12.மன்னியநீர்ச் சருக்கம்

@1 பூசலார் நாயனார் புராணம்

#1
அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த
நின்ற ஊர் பூசலார்-தம் நினைவினை உரைக்கல்உற்றார்

#2
உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு
நலம் மிகு சிறப்பின் மிக்க நான்_மறை விளங்கும் மூதூர்
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊர் ஆம்

#3
அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை
தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல் மேல் சார
வரு நெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மை
பொருள் பெறு வேத நீதி கலை உணர் பொலிவின் மிக்கார்

#4
அடுப்பது சிவன்-பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொள கொடுத்தும் கங்கை
மடு பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்
எடுப்பது மனத்து கொண்டார் இருநிதி இன்மை எண்ணார்

#5
மனத்தினால் கருதி எங்கும் மா நிதி வருந்தி தேடி
எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்
தினைத்துணை முதலா தேடி சிந்தையால் திரட்டி கொண்டார்

#6
சாதனத்தோடு தச்சர்-தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே
ஆதரித்து ஆகமத்தால் அடி நிலை பாரித்து அன்பால்
காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்

#7
அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரம்-தானும் முன்னிய முழத்தில் கொண்டு
நெடிது நாள் கூட கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்

#8
தூபியும் நட்டு மிக்க சுதையும் நல் வினையும் செய்து
கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி
வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரும் நாளில்

#9
காடவர் கோமான் கச்சி கல்தளி எடுத்து முற்ற
மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான்
நாட மால் அறியாதாரை தாபிக்கும் அந்நாள் முன் நாள்
ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடை கனவில் எய்தி

#10
நின்ற ஊர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருள போந்தார்

#11
தொண்டரை விளக்க தூயோன் அருள்செய துயிலை நீங்கி
திண் திறல் மன்னன் அந்த திருப்பணி செய்தார்-தம்மை
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும்
தண் தலை சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான்

#12
அ பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில்
எப்புடையது என்று அங்கண் எய்தினார்-தம்மை கேட்க
செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார்
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன்

#13
பூசுரர் எல்லாம் வந்து புரவலன்-தன்னை காண
மாசு_இலா பூசலார் தாம் யார் என மறையோர் எல்லாம்
ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான்
ஈசனார் அன்பர்-தம்-பால் எய்தினான் வெய்ய வேலான்

#14
தொண்டரை சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு
எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு
அண்டர் நாயகரை தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மை
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான்

#15
மன்னவன் உரைப்ப கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளா கொண்டே எம்பிரான் அருள்செய்தாரேல்
முன் வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
இன்னது ஆம் என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்து சொன்னார்

#16
அரசனும் அதனை கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே
புரை_அறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி
விரை செறி மாலை தாழ நில மிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசு எறி தானையோடு மீண்டு தன் மூதூர் புக்கான்

#17
அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார்-தம்மை
நன் பெரும் பொழுது சார தாபித்து நலத்தினோடும்
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணி
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார்

#18
நீண்ட செம் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி
பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொன் தாள் போற்றி
ஆண்தகை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வ
பாண்டிமாதேவியார்-தம் பாதங்கள் பரவல் உற்றேன்
&12 மன்னிய நீர்ச் சருக்கம்
@2 மங்கையர்க்கரசியார் புராணம்

#1
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி
செங்கமல திரு மடந்தை கன்னிநாடாள் தென்னர் குல பழி தீர்த்த தெய்வ பாவை
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள்
பொங்கு ஒளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே

#2
பூசுரர் சூளாமணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான்
மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை
ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்

#3
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள்
திரு நாடு போல் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி
ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும்
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம்
&12 மன்னிய நீர்ச் சருக்கம்
@3 நேச நாயனார் புராணம்

#1
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
பார் வளர் புகழின் மிக்க பழம் பதி மதி தோய் நெற்றி
கார் வளர் சிகர மாட காம்பீலி என்பது ஆகும்

#2
அ நகர்-அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்
பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம்
சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார்

#3
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடி போதுக்கு ஆக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆக
பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார்

#4
உடையொடு நல்ல கீளும் ஒப்பு_இல் கோவணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால்
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி
அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார்

#5
கற்றை வேணி முடியார்-தம் கழல் சேர்வதற்கு கலந்த வினை
செற்ற நேசர் கழல் வணங்கி சிறப்பால் முன்னை பிறப்பு உணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம்
&12 மன்னிய நீர்ச் சருக்கம்
@4 கோச்செங்கண் சோழ நாயனார் புராணம்

#1
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமை சோணாட்டில்
அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும்
குலையில் பெருகும் சந்திரதீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை
நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது-ஆல்

#2
அ பூம் கானில் வெண் நாவல் அதன் கீழ் முன் நாள் அரி தேடும்
மெய் பூம் கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி
மை பூம் குவளை களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகும்-ஆல்

#3
ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்கு பெயர் ஆக
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல்
கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால்
மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல்

#4
நன்றும் இழைத்த சிலம்பி வலை பரப்பை நாதன் அடி வணங்க
சென்ற யானை அநுசிதம் என்று அதனை சிதைக்க சிலம்பி-தான்
இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை
அன்று கழித்த பிற்றை நாள் அடல் வெள் யானை அழித்தது-ஆல்

#5
எம்பிரான்-தன் மேனியின் மேல் சருகு விழாமை யான் வருந்தி
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து
வெம்பி சிலம்பி துதிக்கையினில் புக்கு கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கை நிலத்தில் மோதி குலைந்து வீழ்ந்தது-ஆல்

#6
தரையில் புடைப்ப கைப்புக்க சிலம்பி-தானும் உயிர் நீங்க
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து
முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள்செய்து அருள நிலத்தின்-கண்

#7
தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன்
தன்னுடைய பெருந்தேவி கமலவதி உடன் சார்ந்து
மன்னு புகழ திருத்தில்லை மன்று ஆடும் மலர் பாதம்
சென்னி உற பணிந்து ஏத்தி திரு படி கீழ் வழிபடு நாள்

#8
மக்கள் பேறு இன்மையினால் மா தேவி வரம் வேண்ட
செக்கர் நெடும் சடை கூத்தர் திரு உள்ளம் செய்தலினால்
மிக்க திருப்பணி செய்த சிலம்பி குல வேந்து மகிழ்
அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய

#9
கழையார் தோளி கமலவதி-தன்-பால் கருப்ப நாள் நிரம்பி
விழைவார் மகவு பெற அடுத்த வேலை-அதனில் காலம் உணர்
பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார்

#10
பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி
அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அரு மணியை
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள்

#11
தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம்
மேவும் உரிமை முடி கவித்து தானும் விரும்பு பெரும் தவத்தின்
தாவு_இல் நெறியை சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான்

#12
கோதை வேலர் கோச்செங்கண் சோழர்-தாம் இ குவலயத்தில்
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார்
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள்
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார்

#13
ஆனைக்காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு
மானை தரித்த திரு கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்
ஞான சார்வாம் வெண் நாவல் உடனே கூட நலம் சிறக்க
பால் நல் களத்து தம் பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார்

#14
மந்திரிகள்-தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன்
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார்
சந்திரசேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார்

#15
அ கோயில்-தொறும் சிவனுக்கு அமுது படி முதலான
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்து
திக்கு அனைத்தும் தனி செங்கோல் முறை நிறுத்தி தேர் வேந்தர்
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார்

#16
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
பெருமானை அடி வணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
உருகா நின்று உளம் களிப்ப தொழுது ஏத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்

#17
தேவர் பிரான் திருத்தொண்டில் கோச்செங்கண் செம்பியர் கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளி புவனியின் மேல்
ஏவிய நல் தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திரு அடி நிழல் கீழ்

#18
கரு நீல மிடற்றார் செய்ய கழல் அடி நீழல் சேர
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும்
திருநீலகண்டபாணர் திறம் இனி செப்பல்உற்றேன்
&12 மன்னிய நீர்ச் சருக்கம்
@5 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

#1
எருக்கத்தம்புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன்-தன் சீர்
திரு தகும் யாழில் இட்டு பரவுவார் செழும் சோணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல்
பருப்பத சிலையார் மன்னும் ஆலவாய் பணிய சென்றார்

#2
ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று
பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கி
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து
ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார்

#3
மற்று அவர் கருவி பாடல் மதுரை நீடு ஆலவாயில்
கொற்றவன் திருவுள்ளத்து கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம்
அற்றை நாள் கனவில் ஏவ அருள் பெரும்பாணனாரை
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார்

#4
அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை_பாகன்
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே
மன் பெரும்பாணனாரும் மா மறை பாட வல்லார்
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரை பாடுகின்றார்

#5
திரிபுரம் எரித்தவாறும் தேர் மிசை நின்றவாறும்
கரியினை உரித்தவாறும் காமனை காய்ந்தவாறும்
அரி அயற்கு அரியவாறும் அடியவர்க்கு எளியவாறும்
பரிவினால் பாட கேட்டு பரமனார் அருளினாலே

#6
அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும்
சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார்
செந்தமிழ் பாணனாரும் திருவருள் பெற்று சேர்ந்தார்

#7
தமனிய பலகை ஏறி தந்திரி கருவி வாசித்து
உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி எண்_இல் தானங்கள் கும்பிட்டு
அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்

#8
கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும்
தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும்
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டு பாட கேட்டு அங்கண்
வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார்

#9
மூல தானத்து எழுந்தருளி இருந்த முதல்வன்-தனை வணங்கி
சால காலம் அங்கு இருந்து தம்பிரான்-தன் திருவருளால்
சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின்-நின்றும் போய்
ஆலத்து ஆர்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி

#10
ஆழி சூழும் திரு தோணி அமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசை பாணர்

#11
ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும்
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின்
பானல் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாள் அடைந்தார்

#12
வரும் பான்மையினில் பெரும்பாணர் மலர் தாள் வணங்கி வயல் சாலி
கரும்பு ஆர் கழனி திருநாவலூரில் சைவ கலை மறையோர்
அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற
சுரும்பு ஆர் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல்உறுகின்றோம்
&12 மன்னிய நீர்ச் சருக்கம்
@6 சடைய நாயனார் புராணம்

#1
தம்பிரானை தோழமை கொண்டு அருளி தமது தடம் புயம் சேர்
கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும்
எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம்
நம்பிஆரூரை பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ
&12 மன்னிய நீர்ச் சருக்கம்
@7 இசை ஞானியார் புராணம்

#1
ஒழியா பெருமை சடையனார் உரிமை செல்வ திருமனையார்
அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார்
இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன்
மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாது-ஆல்