6. வம்பறா வரிவண்டு சருக்கம்

அதிகாரங்கள்

  1. திருஞானசம்பந்த நாயனார் புராணம் (1256)
  2. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் (409)
  3. திருமூல நாயனார் புராணம் (28)
  4. தண்டியடிகள் நாயனார் புராணம் (26)
  5. மூர்க்க நாயனார் புராணம் (12)
  6. சோமாசிமாற நாயனார் புராணம் (6)

1 திருஞானசம்பந்த நாயனார் புராணம்

#1
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க
பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலி திருஞானசம்பந்தர்
பாத மலர் தலை கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
#2
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார்-தம்
மன்னிய சைவ துறையின் வழிவந்த குடி வளவர்
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால்
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர்
#3
அ பதி தான் அந்தணர்-தம் கிடைகள் அரு_மறை முறையே
செப்பும் ஒலி வளர் பூக செழும் சோலை புறம் சூழ
ஒப்பு_இல் நகர் ஓங்குதலால் உக கடை நாள் அன்றியே
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளது-ஆல்
#4
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள்
விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள்
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில்
வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்கும்-ஆல்
#5
வளம் பயிலும் புறம் பணை-பால் வாச பாசடை மிடைந்த
தளம் பொலியும் புனல் செந்தாமரை செவ்வி தட மலரால்
களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி
இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல
#6
உளம் கொள் மறை வேதியர்-தம் ஓம தூமத்து இரவும்
கிளர்ந்த திருநீற்று ஒளியில் கெழுமிய நண்பகலும் அலர்ந்து
அளந்து அறியா பல் ஊழி ஆற்றுதலால் அகல் இடத்து
விளங்கிய அ மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை
#7
பரந்த விளை வயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில்
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய்
நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர்
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல்
#8
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண் மதியம்
சோலை-தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்
பால் அணைந்து மது தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி
மாலை எழும் செவ் ஒளிய மதியம் போல் வதியும்-ஆல்
#9
காமர் திரு பதி-அதன்-கண் வேதியர் போல் கடி கமழும்
தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கி
தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி
தேம் மரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடும்-ஆல்
#10
புனைவார் பொன் குழை அசைய பூம் தானை பின் போக்கி
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குஉற வெண் சுதை ஒழுக்கும்
கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின்
மனை வாழ்க்கை குல மகளிர் வளம் பொலிவ மாடங்கள்
#11
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டு பண்ணை-தொறும்
பூழியுற வகுத்து அமைத்து பொன் புனை கிண்கிணி ஒலிப்ப
ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும்
வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு
#12
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம்
தொடு குடுமி நாசி-தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல்
உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால்
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம்
#13
மடை எங்கும் மணி குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம்
புடை எங்கும் மலர் பிறங்கல் புறம் எங்கும் மக பொலிவு
கிடை எங்கும் கலை சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள்
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி
#14
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்
பொருவு_இல் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சைவயம்
பரவு திரு கழுமலமாம் பன்னிரண்டு திரு பெயர்த்து-ஆல்
#15
அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை
கைப்படுத்த சீலத்து கவுணியர் கோத்திரம் விளங்க
செப்பும் நெறி வழிவந்தார் சிவபாதஇருதயர் என்று
இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்
#16
மற்று அவர்-தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு
பெற்றியினார் எ உலகும் பெறற்கு அரிய பெருமையினார்
பொற்பு உடைய பகவதியார் என போற்றும் பெயர் உடையார்
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்
#17
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார்
அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள்
#18
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர்-தம் பொய் மிகுந்த
ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால்
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழிய கண்டு
ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார்
#19
மனை_அறத்தில் இன்பமுறு மக பெறுவான் விரும்புவார்
அனைய நிலை தலை நின்றே ஆய சேவடி கமலம்
நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீர் ஆக்கும்
புனை மணி பூண் காதலனை பெற போற்றும் தவம் புரிந்தார்
#20
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலி
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடி கீழ் வழிபட்டு
கருத்து முடிந்திட பரவும் காதலியார் மணி வயிற்றில்
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக
#21
ஆள் உடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறை நூல் முறை சடங்கு
நாள் உடைய ஈர்_ஐந்து திங்களினும் நலம் சிறப்ப
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வுறு நாள்
#22
அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்க பேணிய நல் ஓரை எழ
திரு கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க பரசமய
தருக்கு ஒழிய சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க
#23
தொண்டர் மனம் களி சிறப்ப தூய திருநீற்று நெறி
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக
வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப
#24
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற
மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல
அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக
#25
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற
நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க
வாள் உடைய மணி வீதி வளர் காழி பதி வாழ
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக
#26
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமய
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி-தொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே தாவு_இல் சராசரங்கள் எலாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்
#27
அப்பொழுது பொற்புறு திருக்கழுமலத்தோர்
எ பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி
மெய்ப்படு மயிர் புளகம் மேவி அறியாமே
ஒப்பு_இல் களிகூர்வது ஓர் உவப்புற உரைப்பார்
#28
சிவன் அருள் என பெருகும் சித்தம் மகிழ் தன்மை
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார்
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்
அவன் வரும் நிமித்தம் இது என்று அதிசயித்தார்
#29
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும்
தேன் மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம்
தூ மருவு சோதி விரிய துகள் அடக்கி
மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே
#30
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பு_இல்
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும்
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார்
#31
பூத கண நாதர் புவி வாழ அருள்செய்த
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார்
ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும்
#32
பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கி
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும்
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம்
#33
அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்
சங்கம் படகம் கருவி தாரை முதலான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம்
#34
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர்-தம்மை
தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில்
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே
அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார்
#35
காதல் புரி சிந்தை மகிழ களி சிறப்பார்
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார்
சூத நிகழ் மங்கல வினை துழனி பொங்க
சாதக முறை பல சடங்கு வினை செய்வார்
#36
மா மறை விழு குல மடந்தையர்கள்-தம்மில்
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்ன
தூ மணி விளக்கொடு சுடர் குழைகள் மின்ன
காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார்
#37
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி
உள் நிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார்
வெண் முளைய பாலிகைகள் வேதி-தொறும் வைப்பார்
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்
#38
செம்பொன் முதலான பல தான வினை செய்வார்
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார்
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர்
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார்
#39
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்
நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும்
வெய்ய தழல் ஆகுதி விழு புகையினாலும்
தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார்
#40
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர்
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின்
மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார்
#41
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்தி
சேம உதய பரிதியில் திகழ் பிரானை
தாமரை மிசை தனி முதல் குழவி என்ன
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார்
#42
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால்
அரு_மறை குழைத்த அமுது செய்து அருளுவாரை
தரு மறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே
திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார்
#43
ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலே
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார்
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்
#44
தாயர் திரு மடி தலத்தும் தயங்கு மணி தவிசினிலும்
தூய சுடர் தொட்டிலினும் தூங்கு மலர் சயனத்தும்
சேய பொருள் திரு மறையும் தீம் தமிழும் சிறக்க வரு
நாயகனை தாலாட்டும் நலம் பல பாராட்டினார்
#45
வரும் முறைமை பருவத்தில் வளர் புகலி பிள்ளையார்
அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல்
திரு முக மண்டலம் அசைய செங்கீரை ஆடினார்
#46
நாம் அறியோம் பரசமயம் உலகிர் எதிர் நாடாது
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன்-பால்
காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல்
தாமரை செம் கைகளினால் சப்பாணி கொட்டினார்
#47
விதி தவறுபடும் வேற்று சமயங்களிடை விழுந்து
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார்
மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார்
#48
சூழ வரும் பெரும் சுற்றத்து தோகையரும் தாதியரும்
காழியர்-தம் சீராட்டே கவுணியர் கற்பகமே என்று
ஏழ் இசையும் பல கலையும் எ உலகும் தனித்தனியே
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப
#49
திரு நகையால் அழைத்து அவர்-தம் செழு முகங்கள் மலர்வித்தும்
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும்
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன்
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலி பிள்ளையார்
#50
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலைய செந்நின்று
கிளர் ஒலி கிண்கிணி எடுப்ப கீழ்மை நெறி சமயங்கள்
தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார்
#51
தாதியர்-தம் கை பற்றி தளர் நடையின் அசைவு ஒழிந்து
சோதி அணி மணி சதங்கை தொடுத்த வடம் புடைசூழ்ந்த
பாத மலர் நிலம் பொருந்த பருவ முறை ஆண்டு ஒன்றின்
மீது அணைய நடந்து அருளி விளையாட தொடங்கினார்
#52
சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்
குறு வியர்ப்பு துளி அரும்ப கொழும் பொடி ஆடிய கோல
மறுகிடை பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார்
#53
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்றிருந்த
திங்கள் சேர் சடையார் தம் திருவருட்கு செய் தவத்தின்
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும்
#54
நா ஆண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்ப
பூ ஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த
சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு
மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன்
#55
பண்டு திருவடி மறவா பான்மையோர்-தமை பரமர்
மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்
கொண்டு எழலும் வெரு கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய்
#56
மேதகைய இ நாளில் வேறு ஒரு நாள் வேத விதி
நீதி முறை சடங்கு நெறி முடிப்பதற்கு நீராட
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூட
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார்
#57
பின் சென்ற பிள்ளையார்-தமை நோக்கி பெரும் தவத்தோர்
முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும்
மின் செய் பொலம் கிண்கிணி கால் கொட்டி அவர் மீளாமை
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார்
#58
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல்
இடையறா பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம்
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார்
#59
பிள்ளையார்-தமை கரையில் வைத்து தாம் பிரிவு அஞ்சி
தெள்ளு நீர் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணி வாவி
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார்
#60
நீராடி தரு பிடித்து நியமங்கள் பல செய்வார்
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின்
ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர்
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய்
#61
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மை காணாது
இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல்
முறை புரிந்த முன் உணர்வு மூள அழ தொடங்கினார்
நிறை புனல் வாவி கரையில் நின்று அருளும் பிள்ளையார்
#62
கண் மலர்கள் நீர் ததும்ப கைம் மலர்களால் பிசைந்து
வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப
எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப
புண்ணிய கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார்
#63
மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார்
தம் மேலை சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை-தானோ
செம் மேனி வெண் நீற்றார் திருத்தோணி சிகரம் பார்த்து
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள
#64
அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள் நோக்கால்
முன் நிலைமை திருத்தொண்டு முன்னி அவர்க்கு அருள்புரிவான்
பொன்_மலை_வல்லியும் தாமும் பொரு விடை மேல் எழுந்தருளி
சென்னி இளம் பிறை திகழ செழும் பொய்கை மருங்கு அணைந்தார்
#65
திரு மறை நூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும்
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த
அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார்
#66
அழுகின்ற பிள்ளையார்-தமை நோக்கி அருள் கருணை
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர்-தாம் எ உலகும்
தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள்
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன
#67
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவு ஆன
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து
வார் இணங்கு திரு முலை பால் வள்ளத்து கறந்து அருளி
#68
எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும்
கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள்புரிந்தார்
#69
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார்
ஆவதனால் ஆளுடையபிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவு_அரிய பொருள் ஆகும்
தாவு_இல் தனி சிவ ஞானசம்பந்தர் ஆயினார்
#70
சிவன் அடியே சிந்திக்கும் திரு பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலா கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்
#71
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்
அப்பொருள்-தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும்
இப்படியால் இது அன்றி தம் இசைவு கொண்டு இயலும்
துப்புரவு இல்லார் துணிவு துகளாக சூழ்ந்து எழுந்தார்
#72
சீர் மறையோர் சிவபாதஇருதயரும் சிறு பொழுதில்
நீர் மருவி தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா
#73
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரை காட்டு என்று
கை சிறியது ஒருமாறு கொண்டு ஓச்ச கால் எடுத்தே
அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி
#74
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடை மேலே
பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன்
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞான திரு மொழியால்
#75
எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை
மல்லல் நெடும் தமிழால் இ மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப
பல் உயிரும் களிகூர தம் பாடல் பரமர்-பால்
செல்லு முறை பெறுவதற்கு திரு செவியை சிறப்பித்து
#76
செம்மை பெற எடுத்த திரு தோடுடைய செவியன் எனும்
மெய்ம்மை மொழி திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றி தாதையார்க்கு
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார்
#77
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண்_நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் என காட்ட
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசை பாட
அண்ணல் அவற்கு அருள்புரிந்த ஆக்கப்பாடு அருள்செய்தார்
#78
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என தொழார்
வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும்
இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார்
#79
வேத காரணர் ஆய வெண் பிறை சேர் செய்ய சடை
நாதன் நெறி அறிந்து உய்யார்-தம்மிலே நலம் கொள்ளும்
போதம் இலா சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்
#80
திருப்பதிகம் நிறைவித்து திருக்கடைக்காப்பு சாத்தி
இருக்கு மொழி பிள்ளையார் எதிர்தொழுது நின்று அருள
அருள் கருணை திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார்
#81
வந்து எழும் மங்கலமான வானக துந்துபி முழக்கும்
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலி கடல் முழக்கும்
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும்
அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க
#82
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர்-தம்
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய்
பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடைசூழ
#83
அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார்-பால்
இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின்
புணை அருள் அங்கணர் பொரு விடை தங்கிய புணர் பாகத்து
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி
#84
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே
மண் மிசை நின்ற மறை சிறு போதகம் அன்னாரும்
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏக
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார்
#85
ஈறு_இல் பெரும் தவம் முன் செய்து தாதை என பெற்றார்
மாறு விழுந்த மலர் கை குவித்து மகிழ்ந்து ஆடி
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப்பு ஓர்வார்
#86
தாணு வினை தனி கண்டு தொடர்ந்தவர்-தம்மை போல்
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார்
தோணிபுரத்து இறை-தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம்
பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார்
#87
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார்
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ
#88
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று
அங்கு எதிர்நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்
#89
இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே
சொல் முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும்
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும்
பொன் மணி வாயினர் கோயிலின்-நின்று புறப்பட்டார்
#90
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும்
தோணி புரத்தவர் தாம் எதிர்கொண்டு துதிக்கின்றார்
#91
காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து
ஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன்
வாழிய வந்து இ மண் மிசை வானோர் தனி நாதன்
ஏழ் இசை மொழியாள்-தன் திருவருள் பெற்றனை என்பார்
#92
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞான
பொறை அணி முகிலே புகலியர் புகலே பொரு பொன்னி
துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார்
#93
புண்ணிய முதலே புனை மணி அரை_ஞாணொடு போதும்
கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும்
பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்
#94
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும்
நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது
சென்று அணைந்த தாதையர் சிவபாதஇருதயர் தாம் தெய்வ ஞான
கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல
#95
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே
பூ மறுகு சிவானந்த பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும்
காமர் நுரை குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக
#96
நீடு திரு கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண்
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாச
தோடு மலி நறு மலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பர்
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக
#97
மங்கல தூரியம் துவைப்பார் மறை சாமம் பாடுவார் மருங்கு வேதி
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரணகும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க
தங்கு திரு மலி வீதி சண்பை நகர் வலம் செய்து சாரும்-காலை
#98
தம் திரு மாளிகையின்-கண் எழுந்தருளி புகும் பொழுது சங்க நாதம்
அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார்
சுந்தர பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும்
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார்
#99
தூ மணி மாளிகையின்-கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத
மா மறைகள் திரண்ட பெரும் திருத்தோணி மன்னி வீற்றிருந்தார் செய்ய
கா மரு சேவடி கமலம் கருத்தில்உற இடையறா காதல் கொண்டு
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில்
#100
காதல் உடன் அணைந்து திரு கழுமலத்து கலந்து வீற்றிருந்த தங்கள்
தாதையாரையும் வெளியே தாங்க_அரிய மெய்ஞ்ஞானம் தம்-பால் வந்து
போதம் முலை சுரந்து அளித்த புண்ணிய தாயாரையும் முன் வணங்கி போற்றி
மே தகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார்
#101
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த
வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி
திருக்கோலக்கா எய்தி தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று
இருக்கு ஓலிட்டு அறிவு_அரிய திரு பாதம் ஏத்துவதற்கு எடுத்து கொள்வார்
#102
மெய் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழு பொருளை வேணி மீது
பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை
மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால்
கை நிறைந்த ஒத்து அறுத்து கலை பதிகம் கவுணியர் கோன் பாடும்-காலை
#103
கை அதனால் ஒத்து அறுத்து பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த
செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம்
ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த
வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே
#104
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திரு தாள கருவி கண்டு
வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால்
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி
தாழும் மணி குழையார் முன் தக்க திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார்
#105
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கி
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல்
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும்
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளி சண்பை நகர் சார செல்வார்
#106
செங்கமல மலர் கரத்து திரு தாளத்துடன் நடந்து செல்லும் போது
தங்கள் குல தாதையார் தரியாது தோளின் மேல் தரித்து கொள்ள
அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்
திங்கள் அணி மணி மாட திருத்தோணிபுர தோணி சிகர கோயில்
#107
திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று
விருப்புறு பொன் திருத்தோணி வீற்றிருந்தார்-தமை பாட மேவும் காதல்
பொருத்தமுற அருள் பெற்று போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை
#108
எடுத்த திருப்பதிகத்தின் இசை திரு தாளத்தினால் இசைய ஒத்தி
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி
மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம் கோலத்து காட்சி
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞான கொண்டலார்-தாம்
#109
அ நிலையில் ஆளுடையபிள்ளையார்-தமை முன்னம் அளித்த தாயார்
முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம்
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார்
#110
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே
எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும்
பொங்கு திருத்தொண்டர்களும் அதிசயித்து குழாம் கொண்டு புகலியார்-தம்
சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார்
#111
வந்த திருத்தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும்
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை
தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர்
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில்
#112
செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே
எழுந்தருள வேண்டும் என இசைந்து அருளி தோணி வீற்றிருந்தார் பாதம்
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார்
#113
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை
மா தவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக்கொள்ள
நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார்
#114
தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி பள்ளியினை சார செல்வார்
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி
பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு
ஞான போனகர் தொழுது நல் தமிழ் சொல் தொடை மாலை நவிலல்உற்றார்
#115
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மை
சீர் இயல் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு-தன்னில்
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார்-தம்
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார்
#116
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்று
போதுவார்-தம்மை சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார்-தாம்
#117
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட
நம் பெருந்தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவ தொண்டரோடு
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம்
#118
காவணம் எங்கும் இட்டு கமுகொடு கதலி நாட்டி
பூ அணை தாமம் தூக்கி பூரணகும்பம் ஏந்தி
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார்
#119
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்க
பெரு மறை ஓசை மல்க பெரும் திரு கோயில் எய்தி
அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின்
தரு முறை நெறி அ கோயில் சார்ந்தமை அருளி செய்தார்
#120
கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும்
இறைவரை தொழுது பாடும் கொடியுடை ஏந்தி போந்து
நிறை புனல் திருச்சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்
#121
பன்னக பூணினாரை பல்லவனீச்சரத்து
சென்னியால் வணங்கி ஏத்தி திருந்து இசை பதிகம் பாடி
பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்-தம் திருச்சாய்க்காட்டு
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார்
#122
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம்கொண்டு புக்கு
தேன் அலர் கொன்றையார்-தம் திரு முன்பு சென்று தாழ்ந்து
மானிடம் தரித்தார் தம்மை போற்றுவார் மண் புகார் என்று
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை
#123
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக்கடைக்காப்பு போற்றி
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிட பயில்வார் பின்னும்
ஏர் இசை பதிகம் பாடி ஏத்தி போந்து இறைவர் வெண்காடு
ஆரும் மெய் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே
#124
பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு
சென்னியர் திருவெண்காட்டு திருத்தொண்டர் எதிரே சென்று
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க
மன்னு சீர் சண்பை ஆளும் மன்னரை கொண்டு புக்கார்
#125
முத்தமிழ் விரகர்-தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்
சித்த நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்கு
பத்தராம் அடியார் சூழ பரமர் கோயிலை சூழ் வந்து
நித்தனார்-தம் முன்பு எய்தி நிலமுற தொழுது வீழ்ந்தார்
#126
மெய்ப்பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரை
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்
#127
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில்
திருமுல்லைவாயில் எய்தி செந்தமிழ்_மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்த
திரு மலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார்
#128
தோணி வீற்றிருந்தார்-தம்மை தொழுது முன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூர
சேண் உயர் மாடம் ஓங்கும் திரு பதி அதனில் செய்ய
வேணியார்-தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்
#129
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திர பள்ளி வாசம்
செய் பொழில் குருகாவூரும் திருமுல்லைவாயில் உள்ளிட்டு
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தி
தையலாள் பாகர்-தம்மை பாடினார் தமிழ் சொல்_மாலை
#130
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள்
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவி போற்றி
உய் வகை மண்ணுளோருக்கு உதவிய பதிகம் பாடி
எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில்
#131
திருநீலகண்டத்து பெரும்பாணர் தெள் அமுதின்
வரு நீர்மை இசை பாட்டு மதங்கசூளாமணியார்
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்க
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார்
#132
பெரும்பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர்கொள்ள
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய் மொழிகளால் துதித்து
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார்
#133
அளவு_இலா மகிழ்ச்சியினார்-தமை நோக்கி ஐயா நீர்
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு
கள நிலவு நஞ்சு அணிந்தார்-பால் அணையும் கவுணியனார்
#134
கோயிலினில் புற முன்றில் கொடு புக்கு கும்பிடுவித்து
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என
ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி
மேய தொடை தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார்
#135
தான நிலை கோல் வடித்து படி முறைமை தகுதியினால்
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை
மான முறை பாடினியார் உடன் பாடி வாசிக்க
ஞான போனகர் மகிழ்ந்தார் நான்_மறையோர் அதிசயித்தார்
#136
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி
வாழி திரு தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினை
தாழும் இரு சிறை பறவை படிந்த தனி விசும்பிடை-நின்று
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார்
#137
எண்_அரும் சீர் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவி
பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின்
கண்_நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப
#138
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த
வெள்ள நீர் சடையாரை அவர் மொழிந்த மெய் பதிகம்
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புற தொழுதார்
#139
காழியர் தவ பயனாம் கவுணியர்-தம் தோன்றலார்
ஆழி விடம் உண்டவர்-தம் அடி போற்றும் பதிக இசை
யாழின் முறைமையின் இட்டே எ உயிரும் மகிழ்வித்தார்
ஏழ் இசையும் பணி கொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர்
#140
சிறிய மறை களிறு அளித்த திருப்பதிக இசை யாழின்
நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும்
அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன்
பிறிவு இன்றி சேவிக்கப்பெற வேண்டும் என தொழுதார்
#141
மற்று அதற்கு பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள
பெற்றவர்-தாம் தம்பிரான் அருள் இதுவே என பேணி
சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார்
#142
சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞானசம்பந்தர்
பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில்
தர இசையும் குறிப்பு அறிய தவ முனிவர்க்கு அருள்செய்தார்
#143
பிள்ளையார் அருள்செய்ய பெரும் தவத்தால் பெற்றெடுத்த
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப
வெள்ளி மால் வரை என்ன திருத்தோணி வீற்றிருந்த
புள்ளி மான் உரியாரை தொழுது அருளால் புறப்பட்டார்
#144
தாழ்வு_இல் யாழ்ப்பாணரொடும் தாதையார்-தம்மோடும்
மேவிய சீர் அடியார்கள் புடைவர வெம் குரு வேந்தர்
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினை கடந்து போய்
தேவர்கள்-தம் பெரும் தேவர் திரு தில்லை வழி செல்வார்
#145
நள்ளிருள்-கண்-நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி
முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ
புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து
கொள்ளிட திரு நதி கரை அணைந்தார் கவுணியர் குல தீபர்
#146
வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி
தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ
தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும்
கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி
#147
பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ
செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம்
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார்
#148
செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம்
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும்
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச
பொங்கு செம் முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை
#149
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப
இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை
#150
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம்
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி
#151
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களிகூர்வ
போல் அசைந்து இரு புடை மிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம்
#152
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடு வானம்
#153
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக
#154
பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ்ஞானம் ஆம் போனகம் பொன் குன்றம்
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று
அங்கண் வாழ் பெரும் திரு தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி
எங்கும் மங்கல அணி மிக அலங்கரித்து எதிர்கொள அணைவார்கள்
#155
வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்து ஓங்க
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆர
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லி
கோது_இலாதவர் ஞானசம்பந்தரை எதிர்கொண்டு புக்கார்
#156
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில்
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ
மல்லல் ஆவண மறுகிடை கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கை
தொல்லை மாளிகை நிரை திரு வீதியை தொழுது அணைந்தனர் தூயோர்
#157
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி
சிலம்பு அலம்பு சேவடியவர் பயிலுறும் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர்-தம் சிந்தையில் திகழ் திரு வீதி கண் களி செய்ய
பலன் கொள் மைந்தனார் எழு நிலை கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி
#158
நீடு நீள் நிலை கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின்
மாடு செம்பொனின் மாளிகை வலம்கொண்டு வான்உற வளர் திங்கள்
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில்
#159
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட
அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில்
சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார்
#160
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலமும் தம்
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும்
கண்ணின் முன்புற கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழி
புண்ணிய கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு
#161
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண்
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை என போற்றி
இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில்
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி
#162
ஊழி முதல்வர்க்கு உரிமை தொழில் சிறப்பால்
வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்
காழியர்-தம் காவலனார் கற்றாங்கெரியோம்பி
#163
பண்ணார் பதிக திருக்கடைக்காப்பு பரவி
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும்
விண் நாயகன் கூத்து வெட்டவெளியே திளைத்து
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார்
#164
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று
சொல்_மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற
பொன் மாளிகையை வலம்கொண்டு புறம் போந்தார்
#165
செல்வ திரு முன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம்
மல்கும் திரு வாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள்
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண்
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்தகையார்
#166
செய்ய சடையார் திருவேட்களம் சென்று
கைதொழுது சொல் பதிகம் பாடி கழுமலக்கோன்
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும்
ஐயன் திரு கூத்து கும்பிட்டு அணைவுறும் நாள்
#167
கை மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து
மெய் மாலை சொல் பதிகம் பாடி விரை கொன்றை
செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை
அம்மானை கும்பிட்டு அரும் தமிழும் பாடினார்
#168
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார்
நீடும் திரு தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள்
ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார்
#169
ஆங்கு அவர்-தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார்
தேன் கமழும் சோலை திருவேட்களம் கடந்து
பூம் கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்-கண்
#170
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை
முண்ட திருநீற்று மூவாயிரவர்களும்
தொண்ட தகைமை கண நாதராய் தோன்ற
கண்ட அ பரிசு பெரும்பாணர்க்கும் காட்டினார்
#171
செல்வம் பிரிவு அறியா தில்லை வாழ் அந்தணரும்
எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள்
#172
பொங்கி எழும் காதல் புலன் ஆக பூசுரர்-தம்
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும்
செம் கையொடும் சென்று திரு வாயில் உள் புக்கார்
#173
ஒன்றிய சிந்தை உருக உயர் மேரு
குன்று அனைய பேரம்பலம் மருங்கு கும்பிட்டு
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்க கூத்தர் எதிர்
சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப்படி கீழ்
#174
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால்
பாடினார் பின்னும் அ பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில்
நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம்
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி
#175
இன்ன தன்மையில் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும்
பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புற முன்றில்
#176
அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில்
பொற்புற தொழுது எழுந்து உடன் போதர போற்றிய புகழ் பாணர்
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார்
#177
பொங்கு தெண் திரை புனித நீர் நிவா கரை குட திசை மிசை போந்து
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்ல
செம் கை யாழ் திருநீலகண்ட பெரும்பாணருடன் சேர
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வர வந்தார்
#178
இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம்புலியூரின்
மருங்கு சென்றுஉற நீலகண்ட பெரும்பாணர் வணங்கி கார்
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று
அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார்
#179
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு
செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட
மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார்
உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்
#180
அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி
துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர்
செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார்
#181
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி
செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு
ஐயர் சேவடி பணியும் அ பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்
#182
வான நாயகர் திரு முது குன்றினை வழிபட வலம்கொள்வார்
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி
ஞானபோனகர் நம்பர்-தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்கு
தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார்
#183
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி
வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை வைகுவார் மணி வெற்பு
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள்
#184
ஆங்கு நாதரை பணிந்து பெண்ணாகடம் அணைந்து அரு_மறை ஓசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனி பரஞ்சோதி
பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை
தீங்கு நீங்குவீர் தொழும்-மின்கள் எனும் இசை பதிகமும் தெரிவித்தார்
#185
கருவரைப்பில் புகாதவர் கைதொழும்
ஒருவரை தொழுது உள்ளம் உவந்து போய்
பெருவரத்தினில் பெற்றவர்-தம்முடன்
திருஅரத்துறை சேர்தும் என்று ஏகுவார்
#186
முந்தை நாள்கள் ஒரோஒருகால் முது
தந்தையார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து
அந்தணாளர் அவர் அருகே செல
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர்
#187
ஆதியார்-தம் அரத்துறை நோக்கியே
காதலால் அணைவார் கடிது ஏகிட
தாதையாரும் பரிவுற சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய
#188
மறை அனைத்தும் ஒரு வடிவாம் என
நிறை மதி பிள்ளை நீள் நிலம் சேர்ந்து என
துறை அலை கங்கை சூடும் அரத்துறை
இறைவரை தொழுவான் விரைந்து ஏகினார்
#189
பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை
ஆசை சங்கரற்கு ஆயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு ஆனவர்
ஈசனை தொழுதே தொழுது ஏகினார்
#190
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி ஆனவர்
சிந்தை ஆர் அமுது ஆகிய செம் சடை
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார்
#191
மாறன்பாடி எனும் பதி வந்துற
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துற பிள்ளையார்
ஏறும் அஞ்சு_எழுத்து ஓதி அங்கு எய்திட
#192
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போல
கைகள் ஆயிரம் வாங்கி கரந்து போய்
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன்
#193
அற்றை நாள் இரவு அ பதியினிடை
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிட
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார்
வெற்றி மா தவத்தோருடன் மேவினார்
#194
இந்நிலை-கண் எழில் வளர் பூந்தராய்
மன்னனார் தம் வழி வருத்த தினை
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறை
சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர்
#195
ஏறுதற்கு சிவிகை இட குடை
கூறி ஊத குலவு பொன் சின்னங்கள்
மாறு_இல் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்
#196
நீடு வாழ் பதியாகும் நெல் வயலின்
மாட மா மனை-தோறும் மறையோர்க்கு
கூடு கங்குல் கனவில் குல மறை
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின்
#197
ஞானசம்பந்தன் நம்-பால் அணைகின்றான்
மான முகத்தின் சிவிகை மணி குடை
ஆன சின்னம் நம்-பால் கொண்டு அரும் கலை
கோன்-அவன்-பால் அணைந்து கொடும் என
#198
அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும்
சிந்தையோடும் செழு நீர் அரத்துறை
இந்துசேகரர் கோயில் வந்து எய்தினர்
#199
ஆங்கு மற்ற அருள் அடியாருடன்
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அ மறையோர்கள் முன் சாற்றினார்
#200
சால மிக்க வியப்புறு தன்மையின்
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின்
காலம் எய்திட காதல் வழிப்படும்
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார்
#201
திங்கள் நீர்மை செழும் திரள் முத்தினால்
துங்க வெண்குடை தூய சிவிகையும்
பொங்க ஊதும் பொருவு_அரும் சின்னமும்
அங்கண் நாதர் அருளினால் கண்டனர்
#202
கண்ட பின் அவர் கை தலை மேல் குவித்து
எண் திசைக்கும் விளக்கி இவையாம் என
தொண்டரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து
அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்
#203
சங்கு துந்துபி தாரை பேரி இ முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன்
பொங்கு காதல் எதிர்கொள போதுவார்
#204
மாசு_இல் வாய்மை நெல் வாயில் மறையவர்
ஆசு_இல் சீர் சண்பை ஆண்தகையார்க்கு எதிர்
தேசு உடை சிவிகை முதலாயின
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார்
#205
இத்தலை இவர் இன்னணம் ஏகினார்
அத்தலை சண்பை நாதர்க்கும் அ இரா
முத்த நல் சிவிகை முதல் ஆயின
உய்த்து அளிக்கும்படி முன் உணர்த்துவார்
#206
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என
உள்ளவாறு அருள்செய்ய உணர்ந்த பின்
#207
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கு அமர்
தொண்டருக்கு அருள்செய்து தொழா முனம்
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்
#208
மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி
கோல மேனியர் ஆய் கை மலர் குவித்து
ஏல அஞ்சு_எழுத்து ஓதி எழுந்தனர்
#209
போத ஞான புகலி புனிதரை
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிட
காதல் செய்பவன் போல கரும் கடல்
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்
#210
ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர் குடை
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்பரோடு
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார்
#211
வந்து தோன்றிய அந்தணர் மா தவர்
கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன்
அந்தம்_இல் சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர்
#212
என்று தங்களுக்கு ஈசர் அருள்செய்தது
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன்
நின்று போற்றி தொழுதிட நேர்ந்தது
மன்று உளரர் அருள் என்று வணங்கினார்
#213
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர்
செம்மை நித்தில ஆன சிறப்பு அருள்
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே
#214
எந்தை ஈசன் என எடுத்து இ அருள்
வந்தவாறு மற்று எவ்வணமோ என்று
சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை
புந்தி ஆர புகன்று எதிர் போற்றுவார்
#215
பொடி அணிந்த புராணன் அரத்துறை
அடிகள்-தம் அருளே இதுவாம் என
படி இலாத சொல்_மாலைகள் பாடியே
நெடிது போற்றி பதிகம் நிரப்பினார்
#216
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று
ஆதியார் அருள் ஆதலின் அஞ்சு_எழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம்
#217
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்த
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி
வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம்
#218
விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்தது ஓர் கருணையின் ஆர்த்தன முத்து
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே
#219
பல்கு வெண் கதிர் பத்தி சேர் நித்தில சிவிகை
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார்
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரை தரங்கம்
மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார்
#220
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே
ஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவு_இல் ஆனந்தம்
கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார்
#221
செய்ய பொன் புனை வெண் தரளத்து அணி சிறக்க
சைவ மா மறை தலைவர்-பால் பெறும் தனி காளம்
வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும்
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத
#222
சுற்று மா மறை சுருதியின் பெருகு ஒலி நடுவே
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திரு சின்னம்
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட
பெற்ற பால் அறா வாயன் வந்தான் என பிடிக்க
#223
புணர்ந்த மெய் தவ குழாத்தொடும் போதுவார் முன்னே
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலம் கிளர் தாரை
அணைந்த மா மறை முதல் கலை அகிலமும் ஓதாது
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத
#224
தெருளும் மெய் கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுது சொல் மறை அளிப்பவர்-தாம்
பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு
அருளும் அங்கணர் திரு அரத்துறையை வந்து அணைந்தார்
#225
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆக
சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல
அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார்
#226
மன்னு கோயிலை வலம்கொண்டு திரு முன்பு வந்து
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார்
என்னையும் பொருளாக இன் அருள்புரிந்து அருளும்
பொன் அடி தல தாமரை போற்றி என்று எழுந்தார்
#227
சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர்
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி
நீடினார் திருவருள் பெரும் கருணையே நிகழ
பாடினார் திருப்பதிகம் ஏழ் இசையொடும் பயில
#228
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு
திசை விளங்கிட திருவருள் பெற்றவர் சில நாள்
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார்
#229
தேவர் தம்பிரான் திரு அரத்துறையினில் இறைஞ்சி
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலா
தாவு_இல் அன்பர்கள் தம்முடன் தொழுது பின் சண்பை
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்
#230
விளங்கு வேணுபுரத்து திருத்தோணி வீற்றிருந்த
களம் கொள் கண்டர்-தம் காதலியார் உடன் கூட
உளம் கொள புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி
வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார்
#231
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி
நண்ணு பேர் அருளால் விடைகொண்டு போய் நடம் கொண்டு
உள் நிறைந்த பூம் கழலினை உச்சி மேல் கொண்டே
வெண் நிலா மலர் நித்தில சிவிகை மேல் கொண்டார்
#232
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்க
கவிகை வெண் மதி குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்ப
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆட
புவி கைம்மாறு இன்றி போற்ற வந்து அருளினார் போந்தார்
#233
மறை முழங்கின தழங்கின வண் தமிழ் வயிரின்
குறை நரன்றன முரன்றன வளை குலம் காளம்
முறை இயம்பின இயம் பல ஒலித்தன முரச
பொறை கறங்கின பிறங்கின போற்று இசை அரவம்
#234
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அ பதியோர்
புடை இரண்டினும் கொடியொடு பூம் துகில் விதானம்
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார்
#235
அனைய செய்கையால் எதிர்கொளும் பதிகள் ஆனவற்றின்
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவி
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்
பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்
#236
அங்கு அணைந்து இளம் பிறை அணிந்த சென்னியர்
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின்
துங்க நீள் விமானத்தை சூழ்ந்து வந்து முன்
பங்கய சேவடி பணிந்து பாடுவார்
#237
மண்ணினில் பொலி குல மாலையர் தாம் தொழுது
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்
நண்ணிய வகை சிறப்பித்து நாதரை
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்
#238
பாவினது இசைவழி பாடி அங்கு அகன்றி
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார்
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார்
மேவிய பெரும் திரு விசயமங்கையில்
#239
அந்தணர் விசயமங்கையினில் அங்கணர்
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன்
வந்தனை செய்து கோதனத்தை மன்னிய
செந்தமிழ்_மாலையில் சிறப்பித்து ஏத்தினார்
#240
விசயமங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள்
அசைவு_இல் வைகாவினில் அணைந்து பாடி போந்து
இசை வளர் ஞானசம்பந்தர் எய்தினார்
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம்
#241
புறம் பயத்து இறைவரை வணங்கி போற்றி செய்
திறம் புரி நீர்மையில் பதிக செந்தமிழ்
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார்
#242
அ திரு பதி பணிந்து அகன்று போய் அனல்
கை தலத்தவர் பதி பிறவும் கைதொழும்
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்
செய் தலை பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர்
#243
திரு மலி புகலி மன் சேர சேய்ஞலூர்
அரு_மறையவர் பதி அலங்கரித்து முன்
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே
வரு முறை எதிர்கொள வந்து முந்தினார்
#244
ஞானசம்பந்தரும் நாயனார் சடை
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும் பதி என்று நித்தில
யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார்
#245
மா மறையாளர் வண் புகலி பிள்ளையார்
தாம் எழுந்தருளிட தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில் வந்து அருள கண்டனர்
ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர்
#246
களித்தனர் புண்ணிய கரக வாச நீர்
தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர்
துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம்
அளித்தவர் கோயில் உள் அவர் முன்பு எய்தினார்
#247
வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலை
பொங்கிய விருப்பினால் புடை வலம்கொடு
செம் கைகள் சென்னி மேல் குவித்து சென்று புக்கு
அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்
#248
வேதியர் சேய்ஞலூர் விமலர்-தம் கழல்
காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதை தாள் தடிந்த சண்டீச பிள்ளையார்
பாதக பயன் பெறும் பரிசு பாடினார்
#249
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே
நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய
பின்னர் வெண் பிறை அணி வேணி பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார்
#250
ஆங்கு அணி சொல் மலர் மாலை சாத்தி அ
பாங்கு பந்தணைநலூர் பணிந்து பாடி போய்
தீங்கு தீர் மா மறை செம்மை அந்தணர்
ஓங்கும் ஓமாம்புலியூர் வந்து உற்றனர்
#251
மற்ற நல் பதி வட தளியின் மேவிய
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்
சொல் தொடை பாடி அங்கு அகன்று சூழ் மதில்
பொன் பதி வாழ் கொளிபுத்தூர் புக்கனர்
#252
சீர் வளர் கோயிலை அணைந்து தே மலர்
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்
#253
நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகி கூடிய
வம்பலர் செந்தமிழ்_மாலை பாடி நின்று
எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்
#254
அ பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன்
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர்
பை பணியவர் கருப்பறியலூரினில்
#255
பரமர்-தம் திரு கருப்பறியலூரினை
சிரபுர_சிறுவர் கைதொழுது செந்தமிழ்
உரை இசை பாடி அ மருங்கின் உள்ளவாம்
சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார்
#256
மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது
#257
பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல்
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர
வெள்ள மறை ஒலி பெருகு மறுகு-தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார்
#258
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச
பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார்
#259
கண்ட பொழுதே கைகள் தலை மேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்ப காதல் பொங்கி
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல்_இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார்
#260
திங்கள் அணி மணி மாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறை கற்பின் மாதர்
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து
துங்க நிலை கோபுரத்தை இறைஞ்சி புக்கு சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள்
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார்
#261
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணை திருவருளின் பரிசு போற்றி
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை
சிரபுரத்து பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே
வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார்
#262
மறையவர்கள் அடி போற்ற தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில்
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திருநீற்று காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்
#263
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத்தோணி மிசையாரை சென்று தாழ்ந்து
மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில்
ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார்
தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற
#264
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும்
இருபிறப்பின் நிலைமையினை சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம்
#265
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரை
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை
கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார்-தம்மை கண் முன்
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார்
#266
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால்
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார்
#267
அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து
சித்தம் மகிழ்வொடு சிறப்ப தாமும் தெய்வ திருத்தோணி அமர்ந்தாரை சென்று தாழ்ந்து
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில்
#268
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட
செந்தமிழ் ஞானசம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சுதற்காக
அந்தணர் பூந்தராய்-தன்னில் அணைந்தனர் நாவுக்கரையர்
#269
வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு
பூ கமழ் வாச தடம் சூழ் புகலி பெருந்தகையாரும்
ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில்
#270
சிந்தை இடையறா அன்பும் திரு மேனி-தன்னில் அசைவும்
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவார படையும்
வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும்
அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய
#271
கண்ட கவுணியர் கன்றும் கருத்தில் பரவு மெய் காதல்
தொண்டர் திரு வேடம் நேரே தோன்றியது என்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள்செய்தார்
#272
பேர் இசை நாவுக்கரசை பிள்ளையார் கொண்டு உடன் போந்து
போர் விடையார் திருத்தோணி பொன் கோயில் உள் புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால்
சீர் வளர் தொண்டரை கொண்டு திரு மாளிகையினில் சேர்ந்தார்
#273
அணையும் திருத்தொண்டர்-தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்
இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து
புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு
உணரும் சொல்_மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்
#274
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கரசர்
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டி
பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலி பிரான் இசைவோடும்
பின்னாக எய்த இறைஞ்சி பிரியாத நண்பொடும் போந்தார்
#275
வாக்கின் தனி மன்னர் ஏக மாறா திரு உளத்தோடும்
பூ கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து
தேக்கிய மா மறை வெள்ள திருத்தோணி வீற்றிருந்தாரை
தூக்கின் தமிழ்_மாலை பாடி தொழுது அங்கு உறைகின்ற நாளில்
#276
செந்தமிழ்_மாலை விகற்ப செய்யுள்களான் மொழி மாற்றும்
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்கு
சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்கு குறள் சாத்தி
எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு
#277
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கியமாக எல்லா பொருள்களும் முற்ற
ஞாலத்து உயர் காழியாரை பாடினார் ஞானசம்பந்தர்
#278
இன் இசை பாடின எல்லாம் யாழ்ப்பெரும்பாணனார்-தாமும்
மன்னும் இசை வடிவான மதங்கசூளாமணியாரும்
பன்னிய ஏழ் இசை பற்றி பாட பதிகங்கள் பாடி
பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார்
#279
அங்கண் அமர்கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும்
திங்கள் சடை அண்ணலார்-தம் திரு பதி யாவையும் கும்பிட்டு
எங்கும் தமிழ்_மாலை பாடி இங்கு எய்துவன் என்று
தம் குல தாதையாரோடும் தவ முனிவர்க்கு அருள்செய்தார்
#280
பெருகு விருப்புடன் நோக்கி பெற்ற குல தாதையாரும்
அருமையால் உம்மை பயந்ததனால் பிரிந்து உறைவு ஆற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்
#281
ஆண்தகையாரும் இசைந்து அங்கு அம் பொன் திருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே
ஈண்டு புகழ் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும்
காண்தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார்
#282
அ திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன் போதுவார் போத
மெய் தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளி தாமம் நிரத்த
நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற
#283
சின்னம் தனி காளம் தாரை சிரபுரத்து ஆண்தகை வந்தார்
என்னும் தகைமை விளங்க ஏற்ற திரு பெயர் சாற்ற
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடை பல்லியம் ஆர்ப்ப
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர்கொண்டு வணங்க
#284
சங்க நாதங்கள் ஒலிப்ப தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப
திங்களும் பாம்பும் அணிந்தார் திரு பதி எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்ற புகலி கவுணியர் போந்தார்
#285
திருமறை சண்பையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெரு விருப்பால் அணைந்து ஏத்தி பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி
வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார்
#286
போற்றிய காதல் பெருக புள் இருக்கும் திருவேளூர்
நால் தடம் தோள் உடை மூன்று நயன பிரான் கோயில் நண்ணி
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி அம் சொல் பதிகம் அணிந்தார்
#287
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்தி
கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண் தமிழ் கூறி
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார்
#288
அங்கு-நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான்_மடந்தை
பங்கர் உறை பழ மண்ணி படிக்கரை கோயில் வணங்கி
தங்கு தமிழ்_மாலை சாத்தி திருக்குறுக்கை பதி சார்ந்தார்
#289
திருக்குறுக்கை பதி மன்னி திரு வீரட்டானத்து அமர்ந்த
பொருப்பு வில்லாளரை ஏத்தி போந்து அன்னியூர் சென்று போற்றி
பருக்கை வரை உரித்தார்-தம் பந்தணைநல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார்
#290
அ பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி
செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி
எப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள் பாடி பதி எய்தி
ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார்
#291
செழும் திரு வேள்விக்குடியில் திகழ் மணவாள நல் கோலம்
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனித துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூட தண் தமிழ்_மாலையில் பாடி
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார்
#292
திருக்கோடிகாவில் அமர்ந்த தேவர் சிகாமணி-தன்னை
எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏன
பருக்கோடு பூண்ட பிரானை பணிந்து சொல்_மாலைகள் பாடி
கரு கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழ சென்றார்
#293
கஞ்சனூர் ஆண்ட தம் கோவை கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து
மஞ்சு அணி மா மதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாக
செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார்
#294
வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளை போற்றி
தங்கிய இன் இசை கூடும் தமிழ் பதிக தொடை சாத்தி
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்ட தொழுது
செம் கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன்குடி சேர்ந்தார்
#295
திருந்து தேவன்குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்தி
பொருந்திய காதலில் புக்கு போற்றி வணங்கி புரிவார்
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார்
#296
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார்
செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்திடை போய்
மை திகழ் கண்டர்-தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்-தம் கோயில்
#297
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன
பன்னும் தமிழ்_தொடை மாலை பாடல் புனைந்து பரவி
பொன் அம் கழல் இணை போற்றி புறம் போந்து அணைந்து புகுந்தார்
மன்னும் தடம் கரை பொன்னி வட குரங்காடுதுறையில்
#298
வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட
அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளி
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி
படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார்
#299
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில்
உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார்
அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்
#300
மாடம் நிரை மணி வீதி திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர்
நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து
நீடு மன களிப்பினொடும் எதிர்கொள்ள நித்தில யானத்து நீங்கி
#301
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால்
நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர்
#302
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில்
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல்
தணியாத கருத்தின் ஓடும் தம் பெருமான் கோயில் வலம்கொண்டு தாழ்ந்து
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார்
#303
கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய
#304
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு
நிலவு திரு பதி-அதன்-கண் நிகழும் நாள் நிகர் இலா நெடு நீர் கங்கை
அலையும் மதி முடியார்-தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றி
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்
#305
குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும்
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி
அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும்
புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்ற சென்றார்
#306
செம் கை மான் மறியார் தம் திருமழபாடி புறத்து சேர செல்வார்
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில்
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள்
பொங்கு மா தவம் உடையார் என தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார்
#307
மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி
செழு வாச மலர் கமல சேவடி கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று
தொழுது ஆடி பாடி நறும் சொல்_மாலை தொடை அணிந்து துதித்து போந்தே
ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள்
#308
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ
முதன் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனை தொழுது போற்றி
பதம் நிறை செந்தமிழ் பாடி சடை முடியார் பயில் பதியும் பணிந்து பாடி
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்
#309
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார்-தம்
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து
துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல்_மாலை நிகழ பாடி
#310
அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர்-தம் பதி பிறவும் அணைந்து போற்றி
செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா
பொங்கு ஒலி நீர் மழநாட்டு பொன்னி வட கரை மிசை போய் புகலி வேந்தர்
நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போதில்
#311
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல்
கன்னி இள மட பிணையாம் காமரு கோமள கொழுந்தின் கதிர் செய் மேனி
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான்
#312
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம்
பற்றியே வரும் குலத்து பான்மையினான் ஆதலினால் பரிவு தீர
பொன்_தொடியை கொடு வந்து போர் கோல சேவகராய் புரங்கள் மூன்றும்
செற்றவர்-தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான்
#313
அவ்வளவில் ஆளுடையபிள்ளையார் எழுந்தருளி அணுக எய்த
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞானசம்பந்தன் வந்தான் என்றே
எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை
எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான்
#314
மா நகரம் அலங்கரி-மின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாச
தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும்
வானவர் நாயகர் மகனார் வரும் முன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான்
#315
பிள்ளையார் எழுந்தருள பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல்
வெள்ளம் நீர் கண் பொழிய திரு முத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது
வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான்
#316
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதி சடையார் கோயில்
பொங்கு சுடர் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை-நின்றும்
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு
தங்கள் பிரான் கோயில் வலம்கொண்டு திரு முன் வணங்க சாரும்-காலை
#317
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனை கண்டு நோக்கி
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில்
முன் அணைய கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான்
#318
அணி கிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அ நிலையின் நின்றே
பணி வளர் செம் சடை பாச்சின் மேய பரம்பொருள் ஆயினாரை பணிந்து
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று
தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர்
#319
பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல்
கன்னி உறு பிணி விட்டு நீங்க கதும்என பார் மிசை நின்று எழுந்து
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள்
#320
வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க
தன்தனி பாவையும் தானும் கூட சண்பையர் காவலர் தாளில் வீழ
நின்ற அரு_மறை பிள்ளையாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம்
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார்
#321
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே
ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலி சிவபெருமானை இறைஞ்ச சென்றார்
#322
பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து
மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையை சார்ந்தார்
#323
செம் கண் குறவரை தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும்
கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசை பதிகம் புனைந்து
பொங்கர் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றி
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோது_இல் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார்
#324
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து
தெண் திரை நீர் தடம் பொன்னி தென் கரையாம் கொங்கின்இடை
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார்
கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாட செங்குன்றூர்
#325
அ நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து
பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து
முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள்
சென்னியுற கொண்டு அணைந்தார் சின விடையார் செழும் கோயில்
#326
தம் பெருமான் கோயிலின் உள் எழுந்தருளி தமிழ் விரகர்
நம்பர்-அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க
இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி
கும்பிடும் ஆதரவுடன் அ கோ நகரில் இனிது அமர்ந்தார்
#327
அப்பாலை குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில்
எப்பாலும் சென்று ஏத்தி திருநணாவினை இறைஞ்சி
பை பாந்தள் புணைந்த வரை பரவி பண்டு அமர்கின்ற
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார்
#328
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்-கண்
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழி-காலை
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர
பாங்கர் வரையும் குளிரும் பனி பருவம் எய்தியது-ஆல்
#329
அளி குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலர
பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை என
துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால்
குளிர் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும்
#330
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய்
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி
வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பினிடை
ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகும்-ஆல்
#331
நீடிய அ பதிகள் எலாம் நிறை மாட திறைகள்-தொறும்
பேடையுடன் பவள கால் புறவு ஒடுங்க பித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள்
ஆடவர் தம் பணை தோளும் மணி மார்பும் அடங்குவன
#332
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம்
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம்
எரி உமிழ் பேழ் வாய் தோணி இரும்பு ஈர்ப்பாரிடை எல்லாம்
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்
#333
அந்நாளில் கொடி மாட செங்குன்றூர் அமர்ந்து இருந்த
மெய்ஞ்ஞான பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள்
பல் நாளும் அ நாட்டில் பயின்றதனால் பனித்த குளிர்
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும்
#334
அ நிலைமை ஆளுடையபிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம்
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே
இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று
சென்னி மதி அணிந்தாரை திருப்பதிகம் பாடுவார்
#335
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே
செய்வினை தீண்டா திருநீலகண்டம் என செப்பினார்
#336
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளி செய்து
தூய பதிக திருக்கடைக்காப்பு தொடுத்து அணிய
மேய அ பொன் பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள்
தீய பனி பிணி அ நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே
#337
அ பதியின்-கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று
துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி
முப்புரிநூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும்
செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார்
#338
பருவம் அறா பொன்னி பாண்டி கொடு முடியார்-தம் பாதம்
மருவி வணங்கி வள தமிழ்_மாலை மகிழ்ந்து சாத்தி
விரி சுடர் மாளிகை வெஞ்ச மா கூடல் விடையவர்-தம்
பொருவு_இல் தானம் பல போற்றி குண திசை போதுகின்றார்
#339
செல்வ கருவூர் திருவானிலை கோயில் சென்று இறைஞ்சி
நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து
மல்கு திரை பொன்னி தென் கரை தானம் பல பணிவார்
#340
பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும்
அ நிலை தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார்
பொன் இயல் வேணி புனிதர் பராய்த்துறையுள் புகுந்தார்
#341
நீடும் பராய்த்துறை நெற்றி தனி கண்ணர் கோயில் நண்ணி
கூடும் கருத்தொடு கும்பிட்டு கோது_இல் தமிழ் சொல்_மாலை
பாடும் கவுணியர் கண் பனி மாரி பரந்து இழிய
சூடும் கர தலத்து அஞ்சலி கோலி தொழுது நின்றார்
#342
தொழுது புறம்பு அணைந்து அங்கு-நின்று ஏகி சுரர் பணிவுற்று
எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா
வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார்
செழு மலர் சோலை திரு கற்குடி மலை சேர வந்தார்
#343
கற்குடி மா மலை மேல் எழுந்த கனக கொழுந்தினை கால் வளைய
பொன் திரள் மேரு சிலை வளைத்த போர் விடையாளியை போற்றி இசைத்து
நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும்
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளி சிலம்பு அணைந்தார்
#344
செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை
கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து
மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து
மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்
#345
விண்ணவர் போற்றி செய் ஆனைக்காவில் வெண் நாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து
பண்ணுறு செந்தமிழ்_மாலை பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்
#346
நாரணன் நான்_முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும்
ஆரணத்து உட்பொருள் ஆயினாரை ஆனைக்காவின்-கண் புகழ்ந்து பாடி
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார்
#347
கைதொழுது ஏத்தி புறத்து அணைந்து காமர் பதி அதன்-கண் சில நாள்
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து
வைதிக மா மணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்தி செல்வார்
#348
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மா மலையே முதலா
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ
ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச
நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார்
#349
நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்-பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணி செம் சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றி
கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார்
#350
சென்று திகழ் திருக்காட்டுப்பள்ளி செம் சடை நம்பர்-தம் கோயில் எய்தி
முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழுவார்
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார்
#351
அங்கு அ பதி-நின்று எழுந்தருளி அணி திருவாலம்பொழில் வணங்கி
பொங்கு புனல் பொன்னி பூந்துருத்தி பொய்யிலியாரை பணிந்து போற்றி
எங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எ பதியும் தொழுது
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார்
#352
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்தி கலந்து அடியாருடன் காதல் பொங்க
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சி குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில்
அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி
#353
வினவி எடுத்த திருப்பதிகம் மேவு திருக்கடைக்காப்பு-தன்னில்
அனைய நினைவு_அரியோன் செயலை அடியாரை கேட்டு மகிழ்ந்த தன்மை
புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலி கவுணியனார்
துனை புனல் பொன்னி திரை வலம்கொள் சோற்றுத்துறை தொழ சென்று அடைவார்
#354
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோம் என்று
ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால்
செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்
#355
தொல்லை நீள் திரு சோற்றுத்துறை உறை
செல்வர் கோயில் வலம்கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்க நஞ்சுண்டபிரான் அடி
எல்லை_இல் அன்பு கூர இறைஞ்சினார்
#356
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார்
சிறந்த சீர் திரு வேதிக்குடியினில்
#357
வேத வேதியர் வேதிக்குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ்
பாத பங்கயம் போற்றி பணிந்து எழுந்து
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை
#358
எழுது மா மறையாம் பதிகத்து இசை
முழுதும் பாடி முதல்வரை போற்றி முன்
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ்
பழுது_இல் சீர் திரு வெண்ணி பதியினில்
#359
வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலின் நாள் மதி
கண்ணியார்-தம் கழல் இணை போற்றியே
பண்ணில் நீடும் பதிக முன் பாடினார்
#360
பாடி நின்று பரவி பணிந்து போய்
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறை புகழ் வேதியர்
#361
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய்
மெய் தரும் பரிவிலான் வேள்வியை பாழ்பட
செய்த சங்கரர் திரு சக்கரப்பள்ளி முன்பு
எய்த வந்து அருளினார் இயல் இசை தலைவனார்
#362
சக்கரப்பள்ளியார்-தம் திரு கோயில் உள்
புக்கு அருத்தியின் உடன் புனை மலர் தாள் பணிந்து
அக்கரை பரமர்-பால் அன்புறும் பரிவு கூர்
மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்
#363
தலைவர்-தம் சக்கரப்பள்ளி-தன்னிடை அகன்று
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கை பதி
குலவும் ஆலந்துறை கோயிலை குறுகினார்
#364
மன்னும் அ கோயில் சேர் மான் மறி கையர்-தம்
பொன் அடி தலம் உற புரிவொடும் தொழுது எழுந்து
இன் இசை தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன்
பன்னு பாலைத்துறை பதி பணிந்து ஏகினார்
#365
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய்
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும்
பூவின் மேல் விழையுறும் புகலியார் தலைவனார்
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்
#366
மன்றல் அம் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர்
துன்று மங்கல வினை துழனியால் எதிர்கொள
பொன் தயங்கு ஒளி மணி சிவிகையில் பொலிவுற
சென்று அணைந்து அருளினார் சிரபுர செம்மலார்
#367
நித்தில சிவிகை மேல்-நின்று இழிந்து அருளியே
மொய்த்த அந்தணர் குழாம் முன் செல பின் செலும்
பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே
அத்தர்-தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார்
#368
வெள்ளி மால் வரையை நேர் விரி சுடர் கோயிலை
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர்
வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர்
துள்ளுவார் சடையரை தொழுது முன் பரவுவார்
#369
பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவு-தான்
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து
அரவு உடை சடையர் பேர் அருள் பெறும் பெருமையால்
விரவும் அ பதி அமர்ந்து அருளியே மேவினார்
#370
அன்ன தன்மையில் அ பதியினில் அமர்ந்து அருளி
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கி
பன்னும் இன் இசை பதிகமும் பல முறை பாடி
நல் நெடும் குல நான்_மறையவர் தொழ நயந்தார்
#371
நீடும் அ பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர்
ஆடுவார் திருவருள் பெற அகன்று போந்து அங்கண்
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார்
தேடும் மால் அயற்கு அரியவர் திரு கருகாவூர்
#372
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்
சந்த மா மறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று
சிந்தை இன்புற பாடினார் செழும் தமிழ் பதிகம்
#373
பதிக இன் இசை பாடி போய் பிற பதி பலவும்
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அருள்இவள்நல்லூர்
#374
மன்னும் அ பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த
தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சி
பன்னு சீர் பதி பலவும் அப்பால் சென்று பணிவார்
#375
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு
எழுது மா மறையாம் பதிகத்து இசை போற்றி
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை
வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து
#376
பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து
பங்கய தடம் பணை பதி பலவும் முன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார்
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம் பதி ஆவூர்
#377
பணியும் அ பதி பசுபதீச்சரத்தின் இனிது இருந்த
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கி
தணிவு_இல் காதலினால் தண் தமிழ்_மாலைகள் சாத்தி
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்
#378
மறை விளங்கும் அ பதியினில் மணிகண்டர் பொன் தாள்
நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும்
பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு
அறை நறும் பொழில் திரு வலஞ்சுழியில் வந்து அணைந்தார்
#379
மதி புணைந்தவர் வலஞ்சுழி மருவு மா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்-தம் முன் வந்து
எதிர்கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர்செல மதியை
கதிர் செய் வெண் முகில் குழாம் புடைசூழ்ந்து என கலந்தார்
#380
கலந்த அன்பர்கள் தொழுது எழ கவுணிய தலைவர்
அலர்ந்த செங்கமல கரம் குவித்து உடன் அணைவார்
வலஞ்சுழி பெருமான் மகிழ் கோயில் வந்து எய்தி
பொலம் கொள் நீள் சுடர் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார்
#381
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம்கொண்டு
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்
திரு வலஞ்சுழி உடையவர் சேவடி தலத்தில்
பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்
#382
ஞானபோனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்
ஆன காதலில் அங்கணவர்-தமை வினவும்
ஊனம்_இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்
பானல் ஆர் மணிகண்டரை பாடினார் பரவி
#383
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர் பொன்னி சூழ் திரு பதியினில் இருந்து
நலம் கொள் காதலின் நாதர் தாள் நாள்-தொறும் பரவி
வலஞ்சுழி பெருமான் தொண்டர்-தம்முடன் மகிழ்ந்தார்
#384
மகிழ்ந்ததன்-தலை வாழும் அ நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணை புணர் ஓரை உள் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற
வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்
#385
தண் புனல் குளிர் கால் நறும் சந்தன தேய்வை
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர்
நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும்
உண்ப மாதுரிய சுவை உலகு உளோர் விரும்ப
#386
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான்
பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும்
உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும்
பறவை சிறை விரித்து ஒடுங்க பனி புறத்து வதியும்-ஆல்
#387
நீள் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும்
வாள் நிழல் நல் சோலையிலும் மலர் வாவி கரை மாடும்
பூண் நிலவு முத்து அணிந்த பூம் குழலார் முலை தடத்தும்
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவார்-ஆல்
#388
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய
குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில்
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில்
#389
சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ்சுழியை
எண் பெருக தொழுது ஏத்தி பழையாறை எய்துதற்கு
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார்
#390
திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செம் தீயின்
உருவாளன் அடி வணங்கி உருகிய அன்பொடு போற்றி
மரு ஆரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள்
தருவார் தம் திருச்சத்திமுற்றத்தின் புறம் சேர்ந்தார்
#391
திருச்சத்திமுற்றத்தில் சென்று எய்தி திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வமுற பணிந்து ஏத்தி
கரு சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி
விருப்புற்று திருப்பட்டீச்சரம் பணிய மேவும்-கால்
#392
வெம்மை தரு வேனிலிடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு
மும்மை நிலை தமிழ் விரகர் முடி மீதே சிவபூதம்
தம்மை அறியாதபடி தண் தரள பந்தர் எடுத்து
எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப
#393
அ உரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழ
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்து பிள்ளையார்
இ வினை-தான் ஈசர் திருவருளால் ஆகில் இசைவது என
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசை தாழ்ந்தார்
#394
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்க
கதிர் ஒளிய மணி காம்பு பரிசனங்கள் கை கொண்டார்
மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச
புது மலரால் அ பந்தர் பூம் பந்தரும் போலும்
#395
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப சுருதிகளின் பெரும் துழனி
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்தருளும் பிள்ளையார்
வெண் தரள பந்தர் நிழல் மீது அணைய திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார்
#396
பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின்
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணை திறம் போற்றி
ஈர மனம் களி தழைப்ப எதிர்கொள்ள முகம் மலர்ந்து
சேர வரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்
#397
சென்று அணைந்து திரு வாயில் புறத்து இறைஞ்சி உள் புக்கு
வென்றி விடையவர் கோயில் வலம்கொண்டு வெண் கோட்டு
பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார்
#398
அருள் வெள்ள திறம் பரவி அளப்பு_அரிய ஆனந்த
பெரு வெள்ளத்திடை மூழ்கி பேராத பெரும் காதல்
திரு உள்ள பரிவுடனே செம்பொன் மலை_வல்லியார்
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார்
#399
அ பதியில் அமர்கின்ற ஆளுடையபிள்ளையார்
செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு
எப்பொருளுமாய் நின்றார் இரும்பூளை எய்தினார்
#400
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்பூளை சென்று எய்த
காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்ப
பூவண மாலைகள் நாற்றி பூரண பொன் குடம் நிரைத்து அங்கு
யாவர்களும் போற்றி இசைப்ப திருத்தொண்டர் எதிர்கொண்டார்
#401
வண் தமிழின் மொழி விரகர் மணி முத்தின் சிவிகையினை
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று
பண்டு அரும் இன் இசை பதிகம் பரம்பொருளை பாடுவார்
#402
நிகர்_இலா மேரு வரை அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுது ஆகி நொய்யானை
தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவி தமிழ் விரகர்
பகர்கின்ற அரு_மறையின் பொருள் விரிய பாடினார்
#403
பாடும் அரதை பெரும் பாழியே முதல் ஆக
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார்
#404
அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய்
செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்து சென்று அடைந்து
கங்கை சடை கரந்தவர்-தம் கழல் வணங்கி காதலினால்
பொங்கும் இசை திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார்
#405
போற்றி இசைத்து புனிதர் அருள் பெற்று போந்து எ உயிரும்
தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அந்தணனார்
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர்-தமை ஏத்துதற்கு
நாற்றிசையோர் பரவும் திரு குடமூக்கு நண்ணினார்
#406
தே மருவு மலர் சோலை திரு குடமூக்கினில் செல்வ
மா மறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருள
தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க
கோ முறைமை எதிர்கொண்டு தம்பதி உள் கொடு புக்கார்
#407
திருஞானசம்பந்தர் திரு குடமூக்கினை சேர
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம்
உருகா நின்று உளம் மகிழ் குடமூக்கை உவந்து இருந்த
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்
#408
வந்து அணைந்து திரு கீழ்க்கோட்டத்து இருந்த வான் பொருளை
சிந்தை மகிழ்வுற வணங்கி திருத்தொண்டருடன் செல்வார்
அந்தணர்கள் புடைசூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும்
கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார்
#409
பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெரும் தீர்த்தம்
மா மகம்-தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்
தூ மருவும் மலர் கையால் தொழுது வலம்கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்
#410
கண்ணாரும் அரு மணியை காரோணத்து ஆர் அமுதை
நண்ணாதார் புரம் எரித்த நான்_மறையின் பொருளானை
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி பிற பதியும்
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி
#411
திரு நாசேச்சரத்து அமர்ந்த செம் கனக தனி குன்றை
கரு நாகத்து உரி புணைந்த கண்_நுதலை சென்று இறைஞ்சி
அரு ஞான செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து
பெரு ஞானசம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார்
#412
மா நாகம் அர்ச்சித்த மலர் கமல தாள் வணங்கி
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி
பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடைமருதில்
பூ நாறும் புனல் பொன்னி தடம் கரை போய் புகுகின்றார்
#413
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளி
தாங்க_அரிய பெரு மகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால்
ஈங்கு எனை ஆளுடையபிரானிடை மருது ஈதோ என்று
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்தருளினார்
#414
அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கு அணைந்து
முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி
படியில் வலம்கொண்டு திரு முன்பு எய்தி பார் மீது
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய
#415
பரவுறு செந்தமிழ் பதிகம் பாடி அமர்ந்த அ பதியில்
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடு
அரவு சடைக்கு அணிந்தவர்-தம் தாள் போற்றி ஆர்வத்தால்
உரவு திருத்தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள்
#416
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதி கரை போய்
குரங்காடுதுறை அணைந்து குழகனார் குரை கழல்கள்
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன் இசை பெருக
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார்
#417
அ மலர் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகு
கை மலர் களத்து இறைவர்-தம் கோயில்கள் வணங்கி
நம் மல துயர் தீர்க்க வந்து அருளிய ஞான
செம்மலார் திருவாவடுதுறையினை சேர்ந்தார்
#418
மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூல
தேவர்-தம் திருவாவடுதுறை திருத்தொண்டர்
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணை புகலி
காவலர்க்கு எதிர்கொள்ளும் ஆதரவுடன் கலந்தார்
#419
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ் சண்பை
அந்தணர்க்கு எலாம் அரு_மறை பொருள் என வந்தார்
சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர்-தம் கோயில் முன் சென்றார்
#420
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான்
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடுதுறையுள் ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார்
#421
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால்
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர்
துன்பு போம் மன திருத்தொண்டர்-தம்முடன் தொழுதே
இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார்
#422
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு
ஆவது ஆகிய காலம் வந்து அணையுற அணைந்து
தா_இல் சண்பையர் தலைவர்க்கு தாதையார் தாமும்
போவதற்கு அரும் பொருள் பெற எதிர்நின்று புகன்றார்
#423
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி
அந்தம்_இல் பொருள் ஆவன ஆவடுதுறையுள்
எந்தையார் அடி தலங்கள் அன்றோ என எழுந்தார்
#424
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி
நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது
ஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன்
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்
#425
எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்
#426
நச்சி இன் தமிழ் பாடிய ஞானசம்பந்தர்
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால்
அ சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிர கிழி ஒன்று
#427
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால்
உய்ந்த இ கிழி பொன் உலவா கிழி உமக்கு
நித்தனார் அருள்செய்தது என்று உரைக்க நேர் தொழுதே
அத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார்
#428
பணிந்து எழுந்து கைதொழுது முன் பனி மலர் பீடத்து
அணைந்த ஆடகக்கிழி தலைக்கொண்டு அரு_மறைகள்
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால்
தணிந்த சிந்தை அ தாதையார்க்கு அளித்து உரைசெய்வார்
#429
ஆதி மா மறை விதியினால் ஆறு சூழ் வேணி
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி
தீது நீங்க நீர் செய்யவும் திரு கழுமலத்து
வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகும்-ஆல்
#430
என்று கூறி அங்கு அவர்-தமை விடுத்த பின் அவரும்
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண
வென்றி ஞானசம்பந்தரும் விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடுதுறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார்
#431
அண்ணலார் திருவாவடுதுறை அமர்ந்தாரை
உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடை மேல்
தெள் நிலா அணிவார் திரு கோழம்பம் சேர்ந்தார்
#432
கொன்றை வார் சடை முடியரை கோழம்பத்து இறைஞ்சி
என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி
மன்று உளார் மகிழ் வைகல் மாட கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுர செல்வர்
#433
வைகல் நீடு மாட கோயில் மன்னிய மருந்தை
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி
செய்ய இன் இசை செந்தமிழ்_மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்தராய் திருநல்லத்தில் நண்ணி
#434
நிலவு மாளிகை திருநல்லம் நீடு மா மணியை
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து
பலவும் ஈசர்-தம் திரு பதி பணிந்து செல்பவர்-தாம்
அலை புனல் திருவழுந்தூர் மாட கோயில் அடைந்தார்
#435
மன்னு மாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கி
பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவி
பொன்னி மா நதி கரையினில் மீண்டு போந்து அணைந்து
சொன்னவாறு அறிவார்-தமை துருத்தியில் தொழுதார்
#436
திரை தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில்
வரைத்தலை பசும்பொன் எனும் வண் தமிழ் பதிகம்
உரைத்து மெய்யுற பணிந்து போந்து உலவும் அ நதியின்
கரை கண் மூவலூர் கண்_நுதலார் கழல் பணிந்தார்
#437
மூவலூர் உறை முதல்வரை பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து
பூ அலம்பு தண் புனல் பணை புகலியார் தலைவர்
வாவி சூழ் திரு மயிலாடுதுறையினில் வந்தார்
#438
மல்கு தண்டலை மயிலாடுதுறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரொடு எதிர்கொள சென்று
கொல்லை மான் மறி கையரை கோயில் புக்கு இறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார்
#439
உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருகி
வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிக
தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார்
#440
அ திருப்பதி அன்று போய் அணி கிளர் சூலம்
கைத்தல படை வீரர் செம்பொன் பள்ளி கருதி
மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம்
பத்தர்-தம் உடன் பணிந்து இசை பதிகம் முன் பகர்ந்தார்
#441
பாடும் அ பதி பணிந்து போய் பறியலூர் மேவும்
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும்
காடு கொண்ட செம் சடை முடி கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர்
#442
பரமர்-தம் திருப்பறியலூர் வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி
சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொள செல்வார்
#443
அடியவர்கள் களி சிறப்ப திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய் போகி
கடி கமழும் மலர் பழன கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கி
கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை
படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர்
#444
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு
பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த
அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார்
#445
கிளைஞரும் மற்று அது கேட்டு கெழுவு திருப்பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை
அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம்
வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கி பணிந்து திருநீலகண்ட பெரும்பாணர் உணர்த்துகின்றார்
#446
அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும்
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால்
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்பெற்றால் பண்பு நீடி
இலகும் இசை யாழின்-கண் அடங்காமையான் காட்டப்பெறுவன் என்றார்
#447
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத
நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார்
மாதர் மட பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த
#448
வண் புகலி வேதியனார் மாதர் மட பிடி எடுத்து வனப்பில் பாடி
பண் பயிலும் திருக்கடைக்காப்பு சாத்த அணைந்து பெரும்பாணர்-தாம்
நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு
எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே
#449
அப்பொழுது திருநீலகண்ட இசை பெரும்பாணர் அதனை விட்டு
மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி
இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன
செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார்
#450
வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர்
ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார்
#451
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால்
எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப
வையகத்தோர் அறிவுற இ கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார்
#452
சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர்
இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த
வந்தவாறே பாடி வாசிப்பீர் என கொடுப்ப புகலி மன்னர்
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார்
#453
அணைவுறும் அ கிளைஞர் உடன் பெரும்பாணர் ஆளுடையபிள்ளையார்-தம்
துணை மலர் சேவடி பணிந்து துதித்து அருள தோணிபுர தோன்றலாரும்
இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார்
#454
பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனை பலவும் வணங்கி போற்றி
தங்கி இசை யாழ் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார்
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு
#455
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை
தெள்ளாற்று வேணியர்-தம் திரு வளர் கோபுரம் இறைஞ்சி செல்வ கோயில்
உள்ளாற்ற வலம்கொண்டு திரு முன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார்
#456
உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல
மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய்
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று
பொருவு_இல் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்து போற்றி
#457
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப
சேண் அளவு பட ஓங்கும் திருக்கடைக்காப்பு சாத்தி செம் கண் நாக
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்து புறத்து அணைந்து புவனம் ஏத்தும்
பாணனார் யாழில் இட-பால் அறா வாயர் அருள் பணித்த போது
#458
பிள்ளையார் திரு தாளம் கொடு பாட பின்பு பெரும்பாணனார்-தாம்
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி
கொள்ள இடும் பொழுதின்-கண் குவலத்தோர் களிகூர குலவு சண்பை
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத்தொண்டருடன் மருவும்-காலை
#459
மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கி போந்து வாச நல் நீர்
பொன்னி வளம் தரு நாட்டு புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றி
செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர்
தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ
#460
நிறை செல்வ திருச்சாத்தமங்கையினில் நீலநக்கர்-தாமும் சைவ
மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும்
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி
முறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார்
#461
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர்-தம் கோயில் மருங்கு அணைந்து வானோர்
உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர்
மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம்
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார்
#462
போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர்-தம் எதிர்நின்று துதித்து போந்து எல்லை இல்லா
நீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்தருளி அன்பால்
ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார்
#463
நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை
பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி
ஆடும் அவர் அயவந்தி பணிவு-அதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று
நாடிய நண்பு உடை நீலநக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து
#464
கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி
ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்-தம் பெரும் சீர் நிகழ வைத்து
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசை பதிகம் போற்றி செய்தார்
#465
பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில்
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார்
உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி
#466
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த
கற்றவர் வாழ் கடல் நாகை காரோணத்து கண்_நுதலை கைதொழுது கலந்த ஓசை
சொல் தமிழ்_மாலைகள் பாடி சில நாள் வைகி தொழுது அகன்றார் தோணிபுர தோன்றலார்-தாம்
#467
கழி கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கி கங்கை ஆற்று
சுழி கானல் வேணியர்-தம் பதி பலவும் பரவி போய் தோகைமார்-தம்
விழி காவி மலர் பழன கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி
மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும்
#468
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரை பணிந்து போற்றி
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டு
திரு மருவு செங்காட்டங்குடி-நின்றும் சிறுத்தொண்டர் ஓடி சென்று அங்கு
குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார்
#469
சிறுத்தொண்டர் உடன் கூட செங்காட்டங்குடியில் எழுந்தருளி சீர்த்தி
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்-அவர் நண்பு அமர்ந்து நீலகண்டம்
பொறுத்து அண்டர் உய கொண்டார் கணபதீச்சரத்தின்-கண் போகம் எல்லாம்
வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர்
#470
அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி
தங்கள் பெருந்தகையாரை சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றி
பொங்கி எழும் இசை பாடி போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார்
#471
போந்து மாமாத்திரர்-தம் போர் ஏற்றின் திரு மனையில் புகுந்து சிந்தை
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும்
காய்ந்த மால் விடையார்-தம் கணபதீச்சரம் பரவு காதல் கூர
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில்
#472
திருமருகல் நகரின்-கண் எழுந்தருளி திங்களுடன் செம் கண் பாம்பு
மருவு நெடும் சடை மவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கி போற்றி
உருகிய அன்புறு காதல் உள் அலைப்ப தெள்ளும் இசையுடனே கூட
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம்
#473
அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள்
#474
வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லா கொள்கையினாலும் தீர்க்க குறையாது ஆக
நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள்
#475
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவு ஆக உடன் போந்தேன் அரவால் வீடி
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள்
#476
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண்
நெடியானும் நான்_முகனும் காணா கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்து
பொடியான காமன் உயிர் இரதி வேண்ட புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாச
கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும்
#477
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும்
செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா
இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும்
அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும்
#478
இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும்
அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம்
மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல்
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார்
#479
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றி சிந்தை நைந்து
பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன
கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத
புரவலனார் சேவடி கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல்உற்றாள்
#480
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு
குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான்
தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன்
#481
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல் நின்றேன்
சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்க
பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார்
#482
சடையானை எ உயிர்க்கும் தாய் ஆனானை சங்கரனை சசி கண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற
படையானை பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட
#483
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவு_இல் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கை அவள்-தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார்
#484
மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம்
சொற்ற புகழ் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டி
பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும்
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார்
#485
புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த
செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக
மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்
கை கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்ட கண்டார்
#486
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங்காட்டங்குடியின் மன்னி
பெருகு கணபதீச்சரத்தார் பீடு உடை கோலமே ஆகி தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட
அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து
#487
கண்டு எதிர் போற்றி வினவி பாடி கணபதீச்சரம் காதலித்த
அண்டர்பிரானை வணங்கி வைகும் அ பதியில் சில நாள் போற்றி
தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி
புண்டரிக தடம் சூழ் பழன பூம்புகலூர் தொழ போதுகின்றார்
#488
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர் பாங்கு அணைந்தார்
#489
திரு புகலூர் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய் மகிழ்ந்த
விருப்பொடு சென்று எதிர்கொள்ள வந்து வேத முதல்வர்-தம் கோயில் எய்தி
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு
ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார்
#490
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரை
நெக்குருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய
மிக்க தமிழ்_தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடி போந்து
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார்
#491
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அ பதி-தன்னில் அமரு நாளில்
வாங்கு மலை சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி
ஓங்கிய அன்பின் முருகனார்-தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும்
பாங்கு உடை வண் தமிழ் பாடி நாளும் பரமர்-தம் பாதம் பணிந்து இருந்தார்
#492
மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம்
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி
சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார்
#493
நாவுக்கரசர் எழுந்தருளும் நல்ல திரு வார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞானசம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிக பெருக விரைந்து எதிர்கொள்ள மெய் அன்பரோடும்
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார்
#494
அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச
பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தி
தங்களின் அன்பின் முறைமையாலே தாழ்ந்து வணங்கி தனித்தனியே
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது
#495
மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர்
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர்
செப்பிய வண் தமிழ்_மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்
#496
அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட
சிரபுர வேந்தரும் சிந்தையின்-கண் தென் திருவாரூர் வணங்குதற்கு
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார்
#497
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொட தாமும்
பொன் புகலூர் தொழ சென்று அணைந்தார் புகலி பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றி
பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான்_மறை பாடி போந்தார்
#498
துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின்
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்க
புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார்
#499
வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர்
தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த
பால் நிற நீற்றர் பருக்கையானை பதிக தமிழ் இசை பாடி ஆடி
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார்
#500
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவி மேல் பொலிவது என்ன
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி
தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர்
#501
படி இல் ஞானம் உண்டு அருளிய பிள்ளையை பணிதற்கு
அடியர் சென்று எதிர்கொள எழுந்தருளும் அஞ்ஞான்று
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன் மதில் ஆரூர்
கடி கொள் பேரணி பொலிவையார் முடிவுற காண்பார்
#502
நான மான்_மத நளிர் பெரும் சேற்றிடை நறும் பொன்
தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளி படலை
ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய
வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி
#503
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள்
தோடு சூழ்வன சுரும்பொடு தமனிய தசும்பு
காடு கொண்டன கதலி தோரணம் நிரை கமுகு
மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம்
#504
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின்
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும்
நீல மா மணி நிழல் பொர நிறம் புகர் படுக்கும்
பால வாயின பவன வேதிகை மலர் பந்தர்
#505
தழை மலர் தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம்
குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும்
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள்
#506
விரவு பேர் அணி வேறுவேறு இன்னன விளங்கும்
பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர்
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்
புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது
#507
வந்து இறைஞ்சும் மெய் தொண்டர்-தம் குழாத்து எதிர்வணங்கி
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர்
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே
எந்தை தான் எனை என்று கொள்ளும்-கொல் என்று இசைத்தார்
#508
ஆன அ திருப்பதிகம் முன் பாடி வந்து அணையும்
ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார்
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார்
#509
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார்
தன் உள் எவ்வகை பெருமையும் தாங்கிய தகைத்து ஆம்
பன் நெடும் சுடர் படலையின் பரப்பினை பார்த்து
சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார்
#510
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி
கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்து
தேடு மால் அயர்க்கு அரியராய் செழு மணி புற்றில்
நீடுவார் முன்பு நிலமுற பல முறை பணிந்தார்
#511
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம்
அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப்பொருள் ஆனவர்-தமை கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார்
#512
செம் சொல் வண் தமிழ் திருப்பதிகத்து இசை எடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து
அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார்
#513
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த
செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து
பொங்கு பேர் ஒளி புற்று இடம் கொண்டவர் புனித
பங்கய பதம் தொழுது காலம்-தொறும் பணிந்தார்
#514
புற்று இடம் கொளும் புனிதரை போற்றி இசை பெருக
பற்றும் அன்பொடு பணிந்து இசை பதிகங்கள் பாடி
நல் தவ திருத்தொண்டர்களொடு நலம் சிறப்ப
மற்ற வண் பதி-தன்னிடை வைகும் அ நாளில்
#515
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலா
தொல்லை நான்_மறை முதல்வர்-தம் பதி பல தொழுதே
எல்லை_இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்
#516
ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட
ஆறு உலாவிய சடை முடி ஐயரை பணிந்து
நீறு வாழ்வு என நிகழ் திருத்தொண்டர்களோடும்
ஈறு_இலா திருஞானசம்பந்தர் அங்கு இருந்தார்
#517
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல
நங்கள்-தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து
பொங்கு சீர் புகலூர் தொழ அருளினால் போவார்
தங்கும் அ பதி புறம்பணை சார்ந்து அருள்செய்வார்
#518
புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி
பவனமாய் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே
#519
காழியார் வாழ வந்து அருள்செயும் கவுணிய பிள்ளையார்-தாம்
ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார்
பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து
வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி
#520
அங்கு-நின்று அரிது எழுந்தருளுவார் அகில காரணமும் ஆனார்
தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார்
பொங்கு தண் பாசடை பங்கய புனல் வயல் புகலூர் சார
#521
நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாம
சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத
பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார்
#522
தேவர்-தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்துஉற வணங்கி
பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில்
#523
நீலநக்க அடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மை
சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை
சால மிக்கு உயர் திருத்தொண்டின் உண்மை திறம்-தன்னையே தெளிய நாடி
காலம் உய்த்தவர்களோடு அளவளாவி கலந்து அருளினார் காழி நாடார்
#524
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல்
தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார்
#525
புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழ செல்வார்
வள்ளலார் சிறுத்தொண்டரும் நீலநக்கரும் வளம் பதிக்கு ஏக
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார்
#526
கண் அகல் புகலூரினை தொழுது போம் பொழுதினில் கடல் காழி
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே
வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை
எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார்
#527
நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இ நலம் கிளர் ஒளி முத்தின்
தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர் என்றலும் சுடர் திங்கள்
மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும்
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார்
#528
என்று பிள்ளையார் மொழிந்து அருள்செய்திட இரும் தவத்து இறையோரும்
நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற
அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அ இயல்பினில் செல்வார்
சென்று முன் உற திருவம்பர் அணைந்தனர் செய் தவ குழாத்தோடும்
#529
சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலை செல்வார்
பண்பு மேம்படு பனி கதிர் நித்தில சிவிகையில் பணிந்து ஏறி
வண் பெரும் புகலூரினை கடந்து போய் வரும் பரிசனத்தோடும்
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார்
#530
அம்பர் மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை
உம்பர் வாழ நஞ்சு உண்டவர்-தமை பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்
#531
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்தி
சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது
வீழ்ந்த வேணியர்-தமை பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர்
#532
பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றி
திருவின் ஆர்ந்த கோச்செங்கணான் அ நகர் செய்த கோயிலை சேர்ந்து
மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும்
#533
இன்னவாறு சொல்_மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில்
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழ காதல் செய்து அருளி போய்
மன்னு கோயில்கள் பிற பதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும்
அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார்
#534
மற்ற வண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில்
சுற்று மாளிகை வலம்கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி
#535
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு
விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி
கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி
#536
சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும்
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழ செல்வார்
மறை பெரும் திரு கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர்
#537
தக்க அந்தணர் மேவும் அ பதியினில் தான் தோன்றி மாடத்து
செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்தி
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார்
#538
பாம்புரத்து உறை பரமரை பணிந்து நல் பதிக இன் இசை பாடி
வாம் புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றி
காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கி
தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்குற செல்கிறார்
#539
அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர்கொண்ட
மெய் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார்
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார்
எ பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார்
#540
நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப
இறைவர் திரு மைந்தர்-தமை எதிர்கொள் வரவேற்றார்
#541
வந்து திரு வீழிமிழலை மறை வல்ல
அந்தணர்கள் போற்றி இசைப்ப தாமும் மணி முத்தின்
சந்த மணி சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து அருளி
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார்
#542
அப்போது அரையார் விரி கோவண ஆடை
ஒப்பு ஓத_அரும் பதிகத்து ஓங்கும் இசை பாடி
மெய் போத போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார்
கை போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார்
#543
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண
மேவிய விண் இழிந்த கோயில் வலம்கொள்வார்
பூவியலும் உந்தியான் போற்ற புவி கிழிந்த
தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார்
#544
வலம்கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின்
சலம் கொண்ட வேணி தனி முதலை தாழ்ந்து
நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல்
புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார்
#545
போற்றி சடையார் புனல் உடையான் என்று எடுத்து
சாற்றி பதிக தமிழ்_மாலை சந்த இசை
ஆற்ற மிக பாடி ஆனந்த வெள்ளத்தில்
நீற்று அழகர் சேவடி கீழ் நின்று அலைந்து நீடினார்
#546
நீடிய பேர் அன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று
பாடி எதிர் ஆடி பரவி பணிந்து எழுந்தே
ஆடிய சேவடிகள் ஆர்வமுற உட்கொண்டு
மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார்
#547
வந்து அணைந்து வாழ்ந்து மதில் புறத்து ஓர் மா மடத்து
செந்தமிழ் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருள
சந்த மணி கோபுரத்து சார்ந்த வட-பால் சண்பை
அந்தணர் சூளாமணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார்
#548
அங்கண் அமர்வார் அரனார் அடி இணை கீழ்
தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே
பொங்கு புகழ் வாகீசரும் கூட போற்றி இசைத்தே
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார்
#549
ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கர் திலதை பதி முற்றமும் பணிந்து
வீங்கு ஒலி நீர் வீழிமிழலையினில் மீண்டும் அணைந்து
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில்
#550
சேண் உயர் மாட புகலி உள்ளார் திருஞானசம்பந்த பிள்ளையாரை
காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரை இகப்ப
பூணும் மனத்தொடு தோணி மேவும் பொரு விடையார் மலர் பாதம் போற்றி
வேணுபுரத்தை அகன்று போந்து வீழிமிழலையில் வந்து அணைந்தார்
#551
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன
வீழிமிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார்
#552
சண்பை திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரை பணிந்து போந்து
நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம்பந்தர் மடத்தில் எய்தி
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப்பெற வேண்டும் என்றார்
#553
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு_இல் சிவஞான பிள்ளையாரும்
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே
அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார்
#554
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார்-தமை பரவும்
சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே
கார் பட்ட வண் கை கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள்செய்கின்றார்
#555
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூ மறை வீழிமிழலை-தன்னுள்
சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம்
பேணும்படியால் அறிதி என்று பெயர்ந்து அருள்செய்ய பெரும் தவங்கள்
வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார்
#556
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார்
#557
மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல்
கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை-தன்னுள்
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர்
#558
செம் சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்ப போந்து
மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள்செய்கின்றார்
#559
பிரமபுரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டியோடும்
விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி
வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று
தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார்
#560
என்று கவுணிய பிள்ளையார் தாம் இயம்ப பணிந்து அருள் ஏற்று கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து
மன்று உள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கி சென்று
நின்ற புகழ் தோணி நீடுவாரை பணியும் நியதியராய் உறைந்தார்
#561
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னை திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழா திருத்தொண்டர் சூழ
உரவு தமிழ்_தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும்
விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில்
#562
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல்
கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார்
#563
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால்
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளி செய்வார்
#564
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால்
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும்
இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால்
அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர்
#565
தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்க சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி
வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி
அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார்
#566
காதலொடும் தொழுது எடுத்துக்கொண்டு நின்று கை குவித்து பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க
நாதர் விரும்பு அடியார்கள் நாளும்நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று
தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில்
#567
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி
தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார்
#568
திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள்
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு
கருதிய எல்லாம் கொள்ள வேண்டி சென்றால் காசு-தனை வாசிபட வேண்டும் என்பார்
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார்
#569
திருஞானசம்பந்தர் அதனை கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் நமக்கு தந்த
ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த
பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை
வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார்
#570
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் என பதிகம் பாடி
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட
நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார்
#571
அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார்
#572
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது
சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார்
#573
நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி
பாடு ஒலி நீர் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி
நாடு புகழ் தனி சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடி
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றி திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார்
#574
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி
பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி
உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி
செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி திருமலிவெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார்
#575
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த
கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றி திருமறைக்காட்டு-அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே
#576
கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர்-தம் தலைவர்-தாமும்
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள்
வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார்
#577
முன் அணைந்த திருநாவுக்கரசர்-தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கி
பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்-தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டு
சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை
மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார்
#578
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர்
மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர்
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே
#579
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள்
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார்
#580
அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும்
பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை
திரு மறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்கு செப்புகின்றார்
#581
அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை
இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட
#582
பாடிய அ பதிக பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில்
சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட
ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க
#583
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கி
பொற்பு உறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி
அற்புத நிலையினார்கள் அணி திருமறைக்காடு ஆளும்
கொற்றவர் கோயில் வாயில் நேர் வழி குறுகி புக்கார்
#584
கோயில் உள் புகுவார் உச்சி குவித்த செம் கைகளோடும்
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரை கண்டார்
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிட படியின் மீது
மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்
#585
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர்
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி
மின் புரை சடையார்-தம்மை பதிகங்கள் விளம்பி போந்தார்
#586
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி
நிறம் கிளர் மணி கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்க
திறந்தவாறு அடைக்க பாடி அருளும் நீர் என்றார் தீய
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்
#587
அன்று அரசு அருளி செய்ய அரு_மறை பிள்ளையாரும்
வென்றி வெள் விடையார்-தம்மை விருப்பினால் சதுரம் என்னும்
இன் தமிழ் பதிக பாடல் இசைத்திட இரண்டு-பாலும்
நின்ற அ கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே
#588
அடைத்திட கண்டு சண்பை ஆண்தகையாரும் அம் சொல்
தொடை தமிழாளி யாரும் தொழுது எழ தொண்டர் ஆர்த்தார்
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர்
நடை தமிழ் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி
#589
அ திரு வாயில்-தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே
மெய் திரு மறைகள் போல மேதினி புக்கு போற்ற
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை
கைத்தலம் குவித்து தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம்
#590
அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து
பெருமையின் முழங்க பஞ்சநாதமும் பிறங்கி ஓங்க
இரு பெருந்தகையோர் தாமும் எதிர்எதிர் இறைஞ்சி போந்து
திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள
#591
வேதங்கள் எண்_இல் கோடி மிடைந்து செய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார்
நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார்
#592
திரு மறை நம்பர் தாம் முன்பு அருள்செய்த அதனை செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார்-பால் ஒக்க
வரும் அருள்செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால்
பெரு மறையுடன் மெய் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே
#593
இ வகை திருமறைக்காட்டு இறையவர் அருளை உன்னி
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில்
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக
#594
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார்
மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார்
எண் திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா
அண்டர் தம்பிரானார்-தம் பின் போயினார் ஆர்வத்தோடும்
#595
அங்கு அவர் ஏக சண்பை ஆண்தகையாரும் அப்பர்
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில்
பொங்கிய காதலால் என்று உரைத்திட போன தன்மை
சங்கை உற்று என்-கொல் என்று தாமும் அங்கு அணைய போந்தார்
#596
அ நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட
மன்னிய ஆடல் காட்ட தளிர் இள வளரும் பாடி
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு
இன் இயல்புற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்
#597
நீடு சீர் திருவாய்மூரில் நிலவிய சிவனார்-தம்மை
பாடு சொல் பதிகம்-தன்னால் பரவி அ பதியில் வைகி
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு
தேடு மா மறைகள் கண்டார் திருமறைக்காடு சேர்ந்தார்
#598
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழி தலைவரோடு
மண் பயில் சீர்த்தி செல்வ மா மறை காட்டு வைகி
கண் பயில் நெற்றியார்-தம் கழல் இணை பணிந்து போற்றி
பண் பயில் பதிகம் பாடி பரவி அங்கு இருந்தார் அன்றே
#599
இ வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால்
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டிநாட்டு
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்கு
கை வகை முறைமை தன்மை கழிய முன் கலங்கும் காலை
#600
தென்னவன்-தானும் முன் செய் தீ_வினை பயத்தினாலே
அ நெறி சார்வு-தன்னை அறம் என நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும்
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே
#601
பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி
சூழ் இருள் குழுக்கள் போல தொடை மயில் பீலியோடு
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப
#602
பறி மயிர் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனி
செறியும் முக்குடையும் ஆகி திரிபவர் எங்கும் ஆகி
அறியும் அ சமய நூலின் அளவினில் அடங்கி சைவ
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும்-காலை
#603
வரி சிலை தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான்
திரு உயிர்த்து அருளும் செல்வ பாண்டிமாதேவியாரும்
குரை கழல் அமைச்சனாராம் குலச்சிறையாரும் என்னும்
இருவர்-தம் பாங்கும் அன்றி சைவம் அங்கு எய்தாது ஆக
#604
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற
தீங்கினுக்கு அளவு தேற்றா சிந்தையில் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூம் கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார்
#605
இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மை சைவ
செந்நெறி விளக்குகின்றார் திருமறைக்காடு சேர்ந்த
நல் நிலை கன்னிநாட்டு நல்_வினை பயத்தால் கேட்டார்
#606
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி
வாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கரசியாரும்
சேண்படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார்
#607
காதலால் மிக்கோர் தாங்கள் கைதொழும் கருத்தினாலே
போது அவிழ் சோலை வேலி புகலி காவலனார் செய்ய
பாதங்கள் பணி-மின் என்று பரிசன மாக்கள் தன்மை
மா தவம் சுருதி செய்த மா மறைக்காட்டில் விட்டார்
#608
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடை மாந்தர் அங்கண்
நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து
தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார்
#609
திருமறைக்காடு நண்ணி சிரபுர நகரில் வந்த
அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ
பெரு மடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள்
வரு முறை தன்மை எல்லாம் வாயில் காவலர்க்கு சொன்னார்
#610
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் ஏவ
பொன் கழல் பணிய வந்தோம் என சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றி தொழுது விண்ணப்பம் செய்தார்
#611
புகலி காவலர் தாம் கேட்டு பொருவு_இலா அருள் முன் கூர
அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய
நகை முக செவ்வி நோக்கி நல் தவ மாந்தர் கூவ
தகவு உடை மாந்தர் புக்கு தலையினால் வணங்கி நின்றார்
#612
நின்றவர்-தம்மை நோக்கி நிகர்_இல் சீர் சண்பை மன்னர்
மன்றல் அம் குழலியாராம் மானியார்-தமக்கும் மான
குன்று என நின்ற மெய்ம்மை குலச்சிறையார்-தமக்கும்
நன்று தான் வினவ கூறி நல் பதம் போற்றுவார்கள்
#613
கன்னிநாடு அமணர்-தம்-பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும்
கொன் நவில் அயில் வேல் வென்றி குலச்சிறையாரும் கூடி
இ நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார்
#614
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம்
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற
#615
மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூட சென்று
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திரு கோபுரத்துள் இருந்து தென் நாடு
உற்ற செயல் பாண்டிமாதேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை
சொற்ற தனி மன்னவருக்கு புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்கு துணிந்த போது
#616
அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய
விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே
#617
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார்
#618
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு
பாதமுற பணிந்து எழுந்து பாடி போற்றி பரசி அருள் பெற்று விடைகொண்டு போந்து
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும்
காதலினால் அருமையுற கலந்து நீங்கி கதிர் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர்
#619
திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞானசம்பந்தர் செழு நீர் முத்தின்
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து
ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே
#620
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும்
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம்
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப
#621
மலர்_மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன்
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர்கொள்ள
கலை மாலை மதி சடையார் இடம் பலவும் கைதொழுவார்
#622
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி
அண்டர் பிரான் கழல் வணங்கி அரும் தமிழ் மா மறை பாடி
கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடி குழகர்-தமை
தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுர தோன்றலார்
#623
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி
எண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி
பண் ஆர்ந்த தமிழ் பாடி பரவியே செல்கின்றார்
#624
திரு உசாத்தானத்து தேவர் பிரான் கழல் பணிந்து
மருவிய செந்தமிழ் பதிக மால் போற்றும்படி பாடி
இருவினையும் பற்று அறுப்பார் எண்_இறந்த தொண்டருடன்
பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார்
#625
கரும் கழி வேலை பாலை கழி நெய்தல் கடந்து அருளி
திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி
மருங்கு மிடை தடம் சாலி மாடு செறி குல தெங்கு
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார்
#626
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழை கரும்பு எங்கும்
கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும்
அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும்
எங்கும் எங்கும் மலர் படுகர் இவை கழிய எழுந்தருளி
#627
தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம்
இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை
மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை
நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து
#628
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும் புதல்கள்
கார் நாடு முகை முல்லை கடி நாறு நிலம் கடந்து
போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கி
சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார்
#629
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல
சென்று அணைந்து கடந்து ஏறி திரி மருப்பின் கலை புணர் மான்
கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார்
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும்குன்றம்
#630
கொடும்குன்றத்து இனிது அமர்ந்த கொழும் பவள செழும் குன்றை
அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி
நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி
தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார்
#631
இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும்
அ நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்று
பல் முறை வெரு கொண்டு உள்ளம் பதைப்ப தீ கனாக்களோடும்
துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல்உற்றாம்
#632
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும்
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில்
கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய
புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும்
#633
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்த கை வழுவி வீழ
கால்களும் தடுமாறும் ஆடி கண்களும் இடமே ஆடி
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார்
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம்
#634
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள
வந்தவாறு அமணர் தம்மில் மாறுகொண்டு ஊறு செய்ய
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டு
சிந்தையில் செற்றம் முன்னா தீ குணம் தலை நின்றார்கள்
#635
இப்படி அமணர் வைகும் எ பெயர் பதியும் எய்தும்
ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீ கனாவும் வேறுவேறு ஆக கண்டு
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்
#636
அ நகர்-தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகி
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி
இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார்
#637
சீர் மலி அசோகு-தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழ கண்டனம் அதன் பின் ஆக
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றி போக
ஊர் உளோர் ஓடி காண கண்டனம் என்று உரைப்பார்
#638
குண்டிகை தகர்த்து பாயும் பீறியோர் குரத்தி ஓட
பண்டிதர் பாழி-நின்றும் கழுதை மேல் படர்வார்-தம் பின்
ஒண் தொடி இயக்கியாரும் உளை இட்டு புலம்பி ஓட
கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார்
#639
கானிடை நட்டம் ஆடும் கண்_நுதல் தொண்டர் எல்லாம்
மீனவன் மதுரை-தன்னில் விரவிட கண்டோம் என்பார்
கோன்-அவன்-தானும் வெய்ய கொடும் தழல் முழுக கண்டோம்
ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார்
#640
மழ விடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம்-தன்னை
உழறிட சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி
விழ ஒரு புகலும் இன்றி மேதினி-தன்னை விட்டு
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிட கண்டோம் என்பர்
#641
ஆவது என் பாவிகாள் இ கனா திறம் அடிகள்மார்க்கு
மேவிய தீங்கு-தன்னை விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள்
#642
அவ்வகை அவர்கள் எல்லாம் அ நிலைமையர்கள் ஆக
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல்
பை வளர் அரவு ஏர் அல்குல் பாண்டிமாதேவியார்க்கும்
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேல்மேல்
#643
அளவு_இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த
உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை
கிளருறும் ஓகை கூறி வந்தவர் மொழிய கேட்டார்
#644
அ மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி
தம்மையும் அறியா வண்ணம் கைமிக்கு தழைத்து பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்
#645
மங்கையர்க்கரசியார்-பால் வந்து அடி வணங்கி நின்ற
கொங்கு அலர் தெரியலார் ஆம் குலச்சிறையாரை நோக்கி
நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி
இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார்
#646
மன்றல் அம் குழலினாரை வணங்க போந்த அமைச்சனாரும்
வென்றி வேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து
பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்து போகி
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும்-காலை
#647
அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார்-தம்மை
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி
தம் பரிசனங்கள் சூழ தனி தடையோடும் சென்று
நம்பரை வணங்கி தாமும் நல் வரவேற்று நின்றார்
#648
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண்குடை நிழற்ற
பெருகு ஒளிய திருநீற்று தொண்டர் குழாம் பெருகிவர
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார்
#649
துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே
அந்தணராம் மா தவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்க
செந்தமிழ் மாருதம் எதிர்கொண்டு எம்மருங்கும் சேவிப்ப
#650
பண்ணிய வஞ்சனை தவத்தால் பஞ்சவன் நாட்டிடை பரந்த
எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட
மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும்
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த
#651
துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால்
அல்நெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு
மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர்-தம்
கன்னிநாட்டிடை கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட
#652
பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படி பரந்த
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப
#653
புரசை வய கட களிற்று பூழியர் வண் தமிழ்நாட்டு
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம்
பரசமய கோளரி வந்தான் என்று பணிமாற
#654
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும்
ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை
செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார்
#655
அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார்
நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்ல கண்டு நீள் நிலத்திடை தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரி தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார்
#656
நில மிசை பணிந்த குலச்சிறையாரை நீடிய பெரும் தவ தொண்டர்
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு
மலர் மிசை புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம்
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற
#657
சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து
விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து
கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப
வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார்
#658
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி
தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார்
#659
சென்ற காலத்தின் பழுது_இலா திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம்
நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்
#660
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி
மங்கையர்க்கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றே
அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர்
#661
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில்
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ
#662
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும்
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார்
#663
தொண்டர்-தாம் போற்றி காட்டிட கண்டு துணை மலர் கரம் குவித்து அருளி
மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும்
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற
#664
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும்
தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து
நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு
மாடு சூழ் வலம்கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார்
#665
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த
கான கண்டரை கண்களின் பயன் பெற கண்டு
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார்
மீளவும் பல முறை நிலமுற விழுந்து எழுவார்
#666
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு_இன்றி வணங்கி
பொங்கு காதலின் மெய் மயிர் புளகமும் பொழியும்
செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர்
#667
நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும்
மூலம் ஆகிய திரு இருக்கு குறள் மொழிந்து
சீல மா தவ திருத்தொண்டர்-தம்மொடும் திளைத்தார்
சாலும் மேன்மையில் தலைச்சங்க புலவனார்-தம் முன்
#668
சேர்த்தும் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு
சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை
பேர்த்தும் இன்புற பாடி வெண் பிறை அணி சென்னி
மூர்த்தியார் கழல் பரவியே திரு முன்றில் அணைய
#669
பிள்ளையார் எழுந்தருளி முன் புகுதும் அப்பொழுது
வெள்ள நீர் பொதி வேணியார்-தம்மை தொழும் விருப்பால்
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும்
தெள்ளு நீர் விழி தெரிவையார் சென்று முன்பு எய்த
#670
மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கி
கரும் குழல் கற்றை மேல் குவி கைத்து அருளி உடையார்
பரும் கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்ன
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார்
#671
தென்னவன் பெருந்தேவியார் சிவ கன்றின் செய்ய
பொன் அடி கமலங்களில் பொருந்த முன் விழுந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும்
இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார்
#672
ஞான போனகர் எதிர்தொழுது எழுந்த நல் தவத்து
மானியார் மன கருத்து முற்றியது என மதித்தே
பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி
யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார்
#673
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்க
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும்
சூழும் ஆகிய பரசமயத்திடை தொண்டு
வாழும் நீர்மையீர் உமை காண வந்தனம் என்றார்
#674
இன்னவாறு அருள்செய்திட தொழுது அடி வீழ்ந்தார்
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய
அன்ன மென் நடையார்-தமக்கு அருள்செய்து போக்கி
துன்னு மெய் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது
#675
செல்வம் மல்கிய திரு ஆலவாயினில் பணி செய்து
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி
மல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள
எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார்
#676
அ திருத்தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவி
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்ட
பத்தர் போற்றிட பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார்
#677
பரவு காதலில் பாண்டிமாதேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்ப
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார்
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய
#678
வழுதி மா நகர் அதனிடை மா மறை தலைவர்
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு-பால்
#679
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த
துங்க மா மடம்-தன்னிடை தொண்டர்-தம் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த
பொங்கு பேர் ஒலி செவி புலம் புக்கிட பொறாராய்
#680
மற்று இ வான் பழி மன்னவன் மாறனை எய்தி
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்
கொற்றவன் கடை காவலர் முன் சென்று குறுகி
வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார்
#681
வாயில் காவலர் மன்னவன்-தனை எதிர்வணங்கி
ஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன
ஏயினான் அணைவார் என அவரும் சென்று இசைத்தார்
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார்
#682
புக்க போது அவர் அழிவுறு மனத்திடை புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன
தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார்
#683
ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர்
மாவலாய் உன்-தன் மதுரையில் சைவ வேதியர் தாம்
மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப
#684
என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி
நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான்
கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார்
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான்
#685
மாலை வெண்குடை வளவர் சோணாட்டு வண் புகலி
சூல பாணி-பால் ஞானம் பெற்றான் என்று சுருதி
பாலன் அன்பர்-தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை
மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல
#686
என்று கூறுவார் இ திறம் முன்பு தாம் அறிந்தது
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன்
மன்றல் அம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம்
சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான்
#687
மற்ற மா மறை மைந்தன் இ மருங்கு அணைந்தானேல்
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப
செற்றம் மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார்
#688
வந்த அந்தணன்-தன்னை நாம் வலிது செய்து போக்கும்
சிந்தை அன்றி அ சிறு மறையோன் உறை மடத்தில்
வெம் தழல் பட விஞ்சை மந்திர தொழில் விளைத்தால்
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார்
#689
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்ய
போவது என்று அவரை போக்கி பொய் பொருளாக கொண்டான்
யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும்
பூ அணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள்
#690
மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்-தாம்
என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார்
#691
தேவியார்-தம்மை நோக்கி தென்னவன் கூறுகின்றான்
காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும்
தா_இல் சீர் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு
மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல என்றான்
#692
வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம்
கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல்
வண்டு உண துதைந்த கோதை மானியே இங்கு வந்த
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான்
#693
மன்னவன் உரைப்ப கேட்டு மங்கையர்க்கரசியார்-தாம்
நின் நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வ தன்மை
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார்
#694
சிந்தையில் களிப்பு மிக்கு திரு கழுமலத்தார் வேந்தன்
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும்
கொந்து அலர் குழலார் போத குலச்சிறையார் அங்கு எய்த
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர்
#695
கொற்றவன் அமைச்சனாரும் கை தலை குவித்து நின்று
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திட பெறும் பேறு என்பார்
இற்றை நாள் ஈசன் அன்பர்-தம்மை நாம் இறைஞ்ச பெற்றோம்
மற்று இனி சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார்
#696
மானியார் தாமும் அஞ்சி வஞ்சக புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி
ஞானசம்பந்தர் தம்-பால் நன்மை அல்லாது செய்யும்
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார்
#697
இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னவன் ஆன
அவன் நிலை அதுவாம் அ நாள் அருகர்-தம் நிலை யாது என்னில்
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார்
#698
ஆதி மந்திரம் அஞ்சு_எழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள்
சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார்
#699
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீ தொழில் சரிய
கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார்
#700
மந்திர செயல் வாய்த்து இல மற்று இனி செய்யும்
புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு
அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல்
வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்
#701
திரு மடப்புற சுற்றினில் தீய பாதகத்தோர்
மருவுவித்த அ தொழில் வெளிப்படுதலும் மறுகி
பரிசனத்தவர் பதை பொரும் சிதைத்து நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார்
#702
கழுமல பதி கவுணியர் கற்பக கன்றை
தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினை சொன்ன
பொழுது மா தவர் துயிலும் இ திரு மட புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள் என பரிந்து அருளி
#703
என் பொருட்டு அவர் செய்த தீங்காயினும் இறையோன்
அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம்
முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர்
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார்
#704
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால்
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம்
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீ தழல் போய்
பையவே சென்று பாண்டியற்கு ஆக என பணித்தார்
#705
பாண்டிமாதேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும்
ஆண்தகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்-பால் அபராதம் உறுதலாலும்
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர்
தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார்
#706
திருந்து இசை பதிகம் தொடை திரு ஆலவாயின்
மருந்தினை சண்பை மன்னவர் புனைந்திட அருளால்
விரிந்த வெம் தழல் வெம்மை போய் தென்னனை மேவி
பெரும் தழல் பொதி வெதுப்பு என பெயர் பெற்றதன்றே
#707
செய்ய மேனியர் திரு மகனார் உறை மடத்தில்
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகி
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப
வெய்யவன் குண கடலிடை எழுந்தன மீது
#708
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில்
குரவ ஓதியார் குலச்சிறையாருடன் கேட்டு
சிவபுர பிள்ளையாரை இ தீயவர் நாட்டு
வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி
#709
பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு
திரு மடப்புறம் மருங்கு தீது_இன்மையில் தெளிந்து
கரு முருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால்
வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது
#710
அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள்
உரை செய பதைத்து ஒரு தனி தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேல் கொள குலச்சிறையாரும்
வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார்
#711
வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை
காந்து வெம் தழல் கதும்என மெய் எலாம் கவர்ந்து
போந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க
#712
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகு தூரத்திடை அகல
புணர் இளம் கதலி குருத்தொடு தளிர் புடையே
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண் துகள் ஆக
#713
மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல்மேல்
உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆக
கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன்
#714
ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம்
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து
போன கங்குலில் புகுந்தது இன் விளைவு-கொல் என்பார்
மான முன் தெரியா வகை மன்னன்-மாட்டு அணைந்தார்
#715
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்
பீலி கொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து
மேல் எரியும் பொறி சிதறி வீழ கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார்
#716
கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய்
அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான்
#717
பாண்டிமாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர்-தம்மை நோக்கி புகலியில் வந்து நம்மை
ஆண்டு கொண்டவர்-பால் கங்குல் அமணர்-தாம் செய்த தீங்கு
மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற
#718
கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர்-தம்-பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு
முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார்
#719
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து
பெருகியது இதற்கு தீர்வு பிள்ளையார் அருளே என்று
#720
காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள்
மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்
தீய இ பிணியே அன்றி இ பிறவியும் தீரும் என்றார்
#721
மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற
ஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல
ஆன போது அயர்வு-தன்னை அகன்றிட அமணர் ஆகும்
மானம் இல்லவரை பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல்உற்றான்
#722
மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம்
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி
மன்னிய சைவ நீதி மா மறை சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இ நோய் அகலுமேல் அறிவேன் என்றான்
#723
என்று முன் கூறி பின்னும் யான் உற்ற பிணியை தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன
அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கி
சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார்
#724
பாய் உடை பாதகத்தோர் திரு மட பாங்கு செய்த
தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான்
மேய அ துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு
நாயக பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி
#725
மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல்கொண்டே
அன்ன மெல் நடையினாரும் அணி மணி சிவிகை ஏறி
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும்
முன் அணைந்து ஏக சைவ முதல்வனார் மடத்தை சார்ந்தார்
#726
திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன்
வரு பரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்ன
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார்
#727
பாண்டிமாதேவியாரும் பரிவு உடை அமைச்சனாரும்
ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை
ஆண்தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளி செய்ய
மீண்டு போந்து அழைக்க புக்கார் விரையுறும் விருப்பின் மிக்கார்
#728
ஞானத்தின் திரு உருவை நான்_மறையின் தனி துணையை
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதி கொழுந்தை
தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும்
கானத்தின் எழு பிறப்பை கண் களிப்ப கண்டார்கள்
#729
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே
மண்டிய கண் அருவி நீர் பாய மலர் கை குவித்து
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலமுற விழுந்தார்
கொண்ட குறிப்போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய்
#730
உரை குழறி மெய் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகி
தரையின் மிசை புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றி
கரை_இல் கவலை கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று
விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார்-தமை கண்டு
#731
அரு_மறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட
இருவரையும் திரு கையால் எடுத்து அருளி தேற்றிடவும்
தெருமந்து தெளியாதார்-தமை நோக்கி சிறப்பு அருளி
திருவுடையீர் உங்கள்-பால் தீங்கு உளதோ என வினவ
#732
வெம் சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே
அஞ்சினோம் திரு மேனிக்கு அடாது என்றே அது தீந்தோம்
வஞ்சகர் மற்று அவர் செய்த தீ தொழில் போய் மன்னவன்-பால்
எஞ்சல் இலா கொடு வெதுப்பாய் எழா நின்றது என தொழுது
#733
வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம்
செய்யும் மதி மாயைகளால் தீராமை தீ பிணியால்
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில்
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள்
#734
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர்
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில்
வென்று மீனவனை வெண்நீறு அணிவிப்பன் விதியால் என்றார்
#735
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார்
அழுந்தும் இடர் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருள
செழும் தரள சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால்
எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும்
#736
ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும்
பாவகாரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்ல
சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று
பூ அலர் பொழில் சூழ் சண்பை புரவலர் போதுகின்றார்
#737
வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின்-நின்று
மெய் அணி நீற்று தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்ட
செய்யவார் சடையார் மன்னும் திரு ஆலவாயுள் புக்கார்
#738
நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்ய
தீ கனல் மேனியானே திருவுளமே என்று எண்_இல்
பாக்கிய பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை
நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார்
#739
கானிடை ஆடுவாரை காட்டு மா உரி முன் பாடி
தேன் அலர் கொன்றையார்-தம் திருவுளம் நோக்கி பின்னும்
ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை
மானம் இல் அமணர்-தம்மை வாதில் வென்று அழிக்க பாடி
#740
ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்து
காலனை மார்க்கண்டர்க்கா காய்ந்தனை அடியேற்கு இன்று
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்_மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயில் சிவபெருமானே என்றார்
#741
நாதர் தம் அருள் முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்க
போதுவார் பணிந்து போற்றி விடைகொண்டு புனித நீற்று
மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார்
#742
அ மலர் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டி
செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில்
எம்மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை_இன்றி
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே
#743
பல்லிய நாதம் பொங்க படர் திருநீற்றின் சோதி
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன
வில் வளர் தரள கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு
எல்லை_இல் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத
#744
கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என்-கொல் பஞ்சவன் தஞ்சம் மேவி
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார்
#745
தென்னவர் தேவியாரும் திரு மணி சிவிகை மீது
பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்தருளி புக்கார்
கன்னிநாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை
#746
கொற்றவன்-தன்-பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்தி
பொன் தட மதில் சூழ் சண்பை புரவலர் வரவு கூற
முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம்
மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான்
#747
மந்திரியாரை பின்னும் எதிர்செல மன்னன் ஏவ
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர்
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால்
நம் தனி சமயம்-தன்னை நாட்டும் ஆறு என்று பின்னும்
#748
நின் அற_நெறியை நீயே காத்து அருள்செய்தி ஆகில்
அன்னவர்-தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும்
முன் உற ஒக்க தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது
என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார்
#749
பொய் தவம் ஆக கொண்ட புன் தலை சமணர் கூற
செய் தவ பயன் வந்து எய்தும் செவ்வி முன்னுறுதலாலே
எய்திய தெய்வ சார்வால் இரு திறத்தீரும் தீரும்
கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான்
#750
என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை
தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார்
வன் தனி பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு
பொன் திகழ் தரள பத்தி சிவிகை-நின்று இழிந்து புக்கார்
#751
குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும்
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன்
நிலத்திடை வானின்-நின்று நீள் இருள் நீங்க வந்த
கலை செழும் திங்கள் போலும் கவுணியர்-தம்மை கண்டார்
#752
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கி
தண் துணர் முடியின் பாங்கர் தமனிய பீடம் காட்ட
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை
கொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார்
#753
செழியனும் பிள்ளையார்-தம் திருமேனி காணப்பெற்று
விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி
கெழுவுறு பதி யாது என்று விருப்புடன் கேட்ட போது
#754
பொன்னி வளம் தரு நாட்டு புனல் பழன புறம் பணை சூழ்
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் என சிறந்த
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம்
தென்னவன் முன்பு அருள்செய்தார் திருஞானசம்பந்தர்
#755
பிள்ளையார் செம்பொன் மணி பீடத்தில் இருந்த பொழுது
உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர்
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோப தீ
துள்ளி எழும் என கண்கள் சிவந்து பல சொல்லுவார்
#756
காலை எழும் கதிரவனை புடைசூழும் கரு முகில் போல்
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார்-தமை சூழ்வார்
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணி தாம்
கோலும் நூல் எடுத்து ஓதி தலை திமிர்ப்ப குரைத்தார்கள்
#757
பிள்ளையார் அது கோளா பேசுக நும் பொருள் எல்லை
உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார்
துள்ளி எழும் அநேகராய் சூழ்ந்து பதறி கதற
ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி
#758
தென்னவன்-தன்னை நோக்கி திரு மேனி எளியர் போலும்
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள்
மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும்
பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார்
#759
மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று
வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும்
ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள்
தேறிய தெய்வ தன்மை என்னிடை தெரிப்பீர் என்றான்
#760
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி
மானின் நேர் விழியினாய் கேள் மற்று எனை பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி
#761
பெற்றியால் அருளி செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலி தீரும்
தெற்று என தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப
#762
மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள்
உன் உடம்பு அதனில் வெப்பை ஒரு-புடை வாம பாகம்
முன்ன மந்திரித்து தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார்
#763
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணைய சென்று
வாதினில் மன்னவன்-தன் வாம பாகத்தை தீர்ப்பார்
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல்மேல் வெப்பு
தீதுற பொறாது தென்னவன் சிரபுரத்தவரை பார்த்தான்
#764
தென்னவன் நோக்கம் கண்டு திரு கழுமலத்தார் செல்வர்
அன்னவன் வல-பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய் தீர்ப்பது என்று
பன்னிய மறைகள் ஏத்தி பகர் திருப்பதிகம் பாடி
#765
திருவளர் நீறு கொண்டு திரு கையால் தடவ தென்னன்
பொருவு_அரு வெப்பு நீங்கி பொய்கையின் குளிர்ந்தது அப்பால்
மருவிய இட-பால் மிக்க அழல் என மண்டு தீ போல்
இரு-புடை வெப்பும் கூடி இடம் கொளாது என்ன பொங்க
#766
உறி உடை கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்தி
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீ தம்மை
எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார்
அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்
#767
பலர் தொழும் புகலி மன்னர் ஒரு-புடை வெப்பை பாற்ற
மலர் தலை உலகின் மிக்கார் வந்து அதிசயத்து சூழ
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே
#768
மன்னவன் மொழிவான் என்னே மதித்த இ காலம் ஒன்றில்
வெம் நரகு ஒரு-பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு-பால் ஆகும்
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும்
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான்
#769
வெம் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும்
வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள்புரிவீர் என்று
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான்
#770
திரு முகம் கருணை காட்ட திரு கையால் நீறு காட்டி
பெரு மறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி பின்னும்
ஒரு முறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம்
மருவு தீ பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்
#771
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்து
பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார்
#772
மீனவன்-தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த
ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான்
#773
கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர்
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம்
முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார்
#774
சைவ மைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல்_மாலையால்
கைதவன்-தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம்
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார்
#775
பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசும்-மின்கள் என்றலும்
தள்ளு நீர்மையார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம்
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மை-தான்
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார்
#776
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும்
கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்த போது
என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்ன வாது உமக்கு என
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி_வாயர் சொல்லுவார்
#777
என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா என
சொன்ன வாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால்
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்
வெம் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது என்றனர்
#778
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார்
நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடு-தான்
வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்
வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர்
#779
அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில்
ஒப்பு_இல் வண் புகழ் சண்பையர் காவலர் உரையால்
செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர்
வெப்புறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான்
#780
ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி
தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து
காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி
#781
செம் கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த
பொங்கு இசை திருப்பதிகங்கள் முறையினை போற்றி
எங்கள் நாதனே பரம்பொருள் என தொழுது எடுத்தே
அங்கையால் முடி மிசை கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார்
#782
சாற்றும் மெய்ப்பொருள் தரும் திருமுறையினை தாமே
நீற்று வண் கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால்
நால் தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு
போற்றும் அ பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள்
#783
அ திருப்பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி
மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி
மெய்த்த நல் திரு ஏட்டினை கழற்றி மெய்மகிழ்ந்து
கைத்தலத்திடை கொண்டனர் கவுணியர் தலைவர்
#784
நன்மை உய்க்கும் மெய் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும்
என்னை ஆள் உடை ஈசன்-தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொருளாம் என காட்டிட வன்னி
தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி
#785
செய்ய தாமரை அக இதழினும் மிக சிவந்த
கையில் ஏட்டினை கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்
#786
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ் பதிகம்
மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து
அட்ட மூர்த்தியை பொருள் என உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடை பச்சையாய் விளங்கியது அன்றே
#787
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த
கையில் ஏட்டினை கதுவு செம் தீயினில் இடுவார்
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார்
#788
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவு இலா அமணர்
வெம் சுடர் பெரும் தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடை பட்டது பட கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார்
#789
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின்
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார்
பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப
#790
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கி
அடுத்த நீர் இட்ட ஏட்டினை காட்டும்-மின் என்றான்
#791
அருகர் தாம் இட்ட ஏடு வாங்க சென்று அணையும் போதில்
பெருகு தீ கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன்
தரு புனல் கொண்டு செம் தீ தணிப்பித்தான் சமணர் அங்கு
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பர்
#792
செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினால் பிசைந்து தூற்றி பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும்
பொய்யினால் மெய்யை ஆக்க புகுந்த நீர் போம்-மின் என்றான்
#793
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால்
துப்புரவு உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான்
#794
தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார்
சொன்னது பயனாக கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இரு-கால் செய்தோம் மு-காலில் ஒரு-கால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார்
#795
தோற்கவும் ஆசை நீங்கா துணிவிலார் சொல்ல கேட்டு இ
மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும்
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர்
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார்
#796
நீடு மெய்ப்பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும்
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு
நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார்
#797
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர்
நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து
வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார்
#798
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று
பொங்கிய வெகுளி கூர பொறாமை காரணமே ஆக
தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில்
வெம் கழு ஏற்றுவான் இ வேந்தனே என்று சொன்னார்
#799
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று
பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில்
பொற்புற விடுவதற்கு போதுவது என்று கூற
#800
பிள்ளையார் முன்னம் பைம்பொன் பீடத்தில் இழிந்து போந்து
தெள்ளு நீர் தரள பத்தி சிவிகை மேல் ஏறி சென்றார்
வள்ளலார் அவர்-தம் பின்பு மன்னன் மா ஏறி சென்றான்
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறி சென்றார்
#801
தென்னவன் வெப்பு தீர்ந்து செழு மணி கோயில் நீங்கி
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம்
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருள கண்டு
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார்
#802
மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த
ஞானசம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார்
பால் நறும் குதலை செய்ய பவள வாய் பிள்ளையார் தாம்
மான சீர் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார்
#803
எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார்
புரி சடை அண்ணல் நீறே பொருள் என கண்டோம் என்பார்
பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம்
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார்
#804
ஏதமே விளைந்த இந்த அடிகள்மார் இயல்பால் என்பார்
நாதனும் ஆலவாயில் நம்பனே காணும் என்பார்
போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார்
வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார்
#805
அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார்
கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார்
வடி கொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்தது இந்த வெம் சமணர் இருளும் என்பார்
#806
நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வார்களோ என்பார்
இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார்
பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார்
மருப்பு உடை கழுக்கோல் செய்தார் மந்திரியார்-தாம் என்பார்
#807
ஏடுகள் வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார்
ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார்
நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார்
#808
தோற்றவர் கழுவில் ஏற துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினை போற்றும் என்பார்
#809
இன்னன இரண்டு-பாலும் ஈண்டினர் எடுத்து சொல்ல
மின் ஒளி மணி பொன் வெண்குடை மீது போத
பல் மணி சிவிகை-தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு
நல் நெறி காட்ட வந்தார் நான்_மறை வாழ வந்தார்
#810
தென் தமிழ் விளங்க வந்த திரு கழுமலத்தான் வந்தான்
மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான்
வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான்
என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க
#811
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்ப பின்னே
தென்னனும் தேவியாரும் உடன் செல திரண்டு செல்லும்
புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர்
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார்
#812
கார் கெழு பருவம் வாய்ப்ப காமுறும் மகளிர் உள்ளம்
சீர் கெழு கணவன்-தன்-பால் விரைவுற செல்லுமா போல்
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்து செல்லும்
பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு
#813
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதி பிள்ளையாரும்
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான்
தோற்றவர் தோலார் என்று முன்னுற துணிந்து இட்டார்கள்
#814
படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய்
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில்
கடுகிய புனலை கண்டும் அவாவினால் கையில் ஏடு
விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே
#815
ஆறு கொண்டு ஓடும் ஏட்டை தொடர்ந்து எதிர் அணைப்பார் போல
தேறு மெய் உணர்வு இலாதார் கரை மிசை ஓடி சென்றார்
பாறும் அ பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு
நூறு வில்கிடைக்கு முன்னே போனது நோக்கி காணார்
#816
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு
நாண் இலா அமணர்-தம்மை நட்டாற்றில் விட்டு போக
சேணிடை சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்
#817
வேறு ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கி தம்-பால்
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி
ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று
மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார்
#818
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கி கூற
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு
தேசு உடை பிள்ளையார்-தம் திருக்குறிப்பு அதனை நோக்க
பாசுரம் பாடல் உற்றார் பரசமயங்கள் பாற
#819
தென்னவன் மாறன்-தானும் சிரபுரத்து தலைவர் தீண்டி
பொன் நவில் கொன்றையார்-தம் திருநீறு பூசப்பெற்று
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை
உன்னினான் வினைகள் ஒத்து துலை என நிற்றலாலே
#820
உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
நிலவு மெய் நெறி சிவ நெறியது என்பதும்
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும்
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மை-ஆல்
#821
அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று
இந்த மெய் மொழி பயன் உலகம் இன்புற
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன்
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்ன ஆம்
#822
வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்
ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்
#823
ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர்
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும்
வாழி அஞ்சு_எழுத்து ஓதி வளர்கவே
#824
சொன்ன வையகமும் துயர் தீர்கவே
என்னும் நீர்மை இக பரத்தில் உயர்
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட
முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர்
#825
அரிய காட்சியர் என்பது அ வாதியை
தெரியலாம் நிலையால் தெரியார் என
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்
பெரிய நல் அடையாளங்கள் பேசினார்
#826
ஆயினும் பெரியார் அவர் என்பது
மேய இ இயல்பே அன்றி விண் முதல்
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர் வடிவு என்பது ஆம்
#827
பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா
மன் பெருந்தன்மையார் என வாழ்த்தினார்
அன்பு சூழ் சண்பை ஆண்தகையார் அவர்
#828
வெந்த சாம்பல் விரை என்பது தமது
அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம்
வந்து வெந்து அற மற்று அ பொடி அணி
சந்த மா கொண்ட வண்ணமும் சாற்றினார்
#829
தமக்கு தந்தையர் தாய் இலர் என்பதும்
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது
இமைத்த சோதி அடங்கி பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றது ஆம்
#830
தம்மையே சிந்தியார் எனும் தம்மை-தான்
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என
இம்மையே நினைவார் தம் இருவினை
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றது ஆம்
#831
எந்தையார் அவர் எவ்வகையார்-கொல் என்று
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும்
முந்தையோரை எ கூற்றின் மொழிவது என்று
அம் தண் பூந்தராய் வேந்தர் அருளினார்
#832
ஆதி ஆள்-பால் அவர்க்கு அருளும் திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலும்-கால்
ஓதும் எல்லை உலப்பு_இல ஆதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றது ஆம்
#833
அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அ
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர்
#834
மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மை-தான்
அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்டு
அன்னவற்றால் அளப்பு_இலன் என்றதாம்
#835
தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது
ஆன்ற அங்கி புறத்து ஒளியாய் அன்பில்
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்றது ஆம்
#836
மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது
ஆதி சுடர் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கி
போதித்த நோக்குற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து
போதித்த பந்த பிறப்பின் நெறி பேர்-மின் என்று ஆம்
#837
ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர் தாள்
பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்-மின் என்று
ஆண்ட சண்பை அரசர் அருளினார்
#838
ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும்
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர்
கூடும் கருணை திறம் என்றனர் கொள்கை மேலோர்
#839
கருதும் கடிசேர்ந்த என்னும் திரு பாட்டில் ஈசர்
மருவும் பெரும் பூசை மறுத்தவர் கோறல் முத்தி
தரு தன்மையது ஆதல் சண்டீசர்-தம் செய்கை தக்கோர்
பெரிதும் சொல கேட்டனம் என்றனர் பிள்ளையார்-தாம்
#840
வேத முதல்வன் எனும் மெய் திருப்பாட்டினில் நேர்
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும்
பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர்
#841
பாவுற்ற பார் ஆழி வட்ட திருப்பாட்டின் உண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர்
#842
மால் ஆயவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும்
தோலா மறை நான்_முகனும் தொடர்வாம் அமரர்
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த
மேலாம் கருணை திறம் வெம் குருவேந்தர் வைத்தார்
#843
ஆன அற்று அன்றி என்ற அ திருப்பாட்டில் கூடல்
மா நகரத்து சங்கம் வைத்தவன் தேற்ற தேறா
ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில்
ஞானம் ஈசன்-பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்
#844
வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய் பாசுரத்தை
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திரு பாதம் தந்த
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்
#845
அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம்
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந்து உய்ய பகர்ந்து வரைந்து ஆற்றில்
நிலவும் திரு ஏடு திரு கையால் நீட்டி இட்டார்
#846
திரு உடை பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு
மரு உறும் பிறவி ஆற்றில் மா தவர் மனம் சென்றால் போல்
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும்
இரு நிலத்தோர்கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி
#847
எம்பிரான் சிவனே எல்லா பொருளும் என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன்-தன்னை முன் ஓங்க பாட
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்தி
செம்பியன் செங்கோல் என்ன தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே
#848
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூ_மாரி தூர்த்தார்
ஆடு இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான்
பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார்
#849
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டி
காற்று என விசையில் செல்லும் கடும் பரி ஏறிக்கொண்டு
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்
ஏற்று உயர் கொடியினாரை பாடினார் ஏடு தங்க
#850
ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்து பாட
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடி
காடு இடமாக ஆடும் கண்_நுதல் கோயில் மாடு
நீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்து கொண்டார்
#851
தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ
மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார்
#852
மற்று அவர் பிள்ளையார்-தம் மலர் அடி வணங்கி போற்றி
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையில் ஏந்தி பண்பினால் யார்க்கும் காட்ட
அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே
#853
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி
துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இ சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார்-பால் அனுசிதம் முற்ற செய்தார்
கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற
#854
புகலியில் வந்த ஞான புங்கவர் அதனை கேட்டும்
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு
தகவு இலா சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை
#855
பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால்
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்து தீ நாடி இட்ட
எண்_பெரும்_குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்
#856
தோற்றவர் கழுவில் ஏறி தோற்றிட தோற்றும் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம்
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம்
போற்று சீர் பிள்ளையார் தம் புகழ் சய தம்பம் ஆகும்
#857
தென்னவன்-தனக்கு நீறு சிரபுர செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்துகொண்டு முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார்
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார்
#858
பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேத நீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்
மேதினி புனிதம் ஆக வெண் நீற்றின் விரிந்த சோதி
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே
#859
மீனவற்கு உயிரை நல்கி மெய் நெறி காட்டி மிக்க
ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்ய கொண்ட
ஞானசம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்க
தேன் அலர் கொன்றையார்-தம் திரு நெறி நடந்தது அன்றே
#860
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க
இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம்
குறைவு இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி
நிறை கடல் பிறவி துன்பம் நீங்கிட பெற்றது அன்றே
#861
அம் கயல் கண்ணி-தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கய செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று
பொங்கு ஒளி சிவிகை ஏறி புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க்கரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்
#862
எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி
புண்ணிய பிள்ளையாரை புகழ்ந்து அடி போற்றி போத
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார்-தம்மை கண்டு
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னிநாட்டவர்கள் எல்லாம்
#863
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்ற கண்டு
பால் அறா வாயர் மிக்க பண்பினால் தொழுது சென்று
மாலும் நான்_முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில்
சீல மா தவத்தோர் முன்பு சிவிகை-நின்று இழிந்து புக்கார்
#864
தென்னவன்-தானும் எங்கள் செம்பியன் மகளார்-தாமும்
நல் நெறி அமைச்சனாரும் ஞானசம்பந்தர் செய்ய
பொன் அடி கமலம் போற்றி உடன் புக புனிதர் கோயில்
தன்னை முன் வலம்கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்
#865
கைகளும் தலை மீது ஏற கண்ணில் ஆனந்த வெள்ளம்
மெய் எலாம் பொழிய வேத முதல்வரை பணிந்து போற்றி
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார்
#866
ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம்
மன்றில் நான்_மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்
என்று பூம்புகலி மன்னர் இன் தமிழ் பதிகம் பாட
#867
தென்னவன் பணிந்து நின்று திரு ஆலவாயில் மேவும்
மன்னனே அமணர்-தங்கள் மாய்கையால் மயங்கி யானும்
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட்கொள்ள
இன் அருள் பிள்ளையாரை தந்தனை இறைவா என்றான்
#868
சீர் உடை பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும்
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கி காதல்
ஆர் அருள் பெற்று போற்றி அங்கு-நின்று அரிது நீங்கி
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார்
#869
நீடு சீர் தென்னர் கோனும் நேரியன் பாவையாரும்
மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை-தன்னில் போக
கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிடும் விருப்பினாலே
நாடி அங்கு இருந்து தங்கள் நாதரை பாடல்உற்றார்
#870
திரு இயமகத்தின் உள்ளும் திருநீலகண்ட பாணர்க்கு
அருளிய திறமும் போற்றி அவரொடும் அளவளாவி
தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே
#871
பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம்
கீழ் உற பறித்து போக்கி கிளர் ஒளி தூய்மை செய்தே
வாழி அ பதிகள் எல்லாம் மங்கலம் பொலிய செய்தார்
#872
மீனவன் தேவியாரும் குலச்சிறையாரும் மிக்க
ஞானசம்பந்தர் பாதம் நாள்-தொறும் பணிந்து போற்ற
ஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில்
#873
செய் தவத்தால் சிவபாதஇருதயர் தாம் பெற்று எடுத்த
வைதிக சூளாமணியை மா தவத்தோர் பெரு வாழ்வை
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை
எய்திய பூம்புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார்
#874
ஆன புகழ் திருநாவுக்கரசர்-பால் அவம் செய்த
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும்
மீனவன்-தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்குதற்கும்
போனவர்-பால் புகுந்தபடி அறிவன் என புறப்படுவார்
#875
துடி இடையாள்-தன்னோடும் தோணியில் வீற்றிருந்த பிரான்
அடி வணங்கி அலர் சண்பை அதன்-நின்றும் வழி கொண்டு
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி
வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார்
#876
மா மறையோர் வளம் பதிகளிடை தங்கி வழி செல்வார்
தே மருவு நறும் பைம் தார் தென்னவன்-தன் திரு மதுரை
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன்
பூ மருவும் சேவடி கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார்
#877
அங்கணரை பணிந்து போந்து அருகு அணைந்தார்-தமை வினவ
இங்கு எம்மை கண் விடுத்த காழியர் இள ஏறு
தங்கும் இடம் திருநீற்று தொண்டர் குழாம் சாரும் இடம்
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார்
#878
செப்புதலும் அது கேட்டு திரு மடத்தை சென்று எய்த
அப்பர் எழுந்தருளினார் என கண்டோர் அடி வணங்கி
ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய
எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள
#879
சிவபாதஇருதயர் தாம் முன் தொழுது சென்று அணைய
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர்தொழுவார்
அவர் சார்வு கண்டு அருளி திரு தோணி அமர்ந்து அருளி
பவ பாசம் அறுத்தவர்-தம் பாதங்கள் நினைவுற்றார்
#880
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி
அரும் தவத்தீர் எனை அறியா பருவத்தே எடுத்து ஆண்ட
பெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று
பொருந்து புகழ் புகலியின் மேல் திருப்பதிகம் போற்றி இசைத்தார்
#881
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக
அண்ணலார்-தமை வினவி திருப்பதிகம் அருள்செய்தார்
தண் நறும் பூம் செங்கமல தார் அணிந்த தமிழ் விரகர்
#882
திருப்பதிகம் திருக்கடைக்காப்பு சாத்தி சிறப்பின் மிகு
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள்
அருப்புறு மெய் காதல் புரி அடியவர்கள்-தம்மோடும்
பொருப்புறு கை சிலையார் சேர் பதி பிறவும் தொழ போவார்
#883
ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை
நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை
காலம் பெற்று இனிது இறைஞ்சி கைதொழுது புறம் போந்தார்
சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத
#884
தேன் நிலவு பொழில் மதுரை புறத்து போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே
#885
ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப்பதிகங்கள் நிகழ பாடி
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண்
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே
#886
பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார்-தம் பூவணத்தை புக்கு இறைஞ்சி புகழ்ந்து பாடி
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப்பேரும் கைதொழுது தமிழ் பாடி சுழியல் போற்றி
குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே
#887
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார்
விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டி
திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார்
#888
செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில்
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த
#889
சேதுவின்-கண் செம் கண் மால் பூசை செய்த சிவபெருமான்-தனை பாடி பணிந்து போந்து
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம்
கோது_இல் புகழ் பாண்டிமாதேவியார் மெய் குலச்சிறையார் குறை அறுத்து போற்றி செல்ல
நாதர்-தமை நாள்-தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலை கரையில் நயந்து இருந்தார் அன்றே
#890
அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில்
மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி
சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்கேதீச்சரத்து அண்ணல் செய்ய பாதம்
உன்னி மிக பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார்
#891
அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்
புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும்
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார்
#892
பதி நிலவு பாண்டிநாடு-அதனில் முக்கண் பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி
விதி நிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண் நீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ
மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார்
#893
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து
மன்னு திருத்தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கரசியாரும்
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றி சிரபுரத்து செல்வர் இனிது இருந்த நாளில்
#894
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்கு திருவுள்ளம் ஆக போற்றும்
மங்கையர்க்கரசியார்-தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார்-தாமும் கூட
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று
#895
சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார்
#896
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவு_இல் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும்
பன்னக பூண் அணிந்தவர்-தம் கோயில்-தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்ற சென்று
கன்னி மதில் திருக்களரும் போற்றி கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடி
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர்
#897
மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம்
நிலை புரியும் ஓட கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்தி போக
கலை பயிலும் கவுணியர் கோன் அதனை கண்டு அ கரையின்-கண் எழுந்தருளி நின்ற காலை
#898
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர் எதிர் தோன்ற திரு உள்ளம் பணிய சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பை
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து கண்_நுதலான் திருத்தொண்டர்-தம்மை ஏற்றி
நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட
#899
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று
செம்பொன் நேர் சடையார்-தம் கொள்ளம்பூதூர்-தனை சேர அக்கரையில் சேர்ந்த பின்பு
நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்
#900
நீண் நிலை கோபுரம்-அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலா தொண்டருடன் நெருங்க சென்று
வாண் நிலவு கோயிலினை வலம்கொண்டு எய்தி மதி சடையார் திரு முன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாக
பூணினாய் களிற்று உரிவை போர்த்த முக்கண் புனிதனே என பணிந்து போற்றி செய்தார்
#901
போற்றி இசைத்து புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர்-தம்மோடு
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ
நால் திசையும் பரவும் திருநள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே
#902
நீடு திருத்தொண்டர் புடைசூழ அங்கண் நித்தில யானத்திடை-நின்று இழிந்து சென்று
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில்
மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை
பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய
#903
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி
என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி
மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார்
#904
சீர் நிலவு திருத்தெளிச்சேரியினை சேர்ந்து சிவபெருமான்-தனை பரவி செல்லும் போது
சார்வு அறியா சாக்கியர்-தம் போதிமங்கை சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து
பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத
#905
புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடி புகலியர்-தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று
மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்தநந்தி முதலான தேரார்க்கும் கனன்று சொன்னார்
#906
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர்
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது
செற்றம் மிகு உள்ளத்து புத்தநந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழ சென்று
வெற்றி புனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான்
#907
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும்
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்
#908
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம்
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற
அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே
உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார்
#909
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே
வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக
கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே
#910
மற்றவர்கள் நிலைமையையும் புத்தநந்தி வாக்கின் போர் ஏற்றவன்-தன் தலையும் மெய்யும்
அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம்
வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க
உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே
#911
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார்
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார்
#912
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று
மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர்
சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்க என திரு முன் நின்றார் புகலி காவலர் போற்றி சென்றார்
#913
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றி மழ இளம் களிறு சண்பையாளி வேதபாரகன் மும்மை தமிழின் வேந்தன்
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா
தன் தகைமை புத்தருடன் சாரிபுத்தன் சந்திரமண்டபமும் சார வந்தான்
#914
அங்கு அணைந்து மண்டபத்து புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில்
எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர்
பொங்கு புகழ் புகலி காவலர்-தம் பாதம் போற்றி அருளால் சாரிபுத்தன்-தன்னை
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான்
#915
கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதி மாறும் கணபங்க இயல்பு-தன்னில்
பொற்பு உடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்த செய்ய
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான்
#916
என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும்
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார்
நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்
#917
ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி
தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன்-தானும்
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான்
#918
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும்
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார்
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு
வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான்
#919
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார்
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான்
#920
இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல்
மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது
செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான்
அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார்
#921
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம்
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞான கடல் அமுதம் அனையவர்-தம் காதல் அன்பர்
பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய்
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார்
#922
உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம்
கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து
உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான்
#923
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய்
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன்
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனை தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில்
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார்
#924
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே
ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய
வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர்
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்
#925
புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம்படி அன்பர் பொருந்த கூற
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார்
#926
அன்று அவர்க்கு கவுணியர் கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மை அகன்று நீங்கி
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்
நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள்செய்து சண்பை வேந்தர்
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார்
#927
அந்நகரில் அடியார்கள் எதிர்கொள்ள புக்கு அருளி
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி
மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீச மா முனிவர்
எ நகரில் எழுந்தருளிற்று என்று அடியார்-தமை வினவ
#928
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்தருளி
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின்-கண் போற்றி இசைத்து
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார்
#929
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினை காணும்
ஒப்பு_அரிய பெரு விருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு
மை பொருவு கறை கண்டர் கழல் வணங்கி அருள் பெற்று
செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார்
#930
பூ விரியும் தடம் சோலை புடை பரப்ப புனல் பரக்கும்
காவிரியின் தென் கரை போய் கண்_நுதலார் மகிழ்ந்த இடம்
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு
நாவரசர்-உழை சண்பை நகர் அரசர் நண்ணுவார்
#931
அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்து ஆக
வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி
நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது
முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார்
#932
எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெரு விருப்பால்
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த
பதி-நின்றும் புறப்பட்டு பரசமயம் சிதைத்தவர்-பால்
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார்
#933
திரு சின்னம் பணிமாற கேட்ட நால் திசை உள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார்-தமை சூழ்ந்த
நெருகின் இடையவர் காணா வகை நிலத்து பணிந்து உள்ளம்
உருக்கி எழும் மனம் பொங்க தொண்டர் குழாத்துடன் அணைந்தார்
#934
வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர்
சந்த மணி திரு முத்தின் சிவிகையினை தாங்கியே
சிந்தை களிப்புற வந்தார் திருஞானசம்பந்தர்
புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்
#935
அப்பர்-தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள்செய்ய
செப்ப_அரிய புகழ் திருநாவுக்கரசர் செப்புவார்
ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள்
இப்பொழுது தாங்கிவர பெற்று உய்ந்தேன் யான் என்றார்
#936
அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி
இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும்
செவ்வாறு மொழி நாவலர் திருஞானசம்பந்தர்க்கு
எவ்வாறு செய தகுவது என்று எதிரே இறைஞ்சினார்
#937
சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து
வாழ்ந்து மன களிப்பினராய் மற்று இவரை வணங்கப்பெற்று
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார்
#938
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர்-தமை
பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇ கொள்ள பிள்ளையார்
மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார்
பொரு ஆரும் புனல் சடையார் மகிழ்ந்த திரு பூந்துருத்தி
#939
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில்
முன் பணித்து ஆக சென்று கோபுரத்தை முன் இறைஞ்சி
துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி
என்பு உருக வலம்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார்
#940
பொய்யிலியாரை பணிந்து போற்றியே புறத்து அணைவார்
செய்ய சடையார் கோயில் திரு வாயில் முன்னாக
மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு
உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார்
#941
வாக்கின் தனி மன்னர் வண் புகலி வேந்தர்-தமை
போக்கும் வரவும் வினவ புகுந்தது எல்லாம்
தூக்கின் தமிழ் விரகர் சொல்_இறந்த ஞான மறை
தேக்கும் திரு வாயால் செப்பி அருள்செய்தார்
#942
காழியினில் வந்த கவுணியர்-தம் போர் ஏற்றை
ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடி வணங்கி
வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்-தான் ஓங்குதற்கு
சூழும் பெரு வேலி ஆனீர் என தொழுதார்
#943
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின்
வெள்ளம் அனைய புகழ் மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமை குலச்சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார்
#944
தென்னற்கு உயிரோடு நீறு அளித்து செங்கமலத்து
அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளி
துன்னும் நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால்
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார்
#945
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி
மல்கு புகழ் காஞ்சி ஏகாம்பரம் என்னும்
செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும்
புல்கு நூல் மார்பரும் போய் போற்ற மனம் புரிந்தார்
#946
அங்கணரை போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து
திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடி கீழ்
தங்கு மனத்தோடு தாள் பரவி செல்லும் நாள்
#947
வாகீச மா முனிவர் மன்னும் திரு ஆலவாய்
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்க
போகும் பெரு விருப்பு பொங்க புகலியின் மேல்
ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார்
#948
பூந்துருத்தி மேவும் புனிதர்-தமை புக்கு இறைஞ்சி
போந்து திரு வாயில் புறத்து அணைந்து நாவினுக்கு
வேந்தர் திரு உள்ளம் மேவ விடைகொண்டு அருளி
ஏந்தலார் எண்_இறந்த தொண்டருடன் ஏகினார்
#949
மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில்
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சி
பாடு தமிழ்_மாலைகளும் சாத்தி பரவி போய்
ஆடல் புரிந்தார் திருப்பழனம் சென்று அணைந்தார்
#950
செம் கண் விடையார் திருப்பழனம் சேர்ந்து இறைஞ்சி
பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும்
தங்கி போய் சண்பை நகர் சார்ந்தார் தனி பொருப்பின்
மங்கை திரு முலை பால் உண்டு அருளும் வள்ளலார்
#951
தென்னாட்டு அமண் மாசு அறுத்து திருநீறே
அ நாடு போற்றுவித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு
எ நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர்
முன்னாக வேதம் முழங்க எதிர்கொண்டார்
#952
போத நீடு மா மறையவர் எதிர்கொள புகலி காவலரும் தம்
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர் கரம் குவித்து இறைஞ்சி போய்
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணி கோபுரம் சென்று உற்றார்
#953
அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற
பொங்கு காதலில் புடை வலம்கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதி
துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி
மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர் கழல் பணிவுற்றார்
#954
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி
உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார்
#955
சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக்கடைக்காப்பு ஏற்றி
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார்-தமை போற்றி
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில்
#956
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திட சண்பையார் தனி ஏறு
மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள்
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று
காதலித்தவர்க்கு அருள்செய்து தம் திரு மாளிகை கடை சார்ந்தார்
#957
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞானசம்பந்தர்
விறலியார் உடன் நீலகண்ட பெரும்பாணர்க்கு மிக நல்கி
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில்
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார்
#958
அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும்
துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொள தொழுவாராய்
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றி
பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி
#959
நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும்
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும்
சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிட குழை கம்பர்
கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார்
#960
தண்டக திரு நாட்டினை சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில்
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள்செய்வார் காலம் பெற்று
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்று
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார்
#961
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும்
துப்பு நேர் சடையார்-தமை பரவியே தொழுதிடும் என சொல்லி
மெய் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளி போய்
ஒப்பு_இலாதவர்-தமை வழியிடை பணிந்து உருகும் அன்போடு செல்வார்
#962
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி
பல் பெருந்தொண்டர் எதிர்கொள பரமர்-தம் திருத்தினை நகர் பாடி
அல்கு தொண்டர்கள்-தம்முடன் திருமாணிக்குழியினை அணைந்து ஏத்தி
மல்கு வார் சடையார் திருப்பாதிரிப்புலியூரை வந்து உற்றார்
#963
கன்னி மா வனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி
மன்னுவார் பொழில் திருவடுகூரினை வந்து எய்தி வணங்கி போய்
பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார்
#964
வக்கரை பெருமான்-தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார்
#965
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும்படி காட்ட
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி
#966
பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கி போய்
அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திருவாமாத்தூர்
சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார்
#967
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்
பொன்ற அங்கு பூம் கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றி
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி
நன்றும் இன்புற பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்
#968
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள்
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார்
#969
சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அ திருவறைஅணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்-தம் மலை மிசை வலம்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்-தொறும் பணிந்து ஏத்தும்
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிட கண்டார்
#970
அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகி கைதொழுது கலந்து போற்றும் காதலினால்
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து
தெள் நீர் முடியார் திருவண்ணாமலை சென்று சேர்வுற்றார்
#971
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள் தாமரைகள் தம் முடி மேல்
பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி
எங்கும் ஆகி கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார்
#972
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்
பூத நாதர்-அவர்-தம்மை பூவார் மலரால் போற்றி இசைத்து
காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்
#973
மங்கை பாகர் திருவருளால் வணங்கி போந்து வட திசையில்
செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார்
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில்
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரை சேர்வுற்றார்
#974
தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத்தொண்டர்
தா_இல் சண்பை தமிழ் விரகர் தாம் அங்கு அணைய களி சிறந்து
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும்
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார்
#975
சண்பை வேந்தர் தண் தரள சிவிகை-நின்றும் இழிந்து அருளி
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ்
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு
பண்பின் நீடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார்
#976
வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர்
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார்-தன் முன் அணைந்து இறைஞ்சி
நாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும்
காரணத்தின் வரும் இன்ப கண்ணீர் பொழிய கைதொழுதார்
#977
தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல்_மாலைகளால் துதி செய்து
முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை
பொழுது-தோறும் புக்கு இறைஞ்சி போற்றி செய்து அங்கு அமர்வார் முன்
அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார்
#978
அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம்
மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர்
இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று
பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல
#979
பரமனார் திருத்தொண்டர் பண்பு நோக்கி பரிவு எய்தி
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி
அரவும் மதியும் பகை தீர அணிந்தார்-தம்மை அடி வணங்கி
இரவு போற்றி திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி
#980
விரும்பு மேன்மை திருக்கடைக்காப்பு-அதனில் விமலர் அருளாலே
குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை
அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார்
#981
சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றி சிவனார் அருள் பெற்று
பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்து பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்து கொடுத்து அருளி
ஆரும் உவகை திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்
#982
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்-தம் செய்கை கண்டு திகைத்த அமணர்
அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள்
என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த
பொன் ஆர் மேனி புரி சடையான் அன்றே என்று போற்றினார்
#983
பிள்ளையார்-தம் திரு வாக்கில் பிறத்தலால் அ தாலமும் முன்பு
உள்ள பாசம் விட்டு அகல ஒழியா பிறவி-தனை ஒழித்து
கொள்ளும் நீர்மை காலங்கள் கழித்து சிவமே கூடினவால்
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம்
#984
அங்கண் அமரர் பெருமானை பணிந்து போந்து ஆடு அரவின் உடன்
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்தி போய்
கொங்கு மலர் நீர் குரங்கணின் முட்டத்தை சென்று குறுகினார்
#985
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகர்_இல் சண்பையினில்
வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார்
மாது_ஓர்_பாகர்-தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்
#986
நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும்
மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார்
காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால்
#987
கொடி நிரைத்த வீதியில் கோல வேதிகை புறம்
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன்
மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார்
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார்
#988
கோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும்
வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய்
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார்
#989
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும்
பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல்
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர்
#990
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார்
வாள் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில்
பூணும் அன்பர் தம்முடன் புகுந்திட புறத்து உளோர்
காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர்
#991
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழ
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும்
புயல் பொழிந்ததாம் என பூவினொடு பொன் சுண்ணம்
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார்
#992
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார்
பின்னு வார் சடை முடி பிரான் மகிழ்ந்த கோயில்கள்
முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள்
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார்
#993
கம்பவாணர் கோயில் வாயில் கண்டு கை குவித்து எடுத்து
உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து
அம் பொன் மாளிகை புறத்தில் அன்பரோடு சூழ வந்து
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார்
#994
செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி
கம்பரை வந்து எதிர்வணங்கும் கவுணியர்-தம் காவலனார்
பம்பு துளி கண் அருவி பாய்ந்து மயிர் புளகம் வர
தம் பெருகு மன காதல் தள்ள நிலம் மிசை தாழ்ந்தார்
#995
பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப
மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க
நிலவு மிசை முதல்_தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ
#996
பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்த கூத்து
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல்
சூடினார் மெய் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய்
தேடினார் இருவருக்கும் தெரிவு_அரியார் திரு மகனார்
#997
மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால்
பெருகிய கண் மழை பொழிய பெரும் புகலி பெருந்தகையார்
உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவ குழைந்தவரை
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார்
#998
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திரு மடத்தில்
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார்
மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார்
அறம் பெரும் செல்வ காமகோட்டம் அணைந்து இறைஞ்சினார்
#999
திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரை சேவடியில்
ஒரு போதும் தப்பாதே உள் உருகி பணிகின்றார்
மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும்
பெருகும் இசை திருப்பதிக தொடை புனைந்தார் பிள்ளையார்
#1000
நீடு திரு பொழில் காஞ்சி நெறிக்காரைக்காடு இறைஞ்சி
சூடு மதி கண்ணியார் துணை மலர் சேவடி பாடி
ஆடும் அவர் இனிது அமரும் அனேகதங்காவதம் பரவி
மாடு திரு தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்
#1001
எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து
தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார்
#1002
அ பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார்
செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய்
மை பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி
முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார்
#1003
திருமால் பேறு உடையவர்-தம் திருவருள் பெற்று எழுந்தருளி
கரு மாலும் கருமாவாய் காண்பு_அரிய கழல் தாங்கி
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கி தம்
பெருமாற்கு திருப்பதிக பெரும் பிணையல் அணிவித்தார்
#1004
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வட-பால் இறைவர்
எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி
செம் கண் விடை உகைத்தவரை திருப்பதிகம் பாடினார்
#1005
திருத்தொண்டர் பலர் சூழ திருவில்கோலமும் பணிந்து
பொருள் பதிக தொடை மாலை புரம் எரித்தபடி பாடி
அருள் புகலி ஆண்தகையார் தக்கோலம் அணைந்து அருளி
விருப்பினோடும் திருவூறல் மேவினார்-தமை பணிந்தார்
#1006
தொழுது பல முறை போற்றி சுரர் குருவுக்கு இளைய முனி
வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த
பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர்
#1007
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும்
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத்தொண்டர் உடன்
பொன் தயங்கு மணி மாட பூந்தராய் புரவலனார்
சென்று அணைந்தார் பழையனூர் திரு ஆலங்காட்டு அருகு
#1008
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்
அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சி சண்பை வரும் சிகாமணியார் சார சென்று
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார்
#1009
மாலை இடை யாமத்து பள்ளிகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார்
#1010
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி
பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்
#1011
நீடும் இசை திருப்பதிகம் பாடி போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த-காலை
மாடு திருத்தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆலவனத்து மன்னி
ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார்
#1012
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு
பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்
விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே
அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார்
#1013
மன்னு திருப்பதிக இசை பாடி போற்றி வணங்கி போந்து அ பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால்
முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை
உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார்
#1014
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென் புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர்
#1015
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும்
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு
சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார்
#1016
மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக
பூதி நிறை கடல் அணைவது என்ன சண்பை புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்ன
தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும்
நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண
#1017
கானவர்-தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திரு பாத செருப்பு தோய
மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும்
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத
தானமும் மற்று அவை கடந்து திரு காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர்
#1018
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும்
உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார்
#1019
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை-நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க
அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால்
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார்
#1020
வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும்
இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும்
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு
சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார்
#1021
திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலி கரை அணைந்து தொழுது போகி
அரும் தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடை பிள்ளையார் அயன் மால் தேடும்
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார்
#1022
தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில்
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானை கண்டு வீழ்ந்தார்
#1023
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அ அன்பின் உள்ளே மன்னும்
வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார்
#1024
பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர்
#1025
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத
தேவர்கள்-தம் பெருமானை திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனை
பூ அலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள்-தோறும் புக்கு
பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில்
#1026
அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக
திங்கள் புனை முடியார்-தம் தானம்-தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வட கயிலை வணங்கி பாடி
செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி
#1027
கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திரு பருப்பகத்தின் கொள்கை பாடி
ஏற்றின் மிசை வருவார் இந்திரன்-தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம்
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடி புகலியார்-தம் பெருந்தகையார் புனிதம் ஆகும்
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார்
#1028
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண்
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார்
#1029
மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும்
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி
பல் மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடு
சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர்
#1030
திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார்
#1031
மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி
மை குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திரு கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்க திருக்கடைக்காப்பு சாற்றி தேவர்-தம் பெருமான் திரு வாயில் ஊடு சென்று
புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்
#1032
பொன் திரள்கள் போல் புரிந்த சடையார்-தம்-பால் பொங்கி எழும் காதல் மிக பொழிந்து விம்மி
பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும்
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார்
#1033
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால்
பன்னு தொல் புகழ் திரு மயிலாபுரி பதியில்
மன்னு சீர் பெரும் வணிகர்-தம் தோன்றலார் திறத்து
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்
#1034
அரு நிதி திறம் பெருக்குதற்கு அரும் கலம் பலவும்
பொரு கடல் செல போக்கி அ பொருள் குவை நிரம்ப
வரும் மரக்கலம் மனை படப்பு அணைக்கரை நிரைக்கும்
இருநிதி பெரும் செல்வத்தின் எல்லை_இல் வளத்தார்
#1035
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை
மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால்
பொய்ம்மை நீக்கிய பொருள் இது என கொளும் உள்ள
செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார்
#1036
கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும்
பற்று இலா நெறி பரசமயங்களை பாற்றும்
செற்றம் மேவிய சீலமும் உடையாராய் திகழ்வார்
#1037
ஆன நாள் செல அரு_மறை கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும் நால் நிலம் உய்ய
ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்
ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய்
#1038
செல்வம் மல்கிய சிரபுர தலைவர் சேவடி கீழ்
எல்லை இல்லது ஓர் காதலின் இடையறா உணர்வால்
அல்லும் நண்பகலும் புரிந்தவர் அருள் திறமே
சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்
#1039
நிகழும் ஆங்கு அவர் நிதி பெரும் கிழவனின் மேலாய்
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகி
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும்
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு
#1040
அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால்
கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து
தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள்
#1041
நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்ப
பல் பெரும் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும்
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப
மல்லல் ஆவண மறுகிடை பொழிந்து உளம் மகிழ்ந்தார்
#1042
ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால்
ஈறு_இலாத பூசனைகள் யாவையும் மிக செய்து
மாறு_இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்து
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார்
#1043
சூத நல் வினை மங்கல தொழில் முறை தொடங்கி
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த
சாதகத்தொடு சடங்குகள் தச தினம் செல்ல
காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார்
#1044
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புற பயந்த
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி
பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க
#1045
திங்கள்-தோறும் முன் செய்யும் அ திருவளர் சிறப்பின்
மங்கலம் புரி நல்_வினை மாட்சியில் பெருக
அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர்அணைந்து
தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில
#1046
தளரும் மின்னின் அங்குரம் என தமனிய கொடியின்
வளர் இளம் தளிர் கிளை என மணி கிளர் ஒளியின்
அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து
இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த
#1047
அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய
மழலை மெல் கிளி குலம் என மனையிடை ஆடி
#1048
பொன் தொடி சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி
மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர
#1049
தந்தையாரும் அ தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை
இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன்
அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார்
#1050
ஆய நாள்களில் அமண் பயில் பாண்டிநாடு அதனை
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து
மாய வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும்
மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும்
#1051
நெருப்பில் அஞ்சினார்-தங்களை நீரில் ஒட்டிய பின்
மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்கள் ஏறியதும்
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளி
பொருப்பு வில்லியார் சாதனம் போற்றுவித்ததுவும்
#1052
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்ப
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார்-தமை திசை நோக்கி
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று
#1053
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்ப
கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்
பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்
#1054
எல்லை_இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல்
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலி
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார்
#1055
ஆற்று நாள்களில் அணங்கு அனார் கன்னிமாடத்தின்
பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான்
போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து
கோல் தொடி தளிர் கையினால் முகை மலர் கொய்ய
#1056
அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால்
பொன் பிறங்கு நீர் புகலி காவலர்க்கு இது புணராது
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய்
முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம்
#1057
மௌவல் மாதவி பந்தரில் மறைந்து வந்து எய்தி
செவ்வி நாள்_முகை கவர் பொழுதினில் மலர் செம் கை
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல்
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து
#1058
நாலு தந்தமும் என்புற கவர்ந்து நஞ்சு உகுத்து
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ
மாலை தீயிடை பட்டது போன்று உளம் மயங்கி
#1059
தரையில் வீழ்தர சேடியர் வெருக்கொடு தாங்கி
விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருக
கரை_இல் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார்
#1060
விடம் தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர்
திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி
தொடர்ந்த செய்வினை தனித்தனி தொழிலராய் சூழ்வார்
#1061
மருந்தும் எண்_இல மாறு_இல செய்யவும் வலிந்து
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கி
பெரும் தடம் கண் மெல் கொடிஅனாள் தலை மிசை பிறங்கி
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து_இலது-ஆல்
#1062
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறி
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலி கடல் போல்
#1063
சிந்தை வெம் துயருறும் சிவநேசரும் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர்
இந்த வெவ் விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட
அந்தம்_இல் நிதி குவை என பறை அறைவித்தார்
#1064
முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற
அரசர் பாங்கு உளோர் உட்பட அவனி மேல் உள்ள
கரை_இல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி
புரை_இல் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திட போனார்
#1065
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கி
காரின் மல்கிய சோலை சூழ் கழுமல தலைவர்
சாரும் அவ்வளவும் உடல் தழலிடை அடக்கி
சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்
#1066
உடைய பிள்ளையார்க்கு என இவள்-தனை உரைத்ததனால்
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல்
புடை பெருத்த கும்பத்தினில் புக பெய்து வைப்பார்
#1067
கன்னிமாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்து
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல்
மன்னும் பொன் அர்¢ மாலைகள் அணிந்து வைத்தனர்-ஆல்
#1068
மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள்-தொறும் வழாமை
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய
சாலும் நன்மையில் தகுவன நாள்-தொறும் சமைத்தே
ஏலுமா செய யாவரும் வியப்பு எய்தும் நாளில்
#1069
சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து
பண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்து இருந்த
நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர்
வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார்
#1070
சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும்
துன்னு நீள் நடை காவணம் துகில் விதானித்து
#1071
மகர தோரணம் வண் குலை கமுகொடு கதலி
நிகர்_இல் பல் கொடி தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால்
புகர்_இல் பொன் உலகம் இழிந்ததாம் என பொலிவித்தார்
#1072
இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி
முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர்
பொன் அடி தலம் தலை மிசை புனைவான் என்று எழுவார்
அ நகர் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார்
#1073
ஆய வேலையில் அரு_மறை புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று
காயல் சூழ் கரை கடல் மயிலாபுரி நோக்கி
தூய தொண்டர்-தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற
#1074
மாறு_இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த
நீறு சேர் தவ குழாத்தினை நீளிடை கண்டே
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று
ஈறு_இலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச
#1075
காழி நாடரும் கதிர் மணி சிவிகை-நின்று இழிந்து
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி
வாழி மா தவர் வணிகர் செய் திறம் சொல கேட்டே
ஆழி சூழ் மயிலாபுரி திரு நகர் அணைந்தார்
#1076
அ திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்து
சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்ப
பொய்த்த அ சமண் சாக்கியர் புறத்துறை அழிய
வைத்த அ பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி
#1077
கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து
துங்க நீள் சுடர் கோபுரம் தொழுது புக்கு அருளி
மங்கை பங்கர்-தம் கோயிலை வலம்கொண்டு வணங்கி
செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார்
#1078
தேவ தேவனை திரு கபாலீச்சரத்து அமுதை
பாவை பாகனை பரிவுறு பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையில் போற்றினார் ஞானசம்பந்தர்
#1079
போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறை மயிர் புளகங்கள் நெருங்க
கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி
ஆற்றும் இன் அருள் வணிகர் மேல்செல அருள்செய்வார்
#1080
ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய
அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அ குடத்தை
பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில்
திரு மதில் புறவாய்-தனில் கொணர்க என்று செப்ப
#1081
அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு
கந்த வார் பொழில் கன்னிமாடத்தினில் புக்கு
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து
#1082
மூடு பன் மணி சிவிகை உள் பெய்து முன் போத
மாடு சேடியர் இனம் புடைசூழ்ந்து வந்து அணைய
ஆடல் மேவினார் திரு கபாலீச்சரம் அணைந்து
நீடு கோபுரத்து எதிர் மணி சிவிகையை நீக்கி
#1083
அங்கணாளர்-தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால்
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்து
தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார்
#1084
மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றி_இல் சமயத்தின் உள்ளோர்
மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க
#1085
தொண்டர்-தம் பெரும் குழாம் புடைசூழ்தர தொல்லை
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தை
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி
#1086
இந்த மா நிலத்து இறந்துளோர் என்பினை பின்னும்
நந்து நல் நெறிப்படுத்திட நன்மையாம் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால்
சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி
#1087
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார்-தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல் விழா பொலிவு கண்டு ஆர்தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார்
#1088
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும்
அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம்
துன்ன வந்துவந்து உருவமாய் தொக்கது அ குடத்துள்
#1089
ஆன தன்மையின் அ திரு பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி
ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன்
ஞான போனகர் பின் சமண் பாட்டினை நவில்வார்
#1090
தேற்றம்_இல் சமண் சாக்கிய திண்ணர் இ செய்கை
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது
கோல் தொடி செம் கை தோற்றிட குடம் உடைந்து எழுவாள்
போற்று தாமரை போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்
#1091
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திரு பாட்டு
அடுத்த அம்முறை பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து
தொடுத்த வெம் சமண் பாட்டினில் தோன்றிட கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு மேல் விரித்தார்
#1092
ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள்
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலை
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்ன பார் மேல்
ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே
#1093
தேவரும் முனிவர்-தாமும் திருவருள் சிறப்பு நோக்கி
பூ வரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்
#1094
அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்தி
பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர்
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்
#1095
கன்னி-தன் வனப்பு-தன்னை கண்களால் முடிய காணார்
முன்னுற கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம்
மன்னிய வதனம் செந்தாமரையினில் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற
#1096
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனி மலர் அளக பந்தி
தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில்
பூம்_கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட புயல் கீழ் இட்ட
வாங்கிய வானவில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப
#1097
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன்
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப
#1098
மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள்-தன்
கண்ணிணை வனப்பு காணில் காமரு வதன திங்கள்
தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண் நிற கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ
#1099
பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்
நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு
மணி நிற கோபம் கண்டு மற்றது வவ்வ தாழும்
அணி நிற காமரூபி அணைவதாம் அழகு காட்ட
#1100
இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது
வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும்
கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும்
அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக
#1101
வில் பொலி தரள கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பு அமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த
நல் பெரும் பணிலம் என்னும் நல் நிதி போன்று தோன்றி
அல்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட
#1102
எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து
திரள் பெற சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற
#1103
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாக
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்ப
சீர் கெழு முகிழை காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற
#1104
காமவேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை
நேமி அம் புட்கள்-தம்மை அகப்பட நேரிது ஆய
தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும்
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி
#1105
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன்
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட
#1106
வரி மயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை
கரி இளம் பிடி கை வென்று கதலி மென் தண்டு காட்ட
தெரிவுறும் அவர்க்கு மென்மை செழு முழந்தாளின் செவ்வி
புரிவுறு பொன் பந்து என்ன பொலிந்து ஒளி விளங்கி பொங்க
#1107
பூ அலர் நறும் மென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன்
ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும்
ஓவியர்க்கு எழுத ஒண்ணா பரட்டு ஒளி ஒளிருற்று ஓங்க
#1108
கற்பகம் ஈன்ற செவ்வி காமரு பவள சோதி
பொன் திரள் வயிர பத்தி பூம் துணர் மலர்ந்த போலும்
நல் பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம்
அற்புதம் எய்த தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள்
#1109
எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள்-தன்-பால்
புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர்
கண்_நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்
#1110
இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள்
தன்னை முன் கண்ணுற கண்ட தாதையார்
பொன் அணி மாளிகை புகலி வேந்தர் தாள்
சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர்
#1111
அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து
இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ
#1112
சீர் கெழு சிவ நேசர்-தம்மை முன்னமே
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர்
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி
பார் கெழு மனையில் படர்-மின் என்றலும்
#1113
பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார்
மருவு தாமரை அடி வணங்கி போற்றி நின்று
அருமையால் அடியனேன் பெற்ற பாவையை
திருமணம் புணர்ந்து அருள்செய்யும் என்றலும்
#1114
மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர்
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான்
கற்றை வார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப்பித்தலால் உரை தகாது என
#1115
வணிகரும் சுற்றமும் மயங்கி பிள்ளையார்
அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர்
தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல்
துணிவினை அருள்செய்தார் தூய வாய்மையார்
#1116
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர் கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திட
பள்ள நீர் செலவு என பரமர் கோயிலின்
உள் எழுந்தருளினார் உடைய பிள்ளையார்
#1117
பான்மையால் வணிகரும் பாவை-தன் மணம்
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய்
வான் உயர் கன்னிமாடத்து வைத்தனர்
தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள்
#1118
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திரு கபாலீச்சரத்து
மேவிய ஞான தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெரும் கருணை கை தந்தபடி போற்றி
பாவலர் செந்தமிழ் பாடி பன்முறையும் பணிந்து எழுவார்
#1119
தொழுது புறம் போந்து அருளி தொண்டர் குழாம் புடைசூழ
பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள்
முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச
அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார்
#1120
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடைகொள்ள சிவநேசர்
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடைகொடுத்து
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கி போய் நிறை காதல்
அருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார்
#1121
திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள
அருகாக இழிந்து அருளி அவர் வணங்க தொழுது அன்பு
தருவார்-தம் கோயில் மணி தடம் நெடும் கோபுரம் சார்ந்தார்
#1122
மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திரு முன்றில்
புக்கு அருளி கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து
கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ் தாழ்ந்தார்
#1123
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று
வாழ்ந்து களிவர பிறவி மருந்தான பெருந்தகையை
சூழ்ந்த இசை திருப்பதிக சொல்_மாலை வினா உரையால்
வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார்
#1124
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப
விரவு மயிர் புளகங்கள் மிசை விளங்க புறத்து அணைவுற்று
அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள்
சிரபுரத்து புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார்
#1125
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின்
பொங்கும் இசை பதிகங்கள் பல போற்றி போந்து அருளி
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி
செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார்
#1126
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடை சுரத்து
மன்னும் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள வந்து அருளி
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நல் கோயில்
தன்னை வலம்கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு
#1127
கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல்
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன்
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து
அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார்
#1128
இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவி
திருந்து மனம் கரைந்து உருக திருக்கடைக்காப்பு சாத்தி
பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்
#1129
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு
உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று
சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளி செந்துருத்தி
அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக்குன்றினை அணைந்தார்
#1130
சென்று அணையும் பொழுதின்-கண் திருத்தொண்டர் எதிர்கொள்ள
பொன் திகழும் மணி சிவிகை இழிந்து அருளி உடன் போந்து
மன்றல் விரி நறும் சோலை திருமலையை வலம்கொண்டு
மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்
#1131
திருக்கழுக்குன்று அமர்ந்த செம் கனக தனி குன்றை
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று
திருப்பதிகம் புனைந்து அருளி சிந்தை நிறை மகிழ் உற்றார்
#1132
இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு_இல் பெருந்தொண்டருடன்
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்று போந்து அருளி
என்புற்ற மணி மார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து
அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறுபாக்கம் அணைந்தார்
#1133
ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும்
கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி
மா தவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்று
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி
#1134
ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும்
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்து இறைஞ்சி
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரி சடையில்
ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார்
#1135
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசை பணிந்து
பரசி எழு திரு புறவார் பனங்காட்டூர் முதலாய
விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி
திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார்
#1136
எல்லை_இல் ஞான தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார்
தில்லையில் வாழ் அந்தணர் மெய் திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து
அல்கு பெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார்
#1137
திரு எல்லையினை பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை
மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி
உருகு பெரும் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலி
பெருகி வளர் மணி மாட பெரும் திரு வீதியை அணைந்தார்
#1138
நலம் மலியும் திரு வீதி பணிந்து எழுந்து நல் தவர்-தம்
குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு
தலம்உற முன் தாழ்ந்து எய்தி தமனிய மாளிகை மருங்கு
வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார்
#1139
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத
கணங்கள் மிடை திரு வாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார்
#1140
தொண்டர் மனம் பிரியாத திருப்படியை தொழுது இறைஞ்சி
மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார்
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து
கண்ட பேரின் பத்தின் கரை_இல்லா நிலை அணைந்தார்
#1141
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தா காலத்தில்
மன்னு திரு அம்பலத்தை வலம்கொண்டு போந்து அருளி
பொன் அணி மாளிகை வீதி புறத்து அணைந்து போது-தொறும்
இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார்
#1142
திருந்திய சீர் தாதையார் சிவபாதஇருதயரும்
பொருந்து திரு வளர் புகலி பூசுரரும் மா தவரும்
பெரும் திருமால் அயன் போற்றும் பெரும்பற்றப்புலியூரில்
இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார்
#1143
ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும்
தாங்க_அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க
ஓங்கு திரு தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆக
தேன் கமழ் கொன்றை சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார்
#1144
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன்
அன்பு நெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடி போற்றி
பொன் புரி செம் சடை கூத்தர் அருள் பெற்று போந்து அருளி
இன்புறு தோணியில் அமர்ந்தார்-தமை வணங்க எழுந்தருள
#1145
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும்
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளி புறம் போந்து
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சி
கற்றவர்கள் பரவு திரு கழுமலமே சென்று அடைவார்
#1146
பல் பதிகள் கடந்து அருளி பன்னிரண்டு பேர் படைத்த
தொல்லை வள பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்
மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கி
செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள்செய்வார்
#1147
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்
என்னும் இசை சொல்_மாலை எடுத்து இயம்பி எழுந்தருளி
புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார்
#1148
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது
காழி நகர் சேர்-மின் என கடை முடிந்த திருப்பதிகம்
ஏழிசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார்
#1149
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான்
தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு-தனை உன்னி
நீள் நிலை கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சி புக்கு அருளி
வாள் நிலவு பெரும் கோயில் வலம்கொண்டு முன் பணிந்தார்
#1150
முன் இறைஞ்சி திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறி
பொன் இமய பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரை
சென்னி மிசை குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார்
#1151
பரவு திருப்பதிகங்கள் பலவும் இசையினில் பாடி
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி
அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன்
சிரபுரத்து பெருந்தகையார் தம் திரு மாளிகை சேர்ந்தார்
#1152
மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள்புரிந்து
தாள் பணியும் பெரும் கிளைக்கு தகுதியினால் தலையளிசெய்து
ஆளுடைய தம் பெருமான் அடியவர்களுடன் அமர்ந்து
நீள வரும் பேரின்பம் மிக பெருக நிகழும் நாள்
#1153
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த
ஆழியினும் மிக பெருகும் ஆசையுடன் திரு முருகர்
வாழி திருநீலநக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர்
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்
#1154
வந்தவரை எதிர்கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர் கோன்
அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து
சுந்தர ஆர் அணங்கின் உடன் தோணியில் வீற்றிருந்தாரை
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி
#1155
பெரு மகிழ்ச்சியுடன் செல்ல பெரும் தவத்தால் பெற்றவரும்
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடி
திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு
பருவம் இது என்று எண்ணி அறிவிக்க பாங்கு அணைந்தார்
#1156
நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும்
கூட்டுவது மனம் கொள்வார் கோது_இல் மறை நெறி சடங்கு
காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னி-தணை
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள்
#1157
மற்றவர்-தம் மொழி கேட்டு மா தவத்தின் கொழுந்து அனையார்
சுற்றம் உறும் பெரும் பாச தொடர்ச்சி விடும் நிலைமையராய்
பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள
#1158
அரு_மறையோர் அவர் பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார்
இரு நிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்
வருமுறையால் அறு_தொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும்
திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என
#1159
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும்
துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும்
பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த
கறை வாழும் கண்டத்தார்-தமை தொழுது மனம் களித்தார்
#1160
திருஞானசம்பந்தர் திருவுள்ளம் செய்ததற்கு
தரு வாய்மை மறையவரும் தாதையரும் தாங்க_அரிய
பெரு வாழ்வு பெற்றாராய் பிஞ்ஞகனார் அருள் என்றே
உருகா நின்று இன்பமுறும் உள மகிழ்ச்சி எய்துவார்
#1161
ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால்
நாதர் திரு பெரு மணத்து நம்பாண்டார் நம்பி பெறும்
காதலியை காழி நாடு உடைய பிரான் கைப்பிடிக்க
போதும் அவர் பெருந்தன்மை என பொருந்த எண்ணினார்
#1162
திருஞானசம்பந்தர் சீர் பெருக மணம் புணரும்
பெரு வாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிக பேணி
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச
தருவார் தண் பணை நல்லூர் சார்கின்றார் தாதையார்
#1163
மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏக
திக்கு நிகழ் திரு நல்லூர் பெரு மணத்தை சென்று எய்த
தக்க புகழ் நம்பாண்டார் நம்பி-தாம் அது கேட்டு
செக்கர் சடை முடியார்-தம் திரு பாதம் தொழுது எழுவார்
#1164
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால்
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி
செப்ப_அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே
எப்பொருளும் எய்தினேன் என தொழுது அங்கு எதிர்கொண்டார்
#1165
எதிர்கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும்
முதிர் உணர்வின் மா தவரும் அணைந்த திறம் மொழிகின்றார்
#1166
ஞான போனகருக்கு நல் தவத்தின் ஒழுக்கத்தால்
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என
ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சியொடு மொழிவார்
#1167
உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த
அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு
எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம்
வம்-மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார்
#1168
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து
கார் உலவு மலர் சோலை கழுமலத்தை வந்து எய்தி
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பி
பார் குலவும் திருமணத்தின் பான்மையினை தொடங்குவார்
#1169
திருமணம் செய் கலியாண திரு நாளும் திகழ் சிறப்பின்
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்ப
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி
அருள்புரிந்த நல் நாளில் அணி முளை பாலிகை விதைத்தார்
#1170
செல்வம் மலி திரு புகலி செழும் திரு வீதிகள் எல்லாம்
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே
எல்லை_இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி
அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார்
#1171
அரும் தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய
பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணைய
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார்
#1172
மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி
நல் நிலைமை திரு நாளுக்கு எழு நாளாம் நல் நாளில்
பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப
பொன் மணி பாலிகை மீது புனித முளை பூரித்தார்
#1173
சேண் உயரும் மாடங்கள் திரு பெருகு மண்டபங்கள்
நீள் நிலைய மாளிகைகள் நிகர்_இல் அணி பெற விளக்கி
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும்படி எழுதி
வாள் நிலவு மணி கடை-கண் மங்கல கோலம் புனைந்து
#1174
நீடு நிலை தோரணங்கள் நீள் மருகு-தொறும் நிரைத்து
மாடு உயரும் கொடி மாலை மணி மாலை இடை போக்கி
சேடு உயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவி
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார்
#1175
மன்றல் வினை திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம்
முன்றில்-தொறும் வீதி-தொறும் முக நெடு வாயில்கள்-தொறும்
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறை வாச பொன் குடங்கள்
துன்று சுடர் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்
#1176
எங்கணும் மெய் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி
பொங்கு திரு புகலி-தனில் நாள்-தோறும் புகுந்து ஈண்ட
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார்
#1177
மங்கல தூரிய நாதம் மறுகு-தொறும் நின்று இயம்ப
பொங்கிய நான்_மறை ஓசை கடல் ஓசை மிசை பொலிய
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன்
செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக
#1178
எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்க
பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில
மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய
உண்டி வினை பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க
#1179
மா மறை நூல் விதி சடங்கில் வகுத்த முறை நெறி மரபின்
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர்-தம் தொழில் துவன்ற
தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர்-தாம் எடுத்த
பூ மருவு பொன் கலச புண்ணிய நீர் பொலிவு எய்த
#1180
குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழும
பொங்கு விரை புது கலவை புகை எடுப்போர் தொகை விரவ
துங்க நறும் கர்ப்பூர சுண்ணம் இடிப்போர் நெருங்க
எங்கும் மலர் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிக பெருக
#1181
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும்
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர்
நினைவு_அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதி கோமான்
தனை இறைவர் தாம் ஏவ சமைத்தது போல் அமைந்து உளதால்
#1182
மாறு_இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்கூறும்
நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார்
#1183
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க
ஓத நீர் உலகில் இயல் முறை ஒழுக்கமும் பெருக
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர்
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார்
#1184
நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த
புகர்_இல் சித்திரவிதன மண்டபத்தினில் பொலிய
பகரும் வைதிக விதி சமாவர்த்தன பான்மை
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார்
#1185
செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண் பரப்பின்
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த
அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில்
#1186
நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர்
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாச
போது சாந்து அணி பூம் துகில் புணைந்த புண்ணியம் போல்
மீது பூம் சயனத்து இருந்தவர் முன்பு மேவி
#1187
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய
சீர் மறை தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்
பார் வழிப்பட வரும் இருவினைகளின் பந்த
சார்பு ஒழிப்பவர் திரு கையில் காப்பு நாண் சாத்த
#1188
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார்
கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி
மண்டு மா மறை குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே
#1189
நிறைந்த கங்குலின் நிதி மழை விதி முறை எவர்க்கும்
புரந்த ஞானசம்பந்தர் தாம் புன் நெறி சமய
அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல்
பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன்
#1190
அம் சிறை சுரும்பு அறை பொழில் சண்பை ஆண்தகையார்
தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று
மஞ்சன தொழில் புரிந்து என மாசு இருள் கழுவி
செம் சுடர் கதிர் பேரணி அணிந்தன திசைகள்
#1191
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள்
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால்
தரம் கடந்தவர் தம் திரு கல்லியாணத்தின்
வரம்பு_இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம்
#1192
நங்கள் வாழ்வு என வரும் திருஞானசம்பந்தர்
மங்கல திருமண எழுச்சியின் முழக்கு என்ன
துங்க வெண் திரை சுரி வளை ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி
#1193
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும்
விளக்கு மா மண விழாவுடன் விரைந்து செல்வன போல்
துளக்கு_இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி
#1194
சந்த மென் மலர் தாது அணி நீறு மெய் தரித்து
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு
சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து
#1195
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி
மண்டும் அ திருமண எழுச்சியின் அணி வாய்ப்ப
கொண்ட வெண் நிற குரூஉ சுடர் கொண்டல்கள் என்ன
வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு
#1196
ஏல இ நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும்
காலை செய் வினை முற்றிய கவுணியர் பெருமான்
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கி
சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார்
#1197
காழி மா நகர் வேதியர் குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல
வாழி மா மறை முழங்கிட வளம் பதி வணங்கி
நீழல் வெண் சுடர் நித்தில சிவிகை மேற்கொண்டார்
#1198
ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேற்கொள்ள
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி
மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள்
#1199
சங்கொடு தாரை சின்னம் தனி பெரும் காளம் தாளம்
வங்கியம் ஏனை மற்று மலர் துளை கருவி எல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கி பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்க திருமணம் எழுந்தது அன்றே
#1200
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர்-பால் கோல
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு-பால் மிக்க
ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும்
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு-பால் ஆக
#1201
விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம்
கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரி கானம்
மண்ணிய மணி பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்
எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண
#1202
சிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார்
புகை விடும் வேள்வி செம் தீ இல்லுடன் கொண்டு போவார்
தகைவு_இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பி சார்வார்
வகை அறு பகையும் செற்ற மா தவர் இயல்பின் மல்க
#1203
அறு வகை விளங்கும் சைவத்து அளவு_இலா விரதம் சாரும்
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர்
மறு_அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோக
குறி நிலை பெற்ற தொண்டர் குழாம் ஆகி ஏக
#1204
விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர்
தம் சுடர் விமானம் ஏறி தழைத்த ஆதரவினோடு
மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காண சென்றார்
#1205
மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி
முற்ற இ தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும்
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலிய செல்ல
#1206
தவ அரசு ஆள உய்க்கும் தனி குடை நிழற்ற சாரும்
பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்து கொண்டு
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திரு பெருமணத்தை சேர்ந்தார்
#1207
பெருமண கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால்
வரு மண திறத்தின் முன்னர் வழி எதிர்கொள்ள சென்று
திருமணம் புணர எய்தும் சிரபுர செம்மலார்-தாம்
இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர்-தம் கோயில் புக்கார்
#1208
நாதரை பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடி
காதல் மெய் அருள் முன் பெற்று கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவை கோலம் புனைந்திடவேண்டும் என்ன
பூத நாயகர்-தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார்
#1209
பொன் குடம் நிறைந்த வாச புனித அஞ்சனம் நீராட்டி
வில் பொலி வெண் பட்டு ஆடை மேதக விளங்க சாத்தி
நல் திரு உத்தரீய நறும் துகில் சாத்தி நான
பற்பல கலவை சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர்
#1210
திருவடி மலர் மேல் பூத்த செழு நகை சோதி என்ன
மருவிய தரள கோவை மணி சரி அணைய சாத்தி
விரி சுடர் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி
#1211
தண் சுடர் பரிய முத்து தமனிய நாணில் கோத்த
கண் கவர் கோவை பத்தி கதிர் கடி சூத்திரத்தை
வெண் சுடர் தரள மாலை விரி சுடர் கொடுக்கின் மீது
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி
#1212
ஒளி கதிர் தரள கோவை உதர பந்தனத்தின் மீது
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தை சாத்தி
குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம் சாத்தி
#1213
வாள் விடு வயிர கட்டு மணி விரல் ஆழி சாத்தி
தாளுறு தட கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி
நீள் ஒளி முழங்கை பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தி
தோள் வளை தரள பைம் பூண் சுந்தர தோள் மேல் சாத்தி
#1214
திரு கழுத்து ஆரம் தெய்வ கண்டிகை மாலை சேர
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திரு ஆர் காதில்
வருக்க வெண் தரள கொத்தின் வடி குழை விளங்க சாத்தி
#1215
நீற்று ஒளி தழைத்து பொங்கி நிறை திரு நெற்றி மீது
மேற்பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்ன
பாற்படு முத்தின் பார பனி சுடர் திரணை சாத்தி
ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்
#1216
இவ்வகை நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வ கோலம்
கைவினை மறையோர் செய்ய கடி கொள் செங்கமல தாதின்
செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை
எவ்வுலகோரும் ஏத்த தொழுது தாம் எடுத்து பூண்டார்
#1217
அழகினுக்கு அணியாம் வெண் நீறும் அஞ்சு_எழுத்தும் ஓதி சாத்தி
பழகிய அன்பர் சூழ படர் ஒளி மறுகில் எய்தி
மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது
#1218
எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண் ஏர் கற்பக புது பூ_மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்து பொங்கி
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்
#1219
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர்
அடர் புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்க
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல
வட நிரை அணிந்த முத்தின் மணி குடை நிழற்ற வந்தார்
#1220
சீர் அணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின்
ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளி தாரை எல்லாம்
பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு
தாரணி உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என்று
#1221
மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள்
எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப்பெற்ற
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க
#1222
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செம் கை பற்ற
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ
கற்பக பூம் கொம்பு அன்னார் தம்மையும் காப்பு சேர்த்து
பொற்புறும் சடங்கு முன்னர் பரிவுடன் செய்து அ வேலை
#1223
செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ
பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை
நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார்
#1224
மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும்
தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த
காமர் பொன் கலச நல் நீர் இருக்குடன் கலந்து வீச
#1225
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச
மண்ணகம் நிறைந்த கந்த மந்தமாருதமும் வீச
கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடு
புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார்
#1226
பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரள பத்தி வளர் மணி சிவிகை-நின்றும்
பல் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார்
#1227
மறை குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம்
நிரைத்த நீர் பொன் குடங்கள் நிரை மணி விளக்கு தூபம்
நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில்
உறை பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார்
#1228
ஆங்கு முன் இட்ட செம்பொன் அணி மணி பீடம்-தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்ன
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறி
பாங்கு ஒளி பரப்ப நின்றார் பரசமயங்கள் வீழ்த்தார்
#1229
எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர்
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து
கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல்
விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார்
#1230
மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்ல
கங்கையின் கொழுந்து செம்பொன் இம வரை கலந்தது என்ன
அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார்
எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார்
#1231
அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை
#1232
திருமகள் கொடுக்க பெற்ற செழு மறை முனிவர்-தாமும்
அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும்
பெரு மகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார்
#1233
வந்து முன் எய்தி தான் முன் செய் மா தவத்தின் நன்மை
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம்
கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி
#1234
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலை மேல் கொண்டு
பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர்
உருப்பு ஒலி உதர துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும்
#1235
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர் கை-தன்னில்
மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார்
தரு முறை கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்-தன்
அரு நிதி பாவையாரை பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார்
#1236
நல் தவ கன்னியார் கை ஞானசம்பந்தர் செம் கை
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மண பிணை அன்னாரை
சுற்றம் முன் சூழ்ந்து போற்ற கொண்டு முன் துன்னினார்கள்
#1237
ஏகமாம் சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வல-பால் எய்தி
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை
மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்றிருந்த வெள்ளை
மேகமொடு இசையும் மின்னு கொடி என விளங்க வைத்தார்
#1238
புனித மெய் கோல நீடு புகலியார் வேந்தர்-தம்மை
குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட
நனி மிக கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி
#1239
பத்தியில் குயிற்றும் பைம்பொன் பவள கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத்தின் கீழ் செழும் திருநீலநக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய
#1240
மறை ஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த
பொறை அணி முந்நூல் மார்பர் புகர்_இல் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை எரி வலம்கொள்ள வேண்டி
#1241
அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு
ஒரு படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம்-தன்னில்
விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று
திரு பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்
#1242
மந்திர முறையால் உய்த்த எரி வலம் ஆக மாதர்
தம் திரு கையை பற்றும் தாமரை செம் கையாளர்
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்-தன்னோடும்
அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க
#1243
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கி சூழ
அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண்
உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி
குல மணம் புரிவித்தார்-தம் கோயிலை நோக்கி வந்தார்
#1244
சிவன் அமர்ந்து அருளும் செல்வ திரு பெருமணத்துள் எய்தி
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கி
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட
நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க
#1245
காதல் மெய் பதிகம் நல்லூர் பெரு மணம் எடுத்து கண்டோர்
தீதுறு பிறவி பாசம் தீர்த்தல் செம்பொருளாக கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன்
பாத மெய் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட
#1246
தேவர்கள் தேவர்-தாமும் திருவருள்புரிந்து நீயும்
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று
மூவுலகு ஒளியால் விம்ம முழு சுடர் தாணு ஆகி
#1247
கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி
வாயிலை வகுத்து காட்ட மன்னு சீர் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு பரம் சுடர் தொழுது போற்றி
மா இரு ஞாலம் உய்ய வழியினை அருளி செய்வார்
#1248
ஞான மெய் நெறி-தான் யார்க்கும் நமச்சிவாய அ சொலாம் என்று
ஆன சீர் நமச்சிவாய திருப்பதிகத்தை அங்கண்
வானமும் நிலமும் கேட்க அருள்செய்து இ மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன
#1249
வரு முறை பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி
உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள்
திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார்
#1250
சீர் பெருகு நீலநக்கர் திரு முருகர் முதல் தொண்டர்
ஏர் கெழுவு சிவபாதஇருதயர் நம்பாண்டார் சீர்
ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர்
பார் நிலவு கிளை சூழ பன்னிகளோடு உடன் புக்கார்
#1251
அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கி சென்றோர்கள்
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினை பாசம்
துணிவித்த உணர்வினராய் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்
#1252
ஆறு வகை சமயத்தில் அரும் தவரும் அடியவரும்
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும்
வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும்
ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின்
#1253
காதலியை கைப்பற்றி கொண்டு வலம் செய்து அருளி
தீது அகற்ற வந்து அருளும் திருஞானசம்பந்தர்
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார்
போத நிலை முடிந்த வழி புக்கு ஒன்றி உடன் ஆனார்
#1254
பிள்ளையார் எழுந்தருளி புக்கு அதன் பின் பெரும் கூத்தர்
கொள்ள நீடிய சோதி குறி நிலை அ வழி கரப்ப
வள்ளலார்-தம் பழைய மண கோயில் தோன்றுதலும்
தெள்ளு நீர் உலகத்து பேறு_இல்லார் தெருமந்தார்
#1255
கண்_நுதலார் திரு மேனி உடன் கூட கவுணியனார்
நண்ணியது தூரத்தே கண்டு நணுக பெறா
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர்
எண்_இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார்
#1256
அரும் தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம்
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணி மேல்
பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால்
வரும் தகைமை கலிக்காமனார் செய்கை வழுத்துவேன்

மேல்

2 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

#1
நீடு வண் புகழ் சோழர் நீர் நாட்டிடை நிலவும்
மாடு பொன் கொழி காவிரி வட கரை கீழ்-பால்
ஆடு பூம் கொடி மாடம் நீடிய அணி நகர்-தான்
பீடு தங்கிய திரு பெருமங்கல பெயர்த்து-ஆல்
#2
இஞ்சி சூழ்வன எந்திர பந்தி சூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம்
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடி செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு
#3
விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடு வீதி
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம்
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில்
உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இரும் குடிகள்
#4
நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்து
காரினில் திகழ் கண்டர்-தம் காதலோர் குழுமி
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர் தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி என தகும் சிறப்பால்
#5
இன்ன வாழ் பதி அதனிடை ஏயர் கோ குடி-தான்
மன்னிய நீடிய வளவர் சேனாபதி குடி ஆம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய
பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினது-ஆல்
#6
அங்கண் மிக்க அ குடியினில் அவதரித்து உள்ளார்
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடி பணிவார் அடி சார்ந்து
பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார்
#7
புதிய நாள் மதி சடை முடியார் திரு புன்கூர்க்கு
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று
துதியினால் பரவி தொழுது இன்புறுகின்றார்
#8
நாவலூர் மன்னர் நாதனை தூது விட்டு அதனுக்கு
யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப
தேவர் தம்பிரான்-அவர் திறம் திருத்திய அதற்கு
மேய வந்த அ செயலினை விளம்புவான் உற்றேன்
#9
திருத்தொண்டத்தொகை அருளி திருநாவலூராளி
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர்
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள்
#10
தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த
வேளாளர் குண்டையூர் கிழார் எனும் மேதக்கோர்
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று
ஆளாக கொண்டவர் தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார்
#11
செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும் தீம் கரும்பின்
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள்
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல்
பல் நெடு நாள் பரவையார் மாளிகைக்கு படி சமைத்தார்
#12
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்க
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்கு போதாமை
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார்
#13
வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார்
#14
ஆரூரன்-தனக்கு உன்-பால் நெல் தந்தோம் என்று அருளி
நீர் ஊரும் சடை முடியார் நிதி கோமான் தனை ஏவ
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல்
கார் ஊரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது-ஆல்
#15
அ இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே
எவ்வுலகின் நெல் மலை-தான் இது என்றே அதிசயித்து
செவ்விய பொன் மலை வளத்தார் திருவருளின் செயல் போற்றி
கொவ்வை வாய் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்
#16
நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு
யாவரால் எடுக்கல் ஆகும் இ செயல் அவர்க்கு சொல்ல
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளி செய்து
தேவர்-தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்
#17
குண்டையூர் கிழவர்-தாமும் எதிர்கொண்டு கோது_இல் வாய்மை
தொண்டனார் பாதம்-தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட
அண்டர் தம்பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று
#18
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம்
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார்
#19
விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலை தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும்
தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று
#20
ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம்
மூள வரும் காதலுடன் முன் தொழுது பாடுதலும்
#21
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி
மிக பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறைய
புக பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில்
நிகர்ப்பு அரியது ஒரு வாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால்
#22
தம்பிரான் அருள் போற்றி தரையின் மிசை விழுந்து எழுந்தே
உம்பரால் உணர்வு அரிய திரு பாதம் தொழுது ஏத்தி
செம்பொன் நேர் சடையாரை பிற பதியும் தொழுது போய்
நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலனார்
#23
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரை புக்கு இறைஞ்சி
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்தி புறம் போந்து
பாங்கு ஆனார் புடைசூழ்ந்து போற்றி இசைக்க பரவையார்
ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர்
#24
கோவை வாய் பரவையார் தாம் மகிழும்படி கூறி
மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்ததன் பின்
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருவருளின்
ஏவலினால் அ இரவு பூதங்கள் மிக்கு எழுந்து
#25
குண்டையூர் நெல் மலையை குறள் பூத படை கவர்ந்து
வண்டு உலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன-ஆல்
#26
அ விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து
நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு
இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார்
#27
நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும்
போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார்
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இ நெல்லும்
போக்கும் இடம் அரிது ஆகும் என பலவும் புகல்கின்றார்
#28
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார்
இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம்
பொன் தங்கு மாளிகையில் புக பெய்து கொள்க என
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார்
#29
அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்கு பறை அறைந்த
பணியாலே மனை நிறைத்து பாங்கு எங்கும் நெல் கூடு
அணியாமல் கட்டி நகர் களிகூர பரவையார்
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார்
#30
நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறை நாள்
செம்பொன் புற்று இடம் கொண்டு வீற்றிருந்த செழும் தேனை
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார்
#31
குலவு புகழ் கோட்டிலியார் குறை இரந்து தம் பதி-கண்
அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார்
#32
தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வ திருவாரூர்
காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணி
பாவை_பாகர்-தமை பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார்
#33
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி
ஞாலம் நிகழ் கோள் புலியார்-தம் நாட்டியத்தான் குடி நண்ண
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி
கோல மணி மாளிகையின்-கண் ஆர்வம் பெருக கொடு புக்கார்
#34
தூய மணி பொன் தவிசில் எழுந்தருளி இருக்க தூ நீரால்
சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால்
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார்
#35
பூம் தண் பனி நீர் கொடு சமைத்த பொருவு_இல் விரை சந்தன கலவை
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறை மான் மத சேறு
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன்
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி
#36
வேறுவேறு திருப்பள்ளி தாம பணிகள் மிக எடுத்து
மாறு_இலாத மணி திரு ஆபரண வருக்கம் பல தாங்கி
ஈறு_இல் விதத்து பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி
ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார்
#37
செங்கோல் அரசன் அருள் உரிமை சேனாபதி ஆம் கோட்புலியார்
நம் கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால்
தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவார்
#38
ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த
தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த
மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர்
தூ நாண் மலர் தாள் பணிவித்து தாமும் தொழுது சொல்லுவார்
#39
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே
மகண்மையா கொண்டார் பரவையார்-தம் கொழுநனார்
#40
கோதை சூழ்ந்த குழலாரை குறங்கின் வைத்து கொண்டு இருந்து
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உள் கசிவால் அணைத்து உச்சி
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பி தம்பிரான் தோழர்
#41
வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திரு கோபுரம் இறைஞ்சி
ஒன்றும் உள்ளத்தொடும் அன்பால் உச்சி குவித்த கரத்தோடும்
சென்று புக்கு பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்து
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை
#42
சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு அதனின்னிடை சிங்கடியாரை
பிறப்பித்து எடுத்த பிதா ஆக தம்மை நினைத்த பெற்றியினால்
மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி
நிற பொற்பு உடைய இசை பாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார்
#43
அங்கு-நின்றும் எழுந்தருளி அளவு_இல் அன்பின் உள் மகிழ
செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி
மங்கை பாகர் தம்மை பதிகம் வலிவலத்து கண்டேன் என்று
எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார்
#44
நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டு உகந்தீர்
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி
மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமை திருவாரூர்
சென்று குறுகி பூங்கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து
#45
இறைஞ்சி போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வ திருவாரூர்
புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றி புற்று இடமாய்
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார்
#46
செறி புன் சடையார் திருவாரூர் திரு பங்குனி உத்தர திரு நாள்
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு அறுக்க
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணிய எழுந்தருளி சென்று அங்கு எய்தினார்
#47
சென்று விரும்பி திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சி
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து
நின்று பதிக இசை பாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார்
#48
சிறிது பொழுது கும்பிட்டு சிந்தை முன்னம் அங்கு ஒழிய
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர்
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல்
#49
துயில் வந்து எய்த தம்பிரான் தோழர் அங்கு திருப்பணிக்கு
பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன்
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார்
#50
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண்
பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம்
பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி
#51
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல்
கொண்டு கோயில் உள் புக்கு குறிப்பில் அடங்கா பேர் அன்பு
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழி மாலை
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து பாடினார்
#52
பதிகம் பாடி திருக்கடைக்காப்பு அணிந்து பரவி புறம் போந்தே
எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும்
பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர்
#53
செய்ய சடையார் திருப்பனையூர் புறத்து திரு கூத்தொடும் காட்சி
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி
ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார்
#54
வளம் மல்கிய சீர் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி
அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர்
தளவ முறுவல் பரவையார்-தம் மாளிகையில் புக தாமும்
உளம் மன்னிய தம் பெருமானார்-தம்மை வணங்கி உவந்து அணைந்தார்
#55
வந்து பரவை பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள்
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப்பாடியார்-தம் காவலனார்
#56
பல நாள் அமர்வார் பரமர் திருவருளால் அங்கு-நின்றும் போய்
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்து சென்று எய்தி
வலமா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மையினான் என்னும் தமிழ்_மாலை
#57
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழிமிழலையினில்
நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டி
நாடு மகிழ அவ்வளவு நடை காவணம் பாவாடைஉடன்
மாடு கதலி பூகம் நிரை மல்க மணி தோரணம் நிரைத்து
#58
வந்து நம்பி-தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்று அவரும்
சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சி சேண் விசும்பின்
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார்
#59
படம் கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவிய
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் என
தடம் கொள் செம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு சாரும் நாள்
#60
வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்-பால்
தேசு மிக்க திருவருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள்
பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும்
மாசு_இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரை புத்தூர் அணைந்தார்
#61
செழு நீர் நறையூர் நிலவு திரு சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி
விழு நீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திரு புத்தூர் வணங்கி
தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள்
#62
புனிதனார் முன் புகழ் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து
முனிவர் போற்ற எழுந்தருளி மூரி வெள்ள கங்கையினில்
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து
இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவாவடுதுறையில்
#63
விளங்கும் திருவாவடுதுறையில் மேயார் கோயில் புடைவலம்கொண்டு
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார்
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான்
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்து தமிழ் சொல்_மாலை சாத்தினார்
#64
சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூட
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார்
தீர்த்த பொன்னி தென் கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்து
மூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடி தலைவர்
#65
மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுர சொல் மலர்கள்
பன்னி புனைந்து பணிந்து ஏத்தி பரவி போந்து தொண்டருடன்
அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை
முன்னி புக்கு வலம்கொண்டு முதல்வர் திரு தாள் வணங்கினார்
#66
பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடி பெயர்ந்து நிறை
திருவின் மலியும் சிவபுரத்து தேவர் பெருமான் கழல் வணங்கி
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து
மருவும் பதிகள் பிற பணிந்து கலையநல்லூர் மருங்கு அணைந்தார்
#67
செம்மை மறையோர் திரு கலையநல்லூர் இறைவர் சேவடி கீழ்
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார்
கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம்
மெய்ம்மை புராணம் பலவும் மிக சிறப்பித்து இசையின் விளம்பினார்
#68
அங்கு-நின்று திரு குடமூக்கு அணைந்து பணிந்து பாடி போய்
மங்கை_பாகர் வலஞ்சுழியை மருவி பெருகும் அன்பு உருக
தங்கு காதல் உடன் வணங்கி தமிழால் பரசி அரசினுக்கு
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார்
#69
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி
எல்லாம் இறைஞ்சி ஏத்தி போந்து இசையால் பரவும் தம்முடைய
சொல் ஊதியமா அணிந்தவர்-தம் சோற்று துறையின் மருங்கு எய்தி
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார்
#70
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூர பரவிய பின்
கெழு நீர்மையினில் அருள் பெற்று போந்து பரவையார் கேள்வர்
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார்
#71
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை
மேவி வணங்கி பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சி
சேவில் வருவார் திரு ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு
பாவு சயனத்து அமர்ந்து அருளி பள்ளிகொள்ள கனவின்-கண்
#72
மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து
நிழலார் சோலை கரை பொன்னி வட-பால் ஏறி நெடு மாடம்
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர்
#73
அணைந்து திரு கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை
குணம் கொள் அருளின் திறம் போற்றி கொண்ட புளகத்துடன் உருகி
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து
#74
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து
மன்னும் பதியில் சில நாள்கள் வைகி தொண்டருடன் மகிழ்ந்து
பொன்னி கரையின் இரு மருங்கும் பணிந்து மேல்-பால் போதுவார்
#75
செய்ய சடையார் திரு ஆனைக்காவில் அணைந்து திருத்தொண்டர்
எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து
மெய்யும் முகிழ்ப்ப கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார்
#76
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம்
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர்-தமை நோக்கி
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார்
உறையூர் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி
#77
வளவர் பெருமான் மணி ஆரம் சாத்தி கொண்டு வரும் பொன்னி
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவி போக ஏதம் உற
அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி
தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்க சாற்றினார்
#78
சாற்றி அங்கு தங்கு நாள் தயங்கும் பவள திரு மேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால்
போற்றி அங்கு-நின்றும் போய் பொருவு_இல் அன்பர் மருவிய தொண்டு
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார்
#79
சென்று திரு கோபுரம் இறைஞ்சி தேவர் மலிந்த திருந்து மணி
முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி
நன்று பெருகும் பொருள் காதல் நயப்பு பெருக நாதர் எதிர்
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று
#80
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திரு தோழமை பணியால்
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால்
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார் போல்
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார்
#81
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்திடை புலம் கெழும் பிறப்பால்
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார்
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர்
#82
இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி
எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள்
#83
அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும்
எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி
பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரை கண்டார்
#84
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதர கை குவித்து இறைஞ்சி
வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று
அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார்
#85
பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று
கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி
குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில்
#86
கொங்கினில் பொன்னி தென் கரை கறையூர் கொடு முடி கோயில் முன் குறுகி
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிட தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி
இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப
#87
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு_எழுத்து அறிய எப்பொழுதும்
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால்
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாய திருப்பதிகம்
#88
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை
நிலவிய சிந்தையுடன் திருவருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள்
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை
குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால்
#89
அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்ட
கைத்தலம் குவித்து கண்கள் ஆனந்த கலுழி நீர் பொழிதர கண்டார்
#90
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை_இல் அன்பு என்பினை உருக்க
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்க
தாண்டவம் புரியும் தம்பிரானாரை தலைப்பட கிடைத்த பின் சைவ
ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார்
#91
அ நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால்
என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார்
#92
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும்
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து
மேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில்
#93
வீடு தரும் இ கற்குடியில் விழுமியாரை பணிந்து இறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பாடி
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார்
#94
செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில்
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூட
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார்
இம்பர் வாழ இன்னம்பர் நகரை சேர எய்தினார்
#95
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார்
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்ற
சேரும் உள்ளம் மிக்கு எழ மெய் பதிகம் பாடி சென்றார்
#96
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில்
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழ போதும் என்று
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே
#97
அ பதி கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய்நல்லூரினில்
ஒப்பு_அரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர்
இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார்
#98
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்து
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று
ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால்
பீடு நீடு நிலத்தின் மேல் பெருக பணிந்து வணங்கினார்
#99
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிக பொழிந்து எழும் அன்பினால்
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில்
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார்
#100
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி
தம்பிரான் அமர்ந்த தானம் பலப்பல சார்ந்து தாழ்ந்து
கொம்பனார் ஆடல் நீடு கூடலையாற்றூர் சார
#101
செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி
ஒப்பு_அரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு
மெய் பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார்
முப்புரிநூலும் தாங்கி நம்பிஆரூரர் முன்பு
#102
நின்றவர்-தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய் தாழ்வார்
இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன
குன்ற வில்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏற
சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல
#103
கண்டவர் கைகள் கூப்பி தொழுது பின் தொடர்வார் காணார்
வண்டலர் கொன்றையாரை வடிவு உடை மழு என்று ஏத்தி
அண்டர்-தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று
கொண்டு எழும் விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார்
#104
கூடலையாற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்-தம்
பீடு உயர் கோயில் புக்கு பெருகிய ஆர்வம் பொங்க
ஆடக பொதுவில் ஆடும் அறை கழல் வணங்கி போற்றி
நீடு அருள் பெற்று போந்து திரு முதுகுன்றில் நேர்ந்தார்
#105
தட நிலை கோபுரத்தை தாழ்ந்து முன் இறைஞ்சி கோயில்
புடை வலம்கொண்டு புக்கு போற்றினர் தொழுது வீழ்ந்து
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்_மாலை
தொடை நிகழ் பதிகம் பாடி தொழுது கை சுமந்து நின்று
#106
நாதர்-பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம்
கோது_அறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடியும் பாட
#107
பனி மதி சடையார்-தாமும் பன்னிரண்டாயிரம் பொன்
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி
தனி வரும் மகிழ்ச்சி பொங்க தாழ்ந்து எழுந்து அருகு சென்று
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார்
#108
அருளும் இ கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்ன
தெருளுற எழுந்த வாக்கால் செழு மணிமுத்தாற்றில் இட்டி
பொருளினை முழுதும் ஆரூர் குளத்தில் போய் கொள்க என்றார்
#109
என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர்
வன் தொண்டர் மச்சம் வெட்டி கை கொண்டு மணிமுத்தாற்றில்
பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டு போதுகின்றார்
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று
#110
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில்
காவியம் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று
வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார்
#111
மாடு உள பதிகள் சென்று வணங்கி போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்த கூத்தர்
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு
சேடு உயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார்
#112
பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும்
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர்
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன்
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார்
#113
ஆடிய திரு முன்பு ஆன அம் பொனின் கோபுரத்தின்
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில்
நாடகம் செய்ய தாளை நண்ணுற உள் நிறைந்து
நீடும் ஆனந்த வெள்ள கண்கள் நீர் நிறைந்து பாய
#114
பரவு வாய் குளறி காதில் படி திரு படியை தாழ்ந்து
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தர பெருகி நெஞ்சில்
கரவு இலாத அவரை கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள
#115
மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல்
அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம்
தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும்
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி
#116
மீளாத அருள் பெற்று புறம் போந்து திரு வீதி மேவி தாழ்ந்தே
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேர் அன்பால் பொன் பதியை வணங்கி போய் மறலி வீழ
தாளாண்மை கொண்டவர்-தம் கருப்பறியலூர் வணங்கி சென்று சார்ந்தார்
#117
கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி
சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில்
#118
கண்_நுதலார் விரும்பு கருப்பறியலூரை கைதொழுது நீங்கி போய் கயல்கள் பாயும்
மண்ணி வளம் படி கரையை நண்ணி அங்கு மாது_ஒரு_பாகத்தவர் தாள் வணங்கி போற்றி
எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்து போற்றி
#119
திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தி தேவர் பெருமானார்-தம் கோயில் வாயில்
உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால்
பொருப்பு அரையன் மட பாவை இட-பாலானை போற்றி இசைத்து புறம் போந்து தங்கி பூ மென்
கருப்பு வயல் வாழ்கொளிபுத்தூரை நீங்கி கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது
#120
கான் நாட்டு முள்ளூரை சாரும் போது கண்_நுதலார் எதிர் காட்சி கொடுப்ப கண்டு
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று
வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி
தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார்
#121
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும்
சித்த நிலை திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி
அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்
#122
காட்டு நல் வேள்வி கோலம் கருத்துற வணங்கி காதல்
நாட்டிய உள்ளத்தோடு நம்பிஆரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு-நின்று ஏகி அன்பு
பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சி போந்து
#123
எஞ்சாத பேர் அன்பில் திருத்தொண்டர் உடன் எய்தி
நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி
மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர் தடங்கள் புடைசூழும்
செஞ்சாலி வயல் மருத திருவாரூர் சென்று அடைந்தார்
#124
செல்வ மலி திருவாரூர் தேவரொடு முனிவர்களும்
மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு
எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து
பல்கு திருத்தொண்டருடன் பரமர் திரு முன் அணைந்தார்
#125
மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத
சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள்
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சி புறம் போந்து
தாவாத புகழ் பரவையார் திரு மாளிகை சார்ந்தார்
#126
பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்ற
பங்கய கண் செம் கனிவாய் பரவையார் அடி வணங்கி
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள்
#127
நாயனார் முதுகுன்றர் நமக்கு அளித்த நல் நிதியம்
தூய மணிமுத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர்
கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே
போய் எடுத்து கொடு போத போதுவாய் என புகல
#128
என்ன அதிசயம் இது-தான் என் சொன்னவாறு என்று
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார்
நல்_நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில்
பொன் அடைய எடுத்து உனக்கு தருவது பொய்யாது என்று
#129
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன்
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரை புக்கு இறைஞ்சி
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலை
பாங்கு திரு குளத்து அணைந்தார் பரவையார் தனி துணைவர்
#130
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி
முற்று இழையார்-தமை நிறுத்தி முனைப்பாடி திரு நாடர்
கற்றை வார் சடையாரை கைதொழுது குளத்தில் இழிந்து
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்கு தடவுதலும்
#131
நீற்று அழகர் பாட்டு உவந்து திருவிளையாட்டினில் நின்று
மாற்றுறு செம்பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள
ஆற்றினில் இட்டு குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ
சாற்றும் என கோல் தொடியார் மொழிந்து அருள தனி தொண்டர்
#132
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என
மின் செய்த நூல் மார்பின் வேதியர்-தாம் முதுகுன்றில்
பொன் செய்த மேனியினீர் என பதிகம் போற்றி இசைத்து
#133
முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள்
சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு
எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார்
#134
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும்
காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை
கூத்தா தந்து அருள்வாய் இ கோமளத்தின் முன் என்று
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும்
#135
கொந்து அவிழ் பூம் கொன்றை முடி கூத்தனார் திருவருளால்
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற
அந்தரத்து மலர்_மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர்
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார்
#136
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து
மூலம் என கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்க
நீலமிடற்றவர் அருளால் உரை தாழ பின்னும் நெடு
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன் தொண்டர்
#137
மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும்
பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும்
ஓட்டு அறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக்கொண்டு கரை ஏறினார்
#138
கரை ஏறி பரவையார் உடன் கனக ஆனது எலாம்
நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கி
திரை ஏறும் புனல் சடில திரு மூலத்தானத்தார்
விரை ஏறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில்
#139
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து
அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார்
கந்த மலி மலர் சோலை நாவலர்-தம் காவலனார்
#140
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்து அருளும் பரம்பொருளை
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப்பதிகம்
தணியாத ஆனந்தம் தலை சிறப்ப தொண்டருடன்
துணிவு ஆய பொருள் வினவி தொழுது ஆடி பாடுவார்
#141
பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி
உள் நிறையும் மன களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப
கண் நிறையும் புனல் பொழிய கரை இகந்த ஆனந்தம்
எண் நிறைந்தபடி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்
#142
இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும்
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே
அன்புற்ற காதலுடன் அளவு_இறந்த பிற பதியும்
பொன் புற்கு என்றிட ஒளிரும் சடையாரை தொழ போவார்
#143
பரிசனமும் உடன் போத பாங்கு அமைந்த பதிகள்-தொறும்
கரி உரிவை புனைந்தார்-தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தி
துரிசு அறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்கு
புரிவுறு மெய் தொண்டர் எதிர்கொள்ள புக்கு அணைந்தார்
#144
விண் தடவு கோபுரத்தை பணிந்து கரம் மேல் குவித்து
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர்
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலம் மிசை பணிந்தார்
#145
அங்கணரை பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய்
மங்குல் அணி மணி மாட திருக்கடவூர் வந்து எய்தி
திங்கள் வளர் முடியார்-தம் திரு மயானமும் பணிந்து
பொங்கும் இசை பதிகம் மருவார் கொன்றை என போற்றி
#146
திரு வீரட்டானத்து தேவர் பிரான் சின கூற்றின்
பொரு வீரம் தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி
மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த
பெரு வீரர் வலம் புரத்து பெருகு ஆர்வத்தொடும் சென்றார்
#147
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி
உரை ஓசை பதிகம் எனக்கு இனி ஓதி போய் சங்கம்
நிரையோடு துமி தூப மணி தீபம் நித்தில பூம்
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்
#148
தேவர் பெருமான்-தன்னை திருச்சாய்க்காட்டினில் பணிந்து
பாவலர் செந்தமிழ்_மாலை திருப்பதிகம் பாடி போய்
மேவலர்-தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி
நாவலர் காவலர் அடைந்தார் நனிபள்ளி திரு நகரில்
#149
நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல் தமிழின்
புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல்
பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய்
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார்
#150
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி
ஒன்றிய அன்பு உள் உருக பாடுவார் உடைய அரசு
என்றும் உலகு இடர் நீங்க பாடிய ஏழ் எழுநூறும்
அன்று சிறப்பித்து அம் சொல் திருப்பதிகம் அருள்செய்தார்
#151
அ பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில்
செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில்
ஒப்பு_அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார்
மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார்
#152
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது
விடல் ஆமே எனும் காதல் விருப்புறும் அ திருப்பதிகம்
அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி
உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார்
#153
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சி
கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய
கங்கை சடை கரந்தவர்-தாம் எதிர் காட்சி கொடுத்து அருள
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார்
#154
திருஞானசம்பந்தர் திரு கைகளால் ஒற்றி
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி
அருளாலே திரு தாளம் அளித்தபடி சிறப்பித்து
பொருள் மாலை திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார்
#155
மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று
தாவாத புகழ் சண்பை வலம்கொண்டு தாழ்ந்து இறைஞ்சி
நாவார் முத்தமிழ் விரகர் நல் பதங்கள் பரவி போய்
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார்
#156
உண் நீரின் வேட்கையுடன் உறு பசியால் மிக வருந்தி
பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர்
கண் நீடு திரு நுதலார் காதல் வர கருத்து அறிந்து
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழி சார்கின்றார்
#157
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரை குளிர் மென்
பான் நல் மலர் தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார்
மான் அமரும் திரு கரத்தார் வன் தொண்டர்-தமை பார்த்து
#158
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த்திருப்ப
திருவாரூர் தம்பிரான் தோழர் திருத்தொண்டருடன்
வருவார் அ பந்தரிடை புகுந்து திரு மறைவர்-பால்
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம என பேசி
#159
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கி
சால மிக பசித்தீர் இ பொதி சோறு தருகின்றேன்
காலம் இனி தாழாமே கை கொண்டு இங்கு இனிது அருந்தி
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என
#160
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கி
சென்று திருத்தொண்டருடன் திரு அமுது செய்து அருளி
#161
எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்த
பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த
உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால்
#162
சங்கரனார் திருவருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில
கங்கை சடை கரந்தார் அ பந்தரொடும் தாம் கரந்தார்
#163
சித்த நிலை திரியாத திருநாவலூர் மன்னர்
அ தகுதியினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து
மெய் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்
#164
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் புக்கு
வரு காதல் கூர வலம்கொண்டு திரு முன் வணங்கி
பருகா இன் அமுதத்தை கண்களால் பருகினார்
#165
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி
பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்தி
உள் நாடும் பெரும் காதல் உடையவர்-தாம் புறத்து எய்தி
நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார்
#166
அ நாளில் தம் பெருமான் அருள் கூட பணிந்து அகன்று
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி
கல் நாடும் எயில் புடைசூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி
தென் நாவலூர் மன்னர் திரு தில்லை வந்து அடைந்தார்
#167
சீர் வளரும் திரு தில்லை திரு வீதி பணிந்து புகுந்து
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி
பார் வளர மறை வளர்க்கும் பதி-அதனில் பணிந்து உறைவார்
போர் வளர் மேரு சிலையார் திரு தினைமாநகர் புகுந்தார்
#168
திரு தினைமாநகர் மேவும் சிவ கொழுந்தை பணிந்து போய்
நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கி
பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திருநாவலூர்
கருத்தில் வரும் ஆதரவால் கைதொழ சென்று எய்தினார்
#169
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் என கேட்டு
பெரு நாம பதியோரும் தொண்டர்களும் பெரு வாழ்வு
வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய
செரு நாகத்து உரி புனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார்
#170
மேவிய அ தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை
மூவுலகும் போய் ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்தி
ஆவியினும் அடைவுடையார் அடி கமலத்து அருள் போற்றி
கோவலன் நான்_முகன் எடுத்து பாடியே கும்பிட்டார்
#171
நலம் பெருகும் அ பதியில் நாடி அன்பொடு நயந்து
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து
சலம் பெருகும் சடை முடியார் தாள் வணங்கி அருள் பெற்று
பொலம் புரி நூல் மணி மார்பர் பிற பதியும் தொழ போவார்
#172
தண்டகமாம் திரு நாட்டு தனி விடையார் மகிழ் இடங்கள்
தொண்டர் எதிர்கொண்டு அணைய தொழுது போய் தூய நதி
வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே
எண் திசையார் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார்
#173
தேன் ஆர்ந்த மலர் சோலை திருக்கழுக்குன்றத்து அடியார்
ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்து அருளி
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார்
#174
பாடிய அ பதியின்-கண் இனிது அமர்ந்து பணிந்து போய்
நாடிய நல் உணர்வினொடும் திருக்கச்சூர்-தனை நண்ணி
ஆடக மா மதில் புடைசூழ் ஆல கோயிலின் அமுதை
கூடிய மெய் அன்பு உருக கும்பிட்டு புறத்து அணைந்தார்
#175
அணைந்து அருளும் அ வேலை அமுது செயும் பொழுதாக
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திரு வாயில்
புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார்
#176
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார்
மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஓடு ஏந்தி
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய் புறப்பட்டு
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூற செப்புவார்
#177
மெய் பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர் வேட்கை விட
இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன்
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் என
செப்பி அவர் கச்சூர் மனை-தோறும் சென்று இரப்பார்
#178
வெண் திருநீறு அணி திகழ விளங்கு நூல் ஒளி துளங்க
கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு
புண்டரிக கழல் புவி மேல் பொருந்த மனை-தொறும் புக்கு
கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார்
#179
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும்
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார்
#180
வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த
ஓங்கு தவ தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப
ஆங்கு அருகு நின்றார் போல் அவர்-தம்மை அறியாமே
நீங்கினார் எ பொருளும் நீங்காத நிலைமையினார்
#181
திருநாவலூராளி சிவயோகியார் நீங்க
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே
பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண்
உரு நாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம் என உருகி
#182
முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார்-தம் பெரும் கருணை
அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி
புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து
மது வார் இதழி முடியாரை பாடி மகிழ்ந்து வணங்கினார்
#183
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம்
முந்தி தொண்டர் எதிர்கொள்ள புக்கு முக்கண் பெருமானை
சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே
அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார்
#184
அன்று வெண்ணெய்நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்-தாம்
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார்
#185
மல்கு மகிழ்ச்சி மிக பெருக மறுகு மணி தோரணம் நாட்டி
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்து
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர
பல்கு தொண்டருடன் கூடி பதியின் புறம் போய் எதிர்கொண்டார்
#186
ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதில் கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார்
#187
ஆழி நெடு மால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன்
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கி புகுந்து அருளி
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம்கொண்டு
வாழி மணி பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர்
#188
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம்
செய்ய கமல சேவடி கீழ் திருந்து காதலுடன் வீழ்ந்தார்
#189
வீழ்ந்து போற்றி பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால்
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லை காஞ்சி நகர்
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார்
#190
சீரார் காஞ்சி மன்னும் திரு காமகோட்டம் சென்று இறைஞ்சி
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திருமேற்றளி மேவி
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம்
பாரார் பெருமை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்
#191
ஓண காந்தன்தளி மேவும் ஒருவர்-தம்மை உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமை திறம் பேசி
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும்
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார்
#192
அங்கண் அமர்வார் அனேகதங்காபதத்தை எய்தி உள் அணைந்து
செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ்
தங்கும் இடமாம் என பாடி தாழ்ந்து பிறவும் தானங்கள்
பொங்கு காதலுடன் போற்றி புரிந்த பதியில் பொருந்தும் நாள்
#193
பாடல் இசையும் பாணியினால் பாவை தழுவ குழை கம்பர்
ஆடல் மருவும் சேவடிகள் பரவி பிரியாது அமர்கின்றார்
நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால்
மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனம்காட்டூரில் வந்து அடைந்தார்
#194
செல்வம் மல்கு திரு பனம்காட்டூரில் செம்பொன் செழும் சுடரை
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்பு பொழி கண்ணீர்
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம்
நல்ல இசையின் உடன் பாடி போந்து புறம்பு நண்ணுவார்
#195
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கி பரவி திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சி போய் சாரும் மேல்-பால் சடை கற்றை
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கி பெருந்தொண்டர்
சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார்
#196
தடுக்கலாகா பெரும் காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்து ஆட்கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறும்
அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார்
#197
வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுர இசை
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்
#198
வட மாதிரத்து பருப்பதமும் திரு கேதார மலையும் முதல்
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து
திடமாம் கருத்தில் திருப்பதிகம் பாடி காதல் சிறந்து இருந்தார்
#199
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார்
தங்கும் இடங்கள் எனை பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடி
பொங்கு புணரி கரை மருங்கு புவியுள் சிவலோகம் போல
திங்கள் முடியார் அமர்ந்த திருவொற்றியூரை சென்று அடைந்தார்
#200
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள
எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார்
வண்ண வீதி வாயில்-தொறும் வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்து தொழ எழுங்கால்
#201
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில்
புர மங்கையர்கள் நடம் ஆட பொழியும் வெள்ள பூ_மாரி
அரமங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார்
பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர்
#202
ஒற்றியூரின் உமையோடும் கூட நின்றார் உயர் தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டி
சுற்றம் அணைந்து துதி செய்ய தொழுது தம்பிரான் அன்பர்
கொற்ற மழ ஏறு உடையவர்-தம் கோயில் வாயில் எய்தினார்
#203
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர்
கூனல் இளம் வெண் பிறை சடையார் கோயில் வலம்கொண்டு எதிர் குறுகி
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன்
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர்
#204
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும்
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமல சேவடியில்
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்து பாடினார்
#205
பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்ற புறம் போந்து
நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்ற
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திரு பாதம்
கூடும் காலங்களில் அணைந்து பரவி கும்பிட்டு இனிது இருந்தார்
#206
இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக
அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார்
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர்
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரிய சாற்றுவாம்
#207
நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர்
பால் ஆதரவு தரும் மகளார் ஆகி பார் மேல் அவதரித்தார்
ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார்
#208
மலையான் மடந்தை மலர் பாதம் மறவா அன்பால் வந்த நெறி
தலையாம் உணர்வு வந்து அணைய தாமே அரிந்த சங்கிலியார்
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு
நிலை ஆயின அ பருவங்கள்-தோறும் நிகழ நிரம்புவார்
#209
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றி தெய்வ நிகழ் தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார்
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த
சாரும் பதத்தில் தந்தையார் தம்-கண் மனைவியார்க்கு உரைப்பார்
#210
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும்
படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம்
கடி சேர் மணமும் இனி நிகழும் காலம் என்ன கற்பு வளர்
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார்
#211
தாயாரோடு தந்தையார் பேச கேட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்று இது எம்பெருமான் ஈசன் திருவருளே
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார்
#212
பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்து பரிந்து எடுத்தே
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என
தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார்
#213
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார்
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது
வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல்
சென்று திருவொற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என
#214
அந்த மாற்றம் கேட்டவர்-தாம் அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுக
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான்
சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார்
#215
தாதையாரும் அது கேட்டு தன்மை விளம்ப தகாமையினால்
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன்
தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான்
மாதராரை பெற்றார் மற்று அதனை கேட்டு மனம் மருண்டார்
#216
தையலார் சங்கிலியார் தம் திறத்து பேச தகா வார்த்தை
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய
செய்த விதி போல் இது நிகழ சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார்
#217
அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர்-ஆல்
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும்
குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர்
பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார்
#218
பண் ஆர் மொழி சங்கிலியாரை நோக்கி பயந்தாரொடும் கிளைஞர்
தெள் நீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல் கதியும்
கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகி கன்னிமாடத்து
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று
#219
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே
மற்று செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார்-தாம்
சொற்ற வண்ணம் செய துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார்
#220
சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து
துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லை பதியோர் இசைவினால்
கன்னிமாடம் மருங்கு அமைத்து கடி சேர் முறைமை காப்பு இயற்றி
மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி
#221
யாங்கள் உமக்கு பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி
ஓங்கு கன்னிமாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார்
தாங்கற்கு அரிய கண்கள் நீர் தாரை ஒழுக தரியாதே
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில்
#222
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார்
பூத நாதர் கோயிலினில் காலம்-தோறும் புக்கு இறைஞ்சி
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய
சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து
#223
பண்டு கயிலை திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம்
கொண்ட உணர்வு தலை நிற்ப குலவு மென் கொடி அனையார்
வண்டு மருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப
அண்டர் பெருமான் முடி சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள்
#224
அந்தி வண்ணத்து ஒருவர் திருவருளால் வந்த ஆரூரர்
கந்த மாலை சங்கிலியார் தம்மை காதல் மணம் புணர
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார்
#225
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரை
பண்டை முறைமையால் பணிந்து பாடி பரவி புறம் போந்து
தொண்டு செய்வார் திரு தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார்
புண்டரீக தடம் நிகழ் பூம் திரு மண்டபத்தின் உள் புகுந்தார்
#226
அன்பு நாரா அஞ்சு_எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே
என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து
மின் போல் மறையும் சங்கிலியார்-தம்மை விதியால் கண்ணுற்றார்
#227
கோவா முத்தும் சுரும்பு ஏறா கொழு மென் முகையும் அனையாரை
சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது சிந்தை நிறை
காவாது அவர்-பால் போய் விழ தம்-பால் காமனார் துரந்த
பூ வாளிகள் வந்துற வீழ தரியார் புறமே போந்து உரைப்பார்
#228
இன்ன பரிசு என்று அறிவ_அரிது-ஆல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி
தன்னுள் நீர்மையால் குழைத்து சமைத்த மின்னு கொடி போல்வாள்
என்னை உள்ளம் திரிவித்தாள் யார்-கொல் என்று அங்கு இயம்புதலும்
#229
அங்கு நின்றார் விளம்புவார் அவர்-தாம் நங்கை சங்கிலியார்
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன
இருவரால் இ பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார்
#230
மின்னார் சடையார் தமக்கு ஆளாம் விதியால் வாழும் எனை வருத்தி
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை
பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார்
#231
மலர் மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை
உலகம் எலாம் தாம் உடையாராயும் ஒற்றியூர் அமர்ந்த
இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார்
#232
மங்கை ஒரு-பால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின் கண்
கங்கை-தன்னை கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்கு
இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த
திங்கள் வதன சங்கிலியை தந்து என் வருத்தம் தீரும் என
#233
அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்தி புறத்து அணைந்தே
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில்
திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான்
தண் நிலா மின் ஒளிர் பவள சடையீர் அருளும் என தளர்வார்
#234
மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப
கதிரோன் மேலை கடல் காண மாலை கடலை கண்டு அயர்வார்
முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை
நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்துநினைந்து அழிய
#235
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்-பால் எய்தி சங்கிலியை
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்து
கொம்பை உனக்கு தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன
#236
அன்று வெண்ணெய்நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி
ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் என போற்றி
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர்
#237
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளி கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம்
தீண்டு கன்னிமாடத்து சென்று திகழ் சங்கிலியாராம்
தூண்டு சோதி விளக்கு அனையார்-தம்-பால் கனவில் தோன்றினார்
#238
தோன்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்தருளும்
பேற்றுக்கு என் யான் செய்வது என பெரிய கருணை பொழிந்து அனைய
நீற்று கோல வேதியரும் நேர் நின்று அருளி செய்கின்றார்
#239
சாரும் தவத்து சங்கிலி கேள் சால என்-பால் அன்பு உடையான்
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய்நல்லூரில்
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான்
வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார்
#240
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளி செய்த பொழுதின்-கண்
மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு_அரிய
சீத மலர் தாமரை அடி கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார்
#241
எம்பிரானே நீர் அருளி செய்தார்க்கு உரியேன் யான் இமையோர்
தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால்
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமய
கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார்
#242
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணி தொழுது உரைப்பார்
மன்னும் திருவாரூரின்-கண் அவர் தாம் மகிழ்ந்து உறைவது
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய்
மின்னும் புரி நூல் அணி மார்பீர் என்றார் குன்றா விளக்கு அனையார்
#243
மற்று அவர்-தம் உரைகொண்டு வன் தொண்டர் நிலைமையினை
ஒற்றிநகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார்
பொன்_தொடியாய் உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம்
அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி
#244
வேய் அனைய தோளியார்-பால் நின்று மீண்டு அருளி
தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார்-பால் அணைந்து
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால்
ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள
#245
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு
சென்று கிடைத்து இ இரவே செய்க என அருள்செய்தார்
#246
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள
#247
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர்
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று
கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் என குறிப்பால்
தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார்
#248
சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார்
மங்கை அவள்-தனை பிரியா வகை சபதம் செய்வதனுக்கு
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விட
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார்
#249
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டி கொண்டு அருள
உம்பர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய்
நம்பி நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள
எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி
#250
அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்று புறம் போத
செம் சடையார் அவர்-மாட்டு திருவிளையாட்டினை மகிழ்ந்தோ
வஞ்சி இடை சங்கிலியார் வழி அடிமை பெருமையோ
துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார்
#251
சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூளுற கடவன்
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே
கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள
#252
மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு_அரியீர்
அற்றம் எனக்கு அருள்புரிந்த அதனில் அடியேன் ஆக
பெற்றது யான் என கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய
வெற்றி மழ_விடையார்-தம் சேவடி கீழ் வீழ்ந்து எழுந்தார்
#253
தையலார் தமக்கு அருளி சடா மகுடர் எழுந்தருள
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அ இரவின்-கண்
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார்
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி
#254
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர்
தாம் கனவில் எழுந்தருளி தமக்கு அருளி செய்தது எலாம்
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும்
தாங்கு மகிழ்ச்சியும் எய்த சங்கிலியார்-தமை பணிந்தார்
#255
சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும்
தூய பணி பொழுது ஆக தொழில் புரிவார் உடன் போத
கோயிலின் முன் காலம் அது ஆகவே குறித்து அணைந்தார்
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர்
#256
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு
சென்று அணைந்து தம் பெருமான் திருவருளின் திறம் கூற
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார்
ஒன்றிய நாணொடு மடவாருடன் ஒதுங்கி உள் புகுந்தார்
#257
அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர்
இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும்படி இயம்ப
திங்கள் முடியார் திரு முன் போதுவீர் என செப்ப
சங்கிலியார் கனவு உரைப்ப கேட்ட தாதியர் மொழிவார்
#258
எம்பெருமான் இதற்காக எழுந்தருளி இமயவர்கள்
தம் பெருமான் திரு முன்பு சாற்றுவது தகாது என்ன
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும்
#259
மாதர் அவர் மகிழ் கீழே அமையும் என மனம் அருள்வார்
ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில்
ஆதலினால் உடன்படவே அமையும் என துணிந்து ஆகில்
போதுவீர் என மகிழ் கீழ் அவர் போத போய் அணைந்தார்
#260
தாவாத பெரும் தவத்து சங்கிலியாரும் காண
மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார்
பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடி புரவலனார்
#261
மேவிய சீர் ஆரூரர் மெய் சபதம் வினை முடிப்ப
காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கி
பாவியேன் இது கண்டேன் தம்பிரான் பணியால் என்று
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார்
#262
திருநாவலூராளி தம்முடைய செயல் முற்றி
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள் புகுந்து இறைஞ்சி
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என
பெரு நாமம் எடுத்து ஏத்தி பெரு மகிழ்ச்சி உடன் போந்தார்
#263
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின்
தார் புனையும் மண்டபத்து தம்முடைய பணி செய்து
கார் புனையும் மணிகண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி
ஏர் புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர
#264
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள
நின்ற புகழ் திருவொற்றியூர் நிலவு தொண்டர்க்கு
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார்
#265
நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை
இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார்
#266
மண் நிறைந்த பெரும் செல்வத்து திருவொற்றியூர் மன்னும்
எண் நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி
உள் நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ_மழை பொழிய
கண் நிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார்
#267
பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி-தன் அருளாலே
வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர்
புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால்
#268
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும்
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து
வீழும் அவர்க்கு இடை தோன்றி மிகும் புலவி புணர்ச்சி கண்
ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம்
#269
இ நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும்
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால்
சென்னி மதி புனைவார்-தம் திரு பாதம் தொழுது இருந்தார்
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல
#270
பொங்கு தமிழ் பொதிய மலை பிறந்து பூம் சந்தனத்தின்
கொங்கு அணைந்து குளிர் சாரலிடை வளர்ந்த கொழும் தென்றல்
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர்
மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு அருளும் வகை நினைந்தார்
#271
வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப்பெருமான்
ஒண்_நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதனிடையே
பண் அமரும் மொழி பரவையார் பாடல் ஆடல்-தனை
கண்ணுற முன் கண்டு கேட்டார் போல கருதினார்
#272
பூங்கோயில் அமர்ந்தாரை புற்று இடம் கொண்டு இருந்தாரை
நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரை
பாங்காக தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார்
ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார்
#273
மின் ஒளிர் செம் சடையானை வேத முதல் ஆனானை
மன்னு புகழ் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து
பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்
என்னும் இசை திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்
#274
பின் ஒரு நாள் திருவாரூர்-தனை பெருக நினைந்து அருளி
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர்
தன்னை அகல புக்கார் தாம் செய்த சபதத்தால்
முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார்
#275
செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார்
மை விரவு கண்ணார்-பால் சூளுறவு மறுத்து அதனால்
இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை
எய்திய இ துயர் நீங்க பாடுவேன் என நினைந்து
#276
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது_ஓர்_பாகனார் மலர் பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும்
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார்
#277
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து
திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி
#278
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை
கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார்
வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார்
#279
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்தி
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி
இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல
#280
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்து பெண் பாகம்
விழை வடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழை என மாசுணம் அணிந்த இறையானை பாடினார்
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார்
#281
முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழி மாலை
பன்னும் இசை திருப்பதிகம் பாடிய பின் பற்று ஆய
என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை-கொலாம் என்று
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழி கொள்வார்
#282
அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பருடன்
பங்கய பூம் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தி
தங்குவார் அம்மை திரு தலையாலே வலம்கொள்ளும்
திங்கள் முடியார் ஆடும் திருவாலங்காட்டின் அயல்
#283
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளி
பன்னும் இசை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார்
அ நின்று வணங்கி போய் திருவூறல் அமர்ந்து இறைஞ்சி
கன்னி மதில் மணி மாட காஞ்சி மா நகர் அணைந்தார்
#284
தேன் நிலவு பொழில் கச்சி காமகோட்டத்தில்
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால்
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திரு கோயிலின் முன்
வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர்
#285
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்து போய் தொல் உலகம்
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம்
பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார்
இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி
#286
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார்
#287
பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து
பொங்கிய அன்பொடு பரவி போற்றிய ஆரூரருக்கு
மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார்
#288
ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்
மூலம் தான் அறிவு_அரியார் கண் அளித்து முலை சுவட்டு
கோலம் தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து
ஆலம் தான் உகந்தவன் என்று எடுத்து ஆடி பாடினார்
#289
பாடி மிக பரவசமாய் பணிவார்க்கு பாவையுடன்
நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சி
சூடிய அஞ்சலியினராய் தொழுது புறம் போந்து அன்பு
கூடிய மெய் தொண்டருடன் கும்பிட்டு இனிது அமர்வார்
#290
மா மலையாள் முலை சுவடும் வளை தழும்பும் அணிந்த மதி
பூ மலிவார் சடையாரை போற்றி அருள் அது ஆக
தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார்
பா மலர் மாலை பதிகம் திருவாரூர் மேல் பரவி
#291
அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால்
எந்தை பிரான் திருவாரூர் என்று-கொல் எய்துவது என்று
சந்த இசை பாடி போய் தாங்க_அரிய ஆதரவு
வந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார்
#292
மன்னு திருப்பதிகள்-தொறும் வன்னியொடு கூவிளமும்
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சி
பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவியே போந்து அணைந்தார்
அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்
#293
அங்கணரை ஆமாத்தூர் அழகர்-தமை அடி வணங்கி
தங்கும் இசை திருப்பதிகம் பாடி போய் தாரணிக்கு
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார்
செம் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு
#294
அ நாட்டின் மருங்கு திரு அரத்துறையை சென்று எய்தி
மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து
சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி
மன் ஆர்வ திருத்தொண்டருடன் மகிழ்ந்து வைகினார்
#295
பரமர் திரு அரத்துறையை பணிந்து போய் பல பதிகள்
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி
உரவு நீர் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி
அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார்
#296
அங்க அணைவார்-தமை அடியார் எதிர்கொள்ள புக்கு அருளி
பொங்கு திரு கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து
கங்கை வாழ் சடையாய் ஓர் கண் இலேன் என கவல்வார்
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்
#297
திருப்பதிகம் கொடு பரவி பணிந்து திருவருளால் போய்
விருப்பினொடும் திருத்துருத்தி-தனை மேவி விமலர் கழல்
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார்
#298
பரவியே பணிந்தவர்க்கு பரமர் திருவருள்புரிவார்
விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக
வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன
கரவு_இல் திருத்தொண்டர் தாம் கைதொழுது புறப்பட்டார்
#299
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம்
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார்-தமை தொழுது
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி
அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார்
#300
கண்டவர்கள் அதிசயிப்ப கரை ஏறி உடை புனைந்து
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம்
எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார்
#301
பண் நிறைந்த தமிழ் பாடி பரமர் திருவருள் மறவாது
எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி
உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கி போய்
கண் நிறைந்த திருவாரூர் முன் தோன்ற காண்கின்றார்
#302
அன்று திரு நோக்கு ஒன்றால் ஆர கண்டு இன்புறார்
நின்று நிலம் மிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி
வன் தொண்டர் திருவாரூர் மயங்கு மாலையில் புகுந்து
துன்று சடை தூ வாயர்-தமை முன்னம் தொழ அணைந்தார்
#303
பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சி
துங்க இசை திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே
இங்கு எமது துயர் களைந்து கண் காண காட்டாய் என்று
அங்கணர்-தம் முன் நின்று பாடி அரும் தமிழ் புணைந்தார்
#304
ஆறு அணியும் சடையாரை தொழுது புறம் போந்து அங்கண்
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி
ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து
மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார்
#305
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கி
கோது_இல் இசையால் குருகு பாய என கோத்து எடுத்தே
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம்
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார்
#306
சீர் பெருகும் திரு தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சி
கார் விரவு கோபுரத்தை கைதொழுதே உள் புகுந்து
தார் பெருகு பூங்கோயில்-தனை வணங்கி சார்ந்து அணைவார்
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார்
#307
வீழ்ந்து எழுந்து கைதொழுது முன் நின்று விம்மியே
வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார்
ஆழ்ந்த துயர் கடலிடை-நின்று அடியேனை எடுத்து அருளி
தாழ்ந்த கருத்தினை நிரப்பி கண் தாரும் என தாழ்ந்தார்
#308
திருநாவலூர் மன்னர் திருவாரூர் வீற்றிருந்த
பெருமானை திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனை
பருகா இன் அமுதை கண்களால் பருகுதற்கு
மருவு ஆர்வத்துடன் மற்றை கண் தாரீர் என வணங்கி
#309
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம்
மாளாமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானை
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று
ஆளாம் திரு தோழமை திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார்
#310
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர்
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்
#311
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவி பணிந்து மிக பரவி
எழுந்த களிப்பினால் ஆடி பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றினிடை எழுந்த
செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார்
#312
காலம் நிரம்ப தொழுது ஏத்தி கனக மணி மாளிகை கோயில்
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழிய புறம் போந்து
சீலம் உடைய அன்பருடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார்
#313
நங்கை பரவையார்-தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின்
தங்கு மணி மாளிகையின்-கண் தனிமை கூர தளர்வார்க்கு
கங்குல் பகலாய் பகல் கங்குல் ஆகி கழியா நாள் எல்லாம்
பொங்கு காதல் மீதூர புகல்வார் சில நாள் போனதன் பின்
#314
செம்மை நெறி சேர் திருநாவலூர் ஒற்றியூர் சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மை குலவு மணம் புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார்
#315
மென் பூம் சயனத்திடை துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார்
பொன் பூம் தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார்
மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார்
என்பு ஊடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார்
#316
ஆன கவலை கையறவால் அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக
பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமை பரிசனங்கள் புகுதப்பெறாது புறம் நின்றார்
#317
நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர்
சென்று மொழிவார் திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம்
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமும் சென்று எய்த பெற்றிலோம் என்று இறைஞ்சினார்
#318
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர்
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு
கற்ற மாந்தர் சிலர்-தம்மை காதல் பரவையார் கொண்ட
செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்ல செல விட்டார்
#319
நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது
பைம்பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவி கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார்
#320
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன்
மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர்
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சி புறம் போந்தார்
#321
போந்து புகுந்தபடி எல்லாம் பூம் தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலை
நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தை ஆகுலம் நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாம கடலுள்
#322
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி
பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய்
முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும்
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார்
#323
முன்னை வினையால் இ வினைக்கு மூலம் ஆனாள்-பால் அணைய
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்தருளி
அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றி
பின்னை இல்லை செயல் என்று பெருமான் அடிகள்-தமை நினைந்தார்
#324
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை
தொடியார் தழும்பும் முலை சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும்
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய
#325
தம் பிரானார் எழுந்தருள தாங்கற்கு_அரிய மகிழ்ச்சியினால்
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய
அம்பிகா வல்லவர் செய்ய அடி தாமரையின் கீழ் விழுந்தார்
#326
விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினோடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று
#327
அடியேன் அங்கு திருவொற்றியூரில் நீரே அருள்செய்ய
வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம்
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில்
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து
#328
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்கு
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில்
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும்
போய் இ இரவே பரவையுறு புலவி தீர்த்து தாரும் என
#329
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கி
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே
பொன் செய் மணி பூண் பரவை-பால் போகின்றோம் என்று அருள்செய்தார்
#330
எல்லை இல்லா களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர்
முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல
நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி என தொழுதார்
#331
அண்டர் வாழ கருணையினால் ஆலகாலம் அமுது ஆக
உண்ட நீல கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு_அரியர்
வண்டு வாழும் மலர் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி
தொண்டனார்-தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்தருள
#332
தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்து
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய
ஓவா அணுக்க சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர்
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன் போக
#333
அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அ இருடிகளும்
மருவு நண்பின் நிதி கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த
தெருவும் விசும்பும் நிறைந்து விரை செழும் பூ_மாரி பொழிந்து அலைய
பொருவு_இல் அன்பர் விடும் தூதர் புனித வீதியினில் போத
#334
மாலும் அயனும் காணாதார் மலர் தாள் பூண்டு வந்து இறைஞ்சும்
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த
ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப
நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி
#335
இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின் தொடர
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம்
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன்
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது
#336
பெரு வீரையினும் மிக முழங்கி பிறங்கு மத குஞ்சரம் உரித்து
மருவீர் உரிவை புனைந்தவர்-தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வ திருவாரூர்
ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாம்-ஆல்
#337
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார்
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூட தம்
பால் அங்கு அணைந்தார் புறம் நிற்ப பண்டே தம்மை அர்ச்சிக்கும்
சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார்
#338
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு
நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும்
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய்
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து
#339
பாதி மதி வாழ் முடியாரை பயில் பூசனையின் பணி புரிவார்
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே
பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார்
#340
மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயிலிடை
முன் நின்றாரை கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின்-கண்
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன
மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார்
#341
கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளி செய்வார்
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன
அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால்
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி
#342
என் நினைந்து அணைந்து என்-பால் இன்னது என்று அருளி செய்தால்
பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும்
மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன
நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார்
#343
பங்குனி திரு நாளுக்கு பண்டு போல் வருவார் ஆகி
இங்கு எனை பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே
சங்கிலி தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர்
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகு இது என்றார்
#344
நாதரும் அதனை கேட்டு நங்கை நீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்து கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி
நோ தக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக்கொண்டது
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார்
#345
அரு_மறை முனிவரான ஐயரை தையலார்-தாம்
கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம்
பெருமைக்கு தகுவது அன்று-ஆல் ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்து சொன்னார்
#346
நம்பர்-தாம் அதனை கேட்டு நகையும் உள் கொண்டு மெய்ம்மை
தம் பரிசு அறிய காட்டார் தனி பெரும் தோழனார்-தம்
வெம்பு உறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி
வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார்
#347
தூதரை போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர்
நாதரை அறிவிலாதே நல்_நுதல் புலவி நீக்கி
போதர தொழுதேன் என்று புலம்புவார் பரவையாரை
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார்
#348
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ
நாயனார் தம்மை கண்டால் நல்_நுதல் மறுக்குமோ தான்
ஆய என் அயர்வு-தன்னை அறிந்து எழுந்தருளினார் தாம்
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று
#349
வழி எதிர்கொள்ள செல்வர் வரவு காணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன்
பொழி மலர்_மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார்
#350
பரவையார்-தம்-பால் நம்பி தூதராம் பாங்கில் போன
அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில்
இரவும்-தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார்
#351
சென்று தம் பிரானை தாழ்ந்து திரு முகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே
அன்று நீர் ஆண்டுகொண்ட அதனுக்கு தகவே செய்தீர்
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி என்றார்
#352
அ மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளி செய்வார்
நம்மை நீ சொல்ல நாம் போய் பரவை-தன் இல்லம் நண்ணி
கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள்
வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார்
#353
அண்ணலார் அருளி செய்ய கேட்ட ஆரூரர்-தாமும்
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த
வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ணலார் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று
#354
வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர்
தானவர் புரங்கள் வேவ மூவரை தவிர்த்து ஆட்கொண்டீர்
நான்_மறை சிறுவர்க்காக காலனை காய்ந்து நட்டீர்
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார்
#355
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால்
பாவியேன்-தன்னை அன்று வலிய ஆட்கொண்ட பற்று என்
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார்
#356
தம்பிரான் அதனை கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள்-பால் போய் அ
கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம்
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார்
#357
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை
நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்-தாமும்
முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடி தொழும்பன் ஏனை
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற
#358
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்ல
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார்
முன்பு உடன் போதாதாரும் முறைமையில் சேவித்து ஏக
பொன் புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார்
#359
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும்
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சி கெட்டேன்
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார்
#360
கண் துயில் எய்தார் வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று
அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம்
கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று
ஒண் சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில்
#361
வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை
அறிவுறு கோலத்தோடும் அளவு_இல் பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து
#362
பாரிட தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர்
நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே
பேரருளாளர் எய்தப்பெற்ற மாளிகை-தான் தென்-பால்
சீர் வளர் கயிலை வெள்ளி திருமலை போன்றது அன்றே
#363
ஐயர் அங்கு அணைந்த போதில் அகிலலோகத்து உள்ளாரும்
எய்தியே செறிந்து சூழ எதிர்கொண்ட பரவையார் தாம்
மெய்யுறு நடுக்கத்தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்க
செய்ய தாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார்
#364
அரி அயற்கு அரியர்-தாமும் ஆய்_இழையாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்-பால் வந்தோம்
முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்-பால்
பிரிவுற வருந்துகின்றான் வரப்பெற வேண்டும் என்றார்
#365
பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய உள்ளத்தோடு மலர் கரம் குழல் மேல் கொண்டே
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த
இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார்
#366
துளி வளர் கண்ணீர் வார தொழுது விண்ணப்பம் செய்வார்
ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது
அளி வரும் அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகி
எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றார்
#367
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார்
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார்
#368
ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு அருளாதார்
தூதினில் ஏகி தொண்டரை ஆளும் தொழில் கண்டே
வீதியில் ஆடி பாடி மகிழ்ந்தே மிடைகின்றார்
பூதியில் நீடும் பல் கண நாத புகழ் வீரர்
#369
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த
மின்_இடையார்-பால் அன்பரை உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர்
மன்னவனார் அ மறையவனார்-பால் வந்து உற்றார்
#370
அன்பரும் என்-பால் ஆவி அளிக்கும்படி போனார்
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூர
பொன் புரி முந்நூல் மார்பினர் செல்ல பொலி வீதி
முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார்-ஆல்
#371
அ நிலைமை-கண் மன்மதன் வாளிக்கு அழிவார்-தம்
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த
முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள்
சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார்
#372
எம்பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும்
கொம்பு அனையாள் பால் என் கொடு வந்தீர் குறை என்ன
தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணிவித்தோம்
நம்பி இனி போய் மற்று அவள்-தன்-பால் நணுகு என்ன
#373
நந்தி பிரானார் வந்து அருள்செய்ய நலம் எய்தும்
சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தி திகழ்கின்றார்
பந்தமும் வீடும் நீர் அருள்செய்யும்படி செய்தீர்
எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார்
#374
என்று அடி வீழும் நண்பர்-தம் அன்புக்கு எளிவந்தார்
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து
வென்று உயர் சே மேல் வீதிவிடங்கப்பெருமாள் தம்
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ
#375
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார்
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சியோடும்
வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்தருளும் போது
#376
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின் திகழ் பொலம் பூ_மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த
தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட
#377
மாலை தண் கலவை சேறு மான் மத சாந்து பொங்கும்
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள
சாலும் மெய் கலன்கள் கூட சாத்தும் பூண் ஆடை வர்க்கம்
பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல
#378
இ வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும்
மை வளர் நெடும் கணாரும் மாளிகை அடைய மன்னும்
செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து
நெய் வளர் விளக்கு தூபம் நிறை குடம் நிரைத்து பின்னும்
#379
பூ மலி நறும் பொன் தாமம் புனை மணி கோவை நாற்றி
காமர் பொன் சுண்ணம் வீசி கமழ் நறும் சாந்து நீவி
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்த தாமும்
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார்
#380
வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட
கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாது
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அ குரிசிலாரும்
தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார்
#381
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடி செய்த
திருவருள் கருணை வெள்ள திறத்தினை போற்றி சிந்தை
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார்
#382
ஆரண கமல கோயில் மேவி புற்று இடம் கொண்டு ஆண்ட
நீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி
பார் அணி விளக்கும் செம் சொல் பதிக மாலைகளும் சாத்தி
தார் அணி மணி பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில்
#383
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று
தம் பிரானாரை தூது தையல்-பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோனார்-தாம் கேட்டு
வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார்
#384
நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால
ஏயும் என்று இதனை செய்வான் தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க ஒண்ணா பிழையினை செவியால் கேட்பது
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார்
#385
காரிகை-தன்-பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவ
பாரிடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவ
தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி
ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று
#386
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல்
உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா
எம்பிரான் இசைந்தால் ஏவப்பெறுவதே இதனுக்கு உள்ளம்
கம்பியாதவனை யான் முன் காணும் நாள் எ நாள் என்று
#387
அரிவை காரணத்தினாலே ஆளுடை பரமர்-தம்மை
இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான்-தன்னை
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்-கொல் என்று
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி
#388
ஈறு_இலா புகழின் ஓங்கும் ஏயர்கோனார் தாம் எண்ணி
பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி
வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை
ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து
#389
நாள்-தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர்-தம்முள் இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார்-தம்-பால் மேனி
வாடுறும் சூலை-தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால்
#390
ஏதம் இல் பெருமை செய்கை ஏயர்-தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன
வேதனை மேல்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து
பூத நாயகர்-தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார்
#391
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி போற்றி செய்ய
எம்-தமை ஆளும் ஏயர் காவலர்-தம்-பால் ஈசர்
வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள்செய்ய கேட்டு
#392
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம்
தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை
வம்பு என ஆண்டுகொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து
#393
மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்று-ஆல்
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன
கற்றை வார் சடையார்-தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே
#394
வன் தொண்டர்-தம்-பால் சென்று வள்ளலார் அருளி செய்வார்
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள்செய சிந்தையோடு
நன்று மெய் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர்
#395
அண்ணலார் அருளி செய்து நீங்க ஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்கு
திண்ணிய சூலை தீர்க்க வரும் திறம் செப்பிவிட்டார்
#396
நாதர்-தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்-பால் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு
தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார்
#397
மற்றவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன் நான் மாய
பற்றி நின்று என்னை நீங்கா பாதக சூலை-தன்னை
உற்ற இ வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள்-தன்னால்
செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே
#398
கருத அரும் பெருமை நீர்மை கலிக்காமர் தேவியாரும்
பொருவு_அரும் கணவரோடு போவது புரியும்-காலை
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும்
#399
கணவர்-தம் செய்கை-தன்னை கரந்து காவலரை நம்பி
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்ன
புணர் நிலை வாயில் தீபம் பூரணகும்பம் வைத்து
துணர் மலர் மாலை தூக்கி தொழுது எதிர்கொள்ள சென்றார்
#400
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர்கொண்டு போற்ற
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி
மெய்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து மிக்க
மொய் மலர் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது
#401
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த
நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு
யான் மிக வருந்துகின்றேன் ஏயர்கோனார் தாம் உற்ற
ஊன வெம் சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார்
#402
மாதர்-தம் ஏவலாலே மனை தொழில் மாக்கள் மற்று இங்கு
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார் என்ன
தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம்
ஆதலால் அவரை காணவேண்டும் என்று அருளி செய்தார்
#403
வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மை காட்ட
துன்றிய குருதி சோர தொடர் குடர் சொரிந்து உள் ஆவி
பொன்றியே கிடந்தார்-தம்மை கண்ட பின் புகுந்தவாறு
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார்
#404
கோளுறும் மனத்தர் ஆகி குற்று உடைவாளை பற்ற
ஆளுடை தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில்
வாளினை பிடித்துக்கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார்
#405
மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர்
கொற்றவனாரும் நம்பி குரை கழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர்
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற
#406
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே
பொருவு_அரும் மகிழ்ச்சி பொங்க திரு புன்கூர் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார்
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி
#407
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப்பாடி நாடர்
மலர் புகழ் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர்
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில்
நிலவினார்-தம்மை கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால்
#408
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து
பொங்கிய திருவின் மிக்க தம் பதி புகுந்து பொற்பில்
தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே
செம் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும்
#409
நள்ளிருள் நாயனாரை தூது விட்டு அவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர்கோனார் மலர் அடி வணங்கி புக்கேன்
உள்ளுணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை
தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப
&6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

மேல்

3 திருமூல நாயனார் புராணம்

#1
அந்தி இளம் பிறை கண்ணி அண்ணலார் கயிலையினில்
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும்
நந்தி திருவருள் பெற்ற நான்_மறை யோகிகள் ஒருவர்
#2
மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார்
கொற்றவனார் திரு கயிலை மலை-நின்றும் குறுமுனி-பால்
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார்
#3
மன்னு திரு கேதாரம் வழிபட்டு மா முனிவர்
பன்னு புகழ் பசுபதி நேபாளத்தை பணிந்து ஏத்தி
துன்னு சடை சங்கரனார் ஏற்ற தூ நீர் கங்கை
அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார்
#4
கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும்
அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார்
#5
நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி
ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து
மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார்
#6
நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்
கல் புரிசை திருவதிகை கலந்து இறைஞ்சி கறை கண்டர்
அற்புத கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திரு வீதி
பொன் பதியாம் பெரும்பற்றப்புலியூரில் வந்து அணைந்தார்
#7
எ உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரை
செவ்விய அன்புற வணங்கி சிந்தை களிவர திளைத்து
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை
அ இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார்
#8
தட நிலை மாளிகை புலியூர்-தன்னில் உறைந்து இறைஞ்சி போய்
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது என கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்
#9
காவிரி நீர் பெரும் தீர்த்தம் கலந்து ஆடி கடந்து ஏறி
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடுதண்துறை அணைந்து
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார்
#10
அ நிலைமை தானத்தை அகலாதது ஒரு கருத்து
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்த
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோ குலங்கள்
பொன்னி நதி கரை புறவில் புலம்புவன எதிர் கண்டார்
#11
அந்தணர்-தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடி தோன்றி
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர் உடையான்
வந்து தனி மேய்கின்றான் வினை மாள வாழ்நாளை
வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்திடை வீழ்ந்தான்
#12
மற்றவன்-தன் உடம்பினை அ கோ குலங்கள் வந்து அணைந்து
சுற்றி மிக கதறுவன சுழல்வன மோப்பன ஆக
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ
உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார்
#13
இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று
அவன் உடலில் தம் உயிரை அடைவிக்க அருள்புரியும்
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற
பவன வழி அவன் உடலில் தம் உயிரை பாய்த்தினார்
#14
பாய்த்திய பின் திருமூலராய் எழலும் பசுக்கள் எலாம்
நா தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப்பொடு நயந்து
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்து துள்ளி பின்
நீத்த துயரின ஆகி நிரைந்து போய் மேய்ந்தன-ஆல்
#15
ஆவின் நிரை மகிழ்வுற கண்ட அளிகூர்ந்த அருளினராய்
மேவி அவை மேய் விடத்து பின் சென்று மேய்ந்தவை-தாம்
காவிரி முன் துறை தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற
பூ விரி தண் புறவின் நிழல் இனிதாக புறங்காத்தார்
#16
வெய்ய சுடர் கதிரவனும் மேல் பாலை மலை அணைய
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன்
பைய நடப்பன கன்றை நினைந்து படர்வன ஆகி
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்த பின் போனார்
#17
போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை-தோறும் புக நின்றார்
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று
ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள்
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய் தீண்ட அதற்கு இசையார்
#18
அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள்
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து
பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள் புகுந்தார்
#19
இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம்
சொல் ஆடாது இருந்தவர்-பால் அணையாது துயிலாதாள்
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார்
#20
பித்துற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று
சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில்
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு_இல் பெருமையில் இருந்தார்
இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார்
#21
பற்று அறுத்த உபதேச பரமர் பதம் பெற்றார் போல்
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள்
சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி
மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார்
#22
இ நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள்
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த
முந்தை உடல் பொறை காணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞான
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார்
#23
தண் நிலவு ஆர் சடையார் தாம் தந்த ஆகம பொருளை
மண்ணின் மிசை திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப
கண்ணிய அ திருவருளால் அ உடலை கரப்பிக்க
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார்
#24
சுற்றிய அ குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்கு தொடர்வு இன்மை
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின்
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்து பெருகு ஆர்வ
செற்றம் முதல் கடிந்தவர்-தாம் ஆவடுதண்துறை சேர்ந்தார்
#25
ஆவடுதண்துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி
மேவுவார் புற குட-பால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்
தே இருக்கை அமர்ந்து அருளி சிவயோகம் தலை நின்று
பூ அலரும் இதயத்து பொருளோடும் உணர்ந்து இருந்தார்
#26
ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய
ஞானம் முதல் நான்கு மலர் நல் திருமந்திர மாலை
பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம்பொருளாம்
ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து
#27
முன்னிய அ பொருள் மாலை தமிழ் மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து
சென்னி மதி அணிந்தார்-தம் திருவருளால் திரு கயிலை
தன்னில் அணைந்து ஒருக்காலும் பிரியாமை தாள் அடைந்தார்
#28
நலம் சிறந்த ஞான யோக கிரியா சரியை எலாம்
மலர்ந்த மொழி திருமூலத்தேவர் மலர் கழல் வணங்கி
அலர்ந்த புகழ் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட
தலம் குலவு விறல் தண்டிஅடிகள் திறம் சாற்றுவாம்

மேல்

4 தண்டியடிகள் புராணம்

#1
தண்டிஅடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமை தவம் உடையார்
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம்பொன் கழல் மனத்து
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றி புற நோக்கும்
கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார்
#2
காணும் கண்ணால் காண்பது மெய் தொண்டே ஆன கருத்து உடையார்
பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே
பூணும் அன்பினால் பரவி போற்றும் நிலைமை புரிந்து அமரர்
சேணும் அறிய_அரிய திருத்தொண்டில் செறிய சிறந்து உள்ளார்
#3
பூ ஆர் சடில திரு முடியார் மகிழ்ந்த செல்வ பூங்கோயில்
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய் செம்மை புரி
நாவால் இன்பமுறும் காதல் நமச்சிவாய நல் பதமே
ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில்
#4
செம் கண் விடையார் திரு கோயில் குட-பால் தீர்த்த குளத்தின் பாங்கு
எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால்
அங்கு அ நிலைமை-தனை தண்டிஅடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார்
#5
குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின்
இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவி போய்
ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார்
#6
நண்ணி நாளும் நல் தொண்டர் நயந்த விருப்பால் மிக பெருகி
அண்ணல் தீர்த்த குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி
எண்ணி தண்டிஅடிகள்-பால் எய்தி முன் நின்று இயம்புவார்
மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார்
#7
மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம்
தேசு பெருகும் திருத்தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள்
பூசு நீறு சாந்தம் என புனைந்த பிரானுக்கு ஆன பணி
ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார்
#8
அந்தம்_இல்லா அறிவு உடையார் உரைப்ப கேட்ட அறிவு இல்லார்
சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன
மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார்
#9
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள்
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார்
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார்
#10
அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல்
பெருகும் இ ஊரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று
கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கி கருத்தின் வழி
தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார்
#11
வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டிஅடிகள்-தாம்
மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி
ஐயனே இன்று அமணர்கள்-தாம் என்னை அவமானம் செய்ய
நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார்
#12
பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப்பெறாது
அழுது கங்குல் அவர் துயில கனவில் அகிலலோகங்கள்
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளி செய்கின்றார்
#13
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழி தந்த
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே
துஞ்சும் இருளில் அரசன்-பால் தோன்றி கனவில் அருள்புரிவார்
#14
தண்டி நமக்கு குளம் கல்லக்கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணி விலக்க வெகுண்டான் அவன்-பால் நீ மேவி
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார்
#15
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப
பூம் தண் கொன்றை வேய்ந்தவரை போற்றி புலர தொண்டர்-பால்
சார்ந்து புகுந்தபடி விளம்ப தம் பிரானார் அருள் நினைந்தே
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார்
#16
மன்ன கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்ல
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லி
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி
#17
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இது மேல்
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார்
#18
அருகர்-தம்மை அரசனும் அங்கு அழைத்து கேட்க அதற்கு இசைந்தார்
மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி
அருகு நின்று விறல் தண்டிஅடிகள்-தம்மை முகம் நோக்கி
பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர்
#19
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார்
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணி நீர் மூழ்கினார்
#20
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார்
பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண் பூ_மாரி
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாற கண்டு
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான்
#21
தண்டிஅடிகள்-தம்முடனே ஒட்டி கெட்ட சமண் குண்டர்
அண்டர் போற்றும் திருவாரூர்-நின்றும் அகன்று போய் கழிய
கண்ட அமணர்-தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி
#22
குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை என உரைப்பார்
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர்
அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார் அரசனுக்கு
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார்
#23
பீலி தடவி காணாது பெயர்வார் நின்று பேதுறுவார்
காலினோடு கை முறிய கல் மேல் இடறி வீழ்வார்கள்
சால நெருங்கி எதிர்எதிரே தம்மில்தாமே முட்டிடுவார்
மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார்
#24
அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம்
சொன்ன வண்ணமே அவரை ஓட தொடர்ந்து துரந்து அதன் பின்
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து குளம் சூழ் கரைபடுத்து
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான்
#25
மன்னன் வணங்கி போயின பின் மாலும் அயனும் அறியாத
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே
உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார்
#26
கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட
எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி
விண்ணில் வாழ்வார் தாம் வேண்ட புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர்
உள் நிலாவும் புகழ் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம்

மேல்

5 மூர்க்க நாயனார் புராணம்

#1
மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும்
நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி
அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை
மின்னு கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடும் வேற்காடு
#2
செம்பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடை கற்றை
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும்
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார்
#3
கோது_இல் மரபில் பிறந்து வளர்ந்து அறிவு கொண்ட நாள் தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார்
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும்
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார்
#4
தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து
மேய அடியார்-தமை போற்றி விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர் வேண்டும்படியால் உதவி அன்பு மிக
ஏயுமாறு நாள்-தோறும் இனைய பணி செய்து இன்புற்றார்
#5
இன்ன செயலின் ஒழுகு நாள் அடியார் மிகவும் எழுந்தருள
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன்
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார்
#6
அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்து அயர்வார்
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூதால்
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்கு பொருவார் இன்மை இனில் போவார்
#7
பெற்றம் ஏறி பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள்
உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து
கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதார் ஊர்
செற்ற சிலையார் திரு குடந்தை அடைந்தார் வந்து சில நாளில்
#8
இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க
பொருள் ஆயம் எய்துதற்கு புகழ் குடந்தை அம்பலத்தே
உருளாய சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர்
அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார்
#9
முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ள
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கி
சொல் சூதால் மறுத்தாரை சுரிகை உருவி குத்தி
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால்_நிலத்தில்
#10
சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில்
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ள தாம் தீண்டார்
காதல் உடன் அடியார்கள் அமுது செய கடை பந்தி
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள்
#11
நாதன்-தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்-தோறும்
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே
ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின்
பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார்
#12
வல்லார்கள்-தமை வென்று சூதினால் வந்த பொருள்
அல்லாரும் கறை கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கி
சொல்லார் சீர் சோமாசிமாறர் திறம் சொல்லுவாம்

மேல்

6 சோமாசி மாற நாயனார் புராணம்

#1
சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால்
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார்
#2
யாழின் மொழியாள் தனி பாகரை போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன
ஏழும் உவப்ப புரிந்து இன்புற செய்த பேற்றால்
வாழும் திறம் ஈசர் மலர் கழல் வாழ்த்தல் என்பார்
#3
எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
அத்தன்மையராம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் என போற்றும் நெறியில் நின்றார்
#4
சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி
ஆரம் திகழ் மார்பின் அணுக்க வன் தொண்டர்க்கு அன்பால்
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கி
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார்
#5
துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்
#6
பணையும் தடமும் புடைசூழும் ஒற்றியூரில் பாகத்தோர்
துணையும் தாமும் பிரியாதார் தோழ தம்பிரானாரை
இணையும் கொங்கை சங்கிலியார் எழில் மென் பணை தோள் எய்துவிக்க
அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே
மேல்