7. வார்கொண்ட வனமுலையார் சருக்கம்

அதிகாரங்கள்

  1. சாக்கிய நாயனார் புராணம் (18)
  2. சிறப்புலி நாயனார் புராணம் (6)
  3. சிறுத்தொண்ட நாயனார் புராணம் (88)
  4. கழறிற்று அறிவார் நாயனார் புராணம் (175)
  5. கணநாத நாயனார் புராணம் (7)
  6. கூற்றுவ நாயனார் புராணம் (9)

1 சாக்கிய நாயனார் புராணம்

#1
அறு சமய தலைவராய் நின்றவருக்கு அன்பராய்
மறு சமய சாக்கியர்-தம் வடிவினால் வரும் தொண்டர்
உறுதி வர சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து
மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம்
#2
தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவு உடைய
வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து
கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி
நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார்
#3
அ நாளில் எயில் காஞ்சி அணி நகரம் சென்று அடைந்து
நல் ஞானம் அடைவதற்கு பல வழியும் நாடுவார்
முன்னாக சாக்கியர்-தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து
மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார்
#4
அ நிலைமை சாக்கியர்-தம் அரும் கலை நூல் ஓதி அது
தன் நிலையும் புற சமய சார்வுகளும் பொருள் அல்ல
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ
நல் நெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார்
#5
செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்
மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் என கொண்டே
இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்
#6
எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே
துன்னிய வேடம்-தன்னை துறவாதே தூய சிவம்
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்
#7
எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார்
பொல்லா வேட சாக்கியரே ஆகி புல்லர் ஆகுவார்
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன
வல்லார் இவர் அ வேடத்தை மாற்றாது அன்பின் வழி நிற்பார்
#8
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடிய மால் நான்_முகனும் காண நடு
சேண் ஆரும் தழல் பிழம்பாய் தோன்றிது தெளிந்தாராய்
#9
நாள்-தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து
மாடு ஓர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம்
நீடோடு களி உவகை நிலைமை வர செயல் அறியார்
பாடு ஓர் கல் கண்டு அதனை பதைப்போடும் எடுத்து எறிந்தார்
#10
அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால்
மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால்
இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே
நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார்
#11
அன்று போய் பிற்றை நாள் அ நியதிக்கு அனையும்-கால்
கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்பு-அதனை
நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார்
#12
தொடங்கிய நாள் அருளிய அ தொழில் ஒழியா வழி தொடரும்
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை
படம் புனை வேடம் தவிரார் பசுபதியார்-தம் செயலே
அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மா தவர்-தாம்
#13
இ நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய
முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில்
துன்னிய மெய் அன்புடனே எழுந்த வினை தூயவர்க்கு
மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால்
#14
கல்லாலே எறிந்ததுவும் அன்பு ஆனபடி காணில்
வில் வேடர் செருப்பு அடியும் திரு முடியில் மேவிற்று-ஆல்
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆம்-ஆல்
#15
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ண புகுகின்றார்
எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து
பொங்கியது ஓர் காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு
வெம் கரியின் உரி புனைந்தார் திரு முன்பு மேவினார்
#16
கொண்டது ஒரு கல் எடுத்து குறி கூடும் வகை எறிய
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும்
கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால்
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியொடும் தோன்றினார்
#17
மழ விடை மேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலே
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி
விழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில்
பழ அடிமை பாங்கு அருளி பரமர் எழுந்தருளினார்
#18
ஆதியார்-தம்மை நாளும் கல் எறிந்து அணுகப்பெற்ற
கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்
சோதியார் அறிதல் அன்றி துணிவது என் அவர் தாள் சூடி
தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரை செப்பி

மேல்

2 சிறப்புலி நாயனார் புராணம்

#1
பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளோர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரை சண்பை
மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர்
#2
தூ மலர் சோலை-தோறும் சுடர் தொடு மாடம்-தோறும்
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும்
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ
ஓம நல் வேள்வி சாலை ஆகுதி தூபம் ஓங்கும்
#3
ஆலை சூழ் பூக வேலி அ திரு ஆக்கூர்-தன்னில்
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார்
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற
சீலராய் சாலும் ஈகை திறத்தினில் சிறந்த நீரார்
#4
ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்து உள் தங்கி நிதி மழை மாரி போன்றார்
#5
அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம்
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிட செய்து ஞாலத்து
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடையறா அன்பால் வள்ளல்
தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே
#6
அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர்-தன்னில்
மறை பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்தி
சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த
விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன்

மேல்

3 சிறுத்தொண்ட நாயனார் புராணம்

#1
உரு நாட்டும் செயல் காமன் ஒழிய விழி பொழி செம் தீ
வரும் நாட்ட திரு நுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில்
கருநாட்ட கடைசியர் தம் களி நாட்டும் காவேரி
திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக்குடி ஆகும்
#2
நிலவிய அ திரு பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால்
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார்
பலர் புகழும் திரு நாமம் பரஞ்சோதியார் என்பார்
#3
ஆயுள் வேத கலையும் அலகு_இல் வட நூல் கலையும்
தூய படைக்கல தொழிலும் துறை நிரம்ப பயின்று அவற்றால்
பாயும் மத குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார்
#4
உள்ளம் நிறை கலை துறைகள் ஒழிவு_இன்றி பயின்று அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு
பள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார்
#5
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே
ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக
பூசல் முனை களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர்
தேசங்கள் பல கொண்டு தேர் வேந்தன்-பால் சிறந்தார்
#6
மன்னவர்க்கு தண்டு போய் வட புலத்து வாதாவி
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து
பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும்
இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்
#7
கதிர் முடி மன்னனும் இவர்-தம் களிற்று உரிமை ஆண்மையினை
அதிசயித்து புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார்
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால்
எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார்
#8
தம் பெருமான் திருத்தொண்டர் என கேட்ட தார் வேந்தன்
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் என வெருவுற்று
எம்பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான்
#9
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமை தொழிற்கு அடுத்த
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு
நிறைந்த நிதி குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான்
#10
உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்
எம்முடைய மன கருத்துக்கு இனிதாக இசைந்து உமது
மெய்ம்மை புரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்து
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடைகொடுத்தான்
#11
மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்து அடைந்து
பன்னு புகழ் பரஞ்சோதியார் தாமும் பனி மதி வாழ்
சென்னியரை கணபதீச்சரத்து இறைஞ்சி திருத்தொண்டு
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார்
#12
வேத காரணர் அடியார் வேண்டிய மெய் பணி செய்ய
தீது_இல் குடி பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும்
காதல் மனை கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார்
#13
நறை இதழி திரு முடியார் அடியாரை நாள்-தோறும்
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டி பின் உண்ணும்
நிறை உடைய பெரு விருப்பில் நியதி ஆக கொள்ளும்
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார்
#14
தூய திரு அமுது கனி கன்னல் அறு சுவை கறி நெய்
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம்
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார்
மா இரு ஞாலம் போற்ற வரும் இவர்-பால் மனம் மகிழ்ந்தார்
#15
சீத மதி அரவினுடன் செம் சடை மேல் செறிவித்த
நாதன் அடியார்-தம்மை நயப்பாட்டு வழிபாட்டால்
மே தகையார் அவர் முன்பு மிக சிறியராய் அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல்
#16
கண்_நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின்-கண்
#17
நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்து
பேராளர் அவர்-தமக்கு பெருகு திரு மனை அறத்தின்
வேர் ஆகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை-பால்
சீராள தேவர் எனும் திரு மைந்தர் அவதரித்தார்
#18
அருமையினில் தனி புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த
பெருமையினில் கிளை களிப்ப பெறற்கு அரிய மணி பெற்று
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளர
திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப
#19
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப
அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து
தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும்
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணி புணைந்தார்
#20
ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர்-தாம்
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறை பாராட்டு
சீர் பெருக செய்ய வளர் திரு மகனார் சீறடியில்
தார் வளர் கிண்கிணி அசைய தளர் நடையின் பதம் சார்ந்தார்
#21
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணை காதின் மணி குதம்பை
மருவு திரு கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில்
பொருவு_இல் வயிர சரிகள் பொன் அரை_ஞாண் புனை சதங்கை
தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார்
#22
வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து
தந்தையாரும் பயந்த தாயாரும் தனி சிறுவர்
சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயில தம்
பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார்
#23
அ நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்தருள
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர்
பொன் மார்பில் சிறுத்தொண்டர் புகலி காவலனார்-தம்
நல் நாம சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார்
#24
சண்பையர்-தம் பெருமானும் தாங்க_அரிய பெரும் காதல்
பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்து சிறப்பித்து
நண்பு அருளி எழுந்தருள தாம் இனிது நயப்புற்றார்
#25
இ தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை
அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய
மெய் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர்-தாம்
சித்தம் மகிழ் வயிரவராய் திருமலையின்-நின்று அணைகின்றார்
#26
மடல் கொண்ட மலர் இதழி நெடும் சடையை வனப்பு எய்த
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேக சுருள் போல்
தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி
படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆக பரப்பி
#27
அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை
மஞ்சினிடை எழுந்த வான மீன் பரப்பு என்ன
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்ப
துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற
#28
அருகு திரு முடி செருகும் அந்தி இளம் பிறை-தன்னை
பெருகு சிறு மதி ஆக்கி பெயர்த்து சாத்தியது என்ன
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்
திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க
#29
வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும்
அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை
வவ்வும் திரு காதின் மணி குழை சங்கு வளைத்து அதனுள்
செவ் அரத்த மலர் செறித்த திரு தோடு புடை சிறக்க
#30
களம் கொள் விடம் மறைத்து அருள கடல் அமுத குமிழி நிரைத்து
துளங்கு ஒளி வெண் திரள் கோவை தூய வடம் அணிந்தது என
உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருக பெருக
விளங்கும் திரு கழுத்தினிடை வெண் பளிங்கின் வடம் திகழ
#31
செம் பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்தி
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என
தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்தது சாத்தும்
அம் பவள திரு மேனி கஞ்சுகத்தின் அணி விளங்க
#32
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திரு மேனி விளைந்தது என
அக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும்
கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும்
தக்க திரு கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க
#33
பொருவு_இல் திருத்தொண்டர்க்கு புவி மேல் வந்து அருள்புரியும்
பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர்
வரும் அன்பின் வழி நிற்பீர் என மறை பூண்டு அறைவன போல்
திருவடி மேல் திரு சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப
#34
அயன் கபாலம் தரித்த இட திரு கையால் அணைத்த
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய
தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட
#35
அருள் பொழியும் திரு முகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடி சூலம் வெயில் எறிப்ப
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கி புவி ஏத்த
தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார்
#36
தண்டாதது ஒரு வேட்கை பசி உடையார்-தமை போல
கண்டாரை சிறுத்தொண்டர் மனை வினவி கடிது அணைந்து
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர்
வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன
#37
வந்து அணைந்து வினவுவார் மா தவரே ஆம் என்று
சந்தனமாம் தையலார் முன் வந்து தாள் வணங்கி
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார்
எம்-தமை ஆள் உடையீரே அகத்து எழுந்தருளும் என
#38
மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த
இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனை
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி
#39
அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு
எம்பெருமான் யாவரையும் கண்டிலர் தேடி போனார்
வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால்
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனி தாழார்
#40
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்தருளி இரும் என்ன
ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம்
செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம்
எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி
#41
கண்_நுதலில் காட்டாதார் கணபதீச்சரத்தின்-கண்
வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம்
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார்
#42
நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும்
பார் ஆதரிக்கும் திரு வேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார்
#43
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார்
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண்
துடி சேர் கரத்து பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய்
கடி சேர் திரு ஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து
#44
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்தி
சென்று கண்டு திரு பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர்-தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய்மலர்ந்து அருள இறைவர்-தம்மை தொழுது உரைப்பார்
#45
பூதி அணி சாதனத்தவர் முன் போற்ற போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால் அருளி செய்வார் நான் என்று
கோது_இல் அன்பர்-தமை அமுது செய்விப்பதற்கு குல பதியில்
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமை கண்டேன்
#46
அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும் என
நெடியோன் அறியா அடியார்-தாம் நிகழும் தவத்தீர் உமை காணும்
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மை பரிந்து ஊட்ட
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள
#47
எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு-அதனை
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க
தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட
ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார்
#48
அரியது இல்லை என கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிரவ கோல பெருமான் அருளி செய்வார் யாம்
பரியும் தொண்டீர் மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார்
#49
சால நன்று மு நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என
ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கைதொழுதார்
#50
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம் உண்ண படுக்கும் பசுவும் நர பசுவாம்
உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம்
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார்
#51
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளி செய்யும் என
நாதன்-தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனை
தாதை அரிய தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார்
#52
அதுவும் முனைவர் மொழிந்து அருள கேட்ட தொண்டர் அடியேனுக்கு
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று
கதும்என் விரைவில் அவர் அவர் இசைய பெற்று களிப்பால் காதலொடு
மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார்
#53
அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திருவெண்காட்டு அம்மை
முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சி
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ
#54
வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மா தவர்-தாம்
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய்
கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய்
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார்
#55
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார்
பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு
வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும்
#56
மனைவியார்-தம் முகம் நோக்கி மற்று இ திறத்து மைந்தர்-தமை
நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்று
தனையன்-தன்னை தந்தை தாய் அரிவார் இல்லை தாழாதே
எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார்
#57
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர்
இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம்
நன்று காண்பது என நயந்து நம்மை காக்க வரும் மணியை
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார்
#58
காதல் மனையார்-தாம் கூற கணவனாரும் காதலனை
ஏதம் அகல பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன்
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார்
#59
பள்ளியினில் சென்று எய்துதலும் பாத சதங்கை மணி ஒலிப்ப
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல்
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர்
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன்-தன்னை எதிர் வாங்கி
#60
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி
எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார்
#61
அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன்
உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார்
பொச்சம் இல்லா திருத்தொண்டர் புனிதர்-தமக்கு கறி அமைக்க
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார்
#62
ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில்
சென்று புக்கு பிள்ளை-தனை பெற்ற தாயார் செழும் கலங்கள்
நன்று கழுவி கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை
வென்ற தாதையார் தலையை பிடிக்க விரைந்து மெய் தாயார்
#63
இனிய மழலை கிண்கிணி கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க காதலனும்
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய
தனி மா மகனை தாதையார் கருவி கொண்டு தலை அரிவார்
#64
பொருவு_இல் பெருமை புத்திரன் மெய் தன்மை அளித்தான் என பொலிந்து
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார்
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார்
#65
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது என கழித்து
மறைத்து நீக்க சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார்
#66
மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து
பட்ட நறையால் தாளித்து பலவும் மற்றும் கறி சமைத்து
சட்ட விரைந்து போனகமும் சமைத்து கணவர்-தமக்கு உரைத்தார்
#67
உடைய நாதர் அமுது செய உரைத்தபடியே அமைவதற்கு
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகி களிகூர
விடையில் வருவார் தொண்டர்-தாம் விரைந்து சென்று மெல் மலரின்
புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார்
#68
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்-பால்
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு
பண்ணினேனாய் பசித்து அருள தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார்
#69
இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச
கறையும் கண்டத்தினில் மறைத்து கண்ணும் நுதலில் காட்டாதார்
நிறையும் பெருமை சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும்
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார்
#70
வந்து புகுந்து திரு மனையில் மனைவியார் தாம் மா தவரை
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை
சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றி தவிசு அடுத்த
கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த
#71
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார்-தம் கழல் விளக்கி
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம்
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம்
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார்
#72
பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூம் குஞ்சி பயிரவராம்
புனிதர்-தம்மை போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின்
வனிதையாரும் கணவரும் முன் வணங்கி கேட்ப மற்று அவர்-தாம்
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என
#73
பரிசு விளங்க பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றி
தெரியும் வண்ணம் செஞ்சாலி செழும் போனகமும் கறி அமுதும்
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல்
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார்
#74
சொன்ன முறையில் படுத்த பசு தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு
மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என கழித்தோம்
என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார்
#75
சிந்தை கலங்கி சிறுத்தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயர
சந்தனத்தார் எனும் தாதியார்-தாம் அந்த தலை இறைச்சி
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார்
#76
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி
ஈங்கு நமக்கு தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இ
பாங்கு நின்றார்-தமை கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள
ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார்
#77
அகத்தின் புறத்து போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து
முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார்
இகத்தும் பரத்தும் இனி யாரை காணேன் யானும் திருநீறு
சகத்தில் இடுவார்-தமை கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச
#78
உம்மை போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று
செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை-தம்மை கலம் திருத்தி
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார்
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி
#79
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன்-தன்னை அழையும் என
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார்
#80
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர்
தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால்
பூ மென் குழலார்-தம்மோடும் புறம் போய் அழைக்க புகும் போது
#81
வையம் நிகழும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார்
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய் தாம் அழைப்பார்
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம்
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட
#82
பரமர் அருளால் பள்ளியின்-நின்று ஓடி வருவான் போல் வந்த
தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம்
கரம் முன் அணைத்து கணவனார் கையில் கெடுப்ப களிகூர்ந்தார்
புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ண பெற்றோம் எனும் பொலிவால்
#83
வந்த மகனை கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார்
முந்தவே அ பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருள
சிந்தை கலங்கி காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சி கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார்
#84
செய்ய மேனி கரும் குஞ்சி செழும் அஞ்சுகத்து பயிரவர் யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே என தேடி
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த
தையலோடும் சரவணத்து தனயரோடும் தாம் அணைவார்
#85
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர்
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்தருளி
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார்
#86
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர்
முன்பு தோன்றும் பெரு வாழ்வை முழுதும் கண்டு பரவசமாய்
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள்புரிவார்
#87
கொன்றை வேணியார்-தாமும் பாகம் கொண்ட குல_கொடியும்
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார்
#88
ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள்
வேறு கழறிற்றறிவார்-தம் பெருமையும் தொழுது விளம்புவாம்

மேல்

4 கழறிற்று அறிவார் நாயனார் புராணம்

#1
மா வீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டு
பா வீற்றிருந்த பல் புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி-தான்
சே வீற்றிருந்தார் திருவஞ்சை களமும் நிலவி சேரர் குல
கோ வீற்றிருந்து முறை புரியும் குல கோ மூதூர் கொடுங்கோளூர்
#2
காலை எழும் பல் கலையின் ஒலி களிற்று கன்று வடிக்கும் ஒலி
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது-ஆல்
#3
மிக்க செல்வம் மனைகள்-தொறும் விளையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கும் சாலை-தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன
தக்க அணி கொள் மாடங்கள்-தொறும் சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கள் இடங்கள்-தொறும் அடங்க நிதியம் துவன்றுவன
#4
வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ்
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான்
கோதை அரசர் மகோதை என குலவும் பெயரும் உடைத்து உலகில்
#5
முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின்
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப
திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய்
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக்கோதையர்
#6
திரு மா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால்
வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி
தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப
பெரு மா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கின-ஆல்
#7
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால்
கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணும் கருத்தினராய்
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார்
தெள் நீர் முடியார் திருவஞ்சை களத்தில் திருத்தொண்டே புரிவார்
#8
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார்
புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து
மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து
#9
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு
வரும் அன்புடன் இன்புற சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும்
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதி பணிந்தே ஒழுகும் நாள்
#10
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ்
சீரின் மலிந்த திரு நகரம்-அதனில் செங்கோல் பொறையன் எனும்
காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்ற குடை நிழல் கீழ்
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்து தவம் சார்ந்தான்
#11
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின்
சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி
முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக
இந்து முடியார் திருவஞ்சை களத்தில் அவர்-பால் எய்தினார்
#12
எய்தி அவர்-தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டு
செய்தி முறைமையால் உரிமை செங்கோல் அரசு புரிவதற்கு
மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என
பொய் தீர் வாய்மை மந்திரிகள் போற்றி புகன்ற பொழுதின்-கண்
#13
இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால்
#14
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும்
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு_இல்லா
தா_இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம்
காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்துற பெற்றார்
#15
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல்
ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும்
மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார்
#16
உரிமை நாளில் ஓரை நலன் எய்த மிக்க உபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ்
தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற்றறிவார்-தாம்
#17
தம்பிரானார் கோயில் வலம்கொண்டு திரு முன் தாழ்ந்து எழுந்து
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக்குடையும் சாமரையும்
நம்பும் உரிமையவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம்கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார்
#18
மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால்
உழையில் பொலிந்த திரு கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே
இழையில் சிறந்த ஓடை நுதல் யானை கழுத்தின்-நின்று இழிந்து
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கைதொழுதார்
#19
சேரர் பெருமான் தொழ கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார்
#20
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம்
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்ற சின மால் களிறு ஏறி
மின்னு மணி பூண் கொடி மாட வீதி மூதூர் வலம்கொண்டு
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய
#21
யானை மிசை-நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின்-கண்
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக்குடை நிழற்ற
பானல் விழியார் சாமரை முன் பணிமாற பல் மலர் தூவி
மான அரசர் போற்றிட வீற்றிருந்தார் மன்னர் பெருமானார்
#22
உலகு புரக்கும் கொடை வளவர் உரிமை செழியர் உடன் கூட
நிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி
அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து
மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார்
#23
நீடும் உரிமை பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும்
தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லை திருச்சிற்றம்பலத்துள்
ஆடும் கழலே என தெளிந்த அறிவால் எடுத்த திரு பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள்
#24
வாச திரு மஞ்சனம் பள்ளி தாமம் சாந்தம் மணி தூபம்
தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும்
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும்
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார்
#25
நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால்
செம்பொன் மழையாம் என பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி
உம்பர் போற்ற தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார்
#26
இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு
மன்னும் மதுரை திரு ஆலவாயில் இறைவர் வரும் அன்பால்
பன்னும் இசை பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார்
#27
இரவு கனவில் எழுந்தருளி என்-பால் அன்பால் எப்பொழுதும்
பரவும் சேரன்-தனக்கு உனக்கு பைம்பொன் காணம் பட்டு ஆடை
விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி
தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று
#28
அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள்செய்த பெருமையாலே
எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று
மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை
கதிர் ஒளி விரிந்த தோட்டு திரு முகம் கொடுத்தார் காண
#29
சங்க புலவர் திரு முகத்தை தலை மேல் கொண்டு பத்திரனார்
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி
துங்க பரிசை கொடுங்கோளூர்-தன்னில் புகுந்து துன்னு கொடி
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார்
#30
கேட்ட பொழுதே கை தலை மேல் கொண்டு கிளர்ந்த பேர் அன்பால்
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி
ஓட்ட தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன்
பாட்டின் தலைமை பாணனார் பாதம் பலகால் பணிகின்றார்
#31
அடியேன் பொருளா திரு முகம் கொண்டு அணைந்தது என்ன அவர்-தாமும்
கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார்
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர்
பொடியார் மார்பில் பரந்து விழ புவி மேல் பலகால் வீழ்ந்து எழுந்தார்
#32
பரிவில் போற்றி திரு முகத்தை பலகால் தொழுது படி எடுக்க
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி
விரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமை சுற்றம் எலாம்
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள்செய்வார்
#33
தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதி குவையாய்
பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம்
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடைய கண்டு புறப்பட்டு
தங்கும் பொதி செய் தாளின் மேல் சமைய ஏற்றி கொணரும் என
#34
சேரர் பெருமான் அருள்செய்ய திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும்
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல்
பாரில் நெருங்க மிசை ஏற்றி கொண்டு வந்து பணிந்தார்கள்
#35
பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
நிரந்த தனங்கள் வேறுவேறு நிரைத்து கட்டி மற்று இவையும்
உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும்
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார்
#36
பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலி சேரலனார்
காண கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்து
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார்
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச
#37
இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே
உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர்
பிறை வெண் கோட்டு களிற்று மேல் கொண்டு போந்தார் பெரும்பாணர்
#38
பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின்
கண்கள் பொழிந்த காதல் நீர் வழிய கையால் தொழுது அணைய
நண்பு சிறக்கும் அவர்-தம்மை நகரின் புறத்து விடைகொண்டு
திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர்
#39
வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகி
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும்
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்றிருந்தார்
#40
அளவு_இல் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின்
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி
களவு கொலைகள் முதலான கடிந்து கழறிற்றறிவார்-தாம்
வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள்
#41
வான கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டு
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள்
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல்
மான பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி
#42
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது என பொருமி
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று
தேசின் விளங்கும் உடைவாளை உருவி திரு மார்பினில் நாட்ட
ஈசர் விரைந்து திரு சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார்
#43
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர்
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன்
தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார்
#44
என்ற பொழுதில் இறைவர்-தாம் எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்
மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமை போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வர தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார்
#45
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி
தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி
நல் நீர் நாட்டு செல நயந்தார் நாம சேரர் கோமானார்
#46
பொன் ஆர் மௌலி சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற
மின் ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர்
அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய்
#47
இட்ட நல் நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக்களத்து
மட்டு விரி பூம் கொன்றையினார்-தம்மை வலம்கொண்டு இறைஞ்சி போய்
பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம்
தொட்ட கொடி மாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார்
#48
யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற
சேனை வீரர் புடை பரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த
கானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினது-ஆல்
#49
புரவி திரள்கள் ஆ யோக பொலிவின் அசைவில் போதுவன
அரவ சேனை கடல் தரங்கம் மடுத்து மேல்மேல் அடர்வன போல்
விரவி பரந்து சென்றன-ஆல் மிசையும் அவலும் ஒன்றாக
நிரவி பரந்த நெடும் சேனை நேமி நெளிய சென்றன-ஆல்
#50
அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி
மின் ஆர் மணி பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டு
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டிடை போவார்
#51
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ள
குன்றும் கானும் உடை குறும்பர் இடங்கள்-தோறும் குறை அறுப்ப
துன்று முரம்பும் கான்ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து
வென்றி விடையார் இடம் பலவும் மேவி பணிந்து செல்கின்றார்
#52
பொருவு_இல் பொன்னி திரு நதியின் கரை வந்து எய்தி புனித நீர்
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வட-பால் கரை ஏறி
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார்
#53
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கி
சந்த விரை பூம் திரு வீதி இறைஞ்சி தலை மேல் கரம் முகிழ்ப்ப
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார்
#54
நிலவும் பெருமை எழு நிலை கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி
மலரும் கண்ணீர் துளி ததும்ப புகுந்து மாளிகை வலம்கொண்டு
உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார்
அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன்
#55
அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட
உளமும் புலனும் ஒருவழி சென்று உருக போற்றி உய்கின்றார்
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார்
#56
ஆரா ஆசை ஆனந்த கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால்
சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ்
பார் ஆதரிக்க எடுத்து ஏத்தி பணிந்தார் பருவ மழை பொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடை கையார் கழறிற்றறிவார்-தாம்
#57
தம்பிரானார்க்கு எதிர்நின்று தமிழ் சொல்_மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்த ஒலி-தாமும் எதிரே கேட்பித்தார்
#58
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம்
கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார்
நீட பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து
மாட திரு மாளிகை வீதி வணங்கி புறத்து வைகினார்
#59
பரவும் தில்லை வட்டத்து பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திரு படி கீழ்
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில்
#60
ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளி தாழ்த்தபடி தமக்கு
கூடும் பரிசால் முன்பு அருளி செய்த நாவலூர் கோவை
நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல்
தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார்
#61
அறிவின் எல்லை ஆய திரு தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சி
பிறவி இலாத திருவடியை பெருகும் உள்ளத்தினில் பெற்று
செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்
#62
வழியில் குழியில் செழு வயலின் மதகின் மலர் வாவிகளின் மடு
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ள கழனி ஆரூர் கண்ணுற்றார்
#63
நம்பி-தாமும் அ நாள் போய் நாகை காரோணம் பாடி
அம் பொன் மணி பூண் நவ மணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா
பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்
தம்பிரானை பணிந்து ஏத்தி திருவாரூரில் சார்ந்து இருந்தார்
#64
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்த
அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்று
சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார்
சந்தம் விரைத்தார் வன் தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார்
#65
முன்பு பணிந்த பெருமாளை தாமும் பணிந்து முகந்து எடுத்தே
அன்பு பெருக தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ
இன்ப வெள்ளத்திடை நீந்தி ஏறமாட்டாது அலைபவர் போல்
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்
#66
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த
மான சேரர் பெருமானார் தாமும் வன் தொண்டரும் கலந்த
பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியது-ஆல்
#67
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து
மருவ இனியார்-பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால்
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய
தெருவு நீங்கி கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர்
#68
சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சி திரு மாளிகை வலம்கொண்டு
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக
நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார்
#69
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வ பெருமாள் கழல் வணங்கி
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்க கேட்பித்தார்
தா_இல் பெருமை சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார்
#70
அங்கண் அருள் பெற்று எழுவாரை கொண்டு புறம் போந்து ஆரூரர்
நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார்
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும்
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார்
#71
சோதி மணி மாளிகையின்-கண் சுடரும் பசும்பொன் கால் அமளி
மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப
கோது_இல் குணத்து பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார்
#72
தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்க துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்து கறியும் போனகமும்
ஈண்ட சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார்
#73
அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும்படியாக
விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின்
புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய
பரவை பிறந்த திரு அனைய பரவையார் வந்து அறிவித்தார்
#74
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்ய செய் தவத்தால்
தாரின் மலி பூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி என
பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள்
ஏரின் விளங்க திரு கரத்தில் இரண்டில் படியாய் ஏற்றுதலும்
#75
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார்
#76
ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்து பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறு சுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்த
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார்
#77
பனி நீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரை கலவை
வனிதை அவர்கள் சமைத்து எடுப்ப கொடுத்து மகிழ் மான் மத சாந்தும்
புனித நறும் பூ மாலைகளும் போற்றி கொடுத்து பொன்_கொடியார்
இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார்
#78
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளி
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து
மேய விருப்பின் உடன் இருப்ப கழறிற்றறிவார் மெய் தொண்டின்
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார்
#79
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவி
கலை நாள் பெருகு மதி முகத்து பரவையார்-தம் கணவனார்
சிலை நாட்டிய வெல் கொடியாரை சேர தந்தார் என கங்கை
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார்
#80
செல்வ திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த
வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதிவிடங்கப்பெருமானை
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார்
#81
இவ்வாறு ஒழுகும் நாளின்-கண் இலங்கு மணி பூண் வன் தொண்டர்
மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி
செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார்
#82
சேரர் பிரானும் ஆரூரர்-தம்மை பிரியா சிறப்பாலும்
வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த
வீரர் அளித்த திரு முகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்கு
சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செல துணிந்தார்
#83
இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள்
பொருவு_இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத
#84
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழ திருவாரூர் இறைஞ்சி
காவில் பயிலும் புறம்பு அணையை கடந்து போந்து கீழ்வேளூர்
மேவி பரமர் கழல் வணங்கி போந்து வேலை கழி கானல்
பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார்
#85
திருக்காரோண சிவ கொழுந்தை சென்று பணிந்து சிந்தையினை
உருக்கு ஆர்வ செந்தமிழ்_மாலை சாத்தி சில நாள் உறைந்து போய்
பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி
அருள் காரணர்-தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர்
#86
முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி
செந்நீர் வாய்மை திருநாவுக்கரசும் புகலி சிவ கன்றும்
அந்நேர் திறக்க அடைக்க என பாடும் திரு வாயிலை அணைந்து
நல் நீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்து இறைஞ்சி
#87
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அரு மணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழை பழித்து என்னும்
அறைந்த பதிக தமிழ்_மாலை நம்பி சாத்த அருள் சேரர்
சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதி திளைத்து எழுந்தார்
#88
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள்
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு
அழுந்து மிடற்றார் அகத்தியான்பள்ளி இறைஞ்சி அவிர் மதிய
கொழுந்து வளர் செம் கடை குழகர் கோடி கோயில் குறுகினார்
#89
கோடி குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடி காணாது உள் புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார
பாடி காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார்
#90
அங்கு வைகி பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார்
தங்கும் இடங்கள் வணங்கி போய் பாண்டிநாடு-தனை சார்ந்து
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும்
மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார்
#91
சேரமான் தோழரும் அ சேரர் பிரானும் பணி பூண்
ஆர மார்பரை ஆலவாயினில் வணங்க
வாரமா வந்து அணைய வழுதியார் மன காதல்
கூர மாநகர் கோடித்து எதிர்கொண்டு கொடு புக்கார்
#92
தென்னவர் கோன் மகளாரை திருவேட்டு முன்னரே
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார்
அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி
மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார்
#93
திரு ஆலவாய் அமர்ந்த செம் சடையார் கோயில் வலம்
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு
தருவாரை போற்றி இசைத்து தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ்
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார்
#94
படி ஏறு புகழ் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து
அடியேனை பொருளாக அளித்த திரு முக கருணை
முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாற
கடி ஏறு கொன்றையார் முன் பரவி களிகூர்ந்தார்
#95
செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரருடன்
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால்
உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும்
பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார்
#96
உளம் மகிழ கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன்
கிளர் ஒளி பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி
வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார்
#97
அ நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள்
பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போத
செந்நாவின் முனைப்பாடி திரு நாடர் சென்று இறைஞ்சி
சொல்_மாலைகளும் சாத்தி தொழ திருப்பூவணத்தை அணைந்தார்
#98
நீடு திருப்பூவணத்து அணித்து ஆக நேர் செல்ல
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அ பதி காட்ட
தேடு மறைக்கு அரியாரை திருவுடையார் என்று எடுத்து
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார்
#99
சென்று திருப்பூவணத்து தேவர் பிரான் மகிழ் கோயில்
முன்றில் வலம்கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து
நின்று பரவி பாடி நேர் நீங்கி உடன் பணிந்த
வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார்
#100
அ பதியில் அமர்ந்து இறைஞ்சி சில நாளில் ஆரூரர்
மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி
மெய் பரிவில் திரு ஆலவாயுடையார் விரை மலர் தாள்
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார்
#101
செம் சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம்
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே
எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து
மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார்
#102
பரமர் திருப்பரங்குன்றில் சென்று பார்த்திபரோடும்
புரம் எரித்தார் கோயில் வலம்கொண்டு புகுந்து உள் இறைஞ்சி
சிரம் மலி மாலை சடையார் திருவடி கீழ் ஆட்செய்யும்
அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார்
#103
கோத்திட்டை என்று எடுத்து கோது_இல் திருப்பதிக இசை
மூர்த்தியார்-தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே
ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில்
#104
இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி
மறை முந்நூல் மணி மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார்
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார்
#105
அ நாட்டு திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்ச மலை
நல் நாட்டு வேந்தருடன் நம்பி-தாம் எழுந்தருள
மின் நாட்டும் பல் மணி பூண் வேந்தர் இருவரும் மீள்வார்
தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார்-தமை விடுத்தார்
#106
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்தருளும்
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர்
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலை சாரல்
குரு மணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார்
#107
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கி
சொல் தாம மலர் புனைந்து குறும்பலா தொழுது இப்பால்
முற்றா வெண் மதி முடியார் பதி பணிந்து மூவெயில்கள்
செற்றார் மன்னிய செல்வ திருநெல்வேலியை அணைந்தார்
#108
நெல்வேலி நீற்று அழகர்-தமை பணிந்து பாடி நிகழ்
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார்
வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றி பின்
செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து
#109
மன்னும் இராமேச்சரத்து மா மணியை முன் வணங்கி
பன்னும் தமிழ்_தொடை சாத்தி பயில்கின்றார் பாம்பு அணிந்த
சென்னியர் மா தோட்டத்து திருக்கேதீச்சரம் சார்ந்த
சொல் மலர் மாலைகள் சாத்தி தூரத்தே தொழுது அமர்ந்தார்
#110
திரு இராமேச்சரத்து செழும் பவள சுடர் கொழுந்தை
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து
பெரு விமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல்
மருவினார் வன் தொண்டர் மலை வேந்தருடன் கூட
#111
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலை சிலையாரை
கரு சுழியில் வீழாமை காப்பாரை கடல் விடத்தின்
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்
பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார்
#112
அங்கணரை பணிந்து உறையும் ஆரூரர்க்கு அ ஊரில்
கங்குலிடை கனவின்-கண் காளையாம் திரு வடிவால்
செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன்
எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி
#113
கான பேர் யாம் இருப்பது என கழறி கங்கை எனும்
வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல
ஞான பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன்
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார்
#114
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளி
புண்டரிக புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கி போய்
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்
தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார்
#115
காளையார்-தமை கண்டு தொழ பெறுவது என் என்று
தாளை நாளும் பரவ தருவார்-பால் சார்கின்றார்
ஆளை நீளிடை காண அஞ்சிய நீர் நாய் அயலே
வாளை பாய் நுழை பழன முனைப்பாடி வள நாடார்
#116
மன்னு திருக்கானப்பேர் வளம் பதியில் வந்து எய்தி
சென்னி வளர் மதி அணிந்தார் செழும் கோயில் வலம்கொண்டு
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து
பன்னு செழும் தமிழ்_மாலை பாடினார் பரவினார்
#117
ஆராத காதலுடன் அ பதியில் பணிந்து ஏத்தி
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளி
கார் ஆரும் மலர் சோலை கானப்பேர் கடந்து அணைந்தார்
போர் ஆன் ஏற்றார் கயிலை பொருப்பர் திருப்புனவாயில்
#118
புனவாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு
மனம் ஆர்வமுற சித்த நீ நினை என்னொடு என்றே
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அ பதியில்
சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார்
#119
திருப்புனவாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும்
விருப்பு உடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார்
பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்து
பருப்பத வார் சிலையார்-தம் பாம்பு அணி மா நகர்-தன்னில்
#120
பாதாளீச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும்
வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன்
சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார்
#121
திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தருடன்
வருவாரை திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ள
தரும் காதலுடன் வணங்கி தம் பெருமான் கோயிலினுள்
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெற புகுந்தார்
#122
வாச மலர் கொன்றையார் மகிழ் கோயில் வலம்கொண்டு
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால்
பாச வினை தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார்
#123
பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த
விரவு பேர் அலங்கார விழு செல்வம் மிக பெருக
வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு
புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார்
#124
பரவியே பரவையார் பரிவுடனே பணிந்து ஏத்தி
விரவிய போனகம் கறிகள் விதம் பலவாக சமைத்து
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்து
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார்
#125
மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து
தங்கி இனிது அமர்கின்றார் தம்பிரான் கோயிலினுள்
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார்
#126
நிலை செண்டும் பரி செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி
விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற
மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி
அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார்
#127
விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்ல
கரவு_இல் ஈகை கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டு
பரவையார்-தம் கொழுநனார்-தம்மை பணிந்து கொண்டு அணைவான்
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள
#128
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருள
திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி
பொங்கும் முயற்சி இருவரும் போய் புக்கார் புனிதர் பூங்கோயில்
#129
தம்பிரானை தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய
நம்பி ஆரூரரும் சேரர் நல் நாட்டு அரசனார் ஆய
பைம்பொன் மணி நீள் முடி கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன்
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார்
#130
பொன் பரப்பி மணி வரன்றி புனல் பரக்கும் காவேரி
தென் கரை போய் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திரு கண்டியூர்
அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள்
#131
வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர் கரங்கள்
உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி
கடல் பரந்தது என பெருகும் காவிரியை கடந்து ஏறி
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார்
#132
ஐயாறு அதனை கண்டு தொழுது அருள ஆரூர்-தமை நோக்கி
செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார்
மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன
#133
ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல்
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப
நீறு விளங்கும் திரு மேனி நிறுத்தர் பாதம் பணிந்து அன்பின்
ஆறு நெறியா செல உரியார் தரியாது அழைத்து பாடுவார்
#134
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளி பாடும் திரு பாட்டின் முடிவில்
அரவம் புனைவார்-தமை ஐயாறு உடைய அடிகளோ என்று
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம்
நிரவும் இசையில் வன் தொண்டர் நின்று தொழுது பாடுதலும்
#135
மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல்
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட
#136
விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்-பால் பளிக்கு வெற்பு என்ன
நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி
பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி
கண்ணில் பொழிந்து மயிர் புளகம் கலக்க கை அஞ்சலி குவித்தார்
#137
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்
செம்பொன் முந்நூல் மணி மார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து
தம்பிரானை போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார்
#138
செம் சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான்
எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில்
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறி தலைச்சென்று
பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்
#139
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றி திளைத்து இறைஞ்சி
தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டும் தடம் பொன்னி
பொங்கு நதியின் முன் வந்தபடியே நடுவு போந்து ஏற
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடர பெருகியதால்
#140
ஆய செயலின் அதிசயத்தை கண்டு அக்கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்-பால் போய்
தூய மதி வாழ் சடையார்-தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்தி
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரருடன்
#141
கொங்கு நாடு கடந்து போய் குலவு மலை நாட்டு எல்லையுற
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர்
அங்கண் உடனே அணைய எழுந்தருளா நின்றார் எனும் விருப்பால்
எங்கும் அ நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர்
#142
பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூ வனங்கள்
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார்
நதிகள் எங்கும் மலர் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர் பூ
#143
திசைகள்-தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனை பெரு வெள்ளம்
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம்
மிசை கொள் பண்ணும் பிடி வெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு
அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார்
#144
கொடுங்கோளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து
தொடும் கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர் சாலைகள் தெற்றி
நெடும் கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணி தாமம் கமுக
விடும் கோதை பூம் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து
#145
நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்_இல் அரங்கு-தொறும்
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார்
சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக்களத்து
நிகர்_இல் தொண்டர்-தமை கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார்
#146
இறைவர் கோயில் மணி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி எதிர் புக்கு
நிறையும் காதலுடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து
பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார்
#147
தொழுது தினைத்து புறம் போந்து தோன்ற பண்ணும் பிடி மேல் பார்
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றி பின்பு தாம் ஏறி
பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும்
பொழுது மறுகில் இரு புடையும் மிடைந்தார் வாழ்த்தி புகல்கின்றார்
#148
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார்
எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார்
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார்
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார்
#149
பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார் பொருவு_இல் இவர்
மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார்
பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின்
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார்
#150
கழறிற்றறியும் திருவடியும் கலை நாவலர்-தம் பெருமானாம்
முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர்-தம்மை உடன் கொண்டு
விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தி தாமும் நேர் நின்று
#151
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த
அம் பொன் பாதம் தாம் விளக்கி அருள புகலும் ஆரூரர்
தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என
#152
பெருமாள் வேண்ட எதிர் மறுக்கமாட்டார் அன்பில் பெருந்தகையார்
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார்
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின்
ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார்
#153
சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி
ஆரம் நறு மென் கலவை மான் மத சாந்து ஆடை அணி மணி பூண்
ஈர விரை மென் மலர் பணிகள் இனைய முதலாயின வருக்கம்
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிக தமக்கு ஆக்கி
#154
பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம்-தொறும் நிகழ
மாடு விரை பூம் தரு மணம் செய் ஆராமங்கள் வைகுவித்து
கூட முனைப்பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார்
#155
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும்
வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும்
தண்டாமும் மத கும்ப தட மலை போர் சல மற்போர்
கண்டு ஆரா விருப்பு எய்த காவலனார் காதல் செய் நாள்
#156
நாவலர்-தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்
ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்
#157
திருவாரூர்-தனை நினைந்து சென்று தொழுவேன் என்று
மரு ஆர்வ தொண்டருடன் வழி கொண்டு செல் பொழுதில்
ஒருவா நண்பு உள்ளுருக உடன் எழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார்
#158
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய்
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன
ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்-கண் இருந்து
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார்
#159
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர்
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாத மலர்
தேர் ஊரும் நெடும் வீதி திருவாரூர்க்கு எழுந்தருள
நேர் ஊரும் மன காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார்
#160
மன்னவனார் அது மொழிய வன் தொண்டர் எதிர் மொழிவார்
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை
வன் நெஞ்ச கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார்
இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச
#161
மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள்-தமை அழைத்து
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த
நல் பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம்
பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவர பண்ணும் என
#162
ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள்
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணி பூண் துகில் வருக்கம்
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலிய கொண்டு அணைந்தார்
#163
மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின்
முற்படவே செல விட்டு முனைப்பாடி திரு நாடார்
பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல்
வெற்பு உயர் தோளுற தழுவி விடை அளித்தார் வன் தொண்டர்
#164
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று
கார் ஊரும் மலை நாடு கடந்து அருளி கல் சுரமும்
நீர் ஊரும் கான் யாறும் நெடும் கானும் பல கழிய
சீர் ஊரும் திரு முருகன் பூண்டி வழி செல்கின்றார்
#165
திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின்-கண்
பொரு விடையார் நம்பிக்கு தாமே பொன் கொடுப்பது அலால்
ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கி
பெருகு அருளால் தாம் கொடுக்க பெறுவதற்கோ அது அறியோம்
#166
வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்று
வன் தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவ படையாய்
சென்று அவர் தாம் வரும் வழியில் இரு-பாலும் செயிர்த்து எழுந்து
#167
வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்து
கொல்வோம் இங்கு இட்டுப்போம் என கோபத்தால் குத்தி
எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார்
#168
ஆரூரர்-தம்-பால் அ வேடுவர் சென்று அணையாதே
நீர் ஊரும் செம் சடையார் அருளினால் நீங்க அவர்
சேர் ஊராம் திரு முருகன் பூண்டியினில் சென்று எய்தி
போர் ஊரும் மழ_விடையார் கோயிலை நாடி புக்கார்
#169
அங்கணர்-தம் கோயிலினை அஞ்சலி கூப்பி தொழுது
மங்குலுற நீண்ட திரு வாயிலினை வந்து இறைஞ்சி
பொங்கு விருப்புடன் புக்கு வலம்கொண்டு புனித நதி
திங்கள் முடிக்கு அணிந்தவர்-தம் திரு முன்பு சென்று அணைந்தார்
#170
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமை பாகம்
மருவிய தம் பெருமான் முன் வன் தொண்டர் பாடினார்
வெருவுற வேடுவர் பறிக்கும் வெம் சுரத்தில் எத்துக்கு இங்கு
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம்
#171
பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால்
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார்
#172
கைக்கொண்டு கொடுபோம் அ கைவினைஞர்-தமை ஏவி
மை கொண்ட மிடற்றாரை வணங்கி போய் கொங்கு அன்று
மெய் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும்
செய் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார்
#173
நாவலர் மன்னவர் அருளால் விடைகொண்ட நரபதியார்
ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர்-தமை நினைந்து
மா அலரும் சோலை மாகோதையினில் மன்னி மலை
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார்
#174
இ நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன் தொண்டர்
பொன்னி வள நாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து
மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள
முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம்
#175
மலை மலிந்த திரு நாட்டு மன்னவனார் மா கடல் போல்
சிலை மலிந்த கொடி தானை சேரலனார் கழல் போற்றி
நிலை மலிந்த மணி மாடம் நீள் மறுகு நான்_மறை சூழ்
கலை மலிந்த புகழ் காழி கணநாதர் திறம் உரைப்பாம்

மேல்

5 கணநாத நாயனார் புராணம்

#1
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திரு முலை அமுது உண்ட
வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா
ஊழி மா கடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய்
காழி மா நகர் திரு மறையவர் குல காவலர் கணநாதர்
#2
ஆய அன்பர்-தாம் அணி மதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி
நாயனார்க்கு நல் திருப்பணி ஆயின நாளும் அன்பொடு செய்து
மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு
தூய கை திருத்தொண்டினில் அவர்-தமை துறை-தொறும் பயில்விப்பார்
#3
நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர்
பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர்
அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர்
எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர்
#4
இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அ திருத்தொண்டின்
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே
அனைய அ திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார்
#5
இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி
மெய் பெரும் திருஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே
மு பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும்
ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல்
#6
ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும்
ஞானம் உண்டவர் புண்டரீக கழல் அருச்சனை நலம் பெற்று
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி
மான நல் பெரும் கணங்களுக்கு நாதராம் வழி தொண்டின் நிலை பெற்றார்
#7
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி
அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும்
மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம்

மேல்

6 கூற்றுவ நாயனார் புராணம்

#1
துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூல படையார்-தம்
நல் நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார்
பல் நாள் ஈசர் அடியார்-தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி
முன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்
#2
அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார்
பொருளின் முடிவும் காண்பு_அரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க
மருளும் களிறு பாய் புரவி மணி தேர் படைஞர் முதல் மாற்றார்
வெருளும் கருவி நான்கு நிறை வீர செருக்கின் மேலானார்
#3
வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கி
சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி
மன்றல் மாலை மிலைந்து அவர்-தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார்
#4
மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்கு
தில்லை வாழ் அந்தணர்-தம்மை வேண்ட அவரும் செம்பியர்-தம்
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று
நல்கார் ஆகி சேரலன்-தன் மலை நாடு அணைய நண்ணுவார்
#5
ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும்படி இருத்தி
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்திய பின்
வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார்
#6
அற்றை நாளில் இரவின்-கண் அடியேன் தனக்கு முடி ஆக
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும்
பற்று விடாது துயில்வோர்க்கு கனவில் பாத மலர் அளிக்க
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார்
#7
அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய்
தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித்தனியே
இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும் பூசனை இயற்றி
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார்
#8
காதல் பெருமை தொண்டின் நிலை கடல் சூழ் வையம் காத்து அளித்து
கோது அங்கு அகல முயல் களந்தை கூற்றனார்-தம் கழல் வணங்கி
நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும்
போதம் மருவி பொய் அடிமை இல்லா புலவர் செயல் புகல்வாம்
#9
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திரு நாள்
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர் பாதம்
யானும் பரவி தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன்
மேல்