9. கறைக்கண்டன் சருக்கம்

@1 கணம்புல்ல நாயனார் புராணம்

#1
திரு கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கி
பெருக்கு வட வெள் ஆற்று தென் கரை-பால் பிறங்கு பொழில்
வருக்கை நெடும் சுளை பொழி தேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்
இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி

#2
அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த
எ பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார்
ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார்
மெய்ப்பொருள் ஆவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார்

#3
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று
ஓவாத ஒளி விளக்கு சிவன் கோயில் உள் எரித்து
நா ஆர பரவுவார் நல்குரவு வந்து எய்த
தேவாதி தேவர் பிரான் திரு தில்லை சென்று அடைந்தார்

#4
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த
வில்லியார் திருப்புலீச்சரத்தின்-கண் விளக்கு எரிக்க
இல்லிடை உள்ளன மாறி எரித்து வரும் அ நாளில்

#5
ஆய செயல் மாண்டதன் பின் அயல் அவர்-பால் இரப்பு அஞ்சி
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லு கொடு வந்து
மேய விலைக்கு கொடுத்து விலை பொருளால் நெய் மாறி
தூய திரு விளக்கு எரித்தார் துளக்கு அறு மெய் தொண்டனார்

#6
இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள்
மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல்
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இ பணி ஒழியார்
அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார்

#7
முன்பு திரு விளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல்
மென் புல்லும் விளக்கு எரிக்க போதாமை மெய்யான
அன்பு புரிவார் அடுத்த விளக்கு தம் திரு முடியை
என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார்

#8
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு
பொங்கிய அன்புடன் எரித்த பொருவு_இல் திருத்தொண்டருக்கு
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருள சிவலோகத்து
எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார்

#9
மூரியார் கலி உலகின் முடி இட்ட திரு விளக்கு
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி
வேரியார் மலர் சோலை விளங்கு திருக்கடவூரில்
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம்
&9 கறைக்கண்டன் சருக்கம்
@2 காரிநாயனார் புராணம்

#1
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கி பொருள் மறைய
குறையாத தமிழ் கோவை தம் பெயரால் குலவும் வகை
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்-பால் பயில்வார்

#2
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி
கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறை சென்னி
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்

#3
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழி பயன் இயம்ப
தேவர்க்கு முதல் தேவர் சீர் அடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்-தம்
கா உற்ற திரு கயிலை மறவாத கருத்தினர் ஆய்

#4
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி
ஆய்ந்த உணர்வு இடையறா அன்பினராய் அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்-தம் அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார்

#5
வேரியார் மலர் கொன்றை வேணியார் அடி பேணும்
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால்
வாரியார் மத_யானை வழுதியர்-தம் மதி மரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்
&9 கறைக்கண்டன் சருக்கம்
@3 நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்

#1
தடுமாறும் நெறி-அதனை தவம் என்று தம் உடலை
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்தது-ஆல்

#2
அந்நாளில் ஆளுடையபிள்ளையார் அருளாலே
தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து
சொல் நாம நெறி போற்றி சுரர் நகர் கோன்-தனை கொண்ட
பொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலிகின்றார்

#3
ஆய அரசு அளிப்பார்-பால் அமர் வேண்டி வந்து ஏற்ற
சேய புல தெவ்வர் எதிர் நெல்வேலி செரு களத்து
பாய படை கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்
காயும் மத_களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார்

#4
எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இரு படையில் பொரு படைஞர்
படுத்த நெடும் கரி துணியும் பாய்மாவின் அறு குறையும்
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர்
மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக

#5
வய பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும்
கய பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும்
வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள
சய தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படி தயங்க

#6
தீ உமிழும் படை வழங்கும் செருக்களத்தும் உருக்கும் உடல்
தோயும் நெடும் குருதி மடு குளித்து நிணம் துய்த்து ஆடி
போய பருவம் பணி கொள் பூதங்களே அன்றி
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க

#7
இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில்
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து
முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து

#8
வளவர் பிரான் திரு மகளார் மங்கையருக்கரசியார்
களப மணி முலை திளைக்கும் தட மார்பில் கவுரியனார்
இள அரவு வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம்
அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார்

#9
திரை செய் கடல் உலகின்-கண் திருநீற்றின் நெறி விளங்க
உரை செய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார்
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே
பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார்

#10
பொன் மதில் சூழ் புகலி காவலர் அடி கீழ் புனிதராம்
தென்மதுரை மாறனார் செங்கமல கழல் வணங்கி
பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம்
&9 கறைக்கண்டன் சருக்கம்
@4 வாயிலார் நாயனார் புராணம்

#1
சொல் விளங்கும் சீர் தொண்டை நல் நாட்டினிடை
மல்லல் நீடிய வாய்மை வளம் பதி
பல் பெரும் குடி நீடு பரம்பரை
செல்வம் மல்கு திருமயிலாபுரி

#2
நீடு வேலை-தன்-பால் நிதி வைத்திட
தேடும் அ பெரும் சேம வைப்பாம் என
ஆடு பூம் கொடி மாளிகை அ பதி
மாடு தள்ளும் மரக்கல செப்பினால்

#3
கலம் சொரிந்த கரி கரும் கன்று முத்து
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும்
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா
சிலம்பு தெண் திரை கானலின் சேண் எலாம்

#4
தவள மாளிகை சாலை மருங்கு இறை
துவள் பதாகை நுழைந்து அணை தூ மதி
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்கும்-ஆல்

#5
வீதி எங்கும் விழா அணி காளையர்
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர்
ஓதி எங்கும் ஒழியா அணி நிதி
பூதி எங்கும் புனை மணி மாடங்கள்

#6
மன்னு சீர் மயிலை திரு மா நகர்
தொன்மை நீடிய சூத்திர தொல் குல
நன்மை சான்ற நலம் பெற தோன்றினார்
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்

#7
வாயிலார் என நீடிய மா குடி
தூய மா மரபின் முதல் தோன்றியே
நயனார் திருத்தொண்டின் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்

#8
மறவாமையான் அமைத்த மன கோயில் உள் இருத்தி
உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திரு மஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்

#9
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார்-தமை நாளும்
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே
திகழ நெடு நாள் செய்து சிவபெருமான் அடி நிழல் கீழ்
புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார்

#10
நீர் ஆரும் சடையாரை நீடு மன ஆலயத்து உள்
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்-பால்
பேராத நெறி பெற்ற பெருந்தகையார்-தமை போற்றி
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம்
&9 கறைக்கண்டன் சருக்கம்
@5 முனையடுவார் நாயனார் புராணம்

#1
மாறு கடிந்து மண் காத்த வளவர் பொன்னி திரு நாட்டு
நாறு விரை பூம் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழும் தேன்
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்
சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர்

#2
விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர்
களம் கொள் மிடற்று கண்_நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும்
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார்

#3
மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து தம்-பால் மா நிதியம்
ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்து
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்று சென்று எறிந்து
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார்

#4
இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள்
சொன்ன சொன்னபடி நிரம்ப கொடுத்து தூய போனகமும்
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள்ளுறுத்த கலந்து அளித்து
மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார்

#5
மற்று இ நிலைமை பல் நெடு நாள் வையம் நிகழ செய்து வழி
உற்ற அன்பின் செம் நெறியால் உமையாள் கணவன் திருவருளால்
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார்
முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன் உடையார்

#6
யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார்-தமக்கு இன்பம்
மேவ அளிக்கும் முனையடுவார் விரை பூம் கமல கழல் வணங்கி
தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும்
காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்

#7
செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறி உண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால்
வெறி உண் சோலை திரு முருகன் பூண்டி வேடர் வழி பறிக்க
பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே