13. வெள்ளானைச் சருக்கம்

அதிகாரங்கள்

  1. வெள்ளானைச் சருக்கம் (53)

1 வெள்ளானைச் சருக்கம்

#1
மூலம் ஆன திருத்தொண்டத்தொகைக்கு முதல்வராய் இந்த
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பிரான் தோழர்
காலை மலர் செங்கமல கண் கழற்று அறிவார் உடன் கூட
ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம்
#2
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி
வடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆக
கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி
முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல்
#3
ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர்
ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள்
சேரர் பெருமாள்-தனை நினைந்து தெய்வ பெருமாள் கழல் வணங்கி
சாரல் மலை நாடு அணைவதற்கு தவிரா விருப்பின் உடன் போந்தார்
#4
நல் நீர் பொன்னி திரு நாட்டு நாதர் மகிழும் திரு பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான்
துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர்
சென்னி மிசை வைத்தவர் செல்வ திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார்
#5
மறையோர் வாழும் அ பதியின் மாட வீதி மருங்கு அணைவார்
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள்
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார்
#6
அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை
முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம்
இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார்
#7
இ தன்மையினை கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம்
மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும் மனைவி-தானும் மகவு இழந்த
சித்த சோகம் தெரியாமே வந்து திரு தாள் இறைஞ்சினார்
#8
துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்-தம்மை முகம் நோக்கி
இன்ப மைந்தன்-தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல்கின்றோம்
அன்பு பழுது ஆகாமல் எழுந்தருள பெற்றேம் என தொழுதார்
#9
மைந்தன்-தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி-தானும் சிறுவனை யான்
அந்த முதலையின் வாய்-நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார்
#10
இவ்வாறு அருளி செய்து அருளி இவர்கள் புதல்வன்-தனை கொடிய
வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு
அ ஆழ் பொய்கை கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர்
வை வாள் எயிற்று முதலை கொடுவருதற்கு எடுத்தார் திருப்பதிகம்
#11
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த
வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து
திரை பாய் புனலின் முதலை வாயில் உடலில் சென்ற ஆண்டுகளும்
தரை-பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான்
#12
பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை
உருகா நின்ற தாய் ஓடி எடுத்து கொடுவந்து உயிர் அளித்த
திருவாளன்-தன் சேவடி கீழ் சீல மறையோனொடு வீழ்ந்தாள்
மருவார் தருவின் மலர்_மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள்
#13
மண்ணில் உள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது
அண்ணலாரும் அவிநாசி அரனார்-தம்மை அரு_மறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல்
#14
பரவும் பெருமை திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு
விரவு மறையோன் காதலனை வெண் நூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்ப கலியாணம் முடித்து முடி சேரலர்-தம்-பால்
குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார்
#15
சென்ற சென்ற குட புலத்து சிவனார் அடியார் பதிகள்-தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும்
துன்று மணி நீர் கான்ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார்
#16
முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு
தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு
அ நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்ப
பொன் ஆர் கிழியும் மணி பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார்
#17
செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து என்
ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார்
#18
பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்து பெரியோர் எழுந்தருள
பொருவு_இல் நகரம் அலங்கரித்து பண்ணி பயணம் புறப்படுவித்து
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும்
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார்
#19
மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில்
சிலை நாட்டிய வெல் கொடி தானை சேரர் பெருமான் எதிர் சென்று
தலை நாள் கமல போது அனைய சரணம் பணிய தா_இல் பல
கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர்-ஆல்
#20
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள்
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய்
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர் செல்வம் வினவி இன்புற்றார்
#21
ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல்
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசை ஏற்றி தாம் பின் மதி வெண்குடை கவித்தார்
#22
உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப
கதிர் வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார்
#23
ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின
பூரண கலசம் மலிந்தன பூ_மழை மகளிர் பொழிந்திடும்
தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம்
#24
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன
சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி
விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர்
#25
தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும்
நான்_மறை முனிவர்கள் மங்கல நாம நல் மொழிகள் விளம்பிட
மேல் நிறை நிழல் செய வெண்குடை வீசிய கவரி மருங்கு உற
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர்
#26
அரியணை-அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை
வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின்
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர்
#27
இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்-தாம் இடர் கெட முனைப்பாடி
மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும்
பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர்
#28
ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர்
தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர்
பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும்
சேய நல் நெறி குறுகிட குறுகினார் திருவஞ்சைக்களம்-தன்னில்
#29
கரிய கண்டர்-தம் கோயிலை வலம்கொண்டு காதலால் பெருகு அன்பு
புரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர்-தம் பூம் கழல் இணை போற்றி
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை
சரியவே தலைக்கு தலை மாலை என்று எடுத்தனர் தமிழ்_மாலை
#30
எடுத்த அ திருப்பதிகத்தின் உள் குறிப்பு இ உலகினில் பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாட
கடுத்த தும்பிய கண்டர்-தம் கயிலையில் கணத்தவருடன் கூட
தடுத்த செய்கை-தான் முடிந்திட தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார்
#31
மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட
வென்றி வெள் விடை பாகர் தாம் வீற்றிருந்து அருளிய பொழுதின்-கண்
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார்
#32
வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடைகொண்டு
தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு
தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர
கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில்
#33
தேவர்-தம் குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவலூரர்-தம்
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்ற
பூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இ பாடு என போற்றி
ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார்
#34
ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம்கொண்டு ஏற்ற
நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப
போற்றி வானவர் பூ_மழை பொழிந்திட போதுவார் உயிர் எல்லாம்
சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார்
#35
சேரர் தம்பிரான் தோழர்-தம் செயல் அறிந்து அப்போதே
சார நின்றது ஓர் பரியினை மிசை கொண்டு திருவஞ்சைக்களம் சார்வார்
வீர வெண் களிறு உகைத்து விண் மேல் செலும் மெய் தொண்டர்-தமை கண்டார்
பாரில் நின்றிலர் சென்ற தம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார்
#36
விட்ட வெம் பரி செவியினில் புவி முதல் வேந்தர்-தாம் விதியாலே
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழ பாய்ந்து
மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை
முட்ட எய்தி வலம்கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக
#37
உதியர் மன்னவர்-தம் பெரும் சேனையின் உடன் சென்ற படை வீரர்
கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை
எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல் வீழ்ந்தார்
#38
வீர யாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானை
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட
வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலை திசை நோக்கி
#39
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்
தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை
மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில்
#40
மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில்
தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடை செல்வார்
ஈசர் வெள்ளி மா மலை தடம் பல கடந்து எய்தினார் மணி வாயில்
#41
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர்
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே
பொங்கு மா மதம் பொழிந்த வெள் ஆனையின் உம்பர் போற்றிட போந்த
நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திரு முன்பு
#42
சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு
அகன்று கோவினை கண்டு அணைந்தது என காதலின் விரைந்து எய்தி
நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகு உய்ய
#43
அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி
முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர்
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர்
#44
நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர் கழல் சார
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் என செப்ப
குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி
#45
மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி
பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிட புது மதி அலைகின்ற
கங்கை வார் சடை கயிலை நாயகர் திரு முறுவலின் கதிர் காட்டி
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள்செய்தார்
#46
அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றி
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணை தொண்டு
இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன்
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று
#47
பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால்
திரு உலா புறம் பாடினேன் திரு செவி சாத்திட பெற வேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார்
#48
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திரு உலா புறம் கொண்டு
நாரி_பாகரும் நலம் மிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊரன் ஆகிய ஆலாலசுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும்
சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள்செய்தார்
#49
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு
மன்னும் வன் தொண்டர் ஆலாலசுந்தரர் ஆகி தாம் வழுவாத
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும்
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார்
#50
தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும்
நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே
அலத்த மெல் அடி கமலினியாருடன் அனிந்திதையார் ஆகி
மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார்
#51
வாழி மா தவர் ஆலாலசுந்தரர் வழியிடை அருள்செய்த
ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர்
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி
ஊழியில் தனி ஒருவர்-தம் திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்வித்தான்
#52
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அ திரு உலா புறம் அன்று
சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்த
பாரில் வேதியர் திருப்பிடவூர்-தனில் வெளிப்பட பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே
#53
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று உளார் அடியார் அவர் வான் புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகு எலாம்
மேல்