்று உண்மையில் சொல்வது ஈதே
பொலத்தினில் அமைத்த சொர்க்கம் புகுத்துவிப்பதுவும் ஈதே
நலத்தகு முறைமை ஈது என்று அகத்தினில் நாட்டினாரால்

மேல்
$3.1.33

#2378
மனத்தின் நல் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபை போற்றி மன்னர்
இனத்தினும் உயிரின் மிக்காய் என எடுத்து இனிய கூறி
கனத்த நூல் முறையின் வாய்த்த நபி கலிமாவை ஓதி
சினத்து இடர் குபிரை மாற்றி தீன் நிலை நெறி நின்றாரே

மேல்
$3.1.34

#2379
உள்ளகம் பொருந்தி ஈமான் கொண்டு உசைது என்னும் வேந்தர்
வள்ளலால் இருவர் செவ்வி மதி எனும் வதனம் நோக்கி
கொள்ளும் என் மனத்தின் உற்ற குறிப்பு எனும் கருமம் இன்னே
விள்ளுதல் செவி கொள்வீர் என்று அணிபெற வியத்தி சொல்வார்

மேல்
$3.1.35

#2380
பூதலத்து உயர்ந்த மேன்மை பொறையினில் அறிவில் மிக்கான்
மா தவர் உரைக்கும் வேத வழி முறை ஒழுகி நின்றான்
காது வெம் களிறே அன்ன கருதலர்க்கு அரி ஏறு ஒப்பான்
சாது எனும் அரசன் இ ஊர் தலைவரில் தலைமையானே

மேல்
$3.1.36

#2381
மன்னும் என் உயிரே அன்னான் மாற்றம் ஏதெனினும் என் சொல்
தன் உரை என்ன தேறும் தன்மையன் வடு ஒன்று இல்லான்
அன்னவன் கலிமா ஓதி ஆரண நெறி நின்றானேல்
இ நகர் முழுதும் ஈமான் கொண்டதற்கு ஐயம் இன்றே

மேல்
$3.1.37

#2382
பிடித்து ஒரு மொழியில் நெஞ்சம் பேதுற அவனை நுங்கள்
இடத்தினில் வரச்செய்வேன் யான் இதத்தொடும் இனிய மாற்றம்
தொடுத்து உரைத்து அரும் குறானை செவி வளை துளைக்குள் ஓட்டி
படித்த நல் அறிவில் தேற்றி தீன் வழி படுத்தும் என்றார்

மேல்
$3.1.38

#2383
இருவரும் களிப்ப கூறி எழில் மலர் பொழில் விட்டு ஏகி
தெரிதர ஈமான் கொண்ட சிந்தையில் புளகம் பூப்ப
திரு மரு புயங்கள் ஓங்க செம் முகம் மலர்ந்து தோன்ற
வருவது நோக்கி சஃது மன்னவன் உளத்தில் சொல்வான்

மேல்
$3.1.39

#2384
மடித்து இதழ் அதுக்கி காந்தி வாள் வலன் ஏந்தி மீசை
துடித்திட வேகத்தோடும் சென்றனன் துணர் பைம் காவை
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால்
அடுத்தனன் அவணில் உற்றது அறிகிலம் என்று நின்றான்

மேல்
$3.1.40

#2385
இன்னணம் சகுது நெஞ்சத்து எண்ணி நின்று உலவும் நேரம்
மன்னவர் உசைதும் புக்கார் மா மரை வதனம் நோக்கி
மின்னிய கதிர் வாள் தாங்கி போயதும் மீண்டவாறும்
பன்னுக என்றான் கேட்டு அங்கு அவர் எதிர் பகர்வதானார்

மேல்
$3.1.41

#2386
பொழிலிடை புகுந்தேன் நின்ற புரவலர்-தம்மை கண்டேன்
வழி வசம் அலது வேறு ஓர் வடு வரும் தகைமை காணேன்
மொழிவ பின் ஒன்று கேட்டேன் முன்னவன் அசுஅது என்போன்
பழிபட கோறல் வேண்டி வந்தனர் பகைஞர் என்றே

மேல்
$3.1.42

#2387
தாய்க்கு முன்னவள்-தன் சேய்-பால் தரியலர் அடைந்தார் என்னும்
வாய் கொளா கொடிய வெம் சொல் மனத்தினை வெதுப்ப கண்கள்
தீய்க்கொள சினந்து சீறி செம் கரம் பிசைந்து நக்கி
மூக்கினில் விரலை சேர்த்தி முரணொடும் எழுந்து நின்றான்

மேல்
$3.1.43

#2388
என் உயிர் துணைவன்-தன் முன் எதிர்ந்தவர் யாவரேனும்
பன்ன அரும் விசும்பில் ஆவி பட விடுத்திடுவன் என்ன
தென் உறும் கதிர் வாள் ஏந்தி சீற்றம் முன் நடப்ப சென்றான்
முன்னை ஊழ் விதியின் வண்ணம் முறை நெறி அறிகிலானே

மேல்
$3.1.44

#2389
செம் கதிர் வடி வாள் தாங்கி சென்றவன் துடவை புக்கி
எங்கினும் தெரிய நோக்கி இகல் மருவலரை காணான்
பொங்கிய மன்றல் தூங்கும் பொழிலில் அ இருவர் தாமே
தங்கி அங்கு இருப்ப கண்டான் தனித்து அவண் சார்ந்து நின்றான்

மேல்
$3.1.45

#2390
இரைந்து அளி சுழலும் காவில் இருப்பவர்-தம்மை நோக்கி
விரைந்து இவண் அகன்று வேற்று ஊர் புகும் இவை வினவிரேல் சோகு
அருந்திட உடலம் வீழ்த்தி ஆர் உயிர் பறித்து நுங்கள்
பெரும் தமர்-தமக்கும் கூட பிழை விளைத்திடுவன் மாதோ

மேல்
$3.1.46

#2391
சாற்றியது எனது தம்பி தமையன் என்பதனினானும்
மாற்றலர்க்கு ஒரு சொல் தன்மம் வகுத்து அமர் மலைவது என்ன
தேற்று நல் அறிவோர் கூறும் திறத்தினும் பொறுத்ததல்லால்
கூற்று எனும் பழியை நாணி கூறினனலன் யான் என்றான்

மேல்
$3.1.47

#2392
மருவலர்க்கெனினும் ஓர் சொல் வகுத்து அமர் விளைப்பர் என்ன
விரி மறையவர்கள் கூறும் மெய் மொழி-அதனால் வேண்டி
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம்
தெரிதர கேட்டு பின் உன் திறல் செலுத்திடுக என்றார்

மேல்
$3.1.48

#2393
முன்னவன் ஒருவன் நீதி முறைமையிற்கு உரியன் மற்றோன்
இன்னவர்க்காக வேண்டி இருந்து அறிகுவம் யாம் என
உன்னிய வெகுளி தீயை உணர்வு எனும் நீரால் மாற்றி
பின் எதிர் இருந்து நீவிர் பிதற்றுவது எவை-கொல் என்றான்

மேல்
$3.1.49

#2394
நகரினுக்கு உரியன் ஓது நாவினன் தெளிந்த நீரான்
நிகர் அரும் வீரத்தான் நம் நெறியினுக்கு அமைந்தான் என்ன
புகர் அற மனத்துள் கொண்டு பூரித்த புளகத்தோடும்
பகர அரும் வேதத்து உற்ற சொல்லினை பகுத்து சொன்னார்

மேல்
$3.1.50

#2395
முறைமையில் சிதகா வண்ணம் முசுஇபு பகுத்து சொன்ன
மறையும் அ மறையின் உற்ற வழியும் அ வழியில் உற்ற
பொறையும் நல் அமிர்தம் என செவி வழி புகுத கேட்டு
நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சு நெக்குருகினாரே

மேல்
$3.1.51

#2396
ஆர் அமுது அனைய வேதத்து அரு மொழி அகத்துள் தேக்கி
பேர் உணர் பொங்கி யாவும் தோற்றிடா பெருக்கு ஆநந்த
கார் முகில் கவிகை வள்ளல் தீன் எனும் கடலுள் ஆழ்ந்து
வாரமுற்று அறிவினால் ஈமான் எனும் போகம் துய்த்தார்

மேல்
$3.1.52

#2397
மா தவர் இறசூல் என்னும் முகம்மதை வாழ்த்தி வாழ்த்தி
வேத நல் நிலையில் தோன்றும் விதி முறை கலிமா ஓதி
பூதலத்து உயர்ந்த நல்லோர் புகழ்ந்திட இசுலாம் ஆகி
மூதறிவு உடைய வள்ளல் முசுஇபை தழுவினாரால்

மேல்
$3.1.53

#2398
என் உயிர் துணைவ நின்னை இரும் கொலை நினைத்தேன் என்ன
முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன்
பொன் அடி பரவி இந்த புகழ் நிலை நிறுத்தி தந்த
மன்னவர் உசைது என்று ஓதி மார்புற தழீஇயினாரே

மேல்
$3.1.54

#2399
முசுஇபை அசுஅது என்று உயர் முன்னோனையும்
உசைதையும் தணப்பு இலாது உவந்து கொண்டுசென்று
அசைதரும் கொடி மறுகு அகன்று மாறு அடர்ந்து
இசைதரும் வேலினார் மனையின் ஏகினார்

மேல்
$3.1.55

#2400
மன்னிய செழும் கதிர் மாடத்துள் கொடு
மின்னிய தவிசினில் ஏற்றி வீரத்தின்
முன்னிய மூவரும் உவப்ப மூரல் இட்டு
இன் நறை பாகொடும் இனிதின் ஊட்டினார்

மேல்
$3.1.56

#2401
வெள்ளிலை அரி பிளவு ஈய்ந்து மேலவர்
உள்ளம்-அது உவப்புற உழையினோர் மன
கள்ளம்-அது அற கலிமாவை நாவினின்
விள்ளுதல்படுத்தி தீன் விளக்குவேன் என்றார்

மேல்
$3.1.57

#2402
அன்னது கேட்டு அகம் குளிர்ந்து மூவரும்
மன்னிய இடத்தினில் புக்க மன்னவர்
தம் உயிர் எனும் கிளையவரை சார்பினில்
இன்னல் அற்றிட அழைத்து இருத்தினார் அரோ

மேல்
$3.1.58

#2403
இனத்தவர் குழுவினை நோக்கி என்னை நும்
மனத்தினில் எவர் என மதிக்கின்றீர் சொலும்
பினை தனி புகல்வன் யான் என்ன பேசினார்
சின தட கதிர் அயில் ஏந்தும் செங்கையார்

மேல்
$3.1.59

#2404
சாது எனும் மன்னவர் சாற்ற கேட்டலும்
பேதுறு மனத்தொடும் பெரிது நைந்து இவர்
ஏது இவை உரைத்தனரோ என்று எண்ணுறும்
காதரத்தொடும் எதிர் கவல்வதாயினார்

மேல்
$3.1.60

#2405
இ தல தலைவரின் எவர்க்கும் நாயக
உத்தம கிளைக்கு எலாம் உயிரின் மிக்கு என
பத்தியில் கொண்டனம் பகர்வது என் உள
புத்தியில் தெளியும் நீர் என புகன்றனர்

மேல்
$3.1.61

#2406
உற முறை கிளைஞர்கள் ஒருப்பட்டு யாவரும்
பெறும் மொழி அறுதியில் பேசினார் இவை
மறை பகர் முகம்மதின் பறக்கத்தால் என
திறன் உறும் கருத்தினில் சிந்தித்தார் அரோ

மேல்
$3.1.62

#2407
பெருக்கிய கிளையவர் எவரும் பெட்புற
திரு கிளர் நபி கலிமாவை தேர்ந்து எடுத்து
உரைக்கிலீரெனில் உமது உறவுக்கு உண்மையுற்று
இருக்கிலன் யான் என எடுத்து கூறினார்

மேல்
$3.1.63

#2408
இ தகை எவர் எடுத்து இயம்புவார் உமக்கு
ஒத்தவை எமர்களுக்கு ஒத்த செல்வமே
வித்தக இ உரை வெறுத்திட்டோமெனில்
பித்தர் என்று உலகினில் பேச வேண்டுமே

மேல்
$3.1.64

#2409
என்று உரைத்து இனியன புகன்று நல் நபி
மன்றல் அம் புகழ் பெறும் புதுமை வாழ்த்தியே
ஒன்றிய திரு கலிமாவை ஓதியே
பொன்றிலா தீன் நிலை பொருந்தினார் அரோ

மேல்
$3.1.65

#2410
கனம் பயில் கொடை கரன் சகுது கல்பினில்
உனும் பொருள் குறித்து நல் உணர்வு பெற்றிடும்
சனம் பலர் எவரவர்-தமக்கு அன்சாரிகள்
எனும் பெயர் உலகு எலாம் இலங்க நின்றதே

மேல்

2 மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம்

$3.2.1

#2411
உயர் புகழ் முகம்மதுக்கு உம்பர்_கோன் நபி
பெயர் அளித்து ஆண்டு பன்மூன்று பேர் பெற
நயமுற நடக்கும் அ நாளில் கச்சினுக்கு
இயல்பெற யாவரும் ஈண்டினார் அரோ

மேல்
$3.2.2

#2412
அரு வரை தட புய சகுது அசுஅதும்
தரும நல் நெறி உசைதுடன் அன்சாரிகள்
பெருகிய காபிரும் புறப்பட்டு எண்ணிலா
நரரொடு மக்க மா நகரை நண்ணினார்

மேல்
$3.2.3

#2413
வாய்ந்த எண்திசைஞரும் மதீன மா நகர்
வேந்தரும் மக்க மா நகரின் வீரரும்
போந்து கஃபாவினில் புகுந்து தொன் முறை
ஏய்ந்த கஜ் எனும் நெறி முடித்திட்டார் அரோ

மேல்
$3.2.4

#2414
மண முரசு ஒலி மறா மதீன மா நகர்
உணர்வு எழும் தீன் நிலைக்கு உரியர் ஆர் உயிர்
துணைவரும் சூழ்தர எழுந்து திண் சுடர்
பணை திரள் புய நபி பாதம் நண்ணினார்

மேல்
$3.2.5

#2415
மல் அணி புய அபித்தாலிப் மன்னவர்
இல் உறைந்து இரவினில் இருப்ப ஒல்லையின்
வில் அணி தட கை அப்பாசும் விண்ணக
செல் அலம் கவிகையாரிடத்தில் சேர்ந்தனர்

மேல்
$3.2.6

#2416
மதி தவழ் கொடி மதிள் மதீனம் என்னும் அ
பதி உறை மன்னவர் பலரும் பண்புற
விதமொடு நபி சில மொழி இயம்பலும்
துதிசெய்து அப்பாசு வாய் விண்டு சொல்லுவார்

மேல்
$3.2.7

#2417
தங்கிய மறை முகம்மதுவை சார்ந்து தீன்
பொங்கிய நிறை நிலை பொருந்தினீர் இனி
எங்கள்-தம் குலத்தினுக்கு இனிய ஆர் உயிர்
உங்களை அலது வேறு உலகில் இல்லையே

மேல்
$3.2.8

#2418
மக்க மா நகர் உறை ஹாஷிம் மா குலத்து
ஒக்கலின் முதியவர்க்கு உறு கண் மா மணி
தக்க மெய்ப்பொருள் எமர்-தமக்குள் ஆவியின்
மிக்கவர் முகம்மதே அன்றி வேறு இன்றே

மேல்
$3.2.9

#2419
தெறு படை வீரத்தில் பொருளில் செல்வத்தின்
உறுபவர் நுமக்கு எதிர் ஒருவர் இல்லையால்
பெறும் மொழி ஒன்று உள குறிப்பின் பெற்றியை
அறிவினோடு இரகசியத்து அமைத்தல் வேண்டுமால்

மேல்
$3.2.10

#2420
உரைத்திடும் மொழியினை உறுதியாக உள்
இருத்தி வேறு ஒரு நினைவு இன்றி யாவரும்
கருத்து ஒரு கருத்து என படுத்தி காதுற
பொருத்தி என் மொழியினை பொருத்தல் வேண்டுமால்

மேல்
$3.2.11

#2421
எனக்கு உயிர்க்கு உறுதுணை ஈன்ற மா மணி
மன கலை அறிவினில் மதித்திடா பொருள்
கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-
தனக்கு ஒரு திலதம் ஒத்து அனைய தன்மையார்

மேல்
$3.2.12

#2422
பெரும் புகழ் முகம்மது பிறந்த நாள் தொடுத்து
அரும் புவியிடத்தில் தீங்கு அடுத்திடா வகை
வரம் பெறும் அவரவர் வணக்கம்-தன்னொடும்
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே

மேல்
$3.2.13

#2423
கண் உறு மணி என காமுற்று யாவரும்
எண்ணரும் சிறப்பொடும் இனிது கூர்ந்தனம்
அண்ணலை குறித்து உமர் அடுத்து தீன் எனும்
வண்ணம் ஒத்து ஒழுகி நல் வழி பட்டார் அரோ

மேல்
$3.2.14

#2424
அன்று தொட்டு உம்மிடத்து அடுத்து தீன் நிலைக்கு
ஒன்றிய முதியவர் ஒழுங்கும் செய்கையும்
நன்றியும் வணக்கமும் நயந்து நாட்குநாள்
வென்றி கொள் முகம்மது விருப்புற்றார் அரோ

மேல்
$3.2.15

#2425
மரு பொதி துடவை சூழ் மதீன மன்னவர்
விருப்பொடும் தம் மன விருப்பும் வேறு இலாது
ஒருப்பட உயிர் துணை உடையரா குடி
யிருப்பது கருத்தில் வைத்து இருத்தினார் அரோ

மேல்
$3.2.16

#2426
திரு நபி முகம்மதும் திருந்த நும்முழை
வருவது சரதம் அ மதீனம்-தன்னினும்
கருதலர் உளர் உறும் கருத்தின் பெற்றியை
விரிதர அறிகிலன் விளம்ப வேண்டுமால்

மேல்
$3.2.17

#2427
இன்னவை அனைத்தையும் எடுத்து அப்பாசு எனும்
மன்னவர் உரைத்தலும் மதீனமாகிய
நல் நகர் தலைவர்கள் கேட்டு நன்கு என
சென்னிகள் துயல்வர செப்புவார் அரோ

மேல்
$3.2.18

#2428
நர_பதி முகம்மதை மதீன நல் நகர்க்கு
அரசு என இருத்தி ஊரவர்கள் யாவரும்
விரைவின் குற்றேவல் செய்து இருப்ப வேண்டும் என்று
ஒருவருக்கொருவர் முன் உரைத்தது உண்டு அரோ

மேல்
$3.2.19

#2429
ஊக்கமுற்று எமது உளத்து உள்ளுமாறு நும்
வாக்கினில் உரைத்தனிர் மதிக்கு மேலவன்
ஆக்கியது இஃது இனிது ஒழிவது அன்று அமர்
நீக்கிய கதிர் அயில் நிருபர் வேந்தரே

மேல்
$3.2.20

#2430
நனி களிப்பு எய்தி எம் உள்ளம் நன்குற
இனியவை இவை என இசைந்தோர் வாசகம்
தனியவன் தூதுவர் சாற்றுவாரெனில்
தினையளவினும் ஒரு சிதைவும் இல்லையால்

மேல்
$3.2.21

#2431
மறு அற இனையன மதீன மன்னவர்
நிறை பெற உரைத்தவை கேட்டு நீள் நிலத்து
இறையவன் தூதுவர் இனிய மா மறை
முறையொடும் தெளிதர மொழிவதாயினார்

மேல்
$3.2.22

#2432
அரும் பொருள் வேதமும் தீனின் ஆக்கமும்
பெரும் புவியிடத்தினில் பெருக நாளும் அ
இரும் பதியிடத்து உறைந்து இருப்ப என் மனம்
விரும்பியது உங்கள்-தம் நட்பின் மேன்மையால்

மேல்
$3.2.23

#2433
எமக்கு அணு எனும் இடர் இயையுமேல் நுமர்
தமக்கு வந்தவை எனும் தகைமை வேண்டுமால்
கமை கருத்தொடும் அவண் உறைவன் காணும் குங்
கும குவடு எனும் புய கொற்ற வேந்தரே

மேல்
$3.2.24

#2434
என்று நல் நபி இவை இயம்ப வீறொடு
மன்றல் அம் புய பறா என்னும் மன்னவர்
நன்று நன்று என கலிமாவை நாட்டிய
வென்றியின் அவையினில் விளம்புவார் அரோ

மேல்
$3.2.25

#2435
நிலை முறை தவறு இலா நீதி மன்னவர்
தலைமுறைதலைமுறை வீரம் தாழ்விலார்
நலன் உறும் புகழினர் நாம வேலினர்
அலைவு இலார் எமர் குலத்து அறிவின் செல்வரே

மேல்
$3.2.26

#2436
இ திறத்தவர்களும் யாங்களும் உமது
உத்தரத்து ஆடியின் உறையும் பாவை போல்
வித்தக நெறி முறை விளக்குவோம் இவை
அ தலத்து உறைந்த பின் அறிய வேண்டுமால்

மேல்
$3.2.27

#2437
இந்த நல் மொழிக்கு இயைந்து இறைவ நம் பதி
வந்திருந்தனிரெனில் மருவலார்களால்
உந்திய பெரும் பகை ஒடுக்கி வேர்வைகள்
சிந்திடில் உதிரமே சிந்தச்செய்குவோம்

மேல்
$3.2.28

#2438
இவ்வணம் தவறு இலாது இயற்றுவோம் என
செவ்வண கருத்தொடும் வல கை சேர்த்துவம்
மை வண கவிகையீர் எங்கள் வாய்மையில்
குவ்வினில் குறை இலை என்ன கூறினார்

மேல்
$3.2.29

#2439
முகம்மது நபிக்கு எதிர் உண்மை வாசகம்
இகல் அற திறல் பறா இசைப்ப கேட்டு இவண்
புகல்வது பொறுமின் என்று உரைத்து புந்தியின்
அகம் மகிழ் கைதம் என்பவர் இயம்புவார்

மேல்
$3.2.30

#2440
இறையவன் தூதுவர் இசைத்த நல் மொழிக்கு
உறுதிகொண்டு எழில் பறா உரைத்த மாற்றமே
பெறும் முறையாயினும் இன்னும் பேச்சினில்
சிறு மொழி ஒன்று உண்டு என்று உரைத்து செப்புவார்

மேல்
$3.2.31

#2441
மாரி விண்டு அணி திகழ் மக்க மா நகர்
சீரியர்-தமக்கும் எம் மரபின் செல்வர்க்கும்
பேர் பெறும் வசன நிண்ணயத்தின் பெற்றியால்
ஈரம் மற்று ஒல்லையின் இகலும் இல்லையால்

மேல்
$3.2.32

#2442
வரம் உறும் செல்வ நும் வசனத்தால் எமர்க்கு
உரியவர் யாவரும் உரைத்த வாய்மையும்
பெருகிய கிளை எனும் தொடரும் பேர் அற
முரணொடும் அன்பு அற முறிக்க வேண்டுமால்

மேல்
$3.2.33

#2443
மறை மொழி குறித்து தீன் வழி மறாது இவண்
குறைஷிகளொடும் பகை கொள்ளும் காலையில்
உற முறை என்று உமது உளம் இரங்குமேல்
பிற மொழி எடுத்து எவர் பேச வல்லரே

மேல்
$3.2.34

#2444
இனையன பல மொழி கைதம் என்பவர்
மன நிலை தெளிதர வகுத்து காட்டலும்
நனி முறுவலின் முகம்மது நல் மா மறை
புனைதரு நாவினால் புகல்வதாயினார்

மேல்
$3.2.35

#2445
ஆதி முன் மொழி கலிமாவை அன்பொடும்
ஓதினர் எனது உடல் உயிரின் மிக்கவர்
பேதுற தீன் நிலை பிழைத்து நின்றவர்
தீது உற இருமையும் தீயர் ஆவரால்

மேல்
$3.2.36

#2446
வரை தடம் சாயினும் மதி தெற்கு ஆயினும்
கரைத்து எறி திரை கடல் சுவறி காயினும்
தரைத்தலம் புரளினும் வாய்மை தக்க யான்
உரைத்தவை மறுத்து எடுத்து உரைப்பது இல்லையால்

மேல்
$3.2.37

#2447
முன் முக மலர்ச்சியின் மொழிந்து வேறு ஒரு
வன்மமுற்றிடில் அவை மறந்து மேலவர்
நல் மன தொடர் விடு நட்பு நாள்-தொறும்
தின்மையை வளர்த்து அறம் தீய்த்து நிற்குமே

மேல்
$3.2.38

#2448
சாலவும் நட்பினை தணப்பிலாதவர்
மேலவர் நட்பினை வெறுக்கும் வாய்மையர்
சீலம் ஒன்று இன்றி அ சிறுமையார் என
நூலினும் வழக்கினும் நுவலுகின்றதே

மேல்
$3.2.39

#2449
ஈது முத்திரை உமது இதயத்து எண்ணி அ
தீது அறு மா மறை செவ்வியோர்களில்
ஏதம் இல் தலைவர் பன்னிருவரை தெரிந்து
ஆதரத்தொடும் இவண் அடைக என்றனர்

மேல்
$3.2.40

#2450
மல் வளர் புய முகம்மது-தம் வாய் மொழி
கல்பினில் இருத்தி நன்கு என்ன காவலர்
நல் வளம் பொருந்திய மதீன நல் நகர்
செல்வர்-தம் உழை இவை எடுத்து செப்பினார்

மேல்
$3.2.41

#2451
கேட்ட மன்னவர் அனைவரும் கிளர் ஒளி வனப்பில்
பூட்டு வார் சிலை வீரத்தில் குறைவு அறா பொருளின்
வாட்டம் இன்றி அ கசுறசு வங்கிஷத்தவர்கள்
கூட்டத்தாரினில் ஒன்பது பெயரினை குறித்தார்

மேல்
$3.2.42

#2452
கான்றிடும் கதிர் வாள் மறவாத கையினராய்
ஊன்று வெம் சின வீரத்தினுடன் பிறந்தவராய்
ஆன்ற பேரறிவு அவுசு வங்கிஷத்தவரதனின்
மூன்று பேரையும் முதன்மையர் எனும்படி முடித்தார்

மேல்
$3.2.43

#2453
இரு குலத்தினும் முதியவர் பன்னிருவரையும்
வரிசை நாயகன் தூதுவர் முகம்மது நபி முன்
விரைவினில் கொடுவந்தனர் விறலுடன் உலவி
திரியும் கேசரிக்கு உடன்படும் உழுவையின் திரள் போல்

மேல்
$3.2.44

#2454
இலகு தீன் நிலைக்கு உரியரின் எழுபத்துமூன்று
தலைவரின் உயர் தலைவர் பன்னிருவர்கள்-தமக்குள்
நிலைமை முன்னிலை தலைவராய் அசுஅதை நிறுத்தி
உலகின் மேல் வரும் திறன் எடுத்து இயல் நபி உரைப்பார்

மேல்
$3.2.45

#2455
மாறு இலாது உமது இரு குலத்தினில் சிலர் மறுத்து
வேறு கூறினும் இ நகர் குறைஷிகள் வெகுண்டு
சீறினும் மறு புற நகர் படை திரண்டிடினும்
தூறு தோன்றி இன்பு அற பெரும் துன்பமே வரினும்

மேல்
$3.2.46

#2456
படைக்கல திரை எறிந்து எதிர் வரும் பகை கடலை
கடக்கும் வேல் வலன் ஏந்திய செழும் தடம் கரத்தீர்
உடற்குள் ஆவி ஒத்து இ பதிற்றிருவர்கள் உரை கீழ்
நடக்க வேண்டும் என்று உரைத்தனர் நபிகள் நாயகமே

மேல்
$3.2.47

#2457
புகலும் நல் மொழி அனைத்தையும் மனத்துற பொருத்தி
இகல் அற தெளிந்து ஆய்ந்து சீர்தூக்கி இ நிலத்தில்
பகரும் இ மொழிக்கு ஈறு இலை என நிலைப்படுத்தி
மகிதலம் புகழ் மதீன மன்னவர்கள் சம்மதித்தார்

மேல்
$3.2.48

#2458
முத்த வெண் கதிர் முகம்மதே முனிவு இலா திரு வாய்
உத்தரத்தினில் அறிவு பெற்றனம் உளம் ததும்ப
புத்தி பெற்றனம் பெருகிய கதி பெறும் பொருட்டாய்
இ தலத்து எமக்கு இயம்புவது இயம்பும் என்று இசைத்தார்

மேல்
$3.2.49

#2459
அந்த வேளையில் அருள் உடை அமரருக்கு அரசன்
இந்த மா நிலத்து அரசு எனும் முகம்மதினிடத்தில்
சிந்தை கூர்தர ஆதி-தன் திரு சலாம் உரைத்து
வந்திருந்தனர் பிறர் அவர் அறிகிலா வண்ணம்

மேல்
$3.2.50

#2460
இறைவன் தூதுவ எனது உயிர் துணைவ இ இரவே
அறிவினால் உயர் மதனியர்-தம் அகத்து உண்மை
உறைய வாய்மையில் பெறுக ஒவ்வொருவர்-பால் ஒழுங்காம்
முறை இவர்க்கு பின் இவர் என மொழிந்து விண் போனார்

மேல்
$3.2.51

#2461
அவிர் ஒளி சிறை ஜிபுறயீல் அருளுரைப்படியே
தவிசின் மீதிருந்து அவரவர் வரன் முறை தவறாது
எவரும் புந்தியின் மகிழ்வுற வல கரம் ஈந்து
செவி குளிர்ந்த நல் மொழியொடும் அறுதி செய்க என்றார்

மேல்
$3.2.52

#2462
மதியின் மிக்க நல் முகம்மது அங்கு உரைத்தலும் மதீனா
பதியின் மன்னவர் முறைமுறை எழுந்து அடி பணிந்து
சிதைவு இலா திட மொழி கொடுத்து அணி கரம் சேர்த்தி
விதுவும் சூழ் உடு இனமும் ஒத்து இருந்தனர் விளங்கி

மேல்
$3.2.53

#2463
திடம் கொள் மும்மத கரி குபிர் பகை அற செழும் தீன்
மடங்கல் ஏறு என வரு திரள் மதீன மன்னவர்கள்
இடம் கொள் சிந்தையில் தெரிதரும் தமியர்கள் இனிமேல்
தொடங்கும் வீரத்தின் திறம் என பணிவொடும் சொன்னார்

மேல்
$3.2.54

#2464
என்றும் இ மொழி தவறு இலாது உற நிறைவேற்றி
நின்ற மன்னவர்க்கு ஆதி-தன் கிருபையும் நிறைந்த
வென்றியும் சுவர்க்கமும் அருள்குவன் என விரித்தார்
மன்றல் துன்றிய மது மலர் அணி முகம்மதுவே

மேல்
$3.2.55

#2465
கனைக்கும் வெண் திரை கடல் புவி புகழ் அபுல் காசிம்
நினைக்கும் சிந்தையில் பொருந்துற நிறைந்த நல் நபியை
குனிக்கும் வார் சிலை கரத்தொடு பணிந்து இரு குலத்தோர்
தனி கடம் தரு களிறு என சார்பினில் சார்ந்தார்

மேல்

3 யாத்திரைப் படலம்

$3.3.1

#2466
மண்ணகம் புகழ் முகம்மது மனம் களித்து இருப்ப
புண் உலா அயில் கரத்தரும் விடுதியில் புகுத
கண் அகன் புவிக்கு எவை விளைந்தன என கருத்தின்
எண்ணமோடு அழிந்து எழுந்திருந்தனன் இபுலீசு

மேல்
$3.3.2

#2467
அற்றை போது இரவினில் அணி மக்க மா நகரின்
உற்ற நன்னடு மறுகினில் உரு தெரியாமல்
முற்றும் காத்து அளித்திடுமவர் மொழிந்திடும் மொழி போல்
சுற்று நால் திசை அடங்கலும் தொனி பரந்திடவே

மேல்
$3.3.3

#2468
குறைவு இலா வள மக்க மா நகர் குறைஷிகளே
உறையும் இ நகர் முகம்மது மதீனத்துள்ளவரும்
அறையும் வாய்மையின் வல கரம் கொடுத்து அவரவர்க்கே
முறைமுறைப்படி ஒன்றுபட்டு ஒரு மொழி முடித்தார்

மேல்
$3.3.4

#2469
ஏதெனில் குறைஷிகள் அறபிகள் இவண் இருந்தோர்
வேதனைப்பட கொலை விளைத்து ஆலயம் வீழ்த்தி
சூது வஞ்சனை தொழிலொடு மாய்ந்திட துணிந்து
போதுகின்றனர் என்று கூக்குரலொடும் புகன்றான்

மேல்
$3.3.5

#2470
விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் கூக்குரல் விளக்கி
திரிந்த மாய வஞ்சகன்-தனை நோக்கி கண் செவந்து
புரிந்த நின் வலி கெடுக்குவன் காண் என புகன்றார்
சொரிந்து வானவர் புகழ்தர வரும் இறசூலே

மேல்
$3.3.6

#2471
தேயம் எங்கணும் இருள் கெட செழும் கதிர் குலவ
மேய வாவியின் வனசங்கள் விரிதர விளங்க
மாய வஞ்சகன் கூக்குரல் மறுத்து வாய் அடைப்ப
கூய எத்திசை-தொறுந்தொறும் சேவலின் குலங்கள்

மேல்
$3.3.7

#2472
ஒடிந்து வீழ் திரை குண கடல் கதிரவன் உதிப்ப
விடிந்த காலையின் மக்க மா நகரினின் வீரர்
கடந்த சொல்லொடும் மதீன மன்னவர்களை கடிதின்
அடர்ந்து இவண் கொடுவருக என தூதுவிட்டு அழைத்தார்

மேல்
$3.3.8

#2473
உலவு நீள் கொடி மதீன மா நகரினில் உறைந்த
தலைவரில் சில காபிர்கள்-தமை விளித்து இரவில்
நலிதல் அன்றி ஓர் கூக்குரல் கேட்டனம் நடுவு
நிலைமை அற்ற சொல் கேளுதிர் என நிகழ்த்துவரால்

மேல்
$3.3.9

#2474
மதின மன்னவர் அடங்கலும் முகம்மது-தனக்கு
முதிய சத்தியம் செய்து அவன் தீன் நிலை முயன்று
பதியினில் கொடுபோய் எமருடன் பகை விளைப்ப
புதிய மாற்றமும் முடித்தனராம் மறை பொருட்டால்

மேல்
$3.3.10

#2475
ஈது வந்தது என் எமர்க்கு இடர் நினைத்தது என் இணங்கா
சூதன்-தன்னொடு பொருந்தியவாறு அது என் தொலையா
பாதக பழிக்கு அடி இடம் முடித்தது என் பகர்ந்து ஈது
ஓத கேட்டு எவர் மனங்கொள்வர் நகைக்கும் இ உலகே

மேல்
$3.3.11

#2476
இந்தவாறு மெய் எனில் கசுறசு எனும் இனமும்
சிந்து என பெரு கௌசு எனும் குலத்தவர் திரளும்
நந்து வெம் பகை முடித்திட மக்க மா நகரில்
வந்ததல்லது நல் வினைக்கு அல என வகுத்தார்

மேல்
$3.3.12

#2477
மாடம் ஓங்கிய மக்க மன்னவர் வகுத்து உரைப்ப
கேடு இலா மதீனத்து உறை காபிர்கள் கேட்டு
கூடும் எம் இனத்தவர்களில் இதில் ஒரு குறிப்பும்
நாடுவார் இலர் என்-கொலோ நீர் நவின்றதுவே

மேல்
$3.3.13

#2478
சமய பேதக முகம்மது என்பவன்-தனை விளித்து ஓர்
இமை நொடி பொழுது அடுத்து இருந்து அறிகிலம் யாங்கள்
உமை மறுத்தவர்க்கு உண்மைகள் உரைப்பது எவ்வழி எம்
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால்

மேல்
$3.3.14

#2479
இ நிலத்தவர் மதீன மன்னவரொடும் இணங்கி
நல் நிலைப்பட இருப்பது பிரிப்புற நலியா
மன்னும் வஞ்சக முகம்மது மாய விச்சையினால்
உன்னி வந்தது அ கூக்குரல் உரைத்திடும் உரையே

மேல்
$3.3.15

#2480
அலது வேறு இலை என செழும் மதீன மன்னவர்கள்
பலரும் கூறினர் யாவரும் கேட்டு இவை படிறு ஒன்று
இலை என சிரம் அசைத்து அவர்க்கு இனியன புகன்று
தலைவமாரொடும் அவரவர் சார்பினில் சார்ந்தார்

மேல்
$3.3.16

#2481
குறைஷிகட்கு எதிர் மொழிந்திடும் காபிர்கள் குலமும்
மறைபட தனி இருந்த மெய் தீனின் மன்னவரும்
முறைமை ஆகிய கச்சினை குறைவு அற முடித்து
புறநிலத்தரும் அவரவர் பதியினில் போனார்

மேல்
$3.3.17

#2482
பரத்தலத்தவர் போய பின் அறம் எனும் பழைய
புரத்தினின் உற்ற வன் காபிர்கள் மதீன மா புரத்தோர்
திருத்தும் தீன் நிலை முகம்மதினொடும் திட வசனம்
உரைத்து போயவை உற்று அறிந்து ஒருங்கினில் திரண்டார்

மேல்
$3.3.18

#2483
இடு சுதை கதிர் மறுகினும் ஆவணத்திடத்தும்
கொடுமுடி பெரும் கோயில்களிடத்தினும் குறுகா
ருடன் உறைந்திடும் மனையினும் மதீனத்துள்ளோரை
கடிதில் தேடினர் திரிந்தனர் சினத்தொடும் கறுத்தே

மேல்
$3.3.19

#2484
தேடி எத்திசை-தொறும் திரிந்து அலுத்து ஒரு தெருவில்
கூடி முந்திறு என்பவரையும் சகுதையும் குறுகி
ஆடை முந்தி தொட்டு ஈழ்த்து உறுக்கொடும் அலக்கழித்து
வீடு உறைந்து ஒளித்தவர் இவர் என கொடு விடுத்தார்

மேல்
$3.3.20

#2485
விரைந்து காபிர்கள் முன் கொடு விடுக்கும் அ நேரம்
கரந்து முந்திறு என்பவர் ஒரு திசை நெறி கடந்தார்
பரந்து தேடினர் ஓடினர் காண்கிலர் பதைத்து
வருந்தி சஃது ஒருத்தரையுமே நெருக்கிட வளைந்தார்

மேல்
$3.3.21

#2486
பற்றுவார் சிலர் அடருவர் சிலர் கரம் பதிய
எற்றுவார் சிலர் இணை விரல் மடக்கி மெய் சேப்ப
குற்றுவார் சிலர் அடிக்கடி கொதித்தவர் அலது
சற்றும் மாறினரலர் கொடும் காபிர்கள்-தாமே

மேல்
$3.3.22

#2487
அடி-மின் என்பவர் சிலர் சிலர் ஆ தகாது இவரை
விடு-மின் என்பவர் சிலர் சிலர் அவர்களை வெகுண்டு
பிடி-மின் என்பவர் சிலர் சிலர் இவன் உயிர் பிசைந்து
குடி-மின் என்பவர் சிலர் சிலர் காபிர்கள் குழுமி

மேல்
$3.3.23

#2488
ஒலிது அபூஜகுல் உத்துபாவுடன் உமையாவும்
மலிதரும் குறைஷிகளொடும் இவர் மனம் மறுக
அலைவு செய்திடும் வேளையில் சுபைறும் ஆரிதுவும்
கலி இது என்-கொல் நீர் செய்தவை என கழறுவரால்

மேல்
$3.3.24

#2489
குற்றம் இன்றிய ஒளசுடன் கசுறசு குலத்தோர்க்கு
உற்றிடும் பெரும் தலைமையில் பெயரினில் உயர்ந்தோன்
பற்றலர்க்கு அரி ஏறு இவனொடும் பகை விளைப்ப
முற்றுமோ நமர் குலம் திரளினும் முடியாதே

மேல்
$3.3.25

#2490
மதின மா நகரவர்க்கும் இ பதியின் மன்னவர்க்கும்
இதம்-அது அன்றியே இகல் இலை இன்று இவன் பொருட்டால்
புதிய வெம் பகை விளைந்தது போக்கவும் அரிது இ
சதி விளைத்தது தகுவது என்று என உரைத்தனரால்

மேல்
$3.3.26

#2491
குவிதரும் குலத்தவர் சினம் கெட மதி குறிப்பாய்
சுபைறும் ஆரிதும் உரைத்தலும் இதயங்கள் துணுக்குற்று
அவம் அறிந்திலம் என விடுத்து அகன்றனர் மறை நேர்
தவம் முயன்றிடு சகுதுவும் சார்பினில் சார்ந்தார்

மேல்
$3.3.27

#2492
குறைஷி காபிர்கள் விளைத்திடும் கொடிய வல் வினையை
மறை தரித்த நல் முகம்மதினுடன் வகுத்து உரைத்து
நிறை மனத்தொடும் பணிந்து எழுந்து அவரிடம் நீங்கி
உறையும் தம் நகர் புகுந்தனர் சகுது எனும் உரவோர்

மேல்
$3.3.28

#2493
மகிதலம் புகழ் சகுது மன்னவர் வள மதீனா
நகர் புகுந்த பின் செழும் மறை முகம்மது நயினார்
அகம் மகிழ்ந்து தீனவர்களை அழைத்து அருகு இருத்தி
புகர் அற தமது உளத்தினில் நினைத்தவை புகல்வார்

மேல்
$3.3.29

#2494
வற்றுறா புனல் தடம் திகழ் மதீன மன்னவரை
உற்ற மெய் துணையாய் உடற்கு உயிர்-அதாய் உறும் தீன்
வெற்றியாய் வலியாய் புகழ் நிலைபெற விளக்க
முற்றும் நம்-வயின் அளித்தனன் தனி முதலவனே

மேல்
$3.3.30

#2495
இந்த ஊரினில் குபிருழை உழன்றனம் இனிமேல்
அந்த நல் பதி புகுவமேல் எதிர் அடையலரால்
வந்த வெம் பகை தடிந்து இசுலாமினை வளர்த்து
நந்தமர்க்கு எவர் இணை என தீன் நெறி நடத்தும்

மேல்
$3.3.31

#2496
ஆதி_நாயகன் உரை அவண் புக வருமளவும்
ஏதம் இன்றி இங்கிருந்து பின் வருகுவன் யான் முன்
போதல் வேண்டும் நம் இனத்தவர் என புகழ்ந்து உரைத்தார்
ஈது முத்திரை பொருள் என யாவரும் இயைந்தார்

மேல்
$3.3.32

#2497
சோதி நாயகன் திரு மறை தூதுவர் இறசூல்
ஓதும் வாய்மையும் மறை பொருள் என உளத்து இருத்தி
சாதி மன்னவர் மூவரும் இருவரும் தனித்தும்
போதும் வல் இருள் பொழுதினும் பகலினும் போனார்

மேல்
$3.3.33

#2498
உரத்தின் மிக்க அபூபக்கரும் உமறு உதுமானும்
வரை தட புய வலி அலி புலியும் வன் காபிர்
கரத்து அகப்படும் பெயருமல்லது செழும் கலிமா
திருத்தும் தீனவர் யாவரும் மதீனத்தில் சேர்ந்தார்

மேல்
$3.3.34

#2499
மக்க மா நகர் தீனவர் யாவரும் மதீனம்
புக்கினார் எனும் மொழி பலபல புறம் பொசிய
உக்குபா உத்பா உமையா ஒலிது உரைப்ப
தக்க பேருடன் கேட்டு அபூஜகுல் உடல் தளர்ந்தான்

மேல்
$3.3.35

#2500
வடித்து மும்மறை தெளிந்த மன்னவரையும் வடி வாள்
எடுத்த வீரத்தின் திறத்தவர் இனத்தையும் இசுலாம்
தடுத்து நின்றவர் குலத்தையும் தனக்கு உயிர் துணையாய்
அடுத்த பேரையும் விரைவினில் தனித்தனி அழைத்தான்

மேல்
$3.3.36

#2501
குறைஷி அம் குல காபிர்கள் அனைவரும் கூண்டு
நிறைதரும் பெரும் குழுவினில் புக மனம் நேடி
சிறியன் வஞ்சக செய்கையன் யாவர்க்கும் தீயோன்
இறைவன் ஏவலை தவிர்த்திடும் கசட்டு இபுலீசு

மேல்
$3.3.37

#2502
பொறுமையுள்ளவன் போலவும் வணக்கத்தில் புகழின்
அறிவின் மிக்கவன் போலவும் அறபி வங்கிடத்தின்
பிறவி போலவும் முதிர்ந்தவன் போலவும் பிரியாது
உறவினுற்றவன் போலவும் அவையின் உற்றனனால்

மேல்
$3.3.38

#2503
சாரும் மெய் நரை பிறங்கிய முதியவன்-தனை கண்டு
ஆரும் இங்கு இவர் பெரியராம் என அகத்து இருத்தி
வாரும் இங்கு இரும் என உரைத்தனர் மனம் மகிழ்வுற்று
ஈரம் முற்றிடும் அறிவர்களிடத்தினில் இருந்தான்

மேல்
$3.3.39

#2504
மருள் இலாது நல் மறைகளை மறு அற தேர்ந்து
தெருளும் மேலவர் சிறியவர் யாவர்க்கும் தெரிய
பொருளும் சொல்லும் ஒத்து இருந்தன மொழிகளால் பொருந்த
இருளும் புன் மன கொடியவன் அபூஜகுல் இசைப்பான்

மேல்
$3.3.40

#2505
மறு என பிறந்து இ ஊரிடை வளர்ந்த முகம்மது மாய வித்தையினால்
அறிவுறா வினை மேற்போட்டு நம் இனத்தாரவர் சிலர்-தமை அகப்படுத்தி
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி
நிறைபெற தனது பெயரையும் நிறுத்தி தீனையும் நிலைநிறுத்தினனால்

மேல்
$3.3.41

#2506
இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-
தனில் நிலைநிறுத்திவிட்டனம் அறிவும் தரணியில் பெருமையும் இழந்தேம்
மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த
வினைகளும் சிதறி நமரவர் எவர்க்கும் மேன்மையும் வீடும் உண்டாமால்

மேல்
$3.3.42

#2507
வரும் தகை இஃது என்று அகுமதின் வலியை மாய்த்திடல் அரிது என மனை-கண்
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும்
திருந்திடாது இனம் தேய்ந்து இகலவர் எவரும் சிரித்திட உலகமும் நகைக்கும்
அரும் தவத்துடையீர் ஈது அலால் பிழை வந்து அடருவது அலது ஒழியாதே

மேல்
$3.3.43

#2508
இகத்தினில் எவர்க்கும் முடித்திட அரிது என்று இருக்கும் ஓர் வல்வினையெனினும்
அகத்தினில் ஒருமித்து எடுத்து ஒரு துணிவாய் அடுப்பது ஓர் முயற்சி உண்டாயின்
செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என்
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே

மேல்
$3.3.44

#2509
முன்னை நாள் அபித்தாலிபு-வயின் பலகால் மொழிந்து வற்புறுத்தியது அனைத்தும்
முன்னி உள் கணித்தானிலன் கொடும் புலி வால் உருவிய தகைமை ஒத்து இருந்தான்
இன்னை நாள் தொடுத்தும் விடுவது அன்று எளிதின் விட்டனமெனில் இரும் பதியில்
அன்னவன் முரணில் எவ்வளவெனினும் அமைத்திட நமர்க்கு அரிதாமால்

மேல்
$3.3.45

#2510
எள்ளுதற்கு அரிதாய் மிகு வலி படைத்து இங்கு இருந்தனன் இதற்கு முன் ஒரு நாள்
நள்ளிடை இரவில் தேவ தன்மையினால் நால் மறுகிடத்தினும் சிறப்ப
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து
தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே

மேல்
$3.3.46

#2511
புரத்தினில் இரவில் பிறந்த சொல் நென்னல் பொழுதினில் தெரிந்தது ஏதென்னில்
வரத்தினில் உயர்ந்த மதீன மா நகரார் முகம்மதின் மார்க்க மன் நெறியை
கருத்தினில் பொருத்தி உண்மைகொண்டு அ ஊர் காக்குதற்கு இவரையும் அரசாய்
இருத்துதற்காய வல கரம் கொடுத்து அங்கு எழுந்தனர் யாவரும் இயைந்தே

மேல்
$3.3.47

#2512
அ நெறி முறையே முகம்மதுக்கு ஈமான் கொண்டவர் அனைவரும் மதீனா
பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப
மன் அங்கு இருந்து நாட்குநாள் தீனை மறைபடாது ஓங்கிட வளர்த்தார்
இ நிலத்து இவனும் அ பெரும் பதியில் போவதற்கு இசைந்திருந்தனனால்

மேல்
$3.3.48

#2513
புது மறை வளர்க்கும் முகம்மது மதீனா பதியினில் புகுவனேல் தொலையா
சதி விளைந்திடுவது அறுதி தன் வலியால் தணிப்பவர் இவண் இலை எவரும்
பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால்
கதி பெறு தேவாலயங்களும் நமர்-தம் சமயமும் காண்பதற்கு அரிதே

மேல்
$3.3.49

#2514
இந்த வல் வினைகள் முடியும் முன் தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து
புந்தியில் தெரிந்து செய்வது தவிர்வது எனும் வினை பிறந்திட பொருந்தி
மந்திர பொருளாய் குல நலம் தழைக்க மாற்றம் ஒன்று உரை-மின்கள் என்ன
நிந்தையும் படிறும் கொலையும் உள் அமைத்த நெஞ்சினன் அபூஜகுல் உரைத்தான்

மேல்
$3.3.50

#2515
தலைவரில் தலைவன் அபூஜகுல் எடுத்து சாற்றிய மாற்றம்-அது அனைத்தும்
உலைவுற கேட்டு பெரிது அழிந்து ஒக்கும் ஒக்கும் என்று ஒருவருக்கொருவர்
நிலை பெற தேறி இருக்கலும் அ அவையில் நெஞ்சு அழன்று ஒரு கொடும் காபிர்
கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால்

மேல்
$3.3.51

#2516
முறை ததும்பியதை நினைப்பது என் இனிமேல் முடித்திடும் சூழ்ச்சி ஈது என்ன
நிறைபெற தேர்ந்து ஒத்து எவரும் ஓர் கருத்தாய் நினைப்பது வினைத்திறமலது
மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து
பொறையுடன் இருத்தல் வினைக்கு இடங்கொடுத்தல் என புகன்றனன் ஒரு முதியோன்

மேல்
$3.3.52

#2517
இதத்தது இ மொழியே முகம்மது என்பவனை இரும் கொலைப்படுத்தலே வேண்டும்
வதைத்தவர் இவர் பொன்றினர் இவர் எனும் சொல் வழக்கினில் தோன்றிடா வண்ணம்
புதைத்தலுக்கு இடம் உற்று இருக்கும் ஓர் வினையால் பொருந்துவதன்றி மேல் பழியாய்
சதித்திடல் எவர்க்கும் தகுவது அன்று எனவே சாற்றினன் அதில் ஒரு தலைவன்

மேல்
$3.3.53

#2518
நன்கு இலது உறும் சொல் முகம்மதை பிடித்து ஓர் மனையினில் நள் இருள் அடைத்து
புன்கமும் புனலும் சிறிது இலவாய் போக்குடன் வரத்தும் இல்லாமல்
இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன்
வன் கொலை தொடரா மறுவும் மற்று ஒழியும் என உரைத்தனன் ஒரு மதியோன்

மேல்
$3.3.54

#2519
இல்லகத்து அடைத்தும் எனும் மொழி இபுலீசு எனும் அவன் கேட்டு இளநகையாய்
நல்லவை உரைத்தீர் அடைத்து ஒரு மனைக்குள் நாள் பல கழிந்த பின் பார்க்கின்
மெல் அணை படுத்து அங்கு இருந்தவர் போல வருகுவன் விரைவினில் பசி ஏது
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான்

மேல்
$3.3.55

#2520
மற்றொரு தலைவன் முகம்மதை பிடித்து ஓர் ஒட்டையின் வெரிந் உற வனைந்து
பற்றிய உகிர் கால் கொடுவரி குழுவும் மடங்கலும் கரடியும் பாம்பும்
துற்றிய வனத்தில் போக்கிடில் அவன்-தன் நாமமும் தொலைந்திடும் இஃதே
உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான்

மேல்
$3.3.56

#2521
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும்
கோட்டு உடை களிறும் கரடியின் குழுவும் கொணர்ந்து நம் பதியினில் விடுத்து
வீட்டுவன் குலத்தினொடும் அவன் படித்த விச்சையினால் இஃது ஒழிக
தீட்டு வெண் புகழீர் மறுத்து ஒரு சூழ்ச்சி செப்பும் என்று உரைத்தனன் தீயோன்

மேல்
$3.3.57

#2522
அவரவர் உரைத்த வசனமும் இபுலீசானவன் உரைத்திடும் திறனும்
கவர் அற கேட்டு புந்தியில் தேர்ந்து காவலர் எவரையும் விளித்து
புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்
பவிதரும் சூழ்ச்சி ஒன்று உள கேண்-மின் என அபூஜகல் பகர்ந்திடுவான்

மேல்
$3.3.58

#2523
வங்கிடத்து ஒருவர் படைக்கலம் எடுத்து முகம்மதை பொதுவுற வளைந்து
செம் கரம் எடுத்திட்டு யாவரும் ஓங்கி சின்னபின்னம்பட உடலில்
பொங்கிய குருதி சிதறிட துணிகள் புரள்தர புவியினில் வீழ்த்தி
நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர்

மேல்
$3.3.59

#2524
இவ்வணம் முடித்தோமெனில் ஒரு தீங்கும் இயைந்திடாது இரும் பழி சுமக்கின்
ஒவ்வொரு பெயருக்கு ஒரு பழி தொடர்வர் எவர் உலகினில் கொடுப்பவர் யார்
செவ்விதின் நெறியே அலது வேறு இலை என்று இசைத்தனன் யாவர்க்கும் தெரிய
பவ்வமும் கொலையும் திரண்டு உருவெடுத்த பாதகன் எனும் அபூஜகுலே

மேல்
$3.3.60

#2525
அபுஜகுல் உரைத்த மொழி வழி துணிந்து அங்கு அகம் குளிர்ந்தனர் அனைவோரும்
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான்

மேல்
$3.3.61

#2526
இன்னவாறலது வேறு ஒரு குறிப்பும் இலை என சம்மதித்து எழுந்து
மன்னிய காபிர் மனையிடம் புகுத வரமுறும் வானவர்க்கு இறைவர்
பன்ன அரும் கிரண சிறை பல ஒடுக்கி படர் இரு விசும்பினின்று இழிந்து
நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார்

மேல்
$3.3.62

#2527
மேலவன் தூதை முகம்மதை விளித்து வினை கொடும் காபிர்கள் திரண்டு
கோலிய பழியை முடித்திட துணிந்த குறிப்பு எலாம் படிப்படி உரைத்து
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில்
சீலமுற்று இருந்து நல் நெறி வழாது தீன் நிலை நிறுத்திடும் எனவும்

மேல்
$3.3.63

#2528
கட்டுரைக்கு அடங்கா காபிர்-தம் ஆவி களைந்திடும் என்னவும் இறையோன்
இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை
மட்டற புகழ்ந்து பிறரவர் அறியா வண்ணத்தின் ஒரு நொடி பொழுதின்
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர்

மேல்
$3.3.64

#2529
மங்குலில் சுழலும் துவச நீள் மாட மதீன மா நகரினில் உறைந்து
வெம் குபிர் கடிந்து பீசபீல் செய்ய மேலவன் விதித்தனன் என்ன
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று
அங்கமும் அகமும் உவகையில் குளிப்ப அகுமது இ யாத்திரைக்கு இயைந்தார்

மேல்
$3.3.65

#2530
தரு முகம்மது நம் இறையவன் தூதாய் நபி எனும் பட்டமே தரித்து
வரும் முறை பதினான்கு ஆண்டினில் மாச தொகையினில் றபீவுல் அவ்வலினில்
தெரிதரும் தேதி ஐந்தினில் திங்கள் இரவினில் சிறப்பொடு மதீனா
பெரு நகர்க்கு ஏக இருந்தனர் இஃது பிறந்தது காபிர்கள்-தமக்கே

மேல்
$3.3.66

#2531
இற்றையின் இரவில் முகம்மது மதீனத்து ஏகுதற்கு இசைந்திருந்தனர் என்று
ஒற்றரில் இபுலீசு உரைத்திடும் மொழி கேட்டு ஊரவர் அனைவரும் திரண்டு
பற்று அறும் உக்பா உத்துபா முதல பாதகன் அபுஜகுலுடனும்
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார்

மேல்
$3.3.67

#2532
அறபிகள் குலத்தின் முதியர் போல் இபுலீசானவன் அவர்கள் முன் நடப்ப
உறைதரும் பவத்துக்கு ஒருவருக்கொருவர் உரைக்கொணா பாஷைகள் உரைத்து
மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள்
அற வளைந்தது போல் காபிர்கள் எவரும் அகுமது மனையினை வளைந்தார்

மேல்
$3.3.68

#2533
தெருவினும் வாயில் புறத்தினும் கதிர்கள் திகழ் சுதை மாளிகை புறத்தும்
பெருகிய திரு முன்றிலின் செழும் புறத்தும் பிறங்கிய திரு மதிள் புறத்தும்
நிரைநிரை காபிர் செறி திரள் நெருங்கி நின்றனர் இருந்தனர் அவரில்
ஒருவரினொருவர் பிந்திடாது உறைந்த ஆங்கு உரவரில் சிலவர் சொல்லுவரால்

மேல்
$3.3.69

#2534
இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன்
அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன்
வெருவி இங்கு எவரும் நா வழங்காமல் விழித்தது விழித்ததாய் இருப்ப
கரு விளைத்திடுவன் முகம்மது படித்த மாயங்கள் கவலுதற்கு அரிதே

மேல்
$3.3.70

#2535
இல்லகத்து உளனோ புறத்து அடைந்தனனோ எவர் அறிகுவர் வளைந்தவரில்
கல்லகம் குழைய விலங்கு இனம் அலைய கற்றிடும் மாய மந்திரத்தான்
ஒல்லையின் எதிர்ந்தானெனில் தொடர்பவர் ஆர் உயிர் செகுத்திட வளைந்திருந்தார்
வில் அணி தட கை வீரர்கள் பல பால் என்-கொலோ விளைவது என்று உரைத்தார்

மேல்
$3.3.71

#2536
எடுத்தெடுத்து எவரும் வெருவுறும் மாற்றம் இயம்புதல் விடுத்திர் இல்லகத்துள்
படுத்தனன் கரந்து போயினனலன் ஓர் கடிகையின் நமர் கையில் படுவன்
தொடுத்திடும் கருமம் முடித்தனம் துணிந்த துணிவை விட்டு ஐயுறல் என சொல்
கொடுத்து இபுலீசு காபிர்-தம் மனங்கள் குறைவு அற திருத்தி அங்கு இருந்தான்

மேல்
$3.3.72

#2537
உரப்பிய உரைகள் மறுத்து நித்திரையை ஒழித்திடும் திசைதிசை பதின்மர்
இருப்பிடம் பெயர்ந்து நின்றுநின்று உலவி எவ்வழியினும் விழி பரப்பும்
கரப்பிடம் இனி மற்று இல்லை மா மதீனா காண்பதும் அரிது அவன் மார்க்கம்
விரிப்பதும் ஒழிந்தது இன்று என உரைத்து வீறுடன் அபூஜகுல் இருந்தான்

மேல்
$3.3.73

#2538
நபி முகம்மதுவை தீவினை இருளை துடைத்திடும் நறும் சுடர் மணியை
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப
புவனமும் விசும்பும் செறிந்து இருள் படலம் போர்த்தது அ இரவினில் துயில் ஒன்று
அவரவர் கருத்தும் கண்களும் மயங்க தலை குழைத்து அசைப்ப வந்து அடுத்த

மேல்
$3.3.74

#2539
சாய்ந்து உடல் முடக்கி கிடப்பவர் சிலர் வாள்-தனை மறந்து அணி முக முழந்தாள்
தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக
மாய்ந்தவர் போல கிடந்தவர் சிலர் வெண் மணி இதழ் விரிப்ப ஐம்புலனும்
தேய்ந்து அற ஒடுங்கி கிடந்தவர் எவரும் திரு மனை புறம்-தொறும் செறிந்தே

மேல்
$3.3.75

#2540
தனை மதித்து அடர்ந்த காபிரின் குலமும் தறுகணன் எனும் இபுலீசும்
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம்
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார்
மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான்

மேல்
$3.3.76

#2541
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி
இன்று இரவினினும் மனையினில் அலியை இயல்பெற துயிலுதற்கு இயற்றி
பொன்றிலா பசிய போர்வையில் போர்த்து புறத்தினில் காபிர்கள் முகத்தில்
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார்

மேல்
$3.3.77

#2542
அமரருக்கு அரசர் மொழிப்படி திருந்த அலி-தமை அணை மிசை படுத்தி
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து
கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து
தமை வளர்த்து வந்த பாத்திமா எனும் அ தாயர்க்கும் உரைத்து எழுந்தனரால்

மேல்
$3.3.78

#2543
திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி
ஒருதரம் யாசீன் ஓதி நால் திசையும் உறங்கிய காபிரை நோக்கி
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து
சொரி கதிர் சுதை மா மனையிடம் கடந்து தோன்றினர் நீண்ட மா மறுகில்

மேல்
$3.3.79

#2544
ஒரு கதிர் நிகரா பெரும் பதி தெருவின் உலவியது என தனி நடந்து
கரு விழி துவர் வாய் ஆயிசா எனும் பெண் கனி எனும் கன்னியை பயந்த
மரு மலர் தொடை திண் புயத்து அபூபக்கர் மனை தலைவாயிலை குறுகி
விரைவொடும் ஒரு சொல் பிறந்திட உரைத்து விளித்தனர் முகம்மது நபியே

மேல்
$3.3.80

#2545
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து
நிறைதரும் இருளின் ஒருதரமெனினும் நினைத்து இவண் அடைந்தவரலர் இன்று
இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின்

மேல்
$3.3.81

#2546
உறுப்பு ஒன்று உறையா பெரும் தசையை ஒளிரும் புவன மடந்தையரின்
சிறப்புற்று இருப்ப செய்த இறசூலே வரிசை நயினாரே
அற பொங்கு இருளில் தனித்து இவணின் அடைந்த வரவாறு என் செவியில்
பிறப்ப உரைப்ப வேண்டும் என பிரியமுடன் நின்று இனிது உரைத்தார்

மேல்
$3.3.82

#2547
உரைக்கும் உறுதி மொழிகள் சிலது உளது மனையில் பிறரவர்கள்
இருக்கில் அகற்றும் என இறசூல் இசைப்ப இவணின் அயலவர்கள்
வருக்கம் இலை இங்கு எழுக என மனையில் கொடுபோய் தவிசின் மலர்
விரிக்கும் மணி பஞ்சணை இருத்தி வெற்றி அபூபக்கரும் இருந்தார்

மேல்
$3.3.83

#2548
இற்றை இரவு இனி யாத்திரை என்று இபுலீசு அறிந்து காபிருடன்
சொற்ற துணிவும் மருவார்கள் சூழ்ந்து மனையை வளைந்ததுவும்
உற்ற துணை வானவர்க்கு அரசர் உரையின்படியால் பூழ்தி எடுத்து
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார்

மேல்
$3.3.84

#2549
கோதும் கத வெம் குபிர் குலத்தை குறைப்ப மதீன மா நகரில்
போதும் எனும் சொல் கேட்டு உணர்ந்து புதியோன் தூதே இனி இவணில்
தீது விளையும் தரிப்பது அல செல்வது அறனே இமைப்பில் தறு
காதி யானும் உடன்வருதல் சரதம் என கட்டுரைத்தனரால்

மேல்
$3.3.85

#2550
உறு மெய் துணைவர் வருவன் எனும் உரையால் மிகவும் மனம் மகிழ்ந்து
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய
பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது
இறைவன் பரம் என்று இசைப்ப அபூபக்கர் எடுத்து அங்கு இயம்புவரால்

மேல்
$3.3.86

#2551
உரத்தின் வலியில் சுமைக்கு இளையாத ஒட்டை இரண்டு என்னிடத்தின் உள
பரித்தற்கு உமக்கு ஒன்று யான் அளித்தேன் என்றார் நபியும் பரிவினொடும்
பொருத்தும் கிறையம் பொருத்தி எமக்கு அருளும் எனும் சொல் புகல மனத்து
இருத்தி இஃதே நெறி முறை என்று இணங்கி விரைவில் கொடுத்தனரால்

மேல்
$3.3.87

#2552
இருவர் மனமும் பொருந்த வரும் இளவல் ஒருவன்-தனை அழைத்து
தெரிய நெறி கூலியும் அளித்து ஒட்டகமும் அவன்-தனிடம் சேர்த்தி
முருகு துளிக்கும் தௌறு மலை பொதும்பில் தினம் மூன்று அகன்றதன் பின்
விரைவில் நாலாம் தினத்து இரவின் வா என்று இவையும் விளம்பினரால்

மேல்
$3.3.88

#2553
திரிகை கனியும் மோதகமும் திரட்டி துகிலில் பொதிந்து தமது
அருமை மகவார் அசுமா-தன் அரையில் கயிற்றால் உற இறுக்கி
வரிசை மனையார் கொடுப்ப எதிர் மருவார் உயிரை விசும்பு ஏற்றும்
குருதி வடி வேல் ஏந்து மலர் கொழும் செம் கரத்தில் கொண்டனரால்

மேல்
$3.3.89

#2554
கொறிகள்-தமை மேய்த்து ஆமீறை குறும்பினிடத்தில் தினம்-தோறும்
உறைய உரைத்திர் என சாற்றி உயிர் ஓர் உருக்கொண்டு உற்று அனைய
சிறுவர் அப்துல்லா எனும் பேர் செம்மல் செழும் செம் கரம் பிடித்து
மறுவி கமழ்ந்த முகம்மதுடன் எழுந்தார் மனையாள்-தமக்கு உரைத்தே

மேல்
$3.3.90

#2555
புகழ் ஓர் வடிவு கொண்ட அபூபக்கர் பொதி சோறு இனிது ஏந்தி
இகலார் அறியாது எழுந்து நடு இருளின் மறுகூடு இனிதுவர
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த
வகிர் வார் நெறியில் கால் தடவி வந்தார் தௌறு மலை சார்பில்

மேல்
$3.3.91

#2556
ஓங்கல் அடுத்து ஓர் பொதும்பரில் மூன்று உழுவை உறைந்தது என நபியும்
வாங்கு சிலை கை வள்ளல் அபூபக்கர் எனும் மெய் மதியோரும்
பாங்கர் அப்துல்லா எனும் அ பாலனுடனும் இனிது இருப்ப
வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால்

மேல்
$3.3.92

#2557
மரையும் மதியும் பொருவாத வதன நபி மாளிகை புறத்தின்
இரவின் வளைந்து காத்திருந்தோர் எழும் முன் இபுலீசு எழுந்தனன் நித்
திரை விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால்
விரைவில் துடைத்தான் வாய் பூழ்தி உமிழ்ந்தான் தனை மெய் மறந்தானே

மேல்
$3.3.93

#2558
அவதி உறக்கம் அனைவோர்க்கும் வருமோ என்ன அதிசயிப்பன்
எவரும் இருப்ப தனி கரப்பது இவனோ என வா இதழ் கறிப்ப
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன்
புவியில் பகையும் விளைந்தது என பொருமி மனத்தில் புழுங்குவனால்

மேல்
$3.3.94

#2559
எண்ணி இடைந்து வளைந்து விழித்திருக்கின்றீர்காள் எவர் வாய்க்கும்
மண்ணை அறைந்தான் முகம்மது என்போன் மாயம் விளைத்து புறம் போனான்
பண்ணும் துயிலில் இறந்தவர் போல் கிடந்தால் பயனும் பெறுவது உண்டோ
துண்ணென்று எழு-மின் எழு-மின் என சொன்னான் மறுத்தும் சொன்னானே

மேல்
$3.3.95

#2560
அதிரும் தொனியால் இபுலீசும் அறைய கேட்டு நடுங்கி உடல்
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில்
புதய கிடந்த பூழ்தி துடைத்து எழுந்தார் சிலர் வாய் மண்ணை உமிழ்ந்து
இது என்ன கொடுமை கொடுமை என எழுந்தார் சிலர் நெஞ்சு இடைந்தாரே

மேல்
$3.3.96

#2561
குழுமி கிடந்த பல திசையும் குழறி எழ கண்டு அபூஜகுலும்
முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண்
விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான்
ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால்

மேல்
$3.3.97

#2562
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடி
கெடுக்கும்படிக்கு கெடுத்து எழுந்து கிளத்தும் தனது மறை நெறியின்
அடுக்குமவர்கள்-வயின் அடைந்தான் அவனால் இனிமேல் நமது இனத்தில்
தொடுக்கும் பகையை துடைப்பவர்கள் இலை என்று இவையும் சொன்னானே

மேல்
$3.3.98

#2563
உரைத்தவை அனைத்தும் கேட்டு அங்கு அபூஜகுல் ஒழியா துன்பம்
பெருத்து நின்று இடைந்து வாடி பிறர் சிலர் தம்மை கூவி
தரித்தவர் எவர் என்று இல்லுள் சார்ந்து நோக்குக என்று ஓத
வரி திறல் குருளை போன்ற அலி அலது இலை வேறு என்றார்

மேல்
$3.3.99

#2564
இல் உறைந்து இரவின் கண்ணே இருந்தனன் கண்கட்டாக
ஒல்லையில் புறத்தில் போந்தான் உறு தொலை கடந்தான் அன்று
சொல்ல அரும் குவடும் கானும் சுற்றியே திரிவன் தேடி
பல்லரும் எழுக என்றான் திசைதிசை பரந்து போனார்

மேல்
$3.3.100

#2565
பாடு உறைந்து இல் புக்கோனை பற்றிலார் வீணில் முள் சார்
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும்
தேடிய பெயர்கள் போல செல்லும் தன் திசையில் சென்றான்

மேல்
$3.3.101

#2566
ஆலயத்திடத்தும் தீனோர் அணி மனையிடத்தும் சேர்ந்த
சோலையினிடத்தும் சீறூர் சுற்றினும் துறுகல் சார்பும்
கோல முள் ஈந்தின் கானும் குரிசில் நம் நபியை மேலும்
கால் இட இடம் இன்று என்ன காபிர்கள் தேடினாரால்

மேல்
$3.3.102

#2567
கிரி பொதும்பு இருந்து மாறா கிளர் ஒளி வனப்பின் மிக்கார்
மரு புயன் அப்துல்லாவை கூவி மா நகரம் புக்கி
இருப்பவர் எவர்க்கும் தோன்றாது ஏதிலார் நடத்தும் செய்கை
விருப்புற தெரிந்து வல்லே விரைந்து இவண் வருக என்றார்

மேல்
$3.3.103

#2568
அற நெறி வடிவம் கொண்ட அபூபக்கர் மதலையான
சிறுவரும் பதியில் புக்கி செய்திகள் அனைத்தும் தேர்ந்து
பொறையிடத்து இவர்கட்கு ஓதி பொருந்தலர் காண்கிலாது
முறைமுறை மூன்று நாளும் இ வண்ணம் மொழியா நின்றார்

மேல்
$3.3.104

#2569
கொறிகள் மேய்த்து ஆமிறு என்னும் கோளரி எவர்க்கும் தோன்றாது
இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி
நிறையுற பருகச்செய்து நெறி விடுத்து அடவி சுற்றி
திறனொடு நகரம் சேர்ந்து மீண்டு சென்று அடைவன் மாதோ

மேல்
$3.3.105

#2570
நிலம் பிறழாத நல் நேர் நெறி மறை தவறா வள்ளல்
சிலம்பு உறைந்து இருப்ப கண்ட சிலம்பி அ பொதும்பர் வாயில்
சலம் புரிந்து இகலாநின்ற தரியலர் நோக்கா வண்ணம்
பலன் பெற மெய் நூல் ஆர வேய்ந்தது பரிவின் அன்றே

மேல்
$3.3.106

#2571
முகம்மது இருக்கும் சார்பில் சிலம்பி நூல் மறைப்ப ஓர்பால்
புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு
அகடு உறை கருவிட்டு அன்பாய் அணி மணி சிறையால் போர்த்து
புகர் அற சேவலோடும் பொருந்தி அங்கு இருந்தது அன்றே

மேல்
$3.3.107

#2572
பொருந்துதல் பயிலா காபிர் திசை-தொறும் புகுந்து தேடி
கரும் தடம் கொண்டல் செவ்வி கவிகையின் உலகம் காத்து
விரிந்த தீன் விளக்கம் செய்யும் வேதியர் இறசூலுல்லா
இருந்த வான் உரைஞ்சி நின்ற இறும்பிடத்து அடைந்தார் அன்றே

மேல்
$3.3.108

#2573
விரல் இட அரிதாய் நின்ற வேய் வனத்திடத்தும் சாய்ந்த
பரு வரை துறுகல் பாங்கும் பருதியின் கரம் புகாமல்
செருகிய கடத்தும் தேடி சேரலர் சிலம்பி நூலால்
புரை அற போர்த்து வைகும் பொதும்பரின் வாயில் வந்தார்

மேல்
$3.3.109

#2574
கரத்தில் ஏந்திய வை வேலும் கால் இணை கபுசும் நீண்ட
உரத்தினும் முகத்தும் வேர்வை உதிர்ப்பொடும் காபிர் கூண்ட
வரத்தினை இரு கண் ஆர மன் அபூபக்கர் நோக்கி
திருத்து மெய் இறசூலுல்லா செம் முகம் பார்த்து சொல்வார்

மேல்
$3.3.110

#2575
இரவினில் இருளின் ஊர் விட்டு இவணிடை அடைந்தோம் மாற்றார்
அரு வரையிடத்தும் தேடி அடைந்தனர் முழந்தாள்மட்டும்
தெரிவது நமக்கு இங்கு அன்னோர் திறத்தொடும் கவிழ்ந்து நோக்கின்
விரைவொடும் காண்பர் என்ன வேதியர்க்கு எடுத்துச்சொன்னார்

மேல்
$3.3.111

#2576
இருவர் நாம் இருப்ப பூவின் இருந்த பல் உயிரும் காக்கும்
ஒருவன் நம் இடத்தை நீங்காது உடன் உறைந்து இருப்ப காபிர்
தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார்
அரு வரை முழையில் புக்கி அருக்கன் ஒத்திருக்கும் வள்ளல்

மேல்
$3.3.112

#2577
ஒருங்கினில் நின்ற காபிர் ஒருவருக்கொருவர் இந்த
மருங்கினில் பொதும்பில் புக்கி நோக்குவம் வருக என்றார்
நெருங்கிய சிலம்பி நூலும் நீள் சிறை புறவின் கூடும்
சுருங்கிடாது அழியாது யாவர் தொடருவர் பொதும்பின் என்றார்

மேல்
$3.3.113

#2578
இப்படி சிலர் கூற கேட்டு எவரும் எம்மருங்கும் நோக்கி
மை படி கவிகை வள்ளல் முகம்மதை காண்கிலோம் என்று
ஒப்புரவு அகன்ற நெஞ்சோடு உளைந்து உலைந்து அடவி சுற்றி
மெய்ப்பொடும் வெயர்வை சிந்த விலங்கல் விட்டு அகன்று போனார்

மேல்
$3.3.114

#2579
முகம்மதின் புகழை போற்றி வகுதை வாழ் அபுல் காசீம்-தன்
அக மலர் களிக்குமாறா அணி சிறை பறவை யாவும்
இகலவர் போனார் என்ன இதயங்கள் உற பூரித்து
புகர் அற கூவி சுற்றி பொருப்பை விட்டு அகன்றிடாதே

மேல்

4 விடமீட்ட படலம்

$3.4.1

#2580
நகரை விட்டு அகன்று கான் சூழ் நகத்திடத்து உறைந்து தேடும்
இகலவர் கண்ணில் காணாது இருந்து அவண் இருக்கும் காலை
புகல் அபூபக்கர் செவ்வி மடி மிசை பொருந்த வாசம்
திகழ் சிரம் சேர்த்தி வள்ளல் செழும் துயில்புரிவதானார்

மேல்
$3.4.2

#2581
விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த
மடங்கல் ஏறு என்ன செவ்வி முகம்மது துயிலும் போதில்
இடம் கொள் அந்தரமும் மண்ணும் இடன் அற நெருங்கி விண்ணோர்
நெடும் கழை வரையை சுற்றி காவலின் நிறைந்து நின்றார்

மேல்
$3.4.3

#2582
மறை நபி துயிலாநின்ற மலை முழை-அதனின் கண்ணே
குறு வளை அனேகம் ஆங்கு ஓர் வளையினில் கொடும் கண் வெவ் வாய்
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு
எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே

மேல்
$3.4.4

#2583
பொரி அரை தருக்கள் யாவும் புது மலர் சொரியும் கானின்
கிரியிடை பொதும்பர் வாயில் கேசரி அனைய வள்ளல்
வரி தரும் கமல செம் கண் வளரிடத்து அரவு தோன்ற
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார்

மேல்
$3.4.5

#2584
படி அடி பரப்ப செய்யா முகம்மதும் பரிவு கூர
மடி மிசை துயின்றார் இந்த வளையிடத்து அரவும் கண்டேம்
விடிவது எவ்வாறோ என்ன வெருவி நெஞ்சு உளைந்து போர்த்த
பிடவையில் கிழித்து சுற்றி பேதுறாது அடைத்து நீன்றார்

மேல்
$3.4.6

#2585
அடைத்த அ புடையை நீக்கி அகுமதுக்கு அணித்தாய் வேறு ஓர்
இடத்து உறும் வளையில் சர்ப்பம் எதிர்ந்தது கண்டு தேங்கி
படத்தினில் ஒரு பால் கீறி பதும மென் கரத்தை நீட்டி
விடத்தினுக்கு அஞ்சி ஏதும் வெளி அற புகுத்தினாரால்

மேல்
$3.4.7

#2586
மற்றொரு வளையில் தோன்ற அடைத்தனர் பொதும்பர் வாயில்
சுற்றிய வளைகள்-தோறும் தோன்றிய துகிலை கீறி
முற்றினும் அடைத்தார் ஓர் பால் முழையினுக்கு ஆடை காணாது
உற்று உளம் இடைந்து வாடி உருகினர் துயிறல் ஓர்ந்தே

மேல்
$3.4.8

#2587
ஒரு வளை அன்றி யாவும் அடைத்தனம் உரகம் ஈங்கு
வருமெனின் மறைப்ப யாதும் இலை திரு வள்ளலார் நித்
திரை மறுத்திடுதல் நன்று அன்று என உடல் திடுக்கிட்டு ஏங்கி
பருவரல் சுமந்து நின்றார் பணி வரவு அறிகிலாரே

மேல்
$3.4.9

#2588
இரு மனம் பேதுற்று அங்ஙன் இருப்ப அ புழையின்-கண்ணே
விரி தரு கவை நா நீட்டி கட்செவி விரைவில் தோன்ற
பெரியவன் தூதர்-தம் பால் வரும் முனம் பெட்பினோடும்
ஒரு திரு தாளை நீட்டி காப்பதற்கு ஒருமித்தாரால்

மேல்
$3.4.10

#2589
மடி மிசை இருந்த காந்தி மதி முகம் அசைந்திடாமல்
கடி நறை பொதுளும் செவ்வி கமல மென் வல தாள் நீட்டி
விட அரவு உறையும் பாலில் வெளி அணுவெனினும் தோன்றாது
இடன் அற உள்ளங்கால் கொண்டு இன்புற அடைத்தார் அன்றே

மேல்
$3.4.11

#2590
புறப்படற்கு அரிதாய் வேகம் பொங்கி கண் செவந்து சீறி
மறைப்படும் வளைக்குள் ஆர்ந்த வல் உடல் நெளித்து நீட்டி
குறிப்பொடு கெந்தம் நான்கும் குழைவு அற நிமிர்த்து வாய் விண்டு
உறப்பட உள்ளந்தாளில் கவ்வியது உரகம் அன்றே

மேல்
$3.4.12

#2591
கடி வழி உதிரம் சிந்த கால் தளர்ந்து அசைந்திடாமல்
நெடியவன் தூதர் செய்யும் நித்திரைக்கு இடர் இல்லாமல்
புடையினில் இருந்த சர்ப்பம் புறப்படற்கு இடங்கொடாமல்
உடல் அணு நடுக்கம் இன்றி இருந்தனர் உணர்வின் மிக்கார்

மேல்
$3.4.13

#2592
மிதிப்படும் வளையில் காலை விடுத்திலர் கடித்தும் என்ன
கொதிப்பொடு கெந்த நான்கும் குறைபட சீறிச்சீறி
பதிப்பொடும் உடலை வீங்கி படு விடம் அனைத்தும் சிந்தி
அதிர்ப்பொடும் வேக மீக்கொண்டு அடிக்கடி கடித்தது அன்றே

மேல்
$3.4.14

#2593
மாசு அற தெளித்த பஞ்சின் வாய் படும் நெருப்பு போன்றும்
வேசு அற சுட்ட சாம்பர் மீது உறும் புனலை போன்றும்
மூசி வெள் எயிறு சிந்த முரண் அரா கடித்த வாயின்
ஆசொடும் விடத்தின் வேகம் ஆகத்தின் முழுதும் ஏற்ற

மேல்
$3.4.15

#2594
பன்ன அரும் கொடிய வேகம் பரந்து உடல் அனைத்தும் தாக்கி
சென்னியில் பரப்ப சற்றே சிந்தையின் மயக்கம் தோன்ற
தன் நிலை தளராது உள்ளம் தாளையும் பெயர்த்திடாமல்
அ நிலை இருந்தார் செவ்வி அகுமதும் விழித்தார் அன்றே

மேல்
$3.4.16

#2595
மதியிடத்து இரண்டு செவ்வி மரை மலர் பூத்தது என்ன
விதியவன் தூதர் கண்கள் விழித்து அபூபக்கர்-தம்மை
எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார்

மேல்
$3.4.17

#2596
தட வரை பொதும்பில் நீவிர் தண் மதி கடுப்ப சாய்ந்து என்
மடி மிசை துயில ஆதி வல்லவன் உரையால் இந்த
நெடும் முழை-அதனின் நேராய் நெட்டு உடல் வளைக்கும் பாந்தள்
கடிதினில் தலையை நீட்ட கண்டனன் கவலை கூர

மேல்
$3.4.18

#2597
அ பெரும் பாந்தள் இங்ஙன் வரும் முனம் அடைப்பான் வேண்டி
ஒப்ப அரும் மதியின் காந்தி உரித்து என துகிலை என்-தன்
கைப்பட கீண்டு உள் ஓடி கரந்திட அடைத்தேன் அப்பால்
துப்பொடும் வேறுவேறு புழை-தொறும் தோன்றிற்று அன்றே

மேல்
$3.4.19

#2598
இனையன புழைகள் எல்லாம் அரவு எழுந்து எதிர துன்பம்
மனதினில் படர சோதி கலையினை வலிதின் வாங்கி
நனி பெற கீண்டுகீண்டு நலம் தர அடைத்து நின்றேன்
குனி சிலை தழும்பின் கையாய் கொடும் புரை ஒன்று அல்லாமல்

மேல்
$3.4.20

#2599
முடங்கி நீண்டு இருள் உள் ஆர்ந்த முழை ஒன்றில் தலையை நீட்ட
தடம் கொள் கோடிகம் இல்லாதால் தாளினை நிமிர்த்து காலும்
தொடங்கிலா வண்ணம் நீங்காது அடைத்தனன் துளை பல் பார்ந்தள்
விடங்கள் கான்று அரிதில் சீறி வெகுளியில் கடித்தது அன்றே

மேல்
$3.4.21

#2600
ஊறுபட்டு உதிரம் கால வலது உளந்தாளை பற்றி
மாறு இலாது இன்னும் தீண்டி வாங்கியது அதனால் உள்ளம்
வேறுபட்டு இமைப்பின் நேரம் மெய் மயக்குற்றேன் என்றும்
ஈறிலான் தூதே இங்ஙன் விளைந்தவாறு இது என சொன்னார்

மேல்
$3.4.22

#2601
அடல் உறும் அரி ஏறு என்னும் அபூபக்கர் உரைப்ப கேட்டு
படர் பருவரல் உற்று ஆதி அளித்திடும் பயனும் ஓர்ந்து
புடையினில் பொருந்தும் தாளை பெயர்த்திடும் என புகன்றார்
வடிவினில் நிகர் இன்று என்ன வந்த மா முகம்மது அன்றே

மேல்
$3.4.23

#2602
தரைத்தலம் புகல வீரம் தக தமை நினையா நீட்டு
மரை தட பதத்தை மெல்ல வாங்கினர் வாங்க சோதி
விரித்த சூட்டு எரி கண் பாந்தள் விளங்கி அ வளையை நீங்கி
துருத்தி நீர் வெளி விட்டு என்ன விரைவொடும் தோன்றி நின்ற

மேல்
$3.4.24

#2603
நெட்டு உடல் முடக்கி வாய்ந்த கழுத்தையும் நிமிர்த்து நின்ற
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி
வட்ட வாருதி சூழ் எட்டு திக்கினும் அணி வானத்தும்
எட்டிய கீர்த்தி கொண்டோர் இனியன மொழிகள் சொல்வார்

மேல்
$3.4.25

#2604
அரு மறை பொருளாய் நின்றோன் அமைத்த பன்னகமே யாங்கள்
வரையின் ஓர் இடுக்கண் உற்று வந்திருந்தனமல்லாமல்
பரிவுடன் உனக்கு யாது குற்றமும் பயின்றது உண்டோ
தரையின் எம் முன்னோர் முன் நாள் இயற்றிய தவறும் உண்டோ

மேல்
$3.4.26

#2605
ஏதொரு குறையும் செய்தது இன்று இவை இகழ்ந்து எண்ணாமல்
நீதமில்லவரை போல நெடும் புடை-அதனின் வந்து
தீது உற கொடிய வேகம் தலை கொள சினந்து சீறி
வேதனைப்பட வாய் வைத்தது என் என விரைவில் கேட்டார்

மேல்
$3.4.27

#2606
மறையின் வாய் உரை கேட்டு எழில் முகம்மதை நோக்கி
நிறுவி நின்றிடும் நெடும் தலை நிலத்திடை சேர்த்தி
முறைமையின் சலாம் உரைத்து முள் எயிற்று வாய் திறந்து
குறைவு இலாது உளத்து இருந்தவை அனைத்தையும் கூறும்

மேல்
$3.4.28

#2607
ஆதி_நாயகன் திரு நபியே இவண் அடியேன்
நீதி அன்றியே தீண்டினனலன் நெடும் காலம்
பூதரத்தின் எம் முன்னவர் சில மொழி புகன்றார்
ஏது என செவிகொடுத்திட வேண்டும் மெய் எழிலோய்

மேல்
$3.4.29

#2608
செவ்வி நாயகன் திரு ஒளிவினில் உரு திரண்டு
குவ்விடத்தினில் உதித்து அரும் புதுமையில் குலவி
அவ்வியம் களைந்து அகுமது நபி என அழகாய்
எவ்வெவர்க்கும் நல் மறை நெறி நடத்துவர் எனவும்

மேல்
$3.4.30

#2609
அவர்க்கு நல் வழியாய் இசுலாமினில் ஆனோர்
சுவர்க்கம் எய்துவர் எனவும் அ சொல்லினை கடந்தோர்
பவ கடல் கிடந்து அலைகுவர் என்னவும் பரிவின்
உவக்கும் வேற்று உரு சமயங்கள் ஒழிந்திடும் எனவும்

மேல்
$3.4.31

#2610
பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின்
அரிய நாயகன் திரு மறை விளக்கி அங்கு இருந்து இ
வரையினும் தனி வருகுவர் என்னவும் மதீனா
திரு நகர்க்கு அரசிருந்து தீன் திருத்துவர் எனவும்

மேல்
$3.4.32

#2611
இனைய வாசகம் அனைத்தையும் உணர்ந்து உளத்து இருத்தி
கனியும் சிந்தையும் கண்களும் களிப்புற நோக்கி
புனிதமாகுவது என்று என தினம்-தொறும் பொருவா
நினைவின் நேர் வழி தவத்தொடும் இருந்தனன் நெடு நாள்

மேல்
$3.4.33

#2612
இற்றையின் முதல் மூன்று நாள் தொடுத்து இறும்பிடத்தில்
குற்றம் அற்ற பேரொளியொடு மான்மதம் குலவி
வற்றுறா புது மணத்தொடும் கமழ்ந்தன மனத்தின்
உற்று இது ஏது என குறித்திடாது ஒரு வளை உறைந்தேன்

மேல்
$3.4.34

#2613
அந்தரத்தினும் நிலத்தினும் பெரும் குவடு அனைத்தும்
வந்து வானவர் புகழ்தர அரும் சலவாத்தை
சிந்தைகூர்தர புகல்வது கேட்டு உளம் தேறி
எம்-தம் நாயகர் இவண் உறைந்தனன் என இசைந்தேன்

மேல்
$3.4.35

#2614
தொல்லை வல் வினை தொடர் பவம் களைந்து நல் சுவனத்து
எல்லையின் பதம் கிடைத்தது இன்று என தவழ்ந்து ஏகி
ஒல்லையில் குவடு அடங்கலும் தேடினன் ஒளிரும்
கல்லகத்து உழை கண்டனன் இரு விழி களிப்ப

மேல்
$3.4.36

#2615
வரை முழை சிறு வாயிலில் சிலம்பி நூல் மறைப்ப
விரி சிறை புறவு இருப்பது நோக்கினன் விரைவில்
பெருகும் காப்பு அழித்திடுவது அன்று என பிரிந்து ஒதுங்கி
புரை அற தனி மற்றொரு வளையினில் புகுந்தேன்

மேல்
$3.4.37

#2616
சிறு புழைக்குள் என் நெட்டு உடல் ஒடுங்கிட செருகி
புறப்படும் திசை அனைத்தையும் அடைத்தனர் புழுங்கி
வெறுப்பொடும் இருந்து ஒரு-வயின் மேவினன் விரைவின்
மறைப்பட தட தாள் கொடு அ வளையையும் மறைத்தார்

மேல்
$3.4.38

#2617
வரையினில் புறம் அகலவும் வழி இலாது உமது
திரு மலர் பதம் காணவும் செயல் இலாது அழிந்து
முரிதரும்படி குவட்டுளை இடம்-தொறும் முடங்கி
திரிதலல்லது வெளிப்படல் அரிது என திகைத்தேன்

மேல்
$3.4.39

#2618
போதுதற்கு இடம் அன்றியும் புதியன் நாயகன்-தன்
தூதரை தெரிசித்திட வரும் வழி தூர்த்த
பாதகத்தையும் நினைத்து மை கொடு விடம் பழுத்த
தீது உறும் கொடிற்று எயிற்று அற கடித்தனன் சிறியேன்

மேல்
$3.4.40

#2619
நெடிய காலம் உற்று ஒரு பலன் நினைத்தவர்க்கு அடுத்து
முடியும் போழ்தினில் தடுப்பவர் எவரையும் முரணி
தடிதல் நன்று எனும் அறிவினால் தடிந்ததேயன்றி
படியின் நேர் தவறிலன் என உரைத்தது பாந்தள்

மேல்
$3.4.41

#2620
பாந்தள் கூறிட கேட்டலும் பதும மென் மலரின்
சேர்ந்த பொன் முக குளிர்ப்பொடும் களிப்பொடும் சிறப்ப
வாய்ந்த வாய்மையின் விளித்து அருகுற வரவழைத்து
கூர்ந்த தம் மனத்து உவகையில் சில மொழி கொடுப்பார்

மேல்
$3.4.42

#2621
நெறி உரைத்தனை கண்டனை நில நெடும் காலத்து
உறவு கொண்டனை பவ தொடர் துன்பமும் ஒழித்தாய்
குறைவு அற பலன் படைத்தனை வாழ்ந்து நின் குலத்தோடு
உறைக என புகழொடும் உரைத்தனர் மறை உரவோர்

மேல்
$3.4.43

#2622
வேத_நாயகர் உரைத்தலும் விடத்து எயிற்று அரவம்
பாத மென் மலரிடத்தினில் சிரம் கொடு பணிந்து
கோது அற கலிமா எடுத்து ஓதி மெய் குழைத்து
பூதரத்து உறு நெடு வளையிடை புகுந்ததுவே

மேல்
$3.4.44

#2623
அரவு அகன்ற பின் எழில் அபூபக்கர் செம் மலர் தாள்
விரிதரும் கடிவாயினில் கொடு விடம் அகல
மரை இதழ் துளி நீரினை விரலினால் வாங்கி
புரை அற தடவினர் செழும் புகழ் முகம்மதுவே

மேல்
$3.4.45

#2624
இருள் அகற்றிய கதிரவன் கதிர் என இதழில்
பரிவு பெற்றிடும் அமிர்த நீர் உடல் எலாம் பரந்த
கரிய வெவ் விடம் அனைத்தையும் அணு அற கடிந்து
சொரியும் காந்தி கொண்டு அரிய மெய் மாசு அற துடைத்த

மேல்
$3.4.46

#2625
பன்னக கொடும் விட பெரும் பருவரல் தீர்ந்து
மின்னு செம் கதிர் வேல் அபூபக்கரும் விறலார்
மன்னர்_மன்னவர் முகம்மது நபியுடன் வரையின்
இன் இசை புகழொடும் புதியனை தொழுது இருந்தார்

மேல்

5 சுறாக்கத்துக் தொடர்ந்த படலம்

$3.5.1

#2626
அடுக்கல் இன்புற மூன்று நாள் இருந்து நாலாம் நாள்
விடுக்கும் செம் கதிர் ஆதவன் மேல் திசை கடலுள்
ஒடுக்கும் எல்வையின் அத்தரி இரண்டுடன் உவனும்
இடுக்கண் இன்றி மெய் திடத்தொடும் அவ்விடத்து எதிர்ந்தான்

மேல்
$3.5.2

#2627
கதிர் புகுந்து இருள் பரந்தது தொத்தினன் கடிதின்
எதிரின் ஒட்டகம் இரண்டும் கொண்டு அடுத்தனன் இனி இ
விதிரும் மென் மலர் கான் செறி வரையிடம் விடுத்து
புதியது ஓர் நெறி புக எழும் என நபி புகன்றார்

மேல்
$3.5.3

#2628
முத்திரை திரு வாய் மொழி முறைமையில் சிதகா
பத்தியின் அபூபக்கரும் முகம்மதும் பரிவில்
குத்திர புறம் விடுத்து எழுந்தனர் கதிர் குலவ
சித்திரத்து இரு மதி இருந்து எழுந்தன சிவண

மேல்
$3.5.4

#2629
துட்ட வல் விலங்கு இனங்கள் ஒன்று ஒன்றினை துரத்தி
விட்ட வாய் குரல் அதிர்தரும் வரையிடை விரைவின்
பட்ட கார் இருள் போதினில் படர் ஒளி குலவ
ஒட்டகத்தின் மேல் கொண்டனர் தூதரின் உயர்ந்தோர்

மேல்
$3.5.5

#2630
அறிவின் மிக்க அபூபக்கரும் ஆமிறு என்பவனும்
பிறிது ஓர் ஒட்டகம் மேற்கொடு வதிந்தனர் பிறங்கி
செறியும் வல் இருள் கானிடை யாவர்க்கும் தெரியாது
இறு கல் சின்னெறி கொண்டனன் கூலியின் இளவல்

மேல்
$3.5.6

#2631
நஞ்சு முள் எயிற்று அரவு உறை வரையில் நள்ளிருளில்
பஞ்சரத்திருந்து எழும் அரி ஏறு என பரிவின்
கஞ்ச மென் முக மலர்தர போயினர் கணியா
வஞ்சர் நெஞ்சகம் போன்ற முள் சிறு நெறி வனத்தில்

மேல்
$3.5.7

#2632
கூன வான் தொறு எனும் குவட்டிடை எழில் குலவும்
தான ஆரண முகம்மதின் தனுவின் தண் கதிரால்
வான வாவி ரவியின் கதிர் என மலைமலைந்து
கான வாரண குலம் சிலம்பின கடல் கடுப்ப

மேல்
$3.5.8

#2633
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து
வயிற்றிடை படுத்திருந்த வல் இருள் குலம் மறுக
பயிற்றும் வேத வாசக முகம்மதை கொடு பரிவின்
கயிற்று அசைப்பிடாது ஏகின சுரி நெடும் கழுத்தல்

மேல்
$3.5.9

#2634
ஆவி போல் உறு தோழரும் அரச_நாயகரும்
காவின் கானையும் வளை செறி பொறைகளும் கடந்தார்
பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப
வீவு இலா கனை திரை குண கடல் திசை வெளுத்த

மேல்
$3.5.10

#2635
மட்டு வார் பொழில் சூழ்தரு மக்க மா நகரம்
விட்டு நம் நபி கொடிய வெம் கானிடை விளங்க
பட்ட காரணம் எவை-கொல் என்று அஞ்சி உள் பயத்தோடு
எட்டிப்பார்ப்ப போல் எழுந்தன நெடும் கதிர் இரவி

மேல்
$3.5.11

#2636
இரவின் முள் செறி வனம் கடந்து இரவி தோன்றிய பின்
பரல் கிடந்த வெம் பாலையில் பகல் நடு போதில்
ஒரு குறும்பொறையிடத்தினில் அறிவு உறும் உரவோர்
விரைவின் ஏகி அங்கு இறங்கினர் நிழல் இலா வெயிலின்

மேல்
$3.5.12

#2637
கடம் கடந்து மெய் வருந்தி அங்கு இருந்த காவலர்க்கு ஓர்
படங்கலின் புறம் விரித்திருந்தனர் அபூபக்கர்
அடங்கலார் எனும் குபிர் அறுத்திட அவதரித்த
மடங்கல் ஏறு என துயில்புரிந்தனர் முகம்மதுவே

மேல்
$3.5.13

#2638
பஞ்சின் மெல் அணை விடுத்து அரும் பரலினில் படுத்த
மஞ்சு உலாம் குடை அரசரை நோக்கி வஞ்சகரால்
மிஞ்சும் வல் வினை என திசை-தொறும் விழி பரப்பி
அஞ்சி ஐயமுற்று இருந்தனர் துணை அபூபக்கர்

மேல்
$3.5.14

#2639
செறி மயிர் திருகிய மருப்பு உடை சிறு கவை கால்
குறுமறி திரளொடு மயிர் போர்வை தோள் கொண்டு
வெறி கமழ்ந்து இவண் இருப்பவர் எவர் என வியந்து
தறி கை கோல் கடை காலொடு சார்ந்து நோக்கினனால்

மேல்
$3.5.15

#2640
அடைந்து நோக்கிய தொறுவனை விளித்து அபூபக்கர்
மிடைந்த இ கொறி நின்னதோ பிறரதோ விளம்பு என்று
இடைந்திலா மொழி கொடுத்தலும் திரியும் என் உருக்க
ளொடும் புற சில கூலியும் உளது என உரைத்தான்

மேல்
$3.5.16

#2641
கூலியின் கொறி விடுத்து நின் கொறியினை குறுகி
பாலினை கறந்து இவண் தருக என பணிந்து ஓடி
காலினை தகைந்து உறும் கடைகாலினில் கறந்து
சீலமுற்றவரிடத்தினில் கொடுத்தனன் திறலோன்

மேல்
$3.5.17

#2642
வில் உமிழ்ந்த மெய் முகம்மதும் துயிலினை விடுத்திட்டு
ஒல்லையின் எழுந்திருந்த பின் உயிர் எனும் துணைவர்
முல்லை_மன்னவன் தரு நறும் பாலினை முறையா
செல் உலாம் கரத்து அளித்தலும் பொசித்தனர் சிறப்ப

மேல்
$3.5.18

#2643
மந்தர புய முகம்மது மதி முக நோக்கி
கந்த மென் மலர் பதம் இரு சுரம்கொடு தடவி
எந்தையீர் பவம் துடைத்தனன் என புகழ்ந்து இடையன்
புந்தி கூர்தர கொறியொடும் வனத்திடை போனான்

மேல்
$3.5.19

#2644
இருந்த நாயகர் இருவரும் இவண் நெடு நேரம்
பொருந்தல் தீது என அத்திரி புறத்து அணை விசித்து
வருந்திலாது எழுந்து அரும் கட நெறிகளை மறுத்து
திருந்து நல் நெறி இஃது என விரைவொடும் சென்றார்

மேல்
$3.5.20

#2645
இகல் மனத்து அபூஜகல் விடும் ஒற்றர்கள் யாரும்
பகு மனத்தொடும் பல் நெறி-தொறுந்தொறும் படர்ந்தார்
சகி இலாது ஒரு கொடியவன் தனித்து ஒரு பரி மேல்
திகை மறுத்து அவர் இருவரும் வரும் நெறி சேர்ந்தான்

மேல்
$3.5.21

#2646
கிள்ளை வேகமும் வல கரம் கிடந்த வெள் வேலும்
வெள்ளை மென் துகில் கஞ்சுகி நனைதரும் வெயர்வும்
துள்ளி நால் திசை பரப்பிய துணை விழிகளுமா
கள்ள வன் மனத்தவன் வரும் வரவினை கண்டார்

மேல்
$3.5.22

#2647
மாதிரத்தினை அடர்ந்த திண் புயத்து அபூபக்கர்
சீத மெய் நறை முகம்மது திரு முகம் நோக்கி
வேதனை தொழில் அபூஜகல் திசை-தொறும் விடுத்த
தூதரின் உளனலது வேறலன் என சொன்னார்

மேல்
$3.5.23

#2648
கசை புறம் புடைத்திட புவி அதிர்ந்திட கலி மா
விசையும் வேகமும் கையினில் சுழற்றிய வேலும்
நசை விடாது கொண்டு இவண் அடுத்தனன் இகல் நடப்ப
இசைவன் வேறு இனி உரைப்பது இன்று என்னவும் இசைத்தார்

மேல்
$3.5.24

#2649
வலிய வெம் பகை வளைந்திடில் தனித்தவர் மனத்தின்
நலிவு இலாது எதிர்ந்து அடருதல் தீன் நடுநிலைமை
கலி இது என்-கொல் என்று ஐயுறல் கலங்குதல் ஈமான்
நிலையும் வீரமும் புறம் விடுத்திடுபவர் நெறியே

மேல்
$3.5.25

#2650
இறுதியற்றவன் ஒருவன் நாம் இருவர் இங்கு எய்தி
மறம் முதிர்ந்து எதிர் வருபவன் ஒருவன் மற்று இவனால்
பெறுவது என்-கொல் என்று உரைத்தனர் தீன் நிலை பிரிக்கும்
செறுநராகிய விலங்கு இனம் கெட வரும் சீயம்

மேல்
$3.5.26

#2651
புறா கத்தும் பறந்து உயவும் பாசடை தரு பொரிய
மறா கதிர் கதிரவன் சுடு நெடும் சுர வழியின்
உறா கடும் விசை குசை பரி கடிதில் கொண்டு ஓடி
சுறாக்கத் என்பவன் களிப்பொடும் அடுத்தனன் தொடர்ந்தான்

மேல்
$3.5.27

#2652
அடுத்த வெம் பகைவனை மனத்திடை அதிசயித்து
படுத்த மண்-தனை நோக்கி இ பாதகன் பரியை
விடுத்திடா விழுங்கா வகை குளம்பினை விசித்து
பிடித்திடு என்றனர் தூது என தீன் நிலை பிடித்தோர்

மேல்
$3.5.28

#2653
ஈண்டு வல்லவன் தூதர்-தம் திரு மொழிக்கு இயைய
வேண்டுமல்லது வெறுத்திடல் அரிது என விரும்பி
தூண்டி வந்தவன் பரியினால் குளம்பையும் சுருக்கி
பூண் தரங்கு என பிடித்தது கடல் நடு புடவி

மேல்
$3.5.29

#2654
புதிய சித்திரம் என புரி நூல் உடை குயவன்
சுதையினால் சமைத்திடு பரி என்னவும் துணுக்கா
குதி இலாது உதையா வளை முகம் குழையாது
பதிய நின்றது கொடியவன் விடு நெடும் பரியே

மேல்
$3.5.30

#2655
கடிய வெம் பரி நடந்தில என மனம் கனன்று
நெடிய மத்திகை விசைதர அங்கையின் நிமிர
அடியடித்தனன் காலினில் புடைத்தனன் அனைய
கொடுமையால் தலை அசைத்தது நடந்தில குதிரை

மேல்
$3.5.31

#2656
தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய்
மலைதர வஞ்சனை விளக்கு முகம்மது செய் வினை திறனோ மாயம் யாது என்று
உலைவு உறு நெஞ்சினன் ஆகி கவிழ்ந்து நோக்கலும் வேகம் ஒடுங்க வாசி
நிலைபட நால் குளம்பையும் பூதலம் புதைய பிடித்து இறுக்கி நெருக்க கண்டான்

மேல்
$3.5.32

#2657
துரகதத்தின் பதத்தினை பூ பிடித்திருப்பது அகுமது-தம் சூழ்ச்சியாம் என்று
எரியும் மனம் வெகுளாது முகம் மலர்ச்சி கொடுப்பவர் போல் இனிது நோக்கி
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில்
பரிவுடன் செல்குவன் புடவி விளைக்கும் இடர் தவிர்த்திர் என பணிந்து சொன்னான்

மேல்
$3.5.33

#2658
சத்தியமும் பொறையும் மனம் நீங்காத நெறி தவறா தரும வேந்தும்
புத்தமுதம் ஒழுகும் மறை விளைந்த திரு வாய் மலர்ந்து புடவி நோக்கி
அத்திரியின் தடைபடுத்தல் விடுத்தி என விடுத்திட மண் அதிர தாவி
எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே

மேல்
$3.5.34

#2659
புன்மை கவர் வஞ்சக நெஞ்சினர்க்கு மறை தினம்-தோறும் புகட்டினாலும்
நன்மை பயவார் எனும் சொல் பழமொழியை புதுக்குவன் போல் நடுக்கம் நீங்கி
கொல் நுனை வேல் கொடு தாக்கி முகம்மதினை தரை வீழ்த்தி கொல்வேன் என்ன
வன்மை மனத்தொடும் புரவி-தனை நடத்தி வெகுண்டு வந்தான் மதியிலானே

மேல்
$3.5.35

#2660
சினந்து வெகுண்டு அடல் பரி கொண்டு அடர்பவனை முகம்மது தம் திரு கண் நோக்கி
மனம்-தனில் புன்முறுவலொடும் வெகுளாது முன் போல் வன் பரியின் தாளை
இனம் பிடித்திடு என உரைப்ப கொடியவன்-தன் உயிர் பிடுங்கி எடுத்து வாரி
கனம்-தனில் உட்படுத்தி உணும்படி முழந்தாள் தெரியாமல் கவ்விற்று அன்றே

மேல்
$3.5.36

#2661
கள்ளம் இகல் பழி பாவம் மாறாத கொடிய சுறாக்கத் என்று ஓதும்
உள் இரக்கமில்லாதான் முகம்மது-தம் திரு பெயரை உரைத்து கூவி
விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ
தள்ள அரிய தடை விடுத்திர் இகலேன் என்று அகம் வேறாய் சாற்றினானால்

மேல்
$3.5.37

#2662
இகல் எடுத்து வருமம் உரைத்தவர் மறுத்தும் வணக்க மொழி இசைத்தாரென்னில்
புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று
அகம்-அதனில் அகுமது தாம் நினைத்து அவனி-தனை நோக்கி ஆடல் மாவின்
தகை தவிர்த்திடு என உரைப்ப எவர்க்கும் தெரிதர திரிய தள்ளிற்று அன்றே

மேல்
$3.5.38

#2663
சுடரிடத்தில் பதங்கம் நினைவு அறியாது வருவது போல் சுறாக்கத் என்போன்
புடவி பரி பதம் பிடிக்கும் முனம் வேகத்தொடும் அடுத்து பொருவு இலாத
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால்

மேல்
$3.5.39

#2664
எடுத்த கொலை தொழில் மறுப்ப தடை இரு போது அடுப்ப மனதினில் எண்ணாது
தொடுத்தவன்-தன் மன வலியும் வாள் வலியும் அதிசயித்து தூயோன் தூதர்
அடுத்த பகை களைதரும் மதீன நகர்க்கு ஏகிய பின் ஆதல் என்றால்
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார்

மேல்
$3.5.40

#2665
சிந்தையினில் வெருவல் அற முரண் நாடி பின்னும் எனை தெறுதல் தேறி
வந்தனன்-தன் வீரமும் கோரமும் நடுங்க பற்று என வாய் மலர்ந்து கூற
கந்துகத்தின் பத நான்கும் அடிவயிறும் அங்கவடி காலும் கூட்டி
குந்தி அசைவு அற அமிழ்த்தி பதித்தது என வசுந்தரை வாய் கொண்டது அன்றே

மேல்
$3.5.41

#2666
தள்ளாத வருத்தம் உடல் தோலாத பயம் இதய தட தடாகம்
கொள்ளாத நலிதல் ஐயம் துன்பமுடன் சூழ்ந்து குடிகொண்டு தோன்ற
விள்ளாத துணிவு மறம் மதம் ஊக்கம் இகல் நினைவு வெகுளி மானம்
புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே

மேல்
$3.5.42

#2667
பாடலத்தின் பதமும் அதன் அகடும் அவன் பரடும் பத படியும் தோன்றாது
ஈடுபட கவ்வியது நபியின் உரை மறுத்தோரை எரி மீக்கொண்டு
சூடுபடும் அழல் குழி வெவ்விட பாந்தள் பகு வாயின் துளை பல் பூண
ஓடி அற விழுங்குவது இ தரம் என சொல்வது போல உணர்த்திற்று அன்றே

மேல்
$3.5.43

#2668
தலை அசைத்து வால் வீசி புரவி படும் பாடும் இரு தாளின் நோவின்
மலைய மனம் வேறாகி கை வேலை நிலம் சேர்த்தி வாய் அங்காந்து
சொலும் மொழி ஈது என அறியாது அடிக்கடி வாய் குழறி விழி சுழல வாடி
உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால்

மேல்
$3.5.44

#2669
அபுஜகல்-தன் உரை தேறி நால் திசைக்கும் பரந்தவர் போல் ஆகா வண்ணம்
இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா
சவி தரள உருவெடுத்தோர் இரங்கார் மேல் இரங்கி உரை சாற்றினாலும்
புவி விடுவதல இறுதி முடிந்தது என பொருமலொடும் புலம்பினானால்

மேல்
$3.5.45

#2670
மனை மனைவி புதல்வர் பொருள் அவை நினைந்து கண்ணீர் வார்ந்து ஒழுகி ஓட
இனும் முகம்மதினை பரவி கேட்கில் அவர் இரங்குவர் என்று இதயம் தேறி
தனியவன்-தன் திருத்தூதே முகம்மதுவே பொறை கடலே தமியேன் கூற்றை
உனது செவிக்கு இடவேண்டும் வேண்டும் என இரக்கமொடு உரைக்கின்றானால்

மேல்
$3.5.46

#2671
என் போலும் சிறியர் பெரும் பழி அடுத்த குறை பிழை ஆயிரம் செய்தாலும்
பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப
நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ
முன் போலும் காத்து அளித்தல் வேண்டும் அது நினது மறை முறைமைத்தாமால்

மேல்
$3.5.47

#2672
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால்
மறுமொழி இல் என அகல்வேன் இனம் தேடி வருபவர்க்கு மறைத்து கூறி
நெறியுடன் நன்கு உரைத்து மணி மூதூர் கொண்டு அணைகுவன் நிர்ணயம் ஈது என்னை
பெறுமவர்கள்-தம் ஆணை குபல் ஆணை உறுதி என பிதற்றினானால்

மேல்
$3.5.48

#2673
நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால்
எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது
பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத
நற்குணத்தீர் அழித்தலும் காத்து அளித்தலும் நின் கிருபை என நவிற்றினானால்

மேல்
$3.5.49

#2674
கலங்கி வலி இழந்து உரைத்த மொழி அனைத்தும் திரண்டு திரு காதுள் ஓடி
இலங்கிய நல் மறை ததும்பும் மனத்து உறைய குறை போக்கி இரக்கம் ஊறி
விலங்கு இனத்தின் தளை இவன் கால் தளை விடுத்தி என விபுலை விடுத்தலோடும்
பிலங்கிடந்து பிறந்து எழுந்து வருபவர் போல் புரவியுடன் புறப்பட்டானால்

மேல்
$3.5.50

#2675
வாசியுடன் முகம்மது தாள் பணிந்து வரு நெறி மீட்டு மக்கம் நோக்கி
ஆசு அடுத்தது இவண் இவண் என்று அ வழியும் விலங்கி விரைந்து அகலும் காலை
பூசலிட தொடர்ந்து சிலர் வருபவர்க்கு நன்கு உரைத்து புறம் புகாமல்
பாசம் உற உடன் கூட்டி பரிவொடும் போய் புகுந்தனன் பதியின் மன்னோ

மேல்

6 உம்மி மகுபதுப் படலம்

$3.6.1

#2676
காயும் வெம் சுரத்திடை தொடர்ந்தனன் மனம் கலங்கி
பாயும் வீர வெம் பரியுடன் வரும் வழி பார்த்து
போய பின் அபூபக்கரும் முகம்மதும் புளகித்
தே இழிந்து அறிவுடன் தொழுது அ இடம் விட்டு எழுந்தார்

மேல்
$3.6.2

#2677
கறை இல் வெண் திரை உண்ட வண் கவிகை முன் நிழற்ற
குறையும் நீள் தரு தளிர்த்து அலர் நறவு கொப்பிளிப்ப
பறவை எங்கணும் செழும் புகழ் பாட ஒட்டகத்தின்
முறையின் ஏகினர் இறை அருள் நிறை முகம்மதுவே

மேல்
$3.6.3

#2678
கரை கொழித்த வெண் வண்டலும் நெடிய கான்யாறும்
திரை அலம்பிய குறும் சுனை இடங்களும் செறிந்து
விரை கொள் முல்லை அம் பந்தரும் விளை நறா உடைந்து
சொரியும் கொன்றையும் தோன்றிட சென்றனர் தூயோர்

மேல்
$3.6.4

#2679
வேய் இசை தொனி இரு செவி குளிர்தர வெருவா
காயும் வெம் சின வாரணம் பொருவ கண் களிப்ப
தோயும் வெண் தயிர் நறு நறை நாசிகள் துளைப்ப
பாய் அரி குலம் என நெறி குறுகிட படர்ந்தார்

மேல்
$3.6.5

#2680
நிறையும் சாமையின் போர் குவை வரைகளை நிகர்ப்ப
அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ
பறழின் வாய் தொனி இடையறாது இருந்தது ஓர் பாடி

மேல்
$3.6.6

#2681
வந்து அரும் பெரும் ஒட்டகம் இழிந்து அபூபக்கர்
எந்தையீர் இளைப்பாறி மற்று ஏகுவம் என்ன
பந்தர் இன்றி ஓர் புறம் வெளிப்படும் பழ மனையில்
சிந்தை நேர்ந்து அவண் அடைந்தனர் தெரி மறை செம்மல்

மேல்
$3.6.7

#2682
அம்மல் ஓதி வெண் நூலினில் பிறங்கிட அழகு ஆர்
கொம்மை வெம் முலை தாழ்ந்து அணி வயிற்றிடை குழைய
வம்-மின் யாவர் என்று ஒரு மொழி வழங்கி அங்கு இருந்தாள்
உம்மி மஃபது என்றிடும் பெயர் விருத்தையள் ஒருத்தி

மேல்
$3.6.8

#2683
ஆயர்-தம் குல விருத்தையை விளித்து நின் அகத்துள்
போய் எமக்கு உணவு உளதெனில் தருக என பொருந்தா
காயும் வன் கலி சாமமும் வறுமையும் கலந்து
மாயும் இல்லினள் அருள்வது ஒன்று இலை என வகுத்தாள்

மேல்
$3.6.9

#2684
திரைக்கு மெய்யினள் மனை புறம் செறி மயிர் கொறி ஒன்று
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில்
சுரக்கும் பால் இலையோ என மகிழ்வொடும் தூண்டி
உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள்

மேல்
$3.6.10

#2685
என்னினும் முதிர்ந்து அரும் பெரும் நோயினால் இடைந்த
வன் மலட்டது திரிவதற்கு உயிர் இலா வரடு
தன்மமில்லவள் மனையினில் சார்ந்த நீர் இசைத்தல்
இன்மை நோயினும் வலிது என அவசமுற்று இசைத்தாள்

மேல்
$3.6.11

#2686
விருத்தை என்னும் அ தொறுவி சஞ்சல மொழி விளம்ப
கருத்தினூடு உற இரங்கி மா நோயினில் கசிந்து
வருத்தமுற்ற மை மலட்டினை கொணர்க என வலிதில்
திருத்தி மென்மெல முகம்மது திரு முனம் விடுத்தாள்

மேல்
$3.6.12

#2687
நிகரிலான் அருள் தூதுவர் நெடும் கரம் நீட்டி
தகையும் மை முதுகிடத்தினில் பயப்பய தடவ
பகருதற்கு அரிதாய் இடம் தழைத்து உடல் பருத்து
புகர் அற கொழுத்து இளமையில் செழுமையும் பொதிந்த

மேல்
$3.6.13

#2688
நிரைத்த செம் மயிர் குறங்குகள் அகல்தர நிமிர்ந்து
விரித்ததில் திரண்டு அடிவயிறு உற மடி வீங்கி
சுரித்த சின் முலை நீண்டு விம்மிதத்தொடும் சுரந்து
புரை தலம் திறந்து அமுது எழுந்து ஓடின புவியில்

மேல்
$3.6.14

#2689
மூத்திருந்தவள்-தனை விளித்து உனது கை முறையாய்
நா திருந்த நல் அமுது கொள்க என நபி நவில
வாய்த்திருந்தது பசிக்கு என எழுந்து தன் மனைக்குள்
பாத்திரம்-தனை எடுத்தனள் கறந்தனள் பாலை

மேல்
$3.6.15

#2690
வரம் கொள் மை முலையினும் ஒழுகின என மகிழ்வின்
அரங்கின் உள்ளிருந்து எடுத்த பாத்திரம் அடங்கலினும்
இரங்கும் பால் கறந்து அணியணி நிரப்பினள் இனி என்
கரங்கள் சோர்ந்தது என்று இடை நிலம் சேர்த்தினள் கடைகால்

மேல்
$3.6.16

#2691
அடுத்த கேளிருக்கு உரைத்தலும் அவரவர் கரத்தின்
எடுத்த பாத்திரம்-தொறுந்தொறும் கறந்து இனிது ஏகி
விடுத்த போதினும் ஒழுகிய சுரப்பு மென்மேலும்
கொடுத்து நின்றது முகம்மது காரண கொறியே

மேல்
$3.6.17

#2692
வாய்ந்த மெல் இடை இடையர்-தம் குலத்து உறு மடவாள்
ஆய்ந்தவர்க்கு இடர் விளைப்பவர் வளம் எனும் அடுப்பில்
காய்ந்த பாலினை வடித்து வண் தாமரை கரத்தின்
ஈய்ந்து நின்றனள் அருந்தினர் துணையொடும் இறசூல்

மேல்
$3.6.18

#2693
இதம் தரும் பெரும் புதுமையை அருள் நபி இறசூல்
பதம்-தனில் பணிந்து இரும் கலிமா மொழி பகர்ந்து
மதம் தழீஇ இசுலாமினில் ஆயினாள் வணங்கி
நிதம் தரும் தவ தொழுகையின் முறை வழி நின்றாள்

மேல்
$3.6.19

#2694
இன்று வந்து இவண் இருவர்கள் இருந்தனர் கிழ ஆடு
ஒன்று கண்டனர் பால் உரு ஆக்கினர் உலகில்
பொன்றிலா புகழ் விளைத்தனர் புதுமை-கொல் எனவே
நின்று நோக்கினர் பாடியில் தொறுவர்கள் நிறைந்தே

மேல்
$3.6.20

#2695
தேயும் சிற்றிடை மடந்தையள் ஒருத்தி-தன் திறத்தால்
மாய வன் குபிர் போக்கி நம் நபி வழி வழுத்தி
பாய் அரி கயல் விழி மடவாரொடும் பாடி
ஆயர்-தம் குலத்தவர் இசுலாமினில் ஆனார்

மேல்
$3.6.21

#2696
அற்றை போதினில் மக்க மா நகரவர் அறிய
சுற்றும் காவதம் கேட்டிட கவிதையின் தொடரா
பற்றலார் குலம் கெட செழும் தீன் நிலை படர
வெற்றி கொண்டு ஒரு தொனி முழங்கியது விண்ணிடத்தில்

மேல்
$3.6.22

#2697
மரு மலர் பொழில் மதீனத்தின் ஏகும் அ வழியில்
இருவர் வந்து ஒரு முல்லை அம் பாடியின் இறங்கி
புரி வெண் நூல் குழல் முதியவள் மனையில் புக்கு இருந்து
விரியும் காரண புதுமைகள் பலபல விளைத்தார்

மேல்
$3.6.23

#2698
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ
பொதுவர் தம் குலத்தொடும் இசுலாமினில் பொருந்தி
அதிவிதத்தொடும் தீன் நிலைக்கு உரியவர் ஆகி
பதவி பெற்று நல் செல்வமும் வளம் பெற படைத்தார்

மேல்
$3.6.24

#2699
பலாபலன் தரும் தீன் நிலை மறுத்தவர் பலர்க்கும்
பலாய் அடைந்தது என்று இரும் பொருள் பிறந்திடும் வசனம்
குலாவும் வெம் குபிர் தலைவர்கள் செவியினில் குறுக
கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார்

மேல்
$3.6.25

#2700
அஞ்சல் இன்றி விண் அதிர்ந்திடும் மொழியினை ஆய்ந்த
விஞ்சை வல்லவர் தெரிதர முகம்மது விளைத்த
வஞ்சத்துள் படும் ஜின்களில் ஒன்று என மதித்து
நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார்

மேல்
$3.6.26

#2701
விம்மித புயத்து ஆயர்கள் திரண்டு மெய் மகிழ்ந்து
செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட
நம் இனத்தினும் உரியள் என்று இனிய நல் மொழிகள்
உம்மி மஃபதுக்கு இசைத்து எழுந்தனர் மறை உரவோர்

மேல்

7 மதீனம் புக்க படலம்

$3.7.1

#2702
உதய மால் வரை பருதியை நிகர்ப்ப ஒட்டகத்தின்
விதியவன் திரு தோழரும் துணைவரும் விரி பூ
உதிரும் சோலையின் அளி இசை திசைதிசை ஓங்கும்
பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்து அயல் போனார்

மேல்
$3.7.2

#2703
மக்க மா நகர் விடுத்து நல் மதீன மா நகரம்
புக்குதற்கு இடம் என வரும் நெறியினில் புறத்தில்
ஒக்கலோடு அசுகாபிகள் ஒவ்வொரு பெயரா
அக்கம் போக்கி பின் படைத்தவர் போல வந்து அடுத்தார்

மேல்
$3.7.3

#2704
பின்னும் ஓர் பகல் போக்கிய நெறியினில் பிரியா
மின்னும் வெம் கதிர் வேலவர் நூற்றினும் மேலார்
மன்னும் மெய்யிடம் விடுத்த நல் உயிர் என வந்தார்
சொல் நயம் பெறு முகம்மது மன களி துளங்க

மேல்
$3.7.4

#2705
வானகத்து உடு கணத்திடை நடு எழு மதி போல்
கான வேங்கைகள் நடு வரும் கேசரி கடுப்ப
சோனை மா முகில் கவிகை நுண் துவலைகள் தூற்ற
நானம் எத்திசையினும் கமழ்தர நபி நடந்தார்

மேல்
$3.7.5

#2706
உகளும் வாளை கண்டு அன பெடை ஒதுங்கும் வாவிகளும்
முகில் அடைந்து கண்படுத்த பைம் பொழில்களும் முன்னி
புகை தவழ்ந்த வெண் மாளிகை புறம் பல செறிந்து
திகழும் பொன் நகர் மதீனமும் தெரிதர சென்றார்

மேல்
$3.7.6

#2707
வட_வரை பொருவன மலிந்த மேனிலை
கடல் என ஒலித்தது ஆவணத்தின் கம்பலை
புடவியை அளந்தன போன்ற வீதிகள்
இடன் அற நெருங்கின மாடம் எங்குமே

மேல்
$3.7.7

#2708
கலை_வலார் மறையவர் கருத்தில் எண்ணியது
இலை எனாது அரும் பொருள் யாவும் எய்தலால்
மலைவு இலாது அருளிய வள்ளியோரினும்
தொலைவு இலா பெரும் புகழ் படைத்த தொல் நகர்

மேல்
$3.7.8

#2709
தோரணத்தொடும் கொடி காடு துன்னலால்
வாரண மத மலை மலிந்து நிற்றலால்
காரணத்தொடும் வரவாறு காணலால்
பூரண புவி என பொலிந்த பொன் நகர்

மேல்
$3.7.9

#2710
சுதை ஒளி மேனிலை துலங்கி தோன்றலால்
புது மலர் தெரு-தொறும் சிந்தி பொங்கலால்
எதிர் பணிந்திடு விருந்து இனிதின் நல்கலால்
வதுவையின் மனை என இருந்த மா நகர்

மேல்
$3.7.10

#2711
உறு பகை வறுமை நோய் ஓட ஓட்டி மேல்
குறைவு அற மனு முறை கோல் நடாத்தி நீள்
நிறைதரு பெரும் புகழ் நிலை நிறுத்தி ஓர்
மறு இலாது அரசு என இருந்த மா நகர்

மேல்
$3.7.11

#2712
பொறிகள் ஐந்து என பவம் ஐந்தும் போக்கலால்
குறியுடன் ஒரு நிலை கொண்டு மேவலால்
நெறியுடன் எங்கணும் வாய்மை நிற்றலால்
அறிவர் ஒத்து இருந்தது அ அணி கொள் மா நகர்

மேல்
$3.7.12

#2713
தெள் திரை ஆரமும் பூணும் சிந்தலால்
விண்டு பல் பலபல மொழி விளம்பலால்
மண்டிய வளம் தலைமயங்கலால் மது
உண்டவர் என மதர்த்து இருந்த ஒண் நகர்

மேல்
$3.7.13

#2714
தானமும் ஒழுக்கமும் தவமும் ஈகையும்
மானமும் பூத்த திண் மறனும் வெற்றியும்
ஊனம் இல் ஊக்கமும் ஒளிர காய்த்த நல்
தீன் எனும் செல்வமே பழுத்த சேண்_நகர்

மேல்
$3.7.14

#2715
அ நகர் நாப்பண் ஓர் அணி கொள் மேனிலை
தன்னிடத்திருந்து ஒரு காபிர்-தன் மகன்
சென்னியை நீட்டி ஓர் திசையை நோக்கினான்
மன்னிய புயல் குடை வரவு கண்டனன்

மேல்
$3.7.15

#2716
சூல் முகில் கவிகையில் பல்லர் சூழ்வர
மீன் நடு மதி என விளங்கி தோன்றிய
தானவன் யாவன் என்று உளத்தில் தான் உணர்ந்து
ஈனம் இல் முகம்மதாம் என்று தேறினான்

மேல்
$3.7.16

#2717
மதின மண் இருந்து முன் மார்க்க நிண்ணய
விதியினை இனத்தொடும் வெறுத்து வேறு ஒரு
புதிய நிண்ணயத்தினை பொருந்தும் மாந்தர்காள்
இதமுற கேண்-மின் என்று எடுத்து சொல்லுவான்

மேல்
$3.7.17

#2718
கறா எனும் திசையை ஓர் கடிகை நீங்கிலாது
உறாது எதிர் சென்று பார்த்து உலையும் வீரர்காள்
அறா நெறி முகம்மது என்பவன் பல் பேருடன்
மறாது அமை கவிகையின் வருகின்றான் என்றான்

மேல்
$3.7.18

#2719
மா தவ நபி இவண் வருகின்றார் என
காதினில் கேட்டலும் களித்து அன்சாரிகள்
சீத ஒண் கவிகையின் திசையை நோக்கிய
பாதையின் இடம் அற பற்றி ஏகினார்

மேல்
$3.7.19

#2720
ஒருவருக்கொருவர் முன் ஓடி யாவரும்
வருபவர் இ வழி விரைவின் வம் என
இருள் அறு மனத்தராய் எதிர்ந்து செல் நெறி
திரு நபி பதத்தினில் சென்னி சேர்த்தினார்

மேல்
$3.7.20

#2721
துன்னிய திரை கடல் தோழர் நாப்பணின்
நல் நபி பதங்கனை போன்ற நாடிய
மன்னவர் களிப்பினால் நோக்கு மா முக
பொன் இதழ் தாமரை காடு பூத்ததால்

மேல்
$3.7.21

#2722
அல் எனும் குபிர் கசடு அறுத்து தீன் நெறி
எல்லவன் என வரும் தூதர் யாரையும்
மல் அணி மார்புற தழுவி மான்மத
வில் உமிழ் மேனியும் புயமும் வீங்கினார்

மேல்
$3.7.22

#2723
இடர் அறுத்து அடைந்த முஹாஜிரீன்களும்
அடல் உறும் வேல் கை அன்சாரிமார்களும்
உடன் உவந்து ஒருவருக்கொருவர் அவ்வயின்
இடன் உற காந்தமும் இரும்பும் ஆயினார்

மேல்
$3.7.23

#2724
வரி சிலை குரிசிலும் மதீன மன்னரும்
கருதலர் செகுக்கும் முஹாஜிரீன்களும்
தரு என வரும் அபூபக்கர்-தம்மொடும்
அரியவன் அருளொடும் புறப்பட்டார்களால்

மேல்
$3.7.24

#2725
நீடிய கற்றா எனும் எல்லை நீங்கி ஓர்
பாடியும் கடந்து தம் பரிசனத்தொடும்
கூடிய பனீயமுறு என்னும் கூட்டத்தை
நாடி அங்கு ஒரு நெறி நடந்து போயினார்

மேல்
$3.7.25

#2726
வரி வரால் பகடுகள் வனச வாவியும்
சொரி மது சோலையும் கதலி சூழலும்
தெரிதர கண்டு சென்று இன்ப செல்வமே
தரு குபா என்னும் அ தலத்தை நண்ணினார்

மேல்
$3.7.26

#2727
ஆசிலாதவரொடும் றபீயு லவ்வலின்
மாசம் பன்னிரண்டினில் வதிந்த திங்களில்
பாசமுற்று அவரிடம் பரிந்து நம் நபி
வாசமுற்று உறைந்தனர் மகிழ்வின் மாட்சியால்

மேல்
$3.7.27

#2728
ஏடு அவிழ் மாலையர் பலரும் ஏந்தலும்
பீடு பெற்று அவ்விடத்து இருப்ப பெய் முகில்
ஓடியது என நறவு ஊற்றும் தார் உடை
ஆடக வரை புயத்து அலியும் வந்தனர்

மேல்
$3.7.28

#2729
பண் தரும் மறை பயகாம்பர் மா முகம்
கண்டனர் பதத்தினில் கரங்கள் தேய்த்தனர்
விண்டனர் ஆகுலம் வீறும் மேன்மையும்
கொண்டனர் மனத்தினும் களிப்பு கொள்ளவே

மேல்
$3.7.29

#2730
திருப்ப அரும் உயிர் உடல் சேர்ந்தது ஒத்து என
வரி புலி அலி-தமை மார்புற தழீஇ
இருப்ப மற்று அவ்விடத்து இருந்த மன்னரும்
பொருப்பு எனும் புயங்களில் பொருந்த புல்லினார்

மேல்
$3.7.30

#2731
அவிர் ஒளி முகம்மதும் ஆவி போன்றவர்
எவரும் மற்று இன்புற இருந்து அ ஊரினில்
சவி தரும் வெண் சுதை தயங்க எங்கணும்
கவின் உற பள்ளி ஒன்று அரிதில் கட்டினார்

மேல்
$3.7.31

#2732
ஆய அ பள்ளியில் தொழுது அன்னோருடன்
நாயக நபி பதினாலு நாளின் மேல்
தாயகம் என பனீசாலிம் என்னும் அ
தூயவர் இருப்பிடம்-அதனில் தோன்றினார்

மேல்
$3.7.32

#2733
பனியமுறு என்பவர் வாழ் குபாவுக்கும்
நனி புகழ் மதீன மா நகர்க்கு நாப்பணின்
நனை மலர் வாவி சூழ் றாத்தூனா என
புனை எழில் குடியிடை பொலிய வைகினார்

மேல்
$3.7.33

#2734
தரை புகழ் வலி பனீசாலிம் என்னும் அ
புரவலர் தலத்தினில் இருக்கும் போழ்தினில்
அரி ஹமுசா உமறு ஆதி மா மறை
தெரி உதுமானொடும் வந்து சேர்ந்தனர்

மேல்
$3.7.34

#2735
தந்தையர் எனும் ஹமுசாவும் திண் புய
வெம் திறல் உமறு உதுமானும் ஏய பின்
புந்தியில் களித்து இரு புயங்கள் வீங்கிட
சந்து அணி மார்புற தழீஇயினார் அரோ

மேல்
$3.7.35

#2736
மரை மலரொடு மரை மலரை வைத்து என
சரகு அணி முறையொடும் தட கை தாம் கொடுத்து
உரிய பால் தயிரொடும் உணவும் ஈந்திடு
கரையிலா உவகை அம் களிப்பின் வைகினார்

மேல்
$3.7.36

#2737
வேல் இடும் செழும் கர வீரராம் பனீ
சாலிம் என்பவர் உறை தலத்தின் அன்பு உற
நாலு நாள் இருந்து பின் அவர்க்கு நன்கொடு
பாலினும் இனிய சொல் பயிற்றினார் அரோ

மேல்
$3.7.37

#2738
அ தலத்து உறைந்து பின் அடுத்த வெள்ளி நாள்
உத்தம தமரொடு அவ் உறைந்த பேர்கட்கும்
இ தலத்து இன்று தொட்டு ஈறு_நாள்மட்டும்
குத்துபா என நபி குறித்து காட்டினார்

மேல்
$3.7.38

#2739
மா முகில் குடை நபி வகுத்த வாசகம்
தே மலர் புயத்தவர் யாரும் சிந்தித்து
பூ மரு வண்டு என பொலிய நம் நபி
தோம் இல் வண் குத்துபா தொழுவித்தார் அரோ

மேல்
$3.7.39

#2740
தூயவன் தூதர் என்று எவர்க்கும் சொல் நிறீஇ
தேயம் எங்கணும் பெரும் தீனை வித்திய
நாயக முகம்மது நாட்கொண்டு அ இடத்
தே உயர் குத்துபா இயற்றினார் அரோ

மேல்
$3.7.40

#2741
வெற்றி சேர் நால்வரும் வேந்தர்-தம்மொடும்
உற்று இனிது ஓங்கி அங்கு உறைந்த பேரொடு
மற்றைநாள் இருந்து அவண் அகன்று பூம் பொழில்
சுற்றிய மதீன மா நகரில் தோன்றினார்

மேல்
$3.7.41

#2742
கதிர் அயில் ஏந்து முஹாஜிரீன்களும்
சதி பயில் புரவி அன்சாரிமார்களும்
முதிரும் தீன்தீன் எனும் முழக்கம் ஆர்த்து எழ
புதியவன் திரு நபி புரத்தில் புக்கினார்

மேல்
$3.7.42

#2743
வட்ட வான் நிழல் தர வந்த நம் நபி
ஒட்டகை மேல் கயிறு-அதனை ஊரவர்
தொட்டனர் நெருங்கினர் சுமை கொண்டு ஆர்த்தனர்
விட்டிலர் அவரவர் விருப்பின் செய்கையால்

மேல்
$3.7.43

#2744
பொன்_மனை இடத்தவர் பொங்கி யாவரும்
என் மனையிடத்தில் கொண்டு ஏகுவேன் என
தன் மன களிப்பினால் சாற்றி வாகனத்
தின் மணி கயிற்றினை ஈர்க்கின்றார்களால்

மேல்
$3.7.44

#2745
வித்தக முகம்மதின் விருப்பின் மாட்சியால்
தத்தம் இல் கொடு புக சார்ந்த மன்னவர்
அத்தனை பெயரையும் நோக்கி அத்திரி
சித்திரம் என தனி சிறந்து நின்றதால்

மேல்
$3.7.45

#2746
கடு விசை பரியினும் கடிய வேகமாய்
கொடு வரும் சோகினை கூண்டி யாவரும்
தொடுவது அன்று என கரம் தூண்டி பாசத்தை
விடும் விடும் என நபி விளம்பினார் அரோ

மேல்
$3.7.46

#2747
பிடிபடும் கயிற்றினை பிடித்து நீவிர்கள்
தடைபடுத்திடில் அது சார்ந்திடாது நம்
முடைய நாயகன் திருவுளத்தின் உன்னியே
வடிவு உறும் ஒட்டகம் வருவது ஈண்டு அரோ

மேல்
$3.7.47

#2748
கறங்கிய கடல் என களித்து இடா நகர்ப்
புறம் கிடந்து உறையினும் நடுவண் புக்கினும்
நிறம் கிளர் ஒட்டகம் நினைவின் நேர் வழி
இறங்கிய இடத்து யான் இருப்பன் என்றனர்

மேல்
$3.7.48

#2749
மாசிலான் அருள் கொடு நடந்த வாகன
பாசம் மேல் குவி கர பதும கொள்ளைகள்
காசு இல் வண் புகழ் நபி கழறும் சொல் கதிர்
வீசிட சடுதியின் விரிந்து நின்றவால்

மேல்
$3.7.49

#2750
கோது இலாது அடர்ந்து எதிர் குவிந்த மன்னவர்
வீதியின் அத்திரி விடுத்த பின் எழில்
சோதி மெய் துகள் படா தூதரும் மரை
போது எனும் செழும் கர பூட்டு நீக்கினார்

மேல்
$3.7.50

#2751
இடம்-தனில் நின்றவர் யாரும் இன்புற
வடம்-தனை விடுத்தனர் என்று மாசு இலா
நெடும் தட வரை என நின்ற ஒட்டகம்
நடந்தது தனியவன் அருளை நாடியே

மேல்
$3.7.51

#2752
சோதி மென் கொடி என தோன்றும் ஆமினா
மாதுலராகிய பனீநஜ்ஜாறுகள்
காதரம் அற வரும் காணியாகிய
பூதலத்திடை தனி பொருந்தி நின்றதே

மேல்
$3.7.52

#2753
நின்று நால் திசையினும் நோக்கி நேர் இலா
வென்றி கொள் மெய் அசையாது மெல்லென
ஒன்றிய தாளினை ஒடுக்கி நீள்தரும்
குன்று என உறைந்து அவண் படுத்துக்கொண்டதே

மேல்
$3.7.53

#2754
உறைந்த ஒட்டகம் பினர் எழுந்து அ ஊரவர்
நிறைந்து நோக்கலும் மெல நடந்து நீடு ஒளி
குறைந்திலா தெரு பல குறுகி நின்றது
மறைந்திடாது ஒரு தலைவாயில் மேவியே

மேல்
$3.7.54

#2755
கொடி மதிள் மாட வாய் குறுகி கோது அற
நெடியவன் தூதரை சுமந்து நேர் இலா
வடிவு உற நின்ற ஒட்டகம் அ வாயிலின்
படி உற படுத்தது பலரும் காணவே

மேல்
$3.7.55

#2756
கொய் உளை பரியவர் குழுமி பின் வர
கையினில் தரித்த வேல் காவலோர் அபூ
அய்யுபு வாயிலில் படுத்த அத்திரி
வையகம் புகழ்தர மறுத்து எழுந்ததே

மேல்
$3.7.56

#2757
எழுந்த ஒட்டகம் விரைந்து ஏகி தேன் மழை
பொழிந்து என நபி சலவாத்து பொங்கவே
அழுந்தி மெய் உற முதல் படுத்த அவ்வயின்
இழிந்திடும்படி பினும் படுத்திருந்ததே

மேல்
$3.7.57

#2758
ஒடுங்கிட தாள் மடித்து உறைந்த ஒட்டகம்
நெடும் கழுத்தின் கரிபு இன்றி நீட்டியே
இடங்கொள் வாய் பிளந்து நா எடுத்து நின்றவர்
அடங்கலும் செவி கொளா கூப்பிட்டு ஆர்த்ததால்

மேல்
$3.7.58

#2759
ஒட்டகை குரல் பொருள் உணர்ந்து நம் நபி
வட்ட ஒண் தவிசின் மேல் வதிந்த மெல் அணை
விட்டு இழிந்து அரிய தீன் விளக்கும் மேன்மையின்
இட்டமுற்று அவர்க்கு எலாம் எடுத்து கூறுவார்

மேல்
$3.7.59

#2760
இன்று தொட்டு ஈறு_நாள் அளவும் என் உயிர்க்கு
ஒன்றிய நால்வரோடு உறைந்து தீன் நிலை
வென்றி கொண்டு உறைவது இ தலமல்லாது வேறு
இன்று நம் மேலவன் இசைத்த மாற்றமே

மேல்
$3.7.60

#2761
சடுதியின் ஒட்டகம் தரித்த நீள் நிலத்து
இடு மதிள் மனை எமக்கு இயற்று நாள்மட்டும்
அடு திறல் அபூ அய்யூபு அன்சாரியார் அகம்
விடுதி என்று எடுத்து உரை விளம்பினார் அரோ

மேல்
$3.7.61

#2762
முத்திரை முகம்மது மொழிந்து காட்டிய
உத்தரம் செவி புகுந்து உணர்வு விம்மவே
இ தவம் எய்தியது எனக்கு என்று அன்னவர்
மத்தக கரி என மதர்ப்பு வீங்கினார்

மேல்
$3.7.62

#2763
ஆதி-தன் திருவுளத்து ஆய ஒட்டகம்
ஓதிய மொழி வழி உணர்ந்து நல் நெறி
வேதியர் உரைத்தனர் விதி இது என்னவே
மா தவர் யாவரும் மகிழ்வுற்றார்களால்

மேல்
$3.7.63

#2764
ஈர நல் மனத்து முஹாஜிரீன்களை
கார் நிழல் கவிகையார் கடிதில் கூவி இ
ஊரினில் அவரவர் உறவின் தன்மையில்
சார்பிடம் எவண் அவண் சார்மின் என்றனர்

மேல்
$3.7.64

#2765
மா மறை முறை தெரி மதீன மன்னரை
தாமதியாது அவர் சார்பில் சார்க என
நாம வேல் முகம்மது ஆண்டு உரைப்ப நன்கு என
கோ மறுகிடம்-தொறும் குறுகினார்களால்

மேல்
$3.7.65

#2766
கவர் அறு புந்தி முஹாஜிரீன்களும்
அவரவர் சார்பினில் புக அபீ அய்யூப்
திவள் ஒளி மாளிகை திசையை நோக்கி நல்
நபிகளின் நாயகம் நடந்து போயினார்

மேல்
$3.7.66

#2767
படர் ஒளி விரிதர பதியின் வீதி-வாய்
இடன் அற நெருங்கி நின்று எவரும் வாழ்த்தவே
அடல் பெறும் வீரர் அபூ அய்யூப் எனும்
வட_வரை புயத்தினர் மனை புக்கார் அரோ

மேல்

8 கபுகாபுப் படலம்

$3.8.1

#2768
மாரி அம் கவிகை வள்ளல் மதீன மா நகரம் புக்கி
சீரிய மறையின் தீம் சொல் செவ்வியோர்க்கு இனிதின் ஊட்டி
கூர் இலை கதிர் வேல் செம் கை தீனவர் குழாம்கொண்டு ஏத்த
ஏர் அணி அபூ அய்யூபின் இல்லிடத்து இருக்கும் நாளில்

மேல்
$3.8.2

#2769
அறத்தினில் புகுந்து வேதத்து அறிவினில் குடிகொண்டு ஓங்கும்
திறத்தினர் அம்மாறு என்னும் சீயம் மற்றொருவரேனும்
பெறற்கு அரும் வடிவின் மிக்கோர் இளவல் கை பிடித்து விண்ணோர்
புறத்தினில் காவல் ஓம்பும் புண்ணியர் திருமுன் வந்தார்

மேல்
$3.8.3

#2770
மந்தர புயமும் சோதி வடிவு மேல் வளர்ந்து நீண்ட
சுந்தர கரமும் மாறா சுடர் மதி முகமும் நோக்கி
சிந்தையுள் களித்து துன்பத்து இருக்கு அற திருக்கும் கையும்
கந்த மென் பதத்தில் சேர்த்தி கண்ணில் நீர் கலுழ நின்றான்

மேல்
$3.8.4

#2771
பதத்தினில் இறைஞ்சி தாழ்ந்து பணிந்து வாய் புதைத்து போற்றி
இதத்தொடு சலாமும் கூறி இனிது நின்றவனை நோக்கி
உதித்து எழும் பருதி ஏய்ப்பான் உரைக்க அரும் வடிவன் இ யாவன்
மதித்து உரை என அம்மாறு முகம்மதுக்கு எதிர்ந்து சொல்வார்

மேல்
$3.8.5

#2772
அடிமையில் சிறியேன் வாழும் அகத்தினில் இருந்து நும்-தம்
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி
நெடியவன் மறை நேர் இன் சொல் நிகழ்த்தினன் செவியில் கேட்டு
சடுதியின் என் முன் தோன்றி விருப்பொடு சலாமும் சொன்னார்

மேல்
$3.8.6

#2773
அந்தமும் முடிவும் இல்லா அரியவர்க்கு உரிய தூதர்
வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர்
சந்திர வதன வள்ளல்-தனை கண்ணால் தெரிசித்து உண்டோ
எந்தை கேட்டு இசைக்குமாறோ யாது எடுத்து இயம்பும் என்றார்

மேல்
$3.8.7

#2774
புதியது ஓர் அழகு வாய்ந்த புரவல வேத வாய்மை
மதி_வலோர்க்கு ஏவலாளாய் மலர் அடி விளக்கி நாளும்
துதிசெய்து பவங்கள் தீர்த்து தொல் வினை பகுதியால் நற்
கதி பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன்

மேல்
$3.8.8

#2775
கண்டனன் என்னும் மாற்றம் செவி புக ஹபீபை தேடிக்
கொண்டு உற நடந்த பொன் தாள் இது-கொலோ என்ன கூறி
முண்டக மலரின் வாய்ந்த முகத்தை என் தாளில் சேர்த்தி
பண் தரும் திரு வாய் முத்தி பற்பல்கான் மோந்துகொண்டார்

மேல்
$3.8.9

#2776
காலினை விடுத்து மாறா காரணர் வடிவை நாளும்
மால் உற பருகும் கண்கள் இவை என மணி வாய் வைத்து
மேல் உற முகந்து முத்தி மெய் மயிர் சிலிர்ப்ப பூரித்து
ஓல வாருதியை ஒப்பார் உவந்து எனை புகழ்ந்து நின்றார்

மேல்
$3.8.10

#2777
நல் நபி பெயர் கேட்டு உள்ள களி நனி பெருகாநின்றார்
இன்னவர் வரிசை மேலோர் என்பதை இதயத்து எண்ணி
பின் ஒரு மொழி கொடாமல் இவர் கரம் பிடித்து வல்லே
பொன் அடி அடைந்தேன் என்றார் சூழ்ச்சியும் பொறையும் மிக்கார்

மேல்
$3.8.11

#2778
இசைத்த நல் மொழி கேட்டு அந்த இளவலை இனிது கூவி
திசை தலம் யாண்டு யாவன் சேய் உனக்கு இடு பேர் யாது
விசைத்து இவண் அடைந்தவாறும் விளம்பு என குரிசில் கூற
நசை தட குண குன்று அன்னான் இனியன நவிலலுற்றான்

மேல்
$3.8.12

#2779
வானவர் ஏவல் பூண மானிட வடிவாய் வந்த
தானவ அரசு செய்ய தவம் முயன்று அழகு பெற்ற
கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும்
ஈனம் இல் மறைகள் வல்ல பண்டிதன் எந்தை மன்னோ

மேல்
$3.8.13

#2780
எந்தையும் ஆயும் பல் நாள் இயற்றிய தவத்தால் வந்த
சந்ததி என்ன வேறு தனையர் இல்லாது நாளும்
புந்தியின் உவகை கூர போற்றி நல் புராணம் தேர்ந்து
நந்தல் இல் கபுகாபு என்னும் நாமமும் நவின்றிட்டாரால்

மேல்
$3.8.14

#2781
உத்தமர் செல்வம் போன்றும் உளத்து அணு மாசு ஒன்று இல்லா
பத்தியர் தவமே போன்றும் பகர அரும் விசும்பில் தோன்றும்
சித்திர மதியம் போன்றும் செவ்வியர் இருவர் ஆவி
வைத்ததோர் உடம்பு போன்றும் நாட்குநாள் வளர்த்திட்டாரால்

மேல்
$3.8.15

#2782
பேதமை அகற்றி புந்தி பெருக்கு எடுத்து ஒழுகல் செய்யும்
வேத வாசகம் புராண காவிய விதிகள் யாவும்
ஓது என ஓதுவித்து என் உளத்தினுக்கு இயைந்ததாக
போதர செய்துநின்றார் பொருவு இலா வண்ணத்து அன்றே

மேல்
$3.8.16

#2783
முன்னவர் ஓதும் வேத மூன்றினும் தெரிந்த நூல்கள்
பல் நெறி ஞான நூல்கள் இனையன பலவும் தொக்க
மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ

மேல்
$3.8.17

#2784
நாள்-தொறும் கருத்து ஈது அல்லால் வேறு ஒரு நாட்டம் இல்லேன்
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த
மோடு உயர் பேழை பூட்டின் முத்திரை விடுத்து வல்லே
தேடினன் கண்ணில் காணா செய்யுளின் விருப்பத்து அன்றே

மேல்
$3.8.18

#2785
அன்ன வில் பேழையுள் கண் அறையின் ஆடகத்தின் வாய்ந்த
மின் அவிர் கிரண செப்பு ஒன்று இருந்த மென் விரலால் தீண்டி
என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால்
பின்னரும் வைத்து மீண்டு ஏதோ என பேதுற்றேனால்

மேல்
$3.8.19

#2786
சிந்தையின் ஐயம் தோன்றி தெளிவு இலாது எம்மான்-பாலின்
வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண்
எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும்
சந்ததி என்ன கூவி அன்பொடு சாற்றுவானால்

மேல்
$3.8.20

#2787
சொல்லிய கனக செப்பில் சுடர் மணி தொகுதியேனும்
எல்லையில் நிதியமேனும் இழை பலவேனும் யாதும்
ஒல்லை நீ அறியாவண்ணம் ஒளித்தது என்று எள்ளல் வேண்டாம்
மல்லல் அம் புவியில் செய்த தவத்தினால் வந்த மைந்த

மேல்
$3.8.21

#2788
மாயமும் கபடும் பொய்யும் மறை என திரட்டி முன் நாள்
ஆய தேவதத்தின் மார்க்கத்து அறத்தினை வழுக்கி பேசும்
தீயவன் ஒருவன் தோன்றி தீன் எனும் மதம் உண்டாக
காய் கதிரவனை போல் பிற்காலத்தில் வருவன் என்றே

மேல்
$3.8.22

#2789
அன்னவன் நெறியால் மாந்தர் கடு பகை பெரிது உண்டாகும்
என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு
பன்னி நிச்சயித்து பேரும் புள்ளியும் பரிவில் தீட்டும்
பொன்னின் முத்திரை நீ தீண்டல் அன்று என புகழ்ந்து சொன்னான்

மேல்
$3.8.23

#2790
பண்டை முன் பெரியோர் தேர்ந்த பழ மொழி வழக்கம் யாவும்
கண்டு அறிந்திடுதல் நன்று என்று எண்ணிய கருத்தினானும்
மிண்டு தந்தையர் சொல் மாற்றல் என்பதோர் வெறுப்பினானும்
மண்டும் ஐயங்கள்-தம்மால் வைகினன் சிறிது நாளால்

மேல்
$3.8.24

#2791
இவ்வண்ணம் நிகழும் காலத்து எந்தை பேரீந்தின் ஊறும்
கவ்வையில் பெரிது மாந்தி கண் சிவந்து இதயம் வேறாய்
செவ்விதின் உணர்வு மாறி தெரிந்து உரை பகர்கிலாது
வெவ்விய சீற்றம் மீக்கொண்டு இருந்தனன் வெறியின் மன்னோ

மேல்
$3.8.25

#2792
வெறியினால் தந்தை வைகும் வேளையில் ஈன்றாள்-தானும்
அறிகிலா வண்ணம் புக்கி அறை திறந்து அரும் பொன் செப்பை
குறியொடும் எடுத்து வல்லே கொண்டு ஒரு புறத்தில் சார்ந்து
செறியும் முத்திரையை நீக்கி நோக்கினன் சிறப்ப மன்னோ

மேல்
$3.8.26

#2793
பத்தியின் தந்தை கூறும்படிக்கு ஒரு கடுதாசு அங்ஙன்
வைத்திருந்ததின் மேல் ஓர் பால் வரி ஒன்றில் கலிமா என்னும்
உத்தரம் பிறக்க தீட்டும் எழுத்தினை வாசித்து ஓர்ந்து
வித்தையும் வீடும் பெற்றோம் என இரு விழியில் கொண்டேன்

மேல்
$3.8.27

#2794
விரித்து அதை நோக்கும் போழ்தின் விறல் நபி முகம்மது என்ன
திருத்திய பெயரும் வீறும் சிறப்பும் மெய் புதுமை பேறும்
கருத்து உற தெளிய வாசித்தனன் கடுதாசின் கண்ணே
ஒருத்தரும் தெரியா வண்ணம் ஒளி ஒன்று பிறந்தது அன்றே

மேல்
$3.8.28

#2795
பதிவு பெற்றிருக்கும் தாரா கணத்து ஒளி பலவும் வெய்ய
கதிரவன் ஒளியும் சோதி கலை நிறைந்து உவாவில் தோன்றும்
மதியின் நல் ஒளிவும் தூண்டா வண் சுடர் ஒளிவும் தோன்றும்
புதிய பேரொளிவுக்கு ஏற்ப பொருத்தினும் பொருந்திடாதே

மேல்
$3.8.29

#2796
கண்களும் வழுக்கி கூசி காரண பயம் உள் ஊறி
பண் கெழும் கலிமா என்னும் பத்தி வேர் இதயத்து ஊன்றி
திண் கொளும் ஈமான் என்னும் செழும் பயிர் தழைத்து நீண்ட
மண் கொளா பெரும் பேராசை மனது உற படர்ந்தது அன்றே

மேல்
$3.8.30

#2797
தீன் எனும் பெரும் பேராசை மயக்கத்தால் சிந்தை நேர்ந்து
வானவர் பரவும் வண்மை முகம்மதே முகம்மதே என்று
ஆன நும் திரு நாமத்தை அடிக்கடி உரையாநின்றேன்
ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள்

மேல்
$3.8.31

#2798
மன பயம் பெருத்து வாடி மறுகு உறும் மனைக்கு ஓர் மாற்றம்-
தனை கொடுத்திலன் யான் என்ன சஞ்சலம் பெரிதும் முற்றி
இனத்துள் ஆடவரை கூவ என் பிழை விளைந்தது என்ன
குனித்த வில் தட கை வீரர் திடுக்கொடும் கூண்டு வந்தார்

மேல்
$3.8.32

#2799
ஏது எனும் அறியேன் இங்ஙன் இருந்தனன் புலம்பு கொண்டான்
மா தவமுடையீர் பித்தோ வஞ்சனை தொழிலோ சூழ்ந்த
தீது எவை குறிப்பு நோக்கி செப்பும் என்று இனைய கூறி
வாதையில் பதைத்து சோர்ந்து கண்ணில் நீர் வடித்து நின்றாள்

மேல்
$3.8.33

#2800
அன்னை ஆகுலத்தை நோக்கி அடுத்தவர் பலரும் ஏங்கி
என்னையும் நோக்கி தாதை-பாலில் கொண்டு ஏகுகின்றார்
முன்னனை மயக்கம் தீர்ந்து முகம் மலர்ந்து இருந்தான் கண்டான்
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான்

மேல்
$3.8.34

#2801
திடுக்கொடும் பதறி ஏங்கி செம் கையால் தழுவி வாய் விண்டு
அடிக்கடி ஐயனே என் ஐயனே என்ன கூவி
வடி கண்ணீர் பணித்து நிற்கும் மாதையும் நோக்கி சூழ்வீர்
இடுக்கண் ஏது என்ன கேட்ப யாது ஒன்றும் அறியேம் என்றார்

மேல்
$3.8.35

#2802
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று
உனக்கு உறும் வரவாறு என்னோடு உரை என உரைப்ப பின்னர்
கன கரும் கவிகை வள்ளல் நும் பெயர் கருத்துள் நாட்டி
மனை-கணின் இருந்தோர்க்கு எல்லாம் தெரிதர வகுக்கலுற்றேன்

மேல்
$3.8.36

#2803
தெறு கொலை பவங்கள் யாவும் சிதைத்து நற்கதியில் சேர்க்கும்
உறு பொருள் தந்தை தாயர் உயிர் எனும் மனைவி கேளிர்
பெறு மனைக்கு உரிய மக்கள் பெறுவதற்கு உரைத்து காட்டார்
இறுதியின் ஒழியா துன்பத்து எரி நரகிடையின் வீழ்வார்

மேல்
$3.8.37

#2804
அரிய பொன் மணி பூண் ஆடை ஆதியா மற்றும் உள்ள
பொருள் பல எனினும் யார்க்கும் வழங்குதல் பொதுமை அன்றோ
ஒரு திரு மொழியால் வாழும் உலகு என்றால் அதனை தோன்றாது
இருள்பட மறைத்தல் கல்லா புல்லர்க்கும் இழிவதாமால்

மேல்
$3.8.38

#2805
போதமும் தருமம் நேர்ந்த புந்தியும் புகழின் பேறும்
வேதமும் கலையும் ஞான விளக்கமும் மனுவின் நூலும்
காதலில் பயந்த மைந்தர் கருத்தினில் சிறப்ப செய்தல்
தாதையர் கடனே அன்றி கரப்பது தகைமைத்து அன்றே

மேல்
$3.8.39

#2806
என் உள தவிசின் வாழும் இறையவன் தூதை அன்னோர்
நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-
தன்னையும் நோக்கா வண்ணம் தடுத்தனை ஐயா வேறு
பன்னுவது என்-கொல் பன்னில் பழுது அன்றி பயனும் இன்றே

மேல்
$3.8.40

#2807
சேண்_உலகு இருந்து வாழச்செயும் நபி திருநாமத்தை
காணுதற்கு அரிதா வைத்த காரணம் அதனால் உள்ளம்
நாணி நின் வதனம் நோக்க நடுங்கினனன்றி வேறு
பூணுவது இலை என் ஐயா என்று இவை புகன்றிட்டேனால்

மேல்
$3.8.41

#2808
அறிவினால் உரைத்த சொல் என் ஐயற்கு வேம்பாய் கண்கள்
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு
உறும் மொழி உரைத்தானல்லன் உரவர்கள் நகைக்க மாறா
வெறி மருள் கொண்டார் என்ன சேய் எனும் வேட்கை தீர்ந்தான்

மேல்
$3.8.42

#2809
முகம்மது என்னும் சொல் நாவின் மொழிந்திடல் என்ன பேசி
அகம் முகம் கை கால் நோக்காது அலக்கழித்து அடித்து வீழ்த்தி
பகையரும் செவியில் கொள்ளா வசை மொழி பலவும் சாற்றி
சகி இலாது அடர்ந்து நின்றான் அனல் பொறி தவழும் கண்ணான்

மேல்
$3.8.43

#2810
தாக்குவன் வருவன் போவன் தட கைகள் இரண்டும் கொட்டி
மூக்கினில் சேர்ப்பன் வெள்ளை முறுவலின் இதழை துண்டம்
ஆக்கிட கறிப்பன் நின்-தன் ஆவியை கசக்கி வீணில்
போக்குவன் என்ன சீறி புழுங்குவன் அழுங்குவானே

மேல்
$3.8.44

#2811
உறுக்குவன் அசாவை நீட்டி ஓங்குவன் உடலை இன்னே
நொறுக்குவன் காண்டி என்ன நொடியினில் பல கால் மீசை
முறுக்குவன் அங்கை வாளான் மோதுவன் என்றே ஆடை
இறுக்குவன் கடுப்பன் கோபித்து எழுவன் மற்று இருப்பன் மன்னோ

மேல்
$3.8.45

#2812
அரும் தவம் இயற்றி பெற்று என் அகத்தினுள் இருத்தி மேனி
வருந்திடா வண்ணம் போற்றி வளர்த்தனன் தாதை மாற்றம்
பொருந்திடாது அழித்து மாய முகம்மதை புகழ்ந்தோன் பாரில்
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான்

மேல்
$3.8.46

#2813
ஒடித்து அவன் மாறுகை கொண்டு உதிரங்கள் ஒழுக வீசி
அடித்ததற்கு அடியேன் மேனி அசைந்தில கொடும் சொல் கூறி
கடுத்ததற்கு ஒல்கி நெஞ்சம் கலங்கில கருத்துள் ஆர
படித்தது கலிமா நாவில் பகர்ந்ததும் நாமம் ஐயா

மேல்
$3.8.47

#2814
பொற்புடன் உமது நாமம் புகல்வதே எற்கு வேலை
பல் பகல் தாதைக்கு என்னை பங்கமே படுத்த வேலை
அல் பகல் ஈன்றாள் கண்ணின் அருவி நீர் சொரிய வேலை
இல் புறத்து இருந்தோர் யாரும் இரங்கவே வேலை எந்தாய்

மேல்
$3.8.48

#2815
இனையன கண்டோர் கேட்டோர் எந்தையை நோக்கி மக்கள்
குனிதர கண்ணால் கையால் கோபித்து விடுதலன்றி
தினம் இது தொழிலோ நல்லோர் செவிக்கு இது தகுமோ நும்-தம்
மன வெகுளியையும் மாற்றி தண்டனை மறுத்திடு என்றார்

மேல்
$3.8.49

#2816
மரபினுக்கு உரியீர் நம்-தம் மார்க்க நல் நெறியை மாறி
குரு முகம்மது என்று ஈமான் கொண்டனன் அதனை இன்னே
தெரிதர தவுபா செய்தால் தீவினை மறுப்பேன் அல்லால்
எரிதர இவன்-தன் ஆவி ஏற்றுவன் விசும்பில் என்றான்

மேல்
$3.8.50

#2817
பண்டை நல் நெறியை மாறி நின்ற பாவிகளை செய்யா
தண்டனைப்படுத்தல் யார்க்கும் தகைமை என்று இதயத்து எண்ணி
விண்டவர்க்கு உரை கொடாமல் மேலவர் என்னை கூவி
கண்டிதத்தொடும் அன்போடும் சில மொழி கழறலுற்றார்

மேல்
$3.8.51

#2818
தந்தை முன்னவர்கள் கொண்ட நெறி முறை தவிர வேதம்
வந்தது என்று ஒருவன் மக்கா புரத்தினில் மாறு-அதாக
நிந்தனை பெற்றான் அன்னோன் பெயரினை நினைவில் கொண்டாய்
புந்தியது அன்று நும்-தம் குலத்துக்கும் புகழ்-அது அன்றே

மேல்
$3.8.52

#2819
மதிக்கு நல் அறம் உண்டாதல் மானிடராகி செம் பொன்
பதிக்கு உறும் கதி பேறு எய்தல் பாரினில் தந்தை என்போன்
விதித்த சொல் கடவாதன்றி வேறு மந்திரமும் உண்டோ
உதிக்கும் நின் உள்ளத்துள்ளும் பெயரினை ஒழித்தல் வேண்டும்

மேல்
$3.8.53

#2820
உறைந்த இ பதியுள்ளோர்க்கும் உறு மறை தெரிந்தபேர்க்கும்
திறந்து உரைத்திடுதல் தீது தாதை-தன் செவிக்கும் தீதாய்
பிறந்ததோர் மொழியை நீ ஓர் பொருள் என பிதற்றல் தேறா
நிறைந்திலா வயதுக்கு ஒத்த புந்தி நீ நினைத்தது என்றார்

மேல்
$3.8.54

#2821
அன்னை உள் துயரம் நீங்க ஐயர்-தன் வெகுளி மாற
துன்னிய கிளைஞர் நெஞ்சம் துன்புறாது அமைய நாளும்
என்னையும் காப்பர் போல எடுத்து அவர் கொடுத்த மாற்றம்-
தன்னை உள் உணர்ந்து யானும் சில மொழி சாற்றுவேனால்

மேல்
$3.8.55

#2822
மண்ணகத்து அடியும் தோன்றா மான்மத நறையும் மாறா
விண் முகில் கவிகை நீங்கா மெய் ஒளி இருளின் மாயா
நண்ணும் இ புதுமை எல்லாம் முகம்மது நபிக்கு அல்லாதே
எண்ணிலா மக்கள் யாக்கை எடுத்தவர் யார்க்கும் இன்றே

மேல்
$3.8.56

#2823
வாரணத்து அரசர்க்கு ஏற்ப வரும் அமாவாசை போதில்
பூரண மதியம் தோன்றி முகம்மதை புகழ்ந்து நும்-தம்
ஆரண கலிமா யானும் அறைந்தன் என்று உரைத்து போமால்
பாரினில் ஐயம் எய்தப்படுவது என் பகருவீரே

மேல்
$3.8.57

#2824
இறுதியில் புறுக்கான் வேதத்தின் வழி சுவன வாழ்வு
பெறுவர் என்று ஆதி வேதம் மூன்றினும் பேசித்து என்றால்
மறு மொழி ஓதுவேன் என்று யாவர் வாய் திறக்க வல்லார்
உறுதியை தவிர்தல் செய்தல் உலகினுக்கு இழிவதாமால்

மேல்
$3.8.58

#2825
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம்
போதனைக்கு அடங்கேன் ஆவி பொன்றினும் தாதைக்கு ஏற்ப
சூதரும் உடன்று செய்யா துன்பமே செய்ய சொல்-மின்
வேதமும் உணர்ந்து நீதி விளக்குதற்கு அமைந்து நின்றீர்

மேல்
$3.8.59

#2826
மறு இலா வேத நூலின் முகம்மதின் கலிமா ஓதி
பெறு கதி பெறுவதல்லால் பேசும் நும் மாற்றம்-தன்னால்
இறுதியில் நரகவாதி எனும் பெயரெடுப்பதின்று என்று
அறுதியின் மொழிந்து நின்றேன் ஆதி-தன் தூதின் மிக்கோய்

மேல்
$3.8.60

#2827
பன்னிய மொழிகள் கேட்டு யாவரும் நகைத்து பாவி
சொன்னவை அறியான் ஊழில் சூழ் விதி துன்பம் மாற்ற
மன்னவர் உளரோ என்ன வருமம் உற்று எனது தாதை-
தன் அகம் பொருந்த வேறு சூழ்ச்சியில் சாற்றுவாரால்

மேல்
$3.8.61

#2828
புது நறை கனி பால் தேன் நெய் நாள்-தொறும் பொசித்து தின்பது
அதி மதுரங்கள் யாவும் பசி இன்றி அயின்றதாலும்
கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும்
மதி_வலோய் பெரிது போற்றிவைத்து நீ வளர்க்கலாலும்

மேல்
$3.8.62

#2829
மீறிய செல்வம்-தன்னால் வெறி மதம் பெருத்து மேன்மேல்
ஊறிய நினைவு போக்கி உணர்வு அழிந்து ஒடுங்கா நின்று
மாறு கொண்டு இசையா மாற்றம் வைகலும் பிதற்றுகின்றான்
சீறுதல் தவிர்த்து இ கோட்டிக்கு ஏற்பவை செய்தல் வேண்டும்

மேல்
$3.8.63

#2830
கரிய கம்பளத்தை போர்த்து வீக்கிய கலைகள் நீத்து ஓர்
இருள் தரும் மனையில் ஆக்கி யாவரும் முகம்கொடாமல்
பொருதரும் உவர்நீரோடு கசந்த போசனமுமாக
ஒரு பிடி மூன்று நாளைக்கு ஒரு தரம் அளித்தல் வேண்டும்

மேல்
$3.8.64

#2831
இ தொழில் இயற்றுவீரேல் இடும்பு எனும் மதத்தால் வந்த
பித்தமும் பிதற்றும் நீங்கும் பிறிது ஒரு தீங்கும் வாராது
உத்தமம் இவை-கொல் என்ன உரைத்தவர் பலரும் போனார்
அத்தனும் மனத்துள் கொண்டான் அனையும் ஒத்திருந்தாள் அன்றே

மேல்
$3.8.65

#2832
அடுத்த நாள் ஓர் பாழ்வீட்டில் அடைத்து கம்பளத்தால் மூடி
எடுத்து உவர்நீரும் கைப்பின் இயைந்த போசனமுமாக
கொடுத்தனர் மூன்று நாளைக்கு ஒரு தரம் கொள்க என்ன
முடித்தனர் ஈன்றார் கேளிர் குழுவுடன் மொழிந்த ஆற்றால்

மேல்
$3.8.66

#2833
உய்த்திட மூன்று நாளைக்கு ஒரு தரம் இருளின் என்-பால்
வைத்திடும் உணவில் சற்றே தீண்டி வாய் பெய்தேன் நாவும்
பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின்
கைத்தது கூற கேட்டோர் செவியினும் கசக்கும்-மன்னோ

மேல்
$3.8.67

#2834
காசினியிடத்தின் அந்த கசப்பு அன்றி கசப்பும் இல்லை
ஓசை மா கடல் நீர் வைத்த உப்புநீர்க்கு உவமை என்ன
ஆசு இல் நல் பசி மீக்கொண்டும் அருந்திட பொருந்திடாமல்
மாசு உறும் இருளில் தன்னந்தனியொடும் வருந்தினேனால்

மேல்
$3.8.68

#2835
இருள் அடை மனையின் முன்னர் இருந்த பாளிதத்தை ஏந்தி
பரிவின் நல் அமுதமாக தருக என பணிந்து நீங்கா
வரிசை நம் நபியே நும் பேர் பற்பல் கால் வழுத்தி வாழ்த்தி
அரிதினில் கலிமா ஓதி அங்கையால் அருந்தினேனால்

மேல்
$3.8.69

#2836
வானகத்து அமுதம் என்-பால் வந்ததோ மதுரம் ஊறி
தேனினும் இனிதாய் வாசம் திகழ்ந்தன உவர் நீர் ஆலை
பானமும் பொருவா வண்ணம் உருசிக்கும்படிக்கும் வாய்ந்த
தானமும் உண்ண உண்ண பொலிந்தன தமியற்கு அன்றே

மேல்
$3.8.70

#2837
ஒரு பிடி அமுதம் உட்கொண்டு உவர் இழி நீரும் வாயால்
பருகிடின் நிரப்பமாகி பத்து நாள் பசித்திடாது
பிரிவில் இ வண்ணம் சின்னாள் உண்டு மெய் பெரிது பூரித்து
அருளொடும் இருந்தேன் தாதை விடும் சிறை அறையில் அன்றே

மேல்
$3.8.71

#2838
திருந்திலா மத பித்து இன்னம் தீர்ந்ததோ இலையோ என்ன
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர்
வருந்திலாது உரைப்ப தாதை முன்னின் மும்மடங்காய் யார்க்கும்
அருந்திடா கசப்பும் உப்பும் அளித்தனன் மேலும் அன்றே

மேல்
$3.8.72

#2839
கொடிது எனும் உப்பும் கைப்பும் குவலயத்தினில் இல்லாத
வடி நறா அமுதமாக இனிது உண்டு வரும் அ நாளில்
அடிகள் நா மதீனா மூதூர்க்கு எழுந்தருளுவதா மாற்றம்
சடுதியின் எந்தை கேட்டு சாலையின் வந்து புக்கான்

மேல்
$3.8.73

#2840
காலினில் விலங்கும் சேந்த கையினில் தளையும் பூட்டி
சாலையை விடுத்து காலி தொறுவர் கை சாட்டி நும்-தம்
பாலினில் கொடுபோய் ஏற்ற வேலை உட்படுத்தும் என்ன
கோலிய வெகுளியோடும் கொடுத்தனன் என்னை அன்றே

மேல்
$3.8.74

#2841
இட்ட கால் தளையினோடும் எண்பதின் காவதத்தின்
மட்டு எனை கொடுபோய் காலி தொழுவின் ஓர் மருங்கில் சேர்த்து
விட்டிடா வண்ணம் மாறா வேலைகள் பலவும் சாட்டி
கட்டளையாக வைத்தார் பசு தொழு காவலோரே

மேல்
$3.8.75

#2842
கரத்தினில் தாளில் பூட்டும் தளை விடுத்திலர் கண் ஆர
வருத்தம் ஈது என்று நோக்கார் வயிறளவு உணவும் ஈயார்
பொருந்திடா தொழில்கள் எல்லாம் பூட்டுவர் தாதை என்-பால்
இருத்திய வெகுளி மாறா கொடுமைக்கு எண் மடங்கு செய்தார்

மேல்
$3.8.76

#2843
தொல்லை முன் விதியால் தோன்றும் துன்பங்கள் விடுத்து நீங்கும்
எல்லை-அது அன்றி நீங்காது என்பதை மனத்தில் எண்ணி
முல்லை அம் பாடியோர்க்கு முறைமுறை தொழும்பனாகி
அல்லலுற்று உறைந்தேன் பல் நாள் அருள் அடைகிடக்கும் கண்ணாய்

மேல்
$3.8.77

#2844
அடிமையின் தொழில் செய்து அங்ஙன் இருந்தனன் அருக்கன் ஓடி
குட திசை புக திகாந்த குல வரை தொடுத்து விண்ணும்
படியும் தோன்றாத வண்ணம் விடம் பரந்து என்ன மூடி
இடியொடும் மழையும் மின்னும் தோன்றிட இருண்ட மேகம்

மேல்
$3.8.78

#2845
அந்த வல் இருளின்-கண்ணே ஐய நும் திருநாமத்தை
புந்தியில் நினைத்து காண்பது என்று என பொருமி வாடி
நொந்திருந்து அழுதேன் பூட்டும் தளை எல்லாம் நுறுங்கி நூறாய்
சிந்தின மனத்தில் கூண்ட துன்பமும் சிதறிற்று அன்றே

மேல்
$3.8.79

#2846
என் இரு விழியினுள் ஆர்ந்திருந்த நல் மணியே தேற்றத்து
உன்னி நும் திசையை நாடி நடப்பம் என்று உள்ளத்து எண்ணி
பன்னிய புவியின் எட்டி பத்து அடி நடந்தேன் இப்பால்
மன்னவன் எனும் அம்மாறு தலைக்கடை வாயில் வந்தேன்

மேல்
$3.8.80

#2847
மா தவன் எனும் அம்மாறு மதி முகம் கண்டேன் நாளும்
காதலித்திருந்த நெஞ்சும் கண்களும் களிப்ப நும்-தம்
பாத பங்கயத்தை கண்டேன் பருவரல் தவிர கண்டேன்
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான்

மேல்
$3.8.81

#2848
செவ்வியன் கபுகாபு என்னும் செம்மல் சொல் அனைத்தும் கேட்டு
நவ்வி முன் நவின்ற தூதும் நகை முகம் மலர வான்மட்டு
எவ்விடத்தினும் குலாவும் இரும் சிறை ஒடுக்கி நீண்ட
குவ்விடத்து இனிதின் வந்தார் ஜிபுறயீல் என்னும் கொண்டல்

மேல்
$3.8.82

#2849
ஒல்லையின் இழிந்து அனாதி ஓதிய சலாமும் கூறி
செல் உலாம் கவிகை வள்ளல் சீத செம் முகத்தை நோக்கி
அல்லல் இல் கபுகாபு என்னும் அன்பருக்கு உற்ற பேறை
மல்லல் அம் புவனம் போற்றும் வானவர்க்கு அரசர் சொல்வார்

மேல்
$3.8.83

#2850
உலகிடத்தினில் அய்யூப் என்று ஓதிய நபியும் எண்ணெண்
கலை தெரி கபுகாபு என்னும் காளையும் சமானமாக
நிலைபெற அமைத்தேன் என்ன இறையவன் நிகழ்த்தினான் என்று
இலகிய வள்ளற்கு ஓதி ஜிபுறயீல் ஏகினாரால்

மேல்
$3.8.84

#2851
விண்ணவர்க்கு அரசர் கூறும் மெய் மொழி எவர்க்கும் கூறி
கண் எனும் கபுகாபு என்னும் காளையை தழுவி போற்றி
நண்ணி முன் கொணர்ந்து விட்ட நாயகர்-தமையும் வாழ்த்தி
மண்ணினுக்கு அழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந்து இருந்தார்

மேல்

9 விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம்

$3.9.1

#2852
மதி முகம்மது தாய் ஆமினாக்கு உரிய மாதுலர் பனீநச்சாறுகளின்
முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும்
புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார்

மேல்
$3.9.2

#2853
மல் புய வரிசை முகம்மது நயினார் வாழும் மாளிகை நிலம் விலையா
நிற்சயித்திடலே கருமம் என்று உரைப்ப யாவரும் விலை நிசப்படுத்தி
வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர்
அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால்

மேல்
$3.9.3

#2854
தங்கம் ஓர் ஈரைந்து அளித்து அபூபக்கர் வாங்கிய தலத்தினை இனிதின்
கொங்கு இருந்து உலவும் முகம்மது நபிக்கு கொடுத்தனர் அ நிலத்து இடத்தின்
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல்

மேல்
$3.9.4

#2855
செழும் மறை குரிசில் இருக்கும் அ நாளில் திறல் அபூ அய்யூபை விளித்து
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின்
எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும்
மழை என தரும் செம் கரத்தினில் வாங்கிவைத்து ஒரு மொழி பகர்ந்திடுவார்

மேல்
$3.9.5

#2856
இ பெரும் பதியின் தலைவரில் சிறந்த இயல் மறை பெரியவர் தெரிந்து
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி
ஒப்ப அரும் திறனும் தலைமையும் சிறந்தோர் உவர் இவர் அவர் என ஓடி
செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன்

மேல்
$3.9.6

#2857
மரு மலர் புயத்தார் அழைத்து முன் விடுத்த மன்னரை உபசரித்து இருத்தி
இருவருக்கு இருந்த உணவினை அளித்து யாவரும் அயின்றிடும் என்ன
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று
அரிய செம் கரத்தால் திரு வயிறார அனைவரும் அமுதுசெய்தனரால்

மேல்
$3.9.7

#2858
உண்டு இருவருக்கு இ அமுது என இருந்தோம் ஊரவர் முப்பது பெயரும்
கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார்
கண்டிடா புதுமை புதுமை ஈது என்ன யாவரும் ஒருப்பட கலிமா
விண்டனர் ஈமான் கொண்டு அசுகாபிமார்களாய் வீடு பெற்றனரால்

மேல்
$3.9.8

#2859
முன்னரின் அமுது குறைந்தில வளர்ந்த முப்பது பெயரினுக்கு இரட்டி
மன்னரை இனம் கொண்டு இவண் வருக என்ன வழங்கலும் மன்னவர் எழுந்து
சொன்ன அப்படியே அழைத்து முன் விடுத்தார் தோன்றலும் மகிழ்வுடன் இருத்தி
அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார்

மேல்
$3.9.9

#2860
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை
பூண்டது மதுரம் விடுத்தில என உண்டு உதரங்கள் பொருமினர் சிலர் மேல்
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால்
கூண்டவர் எவரும் பொசித்திட முனம் போல் இருந்தது குறைந்தில அமுதம்

மேல்
$3.9.10

#2861
சிறிய பாத்திரத்தின் இருந்த போனகம் நும் திரு கையால் தீண்டிட பெருகி
அறுபது பேரும் பொசித்தனம் இன்னும் அளவினில் குறைந்தில புதுமை
பெறுவது இங்கு இனிமேல் யாது உள உமது பெயர் கலிமா அலால் உலகில்
உறு பொருள் இலை என்று அனைவரும் ஈமான் கொண்டனர் உளத்து உவகையினால்

மேல்
$3.9.11

#2862
மறுத்தும் அ அபூ அய்யூப் என ஓதும் மன்னரை முகம்மது விளித்து
நிறைத்த மூரலினுக்கு இனம் பதி புகுந்து நீள் மறுகிடம்-தொறும் குறுகி
குறித்ததில் தொண்ணூறு இயல் மறையவரை கூட்டி இங்கு உறைக என கூற
வெறுத்திடாது ஏகி உரைத்த சொற்படியே வேந்தரை கொணர்ந்து முன் விடுத்தார்

மேல்
$3.9.12

#2863
வந்த மன்னவர்கள் அனைவர்க்கும் இனிய வாசகம் கொடுத்து அருகு இருத்தி
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன
பந்தியில் படுத்தி அமலையை எடுத்து பதும மென் கரத்தினால் திருந்த
கொந்து அலர் மரவ தொடை புய குரிசில் ஈந்தனர் குறைவு அற அன்றே

மேல்
$3.9.13

#2864
ஈய்ந்தனர் எவரும் பொசித்தனர் அமுதும் இருந்தது குறைந்தில அதனால்
ஆய்ந்த கேள்வியர்கள் காட்சியில் பெரிய அதிசயம் என சிரம் அசைத்து
வாய்ந்த பேரொளியும் மான்மத நறையும் மாறு இலாது இருந்து மண்ணகத்தில்
தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால்

மேல்
$3.9.14

#2865
பத மலர்-அதனில் கண் மலர் பரப்பி களிப்பொடும் பற்பல் கால் போற்றி
இதம் உறும் கலிமா எடுத்து இனிது ஓதி இதயத்தின் இடும் திரவியம் போல்
புதியதோர் ஈமான் எனும் நிலை நிறுத்தி பொருவு இலா குறான் வழி பொருந்தி
அதிசயம் பிறப்ப முகம்மது-தமக்கு அன்சாரிகள் எனும் பெயர் ஆனார்

மேல்
$3.9.15

#2866
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண்
இருவருக்கு இருந்த அமுதினால் ஒரு நூற்றெண்பது பெயர்க்கு இனிது அருத்தி
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து
பரிவு பெற்று இருந்தார் அவர் திரு மனையில் பார்த்திவர் எனும் இறசூலே

மேல்

10 உகுபான் படலம்

$3.10.1

#2867
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின்
நிலை பெறும் மனையும் பள்ளியும் வனைந்தது எனும் மொழி தொழிலவர் நிகழ்த்த
விலையுறும் பெயரில் சைதையும் அபாறாபிகையும் நண்புடன் விரைந்து அழைத்தே
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே

மேல்
$3.10.2

#2868
மக்க மா நகர் விட்டு உடன் வரும் பேரின் மனையுடன் அடைந்தவரல்லார்
ஒக்கலின் மனைவியுடன் வரா பெயர்கள் உயர் தரும் பள்ளியின் அடுப்ப
பக்கலில் நிரைத்து பந்தர்கள் வனைந்து இங்கு இரு-மின்கள் என நபி பகர
மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார்

மேல்
$3.10.3

#2869
ஆய்_இழை சௌதா அபூபக்கர் மனைவி-தன்னொடும் ஆயிசா அலியின்
தாய் எனும் வரிசை பாத்திமா நயினார் தரும் புதல்வியர்கள் நால்வரையும்
சேயினும் இனிய அடிமைகள் இருவர் திருந்தலர் நோக்கிலா வண்ணம்
நாயக பதி என்று ஓதிய மதீனா நகரினில் அழைத்து வந்தனரால்

மேல்
$3.10.4

#2870
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும்
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு
குலவு மாளிகைகள் ஒன்றுக்கு ஆயிரமாய் கொடுத்தனன் என நபி உரைத்தார்

மேல்
$3.10.5

#2871
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார்
இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார்
அன்ன மென் நடையின் ஆயிசா எனும் மான் அபூபக்கர் அகத்தினில் இருந்தார்

மேல்
$3.10.6

#2872
இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால்
வருந்த மெய் நடந்த அவதியினாலும் மதீனத்தின் நசல் பெரிதாலும்
பொருந்திலா சல வேற்றுமை-அதினாலும் புரவலர் வனிதையர் சிறுவர்
சுரம் தனி பிடிப்ப உடல் உலைந்து ஒடுங்கி சோர்வுற துன்பமுற்றனரால்

மேல்
$3.10.7

#2873
அடைந்தவர் எவரும் சுரத்தினால் அற நொந்து அவதியுற்றனர் என நபி உள்
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க
தொடர்ந்திடும் சுரங்கள் யாவர்க்கும் தீர்ந்து துன்பம் அற்று இருந்தனர் சுகமே
நடந்த நாள் தொடுத்து வளம் பெறும் மதீனா நகரினில் சுரம் என்பது இலையே

மேல்
$3.10.8

#2874
மக்க மா நகர முஹாஜிரீன்களுக்கும் மதீனத்து அன்சாரிகள்-தமக்கும்
ஒக்கலின் பிரியாத அனந்தரத்தவரும் உவந்த சம்பந்தருமாக
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும்
புக்கிய உயிரும் போல் பிரியாது அங்கு அவர்களும் பொருந்தி அங்கு இருந்தார்

மேல்
$3.10.9

#2875
மதின மன்னவரும் மக்க மா நகர மன்னரும் நால்வரும் அடுத்த
பதியின் மன்னவரும் உடன் உறைந்து இருப்ப அவையினில் பண்புற நோக்கி
இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய்
நுதி தரும் வேலீர் ஆசு உறா நோன்பு நோற்பதை நோக்குவீர் எனவும்

மேல்
$3.10.10

#2876
இற்றை நாள் தொடுத்து ஐந்து ஒகுத்தினும் வாங்கு என்று இயற்றிய திருமொழி சிதையாது
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார்
கற்ற வல்லோர்கள் யாவரும் விரும்பி கருத்து உறும்படி முடித்து உவந்து ஆர்
வெற்றியும் புகழும் தழைத்து இனிது ஓங்கி வீறுபெற்று இருக்கும் அ நாளில்

மேல்
$3.10.11

#2877
முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை
விரி பரப்பு உடுத்த மதீன மா நகரின் கொறி உடை தொறுவரில் வியந்தோன்
உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன்
திரள் ஒரு சிதகா முளரியின் அடைந்து காப்பொடும் கொடு நிதம் திரிவான்

மேல்
$3.10.12

#2878
கொறி நிரை திரட்டி நெடு வனம் புகுந்து ஓர் குவட்டு அடி மருங்கினில் பசும் புல்
செறிதரும் இடத்தில் விடுத்து ஒரு தருவின் நீழலில் தனி சிறந்து இருப்ப
நிறைதரு நீத்தம் பரந்து என பொறையும் அடவியும் நிழல் செறி பொதும்பும்
மறைதரு திடரும் அருவி நீரிடமும் மலிதர பரந்து மேய்ந்தனவால்

மேல்
$3.10.13

#2879
காத்திர கோலும் நீள் கடைகாலும் தரித்திடும் சுரத்தினில் சிரத்தை
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண்
கூர்த்த வள் உகிர் கால் நீண்ட வால் வரி ஆர் கொடிப்புலி கொடிய வெம் பசியால்
போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால்

மேல்
$3.10.14

#2880
காய்ந்த வெம் பசியால் விரைவுடன் நடந்து ஓர் கல் அடி இடத்தினில் ஒதுங்கி
வாய்ந்த கால் மடக்கி பயப்பய பதுங்கி வல் உடல் சுருக்கி வால் நிமிர்த்து
பாய்ந்து ஒரு கொறியை பிடித்தது கானின் பரப்பு எலாம் திசைதிசை வெருண்டு
சாய்ந்தன சிறு வால் பேருடல் கவை கால் துருவைகள் தலைமயங்கிடவே

மேல்
$3.10.15

#2881
தீ என மிளிர் கண் கொடிப்புலி பேழ் வாய் சிக்கிய துருவையின் பல கால்
வாய் எனும் தொனி கேட்டு அரும் துயில் இழந்து மனம் திடுக்கொடும் எழுந்து உகுபான்
வீய்வுறும் கொறியின் தொனி இது என்று ஏங்கி விரைவொடும் ஒரு திடர் ஏறி
போய் இருநான்கு திசையினும் நோக்கி கொறி இனம் பொருந்தல் காண்கிலனால்

மேல்
$3.10.16

#2882
சிதறின கூண்டு நின்றில இரண்டு செவிகளும் அடைப்ப இ திசையில்
கதறியது என நின்று ஓடினன் அவணில் காண்டன் கொறியோடும் புலியை
பதறினன் சினை ஆடு என்பதின் இரங்கி படர்ந்தனன் வெகுண்டனன் படு முள்
உதறினன் தொறுவர் கூவினன் சிறு தூறு ஒடிபட ஓடினன் தொடர்ந்தே

மேல்
$3.10.17

#2883
எடுத்தனன் பெரும் கல் விண்ணென துரத்தி எறிந்தனன் ஆர்த்தனன் கோலால்
புடைத்தனன் கொறியை கைவசப்படுத்தி புலியினை ஒருபுறம் போக்கி
விடுத்தனன் பரலால் மெலமெல நடந்து ஓர் விரி மலர் சினை தரு நிழலில்
அடுத்தனன் இருந்தான் கானினில் தொடர்ந்த அரும் தவிப்பு ஆறுதற்கு அன்றே

மேல்
$3.10.18

#2884
மையினை விடுத்த கொடிப்புலி அடுத்த வரைப்புறத்து உச்சியின் ஏறி
கையினில் தரித்த கோலொடும் இருந்த தொறுவனை கடிதினில் நோக்கி
வெய்யவா இறையோன் இன்று எனக்கு அளித்த பொசிப்பினை விரும்பினால் வேறு
செய்யவும் நினக்கு தகுவதோ என்ன தெளிவுடன் உரைத்துநின்றதுவே

மேல்
$3.10.19

#2885
மலிதரும் மொழி கேட்டு எண் திசையிடத்தும் மாசு அற நோக்கினன் பொருவாது
ஒலி செவிக்கு அறிவாய் புகுந்தது மாந்தர் ஒருவரும் இவண் இலை ஈது ஓர்
கலி என திகைக்கும் போதினில் யானே கழறினன் என மறுத்து உரைப்ப
புலி பகர்ந்திடுதல் அற பெரும் புதுமை புதுமை என்று அகத்து அதிசயித்தான்

மேல்
$3.10.20

#2886
எண் திசையிடத்தும் தொறுவரை கூவி யாவரும் இவணிடம் புகு-மின்
கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்து
கொண்டு ஒரு புலி என் எதிரினில் அறிவாய் கூறிய மொழி செகதலத்தும்
விண்தலம்-தனினும் காண்ப அரிது என்ன விரைவொடும் உரைத்துநின்றனனால்

மேல்
$3.10.21

#2887
ஆயர்கள் அறிய விலங்கு இனம் உரைத்தது அதிசயம் அதிசயம் என்ன
கூய பேருவகை பொதுவனை நோக்கி கொடிப்புலி மறுத்தும் வாய் திறந்து
மா இரும் புவியின் யான் எடுத்துரைத்த மாற்றமே புதுமை என்று உரைத்தாய்
தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும்

மேல்
$3.10.22

#2888
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார்
புக்கினர் அவர் சொல் உண்மை என்று ஈமான் கொண்டு உளம் பொருந்தி தீன் நிலையை
கைக்கொளாதிருத்தல் புதுமையேயன்றி கானிடை விலங்கு இனம் மொழிவது
இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற

மேல்
$3.10.23

#2889
புடவியில் மாந்தர் என சடமெடுத்தோர் ஏவலும் விலகலும் பொருந்தல்
கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில்
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு
நடைதர நடந்து ஈமான் நெறி தோன்ற நபிகள் நாயகமிடத்து அடைந்தான்

மேல்
$3.10.24

#2890
விலங்கி இனம் காத்து விலங்கினும் விலங்காய் திரிந்தனன் மெய் மறை முதியோர்
குலங்களும் அறியேன் இன்று நும்பொருட்டால் கொடிப்புலி கானகத்து உரைத்த
நலம் கெழும் அறிவால் குபிரினை அகற்றி நல் நெறி தீனினை பிடித்து
பலன்களும் படைத்து ஈமான் நிலை நின்றேன் என மலர் பதம் பணிந்தனனால்

மேல்
$3.10.25

#2891
விண்டகத்து உரைத்த கொடிப்புலி குருவாய் மேலவன் விதி மறை ஈமான்
கொண்டனன் உகுபான் என பலர் குழுமி புகழ்ந்திட கொண்டலை போற்றி
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து
தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர்-தம் சேரியில் புக்கான்

மேல்

11 சல்மான் பாரிசுப் படலம்

$3.11.1

#2892
பூண்ட நல் கலம் போல் காரண வரைகள் புடை உடுத்திருந்த மக்காவில்
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர்
ஆண்டு சென்றதன் பின் அகுமது மறையோர் அணிதர இருக்கும் அ நாளில்
காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான்

மேல்
$3.11.2

#2893
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி
சிந்தையில் கனிவும் வணக்கமும் ஒழுக்க செய்கையும் பொறுமையும் தரித்தான்
இந்த நற்குணத்தோன் யாவன் என்று அறிய வேண்டும் என்று இதயத்தின் அமைத்து
சுந்தர புயத்தோய் நின் வரவு எனக்கு சொல்லுக என நபி உரைத்தார்

மேல்
$3.11.3

#2894
உரை எனும் மொழி கேட்டு உம்பரின் முதியோய் உலகினுக்கு ஒரு தனி அரசே
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே
பெருகிய குலமும் பெயரும் என் பதியும் பேரறிவாளரில் பழகி
வரும் உள கருத்தும் கேண்-மின் என்று ஒதுங்கி வாய் புதைத்து உரைக்கலுற்றனனால்

மேல்
$3.11.4

#2895
வேரி அம் கனி தேன் பொழிதர ஓடி விடு நெடு மதகினில் வழிய
வாரிச கழனி வரி வரால் அருந்தி மேதினியின் மடு நடு குடையும்
பாரிசு என்று உரைக்கும் வளமை நாடு உடுத்த புரிசை சூழ் பதியினில் பிறந்தோன்
நேர் இசைந்து ஈன்றார் இருவரும் சல்மான் என இடும் பெயரினன் சிறியேன்

மேல்
$3.11.5

#2896
அ பெரும் பதியில் வளர்ந்தனன் சில நாள் ஆதியின் ஊழ்வினை பயனால்
இ பெரும் பதியோர்க்கு அடிமையன் ஆனேன் இப்பொழுது இதற்கு முன் நயம் கூர்
செப்ப அரு நூல்கள் பலபல உணர்ந்தும் செவி வழி ஒழுகிட பெரியோர்
ஒப்ப அரும் மறை நூல் உரைத்தவை கேட்டும் உளத்து அறிவொடும் இருந்தனனால்

மேல்
$3.11.6

#2897
தெரிதரு மறைகள் மூன்றினும் பெரியோர் செய்யுளில் கணித நூலிடத்தும்
அருளினில் உருவாய் தோன்றியே ஆதத்து ஐம்பதின் தலைமுறை பின்னர்
நரர்களின் ஒளிவின் உரு அமைந்து ஆதி நபி அவதாரம் என்று எடுத்து
வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும்

மேல்
$3.11.7

#2898
அ நெறி மறையின் முறை வழி ஒழுகி நின்றவர் அரம்பையர் சேர்ந்து
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில்
பல் நெடும் காலம் அழுந்துவர் எனவும் தெரிந்தனன் பரவை சூழ் புவியின்
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன்

மேல்
$3.11.8

#2899
நால் கடல் பரப்பின் எண் திசை புறத்தின் தேயங்கள்-தொறுந்தொறும் நடந்து
நூல் கடல் கரைகண்டவர்கள்-பால் அடுத்து கேட்டலும் நூதன நபியாய்
மார்க்கமும் கொண்டு இ அறபினில் வருவர் என்று உரைத்தனர் அவர் வகுத்த
தால் கலை வல்லோய் காட்சியின் அரிய இ திசை புகுந்தனன் அடியேன்

மேல்
$3.11.9

#2900
அறபு எனும் தலத்தில் ஞான_வாருதிகளாம் என திசை-தொறும் துதிப்ப
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார்
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து
நறை கமழ் புயத்தோய் நும் வழிப்படுதற்கு இருந்தனர் பெரியர்கள் நால்வர்

மேல்
$3.11.10

#2901
மூதுரைக்கு உரிய சைதும் நல் நிலையின் முதியரில் ஒறக்கத் என்பவரும்
வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும்
பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால்
தீது இலாது இதயம் களிப்புற தேடி போயினர் பலபல திசையில்

மேல்
$3.11.11

#2902
திறல் உடை சைதும் ஷாமிராச்சியத்தில் சென்று அரும் கணிதரை கேட்ப
நறை விரி அலங்கல் புயத்து இபுறாகீம் நல் நபி நடத்திய மார்க்க
முறை வழி முகம்மது எனும் நபி அறபின் வருகுவர் என அவர் மொழிய
உறுதியின் திரும்பி வரும் நடுவழியின் இறந்தனர் முறைமையின் உரவோய்

மேல்
$3.11.12

#2903
ஒறக்கத் என்பவரும் திசை-தொறும் திரிந்து மக்க மா நகரினில் உறைந்து
துறக்கமும் புகழும் சுரி குழல் கதீஜா என்னும் அ தோகைக்கு நிதமும்
சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய்
நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய்

மேல்
$3.11.13

#2904
மிகும் மதி உதுமான் என்பவர் உறூமி பதியினில் மேவி நல் அறிவின்
பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும்
முகம்மது நபியாய் வருவர் அங்கு அவர்-தம் மார்க்கமே மார்க்கம் என்று ஓதி
இகல் அறும் அ நாட்டு அரசனுக்கு உவந்த இயல் மறை பெரியராய் இருந்தார்

மேல்
$3.11.14

#2905
பெருக்கும் நல் அறிவின் உபைதுல்லா என்னும் பெயரினர் காண்டலின் பொருட்டால்
தருக்கொடும் தெளிந்தும் எண்ணிறந்தனைய சாத்திரம் கற்று வல்லவராய்
இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி
திரை கடல் புடவி திசையினில் பதிகள்-தொறுந்தொறும் இனம் திரிகின்றார்

மேல்
$3.11.15

#2906
இவ்வணம் திரிந்து தேடின பெரியோர் எண்ணிலர் இஃது எலாம் அறிந்தும்
மை வண்ண கவிகை முகம்மது மதீனா நகரினில் வருகுவர் என்ன
செவ்வியர் பல கால் உரைத்தலும் தேறி திரு மறை முழக்கும் ஆவணத்தின்
கவ்வையும் ஒடுங்கா மதீன மா நகரில் காத்திருந்தனன் சில நாளால்

மேல்
$3.11.16

#2907
சுரி முக குட வளை குலம் சூல் உளைந்து ஈன்ற
தரள வெண் துளி திரை எறி தடம் திகழ் ஷாமின்
வரும் எகூதிகள் தலைவரில் இபுனு கை பான் என்று
உரைதரும் பெயரினர் மறை யாவையும் உணர்ந்தோர்

மேல்
$3.11.17

#2908
உததி சூழ்தரு பாரிடை திசை-தொறும் உலவி
பதிகள்-தோறினும் திரிந்து நம் பழ மறைக்கு உரித்தாய்
மதின மா நகரிடை முகம்மது வருகுவர் என்று
இதமித்து அன்புறும் கருத்தொடும் இவணில் வந்தடைந்தார்

மேல்
$3.11.18

#2909
ஆதி_நாயகன் திரு நபி வருவது இங்கு அணித்து என்று
ஓதி மாசு அற பனீகுறைலாவிடத்து உறைந்து
நீதி நல் நெறி விலகுதல் பவ நெறி நிகழ்த்தி
போத நேர்தர காத்திருந்தனர் சில போழ்தால்

மேல்
$3.11.19

#2910
இங்கு இவர்க்கு உறும் அறிவினில் தலைவர்கள் இலை என்று
அங்கை நீட்டி நல் பதம் பணிந்து அவர்கள் ஆசரிப்ப
பங்கமற்றவன் விதி வழி இவர் உயிர் பருக
பொங்கி வந்தது ஆயாசம் என்று ஒரு பெரும் புலியே

மேல்
$3.11.20

#2911
வீரம் மிக்கு உயர் பனீகுறைலா எனும் வேந்தர்
யாரையும் விளித்து இயல் நபி ஒல்லையின் இவணில்
கார் நிழற்றிட வருவர் செய் வினை பவம் களைந்து
சாரு நல் பெயரும் பதவி பெற்றிடுவிர்கள் தாழ்ந்தே

மேல்
$3.11.21

#2912
முற்ற நாள் இவண் இருந்து இயல் முகம்மதை காண
பெற்றிலேன் வருத்தமும் பெருத்தன இனி வீந்தால்
உற்று நீவிர்கள் என் சலாம் உரை-மின் என்று ஓதி
வெற்றி மன்னவர் சூழ்தர இறந்தனர் மேலோய்

மேல்
$3.11.22

#2913
கவின் படைத்த நல் இபுனுகைபான் உமை காண
இவண் அடைந்து காத்திருந்தனர் எனும் இயல் வலியால்
புவியின் மற்று ஒரு தேசத்தில் புகுந்திடா வண்ணம்
சவி கொள் மெய்யவர் வருவர் இங்கு என இருந்தனனால்

மேல்
$3.11.23

#2914
தெருளும் மாந்தர்கள் சூழ்தர மதீனத்தில் செறிந்த
இருள் அறும்படி வந்தனர் எனும் மொழி கேட்டு
மருளும் சிந்தையில் களிப்புற உவகையின் மகிழ்ந்து
திரு மலர் பதம் காணுதற்கு எழுந்தனன் சிறியேன்

மேல்
$3.11.24

#2915
வள்ளல் என்று உதவிய நபி முகம்மதுக்கு ஈமான்
கொள்ளுதற்கு இசைந்தனன் இவன் என குறிப்பு அறிந்து
விள்ளல் அன்றி முன் எனை விலைகொளுமவர் வெகுண்டு
தள்ளுதற்கு இடம் அற மற மனத்தொடும் தடுத்தார்

மேல்
$3.11.25

#2916
தடுத்து தீங்கு இயற்றியதை உள்ளகத்தினில் தரித்து
படுத்தும் பாடு அறிகுவம் என அவர் கண் முன் பரிவின்
விடுத்து உரைத்திலன் நும் பெரும் தீன் நிலை விருப்பால்
வடித்த நல் மறை வகுத்து இசுலாமினை வளர்த்தீர்

மேல்
$3.11.26

#2917
புதிய மார்க்கம் என்று எடுத்தவன் இடத்தினை பொருந்தி
மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம்
பதியினில் சிறைப்படுத்தலே கருத்து என பரிவில்
சிதைவு இலாது எனை காவலின் அகத்திடை சேர்த்தார்

மேல்
$3.11.27

#2918
புறத்தினில் புகுதாது அடைத்து அருந்திடும் பொசிப்பை
குறைத்து வைகலும் இதம் அற பேசியும் கொடிதாய்
செறுத்தும் தீவினை செய துணிந்தவர்களேயன்றி
மறுத்தும் வேண்டும் என்று எள்ளளவினும் மதித்திலரே

மேல்
$3.11.28

#2919
ஈது அலால் பெரும் கொடுமையில் தொடர் இடர் படுத்தும்
தீது எலாம் ஒரு துயர் என குறித்திலன் சிறியேன்
காதும் வெம் சினத்தவர் இவன் தீன் நிலை கருத்தில்
கோதி நின்றனன் இடர்க்கு அடங்கிலன் என குறித்தார்

மேல்
$3.11.29

#2920
அடிமை கொண்டவர் உரை வழிக்கு ஏவலின் ஆளாய்
முடியுமேல் அவன் உள் கருத்தின்படி முடியும்
படியின் மாறு கொண்டு இகலுமேல் உடல் உயிர் பதைப்ப
தடிவர் என்பதற்கு ஐயம் இல் என உரைத்தனரால்

மேல்
$3.11.30

#2921
என் மனத்தின் வேறு இலை முகம்மது நபிக்கு ஈமான்
நல் மனத்தொடும் கொள பொருந்தினன் என்னை நாடி
வன் மனத்தினை வெறுத்து ஒரு வழிப்படுத்துவிரேல்
சொல் மறுத்திலன் உரை-மின்கள் என தொகுத்து உரைத்தேன்

மேல்
$3.11.31

#2922
நன்று நன்று என சிரம் அசைத்து அனைவரும் நலியாது
இன்று தொட்டு முந்நூற்றினில் குறைந்திடாது ஈத்தம்
கன்று வைத்து நீர் இறைத்து அவை பலன்பட காய்த்து
நின்ற வண் பொழில் ஆக்கி நீ அளிப்பதுமல்லால்

மேல்
$3.11.32

#2923
ஆயிரத்திருநூற்றின் மேல் ஐம்பதின் அளவின்
ஏய தானவிராகன் என்று ஓதிய எடையின்
தூய தங்கமும் அளித்தியேல் தூதர் என்பவர்-பால்
போய் ஈமான் கொள துணிவது துணிவு என புகன்றார்

மேல்
$3.11.33

#2924
இன்ன வாசகம் இசைத்தவர் இதயங்கட்கு ஏற்ப
நன்னயத்தொடும் சில மொழி நவின்று அவண் நீங்கி
மன்னர்_மன்னவ நும் பதம் அடைந்தனன் மனத்தில்
உன்னி ஏற்பவை எற்கு உரைத்திடுக என்று உரைத்தான்

மேல்
$3.11.34

#2925
பாரிசு என்னும் அ ஊரவன் பகர்ந்த சொல் அனைத்தும்
வேரி அம் புய முகம்மது கேட்டு அகம் விரும்பி
சாரும் நல் வழிக்கு உரியன் என்று உளத்திடை தரித்து
மாரி போன்று நல் மறை தரு வாய் திறந்து உரைப்பார்

மேல்
$3.11.35

#2926
இரு நிலத்திடை பிறந்து நல் நபி என இவணின்
வருவர் என்று எனை தேடிய உண்மை வல்லவர்கள்
அரிதில் காண்கினும் இறக்கினும் உம்மத்தினவராய்
பெருகும் தீனில் சலாமத்து பெறுவர்கள் என்றே

மேல்
$3.11.36

#2927
பழுதிலாதவன் உரைத்த நல் மறை மொழிப்படியே
தழுவி வெம் குபிர் களைதர வேல் வலம் தரித்தோய்
வழுவி முன் விலைகொண்டவர் உரைத்திடும் வழியே
எழுதி நீ கொடுத்து இவண் வருக என நபி இசைத்தார்

மேல்
$3.11.37

#2928
மன்னும் நம் நபி உரைத்தலும் களிப்புடன் வாழ்த்தி
முன் உரைத்து இவண் விடுத்தவரிடத்தினின் முன்னி
சொன்ன சொன்னமும் துடவையும் அவதியில் அளிப்பேன்
என்ன ஓர் முறி எழுதி அங்கு அவர் கரத்து ஈந்தான்

மேல்
$3.11.38

#2929
மருங்கு நின்ற சல்மான்-தனை நோக்கி நீ வரைந்து
தரும் கடுத்தமும் தந்தனை உனக்கு உறும் சார்பின்
இரும் குலத்தவர்க்கு உரைத்து எமக்கு ஈதலும் இயற்றி
அரும் கணத்து இசுலாமினில் வழிப்படு என்று அறைந்தார்

மேல்
$3.11.39

#2930
தண் தளிர் பொழில் பாரிசின் விலை என தலைநாள்
கொண்டபேரிடம் விடுத்து நம் நபியிடம் குறுகி
பண்டு உரைத்த அப்படி முறை பத்திரம் எழுதி
விண்டு அளித்தனன் என உரைத்தனன் புகழ் விறலோன்

மேல்
$3.11.40

#2931
மன்றல் துன்றிய மது மலர் புய முகம்மதுவும்
நன்று நன்று என எழுந்து சல்மானை முன் நடத்திச்
சென்று தோழர்களுடன் ஒரு துடவையை சேர்ந்து
நின்று கன்று எடுத்து இவண் தருக என நிகழ்த்தினரால்

மேல்
$3.11.41

#2932
ஈத்தம் கன்று முந்நூற்றையும் எடுத்து அவர் இருந்த
மாத்திரத்தினின் முன்பு வைத்தனர் மனம் மகிழ்ந்து
தே ததும்பிய மலர் புயம் அசைதர திருத்தும்
பாத்தி-தோறினும் பதும மென் கரத்தினில் பதித்தார்

மேல்
$3.11.42

#2933
ஆதி_நாயகன் நபியுடன் அமை அசுகுபிகளில்
போதம் மேவிய முதியவர் ஒருவர் அ புவியில்
சோதி வீசிய மரகத பாசடை துலங்கும்
தீது இலாது ஒரு கன்று நட்டினர் அவண் சிறப்ப

மேல்
$3.11.43

#2934
எய்த்திடா புகழ் நபி திரு கரத்தினில் எடுத்து
வைத்த கன்றுகள் யாவும் வான்_உலகு உற வளர்ந்து
நெய்த்து வீறொடும் திரண்டன நெருங்கின நிறை கண்
மொய்த்த பூம் குலை சாய்த்தன காய்த்தன முழுதும்

மேல்
$3.11.44

#2935
கலந்து நின்ற மெய் தோழரில் ஒருவர் கை ஆர
நிலம்-தனில் பதித்திருந்த கன்று ஒன்றும் அ நிலையாய்
உலந்து நின்றது கண்டு நம் நபி ஒளிர் கரத்தால்
நலம் தரும்படி எடுத்து அதை மறுத்து நட்டினரால்

மேல்
$3.11.45

#2936
ஈத்தம் காவகம் பனிரண்டு வருடத்தின் இயல்பாய்
காய்த்து நல் பலன் தருதல் போல் நபி செழும் கரத்தால்
வாய்த்து மாதம் பன்னிரண்டினில் குறைவு அற வளர்ந்து
பூத்து காய்த்து நல் பழ குலையொடும் பொருந்தினவால்

மேல்
$3.11.46

#2937
மதுரம் ஊறிய பழ குலை பொறுக்கிலா வளைந்து
சிதறுகின்றன துடவை கண்டு அரும் களி சிறந்து
நுதிகள் வேல் வலம் தாங்கு சல்மான்-தனை நோக்கி
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார்

மேல்
$3.11.47

#2938
சிறை கொள் வாரணம் இடும் சினையளவு என திரண்ட
நிறையில் காஞ்சனத்தினில் திரு வாய் உமிழ்நீரால்
குறைவு இலா உற தடவி நல் செழும் கரம் கொண்டு
மறு இலாத சல்மான் மலர் கரத்தில் வைத்தனரால்

மேல்
$3.11.48

#2939
இறைக்கும் தேன் கனி துடவையும் அவர்களுக்கு ஈந்து
குறிக்கும் பொன்னையும் முன்னரின் எழுதி நீ கொடுத்த
நிறைக்குள் எவ்வளவு அவ்வளவு இந்த மா நிதியின்
நறுக்கி ஈந்திடுக என்றனர் முகம்மது நபியே

மேல்
$3.11.49

#2940
பொன்னை வாங்கி வெண் துகிலினில் இறுகுற பொதிந்து
பன்னு நல் நபி முகம்மதின் இரு பதம் பணிந்து
துன்னு தோழர்கள் யாரையும் இனிதுற துதித்து
தென் உலா மரை பதம் பெயர்த்து எழுந்தனன் திறலோன்

மேல்
$3.11.50

#2941
கொண்டல் தூங்கிய துடவையும் கனகமும் கொடுத்து
மண்டு பூம் பொழில் பொன்_நகர் வாங்கினம் வாய்ப்ப
தெள் திரை புவியிடத்தினில் முகம்மதை தேடி
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான்

மேல்
$3.11.51

#2942
வருந்திலா நிதி அளித்து முன் விலை என வாங்கி
யிருந்த மன்னவன் மைந்தர்கள் மனையிடத்து ஏகி
திருந்த வாய் புதைத்து அடிகள் சொற்படி முறை சிறியேன்
பொருந்தி வந்தனன் கொண்-மின் என்று இசைதர புகன்றான்

மேல்
$3.11.52

#2943
கேட்டு மன்னவர் ஒல்லையின் எழுந்து காய் கிளைத்த
தோட்டம் முற்றினும் சுற்றி நன்கு என சிரம் தூக்கி
காட்டின் மிக்க நல் துடவை கைக்கு அளித்தனை கடிதின்
வேட்ட பொன்னையும் தருக என எதிர் விளம்பினரால்

மேல்
$3.11.53

#2944
பொன் அளித்திடு என்று உரைதர துகிலிடை பொதிந்த
மின்னும் ஆடக கட்டியை தெரிதர விரைவில்
சொன்ன சொல் எடை மாட்டிய துலையினில் தூக்க
நன்னயம் பெற இடைக்கிடை நறுக்கி வைத்தனனால்

மேல்
$3.11.54

#2945
எ தலத்தினும் நிறை என இயற்றும் விராகன்
பத்து இரண்டு நூற்றைம்பது என்றிடும் எடைப்படியே
தத்தரத்தினில் பலபட நறுக்கியும் சரியா
வைத்தும் ஆடக கட்டி முன் போல் வளர்ந்து இருந்த

மேல்
$3.11.55

#2946
தனம்-தனில் குறையாது அளித்தனை பொழில்-தனையும்
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன்
மனம்-தனில் துணிந்திடும் இசுலாம் நெறி மார்க்கத்து
இனம்-தனில் செல் என்று இசைத்தலும் விரைவுடன் எழுந்தார்

மேல்
$3.11.56

#2947
தொண்டு என குறித்து ஆண்டவர் துடர் அற துடைத்து
கொண்டுபோன பொன்னினில் அணுவெனும் குறையாமல்
திண் திறல் புயம் வீங்கிட செழும் முகம் இலங்க
அண்டர்_நாயகன் தூதுவர் அவையிடத்து ஆனார்

மேல்
$3.11.57

#2948
சிறை என தனி ஆண்டவர் உரைவழி திருந்த
நறை தரும் கனி பொழில் அளித்து அவர்கள் முன் நடுவாய்
அறைதரும் கனகத்தினை அளித்து முன் அளவாய்
குறைவு இலாது இன்னம் வளர்ந்த பொன் இது என கொடுத்தார்

மேல்
$3.11.58

#2949
அடுத்து அளித்த சல்மான்-தனை நோக்கி அன்புடனே
தொடுத்த காரியம் முடித்து அரும் துன்பமும் துயரும்
விடுத்தனை பதம் படைத்தனை வீறொடு நிதியும்
எடுத்து நீ கொடுபோ என உரைத்தனர் இறசூல்

மேல்
$3.11.59

#2950
இறையவன் திருத்தூதுவர் ஈந்த பொன்-அதனால்
வறுமை என்று இல நிலத்திடை வாழும் நாளளவும்
பொறையின் மீது இடும் சுடர் என தீன் எனும் பொருட்டால்
உறையும் பாவம் அற்று அமரர்கள் பதவியுற்று இருந்தார்

மேல்
$3.11.60

#2951
பூணும் தம் செலவு அடங்கலும் போக்கியும் புகழால்
பேணும் நல்லவர்க்கு இனிது எடுத்து அருளியும் பெரிதின்
நீள் நிலத்தினின் நபி தரு கட்டி மா நிதியம்
மாணுற தனி இருந்தது நாட்குநாள் வளர்ந்தே

மேல்
$3.11.61

#2952
மா நிலம் புகழ் முகம்மது நபி பதம் வழுத்தி
தீன் நிலைக்கு உரியவர் என பெரும் புகழ் செலுத்தி
ஆனும் காவும் ஒவ்வாத சல்மான் எனும் அரசர்
தானம் மிக்கு உயர் தலைவரின் வாழ்ந்திருந்தனரால்

மேல்

12 ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்

$3.12.1

#2953
நபி என தீண் நிலை நடத்தும் நாள் முதல்
கவின் உறும் பைத்துல் முகத்திசு என்னும் அ
தவிசினை நோக்கியே தக்குபீறொடும்
புவியிடை தொழுகையை பொருந்தி நின்றனர்

மேல்
$3.12.2

#2954
தூவ தண் துளி மழை கவிகை தூதுவர்
தீவத்தும் புகழ்தர வணக்கம் செய்யும் நாள்
பாவத்தின் திரள் கெட படுத்து தோன்றிய
காபத்துல்லாவை பின் காட்டல் இல்லையால்

மேல்
$3.12.3

#2955
மகிதலத்தினில் உயர் மக்கம் ஆகிய
நகர் விடுத்து அணி மதினாவை நண்ணி சூழ்
புகழொடும் தீன் நெறி புரந்து வைகும் நாள்
திகழ் சகுபான் என விளங்கும் திங்களில்

மேல்
$3.12.4

#2956
மிக்க நல் தேதி மூவைந்தின் மேவிய
தக்க செவ்வாயினில் லுகறு நேரத்தில்
அக்கனை இரண்டு இறக்ஆத்து தான் தொழுது
ஒக்கலோடு இசை நபி உறையும் ஒல்லையில்

மேல்
$3.12.5

#2957
நிரை மணி தட சிறை ஒடுக்கி நீள் கதிர்
விரிதரு வெள்ளிடை படர்ந்து வேத நூல்
உரைதரும் திரு நபியிடத்தின் ஓர் நொடி
வரையினில் ஜிபுறயீல் வந்து உற்றார் அரோ

மேல்
$3.12.6

#2958
இறையவன் ககுபத்துல்லா என்று எய்திய
துறவு உயர் பள்ளியை நோக்கி தான் தொழ
மறை உரை வழங்கினன் என்ன மன் நபி
முறை இது என்று ஆநந்த கடலின் மூழ்கினார்

மேல்
$3.12.7

#2959
முன்னர் இரண்டு இறக்ஆத்து முற்றிய
பின்னரில் ககுபத்துல்லாவை பெட்புற
உன்னினர் நோக்கினர் ஓதும் பாதியும்
துன்னிய குழுவுடன் தொழுது வைகினார்

மேல்
$3.12.8

#2960
பருதி வானவன் விலகிய நெடும் பதி-தனக்கும்
நரலை போல் வளம் பெருகிய மதீன மா நகர்க்கும்
தெரிகிலாது உற நிமிர்ந்து மால் தோய்தர திரண்ட
வரைகள் யாவையும் பதுக்கையும் திடர் உறு வனமும்

மேல்
$3.12.9

#2961
இரு நிலம் பிதுங்கிட கடல் அலை கிடந்து எறிய
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி
ஒரு நிலத்தளவு ஆக்கி அங்கு உறைந்தனர் உடுக்கள்
செருகும் வானகம் கீண்டிட வரும் ஜிபுரீலே

மேல்
$3.12.10

#2962
சூல் முகில் குலவிய வரையின் சுற்று எலாம்
வானவர்_கோன் புவியிடையின் மாட்டலால்
பூ நிமிர் ககுபத்துல்லாவும் பூண் எனும்
கான் அமர் தூதர் கண் காணலாயதே

மேல்
$3.12.11

#2963
மதி தவழ் நெடும் கொடி மதீனம் ஆகிய
பதியினில் அமைத்த அ புதிய பள்ளியை
நிதி மதிள் ககுபத்துல்லாவின் நேர்-அதாய்
விதியொடும் திரித்து பின் விளங்க கட்டினார்

மேல்
$3.12.12

#2964
இரு சுடர் விலங்கிட இலங்கும் நீள் கொடி
நிரைதரும் பள்ளியை நோக்கி நீள் நபி
ஒருவனை தொழுது இரந்து உவக்கும் திங்களில்
தெரிதரும் புதுமை ஒன்று எடுத்து செப்புவாம்

மேல்

13 ஓநாய் பேசிய படலம்

$3.13.1

#2965
நலன் உறு மக்க மா நகரை சுற்றிய
மலைகளின் ஒரு வரை அடவியின்-வயின்
நிலைகொளா பறழொடு நிறைந்த புள்ளி மான்
கலையொடும் செறிந்து புல் கறித்து நின்றதே

மேல்
$3.13.2

#2966
வள் உகிர் முடங்கு வால் வளை பல் தூங்கு உரன்
உள் ஒடுங்கு அகட்ட ஓநாய் ஒன்று ஒள் நுனை
முள் அரை கானிடை கிடந்து மூரி வெம்
புள்ளி மெய் பிணையினை நோக்கி போனதால்

மேல்
$3.13.3

#2967
கல் இரு புறத்தினும் சிதற கால் வறீஇ
வல் உரன் நிலம்பட வளைந்து சென்னி தாழ்த்து
எல்லையில் பசியொடும் எதிர மான் இனம்
பல்பல திசையினும் படர்ந்து போயின

மேல்
$3.13.4

#2968
பிணை குலம் திசை-தொறும் சிதறி போதுற
அணித்தது என்று ஒரு பிணை-அதனை நோக்கி வெண்
மணி கதிர் எனும் உகிர் நிலத்தில் வவ்வுற
துணித்து உணும் மம்மரில் தொடர்ந்து போயதே

மேல்
$3.13.5

#2969
வடித்த நீர் தூங்கு நா சுணங்கன் வாயினில்
பிடித்து என தொடர்ந்து பெயர புள்ளி மான்
அடித்த பந்து என குதித்து அரிதில் சென்ற பூ
நடித்திடும் ககுபத்துல்லாவை நாடியே

மேல்
$3.13.6

#2970
பட்டியின் வாய் நுனி படரும் மானின் வால்
தொட்டது காண் என தொடரும் எல்வையின்
எட்டு எனும் திசை புகழ்ந்து ஏத்தும் தீவினை
தட்டு அறும் ஹறம் எனும் தலத்துள் ஆயதே

மேல்
$3.13.7

#2971
இறையவன் அமரர்கள் இயற்றும் சங்கையால்
ஹறம் எனும் தலத்தின் மான் ஆயது ஈண்டு இனி
தெறு கொலை விளைத்திடல் தீது செய் நெறி
முறை-அது அன்று என தனி முடுவல் நின்றதே

மேல்
$3.13.8

#2972
ஈனன் அபாசுபியானும் இன்பமும்
மானமும் தவிர் அபூஜகுலும் வன் கொலைக்
கான பஞ்சர சபுவானும் ஆண்டு ஒரு
தானம் மீது அமர்ந்து நின்றவர்கள் சாற்றுவார்

மேல்
$3.13.9

#2973
கானக சுணங்கன் வாய் கழிந்து போனது இ
மான் என இருந்தனம் மானும் ஒல்லையின்
ஆன நல் ஹறம்-அதுள் ஆயதால் அது
தானும் நல் ஹறம்-அதை சங்கை செய்தே

மேல்
$3.13.10

#2974
வருந்திட நிதம் உயிர் செகுக்கும் வன் சுணங்கு
அருந்திடும் பசி வெறுத்து அறமை சங்கை செய்
திருந்தது மானும் இ எல்லை உட்பட
பொருந்தி நின்று அகம் புறம் போயதில்லையால்

மேல்
$3.13.11

#2975
புதுமையில் புதுமை ஈது என்ன பொங்கி நின்று
அதிசயத்தொடும் அவரவர்கள் கூறலும்
பிதிர் விரல் உயர்ந்த பல் பிளந்த வாயில் நீர்
குதிதரும் நெடிய நா நீட்டி கூறுமால்

மேல்
$3.13.12

#2976
கருத்தினில் புந்தி அற்று இருக்கும் காபிர்காள்
பெருத்திடும் ஹறம்-அதை குறித்து பிந்தி ஈண்டு
இருத்தலை புதுமை என்று இசைக்கின்றீர் என
திருத்தியே உரைத்திட மறுத்து செப்புவார்

மேல்
$3.13.13

#2977
குதி மறுத்து அறம்-அதை குறித்து நின்றதே
புதுமை என்று இந்தனம் பொருவு இலாத நல்
மதியொடும் இன்று நீ உரைத்த வாசகம்
அதனினும் புதுமை என்று அறைந்திட்டார்களால்

மேல்
$3.13.14

#2978
குறித்து நின்று எதிர்ந்து யான் கூறும் வாய்மை எ
புறத்தினும் அறிகிலா புதுமை என்கின்றீர்
அறத்தினுக்கு உரியவன் ஆணை உம்மிடத்து
உற பெரும் புதுமை ஒன்று உளது என்று ஓதிற்றே

மேல்
$3.13.15

#2979
கடத்து உறை ஞமலி நீ காணொணாது எம
திடத்தினில் புதுமை உண்டு என்கின்றாய் அவை
திடத்துடன் யாவர்க்கும் தெரிய செப்பு என
தொடுத்தவர்க்கு அறிவுற சொல்லுகின்றதால்

மேல்
$3.13.16

#2980
ஆதி-தன் ஒளிவினில் தரித்து அனாதி-தன்
தூது என உலகினில் தோன்றி நின்றனர்
வேதமும் இறங்கின மெய்மை வேதத்தின்
நீதமும் நடத்தினர் நிகரும் இல்லையால்

மேல்
$3.13.17

#2981
அ நபி நல் மறை அறைந்து ஈமான் கொள
சொன்னவை அனைத்தையும் மறுத்து சூழ்தர
இன்னலை பொருந்தினிர் ஈது அலால் இனி
பன்ன அரும் புதுமை ஒன்று இல்லை பாரினே

மேல்
$3.13.18

#2982
முகம்மது நபி உரை மறுத்த மாற்றலர்
முக மதி நோக்குதல் முழுதும் தின்மை என்று
இகல் உற கொடும் மொழி எடுத்து காட்டி விண்
புகும் மலை கானினில் சுணங்கன் புக்கதால்

மேல்
$3.13.19

#2983
இணங்கிய நல் மொழி எவர்க்கும் கூறி அ
சுணங்கன் வெம் கான் புக சூழ்ந்து நின்றிடும்
கணங்களில் அபூஜகல் கபடும் கள்ளமும்
பிணங்கிய மனத்தினின் நகைத்து பேசுவான்

மேல்
$3.13.20

#2984
உடும்பை வன் பிணையினை தன் கைக்கு உட்பட
இடும்பினை பயிற்றிய முகம்மது என்பவன்
கடம் படு ஞமலியின் கருத்து பேதுறப்
படும்படி பயிற்றுதல் பகர வேண்டுமோ

மேல்
$3.13.21

#2985
அறத்தின் உட்படு நகர் மாந்தர்க்கு அன்பு இலாது
இறத்தலை படு நினைவு எடுத்த வஞ்சத்தால்
புறத்து ஒரு நகரிடை புகுந்து மாயங்கள்
மறுத்திலன் விளைத்தனன் முகம்மது ஆம்-கொலோ

மேல்
$3.13.22

#2986
அயல் நகர் புகுந்தனன் அகுமது என்று யாம்
பயம் அற இருப்பது பழுது பற்றலார்க்கு
இயலுறும் இடங்கொடுத்து இருத்தல் பாரிடை
வியன் உறும் வீரத்தின் விழுமம் அன்று அரோ

மேல்
$3.13.23

#2987
மருவலர் வலி கெட உடைந்து மற்றொரு
பெரு நகர் இருந்தனராயில் பேதுற
பர நகர் வேந்தரால் பகைகள் மூட்டியும்
கருவறுத்து அவர் பகை களைய வேண்டுமால்

மேல்
$3.13.24

#2988
திறை பல வழங்கினும் சேர்ந்து கை குவித்து
இறை என நிற்பினும் இனிது கூறினும்
கறை கெழும் கொடு மன கருதலார்-தமை
உறவு என நினைத்திடல் உணர்வுக்கு ஈனமால்

மேல்
$3.13.25

#2989
அடுத்து உறைந்திலர் என எள்ளல் அன்று இகல்
எடுத்திடும் கருதலர் இருந்து நாட்குநாள்
தொடுத்திடும் வினையமும் செயலும் சூழ்ச்சியும்
விடுத்திடும் ஒற்றரால் தெரிய வேண்டுமால்

மேல்
$3.13.26

#2990
வைகினன் இ நகர் வடுவும் தீமையும்
பொய்யினின் முடித்து அரும் புந்தியோர்களை
வெய்யவர் ஆக்கினன் மேலும் தீவினை
செய்கலன் என மனம் தேறலன்று அரோ

மேல்
$3.13.27

#2991
பவ்வம் உற்றிடும் நெடும் பாரில் நீங்கலாது
எவ்வுழை இருக்கினும் முகம்மது என்பவன்
செவ்வியன் அலன் அவன் ஊக்கம் சீர்கெட
வெவ் வினை விளைத்து இசை நிறுத்த வேண்டுமால்

மேல்
$3.13.28

#2992
என்றவன் இனையன இயம்ப சூழ்தர
நின்றவர் கேட்டு இவை நினைவு இதாம் என
குன்று என இரும் புயம் வளர்ந்துகொண்டு எழ
வன் திறல் பெரும் பகை மனத்தர் ஆயினார்

மேல்
$3.13.29

#2993
ஈரம் இல் அபூஜகுல் என்னும் மன்னவன்
சார்பினில் உறவினில் தக்க வேந்தரும்
பாரிடை சிறு குடிப்படையின் மாந்தரும்
ஊரிடை படையொடும் ஒருங்கு கூடினார்

மேல்

14. வத்தான் படைப் படலம்

$3.14.1

#2994
மாறு அரு நெடு வரை மக்க மா நகர்
தேறலர் இனையன நிகழ்த்தும் செய்கையை
கூற அரும் பெரும் புகழ் கொண்டல் மால் நபி
வீறுடை திரு செவி விளைய கேட்டனர்

மேல்
$3.14.2

#2995
அரிகள்-தம் செய்கைகள் அனைத்தும் கேட்டு அருள்
பெருகிய மனத்தினில் பிரியமுற்று எழில்
வரிசை மன்னவர்களை அழைத்து வம் என
உரைசெய தூதுவர் ஓடி ஓதினார்

மேல்
$3.14.3

#2996
வில் கர வலி அபூபக்கர் வெற்றி சேர்
மல் புயர் உமறு உதுமான் நல் வாள் அலி
சொல் பெரும் தோழரும் தூது என்று ஓதுவோர்
முற்படு நபி திருமுன்னம் முன்னினார்

மேல்
$3.14.4

#2997
மனன் உறை அறிவு என இருக்கும் மன்னவர்
அனைவரும் அடுத்து உறைந்து இருப்ப ஆரண
தனி நிலை உள்ளகம் ததும்ப நல் நபி
இனியன மொழி கொடுத்து இயம்புவார் அரோ

மேல்
$3.14.5

#2998
கொலை மனத்து அபூஜகல் குழுவும் அ நகர்
சிலை வய வீரரும் திரண்டு தீனவர்
மலைவுற பேரமர் வளர்க்க வேண்டும் என்று
இலை மலி வேலினீர் இருக்கின்றார்களால்

மேல்
$3.14.6

#2999
மா விசும்பு அமரருக்கு இறையவர் இ மதி
னாவினில் போய் அமர் நடத்த வேண்டும் என்று
ஏவினன் இறை என இசைத்த மாற்றமும்
போவது அன்று இகல் கெட புரிதல் வேண்டுமால்

மேல்
$3.14.7

#3000
வல்லவன் ஜிபுறயீல் உரைத்த வாய்மையில்
செல்லவும் தீன் நெறி விசயம் செய்யவும்
நல்லவை நமக்கு இவை அன்றி நாட்டம் ஒன்று
இல்லை என்று இசை நபி இசைத்திட்டார் அரோ

மேல்
$3.14.8

#3001
நாயகன் மறை வழி நடத்தும் நல் நபி
வாயகத்து உதித்த சொல் மாறல் இன்றியே
சேய் என நடப்பது திறமைதாம் என
தூயவர் யாவரும் துணிவுற்றார்களால்

மேல்
$3.14.9

#3002
போற்றி நின்று அனைவரும் புந்தியாம் என
தேற்றமுற்று இயல்புடன் செப்ப நல் நபி
மாற்றலர் எனும் குபிர் மாய்க்கும் பீசபீற்கு
ஏற்றவை யாவையும் இயற்றும் என்றனர்

மேல்
$3.14.10

#3003
கொற்ற வெண் கவிகையும் கோலம் ஆர் துகில்
சுற்றிய வட்டமும் தூங்கு குஞ்சமும்
கற்றை அம் கவரியும் கதிர் செய் மா மணி
வெற்றி வெண் துவசத்தின் பேத வீக்கமும்

மேல்
$3.14.11

#3004
தடம் உறு பதலையும் தவிலும் தாளமும்
இடி என முழங்கு பேரிகையும் ஓர் புற
திடிமனும் தகுணிதம் சிறந்த பீலியும்
வடிவு உடை காளமும் வயிரும் சின்னமும்

மேல்
$3.14.12

#3005
வட்டணம் தட்டி நீள் வள்ளி தண்டை தோல்
கட்டிய தோல் பரம் கவசம் கீசகம்
புட்டில் கை சோடு இணை தாக்கு போர்வை வெண்
பட்டினில் பஞ்சு வைத்து அடைக்கும் பாயமும்

மேல்
$3.14.13

#3006
பட்டையம் தோமரம் பரசு கப்பணம்
சொட்டை வாள் அயில் தனு சுரிகை முப்பிடி
நெட்டு இலை சூலம் கோல் பாலம் நேமி சூழ்
கட்டு பத்திரம் சரம் சுழற்று கை கவண்

மேல்
$3.14.14

#3007
ஆடல் அம் பரி பரிக்கு அணிகள் யாவையும்
தேடினர் இயற்றினர் சேனை காக்குதற்கு
ஈடு உடைவர் இவர் என்ன நல் நபி
கூடிய பெயரினில் குறித்து காட்டினார்

மேல்
$3.14.15

#3008
அரண் அடு கட கரி அனைய நால்வரும்
முரண் அரி பொருவும் முஹாஜிரீன்களும்
தரியலர் உயிர் உண் அன்சாரிமார்களும்
நர_பதி நபியுடன் இருக்கும் நாளினில்

மேல்
$3.14.16

#3009
செறுநர் வத்தான் எனும் தலத்தில் சேர்கிலா
குறைஷிகள் பலரும் கனானி கூட்டமும்
மறமுடன் திரண்டனர் என்னும் வாசகம்
இறையவன் திரு நபிக்கு எடுத்து கூறினார்

மேல்
$3.14.17

#3010
மாற்றலர் முதல் படை திரண்டு வைகிய
கூற்றினை உணர்வொடும் குறித்து அசுகாபிகள்
சீற்றமுற்று அவ்வயின் செல்குவோம் என
சாற்றலும் முகம்மதும் தகும் என்று ஓதினார்

மேல்
$3.14.18

#3011
தீட்டிய செழும் படை சேனை வீரரை
வீட்டி வெம் களத்திடை பருந்துக்கே விருந்து
ஊட்டிய வேல் கை உபாத செய் தவம்
கூட்டியது என உருவெடுத்த கோலத்தார்

மேல்
$3.14.19

#3012
காதலுற்று இரப்பவர் கருத்து தேக்குற
ஈதலுக்கு இசைந்து எடுத்து அளிக்கும் செங்கையார்
போதமும் வீரமும் புகழும் தூங்கிய
சாதன சகுது எனும் தரும வேந்தரே

மேல்
$3.14.20

#3013
அன்னவர்-தமை மதினாவிற்கு ஆதியா
மன் நபி முகம்மது அங்கு இருத்தி வைத்த தாள்
பின்னிடாது அடும் சரம் பெய்யும் வீரர்கள்
துன்னிட எழுந்தனர் துதிக்க யாவுமே

மேல்
$3.14.21

#3014
குடைகளும் துவசமும் குழுமி ஓங்கிட
கடு விசை பரி குழாம் கலந்து முன் செல
சுடர் விடு படைக்கலம் சுமந்த கொற்றவர்
புடை எழ திரு நகர் புறத்தில் தோன்றினார்

மேல்
$3.14.22

#3015
படியிடத்து எழும் துகள் புயலின் பம்ப வான்
இடி என முரசு பல்லியம் கறங்க கூர்
வடி நெடும் கதிர் அயில் மலிந்து மின்னிட
கொடியவர் திசையினை குறுகினார் அரோ

மேல்
$3.14.23

#3016
சேனையும் வாசியும் செருமி சூழ்தரு
கான் அரண் அனைத்தையும் கடந்து சென்று க
னானியர் குறைஷிகள் நடுநடுங்க வத்
தான் எனும் பெயர் உடை தலத்தை சுற்றினார்

மேல்
$3.14.24

#3017
ககன வெம் கதிரவன் கரங்கள் தூளியில்
புக இடம் இலை என பொருந்து மன்னவர்
தொகுதியும் வாசியும் சுற்றும் சேனையும்
மகுசி கண்டு உளத்திடை மலைந்திட்டான் அரோ

மேல்
$3.14.25

#3018
வருவதும் நிகழ்வதும் வகுத்து புந்தியில்
பெருகிய தலைவருக்கு எடுத்து பேசி நல்
உரையினும் வழக்கினும் ஒத்த சூழ்ச்சியின்
புரவலன் ஒருவனை தூது போக்கினான்

மேல்
$3.14.26

#3019
சந்து என விட வரும் தலைமை மன்னவன்
வந்து நல் நபி பதம் வழுத்தி ஊன்றிய
கந்து அடு கட களிறு அனைய காட்சியான்
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான்

மேல்
$3.14.27

#3020
இறையவன் திரு நபி உலகுக்கு இன்புறும்
மறை வழி ஒழுகி அ வணக்க வாசகம்
முறைமையின் நடத்தி யாம் முழுதும் இவ்வயின்
உறைகுவதலது வேறு உறுதி வேண்டுமோ

மேல்
$3.14.28

#3021
மகுசி என்று ஓதும் வத்தானின் ஏந்தலும்
மிகு படைத்தலைவரும் வேறு உறாது ஒரு
தகைமையில் பணிவது சரதம் இன்று நீர்
இகல் மறுத்து அணி நகர்க்கு எழுக என்றனன்

மேல்
$3.14.29

#3022
உற்று உறைந்து அவன் இவண் உரைத்த வாசகம்
வெற்றி என்று இயல் நபி போரின் வேட்கையில்
சுற்றிய திறல் படை சூரர் யாரையும்
இற்றையின் எழுக என்று ஏவினார் அரோ

மேல்
$3.14.30

#3023
இங்கிதத்தொடும் பணிந்து இசைத்த தூதுவன்
அம் கலுழ் நபி மலர் அடியினில் கர
பங்கயம் குவித்து அரும் பதியில் போயினன்
திங்கள் அம் குடையொடும் எழுந்த சேனையே

மேல்
$3.14.31

#3024
ஓட்டிய செழும் முகில் கவிகை ஊடுற
நீட்டிய வெண் கொடி நிலவு கான்றிட
தீட்டிய படைக்கலம் செறிய சென்று ஒரு
காட்டினில் இறங்கினர் காரணீகரே

மேல்
$3.14.32

#3025
இறங்கிய பாசறை இருந்து வாரி போல்
கறங்கிய சேனை முஹாஜிரீன்களின்
மறம் கிளர் எண்பது பெயரை வாளொடும்
நிறம் கிளர் அயிலொடு நீக்கினார் அரோ

மேல்
$3.14.33

#3026
கந்தமும் கதிரும் அறாத காட்சியர்
கொந்து அலர் புயத்து உபைதாவை கூவி நல்
சிந்தையின் மகிழ்வுற இருத்தி தேறிய
மந்திர மொழி சில வகுத்து பின்னரும்

மேல்
$3.14.34

#3027
கூடும் எண்பது பெயருடனும் கோது அற
நாடி நீர் மக்க மா நகரை சூழ்தரு
பாடிகள் அனைத்தும் பாழ்படுத்தும் சூறைகள்
ஆடி இங்கு அடைக என அறைந்திட்டார் அரோ

மேல்
$3.14.35

#3028
கரியினும் மதர்த்த முஹாஜிரீன்களை
மரு மலர் புயத்து உபைதாவை மன் நபி
திரு நயனங்களால் நோக்கி சிந்தை வைத்து
இருள் அறும் வெற்றி வெண் கொடியும் ஈந்தனர்

மேல்
$3.14.36

#3029
கருதலர் உறை பதி களைந்திட்டு ஒல்லையின்
வருக என வினைஞரை விடுத்து வள்ளல் பாய்
துரகத குழுவொடும் சேனை சூழ்தர
நரலையின் வள மதீனாவை நண்ணினார்

மேல்
$3.14.37

#3030
எண் ஒரு பதின்மரும் இலங்கு நீள் தொடை
வண்ண ஒண் புயத்து உபைதாவும் மாறு இலாது
அண்ணல்-தன் பத மலர் போற்றி அன்பொடும்
விண் நெடும் கடு விசை புரவி மேல் கொண்டார்

மேல்
$3.14.38

#3031
எதிர் அமர்-தொறும் தழும்பு இருந்த மெய்யினர்
கதிர் அயில் வாள் மறவாத கையினர்
விதியவன் மறை முறை விளக்கும் வாயினர்
புதிய வெம் பகை பதி அடுப்ப போயினார்

மேல்
$3.14.39

#3032
வெற்றி வெண் கொடியொடும் வேக வாம் பரி
கொற்றவர் குழுமி வந்து அடரும் கொள்கையை
பற்றலர் அறிந்து சீறூரில் பல்பல
தெற்று அற குடியொடும் சிதறிப்போயினார்

மேல்
$3.14.40

#3033
இவுளியும் படையும் முஹாஜிரீன்களும்
தவிசு உறை அரசு உபைதாவும் வந்தவை
அபுஜகல் மகன் அறிந்து அரிய வேகத்தால்
குவி தரும் படைக்கு எதிர்கொண்டு நேர்ந்தனன்

மேல்
$3.14.41

#3034
மதி வரவழைத்தவர் விடுத்த மன்னரும்
சதி அபுஜகல் தரு புதல்வன் தானையும்
கதி பரியொடு படைக்கலத்தின் கையொடும்
எதிர் உமக்கு எமக்கு என இருக்கும் காலையில்

மேல்
$3.14.42

#3035
சதி வைத்த கருதலர் தளத்தின் ஊடிருந்து
இதமித்த நபி கலிமாவுக்கு இன்புறும்
மதிவத்தி எனும் மிகுதாதும் வாம் பரி
உதபத்தும் வந்து உபைதாவை கூடினார்

மேல்
$3.14.43

#3036
மா தவர் இருவரும் வந்த போழ்தினில்
ஆதரம் விடுத்து அமர் அரிகள் துன்புற
பூதலம் புகழும் உக்காசு புத்திரர்
காது அகல் சகுது ஒரு கணை தொட்டார் அரோ

மேல்
$3.14.44

#3037
அடுத்து நின்றவர் இசுலாமில் ஆயதும்
எடுத்து ஒர் அம்பு எய்தவர் இருந்த வேகமும்
கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர்
தடுத்து அபூஜகல் மகன் தளம் பின்வாங்கினான்

மேல்
$3.14.45

#3038
வெட்டுக்குத்து எனும் மொழி விளம்பிலாது ஒரு
மட்டின் நின்றவர்கள் பின்வாங்கினார் இனி
தொட்டு அமர் விளைத்திடல் சூழ்ச்சித்து அன்று என
தட்டு அலகு அயில் உபைதாவும் நீங்கினார்

மேல்
$3.14.46

#3039
மருவலருடனிருந்து இருவர் வந்ததும்
பொரு சகுதுக்கு எதிராது போயதும்
விருது கொண்டு இகலிடும் வெற்றி போரினும்
பெரிது என குழுவொடும் பிரியத்து ஏகினார்

மேல்
$3.14.47

#3040
மிகல் பெறும் வெற்றியின் பீசபீலுக்காய்
இகல் முதல் சரமும் ஒன்று எய்தும் மன்னவர்
முகில் தவழ் கொடி செல தானை மொய்த்திட
நகர் புகுந்து அகுமது பதத்தை நண்ணினார்

மேல்

15. பாத்திமா திருமணப் படலம்

$3.15.1

#3041
திங்கள் வந்து இறைஞ்சி போற்றி செய்து எதிர் பேச பேசும்
மங்குல் அம் கவிகை வள்ளல் வளம் பெறு மதீனா-தன்னில்
பொங்கு தீன் விளங்க நாளும் காரண புதுமை ஓங்கி
எங்கணும் படர செங்கோல் நெறி அரசு இயற்றும் நாளில்

மேல்
$3.15.2

#3042
விதியவன் மொழி மறாது விண்ணவர்க்கு அரசர் கூறும்
புதுமறையவர்கள் போற்ற பொருவு இல் வானவர்கள் வாழ்த்த
கது அகில் கரிய கூந்தல் காரிகை பாத்திமா-தம்
வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம்

மேல்
$3.15.3

#3043
ஆதி_நாயகன்-தன் தூதர்க்கு அன்புறும் கதீஜா ஈன்ற
பேதையர் நால்வர்-தம்முள் பெற்ற பேறு அனைத்தும் ஒன்றாய்
கோது அற திரண்டு சோதி கொடி என உருக்கொண்டு ஓங்கி
மாதர்கள் திலதம் என்ன மா நிலத்து உதித்த பாவை

மேல்
$3.15.4

#3044
அதிர் திரை கடல் பார் எங்கும் அமுத தீன் திவலை சிந்தி
உதித்து எழும் முகம்மது என்னும் திங்களில் உதயம் செய்து
பதித்தலத்து உவக்கும் மாதர் பவ கடல் திமிரம் ஓட்டும்
கதிர் தட தீபம் என்ன கட்டழகு எறிக்கும் சோதி

மேல்
$3.15.5

#3045
ஆதி நாள் ஒளிவு வாய்ந்த அழகு எலாம் திரட்டி சேர்த்த
பாதியில் பாதி நூற்றோர் பங்கினில் செம்பொன்_நாட்டின்
மாதரை வகுத்து இ மாதை திரட்டிய வண்ணம் எல்லாம்
தூது உயிர் புதல்வி என்ன படைத்தனன் சுருதியோனே

மேல்
$3.15.6

#3046
சுற்று இளம் பருதி வெய்யோன் சுவட்டு அடி சேப்புக்கு ஏய
பெற்றனன் மடந்தை துண்டத்து அழகினில் பெற்றிலேன் என்று
உற்று உளம் ஒடுங்க கூனி அந்தரத்து உலவி நாணி
மற்றுள கலையும் தேய்ந்து நாட்குநாள் மறுகும் திங்கள்

மேல்
$3.15.7

#3047
எண்ணரும் தவமும் கற்பும் புகழும் நின்று இறைஞ்சி ஏத்தும்
பண் அரும் வேத வாய்மைப்படி தவறாத வாக்கும்
நண்ண அரும் தருமம் யாவும் சொற்படி நடக்கும் நாளும்
கண் அகன் புவியில் பாவை கற்பு எனும் அரசுக்கு அன்றே

மேல்
$3.15.8

#3048
சேண்_உலகு இமையா நாட்ட தெரிவையர்-தமக்கும் இம்பர்
பூண் முலையவர்க்கும் ஏக நாயகி என்ன பூவில்
காணுதற்கரியோன் செய்தானென்னில் இ கவின் கொண்டு ஓங்கும்
மாண் இழை மடந்தைக்கு உற்ற பெற்றி யார் வகுக்க வல்லார்

மேல்
$3.15.9

#3049
எல்லையில் அழகு வாய்ந்த ஏந்து_இழை கதீஜா ஈன்ற
நல் இயல் கனக_நாட்டின் நாரியர் திலதம் அன்னார்
கல் அடர் கரிய வாள் கண் அகத்திடை வரிகள் ஓடி
பல்லவம் பசப்புற்று என்ன பருவம் வந்து இறுத்தது அன்றே

மேல்
$3.15.10

#3050
வடிவு உறும் செம்பொன் பூவில் வாசம் வந்து உறைந்த போலும்
கொடி மலர்-அதனில் சேர்ந்த கொழு நறா நிறைந்த போலும்
கடி நெடும் கழையில் செவ்வி கதிர் மணி தரித்தல் போலும்
அடிகள்-தம் புதல்விக்கு இன்ப பருவம் வந்து அடைந்தது அன்றே

மேல்
$3.15.11

#3051
வரிசையும் பேறும் வேத வாய்மையும் உளர் அதன்றி
அரசருக்கு அரசர் செல்வத்து அரும் பொருள் அனைய செல்வி
பெரியவன் அருளால் வந்த பெண்ணினை வரைதல் யான் என்று
உரை கொடுப்பவர் யார் என்ன உள்ளம் நெக்குருகுவாரும்

மேல்
$3.15.12

#3052
தரியலர் செகுக்கும் வெள் வேல் சதுமறை தலைவர் ஈன்ற
வரி விழி கரிய கூந்தல் மங்கை-தம் வதுவை வேட்டு
புரி முறுக்கு அவிழும் தொங்கல் புய வரை அரசர் கூடி
ஒருவருக்கொருவர் உள்ளிட்டு உரை வெளிப்படுத்துவாரும்

மேல்
$3.15.13

#3053
வடிவமும் ஒழுங்கும் நீதி வணக்கமும் அறிவும் பூத்த
கொடி மட மயிலை சோதி குல கொழுந்து அனைய கற்பை
பிடிபடும் மணத்தில் சேர்ந்து பேருலகு அனைத்தும் வாழ்த்தப்
படுமவர் எவரோ என்ன பற்பல் கால் பகருவாரும்

மேல்
$3.15.14

#3054
பிற நகர் அரசர் செவ்வி பெண் கனி வதுவை வேண்டி
அறை திரை பரவை ஆடை அம் புவி முழுதும் காத்து
முறைசெயும் காரணீகர் திருமுனம் மொழி-மின் என்று என்று
உறவினரிடத்தில் தீட்டும் ஓலைகள் அனுப்புவாரும்

மேல்
$3.15.15

#3055
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர்
தருகுவம் வதுவை எம்-பால் அளித்திடில் என்ன தாழ்ந்து
கருதலர் அரி ஏறு அன்னார் காதினில் ஓதுவாரும்

மேல்
$3.15.16

#3056
உரை பலர் இனைய வண்ணம் உலகவர் இயம்ப யாணர்
மரை மலர் வதன வள்ளல் மங்கை-தம் வதுவை வல்லோன்
திருவுளப்படியதன்றி செய்வது இன்று என்ன செவ்வி
தரு மனத்து இருத்தி யாரும் சாற்றுதல் பொருந்திலாரால்

மேல்
$3.15.17

#3057
இவ்விதம் நிகழாநிற்ப இயைதரு விதியின் பண்பான்
மவ்வல் அம் குழலார் வாழ்க்கைத்துணை வரும் நயத்தை நோக்கி
தெவ் அடர்த்து எறியும் வெள் வேல் சிங்க ஏறு அனைய காளை
செவ்வியல் அலியார் காதல் சிந்தையின் நாளும் பூத்தார்

மேல்
$3.15.18

#3058
நகரவர் உரையும் சூழ்ந்த நாட்டவர் விடுக்கும் தூதர்
பகரும் நல் மொழியும் மற்றோர் தீட்டு பாசுரத்தின் கூறும்
நிகர் அரும் வள்ளல் உள்ளத்து இருத்திய நினைவும் ஓர்ந்து
வகையுறாது ஈற்றின் எண்ணத்தால் உளம் வருந்தினாரால்

மேல்
$3.15.19

#3059
மின் உரு கொண்ட கன்னி விளங்கு_இழை நலத்தை நாடி
மன்னர்கள் உளம் தேறாது வதுவையின் மயக்குற்றாரேல்
பன்னெடும் நாளில் காமம் மனத்தின் உட்படுத்தி பாவை-
தன்னை வைத்திருக்கும் வேந்தர் கருத்தை யார் சாற்ற வல்லார்

மேல்
$3.15.20

#3060
குனி சிலை புருவம் வாள் கண் கொடி இடை கரிய கூந்தல்
கனி இதழ் சிறு வெண் மூரல் காரிகை நலத்தை நாடி
நினைவும் நித்திரையும் போக்கி நீள் தொடு குழியின் ஆர்ந்த
நனி மத களிறு போன்று வேட்கையில் நடுங்கினாரால்

மேல்
$3.15.21

#3061
குயின் உறை சிகர மேரு குல வரை அனைத்தும் வென்று
வயிர ஒண் வரையின் மீறும் மாண் எழில் புயங்கள் சேந்த
கயிரவம் அனைய செ வாய் காரிகை மம்மர் நோயால்
வெயில் படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த அன்றே

மேல்
$3.15.22

#3062
விண்-கணின் அமரர்_கோமான் மேதினிக்கு உரைத்த வேத
பண் கனிந்து ஒழுகும் செ வாய் பாத்திமா என்னும் அந்த
பெண் கனி உருவத்து ஆர்ந்த பேரெழில் கடலில் ஆழ்ந்து
கண்களின் மறுத்து தோன்றும் உரு அன்றி காண்கிலாரே

மேல்
$3.15.23

#3063
கலி தடுத்து உலகம் காக்கும் காவலர் இனிதின் ஈன்ற
ஒலி கடல் அமிர்தம் ஒவ்வா ஒண்_தொடி முகத்தின் வாய்ந்து
மலி தரும் கரு மை உண்ட வரி விழி கயல்கள் பாய
அலி எனும் வலிய வீரர் அக கடல் கலங்கிற்று அன்றே

மேல்
$3.15.24

#3064
பற்றலர் உடலம் தேய்த்து பஃறலை குருதி ஊற்றும்
வெற்றி வாள் அலி என்று ஓதும் வீர வெண் மடங்கல் நாளும்
இற்ற சின் மருங்குல் பாத்திமா எனும் இள மான்-தன்னால்
வற்றுறா வலியும் போக்கி மயக்குண்டு கிடந்தது அன்றே

மேல்
$3.15.25

#3065
செறி கடல் பாரில் தூண்டா மணியினும் செவ்வி வாய்ந்து
நிறைதரும் கற்பின் நல்லாரிடத்தினில் நிதமும் மாறா
அறிவு எனும் தூது-தன்னோடு அகம் எனும் துணையும் போக்கி
வறியரில் தமியராகி வாள் அலி மவுலலுற்றார்

மேல்
$3.15.26

#3066
கனிந்து இனிது ஒழுகும் பெண்மை கரும்பை தேன் கனியை வாசம்
புனைந்த பூம் கதுப்பில் துஞ்சும் வண்டு என பொருகண்ணாரை
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா
அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார்

மேல்
$3.15.27

#3067
வனை கழல் செரு வாள் வள்ளல் மனத்து உறும் காமத்து அன்பும்
பனி மலர் செருகும் கூந்தல் பாவை-தம் எழிலும் சூட்ட
நனை தரும் வதுவை வேண்டி நாள்-தொறும் கெஞ்சிக்கெஞ்சி
தனியனுக்கு உரைத்தாரல்லால் பிறர்க்கு உரை சாற்றிலாரே

மேல்
$3.15.28

#3068
அரிந்து வெம் குபிரை ஓதும் ஆதி நூல் கலிமா வித்தி
விரிந்த தீன் பயிரை ஏற்றும் விறல் படை அலியாம் வேங்கை
பரிந்து இரு கரங்கள் ஏந்தி பற்பல் கால் இறையோன்-தன்பால்
கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே

மேல்
$3.15.29

#3069
மூது இருள் படலம் சீக்கும் முச்சுடர் கதிரும் ஒவ்வா
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண்
ஆதரம் பெருக ஆதி அருளின் வான் இழிந்து மெய்மை
தூதரினிடத்தில் வந்தார் துணை எனும் ஜிபுறயீலே

மேல்
$3.15.30

#3070
வந்து அடுத்து உறைந்து வண்மை முகம்மதே சலாம் என்று ஓதி
பைம் தொடி கரிய கூந்தல் பாத்திமா பொருட்டால் வானில்
அந்தமிலவன்-தன்பால் நிகழ்ந்தவை அனைத்தும் தேறும்
புந்தியின் மகிழ்வு பூப்ப படிப்படி புகலலுற்றார்

மேல்
$3.15.31

#3071
அரியவன் திரு மெய் தூதே அண்ணலே இறையோன் சோதி
குரு மணி இனத்தால் போதால் கொழும் துகில்-அதனால் செம்பொன்
திருநகர் மனைகள்-தோறும் சிறப்பிக்க அருளி செய்தான்
உரை அருள்படியே வானோர் உம்பரின் விளக்கம் செய்தார்

மேல்
$3.15.32

#3072
பொன்_நகர் விளக்கி பின்னர் புகழ்தர மகரும் நாட்டி
என்னுடன் இசுறாபீல் மீக்காயிலும் சாட்சி ஏய
பன்ன அரும் அலியார்க்கு இன்ப பாத்திமா-தமை நிக்காகு
முன்னிய தரு தூபாவின் முடித்தனன் இறைவன் அன்றே

மேல்
$3.15.33

#3073
இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ
வந்தனன் என்ன போற்றி வானவர்க்கு அரசர் கூற
சந்தன கதம்பம் மாறா தட வரை புயங்கள் விம்ம
கந்து அடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற்றாரால்

மேல்
$3.15.34

#3074
அடல் அபூபக்கர் வெற்றி அரி உமறு உதுமான் ஒன்னார்
இடர் அற வரும் முஹாஜிரீன்கள் அன்சாரிமார்கள்
உடன் உறை முதியோர்க்கு உம்பர் உற்ற சோபனத்தை செம் தேன்
வடி மலர் தொங்கல் திண் தோள் முகம்மது வழங்கினாரால்

மேல்
$3.15.35

#3075
கனக_நாடு-அதனின் உற்ற காரண அமுதம் தேக்கி
அனைவரும் களிப்பு வெள்ளத்து ஆநந்த கடலின் மூழ்கி
இனையன நினைத்தோம் யாங்கண் நினைத்தவை இறையோன் செய்தான்
வனை கழல் அலி-தம் பேறின் மகிமை யார் வகுக்க வல்லார்

மேல்
$3.15.36

#3076
என்னும் நல் மொழிகள் மிக்கோர் இனியன மகிழ்வில் கூற
பன்னகம் பேச பேசும் பார்த்திவர் இறசூலுல்லா
தன் அகத்து இருந்த வண்ணம் முடித்தனன் தனியோன் என்ன
மன் அபித்தாலிபு ஈன்ற மணியினை கொணர்-மின் என்றார்

மேல்
$3.15.37

#3077
மருவலர் மதங்கள் தேய்க்கும் மன்னவர் உரைத்த மாற்றம்
இருவர்கள் சென்னி மேற்கொண்டு எழுந்து அலி-தம்மை முன்னி
பரிவின் சலாமும் கூறி பாவலர் வறியோர் வாழ
சொரிதரும் செம் கை வேந்தே சோபனம் வருக என்றார்

மேல்
$3.15.38

#3078
மதுகை மன்னவர்கள் கூறும் சோபன வசனம் தன்னான்
இதயத்தின் இருந்த வண்ணம் முடிந்ததோ என்ன எண்ணி
கொதி நுனை பகு வாள் வள்ளல் எழுந்து இரு குவவு திண் தோள்
புது நறா துளிக்கும் தொங்கல் புரள்தர விரைவின் வந்தார்

மேல்
$3.15.39

#3079
ஆரணம் முழங்கும் பள்ளிவாயில்-தன் அவையின் நண்ணி
காரண குரிசிற்கு இன்ப கட்டுரை சலாமும் கூறி
ஊரவருடனும் ஓர்பால் உறைந்தனர் உயர்ந்த வெற்றி
ஏர் அணிந்து இலங்கும் பைம் பூண் இளம் சிங்கம் இருந்தது ஒத்தே

மேல்
$3.15.40

#3080
தமனிய_பதியில் தூபா தரு-வயின் நடந்த பேறும்
அமரருக்கு அரசர் கூற நபி அகம் மகிழ்ந்த வாறும்
திமிர வெம் குபிரை ஓட்டும் தினகரன் என்னும் தூயோர்
கமை தரு சீற்ற வேங்கை அலி அகம் களிப்ப சொன்னார்

மேல்
$3.15.41

#3081
வானவர்க்கு அரசர் சொன்ன வாய்மையின் முதியோர் கூறும்
தேன் எனும் மணத்தின் தீம் சொல் செவி வழி புகுதலோடும்
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும்
தானவன் அருள் ஈது என்ன தட பெரும் புளகம் பூத்த

மேல்
$3.15.42

#3082
திருத்திய கனக பைம் பூண் சே_இழை வதுவை வேட்டு
வருத்தமுற்று உணர்வு போக்கி நாள்-தொறும் வருந்தும் நெஞ்சில்
பொருத்துற நினைத்த வண்ணம் முடிந்தது என்று உரை புக்கு ஆல
கருத்தினில் பெருகு ஆநந்த களிப்பை யார் கணிக்க வல்லார்

மேல்
$3.15.43

#3083
அகலிடம் விளங்கும் ஐந்நூறு இரசிதத்து அரிய காசு
மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன
பகர அரும் கற்பின் மிக்க பாத்திமா செவியில் சாற்ற
இகல் அறும் வேத வாய்மை முகம்மது அங்கு இசைத்தார் அன்றே

மேல்
$3.15.44

#3084
அரு மறை முதியோர் ஏகி இறையவன் அலியார்க்கு இன்ப
திருமண முடித்தான் என்ன ஜிபுறயீல் உரைத்த வாறும்
மரு மலர் வாகை திண் தோள் முகம்மது மகிழ்ந்த வாறும்
புரி குழல் நவ்வி பாத்திமா முனம் புகன்றிட்டாரால்

மேல்
$3.15.45

#3085
மறையவர் உரைத்த மாற்றம் மதி நுதல் மடந்தை கேட்டு இன்று
இறையவன் முடித்த வாறும் இயல் நபி மகிழ்ந்த வாறும்
முறை என தலைமேல் கொண்டேன் முன்னர் நூல் முழுதும் வல்லீர்
அறைவது ஒன்று உளது கேண்-மின் எனும் உரை அருளி சொல்வார்

மேல்
$3.15.46

#3086
சினவு வேல் அபித்தாலீபு சேய் எனும் புலிக்கு யானே
மனையினிற்கு உரியள் ஆனேன் மகர் இரசிதம் ஐந்நூறு என்று
உனும் மொழி பொருத்தமில்லேன் என் உளத்து உறைந்த வண்ணம்
இனிதுற அருள வேண்டும் எனும் உரை விளங்க சொன்னார்

மேல்
$3.15.47

#3087
மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம்
படர்ந்த கேள்வியர்கள் வந்து நபி முனம் பகர கேட்டு
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்
திடம் தனி மலைவு தோன்றி இருந்தனர் பெரிதின் மன்னோ

மேல்
$3.15.48

#3088
அவ்வயின் இமையா நாட்டத்து அமரருக்கு அரசர் ஆதி
செவ்விய மொழியினோடும் செகதலத்து இழிந்து கூறா
நவ்வி முன் எதிர்ந்து பேசும் நாயக சலாம் என்று ஓதி
கவ்வை அம் கடலின் மிக்காம் களிப்புற கருதி சொல்வார்

மேல்
$3.15.49

#3089
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து
உறைகின்ற மகரை கேட்டு வருக என்று உம்பர் போற்றும்
இறையவன் அருளி செய்தான் என்று உரைத்தனர் அ மாற்றம்
முறை வழி விளக்க தூதர் மொழிந்தனர் பாவைக்கு அன்றே

மேல்
$3.15.50

#3090
மேலவன் வரிசை பேறாய் விளம்பிய மாற்றம் கேட்டு
நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி
ஞாலமும் விண்ணும் நிற்க நாட்டிய தம்பம் என்ன
சீலம் உற்று அறிவினோடும் ஒரு மொழி செப்பலுற்றார்

மேல்
$3.15.51

#3091
இறுதியில் பவத்தின் மாதர் என் சபாஅத்தி லீடேற்றம்
பெற மன்றாட்டு அருள வேண்டி பேரருள் கபூல் செய்தானேல்
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம்
சிறை குலாம் வள்ளல் ஆதி திருமுன் விண்ணப்பம் செய்தார்

மேல்
$3.15.52

#3092
நபியை மான் பாத்திமாவை நரர் புலி அலியை எந்த
புவியினும் உவந்தோர் செய்யும் பிழை பொறுத்திடுவதாக
அவியும் பிற்கால மன்றாட்டு அருளுவன் என்ன ஆதி
கவினுற சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார்

மேல்
$3.15.53

#3093
வான் இழிந்து அரிய வேத முகம்மதுக்கு உரைப்ப அன்னோர்
தேன் இமிர் அலங்கல் கூந்தல் சே_இழைக்கு உரைப்ப செய்தார்
பானல் அம் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்து இவ்வண்ணம்
தான் வரைந்து அளித்தல் வேண்டும் எற்கு என சாற்றினாரால்

மேல்
$3.15.54

#3094
கோதையர் உரைத்த மாற்றம் இஃது என கொண்டல் கூற
மா தவர்க்கு உதவி கூறும் ஜிபுறயீல் மகிழ்வின் ஏகி
பூதலத்து உறைந்த யாக்கை உயிர்-தொறும் பொருந்தி வாழும்
ஆதி முன் உரைத்து நின்றார் அருள் கடை நோக்கி அன்றே

மேல்
$3.15.55

#3095
பாவையர் உரைத்த வண்ணம் பச்சை அம் கடுதாசின்-கண்
மேவர கனக மையால் வரிபட விளங்க தீட்டி
சேவையின் நினைவு மாறா செவ்விய ஜிபுறயீல்-பால்
ஈவது ஈது என்ன ஓதி இறையவன் அளித்திட்டானால்

மேல்
$3.15.56

#3096
வரைந்த பாசுரத்தை ஏந்தி வான் இழிந்து அமரர்_கோமான்
கரும் தடம் கண்ணார்க்கு என்ன நபி திரு கரத்தில் வைத்தார்
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி
பரிந்து ஒரு துணைவர்க்கு ஈந்து பாசுரம் விளக்கு என்றாரால்

மேல்
$3.15.57

#3097
கொடுத்த பத்திரத்தை வாங்கி கொழும் மலர் கண்ணில் ஒத்தி
விடுத்து அதை விரித்து பைம் பொன் வரி முறை விளங்க நோக்கி
அடுத்தவர் பிறர் மற்றுள்ளோர் யாவரும் அறிய வல்லே
தொடுத்து ஒரு மொழி வழாது வாசகம் சொல்லலுற்றார்

மேல்
$3.15.58

#3098
என் அடியவரின் மிக்கா முகம்மதின் இனிதின் ஈன்ற
பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப
மன்னிய வதுவைக்கான மகர் என இசுலாம் உற்ற
பன்னிகள் பவத்தினுற்றோர் பல்லர்க்கும் குறைகள் தீர

மேல்
$3.15.59

#3099
இறுதி நாளினில் மன்றாடி தன் சபாஅத்தி லீடேற்றம்
மறை-தொறும் விளங்க சொல்லும் முகம்மதும் ஜிபுறயீலும்
அற நெறி மீக்காயீலும் சாட்சியதாக நானே
மறு அற கபூல் செய்தேன் என்று இருந்ததை வாசித்தாரால்

மேல்
$3.15.60

#3100
பாரினில் முதலோன் வாய்மை பத்திரம் வர வளாக
பேருலகினில் இ பேறு பெற்றவர் உளரோ என்ன
வீர வெண் மடங்கல் அன்ன விறல் உடை வள்ளலோடும்
சீர் பெறு முதியோர் யாரும் சிலிர்த்தனர் உடலம் அன்றே

மேல்
$3.15.61

#3101
செவி அகம் குளிர பொன்னால் தீட்டு பத்திரத்தை ஏந்தி
அவையகம் விடுத்து பாத்திமா அணி மனையை நண்ணி
கவின் உறு மயிலே என்ன வாசித்து காண்பித்து அன்பின்
நவன் இவை என்ன போற்றி சில மொழி நவிலலுற்றார்

மேல்
$3.15.62

#3102
வரத்தினில் உயர்ந்த பேறே மகுசறு வெளியில் என்-தன்
கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை
ஒருத்தரும் தீண்டா வண்ணம் உயிர் என ஓம்பி ஓர்பால்
இருத்தும் என்று இறசூலுல்லா இளம்_தளிர் கையில் ஈந்தார்

மேல்
$3.15.63

#3103
அந்த நல் மாற்றம் கேட்ட அரிவையர்க்கு அமுதம் அன்னார்
செம் தளிர் கரத்தின் ஏந்தி சென்னி மேல் விழி மேல் கொண்டு
மந்திர பொருளை செம்பொன் மணி செப்பின் அடைத்து கிட்டா
புந்தியும் உயிரும் என்ன போற்றுதல் பொருந்தினாரால்

மேல்
$3.15.64

#3104
பரம்பொருள் விருப்பின் ஈந்த பத்திரம் மகள் கைக்கு ஈந்து
வரம் பெறும் வள்ளல் பள்ளிவாயிலின் அவையின் நண்ணி
அரம் பொருந்து இலங்கும் வெள் வேல் அபூபக்கர் முதலாய் உள்ள
தரம் பெறும் தோழர்க்கு எல்லாம் இனியவை சாற்றுவாரால்

மேல்
$3.15.65

#3105
மதுர மென் கனிக்கும் சீர்த்தி வாள் அலி தமக்கும் மேன்மை
முதலவன் மண நிக்காகு முடித்தனன் அதனை எந்த
பதியினும் சிறப்பு வாய்ப்ப பற்றலர் ஒடுங்க மேலும்
இதமுற இயற்றற்கு ஏற்ற யாவையும் இயற்றும் என்றார்

மேல்
$3.15.66

#3106
பேறு உயர் ஆதியால் இலாஞ்சனை பெற்ற சிங்கம்
கூறிய வசனம் கேட்டு கொற்றவர் உவகை எய்தி
மாறு இலா வளமை ஓங்கும் மதீன மா நகரை இன்னே
வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார்

மேல்
$3.15.67

#3107
குழுவின் மன்னவர் விளித்தனர் என குறித்து எழுந்து
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க
முழுதும் இ நகர் அறிந்திட மண முரசு அறைக
எழுக என்றலும் எழுந்தனர் கடி முரசினரே

மேல்
$3.15.68

#3108
கடி கொள் வெண் சுதை சோகங்கள் கவின் உற தடவி
நெடிய சுந்தரத்தினின் மலர் மாலைகள் நிரப்பி
இடியின் மிக்கு அதிர் முரசுகள் எடுத்தெடுத்து ஏற்றி
படி அளந்திடும் தெரு தலை-தொறுந்தொறும் படர்ந்தார்

மேல்
$3.15.69

#3109
எடுத்த பேரொலி முரசொடும் ஒட்டகத்து இருந்து
பிடித்த நல் மறை தீனொடு பெரும் துனி யாவும்
முடித்த நல் வழி தொழுகையின் விழி வழி முயன்று
தொடுத்து நாள்-தொறும் வாழ்க என்று இனையன துதித்தே

மேல்
$3.15.70

#3110
இறையவன் திரு புலிக்கு நம் நபி இளம் கொடிக்கு
மறு இலா திரு மங்கல சோபன வசனம்
செறியும் பேரெழில் ததும்பிய திரு நகர் மதீனத்து
அறிவர் ஆடவர் யாவரும் அறிக என்று அறைவார்

மேல்
$3.15.71

#3111
கனம் தரும் கொடை முகம்மதை கவின் அலி புலியை
சினந்த வேல் விழி பாத்திமா எனும் செழும் குயிலை
நினைந்த கவ்வைகள் எவ்வையும் தனி நிறைவேற
மனம்-தனில் தினம் புகழொடும் உவப்பு வைத்திடு-மின்

மேல்
$3.15.72

#3112
சுருதி நேர் தவறு இன்றி அஞ்சு ஒகுத்தினும் தொழு-மின்
வரிசை நல் நினைவொடும் சதக்கா வழங்கிடு-மின்
பெருகு நல்லறிவினர் துஆ பேறுகள் பெறு-மின்
தரையின் மீது உற வாழ்ந்து சலாமத்தும் பெறு-மின்

மேல்
$3.15.73

#3113
அருவி நல் நதி ஆடி நல் ஆடைகள் உடு-மின்
புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின்
சொரி கதிர் பணி பல களத்திடை சுமத்திடு-மின்
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின்

மேல்
$3.15.74

#3114
இலங்க முன்றில்கள்-தொறும் செழும் பூம் பந்தர் இடு-மின்
நலம் கொள் ஆடை விமானங்கள் தோரணம் நடு-மின்
விலங்கல் மாடங்கள்-வயின்வயின் கொடி விசித்திடு-மின்
பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின்

மேல்
$3.15.75

#3115
மதுர முக்கனி தேன் நெய் பால் தயிரொடும் வழங்கி
புது விருந்தினர்க்கு இடு-மின்கள் என பல போற்றி
முதிரும் நல் நகர் தெரு-தொறும் முகிலிடை முழங்கி
அதிரும் பேரொலி இடி என கடி முரசு அறைந்தார்

மேல்
$3.15.76

#3116
முரசு அறைந்து வள்ளுவர் தெருத்தலை-தொறும் மொழிந்த
உரை செவி புக நகரவர் பலரும் உள் உவந்து
வரை செய் மாடமும் கூடமும் மனைகளும் மறுகும்
விரை செயும்படி புதுக்கிட துணிந்தனர் விரைவின்

மேல்
$3.15.77

#3117
பொழிந்த பொன் பொறி சுணங்கு அலர் பூண் முலைக்கு அணிந்து
வழிந்த சந்தமும் கூந்தலில் கழித்து எறி மலரும்
அழுந்து கூடலில் ஊடலில் களைந்த பொன் அணியும்
எழும் துகள் படலம் தர வாரி நின்று எறிவார்

மேல்
$3.15.78

#3118
சிறு துளை கதிர் பொன் பலகணி நிரை செறிந்து
பிறையும் மங்குலும் உடுக்களும் செருகிட பிணங்கி
நிறையும் நெற்றிய மாடமும் நிவந்த மேனிலையும்
துறும ஊட்டு அகில் பழம் புகை களங்கு அற துடைப்பார்

மேல்
$3.15.79

#3119
தெரிந்த வெண் மணி நீற்றினை கரைத்து அற தெளித்து
பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்று பதைப்ப
விரிந்த பூம் குழலார்கள் கண்ணாடியின் விளங்க
இருந்த வாய்-தொறும் உரு தெரிதர மெழுகிடுவார்

மேல்
$3.15.80

#3120
மறம் கிடந்த செம் கதிரவன் கதிர்களும் மதியின்
பிறங்கி நீள்தரு கலைகளும் ஓர் இடம் பிரியாது
அறம் கிடந்த நல் நகர் மதிள்-தொறும் அணியணியா
இறங்கி எங்கணும் வழிந்து என கோலங்கள் இடுவார்

மேல்
$3.15.81

#3121
நெருங்கி சேந்த மென் விரல் என தளிர்களும் நீண்ட
கரும் கண் போல் செழும் குவளையும் முக கமலமும் போன்று
ஒருங்கு பூத்த செ வாய் என ஆம்பலும் ஒசியும்
மருங்குல் போல் சிறு கொடிகளும் எழுதுவர் மடவார்

மேல்
$3.15.82

#3122
சந்தன திரள் தருக்களை கவை உற தறித்து
பந்தி பந்தியின் நிறுவி ஒள் அகில் வளை பரப்பி
சிந்து வெண் கதிர் இரசித கிடுகுகள் செறித்து
மந்த மாருதம் உலவிட காவணம் வகுப்பார்

மேல்
$3.15.83

#3123
கழிகளில் பொதிந்து அகுமது நபி திரு கலிமா
எழுது சித்திர பொன் கொடி அணி நிரைத்திடுவார்
வழு இலாத பொன்_மலையின் விமானங்கள் வகுப்பார்
பொழுது போம் வழி இல் என தோரணம் புனைவார்

மேல்
$3.15.84

#3124
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி
பதிக மாதளை தாழை முள் புற கனி பனசம்
விதிரும் மென் தளிர் மா செழும் பழ கொழுவிஞ்சி
மதுரம் ஊறிய கனியொடும் தூண்-தொறும் வனைவார்

மேல்
$3.15.85

#3125
பிரசம் ஊறிய பல் மலர் தொகுதியின் பிறங்கி
விரி கதிர் பல திரள் மணி வடத்தினும் விலையின்
அரிய பொன் இழை துகிலினும் பல்பல அணியாய்
திரு நகர் புறம் எங்கணும் இயற்றினர் சிறப்ப

மேல்
$3.15.86

#3126
பூம் துணர் பசும் காயொடும் பழத்தினை பூகம்
சேர்ந்த பந்தரில் தென்றலின் உதிர்ப்பன திரட்டி
வாய்ந்த பொன்னையும் மரகத மணியையும் வாரி
ஈந்த மேலவர் போன்றன வீதிகள் எங்கும்

மேல்
$3.15.87

#3127
அரத்த ஆடையின் பசிய மென் துகில் தொடுத்து அணியா
நிரைத்திருப்பது மா மணி தூண்-தொறும் நெடு வான்
தரித்த கொண்டலின் இடம் விடுத்து இந்திரசாபம்
விரித்த பந்தரில் புகுந்து இருந்து என பல விளங்கும்

மேல்
$3.15.88

#3128
வெடித்த தாமரை மலரொடும் விரிந்த வெண் தாழை
தொடுத்து பந்தரில் துயல்வர தூக்கிய தோற்றம்
வடித்த நல் நறை அல்லியை இதழொடும் வாயின்
எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த

மேல்
$3.15.89

#3129
வேரி அம் செழு மலர்களும் தளிர்களும் விளங்க
சாரும் நல் கதிர் பல் மணி குலங்களும் தயங்க
கூரு மாந்தர் தம் மனத்தினின் நினைத்தவை கொடுப்ப
பாரில் கற்பக வனத்தை ஒத்து இருந்தன பந்தர்

மேல்
$3.15.90

#3130
தரள மா மணி அரும்பு இனம் ஈன்று தாரணியின்
பரிவு பெற்றிடும் பொன் இதழ் பல் மலர் பூத்து
மரகத செழு மணி திரள் காய் குலை வளர்த்து
புருடராகங்கள் பழுத்தன போன்றன பந்தர்

மேல்
$3.15.91

#3131
காத்திர முசல நீள் கை கட கரி குலமும் மாவும்
பூ துணர் பொதுளும் மாந்தர் தொகுதியும் எதிரில் போதல்
வாய்த்த மெல்லிழையார் தீற்று மணி ஒளி மறுகு-தோறும்
சூத்திர பாவை போன்றும் வயின்வயின் துலங்கும் அன்றே

மேல்
$3.15.92

#3132
புது மலர் தார்கள் நாற்றி பூம் துகில் கொடிகள் சேர்த்தி
கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி
விதிர் இள நிலவு கான்ற மேனிலை மாடம் யாவும்
வதுவையின் புதுமை நோக்க மலைகள் வந்து இருந்தது ஒத்த

மேல்
$3.15.93

#3133
சீத சந்து இந்துகாந்த நீரினில் தேய்வை பன்னீர்
ஆதி மான்மதம் கற்பூரம் அளறு எழ கலக்கி வாரி
வீதியும் மதிளும் மாட வாயிலும் தெளித்து வீச
கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம்

மேல்
$3.15.94

#3134
சொரிந்த பூம் குழல் மதி நுதல் கயல் விழி துவர் வாய்
முரிந்ததோ எனும் மருங்கினர் முருகு கொப்பிளிப்ப
விரிந்த சந்து அகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கி
பரந்து போர்வையின் மூடின நீள் பெரும் பதியை

மேல்
$3.15.95

#3135
அங்கராகமும் வரி அளி மலரிடை அறு_கால்
தங்கி வீழ்தரு துகளும் குங்கும செழும் தாதும்
எங்கணும் பரந்து இரு நிலம் தெரிகிலாது இருத்தல்
பொங்கு பொன்_நிலம் வதுவையில் சமைத்தன போலும்

மேல்
$3.15.96

#3136
குதித்த தேன் குழல் மடந்தையர் ஆடவர் குழுமி
பதி தெரு-தொறும் கலவையில் சேறுகள் படுத்தி
விதித்த காரண வதுவையின் மண விதை விதைத்து
மதித்திடும் பெரும் சிறப்பு எனும் பயிரினை வளர்த்தார்

மேல்
$3.15.97

#3137
சிந்து செம் கதிர் மணி தெளித்து எழுது சித்திரத்தின்
கந்த மான்மதம் கமழ்தலின் கதலிகை வனத்தின்
விந்தை விந்தை செய் தோரண தொகுதியின் வியப்பின்
அந்த மால் நகர் அல்லன போன்று இருந்ததுவே

மேல்
$3.15.98

#3138
மின் இனம் திரு வில்லொடும் முகிலொடும் விரைவில்
பொன் அம் தாமரை வாவியில் புகுந்து என புகுந்து
மன்னு வில் புருவ கரும் குழல் கொடி மருங்கார்
இன் நலம் தர மூழ்குவர் ஆடுவர் எங்கும்

மேல்
$3.15.99

#3139
இலகு பொன்னொடு வெள்ளி வெண் பானைகள் ஏற்றி
நிலவு கான்று எனும் பாலினில் வால் அரி நிறைத்து இ
உலகில் நூன்முறை அடு தொழில் புது மணம் ஊட்டி
அலகிலா பெரு நகர்-தொறும் அமலைகள் அடுவார்

மேல்
$3.15.100

#3140
கனியினும் செழும் காயினும் பூவினும் கலவா
புனித நெய்யினில் வெண் மலர் கரிய பூம் குழலார்
சுனிதமாகி நல் பாகொடும் அறு சுவை தூங்க
இனிமை கூர்தர மணத்தொடும் கறி சமைத்திடுவார்

மேல்
$3.15.101

#3141
தேன் அவாம் தொடை மடந்தையர் குழலினும் செருகி
நானம் ஆர் புய மாந்தர்கள் நாசியும் அமட்டி
தான மால் நகர் மேனிலை யாவையும் தடவி
வானம் மீதினும் கமழ்த்தின பொரி கறி வாசம்

மேல்
$3.15.102

#3142
நனி விருந்தினர்க்கு அன்புடன் எதிர் நடந்து அழைத்து
பனி மலர் செழும் பாயலின் இருத்தி மெய் பணிந்து
மினுமினென்ற முப்பழத்தினை தேனொடும் விரவி
இனிதின் ஊட்டுவர் வலிதினில் அடிக்கடி எவரும்

மேல்
$3.15.103

#3143
உலவு பூம் புகை பொன் குடம் கமழ்தர ஊட்டி
சொல அரும் தட தெளிதரு புது புனல் சொரிந்து
பொலன் நிறத்த குங்குமம் முதல் முடிந்து அதில் புகட்டி
இலகு வீதியின் முன்றில்கள்-தொறும் நிரைத்திடுவார்

மேல்
$3.15.104

#3144
மருங்குல் மின்னுக்கு மின்னு பொன் இழை துகில் வனைவார்
நெருங்கு பூண் முலை மலையின் மலைவுற நிரைப்பார்
கரும் குழற்கு அரும் குங்கும கண்ணிகள் புனைவார்
அரும் கரங்களில் அரம் கொளும் குருகு எடுத்து அணிவார்

மேல்
$3.15.105

#3145
மா வருக்கை இக்கு அரம்பை பூம் கமுகுடன் வனைந்த
காவகத்திடை மயில் என குயில் மொழி கனி வாய்
பூவை அன்னவர் கலவையும் பரிமள பொடியும்
தாவ எற்றுவர் ஒருவருக்கொருவரை சருவி

மேல்
$3.15.106

#3146
விரி சிகை கதிர் மணி வெயில் எறித்திட விடு பூ
சொருகு கூந்தலில் மாலைகள் துயல்வர துடி போல்
அருகு நுண் இடை ஒடிந்திடும் எனும்படிக்கு அசைய
திரு குரும்பைகள் ஆடுவர் வயின்வயின் சிறப்ப

மேல்
$3.15.107

#3147
பாடுவார் சிலர் குயில் என பாடலுக்கு எதிரின்
ஆடுவார் சிலர் மயில் என ஆடலுக்கு அழகாய்
கூடுவார் சிலர் கிளி என கூடலின் குறி கண்
மூடுவார் சிலர் விரிதரும் கமல மென் முகத்தார்

மேல்
$3.15.108

#3148
பூசுவார் சிலர் கலவையில் புது விரை கலக்கி
வீசுவார் சிலர் வீசலின் மெய் வழி வழிய
கூசுவார் சிலர் கூசுவது என் என குழைந்து
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார்

மேல்
$3.15.109

#3149
பொருவு இலா நகர் ஆடவர் அரிவையர் போற்ற
மரு மலர் புய முகம்மதை அலி-தமை வாழ்த்தி
கருதலர்க்கு அரி ஏறு எனும் காளையர் கூடி
தெரு எலாம் மண பைத்துகள் சொலிச்சொலி திரிவார்

மேல்
$3.15.110

#3150
புகர் இல் நல் நிரியாசங்கள் முதலிய புகைத்து
பகரு நல் மறை முதியவர் பலபல திரளா
நகரம் எங்கணும் வேதங்கள் ஓதிய நாதம்
மகர வாருதி திரை ஒலி கலிப்பினை மலைக்கும்

மேல்
$3.15.111

#3151
கலிக்கும் மா மறை முதல்வன் நிக்காகினை கருதி
அலிக்கும் பாவைக்கும் முடித்திட அகுமது மகிழ
சிலை வீரர்கள் நகரத்தின் இயற்றிய சிறப்பை
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார்

மேல்
$3.15.112

#3152
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க
திரை மணி கொழிக்கும் வாவி சூழ் மதீன திரு நகர் சிறப்பு இயற்றிய பின்
தரு எனும் நபியும் மூவரும் பெருகு சதுமறை தலைவரும் திரண்டு
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார்

மேல்
$3.15.113

#3153
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர்
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி
செருகிய நீல கதிர் குடியிருந்த சென்னியில் சொரிந்தனர் அன்றே

மேல்
$3.15.114

#3154
வெள்ளை மென் துகிலால் சிரசிடம் புலர்த்தி வில் உமிழ் மெய்யினும் விளக்கி
தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி
கொள்ளை வெண் தரளம் குவித்து என வீரம் புகழொடும் குடியிருந்து என்ன
ஒள்ளிய சவிகள் திரண்டு என சருவந்து ஒளிதர சென்னியில் தரித்தார்

மேல்
$3.15.115

#3155
பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம்
பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண்
வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப
ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே

மேல்
$3.15.116

#3156
மண்ணினில் குபிரர் குலம் கருவறுத்து வரும் உயிர் சுவையினை அறிய
எண்ணிலா விட பல் நாகத்தின் நா போல் இயற்றிய இரு பகு புடை வாள்
அண்ணலார் மருங்கில் எழில்தர இருத்தி அணி மணி உதரபந்தனமும்
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர்

மேல்
$3.15.117

#3157
மரகத வரையில் சந்தொடு மருவி வந்ததோ வளைந்த பைம் கடலில்
திரை-கொலோ அணிந்த சருவந்து கான்ற செவ்விகள் வழிந்து ஒழுகியதோ
பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில்
தரள வெண் மணியின் நிரைநிரை வடங்கள் தயங்கு ஒளி தர அணிந்ததுவே

மேல்
$3.15.118

#3158
வண்ண ஒண் புய பைம் கஞ்சுகியிடத்தின் வால் மணி தரள மாலிகையின்
வெண் நறை மலர் மாலிகை புனைந்து அரிய மான்மதம் விதிர்த்திடும் தோற்றம்
தண் நறும் பசும் கற்பக மலரிடையில் சாலிகள் துளித்திட ததைந்து
பண் இசை மிழற்றும் ஞிமிறு இனம் இருந்த பான்மை ஒத்திருந்தன மாதோ

மேல்
$3.15.119

#3159
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின்
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில்
கொம்பு அலர் மரவம் சந்தொடும் குழைத்து குளிர்தர திமிர்ந்து கை விரலில்
பம்பிய திரை வாருதியினில் பிறந்த பரு மணி ஆழியும் செறித்தார்

மேல்
$3.15.120

#3160
அலங்கரித்து அயினி சுழற்றி நூலவர்கட்கு அரு நிதி மணியொடும் வழங்கி
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த
துலங்கிய கவரி வெண் நிலா எறிய சுருதி வல்லவர் துஆ இரப்ப
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால்

மேல்
$3.15.121

#3161
மலர் அணை படுத்த துகிலின் மேல் நடந்து வானவர் மகளிர் ஏத்தெடுப்ப
சிலை வலர் அபித்தாலிபு மனைக்கு உரிய திரு நபி-தமை வளர்த்து வந்து
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப
இலகிய மடவார் குரவைகள் இயம்ப எழில் அலி வாசி மேல் கொண்டார்

மேல்
$3.15.122

#3162
பேரிகை திமிலை குடப்பறை தடாரி பீலி ஆர் திண்டிமம் முரசு ஓர்
பாரிச பதலை இட கை தட்டிய நீள் பணவம் வார் அணி தட மொந்தை
பூரிகை நவுரி காகளம் சின்னம் போர் வயிர் கொம்பு கைத்தாளம்
வாரியும் அலைப்ப பேரிடி மயங்க மண் அதிர்தர முழங்கினவால்

மேல்
$3.15.123

#3163
பரிதியின் கதிரால் மதியை ஏந்தின போல் பவள கால் வெண் குடை நிழற்ற
திரள்தரும் துவசம் வெளி அற செருக செம் மணி துகில் செய் ஆலவட்டம்
இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய
வரு படை நாப்பண் எறிந்த பாவாடை வானம் மின் என திசை மலிய

மேல்
$3.15.124

#3164
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க
திரள் பனை நெடும் கை துளை வழி திவலை தெரு திசை மழை என சிதற
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால்

மேல்
$3.15.125

#3165
மாருதம் மலைக்கும் விசையின இரு பால் மலிந்த பக்கரையின அதிர
பாரினை உடைக்கும் குளம்பின பொன் பூ பல நிரை கேச பந்தியின
போர் அடர் சீரா அணியின பாகர் புந்தியின் அமைந்தன பதினெண்
சாரிகை நடன புரவியின் கணங்கள் எண்ணில தலைமயங்கினவே

மேல்
$3.15.126

#3166
மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர
பிணித்த பொன் காந்தி உமிழ்தரும் கொடிகள் பெரும் துகள் படலங்கள் துடைப்ப
பணி தலை நெளிய தரைத்தலம் குழிய பரியொடும் திசை பறப்பன போல்
கணித்து உரைக்கு அடங்கா தெரு தலை நெருங்க கலித்த கோலாரி வண்டில்களே

மேல்
$3.15.127

#3167
பத்தியின் நெடும் பொன் சட்டகம் அமைத்து பரு வயிரம் பல பதித்து
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர்
சித்திர படம் மேல் விரித்து அணி அலர்கள் செறிதர மாலைகள் நாற்றி
வைத்த பொன் சிவிகை பலபல மருங்கும் சிறந்திட வீதியின் மலிந்த

மேல்
$3.15.128

#3168
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்க
ருடன் உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும்
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர்
இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால்

மேல்
$3.15.129

#3169
இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும்
பெயர்களும் அன்சாரிகள் எனும் வரிசை பேறு உடை தலைவர் மன்னவரும்
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து
முயலகன் மதியின் குடையொடு கொடியும் மொய்த்திட செறிந்தனர் அன்றே

மேல்
$3.15.130

#3170
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க
பரிசையும் மேக மின் என ஒளிரும் பட்டையத்தவர் ஒரு மருங்கும்
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க
அரசரும் சூழ அலி எனும் அரி ஏறு ஆடல் அம் பரி நடத்தினரால்

மேல்
$3.15.131

#3171
ஆரண கிழவர் பேர் உடை தலைவர் ஆடவர் காளையர் சிறுவர்
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர்
ஊரினில் இருந்த நாற்குலத்தவர் மேல் உரிமையர் தொழும்பின் உள்ளவரும்
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார்

மேல்
$3.15.132

#3172
பத சிலம்பு அலம்ப சூழ்ந்த பைம் பொன் மேகலைகள் ஆர்ப்ப
கத களி கரியின் கோட்டு கதிர் முலை பணிகள் மின்ன
புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார்

மேல்
$3.15.133

#3173
ஆடல் அம் பரிக்கு வேந்தர் அலி வரும் பவனி வேலை
ஊடு உறை அமுதம்-தானோ அமுதத்தின் வேர் விட்டு ஓடி
கூடுறும் பவள செவ்வி கொடி கிளைத்ததுவோ என்ன
ஏடு அவிழ் மலர் பூம் கூந்தல் இலங்கு இழையவர்கள் மொய்த்தார்

மேல்
$3.15.134

#3174
கண் எனும் கயல்கள் தாவ களம் எனும் சங்கம் ஆர்ப்ப
வெண் நகை தரளம் நக்க விரி இதழ் பவளம் மின்ன
ஒள் நிற பசலை கால ஒளிர் நுரை மாலை சிந்த
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே

மேல்
$3.15.135

#3175
சவி விரல் தளிர்கள் ஈன்று தண் நகை அரும்பு பம்பி
திவள் ஒளி வதனம் பூத்து தேன் அளி முரல மாதர்
குவி பெரும் தானை நாப்பண் கூண்டவை அலி என்று ஓதும்
பவனியின் தருவை நோக்கி பல கொடி படர்ந்தது ஒத்த

மேல்
$3.15.136

#3176
நிறை மணி குயிற்றும் பொன் மேனிலை-வயின் நெருங்கும் மாதர்
அறை சிலம்பு அலம்ப செம் சீறடி நிலம் தோயாதாலும்
நறை மலர் புலராதாலும் நாட்டங்கள் இமையாதாலும்
மறை முதலவன் பொன்_நாட்டு மங்கையர் போல நின்றார்

மேல்
$3.15.137

#3177
முறைமையின் அணிய நின்றார் வதுவையின் முழக்கம் கேட்டு
பொறை பொரு தனத்தில் சூட்டும் பொன் அணி ஒரு கை ஏந்தி
கறை அளி முரலும் கூந்தல் கண்ணி ஓர் கையில் ஏந்தி
திறையிடுபவர்கள் போல சிலர் தெரு தலையின் வந்தார்

மேல்
$3.15.138

#3178
அல் எனும் கூந்தல் கையால் அடிக்கடி முடித்து வாய்த்தது
இல் என மறுத்து நெற்றி திலகம் தொட்டு இயற்றும் போழ்தில்
கல்லெனும் ஓதை கேட்டு கடுப்பினில் கை கண்ணாடி
ஒல்லையின் எறிந்து நாணி சிலர் ஒளித்து ஒருங்கு நின்றார்

மேல்
$3.15.139

#3179
விள்ள அரும் செக்கர் வான் போல் விரிதரும் கலைகள் வீக்கி
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி
வள்ளல்-தன் அழகை கண்ணால் பருகிய மாதராக
துள்ளு உறும் காம தீ மேல் ஒளிர்வது போல நின்றார்

மேல்
$3.15.140

#3180
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண்
சுடர் கதிரவனை ஒப்ப தோன்றிய அலி-தம் செவ்வி
தட புது புனலில் நஞ்சம் தரும் விழி கயல்கள் போக்கி
எடுத்து அணி வளையும் வீழ்த்தி சிலர் இடரிடைப்பட்டாரால்

மேல்
$3.15.141

#3181
சிற்றிடை ஒசிய சோதி சிறு நுதல் வெயர்ப்ப வாய்ந்த
முற்று இழை முலைகள் விம்ம முருகு அயின்று அளிகள் ஆர்ப்ப
வெற்றி வாள் அலி என்று ஓதும் வேந்தர்_கோன் பவனி போந்து
பொன் தொடி காந்தள் செம் கை மடந்தையர் புகலலுற்றார்

மேல்
$3.15.142

#3182
மா இரு ஞாலம் போற்றும் மன் அபித்தாலிபு ஈன்ற
சேய் அலி மெய்யின் வாய்ந்த திரு வடிவு அழகை நோக்கி
பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து
ஆயிரம் கண்கள் வேணும் என சிலர் அறிவில் சொல்வார்

மேல்
$3.15.143

#3183
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும்
அவிர் கதிர் வடி வாள் செம் கை அலி திருமணம் என்று ஓதும்
கவின் உறும் கனக_நாட்டு காட்சியை பாத்திமாவால்
அவனியின் மாந்தர் காண அரும் பலன் கிடைத்தது என்பார்

மேல்
$3.15.144

#3184
வரம் உறும் சுவன மாதர் மலர் அடி பரவி போற்ற
அரசு வீற்றிருக்கும் செவ்வி அணி விழா காணப்பெற்றோம்
கரு முகில் கவிகை வள்ளல் கனக_நாடு-அதனின் நாளை
வரு பவனியும் யாம் காண்போம் என சிலர் மவுலுவாரால்

மேல்
$3.15.145

#3185
பேரொளி அழகு வாய்ந்த பெண்ணினை மணப்ப பூவின்
ஆர் எழிலவர் என்று எண்ணியிருந்தனம் இவரை நோக்கின்
சீர் அணி பெறும் அ மங்கை செவ்விக்கு செவ்வி தூயோன்
பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார்

மேல்
$3.15.146

#3186
அரு மறை மணத்த வாயும் அருள் அடைகிடந்த கண்ணும்
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும்
தரு என சிவந்த கையும் தாமரை தாளும் வாய்ப்ப
பெருகிய அழகை எல்லாம் ஒருத்தியோ பெறுவள் என்பார்

மேல்
$3.15.147

#3187
வீதியின் அழகோ வந்த வேந்தர்_கோன் அழகோ சூழ்ந்த
மா தவர் அழகோ யாது பெரிது என மதித்து சொல்வார்
ஆதி-தன் தூதர் ஈன்ற அரிவை-தம் மணத்தின் கோலம்
பேதம் ஒன்று இன்றி காணப்பெற்றதே அழகு என்பாரால்

மேல்
$3.15.148

#3188
எயிறுகள் நிறையா மார்பின் இள முலை முளையா கண்கள்
அயில் என வரிகள் சேரா அளகமும் முடியில் கூடா
தொயில் வரை மெய்யில் பூழ்தி பூத்ததும் துடையா காம
பயிர் என தோன்றும் பேதை பருவத்தின் ஒருத்தி வந்தாள்

மேல்
$3.15.149

#3189
கனை கடல் படையும் நீண்ட கவிகையும் கொடியும் சூழ்ந்த
வனை கழல் அரசர் நாப்பண் வரும் திறல் அலியும் நோக்கி
புனை மணி பரியின் மீது புரவலரிடத்தில் கூட
எனையும் வைத்திடு-மின் என்ன இரு விழி பிசைந்து நின்றாள்

மேல்
$3.15.150

#3190
ககனமும் புவியும் போற்றும் காவலன் புலியை செவ்வி
அகுமதின் மருகரான அலி எனும் அரசை ஆக
மகிழ்வுற பரித்தல் செய்யும் வாசி மேல் இருத்தல் நம்மால்
தகுவது அன்று என்று சாற்றி தாயர்கள் அணைத்து போனார்

மேல்
$3.15.151

#3191
கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள்
குரும்பையின் முலையாள் மாயம் கொலை களவு என்ப சற்றே
அரும்பிய விழியை போலும் அகத்தினள் அமலை மாறா
பெரும் படை பவனி நோக்கி பெதும்பை என்று ஒருத்தி வந்தாள்

மேல்
$3.15.152

#3192
பருந்து எழும் கதிர் வாள் வள்ளல் பதும மென் முகத்தை நோக்கி
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களிப்புற நாணின் மூடி
தெரிந்து ஒரு வடத்தை ஏந்தி சேவகர் மார்பில் பூட்டி
இருந்ததில் இவையும் பூட்டு என்று ஒருத்தியோடு இசைத்து நின்றாள்

மேல்
$3.15.153

#3193
புத்து அமுது உகளும் வாயும் புது மதி முகமும் சேர்ந்த
கொத்து அலர் குழலும் செம்பொன் குவி முலை சுணங்கும் நூலின்
எய்த்த சிற்றிடையும் காந்தி வளை நிரைத்து எடுத்த கையின்
வைத்து ஒரு கிளியும் ஏந்தி மங்கையள் ஒருத்தி வந்தாள்

மேல்
$3.15.154

#3194
வள்ளல்-தன் வதனம் நோக்கி மதி மயக்குற்று காமம்
உள் உறும் தீயால் முத்தம் சுடச்சுட ஒருங்கு சிந்தி
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது
எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள்

மேல்
$3.15.155

#3195
வார் அறுத்து எழுந்து வீங்கும் வன முலை பூணும் சாந்தும்
கூர் அயில் பொருது நீண்ட கொடி வரி விழியின் மையும்
கார் என திரண்ட கூந்தல் காட்டினில் வரி வண்டு ஆர்ப்ப
பேரணி மடந்தை என்னும் பெண் கொடி ஒருத்தி வந்தாள்

மேல்
$3.15.156

#3196
வாங்கு வில் தட கை வேந்தர் வாள் அலி வதனம் நோக்கி
பூம்_கொடி வருந்தி நெஞ்சத்து அறிவு எலாம் துயரம் போர்ப்ப
கோங்கு இள முலையின் செம்பொன் கொடி என என்னை சூழ்ந்த
பாங்கியர் எங்கே என்ன பாங்கியர்-தம்மை கேட்டாள்

மேல்
$3.15.157

#3197
காழ் தட களிறு சூழ வந்த காவலரை நோக்கி
வீழ்த்தனள் அறிவை நாண விருப்பினால் மெல்லமெல்ல
ஈழ்த்தனள் வாராதாலோ என்னையோ பாலில் சூழ்ந்து
வாழ்த்தி நின்றவரை எல்லாம் வைதுகொண்டு அரிவை நின்றாள்

மேல்
$3.15.158

#3198
பெரும் படை தலைவர் சூழ வரும் பிரான் வதனம் நோக்கி
அரும்பிய துயர வெள்ளம் அடிக்கடி பெருகலாலே
வரம் பெறு நாணும் போக்கி மதி மயக்குற்று இ வள்ளல்
திரும்பலில் சொல்வேன் என்ன சினந்து ஒரு தெரிவை போனாள்

மேல்
$3.15.159

#3199
குலிகம் ஆர் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து
மலி தரும் தொடையல் சிந்த வடகங்கள் துயல நோக்கி
அலியினை சேரா மாதர் அலி என இருத்தல் நன்று என்று
ஒலிதர உரைத்து செவ்வி ஒழுகு பேரிளம்பெண் போனாள்

மேல்
$3.15.160

#3200
எய்த்த நுண்ணிடையீர் வேந்தர் ஏறு அலி அகலாது என்-தன்
மை தடம் கண்ணுள் ஆனார் மறுகினில் மறுகி நீவிர்
கொத்து அலர் தூற்றி வாழ்த்தி கூண்டவை குறிக்கில் பேதை
புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள்

மேல்
$3.15.161

#3201
சொரி நிலா கவிகை நீழல் சுடரவன் கடுப்ப தோன்றும்
அரச கேசரியை நோக்கி அழகு எலாம் விழியால் உண்டு
வரு துயர் வெறியின் மீறி வாய் இதழ் வெளிற கண் சேந்து
இருள் குழல் மாலை சோர இதயம் நொந்து ஒருத்தி போனாள்

மேல்
$3.15.162

#3202
இன்னன மடவார் கூறி இதயம் நெக்குருகும் காலை
பின்னிய கொடியும் வீசும் கவரியும் பிறங்க தாங்கும்
பன்னகம் வருந்த தூளி படலம் ஏழ் கடலும் தூர்ப்ப
மன்னவர் அலியுல்லாவும் மற்று ஒரு மறுகு சார்ந்தார்

மேல்
$3.15.163

#3203
பல்லியம் முகிலின் ஆர்ப்ப பரி குழாம் பரந்து பொங்க
செல் உறழ் கரட கைமா தெரு-தொறும் மலிய மாறா
நல் இயல் மறையோர் போற்ற நடன வாம் பரியின் மீது
வல்லியம் அலியுல்லாவும் வானவர் வாழ்த்த போந்தார்

மேல்
$3.15.164

#3204
நரர் புலி அலியார் வந்தார் நபி திரு மருகர் வந்தார்
அரி அபித்தாலிபு ஈன்ற ஆணின் அழகர் வந்தார்
பரி வலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார்
திரு உலா என்ன போற்றி திரு சின்னம் இயம்பிற்று அன்றே

மேல்
$3.15.165

#3205
கள் அவிழ் மரவ மாலை காளையர் பலரும் போற்ற
பள்ளியின் வாயல் புக்கி பாத்திகா இனிதின் ஓதி
அள்ளு இலை வேல் கண் பாத்திமா எனும் அழகு வாய்ந்த
தெள்ளு தேன் அமுதம் அன்னார் திருமண பந்தர் வந்தார்

மேல்
$3.15.166

#3206
அரம் பொரும் வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்ப
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப
முரசுடன் நௌரி கொம்பு விண் முகடு உடைத்து பொங்க
புரவலர் அலியுல்லாவும் புரவி விட்டு இறங்கினாரால்

மேல்
$3.15.167

#3207
அடி மிசை பனிநீர் சிந்தி அம் பொன் மென் துகிலால் நீவ
வடி மறையவர்கள் வாழ்த்த வானவர் ஆமீன் கூற
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி
இடு சுடர் தவிசின் மீதில் அலி இனிது இருந்தார் அன்றே

மேல்
$3.15.168

#3208
அலங்கலும் பணியும் சாந்தும் ஆடக துயிலும் ஏந்தி
சிலம்புகள் சிலம்ப பைம் பொன் சே_இழையவர்கள் கூடி
கலன் கதிர் எறிப்ப வேத_காரணர் மனைவியாக
பலன் பெறும் கதீஜா ஈன்ற பாத்திமா இடத்தில் புக்கார்

மேல்
$3.15.169

#3209
இறையவன் தூதர் ஈன்ற இரு விழி மணியை சோதி
மறைபடா விளக்கை சேணின் வானிடத்து உறையா மின்னை
கறைபடா மதியை நாளும் கவின் குடியிருந்த கொம்பை
பொறை என வளர்ந்த கற்பை பூம் புனலாட்டினாரால்

மேல்
$3.15.170

#3210
மின்னை வெண் சோதி சுற்றி கிடந்து அன துகிலை வீக்கி
பன்ன அரும் கரு மேகத்தின் வெண் முகில் படர்ந்த போல
நல் நெடும் கூந்தல் காட்டின் நறும் புகை கமழ ஊட்டி
தென் உலா மணியின் சோதி சீப்பிட்டு சிறப்பிட்டாரால்

மேல்
$3.15.171

#3211
முக மதிக்கு இடைந்து சுற்றி மூதிருள் படலம் யாவும்
புகும் இடம் இது என்று ஓதும் புரி குழல்-அதனில் சாந்தும்
தகரமும் விரவி வெண் பூ தனித்தனி சிதறி வாய்ந்த
சிகழிகை முடித்து வாச செழு மலர் தொடையல் வேய்ந்தார்

மேல்
$3.15.172

#3212
நுதல் பிறை கதிர்கள் ஓடி மேகத்தில் நுளைந்தது என்ன
புது கதிர் தரள சுட்டி புனைந்து மேல் சாத்தும் சாத்தி
கதத்து அடல் படை வாள் வள்ளல் கவின் நறா பருக நாளும்
மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால்

மேல்
$3.15.173

#3213
மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி
மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும்
சுடர் பிறை வடத்தை சூடி சொரி கதிர் வடங்கள் சேர்த்து
கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார்

மேல்
$3.15.174

#3214
ககனமும் புவியும் இல்லா கவின் பழுது ஒழுகும் கையின்
மகிதல முழுதும் விற்கும் வச்சிர கடகம் பூட்டி
பகிர் ஒளி காந்தள் அம் கை விரல் எனும் பவள கொப்பின்
முகிழ் அலர் பூத்தது என்ன முத்து மோதிரங்கள் இட்டார்

மேல்
$3.15.175

#3215
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம்
செதுக்கி பொன் இழையில் கோத்த வடத்தொடும் சேர்வையாக்கி
கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி
புது குடியிருந்தது என்ன பொருந்து மேகலையும் சேர்த்தார்

மேல்
$3.15.176

#3216
வடி நறா வனச போதும் மா இளம் தளிரும் ஒவ்வா
வடி மிசை ஊட்டும் பஞ்சின் நலத்தக மலர்த்தி நாளும்
பிடி இன நடையை கற்பான் பெட்புறும் பதத்தில் செம்பொன்
சுடர் மணி சதங்கை தண்டை பாடகம் சூட்டினாரால்

மேல்
$3.15.177

#3217
பொன்னினும் மணியினாலும் பூம் தொடை கற்றையாலும்
மின்னினை மறைத்து சற்றே வெளியிடை கிடந்தது எல்லாம்
துன்னிய களப சேற்றால் தடவி மெய் துலங்க செய்து
கன்னியர் சூழ்ந்து வாழ்த்தி கண்ணெச்சில் கழித்திட்டாரால்

மேல்
$3.15.178

#3218
மரகத சுடரை சேந்த மாணிக்க கொழுந்தை பூவில்
பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா
பரகதி பேறை வாழ்வை பாத்திமா என்னும் அந்த
அரசு இளம் குயிலை பூவின் அணை மிசை நடத்தினாரால்

மேல்
$3.15.179

#3219
அணி கலம் கலவை செப்பு கோடிகம் அடைப்பை ஏந்தி
பிணைக்கு அரும் கண்ணார் சூழ பிறங்கு சாமரைகள் தூங்க
கணிப்பிலா துஆவும் ஆமீன் எனும் சொலும் கடல் போல் ஆர்ப்ப
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார்

மேல்
$3.15.180

#3220
வந்த பொன்_மயிலை இன்ப மறை நபி என்னும் வள்ளல்
சிந்தையும் கண்ணும் ஆர செழும் களி பெருகி ஓட
சுந்தர அருவி மாறா சுடர் வரையிடத்தில் தோன்ற
அந்தரத்து இழிந்த மின் போல் அலியிடத்து இருத்தினாரால்

மேல்
$3.15.181

#3221
மலி பொலன்_கிரியில் சோதி மணியினை இருத்தல் போல
அலியிடத்து இருத்தும் பாவை அழகு கண்டு உவந்து மேலோர்
ஒலி கடல் கிளர்ந்தது என்ன உற்றவர் எவரும் சூழ்ந்து
பலனுற வாழ்த்தி வாழ்த்தி பாத்திகா ஓதும் காலை

மேல்
$3.15.182

#3222
மெய் ஒளி பரப்பும் சோதி விரி சிறை ஒடுக்கி யார்க்கும்
துய்யவன் அருளின் மேன்மை ஜிபுறயீல் என்னும் தோன்றல்
உய்யும் மா நிலத்தின் மாந்தர்க்கு உற்றது ஓர் உவகை கொண்டு
வையகம் விளங்கும் தீனின் முகம்மதினிடத்தில் வந்தார்

மேல்
$3.15.183

#3223
தரு முகம்மதுவுக்கு இன்ப சலாம் எடுத்து உரைத்து மேலாம்
பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற
வரிசையும் வானோர் வாழ்த்தும் மகிழ்ச்சியின் கூறுலீன்கள்
பெருகும் ஆநந்தத்து உற்ற பெற்றியும் கூறுவாரால்

மேல்
$3.15.184

#3224
இற்றையின் இரவில் சோதி இலங்கிய சுவன நாடு
முற்றினும் சிறப்பித்து அன்பாய் முறைமுறை வானோர் யாரும்
வெற்றி வாள் அலிக்கும் செவ்வி விளங்கு_இழை-தமக்கும் திட்டி
சுற்றி விட்டு எறியும் என்ன துய்யவன் உரைத்தான்-மன்னோ

மேல்
$3.15.185

#3225
வல்லவன் உரை மறாமல் எண்ணில் வானவர்கள் கூண்டு
சொல்ல அரும் சுவன நாட்டு சுடர் மணி மனைகள்-தோறும்
பல்லவ துணர் பைம் காவும் வீதியும் பல்பல் கோடி
எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால்

மேல்
$3.15.186

#3226
வானவர் மகளிர் எல்லா மணவினை கோலம் செய்து
தானவன் பெயரின் வண்ண பயித்தொடும் சலவாத்து ஓதி
பானமும் கனியும் கொண்டு பல் மணி ஊசல் ஏறி
தீனவர்-தமையும் வாழ்த்தி செறிந்தனர் விண்ணின் அம்மா

மேல்
$3.15.187

#3227
மறை மொழி கலிமா தீட்டும் வாயில் மாளிகையின் உள்ளுள்
அறை-தொறும் திறந்து வன்ன பேத பட்டாடை கோடி
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி
நறை மலர் தொடையும் வாய்ப்ப நல் மணி கரத்தில் கொண்டார்

மேல்
$3.15.188

#3228
மூதிருள் கடியும் காந்தி சிதுறத்துல் முன்தகா என்று
ஓதிய தருவின்-பாலில் உயர் அலி பெயரும் பாத்தி
மா திரு பெயரும் கூறி வானவர் கரங்கள் ஆர
சோதி நின்று எறிய திட்டி சுற்றி நின்று எறிந்திட்டாரால்

மேல்
$3.15.189

#3229
புது நறும் பனிநீர் சந்தம் புழுகு மான்மதம் கற்பூரம்
மது விரிந்து ஒழுகும் பொன் பூ வானவர் மகளிர் ஏந்தி
கதிர் மணி கதீஜா ஈன்ற கன்னியை அலியை போற்றி
விதமுற திசைகள்-தோறும் சிதறினர் விளங்க அன்றே

மேல்
$3.15.190

#3230
பெரும் தரு அடியில் திட்டிகழித்து எறி பிடவை எல்லாம்
அரும் தவம் உடைய வள்ளல் அகுமதே உமக்கு ஈமான் கொண்டு
இருந்து பின் கணவராக வருமவர்க்கு ஈவோம் என்ன
வருந்திலாது அமரர் மாதர் எடுத்து வைத்திருக்கின்றாரால்

மேல்
$3.15.191

#3231
நறை விரி கனக_நாட்டின் நடந்த சோபனங்கள் ஈது என்று
அறிவுற வானோர்_கோமான் உரைத்தனர் அதனை கேட்டு
மறை நபி களிப்பு ஆநந்த வாருதி-தன்னை மூழ்கி
இறையவன்-தன்னை போற்றி யாவர்க்கும் இயம்பினாரால்

மேல்
$3.15.192

#3232
அருள் அபூபக்கர் வெற்றி அடல் அரி உமறு கத்தாப்
தெருள் உறும் உதுமான் மற்ற செவ்வியோர் எவரும் கேட்டு
பெருகிய புதுமை என்ன பேர் அலி-தமையும் பெண்மை
அரசையும் பெரிது வாழ்த்தி அக களி பெருகி நின்றார்

மேல்
$3.15.193

#3233
முகம்மது நயினார் வாழ்த்த மற்ற மன்னவர்கள் வாழ்த்த
புகல அரும் கற்பின் மிக்க பூவையர் எவரும் வாழ்த்த
நகு மணி கொம்பு அனாரும் நரர் புலி அலியும் இன்ப
மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகினாரால்

மேல்
$3.15.194

#3234
இருவரும் மணவறை புக்கி இன்புற
பெருகிய மகிதலத்து உறைந்த பேரிருள்
வெருவுற திசைதிசை ஒளிப்ப வெவ்விய
பருதி வானவன் கதிர் பரப்ப தோன்றினான்

மேல்
$3.15.195

#3235
அடி திரை வளை மணி எறியும் ஆவி-வாய்
கடி மரை விரிதர விடிந்த காலையில்
படியினும் பெரும் பொறை பாத்திமா திரு
வடிவு உறும் புது மண கோல வாயிலின்

மேல்
$3.15.196

#3236
தடி உலர்ந்து உடல் நரம்பு எழுந்து தாங்கிலா
மிடியினன் பசி அடைத்திருக்கும் மெய்யினன்
பிடி விரல் உருவு இலா பீறல் ஆடையன்
கொடுகிய குளிரின் வந்து ஒருவன் கூயினான்

மேல்
$3.15.197

#3237
கூயவன் யாவன் என்று எழுந்து கோதையர்
நாயகி எதிர்ந்து பக்கீறை நன்குற
சாயிபு பத மலர் வருந்தத்தக்க என்
வாயிலின் வந்தது என் மவுலுவீர் என்றார்

மேல்
$3.15.198

#3238
கடி மனை இஃது என கருதி வந்தனன்
வடிவு உறு மயில் அனீர் வயிற்று உறும் பசி
கொடுமையும் தவிர்த்து உடல் குளிரும் நீங்க ஓர்
பிடவையும் அருள்க என்று எடுத்து பேசினான்

மேல்
$3.15.199

#3239
வறியவன் உரைத்த சொல் கேட்டு மா மயில்
அறுசுவை கறியுடன் அன்னம் ஈந்து மேல்
குறை அற இயற்றிய புது குப்பாயமும்
பெறுக என்று அளித்தனர் அறிவின் பெற்றியால்

மேல்
$3.15.200

#3240
இகல் அறு மனத்தவர் ஈந்த போசனம்
அகம் மகிழ்தர வயிறார உண்டு நல்
துகிலையும் ஒல்லையில் புனைந்து தோமறும்
புகழொடும் வாழ்த்தி பக்கீறு போயினான்

மேல்
$3.15.201

#3241
ஆதுலன் அகன்ற பின் ஆதி தூது எனும்
மா தவ முகம்மதும் மருவலார்-தமை
காது அபூபக்கரும் உமறும் கல்வியின்
ஏதம் இல் குணத்து உதுமானும் யார்களும்

மேல்
$3.15.202

#3242
இனையன பெயரும் வந்து எய்த நல் மலர்
புனைதரும் பாத்திமா என்னும் பூம்_கொடி
தனி எதிர் எழுந்து சலாம் என்று ஓதினார்
அனைவரும் மறுமொழி கொடுத்து அன்புற்றனர்

மேல்
$3.15.203

#3243
மணி ஒளி முகம்மது மகவை நோக்கி நன்கு
இணை மணி பணியொடும் புதியது இன்றியே
பணிமொழியீர் ஒரு பழம் குப்பாயத்தை
அணிவது என் எமக்கு எடுத்து அருளுவீர் என்றார்

மேல்
$3.15.204

#3244
தந்தையீர் துகில் இலா சஞ்சலத்தினால்
வந்தனன் ஒரு பக்கீர் வழங்கினேன் என
இந்து எனும் நுதலியர் இயம்ப செவ்விய
மந்தர புய நபி மறுத்து கூறுவார்

மேல்
$3.15.205

#3245
இரவலரிடத்தினில் பழையது ஈந்து நல்
புரி இழை மென் துகில் புது குப்பாயத்தை
மரு மண கோலத்தின் வனைய வேண்டும் என்று
உரைதர மறுமொழி உரைப்பது ஆயினார்

மேல்
$3.15.206

#3246
அழகியது எவையும் அல்லாவுக்காகவே
விழைவுடன் கொடுத்திடவேண்டும் என்று நும்
பழமறை வாக்கினால் பகர்ந்ததால் அரோ
மழை தவழ் கொடை அனீர் வழங்கினேன் என்றார்

மேல்
$3.15.207

#3247
பாத்திமா எனும் மயில் பகர கேட்டு அலர்
தே தரு புய நபி மகிழ்ந்த செய்கையால்
கோத்திரத்தவர் செழு முகங்கள் கோது அற
பூத்த செந்தாமரை காடு போன்றவே

மேல்
$3.15.208

#3248
ஆண்டகை அலி மனைக்கு அம்ம நின்னை யான்
கூண்டவருடனுமே கூட்டி செல்வதற்கு
ஈண்டு வந்து உறைந்தனன் என்ன யாவரும்
காண்டரும் காரணர் கழறினார் அரோ

மேல்
$3.15.209

#3249
தந்தையர் உரைதர தரும வீடு எனும்
சிந்தையில் களித்து ஒளிர் செவ்வி ஓங்கிய
இந்து எனும் நுதல் மனை இருந்த யாவையும்
மந்திர கிழவர் முன் வைத்து நின்றனர்

மேல்
$3.15.210

#3250
மாண் எழில் அரிய பீங்கானும் வார் தலை
காணியும் பாயலும் கதிர் கொள் வெள் வளை
பாணியில் திருகையும் பரமதானியும்
பூண்_இழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார்

மேல்
$3.15.211

#3251
வய வரி அலி திரு மனையில் சேறுதற்கு
உயர் மறை முகம்மதும் ஒளிர் செம் கையினால்
வியன் உறும் திருகையை ஏந்தினார் விறல்
இயல அபூபக்கரும் பாயை ஏந்தினார்

மேல்
$3.15.212

#3252
உற்றவர்க்கு உதவிய உமறு வெள் இழை
நல் தலையணையினை ஏந்தினார் உயர்
வெற்றி சேர் அடல் உதுமானும் மெய் மன
பற்றொடும் எடுத்தனர் பரமதானியே

மேல்
$3.15.213

#3253
கதிர் தரு பெரிய பீங்கானை கையினில்
மதி_வலர் எனும் உசாமா எடுத்தனர்
பதும மென் மலர் முக பாத்திமா பதம்
பொதிதரு கபுசுடன் புறப்பட்டார் அரோ

மேல்
$3.15.214

#3254
வல்லியம் எனும் அலி மனையின் வள்ளலார்
செல் எனும் ஒல்லையின் விரைவில் சேண் இழிந்து
எல்லவன் கதிரினும் ஜிபுறயீல் எழில்
முல்லை வெண் நகை மயில் முன்றில் நண்ணினார்

மேல்
$3.15.215

#3255
பர அரசு அரி அலி மனைக்கும் பாத்திமா
திருமண மனைக்கும் பாவாடை செய்து என
வரகதி ஜிபுறயீல் என்னும் வள்ளல் தம்
விரி கதிர் சிறையினை விரித்து நின்றனர்

மேல்
$3.15.216

#3256
மன்னவர் யாவரும் மருங்கு சூழ்வர
கன்னியும் தொடும் பத கபுசு-தன்னொடு
மின்னிய சிறை எனும் ஆடை மீதினில்
நல் நலம் கனிதர நடந்து போயினார்

மேல்
$3.15.217

#3257
மறை நபி மகள்-தமை அலி-தம் வாயிலில்
சிறையினில் நடத்துதல் செய்து வானவர்க்கு
இறை ககன் புகுந்தனர் யாரும் இன்புற
பொறையெனும் மனை-வயின் பொலிய வைகினார்

மேல்
$3.15.218

#3258
கொணர்ந்தவை யாவையும் கொடுத்து மன்னவர்
மணம் தரும் அலியையும் மயில் அன்னாரையும்
இணங்கிட போற்றி வாழ்த்தெடுத்து அ இல்லிடம்
தணந்து அவரவர் உறை சார்பில் சார்ந்தனர்

மேல்
$3.15.219

#3259
சலிலமும் சீரமும் தழீஇய தன்மை போல்
ஒலி கடல் புவியில் நீடூழி வாழ்க என
அலியையும் மகவையும் வாழ்த்தி அன்பொடு
மலி புகழ் முகம்மது மனை புக்கார் அரோ

மேல்
$3.15.220

#3260
சொல்லுடன் பொருள் என சுருதி நூல் முறை
இல் உறைந்து ஒருவருக்கொருவர் இன்பமுற்று
அல் எனும் கூந்தலும் அரசர் சீயமும்
மல்லல் அம் புவியிடை மகிழ்வின் வைகினார்

மேல்

16 சீபுல் பகுறுப் படலம்

$3.16.1

#3261
இறையவன் தூதரும் யார்கள் நால்வரும்
மறை வழி பெருக்கிய மன்னர் யாவரும்
நிறைதர இருக்கும் அ நாளில் நேரலர்
உறை பதியிடத்திருந்து ஒற்றர் உற்றனர்

மேல்
$3.16.2

#3262
கடற்கரை சீபுல் பகறு என்று ஓதிய
இடத்தினில் அபூஜகுலுடன் முன்னூறு இயல்
அடல் பரி கபடமாய் அடைந்தது இன்று என
மடல் துளை செவி புக வாழ்த்தி சொல்லினார்

மேல்
$3.16.3

#3263
ஒற்றர்கள் உரைத்தவை உணர்ந்து தீன் நிலை
வெற்றி சேர் வேந்தருக்கு உரைத்து வேறு கொள்
பற்றலர் எனும் இருள் பருகும் வெம் கதிர்
கொற்றவர் அடல் ஹமுசாவை கூவினார்

மேல்
$3.16.4

#3264
புடவியில் பறப்பன போலும் முப்பஃது
அடல் வய பரியுடன் அயில் வில் ஏந்திய
மிடல் உடை வீரர்கள் சிலரும் வெண்ணிலா
சுடர் விடு துவசமும் தொகுத்திட்டார் அரோ

மேல்
$3.16.5

#3265
வயிர் ஒலித்திட படை மன்னர் சூழ்வர
அயிலொடும் சென்று அவண் அடர்ந்து அபூஜகல்
செயும் அமர் வலி கெட செயித்து வம் என
உயிர் எனும் சிறியதந்தையருக்கு ஓதினார்

மேல்
$3.16.6

#3266
கருதலர் செகுத்து இவண் கடிதின் வம் என
அரசர்_நாயக நபி அளித்த வாசகம்
சிரசின் மேல் கொண்டு அமுசாவும் சேண் உலாய்
வரும் விசை பெரும் திறல் வாசி மேற்கொண்டார்

மேல்
$3.16.7

#3267
பரகதி படையொடும் படை குழாத்தொடும்
வரம் உறு முகம்மதை வாழ்த்தி வாள் மறா
கரதலர் எனும் ஹமுசா பெய் கார் முகில்
பொரு திரை கடற்கரை இடத்தில் போயினார்

மேல்
$3.16.8

#3268
உவமை இல் மிடல் ஹமுசா வந்து உற்றவை
அபுஜகல் அறிந்து அடல் பரியும் சேனையும்
குவிதர பொரும் அமர் கோலம்-தன்னொடும்
புவி துகள் எழ எதிர் புறப்பட்டான் அரோ

மேல்
$3.16.9

#3269
தவிசு உறை முகம்மதின் சிறியதந்தையும்
பவுரி கொள் கவன வெம் பரியும் வீரரும்
துவசமும் துலங்கிட சூழி மா கரி
அபுஜகல் வரும் இடத்து எதிர்வது ஆயினார்

மேல்
$3.16.10

#3270
இருவர்-தம் சேனையும் எதிரும் காலையில்
திருகு நெஞ்சு அபூஜகல் சேனை புக்கிருந்து
அரிதினில் தனித்த அமுசா என்று ஓதிய
மரு மலர் புயத்தினரிடத்தில் வந்தனன்

மேல்
$3.16.11

#3271
மறை நபி முகம்மதினிடத்தும் வன் குபிர்
செறுநர்களிடத்தினும் சேர்ந்த பண்பினன்
கறை கொள் வஞ்சகம் கபடு அடைந்த கல்பினன்
இறும் மொழி சூதினன் மசுதிய் என்பவன்

மேல்
$3.16.12

#3272
தரு-தனை உறழ் நபி சிறியதந்தையர்
கருத்தினுக்கு ஏற்பவை கபடம் தோன்றிலாது
இருத்தி நல் மொழியொடும் இசைவதாகவே
பொருத்தினன் தவிர்த்தனன் போரின் கோலமே

மேல்
$3.16.13

#3273
உள் உறை வஞ்சகத்து உறுதி கூறியே
தெள்ளியன் என எழுந்து அரிதில் சென்று பின்
அள்ளு இலை வேல் அபூஜகுலும் சேனையும்
புள்ளுவத்து அவர் தலம் புகுத்தி போயினான்

மேல்
$3.16.14

#3274
தட திரள் புயத்து அமுசாவும் தண்டு உறை
கடற்கரை சீபுல் பகுறுவை நீங்கி நீள்
கொடி திரளொடும் குரகதங்கள் முன் செல
அடல் படை கொடு மதினாவில் ஆயினார்

மேல்
$3.16.15

#3275
எறி திரை கடற்கரை இடத்தில் சென்றதும்
செறுநர் வந்து உற்றதும் மசுதி செய்கையும்
முறைமையின் முகம்மது முன்பு கூறினார்
சிறியதந்தையர் எனும் செவ்வி சீயமே

மேல்

17 புவாத்துப் படலம்

$3.17.1

#3276
சீபுல் பகுறு எனும் தலத்தின் செய்தியை
காவலர் முகம்மது அங்கு அறிந்து கல்வி சேர்
நாவலருடன் இனிது இருக்கும் நாளினில்
வேவு கொண்டு ஒருவர் வந்து இறைஞ்சி விள்ளுவார்

மேல்
$3.17.2

#3277
முன்னர் நம் முன் நலம் மொழிந்து அபூஜகல்-
தன்னுடன் பொருந்தி அங்கு அவனை தப்பவிட்டு
ஒன்னலர்-தமக்கு உயிர் உடலும் போன்றவன்
இன்னை நாள் புவாத்துவின் இருக்கின்றான் என்றார்

மேல்
$3.17.3

#3278
ஒற்றர் வந்து உரைத்தவை உணர்ந்து நம் நபி
நற்றவமுடைமையீர் நன்று நன்று நம்
வெற்றி சேர் யார்களும் பரியின் வீரரும்
இற்றையில் பகற்பொழுது எழுக என்றனர்

மேல்
$3.17.4

#3279
அகிலம் அன்புறும் மதினாவுக்கு ஆதியா
சகி மன சாயிவை தனியதாக வைத்து
இகல் படை கோலங்கள் இயற்றி யாவரும்
புகழ் நபி முகம்மது புறத்தில் ஆயினார்

மேல்
$3.17.5

#3280
அறை தவில் பேரிகை முரசும் ஆர்த்து எழ
முறைமுறை கொடி படை படர்ந்து முன் செல
சுறவு எனும் வீரரும் பரியும் துன்னவே
இறை நபி முகம்மதும் எழுந்து போயினார்

மேல்
$3.17.6

#3281
உண்ணு நீர் காவதம் உலவி தேடினும்
கண்ணினில் காண்பு அரிதான கானகம்
விண்ணினில் புது புனலன்றி வேறு ஒரு
மண்ணினில் கூவல் இலா புவாத்துவே

மேல்
$3.17.7

#3282
தொடர் அறும் கேண்மையின் மசுதிய் என்னும் அ
கொடியவன் உறைந்த புவாத்து கோட்டையை
சடிலமும் சேனையும் சதுரின் சுற்றிட
வடிவு உறு நபி அவண் வைகினார் அரோ

மேல்
$3.17.8

#3283
உய்யும் நல் மதியிலன் உறைந்த ஊரினை
வையகம் புகழ் நபி வளைந்த காலையில்
வெய்யவன் பூதலம் விளக்கி நீள் கதிர்
கையினை ஒடுக்கி மேல் கடல் புக்கான் அரோ

மேல்
$3.17.9

#3284
இரவினில் படை வளைந்து இருப்ப கீழ் திசை
விரிதர வெளுத்தது விரவில் நம் நபி
அரியவன் தொழ பஜிறு அடுத்த தீம் புனல்
தருக என்று உரைத்தனர் சாபிர்-தன்னையே

மேல்
$3.17.10

#3285
ஏடு அலம்பிய புய நபி இசைத்தலும்
மூடிய கடங்களும் துருத்தி மூட்டையும்
தேடினர் இல் என திசையும் பாடியும்
ஓடினர் நீர் உறை ஒருங்கு காண்கிலார்

மேல்
$3.17.11

#3286
மீண்டனர் சடுதியின் வேத_நாயக
கூண்ட இ பதி புறம் குறுகி எங்கணும்
காண்டிலன் நீர் என கழற நம் நபி
ஈண்டு நீர் துருத்தியை கொணர்-மின் என்றனர்

மேல்
$3.17.12

#3287
தருக எனும் உரைவழி சாபிறு ஒல்லையில்
பருகு நீர் அற்ற தோல் துருத்தி பையினை
திருமுனம் வைத்தனர் தொட்டு செவ்வியோர்
சுருதி மந்திரத்தினில் துஆ செய்தார் அரோ

மேல்
$3.17.13

#3288
மண் உறும் பாண்டம் ஒன்று எடுத்து வம் என
அண்ணலார் உரைத்தலும் ஓடி அவ்வயின்
தண் உறும் தொடை புய சாபிர் மன்னவர்
உள் நிறை களிப்பொடும் உவந்து வைத்தனர்

மேல்
$3.17.14

#3289
புது நறும் பானையின் வாயில் பொற்பு உற
பதும மென் கர விரல் பரப்பு மூடி நின்று
இதம் உறும் துருத்தியை எடுத்து கையின் மேல்
விதமுற கவிழ்த்து என விளம்பினார் அரோ

மேல்
$3.17.15

#3290
விடும் என உரைத்தலும் வெறும் துருத்தியை
கட நிறை விரலின் மேல் கவிழ்ப்ப உள் உறைந்
திடு துளி ஒன்றின் மேல் இன்றி வீழ்ந்தது
படும் இடம் நீர் எனும் பான்மை தோன்றவே

மேல்
$3.17.16

#3291
கையின் மேல் ஒரு துளி கான்ற போழ்தினின்
மெய் ஒளி முகம்மது பிசுமில் ஓதினர்
செய்ய மென் விரலிடை நான்கில் சேண் அதி
பெய்யும் நல் அருவி போல் பிறந்து எழுந்ததே

மேல்
$3.17.17

#3292
சுருதி வல்லவன் அருள் சுரந்த நம் நபி
விரலிடை நதி என பிறந்த வெள்ளத்தால்
பரல் அழல் பாலையை போக்கி பண்ணை சூழ்
மருத நல் நிலம் என வளம் உண்டாயதே

மேல்
$3.17.18

#3293
பரிகள் ஒட்டகம் சுமை பரித்த நந்திகள்
அரிதினில் குடித்து அரும் அயாவும் தீர்ந்தன
திரு நபி முகம்மதும் சேனை வீரரும்
வர நதியிடத்தினில் தொழுது வாழ்த்தினார்

மேல்
$3.17.19

#3294
இவ்வண்ணம் மூன்று நாள் இருக்கும் எல்வையின்
மை வண்ணத்து உள்ளத்து மசுதிய் என்பவன்
செவ்வியர் அறிகிலாது ஒளித்து தேட அரும்
கவ்வை செய் நெடி படு கானம் போயினான்

மேல்
$3.17.20

#3295
ஓங்கிய நெடும் கடத்து ஒளித்து போயினன்
ஈங்கு இருந்து என் பலன் என்ன நம் நபி
தாங்க அரும் புரவியும் தானை வீரரும்
வாங்கு-மின் என மதினாவில் வந்து உற்றார்

மேல்

18. அசீறாப் படலம்

$3.18.1

#3296
வானவர் பரவிய வள்ளல் நம் நபி
தீன் எனும் பெரும் பெயர் அரசுசெய்யும் நாள்
ஈனவன் குபிரவர் இயற்றும் செய்கையை
தான் அறிந்து ஒருவர் வந்து அவையில் சாற்றுவார்

மேல்
$3.18.2

#3297
வரை செறி மக்க மா நகரின் மாற்றலர்
திரகமும் மணிகளும் செம்பொன் ஆடையும்
தரளமும் மிகு விலை சரக்கும் தாங்கிய
பரிகளும் எருதும் ஒட்டகத்தின் பந்தியும்

மேல்
$3.18.3

#3298
காமரின் நிரைநிரை காவலாளரும்
மா மதி வல சில வணிக மாக்களும்
பூ மணம் செறிதரு பொழில்கள் சுற்றிய
ஷாமினுக்கு அனுப்பினர் சமயம் ஈது என்றார்

மேல்
$3.18.4

#3299
உற்று உளவு அறிந்த அ ஒற்றர் ஈது என
சொற்றவை செவி புக தூயன் தூதுவர்
வெற்றி கொள் வேலினர் வியப்ப இ மொழி
பெற்றனம் என தனி மறையின் பேசினார்

மேல்
$3.18.5

#3300
தலைவருக்கு இ மொழி சாற்றி வேத நூல்
மலிதரும் கேள்வி அபாசல்மா-தமை
பல வளம் கெழு மதினாவில் பண்புற
நிலைதர முதன்மையின் நிறுத்தினார் அரோ

மேல்
$3.18.6

#3301
விரி கதிர் வேலினர் வளைந்த வில்லினர்
கரிகை பட்டயம் மழு சுமந்த தோளினர்
பொருவு இல் நூற்றைம்பது புரவி-தம்மொடும்
வர நபி எழுந்தனர் அமரர் வாழ்த்தவே

மேல்
$3.18.7

#3302
அறை தவில் பம்பை தடாரி ஆர்த்து எழ
முறைமுறை காகள முழக்கம் ஓங்கிட
மறு அறும் வெண் கொடி உலவி வள்ளலார்
சிறியதந்தையர் முனம் செல்ல சென்றனர்

மேல்
$3.18.8

#3303
உள் அகம் களித்து அமுசா என்று ஓதிய
வள்ளல் வெண் கொடியுடன் மகிழ்ந்து முன் செல
புள்ளினும் நனி விசை புரவி சூழ்வர
கள் அவிழ் மலர் பொழில் கடந்து போயினார்

மேல்
$3.18.9

#3304
அடவியும் பாலையும் அருவி குன்றமும்
கட கரி வனங்களும் கடந்து போய் இகல்
படு கொலை மருவலர் நடத்தும் பாதையின்
இடன் அசீறா எனும் தலத்தின் எய்தினார்

மேல்
$3.18.10

#3305
வற்றுறா பெரும் புகழ் மக்க மா நகர்
பற்றலர் ஷாமினுக்கு ஏகும் பாதையில்
சுற்றினும் இறங்கின சுருதி வாசக
கொற்றவன் நபியொடும் படை குழாங்களே

மேல்
$3.18.11

#3306
இலகு அசீறாவினில் இரண்டு நாள் இருந்து
உலவிய ஒற்றரால் உணரும் ஒல்லையில்
பலபல திசையவர் படர்ந்து சாவியே
நலனுறு முகம்மது நபி முன் எய்தினார்

மேல்
$3.18.12

#3307
முதல்வ நம் படை வர மூன்று நாட்கு முன்
பொதி எருது ஒட்டகம் புடையில் பொங்கவே
நிதியொடும் போயின நிகரில் ஷாம் எனும்
பதியினுக்கு என பதம் பணிந்து சொல்லினார்

மேல்
$3.18.13

#3308
பர திசை திரிபவர் பகர கேட்டு அவண்
கர நதி தரு நபி இருக்கும் காலையில்
பெருகும் அ இடத்தவர் கூடி பெட்பு உற
மரை மலர் இணை பதம் வந்து நண்ணினார்

மேல்
$3.18.14

#3309
பேர் பனீ முத்லசு என்னும் பேருடன்
ஆர் பனீ லமுறத் என்பவரும் ஆண்டு உற
போர் அற தன்மையில் படுத்தி பொற்புடன்
தார் கெழும் புய நபி தருக்கின் மீண்டனர்

மேல்
$3.18.15

#3310
முரசமும் பேரியம் முழங்க தாவிய
பரிகளும் மன்னவர் பலரும் சூழ்வர
நரலையை நிகர் திரு நகரை நோக்கியே
வரும் வழியினில் ஒரு வசனம் கேட்டனர்

மேல்
$3.18.16

#3311
துறு மலர் பொழில் திகழ் மதீனம் சுற்றிய
சிறுகுடி பாடிகள் திடுக்குற்று ஏங்கிட
பெறு நிரை அனைத்தையும் பிடித்து தெவ்வரில்
குறுவு எனுமவன் கொடுபோயினான் என்றே

மேல்
$3.18.17

#3312
குரை கடல் என நிரை கொண்டு போயது ஓர்
தரு முகில் தவழ் சபுவான் என்று ஓங்கிய
வரை அடிவாரத்தை நோக்கி மால் நபி
பொருவு இல் வெம் படையொடும் போயினார் அரோ

மேல்
$3.18.18

#3313
இறையவன் உரை வழி இயற்றும் தூதுவர்
மறை முதிர் படையொடும் வருகின்றார் என
குறுசு எனும் அவன் நிரை குழுவும் ஊரும் விட்டு
உறைவது இல் என ஒளித்து ஓடினான் அரோ

மேல்
$3.18.19

#3314
வலன் உற வரும் சபுவான் எனும் பெரு
மலை அடிவாரத்தின் வந்து அ ஊரிடை
நிலை கொளும் நிரை எலாம் கொண்டு நீள் நபி
சிலை அயில் படையொடும் திரும்பினார் அரோ

மேல்
$3.18.20

#3315
கல் அடை திடரும் முள் காடும் கண் அறா
செல் அடை நெடு வரை திகரி சூழலும்
எல்லவன் கதிர் கிடந்து எரியும் பாலையும்
முல்லையும் கடந்து ஒரு பொழிலை முன்னினார்

மேல்
$3.18.21

#3316
சேந்தன செழும் கனி சிதற சிந்திய
ஈந்து அடர் பொழிலிடத்து இறங்கி நம் நபி
ஆய்ந்த நல் அறிவினர் அமச்சர் இன்புற
வாய்ந்தது ஓர் பத்திரம் வரைந்து கட்டினார்

மேல்
$3.18.22

#3317
அகில மன் அப்துல் முத்தலிபுக்கு அன்பு உறு
மகள்மகன் அப்துல்லா என்னும் மன்னரை
இகல் அறு மனத்தவர் இருத்தி முத்திரை
தகுதியில் பத்திரம் கொடுத்து சாற்றினார்

மேல்
$3.18.23

#3318
பாடி பத்துனு நகுலாவில் பாங்குற
கூடி அங்கு உறைந்து கை கொடுத்த பத்திரம்
மூடிய முத்திரை முறித்து பாசுரம்
சூடிய உரை வழி துணி-மின் என்றரோ

மேல்
$3.18.24

#3319
கண் என பிரிவு இல் முஹாஜிரீன்களில்
எண்மரை அவர் மொழிக்கு இணங்க சேர்த்து இனிது
உள் மகிழ்தர அவண் உறைகுவீர் என
மண்ணகம் புகழ் முகம்மது அனுப்பினார்

மேல்
$3.18.25

#3320
நாயகர் உரைத்தவை உளத்தில் நாட்டி நல்
தூயவர் எண்மரும் பரிவில் சூழ்வர
பாய் அரி துவசம் முன் படர போயினர்
சீயம் ஒத்து அப்துல்லா என்னும் செம்மலே

மேல்
$3.18.26

#3321
தந்தை-தம் முன்னவள் தருமத்தால் வரும்
மைந்தரை அவணிடை அனுப்பி மன்னர்_கோன்
சிந்திடத்து உயர் வரை சிதற தாக்கி கை
பந்து என அரும் திறல் பரியின் மேற்கொண்டார்

மேல்
$3.18.27

#3322
திறல் வய வீரரும் சேனை மன்னரும்
மறை ஒலி திசை தர வரும் அ வேளையில்
அறபியில் ஒருவன் வந்து அடுத்து யாவர்க்கும்
இறையவன் தூதர் முன் இயம்புவான் அரோ

மேல்
$3.18.28

#3323
முன்னவர் மும்மறை மொழியின் ஈறினில்
நல் நபி ஒருவர் உண்டு என்னும் நாட்டத்தால்
செல் நிலம்-தொறுந்தொறும் திரிந்தும் காண்கிலாது
இ நிலத்து எதிர்ந்தனன் ஊழின் ஏவலால்

மேல்
$3.18.29

#3324
மண்டலம் புகழ் தரும் முகம்மதே நிழல்
கொண்டல் அம் கவிகையும் குறிப்பும் காட்சியும்
கண்டவன் பொருட்டு உயர் காரணீகம் ஒன்று
உண்டு எனில் எனக்கு வேறு உறுதி இல்லையால்

மேல்
$3.18.30

#3325
என்றவன் உரைத்தனன் ஏகன் தூதுவர்
வென்றி கொள் அறபியை விளித்து சேணிடை
நின்ற அ தருவினை கூவின் நின்னிடத்து
ஒன்றும் என்று இசைதர உரைத்திட்டார் அரோ

மேல்
$3.18.31

#3326
தூதுவர் உரை வழி அறபி தூரத்தின்
மா தரு நிலையினை நோக்கி வா என
கோது அற கூறினன் கூற அ தரு
பூதலம் விரிதர புறத்து எழுந்ததால்

மேல்
$3.18.32

#3327
எழும் தரு பணர் சினை யாவும் பின்னரின்
விழுந்திட வேரை முன் நீட்டி மேதினி
அழுந்திட ஊர்ந்து அதிசயிப்ப ஆசல
செழும் தொடை புய நபி திருமுன் நின்றதே

மேல்
$3.18.33

#3328
வந்து நின்று அ தரு மண்ணுள்ளோர்களும்
அந்தரத்து அமரரும் கேட்பதாகவே
சுந்தரம் பெற சலாம் சொல்லி இ நிலத்து
உய்ந்தனன் என கலிமாவும் ஓதிற்றே

மேல்
$3.18.34

#3329
இரு வகை மொழியும் கேட்டு அறபி ஈங்கு உறை
தருவினை முன் உறை தானம் சேர்தர
அருளுக என்று உரைத்தனன் ஆதி தூதரும்
ஒரு மொழி செல்க என உவந்து கூறினார்

மேல்
$3.18.35

#3330
வட_வரை புய நபி வசனம் கேட்டலும்
உடைமரம் இலையில் ஒன்று உதிர்தராமலே
படர் பணர் துயல்வர சலாம் பகர்ந்து அகம்
அடைவ போல் ஏகி முன் இடத்தின் ஆயதால்

மேல்
$3.18.36

#3331
தரு புதுமைகள் தர தந்த நம் நபி
திரு பதத்தினில் சிரம் சேர்க்க தன் மனம்
ஒருப்பட செழும் கலிமாவை ஓதி நல்
விருப்பொடு நெறி இசுலாமின் மேவினான்

மேல்
$3.18.37

#3332
காரண குரிசில் நும் கமல மா மலர்
ஈர் அடியினும் சஜதா செய்து ஏத்தி இ
பாரிடை பலன் பெற பரிவின் ஓர் விடை
தாரும் என்று உரைத்தனன் தழைத்த புந்தியான்

மேல்
$3.18.38

#3333
அறபி இ உரைதர அழகின் பேறு உற
தறை சிரம் பட சஜதா செய்து ஏத்துவது
இறைவனுக்கல்லது மாந்தர்க்கு இல் என
முறைமையின் மறை வழி மொழிந்து காட்டினார்

மேல்
$3.18.39

#3334
துன் இதழ் தாமரை பாதம் தொட்டு யான்
என் இரு விழி சிரம் ஏத்தவாயினும்
உன் உளத்து இசைந்து அருள் உரை செய்வீர் என
பொன்னகம் காவலர் பொருந்தினார் அரோ

மேல்
$3.18.40

#3335
அரு மறை முகம்மதின் அம் பொன் தாள் இணை
இரு விழி வைத்து முத்தாடி யாவர்க்கும்
பிரியமுற்று ஒரு சலாம் ஓதி பெட்புடன்
வரிசை பெற்று அறபி வாழ் பதியில் போயினான்

மேல்
$3.18.41

#3336
வழிபடும் அவனை நல் வழியில் ஆக்கி மேல்
சுழிபடு புரவியும் படையும் துன்னவே
அழிபடா பெரும் புகழ் அரசர் கேசரி
பழிபடாது இருந்து வாழ் பதியை நண்ணினார்

மேல்

19 பத்னுன்னகுலாப் படலம்

$3.19.1

#3337
மழை தவழ் கவிகை வள்ளல் முகம்மது தீனை போற்றி
எழில் பெறும் அப்துல்லாவும் எண்மரும் கூண்டு சுற்றி
சுழி எறி ஆறும் கானும் சுரங்களும் கடந்து செம் தேன்
பொழிதர கனிகள் தூங்கும் பொழிலிடை இறங்கினாரால்

மேல்
$3.19.2

#3338
நபி-தமை விடுத்து மூன்றாம் நாளினில் இறங்கும் காவில்
கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி
புவி புகழ் அப்துல்லா நல் புரவலர் எவரும் கேட்டு
செவியினில் மகிழ்ச்சி கூர தெரிதர வாசித்தாரால்

மேல்
$3.19.3

#3339
மக்க நல் நகரார் ஷாமுக்கு அனுப்பிய முதலும் மற்றும்
மிக்க அத்திரியும் மாவும் மீண்டு அவண் வரும் நாள்மட்டும்
புக்கி அங்கு உறைந்து கானில் போவதற்கு இடங்கொடாமல்
திக்கு அற பறித்து வெட்டி திரும்பும் என்று இருந்தது அன்றே

மேல்
$3.19.4

#3340
விரிந்த வாசகத்தை கேட்டு விரைந்து எழுந்து அரசர் யாரும்
பரிந்த தாயிபுக்கு மக்கம் எனும் பதி-தனக்கு நாப்பண்
வரம் தரு நயினார் சொன்ன பத்துனு நகுலா என்னும்
புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார்

மேல்
$3.19.5

#3341
பாய் அரி போன்று சில் நாள் பாதை காத்து இருப்ப ஷாமில்
போயின சரக்கும் மாவும் ஒட்டகை குழுவும் பொங்கி
தாயிபுக்கு இப்பால் பட்டது எனும் குறிப்பு அறிந்து தத்தம்
ஆயுதம் எடுத்து சேர்த்து புரவி மேல் ஆயினாரால்

மேல்
$3.19.6

#3342
பொன்னு நல் மணியும் தூசும் புரவி ஒட்டகத்தின் ஏற்றி
கொன் உறை கதிர் வாள் தாங்கி குமரரும் வருதல் நோக்கி
மின் இலங்கிய வேல் செம் கை முகம்மது விடுத்த வேந்தர்
பன்னகம் நெளிய தத்தம் பரியொடும் எதிர்ந்து கொண்டார்

மேல்
$3.19.7

#3343
செயல் அறு மருவலாரும் தீனவர் படையும் தாக்கி
கயின் உறை கழித்த வாளின் கண்கள் தீ கனல காதி
வெயிலவன் கதிரில் தூண்டும் வெம் சரம் தொடுத்து நீண்ட
அயிலொடும் அயில்கள் நீட்டி அடும் சமர் விளைத்து நின்றார்

மேல்
$3.19.8

#3344
அமரிடை வெகுண்டு சீறி காபிரில் அம்று என்று ஓதும்
குமரன் முன் எதிர்ந்து தாவ கோளரி அப்துல்லா கண்டு
இமை சுட விழித்து முன்னர் ஏகி தம் வாளால் வாசி
சுமை கெட இரண்டு துண்டம்பட உடல் துணித்து நின்றார்

மேல்
$3.19.9

#3345
மருவலன் அம்று என்போனும் மாண்ட பின் இருவர் தாக்க
இருவருக்கு இருவர் ஏகி எதிர்ந்து மற்போரில் சேர்ந்து
தரையிடை வீழ்த்தி வெளவி கட்டுதல்-தனை கண்டு ஏங்கி
ஒருவனும் ஓடினான் மற்றுளர் திசை சிதறினாரால்

மேல்
$3.19.10

#3346
தாரையின் எதிர்ந்த நான்கு தலைவரின் ஒருவன் வீந்தான்
வீரர்கள் இருவர் தீனின் வேந்தர் கையினில் கட்டுண்டார்
போர் எதிராது மற்ற ஒருவனும் புறத்தில் போனான்
வாருதி போல வந்தோர் திசைதிசை மறுகினாரால்

மேல்
$3.19.11

#3347
ஒட்டக திரளும் ஏறும் புரவியும் ஒளிர சேர்த்த
பெட்டக தொகையும் செல்ல பிடித்தவர் இருவர் செம் கை
கட்டுடன் நடத்தி செ வேல் காளையர் இனிது சூழ
மட்டு அவிழ் அலங்கல் திண் தோள் மன்னவர் புறப்பட்டாரால்

மேல்
$3.19.12

#3348
எண்ணொணா திரகம் கைக்கொண்டு எண்மரும் இலங்கும் வேல் கை
அண்ணல் என்று இசைக்கும் கீர்த்தி அப்துல்லா என்னும் வேந்தும்
விண்ணினும் திசையும் தீன்தீன் எனும் மொழி விளங்க கூறி
பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார்

மேல்
$3.19.13

#3349
அறை கடல் அவனி காக்கும் அகுமதின் இடத்தை நண்ணி
முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த
சிறையுடன் பொதியில் செய்த திரகத்தின் தொகுதி காட்டி
தறுகு இலாது எழுந்து போற்றி அவரவர் சார்பில் சார்ந்தார்

மேல்
$3.19.14

#3350
பூசலிட்டு அடையலாரை பொருது வெல்லுவதற்கு ஆகா
மாச பேதத்தில் பொன்னை வைத்தனர் சில் நாள் பின்னர்
ஆசிலான் கருணை கூர ஆயத்து ஒன்று இறங்கையாலே
பாசமுற்று அவர்கட்கு எல்லாம் பகுந்து இனிது அளித்திட்டாரால்

மேல்
$3.19.15

#3351
பிடித்து அரும் சிறையிற்பட்ட பெயர் தலை விலை-அதாக
கொடுத்து அரும் பொன்னால் மக்காபுரத்தவர் கொண்டு போனார்
வடித்த சொல் மறையோர் வாழ்த்த மன்னவர் இனிது போற்ற
தொடுத்த தீன் விளங்கச்செய்து தூதுவர் இருந்தார் அன்றே

மேல்

20 பதுறுப் படலம்

$3.20.1

#3352
நெறியொடும் புறுக்கான் நல் நேர் நிகழும் அ வருடம்-தன்னில்
பெறு கதி றமலால் என்ன பெருகிய நோன்பு-தன்னை
உறுதி கொண்டு எவர்க்கும் செவ்வியுற பறுலாக்கினேன் என்று
இறையவன் அருளின் ஆயத்து இறங்கியது எவர்க்கும் அன்றே

மேல்
$3.20.2

#3353
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன்
விள்ளுதற்கு அரிய வேத வழிமுறை விதித்த நோன்பை
வள்ளல் நம் நபியும் நாலு யார்களும் மற்றுளோரும்
தெள்ளிய மனத்தினோடும் சிறப்புடன் முடித்து வந்தார்

மேல்
$3.20.3

#3354
பறுல் எனும் நோன்பு நோற்று வருகையில் பதினேழாய
குறைவு அற வெள்ளி நாளில் குத்துபா தொழுத பின்னர்
மறு அறும் ஒற்றர்-தம்மில் பசுபசா என்னும் வீரர்
முறை வழி தவறா வள்ளல் முன் பணிந்து எழுந்து நின்றார்

மேல்
$3.20.4

#3355
வியர்வும் மெய் தொய்வும் பூண விசித்த கசையும் ஆகத்தின்
அயர்வொடும் விரைவின் வந்தாய் ஆதி-தன் தீனை மாறும்
கயவர்-தம் செய்கை யாது கண்டனை என்ன மார்க்கத்து
உயர் நபி முகம்மதின்-பால் ஒதுங்கி வாய் புதைத்து சொல்வார்

மேல்
$3.20.5

#3356
மரு கமழ் சோலை சூழு மக்க மா நகரின் வாழ்வு
பெருக்கி நம் தீனை மாறு பேசிய தலைவர்க்கு உற்ற
உரக்கமும் மணியும் தேச வாணிபத்து உறுதியான
சரக்குகள் சில் நாள் முன்னர் ஷாமுக்கு போயது அன்றே

மேல்
$3.20.6

#3357
அ நகர் அடைந்து இலாபம் இரட்டிக்கும் அதிகம் மாறி
பின்னர் இ நாட்டுக்கு ஏயப்பெறும் சரக்கு அனைத்தும் கொண்டு
மன்னிய புரவி ஏறு வரி நெடும் கழுத்து அலி யாவும்
துன்னிட சுமைகள் ஏற்றி தொகுதிகள் தொகுதியாக

மேல்
$3.20.7

#3358
இரு நிதி செல்வர் நாற்பது இலக்கு உறும் தலைவர் சூழ
மரு மலர் தொடையல் வேய்ந்த வரை புயன் கறுபு மைந்தன்
அருள் அறம் பயிலா சிந்தை அபாசுபியானுமாக
தெரிவு அரும் செம்பொன் குப்பை திரளொடும் வருகின்றாரால்

மேல்
$3.20.8

#3359
ஈது போல் நமக்கு வாய்த்தது இலை ஒரு காலத்தேனும்
மா தவ இஃது என்று ஓதி வாய் புதைத்து ஒருங்கு நின்றார்
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல்
காதினுள் புகுந்து மாற்றம் கருத்தையும் வியத்திற்று அன்றே

மேல்
$3.20.9

#3360
தனு சர வேகம் மானும் பசுபசா சாற்றும் மாற்றம்
நனை செழும் தொடையல் வேய்ந்த தோழர் நால்வருக்கும் கூறி
தொனிச்சு அதிர் கடல் அம் தானை தொகை படை தலைவர் யாரும்
இனி சடுதியின் என் முன்னர் வருக என்று இசை-மின் என்றார்

மேல்
$3.20.10

#3361
அடையலர் இடியேறு அன்ன அபாலுபானாவை செம்பொன்
மடல் திகழ் கமல வாவி மதீன மா நகர்க்கும் மற்ற
புடைபடு நகர்க்கும் செங்கோல் புரந்தரர் இவரே என்ன
இடையறா மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு இருத்தினாரால்

மேல்
$3.20.11

#3362
பழுது இலாத மெய் முதலவன் பறுல் என பணியும்
தொழுகை நேர் இமாம் என செயும் தொழில் முறை சிறப்ப
பொழியும் நல் மறை நாவினர் புகலும் நூல் எவையும்
வழுவு இல் இபுனு உம்மி மக்குத்தூமை தலைமையா வைத்தார்

மேல்
$3.20.12

#3363
வீர வெண் மடங்கல் என்னும் விறல் அபூபக்கர் வேக
மாருதம் அடங்க தாவும் வய பரி உமறும் சேந்த
கூர் அயில் தாங்கும் செம் கை கோ உதுமானும் வெற்றி
தார் கெழும் வடி வாள் ஏந்தும் தட புய அலியும் வந்தார்

மேல்
$3.20.13

#3364
இயல் மறை தெரி முஹாஜிரீன்கள் எண்பத்துமூன்று
பெயரும் அன்சாரிமாரில் பேர்பெறும் தலைமை மிக்கோர்
உயர் இருநூற்றுமுப்பத்தொரு பெயரவரும் கை வாள்
அயருறா வெற்றி வீரத்தவருடன் ஈண்டினாரால்

மேல்
$3.20.14

#3365
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும்
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன
வரையிடை கிடந்து சீறு மடங்கல் ஏற்று இனங்கள் என்ன
விரி கடல் தானை சூழ வேந்தர்கள் திரண்டு மொய்த்தார்

மேல்
$3.20.15

#3366
திரை கடல் கடுப்ப வேந்தர் சேனை கொண்டு ஈண்ட தாவும்
பரி குழாம் நெருங்க சேந்த படைக்கலன் செறிந்து மின்ன
மரு கமழ் படலை திண் தோள் மலை என வளர வள்ளல்
அருக்கன் ஒத்து எழுந்து வெம் போர் அணி கலன் அணியலுற்றார்

மேல்
$3.20.16

#3367
தண் ஒளி விலகி வீசும் சபூகு எனும் தலைச்சோடு இட்டு
வெள் நிலா கதிரின் கற்றை மின்னினை பொதிந்தது என்ன
வண்ண வெண் சறுபால் தொட்டு மருங்கினில் சுருக்கி வீக்கி
கண் ஒளி கவரும் சோதி கஞ்சுகி கவின செய்தார்

மேல்
$3.20.17

#3368
ஒலியல் மேல் இருத்தி செவ்வி ஒளிரும் குற்று உடைவாள் என்னும்
கலிபினை சேர்த்த காட்சி கருதலர் உயிரை நாளும்
பலி எனக்கு அருள்வீர் என்ன பரு மணி கச்சின் கையால்
மலி புகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்றது அன்றே

மேல்
$3.20.18

#3369
திரு நபிக்கு ஏவல் யானும் செய்குவன் என்ன வெய்யோன்
வெரிநிடத்து உறைந்த போல விளங்கு கேடகத்தை சேர்த்து
சொரி கதிர் வயிர மாலை தோள் வரையிடத்தில் தோன்றி
ஒரு பிறை கிடந்தது என்ன தனு ஒரு புறத்தில் கொண்டார்

மேல்
$3.20.19

#3370
வெய்யவன் கதிரின் வேக விசையின வேத வாய்மை
ஐயனுக்கு ஒன்று நூறாயிரம் என அமைந்த ஏவல்
செய்வன திகாந்த மட்டும் செல்வன திறத்த எண்ணில்
பெய் சர காபூறு என்னும் தூணி பிற்புறத்தில் சேர்த்தார்

மேல்
$3.20.20

#3371
மறு இல் உகைபத்து என்னும் மரவயிரத்தில் செய்த
குறுசூனு எனும் தண்டம் ஏந்தி குல கொழுந்து அனைய கற்பில்
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி
இறைவனை வாழ்த்தி ஏத்தி முகம்மதும் எழுந்தார் அன்றே

மேல்
$3.20.21

#3372
தாவிடின் மனத்தை ஒக்கும் தாக்கிடின் இடியேறு ஒக்கும்
மேவிடில் திகிரி ஒக்கும் எதிர்ந்தவர்க்கு எரியை ஒக்கும்
பூவிடத்து அடலின் வங்கூழ் போன்றிடும் சக்பென்று ஓதும்
மாவினை கொணர்-மின் என்ன முகம்மது சரணம் வைத்தார்

மேல்
$3.20.22

#3373
கடலினை கலக்க என்றோ கதிர் துகள் படுத்த என்றோ
வட_வரை தகர்க்க என்றோ மண்ணிலம் பிளக்க என்றோ
அடையலர் பதியை இன்னே அந்தரத்து இடுக என்றோ
தடம் உறும் கடின வாசி தாள் பெயர்த்திட்டது அம்மா

மேல்
$3.20.23

#3374
உவரி உண்டு எழுந்த காரின் ஒலித்த ஒட்டகத்தின் பேரி
புவியிடம் அதிர பொங்க முரசங்கள் புடையின் ஆர்ப்ப
நவுரி காகளங்கள் சின்ன நரலையின் கலித்து விம்ம
பவுரி கொள் பரி முன் செல்ல நடந்தது பதாதி வெள்ளம்

மேல்
$3.20.24

#3375
பரிசை கேடகம் வாள் சொட்டை பட்டயம் சுரிகை தண்டம்
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில்
வரிசையின் நிரையின் ஏந்தும் வயவரும் பரியும் மற்றும்
விரலிடம் இன்றி எங்கும் நெருங்கின படையின் வெள்ளம்

மேல்
$3.20.25

#3376
மண்களில் அரசு வைகும் வன் குபிர் களைகள் தீர்த்து
பண் கெழும் இறசூல் வேத புகழ் முனம் படர்ந்தது என்ன
கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும்
வெண் கதிர் வெள்ளை வெற்றி கொடியை முன் விரித்திட்டாரால்

மேல்
$3.20.26

#3377
மிடல் உறும் வெற்றி உக்காபு எனும் கொடி மிசஃபு கை கொண்டு
அடல் நபி முன்பு செல்ல அலி முனம் கொடி ஒன்று ஏக
தடம் உறு மதீனா வேந்தர்-தம் முனம் கொடி ஒன்று ஏக
இடன் அற கவிகை வெள்ளம் எங்கணும் பரந்தது அன்றே

மேல்
$3.20.27

#3378
பரந்து அகல் விசும்பு தோன்றா மறைத்தன படல தூளி
விரிந்த அ படல தூளி மறைத்தன கொடியின் வீக்கம்
நிறைந்தன கொடியின் வீக்கம் மறைத்தன கவிகை நீத்தம்
சொரிந்தன கவிகை நீத்தம் மறைத்தன கவரி துள்ளல்

மேல்
$3.20.28

#3379
படர் திரை கடலின் ஓதை கடந்தன படையின் ஓதை
புடைபடும் படையின் ஓதை கடந்தன புரவி ஓதை
கடு விசை புரவி ஓதை கடந்தன கரியின் ஓதை
தட வரை கரியின் ஓதை கடந்தன சலவாத்து ஓதை

மேல்
$3.20.29

#3380
உலம் பொரு தோளில் துன்னும் மாலைகள் உகுத்த தேனும்
கலன் பல அணிந்த மெய்யின் அழிந்திடும் கலவை சேறும்
விலங்கலின் புறத்தும் தாவும் வெம் பரி விலாழி நீரும்
நிலன் பட பிறந்த சேற்றால் நெடும் பணை போன்றது அன்றே

மேல்
$3.20.30

#3381
கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த
குடை கொடி செறிந்தது ஒப்ப குருகு இனம் இரியல் போக
புடைபடும் கதலி சூழல் பூம் கரும்பு அடவி மாய
மடை செறி தடங்கள் சூழ்ந்த மருதம் விட்டு அகன்று போனார்

மேல்
$3.20.31

#3382
நீட்டு இலை மிடறு சாய்த்த நெடும் கதிர் தினையின் சார்பில்
கோட்டு அலர் கமழும் கூந்தல் குறத்தியர் கவண் கல் ஏந்தி
பாட்டு இசை மிழற்றும் செ வாய் பசும் கிளி கடியும் ஓதை
கேட்டு இனிது ஆமா துஞ்சும் கிளை வரை சாரல் போந்தார்

மேல்
$3.20.32

#3383
ஆம்பல் அம் குழலில் வாய் வைத்து ஆயர்கள் இசைக்கும் ஓதை
தேம் பிளி மதுர தீம் பால் செவிமடுத்து இனிது மாந்தி
வாம் பரி வீரர் யாரும் முகம்மதின் சலவாத்து ஓதி
பூம் பொழில் கொன்றை வேலி முல்லையும் கடந்து போனார்

மேல்
$3.20.33

#3384
விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி
முரிதரும் திவலை தூற்று முகில் குடை நிழலின் ஏகி
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர்
வரையிடை வயவர் சூழ முகம்மது உற்று இறங்கினாரால்

மேல்
$3.20.34

#3385
வடி சுதை தீற்று மாட மதீன மா நகரின் வள்ளல்
கொடுவரி இனங்கள் போன்ற குழுவுடன் பாதை நாப்பண்
படை கொடும் உறைந்தார் என்னும் பருவரல் ஒற்றர் கூற
அடல் அபாசுபியான் கேட்டு ஓர் அடவியின் இறங்கினானால்

மேல்
$3.20.35

#3386
எண்ணிறந்து அனைய செம்பொன் இடும் சுமை தொகுதி யாவும்
கண் என ஒருங்கு சேர்த்து காவலின் இருந்து நேமி
மண்ணகம் பரவும் மக்கா மா நகர் அரசர்க்கு எல்லாம்
விண்ணபத்திரத்தை தீட்டி விரைவுடன் அனுப்பினானால்

மேல்
$3.20.36

#3387
பத்திரம் சிரசின் ஏந்தி பாதை விட்டு ஒருபால் சென்று
குத்திர புறங்கள் நீந்தி கொடுமர சரத்தின் ஏகி
புத்தொளி விரிக்கும் மாட மக்க மா புரத்தின் வேந்தர்
மொய்த்த பேரவையில் நண்ணி வைத்தனன் முடங்கல் அன்றே

மேல்
$3.20.37

#3388
அபுஜகல் முதல் மற்றுள்ளோர் அனைவரும் திரண்டு வைகி
கவின் உறும் ஷாமுக்கு ஏகி வருமவர் கடிதில் தீட்டி
இவண் விடுத்து அனுப்பும் ஓலை-தனை விரித்து இயம்புக என்ன
செவி வழி புகுத கேட்டோர் செவ்வியன் வாசிக்கின்றான்

மேல்
$3.20.38

#3389
ஷாம் எனும் பதியை நீந்தி தலைவர் நாற்பதின்மர் சூழ
ஏமமும் பண்டம் யாவும் கொண்டு யான் வருவ கேட்டு
மா மதினாவின் வைகும் முகம்மது படைகோடு எய்தி
பூமனும் உபய மார்க்க பொறையிடத்து இறங்கினானால்

மேல்
$3.20.39

#3390
இன்னணம் பதியில் உள்ளோர் யாவரும் திரண்டு பூவில்
பன்ன அரும் படை கொண்டு ஈண்டி பாதையின் நாப்பண் வைகும்
மன்னவன் முகம்மது என்போன் வலி கெடுத்து அவனை வீழ்த்தி
நம் நிலை எடுத்து சீர்த்தி நாட்டுதல் துணிதல் வேண்டும்

மேல்
$3.20.40

#3391
இல்லெனில் எம்மோடு உற்றோர் உயிர் செகுத்து எனையும் மாய்த்து
சொல்ல அரும் பணியும் பண்ட தொகுதியும் கவர்ந்து வாரி
ஒல்லையில் கொடுபோய் தன் ஊர் உறைகுவன் உறுதி என்ன
மல்லல் அம் புயத்தான் தீட்டும் பாசுரம் வாசித்தானால்

மேல்
$3.20.41

#3392
ஓலை வாசகத்தை கேட்டு அங்கு உயர் பதி தலைவர் யாரும்
மாலையும் புயமும் வாகு வலயமும் குலுங்க நக்கி
சீலமும் அறனும் தேய்த்த சிறுவரில் ஒருவன் இன்னே
சாலவும் வலியன் என்றால் சாற்றுவது என்-கொல் மாதோ

மேல்
$3.20.42

#3393
அடவியில் கரந்து பாதையவர்களை தடிந்து முன்னர்
உடைமை கோடு உறைந்தான் நம்மால் காப்பது ஒன்று இன்மையாலே
படையொடும் இன்னும் வந்தான் இனி பகை தவிர்த்திடேமால்
புடவியின் முகம்மது என்போன் புகழ் நிலை நிறுத்துவானால்

மேல்
$3.20.43

#3394
அரு நிதிக்கு இடையூறாய் வந்து அடுத்தவன்-தன்னை இன்னே
பொருது அடர்ந்து அவனை வீழ்த்தி ஆவி விண் புகுத்தேமாகில்
பரவை சூழ் நிலத்தில் நம்-தம் படைக்கலன் சுமந்த கையின்
உரம் என் ஆம் வீரம் என் ஆம் உயர் குடி தலைமை என் ஆம்

மேல்
$3.20.44

#3395
என எடுத்து இசைத்த மாந்தர்க்கு எதிர் இருந்து அகத்தின் நக்கி
வினையம் உற்பவித்த புந்தி அபூஜகல் என்னும் வீரன்
மனமும் உள் அறிவும் உட்க வயிரமும் மறனும் பூண
சினமொடும் கண்கள் சேப்ப ஒரு மொழி தெரிந்து சொல்வான்

மேல்
$3.20.45

#3396
பிறந்த நாள் தொடுத்து வாய் வீண் பேசுவதலது நம்மால்
மறம் தர புகழ் ஏதேனும் வாய்மையின் முடித்தது உண்டோ
அறம் தவிர் நமர்கட்கு எல்லாம் ஆண்மையின் பெயரும் உண்டோ
வெறும் தரை தடவல் மாற்றம் விடு-மின்கள் விடு-மின் என்றான்

மேல்
$3.20.46

#3397
ஆள் திறத்து அனைய வீரன் அபூஜகுல் உரைத்த மாற்றம்
கேட்டலும் தலைவர் எய்தா கோப தீ கிளர பொங்கி
நீட்டிய உயிர்ப்பு வீங்கி நெடும் கரம் பிசைந்து விம்மி
தோள் துணை வரைகள் நோக்கி வீரத்தில் துணிந்து நின்றார்

மேல்
$3.20.47

#3398
மறித்து எதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை இன்னே
தறித்து அபாசுபியான் துன்பம் தவிர்த்திடேமாகில் யார்க்கும்
குறித்து உயிர்க்குயிராய் நின்ற குபல் எனும் தம்பிரானை
வெறுத்து அழல் குழியில் வீழும் வீணர்கள் ஆவேம் என்றார்

மேல்
$3.20.48

#3399
தனது உயிர் தலைவர் இந்த வஞ்சினம் சாற்ற தீமை
புனை அபூஜகுல் என்று ஓதும் புன்மையன் தானும் வாளால்
முனை முகம்மதுவை வீழ்த்தி முடி துகள் படுத்தேனாகில்
மனைவியை பிறருக்கு ஈந்த மதியிலி ஆவேன் என்றான்

மேல்
$3.20.49

#3400
அரசு அபூஜகல் சொல் மாற்றம் அனைவர்க்கும் இஃதே என்ன
புரவலர் எவரும் ஒத்து பொரு படை யாவும் தத்தம்
நிரையொடும் வருக என்ன முரசம் நீள் மறுகு-தோறும்
விரைவொடும் அறைக என்றார் அன்னது விளக்கினாரால்

மேல்
$3.20.50

#3401
முரசு அதிர் ஓதை கேட்டு மொய் நகருள்ளோர் எல்லாம்
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம்
கரதலத்து ஏந்தி தாவும் கடும் பரி திரளினோடும்
இருள் அறும் ககுபத்துல்லா எனும் இடத்து எய்தினாரால்

மேல்
$3.20.51

#3402
கேடகம் மருங்கு சேர்த்து கிளர் ஒளி வடி வாள் தாங்கி
சோடு அணிந்து அரிய செம்பொன் சுடர் மணி கடகம் பூண்டு
தேட அரும் வெற்றி மாலை சென்னியின் இலங்க சூடி
ஆடல் அம் பரியின் ஏறி சைபத்தும் அவணின் வந்தான்

மேல்
$3.20.52

#3403
வெம் சின மடங்கல் என்ன வெகுளியின் எழுந்து சேந்த
கஞ்சுகி அணிந்து சந்த கதம்ப மான்மதங்கள் பூசி
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம
வஞ்சினம் கூறி தாவும் வாசி மேல் உமையா வந்தான்

மேல்
$3.20.53

#3404
மணி அணி பலவும் தாங்கி வச்சிர உடைவாள் சேர்த்து
கணை சொரி தூணி வீக்கி கார்முகம் கையின் ஏந்தி
அணியணி வீரர் சூழ ஆலயம் புகுந்து தாழ்ந்து
பணிதர குபலை போற்றி உத்பத்தும் பரியின் வந்தான்

மேல்
$3.20.54

#3405
சுரிகையை மருங்கு சேர்த்து சொரி கதிர் இலை வேல் ஏந்தி
குரகதம் நடத்தி வெல் வேல் குமரர்கள் பல்லர் சூழ
வரி என வெகுளி பொங்கி ஆண்மையும் வலியும் கூறி
விரிதரும் கவிகை நீழல் அபூஜகல் விரைவின் வந்தான்

மேல்
$3.20.55

#3406
இன்னன வேந்தரோடும் எண்பஃது அரசர் மொய்ப்ப
அ நகர் அறபி காபிர் ஆயிரம் பெயர்கள் சூழ
மன்னிய சீறூர் உற்ற மைந்தர்கள் எவரும் ஈண்ட
பொன்_நகர் என்னு மக்காபுரத்தினில் புறத்துற்றாரால்

மேல்
$3.20.56

#3407
காணுதற்கு இறுதி இல்லா திறத்தினர் கவலும் வெற்றி
பூணினர் உயிரை ஈந்து புகழினை நிறுத்தும் பொற்பார்
மாண் உறும் கிரியும் கீறி வகிர்ந்து எடுத்து எறியும் வல்லார்
சேண் உற நிவந்த ஊழித்தீயையும் அவிக்கும் நீரார்

மேல்
$3.20.57

#3408
புடவி தொட்டு எழுந்து வானில் போவன போன்று மேன்மேல்
படர் திசை எட்டும் எட்டி பறப்பன போன்றும் துள்ளி
கடி திரை உவரி ஏழும் கடப்பன போன்றும் வாகை
விடுவிடென்று அதிர்ந்து தாவும் வெம் பரி குழுவின் வேகம்

மேல்
$3.20.58

#3409
பரிகள் இவ்வண்ணம் சான்ற நிலம் பரப்பு இன்றி தோன்ற
எரி விழி கலுழ வேந்தர் இளையரும் குழாம்கொண்டு ஈண்ட
வரம் உறும் வெற்றி வள்ளல் முகம்மதை வெல்வேன் என்ன
பொரு படை பெருக்கம் நோக்கி அபூஜகல் பூரித்தானால்

மேல்
$3.20.59

#3410
வயிரொடு சின்னம் ஆர்ப்ப வலம்புரி முழங்க வாரி
பெயும் முகில் இடியேறு என்ன பேரிகை குழாங்கள் பொங்க
வெயிலவன் கதிர்கள் தோன்றா வெள்ளை வெண் கவிகை மொய்ப்ப
துயல்வரும் கொடிகள் துன்ன துரகதம் நடத்தினாரால்

மேல்
$3.20.60

#3411
கத கடல் பரந்தது என்ன கடந்து எழும் சேனை வெள்ள
பத துகள் எழுந்து மேக படலங்கள் அனைத்தும் மூடி
மதித்த எண் திசையும் திக்கும் வானினும் செறிந்து நாளும்
அதிர்த்து இரை பரவை வேலை அலையையும் சுவற்றிற்று அன்றே

மேல்
$3.20.61

#3412
பவளங்கள் குலை சாய்த்து என்ன பழுத்த செம்சாலிக்காடும்
தவள வெண் தரளம் சிந்தும் சலஞ்சல தடமும் காவும்
திவள் ஒளி குவளை காடும் திசை எலாம் வழியதாக
இவளவு என்று எண்ணவொண்ணாது எழுந்தன சேனை வெள்ளம்

மேல்
$3.20.62

#3413
அடவிகள் நெரிய கானின் ஆறுகள் சேறதாக
புடைபடும் இறும்பும் கல்லும் பொடிபடு நூறதாக
திடர் இடம் குழியதாக குழியிடம் திடர்-அதாக
படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே

மேல்
$3.20.63

#3414
கவிகையின் நெருக்கம் என்கோ கவரியின் நெருக்கம் என்கோ
சிவிகையின் நெருக்கம் என்கோ செழும் கொடி நெருக்கம் என்கோ
குவி பரி நெருக்கம் என்கோ கொற்றவர் நெருக்கம் என்கோ
சவுரியர் நெருக்கம் என்கோ யாது என சாற்ற மாதோ

மேல்
$3.20.64

#3415
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை
பரல் வழி கடந்து வேற்று பாடிகள் அகன்று முள் சார்
பொரி அரை காடு நீந்தி பொருப்பிடம் அனைத்தும் போக்கி
இருள் அறல் கொழிக்கும் கான்யாற்று இடத்தினில் இறுத்தது அன்றே

மேல்
$3.20.65

#3416
அரி உளை கேச பந்தி ஆடல் அம் பரிகள் யாவும்
நிரைநிரை நிரைத்து பேரி சுமை நெடுங்கழுத்தல் சேர்த்து
முருகு உமிழ் வெற்றி மாலை முரண் படை வேந்தர் வீரர்
வரி வய போத்து சூழ்ந்த மடங்கலின் வைகினாரால்

மேல்
$3.20.66

#3417
விண்-கணின் அமரர் யாரும் மெல் அடி பரவி போற்றும்
ஒண் கதிர் உருவ வள்ளற்கு உறு பகையாகி கூண்ட
புண் கதிர் எஃகம் ஏந்தும் புரவலர் முகம் நோக்காது
கண்களை புதைத்து வெய்யோன் மேல் திசை கடலுள் ஆனான்

மேல்
$3.20.67

#3418
கதிரவன் கடலில் புக்கான் கங்குல் அம் காலை போழ்தின்
அதிர் கடல் துயிலும் ஆறா அனைவரும் துயில்வதானார்
சதி வரவு அறியா சிந்தை அபூஜகல்-தானும் மற்ற
கொதி நுனை வேலினோரும் கொடும் கனவு அடுப்ப கண்டார்

மேல்
$3.20.68

#3419
வெருவரும் கனவு தோன்ற விழித்து எழுந்து அரசர் யாரும்
ஒருவருக்கொருவர் விள்ளாது உள்ளத்தின் ஒடுக்காநின்றார்
எரி கதிர் பரிதி வெய்யோன் எழுந்தனன் எழுந்த பின்னர்
முரசு சங்கு ஒலிப்ப பொங்கி எழுந்தது மூரி தானை

மேல்
$3.20.69

#3420
கடு நடை புரவி வெள்ளத்து ஒட்டகம் கலித்து பொங்க
மிடல் உடை கதிர் வெள் வேலும் வில்லொடும் மிடைய தாங்கி
படர் அரி இனங்கள் என்ன காளையர் பல்லர் ஏக
இடு கொடை கவிப்ப மன்னர் ஏகியோர் புறத்தில் ஆனார்

மேல்
$3.20.70

#3421
ஷாமினின்று எழுந்த பின்னர் தம் படையலது வெற்றி
மா மதிள் புரிசை மக்கா மா நகர் படையினோடும்
ஆம் மதி அறியா சிந்தை அபூஜகல் வந்தவாறும்
தோம் அறும் ஒற்றர் வள்ளல் முகம்மதுக்கு அறிய சொன்னார்

மேல்
$3.20.71

#3422
இரு வகை பெரும் படையும் வந்து அடுத்தது என்று இசைப்ப
மரு மலர் செழும் புய நபி முகம்மது கேட்டு
திருகு வெம் சினத்து இரு நிலம் பிளந்து மண் சிதற
பொரும் அறா மத கயம் என இருக்கும் அ போழ்தில்

மேல்
$3.20.72

#3423
முகில் பரப்பிய நிழல் வரு முகம்மது-தமக்கு
பகுப்பதற்கு இடம் இல் எனும் பரம்பொருள் அருளால்
இகல் படும் பகை இரண்டில் ஒன்று உமது கையிடத்தின்
அகப்படுத்தினன் எனும் மொழி இறங்கியது அன்றே

மேல்
$3.20.73

#3424
ஒக்கலின் புகழ் அபூபக்கர்-தமை அரசு உமறை
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து
பக்கல் இன்புற இருத்தி விண்ணினும் புகழ் பரப்பும்
தக்க வாய்மையின் முகம்மது சாற்றுவர் அன்றே

மேல்
$3.20.74

#3425
படரும் வெம் பகை இரண்டில் ஒன்று உமது கைப்படும் என்று
உடைய நாயகன் ஆயத்தும் இறங்கினது உலவி
சுடரும் வேல் படை அபூஜகல்-தனை துணிதுணிப்ப
புடவி மேல் அமர் விளைப்பதோ அல்லது புகழீர்

மேல்
$3.20.75

#3426
அரும்பு மென் மலர் வாவி சூழ் ஷாமிருந்து அடுப்ப
வரும் பெரும் பொருள் அனைத்தையும் படையுடன் வளைந்து
கரம்படுத்திட துணிவதோ கருத்தினில் தெளிந்து
விரும்பு இரண்டில் ஒன்று உரை-மின்கள் எனும் மொழி விரித்தார்

மேல்
$3.20.76

#3427
வனையு நீள் முடி முகம்மதும் உரைப்ப வண் தரளம்
புனையும் மார்பினர் கருத்தினுள் மதி எலாம் பொருத்தி
நினைவின் நேர் வழி இஃது முத்திரை என நிறுத்தி
கனை கொள் வாம் பரி மன் அபூபக்கர் கட்டுரைப்பார்

மேல்
$3.20.77

#3428
அறமும் இன்பமும் வளர்த்திடும் உலகு எலாம் அளிப்ப
திறன் அளித்திடும் சேரலர் பகையையும் சிதைக்கும்
வெறுமை கண்டவர்-தம்மை மேன்மையர் என வியந்து
நிறையிலா பெரும் புகழ் தரும் உலகினில் நிதியே

மேல்
$3.20.78

#3429
என்னும் நீர்மையில் ஷாமினிலிருந்து இவண் அடைந்த
பொன்னை யாம் வசப்படுத்துதல் நன்கு என புகழும்
மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின்
அன்னதே கருத்து என இருவரும் அறைந்தனரால்

மேல்
$3.20.79

#3430
மாதுலன் முதல் மூவரும் வழங்கிய வசனம்
காதின் உற்ற அரும் காரணர் கருத்தினுள் படுத்தி
சீத நல் மொழியொடும் பலருடன் இனம் தெரிந்து
போதம் இன்புற சொலு-மின்கள் எனும் மொழி புகன்றார்

மேல்
$3.20.80

#3431
மந்திரத்தினில் தலைவரும் உரிமை மன்னவரும்
தந்திராதி அன்சாரிகள் எனும் தகைமையரும்
நம்-தம் புந்தியின் நடத்துதல் பழுது என நடுங்கி
கந்த மென் புய நபி திருமுனம் கழறுவரால்

மேல்
$3.20.81

#3432
மேலவன் திரு மொழி வழி உலகினை விளக்கி
கோல் நடாத்திய செழும் முகில் கவிகை அம் கோவே
காலம் மூன்றையும் தெரிந்த நும் கருத்தினுக்கு இசைவ
போலும் புந்தியில் சொலுமவர் எவர் இரும் புவியில்

மேல்
$3.20.82

#3433
அடிகள் புந்தியின் இருந்தவை உரைக்கில் அ வழியே
முடியும் எங்களால் உரைப்பது என் முரணடையலரை
தடி-மின் என்றலும் தடிகுவம் எமர்கள்-தம் உயிரை
விடு-மின் என்றலும் விடுகுவம் நும் திருவுளத்தால்

மேல்
$3.20.83

#3434
உயிர்க்கு உறும் துணையவர்கள் இ உரை எடுத்து உரைப்ப
குயில் குலம் கவிதரு நிழல் வரு பெரும் குரிசில்
வெயில் படும் கதிரவன் என தீன் நிலை விளக்க
கயிற்படும் பொருள் என ஒரு மொழி கழறுவரால்

மேல்
$3.20.84

#3435
பந்தி நீடிய தெரு-தொறும் பல மணி குயிற்றி
இந்து தீண்டிய மேனிலை ஷாமினிலிருந்து
வந்த பொன்னொடும் மாந்தரை செலும் வழி மறித்து
நந்த தாக்குதல் இருப்ப பின் ஒரு மொழி நவில்கேன்

மேல்
$3.20.85

#3436
மக்க மா நகரவர் அபூஜகுல் உரை வழியின்
ஒக்கல் கூட்டுற அறபிகள் எவரும் வந்து உறைந்தார்
புக்கி அங்கு அவர் செகுத்து நம் புகழ் நிலை நிறுத்தற்கு
இக்கணம் துணிவது பெரும் கருமம் என்று இசைத்தார்

மேல்
$3.20.86

#3437
மதித்திடா பெரும் பொருள் ஒளிவினில் வடிவு அழகாய்
உதித்த நம் நபி உரைத்தலும் உயிர் எனும் உரவோர்
கதித்த மா கடல் எனும்படி அகங்களில் களிப்ப
விதித்தது இ மொழி துணிவதும் இவை என இசைத்தார்

மேல்
$3.20.87

#3438
புடைக்கும் பேரொலி பல்லியம் தொடு கடல் பொருவ
கொடி கணம் திரண்டு இரு விசும்பு இடைவெளி குறைப்ப
படைக்கலத்தொடும் எழுந்து போய் பதுறு எனும் பதலை
அடிக்கு கீழ்புறத்து எல்லையின் இறங்கினர் அன்றே

மேல்
$3.20.88

#3439
ஆதி நீள் மதிள் ஷாமினிலிருந்து வந்தவரும்
பாதவத்திடம் முகம்மது அன்று இறங்கு பாசறைக்கு
காதமாம் என கடற்கரை புறத்தினில் கடிதின்
ஏதம் இன்றி அ பெரு நிதியொடும் இறங்கினரால்

மேல்
$3.20.89

#3440
விரை செய் மெய் நபி பாசறை அடுப்ப தென்மேல்-பால்
அருவி ஆறும் வன் பொருப்பும் உண்டு அதற்கும் அப்புறத்தில்
பரியும் சேனையும் மிடைதர அபூஜகல் படையும்
ஒருவரும் தெரியாவணம் அவணில் வந்து உறைத்த

மேல்
$3.20.90

#3441
வரையிடத்தினும் கடற்கரையிடத்தினும் வனத்தும்
பெருகும் சேனை கொண்டு இறங்கி வெம் பேர் அமர் விளைப்ப
ஒருவர்-தம் படை செய்தி அங்கு ஒருவர்-தம் படைக்கு
தெரிகிலாது இருந்தனர் செழும் திறல் வய வேந்தர்

மேல்
$3.20.91

#3442
பற்றலார் உறையிடம் தெரிதர சில பகுப்பாய்
ஒற்றரை திசைதிசை விடுத்தனர் அவர் ஓடி
வற்றுறா பெரு நதிகளும் வனங்களும் மலையும்
சுற்றிப்பார்த்து அவர் வரும் வழி-தனில் ஒரு சுரத்தில்

மேல்
$3.20.92

#3443
நறவு தூற்றிய பொழில் திகழ் மக்க மா நகரின்
அறபி காபிர்கள் பெரும் சுமை திரளின் ஒட்டகமும்
பிறவும் கொண்டு இவண் வருதல் கண்டு இமைப்பினில் பிடித்து
வெறி கமழ்ந்த மெய் முகம்மதின் திருமுனம் விடுத்தார்

மேல்
$3.20.93

#3444
இறுங்கு கோதும்பை நெல் முதலிய பல ஏற்றி
பிறங்கலின் வனம் விடுத்து அரும் பெரும் சுர வழியின்
புறம் கடந்து எவண் ஏகுவிர் புகலிடம் யாது என்று
அறம் கிடந்த சொல் முகம்மது அங்கு அவர்களை கேட்டார்

மேல்
$3.20.94

#3445
பருகுறா கொடும் பாலையில் பெரும் புனல் படுத்து
முருகு அறாத மெய் முகம்மது திரு முகம் நோக்கி
இரு கிறா மலை மக்க மா நகரிடத்திருந்து
வருகிறோம் என உரைத்தனர் அறபி வங்கிடத்தார்

மேல்
$3.20.95

#3446
விலகு நீள் கதிர் சுதை நிலை ஷாமினை விடுத்து
குலவும் ஒட்டக திரளொடும் பலருடன் கூடி
இலகும் வேல் கை அபாசுபியான் எவண் உறைந்தான்
சொலு-மின் நீவிர் என்று உரைத்தனர் நபி இறசூலே

மேல்
$3.20.96

#3447
துடவை சுற்றிய ஷாமினை துறந்து அவர் உறைந்த
இடமும் எல்லையும் அறிகிலம் அபூஜகுல் என்போன்
உடன் எழுந்து உத்பத்து சைபத்து உமையாவும்
படையும் வெம் பரி குழுவுடன் இறங்கினர் பரிவின்

மேல்
$3.20.97

#3448
பதுறு மா மலைக்கு அப்புறம் இருக்கும் மன்னவர்க்கு
புதிய போசன வருக்கங்கள் இவை கொடுபோந்தேம்
இது-கொல் யாம் அறிந்தவை என அறபிகள் இயம்ப
சுதினம் இன்று என உரைத்து இறையவன்-தனை துதித்தார்

மேல்
$3.20.98

#3449
அறபி காபிர்கள்-தமை ஒரு தலத்தினில் ஆக்கி
புறம் அடைந்து அகலாது வன் காவலில் புகுத்தி
இறுக கட்டிய ஒட்டகை சுமைகளை இறக்கி
மறுபுறத்தினில் இருத்தும் என்றனர் முகம்மதுவே

மேல்
$3.20.99

#3450
வலிய வீரர்கள் எழுந்து நம் நபி மொழி வழியே
பொலிவுறும் சுமை அனைத்தையும் ஒருபுறத்து ஆக்கி
கலின வாம் பரி அறபிகள்-தமையும் அக்கணத்தில்
ஒலி கொள் பாசறைக்குள் உற புகுத்தினர் ஒருங்கே

மேல்
$3.20.100

#3451
கவசம் போலும் கண் போலும் நல் காயத்தின் உறைந்த
நுவலுதற்கு அரும் உயிர் எனும் துணைவரை நோக்கி
நபிகள் நாயகம் அக களி நனி கனிந்து ஒழுக
மவுலலுற்றனர் தெரிதர ஒரு திரு வசனம்

மேல்
$3.20.101

#3452
கூறும் மக்க நல் நகரவர் குழுவுடன் கூடி
மாறு கொண்டு இவண் அடைந்தனர் ஒல்லையின் வளைந்து
பாறு கொண்டு உண வெம் சமர் களத்திடை படுத்தற்கு
ஈறு இது அதன்றி பின் வேறு ஒரு சமயமும் இலையால்

மேல்
$3.20.102

#3453
இற்றை போதினில் வாய்த்தது இங்கு அடல் இறையோனும்
வெற்றி தந்தன் என்று ஆயத்தும் இறக்கினன் விரி நீர்
வற்றுறா கடல் புவியினில் தீன் பயிர் வளர்க்க
பெற்றம் என்று இயல் நபி மனம் பிரியமுற்று உரைத்தார்

மேல்
$3.20.103

#3454
ஈது முத்திரை பொருள் என யாவரும் இசைந்து
மோது பேரலை மடுக்களும் சுனைகளும் முருகு ஆர்
தாது உகுத்த வெள் அருவியும் மலை அடி சார்பும்
காது மாற்றலர்க்கு இடம் அற காவலில் பொதிந்தார்

மேல்
$3.20.104

#3455
அற்றை போது புக்கு அடைந்த பின் பாசறை அனைத்தும்
பற்றலார்க்கு இடம் அற தலைக்காவலில் படுத்தி
வெற்றி வேந்தர்கள் இருந்தனர் இருள் அற விளக்கி
ஒற்றை ஆழி வெய்யவன் கதிர் விரித்து உதித்தனனால்

மேல்
$3.20.105

#3456
விடிந்த காலையில் அபூஜகுல் எனும் அடல் வீரன்
அடைந்த பாசறை எழுக என்று எழும் முரசு அதிர
கடம் ததும்பிய களிறு எனும் அரசரும் கணமும்
படர்ந்த வெம் பரி குழுவுடன் எழுந்தனர் பரந்தே

மேல்
$3.20.106

#3457
கோல வட்ட வெண் கவிகையும் நெடும் கொடி காடும்
ஆலவட்டமும் கேகய பீலியும் அணியாய்
வேலை வட்ட வெண் திரை என கவரியின் வீச்சும்
நீல வட்ட ஒண் விசும்பு இடன் அற நெருங்கினவே

மேல்
$3.20.107

#3458
பேரி காகளம் அதிர்தர அபூஜகல் புறப்பட்டு
ஆர வாருதி முகம்மது திசை அறியாமல்
பாரின் மின் குலம் பரந்து என வேல் ஒளி பரப்பி
வீரர் சூழ்வர வரவு கண்டவர் விளம்புவரால்

மேல்
$3.20.108

#3459
இகல் மனத்து அபூஜகல் பெரும் படையுடன் எழுந்து
தகைவின் நம் படை உறைவது-தனை அறியாமல்
அகல்வதன்றி நம் எதிர் அடுத்து அடைந்தனன் எனும் சொல்
பகர்வதாயினர் முகம்மது திருமுனம் பணிந்தே

மேல்
$3.20.109

#3460
ஒன்னலார் படை உறுவது என்று உரை வழங்கிடவே
கன்னி மா பெரும் தொகுதிகள்-தமை அலங்கரித்து
மின்னு குற்று உடைவாள் எடுத்து அரையினில் விசித்து
மன்னர் யாவரும் போர் அமர் கோலங்கள் வனைந்தார்

மேல்
$3.20.110

#3461
உதித்த திங்களின் சவி கெட கவிகைகள் ஒளிர
பதி தலத்தினும் விண்ணினும் கொடி திரள் பறப்ப
கதித்த வெம் பரி வீரர்கள் வேந்தர்கள் கடிதின்
இதத்த நல் மறை முகம்மது நபியுடன் எழுந்தார்

மேல்
$3.20.111

#3462
சின்னம் பூரிகை பேரிகை தவில் பறை திடிமன்
இன்னியம் பல முழக்கலில் புவி செவிடு எடுப்ப
மன்னர் பேரணிகலன் ஒளி பருதியின் மலிய
நல் நய சலவாத்தொடும் வாழ்த்தொடு நடந்த

மேல்
$3.20.112

#3463
கொதி கொள் வேலினர் வரி புலி குழு என குழும
பதலையின் புறம் விடுத்து அடல் படை கொடு நடத்தி
எதிரிலான் துணையொடும் ஒரு திடரை விட்டு இறங்கி
பதுறு எனும் தலத்து ஆயினர் முகம்மது நபியே

மேல்
$3.20.113

#3464
ஹபீபு-தம் பெரும் சேனையும் கவிகையும் கொடியும்
அபூஜகுலுடன் வருபவர் எவரும் கண்டு அறிந்தார்
அபூஜகல் பெரும் தானையும் துவசமும் ஆர்ப்பும்
ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவில் கண்டு அறிந்தார்

மேல்
$3.20.114

#3465
திருகு வெம் சின கட கரி அனையவர் திரளை
அரசர் கேசரி என வரும் அகுமதும் நோக்கி
இரு நிலத்தினில் தரு எனும் இரு கரம் ஏந்தி
சுருதி வல்லவன்-தனை இரந்து ஒரு மொழி சொலுவார்

மேல்
$3.20.115

#3466
உன்னும் உன் திரு மறை படிறு எனவும் இ உலகில்
என்னையும் திரு தூதனும் அல என இழிவாய்
சொன்ன காபிர்கள் அடைந்தனர் இவர் உடல் துணிப்ப
மின்னும் வாள் வலி எனக்கு அருள் என விளம்பினரால்

மேல்
$3.20.116

#3467
இந்த நல் மொழி இறையவனிடத்து இரந்து ஏத்தி
அந்தரத்தினில் அமரர் ஆமீன் ஒலி அதிர
கந்துகத்து இருந்து அரு மறை பாத்திகா ஓதி
சுந்தர புய துணைவரை அருளொடும் நோக்கி

மேல்
$3.20.117

#3468
பேத வஞ்ச மன்னவர்கள்-தம் பெயர்களை குறித்து
சோதி மென் கரம் எடுத்து இரு நிலத்தினை தூண்டி
ஏதமுற்று உயிர் விடும் இடம் இஃது இஃது எனவே
பூதலம் புகழ் திரு நபி வாக்கினில் புகன்றார்

மேல்
$3.20.118

#3469
கருதலார் படு களம் இது தலம் என காட்டி
சுருதி நூல் முறை பெருக்கிய நாவினர் சூழ
விருது நீள் கொடி இரு புறம் உலவி மேல் விளங்க
பருதி போல் பெரும் புகழ் நபி படை அணி வகுப்பார்

மேல்
$3.20.119

#3470
கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல்
பிடிக்கும் வெற்றி அஸ்ஹாபிகளினில் சில பெயரை
வடிக்கும் மா மறையவரிடத்தினில் வரவழைத்து
நடிக்கும் வெம் பரியினர் உளம் தெரிதர நவில்வார்

மேல்
$3.20.120

#3471
செறுநர் வெம் படை அடரினும் இவண் சிதகாமல்
விறல் கொள் வில்லினில் பொருவதல்லது கதிர் விரி வாள்
உறையை நீக்கல் என் உரை பிறந்ததன் பின் என்று உரைத்து
நெறியின் ஓர் இடம் நிறுத்தினர் நிலைதவறாதார்

மேல்
$3.20.121

#3472
நிகர் இல் மன்னவர்க்கு இனிது உரைத்து ஒரு தலம் நிறுத்தி
செகதலம் புகழ் அபூபக்கர் செழும் முகம் நோக்கி
இகல் அறும் தனி முதலவன் உதவி கோடு இவணில்
ககன் இழிந்து அமராதிபர் வரவு கண்டனனால்

மேல்
$3.20.122

#3473
ஓங்கல் போலும் ஐயாயிரம் மலக்குகளுடனே
நீங்கில் பஞ்சகலியாணியில் தமனிய நிறத்த
பாங்கரின் சருவந்து அணிந்து அரும் படைக்கலன்கள்
தாங்கி விண்ணிடை எதிர்ந்தனர் இரு விழி தழைப்ப

மேல்
$3.20.123

#3474
எந்தன் ஆருயிர் ஜிபுறயீல் இவண் அமர் அடுத்து
வந்து நின்றனர் வெற்றியும் பிடித்த வாள் வலியும்
அந்த நாயகன் நமக்கு அளித்தனன் என அறைந்தார்
இந்து வந்து எதிர் பகிர்தர பகர்தரும் இறசூல்

மேல்
$3.20.124

#3475
அலியையும் புகழ் தரும் ஹமுசாவையும் அடல் வாள்
வலிமை மிக்கு உபைதத்தையும் மூன்று அணி வகுத்து
சிலை கொள் வெம் பரி வீரர்கள் கணம் பல செறிய
நிலைகொளும்படி தாமும் ஓர் அணி என நின்றார்

மேல்
$3.20.125

#3476
அபுஜகல் முதல் உத்பத்தும் அவன் மகன் ஒலீதும்
பவுரி வாம் பரி சைபத்தும் பெரும் படை கடலும்
நவுரி பம்பைகள் ஆர்த்திட நாலு கையாக
புவனம் எங்கணும் நடுங்குற நடத்தினர் புரவி

மேல்
$3.20.126

#3477
முதிரும் பூசல் கொண்டு இரு பெரும் படைகளும் முன்னி
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி
பதியிருந்து உற முறைகளை பழித்த பாதகரை
சதிபடுத்து இறைவா என தனி இரந்தனனால்

மேல்
$3.20.127

#3478
எட்டிக்கொண்டு எமக்குஉமக்கென இருக்கும் அ இடத்தில்
சுட்டிக்கொண்டவர் இவர் என பெயர்களை தொகுத்து
தட்டிக்கொண்டு கை ஏந்தி நின்று இரந்தவன் தனைத்தான்
திட்டிக்கொண்டது போல் இருந்தன சொலும் திறனே

மேல்
$3.20.128

#3479
உறு சினத்து உத்பத்து சைபத்துடன் ஒலீதும்
முறுகு வெம் சின வெகுளியில் புருவங்கள் முரிய
தெறி கனல் பொறி தெறித்து இமை விழிக்கடை தீய
தறுகிலாது முன் நடத்தினர் துரகத தளத்தை

மேல்
$3.20.129

#3480
தேன் திகழ்ந்த பொன் புய வரை செழும் திறல் அலியும்
ஊன் ததும்பு வேல் உபைதத்தும் அடையலர் உடலம்
கீன்ற வேல் ஹமுசாவும் வெம் படை கொடு கெழுமி
மூன்று பேரும் அ மூவர்கள் எதிரின் முன்னினரால்

மேல்
$3.20.130

#3481
படர் தென்கீழ் திசை இறையவன் சுடு கனல் படையும்
வடவையும் வெகுண்டு எதிர் மலைந்து என வளை கிரியும்
புடவியுள் விழ கடல் சுவறிட பணி புரள
இடன் அற தனி தாக்கின எதிர் இரு படையும்

மேல்
$3.20.131

#3482
முரசு துந்துமி திண்டிமம் முருடு மல்லாரி
பெரிய காகளம் நவுரி பூரிகை தவில் பேரி
இரு வகை படையினும் கிடந்து எழுந்த பேரோதை
குரவு நீர் பெரும் கடல் ஒலி காண்கிலாது ஒளித்த

மேல்
$3.20.132

#3483
பரி குரத்தினும் ஆடவர் தாளினும் பரித்து
துரக்கும் திண் வளை உருளினும் பிறந்த அ தூளி
எரிக்கும் வெம் கதிர் வெய்யவன் இடம் தெரியாமல்
நெருக்கி நின்றது திசையினும் விசும்பினும் நிறைந்தே

மேல்
$3.20.133

#3484
படல தூளிகள் மேகத்தின் நிறைந்த பல் திசையும்
இடிகள் ஒத்த வில் நாண் ஒலி வீரர்கள் எதிர்ந்து
தொடு கை வாள் ஒலி மின் என பல துடிதுடிப்ப
கடி கொள் மா மழை சொரிந்து என சொரிந்தன கணைகள்

மேல்
$3.20.134

#3485
பரவை ஒத்தன சேனையின் நிரைநிரை படர்ந்த
திரைகள் ஒத்தன வாவு வெம் பரி திரை சுறவின்
விரைவை ஒத்தன வேந்தர்கள் திரிந்தவை விரி நீர்
அரவம் ஒத்தன நெருங்கிய படை தரும் அரவம்

மேல்
$3.20.135

#3486
மிதித்தும் சோடு அணி முகத்தினில் தாக்கியும் விரவில்
குதித்த கொட்பினும் வீதியில் திரிந்தும் கொல் நுனை வாள்
பதித்த திண் கர வீரர்கள் உடல் உயிர் பதைப்ப
சதித்து தாவின திரிந்தன சிலசில சடிலம்

மேல்
$3.20.136

#3487
இடியின் ஒன்று ஒலி என எழுந்து அனுமனித்து இமைப்பில்
படியின் மண் திகிரிகள் என கறங்கு என பலகால்
நெடு நிலம் சுழல் வளி என நினைந்த திக்கு அனைத்தும்
கொடிய வெம் படையிடை திரிந்தன சில குதிரை

மேல்
$3.20.137

#3488
வெடித்து மண்டையின் மூளைகள் சொரிய மெல் இதழை
கடித்த பல் பல உதிர்தர கனல் விழி கலங்க
பிடித்த கையொடும் வில் முறிதர குடர் பிதுங்க
அடித்த பந்து என திரிந்தன ஆடல் அம் பரி மா

மேல்
$3.20.138

#3489
வேலில் தாக்கினர் வில்லினில் தாக்கினர் விரி முக்
கோலில் தாக்கினர் வாளினில் தாக்கினர் குடங்கை
தோலில் தாக்கினர் சுரிகையில் தாக்கினர் துரத்தி
காலில் தாக்கினர் தாக்குறும் பேர் அமர் களத்தில்

மேல்
$3.20.139

#3490
உரத்தினும் செழும் தோள் வரை இடத்தினும் உயர் வேல்
கரத்தினும் மலர் முகத்தினும் கழுத்தினும் கரிய
சிரத்தினும் இதழ் கறித்திடும் வாயினும் சினம் அங்கு
உரித்த கண்ணினும் ஒழுகின அருவி ஒத்து உதிரம்

மேல்
$3.20.140

#3491
கால சூறையின் ஒத்து எதிர்ந்து எழு குரகதத்தின்
மேல் அறுந்தன வளை முகம் அறுந்தன மிதி கால்
நால் அறுந்தன காயத்தின் குருதியில் நனைந்து
வால சூரியன் என நின்ற வீரர் கை வாளால்

மேல்
$3.20.141

#3492
காந்து வெவ் அழல் என படைக்கலன்களை கடிந்து
போந்த மள்ளர்கள் ஆவியை விசும்பிடை போக்கி
பாய்ந்த மாக்களின் உரங்களை இரு வகிர்ப்படுத்தி
வேந்தர் மார்பினும் புகுந்தன வயவர் கை வேல்கள்

மேல்
$3.20.142

#3493
கேடகத்தையும் தாங்கிய கரத்தையும் கிடந்த
சோடு இணைப்படும் இரும்பையும் உரத்தையும் துளைத்து உள்
ளூடுற புகுந்து இருந்த வல் உயிரையும் உருவி
சாடி அப்புறம் போயின வீரர் கை சரங்கள்

மேல்
$3.20.143

#3494
கொடி ஒடிந்தன விரி குடை நுறுங்கின குணிலால்
அடிபடும் பறை பேரிகை உடைந்தன அரசர்
முடி தகர்ந்தன சோடுகள் உதிர்ந்தன மூரி
தடமுறும் கரத்து ஏந்திய வீரர் கை தடியின்

மேல்
$3.20.144

#3495
மூசி வண்டு உடை தும்பை அம் தொடையலை முடித்து
தூசி நின்றவர் துணித்து வெம் கொடி படை துரத்தி
வாசியின் குழு குறைந்திட பிண குவை மலிய
வீசி நின்றனர் சிலசில திறல் வய வீரர்

மேல்
$3.20.145

#3496
வாடை கொண்டு உறும் பரியொடும் வீரரை மாய்த்து
நீடும் வேல் கெட விடுத்து அவண் நிலத்திடை கிடந்த
ஆடல் வெம் பரி தாள் எடுத்து ஒரு கையில் ஆக்கி
சாடுகின்றனன் வயவரை அதில் ஒரு தலைவன்

மேல்
$3.20.146

#3497
வெற்றி வாள் கணை பொருது அழிந்திடலும் வெம் சினத்தின்
முற்றி நின்றனன் கண்டு ஒரு திறலவன் முன்னி
இற்று வீழ்ந்திட தோளினை வாளினால் எறிந்தான்
அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே

மேல்
$3.20.147

#3498
அடுத்து பிற்புற தூணியில் கிடந்த அம்பு அனைத்தும்
தொடுத்து மள்ளரை துணித்து அற தொடு சரம் இலவால்
மடுத்து மார்பகம் கிடந்த அம்பு அனைத்தையும் வாங்கி
விடுத்து நின்றனன் சிலை குழைந்திட ஒரு வீரன்

மேல்
$3.20.148

#3499
பம்பும் மா கடல் தானைகள் இரிதரப்படுத்தி
வெம்பு மா திரள் ஒன்றொடொன்று அடித்து அற வீழ்த்தி
கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும்
தும்பி இல் என சலித்து நின்றனன் ஒரு வீரன்

மேல்
$3.20.149

#3500
கூரும் வெம் கணை அனைத்தையும் தொலைத்து குற்று உடைவாள்
வாரிச செழும் கரம் கொள வெகுண்டு ஒரு வயவன்
ஆர மார்பினில் வேல் கொடு தாக்கினன் அவனை
வீர வேல் உற நடந்து கொன்றனன் ஒரு வீரன்

மேல்
$3.20.150

#3501
பாரின் வெம் களத்திடை வெறும்கயன் என பரியை
ஊரவிட்டு அடர்ந்து எதிர்த்தனை வெகுண்டு வண்டு உறுக்கி
மூரி வெம் பரியுடன் அவன் வாயினும் மூக்கும்
சோரி கொட்டிட புடைத்தனன் அதில் ஒரு சூரன்

மேல்
$3.20.151

#3502
அச்சுவத்தினும் வீரர்கள் புயத்தினும் அழுந்த
தச்ச வாளியும் வேலும் பைம் குருதிகள் சாய்ப்ப
விச்சையின் களத்து இடன் அற திரிந்தவர் எவரும்
எச்சில் என்று உறை வாள் கழற்றிலன் ஒரு வீரன்

மேல்
$3.20.152

#3503
நீல மா முகில் துணி எனும் கேடக நிரையின்-
பால் புகுந்து உடல் தலை கரம் இரு வகிர்ப்படுத்தி
கோலி நின்ற மன்னவன்-தனை எதிரினில் குறுகி
வேலினால் எடுத்து ஏந்தினன் ஒரு வய வீரன்

மேல்
$3.20.153

#3504
பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி
ஐயமற்றவன்-தனை ஒரு வீரன் சென்று அடுத்து
செய்வது ஈது என வீழ்த்தி வன் சிரத்தினை திருகி
கையின் ஏந்தி நின்று ஆடினன் எதிர் அமர் களத்தில்

மேல்
$3.20.154

#3505
ஆவியோ சினமோ பெரிது என அறிகிலன் போர்
தாவி போக்கினன் கரத்தொடும் இரு துணை தாளும்
பூவின் மேல் கிடந்து ஆர்ப்பொடும் வயவரை புகழ்ந்து
கூவி ஓய்ந்திலன் போர் வருக என ஒரு குரிசில்

மேல்
$3.20.155

#3506
முடக்கு வால் பகு வாய் அரி ஏறு என முனியும்
சுடர் கண் வேங்கைகள் என சில வீரர்கள் துறுமி
கடக்கும் வெற்றியின் இனையன அமர்செய கடிதின்
உடைக்கும் வெம் பரி வீரர் உக்காச வந்துற்றார்

மேல்
$3.20.156

#3507
கால மாருத பரியினை விசையினில் கடவி
ஆலகாலம் ஒத்து அரசரை பிண குவை ஆக்கி
மேலும் தாக்கி வெம் பரி இனம் தரையினில் வீழ்த்தி
கோலம் ஆர் கதிர் வாளினில் கூறுசெய்தனரால்

மேல்
$3.20.157

#3508
கரு கொள் கார் இடி என கருதலர்கள் கட்டு அழிய
முருக்கும் வேளை உக்காச கை ஆயுதம் முறிந்து
செருக்கொடும் திரிந்து உலவிய பரியினை திருப்பி
அருக்கன் ஒத்த நம் முகம்மது நபியிடத்து ஆனார்

மேல்
$3.20.158

#3509
பால் அடுத்த உக்காச செம் மலர் முகம் பார்த்து ஓர்
கோல் எடுத்து நம் நபியவர் கரத்தினில் கொடுப்ப
மால் அடுத்த கைக்கு ஏந்தியவுடன் வடி வாளாய்
சூல் அடுத்த மை மின்னினும் சுடர் இலங்கியதே

மேல்
$3.20.159

#3510
மன்னர் மன் நபி கொடுத்த கை கோல் ஒரு வாளாய்
இ நிலம் பெற இரும் தகை கரத்தினில் ஏந்தி
பொன் இலங்கிய குசை பரியொடும் படை புகுந்து
முன்னர் தாக்கினும் மும்மடங்கு என முருக்கினரால்

மேல்
$3.20.160

#3511
நீளும் வேல் அறுந்தன கதை அறுந்தன நிருபர்
தோள் அறுந்தன சோடு அறுந்தன துரகதத்தின்
தாள் அறுந்தன கேடகம் அறுந்தன தலைவர்
வாள் அறுந்தன குடை கொடி அறுந்தன மாதோ

மேல்
$3.20.161

#3512
மாறுபட்டவர் சிரத்தினும் உரத்தினும் மலிய
ஊறு பட்டன உதிரங்கள் ஊற்றெடுத்து ஒழுகி
சேறுபட்டன நெடு நில மணியொடு திறனும்
வேறுபட்டன பட்டன காபிர்கள் வீரம்

மேல்
$3.20.162

#3513
தலை குவிந்தன கர துணி குவிந்தன தரியார்
சிலை குவிந்தன படைக்கலம் குவிந்தன திரளின்
உலவு வெம் பரியுடன் அடல் வேந்தர்கள் உடலம்
மலை குவிந்து என குவிந்த உக்காச கை வாளால்

மேல்
$3.20.163

#3514
உக்கிர பரி நடவி வெள் உரும் என உரறி
கை கடுத்தலை விதிர்த்து வெம் காபிர்கள் சூழ
மிக்க சைபத்து என்று ஓதிய விறல் அரி வீரன்
புக்கினன் திரு நபி துணையவர் பொரும் இடத்தில்

மேல்
$3.20.164

#3515
அடர்ந்து சைபத்து வரவு கண்டு அடல் அரி ஹமுசா
திடம் தரும் கதிர் வாளினை நோக்கி கண் சிவந்து
தொடர்ந்து சூறையில் திரித்து வெம் பரியினை துரத்தி
இடம்தரும் பெரும் களத்தில் அங்கு அவன் முனம் எதிர்ந்தார்

மேல்
$3.20.165

#3516
மாறிலான் திரு நபிக்கு உரைத்திடும் கலிமாவை
வேறு கொண்டனை புந்தி அற்றனை முனம் விதித்த
ஈறு நாள் இவையோ வினை சூழ்ந்ததோ எதிர்ந்தாய்
கூறு கூறு என நகைத்து அவன் முனம் குறுகினரால்

மேல்
$3.20.166

#3517
நீங்க அரும் கிளை இழந்து முன் நெறி நிலை தவறி
தீங்கினுட்படும் பதக என்று இரு விழி சிவப்ப
ஓங்கும் வாள் எடுத்து அசைத்து இதழ் கறித்து வண்டு உறுக்கி
பாங்கரில் கறங்கு என திரித்தனன் வய பரியை

மேல்
$3.20.167

#3518
வாவு வெம் பரி இழிந்து எனை ஒருதரம் வணங்கி
சேவகத்தினை தவிர் பிழை அல எனில் தீங்கின்
ஏவல் கொண்டு உனை விடுத்த பொய் முகம்மதினிடத்தில்
போவதற்கு இடம் இலை இறந்தனை நொடி போதில்

மேல்
$3.20.168

#3519
ஈது முத்திரை அறிக என சைபத்து என்பவன் அங்கு
ஓதி நின்றனன் கேட்டு அனல் வெகுளியுற்று உனை போல்
வாது உரைப்பது இன்று அமர் அறிகுவன் என வகுத்து
காதும் வாளையும் தோளையும் நோக்கி கண்சிவந்தார்

மேல்
$3.20.169

#3520
கொதித்த கண் எரி தவழ்தர கொடும் கதிர் வாளால்
மதித்த மன் ஹமுசா திரு மணி முடி இலக்காய்
எதிர்த்து தாக்கினன் தாக்கலும் கேடகத்து ஏந்தி
அதிர்த்து வீசினர் வீசலும் தாங்கினன் அவனே

மேல்
$3.20.170

#3521
கையின் வேல் எடுத்து எறிந்தனன் கதிர் முடி ஹமுசா
மெய்யில் சோட்டினில் தாங்கின கடுப்பினில் வெகுண்டு
செய்ய வெம் கதை எடுத்து அடித்தலும் பட சிதறி
ஐயமற்று அற நொறுங்கின கேடகம் அன்றே

மேல்
$3.20.171

#3522
கட்டு வாம் பரியினை பரி முகத்தொடும் கடவி
வெட்டுவார் எறிவார் மணி வேலினை வேலில்
தட்டுவார் புடைப்பார் திரிவார் தட கதையால்
ஒட்டுவார் திறம் சாய்த்திலர் ஒருவருக்கொருவர்

மேல்
$3.20.172

#3523
மடித்து வாய் இதழ் கறித்து செம் மணி கதை ஓங்கி
புடைத்தனன் ஹமுசா திரு கொடி விலாப்புறத்தில்
இடிக்கு நேர் எனும் அடியினில் சினந்து வாள் எறிந்தார்
அடல் பரி குசையொடும் அவன் கரம் அறுந்தனவால்

மேல்
$3.20.173

#3524
கரம் தறிந்திட ஓங்கினன் மறுத்தும் அ கதையும்
உரம் திகழ்ந்த அவன் சிரமும் பொன் சோடுடன் உடலும்
பரிந்த பக்கரை குதிரையும் இரு பகுப்பாக்கி
விரிந்த பாரிடத்தினில் கிடத்தினர் ஒரு வீச்சில்

மேல்
$3.20.174

#3525
வீரன் சைபத்து மடிந்தனன் எனும் வெகுளியினால்
கோர மா மத கரட வெம் களிறு என கொதித்து
காரின் மின் எனும் அயிலொடும் பரியினை கடவி
சாரும் வெம் படை அதிர்தர ஒலீது வந்தனனால்

மேல்
$3.20.175

#3526
பச்சிரத்த செம் சேற்று அழறு எழும் நெடும் பாரின்
வச்சிராயுதம் கொடு வரும் ஒலீது உளம் மறுக
அச்சுவத்தொடும் முதன்முறை செரு விளையாட்டுக்கு
இச்சையின்படி கிடைத்தது என்று அலியும் வந்து எதிர்ந்தார்

மேல்
$3.20.176

#3527
கலின வாம் பரி வீரரில் எனது கை அறிய
வலிய வஞ்சக முகம்மதே எதிர் வரல் வேண்டும்
சிலையும் தண்டமும் கட்கமும் தரித்து ஒரு சிறுவன்
நலிவு இலாது இவனோ எதிர்பவன் என நகைத்தான்

மேல்
$3.20.177

#3528
படைக்கலத்தொடும் உனையும் வெம் பரியையும் படியின்
அடித்து வீழ்த்துவது அரிது அல எதிர்ந்தனையாயில்
பிடித்து நோக்குவது இலை உனது உயிர்க்கு ஒரு பிழையாய்
இடுக்கண் எய்தும் முன் சார்பிடத்து உறைக என்று இசைத்தான்

மேல்
$3.20.178

#3529
அறிவின் செய் வினை தவிர் வினை அறிகிலாதவரே
சிறுவர் பூவினில் சிறுவராயிருந்தும் செவ்விய தீன்
முறைமை நின்று நல் வணக்கமும் ஒழுக்கமும் முதிர்ந்தோர்
மறனும் ஆண்மையும் பெரிது என அலி வகுத்து உரைத்தார்

மேல்
$3.20.179

#3530
தருமம் என்று உரை வழங்கினன் அ மொழி-தனை நீ
வருமம் என்று கொண்டு இகழ்ந்தனை உனை வரைந்து இறுக்கி
எரி முன் ஆக்குவன் காண்டி ஒல்லையின் என இசைத்தான்
பொரியும் செம் தழல் கெழுமிய குழியிடை புகுவான்

மேல்
$3.20.180

#3531
நாயகன் திரு தூது எனும் முகம்மது நபியை
காயும் வஞ்சக கொடியன் என்று உரைத்த கட்டுரைக்கும்
தீயினில் புகுத்திடுவன் என்று எனை செறுத்தற்கும்
வாயினை கிழித்து எறிவன் கண்டு அறி என வகுத்தார்

மேல்
$3.20.181

#3532
இசைத்த வாசகம் கேட்டலும் இரு விழி கனல
கசைத்தலம் பொடிபட பரி புடைத்து இதழ் கடித்து
விசைத்து இட கர கேடகம் குலுக்கி வெம் கதிர் வாள்
அசைத்து எறிந்தனன் ஆடல் வெம் பரி புலி அலியை

மேல்
$3.20.182

#3533
எறிந்த வாள் அலி கதையினில் தாக்க எண் பகுப்பாய்
முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல் கொடும் முனிந்து
பறிந்து போம்படி விடுத்தனன் பல் மணி கதிரின்
நிறைந்த கேடகத்து எற்றவும் இற்றது அ நெடு வேல்

மேல்
$3.20.183

#3534
அயிலும் கட்கமும் அறுந்தன என மனம் அழுங்கி
எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து
பயிலும் வெம் படைக்கலன் உளவெனில் இனம் பார் என்று
இயல் தரும் திரு மறை நபி மருகர் நின்று இசைத்தார்

மேல்
$3.20.184

#3535
உற்ற வாசகம் கேட்டலும் வலிய தண்டு ஓங்கி
சுற்றி விட்டெறிந்தனன் பிடித்து இட கையால் சுழற்றி
மற்றவன் புயத்து எறிந்தனர் வனை துடர் சோடும்
அற்று இறுந்தது அ தண்டமும் நுறுங்கியது அன்றே

மேல்
$3.20.185

#3536
பின்னும் ஓர் வடி வாளினை கரத்தினில் பிடித்து
மன்னு வாம் பரி அலியின் மேல் நீட்டினன் மறுத்தும்
கொல் நுனை கதிர் வாளினில் தாங்கினர் கொதித்து
சின்னபின்னங்கள் படுத்திட பரியினை திரித்தார்

மேல்
$3.20.186

#3537
ஒலிதும் வெம் பரி துரத்திட ஊழி வெம் காலும்
மலியும் வெவ் அழல் வடவையும் எதிர்ந்தன மலைந்து
கலினெனும் படைக்கல தொனி திசைதிசை கதுவ
புலன் உறைந்தவர் அதிசயித்திடும்படி பொருதார்

மேல்
$3.20.187

#3538
கன்றிலா மன திறத்தவர் இடு படைக்கலன்கள்
ஒன்றொடொன்று எறிந்து அழல் பொறி தெறித்திட ஒளிரும்
வென்றி வாள் அலி செழும் கர விசை தரும் விரைவில்
குன்று போல் விழுந்து அவிந்தனன் ஒலீது எனும் கொடியோன்

மேல்
$3.20.188

#3539
கலின வாம் பரி மிசை கர கடுத்தலையுடனும்
ஒலிது வீழ்ந்தது கண்டு உத்துபத் எனும் உரவோன்
புலி எனும்படி சினந்து எழுந்து அடல் பரி புடைத்து
வலிய வீரர்கள் பொரும் அமர் களத்திடை வந்தான்

மேல்
$3.20.189

#3540
உதுபத் என்னும் அ கொடியவன் நடந்த உக்கிரத்தின்
எதிர் எழுந்து உபைதத்து எனும் புரவலர் ஏகி
கதிர் கொள் வாள் கொடு தாக்கினர் கதையினில் பிடித்து
முதிரும் வெம் கதிர் அயில் கொடு முனிந்து மோதினனால்

மேல்
$3.20.190

#3541
அள்ளு இலை கதிர் வேலினை வாளினால் அறுத்து
வள்ளல் தாக்கலும் தாக்கினன் செழும் கதிர் வாளால்
விள்ள அரும்படி ஒருவருக்கொருவர் வாள் விதிர்ப்ப
கொள்ளி வட்டங்கள் என திரிந்தன குரகதங்கள்

மேல்
$3.20.191

#3542
காற்றை ஒத்தன விசையினில் தாக்கினில் கரு வான்
ஏற்றை ஒத்தன வெகுளியின் எரியை ஒத்தனவால்
சீற்றம் உள் கொடும் எழுந்தன பறந்தன தெரிந்து
சாற்றும் பேர் எவர் இருவர்-தம் குதிரையின் சாரி

மேல்
$3.20.192

#3543
சக்கரத்தினும் வேலினும் வாளினும் தாக்கும்
உக்கிரத்தினில் இருவர் மெய்யினும் ஒழுகு உதிரம்
கக்கிநின்றன ஊறுகள் இடன் அற கலிப்ப
மிக்க வெம் சமர் விளைத்தனர் இருவரும் விரைவின்

மேல்
$3.20.193

#3544
விரைவினில் பெரும் போரினை இருவரும் விளைப்ப
அரி எனும் திறல் அலியும் வெம் பரி ஹமுசாவும்
ஒரு நொடிக்குள் வந்து அடுத்தனர் உத்பத் என்பவனை
இரு நிலத்திடை வீழ்த்தினர் உதிரங்கள் இழிய

மேல்
$3.20.194

#3545
வேந்தர் மூவரும் இறந்திட அபூஜகில் வெகுண்டு
காந்து வெம் கனல் விழி எரிதர கரம் பிசைந்து
மாய்ந்திடும் பெரும் களத்திடை தீனவர் மறுக
பாய்ந்திடும் புலி குழு என நடத்தினன் படையை

மேல்
$3.20.195

#3546
ஆடல் அம் பரியொடும் திறல் பரிகள் வந்து அடர்த்த
நீடும் வேலுடன் வேலவர் அடர்த்தனர் நெருங்கி
சாடும் வாளுடன் வாளினர் அடர்த்தனர் தாக்கி
கோடும் வில்லுடன் வில்லினர் அடர்த்தனர் குழுமி

மேல்
$3.20.196

#3547
விடு கை அம்பினும் கதையினும் மழுவினும் விடம் ஆர்
நெடிய வேலினும் சக்கரத்தினும் உடல் நெரிய
படு கவண் கலின் எறியினும் உரத்தினில் பதிய
தொடு சரத்தினும் விசும்பினை இடன் அற தூர்த்தார்

மேல்
$3.20.197

#3548
வன் பிறந்திட செலும் திறத்தவர் செழும் மார்பில்
பொன் பிறந்த பல் மணி சிறிது இமைத்தன பொரு பா
ரின் பிறந்த செம் தூளியினிடை பல கோடி
மின் பிறந்து என பிறந்தன வாள் ஒளி விளக்கம்

மேல்
$3.20.198

#3549
பெருகும் பல்லியத்து ஒலிப்பினும் படைக்கலன் பிணங்கி
மருவும் ஆர்ப்பினும் வரும் சிலை கலிப்பினும் மலிந்த
புரவி ஆர்ப்பினும் வீரர்கள் ஆர்ப்பினும் போரின்
இரு திறத்து மன்னவர்களும் தலைமயங்கினரால்

மேல்
$3.20.199

#3550
முருகு இருந்த பைம் தொடையலும் சருவந்த முடியும்
கருகும் வட்ட ஒண் பரிசையும் மணி பல கலனும்
விரிதரும் செழும் துகிலும் கஞ்சுகியும் வெம் பரியும்
குருதி நீரில் நனைந்து செம் நிறத்தினை கொடுத்த

மேல்
$3.20.200

#3551
வில்லின் வீழ்த்திட மாய்ந்தனர் சிலர்சிலர் வெகுண்டு
மல்லின் மாய்ந்தனர் சிலர்சிலர் வேல் கொடு மார்பில்
கல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் வாக்கினில் கலிமா
சொல்லி மாய்ந்தனர் சிலர்சிலர் சோரி வெம் களத்தில்

மேல்
$3.20.201

#3552
படர்ந்து கொன்றனர் சிலர்சிலர் இழிந்து வெம் பரியை
நடந்து கொன்றனர் சிலர்சிலர் நடையும் மற்று ஒழிந்து
கடந்திருந்து கொன்றனர் சிலர்சிலர் மனம் கனன்று
கிடந்து கொன்றனர் சிலர்சிலர் வீரர்கள் கெழுமி

மேல்
$3.20.202

#3553
அண்டர்_நாயகன் மறை நெறி தீனிலையவரும்
மிண்டு பேசிய அபூஜகல் காபிர் வெம் படையும்
மண்டு பேர் அமர் விளைத்திட முகம்மது நயினார்
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள்

மேல்
$3.20.203

#3554
சேவைசெய்து அமரர் நிதம் அடி பரவும் செவ்வியர் கருத்தினை அறிந்து இன்று
ஏவலுக்கு இயைவன் யான் என புடவி இரு விசும்பிடத்தவர் கேட்ப
கூவியது உணர்ந்து மா மறை அளித்த கொற்றவன்-தனை புகழ்ந்து ஏத்தி
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால்

மேல்
$3.20.204

#3555
திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில்
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து
பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால்

மேல்
$3.20.205

#3556
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து
செறிந்த வெம் களத்தில் காபிர்கள் முகத்தும் செவந்த கண்களினும் வாயினும் போய்
மறைந்தன விழுந்து வலிகளும் கெடுத்து மண்டின அதில் தலைமயங்கி
அறைந்த பேரொலியும் செவிகளில் தோன்றாது அற பயந்து அறிவு அழிந்தனரால்

மேல்
$3.20.206

#3557
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும்
ஒருப்பட திரண்டு நடந்து என தீனோர் யாவரும் ஒருமுகம் ஈண்ட
தெரிப்ப அரும் தொகுதி தலைவரும் பரியும் திரளுறும் சேனையும் மிடைந்து
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி

மேல்
$3.20.207

#3558
நிரைநிரை பரியின் பிண குவை மலிந்த நிருபர்கள் உடற்குறை மலிந்த
விரி கதிர் பூணும் ஆரமும் மலிந்த வெற்றி வெம் படைக்கலன் மலிந்த
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த
முரிதரும் சிரசின் மூளைகள் மலிந்த மொய்த்த வெண் நிணங்களும் மலிந்த

மேல்
$3.20.208

#3559
முரசமும் அவிந்த காகளம் அவிந்த மூரி வெம் பேரியும் அவிந்த
பரிகளும் அவிந்த ஆவண தொகுதி பாசறை முழக்கமும் அவிந்த
திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த
அரசரும் அவிந்த வாகையும் திறனும் ஆண்மையும் அவிந்தன அன்றே

மேல்
$3.20.209

#3560
சம்பு இனம் பரந்த ஓரியும் பரந்த தசையினுக்கு ஒன்றொடொன்று அடர்ந்து
வெம்பிய ஞமலி குலங்களும் பரந்த விசும்பிடத்து இடன் அற நெருங்கி
செம்பருந்து இனமும் சகுந்தமும் பரந்த திரள் கரும் கொடி பல பரந்த
பம்பு வாருதியின் அலகைகள் பரந்த பாசறை பெரும் பறந்தலையின்

மேல்
$3.20.210

#3561
வரைகளின் ஏறி பொதும்பரில் புகுந்து மறைந்தனர் சிலர் அயில் எறிந்து
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின்
நிரைகளில் பதுங்கி கிடந்தனர் சிலர் தம் நினைவு அழிந்து உழன்றவர் சிலரால்
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால்

மேல்
$3.20.211

#3562
தெறு களத்து உயிரை முதல் இடுபவரும் திசைதிசை சில அழிந்தவரும்
உறு கொலை களம் நின்று ஊர் புகுந்தவருமன்றி ஒண் சிலை அயில் கதிர் வாள்
எறிதர எதிர்ந்த தலைமை மன்னவரின் எழுபது பெயரினை சினந்து
மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ

மேல்
$3.20.212

#3563
அடி நிலம் தெரியா முகம்மதின் பிதா பின்னான அபாசையும் நிகரா
வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின்
நடவு வாம் பரி ஆரிது தரு திரு சேய் நெளபல் என்பவனையும் முன்னர்
பிடிபடும் பெயரின் இவரையும் நபி முன் பிடித்து வந்தனர் வய வேந்தர்

மேல்
$3.20.213

#3564
பிடித்த மன்னவரை முன்னுற நடத்தி பெரும் படை அனைத்தையும் திரட்டி
முடித்த வெம் போரில் காகளம் முழக்கி உறைந்திடும் பாசறை முன்னி
அடித்து உடைத்து இறந்த தீனவர் பதினான்கு அமர் உறும் தலைவர்கள்-தமையும்
எடுத்து இனிது அடக்கி தொழுதிருந்தனர் மேல் இரவியும் மறைந்தனன் அன்றே

மேல்
$3.20.214

#3565
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை
திடம் தரு மொழியால் அழைத்து அருகு இருத்தி தீயவன் அபூஜகுல் என்போன்
உடைந்து ஒழுகினனோ அலது இறந்தனனோ ஊறுபட்டு இடைந்தனனோ என்று
இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார்

மேல்
$3.20.215

#3566
தூயவன் இறசூல் நபி இனிது உரைத்த சொல்லினை சிரசின் மேல் ஏற்றி
சீயம் ஒத்து எழுந்து வரி புலி அனைய தீனவர் நால்வர்களுடனும்
மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது
போயினர் பறவை பந்தரில் கிடந்த பொங்கு செம் குருதி வெம் களத்தில்

மேல்
$3.20.216

#3567
மெய் உழன்று இறந்து கிடந்தவர் ஒரு பால் விலா புடைத்து இறந்தவர் ஒரு பால்
கை இழந்து அருகில் கிடந்தவர் ஒரு பால் கால் துணை இழந்தவர் ஒரு பால்
மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால்
எய்யும் வன் சரங்கள் துளைத்திட குருதி இழிந்திருந்து இறந்தவர் ஒரு பால்

மேல்
$3.20.217

#3568
காலினை மடக்கி வாய் இதழ் அதுக்கி கவ்வி வெள் எயிறுகள் இலங்க
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி
மால் உறும் கரட மத மலை துளைக்கும் வயிர ஒள் வேலினை ஊன்றி
மேல் உறும் அமரும் கொல்வன் என்பவன் போல் இருந்த பல் வீரரும் கண்டார்

மேல்
$3.20.218

#3569
குற்று உடை கதிர் வாள் குரகத வயிற்றில் குழித்திட சாய்ந்து அவண் கிடந்த
முற்றிய முனையின் திறத்தவன் அலகை குலத்தொடும் அருந்திட முரணி
பற்றி வெம் கரத்தால் நிண குடர் பிடுங்கும் பான்மை ஒத்தனன் பல நோக்கி
வெற்றி வெண் மலர் தார் புயத்தவர் மகிழ்ந்து திரிந்தனர் வீர வெம் களத்தில்

மேல்
$3.20.219

#3570
கந்துக கழுத்தை முரிதர நெருக்கி எறிந்தவன் களன் அற கவப்பட்டு
இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி
நந்தினனலன் என்று இகலனும் சுணங்கும் நடந்து அருந்திட கடிது ஒதுங்கி
சிந்தையின் வெருவுற்று அடிக்கடி நோக்கி திரிவன பலவும் கண்டனரால்

மேல்
$3.20.220

#3571
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி
அள்ளு இலை நெடு வாளிகள் உறைந்திருந்த ஆடவர் தோற்றம் அங்கு அடைந்த
வள் உகிர் சுணங்கும் இகலனும் திரிந்த இடத்தின் முள்மாவும் வந்து இணங்கி
உள்ளுறும் களத்தில் கிடப்பன போன்றும் கண்டனர் பலபல ஒருங்கே

மேல்
$3.20.221

#3572
பறவைகள் குலவும் சிறை நிழல் பந்தர் பக்கரை பரி அணை சாய்ந்து
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி
குறைவற அலகை நடம் பல பயில கொடும் கள குருதி நல் நிலத்தின்
நிறை உயிர் போக்கி அரசுவீற்றிருந்த இடங்களும் நிறைந்தன கண்டார்

மேல்
$3.20.222

#3573
இடருறும் இகலன் ஒன்றொடொன்று இகலி இரைத்து எழும் குரைப்பினுக்கு அஞ்சி
துடர்படும் குடர் வாய் கவ்வி விண்ணிடையில் சுழன்று எழும் பறவையின் தோற்றம்
அடிபடும் கொடிய மாருத விசையின் ஆயிடை புரி முறுக்கு அறுந்து
விடு நெடும் கயறும் படமும் ஒத்து எழுந்து விளங்குதல் பலவும் கண்டனரால்

மேல்
$3.20.223

#3574
மல் உயர் திணி தோள் விடலைகள் தாங்கும் வட்ட ஒண் கரிய கேடகங்கள்
எல்லையின் இழிந்த குருதியில் கிடந்து அங்கு இலங்குவது எழில்தர சிவந்த
அல்லி சேதாம்பல் தடத்திடை மிதந்த ஆமையின் புறம் என ஒளிர
வில் அணி தட கை மறத்தில் தீன் விளைத்த வெற்றி மன்னவர்கள் கண்டனரால்

மேல்
$3.20.224

#3575
அலர் நகை முகங்கள் எண்ணில பரந்து கிடந்திடும் குருதி அம் சேற்றில்
நிலவு வெண் கவிகை இடையிடை பதிந்து நிறைந்து இலங்குவன பைம் தடத்துள்
பல இதழ் விரித்து செம் நறா துளித்த பதும மென் காட்டிடை புகுந்து
குலவிய அனத்தின் குலங்கள் வீற்றிருந்த கோலம் ஒத்தனவும் கண்டனரால்

மேல்
$3.20.225

#3576
அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில்
விரி கதிர் உமிழ்ந்து கிடப்பன என்றூழ் விழுங்கிய செக்கர் வானிடத்தினில்
பெருகிய தாரா கணம் பல கோடி பிறந்து ஒளி விரிப்பன போலும்
தெரிதர நோக்கி அடிக்கடி மகிழ்ந்து திரிந்தனர் சில வய வீரர்

மேல்
$3.20.226

#3577
கங்கமும் கொடியும் சகுந்தமும் ஓரி கணங்களும் இகலனும் சுணங்கும்
செம் களத்திடை குற்றுயிர் உடல் அருந்த தெறித்திடும் குருதியில் திரிவ
வெம் கதிர் நெடு வேல் ஊறுகள்பட மெய் வருந்திடா வீரரை போன்றும்
எங்கணும் பல கண்டு அடு படைக்கலன்கள் இடு நெடும் புலத்திடை திரிந்தார்

மேல்
$3.20.227

#3578
ஏற்றிய சிலை கை தறித்திட பறிபட்டு எழுந்த அம்பு ஊறுபட்டு இடைந்து
சேற்றிடை கிடந்து மூச்சொடு முனங்கி திகைப்பன ஓரிகள் பலவும்
மாற்ற அரும் வீரர் கதைபட தெறித்த மண்டைகள் மூளையின் வழுக்கி
கால் துணை முறிந்து பயப்பய திரியும் நரி குலம் பலவும் கண்டனரால்

மேல்
$3.20.228

#3579
ஒலிது எனும் வேந்தன் இறந்த பேர் இடமும் உக்குபா வீந்த வெம் களமும்
பலி என உத்பத் இறந்திடும் இடமும் சைபத்து படும் பறந்தலையும்
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும்
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால்

மேல்
$3.20.229

#3580
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப
குறையுயிர் உடலம் குருதி கொப்பிளிப்ப கொடும் சமர் பல விளையாடி
தெறு கள நாப்பண் அபூஜகல் கிடப்ப தீனவர் இனிது கண்டனரால்

மேல்
$3.20.230

#3581
கண்களில் சேப்பும் நுதலினில் வியர்ப்பும் கரிய மை மீசையின் முறுக்கும்
புண்பட இதழில் பற்பல் கால் சினந்து பூட்டிய கொடிய வெள் எயிறும்
மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும்
பண்பொடும் தெரிய களத்திடை கிடந்த பாதகனிடத்தின் உற்றனரால்

மேல்
$3.20.231

#3582
செல்வமும் திறனும் புறத்து அளித்தனையே தீவினை பயிர் விளைத்தனையே
நல் வரம் அனைத்தும் பாழ்படுத்தினையே நடுநிலை-தனை தவறினையே
பல் பொருள் சுவன பதி இழந்தனையே பாழ்ங்குழிக்கு உடல் வளர்த்தனையே
சொல் விதம் விடுத்து பவம் எடுத்தனையே சூழ் வினை-தனை அறிந்திலையே

மேல்
$3.20.232

#3583
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே
பாரினில் சிறந்த மக்க மா நகரில் பரிவுறும் வீரருக்கு அரசே
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை
ஈரமுற்று இசைந்து மனத்தினில் இருத்தாது இடும்பு எனும் இடர் விளைத்தனையே

மேல்
$3.20.233

#3584
மேலும் இன் கலிமா உரைத்து உறும் தீனை விரும்புவையெனில் முகம்மது-தம்
பாலினில் கொடுபோய் பருவரல் தவிர்த்து பரிவுறும் தலைமை செய்குவம் நீ
கோலிய பகையை விடுத்து நன்கு உரையை கூறு என கூறலும் கொதித்து
வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான்

மேல்
$3.20.234

#3585
இறுதியில் கலிமா உரை என எதிரின் உரைத்தனை இழிந்த சாதிகளில்
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற
பெறுமவர் இலை என்னிடத்தினில் என்றால் யாவர்தான் என் இனி பேசார்
தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான்

மேல்
$3.20.235

#3586
வசை மொழி உரைப்ப கடிதினில் வெகுண்டு மருங்கு உடைவாளினை வாங்கி
விசையுடன் தாடி-தனை பிடித்து ஈழ்த்து விறல் கொழும் கரத்தினில் சுற்றி
அசையுறும் சிரசை அறுத்து வேறாக்கி அவனுடன் எழுவர்கள்-தமையும்
பசை அறும் பாழ்ங்கூவலினிடை படுத்தி விட்டனர் பலன் படையாமல்

மேல்
$3.20.236

#3587
அபுஜகல் சிரத்தை கரத்தினில் தூக்கி அள்ளல் அம் குருதியில் திரிந்த
கவி சிறை பறவை குலங்களும் இரிய கணத்தொடு நரி குலம் ஒதுங்க
சவி தரும் கொடியும் கவரியும் குடையும் தாள் இணை இடறிட நடந்து
புவியிடை பரந்த பறந்தலை கடந்து போயினர் இறங்கு பாசறையின்

மேல்
$3.20.237

#3588
மறத்தினை தொடுத்து தீவினை விளைத்து வஞ்சகம் பலபல இயற்றி
அறத்தினை வெறுத்த கொடும் பெரும் பதகன் அபூஜகல் தலை இஃது என்ன
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும்
திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர் வேல் ஏந்திய செழும் கரதலத்தார்

மேல்
$3.20.238

#3589
ஆதியை புகழ்ந்து காபிர்-தம் வலியும் அற்றது தீன் எனும் பயிரின்
கோது அறும் கொழுந்தும் குவலயம் படர்ந்தது இன்று என யாவர்க்கும் கூறி
தீது உறும் கொடிய பாதகன் சிரசை அகற்று-மின் என செழு மறையின்
மூதுரை தெரிந்த புரவலருடனும் இருந்தனர் மூன்று நாள் அவணின்

மேல்
$3.20.239

#3590
வற்றுறா வளமை மக்க மா நகரார் வந்ததும் எதிர் மலைந்து அவணில்
உற்றதும் எழுவருடன் அபூஜகல் தன் உயிர் இழந்ததுவும் வெண் சமரில்
வெற்றியும் யாவும் வரிப்பட எழுதி விரைவினில் மாருதம் இயையா
ஒற்றர் கை கொடுத்து மதீன மா நகருக்கு அனுப்பினர் எவரினும் உயர்ந்தோர்

மேல்
$3.20.240

#3591
வடிவு உறும் சாயை வெளி உறா நபி-தம் மக்களில் றுக்கையா என்னும்
கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து
படியினில் அடக்கி யாவரும் திரண்டு பள்ளியின் இருக்கும் அ போதில்
உடைபட பதுறில் பொருது வென்று எழுதும் ஓலையை கொடுத்தனர் ஓட்டர்

மேல்
$3.20.241

#3592
புவியினில் புதுமை காரண மதீனாபுரத்தினில் உறைந்தவர் எவரும்
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து
நபி திரு மகளார் அடைந்தனர் எனும் அ நடுக்கமும் கலக்கமும் அகற்றி
கவலுதற்கு அரிய ஆநந்த பெருக்கின் களி கடல் குளித்து மூழ்கினரால்

மேல்
$3.20.242

#3593
பதுறு எனும் புடவி வரை அடி விடுத்து அ மாற்றலரிடத்தினில் பறித்த
கதிர் கொளும் துல்புகாறு எனும் வாளை கரதலத்து எழில்தர ஏந்தி
கொதி நுனை வடி வேல் மன்னவர் சூழ குதிரையின் தொகுதிகள் ஈண்ட
அதிர் முரசமும் பேரிகைகளும் ஆர்ப்ப அகுமது நபி எழுந்தனரால்

மேல்
$3.20.243

#3594
தானைகள் ஈண்ட கொடி திரள் மலிய வரும் நபி-தமை முகம் நோக்கி
கானகம் விடுத்து ஓர் காவதத்திடத்தில் கடற்கரை புறத்து அபாசுபியான்
ஊன் உடல் வதைத்து மா நிதி அனைத்தும் ஒல்லையில் கொள்வம் என்று இனிதின்
தீனவர் ஒருவர் உரைத்தனர் கேட்டு சிந்தையில் பொருந்தினர் அன்றே

மேல்
$3.20.244

#3595
எழுந்து இவண் வரும் முன் இரண்டில் ஒன்று உம் கைக்கு இறை வசப்படுத்தினன் எனும் சொல்
மொழிந்தினிர் அவையே முடிந்தன இனிமேல் மூளும் வெம் சினத்தினை முற்றி
அழுந்திட பொருதல் அறிவு அல என அபாசு எனும் தந்தையர் மொழிய
செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார்

மேல்
$3.20.245

#3596
நுதி கொளும் கதிர் வேல் காபிரை பதுறில் அடர்ந்த முந்நூற்றுடன் பதினான்கு
இதம் உறும் தலைவர்க்கு உம்பர் மாராயம் உண்டு என இயல்பொடும் உரைத்து
கதி கொளும் பரியும் தானையும் நெருங்க கானகம் பலபல கடந்து
சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார்

மேல்
$3.20.246

#3597
குறைந்து இடர் ஒடுங்கி போயின மருவார் பாசறை கொள்ளையின் தொகையும்
இறந்திடும் எழுபது அரும் திறல் வேந்தர் இடுகலன்களும் படைக்கலனும்
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார்
புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே

மேல்
$3.20.247

#3598
அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ
இறௌகா எனும் அ தலத்தினில் வரும் போழ்து இயல் பெறு மதீன மன்னவரும்
புறநகரவரும் திரண்டு எதிர் பணிந்து பொங்கிய முழக்கொடும் சூழ
நறவு கொப்பிளிக்கும் துடவை சூழ் நகரில் நண்ணினர் முகம்மது நபியே

மேல்
$3.20.248

#3599
மறையவர் வாக்கின் பயித்து ஒலி முழங்க வானவர் இனிது வாழ்த்து எடுப்ப
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய
முறைமுறை பேரி தவில் பறை திடிமன் முருடு சச்சரி முரசு அதிர
இறையவன் அருளால் வெற்றி கொண்டு இறசூல் இலங்கிய நகரின் வந்தனரால்

மேல்
$3.20.249

#3600
மடல் அவிழ் வனச வாவி சூழ் மதினா வந்த பின் மற்றை நாள் பதுறில்
பிடிபடுமவரை கொணர்க என கூற பெரும் சிறைச்சாலையில் நண்ணி
கடிதினில் எழுபது அரசர்கள்-தமையும் கையினில் தளையொடும் கொடுவந்து
அடல் பெரும் குரிசில் முகம்மது நபி முன் விடுத்தனர் அணி வய வீரர்

மேல்
$3.20.250

#3601
ஆரிது புதல்வன் நலிறையும் பதகன் உக்குபத் என்பவன்-தனையும்
ஊரினில் புறத்தில் பாதையின் நாப்பண் தலை களைந்திடுக என்று உரைப்ப
வீரர்கள் வெகுண்டு பிடித்த கை கயிற்றின் விரைவொடு நடத்தி அவ்வுழையில்
சோரி நீர் ஒழுக இருவர்கள் தலையும் துணித்து அரும் கழுவின் இட்டனரால்

மேல்
$3.20.251

#3602
நல் தவம் உடைய முகம்மதின் கலிமா நாவினில் இயற்றிடாது எதிர்ந்த
பற்றலர் உழையின் இருவர்கள்-தமையும் பாழ்ங்குழியிடை படர்படுத்தி
மற்றவர் அறுபத்தெண்மர்கள்-தமையும் மாசு இல் அஸ்ஹாபிகள் என்னும்
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி

மேல்
$3.20.252

#3603
உறு தலை விலை நாலாயிரம் திருகம் ஒவ்வொருவருக்கு இனிது அளித்து
மறு அற மீண்டு மக்க மா நகரார் போயினர் மன்னர் அபாசும்
அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும்
முறைமையின் தமக்கும் தலை விலையாக மீண்டனர் முது பொருள் அளித்தே

மேல்
$3.20.253

#3604
அண்ணல் அம் களிற்றை முகம்மதை வளர்த்த அடல் அபுத்தாலிபு திரு சேய்
வண்ண ஒண் புயன் உக்கயிலையும் சிறந்த ஆரிது மகன் நவுபலையும்
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு
உள் நிறை கலிமா ஓதி ஈமான் கொண்டு உவந்து இனிது உறைந்தனர் அன்றே

மேல்
$3.20.254

#3605
தரு உரை பகர எதிர் உரை பகர்ந்த தரு நபி சிறியதந்தையரும்
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று
செரு அடல் மலி அன்சாரிகள்-தமக்கும் செவ்விய முஹாஜிரீன்களுக்கும்
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால்

மேல்
$3.20.255

#3606
வரத்தினில் சிறந்த ககுபத்துல்லாவின் ஆபுசம்சத்தின் நீர் வழங்கும்
துரத்தினுக்கு உரியராதலால் பிரியா தொல் முறை வருதலால் நபிக்கும்
புரத்தின் உற்றவர்க்கும் தனித்தனி உரைத்து புதியவன்-தனை புகழ்ந்து ஏத்தி
கரத்த களிறு அப்பாசு எனும் உரவோர் கடி கொள் தம் பதியிடை புக்கார்

மேல்
$3.20.256

#3607
முதலவன் விதித்த இறமலான் நோன்பு முடிவினில் யாவரும் அறிய
அதிசயம் பிறப்ப பித்துறா பறுல் என்று ஆயத்தும் நபிக்கு இறங்கியதால்
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும்
பதிவுபெற்று இருந்து தழைத்தன செல்வம் படர்ந்து இனிது ஓங்கின அன்றே

மேல்

21 சவீக்குப் படலம்

$3.21.1

#3608
ஆரண முறையின் தீன் நெறி பெருக்கி அகுமது உற்று உறையும் அ நாளில்
கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும்
வீரர்கள் கூட்டம் வாய்மையை முறித்து வேறு ஒரு தலத்திடை புக்கி
பாரினில் தீனுக்கு இடர் நடத்தினர்கள் எனும் மொழி பகர்தர கேட்டார்

மேல்
$3.21.2

#3609
நாயகர் செவியில் புகுதலும் தலைமை நண்பரும் கடு விசை பரியும்
சாயக சிலை கை வீரரும் சூழ தட கதிர் வேல் எடுத்து ஏந்தி
போய் அவர் உறைந்த பதியினை வளைந்து புரிசைகள் துகள் எழப்படுத்தி
மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால்

மேல்
$3.21.3

#3610
பொருள் எனப்படுதல் யாவையும் கவர்ந்து புறம் படர் கயினுக்காகு என்னும்
விரி பெரும் கூட்டத்தவரினை உபை சேய் விறல் பெறும் அப்துல்லாவிடத்தில்
பரிவுற சாட்டி கொடுத்துவிட்டதன் பின் பண்பு உறு மதீன மா நகரின்
மரு மலர் அணிந்த தீனவர் சூழ வந்தனர் முகம்மது நபியே

மேல்
$3.21.4

#3611
கோது உறும் கயினுக்காகு எனும் அவர்கள் கூட்டத்தின் காரணமாக
காதிய நசுறானிகள் எகூதிகளாம் காபிர்கள் உடன்பட கலப்ப
ஓதிய மறையின் உண்மை என்று உரைக்கும் உறவுகள் வேண்டலிர் என்ன
ஆதி-தன் ஆயத்து இறங்கின நபியும் அன்புடன் இனிது வந்தனரால்

மேல்
$3.21.5

#3612
வலி கொடு காபிரை பதுறின் மாய்த்து நல்
நிலை கெடும் கயினுக்காகவரை நீத்து இடர்
நலிவு அற முகம்மது ஆண்டு இருக்கும் நாளினில்
பொலிவுற சில மொழி புகலுவாம் அரோ

மேல்
$3.21.6

#3613
ஷாமினில் புக்கி மா நிதியம் தன்னொடு
மா மதிள் மக்க மா புரத்தின் வைகிய
சூமன் அபாசுபியான் வன் சொல்லினால்
தாம ஒண் புயத்தவர்க்கு எடுத்து சாற்றுவான்

மேல்
$3.21.7

#3614
பொன்னும் நல் மணியும் ஒத்து இலங்கும் பொற்பினால்
கன்னியர் காமுறும் காளை வீரர்கள்
என் உயிர் அனையர் இ புரத்துக்கு ஆதியாம்
மன்னவர் பதுறினின் மடிந்திட்டார் அரோ

மேல்
$3.21.8

#3615
பொழி தரும் செழும் முகில் பொருப்பின் சார்பினில்
கழுதுகள் நடம் பல காண வீணினில்
வழு உறும் ஒருவனுக்காக மன்னவர்
எழுவரும் படையுடன் இறத்தல் வேண்டுமோ

மேல்
$3.21.9

#3616
வயம் உறும் உதவியின் இறந்த மன்னரோடு
இயல்புற உயிரினை ஈந்திடாது ஒளித்து
அயல் புகுந்தனன் என அணுகிலா அவ
பயன் உற உலகமும் பழிக்குமே-கொலாம்

மேல்
$3.21.10

#3617
துனி தவிர்த்து உதவிசெய்தவர்கள் துஞ்ச யான்
நனி பல பொருளுடன் நகரம் நண்ணி மென்
பனி மலர் பஞ்சணை படுத்து நாள்-தொறும்
இனியன உண்டி உண்டிருத்தல் நன்று அரோ

மேல்
$3.21.11

#3618
வீணினில் அவர் உயிர் இறத்தல் மேயினன்
பூண அரும் பழி எனும் பொறையும் தாங்கினன்
நாணினை வீழ்த்தினன் நகைக்கும் ஆயினன்
ஆணினில் வலியன் என்று அறைய வேண்டுமோ

மேல்
$3.21.12

#3619
உதவிசெய்பவர்க்கு உயிர் உதவிசெய்குதல்
விதி உயிர் உதவியின் வீழ்த்தி நின்றவர்க்கு
இதமுற பழிகொளாது இருத்தல் உம்பரின்
பதவியும் இலை இவண் பலனும் இல்லையால்

மேல்
$3.21.13

#3620
போர் உறும் பெரும் படையுடனும் புக்கி அ
சேரலர் அணி கெட சிதைத்து தீன் எனும்
வேர் அற முகம்மதை வீழ்த்திடேன் எனில்
பாரி-தன் முகத்தினை பார்ப்பது இல்லையால்

மேல்
$3.21.14

#3621
வாரியின் பெரும் கிளை மலிவினாலும் இ
பாரினில் பல பொருள் படைத்த மாண்பினும்
கூரும் வை வேல் படை கூட்டத்தாலும் தன்
வீரியத்தினும் இவை விளம்பினான் அரோ

மேல்
$3.21.15

#3622
இன்னன பல எடுத்து இசைத்த வாசகம்
நல் நிலை மக்க மா புரத்தில் நண்பு உறு
மன்னிய வேந்தர்கள் எவர்க்கும் மார்புறும்
கொல் நுனை வேலினும் குளித்து நின்றதே

மேல்
$3.21.16

#3623
இவர் மொழிக்கு இன்னணம் இயைந்திலோமெனில்
புவியினில் செல்வமும் புகழும் வீரமும்
அவம் என யாவரும் அகத்தினுள் கொடு
குவிதரும் கணத்தொடும் கூறலுற்றனர்

மேல்
$3.21.17

#3624
அரும் திறல் அபூஜகுலுடன் நம் ஆண்மையும்
பொரும் திறல் வீரமும் பொன்றிப்போயது என்று
இருந்தனம் இன்று நீ இயம்பும் மாற்றத்தால்
விரிந்த நம் குலத்தவர் வெற்றி வீரமே

மேல்
$3.21.18

#3625
இன்று நீ துணிந்தனை இறந்த மன்னவர்
வன் திறல் பழியினை வாங்கினோம் இனி
நன்றியும் விளைத்தனம் நமக்கு நாள்-தொறும்
வென்றி உண்டு என்பது விளம்ப வேண்டுமோ

மேல்
$3.21.19

#3626
செழும் திறல் சேனையும் சேனை வீரரும்
வழிந்திடும் குருதி வேல் மன்னர் தம்மொடு
மொழிந்திடும் உரை வழி முன்னி இற்றையின்
எழுந்திட வேண்டும் என்று இசைத்திட்டார் அரோ

மேல்
$3.21.20

#3627
நள் உற நகரவர் நவிலும் பெற்றியின்
வள் உரத்து அபாசுபியானும் மாசு இலா
அள்ளு இலை வேல் எடுத்து ஆடல் மாவொடும்
புள் எழ விரைவினில் புறப்பட்டான் அரோ

மேல்
$3.21.21

#3628
குரகத பேர் அணி குழுமி சூழ்தர
விரி கதிர் எஃகினர் விரைவின் முன் செல
சொரி கணை வில் கதை சுரிகை வாள் சுமந்து
அரசர்கள் சிலர் திரண்டு அரியின் ஈண்டினார்

மேல்
$3.21.22

#3629
அடல் பரி இரண்டுநூற்று அரசர்-தம்மொடும்
படைக்கலன் வீரரும் பரந்து முன் செல
கொடி படை குழுவொடும் குடைகள் மொய்த்திட
கடல் படு பல்லியம் கறங்க போயினான்

மேல்
$3.21.23

#3630
கைத்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன்
மொய்த்து எழும் பெரும் துகள் முகிலின் விம்மிட
பைத்தலம் நெளிதர படை கொண்டு ஈண்டியே
எய்த்திடா திறத்தொடும் சவீக்கின் எய்தினான்

மேல்
$3.21.24

#3631
வயம் உறு நபி உறை மதீன மா நகர்க்கு
இயல்புற காதம் நான்கு என்னும் எல்லையின்
உயர் சவீக் எனும் தலத்து உழையின் மாவொடு
பயம் அற இறங்கினான் வகுத்து பாசறை

மேல்
$3.21.25

#3632
பரி திரள் நிரைநிரைப்படுத்தி பாங்கரின்
விரித்து ஒளிர் படங்குகள் விளங்க கோட்டி நல்
அரி திறல் அரசருக்கு அமைதி காட்டி ஊடு
இருத்தும் அங்காடியும் இருத்தினான் அரோ

மேல்
$3.21.26

#3633
கறங்கிய மேல் கடல் கனலி புக்க பின்
இறங்கிய பாசறை இடத்தில் சூழ்தர
மறம் கிளர் வீரரை வைத்து யாவரும்
உறங்கிய காலையின் ஒருவன் ஆயினான்

மேல்
$3.21.27

#3634
தன் உரு அகற்றி வேற்று உருவம் தாங்கி வில்
கொல் நுனை வாளொடும் குந்தம் ஏந்தி பின்
முன்னிடம் தெரிகிலா கங்குல் முன்னி நல்
பொன் இயல் மதீன மா புரம் புக்கான் அரோ

மேல்
$3.21.28

#3635
அரசர்-தம் வீதியும் ஆவணங்களும்
குரிசில்-தன் வாயிலும் கடந்து கோமகன்
வரும் அகுத்தபு மகன் இல்லின் வாயிலின்
கரை புரள் கதிர் மணி கபாடம் தீண்டினான்

மேல்
$3.21.29

#3636
புது மணி கதவினில் புடைத்திட அ தொனி
கதழ்வுற செவியினில் கலப்ப கேட்டு எழுந்து
உதிர் நறை தொங்கல் மார்பு உலவ வந்து நின்று
இதமுற கவிழ்ந்து இருட்டு அறுத்து நோக்கினான்

மேல்
$3.21.30

#3637
கதி பிறிது ஒன்று இலா ஹறுபு பெற்றிடும்
பதகன் என்று அறிந்து அவன் பகரும் வாசகத்து
எதிர்கொடுத்து அழைத்திடல் பழுது என்று எண்ணி மா
மதியொடும் எழுந்து தன் மனை புக்கான் அரோ

மேல்
$3.21.31

#3638
நின்றனன் கூயினன் நெடிது தன் மனம்
கன்றி இங்கு ஒருவரும் காண்கிலோம் என
மின் திகழ் அயிலொடு வேறு வீதியில்
சென்றனன் தனித்து ஒரு வாயில் சேர்ந்தனன்

மேல்
$3.21.32

#3639
பல திசையினும் மெல பார்த்து இ இல்லினும்
இலர் உளர் மாந்தர்கள் என்ன எண்ணிய
மலைவொடும் அசுக்கமின் மகன் இல் வாயிலின்
நிலை உறும் கதவினை புடைத்து நின்றனன்

மேல்
$3.21.33

#3640
கங்குல் அம் காலையில் கதவை தீண்டுதற்கு
இங்கு அடைந்தவர் எவர் என்ன இல் உறை
மங்கையர்க்கு உரைத்து எழுந்து அரிதின் வந்து ஒளி
நுங்கிய இருளிடை நோக்கினான் அரோ

மேல்
$3.21.34

#3641
கலைப்பவன் என வரும் ஹறுபு மைந்தனை
தலைக்கடை கண்டு கை படித்து தான் உறை
இலத்தினில் கொண்டு சென்று இருத்தி இன்புறும்
நலத்தொடும் சுவையொடும் பொசிப்பு நல்கினான்

மேல்
$3.21.35

#3642
உண்டிலை தின்ற பின் உறுதியாக இ
மண்டலத்து உளவையும் முகம்மது என்னும் பேர்
கொண்டவற்கு உறும் படை குறிப்பும் கொள்கையும்
விண்டு எமக்கு உரை என விளம்பினான் அரோ

மேல்
$3.21.36

#3643
முகம்மதின் மார்க்கமும் வலியும் வெற்றியும்
இகலவர் பணிவும் போர் இயற்றும் செய்கையும்
பகை பிறிது இலை என பகரும் பெற்றியும்
வகைவகை தெரிதர மசுக்கம் சொல்லினான்

மேல்
$3.21.37

#3644
சாற்றியது அனைத்தையும் ஹறுபு-தன் மகன்
தேற்றமுற்று உணர்ந்து சிந்தித்து நன்கு என
மாற்றவர் அறிகிலாது எழுந்து வல் இருள்
ஆற்றிடை குறுகி பாசறையின் ஆயினான்

மேல்
$3.21.38

#3645
உதித்த தன் கிளையினுக்கு உரியர் யாவரும்
மதித்திடும் திறத்தினர் மன்னர் நால்வரை
கதித்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன்
இதத்தொடும் அழைத்து அருகு இருத்தி சொல்லுவான்

மேல்
$3.21.39

#3646
முகம்மதின் உறை மதினாவில் சூழ்தரும்
திகைதிகை சிறுகுடி நிரைகள் சேர்த்து அவண்
துகள்பட பல பொருள் சூறையாடி நின்று
இகலவர் உயிர் செகுத்திடு-மின் என்றனன்

மேல்
$3.21.40

#3647
மன்னன் அபாசுபியான் சொல் வாசகம்
சென்னியில் கொடு சில பெயர்கள்-தம்முடன்
மின் அயில் வேலொடும் வீர வாளொடும்
பன்ன அரும் கங்குலில் பரந்து போயினார்

மேல்
$3.21.41

#3648
பரிகளை கங்குலில் கரந்து பற்றியும்
நிரைகளில் தொறுவரை நெருக்கி தாக்கியும்
விரைவொடும் எதிர்ந்தவர் தலைகள் வீழ்த்தியும்
தெரிதராது ஒளித்து அரும் குறும்பு செய்தனர்

மேல்
$3.21.42

#3649
கல் அடர் பொருப்பிடை காலிக்காரரும்
பல்லரும் திரிதரும் பாதையோர்களும்
எல்லையில் சிறுகுடி இருக்கின்றோர்களும்
சில்லறை பெரிது என நபி முன் செப்பினார்

மேல்
$3.21.43

#3650
தேம் கமழ் தெரியலார் ஈது என் செய்கை என்று
ஆங்கு உறும் ஒற்றரை அறிய கேட்டலும்
பூம் கழல் இறைஞ்சி வாய் புதைத்து மென்மெல
பாங்குறும் செவி கொள பகருவார் அரோ

மேல்
$3.21.44

#3651
குரகதத்தொடும் சில படையும் கூட்டி ஓர்
வரையிடை சவீக் எனும் தலத்தில் வந்து இருந்து
இரு மன ஹறுபு-தன் இளவல் இவ்வணம்
விரைவினில் பகை பல விளைக்கின்றான் என்றார்

மேல்
$3.21.45

#3652
பற்றலர் எனும் மொழி செவியில் பற்றலும்
வெற்றி அபாலுபானாவை வீறொடும்
அற்றை இ நகரினுக்கு ஆதியாக வைத்து
உற்ற வெம் சமர் படையுடன் எழுந்தனர்

மேல்
$3.21.46

#3653
குவி பெரும் சேனையும் பரியும் கூட்டமும்
கவிகையும் துவசமும் கலப்ப பல்லியம்
உவரியின் ஒலித்திட முகம்மதும் செழும்
புவி திசை அதிர்தர கடிது போயினார்

மேல்
$3.21.47

#3654
பொழில் முகில் வரையிடை பதுறில் போரினில்
வழி நிணம் அறாத வேல் மன்னர் வெம் படை
குழுவொடும் கறுக்கறா என்ன கூறிய
எழில் தரும் தலத்திடை இறங்கினார்களால்

மேல்
$3.21.48

#3655
மறை நபி முகம்மதும் மற்ற யார்களும்
தெறு கொலை வீரரும் சேனை மாக்களும்
அறை கடல் என அடுத்தனர்கள் ஈண்டு என
கறுபு-தன் திரு மகன் காதில் ஓதினார்

மேல்
$3.21.49

#3656
அள்ளு இலை வேலொடும் அகுமதின் படை
புள் எழ கறுக்கறா புலத்தின் உற்றவை
விள்ளலும் கறுபு-தன் விடலை ஆக்கமும்
உள்ளமும் வீரமும் ஒடுங்கினான் அரோ

மேல்
$3.21.50

#3657
பொங்கிய தானையும் புரவி கூட்டமும்
தங்கிய பொருளும் அ தலத்தின் விட்டுவிட்டு
அங்கு அவர் ஒருவரும் அறிகிலா நடு
கங்குல் அம் காலையில் கரந்து போயினான்

மேல்
$3.21.51

#3658
கரந்து போயினர் அரைசு என்னும் கட்டுரை
பரந்தன பாசறை முழுதும் பாய் கதிர்
விரிந்தன விடிந்தன விரைவின் எங்கணும்
சரிந்தனர் குழுவொடும் தறுகண் வீரரே

மேல்
$3.21.52

#3659
சரம் தரு தூணியும் தனுவும் தண்டமும்
அரம் தடவு அயிலும் தாவு அச்சுவங்களும்
பரந்த வெண் படங்கு பாசறையும் வீதியும்
இருந்தன போயினர் யாரும் என்பவே

மேல்
$3.21.53

#3660
வானவர் பரவிய வள்ளல் மால் நபி
ஈனம் இல் கறுக்கறா எல்லை நீத்து வந்து
ஆனதோர் சவீக்கினில் அரிகள் காண்கிலார்
கான் அலர் படங்கும் பாசறையும் கண்டனர்

மேல்
$3.21.54

#3661
கரும் சகுந்தமும் கொடி கணமும் கங்கமும்
உரைஞ்சிட கொடியொடு நடந்த ஒள்ளியோர்
பெரும் சமர் எனும் ஒரு பெற்றி காண்கிலார்
அரும் சுர வழி இளைப்பாறினார் அரோ

மேல்
$3.21.55

#3662
கட்டு வாம் புரவியும் படைக்கலன்களும்
வட்ட வெண் கவிகையும் இரசவர்க்கமும்
ஒட்டகை திரள்களும் ஒளிர் நிசானியும்
விட்ட பல் பண்டமும் விரைவின் வாரினார்

மேல்
$3.21.56

#3663
சிறியரும் பெரியரும் சேனை வீரரும்
குறியொடும் பல பொருள் கொள்ளை கொண்டதில்
தறுகு இலா கறுபு சேய் தருமத்தால் அன்றோ
வறியவர் எவர்களும் வலியர் ஆகினார்

மேல்
$3.21.57

#3664
கொள்ளையின் பல பொருள் அனைத்தும் கைக்கொடு
கிள்ளையின் திரளொடும் கிளரும் வாள் அயில்
மள்ளர்கள் சூழ்தர வள்ளல் நம் நபி
நள் உறை அரி என நகரம் நண்ணினார்

மேல்

22 குதிரிப் படலம்

$3.22.1

#3665
கொற்ற வெண் கவிகை நீழல் உலகு எலாம் குளிர செய்து
வெற்றி கொண்டு இசுலாம் ஓங்க விறல் நபி இருக்கும் நாளில்
பற்றலர் தேயம்-தோறும் பற்பல் கால் இருந்து உசாவும்
ஒற்றரில் ஒருவர் தோன்றி சில மொழி உரைப்பது ஆனார்

மேல்
$3.22.2

#3666
மதின மா நகரில் தென்கீழ் திசையினில் வளமை ஓங்க
குதி வரால் வனச வாவி சூழ்தரு குதிரி என்னும்
பதி பனிசுலைமு கூட்டத்தாரினில் பல்லர் கூண்டு
விதி முறை மறையின் மாற்றம் பொய் என வெறுத்து மன்னோ

மேல்
$3.22.3

#3667
நல் நய கலிமா என்னும் நாமம் நா நாட்டும் மாக்கள்
சொல் நெறி வழுவதாக்கி தூடணித்து இகலதாக
மன்ன நும் பெயரும் கூறும் வாய்மையும் மதித்திடாமல்
பன்ன அரும் குறும்பு மேற்கொண்டு இருந்தனர் பரிவற்று என்றார்

மேல்
$3.22.4

#3668
புவியிடம் திரிந்து நாளும் புகலுவோர் உரைத்த மாற்றம்
செவி வழி புகுதலோடும் செவ்வியர் இறசூலுல்லா
இபுனு உம்மி மக்குத்தூம் என்னும் இளவலை நகரில் நாட்டி
கவன வெம் பரியும் தானை கணத்தொடும் கடிது போனார்

மேல்
$3.22.5

#3669
மதி தவழ் சிகர கோடி வரை பல கடந்து நல் நீர்
நதி சில கடந்து மாறா நள்ளிருள் கானம் நீந்தி
கதிரவன் கதிரினால் எண் காவதம் கடந்து வல்லே
குதிரி என்று ஓங்கும் செல்வ கொழு நகர் அடுப்ப புக்கார்

மேல்
$3.22.6

#3670
பூ அலர் பொய்கை வேலி புறம் படர்ந்து இலங்க சூழ்ந்த
கா அணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டு
கோவுடன் குடியும் கூடும் கூட்டமும் குலைந்து தத்தம்
சேவகம் இழந்து நான்கு திசையினும் சிதறிப்போனார்

மேல்
$3.22.7

#3671
பற்றலர் பதியை நீங்கி பஃறிசை படர்ந்தார் என்ன
உற்றவர் உரைப்ப தீனோர் ஒண் புயம் குலுங்க நக்கி
கற்றை வெண் நிலவு காலும் கவிகையும் கொடையும் ஓங்க
கொற்றவருடனும் ஏகி குதிரியினிடத்தில் ஆனார்

மேல்
$3.22.8

#3672
கூறிய குதிரி வாழ்ந்தோர் ஒட்டகம் குதிரை காலி
ஏறு மேழகங்கள் எல்லாம் இனத்தொடும் ஒருங்கு சேர்த்து
மாறு அரு மணியும் பொன்னும் ஆடையும் இனிதின் வாரி
வேறு இனி இல்லை என்ன கவர்ந்தனர் விரைவின் அன்றே

மேல்
$3.22.9

#3673
மட்டறும் பண்டம் யாவும் மலிதர செறிந்து வைகும்
ஒட்டகை திரளின் ஏற்றி உறு நிரை அனைத்தும் சேர்த்து
விட்டு முன் நடத்தி வேந்தர் வீரர் வெம் பரியில் சூழ
கட்டழகு எறிக்கும் சோதி காவலர் புறப்பட்டாரால்

மேல்
$3.22.10

#3674
ஓல வாரியின் தடாரி முரசங்கள் ஒலித்து பொங்க
நீல ஒண் கவிகை மேக நிழல் தர சலவாத்து ஆர்ப்ப
கோல் வளையாது செய்து குவலயம் முழுதும் காத்த
மாலை ஒண் புயத்து வள்ளல் மதீன மா புரத்தின் வந்தார்

மேல்
$3.22.11

#3675
கருதலர் பதியில் புக்கி கவர்ந்த பல் பொருளும் பங்கில்
பிரிவு இலா யார்கட்கு ஈந்து பிடித்த ஒட்டகை ஐந்நூற்றில்
வரி மறை முறை நானூறும் வரன் முறை இனிதின் நல்கி
பரிவினில் மற்ற நூறும் தம்வசப்படுத்தினாரால்

மேல்
$3.22.12

#3676
கோது உறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்கள் எல்லாம்
மாதவ தீனர்க்கு ஈந்து வானவர் பரவி வாழ்த்த
தீது அற செல்வம் ஓங்க செழும் மறை நாளும் பொங்க
ஆதி-தன் கிருபை தாங்கி அகுமது இருந்தார் அன்றே

மேல்

23 தீயம்றுப் படலம்

$3.23.1

#3677
பானல் அம் கழனி சூழ்ந்த நசுது எனும் பதியில் நாளும்
கோன் நிலை பொருந்தி வாழும் கத்துபான் கூட்டத்தாரை
தீன் நிலை படுத்த வேண்டும் செயலினை கருத்துள் கொண்டார்
மால் நிலம் பாதம் தோயா வள்ளல் மா முகம்மது அன்றே

மேல்
$3.23.2

#3678
மலர் தலை உலகம் போற்றும் மதீன மா நகரம் தன்னில்
இலகிய புகழ் சேர் வள்ளல் இயல் உதுமானை வைத்து
பல கதி பரியினோடும் படைக்கலத்து அரசர் சூழ
புலவர்கள் இனிது வாழ்த்த முகம்மது புறப்பட்டாரால்

மேல்
$3.23.3

#3679
குறைவு அற நசுதில் வாழும் கத்துபான் கூட்டத்தாரை
மறை வழி இசுலாம் ஆக்கி மாதம் ஒன்று இருந்த பின்னர்
கறை நிணம் குருதி மாறா கதிர் வை வேல் வீரர் சூழ
நறை மலர் துடவை போர்த்த மதீன மா நகரில் வந்தார்

மேல்
$3.23.4

#3680
நறா கனி துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோர்
அறா கதிர் புரிசை ஷாமினி யாத்திரை அகற்றி பின்னர்
இறாக்கினில் தொழில் செய்கின்றார் என்னும் அ செய்தி யாவும்
அறா கன கவிகை வள்ளல் முகம்மதுக்கு உரைத்தார் மன்னோ

மேல்
$3.23.5

#3681
சிலை அயில் படைகள் தாங்கும் செல்வரும் பரியும் கூட்டி
புலி எனும் காரிதா-தன் புதல்வரை தலைமை செய்து
நலிவு அற மக்க நாட்டார் வரும் வழி நாப்பண் வைகி
வலியுடன் இருந்து வெட்டி பறித்து இவண் வருக என்றார்

மேல்
$3.23.6

#3682
காரிதா தவத்தின் வந்த கண்மணி செய்து என்று ஓதும்
வாரிச வதன மன்னர் முகம்மது பாதம் போற்றி
கூர் இலை கதிர் வேல் ஏந்தி கொலை மத களிறு போல
பூரிகை பேரி ஆர்ப்ப படையொடும் புறப்பட்டாரால்

மேல்
$3.23.7

#3683
கன வரை கடந்து கான்யாறுகள் பல கடந்து மாறா
சின வரி புலி உலாவி திரி வனம் பல கண்டு ஏகி
நனை பொழில் சூழ் இறாக்கு நாட்டுக்கும் வரிசை மக்கம்
எனும் நகர்-அதற்கும் நாப்பண் இருந்த தீயம்றை சார்ந்தார்

மேல்
$3.23.8

#3684
கொய் உளை பரியும் வீரர் குழுவும் ஓர் வனத்தின் ஆக்கி
மையல் அம் களிறு போன்ற காரிதா மதலை நான்கு
பையல்களோடும் தாம் அ பதியிடை இருக்கும் காலை
பொய்யுறா செல்வ மக்கா புரத்தவர் வருதல் கேட்டார்

மேல்
$3.23.9

#3685
அடவியின் இருந்த சேனை திரளும் அச்சுவமும் கொண்டு
கடிதினில் எழுந்து மாறா கதிர் படைக்கலன்கள் ஏந்தி
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி
நெடி படு கானம் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார்

மேல்
$3.23.10

#3686
பன்ன அரும் கதியில் தாவும் பரியொடும் சேனையோடும்
மன் அபாசுபியான் என்னும் பெயரினன் வந்து தாக்கி
உன்னும் முன் சைதுக்கு ஆற்றாது உடைந்து மற்று எவையும் போக்கி
தன் அகம் கலங்கி மக்க மா நகர் ஒல்லை சார்ந்தான்

மேல்
$3.23.11

#3687
ஏட்டு அலர் சோலை சூழ் இறாக்கு மா நகரை சார்ந்த
நாட்டு வாணிபத்துக்கு ஏற்ற நல் நய பொருள்கள் யாவும்
கூட்டிய பரியினோடும் ஒட்டகை திரளும் கொண்டு
தீட்டும் வேலவர்கள் சூழ மதீன மா நகரம் சேர்ந்தார்

மேல்
$3.23.12

#3688
பாதையில் பறித்த வெற்றி பலன் படு பொருள்கள் எல்லாம்
மா தவன் காரிதா சேய் முகம்மதினிடத்தில் நீட்ட
வேத நல் மறையின் உற்ற விதிப்படி தீனர்க்கு ஈந்து
பூதலம் அனைத்தும் போற்ற புகழ் நபி இருந்தார் அன்றே

மேல்

24 அபீறாபிகு வதைப் படலம்

$3.24.1

#3689
மக்க மா நகரில் வாழும் காபிரில் ஒருவன் மாறா
விக்கினம் என்ப யாவும் விளைத்திடும் கொடிய நீரான்
மை கலந்து உயரும் சோலை கைபறில் வாழ்வோன் நாளும்
துக்கமும் இழிவும் வீணும் விளைப்பது துணிந்து நின்றோன்

மேல்
$3.24.2

#3690
கள்ளமும் கொலையும் பொய்யும் நிந்தையும் கள்ளும் நீங்காது
உள்ளகத்து இருத்தி வாழும் உயிர் துணையாக கொண்டோன்
வள்ளல் நம் நபி-தம் நாமம் வழுத்திய மாந்தர்க்கு எல்லாம்
எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன்

மேல்
$3.24.3

#3691
கதி பெறும் தீனுள்ளோரை கண்ணினும் காண மேவான்
பதி-தொறும் மருவார்க்கு ஏய பண்பு உறும் உதவியானோன்
சதி மனத்து இபுலீசு என்போன் தனையரில் ஒருவன் போல்வான்
அதபு அறிவு என்பது இல்லா அகத்து அபீறாபிகு என்போன்

மேல்
$3.24.4

#3692
இனையன பண்பினோன்-தன் செய்கையும் இயற்கை யாவும்
மனன் உற வைகல்-தோறும் வரிசை அம் குரிசில் கேட்டு
புனை கழல் உதைக்கு தந்த புதல்வரில் அப்துல்லாவை
தனி அழைத்து இருத்தி தோன்றா மறையினில் சாற்றுவாரால்

மேல்
$3.24.5

#3693
அழிவுறு நெறி மேற்கொண்ட காபிர்கள் அறிதல் தோன்றா
வழி அபீறாபி-தன்னை கைபறில் புகுந்து வல்லே
இழிவு மற்று இடரும் நீங்க கோறல்செய்து இவணின் நீவிர்
குழுவுடன் வருக என்றார் அன்னது கருத்துள் கொண்டார்

மேல்
$3.24.6

#3694
ஆரண நெறி மறா அன்சாரிகள் பதின்மர் சூழ
வார் அணி முலையார் சிந்தை மயக்கு உறும் வனப்பு வாய்ந்த
தார் அணி புயங்கள் விம்ம அப்துல்லா தயங்கும் காந்தி
கூர் அயில் கரத்தில் தாங்கி குரகத மேல் கொண்டாரால்

மேல்
$3.24.7

#3695
குரிசில் நம் நபியை போற்றி பதின்மர்-தம் கூட்டம் நீங்கா
விரைவுடன் எழுந்துபோந்து விலங்கலும் வனமும் நீந்தி
கருதலன் இருந்து வாழும் கைபறு என்று ஓதும் ஊரின்
புரிசையின் புறத்தின் உற்றார் வணிகரை போன்று மாதோ

மேல்
$3.24.8

#3696
புரிசையுள் உறைந்தபேர்க்கும் புறநகர் புகுதுவோர்க்கும்
வரன் முறை வேட்ட யாவும் வாணிப தொழிலில் மாறி
ஒருவரும் உழையில் புக்கி உசாவுதற்கு இடங்கொடாமல்
இருளினும் பகலும் நீங்காது இரண்டு நாள் இருந்து மாதோ

மேல்
$3.24.9

#3697
மாசு அற பின்னர் மூன்றாம் நாளில் விண்_மணி வில் வீழ்த்தி
ஓசை மேல் கடலில் புக்கி உலகமும் இருளும் காலை
காசு அறும் அப்துல்லா என்று ஓதிய களிறு காலில்
தூசியின் தொறுவினோடும் கரந்து சூழ் புரிசை புக்கார்

மேல்
$3.24.10

#3698
செருக்கொடும் புகுந்து வாரி வாயிலின் திறவுகோல் வைத்
திருக்கும் அ இடத்தை காணாது இரவினில் கரந்து நோக்கி
உருக்கு அறுத்து இலங்கும் வேலோர் உறையிடம் அனைத்தும் நோக்கி
மரு கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ

மேல்
$3.24.11

#3699
மன்னவர் மனைகள் நோக்கி மா நகர் காவலாளர்
துன்னும் அ இடங்கள் நோக்கி துரத்து அபீறாபிகு என்போன்-
தன் அக புரிசை வாயில்-தன்னையும் நோக்கி நோக்கி
பொன் அணி மனையும் அந்தப்புரத்தையும் நோக்கினாரால்

மேல்
$3.24.12

#3700
மரவங்கள் கிடந்து உலாவும் மணி புய வரையின் வள்ளல்
இரவு அங்கு புகுந்து உசாவி எவ்விடம் அனைத்தும் நோக்கி
அரவங்கள் ஒடுங்குமட்டும் ஆயத்து பலகால் ஓதி
கரவங்கம் இது-கொல் என்ன களித்து ஒருபுறத்தில் நின்றார்

மேல்
$3.24.13

#3701
நள்ளிருள் காலை ஆயது இஃது என நடந்து உசாவி
உள் உறைந்து உறங்கும் ஒன்னார்-தமை கடந்து ஒளித்து ஓர்பாலில்
தள்ள அரும் பலகை தாங்கி பேழையில் தட கை நீட்டி
கொள்ள அரும் காப்பு வாய்ந்த திறவுகோல் அனைத்தும் கொண்டார்

மேல்
$3.24.14

#3702
அவ்விடம் அகன்று மெல்ல அடி பெயர்த்து ஒதுங்கி நீங்கி
கௌவைகள் தோன்றா நீண்ட கபாடத்தின் வாயில் நண்ணி
செவ்விய திறவுகோலால் பூட்டினை தீண்டி நீத்து
நொவ்விதில் திறந்து உள் ஆய கரப்பை யார் நுவல வல்லார்

மேல்
$3.24.15

#3703
செறித்த பொன் கதவம் எல்லாம் இமைப்பினில் திறந்து மூடி
குறித்தவன் வாயில் புக்கி கூண்டவர் துயிறல் நோக்கி
எறித்த வெண் காந்தி மாடம் எங்கணும் திரிந்து பள்ளி
யறை தலம் திறந்து உள் ஆகி அடுத்து ஒருபுறத்தில் நின்றார்

மேல்
$3.24.16

#3704
திரை துகில் அடுத்து அன்னோன் நித்திரையினை உணரும் காலை
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர்
வரி தடம் கண்ணினாளும் மன்னனும் விழிப்பதாக
இருத்தல் கண்டு இருந்தார் ஆங்கு ஓர் இளம் புலி இருந்தது ஒத்தே

மேல்
$3.24.17

#3705
இருவரும் துயிறல் கொள்ளாது இருந்தனர் இருளும் ஆய
உருவி வாள் தட கை நீட்டி ஓங்கினோமாகில் அம்ம
அரிவையோ அவனோ ஆவி அளிப்பவர் என்ன இன்னே
தெரிவு அரிது என்ன மாழ்கி சிந்தையில் தேம்பினாரால்

மேல்
$3.24.18

#3706
கங்குலின் எதிர்ந்து தாவும் போதினில் கடிதின் ஆவி
மங்கையே வழங்கினாளேல் மா நிலம் முழுதும் கொள்ளா
பங்கமும் பவமும் தூறும் பழியும் வந்தடையும் என்ன
அங்கையில் பிடித்த வாளை அணி நிலம் சேர்த்தினாரால்

மேல்
$3.24.19

#3707
கொல்வதற்கு இசைந்து நின்றேம் காலையும் குறுகி போய
மல் வளர் புயத்தினானும் மங்கையும் தெரிதல் தோன்றா
இல் விடுத்து அகன்று சார்பின் எய்தி அங்கு உறைந்து நாளை
செல்வது எவ்வண்ணம் என்ன அடிக்கடி தெருமந்தாரால்

மேல்
$3.24.20

#3708
கொற்றவன் ஆவி போவதன்றி இவை குறித்து நோக்கி
நிற்றனம் ஆவி என்ன இடைந்திடைந்து எண்ணும் காலை
கற்றை அம் கரிய கூந்தல் கன்னியை விளித்து மன்னன்
உற்று அறி என்பான் போல சில மொழி உரைப்பது ஆனான்

மேல்
$3.24.21

#3709
பல் மணி கலன்கள் பூண்டு பரிமளம் திமிர்ந்து வாச
சில் மலர் செருகும் கூந்தல் சே_இழை ஒருத்தி என்-பால்
பின் முகம் திரும்பி ஏறா மொழி பல பிதற்றி பேசி
வன்மமுற்று இருப்ப கண்டேன் கனவு என வழங்கினானால்

மேல்
$3.24.22

#3710
கூறிய மொழியை கேட்டு கொவ்வை அம் கனி வாய் பேதை
வேறு ஒரு மாதை உள்ளம் விரும்பினை அதனால் இந்த
பேறுடன் கனவு காணப்பெற்றனை என்ன ஊடி
சீறிய வெகுளி பொங்க இரு விழி சிவந்து நின்றாள்

மேல்
$3.24.23

#3711
அற கடிந்து உரைப்ப கேட்ட ஆடவன் அவளை நோக்கி
பெறற்கு அரும் பெண்மை நல்லாய் பிறிது ஒரு மாதை ஆவி
இறக்கினும் இறப்பதல்லால் நினைத்திலன் எளியேன் என்ன
திறக்க அரும் வெகுளி மாற ஊடலை திருத்தினானால்

மேல்
$3.24.24

#3712
ஊடலை திருத்தி அன்னோன் உரைத்திடும் தொனியும் வாய்ந்த
பேடை மா மயில் அன்னாள் வாய் பிறந்த சொல் தொனியும் நீங்கி
கூடுறாது இருக்கும் தான குறிப்பினை உணர்த்த கேட்டு
பீடுற நலிதல் போக்கி மனத்தினில் பிரியமுற்றார்

மேல்
$3.24.25

#3713
இருந்தவர் எழுந்து வீழ்த்த திரையினை ஈழ்த்து உள் புக்கி
அரிந்திடும் கதிர் வெள் வாளை அங்கையில் பூட்டி அன்னோன்
திருந்த அங்கு அவளுக்கு ஓதும் மொழி வழி சென்று செந்நீர்
சொரிந்திட எறிந்து நின்றார் சூரர்கள் திலதம் அன்னார்

மேல்
$3.24.26

#3714
ஊறுபட்டு எழுந்து வாய் விண்டு உரப்பி ஆங்கரித்து இ இல்லின்
வேறுபட்டு எவரோ கொன்றார் என்ன வாய் வெருவி கூவ
வேறுபட்டவர் யார் கொன்றார் எவர் என இடைந்து மாந்தர்
தேறுபட்டிலராய் மாழ்கி மனையிடம் செறிந்தார் மன்னோ

மேல்
$3.24.27

#3715
எறிந்து ஒளிந்திருந்தோர் காயம் சிறிது என மனத்தின் எண்ணி
உறைந்து உசாவுவர் போல் ஆங்கின் உற்று வாள் ஓங்கி பின்னும்
குறைந்து உயிர் மீள தாக்கி கூர் இருள் காலை கூண்டு
நிறைந்தவருடனும் நின்று பயப்பய நீங்கினாரால்

மேல்
$3.24.28

#3716
மறம் தரும் கொடிய வஞ்ச மனத்து அபீறாபிகு இன்னே
இறந்தனன் உயிர்பெற்றான் என்று இரண்டில் ஒன்று அறிவோம் என்ன
திறம் தரும் அப்துல்லா என்று ஓதிய திரு பேர் மன்னர்
நிறம் தரம் தெரியா கங்குல் நின்றனர் ஒருபால் அன்றே

மேல்
$3.24.29

#3717
இருந்தனர் எவர்-கொல் என்பார் யாவர் இல் புகுந்தார் என்பார்
தெரிந்திலன் காணும் என்பார் தீபமும் இலையோ என்பார்
கரந்தவர் உளரோ என்பார் ஒருவரும் காணோம் என்பார்
சொரிந்தது குருதி என்பார் சோர்ந்தனன் மன்னன் என்பார்

மேல்
$3.24.30

#3718
உண்டு இலை ஆவி என்பார் உயிர் துடிக்கின்றது என்பார்
விண்டனன் மாற்றம் என்பார் விழித்தனன் காணும் என்பார்
கண்டவர் உளரோ என்பார் காயத்தில் பிழைப்பு இல் என்பார்
மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்தது என்பார்

மேல்
$3.24.31

#3719
என் இனி செய்வோம் என்பார் இடைந்திடைந்து ஏங்கி நிற்பார்
பன்னுவது என்-கொல் என்பார் பழி முடித்தவர் ஆர் என்பார்
முன்னை ஊழ் விதி-கொல் என்பார் முனையகத்து இறந்திடாது
மன்னவன் ஆவி வீணில் வழங்கினான் காணும் என்பார்

மேல்
$3.24.32

#3720
மடிந்தனன் என்னும் மாற்றம் வழங்கிட கடலில் நாப்பண்
படர்ந்த வெண் திரையில் தத்தி பல் மணி நிதியத்தோடும்
உடைந்திடும் கலம்-அது ஒப்ப மன்னவன் மனையுள் எங்கும்
இடைந்திடைந்து இரங்கி ஏங்கி எழுந்து கொல்லென்றது அன்றே

மேல்
$3.24.33

#3721
மாற்றலன் இறந்தான் என்ன மனம் மகிழ்ந்து உவகை பொங்கி
போற்றி நல் நபியை வாழ்த்தி அப்துல்லா பூரிப்போடும்
தோற்றிடாது ஒதுங்கி வாயல்-தொறும் கடந்து எளிதின் ஏகி
தீற்றி வெண் நிலவு காலும் புரிசையின் வாயில் சேர்ந்தார்

மேல்
$3.24.34

#3722
புரிசையின் வாயிலாலும் பொதி இருள் காலையாலும்
வரி முறை படியில் காலை வைத்திட தவறி வீழ்ந்து
தரிபடற்கு அரிதாய் ஓர் தாள் ஒடிந்தது அ தாளினோடும்
விரைவொடும் எழுந்து சாரும் விடுதியை நண்ணினாரால்

மேல்
$3.24.35

#3723
மூரி அம் கணைக்கால் கீழ்-பால் முகிழ்தரும் பரட்டின் மேல்-பால்
சார்பற ஒடிந்த காலை தன் தலைப்பாகில் சுற்றி
ஊரினில் எவர்க்கும் தோன்றாது உறைந்தனர் உறைந்த பின்னர்
பார் இருள் படலம் நீத்து பகலவன் உதயம்செய்தான்

மேல்
$3.24.36

#3724
கதிரவன் எழுந்து ஓர் சாமம் இருந்து அவண் கடந்து வல்லே
பதின்மரும் தாமுமாக வேறு ஒரு பாதை பற்றி
முதிர்தரும் முளரி நீந்தி முகில் உறை வரைகள் நீங்கி
மதுர மென் மறையோர் வாழ்த்த மதீன மா நகரின் வந்தார்

மேல்
$3.24.37

#3725
நகரினில் புகுந்து வேத_நாயகர் பதத்தை நண்ணி
புகுமிடத்து உறைந்த செய்தி யாவையும் புகன்று காலில்
தகைபடுத்து ஒடிந்த வாறு தன்னையும் உரைத்து நின்றார்
மகிதலம் புகழும் கீர்த்தி மன்னவர் அப்துல்லாவே

மேல்
$3.24.38

#3726
கொடிய வஞ்சகத்தை சூழ்ந்த குணத்து அபீறாபிகு ஆவி
முடிவினை கேட்டு தீனின் முரண் பகை தவிர்ந்தது என்ன
நெடியவன் இறசூலுல்லா நேரலர்க்கு அரி ஏறு அன்னார்
ஒடிபடும் தாளை நோக்கி ஓதி செம் கரத்தில் தொட்டார்

மேல்
$3.24.39

#3727
என்பு அற முறிந்து தோலும் இழந்து ஒரு நரம்பில் தூங்கி
துன்புறும் தாளில் நீண்ட திரு கரம் தொட்டு நீவ
வன்புற பொருந்தி காயம் என்பது ஓர் வடுவும் இன்றி
முன்பு இருந்ததனில் செவ்வி மும்மடங்கு ஆயிற்று அன்றே

மேல்
$3.24.40

#3728
கடம் கரைத்து இறைக்கும் வெற்றி களிறு எனும் அப்துல்லாவை
இடம் பெற இருத்தி செய்யும் வரிசைகள் அனைத்தும் ஈந்து
தடம் கடல் புடவி காத்து தரியலர்க்கு அரி ஏறு என்ன
மடங்கலாசனத்தின் வைகி முகம்மது ஆண்டு இருந்தார் அன்றே

மேல்

25. அசனார் பிறந்த படலம்

$3.25.1

#3729
மருந்து எனும் கலிமா உரை விதைத்து மக்காவி
லிருந்து மா மதீனாவிடத்து இனிது எழுந்தருளி
திருந்த ஆண்டு ஒரு மூன்றினில் தீன் பயிர் விளைத்து
பொருந்து நாளினின் உற்றவையினில் சில புகல்வாம்

மேல்
$3.25.2

#3730
ஒலி கொள் மா கடல் மணி எனும் நபி உயிர்க்குயிராய்
வலியும் வீரமும் வெற்றியும் திரண்டு ஒரு வடிவாய்
நிலன் உதித்து உயர் உம்பரின் வரிசையில் நிறைந்த
குலவு நீள் புகழ் உமறு கத்தாபு எனும் குரிசில்

மேல்
$3.25.3

#3731
அரும் தவத்தினில் ஈன்றெடுத்து உவந்த பெண்_அரசை
கரும் தடம் கயல் கண்ணியை நறு மொழி கனியை
வருந்து மெல் இழை கொடியை மென் பிடி நடை மயிலை
பொருந்தும் ஆரமுதை அபுசா எனும் பூவை

மேல்
$3.25.4

#3732
குறைஷி அம் குல காவினில் உறைந்த கோகுலத்தை
பொறையும் நீதியும் ஒழுக்கமும் விளைத்த பொன்னிலத்தை
உறையும் கற்பினுக்கு உறையிடத்தினை ஒளிர் மணியை
மறையின் நேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார்

மேல்
$3.25.5

#3733
புரந்தராதிபர்க்கு அரி உமறு அருள் புதல்வியரை
தெரிந்த நல் மொழி தரும் ஹபுசா எனும் திருவை
வரைந்து நம் நபி இன்புறும் வாரியின் மூழ்கி
பிரிந்திடா நலம் பொருந்தி உண்டு இருந்ததன் பின்னர்

மேல்
$3.25.6

#3734
பூதலம் புகழ் தரும் கதீஜா புதல்வியரின்
மாதருக்கு அரசு உம்முக்குல்தூம் மணி விளக்கை
கோது இலா உதுமான் மனம் களிப்புற கொடுத்தார்
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது உறைந்தனர் அன்றே

மேல்
$3.25.7

#3735
மறமும் வீரமும் இலகிய வேல் உதுமானுக்கு
உறையும் ஆவியின் மிக்கு உயிர் புதல்வியை உதவி
கறை கொள் வெம் குபிர் குலம் கடிந்து அரும் கலிமாவை
நறை தரும் புவியிடத்தினில் நடத்தும் அ நாளில்

மேல்
$3.25.8

#3736
மல் வளர்ந்து எழும் புயன் உசைமா வரத்து உதித்த
செல்வியை எழில் செயினபை பொறை செழும் அமுதை
பல்விதத்தொடும் திருமணம் முடித்து இசை பரப்பி
இல் வளத்தொடும் உறைந்தனர் ஹபீபெனும் இறசூல்

மேல்
$3.25.9

#3737
செருகு பூம் குழல் செயினபை திரு நபி மணந்த
வருடம் மங்கையர்க்கு அரசு எனும் பாத்திமா வயிற்றில்
கரு என தரித்து உம்பரின் பேரொளி கவின
முரியும் மெல் இடை தெரிதர கருப்பமும் முதிர்ந்த

மேல்
$3.25.10

#3738
கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க
நடந்து நால் அடி வைத்திடில் பசந்த மெய் நலிய
திடம் தராது உளம் இடைந்திட தெரியல்கள் துயல
மடந்தையர்க்கு அரசியர்க்கு அரும் வருத்தம் உற்றனவால்

மேல்
$3.25.11

#3739
இறமலான் பதினைந்தினில் வெள்ளியின் இரவின்
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான்
அறமும் வெற்றியும் ஓர் உரு எடுத்து என அரிதில்
பொறை உயிர்த்தனர் ஒளிதர ஒரு புதல்வனையே

மேல்
$3.25.12

#3740
பொருவு இலா முதலவன் திரு புலி எனும் அலிக்கு
பெருகும் செல்வத்துள் பிறந்தது மகவு என கேட்டு
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க
வரிசை நம் நபி வந்தனர் அவர் திரு மனையின்

மேல்
$3.25.13

#3741
ஆரண திரு நாவினர் சூழ்தர அடுத்த
காரண கடல் எனும் முகம்மது செழும் கரத்தில்
பூரண கதிர் பிறங்கிய புதல்வனை ஏந்தி
கூரும் வேல் விழி மடந்தையர் விரைவினில் கொடுத்தார்

மேல்
$3.25.14

#3742
தீங்கு அகற்றிய மகள் மகன் வல திரு செவியின்
வாங்கு உரைத்து இட காதினில் காமத்தும் வழங்கி
பாங்குற கமழ் தரு நறும் பரிமளம் எடுத்து
தாங்கும் மென் சிரத்தினில் அழகுற தடவினரால்

மேல்
$3.25.15

#3743
பொன்னிலத்து உறுமவர்கள் ஆமீன் என புகல
இன்னல் போக்கிய முதியவர் இரு கை ஏத்து இரப்ப
உன்னும் மா மறை வாழ்த்தொடும் ஒரு துஆ ஓதி
மன்னர் மன் நபி கொடுத்தனர் போந்தனர் மனையில்

மேல்
$3.25.16

#3744
தெரிதர தினம் ஏழினில் செழும் புவி புரக்கும்
அரசர்_நாயகர் மகள் மனை அடுத்து அரும் புதல்வன்
கரிய மென் சிர மயிரினை களைவித்து அ இடையின்
இரசிதம் சதகா என எடுத்து இனிது அளித்தார்

மேல்
$3.25.17

#3745
கொறி இரண்டு அறுத்து உடன் அக்கீகாவினை கொடுத்து
பொறையின் மிக்கு உயர் மருத்துவ பூம் கொடி-தனக்கு
தறுகிலாது ஒரு குறங்கும் ஓர் தமனிய காசும்
பெறுக என்று இனிது அளித்தனர் தூதரில் பெரியோர்

மேல்
$3.25.18

#3746
முசுலிமானவர் செயும் தொழில் சடங்குகள் முடித்து
திசை எலாம் புகழ்ந்து உரைதர பேசிய செம்மல்
வசையறும் கரத்து எடுத்து அரும் பேரனை வாழ்த்தி
அசன் என செழும் திரு பெயர் தரித்தனர் அன்றே

மேல்
$3.25.19

#3747
உருவும் அந்தமும் நிறமும் நம் நபி என ஒளிரும்
அரும் மக செழும் குழவியும் ஜிபுரியீல் அணுகி
இருள்-தொறும் மணி தொட்டிலை அசைத்து அருகு இருந்து
வரிசை செய்திட நாயகன் வளர்த்திட வளர்ந்த

மேல்
$3.25.20

#3748
இந்த மால் நில மடந்தையர் எவரும் ஈடேற
வந்த நாயகி பாத்திமா தரு திரு மகவை
சிந்தை கூர்தரும் உவப்பொடும் தினந்தினம் போற்றி
அந்த நாயகன் தூதுவர் இருக்கும் அ நாளில்

மேல்