4. மும்மையால் உலகாண்ட சருக்கம்

@1 மூர்த்தி நாயனார் புராணம்

#1
சீர் மன்னு செல்வ_குடி மல்கு சிறப்பின் ஓங்கும்
கார் மன்னு சென்னி கதிர் மா மணி மாட வைப்பு
நார் மன்னு சிந்தை பல நல் துறை மாந்தர் போற்றும்
பார் மன்னு தொன்மை புகழ் பூண்டது பாண்டிநாடு

#2
சாயும் தளிர் வல்லி மருங்குல் நெடும் தடம் கண்
வேயும் படு தோளியர் பண்படும் இன் சொல் செய்ய
வாயும் படும் நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம்
பாயும் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம்

#3
மொய் வைத்த வண்டின் செறி குழல் முரன்ற சந்தின்
மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த
மெய் வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மை
தெய்வ தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம்

#4
சூழும் இதழ் பங்கயமாக அ தோட்டின் மேலாள்
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அ தையல் ஒப்பார்
யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும்

#5
சால்பு ஆய மும்மை தமிழ் தங்கிய அங்கண் மூதூர்
நூல் பாய் இடத்தும் உள நோன் தலை மேதி பாய
பால் பாய் முலை தோய் மது பங்கயம் பாய எங்கும்
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம்

#6
மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில்
பந்து ஆடிய மங்கையர் பங்கய செம் கை தாங்கும்
சந்து ஆர் முலை மேலன தாழ் குழை வாள் முக பொன்
செந்தாமரை மேலன நித்திலம் சேர்ந்த கோவை

#7
மும்மை புவனங்களின் மிக்கது அன்றே அ மூதூர்
மெய்ம்மை பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மை
செம்மை பொருளும் தருவார் திரு ஆலவாயில்
எம்மை பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால்

#8
அ பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மை
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார்
எ பற்றினையும் அறுத்து ஏறு உகைத்து ஏறுவார் தாள்
மெய் பற்று என பற்றி விடாத விருப்பின் மிக்கார்

#9
நாளும் பெரும் காதல் நயப்புறும் வேட்கையாலே
கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார்
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்-தாம்

#10
அந்தி பிறை செம் சடை மேல் அணி ஆலவாயில்
எந்தைக்கு அணி சந்தன காப்பிடை என்றும் முட்டா
அந்த செயலின் நிலை நின்று அடியார் உவப்ப
சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில்

#11
கான கடி சூழ் வடுக கருநாடர் காவல்
மான படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்
யானை குதிரை கருவி படை வீரர் திண் தேர்
சேனை கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான்

#12
வந்துற்ற பெரும் படை மண் புதைய பரப்பி
சந்த பொதியில் தமிழ்நாடு உடை மன்னன் வீரம்
சிந்த செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால்
கந்த பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான்

#13
வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம் படுத்து
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு
வில்லான் அடிமை திறம் மேவிய நீற்றின் சார்பு
செல்லாது அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான்

#14
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து
வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னை
சூழும் வினையால் அரவம் சுடர் திங்களோடும்
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான்

#15
செக்கர் சடையார் விடையார் திரு ஆலவாயுள்
முக்கண் பரனார் திருத்தொண்டரை மூர்த்தியாரை
மை கல் புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர்
எக்கர்க்கு உடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி

#16
அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம்
முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார்
தம்தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும்
எம்-தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார்

#17
எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்ய
தள்ளும் செயல் இல்லார் சந்தன காப்பு தேடி
கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை செய்வான்
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து

#18
புன்மை செயல் வல் அமண் குண்டரின் போது போக்கும்
வன்மை கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேத
நன்மை திருநீற்று உயர் நல் நெறி தாங்கு மேன்மை
தன்மை புவி மன்னரை சார்வது என்று சார்வார்

#19
காய்வுஉற்ற செற்றம் கொடு கண்டகன் காப்பவும் சென்று
ஆய்வுஉற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி
ஏய்வுஉற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை
சாய்உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில்-தன்னில்

#20
நட்டம் புரிவார் அணி நல் திரு மெய் பூச்சு இன்று
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும் புறம் தோல் நரம்பு என்பு கரைந்து தேய

#21
கல்லின் புறம் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார்
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள்செய்த வாக்கு

#22
அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய உன்-பால்
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு
முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்து காத்து
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன

#23
இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு
செய் வண்ணம் ஒழிந்திட தேய்ந்த புண் ஊறு தீர்ந்து
கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார்-தாம்

#24
அந்நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்
மன் ஆகிய போர் வடுக கருநாடர் மன்னன்
தன் நாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு
மின் ஆம் என நீடிய மெய் நிலையாமை வெல்ல

#25
இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல்
அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன்
வெம் வாய் நிரயத்துஇடை விரைந்து வீந்தான்

#26
முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின்
எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வு உற்றது மற்று அவன் அன்ன மாலை
பொழுதும் புலர்வு உற்றது செம் கதிர் மீது மோத

#27
அ வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடி தங்கள்
கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி
வை வேலவன்-தன் குல மைந்தரும் இன்மையாலே
செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார்

#28
தாழும் செயல் இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும்
கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்தேனும்
சூழும் படை மன்னவன் தோள் இணை காவல் இன்றி
வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார்

#29
பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான்
தன் நெடும் குடை கீழ் தம்தம் நெறிகளில் சரிந்து வாழும்
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணும் காலை
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார்

#30
இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை
செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற
கை வரை கைக்கொண்டார் மண் காவல் கைக்கொள்வார் என்று

#31
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால்
இ மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றி
கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார்

#32
கண் கட்டி விடும் களி யானை அ காவல் மூதூர்
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகி
திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆலவாயின்
விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி

#33
நீங்கும் இரவின்-கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்
ஈங்கு எம்பெருமான் அருளாம் எனில் இந்த வையம்
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கி
பூம் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப

#34
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று
வாழ்வுற்று உலகம் செய் தவத்தினின் வள்ளலாரை
சூழ் பொன் சுடர் மா மணி மாநிலம் தோய முன்பு
தாழ்வுற்று எடுத்து பிடர் மீது தரித்தது அன்றே

#35
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மை காணா
ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம்
பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது
ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அ ஊர்

#36
சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரியோடும்
எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை_இல்ல
அங்குஅங்கு மலிந்தன வாழ்த்து ஒலி அம் பொன் கொம்பின்
பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும்

#37
வெம் கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரி
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை
அங்கண் கொடு புக்கு அரியாசனத்து ஏற்றி ஒற்றை
திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார்

#38
மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதி-கண்
துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர்
உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள்

#39
வந்துற்று எழு மங்கல மாந்தர்கள்-தம்மை நோக்கி
சிந்தை சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம்
முந்தை செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில்
இந்த புவி தாங்கி இ விண்ணரசு ஆள்வான் என்றார்

#40
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர்-தாமும்
எவ்வாறு அருள்செய்தனை மற்று அவை அன்றி யாவர்
செய்வார் பெரியோய் என சேவடி தாழ்ந்து செப்ப

#41
வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே
செய்யும் அபிடேகமும் ஆக செழும் கலன்கள்
ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும்
மொய் புன் சடை மா முடியே முடி ஆவது என்றார்

#42
என்று இ உரை கேட்டலும் எல்லை_இல் கல்வியோரும்
வன் திண் மதிநூல் வளர் வாய்மை அமைச்சர்-தாமும்
நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை
ஒன்றும் அரசாள் உரிமை செயல் ஆன உய்த்தார்

#43
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்க
சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம்
தேடும் கழலார் திரு ஆலவாய் சென்று தாழ்ந்து
நீடும் களிற்றின் மிசை நீள் மறுகு ஊடு போந்தார்

#44
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது
தன்-நின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில்
பொன்னின் அரி மெல் அணை சாமரை காமர் பூம் கால்
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி

#45
குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக
கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி
நிலவும் திருநீற்று நெறி துறை நீடு வாழ
உலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன

#46
நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதம் எங்கும் நிறைந்து விளங்க பவங்கள் மாற
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி
முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார்-தாம்

#47
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும்
சீலம் கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி
ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து

#48
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
ஏதம் பிணியா வகை இ உலகு ஆண்டு தொண்டின்
பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று
நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே

#49
அகல் பாறையின் வைத்து முழங்கையை அன்று தேய்த்த
இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம்
முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதி
புகலூர் வரும் அந்தணர்-தம் திறம் போற்றல் உற்றாம்
&4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
@2 முருகநாயனார் புராணம்

#1
தாது சூழும் குழல் மலையாள் தளிர் கை சூழும் திருமேனி
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி
சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு
போது சூழும் தடம் சோலை பொய்கை சூழும் பூம்புகலூர்

#2
நாம மூதூர் மற்று அதனுள் நல்லோர் மனம் போல் அவர் அணிந்த
சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மை திருந்து ஒளியால்
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல்
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும்-ஆல்

#3
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய
வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல
தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மட மென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணி வாயும் பதிக செழும் தேன் பொழியும்-ஆல்

#4
வண்டு பாட புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல
அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும்
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும்-ஆல்

#5
ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில்
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர்
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ்
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார்

#6
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள்
மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய்
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை
சடை மேல் அணிய திருப்பள்ளி தாமம் பறித்து சாத்துவார்

#7
புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கி போய்
மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த
அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார்

#8
கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின்
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலரும் திருவாயில்
காட்டு முறுவல் நிலவு அலர கனக வரையின் பன்னக நாண்
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து

#9
கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும்
இண்டை சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும்
தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும்
நுண் தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூல் மார்பர்

#10
ஆங்கு அ பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்து
தாங்கி கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிக பற்றான
ஓங்கி சிறந்த அஞ்சு_எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார்

#11
தள்ளும் முறைமை ஒழிந்திட இ தகுதி ஒழுகும் மறையவர்-தாம்
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார்

#12
அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல்
மன்னும் புகலூர் உறைவாரை வர்த்தமான ஈச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார்

#13
அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கு அருளி
செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்

#14
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்
விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி
கரவு_இல்லவர்-பால் வருவாரை கருத்தில் உருத்திரம் கொண்டு
பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்உற்றேன்
&4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
@3 உருத்திர பசுபதி நாயனார் புராணம்

#1
நிலத்தின் ஓங்கிய நிவந்து எழும் பெரும் புனல் நீத்தம்
மலர் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டு
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமி
தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திரு தலையூர்

#2
வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ
தேன் அளிப்பன நறு மலர் செறி செழும் சோலை
ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர்
தான் அளிப்பன தருமமும் நீதியும் சால்பும்

#3
அங்கண் மா நகர் அதனிடை அரு_மறை வாய்மை
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செம் கண் மால் விடையார் செழும் பொன் மலை_வல்லி
பங்கனார் அடிமை திறம் புரி பசுபதியார்

#4
ஆய அந்தணர் அரு_மறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறா சுருதி
நேய நெஞ்சினர் ஆகி அ தொழில் தலை நின்றார்

#5
கரை_இல் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு
பிரச மென் சுரும்பு அறைந்திட கரு வரால் பிறழும்
நிரை நெடும் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய
விரை நெகிழ்ந்த செங்கமலம் என் பொய்கையுள் மேவி

#6
தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடை செறிய
உள்ளுற புக்கு நின்று கை உச்சி மேல் குவித்து
தள்ளு வெண் திரை கங்கை நீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்

#7
அரு_மறை பயன் ஆகிய உருத்திரம்-அதனை
வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திரு மலர் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள்
ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்

#8
காதல் அன்பர்-தம் அரும் தவ பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்து அருள்செய்ய மற்று அவர்-தாம்
தீது_இலா நிலை சிவபுரி எல்லையில் சேர்ந்தார்

#9
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுஉற அணைந்தனர் அவர்க்கு
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார்-ஆம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற

#10
அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால்
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி
எயில் உடை தில்லை எல்லையில் நாளைப்போவாராம்
செயல் உடைப்புற திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்
&4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
@4 திருநாளைப்போவார் புராணம்

#1
பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும்
திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழு மணிகள் திரை கரத்தால்
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர் கையேற்கும்
அகல் பணை நீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர்

#2
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின்
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர்
ஆற்று அலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி
சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம்

#3
நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகி
கனம் மருவி அசைந்து அலைய களி வண்டு புடைசூழ
புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூம் சோலை

#4
பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின்
தாள் அதிர மிசை முட்டி தடம் கிடங்கின் எழ பாய்ந்த
வாளை புதைய சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின்
நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும்

#5
வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும்
வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவின ஆம்
புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய்
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர்

#6
மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமை தொழில் உழவர் கிளை துவன்றி
பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை
புல் குரம்பை சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி

#7
கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும்
வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ்
கார் இரும்பின் சரி செறிகை கரும் சிறார் கவர்ந்து ஓட
ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி

#8
வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும்
புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும்

#9
செறி வலி திண் கடைஞர் வினை செயல் புரிவை கறை யாம
குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும்

#10
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடை புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது
விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள் உண்டு களி தூங்க கறங்கு பறையும் கலிக்கும்

#11
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய் பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்
அ பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்

#12
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால்
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார்

#13
ஊரில் விடும் பறை துடைவை உணவு உரிமையா கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும்
பேரிகையே முதலாய முக கருவி பிறவினுக்கும்

#14
போர்வை தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனைகட்கு
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார்

#15
இ வகையால் தம் தொழிலின் இயன்ற எலாம் எவ்விடத்தும்
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று
மெய் விரவு பேர் அன்பு மிகுதியினால் ஆடுதலும்
அ இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில்

#16
திரு புன்கூர் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து
விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும்
வருத்தமுறும் காதலினால் வந்து அ ஊர் மருங்கு அணைந்தார்

#17
சீர் ஏறும் இசை பாடி திருத்தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு
போர் ஏற்றை விலங்க அருள்புரிந்து அருளி புலப்படுத்தார்

#18
சிவலோகம் உடையவர்-தம் திரு வாயில் முன் நின்று
பவலோகம் கடப்பவர்-தம் பணிவிட்டு பணிந்து எழுந்து
சுவல் ஓடுவார் அலைய போவார் பின்பு ஒரு சூழல்
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார்

#19
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திருவருளால்
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான்
இடம் கொண்ட கோயில் புறம் வலம்கொண்டு பணிந்து எழுந்து
நடம் கொண்டு விடைகொண்டு தம் பதியில் நண்ணினார்

#20
இ தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி
மெய் திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த
சித்தமொடும் திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப

#21
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார்
நன்று எழும் காதல் மிக நாளை போவேன் என்பார்

#22
நாளை போவேன் என்று நாள்கள் செல தரியாது
பூளை பூவாம் பிறவி பிணிப்பு ஒழிய போவாராய்
பாளை பூம் கமுகு உடுத்த பழம் பதியின்-நின்றும் போய்
வாளை போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார்

#23
செல்கின்ற போழ்து அந்த திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்

#24
நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன்
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார்
குன்று அனைய மாளிகைகள்-தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள்

#25
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி
அ பதியின் மதில் புறத்தின் ஆராத பெரும் காதல்
ஒப்பு_அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கைதொழுதே
செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார்

#26
இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ்வண்ணம் என நினைந்தே ஏசறவினொடும் துயில்வார்

#27
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
அ நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திருத்தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு
முன் அணைந்து கனவின்-கண் முறுவலோடும் அருள்செய்வார்

#28
இ பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி
முப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்

#29
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான் அருள்செய்த பணி செய்வோம் என்று ஏத்தி
தம் பரிவு பெருக வரும் திருத்தொண்டர்-பால் சார்ந்தார்

#30
ஐயரே அம்பலவர் அருளால் இ பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப
நையும் மன திருத்தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார்

#31
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம்கொண்டார்

#32
கைதொழுது நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார்
எய்திய அ பொழுதின் கண் எரியின் கண் இ மாய
பொய் தகையும் உருவு ஒழித்து புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்

#33
செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து
பைம் துணர் மந்தாரத்தின் பனி மலர்_மாரிகள் பொழிந்தார்

#34
திரு உடைய தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுதார்
பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திருநாளைப்போவாராம் மறை முனிவர்

#35
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்ல சென்று எய்தி
கொல்லை மான் மறி கரத்தார் கோபுரத்தை தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினை தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால்

#36
அந்தணர்கள் அதிசயத்தார் அரு முனிவர் துதி செய்தார்
வந்து அணைந்த திருத்தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து
சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள்புரிந்தார்

#37
மாசு உடம்பு விட தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசு உடைய கழல் வாழ்த்தி திருக்குறிப்புத்தொண்டர் வினை
பாசம் அற முயன்றவர்-தம் திருத்தொண்டின் பரிசு உரைப்பாம்
&4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
@5 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்

#1
ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை_இல் கருணை
தாய் அனாள் தனி ஆயின தலைவரை தழுவ
ஆயும் நான்_மறை போற்ற நின்று அரும் தவம் புரிய
தூய மா தவம் செய்தது தொண்டை நல் நாடு

#2
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமை சால் பெரும் குடி தழைப்ப
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு

#3
நல் திறம் புரி பழையனூர் சிறுத்தொண்டர் நவை வந்து
உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு-கால்
சொற்ற மெய்ம்மையும் தூக்கி அ சொல்லையே காக்க
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டைநாடு

#4
ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும்
சேண் உலாவு சீர் சேரனார் திருமலைநாட்டு
வாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துன கேண்மை
பேண நீடிய முறையது பெரும் தொண்டைநாடு

#5
கறை விளங்கிய கண்டர்-பால் காதல் செய் முறைமை
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால்
பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டைநாட்டு
முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்து-ஆல்

#6
தா_இல் செம் மணி அருவி ஆறு இழிவன சாரல்
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம்
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்

#7
குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம்
பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம்
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல்

#8
கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரை-பால்
தண் துணர் கொன்றை பொன் சொரி தளவு அயல்-பால்
வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயல்-பால்
கண்டல் முன் துறை கரி சொரிவன கலம் கடல்-பால்

#9
தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலை சீறூர்
பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர்
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள்

#10
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம்
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல்

#11
மல்கும் அ பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும்
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை
சொல்லும் அ புனம் காப்பவும் சுரி குழல் தோகை

#12
அங்கண் வான் மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு
பொங்கு பூண் முலை கொடிச்சியர் குழல் மூழ்கி போகா
செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும்
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும்

#13
பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறு_இல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும்
ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும்
கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி

#14
அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அரமகளிர்
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும் உடைத்து-ஆல்
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ

#15
கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள்
நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து
கால வேனிலில் கடும் பகல் பொழுதினை பற்றி
பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு

#16
சொல்லும் எல்லையின் புறத்தன துணர் சுரும்பு அலைக்கும்
பல் பெரும் புனல் கான்யாறிடை இடை பரந்து
கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர்
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை

#17
பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை
களவு கொண்டது அளவு என களவு அலர் தூற்றும்
அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அ களவை
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று

#18
மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும்
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும்
செம் கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில்

#19
நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடி மேல்
மாறு_இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே
ஊறு நீர் தரும் ஒளி மலர் கலிகை மா நகரை
வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை

#20
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி
பாசடை தடம் தாமரை பழனங்கள் மருங்கும்
பூசல் வன் கரை குளங்களும் ஏரியும் புகுவ

#21
துங்க மாதவன் சுரபியின் திரு முலை சொரி பால்
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசை போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள்
பங்கய தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி

#22
பிள்ளை தைவர பெருகு பால் சொரி முலை தாய் போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறி
பள்ள நீள் வயல் பரு மடை உடைப்பது பாலி

#23
அனைய ஆகிய நதி பரந்து அகன் பணை மருங்கில்
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரை பெரும் குளங்கள்
புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய்
வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன் கால்

#24
மாறு_இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன
வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகும்-ஆல்

#25
வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை
பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர் பழனம்
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி

#26
தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரை தவிசின்
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும்
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பிடை ஊர் கோள்
வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு

#27
ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழை கரும்பு
பூம் கரும்பு அயல் மிடைவன பூகம் அ பூக
பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு
தூங்கு தீம் கனி சூத நீள் வேலிய சோலை

#28
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர்கொள்ளும்
பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும்
மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள்

#29
தொல்லை நான்_மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றி
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும்
செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள்

#30
தீது நீங்கிட தீ கலியாம் அவுணற்கு
நாதர் தாம் அருள்புரிந்தது நல்_வினை பயன் செய்
மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்

#31
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்து இழி பாலியின் கரையின்
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம்
பொருவு_இல் கோயிலும் சூழ்ந்தது அ புறம்பணை மருதம்

#32
விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள்
அரும் கரை பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து
பரும் கை யானையை உரித்தவர் இருந்த அ பாசூர்
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம்

#33
பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர்
தாம் அரும் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து
மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும்
காமர் தண் பணை புறத்தது கரும் கழி நெய்தல்

#34
தூய வெண் துறை பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு
சாயன் மெல் இடை அளத்தியர் அளப்பன தரளம்

#35
கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழு மீன்
படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர்-தம்
வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி

#36
கழி புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய
வழி கரை பொதி பொன் அவிழ்ப்பன மலர் புன்னை
விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண
கழிக்கரை பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை

#37
காயல் வண் கரை புரை நெறி அடைப்பன கனி முள்
சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள்
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம்
தாய முன் துறை சூழல் சூழ் ஞாழலின் தாது

#38
வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில்
தாம் பரப்பிய கயல்களின் விழி கயல் தவிர
காம்பின் நேர் வரும் தோளியர் கழி கயல் விலை செய்
தேம் பொதிந்த சில் மழலை மென் மொழிய செவ்வழி யாழ்

#39
மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும்
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த
திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு

#40
மெய் தரும் புகழ் திரு மயிலாபுரி விரை சூழ்
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலா
பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால்
நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ

#41
கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து
மாடு மொய் வரை சந்தன சினை மிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால்
ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய

#42
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை
தலை உகைப்பவும் தளை செறு விடை நெடும் கருமான்
கலை குதிப்பன கரும் பகட்டு ஏர் நிகர்ப்பவுமாய்
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம்

#43
புணர்ந்த ஆன் நிரை புற விடை குறு முயல் பொருப்பின்
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து
மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்

#44
கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து
சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள்
அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும்
உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம்

#45
அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும்
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும் எதிர்எதிர் பயில
வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு

#46
மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென்
தோளும் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள்

#47
ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி
தீய என்பன கனவிலும் நினைவு இலா சிந்தை
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ

#48
இ வளம் தரு பெரும் திரு நாட்டிடை என்றும்
மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப
எ உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும்
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம்

#49
ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை
மான அர்ச்சனையால் ஒரு காலத்து வழிபட்டு
ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த
மேன்மை பூண்ட அ பெருமையை அறிந்தவா விளம்பில்

#50
வெள்ளி மால் வரை கயிலையில் வீற்றிருந்து அருளி
துள்ளு வார் புனல் வேணியர் அருள்செய தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகம திறன் எலாம் தெரிய
உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள்

#51
எண்_இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள
அண்ணலார்-தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவள் ஆயின பெரும் தவ கொழுந்து

#52
நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற

#53
தேவ தேவனும் அது திருவுள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால்
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள்

#54
ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி
போது நீர்மையில் தொழுதனள் போத பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான்

#55
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து

#56
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி
திங்கள் தங்கிய புரி சடையார்க்கு திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழிய
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்_மலை_வல்லி

#57
நெஞ்சம் ஈசனை காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண

#58
கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க
கொண்ட காதலின் விருப்பளவு இன்றி குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு
தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்

#59
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள்

#60
கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச
நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய் பூச
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி

#61
கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்-பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால்
சிரம் பணிந்து எழு பூசை நாள்-தோறும் திரு உளம் கொள பெருகியது அன்றே

#62
நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்
காதல் மிக்கவோர் திருவிளையாட்டில் கனம்_குழைக்கு அருள்புரிந்திட வேண்டி
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார்

#63
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல்
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே
உள் நிலாவிய பதைப்புறு காதலுடன் திரு கையால் தடுத்தும் நில்லாமை
தண் நிலா மலர் வேணியினாரை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள்

#64
மலை_குல_கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை
முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ
சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே
கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார்

#65
கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த
வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே

#66
பூதி ஆகிய புனித நீர் ஆடி பொங்கு கங்கை தோய் முடி சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழ கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார்

#67
கோது_இலா அமுது அனையவள் முலை குழைந்த தம் மணவாள நல் கோலம்
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்ததின்மை-தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி

#68
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல்
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய

#69
மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும்
வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்
பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள்

#70
விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும்
தடைபடாது மெய் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள்செய்தார்

#71
எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கை
புண்ணிய திரு காமகோட்டத்து பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும்

#72
அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம்
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம்
மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும்

#73
தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திரு காமகோட்டத்தின்
பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல்

#74
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை-தன் திரு காமகோட்டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத தன் மருங்கு போதலினால்
சந்த மாதிரம் மயங்கி எம்மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கும்
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல்

#75
கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு
சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும்
தன் நிழல் பிரியாத வண் காஞ்சி தானம் மேவிய மேன்மையும் உடைத்து-ஆல்

#76
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறு_இலா நியமம் தலை நின்று
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவரவர்க்கு அருளி
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை

#77
மன்னுகின்ற அ திருநகர் வரை பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால்
தன் நிலத்து-நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி
எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல்

#78
ஈண்டு தீ_வினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்பு உடை தீர்த்தம் மூன்று_உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்

#79
தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனிய செழும் தாமரை தடமும்
நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு
நாள் அலர்ந்து செங்குவளை பைம் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றி
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல்

#80
சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று
மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று
மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால்

#81
அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும்

#82
சத்தி தற்பரசித்தி யோகிகளும் சாதக தனி தலைவரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம்
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி
வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல்

#83
வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரை தாம் காண்பிடம் உளது
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும்
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும்
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார்

#84
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி
தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல்
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அ நகரம்

#85
என்றும் உள்ள இ நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன்
வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை
சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து
குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும்

#86
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும்
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும்

#87
கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும்
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ

#88
ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல
ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால்
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம்
தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும்

#89
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்க கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே

#90
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல்
தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி
மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும்

#91
கிளர் ஒளி செம் கனக மயம்-தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண
கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும்

#92
மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசை பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது
பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால்
வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு
அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத

#93
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும்
நிகர்_இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை
நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும்
அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும்

#94
பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணி பந்தும் போற்றி ஆடும்
வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி
நல் கனக மழை அன்றி காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும்நாளும்

#95
பூ_மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாட தரமியங்கள் பொலிய நின்று
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகில்கள் செம் முகில்கள் ஆகி காட்டும்

#96
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர்களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்-தங்களையும் விசும்பிடை-நின்று இழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர்-தமையும் வெவ்வேறு அறிவ_அரிதாம் தகைமையன அனேகம் அங்கண்

#97
அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட
விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும்
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம்
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர்

#98
வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர்
பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும்

#99
அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட
பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்
வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில்
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும்

#100
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்
புரசை மத கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும்
விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்
நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார்

#101
வெயில் உமிழும் பன் மணி பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க
வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற
பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும்

#102
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம்
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும்

#103
ஓங்கிய நால் குலத்து ஒவ்வா புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே

#104
ஆதி மூதெயில் அ நகர் மன்னிய
சோதி நீள் மணி தூபமும் தீபமும்
கோது_இல் பல்லியமும் கொடியும் பயில்
வீதி நாளும் ஒழியா விழா அணி

#105
வாயில் எங்கணும் தோரணம் மா மதில்
ஞாயில் எங்கணும் சூழ் முகில் நாள் மதி
தோய் இல் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குல குழாம்

#106
வேத வேதியர் வேள்வியே தீயன
மாதர் ஓதி மலரே பிணியன
காதல் வீதி விலக்கே கவலைய
சூத மாதவியே புறம் சூழ்வன

#107
சாயலார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாட கொடியே அசைவன
சேய ஓடை களிறே திகைப்பன
பாய சோலை தருவே பயத்தன

#108
அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன
தண் நறும் செழும் தாதே துகள்வன
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன
எண்_இல் குங்கும சேறே இழுக்கின

#109
வென்றி வானவர் தாம் விளையாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது

#110
புரம் கடந்தவர் காஞ்சிபுரம் புகழ்
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும்
வரம்பு_இல் போக வனப்பின் வளம் எல்லாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால்

#111
அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார்
இ உலகில் பிறப்பினால் ஏகாலி குலத்து உள்ளார்
செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார்
மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார்

#112
மண்ணின் மிசை வந்ததற்பின் மனம் முதல் ஆயின மூன்றும்
அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார்
புண்ணிய மெய் தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை
திண்மையினால் திருக்குறிப்புத்தொண்டர் எனும் சிறப்பினார்

#113
தேர் ஒலிக்க மா ஒலிக்க திசை ஒலிக்கும் புகழ் காஞ்சி
ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார்
நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்
பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும்

#114
தேசு உடைய மலர் கமல சேவடியார் அடியார்-தம்
தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை
ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி
மாசு-தனை விட கழித்து வரும் நாளில் அங்கு ஒருநாள்

#115
பொன் இமய பொருப்பு அரையன் பயந்து அருளும் பூம்_கொடி-தன்
நல் நிலைமை அன்று அளக்க எழுந்தருளும் நம் பெருமான்
தன்னுடைய அடியவர்-தம் தனி தொண்டர் தம்முடைய
அ நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவார்

#116
சீதம் மலி காலத்து திருக்குறிப்புத்தொண்டர்-பால்
ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன்
மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள்
கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி

#117
திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்து
கரு மேகம் என அழுக்கு கந்தையுடன் எழுந்தருளி
வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு
உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார்

#118
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று
கைதொழுது கந்தையினை தந்து அருளும் கழுவ என
மை திகழ் கண்டம் கரந்த மா தவத்தோர் அருள்செய்வார்

#119
இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான்
மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால்
அ குன்றம் வெம் கதிரோன் அணைவதன் முன் தருவீரேல்
கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார்

#120
தந்து அருளும் இ கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும்
கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல்
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார்

#121
குறித்த பொழுதே ஒலித்து கொடுப்பதற்கு கொடு போந்து
வெறி தட நீர் துறையின் கண் மா செறிந்து மிக புழுக்கி
பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய்
மறி கரத்தார் திருவருளால் மழை எழுந்து பொழிந்திடுமால்

#122
திசை மயங்க வெளி அடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து
மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய
அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அரும் தவர் பால்
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார்

#123
ஓவாதே பொழியும் மழை ஒருக்கால் விட்டு ஒழியும் என
காவாலி திருத்தொண்டர் தனி நின்றார் விட காணார்
மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால்
ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா என விழுந்தார்

#124
விழுந்த மழை ஒழியாது மெய் தவர் சொல்லிய எல்லை
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன்
செழும் தவர் தம் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார்

#125
கந்தை புடைத்திட எற்றும் கல் பாறை மிசை தலையை
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசை
தன் தலையை புடைத்து எற்ற அ பாறை-தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை

#126
வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழி திருமுடியார் பொரு விடையின்
மேல் நிறைந்த துணைவியொடும் வெளி நின்றார் மெய் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருக கைதொழுது தனி நின்றார்

#127
முன் அவரை நேர் நோக்கி முக்கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி
அ நிலையே எழுந்தருளி அணி ஏகாம்பரம் அணைந்தார்

#128
சீர் நிலவு திருக்குறிப்புத்தொண்டர் திரு தொழில் போற்றி
பார் குலவ தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன்
பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால்
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார்
&4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
@6 சண்டேசுர நாயனார் புராணம்

#1
பூம் தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு
வாய்ந்த மண்ணி தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞலூர்

#2
செம்மை வெண் நீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மை தழல் ஓம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார்
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது

#3
கோது_இல் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழை குடுமி
ஓது கிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும்
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போல புணர் மாடங்கள்
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன

#4
யாகம் நிலவும் சாலை-தொறும் மறையோர் ஈந்த அவி உணவின்
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள்
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன்
நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டம் உள

#5
தீம்_பால் ஒழுக பொழுது-தொறும் ஓம தேனு செல்வனவும்
தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அணைவனவும்
பூம் பாசடை நீர் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும்
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள

#6
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின்
தாழ்வு_இல் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாக தடம் சாலை
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும்
வேள்வி தலைவர் பெரும் தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள்

#7
மடையில் கழுநீர் செழு நீர் சூழ் வயலில் சாலி கதிர் கற்றை
புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம் பாளை
அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி
நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி

#8
சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லை திரு எல்லை
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும்
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும்
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர்

#9
பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இன் சுவையும்
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத பயனாம் சைவமும் போல்
மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ

#10
பெருமை பிறங்கும் அ பதியின் மறையோர்-தம்முள் பெருமனை வாழ்
தருமம் நிலவு காசிப கோத்திரத்து தலைமை சால் மரபில்
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல்
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான்

#11
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர்
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள்
பற்றை எறியும் பற்று வர சார்பாய் உள்ள பவித்திரையாம்

#12
நன்றி புரியும் அவர்-தம்-பால் நன்மை மறையின் துறை விளங்க
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர்
வென்றி விளங்க வந்து உதயம் செய்தார் விசாரசருமனார்

#13
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல்
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால்

#14
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்த
புகழும் பெருமை உபநயன பொருவு_இல் சடங்கு முடித்து அறிவின்
இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம்
திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார்

#15
குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார்
அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார்

#16
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின்
கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின்
திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒருநாள்

#17
ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க
போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து

#18
பாவும் கலைகள் ஆகம நூல் பரப்பின் தொகுதி பான்மையினால்
மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில்
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால்
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார்

#19
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமை தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன
துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்தும் தாம் உடைய அல்லவோ நல் ஆன் இனங்கள்

#20
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும்
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண் தலை தொடையும்
மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம்

#21
சீலம் உடைய கோ குலங்கள் சிறக்கும் தகைமை தேவருடன்
காலம் முழுதும் உலகு அனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும்
நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்தும் நீறு தரும்
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ

#22
உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேர மிசை
கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ இ சுரபி குலம்

#23
என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று
நின்ற ஆயன்-தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார்

#24
யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும்
தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர்

#25
கோலும் கயிறும் கொண்டு குழை குடுமி அலைய குலவு மான்
தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரை கோவணம் சுடர
பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்
சாலும் புல்லின் அவை வேண்டும் தனையும் மிசையும் தலை சென்று

#26
பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி
அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால்
உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம்-தொறும் உய்த்தார்

#27
மண்ணி கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும்
தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும்
எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு
நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில்

#28
ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிக பல்கி
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும்
தூய தீம்பால் மடி பெருகி சொரிய முலைகள் சொரிந்தன-ஆல்

#29
பூணும் தொழில் வேள்வி சடங்கு புரிய ஓம தேனுக்கள்
காணும் பொலிவின் முன்னையினும் அநேக மடங்கு கறப்பனவாய்
பேணும் தகுதி அன்பால் இ பிரமசாரி மேய்த்ததன் பின்
மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார்

#30
அனைத்து திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி
மனை-கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறை கன்று
தனை கண்டு அருகு சார்ந்து உருகி தாயாம் தன்மை நிலைமையவாய்
கணைத்து சுரந்து முலை கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால்

#31
தம்மை அணைந்த ஆன் முலை பால் தாமே பொழிய கண்டு உவந்து
செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில்
மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும்

#32
அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டா
பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளின குறையில் ஆத்தியின் கீழ்
செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும்
துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார்

#33
ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில்
பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடில திரு முடி மேல்
சாத்தல் ஆகும் திருப்பள்ளி தாமம் பலவும் தாம் கொய்து
கோத்த இலை பூம் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார்

#34
நல்ல நவ கும்பங்கள் பெற நாடி கொண்டு நாணல் பூம்
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட
ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர்
செல்ல அவையும் கனைத்து முலை தீண்ட செழும் பால் பொழிந்தன-ஆல்

#35
கொண்ட மடுத்த குட நிறைய கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண் மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து
வண்டு மருவும் திருப்பள்ளி தாமம் கொண்டு வரன் முறையே
பண்டை பரிவால் அருச்சித்து பாலின் திருமஞ்சனம் ஆட்டி

#36
மீளமீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட
ஆளஉடையார் தம்முடைய அன்பர் அன்பின்-பால் உளதாய்
மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ்
கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார்

#37
பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார்-தம் உள்ளத்தில்
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பு ஆன
திருமஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி
வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார்

#38
இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும்
நிறை பூசனைக்கு குடங்கள் பால் நிரம்ப சொரிந்து நிரை குலங்கள்
குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகும்-ஆல்

#39
செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர்
இயல்பில் புரியும் மற்று இதனை கண்டு இ திறத்தை அறியாத
அயல் மற்று ஒருவன் அ பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான்

#40
அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின்
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து
பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை
எச்சதத்தன்-தனை அழை-மின் என்றார் அவையில் இருந்தார்கள்

#41
ஆங்கு மருங்கு நின்றார்கள் அ அந்தணன்-தன் திருமனையின்
பாங்கு சென்று மற்றவனை அழைத்து கொண்டு வர பரந்த
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய்
தீங்கு-தன்னை கேள் என்று புகுந்த பரிசு செப்புவார்

#42
அம் தண் மறையோர் ஆகுதிக்கு கறக்கும் பசுக்களான எலாம்
சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்ப்பான் போல்
கந்தம் மலி பூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார்

#43
மறையோர் மொழிய கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் என
குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான்

#44
அந்தணாளர்-தமை விடைகொண்டு அந்தி தொழுது மனை புகுந்து
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான்
இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க
மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன்

#45
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய்
மன்றல் மருவும் புறவின்-கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில்
அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால்
நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான்

#46
அன்பு புரியும் பிரமசாரிகளும் மூழ்கி அரனார்க்கு
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம்
தன்-பால் கொணர்ந்து தாபித்து பிறவும் வேண்டுவன சமைத்தார்

#47
நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல்
மன்றல் விரவும் திருப்பள்ளி தாமம் சாத்தி மஞ்சனமா
நன்று நிறை தீம்பால் குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும்

#48
பரவ மேல்மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும்
விரவும் மேதக்கவர்-தம்-பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான்
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து
குரவ மேவு முதுமறையோன் கோப மேவும்படி கண்டான்

#49
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கை தண்டு
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற
தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல்
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர்-ஆல்

#50
மேலாம் பெரியோர் பல-காலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார்
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு
மாலா மறையோன் மிக செயிர்த்து வைத்த திருமஞ்சன குட பால்
காலால் இடறி சிந்தினான் கையால் கடமை தலை நின்றான்

#51
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறை இல் தீயோனை
தந்தை எனவே அறிந்தவன்-தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால்
வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும்

#52
எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக
மறிந்த தாதை இரு தாளும் துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திட புகலும்
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி

#53
பூத கணங்கள் புடைசூழ புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம்
காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனம் களித்து
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார்

#54
தொடுத்த இதழி சூழ் சடையார் துணை தாள் நிழல் கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள

#55
செம் கண் விடையார் திரு மலர் கை தீண்டப்பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய்
பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம்
துங்க அமரர் துதி செய்ய சூழ்ந்த ஒளியில் தோன்றினார்

#56
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு
துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார்

#57
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்_மாரிகள் பொழிய
பல் ஆயிரவர் கண நாதர் பாடி ஆடி களி பயில
சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ
நல் ஆறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார்

#58
ஞாலம் அறிய பிழை புரிந்து நம்பர் அருளால் நான்_மறையின்
சீலம் திகழும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் திரு கையில்
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன்
மூல முதல்வர் சிவலோகம் எய்த பெற்றான் முதுமறையோன்

#59
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறை சிறுவர்
அந்த உடம்பு-தன்னுடனே அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு_இலாதார் தமக்கு அன்பு
தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும்-கால்

#60
நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து
தேசம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன்
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்